Blog

  • ஜகதலப்பிரதாபன்!

    -தனுசு

     


    கரைவேட்டித் தலைவா!
    உன்
    புகழ்பாட வரவா!
    கல்கண்டு மொழியா!
    உனைப் போற்றி
    சொல்கொண்டு வரவா!

    அருவியெனக் கொட்டும்
    தேன்
    உரை வீச்சு நீயே!
    உச்சி வெய்யிலில்
    ஊரைக் கூட்டும் கவர்ச்சியும் நீயே!

    உன் சதா சிரிப்பும்
    வெள்ளை வனப்பும்
    என் உள்ளம் கவர்ந்ததென்றால்…
    உன்
    மாதர் பக்தியும்
    முதியோர் அணைப்பும்
    என்னை மெய்சிலிர்க்க வைக்கும்!

    ஊருக்கொரு சாலை தருவாய்
    பொது நலம் கொண்டு!
    அதில் ஊருக்குள் பரந்துகிடக்கும்
    உன் நிலத்திற்கு
    விலையேற்றும் சுயநலம் உண்டு!

    உன் மித மிஞ்சிய பணம்
    தேடுமிடம் பங்குச்சந்தை!
    நேர் கணக்குக்கு
    அஞ்சிய பணம்
    நாடுவதோ உலக வங்கிச்சந்தை!

    மாலை மணி மரியாதை
    தேடிடும் உனக்கு
    சமயத்தில்
    முதலில் கிடைப்பது
    காலணி மரியாதை!

    வேட்டியை மடித்துக் கட்டினால்
    தமிழனுக்கு வீரன் என அர்த்தம்!
    உன் வேட்டி உயர்ந்தால்
    அது
    கிழியப்போவதாய் அர்த்தம்!

    ஏழைப்பங்காளன் நீ…
    வெள்ள நிவாரணத்தில் ஒதுக்கியதால்!
    புரட்சியாளன் நீ…
    வறட்சி நிவாரணத்திலும் ஒதுக்கியதால்!

    ஆனால்
    எந்த தேர்தல் உன்னை ஒதுக்கினாலும்
    எந்த மாறுதலும் இல்லாமல்
    இந்த ஜகத்தை அதகலப்படுத்தும் பிரதாபா
    உன்
    மக்களாட்சி தத்துவம் எனக்குப் பிடித்திருகிறது!

     

    படத்துக்கு நன்றி: http://www.padaipali.net/2011/08/blog-post_12.html

     

    Share
  • தொல்லை காட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயா நானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

    மோகன் குமார்

    ஒரு மாறுதலுக்கு இவ்வார தொல்லை காட்சியில் விஜய் டிவி நிகழ்ச்சிகள் மட்டுமே !
    *****
    விஜய் டிவியின் பெரும் பலம்: அதன் கேம் ஷோக்கள் தான். குறிப்பாக வார இறுதியில் வரும் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகள் பெரிதும் ரசிக்கப்படுகிறது. ஒவ்வொரு வகையிலும், ஒவ்வொரு ஸ்லாட்டிலும் தான் தான் நம்பர் 1- ஆக இருக்க வேண்டுமென நினைக்கும் சன்னை கூட வார விடுமுறையில் விஜய் டிவி முந்தி விடும் என்றே தோன்றுகிறது.

    கேம் ஷோக்கள் அதன் பலம் என்றால் – பயணம், சிறுத்தை, வாகை சூடவா, சாட்டை என 10 படங்களை மட்டுமே மாற்றி மாற்றி ஒவ்வொரு வாரமும் போட்டு ஜல்லியடிப்பது சூர மொக்கை. இந்த விஷயத்தில் ஏன் தான் விஜய் டிவி இப்படி இருக்கோ தெரியலை !
    ************
    நீயா நானாவில் கௌரவ கொலைகள்

    பிரகாஷ் ராஜ் கௌரவ கொலைகள் குறித்த தனது புதிய படமான கௌரவம் படத்தின் பாடல் வெளியீட்டை நீயா நானாவில் நடத்த விரும்பி அணுக, அதே தலைப்பில் ஒரு விவாதமும் வைத்து பாடல் வெளியீடு நடந்தது.

    சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்து உறவினர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட பலரும் வந்திருந்து தங்கள் கதையை கூறினர். குறிப்பாக ஒரு பெண் சாதி விட்டு திருமணம் செய்ததால் தனது கணவர் கொல்லப்பட்டதாகவும், தான் இப்போது குழந்தையுடன் சாப்பாட்டுக்கே வழியின்றி தவிப்பதாகவும் சொன்னது பரிதாபம்.

    நிகழ்ச்சியில் பேசியர் ஒருவர் சொன்ன தகவல் சிந்திக்கத்தக்கது.

    ” கி.மு 2000 முதல் சாதி இருந்துள்ளது. ஆனால் தீண்டாமை கி. பி 500 -ல் தான் வந்தது. அதாவது முதலில் சாதி இருந்தது. ஆனால் தீண்டாமை இல்லை. சாதி வந்து 2500 ஆண்டுகளுக்கு பின் தான் தீண்டாமை வந்தது”

    ” Scheduled Caste என்று சொல்ல எவரும் தயங்க தேவையில்லை; பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சொல்லும் போது தான் மேலே, கீழே என ஏற்ற தாழ்வு வருகிறது. Scheduled Bank என்று சொல்வது போல  தான் Scheduled Caste.. அரசு இவர்களை குறிப்பிட்ட பட்டியலில் வைத்துள்ளது என்பதை மட்டுமே குறிக்கிறது “

    நிற்க. கௌரவம் பட டிரைலர் பெரிதாய் கவரவில்லை. கிராமத்தில் ஒரு கௌரவ கொலை – அதை எதிர்த்து போராடும் கல்லூரி மாணவர்கள் என போகிறது கதை..

    ஒரு லட்சம் வென்ற ஜோடிகள்

    ஜேம்ஸ் வசந்தன் நடத்தும் ” ஒரு லட்சம் பரிசு போட்டியில் இதுவரை மூவர் தான் – கடைசி லெவல் வரை வென்று ஒரு லட்சம் பரிசு வேன்றுள்ளனராம். மறு ஒளிபரப்பில் அப்படி ஜெயித்த 3 க்ரூப்பையும் காண்பித்தனர். வேணு அரவிந்த்- அபிஷேக், வடிவுக்கரசி- சின்னத்திரை இயக்குனர் ஆனந்த், இரு இளம் டிவி சீரியல் நடிகைகள்.

    கடைசி நிலைகளில் சற்று கடினமான வார்த்தைகள் இருந்தாலும், நிதானமாய் பொறுமையாய் ஆடி ஜெயித்தது ஆச்சரியமாய் இருந்தது.

    சில நேரம் எதிரணிக்கு மிக கஷ்டமான வார்த்தைகளும் மற்றொரு அணிக்கு சற்று இலகுவான வார்த்தைகளும் வருவதை கவனித்து சரி செய்தால் நன்றாயிருக்கும் !

    நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

    எடுத்தவுடன் ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன்: சூர்யா இருந்த போது இருந்த ஜோஷ் இப்போது சுத்தமாக இல்லை. பிரகாஷ் ராஜ் என்னதான் கலந்து கொள்வோரை எப்போதும் ” எக்சலண்ட் ” ” சூப்பர்ப்” என்கிற சூபர்லேடிவ்களை மட்டுமே வைத்து பாராட்டினாலும் நிகழ்ச்சி நிச்சயம் செல்ப் எடுக்கலை.

    எளிமையாய் சொல்லுணும் என்றால் முன்பெல்லாம் சூர்யா வரும்போது நிகழ்ச்சி தவற விடாமல் பார்க்கணும் என தோன்றும். இப்போது அநேகமாய் பார்ப்பதே இல்லை.

    விஜய் டிவி விழித்து கொள்ளா விட்டால் இதன் TRP அதள பாதாளத்தில் தான் இருக்கும்.

    அசத்தும் காம்பியர்கள்

    விஜய் டிவியில் மட்டும் எப்படி தான் நல்ல நல்ல காம்பியர் பிடிக்கிறார்களோ தெரியவில்லை. சற்று கவனித்து பாருங்கள். மற்ற தமிழ் டிவி காம்பியர்கள் எத்ததனை பேரின் முகமோ, பெயரோ நினைவுக்கு வருகிறது? ஆனால் விஜய் டிவி காம்பியர்கள் சிலர் சினிமா நட்சத்திர ரேஞ்சுக்கு புகழோடு உலா வருகிறார்கள்.

    சந்தானம், சிவகார்த்திகேயன், இன்றிய மா. கா. பா ஆனந்த என பலரும் இங்கு காமெடி அல்லது காம்பியரிங் செய்து பின் பெரிய திரைக்குள் நுழைந்தவர்கள் தான்.

    இன்னொரு பக்கம் கோபிநாத் தினம் ஒரு மகளிர் ஷோவும் வார கடைசியில் ரெண்டு ஷோவும் அலுக்காமல் நடத்துகிறார். ஒரு வார்த்தை ஒரு லட்சம் நடத்தும் ஜேம்ஸ் வசந்தனாகட்டும், தமிழ் பட்டி மன்றம் நடத்தும் இளைஞர் ஆகட்டும் பெரும்பாலானோர் ரசிக்க வைக்கிறார்கள்

    இப்படி சரியான காம்பியர் கிடைப்பது அதிர்ஷ்டமா அல்லது இங்கு யாரோ சரியான ஆள் தேர்வு குழுவில் இருக்கிறாரா தெரியலை !

    சீரியல் பக்கம் சரவணன் மீனாட்சி

    படிக்குற வேலை, சமையல் வேலை எல்லாம் முடிஞ்சு 9 மணிக்கு டிவி போடுவோம். அப்படி தான் சூப்பர் சிங்கர் ரொம்ப காலம் பார்த்தது. இப்போ சூப்பர் சிங்கரை ஒன்பதரைக்கு தள்ளிட்டு ஒன்பது மணிக்கு “சரவணன் மீனாட்சி ” சீரியல் வருது. மனைவியும் மகளும் பார்ப்பதால் கருமமே என கொஞ்சம் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கு. சரவணன் & மீனாட்சி – தங்கள் பெற்றோரை விட்டுட்டு அதே ஊரில் தனிக்குடித்தனம் போறாங்க. அந்த கதை தான் சில வாரமா ஓடிகிட்டு இருக்கு.

    குயிலி மாதிரி தளுக்கி மினுக்கி எந்த பெண் பேசுறாரோ ? ஓவர் ஆக்டிங்கின் இலக்கணம் இந்த சீரியலில் வரும் குயிலி தான். முடியல !

    இந்த மீனாட்சி பொண்ணு இருக்கே.. ரொம்ப நாளா சொல்ல வேணாம்னு பார்த்தேன். சரி இன்னிக்கு சொல்லிடலாம்..

    வீட்டில் இருக்கும்போதும் சரி, புருஷனோட தனி அறையில் இருக்கும்போதும் சரி இடுப்பில் துளி கூட தெரியாம முழுக்க மறைச்சு புடவை கட்டுது. வீட்டில் கூட – அதுவும் கணவனுடன் தனியறையில் இருக்கும்போதுமா?

    சின்னத்திரையில் இருந்தாலும் அம்மணி அநியாய ஆர்த்தடாக்ஸ் போல..

    லோ ஹிப் கட்டுவதை பார்த்தால் வருகிற எரிச்சல் இப்படி ஒரேயடியா இழுத்து சொருகிகிட்டாலும் ஏனோ வரத்தான் செய்யுது.

    புதிய நிகழ்ச்சி – ஜோடி சீசன் – 4

    விஜய் டிவி யில் மீண்டும் ஜோடி நம்பர் சீசன் – 4 துவக்கி இருக்கிறார்கள். இப்போதைக்கு சனிக்கிழமை இரவு 7.30 முதல் எட்டரை வரை ஒளிபரப்பாக உள்ளது. ரம்யா கிருஷ்ணன் சரோஜா தேவி ஆகியோர் நடுவர்களாக இருக்க, ஏழெட்டு புது ஜோடிகள் அறிமுக ஆகிறார்கள். மீண்டும் திவ்ய தர்ஷினி தொகுப்பாளினி ஆக வருகிறார்

    ரசிக்கும் படி யாரேனும் இருந்தால் அவர் ஆடும்போது எட்டி பார்க்கலாம் மற்றபடி நடுவர்கள் கருத்து சொல்லுபோது சானல் மாற்றிவிடுவது நல்லது

    சூப்பர் சிங்கர் பாண்டிச்சேரி விஜயம்

    சூப்பர் சிங்கரில் இப்போ டாப் 30 க்கு வந்துள்ளனர். பாடகர்கள் அனைவரையும் வேனில் போட்டு பாண்டிச்சேரி கூட்டி சென்று, எலிமினேஷன் இன்றி ஜாலியாய் பாடவைத்து ஒரு வாரம் ஓட்டினர்.

    இந்த டாப் 30-ல் சென்ற சீசனில் இறுதி நிலை வரை வந்த சவுந்தர்யா (சவுண்டு சவுந்தர்யா என்பார் DD ) இருக்கிறார். அவர் அளவுக்கு மற்றவர்கள் நிச்சயம் பாடலை. சவுந்தர்யா பைனல் வரை வரவும், பரிசு வெல்லவும் கூட வாய்ப்பு உண்டு

    ஆள் ஆளுக்கு தேவனை திட்டுவது அவர் காதில் விழுந்துச்சோ என்னவோ.. இவ்வாரம் பாடியவர்களை அவர் அதிகம் திட்டலை.

    இனி ஒவ்வொரு எலிமிநேஷனாக ஆரம்பிப்பார்கள். பத்தரை வரை செல்வதால் தொடர்ந்து பார்க்க முடிவதில்லை

    அது இது எது

    இவ்வாரம் அது இது ஏதுவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா – டீம் வந்திருந்தது. விமல், சிவகார்த்திகேயன் மற்றும் பிந்து மாதவி.

    சிவாவுக்கு இது வித்யாச ஹோம் கம்மிங். பல வருடங்கள் இந்நிகழ்ச்சி நடத்தியவர் இன்று அதில் ஒரு போட்டியாளராக… மா. கா. பா – சிவா இருப்பதால் அடக்கி வாசித்து அவரை நிறையவே பேச விட்டார்.

    பிந்து மாதவி முடியெல்லாம் வெட்டி கொண்டு பையன் மாதிரி இருந்தார் அதை வைத்து அவரை நன்றாக ஓட்டி தள்ளி விட்டார் சிவா. விமல் சிவாவுக்கு நேர் எதிர் போலும். மனுஷன் சுத்தமா பேசவே மாட்டேங்கிறார். 3 ரவுண்டிலும் ஜெயித்தது பிந்து மாதவி மட்டுமே ! இவ்வாரம் சிரிச்சா போச்சு ரவுண்டு செம கலக்கல். முடிஞ்சா இணையத்தில் தேடி கண்டு களியுங்கள் !

    Share
  • வாழ்க்கை நலம் – 4

     

    குன்றக்குடி அடிகள்

    4. வான் மழை

    கடவுள் எல்லையற்ற பொருள்; ஆற்றலுடைய பொருள்; ஆனால் உருவமற்றது. விஞ்ஞான அடிப்படையில் கூட ஏராளமான ஆற்றல் மிக்க பொருள்கள்-வாழ்க்கைக்குப் பயன்படும் பொருள்கள் உருவமற்றவையாகவே இருக்கின்றன, என்பதை-உலகத்தின் மிகப்பெரும் ஆற்றலாக விளங்கும் மின்சாரத்திற்கே உருவமில்லையென்பதை நினைவிற் கொள்ள வேண்டும். கட்புலனுக்கு வாராத பொருள்களின் உண்மையை அவற்றின் செயற்பாட்டின் மூலமும், பயன்பாட்டின் மூலமும் அறிய முடியும். அது போல இயற்கையில் எல்லாம் விஞ்சிய இயற்கையாக விளங்குவது வான்மழை. கடவுளைப் பற்றிப் பேசிய திருவள்ளுவர் அடுத்து உலக இயக்கத்துக்கும் நுகர் பொருள் படைப்புக்கும் கருவியாக இலங்கும் வான் மழையைச் சிறப்பித்துக் கூறுகிறார்.

    வானை இடமாகக் கொண்டு நீர்த்துளிகள் மழையாகப் பொழிவதால் வான் சிறப்பு எனப்பெற்றது. வான் சிறப்பு என்று கூறினாலும் வானின் பயனாக இருக்கின்ற தண்ணீர் என்றே கொள்ள வேண்டும். தண்ணீரின்றி உலக இயக்கமில்லை; உயிர் வாழ்வன இல்லை. அதனால், திருவள்ளுவர் “நீரின்றியமையாது உலகு” என்றார்.

    உலகின் அனைத்துப் பொருள்களிலும் நீர் கலந்திருக்கிறது. நீர் கலவாத – நீர் இல்லாத இடமில்லை. தண்ணீர் ஊடுருவி நிற்காத பொருளுமில்லை. நம்முடைய மானிட உடம்பில் 70 சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது. இந்தத் தண்ணீர் உயிர்நிலை வாழ்வுக்கு இன்றியமையாதது. அதுமட்டுமல்ல, பூமண்டலத்தில் தட்பவெப்ப நிலைகளைப் பாதுகாக்கவும் தண்ணீர் பயன்படுகிறது. தண்ணீர் உணவாகவும், பிற உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் சாதனமாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் அழுக்குகளை நீக்கித் தூய்மை செய்வதற்குத் தண்ணீரே பயன்படுகிறது. இந்த உலகம் தண்ணீர் மயம்.

    “நீரின்றமையாது உலகு” – என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் கூறியதை உற்று நோக்குக. ஒழுக்க நெறி நிற்பதற்கு ஏற்ற உடல் நலம் தேவை. உடல் நலம் பாதுகாப்பதற்கு தட்ப வெப்பச் சூழ்நிலை தேவை. உடலின் கருவிகளைச் சீராக இயக்க நல்ல சமவிகித உணவு தேவை. இவ்வளவும் அமைந்தால்தான் ஒழுக்கமுள்ள ஒரு சமுதாயம் அமையும். இந்த ஒப்பற்ற சமுதாய அமைப்புக்கு அடிப்படையாக அமைவது மழையேயாம். அதனால் “வானின்று அமையாது ஒழுக்கு” என்றார் திருவள்ளுவர்.

    நிலம் பசுமை போர்த்ததாக இருக்க வேண்டும். அங்ஙனம் நிலம் பசுமை தாங்கி விளங்குவது நிலத்திற்கும் நல்லது; உயிர்க் குலத்திற்கும் நல்லது. நிலமகள் பசுமைக்கோலம் பூண்டு விளங்க வேண்டுமானால் வான் நின்று மழை பொழிய வேண்டும். வான் நின்று மழை பொழியத் தவறி விடுமாயின் நிலத்தில் பசிய புல்லின் தலையைக் கூடக் காணல் அரிது என்கிறது வள்ளுவம். வளர்ந்த புள் அல்ல, முளைத்தெழும் புல் என்பதை “பசும்புல் தலை” என்றார் திருவள்ளுவர். வான் நின்று மழை பொழியத் தவறினால் நிலத்தில் பசும்புல் தலை இல்லை! ஏன்?

    நிலத்தின் மேற்பரப்பிலுள்ள மண் நிலத்திற்கு இன்றியமையாதது. இந்த மேற்பரப்பு மண் தோன்ற பல்லாயிரம் ஆண்டுகளாகின்றன. இந்த மண் காற்றினால் தூசியாகப் பறந்து போய்விடாமல் நிலத்தின் மேலேயே மழைத்துளிகளால் நனைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. நிலத்தின் மேலுள்ள மணற்பரப்பு மண்ணின் வளத்திற்கு உயிர் நிலையாகும். இந்த மைனர் பரப்பைக் காப்பது நமது கடமை.

    காற்றினாலோ, தன் போக்கில் தண்ணீர் வேகமாக ஓடுவதாலோ, கால் நடைகள் கண்டபடி மேய்வதாலோ, நிலத்தின் மேற்பரப்பு சமமாக இல்லாமல் மிக அதிகமான மேடு பள்ளமாக இருப்பதாலோ இந்த மேல் மணற்பரப்பு ஆழிகிறது. இதை வேளாண்மைத் துறை விஞ்ஞானிகள் மண்ணரிப்பு என்பர். இந்த மண்ணரிப்பு வராமல் நிலத்தைப் பாதுகாப்பதற்கு மழை இன்றியமையாதது.

    “விசும்பின் துளிவீழின் அல்லாமற் றாங்கே
    பசும்புல் தலைகாண் பரிது”

    என்ற திருக்குறளைத் திரும்பத் திரும்ப படித்திடுக!

    ஆதலால், தண்ணீரின் இன்றியமையாத் தன்மையை உணர்க! நமது நாட்டு வாழ்வியலில் தண்ணீரின் அருமை பலருக்குத் தெரிவதில்லை. நெறிமுறையின்றித் தாராளமாகச் செலவு செய்பவர்களை “தண்ணீர் மாதிரி செலவு செய்கிறார்கள்” என்று சொல்வதுண்டு. ஆனால் உலக வாழ்க்கையில் தண்ணீர் இன்னும் பற்றாக்குறையென்பதை மறந்து விடக்கூடாது. ஆதலால், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

    தண்ணீருக்குக் காரணமாக இருக்கிற வான் மழையைப் பெறுவதற்கு முதல் துணையாக இருக்கிற நீர் நிலைகளைப் பேணி, நீரைத் தேக்கி வைக்க வேண்டும். நீர்த்திவலைகள் நிறைந்த மேகத்தை மழையாக மாற்றித் தரும் ஈரப்பதக் காற்றைப் பராமரித்து வரவேண்டும். இதற்கு நிறைய மரங்களை வளர்க்க வேண்டும். வீட்டிற்கு ஒருமரம் என்ற செயற்பாடு போதாது. வாழும் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ஒரு மரம் என்ற நியதியை ஏற்றுக்கொண்டு மரம் வளர்க்க வேண்டும். மா மழை வழங்கும் தண்ணீரே இந்த உலகம். இளங்கோவடிகளும்

    “மாமழை போற்றுதும் மாமழை போற்றுது” என்று வாழ்த்தினார்.

     

     
    படம் உதவி: http://www.karaikalport.com/images/csr/environment/green_kalam.jpg
    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

    Share
  • புவிக் குழந்தைகள்

    குளக்கரையில்
    மஞ்சக்குளித்து
    அந்தி தொலைத்து
    இருள் பூசிக்கொள்ளும்
    குருவிகள் பூத்த
    புவிக் குழந்தைகள்!

     

    Live from Halle Park Lake, Collierville, TN, U.S.A!!
    Share
  • வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போமா! (7)

    பவள சங்கரி

    தங்களுக்குத் தேவையானது எது என்பதைத் தெளிவாக அறிந்துணர்ந்து கொண்டவர்கள் எவரோ அவர்களுக்கு அதை அடையக்கூடிய மனவலிமையை இவ்வுலகம் மிக மகிழ்வுடன் வழங்கிக் கொண்டிருக்கிறது!
    வால்ட்டர் ஸ்டேபிள்ஸ்

    சிந்தித்து செயல்படுவோமா?

    எந்த ஒரு காரியமும் மேலோட்டமாக செயல்படுவதற்கும், நல்ல முறையில் சிந்தித்து செயல்படுத்துவதற்கும் உள்ள வேறுபாடு வெளிப்படையாகத் தெரியும். பல நேரங்களில் நாம் சிந்தித்து செயல்படுவதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். அந்த மேலோட்டமான நினைவலைகள் எந்த பாதிப்பையும், எங்கும் ஏற்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. பின் எப்படி சிந்திப்பது?

    சிந்தனை என்பது ஆழ்மனதிலிருந்து பிறக்க வேண்டும். ஆம் உண்மையான ஈடுபாட்டுடன் கூடிய தெளிவான ஆழ்மனச் சிந்தனையாக அது அமைதல் வேண்டும். அப்படி நம் ஆன்மாவைத் தீண்டக்கூடிய ஒரு சிந்தனை வாய்க்கப்பெறும் போது அதன் படைப்பாளி நாம் அல்ல என்பதை நம்மால் உணர முடியும். நாம் நினைத்துப் பார்த்திராத, நம் கற்பனைக்கும் எட்டாத ஒரு சக்தியையும், வழிகாட்டுதலையும் அது வழங்குவதையும் ஒரு மூன்றாம் மனிதரைப் போல தள்ளி நின்று நாமும் உணர முடியும். என்பதுதான் சத்தியம்! ஆம் அப்படி ஒரு சிந்தனையின் வழி நடப்போர் வெற்றியை இழந்ததாக சரித்திரமே இருக்காது என்பதும் உண்மை. அமைதியாக அமர்ந்து, எந்த இடையூறும் இல்லாத சூழலில் தெளிவாகச் சிந்திக்க வழிவகுக்க ஆரம்பித்தாலே வெற்றியின் எல்லையை தொட ஆரம்பிக்கிறோம் என்றுதானே அர்த்தமாகிறது!

    பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் தேவையில்லை

    ந்ம் சக்திக்கு உட்பட்ட, நம்மால் நிறைவேற்றக்கூடிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள ஒரு போதும் தயக்கம் கொள்ள வேண்டியதில்லை. நம் பங்களிப்பு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் நம் உரிமைகளைப்  பெறவும் எளிதாகிறது. அந்த வகையில் ஏற்றுக் கொள்ளும் எண்ணற்ற பொறுப்புகள் மற்றும் வாழ்க்கையை அனுசரித்துச் செல்லும் இந்தப் போக்கு நம் வெற்றிப்பாதையை விரிவடையச் செய்கிறது.

    உண்மையை அன்போடும், கருணையோடும் எதிர்கொள்வோம் !

    ஆம், மாற்ற இயலாத சில உண்மைகளை நேசிக்கக் கற்றுக் கொண்டால் அது நம்மைப் பெரிதாக பாதிக்காது. உதாரணமாக நம்மோடு பணிபுரிபவரோ அல்லது அண்டை அயலாரோ நம்மிடம் இயல்பாக இல்லாமல் எதோ ஒரு கோபத்தை வெளிப்படுத்துபவராக இருக்கலாம். நாம் அடிக்கடி சந்திக்கக்கூடியவர்களின் இந்த மனநிலை நம்மையும் நிச்சயம் பாதிக்கக்கூடும். அது நம் அன்றாடப் பணிகளை முடக்கிப் போட்டுவிடும். இது போன்ற சூழலில் நாமும் அவருடைய எண்ணங்களைப் பிரதிபலிக்காமல், உண்மையான நேசத்தை அங்கு வெளியிட்டால் நாளடைவில் அவரும் நம்மிடம் அதே அன்பை வெளிப்படுத்தும் இயல்பிற்கு வந்துவிட வாய்ப்புகள் அதிகம். அப்படி அவர்களால் வர முடியாவிட்டாலும் அந்த அவர்களுடைய எண்ணம் நம்மை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நம் நேசம் அதற்கொரு கவசமாகிவிடும்.  இதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவர்களை நேராகச் சந்திக்க வேண்டிய தருணம் ஏற்படும் பொழுதெல்லாம், அவருடைய கண்களை நேரிடையாகச் சந்தித்து, ஒரு “ஹாய்” அல்லது புன்னகையுடன் ஒரு அன்பான பார்வையுடன் ஒரு ‘வணக்கம்’ சொல்ல வேண்டியது. இந்த சின்ன செயல் அவரையும் மனம் மாறச் செய்வதோடு, நம்மையும் உற்சாகமாக நம் பணிகளைத் தொடர சக்தியைக் கொடுத்துவிடும். முயன்றுதான் பார்ப்போமே! மீண்டும் நினைவு கூர்வோம். நாம் அச்சம், கோபம் மற்றும் வெறுப்பு கொள்ளக்கூடிய உண்மைகளை அன்போடும், கருணையோடும், பொறுமையோடும் எதிர்கொள்வது மிக சக்தி வாய்ந்ததொரு மந்திரம். அன்றாடம் அந்த மந்திரத்தை உச்சரித்து நம் வெற்றிப் பாதையை விரிவாக்குவோம்!

    இலட்சியம் ஏற்படுத்துவது மாற்றம் என்றால்
    அலட்சியம் ஏற்படுத்துவது ஏமாற்றம்தானே?

    தொடருவோம்

    Share
  • “ பயம் “

    தமிழ்த்தேனீ

    ரமேஷ் அவனுடைய முறை  வருவதற்காக காத்திருந்தான் , டோக்கன் எண் 9 என்று அழைத்தார்கள். ஓ இன்னும் ஆறு  பேர் போய்விட்டு வரவேண்டுமா, பல்வலியுடன் காத்திருந்தான் ரமேஷ். வாழ்க்கையில் தலைவலி, பல் வலி, காது வலி ,கண் வலி என்று எது வந்தாலும்  அதைத் தவிர எதுவந்தாலும் பொறுத்துக் கொள்ளலாம் என்று தோன்றும், ஆனால் எந்த வலி வந்தாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதே உண்மை என்று தோன்றியது ரமேஷுக்கு. அட துன்பம் வரும் வேளையிலே சிரிங்கன்னு வள்ளுவர் சொன்னாப்  போலே .
    பல்வலி வந்து இங்கே வந்து உக்காந்து இருக்கையில் ஏதோ தத்துவமெல்லாம் தோன்றுகிறதே   என்று சிரிப்பாய் வந்தது  ரமேஷுக்கு.  சிரிக்க முயன்று பல் வலியினால் சிரிப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டு நிமிர்ந்தான்.  அந்தக் காட்சி கண்ணில் பட்டது.ஒரு பெரியவர்  உட்கார்ந்திருந்தார், அவருக்கு பக்கத்தில்  ஒரு பெண்மணி அவர் மனைவியாக இருக்க வேண்டும், அந்தப் பெண்மணி முகத்தில் கவலை, சற்று நேரம் கணவன் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்துவிட்டு, ஏதோ தோன்றவே தண்ணீர் பாட்டிலை எடுத்து அவருக்கு நீட்டினாள், அவரும் அந்தப் பாட்டிலை வாங்கி  தண்ணீர் குடித்துவிட்டு  அவளிடம் நீட்டினார், அந்தப் பெண்மணியும்   சற்று தண்ணீர் குடித்துவிட்டு பாட்டிலை உள்ளே வைத்தார்,
    ஏங்க பல்லை எடுக்கணும்னாலோ ,  இல்லேன்னா ரூட் கெனால் செய்யணும்னு சொன்னாலோ  வலியைப் பொறுத்துக்க முடியுமா என்றாள் கவலையோடு, எல்லாம் சமாளிச்சுதான் ஆகணும் , நீ எதுக்கும் கவலைப் படாதே  நான் பாத்துக்கறேன்  என்றார் அவர், அரை மணிக்கொரு முறை அந்தப் பெண்மணி ஆதரவாக  தண்ணீர் கொடுப்பதும் ,ஏதோ கவலையுடன் பேசுவதும் அவர் ஆறுதல் சொல்வதுமாக நேரம் நகர்ந்தது.
    டோக்கன் 15 என்று அழைத்தவுடன் அவரும் அந்தப் பெண்மணியும் மெதுவே உள்ளே  போனார்கள், சற்று நேரத்தில் அவர் மட்டும் வெளியே வந்தார்.
    நீங்க இங்கே உக்காருங்க ,அவங்களுக்கு ட்ரீட்மென்ட் செய்யும்போது  நீங்க அங்கேயே இருந்து பாத்துகிட்டு இருந்தா  உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும், அதுனாலே ட்ரீட்மென்ட் முடிச்சிட்டு டாக்டர் கூப்புடுவாங்க ,அதுக்கப்புறம் உள்ளே போங்க என்று அவரை உட்கார வைத்தாள் நர்ஸ்.
    ரமேஷுக்கு அதிர்ச்சியாய் இருந்தது . மெதுவே அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்து  ஏங்க உங்களுக்கு பல் வலி இல்லையா  என்றான்.அட ஏன் தம்பி நீங்க வேற எனக்கு ஒண்ணும் இல்லே, அவளுக்குதான் பல் வலி  என்றார்,
    நீங்க தப்பா நெனைக்கலேன்னா நான் ஒண்ணு கேக்கலாமா  என்றான் ரமேஷ்
    கேளுங்க தம்பி , உள்ளே அவளுக்கு ட்ரீட்மென்ட் நடக்கற வரைக்கும் நமக்கும் பொழுது போகணும் இல்லே, சும்மா கேளுங்க  என்றார் பெரியவர்
    ஏதோ உங்களுக்குத்தான் பல் வலி போலவும், அடிக்கடி உங்களுக்கு ஆறுதல் சொல்லிகிட்டு  ,அடிக்கடி குடிக்கத் தண்ணீர் கொடுத்து உங்களை கவனிச்சிகிட்டாங்க உங்க மனைவி. அதுனாலேதான் நான் உங்களுக்கு பல்வலின்னு  தப்பா நெனைச்சுகிட்டு  உங்களுக்கு   பல் வலி இல்லையான்னு கேட்டேன் என்றான் ரமேஷ்
    ஓ அதுவா தம்பி உலகத்திலே பலவிதமான மனிதர்கள் இருக்காங்க, அதுலே ஒரு விதம் என் மனைவி, அவளுக்குதான் பல் வலி, ஆனா அவளுக்கு பயம் அதிகம், அதுனாலே சந்தேகம் கேட்டுகிட்டே இருந்தா. பயம் அதுனாலே அடிக்கடி  தண்ணீர் குடிச்சா, அதுவும் பத்தாக் குறைக்கு  அவளுக்கு நெனைப்பு நான் ரொம்ப பயந்த சுபாவம் உள்ளவன்னு. அதுனாலே   எனக்கு தைரியம் சொல்றாப் போலே அவ தனக்குதானே தைரியம் சொல்லிக்குவா. அவளோட பயத்தைப் போக்கிக்க  அப்பப்போ தண்ணீர் குடிப்பா, அப்பிடியே எனக்கும் குடுப்பா, அதை நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க அதான் என்றார்.
    பலபேரு அவங்க பயத்தையெல்லாம் நம்ம மேலே ஏத்திடுவாங்க, ஏனுங்க ஜாக்கிறதையா வண்டி ஓட்டிகிட்டு போயிட்டு வாங்கன்னு பொண்டாட்டி சொன்னா , அது நம்ம மேலே உள்ள அக்கரையாவும் இருக்கலாம், நம்ம மேலே உள்ள அவநம்பிக்கையாவும் இருக்கலாம். இதெல்லாம் உங்களுக்கும் கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் வாழ்ந்தப்புறம் உங்களுக்கும் புரியும்  என்றார்
    ரமேஷுக்கு உண்மையிலேயே இப்போதுதான் பயம் வந்தது, அவனுக்கு எப்படிப் பட்ட பெண் மனைவியாக வரப் போகிறாளோ  என்று
    அவன் தன் பயத்தைப் போக்கிக் கொள்ள  பெரியவரைப் பார்த்து   நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க என்றான்.
    பெரியவருடைய  மனைவி  வெளியே வந்தாள், ஓடிப்போய் அவளத் தாங்கி கூட்டிவந்து   உட்கார வைத்தார் பெரியவர்.
    டோக்கன்  எண் பதினாறு என்று குரல் கேட்டது, சார் கொஞ்சம் தண்ணி குடுங்க  என்று அவரிடம் தண்ணீர் பாட்டிலை  வாங்கி  கொஞ்சம் குடித்துவிட்டு, சார் நீங்களும் கொஞ்சம் தண்ணீர் குடிங்க என்று சொல்லிவிட்டு   பயத்துடன் உள்ளே சென்றான்   ரமேஷ்

    Share
  • தாமரை நெஞ்சம்

    மேகலா இராமமூர்த்தி

    கடற்கரையில் தனியே அமர்ந்திருந்த  தாமரை சுற்றும் முற்றும் பார்த்தபடியே பதட்டத்தோடு  காணப்பட்டாள். கடலிலிருந்து எழும்பி வந்த ஓர் அலை அவள் ஆடையை நனைத்துவிட்டுச் சென்றது. ’ஓ’ என்று கடல் எழுப்பும் பேரிரைச்சல் சிறிது நேரமாக அவள் உள்ளத்துக்குள்ளும் கேட்டுக்கொண்டிருந்தது. யாரையோ எதிர்பார்த்தபடி அவள் தவிப்புடன் அமர்ந்திருப்பதை அவள் முகம் நன்றாக எடுத்துக் காட்டியது

    கைப்பையிலிருந்த செல்ஃபோன்  அப்போது ஒலிப்பதைக் கேட்டு சற்றே திடுக்கிட்டவளாய் அதை எடுத்தாள். வீட்டிலிருந்துதான் ஃபோன்.

    எடுத்து ’ஹலோ’ என்றாள். அவளுடைய தந்தைதான் பேசினார், “என்ன தாமரை மணி ஆறாகப் போகுது…ஏன் இன்னும் வீட்டுக்கு வரல, பஸ்ஸு கெடக்கலையாம்மா?”

    என்ன சொல்வது என்று  சில வினாடிகள் யோசித்துவிட்டு, ”இல்லப்பா, எங்கூட வேல பாக்குற ஃப்ரெண்டு ஒருத்திக்கு இன்னிக்கு பர்த் டே. அதான் ஈவ்னிங் ’ட்ரீட்’ தரேன்னு ஹோட்டலுக்குக் கூட்டிக்கிட்டு வந்திருக்கா. அவளோடதாம்பா இப்ப ஹோட்டல்ல ஒக்காந்திருக்கேன். மத்தியானமே அம்மாவுக்குப் ஃபோன் பண்ணி இதப் பத்தி சொல்லணும்னுதான் நெனச்சேன்…ஆனா வேல டென்ஷன்ல மறந்துட்டேன்….ஸாரிப்பா, சீக்கிரமே கெளம்பி வீட்டுக்கு வந்துடறேன். கவலப்பட வேணான்னு அம்மாட்டயும் சொல்லிடுங்க.”

    “சரிம்மா, காலம் கெட்டுக்கெடக்கு….ராத்திரில  லேட்டா வரதெல்லாம் அவ்வளவு  நல்லதில்ல. சீக்கிரம் வந்துடு” என்றபடி ஃபோனைத் துண்டித்தார்.

    ”சே…தப்பு செஞ்சுட்டோமோ…இந்த  ஆதவன் கூப்பிட்டார்னு பீச்சுக்கெல்லாம் தனியா வந்திருக்கக் கூடாது. இதனால தேவையில்லாம அப்பாட்ட பொய் சொல்லவேண்டியதாப் போச்சே” என்று தன்னையே நொந்து கொண்டாள்.

    ”ஹலோ தாமரை ரொம்ப நேரமாக் காத்திட்டிருக்கீங்களா? ஸாரி ஃபார் த டிலே..” என்ற குரல் கேட்டுத் திரும்பியவள், சமீபமாக வந்து கொண்டிருந்த ஆதவனைச் சற்று கோபத்தோடு பார்த்து “ஆமாங்க, அரை மணி நேரமாக் காத்திட்டிருக்கேன்…. நீங்க ஏன் சொன்ன டயத்துக்கு வரலே…?”

    “ஸாரிங்க….இன்னிக்குன்னு பாத்து ஆபீஸுல எதிர்பாராத வேல ஒண்ணு வந்துடுச்சு. அத முடிச்சுட்டுக் கெளம்பக் கொஞ்சம் ’லேட்’ ஆயிடுச்சு. உங்கள வெய்ட் பண்ண வச்சதுக்கு ஐயாம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி.”

    ”அப்படியா? சரி….பரவாயில்ல…..ஏதோ முக்கியமான விஷயம் பேசணும் கண்டிப்பா வாங்கன்னு சொன்னதால தான் நான் இங்க வந்தேன். மத்தபடி இங்கக் கடற்கரையிலே தனியா வந்து உக்காந்திருக்கறது எனக்கு ரொம்பக் கூச்சமா இருக்கு” என்றாள் தாமரை.

    ”உங்ககிட்ட மனசு விட்டுப் பேசணும்னுதான் தனியா மீட் பண்ணுவோம்னு சொன்னேன் தாமரை. மறுப்பு எதுவும் சொல்லாம என்ன சந்திக்க வந்ததுக்கு ரொம்ப தாங்ஸ்”

    சிறிது நேரம் இருவரும் ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்தனர். சுண்டல் விற்கும் சிறுவனொருவன் அருகில் வந்து, ”அண்ணே! சுண்டல் வேணுமா? சூடா இருக்குண்ணே” என ஆதவனைப் பார்த்துக் கேட்க, அவனோ தாமரை முகத்தைப் பார்த்தான். அவள் ”வேண்டாம்பா” என்று பதில் சொல்லிவிட்டு, ”ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்லிட்டு சும்மா உட்கார்ந்திருந்தா எப்படி?” என்று கேட்டாள்.

    ”ம்..ம், முக்கியமான மேட்டர் பேசணும்னுதான் வந்தேன். ஆனா… இப்ப பேசவே வார்த்த கெடக்க மாட்டேங்குது.”

    ”என்ன ஆதவன் இது….ஆச்சர்யமா இருக்கு. பஸ்ஸுல அவ்ளோ கலகலப்பா எல்லாரோடயும் பேசுவீங்க; ஜோக் அடிப்பீங்க. இப்ப என்னாச்சு உங்களுக்கு…?” என்ற தாமரையின் கேள்வி அவனுக்குச் சற்றே தைரியத்தை அளித்தது.

    ”அது ஒண்ணுமில்லீங்க தாமரை…நம்ம எதிர்காலம் பத்திப் பேசத்தான் கூப்பிட்டேன்.”

    ”நம்ம எதிர்காலத்தப் பத்தியா? புதிர் போடாம விஷயத்த சொல்லுங்க  ப்ளிஸ்.”

    ”அது வந்து….நம்ம ரெண்டு பேருக்குமே ஒரே மாதிரியான ’டேஸ்ட்’ இருக்கு… ஃபார் எக்ஸாம்ப்ல்…..எனக்கு இளையராஜா பாட்டுக்கள் பிடிக்கும், உங்களுக்கும் பிடிக்குமுன்னு ஒரு தடவை சொல்லியிருக்கீங்க. எனக்கு கவிதைகள் வாசிக்கப் பிடிக்கும்; உங்களுக்கும் பிடிக்கும், எனக்குச் சரித்திர நாவல்கள் பிடிக்கும், உங்களுக்குந்தான் இல்லையா?” என இழுத்தான்.

    அவன் போடும் ரசனைப் பட்டியலைக் கேட்டுச் சிரித்த தாமரை ”அதெல்லாம் சரிதான்…அதுக்கும் நாம இங்கே சந்திக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?” என்று ஒன்றும் விளங்காதவள் போல் கேட்க, இனியும் சுற்றி வளைக்க வேண்டாம் என்று முடிவெடுத்துத் தொண்டையை லேசாகக் கனைத்துக் கொண்ட ஆதவன், தாமரையின் முகத்தைப் பார்த்தான். சினிமா ஹீரோக்களுக்கு வருவதுபோல் திடீரென்று ஓர் துணிச்சலும், வீரமும் அப்போது அவனுக்கு வந்தது. “சுத்தி வளைக்காம நேரடியாவே விஷயத்துக்கு வரேனே, எனக்கு உங்களப் பிடிச்சிருக்கு. உங்களை லவ் பண்றேன்; கல்யாணம் செஞ்சுக்கவும் ஆசப்படறேன்” என்றான்.

    தாமரை சற்று நேரம் பேசாமல் ஏதோ யோசனை செய்யும் பாவனையில் அமர்ந்திருந்தாள். பின்பு அவனைப் பார்த்து மெல்லிய குரலில், ”என்ன சொன்னீங்க…..என்னக் கல்யாணம் செஞ்சுக்க ஆசப்படறேன்னா….நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தீங்களா?”

    ”நல்லா யோசிச்சுட்டேன் தாமரை. உங்கள மனைவியா அடையணும்னு ஆசப்படறேன். .உங்களுக்கு என்னப் புடிச்சிருக்கா…? என்னக் கல்யாணம் செஞ்சுக்க சம்மதமா சொல்லுங்க?” ஆவலோடு அவளைப் பார்த்தான்.

    மெல்லிய முறுவலை முகத்தில்  தவழவிட்டவள், ”ஒங்களையே எனக்கு ஆறு மாசமாத்தான் தெரியும். நாம காலையில ஒரே பஸ்ஸுல ஆபீஸ் போறோம். ஈவ்னிங் கூட திரும்பிவரும்போது அடிக்கடி ஒரே பஸ்ஸுல மீட் பண்றோம். அப்படித்தான் நீங்க எனக்கு அறிமுகம். யூஷுவலா ஜென்ட்ஸ்கிட்ட நான் அதிகம் பேச்சு வச்சுக்கறதில்ல. ஆனா ஒங்கள்ட்ட மட்டும் பேசறேன்னா அதுக்குக் காரணம் எந்த பந்தாவும் இல்லாம நீங்க எல்லாரோடையும் பழகற விதமும், உங்க பேச்சுல இருந்த கண்ணியமும் தாங்க. ஆனா இன்னிக்கு…..”

    ”இன்னிக்கு  என்ன தாமரை…?” சற்று பதட்டத்தோடு இடைமறித்த ஆதவன், “இன்னிக்கு உங்கள நான் பீச்சுக்கு வரச்சொன்னதால என்ன தப்பா நெனச்சுட்டீங்களா…?” சற்று கவலையோடு கேட்டான்.

    ”இல்ல ஆதவன். அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல……அப்படி ஒரு சந்தேகம் எனக்கிருந்தா, இன்னிக்கு மத்தியானம் நீங்க எனக்கு ஃபோன் செஞ்சு, எங்கிட்டக் கொஞ்சம் தனியாப் பேசணும், ஆபீஸ் முடிஞ்சதும் பீச்சுக்கு வரமுடியான்னு கேட்டப்பவே மாட்டேன்னு சொல்லியிருப்பேனே…? நீங்க ஒரு ‘ஜென்டில்மேன்’ங்ற நம்பிக்கையிலதான் நான் உங்கள சந்திக்க ஒத்துக்கிட்டேன்.”

    ”அப்பாடி….! நம்ம மேல நல்ல ’ஒபீனியன்’தான் வச்சிருக்கா, அப்ப நம்ம காதலையும் கண்டிப்பா ஏத்துப்பா” என்ற நம்பிக்கையோடு தாமரையைப் பார்த்தான். ’ஆலிவ் க்ரீன் கலர் காட்டன் புடவை’யில் பூலோக ரம்பையாக, அவன் கண்களுக்கு அவள் தெரிந்தாள். சில நொடிகள் கனவுலகில் சஞ்சரித்தவன் மீண்டும் நனவுலகுக்குத் திரும்பி வந்தான்.

    தாமரைக் கடலைப் பார்த்தபடியே அமைதியாக உட்கார்ந்திருப்பதைக் கண்டு,

    அவள்  தன் கேள்விக்கு இன்னும் எந்த பதிலையும் சொல்லவில்லை என்பதை ஞாபகப்படுத்திக்கொண்டு, “தாமரை நான் கேட்ட கேள்விக்கு நீங்க ஒரு பதிலும் சொல்லலையே… ஏதோ யோசிச்சிட்டு இருக்கற மாதிரி இல்ல தெரியுது…”

    ”அதெல்லாம்  ஒண்ணுமில்லீங்க.”

    ”அப்படீன்னா…..உங்க பதிலச் சொல்லுங்க….ஆனா நல்ல பதிலாச் சொல்லுங்க…ப்ளீஸ்” கேட்டுவிட்டு ஏக்கத்தோடும், காதலோடும் அவளைப் பார்த்தான்.

    ”சொல்றேங்க, ஆனா அதுக்கு முன்னாடி உங்க தங்கச்சி இப்ப எப்படி இருக்கான்னு சொல்லுங்க?” என்ற தாமரையை ஒன்றும் புரியாமல் பார்த்தவன், ”தங்கச்சியா..?அப்படி ஒருத்தி இருக்கறதையே நான் மறந்திட்டேன்….இந்த நல்ல நேரத்துல அவள ஏன் ஞாபகப்படுத்தறீங்க” என்றான் எரிச்சலுடன்.

    ”காரணம் இருக்குங்க, அதான்  ஞாபகப்படுத்தினேன்”

    ”எவ்வளவு ஆசையா அவள வளத்தாங்க எங்க வீட்டுல..அதுலயும் கடைக்குட்டிங்கறதால ரொம்ப செல்லம். அவ கேட்டதெல்லாம் வாங்கிக் குடுத்தாரு எங்கப்பா”

    ”அப்படின்னா….ஷீ இஸ் வெரி லக்கின்னுதான் சொல்லணும்.”

    “ஆமாங்க. நான் ’பைக்’ கேட்டப்ப முடியாதுன்ன எங்க அப்பா அவ கேட்ட உடனே ’ஸ்கூட்டி’ வாங்கிக் குடுத்தாரு. அவளத் தலையில தூக்கி வச்சுக்கிட்டில்ல ஆடினாங்க. அதுக்கு சரியான சூடு குடுத்துட்டு, எவனோ கூடப் படிச்சவனோட ஓடிப் போயிக் கல்யாணம் பண்ணிக்கிட்டா. நன்றி கெட்டவ. எங்க அம்மாவோட மனநிலகூட அதனால கொஞ்சம் பாதிக்கப்பட்டுடிச்சு. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமாத் தேறிட்டு வராங்க…இதெல்லாம் நான் ஏற்கனவே உங்களுக்குச் சொல்லிருக்கேனே….இப்ப ஏன் புதுசாக் கேக்கறீங்க” என்று அலுத்துக்கொண்டு ”நான் உங்களக் கேட்டதுக்குப் பதிலே சொல்லாம வேற ஏதேதோ சம்பந்தமில்லாம பேசறீங்களே தாமரை.”

    ”சம்பந்தமில்லாத விஷயத்தப் பேசலைங்க. நமக்கும் இதுக்கும் நெறயவே சம்பந்தமிருக்கு.

    ”எப்படி?”

    “உங்க தங்கச்சி, உங்க குடும்பத்துக்கு விருப்பமில்லாத, உங்க சமூகத்துலேர்ந்து வேறுபட்ட வேற சமூகத்தச் சேர்ந்த ஒரு பையனக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கறதால தானே நீங்கல்லாம் அவள வெறுக்கறீங்க. உங்க .குடும்பத்திலேயே சேக்கமாட்டேங்கறீங்க. இப்ப அதே தப்ப நாம செஞ்சாப் பரவால்லியா?” என்றவளைக் குழப்பத்தோடு பார்த்தான்.

    ”இதப் பாருங்க ஆதவன். நீங்க ரொம்ப நல்லவர்தான். சொல்லப்போனா இந்த காலத்துப் பசங்க கிட்ட இருக்கற சிகரெட், குடின்னு எந்தக் கெட்ட பழக்கமும் உங்ககிட்ட இல்லங்கறத நானே கவனிச்சுருக்கேன். கை நிறைய சம்பாதிக்கவும் செய்யறீங்க…ஸோ யூ ஆர் அன் எலிஜிபில் பாச்சுலர்……நோ டவுட் அபௌட் தட். பட்… நம்ம கல்யாணம் நடக்கறதுக்கு அது மட்டுமே போதுமா? நானும் நீங்களும் வேற வேற சமூகத்த சேந்தவங்கங்கறது உங்களுக்குத் தெரியும் இல்லயா? என்னக் கல்யாணம் செஞ்சுக்கமட்டும் உங்க வீட்டுல ஒத்துப்பாங்களா…சொல்லுங்க பாப்போம்?”

    ”அது வந்து…. அதப்பத்தி நீங்க கவலப்படாதீங்க தாமரை. நான் இன்னிக்கு நைட்டே எங்க வீட்டுல இதப்பத்திப் பேசிடறேன். அப்புறம் உங்களயும் அழைச்சுட்டுப்போய் அவங்க முன்னாடி நிறுத்தறேன். உங்களப் பாத்தா எங்க அம்மா, அப்பாவுக்கு நிச்சயம் புடிக்குங்க. நம்ம கல்யாணம் நடக்கறதில எந்தப் பிரச்சனையும் வராம நான் பாத்துக்கறேன். நீங்க மட்டும் சரின்னு சொல்லுங்க போதும்”

    அதைக் கேட்டதும் அவன் அறியாமையை நினைத்து அழுவதா…சிரிப்பதா என அவளுக்குப் புரியவில்லை. ”சரிங்க…நீங்க சொல்றபடியே ஒங்க அம்மா, அப்பா ஒத்துக்கறாங்கன்னே வெச்சுப்போம். அதுமட்டும் போதுமா….? எங்க அம்மா, அப்பாவோட சம்மதம் வேண்டாமா உங்களுக்கு?”

    ”அதுவும்தாங்க வேணும். வேணா நானே உங்க வீட்டுலயும் வந்து பேசி நம்ம கல்யாணத்துக்குச் சம்மதம் வாங்கறேன்.”

    ”கொழந்த மாதிரி பேசறீங்க ஆதவன். எங்க அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இந்த காதல், கத்தரிக்காயெல்லாம் சுத்தமாப் புடிக்காது. அவங்க ஒரு நாளும் இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க.”

    “என்ன தாமரை…இப்படி சொல்றீங்க. உங்கப்பாவப் பத்தி எனக்கும் கொஞ்சம் தெரியும். அன்னிக்கு ஒங்க அப்பாவோட ஃப்ரெண்டு ஒருத்தர் நம்ம பஸ்ஸுல வந்தாரே….அவர் ஒங்க அப்பா மாதிரி எல்லாரும் முற்போக்குச் சிந்தனை உடையவங்களா இருந்துட்டா வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லதுன்னு ஒங்ககிட்ட சொல்லிட்டு இருந்தாரே….அது பக்கத்து சீட்டுல ஒக்காந்திருந்த என் காதிலயும் விழுந்தது. அப்படிப்பட்டவரு லவ் மேரேஜை ஒத்துக்க மாட்டார்னு நீங்க சொல்றது நம்பற மாதிரி இல்லையே.”

    ”அவர் எங்கிட்ட சொல்லிட்டிருந்தத நீங்களும் கேட்டீங்களா? தட்ஸ் ஓகே….அது ஒண்ணும் பெரிய ரகசியமில்ல. அவர் சொன்னாப்ல எங்கப்பா முற்போக்குச் சிந்தனை உடையவர்தான். ஆனா…முற்போக்குங்கற பேருல நம்மள மாதிரி இளைய தலைமுறையினர் செய்ற எல்லாத் தப்பையும் அவர் ஆதரிக்கமாட்டார்.”

    ”புரியலயே..?”

    ”எங்க அப்பாவப் பத்தி சொல்லணும்னா….அவர் சில விஷயங்கள்ள முற்போக்கானவர்….சில விஷயங்கள்ள பழமைய ஆதரிக்கிறவர், கன்வென்ஷனல் டைப்.”

    ”தெளிவாக் கொழப்பறீங்க தாமரை.”

    ”இதுல கொழப்பம் ஒண்ணும் இல்லீங்க. ஒங்களுக்கு புரியற மாதிரியே சொல்றேனே….பெண்கள் நெறயப் படிக்கணும், தங்களோட சொந்தக் கால்ல நிக்கணுங்கறதுல அவர் புதுமை விரும்பி. அதே சமயம் புள்ளைங்க, பெத்த அப்பா அம்மாவத் தூக்கி எறிஞ்சுட்டுத் தங்களோட மேரேஜ் லைஃபை தாங்களே முடிவு செய்யறதுல அவருக்கு உடன்பாடு கிடையாது. அதுல பழமைவாதின்னு சொல்லலாம்.”

    ”அது எப்படி இவ்வளவு ஸ்ட்ராங்காச் சொல்றீங்க. இதுபத்தியெல்லாம் அவரோட நீங்க ஏற்கனவே டிஸ்கஸ் பண்ணியிருக்கீங்களா..என்ன?”

    ”ஆமாங்க. எங்க சொந்தக்கார பையன் ஒருத்தன் வேற ’கம்யூனிட்டி’ பொண்ணக் கல்யாணம் செஞ்சுகிட்டது சம்மந்தமா சமீபத்தில எங்க அம்மாவும், அப்பாவும் ரொம்பக் கோவமாப் பேசிக்கிட்டு இருந்தத நானே பாத்திருக்கேன். அந்தப் பையனோட பேரண்ட்ஸ் அவங்க சொந்தக்காரங்க மொகத்துலயே முழிக்க முடியாதபடி அந்தப் பையன் செஞ்சுட்டான்னு அவங்க திட்டிட்டு இருந்ததும் எனக்குத் தெரியும். அப்ப நானே எங்க அப்பாகிட்ட, ”என்னப்பா…ஒங்களுக்குப் பெரியாரோட கொள்கைகள் புடிக்கும்னு அடிக்கடி சொல்லிக்கறீங்க, ஆனா அதுக்கு ’ஆப்போசிட்டா’ காதல் கல்யாணத்த எதிர்க்கறீங்களேன்னேன்.”

    ”நீங்களே அவரக் கேட்டீங்களா? பரவாயில்லியே………அதுக்கு அவர் என்னங்க சொன்னார்?” அடங்காத ஆவலோடு கேட்டான் ஆதவன்.

    அவரா…….? ”எனக்குப் பெரியாரோட கொள்கைகள் பிடிக்கும்தான், அதுல சந்தேகமில்ல. காதல் கல்யாணம் செஞ்சுகிட்டா சமுதாயத்தில ஏற்றத்தாழ்வ உண்டாக்குற ஜாதிங்கற நோய் ஒழியும்னு நெனச்சுப் பெரியார் அப்படிச் சொன்னார். ஆனா இங்க நடந்தது என்னம்மான்னு?” என்னக் கேட்டார்.

    “எனக்குத் தெரியலப்பா”ன்னு நான் சொன்னேன்.

    ”காதல் கல்யாணம் செஞ்சுக்கறவங்க என்ன ஜாதி ஒழிப்பா செஞ்சுட்டாங்க? இல்லையே. இப்படிக் கல்யாணம் செஞ்சுகிட்டவங்கள்ள ஆணோ, பெண்ணோ ஒருத்தர் இன்னொருத்தருடைய ஜாதி அல்லது மத சம்பிரதாயத்த ஃபாலோ பண்றாங்க. அப்படித்தானே? இதுல கொடும என்னன்னா….”காதல் கல்யாணம் செஞ்சுகிட்ட பாவத்துக்காக அந்தப் பொண்ணுதானே எல்லாத்தையும் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கு. ஆம்பளைங்க எதையும் விட்டுக் கொடுக்கறதில்லியேம்மா….அவங்களுக்குப் பிறக்கற புள்ளங்ககூடத் தன் அப்பாவோட ஜாதியத்தானே தங்களோட ஜாதியா எல்லா ’சர்டிஃபிகேட்லயும்’ போட்டுக்கறாங்க. இப்பசொல்லு….இதுல ஜாதி எங்க ஒழிஞ்சிருக்கு?”

    ”எங்கப்பாவோட இந்தக் கேள்விக்கு நெஜமாவே எனக்குப் பதில் தெரியல ஆதவன்.”

    ”என்ன தாமரை நீங்க…..உங்க அப்பாவப் பத்தி இப்படிச் சொல்றீங்க…நான் நம்ம கல்யாணத்துக்கு எங்க வீட்டுலதான் எதிர்ப்பு வரும், அத எப்படியாவது சமாளிச்சிடலாம்னு நெனச்சுகிட்டு இருந்தேன். நீங்க சொல்றதப்பாத்தா எதிர்ப்பே உங்க வீட்டுலேந்துதான் பலமா வரும்போலத் தெரியுது.”

    ”ஆமா…ஆதவன். கண்டிப்பா எங்கவீட்டுலேந்து எதிர்ப்பு வரத்தான் செய்யும். இப்ப சொல்லுங்க…..இப்படிப் பெத்தவங்க எல்லாரையும் பகைச்சுகிட்டு, அவங்க மனசயும் நோக அடிச்சுட்டு நாம கல்யாணம் செஞ்சுக்கணுமா? அப்படி செஞ்சுகிட்டா அந்தக் கல்யாணம் நமக்கு என்ன சந்தோஷத்தக் கொடுத்துடும்?”

    அவனிடம் பதிலில்லை.

    ”காதல் கல்யாணங்கறது மேலோட்டமாப் பாத்தா ரொம்ப இனிமையாவும், சந்தோஷமானதாவும்தான் தெரியுது. ஆனா உண்மையிலேயே கல்யாணத்துக்கு அப்புறம்தான் அதோட சுயரூபமே தெரிய வருது. இதெல்லாம் இல்லன்னு சொல்ல முடியுமா உங்களால?” தாமரையின் ஆழமான கேள்வியில் ஆடிப் போய்விட்டான் ஆதவன்.

    ”சரி  முடிவா என்னதான் சொல்றீங்க  தாமரை?” கேட்கும்போதே தொண்டை அடைத்தது அவனுக்கு.

    ”நம்ம அப்பா, அம்மாவுக்குத் தல குனிவ ஏற்படுத்தற வகையில என் கல்யாணத்த ’நானே’ முடிவு செய்ய விரும்பலீங்க. அவங்க பாத்து முடிவு செய்யற ’எனக்கும் பிடிச்ச’ ஒரு பையனக் கல்யாணம் செஞ்சுக்கவே நான் ஆசப்படறேன். அதுதான் என்னோட எதிர்காலத்துக்கும் நல்லது.”

    ”அப்ப, உங்களுக்கு என்ன பிடிக்கல…இல்லையா….?”

    ”சே…சே..அப்படியில்லீங்க. உங்க குணமும், பழக்க வழக்கங்களும் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. நீங்க சொல்ற மாதிரி நம்ம ரசனைகளும் ஒண்ணா இருக்கு, நான் ஒத்துக்கறேன். ஆனா… அது எல்லாத்தையும்விட நம்ம பெத்தவங்களோட சம்மதமும், ஆசீர்வாதமும்தானே நம்ம கல்யாணத்துக்கு ரொம்ப முக்கியம். அது நமக்குக் கெடைக்கும்னு எனக்குத் தோணல. ஸோ…. ’ஸாரி ஆதவன், ஐ கெனாட் மேரி யூ…….ப்ளீஸ் டோன்ட் கெட் மீ ராங்.”

    “உங்க முடிவ இப்பவே சொன்னதுக்கு தாங்க்ஸ் தாமரை. உண்மையிலேயே எனக்கு இது ஏமாற்றமாத்தான் இருக்கு. இருந்தாலும் என்ன செய்யறது…? நீங்க சொல்றதுல இருக்கற நியாயம் எனக்கு நல்லாப் புரியுது. காதல் கல்யாணத்தப் பத்தி இவ்வளவு ஆழமால்லாம் நான் இதுவரைக்கும் யோசிச்சதில்லீங்க. அதோட இன்னொரு பக்கத்தையும் நீங்க எனக்கு இன்னிக்கு புரியவச்சுட்டீங்க.”

    ”எந்த ஒரு விஷயத்தையும் ’நம்ம பாயிண்ட் ஆஃப் வியூலேர்ந்து’ மட்டுமே பாக்காம அடுத்தவங்க எடத்திலேர்ந்தும் பாக்கக் கத்துக்கணும். அப்பதாங்க அத நம்மளால முழுசாப் புரிஞ்சுக்க முடியும். இப்ப ஒங்க தங்கச்சி விஷயத்தையே எடுத்துக்கங்க….அவ என்ன தப்பு செஞ்சா…..அவ இஷ்டப்படி லவ் மேரேஜ் செஞ்சுகிட்டா, அவ்வளவு தானே? அதுக்கு நீங்களும், ஒங்க அப்பா அம்மாவும் குடும்ப கௌரவமே போச்சுன்னு வானத்துக்கும், பூமிக்கும் குதிக்கலையா? இப்ப நீங்களும் அதே தப்ப செய்ய ரெடியா இருக்கீங்க. அது தப்புன்னும் ஒங்களுக்குத் தோணவேயில்ல. ஒங்க தங்கச்சி செஞ்சா தப்பு….அதயே நீங்க செஞ்சா தப்பில்லங்கறது என்ன நியாயங்க?” தாமரை கேட்கத் தலைகுனிந்து கொண்டான் ஆதவன்.

    அவன்  முகத்தில் தெரிந்த வருத்தமும், ஏமாற்றமும் தாமரையை வேதனையடையவே  வைத்தது.

    “பாத்தீங்களா…நான் சொன்னதக் கேட்டதும் உங்க முகம் வாடிப் போச்சு. உங்கக் காதல மறுத்ததுக்கு என்ன மன்னிச்சுடுங்க. ஆனா…நான் சொல்றது சரியா, இல்லையாங்கறதப் பொறுமையா ஒக்காந்து யோசிச்சுப் பாருங்க, உங்களுக்கே புரியும். பின்னால வரப்போற பிரச்சனைகள முன்னாலயே யோசிச்சுப் பாத்து, நம்ம ரெண்டு பேருக்கும் எது நல்லதோ அதச் செய்யறதுதானே புத்திசாலித்தனம்….?” என்ற தாமரையை மரியாதையோடு பார்த்தான்.

    ”இவ்வளவு  தீர்க்க தரிசனத்தோட நீங்க  பேசறது எனக்குப் புடிச்சிருக்கு தாமரை. நீங்க சொல்றதுதான் சரின்னு நானும் ஒத்துக்கறேன். நம்ம சந்தோஷத்துக்காக நம்மள பெத்து, வளத்து, ஆளாக்கின அம்மா, அப்பாவத் தூக்கியெறிஞ்சுட்டு போறதுங்கறது தப்புதாங்க” என்றவனின் முகத்தில் இப்போது ஓர் தெளிவு தெரிந்தது.

    ஓரிரு நிமிட மௌனத்திற்குப் பின்…..

    ”சரி  தாமரை……நான் கூப்பிட்டதுக்காக இவ்வளவு தூரம் வந்ததுக்கு ரொம்பத் தாங்ஸ்ங்க. அப்ப நாம வீட்டுக்குக் கெளம்புவோமா? நல்லா இருட்டிடுச்சு பாருங்க…..”

    ”நீங்க புறப்படுங்க ஆதவன்…நான் இதோ பின்னாலேயே வந்துடறேன்”

    ஏன் என்று அவளைக் கேட்காமல்  ஆதவன் அங்கிருந்து நகர ஆரம்பிக்க……..

    ”ஆதவன்!” என்ற அவள் குரல், அவன் நடையை நிறுத்தியது. என்ன என்பதுபோல் திரும்பிப் பார்த்தான்.

    “ஒண்ணுமில்ல….உங்கக் காதல நான் ஏத்துக்கலேன்னு எம்மேல ஒங்களுக்கு கோவம் எதுவும் இல்லையே….?”

    ”அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க.”

    “கோவம்  ஏதாவது இருந்தா இப்பவே திட்டிடுங்க……ஏன்னா, நம்ம ஃப்ரெண்ட்ஷிப் எப்பவும் நீடிக்கணும்னுதான் நான் ஆசப்படறேன்.”

    ”கண்டிப்பா  தாமரை. நம்ம நட்பு எப்பவும் தொடரணும்கறதுதான் என்னோட ஆசையும். அப்ப நாளைக்கு பஸ்ஸுல மறுபடி சந்திப்போம்….குட் நைட்” என்றபடி விடைபெற்றான்.

    அவன்  போவதையே சற்று தூரம்வரைப் பார்த்திருந்த தாமரை தன் மனபாரம் இறங்கியவளாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கடலைப் பார்த்தாள். பொங்கிவரும் கடலலைகள் அந்த இருட்டில் பளபளக்கும் வெள்ளிப் பாளங்களாக அவள் கண்களுக்குத் தோன்றின. வெகு வேகமாக முன்னேறி வந்த ஓரலை அவள் கால்களை முத்தமிட்டுவிட்டு ஓடி மறைந்தது. தன் முடிவைப் பாராட்டியே அது தன்னை முத்தமிட்டுச் செல்வதாகத் தோன்றியது தாமரைக்கு. தன் வீட்டு ஞாபகம் உடன் வரவே எழுந்து நடக்கத் தொடங்கினாள்.

    Share
  • அறுமுகநூறு (7)

     

    -சச்சிதானந்தம்

     

    மழலைக்கு அமுதூட்டும் அன்னை போல,

    மனதினில் பொறுமையை மிக்க உற்று,

    மட்டற்ற கருணையால் முழுமை யுற்று,

    முருகென்னும் அருளினைப் பருகத் தந்தாய்!                                                                 31

     

    பழனியில் பழமெனப் பூத்தவன் போற்றி,

    பரமனுக் கருளிய பாலகன் போற்றி,

    பனியெனக் குளிர்ந்தவன் பாதம் போற்றி,

    படையறு வீடுகள் கொண்டவன் போற்றி!                                                                        32

     

    பழமுதிர்ச் சோலையின் தலைவா போற்றி,

    பலவண்ண எழிலுடை இறைவா போற்றி,

    பதமலர் சிவந்த பண்டிதா போற்றி,

    பதிகம் பாடிப் பணிவோம் போற்றி!                                                                                  33

     

    திருப்பரங் குன்றத் தீஞ்சுடர் போற்றி,

    திலகம் தரித்த நுதலே போற்றி,

    தில்லை நாதனின் பிள்ளாய் போற்றி,

    திசைகள் தோறும் நிறைந்தாய் போற்றி!                                                                         34

     

    திருத்தணி கைகொண்ட கந்தா போற்றி,

    தினைப்புன வள்ளியைக் கொண்டாய் போற்றி,

    திருத்தமிழ் வளர்க்கப் பிறந்தாய் போற்றி,

    திளைத்திடுவோம் உன் அழகைப் போற்றி!                                                                     35

     

    Share
  • ஆசான்

    பி.தமிழ்முகில் நீலமேகம்

     

    அன்னையும் பிதாவும்

    கொடுத்த அறிவினை

    சுடர் விட்டெரிய செய்யும்

    தூண்டுகோல் !!!

     

    கண்டிக்கும் வேளையில்

    சற்று கரடு முரடு தான்

    கற்றுத் தரும்

    ஆசான்கள் எப்போதும் !!!

     

    அவர்தம் உள்ளந்தனில்

    மாணாக்கரின் நினைவுகள்

    என்றென்றும் – நினைத்தாலே

    இனிக்கும் கற்கண்டுகள் !!!

     

    கற்ற கல்வியையும் -பெற்ற

    அனுபவத்தையும் நாளும்

    போதனை மூலம் உலகிற்கு

    பரப்பிடும் ஒளி விளக்குகள் !!!

     

    அன்றாடம் கற்பித்தலின் மூலம்

    தானும் கற்றுக் கொண்டே

    இருக்கும் வளர்ந்து விட்ட

    பிள்ளைகள் -ஆசான்கள்!!

     

    படத்திற்கு நன்றி :  http://teachingwithcontests.com/wp-content/uploads/2011/03/comp.jpg

    Share
  • பாரதியின் வேத முகம் – 6

    எத்தனை கோடி இன்பம்

    -சு.கோதண்டராமன்

    வேத ரிஷிகள் உலக வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவையும் ரசித்து ரசித்து அனுபவித்தவர்கள். காணும் ஒவ்வொரு பொருளிலும், கேட்கும் ஒவ்வொரு ஒலியிலும் அவர்களுக்கு இன்பம் பொங்கி வருவது தெரிகிறது. வாழ்க்கையின் இருண்ட பகுதியையே எண்ணி, ஐயோ என் வாழ்க்கை இப்படித் துன்ப மயமாக ஆகிவிட்டதே, உலகில் எல்லாரும் வஞ்சகக்காரர்கள், எல்லாப் பொருளும் துன்பம் நிறைந்தவை என்று அஞ்சி அஞ்சிச் சாகும் மானிடப் பூச்சிகளுக்கும் அவர்களுக்கும் தான் எத்தனை வேறுபாடு. இதோ இந்த வேத மந்திரத்தைப் பாருங்கள்.

    மது வாதா ருதாயதே

    மது க்ஷரந்தி ஸிந்தவ:

    மாத்வீர் நஸ் ஸந்த் வோஷதீ:

    மது நக்தம் உதோஷஸி

    மதுமத் பார்த்திவகும் ரஜ:

    மது த்யௌ ரஸ்து ந: பிதா

    மதுமாந்நோ வனஸ்பதி:

    மதுமாகும் அஸ்து சூர்ய:

    மாத்வீர் காவோ பவந்துந:

     

    பித்ரு தர்ப்பணத்தின் போது முப்பாட்டனார்க்கு எள்ளும் நீரும் அளிக்கும் போது இந்த மந்திரத்தைச் சொல்கிறோம். இதன் பொருள் என்ன?

    இனிய காற்று வீசுகிறது. நதிகள் இனிமையாக ஓடுகின்றன. செடி கொடிகள் நமக்கு இனியனவாக இருக்கட்டும். இரவும் விடியற்காலையும் இனியவையாக உள்ளன. பூமியின் புழுதி இனிதாக உள்ளது. நமது தந்தை போன்ற ஆகாயம் இன்பம் அளிக்கட்டும். வனத்தின் மரங்கள் இன்பம் நிறைந்தவைகளாக இருக்கட்டும். சூரியன் இன்பம் தரட்டும். பசுக்கள் இனிமையான பாலை அளிக்கட்டும்.

    உலகில் துன்பம் இருப்பது உண்மை தான். ஆனால் அதற்காகத் துவண்டு விடக் கூடாது என்பது பாரதியின் கருத்து. நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கு அளிப்பாள் என்று நம்புக” என்று ஊக்கம் தருகிறார் அவர். துன்பமே இயற்கை என்னும் சொல்லை மறந்திடுவோம், இன்பமே வேண்டி நிற்போம் யாதும் அவள் தருவாள் என்று கூறுகிறார். அவருக்குக் காக்கைச் சிறகினிலும், பார்க்கும் மரங்களிலும் நந்தலாலா தென்படுகிறான். கேட்கும் ஒலியில் எல்லாம் அவனது கீதமே காதில் விழுகிறது. தீக்குள் விரலை வைத்தாலும் நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் தோன்றுகிறது. அவரது இந்த வசன கவிதையைப் பாருங்கள். இந்த வேத மந்திரத்தின் நேர் மொழிபெயர்ப்பு போலவே உள்ளது.

    இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமை யுடைத்து

                    காற்றும் இனிது தீ இனிது நீர் இனிது நிலம் இனிது

                    ஞாயிறு நன்று திங்களும் நன்று

                    வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன

                    மழை இனிது மின்னல் இனிது இடி இனிது

                    கடல் இனிது மலை இனிது காடு இனிது

                    ஆறுகள் இனியன

     

    இன்பம் என்ற இந்த வசன கவிதை முழுவதையும் படித்துப் பாருங்கள். நமக்கும் பாரதியைப் போல எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்று நன்றி சொல்லத் தோன்றும்.

    Share
  • வால்ட் விட்மன் வசனக் கவிதை -17

    என்னைப் பற்றிய பாடல் – 10

    (Song of Myself)

    எதிலும் நீ இருக்கிறாய் ..!

    (1819-1892)

    (புல்லின் இலைகள் -1)

    எதிலும் நீ இருக்கிறாய் ..!

    மூலம் : வால்ட் விட்மன்

    தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

     

     

    உள்ளும் புறமும் தெய்வாம்சம்
    எனக்குள்ளது ! நான்
    எதைத் தொட்டாலும், யாரேனும்
    எனைத் தொட்டாலும்
    எனக்குப் புனித மாகும் !
    பிரார்த்தனை மணத்தை விட எனது
    அக்குள்ளின் வாசனை
    மிக்க நேர்த்தி யானது !
    எனது சிரமானது
    ஆலயம், பைபிள் போன்ற
    சமய விதிகளை விடச்
    சாலச் சிறந்தது !
    ஒன்றைவிட நான் மேலாய் வேறொன்றை
    வழிபட்டால் அது என்
    உடலுறுப்பின் வளர்ச்சியால் தான் !

    என் பளிங்கு வார்ப்பில்
    இருப்பது நீ !
    நிழலில், நில வசிப்பில்
    இருப்பது நீ !
    நிமிர்ந்த குதிரை ஓட்டி நீ !
    என் உழுத நிலத்தில்
    எது புகுந்தாலும்
    அது நீதான் !
    என் செழித்த குருதி நீ !
    என் வாழ்வின்
    வெளுத்த பாலோட்டம் நீ ! நான்
    அழுத்தித் தழுவும் மார்பு நீ !
    எந்தன் மூளை
    உந்தன் ஆன்மீகச் சுழற்சி !
    சொட்டுச் சொட்டாய்க் கசியும்
    மேப்பிள் மரச்சார் நீ !
    கோதுமை ஆண்மை நார் நீ !

    தாராளமாய்க் கொடை அளிக்கும்
    சூரியன் நீ !
    என் முகத்துக்கு
    ஒளியும் நிழலும்
    அளிக்கும் ஆவி முகில் நீ !
    வேர்க்கும் சிற்றோடை, பனித்துளி நீ !
    உடல் உறுப்பை எழுப்பும்
    உணர்வுத் தென்றல் நீ !
    தேக்கு மரக் கிளைகள் நீ !
    அகன்ற செழிப்புத் தளங்கள் நீ !
    சுழிவுப் பாதை களில்
    இளைப்பாறும் சுமைதாங்கி நீ !
    நின் கைகளைப் பற்றினேன்,
    நின் முகத்தில் முத்த மிட்டேன்,
    நானென்றும் தொடும்
    மானிடப் பிறவி
    நீ ஒருத்தி தான் !

    +++++++++++++++++++++++++++++

    தகவல்:

    1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
      2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
      Cowley [First 1855 Edition] [ 1986]
      3. Britannica Concise Encyclopedia [2003]
      4. Encyclopedia Britannica [1978]
      5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
      6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
      [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

    ********************
    jayabarat@tnt21.com [S. Jayabarathan] (March 27, 2013)
    http://jayabarathan.wordpress.com/

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (51)

    சக்திசக்திதாசன்

    அன்பினியவர்களே !

    ஸ்பிரிங் என்று அழைக்கப்படும் வசந்தம் ஆரம்பமாகும் காலமிது என்றாகியும் கூட விண்டர் எனப்படும் மாரிகாலம் இங்கிலாந்தை விட்டு அசைய மனமில்லாமல் தத்தளிக்கிறது. ஆமாம் அதிபயங்கரக் குளிரில் இங்கிலாந்தின் பல பாகங்களையும் பனிமழையால் இயற்கையன்னை அபிஷேகித்துக் கொண்டிருக்கும் வேளையிலே கதகதப்பான சூழலில் தகிக்கும் கதிரோனின் வெப்பத்துள் வதங்கும் உங்களுடன் அடுத்த மடலில் இணைகிறேன்.

    இங்கிலாந்தின் அரசியல் பயணம் ஒரு விசித்திரமான சந்தியில் வந்து நிற்கிறது. 2013ம் ஆண்டு இங்கிலாந்தின் இளைய சமுதாயத்தினர் அரசியலின் மேல் கொண்டுள்ள பார்வை ஒரு புதிய பரிணாமத்தை எடுத்துள்ளது.

    நாட்டின் பொருளாதார நிலைமை, அரசியல்வாதிகளின் மீதான நடத்தை அதிருப்தி, நாகரீகம் எனும் பெயரில் சமுதாயமும் அன்றாட வாழ்க்கையில் விஞ்ஞான வளர்ச்சி ஏற்படுத்தியுள்ள தாக்கமும் எதிர்கால அரசியல்  பாதையின் மீதான் கண்ணோட்டத்தின் திசையைத் திருப்பியுள்ளது போன்றே தென்படுகிறது.

    சமீபத்தில் நடைபெற்ற ஒரு பாராளுமன்ற இடைத் தேர்தலில் முன்னணி கட்சிகள் மூன்றும் தாக்கங்களைச் சந்திக்க ஜரோப்பிய முன்னணிக்கு எதிரான கருத்துக்களை முன்னெடுக்கும் ஜக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி என்றழைக்கப்படும் UKIP  எனும் கட்சி அதிக முன்னேற்றம் கண்டிருந்தது. இக்கட்சி தற்போது ஆட்சியிலிருக்கும் கூட்டரசாங்கத்தின் முக்கிய பங்காளியான கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து அக்கட்சி ஜரோப்பிய யூனியனை நோக்கிக் கொண்டிருந்த கொள்கைகளின் பால் வெறுப்புற்று அக்கட்சியிலிருந்து நீங்கி அமைக்கப்பட்ட கட்சியாகும்.

    இக்கட்சிக்கு விழுந்த வாக்குகளில் பெரும்பான்மையானவை கன்சர்வேடிவ் கட்சி ஆதரவாளர்களிடமிருந்து கிடைக்கப் பெற்றவையாகும். இதனால் கன்சர்வேடிவ் கட்சி பீதியடையத் தொடங்கியிருக்கிறது.

    விளைவு,

    பிரதமர் டேவிட் கமரன் அவர்களின் இன்றைய பேச்சின் காரணம். அது என்ன “இன்றைய பேச்சு ” என்கிறீர்களா ? அடுத்த வருடம் ஜரோப்பிய ஒன்றியத்தின் கதவுகள் பல்கேரியா மற்றும் ரோமானிய நாடுகளுக்குத் திறக்கப்படவிருக்கிறது. இதன் மூலம் பல்கேரிய மக்களும், ரோமேனிய மக்களும் ஜரோப்பிய நாடுகளுக்குள் எதுவித தடங்களுமின்றி பிரயாணம் செய்யலாம். அது மட்டுமின்றி இங்கிலாந்து நாட்டின் வேலையில்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் உதவிப் பணத்தைப் பெறும் தகுதியும் இவர்களுக்குக் கிடைக்கிறது.

    இதைப் பற்றிய பெரிய அளவிலான பிரச்சாரத்தை UKIP  கட்சி மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது இது கன்சர்வேடிவ் கட்சிக்கு மிகுந்த தலையிடியைக் கொடுத்துள்ளது.

    அடுத்த‌ தேர்த‌லில் எங்கே விலாச‌மேயில்லாத‌ அளவிற்குத் தோல்வியைத் த‌ழுவி விடுவோமோ ? எனும் அச்ச‌ம் ஒருபுற‌மிருக்க‌ , பொருளாதார‌ நெருக்க‌டியிலிருந்து த‌ம‌து கொள்கை இங்கிலாந்தை மீட்சிப்பாதைக்குக் கொண்டு போகும் என்று தெரிவித்த‌ திட‌மான‌ ந‌ம்பிக்கை வலுவிழ‌ந்த‌ வ‌கை ஒருபுற‌ம் கொடுக்கும் தாக்க‌மும் சேர்ந்த‌தினால் மிக‌வும் க‌டுக‌தியாக‌ புதிய‌ கொள்கைப் பிர‌க‌ட‌ன‌ம் செய்ய‌ வேண்டிய‌ நிலைக்கு க‌ன்ச‌ர்வேடிவ் க‌ட்சி த‌ள்ள‌ப்ப‌ட்ட‌து.

    இந்த‌ப் பின்ன‌ணியின் கார‌ண‌மே ச‌மீப‌த்தில் வெளியான‌ பிர‌த‌ம‌ர் டேவிட் க‌ம‌ர‌னின் குடியேற்ற‌க் கொள்கை ப‌ற்றிய‌ க‌ரிச‌னை மிகுந்த‌ பேச்சு.

    நிலைகுலைந்த‌ பொருளாதார‌த்தினால் த‌லைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்ட‌த்திற்கு இங்கிலாந்துக்குள் வ‌ந்திற‌ங்கும் வெளிநாட்ட‌வ‌ரின் வ‌ருகையைக் கார‌ண‌ம் காட்டித் த‌ப்பித்துக் கொள்வ‌து அனைத்துத் த‌ர‌ப்பின‌ருக்கும் ஒரு இல‌குவான‌ செய‌லாகிற‌து.

    அது த‌விர‌ த‌ம‌து விற்ப‌னையின் வீழ்ச்சியைத் த‌டுப்ப‌த‌ற்கான‌ ம‌க்க‌ளின் ம‌ன‌தில் நிலைகொண்டுள்ள‌ வெளிநாட்ட‌வ‌ரின் வ‌ருகையின் மீதான‌ அச்ச‌ம் மிகுந்த‌ ம‌னோநிலையைச் சாத‌க‌மாக்கி அதைப் பெரிதுப‌டுத்தி செய்தி வெளியிடும் ஊட‌க‌த்துறையின் ப‌ங்க‌ளிப்பும் மிகையான‌தே !

    விளைவாக‌ ம‌க்க‌ளின் ஆத‌ர‌வைப் பெறுவ‌த‌ற்கு முக்கிய‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் அனைத்தும் இக்கொள்ள‌கையில் தாம் மிக‌வும் க‌ட்டுப்பாட்டுட‌ன் இருப்ப‌தாக‌க் காட்டிக் கொள்ளும் தேவையை உண‌ர்ந்து இக்குடியேற்ற‌ப் பிர‌ச்ச‌னையைக் கொஞ்ச‌ம் மிகைப்ப‌டுத்த‌த் தொட‌ங்கியுள்ள‌ன‌ என‌ ந‌டுநிலையான‌ அர‌சிய‌ல் அவ‌தானிக‌ள் க‌ருத்துத் தெரிவிக்கின்ற‌ன‌ர்.

    வெளிநாட்ட‌வ‌ர் அதுவும் குறிப்பாக‌ ஜ‌ரோப்பிய‌ நாட்டின‌ர் இங்கிலாந்தில் ஆறுமாத‌ கால‌த்திற்கும் மேலாக‌ வேலையில்லாதோருக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் அர‌சாங்க‌ உத‌வித் தொகையைப் பெற‌முடியாது எனும் அடிப்ப‌டையில் ஊதிய கொள்கைக‌ளைப் பிர‌த‌ம‌ர் குறிப்பிட‌, லிப‌ர‌ல் டெம‌கிர‌ட்ஸ் க‌ட்சியின் த‌லைவ‌ர் நிக் கிளேக் அவ‌ர்க‌ளோ ஜ‌ய‌ம் மிகுந்த‌ நாடுக‌ளில் இருந்து வ‌ரும் விருந்தின‌ர் விசா பெறுப‌வ‌ர்க‌ள் தாம் திரும்பிச் செல்வ‌தை உறுதிப்ப‌டுத்துவ‌த‌ற்காக‌ ஒரு க‌னிச‌மான‌ தொகையை விசா பெறும்போது க‌ட்டி , தாம் த‌ம‌து விடுமுறை முடிந்து திரும்பும் போது அப்ப‌ண‌த்தை திரும்ப‌ பெற்றுக் கொள்ள‌லாம் எனும் கொள்கையை பிர‌ஸ்தாபிக்கிறார்.

    இத‌னிடையே பிர‌தான‌ எதிர்க் க‌ட்சியான‌ லேப‌ர் க‌ட்சியின் த‌லைவ‌ர் எட் மில்லிபாண்ட் ம‌க்க‌ள் ம‌ன‌தில் வெளிநாட்ட‌வ‌ர் குடியேற்ற‌க் கொள்கையைப் ப‌ற்றிய‌ அச்ச‌த்தின் ஆழ‌த்தை த‌ம‌து க‌ட்சியின‌ர் உண‌ர‌த் த‌வறிய‌மைக்காக‌ தாம் ம‌ன்னிப்புக் கோருவ‌தாக‌க் கூறி தாம் அவ‌ர்க‌ளை விட‌ ஒருப‌டி மேலேறி நிற்கிறார்.

    ஆனால் ந‌டுநிலையான‌ புள்ளி விப‌ர‌ங்க‌ளின் ப‌டி இந்நாட்டில் குடியேறி வாழும் வெளிநாட்ட‌வ‌ர் ப‌ணிபுரிந்து செலுத்தும் வ‌ரிப்ப‌ண‌ம் இங்கிலாந்தின் பொருளாதார‌த்திற்கு மிக‌வும் பெரிய‌ அள‌விலான‌ ப‌ங்க‌ளிப்பைச் செய்கிற‌து என்று குறிப்பிடுகிற‌து.

    உண்மையான‌ அர‌சிய‌ல் அவ‌தானிக‌ளின் அச்ச‌ம் என்ன‌வென்றால் குறுகிய‌ கால‌ க‌ண்ணோட்ட‌த்தில் தேர்த‌ல் அனுகூல‌த்தை ம‌ட்டும் க‌ருத்தில் வைத்து கிள‌றிவிட‌ப்ப‌டும் இப்பிர‌ச்ச‌னை இன‌த்துவேஷ‌ அதிக‌ரிப்புக்கு வ‌ழி வ‌குத்து விட‌க்கூடாது என்ப‌தே.

    நாட்டுக்காக‌வே ம‌க்க‌ள் , ம‌க்க‌ளுக்காக‌வே அர‌சிய‌ல் இந்த‌க் கோட்பாட்டை ஞாப‌க‌த்தில் கொண்டுள்ளார்க‌ளா இந்நாட்டின் ம‌க்க‌ள் பாதுகாவ‌ல‌ர்க‌ள் என்று த‌ம்மை அறிமுக‌ப்ப‌டுத்திக் கொள்ப‌வ‌ர்க‌ள் ?

    ப‌தில் கால‌த்தின் கையில் …….

    மீண்டும் அடுத்த‌ ம‌ட‌லில்

    அன்புட‌ன்
    ச‌க்தி ச‌க்திதாச‌ன்
    27.03.2013

    Share
  • இஸ்ரேல் பயணம் (12)

    நாகேஸ்வரி அண்ணாமலை

    செய்தி வாசிப்பவர்கள்  செய்திகளின் முடிவில் ‘செய்திகளின் சுருக்கம்’ என்று அதுவரை கொடுத்த செய்திகளின் சாராம்சத்தைக் கூறுவார்கள்.  அது போல் நானும் இங்கு இஸ்ரேல்-பாலஸ்தீன சரித்திரத்தின் (அல்லது போராட்டத்தின்) சுருக்கத்தைக் கூறுகிறேன்..

    மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில், அதாவது இப்போதைய இஸ்ரேலிலும் தனி நாடாக உருவாகப் போகும் பாலஸ்தீனத்திலும் 3000 ஆண்டுகளுக்கு முன் பல யூத இனங்கள் வாழ்ந்து வந்தன.  இவர்கள் ஆபிரஹாம், அவர் மகன் ஐஸக், அவருடைய மகன் ஜேக்கப் ஆகியோரின் வழித்தோன்றல்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டனர்.  பழைய ஏற்பாடு பைபிளில் கூறப்பட்டிருக்கும் புராணக் கதைகள் தவிர இதற்கு சரித்திர பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை.  ரோமானிய, கிரேக்க சமூகங்கள் பல கடவுள்களையுடைய மதங்களைப் பின்பற்றி வந்தபோது இவர்கள் ஒரே கடவுளைக் கொண்ட மதத்தைப் பின்பற்றி வந்தனர்.  என்றாவது ஒரு நாள் தங்கள் கடவுளின் தூதர் ஒருவர் வந்து தங்களை கடவுளிடம் அழைத்துச் செல்வார் என்று எண்ணிக்கொண்டிருந்தனர்.  டேவிட், சாலமன் என்ற இரு புகழ்பெற்ற அரசர்கள் இவர்கள் வழியில் வந்தவர்கள்.

    இவர்கள் அடிக்கடி பக்கத்து நாடுகளில் ஆண்டுவந்த அரசர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர்.  கி.மு.750-இல் அசீரியர்களாலும், கி.மு.612-இல் பாபிலோனியர்களாலும், கி.மு.538-இல் பெர்ஷியர்களாலும், கி.மு.333-இல் கிரேக்கர்களாலும் தங்கள் சுதந்திரத்தை இழந்தனர்.  அதற்குப் பிறகு வந்த ரோமானியர்கள் ஆட்சியில் கி.பி. 66-இல் இவர்கள் ரோமானிய அரசரை எதிர்த்ததால் ஜெருசலேமை விட்டு வெளியேறும் நிர்பந்தத்திற்கு உள்ளாயினர்.  இதற்கிடையில் கி.பி. 0-இல் இவர்களில் ஒருவராக இயேசு கிறிஸ்து பிறந்து அப்போதைய சமூகத்தில் – குறிப்பாக ஜெருசலேமில் உள்ள யூதக் கோயிலில் – நடந்து வந்த அநீதிகளையும் ஊழல்களையும் ஒழிக்கப் பாடுபட்டார்.  யூதர்களில் ஒரு சாரார் இயேசுவைக் கடவுளின் தூதர் என்று ஏற்றுக்கொண்டு அவருடைய கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கினர்.  அவர்கள் கிறிஸ்துவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.  ஆனால் சமூகத்தின் மேல் மட்டத்தில் இருந்த யூதர்கள், இயேசுவின் கொள்கைகளால் தங்கள் நலன்களுக்குப் பங்கம் விளையும் என்று பயந்து அவரை ஒழித்துவிடத் தீர்மானித்து ரோமானிய அரசனின் உதவியோடு அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றனர்.  குற்றம் புரியும் சமூக விரோதிகளைச் சிலுவையில் அறைந்து அப்படியே அவர்களை இறக்கவிடுவதுதான் அப்போதைய பழக்கம்.  இப்படித்தான் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கினார்கள்.  சமூக சீர்திருத்தவாதியான இயேசு தன் சொந்த சமூகத்தாலேயே சமூக விரோதியாகக் கருதப்பட்டு மரண தண்டனைக்குள்ளானார்.  கிறிஸ்துவின் சீடர்களும் தண்டிக்கப்பட்டனர்.  அப்போதைக்கு அவர்களால் வெளிப்படையாகக் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்ற முடியவில்லை.

    கி.பி. 66-இல் ரோமானிய அரசனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த யூதர்கள் பலர் உயிர் இழந்தனர்;  பலர் அடிமைகளாக விற்கப்பட்டனர்;  பலர் ஜெருசலேமிலிருந்து வெளியேறினர்; வெளியேற்றப்பட்டனர்.  மறுபடியும் இஸ்ரேலில் இருந்த யூதர்கள் கி.பி. 132-இல் ரோமானிய அரசனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர்.  இதிலும் யூதர்கள் பலர் உயிரிழந்தனர்.  அதன் பிறகு யூதர்கள் முழுவதுமாக ஜெருசலேமை விட்டு வெளியேறினர்.  மத்திய தரைக்கடலைச் சுற்றியிருந்த நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.  கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் கான்ஸ்டாண்டின் என்னும் ரோமானிய அரசன் கிறிஸ்துவனான பிறகு ஜெருசலேம் நகரம் மறு வாழ்வு பெற்று கிறிஸ்தவ நகரமாக விளங்கத் தொடங்கியது.  யூதர்கள் ஜெருசலேமில் குடியேற அனுமதிக்கப்படவில்லை யென்றாலும், இடிக்கப்படாமல் மிஞ்சியிருந்த யூதர்களின் இரண்டாவது கோயிலின் வெளிச் சுவரை – இது யூதர்களின் மிகச் சிறந்த புண்ணியதலமாகக் கருதப்பட்டது – சென்று பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

    ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபி இஸ்லாம் மதத்தைத் தோற்றுவித்தார்.  இந்த மதத்தைப் பின்பற்றிய அரசர்கள் ரோமானியர்களை வென்று பாலஸ்தீனத்தில் ஆட்சி நடத்தத் தொடங்கினர்.  இந்த இஸ்லாமிய மன்னர்கள் காலத்தில் யூதர்கள் ஜெருசலேமிற்குள் வருவதற்கு இருந்த தடை நீங்கி அவர்கள் ஜெருசலேமில் வசிக்க அனுமதிக்கப்பட்டனர்.  பதினோராம் நூற்றாண்டில் போப்பாக இருந்த போப் அர்பன் (Pope Urban II) கிறிஸ்தவர்கள் ஜெருசலேமிற்குச் சென்று தங்கள் மத சம்பந்தப்பட்ட இடங்களை வழிபட ஏதுவாக அங்கு ஆண்டுகொண்டிருந்த அரசர்களோடு சண்டை புரிந்து ஜெருசலேமைக் கைப்பற்ற சிலுவைப் போராளிகளை அனுப்பினார்.  அவர்கள் முஸ்லீம் அரசர்களை வென்ற பிறகு சுமார் இருநூறு வருடங்கள் கிறிஸ்தவர்களின் கையில் ஜெருசலேம் இருந்தது.  அப்போது யூதர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்;  பல யூதர்கள் கொல்லப்பட்டனர்; பலர் அடிமைகளாக விற்கப்பட்டனர்.  அதன் பிறகு இரு நூற்றாண்டுகள் இப்பகுதி எகிப்தை ஆண்ட மாம்லக் அரச பரம்பரை வசம் இருந்தது.  1517-இல் துருக்கியை ஆண்ட ஆட்டோமான் அரசர்கள் பாலஸ்தீனத்தைப் பிடித்துக்கொண்டனர்.  முதல் உலகப் போரில் ஆட்டோமான் அரசு வீழ்ச்சி அடையும் வரை பாலஸ்தீனம் அவர்கள் ஆளுகையில் இருந்தது.  அப்போதும் யூதர்கள் அங்கு வசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    யூதர்கள் குடியேறிய  இடங்களில் தாங்கள் உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் ஆங்காங்கே இருந்த மக்களோடு சேராமல் தனித்தே வாழ்ந்திருக்கிறார்கள்.  மேலும் இவர்கள் செய்துவந்த வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலாலும் இவர்கள் மீது மற்றவர்களுக்கு நட்புரிமை ஏற்படவில்லை.   அந்தந்த நாடுகளில் இருந்த கிறிஸ்துவர்கள், தங்கள் கடவுளின் தூதரை – அதாவது இயேசுவை – வஞ்சித்துக் கொன்றவர்கள் யூதர்கள் என்று எண்ணி இவர்களின் மீது மிகுந்த வன்மம் பாராட்டினர்.  ஸ்பெயின் முஸ்லீம் மன்னர்களின் கீழ் இருந்தபோது யூதர்கள் எந்த விதப் பாதிப்புக்கும் ஆளாகவில்லை.  ஆனால் சிலுவைப் போராளிகள் ஸ்பெயினில் நுழைந்ததும் யூதர்களைப் பலவாறாகத் துன்புறுத்தினர்.  அவர்கள் குடியேறியிருந்த நாடுகளில் எல்லாம் கிறிஸ்தவர்கள் இவர்களிடம் பகைமை பாராட்டியதால், தங்களுக்கென்று ஒரு நாடு இருந்தால் அங்கு சுதந்திரமாக எந்த விதப் பிரச்சினையுமின்றி இருக்கலாம் என்ற எண்ணம் பல நாடுகளிலும் இருந்த யூதர்களிடம் உண்டானது.  தங்களுக்கென்று ஒரு நாடு வேண்டும் என்று நினைத்தோடல்லாமல் அந்த நாடு ஒரு காலத்தில் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்துவந்த, தங்கள் புண்ணிய பூமி என்று அவர்கள் கருதிய, பாலஸ்தீனமாக இருக்க வேண்டும் என்றும் நினைத்தனர்.  இந்த எண்ணம் ஒரு இயக்கமாக மாறியது.  இதற்குப் பெயர் ஸயானிஸம் (Zionism). இந்த இயக்கம் தோன்றியதிலிருந்தே பல நாடுகளில் வாழ்ந்து வந்த யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் குடியேற ஆரம்பித்தனர்.  அது மட்டுமல்ல, தாங்கள் கொண்டுவந்த தொழில்நுட்பம், செல்வம் ஆகியவற்றின் பலத்தால் பாலஸ்தீனத்தில் பல நிலங்களை வாங்கிப்போட்டு நவீன முறையில் விவசாயம் செய்தனர்; தொழிற்சாலைகள் ஆரம்பித்தனர்.  பாலஸ்தீனம் வளமடையத் தொடங்கியதால் அங்கு குடியேறிய யூதர்களோடு பாலஸ்தீன அரேபியர்களும் நன்மை அடைந்தாலும், யூதர்கள் அதிக அளவில் பாலஸ்தீனத்தில் குடியேறியதும் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனதும் அரேபியர்களின் கோபத்தையும் பயத்தையும் அதிகரித்தது.  முதலாம் உலகப் போருக்குப் பிறகு ஆட்டோமான் பேரரசு அழிந்து, அது பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டு பாலஸ்தீனம் பிரிட்டனின் மேற்பார்வையில் வந்ததும் யூதர்கள் பிரிட்டனிடம் பாலஸ்தீனத்தில் தங்களுக்கு ஒரு தனி நாடு வேண்டும் என்று கேட்கத் தொடங்கி அதில் வெற்றியும் பெற்றனர்.  இரண்டாவது உலக யுத்தத்தில் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த ஹிட்லர் ஜெர்மனியில் இருந்த அறுபது லட்சம் யூதர்களைக் கொன்று குவித்ததும் யூதர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைய வழிகோலியது.  யூதர்களின் மேல் ஏன் இந்த அளவிற்கு ஹிட்லருக்குக் கோபம் இருந்தது என்பதற்குப் பல காரணங்கள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.  இவர் சிறு வயதினராக இருந்தபோது இவர் தாய்க்கு சிகிச்சை அளித்தவர் ஒரு யூத மருத்துவராம்.  சிகிச்சை பலனின்றி அவர் தாய் இறந்துவிட்டாராம்.  அவருடைய தாயின் இறப்பிற்கு அந்த யூத மருத்துவர் காரணம் என்று நினைத்திருக்கலாம் என்பது ஒரு ஊகம்.  இன்னொரு கோட்பாட்டின்படி அப்போது ஜெர்மனியில் பாதிக்கு மேற்பட்ட வங்கிகள் யூதர்களின் கைகளில் இருந்தனவாம்.  ஜெர்மனியில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டதற்கு யூதர்கள்தான் காரணம் என்று ஹிட்லர் நினைத்ததாகச் சொல்கிறார்கள்.  எந்த ஆராய்ச்சியிலும் உண்மையான காரணம் எது என்று வெளிவரவில்லை.  ஜெர்மனியிலும் யூதர்களுக்கு எதிராக இருந்தவர்கள் கிறிஸ்தவர்கள்தான்.  அப்போதிருந்த கிறிஸ்தவ போப்பும் ஹிட்லர் செய்த அட்டூழியங்களைக் கண்டிக்கவில்லை.

    யூதர்கள் வெளியிலிருந்து வந்து பாலஸ்தீனத்தில் குடியேறக் குடியேற யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையில் நிறையப் பூசல்கள் ஏற்பட ஆரம்பித்தன.  இந்தப் பூசல்களைக் கையாளுவதில் உள்ள சிரமத்தை எண்ணியும், இனி பாலஸ்தீனம் தன் மேற்பார்வையில் இருப்பதால் தனக்கு நன்மை எதுவும் இல்லை என்பதையும் உணர்ந்த பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டுத் தான் வெளியேறுவதாக ஐ.நா.விடம் தெரிவித்தது.  ஐ.நா. பல முறை தன் பிரதிநிதிகளை அனுப்பி அங்குள்ள நிலையை அறிந்துவரச் செய்தது.  1947-இல் பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை யூதர்களுக்கும் இன்னொரு பகுதியை அரேபியர்களுக்கும் (இவர்களில் அரேபிய கிறிஸ்தவர்களும் உண்டு) கொடுப்பது என்று ஐ.நா. முடிவுசெய்தது.

    பாலஸ்தீனம் முழுவதும் தங்களுக்கு மட்டுமே உரியது என்று நினைத்துக்கொண்டிருந்த பாலஸ்தீனர்கள் இந்தப் பாகப்பிரிவினையை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்துப் போராடுவது என்று முடிவுசெய்தனர்.  அதனால் இன்று வரை பாலஸ்தீனம் என்ற நாடு உருவாகாமலேயே இருக்கிறது.  ஆனால் யூதர்களோ தாங்கள் கேட்டதற்கு மேலேயே அதிக அளவுள்ள நாடு கிடைத்துவிட்டதால் உடனேயே தங்கள் நாடான இஸ்ரேலைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்திக்கொண்டனர்.  இதற்கு மறு நாளே பாலஸ்தீனத்தைச் சுற்றியிருந்த ஜோர்டன், சிரியா, லெபனான், எகிப்து ஆகிய அரபு நாடுகள் இஸ்ரேலின் மீது படையெடுத்ததில் அரபு நாடுகள் தோற்றுப் போயின.  மேலும் இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு ஐ.நா.வால் கொடுக்கப்பட்ட இடங்களில் சிலவற்றையும் பிடித்துக்கொண்டது.  இப்படி அரேபிய இடங்களை ஆக்கிரமித்துக்கொண்டதோடு அந்த இடங்களில் யூதர்களைக் குடியேற்றவும் செய்தது.  இஸ்ரேல் நாட்டிற்குள்ளேயே இருக்கும் அரேபியர்களையும் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துகிறது.  பாலஸ்தீனத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த அரேபியர்களை அங்கு தொடர்ந்து இருக்கவிடுவதே தன்னுடைய தாராள மனப்பான்மையினால்தான் என்பது போல் இஸ்ரேல் நடந்துகொள்ள ஆரம்பித்தது.  பாலஸ்தீனத்தில் இஸ்ரேலுக்குத் தனி நாடு உருவாக்கிக் கொடுப்பதாக பிரிட்டன் ஒப்புக்கொண்டபோது அங்கு ஏற்கனவே வசித்துவரும் அரேபியர்களுக்கு எந்த விதக் கஷ்டமும் விளைவிக்கக் கூடாது என்ற நிபந்தனையைப் போட்டிருந்தது.  அதையெல்லாம் இஸ்ரேல் நினைப்பதாகத் தெரியவில்லை.

    இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து  பூசல்கள் ஏற்பட்டன.  1967-இல் நடந்த யுத்தத்தில் ஐ.நா.வால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களில் இஸ்ரேல் பெரும்பகுதியைப் பிடித்துக்கொண்டது.  இஸ்ரேல் அங்கும் யூதர்களைக் குடியேற்றுவதைத் தொடர்ந்தது.  இப்படிக் குடியேற்றப்பட்டவர்கள் அங்கு வசிக்கும் பாலஸ்தீனர்களுக்கும் நிறையத் தொந்தரவுகள் கொடுத்து வந்தார்கள்; வருகிறார்கள்.  இவர்கள் ஒரு முறை பெடுயின் இனத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் இனத்தவரின் ஆடுகளுக்கு விஷம் வைத்து அவற்றைக் கொன்றனர்.  இஸ்ரேல் அரசும் இஸ்ரேல் ஆக்கிரமித்த இடங்களில் குடியேற்றப்பட்ட யூதர்களும் (இப்படிக் குடியேற்றப்பட்ட யூதர்களில் பலர் 1960-க்குப் பிறகு அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளிலிருந்து இஸ்ரேலில் குடியேறியவர்கள்) அங்கேயே காலம் காலமாக வாழ்ந்து வந்த பாலஸ்தீனியர்களைப் பல இன்னல்களுக்கு ஆளாக்கினர்.

    1964-இல் பாலஸ்தீன விடுதலை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.  1969-இல் யாசர் அராபத் அதன் தலைவரானார்.  பாலஸ்தீனம் முழுவதையும் ஒரே நாடாக உருவாக்கியே தீருவது என்பது இந்த இயக்கத்தின் குறிக்கோள்.  ஆக்கிரமித்துக்கொண்ட பகுதிகளில் பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அவர் தட்டிக் கேட்டபோது அவரைத் தீவிரவாதி என்று இஸ்ரேல் கூற ஆரம்பித்தது.  1992-இல் பிரதமர் பதவியேற்ற யிட்சக் ராபின் பாலஸ்தீனர்களோடு சமரசம் பேச முன்வந்தார்.  அதுவரை இஸ்ரேல் நாடு இருப்பதையே ஒப்புக்கொள்ளாத பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த யாசர் அராபத், யிட்சக் ராபினின் சமரச ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார்.  இவர்களுக்கிடையே 1993-இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் யூதர்களுக்கென்று இஸ்ரேல் என்ற தனி நாடு இருப்பதை பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஒப்புக்கொள்வதென்றும் 1947-இல் ஐ.நா.வால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடத்தில் ஐந்து வருடங்களில் பாலஸ்தீன நாடு உருவாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.  அது வரை இந்த இடங்கள் பாலஸ்தீன அத்தாரிட்டி என்னும் அமைப்பின் கீழ் செயல்படும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.  இதற்கு ஆஸ்லோ ஒப்பந்தம் என்று பெயர்.  1995-இல் ராபின், இதை எதிர்த்த ஒரு யூத வெறியனால் கொலைசெய்யப்பட்ட பிறகு அதற்குப் பின் பதவிக்கு வந்த நேத்தன்யாஹூ (சென்ற ஜனவரியில் நடந்த தேர்தலில் இவருடைய கட்சி 120 இடங்கள் உள்ள இஸ்ரேலிய பார்லிமெண்டில் 31 இடங்களைப் பிடித்தது; மற்ற சில கட்சிகளோடு சேர்ந்து இப்போது இவர் மந்திரிசபை அமைத்திருக்கிறார்.  இவர்தான் பிரதம மந்திரி.) ஆஸ்லோ ஒப்பந்தத்தைச் சரியாகப் பின்பற்றவில்லை.

    இஸ்ரேல் அரசோடு சமாதானமாகப்  பேச்சுவார்த்தை நடத்திப் பயனில்லை என்று நினைத்த  பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச்  சேர்ந்த சிலர் யாசர்  அராபத்தின் ஃபாட்டா (Fatah) கட்சியிலிருந்து பிரிந்து தனிக் கட்சிகள் ஆரம்பித்தனர்.  ஹமாஸ் (Hamas) என்னும் கட்சியைச் சேர்ந்தவர்கள் 1967-இல் இஸ்ரேல் எகிப்திடமிருந்து பிடித்திருந்த காஸா பகுதியை இஸ்ரேல் 2005-இல் திருப்பிக் கொடுத்த பிறகு அங்கு ஆட்சி செய்யத் தொடங்கினர்.  லெபனானில் இஸ்ரேல் பிடித்திருந்த இடத்தை ஹெஸ்புல்லா (Hezbollah) என்ற கட்சி பிடித்து அங்கு ஆட்சி நடத்தத் தொடங்கியது.  இவை இரண்டும் தீவிரவாதக் கட்சிகள்.  அடிக்கடி இக்கட்சிகளுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் பூசல்கள் ஏற்பட்டு வருகின்றன.

    இஸ்ரேலின் கொள்கைகளால்  அதிருப்தி அடைந்த பாலஸ்தீன இளைஞர்கள் தற்கொலைப் படையினராக இஸ்ரேலுக்குள் சென்று யூதர்களைக் கொன்றனர்.  யாசர் அராபத் பாலஸ்தீன இளைஞர்களை இந்த வன்முறையிலிருந்து தடுக்கவில்லை என்று கூறி 2002-இல் அப்போது பிரதமராகயிருந்த எரியல் ஷேரன் பாலஸ்தீன இளைஞர்கள் இஸ்ரேல் பகுதிக்குள் வருவதைத் தடுக்கப் பெரிய தடுப்புச் சுவரை எழுப்ப ஆரம்பித்தார்.  இந்தச் சுவர் வெஸ்ட் பேங்கில் (1947-இல் பாலஸ்தீனர்களுக்கு ஐ.நா. கொடுத்த இடத்தில் இதுவும் சேர்த்தி) இஸ்ரேல் ஆக்கிரமித்த இடங்களையும் உள்ளடக்கி எழுப்பப்பட்டது.  (சுவர் இன்னும் முற்றுப் பெறாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது.)  இந்தச் சுவர் எழுப்பியதின் மூலம் பாலஸ்தீனியர்கள் மிகுந்த துன்பத்துக்குள்ளாகின்றனர்.  பலருடைய விளைநிலங்கள் சுவருக்கு இந்தப் பக்கம் இருப்பதால் அவர்கள் சுவரைச் சுற்றிக்கொண்டு இஸ்ரேலின் சோதனைச் சாவடிகள் வழியாகத்தான் தங்கள் விளைநிலங்களுக்கோ அல்லது வேலைபார்ப்பதற்கோ வர வேண்டியதிருக்கிறது.  மேலும் இப்படி வருவதற்கு இஸ்ரேல் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் அடையாள அட்டையை சோதனைச் சாவடியில் காட்ட வேண்டும்.  ஆண்டாண்டு காலமாக வாழ்ந்துவந்திருக்கும் தங்கள் சொந்த இடத்திலேயே பாலஸ்தீன அரேபியர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர்.

    2004-இல் யாசர் அராபத் பாரீஸில் உடல்நலத்திற்காக சிகிச்சை பெற்று வரும்போது இறந்துவிட்டார்.  இப்போது அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாமோ என்று அவர் மனைவி சந்தேகப்பட்டதால் ராமல்லா என்ற ஊரில் (இதுதான் பாலஸ்தீன அத்தாரிட்டியின் தலைமையகம்) இருந்த அவருடைய கல்லறையைத் தோண்டி அவர் உடலை மீட்டுப் பரிசோதனைக்காக அனுப்பியிருக்கிறார்கள்.

    இவருக்குப் பிறகு  ஃபாட்டாவின் பொறுப்பை அகம்மது  அப்பாஸ் என்பவர் ஏற்றார்.  இவரும் சமாதான விரும்பி.  எப்படியாவது பாலஸ்தீன நாட்டை உருவாக்கிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.

    ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாக இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு வெஸ்ட் பேங்கில் கொடுக்கப்பட்ட இடங்களில் நிறைய இடங்களைப் பிடித்துக்கொண்டு சில இடங்களை மட்டும் பாலஸ்தீன அத்தாரிட்டி நிர்வகிக்கும்படி விட்டிருக்கிறது.  (ஆஸ்லோ ஒப்பந்தத்திற்குப் பிறகு பாலஸ்தீன அத்தாரிட்டி உருவாக்கப்பட்டு பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களை நிர்வகித்து வருகிறது.)  சில இடங்கள் இருவரின் கீழேயும் இருக்கின்றன.  சில இடங்கள் இஸ்ரேலின் கீழ் இருக்கின்றன.  வெஸ்ட் பேங்கில் பாலஸ்தீனர்களுக்குச் சேர வேண்டிய நூறு மில்லியன் டாலர் சுங்கவரிப் பணத்தை பாலஸ்தீன அத்தாரிட்டியிடம் கொடுக்காமல் இழுத்தடித்தனர்.  சில நாட்களுக்கு முன்தான் அந்த வரிப் பணம் பாலஸ்தீன அத்தாரிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.  இஸ்ரேலுக்கு அமெரிக்காவில் வாழ்ந்துவரும் யூதர்களிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் நிறையப் பணம் வந்துகொண்டிருக்கிறது.  ஆனால் பாலஸ்தீனர்களுக்கு அப்படியில்லை.  1945-இல் அரபு நாடுகள் பல ஒன்று சேர்ந்து (முதலில் இதில் ஜோர்டன், சவூதி அரேபியா, சிரியா, லெபனான், ஈராக், எகிப்து ஆகிய நாடுகள் இருந்தன.  பின்னால் பல நாடுகள் சேர்ந்துகொண்டன.  இப்போது அதில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை 21) அராப் லீக் (Arab league) என்ற அமைப்பை உருவாக்கிக்கொண்டன.  இந்த அமைப்பிலிருந்து பாலஸ்தீனத்திற்கு பணம் வந்துகொண்டிருந்தது.  இப்போது அது வெகுவாகக் குறைந்துவிட்டது என்கிறார்கள்.  இதனால் பாலஸ்தீன அத்தாரிட்டியின் கீழ் இருக்கும் இடங்களில் வறுமை இருக்கிறது.

    அமெரிக்காவிலுள்ள பல பணபலமுள்ள யூதர்களின் வற்புறுத்தலாலும் செல்வாக்காலும் அமெரிக்கா இஸ்ரேலின் முழு நண்பனாகவும் ஆதரவாளனாகவும் விளங்குகிறது.  அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேலுக்கு தினமும் பத்து லட்சம் டாலர் உதவிப்பணம் கிடைப்பதாகக் கூறுகிறார்கள்.  2011-இல் ஐ.நா.வின் யுனெஸ்கோ ஸ்தாபனத்தில் பாலஸ்தீன் ஒரு அங்கத்தினர் ஆனது.  இதை இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் எதிர்த்தது.  அதோடு மட்டுமல்ல அமெரிக்கா யுனெஸ்கோவுக்குக் கொடுக்கும் தன் பங்கிற்கான பணத்தையும் கொடுக்க மறுத்தது.  (ஐ.நா.வின் பல ஸ்தாபனங்களுக்கு உலகிலேயே பணக்கார நாடு என்பதால் அமெரிக்காதான் நிறையப் பணம் வழங்கி வருகிறது.  அதனால் அவற்றில் அதிகாரமும் செலுத்திவருகிறது.)

    மேலும் தனி நாடாகி ஐ.நா.வில் நிரந்தர இடத்தைப் பிடிப்பதற்கு முன் இப்போதே ஜெனரல் அசெம்பிளியில் 2012 நவம்பர் மாதம் non-member observer entity என்ற அந்தஸ்தை பாலஸ்தீனத்திற்கு முகம்மது அப்பாஸ் பெற்றிருக்கிறார்.  இது அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் கொஞ்சமும் பிடிக்கவில்லை.  கோபத்தில் அமெரிக்கா பாலஸ்தீன அத்தாரிட்டிக்குக் கொடுத்துவந்த உதவித்தொகையை நிறுத்திவிட்டது.  அதனால் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்யவே பாலஸ்தீன அத்தாரிட்டி திணறுகிறது.  பாலஸ்தீனத்திற்கு இந்த அந்தஸ்தைக் கொடுப்பதற்குரிய ஓட்டெடுப்பில் ஃபிரான்ஸ், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் உட்பட 138 நாடுகள் அந்தஸ்து கொடுக்கலாம் என்று ஓட்டளித்தன.  அமெரிக்கா இஸ்ரேல் உட்பட ஒன்பது நாடுகள் கூடாது என்று ஓட்டளித்தன.  ஜெர்மனி, பிரிட்டன் உட்பட 41 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்றுக்கொள்ளவில்லை.

    இப்படி ஐ.நா.வின் ஜெனரல் அசெம்பிளியில் பாலஸ்தீன அத்தாரிட்டிக்கு, ‘ஓட்டெடுப்பில் பங்கெற்றுக்கொள்ள முடியாத அங்கத்தினர்’ பதவி (non-member observer status) கிடைத்திருப்பதால் இஸ்ரேலுக்குச் சில பின்விளைவுகள் ஏற்படலாம்.  பாலஸ்தீன அத்தாரிட்டி அகில உலக கிரிமினல் நீதிமன்றத்தில் இஸ்ரேல் மீது ஐ.நா.வால் பாலஸ்தீனத்திற்குக் கொடுக்கப்பட்ட இடங்களில் குடியிருப்புகளை அமைப்பதை எதிர்த்து வழக்குத் தொடுக்கலாம் என்பது அவற்றில் ஒன்று

    இப்படிப்பட்ட பின்விளைவுகளுக்குப் பயந்து அமெரிக்காவின் ஐ.நா. பிரதிநிதி ‘நாளை எழுந்ததும் பாலஸ்தீனர்களின் வாழ்க்கையில் எந்த வித முன்னேற்றமும் இருக்கப் போவதில்லை.  அமைத்திக்கான பேச்சு வார்த்தைகளில்தான் இன்னும் தாமதம் ஏற்படப் போகிறது’ என்று ஏளனமாகக் கூறியிருக்கிறார்.  அமெரிக்காவின் இரு அரசியல் கட்சிகளும் கூட்டாக பாலஸ்தீனத்தின் புதிய அந்தஸ்தை எதிர்க்கின்றன.  பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு எதிராக அகில உலக கிரிமினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் பாலஸ்தீன அத்தாரிட்டிக்குக் கொடுக்கும் நிதியை நிறுத்திவிடுவதாகவும் இஸ்ரேலுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாவிட்டால் பாலஸ்தீன அத்தாரிட்டியின் வாஷிங்டன் அலுவலகத்தை மூடிவிடப் போவதாகவும் அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. 

    2013 மார்ச் மாதம் அமெரிக்கா கௌரவிக்கவிருந்த பெண்கள் பட்டியலிலிருந்து எகிப்து நாட்டைச் சேர்ந்த ஆர்வலர் ஒருவரின் பெயரை நீக்கியிருக்கிறது.  அவருடைய ட்விட்டர் கணக்கில் சமீபத்தில் பல்கேரியாவில் இஸ்ரேலிய யூதர்கள் பயணித்த ஒரு பேருந்து தாக்கப்பட்டதைப் புகழ்ந்து எழுதியிருந்தாராம்; மேலும் ஹிட்லர் யூதர்களுக்கு எதிராகக் கூறிய ஒரு மேற்கோளும் எடுத்தாளப்பட்டிருக்கிறதாம்.  ஆனால் அந்தப் பெண் தான் அப்படி எழுதவில்லை என்றும் தன்னுடைய கடவுச் சொல்லை (password) யாரோ திருடி தன் கணக்கில் யாரோ அப்படி எழுதியிருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.  இது பற்றி தீர விசாரித்த பிறகே முடிவெடுக்கப்படும் என்று அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறை அறிவித்திருக்கிறது. அமெரிக்காதான் இப்போதைய இஸ்ரேலின் முழு நண்பன்.  இஸ்ரேலைத் தாக்கும் யாரும் அமெரிக்காவில் ஜனாதிபதியாக வர முடியாது.

    சென்ற ஜனவரி 22-ஆம்  தேதி இஸ்ரேலில் பார்லிமெண்ட் தேர்தல் நடந்தது.  எட்டு  மில்லியன் ஜனத்தொகை கொண்ட  இஸ்ரேலில் 20 சதவிகிதம்பேர்  (1.5 மில்லியன்) அரேபியர்கள். இவர்களில் பலர் தேர்தலில் வாக்களிப்பதில்லை.  இதற்குப் பல காரணங்கள் உள்ளன.  2008-இல் நடந்த தேர்தலில் 53% வாக்களித்தனர்.  இந்தத் தேர்தலில் இன்னும் இது குறைவாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர்.  ஆனால் 56% வாக்களித்திருக்கிறார்கள்.  ‘யூதர்கள் (64%) அளவு அரேபியர்கள் ஓட்டளித்தால் இருபதுக்கும் மேலான இடங்களைப் பெறலாம்.  இப்போது வாக்களிப்பவர்களில் இன்னும் 50% அதிகரித்தால் நேத்தன் யாஹூ அரசில் (government) இருக்க முடியாது’ என்று முன்னாள் பார்லிமெண்ட் உறுப்பினரும் மந்திரியுமான கேலப் மஜாட்லே (Ghaleb Majadleh) கூறியிருக்கிறார்.  நிறைய அரேபியர்கள் ஓட்டளித்தால் நாடு (இஸ்ரேல்) ஜனநாயகத்தையும், எல்லோருக்கும் சமஉரிமை கொடுப்பதையும் மதிக்கிறது என்பது புலனாகும் என்கிறார்கள் இஸ்ரேல் தலைவர்கள்.    அரேபிய அரசியல்வாதிகள் அவர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சமமான வேலைவாய்ப்புகள், கல்வி வசதிகள், முனிசிபல் வசதிகள் இல்லை என்கிறார்கள்.  அரேபிய கட்சிகளுக்குள்ளும் ஒற்றுமை இல்லை என்கிறார்கள்.  சில அரேபியர்களுக்கு தேர்தலில் அக்கறையில்லை.  ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்ற மனப்போக்கு.  இரண்டாவது வகையினருக்கு தேர்தலில் நம்பிக்கை இல்லை.  வாக்களிப்பதால் தங்கள் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை, ஏனெனில் இஸ்ரேல் தங்களுடைய நாடு இல்லை என்று நினைக்கிறார்கள்.  ஒரு குடியரசு என்று இஸ்ரேல் தன்னைக் கூறிக்கொண்டாலும் அரேபியர்களை சரியாக நடத்துவதில்லையாதலால் வாக்களித்துப் பிரயோஜனம் இல்லை என்று நினைக்கிறார்கள்.  என்னதான் தாங்கள் சரியாக நடத்தப்படாவிட்டாலும் – வேலைவாய்ப்பு, கல்வி வசதி, முனிசிபல் வசதிகள் இல்லையென்றாலும் – யூதர்களைப் போல் தங்களுக்கும் ஓட்டுரிமை இருப்பதால் அதைப் பயன்படுத்த வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள்.  மூன்று அரேபியர்கள் கட்சி – ஒன்று மத அடிப்படையில், இன்னொன்று கம்யூனிஸ்ட், இன்னொன்று தேசியக்கட்சி – இருக்கின்றன.  புதிதாக இன்னொன்று இந்தத் தேர்தலில் சேர்ந்திருக்கிறது.  இஸ்ரேலின் பாகுபாட்டுக் கொள்கைகளைத் தட்டிக்கேட்க யாராவது வேண்டுமல்லவா;  அதனால் நான் வாக்களிக்கப்போகிறேன் என்கிறார் இன்னொரு அரேபியர்.

    2013 மார்ச் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் விஜயம் செய்தார்.  அரசியல் தலைவர்களோடு பேசுவதை விட இளம் தலைமுறையினரோடு பேசி அவர்கள் மனதை மாற்ற முயற்சி மேற்கொண்டார்.  இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பேசுவதற்குப் பதிலாக ஜெருசலேமில் உள்ள மாநாட்டு அரங்கம் ஒன்றில் 2000 பேர் அடங்கிய கூட்டத்தில் இளம் தலைமுறையினருக்கு அறைகூவல் விடுத்தார்.  ‘பாலஸ்தீனர்களின் இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள்.  அவர்கள் கண்கள் மூலம் உலகைப் பாருங்கள்.  பாலஸ்தீனக் குழந்தைகளுக்கும் உங்களைப் போல் சொந்த நாட்டில் சுதந்திரமாக வளரும் உரிமை இருக்கிறதல்லவா?’ என்று பேசினார்.  ஆனால் இஸ்ரேல் அமைத்துவரும் குடியிருப்புகளைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை.  முகம்மது அப்பாஸை ராமல்லாவில் சந்தித்தபோது மறுபடி சமாதான உடன்பாட்டிற்குரிய பேச்சுவார்த்தைகளில் எந்த வித நிபந்தனையுமின்றி கலந்துகொள்ளுமாறு வற்புறுத்தினார்.

    அமெரிக்க ஜனாதிபதி இப்படிப் பேசி இஸ்ரேல் தலைவர்களை  நியாயமாக நடந்துகொள்ள வைக்க  முடியுமா என்று தெரியவில்லை.  பாலஸ்தீனியர்களின் இடங்களில்  இஸ்ரேலியர்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும்  குடியிருப்புகளில் வசித்துவரும் இஸ்ரேலியர்களை எப்படி அங்கிருந்து  வெளியேற்றுவது?  இதற்கெல்லாம் தீர்வு ஏற்பட்டாலும் தீர்வு காண முடியாத இன்னொரு பிரச்சினை இருக்கிறது.  இஸ்ரேல் அரசு நிர்மாணித்து வரும் பெரிய மதில் சுவரால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்கள் இப்போது தொடர்ச்சியாக இல்லை.  இப்படித் தொடர்ச்சியாக இல்லாத இடங்களை வைத்துக்கொண்டு அவர்கள் எப்படி பாலஸ்தீன நாட்டை உருவாக்குவது?

    இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு நாடுகளாக இல்லாமல் பாலஸ்தீனம் முழுவதும் ஒரே நாடாக உருவானாலும் யூதர்கள் அதை விரும்பவில்லை.  அவர்களுடைய நாடு ஒரு யூத நாடாகத்தான் இருக்க வேண்டுமாம்.  மேலும் அப்படி ஒரே நாடு உருவாகும் பட்சத்தில் பாலஸ்தீனர்கள் மெஜாரிட்டி ஆகிவிடுவார்கள்.  தங்களுக்கே தங்களுக்கென்று ஒரு யூத நாடு வேண்டும் என்று கேட்பவர்கள் இதை எப்படி ஏற்பார்கள்?  இத்தகைய காரணங்களினால் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

    கடையாக ஒன்றைக் குறிப்பிட  வேண்டும்.  மேலே குறிப்பிட்டுள்ள சரித்திர நிகழ்வுகளை வைத்துப் பார்த்தால் கிறிஸ்துவர்கள்தான் யூதர்களைப் பல இன்னல்களுக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள் என்பதும் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்ட பிறகுதான் முஸ்லீம்களுக்கும் யூதர்களுக்கும் பகைமை ஏற்பட்டிருக்கிறது என்பதும் நன்றாகப் புலனாகும்.  இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையைப் பற்றி இப்போது பேசுபவர்கள் இந்த உண்மையை மறந்துவிடுகிறார்கள்.  அது மட்டுமல்ல, முஸ்லீம்கள்தான் தீவிரவாதிகள் போலவும் அவர்களால்தான் யூதர்களுக்குத் தீங்கு விளைவது போலவும் கூறுகிறார்கள்.

    முற்றும்

    கீழே இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்குக் கொடுக்கப்பட்ட நாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக பிடித்துக்கொண்ட வரைபடத்தைப் பார்க்கலாம்.

    palestine-FourMaps

    Share
  • முதுமைப் பூங்காற்று

     

    முதுமைப் பூங்காற்று

     

    மெல்லிய ஒளியுடன் மெதுவாய்த் தோன்றும்,

    மாலை வானின் மதியம் போல,

    மேன்மை பொருந்திய எந்தை தாயிடம்,

    முதுமை மெல்ல அரும்பி யதோ?

     

    மழலை என்னும் வேடம் அணிந்து,

    மானுட வாழ்வை மண்ணில் அடைந்து,

    மார்போ டணைக்கும் பெற்றோ ரன்பால்,

    மான் போல் துள்ளி மகிழ்ந்தீரே!

     

    மிளிரும் இளமை வேடம் பூண்டு,

    மணவாழ் வென்னும் வேதம் கண்டு,

    மாயம் நிறைந்த உலகை வென்று,

    மயக்கம் இன்றி வாழுகின் றீர்!

     

    பெற்றோ ரென்னும் புதிய வேடத்தைப்,

    பொறுப்புடன் ஏற்று மக்களைக் காத்து,

    தங்களைப் பெற்றவர் பெருமிதம் கொள்ள,

    பண்புடன் வாழ்க்கை நடத்து கின்றீர்!

     

    தொழில் என்னும் தோணியில் ஏறி,

    வாழ்வென்னும் கடலைக் கடந்தீரே அன்றிப்,

    பொருள் சேர்க்கும் ஆசை வலையில்,

    ஒருநாளும் வீழாமல் இருக்கின் றீர்!

     

    தங்கள் பெற்றோர், தங்கள் கடமை,

    தரணியில் முடித்துச் சென்ற பொழுது,

    தேய்பிறைத் திங்கள் போல் துவண்டாலும்,

    தெளிவுடன் நின்ற உங்களை அறிவேன்!

     

    நிழலில் உலர்த்திய மாவிலை போல,

    உங்கள் மேனியின் சுருக்கம் கண்டு,

    தணலில் விழுந்த புழுவைப் போல,

    எந்தன் இதயம் துடிக்கின் றேன்!

     

    மெல்லிய ஒளியுடன் மெதுவாய்த் தோன்றும்,

    மாலை வானின் மதியம் போல,

    மேன்மை பொருந்திய எந்தை தாயிடம்,

    முதுமை மெல்ல அரும்பி யதே!

     

    சச்சிதானந்தம்

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    திவாகர்

    இந்த ‘காலகட்ட’ ஆராய்ச்சிகளென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.நம்மாழ்வார் எப்போது பிறந்திருப்பார், திருவள்ளுவரின் காலம் என்ன, திருவள்ளுவருக்கு திருமூலர் முந்தியவரா பிந்தியவரா, மாணிக்கவாசகரின்காலம் தேவார மூவருக்கும் முந்தியதா என்பதெல்லாம் ஆராயப் பிடிக்கும்.அப்படித்தான் மாணிக்க வாசகர் பற்றிய காலகட்டத்தின் ஆராய்ச்சியொன்றினை என் வலைப்பகுதியில் தொடராக எழுதியுள்ளேன்.

    ஆனால் இவையெல்லாம் வருங்காலம் இன்னமும் எளிதாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.நாம் எத்தனைதான் முன்னோரைப் பற்றி ஆராய்ச்சி செய்தாலும்சம்பந்தப்பட்டவராகவே வந்து நமக்கு சரிவரத் தெரிவிக்காவிடில் எல்லாமும் கணிப்புகளின் ஒரு பகுதிதான் என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். நாம் எத்தனைதான் சந்தேகமற நம் முன்னோர்களின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் தெளிவாக ஆராய்ந்து எழுதினாலும் சம்பந்தப்பட்டவர்களின் நேரடி சாட்சியங்கள் கிடைக்காத மட்டில் இந்த ஆராய்ச்சிகள் அனைத்துமே மறு ஆராய்ச்சிக்கு உட்பட்டதுதான். உதாரணமாக நம் தேச தந்தை காந்தியடிகளின் வரலாறு ‘சத்திய சோதனை’ என்று அவரே கைப்பட எழுதியதுதான் அவரது காலக் கட்டத்தைப் பற்றியும் அவரது சாதனைகள் பற்றியும் எதிர்காலத்தவருக்கு சரியான செய்தியாகப் போய்ச் சேரும். ஒருவேளை காந்தி எழுதவில்லை என்றால் வேறு ஆயிரம் பேர்கள் காந்தியைப் எழுதினாலும் அத்தனை எழுத்துக்களும் மறு ஆய்வுக்குரியதே.

    இந்த வகையில் பார்க்கும்போது டாக்டர் செம்மல் அவர்கள் ஒரு சிறந்த சேவையாக அறிஞர்களின் வாழ்க்கையை நேரடியாக அவர் வாய் மூலமாகக் கேட்டு அதைக் காலப் பெட்டகத்தில் பதிப்பது ஒரு பொறுப்பான சமூகப் பணியாகும். இதோ அவரது கோரிக்கை ஒன்று இந்த வாரத்தில் வல்லமை குழுவில் வெளிவந்தது.

    Subject: Archiving Tamil Scholars Living in Madurai as on March 2013

    Dear All,

    Hereby the Scientific Tamil Foundation launches a new webpage title as http://www.tamillanguagearchives.blogspot.in/Kindly refer the names of the Scholars living in Madurai at present whom you believe may be added to this webpage. Viewing at the activities of the foundation, many may be of the opinion that it will be manned by a team; the reality is that – at present the foundation is manned only by me as a single person.
    Shri. Manavai Mustafa, the founder of the foundation has donated rupees 10 lakhs (INR) (that which was given for nationalization of his
    books) by the Government of tamilnadu to the foundation. With that corpus fund the foundation is able to proceed on various non
    commercial ventures smoothly. Apart from this, every month I am funneling a part of my salary for the ventures.The foundation is registered with the Government and is ready to provide financial assistance for Tamil Development. Archiving will be done by me personally on Tuesday (26th March) (10:00 hours till 16:00 Hours)All the Processing, Recording , Video editing , Uploading will be done Free of cost. Refer the names of the genuine scholars to me as early as possible.

    டாக்டர் செம்மலுக்கு நாம் அனைவரும் உதவுவோமாக.. எதிர்கால தலைமுறைக்குஒரு மிகச் சிறந்த சேவையாக இதைக் கருதி, இச் செய்லை மேற்கொண்டு வரும் டாக்டர் செம்மல் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழு மனமுவந்து தேர்ந்தெடுக்கிறது. டாக்டர் செம்மல் அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: ’மலர் சபா’ அவர்களின் சிலம்புத் தமிழ் காணிக்கையிலிருந்து

    இனிய கதிர்களையுடைய
    திங்களது போலும்
    ஒளிர்ந்திருக்கும் முகத்தையுடைய
    தலைவியின் சிவந்த வாயில் இருக்கும்
    அழகிய பற்களுக்கு
    நீ தரும் இந்த முத்துகள் ஈடாகா;

    எனினும்

    ‘முத்துகளை நீங்கள் வாங்குங்கள்’ என்று கூறித்
    திருமாலின் மகன் காமன் அவன் போல் பித்தேறி
    கடலே! நீயும் நாள்தோறும் இங்கு வருகின்றாய்!

    Share