திருமால் திருப்புகழ்…. (61)
கிரேசி மோகன்
————————————————————————————————————————
கண்ணன் திருப்புகழ் (வெண்பா)
“கண்ணனை நெஞ்சே கருது”
————————————————-

காட்டுப் பகுதியில் கீதம் இசைத்திடும்,

மாட்டுத் தொழுவத்தில் மண்ணுண்டு -கேட்டிடும்
அன்னைக்கு வாய்க்குள் அகிலத்தைக் காட்டிடும்
கண்ணனை நெஞ்சே கருது….
அட்டைக் கரியாக ஆடை கலைந்திட
வெட்ட வெளிதனில் வீற்றிருந்து -தொட்டிலில்
தன்நினைவு இன்றித்தாய் தாலாட்டில் தூங்கிடும்
கண்ணனை நெஞ்சே கருது….
பீதாம் பரமாட பீலி மயிலாட
தோதான தோழர்கள் தோள்கொடுக்க -மீதேறி
வெண்ணையை வாரி வழங்கிடும் வள்ளலை
கண்ணனை நெஞ்சே கருது….
நாணமின்றி யுத்தத்தில் நாலுகால் ஜந்துக்கள்
சாணமள்லிக் கொட்டும் ஜனார்த்தனனை -ஞானமள்ளி
உண்ணென கீதையை ஊட்டியதே ரோட்டியை
கண்ணனை நெஞ்சே கருது….
சூழ்ச்சி யுடன்வந்த பேய்ச்சி முலைபற்றி
மோட்ஷ விருந்தளித்த மோகனனை -மேய்ச்சலில்
கண்ணென கோகுலக் கன்றுகள் காத்திடும்
கண்ணனை நெஞ்சே கருது
