Blog

  • தொல்லை காட்சி- அரவிந்த் சாமி- மிஸ்டர் பீன்- மௌன ராகம்

    மோகன் குமார்

    டிவி யில் பார்த்த படம் – மௌன ராகம்

    தமிழின் மிக சிறந்த பட வரிசையில் வரக்கூடிய மௌன ராகம் மீண்டும் ஒரு முறை காண முடிந்தது. மணி ரத்னம் மனதளவில் Fresh -ஆக இருந்த போது எடுத்த படம். மனம் ஒவ்வாத கணவன் – மனைவி, மனைவிக்கு ஒரு பழைய காதல் என  இன்றைக்கும் பொருந்துகிற மாதிரி இருப்பது ஆச்சரியம். கார்த்திக்கின் கேமியோ, ராஜாவின் அதி அற்புத பாடல்கள், PC  ஸ்ரீராமின்  ஒளி ஓவியம் (அந்த வார்த்தைக்கு தங்கர் பச்சான் காப்பி ரைட் எதுவும் வாங்கலையே ?) , ரேவதியின் அழகு.. என மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று.

    கடல் பார்த்து விட்டு , கட்டு போட்டு கொண்டு படுத்திருப்போர் பாலு மகேந்திரா போல மணிரத்னமும் சினிமாவிலிருந்து ரிட்டையர் ஆகிடனும் என சொல்ல ஆரம்பித்துள்ளனர். மணிரத்தினத்தின் சமீபத்துப் படங்களை பார்த்தால் (அதுவும் 3 முறை ஹார்ட் அட்டாக் வந்த அவரது  உடல்நிலையை  கணக்கில் எடுத்துக் கொண்டால்) – இந்த கூற்று சரியென்றே தோன்றுகிறது

    மிஸ்டர் பீன்

    போகோவில் இப்போதும் அவ்வப்போது மிஸ்டர் பீன் காட்சிகள் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறோம்…. நானும் மகளும் . என் பெண்ணுக்கு 10 வருஷத்துக்கும் மேலாக மிஸ்டர் பீன் அலுப்பதே இல்லை.  நண்பர்கள் சிலர் வீட்டில் குழந்தைகளுக்கு மிஸ்டர் பீன் காமெடி காட்டுவதில்லை சற்று அடல்ட் கண்டெண்ட் வரும் என்பதால்.. அப்படி ஒன்றும் செக்சியாய் இருக்காது. திடீரென எப்போதாவது ஒரு முறை உடையின்றி ஓடுவார் .அவ்வ ளவு தான்.. :))

    மிஸ்டர் பீன் பரீட்சை எழுதும் காட்சி, சர்ச்சில் பிரேயர் நடக்கும் போது செய்யும் லூட்டிகள் .. இவையெல்லாம் எவர் கிரீன் காமெடி..

    நிற்க. புகழ் உச்சியில் இருக்கும் போதே மிஸ்டர் பீனாக நடிக்கும் ரோவன் அட்கின்சன் நடிப்பதை நிறுத்திக் கொள்கிறேன் என அறிவித்து விட்டார். உங்களுக்கு இதில் மெசேஜ் ஏதும் இருக்கா மணிரத்னம் சார் மற்றும் டெண்டுல்கர் ?

    பிளாஷ் பேக் : வந்தே மாதரம்

    இன்றைய சோ – தன் ஜால்ரா நடவடிக்கையால் நம் மதிப்பை இழந்து வந்தாலும், அவரது பழைய நாடகங்கள் சில அட்டகாசம் என்பதை மறுக்க முடியாது

    குறிப்பாக வந்தே மாதரம் என்கிற இந்த நாடகம் ஞாயிறு காலை 9 மணியளவில் ஒளிபரப்பாகும். டிவி வந்த புதுசு. தூர்தர்ஷனில் தான் பார்த்த நினைவு. ஒவ்வொரு ஞாயிறும் மிக எதிர்பார்ப்புடன் பார்த்து ரசித்த நாடகம். நமக்கு நன்கு தெரிந்த சுதந்திரப் போரை செம சுவாரஸ்யம் மற்றும் சஸ்பென்சுடன் காட்டி அசத்தியிருந்தார். அன்றைய அரசியலை அதிகம் நக்கல் செய்யாமல் எடுத்துக் கொண்ட விஷயத்தை மட்டும் ஒரே கோட்டில் எடுத்துச் சென்ற சீரியல். இப்போது DVD -யாகவும்   கிடைக்கிறது என இணையம் மூலம் அறிகிறேன்.

    ஜெயா டிவி யில் விஸ்வரூப செய்தி

    விஸ்வரூபம் பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்தபோது பேசாமல் இருந்த ஜெயா டிவி, கமலுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்ட போது தொடர்ந்து அதை பிளாஷ் நியூசாக போட்டது. பிரச்சனை முடிவுக்கு வருவதை சொல்வது நல்ல விஷயம் தான்..

    ஆனால் பிளாஸ் நியூஸ் இப்படி சொன்னது: முதல்வர் நடவடிக்கை : விஸ்வரூப பிரச்சனை தீர்ந்தது.. !

    ஆமா, ஜெயா டிவிக்கும், முதல்வருக்கும் சம்பந்தமே இல்லியாமே?  நம்பிட்டோம் !

    அரவிந்த் சாமியும் அடுப்புல வெந்த ஆசாமியும்

    கடல் படம் பற்றி அரவிந்த்சாமி விஜய் டிவியில் 1 மணி நேரம் பேசினார். அரவிந்த்சாமியின் கடல் பார்த்து அடுப்புலே வெந்த ஆசாமியாகி போனவர்கள் இந்த நிகழ்ச்சி பார்த்தால்  நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பார்கள்

    படம் ஆஹோ ஓஹோ என படக் குழு பேசும்போது கவுண்டர் படத்தில் வரும் ” போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சுது ” தான் நியாபகத்துக்கு வந்தது.

    அரவிந்தசாமியை ஓரிரு வருடங்களுக்கு முன் பார்த்துள்ளீர்களா? நன்கு வெயிட் போட்டு முடி ஏகமாய் கொட்டி. முக நூலில் சில நண்பர்கள் கூட ” எப்ப பார்த்தாலும் பெண்கள் சைட் அடித்த மனிதன் இன்று எப்படி ஆனார் பாருங்கள் ” என்று போட்டோ போட்டு மகிழ்ந்தனர் ஆனால் மனிதர் மீண்டும் பழைய ஆளாக வந்து எல்லார் வயிற்றிலும் புளியைக் கரைத்துள்ளார் . வெயிட் குறைத்து சரி. கொட்டிய முடி எப்படி திரும்ப வந்துச்சு சார்? சினிமாவில் தான் விக் என்றால் வெளியிலுமா?

    என்னமோ போடா மாதவா.. !

    படத்திற்கு நன்றி :

    http://www.joystiq.com/2007/04/06/mr-bean-game-coming-to-playstation-2/

    Share
  • இந்தவார ராசி பலன் (04.02.2013 -10.02.2013)

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம்: பொது சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் , உங்களைத் தேடி வருபவர்களுக்கு உதவும் குணம் இருந்தாலும், மற்றவர்கள் உங்களை ஏமாற்ற இடம் கொடாதீர்கள். இந்த வாரம் மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் கிட்டும். வியாபாரிகள் தேவையான இடங்களில் கனிவையும், பணிவையும் பயன்படுத்தினால், அதிக லாபம் பெறலாம். பெண்கள் இழுபறியான காரியங்களை கையில் எடுக்கும் முன் தேவையான செய்திகளையும், பலத்தையும் திரட்டிக் கொண்டு செயல்படுவது நல்லது. வியாபாரிகள் ஏற்ற இறக்கமுள்ள பங்குச் சந்தையில் அகலக் கால் வைக்க வேண்டாம்.

    ரிஷபம்: வியாபாரிகளுக்கு கிடப்பில் கிடந்த நல்லத் திட்டங்களை மீண்டும் செயலாற்றும் வாய்ப்பு கிட்டும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணிச்சுமையால், மன இறுக்கம் தோன்றி மறையும்.கலைஞர்கள் தேவையற்ற விமர்சனங்களைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம். மாணவர்கள் காரியங்கள் முடியும் வரை கவனச்சிதறலுக்கு இடம் தராமலிருப்பது நல்லது. பெண்கள் உறவுகளை அனுசரித்து நடந்து கொண்டால், அதிக ஆதாயம் இருக்கும். அடிக்கடி வெளியூர் செல்பவர்கள் பயணங்களில் கவனமாக இருப்பது அவசியம். பெற்றோர்கள்பிள்ளைகள் தொடர்பான நல்ல விஷயங்களை உடன் முடித்து விடுவது நல்லது.

    மிதுனம்: சுய தொழில் புரிபவர்கள் சிறந்த திட்டங்களைத் தீட்டி அதன் படி நடந்தால், அதிக லாபம் பெறலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் லட்சியங்களை நிறைவேற்ற அயராமல் பாடுபடுவர். குடும்ப அமைதிக்குப் பங்கம் வராமலிருக்க, பெண்கள் முக்கிய விஷயங்களை குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையுடன் செயல்படுத்துவது அவசியம். இந்த வாரம் கை வேலைகளில் ஈடுபடுபவர்களின் பொருளுக்கு நல்ல லாபம் கிட்டும். பெற்றோர்கள் பிள்ளைகளின் கையில் அதிக பணம் தருவதைத் தவிர்த்தல் நலம். மாணவர்கள் தீய பழக்கங்களின் பக்கம் திரும்பாமலிருந்தால், நல்லோரின் ஆதரவு நிலையாக இருக்கும்.

    கடகம்: கலைஞர்கள் உங்கள் திறமையால் விசேஷ சலுகைகளை பெறுவீர்கள். மாணவர்கள் உங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால், தடைகளை எளிதில் தாண்டி விடலாம். பெண்கள் சிறு பூசல்களை பெரிதாக்காமல் இருப்பது புத்திசாலித்தனம். பெற்றோர்கள் பிள்ளைகளின் பற்களின் பராமரிப்பில் கவனமாய் இருந்தால், மருத்துவச் செலவுகளை குறைத்து விடலாம். பொது வாழ்வில் உள்ளவர்கள் சில நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாமலிருந்தால், உங்கள் நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்வது கடினமாய் இராது. இந்த வாரம் வீடு மனை வாங்க எடுக்கும் முயற்சிகளில் மும்முரமாக ஈடுபடுவீர்கள்.

    சிம்மம்: கலைஞர்கள் புதிய முயற்சிகளில் வெற்றி பெற ஆக்கத்துடனும், ஊக்கத்துடனும் உழைப்பீர்கள். இந்த வாரம் வியாபாரிகள் சரக்கு விநியோகத்தில் குளறுபடி இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.வியாபாரத்தில் தொய்விராது. மாணவர்கள் நேர்வழியில் போட்டிகளை எதிர்கொண்டால், எதிலும் வெற்றி பெறலாம். பெண்கள் பொது விழாக்கள், விருந்து ஆகியவற்றில் பக்குவமாக நடந்து கொண்டால், நட்பும், உறவும் கசக்காமல் இருக்கும். பணியில் இருப்பவர்கள் பிரச்னைக்குரிய விஷயங்கள், பிரச்னைக்குரிய நபர்கள் ஆகிய இரண்டிலிருந்தும் விலகி இருந்தால், அமைதியாய் செயல்பட முடியும்.

    கன்னி: அதிகாரிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு அனுகூலமாக அமைவதால், உங்கள் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, நினைத்த காரியத்தை முடிப்பதில் குறியாய் இருப்பீர்கள் இந்த வாரம் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பெண்கள் பொது இடங்களில் பிறரின் நிறை குறைகளை அலசாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் வீண் செலவுகளுக்கு வழி வகுக்கும் இடங்களுக்கு செல்லாமலிருப்பதே புத்திசாலித் தனமாகும். கலைஞர்கள் மன வருத்தங்களை வெளிப்படுத்த முடியாத சூழல் இருக்கும்.. நெருங்கிப் பழகிய பங்குதாரர்கள் சிறு பிணக்குகள் காரணமாகப் பிரிந்து போக நேரலாம்.

    துலாம்: .மாணவர்கள் தங்கள் ஒப்பனை, உடை அலங்காரம் ஆகியவை கண்ணியமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நலம். சக கலைஞர்களின் ஆலோசனையால் கலைஞர்கள் தங்கள் திறமைகளை மெருகேற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிட்டும். கடன் தொல்லைகளினால் பெண்களுக்கு சிறிது மன சஞ்சலம் ஏற்பட்டாலும், செலவுகளைச் சமாளிக்க சேமிப்பு கைகொடுக்கும். மாணவர்கள் பாடங்களை கவனமாக பயில்வதன் மூலம் கடைசி நேர பதற்றத்தைக் குறைத்துக் கொள்ளலாம். நிர்வாகத்தில் உள்ளவர்கள் சோம்பலையும், பணிகளை தள்ளிப் போடுதலையும் தவிர்த்தால், நல்ல வாய்ப்புகளைப் பெறலாம்.

    விருச்சிகம்: இதமான அணுகுமுறை மூலம் வியாபாரிகள் பாக்கிகளை எளிதில் வசூலிக்கலாம். இந்த வாரம் உறவுகள் பாராமுகமாய் இருந்த போதிலும், அவர்களின் சுப நிகழ்ச்சிகளுக்கென்று பணமும், நேரமும் செலவு செய்யும் நிர்ப்பந்தமிருக்கும். முதியவர்கள் கண் சம்பந்தமான நோய்களை உடனுக்குடன் கவனிப்பது நல்லது. வீட்டை விரிவுபடுத்துவதில் அதிக பணம் முடங்கும். பெண்கள் இதமாகப் பேசினால் உறவுகள் தொடர்கதையாகும் என்பதை அவ்வப்போது நினவில் கொள்வது நல்லது. விலை உயர்ந்த ஆடைவகைகள், நவீன பொருட்கள் ஆகியவை மாணவர்கள் வசமாகும்.

    தனுசு: வேலை செய்யும் இடங்களில் மன உறுதியுடன் செயல்பட்டு வாருங்கள். குறை சொல்பவர்களின் எண்ணிக்கை தானே குறைந்து விடும்.இந்த வாரம் சரளமான பண வரவு இருந்தாலும், வீண் செலவுக்கு ஆசைப்பட வேண்டாம். வியாபாரிகள் ,யோசனை செய்த பின் பிறர்க்கு வாக்குறுதிகளை அளியுங்கள்.பணியில் உள்ளவர்கள் அதிகார எல்லையைக் குறைத்துக் கொண்டால், அன்பு வட்டம் தானே விரியும். செய்தொழிலில் சில பிரச்னைகள் இருந்தாலும், உங்கள் வளர்ச்சி சீராக இருக்கும். நன்மைகள் பல கலைஞர்களை நாடி வர, வீண் கௌரவத்திற்கும், ஆணவத்திற்கும் இடம் தராமலிருப்பது நல்லது.

    மகரம்: மாணவர்கள் தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ள எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். இந்த வாரம் சொந்த பந்தங்கள் கேளாமலேயே உதவி செய்து உங்களை மகிழ்விப்பார்கள். பெண்கள் குடும்ப விவகாரத்தில் அடுத்தவர் தலையீட்டிற்கு இடம்கொடாமலிருந்தாலே கருத்து வேற்றுமைகள் தானாய் விலகிவிடும். மேலும் அறிமுகமில்லாத இடங்களில் உரையாடல்கள் அளவாக இருப்பது அவசியம். உயர் படிப்பிற்காக வெளியிடம் செல்பவர்கள் எதிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நன்மை தரும். கலைஞர்கள் சேமிப்பைக் கரைக்கும் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுதல் மூலம், மன உளைச்சலைத் தவிர்க்கலாம்.

    கும்பம்: வியாபாரிகள் பணியாளர்கள் கொடுத்த பொறுப்புகளை சரிவரச் செய்கிறார்களா என்று கவனித்துக் கொண்டால், பணமும், பொருளும் வீணாவதைத் தவிர்த்து விடலாம். கலைஞர்கள் தங்கள் பேச்சாற்றலை நல்ல முறையில் பயன்படுத்தினால், பல ஒப்பந்தங்கள் உங்கள் பக்கமே! பணியில் உள்ளவர்கள் நிதி நிலவரத்தை அனுமானித்தபின் காசோலைகளை பிறர்க்கு வழங்குவது நல்லது. பெண்கள் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால், வேண்டிய காரியங்களை எளிதில் நிறைவேற்றிக் கொள்ளலாம். உயர் பதவியில் இருப்பவர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையாமல் பார்த்துக் கொண்டால் வேலைகள் சீராக நடக்கும்.

    மீனம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் மனோபாவத்தை உணர்ந்து அதற்கேற்றவாறு உங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டால், அவர்களிடமிருந்து நல்ல பெயரை பெற்றுவிடலாம். சுய தொழில் புரிபவர்கள் சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்திக் கொண்டால், உங்கள் அந்தஸ்து உயர்ந்து விடும். பெண்கள் வாக்குவாதங்களை வளர விடாமலிருந்தால், வீண் தொல்லைகளும் வளராது. பொது வாழ்வில் உள்ளவர்கள் எதிரிகள் வகையில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நலம். கலைஞர்கள் தங்கள் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுபவர்களிடமிருந்து விலகி இருந்தால், உங்களுக்குரிய அங்கீகாரம் கிட்டும்.

    Share
  • ஜனவரி (2013) மாதச் சிறுகதைப் போட்டி முடிவுகள்!

    வெங்கட் சாமிநாதன்

    எல்லாக் கதைகளையும் படித்தேன். இந்தத் தடவை வந்த கதைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.  நிறைய கதைகள் எழுதி வந்தவர்கள் கூட இம்முறை எழுதவில்லை. ஒரு வேளை ஏமாந்த மனக் கசப்புடன் இருக்கிறார்களோ என்னவோ.

    வந்த கதைகளில் முற்றிலும் திருப்தி அளித்த கதைகள் என்று சொல்லமுடியாவிடடாலும் தமிழில் சாதாரணமாக எழுதப்படாத, சரி, வல்லமையில் சாதாரணமாக எழுதப்படாத விஷயங்களை கையாண்டு பெரும்பாலும் நன்றாகவே எழுதப்பட்டவை என்று சொல்லப்படவேண்டியவை இரண்டு. ஒன்று, அம்மாவின் தேன் குழல் மாதவன் இளங்கோ எழுதியது; இரண்டாவது  நாலடி கோபுரங்கள்  ஜெயஸ்ரீ ஷங்கர் எழுதியது.

    பெரும்பாலும் நன்றாக எழுதப்பட்டவை என்று சொன்னேன். மாதவன் இளங்கோ எனக்கும் ஒரு வேளை வல்லமைக்கும் கூட புதியவர். எங்கோ இருப்பவர். ப்ரஸ்ஸல்ஸும் மயிலாப்பூரும் இணையாதவை. இணைக்க முடியும். ஆனால் இணையாதவர்கள் இரண்டு முனைகளி. நன்றாகத் தான் ஒரு நல்ல விஷயத்தைத் தான் எழுதியிருக்கிறார். ஆங்காங்கே சில வார்த்தைகள், சில வாக்கியங்கள் melodrama வாக இருக்கின்றன. அதைப் பெரிது படுத்த வேண்டாம். போகப் போக சரியாகும்.  கடைசியாக், வரும் சில பாராக்களை ஒதுக்கியிருக்கலாம்.  ”இன்னும் வேகமாக நடக்க ஆரம்பித்தேன  என்னும் வரியோடு கதை முடிகிறது. அடுத்து வருபவை வேண்டாம்.

    ஜெயஸ்ரீ ஷங்கர் கதை இது காறும் அவர் வல்லமையில் எழுதிய கதைகளிலிருந்து  நாலடி கோபுரங்கள் மாறுபட்டது.  தாய் தந்தையரால் கூட உதறிவிடப்பட்ட ஒரு குள்ள மனிதனின் அனுபவங்கள், கேலியும் தனக்கு மறுக்கப்பட்ட வாழ்க்கையும் கூட பாதிக்கவில்லை. அதெல்லாம் சரி. கடைசியில் லிப்டிலிருந்து குழுந்தையைக் காப்பாற்றியது – இது நடக்கலாம் தான் ஆனால் – இது வரை இயலப்பாக எழுதப்பட்டது இங்கு இந்த சம்பவம் உருவாக்கப்பட்டு சேர்க்கப்பட்டது போல தோன்றுகிறது. அதேபோல முன்னரும் கூட தன்னை மாற்றச் சொல்லி கடிதமாக எழுதி ராஜாவிடமே கொடுத்தது. இது மறைவாகச் செய்யப்பட்டது பின் ராஜாவின் காதில் விழுகிறது என்றிருந்தால் அது இயல்பாக இருந்திருக்கும்.

    எப்படியாயினும் இந்த இருகதைகளும் என் தேர்வுகள். மாதத் தேர்வு தானே. அதனால் பரவாயில்லை. இரண்டும் உற்சாகப்படுத்த தகுதி கொண்ட எழுத்துக்கள்.

    இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    வெ.சா.

    இந்த மாதப் போட்டிக்கான சிறுகதைகள்

    1. கண்ணாள் ஓதுகம்

    2. பச்சைக் கிளி

    3. ஆசான்

    4. பட்டி நோம்பி

    5. “வடு”

    6. காதல் கீதை …

     

    7. அம்மாவின் தேன்குழல்

    8. பொய் வாழ்க்கை

     

    9. பலிபீடம்

     

    10. ஆத்ம சாந்தி

    11. நாலடிக் கோபுரங்கள்…!

     

     

    போட்டியில்  வெற்றி பெற்ற திரு மாதவன் இளங்கோ மற்றும் திருமதி ஜெயஸ்ரீ ஷங்கர் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.  பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  தொடர்ந்து தங்கள் படைப்புகளை அனுப்புங்கள். பரிசினை வெல்லுங்கள்!

    அன்புடன்

    பவள சங்கரி

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 4

     

    தேமொழி

     

     

    சூறைக்காற்று மோதினால்
    தோணி ஓட்டம் மேவுமோ
    வாழ்வில் துன்பம் வரவு…சுகம் செலவு…இருப்பது கனவு
    காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்…

    ஆசையே அலை போலே
    நாமெல்லாம் அதன் மேலே
    ஓடம் போலே ஆடிடுவொமே…வாழ்நாளிலே

    வரிகள்: கண்ணதாசன்

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 5                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 3>>

    Share
  • சூரியன் வந்து வாவென்ற போது

    மணி ராமலிங்கம்

    எப்படி அந்த வரி வந்து விழுந்தது என்று தெரியவில்லை. விழுந்த அந்தக் கணமே தளை அறுந்த மகிழ்ச்சி. பிரசவ சந்தோசம். ஓவ்வொரு வரியும் பிரசவம்தான்.

    ஓரிருமுறை தனது வரியை உச்சி  மோர்ந்துவிட்டு, தனது சர்வீஸ் டீமுக்கு அதை தாரை வார்த்துக்கொடுத்துவிட்டு, அப்போது அலுவலகம் விடுத்து இல்லம் ஏகுவான்.

    வீட்டில் வளர்ந்து திளைத்து கிடக்கும் சூயஸ்(நாய் பெயர்) தான் அன்றைக்கு அவனின் துணை. அதற்கு தீனி போட்டு இறுக்கி கட்டிக்கொண்டு படுத்து தூங்க முயற்சிப்பான்.

    ஆனால் அவனுக்கு தெரியும், இன்றைக்கு கிடைத்தது பெரிய வெற்றி. அதற்காக மூளை உழைத்த உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல. இப்போதைக்கு தூக்கத்திற்கு சூயஸ் மட்டும் போதாது.

    யாருக்கு போன் செய்யலாம் என்று, நினைத்துக்கொண்டிருக்கும் போதே, தர்த்தி போன் செய்தாள். தர்த்தி – சர்வீஸ் டீம் ஹெட். ரவியின் விளம்பர வரிகளை வாடிக்கையாளர் தலையில் தேய்த்து, சரியென்று சம்மதிக்க வைக்க வேண்டும். [Client Approval]

    போனை கிளிக்க,

    “ என்ன பாஸ்.. வரவா.. ? “ தர்த்தி. குரல் குழைந்தது.

    “ஹீம். யா.. “  வயிற்றுக் கீழே பட்டாம்பூச்சி.

    சின்ன மெளனத்திற்கு பிறகு  சொன்னான் “ யா.. தேங்க்யூ.. செல்லம்.. “

    *

    குளித்து முடிந்து, குடித்த  விஸ்கி சூடாக்கிய மெல்லிய  சூடு – ஏசியின் காற்று காமக்கனலை ஊதிப் பெருக்க முனைந்தது. பட்டணத்தாரின் கோமணம் போல ஜாக்கி அணிந்திருந்தான் ரவி.

    தர்த்தி பேசிக்கொண்டேயிருந்தாள். பேச்சு. பேச்சு. அவள் அப்படித்தான். அலை அலையாய் வார்த்தைகள். அதன் ருசி கூட்டும் வியாஞ்ஞானமாய் உடல் மொழிகள்.

    பேசியபடியே ரவியின் கையை தனது இடது மார்பில் வைத்துக்கொள்ள செய்தாள். அவளுக்கு அது பிடிக்கும்.

    ” யூ நோ ரவி.. நான் அந்த லாஸ்டு ஸ்லைடை பிரசண்டு பண்ணினப்போ .. போர்டு ரூமில் எல்லோரும் க்ளீன் போல்டு.. சேர்மேன். எழுந்து நின்றுவிட்டார்… வெரி எக்சைட்டிங்..”

    ரவிக்கு தர்த்தியின் சந்தோசம் பிடித்திருந்தது. தனது தொழிலின் பிடித்த கணங்கள். வெற்றியை சக அலைவரிசை தோழியோடு பகிர்ந்து கொள்ளுதல்.

    “ கிரிக்கெட் பற்றி இப்படி ஒரு லைன், நியூ அவுட்லுக் வந்ததேயில்லைன்னு.. கஸ்டமர் ஷாக் ஆயிட்டாங்க.. அவங்களோடு புராடாக்டுக்கும் அது அப்படியே ஜிங்க் ஆயிருத்து.. எல்லா மீடியா கவரேஜிம் நமக்குத்தான். ”

    தர்த்தியும் ரொம்பவே எக்சைட்டிங்காக இருந்தாள். குதூகலிக்கும்  குழந்தை. இதயம் நடுவில்  மலரும் அன்பு. உடம்பு மலர்த்தும் காம வாசனை.

    மார்பைச் சுற்றி மெல்லிய வளையமிட்டான். அவனித்து எழுந்த தடமுலைகள் இல்லைதான். ஆயினும் எந்த சிந்தனையுமின்றி சந்தோசமாய் அவன் வட்டமிட்டுக்கொண்டிருந்தான். ரவிக்கு அந்தக் கணம் நிறைவாய் இருந்தது.

    ” எப்படி ரவி.. உனக்குன்னு ஐடியா எப்படி இவ்வளவு சூப்பரா வருது.. “ தலைக்குள் கைவிட்டு அழுத்தி முடி இழுத்தாள். கொஞ்ச முன் குடித்திருந்த விஸ்கியால் பறந்து கொண்டிருந்த ரவியின் தலைக்கு வலி சுகம் கொடுத்தது.

    “ It is not game, it is one more religion “ – தான் எழுதிய அந்த விளம்பர வரியை இன்னொரு முறை உதட்டிற்குள் சொல்லிக்கொண்டான்.

    மிகப்பெரிய சந்தோசங்கள் பொங்கும் போது, நுரை பொங்க கிடைக்கும் மைசூர் கபேயின் அடியில் கசக்கும் டிகாசன் போல கல்யாணமாகாத குறை. அப்போது தான் அந்த கவலைக் குமிழ் உடைந்து ரொம்ப நாளாய் உள்ளிருந்து அரிக்கும் கல்யாணக் கவலை.

    அம்மா சொல்லி சொல்லி பார்த்து, அலுத்து தன் கல்யாணம் பார்க்காமல் செத்தும் போய்விட்டாள். தன் சம்பாத்தியத்தில் பத்தில் ஒரு பங்கு இல்லாவிட்டாலும், தனது தமையன்கள் சென்னையில் ஒண்டிக் குடுத்தினத்தில் இரண்டு குழந்தைகளோடு.

    தான் மட்டும் தனிமரமாய்.

    ஏன் கல்யாணம் ஆகவில்லை, செய்து கொள்ளவில்லை என்று யோசிப்பதை  தவிர்த்தான்.  அந்த எண்ணப்பயணம் எங்கேயும் நிற்பதில்லை. தனது படைப்புகள் கொடுக்கிற ஒருசில மணித்துளிகளின் இன்பத்தை தவிர வேறு எதுவுமே தன்னை பெரிதாய் பாதிப்பதில்லை என்பதை நினைவில் முட்டியது.

    தர்த்தியை இன்று பார்க்க, வித்தியாசமாய் ஒளிர்ந்தாள்.

    தர்த்தி.. எத்தனை உதவியாய் இருக்கிறாள். தான் செய்த எல்லா புராஸக்டுகளிலும் இவள் துணையில்லாமல் செய்திருக்க முடியாது. உடுக்கை இழந்த போதும், இழக்காத போதும் இவள் பலமுறை இடுக்கண் களைந்திருக்கிறாள். இவளின் உதவி திருப்பி கொடுத்து ஈடு செய்ய முடியாதது. அவளின் துணை மகிழ்ச்சி தருவது. அந்த மகிழ்ச்சி வெறும் உடல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல என்று இருவருக்கும் தெரியும்.

    இவளுக்கு ஏதாவது செய்ய  வேண்டும்.. அவளை இன்னும் புரிந்து கொண்டு,  அவள் என்ன கேட்டாலும் கொடுத்துவிட வேண்டும். ஹீம்.. ஏதாவது செய்ய வேண்டும். என்ன செய்யலாம் ?

    *

    அறையிலிருந்து வெளியே வந்து  சோம்பல் முறித்தாள். முறிந்தது.

    பாந்திராவின் டிசம்பர் மாதக் கடல் குளிர் காற்று. சில்லிட்ட பால்கனி. இருட்டான பால்கனி. அலைச் சத்தம். கண்ணாடிக்  கதவின் வழியே பார்க்க ரவியின்  ஆழ் தூக்கம்.

    ரவி ரிஸி போல நிச்சலமாய் தூங்கிக்கொண்டிருக்கிறான். இந்த உறவில் ஏதோ ஒரு தேவதை தன்மை கூடுவதுபோல உணர்ந்தாள்.

    சில்லிட்ட பால்கனி சேரில் உட்கார்ந்து காலை கம்பியின் மேல் அகட்டி வைத்துக் கொண்டாள்.

    இளகிய இருட்டு. மணி மூணு, மூணரை இருக்கலாம். இன்னும்  கொஞ்ச நேரத்தில் வெளுக்கும் வானம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காலைச் சூரியனின்  ஆரம்ப கணங்கள். சிறிய வயதிலிருந்தே பிடித்திருக்கும் சூரியப் பயித்தியம். எழும், எரிக்கும், விழும் சூரியனோடான காதல் யுக யுகமாய்.

    ஏதோ கொஞ்ச நாளாய் ரொம்ப  ரொம்ப ரொம்ப ரொம்ப .. மகிழ்ச்சியாய். உள்ளுக்குள், வயிற்றுக்கு மேலே நெஞ்சுக்கு கீழே ஏதோ புள்ளியில் ஏராளமாய் பொங்கும் ஆற்றல். அலை அலையாய் சந்தோசம். எதனால் ?.

    அலுவலக வெற்றியா ?, ரவியினால் உடல் மலர்தலா ? நோ வே. (No way) . அது மட்டுமேயிருக்க முடியாது.

    அலுவலக வெற்றி ஒன்றும்  புதிதல்ல.

    ஆறுமாதத்திற்கு முன்பும் இதே போல இன்ஸீரன்ஸ் நிறுவனத்திற்கான  விளம்பரத்தில் பெரிய வியாபார  வெற்றி.  பெருத்த போராட்டங்களுக்கு இடையே கிடைத்த வெற்றி. அன்றைக்கும் இதே போல தானே அழைத்து, தானே கொடுத்து. இடைவிடாத பேச்சு. உடல், அன்பு பரிமாற்றம்.

    உடல் மலர்தலும் புதிதல்ல. ரவிக்கும் முன்னும் உடல் மலர்ந்திருக்கிறது.

    ஆனால், இப்போது சில காலங்களாய் உடலிலிருந்து எழும் பெரு மகிழ்ச்சி அலை அசாதரணமானது. பொங்கி வழிகிற கருணை. தொடர்ந்து ஊறி பல்கி பெருகி நீரூற்றாய் உடைகிற ஆற்றலை, அந்த புள்ளியை அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தாள்.

    அந்த ஆற்றலின் புள்ளி அவளை உடலின் ஆதி மலரலுக்கு கொண்டு சென்றது.

    *

    ”  நான் போகட்டுமா.. ”  கை கூப்பியபடி தனக்கு பிடித்தமான அவன் நின்று கொண்டிருக்கிறான்.  சரியான உயரம், மெல்லியதான வெப்பம், கொஞ்சமான காவிக் கலர் உடை. காற்றில்லாத போதும் பறக்கும் மயிர் கற்றைகள்.

    மந்திரம் உண்மையில் பலித்து  விட்டதா.. விளையாட்டு வினையாகி விட்டதா. ரிஸி உள்ளே தூங்கிக்கொண்டிருந்தார்.

    அவனைப் பார்க்க, பார்க்க பொங்கி வழிகிற ஆர்வம். வழுக்கி விழுகிற இதயம். இவனா ஒளி கொடுப்பவன். உலகமே தூயில் எழுந்தவுடன் துதிக்கப்படுபவன். இவனா என் உள்ளம் கவர்ந்தவன்.

    பிடுங்கித் தின்கிற வெட்கம்  மறைந்து அவனை பார்க்க, உடம்பு மலர பிரயத்தனப்பட்டது. முட்டிக்கொண்டு நின்றன மொட்டுக்களின் முனைகள். மண்ணாலான உடலின் உறுப்புகள் , சுரப்பிகள் வேகமாய் இயங்க  தயாராகின.

    மந்திரப்படி அவ்னோடு சேரவேண்டும். சேர்ந்தால், என்னை உதறும் –  கட்டுகள் நிறைந்த உலகம். என் கர்ப்ப பையை கட்டுப்படுத்தும் ராஜாங்கம், நீதி பரிபாலனம். மண்ணாங்கட்டி.

    தடுத்தது – மனத்திலிருந்து பயக்குமிழி. அதற்குள்ளே சமூகம், ராஜ குலம், கட்டுமானம், திருமணம், நற்பெயர், பெண், கொஞ்சம் உயரத்தில் ஆண், கர்ப்பம், தகப்பன், தாய் எல்லாம் கலந்து கட்டி. காற்றில் மெல்ல பறந்து, கலைந்து வெடிக்க, பயம் தன் மீது ஈரமாய் ஒட்டியது.

    அவன் விழி நோக்கின் பயம் தாண்டத் தூண்டும் மனம். உதவியாய் ம்லரும் உடல். இவன் என் தேர்வல்லவா.. என் தேவனல்லவா. நான் விரும்பிய பிரம்ம புருஸனல்லவா..

    மந்திரம் சொல்லியபின்  கூடாமல் போனால், அவன் உடம்பில் பாதி எரிந்துவிடுமாம். நீங்கள் தவறாக அழைத்துவீட்டீர்கள் போல, பரவாயில்லை. மந்திர சாபத்தை உங்களுக்காக நான் ஏற்றுக் கொள்கிறேன். விரும்பிய போது மறுபடி வருகிறேன் என்று கை கூப்பியப்டி சொல்கிறான்.

    அந்த பணிவை ரசித்து  உடம்பில் சுரப்பிகளின் தாளம். மொட்டுகளின் முனை முறிந்து பெண்மை ததும்பல்.

    “ வேண்டாம்.. இரும்.. “ என்றாள்  கம்பீரமாய்.

    அவன் புரிந்து கொண்டான். மெல்லிய நிலவொளியில் அவனின் கையைப்பிடித்து தோட்டத்திற்கு இட்டுச் சென்றாள்.

    அவளுள் சுருண்டிருந்த பாம்புகள் சடக்கென உள்ளே தீ விழித்து  தலை நோக்கி பாய்ந்தன. பெரு மகிழ்ச்சி அலை. வயிற்றுக்கு மேலே நெஞ்சுக்கு கீழே ஒரு புள்ளியிலிருந்து நீரூற்றாய் எழுகிற ஆனந்தம். ஆதி மலரல்.

    அவன் அவளை மானசீகமாய் நமஸ்கரித்து  பக்கம் நெருங்கினான்.

    *

    சுற்று முற்றும் வானம், இருட்டு. தூரத்தில் அலைச்சத்தம். அவள் பிரஞ்ஞை முழுவதும் வெற்று வெளி.  தனது கால்களை திறந்து வானம் நோக்கி வைத்துக் கொண்டாள்.

    இருட்டு கரைந்து, மெல்லிய  நீலமாகி பின் அவன் ரதத்தோடு வரும் பாதையை யாரும் பார்க்குமுன் தான் பார்த்து நிற்பது.  இந்த வானம் அவளுக்கு பழக்கமான பிடித்த ஓன்று.

    அறைக்குள் பார்க்க, ரவி  இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறான். நிசப்தம்.

    தர்த்தி கண்களை மூடிக்கொண்டே யோசிக்க ஆரம்பித்தாள். சில நாட்களாய் சிதைந்த கனவுகள், சில பிம்பங்கள். வேலை அசதியால் இருக்கும் என்று விட்டு விட்டாள். வயிற்றிலிருந்து வருகிற துடிப்பு அல்சரா, இல்லை பிரியட் பிரச்சனையா என்று சந்தேகம். இரண்டும் இல்லை என்று முடிவான பின்பு அதை உற்று நோக்க ஆரம்பித்தாள்.

    உடலும், மனதும் எதற்கோ தான் தயாராகப் போவதை சமிஞ்ஞையிடுவதாக ஒரு எண்ணம் எழுந்தது.

    இப்படியெல்லாம் தான் யோசிப்பதே அவளுக்கு ஆச்சரியம் கலந்த பயம் கொடுத்த்து. வேலை, ஊர் சுற்றல், அடுத்த பதவி, அடுத்த வாடிக்கையாளர், புலன்களால் புது புதிதாய் புலரும் மகிழ்ச்சி என ஓடிக்கொண்டிருக்கும் தான் இப்படி தான் இப்படி யோசிப்பது கொஞ்சநாளில் சரியாகிவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, கனவுகள், வேறு சில சமிஞ்ஞைகள் என்று தான் எங்கோ இழுத்துப் போகப்படுவதாய் நினைத்தாள். நினைவுகளை கலைத்தாள்.

    முயக்கம் முடிந்து இலேசான உடம்பு. அகட்டி வைத்துக்கொண்டிருந்த காலின் வழியே நுழைந்து எல்லாயிடமும் குளிர்படுத்தும் காற்று. வயிற்றிலிருந்து மறுபடி பொங்கிச் சீறிடும் ஆற்றல். கண் மூடி அதையே நோக்கிக் கொண்டிருந்தாள்.

    மெல்லியதான கூச்சம் தொடையில். சின்னதாய் நடுக்கம். ஆதிகால கன்னிமையை யாரோ வருட வரப்போவது போல.. நன்றாகவும், கிளர்ச்சியாகவும் இருந்தது. நிறைய யுகங்களுக்கு முன்னான உணர்ச்சியின் எச்சமாய் அது இருந்தது.  தோட்டத்தில் படுத்திருந்தது போல உணர்வு.

    வயிற்றை தானே தடவிக் கொண்டாள். மேடிட்டு மெல்லிய குற்றவுணர்வை அளிக்கு வயிறு இன்று அப்படியில்லாததை உணர்ந்தாள். சூட்டினால் உடல் ஈரம் துப்பியது. அது இன்னும் சூட்டை கொடுத்தது. தயாராகும் உடல்.

    கிளர்ச்சியா.. இது. ஆனால், இன்னொரு புலனால் எழுகிற கிளர்ச்சி அல்ல. இன்று மலர்கிற கிளர்ச்சி, இதுவரை அறியாத புனிதமான உடல் கிளர்ச்சி.

    சேரில் சாய்ந்து மார்பை, உடையை தளர்த்திக் கொண்டாள். கண்களை மூடிக் கொண்டாள். இளம் வெயில் தனது உடம்பில் சகல பாகங்களிலும் பரவுவதாய் உணர்ந்தாள்.

    திடீரென்று, பிரஞ்ஞையின்  அடியாழத்திலிருந்து தான் அறியாத மொழியிலிருந்து சில  வார்த்தைகள். சூர்யம்.. ப்ரமண்யம்  பகு புத்தார.. தனக்கே புரியாத  வார்த்தைகள். அதுவாக உள்ளிருந்து  எழுந்து, ஆகுதியாய் வளர்ந்து, ஆகுதியில் விழுந்து. அதை  மூன்றாமவள் போல தர்த்தி  பார்த்துக்கொண்டேயிருந்தாள்.

    இறுக்கமான உடலில் ஏதோ விசை அழுத்த சுருண்ட தூங்கிக் கொண்டிருந்த பாம்பு மறுபடி எழுந்தது. வாயை திறந்து உணவுக்காக உள்ளே காத்திருக்கத் தொடங்கியது.

    அப்போது தான் அவன் பறந்து வந்து பால்கனிக்குள் ரதத்தில் இறங்கினான். காற்றில்லாத போதும் அலையும் முடிக்கற்றைகள். நமஸ்கரித்து பக்கம் நெருங்கினான்.

    இளஞ் சூடு. இத்தனை காலம், தேங்கியிருந்த யோனியின் யுகக் கசடுகளை நொடியில் சுத்தம் செய்தான்.

    யுக யுகமாய் சூரியனுக்காக காத்திருந்த அந்த யோனியின் இதழ் விரித்து அவளின் கருப்பைக்குள் தன்னிலிருந்து வழித்து எடுத்த சூரிய ஓளி கோப்பையை முழுமையாய், இளம் சூடாய் கவிழ்த்தினான்.  அது அவளின் அகத்தை ஆகர்சித்தது.

    இதற்குத்தானா இவ்வளவும் ?

    *

    உறுதியாய் சொல்லிக் கொண்டாள்.

    அப்போதும் நீயே நான் தேர்ந்தெடுத்த மகன். மண் தேர்ந்தெடுத்த விதை.  நான் விரும்பி, நானே முடிவெடுத்து, என் ஆதி மலரலில் மலர்ந்தவன் நீ. என் முதல் மரம் நீ.

    மற்றவைகளெல்லாம் என் மீது வீசப்பட்டவை தானே. நாட்டுக்காக, போருக்காக என்ற ஏதோ பெயரில்  நான் கட்டாயமாக சுமக்க வைக்கப்பட்டவை.

    இந்த பிறப்பில் நீயும், நானும் நமக்காக மட்டும்.

    எனக்கு – நானாகவே, நான் விரும்பியபடி தாய்மை அடைந்து,  முழுவதுமாய் தாய்மையின் வளர்ச்சியின் ருசி அறிந்து, புழுங்காமல், யாருக்காவுமின்றி எனக்கான கட்டற்ற வாழ்க்கை வேண்டும். பழைய கணக்கின் பள்ளங்களை நிரப்பும் ஆசைகள். கர்மாக்கள்.

    உனக்கு – பிறப்பின் மூலம் தெரிந்து ஒரு முழுமையான வாழ்க்கை வேண்டும். ஒளிவட்டமின்றி, புகழ் புழுக்கமின்றி மெல்லியதாய் தாய் நதியின் பக்கத்திலே ஒடும் ஒரு கிளை நதிபோல.

    வாழ்நாள் முழுவதும் நீ தேடுக்க்கொண்டிருந்தது  உன் முழுமையடையா பெண்மையின் இடப்பாகத்தை தானே.  ஆணின் பெண்மை தேடலின் முதலும், முடிவும் தாயில் தானே புதைந்திருக்கிறது. ஆகவே உனக்கான வாழ்க்கை, தாயோடு மட்டும் தனியாய், தனியனாய். எல்லாமே தாயாய்.

    அள்ளி அள்ளி கொடுத்த நீ அழுது அழுது கேட்ட போதும் கிடைத்தது கொஞ்ச நேர  மடிதானே. அம்பின் வலியோடும், அவமானமாய் பார்க்கிற கண்களை தவிர்த்தும் என் மார்போடிருந்த  ஒரு சில மணித்துகள்களில்  எப்படி முழு வாழ்நாளின் வலியை  கரைப்பது.

    இந்த தடவை இவற்றை கழித்து  விடுவோம். இதிகாசத்தின் கோடிட்டு காலியான இடத்தை நிரப்புவதுதான் இந்த  வாழ்க்கையின் குறிக்கோளோ என்னமோ ?

    ரத்த சீழ் வடிந்த அந்த போர்களத்தில் என் மார்பில் நீ மடிந்த போது உடம்பின் ஆசைகள் உதிர்ந்த ஆன்மாவின் அலறலில்  நாம் வார்த்தைகளின்றி நாம் பேசிக்கொண்டதல்லவா இது.

    கேட்ட்து நீ, நான் மற்றும்  கீழ் வானத்தில் மறைந்து  கொண்டிருந்த உன் அப்பா.

    *

    நன்றாக வெளுத்த விட்ட  வானம். எல்லாம் உணர்ந்து கொண்ட தெளிவான மனம். வயிற்றின் கனம். தானே உணர்ந்து கொண்ட காலச்சக்கரம்.

    What is next, how to execute – யோசித்தாள் தர்த்தி.

    அப்பா பெயரில்லாமல் அவதிப்படாதிருக்க ஒரு பெயர். ரவி. நல்ல பெயர்  தான். ஒரு தொந்திரவு செய்யாத  பெயர் வேண்டும். பொருத்தமாகவும் இருப்பதால் ஒரு சிரிப்பும் வந்தது.

    தூங்கி எழுந்த ரவியைப்  பார்த்து நாம் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்க நினைத்த தர்த்தி,

    “ என் குழந்தைக்கு அப்பாவாகயிருப்பாயா.. “ என்று கேட்டாள்.

    ரவி ஆதுரமாய் அவள் கை கோர்த்துக் கொண்டான்.

    Share
  • “ வறு கடலை “

    தமிழ்த்தேனீ

    மிஸ்டர் ரமேஷ் இந்தப் ப்ராஜக்டை  இந்தவாரம் எப்பிடியும்  முடிச்சிருவ்விங்கன்னு  நம்பறேன். இதுக்கு உங்களுக்கு என்ன உதவி வேணுமோ  நீங்க தயங்காம கேளுங்க. ஆனால் முடிக்கணும் சரியா என்று கேட்டுவிட்டு அதில் தனக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லாதது போல் சென்ற மேனேஜரைப் பார்த்து சரிசார் முடிச்சிடறேன் என்று கூறிவிட்டு சலிப்புடன் நாற்காலியில் வந்து கம்ப்யூட்டர்  முன் உட்கார்ந்தான் ரமேஷ்

    செல்போன்  அழைத்தது எடுத்து ரமேஷ் ஹியர் என்றான். உடனடியாக அழைப்பு துண்டிக்கப்பட்டது. எண்ணைப் பார்த்தான், தெரிந்த எண்ணாகத் தோன்றவில்லை , யாராவது தவறாக எண் போட்டு அவரை அழைத்திருப்பார்கள்.  செல்போனை வைத்துவிட்டு மீண்டும் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

    உங்களுக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது தேவையானால் உபயோகியுங்கள் ,அல்லது நிராகரியுங்கள்  என்று ஒரு சிணுங்கலுடன் இனிய குரலில் அறிவித்தது  செல்போன் . எடுத்து செய்தியைப் படித்தான், அதில் மன்னிக்கவும்  தவறுதலாக உங்கள் எண்ணைப் போட்டு உங்களை தொல்லைப் படுத்திவிட்டேன். மன்னிக்கவும்   என்றிருந்தது.

    அடேடே  தவறுக்கு வருந்தும் மனிதர்களும்  இருக்கிறார்களே என்று அதே  செய்தியில் அதனால் பரவாயில்லை வருந்தவேண்டாம் என்று எழுதி  செய்தியை திருப்பி அனுப்பினார். செய்தி அனுப்பப்பட்டது  என்று அறிவித்தது .மீண்டும் ஒரு செய்தி  மிக்க மகிழ்ச்சி ,உங்கள்  இணைப்பு எண் மிகவும் மாடர்னாக இருக்கிறதே  நீங்கள் யாரென்று அறிந்து கொள்ளலாமா? என்றிருந்தது.

    மீண்டும் நான் யாரென்று தாராளமாக அறிந்து கொள்ளலாமே ,நான் ஒரு கம்ப்யூட்டர் இஞ்சினீயர்  என் பெயர் ரமேஷ். காக்னிசென்ட் டெக்னாலஜிஸ் சில் வேலை செய்கிறேன் என்று எழுதி அனுப்பிவிட்டு மீண்டும் வேலையைத் தொடர்ந்தான்..

    மீண்டும் ஒரு செய்தி ! அதில்  மிக்க மகிழ்ச்சி நீங்கள் மிகவும் பொறுமையாக பதில் கூறுகிறீர்கள் நன்றி , நீங்கள் எங்கிருக்கிறீர்கள் ?என்று செய்தி கேட்டது.

    நான்  அண்ணா நகரில் இருக்கிறேன், ,இவ்வளவு அக்கரையாக கேட்கிறீர்களே நீங்கள் யார் ,உங்கள் பெயரென்ன?

    என் பெயர் ப்ரவீணா நானும் கம்ப்யூட்டர் இஞ்சினீயர்தான். நான் அடையாறில் இருக்கிறேன்.நான் மேக்னம் கம்ப்யூட்டரில் வேலை செய்கிறேன்.  வேலைக்கு நடுவே சற்றே ஊக்கப்படுத்திக்கொள்ளலாம் என்றுதான் உங்களுக்கு தகவல் அனுப்பினேன், தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் . அடுத்தடுத்து  செய்திகள் பறிமாறிக்கொள்ளப்பட்டன

    அதனால் பரவாயில்லை, உண்மையிலேயே  தலைபிய்ச்சிக்கற வேலைக்கு நடுவுலே இது மாதிரி சின்னச் சின்ன சந்தோஷங்கள் இருந்தால்தான் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும் ,மகிழ்ச்சி.

    அடுத்து செல்லில் அழைப்பு  வந்தது . எண்ணைப் பார்த்தான் ரமேஷ், அவள்தான். மனம் சுறுசுறுப்பாயிற்று.  ஹலோ என்றான் ரமேஷ்

    நான்தான் ப்ரவீணா ,இப்போது  தெரிந்தே சரியாகத்தான் அழைத்திருக்கிறேன்  என்றாள் அவள். .  ஓ மகிழ்ச்சி! உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கு என்றான் ரமேஷ்

    நன்றி, நீங்களும் நன்றாகத்தான் பேசுகிறீர்கள், உங்கள் குரல்லேயும் ஒரு கவர்ச்சி இருக்கு என்றாள் அவள்.

    நன்றி  சற்று நேரம் என்ன பேசுவதென்றே தெரியாமல் சிறு மௌனம். மீண்டும் ப்ரவீணா கலகலவென்று சிரிப்பது கேட்டது. மேலே என்ன பேசுவது என்று தெரியவில்லையா, எனக்கும் அதே நிலைதான். நாம் நேரில் சந்திக்கலாமா என்றாள் அவள்.

    காத்திருந்ததைப் போல  ஓ சந்திப்போமே இன்று  சந்திக்கலாம் மாலை ஐந்து  மணிக்கு, நானும் உங்களைப் பார்க்க  ஆவலாய் இருக்கிறேன் என்றான்  ரமேஷ்.   ஹும்  எங்கே சந்திக்கலாம், நான் உங்களை எப்படி அடையாளம் தெரிஞ்சிக்கறது ?

    நான் இன்று பச்சைக்  கலர் டாப்ஸும் ஜீன்ஸும் போட்டிருக்கேன்.. நீங்கள் என்ன உடை போட்டுக்கொண்டு வருவீர்கள் என்றாள் ப்ரவீணா

    நான் இன்று ஆபீஸுக்கு  வந்திருக்கும் உடையிலேயே  வரேன். கையில் மஞ்சள் நிற வானிடி பேக் வைத்திருப்பேன். காந்தி சிலையருகே நிக்கறேன் என்றாள் ப்ரவீணா..

    மாலை ஐந்து மணி  காந்தி சிலை அருகே ரமேஷ்  சென்ற போது ப்ரவீணா தூரத்தில் தெரிந்தாள் அவன் மனம் உற்சாகமானது.

    அருகே சென்று  வாவ் அழகா இருக்கே  நீ என்றான்  ரமேஷ்.

    தேங்க்யூ ரமேஷ் நீங்களும்தான் என்றாள் ப்ரவீணா வெகுநாட்கள் பழகியதைப் போன்று.

    இருவரும் ஒருவரை ஒருவர் எடைபோட்டுக்கொண்டே  பார்வையால் விழுங்கியபடி அருகருகே அமர்ந்தனர். ரமேஷ்  கொண்டு வந்திருந்த மல்லிகைப் பூவையும் இனிப்பையும் அவளிடம் கொடுத்தான்.

    ப்ரவீணா அவள் கொண்டு வந்திருந்த புத்தம் புது கீ செயினை அவனிடம் கொடுத்தாள் . இருவரும் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர். யுகம் யுகமாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தவர்களைப் போன்ற உணர்வு இருவருக்குமே, சூழ்நிலையே மறந்து போய் இருவரும் ஒருவரில் ஒருவர் லயித்திருந்தனர். ஒருவரை ஒருவர் பார்வையாலேயே விழுங்கிக் கொண்டிருந்தனர். .

    திடீரென்று ஒரு  கூக்குரல், முன்னபின்ன தெரியாத  எவனையாவது விவரமே தெரியாம  காதலிக்க வேண்டியது, அப்புறம் அவன் கைவிட்டுட்டான்னு  இப்பிடிக் கடல்லே விழுந்து தற்கொலை செஞ்சிக்க வேண்டியது,

    வரவர விவஸ்தையே  இல்லாம போச்சு நாடு. ஒரு நாளாவது  நம்மை நிம்மதியா இருக்க விடறானுங்களா  இந்தக் காலத்துப்  பசங்க. அவங்க கல்யாணம் செஞ்சிகிட்டு  தாலிகட்டிக்கிட்டு அந்த்த் தாலியை மதிக்கறாங்களோ  இல்லையோ  நம்ம தாலியறுக்கறானுங்க.

    பெத்தவங்க இப்பிடியே  கவனிக்காம விட்டுட்டு அப்புறம் அய்யோ  போச்சேன்னு கதர்றாங்க. கவனிக்க வேண்டிய காலத்திலே  கவனிக்காம அப்புறம் வாயிலே வயித்திலே அடிச்சுகிட்டு  என்னா ப்ரயோசனம் என்று முனகியபடி , 507   பொதுமக்களை  தள்ளிப் போகச்சொல்லுயா கூட்டம் போடவேணாம் . அப்புறம் ஏதாவது முக்கியமான தடையம் காணாமப் போயிடும் என்றார் காவல்துரை அதிகாரி கேசவன்.

    அந்த போட்டோ கிராபரை நிறைய கோணத்திலே படம் எடுக்க சொல்லுய்யா,  வேன் வந்திருச்சா, போட்டோ எடுத்தப்புறம் ஏதாவது தடையம் கிடைக்குதான்னு பாரு, யாரு ,எந்து ஊருன்னு கண்டுபிடிக்கலாம் , சே  என்னா பொழைப்புய்யா இந்தப் போலீஸ்காரன் உத்யோகம் ,ஒரு நாளாவது ஒழுங்கா வீட்டுக்கு சரியான நேரத்திலே போக முடியுதா?.பொண்டாட்டி புள்ளை குட்டிகளைக் கவனிக்க முடியுதா? என்று சலித்துக்கொண்டே வேலையைத் தொடர்ந்தார் அவர்.

    ப்ரவீணா ரமேஷிடம் குனிந்து ரகசியக் குரலில்   இங்கே இருந்து போயிடலாம் ,அதோ அந்தப் போலீஸ்காரர் என் அப்பா என்றாள் .

                                  சுபம்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (43)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    மனிதன் தோன்றிய காலம் முதல் இன்றுவரை அவனுடைய சரித்திரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எண்ணிலடங்காதவை. கலாச்சாரம், மொழி, வாழ்க்கைமுறை என்று பலதரபட்ட மாற்றங்களுக்குள்ளாகிய சரித்திரம் மனித சரித்திரம் என்பதுவே உண்மையாகும்.

    அத்தகைய மாற்றங்களுக்குட்பட்டதொன்றே தற்கால போக்குவரத்து முறைகளாகும். இத்தகைய முன்னேற்றங்களில் முன்னிடம் வகித்தது மேலைத்தேசங்களில் இங்கிலாந்து என்று சொன்னால் மிகையாகாது.

    2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி இங்கிலாந்து தேசத்தின் போக்குவரத்து முன்னேற்றம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும்.

    என்ன அது ? அப்படி அது என்ன பெரிய சாதனை ? உங்கள் கேள்வி புரிகிறது.

    “London Underground ” இலண்டன் நிலத்துக்குக் கீழான சுரங்க இரயில் சேவை ஆரம்பித்து அன்று 150வது வருடமாகும். ஆமாம் லண்டனின் முதலாவது சுரங்க ரயில் ஓடத் தொடங்கியது 1863ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதியாகும்.

    இன்றைய லண்டன் “சுரங்க இரயில் ” இன்றி இயங்க முடியாது எனும் நிலையை எட்டியுள்ளது. இச்சுரங்க இரயில் மூலம் தமது அன்றாடப் பய்ணங்களை தமது வேலைத்தளங்களுக்கு மேற்கொள்ளும் பிரயாணிகளின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    நான் இங்கிலாந்தில் காலடி வைத்து இப்போ 37 வருடங்கள் ஓடி விட்டன. நான் மாணவனாக லண்டனில் வலம் வந்த நேரம் இரவு நேரங்களில் பகுதி நேர காவலாளியாகப் பணிபுரிந்து விட்டு பகல் பொழுதுகளில் கல்லூரி செல்ல வேண்டிய நிலை அப்போது.

    18/19 வயதுகளில் மிதந்த நான் அன்று எனது வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள உதவியது இந்த இலண்டன் சுரங்க ரயில் சேவையே. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு விரைவாகப் பயணம் மேற்கொள்ள வேண்டிய தேவை இருந்த நேரத்தில் இந்த ரயில் சேவையின் மகத்துவம் புரிந்தது.

    லண்டனில் வாழ்ந்த சார்ள்ஸ் பியர்சன் என்பவரின் வாழ்க்கைக் காலம் 1793 தொடக்கம் 1862 வரையுமாகும். இல்ண்டனில் ஒரு நிலத்துக்குக்கீழான சுரங்க இரயில் சேவை அமைப்பதை கற்பனையில் உருவாக்கியவர் இவரேயாகும்.

    இவரது கனவுக்கு செயலாக்கம் கொடுக்கும் பணி 1817 தொடக்கம் 1898 வரை வாழ்ந்த ஜான் வவுலர் என்பவருக்கு அளிக்கப்பட்டது.

    இத்திட்டம் செயல்வடிவம் கொடுக்கப்பட்டது 1860ம் ஆண்டு  பெப்பிரவரி மாதம் ஆகும். ஜான் வவுலர் இத்திட்டத்தை செயல் வடிவப் படுத்தத் தொடங்கினார். ஆனால் இது முழு வடிவம் பெற்ற போது இதக் கற்பனையில் தீட்டிய சார்ல்ஸ் பியர்சன் உயிருடன் இருக்கவில்லை.

    மெட்ரோபொலிட்டன் சேவை என அழைக்கப்பட்ட முதலாவது லண்டன் சுரங்க இரயில் சேவை படிங்டன் Padington)  எனும் இடத்திற்கும் பரிங்டன் (Farringdon) எனும் இடத்திற்கும் இடையில் முதன் முதலாக 1863ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதன் நீளம் நான்கு மைல்களாகும்.

    இச்சேவையின் பரீட்சார்த்த ஓட்டம் அன்று முடிவுற்றதும் அடுத்த நாளே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இச்சேவை ஆரம்பித்து சில மாதங்களில் நாளொன்றிற்கு சுமார் 26000 பயணிகள் இச்சேவையை உபயோகித்தார்கள்.

    இச்ச்சேவை பிரத்தியேக கம்பெனியின் நிதி உதவியுடனேயே முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது.

    1884ம் ஆண்டு உள்ளடங்கிய வட்டத்தில் சுமார் 800 சுரங்க இரயில்கள் ஓடின என்று கூறப்படுகிறது. இச்சுரங்க இரயில்களுக்கான நிலத்துக்குக் கீழான சுரங்கமைப்புக்கான யோசனை 1840ம் ஆண்டளவில் தேம்ஸ் நதிக்குக்கீழாக சுரங்கப்பாதை அமைத்த பொறியியலாளர் ப்ரூனல் என்பவரின் செலாக்கத்தினாலேயே உருவானது எனப்து குறிப்பிடத்தக்கது.

    முதலாவது இலவச சுரங்க இரயில் பாதைக்கான வரைபடம் 1908ம் ஆண்டே வழங்கப்பட்டதாம். முதலாவது உலக மகாயுத்தத்தின் போது ஆண்கள் ஆனைவரும் இராணுவத்தில் இணைந்ததினால் ஏற்பட்ட ஊழியர் பஞ்சத்தைத் தீர்க்கவே இச்சுரங்க இரயில் சேவையில் முதன்முதலாக பெண்கள் இணைக்கப்பட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

    இச்சேவையின் முக்கியத்துவத்தை அதை உபயோகித்து அனுகூலத்தை அனுபவித்தவன் எனும் வகையில் நான் பெருமையுடன் நினைவு கூறுகிறேன். இத்தகைய கண்டுபிடிப்புகள் மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு ஈடர்ன வகையில் சேவையாற்றியிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • சிந்தையால் கேள்

    வருணன்
    
    ஓலமிடும் தரணியின் 
    துயர் துடைக்க
    சிறியன் நான் என் செய்வேனென
    திகைக்கிறாயா நண்பா?
    
    ஒன்றுமில்லை
    குருவியின் தலையில்
    பனங்காய் சுமக்கத்
    தேவையில்லை.
    
    இயன்றதைச் செய்தாலே
    இவ்வுலகம் பிழைத்திடும்.
    
    கசக்கி எறிந்து வீணடிக்கும்
    ஒவ்வொரு காகிததிலும்
    ஒரு மரக் கிளையின்
    கண்ணீர் துளியின்
    பிசுபிசுப்பு உணர். 
    
    விசிறியடிக்கும்
    ஒவ்வொரு ஞெகிழிப் பையும்
    பூமித் தாயின் மூச்சுக் குழாய்
    அடைக்கிறது.
    புரி!
    
    நிறைய கனவு காண்
    கள்ளமில்லா காற்று
    மாசில்லா நீர்நிலை 
    கருஞ்சாலை நதியின்
    கரையெங்கும் 
    நிழல் காய்க்கும் மரங்கள்…
    
    கனவோடு நில்லாதே 
    காரியம் கெடும்.
    முயற்சி வடம் பிடித்து
    கனவுத் தேர் இழு !
    
    விதைகளைப் பதியனிடு
    எதிர்காலம் விருட்சமாகும்.
    
    உன் சந்ததியின்
    உயிர் துடிப்பை
    தளிர்களின் சலசலப்பில்
    கேள் !
    
    தோழா !
    போகிக்குக் கொளுத்திட
    குப்பைகள் 
    மண்டிக் கிடக்கிறது ஏராளமாய்
    மனவீட்டின் கொல்லையில்…
    
    பின் எதற்கு தெருக்களில்?
    சிந்திப்பாய் …!
    
    படத்துக்கு நன்றி
    http://www.novadesk.com/go-green-with-nova/ 
    Share
  • வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போமா! (1)

    பவள சங்கரி

    ’நாம்’ நாமாகவே இருப்பதற்கு நம் எண்ணங்களே காரணம். நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் நம்மை நல்வழிப்படுத்தி, வெற்றிக்கனியை எட்டிப் பறிக்கச் செய்யும் என்ற நம்பிக்கை உடையவர் நீங்கள் என்பது உண்மையானால் இத்தொடர் உங்களை அக்காரியத்தை மென்மேலும் ஊக்குவிக்க வல்லது என்பது சத்தியம். நம்பிக்கை என்ற ஒன்றே வாழ்க்கையில் நம்மை உயரத்திற்கு இட்டுச் செல்லக்கூடியது. நம் எண்ணங்கள் மேம்படும்போது நம் வாழ்க்கைத் தரமும் உயரும். நம் எண்ணங்களை எப்படி மேம்படுத்தப் போகிறோம் என்பதையே இத்தொடரில் விவாதிக்கப் போகிறோம். நல்ல எண்ணங்கள் மட்டுமே நம் சுய வல்லமையை ஊக்குவிக்கும் ஒரு உன்னத காரணி.

     உறுதியான எண்ணத்தால் உயர்ந்து நிற்போம்!

    நற்சிந்தையாலும், நல்ல ஆரோக்கியத்தினாலும், நல்லொழுக்கத்தினாலும் உயர்ந்து நிற்பதால் வெற்றிக்கான அடித்தளத்தை உறுதியாக்கிவிட்டோம் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ளும்போது இடையில் வரும் தடைகளை எளிதாகத் தகர்த்தெறியும் வல்லமை பெறுகிறோம். இதனால் உங்கள் பயணத்தில் அன்பைத் தவிர வேறு எந்தக் காரணத்திற்காகவும் எவருக்காகவும் நீங்கள் தலை வணங்கத் தேவையில்லை..

    முதலில் நம் உடலளவில் உயர்ந்து நிற்போமே. ஒரே ஒரு உடல் மொழியால் ஓராயிரம்  எண்ணங்களை உணர்த்தக்கூடும். அத்தகைய உடலை முதலில் சரியாகக் கையாள வேண்டியது அவசியம். முத்ற்பார்வையிலேயே வெளித்தோற்றம் மட்டுமே ஒருவரை எடை போடச் செய்கிறது. கருப்போ, சிகப்போ, நெட்டையோ, குட்டையோ, செல்வந்தரோ, வறியவரோ எவராயினும் நம் புறத்தோற்றம் எப்படி இருந்தாலும், நாம் அதை வெளிப்படுத்தும் விதமே நம்மைப் பற்றிய மதிப்பீட்டை உருவாக்குகிறது.

    தன்னம்பிக்கை உடைய ஒருவர் தம் தோற்றம் மூலமே அதனை எளிதாக அடுத்தவரை உணரச் செய்ய முடியும். வளைந்து, நெளிந்து, கூனிக் குறுகி ஒருக்காலும் நிற்க மாட்டார் தன்னம்பிக்கை உடையவர். பாரதியின் நிமிர்ந்த நன்னடை பார்த்தவுடன் மரியாதை அளிக்கக்கூடிய தோற்றப் பொலிவைக் கொடுக்கக் கூடியது. அந்த நிமிர்ந்த நன்னடைக்கு மனதில் நம்பிக்கை வேறூன்றியிருக்க வேண்டும். அந்த நம்பிக்கைக்கு அச்சாரம் என்பது நேர்மையும், சுய கட்டுப்பாடும், உண்மையான உழைப்பும்தான்.

    தெருவோரத்தில் மசாலாப் பொறிக்கடலை கடை போட்டு பிழைப்பு நடத்தும் ஒருவர், சுறுசுறுப்பான வியாபார நேரத்தில், பம்பரமாய்ச் சுழலுகிறார். ஒரு பாத்திரத்தில் இரண்டு கை பொறியை அள்ளிப்போட்டு அதில் துருவிய கேரட், பீட்ரூட், கொத்தமல்லி இலைகள், கொஞ்சம் புதினாத் தொக்கு, எல்லாம் போட்டு, இறுதியாக மசாலாப் பொடியும், மிளாகய்த்தூள், உப்பு கலந்த கலவையையும் அப்படியேத்தூவி, அதன் மீது சிலத் துளிகள் எலுமிச்சைச் சாறும் தெளித்துக் கொடுப்பார். சுவையான சுவைதான் போங்கள். நாம் இங்கு அந்தச் சுவையில் மெய்மறந்து இருக்கும் போது, அந்த வழியாகக்  கடந்து போகும் ஒரு இரு சக்கர வாகன ஓட்டியின் கண்களில் பறந்து போய் விழுந்த அந்த மிளகாய்ப்பொடி படுத்திய பாடு, மனிதர் ஒரு பெரிய விபத்திலிருந்து தப்பி வந்தார் பாவம். இதை அறியும்போது அந்த மசாலாப்பொறிக் கடைக்காரர் எப்படி நிமிர்ந்த நன்னடையுடன் நடமாட இயலும். அவர் தூவும் அந்த மசாலாப் பொடிகள் அடுத்தவரின் பார்வைகளை பதம் பார்க்காதவாறு ஒரு மறைப்பான் வைத்து தம் சமுதாய அக்கறையை வெளிப்படுத்தியிருந்தால் அவர் அடுத்தவர் முன்போ, தம் மனசாட்சியின் முன்போ கூனிக்குறுகி நிற்க வேண்டியதில்லை. அடுத்தவர் வந்து முறைப்படுத்த வேண்டும் என்று எண்ணாமல் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டாலே தலை நிமிர்ந்து நிற்கலாமே.

    தூக்கணாங்குருவிக் கூட்டைப் பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு பெருத்த ஆச்சரியமாக இருக்கும். மரத்திலோ, குட்டிச் சுவற்றிலோ, கிணற்றினுள்ளோ,  அப்படியே தொங்கிக் கொண்டிருக்கும் அதை அது எப்படித்தான் கட்டியிருக்குமோ என்று. எத்தனை பொறுமை வேண்டும். ஒவ்வொரு புல்லாகக் கொண்டு வநது கீழே விழுந்தாலும் மீண்டும், மீண்டும் பொறுக்கி எடுத்து கூடாக்கிவிடும். காற்று பலமாக வீசினாலும், ஆடுமே தவிர அறுந்து விழாது. ஒரு சின்ன குருவிக்கு இருக்கும் அந்த வல்லமை ஆறறிவு படைத்த நமக்கு இல்லாமலா போகும்?

    தொடரும்

    படத்திற்கு நன்றி :

    http://www.great-inspirational-quotes.com/stand-tall-like-the-sunflower.html

    Share
  • மறியிடைப் படுத்த மான் பிணை….

    முனைவர். ப. பானுமதி


    காலம் வெகுவாக மாறி விட்டது. ஒரு காலத்தில் தமிழ்ச்சமுதாயம் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தது. ஒரு பெரிய கூடம் (ஹால்) இருக்கும். குறைந்தது 20 பேரை நிம்மதியாகப் படுத்து உறங்க வைக்கும் கொள்ளளவு அந்தக் கூடத்திற்கு இருக்கும். ஒரே நேரத்தில் முப்பது அல்லது 40 பேருக்குப் பந்தி வைக்க வேண்டும் என்னும் கொள்கை அளவும் அதற்கு இருக்கும். இதை பட்டாசாலை என்று கூறும் வழக்கம் இருந்துள்ளது. இதற்கு அடுத்து அங்கணம் என்று கூறப்படும் சின்ன பட்டாசாலை ஒன்று இருக்கும். இதிலும் சுமார் 20 பேர் படுக்கலாம். இது இன்னும் சில வீடுகளில் நிலா முற்றம் எனப்படும் நிலவொளி உள்ளே விழும் அமைப்பில் கம்பிகள் மட்டும் மேற்கூறையாகப் போட்டு அமைந்திருக்கும்.

    இவை தவிர, ரேழி ஒன்று இருக்கும். முன்னறைக்கும் வாசலுக்கும் இடைப்பட்ட பகுதியைத்தான் ரேழி என்று கூறுவது வழக்கம். அறை என்று சொன்னால் பொதுவாக ஒன்றோ இரண்டோ அறைகள் சின்னஞ்சிறிய அளவில் இருக்கலாம். ஒன்று அந்த வீட்டு மாப்பிள்ளை வந்தால் தங்க வைப்பதற்கு. மாப்பிள்ளைகள் வந்தால்….? கூடி கும்மாளம் அடிக்க வேண்டியதுதான். மற்றொன்று சாமான்கள் வைக்கும் ஸ்டோர் ரூம். மற்றபடி சமையல் அறை ஒன்று பெரிதாக இருக்கும். ஒத்தார் ஓர்ப்படிகள் ஒன்றாய்க் கூடி கும்மியடிக்கும். தப்பு தப்பு சமையல் செய்யும் இடம்.

    ஆமாம் இப்போது எதற்கு இந்த வாஸ்து சாஸ்திரம் என்று கேட்கத் தோன்றுகின்றதா? தோன்றவில்லை என்றால் நீங்கள் ஏதோ இயந்திரத்தனமாக இந்தக் கட்டுரையைப் படிக்கத் தொடங்கி உள்ளீர்கள் என்று பொருள்.

    சங்க இலக்கிய மான் குடும்பத்துக் காட்சி ஒன்றை இப்போது கூறுவது இக்கட்டுரைப் பொருளுக்குப் பொருத்தமாக இருக்கும். தமிழில் எதைச் சொல்லப் புகுந்தாலும் சங்கத்தில் இருந்து எடுத்துக்காட்டிச் சொல்வது தமிழுக்குப் பெருமை என்பதை விடவும் அதைச் சொன்னவருக்கே பெருமை அதிகம் . “எத்தனைதான் தேக்கு இருந்தாலும் பர்மா தேக்கு போல வராது என்பார்கள். அது போலத்தான் பக்தித்தமிழ், பாமரத்தமிழ், இலக்கியத்தமிழ் என்று பல சொன்னாலும் சங்கத்தமிழ் என்பதில் உள்ள பெருமை மற்ற எதிலும் இல்லை” என்று பேரா. தி. இராசகோபாலன் சொல்வார். விளக்க முற்படும் எந்தச் செய்திக்கும் சங்கச் சான்றே தங்கச் சான்றாக ஒளிவீசும் என்பதில் ஒருவருக்கும் ஐயம் இருக்காது. உயர் மதிப்பையும் அள்ளித் தருவது. தமிழனின் அறவியல், அறிவியல், உடலியல், உளவியல் நுட்பத்தை எடுத்துக் கூறும் சான்றுகளின் கருவுலமும் அதுவே எனலாம்.

            தான் காதலித்த தலைவனோடு உடன் போக்கு சென்று விடுகிறாள் தலைவி. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்து விடுகின்றது. அப்போதும் அவளது தாயும் தந்தையும் அவள் மீது கோபத்துடன் இருக்கின்றனர். ஆனால் அவளை வளர்த்தச் செவிலித்தாயால் அப்படி இருக்க இயலவில்லை. அவள் சென்று தலைவியைப் பார்த்துவிட்டு வருகிறாள். தான் கண்டு வந்த காட்சியைச் சொன்னால் நற்றாய் மனம் மாறி, தலைவி மீது கொண்டுள்ள சினத்தை மாற்றிக் கொள்வாள் என்று நினைக்கிறாள். தலைவியின் கடிமனைக்குச் சென்று வந்த செவிலி உவந்த உள்ளத்தினளாய் நற்றாய்க்குப் பின்வருமாறு கூறுகிறாள்.

                    மறியிடைப் படுத்த மான்பிணை போல,

    புதல்வன் நடுவணன் ஆக நன்றும்

    இனிது மன்றஅவர் கிடக்கை; முனிவின்றி

    நீல் நிற வியலகம் கவைஇய

    ஈனும் உம்பரும் பெறலருங்குரைத்தே!

    காட்டில் குட்டியை ஈன்ற காதல் மான்கள், குட்டி இடையில் படுத்திருக்க அதனைத் தழுவிக் கலைமானும்(ஆண்மான்) பிணை மானும் (பெண்மான்) படுத்திருக்குமாம். அது போல, புதல்வன் நடுவே படுத்திருக்க, அவனைத் தழுவியவாறு தலைவனும் தலைவியும் படுத்திருக்கும் காட்சி இனிமையானது. பரந்து விரிந்த நீல வானத்தைத் தழுவிக்கொண்டிருக்கும் இந்த மண்ணுலகத்திலும் இதற்கு அப்பாற்பட்ட தேவர் உலகமாகிய விண்ணுலகத்திலும் இந்தக் காட்சி கிடைப்பது அரிது என்று கூறுகிறாள். இதில் தலைவன், தலைவி இருவரும் தம் குழந்தை மீது கொண்ட காதலை விளக்குகிறாள். இருவரது அன்பையும் பற்றி கூறுகிறாள். அப்போதும் மனம் மாறாத நற்றாயைப் பார்க்கிறாள். மற்றொரு காட்சியையும் கூறுகிறாள்.

    “புதல்வன் கவையினன் தந்தை; மென்மொழிப்                                          புதல்வன் தாயோ இருவரும் கவைஇயினள்

    இனிது மன்ற அவர் கிடக்கை

    நனி இரும் பரப்பின் இவ்வுலகுடன் உறுமே”

    உன் மகள் எப்படிப் பட்ட தாயாக இருக்கிறாள் தெரியுமா? தலைவன் தன் புதல்வனாகிய உன் பேரனைத் தழுவியபடி படுத்திருக்கிறான். உன் மகளோ தான் ஈன்றெடுத்த மகனான உன் பெயரனையும் தன் காதல் தலைவனையும் ஒரு சேர ஒரு தாயாக தழுவிக்கொண்டு படுத்திருக்கிறாள் என்னும் கருத்து தொணிக்கப் பாடுகிறாள். அப்போதும் சினம் தணியாத தாய்க்கு அங்கு அரங்கேறிய மற்றொரு காட்சியையும் படம் பிடிக்கிறாள்.

    புதல்வன் கவைஇய தாய் புறம் முயங்கி

    நசையினன் வதிந்த கிடக்கை, பாணர்

    நரம்பு உளர் முரற்கை போல

    இனிதால் அம்ம! பண்புமார் உடைத்தே!

     

    இப்போது புதல்வனை அரவணைத்துக் கொண்டு படுத்திருக்கிறாள் தலைவி. அவளின் முதுகுப் புறத்தைத் தழுவி, விருப்பத்தோடு படுத்துக் கொண்டிருக்கிறான் தலைவன். அவர்களை அவ்வாறு காண்பது மிகவும் இனிய காட்சி. அது பாணர்கள் தங்கள் யாழின் நரம்புகளை மீட்டி இசைக்கும் இசையைப் போல இனியது; மிகுந்த பண்பும் உடையது” என்கிறாள். இப்படிப் பட்ட அழகொளிரும் இல்லறக் காட்சிகளை அமைக்கிறார் பேயனார் என்னும் சங்கத் தமிழ்ப் புலவர்.

    பூனைக் குட்டிகளைப் பாருங்கள். தாய்ப்பூனை அருகில் இருக்கும்போது பாதுகாப்பு உள்ளது என்னும் உணர்ச்சியில் அச்சமற்று நன்கு உறங்கும். தாய்ப்பூனை வெளியில் சென்றிருக்கும்போது அவை அச்சத்துடன் திரு திருவென விழித்துக் கொண்டிருக்கும்.

    ஐந்தறிவே உள்ள மான்கள் தங்கள் குட்டியை அணைத்துக் கொண்டு படுக்கின்றன என்கிறது முதல் பாடல். வீட்டு விலங்குகளான பூனை, நாய் முதல் சிங்கம், புலி முதலிய விலங்கினங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட பருவம் வரைத் தம் மக்களைத் தனியாகப் படுக்க வைப்பதில்லை.

    நம் பண்டைய பண்பாட்டுத் தமிழர்கள் தங்கள் குழந்தையைத் தனியாகப் படுக்க வைத்ததில்லை. ஒரு வேளை செல்வந்தர்களின் இல்லங்களில் இணையர் தனியறையில் படுக்க நேர்ந்தால் அவர்களின் குழந்தைச் செல்வங்கள் பாட்டன், பாட்டியுடன் கதை கேட்டு, பாட்டுக் கேட்டு மகிழ்வாகப் படுத்துறங்கும்.

    கூட்டுக் குடும்பம் நலிந்து தனிக்குடும்பம் மலிந்த, நாகரிகத்தில் முற்றிப்போன இன்றைய சமுதாயத்தில் தனியறையில் குழந்தைகளைப் படுக்க வைப்பதும் மலிந்து போனது. எட்டுக்கு எட்டு அறை ஒன்றில் குழந்தையையும் அதற்கென ஒரு கணிப்பொறி மற்றும் இத்யாதி இத்யாதிகளையும் வாங்கி அடைத்து விடுகின்றனர். அணைப்பாரற்ற அந்தக் குழந்தை அன்பு, பாசம் என்னும் ஏக்கத்தால் மூச்சு முட்டியபடியே உறங்குகிறது. உயிர் வாழ்கிறது.

    இதனினும் பெருங்கொடுமை மகிழ்வுந்துப் பயணம். இப்போதெல்லாம் அம்மாவும் அப்பாவும் வெளியில் செல்கின்றார்கள் என்றால் குழந்தைகள் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கின்றன.  காரணம் காரில் முன் இருக்கையில் கணவனுடன் மனைவிதான் அமர வேண்டும். இது இன்றைய நாகரிகம். அதாவது கணவரது எஜமானியாம் மனைவி. அவர்கள் இருவரும் பாட்டுக் கேட்டுக்கொண்டோ, அல்லது ஆங்கிலத்தில் பேசிக்கொண்டோ தம் குழந்தையைச் சட்டை செய்யாமல் முன்பக்க இருக்கைகளில். அந்தக் குழந்தையோ பின் இருக்கையில் சோர்ந்த வாடிய முகத்துடன் ஜன்னலில் இருந்து வெளியே வெறித்துப் பார்த்தபடி.

    இந்நிலையில் அக்குழந்தைக்கு எப்படி மன ஆரோக்கியம் இருக்கும்? அக்குழந்தையின் உலகம் எந்திரங்களாக ஆன பின்பு அக்குழந்தையும் பாசம், பந்தம், அன்பு, கருணை, இரக்கம் என்னும் நற்பண்புகள் எதனையும் புரிந்து கொள்ள முடியாத எந்திரமாகவே ஆகிவிடுகின்றது. அதனால் எதிராளியின் துன்பத்தைக் கூடப் புரிந்து கொள்ளவோ, உதவவோ முடியாமல் போய்விடுகின்றது. சற்று அழுத்தமாகக் கூறவேண்டுமென்றால் எதிராளியைத் துன்புறுத்துவதும் கூடிப் போகிறது என்று கூறலாம்.  குழந்தைகள் வளரும்போது இக்குணமும் படிப் படியே வளர்ந்து வன்முறையாளர்களாக அவர்களை மாற்றிவிடுகின்றது.

    இளமையில் தம்மைத் தனிமைப் படுத்திய பெற்றோர்களை முதுமையில் அவை தனிமைப் படுத்திவிடத் துடிக்கின்றன. முதியோர் இல்லங்களில் பெற்றோர்களைப் போடுகின்றன. ஐந்தில் விளைவுதுதான் விளைவு. குழந்தையின் பத்து வயதிற்குள் அதன் சிந்தையில் என்ன நற்பண்புகள் பதிகின்றதோ அதுதான் எப்போதும் ஒளிவிடும். இவற்றை உணராது ஐயோ முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டனவே என்று அங்கலாய்த்தலில் ஒரு பயனும் விளையப் போவது இல்லை.

    ஆய்வு என்று எதையும் மேற்கொள்ளாத சங்கத் தமிழன் இந்த உளவியல் சார்ந்த உண்மைகளை உணர்ந்தவன். இதற்குச் சான்றுகளே மேற்கூறிய பாடல்கள்.

    ஆனால் இதனை இத்தனை ஆண்டுகள் கழித்து ஆய்ந்து கண்டவர்கள் டென்மார்க் ஆய்வாளர்கள். 2 முதல் 6 வயது வரையிலான 500 குழந்தைகளை ஆய்வு செய்த. டென்மார்க் ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர். நன்னா ஓல்சன் கூறுவதாவது, “பெற்றோருடன் உறங்கும் குழந்தைகள் உடல் மற்றும் மன நலத்துடன் இருக்கிறார்கள் என்கின்றனர். முக்கியமாக பாதுகாப்பு உணர்வு இருப்பதால் நிம்மதியாக  உறங்குகின்றனர். ஹார்மொன்கள் அளவாகச் சுரக்கின்றன. அவர்களது செரிமானம் சீராக இருக்கறது. அதனால் அவர்கள் குண்டாவதில்லை.

    தனியாக உறங்கும் குழந்தைகள் அச்சத்துடன் சரியாக உறங்குவதில்லை. தூக்கத்தில் தொந்தரவு ஏற்பட்டால், அது ஹார்மோன்களைப் பாதித்து உடல்பெருக்கத்தைத் தூண்டும். சரியான உறக்கமின்மையால் உண்ட உணவு சரியாக செரிப்பது இல்லை. அதன் காரணமாகக் குண்டாக இருக்கின்றனர். பெற்றொருடன் படுத்து உறங்கும் குழந்தைகளைவிட தனியாகப் படுத்து உறங்கும் குழந்தைகளின் உடல் எடை மூன்று மடங்கு கூடுதலாக உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது” என்கிறார்.

         மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

          சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”

    என்பார் திருவள்ளுவர். மழலைகளின் மெய்யை வருடுவது குழந்தைக்கு இன்பம் தரும். பெற்றோர்க்கு பேரின்பம் தரும். அந்த இன்பப் போதையில் மூழ்கித் திளைத்த மீசைக்காரனும்,

     

    கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி!
    உன்னைத் தழுவிடலோ, கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி!”

    என்று பாடிப் பரவசமடைந்து படிப்போரையும் பரவசத்துள் ஆழ்த்துகின்றான்.

    குழலையும் யாழையும் தம் இனிய குரலில் இசைத்து நம்மை இன்பமாக இசைவிக்கும் மழலைகளைத் தனியாக உறங்க விடாதீர்கள். ஏக்கத்தின் தவிப்பில் உழலவும் விடாதீர்கள். இனியேனும் பெற்றோர்கள் விழித்துக்கொள்வீர்களாக. தங்கள் குழந்தையை பதமாக அணைத்து இதமாக உறங்க வைப்பீர்களாக! ஒரு மன, உள நோயற்ற குழந்தையின் பெற்றோர் என்னும் பெருமையுடன் உலாவருவீர்களாக!

    Share
  • ” நா ஜீவோ தாரா “

    விசாலம்

    ஸ்ரீ த்யாகராஜ ஆராதனை பகுள பஞ்சமி அன்று திருவையாற்றில் அவரது பிருந்தாவனத்தில் மிகச் சிறப்பாக நடக்கும் அன்றைய தினம் பெரிய சங்கீத மேதைகள் அவர் இயற்றியப் பஞ்ச ரத்ன கீர்த்தனங்கள் பாடுவார்கள்.அப்போது அவரது சிலைக்கும் அபிஷேகம் ஆராதனை, பூஜைகள் நடக்கும் . அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்  இது  .அவர் தன் ஐந்து வயதிலிருந்தே ஸ்ரீராமநாமத்தை ஜபிக்க ஆரம்பித்தார் சுமார் 95கோடிகள் ஜபித்திருக்கிறார், ஒரு சமயம் அவ்ர் திருப்பதி கோவிலுக்குப் போய் திரும்பி வந்துக் கொண்டிருந்தார் அப்போது ஒரு இடத்தில்ஒரே கூட்டம் , என்னவென்று விஜாரித்ததில் ஒருவன் கிணற்றில் விழுந்து இறந்து விட்டான்  என்றுத் தெரிய  வந்தது அதாவது ஒரு பிராமணன் தன் மனைவி, குழந்தையுடன்  அங்கிருக்கும் ஒரு கோவிலுக்குப் போனான்,  இருட்டிவிட்டது ஒரு ஆலயத்திற்குள்   சென்று இரவைக் கழித்துவிட்டுச் செல்ல நினைத்தான் ஆனால் அந்தக் கோவில் உள்ளேத் தாழிடப்பட்டிருந்தது என்ன செயவது  என்றுத் தெரியாமல் அங்கிருக்கும் மதில் மேல் ஏறி உள்ளேக் குதித்து பின் உள் இருக்கும் தாழ்ப்பாளைத் திறக்கலாம் என்று எண்ணி உள்ளே   குதித்தான்  அவ்வளவுதான்   டம்  என்றச் சத்தத்துடன் கிணற்றில்  விழுந்து விட்டான் நீரில் மூழ்கி  தத்தளித்து  செத்துப்போனன் ,.அவள் மனைவி வாசலில்  தன் கணவன்  இவ்வளவு நாழியாகியும்  வெளியில் வரவில்லையெ என்றுக் கவலையுடன் அழுது    ஊரைக் கூட்டினாள் /எல்லொரும் கோவில் உள்ளேத்தேடி  பின் அவனைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்கள்.     அவன் கழுத்தில்  துளசி மாலை
    இருந்தது  அவன் சிறந்த விஷ்ணு பக்தன் என்று   தெரிந்து, கொண்டார்

    “நா ஜீவோ தாரா” என்றுத் தெலுங்கில் ஒரு பாட்டு    அதாவது  அந்த மனிதனின்  உயிரைத் தந்துவிடு ராமா என்று உள்ளம் உருகிப் பாடினார்    தியாகராசர்      அந்த உயிர்ப் போன மனிதன் உறங்கி எழுந்தவன் போல உயிர்ப் பெற்று நின்றான் .என்னபக்தி! என்ன ராம நாமத்தின் மகிமை ,,,
    ,
    அவர்  பாடிய  பாடல்

    நாஜீவாதா ர நாநோமு ப லமா

    ராஜீவலோசந ராஜ ராஜ சிரோமணி

    நா சூபு ப்ரகாசமா

    நா நாஸிகா பரிமளமா

    நா ஜபவர்ண  ரூபமா

    நாது பூஜா ஸூமமா த்யாக ராஜநுத

    இதன்  பொருள்

    என்னுடைய ஜீவனுக்கு ஆதாரமாயுள்ளவனே

     நான் பார்க்காத ஒளியாய் உள்ளவனே
    நான் என்னுடைய சுவாசத்தினால்  உன்னுடைய சுகந்தத்தை முகர்கிறேன்
    நான்  ஜபிக்கும்   அக்ஷரத்தின் ரூபமாய் உள்ளவனே ,
    என்னுடைய பூசையின் புஷ்பமாய் உள்ளவனே
    தியாகராஜனால் துதிக்கப்பட்டவனே …..

    பாகவதத்தில்  துருவசரித்திரத்தில்  துருவனுக்கு மஹாவிஷ்ணு பிரத்த்யட்சமான்வுடன்  ஒருஸ்லோகம் வரும் அதன் பொருள் இந்தப்பாட்டுப்போல் தான் இருக்கும்

    ” எவர்  என்னுள் பிரவேசித்து  தூங்கிக்கொண்டிருந்த வாக்கு கை கால்  காது கண்கள் ,தேகம் முதலியவைகளைத் தன் சக்தியினால்
    ஜீவிக்குமாறு செய்தாரோ அந்த மஹாபுருஷனான மஹாவிஷ்ணுவை   நமஸ்கரிக்கிறேன்

    ஸ்லோகம்

    யோந்த பிரவிக்ய மம வாசாமிமாம் ப்ரஸிப்தம்
    ஸஞ்ஜீவயதியகில சக்திதர ஸ்வதாம்னா
    அன்யாம்ச ஹஸ்த சரணா ஸ்ரவண த்வகாதீன
    பிராணான் நமோ பகவதே புருஷாய துப்யம் ‘

    இந்தப்பாட்டிலும் ஸ்ரீ தியாகராஜர் ஆரம்பத்திலேயே “என்னுடைய ஜிவனுக்கு ஆதாரமானவனே “ என்கிறார் இதில் “அஹம் பிரும்மாஸ்மி “என்ற தத்துவம்  சொல்லி அந்த இறந்தவன் ஜீவனுக்கும் நீதான் ஆதாரம் என்று சொல்லாமல் சொல்லி பாடுகிறார் ……. கீதையில்
    பத்தாவது அத்தியாயம்  20 ஸ்லோகத்திலும் இது சொல்லப்பட்டிருக்கிறது  என்று தெரிந்துகொண்டேன்

    அவருடைய பாடலிலும்   “நா ஜீவோ தாரா”   என்பது இதைக்குறிக்கிறது என  நினைக்கிறேன்

    அந்த மனிதனின்  உயிரைத் தந்துவிடு ராமா  என்ற  பொருள்  பட பாடிய பாடலால் அந்த உயிர்ப் போன மனிதன் உறங்கி எழுந்தவன் போல உயிர்ப் பெற்று நின்றான் .என்னபக்தி! என்ன ராம நாமத்தின் மகிமை ……   “ராம நாமம்” ஒரு சிறந்த  மந்திரம்  இதை எப்போதும் ஜபிக்கலாம் ப்டுக்கையிலும்  ஜபிக்கலாம்   அதன் சக்தியே  தனி வாருங்கள்  நாமும் ராம  நாமம்    சொல்லலாமே !

    படத்திற்கு நன்றி:

    http://devotionalonly.com/wp-content/uploads/2010/04/sri-ramchandraji-ki-jai.jpg

    Share
  • மகாத்மா காந்தி அஞ்சலி

     

    சத்தியமணி

    காந்தியின் இதழ்கள் விரிந்திடும் பணத்தாள்க‌ளில் தாம்பதிந்ததால்
    காந்தியின் இமைகள் கலங்கிடும் கள்ளநோட்டுகளிலும் பதிந்ததால்
    காந்தியின் இதயம் களித்திடும் புதுமைமங்கையர் சிறப்பினால்
    காந்தியின் இதயம் அழுதிடும் அவநிலையில்பெண் நிகழ்வினால்
    காந்தியின் உள்ளம் நிறைந்திடும் இந்தியஅறிவின் பெருமையால்
    காந்தியின் உள்ளம் உடைந்திடும் ஊழல்வஞ்சனைப் பெருக்கினால்
    காந்தியின் கால்களும் குதித்திடும் அரிசனங்களின் வளர்ச்சியால்
    காந்தியின் கால்களும் வலித்திடும் வரிசரங்களின் சுமையினால்
    காந்தியின் கரங்களும் உயர்ந்திடும் உலகில்பாரதப் புகழினால்
    காந்தியின் கண்களும் அழுதிடும் அரசியல்தரத்தின் மலிவினால்
    காந்தியின் ஆத்மா வியந்திடும் இளையபாரத துடிப்பினால்
    காந்தியின் சாந்தி விசும்பிடும் தருமநெறிகளின் தளர்வினால்
    ஹே ராம் ! ஹே ராம் !

    படத்திற்கு நன்றி:

    http://www.nellaieruvadi.com/india/india_rare_photos2.asp

     

    Share
  • மகாத்மா காந்தியின் மரணம்

    [1869-1948]

    மகாத்மா காந்தியின் மரணம்
    சி. ஜெயபாரதன், கனடா
    [ சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ]

    நினைவு நாள்

    [காந்தீயக் கோட்பாடு]

    ***********************

    காந்தீயக் கோட்பாடு என்ன என்பது முதலில் நான் குறிப்பிட வேண்டும்.

    சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ஆகிய மூன்றும் பின்னிய தேசம், ஆட்சி, ஆணையகம், அரசாங்கம், அமைச்சர், அரசாங்கப் பணியாளர், நாடாளும் மன்றம், ஊராட்சி, பல்கலைக் கழகம், கல்விக்கூடம், துணை வேந்தர், கோயில் திருப்பணி, சமயத் திருப்பணி, சட்ட நீதி மன்றம், நீதிபதி, உயர்நீதி, உச்சநீதி மன்றம், காவல்துறை, தொழிற்சாலைகள், தொழிற்சாலை அதிபர், ஊழியர், சமூக சேவை, இல்லறம், துறவறம், மருத்துவக் கூடம், மருத்துவர், மருத்துவப் பணியாளி, சட்ட நிபுணர், வழக்காடுவோர் ஆகியோர் இந்தியருக்கு வேண்டும்.

    சுதந்திரம் [உரிமைப்பாடு, விடுதலை உணர்வு] மனிதப் பிறப்புரிமை. சுதந்திரம் என்பது கட்டுப்பாடுள்ள சுதந்திரம். கட்டவிழ்த்தோடும் பூரண சுதந்திரமில்லை. சுதந்திரம் நடுவில் அடைபட, அதைக் கட்டுப்படுத்த ஒருபுறம் சத்தியம், மறுபுறம் சமத்துவம் உள்ளது.

    சத்தியம் என்பது நேர்மை, மெய்ப்பாடு, உண்மை நெறி. சத்திய நெறியற்ற சுதந்திரம் தீவிர இன்னல் விளைவிக்கிறது. அதுபோல் சமத்துவம் இல்லாத சுதந்திரம் மேல்ஜாதி, கீழ்ஜாதி பிரிவுகளைப் பெருக்கிறது. நேர்மையில்லாத துணைவேந்தர் பதவிக்கு லஞ்சம் வாங்குகிறார்.

    அறநெறி, உரிமை, சமநெறி என்பது முப்பெரும் ஒப்பிலாப் பண்புகளே காந்தீயக் கோட்பாடு. சத்தியம், சுதந்திரம், சமத்துவம் எந்த நாட்டுக்கும், எந்த நூற்றாண்டுக்கும் ஏற்புடைதாகும்.

    *****************************

    அறப் போர் புரிய மனிதர்
    ஆதர வில்லை யெனின்
    தனியே நடந்து செல் ! நீ
    தனியே நடந்து செல் !

    இரவீந்திரநாத் தாகூர்

     

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14

     

    பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.

    மகாத்மா காந்தி

    Gandhi -1

    முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்!

    கி.மு.399 இல் கிரேக்க வேதாந்த ஞானி சாக்ரெடிஸ் [Socrates] எழுபதாவது வயதில் விஷம் ஊட்டப் பட்டுத் தன் இனத்தாரால் கொல்லப் பட்டார்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏசு நாதர் தன் இனத்தாரால் காட்டிக் கொடுக்கப் பட்டு, ரோமானியரால் சிலுவையில் அறையப்பட்டு செத்து மடிந்தார்! அடிமை வாழ்வு ஒழித்த ஆப்ரகாம் லிங்கன் 1865 ஆண்டில் அமெரிக்கன், ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் சுடப்பட்டு உயிர் இழந்தார்! ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங் வெள்ளைக் காரன் ஒருவனால் 1968 இல் சுடப்பட்டு மாண்டார்! மகாத்மா காந்தி 1948 ஜனவரி 30 ஆம் நாள் மாலை 5 மணிக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் இந்து மத வெறியன் ஒருவனால் கண்முன் நேரே சுடப்பட்டு “ஹே ராம்” என்று முணங்கிய வண்ணம் மடிந்தார்!

    உலக வரலாறு மீண்டும் மீண்டும் மீள்கிறது [History repeats again & again]! பல நூற்றாண்டுகளுக் கிடையே அந்த நான்கு பேர் வாழ்ந்த போதிலும், மனிதரால் கொல்லப்பட்ட அவர்களிடம் ஒளிர்ந்த ஓர் அரிய ஒற்றுமை என்ன ? அனைவரும் மனிதப் பணிபுரிந்த உயர்ந்த மனிதாபிமானிகள்! ஆயுள் உள்ள போது சாதித்ததை விட, அவர்கள் மரணத்தின் பின் உலகுக்குப் போதித்தவை, பிரமிக்கத் தக்கவை!

    ஏசு மகான் சிலுவைச் சின்னம் இமயத்தளவு ஓங்கி வளர்ந்து, உலகிலே மாபெரும் கிறிஸ்துவ மதம் பரவ ஆணிவேரானது. மார்டின் லூதர் கிங் அமெரிக்காவின் மகாத்மா வானார்! மகாத்மா காந்தியைப் பற்றி, ‘முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!’ என்று மகாகவி பாரதியார், காந்தி உயிரோடுள்ள போதே போற்றிப் புகழ்ந்தார். அவரது அமர வாக்கு காந்தியின் மரணத்துக்குப் பின், எத்தகைய மெய்மொழியாய் ஆகி விட்டது! ஆனால் கொலை மரணத்தில் இறந்தவர் எல்லோரும் முடிவில்லாக் கீர்த்தியும், புவிக்குள் முதன்மையும் அடைவ தில்லை! அந்தக் கோணத்தில் பார்க்கும் போது, கொலை செய்யப் பட்ட இந்திரா காந்தியும், அவரது மகன் ராஜீவ் காந்தியும், மகாத்மா காந்தியின் உன்னத மகிமையைப் பெற வில்லை!

    அகால மரணத்திற்கு அபூர்வ இரங்கல் அறிவிப்புகள்!

    மகாத்மாவின் மரணச் செய்தியைக் கேட்டு 1948 ஜனவரியில், “அகில உலகும் இந்தியாவுடன் சேர்ந்து வருந்துகிறது” என்று அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அவலச் செய்தி அனுப்பி யிருந்தார். காந்தியின் முதற்போர்க் களமாகிய தென் ஆப்பிரிக்காவி லிருந்து, அவரை வெறுத்த தளபதி ஜான் ஸ்மட் “நம்முடன் இருந்த ஓர் இளவரசர் பிரிந்து விட்டார்” என்று ஒரு புகழுரையை அனுப்பினார். இத்தாலியில் வாட்டிகன் போப் பாண்டவர் பையஸ் XII தனது இரங்கல் மொழியில், “கிறிஸ்துவ மதத்தின் நண்பர், சமாதானத்தின் சீடர் ஒருவர் மறைந்தார்” என்று எழுதி யிருந்தார். சைனாவும் இந்தோனேசியாவும், “ஆசிய விடுதலையின் முதல் மூல கர்த்தா மாண்டார்” என்று கூறி அதிர்ச்சி அடைந்தன.

    ஒன்றான பாரதத்தைத் துண்டு படுத்திய அரசியல் போட்டியாளர் மகமதலி ஜின்னா, தன் இரங்கல் உரையில், “இந்து இனம் உண்டாக்கிய உன்னத மனிதருள் ஒருவர், காந்தி” என்றார். மரணச் செய்தி கேட்டு, இங்கிலாந்தில் லண்டன் மக்கள் கண்ணீர் விட்டனர். காந்தியைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் அவர்கள் நேராகப் பார்த்ததை நெஞ்சம் மறக்க வில்லை! உலக மகா யுத்தம் முடிந்த தறுவாயில் பல சம்பவங்களைக் கேட்ட பிறகு அவர்களை நிலைகுலையச் செய்த நிகழ்ச்சி காந்தியின் கோர மரணம்! காந்தியை வெறுத்த வின்ஸ்டன் சர்ச்சில், வருந்தற் கடிதம் அனுப்பி யிருந்தார். எல்லாருக்கும் மேலாக, நாடக மேதை பெர்னாட் ஷா கூறியது, சிந்திக்க வைப்பது ! “நல்லவராக இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்று காட்டுகிறது, காந்தியின் மரணம்” என்று ஷா கூறினார். ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜய லட்சுமி பண்டிட், மாஸ்கோவில் புதிதாகத் திறக்கப் பட்ட இந்திய எம்பஸியில் வருந்தல் பதிவுப் புத்தகத்தை எடுத்து வைத்தார். ஆனால் ஸ்டாலின் வெளித்துறை உறுப்பினர் ஒருவர் கூடத் தன் பெயரை எழுதிக் காந்தியின் மரணத்துக்கு வருத்தம் தெரிவிக்க வில்லை!

    நேர்வழி எதுவெனத் தெரிந்தபின் செய்யாமல் நழுவுவது கோழைத்தனம்

    இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில், மனைவிமார் காமப் பலாத்காரத்திற்கு இரையாகும் போது, குழந்தைகள் கண்முன் கொலை செய்யப்படும் போது, உறவினர் தலைகள் சீவப்படும் போது, பழிவாங்க ஆய்தமோடு ஓடும் இந்துக்களைத் தடுத்துப் பொறுக்குமாறு, காந்தி அகிம்சா வேதம் போதித்தார். “அகிம்சா வழித் தூதரே! சொல்லுங்கள்! எப்படி இந்த நரகத்தில் வாழ்வது ? பஞ்சாபில் இந்துக்களைக் கண்டதும் முஸ்லீம் ஆட்கள் கொலை செய்யும் போது, ஆயுதத்தைக் கைவிட நீங்கள் எப்படிச் சொல்லலாம் ? கசாப்புக் கடை ஆடுகளைப் போல எங்கள் தலைகள் அறுபட்டுக் கூறுபட வேண்டுமா ?” என்று புலம்பெயர்ந்த கூட்டத்தார் யாவரும் கத்தினார்கள்! “காந்தி சாகட்டும்” என்று கூச்சலிட்டார்கள்!

    டெல்லியில் வாழும் காந்தியின் முஸ்லீம் நண்பர்கள், “உயிருக்கு ஆபத்து என அறிந்தும் இந்தியாவிலே தங்குவதா ? அன்றி எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பாகிஸ்தானுக்கு ஓடுவதா ?” என்று கேட்டால், “ஓடிப் போகாமல் தங்கி மரண ஆபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்பது காந்தியின் பதிலாக இருந்தது! போகப் போக, காந்தியின் அறிவுரை, அவரைப் பின்பற்றியவருக்கும் பிடிக்க வில்லை! எப்போதும் இஸ்லாமியருக்குப் பரிந்து, அவர் பேசுவது பலருக்கு வெறுப்பூட்டின!

    “முஸ்லீம்களுக்குப் பகைவன் எவனோ, அவன் இந்தியாவுக்கும் பகைவன். இந்தியா, பாகிஸ்தான் இரண்டிலும் ஒருங்கே அமைதி நிலவட்டும். நாம் ஒருவரை ஒருவர் பகைவராக எண்ணக் கூடாது. இந்துக்கள் குர்ரானைப் படிக்க வேண்டும். முஸ்லீம் பகவத் கீதையின் உட்பொருளை அறிய வேண்டும். நமது மதத்தை நாம் மதிப்பதுபோல், மற்றவர் மதங்களையும் மதிக்க வேண்டும். உயர்ந்த கருத்துக்கள் உருது மொழியில் இருந்தா லென்ன ? சமஸ்கிருதத்தில் இருந்தா லென்ன ? பார்ஸி மொழியில் இருந்தா லென்ன ? அவை எல்லாமே மெய்யான மொழிகள் தான்! நமக்கும் உலகுக்கும் கடவுள் நல்லறிவைத் தரவேண்டும்.” இவை காந்தியின் அழுத்தமான வார்த்தைகள்.

    காந்தியைக் கொல்ல பலவிதச் சதிகள்

    காந்தி இஸ்லமியருக்குப் பரிந்து பேசுவது, சிலருக்கு வேப்பங் காய்போல் கசந்தது! மகாராஷ்ட்ராவில் ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க [R.S.S.S] உறுப்பினர் பலருக்கு எட்டிக் காயாய் இருந்தது. அவர்கள் தூய இந்துக்கள்; மத வெறியர்கள். குறிப்பாக பூனாவைச் சேர்ந்த நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகிய இரு வாலிபருக்கு காந்தி பகைவரானார்! தென் ஆப்பிரிக்காவில் வேலை முடிந்து 1915 இல் பாரதம் திரும்பிய காந்தியை, விடுதலைப் போராட்டத்திற்கு இழுத்து வந்தவரும், ஒரு மராட்டியரே; அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே! 1948 இல் சதி செய்து அவரைக் கொன்றவனும் ஒரு மராட்டியனே! அவன்தான் நாதுராம் விநாயகக் கோட்சே! முதலில் கோட்சே முழுக்க முழுக்க காந்தியை பின்பற்றினான்! 1937 இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு, கைதி செய்யப் பட்டுச் சிறைக்குச் சென்றவன், கோட்சே! பிறகு கொள்கை பிடிக்காமல் அவரை விட்டுவிட்டு ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க இந்து போராட்டத் தளபதி வீர சாவர்க்கரைப் பின் பற்றினான். வீர சாவர்க்கர் இந்து மதத்தைக் காக்க வந்த கடவுளின் தூதராகப் போற்றப்படும் ஒரு பட்டாளிய இந்து [Messiah of Militant Hindu]. சாவர்க்கர் காந்தியின் கொள்கை எல்லாவற்றையும் எதிர்க்கும் ஓர் எதேச்சை அதிகாரி! மெளண்ட் பாட்டன் தனது இந்தியப் பிரிவினைத் திட்டத்தை, 1947 ஜூலை 3 இல் வெளியிட்ட போது, அதைப் ‘பாரதத்தின் இருண்ட நாள்’ என்று பறை சாற்றி, வீர சாவர்க்கர் தனது பூரண எதிர்ப்புத் தெரிவித்தார்!

    40 கோடி [1948] இந்திய மக்களின் விதி, அப்போது காந்தியின் கையில் இருந்தது! பாரதக் கண்டம் இரு துண்டமாக வெட்டுப்படப் போவதை காந்தி எப்போதும் எதிர்த்தார்! ‘என் இறந்த உடம்பு மீதுதான், இந்தியா பிரிவுபட வேண்டும் ‘ என்று வெகுண்டார். ‘இந்தியா பிளவு பட்டால் ஒழிய, இந்து முஸ்லீம் தனித் தனியே சமரசமாய் வாழ முடியாது’ , என்பது வைஸ்ராய் மெளண்ட் பாட்டனின் உறுதியான எண்ணம். நேரு, வல்லபாய்ப் படேல், ராஜாஜி ஆகியோர் மூவரும் இந்தியா இரண்டாய்ப் பிரிவதைத் தவிர வேறு வழியில்லை என்று காந்தியுடன் வாதாடினர்.

    காந்தி பாரதப் பிரிவினைப் போராட்டத்தில் தோல்வி அடைந்தார்! ‘இந்தியா இரண்டாகப் பிளக்கப் பட்டது. ஆனால் காந்தி உயிரைப் போக்கிக் கொள்ள வில்லையே’ என்று கோட்சே ஆங்காரம் அடைந்தான். ‘காந்தியின் அகிம்சா வேதம், இந்து மக்களைக் கோழையாக்கி, எதிர்க்கும் சக்தியை இழக்க வைத்து, எதிரிகள் முன் மண்டியிடச் செய்து விட்டது! மானத்தைக் காக்க இந்து மாதர்கள், காம பலாத்கார வேதனையிலிருந்து தப்பிக் கொள்ள, கிணற்றில் குதித்துத் தம் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்! பலியானப் பெண்களுக்கு அது ஒரு வெற்றி, என்று காந்தி அவர்களது சாவைப் பாராட்டுகிறார்! அப்படிப் பலியாகும் மாதர்களில் ஒருத்தி, அடுத்து என் தாயாக இருக்கலாம்’ என்று கொதித்தான் கோட்சே! ‘பாரத மாதாவின் சதையைப் பசிக் கழுகுகள் உயிரோடு கிழிக்கின்றன! நம் பெண்டிர் நடுத் தெருவில் கற்பழிக்கப் படுவதை, காங்கிரஸ் அலிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன! எத்தனை காலம் பொறுப்பது ? இதற்கு ஒரே முடிவு, காந்தியைக் கொல்ல வேண்டும்’ என்று கொதித் தெழுந்தான் கோட்சே. இந்து மகா சபையில் காந்தியைக் கொல்ல பலவித சதித் திட்டங்கள், வீர சாவர்க்கர் தலைமையில் உருவாகின! குழுச் சதியாளர்கள்: நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கோபால் கோட்சே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா, இன்னும் சிலர்.

    மகாத்மா காந்தியின் இறுதி உண்ணா விரதம்

    பாரதப் பிரிவினை ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு ஈடாகத் தர வேண்டிய 55 கோடி ரூபாயை, பாரத அரசாங்கம் பிடித்து வைத்துக் கொள்ளப் போவதை, காந்தி அறவே வெறுத்தார். அவரது எதிர்ப்புத் தர்க்கம் நேருவையும், படேலையும் உடன்பட வைக்க முடியவில்லை! இறப்பதற்கு 17 நாட்களுக்கு முன், 1948 ஜனவரி 13 ஆம் தேதி காந்தி, அதற்காகத் தான் உண்ணா விரதத்தைத் தொடங்கப் போவதாக, பிர்லா மாளிகையிலிருந்து அறிவித்தார். ஓராண்டுக்கு முன்பு இந்து முஸ்லீம் படுகொலைக் கலகத்தை நிறுத்த, காந்தி நெளகாலி நோக்கித் தனியாகத் தைரியமாகப் பாத யாத்திரை செய்தார். அப்போது ரவீந்திர நாத் தாகூரின் ஒரு பாடலைப் [தலைப்பில் உள்ளது] பாடிக் கொண்டு தன் உண்ணா விரதத்தைத் துவங்கினார்.

    சில நாட்கள் கழித்து இந்தியாவின் எல்லை மாநிலத்திலிருந்து, பாரதப் பிரிவினைக் கலகத்தில் பாடுபட்ட சில இந்துகளும், சீக்கியர்களும் கூக்குரலுடன் காந்தியைக் காண வந்தனர். ஆறுதல் மொழி கூறு வந்த காந்தியை, அவர்கள் யாவரும் உடனே திட்ட ஆரம்பித்தனர்! ‘இதுவரை எங்களைக் கொடுமைப் படுத்தியது போதும். முற்றிலும் எங்களை நாச மாக்கி விட்டார்! எங்களைத் தனியே வாழ விடு! இமயத்தில் போய் ஓய்வெடு! ‘ என்று காந்தியை நோக்கிக் கூச்சல் போட்டனர். இக்கடுஞ் சொற்கள் காந்தியின் நெஞ்சை ஊடுருவித் தாக்கின! அவற்றைக் கேட்டு கற்சிலையாய் நின்று விட்டார், காந்தி! அவரது மெலிந்த மேனி மீது ஒரு பெரிய பாறாங்கல் விழுந்து எலும்பு நொருங்கியது போல் உணர்ந்தார்! பிறகு சில நாட்கள் சென்றபின் வேறு ஒரு கூட்டம் வந்து, உண்ணா விரதத்தை நிறுத்துமாறுக் காந்தியைக் கெஞ்சியது. அந்தக் கூட்டத்தில் இஸ்லாமியர், சீக்கியர், இந்துக்கள் எல்லா இனத்தவரும் இருந்தனர்.

    [bws_captcha]

    ‘இந்தியாவுக்கு அகிம்சா வழி இனி தேவை இல்லை என்றால், நான் இங்கு உயிர் வாழ்வதிலும் பயனில்லை! பாரதத்தின் தலைவர்கள் ஒருநாள், இந்தக் கிழவனால் நாம் பட்டது போதும்! நம்மை விட்டு அவன் ஒழிந்து போக மாட்டானா ? என்று கூறினால் கூட நான் ஆச்சரியப் படமாட்டேன்’ என்று காந்தி ஒருதரம் சொல்லி யிருக்கிறார்.

    மெளண்ட் பாட்டன் தம்பதியர் உண்ணா விரதத்தில் கிடந்த காந்தியைக் காண வந்தனர். ‘மலையை மகமதிடம் கொண்டு வர, நான் ஓர் உண்ணா விரதம் எடுக்க வேண்டி யிருக்கிறது! ‘ என்று காந்தி நகைப்பூட்டி அவர்களை வரவேற்றார். காந்தியின் மெலிந்து போன உடலைக் கண்டு, எட்வீனா பாட்டன் கண்களில் நீர் பெருகியது! ‘வருத்தப் படாதே, எட்வீனா, காந்தி எதைச் செய்ய விரும்புகிறாரோ, அதைச் செய்து கொண்டிருக்கிறார். அவர் மிகுந்த மனத்திட முடைய மெலிந்த மனிதர்’, என்று மனைவியைத் தேற்றினார் மெளண்ட் பாட்டன்.

    கோபால் கோட்சே, தன் அண்ணன் நாதுராம் கோட்சேயிக்குக் கொடுத்த வாக்குப்படி, ஜனவரி 17 ஆம் தேதி காந்தியைக் கொல்ல .32 காலிபர் கைத் துப்பாக்கியுடன், டெல்லிக்கு வந்தான். ஆனால் அன்று அதை நிறைவேற்ற அவனால் முடியவில்லை!

     

    கடேசியில் பெற்ற காந்தியின் வெற்றி!

    இறுதியில் பாரத அரசாங்கம் 55 கோடி ரூபாயைப் பாகிஸ்தானுக்குக் கொடுக்க முன் வந்தது! காந்தி ஜனவரி 18 ஆம் தேதி உண்ணா விரதத்தை நிறுத்தினார். அன்றைய பிரார்த்தனை சொற்பொழிவில் நேரு பேசினார், ‘இந்திய விடுதலை நான் கண்ட ஓர் ஒளிக்காட்சி! ஆசியாவின் எதிர்காலத்தை என் மனதில் வரைந்து வைத்தேன். ஆனால் அந்த ஒளிக்காட்சியை அளித்தவர் ஓர் அரிய, எளிய மனிதர்! அவரைக் காப்பாற்றச் செய்யும் எந்தத் தியாகமும் அத்தனை பெரியதல்ல! அவர் ஒருவர்தான் நம்மை மெய்யானக் குறிக்கோளை நோக்கி நடத்திச் செல்ல முடியும். அது நம் குருட்டு நம்பிக்கை இல்லை!’

    அன்று கூட்டத்தில் காந்தி பேசினார், ‘பாரத நாடு இந்துக்களுக்கு மட்டுமே! அதுபோல் பாகிஸ்தான் இஸ்லாமியருக்கு மட்டுமே! என்று கூறுவது போல் முட்டாள்தனமான எண்ணம் எதுவும் இருக்க முடியாது! இந்தியா, பாகிஸ்தான் இரண்டையும் ஒருங்கே சீர்திருத்துவது என்பது மிகவும் கடின மானது! ஆனால் நாம் மனம் வைத்து செய்தால், எதுவும் நிச்சயமாக முடியும்!’

    1947 ஜனவரி 20 ஆம் நாள் மிகப் பலவீனமுள்ள காந்தியை, பிர்லா மாளிகைப் பிரார்த்தனை மேடையில் ஒரு நாற்காலியில் வைத்துக் கொண்டு போய் அமர்த்தினர்! அப்போது இந்து மகா சபைச் சதியினர் கொலை ஆயுதங்களோடு கூட்டத்தினுள் நுழைந்தனர். மதன்லால் பாவா பற்ற வைத்த கைவெடி எதிர் பாராதவாறு கூட்டத்தில் வெடித்தது. ஆனால் காந்தி உயிர் தப்பினார். போலீஸ் பாவாவைத் தேடிப் பிடித்துக் கைதி செய்தனர்.

    காந்தி இறப்பதற்கு முந்திய நாள் [ஜனவரி 29, 1948] வியாழக்கிழமை, அவர் அணு ஆயுதங்களைப் பற்றி இந்திரா காந்தியிடம் கூறியது: ‘அணுகுண்டை ஒருங்கே அமெரிக்கா தவிர்க்க வேண்டும். அகிம்சா வழிப் போராட்டம் ஒன்றை மட்டும் அணு குண்டுகள் அழிக்க முடியாது! அணுகுண்டு நம்மைத் தாக்கும் போது, அச்சமின்றி நிமிர்ந்து நின்று மேல் நோக்கிப் பார்த்து, விமானிக்காகப் பிரார்த்திக்க வேண்டு மென்று, என்னைப் பின்பற்று வோரிடம் நான் கட்டாயப் படுத்துவேன்.’ மற்றும் ஒரு சமயம், ‘அகிம்சா இயக்கம் ஒன்றுதான் மனித இனத்தின் கைவசமுள்ள மாபெரும் சக்தி பெற்ற ஓர் ஆயுதம். பேரழிவுச் சக்தியுடைய எந்த யுத்த ஆயுதத்தையும் விட பெரியது, அது!’ என்று சொல்லியிருக்கிறார்.

    இரண்டாம் தடவை ஜனவரி 30 ஆம் தேதி மாலை ஆப்தே, கோட்சே இருவரும் கைத் துப்பாக்கியை மறைத்துக் கொண்டு, காந்தியின் பிரார்த்தனை மைதானத்தில் நடமாடிக் கொண்டிருந்தனர். அன்று கோட்சே வெற்றி அடைந்தான்! காந்தியைக் கொன்ற சதிகாரனாய்ச் சரித்திரத்தில் இடம் பெற்றான்! 1948 மே மாதம் 27 ஆம் தேதி நாதுராம் கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே, சாவர்க்கர் உள்பட எட்டுப் பேர் கைதி செய்யப் பட்டு சதி வழக்குப் பல மாதங்கள் நடந்தது. முடிவில் நாதுராம் கோட்சே, ஆப்தே இருவரும் கொலைக் குற்றம் சாட்டப் பட்டு, நவம்பர் 15 ஆம் தேதி தூக்கிலிடப் பட்டனர்! கோபால் கோட்சே, கார்காரே, பாவா மூவருக்கும் 12 வருட சிறைத் தண்டனை கொடுக்கப் பட்டது! போதிய சாட்சி இல்லாது போனதால், சாவர்க்கர் உள்பட மற்றோர் விடுவிக்கப் பட்டனர்!

     

    ஜாதி மதங்களைப் பார்ப்போம்! சகிப்போம் மதிப்போம்!

    பாரத அரசியல் நிர்ணயச் சட்டப்படி, இந்தியா ‘மதச் சார்பற்ற [Secular]’ ஒரு குடியரசு. மகாத்மா காந்தி மதச் சார்பற்ற ஒரு பாரத நாட்டை உருவாக்கும் பணிக்கே உயிர் வாழ்ந்தார்; அதை இந்தியாவில் நிலைநாட்டப் போராடியதில் அவர் தோல்வியுற்று மாண்டார்! பாரதச் சட்டங்கள் வழக்கறிஞர்களுக்கும் நீதி மன்ற நீதிபதிகளுக்கும் மட்டுமே பயன்படும் கருவிகள்! பாமர மக்கள், அரசியல் வாதிகள், மதவாதிகள், மடாதிபதிகள் ஆகியோருக்கு, எழுதப் பட்டாலும் அவர்கள் சட்டத்தைப் பின்பற்றுவ தில்லை! இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், புத்த மதம், ஜெயின மதம் இந்திய நாட்டில் பல நூற்றாண்டுகள் வேரூன்றி, இந்து மதத்துடன் இணைந்து உலவி வருகின்றன. ஆயிரக் கணக்கில் நம்மிடையே ஜாதிகள் உள்ளன! பல்லாயிரம் ஆண்டுக் காலம் வளர்ந்து வேரூன்றி விட்ட ஜாதிப் புற்றுநோயை எந்த அறுவை முறையிலும், எத்தனை ஆண்டுகள் முயன்றாலும், அவற்றைப் பாரத மண்ணிலிருந்து களை எடுக்க முடியாது! ‘எம்மதமும் சம்மதமே’ என்று காந்தியின் மரணம், நமக்கு அறிவுரை சொல்லட்டும்! பாரத நாடு இம்மதங்கள் ஒருங்கே தனித்து வாழப் பல நூற்றாண்டுகள் இடம் கொடுத்தது. எல்லோருக்கும் இணையான சமரச வாழ்வைத் தொடர்ந்து, ஏன் பாரதம் அளிக்கக் கூடாது ?

    வட இந்தியாவில் இந்து மத வெறியர்கள், அடிக்கடிக் கிறிஸ்துவக் கோயில்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், அங்குள்ள பாதிரியார்களைக் கொலை செய்தும் வருகிறார்கள்! தாழ்த்தப் பட்ட ஏழை மக்களை, மேலினத்தார் வட நாட்டிலும், தென் நாட்டிலும் படாத பாடு படுத்தி வருகிறார்கள். பாரத்திலே பிறந்து வளர்ந்த புத்த மதத்தினரை, இந்து மதவாதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நசுக்கி பாரத நாட்டிலிருந்து விரட்டி விட்டதால், மிஞ்சிய சிறுபான்மையினர் இருக்குமிடம் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்! சீக்கியர் தனி நாடு கோரிப் போராடித் தொல்லை கொடுத்துத் துன்புற்று, அவர்கள் கொட்டம் அடக்கப் பட்டு இப்போது சற்று அமைதி நிலவி வருகிறது.

    [bws_captcha]

    காந்தி ஏசு நாதரை மிகவும் நேசித்தார். ‘ஏசு நாதரின் ‘மலைப் பிரசங்கம்’ [Sermon on the Mount] காந்தியைக் கவர்ந்த ஓர் அரிய வாக்குரை! இந்து வேதங்கள் மட்டுமே தேவ வாக்குகள் என்பதைக் காந்தி ஒருபோதும் ஒப்புக் கொண்ட தில்லை! அவை ஏன் பைபிளாகவும், கொரானாகவும் இருக்கக் கூடாது ? என்று கேள்வி எழுப்பினார். ‘நீங்கள் கிறிஸ்துவர் இல்லை’, என்று ஒருவர் குறிப்பிட்ட போது, காந்தி சொன்னார், ‘நான் ஒரு கிறிஸ்டியன்! நான் ஒரு இந்து! நான் ஒரு முஸ்லீம்! நான் ஒரு யூதன்!’ அந்த ரீதியில் அவர் மற்றவர்களை விடத் தான் ஒரு தகுந்த இந்தியன், என்று காட்டிக் கொண்டார்.

    ‘எனது ஆழ்ந்த நம்பிக்கை இதுதான்: இந்துக்கள், சீக்கியர், இஸ்லாமியர், கிறித்துவர் யாவரும் ஒரே பாரத மாதாவின் புத்திரர், புத்திரிகள். பாரதத்திலோ, பாகிஸ்தானிலோ நடக்கும் எந்த விதப் படு கொலையும் கண்டு பலிவாங்க முற்பட்டு, நம் மக்கள் கடமை யிலிருந்து பிறழக் கூடாது! பாகிஸ்தானில் உள்ள எல்லா இந்துக்களும், சீக்கியரும் கொல்லப் பட்டாலும், இந்தியாவில் உள்ள ஓர் இஸ்லாமியச் சிறு பிள்ளையைக் காப்பாற்ற நாம் முற்படவேண்டும்!’ என்பது காந்தியின் வாக்கு!

    [bws_captcha]

    இந்தியர் பலருக்குத் தேசப்பற்று குன்றி வருவதைக், காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி முதல் பயணம் செய்யும் எவரும் கண்டு பிடித்து விடலாம்! தேசப்பற்று என்றால், நாட்டு மக்கள், நாட்டு மொழிகள், நாட்டுப் பண்புகள், பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள் மீதுள்ள சகிப்புத்தன்மை, மதிப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் மீது இந்தியர் காட்டும் மனிதத் தன்மை! அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை! மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம்! பாரதத்தின் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்துள்ள, இந்தச் சகிப்பற்ற தன்மைகளே !

    ‘ஜாதிகள் இல்லயடி பாப்பா! ஜாதி மதங்களைப் பாரோம்! மற்றும் செப்பும் மொழி பதினெட் டுடையாள், ஆயின் சிந்தை ஒன்றுடையாள்’ என்று பாரத மாதாவைப் பற்றிப் பாரதியார் பாடியதற்கும் இதுதான் அர்த்தம்! ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு’ என்றும் நமக்குக் கூறினார்! நாற்பது ஆண்டுகள் ஒன்றாக எல்லா ஜாதியினரும், எல்லா இனத்தவரும், எல்லா மதத்தினரும் பிரிட்டீஷ் சாம்ராஜியத்தோடு போராடி இந்தியா மகத்தான விடுதலைக் குறிக்கோளை அடைய வில்லையா ?

    ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!

    பிரிட்டீஷ் அரசாங்கம் பாரத நாட்டை அடிமைப் படுத்தினாலும், அது செய்த நல்ல காரியங்களும் உண்டு. துண்டுபட்டுப் போன பரத கண்டத்தை ஒன்றாக்கியது பிரிட்டீஷ் அரசு! ஆங்கில மொழி நம்மிடையே பரவி யிருந்ததால், பாரத நாடு கல்வி, தொழில், வாணிபம், விஞ்ஞானம், வேளாண்மை போன்ற எல்லாத் துறைகளிலும் முன்னேறி இருக்கிறது. இந்தியாவின் பதினெட்டு மொழிகள் வளர்ச்சி பெற, ஆங்கில மொழி உதவியாக இருந்திருக்கிறது. இந்திய நகரங்கள், பெரும்பான்மையான ஊர்கள் ரயில் பாதைகளில் இணைக்கப் பட்டு, ரயில்தொடர் வாகனங்கள் ஜாதி மதம் பாராது எல்லா இனத்தாரையும் ஒருங்கே ஏற்றிச் செல்கின்றன. இந்தியத் தபால், தந்தி நிலையங்கள் ஜாதி மதம் பாராது, எல்லா ஊர்களுக்கும் நமது கடிதங்களைப் பரிமாறி வருகின்றன. இந்திய ரயில்தொடர் வாகனங்கள், ஆகாய விமானங்கள் போன்ற சாதனங்களில் நாம் பயணம் செய்யும் போது, ஜாதி, மதம், இனம் எதையும் பார்க்காமல், ஒரு தேச மக்களாய் நடந்து வருகிறோம்! பன்மொழி பேசும் பல்வேறு இந்திய மக்களைப் பிணைக்கும் ஓர் இணைப்பு மொழியாய் ஆங்கில மொழியும் பாரதத்தில் பணி செய்து வருகிறது!

    [bws_captcha]

    இப்போது அடிப்படைவாத இந்துக்கள் மதப் போர்வைக்குள் புகுந்து கொண்டு, இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர் ஆகியோர்க்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள். அதனால் நாட்டில் மீண்டும் மீண்டும் எழும் கொலை பாதக எதிர்ப்புகளுக்கும் இந்துக்கள் ஆளாகி வருகிறார்கள். 16 ஆம் நூற்றாண்டில் பாபர் கட்டிய பாப்ரி மசூதியை அயோத்தியாவில் 1992 ஆம் ஆண்டில் இடித்துத் தரைமட்ட மாக்கிய பிறகு, அங்கே சில இந்துக்கள் ராமர் கோயில் கட்டப் புகுவது ஒரு மாபெரும் பிரச்சனைக் குரிய மதச் சம்பவம்! இராமர் பிறந்த புண்ணிய பூமியாகக் கருதப்படும் அந்தத் தளத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் நிரந்தர மதப்போரை உண்டாக்கிப் பலரது குருதி வெள்ளம் ஓடி விட்டது! இதைப் பற்றி மத்திய அரசியல் மந்திரி, உமா பாரதி அழுத்தமாகச் சொன்னாராம், ‘பாப்ரி மசூதி தேசீய அவமானச் சின்னம்! ஓர் அடிமைச் சின்னம்! அது நமது தேசப்பற்றைப் பாதிக்கிறது! முகலாய சாம்ராஜியத்தைப் பாரத தேசத்தில் நிலைநாட்டிய ஓர் ஆக்கிரமிப்பாளன் பாபர், பெயரைத் தாங்கி நிற்கிறது! மசூதி இடிப்பில் எந்த விதச் சதித் திட்டமும் இல்லை! அது ஓர் அடிமைச் சின்னம், என்பது எனது உறுதியான நம்பிக்கை’ என்று முழக்கினாராம்!

    [bws_captcha]

    அப்படிப் பார்க்கப் போனால், ஆக்ராவில் உள்ள ‘தாஜ் மஹால்’ ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? டெல்லியில் உள்ள ‘குதுப்மினார்’ கம்பம் ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? மொம்பையில் பிரிட்டீஷ் அரசாங்கம் கட்டிய, ‘இந்தியத் தலை வாசல்’ [Gateway of India] ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? சையத் அகமத் புகாரி உமா பாரதியைத் தாக்கி, ‘பாப்ரி மசூதியை ஓர் அடிமைச் சின்னம் என்பது இஸ்லாமியரை அவமானப் படுத்துவதாகும்! இஸ்லாம் மதத்தை எடுத்துக் காட்டும், ஓர் தனித்துவச் சின்னம் அது’ என்று சீறினார். இராமர் பிறந்த பூமிக்காக தீராத இந்து முஸ்லீம் சண்டைகள், கொலைகள், தீயெரிப்புகள் !

    மீண்டும் வட நாட்டில் 2002 ஆம் ஆண்டில் ‘ராம் ஆலயப் போர்’ தலை தூக்கி யிருக்கிறது! இந்து முஸ்லீம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக், கொலை செய்து பலிவாங்கிக் கொண்டனர்! இறந்தவர்களில் முஸ்லீம் மக்கள் எண்ணிக்கை மிக அதிகம்! பெரும்பான்மையான அடிப்படை இந்து மத வெறியர்கள், தீங்கிழைக்காத சிறுபான்மை முஸ்லீம் மக்கள் இல்லங்களைத் தீயிட்டு, அவர்களை உயிரோடு கொளுத்தி யிருக்கிறார்கள்! காந்தி எந்த மதச் சண்டைகள் நிகழக் கூடா தென்று தன் ஆருயிரைக் கொடுத்தாரோ, அந்த மதச் சண்டைகள் பாரதத்தில் இன்னும் ஓயவில்லை ! இனியும் ஓயப் போவதில்லை!

    கிறிஸ்துவ ஆலயங்களைத் தீயிட்டுக் கொளுத்திப் பாதிரியாரைக் கொன்ற போதோ, பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்ட மாக்கிய போதோ, சங்கராச்சாரியார் போன்ற இந்து மதாதிபதிகள், இந்து மத வெறியர்களைக் கண்டிக்கவும் இல்லை! தண்டிக்கவும் இல்லை! ராம ராஜியத்தை ஆதரித்த மகாத்மா இருந்திருந்தால், ராம பூமிக்காக மசூதி தகர்க்கப் படுவதைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி யிருப்பார்! கிறிஸ்துவர் புனிதக் கோயில் எரிப்புகளையும், அருட் பாதிரியார் கொலைகளையும் தடுக்க அறப்போர் நடத்தி யிருப்பார்! ஆனால் காந்தி சீடர்கள் என்று சொல்லிக் கொள்பவரும், மதச் சார்பற்ற பாரத அரசின் ஆட்சியாளர்களும் கோரக் கொலைகளை, தீயெரிப்புகளை இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அநாகரீகம், அவமானம், அநியாயம், அறிவீனம்!

    வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்!

    மகாத்மா காந்தி இன்னும் மாண்டு போகவில்லை! அவர் ஓர் உலக மனிதாபிமானி! ‘மகாத்மா’ என்னும் பட்டத்தை காந்திக்கு அளித்தவர், கவியோகி இரவீந்திரநாத் தாகூர். ‘உலக சரித்திரத்தில் மகாத்மா காந்தி புத்தர், ஏசுக் கிறிஸ்து ஆகியோருக்கு இணையான இடத்தைப் பெறுவார்’, என்று இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மெளண்ட் பாட்டன் கூறி யிருக்கிறார். ரஷ்ய மேதை லியோ டால்ஸ்டாய், விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காந்தியின் ஆயுதமற்ற விடுதலைப் போராட்டத்தைப் பாராட்டியுள்ளார். ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங், காந்தியின் அகிம்சாப் போராட்ட முறையைப் பின்பற்றினார். ‘வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்’ என்று பாரதியார் பாடியுள்ளது போல், மகாத்மா காந்தி பிற நாடுகளில் ‘மாதிரி மனிதராய்’ மாந்தருக்கு வழிகாட்டியாய் மறைமுகமாகப் பணி செய்து கொண்டிருக்கிறார்! ஆனால் இந்தியாவை விட்டு, அவரது ஆத்மா என்றோ போய் விட்டது ! பாழ்பட்டுப் பரிதபிக்கும் பாரத தேசம் தன்னை, இனி வாழ்விப்பது எப்படி என்று விண்ணுலகிலிருந்து கவலைபட்டுக் கொண்டிருக்கிறார், மகாத்மா காந்தி!
    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14
    http://youtu.be/QT07wXDMvS8

    ***************************

    தகவல்:

    1. Gandhi’s Truth By : Erik H. Erikson (1969)

    2. Gandhi His Life & Message for the World By: Louis Fischer (1954)

    3. The Life of Mahatma Gandhi By : Louis Fischer (1950/1983)

    4. http://graysparks.blogspot.com/2011/04/blog-post_18.html

    jayabarat@tnt21.com

    +++++++++++++++++
    Mohandas Gandhi Timeline

    From the Website : http://www.sparknotes.com/biography/gandhi/timeline.html

    Picture from Gandhi Movie with Ben Kingsley as Gandhi
    +++++++++++++++++

    Mohandas Gandhi
    Timeline

    October 2, 1869: Birth of Mohandas Karamchand Gandhi

    1883: Gandhi and Kasturbai are married.

    1885: Death of Karamchand Gandhi, Gandhi’s father

    September 4, 1888: Gandhi leaves for England to study law.

    June 10, 1891: Gandhi passes the bar exam in England.

    1891-1893: Gandhi fails as a lawyer in India.

    April 1893: Gandhi accepts commission to spend a year in South Africa advising on a lawsuit.

    Spring 1894: Gandhi elects to stay on South Africa, and founds the Natal Indian Congress.

    Spring 1896: Gandhi returns to India to collect his wife and children.

    December 1896: Gandhi returns to South Africa with his family.

    October 1899: Outbreak of Boer War (1899-1901) in South Africa. Gandhi organizes an ambulance corps for the British.

    1901: Gandhi returns to India to attend the Indian National Congress. G.K. Gokhale introduces him to nationalist leaders.

    1901-1906: Gandhi struggles toward Brahmacharya, or celibacy, finally ending his sexual activity in 1906.

    1904: Nationalists found the magazine the Indian Opinion, and soon print it on Gandhi’s farm, the “Phoenix Settlement.”

    July 31, 1907: The Boer Republic Transvaal, now under the control of the British, attempts to register all Indians as members; Gandhi and others refuse to register. Their resistance efforts mark the first use of nonviolent non-cooperation by the Indian minority in South Africa, soon calledsatyagraha, or “soul-force.”

    January 11, 1908: Gandhi is arrested and sentenced to two months in prison.

    October 10, 1908: Gandhi is arrested again, spends a month in jail.

    1909: Gandhi travels to London, pushing for rights of South African Indians. The Transvaal registration law is repealed.

    November 13, 1913: Indians in Natal and Transvaal, under Gandhi’s leadership, march peacefully in protest of a racist poll tax and marriage laws. The marches continue through the winter.

    June 30, 1914: Gandhi and Smuts, the Prime Minister of the Transvaal, reach an agreement, ending the protests.

    July 18, 1914: Gandhi sails to England.

    August 1914: Gandhi arrives in England, just at the outbreak of World War I(1914-1918).

    January 9, 1915: Gandhi returns home to India, and receives a hero’s welcome.

    May 25, 1915: Gandhi and his followers found Satyagraha ashram, the religiously-oriented communal farm where Gandhi, his family, and his followers will live.

    April 6, 1919: Nationalists hold a hartal, or day of fasting and prayer, in protest of the Rowlatt Act, which drastically curtails civil liberties in India.

    April 13, 1919: Amritsar Massacre; Under General Dyer, British troops slaughter Indian protesters.

    August 1, 1920: Gandhi calls for a period of non-cooperation across India.

    March 10, 1922: Gandhi is arrested for sedition.

    March 1922-January 1924: Gandhi remains in prison.

    1924-1928: Gandhi avoids politics, focusing his writings on the improvement of India.

    1925: Despite his long absence from politics, Gandhi becomes President of the Indian National Congress.

    February-August 1928: Residents in the district of Bardoli protest high rents using methods of non-cooperation inspired by Gandhi.

    January 26, 1930: Gandhi publishes the Declaration of Independence of India.

    March 2, 1931: Gandhi warns the Viceroy of his intention to break the Salt Laws.

    March 12-April 6, 1931: Gandhi leads his Salt March to the sea.

    May 5, 1931: Gandhi is arrested for violating the Salt Laws; non-cooperation movements break out across India.

    January 1931: British government yields to protests, releases all prisoners, invites a Congress representative to Britain for a Round Table Conference (the Congress asks Gandhi to be this representative).

    Autumn 1931: Gandhi participates in the Round Table Conference in Britain.

    December 28, 1931: Gandhi returns to India.

    January 4, 1932: Gandhi is arrested for sedition, and held without a trial.

    September 20-25, 1932: Gandhi fasts in prison to protest the treatment of untouchables.

    1934-38: Gandhi avoids politics, travels in rural India.

    1935: Government of India Act passes British Parliament and is implemented in India; it is the first movement toward independence.

    September 1939: World War II begins, lasting until 1945.

    March 22, 1942: Sir Stafford Cripps arrives in India, presenting to the Indian National Congress a proposal for Dominion status (autonomy within the British Commonwealth) after the War.

    August 8, 1942: The Indian National Congress rejects the Cripps proposal, and declares it will grant its support for the British war effort only in return for independence.

    August 1942: Congress leaders are arrested; Gandhi is imprisoned in the Aga Khan’s palace.

    February 10 to March 2, 1943: Gandhi fasts while imprisoned, to protest British rule.

    February 22, 1944: Death of Kasturbai

    May 6, 1944: Gandhi is released from the Aga Khan’s palace.

    Summer 1944: Gandhi visits Muhammed Ali Jinnah in Bombay, but is unable to work out an agreement that will keep India whole.

    May 16, 1946: British Cabinet Mission publishes proposal for an Indian state, without partition; Jinnah and the Muslim League reject the proposal.

    March 1947: Lord Mountbatten arrives in India and hammers out agreement for independence and partition.

    August 15, 1947: Indian independence becomes official, as does the partition into two countries, India and Pakistan.

    August-December 1948: India dissolves into chaos and killings, as Hindus and Muslims flee for the borders of India and Pakistan.

    January 30, 1948: Gandhi is assassinated by Nathuram Vinayuk Godse, a Hindu nationalist.

    +++++++++++++

    S. Jayabarathan (Revised January 29, 2013)

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2GgK_Nq9NLw

    [Mahatma Gandhi Interview].

     

    Share
  • பெண்ணை வாழ விடுங்கள் !!!!


    பி.தமிழ்முகில் நீலமேகம்

     

    அடுக்களையும் அரிகரண்டியும்

    மாதருக்கே பாத்யதை என்று

    பட்டயம் ஏதும்

    எழுதப் பட்டிருக்கிறதோ ??

     

    கல்வி கேள்வி தனில்

    தனித் திறமை இருந்தாலும்

    கறி சமைக்கத் தெரியாதவள்

    ஏளனப் படுவதும் ஏனோ ??

     

    புது வாழ்க்கைக்கும் சூழலுக்கும்

    தன்னைப் பக்குவப்படுத்திக்

    கொள்ள வேண்டியது பெண்ணெனில்

    பக்குவமென்பது ஆண்கட்கு தேவையில்லையா ??

     

    தட்சணை கொடுத்து மரு”மகளாய்”

    சென்றவள் – பசிக்குப் புசிப்பது கூட

    அனுமதி பெற்று தான் எனில்

    இது என்ன நியாயம் ??

     

    எக்காலத்திலும் பெண்ணின் திறமை

    குப்பையில் கிடக்கும் குன்றிமணி !!

    ஆணின் அதிகாரம் மட்டும் என்னவோ

    கம்பீரமான கோட்டை மணி !!!

     

    அடக்கி ஆள்தலும் அடிபணியச் செய்தலும்

    நீங்களடைந்த வெற்றி என்ற எண்ணம்

    மனதிலிருந்தால் – மன்னிக்கவும் !

    நீங்கள் தோல்விப் பாதையில்

    வெகுதூரம் பயணப்பட்டு விட்டீர்கள் ! – நாளை

    துவண்டு விழப்போவது நீங்கள்தான் !!!

     

    பொன்னும் பொருளும் உங்களுக்கு

    காணிக்கை தராதவளை ஏளனமாய்ப்

    பார்ப்போரே ! – அவளது

    சேவைக்கும் தியாகத்துக்கும் உங்களால்

    கைமாறு செய்திடல் இயலுமோ ??

    அது அவளது கடமையென

    சூளுரைப்போரே !

    நீங்கள் என்றுமே

    கடமை தவறிய

    கனவான்கள் தாம் !

    மறந்திடாதீர்கள் !!

    மறுக்க எத்தனிக்காதீர்கள் !

     

    பெண்ணுக்கெதிராய்

    பலாத்காரத்தை ஆயுதமாய்

    கையிலெடுப்போரே !

    நீங்களென்ன மனிதர்களா ?

    அன்றி மாக்களா ?

    நீங்கள் மனித உருவில்

    உலவும் மாக்களெனில்

    உங்களை வழிநெறிப் படுத்த

    தார்க் குச்சியும் சாட்டை வாரும்

    தயாராய் உள்ளது –

    மறவாதீர்கள் !!

     

    பெண்ணைப் போற்றி

    வணங்கச் சொல்லவில்லை !!!

    அவளை உயர்த்தித்

    தாங்கவும் கேட்கவில்லை !!!

    உங்கள் சகமனுஷியாய்

    உயிருள்ள ஓர்

    ஜீவனாய் பாருங்கள் !!!

     

    பெண்ணை நிம்மதியாய்

    வாழ விடுங்கள் !!!

    அவளது மகிழ்வில்

    உங்களது வாழ்வு என்றென்றும்

    வளமாகவும் !!! நலமாகவும் !!!

     

    படத்திற்கு நன்றி:

    http://www.free-photos.biz/photographs/society/photos_of_social_groups/

    Share
  • போற்றி! போற்றி! தேவகுமாரா! போற்றி! போற்றி!

    இன்னம்பூரான்

     போற்றி! போற்றி! தேவகுமாரா! போற்றி! போற்றி!

    அவரொரு அதிசயப்பிறவி. அவனியில் அவரைப்போல் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. என் அகக்கண்ணுக்கு மட்டும் புலப்பட்ட தேவதூதர்கள் புஷ்பக விமானத்தில் வந்திறங்கி சைத்ய உபசாரங்கள் பல செய்து, அனாயாசமாகவல்லவோ அவரை சுவர்க்கலோகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஜனவரி 9, 2013; அன்றைய தினம் வழக்கம் போல்த்தான் பொல பொலவென பொழுது விடிந்தது. அவரும் சகஊழியர்கள் எல்லாரையும் கனிவுடன், கட்டித்தழுவி குசலம் விசாரித்தார். அது பல வருடங்களாக  அவருடைய அன்றாட வாடிக்கை. பிறகு தன்னுலகம் சுற்றி வந்தார். அவருடைய நண்பர்கள் பல இனங்களை சார்ந்தவர்கள். உக்ரம், வக்ரம், மக்கார் எல்லா குணாதிசயங்களும் உண்டு, அவர்களிடம். அவர் சம்பந்தப்பட்டவை, யாவரும் நேசிக்கப்பட்டவர்கள். அவர்களும் அவரவது பலவீனங்களை உதறி விட்டு, அவருடைய அரவணைப்பை அனுபவிப்பார்கள். பிரஹாரம் சுற்றிய பிறகு, வந்தபின், வழக்கம்போல் சொற்பமான காலை உணவு. ஒரு குட்டித்தூக்கம். அதுவே நீளாதூக்கம் ஆகி விட்டது, சார்! துக்கம் தாங்காமல் என் மனம் தேம்பித் தேம்பி அழுகிறது. ஏன்? உலகமே அழுகிறது.

    மனித ஜன்மங்களே! மனித நேயம் என்று புத்தகங்கள் எழுதி, சொற்மாரி பெய்து, அதைப் பொய்த்து, நடமாடுகிறீர்களே! இந்த தேவகுமாரரின் பெயர் ஆர்னி. அவர் ஒரு கம்பீரமான பூனை. லிண்டன் மிருகக்காட்சி சாலையில் அவர் தான் செவிலித்தாய். சிங்கக்குட்டிகளும், புலிக்குட்டிகளும், குரங்குக்குட்டிகளும் அவரால் தான் பேணி வளர்க்கப்பட்டன. அவற்றின் கூடைக்குள் நுழைந்து, கட்டித்தழுவும் போது, அவை அன்னையின் அரவணைப்பின் சுகம் உணர்ந்தன.

    எனக்கு நேரடியாகத் தெரிந்த உண்மை நிகழ்வு ஒன்று. ஒடிஷாவின் ஸிமிலிபால் பிராந்தியத்தில், ‘கைரி’ என்ற புலிக்குட்டி ஒரு வீட்டு செல்லப்பெண்ணாக வளர்ந்தாள். செவிலித்தாய் ப்ளாக்கி என்ற நாய். கைரியின் உருவத்தில் ஒரு சின்ன பின்னம் அளவு சைஸ். ஆனால், கைரிக்கு ப்ளாக்கியிடம் தான் பயம். ஒரு நாள் ப்ளாக்கிக்குக் குட்டிகள் பிறந்தன. கைரிக்கு அவற்றுடன் விளையாட ஆசை.  வாசற்படியில் வந்து கெஞ்சுகிறாள். அனுமதி டினைய்ட்! தன்னுடைய கூர்நகங்களை உள்ளிழுத்துக்காட்டி கெஞ்சுகிறாள். அனுமதீட். அப்பப்பா! என்ன விளையாட்டு! போங்கள்! அதுவல்லவோ தெய்வீகம்!

    சார்! இனி மேல்  எந்த மனிதன் உக்ரமாகவும், வக்ரமாகவும், மக்காராகவும் நடந்தால், மிருகத்துடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள், சார்! ப்ளீஸ்.

    இன்னம்பூரான்

    29 01 2013

    பி.கு: சோம்பல் இருந்தால் கூட, அதை முறித்து விட்டு, உசாத்துணையிலிருக்கும் ஆர்னியின் சித்திரத்தைக் க்ளிக்கி, ஒரு கும்பிடு போடுங்களேன்.

    உசாத்துணை:

    http://www.bbc.co.uk/news/uk-england-cambridgeshire-21244346

    Share