Blog

  • வாழ்க்கை நலம் – 60

    குன்றக்குடி அடிகள்

    60. நலமுற வாழ்வோம்!

    உடல் ஒரு அற்புதமான கருவி. உடம்பில் உயிர் இயங்குகிறது. உடற்கருவி வாய்க்காது போனால் உயிர் இயக்கம் இல்லை. நுகர்வு இல்லை. அறிவு இல்லை. உயிர் வாய்பாக அமையாது போனால் உடல் பயனற்றது. உடல் உயிருடன் இணைந்திருக்கும் பொழுதுதான் பெயர். உடலைவிட்டு உயிர் பிரிந்துவிட்டால் பெயர் போய்விடுகிறது. பிணம் என்ற புதுப்பெயர் வருகிறது.

    வாழ்வதற்கு இந்த வாழ்க்கையை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். வாழ்வாங்கு வாழ வேண்டும். முழுமையாக வாழ்தல் வேண்டும். உடல் – உயிர் சார்ந்த வாழ்க்கைக்குப் புலன்கள் முதன்மையானவை.

    புலன்கள் மூளையின் சார்புடையன. மூளையின் இருப்பு தலை. “எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்” என்பர். உடலுக்கு வாய்த்துள்ள கருவிகள் இரு வகையின. ஒன்று அறிவுகருவிகள். இவை மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியன. பிறிதொன்று செய்கருவிகள். இவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன.

    மனம் ஆற்றல் வாய்ந்த கருவி. காற்றைவிட வேகமாகச் செல்லும் தன்மையது. ஆனால், எங்கு, ஏன் போகிறோம் என்று அதற்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் ஆசைப்படுவதில்லை. இந்தப் பணியை புத்திதான் செய்கிறது. மனம் பற்றும் செய்திகளை ஆய்வு செய்து எடுத்துக் கொள்வதுதான் புத்தியின் வேலை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் புத்தி அளவுக்கு வளர்வதில்லை. மனத்தளவிலேயே நின்று விடுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் உணர்ச்சிவசப்படுவார்கள்; வாழத் தெரியாதவர்கள். சித்தம் சிந்திப்பது.

    சிந்தனை மனிதரின் சிறந்த அகநிலைத் தொழிற்பாடு! சித்தம் மிக மிக நுண்மையான பகுதியைக்கூட ஆய்வு செய்து, உண்மைகளைக் கண்டுபிடிக்கும்; ஆழமான உண்மைகளைக் கண்டுபிடிக்கும். அகங்காரம் என்பது முடிவு செய்யும் உறுப்பு. எடுக்கப்பெறும் முடிவுகள் மெய், வாய், கண், மூக்கு, செவிகள் வாயிலாகச் செயற்பாடுறும். இது உடலியக்கம்.

    உடலியக்கத்திற்கு உடலோடு கூடி வாழ்தலுக்கு இயற்கை, கால எல்லை நியதி செய்திருக்கிறது. மிகப்பெரிய சாதனைகள் செய்யக்கூடிய ஆற்றல் உடையது இந்த வாழ்க்கை. இந்த வாழ்கையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். மானுட வாழ்க்கையின் காலம், ஆற்றல் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

    புத்தி, ஆழமான உண்மைகளைக் காணுதல் வேண்டும். கண்கள் அறிவார்ந்த நெடிய தொலைநோக்குப் பார்வை பெற வேண்டும். கைகள் உழைக்கும் கரங்களாக விளங்க வேண்டும். இந்த உடல் நோய்களால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப் பெற வேண்டும். கதிரொளியில் தோய்தலும், காற்றில் உலாவுதலும் உடலுக்கு நல்லது.

    உடல், ஒரு உழைப்புச் சாதனம் – கருவி. இந்த உடலுக்குப் போதிய உழைப்புத் தராது போனாலும் நோய் வரும். உடல், உழைப்பில் ஈடுபடுத்தப் பெறுதல் வேண்டும். உடலுக்கு இசைந்த உழைக்கும் ஆற்றலைத் தரக்கூடிய நல்ல உணவு தேவை. இவையெல்லாவற்றுக்கும் மேலாக நல்ல எண்ணங்கள் வேண்டும். நல்ல எண்ணங்கள் நல்ல நினைவுகள் இல்லாத வாழ்க்கை நச்சுத்தன்மை அடைந்துவிடும்.

    மேலும் சிறப்பாக உயிருக்கு உயிராக விளங்கும் கடவுளிடம் பேசி மகிழ வேண்டும். இவையெல்லாம் அமைந்து நலமுற வாழ்தல் அறிவியல் சார்ந்த வாழ்க்கை. வாழ்வாங்கு வாழ்வோம்! வையத்திற்கு அணியாக வாழ்வோம்!

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • ஆண்டவன் உலகத்தின் முதலாளி!

    -கவிஞர் காவிரிமைந்தன்

    திரைப்பாடல்களில் உள்ள வரிகளைச் சிலர் மனனம் செய்துவிடுகிறார்கள்.  ஏன் தெரியுமா?  உண்மையை உயிரோட்டமான வரிகளாய்க் கவிஞர்கள் புனைந்திடுவதால்!  அவை காந்த சக்தியைப் போல் இதயம் கவர்ந்துவிடுகின்றன!  அதுவும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கதாநாயகன் திரையில் அப்பாத்திரத்தை ஏற்று உச்சரித்து நடிக்கும்போது, உயிர்க்காவியமாய் அப்பாடல் நிலைபெற்று விடுகிறது. அட.. அப்படிப்பட்ட பாடல் எது என்று கேட்கிறீர்களா?

    கவிஞர் ஆலங்குடி சோமு அவர்களது கற்பனையில் பிறந்த வரிகளைத் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் ஏழிசை வேந்தர் டி.எம்.செளந்தரராஜன் பாடியிருக்கிறார்.  இந்தப் பாடலின் விசேஷம் என்னவென்றால், முதன் முறையாக எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு பாடல்காட்சியில் அமைதியாக ஒரே இடத்தில் அமர்ந்தபடி, ஓர் ஆர்மோனியப் பெட்டியுடன் பாடுகின்ற அபூர்வமான பாடலாகும்!!

    தொழிலாளி என்னும் திரைப்படத்தில், தொழிலாளி என்னும் உயரிய பதத்திற்குப் பல்வேறு பெருமைகளை சேர்த்த பாடல் வரிகளிவை!

    ஒவ்வொரு திரைப்படத்திலும் உழைக்கும் வர்க்கத்தினரின் பிரதிநிதியாகத் தோன்றி நடித்த கதாநாயகனுக்கு இப்பாடல் அந்த ஏற்றத்தை ஏட்டளவில் எழுதிவிட முடியாது.  கவிஞர் ஆலங்குடி சோமு தந்த அட்சய பாத்திர வரிகளிவை.  அகிலம் உள்ள நாள் வரைக்கும் உலகில் உழைப்பாளர்கள் உள்ள வரை ஓங்கி ஒலிக்கும் வரிகளிவை!

    பாடல் :ஆலங்குடிசோமு
    பாடியவர் :
    டி.எம்.சௌந்தராஜன்
    இசை :
    கே.வி.மகாதேவன்

    ஆண்டவன் உலகத்தின் முதலாளி                                                      m.g.r. - ஆண்டவன் உலகத்தின் முதலாளி
    அவனுக்கு நான் ஒருதொழிலாளி
    அன்னை உலகின் மடியின்மேலே
    அனைவரும் எனது கூட்டாளி
    ஆண்டவன் உலகத்தின் முதலாளி
    அவனுக்கு நான் ஒருதொழிலாளி
    அன்னை உலகின் மடியின்மேலே
    அனைவரும் எனது கூட்டாளி

    இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்
    இலக்கணம் படித்தவன் தொழிலாளி
    இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்
    இலக்கணம் படித்தவன் தொழிலாளி
    உருக்கு போன்ற தன்கரத்தை நம்பி
    ஓங்கி நிற்பவன் தொழிலாளி

    ஆண்டவன் உலகத்தின் முதலாளி
    அவனுக்கு நான்ஒரு தொழிலாளி
    அன்னை உலகின் மடியின்மேலே
    அனைவரும் எனது கூட்டாளி

    கல்லைக் கனியாக மாற்றும் தொழிலாளி
    கவனம் ஒருநாள் திரும்பும்
    கல்லைக் கனியாக மாற்றும் தொழிலாளி
    கவனம் ஒருநாள் திரும்பும்
    அதில் நல்லவர் வாழும் புதிய சமுதாயம்
    நிச்சயம் ஒருநாள் மலரும்

    வாழ்க்கை என்றொரு பயணத்திலே
    பலர் வருவார் போவார் பூமியிலே
    வாழ்க்கை என்றொரு பயணத்திலே
    பலர் வருவார் போவார் பூமியிலே
    வானத்து நிலவாய் சிலர் இருப்பார்
    அந்தவரிசையில் முதல்வன் தொழிலாளி
    ஆண்டவன் உலகத்தின் முதலாளி
    அவனுக்கு நான்ஒரு தொழிலாளி
    அன்னை உலகின் மடியின்மேலே
    அனைவரும் எனது கூட்டாளி

    http://www.youtube.com/watch?v=AuWMezsKKxU&feature=player_detailpage

     

     

    Share
  • சிறுகை அளாவிய கூழ் (22)

    -இவள் பாரதி

    தாய் தேடுமென
    எல்லாக் குஞ்சுப் பறவைகளும்
    கூடடைய விரைகின்றன!                                         nivi-192x300

    என் குழந்தை
    நீ தேடுவாயென
    கூடடைய விரைகிறேன்
    போக்குவரத்து நெரிசலுக்குப்
    பெயர்போன
    இப்பெருநகர சாலைகளில்!

    ————–

    நீ முதன்முதலாய்
    எ(ன்)னையழைத்தபோது
    மீட்டெடுத்துக் கொண்டேன்
    கடந்த சில வருடங்களாய்
    நான் புழங்காமல் விட்டிருந்த
    ’அம்மா’ எனும் சொல்லை!

    —————

    உன் பால்பற்களுக்கும்
    மென் உதடுகளுக்கும்
    நாவசைப்பதற்கும் இடையில்
    இடறி விழுகின்ற
    தப்பி வருகின்ற
    துளிர்த்துத் தெறிக்கின்ற
    ஒவ்வொரு வார்த்தையும்
    உயிர்மெய் எழுத்துகளில்
    ஏதேனும் ஒன்றாகத்தானிருக்கின்றன!

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (108)

     

    — சக்தி சக்திதாசன்

     

     
    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன். இம்மடலை வரையும் போது சாரளத்தின் வழியாக வெளியே தெரியும் காட்சியைப் பார்க்கிறேன்.

    ஆதவன் தன் ஒளிக்கதிர்களால் பகலுக்கு பளிச்சென்ற வெளிச்சத்தை வாரியிறைத்துக் கொண்டிருக்கிறான்.

    பச்சைப் பசேலென்ற இலைகள் வசந்தகாலத் தென்றலினால் தாலாட்டப்படுகின்றன.

    ஆனால் இதே போலத்தான் இயற்கை எப்போதும் அமைதியாக அழகாகக் கதிரவன் கதிர்களை அள்ளிப்பருகிக் கொண்டிருக்கப் போகிறதா ?

    இல்லை வானம் கறுக்கத்தான் போகின்றது கதிரவனைக் கருமேகங்கள் மறைக்கத்தான் போகின்றன இதே சாரளத்தினூடாக கறுத்துப் போன பகலையும் பார்க்க வேண்டித்தான் இருக்கப் போகிறது.

    ஆனால் நாம் நாமாகத்தான் இருக்கப் போகிறோம் எமது விழிகளின் பார்வைகள் அதே கோணத்தினூடாக காணத்தான் போகின்றன.

    எதற்காக இந்தத் தத்துவப் பீடிகை என்று எண்ணாதீர்கள். சீட்டாட்டத்தில் எம் கைகளில் தவழப் போகும் சீட்டு எது என்று முன்கூட்டியே தெரிந்திருக்காவிட்டாலும் தரப்படும் சீட்டுக்களை வைத்து அச்சீட்டாட்டத்தில் நாம் ஜெயிக்க எத்தனையோ வழிகளில் முயல்கிறோம்.

    அதே போல வாழ்க்கையில் எத்தகைய நிலைமைகள் எம்மீது எமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் திணிக்கப்படுகிறதோ நாமறியோம் ஆனால் நாமனைவரும் தரப்பட்ட நிலைமைகளில் எமது வாழ்க்கையை வெற்றிகரமாக ஆக்குவதற்கு முடிந்தளவு முயற்சிக்கிறோமா ?

    மிகவும் சிக்கலானதொரு கேள்வி இல்லையா?

    இங்கேதான் நான் உங்களுக்கு ஒரு இளைஞனைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவனுடைய வாழ்க்கை நம் எல்லோருக்கும் ஒரு எடுத்துக் காட்டாக ஏன் சிலசமயங்களில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வல்லமை கொண்டது.

    அவ்விளைஞன் யார் என்று அறிய ஆவலாயிருப்பீர்கள் இல்லையா? இன்றைய ஊடகத்துறையின் கணிசமான வளர்ச்சியினால் இவ்விளைஞனைப் பற்றி நீங்கள் கூட அறிந்திருக்க வாய்ப்புண்டு.

    ss1இங்கிலாந்தின் வடபகுதியில் இருக்கும் ஸ்ரட்வேட்ஷ்யர் (Stratfordshire) எனும் இடத்திலுள்ள பேர்ன்ட்வூட் (Burntwood) எனும் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன் சட்டன் ( Stephen Sutton ) எனும் வாலிபனைப் பற்றியே குறிப்பிடுகிறேன்.

    அப்படி அவனின் பெருமைதான் என்ன ?

    19 வயதே நிரம்பிய இவ்விளஞன் தனது 15வது வயதில் தான் ஒரு வகை புற்றுநோயால் பீடிக்கப்ப்ட்டிருப்பதை அறிந்தான்.

    அதைத்தொடர்ந்து பல விதமான வைத்தியங்களைக் கைக்கொள்டாலும் தன் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை.

    கடந்த வருடம் முற்பகுதியில் அவனுடைய புற்றுநோய் குணமாக்கப்படமுடியாத ஒன்று இன்னும் அதிக காலத்திற்கு அவன் உயிர்வாழ்ப் போவதில்லை எனும் உண்மையை அவன் அறிந்தான்.ss2

    அவன் உலகம் இடிந்து போகவில்லை , அவன் வாழ்க்கை ஒடிந்து போகவில்லை. மாறாகத் தனது இந்த நிலையைத் தனக்கு நேர்மறையான சாதகமாக்கிக் கொண்டான்.

    புது வைராக்கியத்தோடு வாழ்க்கையை எதிர்கொண்டான் சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகநூலில் “ஸ்டீபனின் கதை (Stephen`s storey) எனும் பக்கத்தை உருவாக்கினான்.

    தான் மரணிக்கும் முன்பாக சாதிக்க விரும்பும் 46 விடயங்களை தனக்குத்தேவையான படி வரிசைப்படுத்தி அதனை முகநூலின் மூலம் பகிர்ந்து கொண்டான்.

    அவற்றில் விமானத்திலிருந்து பாரசூட் வழியாக குதிப்பது, மற்றும் வெம்பிளி உதைபந்தாட்ட மைதானத்தில் 90000 ரசிகர்களுக்கு முன்பாக ட்ரம் வாசிப்பது போன்றவற்றோடு தனக்கு உறுதுணையாக இருந்த ” டீனேஜ் கான்சர் ட்ரஸ்ட்” எனும் தொண்டு ஸ்தாபனத்திற்கு 10000 ஸ்ரெலிங் பவுண்ஸ் வரை சேகரித்துக் கொடுப்பது என்பன அடங்கின.

    சாதாரணமாக இப்படியான நோயினால் மரணிக்க இருப்போரின் மனநிலை பொதுவாக சமுதாயத்தின் மீதும் உலகின் மீதும் ஆத்திரம் கொள்வதாக இருக்கும் ஆனால் இந்த 19 வயது இளைஞனோ சமுதாயத்தையும் உலகையும் நேசித்தான். தன்னைப் போல வேறு பலர் மரணிக்கக் கூடாது என்று புற்றுநோய்க்கு மருந்து தேடும் தொண்டு ஸ்தாபனத்திற்கு நிதி சேகரிக்க முயற்சித்தான்.

    எத்தனை உயர்குணம் ! எத்தகையதோர் அர்ப்பணிப்பு !

    அவனுடைய இந்த உயர்குணத்தின் தாக்கம் சமூகவலைத்தளங்கள் எல்லாம் குபீரெனப் பற்றிக் கொண்டது. பல முன்னனி தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் அவனுக்கு உதவி செய்ய முன்வந்து பல நிதிசேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

    விளைவு !

    10000 பவுண்ஸ் மட்டுமே சேர்க்க எண்ணிய அவனது நிதிக்கு இதுவரை சுமார் 3 மில்லியன் 30000 வரையிலான ஸ்ரேலிங் பவுண்ஸ் சேர்ந்துள்ளன.

    இங்கிலாந்தின் பிரதமர் தொடங்கி இங்கிலாந்தின் கடைசிக் குடிமகன் வரை அனைவரும் இவ்விளஞனின் தன்னலமில்லா சேவையையும், மனதின் உறுதியயும் கண்டு பிரமித்துப் போயிருக்கிறார்கள்.

    இத்தகையதோர் நல்ல இதயம் கொண்ட இளஞனை காலனும் அதிகமாக நேசித்தான் போலிருக்கிறது இன்று காலை (14/05/2014) சுமார் 11 மணியளவில் ஸ்டீபன் சட்டன் என்னும் உன்னதமான இளைஞனை மனிதாபிமானம் மிக்க ஒரு வீரனைக் காலன் கவர்ந்து சென்று விட்டான்.

    அவ்வீரப்புதல்வனை ஈன்ற அன்னையின் வசனங்கள் மனதைத் தொட்டு நிற்கின்றன …

    “என் மைந்தனின் செய்கையினால் இதயம் பூரிக்கிறது
    என் மைந்தனின் பிரிவின் வலியினால் இதயம் துடிக்கிறது”

    காற்றோடு காற்றாக அவனது மூச்சு மறைந்தாலும் நேற்றோடு நேற்றாக அவன் நினைவுகள் மறையாது.

     
    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

     

    Share
  • முக்கோணக் கிளிகள்

     

     

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 4
    image

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    jay5

    jay 6

    jay7

    jay8

    Share
  • திருமால் திருப்புகழ் (84)

     

    கிரேசி மோகன்

    Tamasoma jyotirgamaya: new forever series. #krishnafortoday Keshav
    Tamasoma jyotirgamaya: new forever series. #krishnafortoday
    Keshav

    கண்ணன் திருப்புகழ்….
    ——————————————
    ’’கண்ணன் அந்தாதி’’(வெண்பா)….
    ———————————————————-

    Dialogues with Arjuna series. #krishnafortoday Keshav
    Dialogues with Arjuna series. #krishnafortoday
    Keshav

    நிருத்தம் பயில நினக்கொரு வாய்ப்பு,
    கருத்த நவநீதக் கண்ணா, -பருத்த
    அகந்தையாம் ஆற்றில், புகுந்ததே ஆசை,
    முகுந்தாயிக், காளியனுன் மன்று….(26)

    மன்றாடி ஈசன், மனம்குளிர மோகினியாய்,
    அன்றாடிப் பாடிய அச்சுதா, -மன்றாடிக்
    கேட்கிறேன், வைகுந்தா காட்சிதா கைலாசன்,
    வேட்கை, அளவென் விருப்பு….(27)

    விருப்புடன் மாலோலன், விரைகழல் பற்றிச்,
    சிறப்புடன் வாழ்வோம் செகத்தில், -மறுப்பிதில்,
    உண்டென்றால் கேளீர், உறங்கையில் உண்டாநீர்
    உண்டில்லை சொல்வீர், உடன்….(28)

    உடனிருக்கும், ஓட வடமிடும், வாடக்
    கடன்பட்டார் நெஞ்சாய்க் கலங்கும் -புடமிட்ட
    பொன்னாக்கும் மண்ணை, பொலிவாக்கும் வாழ்க்கையை
    கண்ணனைக் கூடிக் கிட….(29)

    கிடந்தால் உறக்கம், கிளர்ந்தெழ உண்பாய்
    இடர்களையும் சாக்கில் இகத்தை -தொடர்ந்திடும்
    இக்கூத்தைக் காண இறைவா எமெக்கெதற்கு
    வக்கத்த வேடிக்கை வாய்ப்பு….(30)
    ————————————————————————————————————————–

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/

    Share
  • இனி ஆவன செய்வோம்

     

    — இன்னம்பூரான்

     

    இனி ஆவன செய்வோம்

     

    tamizhan endru solada

    தேசீய தேர்தல் 2014 இந்தியாவுக்கு ஒரு திருப்புமுனை என்பதை விட திருகிய முனை என்று சொல்வது சாலத்தகும். 81.4 கோடி வாக்காளர்களில் 55.1 கோடி வாக்காளர்கள். 66.38 விழுக்காடு வாக்களித்தனர்.. கடந்த தேர்தலை விட 13.4 விழுக்காடு அதிகமான வாக்காளர்களில், இளைய சமுதாயம் கணிசமாக உளர். தேர்தல் கமிஷன் திறம்பட நிர்வகித்தது பற்றி உலகம் பாராட்டுகிறது. செம்மையான நிர்வாகத்தலைமை இருந்தால், அரசு ஊழியர்கள் உருப்படும் வகையில் இயங்குவர் என்பதை, அரசியலர் கட்டுப்பாட்டில் இருந்தபோது நெறியில் தவறியவர்கள் என கருதப்படும் அதே ஊழியர்கள் நிரூபித்துவிட்டனர் என்பது ஒரு பாடம்.

    எல்லா கட்சியினரும் விதிமுறைகளை மீறுவதில், துட்டு கொடுப்பதில், வசை பாடுவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர் என்றால் மிகையாகாது. பிரதிநிதித்துவ ஜனநாயகம் இன்றும் கானல் நீர் தான். கதவோரம் ஒளிந்திருந்த கருத்துக் கணிப்பாளர்கள், ஒருமுகமாக, திருகிய முனை பாட்டுப்பாடுகிறார்கள். தற்காலம், வருங்கால பிரதமராக பெரிதும் பேசப்படும் திரு. நரேந்திர மோடி,

    ‘நான் அரசு இயந்திரத்தை நல்லதொரு நிர்வாகியாக இயக்குவேன்; நாடு சுயநம்பிக்கையை தொலைத்து விட்டது; தேக்கத்தில் அமுங்கி விட்டது; உந்துதல் சக்தியுடன் அதை உசுப்பி விட்டால், நடக்கவேண்டியவை தானே நடக்கும்.’

    … என்கிறார். இத்தருணம், போனமாதம் அமெரிக்க நாடாளுமன்றம், ‘திரு. நரேந்திர மோடி பிரதமரானல், அவருக்கு A-1 (diplomatic) visa தனக்குத்தானே வந்து சேரும்’ என்று வருமுன் காப்போனாக உரைத்ததையும், அமெரிக்க அதிபரின் சம்பிரதாயம் கலந்த வரவேற்பையும் நாம் உன்னித்து கவனிக்க வேண்டும். மற்ற நாடுகள் அதே வழியில் தான் பயணிப்பார்கள். நான் எதிர்பார்த்தபடியே, ‘ஊடலும் கூடலுமாக’ இயங்கும் பங்குச்சந்தை அண்ணாந்து பார்க்கிறது. வருங்காலத்தில் அதற்கு மராமத்து தேவை. அது கபளீகரர் உலகம். முற்றுகை போதும். இனி ஆவன செய்வோம்.

    அதற்கு ஏதுவாக, தலைமை தேர்தல் கமிஷனர் திரு.வி.எஸ்.சம்பத்
    அளித்த ஒரு பேட்டியின் சாராம்சம்.

    “வன்முறையை ஓரளவு கட்டுப்படுத்தினாலும், செல்வத்திமிர் (மணி பவர்), நிழல் செல்வம், பணப்புழக்கம், எல்லாமே களத்தில் இறங்கி விடுகின்றன. அதை தடுக்க, கமிஷன் மட்டும் போதாது. தவிர, சட்டப்படி, விதி மீறி கெலித்த பிரதிநிதிகளை வீட்டுக்கனுப்ப எம்மிடம் ஆளுமை கொடுக்கப்படவில்லை. (பேட்டி கண்டவர் 2009 தேர்தலில் விதி மீறி ஆறு வருடங்கள் பதவியிலிருந்த் திரு.அஷோக் சாவன் பற்றி வினவினார். அது ஒரு டெஸ்ட் கேஸ் என்பதால் வருங்காலத்தில் நல்லது நடக்கலாம் என்றார், திரு.சம்பத்.)

    ஆக மொத்தம் இன்றைய நிலை:
    முறைகேடுகளும் தேர்தல் உத்திகளாக தொடரக்கூடுபவை. சாளரத்தை திறந்தோம். இனி ஆவன செய்வோம்.

    1. மக்கள் சக்தி மங்கக்கூடாது. அது வெளிச்சத்தில் இயங்கவேண்டும், வன்முறையை அறவே தவிர்த்து.
    2. பேட்டை தோறும், மக்கள் நலத்தை வெளிப்படையாக நாடும் தன்னார்வ குழுக்கள் அமைத்து, பிரதிநிதிகளை கண்காணித்து, பொறுப்புடன் தட்டிக்கேட்கும் பண்பை உருவாக்குங்கள். தரம் கெட்டவர்கள் உட்புகுந்து ஆதாயம் தேடுவார்கள். விழிப்புடன் அவர்களை வெளியேற்றுங்கள். இன்னல்கள் உண்டு. அண்ணல் காந்தி சமாளிக்காததா?
    3. கைகளை கூப்பி, காலை பிடித்து, சமயத்தில் காசை வீசி, கெலித்த பிரதிநிதிகள், உமது ஊழியர்கள். அவர்களை சிம்மாசனத்தில் தூக்கி வைத்து அவர்களின் மண்டை கனத்தை ஏற்றாதீர்கள்.
    4. இனபேதங்கள், ஏற்ற தாழ்வுகள், ஆணவம், பெண்ணிய எதிர்ப்பு போன்றவற்றை பேணாதீர்கள்.
    5. மக்கள் நலம் தெளிவு: தேச பாதுகாப்பு, யோக்கியமான நிதி நிர்வாகம், சட்டம் தவறாமை வகையறா: மத்திய அரசு நிலைப்பாடு
    6. இணக்கமான மாநில நிர்வாகம், அணுக்கத்தொண்டு, அடுத்த நிலைப்பாடு.
    7. தொகுதி நலம் முக்கியம். அவரவர் தொகுதியை, பிரதிநிதியும், மக்கள் குழுவும், கவனித்துக்கொள்ள வேண்டும். – சுற்றுச்சூழல், மின்சாரம், தண்ணீர் வகையறா.
    8. மக்கள் குழுக்கள் ஒன்று சேர்ந்து, கல்வி, மருத்துவம், முன்னேற்றம் ஆகியவை பற்றி, அரசுக்கு ஆலோசனை அளிக்க வேண்டும்.
    9. மேலாண்மை, கள்ளைக்குடிப்பது போல, அதிகார மயக்கம் தரும், யாராயிருந்தாலும். எனவே, மேலாண்மை கண்காணிப்பு இல்லையென்றால், செத்தோம்.
    10. மேற்படி இயங்க, நாம் வாய்மையை கடைபிடித்து, லஞ்சம் கொடுக்காமல், தன்னலம் மாடும் நாடாமால், கறாராக இருக்க வேண்டும்.

    இதெல்லாம் வேலைக்காவாது என்பர் பலர். அப்படியே இருந்து விட்டோமானால், மோடி ஆண்டாலும், ராகுல் ஆண்டாலும், அரவிந்த் ஆண்டாலும், ‘மேலாண்மை, கள்ளைக்குடிப்பது போல, அதிகார மயக்கம் தரும், யாராயிருந்தாலும். எனவே, மேலாண்மை கண்காணிப்பு இல்லையென்றால், செத்தோம்.’ என்பது நடை முறையில் வந்து விடும்.

     

    இன்னம்பூரான்
    13 05 2014

    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    சித்திரத்துக்கு நன்றி:
    http://3.bp.blogspot.com/-dVSaHvVmvhc/U0vGkt31XLI/AAAAAAAABRY/tKDOt8EG5w8/s1600/mb.jpg

    Share
  • கம்பனே…!

    -பிச்சினிக்காடு இளங்கோ

    கம்பனே…
    நான் இதுவரை
    நான்தான்!

    நீ                                                                                                                           Kambar2 for picchinikadu
    என் தூரத்து நண்பனாகவே
    இருந்தாய்!

    குருகுலக் கல்வி
    உன்னிடமிருந்து
    எனக்கில்லை!

    இருந்திருந்தால்
    என் சுயத்தின் சாயம்
    தெளிவற்றிருக்கும்!

    எனக்கென ஒரு
    சுயம்
    இல்லாதுமிருந்திருக்கும்!

    பள்ளிப் பாடத்தில்
    உன்னைப் படித்தேன்!
    கம்பன் கழகத்தில்
    உன்னைக் கேட்டேன்!

    ஒருமுறை
    கம்பன்கழகக் கவியரங்கில்
    உன்னைப் பாட நேர்ந்தது!

    அது
    கேள்வியை வைத்துக்கொண்டே
    நடத்திய வேள்வியானது!

    சலித்துப் புடைத்தால்
    எச்சம்
    வேள்வியின் மிச்சம்
    நான்கு வரிகளானது 

    அவ்வளவுதான்
    அறிமுகம்!

    அவ்வளவுதான்
    என் இருப்புக் கணக்கில்
    உன் இருப்பு!

    ஒரு நெருக்கம்
    இல்லாதிருந்ததால்
    நான் இதுவரை
    நானென்று சொல்லமுடிகிறது!

    எனக்கும்
    எனக்குமான
    அடையாளத்தில்
    நிம்மதியிருக்கிறது!
    பெருமையுமிருக்கிறது!

    எந்தச் சாயலுமில்லாமல்
    என்வழியில் வந்தநான்
    வழியில்
    உன்னைச் சந்தித்தேன்!

    இனிவரும் பயணத்தில்
    நீ
    உதவக் கூடும்!

    எல்லோரையும்போல
    நானும்
    கடன்காரனாகக் கூடும்!

    உதவியேதும் இதுவரை
    இல்லையென்பதே
    இன்றைய பெருமை!

    அப்படியேதும்
    நீ உதவினால்
    நன்றிசொல்வேன்
    அது
    என் கடமை!!

    Share
  • பூக்களைப் பறியுங்கள்!

    சீர்காழி உ. செல்வராஜு

    புதைந்து செரிந்த புலனெறி வழக்கங்கள்
    புதைபொருள் போலப் புராணங்கள் பற்பல!                                        roses for பூக்களைப் பறிக்காதீர் கவிதை
    பூத்துக் குலுங்கும் சொற்பூக்கள் ஏராளம்
    பூஞ்சோலை போன்றதே பைந்தமிழைப் பாரீரோ?

    எதுகையும் மோனையும் எழிலாய் மின்னிடும்!
    எழுத்துகள் யாவையும் எக்காலும் இனித்திடும்!
    ஆடலாய்ப் பாடலாய் ஆகமங்கள் கமழ்ந்திடும்!
    ஆலம் விழுதுபோல் அத்தனையும் தோரணங்கள்!

    கலையும் சுவையும் இரண்டறக் கலந்த
    கன்னித் தமிழோ கவிநயம் புகட்டிடும்!
    காப்பியப் படைப்புகள் கண்முன் நிறுத்திடும்
    காலத்தால் அழியாக் கலைச்சொற்கள் பாரீரோ?

    எளிதில் புரிந்திடவே எடுத்தாள்வோம் புதுமுறையில்
    எங்கெங்கும் மணம்வீச எழுத்துப்பணி செய்திடுவோம்!
    புலமையோர் ஆக்கங்கள் புதுமை படைத்திடவே
    புவியெங்கும் பரப்பிடுவோம் பூக்களைப் பறியுங்கள்!!

    Share
  • யாரடா மனிதன் இங்கே….

    — கவிஞர் காவிரி ​மைந்தன்

     

    யாரடா மனிதன் இங்கே….

     

    கவிஞர் கண்ணதாசனும் கவிஞர் வாலியும் எதிரெதிரே கடை விரித்தவர்கள்.. ஒருவருக்கு வரவு என்றால் ஒருவருக்கு பொருளாதார ரீதியில் இழப்பு! எனினும் தமிழுக்கும் இருவராலும் வரவு!!

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் இருவரும் பாடல்கள் எழுதிக் குவித்திருக்கிறார்கள். அப்படி இருவரிடம் பாடலைப் பெறுகின்ற வேலையை மிகவும் சாதுரியமாக.. வெற்றிகரமாக செய்திருக்கிறார் மெல்லிசை மன்னர். காலையிலே கவிஞர் ஒரு பாடல் எழுதினார் பாரு.. அதைப்போல உன்னாலே எல்லாம் எழுத முடியாது என்று கவிஞர் வாலியிடமும் .. .. வாலி ஒரு பாடல் எழுதினான் பாரு.. அதைப்போல உன்னாலே எழுத முடியாது என கண்ணதாசனிடமும் சொல்லி அவர்களை கிளர்ந்தெழச்செய்து பாட்டு இன்னும் நன்றாக வர வேண்டும் என்று பல வகைகளில் போராடியிருக்கிறார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

    அப்படி.. வாங்கப்பட்ட பாட்டு இது.. கவிஞர் வாலி எழுதிய ஒளிவிளக்கு படப்பாடல்.. தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா? இதற்கு இணையாக கண்ணதாசன் எழுதித்தந்த லட்சுமி கல்யாணம் திரைப்படப்பாடல்.. யாரடா மனிதன் இங்கே கூட்டி வா அவனை இங்கே..

    yarada manithan

    மனிதன் என்பவன் ஒரு நாகரீகமான மிருகம் அவ்வளவுதான். இதில் மாற்றுக் கருத்தில்லை.. மற்றவர்கள் முன்னாடி நம்ம பெயர் கெட்டுவிடுமே என்று கட்டுப்படுகிறானே தவிர. அடிப்படையில் மிருக குணமே நிறைந்திருக்கும்.

    வாழ்க்கையை முற்றிலும் உணர்ந்தவர்கள்.. மனவியல் படித்தவர்கள்.. உளவியல் அறிஞர்கள்.. ஞானிகள்.. உணர்ந்தபடி.. மனிதன் என்னும் நிலை என்ன தெரியுமா..?

    மிருகத்திற்கும் தெய்வத்திற்கும் இடையிலான ஒரு நிலைதான் மனிதன் என்பதாகும். மிருகமாக இருந்தவனை தெய்வமாக உயர்த்தும் நிலையில் இடையில் வாழ்பவன்தான் மனிதனாகிறான்.

    கண்ணதாசன் வரிகளிலேயே இதற்கான விளக்கமிருக்கிறது.

    ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்..
    அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..

    மனிதன் என்பவன் யார்? இவனது குணங்கள் என்னென்ன? மிருகத்திடமிருந்து எப்படி வேறுபடுகிறான்? இந்தப் பகுத்தாய்வை ஒரு திரைப்பாடலில் கொண்டுவந்து சேர்த்த பெருமை கண்ணதாசனையே சேரும்!

    சிரிப்பினில் மனிதனில்லை
    அழுகையில் மனிதனில்லை
    உள்ளத்தில் மனிதனில்லை
    உறக்கத்தில் மனிதனுண்டு

    வாழும் மிருகம் தூங்கும் தெய்வம்
    நடுவே மனிதனடா
    எங்கோ ஒருவன் இருந்தால்–அவனை
    உலகம் வணங்குமடா

    இந்தப்பாடலைப் பார்த்தால்.. மிருகத்திற்கும் தெய்வத்திற்கும் இடையிடையிலுள்ள தூரத்தை வரையறுத்துத் தந்த கண்ணதாசன்.. மனிதன் இதற்கிடையில் இருக்கிறான் என்பதையும் சூசகமாக சொல்கிறார் பாருங்கள்!

    http://youtu.be/RABmwdzsOYw

     

    பாடல் : யாரடா மனிதன் இங்கே

    http://youtu.be/RABmwdzsOYw

    யாரடா மனிதன் இங்கே
    கூட்டிவா அவனை அங்கே
    இறைவன் படைப்பில்
    குரங்குதான் மீதி இங்கே

    மனிதரில் நாய்கள் உண்டு
    மனதினில் நரிகள் உண்டு
    பார்வையில் புலிகள் உண்டு
    பழக்கத்தில் பாம்பு உண்டு

    நாயும் நரியும் புலியும் பாம்பும்
    வாழும் பூமியிலே
    மானம் பண்பு ஞானம் கொண்ட
    மனிதனைக் காணவில்லை

    சிரிப்பினில் மனிதனில்லை
    அழுகையில் மனிதனில்லை
    உள்ளத்தில் மனிதனில்லை
    உறக்கத்தில் மனிதனுண்டு

    வாழும் மிருகம் தூங்கும் தெய்வம்
    நடுவே மனிதனடா
    எங்கோ ஒருவன் இருந்தால்—அவனை
    உலகம் வணங்குமடா

     

     

    Share
  • உன்னை ஒரு மலராய்….. !

     

    கே. ரவி

    vivid_flowers-wide

    உன்னையொரு மலராய் மாற்றுகிறேன் – இதழ்
    ஒவ்வொன்றிலும் சுடர் ஏற்றுகிறேன்
    என்னென்ன வண்ணங்கள் காட்டுகிறாய் – என்
    எண்ணமெலாம் இசை மீட்டுகிறாய்
    (உன்னையொரு)

    பொன்னிறமும் செந்நிறமும் கூடியதாய்த் – துளிப்
    புன்னகையி லேஇழை ஓடியதாய்
    மின்னல் நடனம் களியேறியதாய் – மழை
    மேகமெல்லாம் அணை மீறியதாய்
    என்னென்ன வண்ணங்கள் காட்டுகிறாய் – என்
    எண்ணமெலாம் இசை மீட்டுகிறாய்
    (உன்னையொரு)

    சின்ன சின்ன முத்துக்களும் தூவுகிறாய் – புயல்
    சீறிவரும் போதுநடை மாறுகிறாய்
    அந்திப்பகல் நாடகம் ஆடுகிறாய் – உயிர்
    அத்தனையிலும் கலந்தோடுகிறாய்
    என்னென்ன வண்ணங்கள் காட்டுகிறாய் – என்
    எண்ணமெலாம் இசை மீட்டுகிறாய்
    (உன்னையொரு)

    வெட்டவெளியோ அதில் நட்ட விதையோ
    விண்ணும்மண்ணு மாய்ப்பிளந்து நிற்கும் வடிவோ
    பட்டப்பகலில் கரம் ஆயிரமோ – இருள்
    படர்ந்ததும் கோடிப் பூச்சரமோ
    (உன்னையொரு)

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(27)

    -செண்பக ஜெகதீசன்

    கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
    களைகட் டதனொடு நேர்.  
    (திருக்குறள்- 550: செங்கோன்மை)

    புதுக் கவிதையில்…

    வயலில் பயிர் வளர,
    வளரவிடாது அழித்திடல் வேண்டும்
    இடையில் வளரும் களையை…

    இதுபோன்றதுதான்
    குற்றம்மிகு கொடியவரை
    அரசு
    தண்டித்து அழிப்பதும்!

    குறும்பாவில்…

    கொடியவரைத் தண்டித்து
    வயலில் களைபோல் அழிப்பது
    அரசின் கடமை!

    மரபுக் கவிதையில்…

    வயலில் வளரும் பயிரோடு
    வீணாய் வளரும் களையதையே
    தயவு கொஞ்சமும் காட்டாமல்
    தனியே பிடுங்கி அழித்திடுதல்,
    பயனது ஏது மில்லாத
    பாவச் செயலுக் கஞ்சாத
    பயமிகு கொலைஞரை ஒறுத்தழிக்கும்
    பணிசெயும் அரசுக் கொப்பாமே!

    லிமரைக்கூ…

    கொடியவரை ஒறுத்தரசு பறித்திடும் உயிர்!
    களையை அழித்தால்தான்
    செழிப்பாய் வளரும்பார் வயலிலே பயிர்!

    கிராமிய பாணியில்…

    வெள்ளாம வெள்ளாம
    வெவரமான வெள்ளாம…

    வயலுலதான் பயிர்வளரும்
    கூடவேதான் களவளரும்…

    களபறிச்சி ஒதுக்குனாத்தான்
    பயிர்வளரும் பலன்குடுக்கும்,
    கொறயில்லாம பலன்குடுக்கும்!

    இதுபோலத்தான்,
    அரசாங்கமும் செய்யவேணும்!
    அடக்கிடணும் அடக்கிடணும்
    கொடுமகள அடக்கிடணும்!
    அழிச்சிடணும் அழிச்சிடணும்
    கொடியவர அழிச்சிடணும்!

    இதுவுந்தான்,
    வெள்ளாம வெள்ளாம
    வெவரமான வெள்ளாம!

     

    Share
  • நரசிம்மம்

     

    சு.ரவி

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : சு. ரவி

    அவன்வே தங்கள் மீட்டுக் கொடுக்க ஆழ்கடல் தோன்றிய ஒருமத்ஸ்யம்
    அவனே பாற்கடல் கடையும் நேரம் வடவரை தாங்கிய ஒருகூர்மம்!
    அவனே ஏனம், எனவடி வங்கள் பலவாய் எடுத்துத் தோன்றிடினும்
    அவதா ரத்தின் பரிணா மத்தில் அற்புத வடிவம் நரசிம்மம்

     
    விரிவெளி எங்கும் வியனுல கெங்கும் விரவிப்பரவிய தொருவடிவம்!
    எரியழல், நீர்,நிலம்,காற்றென எங்கும் எல்லாப் பொருளிலும் அது உறையும்!
    சிறிதொரு துகளிலும், அணுவிலும் அணுவின் கருவிலும் கூட அது நிறையும்!
    இரணியன் பிள்ளை சொல்லிய சொல்லைச் சத்தியமாக்கும் நரசிம்மம்!

     
    யுகங்கள், கணங்கள் ஒடுங்கும் கலங்கும் உள்ளே சீயம் கர்ஜிக்கும்
    அகமும், புறமும், அவனே என்னும் அடியார் அன்பில் அதுசிக்கும்!
    நகங்கள் படாமல், பக்தனை நாவால் நக்கிக் கொடுக்கும் நரசிம்மம்!
    அழகிய சிங்கம் துளஸி தரிக்கும், அபயமளிக்கும், துயர்நீக்கும்

     
    அழகிய வடிவினள் திருமக ளைத்தன் மடியிலிருத்தும், மகிழ்விக்கும்
    கழலிணை பணிவோர், அறவழி மறவோர், அடியவர் வாழ்வின் கலிதீர்க்கும்
    பழவினை யெல்லாம் பானகமாக்கித் தாகம் தணிக்கும் நரசிம்மம்!

    போக்கும், வரவும் புரியும் வரையில் புதிராய்த்தோன்றும் இவ்வாழ்வும்!
    யாக்கைக் குள்ளே யார்? இது செல்லும் யாத்திரை எங்கே போய்ச்சேரும்?
    கேட்கும் மனமே! கேள்விகள் எல்லாம் விடைபெறும் ஒருநாள்! அதுமட்டும்
    வாக்கில் பிறக்கும் கவிதைக் குள்ளே வார்த்தை பிளக்கும் நரசிம்மம்!

     

     

    Share
  • ஆத்திசூடி யார்? – ஓர் சுவையான கருத்தாடல்…சில விளக்கங்கள்!

    அன்புள்ள வல்லமை வாசகர்களுக்கு,

    திங்கட் கிழமை (12/05/2014) அன்று வல்லமை இதழில் வெளியான ’ஆத்திசூடி யார்? – ஓர் சுவையான கருத்தாடல்’ என்ற பகுதியின் இறுதிப் பத்தியில்  “எனவே, ஆத்திசூடி நூலின் கடவுள்வாழ்த்தில்  ’ஆத்திசூடி’யாகக் குறிப்பிடப்படுவர் சமண தீர்த்தங்கரராகிய பார்சுவநாதரே என்பது ஐயத்திற்கிடமின்றித் தெளிவாகின்றது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது முனைவர் நா. கணேசன் அவர்களின் கருத்தே அன்றி வல்லமை ஆசிரியர் குழுவின்  தீர்மானமன்று!

    நன்றி!

     

    Share
  • திருமால் திருப்புகழ் (83)

     

     

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    ——————————————
    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————-
    ’’கண்ணன் அந்தாதி’’
    ———————————–
    ஆழ்ந்து படித்தென்ன, ஆராய்ந்து பார்த்தென்ன,

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    வீழ்ந்து கிடப்போர்க்கே விஷ்ணுபதம், -தாழ்ந்த,
    சபரியெச்சில் ஏற்ற, சமத்துவத்தின் மூலம்,
    அபரி மிதமான, அன்பு….(21)

    அன்பே எதுகையாய், ஆர்வமே மோனையாய்,
    உன்பால் தளையற்ற உந்துதலால், -வெண்பாக்கள்
    பாடி அணுகுகிறேன், வேடிக்கைக்(கு) அல்லகண்ணா,
    வாடிக்கை யாளனாக வா….(22)

    வாவென்றால் வாலிபன், வாக்கில் வயோதிகன்
    தாவென்றால் கற்பகத் தாயவன், -சோவென்று,
    மாரியருள் பெய்கின்ற, காரிருள் கண்ணனே,
    வேறிருள் போக்கும் விளக்கு….(23)

    விளக்கீசல் போலே, வியனுலகில் ஈசா,
    உளத்தாசை கொண்டிங்(கு) உதிர்ந்தேன், -அளப்பரிய,
    ஆதியே, உந்தனனு பூதியில் மூழ்கிடும்,
    தேதியைச், சொல்லியெனைத் தேற்று….(24)

    தேற்றி விஜயனைத், தேரேற்றி வில்லேந்தச்
    சாற்றினாய், கீதையை சர்வேசா, -சேற்றினுள்,
    பஞ்சப் புரவிகட்(கு) அஞ்சிப் புதைந்திடும்,
    நெஞ்ச ரதத்தை, நிறுத்து….(25)

    —————————————————————————————————————-

    Share