Blog

  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 5

    கே.ரவி

    ரமணனும் நானும், ஓ, அந்த உறவை எப்படி வர்ணிப்பது! நட்பா, ரசனையா, ப்ரமிப்பா, எல்லாம் சேர்ந்த கலவையா? தெரியவில்லை. வள்ளுவரின் முதிர்ச்சி, கம்பனின் கற்பனை வளம், பாரதியின் உணர்ச்சி, கண்ணதாசனின் எளிமை எல்லாம் அங்கங்கே பளிச்சிடும் அவன் கவித்துவம் மட்டுமே இந்த ஈர்ப்புக்குக் காரணம் என்றும் சொல்ல முடியாது. சில விஷயங்கள் சொல்லுக்கு அப்பாற்பட்டவை. விட்டுவிடுகிறேன்.

    சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் ரமணன் ஒருநாள் சென்னை உயர்நீதி மன்றத்திற்கு என்னைக் காண வந்திருந்தான். என் பணியிடம் அதுதானே.

    அங்கே முதல் மாடியில் ஒரு முற்றம் (qudrangle) உண்டு. காற்றாட நின்றுகொண்டு பேசலாம் என்று அங்கே போனால், காற்றே வரவில்லை. சலித்துக் கொண்டேன். உடனே ரமணன் பாடினான்:

    “காற்றே வா கவிதை தா ஆற்றாமை அதைநீ மாற்றாமல் தாகம் என்ற யாகம் பெருகத் தண்ணீர் ஊற்றிவிடு காற்றே வா கவிதை தா”

    பாடி முடிக்கும் முன் வந்ததே காற்று!

    இந்தப் பாடலில் ஓர் அழகான முரண்பாடு, தன்னைக் கவனிக்கச் சொல்லி முரண்டு பிடிக்கிறதே! தாகத்தைத் தணிக்கவும், யாகத்தை அணைக்கவும் தண்ணீர் ஊற்றுவதுதான் வழக்கம். ஆனால் தாகம் என்ற யாகம் பெருகத் தண்ணீர் ஊற்றச் சொல்கிறானே! அதுவும் காற்றை! கவிஞன் சொன்னால் என்ன வேண்டுமானாலும் நடக்குமோ, இயற்கையில்!

    காற்று மட்டும் இல்லை, நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும் கவிதைக்குக் கட்டுப்பட்டவை. இதையும் அருட்குறள் மூவாயிரத்தில் ரமணனே சொல்கிறான்:

    “தீயென்றால் காடெரியத் தேனென்றால் பூமகிழ வாய்நின்ற பேரருளே வாக்கு.”

    காலத்தில் இன்னும் சற்றுப் பின் நோக்கிப் போவோமே. 1977ஆம் ஆண்டு, கார்த்திகைத் திருநாள். மந்தைவெளி நார்ட்டன் லேன் வீட்டில், முன் வராண்டாவில் ஈஸிசேரில் உட்கார்ந்திருந்தேன். இருபதாவது பிறந்தநாள் பரிசாகத் தன் மகனுக்கு சாய்வு நாற்காலி (அதற்கு நாலு கால் இருந்ததோ?), வாங்கித் தந்த ஒரே தந்தை என் வளர்ப்புத் தந்தையாகத்தான் இருக்க முடியும்! அந்த சாய்வு இருக்கையில் சாய்ந்து கொண்டு, வெறுமை சூழ்ந்த மனத்தோடு வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன், குறிப்பாக எதையும் பார்க்காமல்.

    வெற்று மனத்துடனோ – ஆழம் மேவிய சிந்தை ஒருமையில் மூழ்கியோ சற்று விழிகுவித்து – நானும் சாய்ந்திருக் கின்ற பலசம யங்களில் கொத்து மலர்க் கூட்டம் – அழகு குலுங்கக் குலுங்கவென் உள்விழி யில்மின்னல் இட்டு மறைந்துவிடும் – அடடா இதுவே இதுவே தனிமையின் பேரின்பம்

    (“For oft, when on my couch I lie In vacant or in pensive mood, They flash upon that inward eye Which is the bliss of solitude”)

    ஆங்கில மாக்கவிஞன் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் அமர வரிகளை அப்போது நினைத்துக் கொண்டேனோ இல்லையோ, இப்போது நினைத்துக் கொள்கிறேன்.

    அப்படி நான் சாய்ந்திருந்த அந்தச் சாய்ங்கால நேரத்திலே, சற்று நேரத்துக்கெல்லாம், வெறுமை சூழ்ந்த என் மனத்தில் ஒரு பேரொளி எழுந்து சுடர் விட்டுச் சிரித்தது. அதுவும் வரிசை, வரிசையாக ஒளிச்சுடர்கள். மனத்திலா? அதோ, தெருவெல்லாம், எல்லா வீட்டு வாசல்களிலும்! ஓ, கார்த்திகையாயிற்றே! வீடுதோறும் அகல்விளக்குகள், நிரல்நிரலாக! அந்தக் காட்சியிலிருந்து என் கையைப்பிடித்து வேறொரு ப்ரும்மாண்டமான காட்சிக்கு அழைத்துச் சென்றது காற்று.

    ஒரு சராசரி மனிதனின் பார்வையில் சாதாரண, அன்றாட நிகழ்வாகத் தெரியும் ஒரு காட்சி, சில நேரங்களில் ஒரு கவிஞனை பிரம்மிக்க வைக்கும் ப்ரும்மாண்டத்துக்கு அழைத்துச் செல்லக் கூடும்.

    மாலை மயங்கி இரவாக மாறப் போகும் அந்தி நேரம். கிழக்கு வானில் நிலா உதயம். இது தினமும் நடப்பதுதானே! அன்றும், அதாவது, சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பும் நடந்தது. அதை ஒரு புலவர் பார்த்துவிட்டாரே! போதாதா? பாட்டு வந்தது பாருங்கள், அதுதான்யா பாட்டு!

    “கானெலாம் மலர்ந்த முல்லை ககனமீ தெழுந்த தென்ன வானெலாம் வயங்கு தாரை நிறைநிறை அடர்ந்து தோன்ற வேனிலான் விழவின் வைத்த வெள்ளிவெண் கும்ப மென்ன தூநிலா மதியம் வந்து குணதிசை தோன்றிற் றம்மா”

    காடு முழுக்க மலர்ந்த முல்லைப்பூக்கள் குபீரென்று, தாங்கள் மலர்ந்த செடிகொடிகளை விட்டுப் பிரிந்து, மேலெழுந்து பறந்துபோய் வானத்தை நிறைத்து விட்டதாம்! அப்படி வானம் முழுக்க நட்சத்திரக் கூட்டம் கொட்டிக் கிடந்தது என்கிறார், புலவர். அவற்றுக்கு மத்தியில் நிலா எப்படி வந்து உட்கார்ந்து கொண்டதாம்? மன்மதனுக்கு விழா, அதாவது காமன் திருவிழா, அதில் வெள்ளிக் கும்பம் வைக்கப் பட்டிருக்குமே, அப்படியாம்! நிலா எனப்படும் மதியொளியின் கம்பீரத்தையும், குளுமையையும் அப்படியே படம்பிடித்துக் காட்டும் கவிதையிது. வில்லிபுத்தூர் ஆழ்வார் அருளிய பாரத காவியத்தில் உள்ளது இந்த மகோன்னதமான கவிதை.

    மீண்டும் 1977- மந்தைவெளி, நார்ட்டன் லேனுக்கு வருவோம். அன்று வீடுதோறும் ஏற்றப்பட்ட கார்த்திகை அகல்விளக்குகளின் பேரணியை என்நெஞ்சில் அகலாமல் இடம்பெறச் செய்த அந்தக் கவிதை இதோ:

    காற்றுப் பல்லக்கிலே – செல்லும் கார்த்திகைத் தீபங்களே – உங்கள் காதல் வனப்புகள் ஆடிக் களித்திட ராகங்கள் நான்தருவேன் – இனிய ராகங்கள் நான்தருவேன்

    நேற்று நினைவுகளில் – துள்ளும் நெஞ்சத் துடிப்புகளே – நீங்கள் நேர்வந்தென் கண்முன் நின்று சிலிர்த்திடத் தேகங்கள் நான்தருவேன் – புதிய தேகங்கள் நான்தருவேன்

    (காற்றுப் பல்லக்கிலே)

    புரியாத கதியோடு சுகமான ஜதியோடு நதியாக வந்தாலும் நான்பாடுவேன் – இன்னும் புலராத பொழுதுக்குப் புகைபோடும் மார்கழிப் பனியாக வந்தாலும் பாட்டிசைப்பேன்

    (காற்றுப் பல்லக்கிலே)

    முடியாத பாட்டுக்கு முதலாக என்னுயிரை முழுதாக நான்தந்து விளையாடுவேன் – அந்தப் பாட்டுக்குக் கருவாகிப் பண்ணென்ற உருவாகிப் பாரெங்கும் காற்றாகப் பறந்தோடுவேன்

    (காற்றுப் பல்லக்கிலே)

    காற்றையே பல்லக்காக்கி அதிலேறி அமர்ந்துகொண்டு, மயிலைக் கபாலி கோயில் திருவிழாவில் சப்பரங்களில் போகும் அறுபத்து மூவரைப்போல் தீபங்கள் போகும் அந்த அதியற்புதக் காட்சி, இல்லை, தரிசனம், இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது.

    முதன்முதலில் இந்தப் பாட்டை நண்பர் வ.வே.சு.வுக்குப் பாடிக் காட்டினேன். என்ன ராகம் என்று கேட்டார். ‘சுபபந்துவராளியில் ஒரு ஸ்வரம் மட்டும் நீங்கல்’ என்று பதில் சொன்னது நினைவில் இன்னும் பசுமையாக உள்ளது. அவ்வளவுதான் சாமி நம்ம ராகஞானம்! ஏதோ, காதிருக்கிறது, காற்றடிக்கிறது, வாயசைகிறது, பாடல் வருகிறது, அம்புடுதேன், ஆனால், அம்புட்டும் தேன்!

    பருகலாம், உருகலாம், களி பெருகலாம்.

    இதுவும் தொடரலாம்!

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    –டாக்டர் க. பரமசிவன்.

     

    கண்ணதாசனின் “தைப்பாவை”

     

    Kannadasan

     

    ஆண்டாளின் பாசுரமாகிய “திருப்பாவை”, மணிவாசகரின் “திருவெம்பாவை” ஆகிய பக்திப்பாவைப் பாடல்களுக்கு இணையாகக் கவிஞர் கண்ணதாசனின் “தைப்பாவை” தமிழ் ஆர்வாலர்களின் உள்ளம் கவரும் அற்புதச் சிற்றிலக்கியமாகும். கவிஞர் கண்ணதாசனின் தமிழ் ஆசிரியரும் தென்பொதிகைத் தமிழ் முனிவருமான பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் அவர்களின் அணிந்துரையுடன் வெளியாகியுள்ள “தைப்பாவை” தமிழ்ச்சிற்றிலக்கியங்களுக்கு அணி செய்யும் அற்புதப்படைப்பாகும்.

    கண்ணதாசன் காதல் கவிஞர் – தத்துவக் கவிஞர் என்பதை 30 பாடல்களைக் கொண்ட அந்த நூல் அடிதோறும் அழகிட்டுக் காட்டுகின்றது.

    “காளை மணியோசை களத்துமணி நெல்லோசை
              வாழை இலையோசை வஞ்சியர்கை வளையோசை
    தாழை மடலோசை தாயர் தயிர் மத்தோசை
              கோழிக் குரலோசை குழவியர் வாய்த்தேனோசை
    ஆழி அலையோசை அத்தனையும் மங்கலமால்
              வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ!”

    என்ற வரிகள் ஆண்டாளின் திருப்பாவையை அடியொற்றி மணிவாசகரின் திருவெம்பாவைக்கு இணையாக மிளிர்கின்றன.

    “தைப்பாவை” யின் இறுதிவரிகள்

    “வானேறி மேகம் விழ
              மண்ணுழவர் பொன்னுதிர
    ஊனாகி வந்தெம்
              உயிர் காக்கும் மெய்வடிவே!
    பூ நேர் விழியாரும்
              பூத்துவரும் குலந்தளிரும்
    வான் வாழ்வு வாழ
              வாழ்த்தாயோ தைப்பாவாய்”

    என முடிகிறது. பாடல் தோறும் தமிழ் இனிமையோட சந்த இனிமையும்,சொல்லினிமையும், சுவை இனிமையும் ஒருசேர, கண்ணதாசனை நம் தமிழ் மொழியின் ஓப்புயர்வற்ற கவிஞனாகக் காலம் எல்லாம் காட்டும் என்றால் மிகையாகாது.

    Share
  • மனநல ஆலோசனை கேள்வி பதில்கள்

    கேள்வி :1

    நான் ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவன் என் வகுப்பில் ஒரு பெண் எப்போதும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். இதனால் நான் மிகவும் தவிப்பாக உணர்கிறேன். அவள் பாடத்தைக் கவனிப்பதில்லை. அவளால் நானும் பாடத்தை சரியாக கவனிக்க முடியாமல் இருக்கிறேன். இது காதலாக மாறி விடுமோ என்று பயமாக இருக்கிறது. என் எதிர்கால கனவுகளும் இதனால் பாதிக்கப்படுமோ என்றும் பதட்டமாக இருக்கிறது. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

    பதில் :

    நீங்கள் பதட்டப்படுவதை தவிர்த்து ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும். உங்கள் வயதில் இந்த மாதிரி எதிர் பாலினத்தால் கவரப்படுவதும் இந்த உணர்வுகளும் இயல்பானது தான். அந்தப் பெண் உங்களை பார்க்கிறாள் என்பதே நீங்கள் அவளை பார்ப்பதால் தானே உங்களுக்குத் தெரிகிறது. நீங்களும் அவள் பால் கவரப்பட்டிருக்கிறீர்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. இந்த உணர்வுகள் இயற்கையானது தான் எல்லோருக்கும் உள்ளது தான் என்பதை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள்.

             அடுத்து இம்மாதிரி கவரப்படுவது காதலில் முடிந்து விடுமோ இதனால் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்பதெல்லாம் உங்கள் பதட்டத்தினால் ஏற்படும் பயம்.இது தேவையில்லை. உங்கள் உணர்வுகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் உங்களை மீறி எதுவும் நடக்க வாய்ப்பில்லை. அந்தப் பெண்ணுடன் மற்ற பெண்களுடன் பேசுவது போல் சகஜமாக பேசுங்கள். உங்கள் லட்சியத்தில் உறுதியாக இருங்கள். இப்போதைய உங்கள் கடமை நன்றாகப்  படிப்பது என்பதில் தெளிவாக இருங்கள். அந்தப் பெண்ணுடன் சகஜமாக பழக ஆரம்பித்தாலே தேவையற்ற இந்த சஞ்சலம் போய் விடும்.

    கேள்வி : 2

                என் மகனுக்கு வயது 5. அவன் மிகவும் புத்திசாலி. எதைப்பார்த்தாலும் அதைப்பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்து விடுவான். நான் ஓரளவிற்கு அவன் கேள்விக்கு பதில் சொல்லி விடுவேன். இப்போதெல்லாம் நான் எப்படி பிறந்தேன்  என்று கேட்கிறான். அவனது பிறப்புறப்பை காட்டி விளக்கம் கேட்கிறான். இம்மாதிரி கேள்விகளுக்கு அவனுக்கு எப்படி பதில் சொல்வது?

         குழந்தைகள் வளரும் வயதில் இப்படி புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பது நல்லது. அவர்களுக்கு முடிந்த வரை உண்மையான பதில்களைத் தான் சொல்ல வேண்டும். உங்களுக்குத் தெரியாத கேள்விகளுக்கு எனக்கு தெரியவில்லை கண்டுபிடிச்சி சொல்கிறேன் என்று கூறி எங்காவது பதிலை கண்டுபிடித்து சொல்லுங்கள். அதுவே நீங்கள் தவிர்க்க விரும்பும் கேள்வியாக இருந்தால் அதற்கு மறைமுகமான பதில்களைக் கூறுங்கள். என் வயிற்றுக்குள் தான் நீ இருந்த அப்புறம் டாக்டர் உன்னை வெளியே எடுத்துக் கொடுத்தாங்கன்னு சொல்லலாம். கர்ப்பிணி பெண்களின் புகைப்படத்தைக் காட்டி விளக்கலாம். மேலும் பிறப்புறுப்புகளை நாம் எப்போதுமே மூடி வைத்து அதை ரகசியமான ஒன்றாக சொல்லி வைப்பதாலும் குழந்தைகளுக்கு அதைப்பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வம் இருக்கும். மற்ற உறுப்புகளைப் போல் அதுவும் ஒன்று. அதன் வேலை சிறுநீர் கழிப்பது என்று விளக்குங்கள் .உண்மையான பதிலையே நீங்கள் குழந்தைகளுக்கு கூறலாம். குழந்தை ஜட்டி போடாத போது அதை கேலி செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

    கேள்வி: 3

    எனக்கு இப்போது வயது 48. 30 வயதில் எனக்கு திருமணம் நடந்தது. குடும்ப வாழ்க்கை இவ்வளவு நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் தற்போது தாம்பத்திய உறவில் மகிழ்ச்சி இல்லை. எனக்கு வாலிப வயதில் சுய இன்ப பழக்கம் இருந்தது. இப்போது தாம்பத்தியத்தில் இன்பம் அடைய வழி சொல்லுங்கள்

    பதில்:

    கடந்த 18 வருடங்களாக உங்கள் தாம்பத்ய உறவு மகிழ்ச்சியாக இருந்திருக்கிறது. தற்போது உங்களுக்கு 48 வயது என்பதால் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் சமயம்  (மெனோபாஸ்) போல் ஆண்களுக்கும் ஏற்படும் (ஆண்ரோபாஸ்). இந்த நேரத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினால் தாம்பத்ய உறவில் நாட்டம் குறைவது, விறைப்புத் தன்மை குறைவது, சீக்கிரம் விந்து வெளிப்படுவது போன்றவைகளும் இருக்கலாம். சுய இன்ப பழக்கத்திற்கும் தற்போதைய நிலைக்கும் சம்பந்தம் இல்லை. பதட்டம் இல்லாமல் இருந்தால் தானாகவே இப்பிரச்சனை சரியாகும்.பிரச்சனை  தொடர்ந்தால் முறையான மருத்துவரை (செக்சாலஜிஸ்ட்) அணுகுங்கள்.

    Share
  • கொடி அசைந்ததும் காற்று வந்ததா?

    –கவிஞர் காவிரிமைந்தன்.

    கொடி அசைந்ததும் காற்று வந்ததா?

     

    parthalpasitherum

     

    மனித உணர்வுகள் உற்பத்தியாகும் இடம் மூளை என்பது விஞ்ஞான விளக்கமாக இருக்காலாம்.  ஆனால் மனதிடம்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.  அதுவும் கண்கள் தங்கள் கடமையைச் செய்ய மனம் ஏதோ ஆணைகள் பிறப்பிக்க.. மனிதன் பாவம் ஓடுகின்றான்.. வாழ்க்கைப் பாதையில்..

    இச்சைச் செயலா? அணிச்சைச் செயலா? என்று இனம் கண்டு கொள்ள முடியாத செயல்களில் ஈடுபடுகின்றான்.  விளைவுகள் பயனுள்ளதாயின், இதயம் பூரிக்கிறான்.  மாற்று இல்லாத மனதைக் கட்டி ஆளத்தெரியாமல் மனிதன் படும் பாடு.. சொல்லில் அடங்குவதில்லை..

    எதிலிருந்து எது?  எதற்குப் பின் எது?  என்று சிந்தித்துப் பார்த்தால் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் உண்மை புரிகிறது.  இதோ இயற்கையின் சூட்சுமம் கண்டு இதயம் தெளிகிறான்.

    கேள்விகள் பிறக்கின்றன! மறுவரியில் பதில்களும் கிடைக்கின்றன.. முதல் வரியும் இரண்டாம் வரியும் ஒற்றைப்புள்ளியில் சந்தித்துக் கொள்கின்றன!

    வெறும் காற்றில் தவழ்ந்து வரும் பாடல் அல்ல…  கண்ணதாசன் கற்பனையில் பிறந்துவரும் பாட்டு!  பார்த்தால் பசி தீரும் என்கிற திரைப்படத்தில்.. கேட்டால் சுவைதரும் கானமிது!  கண்ணதாசனே உன் பாடல் சுவை குறையுமோ?  இசையும் கவிதையும் ஏந்திவரும் கவிதை முத்துக்களை இதயம் ஏந்திக் கேட்க வாருங்கள்..  விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரின் இசையமைப்பில்  செவிகளைக் கெளரவிக்கும் பாட்டு ராஜாங்கமிது!

    http://youtu.be/MY05ZtMQZXs காணொளி: -http://youtu.be/MY05ZtMQZXs

    படம்: பார்த்தால் பசி தீரும் இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி சுசீலா: கொடி அசைந்ததும் டி.எம்.எஸ்: ம்ம் சுசீலா: காற்று வந்ததா டி.எம்.எஸ்: ம்ஹ…ம் சுசீலா: காற்று வந்ததும் டி.எம்.எஸ்: ம்ஹ…ம் சுசீலா: கொடி அசைந்ததா டி.எம்.எஸ்: நிலவு வந்ததும் சுசீலா: ம்ம் டி.எம்.எஸ்: மலர் மலர்ந்ததா சுசீலா: ம்ஹ…ம் டி.எம்.எஸ்: மலர் மலர்ந்ததால் சுசீலா: ம்ம்ம் டி.எம்.எஸ்: நிலவு வந்ததா சுசீலா: கொடி அசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா சுசீலா: பாடல் வந்ததும் தாளம் வந்ததா பாடல் வந்ததும் தாளம் வந்ததா தாளம் வந்ததும் பாடல் வந்ததா டி.எம்.எஸ்: பாவம் வந்ததும் ராகம் வந்ததா பாவம் வந்ததும் ராகம் வந்ததா ராகம் வந்ததும் பாவம் வந்ததா சுசீலா: கண் திறந்ததும் காட்சி வந்ததா காட்சி வந்ததும் கண் திறந்ததா டி.எம்.எஸ்: பருவம் வந்ததும் ஆசை வந்ததா ஆசை வந்ததும் பருவம் வந்ததா சுசீலா: கொடி அசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா சுசீலா: வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா டி.எம்.எஸ்: பெண்மை என்பதால் நாணம் வந்ததா பெண்மை என்பதால் நாணம் வந்ததா நாணம் வந்ததால் பெண்மை ஆனதா சுசீலா: ஓடி வந்ததும் தேடி வந்ததும் பாடி வந்ததும் பார்க்க வந்ததும் டி.எம்.எஸ்: காதல் என்பதா பாசம் என்பதா கருணை என்பதா உரிமை என்பதா சுசீலா: கொடி அசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா இருவரும்: நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா ம்ஹ…ம் ஹ…ம் ஒஹோ ஹோ..ம்ஹ…ம் ம்ஹ…ம் ம்ஹ…ம்..ஓஹோஹோஹோஹோ

    Share
  • குருவாக வந்த சிவனே!

     

    இசைக்கவி ரமணன்

    25-1385353941-bangalore-shiva

     

    வினையின்றிப் புதியதோர் வெளியிலே நிற்கிறேன்
    விரல்களால் விண்தொடுகிறேன் 10312399_510682082371830_6844174118360453666_n
    வேதங்கள் கொண்டாடும் பாதங்க ளில்சின்ன
    வெள்ளிமல ராய்க்குழைகி றேன்
    மனையொன்றின் கூடத்தில் மத்யான நேரத்தில்
    மவுனம்சி லிர்த்தநொடி யில்
    மாகேச்வ ரன்முன்பு ஞானக்க னல்பட்டு
    மண்டியிட் டேன்மடிந் தேன்
    நினைவோடு நான்வீழ்ந்த நிஜமான தருணத்தில்
    நிகரற்ற நீயெழுந்தாய்
    நிசியோடு பகலும்விழ நினைவோடு கனவும்கெட
    நெஞ்செலாம் நீநுழைந்தாய்
    முனையின்றி எங்கெங்கும் முழுதான வானமே!
    முன்பின் னிலாஞான மே!
    மோனக் குகைவிட்டு ஞானக் கதைபேச
    முன்வந்த மூலவுயிரே!
    எனையின்று காக்கவே என்றிருந் தோபுவியில்
    என்றைக்கும் வாழும் திருவே!
    எங்கோ கிடந்தவனை ஏழையை மடிமீதில்
    ஏற்றியருள் பொழியுமழை யே!
    நினையன்றி வேறேதும் நினையாமல் நின்னடியின்
    நீழலில் நான்வாழ வே!
    நேரத்தில் வந்தெந்தன் பாரத்தைத் தீர்க்கவே
    குருவாக வந்தசிவ னே! (1)

    ஒருதுளியும் மிஞ்சாமல் ஊட்டினாய்; சலியாமல் nataraja.gif_480_480_0_64000_0_1_0 (1)
    உறுதிமேல் உறுதிதந் தாய்
    உயரங்கள் காட்டினாய் உதிரத்தில் உன்னன்பை
    ஊற்றியென் னுயிர்மீட்டி னாய்
    மறுபடியும் நான்துன்ப மடுதேடி விரைகையில்
    மறவாமல் படியேற்றினாய்
    மாலைபக லிரவென்றும் மாறாமல் எப்போதும்
    மலராகத் தேனூற்றினாய்
    கருவங்கள் தலைதூக்கும் கணமெலாம் கண்ணோரம்
    கனலாகக் கணைவீசினாய்
    காலங்க ளிநன்துன்ப நீளங்க ளைவெட்டிக்
    கணத்தில் யுகம்தேக்கினாய்
    தெருவெங்கி லோவீழ்ந்து தேம்பிக் கிடந்தவனைத்
    தேரேற்றி ஊர்காட்டினாய்
    திரையெங்கும் நீயாகி திசையெங்கும் முகமாகித்
    திரிபற்றச் சுடராகினாய்
    திருவாகி இடையின்றித் தித்திக்கும் இன்பமே!
    தீண்டமுடி யாத்தூய்மை யே!
    திவலைமன தைப்பருகிக் கவலையவலந் திருகிச்
    சீறிடும் கங்கையாறே!
    சிறுவனெனைத் துருவமெனச் சிகரத்தில் வைத்தன்பு
    சீராட்டும் ஆச்சர்யமே!
    செப்பரிய உன்பெருமை செகமெங்கும் ந்ஆன்செப்பக்
    குருவாக வந்த சிவனே! (2)

    உனைமட்டும் வேண்டியே உனைமட்டும் நாடியே 8-1
    உன்முன்பு நிற்கவேண்டும்
    உன்முன்பு நிற்கின்ற ஒப்பற்ற உண்மையை
    உள்ளம்மற வாமைவேண்டும்!
    வினை, சுட்ட விதையாகி விதி, பட்ட மரமாகி
    வீழ்ந்தகதை நம்பவேண்டும்
    வீரத்தி லேஞான தீரத்தி லேநித்தம்
    வெற்றிநடை போடவேண் டும்
    பனைதொட்ட மின்னலில் மழைதொட்ட மட்டைபோல்
    பற்றெலாம் பற்றியெரி யப்
    பாதிநில வேந்திவரும் பரமசிவ னேயின்று
    பாலகன் நான்பிறந்தேன்!
    அனைவர்க்கும் உயிரான ஆண்டவா இன்றுன்னை
    அனைத்துமாய் நான்பருகி னேன்!
    ஆராத னையென்னும் போராட்ட மில்லாமல்
    அத்தனுன் னுள்கலந் தேன்
    வினையெச்சம் தீர்ந்தாலும் நினைவெச்சம் அறியாமல்
    வீணாக நானஞ்சினேன்
    வெற்றுநிழ லைப்பற்றி வீண்சண்டை போட்டதால்
    வெட்கியுன் முன்னிற் கிறேன்
    எனைச்சற்றும் நோக்காமல் உனைமுற்றும் பார்க்கின்ற
    ஏகாந்தம் அருளவேண் டும்
    எருவளரும் புன்னெஞ்சில் திருமலர வைக்கவே
    குருவாக வந்தசிவ னே! (3)

     

    4

    அறியாமை பூண்டபல அபிமான வேடங்கள் 73671_473465409355865_356357631_n
    அறிவென்று போய்நம்பி னேன்
    அரைநொடியும் நில்லாத ஆகாயக் குமிழிகளை
    அமரவாழ் வெனநம்பி னேன்
    தறிகெட்டுக் கவலையெனும் தறிபட்டு நெறிசிதறித்
    தாறுமா றாயலைந் தேன்
    தாகத்தி லும்வீழ்ந்த சோகத்தி லும்கங்கைத்
    தண்ணீரை நான்மறந் தேன்
    அறிவோடு நான்செய்த அரியபல பிழைகளால்
    ஆற்றுமணல் பிறவிகண் டேன்
    அல்லல்க ளால்வந்த அரைஞான அவலத்தில்
    அபலைபோல் கதறியழு தேன்
    முறியாத கவலையெனும் முளையிலே கட்டுண்டு
    முன்பின்னி லாதலைந் தேன்
    மூளாத முன்வினைகள் வாளா யறுக்கநான்
    மூச்சயர்ந் தேனைய னே
    சரிவொன்றின் ஓரத்தில் சரியான நேரத்தில்
    சற்றுநீ கைப்பற்றினாய்
    சரணங்க ளைத்தந்து மரணங்க ளைக்கொன்று
    சரியாக்கி அழகுபார்த்தாய்
    குறிவைத்த துன்கருணை கொலையுண்ட தென்துயரம்
    கொல்லையினில் தில்லைநட னம்
    குப்பையில் மேய்ந்தவனைக் கோவில்விளக்காக்கவே
    குருவாக வந்தசிவ னே!

     

    5

    வெட்கத்தை விட்டுநடு வீதிக்கு வந்துபல 148514_454117937957279_1723256555_n
    வேடங்க ளிட்டபதரை
    வேதநெறி யைவிட்டுப் பாதம்மிக வும்சுட்டு
    வீணாகிப் போனபுலையைப்
    பக்கத்தில் வைத்தமுது பரிந்தூட்டும் காட்சியைப்
    பாரென்றும் கண்டதுண்டோ?
    பாழான பிள்ளைக்குத் தோழனாய்த் துணைநிற்கும்
    பாசத்தைப் பார்த்ததுண்டோ?
    சொர்க்கங்க ளற்பமாய்த் தோன்றுபல லோகங்கள்
    சுலபமாய்த் தருவதுண்டோ?
    சொல்தந்து பொருள்தந்து சுவைதந்து சுடர்தந்து
    சொந்தமாய் ஏற்பதுண்டோ?
    தர்க்கங்க ளில்லாமல் தாழ்நீக்கி யுள்வந்து
    தன்னையாட் கொள்வதுண்டோ?
    தானுவந் தெதிர்நின்று தடையின்றி மொத்தமாய்த்
    தன்னையே தருவதுண்டோ?
    கற்பனைக் கெட்டாத கருணைக்குக் கால்களும்
    கண்களும் கையுமுண்டோ?
    ககனத்து மணியெலாம் கவியான போதுமுன்
    கால்நிழல் சொல்லில்வருமோ?
    கர்ச்சிக்கும் மெளனமெனும் கனலிலே எனைநாட்டிக்
    கண்சிமிட் டும்விந்தையே!
    கயிலாய மலைவிட்டுக் கடையனைக் காக்கவே
    குருவாக வந்தசிவ னே!

     

    6

    சிந்தனையில் கவிதைபோல் செஞ்சடையில் துளிநிலவு 3840_468056386563434_338569680_n
    சித்தம் சிலிர்க்க மின்ன
    செப்பரிய மெளனமெனும் செம்மையொரு வடிவாகிச்
    சிலைபோ லமர்ந்துதிக ழ
    வந்தனைகள் செய்யவரும் வானவரும் ஞானியரும்
    வடிவழகில் வாய்புதைக்க
    வாசலெது வானத்தில் பேசலெது ஞானத்தில்
    வார்த்தைகள் தீர்ந்துபோக
    சந்ததமும் சாட்சியாய் வந்தருளும் திரிசூலம்
    சன்னிதியில் மின்னல்வீச
    சார்ந்தமலை வெண்மையில் சங்கரனின் முழுநீலம்
    சங்கீத வண்ணமாக
    அந்தவிதம் அக்காட்சி அவ்வண்ணம் யாவையும்
    அங்ஙனே அங்கிருக்க
    ஆளரவம் மட்டுமே நாளிரவும் எழுமுலகில்
    அய்யனே எங்குவந்தாய்?
    விந்துவிழ விம்மிவிழும் விடிவற்ற தேகத்தில்
    விந்தைநீ யேன்நுழைந்தாய்?
    விதிசெய்யும் கோலங்கள் பதியாத மனதோடு
    வீதியெல் லாம்நடந் தாய்?
    பொந்துக்குள் அல்லாடும் பூச்சிக்கு முக்திதர
    பூமிக்கு வந்த சிவனே!
    கொல்லாமல் எனைக்கொன்று கொள்ளாமல் எனைக்கொள்ள
    குருவாக வந்த சிவனே!

     

    7

    ‘உள்’ளென்றனை யெந்தன் உடலவிழ மனமவிழarthanareeswarar
    உள்ளெலாம் வெளியானதே!
    ஊரறிய முடியாத ஒப்பற்ற வோர்நீலம்
    உள்ளத்தின் மடுவானதே!
    கள்மயக் கம்தரும் கட்டைவிரற் கனலொன்று
    ககனத்தின் நடுவானதே!
    காலத்தின் கட்டவிழக் கண்கள் திறந்தபடிக்
    கணமுறைந் தேபோன தே!
    முள்ளொன்றின் முனைபோல மூச்சொடுங் கிப்போக
    முன்பின்னி லாதான தே!
    மூடாத வானத்தின் முறுவலாய்த் தீவட்டம்
    மோதிரம் போல்சுற்று தே!
    வெள்ளியினைக் காய்ச்சியதில் புள்ளிவைத் ததுபோல
    விரலொளியின் இதயமின்ன
    வெற்றுடலின் மையத்தில் வெட்டவெளி யைக்காட்டி
    விந்தையொளி நடம்புரிந்தாய்
    கள்ளியினை அமுதாக்கிக் காலத்தை மலராக்கிக்
    கார்த்திகைச் சுடராக்கினாய்
    காணமுடி யாதமெய்ஞ் ஞானானு பூதியினைக்
    கண்ணுக்குள் கொண்டுவந்தாய்!
    வெள்ளிமலை தனைவிட்டு வீதியி லெனைத்தொட்டு
    விளையாட வந்தகுரு வே!
    விடையாக வந்தென்னை முடிவாகத் தீர்க்கவே
    குருவாக வந்தசிவ னே!

    8

    எண்ணமே தாயினும் எந்தையே உன்னெண்ணம்!download
    ஏந்திவரும் சொல்லுந்தன் சொல்!
    எச்செயலும் உன்செய்கை! எவ்விளைவும் உன்சித்தம்!
    எந்நிலையும் உந்தன்நிலைதான்!
    வண்ணங்க ளாய்விரியும் மனமாற்றம் யாவையும்
    வானமே உந்தன் கோலம்!
    தாக்கமும் பாதிப்பும் தர்க்கமும் முடிவுகளும்
    தலைவனே உந்தன் லீலை
    கண்காணும் காட்சியும் கண்மூட வரும்கனவும்
    கருணையே உந்தனுருவம்!
    காலத்தின் மாற்றமும் காயத்தின் தேய்வுமுன்
    கானத்தின் சுருதிலயமே!
    நண்ணும்பல உயர்வுகளும் நாட்டமும் ஏக்கமும்
    நாயகா! உந்தன் மாயம்!
    நன்மைகளும் தீமைகளும் நம்பியே! உன்நடனம்!
    நான்பொறுப் பாவதிலையே!
    புண்ணியமும் பாவமும் பூசனையும் விண்டுபோய்ப்
    புல்லில்பனி யாய்நிற்கி றேன்
    புவனங்க ளத்தனையும் பூரிக்கும் ஒளியுன்னைத்
    துளிபருகித் தீர்ந்துபோ வேன்
    அண்ணலே! நீயன்றி அணுவளவும் நானில்லை
    அன்றில்லை நாளையிலையே!
    ஆனந்த மையத்தின் அமைதியில் எனைநாட்ட
    குருவாக வந்தசிவ னே!

    9

    கனல்வீசும் உன்முன்பு கண்ணீர் ததும்புமென்11-1
    கண்முன்பு நானிறந்தேன்..
    கருணைத் தடாகமே! காலங்கள் தீண்டாத
    கமலமாய் நானெழுந்தேன்
    அனல்வீசும் சன்னிதியில் ஆள்தீர்ந்து போயிந்த
    ஆசாமி சாமியானேன்
    அத்தனே! நானென்ப தத்தனையும் தீர்ந்துபோய்
    ஆச்சர்ய மாய்மிஞ்சி னேன்
    அனுமானம் காணாத ஆதிசிவ வெள்ளத்தில்
    அற்புதத் திவலையானேன்
    அவனாகி இவனாகி அதுவாகி உவனாகி
    அறுதியில் சிவனாகினேன்
    வனமான வினைஞானக் கனலாக வானுயர
    வாழ்வின்றி நான்வாழ்கிறேன்
    வண்ணங்க ளேற்கின்ற வானமாய்க் குழந்தைபோல்
    வடிவத்தில் குணமேற்கிறேன்
    இனமான சிவஞானம்! இதமான குருபாதம்!
    இடையற்ற பரபோதமே!
    இற்றுவீழ்ந் தாலும்துளி இன்னும்வீ ழாதநான்
    இவைபருகி உயிர்வாழுமே!
    மனமான மாயைக்கும் மதமான புத்திக்கும்
    மாண்பொன்று தந்தபதியே!
    மருமத்தைக் காட்டியென் கருவத்தைத் தீர்க்கவே
    குருவாக வந்தசிவ னே!

    10
    உன்சொற்கள் ஒவ்வொன்றும் உள்ளத்தைக் கிள்ளவும்ebbaf6cd-84df-466e-a66f-34819146668c_S_secvpf
    உயிருயிர்க் குயிரூட்டவும்
    உச்சியினில் கள்ளவிழ உடலெங்கும் ஒளிபதற
    உன்மத்தம் நிலையாகவும்
    உன்சொற்கள் என்மெளனம்! என்மெளனம் உன்சொற்கள்!
    உண்மையிது நிஜமாகவும்
    ஊரெங்கும் நான்சென்று உன்பெருமை தான்பேச
    உயிரெங்கும் கனல்வீசவும்
    உன்முன்பு நிற்பதும் உன்னில்நான் வாழ்வதும்
    என்னில்நான் நீயானதும்
    உடலெங்கும் உன்வடிவம் உயிரெங்கும் உன்னருவம்
    ஒன்றிலொன் றாய்நிறைவ தும்
    தன்முன்பு தான்நிற்கும் தன்மைக்குப் பெயரின்றித்
    தடுமாற்றம் கொள்வதாரோ?
    தாளாத ஞானத்தை மாளாத யோகத்தில்
    தான்தேக்கி நிற்பதாரோ?
    என்கதையும் தீர்ந்ததே! எதுவும்சிவ னானதே!
    எமனுக்குப் பணிபோனதே!
    ஏறாதி றங்காத மாறாத மெளனத்தில்
    எதுவுமொன் றாய்ப்போனதே!
    உன்வடிவம் மொத்தவொளி! உன்னாமம் ஓங்காரம்!
    உன்வீடு வெட்டவெளியே!
    உருவத்தை அருவத்தை ஒன்றாக்கித் தீர்க்கவே
    குருவாக வந்தசிவ னே!

    (‘குருவாக வந்த சிவனே’ பதிகம் நிறைவு பெற்றது)

    Share
  • திருமால் திருப்புகழ் (110)

    கிரேசி மோகன்

     SrimadBhagavatham - Kasturi Tilakam. - Keshav

    SrimadBhagavatham – Kasturi Tilakam. – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….

    ————————————————————-

    ’’கண்ணன் வெண்பாக்கள்’’

    ———————————————–

     

    Bhagavatha - Trinavarta Keshav
    Bhagavatha – Trinavarta Keshav

    சரமழை பெய்திடும், சாரங்க பாணி,

    நரனாகி கோதண்ட நாணால், -கரதூஷ னாதி

    யரைத்தீர்த்த, நாரா யணஜோதி,

    ஆதி அனாதியேநா தி….(168)

     

    சிந்தையில் சிக்காத, சச்சிதா னந்தமே,

    எந்தையே ஏகப் பரம்பொருளே, -விந்தையே,

    தீராத ஆட்டத்தை, மாறாத தோட்டத்தில்,

    சீராக ஆடிடும் சேய்….(169)

     

    சிசுபால கம்சர்கள், சீரழிய அன்று,

    வசுதேவ வம்ச திலகா, -பசுக்களை,

    மேய்த்த பகவானே, பக்தர்க்(கு) அருள்புரிய,

    வாய்த்த வரதனே வா….(170)

     

    சோதரர்க்குள் பேதமற, தூதுசென்ற யாதவனை,

    சோதனையால் வேதனைநம் மீதணையும், -போதினிலே,

    கீதையை மூதுரைத்த, மாமதுரை மாதவனை,

    ஆதிமது சூதனென்று ஓது….(171)

     

    சுதாமன் அவலுக்கு, சொத்தை அளித்த,

    கதாதரன் கண்ணன் பரம, -பிதாவாம்,

    அலர்மேல் அன்னை, மணாளன் அருளால்,

    மலரும்நாள் காசின் பிறப்பு….(172)

     

    சுகந்த துளசி, சிலிர்க்க வலிமை,

    மிகுந்த இருதோளில் பூணும், –முகுந்தன்,

    நிதர்ஸனம் என்று, நடப்போர் வழியை,

    சுதர்ஸனம் காக்கும் சுழன்று….(173)

     

    ————————————————————————————————————-

    Share
  • திருமால் திருப்புகழ் (109)

    கிரேசி மோகன்

    Dhruva - Keshav
    Dhruva – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ——————————————-

    Yogamaya - Keshav
    Yogamaya – Keshav

    பள்ளிதனைக் கொண்டதால், பிள்ளை பெறுவதால்,
    வள்ளலாய் பாற்கடல் உள்ளமால், -புள்ளேறும்,
    கார்மேக வண்ணனும், ஓர்மகன் அன்னையும்,
    நேர்நிக ராவர் நமக்கு….(162)

    பழிவாய் மணக்க, பகலும் இரவும்,
    மொழிவாய் முகுந்தா முராரி, -விழுவாய்,
    வணங்க வரதன், வளரடி தன்னில்,
    இணங்கும் இகபரம் இங்கு….(163)
    பெண்ணாகி சாஸ்தாவை, அந்நாள் சுமந்தோனும்,
    பெண்ணை சுமக்குமிட பாகனும், -முந்நாளில்,
    விண்மண் அளக்க, வடிவத்தில் ஓங்கியதால்,
    கண்ணனைமுக் கண்ணனாய்க் கொள்….(164)

    பெரியாழ்வார் பாடியது, பெண்ணாண்டாள் சூடியது,
    சரிதானா சித்த பிரமைதானா, -வெறியோடு,
    உண்டில்லைப் பார்த்திடுவேன், வெண்பாவில், ஊர்ஜிதம்செய்,
    உண்டென்றென் முன்னம் உதித்து….(165)
    பெற்றதோர் வெற்றி, பொறாமைக் கிடமாகும்,
    உற்றிடும் தோல்விக்கோ கேலிமிஞ்சும், -பற்றிலாது,
    காரியம் யாவையும், காரணன் கண்ணனின்
    பேரினில் போடப் பழகு….(166)

    பொய்கையில் பூத்தபக்தி, பூதமதைக் காத்தது,
    பொய்கலந்த போதுபேய் ஓட்டியது, -தெய்வமே,
    மூன்றாழ்வார் மீதமுள்ள, சான்றோர்கள் போலாக,
    தான்தோன்றி மாலே தயவு….(167)

    ————————————————————————————————————–

    படங்களுக்கு நன்றி :

    http://bhagavatham.blogspot.in/

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஜூன் 9, 2014 

    சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திருமிகு. கீதா மதிவாணன்  அவர்கள்

    geetha mathivaanan

    சென்ற வாரம் வல்லமை வாசகர்களுக்காக இவர் வழங்கிய “உன்னைப் போலவே…” என்ற கவிதைக்காக இவர் வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார்.

    ஆஸ்திரேலியா வாழ் இந்தியத் தமிழரான கீதா மதிவாணன் தமிழிலக்கியங்களைப் படிப்பதிலும் படைப்பதிலும் ஆர்வம் மிக்கவர்.  மதுரைக் கணக்காயர் மகன் நக்கீரனார் பாடிய பழந்தமிழ் இலக்கியப் படைப்பான பத்துப்பாட்டில் ஒன்றான “நெடுநல்வாடை“யின் இலக்கிய  நயத்தில் தன்மனதினைப் பறிகொடுத்தவர். அதன் விளக்கத்தை எளிமையான வரிகளால்  புதுக்கவிதை போன்ற பாணியில் இக்காலத் தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார்;  அதனை அவர் தளத்தில் படித்து மகிழலாம் (http://geethamanjari.blogspot.com/2013/05/blog-post.html).  பல சிறுகதைகளும், கவிதைகளும், விமர்சனங்களும்  எழுதியுள்ள கீதா “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?”  என்ற 30 அத்தியாயங்களுக்கும் மேற்பட்ட நெடுங்கதையையும் (http://geethamanjari.blogspot.com/2011/06/1.html) எழுதியுள்ளார்.

    வல்லமை இதழிலும் சற்றேறக் குறைய மூன்று ஆண்டுகளாக கீதா தனது படைப்புகளை  வழங்கி வல்லமை வாசகர்களை மகிழ்வித்து  வருகிறார்.  கவிதை, சிறுகதை, தொடர்கதை, கட்டுரை, இலக்கியம், விமர்சனம் என இவரது எழுத்தாற்றல் பல வகைகளிலும் பரந்து விரிந்திருப்பது மட்டுமல்லாமல் அவற்றிற்காக பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார்.  வல்லமையின் கடித இலக்கியப் போட்டி முதற்கொண்டு,  பிற இதழ்கள் நடத்திய தைப்பொங்கல்  கட்டுரைப் போட்டிக்கான  பரிசு, சிறுகதை விமர்சனப் போட்டிக்கான பரிசு, சிறந்த வலைதள எழுத்தாளருக்கான  பரிசுகள் என்று பல பரிசுகள் வென்றுள்ளார். இவர் கவிதைகள் பெரும்பாலும் மனித நேயத்தை அடிப்படைக் கருத்தாகக் கொண்டு அமைந்துள்ளன. பெண்களின் நிலை, தன்னம்பிக்கை, மாற்றுத் திறனாளிகளின்பால் காட்டும் நேயம், ஒற்றுமை போன்ற கருத்துகளை உள்ளடக்கியவை இவரது கவிதைகள்.  இவ்வார வல்லமையில் இவர் எழுதிய கவிதை தனக்கெனப் போராட வழியற்ற, தனக்காக வாழும் உரிமை கேட்கத் திறனற்ற, கருவிலேயே அழிக்கப்படும் உயிர்களுக்காகக் குரல் கொடுக்கிறது….

    அந்தக் கவிதை வரிகள் இங்கே…

    உன்னைப் போலவே…

    (http://www.vallamai.com/?p=46228)


    ஆகாயம் பிளந்துதித்த அண்டரண்டப் பட்சியுமில்லை
    ஆவென்று வாய்பிளந்து ஆராதித்துத் தொழுவதற்கு!
    பூமி கிளர்ந்து வெளிப்பட்ட புழு பூச்சியுமில்லை
    ’ப்பூ’வென்று புறந்தள்ளிப் புழுதியிற் புரட்டுவதற்கு!

    உன்னைப் போலவே ஒற்றைத் துளியில் உருவாகி
    உயிர்க்குடத்தில் கருவானது!
    உன்னைப் போலவே உண்ணவும் கழிக்கவும்
    உடுத்தவும் உரிமையுடையது!
    உன்னைப் போலவே சிரிக்கவும் அழவும்
    சிந்திக்கவும் கூடியது!

    உன்னைப் போலவே ஆக்கவும் அழிக்கவும்
    அணைக்கவும் தலைப்பட்டது!
    உன்னைப் போலவே உணரவும் புணரவும்
    மரணிக்கவும் வாய்த்த சக மானுடம் அது!

    சாமான்யமாய் எண்ணிவிடாதே…
    சாபத்துக்கு ஆளாகிவிடும்
    சாத்தியத்துக்கு ஆளாகிவிடக்கூடும்!

    மனிதநேயத்திற்காக, கருச்சிதைவினை எதிர்த்து பிறக்காத குழந்தைகளும் உயிர் வாழவேண்டிய நியாயத்திற்காகக் கவிதை வடித்த கீதா மதிவாணன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

     

    [ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • எளிமையே ஏற்றம்

    இசைக்கவி ரமணன்

    இலக்கியவாதி சிட்டியைப் பற்றி…

    chittiஅவரை நான் சந்தித்தபோது அவர் படுத்த படுக்கையாய்த்தான் இருந்தார். ஆம். அந்த ஆர்ப்பாட்டமில்லாத கட்டில், அதில் கூச்சத்துடன் இளைத்திருந்த சிறுமெத்தை, இவற்றின்மேல், ஜடாயுவின் இறகுபோல் தெரிந்தார் அவர்.

    அனுபவம், அதன்மூலம் வாய்க்கப்பெற்ற ஞானம், இவற்றைக் காணும்போது, வயது என்னும் பேச்சே கேலிக்குரியதாக இருக்கிறது. அவருக்கு வயது ஐந்திலிருந்து சில நூற்றாண்டுகள் வரை இருக்கலாம் என்றுதான் தென்பட்டார்!

    அவசரமாய் உடம்பைப் புரட்டக்கூட முடியாத களைப்பில்தான் அவரிருந்தார். அப்போதும், கட்டளையிடாமல் கனிவாய்ப் பேசியே மற்றவர்களிடம் வேலை வாங்கும் ஒரு ரிஷியின் லாகவம் அவருக்கு இருந்தது.

    கறுத்த முகத்திலிருந்து புறப்பட்ட சிரிப்பு, தலைகோதிக் கொண்டுவரும் இளநிலவைப்போல் இருந்தது.

    பெரியகுளம் கோவிந்தசாமி சுந்தரராஜன் என்றால் அவரேகூட யாரென்று நம்மைக் கேட்கக்கூடும். அந்த அளவுக்கு அவர் ‘சிட்டி’ என்னும் தனது புனைப்பெயராலேயே பெரிதும் அறியப்பட்டார், நேசிக்கப்பட்டார். மிகச் சுருக்கமான அந்தப் பெயரில் நேசத்தின் அம்சம் நிறைந்திருந்ததைப் பலரும் உணர்ந்திருக்கிறார்கள்.

    ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் அவர் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்! காலார நடக்கும்போது கன்னத்தை வருடும் தென்றலாக, தெருமுனையில் விழிக்கும்போது இனிய முகத்துடன் திசைகாட்டிவிட்டு நீங்கிவிடும் வழிப்போக்கனாக, ஒரு கடமைபோல் வாழ்வின் நடப்புகளைக் கவனித்துவைத்துக்கொள்ளும் சமுதாயத்தின் மனசாட்சியாக.

    ”மொழி பெயர்ப்பு, இலக்கிய வரலாறு, வானொலி நாடகங்கள், பேட்டிகள், படைப்பிலக்கிய மதிப்பீடு, நகைச்சுவைக் கட்டுரைகள், சிறுகதை, ஆங்கில நூலாக்கம், தி.ஜானகிராமன் தவிர கே.சிவபாத சுந்தரத்தோடு இணைந்து பயண இலக்கியம் என்ற பன்முகத் திறனுடைய படைப்பாளர் அவர். மூன்று தலைமுறைகளின் தமிழுக்கு அவர் நெருக்கமானவர். அவருடைய தாய்மொழி தெலுங்கு. பணம், பதவி, பரிவட்டம் என்று தலை தெறிக்க ஓடுகிறது ஜனசமூகம். இதில் சிட்டி எதிர்த் திசையில் தனியாக, மெதுவாகப் பயணித்தார்,” என்று அவருடைய பங்களிப்பை நயம்பட விளக்குவார் நண்பர் சுப்பு.
    தன்னைக் ’கோமாளி’ என்று குறிப்பிட்டுக்கொள்வதில் அவருக்கு சந்தோஷம் இருந்தது. ஏனெனில், தன்னை ஒரு பெரும் அறிஞனாகவோ, தான் ஏதோ பெரிதாய்ச் சாதித்துவிட்டதாகவோ அவர் கருதிக்கொள்ளவில்லை. எழுத்து என்பது அவருடைய ஆன்ம இயல்பாக இருந்தது. அவருடைய நினைவாற்றல் அனைவரையும் பிரமிக்க வைத்தது.

    இறுதிவரை, சிறுதீனி, மதுரை மணி ஐயர், சிரிப்பு, நகைச்சுவை போன்ற அவருடைய பரிவாரங்கள் புடைசூழத்தான் அவர் வாழ்ந்தார். வாழ்ந்ததைப்போலவே, ஆர்ப்பாட்டமின்றி, அவசரமின்றி மறைந்தார்.

    இடுப்பு எலும்பு முறிந்து, அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவர் பிதாமகனைப்போல் படுத்திருந்தார். படுத்திருந்த அவருடைய காலைத் தொட்டு வணங்கும்போது மனசு நெகிழ்ந்துபோனது.

    கையை உயர்த்திக் கனிவுடன் வாழ்த்தியதும், ஒரு ஜோக் அடித்ததும், அருகில் இருந்த அவருடைய மரியாதைக்குரிய மகன்களை ஏதோ ஒரு தேதியைச் சொல்லி ஒரு நாளிதழில் குறிப்புப் பார்க்கச் சொன்னதும் நினைவுக்கு வருகிறது.

    அதென்னமோ பெரியவர்கள் முதலிலிருந்தே பெரியவர்களாக வாழ்கிறார்கள்! எந்தவிதமான எதிர்பார்ப்போ ஏமாற்றமோ இல்லாமல் கடமை புரியும்போதே கழன்றுகொள்கிறது அவர்களுடைய கடைசி மூச்சு.

    He stood effortlessly tall among his peers, by his humility.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 122

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 11: காடுகாண் காதை

    கவுந்தி அடிகளின் கட்டுரை

    மிக்க பெருமைவாய்ந்தmalar
    மாமறையோன் கூறிய வழியின் இயல்புகள்
    கேட்டறிந்த கவுந்தியடிகள் தாமும்
    அர்த்தம் நிறைந்த கட்டுரை ஒன்றை உரைக்கலானார்.

    ”நல்லொழுக்கம் விரும்புகின்ற
    நான் மறையாளனே!

    நீ குறிப்பிட்ட குகையினுள் புகுகின்ற தன்மை
    நாங்கள் பெற்றிருக்கவில்லை.
    ஏனெனில்,
    நீண்ட கோடி ஆயுளையுடைய
    இந்திரன் இயற்றிய நூலினை
    எம்முடைய அருகதேவன் அருளிய
    ஆகமத்தில் நீ காணவில்லையா?

    அதன் மூலமே மெய்ப்பாட்டினை உணரும் அறிவு
    எங்களுக்கு உள்ளதால்,
    நீ குறிப்பிட்ட புண்ணிய சரவணத்தில்
    நாங்கள் நீராடவும் வேண்டியதில்லை.

    முற்பிறப்பில் செய்த எல்லாவற்றையும்
    இப்பிறப்பில் நீ காணவில்லையா?
    ஆதலால் யாம் பவகாரிணியில் படிதல் வேண்டாம்.

    உண்மை நெறியில் தவறாது,
    பிற உயிர்களைக் காத்து நிற்பவர்க்கு
    எய்துவதற்கு அரிய பொருள் என்று
    எதுவும் உளதோ?
    அதனால் நாங்கள் இட்டசித்தியை
    அடைய வேண்டியதில்லை.

    நீ விரும்பும் தெய்வமாகிய
    திருமாலைக் கண்டு அவர்தம்
    திருவடிகள் தொழுதிட நீ சென்றிடுவாயாக.
    நாங்களும் எங்கள்
    நீண்ட நெடிய வழியில் செல்வோம்”

    இங்ஙனம்அந்த மறையோனுக்குப் பொருந்தும்
    மொழிகளை உரைத்தார் கவுந்தியடிகள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  150 –  162
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html

    படத்திற்கு நன்றி: http://www.dhool.com/sotd2/743.html

     

    Share
  • ஆச்சரிய மாயை அவள்

     

    இசைக்கவி ரமணன்

    நடமாடும் கவிதையாக – என்னை n31
    நவகாளி மாற்றிவிட்டாள்!
    திடமான சிந்தைதந்தாள் – மனத்
    தீமையைத் திகிரியாய்ச் சுழலவைத்தாள்
    விடமுண்ட சிவனின்பாதி – எங்கள்
    வீரத்தி லேயொளிரும் விரிவான சோதி!
    வடமின்றித் தேரிழுத்தாள் – சுழலும்
    வாஞ்சை வஞ்சமென்னும் கண்களைக் கொண்டாள்!

    சுகமான ராகமுண்டு – சில
    சுமைதீர்ந்து போய்த்தொலைய சொல்மீண்டும் பூத்தசைய!
    அகவானில் மேகமுண்டு – நெஞ்சம்
    அழுவதே தொழிலாக அர்ச்சிப்ப துண்டு
    இகமான பரமுண்டுதான்! – இதில்
    இதமான மரணங்கள் இயல்பான நியாயம்தான்!
    நகுமாறு கண்பனிக்கும்! இஃது
    நாடகம் அல்லவே நவகாளி யம்மே!?

    உடலெங்கும் உயிரானது! இங்கு
    ஒருகோடி வீணைக்கும் உற்ற வழியானது download
    கடலிங்கு கலமானது! அட
    காலம்வெளி என்கின்ற கட்டுக் கழன்றது!
    மடமையச் சம்கலியெலாம் – வெறும்
    மண்மேடு போலச் சரிந்தேகலாச்சு
    தொடவேங்கும் வானமெல்லாம்! அவள்
    தோற்றமே பாடுமென் கானமெல்லாம்!

    புகவிடேன் புன்மைகளை! நான்
    பூசிக்கும் மன்றிலே புல்லரைக் கள்ளரை
    நகவிடேன் பேய்மனத்தை – சற்றும்
    நகரவும் விடேனிந்த நாதவொளி நடனத்தை
    சுகம்கெடேன் சுருதி மாறேன்! – துளி
    சோர்வுறேன் மூர்க்கம் கொள்ளேன்
    அகம்விடா தன்னைநின்றாள்! அவள்
    அனலான பாதங்கள் புனலாய் நடிக்குமே!

    மூச்செலாம் அவள்நாமமே! விழிகள்
    முன்விண்டு பார்ப்பதும் அவள்தோற்றமே!
    பேச்செலாம் அவள்கருணையே! என்
    பிடரிவரை பதறுமவள் பெரும்வெம்மையே!
    காற்சிலம் பெதிரொலிக்கும்! ரத்தக்
    களரியில் மலராகக் கவிதைக ளசையும்!
    ஆச்சரிய மாயை அன்னாய்! வந்து
    அருள்செய்வ தன்றிவே றறியாத பிள்ளாய்!

     

    படத்திற்கு நன்றி:

    http://navarathrii.blogspot.in/

    Share
  • சிறுகை அளாவிய கூழ் – 24

    -இவள் பாரதி

    வெறுங்கால்களுடன்
    தெருவில் இறங்கி நடக்கிறாள்
    செல்ல மகள்!                                                            sirukai alaviya kuzh

    கல்லும் மணலும்
    சிவந்த மென்கால்களைப்
    பதம்பார்க்க…
    ஒவ்வொரு அடியையும்
    விரைவாக எடுத்துவைத்து
    நடந்தே ஓடுகிறாள்!

    நான்காம் வீட்டிலிருக்கும்
    நாய்க்குட்டிக்கு
    மாலை வணக்கம் சொல்லிவிட்டுத்
    தன் வாயிலிருக்கும்
    இட்டிலித் துண்டை
    இருவிரலாலெடுத்து
    அங்கே வைத்துவிட்டு
    மீண்டும் வாசல் வருகிறாள்!

    சிறுதுளையிட்ட தண்ணீர்ப் புட்டியை
    உறிஞ்சிவிட்டு
    மீண்டும் தெருவில் இறங்கி ஓடுகிறாள்

    நான்காம் வீட்டு வாசலுக்கு
    இரும்புக் கம்பிகளின் வழியே
    உற்றுப் பார்க்கிறது நாய்க்குட்டி!

    Share
  • உனக்கே உனக்காக – 3 : திருவரங்கம்

    இசைக்கவி ரமணன்

    காதல் தலைநகரம்

     
    திருவரங்கம்
    பேதைமை செய்யும் பெரியவாகிய கண்களின்
    காதல் தலைநகரம்

    உண்ணும்போது மிடறு விழுங்கிக்கொள்ள
    தண்ணீர் கொஞ்சம் அருந்திக்கொள்வதுபோல்
    சாவகாசமாய், சற்றே நின்றது ரயில்
    அது
    அடுத்த கவளத்தை அள்ளிப் போட்டுக்கொள்ளுமுன்
    பதறி ஏறினர் முதிய தம்பதியர்

    மதர்ப்போடு நகர்கிறது ரயில், ஒரு
    மகாராணியின் பல்லக்கைப்போல

    நடைமேடையெங்கும்
    கறுத்த பெண்கள் கூவிச் செல்கிறார்கள்
    அவர்கள் கைகளில்
    நேற்றிரவு எதையும் பொருட்படுத்தாமல்
    நீ அலையாய்ச் சிரித்த சிரிப்புகள்
    மல்லிகைச் சரங்களாய்….

    Share
  • மொழிபெயர்ப்புக் கவிதை – எவ்வளவு அழகியது அம் மாலை நேரம்

    ரிஷான் ஷெரீப்

     

    எவ்வளவு அழகியது அம் மாலை நேரம்

    மழைக் காலநிலையென்ற போதும்
    தெளிவானதும் அமைதியானதுமான அந்தி நேரம்
    வாசிகசாலை முற்ற சீமெந்து வாங்கின் மீது
    நாங்கள் அமர்ந்திருந்தோம்
    எவ்வளவு அழகியது அம் மாலை நேரம்
    இறந்த காலத்துக்கு மீளச் செல்ல இயலாத

    கதைத்துக் கொள்ளாத போதிலும்
    இதயங்களில் ஒன்றே உள்ள,
    கவிதைகள் எழுதிய போதிலும்
    வாழ்க்கையை விற்கச் செல்லாத
    நட்புக்கள் இடைக்கிடையே வந்து அமர்ந்துசென்ற
    சீமெந்து வாங்கும் கூட ஆறுதலைத் தரும்

    காலத்தின் தாளத்திற்கேற்ப மாற்றங்கள் நேராத போதும்
    வெளியே உரைக்க முடியாத் துயரம் உள்ளத்தில் உறைந்த போதும்
    வில்லோ மரக் கிளைகள் காற்றோடு இணைந்து சரசரக்கும்போது எழும்
    எம் புன்னகை கண்டு திறக்கும் எம் மாயலோக இல்லம்

    – ஷஸிகா அமாலி முணசிங்க
    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(30)

    -செண்பக ஜெகதீசன்

    அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
    கோடின்றி நீர்நிறைந் தற்று. 
    (திருக்குறள் – 523: சுற்றந்தழால்)

    புதுக் கவிதையில்…                                      pond for kural

    வளமான வாழ்க்கைக்கு,
    வாழவேண்டும்
    சுற்றத்துடன் சேர்ந்து…

    சுற்றத்தாருடன் மனங்கலந்து
    சேராதவன் வாழ்க்கை,
    கரையில்லாத குளத்தில்
    நிறைந்திடும்
    நீருக்கு நிகராகும்…!

     குறும்பாவில்…

    கரையற்ற குளத்தில் நிறைந்திடும்
    நீர்போலாகும் வாழ்க்கை,
    மனமொன்றி சுற்றத்துடன் சேராதவர்க்கு…!

    மரபுக் கவிதையில்…

    கரையது யில்லாக் குளமும்தான்
         கடல்போல் பெரிதாய் இருந்தாலும்,
    விரைந்தே வந்திடும் நீரெல்லாம்
         வெளியே போய்விடும் நிற்காமல்,
    உரைத்திடும் கதையிது வாழ்வினிலே
         உறவுடன் ஒன்றிடா வாழ்க்கையது
    கரையிலா குளத்து நீர்போலக்
         கணத்திலே போய்விடும் வீணாவே…!

    லிமரைக்கூ…

    வளமாய் வாழ்ந்திடு சுற்றத்துடன் சேர்ந்து,
    அல்லாத வாழ்வது
    கரையில்லா குளமாகும் நீரெல்லாம் தீர்ந்து…!

    கிராமிய பாணியில்…

    கொளத்தப்பாரு கொளத்தப்பாரு
    காஞ்சிபோன கொளத்தப்பாரு,
    கொளத்துக்குத்தான் கரவேணும்
    கரயிருந்தா தண்ணிசேரும்,
    கரயில்லா கொளத்திலதான்
    வந்ததண்ணி வீணாப்போவும்
    எந்தத் தண்ணியும் தங்காதே…!

    கதயிதுதான் வாழ்க்கயில…
    ஒறவோட சேந்துவாழ்ந்தா
    நல்லதுதான் எல்லாத்துக்கும்,
    இல்லன்னா ஓம்பொளப்பு
    கரயில்லா கொளத்துத்தண்ணி கதயாவும் பாத்துக்க
    கருத்தோட நடந்துக்க…!

     

    Share