சர்வதேச நீரிழிவு நோய் தினம்
பவள சங்கரி
நீரிழிவு (சக்கரை வியாதி) நோயாளிகளின் எண்ணிக்கையில் முதன்மையான பத்து நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்கிறது சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை . இந்தியாவில் 70 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று, 199.5 மில்லியன் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேல் பெண்கள் . 2040 இல் 313 மில்லியன் பெண்கள் சக்கரை நோயினால் பாதிக்கப்படக்கூடுமாம்.. ஆண்கள்தான் சக்கரை வியாதியால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்ற பழைய கதையெல்லாம் மலையேறிவிட்டது. ஆம் இந்த இடைவெளி மிக விரைவாக மறைந்து வருகிறது. அதிகரித்து வரும் உடல் பருமன், அமைதியற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது போன்ற காரணங்களால் நகர்ப்புற பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர், கிராமப்புற பெண்களும் விதிவிலக்கல்ல!
இந்த எண்ணிக்கை மேலும் கூடுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதால் உடனடி நடவடிக்கை அவசியமாகிறது என்கிறது அந்த ஆய்வறிக்கை.