Blog

  • தெனாலிராமன் – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    16ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயரின் அரசவையில் விகடகவியாக இருந்தவர், தெனாலிராமன். நகைச்சுவை உணர்வும் மதிநுட்பமும் கொண்டவர். இவரைப் பற்றிய பல கதைகள், இந்தியா முழுவதும் உலவுகின்றன. தெனாலி ராமனாகச் சிவாஜி கணேசன் நடிக்க, 1956இல் இதே பெயரில் திரைப்படமாக எடுத்தனர். தெனாலி ராமன் கதைகள் என்ற தலைப்பில் நூற்றுக்கணக்கான நூல்கள், பல மொழிகளிலும் வெளிவந்துள்ளன. இவருடைய கதையை தி அட்வென்சர்ஸ் ஆஃப் தெனாலி ராமன் (The Adventures of Tenali Raman) என்கிற பெயரில் கார்ட்டூன் நெட் ஒர்க் தொலைக்காட்சி நிறுவனம் கி.பி.2001இல் படமாக்கியது.

    இந்தப் பிரபலமான பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தது, வடிவேலுவின் சரியான முடிவு. மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அவர் நடிக்கும் படம்; இயல்பாகவே மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும். ஆகவே, அதைத் திரை வடிவம் ஆக்கியதிலும் காட்சித் தொகுப்பிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அதில் இயக்குநர் யுவராஜ் தயாளன், கோட்டை விட்டுள்ளார்.

    தெலுங்கு அமைப்புகளின் போராட்டத்தினால், இது, தெனாலி ராமன் கதைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கற்பனைக் கதை என அறிவித்துள்ளார்கள். ஆனால், தெனாலி ராமனை எல்லோரும் அவரை அறிந்தது போல், சிறந்த புத்திசாலியாகப் படம் முழுக்கக் காட்டியிருந்தால், படம் இன்னும் சிறப்படைந்திருக்கும். ஆனால், இடையில் தேவையில்லாமல், அவரைப் போராளியாக்கி, சீனர் சதி, மக்கள் அவதி, கிளர்ச்சி என வீணடித்திருக்க வேண்டாம்.

    Tenaliraman-Movie-Latest-Stills-21

    (கிருஷ்ணதேவராயர்) மன்னர் வேடத்திலும் வடிவேலுவே நடிக்காமல் வேறு ஒருவரை நடிக்க வைத்திருக்கலாம்; அவரும் மன்னருக்கு உள்ள இயல்புகளுடன் இல்லாமல், பல நேரங்களில் நகைச்சுவையாக நடிப்பதால், தெனாலி ராமனின் முக்கியத்துவம் படத்தில் குறைந்துவிடுகிறது. அதுவும் நவரத்தின அமைச்சர்களில் எட்டுப் பேர்களை ஓரளவு புத்திசாலியாகக் காட்டாததால் தெனாலி ராமனுக்கு வலுவான சவால்கள் கிடைக்கவில்லை.அவர் தன் அறிவுத் திறத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு குறைந்துவிட்டது.

    பானைக்குள் யானையைக் காட்டும் சவாலில், வடிவேலு குழந்தையாகத் தரையில் விழுந்து புரண்டு நடித்திருக்க வேண்டியதில்லை. வசனமாகவே பேசியிருக்கலாம். அல்லது, குழந்தையின் தாய் வந்து இந்தச் சிக்கலைச் சொல்வதாகவும் அதற்குத் தெனாலிராமன் தீர்வு சொல்வதாகவும் காட்டியிருந்தால் காட்சி இன்னும் சிறப்பாய் வந்திருக்கும். இது, தனக்கு வசதியில்லாத ஒரு காட்சி என்பதை வடிவேலு புரிந்துகொண்டு தவிர்த்திருக்க வேண்டும். ஒரு குழந்தையைப் போல் அப்படியே நடிப்பது, எந்த நடிகருக்குமே மிகக் கடினம்.

    தெனாலிராமனை மன்னன் மகள் மாதுளை (மீனாட்சி தீட்சித்), காதலிப்பது அவள் உரிமை; ஆனால், அதற்கு ஏற்ற வேதியியலும் உயிரியலும் (கெமிஸ்ட்ரி & பயாலஜி) படத்தில் சரிவர அமையவில்லை. மன்னனின் 36 மனைவியர்களும் 52 பிள்ளைகளும் இருக்க, சந்தையில் அவளது விளையாட்டுகள் குறித்தும் அரண்மனைக்குள் அவளது காதல் குறித்தும் யாருக்கும் தெரியவில்லை. இந்த 36 மனைவியர், 52 பிள்ளைகளை வைத்து, அவர்களுக்குள் உள்ள உறவுகள் குறித்து, இன்னும் நிறைய நகைச்சுவைக் காட்சிகளைக் கொண்டு வந்திருக்கலாம். இயக்குநர் இதிலும் தவறிவிட்டார்.

    படத்தில் சீனர்கள் தமிழில் பேசுகின்றனர்; ஆனால், தமிழர்களில் யாருமே சீன மொழி பேசவில்லை. இறுதியில் தெனாலிராமன் தேர்ந்தெடுத்த புதிய எட்டு அமைச்சர்களும் வேடிக்கையான தேர்வாகவே உள்ளனர். சரித்திர காலப் படத்தில் சரித்திரம் தவிர மற்ற எல்லாம் இருக்கிறது.

    மொத்தத்தில் இது தெனாலிராமனைக் காட்டுவதற்குப் பதிலாக, வடிவேலுவையே பெருமளவு காட்டியுள்ளதால், வடிவேலு ராமன் என்ற பெயரே படத்திற்குப் பொருந்தும்.

    Share
  • திருமால் திருப்புகழ் (62)

     

    கிரேசி மோகன்

    ———————————————
    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ——————————————————

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    “கண்ணனை நெஞ்சே கருது”
    —————————————————–

    பாலுக்(கு) அழும்பாலன், பாவை களின்லோலன்,

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    ஞாயலத் துயர்தீர்க்கும் நாயகன், -மாலுக்குள்

    எண்ணமாய்த் தோன்றி, இடைசாதி வந்தவன்,
    கண்ணனை நெஞ்சே கருது….

    பக்திக்(கு) அவன்பதங்கள், சக்திக்(கு) அவன்சரணம்
    முக்திக்(கு) அவனின் மலர்த்தாள்கள், -யுக்தியாய்
    கண்ணினுன் தாம்பினால் கட்டும் உரிமைக்குக்
    கண்ணனை நெஞ்சே கருது….

    அப்பண ஆதி அனந்தனில் தூங்குவோன்
    சொப்பனம் இவ்வுலக சாராம்சம், -அற்பநான்
    எண்ணம் தொலைத்து எழுவாய் விழிப்புடன்
    கண்ணனை நெஞ்சே கருது….

    இதுநிஜமாய் ஆகும், அது பொய்யாய்ப் போகும்,
    விதவிதமாய் எண்ணல் விடுத்து, -எதுவரினும்,
    கண்ணணைந்த போதுதிக்கும் காரிருள் வண்ணத்துக்
    கண்ணனை நெஞ்சே கருது….

    எங்கரி என்றே இரணியன் கேளும்முன்,
    அங்கொரு தூணில் அதிர்ந்தவன், -சங்கரி
    அண்ணனை, ஆகாய வண்ணனை ஆனந்தக்
    கண்ணனை நெஞ்சே கருது
    ———————————————————————-

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2012_06_01_archive.html

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 116 (21.04.14)

    மலர் சபாmaraiyon

    மதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை

    மறையோன் தனது ஊரையும் , தான் தென்னனை வாழ்த்திய காரணத்தையும் உரைத்தல்

    பாண்டிய நாட்டின் சிறப்பினையும்
    அம்மன்னரின் கொடை முதிலிய செய்கையையும்
    என் கண்கள் குளிரக் கண்டேன்;
    அதனால் அம்மன்னரை வாழ்த்தி வந்திருந்தேன்;
    அதனால் வருகை புரிந்தேன்.
    முத்தீயில் வேள்வி எடுக்கும் மறையோன்
    இங்ஙனம் கூறக் கேட்டு..

    மதுரைக்குச் செல்வதற்கு உரிய நல்ல வழியைப் பற்றி மறையவனிடம் கோவலன் வினாவுதல்

    மதுரைக்குச் சென்றிடும் செவ்விய வழி யாது
    என நீவிர் கூறுவீராக..
    என்று வேதம் ஓதும் மறையோனிடம்
    கேட்டனன் கோவலன்.

    மாங்காட்டு மறையோன் கூறிய மதுரை வழி கால நிலைமையையும் வழியின் அருமையையும் உணர்த்தல்

    அரசியலைத் தொழிலாகக் கொண்ட
    அமைச்சரோடு சேர்ந்து
    தன் செங்கோல் வளையும் வண்ணம்
    அரசனும் நெறி தவறி நடக்க,
    அதனால் நல்லாட்சி இழந்த நாட்டைப் போல..

    வேனில் காலமெனும் அமைச்சனோடு
    கொடுங்கதிர் சூரியன் சேர்ந்து
    தன் நெறிகளில் தவறித்
    தான் உருவாக்கிய நலன்களைத்
    தானே அழித்தனன்.

    முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும்
    தன் இயல்பது மாறி அழிந்து
    தமது நன்மைகளில் குன்றி
    நம்பிய மக்களுக்கு
    நடுநடுங்கக்கூடிய துயர் விளைவித்தது.

    தம் இயல்புநிலை மாறிப்
    பாலையென வடிவம் மாறி விளங்கிய
    இக்காலம் தன்னில்
    நீயும் இக்காரிகை தன்னுடன்
    பயணம் வந்துள்ளாய்..

    கற்பாறைகளும் சிறுமலைகளும்
    அரிதான வழிகளும் நிறைந்த,
    காண்போரைக் குழப்பமடைய வைக்கும்
    இக்கானல் நீர்த்தோற்றமும் உடைய
    இந்நெடிய பாலைவழியைக் கடந்து சென்றால்..

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  54 – 70

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html

    படத்துக்கு நன்றி:

    http://www.inbaminge.com/t/slokas/Vedic%20Chanting/

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஏப்ரல் 21 , 2014

    வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..

    **************************************************************************************

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திரு. எம்.மணிகண்டன் அவர்கள்

    **************************************************************************************

    வல்லமை இதழால் இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்யப் பெறுபவர் மதுரையைச் சேர்ந்த, டி.வி.எஸ்., சமுதாயப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்றுனராக (a demonstrator at TVS Educational Research and Development Centre’s Community College) இருக்கும் திரு. எம். மணிகண்டன் ஆவார். மணிகண்டன், கோவில்பட்டியை அடுத்த, நாலாட்டின்புத்தூரைச் சேர்ந்தவர். சென்ற திங்களன்று (ஏப்ரல் 14, 2014) திருநெல்வேலி, சங்கரன்கோவில் அருகில் குத்தாலப்பேரியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஹர்ஷன் என்ற மூன்று வயதுச் சிறுவனை மீட்டதில் இவருக்கு கணிசமான பங்கு இருக்கிறது. இவர் வடிவமைத்த, இவரது கண்டுபிடிப்பான ஆழ்துளைக் கிணற்றுக் கருவியுடன் (‘Borewell Robot’), இவரும் இவரது மீட்புப் பணிக் குழுவினரும் விரைந்து சென்று சிறுவனை மீட்டுள்ளார்கள். இவருடன் காவல்துறை, அரசு மருத்துவமனை மருத்துவர்கள், தீயணைப்புப் படையினர், ஊர் மக்கள், மாவட்ட ஆட்சியாளர் வரை தளத்தில் இருந்து ஒருங்கிணைந்து பணியாற்றியதில் சிறுவன் உயிருடன் மீட்கப் பட்டிருக்கிறான். அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இந்த மீட்புப் பணியை வெற்றி பெறச் செய்ததில் மணிகண்டனுக்கும் அவரது கண்டுபிடிப்புக்கும் பெரும் பங்கு உண்டு.

    http://youtu.be/WAwRcJoKUpU

    மீட்புப்பணிக் காணொளி: http://youtu.be/WAwRcJoKUpU

    இந்தியாவில் குழந்தைகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்வதில் இந்த நூற்றாண்டில் பற்பல புதுமையான நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று சில குழந்தைகள் நிகழ்த்தும் சாகச நிகழ்ச்சியான ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து எழுவதும் ஒன்றாக இடம் பெற ஆரம்பித்துள்ளது. அக்காலம் போல பிள்ளைத்தமிழ் பாடும் வழக்கம் இருந்திருந்தால் பத்து பருவங்களையும் இற்றைப்படுத்தும் பட்டியலில் குழந்தைகளின் இந்த வீர விளையாட்டையும் ஒன்றாகச் சேர்க்கலாம் போலிருக்கிறது.

    விவசயாத்திற்கு நீர் பற்றாக்குறையும், தொழில்நுட்ப வளர்ச்சியும் பல விவசாயிகளை ஆழ்துளைக் கிணறு தோண்டச் செய்கிறது. அவ்வாறு தோண்டிய ஆழ்துளைக் கிணறுகளில் நீரில்லாவிட்டால் அதனைக் கையோடு மூட வேண்டியதும் தோண்டிய நிறுவனங்களின் கடமையாக இருக்க வேண்டும் என்பது பொது அறிவுக்கு உட்பட்டது. அதைச் செய்யாத நிறுவனங்களின் தொழில் உரிமம் பறிக்கப்படும் என்பதைச் சட்டம் போட்டு நடவடிக்கை எடுத்ததாக இதுவரை தெரியவில்லை. சிறு குழந்தைகளும் வழக்கம் போல் கண் மூடி கண் திறப்பதற்குள் அங்குமிங்கும் ஓடி எளிதில் விபத்துகளைச் சந்திப்பார்கள்.

    இவ்வாறு நேரும் விபத்துகளில் ஏறத்தாழ ஒன்றரை அடி விட்டமுள்ள இதுபோன்று திறந்து கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து விடுவதும் ஒன்றாகிப் போய் விட்டது. உடனே அவசர நடவடிக்கைகள் துவங்கி, சில நேரங்களில் இராணுவத்தையும் உதவிக்கு அழைக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிடுகிறது. தொலைக்காட்சிகளில் பரபரப்புச் செய்திகளும், நேரடி ஒளிபரப்புகளும் வாடிக்கையாகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் நல்லதொரு முடிவாக அனைத்துக் குழந்தைகளும் உயிருடன் மீட்கப்படுவதுமில்லை என்பதைக்  கீழ் வரும் படங்களில் சில காண்பிக்கும்.

    borewell accidents

    பத்தாண்டுகளுக்கு முன்னர் மணிகண்டனின் மகன் சிறுவனாக இருந்தபொழுது இது போன்ற விபத்து ஒன்று நடக்க இருந்து, தடுத்துக் காப்பாற்றிய மணிகண்டனுக்கு இது போன்ற கருவி ஒன்றினை வடிவமைக்க எண்ணம் எழுந்ததாகவும், தனது சொந்த செலவில் வடிமைத்த பிறகு அதனை மேலும் செம்மைப்படுத்த இவர் பணியாற்றும் டி.வி.எஸ். கல்வி ஆராய்ச்சி மையம் உதவியதாகவும் கூறுகிறார் திரு. மணிகண்டன்.

    இனி மணிகண்டனது ஆழ்துளைக் கிணற்றுக் கருவி வேலை செய்யம் விதத்தை அவரே விளக்குவது இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    manikandans borewell robotஆழ்துளைக் கிணற்றில் ஆயிரம் அடி ஆழத்தில் குழந்தைகள் சிக்கி இருந்தாலும் கூட, இக்கருவியின் உதவியால் மீட்க முடியும். `12 வி’ பேட்டரி, டிசி மோட்டார் மூலம் இந்த கருவி இயங்குகிறது. குழந்தைகளைப் பற்றிப்பிடிக்கும் வகையிலான இயந்திர கை தானாக சுருங்கி விரியும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. மின்சப்ளை இல்லாத இடங்களில் பேட்டரி மூலமும் இதை இயக்க முடியும். குழந்தையை மீட்டு வரும்போது, குழந்தை நழுவி விடாமல் இருக்க மடங்கும் விரல்கள் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.

    மொத்தம் 2 அடி உயரம், 5 கிலோ எடை உள்ள இந்த இயந்திரத்தை எங்கும் எளிதாக எடுத்துச் செல்லலாம். குழிக்குள் சிக்கிய குழந்தையை அழுத்தும்போது ஏற்படுத்தும் அழுத்த அளவை துல்லியமாக அறிந்து கொள்ள, `பிரஸ்ஸர் கேஞ்ச்’ அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.

    குழிக்குள் தவறி விழுந்த குழந்தையின்மீது மண் சரிவதால் மீட்புப் பணியில் ஏற்படும் சிரமங்களை நீக்க மண் அள்ளும் இயந்திரம், வாக்குவம் பம்ப் ஆகியவையும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை ஐ.ஐ.டி. இந்த இயந்திரத்துக்கு 2006-ல் விருதும், அங்கீகாரமும் அளித்திருக்கிறது. 2007-ல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் குடியரசு தினவிழாவில் நற்சான்றிதழ் அளிக்கப்பட்டது.

    இக்கருவியை மாவட்டம்தோறும் வைக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

    குறிப்பாக தீயணைப்பு நிலையங்கள் தோறும் இக் கருவியை வைத்துக்கொண்டால், மீட்பு பணிகளுக்குப் பயன்படுத்தி குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்.

    இக்கருவியை யார் வேண்டு மானாலும இயக்க முடியும். இதைத் தயாரிக்க ரூ. 60,000 வரை தான் செலவாகும்.

    இது ‘தி இந்து’ நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதி

    அரியதொரு கண்டுபிடிப்பால் உயிர்காக்க உதவிய எம்.மணிகண்டன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************

    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    செய்திகள் வழங்கிய ‘தி இந்து’ நாளிதழுக்கு நன்றி [http://tamil.thehindu.com/tamilnadu/article5913951.ece]

     

    Share
  • கர்ணனல்லன் விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன்

    பிச்சினிக்காடு இளங்கோ

     

    எல்லாரும்images (5)
    எல்லா இடத்திலும்
    கர்ணனையே வியக்கிறார்கள்
    நான் வேறுபடுகிறேன்

    உலகத்தோடு
    நான்
    ஒத்துப்போகவிரும்பவில்லை
    எல்லாரையும்போல
    ஓபோட
    விரும்பவில்லை

    துடுக்குத்தனமும்
    தோற்றப்பொலிவும்
    நடிகர்திலகம்போல்
    இருந்திருப்பானோ என்னவோ
    தெரியவில்லை

    கொடை
    கொடுக்கும் இடத்திலும்
    குலம்கேட்ட இடத்திலும்
    நான்
    கர்ணன்பக்கம்தான்

    திறன்காட்டவிடாமல்
    குலம்கேட்டது கொடுமைதான்
    அதற்குமேல்
    அவன்மேல்
    மரியாதையில்லை
    நான்
    அவன்பக்கமில்லை

    செஞ்சோற்றுக்கடன்
    தீர்த்ததிலும் பெருமையில்லை

    அங்கதேசத்து
    அதிபனாக்கியது
    அதைவிடபெருமை

    கர்ணனின்
    அவமானம் துடைத்தது
    பெருமையிலும் பெருமை

    எந்தஇடத்திலும்
    என்னால் கர்ணனை
    ஏற்கமுடியவில்லை
    கர்ணன்
    அவசரக்காரன்
    அலட்சியக்காரன்
    பெருமிதக்காரன்
    ஏளனக்காரன்
    என்பது என்முடிவு

    மகேந்திரமலையில்
    பரசுராமரிடம் பொய்சொல்லி
    வேதமும் வித்தையும் கற்றவன்

    பாண்டவர் கெளரவர்
    மற்றும் வேடிக்கை
    பார்ப்பவர்
    நிறைந்த அவையில்
    பாஞ்சாலிக்காக
    யார்பேசினார்கள் நேர்மையாய்?

    பெண்ணெனப்
    பார்த்தவர் அதிகம்
    பெண்ணென்று
    பரிவுகாட்டியவர் யார்?

    கொடுமைகண்டு
    கொதித்தான் வீமன்
    காரணம்
    அவள்
    அவனுக்கும் மனைவி

    பாஞ்சாலியை
    அவைக்கு இழுத்துவந்து
    துரோகத்தின் வடிவம்
    நானென்று
    துரியோதனன் நிலைநாட்டினான்

    சுதந்தரம் இழந்தவன்
    என்னை இழக்க
    என் சுதந்தரத்தை இழக்க
    என்ன உரிமையுண்டு?

    பாஞ்சாலி கேள்விக்கு
    அவை ஆண்மையற்று
    அன்று ஆமைபோல் இருந்தது

    போரென்று வரும்போதும்
    போட்டியென்று வரும்போதும்
    கர்ணன் கைகொடுத்தால்
    அது
    கடனென்று கொள்ளலாம்

    பாஞ்சாலி பேசுவது
    சரியென்று குரல்கொடுத்த
    விகர்ணனைக்
    கண்டித்த கர்ணனைக்
    கண்ணைமூடிக்கொண்டு ஏற்பது
    ஏற்புடையதல்ல எனக்கு

    விகர்ணன்
    அவையில் சின்னவன்
    பெண்ணுக்காய்ப்பேசிய
    பெரியவன் அவன்தான்

    துச்சாதனனைத்
    துகிலுரியத் தூண்டியதே
    கர்வக்காரன் கர்ணன்தான்

    ஒருமுறை அவமானப்பட்டவன்
    எந்த இடத்திலும்
    எவர்மானமும் காக்கப்
    பேசியதாய் இல்லை
    பிறர்படும் அவமானம்பற்றி
    அலட்டிக்கொண்டதே இல்லை

    துவைத வனத்தில்
    சித்திரசேனனிடம்
    துவைக்கப்பட்டான்
    துரியோதனன்
    புறம்காட்டி ஓடினான்
    கர்ணன்

    துரியோதனன்
    சித்திரசேன்னிடம் சிக்கியபோது
    கர்ணனும் சிக்கியிருக்கவேண்டும்
    கந்தர்வனால்
    கட்டப்பட்டிருக்கவேண்டும்
    அன்று
    ஓடியவன் கர்ணன்
    அவனா
    பாட்டுடைத்தலைவன்?
    அதில்
    ஒருபோதும்
    துரியோதனனுக்குத்
    துளியும் உடன்பாடில்லை

    அன்றே அந்த
    அவலம்கண்டு
    உயிர்விடத்துணிந்தான்
    துரியோதனன்

    அவமானம் நீக்கி
    அங்கதேசம் தந்து
    தன்மானம் தந்தவனை
    தவிக்கவிட்டு
    ஓடிப்போனதா?
    கர்ணன் தந்த வெகுமானம்?

    அங்கத்தையே தர
    அங்கே
    நின்றிருக்கவேண்டாமா?

    நியாத்தின் பக்கம்
    நின்றதே இல்லை

    எரியும் நெருப்பிற்கு
    எண்ணையாய் இருந்திருக்கிறான்

    எங்கேயும்
    மழைமேகமாய் மாறி
    தீயணைத்ததில்லை

    கர்ணன்
    படம்பார்த்ததால்
    கர்ணனாய்
    சிவாஜி நடித்ததால்
    அப்பாவித்தனமாக
    நான்
    அவன்பக்கமிருந்தேன்

    சக்தி கிருஷ்ணசாமியின்
    சக்திமிகு வசனம்
    சாய்த்தது என்னை
    அவன் பக்கம்

    இராஜாஜி
    மகாபாரதம் படித்தேன்
    இனி எப்போதும்
    நான் விகர்ணன் பக்கம்

    இராமயணம் என்றால்
    நான்
    கும்பகர்ணன்  பக்கம்

    காரணம்
    விகர்ணன்
    நியாத்தின் பக்கம்

    அவன்
    கெளரவர்களுக்கு
    கெளரவம் தந்தவன்

    அவன்
    நூற்றில்  ஒருவனல்ல
    ஆயிரத்தில் ஒருவன்

    {9.04.2014 ) நள்ளிரவு 1.30க்கும் 2 மணிக்கும் இடையில் அர்ச்சுனன் நாடகம் எழுத இராஜாஜி எழுதிய மகாபாரதம் படித்துக் கொண்டிருந்தபோது கிடைத்த பரிசு இக்கவிதை}

    Share
  • வார ராசி பலன் 21.04.14-27.04.14

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: வெளி நாடு செல்ல வேண்டும் என்று விரும்பியவர்களின் எண்ணம் பலிக்கும். மாணவர்கள் கவனச் சிதறலுக்கு ஆட்படாமல், படிப்பில் அக்கறை காட்ட, எதிர்காலம் நன்றாக இருக்கும். நழுவிச் சென்ற வாய்ப்புகளைக் கலைஞர்கள் தங்கள் திறமையால் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்வர். பொது வாழ்வில் இருப்பவர்கள் சமயோசி தமாகச் செயல்பட்டால், எதிரிகளின் கரம் மேலோங்காதிருக்கும். முதியவர்கள் எளிய உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால், உறுதியான உடலைப் பெறலாம். பணி சுமை கூடுவதால்,பெண்களுக்கு எரிச்சலும், அசதியும் அவ்வப்போது வந்து போகும் வாய்ப்பிருக்கிறது.
    ரிஷபம்: பெண்கள் சொல்லும் வார்த்தை, செலவழிக்கும் பணம் இரண்டிலும் நிதானமாக இருங்கள். உறவுகள் கசக்கா மலிருக்கும். வியாபாரிகள் புதியவரை நம்பி பொறுப்புக்களைத் தருவதைக் காட்டிலும் நேரடியாக நீங்களே கவனம் செலுத்தி வர, லாபம் தடையின்றி வரும் . வேலை செய்யும் இடங்களில் தோன்றும் சிறு பிரச்னைகளை பொறுமையாகக் கையாண்டால், பணியில் இருப்பவர்கள் உயரதிகாரிகளின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வது சுலபமாகும். சுய தொழில் புரிபவர்கள் . தொழிலில் இருந்த பின்னடைவு, நெருக்கடி ஆகியவை நீங்கி, புதுத் தெம்புடன் செயல் படுவார்கள். கலைஞர்களுக்கு , எளிதில் முடியக் கூடிய வேலைகள் சில சமயம் வளர்ந்து கொண்டே போகும்.
    மிதுனம்: கலைஞர்கள் தன்னுடைய பணியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், புதிய கதைகளைத் திரிப்பவர்களின் வாயைக் கட்டி விடலாம். பெண்கள் உறவுகளின் போக்கறிந்து பக்குவமாக நடந்தால், இல்லத்தில் அமைதி நிலவும். சுய தொழில் புரிபவர்கள் தொழில் வகையில் எந்த ஒரு முயற்சியையும் தக்க ஆலோசனையின் பேரில் செயல்படுத்தினால், நினைத்தவாறு லாபம் பெறலாம். கவலைகள் முன்னேற்றத்தின் வேகத்தைக் குறைக்காதவாறு மாணவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும். பணியில் இருப்பவர்கள் நிர்வாகம் மற்றும் உயர் அதிகாரிகளின் செயல் பாடுகள் பற்றிய அலசல்கள். விமர்சனங்கள் ஆகியவற்றில் ஈடுபடாமலிருப்பதே நலம்.
    கடகம்: வெளிடங்களில் வேலைக்காகவும் படிப்பிற்காகவும் தங்கியிருப்பவர்கள் அதிகமாக ஆசைப்படுதலையும், வீண் செலவுகளையும் சுருக்கிக் கொண்டால், பற்றாக் குறையை ஓரளவு சமாளித்துவிட முடியும். யாரையும் குற்றம் சாட்டிப் பேசாமலிருந்தால், கலைஞர்களின் குடும்பத்திலும், தொழிலிலும் குழப்பம் இராது. பணியில் இருப்பவர்கள் கடனில் வண்டி வாங்குவதை சற்று ஆறப் போடவும். மாணவர்கள் திறமையோடு பொறுமையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நினைத்த காரியத்தை சாதிக்கலாம். வீடு, மனை ஆகியவற்றை வாங்கி விற்பவர்கள் அதிக லாபத் திற்கு ஆசைப்படாமலிருந்தால், தங்கள் பெயரை நிலை நிறுத்துக் கொள்ளலாம்.
    சிம்மம்: பணியில் இருப்பவர்கள் பிறருக்கு வழங்கும் பணம், ஆலோசனை இரண்டிலும் கவனமாய் இருப்பது அவசியம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களுக்கென்று ஒரு வரையறை வைத்துக் கொண்டு செயல்படுவது புத்திசாலித்தனமாகும். உறவுகளின் வருகையால் பெண்கள் இல்லத்தில் சில இடையூறுகளை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டியிருக்கும். தொழிலாளர்கள் தங்களின் சலுகை களை முறையாகப் பயன்படுத்துவது நல்லது. முதியவர்கள் எலும்பு சம்பந்தமான உபாதைகளை உடனுக்குடன் கவனி த்து விடுவது நலம். இந்த வாரம் வியாபாரிகள் எதிர்பார்த்த வரவுகள் சற்றே தாமதமாகலாம். பிள்ளைகளின் நட்பு வட்டத்தின் மீது பெற்றோரின் கவனம் தேவை.
    கன்னி: தொல்லைத் தந்து கொண் டிருந்த கடன்கள் படிப்படியாகக் குறைவதால், புது தெம்புடன் வலம் வருவீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தவர்கள் நல்ல வேலையில் அமர்வார்கள். வியாபாரிகள் எதிலும், நிதானம் மற்றும் தீர்க்காலோசனைனயைப் பின்பற்ற, அதிக நன்மை பெறலாம். பெண்கள் இல்லத்திலும், அலுவலகத்திலும் வீண் பேச்சுக்களைக் குறைத்தால், அமைதிக்கு பங்கம் வராமலிருக்கும். புதிய துறையில் கால் பதிப்பவர்கள், சில கெடுபிடிகளைத் தாண்டி, தன் திறமைகளை நிரூபிக்க வேண்டி இ ருக்கும். கவனக் குறைவாகச் செயல்படும் பிள்ளைகளை பெற்றோர்கள் இதமாகக் கண்டிப்பதே நல்லது.
    துலாம்:  முதியோர்களுக்கு , உடலில் சில அசௌகரியங்கள் தோன்றி மறையலாம். தகுந்த மருந்துகளை உட்கொண்டால், ஆரோக்கியம் ஓரளவுக்கு நன்றாக இருக்கும். பெண்கள் கோப தாபங்களைக் குறைத்து பொறுமையாய் இருங்கள். குடும்பத்தில் பல பிரச்னைகள் தீர்ந்து விடும். இந்த வாரம் கவனத் தடுமாற்றம், மறதி ஆகியவை பொது வாழ்வில் உள்ளவர்களை அலைக்கழிக்கும். மாணவர்கள் இனிய அனுபவங்களை பெற்று மகிழ்வதோடு நெருக்கமானவர்கள் காட்டும் பாசமும் உங்களை உற்சாகப்படுத்தும். நம்பிக்கை வைத்தவர்களில் சிலர் ஏமாற்றங்களைத் தருவார்கள். எனவே பொறுப்பில் இருப்பவர்கள் முக்கியமான ஆவணங்கள் , சாவிகள் ஆகியவற்றை பத்திரமாக வைப்பது அவசியம்.
    விருச்சிகம்: பொது சேவை ஆற்றுபவர்கள் அலட்சியப் போக்கைத் தவிர்த்தால், வெற்றிப் படியில் எளிதாக ஏறுலாம். மாணவர்கள், கல்விக்கான செய் முறைப் பயிற்சிகளில் தகுந் த விதிகளைக் கடைபிடிப்பது அவசியம். இந்த வாரம் கடன் தொல்லையால் சில நிகழ்ச்சிகள் தள் ளிப் போக வாய்ப்பிருக்கிறது. பெண்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட வேலையில் கண்ணும் கருத்தாக இருந்தால், நல்ல பெயரைப் பெற இயலும்.. கூட்டுத்தொழில் செய்பவர் கள் எதிலும் கவனமாக இருந்தால், வருகின்ற லாபம் குறையாமல் இருக்கும். கலைஞர்கள் சின்ன விஷயங்களுக்கு சுள்ளென்று கோபப்படுவதைத் தவிர்த்தல் அவசியம்.
    தனுசு: நெருங்கிப் பழகிய பங்குதாராரர்கள் கருத்து வேறுபாடால் உங்க ளை விட்டுப் பிரியலாம். எனவே வியாபாரிகள் எதிலும் நிதானமாய் இருப்பது நல்லது. பணி புரிபவர்கள் எந்த விஷயத்திலும் விடாப்பிடியாய் இருப்பதைக் குறைத்துக் கொண்டால் வாக்குவாதங்களும், வேதனைகளும் இராமல் வேலைகளை செய்ய முடியும். மாணவர்கள் விரும்பிய உணவு வகைகளை உண்பதிலும் ஒரு வரையறை வைத்துக் கொண்டால், ஆரோக்கியம் குன்றாம லிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் செல்வாக்கை சிதறச் செய்யும் காரியங் களுக்கு ஆதரவு தருவதை அறவே தவிர்ப்பது புத்திசாலித்தனமாகும். முதலீடுகள் தொடர் பான விஷயங்களில் கலைஞர்கள் எச்சரிக்கையாய் செயல்படுவது அவசியம்.
    மகரம்: பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகிச் செல்லும் நிலை நிலவினாலும், பெண்கள் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு,பிரச்னைகளைத் தீர்த்தால் உறவுகள் இதமாகத் திகழும். இந்த வாரம் பங்குதாரர்கள் இடையே வீண் சர்ச்சை, வேண்டாத சந்தேகம் ஆகியவை நுழைந்து மன அமைதி யைக் கெடுக்கலாம். மாணவர்கள் படிப்பில் உள்ள கவனத்தை சிதறடிக்கும் விஷயங்களுக்கு தலையசைக்காமலிருப்பது அவசியம் . முயன்றால் முடியாத து இல்லை என்பதை உணர்ந்து, கலைஞர்கள் முழு மூச்சாக செயல்பட்டால் எடுத்த காரியங்களில் வெற்றி அடைவீர்கள். பணி புரிபவர்கள் வாக்கில் நிதானம், செயல்களில் பணிஆகிய இரண்டையும் கடைபிடித்தால், சங்கடம் ஏதும் வரமல் சமாளித்து விடலாம்.
    கும்பம்: வியாபாரிகள் புதியவர்களை நம்பி பணம் கொடுக்காமலிருந்தால், நஷ்டங்களும், கஷ்டங்களும் உங்கள் அருகே வராது. பொது வாழ்வில் உள்ளவர்கள் மன உளைச்சல், சந்தே கம், குழப்பம் ஆகியவை வராதவாறு, பொறுமையுடனும், திறமையுடனும் செயல்பட்டு வந் தால், உங்கள் திறமைக்குரிய திறமைக்குரிய பாராட்டு கிடைக்கும். வேண்டாத தொல்லை களால் சுறுசுறுப்பாக நடந்த சில பணிகளில் தேக்க நிலை உருவாகும். பொறுப்பான பதவி வகிப்பவர் கள் பணியாளர்களிடம் நயமாக நடந்து கொள்ளுங்கள். உங்களிடம் விசுவாசமாய் இருப்பார்கள். பெண்கள் உடல்நலம் பாதிப்பு ஏற்படாதவாறு, பணியில் தகுந்த மாற்றங்களை மேற்கொள்ளுங்கள். எல்லா வேலைகளும் சீராக நடக்கும்.
    மீனம்:வாகனங்களை புதிதாக ஓட்டுபவர்கள், அதிக வேகத்தில் செல்வதை இயன்ற வரைத் தவிர்ப்பது நலம். விளையாட்டுப் போட்டிகளை மாணவர்கள் நேர் வழியில் எதிர்கொண்டால் வெற்றி உறுதி! வியாபாரிகள் பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்கள் சக ஊழியர்களினால் உருவாகும் பிரச் னைகளை சமாளிக்க நேரிடும் . வயதான நோயாளிகள் தேவையான பரிசோதனைகளை தள்ளிப் போட வேண்டாம். கலைஞர்கள் தவறான வழிக்கு மாறாமலிருந்தால், உங்கள் பெயர், புகழ் இரண்டும் குறையாமலிருக்கும். பங்குத்துறையில் உள்ளவர்கள் அளவான முதலீடு என்பதில் உறுதியாக இருப்பது நலம்.

    Share
  • சுருட்டிக்கொள்ளாத வால்

    மாதவன் இளங்கோ

    அந்த உயர்ரக நாயை சமீபத்தில் ஒரு நாய் கண்காட்சியில் வாங்கினேன். நாக்கைத் தொங்கவைத்துக்கொண்டும், வாலை ஆட்டிக்கொண்டும், பாசத்துடன் என் அருகில் வந்து நின்ற அதன் கருப்புநிற கண் அழகிலும் அதன் சுறுசுறுப்பிலும் மயங்கி அதை வாங்கிவிட்டேன். இருப்பினும் அந்த வாலை ஒழுங்காக கவனிக்கத் தவறிவிட்டேன்.

    நல்ல நாய்தான். ஆனால், அந்த வால்?

    அந்த நாய்க்கு ‘ரேகோ’ என்ற பெயர் வைத்தேன். ரேகோ அதிபுத்திசாலித்தனமான நாய் என்றும், அதற்கு பிஸ்கட் மற்றும் மாமிசம் என்றால் மிகவும் பிடிக்கும் என்று நாயை விற்றவன் கூறினான். பிஸ்கட் தருகிறேன் என்றால் போதும் எதையும் செய்துவிடும். பந்தைத் தூக்கிப் போடுவேன், ஓடிச்சென்று கவ்விக்கொண்டு வரும். பிஸ்கட் தருவேன். அமைதியாய் உட்கார் என்பேன், உட்காரும். பிஸ்கட் தருவேன். நான் தேடிக்கொண்டிருந்த செருப்பை கூட ஒருமுறை கண்டுபிடித்துக் கொண்டு வந்தது. பிஸ்கட் தந்தேன். அதன் அறிவைப் பற்றி நண்பர்களிடம் பெருமையோடு பேசினேன்.

    ஆனால், அந்த வால்?

    அது ஏன் எப்போது பார்த்தாலும் சுருண்டுகொள்கிறது? ‘வாலை சுருட்டிக்கொள்ளாதே’ என்றேன். கேட்கவில்லை. ‘பிஸ்கட் stressதருகிறேன்’ என்றேன். கேட்கவில்லை. என் மீதான மரியாதையும், அன்பும் பிஸ்கட் தரும் வரையில் மட்டும் இல்லை, நான் இடும் கட்டளைகள் அதற்குப் பிடித்ததாகவும் இருக்கும் வரையில் தான் என்று புரிந்து கொண்டேன்.

    அன்பாக எடுத்துச் சொன்னேன். கேட்கவில்லை. கெஞ்சினேன். சாட்டை செய்யவில்லை. வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். அதன் நான்கு கால்களிலும் விழுந்து கதறினேன். ம்ஹும்! பயனில்லை. கோபம் கொண்டு அடித்தும் நிமிரவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

    வகைவகையான பிஸ்கட்டுகள் வாங்கித் தந்தேன். அத்தனையும் தின்றுவிட்டு வாலை சுருட்டிக்கொண்டு, வாயைத் திறந்து, நாக்கைத் தொங்கப்பொட்டுக்கொண்டு எப்போதும் போல் கர்வத்துடன் என்னை நிமிர்ந்து பார்த்தது.

    நான் ஒரு சைவி. இருப்பினும் சமரசம் செய்துகொண்டு அதற்கு மாமிசத்துண்டுகளை நானே சென்று வாங்கி வந்து கொடுத்தேன். மசியவில்லை. அந்த பாழாய்ப்போன வாலை நிமிர்த்த நேர்மையுடன் நான் எடுத்த அத்தனை பகீரத பிரயத்தனங்களும், என் தியாகங்களும் வீணாய்ப் போயின.

    ஒருநாள் வாலோடு ஒரு குச்சியை சேர்த்துக் கட்டி வைத்துவிட்டேன். வால் சுருண்டுகொள்ளவில்லை. அழகாக நீண்டிருந்தது. அது எனக்குப் பிடித்திருந்தது. ரசித்தேன். ‘பார், எவ்வளவு அழகாக இருக்கிறது!’ என்று அதற்கும் கண்ணாடியில் காண்பித்தேன். அது ஆமோதிப்பது போலும் இல்லாமல் மறுப்பது போலும் இல்லாமல் வித்தியாசமான பார்வை வீசியது. ஆனால், அந்தப் பார்வையில் கர்வம் மட்டும் மாறவில்லை.

    நிறைய மாமிசம் வாங்கித்தந்தேன். உயர்தர ‘சோப்பு’ போட்டு என்னுடைய பிரத்யேக குளியல் தொட்டியில் எல்லாம் வைத்து க் குளிப்பாட்டினேன். கடைக்கு அழைத்துச் சென்று வேண்டியதையெல்லாம் வாங்கித் தந்தேன். உண்மையில் ஒரு நாயை அப்படி இதுவரை யாருமே கவனித்திருக்க மாட்டார்கள். அந்த ஒரு வாரம் அவ்வளவு மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டேன். செய்ய வேண்டியதை எல்லாம் நேர்மையோடும் அன்போடும் செய்தேன்.
    இதற்கு மேல் ரேகோ வாலை சுருட்டிக்கொள்ளாது, வால் இனி நீண்டுதான் இருக்கும் என்று நம்பினேன். அது நன்றியுள்ள பிராணி ஆயிற்றே என்று எண்ணி, அன்போடு தடவிக்கொண்டே, அந்தக் குச்சியை மெதுவாகப் பிரித்து எடுத்தேன். அடுத்த நொடி சுருண்டுவிட்டது அந்த ‘திமிர்பிடித்த நாயின் திமிர்பிடித்த வால்’!

    வெறுத்துப்போய் அந்தக் குச்சியை அதன் மேலே வீசியெறிந்தேன்.dogtail2

    நண்பனிடம் என் கவலையைப் பகிர்ந்துகொண்டேன். “எல்லா நாய்களும் அப்படித்தான். ‘ நாய் வாலை நிமிர்த்த முடியாது’. அது சுருட்டிக்கொள்ளத்தான் செய்யும். அதை மாற்ற முயன்று நேரத்தை விரயம் செய்யாதே.” என்று அறிவுரை வழங்கினான். இது முன்னரே தெரியாமல் போய்விட்டதே என்று எண்ணி வருந்தினேன்.

    உயர் ரக நாய் என்று கூறி என்னிடம் விற்றவன் மேல் எனக்கு அத்தனை கோபம் வந்தது. மற்றவர்களை மதிக்காமல், தனக்குத் தான் மட்டும்தான் என்றும், தன்னை மாற்றிக்கொள்ளவே மாட்டேன் என்று கர்வம் பிடித்து சுருண்டு கிடக்கும் இந்த வாலைக் கொண்ட நாய் என்ன பெரிய உயர் ரகம்?

    இறுதியில் அந்த நாயைத் துரத்தி அடித்துவிடுவது என்று முடிவு கட்டினேன்.

    இதற்கு மேல் இந்த நன்றிகெட்ட நாய்களை வாங்கக்கூடாது, வாங்கினால் ஒரு பூனையைத் தான் வாங்க வேண்டும். ஆனால், பூனை வால் சுருட்டிக்கொள்ளும் இயல்புடையதா? நண்பனிடம் கேட்க வேண்டும்.

    இல்லை. இதோ, இது தான் என் இறுதியான முடிவு – வாலை சுருட்டிக்கொள்ளாத எந்த பிராணியானாலும் பரவாயில்லை, நான் வாங்கத் தயாராயிருக்கிறேன். அது, புலியாக இருந்தாலும் பரவாயில்லை. அதன் மீது எனக்குத் துளி பயமில்லை.

    எந்தப் பிராணி என்பது முக்கியமில்லை. ‘சுருட்டிக்கொள்ளாத வால்’ எனக்கு மிக முக்கியம்!

    Share
  • பேரிழப்பு

    பத்மநாபபுரம் அரவிந்தன்t-images

    ஐம்பூதங்களில் ஒன்றின்
    நெடு நீள நாக்குகள்
    அவனை சுவைத்துத் தின்கிறது

    இலக்கியத்தின் இடுக்கு வழி நுழைந்து
    புதுத் தெரு புகுந்தவன்..
    அவனைப் பற்றிய விளக்கத்தை தவிர..
    எதனைக் கேட்டாலும்
    பதில் வரும்
    எத்தனையோ சிந்தனைகள்,
    கலைகள் குறித்த தொலைநோக்கு

    புத்திக்குள் இத்தனையும்
    குத்தியேற்ற முடியுமாவென்ற
    பெருவியப்பு சகலருக்கும்

    அத்தனையும், அத்தனையும்
    வெண் புகையுடன் எரிகிறது
    அவன் கபாலத்தை பொசுக்கும் வலு
    தீ நாவிற்கு இருந்தாலும்,
    அவன் உடலின் மற்ற பாகங்களை
    நக்கித் தின்றது போல்
    அத்தனை எளிதாக
    இயலாது அவன் மூளையை..

    அவன் மூளையுள் நிறைந்தவை
    புகையோடு காற்றில்
    கலந்துயர்ந்து எழுகிறது
    அவன் இறப்பு அவனைத்
    தெரிந்த சகலருக்கும் பேரிழப்பு
    அவனுக்கான இறுதி சொட்டுக் கண்ணீர்
    மயானத் தரையில் விழுந்து மறைகிறது..

     

    https://blogs.discovermagazine.com/notrocketscience/2011/01/06/tears-as-chemical-signals-smell-of-female-tears-affects-sexual-behaviour-of-men/

    Share
  • வினைப் பயன்

    தஞ்சை வெ.கோபாலன்                               ’

    கோயிலில் புராணிகர் கதை சொல்லிக் கொண்டிருந்தார். கூட்டம் ஒன்றும் அதிகமில்லையென்றாலும், கதையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அக்கறையோடு கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். நான் அந்த வழியாகப் போகும்போது ஒலிபெருக்கியில் அவர் பேச்சு காதில் விழுந்தது. அவர் பேசிக் கொண்ர்ருக்கும் விஷயம் பூர்வ ஜன்ம வினைப் பயன் மறுபிறவியிலும் வந்து உறுத்தும் என்பது. ‘சிலப்பதிகாரம்’ காப்பிய நோக்கத்திலும் இதைத்தான் சொல்லுகிறது என்பதால் நான் சற்று கோயில் வாயிலில் நின்று புராணிகரின் பேச்சைக் கவனிக்கத் தொடங்கினேன்.

    அவர் சொன்னார் முந்தைய பிறவியின் கர்ம பலன்கள் அடுத்தடுத்தப் பிறவியிலும் அவனையே வந்து சேருவதோடு, இந்தப் பிறவியிலும் செய்தவைகளும் சேர்ந்து கொள்ளும். பழைய பாக்கியைத் தீர்ப்பதற்கான வழிகளைத் தேடுவதோடு, இந்தப் பிறவியிலும் புதிதாக அவனுக்கு கர்ம வினைகள் வந்து சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எத்தனைதான் உயர்ந்தவன், மேலானவன், நல்லவன் இப்படி எல்லாம் இருந்தபோதும் அவனுக்கும் ஒரு தீங்கு வருகிறது என்று சொன்னால் அது வினையின் பயன் என்றார். அவர் பேச்சில் ஒரு சித்தரைப் பற்றி குறிப்பிட்டார். அவர் காலில் ஒரு புண், ஆறாத புண் அதில் ஏராளமான சின்னஞ்சிறு புழுக்கள். அவர் அவற்றைப் பார்த்து ஊம் தின்னுங்கள், சண்டைபோடாமல் அவரவருக்குத் தேவையானதைத் தின்னுங்கள் என்று தன் உடம்பைத் தின்ன அந்த புழுக்களுக்கு அன்போடு உபசரிப்பாராம். தான் அனுபவிப்பது கர்ம வினை என்பதால் அதை அனுபவித்தே ஆகவேண்டுமென்பது அவருக்குத் தெரியும் என்றார்.

    downloadஅப்போது மற்றொரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வந்தது. ஒரு முறை காஞ்சிப் பெரியவர் கண் பொறைக்காக சென்னையின் பிரபல கண் மருத்துவரிடம் அறுவை சிகிச்சை மடத்திலேயே செய்து கொண்டாராம். அப்போது சீடர்களில் ஒருவர் தாங்கள் நினைத்தால் அறுவை சிகிச்சை இல்லாமல் செய்து கொள்ள முடியாதா என்று வெகுளித்தனமாகக் கேட்டிருக்கிறார். அதற்கு சுவாமி சொன்னாராம், “ஏண்டா, நான் மறுபடியும் வந்து பிறந்து அவஸ்தை படணும்கிறியா?” என்றாராம். தனக்கு விதிக்கப்பட்ட கர்ம வினையைத் தான் அனுபவிக்காவிட்டால் அது மீண்டும் தொடராதோ என்பது அவரது வினா.

    அந்த கதையில் அந்த புராணிகர் சொன்ன செய்திகள் எனக்குப் புதுமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இப்படியும் இருக்க முடியுமா? அல்லது இவைகள் எல்லாம் இவருடைய கற்பனைகளா? இவர் சொல்வதற்கு ஏதேனும் ஆதாரங்களை இவர் காட்டுவாரா, எந்த புராணத்திலாவது அவர் சொன்ன அந்த கற்பனைக் கதைகள் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது.

    என் மனவோட்டத்திற்கு பதில் சொல்வதைப் போல புராணிகர் தொடர்ந்து கதை சொல்லலானார். மகாபாரதக் கதையில் கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. கர்ணன் மகாவீரன், அர்ஜுனனும் அவனுக்குச் சற்றும் குறைந்தவனல்ல. இவ்விருவருக்கும் நடக்கும் யுத்தத்தில் யார் வெற்றி பெறுவார் என்பதைக் காண அனைவருக்கும் ஆவல். கர்ணனின் கடுமையான தாக்குதல்களில் அர்ஜுனன் திணறுகிறான்.

    பீஷ்மர் படைத்தலைமை ஏற்றிருந்தவரை போர் புரியாமல் ஒதுங்கியிருந்த கர்ணன் துரோணரும் மாண்டபின் 16ஆம் நாள் யுத்தத்தில்தான் தலைமை ஏற்கிறான். போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வரையில் அர்ஜுனனின் தேரை கர்ணன் இருந்த இடத்துக்கு ஓட்டிக்கொண்டு வராமல் கிருஷ்ணன் தவிர்த்து வந்தார். இவர் ஏன் இப்படிச் செய்கிறார் என்று அர்ஜுனனுக்குக் கவலை. அர்ஜுனனுடைய கவலையைப் புரிந்து கொண்டு கிருஷ்ணன் சொல்கிறார் கர்ணன் இப்போது உச்சகட்ட வீரத்துடன் போர் புரிகிறான். அவனுக்குச் சில சாபங்கள் உண்டு. அவை அவனை சரியான தருணத்தில் பாதித்து அவனுடைய வீரத்துக்குப் பின்னடைவு ஏற்படும் அப்போது போய் அவனோடு நீ மொதினால் உனக்கு ஜெயம் கிட்டும் என்று கிருஷ்ணன் சொன்னதை அர்ஜுனனும் ஏற்றுக் கொண்டானாம்.

    கர்ணன் பரசுராமரிடம் அஸ்திர வித்தைகளைக் கற்றானாம். ஒரு சமயம் பரசுராமர் தன்னிடம் இந்த அஸ்திர வித்தைகளைக் கற்றுக் கொள்ளும் கர்ணன் ஒரு தேரோட்டி மகன் என்பதைத் தெரிந்து கொண்டு, தன்னை ஒரு க்ஷத்திரியன் என்று சொல்லியல்லவா போர்க்கலையைப் பயின்றாய், நீ பொய் சொல்லி என்னை ஏமாற்றி கற்றுக் கொண்டதால், இந்த வித்தைகள் உனக்கு ஆபத்து ஏற்படுகின்ற சமயத்தில் உன்னை கைவிட்டுவிடும். அஸ்திர வித்தைகள் மந்திரங்கள் உனக்கு நினைவுக்கு வராது என்று சாபம் இட்டுவிட்டாராம் பரசுராமர். அப்படியொரு நிலை அவனுக்கு இப்போது போர்க்களத்தில் உண்டான நேரத்தில் அர்ஜுனன், கர்ணனுடைய தேர் சக்கரம் மண்ணில் புதைந்தபோது அதை எடுக்க முயன்ற நேரத்தில் அவனை அம்பு எய்து கொல்கிறான்.

    இந்த அதர்மமான முறையில் அர்ஜுனன் கர்ணனைக் கொன்றது சரியா என்ற கேள்வியை புராணிகர் எழுப்பினார். அர்ஜுனனுடைய குமாரன் அபிமன்யுவையும் கர்ணன் உள்ளிட்ட துரியோதனாதியர்கள் அதர்மமான முறையில் அல்லவா கொன்றார்கள். சகல சாஸ்திரங்கள், தர்மங்கள் அனைத்தையும் அறிந்த பீஷ்மரும், துரோணரும், கிருபாச்சாரியாரும் அல்லவா அவனைக் கூடி நின்று கொன்றார்கள். அதுபோலவே கர்ணன் கொல்லப்பட்ட முறையும் தர்மத்துக்கு மாறானதுதான் என்று சொல்லிவிட்டு அப்படி ஏன் ஒரு நிலைமை அவனுக்கு நேர்ந்தது தெரியுமா? அது அவனது கர்ம வினை என்றார். அது என்ன விவரம் என்று தெரிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது.

    இதற்கு புராணிகர் அளித்த விவரம் சற்று புதிதாக இருந்தது. அப்படியொரு விளக்கம் நான் கேள்விப் பட்டதில்லை. அவர் சொன்னார், இராமாவதாரத்தில் தேவர்கள் இந்த பூமியில் பல்வேறு பாத்திரங்களாக வந்து அவதரித்தார்கள். நாராயணன் இராமனாகவும், இலக்குமி சீதையாகவும் வந்து அவதரித்தார்கள். இந்திரன் வாலியாகவும், சூரியன் அம்சமாக சுக்ரீவன், வாயுவின் அம்சம் அனுமன் இப்படி பலரும் பலவிதங்களில் இராம கைங்கர்யத்தை நிறைவேற்ற பூமியில் அவதரித்தார்கள்.

    இராமவதாரத்தில் சூரியனுடைய குமாரனான சுக்ரீவன் இராமபிரான் மூலமாக இந்திரன் மகனான வாலியைக் கொன்றான். இந்த செயலுக்குப் பழிவாங்கும் விதமாக இந்தப் பிறவியில் இந்திரன் மகனான அர்ஜுனன் மகாவிஷ்ணு அவதாரமான ஸ்ரீகிருஷ்ணன் உதவியால் சூரியகுமாரனான கர்ணனைப் போரில் வஞ்சமாகக் கொல்கிறான், இது பழிக்குப் பழியாக பூர்வ ஜன்ம வினையால் செய்யப்பட்டது என்றார்.

    கதை என்னவோ சரிதான், ஆனால் அவர் சொன்ன லாஜிக் எனக்கு அதிசயமாக இருந்தது. நம் பண்டைய புராணங்கள் எத்தனை ஆழமாக தெளிவாக தர்மங்களையும், வினைப் பயன்களையும் அழகாக எடுத்துரைக்கின்றன, அவைகள் வெறும் கற்பனைக் கதைகள் அல்ல, வரலாறும் அல்ல, ஆனால் தர்மங்களை மக்கள் மனங்களில் ஆழப் பதிய வைக்கும் பொக்கிஷங்கள் என்பதை என் மனம் உறுதியாக ஏற்றுக் கொண்டது.

    Share
  • பொங்கும் கடலோசை – கவிஞர் வாலி

    கவிஞர் காவிரி மைந்தன்

    பொங்கும் கடலோசை..

    கேளுங்கள் அன்பர்களே!

    hqdefaultஒரு பாடல் நம்மை அழைக்கிறது! தேவசுகம் தருகிறது! நாயகன் மனதளவில் சரிந்திருக்கும் நேரத்திலே நாயகி துணைவருகிறாள்! அவனை தூக்கிநிறுத்துகிறாள்! அவன் நெஞ்சம்நோக்கி ஒரு பச்சைக்கிளி பாட்டுப் பண் இசைக்கிறது! ஓ.. அந்த அழைப்பில்தான் எத்தனை உற்சாகம் ஊற்றெடுக்கிறது?

    ஜலதரங்கம் கலகலக்கத் தொடக்கம் பெறும் பாடலிது! அலைகளிடையே இசை ஒன்று உருவானால் அது எப்படிப் பேசுமோ.. அப்படிப் பேச வைத்திருக்கிறார்.. மெல்லிசை மன்னர் ம.சு.விஸ்வநாதன்.. மக்கள் திலகம் ம.கோ.இராமச்சந்திரனுடன் லதா திரையில் தோன்ற.. இயக்கியிருக்கிறார் ஸ்ரீதர் மீனவ நண்பனுக்காக!

    கவிதை வரிகளை காற்றலையில் தவழவிடும் வித்தை அறிந்த கவிஞர் வாலியின் வார்த்தை முத்துக்கள்! அலைகளையேக் கடந்து வந்தால்தான் அமைதியான பயணம் வரும்! அன்புடனே அழைப்பு என்றால் அங்கேதான் காதல்வரும்!

    இத்தனை அற்புதக் கூட்டணியில் தானும் சேர்ந்து நாத லயத்தைத்தான் வழங்கியிருப்பவர் திருமதி.வாணி ஜெயராம்! துள்ளியெழும் வேகத்தை நம் உள்ளம்பெற வைக்கும் ஓர் இன்பப்பாடல்!

    அழகிய ஒளிப்பதிவுடன் அருமையாக திரையில் வந்த காதல் விருந்து! உள்ளம் துவண்டுவிழும் நேரத்தில் உங்கள் காதுகளில் விழுந்தால்.. மெல்லிசை மன்னர் இசையுடன் வீசிடும் கவிதை சாமரம்!

    தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
    கொஞ்சும் தமிழோசை

    பச்சைக்கிளி ஒரு தோணியில்
    பக்கம் வரும் அதிகாலையில்
    மன்னவன் ஓடம் பார்த்ததோ
    மயக்கம் கொண்டு ஆடுதோ
    சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
    மயங்குவதேனோ –
    பொங்கும் கடலோசை

    தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
    கொஞ்சும் தமிழோசை
    வெள்ளி அலை வந்து மோதலாம்
    செல்லும் வழி திசை மாறலாம்
    பொன் மலை காற்று வீசினால்
    படகு தாளம் போடலாம்
    நீரலை… மேடையில்… மீனவன் …
    நாடகம் நடிப்பதும் ஏனோ
    பொங்கும் கடலோசை

    தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
    கொஞ்சும் தமிழோசை

    பொங்கும் கடலோசை
    கொஞ்சும் தமிழோசை

    PONGUM KADALOSAI – MEENAVA NANBAN
    Share
  • ஓட்டுப் போடப் போனார் … (காற்று வாங்கப் போனேன்……மெட்டு)

    சத்திய மணி

     

     

    ஓட்டுப் போடப் போனார்   வெறும்

    ஓட்டைப் போட்டு வந்தார்

    நாட்டை காக்கவில்லை வரும்

    கேட்டை பார்க்கவில்லை   ()

     

    வேட்டையாடும் கூட்டம் பல‌

    கூட்டை தேடி ஓட்டும்

    கோட்டை தாண்டி நோட்டம் லஞ்ச‌

    நோட்டை எண்ணி நீட்டும்

    ஏட்டில் தந்தக் கல்வி பலி

    யாட்டை யாக்கும் பள்ளி

    வீட்டைக் காக்கவில்லை எனில்

    நாட்டைக் காக்க வருமோ  ()

     

    திண்ணும் விலையும் ஏறும் வீட்டு

    மண்ணின் விலையும் ஏறும்

    தேவை வரியும் ஏறும் அதற்கு

    சேவை வரியும் ஏறும்

    தேர்தல் முன்னர்  ஒன்று கூட்டு

    தேர்தல் பின்னர் ஒன்று

    மக்கள் ஓட்டில் இல்லை ஆட்சி

    குதிரை பேரம் போகும்  ()

     

    சின்னம் பார்த்து போட்டால் அது

    பின்னமாகி போகும்

    முன்னத் தேர்தல்போல இதுவும்

    உஞ்சலாட்டம் போடும்

    முதுமை நினைக்கும் ஒன்று துள்ள‌

    இளமை நினைக்கும் ஒன்று

    மடமைத் தனத்தில மீண்டும் வாக்கு

    உரிமை சகுனி தாயம்()

    Share
  • இயேசு கிறித்து உயிர்த்தெழுந்த நாள் வாழ்த்துகள் – நோட்டா ஒரு விளக்கம்

    பவள சங்கரி

    தலையங்கம்

    இயேசு கிறித்து உயிர்த்தெழுந்த நாள் வாழ்த்துகள். மக்களுக்காக வாழ்ந்த மதபோதகர் இயேசு நாதர் மீண்டும் உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மக்கள் நல்வாழ்விற்காகச் சிலுவையைச் சுமந்து, கல்லடிபட்டு மரித்த இயேசு பிரான் மக்கள் நல்வாழ்வு வேண்டி மீண்டும் உயிர்த்தெழுந்த நாள் இந்நாள். அவரை நினைவுகூர்ந்து போற்றுவோம். அன்றிலிருந்து இன்றுவரை கிறித்துவம் என்றால் சேவை என்ற மனப்பான்மையுடன் வாழுகின்ற கிறித்துவ சகோதர, சகோதரிகளுக்கு நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

    சுண்ணாம்புக் காளவாயில் நாவுக்கரசரைப் போட்டபோதும், கல்லோடுக் கட்டி கடலில் தூக்கிப் போட்டபோதும் இறையருளால் அந்தக் கல்லே தெப்பமாக மிதந்து வந்து அவரைக் காத்தது. அவரும்  மக்கள் நல்வாழ்விற்கு வழிகாட்டினார்.

    அரியணையைத் துறந்த புத்தர் அன்பே இறைவன் என்று கூறியதால் மாபெரும் மத போதகரானார். எந்தச் சமயமாக இருப்பினும் ‘சமயம்’ என்றால் ‘வழிகாட்டுதல், நன்னெறிப்படுத்துதல்’ என்றே பொருள் கொள்ளப்படுகிறது.

    நோட்டா ஒரு விளக்கம்

    நோட்டா என்பது நமக்கு விருப்பமில்லையென்றாலும், நம் கடமையிலிருந்து தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவும் நமது தொகுதியில் நிற்கக்கூடிய வேட்பாளர்கள் நம் கொள்கைகளுக்கு உடன்பாடாக இல்லாமல் இருப்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு வாக்களிப்பதில் நமக்கு விருப்பமில்லை என்பதைச் சுட்டிக் காட்டும் விதமாகவும் மற்றும் நமது தொகுதியில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் மக்களுடைய பிரச்சனை, எந்தவொரு கட்சி ஆட்சியில் இருந்தாலும் அது அப்படியே தீர்க்கப்படாமலே இருக்கும் பட்சத்தில் நம்முடைய எதிர்ப்பைக் காட்டுவதற்காகவும் நோட்டோவைப் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட ஒரு தொகுதியியில் நோட்டோ பதிவு முறையைப் பயன்படுத்தி குறிப்பிட்ட சதவிகிதத்திற்கு மேல் பதிவு ஏற்பட்டிருப்பின், அந்தத் தொகுதிக்கு மீண்டும் மறு தேர்தல் வைக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவர வேண்டியது அவசியம்.

    தற்போது நடந்து கொண்டிருக்கும் தேர்தலில், ஐந்து தனித் தொகுதிகளில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் வேட்பாளர்களாக இருப்பதால் மற்ற சாதியைச் சார்ந்தவர்கள் வாக்களிப்பதைத் தவிர்த்திருக்கிறார்கள் என்ற செய்தி வருத்தத்திற்குரியது. டாக்டர் அம்பேத்கார் போன்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த தலைவர்களின் சாதனைகளையும் மனிதாபிமானச் சேவைகளையும் நாம் நினைவுகூர வேண்டியது அவசியம். அந்தக் குறிப்பிட்ட ஐந்து தொகுதிகளிலும் 7 முதல் 11 சதவிகிதம் வரையிலான மக்கள் வாக்களிப்பதைத் தவிர்த்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மெத்தப் படித்த மேதாவிகளே வாக்களிக்கும் கடமையிலிருந்து தவறுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மனப்பான்மை மாறி, அனைவரும் சமம் என்ற உணர்வுடன் தேர்தலைச் சந்தித்து நமது கடமையை நிறைவேற்றுவோம்.

    ஜெய் ஹிந்த்!!!

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

    Share
  • திருமால் திருப்புகழ்…. (61)

     

    கிரேசி மோகன்

    ————————————————————————————————————————
    கண்ணன் திருப்புகழ் (வெண்பா)

    “கண்ணனை நெஞ்சே கருது”
    ————————————————-

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    காட்டுப் பகுதியில் கீதம் இசைத்திடும்,

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    மாட்டுத் தொழுவத்தில் மண்ணுண்டு -கேட்டிடும்
    அன்னைக்கு வாய்க்குள் அகிலத்தைக் காட்டிடும்
    கண்ணனை நெஞ்சே கருது….

    அட்டைக் கரியாக ஆடை கலைந்திட
    வெட்ட வெளிதனில் வீற்றிருந்து -தொட்டிலில்
    தன்நினைவு இன்றித்தாய் தாலாட்டில் தூங்கிடும்
    கண்ணனை நெஞ்சே கருது….

    பீதாம் பரமாட பீலி மயிலாட
    தோதான தோழர்கள் தோள்கொடுக்க -மீதேறி
    வெண்ணையை வாரி வழங்கிடும் வள்ளலை
    கண்ணனை நெஞ்சே கருது….

    நாணமின்றி யுத்தத்தில் நாலுகால் ஜந்துக்கள்
    சாணமள்லிக் கொட்டும் ஜனார்த்தனனை -ஞானமள்ளி
    உண்ணென கீதையை ஊட்டியதே ரோட்டியை
    கண்ணனை நெஞ்சே கருது….

    சூழ்ச்சி யுடன்வந்த பேய்ச்சி முலைபற்றி
    மோட்ஷ விருந்தளித்த மோகனனை -மேய்ச்சலில்
    கண்ணென கோகுலக் கன்றுகள் காத்திடும்
    கண்ணனை நெஞ்சே கருது

    Share
  • தேசிய விருது பெறுகிறாய்.. தங்க மீன்களுக்காக..

     

    கவிஞர் காவிரி மைந்தன்

    kaviri

    எழுத்தை நீ சுவாசிக்கிறாய்… தமிழை நீ நேசிக்கிறாய்..kavir

    எனவேதான் எப்போதும் தமிழன்னை உன்னை மெச்சுகிறாள்!

    தமிழ்ப்பால் அருந்திடும் வாய்ப்பினை தவறாமல் தருகின்றாய்!

    தாய்ப்பாலுக்கு நிகராக தமிழினைக் கருதுகிறாய்!!

    இசையின் மடியில் தலை வைக்கும் இனிய நல்ல பல்லவிகள்!

    இமைபோல் கண்ணைத்தான் காக்கும் சுகம் சுகமான சரணங்கள்!

    பழகும் தமிழும் உன் பக்கம் வந்து பாக்கள் எழுதும் அழகைப் பார்க்கும்!

    பௌர்ணமி நிலவும் அங்கிருந்து பார்க்கும் இனிய தருணங்கள்!!

    அசையும் இசைதான் உன் பாதை.. அதில் நீ நடப்பது அழகுதான்!

    இசையும் வசப்படும் உன்னிடம் நீ எழுதிக் குவிக்கும் கவிதைதான்!

    உயரம் அதிகம் உள்ளவனே.. உன் உள்ளமும் அப்படி உயரம்தான்!

    விருதுகள் உன்னிடம் சரண்புகும்.. அவற்றுக்கும் உன்னைப் பிடிக்குமே!

    வாழ்த்துகள்…

    காவிரிமைந்தன்

    Share
  • திருமால் திருப்புகழ் (60)

     

    கிரேசி மோகன்

    திருவனந்தபுரம் பத்மநாப பெருமாள்….
    ————————————————-

    Sri-Anantha-Padmanabha-Swamy

    தனனதந்த தனனதான தனனதந்த தனனதான
    தனனதந்த தனனதான -தனதான….

    —————————————————————————-

    DSC07796

    இருளகந்தை ஒளியும்மூல ஒளிதுலங்கு குகைவிசார
    முறைபுகன்ற அருணைவாசி -ரமணேசர்images (4)
    வழிநடந்து மனதையாளும், புலன்களைந்தின் பிடிபடாத,
    சிவனினன்பு சுகவிலாசம் -குடியேற,

    மருளஅன்று சிலையைவீசி விஜயன்கொண்ட மனவிசாரம்,
    ஒழியசங்கு ஒலிஉலாவு -அருள்கீதை
    மொழிபுகன்று, கவுரவாதி படையழிந்து புனிதபூமி
    பளுவடங்க ரதம்கடாவு, -விரைவோடு,

    அருளவந்து, அலையுமாசை கடல்கடைந்து அமுதஞானம்
    அதில்பிறந்து அதனைநானும், -பெறவேணும்.
    குறவணங்கு அமரஆனை மணம்புரிந்து கடலிலாடும்G_T4_565
    சிவன்மகிழ்ந்த சுருதிபாலன் -முறைமாம.

    பொருளுகந்த பழையதோழன், அவலுகந்து தருமதானம்,
    புவிவிளங்க மனிதனாக -அவதார,
    மலையடர்ந்து வளமையான, மழைபொழிந்து பசுமையான,
    திருவனந்த பதுமநாப -பெருமாளே….
    ———————————————————————————–

     

    படங்களுக்கு நன்றி:

    http://www.findinsideindia.com/visit-thiruvananthapuram-the-abode-of-lord-vishnu/

    http://thulasidhalam.blogspot.in/2009/05/2009-24.html

    Share