வேதா. இலங்காதிலகம்
எண்ணங்களின் நிழல், எண்ணப் படங்கள்
எண்ணப் பறவைகள், எண்ணங்களின் கும்மி
எண்ணக் கொலுசுகள் வண்ணப் பரதம்,
திண்ணமான அகத் தீயின் கொழுந்துகள்!
கைநழுவி உதிர்வதல்ல எழுத்துகள்
கைகாட்டும் வழிகாட்டி, கைத்தடியின்னும் பல.
திசையறியாது வீழும் இறகல்ல பெரும்
நசையோடுதிரும் வாசமுடை மலர் எழுத்து.
நீதிக் கதவின் திறவுகோல் எழுத்து.
பீதியின்றி உலகையும் அளக்கிறது நிறுக்கிறது.
தீதுடை உலக மௌனத்தை ஊடுருவுகிறது.
ஆதி சைகை, குறியீடு, கல்வெட்டு
ஓலைச்சுவடியென்று விழுந்த கற்பக விதை.
மூலைகளில் ஒதுங்கிய துன்பம் கிழிக்கும்
ஆழ்ந்த மௌனத்தை ஆலயமணி ஓசையாய்
வீழ்ந்து சுவாசம் நிறைக்கும் எழுத்து.
எழுத்துப் பால் உறிஞ்சி உறிஞ்சியே
எழுச்சியுடன் மனிதன் பாரில் பண்டிதனாகிறான்.
எழுவாய் சொற்பிழம்பே! தயக்கங்களின் தடியடியில்
எழுத்துக்களின் உராய்வு ஒரு நிசப்தக் குழியில்
விழுந்தால் இலட்சிய நுரைகள் என்னாவது!
ஏகலைவன் கணையால் சொற்கோடுகளின் ஆலிங்கனத்தில்
வாக்கியங்கள் இரசவாதமாய் வீறுநடை போடும்.
பாக்கியமாகி ஏற்றும் ஊதுபத்தி வாசனையேயெழுத்து.


Leave a Reply