Blog

  • ஒரு அன்றாடத்தின் சில நொடிகள்

    ஈரோடு கதிர்

    காலையில் வீட்டில் கோடை பண்பலை ஓடிக்கொண்டிருப்பது வாடிக்கை. ஓடிக்கொண்டிருப்பது சொல்லலாமா? சரி பேசிக்கொண்டிருப்பது அல்லது பாடிக்கொண்டிருப்பது. பெரும்பாலும் மனம் அதன் நிகழ்ச்சிகளில் லயிப்பதில்லைலை. அது அதுபாட்டுக்கு சப்பதமிட்டுக்கொண்டிருக்கும். வீட்டில் ஒரு கூடுதல் ஜீவன் போல பலநேரங்களில் ரேடியோவும் டிவியும்.  சமீப நாட்களாய் ஒரு விளம்பரம் என்னை திடீரென வசப்படுத்திவிடுகிறது. ஒரு குழந்தையின் மழலை  உடைந்த குரலில் திடீரென   வரும் “எல்ல்லாலாலாஆஆஆருக்கும் நன்றி”. இது ஒலிக்கையில் மட்டும் மனசு அப்படியே மலர்ச்சியில் இழுத்துச் சொருகிக்கொள்ளும். அந்தக் குரலுக்கேற்ப ஒரு குழந்தையை மனசு உடனே உருவகிக்க முயலும். ஒவ்வொரு தினமும் வேறுவேறு முகங்களும், வேறுவேறு வித முகபாவங்களும் வந்துபோகும். இதுநாள் வரையில் இல்லாமல் நேற்று அந்த ”எல்ல்ல்ல்ல்லாஆஆஆஅருக்கும் நன்றி” நான் யாரிடமோ நன்றி சொன்னதுபோலவும், யார்யாரோ என்னிடம் நன்றி சொன்னது போலவுமான ஒரு உணர்வைத்தந்தது. படியிறங்கும்போது வழக்கத்துக்கு மாறான புன்னகையோடு மனைவிடம் பேசிவிட்டுப் புறப்பட்டேன்.

    கையில் காசு இல்லாதது நினைவுக்கு வந்தது, போகும் வழியில் எந்த ஏடிஎம் போகலாம் என மனசு நினைக்கையில், வண்டி தானாக பெருந்துறை சாலையை நோக்கித் திரும்பியது. டீச்சர்ஸ் காலனி கிழக்கு மூலையிலிருந்து பெருந்துறை சாலைக்கு குறுக்குவழியாக வரும் ரொம்பவும் இக்கட்டான் சந்தில் நுழைந்தபோது, எதிரில் பைக்கில் வந்தவர் சட்டென நின்று கொண்டு, பெரிதாக புன்னைத்தவாறு தொப்பியைக் கழட்டிக்கொண்டே

    ”அண்ணா” என்றார்.

    ”ஆஹா…. பிரபு” என்றவாறே நின்றேன்.

    சார்ட்ஸ், பனியன், பேட் எல்லாம் ஷட்டில் முடிந்து வருவதை உணர்த்தியது. சில நண்பர்கள் இணைந்து ஒரு சிறகுப்பந்து மைதானம் அமைத்து விளையாடி வருவது நினைவிற்கு வந்தது. விடைபெற்று நகர்கையில் மனதிற்குள் ஒரு நவீன சிறகுப்பந்து மைதானம் வந்துபோனது.

    ஏடிஎம் குறித்து யோசித்துக்கொண்டே மெதுவாக வண்டி ஓட்டுகையில், இந்தப் பகுதியில் மின்சாரம் இருக்குமா இருக்காதா என்றும் யோசனை தோன்றியது. மின்சாரம் இல்லையென்றால் பெரும்பாலான ஏடிஎம் இயந்திரங்கள் முடங்கிப்போவது வாடிக்கை. அப்படியே பெருந்துறை ரோடில் ஊர்ந்துகொண்டே ஆக்ஸில் வங்கி ஏடிஎம் முன் வண்டியை நிறுத்தினேன். மேலே நின்று கொண்டிருந்த செக்யூரிட்டி ”எங்கே போறீங்க” என சைகையால் கேட்டார். ஏடிஎம் பக்கம் விரல் சுட்டினேன். ஓராமா போடுங்க என்பது போல் பணிவாக பாவனை செய்தார். சிரித்துக்கொண்டே அவர் சொன்னதைவிட ஓரமாகப் போட்டேன். இந்த மாதிரி சூழல்களில் என்னத்துக்கு ஓரமாப் போடனும், அதும் காலையிலையே! உடனே எடுக்கிறதுதானே எனப் பலமுறை எதிர்நிலை உணர்வு கொண்டதும் உண்டு.

    ஏடிஎம்மை நெருங்கையில் அந்த செக்யூரிட்டி புன்னகைத்தார். உள்ளே ஆள் இருப்பதாகச் சொன்னார். உள்ளேயிருந்தவர் ரொம்ப நேரம் ஏதேதோ ஆராய்ச்சிகள் செய்து பொறுமையாக வெளியேறினார். என்ன பேங்க் இது ரெண்டு மெசின் வைக்கமாட்டாங்களா எனத் தோன்றியது. ஏடிஎம் வந்த பிறகு கொஞ்சம் சோம்பேறித்தனம் கூடிப்போனதாக அவ்வப்போது உணர்வேன். அப்போதும் உணர்ந்தேன்.

    இயந்திரத்தில் அட்டையைச் சொருகி இழுத்தேன். “ஓடிப்போய்டு” என அதன் பாசையில் சொன்னது. மீண்டும் எடுத்து சொருகினேன். மீண்டும் அதையே சொன்னது. என்னடா இது என்று தலைப்பை மாற்றிச்(!) சொருகினேன். அது கேணத்தனம் என்பது புரிந்தது. சட்டையில் வைத்து தேய்த்து, மீண்டும் பலமுறை முயன்றும் ஏடிஎம் மனம் இறங்குவதாகத் தெரியவில்லை. வெளியில் பார்த்தேன். ஒருவர் காத்திருந்தார். சரி அப்புறம் போராடலாம் என வெளியில்வந்து அவருக்கு வழிவிட்டேன். அவரும் போராடுவதுபோல் தெரிய, கொஞ்சம் தலை எம்பி எட்டிப்பார்த்தேன். எனக்கு வந்த அதே ”ஓடிப்போ”. இப்போது திருப்தியாக இருந்தது. அப்போ அட்டையில் சிக்கல் இல்லை, இயந்திரத்தில்தான் போல.

    அவர் பாதுகாவலரிடம் எதோ சொல்ல, அவர் ரொம்பவும் சர்வசாதரணமாக “நெட் பிரச்சனையா இருக்கும் சார்” என்றார்.

    கடகடவென படிகளில் இறங்கும்போது அடர்த்தியான புகையிலை வாசம் அடித்தது. அது சிகரெட் வாசம் அல்ல. காய்ந்த புகையிலையின் மூர்க்கத்தனமான வாசம். அதெப்படி அங்கே. யாராச்சும் மூக்குப் பொடி போட்டிருப்பாங்களோ?.

    சட்டென குமாரவேலு நினைவுக்கு வந்தான். போனவாரம் ஊருக்குப் போயிருந்தபோது, அங்கிருக்கும் மஞ்சக்காரர் தோட்ட தென்னைமரச் சாரியில் புகையில கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. குமாரவேலுவோடது என்றார்கள். அவனும் அவன் தம்பியும் விவசாயத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இருவருமே என்னோடு அடுத்தடுத்த ஆண்டுகளில் பள்ளியில் படித்தவர்கள். கடிமான உழைப்பு. தொடர்ந்து மஞ்சளாகப் போட்டு சேர்த்து வைத்து சட்டை 15000 இருக்கும்போது விற்று மிகப்பெரிய தொகை ஈட்டியவர்கள். பள்ளிப் படிப்பைத் தாண்டவில்லை என்பதாலும், விவசாயிகள் என்பதாலும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் சிரமப்படுவதையும் அறிவேன். பெருமாள் முருகனின் கங்கணம் கதை நாயகன் மாரிமுத்து நினைவுக்கு வந்துபோனார்.

    நொடியில் வந்த புகையிலை வாசம், நினைவுகளில் என்னை எங்கெங்கோ இட்டுச் சென்றதை உணரும் நேரத்தில் பெட்ரோல் பங்குக்குள் என் வண்டி தன்னிச்சையாய் நுழைந்து கொண்டிருந்தது. பெட்ரோல் போடவேண்டும் என்பதை நினைவில் தானாக முளைத்திருந்திருக்க வேண்டும். பெட்ரோல் அடிக்கும்போது அலுவலக அறையில் பங்க்காரர் இருக்கிறாரா எனப்பார்த்தேன். பல ஆண்டுகளாகத் அவரைத் தெரியும். எங்கள் அரிமா சங்கத்தின் முதல் தலைவரும் கூட. இருந்தால் மரியாதை நிமித்தம் ஒரு புன்னகையும், வணக்கத்தையும் பரிமாறிக்கொள்வதுண்டு. சமீபத்தில் இரண்டு கூட்டங்களில் நான் பேசியபோது உடனிருந்ததில் என்மீது பிரியம் கூடியிருப்பதை, அதன்பின் எங்கு பார்த்தாலும் சட்டென கையைப் பிடித்துக்கொள்வதின் மூலம் அறிந்ததுண்டு. அவருடைய மெலிந்த கரமும், எப்போதும் அதிலிருக்கும் ஒரு சில்லிப்பும் ஒரு கணம் நினைவில் வந்துபோனது.

    நினைவை வெட்டி அருகிலிருக்கும் ஸ்டேட்பேங்க் ஏடிஎம் பக்கம் நகர்ந்தேன். அப்போது வந்துநின்ற காரிலிருந்து இறங்கி ஏடிஎம் போய்க் கொண்டிருந்தார் ஒருவர். அட, ஆக்ஸிஸ் வங்கியில் நான் வழிவிட்ட நபர் அல்லவா இவர் எனப்புரிந்தது. கார் ஒரு கால் டாக்ஸி நிறுவனப் பெயரை முன்னும் பின்னும் பதித்திருந்தது.

    திடீரென சில மாதங்களில் கால் டாக்ஸிகள் ஈரோட்டை நிரப்பத் தொடங்கிவிட்டன. எல்லா ஊர்களிலும் கால் டாக்ஸிகள் இருக்கும்போது ஏன் ஈரோட்ல மட்டும் இல்லை என்று நினைப்பதுண்டு. ஆனால் திடீரென மூன்று நான்கு நிறுவனங்கள் கால் டாக்சிகளை இயக்கத் தொடங்கிவிட்டன. சமீபத்தில் ஒரு கால் டாக்ஸியில் போகையில், சும்மா பேச்சுக்கொடுத்தபோது அவர்கள் மட்டும் 80 டாக்ஸிகளை இயக்குவதாகவும், கால்டாக்ஸிகள் குறித்தும் நிறையச் சொன்னார். ஈரோட்டில் மொத்தம் 200 வண்டிகளுக்கு மேல் இருக்குமென்றும் சொன்னார். எப்படி அளந்தாலும் 2 – 3 கி.மீ தூரம் மட்டுமே இருக்கும் நகரத்தில் அத்தனை வண்டிகளுக்கு வேலையா எனக்கேட்டபோது ஆட்டோக்களுக்கு போட்டியாக என்று சொன்னது உண்மைதான் என்றும் பட்டது.

    ஈரோடு மாதிரி ஊர்களில் ஆட்டோக்களை அணுகுவது அவ்வளவு எளிதல்ல. எடுத்த எடுப்பில் நூறு ரூபாய் வரைக் கேட்கும் இடத்தில் முதல் 4 கிலோ மீட்டருக்கு 75 ரூபாய், அதற்கு மேல் கிமீக்கு 10 ரூபாய் என்றிருப்பது ரொம்பவும் வசதிதான். நம் வீட்டு வாசப்படி தேடிவந்து புறப்பட்ட இடத்திலிருந்து சேரும் இடம் வரை மட்டுமே கட்டணம் என்பதும் நன்றாகத்தான் இருக்கின்றது. நாலு பேர் வரை வசதியாகச் செல்லும் வாய்ப்பும் கூட.

    அதே சமயம் காலம் காலமாய் இருக்கும் ஆட்டோக்கள் நசுங்கிப்போவதை நினைக்கவும் சங்கடமாக இருந்தது. மளிகைக்கடைகளை முடக்க வரும் வால்மார்ட் நிறுவனங்களும் இதுபோன்றதொரு திட்டம்தானே என யோசிக்கும்போதே சிந்தனை எங்கு போகிறதெனக் மனக்குரல் கேட்டது.

    அலுவலகப் படியேறுகையில், அங்கே நின்று கொண்டு பின்னாள் வீட்டு ஆயா, இரண்டு வயதுப் பேரனை இக்கத்தில் இடுக்கிக்கொண்டு சோறூட்டிக் கொண்டிருந்தார். முகத்தை இறுக்காம வைத்துக்கொண்டு மென்று கொண்டிருந்தான். வழக்கமாக பார்த்தவுடன் சிரிக்கக்கூடிய குழந்தை. அவனைப் பார்த்து ”வணக்கம் சார்” என்றேன். காரணம் அவன் எப்போது என்னைப் பார்த்தாலும் பாட்டி சொல்லிக்கொடுத்தபடி கும்பிட்டவாறு வணக்கம் எனச் சொல்ல முயல்வான். என் வணக்கத்தை அவன் கண்டுகொள்ளவில்லை. “ஏன் சார் வணக்கம் சொன்னாக்கூட கண்டுக்க மாட்டேங்குறார்” என்றேன்.

    ”சோறு திங்கச் சொன்னதுக்கு கோவத்த பாருங்க” என்றவாறு அடுத்த வாய் சோறூட்டினார். கோவித்துக்கொள்ள 2 வயது சிறுவனுக்கும் கூட காரணம் இருப்பதுதான் வாழ்க்கையின் சுவாரசியம்.

    தேநீர் நேரம். வெயில் அநியாயத்துக் கொளுத்தத் தொடங்கியிருந்தது. டீக்கடையில் நானும் கார்த்தியும் நின்று கொண்டிருக்கின்றோம். எதிரில் இருக்கும் சிந்தாமணி ஒயின்ஸ் பின்புற வழியில் வந்த ஒரு ஆள் கைகளில் மதுபானப்புட்டியும், தண்ணீர் பாக்கெட்டும் வைத்திருந்தார். கார்த்தியிடம் கேட்டேன்.

    “அந்தாளென்ன ராவாவா அடிக்கப்போறானா?”

    “இப்பப் பாருங்க என்ன நடக்கப்போவுதுனு”

    ”என்ன நடக்கும்”

    “அப்படியே கப்னு அடிச்சுட்டு, பாக்கெட் வாட்டர வாய்க்குள்ளே சர்னு அடிச்சு கொப்பளிச்சு துப்பாம முழுங்குவான் பாருங்க. ஒரு சொட்டுக்கூட வீணாயிடக்கூடாதுல்ல”

    ”அப்படியே ராவாவா, இந்த வெயில்ல டீ குடிக்கவே அலறுதே. சரக்கை ராவாவா அடிக்கிறதா… யெப்பா சாமீ?”

    அந்த ஆள் பாட்டிலை கவிழ்த்து ஒரே மடங்கில் குடித்துவிட்டு, பாட்டிலை ஸ்டைலாக சாக்கடையில் வீசிவிட்டு, பாக்கெட் வாட்டரை வாயில் பீய்ச்சி, கார்த்தி சொன்னதுபோல் குடிக்காமல் கீழே துப்பினார்.

    கார்த்தியை பார்த்து புன்னகைத்தேன். அந்த ஆள் புறப்பட்டார்

    ”எப்படி கார்த்தி இப்படி?”

    “அதெல்லாம் இப்படித்தான், இப்பப் பாருங்க அந்தத் தள்ளுவண்டியில ஒரு மாங்காத்துண்டு எடுத்து வாய்ல போட்டுட்டுட்டுப் போவான் பாருங்க”

    அந்த ஆள் ஒரு கம்மங்கூழ் வண்டியைக் கடந்து கொண்டிருந்தார்.

    மாங்காய்த் துண்டை எடுக்கவில்லை.

    ”ம்ம்ம்.. அவ்ளோதான் ஜனசங்கமத்தில ஆளு ஐக்கியமாயிடுச்சு” என்றார் கார்த்தி

    சில நொடிகளுக்கு முன் பார்த்த குடிமகன் என்ற அடையாளம் ஏதுமற்று அங்கிருந்த கூட்டத்தில் கலந்து நகர்ந்து போய்க்கொண்டிருந்தார்.

    “ஸ்பிரிட் படம் மாதிரி, ஒரு கேமரா எடுத்துட்டுச் பின்னாடியே போனோம்னா செம இண்டரஸ்டிங்கான மேட்டர் கிடைக்கும்” என்றார் கார்த்தி

    மோகன்லால் நடித்த ஸ்பிரிட் படத்தை சமீபத்தில்தான் நாங்கள் இருவருமே பார்த்திருந்தோம். ஒரு பின்இரவில் வீட்டில் நான் தனியே பார்த்துக் கொண்டிருந்தேன். படம் பாதிமுடியும் தருணத்திற்குள்ளேயே என் மூளை சூடேறிவிட்டது. சரக்கு அடிப்பதிலிருந்து ஒதுங்கியிருக்கும் எனக்கு, எங்காச்சும் போயி ஒரு ரெண்டு பெக் அடிச்சிடுவோமா எனத்தோன்றியது. ஒரு சினிமா என்னசெய்துவிடும் என்று சொல்பவர்களுக்கு என் பதில் சினிமா “சிலவற்றைச் செய்துவிடும், நல்லதைச் செய்ய இயலுமா எனத் தெரியவில்லை, நல்லதல்லாதவற்றை வெகு எளிதாகச் செய்துவிடக்கூடியதுதான்”

    அதே படத்தின் பின்பாதியில் அந்த பாடலாசிரியர் சமீர் மரணிக்கும் நொடியில் “அம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆ” என அலறும் நொடியை அப்படியே உள்வாங்குபவன் அந்த நொடியே குடியை விட்டு ஓடிவிடவும் சாத்தியமுண்டு. சமீபத்தில் நண்பர்களிடம் ”பாருங்க, பாருங்க” எனப்பரிந்துரைத்த படங்களில் அதுவும் ஒன்று.

    ஸ்பிரிட் என கார்த்தி சொன்னவுடனே, அதன்பின்னர் நானும் கார்த்தியும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. அந்த 11.30 மணி நேரத்து பகல் ”ராவா” குடிமகன் எனக்கு பாஸ்கர் அண்ணனின் நினைவை மீட்டிவிட்டார். சமீபத்தில்தான் பாஸ்கர் அண்ணனின் பெண்ணைப் பார்த்தேன். என் மகள் படிக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்போ, ஒன்பதாம் வகுப்போ படிக்கின்றாள். தனது தாத்தாவோடு பள்ளியில் எதோ கலைநிகழ்ச்சி முடித்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தாள். பாஸ்கரின் அப்பாவைப் பார்த்த பின்தான், அந்தக் குழந்தை பாஸ்கரின் பெண்தான் எனப்புரிந்தது. அவள் பிறந்த அன்றே மருத்துவமனையில் பார்த்ததும் அப்போது நினைவுக்கு வந்தது.

    எத்தனை அற்புதமான மனிதன் பாஸ்கர். 80களிலேயே பிஇ முடித்து பின்னர் எம்பிஏ படித்து வேலைக்குச் செல்லாமல் தொழிலில் சிறப்பாகயிருந்த மனிதர். பழகுவதற்கு அத்தனை இதமான மனிதன். அந்தக் காலத்தில் எங்களை வெளியூர் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதெல்லாம் அவர்தான். அவருடன் RX-100ல் போவது உலகின் உற்சாகமிகு சந்தர்ப்பங்களில் ஒன்று எனக்கு.

    நான் முதன்முதலில் பியர் குடித்ததுகூட அவரோடுதான். அவர், இப்போது ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் அவரின் நண்பர், நான் என மூவரும் பியர் குடித்துவிட்டு ரவி தியேட்டரில் எதோ மோகன்லாலின் படமோ சுரேஷ்கோபியின் படமோ பார்த்ததாக நினைவு.

    பெரிய நட்பு வட்டம் அவருடையது. நானெல்லாம் அதில் பொடிப்பையன். அவர்களின் நட்பு வட்டம் எப்போது கூடினாலும் குடி பிரதானப்படும். அப்போதெல்லாம் குடிப்பது எத்தனை பெரிய ஆண்மை (!) நிறைந்த விசயமென்று ஆச்சரியப்பட்டதுண்டு. காலம் உருண்டோடியது. எங்களுக்குள் தொடர்புகள் குறைந்துபோனது. 10-15 ஆண்டுகளில் குடியால் மட்டுமே உடல்நிலை சீரழிந்து, மஞ்சள் காமாலை தாக்கி ஒரு கட்டத்தில் இறந்து போனார் பாஸ்கர். குடி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது பாஸ்கர் எப்படிப்பட்ட கம்பீரத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பார் என ஒரு காட்சிக்கோர்வை அவ்வப்போது மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும்.

    இந்த தினத்தை எந்த நொடியில் தொடங்கினேன்? இதெல்லாம் காண்பேனென்றோ, உணர்வேனென்றோ நினைத்திருந்திருப்பேனா? ஒரு நொடிக் காட்சி, உணர்தல் ஒரு கொத்து நினைவுகளை அள்ளியள்ளிக் கொட்டிவிடுகிறது. ஒரு அன்றாடத்தின் சில உணர்தல்களிலிருந்து ஒவ்வொருவரும் எங்கெங்கோ தாவி, தவித்து, நிரம்பி, வறண்டு, மீண்டு வருவதை நினைக்கும்போது நான் என்பது சிந்தனைகளின் தொகுப்போ என்று தோன்றுகிறது.,

    ஒரு எல்ல்லாலாலாஆஆஆருக்கும் நன்றி, ஒரு புகையிலை வாசம், ஒரு பெட்ரோல் பங்க் நுழைவு, கண்ணில்படும் ஒரு கால் டாக்ஸி, ஒரு ’ராவா’ குடிமகன், இதுபோல் சட்டென நினைவுகளைக் கிளர்ந்து நம்மை அதில் மூழ்கடிக்கவோ, தாலாட்டிடவோ, தவிக்கவிடவோ ஆயிரமாயிரம் நம்மைச்சுற்றி அன்றாடங்களில் எல்லா நொடிகளிலும் ஏதாவது ஒன்று இருந்து கொண்டேயிருக்கின்றன.

    முழு இரவும் வேலைகள் செய்துவிட்டு காலை 6 மணிக்குப் படுத்து 9 மணிக்கு எழும் ஏதாவது ஒரு அபூர்வ நாட்களில் சிந்தனைகளற்ற ஆழ்ந்த உறக்கத்தினை உணர்வதுண்டு. அப்படியொரு தூக்கத்திற்காகக்கூட முழு இரவு விழிப்பு நிலையை ரொம்பவும் அனுபவிப்பதுமுண்டு. எதையும் உணராமலும், எதுவும் உரசாமலும். சிந்தனைகள் யாதுமற்றிருக்கும் கணம், அவ்வளவாக வாய்த்து விடுவதில்லை. அப்படியொரு நொடி கிடப்பதை ஒரு வரமாக உணர்கிறேன்.

    சிந்தனைகளற்று இருப்பது குறித்துச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன் என சமீபத்தில் ஒரு வரி எழுதியது இப்போது என் சிந்தனையை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

    வேறொன்று நிரம்பும் வரை அதுதான் சுழலும். பின்னர் வேறொன்று நிரம்பும்.

    Share
  • பிக்கோலிம் புளுகு – 2

    தேமொழி

    (தொடர்ச்சி)

    முன் குறிப்பு:
    இது விக்கிபீடியாவில் “பிக்கோலிம் கான்ஃப்ளிக்ட்” என்ற தலைப்பில் பொய்யாகப் புனைந்துரைக்கபட்டு, பின்னர் புளுகுக் கட்டுரை எனக் கண்டறியப்பட்டதால் நீக்கப்பட்ட பதிவின் தமிழாக்கம்.

     

    Goa at its height under Portuguese occupation: Novas Conquistas (highlighted in yellow), Velhas Conquistas (highlighted in red)

    வரலாற்றுப் பின்னணி:
    வாஸ்கோட காமா (Vasco da Gama) கோவாவிற்கு வரும் கடல் வழிப் பாதையைக் கண்டறிந்த பிறகு, போர்சுக்கீசிய வர்த்தகர்கள் 1498 இல் இந்தியாவில் கோவாவை தங்களது முதல் வர்த்தக மையமாக அமைத்தார்கள். இதனால் 1542 ற்குள், கோவாவின் ‘வெலஸ் கான்கியுஸ்டாஸ்’ (Velhas Conquistas) பகுதி செழிப்படைந்தது [4]. இந்துவாகவோ, இஸ்லாமியர்களாகவோ இருக்கவே விரும்பியவர்களை விட, கிறிஸ்துவர்களாக மதம் மாறிய அப்பகுதி மக்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழக்கப் பட்டன [4]. கோவாவில் 1560 இல் ஒரு விசாரணை அமைப்பு நிறுவப்பட்டு, முதல் சில ஆண்டுகளிலேயே கிறிஸ்துவ மத அமைப்புடன் மாறுபட்ட மனப்போக்கு கொண்ட 4,000 பேர் கைது செய்யப்பட்டனர் [5]. இதனால் அருகாமையில் இருந்த இந்துப் பகுதிகளில், குறிப்பாக கோவாவின் வட பகுதியிலும், ‘நோவா கான்கியுஸ்டாஸ்’ (Nova Conquistas) பகுதியிலும் வாழ்ந்த மக்கள், புதியதாக நிறுவப்பட்ட இந்த விசாரணைக் குழுவினால் கலவரம் அடைந்தார்கள் [4].

    இக்காலத்தில் கோவாவின் வளர்ச்சி மிகுதியாக இருந்தாலும், வடக்கில் இருந்த மராட்டிய அரசின் வளர்ச்சியும் பரவலும் இதனைவிட அதிகமாக இருந்தது [6]. இதனிடையில், 1603 க்கும் 1639 க்கும் இடைப்பட்ட காலத்தில், டச்சுக்கரர்களுக்கும் போர்ச்சுகீசியர்களுக்கும் இடையில் நிகழ்ந்த போரினால், டச்சு கடற்படை கோவாவின் கடல் வழியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கடல் வழித் தொடர்பைத் துண்டித்தது. இதனால் போர்ச்சுகீசியர்களால், தங்கள் போர்சுகல் நாட்டிலிருந்து எந்த உதவியையும் அடைய முடியாமல் போனது. இதனால் கோவாவில் வாழ்ந்தவர்களின் வாழ்வு வறுமையில் சீரழியத் தொடங்கியது. டச்சு அரசு பிற நாடுகளில் உள்ள போர்சுகீசியர்களின் வர்த்தக மையங்களை வென்று, தங்கள் நாட்டுடன் இணைத்துத் தங்கள் பேரரசை விரிவாக்க நினைத்த முயற்சியின் விளைவே டச்சுக்காரர்களுக்கும் போர்ச்சுகீசியர்களுக்கும் கோவாவில் நிகழ்ந்த போருக்குக் காரணம் [4]. இதே காலத்தில் மராட்டியப் பேரரசர்  **சிவாஜி பான்ஸ்லே (Shivaji Bhonsle), பல தொடர் வெற்றிகளைப் பெற்றுத் தனது மராட்டியப் பேரரசை விரிவு படுத்திக் கொண்டிருந்தார். இதனால் 1635 ஆம் ஆண்டு வாக்கில், மராட்டியப்பேரரசு விரிவடைந்து போர்சுக்கீசிய கோவாவிற்கும் மராட்டியப் பேரரசிற்கும் ஒரு பொதுவான எல்லை அமைந்தது [7]. மராட்டியப் பேரரசின் வளர்ச்சியும், அதே சமயம் கோவாவில் நிகழ்ந்த பஞ்ச நிலையும், கோவாவின் வட பகுதியில் வாழ்ந்த மக்களை மராட்டியப் பேரரசை ஆதரிக்கச் செய்தது. அப்பகுதில் வாழ்ந்த பிறரும், குறிப்பாக கோவாவின் எல்லைப் பகுதியில் இருந்த, செல்வாக்கு நிறைந்த கோலாப்பூர் (Kolhapur) பகுதியில் உள்ள ஊர்களின் மக்களும் மராட்டியப் பேரரசின் வருகையை மிக விரும்பி ஆதரித்தார்கள் [7].

    டச்சுக்காரர்கள் ஏற்படுத்திய கடல்வழித் தடை நீங்கிய அதே காலத்தில், 1639 ஆம் ஆண்டில் மராட்டியப் பேரரசு அண்மையில் உள்ள மைசூர் அரசுடன் ஒரு உடன்படிக்கையினை ஏற்படுத்திக் கொண்டது. அந்த உடன்படிக்கையின்படி, மராட்டிய அரசும் மைசூர் அரசும், இரு அரசுகளுக்கும் பொதுவாக உள்ள நாடுகளின் எல்லையை மதிப்பதென்றும், ஒருவர் நாட்டின் எல்லைக்குள் மற்றவர் ஊடுறுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு சம்மதம் தெரிவித்துக் கொண்டன [8]. அத்துடன் மராட்டியப் பேரரசு தக்காணத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கும் பாதுகாப்பாக இருக்க முடிவு செய்தது. மராட்டியப் பேரரசின் ஒரே ஒரு அமைதியும் பாதுகாப்பும் அற்றப் பகுதியாக அந்நாட்டின் தெற்கு எல்லை, அதாவது போர்சுக்கீசியர்கள் வசம் இருந்த கோவாவின் பகுதி அமைந்திருந்தது. கோவாவின் வடபகுதியும், கிழக்க்குப் பகுதியும் மராட்டியப் பேரரசை எல்லையாகக் கொண்டிருந்தது [8].

    மோதலின் பாதையில்:
    மராட்டியர்கள் 1640 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோவாவின் போர்சுக்கீசிய தலைமை ஆளுநருடன் (Governor-General) பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டனர் [8] [9]. சமயத் தலைவர்கள் தனக்குக் கொடுத்த நெருக்கடியின் காரணமாக, தலைமை ஆளுநர் ‘மத்தியாஸ் டி ஆல்பகுர்கே’ (Matias de Albuquerque) மராட்டியர்களுடன் முரண்படும் பேச்சுவார்த்தைக்குத் தயங்கினார். மதத் தலைவர்களின் ஆதிக்கம் அக்கால கோவாவின் போர்ச்சுக்கீசிய அரசாங்கத்தின் மீது அதிகம் இருந்தது. அவர்களது விருப்பத்தை மீறி, இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள மராட்டிய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவது அவர்கள் மதத்தின் குறிக்கோளுக்கு எதிரானதாகக் கருதப் பட்டது [4] [10].

    இந்த தயக்கத்தின் காரணத்தைப் புரிந்து கொண்ட மராட்டிய அரசு, அமைதி நிலவிய மைசூர் எல்லையில் இருந்த தனது படைகளை கோவாவின் எல்லைக்குத் திருப்பியது. மராட்டிய அரசின் இந்த நடவடிக்கையின் காரணமாக தலைமை ஆளுநர் மத்தியாஸ் டி ஆல்பகுர்கே, மராட்டியப் பிரதிநிதியுடன் பேச்சு வார்த்தைக்கு இசைந்தார். ஆனாலும் பேச்சு வார்த்தை எந்த ஒரு தீர்வும் இன்றி முடிவுற்றது. மதசார்பின்மைக் கொள்கையைக் கொண்ட மராட்டிய அரசு, மதத்திற்கெதிரான குற்றங்கள் புரிந்ததாக கோவா அரசு அங்கு வாழும் இந்துக்களின் மேல் எடுக்கும் நடவடிக்கைகளையும், கொடுக்கப்படும் தண்டனைகளையும் சுட்டிக் காட்டிக் கண்டனம் தெரிவித்தது [4] [9]. எந்த தீர்மானத்திற்கும் வர இயலாது போன இந்தப் பேச்சு வார்த்தைதான் பிறகு ஏற்பட்ட மோதல்களுக்கு முக்கிய காரணமாக அமைந்தது [9].

    1640 ஆம் ஆண்டு, கோவாவின் கோடை காலம் தொடங்கிய நிலையில் (பிப்ரவரி – மார்ச் 1640), தலைமை ஆளுநர் மத்தியாஸ் டி ஆல்பகுர்கே, போர்ச்சுக்கீசியப் படைகளை பேர்னம் ( (Pernem) மற்றும் பிக்கோலிம் பகுதிகளைச் சார்ந்த கோவாவின் கிராமங்களில் குவித்தார். சந்தேகத்திற்குரிய இந்த நடவடிக்கைகளினால், மராட்டிய அரசும் தனது சிறிய படை ஒன்றை பிக்கோலிம்மை ஒட்டியிருந்த மராட்டிய எல்லைக்கு நகர்த்தியது. நில வழி போர்சுக்கீசிய ஊடுருவலை எதிர்பார்த்திராததால் அதுவரை அப்பகுதி பாதுகாப்பினை மராட்டிய அரசு பலப்படுத்தாமல் விட்டு வைத்திருந்தது [9]. பிக்கோலிம் பகுதியானது, கோவாவில் பிறந்து வளர்ந்து, பின்னர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ‘நிக்கோலா டி மெல்லோ’ (Nicolau de Mello) என்ற போர்ச்சுக்கீசிய அரசுப் பிரநிதியின் மேற்பார்வையில் இருந்தது. நிக்கோலா டி மெல்லோ கோவா மக்களிடையே பிரபலமாகவும் அவர்களது நம்பிக்கையைப் பெற்றவராகவும் இருந்தார் [9]. கோவாவின் வரலாற்றை ஆராய்ந்த வரலாற்றறிஞர் ‘டேவிட் டிஸோஸா’ (David D’Souza), பிக்கோலிம் பகுதி வாழ் இந்துக்கள், நிக்கோலா டி மெல்லோ இந்துக்களுக்கு எதிரானவர் என்று கருதி மாராட்டியருக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர் என்று கூறுகிறார் [11]. வசந்தகுலன் ஸ்ரீனிவாசன் என்ற அறிஞரோ, தங்களின் மீது நிக்கோலா டி மெல்லோ கொண்ட அடக்குமுறையால் ஆத்திரமடைந்திருந்தாலும் இந்துக்கள் அவருக்கு விசுவாசத்துடன் இருந்ததாகவும், மராட்டியர்கள் எல்லைப் பகுதியில் படை குவித்ததை அறியாதவர்களாகவும் இருந்தார்கள் என்று கருதுகிறார் [9].
    (தொடரும்)

    படம் உதவி:
    Chapel of St. Catherine, built in Old Goa during the Portuguese occupation: http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/aa/Churcholdgoa_%2864%29.JPG/450px-Churcholdgoa_%2864%29.JPG

    Portuguese Goa: http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a8/GoaConquistas.png/477px-GoaConquistas.png

    ______________________________________

    References:
    [1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
    [2] Thompson op cit. p 208.
    [3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051
    [4] Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868. ISBN 8189004077
    [5] Hunter, William W, The Imperial Gazetteer of India, Trubner & Co, 1886
    [6] Thompson op cit. p 199.
    [7] Thompson op cit. p 200.
    [8] Thompson op cit. p 201.
    [9] Srinivasan Vasantakulan, Bharaitiya Struggles, (1000 AD – 1700 AD), Voice of India, 1998. ISBN 9789132145612
    [10] Thompson op cit. p 203.
    [11] D’Souza David, Roots of conflict in Portuguese Goa, Dakini Books, 1961. ISBN 9782354278882
    **என் குறிப்பு:
    சிவாஜி பிறந்தது 1630 இல் என்பதையும், அவருக்கு அரசராக முடி சூட்டப்பட்டது அவரது 44 வயதில் (1674இல்) என்பதையும் கவனத்தில் கொள்க. இந்தக் கட்டுக்கதை குறிப்பிடும் காலத்தில் அவர் பதின்ம வயது சிறுவனாகக் கூட இருந்திருக்க வாய்ப்பில்லை.

     

    Share
  • கல்யாணப் புடவை

     

    -பொன். இராம்

    “என்னங்க?. . . கோவிந்தனைப் பார்த்தீங்களா? நம்ப பொண்ணு கலாவுக்கு ஒரு புடவை வாங்கணும்னு தேடிக்கிட்டிருக்கேன்”

    “யாரு?. . . அந்த பழைய சைக்கிள்ல துணியால மூட்டை கட்டித் தெருத் தெருவா வித்துட்டு வருவாரே அவரா?”

    “ஆமாங்க! அவரைத்தான் தேடுறேன்”

    சும்மா   செல்ல கைல வைச்சுக்கிட்டு—–எப்பப் பாத்தாலும் பிரஸ் பண்ணிக்கிட்டு….

    காலேஜ் பசங்க மாதிரி காதுல வேற  செருகியாச்சு……

    பிடுங்கி அதை எறிந்தாள் நந்தினி.

    நந்து….உனக்கு விஷயமே புரிய மாட்டேங்குதே…கரெண்ட் டேட் சயின்ஸ் விஷயமெல்லாம் தெரிஞ்சுடணும். இல்லேன்னா வேலை பாக்கற இடத்துல குப்பை கொட்ட முடியாது.

    அதுக்காக கண்ணுல கண்ணாடி வேற—– வெள்ளெழுத்து ஆரம்பிச்சு வருஷக்கணக்கா ஆகுது.

    இந்த  செல் கண்டுபிடிச்சவன் நம்பரெல்லாம் கொஞ்சம் பெரிசா வைக்கப்படாதா? எனக்கொரு டவுட்.

    ‘ பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயங் கொள்ளலாகாது பாப்பா ‘ ன்னார் பாரதியார்.

    ”பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே”ன்னும் அவர்தானே பாடியிருக்கார். இதுக்கு என்ன பொருள்?

    ரெண்டும் ஒரே ஆளாயிருந்தாலும் அவர் எந்த நேரத்துல பாடினாரோ? கவி தன் கற்பனைச் சிறகை எப்போது சிறகடிக்குமோ? யாருக்குத் தெரியும்?

    சரி! என்னவோ கேட்டியே!

    பேச்சை மாத்தாதீங்க……விடிய விடிய இராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னாங்களாம்!

    புடவைக் கடை கோவிந்தனைக் கேட்டேன்……

    “இல்லையே! நான் அவரைப் பாத்துக் குறைஞ்சது மூணு மாசமாவது இருக்கும். அவர் வீடு எங்கன்னு தெரியுமா?”

    “எனக்குத் தெரியாது. அடுத்த தெரு அம்புஜம் மாமிக்குத் தெரியும். கேட்டுச் சொல்றேன்”

    “ஊரிலே எவ்வளவோ ஜவுளிக்கடையெல்லாம் இருக்கும் போது ஏன் கோவிந்தனைத் தேடிக்கிட்டிருக்கே?”

    “ரங்கநாதன் தெருவில போனா ஆயிரம் கடை இருக்குறது எனக்கும் தெரியும். கோவிந்தன் ஒரு ராசியான ஆள். அவர் கையால ஒரு நூல் புடவை வாங்கினா கூட வாங்கினவங்க வீட்லயும், வாங்கினவங்களுக்கும் நல்லது நடக்கும்.இது உங்களுக்குத் தெரியாதா?

    ஏன் நம்ம மூத்த  பொண்ணு லதாவுக்கு அவர்கிட்ட புடவை வாங்கினதக்கப்புறம் தானே மாப்பிள்ளையே அமைஞ்சது. அதை மறந்துட்டீங்களா?”ஆனாலும் கார்த்திகை நட்சத்திர மாப்பிள்ளை தானே கிடைச்சது..

    ஏன் அதுக்கென்ன….இந்த பொம்பளைங்களே இப்படித்தான்….அமையற வரைக்கும் அப்படி…இப்படின்னு சொல்ல வேண்டியது……..அதுக்கப்புறம் ஏமாத்தி செஞ்சுட்டாங்கன்னு ஒரே குறை பாட வேண்டியது. பொண்ணப் பாத்துட்டு ஜாதகம் பாக்கறது, மாசக்கணக்குல வாழ்ந்துட்டு ஜாதகம் பாக்கறது இதெல்லாம் எனக்குப் பிடிக்காது.

    ஆமா…. கார்த்திகை நட்சத்திரத்துக்காரங்ககிட்ட கல்மிஷம் இருக்கும். கண்மூடித்தனமா சொந்தங்ககிட்ட பாசம் இருக்கும். ஆனா வெளியே ஒண்ணு உள்ளே ஒண்ணா இருக்கும். அடுத்தவங்க அந்தரங்கம்னு தெரியும்.இருந்தும் மத்தவங்க கிட்ட சொல்றதுன்னா முதல் ஆளுதான். இது சரி தப்புன்னு ஒரு வயசுக்கு மேல தான் அவங்களால உணர முடியும். தன்னை வெளிப்படுத்திக்க என்ன வேணும்னாலும் செய்வாங்க……”அறை பறையன்ன கயவர்”னு தெரியுமா?

    உன் ஜாதகம் பாக்கற புத்திய விட மாட்டியா? பொண்ணு கலியாணம் முடிஞ்சு ஒரு புள்ளையும் பெத்து அது அஞ்சு படிக்குது. இப்ப போய் விதைச்ச நெல்லை பிடுங்கிப் பாத்த மாதிரி……………திரும்பப் புது அத்தியாயமா எழுத முடியும்?பொண்ணு ஒங்கிட்ட வந்து குறை படிச்சாளா?சும்மா பிலாக்கணம் படிக்காதே.

    ஜோதிடம்  ஒரு சயின்ஸ் அது எல்லாருக்கும் பாக்க அமையாது. அதுக்கு முக ராசி வேணும். ………..அப்படியென்று இழுத்தார். சொன்னா கோபிச்சுக்கக் கூடாது.பெண்கள் ஜாதகம் பார்ப்பது வீட்டுக்கு நல்லது கிடையாது. சொன்னா நீ திட்டுவ….ஆனாலும் நீ சொன்னது கரிநாக்கு போல டாண்ணு தான் நடந்துக்கிட்டு இருக்கு….இருந்தும் உன்னைப் பாராட்ட மாட்டேனே…..என்று சிரித்தார் ராம் அர்த்தத்துடன்.

    முப்பது வருடமாக என்னைக்கு நீங்க என்னை பாராட்டியிருக்கீங்க………………. விட்டா பெண் படிக்கக்கூடாதுன்னு சொல்வீங்களா?

    சிரித்தபடி முகத்தை மலர்த்தினாள் நந்தினி. அவர்களுக்குள் மலர்ந்த தாம்பத்தியத்தின் சுவை அவள் பேச்சில் இனித்தது. அவள் அதைப் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை. கணவன் சொல்லும் வாயசைவிற்காகக் காத்திருந்தாள். .இல்லடா! பெண்கள் படிக்கணும். தன்னை,தன்னைச் சார்ந்து வாழும் சமூகம் இவற்றிற்குத் தொண்டு செய்து வாழணும். நேர்மையான முறையில. அதுக்குத்தான் உன் அறிவை விருத்தி செய்வதை நான் இவ்வளவு வருஷம் ஆகியும்  தடுக்கல. ஆனா…….  நந்து……………..நட்சத்திரம் பாத்திருக்கியா…………அதைச்சுத்தி இருக்கிற எல்லாவற்றையும் எனக்குத் தெரியுமா? உனக்குத் தெரியுமா? எல்லாவற்றையும் தெரிந்தவர்கள்தாம்மா சரியா வாழ்க்கையைச் சொல்ல முடியும்.

    வெட்டித்தனமா சில பேர் கிடைச்ச சுவடிய வைச்சிக்கிட்டு வயித்தைக் கழுவ உட்கார்ந்து பொழுதைக் கழிக்குதுங்க. ஹூம்…நான் என்ன சொன்னாலும் மாறவா போற….சொல்ல வந்ததைத் தெளிவா சொல்லு…

    “ஆமா! அத நானும் மறந்துட்டேன். “இப்ப கலாவுக்கும் மாப்பிள்ளை தேடிட்டிருக்கோம். எதுவும் அமையல. அதான் கோவிந்தன் கையால ஒரு புடவை வாங்கலாம்னு. . .”நீ கூட பர்ப்பில் கலர்ல லதா கலருக்கேத்த மாதிரி எடுத்த. நான் கூட ஏன் லைட் கலர்ல எடுத்தேன்னு கேட்டேன்”அந்தக் கதை தானே…….

    அதே தாங்க………..

    அவனவன் இருக்கற தகப்பனைச் செத்ததாச் சொல்லி பிள்ளையை பத்து மணிக்கு மேல ஓட விடுறானுங்க……தவிக்க விடுறானுங்க……….இந்த காலத்துல போய் நீ ……….

    என்ன சொல்றீங்க….ஒண்ணுமே புரியலையே……..

    ஜாதகம், சுவடின்னு ….. ஒரு பழைய கதை அம்புலிமாமா கதை மாதிரி இருந்தது. எதுல படிச்சோம்னு கவனமில்லை. நீ ஏதோ சந்தேகம்னு கேட்டாயே? மறுபிறப்பு பத்தி….அதைப்பத்தி நெட்ல தேடினேன். ஆளாளுக்கு ஒண்ணொண்ணு சொல்றாங்க….  என்ன இருமற.. ஹாஸ்பிடல் போகலையா……..

    போகணும்….ஆனா மருந்துக்கு ஆயிரத்துக்கு மேல செலவாகும்….சேல எடுத்துடலாம் அதுக்கு.. உடம்புக்கு வந்தா செத்தா போய்டுவோம் இந்த காலத்துல……

    உன் ஆசைய ஏன் கெடுக்கணும்? இந்தப் பொண்ணுக்குப் பரணி நட்சத்திர மாப்பிள்ளையைப் பாப்பமா? கோவிந்தன் அட்ரஸைக் கொடு. நான் போய்ப் பாத்து வர்றேன்” உன் நம்பிக்கையைப் போய்க் கெடுப்பானேன்! பரணி தரணி ஆளுமில்லையா?

    நந்தினி அம்புஜம் மாமியிடம் அட்ரஸைக் கேட்டு வாங்கிக் கொடுத்து விட்டாள். அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. பகல் 12 மணி வாக்கில்  டிவிஎஸ் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சாலிகிராமம் கிளம்பி விட்ட ராமை உள்மனம் ஏதோ எச்சரித்தது. அதை வெளிக்காட்டாமல் சாலிகிராமத்தை அடைந்தார் ராம்.

    “சாலிகிராமம், தசரதபுரம் 3வது தெரு, 10ம் நம்பர் வீடு இது தானே?”

    “ஆமாம்! நீங்க யாரு? எங்கேயிருந்து வர்றீங்க?” என்றபடி வந்தாள் வெள்ளைப்புடவை உடுத்திய பெண் .

    “என் பேர் ராம். திருவல்லிக்கேணியிலிருந்து வர்றேன். இங்க கோவிந்தன்னு புடவை விக்கறவர் இருந்தாரே!

    “ஆமாங்க!”

    “அவரைப் பாக்கலாம்னு தான் வந்தேன். அவர் இல்லையா?”

    பெண்ணை உற்றுப்பார்க்கும் பழக்கம் ராமிடம் இல்லையென்றாலும் அவள் கண்களில் தெரிந்த ஒளி அவரை என்னவோ செய்தது.

    நீங்க என்ன விஷயமா வந்தீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?

    “உங்க வீட்டுக்காரர் கிட்ட ஒரு புடவை எடுத்த ராசி என் மூத்த பொண்ணுக்கு கல்யாண யோகம் கூடி வந்த மாதிரி என் இளைய பொண்ணுக்கும் ஒரு புடவை அவர் கையால எடுத்து கட்டலாம்னு நினைச்சி வந்தேம்மா!”

    கொஞ்சம் உள்ளே வரீங்களா?

    உட்காருங்க! நீங்க வந்தது சரியான வீடுதான்.

    கொஞ்சம் இருங்க!  புடவையை எடுத்துட்டு வரேன். அவர் நாலு மூட்டை புடவை வாங்கினது கிடக்கு……

    அவள் உள்ளே சென்ற நொடியில் ராமின் மனம் யோசித்தது. இவள் கோவிந்தனுக்கு என்ன உறவு! வெள்ளைப்புடவை வேறு……..என யோசித்தபடி அருகிலிருந்த புத்தக அலமாரியை உற்று நோக்கினார் ராம். பகவத் கீதை தொடங்கி அபிராமி அந்தாதி, ராமகிருஷ்ணர்,சாரதாதேவி, அரவிந்தர் என ஒருவர் விடாமல் இடம்பெற்றிருந்த அந்த இடத்தை விட்டு கண்கள் ஏனோ அகல மறுத்தன.

    ராம் பார்ப்பதைப் புடவை மூட்டையுடன் வந்த அந்தப் பெண் வெங்கலமணிகள் இணைந்த சப்தம்போல் சிரித்தாள். இவையெல்லாம் அவர் படித்தவை.என் பெண்……. எனக்கூறியவள்….கோவில் மணி எங்கோ ஒலிப்பதைக் கூர்ந்து கவனித்தாள்.

    நீங்கள் இந்தப் புடவை மூட்டையில் உங்களுக்குப் பிடித்ததை எடுங்கள். இதோ வருகிறேன் எனக் கூறியபடி விர்ரெனப் பறந்து சென்றதைப்போல ராமிற்குத் தோன்றியது.

    வெளியே நிறைய பேர் பேச்சுக்குரல் கேட்கவே,இலேசாக எட்டிப் பார்த்தார் ராம்.

    வெளியே புழுதி பறக்க கையில் பூஜைத்தட்டுடன் ஒரு ஊரே கூடியிருந்தது.

    ஐயா யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?

    நான் ராம். கோவிந்திடம்  என் பெண்ணுக்கு கல்யாணம் செ்யவதற்காகப் புடவை வாங்க வந்தேன்.

    இதைக் கேட்ட மறுநிமிடம் மஞ்சள் புடவை உடுத்தியிருந்தவள்  புடவைத் தலைப்பால் வாயை மூடி அழத் தொடங்கி விட்டார்.

    “ஏம்மா அழுவுறீங்க? நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா?”

    இல்லப்பா! ஊருக்கெல்லாம் கல்யாணம் செய்யப் புடவை வித்தவரு தம்பொண்ணு ஓடிப்போனதால பொண்ணு கல்யாணத்துக்கு எடுத்து வச்ச புடவையில நாண்டுக்கிட்டாங்க புருசன் பொண்டாட்டி  ரெண்டு பேரும்.

    செத்து ஒரு மாதத்துக்கும் மேல ஆவுது. அவுங்க தொழிலை இங்க செய்யறதாகவும், அடிக்கடி வெங்கலமணிக்குரல் சிரிக்கறதா சொன்னாங்க எல்லாரும். அதான் பூசாரி கிட்ட சொல்லி பூஜை செஞ்சு தாயத்து வீட்டுல கட்லாம்னுட்டு வந்தோம்.

    அது என்ன உங்க கைல….. இது கோவிந்து தம் பொண்ணுக்காக எடுத்து வைச்ச புடவையாச்சே…அது உத்தரத்துல பாதியால்ல தொங்குச்சு…

    இதுதானே அவுங்க ரெண்டு பேர் உயிரையும் எடுத்தது.

    சொன்னது தான் தாமதம் டிவிஎஸ்ஸை மறந்து புடவையைத் தூக்கி வீசியபடி ஓடினான் ராம்.

    ‘எங்கோ மூடப்பழக்கத்தினை ஒழிப்போம் ‘ என மைக்கில் யாரோ பேசியது ராமின் காதில் தெளிவாக ஒலித்தது.

     

     

    Share
  • கொலஸ்டிரால் ரிப்போர்டை அறிந்து கொள்வோம்!… (4)

    செல்வன்      

       உங்கள் கொல்ஸ்டிரால் டெஸ்டில் பொதுவாக கீழ்காணும் வகை கொலஸ்டிரால்கள் காணப்படும்.

    1) மொத்த கொலஸ்டிரால்: இது 200க்கு கீழ் இருந்தால் பாதுகாப்பு என ரிப்போர்ட் கூறும்

    2) எச்டிஎல் கொலஸ்டிரால் (அல்லது நல்ல கொலஸ்டிரால்): இது 40க்கு அதிகம் இருக்கணும்

    3) எல்டிஎல் கொலஸ்டிரால் (அல்லது கெட்ட கொலஸ்டிரால்): இது 130க்கு கீழே இருக்கணும்

    4) ட்ரைகிளிசரைட்: இது 150க்கு கீழே இருக்கணும்.

    இதில் பலரும் மொத்த கொலஸ்டிரால் 200 தாண்டினால் உடனே தான் கொல்ஸ்டிரால் பேஷண்ட் என நினைத்து பீதி அடைவார்கள். கூடவே கெட்ட கொல்ஸ்டிரால் எனும் எல்டிஎல் 130 (சில நாடுகளில் 100) தாண்டினால் அவ்வளவுதான். “எனக்கு ஸ்டாடினை பரிந்துரையுங்கள்” என தானாக மருத்துவரிடம் போய் நோயாளியாக ஆகிறவர்கள் உண்டு.

    உண்மையில் கெட்ட கொல்ஸ்டிரால், நல்ல கொல்ஸ்டிரால் என்பது எல்லாம் பொதுமைபடுத்துதல். எல்டிஎல்லில் பல உள்வகை உண்டு. அதில் சில நமக்கு நல்லது, சில கெட்டது. நல்ல கொல்ஸ்டிரால் எனப்படும் எச்டிஎல்லில் கூட சிலவகை எச்டிஎல் நல்லது, சிலவகை எச்டிஎல் கெட்டது.

    எல்.டி.எல்லில் இரு வகை. சின்ன சைஸ் எல்.டி.எல் (LDL-B), பெரிய சைஸ் எல்.டி.எல் (LDL-A).பெரிய சைஸ் எல்டிஎல் கொலஸ்டிரால் ஆபத்தற்றது. காரணம் அது உங்கள் ரத்த நாளங்களில் ஒட்டி மாரடைப்பை ஏற்படுத்தாது. ஆனால் சின்ன சைஸ் எல்டிஎல் கொலஸ்டிரால் மிக ஆபத்தானது.

    ஆனால் உங்கள் கொல்ஸ்டிரால் ரிப்போர்ட் இது எதையும் காட்டுவது இல்லை. உங்கள் எல்டிஎல் கொல்ஸ்டிராலின் உள்வகைகள், எச்டிஎல் கொலஸ்டிராலின் உள்வகைகள் இவற்றை உங்கள் கொல்ஸ்டிரால் ரிப்போர்ட் பிரித்து காட்டுவது இல்லை. அப்படி பிரித்து ஆராயாமல் உங்களுக்கு இதயநோய் வரும் ஆபத்து உள்ளதா, இல்லையா என்பதை கொலஸ்டிரால் ரிப்போர்டை மட்டும் வைத்து கண்டுபிடிக்கவே முடியாது. அதற்கு NMR lipoprifile test என்பது போன்ற மேலும் அட்வான்ஸ்டான மருத்துவ பரிசோதனைகள் உள்ளன. அதை எல்லாம் செய்யாமல் “உங்களுக்கு கொல்ஸ்டிரால் பிரச்சனை” என உங்கள் மருத்துவர் கூறினால் அதை ஏற்று நீங்கள் ஸ்டாடின்களை உண்டு நோயாளியாக வேண்டாம். NMR lipoprofile பரிசோதனை செய்ய சொல்லி கேளுங்கள். அந்த சோதனை முடிவை விளக்க சொல்லி உங்கள் மருத்துவரை கேளுங்கள்.

    மேலும் உங்கள் கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டில் பல சிக்கல்கள் உள்ளன. அதில் முக்கியமானது என்னவெனில்

    உங்கள் எல்.டி.எல் கொல்ஸ்டிரால் அளவை நேரடியாக அளக்கும் சக்தி அடிப்படையான கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டில் இல்லை. பல கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டில் LDL-calculated என எழுதி இருப்பார்கள். சிலவற்றில் எழுதி இருக்க மாட்டார்கள். ஆனால் எழுதி இருந்தாலும், இருக்காவிட்டாலும் நூற்றுக்கு 99.99% ரிப்போர்டுகளில் உங்கள் எல்.டி.எல் நேரடியாக அளக்கபடுவது இல்லை. கணக்கிடதான் படுகிறது.

    எல்.டி.எல்லை கணக்கிட உதவும் பார்முலாவின் பெயர் ஃப்ரிட்வால்ஃப் பார்முலா. அது எப்படி கணக்கிடபடுகிறது என எழுதினால் கட்டுரை கணக்கு வகுப்பாக மாறிவிடும் அபாயம் இருப்பதால் அதை செய்யவில்லை. ஆனால் தேவைபட்டால் பின்னூட்டத்தில் கேளுங்கள். பதில் அளிக்கிறேன்.

    எல்.டி.எல்லை நேரடியாக அளக்காமல் பார்முலாவை வைத்து கணக்கிடுவதில் உள்ள தவறு என்ன?

    இதில் தவறு என்னவெனில் உங்கள் ட்ரைகிளசரடு எண் 100க்கு கீழ் அல்லது 400க்கு மேல் இருந்தால் ஃப்ரிட்வால்ஃப் பார்முலா வேலை செய்யாது. அது உங்கள் எல்.டி.எல் எண்ணை மிகைபடுத்தி காட்டும். ஆக உங்கள் ட்ரைகிலசரைட் நூறுக்கு கீழ் இருந்தால் உங்கள் எல்.டி.எல் எண் என உங்கள் கொலஸ்டிரால் ரிப்போர்ட்டில் காட்டபடும் எண் முழுக்க தவறானது.

    ஆக கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டை வைத்து ஸ்டாடினை உட்கொள்ள துவங்குவது என்பது தெர்மாமிட்டரை மட்டும் பார்த்து டைபாய்டு மருந்து உட்கொள்வதற்கு சமம். தெர்மாமீட்டர் மிக அடிப்படையான சோதனை. டைபாய்டு இருக்கா இல்லையா என்பதை அறிய மேலும் பல சோதனைகளை செய்யவேண்டும்.அப்படி செய்யாமல் ஸ்டாடினை உட்கொள்வது பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஸ்டாடின் என்பது விளையாட்டு இல்லை. அதில் நினைவு இழப்பு மாதிரி பல பக்கவிளைவுகள் உண்டு. மேலும் அது கொலஸ்டிராலை குறைக்குமே ஒழிய இதய அடைப்பை தடுப்பதற்கான சாத்தியகூற்றை மிகவும் குறைவாக தான் குறைக்கும். இப்படி பக்கவிளைவுகளை உன்டாக்கும் மருந்தை தவறாக இருக்க கூடிய கொல்ஸ்ட்ரால் ரிப்போர்ட்டை மட்டும் நம்பி உண்பது சரியல்ல.

    என்.எம்.ஆர் டெஸ்ட் செலவு பிடிக்கும் விஷயம் தான். ஆனால் கொல்ஸ்டிராலை குறைக்க உண்ணும் ஸ்டாடின் விலையை விட அது குறைவானது தான்.

    மற்றபடி உங்கள் கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டில் முக்கியமான எண்கள் எவை?

    எச்.டி.எல் மற்றும் ட்ரைகிளசரைடு

    எச்.டி.எல் என்பது குப்பை லாரி மாதிரி. அது உங்கள் ரத்தநாளங்களுக்குல் சென்று கெட்ட எல்.டி.எல் கொலஸ்டிராலை வாரி கொண்டு வந்து உங்கள் லிவரில் சேர்க்கும். லிவர் அந்த கெட்ட எல்.டி.எல் கொலஸ்டிராலை உடைத்து கழிவாக மாற்றி அனுப்பிவிடும். ஆக எச்.டி.எல் அதிகமாக இருந்தால் அது மிக ஆரோக்கியமான விஷயம். எச்.டி.எல் 40க்கு கீழே இருந்தால் உங்கள் உடனாடி வேலைகள் அனைத்தையும் ஒத்தி போட்டுவிட்டு எச்.டி.எல்லை 40க்கு மேல் உயர்த்த நீங்கள் முயலவேண்டியது அவசியம். உங்கள் எச்.டி.எல் 60 தான்டினால் அது மிக பெரிய பலம். உங்கள் ட்ரைகிளிசரடு 100க்கு கீழ் இருந்து உங்கள் எச்.டி.எல் 60க்கு மேல் இருந்தால் அது நீங்கள் புல்லட் ப்ரூப் ஆடையை அணிந்து இருப்பது போன்ற பாதுகாப்பை உங்கள் இதயத்துக்கு அளிக்கும். உங்கள் எச்.டி.எல் 60 தான்டி, ட்ரைகிளிசரைடு 140க்கு கீழ் இருந்தால் அப்புறம் உங்கள் எல்.டி.எல்  ஆபத்தை விளைவிக்காத நல்ல வகை எல்.டி.எல்லாக இருக்கும் வாய்ப்பு தான் மிக அதிகம்.

    ட்ரைகிளசரைடு என்பது என்ன?அது எப்படி உருவாகிறது?அதை எப்படி குறைப்பது? எச்.டி.எல்லை எப்படி அதிகரிப்பது?

    இதற்கு இரன்டு வழிமுரைகள் தனியாக இல்லை. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. அதாவது……

    ட்ரைகிளசரிடு அதிகமாக இருந்தால் எச்.டி.எல் தானாக குறையும்.

    ஆக எச்.டி.எல்லை அதிகரிக்க ட்ரைகிளீசரைடை குறைத்தே ஆகவேன்டியது அவசியம். ட்ரைகிளிசரைடை குறைத்தால் எச்.டி.எல் தானாக அதிகரிக்கும்.

    ட்ரைகிளசரைடை எப்படி குறைப்பது?

    இதை அறிய ட்ரைகிள்சரைடு எப்படி உருவாகிறது என்பதை அறிவது முக்கியம்.

    ட்ரைகிளிசரைடு என்பது வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை தான் ட்ரைகிளிசரைடு. நீங்கள் அரிசி, கோதுமையை உன்டால் அதில் உள்ள சர்க்கரை உங்கள் உடலால் குளுகோஸ் ஆக மாற்ரபடும். குளுகோஸ் தான் எரிபொருள். ஆனால் அந்த எரிபொருலை செலவு செய்யாவிடில் அதை சேமிக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இரன்டுநாளுக்கு மேல் தேவையான அளவு குளுகோசை சேமிக்கும் சக்தி உடலில் இல்லை. ஆனால் உடலில் ஒவ்வொரு செல்லிலும் ஏராளமாக கொழுப்பை சேர்க்கும் சேமிப்புதிறன் உங்கள் உடலுக்கு உள்ளது. ஆக மீதம் குளுகோஸ் உங்கள் லிவருக்கு அனுப்பபடும். லிவர் அதை ட்ரைகிளிசரைடு ஆக மாற்றி ரத்தத்தில் அனுப்பும். அது உங்கள் உடலில் ஊளைசதையாக சேமிக்கபடும்.

    ட்ரைகிளசரைடை குறைக்க வழி இதில் இருந்தே தெரியும்.

    சர்க்கரைசத்து (carbohydrates) உள்ள உணவுகளை உண்பதை குறைப்பது, அல்லது நிறுத்துவது.

    சர்க்கரை சத்து நிரம்பிய உணவுகளை உண்பதை குறைத்தால் குரைவான அளவில் ட்ரைகிளிசரடை உடல் உருவாக்கும்.

    சர்க்கரைசத்து நிரம்பிய உணவுகளை உண்பதை சுத்தமாக நிறுத்தினால் ட்ரைகிளிசரைடு உருவாகும் வழியே உடலில் கிடையாது. உடலில் குளுகொஸ் குறைவு எண்கையில் அதிக குளுகோசை சேமிக்கும் அவசியமே இல்லையே?

    ட்ரைகிளிசரடு குறைந்தால் எச்.டி.எல் தானாக் அதிகரிக்கும். இவை இரண்டும் நடந்தால் உங்கள் எல்.டி.எல் ஆபத்தை விளைவிக்கும் சின்ன வகை எல்.டி.எல்லில் இருந்து உடலுக்கு நலனளிக்கும் பெரிய வகை எல்.டி.எல் ஆக மாறும். அதன்பின் உங்களுக்கு கொல்ஸ்டிராலை பற்றி யாதொரு கவலையும் வேண்டியது இல்லை.

    (தொடரும்)

    Share
  • நடிகை(கள்)

     

    -பொன். இராம்


    வண்ணச்சாயப் பூவிதழ்

    உதடுகள் கூறும்

    கண்ணீர் வரிகள்!

    அடிமை விலங்கு

    அவிழ்க்கப்பட்டும்

    அரிதார பொம்மைகளாய்

    நனவுலகில் சிரிக்கின்றோம்!

    கள் மட்டுமே

    போதை!

    இங்கு நாங்கள்

    திரையுலகக்

    கண்ணாடிக் குடுவைக்குள்

    போதைப் பதுமைகளாய்

    வாழ்கின்றோம்!

    இடியாக  மாறி

    படியாத ஆணுலகை

    மாற்றிவிட எத்தனையோ முயன்றாலும்

    பணமழை தான் ஜெயிக்குதடி!

    பட்டமொன்று பெற்றாலும்

    பாவி மனம்

    புகழுக்கு ஏங்குதடி!

    விடியாத பெண்ணுலகத்

    திரையுலகக் கும்மிருட்டில்

    விரைவாய்  யார் வருவார்

    அறிவு விளக்கேற்ற?


    படத்துக்கு நன்றி: http://www.123rf.com/photo_10204675_single-bottle-of-beer-with-shiny-woman-s-silhouette-inside.html

     

    Share
  • வளர்ச்சியான பாதையில் இந்தியா செல்ல.. குடும்ப அட்டையில் முதலில் மாற்றம்….!

    சித்திரை சிங்கர்

    புதியதாக இப்போது விண்ணப்பித்துள்ள பொது மக்களுக்கு, ஏப்ரல் மாதம் புதிய ரேசன் அட்டைகள் வழங்குவது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றாலும்  இந்த ரேசன் அட்டைகள்…. அதில் பதிவு செய்யப்பட்டுள்ள பதிவுகளின் “உண்மை நிலை” கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டியதே. இது வரை போனது போகட்டும் என்றாலும் இனியாவது  முறையாக உண்மையாக பதிவுகள் இருக்கும் வண்ணம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான சாதாரண மக்களின் நெடுநாள் ஆசை.

    இதில் முதலில் குடும்ப வருமானம் அரசுப் பணியில் உள்ளவர்கள் கூட தங்களது சம்பளத்தை இந்த குடும்ப அட்டைகளில் ஒழுங்காக பதிவு செய்வதில்லை என்பது வேதனையான விஷயம்….! இவர்கள் அரசுப் பணியில் தொடரவே  தகுதி இல்லாதவர்கள் என்பதுதான் உண்மை…!  இலவசங்கள் ஓட்டுக்காகவே அரசியல்வாதிகளால்  மக்களின் பணத்தில் இருந்து அவர்களுக்கே கொடுக்கப்படும் ஒரு கண்கட்டி வித்தைதான். இலவசங்கள் மக்களை மிகுந்த சோம்பேறியாக்கி விடுகிறது  என்றாலும் ஓட்டுக்காக அரசு தரும்  இந்த இலவசங்கள்  குடும்ப அட்டைகளின் உண்மையான வருமானத்தை அடிப்படையாக கொண்டு கொடுக்காமல் அரசு வழங்கும் குடும்ப அட்டைகளின்  வண்ணங்களை வைத்து கொடுக்க்கபடுவது ஒரு வேடிக்கையான விஷயம். வெள்ளை கார்டு வைத்துள்ளவர்கள் (தேவையான “சர்க்கரை”க்காக) விருப்பமான பொருளை வாங்குவதற்கு என்று பதிவு செய்பவர்களே தவிர இவர்கள் அரசு தரும் இலவச பொருட்களை வாங்க தகுதியில்லாதவர்கள் அல்ல…!  அரிசி கார்டு  வைத்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் அரிசி வாங்குகிறார்களா அதை அவர்கள் உப்யோகிக்கிறார்களா என்றால்…  குடிசை வீடுகளிலும் பிளாட்பாரங்களிலும் வசிப்பவர்களையும் தவிர்த்து மற்றவர்கள் ‘இல்லை’ என்ற பதில்தான் மனசாட்சியுள்ளவர்கள் சொல்லும் பதிலாக இருக்கும். இப்போது இந்த ரேசன் அரிசிகள் பெரும்பாலும் புதிதாகத் தோன்றி பெருகிவரும்  உணவகங்களுக்கு, முழுமையாகப் பயன்படுகிறது என்பது   மகிழ்ச்சியான உண்மை..

    வருமான அடிப்படையில் என்றால் கூட  அரசு வேலையில் உள்ளவர்கள் அனைவருக்குமே “கௌரவ கார்டு” வாங்கும் தகுதிக்கு உள்ளவர்களே…! இதை நன்கு உணர்ந்த அரசாங்கமே…..அந்தந்த அரசு அலுவலகங்கள் வழியாக  தங்கள் பணியாளர்களுக்கு இப்போதுள்ள குடும்ப அட்டைகளை சமர்ப்பித்து இந்த கௌரவ அட்டைகளை தங்கள் துறையின் மூல்ம் சுலபமாக வழங்கலாம். இது போன்ற முறையான மாற்றங்களை இப்போது தாள் ஒட்டி உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் குடும்ப அட்டைகள் புதியதாக கொடுக்கும் நிலையில் சீர் செய்தால் குடும்ப அட்டைகளும் குறைந்து விடும்….! ரேசன் கடைகளில் கூட்டமும் கொஞ்சம் குறைந்து விடும்.

    பொதுவாக சொந்த வீடு வைத்துள்ளவர்களில் ஒரு சிலரை தவிர்த்து மற்றவர்கள் அனைவருமே ஓரளவுக்கு வசதியானவர்கள்தான்….! நகர்ப் புறங்களில் வேண்டுமானால் புதிதாக வீடு வாங்குபவர்கள் வருமான வரி கழிவுக்காகவும், வாடகைக்கு இருப்பது போன்ற எண்ணத்தில் மாதாமாதம் தவணைகள்  தங்களின் வருமானத்துக்கு தகுந்தவாறுதான் வீட்டு வாடகைக்கு இணையாக தவணைகளை கட்டுகிறார்கள்.   இவர்களும் தங்களின் உண்மையான வருமானத்தைக் கொடுத்து தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் குடும்ப அட்டைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். சொந்த வீட்டுகாரர்கள் தாங்கள்  செலுத்தும் “சொத்து வரி” அடிப்படையில் இவர்களுக்கும் குடும்ப அட்டைகளை வழங்கலாம்.  கூட்டு குடும்பங்களுக்கு அந்தந்த  குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு சிறப்பு சலுகை கொடுக்கலாம். ஓன்று…  இரண்டு… காஸ் சிலிண்டர்கள் வைத்துள்ளவர்களுக்கு மண்ணெண்னை கொடுப்பதை குறைக்கும்… நிறுத்தும்…  உணவு பொருள் வழங்கும் துறை பல இடங்களில் வாடகை வீடுகளின்  வருமானத்தால்  வாழ்ந்து கொண்டிருக்கும் செல்வந்தர்கள் இன்னமும் ரேசனில் முழுமையாக மண்ணெண்ணை வாங்குவதை நாம் கண் கூடாக காண முடிகிறது. நியாயமான குறைகளை அகற்றி முறையான பதிவுகளுடன் புதிய குடும்ப அட்டைகளை  இந்த “ஒட்டுதாள்” முடிய இன்னும் 18 மாதங்கள் இருக்கும்  நிலையில் உண்மையான விபரங்களை பதிவு செய்து புதியதாக குடும்ப அட்டைகளை 2015 ஜனவரி முதல் மக்கள் பயன்படுத்தும் வகையில், வழங்க, இந்த ” உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை” தக்க நடவடிக்கை எடுத்தால்தான் குடும்ப அட்டைகளை  ஒழுங்கு படுத்த  முடியும். நமது பொது மக்களும் அரசின் கணக்கெடுப்பு. நேரத்தில் உண்மையான தகவல்களைக் கொடுத்து பதிவு செய்து நமது முன்னேற்றத்துக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் உதவ வேண்டும். அரசு வேலையில்  நிரந்தரமாக பணிபுரியும் கடை நிலை ஊழியர்கள்  கூட “கௌரவ குடும்ப அட்டை” வாங்கவே தகுதியானவர்கள் என்பதுதான் உண்மை நிலை….! தனியார் நிறுவனங்களில் பன்னாட்டு நிறுவனங்களைத் தவிர்த்து  மற்றைய நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சம்பள அடிப்படையில் மிகவும் பின் தங்கிதான் உள்ளார்கள்.

    எந்த ஒரு மாற்றமும்  அரசின் திட்டத்தாலோ… அரசின் கொள்கை  முடிவினால் வந்து விடாது நாட்டு மக்கள் மனது  வைக்க வேண்டும். எழுச்சியான தமிழகம் காண வேண்டுமானால்…. வளர்ச்சியான பாதையில் இந்தியா  செல்ல வேண்டுமானால் முதலில் அடிப்படையில் இது போன்ற மாற்றங்களை  மக்கள முழுமனதுடன் செய்ய வேண்டும். மக்கள் சக்திதான் மகேசன் சக்தி…! இந்திய மக்களே கொஞ்சம் திருந்துங்கள்…! உங்களின்  உண்மை நிலையை குடும்ப அட்டைகளில் பதிவு செய்து மாற்றங்களை உருவாக்குங்கள்…!
    அவர்கள் சரியில்லை…! இவர்கள் சரியில்லை என்று மற்றவர்களை மட்டுமே குறை கூறி காலத்தை வீணாக்காமல் நமக்கு நாமே திருந்த வேண்டும்..! நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும்….!.

    சித்திரை சிங்கர் , சென்னை.

    Share
  • திருமுருகன் துதிமாலை (2)

     

    சத்தியமணி

    காரணம்தேடி கலங்கிடும் போதுநீ

    காரியம் ஆகவேண்டும்

    ஆரணமோதி அடைந்திடும் மகிமைநின்

    அடிகளில் காணவேண்டும்

    சீரணமாகா திண்டாடும் பிணிநீக்கி

    சேமங்கள் சேர்க்க வேண்டும்

    பாரணங்  கண்டு பலகாலந் தொண்டு

    பணியாற்றும் ஆசி வேண்டும்

    மயில்தோகை விரித்தாடும் எழிலோடுஏறி

    விளையாடும் வேலகுகனே

    துயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்

    முகங்காட்டும் சக்திமகனே   (2)

    Share
  • வார ராசி பலன்!….(31-03-13 – 06-04-13)

    காயத்ரி பாலசுப்ரமணீயன்                                                                                                                                                                                                                                                                                                                                                                               மேஷம்:  பெற்றோர்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்திலும்  கல்வி விஷயத்திலும், அக்கறை செலுத்தி வந்தால்,  குழந்தைகளோடு இல்லத்தில் இருக்கும் அனைவரும் மகிழ்ச்சி யாக இருப்பார்கள். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு  செலவினங்கள் கூடினாலும்  பணப் பிரச்னைகளை தீர்த்து வைக்க நட்பு கை கொடுக்கும்.  பங்கு வர்த்தகத்தில் ஈடுப ட் டி ருப்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் செயல்படவும்.மாணவர்கள் வீண் சந்தேகங்களை ஒதுக்கி துணிச்சலுடன் பணியாற்றினால். எதிலும் வெற்றிதான்!  இந்த வாரம்  கலைஞர்களுக்கு  ஆரோக்கியத்தில் சிறு சங்கடங்கள் தோன்றினாலும் இயல்பான வேலைகள் சீராக ஓடிக்கொண்டிருக்கும்.
    ரிஷபம்:  இந்த வாரம் பணியில் இருப்பவர்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் சிறப்பாக இருக்கும். பெண்கள்  செய்யும் முயற்சிகள் வெற்றி பெற உறவுகள் உறுதுணையாய் இருப்பார்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் வேண்டாத  தொல்லைகளினால் மனவேதனை அடையலாம். வியாபாரிகள்  வெளி நாட்டில் இருந்து எதிர்பார் த்த வர்த்தக  உதவி தக்க சமயத்தில் வந்து சேரும்.மாணவர்கள் கோபத்தை கைவிட்டு  செயல்பட்டால், எடுத்த காரியம் நினைத்ததது போல் முடியும்,   சிறு தொழில் புரிபவர்கள்  வாகன சம்பந்தமாக தேவையற்ற செலவுகளை சமாளிக்க வேண்டி வரும்.
    மிதுனம்
    : அலங்காரப் பொருட்கள்,  மற்றும் ஆயத்த ஆடைகளை விற்கும் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிட்டும்.   பெண்களுக்கு உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் அவ்வ ளவாய் இராது . மாணவர்கள் மற்றவர்களுக்காக  உதவுவதாக எண்ணி  வீண் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.  இந்த வாரம்  குடும்ப  மருத்துவ செலவுகள் சற்று  அதிகமாக இருக்கும்.. . செய்யும் செயல்களுக்கு உரிய பாராட்டு கிடைப்பதால் பொது வாழ்வில் இருப்பவர்கள் மீண்டும் சுறுசுறுப்புடன் செயலாற்றி நல்ல பெயர் பெறுவார்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு  வேலைச்சுமை ஓரளவு குறையும்
    கடகம்:  பெண்களின் மனக் குறை தீர, குல தெய்வ வழிபாடு கை கொடுக்கும். வியாபாரிகள் அறிமுகம் இல்லாதவர்களை நம்பிபொருட்களை கடன்  கடன் கொடுத்து ஏமாற்றம் அடைவதைத் தவிர்க்கவும்.  பிள்ளைகளால் எதிர்பாராத சில தொல்லைகள் வந்து சேர வாய்ப்ப உள்ளதால் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் தேவைக்கதிகமாக பணம் கொடுக்க வேண்டாம்.  பணியில் இருப்பவர்கள் உடன் வேலை செய்பவர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவதால் மனக் கசப்புகளைத் தவிர்க்கலாம்.   இந்த வாரம் கலைஞர்களுக்கு திடீர் பண  நெருக்கடி உண்டாகலாம்.
    சிம்மம்:   இந்த வாரம் கலைஞர்கள் தங்கள் பெயரை நிலைநிறுத்திக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உடன் இருப்பவர்களால் வீண் பிரச்சனைகளும், மன நிம்மதிக் குறைவும் ஏற்படாமலிருக்க  பொது வாழ்வில் இருப்பவர்கள் எந்த சூழலிலும் கவனமாக இருப்பது அவசியம்.  சரளமான பணவரவால்  பெண்களின் கடன் பிரச்னைகள் தீரும். .மாணவர்கள் முன் கோபத்தைக் குறைத்து பெற்றோரின் சொல் கேட்டு நடப்பது நல்லது.  பொறுப்பில் இருப்பவர்கள் மற்றவர்களை  குறை சொல்வதைத் தவிர்த்து நல்ல முறையில் வழி காட்டினால், வேலைகள் விரைந்து முடியும்.
    கன்னி:   குடும்பத்தில் இருந்த பனிப்போர் விலகுவதால் மீண்டும் மகிழ்ச்சியும், கலப்பும் மலரும். பெண்களுக்கு உறவுகளால் சில அனுகூலங்கள் வந்து சேரும். வேலையில் இருப்பவர்கள்  எதிர்பாராமல் ஏற்படும் செலவுக்காக அதிக பணம் ஒதுக்க வேண்டி வரும். பொது வாழ்வில் இருப்பவர்கள்  சமூகத்தில் இருக்கும் நற்பெயரை காத்துக்கொள்ள வேண்டாத செயல்களில்   ஈடுபடுவதை தவிர்க்கவும் இந்த வாரம் மாணவர்களுக்கு நண்பர்களால் செலவுகள், சங்கடங்கள் வந்து நீங்கும்.  கலைஞர்கள்   வெளி இடங்களுக்கு செல்லும் போது  ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
    துலாம்: கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள், எந்த ஒரு மாற்றத்தையும் செய்யும் முன் கலந்தாலோசித்து முடிவெடுப்பது அவசியம். குடும்பப் பிரச்னையில் பக்குவமாகக் கையாள்வதன் மூலம், பெண்கள் தங்கள் அமைதியை தக்க வைத்துக் கொள்ளலாம் . கலைஞர்கள் சுமையாய் தோன்றிய பணியை சவாலாய் எடுத்து செயல்பட்டு பாராட்டு பெற்று மகிழ்வர். வியாபார வட்டத்தில் சிறு சலசலப்பும், சலிப்பும் உண்டாகும் சூழலிருப்பதால், சரக்கு வினியோகத்தில் குள்றுபடிகள் தலை தூக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ளவர்கள், வேண்டிய லாபம் பெற, அன்றாட நிலவரங்களைக் கவனித்து செயல்படுவது அவசியம்.
    விருச்சிகம்:   மாணவர்களுக்கு நெருங்கிப்பழகியவரால் சில தொந்தரவுகள் தோன்றும் வாய்ப்பிருப்பதால், செல் போன்களின் பயன்பாட்டில் விழிப்பாய் இருப்பது அவசியம். பெண்கள் கண்ணில் பட்ட பொருளையெல்லாம் வாங்குவதைக் குறைத்துக் கொண்டால், உங்கள் சேமிப்பு குறையாமலிருக்கும்.  வியாபாரிகள் கடனை வசூல் செய்யும் பொழுது பக்குவமாக நடந்து கொண்டால், வாடிக்கையாளர்களின் ஆதரவு குறையாது. பொது வாழ்வில் இருப்பவர்கள் வீண் பேச்சு வார்த்தைகளைக் குறைத்துக் கொண்டு கடமையில் கவனம் செலுத்தி வருவது நல்ல பலனைக் கொடுக்கும்.
    தனுசு:    மாணவர்கள் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் சிறிய தவறுகளும் மற்றவர்களின் பார்வையில் பெரிதாகத் தெரியக் கூடும்.  சுய தொழிலில் ஈடு ப ட்டுள்ளவர்கள் வங்கி மற்றும் வருமான வரி விவகாரங்களை உடனுக்குடன் கவனித்து வந்தால், பிரச்னைகளை எளிதில் தீர்த்துவிடலாம்.இந்த வாரம்   வேலையில் இருப்போர், நிர்வாகத்தினரின் அதிருப்திக்கு ஆட்படும் வாய்ப்பிருப்பதால், வீண் அரட்டை, விவாதம் ஆகியவற்றில் கலந்து கொள்ளாதிருப்பது நல்லது. உயர்கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கும் வரை பொறுமையாய் இருந் தால் நல்ல பலன் கிட்டும்.
    மகரம்:   முதியவர்கள்  கண் சம்பந்தமான நோய்களை உடனுக்குடன் கவனிப்பது நல்லது. பணி புரியும் பெண்கள் மன உறுதியுடன் செயல்பட்டு வந்தால், நல்ல பெயரை ப் பெறலாம்.பொது வாழ்வில் இருப்பவர்கள் யோசனை செய்த பின் பிறர்க்கு வாக்குறுதிகளை அளிப்பதே புத்திசாலித் தனம்  கலைஞர்கள் சேமிப்பைக் கரைக்கும் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். நிம்மதியாக வேலைகளை செய்ய முடியும்,  வியாபாரிகள் வழக்கு விவகாரங்களை நேரடியாக கவனித்துக் கொண்டால், நஷ்டங்களையும், மன உளைச்சலையும் தவிர்த்து விடலாம்.
    கும்பம்: இந்த வாரம் கலைஞர்கள் சிறிது பொறுமை காத்தால், புதிய ஒப்பந்தங்கள் மூலம் முழுமையான லாபமும் நல்ல பெயரும்  பெறலாம்.பணியில் இருப்பவர்கள்  உங்களைத் தேடி வரும் இடமாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளுங்கள்.அது நல்ல திருப்பு முனையாக இருக்கும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் கவனமாய் இருந்தால் எந்த தொல்லையும் தோன்றாது. சுய தொழிலில் இருப்பவர்கள் நிலவும் சூழலுக்கேற்ப, திட்டங்களையும் உங்கள் அணுகு முறைகளையும் மாற்றினால், பெறுகின்ற லாபம் கணிசமாக இருக்கும்.
    மீனம்: மாணவர்கள்  கணினி, புகைப்படக் கருவி போன்ற விலையுயர்ந்த பொருட்களை பத்திர மாக வைப்பதுடன், அவற்றை கவனமாகவும் கையாண்டால் வீண் விரயங்களைத் தவிர் த்துவிடலாம்.    வியாபாரிகள் பெரிய நிறுவனங்களுக்கு பணம் கொடுக்கும் முன்  நிதி நிலவரத்தை கவனத்தில் கொண்டு காசோலைகளை வழங்குவது நல்லது.  கர்ப்பிணிப்  பெண்கள் ஆகாரத்தில் கட்டுப்பாடாய் இருந்தால், ஆரோக்கியமும் சீராக இருக்கும். பணியில் இருப்பவர்கள் தங்களுக்கு  கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவது அவசியம்

    Share
  • உன்மத்தம்: 2

    இன்னம்பூரான்

    பித்தரெல்லாம் பைத்தியம் அல்ல; பைத்தியம் எல்லாம் சைத்தியம் அல்ல; சைத்தியம் எல்லாம் ‘க்ராக்’‘அல்லது ‘செமிக்ராக்’ அல்ல. பித்தமில்லா எத்தன் பத்தரைமாத்துத் தங்கம் போல அரிதிலும் அரிது. சிலருக்கு ஸ்க்ரூ ரொம்ப லூசு; பலருக்குக் கொஞ்சம் கொஞ்சம் லூசு. ஒத்தருக்குவாது ஸ்க்ரூ டைட் இல்லை. டைட் பண்ணினால், உடைந்து விடும். இது தான் நிலாவெளிச்சம் போல நிதர்சனம்.

    எப்போது நமது சித்தம் நமது ஆளுமைக்குள் இல்லையோ,அதை ‘சித்தஸ்வாதீனம்’ இழந்த நிலை என்று கூறுவது வழக்கம் என்றாலும், சித்தம் நம் ஆளுமைக்குள் இருக்குமா அல்லது நாம் தான் என்றென்றும் சித்தத்தின் ஆளுமைக்குள், ஓட்டின்னுள் உறையும் ஆமையைப் போல, அடங்கி, ஒடுங்கி வாழ்நாளை கழிக்கிறோமோ என்ற சிக்கலை மனோதத்துவ சாத்திரம் இன்று வரை அவிழ்க்கவில்லை. இந்த நுட்பத்தை சிறிதேனும் புரிந்து கொண்டாலே, அவுத்துப்போட்டுட்டு அலையற அசத்துக்களுக்கும், அவதூதர்களின் ஆன்மீகத்துக்கும் உள்ள மடுவுக்கும், மலைக்கும் உள்ளது போன்ற வித்தியாசம் புலப்படும்.

    உன்மத்தம் பைத்தியமோ, சைத்தியமோ இல்லை. ஆன்மீக நினைவலைகளில் மங்காது வாழும் சேஷாத்திரி ஸ்வாமிகள், ஜட்ஜ் ஸ்வாமிகள், ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், விசிறி சாமியார் போன்றோரின் வரத்துப்போக்குக்களை காணக்கொடுத்துவைத்தவர்களில் சிலர் அவர்களது சதா சர்வதா மோன நிலையை கண்டு வியந்தனர். சிலர் அவர்களின் உன்மத்த நிலையை பரிகசித்தனர்.  அவரவர் மனதின் வரையறைகளை யாரால் தாண்ட முடியும்? உயிரனங்களின் மனோதத்துவம் பற்றி மனிதன் அறிந்து கொண்டது சொற்பம். இரண்டே வரியில் அதை உரைத்து விட்டார், எங்கள் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்:

    உடல் வெளுக்க வழி உண்டு எங்கள் முத்து மாரியம்மா,
    மனம் வெளுக்க வழி இல்லையே எங்கள் முத்து மாரி…

    `அபிநவ சுகபிரும்மம்` பிரும்மஸ்ரீ குழுமணி நாராயண சாஸ்திரிகள் எழுதிய `ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் சரித்திரம்` பற்றி உசாத்துணையில் படிக்கும் கொடுப்பினை கிடைத்தது. விருப்பம் உள்ளவர்கள்அதை முழுதும் படிப்பது நலமே.   அதிலிருந்து நன்றி நவின்று பகிர்ந்து கொள்ளும் சத்குரு அவர்களின் அதி ஆச்சரியமான உன்மத்த ஆசாரத்தைப் பற்றிய சில தகவல்கள் நான் சொல்வதை உறுதிப்படுத்துகிறது.

    வம்சாவளி தெய்வ அம்சம் பொருந்தியது. ஆதி சங்கரர் புனித நர்மதை நதியின் புண்யஸ்தலத்திலிருந்து காஞ்சிக்கு வரவழைத்த தேவி உபாசகர்களின் வம்சம் என்கிறார் `அபிநவ சுகபிரும்மம்`. ஜனவரி 22, 1890 அன்று ஜனித்த சேஷாத்திரி , குழவியாக இருக்கும்போதே தொட்டதெல்லாம் பொன்  என்று கியாதி. அந்த வம்சாவளியில் ஜோதிட சாஸ்திரம் கை வந்த கலை. இவருக்கு திருமணம் பேச ஆரம்பித்தவுடனேயே ‘சந்நியாச யோகம்’ என்று சொல்லி, அது நின்று போனதால் வருந்திய விதவைத்தாய் வாடினாள்; மறைந்தும் போனாள். சேஷாத்ரியோ சதா சர்வகாலமும் பூஜை, புனஸ்காரம், கோயில், குளம். கட்டிய துணி அழுக்கு; கலைந்தத் தலைமுடி; தாடி; பளிச் குங்குமம்; தேஜோமயமான முகாரவிந்தம். ஜபதபம், அதுவும் மயானத்தில். பாலாஜி சுவாமிகள் என்பவரிடம் தீக்ஷை. இன்று கூட அவருடைய தீக்ஷாநாமம் யாருக்கும் தெரியாது. அவரைப்போய் லெளஹீகத்தில் அடைத்துப்போட்டார்கள், தந்தையின் சிரார்த்தம் செய்ய. காலி அறை. மாயமாய் மறைந்து விட்டாராம். (பகவான் ஶ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்ஸரை பற்றியும் இப்படி ஒரு செய்தி உண்டு.) ஊரெல்லாம் இந்த அற்புதம் பற்றியே பேச்சு. வீட்டுக்கே செல்லாமல், ஜீவன் முக்தராக ஞானப்பித்தராக, தன்னை உணர்ந்து பிரும்மானந்தக்கடலில் நீந்தி திளைத்தவராய் சுற்றி அலைந்து கொண்டிருந்தார். கால்நடையாகவே பல புண்யக்ஷேத்திரங்களை தரிசித்து விட்டு, திருவண்ணாமலையே கதி என்று அங்கு வந்தடைந்தார்.

    “…அங்கேயே பல இடங்களில் பித்தனைப்போல சுற்றிக்கொண்டிருந்தார். அழுக்கு வேட்டி.சவரம் செய்யப்படாத முகம். கிடைத்ததை சாப்பிடுவார். சாப்பிடாமலும் இருப்பார். யாராவது புதிய வேட்டி கட்டி விட்டால், அடுத்த ஒரு மணியில் அது கந்தயாகி விட்டிருக்கும். குளக்கரை, குப்பைமேடு, எதோ ஒரு வீட்டின் திண்ணை, இப்படி எங்கு வேண்டுமானாலும் படுப்பார். பெரும்பாலும் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கம்பத்து இளையனார் கோயிலில் தான் அமர்ந்து இருப்பார் இதுதவிர, அன்ன சத்திரம், சடைச்சி ஆச்சியம்மாள் வீடு, சாதுமடம், சின்ன குருக்கள் வீடு, ஓயாமடம் போன்ற இடங்களிலும் அடிக்கடி தென்படுவார் 1889 ம் ஆண்டு தனது 19 ம் வயதில் அண்ணாமலைக்கு வந்த சுவாமிகள் நாற்ப்பது ஆண்டு காலம் அந்த புனித மண்ணில் `பைத்தியம்` போல உலவிவிட்டு தன பூத உடலை நீத்தார். அவர் அண்ணாமலையில் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல தீராத வியாதிகளும் மகானின் பார்வை பட்டதுமே பறந்தோடின. வாய் பேச முடியாதவர்கள் பேசினர். எமன் வாயில் சிக்கியவர்களைக்கூட மகான் மீட்டு இருக்கிறார்…’.

    பகவான் ரமணருக்கும் (அவருக்கு ‘உந்திப்பற’ உன்மத்தம்) இவருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது, தொட்டும் தொடாமலும்.

    (தொடரும்)

    உசாத்துணை:

    http://sirugamaniganesan.blogspot.co.uk/2011/10/sadguru-sri-seshadri-swamigal.html

    சித்திரத்துக்கு நன்றி: http://avatharsrisesha.files.wordpress.com/2009/12/ms.jpg

    Share
  • ஆன்ட்ராக் அனிமேஷன் மற்றும் பிலிம் கம்பைன் தயாரிப்பில் 3 ஜீனியஸ்

    செல்வரகு
    ஆன்ட்ராக் அனிமேஷன் மற்றும் பிலிம் கம்பைன் தயாரிக்கும் புதிய படம் 3 ஜீனியஸ். இது மலேசியாவில் தயாரிக்கப்பட்டத் தமிழ்த்திரைப்படம்.

    கதைச்சுருக்கம்

    மக்களின் விழிப்புணர்ச்சிக்கு விஞ்ஞானம் ஒரு மகத்தான பங்கு வகிக்கிறது. அணு சக்தியால் ஏற்படும் நன்மைகள் நானோ தொழில் நுட்பம் போன்ற அறிவியல் விழிப்புணர்வை வலியுறுத்தி உருவாக்கப் படுகிறது 3 ஜீனியஸ். அதி புத்திசாலிகளாகப் பிறக்கும் 3 குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கப் பட்ட கதை 3 ஜீனியஸ்.

    இப்படத்தில் மலேசிய முன்னணி நடிகர்கள் லண்டன் டான் பிரசன்னா, சசி அபாஸ், அகோதரன், சங்கீதா, கவிதா, ஜஸ்பீர் , ஆனந்த ராஜ் , இவர்களுடன் இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரமான விஞ்ஞானி கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.

    இப்படத்தில் வில்லனாக நடிப்பதற்காக நான்கு நாடுகளில்  நான்கு பேர் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள்.பாகிஸ்தானிலிருந்து யாசின், சிங்கப்பூரிலிருந்து ஆனந்த்ராஜ், நைஜீரியாவிலிருந்து கிரிஷ், அரேபியாவிலிருந்து அலிபாய் ஆகியோர் தான் அந்த நான்கு வில்லன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்குகிறார் P.K. ராஜ். அதிநுட்பத் தொழில் நுட்பத்துடன் ஒளிப்பதிவு செய்கிறார் மகேஷ் K தேவ். இசையமைப்பாளர் ஆதிஷ் உத்ரியன் இசையமைக்கிறார்.

    இந்தப் படத்தில் இடம்பெறும் 5 பாடல்களும் மலேசியா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டிருக்கிறது.

    தொழில் நுட்பக் கலைஞர்கள்

    கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்: P.K.ராஜ்

    ஒளிப்பதிவு: மகேஷ் K தேவ்

    இசை: ஆதிஷ் உத்ரியன்

    நடனம்: சந்துரு

    கலை: முருகன்

    ஆக்‌ஷன்: கெளதம் முருகன்]

    P.R.O  : S.செல்வரகு

    தயாரிப்பாளர்கள்: புண்ணியமூர்த்தி கணேசன்  – சிவா கணேசன் – விஜேந்திரன்

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 65

    மலர் சபா
    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

     

    இனிய கள் ஊறும் வாயையுடைய
    நெய்தல் மலரே!
    வருத்தம் அதிகரிக்க வைக்கும்
    இம்மாலைப் பொழுதினில்
    தனிமையில் வருந்துகின்றன
    என் கண்கள்.

    அது போன்ற துன்பம்
    ஏதும் இல்லாததால்
    ஆழ்ந்து நீ உறங்குகின்றாய்!
    நீ உறங்கும்போது
    காண்கின்ற கனவுதனில்
    கொடியவராம் எம் காதலர்
    இச்சோலைப் பக்கம் வரக்கண்டாயா?

    (34)
    பறவைகள் போல
    விரைந்து சென்றிடும்
    குதிரைகள் பூட்டிய
    தேரின் சக்கரங்கள்
    சென்ற வழி அனைத்தையும்
    சிதைத்து நீ நிற்கிறாய்,
    தெளிந்த நீரையுடைய கடலே!

    என்ன செய்வேன் இனி யான்?
    என்னுடன் இருந்து கொண்டே
    பழிபோற்றும் அயலாரோடு
    சேர்ந்துகொண்டு
    நீயும் எனக்குத் துன்பம் தருகின்றாய்.
    என் நோயினை நீ அறியாய்;
    என்ன செய்வேன் இனி யான்?

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html

    படத்துக்கு நன்றி:
    http://jaikrishnaraitushar.blogspot.com/2011_03_01_archive.html

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    திவாகர்

    செய்திகள் என்பது எப்போதுமே பரபரப்பாகவும் மக்கள் உடனடியாக படித்து பதட்டம் அடைவதாகவும் இருக்கவேண்டும் என்று எந்த அறிவாளி எப்போது எந்தக் காலத்தில் சொல்லி வைத்தாரோ, தினமும் பத்திரிகைகளின் வரும் செய்திகள் இந்தக் கொள்கையைத் தவறாமல் கடைபிடித்து வருகின்றன. பத்திரிகைகள் கிடைக்காத அந்தக் காலக் கட்டத்தில் கிராமங்களில் செய்தி பரப்புவதைப் பற்றிய நகைச் சுவைக் கட்டுரை ஒன்றில் ‘ஒரு பாட்டி கிணற்றில் தண்ணீர் எடுக்கும்போது மண்குடத்தைத் தவறிப் போட்டு விட்டாள்’ என்பது வார்த்தைகள் திரிக்கப்பட்டு காட்டுத் தீ போல் ஒவ்வொருவர் வாய் மூலமாகவே கடைசியில்’அந்தப் பாட்டி யாரையோ கிணற்றில் தள்ளிவிட்டு தானும் விழுந்து விட்டாள்’ என்பதாகப் பரவும் என எழுதி இருப்பார். (இல்லாவிட்டால் பாட்டி தவறிப்போய் போட்டுவிட்ட அந்த மண்குடத்தை யார் மதிப்பார்கள்..)

    என்னுடைய ‘எம்டன்’ புதினத்துக்காக சென்ற நூற்றாண்டின் முதல் வருடங்களின் செய்திகளை அதிகம் புரட்டிப் பார்க்க நேர்ந்தது. அப்போதும் கூட அந்த காலத்துக்கேற்ப பல பரபரப்பான செய்திகள் அரங்கேற்றம் ஆகிக் கொண்டே இருந்தனதான். ஒரு மாதிரிக்காக, அன்றைய அன்னி பெசண்ட் அம்மையாருக்கும் ஹிந்துப் பத்திரிகைக்கும் ருக்மிணி அருண்டேல் விஷயத்தில் நடந்த கருத்து மோதல்கள் மிக விறு விறுப்பாகப் படிக்கப்பட்ட செய்தியாகவும், மதராஸ் ஆங்கிலேய கவர்னர் தனிப்பட்ட முறையில் ஹிண்டு பத்திரிகைக்கு ஆதரவு அளித்ததையும் சொல்லலாம். ஆனால் உண்மையில் பார்த்தால் இவையெல்லாம் பொது மக்களுக்குத் தேவையான செய்தியா என்றால் இல்லை என்பதுதான் பதில். ஆனால் பொது மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள் ஏனென்றால் வம்புகளில் கிடைக்கும் ஒரு கிளர்ச்சிகரமான இன்பம் மட்டுமே’ என்பேன்.

    காலம் எத்தனைதான் மாறிவிட்டாலும், இப்போதும் இத்தகைய செய்திகளுக்குத்தான் எங்கும் எதிலும் முதலிடம். காலம் மாறினாலும் கோலம் மாறாது என்பது போல பத்திரிகைகளின் இந்தக் கொள்கையும் மாறவே மாறாது போலும்.

    இத்தகைய நிலையிலும் ஏதோ சில நல்ல செய்திகளும் அந்தப் பத்திரிகைகள் வேறு வழியில்லாமல் பிரசுரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அத்தகைய நல்ல செய்திகள் வரும்போதெல்லாம் நமக்குத் தவறாமல் அதைப் பதிப்பித்து எடுத்துச் செல்கிறார் திரு சங்கர ராமசாமி அவர்கள். இதோ சமீபத்திய அவர்களின் பதிவிலிருந்து ஒரு நல்ல செய்தி..

    தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கெனத் தனியான தமிழ் எழுத்துருக்கள் மற்றும் விசைப்பலகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இனி இந்த எழுத்துருக்களைப் பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் மிச்சமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 13 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னையில் தலைமைச் செயலகம், எழிலகம் உள்ளிட்ட அரசு தலைமை அலுவலகங்கள் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்களில் முற்றிலும் கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

    கோப்புகளைத் தயார் செய்வது உள்பட பெரும்பாலான பணிகள் கம்ப்யூட்டர் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தமிழகத்திலுள்ள அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு அலுவலகத்திலும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றாற்போன்று எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான அலுவலகங்களில் வானவில் என்ற பெயரிலான எழுத்துரு உபயோகிக்கப்படுகிறது.

    ஆனால், இந்த எழுத்துருவுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தியாக வேண்டும். வேறு சில எழுத்துருக்களைப் பயன்படுத்த வேண்டுமானாலும் அதற்குக் கட்டணம் அவசியம். இதனால், அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒரே எழுத்துரு பயன்படுத்துவது என்பது கனவாகி இருந்தது.

    இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒரே எழுத்துருக்கள் மற்றும் விசைப் பலகைகளை பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான முயற்சி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

    இதற்காக, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் முனைவர் பி.ஆர்.நக்கீரன் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பி.செல்லப்பன், மணிவண்ணன், தேசியத் தகவலியல் மையத்தின் உறுப்பினர் ஜே.டி.பிரின்ஸ், தேசியக் கம்ப்யூட்டர் மேம்பாட்டு மையத்தின் உறுப்பினர் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

     இந்தக் குழு சார்பில் பாரதி, கபிலர், கம்பர், வள்ளுவர், காவிரி ஆகிய பெயர்களில் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துருக்கள் ஒரே வகையைச் சேர்ந்தவைதான். இவற்றை விண்டோஸ், லினக்ஸ் உள்ளிட்ட ஆபரேட்டிங் சிஸ்டம்களில் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

    பல கோடி ரூபாய் மிச்சம்: இந்த எழுத்துருக்களுக்கான விசைப் பலகை, சாதாரண டைப்ரைட்டிங் இயந்திரத்தில் உள்ளது போன்றும், ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையை அடித்தால், அது அப்படியே தமிழில் மாறுவது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால், விசைப் பலகையை வேகமாக இயக்கத் தெரியாதவர்கள்கூட, ஆங்கிலத்தில் எழுத்துக்களை அடித்து அதைத் தமிழில் தோன்றச் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இப்படிப்பட்ட செய்திகளை அடிக்கடி வழங்கிக் கொண்டிருக்கும் திரு சங்கர ராமசாமி அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழு மிக மகிழ்ச்சியுடன் தேர்ந்தெடுக்கிறது. திரு ராமசாமி அவர்களுக்கு என் வாழ்த்துகளும் அன்பும்.

    கடைசி பாரா:  சத்தியமணி’ யின் கவிதை வரிகளிலிருந்து

    அன்னமன் னந்நடை அரிவையாகி காதல் கற்றாள்
    தெரிவை எம்மைத் தெரிவாயென இல்லறம் கண்டாள்
    பேரிளம்பெண் அன்னை யென்றே பாசம் பொழிந்தாள்
    நுங்கையாகி நற்றமிழ் எழுதிட கற்று கொடுத்தாள்

    Share
  • திருமுருகன் துதிமாலை (1)

     

    சத்தியமணி

    பங்குனி  உத்திரம்  நினைவாக (நொய்டாவில் முருகன் ஆலய குடமுழுக்கில் அறுமுகனுக்கு அர்ப்பணித்தது)

    அம்மாவின் மடியில் சிம்மாசனம் செய்து

    அரசாளும் ஆறுமுகனே

    இம்மாகலி காலத் தீவினைகள் அகற்ற

    இடம் கண்டு வந்த சிவனே

    சிம்மாளம் கண்டு சிரிப்பான வதனத்தால்

    சிறைசெய் தமிழ் கள்வனே

    பம்மலால் படைவீடு குடிகொண்ட கந்தா

    பட்டாடைச் சுற்றும் அழகா

    மயில்தோகை விரித்தாடும் எழிலோடுஏறி

    விளையாடும் வேலகுகனே

    துயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்

    முகங்காட்டும் சக்திமகனே       (1)

    Share
  • எழுச்சி

    வே.ம.அருச்சுணன் – மலேசியா

    “வெள்ளம் ஏறிடுச்சாம்…..! வெள்ளம் ஏறிடுச்சாம்……!”

    “வெள்ளம்…….எங்க  ஏறிடுச்சு?  விவரமா……..சொல்லு மணியம்….!”

    “வேற எங்க ஜீவா ….! நம்ம…… தமிழ்ப்பள்ளியிலதான்…..வெள்ளம் ஏறிடுச்சாம்….!”

    “ நேத்துப் பேஞ்ச செம மழைல…….வெள்ளம் ஏறாம இருக்குமா…..?”

    தாழ்வு பகுதியிலே அமைந்திருந்த அப்பள்ளி மழைக்காலங்களில் வகுப்பறைகளில் தண்ணீர் ஏறிவிடுவது வழக்கமான ஒன்றுதான்.கடந்த இருபது வருடங்களாக அப்பள்ளி வெள்ளப் பிரச்னையால் நொந்து நூலாகிப் போனது!

    பள்ளியின் முன்னாள்  மாணவர் சங்கத்தலைவர் மணியமும் செயலாளர் ஜீவாவும் பள்ளிக்கு விரைகின்றனர்.

    இவர்களுக்கு முன்னதாகவே தலைமையாசிரியர் இராமநாதன்,தன் அலுவலகத்தில் ஏறிப்போயிருந்த வெள்ள நீரை ‘பிளாஸ்டிக்’  வாளியில்  அள்ளி  வெளியில் ஊற்றிக்கொண்டு இருந்தார். பள்ளி  ஆசிரியர்கள் சிலரும் அவருக்கு உதவுகின்றனர்.

    பள்ளிப் பணியாளர்கள்  மற்ற வகுப்புகளில்  ஏறிப்போயிருந்த நீரைச்  சிரமப்பட்டு இறைத்துக் கொண்டிருந்தனர்! பல மணி நேர போராட்டத்தின் எதிரொலியை களைத்துப்போன  அவர்களின் முகங்கள் தெளிவுபடுத்திக்கொண்டிருந்தன!

    எதிலும் முந்திக் கொள்ளும் மணியத்திற்கு தான் வருவதற்கு முன்பே தோட்ட மக்கள் பலர் அங்கு கூடிப்போயிருந்தது மனதில் வெட்கத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவு மணியத்தின் முகம்  சுருங்கிவிட்டது! கூட்டத்தில் ஒருவனாக நெருங்கிய நண்பன்  சுந்தரம் இருந்தது மணியத்திற்கு  கோபமாக இருந்தது! அவன் விசியத்தைச் சொல்லியிருந்தால் முன்னாடியே வந்து உதவியிருக்கலாமே என்று மனம் வருந்துகிறார்!

    “சார்…! சார்….! நீங்கே வெளியே வாங்க. நாங்க  தண்ணீர இறைக்கிறோம் …….!”மணியும், தலைமையாசிரியரிடமிருந்த வாளியை வாங்கி, ஓரடித் தண்ணீருக்குள் மூழ்கிப்போயிருந்த அவரது அலுவலகத்திலுள்ள தண்ணீரை ‘மடமட’ வென்று இறைக்கிறார். ஜீவாவும் அவருடன் சேர்ந்து கொள்கிறான்.

    அங்கு வந்த பலரும் வேலையில் மும்முரம் காட்டுகின்றனர்.சிறிது நேரத்தில் தண்ணீர் வேகமாக அலுவலகத்திலிருந்து வெளியேறத் தொடங்குகிறது. அரை மணி நேரத்தில் அலுவலகத்திலிருந்த  தண்ணீரை முற்றாக வெளியேற்றிய போது, தலைமையாசிரியரின் முகத்தில்  புன்னகை மலர் பூக்கிறது.

    “தலைவரே……அவசரத்திலே ஓடிவந்ததால உங்ககிட்ட சொல்லாம வந்துட்டேன்,மன்னிச்சிடுங்க…..!” சுந்தரம் பயத்தால் தயங்கி நின்றான்.“சரி…சரி….அதான் வந்துட்டோமில்ல….கவலைய விடு….! ஜீவா,சுந்தரம்…. நாம படிச்ச முதலாம் வகுப்பைப் போய்ப் பாப்போம்…..தண்ணீர் ஒரு அடிக்கு மேலே ஏறி நிக்குதாம்…..!” வெள்ளத்தில் சுவரில் மாட்டப்பட்டிருந்த போதனைக்குரிய வாசிப்பு  அட்டைகள் பல தண்ணீரில் மிதந்தன. அவை மீண்டும் பயன் படுத்துவதற்கு  முற்றாய்த் தகுதியிழந்திருந்தன! ஆசிரியர்களின் உழைப்பு பாழாய்ப் போனது மணியத்திற்கு தாங்கொணா வருத்தத்தைத் தருகிறது!

    நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தான் முதலாம் ஆண்டில் படிக்கும் போது தரையில் அமர்ந்து, மணல் பரப்பிய நீண்ட பலகையிலான பெட்டியில் எழுதிப் பழகிக் கொடுத்த அழகம்மா….. வாத்தியாரம்மா நினைவுக்கு வருகிறார். ஐம்பதாம் ஆண்டுகளில்,தரையில் அமர்ந்து பலரோடு தானும் கல்வி பயின்ற அந்த நினைவு மின்னல் கீற்று பளிச்சென நினைக்கு வருக்கிறது வந்திருந்த,  முன்னாள் மாணவர்கள்  எல்லா  வகுப்புகுகளிலும்  ஏறியிருந்தத் தண்ணீரை இறைக்கின்றனர். தண்ணீரில் மிதந்த கொண்டிருந்த நோட்டுப் புத்தகங்கள்,பயிற்சிப் புத்தகங்கள் இன்னும் சில பாட நூல்களை எடுத்து வெயிலில் காய வைத்துக் கொண்டிருந்தனர் சிலர்.

    மூன்று மணி நேரம் போராட்டத்திற்குப் பின் அலுவலகம்,வகுப்பறைகள் என்று பத்து அறைகளில் ஏறிய தண்ணீர் முற்றிலுமாக இறைக்கப்படுகிறது.எல்லா வகுப்பறைகளும் சேரும் சகதியுமாகக் காணப்படுகின்றன. வெள்ளத்தால் செத்து மடிந்த எலிகளும், பூச்சிகளும், துர்நாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

    எத்தனையும் பொருட்படுத்தாமல்,சேற்றையும் சகதியையும் வாளிகளிலும் மற்ற பாத்திரங்களிலும்,அள்ளி  வெளியில்  கொட்டிக் கொண்டிருந்தனர். அங்கிருருந்த முன்னாள் மாணவர்கள். நாளை மாணவர்கள் கல்வி கற்க வேண்டுமே என்ற அக்கறையினால், உடல் உழைப்பை  முழுமையாகக்  கொடுத்து உழைத்துக் கொண்டிருத்தனர். பொது அமைப்பைச் சேர்ந்த பலரின் உழைப்பும் அக்கறையும் அங்கு மிகுந்து காணப்படுகின்றன!

    கடும் உழைப்பை வழங்கிக் கொண்டிருக்கும் முன்னாள் மாணவர்களுக்கு, மதிய உணவு வழங்க தலைமையாசிரியர் ஏற்பாடு   செய்திருந்தார். அவர்,பணியில் ஈடுபட்டிருந்த அனைவருடனும் ஒன்றாய் அமர்ந்து மதிய உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

    “டத்தோ…..வந்துட்டாரு, டத்தோ வந்துட்டாரு…..!” மணியத்தின் அருகில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்த ஜீவாதான் எல்லாரது கவனமும் ஈர்க்கும் வகையில் உரத்தக் குரலில் கூறுகிறான். டத்தோவை நோக்கி எல்லாரது கவனமும் திரும்புகிறது.

    உணவை உண்டு  முடித்தவர்கள் தலைமையாசிரியருடன் அவசர அவசரமாக  டத்தோ  மனோகரனை எதிர் கொண்டு வரவேற்கின்றனர். மணியம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்; இன்னும் அவர் உணவை உண்டு முடிக்கவில்லை!

    டத்தோ மனோகரனும் மணியமும் ஒரே வகுப்பில் பயின்றவர்கள். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.தங்கள் பள்ளியில் பயின்ற தம் நெருங்கிய நண்பர்  சட்டமன்ற உறுப்பினராக வருவதற்கு மிகக் கடுமையாக உழைத்தவர் மணியம். கடந்த இருபது வருடங்களாகச் சட்டமன்ற உறுப்பினராகவும் மாநில ‘ஆட்சிக்குழு’ உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

    முதல் முறையாக, அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்ற போது இப்போது கொண்டிருக்கும் ‘டத்தோ’ பட்டத்தையோ, பிற பதவிகளையோ கொண்டிருக்கவில்லை. பதவிக்கு வந்த ஐந்தாண்டுகளில் ‘மளமள’ வென்று டத்தோ பட்டமின்றி பல பதவிகளையும் பட்டங்களையும் பெற்று அரசியல் வானில் மின்னும் நட்சத்திரமாக ஜொலிக்கத் தொடங்கிறார்.

    ‘முன்னாள் மாணவர் சங்கம்’, அவரைச் சிறப்புடன்   பள்ளிக்கு  அழைத்து      தலைவர் என்ற முறையிலும் நெருங்கி நண்பர் என்ற முறையிலும், மணியம் சில கோரிக்கைகளை அவர் முன்  வைக்கிறார்.  மிக முக்கியமான கோரிக்கையாக,எண்பது ஆண்டுகாலமாக இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளிப் பிரச்னை! இதுவரை பல்வேறு காரணங்களுக்காக நான்கு முறை  பள்ளிக் கட்டிடம் இடம் பெயர்ந்துள்ளது. தாழ்வு நிலங்களில் பள்ளி அமைக்கப் பட்டதன் விளைவே அடிக்கடி வெள்ளப் பிரச்னையில் பள்ளி சிக்கிப் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்துள்ளது. இதற்கு நிரந்திரத் தீர்வாகப், புதியப் பள்ளியை மேட்டு நிலத்தில்   அமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கிறார் மணியம். மறுமொழி பகன்ற, ஓய்பீ மனோகரன், அடுத்த ஐந்தாண்டுகளுக்குள், பள்ளியை மேட்டு நிலத்தில், கட்டி வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதாக உறுதி கூறியபோது நிகழ்வு நடந்த மண்டபத்தின் கூரையே இடிந்துவிடும் அளவிற்கு கையொலி ஓங்கி ஒலித்தது! மாலையும் மரியாதையும் பெற்றுக் கொண்டு போகிறார்.

    அன்று,கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்குப் புதிய நம்பிக்கை பிறந்தது. இதற்கு முன் பல அரசியல்வாதிகளைப் பார்த்தவர்களுக்கு,ஓய்பியின் சாதுர்யமானப் பேச்சு அனைவரையும் தலைகீழாய்ப் பிரட்டிப் போட்டிருந்தது! ‘எங்க வீட்டுப் பிள்ளை’ நிச்சயம் புதிய பள்ளியைக் கட்டிக் கொடுத்துவிடுவார் என்று பந்தயம் கட்டினர்!

    மறுநாள்!

    “ஹல்லோ…..யாரு பேசுறது…?”

    “ஓய்பீ.மனோகரன் போசுறேன்….!”

    “என்ன….! ஓய்பீயா பேசுறது……?” ஆச்சரியப் படுகிறார் மணியம்.

    “பள்ளி விசியமா ஏதும் பேசனுமா ஓய்பீ…..? சொல்லுங்க செயலவை உறுப்பினர்களை அழைச்சிக்கிட்டு நேரில் வர்றேன்….!”

    “அதெல்லாம்….. ஒன்னும் வேணாம்….! நாளை புதன் கிழமை காலை மணி பத்துக்கு என்னோட ஆபீசுக்கு வந்துடு….. சில முக்கியமான விசியங்களை உன்னோடு பேசனும்…!”

    மறுநாள், காலை ஒன்பது மணிக்கே ஓய்பியின் அலுவலகம் அமைந்த பதினான்காவது மாடிக்குச் செல்கிறார் மணியம். அலுவலகத்தில் திருவிழாக் கோலம் போல் மக்கள் வெள்ளம் காணப்படுகிறது! மணியத்திற்கு அங்கே முன்னே பின்னே சென்றது கிடையாது! அரசியல்வாதியாக இல்லாததே இது போன்ற இடங்களுக்குச் செல்லாததே காரணமாகும்!  அங்கு குழுமியிருந்தவர்கள் பெரும்பாலும் அரசியல் தொடர்பு கொண்டவர்களாக இருந்தனர்!

    குறித்த நேரத்தில், செயலாளர் வந்து மணியத்தை ஓய்பீ அறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். பால்ய நண்பர் என்ற தகுதியை மட்டுமே கொண்டிருந்த மணியத்திற்கு  ஓய்பியின் உடனடித் தரிசனம் வியப்பையும்,நண்பர் என்ற நட்புக்கு வழங்கிய  மதிப்பையும், மரியாதையும் மணியத்தின் உள்ளத்தில் ஓய்பியின் மதிப்பு இமயத்தை தாண்டிக் கொண்டிருந்தது!

    “மணியம்…..எப்படி இருக்கே….?”

    “நலமா  இருக்கேன்…..! எனக்கு என்ன குறைச்ச ஓய்பீ….?”

    “இருக்கிறது சொந்த வீடா….?”

    “ஆமாம்…. சொந்தவீடுதான் ஓய்பீ…..!”

    “எத்தனை வீடு வெச்சிருக்கே…..?”

    “ஒரு வீடுதான்….!”

    “எத்தனைப் புள்ளைங்க இருக்காங்க…?”

    “நான்குப் பிள்ளைங்க இருக்காங்க….!”

    “பிளைகள்……எல்லாம் வேலை செய்யுறாங்களா…?”

    “மூன்று பேர் வேலை செய்றாங்க…..கடைசிப் பையன் எம்யூல கடைசி ஆண்டு இஞ்ஜியரிங் செய்யிறாரு….!”

    “உனக்கு….வருமானம்…..போதுமானதா இருக்கா…?”

    “இருபது ஆண்டுகளாக நானும் மனைவியும் செய்யிற பூவிற்பனை மூலம் போதுமான வருமானம் கிடைக்குது. திட்டமிட்டு வாழ்றதால ஆண்டவன் புண்ணியத்தில நிம்மதியா வாழ்ந்துகிட்டு இருக்கோம். அது போதும்…..ஓய்பீ….!”

    “மணியம்…..என்னப்பா நீ  பிழைக்கத் தெரியாத ஆளா இருக்கிறீயே…..!”

    “ஓய்பீ…..நீங்க என்ன சொல்றீங்கனு எனக்கு விளங்கல….!”

    “நான்….ஒரு அரசியல்வாதி, காற்று இருக்கும் போது தூற்றிக் கொள்ளனு முனு பழமொழி சொல்லுது….! உனக்கு நிலம் போட்டுத்தர்ரேன். பட்டம் போடுரேன்.வீடு போட்டுத் தர்ரேன். பணம் தர்ரேன்…..! எது வேணும் சொல்லு….? உடனே தர்ரேன். நாம ஒரே வகுப்பில படிச்சோம் என்ற உறவினால உனக்காக எதுவும் செய்யிறதுக்குத் தயாராஇருக்கேன்! கொடுக்கிறத வாங்கிகிட்டு சும்மா இருப்பியா……!இதவுட்டுட்டு….. பள்ளியப் புதுசாக் கட்டனுமுனு….பப்ளிக்கா கூட்டத்தில பேசிக்கிட்டுத் திரியாதே…..!”

    “என்ன……ஓய்பீ……இப்படிப் பேசுறீங்க…….?”

    “மணியம்……நீ ஒன்ன நல்லா புரிஞ்சிக்கனும். என் அரசியல் வாழ்வுக்கு குறுக்கே வர்ர யாரையும் நான் விட்டு வைக்கிறதில்லை…..! என் வழியிலக் குறுக்கிட்ட நண்பன் என்றுகூடப் பார்க்க மாட்டேன்!”

    ஓய்பியின் பேச்சைக் கேட்டு மணியம் அதர்ச்சியடைகிறார் ஒரு கணம்.

    “ஐஞ்சி வருசத்தில……நாம படிச்சப் பள்ளியக் கட்டித்தர்ரதா…..பெற்றோர் முன்னிலையில் வாக்கு கொடுத்திங்களே……ஓய்பீ!”

    “மணியம்…..என்னைப் போன்ற அரசியல்வாதிங்க…..சூழ்நிலைக்குத் தகுந்தாப் போல பேசுவோம்…..! நாங்கப் பேசுறதயெல்லாம் உண்மையினு பொதுமக்கள் நினைச்சிக்கிட்டா அதுக்கு நாங்கப் பொறுப்பில்லையே….?” மணியத்தைப் பார்த்து ஏளனமுடன் கடகடவென….சிரிக்கிறார். அகம்பாவம் அவரது குரலில் தலைவிரித்து ஆடுகிறது….!

    அவமானத்தால், மணியம் தலைகுனிகிறார்! ஏன் வந்தோமுனு ஆயிடுச்சு! இனியும் அங்கிருக்கத் தன்மானம் அவருக்கு இடம் தராததால்,உடனே அங்கிருந்து வெளியேறுகிறார்!

    பொதுவாழ்வில்  சோரம் போகாத ஒரு சொக்கத் தங்கம் வெளியில் செல்வதை முதல் முறையாக வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார் ஓய்பீ!  மணியம்,  தன் பால்ய நண்பன் என்று கூறுவதில் மனதளவில் பெருமைப் பட்டுக் கொள்கிறார்!

    கபடம் நிறைந்த மற்ற அரசியல்வாதிகள் போல் அல்லவா,தன் ஆருயிர் நண்பனும் நடந்து கொண்டான்! ச்சே…..என்ன உலகமடா இது….! தன்னுடன் படித்தவனே…..ஏங்கித்தவிக்கும் இந்த ஏழைச் சமுதாயத்தைத்…… தன் சுயநலப் போக்கால்  கைதூக்கிவிட முன்வரவிலையே….?

    நாடு சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டு கடந்துவிட்டது.நாடு துரித வளர்ச்சியைப் பெற்றுவிட்டது. எல்லா இனமும் வாழ்வில் உயர்ந்துவிட்டன!  நமது வாழ்வில் மட்டும் எந்தவிதப் பெரியமாற்றமும் ஏற்படாமல் போய்விட்டதே? நல்ல சூழலில் கல்வி கற்க ஒரு பள்ளியைக் கட்டமுடியவில்லையே? இனி….யார்தான் நமக்கு உதவப் போகிறார்கள்?  மிகுந்த மனக் கவலையுடன் வீடு திரும்புகிறார் மணியம்.

    விசியத்தை ஜீவா அறிந்த போது வெகுண்டெழுந்தான், “தலைவரே……நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க….மிக விரைவில ஏதோ… ‘சுனாமி’ வரப்போர்ரதா பேப்பர்ல போட்டுருக்காங்க! ம்…..வீசிக்கிட்டிருக்கிற காற்று எப்போதும் ஒரே திசையில வீசப்போறதில்லா…..!”

    மலேசியாவில் மட்டுமல்லாது வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் மாணவர்களையெல்லாம் தொடர்பு கொண்டு புதிய பள்ளியைக் கட்டும் திட்டத்தை 2007 ஆம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் அறிவிக்கின்றார். சற்றும் எதிர்பார்க்காத அமோக ஆதரவு கிடைக்கிறது! ஒவ்வொரு உறுப்பினரும் தங்களின் உரிமைக்காகப் போராட உறுதி கொள்கின்றனர். இதுவரையில் ஏமாந்தது போதுமென்ற முடிவு எடுக்கின்றனர்.மக்கள் விழித்துக் கொள்கின்றனர்! ஐந்து ஆண்டுகளாக மிகக்கடுமையாக உழைக்கிறார் மணியம்.

    தான்   இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது  என்ற இறுமாப்புடன் உலாவந்த டத்தோ,அவரது நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த அவரைக் கட்சியிலிருந்து நீக்கிவிடுகிறது! நாட்டில் அதிநவீன முறையில் கட்டப்பட்ட முதல் தமிழ்ப்பள்ளியின் திறப்புவிழாக் காட்சியைப் பதவி இழந்த டத்தோ மனோகரன்  தொலைக்காட்சியில் கண்டு வெட்கித் தலைகுனிகிறார்!

    Share
  • பொருளாதார விண்மீன்களும் சமுதாய மின்மினிகளும்………

     

    சச்சிதானந்தம்

            

    சில வாரங்களுக்கு முன்பு விஜய் டிவி யில் ஒளிபரப்பான நீயா? நானா? நிகழ்ச்சியில் சமுதாயம் மற்றும் நிச்சயமற்ற பொருளாதார சூழலில் இந்தியர்களுக்கு உண்டாகும் மன அழுத்தம் பற்றி விரிவாக விவாதிக்கப் பட்டது.

                                     ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்களுக்கு இன்றைய சூழலில் மன அழுத்தத்திற்கான காரணம், தனி மனிதப் பொருளாதாரத்தை மேலும் மேலும் விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் தான் என்பது தெளிவாகத் தெரிந்தது. அதிலும் பெரும்பாலானவர்கள், தங்கள் பொருளாதாரத்தை உயர்த்தி வசதி படைத்தவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்வதற்குக் காரணம், இந்த சமுதாயமும், உறவினர்களும் தங்களுக்குத் தரும் நெருக்கடிதான் என்பது போலக் கூறியது வேடிக்கையாகவும் அதே சமயத்தில் அதிர்ச்சியாகவும் இருந்தது.

                                       ஒருவர் தன்னிடம் 1௦௦ ரூபாய் இருக்கும் பட்சத்தில் 8௦ ரூபாய்க்குள் செலவுகளைத் திட்டமிட்டு 2௦ ரூபாயை சேமிக்கலாம். அந்த சேமிப்பைச் சிறுகச் சிறுகப் பல்வேறு பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து, அவரவர் தேவைகளைப் பொறுத்து 10, 15, அல்லது 20 ஆண்டுகளில் அந்த சேமிப்பின் பலனை அனுபவிக்கலாம். வாழ்க்கைத் தரத்தைச் சமுதாயத்திற்காக இல்லாமல் உண்மையாக உயர்த்திக் கொள்ளலாம்.

                                      ஆனால் பெரும்பாலானவர்கள் இவ்வாறு செய்வதில்லை. தங்களுடைய வருமானத்தைப் போல 10 முதல் 25  மடங்கு வரை அதிகமாகக் கடன் வாங்கியாவது தங்களது பொருளாதார இலக்கின் உச்சத்தை அடைய முழு மூச்சாக முயற்சி செய்து பார்க்கிறார்கள். இவ்வாறு முயல்பவர்களில் சிலர் தங்களின் இலக்கை அடைந்தும் இருக்கிறார்கள், வாழ்க்கையை வெற்றிகரமாகவும் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் திட்டமிட்டபடி செயல்படுத்த முடியாமல் உச்சகட்ட மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

                                  சரி, அதற்காகப் பொருள் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவது குற்றமா? இன்று நாம் துணிந்து செயல்பட்டால்தானே அடுத்த தலைமுறை இன்னும் கொஞ்சம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும். உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்றைத் தவிர “தொடர்ச்சியான முன்னேற்றம்” என்பதும் மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று என்று ஆகி விட்ட நிலையில், பொருள் சேர்க்கும் முயற்சியைத் தவறு என்று கூறவே முடியாது.

                                       விண்மீன்களைப் பிடிக்கும் ஆசையில் மின்மினிகளின் அழகைக் கண்டு இரசிக்கத் தவறுவது போல, பொருளாதார இலக்கு என்னும் விண்மீன்களை நோக்கிய நமது பயணத்தில், நண்பர்கள், உறவினர்கள் என்னும் மின்மினிகளைக் கண்டு இரசிக்கத் தவறினால் விண்மீன்களை நாம் அடைந்தும் பயனில்லை. ஒருவேளை விண்மீன்களை அடைய முடியாமல் போனால், நமக்காக எந்த மின்மினிகளும் அப்போது காத்திருக்கப் போவதும் இல்லை.

                                          உலகின் மாபெரும் பொருளாதார வல்லுனர்கள் எல்லாம் ஒரு மனிதனின் வருமானம் எவ்வளவு என்பதிலிருந்தோ, கடன் வாங்கியாவது அவன் சேர்க்கும் சொத்தின் (போலியான) மதிப்பு எவ்வளவு என்பதிலிருந்தோ அவனது பொருளாதார நிலைத்தன்மை அமையும் என்று கூறவில்லை. மாறாக ஒரு மனிதன் தனது வருமானத்தில் எவ்வளவு விழுக்காடு தொடர்ந்து சேமிக்கிறான் என்பதிலிருந்தும், கடன் வாங்கும் அவசியம் ஏற்படும் போது தனது பொருளாதார வலிமையை முழுமையாக உணர்ந்து கடன் வாங்குகிறான் என்பதிலிருந்தும்தான் அவனது வாழ்நாளின் பொருளாதார நிலைத்தன்மையும், மன அழுத்தமற்ற சுதந்திர உணர்வுடன் கூடிய மகிழ்ச்சியான மனநிலையும் அமையும் என்று கூறுகிறார்கள்.

                                    தாய்மார்களின் மொழியில் கூற வேண்டும் எனில், தங்களது பொருளாதார வலிமையைப் பொறுத்து வாழ்க்கையைத் திட்டமிட்டு, தொடர்ந்து சேமிக்கும் பழக்கத்தைப் பின்பற்றி வாழ்வது என்பது சுகப்பிரசவம் போன்றது. அந்த வலி உண்மையானது, ஆனால் சுகமானது. அந்த வலியைப் பொறுத்துக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கலாம். ஆனால் முறையாகத் திட்டமிடப் படாமல் (சமயங்களில் முறையாகத் திட்டமிட்ட போதும் கூட) கடன் வாங்கி மேம்படுத்தப்படும் வாழ்க்கைத் தரம் என்பது அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதைப் போன்றது. அப்போதைக்கு உங்களை மயக்கத்தில் ஆழ்த்தி, வலியைத் தற்காலிகமாக உணராமல் செய்து, மகிழ்ச்சியாக வைத்திருப்பதைப் போன்று ஒரு மாயத்தை ஏற்படுத்தும். ஆனால் மயக்கம் தெளிந்தவுடன் உணரப்படும் வலியானது வாழ்நாள் முழுவதும் உங்களை இரணப்படுத்தி ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும்.

                                எனவே, தற்காலிக வலிகளைப் பொறுத்துக் கொண்டு, நீண்ட காலப் பொருளாதாரப் பலன்களை அடையத் திட்டமிட்டு சேமிக்கும் பழக்கத்தைத் தொடர்ந்து பின்பற்றி மன அழுத்தமின்றி வாழ்வோம்.

     

    Share