என் அண்ணி..என் அன்னை!
-விசாலம்
என் அண்ணி எனக்குத் தாய்!
தாயில்லாத நிலையில்
அவளே எனக்குத் தாயானாள்!
நிலாக் காட்டிச் சோறு ஊட்டினாள்!
அவள் மடியில் நான் படுக்க,
வந்தன பல நீதிக் கதைகள்!
அவள் ஜீஜாபாயாக ஆனாள்,
என்னைச் சிவாஜியாக ஆக்க!
கணக்கில் தவறு செய்ய,
கன்னத்தில் விழும் செல்ல அடி!
நான் அவள் கழுத்தை அணைப்பேன்,
என் உச்சியில் ஒரு “இச்” கொடுப்பாள்!
அண்ணனுக்கு ஆபிஸே உலகம்…
எனக்கோ அண்ணியே உலகம்!
கிரிக்கெட்டுக்கும் வருவாள்,
என் சிக்சரில் மனமகிழ்வாள்!
இன்று நான் ஓர் ஆணழகன்!
மீசை முளைத்த துடி இளைஞன்!
முதல் மாதச் சம்பளம் என் கையில்…
முகமலர அண்ணி வந்தாள்!
“வாழ்த்துகள்!” என்று கைக்குலுக்கினாள்.
முதுகில் மட்டும் ஒரு செல்லத்தட்டு!
மடியில் இடம் கொடுத்த அண்ணி
இன்று மாறுபட்டு இருப்பதேன்?
அணைக்கத் துடித்த என் கைகளை
ஏதோ ஒன்று தடுப்பதேன்?
அண்ணியின் வளர்ப்புமுறையா?
மனதிற்கு ஒரு தடுப்புமுறையா?
சமுதாயம் என்ற வேலியா?
சட்டம் என்ற கல் சுவரா?

