பாதுகா வெண்பாக்கள் – நவக்கிரக தோச பரிகாரம்

1

 

கிரேசி மோகன்

crazy
அதர்மமே யானாலும் அஞ்சாது செய்யும்
சுதர்மம் சுதந்திர சொர்கம் -பதமுறும்
பாதுகையே போய்ச்சொல் தூதுவனாய்க் கண்ணனிரு
காதுகளில் காத்திருப்பே னென்று….(1)….

 
அகங்காரம் ஆசை பயம்கோபம் என்றும்
சுகம்காணும் சொந்த நலத்தில் -புகுந்தாடும்
மால்கட்டு நீங்கிட மாலோலன் பங்கயக்
கால்கட்டும் பாதுகாய் காப்பு….(2)….

 
அகஸ்மாத்தாய்க் கேட்டோர் அதிசயிக்கும் வண்ணம்
சகஸ்ரம் எழுதிய சிங்கம் -நிகமாந்த
தேசிகர் பாதுகையை யாசகமாய்ப் பெற்றுத்தா
வாசகனென் தோஷம் விடுத்து….(3)….

சாவடி ஆவிற்கு பாவடி ஆழ்வார்க்கு
காவடி ஐவர்க்கு , மாபலிக்கு -மூவடி
நீவடி வாவது நெஞ்சமர் ராதைக்கு
சேவடி உன்கால் அணிக்கு….(4)….

வேத புராண இதிகாச சாத்திரம்
ஓதும் உபநிடதம் ஓங்காரம் -ஆதிகள்
நூலணி நான்முகன் தோளணி சம்புதொழும்
காலணி பாதுகையே காப்பு….(5)….

வானத்து கங்கை வருடிடும், அன்று
தானத்தை தோழர்க்குத் தந்திடும் -தூணித்துச்
சாய்ந்திட தூர்த்திடும் ஸ்ரீரங்கன் கால்களை
காய்ந்திடாது காப்போனே காப்பு….(6)….

நின்றாலும் நீண்டு வளர்ந்தாலும் எங்கு
சென்றாலும் சேவடி சேவகரே -அன்றாலில்
கண்ணுறங்கும் போது கழற்றி இருப்பானே
எங்கிருந்தீர் சொல்லும் எமக்கு….(7)….

சேதாரம் இல்லாது செங்கட் திருமாலின்
பாதார விந்தத்தைப் பாதுகாக்கும் -ஆதாரமே
தூதுபோய்க் கண்ணன் ஏதுதான் கூறினான்
பாதுகாய் பகர்வாய் புகன்று….(8)….

நூபுரம் தண்டை நொறுங்கப் பிரபஞ்ச
கோபுரம் தாண்டிக் கிளர்ந்தவன் -மாபரம்பொருள்
மாதவ னோடு மகோன்னதத்தில் பங்குற்ற
பாதுகா சாகசனைப் போற்று….(9)….

மூவா முகுந்தரின் பாதாதி கேசத்தை
நோவாமல் தாங்கி நடத்துவோய் -சேவா
கணத்தில் உமக்கு அனந்தனின் காலை
தினம்தினம் சேவிக்கும் வாய்ப்பு….(10)….

வாளி,சங்கு, சக்கரம், வாள்தண்டு கேடயம்
தோளணி வில்லும் துயரறுக்கும் -கோளரி
மாதவன்கை ஆயுதங்கள் ஆனாலும் பாதுகாக்கும்
மாதவன்கை ஆயுதங்கள் பாதுகாப்ப தென்னவோ
பாதுகையே காலணிந்த கை….(11)….

தூணுதைத்தான் பின்னர் வானளந்தான் பேதை
மானுடனாய் காட்டில் அலைந்தான் -தானுகந்த
நாளாலில் சேயாக வாளாய் இருந்தவன்
காலளவு பாதுகாய் கூறு….(12)….

காதலில் ராதையைக் காண ரகசியம்
சீதையை மீட்க அவசரம் -கோதையைப்
பெண்ணெடுக்கப் போகையில் பின்னைடைந்தீர் பக்தியில்
பெண்ணுருகும் பாசுரம் கேட்டு….(13)….

பதம்வரையும் வானுமுற்ற பாகவதக் காரன்
பதவுறையாய் சென்ற கதையை -பதவுரையாய்
கூறவல்ல காலணியே வேறுதுணை ஏனெமக்கு
நீரிருக்க நிர்பயமா னேன்….(14)….

தோளணி பூந்துழாய் மேலணி பீலியென
மாலணி ஆபரணம் ஆயிரம் -காலணி
பாதுகைக்கு ஈடாய் படிதாண்டி ஓடிவர
ஏதுகை நெஞ்சே நமக்கு….(15)….

கண்ணிரெண்டால், விண்ணளந்தோன் காணாது போனாலும்
கண்ணிரெண்டு கொண்டோய் குமிழ்களாய் -மண்ணிருந்து
போற்றும் அடியார்கள் புகழ்செலவம் கல்விபெற
சாற்றுன் எஜமான் செவிக்கு….(16)….

வாயுள்ள பிள்ளை வரிசங்கும், ஓயாமல்
கையாலா காதுசுழல் சக்கரமும் -பாயாம்
அரவணையும், வாயில் கரமணைக்கும் சப்த
மரவடியைக் காதால் மடுத்து….(17)….

சகியின் வெளுத்து வளைந்த கழுத்தின்
மகிமையால் சங்கை மறந்தான் -திகிரியை
வாய்க்களித்தான் வேழனுக்கு, வாய்ப்பளித்தான் காலணியே
ஆய்க்குலத்தோன் என்றும் அணிந்து….(18)….

விதுரன் அகத்தில் வினயமும், யுத்த
சதுரங்கத்தில் கீதையும், ராதை -மதுரம்
சுதாமன் சினேகிதம், சந்தித்த தெல்லாம்
பதாம்புயத்துப் பாதுகாய் பேசு….(19)….

காலன் எதிர்வரும் காலம் அணுகிட
மாலன் மலர்த்தாள் முகர்ந்திடும் -காலன்
சகஸ்ரம் உரைத்திட சித்திர குப்தன்
புகஸ்ரமம் கொள்வான் பயந்து….(20)….

கர்ணனின் தாராளம் குபேரன் ஏராளம்
நர்மதை நீர்வேகம் நின்னருளே -வர்ணணை
செய்து வரவழைக்க சொற்களை தேசிகர்போல்
பெய்திட வாக்கைப் பெருக்கு….(21)….

நிற்கையில் மெத்தை நடக்கையில் வாகனம்
வெற்பெடுக்கும் போது வரைதாங்கி -தெற்குநோக்கித்
தூங்கும் அரங்கன் துயிலெழுவ தற்குள்சொல்
தாங்கிய யோகத் தெளிவு….(22)….

சாமா னியரை சதுர்வேதி ஆக்கிஹரி
நாமா வளியயை நவிலவைத்த -ராமா
னுஜனே முழுமுதல் நாரணனைத் தாங்கும்
புஜனே நிஜத்தில் புகுத்து….(23)….

பைகொண்ட பாம்பில் படுத்த பரம்பொருள்
வைகுண்ட நாதர் வடிவத்தை -கைகொண்டு
ஏந்தும்கால் பாதுகையே நீந்திவா பாற்கடலில்
ஏந்திச்செல் என்னை எடுத்து….(24)….

தென்னிலங்கை செல்கையில், தூதுசென்(று) ஐவர்க்காய்
மண்ணளந்து கேட்கையில், மாவலிதன் வரமேற்று
விண்ணளந்த வேளையில், விரகத்தில் ராதைக்காய்
கண்ணலைந்த காலத்தில், காலிருந்த பாதுகாய்
மண்ணளைந்து உண்டவனை என்னகத்திற்(கு) இழுத்துவா….(25)….

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பாதுகா வெண்பாக்கள் – நவக்கிரக தோச பரிகாரம்

  1. பக்திச் சுவை நிறைந்த பாதுகை வெண்பாக்கள் நன்று; நல்ல ஓட்டம் இருக்கிறது. ஆயினும், ‘அன்று தானத்தை’, ’மாபரம்பொருள்’, ’எங்கு சென்றாலும்’,’ அலைந்தான் -தானுகந்த’, ’வேளையில், விரகத்தில்’ ஆகிய இடங்களில் தளை தட்டுகிறது. 25ஆம் பாடல், வெண்பா விதிப்படி முடியவில்லை. உங்களால் இன்னும் சிறப்பாக எழுத முடியும் என நம்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *