கிரேசி மோகன்


பிள்ளையார் வெண்பாக்கள்          
          
lord-shiva
சோமன்த னைச்சென்னி சூடும் சிவகுடும்ப
சீமந்த மைந்தன் சதுர்த்தியின்று -மாமன்தன்
சக்கரத்தை உண்டுமிழ்ந்த சித்தி வினாயகனை
வக்கிர துண்டனை வாழ்த்து….(1)

 தம்பிக்கு காதல் துணைசென்ற தந்தியே
 தும்பிக்கை வேழமே, தேவர்கள் -ஸ்தம்பிக்க
 ஆட்சி கயிலாயத்தை அவ்வைக்(கு) அளித்தவா
காட்சிக்(கு) இனியபிள்ளாய் காப்பு….(2)

 

தொந்தி குலுங்கிட தந்தி ஜொலித்திட
முந்தி முழுமுதல் மோதகன்முச் -சந்தி
அரசடியில் வீற்று அருள்பாலிக் கின்றான்
முரசடித்தேன் தந்திக்கு முந்து….(3)

ஆனைக்கா அம்மையும் ஊனைக்கொள் ஊர்த்தவர்க்கும்
சேனைக்கா வேலன் சகோதரனாய்-தீனர்க்காய்
தோன்றிய பிள்ளாய், தமிழாக அவ்வைக்கோல்
ஊன்றிய வேழா உதவு….(4)

அக்கினிக்கு முப்புரத்தை ஆட்படுத்த தேரேறி
உக்கிரமாய் சென்ற உருத்திரர்க்கே -விக்கினமாய்
அச்சொடித்து உன்னிருப்பை எச்சரிக்கை செய்தவரை
உச்சரிக்க வைத்தாய் ஒழுங்கு….(5)

கணபதி ராயா மனிதச காயா
பனிபதி கைலாசப் பையா -தனபதி
மாலின் மருகோனே மயிலோனின் மூத்தோனே
கோல வினாயகனே காப்பு….(6)

கயிலாய சீதனம் கற்பகச் செல்லம்
மயிலாப்பூர் தோழன் மகோதரன் -பயிலோரும்
பள்ளிப் பரிட்சையில் பெற்றிட வெற்றியை
அள்ளித் தருவான் அவன்….(7)

அருகம்புல் தேங்காய் எருக்கம்பூ, மாலின்
மருகன்பால் வைக்க மகிழ்ந்து -ஒருகொம்பால்
நான்முகன் நம்தலையில் நட்ட விதையினை
ஆனைமுகம் ஆக்கும் அரசு….(8)

cowசுகள் பேணிடும் கண்ணன் மருகோனே
mouseயிக வாகனா மோதகா -houseனுள்
வாராய் வினாயகா வேளை சதுர்த்தியில்
தாராய் அறிவில் தெளிவு….(9)

மூஷிக வாகனனை தோஷ விநாசகனை
பாஷைகள் போற்றும் ப்ரணவனை -வேஷமாய்
வேழத்தோல் போர்த்திய தோழக் கடவுளை
ஏழைகள் ஈசனை ஏத்து….(10)

அரச மரத்தடியில் ஆகாசம் பார்த்து
உரசும் எலியோடு ஒண்டி -பெருசாய்
எதிர்பார்ப்பு ஏதுமின்றி ஏழெட்டு தேங்காய்
சதிராக யாதுமருள் வான்….(11)

கமர்கட் கடலையுண்டை குச்சிஐஸ் மூன்றும்
சமர்பிப்பேன் நானுக்கு என்றும் -அமர்ந்திட்டு
செங்கழுநீர் பிள்ளையாரே சாப்பிட்டு த்ருப்தியாய்
சங்கத் தமிழ்மூன்றும் தா….(12)….
———————————————————————————————————————————————————————————–

பெரியவா அருள்வாக்கில் ‘’ஷோடஸ வினாயகரைப்’’ பற்றி எழுதியதைப் படித்து எழுதியது….

 

 

pillaiyar

—————————-
ஷோடஸ நாயகர்
———————-

பிள்ளையார் பிறப்பு
———————–
நீராடும் வேளை நிலைவாசல் காவலுக்கு
ஓராளைத் தேடினாள் ஓங்காரி -சேறாக
மேனியில் பூசிய மஞ்சளால் செய்தனள்
ஞானி வினாயக னை….

ஆதியே ஆனாலும் அன்னை குளிக்கையில்
பாதியில் வந்த பரம்பொருளை -வீதியில்
தள்ளிய பிள்ளை தலையைத் தகப்பனரன்
கிள்ளியங்கு வைத்தான் கஜம்….
ஸுமுகர்
———–
சிரித்த வதன ஸுமுகரைப் போற்ற
விரித்த வலைவெவ் வினையை -அறுத்து
இழைத்திடுவான் அத்தச்சன் எண்ணென் கலையாய்
அழைத்திடுவாய் அவ்வை அளவு….(1)….

ஏகதந்தர்
———–
சோகம் களைந்து ஸுமுகம் குவித்திடும்
யோகம் விரும்பிட ஏற்றிவிடும் -ஏகதந்தன்
காப்பிருக்க கற்பூரம் கூடவேண்டாம், காரியக்கை
பூப்பறிக்கும் உன்வீட்டில் பார்….(2)….

கபிலர்
——–
சிந்தூர வண்ணனை சித்தி அருளேக
தந்தன் கபிலனைத் தோத்தரிக்க -வந்த
கருத்ததெல்லாம் பாலாக, கண்முன் விலகும்
வருத்தமெலாம் சாயம் வெளுத்து….(3)….

கஜகர்ணகர்
—————
கஜகர்ணம் மற்ற கடவுளர்க்கு போட
நிஜவர்ணம் காட்டும் நெகிழ்ந்து -கஜகர்
ணகர்கபிலர் காதினில் நாத்திக பூசை
பகர்அப லைக்கும் பலன்….(4)….
லம்போதரர்
————–
சம்போ மகாதேவர் செய்த தலைப்பிள்ளை
லம்போ தரனால் லகுவாக -வம்போடு
தும்பும் விலகும் துதிக்கை விரட்டிடும்;
நம்பாள் கஜகர் ணகர்….(5)….

விகடர்
———–
மகுடம் தரித்தரன் முப்புரம் ஏக
சகடத்தின் அச்சை சிதைத்த -விகடன்
லலிதாங்கி மைந்தனை லம்போ தரனை
எலிதாங்கும் ஆனையை ஏத்து….(6)….

விக்கினராஜர்
—————-
சுக்கிரன் பார்க்க சுரர்கள் பணிந்திட
இக்கிரக பூமியில் இந்திரனாய், -விக்கின
ராஜன் விகடனை ராப்பகலாய் வேண்டிட
பூஜா பலனாய் பவிஷு….(7)….

வினாயகர்
————
வினாஅகம் கேட்க விசாரணை செய்யும்
மனோமுக மார்கம் முனிக்கே -வினாயகன்
விக்கின ராஜனை வேண்டித் துயில்வோர்க்கு
சொக்கிடும் போதேமோட் ஷம்….(8)….

தூமகேது
———–
சோமதேவன் சீமந்தன் மாமன்மால் அம்சமா
சாமகாதன் சீமந்தன் மாமன்மால் அம்சமாய்
தூமரூப துஷ்டனைத் தீர்த்திட -தூமகேது
தூமதீது துஷ்டனைத் தீர்த்திட -தூமகேது
வாக அவதரித்து வெற்றியை சூடிய
வாகை வினாயகனை வாழ்த்து….(9)….

கணாத்யஷர்
—————
அனாதியாதி அச்சன் அரசவை பூத
கணாதி களின்சேனைக் காவல் -ஜனாதிபதி
தூமகேது முன்புநின்று தோப்புக் கரணமிட
சாமகீதம் சம்சார சிந்து….(10)….

பாலசந்த்ரர்
————–
நாலுமுகன் செய்த நடிகர் களையியக்கும்
பாலமுக பாலசந்த்ர பிள்ளையார் -ஞால
கணாத்யஷன் காலில் கிடப்போர்க்கு நாளும்
தனாக்ஷர தீரம் தரும்….(11)….
கஜானனர்
————-
அஜாதசத்ரு ஆனை அரக்கனுக்(கு) அன்று
கஜேந்திர மோட்ஷம் கொடுத்த -கஜானனன்
கோலசந்த்ரன் கொண்டமகா கர்வம் அடக்கிய
பாலசந்த்ரன் பாதம் புகு….(12)….

வக்ரதுண்டர்
—————
வக்ரதுண்ட சேயின் விடைபெறாமல், முப்புர
நிக்ரகம் செய்ய நினைத்தூர்ந்த -உக்ரகண்டர்
சக்ரதுண்டம் செய்த சதுர்த்தி கஜானனர்
விக்னகண்டம் தீர்ப்பார் விரைந்து….(13)….

சூர்ப்பகர்ணர்
—————-
வரம்தரும் போதே முறம்போல தீதை
புரம்தள்ளி நையப் புடைத்து -அறம்பொருள்
ஆர்ப்புகங்கை போலின்பம், அவ்வீடு சேர்த்திடும்
சூர்ப்பகர்ண வக்ரதுண்ட சேய்….(14)….

ஹேரம்பர்
————-
பேரம்பார் பண்ணிப்பார் பூவெருக்கம் புல்லருகம்
பேரன்பாய் பாதத்தில் போட்டுவிட்டு -ஆரம்பம்
ஹேரம்பா என்றழைக்க எப்படியும் வெற்றிதான்
நேரும்பார் சூர்ப்பகர்ண னால்….(15)….

ஸ்கந்தபூர்வஜர்
—————–
சீரும்பர் கோன்மகள் சேனை கரம்பிடித்த
சூரன்பால் வேலெறிந்த ஸ்கந்தனுக்கு -ஹேரம்பர்
முன்வந்த பூர்வஜர் ,பெண்ணாக வெற்றியாய்நம்
பின்வந்து நிற்கும் பிடி….(16)….

பலஸ்ருதி
————-

பதினாறும் பெற்று பெருவாழ்வு காண
பதினாறு பேர்களைப் பெற்ற -அதிகாரி
அக்கணேச ஆனைமுன் விக்கினங்கள் வைத்திட
மக்கிடுமே மண்புழுவாய் மாய்ந்து….

——————————————————————————————————————————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *