க. பாலசுப்பிரமணியன்

எப்போது வருவான்? எப்படி வருவான்?

திருமூலர்-1-3

அடியார்களைப் படைத்தது மட்டுமின்றி அவர்கள் உள்ளத்தில் தானே ஒளிவடிவாக அமர்ந்து அவர்களுக்கு அன்பு நெறிகாட்டி அருளால் ஆட்கொள்ளும் ஆனந்தியாக இருக்கின்றான் இறைவன்! பாசத்தால் கவரப்பட்டு ஐம்பொறிகளின் தூண்டுதலுக்கு அடிமையாகி சத்தான வாழ்க்கையின் உண்மைப்பொருளை மறந்த உயிர்களுக்குத்  தானே கைகொடுத்து அவர்களுக்கு ‘பிறவாப் பெருமையை’ தன் அருளால் அளிக்கின்ற பெருந்தகை அவன். அவன் அகத்திலே எப்படி நுழைந்தான்? நம் பிறப்போடு வந்தானா? பின் வந்தானா? நமது ஊழ்வினையின் சத்தாக வந்தானா? வந்தவன் ஏன் அமைதியாக உள்ளே உறங்கிவிட்டான் ? அவன் நினைத்திருந்தால் நம்மை இந்தத் துயரக்கடலிலிருந்து எப்பொழுதோ காப்பாற்றி ஆட்கொண்டிருக்கலாமே ? அவன் இவ்வளவு என நேரம் தாமதமாய் வரக் காரணம் என்ன?

அவனைக் காண்பதற்கு திருமூலர் என்னவெல்லாம் செய்தார்?

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்

தேடியும் கண்டேன் சிவன் பெருந்தன்மையைக்

கூடியவாறே குறியாக குறிதந்து என்

ஊட நின்றான் அவன் தன் அருள் உற்றே

அவன் ஒருவனையே மனதில் நிறுத்தி வேறு ஏதும் வேண்டாத நிலையில் இருக்கும் பொழுது இந்த உலகில் உள்ள எந்தப் பொருளும் நமக்கு வேண்டாததாகவும் விருப்பமற்றதாகவும் மாறிவிடும். இந்த நிலையில் சுற்றமும் சூழலும் கூட நமக்கு பாரமாகத் தோன்றும்.  இந்த நிலைதான் மாணிக்கவாசகருக்கும் ஏற்பட்டது.

 உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்

கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனிமையும்

குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே

கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே !

இத்தனையையும் செய்து அவன் அருளை பெற அவர் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும் ?

அகம் புகுந்தான் அடியேற்கு அருளாலே

அகம் புகுந்தும் தெரியான் அருளில்லார்க்கு

அகம் புகுந்து ஆனந்தமாக்கிச் சிவமாய்

அகம் புகுந்தான் நந்தி ஆனந்தியே !

அகம் புகுந்தும் தெரியாதவனாய் மறைந்து நின்று எந்த நேரத்தில் நம்மை ஆட்கொள்ளவேண்டுமோ அந்த நேரத்தில் சரியாக வந்து காப்பவனாகத் திகழ்கின்றான் அந்தப் பேரருளாளன்!  அவன் அகத்தில் அமைதியாக இருந்த பொழுது என்ன செய்து கொண்டிருந்தான்? நம்முடைய மதியையும் செயலையும் கண்டு ஆராய்ந்து கொண்டிருந்தானா? அல்லது விதிவழி நடக்கும் செயல்களை ஒரு மௌனியாக இருந்து பார்த்துக்கொண்டிருந்தானா? கேள்விகள் எழுகின்றன. சரியான பதில்கள் கிடைப்பதில்லை. திருமூலரின் கீழ்கண்ட பாடல் அதற்கு ஒரு விளக்கம் அளிப்பது போல் இருக்கின்றது

 பொய் இலன் மெய்யன் புவனாபதி எந்தை

மை இருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு

செய் இருள் நீக்கும் திருவுடை நந்தி என்

கை இருள் நீங்கக் கலந்து எழுந்தானே.

 மை இருள், செய் இருள் மற்றும் கை இருள் என்ற ஸ்தூல இருளையும், அஞ்ஞானத்தால் பிறக்கும் செய் இருளையும் மற்றும் ஆசைகளால் எழும் மலத்தினையும் நீக்கி நமக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கின்றான்.

பட்டினத்தாரோ அவன் செய்யும் செயல்களையெல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லி அவனுடைய அளவில்லாத அன்பை நமக்கு வெளிப்படுத்துகின்றார்

ஊட்டுவிப்பானு முறங்குவிப்பானு மிங்கு ஒன்றொடொன்றை

மூட்டு விப்பானும் முயங்கு விப்பானும் முயன்ற வினை

காட்டு விப்பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி

ஆட்டு விப்பானும் ஒருவன் உண்டே தில்லை அம்பலத்தே !

 இப்படியெல்லாம் நமக்கு அருள் பாலித்துக்கொண்டிருக்கும் இறைவன் தன்மையென்ன? அவனை எப்படித்தான் வர்ணிப்பது? “தனக்குவமை இல்லாதான் ” என்று வள்ளுவர் கூறும்பொழுது அந்த உவமையில்லாதவனை கற்பனையில் கூட நம்மால் காண முடியாதோ? அவனுக்கு என்ன வண்ணம்? அவன் குணங்கள் எப்படிப்பட்டவை?

ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்

ஒரூர னல்லன் ஒருவ னில்லி

அப்படியும் அந்நிறமும்அவ் வண்ணமும்

அவனருளே கண்ணாகக் காணி னல்லால்

இப்படியும் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்

இவனிறைவன் என்றெழுதிக் காட்டொண் ணாதே.

எனது திருநாவுக்கரசர் கூறும்பொழுது  அவனை உள்ளத்தில் உணர்வால்தான் அறியமுடியும் என்ற உண்மை தெளிவாக நமக்கு விளங்குகின்றது.

இறைவனுடைய இந்த அளவற்ற பரந்த கற்பனைக்கடங்கா நிலையை வலியுறுத்தும் வண்ணம் வள்ளலார் கூறுகின்றார் :

பொங்கும் சமயமெனும் நதிகளெலாம்

புகுந்து கலங்கிட நிறைவாய்ப்

பொங்கி ஓங்கும் கங்குகரை காணாத கடலே “ 

வடமொழியில் காலையில் கதிரவனை வணங்கும் பொழுது வந்தனையிலே இவ்வாறு சொல்லும் வழக்கமுண்டு ” எவ்வாறு ஆகாயத்திலிருந்து வருகின்ற நீரானது பெருகிக் கடலையே சென்று அடைகின்றதோ அதுபோல எந்தக் கடவுளை வாங்கினாலும் அது ஒரே இறைவனைச் சென்று அடைகின்றது

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *