மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாடவேண்டும்!
-கவிஞர் காவிரிமைந்தன்
திரு. பி.பி. ஸ்ரீனிவாஸ் குரலில் மெளனத்தின் ஆலாபனை…
எண்ணிலடங்கா ஏடுகளில் எத்தனையோ கவிதைகள்
எழுதிக் குவித்த கவிஞர்களின் எண்ணிக்கையும் இங்கு அதிகம்!
அன்றுமின்றும் பெண்ணைப் பற்றிப் பாடாத கவிஞன் யாரிங்கே?
சொல்லும் பொருளும் துள்ளி வருவது பெண்ணைப்பற்றி எழுதும்போதுதானே!
கண்களில் தோன்றுமிந்த காந்த மின்னல்..சில..பல..
எண்ணப் பரிமாறல்களால் காதல் ஆகிவிடும் விந்தை!
தன்னுள் ஏற்பட்ட தாக்கத்தை மொழிபெயர்த்தால்
தானாக மலர்ந்திடுமே கவிதை! பூங்கவிதை!!
தொன்று தொட்ட தமிழ்க்குடியில் பிறந்தமகள்!
தாய்வீட்டுச் சீதனமாய் நான்குவகை குணங்கள்!
எழில்சிந்தும் இளமையின் ஏற்றமிகு வதனம்!
இருந்தாலும் ஓர் குறைதான் உண்டு அந்த ஊமைப்பெண்ணில்!!
இவள் கண்ட மணவாழ்க்கை இனித்திடுமா எனும்கேள்வி
மனதினிலே தாங்கியபடி புகுகின்றாள் முதலிரவு!
கரம்பற்றும் நாயகனைத் தினம் அழைக்க வழிகளில்லை!
சரம்சரமாய் நீர்விழுமே! இருகண்ணில் இருந்தபடி!!
இதுதான் காட்சியென..பாடலொன்று வேண்டுமெனக் கவிஞர் பணிக்கப்படுகிறார். கதாநாயகன் பாடும் பாடல் நாயகிக்கு இதமாக இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அவள் மனம் காயப்பட்டுவிடக் கூடாதென..எத்தனை லாவகமாய்..கவனமாய்..வார்த்தைகளைச் சித்திரம் போல் செதுக்கியிருக்கிறார்!
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் தேன்
ஆறு போலப் பொங்கி வரவேண்டும் வரவேண்டும்
அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் தேன்
ஆறு போலப் பொங்கி வரவேண்டும்
அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகைபோல் – என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் – என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் ம்ம்..
இதுவரை எழுதிய வரிகளிலும் மென்மை நிறைந்திருக்கிறது. எனினும் இனிவரும் வரிகளைப் பாருங்கள்..இப்படி எழுதக் கண்ணதாசன் மட்டுமே வர வேண்டும்!!
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும் மொழி வேண்டும்
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னம் இருக்கும் இந்தச் சின்ன முகத்தில் பல
மொழிகள் பாடம் பெற வரவேண்டும் பல
மொழிகள் பாடம் பெற வரவேண்டும் ம்ம்..
இவளது முகத்தில் தவழும் மெளன மொழியை அறிந்துகொள்ளப் பல மொழிகளும் அவளிடம் வரவேண்டுமாம்! பெண்மையின் மென்மையை – கண்ணதாசனே எத்தனை அழகாய் ஆராதித்திருக்கிறாய்? கவிதையா.. உணர்ச்சியா..?! உன்னால்தான் இப்படி மொழிபெயர்ப்பு நடத்த முடிகிறது! உன்னால்தான் திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் முழுநிலவாய் ஜொலிக்கின்றன! உள்ளத்தின் கதவுகள் எல்லாம் உன் கவிதை பெறவே திறந்து கொண்டன!
திரைப்படம்: கொடிமலர்
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
http://www.youtube.com/watch?v=PFO5EbeDm5I
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் தேன்
ஆறு போலப் பொங்கி வரவேண்டும் வரவேண்டும்
அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் தேன்
ஆறு போலப் பொங்கி வரவேண்டும்
அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகைபோல் – என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் – என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் ம்ம்..
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும் மொழி வேண்டும்
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னம் இருக்கும் இந்தச் சின்ன முகத்தில் பல
மொழிகள் பாடம் பெற வரவேண்டும் பல
மொழிகள் பாடம் பெற வரவேண்டும் ம்ம்..
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
எனக்காக இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் பாடி என்னை மகிழ்வித்த ராகப்பிரவாகம் சுந்தருக்கு என் உள்ளத்து நன்றிகள்!
http://www.youtube.com/watch?v=PFO5EbeDm5I