திருமால் திருப்புகழ் (63)
கிரேசி மோகன்
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————————–
நினைத்திட நம்முள் நவநீதம் பொங்கும்
கனைத்திடக் காமம் கலங்கும் – மணத்துழாய்
திண்ணிய தோளில் துலங்கும், துவாபரக்
கண்ணனை நெஞ்சே கருது!!
காரோத வண்ணனின் பேரோத ஆயிரம்
நீரோடை போல்தெளிவு நம்வாழ்வில் – ஆராத
இன்னமுதை தீந்திருக் கண்ணமுதைக், கற்கண்டைக்
கண்ணனை நெஞ்சே கருது!!
வேறார்வம் கொள்ளாமல், ஆராப் புலனடக்கி
நாரா யணனை நினைப்பதே – சாராம்சம்
அந்நிலைக்குச் செல்ல அனுபூதி தந்திடும்
கண்ணனை நெஞ்சே கருது!!
சினம்மிகுந்த மாமன் சிறைபிறந்து ஆயர்
இனம்புகுந்து வாழ்ந்த இடையன் – மணம்குவிந்த
மண்ணணைநீர் மேகத்து வண்ணனை, மாற்றான்தாய்க்
கண்ணனை நெஞ்சே கருது!!
தந்தைசொல் மந்திரம் தப்பென்ற பிள்ளைக்காய்
அந்தவோர் தூணில் அலமலங்க – வந்தொளிந்து
மன்னன் இரணியன் மார்பைப் பிளந்தவனைக்
கண்ணனை நெஞ்சே கருது!!