உனக்கே உனக்காக – 3 : திருவரங்கம்
இசைக்கவி ரமணன்
காதல் தலைநகரம்
திருவரங்கம்
பேதைமை செய்யும் பெரியவாகிய கண்களின்
காதல் தலைநகரம்
உண்ணும்போது மிடறு விழுங்கிக்கொள்ள
தண்ணீர் கொஞ்சம் அருந்திக்கொள்வதுபோல்
சாவகாசமாய், சற்றே நின்றது ரயில்
அது
அடுத்த கவளத்தை அள்ளிப் போட்டுக்கொள்ளுமுன்
பதறி ஏறினர் முதிய தம்பதியர்
மதர்ப்போடு நகர்கிறது ரயில், ஒரு
மகாராணியின் பல்லக்கைப்போல
நடைமேடையெங்கும்
கறுத்த பெண்கள் கூவிச் செல்கிறார்கள்
அவர்கள் கைகளில்
நேற்றிரவு எதையும் பொருட்படுத்தாமல்
நீ அலையாய்ச் சிரித்த சிரிப்புகள்
மல்லிகைச் சரங்களாய்….