Blog

  • வார ராசி பலன்: பிப். (2013) 11 – 17 வரை:

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம் : வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல், காசோலை வழங்குதல், ஆகியவற்றில் முறையாக செயல்பட்டு உங்கள் கௌரவம் நிலைக்குமாறு செய்து கொள்ளுங்கள். இந்த வாரம் மாணவர்கள் செய்ய மறந்த வேலைகளுக்காக அபராதம் கட்ட நேரிடலாம். எனவே விழிப்புடன் இருப்பது நல்லது. பெண்கள் அற்ப காரணங்களுக்காக, பிறரிடம் சண்டை, வாக்கு வாதத்தில் இறங்க வேண்டாம். சாமர்த்தியமாக இருந்தால் கலைஞர்கள் வருவதை சிக்கெனப் பிடித்துக் கொண்டு, வரவை அதிகரித்துக் கொள்ளலாம். பணியில் இருக்கும் பெண்கள் தக்க சமயத்தில், உங்களின் சிரமங்களை, எடுத்துச் சொல்லி, தீர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

    ரிஷபம் : உயர் அதிகாரிகளின் சினத்திற்கு ஆளாகாதவாறு பணிகளை உடனுக்குடன் முடித்து விடுங்கள். வியாபாரிகள் தோள் கொடுத்து பாடுபடும் பணியாளர்களின் தேவைகளை உடனுக்குடன் கவனிப்பது அவசியம். பெண்கள் தினசரி வேலைகளைத் தள்ளிப் போடாமல் செயல்பட்டால், பிள்ளைகளுடன் செலவிட நேரம் ஒதுக்கலாம். பொது வாழ்வில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சி மற்றும் விழாக்களில் சர்ச்சைக்குரிய கருத்து பரிமாற்றங்களில் இருந்து ஒதுங்கி இருங்கள். மன நிம்மதி பறி போகாமல் இருக்கும். மாணவர்கள் , பேச்சைக் குறைத்து, தன்னுடைய செயலில் தீவிரம் காட்டி வந்தால், கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

    மிதுனம் : மாணவர்கள் கவனம் மற்றும் கருத்துச் சிதறலின்றி பணிகளை மேற்கொள்ளுங்கள். அதிக மதிப்பெண்களை பெற்று மகிழலாம். இந்த வாரம் கலைஞர்கள் அநாவசிய செலவுகளுக்காக கடன்படும் நிலை வராதவாறு, விழிப்புடனிருப்பது அவசியம். பெண்கள் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கை கைக்கொண்டால், விரும்பிய வாழ்க்கை உங்கள் வசமாகும். தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து செயலாற்றும், சுயதொழில் புரிபவர்களுக்கு புதிய வாய்ப்பும், புகழும் தேடி வரும். உங்கள் தொழிலுக்கு முன்னுரிமை தந்தாலும், குடும்பத்தை கவனிப்பதில் குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். குடும்ப வாழ்க்கை அமைதியாகத் திகழும்.

    கடகம் : பெண்கள் உங்களால் நிறைவேற்றக்கூடிய காரியங்களுக்கு மட்டும் வாக்குறுதி கொடுப்பது நல்லது. கைவினை கலைஞர்கள் சிரமங்களுக்கு நடுவே தங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்வார்கள். பொது வாழ்வில் உள்ளவர்கள் சில எதிர்ப்புகளையும், எதிரிகளையும் சமாளிக்க பக்குவமாக நடந்து கொள்ளுதல் அவசியம். மாணவர்கள், நல்ல இதயங்களை புண்படுத்தாமல் இதமாக நடப்பது நன்மையைத் தரும். இந்த வாரம் வியாபாரிகள் கணக்கு வழக்குகளை அலசிப் பார்த்து நிறை குறைகளை உணர்ந்து செயலாற்றினால், அதிக லாபம் பெறலாம். கலைஞர்கள் பத்திரங்களில் பேரில் கடன் வாங்குவதை தள்ளிப் போடுவது நல்லது.

    சிம்மம் : வியாபாரத்தில் கடுமையான போட்டி இருந்தாலும், புத்திசாலித்தனமாக செயல்படும் வியாபாரிகளுக்கு வெற்றி உறுதி. வயதானவர்கள் உடல்நலக்குறைவிற்கு, சொந்த வைத்தியம் மேற்கொள்ளாமல், தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்தல்,நல்லது. மாணவர்கள் அதிக நேரம் கண் விழித்து பணிகளை முடிக்க வேண்டியிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் விளைவுகளை யோசித்தபின் கடினமான செயலில் இறங்குவது அவசியம். பெண்கள் சுய பச்சாதாபத்திற்கு இடமளிக்காதீர்கள். உங்கள் திறமைகள் உங்களை வழி நடத்தும்.பணியில் இருப்பவர்கள் குறுக்கு வழிகளைக் கையாளாமலிருந்தால், உங்கள் கௌரவம் பாதிப்படையாமல் இருக்கும்.

    கன்னி : பணியிடத்தில், கருத்து வேறுபாடும், தேவையற்ற மோதல்களும் தோன்றும் வாய்ப்பிருப்பதால், இயன்றவரை அமைதியாய் இருந்தால், அல்லல்கள் அருகே வராது. பெண்கள் வேலையாட்களை நம்பாமல், அத்தியாவசியமான வேலைகளை நீங்களே செய்து விடுவது நல்லது. வியாபாரிகள் முதலீடுகளில் அகலக் கால் வைப்பதைத் தவிர்த்து விடுவதோடு புதிய பணியாளர்களை அமர்த்துவதில் விழிப்புடன் இருப்பது அவசியம். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் படி நடந்தால், யாவும் சிறப்பாக நடக்கும். இந்த வாரம் கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை பெறவும், அதனைத் தக்கவைத்துக் கொள்ளவும், தீவிரமாக உழைப்பார்கள்.

    துலாம் : கூட்டுத் தொழிலில் உள்ளவர்கள் பங்குதாரர்கள் தரும் நல்ல ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டால், நஷ்டங்களைக் குறைத்துக் கொள்ளலாம். சுயதொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளில் தைரியத்தோடு துணிந்து நின்றால், பாதி வெற்றி கிடைத்துவிடும். மீதி வெற்றியை உங்கள் உழைப்பு நல்கும். கலைஞர்களுக்கு செலவுகள் சிலசமயம் கை மீறி செல்லும் வாய்ப்பிருப்பதால், எதிலும் கவனமாக இருப்பது அவசியம். இந்த வாரம் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு, உதவி செய்தவர்களே சில சமயம் உபத்திரவங்களைத் தருவார்கள். மாணவர்கள் ரசாயனம் தொடர்பான செய்முறைகளில், எச்சரிக்கையாய் இருந்தால், சிறு காயங்களைத் தவிர்க்க முடியும்.

    விருச்சிகம் : தலைசுற்றல், மயக்கம் ஆகியவை வாராதவாறு முதியவர்கள் உணவில் கட் டுப் படாய் இருப்பது நல்லது. உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்லதை சிலர் தடுக்க முயல்வார்கள். எனவே மாணவர்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும். வியாபாரிகள் பணம் சம்பந்தமான விஷயங்களை உங்களின் நேரடிப் பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள்.பல தொல்லைகளைக் கட்டுக்குள் வைக்கலாம். இந்த வாரம் நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நம்பிக்கையின் அடிப்படையில் தான் நல்ல உறவு மலரும் என்பதைப் புரிந்து கொள்ளும் பெண்கள் ஈடுபடும் காரியங்களுக்கு உறவுகளும் துணையாய் நிற்கும்.

    தனுசு : பெண்கள் செலவுக் கடிவாளத்தை சற்று இறுக்கினால், பணமுடை ஏற்படாது. வியாபாரிகள் சரக்கு போக்குவரத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்தால், வீண் விரையத்தைத் தவிர்க்கலாம். புதிய இடங்களில் மாணவர்கள் காட்டும் சொல்சிக்கனம் பிரச்சனைகளை பெரிதாகாமல் தடுக்கும்.சுயதொழில் புரிபவர்கள் சுணக்கமின்றி, தீவிர முயற்சி செய்தால், நல்ல முன்னேற்றம் காணலாம். கலைஞர்கள் எல்லாம் தெரியும் என்கிற மனப்பான்மை உங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த வாரம் பணியில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடுவதால் மன அழுத்தமும் சற்றே அதிகமாகும்.

    மகரம் : கலைஞர்கள் ஒப்பனைப் பொருட்களின் மூலம் ஒவ்வாமை ஏற்படாதவாறு, தரமான பொருட்களை பயன்படுத்துதல் நல்லது. பெண்கள் அக்கம்பக்கத்தாருக்கு ஆலோசனை வழங்குமுன், ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பது அவசியம். ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளாவர்கள் முறையான சிகிச்சையோடு எளிய பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல ஆரோக்கியம் பெறலாம். மாணவர்கள் நண்பர்களிடம் குதர்க்கமான பேச்சைத் தவிர்த்தால், மனக் கசப்பும், நட்பில் விரிசலும் ஏற்படாது.மனக் குழப்பம் உங்களின் திறமையை பாதிக்காதவாறு திடமாகச் செயல்படுங்கள். பல வெற்றிகளைப் பெறலாம்.

    கும்பம் : இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலனிருக்கும். பெற்றோர்கள் குழந்தைகளை கவனமுடன் பார்த்துக் கொண்டால், அவர்களின் ஆரோக்கியம் பற்றிய கவலைப்பட வேண்டாம். புத்தி வேண்டாத விஷயங்களில் ஈடு படுவதைத் தடுக்க, மாணவர்கள் தியானம் மூச்சுப் பயிற்சி ஆகிவற்றில் ஈடுபாடு காட்டுவது அவசியம். கலைஞர்கள் போட்டிகளில் ஜெயிக்கும் வாய்ப்பு பல கிட்டும். பெண்கள் உறவினரிடம் சண்டை சச்சரவின்றி பழகி வந்தால், இல்லத்தில் அமைதி நிலவும். வேலை செய்யும் இடங்களில் எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடக்கலாம். எனவே வேலையில் மட்டும் உங்கள் கவனத்தை செலுத்தி வாருங்கள்.

    மீனம் : சரளமான பணவரவு பெண்கள் மனத்தில் மகிழ்ச்சியையும், உதட்டில் புன்னகையையும் பூக்கச் செய்யும். பிறர் உங்களை தூண்டிவிட்டாலும், நேர்மையான வழியிலேயே செல்லும் வியாபாரிகளுக்கு நற்பெயர் என்றும் நிலைத்திருக்கும். முதியவர்கள் ஆரோக்கிய நலிவுக்குரிய மருந்துகளை முறையாக உட்கொண்டால், மருத்துவச் செலவுகளை கட்டுக்குள் வைத்து விடலாம். மாணவர்கள் வாகனம் ஓட்டுகையில், உரிய விதிகளை கடைப்பிடிப்பது அவசியம். இந்த வாரம் கலைஞர்களுக்கு வாகனங்கள் திடீர் செலவு வைக்கும். மனை வாங்குகையில் நம்பிக்கையான நபர்களை அணுகுங்கள். நல்ல தேர்வாக அமையும்.

    Share
  • மின்தடை

    சு. கோதண்டராமன்
    இரவு மணி எட்டு

    விசிறிகள் சுழல, விளக்குகள் ஒளிர,

    வீடு தோறும் தொக்கா முழக்கம்.

    போட்டிப் பெருங்குரல் மாணவர் படிப்பு.

    உலகமே சுறுசுறு, ஓய்விலா இயக்கம்.

     

    திடீரென மின்சாரம் நின்றது.

     

    விளக்குகள் அணைந்தன,

    தொக்கா ப்ரிட்ஜுடன் க்ரைண்டரும் வாய் மூட,

    வீட்டுக்குள் கொசுக்கடி, வெளியே வந்தோம்.

    வானம் மட்டும் பளிச்செனத் தெரிந்தது.

    இத்தனை விண்மீனா! ஈதென்ன விந்தை!

    முத்துகள் வயிரங்கள் பதித்த பட்டுடையோ!

    வெள்ளி முலாம் பெற்ற தென்னையோ பேரழகு!

    கண்களைக் கூசாத கவினுறு நிலவொளி!

    இயற்கைத் தென்றலின் இதமான தழுவல்!

     

    ஐந்து நிமிடம் கழித்து-

     

    மின்சாரம் வந்தது.

    உறைந்த உலகு உயிர்பெற்று எழுந்தது.

    விட்ட சீரியல் தொடர வேண்டும்,

    விடிந்தால் தேர்வு படிக்க வேண்டும்,

    எல்லோரும் பறவை போல் தத்தம் கூட்டில்.

    மீண்டும் இயந்திரமாயினர் மக்கள்.

    படத்துக்கு நன்றி

    http://kashmirobserver.net/news/power-cut-dismays-consumers

    Share
  • பூமிக்கு அருகே 17,000 மைல் தூரத்தில் நிலவுக்கும் இடையே முதன்முறைக் குறுக்கிட்டுக் கடக்கப் போகும் முரண்கோள் [Asteroid]

    http://www.space.com/19518-asteroid-will-fly-within-18-000-miles-of-earth-video.html

    http://www.space.com/19637-asteroid-s-alarmingly-close-flight-path-depicted-in-animation.html

    [Asteroid 2012 DA14 is about half the width of a football field (150 feet, or 45 meters), and will fly within 17,200 miles (27,700 kilometers) of our planet on Friday, Feb. 15, 2013, zooming closer to the planet than the ring of satellites in geosynchronous orbit.]

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    Path of Asteroid

    வக்கிரக் கோள்கள் வழிதவறி
    வையத்தில் மோதிச்
    சுக்கு நூறாக்க அடிக்கடிச்
    சுற்றி வருகின்றன !
    வால்மீன் வயிற்றில் அடித்து
    தூசிகளை ஆராய்ந்தார்
    நாசா விஞ்ஞானிகள் !
    விண்வெளியில் வால்மீன் ஒன்றை
    விரட்டி வாலின்
    தூசியைப் பிடித்துக்
    காசினிக்குக் கொண்டு வந்தார் !
    வக்கிரக் கோள் மாதிரியை
    வையத்தில் இறக்கி விட்டது
    ஜப்பான் ‘கழுகு’ !
    முரண்கோள் வெஸ்டாவை
    முற்றுகை இட்டது
    நாசாவின்
    “புலர்ச்சி” விண்ணுளவி
    சூரிய மண்டலத் தோற்றம்
    ஆராய் வதற்கு !
    இரு விண்வெளி விமானிகள்
    2025 ஆண்டுக்குள்
    முரண்கோள் ஒன்றில்
    தடம் வைப்பார்
    தளவுளவி இறக்கி
    உளவு செய்யப் பயிற்சி
    அளிக்கிறது நாசா,
    வையத்தைத் தாக்க வரும்
    வக்கிரக் கோளைத்
    திக்கு மாற்றித்
    திசை திருப்பப் போகிறோம் !
    +++++++++++++++++

    தற்போது நம் கைவசம் இருந்து விருத்தியாகும் விண்வெளிப் பொறியியல் நுணுக்கத்தில், ஓராண்டு விண்வெளியில் பயணம் செய்து முரண் கோள் ஒன்றில் மனிதர் இறங்கும் ஒரு குறிப்பணி நிச்சயம் சாதிக்கக் கூடியது.

    மேஜர் டிமதி பீக் (பிரிட்டிஷ் விண்வெளி விமானி) (Major Tim Peake, ESA, European Space Agency)

    முரண் கோள்கள் எப்போதும் நமது பூமிக்கருகில் தாக்க வருகின்றன. ஆனால் நாம் அவற்றைப் பற்றி அபூர்வமாய்த் தெரிந்து கொள்கிறோம். சென்ற ஆண்டு முரண்கோள் ஒன்று பூமியின் புவிச்சுற்று நிலைத்துவ வீதிக்குள்ளே (Earth’s Geostationary Orbit) சில துணைக் கோள்களுக்கும் கீழே வந்து விட்டது.

    போதிய எச்சரிக்கைக் காலத்துக்குள், நாமோர் சுயத்தாக்கு விண்ணுளவியை (Robotic Impact Spacecraft) அனுப்பி பூமியை நெருங்கும் முரண் கோளை மோதித் திசையைத் திருப்பி, ஏற்படப் போகும் எதிர்பாராத பிரளயத் தீங்குகளைத் தடுக்க முடியும்.

    முரண் கோளுக்குப் போகும் அவ்விதக் குறிப்பணி செய்ய நான் விரும்புகிறேன். இந்த முயற்சி சீராக முன்னேறினால் 2025 ஆண்டுக்குள்ளே என்னாலோ அல்லது வேறு ஈசா (ESA) விண்வெளி விமானி களாலோ அந்தக் குறிப்பணி நிறைவேறும்.

    மேஜர் டிமதி பீக் (ESA விண்வெளி விமானி)

    பூமிக்கருகில் நேரப் போகும் ஓர் அற்புதப் பயங்கர விண்வெளி நிகழ்ச்சி

    2013 பிப்ரவரி 15 இல் சிறிய வக்கிரக் கோள் [Asteroid : 2012 DA14] முதன் முறையாக பூமிக்கு அருகில் 17,000 மைல் தூரத்தில் குறுக்கிட்டுக் கடந்தது செல்லப் போவதாய் நாசா முரண் கோள் விஞ்ஞானிகள் பிப்ரவரி 6 ஆம் தேதி அறிவித்துள்ளார்கள். இந்த வக்கிரக் கோள் நகர்ச்சியை நாசாவின் துணைக்கோள் [WISE (Wide-field Infrared Survey Explorer) Spacecraft] தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. 2011 ஆண்டில் நாசாவின் புவிச்சுற்றி [NASA Orbiter] பூமிக்கு அருகே சுற்றும் 100 மீடர் (300 அடி) பரிமாணத்துக்கு மேற்பட்ட சுமார் 20,500 முரண் கோள்களின் போக்கைக் கூர்ந்து நோக்கி வருகிறது. அவற்றில் குறிப்பாக 100 முரண் கோள்களே பூமிக்கு மிக்க அருகில் நெருங்கி வருவதாகத் தெரிகின்றன.

    சிறிய வக்கிரக் கோள் [2012 DA14] பூமிக்கும் நிலவுக்கும் இடையே 17,000 மைல் தூரத்தில் கடக்கப் போவதாக அதன் சுற்றுப் பாதை கணிக்கப் பட்டுள்ளது. நிலவு சுமார் 239,000 மைல் தூரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. உலக நாடுகளின் பல்வேறு தொடர்புத் துறை, கால நிலை அறிவிப்புத் துணைக் கோள்கள் 22,200 மைல் [35,800 கி.மீ.] உயரத்தில் பூமியைச் சுழலிணைப்புச் சுற்று வீதியில் [Geosychronous Orbit] வலம் வருகின்றன. ஆனால் 17,000 மைல் உயரத்தில் குறுக்கிடப் போகும் சிறிய முரண்கோள் நிலவையோ, பூமியையோ, துணைக் கோள்களையோ மோதப் போவதில்லை என்று நாசா விஞ்ஞானிகள் உறுதியாக அறிவிக்கிறார். இது ஓர் அற்புதப் பயங்கர நிகழ்ச்சி. இதுவரை நேராத ஓர் ஆபத்து நிகழ்ச்சி.

    WISE Spacecraft

    சிறிய முரண்கோள் [2012 DA14] பூமிக்கருகில் குறுக்கிடும் விந்தை விபரங்கள்

    முரண்கோள் [2012 DA14] 2.7 மில்லியன் மைல் தூரத்தில் உள்ள போது, 2012 பிப்ரவரி 23 இல் ஸ்பெயின் தேசத்து மல்லோர்கா விண்ணோக்கி ஆய்வுக்கூட விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப் பட்டது. சிறிய முரண்கோள் 150 அடி அகலமும், 130,000 மெட்டிரிக் டன் எடையும் கொண்டது. அது பூமிக்கு மிக நெருங்கி வரும் நாள் 2013 பிப்ரவரி 15 ஆம் தேதி. பூமிக்கு ஒப்பாக அதன் வேகம் : வினாடிக்கு சுமார் 5 மைல் [வினாடிக்கு 8 கி.மீ.] அது கடந்து செல்லும் போது, கிழக்கு இந்து மாக்கடலில் சுமாத்ரா தீவுக்கு அப்பால் தென்படும் என்பது தெரிகிறது. அப்போது அது பூமிக்குச் சுமார் 17,200 மைல் [27,700 கி.மீ.] உயரத்தில் சுற்றிச் செல்லும். துல்லியமாகச் சொல்லப் போனால் முரண்கோள் 17,180 மைலுக்குக் [27,650 கி.மீ.] கீழே நெருங்கி வரப் போவதில்லை என்று அதன் வேகத்தை வைத்து நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளார். பூமிக்கும் நிலவுக்கும் இடையே அந்தச் சிறிய முரண் கோளின் குறுக்கீடு 33 மணி நேரங்கள்தான் நீடிக்கும் என்று அறியப் படுகிறது. பிப்ரவரி 16 ஆம் தேதி சிறிய முரண் கோள் பூமிய விட்டு அப்பால் சென்றுவிடும். அந்தக் குறுக்கீட்டின் போது, பூமியிலோ, நிலவிலோ எந்த விதக் “ஒளி மறைப்போ” அல்லது “நிழலடிப்போ” [Eclipse] இருக்காது என்று நாசா முரண்கோள் கண்காணிப்பு விஞ்ஞானிகள் அறிவிக்கிறார்.

    Asteriods -1

    பூமிக்கு அருகில் சுற்றி வரும் [Asteroid 2012 DA14] போல் பயங்கரச் சிறிய முரண்கோள்களின் எண்ணிக்கை சுமார் 500,000 என்று நம்பப் படுகிறது. அவற்றில் 1% கீழ் எண்ணிக்கை முரண் கோள்கள்தான் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்று தெரிகிறது. நாசாவின் புவி அண்டக்கோள் திட்ட விஞ்ஞானிகள் சராசரி 40 ஆண்டுக்கு ஒருமுறை இதுபோல் சிறிய முரண் கோள்கள் பூமிக்கு அருகில் நெருங்குவதாய் மதிப்பீடு செய்துள்ளார். அந்தச் சராசரி மதிப்பீட்டின்படி 1200 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு சிறிய முரண்கோள் பூமியில் மோதலாம் என்றும் ஊகிக்கப் படுகிறது.

    அமெரிக்க, ரஷ்ய, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளின் அகில நாட்டு விண்வெளி நிலையம் பூமிக்கு மேல் 240 மைல் உயரத்தில் சுற்றி வருகிறது. சிறிய முரண்கோள் பூமியைக் குறுக்கிடும் 17,000 மைல் உயரத்தில் எந்த துணைக்கோளும் இப்போது பூமியைச் சுற்றி வருவதில்லை. இது போன்ற சிறிய முரண்கோள் ஒன்று பூமியின் மீது மோத நேரிட்டால், ஏற்படும் பூமி அதிர்ச்சி சுமார் 2.5 மெகா டன் சக்திக்கு ஒப்பாகும். 1908 இல் சைபீரியாவின் துங்கஸ்கா நதிக் காடுகளில் நேர்ந்த சிறிய முரண்கோள் [சுமார் 100- 130 அடி நீளம்] தாக்கம் 750 சதுர மைல் தகர்ப்பை உண்டாக்கி மட்ட மாக்கி உள்ளது. அது முரண்கோள் குழுவினரால் “துங்கஸ்கா நிகழ்ச்சி” [Tunguska Event] என்று குறிப்பிடப் படுகிறது. நாசாவின் நியோ திட்ட விஞ்ஞானிகள் [NEOO – NASA Near Earth Object Observation Program] பூமிக்கருகே வரும் முரண்கோள்களைத் தொடர்ந்து கண்காணித்து எச்சரிக்கை செய்து வருகிறார்.

    ஒளிமந்தையில் (Galaxy) வாழும் அறிவுசார்ந்த உயிரினத்துக்கு பேரிடர் தரும் பயமுறுத்தல் முரண் கோள்கள் மோதுவதால் நேரப் போவதே !

    ஸ்டீஃபன் ஹாக்கிங்.

    “(முரண்கோள்களில் பனிநீர் உள்ளது) என்னும் கண்டுபிடிப்பால் நமது சூரிய மண்டலத்தின் முரண்கோள் வளைய (Asteroid Belt) அரங்கத்திலே பேரளவு நீர்ப்பனி இருந்திருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது. அக்கருத்து முரண் கோள்கள் பூமியைப் பன்முறைத் தாக்கிப் பேரளவு நீர் வெள்ளத்தைக் கடலில் நிரப்பியது என்னும் கோட்பாடுக்கு ஆதாரம் அளிக்கிறது. புவியில் உயிரினம் தோன்றவும் விருத்தி அடையவும் முரண்கோள்களின் உள்ளமைப்புப் பொருட்கள் மூலச் செங்கற்களாய் இருந்துள்ளன.”

    ஹம்பர்டோ காம்பின்ஸ், மத்திய பிளாரிடா பல்கலைக் கழகம்

    “முரண்கோள்களில் காணப்படும் உலோகப் பொருட்கள் பரிதிக் கோள்கள் தோன்ற கட்டுமானப் பொருட்களாய் உதவியவை. முரண்கோள் #2 பல்லாஸ் (Asteroid #2 Pallas), முரண்கோள் #10 ஹைஜியா (Asteroid #10) (Hygiea) ஆகிய இரண்டிலும் விஞ்ஞானிகள் நீர்ப்பனியும், கார்பன் அடிப்படை ஆர்கானிக் கூட்டுகளும் இருப்பதாக நம்புகிறார்.”

    கரோல் ரேமண்டு (Dy Principal Investigator, NASA Dawn Mission)

    “2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகளை ஒரு வக்கிரக் கோளுக்கு (Asteroid) அனுப்பி வைக்க நாசாவுக்கு நான் ஆணை இடுகிறேன். அந்தக் குறிக்கோளை நிறைவேற்றப் “புலர்ச்சி” விண்ணுளவி (Dawn Space Probe) தேவையான விபரங்களை இப்போது சேமிக்கும்.”

    ஓபாமா அமெரிக்க ஜனாதிபதி

    “பூமியை நெருங்கும் முரண்கோள் ஒன்றில் மனிதர் இறங்கிப் பாதையைத் திருப்பி விடும் நுணுக்க வெடி முறையைக் கற்றுக் கொள்ள வேண்டும். அது விண்வெளி வரலாற்றில் ஒரு புதுச் சாதனை மைல் கல்லை நாட்டி வைக்கும்.”

    ஜான் கிரௌன்ஸ்ஃபெல்டு (American Astro-physicist John Grunsfeld)

    “முதன்முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) முக்கிய வக்கிரக் கோள் ஒன்றை நாசாவின் விண்ணுளவி சுற்ற ஆரம்பித்து விண்வெளித் தேடலில் ஓர் உன்னத மைல்கல் நட்ட இன்றைய தினத்தை நாங்கள் கொண்டாடுகிறோம். வெஸ்டா முரண்கோளை விண்ணுளவி ஆராய்வது மாபெரும் விஞ்ஞானச் சாதனையாகக் குறிக்கப்படுகிறது. அது எதிர்காலப் பரிதி மண்டலக் கோள்களுக்கு மனிதர் பயணம் செய்யப் பாதை விரிக்கிறது.”

    சார்லஸ் போல்டன் (NASA Administrator)

    “வக்கிரக் கோள் வெஸ்டாவில் ஓர் உலோகக் கரு (Metal Core) மையத்திலும் சிலிகேட் பாறை அதைச் சுற்றிலும் இருப்பதாக நாங்கள் ஊகிக்கிறோம். பரதி மண்டல வரலாற்றில் எப்போதோ அதன் தென் துருவ முனை உடைந்து பெரும்பான்மைப் பகுதி சப்பையாகப் போனது. அப்பகுதியின் சிதறிய சில துணுக்குகள் பூமியிலும் விழுந்திருக்கலாம். பூமியில் விழுந்த 20 விண்கற்களில் ஒன்று வெஸ்டாவிலிருந்து விழுந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

    “வெஸ்டா, கிரிஸ் வக்கிரக் கோள்:களை ஆராயும் போது விண்கோள்களின் முரணான தோற்றப் பண்பாடுகளை அறிய முடியும். முன்னது பரிதி மண்டல அகக் கோள்கள் போல் (Inner Planets) பாறைக் கட்டமைப்பில் வார்க்கப் பட்டது. பின்னது புறக்கோள்கள் போல் (Outer Planets) பனித்தள வடிவத்தில் உருவானது.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

    2025 ஆண்டுக்குள் முரண்கோள் ஒன்றில் இறங்க நாசா விண்வெளி விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது.

    பூமிக்கு அப்பால் போகும் முரண் கோள் ஒன்றில் நாசாவின் தளவுளவி தடம் வைக்கப் போகிறது. 1969 இல் சந்திர மண்டலத்துக்குப் பயணம் செய்து பல அமெரிக்க விண்வெளி விமானிகள் தடம் வைத்து ஆய்வு செய்து மீண்டார்கள். இது பெரிய விண்வெளித் தேடல் பயணம். 2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகள் முரண் கோளில் முதமுதல் இறங்குவார் என்று அமெரிக்க அதிபர் ஓபாமா சமீபத்தில் அறிவித்துள்ளார். நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்யத் திட்டமிடும் முரண்கோள் மணிக்கு 50,000 மைல் வேகத்தில் (மணிக்கு 80,000 கி.மீ.) பூதக்கோள் வியாழனைச் சுற்றி வரும் முரண்கோளில் ஒன்று. அதன் தூரம் சுமார் 3 மில்லியன் மைல். விண்வெளி விமானிகள் பயணம் செய்து முரண்கோளில் தடம் வைத்து ஆராய்ந்து வர ஓராண்டு காலம் எடுக்கும். 1969 இல் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் 240,000 மைல் தூரத்தில் பூமியைச் சுற்றும் நிலவில் கால் வைத்து மீள எட்டு நாட்கள் எடுத்தன. முரண்கோள் மனித மீள் பயணத்தின் விபரங்களை ஈசாவைச் சேர்ந்த மேஜர் டிமதி பீக், மே மாதம் 16, 2012 இல் அறிவிப்பு செய்தார். அந்தப் பயிற்சியில் டிமதி பீக், மற்றும் அவரது ஐந்து சகாக்களும் முரண்கோளின் மெலிந்த ஈர்ப்பாற்றலில் அனுபவம் பெற அட்லாண்டிக் கடலடியில் 65 அடிக்குக் கீழ் 12 நாட்கள் உண்டு, உலவி, உறங்கி வரவேண்டும். அதற்கு அவர்கள் வசிக்க 43 அடி நீளம், 20 அடி அகல நெருக்கடிச் சிமிழ் (Capsule) ஒன்றில் பொழுதைக் கடக்க வேண்டும்.

    பயிற்சியின் முக்கிய அம்சங்கள் :-

    1. முரண்கோளின் தளவுளவியில் இறங்கித் தடம் வைத்து ஆய்வுகள் செய்யும் விண்வெளி விமானங்கள் இருவர்.

    2. முரண்கோள் மனித விண்கப்பல் பயணத்தில் பங்கு கொள்வோர் இருவரா அல்லது மூவரா என்பது இப்போது தெரிய வில்லை.

    3. முரண்கோளைச் சுற்றித் தளவுளவியைக் கண்காணிக்கும் தாய்க் கப்பலை இயக்குபவர் விண்வெளி விமானி ஒருவர். தாய்க் கப்பலே தளவுளவியின் தகவலைப் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வரும். (இது மாறலாம்)

    4. புவியிலிருந்து சுயத் தாக்கு விண்கப்பலை அனுப்பி எப்படி முரண்கோளைத் திசை திருப்புவது என்பதே முக்கிய குறிப்பணியாக இருக்கும்.

    5. முரண்கோளின் தளவுளவுகள் ஆய்வு செய்வதின் முக்கிய குறிக்கோள். பாதை தவறிப் பூமிய நெருங்கித் தாக்கப் போகும் வாய்ப்பு இருக்குமாயின் அதை எப்படித் திசை திருப்புவது என்பது அறியப்படும். அதாவது பூமியிலிருந்து நெருங்கும் முரண்கோள்களின் போக்குகள் தொடர்ந்து பதிவு செய்யப்படும். பாதை தவறிப் பூமியை நெருங்கும் முரண்கோளின் வேகம், திசை, ஈர்ப்பாற்றல் கணிக்கப் படும். அதன் பின் மனிதரற்ற ஒரு சுயநகர்ச்சி விண்கப்பல் முரண்கோளை நோக்கி அனுப்பப்படும். முரண்கோளை அது குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட வேகத்தில் மோதி திசை திருப்பும்.

    பூமியின் மூலாதார நீர்வளத்தைத் தெளித்தவை முரண் கோள்களா ?

    முன் யூகிப்பிலிருந்து விலகி இப்போது பூமியின் கடல் வெள்ளமும், சூழ்வெளி வாயு மண்டலமும் தீவிர எரிமலை எழுச்சிகளால் கிளம்பிய புகை மூட்டத்தில் உண்டானவை என்னும் பழைய கோட்பாடு மாறி யுள்ளது. பிரென்ச் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தின் விஞ்ஞானி பிரான்சிஸ் ஆல்பாரடே (Francis Albarede), “பரிதிக் கோள்கள் தோன்றி 100 மில்லியன் ஆண்டுகள் கடந்து புவி பிள்ளைக் கோளாய் வளரும் பருவத்தில் அதன் ஆரம்ப உட்பொருளாய் நீர் உருவக்கப் படவில்லை,” என்று ஆலோசனை கூறுகிறார். ஆப்பம் சுடுவது போல் வட்டத் தட்டாய் முதலில் உருவாகிய பூமியிலே மூன்றில் இருபங்கு நீர் மயமாய் இருக்கும் வெள்ளம் புறவெளிக் கோள்கள் மூலமாகத்தான் (Extraterrestrial) தாமதமாக வந்திருக்க வேண்டும் என்றோர் புதுக் கருத்து மாறுபாடு உறுதியாகி உள்ளது. பூமியில் உயிரினம் தோன்றும் முன்பே நீர் வெள்ளம் நிரம்பி அடித்தட்டு நகர்ச்சி இயக்கங்கள் (Plate Tectonics Movements) நிகழக் காரணமாக இருந்திருக்கிறது என்றும் பிரான்சிஸ் ஆல்பாரடே கூறுகிறார்.

    நீரிருக்கும் இடத்தில் உயிரினம் இருந்திருக்கும் என்பதை உலக விண்வெளி ஆய்வுக் குழுக்கள் ஏற்றுக் கொள்ளும். 4.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்னே புவிக் கடலில் போதிய நீர் நிரம்பி உயிரின வளர்ச்சிக்கு ஏதுவான சூழ்நிலைக் கடலிலும், கண்டங்களிலும் இருந்து அடித்தட்டு நகர்ச்சிக்கும் (Plate Tectonics) வழி வகுத்தது. அகக் கோள்களை ஒப்பு நோக்கினால் புதன் கோளும், நிலவும் புவியைப் போலின்றி படு வரட்சி ஆயின. செவ்வாய்க் கோளும் வாயுக் குடையின்றி சூரியக் கனலில் நீர் ஆவியாகிப் பாலை வனமாய் வரண்டு போனது. வெள்ளிக் கோள் சுட்டுப் பொசுக்கும் அமிலத்தில் அக்கினிக் கோள் ஆனது.

    முரண் கோள்களில் பனிநீர் இருப்பு கண்டுபிடிக்கப் பட்டது.

    2010 ஆண்டில் இரண்டு ஆய்வுக் குழுவினர் தனித்தனியாக முரண்கோள்களில் நீர்ப்பனியும், ஆர்கானிக் மூலக்கூறுகளும் இருப்பதற்கு ஆதாரங்களைக் கண்டறிந்தனர். 2010 ஏப்ரலில் முதற்குழு முரண்கோள் தெமிஸில் (Asteroid # 24 Themis) பனிநீர் இருப்பதையும், 2010 அக்டோபரில் இரண்டாம் குழுவினர் முரண்கோள் சைபெலியில் (Asteroid # 65 Cybele) பனிநீர் உள்ளதையும் கண்டுபிடித்தனர்.

    இவ்விரு புதிய கண்டுபிடிப்புகளும் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பரிதி மண்டலக் கோள்கள் தோன்றிய பிறகு பனிநீர் கொண்ட முரண்கோள்கள் பூமியைத் தாக்கி நீர் வெள்ளத்தை நிரப்பி உயிரினப் பிறப்புக்கும் வளர்ச்சிக்கும் வசதி அளித்திருக்கலாம் என்னும் புதிய கோட்பாடுக்கு வழி வகுத்திருக்கிறது.

    விஞ்ஞானிகள் 180 மைல் (290 கி.மீ.) விட்டமுள்ள முரண்கோள் #65 சைபிலியின் பரிதி ஒளிப் பிரதிபலிப்பை ஆராய்ந்தனர். சைபிலி முரண்கோள் செந்நிறக் கோள் செவ்வாயிக்கும் பூதக்கோள் வியாழனுக்கும் இடையில் பரிதியைச் சுற்றி வருகிறது. விஞ்ஞானக் குழுவினர் இருவித ஆய்வுக் கருவிகளைப் பயன் படுத்தினார். 1. நாசாவின் ஹவாயி மௌனா கியா உட்சிவப்பு தொலைநோக்கி (NASA’s Infrared Telescope in Hawaii) 2.. ஸ்பிட்ஸர் விண்வெளித் தொலைநோக்கி (Spitzer Telescope). இரண்டு கருவிகளும் முரண்கோள் சைபிலியின் மேற்தள நீர்ப்பனி இருப்பின் முத்திரை அடிப்பைப் பதிவு செய்தன. அத்தோடு சிக்கலான ஆர்கானிக் திடப் பொருட் களையும் (Complex Organic Solids) கண்டன. அவை பெரிதான நீர்ப்பனிப் பாறைகளாக இல்லாமல் மிக மெல்லிய (Less than 1 micron thick) பனித்தட்டு களாகவும், நிலையற்றதாகவும் இருந்தன.. பனிநீர்ப் படிவுகள் ஒருசில ஆயிர ஆண்டுகளுக்குள்தான் படிந்திருக்க வேண்டும்.

    விஞ்ஞானிகள் முரண்கோள்களை ஆராய்வதற்கு ஐந்து காரணங்கள்

    1. பரிதி மண்டல மூலத் தோற்ற விபரங்களை முரண்கோள்கள் கூறுகின்றன.

    பூதக்கோள் வியாழனுக்கும், செந்நிறக் கோள் செவ்வாயிக்கும் இடையே பரிதியைச் சுற்றிவரும் முரண்கோள்கள் அகத்தே சுற்றும் விண்பாறை வெப்பக் கோள்களுக்கும், புறத்தே சுற்றும் குளிர்ச்சியான வாயுக் கோள்களுக்கும் நடுவே வலம் வருவதால் பல்வேறு வடிவங்களில் கோள்கள் உருவான தெப்படி என்பதற்கு ஆதாரங்கள் அளிக்கலாம். நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி ஆராயப் போகும் முரண்கோள்கள் வெஸ்டா, செரிஸ் இரண்டும் வெவ்வேறானவை. வெஸ்டாவில் விண்கற்கள் / முரண்கோள்கள் தாக்குதல் மிகுந்திருந்ததால் தேய்வு வெப்பம் சூடாக்கும் அதிக அளவு கதிரியக்க அலுமினியம் (Radioactive Aluminium) காணப் படுகிறது. முரண் கோள்களைப் பற்றி ஆராயும் விஞ்ஞானிகள் இதுபோன்ற பல புதிர்களை விடுவிக்க முடியும்.

    2. பரிதிக் கோள்கள் சிலவற்றில் உயிரினத் தோற்ற மூலத்தை அறிய முடியும்

    பூமியில் உயிரற்ற ஆர்கானிக் பிண்டத்திலிருந்து உயிரனங்கள் எப்படி உதித்தன என்பது விஞ்ஞானிகளுக்கு இன்னும் ஒரு புதிராகவே உள்ளது ! அந்த மர்மத்தைத் தீர்க்க முரண் கோள்கள் உதவலாம். செரிஸ் போன்ற பேரளவு நீர்ப்பனி மண்டலம் கொண்ட சில முரண் கோள்கள் உயிரின மூலத் தோற்றங்களை அறிய உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    முரண்கோள்களில் காணப்படும் உலோகப் பொருட்கள் பரிதிக் கோள்கள் தோன்ற கட்டுமானச் செங்கற்களாய் உதவியவை. முரண்கோள் #2 பல்லாஸ் (Asteroid #2 Pallas), முரண்கோள் #10 ஹைஜியா (Asteroid #10 Hygiea) ஆகிய இரண்டிலும் உயிரினம் தோன்ற மூலக் காரணமான நீர்ப்பனியும், கார்பன் அடிப்படை ஆர்கானிக் கூட்டுகளும் இருப்பதாக நம்பப்படுகிறது.”

    3. பூமிக்கு அருகில் சுற்றும் முரண்கோள்களில் உலோகங்கள் தோண்டி எடுக்கலாம்.

    பூமிக்கு அருகில் உள்ள வளையத்தில் சுற்றும் முரண்கோள்களில் (Asteroids in Near-Earth Belt) விலை மதிப்பில்லா உலோகங்கள் இருப்பதால், அங்கு எதிர்கால விண்வெளி விமானிகள் பயணம் செய்து ஆராய வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆதலால் முரண்கோள்கள் சிலவற்றின் மூலக் கலவைகளை முற்றிலும் அறிவது தேவையாகிறது.

    4. முரண்கோள் எப்போதாவது பூமியைத் தாக்கப் போவதாய்ப் பயமுறுத்தலாம்.

    பரிதியைச் சுற்றிவரும் சில முரண்கோள்கள் நீள்வட்டத்தில் வலம் வருவதால் சில சமயம் அவை பூமிக்கு அருகில் வர வாய்ப்புள்ளது. அவை சில வேளை மிகவும் பூமிக்கருகில் வந்து விடும். 2010 ஜனவரியில் முரண்கோள் 2010- AL30 பூமியை 80,000 மைலுக்குள் (130,000 கி.மீ.) நெருங்கி அபாய நிலையை அறிவித்தது. நல்ல வேளையாக சிறிய முரண்கோள் 2010- AL30 இன் அகலம் 36 அடி (11 மீடர்) மட்டுமே. நாசாவின் அடுத்த எச்சரிக்கை இது ! ஏப்ரல் 13, 2036 இல் இரண்டு கால் பந்துத் திடல் நீளமுள்ள முரண்கோள் அபோ·பிஸ் (Asteroid Apophis) பூமிக்கருகில் 18,300 மைல் தூரத்தில் வரப் போகிறது என்று உலகுக்கு அபாய மணி அடித்துள்ளது ! அது பூமியில் விழுந்தால் பேரளவு சேதம் உண்டாகும் என்று அஞ்சப் படுகிறது !

    5. விண்வெளி விமானிகள் 2025 ஆண்டுக்குள் முரண்கோள் ஒன்றில் இறங்கி ஆராயலாம்

    அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா 2010 ஏப்ரலில் 2025 ஆண்டுக்குள் அமெரிக்க விண்வெளி விமானிகள் ஒரு முரண்கோளுக்குப் பயணம் செய்து மீளுவார் என்று அறிவித்திருக்கிறார். அப்போது விமானிகள் முதன்முறையாக முரண்கோளை வெடிவைத்து அதன் சுற்றுப் பாதையை மாற்ற முயல வேண்டும் என்று அமெரிக்க விண்வெளிப் பௌதிக விஞ்ஞானி ஜான் கிரௌன்ஸ்ஃபெல்டு (Astro-physicist John Grunsfeld) ஆலோசனை கூறி இருக்கிறார். அப்பயிற்சி பூமியைத் தாக்க வரும் எதிர்கால முரண்கோளைத் திருப்பி விடப் பிற்காலத் தேவைக்கு உதவும் என்று சுட்டிக் காட்டி இருக்கிறார்.

    2015 இல் நீர்ப்பனி நிரம்பிய முரண்கோள் செரிஸை நோக்கி நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி

    2011 ஜூலை 17 ஆம் தேதி நாசா 2007 செப்டம்பரில் ஏவிய புலர்ச்சி விண்ணுளவி புவியைத் தாண்டிப் பரிதி மண்டலத்தில் நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து முதன் முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) பெரிய வடிவில் ஒன்றான வெஸ்டா வக்கிரக் கோளை (Asteroid Vesta) நெருங்கிச் சுற்ற ஆரம்பித்துள்ளது. பரிதி மண்டல முரண் கோள் வளையத்தில் கோடான கோடி வக்கிரக் கோள்கள் செவ்வாய்க் கோளுக்கும் வியாழக் கோளுக்கும் இடையே வியாழனைச் சுற்றிக் கொண்டு வருகின்றன. நகரும் இந்த அடர்த்தி மந்தையில் வெஸ்டாவைக் கண்டுபிடித்துப் பிற வக்கிரக் கோள்கள் மோதிச் சிதையாமல் சுற்றி வருவது ஒரு மாபெரும் விண்வெளிச் சாதனையாகவும் வரலாற்று மைல் கல்லாகவும் கருதப்படுகிறது. விண்ணுளவி அன்றைய தினத்தில் வெஸ்டாவை 530 கி.மீ. (300 மைல்) உயரத்தில் வலம் வந்தது. வெஸ்டாவை நெருங்கவே நான்கு வருடங்கள் கடந்து விட்டன. ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி மேலும் நான்கு ஆண்டுகள் பயணம் செய்து அடுத்துள்ள எல்லாவற்றுக்கும் பெரிய முரண்கோள் செரிஸை (Asteroid Ceres) 2015 இல் சுற்றத் துவங்கும். 2015 இல் செரிஸை ஐந்து மாதங்கள் ஆய்வு செய்து புலர்ச்சியின் குறிப்பணி முடியும் போது அது சுமார் 3 பில்லியன் மைல்கள் பயணம் செய்திருக்கும்.

    முரண்கோள் வளையத்தில் எல்லாவற்றுக்கும் பெரிய வக்கிரக் கோள் செரிஸ். அதன் பூதளத் தன்மைகளைக் கண்டறிய முதலில் உதவியது ஹப்பிள் தொலைநோக்கி. செரிஸின் குறுக்கு நீளம் 580 மைல் (930 கி.மீ). ஏறக்குறைய உருண்டையான கிரிஸ் புளுடோ போல் பரிதி மண்டலத்தின் குட்டிக் கோள் (Dwarf Planet) என்ற வகுப்பணியில் வைக்கப் படுவது. செரிஸ் முரண்கோளில் 40 – 80 மைல் (60 – 120 கி.மீ) ஆழப் பனித்தளம் உள்ளதாகவும் பூமியை விட இனிப்பு நீர்ச் சேமிப்பு (Sweet Water Storage) ஆறு மடங்கு மிக்கதாகவும் அறியப் படுகிறது. 2015 இல் சுற்றப் போகும் நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி செரிஸில் பேரளவு உறைந்து கிடக்கும் நீர்ப்பனியின் முழு விபரங்களை நேரடியாக அறிந்து நமக்கு அறிவிக்கும்.

    (தொடரும்)

    ************************
    தகவல்:

    Picture Credits: NASA, JPL, ESA, JAXA

    1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
    2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
    3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
    4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
    5 http://www.thinnai.com/science/sc0925031.html [Author’s Article on Mars Missions]
    5 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=41006061&format=html (Plasma Rocket Engines)
    6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
    7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
    8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)
    9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)
    10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)
    11. Space Probe Enthralls Japan, as it Heads Home By : Sagamihara (AFP) June 8, 2010
    12 Scientific American Hayabusa Spacecraft Headed Back Toward Earth, Perhaps with Asteroid Dust in Hand By : John Matson (June 11, 2010)
    13 Space Flight Now – Japan Spacecraft will Plunge Back to Earth Sunday By : Stephen Clark (June 12, 2010)
    14 Wikipedia : Missio Type Asteroid Sample Returned to Earth (June 13, 2010)
    15 Space Flight Now : Hayabusa Completes Fiery Return to Earth (June 13, 2010)
    16 Aviation Week – Japan Hayabusu Spacecraft Capsule Successful Landing (June 13, 2010)
    17. Space Daily : Asteroid SampleReturn Capsule Recovered in Outback Australia (June 14, 2010)
    18 Japan Seeks Guiness Record Listing for Space Probe. (June 15, 2010)
    19. BBC News : Successful Launch for NASA Probe (Dawn) (Sep 27, 2007)
    20 Wikipedea : http://en.wikipedia.org/wiki/Asteroid_belt (July 19, 2011)
    21 BBC News : Dawn Probe Orbits Asteroid Vesta By : Jonathan Amos (July 17, 2011)
    22 Space Flight Now : Dawn Asteroid Explorer Moves into Orbit ar Versa By Stephen Clark (July 17, 2011)
    23 BBC News : Asteroid Vesta Reveals its Scars By : Jonathan Amos (July 19, 2011)
    24 Daily Galaxy : Was Earth’s Original Water Delivered by Ice-covered Asteroids ? (July 19, 2011)
    25. Wikipedia – http://en.wikipedia.org/wiki/Ceres_(dwarf_planet) (July 20, 2011)
    26. Wikipedia – http://en.wikipedia.org/wiki/Dawn_(spacecraft) ((July 25, 2011)
    27. Wikipedia – http://en.wikipedia.org/wiki/Colonization_of_Ceres (July 29, 2011)
    28. Space Daily – http://www.spacedaily.com/reports/Dawn_Views_Dark_Side_of_Vesta_999.html
    (July 29, 2011)

    29. NASA Trains Astronauts to Land on an Asteroid before 2025 (May 16, 2012)

    30. http://www.smh.com.au/technology/sci-tech/asteroids-earth-flyby-will-enter-satellite-zone-20130208-2e28j.html [Asteroid’s Earth fly-by will enter satellite zone] (Februrary 8, 2013)

    31. http://www.space.com/19518-asteroid-will-fly-within-18-000-miles-of-earth-video.html [NASA Discusses Asteroid 2012 DA14 Earth Flyby Today: How to Watch Live] (February 7, 2013)

    32. http://www.space.com/19653-asteroid-2012-da14-earth-impact-threat.html [Next Week’s Asteroid Flyby Shows Earth is in ‘Cosmic Shooting Gallery’ ] (February 5, 2013)

    33. http://www.upi.com/blog/2013/02/05/Asteroid-DA14-February-15th-flyby-Fear-vs-Fact-VIDEO/4191360083623/ (Asteroid DA14 February 15th flyby Fear vs. Fact [VIDEO])

    34. http://en.wikipedia.org/wiki/Wide-field_Infrared_Survey_Explorer WISE Spacecraft [February 1, 2013]

    ++++++++++++++++++

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) (February 10, 2013)

    Share
  • நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – தொடர்-26

     பெருவை பார்த்தசாரதி

    சமுதாயத்தின் இன்றய சூழ்நிலை மாற்றங்களைப் பற்றிச் சிந்திக்கும்போது, பல நூற்றாண்டுகளுக்குப் முன் வாழ்ந்த மகரிஷிகளும், முனிவர்களும், மஹான்களும் நமக்கு விட்டுச்சென்ற அறநெறிகள் என்கிற பொக்கிஷங்களை எவ்வாறு படைத்திருப்பார்கள். சற்று ஆராந்து பார்த்தோமானல், இவர்கள் எந்தக் கல்லூரியில் படித்தார்கள்?…யாரிடம் கல்வி பயின்று பட்டம் பெற்றார்கள்?….,எப்படி அறிவிற்சிறந்து விளங்கினார்கள்?…என்ற சந்தேகங்கள் எழும்.  அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை எண்ணிப் பார்த்தால் கூட வியப்பு மிகும். இயற்கையோடு ஒன்றி, விலங்கினங்களோடும், தாவரங்களோடும், சுற்றுப் புற சூழ்நிலைகளோடும் ஒட்டி உறவாடி வாழ்ந்தார்கள். இயற்கையே தெய்வமாக வணங்கினார்கள். இயற்கையோடு நல்லுறவாடும்போது, போற்றி வணங்கும்போது, விண்ணிலும் மண்ணிலும் அமைதி நிலவுவதை உணர்ந்தார்கள். இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதினார்கள். அவர்களால் படைக்கப்பட்ட இதிகாசங்கள், புராணங்கள், உபநிஷத்துக்கள், காப்பியங்கள் போன்றவற்றில் நல்வாழ்க்கைக்கு வேண்டிய அறநெறிகள் நிறைந்து காணப்படுகின்றன. இது போன்ற போற்றுதற்கரிய காப்பியங்களைப் படைத்தவர்கள், எந்தச் சூழ்நிலையை அடிப்படையாக வைத்து, இதைப் படைத்திருப்பார்கள்?… விஞ்ஞான வளர்ச்சியடையாத பண்டைக் காலத்தில் ‘வாழ்வதற்கே சிரமப்பட்ட சூழ்நிலையில்’ இன்றைக்கு நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சகல செளகர்யங்களில் ஒன்று கூடத் தோன்றாத கற்காலத்தில், இப்படிப்பட்ட அரிய சிந்தனைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்வாழ்ந்தவர்கள் மனதில் தோன்றியது வியப்புக்குறியது. ஆனால் 21 ஆம் நூற்றாண்டில், இன்று ‘தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ற படி மாறிக்கொள்ளும் மாட மாளிகைகளும், அதிநவீன கம்ப்யூட்டர் யுகத்தில், விஞ்ஞான வளர்ச்சியோடு சுகபோகத்தை அனுபவித்துவாழும் அறிஞர்களுக்குக் கூட காட்டில் வாழ்ந்த ஞானிகளின் வழிகாட்டுதல் அவசியமாகிறது.

     மனித வாழ்க்கையே ஒரு போராட்டம், இந்த நிலையில் சிந்தனை தோன்றுவது அபூர்வம் அதிலேயும், துன்பங்கள் என்னும் அலைகளில் சிக்கித் தவிக்கின்றபோது நற்சிந்தனைக்கும், சாதனைக்கும் இடமில்லை. பணிசெய்யும் இடத்தில் பிரச்சினை, குடும்பத்தில் சிக்கல், உறவினர்களால் வரும் துன்பம், நாமே தேடி வரவழைத்துக் கொள்ளுகின்ற கவலைகள் இப்படி துன்பங்கள் ஏதும் இல்லாமல் இருப்பவர் இவ்வுலகில் உண்டா?.. என்ற கேள்விக்கு விடை காண்பதரிது…எல்லா வசதிகள் இருந்தும், ஏதாவதொரு துன்பத்தை அனுபவிக்கிறவர்கள் இருக்கிறார்கள்.

     நல்வாழ்க்கை வாழ அனைவருமே ஏதாவதொரு வேலையில், பணியில் ஈடுபட்டு வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். கடவுளின் அருளினால், சுபிட்சமான வாழ்க்கை கிட்டினாலும் அதை அனுபவிக்கத் தெரியாமல் சிக்கித் தவிப்போரும் உண்டு.  ஒரு சிறிய துன்பத்தைக் கூட ஏற்றுக் கொள்ள மனம் ஒப்புவது இல்லை. சாதாரணமாக நம்மிடம் பழகுபவர்கள் சிலரிடத்தில் ‘நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டுப் பாருங்கள். உடனே அதை ஏன் கேட்கிறீகள், அலுவலகத்தில் ஒரே வேலை, இங்கும் அங்கும் ஓட வேண்டியிருக்கிறது, இடையே டிரெய்னிங் ப்ரோக்ராம் வேறு, ஒரு வாரம் சரியாகச் சாப்பிடவில்லை, உடம்பு சரியில்லை, தூங்கவில்லை, வீட்டைக் கவனிக்க முடியவில்லை, என்றெல்லாம் அங்கலாய்த்துக் கொள்வார்கள், முடிவில் பெரிதாக ஒன்றும் சாதித்திருக்கவும் மாட்டார்கள். இதில் உடற்குறையைச் சொல்லி, கடமையைத் தட்டிக் கழிப்பவர்களும் உண்டு.ஆக நேரத்தை சரியான முறையில் திட்டமிட்டு செயல்பட்டால் இத்தகய சலிப்புக்கு அங்கே இடமிருக்காது. எதையுமே இன்முகத்தோடு வரவேற்பவருக்கு எல்லாமே இன்பம்தான். வாழ்க்கை எவ்விதம் அமைந்தாலும், அதை ஏற்று வாழும் மனப்பக்குவம் உள்ளவர்களுக்கு முதுமையும், உடல் உபாதைகளும் பெரிதாகத் தோன்றாது, வயதானாலும் இளைமையாகத் தோன்றுவதற்கு இதுவே காரணம் என்பது மனநல ஆராய்ச்சியாளர்கள் கருத்து. இவை அனைத்துக்கும் காரணமாக அமைவது மனது. மனம் தெளிவாக இருந்தால் சிந்தனை பிறக்கும். சிந்தனை தெளிவானால் மனதிலே சக்தி பிறக்கும், மனசக்தி தடைகளை உடைத்தெறியும், சாதனை படைக்கும்.

    ஒரு வயதானவர் கூறுகிறார், என்னுடைய கடமைகளை நான் நிறைவேற்றிவிட்டேன்.  பிள்ளைகள் எல்லோரையும் படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்தாகி விட்டது, ஆனால் அவர்கள் இன்னும் செட்டில் ஆக வில்லை என்கிறார். பிள்ளைகள் அனுபவிக்கின்ற துன்பங்களையும் பெற்றோர் பங்கெடுத்துக் கொள்வதால், இந்தக் கடமை என்பதற்கு எல்லை இல்லைபோலும். சிலர் வசதியாக வாழ்ந்து பிறகு முதியவராகும்போது, ஏதாவதொரு வகையில் மற்றவர்களைச் சார்ந்து வாழவேண்டிய நிலைக்கு (dependent) ஆகிவிடுகிறார்கள்.  உடல்நலக் குறைபாடுகள் ஒன்றா, இரண்டா,  மருத்துவரிடம் விவரிக்கும்போது, அவரே குழப்பத்துக்குள்ளான மாதிரி, உடலில் ஏகப்பட்ட சிக்கல்கள், முடிவில் ஒரு பெரிய மருத்துவசோதனைப்பட்டியல், மருந்துச்சீட்டு, இயன்முறை பயிற்சிமையத்துக்கு (psysiotheraphy centre) ஒரு வாரகாலம் பரிந்துரைத்தல் போன்றவற்றோடு மருத்துவமனையிலிருந்து விடுதலை. இம்மாதிரி இக்கட்டான சந்தர்ப்பந்தங்களில் வருங்காலத்தைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி விடுவது சகஜம். துன்பம் வரும்போது துணைக்கு வருபவரது அறிவுரை, உறவினர், நண்பர்களது பரிந்துரை, நல்ல மருத்துவர் மற்றும் மருத்துவமனையைத் தேடுதல் போன்றவைகளும் பின் தொடரும், இதனால் மனம் மேலும் குழப்பமடையும், நாம் பூஜை, பிரார்த்தனை, பரிகாரம் முதலியவற்றைச் சரிவர செய்துகொண்டிருக்கின்ற போதிலும், பரிகார ஸ்தலங்கள், குளங்கள், மஹான்கள், சாதுக்கள் முக்கியமாக துறவறம், காவிவேட்டி போன்றவைகள் அடிக்கடி ஞாபத்துக்கு வந்து மேலும் நம்மை அலைக்கழிக்கும். நலம் விசாரிப்பவர்களோடும்,  நண்பர்களோடும் உரையாடும்போது தத்துவங்கள் பேசத்தோன்றும். மருத்துவமனையில் தனிமையை விரட்டி, மருத்துவருக்காகவும், மருத்துவ சோதனைக்காகவும் காத்திருக்கும் நேரத்தில், மற்றவரின் அறிவுரையைவிட, நமக்கெல்லாம் உதவக்கூடியது, கைகொடுக்கக்கூடியது என்று சொன்னால், நம்மைப் போல வேறு பலரும் துன்பங்களை அனுபவிப்பவர்களைப் பார்க்கும் போது சற்று ஆறுதல் கிடைக்கும். உடலில் ஒரு சிறிய காயம் பட்டால்கூட, சாதாரண மருத்துவரிடம் செல்லாமல் நிபுணரிடமல்லவா செல்கிறோம். இந்நேரத்தில் ஜனனம் எடுக்கும்போதே குறைகளோடு பிறப்போரைப் பற்றிச் சிந்திக்கிறோமா?…பிறக்கும் போதே ஊனத்தோடு பிறந்தவர்கள், உலக சாதனை புரிவதைப் பற்றி எண்ணிப் பார்க்கிறோமா?…என்றால் ‘இல்லை’ என்பதே பெரும்பாலானவரிடமிருந்து வரும் பதிலாக இருக்கும். மருத்துவரிடம் போகும் போது மட்டும் இத்தகய சிந்தனைகள் நமக்கு எழுவது இயல்பு என்றாலும், மற்ற நேரங்களில் மகிழ்ச்சியாக இருக்கும் போதாவது, இவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுவதில்லை. கஷ்டத்தை வெல்ல மந்திர உச்சாடனை செய்வதைவிட, குறைகளைக் களைந்து சாதனை வாழ்க்கை வாழ்ந்த பலரில், ஒரு சிலரை மட்டும் நினைத்தாலே துன்பங்கள் ஓடோடிவிடும். தினமும் காலையில் மகிழ்ச்சியாக படுக்கையைவிட்டு எழுந்தவுடன் காபி அருந்திவிட்டு, மின்விசிறியை ஆன் செய்து, தினசரிகளைப் புரட்டுகிறோம் அல்லது பாட்டுக் கேட்கிறோம். இந்த ஒரு சாதாரண செயலுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் உண்மைகளை என்றாவது ஒரு நாள் சிந்தித்தித்திருக்கிறோமா!..

    தனது 46 வது வயதில், இடது கையிலும், காலிலும் சில இடங்களில் நிரந்தரமாக செயலிழந்த போது இவை எதையுமே கருத்தில் கொள்ளாமல், ஒருவித ஆராய்ச்சித் துறையில் முழுவதுமாக தன்னை இணைத்துக் கொண்டார். பதப்படுத்துதல், நுண்ணுயிர்கள் பற்றிய இவரது தொடர் ஆராய்ச்சிகள் முடிவில் இவருக்கு உலகப் புகழைத் தேடித்தந்தன. அனுதினமும் பால், பியர், ஒயின், மதுவகைகள் போன்றவற்றைப் பயன்படுத்துபவர்கள் இவரை நினைத்து நன்றி செலுத்த வேண்டும். தினமும் அதிகாலையில், பாக்கட் பால் வாங்குபவர்கள் காபி குடிப்பதற்கு முன் தவறாமல் நினைத்துப் பார்க்க வேண்டியவர்தான் லூயிஸ் பாஸ்ச்சர்

    இன்று நாம் மகிழ்ச்சியோடு பாட்டு மற்றும் பலரது பேச்சுக்களையும் கேட்கிறோம். வெளிச்சம் இல்லையேல் வாழ்க்கை இல்லை என்பதுபோல மின்சார வெளிச்சத்தில் வாழ்க்கை முழுவதும் பலன்களை அனுபவத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு ஐந்து நிமிடம் கரெண்ட் இல்லையென்றால், ஒருவேலையும் செய்ய இயலவில்லை. ‘சம்சாரம் இல்லாமல் வாழ்ந்தாலும், மின்சாரம் இல்லாமல் வாழமுடியாது’ என்பதை உணருகிறோம். ஆனால் தனது இளம் வயதிலேயே ஒருவருக்கு மூளைக்காய்ச்சல் நோய் தாக்கி, நாளடைவில் காது கேட்கும் திறனையும் வெகுவாக இழந்து விட்டார் ஒருவர். அதனால் படிப்பிலும் அதிக நாட்டம் இல்லை. அங்கக் குறையைத் தாங்கி, அயறாத ஆராய்ச்சியில் ஈடுபட்டு உலகத்துக்கே ஒளி ஏற்றினார். இவரது கண்டுப்பால் இரவு பகலானது. நமது வீட்டில் மின்சாரத்தால் இயங்கும் எந்தவொரு பொருளைத் தொடும் போதும், தவறாமல் நம் நினைவில் கொள்ள வேண்டியது இவரைத்தான். இவர் இறந்தபோது உலகமே ஒரு நிமிடம் கண்ணைமூடி (மின்சார விளக்குகளை அணைத்து) நன்றி செலுத்தியது, அவர்தான் தாமஸ் ஆல்வா எடிசன்.

    மிகச்சிறந்த இசைப் படைப்பாளர் என்ற பெயருக்கு உரியவர். உலகத்தை தன் இசையால் கட்டிப்போட்டவர் என்றுகூடச் சொல்லுவார்கள். இவர் ஒரு கால கட்டத்தில் முழுவதும் காது கேளாதவராக இருந்தார் என்பதும் அந்தக் கால கட்டத்தில்தான் தனது 9 வது சிம்பனியை உருவாக்கி சாதனை நிகழ்த்தினார். இனிமையான இசையைக் காதால் கேட்டுத்தானே ரசிக்க முடியும். காதால் கேட்டு இசையை ரசிக்கக்கூடிய பாக்கியத்தைத் தான் பெறவில்லை என்றாலும், பிறருக்கு அந்த இன்பத்தைத் தரமுடிந்த அந்தக் கலைஞனின் மனம் எவ்வளவு வேதனை அடைந்திருக்கும்?……நிச்சயமாக எல்லோரும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். தனது சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட சோகங்களை எதிர்கொண்டு, உலகையே இனிமையான இசையால் மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர்தான் இசைச் சக்கரவர்த்தி பீத்தோவான்.

    இவர்களைப் போல் இன்னும் எத்துணையோ சாதனையாளர்கள், பிறவித் துன்பத்தைத் துச்சமாகக் கருதி, சுயநலம் இன்றி சிந்தித்ததால்தான், இன்றய வாழ்க்கையில் மேம்பட்ட நிலையை நாம் எட்டமுடிகிறது.  

    மகாகவி பாரதி எப்போதுமே, உலகவியலைப் பற்றிக் கனவு கண்டவர். வாழ்க்கையில் நிகழும் துன்பங்களைக் கண்டு ஒரு போதும் உழல மாட்டேன் என்று உறுதிபட எடுத்துரைத்தவர். அவரது படைப்புகளில் ‘என்னுடைய வாழ்நாளில் நான் சாகாமல் இருக்கும் கலையைக் கற்றவன்’ என்று சொல்வது போல ஒரு பாடலை அமைத்திருப்பதைக் காணமுடியும். உலகநியதி என்று சொல்லக்கூடியவைகளை வென்று காட்டுவேன் என்று சொன்ன அவர், பிறப்பும், இறப்பும் மாற்றமுடியாத உலக நியதி, அதிலே கூட மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டு ரசிக்கும் பாரதி, துன்பங்களைக் கண்டு ஒருபோதும் நான் சாக மாட்டேன் என்று உறுதி கூறுகின்றான் போலும். கவலையையும், அச்சத்தையும் போக்கி, துன்பத்திலிருந்து விடுபட்டு மரணத்தை வெல்ல மாகாளியிடம் வரம் வேண்டுவதைப் பாருங்கள்!…

    முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்

    முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய் விட்டார்.

    பொந்திலே யுள்ளாராம், வனத்தில் எங்கோ

    புதர்களிலே யிருப்பாராம், பொதிகை மீதே

    சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே

    சற்றெ யங்கங்கேதென் படுகின் றாராம்,

    நொந்தபுண்ணைக் குத்துவதில் பயனொன் றில்லை;

    நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்!

    அந்தணனாம் சங்கராச்சார்யன் மாண்டான்;

    அதற்கடுத்த இராமாநுஜனும் போனான்!

    சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்,

    தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,

    பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;

    பார்மீது நான்சாகா திருப்பேன், காண்பீர்!

    மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்,

    மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,

    நலிவுமில்லை, சாவுமில்லை! கேளீர்,கேளீர்!

    நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை

    சுருங்கச் சொல்லின், வருகின்ற துன்பத்தை இன்பத்தோடு வரவேற்று, அதையும் இன்பமாகவே கருதினால், பகைவரும் கூட பாராட்டுவர் என்பதைத்தான் ‘துன்பத்தை இன்பமெனக் கொண்டு அமைதி வாழ்க்கை வாழ்தலே சாலச்சிறந்தது’ என்கிறது வள்ளுவனின் வாழ்வியல் பாடம்.

     இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்

    ஒன்னார் விழையுஞ் சிறப்பு (குறள்-630)

    தொடரும்………

    Share
  • கல்லூரி கட்டணம்

    மாதவன் இளங்கோ

    “ஏண்டா சீனி, காத்தால சீக்கரமா போவணும்னு நேத்து ராவே சொல்லமாட்டே? சாப்பாடே உன்னும் ஆகல!” என்று திட்டிக்கொண்டே சமையற்கட்டிலிருந்து வெளியே வந்தாள் என் தாய்.

    “பரவால மா. இன்னிக்கி எங்க கம்பெனி கஸ்டமர்ஸ் ரெண்டு பேரு     அமெரிக்காலர்ந்து வராங்களாம். ஏர்போர்டுக்கு போயி கூட்டினு போணும். கம்பெனி காரு சாவிய வேற நைட் ட்யூடி பாத்த இன்னோரு டிரைவர் மறந்து வீட்டுக்கு எடுத்துனு போயிட்டானாம். அவன் வீட்டுக்கு வேற போணும். நான் மத்தியானம் ஹோடல்லயே சாப்டுக்கறேன்.” என்று கூறிவிட்டு எனது ஷூவை துடைத்து மாட்டிக்கொண்டு கிளம்ப ஆயத்தமானேன்.

    “பால் சுத்தமா இல்ல. முருகன் கடைல டீயாச்சும் குடிச்சிட்டு போடா. வெறும் வயித்துல போகாத.”

    “சரிம்மா. ஆமா, செல்விக்கு இன்னக்கி காலேஜ் இல்லையா? இன்னும் தூங்கினே இருக்குது.”

    ” அட போடா! ஒன்னும் தெரியாத மாரி கேக்கற. ஏந்தான் அவள நீ அந்த காலேஜில சேத்துவுட்டியோ? அப்பப்போ காசு கேட்டு ராவடி பண்றானுங்க. காலேஜி பீசு கட்டணும்னு அவ மூஞ்ச உம்முன்னு வெச்சிணு கிறா. நீயும் கம்முனு கீற. கொஞ்சம் எதனா பண்ணமுடியுமா பாரு. கட்டற தேதி முடிஞ்சி ஒன்ற மாசம் ஆகுது.”

    “நான் என்னா மா பண்றது? எங்க போறது? நான் என்னா யார்கிட்டயும் கேக்காமையா இருக்கேன்?”

    “இல்லாட்டி பேசாம அவள நிறுத்திட்றா நீ. கல்யாணம் பண்ணி அனுப்பில்லாம். படிப்பும் வேணா! ஒரு எழவும் வேணா!” என்று கத்தினாள்.

    “மா, காலாங்காத்தால உன் கச்சேரிய ஆரம்பிக்காத. என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும். சாயங்காலம் பேசிக்கலாம்.” என்று கடிந்து விட்டு அய்யப்பந்தாங்கல் பேருந்து நிலையத்தை நோக்கி விரைந்தேன்.

    நல்லவேளையாக தாம்பரம் செல்லும் பேருந்து ஒன்று கிளம்பத் தயார் நிலையில் இருந்தது. இன்னும் கொஞ்சம் வேகமாக ஓடிச்சென்று பேருந்தில் ஏறி அமர்ந்தேன். உட்கார இடம் கிடைத்ததில் சிறிது மகிழ்ச்சியடைந்தாலும், சற்று நேரத்திற்கு முன்பு என் தாயுடன் பேசியது நினைவுக்கு வரவே, மீண்டும் விசனம் வந்து என்னைத் தொற்றிக்கொண்டது.

    நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே என் தந்தை காலமாகிவிட்டார். தந்தையின் மரணத்திற்குப் பிறகு உறவுகள் தானாய் விலகிக்கொண்டன. எங்கே நாங்கள் அவர்களுக்கு பாரமாகி விடப் போகிறோமோ என்கிற (அ)நியாயமான பயம் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

    என் தாய் வீட்டுவேலை செய்ததில் கிடைத்த பணம் எங்கள் உணவிற்கே போதவில்லை என்பதால், என் படிப்பை நிறுத்திவிட்டு, என் தந்தையின் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் லாரி கிளீனராக என் வேலையைத் தொடங்கி, படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று ஓட்டுநராகி விட்டேன்.

    கல்வி கற்க வேண்டும் என்கிற ஆவல் நிறைய இருந்தாலும், போதாமையால் இளம் வயதிலேயே இந்த வேலைக்குத் தள்ளப்பட்டு விட்டேன். ஆனால், என் தங்கையை மட்டும் எப்பாடுபட்டேனும் நன்றாகப் படிக்கவைக்க வேண்டும் என்கிற வெறி அந்த வயதிலிருந்தே எனக்கு இருந்தது.

    அவளுடைய பள்ளிக்கல்வி வரை அதிக சிரமமில்லாமல் எங்களால் சமாளிக்க முடிந்தது. ஆனால், என்றைக்குக் கல்லூரிக்குப் போக ஆரம்பித்தாளோ அன்றைய நாளிலிருந்தே நிலைமை தலைகீழ் ஆகிப்போனது.

    இந்த இரண்டு வருடங்களில் நிறைய கடன்கள் வாங்கிவிட்டேன். மேலும் யாரிடம் கடன் கேட்கலாம் என்று எனக்குத் ரொம்பத் தெரிந்தவர்கள், சுமாராகத் தெரிந்தவர்கள், எங்களை விட்டு என்றோ விலகிப் போன உறவுகள் என்று இப்படி எல்லோரையும் பட்டியலிட்டு, ஒவ்வொருவரிடமும் சென்று கடன் கேட்டேன். சொல்லி வைத்தார் போல அனைவரிடமிருந்தும் ஒரேமாதிரியான பதில் வரும். இதற்கு மேல் கடன் கேட்க எனக்கு யாருமேயில்லை என்கிற நிலை.

    வீட்டிலும் இதற்கு மேல் விற்பதற்கு என்று எதுவுமே இல்லை. என்னுடைய ஓரே ஒரு சொத்தான பைக்கையும் விற்றுவிட்டேன். நான் பள்ளிக்குத்தான் செல்லவில்லையே தவிர வாசிக்கும் பழக்கம் அதிகமாய் இருந்ததால், தெருவோரக் கடைகளில் வாங்கிய புத்தகங்கள் மட்டும் வீட்டில் ஒரு மூலையில் இரண்டு மூட்டைகள் முழுக்க நிரம்பிக் கிடந்தது. அடுத்ததாக அவைகளைத்தான் விற்கவேண்டும். ஆனால் இப்போதெல்லாம் யார் புத்தகங்களை விலை கொடுத்து வாங்குகிறார்கள்? தமது கதாநாயகர்களின் திரைப்படங்களின் ஆரம்ப நாள் அமர்க்களங்களுக்கு வேண்டுமானால் ஆயிரம், இரண்டாயிரம் இறைப்பார்கள்; குடம் குடமாக பால் வாங்கி அபிஷேகம் செய்வார்கள். புத்தகமாவது? வாங்குவதாவது?

    சரி, வீட்டையாவது விற்கலாமென்றால், புறம்போக்கு நிலத்தில் கட்டிய குடிசையை யார் வாங்குவார்கள்? இன்னும் சொல்லப்போனால் அரசாங்கம் என்றைக்கு அந்த இடத்தை எங்களிடமிருந்து பறித்து, வீட்டை இடித்துத்தள்ளுமோ என்கிற எண்ணம் அவ்வப்போது எனக்குத் தோன்றி மிரட்டிப் பார்க்கிறது.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒரு சிறிய ‘கால் டாக்ஸி’ நிறுவனத்தில் ஆம்னி ஓட்டிக்கொண்டிருந்தேன். என் தங்கை பொறியியல் கல்லூரி சேர்ந்த சமயத்தில் கிட்டத்தட்ட எல்லா வங்கிகளுக்கும் சென்று கடன் கேட்டேன். எனது தற்காலிகப் பணியை காரணங்காட்டி எல்லா வங்கிகளுமே கடன் தர மறுத்து விட்டன.

    இதற்காகவே அரசாங்கத்திலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு நல்ல நிறுவனத்திலோ ஓட்டுநராக வேலைக்குச் சேர வேண்டும் என்கிற வெறியோடு வேலை தேடியலைந்தேன்.

    கடன் வாங்குவதற்கானத் தகுதியை அடைவதற்காகவே ஒரு நல்ல வேலையை த் தேடிய முதல் ஆள் நானாகத் தானிருப்பேன்.

    எங்கள் கம்பெனி டாக்ஸியில் அடிக்கடி பயணித்த வாடிக்கையாளர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் எனக்கு ஓட்டுநராக வேலை கிடைத்தது. மாத ஊதியம் கொஞ்சம் குறைவாயிருந்தாலும், சேமநல நிதி, மருத்துவக் காப்பீடு, நன்றாக வேலை செய்வோருக்கு கூடுதல் ஊதியம் என்று நிறையச் சலுகைகள் இருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு இந்த வேலை மிகவும் பிடித்திருந்தது.

    என் மேலதிகாரி வேணுகோபால் மிகவும் கண்டிப்பானவர். மற்ற ஓட்டுநர்களை விட என் மீது அவருக்கு ஒரு தனி அக்கறை உண்டு. எனக்கு இருக்கும் புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தையும், எனது தமிழ் உச்சரிப்பையும் பாராட்டினாலும், ஆங்கிலம் நன்றாக பேசக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று அடிக்கடி அறிவுரை வழங்குவார். என் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கையினால் என்னை வங்கிக்குச் செல்வது, பொருட்கள் வாங்கி வருவது போன்ற மற்ற சில அலுவலகப் பணிகளையும் செய்யச் சொல்லுவார். நல்ல உடைகளை அணிந்து வரச்சொல்வார். அதனால் தான் இப்போதெல்லாம் நான் சட்டையை மடித்து விட்டுக் கொண்டு, ஷூவெல்லாம் அணிந்து கொண்டு, கிட்டத்தட்ட ஒரு மென்பொருள் வல்லுநரைப் போல அலுவலகத்திற்குச் செல்கிறேன். என்னையே எனக்கு இப்போதுதான் மிகவும் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

    வார நாட்களில் இரவு பகல் பாராமல் உழைத்துவிட்டு, வார ஈறுகளில், சொந்தமாகக் கார் வைத்திருக்கும் எனக்குத் தெரிந்த பழைய வாடிக்கையாளர்கள் சிலருக்கு கார் ஓட்டினேன். அதன்மூலம் சிறிது கூடுதல் வருமானம் கிடைத்தாலும், என் தங்கையின் கல்லூரிச் செலவுகளுக்கு அது போதுமானதாக இல்லை.

    போதிப்பது என்ன அவ்வளவு சிரமமான விஷயமா? பிறகு ஏன் இந்தக் கல்லூரிகள் இப்படி வசூல் வேட்டை நடத்துகின்றன? தரமான கல்வி ஏன் எங்களைப் போன்ற ஏழைகளுக்கு ஒரு எட்டாக்கனியாகவே இருக்கிறது? என் தங்கையின் இந்த வருடக் கல்லூரி கட்டணத்தை எப்படிக் கட்டுவது? வேணுகோபால் சாரிடம் கேட்கலாமா? தருவாரா? நல்லவர்தான்! ஆனால் கண்டிப்பானவர் ஆயிற்றே? எப்போது திருப்பிக் கொடுப்பாய் என்று கேட்டால் என்ன சொல்வது? திருப்பிக் கொடுக்காவிட்டால் வேலைக்கே உலை வைத்துவிடுவார்களே?” என்று இப்படி ஏதேதோ கேள்விகளைத் தனக்குள்ளே கேட்டுக்கொண்டு சிந்தனையில் தொலைந்து போயிருந்த என்னை, தாம்பரம் பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து சேர்த்தது எம்.டி.சி பேருந்து எஸ் 166.

    மேற்கு தாம்பரத்திலிருந்த மற்றொரு ஓட்டுநரின் வீட்டிற்கு ஓட்டமாய் ஓடி, சாவியை வாங்கிக்கொண்டு, அங்கிருந்து நேராக அலுவலகத்திற்குச் சென்று காரை எடுத்துக்கொண்டு நான் விமான நிலையத்திற்குள் நுழையவும், எங்களுடைய அமெரிக்க கஸ்டமர்கள் வந்த விமானம் தரையிறங்கவும் சரியாக இருந்தது.

    அவர்களுடைய பெயர்கள் எழுதியிருந்த போர்டை கையில் வைத்துக்கொண்டு வருகைக்கூடத்தில் அவர்களுக்காகக் காத்திருந்தேன்.

    இரண்டு மேல்நாட்டவர்கள் புன்னகைத்துக் கொண்டே என்னை நோக்கி வந்தார்கள். அவர்களாகத்தானிருக்கும் என்று யூகித்த சமயம், அவர்களில் ஒருவர், “ஆ யூ சி..ரி..நி.. வசன்?” என்று கேட்டார்.

    பெயரைச் சிறிது குழப்பி உச்சரித்தாலும், அவர்கள் எனது பெயரை  தெரிந்து வைத்திருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

    “எஸ் சார். ஐயாம் சீனிவாசன்!” என்று கூறிவிட்டு அவர்களிடமிருந்த கைவண்டியைப் பெற்றுக் கொண்டு,  கார் நிறுத்தத்திற்கு அழைத்துச் சென்றேன்.

    சரியாக இருபது நிடங்களில், எங்கள் வாடிக்கையாளர்கள் வழக்கமாகத் தங்கும் ராடிசன் ஹோட்டலுக்கு அவர்களைக் கொண்டு போய்ச் சேர்த்தேன். சற்று நேரம் இளைப்பாறிவிட்டு, காலையுணவை முடித்துக் கொண்டு வந்த அவர்களுடன் அலுவலகத்திற்குக் கிளம்பினேன்.

    அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே காரை ஓட்டிச் சென்றேன். அது ஆங்கிலம் போலவே இருந்தாலும், பெரும்பாலான வார்த்தைகளும், விஷயங்களும் எனக்குப் புரியவே இல்லை. போக்குவரத்து நெரிசலைப் பற்றியும், ஒழுங்கீனமாக வண்டிகள் சென்று கொண்டிருப்பதைப் பற்றியும் பேசிச் சிரித்துக்கொண்டிருப்பது போலத் தெரிந்தது. ஒருவேளை என் தங்கைக்கு இவர்கள் பேசுவது நன்றாகப் புரியும் என்று நினைத்துக் கொண்டபோது, அவளின் கல்லூரி கட்டணமும் சேர்ந்து நினைவுக்கு வந்து வருத்தியது.

    முப்பது நிமிட ஓட்டத்திற்குப் பிறகு ஐ.டி நெடுஞ்சாலையில் இருந்த எங்கள் அலுவலகத்திற்கு சென்றடைந்தோம். காரிலிருந்து இறங்கிய அவர்கள், “யுவர் டிரைவிங் இஸ் ஆசம்! வெரி டிசிப்ளின்ட் டிரைவர்! ப்ரிசியேட் இட்!” என்று கூறிவிட்டு என்னிடம் கைகுலுக்கி வாழ்த்தினர்.

    “தாங்க்யூ சார்!” என்று கூறிய எனக்கு அவர்கள் பயன்படுத்திய சில வார்த்தைகளும், உச்சரிப்புகளும் புரியவில்லை என்றாலுங்கூட, அவற்றிலிருந்த உணர்வுகள் நன்றாகவே புரிந்தது.

    மாலை ஐந்து மணிக்கு வேணுகோபால் சாரிடமிருந்து எனது கைபேசிக்கு அழைப்பு வந்தது.

    “ஸ்ரீனி, ரிசெப்ஷனுக்கு கொஞ்சம் உடனே வா.”

    “இதோ வர்றேன் சார்” என்று கூறிவிட்டு உள்ளே ஓடினேன்.

    வரவேற்பு கூடத்தில் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தது அந்த ஆறடி உயரம்.

    “ஸ்ரீனி, இன்னிக்கி ஒரு ஆறுமணிக்கு திரும்பவும் கஸ்டமர்ச ஹோட்டலுக்கு கூட்டிட்டு போகணும். நம்ம பாபு சாரும் கூட வருவார். அவர் டீம்லர்ந்து இருபது இருபத்தைஞ்சி பேர் கஸ்டமர்சோட டீம் ப ஃபே டின்னருக்குப் போறாங்க. டின்னர் முடியற வரைக்கும் நீ அங்க வெயிட் பண்ணிட்டு, அவங்க டீம்ல மூணு கேர்ல்ஸ மட்டும் அவங்க வீட்ல டிராப் பண்ணிட்டு போய்டு. ஒகே வா?”

    “ஒகே சார்.” என்று தலையாட்டிவிட்டு, சிறிது தயக்கத்துடன் அவரை அழைத்தேன், “சார்…”

    “என்னப்பா?”

    “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் சார்..”

    “இப்போ கொஞ்சம் வேலை டைட்டா இருக்கு ஸ்ரீனி, நாளைக்கு மார்னிங் கண்டிப்பா பேசலாம்.” என்று கூறிவிட்டு சென்றவர் மீண்டும் திரும்பி வந்து, “ப்யூ மோர் திங்க்ஸ், ஸ்ரீனி. பாபு சார்கிட்ட டின்னர் முடிஞ்சப்புறம் ரெசீட் வாங்கிட்டு வந்து சைலஜா கிட்ட கொடுத்துடு. அப்புறம், நாளைக்கு மார்னிங் கஸ்டமர்ச கூட்டிட்டு நம்ம சிறுசேரி ஆபீஸ் வந்துடு! அவங்க ரொம்ப இம்பார்டன்ட் கஸ்டமர்ஸ். டிரைவ் பண்ணும்போது சும்மா போனெல்லாம் எடுத்து பேசிட்டு இருக்காதே! ஒகே?”

    “ஒகே சார். ஆனா, நான் டிரைவ் பண்ணும்போது எப்போவுமே போன சுட்ச் ஆப் பண்ணிடுவேன் சார்.” என்றேன்.

    “ஐ நோ யூ ஸ்ரீனி. பட் இட்ஸ் மை ட்யூட்டி டு வார்ன் யூ.” என்று கூறி என் தோள் மீது  தட்டிக்கொடுத்து விட்டுச் சென்றார்.

    சுமார் ஆறேகால் மணியளவில் பாபு அவர்களையும், அமெரிக்கர்களையும் அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்குச் சென்று சேர்ந்த போது மணி ஏழு. அவர்கள் இறங்கிய பிறகு கதவுகளை மூடிவிட்டு மீண்டும் காருக்குள் அமரச் சென்றபோது, அவர்களில் ஒருவர், “ஹே, சி..ரி..நி, ஆ யூ நாட் ஜாய்னிங் அஸ்?” என்று கேட்டார்.

    இந்தக் கேள்வியே எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. வழக்கமாக விருந்து முடியும் வரை நான் வெளியேதான் காத்திருப்பேன்.

    “நோ சார். ஐயாம் ஈட் ஹோம்.” என்று எதோ எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் உளறினேன்.

    “நோ நோ! ப்ளீஸ் கம்! பேபு, ப்ளீஸ் ஆஸ்க் ஹிம் டு ஜாயின் அஸ்!”

    “ஸ்ரீனி, வாங்க. ப்ளீஸ். கஸ்டமர்ஸ் தப்பா நினைப்பாங்க!” என்று பாபு சார் வற்புறுத்தியதின் பேரில் அவர்களோடு விருந்திற்குச் சென்றேன்.

    என் வாழ்க்கையிலேயே அத்தனை உணவு வகைகளை நான் பார்த்ததே இல்லை. எங்களுடைய நீண்ட மேசையில், கிட்டத்தட்ட ஒரு இருபத்தைந்து பேர் அமர்ந்து இருந்தனர். எல்லோருமே குதூகலத்துடன் உணவுவகைகளின் பெயர்களைச் சொல்லிக்கொண்டும், அலுவலகத்தில் அன்றாடம் நடக்கும் விஷயங்களைப் பற்றி உரையாடிக்கொண்டும், ஒருவரையொருவர் கிண்டலடித்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும் உணவருந்திக் கொண்டிருந்தனர். அந்த அணியில் நிறைய பேரை எனக்கு ஏற்கனவே தெரியும். இருந்தாலும், அந்தச் சூழல் எனக்கு புதியது என்பதால் அங்கு அமர்வதற்கே சிறிது வெட்கமாக இருந்தது.

    அதிலும் இந்த மேசைக்கரண்டியையும், முள்கரண்டியையும் வைத்துக் கொண்டு எப்படித்தான் சாப்பிடுகிறார்களோ? முதலில் தட்டிலிருக்கும் உணவுக்கும் கரண்டிகளுக்கும் இடையே ஒரு பலத்த போராட்டம்; பிறகு, அதை வாயில் திணிப்பதற்கு ஒரு பகீரதப் பிரயத்தனம் என்று எனக்கு  எப்போதுதான் விருந்து முடியுமோ என்றாகி விட்டது.

    அத்தனை பெயர் தெரியா உணவு வகைகள் விதம் விதமாய் இருந்தாலும், எதையுமே திருப்தியாக ரசித்து ருசித்து உண்ண முடியவில்லை. எந்த வகையான உணவிற்கு எந்தக் கரண்டி, எதை வலது கையில் பிடிப்பது, எதை இடது கையில் பிடிப்பது என்று அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே சாப்பிடுவதற்குள் போதுமென்றாகி விட்டது. வெளியே எழுந்து சென்றால் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்கிற பயம் வேறு இருந்ததால் தட்டையே குனிந்து பார்த்துக்கொண்டு, மெதுவாக உணவருந்திக் கொண்டிருந்தேன். இத்தனை போராட்டங்களுக்கு இடையிலும், கண்டிப்பாக வாழ்வில் ஒருமுறையாவது எனது தாயையும் தங்கையையும் அழைத்து வந்து இத்தனை உணவு வகைகளையும் காண்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் உதித்தது.

    ஒரு வழியாக விருந்து முடிந்தது. அனைவரது தட்டிலும் உணவு வகைகள் தொட்டும் தொடாமலும் இன்னும் நிறைய மீதமிருந்தது. பஃபே முறையில் அளவில்லா உணவு என்பதால் வீணடிப்பதில் தவறில்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டே வெளியே செல்ல நினைத்த போது, என்னுடைய புதிய வெள்ளைக்கார நண்பர்கள் சிரித்துக்கொண்டே என்னிடம் வந்து மீண்டும் கைகுலுக்கினார்கள்.

    இதெல்லாம் எனக்கு பிரமிப்பாக இருந்தது. என் அலுவலகத்தில் பணிபுரிபவர்களே இதுநாள் வரை  என்னிடம் கைகுலுக்கியெல்லாம் நட்பாகப் பேசியதில்லை. அவர்களிடம் மறுநாள் காலை எட்டு மணிக்கு வருவதாய் சொல்லி விடை பெற்றுக்கொண்டு வெளியே சென்றேன்.

    பாபு சார் என்னிடம் வந்து, “ஸ்ரீனி, இந்தாங்க ரெசிட். தென், அந்த கேர்ல்ஸ பத்திரமா வீட்ல ட்ராப் பண்ணிடுங்க!” என்று கூறிவிட்டு ஒரு கவரைத் தந்தார்.

    அதை வாங்கி காரில் வைத்துவிட்டு, அந்த மூன்று பெண்களையும் சென்னை நகரின் ஒவ்வொரு மூலையில் இருந்த அவர்களின் வீடுகளில் பாதுகாப்பாய் விட்டு விட்டு அலுவலகத்தில் நுழைந்த போது மணி பதினொன்று.

    காரிலிருந்து கீழே இறங்கும் போது அந்த வெள்ளைக் கவர் தென்பட்டது. நான் அலுவலகக் கவர்களை என்றுமே பிரித்துப் பார்த்ததேயில்லை. ஆனால், என் தாயையும் தங்கையையும் அது போன்ற விருந்திற்கு ஒருநாள் அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற ஆதங்கம் மேலெழுந்ததால் பிரித்துப்  பார்த்தேன்.

    அதிர்ந்தே போனேன்.

    மொத்தச் செலவு 41000 ரூபாய் என்று இருந்தது. இருபத்தைந்து பேரின் இரவு உணவிற்கு நாற்பத்தியோராயிரமா??? நமக்கெதற்கு இதெல்லாம்? என்னுடைய குடும்பத்தை அங்கு அழைத்துச் செல்லவேண்டும் என்கிற கனவை அந்தக்கணமே தகர்த்து எறிந்துவிட்டேன்.

    அந்நேரத்திற்கு பேருந்து எதுவும் கிடைக்காததால், நடந்தே கிட்டத்தட்ட கிண்டிவரைச் சென்று விட்டேன். அங்கே எதிர்பட்ட ஷேர் ஆட்டோவை கைகாட்டி நிறுத்தி போரூர் வரைக்கும் அதில் சென்று, மீண்டும் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இது ஒன்றும் எனக்குப் புதிதில்லை. நள்ளிரவில் போரூர் ஏரியை பார்த்துக் கொண்டே நடப்பதில் எனக்கு ஒரு அலாதி இன்பம்.

    சில நிமிட நடையில் என் வீட்டுத் தெருமுனையைச் சென்றடைந்த போது, அங்கு வழக்கமான நாய் குரைப்புகளோடு சேர்ந்து ஒருவித சலசலப்பு இருப்பதை உணர முடிந்தது.

    அந்த இருட்டில் என் வீடு மங்கலாகத் தெரிந்தது.

    ஆனால்….

    அங்கு ஏன் அவ்வளவு கூட்டம்?

    நெஞ்சம் படபடத்தது. எனக்கு என்னவோ தவறாகப் பட்டது. இன்னும் அருகே சென்றபோது அங்கே ஒலித்துக்கொண்டிருந்த அழுகுரல்கள் மெள்ள மெள்ள என் காதுகளை வந்து நிரப்ப, என் இதயத்தில் கனம் ஏறிக்கொண்டிருப்பதை உணர முடிந்தது. என் கால்கள் உதறல் எடுக்க ஆரம்பித்து, எனது நடைச் சிறிது சிறிதாய் தளர்ந்தது.

    “அதோ சீனி வந்துட்டான்…..” என்று என்னைக் கண்டவுடன் என் நண்பன் துரை உரக்கக் கத்தினான்.

    அடுத்த நிமிடமே, உள்ளேயிருந்த என் தாய் தலைவிரிக் கோலத்தோடு, தலையிலும், மார்பிலும் அடித்துக்கொண்டும், “டேய்ய்ய்ய்ய் சீனி……..,” என்று கதறிக்கொண்டும் என்னருகே ஓடிவந்து என் சட்டையைப் பிடித்து இரு கன்னங்களிலும் அறைந்துவிட்டு, “எங்கடா போய்த் தொலைஞ்சே? எங்க போயி தொலைஞ்சே? செல்வி நம்மள விட்டுட்டு போய்ட்டா டா சீனீ….! அய்யோ! நான் இப்போ என்னடா பண்ணுவேன்?” என்று அவள் கதறி ஓலமிட்ட அந்த நொடி, என் இதயம் தடதடதடவென்று அதிர்ந்து கொண்டிருந்தது.

    எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன நடந்தது என்று கேட்கவும் வாயெழவில்லை. வீட்டிற்குச் சென்று என் தங்கையைப் பார்க்கக் கூடத் தோன்றவில்லை. என் மனம் உறைந்து போயிருந்தது. அப்படியே பிரமைப் பிடித்தவன் போல துரைமீது சாய்ந்து கிடந்தேன்.

    “எம் பொண்ண நானே கொன்னுட்டேன். நானே கொன்னுட்டேன்.” என்ற என் தாயின் கதறல்கள் என் நெஞ்சைத் தைத்துக்கொண்டே இருக்க, துரை சொல்லிக்கொண்டிருந்த எல்லா விஷயங்களும் மெல்லியதாக என் செவிகளுக்குள் சென்று கொண்டிருந்தது.

    “பீஸ் கட்டாட்டி காலேஜுக்கு வராதேனு சொல்லிட்டாங்களாம் டா பாவிப்பசங்க. வகுப்பறைல இவ பேர மட்டும் படிச்சாங்களாம். சாயங்காலம் ரொம்ப அழுதிருக்கா. அம்மா சும்மா இல்லாம, கன்னா பின்னானு திட்டிட்டு, வேலை பாக்கற எடத்துல பணம் கேக்க போனாளாம். வர்றதுக்கு கொஞ்சம் நேரம் ஆயிடிச்சி போல. அதுக்குள்ற மருந்து நெறைய குடிச்சிட்டா டா. இவள என்ன பண்ண? உனக்கு போன் பண்ணோம். சுட்ச் ஆபுல இருந்துச்சி. வேற யாரு நம்பரும் தெரில. ராமச்சந்திரா ஆஸ்பிடலுக்குப் போறதுக்குள்றயே போய்ட்டா டா.” என்று மெதுவாகக் கூறிவிட்டு, “இந்தா அவ எழுதன லெட்டர்.”

    நடுநடுங்கிக்கொண்டிருந்த என் கைகளில் அந்தக் கடிதத்தைத் திணித்தான் துரை. மெதுவாக அந்தக் கடிதத்தை திறந்து பார்த்தேன்.

    “அன்புள்ள அண்ணா, தன்னலமில்லாமல் இதுவரை நீ செய்த…….” – வாசிக்க ஆரம்பித்த போதே மூச்சு த் திணறியது. அதற்கு மேல் படிக்கத் தோன்றவில்லை. கடிதத்தோடு வேறொரு தாளும் இருந்தது. அதில் அவளுடைய அந்த வருட கல்லூரி கல்வி கட்டண விவரங்கள் இருந்தன.

    அந்த வருட மொத்த கல்லூரி கட்டணம் –

    41000 ரூபாய்.

    Share
  • சிலப்பதிகாரத்தில் சமண சமயமும், சமண சமய பொது அறங்களும்

    முனைவர் மு.பழனியப்பன்
    தமிழாய்வுத்துறைத்தலைவர்
    மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி
    சிவகங்கை

    ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்ற பகுப்புமுறையில்  அமைந்துள்ள சமண சமயம் சார்ந்த காப்பியங்கள் சமணசமய ஆளுமையைத் தமிழிலக்கியப் பரப்பில் வெளிப்படுத்துவனவாகும். சிலப்பதிகாரம் சமண சமய காப்பியம் என்பது அதனுள் இடம்பெறும் சமண சமயச் செய்திகள், சமண சமயப் பாத்திரங்கள் ஆகியவற்றால் உணரத்தக்கதாக உள்ளது. கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு நடந்துசெல்லும் பெருவழிப் பயணத்திற்கு துணைநின்ற கவுந்தியடிகள் பாத்திரம் சமண சமயததைச் சார்ந்த துறவிப்பாத்திரம் ஆகும். இவர்களின் பயணத்தின்போது சந்திக்கின்ற அறவாணர் சமண சமயம் சார்ந்தவர். அவரின் நல்மொழிகளுடன் தங்கள் பயணத்தை அவர்கள் தொடருகின்றார்கள். இவைபோன்ற பற்பல செய்திகள் சமணசமயத்தின் ஆளுமைப்பரவல் சிலப்பதிகார காலத்தில் இருந்தமையைத் தெரிவிக்கின்றன. சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் சமண சமயத்தவர் என்பதை உணர்த்தும்  பல அகச்சான்றுகளும் இக்காப்பியத்துள் உண்டு. சமண சமயத்தின் சிறப்புக் கூறுகளும், பொதுமைக் கூறுகளும் சிலப்பதிகாரத்தில் உணர்த்தப் பெற்றுள்ளன. சிலப்பதிகாரம் உணர்த்தும் சமண சமயம் சார்ந்த செய்திகளையும் அச்சமயம் உணர்த்தும் பொது அறங்களையும் இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

    புகார் நகரமும் சமண சமயமும்

    காவிரிப்பூம்பட்டிணம் என்றழைக்கப்பெறும் பூம்புகார் நகரத்தில் பல் தெய்வக் கோயில்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றோடு சமண சமய வழிபாட்டு இடங்களும் அமைந்திருந்தன.

    அவலம் நீத்தறிந் தடங்கிய கொள்கை
    மெய்வகை உணர்நத விழுமியோர் குழீஇய
    ஐவகை நின்ற அருகத்தானத்துச்
    சந்திஐந்தும் தம்முடன் கூடி
    வந்து தலைமயங்கிய வான்பெரு மன்றத்துப்
    பொலம்பூம் பிண்டி நலம்கிளர் கொழுநிழல்
    நீரணி விழவினும் நெடுந்தேர் விழவினும்  
    சாரணர் வரூஉம் தகுதியுண்டாமென
    உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
    இலகு ஒளிச் சிலாதலம் தொழுது வலம்கொண்டு (நாடுகாண் காதை 16-25)

    என்ற பாடலடிகள் புகார் நகரத்தில் இருந்த சமண இருக்கைகளைப் பற்றி விவரிக்கின்றன. புகாரில் மூவகையான சமண இருப்பிடங்கள் இருந்துள்ளன. அருகத்தானம், பெருமன்றம், சிலாவட்டம் என்பன அவையாகும்.

    அருகத்தானம்

    புகார் நகரில் அருகத்தானம் என்ற இடம் சமண சமய வழிபாட்டிடமாக இருந்துள்ளது. இங்கு புலால் உண்ணாமலும், பொய்கூறாமை என்ற விரதத்தை மேற்கொண்டும், இவற்றோடு துன்பம் நீக்குவதற்கான வழிகளைக் கண்டறிந்து அவற்றில் வெற்றி பெற்றிருந்தாலும், அடங்கிய கொள்கை உடையவர்கள் இருக்கும் இடம் அருகத்தானம் ஆகும். இது ஸ்ரீகோயில் என்று அக்காலத்தில் வழங்கப்பெற்றது.

    பெருமன்றம்

    இத்தானத்தை அடுத்துப் பெருமன்றம் என்ற பகுதி அமைந்திருந்தது. ஐவகைப் பட்ட சந்திகள் ஒன்று கூடும் மன்றமாக அது விளங்கியது. ஐந்து சந்திகள் என்பது பஞ்ர பரமேட்டிகள் என்றழைக்கப் பெறும் ஐவகைச் சான்றோர்களைக் குறிக்கும்.  அருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர், சாதுக்கள் என்ற அவ்வைவரும் இம்மன்றத்தில் ஒன்று  கூடியிருந்தனர். சமண சமயக் கருத்துக்களைப் பரப்பியும் விவாதித்தும் அவர்கள் அம்மன்றத்தில் உறைந்தனர்.

    சிலாவட்டம்

    இவ்வருகத்தானத்தில் பல்வகை விழாக்கள் சீரோடும் சிறப்போடும் கொண்டாடப் பெற்றுள்ளன. பொன்போன்ற பூக்களைத் தரும் அசோகமரத்தின் நிழலில் இருந்த அருகப் பெருமானின் உருவத்திற்கு அவ்வருகப்பெருமானின் அபிடேகத்திருநாளில் ஒரு பெருவிழா நடந்துள்ளது. அவருக்குத் தேர்த்திருவிழா ஒன்றும் நடைபெற்றுள்ளது. இவ்விழாக்காலங்களில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் சாரணர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்கு, அறக்கருத்துகளை உணர்த்துவதற்கு அமைக்கப் பெற்ற  மேடை போன்ற இடம் சிலாவட்டம் ஆகும். பத்துப்பாட்டில் சிலாவட்டம் என்றால் சந்தனம் அரைக்கும்இடம் என்று பொருள். சந்தனம் அரைக்கும் இடத்தில் இருந்த மணமும், குளிர்ச்சியும் நிரம்பிய இடமாக இவ்விடம் இருந்திருந்த காரணத்தால் இதனையும் சிலாவட்டம் என அழைத்துள்ளனர்.

    கோயில், மன்றம், மேடை போன்ற பல்வேறு அமைப்புகளைப் புகார் நகர அருகன் கோயில் கொண்டிருந்தது என்பதை இளங்கோவடிகள் காட்டுகின்றார்.

    கோவலனும் கண்ணகியும் சமண சமயத்தினர்

    கோவலனும் கண்ணகியும் சமண சமயம் சார்ந்தவர்கள் என்ற குறிப்பு சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.

    கவுந்தியடிகள் கோவலனையும் கண்ணகியையும் முதன் முறையாகக் காணுகின்றார். அவர்கள் திசையறியாது மதுரையை நோக்கிப் பயணம் மேற்கொண்ட சூழலில் இச்சந்திப்பு நடைபெறுகிறது.

    ‘‘உருவும் குலனும் உயர்பேர்ஒழுக்கமும்

                                     பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்

                                    உடையீர் என்னோ உறுகணாளரின்

                                    கடைகழிந்து இங்ஙனம் கருதியவாறென’ ( நாடுகாண்காதை, 46-49)

    என்ற இப்பாடலடிகளில் பயின்று வந்துள்ள “பெருமகன் திருமொழி பிறழா நோன்பு” என்ற குறிப்பு சமண மதத்தில் இருந்துப் பிரியாத  கொள்கை உடையர்கள் கோவலனும் கண்ணகியும் என்பதை உணர்த்தி நிற்கின்து. கவுந்தியடிகள் கேட்ட இக்கேள்விக்கு ‘‘உரையாட்டில்லை உறுதவத்தீர்’என்று பதில் சொல்லாதுத் தவிர்க்கிறான் கோவலன்.

    கவுந்தியடிகள்

    கவுந்தியடிகள் மதுரை வருவதற்கான காரணத்தை அவரே குறிப்பிடுகின்றார்.

    ‘‘அறவுரை கேட்டாங் கறிவனை ஏத்தத்

                                    தென்தமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரைக்கு

                                    ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்

                                    போதுவல்யானும் போதுமின் ‘ (நாடுகாண் காதை, 57-60)

    மதுரைக்குச் சென்று அங்குள்ள அருகதேவனை வணங்குவதைத் தன் விருப்பமாகக் கொண்டவர் கவுந்தியடிகள் ஆவார். இதன் காரணமாக மதுரைவரை சமண சமயத்தின் ஆளுமைப் பரவல் இருந்துள்ளது என்பதைச் சிலப்பதிகாரத்தின் வழி அறியமுடிகின்றது.

    திருவரங்கத்தில் சமணம்

    புகாரிலிருந்து நடந்து வந்த இம்மூவரும் அரங்கம் என்ற திருவரங்கத்திற்கு வந்து சேருகின்றனர். அங்கு ஒரு சாரணரைச் சந்திக்கின்றனர். திருவரங்கத்திலும் அந்தக் காலத்தில் சமண சமயம் பரவியிருந்ததை இதன்வழி அறியமுடிகின்றது. இச்சாரணர் ஆங்காங்குத் தோன்றி அறக்கருத்துகளை எடுத்துரைப்பவர் ஆவார். முன்னர் பட்டினப்பாக்கம் என்ற புகாரின் நகரப்பகுதியில் சமயவுரையாற்றிய இவர் தற்போது அரங்கத்தி;ல் இம்மூவரும் கேட்க அறவுரை பகர்கின்றார்.

    அருகப் பெருமானின் இயல்புகள்

    சமண சமயத் தீர்த்தங்கரர்களுள் ஒருவரான அருகப்பெருமானின் சிறப்பியல்புகளைச் சாரணர் இவர்களுக்கு எடுத்துரைக்கின்றார்.

    ‘‘அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்

                     செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்

                    தரும முதல்வன் தலைவன் தருமன்

                    பொருளன் புனிதன் புராணன் புலவன்

                    சினவரன் தேவன் சிவகதிநாயகன்

                    பரமன் குணவதன் பரத்திலொளியோன்

                    தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்

                    சித்தன் பெரியவன் செம்மல் திகழொளி

                    இறைவன் குரவன் இயல்குணன் எம்கோன்

                    குறைவில் புகழோன் குணப் பெருங்கோமான்

                    சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்            

                    அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி

                    பண்ணவன் எண்குணன் பரத்தில் பழம்பொருள்

                    விண்ணவன் வேத முதல்வன் விளங்குஒளி

                    ஓதிய வேதத் தொளியுறின் அல்லது

                    போதார் பிறவிப் பொதியறையோரென’ (நாடுகாண்காதை 176- 191)

    இப்பெருகிய அடிகள் அருகப் பெருமானை வாழ்த்துவனவாகும். அருகப் பெருமானின் வழியல்லது மற்றைவழி செல்லுவோர் பிறவிச் சிறையிலிருந்து விடைபெறமாட்டார்கள் என்று துணிகின்றது இப்பகுதி.

    சமண சமயக் கருத்துகளை, சமண சமயச் சான்றோர்களை நினைவு கூர்ந்த இந்தப் பகுதியைக் கேட்டு ஆனந்தமும், நெகிழ்வும் அடைகிறார் கவுந்தியடிகள். இப்பகுதி சமண சமயக் கருத்துகளைத் தருவதற்கு ஏற்ற பகுதியாக இளங்கோவடிகளுக்கு அமைந்துவிட்டது.

    வினையின் காரணமாக காப்பியத்தில் இனி சோகம் ததும்பிய காட்சிகள் வரப்போகின்றன என்பதை எடுத்துக்காட்டவும்,  அத்துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான வழியைப் பாத்திரங்களும் படிப்போரும் உணரவேண்டும் என்பதற்காக இவ்விடத்தில் சாரணர்காட்சியையும், அவரின்அறவுரையையும் அமைத்துள்ளார் இளங்கோவடிகள்.

    வினைக் கோட்பாடு

    சமண சமயத்தின் உயிர்க்கொள்கை என்பது வினைக்கோட்பாடு ஆகும். இவ்வினைக்கோட்பாடே சிலப்பதிகாரத்தின் படைப்புக் கொள்கைகளுள் ஒன்றான ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுதலாக வெளிப்பட்டுள்ளது. சிலப்பத்திகாரத்தில் சாரணர் அறிவிக்கும் முதல் சமணசமயக் கொள்கை வினைக்கோட்பாட்டின் விளக்கமாக அமைகின்றது.

    ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை

                    இட்டவித்தின் எதிர்ந்து வந்தெய்தி

                    ஒட்டுங்காலை ஒழிக்கவம் ஒண்ணா

                    கடுங்கால் நெடுவெளி இடுசுடர் என்ன

                    ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள் ( நாடுகாண் காதை 171-175)

    தீவினை என்பது ஒழிக என்று வேண்டினாலும் ஒழியாது வல்வினையை வந்து ஊட்டிவிடும் தன்மையது. விதை இட்டால் அது மரமாவதுபோல முன்செய்வினையானது அதற்கான பலனைத் தந்தே நிற்கும். வெட்ட வெளியில் ஏற்றி வைத்த விளக்கு கடுங்காற்று அடிக்கும்போது அணைந்துபோவதுபோல வினை வந்துத் தாக்கும்போது உயிர் உடம்புடன் நில்லாது நீங்கிவிடும். இக்கருத்துகளைச் சாரணர் கோவலன் உள்ளிட்ட மூவரையும் கண்டவுடன் சொன்னதற்குக் காரணம் கோவலன் வினைவலிமை காரணமாக இறக்கப் போகிறான், அவனையிழந்து இவர்கள் தவிக்கப் போகிறார்கள் என்பதுதான். இந்த முன்னுணர்தல் இளங்கோவடிகளின் படைப்பாற்றலில் காணப்படும் சிறப்புக்கூறு ஆகும்.

    கோவலனின் இறப்பிற்குக் காரணம் அவன் செய்த முன்வினையேயாகும். கலிங்க நாட்டில் அரசனுக்கு உறுதுணை செய்யும் பரதன் என்பவனாகக் கோவலன் முற்பிறவியில் பிறந்திருந்தான். அவன் சங்கமன் என்னும் வணிகனை வஞ்சகத்தால் அரசனிடம் காட்டிக் கொடுத்துக் கொலைப்பட வைத்தான். அவனின் மனைவி நீலி இவ்வஞ்சனை செய்தவர்கள் ‘எம்முறு துயரம் செய்தோர் இயாவதும் தம்முறு துயரமிற்றாகுக வென்றே’  என்று உரைத்ததன் வாயிலாக இப்பிறவியில் கோவலன் வணிகனாகப் பிறந்து முன்வினைப்பயனை நுகர்ந்தான்  என்ற தொடர்வும் வினைப்பயன் என்ற சமண உயிர்க்கொள்கையின் விரிவாகும்.

    காமநீக்கம்

    சமணத்தின் மற்றொரு தலையாய கொள்கை காமநீக்கம் ஆகும். இல்லறத்தாரும் நிறைவில் துறவறம் சார்ந்து இறைநிலை பெறுவது முக்தி என்பது இச்சமயக் கருத்தாகும்.  இதனைக் கவுந்தியடிகள் கோவலனுக்கு விளக்குகின்றார்.

       ‘‘வல்வினை ஊட்டுமென்று

                    அறத்துறை மாக்கள் திறத்;திற் சாற்றி

                    நாக்கடிப்பாக வாய்ப்பறை அறையினும்

                    யாப்பறை மாக்கள் இயல்பில் கொள்ளார்

                    தீதுடை வௌ;வினை உறுத்தகாலைப்

                    பேதமை கந்தாப் பெரும்பேது உறுவர்

                    ஒய்யா வினைப்பயன் உண்ணுங்காலை

                    கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்

                    பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும்

                    உருவிலாளன் ஒறுக்கும் துன்பமும்

                    புரிகுழல் மாதர்ப்புணர்ந்தோர்க்கு அல்லது

                    ஒரு தனிவாழ்க்கை உரவோர்க்கில்லை

                    பெண்டிரும் உண்டியும் இன்பமென்று உலகில்

                    கொண்டோர் உறூஉம் கொள்ளத்துன்பம்

                    கண்டனராகிக் கடவுளர் வரைந்த

                    காமம் சார்பாகக் காதலின் உழந்தாங்கு

                    ஏமஞ்சாரா இடும்பை எய்தினர்

                    இன்றே அல்லால் இறந்தோர் பலரால் ‘ (ஊர்காண் காதை,27- 44)

    என்ற இந்தப் பகுதி காம நீக்கம் என்ற கொள்கையை வலியுறுத்துவதாக உள்ளது. தீய செயல்களைச் செய்வதில் இருந்து விலகுங்கள். அவ்வாறு தீச்செயல்களில் இருந்து விலகாமல் இருந்தால் அது அடுத்தடுத்த பிறவிகளில் துன்பத்தை அனுபவிக்கத் தரும் என்று நாவாகிய குறுந்தடியால் வாயாகிய பறையை அறைவதுபோல பலமுறை அறவோர் கூறினாலும் அறிவு அற்றவர்கள் அதனை ஏற்கமாட்டனர். தீவினை தொடரும்போது பெரிதும் வருந்துவர். அறிந்தவர்கள் இவ்வாறு வருந்தமாட்டார்கள். மகளிரைப் பிரிவதால், புணர்வதால் ஏற்படும் துன்பம் இல்லறத்தார்க்கு எப்போதும் உண்டு. தனித்த வாழ்க்கையை மேற்கொண்ட துறவிகளுக்கு அத்துன்பம் இல்லை. பெண்ணும் உணவும் மட்டுமே வாழ்க்கை என்று வாழ்வோர் பெருத்த துன்பமடைவர். காமம் சார்பாக காதலில் விழுந்தோர் கரைகாண இயலாது துன்பத்தை அடைகின்றனர்  என்று மேற்காட்டிய பாடலின் பொருள் அமைகின்றது. இப்பகுதி காம நீக்கம் என்ற சமணக் கொள்கையின் வெளிப்பாடாகும்.

    இவ்வாறு சமண மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஆங்காங்கே வலியுறுத்தி வந்த இளங்கோவடிகள் பொது அறங்களைக் காப்பிய நிறைவில் உணர்த்துகின்றார். சமண சமயம் சார்ந்தவர்களுக்கும், சாராதவர்களுக்கும் பொதுவான அறங்கள் இவ்வகையில் இளங்கோவடிகளால்  எடுத்துரைக்கப்பெற்றுள்ளது.

    பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்

                    தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்

                    பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்

                    ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்

                    தானம் செய்ம்மின் தவம் பல தாங்குமின்

                    செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட்பிகழ்மின்

                    பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்

                    அறவோர்அவைக்களம் அகலாது அணுகுமின்

                    பிறவோர்அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்

                    பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்

                    அறமனை காமின் அல்லவை கடிமின்

                    கள்ளும் களவும் காமமும் பொய்யும்

                    வெள்ளைக்கோட்டியும் விரகினில் ஒழிமின்

                    இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா

                    உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது

                    செல்லும் தேஎத்துக் குறுதுணை தேடுமின்

                    மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கென் ( வரந்தரு காதை 186- 202)

    என்ற இவை சமண மதச் சார்புடைய ஆனால் பொதுவான அறங்களை எடுத்துரைக்கும் இளங்கோவடிகளின் கவிதையாகும். இதனுள் சொல்லப்பெற்றுள்ள அத்தனை அறங்களும் எளிய மக்களும் பின்பற்றவேண்டிய ஒழுக்க முறைகள் ஆகும். இவற்றைக் காப்பிய நிறைவில் அளிப்பதன் வாயிலாக சமணமதத்தைச் சார்ந்த காப்பியமாக சிலப்பதிகாரம் விளங்கினாலும் சமயப் பொதுமை, சமுதாயப் பொதுமையை வேண்டிப் படைக்கப் பெற்றுள்ளது என்பது உறுதி.

    Share
  • இதயக்கோயிலைக் காப்போம்!

    மேகலா இராமமூர்த்தி

    ”அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்றார் ஔவையார். இத்துணை சிறப்பு வாய்ந்த இம்மானிடப் பிறவியிலே மனிதனின் ஒவ்வோர் உறுப்பும் தனித்தன்மை வாய்ந்தது; எந்த உறுப்பின் பணியையும் குறைத்து மதிப்பீடு செய்ய இயலாதெனினும் அனைத்திலும் மேலாக நாம் எண்ணுவது நம் மூளையையும், இதயத்தையுமே அல்லவா? அதிலும் ’இதயம்’ என்ற சொல்லைத்தானே நாம் அன்றாட வாழ்வில் அடிக்கடிப் பயன்படுத்துகின்றோம்.

    இரக்கமில்லாதவனை “இதயமில்லாதவன்” என்கிறோம். நமக்கு மிகவும் பிடித்தவர்களை “இதய தெய்வம்” என்கின்றோம். ஆனால் நாம் இங்கே பேசப்போவது இதயத்திற்குப் பிடித்தமானவர்களைப் பற்றியோ அல்லது இதயமில்லாத நபர்களைப் பற்றியோ அல்ல, இதயத்தைப் பற்றியே.

    சமீபத்தில் உலக சுகாதார அமைப்பானது (World Health Organization) வெளியிட்ட அறிக்கையில், வரும் 2020-இல் இந்தியாவில் அதிகப்படியான மரணங்கள் இதயநோய்களினாலேயே (cardiovascular diseases) ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளது. ஆகவே இதயத்தைப் பற்றியும், அதனைப் பீடிக்கின்ற பல்வேறு நோய்களைப் பற்றியும், அவற்றைத் தவிர்ப்பதற்கு செய்யவேண்டுவன பற்றியும் நாமிங்கே சிந்திக்க இருக்கின்றோம்.

    முதலில் இதயத்தின் அமைப்பையும், அது செய்கின்ற பணிகள் குறித்தும் சுருங்கப் பார்ப்போம்.

    ஓர் பேரிக்காய் வடிவில் (pear-shaped) நம் கையளவினும் சற்றே பெரிய அளவுள்ள நம் இதயம் கிட்டத்தட்ட ஒரு பவுண்டு கனமுடையது. நம் உடல் முழுவதற்கும் தேவையான இரத்தவோட்டத்தைத் தருவதே (blood circulation) இதயத்தின் தலையாய பணி எனலாம். சாதாரணமாக ஒரு நோயற்ற மனித இதயம் நிமிடத்திற்குத் தோராயமாக 72 முறைகள் துடிக்கின்றது (heartbeat) எனலாம்.

    இதயம் நான்கு அறைகளைக் (four chambers) கொண்டுள்ளது. மேலுள்ள இரண்டு அறைகள் ஏட்ரியா (atria) அல்லது ஆரிக்கிள்கள் (auricles) எனவும், கீழுள்ள இரண்டு அறைகள் வென்ட்ரிகிள்கள் (ventricles) எனவும் அழைக்கப்படுகின்றன. அசுத்த இரத்தமானது (deoxygenated blood) உடலின் பிற பகுதிகளிலிருந்து சிரைகள் வாயிலாக (superior vena cava, inferior vena cava) இதயத்திலுள்ள வலது ஆரிக்கிளை வந்தடைகின்றது. பின்பு வலது வென்ட்ரிக்கிளை அடைந்து அங்கிருந்து நுரையீரலுக்குச் சென்று உயிர்க்காற்றைப் (oxygen) பெற்றுச் சுத்த இரத்தமாக மாறிப் பிறகு இடது ஆரிக்கிளை அடைகின்றது. அங்கிருந்து இடது வென்ட்ரிகிளுக்குச் செல்கின்றது. பின்பு உயிர்க்காற்று நிறைந்த சுத்த இரத்தத்தை மகாதமனியின் (aorta) வழியாக உடலின் பிற பாகங்களுக்குச் செலுத்தி உடலுக்குத் தேவையான சத்துக்களை (nutrients) வழங்கிக் கழிவுப் பொருள்களை வெளியேற்ற உதவுகின்றது.

    செப்டம் (septum) என்று சொல்லப்படுகின்ற சுவர் இதயத்தின் வலது பக்கத்தையும், இடது பக்கத்தையும் இரண்டாகப் பிரிக்கின்றது. இதயத்தின் சுவர் மூன்றடுக்குகளால் ஆனது. அவை முறையே வெளியடுக்கு (epicardium), மையஅடுக்கு (myocardium) மற்றும் உள்ளடுக்கு (endocardium) ஆகியன.

    இனி, இதயத்தைத் தாக்குகின்ற பல்வேறு நோய்களைப் பற்றிப் பார்ப்போம். இதயநோய் என்றாலே பொதுவாக நம் நினைவுக்கு வருவது மாரடைப்பு (heart attack) மட்டுமே ஆகும். ஆனால் அதைத் தவிரவும் பல நோய்கள் இதயத்தைத் தாக்கிச் செயலிழக்கச் செய்கின்றன. அவற்றில் சிலவற்றை அறிந்து கொள்வோம்.

    முதலாவது, இதயத் தசைகளுக்குச் சுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளில் (coronary arteries) ஏற்படுகின்ற அடைப்புக்களினால் வரும் இதயநோய் (coronary artery disease). உடலிற்குத் தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு (bad cholesterol) இத்தமனிகளில் படியும்போது  அவை அடைப்பை (plaque) ஏற்படுத்தி இந்த இரத்தக் குழாய்களின் அளவைக் குறுக்கி விடுகின்றன. இதனால் இதயத்திற்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைகின்றது. இதயத்தின் இயல்பான வேலைத்திறன் தடைப்படுகின்றது. இரத்தவோட்டம் தடைப்படுவதினால் இதயத்தில் வலி (angina), மூச்சுத் திணறல் (shortness of breath) ஆகியவை ஏற்படுகின்றன. இரத்தவோட்டம் முற்றிலும் தடைப்படும்போது மாரடைப்பு (heart attack) ஏற்படுகின்றது.

    மாரடைப்பிற்கான 5 முக்கிய அறிகுறிகள்:

    1. தாடை, கழுத்து மற்றும் முதுகுப்பகுதியில் ஏற்படுகின்ற வலி (jaw, neck and back pain), அசௌகரியம் (discomfort) முதலியன.
    2. தலைசுற்றல் (lightheadedness), மயக்கம் (dizziness) மற்றும் உடல் பலவீனம் (fatigue).
    3. நெஞ்சுவலி (angina) அல்லது நெஞ்சில் ஏற்படும் அசௌகரியம்.
    4. கைகளிலோ, தோளிலோ ஏற்படும் வலி (arms and shoulder pain) அல்லது அசௌகரியம்.
    5. மூச்சுத்திணறல் (shortness of breath), வியர்த்துக் கொட்டுதல் (sweating) முதலியன.

    இதுபோன்ற அறிகுறிகள் இருப்பின் விரைவில் மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.

    இரண்டாவது, இதயத் தசைகளின் மாறுபாட்டால் ஏற்படுகின்ற நோய் (cardiomyopathy). இந்நோய் இதயத் தசைகளை பலவீனப்படுத்தவோ (muscle weakness) அல்லது பெரிதாக்கவோ (muscle enlargement) செய்கின்றது. இந்நோயினால் இதயம் சுருங்கி விரிவதிலும், உடலின் மற்ற பகுதிகளுக்கு இரத்தத்தை அனுப்புவதிலும் சிரமம் ஏற்படுகின்றது. இது பரம்பரை நோயாகவோ, ஏற்கனவே ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாகவோ வரலாம். கிருமித்தொற்றுக்களினால் (infection) கூட இந்நோய் ஏற்படக்கூடும். இந்நோயின் விளைவாக இதயம் முற்றிலும் செயலிழந்து போகும் அபாய நிலை ஏற்படும். அது உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்பதில் ஐயமில்லை.

    இதன் அறிகுறிகள்:

    1. வேலை செய்யும்போது மூர்ச்சையடைதல் (breathlessness); சில சமயங்களில் ஓய்வாக இருக்கும்போது கூட மூர்ச்சையடைய வாய்ப்புண்டு.
    2. கால்கள், கணுக்கால்கள், பாதங்கள் ஆகியவற்றில் வீக்கம் (swelling).
    3. நீர்கோர்த்துக் கொள்ளுவதால் ஏற்படும் வயிற்று உப்புசம் (bloating of the abdomen).
    4. விரைவான, தாறுமாறான இதயத்துடிப்பு (rapid, pounding and fluttering heartbeat).
    5. அயர்ச்சி, தலைசுற்றல், மயக்கமடைதல் (fatigue, lightheadedness, fainting).

    இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரை உடனே நாடுதல் நலம்.

    அடுத்ததாகக் கருத்தில் கொள்ளவேண்டிய இதயநோய் இயல்புக்கு மாறான ஒழுங்கற்ற இதயத்துடிப்பு (arrhythmia). இந்நோயினால் இதயத்தின் துடிப்பு இயல்பைவிட அதிகமாகவோ (tachycardia) அல்லது குறைவாகவோ (bradycardia) இருக்கக் கூடும். மேலும் இந்நோயினால் இதயவலி, மூச்சுத்திணறல், தலைசுற்றல், மயக்கம் போன்றவையும் ஏற்பட வாய்ப்புண்டு. இந்நோய் உடனடியான ஆபத்து எதனையும் பொதுவாக விளைவிப்பது இல்லை. எனினும், இது போன்ற மிக விரைவான அல்லது மிக மெதுவான இதயத் துடிப்பு திடீரென்றோ அல்லது அடிக்கடியோ ஏற்பட்டால் உடனடியாய் மருத்துவ ஆலோசனை பெறுவது இன்றியமையாதது.

    மற்றொன்று, இதயத்தைச் சுற்றியிருக்கின்ற உறையில் ஏற்படுகின்ற அழற்சி (pericarditis). இது பொதுவாக கிருமித் தொற்றுக்களினாலோ (cardiac infection), இதய அறுவை சிகிச்சைகளுக்கு பிறகோ, அல்லது புற்றுநோய் போன்றவற்றினாலோ இதயத்தில் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது.

    இவை தவிர, பிறவியிலேயே ஏற்படுகின்ற இதயக் கோளாறுகள் (congenital heart defects) இன்னொரு பக்கம். இந்நோய்கள் பிறந்த குழந்தைகளையும், வளரிளம் பருவத்தினரையும், இளைஞர்களையும் கூடத் தாக்கக் கூடியது.

    மரபணுக்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள், அவற்றின் இயல்புக்கு மாறான தன்மை (genetic changes, chromosomal abnormalities) ஆகியவையே இத்தகைய நோய்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன எனலாம். இதன் அறிகுறிகளாக தோல் நீலநிறத்தில் இருத்தல் (cyanosis), விளையாட்டிலோ அல்லது உடற்பயிற்சியிலோ ஈடுபடும்போது எளிதில் களைத்துப் போதல், மூச்சுத்திணறல் ஏற்படல், இதயத்தைச் சுற்றியும், நுரையீரலிலும் நீர்கோர்த்துக் கொள்ளுதல், கை, கால்கள் வீங்கிப்போதல் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

    இப்படிப் பலதரப்பட்ட இதயநோய்கள் மனிதர்களைத் தாக்குகின்றன. பிறவியிலேயே ஏற்படுகின்ற இதயநோய்களான (congenital heart defects) தவிர மற்றவகை இதயநோய்களை மனிதர்களாகிய நாம் மனது வைத்தால் பெருமளவில் தவிர்க்கலாம், தடுக்கலாம்.

    “எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

    அதிர வருவதோர் நோய்.” என்கிறார் திருவள்ளுவர். ஆகவே நோய்களை வருமுன்னர்க் காத்தலே சாலச் சிறந்தது.

    பொதுவாகவே நம்முடைய உணவுப்பழக்கம் நோயற்ற வாழ்வை வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றது என்றால் மிகையாகாது. மனிதனின் உடலுக்கு ஊறு விளைவிக்காத உணவை அளவோடு உண்டால் நோயற்ற வாழ்வைப் பெறலாம்.

    ”மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்

    ஊறுபா டில்லை உயிர்க்கு.” என்பது பொய்யாமொழி.

    ஆகவே உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறை ஆகிய இரண்டையுமே கருத்தில் கொண்டு தேவையான மாற்றங்களைச் செய்வது ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கும்.

    ஆரோக்கியமாக இதயத்தைக் காக்க இதய மருத்துவர்கள் (cardiologists) கூறும் அறிவுரைகள் சில. இவற்றைப் பத்து கட்டளைகளாகவும் (Ten Commandments) எடுத்துக் கொள்ளலாம்.

    1. உணவில் அதிக அளவில் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் (whole grains), ஓட்ஸ், சோயாபீன்ஸ், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் (fiber-rich food) ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
    2. கொழுப்பு உணவுகளைக் குறைத்துக் கொள்வது நலம். குறிப்பாக உறை கொழுப்பு (saturated fat) என்று சொல்லப்படுகின்ற மிருகக் கொழுப்பு, முட்டை, மற்றும் எண்ணெய் வகைகளான தேங்காயெண்ணெய், பனையெண்ணெய் (palm oil) ஆகியவற்றை முடிந்த அளவிற்குத் தவிர்ப்பது நல்லது. மேற்குறிப்பிட்ட எண்ணெய்களுக்கு மாற்றாக ஆலிவ் எண்ணெயை (olive oil) உபயோகிக்கலாம்.

    Trans fat என்று சொல்லப்படுகின்ற கொழுப்பும் இதயத்திற்குத் தீங்கானதே. வறுத்த, பொரித்த (deep-fried food) உணவு வகைகள், ரொட்டிகள் (biscuits), கேக்குகள் (cakes) ஆகியவற்றில் இந்தக் கொழுப்பு அதிக அளவில் உள்ளது. எனவே இத்தகைய உணவுகளைக் கூடுமானவரைத் தவிர்த்திட வேண்டும்.

    1. நல்ல கொழுப்பாகக் கருதப்படும் omega-3 fatty acids நிறைந்த காய்கறிகளான கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கீரை வகைகள், பரங்கி விதைகள், பழ வகைகளான எலுமிச்சை, ஆரஞ்சு, பப்பாளி, பெர்ரி வகைகள், மற்றும் மீன், மீன்எண்ணெய் ஆகியவற்றை உணவில் அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். கொட்டை (nuts) வகைகளான  பாதாம், பிஸ்தா, வால்நட்ஸ் (walnuts), வேர்க்கடலை ஆகியவற்றை ஒரு கைப்பிடியளவு தினமும் உண்ணலாம்.
    2. உணவில் உப்பின் (sodium) அளவைக் குறைத்து உண்பது நன்மை பயக்கும்.
    3. உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது அவசியம். அதற்கு வாரத்தில் 5 நாட்களேனும், 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யவேண்டும்.
    4. சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களையும் (sugary drinks), சர்க்கரை நிறைந்த உணவுப் பண்டங்களையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.
    5. சுய சுகாதாரத்தில் (personal hygiene) அதிகக் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாகப் பற்களையும், ஈறுகளையும் சரியாகப் பேணவும், பராமரிக்கவும் வேண்டும். இதன்மூலம் இதயத்தில் ஏற்படுகின்ற பல்வேறு தொற்றுநோய்களைத் தவிர்க்க இயலும் என இதயநோய் மருத்துவர்கள் உறுதியளிக்கின்றனர்.
    6. மன அழுத்ததைக் குறைக்க வேண்டியது அவசியம். அதற்கேற்ற மூச்சுப் பயிற்சிகளையும், தியானம் போன்றவற்றையும் பழகுதல் நலம்.
    7. இரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு ஆகியவற்றைக் கட்டாயம் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.
    8. புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்கள் இருப்பின் அவை ’இதயத்தின் எதிரிகள்’ என்பதனை உணர்ந்து அவற்றிற்குப் ’பிரியாவிடை’ கொடுத்துவிட வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட ஆலோசனைகளைத் தவறாது கடைப்பிடித்தாலே இதயநோய்களையும், உடலைத் தாக்கும் வேறுபல நோய்களையும் தவிர்க்கலாம். ஆன்றோர்களும், மருத்துவ அறிஞர்களும் கூறுகின்ற வழி நடப்போம். நம் இதயமென்ற கோயிலை நோய்களின் பிடியிலிருந்து காத்து நலமாய் வாழ்வோம்.

    படங்களுக்கு நன்றி:

    http://www.cdc.gov/heartdisease/coronary_ad.htm                  http://en.wikipedia.org/wiki/Congenital_heart_defect

    தகவல்களுக்கு நன்றி:

    http://en.wikipedia.org/wiki/Human_heart

    http://en.wikipedia.org/wiki/Congenital_heart_defect

    http://www.emunix.emich.edu/~armstron/spmd201/anat06-08.pdf

    http://www.cdc.gov/heartdisease/other_conditions.htm

    http://health.nytimes.com/health/guides/disease/congenital-heart-disease/overview.html

    http://articles.timesofindia.indiatimes.com/2012-10-17/health/34523974_1_heart-diseases-diseases-study-chest-pain

    http://www.webmd.com/heart-disease/ss/slideshow-visual-guide-to-heart-disease

    Share
  • தொல்லை காட்சி – குஷ்பூ – ஜோடி பொருத்தம் – டாடி ஒரு சந்தேகம்

    மோகன் குமார்

    டாடி ஒரு சந்தேகம்அ

    ஆதித்யாவில் வரும் புதிய நிகழ்ச்சி ” டாடி ஒரு சந்தேகம்” ; ஒரு அப்பா – மகன் இருவரும் பேசிக் கொள்வதாக சில டயலாக் வரும். அப்புறம் காமெடி சீன் போடுவாங்க.

    மகனாக – சற்று வளர்ந்த ஒரு மனிதரே தான் வருகிறார். பேச்சு வாக்கில் ” டாடி ஒரு சந்தேகம்” என எடக்கு மடக்காய்    எதோ ஒரு கேள்வி கேட்கிறார்

    உதாரணத்துக்கு  ஒன்று

    ” டாடி  சண்டே சினிமா போகலாம் டாடி “

    ” வேணாம்பா தியேட்டர் ஹவுஸ் புல் ஆயிருக்கும் “

    ” டாடி ஒரு சந்தேகம் .. தியேட்டர்-  புல் ஆனா, தியேட்டர்  புல் – னு தானே சொல்லணும்? ஏன் ஹவுஸ் புல்னு சொல்றாங்க?”

    இப்படி மொக்கை போட்டாலும் கூட சின்னப் பசங்களுக்கு இந்த ஜோக்குகள் பிடிக்கிறது ! அடிக்கடி பார்க்கிறார்கள் !

    பிளாஷ் பேக் – ஜோடிப் பொருத்தம்

    சன் டிவி துவங்கிய காலத்தில் வந்தது ” ஜோடிப் பொருத்தம்”. ரெகோ  என்கிற பெயர் கொண்ட நபர் வெய்யில் காலத்திலும் கோட், டை எல்லாம் கட்டிக் கொண்டு கணவன் – மனைவியை கேள்வி கேட்பார். வந்த புதிதில் மிக நன்கு வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி இது. ஒரு நேரத்தில்,  வெளியூர்களில் மேடையில் வைத்து இந்த நிகழ்ச்சி நடத்துவார்கள். திருச்சியில் அப்படி நடந்த போது (அப்போது எனக்கு கல்யாணம் ஆகலை) அந்தப் பக்கம் சென்றபோது கூட்டம் நிரம்பி  வழிந்தது.

    ரெகோ  கேள்விகள் கேட்பதும் சரி குழப்பி விடுவதும் சரி புத்திசாலித்தனமாக இருக்கும். அவர் இந்த நிகழ்ச்சி தவிர அநேகமாய் வேறு நிகழ்ச்சி செய்த மாதிரி நினைவில்லை. அதன் பின் ரெகோ  என்ன ஆனார் என்றும் தெரிய வில்லை

    இது மாதிரி நிகழ்ச்சிகள்  இப்போது எதோ ஒரு சின்ன டிவியில் வருகிறது ஆனால் அந்த அளவு பாப்புலர் ஆகலை. சன் டிவி மீண்டும் இந்த கான்சப்ட் கையில் எடுக்கலாம் !

    சூப்பர் சிங்கர் -4

    மீண்டும் துவங்கியுள்ளது இன்னொரு சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி. வெவ்வேறு ஊர்களில் நடக்கும் முதல் கட்ட தேர்வுகளை இப்போது காட்டி வருகிறார்கள். ஒரு பக்கம் ஸ்ரீ லேகா & தேவன் நீதிபதிகளாக இருக்க, இன்னொரு பக்கம் ஷைலஜா & புஷ்பவனம் குப்புசாமி இருந்தனர். ஸ்ரீ லேகா டீம் செம ஸ்ட்ரிக்ட் ஆக இருந்து பலரையும் நிராகரித்து தள்ளினர். ஷைலஜா & புஷ்பவனம் ஓரளவு லீனியன்ட் ஆக இருந்தனர். ஆக பாட வருபவர்கள் யாரிடம் போய் பாடுகிறார்களோ அதைப் பொறுத்தே அடுத்த லெவல் செல்வது முடிவாகிறது ! ஹும் 🙁

    மற்றபடி துவக்கம் எப்பவும் ஸ்லோ தான்.

    டிவி செய்திகளில் குஷ்பூ பிரச்சனை

    குஷ்பூ மீது திருச்சியில் செருப்பு எறிந்ததும், சென்னையில் அவர் வீடு தாக்கப்பட்டதும் இணையத்தில் மட்டுமல்ல, டிவி செய்திகளிலும் 2 நாள் பெரிதாய் ஓடியது. அம்மணி பேட்டி படித்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு  சற்று   கோபம் வரும்படி தான் இருந்தது. (விகடனில்  பேட்டி எடுத்தவர் கைவண்ணம் எந்த அளவோ தெரியவில்லை )

    முன்பு கோவில் கட்டிய திருச்சியிலேயே, இன்று  செருப்பும் எறிந்தனர் என முகநூலில் குறிப்பிட்டார் வீடு சுரேஷ் குமார் ! வாழ்க்கை ஒரு வட்டம் என்பது நிரூபமணமாகிறது பாருங்கள் !

    நிலம் வாங்கலியோ நிலம்

    சனிக்கிழமை காலை டிவி பொட்டியை போட்டால் போதும் ஜெயா டிவி, விஜய் டிவி, ஜீ டிவி என எல்லா சானலிலும் நிலம் வாங்கலியோ நிலம் என சின்னத் திரை நடிகர்கள் வந்து கெஞ்சிக் கெஞ்சி கேட்கிறாங்க. ஒவ்வொன்னும் அரை மணி நேர விளம்பரதாரர் நிகழ்ச்சி. 5 நிமிஷம் பாத்தா  போதும், போனை எடுத்து மத்த விபரங்களைக் கேட்க வச்சிடுவாங்க. அவ்ளோ தூரம் பில்ட் அப் செய்றாங்க

    போனை எடுத்து அந்த நம்பருக்கு முயற்சித்தால் கிடைப்பதே இல்லை. டிவியில் அவர்கள் விளம்பரம் வரும் அந்த அரை மணி தான் அவர்கள் கஸ்டமர் பிடிக்கிற நேரமே போலிருக்கு. நம்ம நம்பரைப் பார்த்து விட்டு பின் அவர்களே போன் செய்தனர் நான் கேட்ட கேள்விகள் ரொம்ப சிம்பிள் ” அப்ரூவ்டு நிலமா? ” ” ஆமா சார் பஞ்சாயத்து அப்ரூவ்டு ” – இது ஏமாத்து வேலை என தெரியும் – எனவே ” பேங்க் லோன் கிடைக்குமா ? ” என அடுத்து கேட்க ” கிடைக்காது சார்” என வழிக்கு வந்தார்கள். வெறும் நிலத்துக்கும் கூட வங்கிகள் லோன் தரும்; ஆனால் அது அப்ரூவ்டு என்றால் மட்டுமே கிடைக்கும்

    இவர்கள் தரும் விளம்பரத்தை நம்பி இடம் வாங்குவோர்  என்றோ ஒரு நாள் அவர்கள் விற்கப் போகும் போது இது அப்ரூவ்டு இடம் அல்ல என உணர்வார்கள். பாவம் !

    Share
  • மறைந்தும் மறையாத மலர்மன்னன்

    ஜோதிர்லதா கிரிஜா

    எழுத்துலகத்து விடிவெள்ளியொன்று அஸ்தமித்ததை அறிவித்து 9.2.2013 விடிந்தது. மலர்மன்னன் மிகச் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்லர். அவர் மிகப் பெரிய மனிதாபிமானியுங்கூட. தெளிந்த சிந்தனையுள்ளவர் என்பதும் மெத்தப்படித்தவர் என்பதும் அவருடைய திண்ணைக் கட்டுரைகளிலிருந்து.புலனாகும்.  எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ஒரு சமுதாய.அமைப்போடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். ஒரு முறை அவர் எனக்கு எழுதினார் – ’அந்நோய் உல்கம் முழுவதும் பரவி இருப்பதற்கு ஆணம்க்களே காரணம்’ என்று.  .’அந்நோயினால் பாதிக்கப்ப்ட்டுச் சிகிச்சை பெற்று வரும் பெண்கள் என்னை அப்பா என்று அழைக்கும் போது என்க்கு எவ்வளவு பெருமையாக இருக்கிறது, தெரியுமா?’  என்று உரிய நியாயத்துடன் தாம் எனக்கு எழுதிய கடிதத்தில் பெருமிதப் பட்டுக்கொண்டார். சீரியசிந்தனையும், சமுதாய் உணர்வும். மகாகவி பாரதியார் மீது ஆழ்ந்த பக்தியும். தனிச்சிறப்புக் கொண்ட் எழுத்துத் திறனும் வாய்க்கப்பெற்றிருந்த மனிதாபிமானி மலர்மன்னனின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றால் அது மிகையன்று. அவரது மறைவு நெஞ்சில் ஒரு பள்ளம் விழுந்த உணர்வை உண்டாக்கியது

    Share
  • எழுத்தாளர் மலர் மன்னன் இறைவனடி சேர்ந்தார்

    அண்ணாகண்ணன்

    எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான மலர் மன்னன் அவர்கள், பிப்ரவரி 9 அன்று அதிகாலை 5 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார். இறுதிக் காலத்தில் அவருடன் இருந்து கவனித்து வந்த, எழுத்தாளர் தி.ஜ.ர. அவர்களின் பெயர்த்தி சத்தியபாமா, இதனைத் தொலைபேசியில் தெரிவித்தார். தன் மறைவுச் செய்தியை இறுதியாகச் சிலருக்குத் தெரிவிக்க வேண்டும் என அவர் குறித்து வைத்திருந்த தொலைபேசி எண்களில் என் எண்ணும் இருந்தது.

    2003 முதலாக, அவர் தாடி வைப்பதற்கும் முன்பாகவே மலர் மன்னனுடன் எனக்கு நட்பு உண்டு. நான் அமுதசுரபி பொறுப்பாசிரியராக இருந்தபோது, அந்த இதழின் பதிப்பாளர் ஏ.வி.எஸ். ராஜா, மலர் மன்னனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு மலர் மன்னன், நான் தயாரித்த பதிப்பகச் சிறப்பிதழில் உ.வே.சா. தொடர்பாக ஒரு கட்டுரை எழுதினார். அவரின் ‘மலர்மன்னன் கதைகள்‘ என்ற சிறுகதைத் தொகுப்பினை அமுதசுரபி வெளியிட, அதற்கு நான் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தேன். அது, அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. (அவருக்கு முன்னதாகவே அவரின் சகோதரர் சாம்ராட் என்ற பெயரில் எழுதும் அசோகனை நான் அறிவேன். என் வேண்டுகோளுக்கு இணங்க, அவர் அநேக முறைகள், அமுதசுரபிக்காக எழுதியிருக்கிறார். மலர்மன்னனின் சகோதரி விஜயா சங்கரநாராயணனையும் நான் நன்கு அறிவேன். அரவிந்த அன்னை பற்றி அமுதசுரபியில் தொடர்ந்து எழுதி வந்தார்.)

    மலர் மன்னன், 26.5.2006 அன்று நட்பு நிமித்தம் என்னை டைடல் பூங்காவில் சந்தித்தார். பல தலைப்புகளில் சுவையான செய்திகளைப் பகிர்ந்துகொண்ட மலர் மன்னனைத் தமிழ் சிஃபியில் தொடர்ந்து எழுத அழைத்தேன். பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள மலர் மன்னனை அவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுமாறும் கேட்டுக்கொண்டேன். இசைந்தார். அதன் பிறகு அவர், பா.ஜ.க. தேசிய துணைத் தலைவர் இல.கணேசன் அவர்களை அறிமுகப்படுத்தியதோடு, அவரை அரட்டை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக டைடல் பூங்காவிற்கும் அழைத்து வந்தார். தமிழ் சிஃபியில் தமது பத்தியைத் தொடங்கினார். ஏராளமான கட்டுரைகள் மூலமாக, தமிழ் வாசகர்களுக்குப் புதிய வெளிச்சம் பாய்ச்சினார். வரலாறு, சம கால அரசியல், பண்பாட்டுத் தாக்கங்கள், உலக நிகழ்வுகள்… என ஒவ்வொரு கட்டுரையிலும் அழுத்தமான முத்திரை பதித்தார்.

    மலர் மன்னனின் இயற்பெயர், சிவராம கிருஷ்ண அரவிந்தன். இவர், 1/4 (கால்) என்ற காலாண்டிதழை நடத்தியவர். ‘மலையிலிருந்து வந்தவன்‘ என்ற நாவல் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்தவர். இது, கி.பி.1800இன் இறுதிக் கட்டத்தில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தன் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்திச் சிறையிலேயே உயிர் துறந்த டார்ஸா முண்டா என்ற வனவாசியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது; நா.பார்த்தசாரதியின் தீபம் இதழில் தொடராக வெளிவந்தது; ‘கண் விழித்த கானகம்‘ என்ற தலைப்பில் அவரது சொந்தப் பதிப்பகத்தின் வாயிலாக மறுபதிப்பானது.

    ‘சிந்தனையாளர் நியெட்ஸே‘ என்ற நூலைப் பிரேமா பிரசுரம் வெளியிட்டுள்ளது. ‘தி.மு.க. உருவானது ஏன்?’, ‘ஆரிய சமாஜம்’, ‘திராவிட இயக்கம் புனைவும் உண்மையும்’ ஆகிய வரலாற்று நூல்களைக் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ‘வந்தே மாதரம் – எதிர்ப்பில் வளர்ந்த எழுச்சி கீதம்’ என்ற நூலைத் திரிசக்தி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அடுத்து, கிலாபத் இயக்கம் தொடர்பான நூலை எழுதி வருவதாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

    மலர் மன்னன், அறிஞர் அண்ணாவுடன் நெருங்கிப் பழகியவர். திராவிட அரசியலின் நேரடி சாட்சிகளுள் ஒருவர். அதே நேரம், இந்துத்துவ நிலைப்பாடு கொண்டவர். திண்ணை உள்பட பல தளங்களிலும் மலர் மன்னன் எழுதிய கட்டுரைகள், பெரும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் தோற்றுவித்துள்ளன. மின்னிதழ்கள் மட்டுமின்றி, அச்சிதழ்கள் பலவற்றிலும் தொடர்ந்து பங்களித்து வந்தார்.

    மலர் மன்னனின் மறைவு, தமிழ் இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் பேரிழப்பு. அவரது மறைவுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள், அவரது ஆன்மா சாந்தியடைய, எங்கள் பிரார்த்தனைகள்.

    Share
  • தேவன் ஒரு சகாப்தம்

    திவாகர்

    தேவன் எனும் மகாதேவன் எனும் அரிய பெரிய எழுத்தாளரைப் பற்றி நம் காலத்துப் பெரியவர்கள் அனைவருமே நன்றாகவே அறிந்திருந்தாலும், இந்தக் கால இளைஞர்களுக்கும் வருங்காலத்துக்கும் நம்மால் இயன்ற அளவு அவர் பெருமை சொல்லலாமே என்றுதான் இக்கட்டுரைத் தொடரைத் தொடங்க முன்வந்துள்ளேன்.

    இந்த வருடம் தேவனின் நூற்றாண்டு வருடம்.. ஆம்.. சென்ற 1913 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 8ஆந்தேதிதான் தமிழுலகத்தின் இந்தச செல்லக் குழந்தை திருவிடைமருதூரில் அவதரித்தது. தான் பிறந்த இந்தத் திருவிடைமருதூரை முடிந்த போதெல்லாம் தம் கதைகளில் கொண்டுவந்து விடுவார். பிறந்த ஊரின் மீது அத்தனை பற்று வைத்திருக்கும் தேவனைப் பற்றி எழுதும்போது தேவன் படைப்புகளைக் கொண்டுதான் இக்கட்டுரை அமைய வேண்டுமென்பது என் விருப்பமாதலால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை, அவர் குடும்பம் போன்றவைகளைப் பற்றியோ, அவர் எப்படியெல்லாம் வாழ்ந்தார் என்பதைப் பற்றியோ இங்கு எழுதப்போவதில்லை என்பதை முன்னமேயே சொல்லி விடுகிறேன்.

    தேவனைப் பற்றி எழுத எனக்குக் காரணம் இருக்கிறது. நான் பிறந்தவுடன் அவர் மறைந்தார் என்ற ஒரு காரணத்தை நகைச்சுவைக்காகச் சொன்னாலும், என் எழுத்துக்கு ஆத்திச்சூடி அவர் படைப்புகளிடமிருந்துதான் பெற்றேன் என்பதை மட்டும் மிகப் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். ஒரு கதை எப்படி எழுதப்படவேண்டுமென்பதோடு வாசகன் பார்வையில் அது எப்படிப் படவேண்டுமென்பதிலும் தேவன் மிகக் கவனமாகக் கையாண்டிருக்கிறார். 1930 களின் ஆரம்பத்திலிருந்து 1957 வரை (ஏறத்தாழ இருபத்தைந்து வருடங்கள்) எழுதிக்கொண்டே இருந்த அந்த கை அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அந்த இடைக்கால மாற்றங்களையும் தனக்குத் தோதாக எடுத்துக் கொண்ட விதமும், அவைகளை தம் எழுத்தில் பிரதிபலித்த விதமும் மிகவும் பாராட்டத் தக்கது என்றே சொல்லவேண்டும். இந்த காலகட்டத்தின் ஆரம்பத்தில்தான் இந்திய சுதந்திரப் போராட்டம் மிகத் தீவிரப்பட்டது. இந்த காலகட்டத்தின் மத்தியில்தான் உலகத்தின் மிகக் கொடிய அழிவுக்குக் காரணமான மோசமான உலகப்போர் நிகழ்த்தப்பட்டது. இந்த காலகட்டத்தில்தான் இந்தியா சுதந்திரமும் அடைந்து தன் மக்களின் பிரதிநிதிகளினால் தன் சுய ஆட்சியையும் ஆளப்பெறத் தொடங்கியதும்கூட.. இந்த காலகட்டத்தில்தான் அரசியலில் அவ்வளவாக மாசு படியாத சூழ்நிலை இருந்தாலும் சமூகம் மிகவும் மாசுபடிந்து முன்னேறமுடியாத நிலையில் அல்லலுற்று ஏழ்மை நிலையில் நோய்கள் மலிந்து கிடந்து, தேசத்தின் நாலா பகுதிகளும் ஒரு சோம்பலுற்ற நிலையில்தான் இருந்தது என்பதையும் மறக்கக் கூடாதுதான். பாரத மொழிகள் கூட முன்னேறமுடியாத, செழுமை அடைய முடியாத நிலையில் இருந்த காலகட்டம்கூட இதுதான். அதுவும் நம் மனதுக்கினிய தேனினும் இனிய தமிழ் மொழியைக் கட்டிக்காத்து வளர்த்து வந்தவர்கள் ஆதீனங்களைச் சேர்ந்த மடாதிபதிகளும், நன்னெஞ்சம் கொண்ட ஒரு சில செல்வந்தர்களே என்பதும் நாம் மறக்கக் கூடாது. தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதைய்யரும், மகாகவி பாரதியும் வீறு கொண்டு எழுந்து தமிழால் நாம் பெருமை பெறுகிறோம் என்று பல்வேறு காரணங்களை எடுத்துச் சொன்னதால் ஏனைய மொழிகளை விட தமிழ் இந்த அகண்ட பாரத தேசத்திலே பெருமையோடு இருந்தது என்று வேண்டுமானால் ஓரளவு சொல்லிக் கொள்ளலாம். அவ்வளவுதான்.. ஏனெனில் படித்த பெருமக்களிடையே ஆங்கில மோகம் தலைவிரித்தாடிய காலம். ஆங்கில எழுத்துக்கள், ஆங்கில நாவல்கள், ஆங்கிலக் கவிதைகள், ஆங்கில நாடகங்கள் (ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அறிந்தவன் மட்டுமே அதிபுத்திசாலி) ஆங்கிலத் திரைப்படங்கள் எல்லாமே தமிழோடும் மற்ற மொழிகளோடும்  ஒப்பு நோக்குகையில் தரத்தில் எங்கோ உச்சாணிக்கொம்பில் இருந்ததாகப் பட்டதால் படித்தவர்கள், படிக்கவிரும்பும் மாணவர்கள் எல்லோருமே தமிழுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்பதையும் நாம் ஒப்பு நோக்கவேண்டும். தமிழுக்கு என்றல்ல எந்த மொழியின் நிலையும் அப்படித்தான் இருந்தது.

    சரி, இந்த சரித்திரம் இப்போது எதற்கு எனக் கேட்டால், தேவன் கதைகளையும் கட்டுரைகளையும் வரிசைக் கிரமமாகப் படித்துக் கொண்டே வந்தால் இத்தனை சரித்திரங்களையும் ஆங்காங்கே நமக்கு அவரின் படைப்புகள் மூலம் விளக்கி வந்திருப்பதைக் காணலாம். ஆரம்பகால படைப்புகளில் அரசியல் நிகழ்வுகள் அதிகம் கலந்திருந்தாலும் போகப் போக சமூக நல்லமைப்பிலே நாட்டம் கொண்டு அந்த சமூகத்துக்குத் தம் எழுத்துகள் மூலம் நல்லவை செய்யவேண்டுமென்கிற தூய எண்ணத்தை அவரது தொடர்கதைகளாகட்டும், கட்டுரைகளாகட்டும் தெள்ளிய குளத்து நீரில் தெரியும் தரைமண் போல தெள்ளத் தெளிவாகத் தெரிவிக்கும். இப்படி நிகழ்கால சரித்திர நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கதை மூலமாகவோ கட்டுரை மூலமாகவோ எப்படியாவது பாங்காக நுழைத்துத் தெரிவிப்பது என்பது தேவனுக்கு கை வந்த கலை. ஆங்கில மோகத்தால் ஆங்கிலப் புத்தகங்கள் புதினங்கள் என்று பேசிக்கொண்டிருந்தவர்களை, படித்துக் கொண்டிருந்தவர்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழின் பக்கம் தள்ளிக்கொண்டு வந்த பெருமை தேவனுக்கும் தேவனின் எழுத்துக்கும் நிச்சயமாக உண்டு.

    தேவன் ஆனந்த விகடனுக்கு உதவி ஆசிரியராக வந்து சேர்ந்தது கல்கியால்தான் என்றாலும் ‘மாஸ்டர் ராஜாமணி’ தான் கல்கிக்கு தேவனை அறிமுகப்படுத்திய ’உயர்ந்த’ மனிதன். இந்த மாஸ்டர் ராஜாமணி சின்னப் பையன், வால் பையன், தேவனின் கட்டுரையின் ஒரு பாத்திரம்.. ஆனால் இந்த வால் பையனின் லூட்டியும், திறமையும்தான் கல்கியைக் கட்டிப் போட்டதோடு மட்டுமல்லாமல், அப்போது ஒரு நாள் எதேச்சையாகவும் சாதாரணமாகவும் ஆனந்தவிகடன் அலுவலகத்தில் ‘இந்த கல்கி என்பவர் எப்படி இருப்பாரோ என்று (வேவு) பார்க்க வந்த தேவனை இசகு பிசகாக ஒரு கேள்வி கேட்க வைத்தது.. ’அது சரி, இந்தக் கட்டுரையை நீதான் எழுதினாயோ’ என கல்கி கேட்க இவருக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வர, கல்கி தனக்கே உரிய பாணியில் சமாதானப்படுத்தி தேவனை விகடனிலேயே உதவி ஆசிரியராக நியமிக்க, அந்த 1930 ஆம் வருடங்கள் ஆனந்த விகடனுக்கே வசந்த காலமாகவும் பொற்காலமாகவும் ஆரம்பித்தன என்றே சொல்லலாம். கல்கியின் உயர்ந்த குணங்களில் ஒன்று எங்கே நல்லது தெரிந்தாலும் மனமாறப் பாராட்டுவதும், தன் சக எழுத்தாளர்களையும் கை தூக்கி விடுவதும். அந்த உயர்ந்த குணம் கொண்ட கல்கியின் வலது கரமாகவே ஆகிப்போனவர்தான் தேவன் (கல்கி ஆனந்தவிகடனில் இருக்கும் வரை).

    தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் ஒரு கட்டுரையில் தேவன் உதவி ஆசிரியராய்ச் சேர்ந்த வரலாற்றை இப்படி விவரிக்கிறார்.

    “ அவர் முதல் முதல் எழுதிய மாஸ்டர் ராஜாமணியை, ஆம், அந்தக் குஞ்சுப் பயல் ராஜாமணியை அழைத்துக் கொண்டு, தான் வேலை பார்க்கும் துரைமகனிடம் சென்ற அவனது மாமா, அங்கு அந்த ராஜாமணி குறும்பாகப் பேசிய மழலை மொழிகளை எல்லாம், தமிழே அறியாத துரையிடம் மொழி பெயர்க்கும் விதத்தைப் படித்துப் படித்து இருபத்தைந்து வருஷங்களுக்கு முன், நான் சிரித்ததை எல்லாம், சொன்னபோது அவர் சொன்னார். “ஆம், அந்த மாஸ்டர் ராஜாமணி தான், சார், எனக்கு ஆனந்த விகடனில் வேலை தேடிக் கொடுத்தான். அவன் தான் என்னை ஆசிரியர் ‘கல்கி’யிடமும் திரு வாசனிடமும் அறிமுகம் செய்து வைத்தான்” என்றார். மேலும் சொன்னார். “அந்தக் கட்டுரையைப் படித்த ‘கல்கி’க்கு ஒரு சந்தேகம். அது என் சொந்தச் சரக்குத் தானா என்று. ஆதலால் அதைத் தொடர்ந்து ஒரு கட்டுரையை, அங்கே அவர் பக்கத்தில் கிடந்த மேஜை அருகிலேயே உட்கார்ந்து அப்பொழுதே எழுதும்படிச் சொன்னார். எழுதிக் கொடுத்தேன். அதன் பிறகே என்னை ஒரு உதவி ஆசிரியனாக அமர்த்தினார் “ என்றார். (நன்றி: திரு பசுபதி – தேவன் நினைவுகள்-2 (http://s-pasupathy.blogspot.ca/2010/08/2_30.html)

    சரி, நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன், தேவனின் வாழ்க்கை வரலாற்றுக்கு நான் போகப்போவதில்லை.. ஆனாலும் இதோ நம் தேவன் ஆனந்த விகடனில் எழுத்துப் பணியைத் தொடங்க ஆரம்பித்தாயிற்று. ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்கிற இராமபிரானைப் போல அந்த ஒரே ஆனந்தவிகடனில் தான் சாகும் வரை இருந்து கொண்டு அவர் படைத்த படைப்புகளின் மூலமே அவரைப் பார்க்க ஆரம்பிக்கலாமா?

    (தொடர்வோம்)

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 5

     

    தேமொழி

     

     

     
    ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி…
    தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராகக் குடியிருப்போம்…
    வெய்யிலிலே குளிர்ந்திருக்கும் வேணியிலே கொதியிருக்கும்…
    கையகலம் கதவிருக்கும் காற்றுவர வழியிருக்கும்…
    வழி மேலே விழியிருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்…

    வரிகள்: கண்ணதாசன்

     

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 6                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 4>>

    Share
  • வயோதிகருக்குமுண்டு வெறி

    நாராயண் சுவாமிநாதன்

    “என்ன போட்டிருக்கு பேப்பர்ல ” என்றான் கோபாலன்.

    “சேலத்துல எண்பது வயசுக் கிழவன்  எட்டு வயசுப் பெண்ணைக் கற்பழிச்சிட்டானாம்” என்றான் ரகுபதி.

    ” நாட்ல சட்டம் சரியில்ல. மைனர், மேஜர், மனித உரிமைன்னு தண்டிக்கத் தடை வருது. பெண்கள் கவர்ச்சி உடை, சினிமா குத்தாட்டம், கவர் ஸ்டோரி எல்லாம் காரணம். இவனுகளை தூக்ல போடணும். இல்லாட்டி வேதியியல்  முறையில வலிக்காம ஆண்மை நீக்கம் கூட..”

    “ஆமாண்டா. இவனுக கதறக் கதற கற்பழிப்பானுக..இவனுகளைப் பிடிச்சு தண்டனை கொடுக்கறச்சே மட்டும் நோவாம நுங்கெடுக்கணுமா. ஒரு அருவாளால..”

    “வெறிபிடிச்ச வெளி ஆளுகள் செய்யறதவிட,  வீட்லேயே சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க கூட தப்பு செய்யறாங்க. நம்ம வீட்டு வாசல்லயே நடக்கற ந்யூஸ் தெரியுமா உனக்கு ?”

    “இந்த வீட்டுலயா ? என்ன நடக்கறது ?”

    ” வாசல் திண்ணையில இருக்காறே கிழவரு…அவர் ஒரு ஜொள்ளுப் பேர்வழி. தெரியுமா”

    அவர்கள் குடியிருந்த அந்த வீட்டு  முன்னறையின் சன்னல் வழியாகப்  பார்த்தால்  வாசல் திண்ணையில ஒரு கிழவர் அமர்ந்திருப்பது தெரியும். அந்த  வீட்டு சொந்தக்காரரின் தகப்பனார் அவர். தினமும்  காலையிலும் மாலையிலும் தெருவில் வருவோர் போவோரைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார் அவர்.

    ரகுபதியால் நம்ப முடியவில்லை.

    “பாவம் அவரைப் போயா ஜொள்ளு பேர்வழிங்கறே ?
    பேத்தாத. அவர் வயசென்ன..எழுவது எழுவத்தஞ்சுக்கு மேல இருக்காது ? தப்பாப் பேசாத…” என்று பொரிந்தான்.

    “பார்க்காம சொல்வனா..  மூணு நாளா வாட்ச் பண்றேன்”

    “என்ன பண்ணினாரு அப்படி ?”

    “ஒரு ஸ்கூல் பெண்ணுக்கு தூண்டில் போட்டு பிடிச்சிட்டாரு”

    “யார் அந்தப் பெண் ?”

    “இதே தெருல ரேவதின்னு ஹைஸ்கூல் பெண்ணு. பார்க்கத் தளதளன்னு இருக்கு.  இவரு கூப்பிட்டுப் பேசறாரு.  குழையறாரு. நான் கண்ணால பார்த்தேன்.
    அதுவும் விவரம் புரியாம இருக்கு”

    அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே கிழவர் தெருவை நோக்கி  “ரேவதி..ரேவதி இங்க வா” என்று அழைத்தார்.

    மினுக்கி குலுக்கி அந்தப் பெண் அவர் அருகில் வந்தாள்.

    ”கிட்ட வா” என்றழைத்து, அவள் கழுத்தை அணைத்தவாறே காதில் மெதுவாக  ஏதோ சொன்னார். ரகுபதிக்கு சரியாகப் புரியவில்லை. “மறக்காதே, அது ரொம்ப அவசியம் ” என்று சொன்னது கேட்டது.

    அவள் தலையசைத்து,  “சாயங்காலம் ஸ்கூல் விட்டவுடனே வந்திடவா ? ” என்றாள்.

    “வந்தா ஆறுமணிக்கு மேல வா. என் பிள்ளையும் மருமகளும் வெளிய போனப்பறமா வா. அவங்க  அஞ்சு  அஞ்சரைக்கு ஏதோ கல்யாண ரிசப்ஷன் போறாங்களாம். முன் ரூமில குடியிருக்கறவங்க ஏழு மணிக்கு மேலதான் வருவாங்க. நாம தனியா இருந்தா நமக்கு ஒரு தொந்திரவும் இருக்காது” என்று சொல்லி

     ” சொக்கும் விழிக்காரி  சொப்னசுந்தரி
      சொன்னது  தப்பாமல் வந்திரி “ என்று பாடினார்.

    ரேவதி வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

    அறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கோபாலன் தணிந்த குரலில் “பாத்தியா உன் கண்ணால. கிழத்துக்கு ஹார்மோன் பிரச்னை. அதான் அலையுது. ”அது” அவசியமா வேணுமாமே. எது ?ஆணுறையா? வெவரமான ஆளாத்தான் இருக்கு. தடயம் இல்லாம தப்பு செய்யப் பாக்குது”

    ரகுபதிக்கு கோபம் பற்றிக் கொண்டு வந்தது.

    “இதைத் தொடர்ந்து கண்காணிக்கணும் கோபாலா..  இந்த மாதிரி ஜொள்ளு கிழத்தை எல்லாம் கேஸ்ட்ரேஷன்  பண்ணணும். என்ன  நடக்குதுன்னு இதை ரூம்லயே இருந்து கவனிக்கப்போறேன்.  நமக்கு என்னனு இல்லாம ஒரு சமூகப் பொறுப்போட நாம செயல்படணும்”
    என்று சூளுரைத்து சன்னல் கதவை லேசாக சார்த்தி வைத்தான்.

    “வம்புல மாட்டிக்காத. வாடகைக்கு வீடு கிடைக்கிறது கஷ்டமா இருக்கு. எனக்கு  ஆபீஸ்ல வேலை இருக்கு. என்ன நடக்கறதுன்னு பார்த்துச் சொல்லு” என்றான் கோபால்.

    சாயங்காலம் அஞ்சுமணி.

    “மாமா நாங்க திரும்பி வர ரெண்டு மணி ஆகும்.  மேஜையில அடை வார்த்து வெச்சிருக்கேன். சாப்பிடுங்கோ. கதவை சாத்தி வெச்சுங்கோ” என்று சொல்லிவிட்டு  கிழவரின் மருமகள் தன் கணவனோடு ஆட்டோவில்  ஏறிப் போனாள்.

    அவர்கள் போனதும் குஷியான கிழவர் ஒரு பாடலை  முணுமுணுத்தார்.

    “எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே
    என்னையறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே “

    துள்ளுதோ ? வெட்டிப்போடறேன் என்று நினைத்துக் கொண்டான் அறையில் இருந்த ரகுபதி.

    சற்று நேரத்தில் ரேவதி வந்தாள்.

    மருளும் விழிகளால் சுற்று முற்றும் பார்த்தாள்.

    ” வா ரேவதி ,வா,  லைன் கிளியர்….. அவாள்ளாம் வெளிய போயாச்சு ” என்றார் கிழவர் பரபரப்புடன்.

    ரேவதி ஜாக்கெட்டில் கைவிட்டு ஒரு சிறு சதுரமான பாக்கெட்டை எடுத்துக் கொடுக்க கிழவர் அதை மகிழ்வோடு வாங்கிக் கொண்டார்.

    அது என்ன என்று ரகுபதிக்கு அறையிலிருந்து தெளிவாகத் தெரியவில்லை.

    பார்க்க ஆணுறை போலன்னா இருக்கு. அந்தப் பெண்ணே இதை எடுத்திட்டு வரதா. சே கேவலம்.  நாடு எங்க போயிட்டிருக்கு ? அந்த சின்னப் பொண்ணுதான் ஏதோ வயசுக் கோளாறு ஆர்வத்தில  வந்துட்டாலும், தாத்தன் வயசான இந்தக் கிழம் நல்ல வார்த்தை சொல்லி அவளை வீட்டுக்கு அனுப்ப வேணாம் ? வேலியே பயிரை மேஞ்சா…வெட்கக்கேடு.

    அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஏற்படுமுன் நிறுத்திடணும்.  நாக்கைப் புடுங்கிக்கிறா மாதிரி கிழவரை நறுக்குனு நாலு வார்த்தை கேட்டுடணும் என்று  அறையிலிருந்து வெளியே வந்தான்.

    அவனைப் பார்த்ததுமே ரேவதி தெருவில் இறங்கி ஓடிவிட்டாள்.

    கிழவர் நடுங்கும் கரங்களால் அந்தப் பொட்டலத்தைப் பிரித்தார். கட்டைவிரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து அதில் ஏதோ எடுத்தார்…பின்னர்…
    சர்..சர்.. என்று  தன் மூக்கில்  இழுத்தவுடன்  அருகே வந்த   ரகுபதியைப் பார்த்தார்.

    ஒரு அசட்டு சிரிப்புடன் ” ஆபீஸ்லேருந்து சீக்கிரமா வந்துட்டீங்களா? இந்த மூக்குப் பொடிப்பழக்கம் என்னால விட முடியல. என் மகனும் மருமகளும்  வாங்கித் தர மாட்டேங்கறா.. நான் பொடி போடறது அவங்களுக்குப் பிடிக்கல. நல்ல வேளையா மூணாம் வீட்டுப்பெண்  ரேவதிதான் வாங்கிட்டு வந்து
    கொடுத்துது. காசு கூட வாங்கிக்காம ஓடிப்போயிட்டுது.  இதை நீங்க எங்க வீட்ல யார் கிட்டயும் சொல்லிட வேண்டாம்” என்று சொல்லி, பொடிப் பாக்கெட்டை வேட்டியில் பத்திரமாய் முடிந்து கொண்டார்.

    பிறகு, மிகுந்த மனநிறைவுடன், ”மூக்குப்பொடிக்கும்  ஸ்லோகம் இருக்கு, தெரியுமா ரகுபதி ?” என்று கேட்டுவிட்டு,

    ” பஸ்ம ரூபிணி பரிமள கந்தினி  மனோரஞ்சினி  ஜலதோஷ நாசினி
      நித்ய சுககாரிணி நமஸ்தே நமஸ்தே நாசிகாசூரணி “

    என்று பாடிக் கொண்டே உள்ளே எழுந்து போனார்.

    =========

    என். சுவாமிநாதன்
    லாஸ் ஏஞ்சலஸ்

    Share
  • ஆத்மாவின் மொழி.!

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    நிமிர்ந்த உன்னிடம் சரண் அடைந்து
    சொல்கிறேன் சக்தியும் சிவனும் நீ..!

    அழிக்காது உயிரைக் காப்போம் அன்பில்
    நீர் ஊற்றுவோம் வா..!

    பிறந்தது ஓரிடம் வளர்ந்தது வேறிடம்
    இறந்திடும் ஒன்று கூடி..!

    தலை நீயும் கால் நானுமாய்
    உலகை அளப்போம் சேர் !

    நித்தம் ஜெபிக்கும் எந்தன் மனம்
    நிந்தன் நாம மந்திரம்..!

    லட்சம் உருவைப் போற்றும் போதும்
    குறைந்த பட்சம் இது..!

    முன்னம் யாரோ…பின்னம் யாரோ…?
    இருப்பதில் மகிழ்ந்து விடு..!

    தயா…காருண்யம் சித்தம் கருணை
    பூரணம் பரி வாரணம்..!

    ஆனந்தம் ஆடும் மனது நோக்கினால்
    அழிவின்றி தொடரும் உடல்.

    அஞ்சும் உன்னோடு கரைந்து போகட்டும்
    நெஞ்சே நிமிர்ந்து நில்..!

    தீயாக என்னுள் நீயே தீயாக ஜோதி
    பொய்யென கரைத்தது காற்று..!

    வெட்டி மறையும் ஒளிக்கீற்று மின்னலாய்
    நமக்குள் அவனிட்ட  அன்பு..!

    பாராது பார்க்கும் பார்வை துரத்த
    வாராதது வந்தது பார்..!

    கதிரொளி ஈதென்று மனம் உரைத்திட
    அறிவொளி நீ யென்  கண் ..!

    வாழா திருந்த உடலே மனமே..
    சாகாது ஏகாந்தமாக இரு..!

    செல்லல், நிகழல், வகுதல் மூன்றினையும்
    கடக்கும் நமது மௌனம்..!

    சிறுபொறி பட்ட பஞ்சாக கனன்று
    சுடர் எழுவாய்த் தூயவளே…!

    உருமாறி  உடம்புமாறி மனதளவில் ஒற்று
    வருமாரி பருவமாறிப் பற்று..!

    நெற்றிக்கு நேரே நெற்றி முட்டி
    மூனக்கனல் முழுதும் ஏற்று..!

    ஸ ….நீ , ப…நீ..,ச….நீ..!
    என்னுள் ஸ்வர சங்கமம்…!

    கண்ணாடி முன்னில் நானின்று காணின்
    கண்டேன் உன்னாடும்  முகம்..!

    பஞ்சு மனம் பிஞ்சு மனம் பார்த்ததும்
    துஞ்சுவ தில்லை ஜெயம்..!

    தோன்றாத மலர்கள் தோன்றியதால் உன்னைச்
    சேராமலே வாடி விடும்..!

    விண்ணிறைத்த ஒளியே நின் கண்முன்
    திறந்ததோ என்னுள் விழி..!

    ஆதி ஜோதி நீ என்னுள் பாதி நீ
    சாரதியா யானேன் உனக்கு..

    உன்பால் அறியாத பந்தம் நெஞ்சத்தைத்
    தாகுவ தாகும் தவம்..!

    பற்றில்லை பற்றில்லை பற்றில்லை  என்றே
    பற்றினேன்  நின் பதத்தை..!

    அங்கி தரும் உடல் காப்பு போல்
    நெஞ்சம் காப்பதுன் நினைவு..!

    ஒன்றுள் ஒன்றாகி ஒடுங்கி விட்டால்
    வேறாகுமா ஒன்றும் பூஜ்ஜியமே..!

    அறிந்து கொண்டேன் நாட்டம் நட்டம்
    வருமா எழுந்து செல்..!

    மூலமும் முடிவும் ஒன்றான போது
    தேவை யொன்றும் இல..!

    வேறாகி நின்றாய் நேற்றில் என்னுள்
    வேராகிப் போனதுன் மனம்..!

    வாயுவாய்  வேகமாய் ஒளிக்குள் விழியாய்
    தேடுவாய் சேருவாய் செல்..!

    சிந்தை தெளிந்தும் விகாரம் அடங்கியும்
    தன்னைத் தெளிந்தோம் யாம்..!

    அடக்கத்தின் அரியணையில் அமர்ந்தாளும்  ஆறறிவே..
    எதுவும் தேவையில்லை உனக்கு.

    தன்னையே உணர்ந்து நான் காணும்
    மோஹனம்  நீயன்றி யாரிங்கு சொல்..!

    பெண்ணிவள் பெற்ற பயன் நோக்குங்கால்
    விண்ணாகி விரிந்தாய் வியப்பு..!

    சித்தம் கலங்கிட விரிந்தாய் என்னுள்
    மனக் குளத்தின் தாமரை நீ..!

    பாலுக்குள் மறைந்து காத்து நிற்கும்
    நெய் போல் ஆனதடி நம்முறவு..!

    எண்ணெய்  தீர்ந்தேன் உள்ளத்தின் எண்ணத்தில்
    தீயிட்டு எரித்தாய்த்  திரி..!

    பாரிதில் பரிதியைப் பார்த்ததால் இந்தப்
    பாரிஜாதம் பூத்தது பார்..!

    பெண்ணல்ல ஆணல்ல  திருநங்கையல்ல பேருமல்ல ..
    எனக்குள் யார் புகுந்தார் வியப்பே..!

    அனைத்துமாய் அனைத்திலும் அதிகமாய் அகத்தினை
    ஆழச்  சொரிந்தாய் ஆள் ..!

    உள்ளத்தின் ஓசைக்கு இசை சேர்த்த
    பாசக்கார பவித்ரமோ அன்பு..!

    நெஞ்சத்து நினைவுக்கு வாசமலர் போலானாய்
    மலராது வாடாது உதிராது நீ..!

    வீரிய விதையாய் விழுந்த நிலமாக
    மனத்துள் ஆணிவேராகக்  காலூன்றியாய்..!

    அகடம் விகடமாகி ஊடகச் காந்தமே
    பகடம் தகடாமுகோ சொல்..!

    சத்தியம் நித்தியம் சுகம்தரும் சுகந்தமாய்
    சாத்தியம் நீயும்  சத்தியம்..!

    இளைத்துவிட்ட ஜீவனுக்கு சாபல்ய வரமானாய்..
    மீண்டும் எதற்குப் பவம்..?

    இருசுடர் சிந்தித்தேன் இராப்பகல் ஒன்றாய்
    உட்புகுந்து ஜீவன் தந்தாய்..!

    கடலலை உள்ளத்தின் கலங்கரை விளக்கு நீ
    கலங்காத சிந்தையின்  பாவை விளக்கு..!

    வா…வா…என்றென்னை மனம் விரித்தழைத்த
    உந்தன் கருணையே பாயுமொளி..!

    மதிமுகம் மதியகம் மதியை மயக்கும்
    விதியிது வழியிது ஈசன் செயல் ..!

    தேடியே உள்ளே ஆதியின் அறிவாய்
    ஓடியே ஒளிந்து கொள்வாய்..!

    களைந்த பிறவிகள் பண்ணிய பயனாய்
    வந்திங்கு சேர்ந்து விட்டாய்..!

    கலையா தவத்தால் கலைந்தது  மோட்சம்
    உன்னைப் பெற்றது உணர்வு..!

    வீடெது வீடது விடாது வேண்டினேன்…
    வீடகம் உன்னுள்  கலந்து..!

    சப்த நாடிகள் சப்தம் அடங்க
    பூரகம் பொங்கிய உயிரே..!

    சுழுமுனையுள் தாமரை நூலாம் நாடியது
    என்னுயிரில்  உன் நினைவாம்..!

    ஆதித்தன் சிரிக்க இதழ் விரியும் மாமலராய்
    எனக்குள்  சிரிக்கும் முகம்..!

    நரம்போடு எலும்புமஜ்ஜை  தசையோடு பிசைந்து
    பொய்யில்லை நீ  நிஜம்..!

    வாயு ஓடும் வரையிலா நீளும் வாழ்வு
    அதையும் தாண்டி ஆயுமா சொல்..?

    நாடிகள் ஆயிரமாயிரம் ஒடுங்கால்  நம்மிடத்துள்
    நீ பத்துக்குள் சுழுமுனை எனக்கு.

    உச்சி முகர்ந்தென்னை பரிந்து கட்டு
    புதிதல்லவே நம்முள் உறவு..!

    பெற்றதும் உற்றதும் சுற்றதும் சூழ்ந்திங்கு
    கற்றுத் தந்தது காடு.

    படத்துக்கு நன்றி

    http://www.tumblr.com/tagged/7%20chakras

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (44)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    நாம் வாழ்வில் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிரோம், பேசுகிறோம், பழகுகிறோம் ஆனால் அவர்களில் அனைவருமே எமது மனங்களில் நிரந்தரமாகத் தங்குவார்கள் என்பது நிச்சயமல்ல.

    அதேசமயம் சிலபேரைச் சந்திப்பதில்லை தோலைபேசியில் பேசியோ அன்றிக் கடித, மின்னஞ்சல் தொடர்பு மூலமாகவோ அறிந்து கொள்கிறோம் ஆனால் அவர்கள் எமது மனங்களில் ஒரு நிரந்தரமான இடத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள்.

    மற்றும் சிலரைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்களாக அந்நிகழ்ச்சியின் நடத்துனர்களாகக் காண்கிறோம்.

    அவர்களில் சிலரும் எமது மன‌ங்களிலே தமக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார்கள்.

    எனது பணியின் நிமித்தம்  ஜந்து வாரங்களுக்கு ஒருமுறை வாரவிடுமுறை நாட்களான சனி, ஞாயிறு தினங்களில் நான் பணிமனைக்குச் செல்ல வேண்டிவரும்/. அந்த ஞாயிறுகளைத் தவிர்ந்த மற்றைய ஞாயிறுகளில் வீட்டில் இருக்கும் தினங்கள் அனைத்திலும் நானும் என் மனைவியும் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சிகளில் ஒன்றுதான் “ The Andrew Marr Show ” அன்ட்ரூ மார் ஷோ , இது ஞாயிறு காலை 9 மணிக்கு நடைபெறும்.

    இந்நிகழ்ச்சியின் விஷேசமாக பத்திரிகைத் தலைப்புகளைப் பற்றியும், முக்கிய செய்திகளைப் பற்றியும் விவரமாக அலசுவதற்காக வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்குச் சார்பான பத்திரிக்கைத் துறையினருடன் நிகழ்ச்சித் தொகுப்பாளர் “அன்ட்ரூ மார் (Andrew Marr)”  அவர்கள் கலந்துரையாடலை மிகவும் சுவாரஸ்யமாக நடத்துவார்.

    அது தவிர அந்நிகழ்ச்சியில் ஒவ்வொருவாரமும்  அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என பல்வேறு வித்தியாசமானவர்களுடனான நேர்காணல்கள் இடம்பெறும்.

    இந்த நேர்காணலை மிகவும் காரசாரமாக நடத்துவதில் அன்ட்ரூ மார் அவர்கள் அற்புத ஆற்றல் மிகுந்தவர். மக்களின் மனங்களிலே நீந்தும் முக்கிய்மான கேள்விகளை இவ்வரசியல்வாதிகளை நோக்கி வீசி அவர்களைத் திக்குமுக்காட வைத்து விடுவார்.

    இவரின் மற்றுமோர் தனிப்பட்ட திறமை, கேட்கப்படும் கேள்விகளைத் தமக்கேயுரிய சமயோசித புத்தியினால் தமக்கேற்றவாறு திசைதிருப்பி விட முனையும் அரசியல்வாதிகளை திரும்பத் திரும்ப அக்கேள்விக்கே அழைத்து வந்து அவர்களின் திசைமாற்றும் போக்கை பார்வையாளர்களுக்கு புரியவைத்து விடும் தன்மையாகும்.

    இத்தகைய அற்புத ஆற்றல் மிக்க ஒரு ஊடகவியலாளரான அன்ட்ரூ மார் அவர்களின் வயது வெறும் 53 தான். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் “ஸ்ட்ரோக் (Stroke)”  எனப்படும் ஒருவகை இருதய நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

    தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளர்களைப் பார்க்கிறோம் ரசிக்கிறோம், வானொலியில் எத்தனையோ அறிவிப்பாளர்களைக் கேட்டு ரசிக்கிறோம், பத்திரிக்கைகளில், புத்தகங்களில் அருமையான எழுத்தாளர்களின் பல ஆக்கங்களைப் படித்து மகிழ்கின்றோம். ஆனால் ஏனோ தெரியவில்லை அன்ட்ரூ மார் அவர்களின் இச்சுகயீனச் செய்தி எம் மனதில் ஒருவகை சோகத்துடனான தாக்கத்தை ஏற்படுத்தியது.

    1959ம் ஆண்டு ஸ்கொட்லாந்து நகரில் பிறந்த இவர் தனது ஆங்கில மொழி பட்டப்படிப்பினை உலகப் பிரசித்தி பெற்ற “கேம்பிரிட்ஜ் (Cambridge)” பல்கலைக்கழத்தினில் பயின்று பட்டம் பெற்றார்.

    இவர் அப்பல்கலைக்கழகத்தில் பயிலும் போது தீவிர இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது.

    இவரது பத்திரிக்கைத் துறையிலான ஊடகப்பிரவேசம் 1981ம் ஆண்டு ஸ்கொட்லாந்து பத்திரிக்கையான ” ஸ்கொட்ஸ் மான்(Scots Man)” எனும் பத்திரிக்கை வாயிலாக நிகழ்ந்தது. இப்பத்திரிக்கையின் வியாபார சம்பந்தமான செய்திகள் பிரிவில் ஒரு பயிற்சிபெறும் நிருபராகத்தான் இவரது ஊடகத்துறை பிரவேசம் ஆரம்பித்தது.

    “த இன்டிபென்டன்ட் (The Independant) ” பத்திரிகையினூடாக அரசியல் நிருபராக வளர்ச்சியடைந்த இவரின் ஊடகத்துறையின் மகுடமாக பி.பி.ஸி தொலைக்காட்சிச் சேவையின் செய்திப்பிரிவின் ஆசிரியராக கடமையாற்றியதே.

    தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவதற்காக இப்பதவியினின்றும் விலகினார்.

    அதைத் தொடர்ந்து பி.பி.ஸி தொலைக்காட்சிக்காக பல தொடர்களைத் தாயரித்து தொகுத்து வழங்கியுள்ளார் அவற்றிலே குறிப்பிடப்படக்கூடியவை ,

    ” நவீன இங்கிலாந்தின் சரித்திரம் ( History of the modern Briton)”  , ” அன்ட்ரூ மாரின் உலகச் சரித்திரம் (Andrew Marrs History of the world”  என்பன ஆகும்.

    இவரின் நேர்காணல்களில் பெயர் பெற்றதாக 2004ம் ஆண்டு அப்போதைய பிரதம மந்திரி டோனி பிளேயர் அவர்களுடனான நேர்காணலில் நான்காவது முறை பிரதமராகத் தான் வரமாட்டேன் எனும் டோனி பிளேயரின் பிரசித்தி பெற்ற வாக்கினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

    மற்றும் இவருடைய அரசியல் நிகழ்வுகளின் பாதிப்பாக அப்போதைய லேபர் அரசாங்கத்தின் வியாபார அமைச்சராக இருந்த பீட்டர் மண்டல்சன் பற்றிய விபரங்களை வெளியிட்டமை அவர் தனது பதவியிலிருந்து ராஜினாமாச் செய்வதற்கு வழி வகுத்தது.

    இத்தகைய ஒரு இளைய பிரசித்தி பெற்ற ஊடகவியலாளர் குணமடைந்து மீண்டும் ஊடகத்துறைக்கு பல உன்னதமான ஆக்கங்களை அளிக்க வேண்டுமென எண்ணுவோம்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share