Blog

  • திருமால் திருப்புகழ் (79)

     

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    —————————————————————
    ’’கண்ணன் அந்தாதி’’
    ———————————
    காப்பு
    ————-

    காப்புக் கரம்கொண்டு காதைப் பிடித்துமால்
    தோப்புக் கரணமிடத் தீர்ப்பளித்தோய் – யாப்பெனெக்(கு)
    அந்தாதி வெண்பாவில் அம்மான் புகழ்பாட
    தந்தாதி தெய்வமே தா….
    ———————————————————————————————————————-

    நூல்
    ———–

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    சரணா கதியென்று சார்ந்து கிடப்போர்க்(கு)
    அரணாய் இருக்கும் அரியே -நரனாய்ப்
    பிறந்து வளர்ந்து பிணியென்ற சாக்கில்
    இறந்தில்லை யாவ(து) எதற்கு….(1)

    எதற்கென்ற கேள்வி முதற்கொண்டு மாயை
    உதிக்கின்ற ஞானமே எல்லாம் -மதித்துத்
    துதிக்கின்ற நானும் விதிக்கின்ற நீயும்
    நதிக்கரை நாணல்நீர் நட்பு….(2)

    நட்புனக்கு லீலை நயவஞ் சகம்மாயை
    கட்புலனுக்(கு) எட்டாக் கடிதொளியே -முட்புதரில்
    நிற்கவைத்து ரோஜாவை நீமுகர்ந்து பார்கின்றாய்
    அற்பசுகம் ஆண்டவர்க்கு மா….(3)

    ஆண்டவா நீலவண்ணம் பூண்டவா நீள்விசும்பில்
    நீண்டவா பாரதப் பாண்டவராய் -வேண்டவா!
    தூண்டவா பக்தியால் !, தீண்டவா பாரதியாய் !,
    கீண்டவா தீங்கைக் கிழித்து….(4)

    கிழிந்து பிணியில் கிடக்கும் உடம்பைப்
    பிழிந்து சுகம்மேலும் பார்க்கும் -இழிந்த
    மனமேன் கொடுத்தாய் எனையேன் படைத்தாய்
    உனைஏன் கேட்கநான் உண்டு….(5)

    ————————————————————————————————————

     

    Share
  • பாதுகா வெண்பாக்கள் – நவக்கிரக தோச பரிகாரம்

     

    கிரேசி மோகன்

    crazy
    அதர்மமே யானாலும் அஞ்சாது செய்யும்
    சுதர்மம் சுதந்திர சொர்கம் -பதமுறும்
    பாதுகையே போய்ச்சொல் தூதுவனாய்க் கண்ணனிரு
    காதுகளில் காத்திருப்பே னென்று….(1)….

     
    அகங்காரம் ஆசை பயம்கோபம் என்றும்
    சுகம்காணும் சொந்த நலத்தில் -புகுந்தாடும்
    மால்கட்டு நீங்கிட மாலோலன் பங்கயக்
    கால்கட்டும் பாதுகாய் காப்பு….(2)….

     
    அகஸ்மாத்தாய்க் கேட்டோர் அதிசயிக்கும் வண்ணம்
    சகஸ்ரம் எழுதிய சிங்கம் -நிகமாந்த
    தேசிகர் பாதுகையை யாசகமாய்ப் பெற்றுத்தா
    வாசகனென் தோஷம் விடுத்து….(3)….

    சாவடி ஆவிற்கு பாவடி ஆழ்வார்க்கு
    காவடி ஐவர்க்கு , மாபலிக்கு -மூவடி
    நீவடி வாவது நெஞ்சமர் ராதைக்கு
    சேவடி உன்கால் அணிக்கு….(4)….

    வேத புராண இதிகாச சாத்திரம்
    ஓதும் உபநிடதம் ஓங்காரம் -ஆதிகள்
    நூலணி நான்முகன் தோளணி சம்புதொழும்
    காலணி பாதுகையே காப்பு….(5)….

    வானத்து கங்கை வருடிடும், அன்று
    தானத்தை தோழர்க்குத் தந்திடும் -தூணித்துச்
    சாய்ந்திட தூர்த்திடும் ஸ்ரீரங்கன் கால்களை
    காய்ந்திடாது காப்போனே காப்பு….(6)….

    நின்றாலும் நீண்டு வளர்ந்தாலும் எங்கு
    சென்றாலும் சேவடி சேவகரே -அன்றாலில்
    கண்ணுறங்கும் போது கழற்றி இருப்பானே
    எங்கிருந்தீர் சொல்லும் எமக்கு….(7)….

    சேதாரம் இல்லாது செங்கட் திருமாலின்
    பாதார விந்தத்தைப் பாதுகாக்கும் -ஆதாரமே
    தூதுபோய்க் கண்ணன் ஏதுதான் கூறினான்
    பாதுகாய் பகர்வாய் புகன்று….(8)….

    நூபுரம் தண்டை நொறுங்கப் பிரபஞ்ச
    கோபுரம் தாண்டிக் கிளர்ந்தவன் -மாபரம்பொருள்
    மாதவ னோடு மகோன்னதத்தில் பங்குற்ற
    பாதுகா சாகசனைப் போற்று….(9)….

    மூவா முகுந்தரின் பாதாதி கேசத்தை
    நோவாமல் தாங்கி நடத்துவோய் -சேவா
    கணத்தில் உமக்கு அனந்தனின் காலை
    தினம்தினம் சேவிக்கும் வாய்ப்பு….(10)….

    வாளி,சங்கு, சக்கரம், வாள்தண்டு கேடயம்
    தோளணி வில்லும் துயரறுக்கும் -கோளரி
    மாதவன்கை ஆயுதங்கள் ஆனாலும் பாதுகாக்கும்
    மாதவன்கை ஆயுதங்கள் பாதுகாப்ப தென்னவோ
    பாதுகையே காலணிந்த கை….(11)….

    தூணுதைத்தான் பின்னர் வானளந்தான் பேதை
    மானுடனாய் காட்டில் அலைந்தான் -தானுகந்த
    நாளாலில் சேயாக வாளாய் இருந்தவன்
    காலளவு பாதுகாய் கூறு….(12)….

    காதலில் ராதையைக் காண ரகசியம்
    சீதையை மீட்க அவசரம் -கோதையைப்
    பெண்ணெடுக்கப் போகையில் பின்னைடைந்தீர் பக்தியில்
    பெண்ணுருகும் பாசுரம் கேட்டு….(13)….

    பதம்வரையும் வானுமுற்ற பாகவதக் காரன்
    பதவுறையாய் சென்ற கதையை -பதவுரையாய்
    கூறவல்ல காலணியே வேறுதுணை ஏனெமக்கு
    நீரிருக்க நிர்பயமா னேன்….(14)….

    தோளணி பூந்துழாய் மேலணி பீலியென
    மாலணி ஆபரணம் ஆயிரம் -காலணி
    பாதுகைக்கு ஈடாய் படிதாண்டி ஓடிவர
    ஏதுகை நெஞ்சே நமக்கு….(15)….

    கண்ணிரெண்டால், விண்ணளந்தோன் காணாது போனாலும்
    கண்ணிரெண்டு கொண்டோய் குமிழ்களாய் -மண்ணிருந்து
    போற்றும் அடியார்கள் புகழ்செலவம் கல்விபெற
    சாற்றுன் எஜமான் செவிக்கு….(16)….

    வாயுள்ள பிள்ளை வரிசங்கும், ஓயாமல்
    கையாலா காதுசுழல் சக்கரமும் -பாயாம்
    அரவணையும், வாயில் கரமணைக்கும் சப்த
    மரவடியைக் காதால் மடுத்து….(17)….

    சகியின் வெளுத்து வளைந்த கழுத்தின்
    மகிமையால் சங்கை மறந்தான் -திகிரியை
    வாய்க்களித்தான் வேழனுக்கு, வாய்ப்பளித்தான் காலணியே
    ஆய்க்குலத்தோன் என்றும் அணிந்து….(18)….

    விதுரன் அகத்தில் வினயமும், யுத்த
    சதுரங்கத்தில் கீதையும், ராதை -மதுரம்
    சுதாமன் சினேகிதம், சந்தித்த தெல்லாம்
    பதாம்புயத்துப் பாதுகாய் பேசு….(19)….

    காலன் எதிர்வரும் காலம் அணுகிட
    மாலன் மலர்த்தாள் முகர்ந்திடும் -காலன்
    சகஸ்ரம் உரைத்திட சித்திர குப்தன்
    புகஸ்ரமம் கொள்வான் பயந்து….(20)….

    கர்ணனின் தாராளம் குபேரன் ஏராளம்
    நர்மதை நீர்வேகம் நின்னருளே -வர்ணணை
    செய்து வரவழைக்க சொற்களை தேசிகர்போல்
    பெய்திட வாக்கைப் பெருக்கு….(21)….

    நிற்கையில் மெத்தை நடக்கையில் வாகனம்
    வெற்பெடுக்கும் போது வரைதாங்கி -தெற்குநோக்கித்
    தூங்கும் அரங்கன் துயிலெழுவ தற்குள்சொல்
    தாங்கிய யோகத் தெளிவு….(22)….

    சாமா னியரை சதுர்வேதி ஆக்கிஹரி
    நாமா வளியயை நவிலவைத்த -ராமா
    னுஜனே முழுமுதல் நாரணனைத் தாங்கும்
    புஜனே நிஜத்தில் புகுத்து….(23)….

    பைகொண்ட பாம்பில் படுத்த பரம்பொருள்
    வைகுண்ட நாதர் வடிவத்தை -கைகொண்டு
    ஏந்தும்கால் பாதுகையே நீந்திவா பாற்கடலில்
    ஏந்திச்செல் என்னை எடுத்து….(24)….

    தென்னிலங்கை செல்கையில், தூதுசென்(று) ஐவர்க்காய்
    மண்ணளந்து கேட்கையில், மாவலிதன் வரமேற்று
    விண்ணளந்த வேளையில், விரகத்தில் ராதைக்காய்
    கண்ணலைந்த காலத்தில், காலிருந்த பாதுகாய்
    மண்ணளைந்து உண்டவனை என்னகத்திற்(கு) இழுத்துவா….(25)….

     

     

    Share
  • பிள்ளையார் பதினாறு

     

    கிரேசி மோகன்


    பிள்ளையார் வெண்பாக்கள்          
              
    lord-shiva
    சோமன்த னைச்சென்னி சூடும் சிவகுடும்ப
    சீமந்த மைந்தன் சதுர்த்தியின்று -மாமன்தன்
    சக்கரத்தை உண்டுமிழ்ந்த சித்தி வினாயகனை
    வக்கிர துண்டனை வாழ்த்து….(1)

     தம்பிக்கு காதல் துணைசென்ற தந்தியே
     தும்பிக்கை வேழமே, தேவர்கள் -ஸ்தம்பிக்க
     ஆட்சி கயிலாயத்தை அவ்வைக்(கு) அளித்தவா
    காட்சிக்(கு) இனியபிள்ளாய் காப்பு….(2)

     

    தொந்தி குலுங்கிட தந்தி ஜொலித்திட
    முந்தி முழுமுதல் மோதகன்முச் -சந்தி
    அரசடியில் வீற்று அருள்பாலிக் கின்றான்
    முரசடித்தேன் தந்திக்கு முந்து….(3)

    ஆனைக்கா அம்மையும் ஊனைக்கொள் ஊர்த்தவர்க்கும்
    சேனைக்கா வேலன் சகோதரனாய்-தீனர்க்காய்
    தோன்றிய பிள்ளாய், தமிழாக அவ்வைக்கோல்
    ஊன்றிய வேழா உதவு….(4)

    அக்கினிக்கு முப்புரத்தை ஆட்படுத்த தேரேறி
    உக்கிரமாய் சென்ற உருத்திரர்க்கே -விக்கினமாய்
    அச்சொடித்து உன்னிருப்பை எச்சரிக்கை செய்தவரை
    உச்சரிக்க வைத்தாய் ஒழுங்கு….(5)

    கணபதி ராயா மனிதச காயா
    பனிபதி கைலாசப் பையா -தனபதி
    மாலின் மருகோனே மயிலோனின் மூத்தோனே
    கோல வினாயகனே காப்பு….(6)

    கயிலாய சீதனம் கற்பகச் செல்லம்
    மயிலாப்பூர் தோழன் மகோதரன் -பயிலோரும்
    பள்ளிப் பரிட்சையில் பெற்றிட வெற்றியை
    அள்ளித் தருவான் அவன்….(7)

    அருகம்புல் தேங்காய் எருக்கம்பூ, மாலின்
    மருகன்பால் வைக்க மகிழ்ந்து -ஒருகொம்பால்
    நான்முகன் நம்தலையில் நட்ட விதையினை
    ஆனைமுகம் ஆக்கும் அரசு….(8)

    cowசுகள் பேணிடும் கண்ணன் மருகோனே
    mouseயிக வாகனா மோதகா -houseனுள்
    வாராய் வினாயகா வேளை சதுர்த்தியில்
    தாராய் அறிவில் தெளிவு….(9)

    மூஷிக வாகனனை தோஷ விநாசகனை
    பாஷைகள் போற்றும் ப்ரணவனை -வேஷமாய்
    வேழத்தோல் போர்த்திய தோழக் கடவுளை
    ஏழைகள் ஈசனை ஏத்து….(10)

    அரச மரத்தடியில் ஆகாசம் பார்த்து
    உரசும் எலியோடு ஒண்டி -பெருசாய்
    எதிர்பார்ப்பு ஏதுமின்றி ஏழெட்டு தேங்காய்
    சதிராக யாதுமருள் வான்….(11)

    கமர்கட் கடலையுண்டை குச்சிஐஸ் மூன்றும்
    சமர்பிப்பேன் நானுக்கு என்றும் -அமர்ந்திட்டு
    செங்கழுநீர் பிள்ளையாரே சாப்பிட்டு த்ருப்தியாய்
    சங்கத் தமிழ்மூன்றும் தா….(12)….
    ———————————————————————————————————————————————————————————–

    பெரியவா அருள்வாக்கில் ‘’ஷோடஸ வினாயகரைப்’’ பற்றி எழுதியதைப் படித்து எழுதியது….

     

     

    pillaiyar

    —————————-
    ஷோடஸ நாயகர்
    ———————-

    பிள்ளையார் பிறப்பு
    ———————–
    நீராடும் வேளை நிலைவாசல் காவலுக்கு
    ஓராளைத் தேடினாள் ஓங்காரி -சேறாக
    மேனியில் பூசிய மஞ்சளால் செய்தனள்
    ஞானி வினாயக னை….

    ஆதியே ஆனாலும் அன்னை குளிக்கையில்
    பாதியில் வந்த பரம்பொருளை -வீதியில்
    தள்ளிய பிள்ளை தலையைத் தகப்பனரன்
    கிள்ளியங்கு வைத்தான் கஜம்….
    ஸுமுகர்
    ———–
    சிரித்த வதன ஸுமுகரைப் போற்ற
    விரித்த வலைவெவ் வினையை -அறுத்து
    இழைத்திடுவான் அத்தச்சன் எண்ணென் கலையாய்
    அழைத்திடுவாய் அவ்வை அளவு….(1)….

    ஏகதந்தர்
    ———–
    சோகம் களைந்து ஸுமுகம் குவித்திடும்
    யோகம் விரும்பிட ஏற்றிவிடும் -ஏகதந்தன்
    காப்பிருக்க கற்பூரம் கூடவேண்டாம், காரியக்கை
    பூப்பறிக்கும் உன்வீட்டில் பார்….(2)….

    கபிலர்
    ——–
    சிந்தூர வண்ணனை சித்தி அருளேக
    தந்தன் கபிலனைத் தோத்தரிக்க -வந்த
    கருத்ததெல்லாம் பாலாக, கண்முன் விலகும்
    வருத்தமெலாம் சாயம் வெளுத்து….(3)….

    கஜகர்ணகர்
    —————
    கஜகர்ணம் மற்ற கடவுளர்க்கு போட
    நிஜவர்ணம் காட்டும் நெகிழ்ந்து -கஜகர்
    ணகர்கபிலர் காதினில் நாத்திக பூசை
    பகர்அப லைக்கும் பலன்….(4)….
    லம்போதரர்
    ————–
    சம்போ மகாதேவர் செய்த தலைப்பிள்ளை
    லம்போ தரனால் லகுவாக -வம்போடு
    தும்பும் விலகும் துதிக்கை விரட்டிடும்;
    நம்பாள் கஜகர் ணகர்….(5)….

    விகடர்
    ———–
    மகுடம் தரித்தரன் முப்புரம் ஏக
    சகடத்தின் அச்சை சிதைத்த -விகடன்
    லலிதாங்கி மைந்தனை லம்போ தரனை
    எலிதாங்கும் ஆனையை ஏத்து….(6)….

    விக்கினராஜர்
    —————-
    சுக்கிரன் பார்க்க சுரர்கள் பணிந்திட
    இக்கிரக பூமியில் இந்திரனாய், -விக்கின
    ராஜன் விகடனை ராப்பகலாய் வேண்டிட
    பூஜா பலனாய் பவிஷு….(7)….

    வினாயகர்
    ————
    வினாஅகம் கேட்க விசாரணை செய்யும்
    மனோமுக மார்கம் முனிக்கே -வினாயகன்
    விக்கின ராஜனை வேண்டித் துயில்வோர்க்கு
    சொக்கிடும் போதேமோட் ஷம்….(8)….

    தூமகேது
    ———–
    சோமதேவன் சீமந்தன் மாமன்மால் அம்சமா
    சாமகாதன் சீமந்தன் மாமன்மால் அம்சமாய்
    தூமரூப துஷ்டனைத் தீர்த்திட -தூமகேது
    தூமதீது துஷ்டனைத் தீர்த்திட -தூமகேது
    வாக அவதரித்து வெற்றியை சூடிய
    வாகை வினாயகனை வாழ்த்து….(9)….

    கணாத்யஷர்
    —————
    அனாதியாதி அச்சன் அரசவை பூத
    கணாதி களின்சேனைக் காவல் -ஜனாதிபதி
    தூமகேது முன்புநின்று தோப்புக் கரணமிட
    சாமகீதம் சம்சார சிந்து….(10)….

    பாலசந்த்ரர்
    ————–
    நாலுமுகன் செய்த நடிகர் களையியக்கும்
    பாலமுக பாலசந்த்ர பிள்ளையார் -ஞால
    கணாத்யஷன் காலில் கிடப்போர்க்கு நாளும்
    தனாக்ஷர தீரம் தரும்….(11)….
    கஜானனர்
    ————-
    அஜாதசத்ரு ஆனை அரக்கனுக்(கு) அன்று
    கஜேந்திர மோட்ஷம் கொடுத்த -கஜானனன்
    கோலசந்த்ரன் கொண்டமகா கர்வம் அடக்கிய
    பாலசந்த்ரன் பாதம் புகு….(12)….

    வக்ரதுண்டர்
    —————
    வக்ரதுண்ட சேயின் விடைபெறாமல், முப்புர
    நிக்ரகம் செய்ய நினைத்தூர்ந்த -உக்ரகண்டர்
    சக்ரதுண்டம் செய்த சதுர்த்தி கஜானனர்
    விக்னகண்டம் தீர்ப்பார் விரைந்து….(13)….

    சூர்ப்பகர்ணர்
    —————-
    வரம்தரும் போதே முறம்போல தீதை
    புரம்தள்ளி நையப் புடைத்து -அறம்பொருள்
    ஆர்ப்புகங்கை போலின்பம், அவ்வீடு சேர்த்திடும்
    சூர்ப்பகர்ண வக்ரதுண்ட சேய்….(14)….

    ஹேரம்பர்
    ————-
    பேரம்பார் பண்ணிப்பார் பூவெருக்கம் புல்லருகம்
    பேரன்பாய் பாதத்தில் போட்டுவிட்டு -ஆரம்பம்
    ஹேரம்பா என்றழைக்க எப்படியும் வெற்றிதான்
    நேரும்பார் சூர்ப்பகர்ண னால்….(15)….

    ஸ்கந்தபூர்வஜர்
    —————–
    சீரும்பர் கோன்மகள் சேனை கரம்பிடித்த
    சூரன்பால் வேலெறிந்த ஸ்கந்தனுக்கு -ஹேரம்பர்
    முன்வந்த பூர்வஜர் ,பெண்ணாக வெற்றியாய்நம்
    பின்வந்து நிற்கும் பிடி….(16)….

    பலஸ்ருதி
    ————-

    பதினாறும் பெற்று பெருவாழ்வு காண
    பதினாறு பேர்களைப் பெற்ற -அதிகாரி
    அக்கணேச ஆனைமுன் விக்கினங்கள் வைத்திட
    மக்கிடுமே மண்புழுவாய் மாய்ந்து….

    ——————————————————————————————————————————————————————-

    Share
  • திருமால் திருப்புகழ் (78)

     

    கிரேசி மோகன்

     

    Venugeetham, watercolor, #Krishnafortoday Keshav
    Venugeetham, watercolor, #Krishnafortoday Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————–
    ’’கண்ணன் காப்பு’’
    ——————————

    Gosakha. Oil on canvas. 2006. #krishnafortoday  Keshav
    Gosakha. Oil on canvas. 2006. #krishnafortoday Keshav

    வையங்கள் ஏழை, வயிறார உண்டும்,
    ஐயம் மிகக்கொண்டு அய்யனே ,-கையால்,
    பிடித்துக் கமலப், பதவிரலை அன்று,
    கடித்துக் களித்தவனே, காப்பு….

    நான்மறை ஓதிடும் ,நான்முகன் வாழ்ந்திடும்,
    தாமரை நாபியும், பூமகள் -போய்மறையும்,
    சந்தனம், ஸ்ரீவத்ஸம், சாற்றும் திருத்துழாய்யு
    கந்திடும் திண்மார்பும் காப்பு….

    மோதகப் பிள்ளை முழுங்க, பதைபதைத்து
    பீதகப் பட்டாடை பாழாகக், -காதினைக்,
    கைகளால் பற்றி, கரணமிட்(டு) ஆழியை
    கொய்தகோ பாலனே, காப்பு….

    தேர்கடவி, பாரதப் போர்முடிக்க, பார்த்தனின்
    சீர்கெடலை கீதையால் செப்பனிட்டோன், -மோர்குடத்தை
    கல்லால் உடைத்தன்று, கோபியர் கோபத்திற்க்
    குள்ளான கண்ணனே காப்பு….

    சாக்கிரதை யாக சகாக்களுடன் சென்றாயர்,
    தூக்கிலிட்ட வெண்ணை திருடியுண்ட, -போக்கிரிப்
    பையனே. பேய்மழைக்குப் பர்வதம் தாங்கியக்
    கையனே, கண்ணனே, காப்பு

    ——————————————————————————————–

     

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/2014_01_01_archive.html

     

    Share
  • வன்முறை

     

    மாதவன் இளங்கோ

     

    என்னுடைய வன்முறையை எதிர்த்துக்images

    குரல் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன –

    தாவரங்கள்!

    எனக்குத்தான் அது கேட்பதில்லை!

    கேட்டாலும் அதுபற்றி

    எனக்குக் கவலையில்லை! (more…)

    Share
  • ஒரு விதி — இரு பெண்கள்

     

    நிர்மலா ராகவன்

    “என் கணவர் என்னை நல்லா பாத்துக்கிறார். இவர் எனக்கு மூணாவது!” எண்ணையைத் தடவி, என் உடலைப் பிடித்துவிடும்போது, தன்போக்கில் பேசினாள் அய்னுல்.

    அவள் சொன்னவிதம் எப்படி சாதாரணமாக இருந்ததோ, அதேபோல் நானும் அதை ஏற்றுக்கொண்டேன். அதிர்ச்சியோ, அருவருப்போ ஏற்படவில்லை.

    “மத்த ரெண்டு பேர்?” என்று கேட்டேன். இரண்டு மணி நேரம் போகவேண்டுமே! அத்துடன், மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்ந்திருந்த எனக்கு ஒரு புதிய உலகத்தைப் பார்ப்பது போலிருந்தது.

    “நம்பர் ஒன் இறந்து போயிட்டார். ரெண்டாவது ப்ளே பாய்! அப்படின்னா ஒங்களுக்குத் தெரியுமா?”

    `இப்படியும் ஒரு அப்பாவியா!’ என்று வியந்துகொண்டு, “உம்” என்றேன்.

    “அவர் ரொம்ப அழகா இருப்பார். மாடல்!”

    “மாடல்மாதிரியா?”

    “மாடலேதான். அழகான பொண்ணுங்க பணக்காரியாவும் இருந்துட்டா, விடமாட்டார். அவங்களை மயக்கிடுவார். அவங்க நிறைய காசு குடுப்பாங்க! அவர் வேற வேலை எதுவும் செய்யல”.

    எனக்குச் சில தமிழ் நடிகர்கள் ஞாபகம் வந்தது.

    _DSC9556“எங்கிட்ட அந்தக் காசைக் குடுப்பார். ஆனா, எனக்கு வாங்கப் பிடிக்கலே. என் கையிலே தொழில் இருக்கு. கெட்ட வழியில வர்ற காசு எதுக்கு! அவரை விவாகரத்து பண்ணலாம்னு பாத்தேன். ஆனா அவர் விடலே”. பேசிக்கொண்டே போனாள். நானும் சுவாரசியமாகக் கேட்டேன்.

    “கல் ரொம்ப சூடா இருந்தா சொல்லுங்க, மாம்!” என்றபடி, கொதிக்கும் நீரில் அமிழ்ந்துகிடந்த எரிமலைக் கற்களை என் கால்களில் மேலிருந்து கீழே தேய்த்தாள். இதமாக இருந்தது.

    கைகள் அவள் போக்கில் பழகிய வேலை செய்ய, தன் கதையைத் தொடர்ந்தாள். “என் ஃப்ரெண்ட் ஒருத்தி, என்னை ஒரு போமோகிட்ட (BOMOH, MALAY VILLAGE MEDICINE MAN) கூட்டிட்டுப் போனா — `ஒன் புருஷனோட நடத்தையை இவரால மாத்த முடியும்’னு! இப்ப அந்த `இந்தோன்’தான் என்னோட மூணாவது புருஷன்!”

    எனக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டேன்.

    “அவரோ, `நீ கட்டியிருக்கிற ஆளு BLACK MAGIC பயன்படுத்தறான். அவனை மாத்த முடியாது. ஆனா, ஒன்னை மாத்த முடியும்,’னு சொன்னார். அந்த ப்ளே பாய் ஒருவழியா எனக்கு விவாகரத்து குடுத்தார்!”

    “எத்தனை வருஷமாச்சு நீ இந்த..?”

    நான் கேள்வியை முடிப்பதற்குள், “ரெண்டு வருஷம். அவர்தான் முதலில் கேட்டார். நான் ரொம்ப யோசிச்சேன். என் மூத்த மகன் ஹலீம்தான், `இந்தோனீசியரா இருந்தா என்ன? அவரும் மனுசன்தானே!’ன்னு புத்தி சொன்னான். அவனுக்கும் கல்யாணமாகி, ரெண்டு பிள்ளைங்க ஆகிடுச்சு. நாளைக்கே, நாலு பிள்ளைங்களும் தனித் தனியா போயிட்டா, என்னை யாரு பாத்துப்பாங்க? அதான், `சரி’ன்னுட்டேன்”.

    பேச்சு சுவாரசியத்தில் ரொம்ப சூடாக இருந்த கல்லை அய்னுல் என் வயிற்றுப் பகுதியில் வைக்க, “ஆ!” என்று அலறினேன். உணர்ச்சியற்ற குரலில் மன்னிப்பு கேட்டபடி (வழக்கமாகச் செய்வதுதானோ?) தொடர்ந்தாள். “இவர் என்னை நல்லா பாத்துக்கிறார், மாம். சம்பாதிக்கிறதை அப்படியே எங்கிட்ட குடுத்துடறார்! பக்கவாதம் வந்தவங்களுக்கு, அவங்க வீட்டுக்கே போய் சிகிச்சை குடுக்கறார்!” என்றவள், எதையோ பகிர்ந்து கொள்ளலாமா என்று சற்று யோசித்துவிட்டுத் தொடர்ந்தாள்.

    “எங்க மாநில சுல்தானோட அம்மாவுக்கு இவர்தான் மஸாஜ் செய்வார். அவங்க ஸ்ட்ரோக் வந்து, படுத்தபடுக்கையா கிடந்தவங்க. இப்ப நல்லா நடக்கிறாங்க!” என்று பெருமையுடன் தெரிவித்தாள்.

    அவளுடைய பூரிப்பைப் பகிர்ந்துகொண்ட விதத்தில், ஏதேனும் சொல்ல வேண்டும்போல இருந்தது எனக்கு. “நீ இன்னும் அழகா இருக்கியே! அதான் ஒனக்காக போட்டி போட்டுக்கிட்டு வர்றாங்க!” என்றேன். அவளுக்கு ஐம்பது வயதுக்குமேல் என்று தெரியும்.

    “நெசமாவா?” என்றாள். குரலில் அப்படி ஒன்றும் மகிழ்ச்சி இல்லை. பல பேர் புகழ்ந்திருப்பார்கள். அதனால், அதை அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று நினைத்தேன். ஒருவேளை, முக அழகு இயற்கையில் அமைந்ததுதானே, இதில் தான் பெருமைப்பட என்ன இருக்கிறது என்ற் நினைத்திருக்கலாம்.

    மஸாஜ் முடிந்ததும், வாய்வு விலக, துருவிய இஞ்சியை பழுப்புச் சீனியுடன் கொதிநீரில் போட்ட டீ கொடுப்பார்கள். ஊதிக் குடித்தபடி, ஆற அமர உட்கார்ந்து யோசித்தேன்.

    கும்பகோணத்தில் நடந்த அக்கல்யாணத்திற்கு நான் போய் மூன்று வருடங்கள் ஆகியிருக்குமா? கல்யாண சத்திரத்தில், மாப்பிள்ளையின் பெரியம்மா, விசாலி, ஏதோ சாமானை ஒழுங்காக அடுக்கப்போக, மணமகளின் தகப்பனார், “நீங்க தொடாதீங்கோ!” என்று அலறியதை எப்படி மறக்க முடியும்! ஐம்பது பிராயத்தைத் தாண்டியிருந்த விசாலி, தன் கையிலிருந்ததை மெதுவாகக் கீழே போட்டுவிட்டு, உள்ளே போனாள். அவள் முகத்தில் காணப்படாத அதிர்ச்சி அப்போது என் முகத்தில் அப்பி இருந்திருக்கும்.

    முப்பது வயதுக்குள் கணவனை இழந்து, இரண்டு குழந்தைகளுடன் தனித்து விடப்பட்டவள், பாவம்! எந்தப் புடவை அணிந்தாலும், ரவிக்கை என்னவோ வெள்ளைதான். நெற்றியில் எப்போதும் விபூதி. பிற ஆண்களுடன் இன்னொரு பெண் சிரித்துப் பேசினாலே, இரண்டு சாராருக்கும் கள்ளத்தொடர்பு இருக்கலாம் என்பதுபோல் இவள் ஏன் வம்பு பேசுகிறாள் என்று பலமுறை யோசித்திருக்கிறேன். ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடல் உறவைத் தவிர, வேறு எந்தவிதமான தொடர்பும் இருக்க முடியாது என்று ஆணித்தரமாக விசாலியை நம்பவைத்தது சமூகத்தின் கட்டுப்பாடுகளா? அதனால் உடைந்த உள்ளத்தின் எதிரொலியா?

    பல தலைமுறைகளாகப் பெண்கள் கடைப்பிடித்து வந்தததை எதிர்க்கத் துணிவின்றி, அடங்கிப்போவதுபோல் காட்டிக்கொண்டாலும், உணர்ச்சிகள் அடங்கிவிடுமா, என்ன! இம்மாதிரியான பேச்சுதான் இவளுக்கு வடிகாலோ? பிற சமுதாயங்களில் பெண்கள் எந்த வயதிலும் துணை தேடிக்கொண்டு, எப்படி நிறைவோடு இருக்கிறார்கள் என்பதை அவளுக்குப் புரியவைக்க வேண்டும்.

    அடுத்த முறை அய்னுல்லின் கதையை விசாலியிடம் சொல்லவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன். அதை எப்படி ஏற்பாள்? தன் பாடு மட்டும் இப்படி ஆகிவிட்டதே என்று நொந்துகொள்வாளோ?

    ஊகும்!

    `கஷ்டகாலம்! சில பேருக்கு கல்யாணம்னா கத்திரிக்காய் வியாபாரம்!’ என்று தலையில் அடித்துக்கொள்வாள் என்றுதான் தோன்றியது.

     

     

    படம் உதவி: http://www.coppolaresorts.com/blancaneaux/amenities/waterfall-spa

    http://ffcp.s3.amazonaws.com/coppolaresorts/blancaneaux/313_amenities/5_waterfall_spa/_DSC9556.jpg

    Share
  • அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும் – 1

     

    – கே.எஸ்.சுதாகர்

    ஒரு நாட்டின் மூலமான மக்களை சுதேசிகள் (Indigenous people) என்கின்றோம். மூத்தகுடிகள், பூர்வீகக்குடிகள் என்றும் சொல்லலாம். அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை ஆதிவாசிகள் (Aboriginals), தீவுவாசிகள் (Torres Strait Islanders) என்ற இரண்டு வகையான மக்களை அப்படிச் சொல்கின்றார்கள். இவர்களுக்கிடையே ஏராளமான வித்தியாசமான பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், மொழியினைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.

    Australian Census 2011 demographic map – Australia by SLA – BCP field 0051 Indigenous Persons Both Aboriginal and Torres Strait Islander Persons [wikipedia.org]

    அவுஸ்திரேலியாவில் உள்ள மக்கள் தொகையில் இவர்கள் 2% ஆவார்கள். இது ஏறக்குறைய 400,000. இதில் ஆதிக்குடிகள் 357,000. ஐரோப்பியர்களின் வருகைக்கு (1788) முன்னர் ஏறத்தாழ 600 – 700 இனக்குழுவினர் (tribal groups) இருந்திருக்கின்றார்கள். அப்போது ஏறக்குறைய 250 விதமான மொழியைப் பேசியிருக்கின்றார்கள்.

    இதில் ஆதிக்குடிகள் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவில் இருந்தும், தீவுவாசிகள் Torres Strait (400ற்கும் மேற்பட்ட தீவுகள்) இலிருந்தும் வந்தவர்கள் ஆவார். ஆதிகாலத்தில் அவுஸ்திரேலியாவும் ஆசியாவும் ஒன்றாக இருந்ததாகவும் (ஆழமற்ற கடல் பரப்பு இவை இரண்டையும் இணைத்திருந்தது) பின்னர் இவையிரண்டும் பிரிந்ததாகவும் சொல்லப்படுகின்றது. இற்றைக்கு 50,000 – 130,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள தீவுகளிலிருந்து, இந்த ஆழமற்ற கடல்பரப்பினூடாக முதன்முதலாக அவுஸ்திரேலியாவிற்கு ஆதிக்குடிகள் வந்து சேர்ந்தார்கள் என நம்பப்படுகிறது. இவர்கள் அவுஸ்திரேலியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள கடற்கரையோரங்களில் முதலில் குடியேறினார்கள். விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, 56,000 – 78,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் பெறப்பட்டுள்ளன.

    சுதேசிகள் தாம் வாழ்ந்த இடங்களைக் கொண்டு பின்வருமாறு அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
    Nyoogar (மேற்கு அவுஸ்திரேலியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ளவர்கள்)
    Murri (நியூ சவுத்வேல்ஷின் வடக்குப்புறம் மற்றும் குவீன்ஸ்லாந்தின் தென்கிழக்கு)
    Yolngu (Nothern Territory இன் வடக்குப்புற நிலமான Arnhem)
    Palawa (ரஸ்மேனியா – Tasmania)
    Nungah (தெற்கு அவுஸ்திரேலியா)
    Koori (நீயூ சவுத் வேல்ஸ்)
    Koorie (விக்டோரியா)

    733px-Alexander_Schramm_-_A_scene_in_South_Australia_-_Google_Art_Project

    1770 ஆம் ஆண்டு பிரித்தானியாவிலிருந்து கப்டன் ஜேம்ஸ் குக் என்பவர் தனது Endeavour என்ற கப்பலின் மூலம் Botany Bay என்ற இடத்தை வந்தடைந்தான். அதன்பிறகு 18 வருடங்கள் கழித்து குடியிருப்பதற்காக பிரிட்டனில் இருந்து வந்தார்கள். பழங்குடிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டன. சில ப்ழங்குடிக்குழுக்கள் கொல்லப்பட்டனர். 1789 இல் பிரித்தானியமக்கள் கொண்டுவந்த சின்னம்மை மூலம் சிட்னியைச் சூழவிருந்த ஆதிக்குடிகள் கொல்லப்பட்டனர். ஒருபோதும் இந்த வருத்தத்தைச் சந்தித்திராத அவர்களுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி இருக்கவில்லை.

    ஆதிக்குடிகளின் பிள்ளைகள் அவர்களிடமிருந்து பலவந்தமாகப் (STOLEN GENERATION) பிரித்தெடுக்கப்பட்டார்கள். இந்தப்பிரித்தெடுப்பு 1970 ஆம் ஆண்டுவரை நடந்தது. எத்தனை பிள்ளைகள் இப்படிப் பிரித்தெடுக்கபட்டார்கள் என்ற சரியான தரவுகள் கிடைக்கவில்லை. தரவுகள் அழிக்கப்பட்டன, தொலைந்துவிட்டன. ஏறத்தாழ 1910 இலிருந்து 1970 வரை 10% ஆன பிள்ளைகள் பிரித்தெடுக்கப்பட்டார்கள்.

    Australian Aboriginal Flag [wikipedia.org]

    ஆதிக்குடிகளுக்கென ஒரு கொடி Harold Thomas இனால் உருவாக்கப்பட்டு 1971 இல் அடிலயிட்டில் (Adelaide) பறக்கவிடப்பட்டது. கொடியின் மேற்பகுதியான கறுப்பு நிறம் ஆதிக்குடிகளையும், கீழ்ப்பகுதியான சிவப்புநிறம் ஆதிக்குடிகளுக்கும் நிலத்துக்குமான தொடர்பையும், நடுவே இருக்கும் மஞ்சள் நிறத்திலான வட்டம் சூரியனையும் குறிக்கிறது. உலகைப் படைத்தவர்கள் முன்னோர்கள் எனவும், அவர்களே நிலத்தைப் படைத்து அதிலே மலைகள் ஆறுகள் மரங்கள் என்பவற்றை உருவாக்கினார்கள் எனவும் ஆதிவாசிகள் நம்புகின்றார்கள்.

    1981 Arnhemland Aboriginal Performance on Open Air Theatre [wikipedia.org]

    டிடிஜிறிடு (Didjeridu) என்ற வாத்தியக்கருவியும் பூமராங்கும் (Boomerang) ஆதிக்குடிகளின் சின்னங்களாகக் கருதப்படுகின்றன.

    1960 ஆம் ஆண்டுவரையும் வாழ்வாதாரத்துக்கான (கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவை) உரிமைகள் மறுக்கபட்ட நிலையில் ஆதிக்குடிகள் இருந்துள்ளார்கள். 1965 ஆம் ஆண்டுமுதல் vote போடும் உரிமை பெற்றார்கள். 1967 முதல் குடித்தொகை மதிப்பீட்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். 7 கோடி 618 இலட்சம் சதுர கிலோமீட்டரைக் கொண்ட அவுஸ்திரேலிய நிலப்பரப்பில் ஆதிவாசிகளுக்கென ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பு 9 இலட்சத்து 20 ஆயிரம் சதுரகிலோமீட்டர்கள் ஆகும்.

    Aboriginal boys and men in front of a bush shelter [wikipedia.org]

    1972 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா தினத்தன்று, ஆதிக்குடிகள் கன்பராவில் உள்ள பாராளுமன்றத்திற்கு முன்னால் உள்ள Ngunnawal என்ற நிலத்தில் ஒரு கூடாரம் அமைத்து தமது கொடியைப் பறக்கவிட்டார்கள். ‘அவுஸ்திரேலியா அரசு தங்களை ஒரு வெளிநாட்டுப்பிரஜைகள் போல நடத்துவதால், வெளிநாட்டு மக்களுக்கு இருக்கும் Embassy போல தங்களுக்கும் ஒன்று தேவை’ என அறிவித்து அந்தக்கூடாரத்தை ஆதிக்குடிகளின் Embassy என அறிவித்தார்கள். அவுஸ்திரேலியா அரசு அதை அகற்றுவதற்கு முயற்சித்த போதிலும், அது மீண்டும் கட்டப்பட்டு 1992 முதல் நிரந்தரமாக அங்கே உள்ளது.

    ஐரோப்பியரின் வருகைக்கு முன்னர் ஏறக்குறைய 250 ஆதிக்குடிகளின் மொழிகள் (Alngith, Antakarinya, Bandjalang, Bayungu, Darling, Dirari, Iwaidja, Kamu, Kanju, Thawa, Yorta Yorta) இருந்தன. காலப்போக்கில் இவை அழிந்து கொண்டு வருகின்றன. ஆதிக்குடிகள் பேசிவந்த barramundi, billabong, boomerang, kangaroo, kookaburra, dingo, koala, wombat போன்ற பல சொற்கள் இன்று அவுஸ்திரேலியர்களின் ஆங்கிலச்சொற்களுடன் கலந்துவிட்டன.

    Share
  • மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாடவேண்டும்!

    -கவிஞர் காவிரிமைந்தன்

     

    திரு. பி.பி. ஸ்ரீனிவாஸ் குரலில் மெளனத்தின் ஆலாபனை

    எண்ணிலடங்கா ஏடுகளில் எத்தனையோ கவிதைகள்

    எழுதிக் குவித்த கவிஞர்களின் எண்ணிக்கையும் இங்கு அதிகம்!

    அன்றுமின்றும் பெண்ணைப் பற்றிப் பாடாத கவிஞன் யாரிங்கே?

    சொல்லும் பொருளும் துள்ளி வருவது பெண்ணைப்பற்றி எழுதும்போதுதானே!

    கண்களில் தோன்றுமிந்த காந்த மின்னல்..சில..பல..

    எண்ணப் பரிமாறல்களால் காதல் ஆகிவிடும் விந்தை!

    தன்னுள் ஏற்பட்ட தாக்கத்தை மொழிபெயர்த்தால்

    தானாக மலர்ந்திடுமே கவிதை!  பூங்கவிதை!!

    தொன்று தொட்ட தமிழ்க்குடியில் பிறந்தமகள்!

    தாய்வீட்டுச் சீதனமாய் நான்குவகை குணங்கள்!

    எழில்சிந்தும் இளமையின் ஏற்றமிகு வதனம்!

    இருந்தாலும் ஓர் குறைதான் உண்டு அந்த ஊமைப்பெண்ணில்!!

    இவள் கண்ட மணவாழ்க்கை இனித்திடுமா எனும்கேள்வி

    மனதினிலே தாங்கியபடி புகுகின்றாள் முதலிரவு!

    கரம்பற்றும் நாயகனைத் தினம் அழைக்க வழிகளில்லை!

    சரம்சரமாய் நீர்விழுமே!  இருகண்ணில் இருந்தபடி!!

    இதுதான் காட்சியென..பாடலொன்று வேண்டுமெனக் கவிஞர் பணிக்கப்படுகிறார். கதாநாயகன் பாடும் பாடல் நாயகிக்கு இதமாக இருக்க வேண்டும்.  இன்னும் சொல்லப்போனால் அவள் மனம் காயப்பட்டுவிடக் கூடாதென..எத்தனை லாவகமாய்..கவனமாய்..வார்த்தைகளைச் சித்திரம் போல் செதுக்கியிருக்கிறார்!

    மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்

    நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

    மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்

    நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

    அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் தேன்

    ஆறு போலப் பொங்கி வரவேண்டும் வரவேண்டும்

    அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் தேன்

    ஆறு போலப் பொங்கி வரவேண்டும்

    அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகைபோல் – என்னை

    அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் – என்னை

    அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் ம்ம்..

    இதுவரை எழுதிய வரிகளிலும் மென்மை நிறைந்திருக்கிறது.  எனினும் இனிவரும் வரிகளைப் பாருங்கள்..இப்படி எழுதக் கண்ணதாசன் மட்டுமே வர வேண்டும்!!

    முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்

    வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும் மொழி வேண்டும்

    முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்

    வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்

    முன்னம் இருக்கும் இந்தச் சின்ன முகத்தில் பல

    மொழிகள் பாடம் பெற வரவேண்டும் பல

    மொழிகள் பாடம் பெற வரவேண்டும் ம்ம்..

    இவளது முகத்தில் தவழும் மெளன மொழியை அறிந்துகொள்ளப் பல மொழிகளும் அவளிடம் வரவேண்டுமாம்!  பெண்மையின் மென்மையை – கண்ணதாசனே எத்தனை அழகாய் ஆராதித்திருக்கிறாய்? கவிதையா.. உணர்ச்சியா..?! உன்னால்தான்  இப்படி மொழிபெயர்ப்பு நடத்த முடிகிறது!  உன்னால்தான் திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் முழுநிலவாய் ஜொலிக்கின்றன! உள்ளத்தின் கதவுகள் எல்லாம் உன் கவிதை பெறவே திறந்து கொண்டன!

    திரைப்படம்: கொடிமலர்                                                                                          

    பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்                                              

    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

    இசை:  விஸ்வநாதன்  ராமமூர்த்தி     

    http://www.youtube.com/watch?v=PFO5EbeDm5I

    mouname-1

    மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்

    நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

    மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்

    நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

     

    அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் தேன்

    ஆறு போலப் பொங்கி வரவேண்டும் வரவேண்டும்

    அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் தேன்

    ஆறு போலப் பொங்கி வரவேண்டும்

    அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகைபோல் – என்னை

    அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் – என்னை

    அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் ம்ம்..

     

    மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்

    நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

     

    முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்

    வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும் மொழி வேண்டும்

    முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்

    வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்

    முன்னம் இருக்கும் இந்தச் சின்ன முகத்தில் பல

    மொழிகள் பாடம் பெற வரவேண்டும் பல

    மொழிகள் பாடம் பெற வரவேண்டும் ம்ம்..

     

    மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்

    நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

    எனக்காக இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் பாடி என்னை மகிழ்வித்த ராகப்பிரவாகம் சுந்தருக்கு என் உள்ளத்து நன்றிகள்!

    http://www.youtube.com/watch?v=PFO5EbeDm5I

    Share
  • என் அண்ணி..என் அன்னை!

    -விசாலம்

    vallamai image1

    என் அண்ணி எனக்குத் தாய்!

    தாயில்லாத நிலையில்

    அவளே எனக்குத் தாயானாள்!

    நிலாக் காட்டிச் சோறு ஊட்டினாள்!

    அவள் மடியில் நான் படுக்க,

    வந்தன பல நீதிக் கதைகள்!

    அவள் ஜீஜாபாயாக ஆனாள்,

    என்னைச் சிவாஜியாக ஆக்க!

    கணக்கில் தவறு செய்ய,

    கன்னத்தில் விழும் செல்ல அடி!

    நான் அவள் கழுத்தை அணைப்பேன்,

    என் உச்சியில் ஒரு “இச்” கொடுப்பாள்!

    அண்ணனுக்கு ஆபிஸே உலகம்…

    எனக்கோ அண்ணியே உலகம்!

    கிரிக்கெட்டுக்கும் வருவாள்,

    என் சிக்சரில் மனமகிழ்வாள்!

     

    இன்று நான் ஓர் ஆணழகன்!

    மீசை முளைத்த   துடி இளைஞன்!

    முதல் மாதச் சம்பளம் என் கையில்…

    முகமலர அண்ணி வந்தாள்!

    “வாழ்த்துகள்!” என்று கைக்குலுக்கினாள்.

    முதுகில் மட்டும் ஒரு செல்லத்தட்டு!

    மடியில் இடம் கொடுத்த அண்ணி

    இன்று மாறுபட்டு இருப்பதேன்?

    அணைக்கத் துடித்த என் கைகளை

    ஏதோ ஒன்று தடுப்பதேன்?

    அண்ணியின் வளர்ப்புமுறையா?

    மனதிற்கு ஒரு தடுப்புமுறையா?

    சமுதாயம் என்ற வேலியா?

    சட்டம் என்ற கல் சுவரா?

     

    Share
  • திருமால் திருப்புகழ் (77)

     
    கிரேசி மோகன்

    Bhagavad Gita. Watercolor. #Krishnafortoday - Keshav
    Bhagavad Gita. Watercolor. #Krishnafortoday – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————

    Madhuradhipathy - oil on canvas. Let 2014 be full of Madhuram, sweetness. Keshav
    Madhuradhipathy – oil on canvas. Let 2014 be full of Madhuram, sweetness. Keshav

    ’’கண்ணன் காப்பு’’
    ——————————–
    உறியிழுத்தாய், பின்னர் உரலிழுத்தாய், பின்னர்
    மரமிழுத்தாய், பின்னர் மதகில் – அரவிழுத்தாய்,
    பின்னர் நகிலிழுத்தாய், பெண்கள் துகிலிழுத்தாய்,
    கண்ணா எனையிழுப்பாய், காப்பு….

    சகடா சுரனை சுமந்தா காய,
    முகடில் முறித்த முகுந்தா, – பகடையில்,
    தோற்றவர்க்காய் தேரேறி , நூற்றவர் மாய்ந்திட,
    கூற்றவனாய் நின்றவனே, காப்பு….

    கோடி குருமார்கள் கூறிய வேதாந்தம்,
    தேடிப் படித்தும் திருப்தியில்லை, – நாடியில்,
    ஏதோ அதிருப்தி, என்னென்று சொல்வது,
    கீதோ பதேசகா, காப்பு….

    தரையில் புரளபீ தாம்பர ஆடை,
    சுருளும் முடிநுதல் சாய, -முரளி
    மனோகரா வந்துன், மதிவதனம் காட்டு.
    கனாவரும் நேரத்தில், காப்பு….

    கன்னத்தில் அன்னையிட்ட, கண்மை திருஷ்டியது,
    வண்ணக் கருமையில் வாடிட, -எண்ணற்ற,
    இம்சைக்(கு) இடமாகி, இன்னல் கடந்தோனே,
    கம்சன் மருகோனே, காப்பு!!
    ——————————————————————————————————————-

     

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/2014_01_01_archive.html

     

    Share
  • ‘மறு வாசிப்பில் தேவன்’: கிரேசி மோகன்

    முனைவர் அண்ணாகண்ணன்

    இலக்கிய வீதியும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சும் இணைந்து ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ என்ற தலைப்பில் சென்னை, தியாகராய நகர், கிருஷ்ண கான சபாவில் மாதந்தோறும் இலக்கிய நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் 02.05.2014 அன்று ‘மறு வாசிப்பில் தேவன்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் கிரேசி மோகன் உரையாற்றினார். மிக இயல்பாகவும் எளிமையாகவும் நகைச்சுவை மிளிர, அவரது உரை அமைந்திருந்தது.

    Ilakkiyaveedhi2_02052014

    “எனக்கு இலக்கியம் எல்லாம் தெரியாது; தெரிந்ததெல்லாம் கலக்கியம்தான்” என்றே பேச்சைத் தொடங்கினார். அவரது உரையிலிருந்து ஒரு சிறிய பகுதி இங்கே:

    “தேவனின் படைப்புகளிலிருந்து தாக்கம் பெற்றே இன்றும் நான் எழுதி வருகிறேன். அவருடைய கதை ஒன்றில், தன்னிடம் கண் ஆப்பரேஷன் செய்துகொண்ட ஒருவரிடம் டாக்டர் ரெண்டு விரலைக் காட்டி, இது எவ்வளவு என்பார்; அவர் ரெண்டு என்பார்; ரெண்டாயிரம் ரூபாய் கட்டணம் என்பதையும் அதில் மறைமுகமாகச் சுட்டுவார்; இது போன்ற இயல்பான நகைச்சுவையைத் தேவனிடம் காணலாம். அவரைத் தமிழின் பி.ஜி.வுட்ஹவுஸ் (P.G.Wodehouse) என்பார்கள்; நான், பி.ஜி.வுட்ஹவுஸை இங்கிலாந்தின் தேவன் என்பேன்.

    “அந்தக் காலத்து நடைமுறைகளைத் தேவன் எழுத்திலிருந்து நிறையக் கற்க முடிகிறது. தேவனின் அப்பா மறைந்த போது, ஆசாரம் மிகுந்த அவர் குடும்ப நண்பர் ஒருவர், தேவனிடம் துக்கம் விசாரிக்கவில்லை; விசாரித்தால் அந்தத் தீட்டு ஒட்டிக்கொள்ளும்; குளிக்க வேண்டும் என்பதால், தேவன் வரும்போதெல்லாம் ஓடி ஒளிந்திருக்கிறார். அவரைத் தேவன் ஒரு முறை நிறுத்தி, செத்துப் போனது எங்க அப்பாதான்; நான் இல்லை என நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார்.

    Ilakkiyaveedhi1_02052014

    “தேவன், பிராமணத்துவமாக எழுதினார் எனச் சிலர் விமர்சிக்கிறார்கள்; அது, முழு உண்மை இல்லை; அவர், முதலியார் மொழியிலும் இதர பிரிவினரின் மொழியிலும் கூட எழுதியிருக்கிறார். அவர், அய்யராக இருந்தாலும் அய்யங்கார் பாத்திரங்களைச் சிறப்பாக எழுதியிருக்கிறார்; அய்யங்கார் பரிபாஷைகளை அவரிடமிருந்தே நான் கற்றேன். அப்படியே பிராமண நடையில் அவர் எழுதியிருந்தாலும் அது ஒன்றும் தவறு இல்லை. ஏனெனில் அது அவரோடு உடன் பிறந்தது. என்னை ரிக்‌ஷாக்காரன் வேடத்தில் நடிக்க வைத்தாலும் என்னால் பிராமண பாஷையில்தான் பேச முடியும்.

    “அவ்வை சண்முகியில் முதலியார் பாத்திரத்துக்காகத் தேவனின் கதைகளைப் படித்துக் குறிப்பெடுத்துக்கொண்டேன். சதிலீலாவதி படத்திற்கு முதலில் என் மொழியில் வசனங்களை எழுதிவிட்டு, அதன் பிறகு கோவை சரளாவுடன் உட்கார்ந்து, அதைக் கொங்குத் தமிழுக்கு மாற்றினேன். அது போல், தெனாலி படத்திற்கு என் மொழியில் வசனங்களை எழுதிவிட்டு, அதன் பிறகு அப்துல் ஹமீதுடன் உட்கார்ந்து, ஈழத் தமிழுக்கு மாற்றினேன்.

    Ilakkiyaveedhi3_02052014

    “நான் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சைதை துரைசாமி கலந்துகொண்டார். அவரிடம் பேசும்போது, நான் உதய சூரியனையே பார்ப்பதில்லை என்றேன்; ஏனென்றால் நான் எழுந்திருப்பதே 9 மணிக்குத் தானே. அடுத்து, நானும் இரட்டை இலை தான் என்றேன். அவர் வியந்து பார்த்தார். வெற்றிலை, புகையிலை என்றேன்.

    “தேவனின் எழுத்துகளைத் தொடர்ந்து படியுங்கள். சிரித்து மகிழுங்கள்.”

    இவ்வாறாகக் கிரேசி மோகன் பேசினார்.

    அவரது ஒரு மணி நேரப் பேச்சின் ஒரு சிறிய பகுதியை என் நினைவில் பதிந்தவாறு இங்கே அளித்துள்ளேன். கிரேசி மோகன், சந்தர்ப்பத்துக்கு ஏற்ப உடனடி நகைச்சுவைகளும் உதிர்த்தார். “தேவன் படைப்புகளின் பட்டியலை நீங்கள் சொல்கிறீர்களா? நான் படிக்கட்டுமா?” என முன்னிலை வகித்த எழுத்தாளர் ஜே.எம்.சாலி கேட்க, நீங்களே சொல்லுங்க; கேட்கறது ஈஸியா இருக்கு என்றார். முனைவர் ப.சரவணன் தொகுப்புரை ஆற்றுகையில், கிரேசி மோகனின் சிறப்புகளை எடுத்துரைத்தார்; அடுத்துப் பேச வந்த கிரேசி மோகன், சரவணன் நன்றாக என்னைப் பற்றிச் சொன்னார்; அவையெல்லாம் நான் எழுதித் தந்தவை எனப் பொய்யாக வேடிக்கை செய்தார். அப்பப்ப தண்ணி போடுவேன் என்றபடி, இடையிடையே தண்ணீர் குடித்தபடியே பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு இலக்கிய வீதி இனியவன் அழைத்தபோது, எவ்வளவு நேரம் பேச வேண்டும் என மோகன் கேட்க, ஒரு மணி நேரம் என இனியவன் சொல்லியிருக்கிறார். அதற்கு, மேடை நாடகங்களில் நாங்கள் இருபது பேர் சேர்ந்து ஒரு மணி நேரம் பேசுவோம்; இங்கே நான் ஒருவனே ஒரு மணி நேரம் பேசணுமா எனக் கேட்டதாகச் சொன்னார். இப்படியாக இயல்பாக அவையைச் சிரிக்க வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் குமாரகிருஷ்ணன், இலக்கிய வீதியின் அன்னம் விருதினைப் பெற்றார். அவர் தன் உரையில், பரமார்த்த குரு கதைகளைத் தேவி வார இதழில் 100 வாரங்கள் எழுதிய அனுபவத்தை எடுத்துரைத்தார். குரு ஒருவர், சிஷ்யர்கள் ஐந்து பேர் என்ற வடிவில் சிஷ்யர்களின் முட்டாள்தனங்களைப் புதிது புதிதாக யோசித்து, தானே முட்டாள் ஆனதையும் கூறினார். முட்டாள்தன யோசனைகளை நண்பர்களிடம் கேட்க, அவர்கள் சமோசா வாங்கித் தரச் சொல்ல, இவரும் வாங்கித் தந்துள்ளார். சாப்பிட்ட பிறகு யோசனையைச் சொல்லும்படி கேட்க, இப்போதுதானே கேட்டிருக்கிறாய், யோசித்துச் சொல்கிறோம் என அவர்கள் சொன்னதைப் பகிர்ந்தார்.

    கிரேசி மோகன் நகைச்சுவையில் மட்டுமின்றி, வெண்பா, சந்தப்பா எழுதுவதிலும் அவர் வல்லவர். வல்லமை மின்னிதழில் திருமால் திருப்புகழ் என்ற தலைப்பில் தினந்தோறும் அழகிய சந்தப் பாடலை எழுதி வருவது, நாம் அனைவரும் அறிந்ததே. புகழின் வெளிச்சம் எவ்வளவு இருந்தாலும் குழந்தையைப் போல் உற்சாகத்துடன் பழகுகிறார். என் தமிழாசிரியர் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்களிடம் அவர் வெண்பா கற்றதால், என்னை அவரது சகா (colleague) எனக் கூறினார்.

    கிரேசி மோகனின் கலகலப்பான பேச்சினைக் கேட்க, அரங்கு நிறைய அன்பர்கள் திரண்டு, மனம் நிறைய மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர்.

    படங்கள்: அண்ணாகண்ணன்

    Share
  • திருமால் திருப்புகழ் (76)

    கிரேசி மோகன்


    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————
    ‘’கண்ணன் காப்பு’’
    ——————————

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    தீரன், யமுனா தரங்கக் கரையோரன்,
    சேரும் இளமாதர் ஜீவான்ம -சோரன்,
    அழகில் சுகுமாறன், அன்பில் உபகாரன்,
    கழுகில் வரும்நேரம் காப்பு….

    குவலயா பீடத்தின் கொம்பொசித்துக் கம்சன்,
    கவலையால் பீடிக்கக் கொன்றோன் – ’அவலையா
    தந்தாய் எடுத்துக்கொள் தோழாயென் செல்வமுன்
    கந்தையைக் கட்டுமென்றோன்’ காப்பு….

    கூவும் கஜேந்திரனை, காத்த புஜேந்திரா,
    ஏவிய சக்கரத்தை ஏந்தியவா, -காவிய
    பாகவதக் கண்ணா, பரந்தாமா நாரணா,
    காகவத காகுத்தா காப்பு….

    ஆலில் மிதந்தவா, ஆழ்வார்கள் பாசுர,
    நூலில் நிறைந்தவா, நந்தலாலா, -தோளில்,
    திருத்துழாய் பூண்ட, திருவோணத் தானே,
    கருத்தில் கலந்துவளைக் காப்பு….

    கால்கள் பலநூறு, கண்டேனென் வாசலில்,
    வால்கள் புடைசூழ வந்தமுகுந்தன்,-நூல்போல்,
    அணிவகுப்பாய் சென்று ,அடுக்களை உள்ளில்
    விநியோகம் செய்தான் விருந்து!!

    —————————————————————————————–

     

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2014_05_01_archive.html

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    மே 5, 2014

    வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..

    **************************************************************************************

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திரு. ராஜா கார்த்திக் கண்ட்டா அவர்கள்

    **************************************************************************************

    வல்லமை இதழால் இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்யப் பெறுபவர் திரு. ராஜா கார்த்திக் கண்ட்டா அவர்கள்.

    இலண்டனைச் சேர்ந்த 33 வயதான திரு. ராஜா கார்த்திக் கண்ட்டா என்பவர் பெரும்பான்மையான இந்திய இளைஞர்களில் தனிப்பட்டவராகப் பிரகாசிக்கிறார். இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தனது சொந்த மாநிலமான ஐதராபாத்திலிருந்து இலண்டன் சென்று அங்குள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனத்திற்காகப் பணியாற்றுபவர். சமீபத்தில் (ஏப்ரல் 30, 2014 ) ஆந்திராவில் நடந்த மக்களவைத் தேர்தலில் தனது வாக்கைப் பதிவு செய்யும் பொருட்டு இந்தியா வந்திருப்பவர். உள்ளூரில் இருந்து கொண்டே தாய்நாட்டு நலனில் அக்கறையின்றி வாக்குப் பதிவு செய்யாமல் அலட்சியமாக இருக்கும் சிலருடன் ஒப்பிடும்போது இவர் வாக்களிப்பதற்காகவே வெளிநாட்டிலிருந்து சொந்த மண்ணிற்கு வந்திருப்பது பாராட்டிற்குரியது.

    ராஜா கார்த்திக் கண்ட்டா இதற்கும் ஒருபடி மேலே சென்று, தனக்குச் சிறப்புச் சலுகையை எதிர்பார்த்து, மக்களுடன் வரிசையில் நின்று வாக்களிக்காமல் அனைவரையும் முந்த நினைத்த மத்திய அமைச்சரும், அரசியல் தலைவரும், நடிகருமான திரு. சிரஞ்சீவியின் செயலுக்கு வெளிப்படையாகத் தன் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். இவரது எதிர்ப்பினால் வேறு வழியின்றி ஐதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு செய்ய வந்த சிரஞ்சீவி தனது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அங்கு கூடியிருந்த மற்றவர்கள் போலன்றி, அவர் மத்திய அமைச்சர் என்ற பெரும் பதவியில் இருப்பவராயினும் அவரும் பொது மக்களைப் போலவே வரிசையில் நின்றுதான் வாக்களிக்கச் செல்ல வேண்டும் என்று துணிச்சலாக அவரைத் தட்டிக் கேட்டு, ஒரு சிறந்த குடிமகனாகத் தன் கடமையைச் சரிவர நிறைவேற்றிய இவருடைய செயல் பாராட்டுதலுக்குரியது. இவரது இந்த செயலை ஆதரித்து வரிசையில் காத்திருந்த மற்றவர்களும் கரவொலி எழுப்பித் தங்கள் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    நிகழ்ச்சியின் காணொளி சுட்டி இங்கே: http://youtu.be/LPyL5X8oThw

    Chiranjeevi got disciplined

    இது குறித்து செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த ராஜா கார்த்திக், “நான் அயல்நாட்டில் வசிக்கும் இந்தியன், எனது வாக்குரிமையை நிறைவேற்றவே இந்தியா வந்தேன். சிரஞ்சீவி முதியவரோ, மாற்றுத்திறனாளியோ அல்ல, அதனால்தான் நான் அவரிடம் உங்களுக்குச் சிறப்புச் சலுகை வேண்டுமா எனக் கேட்டு அவரை வரிசையில் நிற்கச் சொன்னேன், சிரஞ்சீவியை நான் மதித்தாலும் அவர் விதிமுறைகளை மீறுவதை அனுமதிக்க முடியாது,” என்று சொல்லியிருக்கிறார். இது போன்று அதிகாரத்திற்கு அஞ்சாது துணிச்சலுடன் இந்திய அரசியல்வாதிகளைக் கண்டிக்கப் பலர் முன் வர வேண்டும்.

    சிறப்பு மிக்க நடத்தையால், இந்திய இளைய சமுதாயத்திற்கு முன்னுதாரணமாக விளங்கிய திரு. ராஜா கார்த்திக் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************

    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    செய்திகள் பல செய்தித் தளங்களில் இருந்து திரட்டப்பட்டன.
    படம் உதவி: www.ndtv.com

    Share
  • கசிவு

    எம்.ரிஷான் ஷெரீப்

    ‘நாயோட வாலுல புடிச்சுக் கட்டிவுட்டாப்புலல்ல இந்தப் பய நாலு தெரு சுத்தறான். எதுக்குங்குறே. ஒண்ணுத்துக்கும் பிரயோசனமில்ல. சும்மாச் சும்மா தெரு அளந்துட்டுத் திரியுறான். நீ ஒருக்காப் போய் தேடிப் பார்த்துட்டு வாயேன் ராசா. காலைல வெளிய இறங்கினவன். பசி தாங்கமாட்டானே புள்ள’

    வழமையாக சோறு வடித்து, பானையை இறக்கி வைக்கும்போதே பசியெனக் கத்திக் கொண்டு வந்து நிற்பவனை இன்னும் காணவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்த வள்ளித்தாயி, வாசலோடு ஒட்டிய உள்தரையில் அமர்ந்திருந்தாள். அவள் ஏவிய மூத்தவன், அவளது பேச்சே தன் காதுகளில் விழாதது போல சாக்குக் கட்டிலில் படுத்து, கூரைத் தகரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்திப் பொழுதை அந்தக் குடிசைக்குள் தள்ளிச் சென்றது போல மழை இருட்டு மதியம் தாண்டிய அப் பிற்பகல் வேளையை சற்று இருளாக்கியிருந்தது. கண்ணுக்கெட்டிய வரை வெளியே எட்டி தெருவைப் பார்த்தாள். எப்பொழுதும் பழைய சைக்கிள் டயரை உருட்டியபடியோ, கூட்டாளிகளோடு விளையாடியபடியோ அத் தெருவே பழியெனக் கிடப்பவனை இன்று காணவில்லை. தூரத்திலிருந்து மழையின் பெருஞ்சத்தம் மிகுந்த வெறியோடு யாரையோ விரட்டிவருவது போலக் கேட்டது. பின் அப்படியே அவளது குடிசையின் தகரக் கூரையிலும் சத்தத்தோடு விழ ஆரம்பித்தது. அவள் தெருவிலிருந்து தூரத்தே தெரிந்த மலைத் தொடருக்கு பார்வையை நகர்த்தினாள்.

    ‘இந்த மழயப் பாரு. எங்கிட்டோ போற மழ. இங்க வந்து கொட்டித் தீக்குது ஆகாசமே பொத்துக்கிட்ட மாதிரி. அந்த மலயக் கூட மூடல. முத்தம் இருட்டல. வுட்டதத் தேடி வர்றாப்ல மழ பேஞ்சு கொட்டுது பாரு. இந்தப் பய நனஞ்சிட்டு வந்து நிப்பானோ, பத்திரமா புத்தி யோசனையா எங்கிட்டாவது நிழல்ல குந்தியீந்துட்டு மழவுட்டாப்புல வூடு வந்து சேருவானோ? தடுமக் காச்சல்னா தாங்கமாட்டானே ராசா. பச்சபச்சயாச் சளி கட்டிக்கும் அவனோட அப்பனுக்குப் போல. இருமி இருமியே சீவன் தேஞ்சிடும். ஏலே போய் எங்கிட்டிருக்கான்னு ஒருக்காப் பாத்துக் கூட்டி வாயேண்டா’

    மூத்தவன் அதையும் காது கொடுத்துக் கேட்கவில்லை. காதில் விழுந்ததுதான். ஆனால் சொல்லப்படுவது தனக்கில்லையென்பது போல அமைதியாக இருந்தான். ஏதோ இவள் மட்டும் தன்னைச் சுற்றியிருக்கும் நான்கு சுவர்களுக்கும் கேட்கும்படி புலம்பிக் கொண்டிருந்தாள். தகரக் கூரையின் ஓட்டைகளிலிருந்து துளித்துளியாக சொட்டிய நீர் களிமண் பூசிய தரையில் விழுந்து, விழுந்த இடத்தைக் குழியாக்கியது. விட்டு விட்டுப் பெய்யும் மழையின் காரணமாக நிலமே ஈரலித்துக் கிடந்தது. மூலையில் அடுக்கியிருந்த சில மண் சட்டிகளைக் கொண்டுவந்து கூரையிலிருந்து தண்ணீர் ஒழுகும் இடங்களைப் பார்த்துத் தரையில் வைத்தவள், அப்படியே சாக்குக் கட்டிலருகே போய் மூத்தவனை தோளில் பிடித்து உசுப்பிவிட்டாள்.

    ‘ராசா..மின்னல் வெட்டுது..இடி விழுது..சின்னவன் எங்கிட்டிருக்கானோ..பயப்புடுவான்..போய்ப் பார்த்துட்டு வாயேண்டா’ என்றாள் திரும்பவும்.

    ‘சும்மா போம்மா..நேத்துத்தான் பொறந்தாம் பாரு மடியில வச்சுப் பாத்துக்கிடறதுக்கு. பத்து வயசாச்சு. நாலு ஆடு கண்டுகளப் புடிச்சுக் குடுத்து மேச்சுட்டு வான்னு அனுப்பியிருந்தாலும் அர வயித்துக்காவது தேறும். வேலயத்துப்போன கண்ட கண்ட தெருப்பசங்களோட வெளையாட அனுப்பிட்டு என்னவுட்டு தேடச் சொல்றியா?’

    அவன் சலிப்போடு கத்திக் கொண்டு அடுத்த பக்கம் திரும்பி ஒருக்களித்துப் படுத்துக் கொண்டான். திடீரென நினைவு வந்தவன் போலவும், குளிரெடுத்தவன் போலவும் திரும்பவும் மல்லாந்து படுத்து, உடுத்திருந்த சாரத்தை அவிழ்த்து கழுத்துவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு, திரும்பவும் அடுத்த பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான். இனி அவனை எழுப்ப முடியாது என உணர்ந்தவள், மீண்டும் வாசலுக்கு வந்து தெருவை எட்டிப் பார்த்தாள். முகத்தில் மழைச் சாரலடித்தது. அது அவளை உசுப்பிவிட்டது.

    ‘ஆமா. சின்னவனை வேலைக்கனுப்பித்தா இந்தக் கெழவி பட்டும், மூக்குத்தியுமாப் போட்டு மினுக்கிக்கப் போறேம் பாரு. வெளாடுற வயசுல அப்படி இப்படித்தா இருப்பான். யேன் நீ இருக்கல? உன் தம்பிதான.. நீ கூட்டிட்டுப் போ.. பட்டற வேலைய அவனுக்கும் கத்துக் குடு. நானா வேணாங்குறே?’ அவிழ்ந்த தலைமுடியைச் சுருட்டிக் கொண்டை கட்டியவாறே மீண்டும் வாசலோரச் சுவரில் சாய்ந்து அமர்ந்தபடி குரலெழுப்பிச் சொன்னாள் வள்ளித்தாயி.

    ‘க்கும். தெருவுல போற ஆனக்கிச் சாப்பாடு கொடுக்குறது இருக்கட்டும்..முதல்ல வளக்குற பூனக்கி மீதியைக் கொடுங்குற கதையா, இருக்குற ஒரு பட்டறக்கே அப்பவோ இப்பவோன்னுதா வேலை வருது. எல்லாத்துக்கும் மெஷினுன்னு வந்தபொறவு எவன் வாறான் அருவா செய்ய கோடரி செய்ய மம்பட்டி செய்யன்னு. இதுல இவனயும் கூட்டிட்டுப் போய் வெட்டியா சோறு போடச் சொல்றியா?’

    இதுவரையிலும் நிலத்திலமர்ந்து, சுவரின் மூலையில் சாய்ந்து, கிழிந்த துணியொன்றைத் தைத்துக் கொண்டிருந்த மருமகள் முதன்முதலாக வாயைத் திறந்து சொன்னதைக் கேட்டதும் ஆவேசம் வந்தவளைப் போலானாள் அவள்.

    ‘எண்ட ராசா எங்கிட்டும் போய்ச் சோத்துக்குக் கெஞ்சப் போறதில்ல. இந்தக் கெழவிக்கு ஒடம்பு குளுந்து போகாம இருக்குற மட்டும் அவன நா பாத்துப்பே. பெத்தவளுக்கு வளக்கத் தெரியாது? வக்கப்போருல மழக்கி மொளச்ச காளானப்போல நேத்து வந்தவளுங்கெல்லாம் அவனுக்குப் பொங்கிப் போடத் தேவல்ல. நடு முதுகுல வந்த கட்டி மாதிரி சொமையா நெனக்கத் தேவயுமில்ல. நா எதுக்கிருக்கே. நா ஆக்கிப் போடுறே..நா பார்த்துப்பே’

    இதைக் கேட்டதும் மருமகளுக்கு இப்பொழுது கோபம் வந்துவிட்டது. தைத்துக் கொண்டிருந்த துணியைச் சுருட்டி ஒரு மூலைக்கு எறிந்தாள். குளித்த தலை காய, அவிழ்த்துப் போட்டிருந்த கூந்தலைக் கொண்டையாகக் கட்டிக் கொண்டு, வலுத்த மழை தகரக் கூரையில் எழுப்பும் சத்தத்தை விட அதிகமான சத்தத்தோடு அவளும் குரலுயர்த்தினாள். அவளுக்குக் கீச்சுக் குரல். தகரத்தில் கம்பியால் கீறுவதைப் போல அது மாறியிருந்தது இப்பொழுது.

    ‘நேத்து வந்தவளாம்ல..சூடு சொரணயிருக்குறவங்க இதுக்கு மேல இங்க இருப்பானுங்களா? இதுக்குத்தா நா இதுக்கிட்ட படிச்சுப் படிச்சுச் சொன்னே. நம்மள மதிக்காதவோ வூட்டுக்கு எதுக்குப் போவணும்னு…கேட்டுச்சா இது? ஏதோ வூட்டுல மூட்ட மூட்டயா பொதையல் கட்டி வச்சிருக்காப்புலல்ல வூட்டுக்குப் போவணும்னு அடம்புடிச்சுக் கூட்டி வந்துச்சு?’

    அவளுக்கு தன் மாமியார் வீட்டுக்கு வர விருப்பமே இருக்கவில்லை. ஊரில் கல்யாண காலம் இது. சமையல், கூலி வேலைகளுக்குப் போனால் கொஞ்சம் பணம் சம்பாதித்துக் கொள்ளலாம். உடுத்துக் கொள்ளப் பழந் துணிகளும் கிடைக்கும். போதாதற்கு மாமியார் வீட்டுக்கு மூன்று பஸ்கள் மாறி மாறி வரவேண்டும். அவன் எங்கே கோபித்துக்கொண்டு தனியே போய்விடுவானோ என்ற பயத்தில் அவன் தன் அம்மா வீட்டுக்குக் கூப்பிடும்போதெல்லாம் முடியாதென அடம்பிடித்துச் சண்டை போட்டுவிட்டுப் பின்னர் அவனுடன் சேர்ந்து வந்து விடுவாள்.

    ‘ஏம் புள்ள என்னப்பாக்க வராம வேற எங்கிட்டுப் போவான்? இந்த வூட்டுல பொதையல் இல்லாமப் போனாலும் அவன் பொறந்து வளந்த வூடு. அவன் மண்ணள்ளித் தின்ன வூடு. இந்த வூட்டுல நா பொணமா வுழுற வரைக்கும் அவன் வரத்தான் செய்வான்..நீ இவன முந்தானைல முடிஞ்சிக்க நெனச்சாக் கூட எண்ட வூட்டுப் புள்ள அதுக்கெல்லாம் ஒத்துவர மாட்டான். போக்கிடமில்லாத சோம்பேறிக் கழுதயப் புடிச்சுக் கொண்டு வந்து அவன் கட்டிக்கிட்டதுக்கு இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ’

    நகரத்தில் இரும்புப் பட்டறை வேலைக்கெனப் போனவன் ஒரு நாள் அவளைக் கோயிலில் வைத்துத் தாலி கட்டிக் கையோடு கூட்டிக்கொண்டு வந்து நின்றான். வள்ளித்தாயி வாசலருகே இருந்து முதலில் கத்திப் பார்த்தாள். அவனை எப்படியெல்லாம் தான் கஷ்டப்பட்டு வளர்த்த கதையைச் சொல்லி, ஒப்பாரி வைத்து அழுதாள். அக்கம்பக்கத்து வீட்டு ஆட்களெல்லாம் வந்து சமாதானம் செய்த பிறகுதான் அவர்களை உள்ளே விட்டாள். முதல் சில நாட்களுக்கு மகனையோ, மருமகளையோ ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மூலைக்கு மூலை அமர்ந்து புலம்பி அழுதுகொண்டிருந்தாள். வீடுகளுக்கு பாத்திரம் கழுவப் போகையில், விஷயம் கேள்விப்பட்டு விசாரிப்பவர்களிடமெல்லாம் வசியம் வைத்து, மருந்து கொடுத்து தன் மகனை மயக்கிவிட்டதாக மருமகளைக் குறைசொல்லி திட்டியபடியே இருந்தாள்.

    ‘ந்த.. கழுத கிழுதன்ன..அப்றம் நடக்குறதே வேற..தோ..இந்தக் கழுததான் எம்பின்னால வந்துச்சு.. மொளகாயக் கடிச்சேனோ..கஞ்சியக் குடிச்சேனோன்னு அர வவுறு நெறஞ்சாலும் எம் பாட்டுல நிம்மதியாக் கெடந்தேன். புலாலுக்குப் பின்னால போற பூன மாதிரி சத்தமில்லாம வந்து தாலியக் கட்டிக்கிட்டதுக்கு சொத்தக் கண்டேனா..சொகத்தக் கண்டேனா..ஆஸ்தியக் கண்டேனா..அந்தஸ்தக் கண்டேனா’

    சத்தமாக ஆரம்பித்தவள், இறுதிவரிகளைச் சொன்னபோது விசும்ப ஆரம்பித்தாள்.

    ‘ ஆமா.. பெரிய ராசா வூட்டு மக பாரு. வரிசயாக் கெடந்தானுங்க இவளத்தான் கட்டிக்கணும்னு..கேக்கப் பாக்க நாதியத்துக் கெடந்தவளுக்கு வாழ்க்க கொடுத்தேம்பாரு..என்னச் சொல்லணும்’

    இவ்வளவு நேரமும் கண்ணை மூடியவாறு தூங்கியது போல படுத்துக் கொண்டிருந்தவன் ஓட்டுக்குள்ளிருந்து தலையை நீட்டும் ஆமையைப் போல தலையை உயர்த்திப் பார்த்து அங்கிருந்தபடியே கத்தினான். அவளை முறைத்துப் பார்த்துவிட்டு திரும்பவும் கண்ணை மூடிக் கொண்டான்.

    ‘ராசா மகளோ இல்லயோ..எங்க அப்பன் என்ன ராசா மக போலத்தான் வளத்தாரு..செறப்பாத்தானே இருந்தேன்..மகராசா ஒரு நாளாச்சும் என்னப் பட்டினியில போட்டிருக்குமா..இப்படி எங்கிட்டோ வந்து கதறத்தான் விட்டிருக்குமா..செருப்புக்கு அளவா கால வெட்டிக்கிடற மாரி வெட்டிக்கிட்டு ஓடி வந்து கானல் தண்ணிய நம்பிப் பாழுங்கெணத்துக்குள்ள குதிச்ச கதயாப் போச்சு யேன் வாழ்க்க’

    ‘ பெத்தவன் மேல அம்புட்டுப் பாசமிருக்குறவ இப்படி எதுக்கு எவன் கூடவாவது ஓடியாரணும்..? ஓலப்பாயில நாய் ஒண்ணுக்கடிச்ச மாதிரி சலசலன்னு பொலம்பிட்டுக் கெடக்கணும்..? அவன வுட்டுப் போயிட வேண்டியதுதான?’

    இப்பொழுது வள்ளித்தாயி குரலுயர்த்த, தனக்கு இரு புறத்திலிருந்தும் ஆதரவில்லை என்பதை உணர்ந்தவள் வாய்க்குள் ஏதேதோ முணுமுணுத்தபடி வெடித்து அழுதாள். அவள் இவனுடன் வந்ததிலிருந்து, அவளது வீட்டில் அவளைச் சேர்க்கவில்லை. திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அவளுக்கு மூத்தவளும் இளையவள்களுமாக வீட்டில் 5 பேர். அம்மா இல்லை. அப்பாவும் மற்றவர்களும் கூலி வேலைகளுக்குப் போய் எப்படியோ சீவனம் நடத்திக் கொண்டு போக, இவளால் ஏற்பட்ட அவப்பெயர் மற்றப் பெண்களின் திருமணத்திற்குப் பெறும் குறுக்கீடாக இருந்தது. அவனது அம்மாவுடன் சண்டை போட்டுக்கொண்டு போன பிறகு அவளிடம் இருந்த தோடுகளையும் வளையலையும் விற்று, அவளது ஊரில் வாடகைக்கு ஒரு சிறிய வீடு தேடிக் குடியேறியிருந்தார்கள்.

    ‘வுட்டுப் போறதுக்கா நம்பிக் கழுத்த நீட்டினேன்? எத்தன சொம வந்தாலும் கண்ண மூடுற காலம் மட்டும் ஒண்ணாச் சேந்திருப்போமுன்னுதான் இந்தக் கழுத மஞ்சக் கெழங்கச் சொமந்து வாக்கப்பட்டுச்சு. பாத்துக்க. பெத்த பயலுக்கு பொஞ்சாதியக் காலம் பூராம் நல்லபடியா வச்சுக் கஞ்சி ஊத்துன்னு சொல்லிக் குடுக்காம கெழவி என்னெல்லாம் சொல்லிக் குடுக்குது. சோத்துக்கு வக்கத்த குடும்பம்னாலும் கெட்டது சொல்லிக் குடுக்க மட்டும் நல்லாத் தெரிஞ்சிருக்கு பூராத்துக்கும்’

    அவள் விசும்பிக் கொண்டே இருந்தாள். அமர்ந்திருந்த இடத்திலேயே காலை நீட்டிப் படுத்துக் கொண்டாள். ஈரலித்த மண் தரை குளிர்ந்திருந்தது. உடல் சிலிர்த்தது.

    ‘க்கும்.. செவப்புத் தோலுக்கு மயங்கினானோ..முழிக்குற முழிக்கு, ஆட்டுற நடக்கி மயங்கினானோ..நோய்காரின்னு தெரியாம கட்டிக்கிட்டு வந்து நின்னவன் எம் பேச்சக் கேட்டானா? உண்டதுமில்ல..கொண்டதுமில்ல..பூ வச்சுக் கட்டக் கொண்டயுமில்ல..நாலு சுத்து சுத்திக் கட்ட சேலயுமில்லங்குற கதயா உருப்படியில்லாத மலட்டுச் சிறுக்கியக் கட்டிக் கூட்டிக்கிட்டு வந்தான். அப்பவே அத்துட்டிருந்தா நாறச் சிறுக்கி மக இப்படிப் பழிபோட்டுப் பேசுவாளா?’

    நான்கு வருடங்களுக்கு மேலாகியும் தனக்குக் குழந்தையில்லையென்ற கவலை உள்ளூர ஊறிப் போயிருந்தது அவளுக்குள். அந்தப் புண்ணைக் கிளறிவிட்டது வள்ளித்தாயியின் பேச்சு. வலிக்க வலிக்கக் கீறப்படும் ரணம். போகுமிடமெல்லாம் அன்பான விசாரிப்புக்கள் போலப் புறப்படும் முட்கள். புண்ணைக் கீறி, மேலும் மேலும் ரணமாக்கி, பெரும் வலியில் வெளிப்படும் அவளது அழுகையைக் காணும் உள்ளூர ஆவலுடனான விசாரணை அது. அவளுக்குப் பின்னால் ஊர் முழுதும் அவளைப் பற்றிப் பேசப்படும் பேச்சுக்கள் குறித்து அவள் அறிந்திருந்தாள். கணவனிடம் சொல்லிப் பல தடவை அழுதிருக்கிறாள்.

    ‘ந்த..ஒண்ணுமில்லாத விஷயத்துக்குத் தொண தொணன்னுக்கிட்டு..செத்த கண்ணசர வுடுறீங்களா..முட்ட போட்ட கோழிங்க மாரி கொக்கரிச்சுக்கிட்டு…மனுச இருப்பானா இந்த வூட்டுல’

    மழை விட்டிருந்தது. கட்டிலிலிருந்து லேசாகக் கழுத்தை உயர்த்தியவன் இருவரையும் பார்த்துக் கத்தினான். அவனது சத்தம் பலமாக இருந்தது. இடி இடிப்பதைப் போல. பெரிய மரமொன்று உடைந்து விழுவதைப் போல. வாசலருகே அமர்ந்திருந்த வள்ளித்தாயியின் குரல் அடங்கியது. ஏதோ வாய்க்குள் முணுமுணுத்தாள். மருமகளது விசும்பல் தொடர்ந்தும் கேட்டது.

    மழைக்குச் சாத்தியிருந்த கதவைத் தள்ளிக்கொண்டு அவள் இவ்வளவு நேரமும் தேடிக் கொண்டிருந்த அவளது இளைய மகன் ‘அம்மா..பசிக்குது’ எனக் கத்திக் கொண்டு உள்ளே வரும் வரை அந்த நிலையே நீடித்தது. பின்னங்கால்களில் பொட்டுப் பொட்டாய்ச் சேறு. தலை, உடலெல்லாம் மழை ஈரம். கைகளில் நெளிந்த சைக்கிள் டயர். ஒரு நீளக் குச்சி. அவனைக் கண்டதும் அவ்வளவு நேரமும் புகைந்துகொண்டிருந்த தணல் பற்றியெரிவது போல ஆவேசத்தோடு எழுந்த வள்ளித்தாயி, அவன் கையிலிருந்த குச்சியைப் பிடுங்கி தாறுமாறாய் அவனை அடிக்கத் தொடங்கினாள்.

    ‘பசிக்குதாம்ல..இம்புட்டு நேரம் தெரு நாய் மாரி எங்க போய்ச் சுத்திட்டு வரே…அங்கயே போய்ச் சாப்டுக்க வேண்டியதுதான..இங்க எதுக்கு வரே? உனக்கு இன்னிக்குச் சோறு கெடயாது..பட்டினி கெட எரும மாடு..உன் காலு ரெண்டையும் முறிச்சுப் போடுறேம் பாரு..எங்கிட்டுச் சுத்தப் போறேன்னு பாக்குறேன் நானு இனிமே’

    வலி தாங்காமல் அவன் கத்தியழ ஆரம்பித்தான். வள்ளித்தாயி இப்பொழுது குச்சியை விட்டுவிட்டு கையால் அவன் முதுகில் ஓங்கி ஓங்கி அறைய ஆரம்பித்தாள். அவன் ‘அம்மா அம்மா’ என்றே கத்தியழுதான். மூத்தவன் திரும்பிப் பார்த்துத் திரும்பவும் கண்ணை மூடிப் படுத்துக் கொண்டான். மருமகள் எழும்பி ஓடி வந்து சின்னவனை இழுத்தெடுத்துத் தனக்குப் பின்னால் மறைத்துக் கொண்டாள்.

    ‘சின்னப் புள்ளயப் போட்டு மாட்டுக்கு அடிக்கிற மாரி அடிக்குற? பெத்த அம்மாவா நீயி?’

    மிகச் சத்தமாய் மருமகள் கத்தியதும், வள்ளித்தாயியின் ஆவேசமெல்லாம் அடங்கிப் போனது போல, அப்படியே தரையில் அமர்ந்துகொண்டாள். மருமகள், அவன் முகத்தில் வழிந்த கண்ணீரை அழுந்தத் துடைத்துவிட்டாள். தான் கட்டியிருந்த சேலை முந்தானையெடுத்து அவன் தலையைத் துவட்டிவிட்டாள். பின்னர் உள்ளே போய்த் தட்டெடுத்து அதில் சோறு, ரசமென ஊற்றிப் பிசைந்து எடுத்துவந்தாள். அவன் இன்னும் கத்தி அழுதுகொண்டே தன் அண்ணியின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு அவள் பின்னால் நின்றுகொண்டிருந்தாள். வள்ளித்தாயி தன் அழுகையை மறைக்கப் போல முற்றத்துச் சகதியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    ‘பாரு மேலெல்லாம் எப்படி வீங்கியிருக்குன்னு…அழுவாத ராசா..அண்ணன் தூங்குதில்ல..இந்தா சாப்டு ராசா’

    அவனை அருகிலமர்த்தி, அவளும் அமர்ந்து, விம்மிக் கொண்டே சோற்றைப் பிசைந்து அவனுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தாள்.

    mrishansha@gmail.com

    படம் உதவி: http://www.panoramio.com/photo/52716439 ,by Prabhat Das

    Share