Blog

  • சிறுகை அளாவிய கூழ் (22)

    -இவள் பாரதி

    தாய் தேடுமென
    எல்லாக் குஞ்சுப் பறவைகளும்
    கூடடைய விரைகின்றன!                                         nivi-192x300

    என் குழந்தை
    நீ தேடுவாயென
    கூடடைய விரைகிறேன்
    போக்குவரத்து நெரிசலுக்குப்
    பெயர்போன
    இப்பெருநகர சாலைகளில்!

    ————–

    நீ முதன்முதலாய்
    எ(ன்)னையழைத்தபோது
    மீட்டெடுத்துக் கொண்டேன்
    கடந்த சில வருடங்களாய்
    நான் புழங்காமல் விட்டிருந்த
    ’அம்மா’ எனும் சொல்லை!

    —————

    உன் பால்பற்களுக்கும்
    மென் உதடுகளுக்கும்
    நாவசைப்பதற்கும் இடையில்
    இடறி விழுகின்ற
    தப்பி வருகின்ற
    துளிர்த்துத் தெறிக்கின்ற
    ஒவ்வொரு வார்த்தையும்
    உயிர்மெய் எழுத்துகளில்
    ஏதேனும் ஒன்றாகத்தானிருக்கின்றன!

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (108)

     

    — சக்தி சக்திதாசன்

     

     
    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன். இம்மடலை வரையும் போது சாரளத்தின் வழியாக வெளியே தெரியும் காட்சியைப் பார்க்கிறேன்.

    ஆதவன் தன் ஒளிக்கதிர்களால் பகலுக்கு பளிச்சென்ற வெளிச்சத்தை வாரியிறைத்துக் கொண்டிருக்கிறான்.

    பச்சைப் பசேலென்ற இலைகள் வசந்தகாலத் தென்றலினால் தாலாட்டப்படுகின்றன.

    ஆனால் இதே போலத்தான் இயற்கை எப்போதும் அமைதியாக அழகாகக் கதிரவன் கதிர்களை அள்ளிப்பருகிக் கொண்டிருக்கப் போகிறதா ?

    இல்லை வானம் கறுக்கத்தான் போகின்றது கதிரவனைக் கருமேகங்கள் மறைக்கத்தான் போகின்றன இதே சாரளத்தினூடாக கறுத்துப் போன பகலையும் பார்க்க வேண்டித்தான் இருக்கப் போகிறது.

    ஆனால் நாம் நாமாகத்தான் இருக்கப் போகிறோம் எமது விழிகளின் பார்வைகள் அதே கோணத்தினூடாக காணத்தான் போகின்றன.

    எதற்காக இந்தத் தத்துவப் பீடிகை என்று எண்ணாதீர்கள். சீட்டாட்டத்தில் எம் கைகளில் தவழப் போகும் சீட்டு எது என்று முன்கூட்டியே தெரிந்திருக்காவிட்டாலும் தரப்படும் சீட்டுக்களை வைத்து அச்சீட்டாட்டத்தில் நாம் ஜெயிக்க எத்தனையோ வழிகளில் முயல்கிறோம்.

    அதே போல வாழ்க்கையில் எத்தகைய நிலைமைகள் எம்மீது எமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் திணிக்கப்படுகிறதோ நாமறியோம் ஆனால் நாமனைவரும் தரப்பட்ட நிலைமைகளில் எமது வாழ்க்கையை வெற்றிகரமாக ஆக்குவதற்கு முடிந்தளவு முயற்சிக்கிறோமா ?

    மிகவும் சிக்கலானதொரு கேள்வி இல்லையா?

    இங்கேதான் நான் உங்களுக்கு ஒரு இளைஞனைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவனுடைய வாழ்க்கை நம் எல்லோருக்கும் ஒரு எடுத்துக் காட்டாக ஏன் சிலசமயங்களில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வல்லமை கொண்டது.

    அவ்விளைஞன் யார் என்று அறிய ஆவலாயிருப்பீர்கள் இல்லையா? இன்றைய ஊடகத்துறையின் கணிசமான வளர்ச்சியினால் இவ்விளைஞனைப் பற்றி நீங்கள் கூட அறிந்திருக்க வாய்ப்புண்டு.

    ss1இங்கிலாந்தின் வடபகுதியில் இருக்கும் ஸ்ரட்வேட்ஷ்யர் (Stratfordshire) எனும் இடத்திலுள்ள பேர்ன்ட்வூட் (Burntwood) எனும் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன் சட்டன் ( Stephen Sutton ) எனும் வாலிபனைப் பற்றியே குறிப்பிடுகிறேன்.

    அப்படி அவனின் பெருமைதான் என்ன ?

    19 வயதே நிரம்பிய இவ்விளஞன் தனது 15வது வயதில் தான் ஒரு வகை புற்றுநோயால் பீடிக்கப்ப்ட்டிருப்பதை அறிந்தான்.

    அதைத்தொடர்ந்து பல விதமான வைத்தியங்களைக் கைக்கொள்டாலும் தன் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை.

    கடந்த வருடம் முற்பகுதியில் அவனுடைய புற்றுநோய் குணமாக்கப்படமுடியாத ஒன்று இன்னும் அதிக காலத்திற்கு அவன் உயிர்வாழ்ப் போவதில்லை எனும் உண்மையை அவன் அறிந்தான்.ss2

    அவன் உலகம் இடிந்து போகவில்லை , அவன் வாழ்க்கை ஒடிந்து போகவில்லை. மாறாகத் தனது இந்த நிலையைத் தனக்கு நேர்மறையான சாதகமாக்கிக் கொண்டான்.

    புது வைராக்கியத்தோடு வாழ்க்கையை எதிர்கொண்டான் சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகநூலில் “ஸ்டீபனின் கதை (Stephen`s storey) எனும் பக்கத்தை உருவாக்கினான்.

    தான் மரணிக்கும் முன்பாக சாதிக்க விரும்பும் 46 விடயங்களை தனக்குத்தேவையான படி வரிசைப்படுத்தி அதனை முகநூலின் மூலம் பகிர்ந்து கொண்டான்.

    அவற்றில் விமானத்திலிருந்து பாரசூட் வழியாக குதிப்பது, மற்றும் வெம்பிளி உதைபந்தாட்ட மைதானத்தில் 90000 ரசிகர்களுக்கு முன்பாக ட்ரம் வாசிப்பது போன்றவற்றோடு தனக்கு உறுதுணையாக இருந்த ” டீனேஜ் கான்சர் ட்ரஸ்ட்” எனும் தொண்டு ஸ்தாபனத்திற்கு 10000 ஸ்ரெலிங் பவுண்ஸ் வரை சேகரித்துக் கொடுப்பது என்பன அடங்கின.

    சாதாரணமாக இப்படியான நோயினால் மரணிக்க இருப்போரின் மனநிலை பொதுவாக சமுதாயத்தின் மீதும் உலகின் மீதும் ஆத்திரம் கொள்வதாக இருக்கும் ஆனால் இந்த 19 வயது இளைஞனோ சமுதாயத்தையும் உலகையும் நேசித்தான். தன்னைப் போல வேறு பலர் மரணிக்கக் கூடாது என்று புற்றுநோய்க்கு மருந்து தேடும் தொண்டு ஸ்தாபனத்திற்கு நிதி சேகரிக்க முயற்சித்தான்.

    எத்தனை உயர்குணம் ! எத்தகையதோர் அர்ப்பணிப்பு !

    அவனுடைய இந்த உயர்குணத்தின் தாக்கம் சமூகவலைத்தளங்கள் எல்லாம் குபீரெனப் பற்றிக் கொண்டது. பல முன்னனி தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் அவனுக்கு உதவி செய்ய முன்வந்து பல நிதிசேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

    விளைவு !

    10000 பவுண்ஸ் மட்டுமே சேர்க்க எண்ணிய அவனது நிதிக்கு இதுவரை சுமார் 3 மில்லியன் 30000 வரையிலான ஸ்ரேலிங் பவுண்ஸ் சேர்ந்துள்ளன.

    இங்கிலாந்தின் பிரதமர் தொடங்கி இங்கிலாந்தின் கடைசிக் குடிமகன் வரை அனைவரும் இவ்விளஞனின் தன்னலமில்லா சேவையையும், மனதின் உறுதியயும் கண்டு பிரமித்துப் போயிருக்கிறார்கள்.

    இத்தகையதோர் நல்ல இதயம் கொண்ட இளஞனை காலனும் அதிகமாக நேசித்தான் போலிருக்கிறது இன்று காலை (14/05/2014) சுமார் 11 மணியளவில் ஸ்டீபன் சட்டன் என்னும் உன்னதமான இளைஞனை மனிதாபிமானம் மிக்க ஒரு வீரனைக் காலன் கவர்ந்து சென்று விட்டான்.

    அவ்வீரப்புதல்வனை ஈன்ற அன்னையின் வசனங்கள் மனதைத் தொட்டு நிற்கின்றன …

    “என் மைந்தனின் செய்கையினால் இதயம் பூரிக்கிறது
    என் மைந்தனின் பிரிவின் வலியினால் இதயம் துடிக்கிறது”

    காற்றோடு காற்றாக அவனது மூச்சு மறைந்தாலும் நேற்றோடு நேற்றாக அவன் நினைவுகள் மறையாது.

     
    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

     

    Share
  • முக்கோணக் கிளிகள்

     

     

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 4
    image

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    jay5

    jay 6

    jay7

    jay8

    Share
  • திருமால் திருப்புகழ் (84)

     

    கிரேசி மோகன்

    Tamasoma jyotirgamaya: new forever series. #krishnafortoday Keshav
    Tamasoma jyotirgamaya: new forever series. #krishnafortoday
    Keshav

    கண்ணன் திருப்புகழ்….
    ——————————————
    ’’கண்ணன் அந்தாதி’’(வெண்பா)….
    ———————————————————-

    Dialogues with Arjuna series. #krishnafortoday Keshav
    Dialogues with Arjuna series. #krishnafortoday
    Keshav

    நிருத்தம் பயில நினக்கொரு வாய்ப்பு,
    கருத்த நவநீதக் கண்ணா, -பருத்த
    அகந்தையாம் ஆற்றில், புகுந்ததே ஆசை,
    முகுந்தாயிக், காளியனுன் மன்று….(26)

    மன்றாடி ஈசன், மனம்குளிர மோகினியாய்,
    அன்றாடிப் பாடிய அச்சுதா, -மன்றாடிக்
    கேட்கிறேன், வைகுந்தா காட்சிதா கைலாசன்,
    வேட்கை, அளவென் விருப்பு….(27)

    விருப்புடன் மாலோலன், விரைகழல் பற்றிச்,
    சிறப்புடன் வாழ்வோம் செகத்தில், -மறுப்பிதில்,
    உண்டென்றால் கேளீர், உறங்கையில் உண்டாநீர்
    உண்டில்லை சொல்வீர், உடன்….(28)

    உடனிருக்கும், ஓட வடமிடும், வாடக்
    கடன்பட்டார் நெஞ்சாய்க் கலங்கும் -புடமிட்ட
    பொன்னாக்கும் மண்ணை, பொலிவாக்கும் வாழ்க்கையை
    கண்ணனைக் கூடிக் கிட….(29)

    கிடந்தால் உறக்கம், கிளர்ந்தெழ உண்பாய்
    இடர்களையும் சாக்கில் இகத்தை -தொடர்ந்திடும்
    இக்கூத்தைக் காண இறைவா எமெக்கெதற்கு
    வக்கத்த வேடிக்கை வாய்ப்பு….(30)
    ————————————————————————————————————————–

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/

    Share
  • இனி ஆவன செய்வோம்

     

    — இன்னம்பூரான்

     

    இனி ஆவன செய்வோம்

     

    tamizhan endru solada

    தேசீய தேர்தல் 2014 இந்தியாவுக்கு ஒரு திருப்புமுனை என்பதை விட திருகிய முனை என்று சொல்வது சாலத்தகும். 81.4 கோடி வாக்காளர்களில் 55.1 கோடி வாக்காளர்கள். 66.38 விழுக்காடு வாக்களித்தனர்.. கடந்த தேர்தலை விட 13.4 விழுக்காடு அதிகமான வாக்காளர்களில், இளைய சமுதாயம் கணிசமாக உளர். தேர்தல் கமிஷன் திறம்பட நிர்வகித்தது பற்றி உலகம் பாராட்டுகிறது. செம்மையான நிர்வாகத்தலைமை இருந்தால், அரசு ஊழியர்கள் உருப்படும் வகையில் இயங்குவர் என்பதை, அரசியலர் கட்டுப்பாட்டில் இருந்தபோது நெறியில் தவறியவர்கள் என கருதப்படும் அதே ஊழியர்கள் நிரூபித்துவிட்டனர் என்பது ஒரு பாடம்.

    எல்லா கட்சியினரும் விதிமுறைகளை மீறுவதில், துட்டு கொடுப்பதில், வசை பாடுவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர் என்றால் மிகையாகாது. பிரதிநிதித்துவ ஜனநாயகம் இன்றும் கானல் நீர் தான். கதவோரம் ஒளிந்திருந்த கருத்துக் கணிப்பாளர்கள், ஒருமுகமாக, திருகிய முனை பாட்டுப்பாடுகிறார்கள். தற்காலம், வருங்கால பிரதமராக பெரிதும் பேசப்படும் திரு. நரேந்திர மோடி,

    ‘நான் அரசு இயந்திரத்தை நல்லதொரு நிர்வாகியாக இயக்குவேன்; நாடு சுயநம்பிக்கையை தொலைத்து விட்டது; தேக்கத்தில் அமுங்கி விட்டது; உந்துதல் சக்தியுடன் அதை உசுப்பி விட்டால், நடக்கவேண்டியவை தானே நடக்கும்.’

    … என்கிறார். இத்தருணம், போனமாதம் அமெரிக்க நாடாளுமன்றம், ‘திரு. நரேந்திர மோடி பிரதமரானல், அவருக்கு A-1 (diplomatic) visa தனக்குத்தானே வந்து சேரும்’ என்று வருமுன் காப்போனாக உரைத்ததையும், அமெரிக்க அதிபரின் சம்பிரதாயம் கலந்த வரவேற்பையும் நாம் உன்னித்து கவனிக்க வேண்டும். மற்ற நாடுகள் அதே வழியில் தான் பயணிப்பார்கள். நான் எதிர்பார்த்தபடியே, ‘ஊடலும் கூடலுமாக’ இயங்கும் பங்குச்சந்தை அண்ணாந்து பார்க்கிறது. வருங்காலத்தில் அதற்கு மராமத்து தேவை. அது கபளீகரர் உலகம். முற்றுகை போதும். இனி ஆவன செய்வோம்.

    அதற்கு ஏதுவாக, தலைமை தேர்தல் கமிஷனர் திரு.வி.எஸ்.சம்பத்
    அளித்த ஒரு பேட்டியின் சாராம்சம்.

    “வன்முறையை ஓரளவு கட்டுப்படுத்தினாலும், செல்வத்திமிர் (மணி பவர்), நிழல் செல்வம், பணப்புழக்கம், எல்லாமே களத்தில் இறங்கி விடுகின்றன. அதை தடுக்க, கமிஷன் மட்டும் போதாது. தவிர, சட்டப்படி, விதி மீறி கெலித்த பிரதிநிதிகளை வீட்டுக்கனுப்ப எம்மிடம் ஆளுமை கொடுக்கப்படவில்லை. (பேட்டி கண்டவர் 2009 தேர்தலில் விதி மீறி ஆறு வருடங்கள் பதவியிலிருந்த் திரு.அஷோக் சாவன் பற்றி வினவினார். அது ஒரு டெஸ்ட் கேஸ் என்பதால் வருங்காலத்தில் நல்லது நடக்கலாம் என்றார், திரு.சம்பத்.)

    ஆக மொத்தம் இன்றைய நிலை:
    முறைகேடுகளும் தேர்தல் உத்திகளாக தொடரக்கூடுபவை. சாளரத்தை திறந்தோம். இனி ஆவன செய்வோம்.

    1. மக்கள் சக்தி மங்கக்கூடாது. அது வெளிச்சத்தில் இயங்கவேண்டும், வன்முறையை அறவே தவிர்த்து.
    2. பேட்டை தோறும், மக்கள் நலத்தை வெளிப்படையாக நாடும் தன்னார்வ குழுக்கள் அமைத்து, பிரதிநிதிகளை கண்காணித்து, பொறுப்புடன் தட்டிக்கேட்கும் பண்பை உருவாக்குங்கள். தரம் கெட்டவர்கள் உட்புகுந்து ஆதாயம் தேடுவார்கள். விழிப்புடன் அவர்களை வெளியேற்றுங்கள். இன்னல்கள் உண்டு. அண்ணல் காந்தி சமாளிக்காததா?
    3. கைகளை கூப்பி, காலை பிடித்து, சமயத்தில் காசை வீசி, கெலித்த பிரதிநிதிகள், உமது ஊழியர்கள். அவர்களை சிம்மாசனத்தில் தூக்கி வைத்து அவர்களின் மண்டை கனத்தை ஏற்றாதீர்கள்.
    4. இனபேதங்கள், ஏற்ற தாழ்வுகள், ஆணவம், பெண்ணிய எதிர்ப்பு போன்றவற்றை பேணாதீர்கள்.
    5. மக்கள் நலம் தெளிவு: தேச பாதுகாப்பு, யோக்கியமான நிதி நிர்வாகம், சட்டம் தவறாமை வகையறா: மத்திய அரசு நிலைப்பாடு
    6. இணக்கமான மாநில நிர்வாகம், அணுக்கத்தொண்டு, அடுத்த நிலைப்பாடு.
    7. தொகுதி நலம் முக்கியம். அவரவர் தொகுதியை, பிரதிநிதியும், மக்கள் குழுவும், கவனித்துக்கொள்ள வேண்டும். – சுற்றுச்சூழல், மின்சாரம், தண்ணீர் வகையறா.
    8. மக்கள் குழுக்கள் ஒன்று சேர்ந்து, கல்வி, மருத்துவம், முன்னேற்றம் ஆகியவை பற்றி, அரசுக்கு ஆலோசனை அளிக்க வேண்டும்.
    9. மேலாண்மை, கள்ளைக்குடிப்பது போல, அதிகார மயக்கம் தரும், யாராயிருந்தாலும். எனவே, மேலாண்மை கண்காணிப்பு இல்லையென்றால், செத்தோம்.
    10. மேற்படி இயங்க, நாம் வாய்மையை கடைபிடித்து, லஞ்சம் கொடுக்காமல், தன்னலம் மாடும் நாடாமால், கறாராக இருக்க வேண்டும்.

    இதெல்லாம் வேலைக்காவாது என்பர் பலர். அப்படியே இருந்து விட்டோமானால், மோடி ஆண்டாலும், ராகுல் ஆண்டாலும், அரவிந்த் ஆண்டாலும், ‘மேலாண்மை, கள்ளைக்குடிப்பது போல, அதிகார மயக்கம் தரும், யாராயிருந்தாலும். எனவே, மேலாண்மை கண்காணிப்பு இல்லையென்றால், செத்தோம்.’ என்பது நடை முறையில் வந்து விடும்.

     

    இன்னம்பூரான்
    13 05 2014

    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    சித்திரத்துக்கு நன்றி:
    http://3.bp.blogspot.com/-dVSaHvVmvhc/U0vGkt31XLI/AAAAAAAABRY/tKDOt8EG5w8/s1600/mb.jpg

    Share
  • கம்பனே…!

    -பிச்சினிக்காடு இளங்கோ

    கம்பனே…
    நான் இதுவரை
    நான்தான்!

    நீ                                                                                                                           Kambar2 for picchinikadu
    என் தூரத்து நண்பனாகவே
    இருந்தாய்!

    குருகுலக் கல்வி
    உன்னிடமிருந்து
    எனக்கில்லை!

    இருந்திருந்தால்
    என் சுயத்தின் சாயம்
    தெளிவற்றிருக்கும்!

    எனக்கென ஒரு
    சுயம்
    இல்லாதுமிருந்திருக்கும்!

    பள்ளிப் பாடத்தில்
    உன்னைப் படித்தேன்!
    கம்பன் கழகத்தில்
    உன்னைக் கேட்டேன்!

    ஒருமுறை
    கம்பன்கழகக் கவியரங்கில்
    உன்னைப் பாட நேர்ந்தது!

    அது
    கேள்வியை வைத்துக்கொண்டே
    நடத்திய வேள்வியானது!

    சலித்துப் புடைத்தால்
    எச்சம்
    வேள்வியின் மிச்சம்
    நான்கு வரிகளானது 

    அவ்வளவுதான்
    அறிமுகம்!

    அவ்வளவுதான்
    என் இருப்புக் கணக்கில்
    உன் இருப்பு!

    ஒரு நெருக்கம்
    இல்லாதிருந்ததால்
    நான் இதுவரை
    நானென்று சொல்லமுடிகிறது!

    எனக்கும்
    எனக்குமான
    அடையாளத்தில்
    நிம்மதியிருக்கிறது!
    பெருமையுமிருக்கிறது!

    எந்தச் சாயலுமில்லாமல்
    என்வழியில் வந்தநான்
    வழியில்
    உன்னைச் சந்தித்தேன்!

    இனிவரும் பயணத்தில்
    நீ
    உதவக் கூடும்!

    எல்லோரையும்போல
    நானும்
    கடன்காரனாகக் கூடும்!

    உதவியேதும் இதுவரை
    இல்லையென்பதே
    இன்றைய பெருமை!

    அப்படியேதும்
    நீ உதவினால்
    நன்றிசொல்வேன்
    அது
    என் கடமை!!

    Share
  • பூக்களைப் பறியுங்கள்!

    சீர்காழி உ. செல்வராஜு

    புதைந்து செரிந்த புலனெறி வழக்கங்கள்
    புதைபொருள் போலப் புராணங்கள் பற்பல!                                        roses for பூக்களைப் பறிக்காதீர் கவிதை
    பூத்துக் குலுங்கும் சொற்பூக்கள் ஏராளம்
    பூஞ்சோலை போன்றதே பைந்தமிழைப் பாரீரோ?

    எதுகையும் மோனையும் எழிலாய் மின்னிடும்!
    எழுத்துகள் யாவையும் எக்காலும் இனித்திடும்!
    ஆடலாய்ப் பாடலாய் ஆகமங்கள் கமழ்ந்திடும்!
    ஆலம் விழுதுபோல் அத்தனையும் தோரணங்கள்!

    கலையும் சுவையும் இரண்டறக் கலந்த
    கன்னித் தமிழோ கவிநயம் புகட்டிடும்!
    காப்பியப் படைப்புகள் கண்முன் நிறுத்திடும்
    காலத்தால் அழியாக் கலைச்சொற்கள் பாரீரோ?

    எளிதில் புரிந்திடவே எடுத்தாள்வோம் புதுமுறையில்
    எங்கெங்கும் மணம்வீச எழுத்துப்பணி செய்திடுவோம்!
    புலமையோர் ஆக்கங்கள் புதுமை படைத்திடவே
    புவியெங்கும் பரப்பிடுவோம் பூக்களைப் பறியுங்கள்!!

    Share
  • யாரடா மனிதன் இங்கே….

    — கவிஞர் காவிரி ​மைந்தன்

     

    யாரடா மனிதன் இங்கே….

     

    கவிஞர் கண்ணதாசனும் கவிஞர் வாலியும் எதிரெதிரே கடை விரித்தவர்கள்.. ஒருவருக்கு வரவு என்றால் ஒருவருக்கு பொருளாதார ரீதியில் இழப்பு! எனினும் தமிழுக்கும் இருவராலும் வரவு!!

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் இருவரும் பாடல்கள் எழுதிக் குவித்திருக்கிறார்கள். அப்படி இருவரிடம் பாடலைப் பெறுகின்ற வேலையை மிகவும் சாதுரியமாக.. வெற்றிகரமாக செய்திருக்கிறார் மெல்லிசை மன்னர். காலையிலே கவிஞர் ஒரு பாடல் எழுதினார் பாரு.. அதைப்போல உன்னாலே எல்லாம் எழுத முடியாது என்று கவிஞர் வாலியிடமும் .. .. வாலி ஒரு பாடல் எழுதினான் பாரு.. அதைப்போல உன்னாலே எழுத முடியாது என கண்ணதாசனிடமும் சொல்லி அவர்களை கிளர்ந்தெழச்செய்து பாட்டு இன்னும் நன்றாக வர வேண்டும் என்று பல வகைகளில் போராடியிருக்கிறார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

    அப்படி.. வாங்கப்பட்ட பாட்டு இது.. கவிஞர் வாலி எழுதிய ஒளிவிளக்கு படப்பாடல்.. தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா? இதற்கு இணையாக கண்ணதாசன் எழுதித்தந்த லட்சுமி கல்யாணம் திரைப்படப்பாடல்.. யாரடா மனிதன் இங்கே கூட்டி வா அவனை இங்கே..

    yarada manithan

    மனிதன் என்பவன் ஒரு நாகரீகமான மிருகம் அவ்வளவுதான். இதில் மாற்றுக் கருத்தில்லை.. மற்றவர்கள் முன்னாடி நம்ம பெயர் கெட்டுவிடுமே என்று கட்டுப்படுகிறானே தவிர. அடிப்படையில் மிருக குணமே நிறைந்திருக்கும்.

    வாழ்க்கையை முற்றிலும் உணர்ந்தவர்கள்.. மனவியல் படித்தவர்கள்.. உளவியல் அறிஞர்கள்.. ஞானிகள்.. உணர்ந்தபடி.. மனிதன் என்னும் நிலை என்ன தெரியுமா..?

    மிருகத்திற்கும் தெய்வத்திற்கும் இடையிலான ஒரு நிலைதான் மனிதன் என்பதாகும். மிருகமாக இருந்தவனை தெய்வமாக உயர்த்தும் நிலையில் இடையில் வாழ்பவன்தான் மனிதனாகிறான்.

    கண்ணதாசன் வரிகளிலேயே இதற்கான விளக்கமிருக்கிறது.

    ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்..
    அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..

    மனிதன் என்பவன் யார்? இவனது குணங்கள் என்னென்ன? மிருகத்திடமிருந்து எப்படி வேறுபடுகிறான்? இந்தப் பகுத்தாய்வை ஒரு திரைப்பாடலில் கொண்டுவந்து சேர்த்த பெருமை கண்ணதாசனையே சேரும்!

    சிரிப்பினில் மனிதனில்லை
    அழுகையில் மனிதனில்லை
    உள்ளத்தில் மனிதனில்லை
    உறக்கத்தில் மனிதனுண்டு

    வாழும் மிருகம் தூங்கும் தெய்வம்
    நடுவே மனிதனடா
    எங்கோ ஒருவன் இருந்தால்–அவனை
    உலகம் வணங்குமடா

    இந்தப்பாடலைப் பார்த்தால்.. மிருகத்திற்கும் தெய்வத்திற்கும் இடையிடையிலுள்ள தூரத்தை வரையறுத்துத் தந்த கண்ணதாசன்.. மனிதன் இதற்கிடையில் இருக்கிறான் என்பதையும் சூசகமாக சொல்கிறார் பாருங்கள்!

    http://youtu.be/RABmwdzsOYw

     

    பாடல் : யாரடா மனிதன் இங்கே

    http://youtu.be/RABmwdzsOYw

    யாரடா மனிதன் இங்கே
    கூட்டிவா அவனை அங்கே
    இறைவன் படைப்பில்
    குரங்குதான் மீதி இங்கே

    மனிதரில் நாய்கள் உண்டு
    மனதினில் நரிகள் உண்டு
    பார்வையில் புலிகள் உண்டு
    பழக்கத்தில் பாம்பு உண்டு

    நாயும் நரியும் புலியும் பாம்பும்
    வாழும் பூமியிலே
    மானம் பண்பு ஞானம் கொண்ட
    மனிதனைக் காணவில்லை

    சிரிப்பினில் மனிதனில்லை
    அழுகையில் மனிதனில்லை
    உள்ளத்தில் மனிதனில்லை
    உறக்கத்தில் மனிதனுண்டு

    வாழும் மிருகம் தூங்கும் தெய்வம்
    நடுவே மனிதனடா
    எங்கோ ஒருவன் இருந்தால்—அவனை
    உலகம் வணங்குமடா

     

     

    Share
  • உன்னை ஒரு மலராய்….. !

     

    கே. ரவி

    vivid_flowers-wide

    உன்னையொரு மலராய் மாற்றுகிறேன் – இதழ்
    ஒவ்வொன்றிலும் சுடர் ஏற்றுகிறேன்
    என்னென்ன வண்ணங்கள் காட்டுகிறாய் – என்
    எண்ணமெலாம் இசை மீட்டுகிறாய்
    (உன்னையொரு)

    பொன்னிறமும் செந்நிறமும் கூடியதாய்த் – துளிப்
    புன்னகையி லேஇழை ஓடியதாய்
    மின்னல் நடனம் களியேறியதாய் – மழை
    மேகமெல்லாம் அணை மீறியதாய்
    என்னென்ன வண்ணங்கள் காட்டுகிறாய் – என்
    எண்ணமெலாம் இசை மீட்டுகிறாய்
    (உன்னையொரு)

    சின்ன சின்ன முத்துக்களும் தூவுகிறாய் – புயல்
    சீறிவரும் போதுநடை மாறுகிறாய்
    அந்திப்பகல் நாடகம் ஆடுகிறாய் – உயிர்
    அத்தனையிலும் கலந்தோடுகிறாய்
    என்னென்ன வண்ணங்கள் காட்டுகிறாய் – என்
    எண்ணமெலாம் இசை மீட்டுகிறாய்
    (உன்னையொரு)

    வெட்டவெளியோ அதில் நட்ட விதையோ
    விண்ணும்மண்ணு மாய்ப்பிளந்து நிற்கும் வடிவோ
    பட்டப்பகலில் கரம் ஆயிரமோ – இருள்
    படர்ந்ததும் கோடிப் பூச்சரமோ
    (உன்னையொரு)

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(27)

    -செண்பக ஜெகதீசன்

    கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
    களைகட் டதனொடு நேர்.  
    (திருக்குறள்- 550: செங்கோன்மை)

    புதுக் கவிதையில்…

    வயலில் பயிர் வளர,
    வளரவிடாது அழித்திடல் வேண்டும்
    இடையில் வளரும் களையை…

    இதுபோன்றதுதான்
    குற்றம்மிகு கொடியவரை
    அரசு
    தண்டித்து அழிப்பதும்!

    குறும்பாவில்…

    கொடியவரைத் தண்டித்து
    வயலில் களைபோல் அழிப்பது
    அரசின் கடமை!

    மரபுக் கவிதையில்…

    வயலில் வளரும் பயிரோடு
    வீணாய் வளரும் களையதையே
    தயவு கொஞ்சமும் காட்டாமல்
    தனியே பிடுங்கி அழித்திடுதல்,
    பயனது ஏது மில்லாத
    பாவச் செயலுக் கஞ்சாத
    பயமிகு கொலைஞரை ஒறுத்தழிக்கும்
    பணிசெயும் அரசுக் கொப்பாமே!

    லிமரைக்கூ…

    கொடியவரை ஒறுத்தரசு பறித்திடும் உயிர்!
    களையை அழித்தால்தான்
    செழிப்பாய் வளரும்பார் வயலிலே பயிர்!

    கிராமிய பாணியில்…

    வெள்ளாம வெள்ளாம
    வெவரமான வெள்ளாம…

    வயலுலதான் பயிர்வளரும்
    கூடவேதான் களவளரும்…

    களபறிச்சி ஒதுக்குனாத்தான்
    பயிர்வளரும் பலன்குடுக்கும்,
    கொறயில்லாம பலன்குடுக்கும்!

    இதுபோலத்தான்,
    அரசாங்கமும் செய்யவேணும்!
    அடக்கிடணும் அடக்கிடணும்
    கொடுமகள அடக்கிடணும்!
    அழிச்சிடணும் அழிச்சிடணும்
    கொடியவர அழிச்சிடணும்!

    இதுவுந்தான்,
    வெள்ளாம வெள்ளாம
    வெவரமான வெள்ளாம!

     

    Share
  • நரசிம்மம்

     

    சு.ரவி

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : சு. ரவி

    அவன்வே தங்கள் மீட்டுக் கொடுக்க ஆழ்கடல் தோன்றிய ஒருமத்ஸ்யம்
    அவனே பாற்கடல் கடையும் நேரம் வடவரை தாங்கிய ஒருகூர்மம்!
    அவனே ஏனம், எனவடி வங்கள் பலவாய் எடுத்துத் தோன்றிடினும்
    அவதா ரத்தின் பரிணா மத்தில் அற்புத வடிவம் நரசிம்மம்

     
    விரிவெளி எங்கும் வியனுல கெங்கும் விரவிப்பரவிய தொருவடிவம்!
    எரியழல், நீர்,நிலம்,காற்றென எங்கும் எல்லாப் பொருளிலும் அது உறையும்!
    சிறிதொரு துகளிலும், அணுவிலும் அணுவின் கருவிலும் கூட அது நிறையும்!
    இரணியன் பிள்ளை சொல்லிய சொல்லைச் சத்தியமாக்கும் நரசிம்மம்!

     
    யுகங்கள், கணங்கள் ஒடுங்கும் கலங்கும் உள்ளே சீயம் கர்ஜிக்கும்
    அகமும், புறமும், அவனே என்னும் அடியார் அன்பில் அதுசிக்கும்!
    நகங்கள் படாமல், பக்தனை நாவால் நக்கிக் கொடுக்கும் நரசிம்மம்!
    அழகிய சிங்கம் துளஸி தரிக்கும், அபயமளிக்கும், துயர்நீக்கும்

     
    அழகிய வடிவினள் திருமக ளைத்தன் மடியிலிருத்தும், மகிழ்விக்கும்
    கழலிணை பணிவோர், அறவழி மறவோர், அடியவர் வாழ்வின் கலிதீர்க்கும்
    பழவினை யெல்லாம் பானகமாக்கித் தாகம் தணிக்கும் நரசிம்மம்!

    போக்கும், வரவும் புரியும் வரையில் புதிராய்த்தோன்றும் இவ்வாழ்வும்!
    யாக்கைக் குள்ளே யார்? இது செல்லும் யாத்திரை எங்கே போய்ச்சேரும்?
    கேட்கும் மனமே! கேள்விகள் எல்லாம் விடைபெறும் ஒருநாள்! அதுமட்டும்
    வாக்கில் பிறக்கும் கவிதைக் குள்ளே வார்த்தை பிளக்கும் நரசிம்மம்!

     

     

    Share
  • ஆத்திசூடி யார்? – ஓர் சுவையான கருத்தாடல்…சில விளக்கங்கள்!

    அன்புள்ள வல்லமை வாசகர்களுக்கு,

    திங்கட் கிழமை (12/05/2014) அன்று வல்லமை இதழில் வெளியான ’ஆத்திசூடி யார்? – ஓர் சுவையான கருத்தாடல்’ என்ற பகுதியின் இறுதிப் பத்தியில்  “எனவே, ஆத்திசூடி நூலின் கடவுள்வாழ்த்தில்  ’ஆத்திசூடி’யாகக் குறிப்பிடப்படுவர் சமண தீர்த்தங்கரராகிய பார்சுவநாதரே என்பது ஐயத்திற்கிடமின்றித் தெளிவாகின்றது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது முனைவர் நா. கணேசன் அவர்களின் கருத்தே அன்றி வல்லமை ஆசிரியர் குழுவின்  தீர்மானமன்று!

    நன்றி!

     

    Share
  • திருமால் திருப்புகழ் (83)

     

     

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    ——————————————
    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————-
    ’’கண்ணன் அந்தாதி’’
    ———————————–
    ஆழ்ந்து படித்தென்ன, ஆராய்ந்து பார்த்தென்ன,

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    வீழ்ந்து கிடப்போர்க்கே விஷ்ணுபதம், -தாழ்ந்த,
    சபரியெச்சில் ஏற்ற, சமத்துவத்தின் மூலம்,
    அபரி மிதமான, அன்பு….(21)

    அன்பே எதுகையாய், ஆர்வமே மோனையாய்,
    உன்பால் தளையற்ற உந்துதலால், -வெண்பாக்கள்
    பாடி அணுகுகிறேன், வேடிக்கைக்(கு) அல்லகண்ணா,
    வாடிக்கை யாளனாக வா….(22)

    வாவென்றால் வாலிபன், வாக்கில் வயோதிகன்
    தாவென்றால் கற்பகத் தாயவன், -சோவென்று,
    மாரியருள் பெய்கின்ற, காரிருள் கண்ணனே,
    வேறிருள் போக்கும் விளக்கு….(23)

    விளக்கீசல் போலே, வியனுலகில் ஈசா,
    உளத்தாசை கொண்டிங்(கு) உதிர்ந்தேன், -அளப்பரிய,
    ஆதியே, உந்தனனு பூதியில் மூழ்கிடும்,
    தேதியைச், சொல்லியெனைத் தேற்று….(24)

    தேற்றி விஜயனைத், தேரேற்றி வில்லேந்தச்
    சாற்றினாய், கீதையை சர்வேசா, -சேற்றினுள்,
    பஞ்சப் புரவிகட்(கு) அஞ்சிப் புதைந்திடும்,
    நெஞ்ச ரதத்தை, நிறுத்து….(25)

    —————————————————————————————————————-

    Share
  • கும்ப முனியின் குறுநகை

    கே.ரவி

    26-10-1988, பெங்களூரு போகும் வழியில் உள்ள குறடு மலையில் சில நண்பர்களோடும்,ஷோபனாவோடும் இருந்தேன். அது ஒரு மிகச்சிறிய கிராமம். அதில் ஒரு மிகப்பழைய,சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வினாயகர் கோயில் உள்ளது. அதில் உள்ளவினாயகர் சிலை ஒரே சாளக்ராமக் கல்லால் ஆனது, மிகப் பெரியது, சுமார் 20 அடி உயரவினாயகர். அதை அகத்திய முனிவர் நிறுவினார் என்று குருநாதர் சொல்லியிருந்தார்.அங்கே, அன்று பகல் நேரத்தில் சற்றுக் கண்னயர்ந்தேன். துயில் கலைந்ததும் ஒரு பாடல்வந்தது, என் கனவில், வஷிஷ்ட, அகத்திய மாமுனிவர் இருவரும் வந்து சில வாசகங்கள் சொன்னதுபோல் …..

    thalakaveri
    அந்தக் கவிதையை, சென்னை வந்ததும் குருநாதருக்குப் படித்துக் காட்டினேன். உடனேஅவர் என்னைத் தலைக்காவேரிக்குச் சென்று அங்கே உள்ள குளம் அருகே அகத்தியமுனிவரை தியானம் செய்துவிட்டு, ‘கும்பமுனியின் குறுநகை’ என்ற தலைப்பில் ஒருகவிதையெழுதி அங்கேயே அதைப் படித்துவிட்டு வருமாறு பணித்தார். நானும்,ஷோபனாவும், ‘திராவிட மாயை’ சுப்புவும் 02-11-1988 புறப்பட்டு, மைசூர் சென்று, இன்னும் மூன்று நண்பர்களை அழைத்துக் கொண்டு மறுநாள் மாலை தலைக்காவேரி சென்றடைந்தோம். அங்கே, கும்பமுனியின் குறுநகை என்று ஐந்து பாடல்களை எழுதி அரங்கேற்றினேன். அந்தப் பாடல்கள் வரக் காரணமாய்க் குறடு மலையில் நான் எழுதிய பாடலையும், கும்பமுனியின் குறுநகை பாடல்களையும் இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

    kuradu

                                                                                  குறடுமலை விநாயகர் : படம் கே. ரவி

    “குந்து மணியுள் குத்து விளக்கா கூர்ந்து கவனித்தேன்
    அந்த மணியென் அருகில் வந்தென் ஆக்ஞ விபூதியிலே
    சென்று நுழைந்து சிதறி வெடிக்கச் சித்துருவா யெழுந்தான்
    குந்து மணியுள் குறுகிக் கொண்டு குந்தி யிருந்தவனே

    பெயர்சொல்ல வில்லையந்தப் பெரிய சித்தன்
    பிடியென்றான் கைநீட்டிப் பிடித்துக் கொண்டேன்
    முயல்பாகம் இல்லாத முழுநி லாப்போல்
    முகமெங்கும் ஜோதியதில் முறுவல் வேறு
    குயவன்மண் பானைவரச் சுற்று தல்போல்
    குறுமுனிவன் எனைப்பற்றிச் சுற்றி விட்டான்
    சுயநினைவு நீங்கியது சூனி யத்தின்
    சூட்சுமத்தில் சுடராக அவனி ருந்தான்

    ஒன்றாக இருந்தவனே இரண்டு கூறாய்
    ஒளியோடு பிரிந்துநின்ற காட்சி கண்டேன்
    ஒருவன்கை ஜபமாலை பிடித்தி ருக்க – (இன்)
    னொருவன்கைக் கமண்டலத்தைக் கொண்டி ருக்க
    நின்றவர்கள் இருவருமே நெடிதி ருந்தார்
    நிலவுமழை போலவொளி வழிய நின்றார்
    நீண்டதொரு கரமந்த ஒளிவட் டத்துள்
    நேராக என்தோளைத் தொட்ட போது

    மூன்று மொழியென் சிந்தையிலே தோன்றி நிறைந்தனவே
    ஒன்று ‘பருகு வெளிச்சத்தை’ என்று பணிக்கிறது
    ஒன்று ‘பழகு ப்ரம்மத்தை’ என்று தொனிக்கிறது
    ஒன்று ‘புலர்க சித்தவெளி’ என்று முடிக்கிறது

    மீண்டும் எதிரே குந்துமணி – அதன்
    உள்ளே ஒருவிளக்கு
    கூண்டுக் குள்ளே சிறகடித்துத் – துயில்
    கலைந்த நினைவெனக்கு.”

     

    (நாள்: 3-11-1988. நேரம்: கும்மிருட்டு. இடம்: தலைக்காவேரி. பாத்திரங்கள்: சுப்பு, ஷோபனா, நான், பின்னணியில் மாமுனிகள் அகத்தியரும், விஸ்வாமித்திரரும். தலைப்பு: “கும்ப முனியின் குறுநகை” என்று குருநாதர் குறும்பாகத் தந்தது! இப்படி ஒரு சூழலில் வந்த பாடல்களை இங்கே பதிவு செய்கிறேன்)

    ஓங்கி எழுந்தவோர் ஓங்காரப் பேரொளியின் ஊற்றுத் தடாகத்திலே
    உந்துகதி யாகிவெளிச் சென்றுகலை யாதுவளி நின்றுநிலை யாகியுள்ளே
    வேய்ங்குழலும் ஆகியதை ஊதுமித ழாகியலை மோதுமுள் நாதமாகி
    மொட்டுமல ராகியதை முட்டியுற வாடியது கொட்டுகிற அமுதமாகி
    வானொன் றிலாதபடித் தானென் றெழுந்துநித் யானந்த லஹரியாகி
    வாசிவெளி யாகமுனை ஊசிவழி யாகவருள் வ்யாபித்து விட்டதிரையில்
    கூன்பிறை யணிந்தசிவ னார்விழி திறந்துதழல் மான்மழு வுடனுடுக்கை
    கொண்டுநட மாடுமெழில் கண்டுமல ரும்பொய்கை கும்பமுனி யின்குறுநகை (1)

    அன்றுதிரி சூலிநட மாடியவி நாடியிலிவ் வண்டச ராசரங்கள்
    விண்டுசித றுண்டுதிசை யென்றநிலை இன்றிவெளி யெங்கும் தெறித்துவீழ
    ஒன்றிலொன் றாயவை கொண்டுசெய் தானொரு மண்டலம் பெரியதேவன்
    மண்டலத் தைச்செய்த மந்திரத் தைத்தன்க மண்டலத் தேந்திவந் தான்
    வந்தமுனி வன்ஞான வாசல் திறந்தந்த மண்டலத் தொளிகொடுக்க
    விந்துமணி யுள்கோயில் கொண்டுபின் வேள்வியில் கும்பத் தெழுந்துவந்தான்
    குந்துமணி போல்சின்ன குண்டலியி லேயவன் குறுகிக் கிடந்தஅழகை
    என்றுநினைத் தாலுமுடன் இந்துவெனத் தோன்றுவது கும்பமுனியின் குறுநகை (2)

    வீடுமறி யாதுவெளி யேகிஉழல் வார்தம்மை வேண்டிச் சுமந்துவந்து
    வித்தையறி வித்துமன வீச்சிலொரு மித்துப்பொய் வித்தகம் அடக்கியாண்டு
    பாடுபடு கின்றபல தேவதூ தர்க்கெலாம் பரமகுரு கும்ப முனிவன்
    பாதையிது தானென்று பாடமுரைப் பானொரு பவித்திரம் புனையவைப்பான்
    ஆடுகட லத்தனையும் அள்ளிப் பருகியவன் ஆனந்த ஜோதி வள்ளல்
    ஆத்ம விதானத்தில் ஆழ்ந்த நிதானத்தில் ஆச்சர்ய மாய்முளைப்பான்
    கூடுபிரி யாமலொளி ஏடுபிரி யாதென்ற கூற்றுப்பொய் யானசரிதை
    கொண்டலுக் குள்மின்னல் கொண்டுவைக் கும்திங்கள் கும்பமுனி யின்குறுநகை (3)

    அன்றிலங் கைப்போரில் வெல்வதற் காதித்ய மந்திரம் சொன்னதென்ன
    அமரரெ லாரும்வந் அமர்ந்தும்கை லாசகிரி அழுந்தாது காத்ததென்ன
    தென்னகத் தேயொளி தங்கவைத் தேநல் லிலக்கணம் வகுத்ததென்ன
    தேடும்விழி யாவுமொளி சூடும்வழி யோகமெனத் தெளிவா யுரைத்ததென்ன
    ஒன்றுவழி என்றமறை வள்ளுவத் தையுடன் வாழ்த்தியருள் செய்ததென்ன
    ஓங்கிவளர் விந்தியத்தின் கர்வம் அகற்றியடி பணியப் புரிந்ததென்ன
    என்றுமுல காளுநெறி சத்யனெறி என்றதொரு சங்கல்பம் தந்ததென்ன
    என்றுமுள தென்றமிழ் இயம்பியிசை கொண்டமுகை கும்பமுனி யின்குறுநகை (4)

    ஐங்கரத் தான்கோயில் செய்துவைத் தானங்கே ஆனந்த ஜோதிவைத்தான்
    ஜோதியுள் ஜோதியெனச் சொல்லவைத் தானின்று சொன்னபடி யேசிரித்தான்
    திங்கள்பகல் என்றவிரு கண்கள்கொண் டானிந்த அகிலத்தின் ஆத்மஜோதி
    தேவமுனி யாவரையும் வரவழைத் தேயெமை அறிமுகம் செய்துவிட்டான்
    சங்கடம் அகன்றதினி சாதகம் கைகூடும் சத்ய யுகமலருமே
    சன்னிதியி லேநின்று சொல்லுகின் றேனிது சத்தியம் தேவதேவே
    செங்கதிரைச் சொல்லாக்கி மந்திரம் ஜபித்தமுனி யோகவிஸ் வாமித்திரன்
    கோமுனிவ னேயென்னைப் பாடவைத் தானதைப் பாடினேன் வணங்குகின்றேன்
    ஓமென் றுரைக்கட்டும் அண்டமெல் லாமிந்த உலகம் இனிதுவாழ்க
    ஆமென் றுரைக்கட்டும் அமரர்கள் அகிலத்தில் ஆனந்த அமைதிசூழ்க. (5)

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    மே 12, 2014

    சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …

    இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு

    திரு. கே.எஸ்.சுதாகர் அவர்கள்

    Untitleda

    ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர் திரு. கே.எஸ்.சுதாகர் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக சிறுகதை, கவிதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் எழுதி வருகின்றார். பொறியியல் பட்டதாரியான இவர் சுருதி, கதிரொளியான் என்னும் புனைபெயர்களிலும் எழுதுவதுண்டு.

    இலங்கை, இந்தியா, மலேஷியா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா எனப் பலநாடுகளில் வெளியிடப்படும் பத்திரிக்கைகளிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. குறிப்பாகப் மரத்தடி, திண்ணை, திசைகள், பதிவுகள், கீற்று, ஈழநேசன், வல்லினம், அப்பால் தமிழ், அக்கினிக்குஞ்சு, தமிழ்முரசு, எதுவரை? வல்லமை எனப் பல இணைய தமிழ் மின்னிதழ் தளங்களிலும் இவரது கட்டுரைகளையும் கதைகளையும் இவர் எழுதியதால் தமிழ் இணைய வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.

    கே.எஸ்.சுதாகரின் சிறுகதைகள் பெரும்பாலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பெற்றவை. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், ஞானம் சஞ்சிகை, நார்வே தமிழ்ச்சங்கம், ஈழம் தமிழ்ச்சங்கம் (ஆஸ்திரேலியா), பூபாள ராகங்கள் (இங்கிலாந்து), மரத்தடி இணையம், தென்றல் (அமெரிக்கா), தாய்த் தமிழ்ப்பள்ளி (ஆஸ்திரேலியா), வல்லமை உட்பட மொத்தம் 20 சிறுகதைப்போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். ‘எங்கே போகின்றோம்’ ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்ற சிறுகதைத்தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரான கே.எஸ்.சுதாகர் தற்போது இந்த அமைப்பின் நிதிச் செயலாளராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

    சென்றவாரம் இவர் வல்லமை வாசகர்களுடன் அவருடைய “அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும்” என்ற சிறந்த கட்டுரை ஒன்றினைப் பகிர்ந்து கொண்டார்.

    அக்கட்டுரையில் கருத்தைக் கவர்ந்த ஒரு சிறு பகுதி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இரு பகுதிகளாக வெளிவந்த இக்கட்டுரையின் சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும் – 1

    அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும் – 2

    ……பண்டைய தமிழர்கள் ஓடித் தப்பிப்பவர்களைப் பிடிப்பதற்கு ‘வளரி’ என்ற ஆயுதத்தைப் பாவித்தார்கள். சங்க கால இலக்கியமாகிய புறநானூற்றுப் பாடலில் (பாடல் எண் 233) வரும் ‘திகிரி’ என்னும் பதம் இந்த ‘வளரி’யையே குறிக்கின்றது.

    பாடல் எண். 233 – பொய்யாய்ப் போக!
    பாடியவர் : வெள்ளெருக்கிலையார்

    “பொய்யா கியரோ! பொய்யா கியரோ!
    பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
    சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய
    பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ!”

    என்று செல்கின்றது அந்தப்பாடல்.

    ‘வளைதடி’ என்று தமிழில் சொல்லப்படும் இந்த ‘வளரி’ என்ற ஆயுதம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டது. இந்த வளரியைப் போன்று அவுஸ்திரேலியா ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட ஆயுதம் ‘பூமராங்’ (boomerang) ஆகும். எனவே இந்த ஆயுதம் தமிழருக்கும் அவுஸ்திரேலியா ஆதிவாசிகளுக்கும் பொதுவானதாகின்றது. இது ஒருமுனை கனமாகவும் மறுமுனை இலேசாகவும் கூராகவும் ஒரு பிறை வடிவில் மரத்தினால் அல்லது உலோகத்தினால் செய்யப்படுகிறது. இதை ஆதிவாசிகள் ஒரு இலக்கை நோக்கி எறிவார்கள். இலக்கு தவறும் பட்சத்தில் அந்த பூமராங் எறிந்தவரின் கைகளுக்குத் திரும்பி வந்து விடும். இதை ஆதிவாசிகள் வேட்டையாடுவதற்கு உபயோகித்தார்கள்.

    மத்திய அவுஸ்திரேலியாவில் இருந்த பழங்குடிகளின் இனத்தின் பெயர்களாக (Tribes Names) – வாகை (Waagai), சிங்காலி (Chingali), இளம்பிறை (Ilpirra), வால்பாறை (Walpari), அருந்தா (Aruntha) போன்ற பெயர்கள் இருப்பதைக் காணலாம். Alice Springs போன்ற இடங்களில், சிறுசிறு குழுக்களாக பரந்த அளவில் ‘அருந்தா’ இனக்குழுவினர் உள்ளனர். மேலும் இவர்கள் விலங்குகள், மரங்களின் பெயர்களைக் கொண்டும் வகைப்படுத்தப்படுகின்றனர். ஏமு மனிதன் (Emu man), கங்காரு மனிதர்கள் (Kangaroo men), பிளம் மர மக்கள் (‘Plum tree’ people) போன்றவறை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

    பழங்குடி மக்களின் பெரும்பாலான உரையாடல்களில் தமிழின் உச்சரிப்பைக் காணலாம். ‘Ten Canoes’ என்ற அவுஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட அபரிஜினல் மக்களைப் பற்றிய படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கும் இந்த அனுபவம் ஏற்படலாம். அவர்கள் பாவிக்கும் சில சொற்களிற்கும் தமிழ்ச் சொற்களுக்கும் ஒற்றுமைகள் இருப்பதைக் காணலாம்.

    சிட்னியில் ‘விண்மலே’, ‘காக்காடு’ என இரு இடங்கள் இருக்கின்றன. ஆகாயமும் (விண்) மலையும் ஒட்டி நிற்பதைப் போல இருக்கும் அந்த அற்புதமான இடத்திற்கு winmalle (விண்மலை) என்று பெயர். ‘கா’ என்றால் சோலை, காடு என்றால் வனம். உண்மையிலே சோலைவனம் போல ஏராளமானவர்களைக் கவர்ந்திழுக்கும் அந்த இடத்திற்கு kakadu என்று பெயர் வழங்குகின்றது. மேற்கு அவுஸ்திரேலியாவில் மதுர (Madura) என்று இன்னொரு இடம் இருக்கின்றது. இன்னொரு ஆதிவாசி இனம் அதிகம் பாவிக்கும் சொற்றொடர் ‘பூனங்கா யிங்கவா’. அதன் அர்த்தம் ‘பெண்ணே இங்கே வா’. ‘பூ நங்கையே இங்கே வா’ என்பதியே அவர்கள் இப்படிச் சொல்கின்றார்கள்.

    ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட மனிதர்கள் தெற்குப்பக்க கடற்கரை வழியாக வந்து இந்தியாவினூடாக அவுஸ்திரேலியாவை அடைந்திருக்கக்கூடும் என்று ஒரு பொதுவான கருத்து நிலவுகின்றது. இந்தக்கருத்தை இந்தியாவிலுள்ள Dr Raghavendra Rao என்பவருடைய ஆய்வு உறுதி செய்கின்றது. இவரது குழுவின் மனிதவர்க்கசாஸ்திர ஆய்வின்படி (Anthropological Survey), திராவிடப்பழங்குடிமக்களிற்கும் தற்போதைய அபரிஜினல் இனத்தவருக்கும் பொதுவான DNA மரபணு மூலக்கூறுகளைக் கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. இவர்களின் கருத்துப்படி 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் அபோர்ஜினமக்கள் தென்னிந்தியா வழியாக அவுஸ்திரேலியாவிற்கு வந்து குடியேறியதாகவும், தற்போதைய அபரிஜினமக்களுக்கும் இந்தியக்குடிமக்களுக்கும் பொதுவான முன்னோர்கள் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்கள்……..

    தமிழர்களின் பரவலுக்கு சான்றாக அமையக்கூடிய கருத்துக்களை தனது கட்டுரையின் வழியாகப் பகிர்ந்து கொண்ட திரு. கே.எஸ்.சுதாகர் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************

    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    Share