தெனாலிராமன் – திரை விமர்சனம்

0

அண்ணாகண்ணன்

16ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயரின் அரசவையில் விகடகவியாக இருந்தவர், தெனாலிராமன். நகைச்சுவை உணர்வும் மதிநுட்பமும் கொண்டவர். இவரைப் பற்றிய பல கதைகள், இந்தியா முழுவதும் உலவுகின்றன. தெனாலி ராமனாகச் சிவாஜி கணேசன் நடிக்க, 1956இல் இதே பெயரில் திரைப்படமாக எடுத்தனர். தெனாலி ராமன் கதைகள் என்ற தலைப்பில் நூற்றுக்கணக்கான நூல்கள், பல மொழிகளிலும் வெளிவந்துள்ளன. இவருடைய கதையை தி அட்வென்சர்ஸ் ஆஃப் தெனாலி ராமன் (The Adventures of Tenali Raman) என்கிற பெயரில் கார்ட்டூன் நெட் ஒர்க் தொலைக்காட்சி நிறுவனம் கி.பி.2001இல் படமாக்கியது.

இந்தப் பிரபலமான பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தது, வடிவேலுவின் சரியான முடிவு. மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அவர் நடிக்கும் படம்; இயல்பாகவே மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும். ஆகவே, அதைத் திரை வடிவம் ஆக்கியதிலும் காட்சித் தொகுப்பிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அதில் இயக்குநர் யுவராஜ் தயாளன், கோட்டை விட்டுள்ளார்.

தெலுங்கு அமைப்புகளின் போராட்டத்தினால், இது, தெனாலி ராமன் கதைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கற்பனைக் கதை என அறிவித்துள்ளார்கள். ஆனால், தெனாலி ராமனை எல்லோரும் அவரை அறிந்தது போல், சிறந்த புத்திசாலியாகப் படம் முழுக்கக் காட்டியிருந்தால், படம் இன்னும் சிறப்படைந்திருக்கும். ஆனால், இடையில் தேவையில்லாமல், அவரைப் போராளியாக்கி, சீனர் சதி, மக்கள் அவதி, கிளர்ச்சி என வீணடித்திருக்க வேண்டாம்.

Tenaliraman-Movie-Latest-Stills-21

(கிருஷ்ணதேவராயர்) மன்னர் வேடத்திலும் வடிவேலுவே நடிக்காமல் வேறு ஒருவரை நடிக்க வைத்திருக்கலாம்; அவரும் மன்னருக்கு உள்ள இயல்புகளுடன் இல்லாமல், பல நேரங்களில் நகைச்சுவையாக நடிப்பதால், தெனாலி ராமனின் முக்கியத்துவம் படத்தில் குறைந்துவிடுகிறது. அதுவும் நவரத்தின அமைச்சர்களில் எட்டுப் பேர்களை ஓரளவு புத்திசாலியாகக் காட்டாததால் தெனாலி ராமனுக்கு வலுவான சவால்கள் கிடைக்கவில்லை.அவர் தன் அறிவுத் திறத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு குறைந்துவிட்டது.

பானைக்குள் யானையைக் காட்டும் சவாலில், வடிவேலு குழந்தையாகத் தரையில் விழுந்து புரண்டு நடித்திருக்க வேண்டியதில்லை. வசனமாகவே பேசியிருக்கலாம். அல்லது, குழந்தையின் தாய் வந்து இந்தச் சிக்கலைச் சொல்வதாகவும் அதற்குத் தெனாலிராமன் தீர்வு சொல்வதாகவும் காட்டியிருந்தால் காட்சி இன்னும் சிறப்பாய் வந்திருக்கும். இது, தனக்கு வசதியில்லாத ஒரு காட்சி என்பதை வடிவேலு புரிந்துகொண்டு தவிர்த்திருக்க வேண்டும். ஒரு குழந்தையைப் போல் அப்படியே நடிப்பது, எந்த நடிகருக்குமே மிகக் கடினம்.

தெனாலிராமனை மன்னன் மகள் மாதுளை (மீனாட்சி தீட்சித்), காதலிப்பது அவள் உரிமை; ஆனால், அதற்கு ஏற்ற வேதியியலும் உயிரியலும் (கெமிஸ்ட்ரி & பயாலஜி) படத்தில் சரிவர அமையவில்லை. மன்னனின் 36 மனைவியர்களும் 52 பிள்ளைகளும் இருக்க, சந்தையில் அவளது விளையாட்டுகள் குறித்தும் அரண்மனைக்குள் அவளது காதல் குறித்தும் யாருக்கும் தெரியவில்லை. இந்த 36 மனைவியர், 52 பிள்ளைகளை வைத்து, அவர்களுக்குள் உள்ள உறவுகள் குறித்து, இன்னும் நிறைய நகைச்சுவைக் காட்சிகளைக் கொண்டு வந்திருக்கலாம். இயக்குநர் இதிலும் தவறிவிட்டார்.

படத்தில் சீனர்கள் தமிழில் பேசுகின்றனர்; ஆனால், தமிழர்களில் யாருமே சீன மொழி பேசவில்லை. இறுதியில் தெனாலிராமன் தேர்ந்தெடுத்த புதிய எட்டு அமைச்சர்களும் வேடிக்கையான தேர்வாகவே உள்ளனர். சரித்திர காலப் படத்தில் சரித்திரம் தவிர மற்ற எல்லாம் இருக்கிறது.

மொத்தத்தில் இது தெனாலிராமனைக் காட்டுவதற்குப் பதிலாக, வடிவேலுவையே பெருமளவு காட்டியுள்ளதால், வடிவேலு ராமன் என்ற பெயரே படத்திற்குப் பொருந்தும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *