திருமால் திருப்புகழ் (84)
கிரேசி மோகன்
கண்ணன் திருப்புகழ்….
——————————————
’’கண்ணன் அந்தாதி’’(வெண்பா)….
———————————————————-
நிருத்தம் பயில நினக்கொரு வாய்ப்பு,
கருத்த நவநீதக் கண்ணா, -பருத்த
அகந்தையாம் ஆற்றில், புகுந்ததே ஆசை,
முகுந்தாயிக், காளியனுன் மன்று….(26)
மன்றாடி ஈசன், மனம்குளிர மோகினியாய்,
அன்றாடிப் பாடிய அச்சுதா, -மன்றாடிக்
கேட்கிறேன், வைகுந்தா காட்சிதா கைலாசன்,
வேட்கை, அளவென் விருப்பு….(27)
விருப்புடன் மாலோலன், விரைகழல் பற்றிச்,
சிறப்புடன் வாழ்வோம் செகத்தில், -மறுப்பிதில்,
உண்டென்றால் கேளீர், உறங்கையில் உண்டாநீர்
உண்டில்லை சொல்வீர், உடன்….(28)
உடனிருக்கும், ஓட வடமிடும், வாடக்
கடன்பட்டார் நெஞ்சாய்க் கலங்கும் -புடமிட்ட
பொன்னாக்கும் மண்ணை, பொலிவாக்கும் வாழ்க்கையை
கண்ணனைக் கூடிக் கிட….(29)
கிடந்தால் உறக்கம், கிளர்ந்தெழ உண்பாய்
இடர்களையும் சாக்கில் இகத்தை -தொடர்ந்திடும்
இக்கூத்தைக் காண இறைவா எமெக்கெதற்கு
வக்கத்த வேடிக்கை வாய்ப்பு….(30)
————————————————————————————————————————–
படங்களுக்கு நன்றி:
http://kamadenu.blogspot.in/
கிரேசி மோகன் ஐயாவிற்கு,
வணக்கம். கண்ணன் வெண்பா அழகுற அமைத்து வருகிறீர்கள்…
//விருப்புடன் மாலோலன், விரைகழல் பற்றிச்,//
இந்த பாடலில், மாலோலன் விரைகழல் என்னுமிடத்து வெண்பாவில் தளை தட்டுகிறது… சரிசெய்தால் நலம்…
உங்களின் இரசிகனாய்,
பிரசாத் வேணுகோபால்