Blog

  • நவராத்திரி நாயகியர் (2)

    க. பாலசுப்பிரமணியன்

     

    ராஜராஜேஸ்வரி

    images (4)

    புவியுடன் வானும் பொன்னிறப் பரிதியும்

    பொலிவுடை நிலவும் படையெனக் கோள்கள்

    பகலுடன் இரவில் பங்கிடும் அண்டத்தை

    பரிவுடன் காக்கும் புன்னகை அரசி !!

     

    மறைகளில் நின்றாய் மூச்சிடும் ஒலியாய்

    மலைகளில் மேருவில் மலர்ந்த வித்யா !

    கலைகளில் முத்திரை காலத்தின் கருவறை

    கருணையில் பெருந்தகை காத்திடும் அன்னை !

     

    அரசவை உனதில் ஆனந்தம் பொங்கும்

    அருளுடைப் பார்வையில் அமைதியே தங்கும்

    அடியவர் உள்ளத்தின் ஆனந்தப் பேரொளி

    அடைக்கலம் நீயே அகிலத்தின் தாயே !!

     

    பெற்றவள் நீயிருக்க பெற்றிட வேறெதெற்கு?

    பொற்சபை அரசியே புன்னகை மாட்சியே

    உள்ளவை பற்றியே அல்லவை விலக்கியே

    வல்லமை பெற்றிட வரம்தரும் தேவியே!

     

    கைகளில் முத்திரை காட்டிடும் யோகினி

    கலக்கிடும் துன்பங்கள் களைந்திடும்  கபாலினி

    கற்பனை தீண்டிடா அண்டங்கள் ஆட்சியே

    காலங்கள் தாண்டிய கருணையின் வடிவே !

     

    விண்ணினை அளந்திடும் விழியுடை விலாசினி

    மண்ணுடை மலர்களில் மயங்கிடும் மீன்விழி-

    மடையெனப் பெருகிடும் மங்கலக்  காவிரி

    மகிழ்வுடன் வந்தருள் மனதினில் மோகினி !

     

     

    Share
  • நூறு வருடங்களுக்கு முன்னால் [2]

    இன்னம்பூரான்
    செப்டம்பர் 19, 2017

    unnamed (4)

    வரலாறு படைத்தவர்களை பற்றி, நாளாவட்டத்தில் மறந்து விடுவது மனிதனின் இயல்பு. வரலாற்றை மாற்றி எழுதுவதும் அவனின் உத்திகளில் ஒன்று. நூறு வருடங்களுக்கு முன்னால் நேற்றைய தேதியில் (செப்டம்பர் 18, 1917) தேசீய கூட்டங்களுக்கு புகழ் பெற்ற கோகலே மன்றத்தில், சிறையில் இற்செறிக்கப்பட்ட தேசபக்தர்களை போற்றி புகழ்வதற்கு, ஒரு கூட்டம் கூடியது. டாக்டர். சர். எஸ். சுப்ரமணிய ஐயர் அவர்கள் தலைமை வகித்தார். இதை பற்றிய அறிவிப்பு தாமதமாக வெளிவந்தாலும், குறித்த நேரத்துக்கு முன்னரே மன்றம் நிரம்பி வழிந்தது. பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கூட்டத்தில் பிராமணரல்லாதார்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். கூட்டத்தினர், தேசபக்தர்களை சிறையில் அடைத்தவுடன் நடத்தப்பட்ட கூட்டத்தினரை போல் வாடிய முகமில்லாமல், மலர்ந்த முகத்துடன் காணப்பட்டனர். தலைமை மேஜையில் திருமதி பெசண்ட் அம்மையாரின் படமும், சர்.ரவீந்தரநாத் டாகூர் அவர்களின் படமும் வைக்கப்பட்டிருந்தன. லாஹூரை சேர்ந்த 19 வயது இளைஞனால் அவை வரையப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆதாரம்:
    http://www.thehindu.com/archive/release-of-the-interned/article19710458.ece

    குறிப்பு: திரு. எஸ்.சுப்ரமண்ய ஐயர் அவர்கள் ஏற்பாட்டில் சென்னை பிரம்மஞான சபை ஆலமரத்தடியில் தான், திரு.ஆக்டேவியன் ஹ்யூம் அவர்களும் கலந்து கொண்ட அமர்வில் தான் விடுதலைக்கு போராடிய காங்கிரஸ் கட்சி பிறந்தது. அதற்கு பின்னர் தான் வரலாற்றில் காங்கிரஸ் பிறந்த மண்ணாக சுட்டப்படும் பாம்பே அமர்வு நடந்தது. ஐயருக்கு அந்த அந்தஸ்தை கொடுக்கலாமோ என்ற தாக்கம் தான் வரலாற்றை மாற்றி எழுதியதோ? தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் தான் அவரை முனீந்தரர் என்று புகழ் பாடினார். சென்னை செண்டினரி ஹாலின் முன் அவருடைய சிலை நிற்கிறது. கலோனிய அரசை கண்டித்து அவர் அமெரிக்க ஜனாதிபதி உட் ரோ வில்சன் அவர்களுக்கு எழுதிய மடலை பிரம்மஞான சபையின் பிரமுகர் ஹென்றி ஹாட்சனர் அவர்கள் தான் மறைமுகமாக எடுத்துச்சென்றார். அது லண்டனையும் அடைந்து பார்லிமெண்டில் விவாதிக்கப்பட்டது; கலோனிய அரசு கண்டிக்கப்பட்டது. கவலையுற்ற கலோனிய அரசு அவருடைய ‘சர்’ பட்டத்தை பிடுங்கிவிடும் என்று பேசிக்கொண்டார்கள். அவரோ அதை கடாசிவிட்டார். உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய் அவர் எல்லாவற்றையும் துறந்து முனிவராக வாழ்ந்து வந்தார்.

    அடுத்தக்குறிப்பு: பிராமணரல்லாதார் வந்ததை குறிப்பிட்டது இன்று விநோதமாகப்படலாம். அன்றைய காலகட்டத்தில் ஜஸ்டிஸ் கட்சி, கலோனிய ஆட்சியின் விரோதத்தை சம்பாதிக்க விரும்பவில்லை. அது பிராமணரல்லாதார் கட்சி. அத்தகையவர்களில் பலருக்கு நாட்டுப்பற்று இருந்ததை, இந்த குறிப்பு சுட்டுகிறது எனலாம்.

    சித்திரத்துக்கு நன்றி:
    http://www.zahlenparty.de/wp-content/uploads/1917.jpg

    ****

    Share
  • என்று வரும் கிளரொளி?

    கவியோகி வேதம்

     

    இருட்டைக் குத்திட,- கதிரும்  பிறந்தது;

    இன்பனி உருண்டிட இலைமுளை துளிர்த்தது;

    சுருட்டிய பாயும் தூக்கம் கலைந்தது;

    துயராம்  ‘சேரி’யின்  ‘விடியல்’ வந்ததா?

    .

    ஆண்யானை விந்தில் ஆச்சர்யம் வளர்ந்தது!

    அருகம் புல்லிலும்  புவனம் தெரிந்தது;

    மாண்ட அரசரால் சரித்திரம் புரிந்தது!

    மண்புரள்  ‘வேட்டி’யால் வறுமை தீர்ந்ததா?

     

    . பன்றியும் குழந்தையும் ஒன்றாய்ப் புரண்டு,

    பள்ளமும் சேறும் காதல் புரிந்து,

    குன்றிய வயிற்றில் வாயுவே நிரம்பும்

    குலமகன் வாழ்வும் என்றுதான் துலங்கும்?

     

    . மனைகள் பணத்தால் மாளிகை ஆகலாம்;

    ‘மாண்பும்’ கட்சியால் மந்திரி ஆகலாம்;

    வனைவுறும் நேர்மையே நிலமெங்கும் பரந்து,

    வளர்ந்(து)என் ‘றிந்தியா’ வல்லர சாகும்?

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170919 - Mahalaya 01 - Bala -lr

     

    ”BALA”….!
    ———————-

    ’’வெள்ளை அரவிந்தம் வெண்புலியில் வீற்றபடி
    கொள்ளை அழகாய் கொலுவிருக்கும், -பிள்ளையவள்,
    பாலா திரிபுரையைப் போற்றிப் பணிவோர்க்கு
    நாளாம் நவராத்ரி நாள்’’….(4)
    BALATHIRIPURASUNDARI….
    —————————————————

    ”பாப்பா நெமிலிவாழ் பாலா திரிபுரை,
    காப்பாள், அடியார் கரம்பிடித்துச், -சேர்ப்பாள்
    அதியற் புதமான ஆன்ம உலகில்:
    துதியவளை சாக்லேட்டைத் தந்து’’….(1)

    ’’அமளி இலாத அமைதி லயத்தில்,
    ரமண மயமாய் ரமிப்பு, -நெமிலிவாழ்,
    பாண்டுரங்கன் சோதரி, பாலா திரிபுரையை
    வேண்டி யுறங்க வரம்’’….(2)

    ‘’காளி அரக்கர்க்கு, கற்பகம் பக்தர்க்கு,
    யாளி அமரும் எஜமானி, -தோளிரெண்டில்,
    வேலா யுதன்அண்ணன் வேழனைச் சுமந்திடும்,
    பாலா நவராத்ரிப் பெண்’’….(3)

    ’’வெள்ளை அரவிந்தம் வீற்று நெமிலியில்
    கொள்ளை அழகாய் கொலுவிருக்கும், -பிள்ளையவள்,
    பாலா திரிபுரையைப் போற்றிப் பணிவோர்க்கு
    நாளாம் நவராத்ரி நாள்’’….(4)

    ’’சுப்ரமண்ய அய்யரின் சொப்பனத்தில் வந்(து)ஆற்றில்,
    தெப்பமாய் நீந்திக்கண் தென்படுவேன், -அப்புறம்,
    ஆலயம் வேண்டாம், அகத்தில் குடிவைப்பீர்’’,
    வாலைபா லாஅருள் வாக்கு’’….(5)

    ‘’மூலாதா ரத்தினில் மூளும் கனலவள்,
    கோலா கலகோ குலன்தங்கை, -பாலா
    திரிபுரையைக் காண திருநெமிலி செல்வோம்
    ஹரிசோ தரியே அரண்’’….கிரேசி மோகன்….(6)

    ”சுண்டு விரலளவு சொப்புப் பதுமையாய்
    கண்டு பிடித்தனர் காட்டாற்றில், -கொண்டுவந்த,
    நாலா யிரத்தோன் நவனீதன் சோதரி
    பாலாம் பிகையவள் பேர்”….கிரேசி மோகன்….(7)

    ’’விடிகாலை வெளிச்சம்’’….!
    ————————————————————–
    “மாலை மயக்கம், மதிய உதயம்அதி
    காலை வெளிச்சம் கனவாகும், -பாலை,
    திரிபுரையைக் கண்டு தரிசிப்போர் , தம்முன்,
    எரிபவை கூட எழில்”…..கிரேசி மோகன்….(8)

    ”பாலாவின் பேர்சொல்லி பாம்பை எழுப்பிடு.
    மூலாதா ரத்தில் முழிபிதுங்கும் : -தோளா
    யிரத்தில் உறங்கிடும், யாதவன் தங்கை,
    சிரத்தில் சிரிப்பாள் சிலிர்த்து’’….(9)

    ’’இமியளவும் தீங்கின்றி, இன்சொல் உரைக்க,
    நெமிலிவாழ் பாலா நெகிழ்வாள் , -ஞமலியின்,
    வாலை நிமிர்த்தித்தன், ஆளாய் அமர்த்துவது,
    பாலை திரிபுரையின் போக்கு’’….கிரேசி மோகன்….(10)

    ஞமலி -நாய்

    ”ஓலை ஜபமணி மாலை அபயமொடு
    காலை மடித்து கொலுவிருக்கும் -பாலை
    திரிபுர சுந்தரியைத் தேடி நெமிலி
    வருபவர் வாழ்வில் வளம்….(11)

    ”பயமகல பாலா, பலம்பெருக பாலா,
    லயமடைய பாலா, லலிதை -மயமான,
    ரூப தியான ரமிப்பில் இருப்போர்க்கு,
    ஆபத்(து) உதவி அவள்”….(12)

    ’’நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….
    ————————————————————

    ‘’திரிபுர சுந்தரி தேவி நமஸ்தே,
    பரிபூ ரணமுணர பாலா -சரிபுகல்வாய்,
    சாதகனாய் ஆக்கி சதாசர்வ காலமும்
    மாதவத்தில் மூழ்கயென், மனு’’….(13)

    ”நெமிலி பாலா திரிபுர சுந்தரி”….
    ———————————————————–

    ”தாலேலோ தாலேலோ தாயாரின் தாலாட்டு,
    பாலேலோ பாலேலோ பையனிவன் -தாலேலோ,
    தூங்காமல் தூங்கும் திருமால் சகோதரி
    ஓங்காரி பாலாவுக்(கு) ஓய்வு”….(14)

    ”நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….
    ——————————————————–

    ‘’கல்லைச் சிலையாக்கும் கல்லுளி மங்கம்மா,
    சொல்லைக் கவியாக்கும் சுந்தரி, -கொல்லை,
    குமுதத்தில் பூப்பாள் குலம்ஜாதி காணா,
    அமுதத்தன் தங்கை அவள்’’….(15)

    ”நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….
    —————————————————

    ‘’ஆலோல வள்ளியின் ஆம்படையான் அன்னையே,
    தாலேலோ பாடவந்தேன் தாயுனக்கு, -பாலேலோ,
    மாலோலன் தங்காய், மனோன்மணி கண்ணுறங்கு,
    காலேல கண்மலர்ந்து கா’’….(16)

    கா -காப்பாய்….

    ’’நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….
    ————————————————————–

    ‘’பொற்கரத்தில் மாலையும், புத்தகமும் ஏந்தியவா(று)
    அற்புதங்கள் செய்ய அலைந்தனையே, -கற்பகமே,
    கண்ணுறங்கு பாலேலோ,கால்வலிக்கப் போகிறது,
    பண்ணுறங்கப் பாடுமெனைப் பார்’’….(17)

    ’’நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….
    ———————————————————-

    ‘’ஈசனிரு கண்ணை இறுகநீ மூடியதால்,
    தேசம் இருண்டதே தேவியே ! -வீசிடும்
    கண்ணிமைகள் பொத்தியதி காலை எழந்திடலாம்,
    பெண்ணிமய பாலா படு’’….(18)

    ’’நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….
    ——————————————————-

    ’’நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட,
    ஐயம் அகன்றதும் ஆதரவாய், -கையைப்
    பிடித்திழுத்துச் செல்வாள், பரமசுகம் கூட்ட,
    படித்ததெலாம் பாலாமுன் பாழ்’’….(19)

    ”நெமிலி பாலா திரிபுர சுந்தரி”….
    ———————————————————–

    ”அமளியில் லாமல் , அமைதியைக் காத்தால்,
    நெமிலிவாழ் பாலா நினக்குள், -கமலியாய்,
    நெஞ்சகத் தாமரையில் நின்று நிலைத்திருந்து,
    அஞ்சேல் அபயம் அளிப்பு”….(20)

    ’நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’…..
    ——————————————————

    ‘’சீட்டிப்பா வாடையும் ,சில்க்கில் சட்டையுமாய்,
    நாட்டுப் புறஊர் நெமிலியின், -வீட்டுக்குள்
    வீற்றவளே பாலா , வருக வருகநான்
    சாற்றும்வெண் பாவை சகித்து’’….(21)….

    ‘நெமிலி பாலா திரிபுர சுந்தரி”….
    ——————————————————-

    “கஷ்டம் கலைந்திடும் , இஷ்டம் இணங்கிடும்,
    அஷ்ட இலக்குமிகள் ஆசியால் -இஷ்டமாய்,
    சுக்குமி ளக்குதி திப்பிலி என்பதின்றி ,
    லக்கு(LUCK)பாலா ஊர்நெமி லி “….(22)….கிரேசி மோகன்….!

    Share
  • சென்னை விமான நிலையத்தின் மற்றுமொரு மைல்கல்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    விமானம் ஓடு பாதையில் விமானங்கள் 75 முதல் 80 வினாடிகளில் பறந்துவிட வேண்டும் என்றிருந்ததை இனி 70 வினாடிகளுக்குள் பறந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இது மேலும் 60 வினாடிகளாகக் குறைப்பதே நமது விமான நிலையத்தின் குறிக்கோளாக உள்ளது. சென்னை விமான நிலையத்திலிருந்து ஒரு மணிக்கு 32 விமானங்கள் என்று இருப்பதை இனி ஒரு மணிக்கு 36 விமானங்கள் பறகும். இது நமது சென்னை விமான நிலையத்தின் பொருளாதார வளர்ச்சியையும், பாதுகாப்பையும் மேம்படுத்துவதாக உள்ளது.

    விமானத்தில் நுழைவதற்கு இருக்கை எண்ணுடன் கூடிய அனுமதிச்சீட்டு (boarding pass) முறை இரத்து செய்யப்படவிருப்பதால் கால தாமதங்கள் குறைய வாய்ப்பாகிறது.

    Share
  • வருவாளோ? – நவராத்திரிப்பாடல்கள் (1)

     

    gangai amman santhavaasal

    கங்கைக் கரையின் ஓரத்தில், ஒரு
    காலை புலரும் நேரத்தில்
    கன்னங் கரிய சின்னஞ் சிறுமி
    காலை இணைத்தென் முன்நின்றாள்
    சிங்கம் பிடரி சிலிர்த்ததுபோல்
    செங்கதிர் எதிரே பளபளக்க
    சேவடி ஈரம் என்விழி ஈரம்
    சேர்ந்த கணத்தினை அவளேற்றாள்
    சிட்டுக் குருவிச் சிறகு விரலால்
    செம்மைத் திலகம் ஏற்றினளே!

    மல்லாந் திருந்த இரவொன்றில்
    மறந்த கனவின் நினைவொன்றில்
    மாடிப் படியில் திமுதிமு திமுதிமுவென
    மணிச்ச தங்கை கலகலக்க
    நில்லா தெங்கோ நின்றாளே
    நினைவைக் கனவைக் கொன்றாளே
    நீலப் பட்டுப் பாவடையை
    நித்திலம் பதறும் மின்விரலால்
    நேர்த்தியின் உன்னத மாய்வந்தாள்
    நேரே உயிரை மலர்கொய்தாள்!

    இமயப் படுகையின் குளிரினிலே
    இரவா பகலா புரியாத
    இறைநட மாடிடும் விந்தைப் பொழுதினில்
    மின்நரை மலிந்த கிழவியென
    இமையுள் சிரித்து நின்றாளே
    என்னை எழுப்பிச் சென்றாளே
    ஈனம் மலிந்த மனத்தினிலே
    ஈசன் வாசனை சேர்த்தாளே
    இதுவரை நேராச் சொல்லெல்லாம்
    இடுப்பில் உடுத்தி நொடித்தாளே!

    காரிருள் அஞ்சும் காரிருளில்
    கட்டி நிலவைக் காணாமல்
    கடல்தடு மாறிக் குமுறும் கருப்பில்
    கருமை அறியாக் கருப்பியென
    நேரில் விண்ணில் எழுந்தாளே
    நெஞ்சம் பதறப் புடைத்தாளே
    நிலையில் லாத மணல்வெளியில்
    வெருட்டித் துரத்திச் சிரித்தாளே
    நெஞ்சம் விடாமல் ஏங்குவதாய்
    எங்கோ உயிரைத் தொட்டாளே!

    எத்தனை எத்தனைக் கோலங்கள்
    ஏட்டில் வராத ஜாலங்கள்
    ஏதிதன் பொருளென எவரே அறிவார்
    எதைநிஜ மெனநான் கொள்ளுவதோ
    முத்த மிட்டதும் மிகவுண்மை
    முனைப்பே அற்றதும் மிகவுண்மை
    மூர்க்கி யினைநான் மோகித்தே
    முழுதாய் இழந்ததும் மிகவுண்மை
    மொட்டுள் மெளனச் சுடர்போல
    மோதும் தென்றலுக் கேங்குகிறேன்!

    கரைவதில் எனக்கு மனமில்லை
    கண்கள் சற்றும் இமைக்காமல்
    கண்ணீர்த் துளிகள் கால்களை நனைக்கக்
    கவிதை முனையில் உயிர்பதற
    விரைவின் அறியா உயரங்களும்
    அமைதியின் புரியா ஆழங்களும்
    விந்தைக் கலவி புரிகையிலே
    விழிக்கும் பிள்ளையாய் நிற்கின்றேன்
    விண்ணை யாளும் பேரழகி
    வீதி முனைக்கு வருவாளோ?

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (240)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக திலகவதி மதனகோபால் அவர்களை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது

    திலகவதி மதனகோபால் அவர்களின் சொந்த ஊர் கோவை. உணவியல் துறையில் பட்டம் பெற்றவர் உணவியல் நிபுணர் ஆவார். முகநூலில் பல சமூக முன்னேற்ற கருத்துக்களை பகிர்ந்து வரும் திலகவதி அவர்கள் சமீபத்தில் பெண் முன்னேற்றம், பெண்விடுதலை குறித்த மிகச் சிறந்த கட்டுரை ஒன்றை பதிப்பித்திருந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    #திருமணம்_மற்றும்_தாய்மை_அழகாக_இருக்கும்_என்று_என்_மகளிடம்_ஏன்_சொல்லுவேன்…..

    திருமணம் மற்றும் தாய்மை பெண்களின் வாழ்கையில் இன்றியமையாத ஒன்று அல்ல என்றாலும், அவற்றில் உள்ள நன்மைகளைப் பற்றி நம் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க நாம் முயற்சி செய்யவேண்டாமா?

    நான் ஒரு பெண்ணியவாதி தான், ஆனால் அதைப் பிரச்சாரம் செய்யும் ரகம் அல்ல. பெண்ணியம் பற்றிய தவறான புரிதலே ஆண்களை வெறுக்கும் நிலைக்கு மாறிவிடுகிறது.

    தன்னை மேம்படுத்திக்கொள்ள எல்லா வழிகளையும் நான் என் மகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பேன். அவள் ஆசைப்படும், விருப்பப்படும் எதை வேண்டுமானாலும் அவள் செய்யலாம். இறுதி முடிவு அவளுடையதாகவே இருப்பினும், திருமணம் மற்றும் தாய்மை முக்கியம் இல்லை என்று நான் ஒரு போதும் அவளிடம் சொல்ல மாட்டேன்.

    தாய்மார்கள் திருமணம் முக்கியம் அல்ல என்று தங்கள் மகள்களுக்கு அறிவுரை கூறும் கட்டுரைகளைப் படிக்கும் போது எரிச்சலடைய செய்கிறது. நம்மைப் பாதுகாக்கவோ, பார்த்துக்கொள்ளவோ நம் வாழ்க்கையில் ஆண்கள் தேவையில்லை தான். நிதி ரீதியாகச் சுயாதீனமாக(financially independent) இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதைத் திருமணத்துடன் தொடர்புப் படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. பழங்காலத்தில் திருமணம் ஒரு பெண்ணின் எதிர்காலப் பாதுகாப்பிற்காகவே இருந்திருக்கலாம், ஆனால் அதுவே திருமணத்திற்கான அடித்தளமாக இருப்பதாக நாம் இன்னும் நம்புகிறோம் என்று அர்த்தமா?

    1திருமணம் என்பது இரு மனங்களும் ஆத்மார்த்தமாக இணைந்து, ஒருவருக்கொருவர் தோழமை, ஆதரவு உணர்வோடு இருந்து மற்றவர்களுடைய தனிப்பான்மையைப் புரிந்து கொண்டு, விட்டுக்கொடுத்து, விசித்திரமான அணுகுமுறை மற்றும் எரிச்சலூட்டும் பழக்கங்களைப் பொறுத்துக்கொண்டு, எல்லாச் சூழ்நிலையிலும் ஒருவருக்கொருவர் தோள்கொடுத்து ஒன்றாகப் பயணிப்பது. அதுமட்டும் இல்லாமல் திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒரு விதப் அழகான பிணைப்பு ஆகும்.

    வேறு எந்த உறவுமுறை இவை அனைத்தையும் வழங்க முடியும்? எப்படி நாம் நம் மகளிடம் திருமணம் அவசியம் இல்லை என்று சொல்ல யோசிக்க முடியும்? திருமணத்தால் ஏற்படும் சந்தோஷத்தையும், தாய்மை வழங்கக்கூடிய இணையற்ற உணர்வையும் அவர்கள் அனுபவிக்க நாம் விரும்பவில்லையா? ஆம், எல்லாத் திருமணங்களும் சந்தோஷமாக அமைவதில்லை என்பது உண்மைதான் பலர் பல இன்னல்களுக்கும், இறுக்கமான வாழ்க்கைக்கும் தள்ள படிக்கிறார்கள், ஆனால் இந்தக் காரணங்களினால் திருமணத்தை விட்டுக்கொடுப்பது/தவிர்ப்பது என்பது ஒரு தீர்வாக இருக்க முடியாது.

    பெண்ணியம் அர்த்தம் என்ன? பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளுடனான எல்லாப் பழமையான பழக்கவழக்கங்களையும் தடுப்பதா? அல்லது முன்னர்ச் செய்த எல்லாவற்றிற்கும் குருட்டுத்தனமாகச் எதிர்ப்பதா?

    நன்றாகப் படித்த ஒரு பெண் திருமணம் செய்துகொள்வதிலும், குழந்தைகள் பெற்றுக்கொள்வதிலும் என்ன தவறுள்ளது? எப்போதில் இருந்து இந்தப் பிற்போக்கு எண்ணம் உண்டானது புரியவில்லை?”

    இவரது சமூகநல கருத்துகளுக்காக இவரை வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை பெருமகிழ்ச்சி அடைகிறது. அடுத்த தலைமுறை பெண்கள் இவரைபோன்ற ஆளுமைகளால் வழிநடத்தபட இவ்விருது ஊக்கம் அளிக்கும் என வல்லமை ஆசிரியர் குழு நம்புகிறது

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179  ]

    Share
  • நவராத்திரி நாயகியர் (1)

    க. பாலசுப்பிரமணியன்

     

    திரிபுரசுந்தரி

    thiripuuu

    திக்கெட்டும் உருவாக்கித் திருபுரமும் தனதாக்கித்

    தித்திக்கும் வடிவாகித் திருவருளைத் தருபவளே

    தீதில்லா மனங்களிலே திருவீதி வலம்வந்து

    தீவினைகள் சுட்டெரிக்கும் திரிபுர சுந்தரியே !

     

    நீரோடு நெருப்பினிலே நடமாடும் காற்றினையும்

    நிலத்தோடு வானத்தின் வளமான வளியினையும்

    நிலையில்லா உடலுக்குள் நிழலாக உருவகித்து

    நினைவாகத் தானமர்ந்து நல்லருள் தருபவளே !

     

    சங்கரி சாம்பவி சடையனின் உறுதுணையே

    கயல்விழி காமினி கருணையின் உட்பொருளே

    பார்கவி பார்வதி பாகனை அழித்தவளே

    பாட்டினில் பைரவி பார்வையில் சுந்தரியே!

     

    சொல்லுக்குள் அடங்காமல் சிந்தைக்குள் சிதறாமல்

    மௌனத்தில் மறையாமல் மனதினில் நிறைந்தவளே

    எண்ணத்தில் எளிதாக சொந்தத்தை உருவாக்கி

    வானத்து வில்லாக வையகத்தை வார்த்தவளே !

     

    கோடிட்ட புருவங்களும் குலுங்கிட்ட காதணியும்

    குவிந்திட்ட கன்னத்தில் கோலமிடும் மின்மினியும்

    குளிர்ந்திட்ட பார்வையும் குறைவில்லா உடலழகும்

    நலுங்கிட்ட பாதங்களும் நெஞ்சத்தில் நிலைத்திடுமே!

     

    அன்றலர்ந்த மலராலே அர்ச்சனைகள் செய்தாலும்

    கண்ணமர்ந்து காட்சிதர கற்பகமே ! மறந்தாயோ?

    மண்ணிருந்து அழைக்கின்றேன் மாமணியே! மங்கலமே !

    விண்ணிருந்து வருவாயே விளக்கொளியில் வீற்றிடவே!

     

     

    Share
  • பி வி சிந்துவுக்கு நல்வாழ்த்துகள்

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக பி வி சிந்து அவர்களை அறிவிக்கிறோம்

    ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் பிவி சிந்து. அவர் புல்லால கோபிசந்தின் மாணவி. உலககோப்பை போட்டியில் அவரிடம் தோற்று வெண்கலப் பதக்கம் பெற்றவர் ஜப்பானிய வீராங்கனை நொசோமி ஒசுகாரா. ஆனால் இதற்குமுன் லண்டன் ஓபனில் வெற்றி பெற்றிருந்தார். இருவருக்குமிடையே சச்சிந் ஷேன் வார்ன் இடையே இருந்தது போல ஆரோக்கியமான போட்டி இருந்து வந்தது.

    இந்த சூழலில்  கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சியோல் நகரில் நடைபெற்றது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21௧9, 16௨1, 21௰ என்ற செட் கணக்கில் ஜப்பானின் மினட்சு மிதானியை தோற்கடித்து அரை இறுதியில் நுழைந்தார்.

    அரை இறுதியில் சீனாவின் ஹி பிங்ஜியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இறுதிப் போட்டியில் ஜப்பானின் ஓகுகாராவை எதிர்கொண்டார் சிந்து. உலகக் கோப்பை போட்டியில் ஓகுகாராவிடம் சிந்து தோற்றிருந்தார். இந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் சிந்துவின் ஆட்டத்தின் அனல் பறந்தது. ஓகுகாராவை 22௨0,11௨1,21௧8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கொரிய ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார் சிந்து. இப்பட்டத்தை வெல்லும் முதலாவது இந்திய வீராங்கணை பி.வி. சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.

    1

    இதன்மூலம் இப்பட்டத்தை வெல்லும் முதலாவது இந்திய வீராங்கனை பி.வி.சிந்து என்ற சரித்திரம் படைத்துள்ளார். பிவி சிந்துவுக்கு சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் ஷேவக், ஆந்திர முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு என நம்பிக்கொன்டிருந்த பலரையும் பாட்மிண்டன் பக்கம் திருப்பியதாலும், பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் நட்சத்திரமாகத் திகழ்வதாலும் சிந்துவின் வெற்றியை இந்தியப் பெண்கள் அனைவரின் வெற்றியாகவும் கருதி வல்லமை அவரை வாழ்த்துவதில் பெருமை அடைகிறது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170918 - DWA -Hrishikesha -The Carousel -lr

    ”சீரங்க ராட்டினம் சேய்வி ஜயர்சவாரி,
    பாரங்கள் போக்கிடும் பாரத -ஓரங்க
    நாடகம் சுற்றும் நவனீதக் கண்ணனவர்
    வீடகம் பாற்கடல்,பேர் விஷ்ணு’’….கிரேசி மோகன்….!

    Share
  • சூரி நாகம்மாள்….ஸ்ரீ ரமணாஸ்ரம லேகலு….!

     

    ’’ஈருபத்து கைகளால் ஈசன்கை லாஸத்தை
    தாருபத்(து) அணிந்தவர் தூக்கிட, -வீறுகொண்டு
    வீழ்த்தினன் கட்டை விரலால் அவன்கர்வம்:
    வாழ்த்துமப்பர்(வாழ்த்துப் பண்பாடும் அப்பர் பதிகம்) பாடலின் வேட்கையால் -தாழ்த்தினர்
    நாள்நிறைய, தப்புணர்ந்த நாடகக் காரனவர்,
    தாள்மறைக் காட்டில் தடார்(திறப்பு)’’….கிரேசி மோகன்….!

    ஈருபத்து -இருபது….
    தாரு பத்து -மாலை பத்து(பத்து தலை, பத்து கழுத்து, 10 மாலை) இராவணர்….
    நாள் நிறைய -லேட்டாக…
    வாழ்த்துமப்பர் -வாழ்த்தும் அப்பர்….
    தாள் மறைக்காடு -வேதாரண்யக் கோவில் கதவு….

    Share
  • படக்கவிதைப் போட்டி (128)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    21622086_1427486197305575_203494868_n
    வெங்கட்ராமன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.09.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • சேர்த்து வைத்த கனவு..!

    பெருவை பார்த்தசாரதி

    dream girl

    பார்த்தமுதல் நாளிரவுமுதல் கனவில்வந்த நீதானெனக்கு

    ……….பத்தினியாய் ஆவாயென தினமும்நான் கனவுகண்டேன்.!

    ஊர்கூடி தேரிழுக்கும் வழக்கம்போல் உன்னைநானும்..

    ……….உற்றாறுறவினரொடு ஊரறியமணப்பது போல் கனவுவரும்.!

    கோர்க்கின்ற பூக்களெல்லாம் நாருடன் இணைவதுபோல்

    ……….கொண்டாடி மகிழத்தான் தினமும்நான் கனவுகண்டேன்.!

    சேர்த்துவைத்த கனவெலாம் சிலநாளில் நனவாகுமெனச்..

    ……….சென்றயிரவுகள்…..உறங்காததாக ஓராயிர மானதம்மா.!

     

    உருவத்தில் பெண்ணாய் உலகழகியாய்நீ வலம்வரவேணும்..

    ……….உனைப்படைத்திட்ட பிரம்மனே பெருமூச்சு விடவேணும்.!

    பருவநிலா புருவமுடன் படைத்திவளைப் படைத்தவனும்..

    ……….பாவலன்நானும்..கண்ட கனவுக்காட்சி நனவாகவேணும்.!

    ஒரு எண்ணிக்கையில் கண்டகனவுகள் கோடியானாலும்..

    ……….ஓரிரவுசேர்த்து வைத்தகனவுமொரு நொடியில் மறையும்..!

    வருத்தமுடன் குமுறுகிறேன்.!..வருவாயாநீ நிஜத்துடன்..

    ……….வாஞ்சையொடு வேண்டுகிறேன் இறைவாநீ அருள்வாயா.!

     

    எண்ணத்தில் தோன்றுவதில் ஆயிரம் வகையுண்டாமதில்..

    ……….ஏதொவொன்று ஆழமாய் ஊன்றிடினது கனவாகுமாம்.!

    கண்மூடியென் மனதில் கண்ணிறைந்த காரிகையாயுனைக்..

    ……….காண ஆவல்மிகுவதால்…அடிக்கடியென் கனவில்வருவாய்.!

    கிண்ணத்தில் நிரம்பியமதுவைப்போல்…கனவில் வந்தமாதுநீ..

    ……….கிட்டத்தில் வந்துவிடின் காதல்போதை உடன்தலைக்கேறும்.!

    பெண்ணெனும் உருவிலுன்னழகை உருவகமாய் என்மனதில்.

    ……….பெரிதாய்ச்சேர்த்து வைத்தகனவு….கலையுமோர் விடியலில்.!

    =============================

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::11-09-17

    நன்றி:: படம் கூகிள் இமேஜ்

    Share
  • நீர் !

    எம் .  ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா

     

    பாரினிலே நாம்வாழ நீரெமக்கு முக்கியமே

    வேரினுக்கு நீரின்றேல் விருட்சமெலாம் வந்திடுமா

    ஊருக்கு ஒருகுளத்தில் நீர்நிரம்பி இருந்துவிடின்

    ஊரெல்லாம் உற்சாகம் ஊற்றெடுத்து நின்றிடுமே

    நீரின்றி பலமக்கள் நீழ்புவியில் இருக்கின்றார்

    ஆர்நீரைக் கொடுத்தாலும் அருந்திவிடத் துடிக்கின்றார்

    கார்கொண்ட மேகங்கள் கனமழையைக் கொட்டிவிடின்

    நீரின்றி இருப்பார்கள் நிம்மதியாய் இருப்பரன்றோ !

     

    விஞ்ஞானம் வளர்ந்ததனால் விந்தைபல விளைகிறது

    நல்ஞானம் எனமக்கள் நாளுமே போற்றுகிறார்

    அவ்ஞான வளர்ச்சியினால் அளவற்ற தொழிற்சாலை

    ஆண்டுதோறும் பெருகிநின்று அவலத்தைத் தருகிறது

    தொழிற்சாலைக் கழிவனைத்தும் தூயநீரில் கலக்கிறது

    அதையருந்தும் மக்களெலாம் ஆபத்தில் சிக்குகிறார்

    ஆபத்தைத் தடுப்பதற்கு ஆட்சியாளர் வராவிட்டால்

    அருந்துகின்ற நீராலே அவலம்தான் பெருக்கெடுக்கும் !

     

    கிராமப் புறங்களிலே கிணற்றுநீர் இருக்கிறது

    மழைபொய்த்து விட்டுவிட்டால் அந்நீரும் வற்றிவிடும்

    நகரப்புறங்களிலே நன்னீரே என்று சொல்லி

    தகரத்தில் போத்தல்களில் தண்ணீரைக் காணுகிறோம்

    விதம்விதமாய் போத்தல்களில் விற்கின்ற நீரனைத்தும்

    வெளிக்கிட்டு வருமிடத்தை யாருமே பார்ப்பதில்லை

    போத்தல்களில் வரும்நீரை  பொறுப்பின்றி அடைப்பதனால்

    குடிக்கின்றார் அனைவருமே கிடக்கின்றார் கட்டிலிலே !

     

    உயிர்வாழ வேண்டுமெனில் உடல்கேட்கும் நீரினையே

    நீரின்றி வாழ்ந்திடுதல் நினைத்திடவே முடியாது

    உட்செல்லும் நீராலே உடல்நிறைவு பெறுகிறது

    உயிரோட்டம் தருவதற்கு நீரெமக்கு தேவையன்றோ

    ஆற்றுநீர் ஊற்றுநீர் அனைத்தையும் குடித்தாலும்

    அசுத்தமில்லா நீரினையே அருந்திடுதல் முறையாகும்

    உள்போகும் நீரினைநாம் உயிரெனவே நினைத்திடுவோம்

    உவப்புடனே நீரருந்தி உலகத்தில் வாழ்ந்திடுவோம் !

     

    ஆபிரிக்க நாடுகளில் அருந்துதற்கு நீரில்லை

    அவர்நீரை எடுப்பதற்கு அலைந்தபடி இருக்கின்றார்

    ஆட்சிதனில் இருப்பார்கள் அதைப்பற்றி அலட்டாமல்

    ஆடிப்பாடி விடுதிகளில் அருந்துகிறார் குடிவகையை

    குடிக்கின்ற நீருக்குக் குடிகள்படும் அவலமதை

    குடித்தாட்டம் போடுகிறார் கொஞ்சமேனும் நினையாமல்

    அடிக்கின்ற கூத்ததனை ஆண்டவனே நீபாரு

    அல்லல்படும் மக்களுக்கு அருந்திவிட நீரைக்கொடு !

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (73)

    நிர்மலா ராகவன்

    பிறர் போற்ற

    நலம்
    தனது முதல் குழந்தையை முதன்முதலாகப் பார்க்கும் தாய், `இவனுக்காக உயிரையே கொடுப்பேன்!’ என்று எண்ணக்கூடும். பார்ப்பவர்கள் அனைவரும் தன் குழந்தையை மெச்சவேண்டும் என்ற ஆவல் பிறக்கும்.

    ஆனால், பிறருக்கு அதுவே தொல்லையாகிவிடும்.

    `எப்போதும் அந்தக் குழந்தையையே பாக்கணும் என்பார்கள்!’ என்று ஒருவரும், `எத்தனையோ குழந்தைகளைப் பாத்தாச்சு, போ!’ என்று அலுத்துக்கொண்ட பெண்மணிகளையும் கண்டிருக்கிறேன்.

    அந்தமாதிரி ஒர் உறவினர் வீட்டில் தங்கியபோது, `இவளைப் பாருங்களேன்!’ என்று தன் இரண்டு வந்து மகளின் பராக்கிரமத்தை ஓயாது பறைசாற்றினாள் அவளுடைய தாய்.

    குழந்தை என்னவோ, வயதுக்கு மீறிய புத்திசாலிதான். ஆனால், அவளை மெச்சுவதைத் தவிர நமக்கு வேறு வேலை இல்லையா, என்ன!

    ஒரு முறை, `நான் படிச்சுண்டு இருக்கேன். தொந்தரவு பண்ணாதே!’ என்றேன் முகத்தை சற்றே திருப்பி. அவளுடைய வாய் அதிர்ச்சியில் பிளந்தது.

    சில வருடங்கள் கழித்து, அவளுடன் பேசும்போது, “உன் குழந்தையைப் பார்ப்பவர்களிடமெல்லாம் காட்டிப் பெருமைப்பட்டுக்கொள்ளாதே!” என்றேன், அறிவுரை கூறும் வகையில்.

    “நான் இப்போதெல்லாம் அப்படிச் செய்வதில்லை. அவளுடைய அப்பாவை அப்படித்தான் நடத்தினார்களாம். அதனால் வேண்டாம் என்கிறார்!” என்றாள். ஏன் கூடாது என்று அவளுக்குப் புரியத்தானில்லை.

    பிறரிடம் தம்மைப் புகழ்கிறார்களே என்று குழந்தைகளுக்கு முதலில் பெருமையாக இருக்கும். நாளடைவில், `நான் செய்வதெல்லாம் பெற்றோருக்குப் பெருமை தரக்கூடியதாக இருக்கிறதோ?’ என்று யோசித்து, யோசித்து ஒவ்வொரு காரியத்தையும் செய்ய முனைவர். அதற்கு ஈடாக, பெற்றோரும் குழந்தைகள் செய்ய வேண்டிய காரியத்தையும் தாம் செய்வர். இரு தரப்பினருக்குமே நிம்மதி கிடைப்பதில்லை. குழந்தைகளுக்குச் சுதந்திர உணர்ச்சி எப்படி வரும்?

    எதிலாவது வெற்றி பெறாவிட்டால், `பெற்றோர் கலங்குவார்களே!’ என்ற ஏமாற்றம் எழும். புதிதாக எதையும் செய்யும் ஆர்வமோ, துணிவோ இல்லாது போய்விடுவதும் இதனால்தான்

    `நான் ரொம்ப அழகாம்!’

    பதின்ம வயதினருக்கான பள்ளிக்கூடம் ஒன்றில், கல்வியில் நாட்டமோ, திறமையோ இல்லாத மாணவிகள் நிரம்பிய வகுப்பில் ஒரு பொதுவான தன்மை இருந்ததைக் கண்டு ஆச்சரியம் எழுந்தது எனக்குள். எல்லாருமே அழகாக இருந்தார்கள்.

    சிறு வயதில், `அழகு!’ என்று பலரும் கொஞ்சியிருப்பார்கள். அதனால் அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வளர்ந்திருக்கிறார்கள். வகுப்பில் ஒரு சிறு கண்ணாடியைக் கையில் வைத்துக்கொண்டு தம் முகவசீகரத்தை ரசித்துக்கொண்டிருப்பார்கள்!

    அழகு, அறிவு – இப்படி ஏதாவது ஒன்று இருந்தால் போதுமா? குணம்?

    உணர்ச்சிமயமான தாய்

    அச்சிறுமிக்கு இரண்டு வயதுதான். ஆனாலும், முதல் குழந்தை ஆயிற்றே, பிறர் பாராட்டுவதுபோல் நடக்க வேண்டாமா என்று தாய் ஓயாது அவளைத் திருத்துவாள். வெளியில் அழைத்துப் போகுமுன்னர் `அதைச் செய்யாதே, இப்படிப் பேசாதே’ என்று போதனை நடக்கும். மகள் மிரண்டுபோய் வாய்பேசாது இருப்பாள். அப்படியும் தப்பு கண்டுபிடித்து, வீட்டிற்கு வந்ததும் திட்டுவாள் தாய்.

    ஐந்து வயதிற்குள் தாயின் குணம் குழந்தைக்குப் படிந்தது. தாய் பேசுவதைப்போலவே அவளிடமும் பிறரிடமும் மரியாதையின்றி பேச ஆரம்பித்தாள்.
    `எவ்வளவு கண்டிப்பாக வளர்த்தேன்! இப்படி நடந்துகொள்கிறாளே!” என்று பெரியவள் கலங்குகிறாள். அவளுடைய வசவு அதிகரிக்கிறது.

    பெரியவர்களைப்போல் குழந்தைகள் எப்போதுமே நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சரியல்ல. அவர்கள் செய்யும் சிலவற்றை `குழந்தைத்தனம்’ என்று விட்டுவிட வேண்டியதுதான். அளவுக்குமீறி உணர்ச்சிவசப்பட்டால் எதிர்விளைவுக்குத் தயாராக இருக்க வேண்டும்.

    எல்லாரையும் மட்டம் தட்டும் தாய்

    தன் மகன் புத்திசாலி என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் தாய் அவள். ஆனால் எங்கள் பள்ளிக்கூடத்தில் அவன் வாங்கிய மதிப்பெண்களோ அவள் நினைப்பைப் பொய்ப்பிக்க வைப்பதாக இருந்தது.

    `உங்கள் ஆசிரியைகள் எல்லாரும் முட்டாள்கள்! உன் அறிவை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை!’ என்று மகனிடமே பழித்தாள். மகன்மூலம் பள்ளிக்கு ஒரு கடிதம் அனுப்பினாள், `என் மகனுக்கு நீங்கள் அளிக்கும் மதிப்பெண்களைவிட அதிகம் வாங்கத் திறமை இருக்கிறதென்று எண்ணுகிறேன்!’ என்று!

    சிலர், “நம் பக்கத்து வீட்டுக்காரர்கள் காட்டுமிராண்டிகள். இப்படியா, உரக்க டி.வியும் ரேடியோவும் போடுவார்கள்!” என்பார்கள்.

    இதையெல்லாம் கேட்டு வளரும் மகன் மட்டும் எப்படிப் பிறரை மதித்து நடப்பான்?
    முதலில் வீட்டுக்கு வெளியே இருப்பவர்களைக் குறை கூறுவதில் ஆரம்பித்து, பிறகு பெற்றோரிடமும் மரியாதை இல்லாதுதான் நடப்பான். ஏனெனில், அதுதான் சிறுவயதிலேயே அவனிடம் படிந்த குணம்.

    முன்பு, கிழக்கு மலேசியாவில் (போர்னியோ) பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் சிரித்தபடி கூறினார்: “பெற்றோர் பிரம்பைக் கொண்டு கொடுத்து, `எங்கள் மகன் தவறு செய்தால் இதைக்கொண்டு அடியுங்கள்!’ என்பார்கள்!”

    அதைக் கேட்டுக்கொண்டு இருந்த நாங்கள், “இப்போது, மகனை அடித்தால், அப்பாவே நம்மை அடிக்க வருவார்!” என்று சிரித்தோம்.

    `பெரியவர்களிடம் மரியாதையாக இரு!’ என்று குழந்தைகளுக்குப் போதித்தால் மட்டும் போதாது. நாமும் அவர்களது உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து, பிறரிடமும் அப்படி நடந்துகொண்டால், இளையவர்களுக்கு இயல்பாகவே அக்குணம் வரும்.

    அன்பில்லாமையால் எதிர்ப்பு

    தாயற்ற பெண் என்று வீட்டிலுள்ள பெண்டிர் எல்லாரும் தன்னைத் திட்டுவதாக எப்போதும் என்னிடம் குறையாகக் கூறுவாள் என்னுடன் படித்துக்கொண்டிருந்த வித்யா. அவள் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவாள்.

    ஒரு முறை, என் தாய் சமையலறையிலிருந்து, “கடைக்குப் போய் கொஞ்சம் சாமான் வாங்கி வருகிறாயா?” என்று உரக்க என்னிடம் கேட்டபோது, “இப்போதே வேண்டுமா, இல்லை, கொஞ்ச நேரம் கழித்துப் போகட்டுமா?” என்று கேட்டேன்.

    “அவசரமில்லை,” என்று பதில் வந்தது.

    எங்கள் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த வித்யா, “என்ன, நீ! உடனே சரியென்று சொல்கிறாய்! நானாக இருந்தால், `மாட்டேன்!’ என்று சண்டை பிடித்திருப்பேன்,” என்றாள்.

    அவள் ஏன் அதிசயப்பட்டாள் என்று நான் யோசித்தபோது புரிந்தது: பிறர் சொல்வதை உடனுக்குடன் நிறைவேற்றியாக வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இருக்கவில்லை.
    அம்மா, `வாங்கி வா!’ என்று கட்டளை இடவில்லை. கோரிக்கை விடுத்தாள். அதனால், செய்யலாமா, வேண்டாமா என்ற முடிவு எனக்கே விடப்பட்டிருந்தது.

    வித்யாவை வளர்த்தவர்களோ, தாயற்ற பெண்ணைத் தவறாக வளர்த்துவிட்டோம் என்று பிறர் குறை கூறிவிடுவார்களோ என்று பயந்து, அன்பை மறைத்து, கடுமையாக நடந்துகொண்டார்கள்.

    அவர்கள் போக்கால் ஆத்திரமும் வருத்தமும் ஒருசேர, தன்னிடம் ஓயாது குற்றம் கண்டுபிடிப்பவர்கள் அனைவரையும் அயர்ச்சி அடையச்செய்வதுதான் தன் வெற்றி என்பதுபோல் நடந்துகொண்டாள்.

    வகுப்பில் ஆசிரியை கேள்வி கேட்கும்போது, அலட்சியமாக எங்கோ பார்த்துக்கொண்டிருப்பாள். `வெளியே போய் நில்!’ என்று ஆசிரியை வழக்கமாக இரையும்போது, எதையோ சாதித்துவிட்டதுபோல், அளவுகடந்த ஓசையுடன் வெளிநடப்பாள். எங்களுக்கு அது வேடிக்கையாக இருக்கும். சிரிப்பை அடக்கப் பாடுபடுவோம்.

    தோல்வியிலும் வெற்றி

    குழந்தைகளிடம் உண்மையான அக்கறை கொண்ட பெற்றோர், அவர்கள் தோல்வி அடையும்போதும் கலங்காது, பக்கபலம் அளிப்பவர்களாக இருப்பார்கள். உதாரணமாக, ஒரு சிறுவன் ஏதாவது போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறாவிட்டால், தாயும் சேர்ந்து அழுகிறார்கள் (தொலைகாட்சியில் பார்த்தது). அதைவிட்டு, `நீ சிறப்பாகத்தான் செய்தாய். ஆனால், மற்றவர்கள் உன்னைவிட வயதிலும் அனுபவத்திலும் பெரியவர்கள். அந்த வயது வந்தால், நீயும் நன்றாகச் செய்வாய்!’ என்றால், அவனுடைய உற்சாகம் குன்றாது. `போட்டி’ என்றால் வெற்றியும் இருக்கும், தோல்வியும் இருக்கும் என்று புரிந்துகொள்வான்.

    ஒரே நிலையான நடப்பு

    சிறுவர்கள் செய்த தவற்றை சில சமயம் கண்டுகொள்ளாமல் இருப்பதும், வேறு சமயங்களில் (பிறர் தப்பாக நினைத்துவிடப்போகிறார்களே என்று) அளவுக்குமீறி தண்டிப்பதும் அவர்களைக் குழப்பத்தில்தான் ஆழ்த்தும். பிறர் பார்க்க, முக்கியமாக, அவர்கள் நண்பர்கள் எதிரே கண்டிப்பதும் தண்டிப்பதும் வெறுப்பைத்தான் வளர்க்கும்.

    “நீங்கள் சொன்னால் வாய்மூடி கேட்டுக்கொள்கிறான்! இதையே நாங்கள் சொன்னால் எதிர்த்துப் பேசுவான்!” என்று பல பெற்றோரும் வளர்ப்பவர்களும் என்னிடம் வருத்தத்துடன் கூறியிருக்கிறார்கள்.

    மரியாதை கொடுத்தால்தான் திரும்ப வாங்கலாம். இந்த நியதி எல்லா வயதினருக்கும் பொருந்துமே! அவர்களுடைய நன்மைக்காகச் சொல்கிறாம், நம் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக இல்லை என்பதைப் புரிய வைத்தால், அதன்படி நடப்பார்கள். பிறர் பாராட்டும்போது தம்மை அப்படி வளர்த்தவர்களிடம் கொண்ட மரியாதை கூடும்.

    தொடருவோம்

    Share