வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போமா! (7)

பவள சங்கரி

தங்களுக்குத் தேவையானது எது என்பதைத் தெளிவாக அறிந்துணர்ந்து கொண்டவர்கள் எவரோ அவர்களுக்கு அதை அடையக்கூடிய மனவலிமையை இவ்வுலகம் மிக மகிழ்வுடன் வழங்கிக் கொண்டிருக்கிறது!
வால்ட்டர் ஸ்டேபிள்ஸ்

சிந்தித்து செயல்படுவோமா?

எந்த ஒரு காரியமும் மேலோட்டமாக செயல்படுவதற்கும், நல்ல முறையில் சிந்தித்து செயல்படுத்துவதற்கும் உள்ள வேறுபாடு வெளிப்படையாகத் தெரியும். பல நேரங்களில் நாம் சிந்தித்து செயல்படுவதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். அந்த மேலோட்டமான நினைவலைகள் எந்த பாதிப்பையும், எங்கும் ஏற்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. பின் எப்படி சிந்திப்பது?

சிந்தனை என்பது ஆழ்மனதிலிருந்து பிறக்க வேண்டும். ஆம் உண்மையான ஈடுபாட்டுடன் கூடிய தெளிவான ஆழ்மனச் சிந்தனையாக அது அமைதல் வேண்டும். அப்படி நம் ஆன்மாவைத் தீண்டக்கூடிய ஒரு சிந்தனை வாய்க்கப்பெறும் போது அதன் படைப்பாளி நாம் அல்ல என்பதை நம்மால் உணர முடியும். நாம் நினைத்துப் பார்த்திராத, நம் கற்பனைக்கும் எட்டாத ஒரு சக்தியையும், வழிகாட்டுதலையும் அது வழங்குவதையும் ஒரு மூன்றாம் மனிதரைப் போல தள்ளி நின்று நாமும் உணர முடியும். என்பதுதான் சத்தியம்! ஆம் அப்படி ஒரு சிந்தனையின் வழி நடப்போர் வெற்றியை இழந்ததாக சரித்திரமே இருக்காது என்பதும் உண்மை. அமைதியாக அமர்ந்து, எந்த இடையூறும் இல்லாத சூழலில் தெளிவாகச் சிந்திக்க வழிவகுக்க ஆரம்பித்தாலே வெற்றியின் எல்லையை தொட ஆரம்பிக்கிறோம் என்றுதானே அர்த்தமாகிறது!

பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் தேவையில்லை

ந்ம் சக்திக்கு உட்பட்ட, நம்மால் நிறைவேற்றக்கூடிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள ஒரு போதும் தயக்கம் கொள்ள வேண்டியதில்லை. நம் பங்களிப்பு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் நம் உரிமைகளைப்  பெறவும் எளிதாகிறது. அந்த வகையில் ஏற்றுக் கொள்ளும் எண்ணற்ற பொறுப்புகள் மற்றும் வாழ்க்கையை அனுசரித்துச் செல்லும் இந்தப் போக்கு நம் வெற்றிப்பாதையை விரிவடையச் செய்கிறது.

உண்மையை அன்போடும், கருணையோடும் எதிர்கொள்வோம் !

ஆம், மாற்ற இயலாத சில உண்மைகளை நேசிக்கக் கற்றுக் கொண்டால் அது நம்மைப் பெரிதாக பாதிக்காது. உதாரணமாக நம்மோடு பணிபுரிபவரோ அல்லது அண்டை அயலாரோ நம்மிடம் இயல்பாக இல்லாமல் எதோ ஒரு கோபத்தை வெளிப்படுத்துபவராக இருக்கலாம். நாம் அடிக்கடி சந்திக்கக்கூடியவர்களின் இந்த மனநிலை நம்மையும் நிச்சயம் பாதிக்கக்கூடும். அது நம் அன்றாடப் பணிகளை முடக்கிப் போட்டுவிடும். இது போன்ற சூழலில் நாமும் அவருடைய எண்ணங்களைப் பிரதிபலிக்காமல், உண்மையான நேசத்தை அங்கு வெளியிட்டால் நாளடைவில் அவரும் நம்மிடம் அதே அன்பை வெளிப்படுத்தும் இயல்பிற்கு வந்துவிட வாய்ப்புகள் அதிகம். அப்படி அவர்களால் வர முடியாவிட்டாலும் அந்த அவர்களுடைய எண்ணம் நம்மை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நம் நேசம் அதற்கொரு கவசமாகிவிடும்.  இதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவர்களை நேராகச் சந்திக்க வேண்டிய தருணம் ஏற்படும் பொழுதெல்லாம், அவருடைய கண்களை நேரிடையாகச் சந்தித்து, ஒரு “ஹாய்” அல்லது புன்னகையுடன் ஒரு அன்பான பார்வையுடன் ஒரு ‘வணக்கம்’ சொல்ல வேண்டியது. இந்த சின்ன செயல் அவரையும் மனம் மாறச் செய்வதோடு, நம்மையும் உற்சாகமாக நம் பணிகளைத் தொடர சக்தியைக் கொடுத்துவிடும். முயன்றுதான் பார்ப்போமே! மீண்டும் நினைவு கூர்வோம். நாம் அச்சம், கோபம் மற்றும் வெறுப்பு கொள்ளக்கூடிய உண்மைகளை அன்போடும், கருணையோடும், பொறுமையோடும் எதிர்கொள்வது மிக சக்தி வாய்ந்ததொரு மந்திரம். அன்றாடம் அந்த மந்திரத்தை உச்சரித்து நம் வெற்றிப் பாதையை விரிவாக்குவோம்!

இலட்சியம் ஏற்படுத்துவது மாற்றம் என்றால்
அலட்சியம் ஏற்படுத்துவது ஏமாற்றம்தானே?

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போமா! (7)

  1. //உண்மையான நேசத்தை அங்கு வெளியிட்டால் நாளடைவில் அவரும் நம்மிடம் அதே அன்பை வெளிப்படுத்தும் இயல்பிற்கு வந்துவிட வாய்ப்புகள் அதிகம். அப்படி அவர்களால் வர முடியாவிட்டாலும் அந்த அவர்களுடைய எண்ணம் நம்மை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நம் நேசம் அதற்கொரு கவசமாகிவிடும். //

    மிகவும் உண்மை!

    //இலட்சியம் ஏற்படுத்துவது மாற்றம் என்றால்
    அலட்சியம் ஏற்படுத்துவது ஏமாற்றம்தானே?//

    அழகான குட்டிக் கவிதை!

    அருமையான பகிர்விற்கு மிக்க நன்றி!

  2. இலட்சியம் ஏற்படுத்துவது மாற்றம் என்றால்
    அலட்சியம் ஏற்படுத்துவது ஏமாற்றம்தானே

    தானாகவே இந்த அருமையான வாசகம் என் நெஞ்சில் பச்சை குத்திக்கொண்டது.

  3. ////மாற்ற இயலாத உண்மைகளை  நேசிக்கக் கற்றுக் கொண்டால் அது நம்மைப் பெரிதாகப் பாதிக்காது////

    எத்தனை அருமையான பொருள் பொதிந்த வார்த்தைகள். ‘மாற்ற இயலாத உண்மைகளை ஏற்றுக் கொண்டால்’ என்பதையும் தாண்டி, ‘நேசிக்கக் கற்றுக் கொண்டால்’ என்பது என்ன அருமையான உன்னத நிலைக்கு மனித மனங்களை இட்டுச் செல்லும்!!!. ‘அலட்சியம் ஏற்படுத்துவது ஏமாற்றம் தானே’ என்ற வரி, நம்மைத் தாக்கும் அவமானம், கோபம், வெறுப்பு முதலிய உணர்வுகளை அலட்சியப்படுத்தக் கற்றுக் கொண்டால், ‘இடும்பைக்கு இடும்பைப் படுப்பர்’ என்பதற்கிணங்க, அவையே ஏமாற்றமடைந்து ஓடிவிடும் என்ற பொருள் தருவதாகவே எனக்குத் தோன்றியது. பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றி.

  4. அன்பின் கவிநயா,

    தங்கள் வாசிப்பிற்கும்,கருத்துரைக்கும் நன்றி.

    அன்புடன்
    பவளா

  5. அன்பின் திருமதி பார்வதி இராமச்சந்திரன்,

    தங்கள் வாசிப்பிற்கும், கருத்துரைக்கும் நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

  6. //நம் ஆன்மாவைத் தீண்டக்கூடிய ஒரு சிந்தனை வாய்க்கப்பெறும் போது அதன் படைப்பாளி நாம் அல்ல என்பதை நம்மால் உணர முடியும்//

    உலகின் மாபெரும் தத்துவ மேதைகளும் அறிஞர்களும் இந்த மனநிலையில் இருந்தே தங்களது படைப்புக்களை இந்த உலகத்திற்கு வழங்கி இருக்கிறார்கள். சிந்தனையை நெறிப்படுத்தும் தங்களது தொடருக்கு நன்றி.

  7. நல்லதொரு கட்டுரை. வாழ்த்துக்கள்.

    ‘சிந்தனை என்பது ஆழ்மனதிலிருந்து பிறக்க வேண்டும்.’

    ~ ஆழ்மனது ஒரு குகை. சிந்தனைக்கு அத்தனை யத்தனம் தேவையில்லை. குடைந்து, குடைந்து கேள்வி கேட்டுக்கொண்டாலே நற்பயன் கிடைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *