Blog

  • சங்க இலக்கியத்தில் அணிகலன்கள்

    முனைவர் மூ. சிந்து
    இணைப் பேராசிரியர்
    தமிழ்த்துறை
    டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி ( தன்னாட்சி)
    காளப்பட்டி ரோடு
    கோயம்புத்தூர் – 641048

    முன்னுரை

    மனிதர்கள் தன்னை அடையாளம் காட்ட விழைவது இயற்கையாகும். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பொருளாதாரம் மற்றும் சூழலுக்கேற்ப உணவு, உடை, அணிகலன், ஆகியவற்றில் ஒப்பனைகளை ஏற்படுத்திக் கொள்வதை அவசியமாகக் கருதுகின்றனர்

    ”ஆடையில்லா மனிதன் அரை மனிதன்” “ஆள் பாதி ஆடை பாதி” என்பது நம் தமிழர் வழக்கு. ஆடைகளில் தன்னிறைவைக் கண்ட மனிதர்கள், அணிகலன்களை பூட்டி தங்களை அழகுபடுத்திக் கொள்கின்ற நிலைப்பாட்டினை இன்று ஆண், பெண் இருபாலர்களிடையேயும் காணமுடிகிறது.

    இன்றைய மகளிரைப் போன்றே சங்ககாலத்துப் பெண்களும் ஆடை அலங்காரங்கள், அணிகலன்கள், ஒப்பனைகள் முதலியவற்றில் மிகுந்த நாட்டம் கொண்டவர்களாகவும், விரும்பி அதனை அணிந்துகொள்ளும் குணம்  உடையவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

    அணிகலன்கள்

    அணி என்பது அழகு எனப் பொருள்படும். மகளிர் தன்னை அழகுப்படுத்தவும், அழகுக்கு மேலும் அழகு சேர்க்கவும் அணிகலன்களைப் பயன்படுத்தினர். நூலுக்கு அணி செய்வது போல ஒரு பெண்ணுக்கு  அணி செய்ய அணிகலன்கள் இன்றியமையாதாகும்.

    மலர்அணிகலன்கள்
    ‘ஆம்பல் வன்னித் தொடிக்கை மகளிர்’       (புறம். 63:12)

    பவளவளை செறிந்தாட் கண்பணித்தான் பச்சைக்
    குவளைப் பசுந்தண்டு கொண்டு’                   (பரி. 11:101-102)

    ஆம்பல், குவளை முதலியவற்றின் தண்டுகளால் மகளிர் வளையல் செய்து அணிந்ததை அறியமுடிகிறது.

    ‘கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி’                   (குறுந். 80:1)

    என்றும்

    “பரூஉப்பகை ஆம்பல் குருஉத்தொடை நீவிச்
    சுரும்பிமீர் ஆய்மலர் வேய்ந்த”                      (அகம். 136:27-28)

    எனும் பாடல் வரிகளில் ஆம்பல் மலர்களால் ஆன மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டதையும், கூந்தலில் சூடியதையும் தெரிவிக்கிறது. மேலும் தாவரங்களினின்று உருவாக்கிய அணிகளைத் தவிர உலோகங்களால் செய்யப்பட்ட அணிகலன்களையும் சங்கப் பெண்டிர் அணிந்திருந்தமையை அறியமுடிகிறது.

    செயற்கை அணிகலன்கள்

    வணிகத் தொடர்புகளாலும், உலோகக் கண்டுபிடிப்புகளாலும்,  செயற்கை அணிகலன்கள் புழக்கத்தில்  வந்தன.

    “அணி, பூண், பணி, இழை, கலன், நகை, குழை, தொடி, வளை முதலிய சொற்கள் அணிகலன்களைக் குறித்து வழங்கப்படுவனவாக அமைந்துள்ளன” என்று வெ.வரதாராசன் அவர்கள் தமிழரின் ஒப்பனைக் கலைத்திறன் என்ற நூலில் கையாண்டுள்ளார்.

    சங்ககால மகளிர் தலையணி, நுதலணி, காதணி, கபத்தணி, தோளணி, மார்பணி, கையணி, விரலணி, இடையணி, காலணி எனும் பலவகை அணிகலன்களை உடலுறுப்புகளில் அணிந்தனர் என்பதையும் அறியமுடிகிறது.

    மகளிர் தன்னை அழகுபடுத்த அணிகளையும், அணிகளை அழகுப்படுத்த அதில் விதவிதமான இரத்தினங்களையும், கற்களையும், முத்து பவளங்களையும் பதித்து அணிந்து கொண்ட செய்திகளையும் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது.

    “கைவல் வினைவன் தையுரு சொரிந்த
    சுரிதக உருவு”                                                        (நற். 86: 5-6)

    கைத்தொழிலில் வல்லவன் இரத்தினக் கற்கள் பதியப்பெற்று செய்த பொன்னாலாகிய சுரிதகம் என்னும் அணியை அணிந்த பெண்டிரைப்  பற்றி பூதன்தேவனார் மருதத்திணைப் பாடலில் எடுத்துரைத்துள்ளார்.

    “எறிமகர வலயம் அணிதிகழ் நுதலியர்”  (பரி.10-77)

    மகரலயம் எனும் நுதலணியைப் பற்றிப் (நெற்றியணி) பரிபாடல் கூறுகிறது.

    காதணிகள்

    புராணக் காலத்தில் ஒலைகளான அணிகளன்களும், சங்க காலத்தில் பூக்களால் ஆகிய அணிகலன்களும், உலோக அணிகளும் அணியப்பெற்றமையை அறியமுடிகிறது. பொன்குழை ஒண்குழை, கனங்குழை, சிறுகுழை, மகரக்குழை, கொடுங்குழை, தோடு ஆகியவற்றை காதணிகளாக சங்கப் பெண்டிர் அணிந்திருந்தனர்.

    “ஞாயலியர் மென்காதிற் புல்லிகைச் சாமனா”   (கலி. 96.11)

    புல்லிகை எனும் அணியும் காதணியையே குறிக்கும் என்பதை அறிய முடிகிறது.

    “கோழி பொறிந்த கொடுங்காற் கனங்குழை
     பொற்கார் புதல்வர் புரவியின் றுருட்டு
     முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்”                (ப.பாலை. 23-25)

    காவிரிப் பூம்பட்டினத்துத் தாய்மார்கள் கோழிகளை விரட்ட காதில் அணிந்த குழையைத் தூக்கி எறிந்ததைப் பட்டினப்பாலை பாடல் வழி அறியலாகிறது.

    கழுத்து அணிகலன்கள்

    கழுத்து அணிகலன்கள் என்பது கழுத்தில் அணியப்படுவது. இது தாலி, மாலை, அல்லது மதாணி (தொங்கல்) போன்ற பல்வேறு வடிவங்களில், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களால் அமைந்ததாகும்.

    பொன்னாலாகிய காசுகளைக் கோர்த்து இழைக்கப்பெற்ற காசு மாலையைக் கழுத்தில் அணிந்ததையும்

    புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்
    பொலங்கல ஒருகா சேய்க்கும்                                              (குறு. 67:4)

    பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி             (அகம். 7:17-18)

    பொன்னொடு புலிப்பல் கோக்கப் பெற்ற தாலி அணிந்ததையும் அறிய முடிகிறது.

    கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
    பந்தர்ப் பெயர்க்கும் பன்மாண் ஏந்தெழில்                         (பதி. 67:1-2)

    அரசர்கள் ஏகவடம் என்னும் முத்து மாலைகளை அணிந்தார்கள். செல்வர் வீட்டுப் பெண்களும் அரசகுமாரிகளும், இராணிகளும் முத்துமாலைகளை அணிந்தார்கள். உரோம தேசத்து மகளிர் தமிழ்நாட்டு முத்துக்களைப் பெரிதும் மதித்தனர் என்ற செய்தியை மயிலை சீனி வேங்கடசாமியின் பழங்காலத் தமிழர் வாணிகம் என்ற நூலின் மூலம் அறியமுடிகிறது.

    தோள் அணிகலன்கள்

    ‘தொடி’ என்பது பழந்தமிழில் பெண்கள் அணியும் கைவளை அல்லது தோள்வளையைக் குறிக்கும் ஒரு அணிகலன் சொல் ஆகும். இது சங்கு, பொன் அல்லது பிற உலோகங்களால் செய்யப்படலாம். இலக்கியங்களில் இது பெரும்பாலும் ‘ஒள் தொடி’ (ஒளிமிக்க வளையல்) எனப் பெண்களின் அழகுக்கும் மென்மைக்கும் அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது.

    “ஒண்தொடி நெகிழ” (அகம். 265:9)

    “தொடிதோள் இலர்க”  (அகம். 269:1)

    எனும் ‘தொடி’ என்னும் அணிகலன் அணியப் பெற்றமையை அறியமுடிகிறது.

    மார்பணிகலன்கள்

    மார்பணி என்பது பொதுவாக மார்பில் அணியும் அணிகலன் (மதாணி, பூண்) அல்லது கவசத்தைக் குறிக்கும். இது ஒருவகை மார்புப் புண், தண்டனையாக மார்பில் தைக்கப்படுவதாகும்.

    வயங்கு கதிர் வயிரமோடு உறழ்ந்து, பூண் சுடர்வர,
    எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து,                  (ப.ப 16:16,)

    பூண் அணிந்து எழிலிய வனைந்துவரல் இள முலை,
    மாண் வரி அல்குல், மலர்ந்த நோக்கின்,                    (ப.ப 65:6)

    என்ற வரிகள் அரசியர்  மார்பணி அணிந்தைமையை எடுத்துரைக்கிறது.

    பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை              (அகம். 16:9)

    மன்னர்கள் மார்பணி அணிந்ததும், பரத்தையர்களாலும் அணியப் பெற்றதையும்  அகநானூறு  பாடல் வழி அறியமுடிகிறது.

    கை அணிகலன்கள்

    தமிழர் பண்பாட்டில் கை அணிகலன்கள் பாரம்பரியம் மற்றும் அழகைக் குறிக்கின்றன. வளையல், காப்பு, கைகளில் அணியப்படும் ஆபரணங்கள். இவை தங்கம், வெள்ளி, மற்றும் சங்கு போன்ற பொருட்களால் செய்யப்படுகின்றன.

    கைகளில் வளையல்கள் அணிவது சங்ககாலந் தொட்டே மங்கலமாகக் கருதப்பட்டது.

    “வல்லோன் வாளரம் ரு கோனோர் எல்வளை”              (நற்.78:8-9)

    வளையல்கள், கொடிகள், பூக்கள், வரிகள் ஆகிய தொழில்நுட்பத்தோடு செய்யப் பெற்றதைக் காணமுடிகிறது.

    “அணிவளை முன்கை ஆயிழை மடந்தெ                          (அகம் 361:4)
    “சின்னிரை வால்வளைக் குறுமகள்”                                               (குறுந் 189.6)

    “வளைக்கை விறலி
    வல்லோள் வானரம் பொருத
    கோணேர் எல்வளை அகன்தொடி செறித்த முன்கை”              (நற்.77:8-10)

    ஆகிய வரிகளின்றும் மகளிர் அனைவரும் (கணவனை இழந்தோர் தவிர வளையல்கள் அணிந்திருந்ததை அறியமுடிகிறது.

    பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி பாண்டிமா தேவி வலம்புரிச்சங்கு வளையல்களோடு பொன் வளையல்களையும் அணிந்திருந்ததை நெடுநல்வாடை கூறுகிறது.

    “பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
    வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து”                   (நெடுநல். 141-142)

    திருமணத்தின் போது கொடுக்கப்படும் பரிசப் பொருட்களில் ஒன்றாக தமிழகத்தில் சங்கு வளையல்கள் இருந்துள்ளதை அறியமுடிகிறது.

    இடுப்பு அணிகலன்கள்

    “மேகலை” என்பது பெண்கள் தங்கள் இடுப்பில் அணியும் ஒரு வகை அணிகலன் அல்லது ஒட்டியாணம் ஆகும். இது இடையணி என்றும் அழைக்கப்படுகிறது,

    வகையமை மேகலை”                                                  (பரி.22:30)

    என்ற பரிபாடலும்

    “நேர்மணி நேர்முக்காழப் பல்பல கண்டிகைத்
    தார்மணி பூண்ட தமனிய மேகலை”                                    (கலி.96:10-15)

    என்ற கலித்தொகையும்

    “பொலம்பசும் பாண்டிய காசுநிரை அல்குல்”                   (ஐங்.310.1)

     என்று ஐங்குநூறும் இடுப்பில் அணியும் அணிகலன்களைக் கூறுகின்றன.

    “…. தெண்நீர்
    முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்தூற்று”             (நற்.110.45)

    தெளிந்த ஒளியுடைய முத்துக்களை உள்ளே பரலாக இட்டுச் செய்த பொற்சிலம்பை அணிந்த சிறு பெண்ணைப் பற்றி அறியமுடிகிறது.

    சிலம்பில் அணிகலன்கள்

    சிலம்பு பற்றிக் கூறும் சிலப்பதிகாரத்தில் மாதவி  அணிந்த அணிகலன்களாக விரலணி (கான்மோதிரம்), பரியகம் (கார்சவடி) நூபுரம் (சிலம்பு) பாடகம், சதங்கை. அரியகம் (பாதசாலம்) குறங்குசெறி (கவான்செறி. விரிசிகை, கண்டிகை (மாணிக்கவளை), கே தோள்வளை, சூடகம், கைவளை (பொன்வணா) பரியகம், (பாசித்தாமணி, கைச்சரி), வால்வளை (சங்கவளை, வெள்ளிவளை), பவழவளை, வாளைப் பகுவாய் மோதிரம், மணி மோதிரம், மரகத் தாள் செறி(மரகதக் கடைசெறி) சங்கிலி மறத்தொடரி. நுண்ஞாண் ஆரம், கயிற்கடை, யொகுழுகிய கோவை (பின்றாலி), இந்திர நீலக் கடிப்பிணை (நீலக்குதம்பை) தெய்வ வுத்தி (திருத்தேவி), வலம்புரி, தொய்யகம் (தலைப்பானை, பூரப்பாளை), புல்லகம் (தென்பல்லியும் வடபல்லியும்) என 27 வகை அணிகள் அணிந்திருந்ததாகச் சிலப்பதிகாரக் கடலாடுகாதை கூறுகின்றது. இவற்றுள் அடங்காத வேறு சில அணிகளும்  அக்காலத்திருந்தன. அவற்றுள் ஒன்று ஆடை அல்லது சூடாமணி, பெண்டிர் அரைப்பட்டிகை மட்டும் மேகலை, காஞ்சி, கலாபம், பருமம், விரிசிகை என ஐந்து வகையாக இருந்தமையையும் சிலப்பதிகாரம் வழி அறியமுடிகிறது.

    முடிவுரை

    • சங்ககாலப் பெண்டிர் இயற்கையானப் பொருட்களைக் கொண்டு அணிகலன்களாக அணிந்தனர்.
    • காலம் செல்லச் செல்ல வாணிகமும், தொழில் நுட்பமும் வளர்ச்சியடைந்த நிலையில் முத்து, பவளம், மாணிக்கம், மணி போன்ற பொருட்களைக் கொண்டு அழகுபடுத்தி அணிகலன்களை உருவாக்கினர்.
    • சிறந்த வகை அணிகலன்களை சங்ககால மக்கள் அணிந்திருந்தனர் என்பதை உணர முடிகிறது.
    • அணிகலன்கள் சங்ககால மக்களின் வாழ்க்கையோடு எல்லா நிலைகளிலும் இருந்தமையை தெளிவுற அறியமுடிகிறது.

    துணை நின்ற நூல்கள்

    1. சங்க இலக்கியத் தொகுப்பு – வர்த்தமானன் பதிப்பகம்.

    Share
  • வாழ்க வளமுடன் என்றுமே வாழ்த்திடுவோம் !

    வாழ்க வளமுடன் என்றுமே வாழ்த்திடுவோம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    அழவைத்து வந்ததெலாம் அழவைக்க வைத்துவிடும்
    நிலமீது நிம்மதியை நித்தமுமே குலைத்துவிடும்
    கண்ணீரை வரவழைத்தால் கண்ணீரே முதலாகும்
    மண்மீது மற்றவரை வதைத்துவிடல் முறையல்ல

    ஏமாற்றிப் பறித்தால் எதுவுமே நிலைக்காது
    எக்கணமும் திருட்டு இருட்டையே காட்டிவிடும்
    பொய்யோடு களவென்றும் உய்யும்வழி காட்டாது
    உய்யும்வழி காண உண்மையாய் இருந்திடுங்கள்

    ஆசையில்லா  மனம் யாருக்குத் தானிருக்கு
    அவனியிலே வாழ்வார்க்கு ஆசைக்கோர் அளவில்லை
    ஆசையினால் விளைகின்ற அத்தனையும் விட்டுவிட்டால்
    அவனியிலே வாழ்க்கை ஆனந்தமாய் இருக்கும்

    திருமூலர் செப்பினார் பட்டினத்தார் பகர்ந்தார்
    நால்வரும் மொழிந்தார் நல்வழியும் சொன்னார்
    ஒளவையும் சொன்னார் ஆளுமைகள் பலசொன்னார்
    உள்ளத்தில் பதிக்காமல் இருந்திடுதல் முறையாமோ

    உறங்கினால் விழிப்போமா யாருக்கும் தெரியாது
    ஓராயிரம் கனவை உள்ளத்தில் சுமக்கின்றோம்
    வஞ்ச மனத்துடனே வாழ்வது முறையாமோ
    நஞ்சகற்றி வாழ்ந்தால் நாளுமே பேரின்பம்

    மனமகிழ வாழ்த்துவோம் வாஞ்சையுடன் அணைப்போம்
    தினமே நல்லதைத் தேர்ந்துமே செய்திடுவோம்
    புலனைந்தும் நன்னெறியில் போகவே வைத்திடுவோம்
    நலமுடைய நல்வாழ்வு நமைத்தேடி வந்துவிடும்

    வாழ்க வளமுடன் என்றுமே வாழ்த்திடுவோம்
    வளமோடும் நலமும் வாய்க்குமே எங்களுக்கு
    இனியவை என்றைக்கும் இன்பத்தையே கொடுக்கும்
    எல்லோரும் அன்பாலே இணைவதுதான் பேரின்பம் !

    Share
  • திருவெம்பாவையை எம் சிந்தையில் இருத்துவோம் !

    திருவெம்பாவையை எம் சிந்தையில் இருத்துவோம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    உலகில் பல மொழிகள் ஒவ்வொரு விதத்திலும் சிறப்பினை உடையதாய் விளங்குகின்றன என்பது தான் பொதுமையான கருத்தாகும். இவற்றுள் எங்கள் தாய் மொழியான தமிழ் ஒன்றேதான் பக்தியைப் பாடிக் கொண்டாடிய மொழி என்பதும் மிக மிகச் சிறப்புடையதாகும். தமிழ் என்றால் பக்தியின் மொழி என்று துணிந்து கூறலாம். அந்தளவுக்கு பக்தியை இலக்கியம் ஆக்கிய பெருமை எங்கள் தமிழ் மொழிக்கு மட்டுமே உரித்தான தாகும் என்று உரத்தே உரைக்கலாம். பக்தியை இலக்கியம் ஆக்கியமையால் பண்கசிந்த தமிழும், பக்குவத் தமிழும், பாடிப் பரவிடும் தமிழும், இன்னிசைத் தமிழும், இயைய வைக்கும் இங்கிதத் தமிழும் எமக்கு பெரும் பொக்கிஷமாகக் கிடைத்தன என்பதை மனமிருத்துவது மிகவும் முக்கியமாகும். சைவமும், வைணவமும், பக்தி இலக்கியத்திக்கு வழங்கிய பெருங்கொடைகள் – தமிழை யாவரும் வியந்தே பார்த்திட வைத்திருக்கிறது. அந்த வகையில் மார்கழியில் மனம் அமரும் வகையில் – வாசகர் மணித் தமிழும், கோதையின் கொஞ்சு தமிழும் கொண்டாடிப் போற்றும் வகையில் மலர்ந்திருக்கிறது என்பது மனக்கொள்ளத்தக்கது.

    மணிவாசகப் பெருமான் தமிழ் மனத்தை உருக்கிட வைக்கும் தமிழ் .சினத்தை அகற்றிட வைக்கும் தமிழ். சிந்தனையைத் தூண்டுந் தமிழ். சிவனை நினைந்து நெக்குருக வைக்குந் தமிழ். தாழ்வாய் உரைத்து தலை வணங்குந் தமிழ். இத்தகு தமிழால் எட்டா நிலையில் இருக்கும் எம்பொருமானை இயம்பிடும் வகையில் எட்டாந் திருமுறையாய் அமைந்து ஏற்றிப் போற்றப்பட்டுக் கொண்டிருக்குந் தமிழ். திருவாசகம் என்னும் தேன்தான் அந்தத் திருமுறைத் தமிழ். அந்தத் திருவாசகத்தில் ஒன்றாய் அமைந்திருப்பதுதான் மார்கழியில் மனமமரும் வாசகரின் திருவெம்பாவை என்னும் திவ்விய தமிழாகும். திருவண்ணாமலையில் மணிவாசகரால் மனமுருகிப் பக்திப் பெருவெளியில் உற்ற துணையாக வந்தமைந்த தமிழ்தான் திருவெம்பாவை என்னும் சிறப்புடைத் தமிழ் எனலாம்.

    “ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ் சோதி” – என்றுதான் மணிவாசகர் திருவெம்பாவையினைத் தொடங்குகிறார்.  “போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே” என்று நிறைவு செய்கின்றார். இருபது பாடல்கள் இறையினைப் பற்றியும், அவரின் இயல்பினைப் பற்றியும், இறையினைத் தொழுதிடும் அடியவர் மனநிலை பற்றியும், இறையடியார்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது, என்பதைப் பற்றியும் பக்குவமாய் காட்டுகின்றார். அதற்காக அவர் பாவைப்பாட்டு என்னும் சங்கத்தமிழ் வழியில் பயணப்படுவதையும் காண்கின்றோம்.

    திரு + எம் + பாவை என்பது திருவெம்பாவை ஆகும். தெய்வத்தை நோக்கிய பக்தி நிலையில் நின்று பாடும் பாடல்கள் என்பதே இதன் அர்த்தம் எனவும் கொள்ளலாம். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் “ஏலோர் எம்பா வாய்” என்றே முடிகின்றதைக் காண்கின்றோம் இதனைப் பாவைப் பாட்டு என்றும் நீராட்டுப் பாட்டு என்றும் குறிப்பிடுவார்கள். இளம் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டும் எனக் கருதி மார்கழி மாதத்தில் நோன்பு நோற்பது வழக்கம். இந்தப் பெண்கள் அதிகாலை எழுந்து இறைவனது புகழைப்பாடி நீராடச் செல்லும் போது “திருவெம்பாவை” பாடல்களைப் பாடிச் சென்றுள்ளனர் என்பதையே இங்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

    முதல் நான்கு பாடல்களும் அதிகாலையில் நீராடப் புறப்பட்ட பெண்கள் இன்னும் நித்திரைவிட்டு எழாத தமது தோழியரை எழுப்புவதாக, அதற்கு அப்பெண்ணானவள் மறுமொழி கூறுவதாகவும் அமைந்திருக்கின்றது. ஐந்தாம் பாடல் தொடக்கம் எட்டாம் பாடல் வரை உள்ளன நித்திரைவிட்டெழும் பெண்கள் கூறும் விதமாக இருக்கின்றன. ஒன்பதாம் பாடல் முதல் இருபதாம் பாடல் வரை நித்திரை கலைந்த பெண்கள் இறைவனைத் துதித்துப் பாடும் வகையில் அமைந்திருக்கின்றன.

    மார்கழியில் அதிகாலை நீராடப் போகும் பெண்கள், ஒருவரை ஒருவர் எழுப்பி ஒன்றாய் கூடி நீராடும் காட்சியை உள்ளடக்கி, அவர்கள் வாயிலாக இறை புகழை, இறை தத்துவத்தை, இயம்பும் வகையில் திருவெம்பாவையினை மணிவாசகப் பெருமான் பக்திப் பாமாலை ஆக்கி இருக்கிறார். காலைப் பொழுது அற்புதமாய் காட்டப்படுகிறது. பெண்களின் இயல்பான உரையாடல் பக்தியுடன் இணைந்து பயணிக்கிறது.

    பெண்கள் ஒருவரை ஒருவர் விழிக்கும் வார்த்தைகள் எம்மை யெல்லாம் விழிக்கவும் வைக்கின்றன. நீராடுதல், நித்திரை விட்டெழுமாறு செய்தல், யாவும் சாதரணமாய் தெரிந்தாலும் அதற்குள் ஆத்ம தத்துவம், ஆத்ம ஈடேற்றம், அனைத்தும் அணைந்தே இருக்கிறது என்பதை அனைவரும் அகம் இருத்துவது அவசியமாகும்.

    சமயத்தை, தத்துவத்தை, ஆன்ம ஈடேற்றத்தை, மக்கள் மனத்தில் பதியச் செய்வது என்பது இலகுவான செயல் அன்று. ஞானவான் ஆகிய மணிவாசகப் பெருமான் இவற்றை மனத்தில் நன்றாய் பதித்த காரணத்தால் யாவருக்கும் பயனை நல்கும் வண்ணம் தேர்ந்தெடுத்த நல்வழியாகவே திருவெம்பாவை யினை அணுகுதல் பொருத்தமாகும். பெண்கள் மார்கழியில் அதிகாலையில் நீராடச் செல்வதை மனமேற்றினார் மணிவாசகர். பாவை நோன்பினை பெண்கள் நோற்பதையும் மனமிருத்தினார். இவையனைத்தையும் தன் சிந்தனைக்குள் இருத்தியே திருவெம்பாவையினைப் பாடினார் என்பது தான் பொருத்தமுடையதாகும்.

    மார்கழி நீராடப் போகும் இளம் பெண்களை இறைவன் புகழினை எடுத்தியம்பிட வைக்கிறார். நீராடச் செல்பவர்கள் தங்கள் தோழிகளை அவரவர் வீட்டு வாசலில் நின்று துயில் எழுப்புவதாய் திருவெம்பாவை யினை எமக்கெல்லாம் வழங்கி இருக்கிறார் மணிவாசகப் பெருமான்.

    “ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி”

    “அத்தன் ஆனந்தன்”

    “தேவன் சிவலோகன்”

    “மாலறியா நான் முகனும் காணா மலையினை”

    “ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்”

    “என்னானை என் அரையன் இன்னமுது என்று எல்லோமும் சொன்னோம் கேள்”

    “கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை”

    “முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே – பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே”

    “விண்ணுக் கொரு மருந்தை வேத விழுப் பொருளை”

    “இவ்வானும் குவலயமும் எல்லோரும் – காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி”

    “வேதப்பொருள் பாடி அப்பொருளாம் மாபாடி
    சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தாழ்பாடி
    ஆதி திறம்பாடி அந்தமாம் மாபாடிப் பேதித்து”

    “விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் – கண்ணார் அமுதமுமாய் நின்றான்”

    “போற்றியென் வாழ்முதல் ஆகிய பொருளே”

    என்று நீராடப் போகும் பெண்கள் வாயிலாக பரம்பொருளின் நிலையினை, பரம்பொருளின் வியாபகத் தன்மையை, பரம் பொருளின் பேராற்றலை, பரம் பொருளின் கருணையின் விசாலத்தை எல்லாம் மணிவாசகப் பெருமான் திருவெம்பாவைப் பாடல்கள் வாயிலாய் எமக்கெல்லாம் உணர்த்தி நிற்கிறார்.

    ஆதியும் அந்தமும் இல்லா அந்த அருப்பெருஞ்சோதியை பாடுவோம், பரவுவோம், பக்குவமாய் மனத்தில் பதிப்போம் என்று நீராடச் செல்லும் மகிளிர் வாயிலாக நல்ல தொரு நற்சிந்தனைப் பாடத்தைப் பக்தியுடன் பதிக்க விடுகிறார் மணிவாசகப் பெருமான் திருவெம்பாவை வாயிலாக எனலாம்.

    திருவெம்பாவைப் பாடல்களை மார்கழியில் ஆலயங்களில் அதிகாலை பாடுவதை நாம் அனைவரும் அதாவது சைவர்கள் கேட்டிருக்கிறோம். நாமும் கூடப் பாடியும் இருக்கிறோம். பாடும் வேளை அதன் பொருள் தெரிந்து பாடுவார் ஒரு சிலரே. மற்றவர்கள் இசையுடனோ அல்லது இசையின்றியோ பாடிவிடுவார்கள். பொருளை விளங்கிப் பாடினால் கிடைக்கும் பயனோ மிகப் பெரிது. இதனால்த்தான் “பொருள் உணர்ந்து சொல்வர் செல்வார் சிவனடிக் கீழ்” என மொழிந்ததை இனியாவது மனமிருத்துவது யாவருக்கும் பயனே.

    துயில் கொள்ளும் தோழியரைத் துயிலெழுப்பி நீராட அழைக்கும் பெண்கள் இறைபுகழைப் பலவாறு பாடுவதாய் திருவெம்பா அமைந்திருக்கிறது. அப்படி அழைக்கும் பெண்கள் கிண்டலாயும், கேலியாயும்,   தமக்குள் பேசுவதையும் திருவெம்பாவையில் காணலாம். சிரிக்கிறார்கள், சீறுகிறார்கள், சிந்திக்கவும் செய்கிறார்கள். ஆனாலும் தங்கருத்தான இறையின் முக்கியத்தைவத்தை மட்டும் விட்டு அகலாதே, மிகக் கவனமாகவே மொழியும் பக்குவத்தை நாமனைவரும் மனமிருத்துதல் அவசியமாகும். இப்படியான ஒரு பக்குவத்தை காட்டும் இயக்குனராய் மணிவாசகப் பெருமான் விளங்குகிறார் என்பதையும் மனமிருத்துதல் வேண்டும்.

    “மாதே வளருதியோ” , “வன் செவியோ நின் செவிதான்”, மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த் தொலிகள் வீதியெங்குமே ஒலிக்கிறதே இன்னுமா உனக்குக் கேட்கவில்லை என்னும் நிலை மிகவும் முக்கிய நிலையாகும். கேட்காத காது , விழிக்காத விழிப்பு இருந்தும் என்ன பயன்? உலக மாயையில் உழலுவதால்   உயர் பொருளான அந்தப் பரம்பொருள் பற்றிய வார்த்தைகளை உன் காது ஏற்க மறுக்கிறது. உலக மாயை உன்னை இறுகப் பற்றிக் கொண்டுள்ளதால் உன்னால் விழிப்படைந்திட முடியாமலே இருக்கிறது. என்னும் உயரிய தத்துவமே இங்கு உணர்த்தப்படுகிறது. நித்திரை எழும்பாத தோழியரை எழுப்பிட முயலுகிறார்கள் மற்றையப் பெண்கள் என்பதுதான் மேலோட்டமாய் நாமனைவரும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஓர்ந்து உணர்ந்தால் உயர் பொருள் உள்ளம் அமரும்.

    ஆண்டாள் திருப்பாவையில் தன்னைக் காட்டும் பாங்கு வேறு. மணிவாசகர் திருவெம்பாவையில் தன்னைக் காட்டும் பாங்கு வேறு. ஆண்டாள் திருமாலை தன் கணவனாக்க முயலுகின்றாள்.தான் எப்படியும் திருமாலின் அருகமர்ந்து மனைவியாய் இருக்கவே மன்றாடி நிற்கிறாள். அதுவே அவளின் உள்ளடக்கிடக்கையாகி திருப் பாவையாய் மலர்கிறது. ஆனால் மணிவாசகர் காட்டும் பாங்கு சிவனடியாரே தங்களுக்குக் கணவராய் வாழ்வு க்குத் துணையாய் ஆகிட வேண்டும் என்று – பெண்கள் பாடிப் பரவுதாகக் காட்டுவ தேயாகும். மணிவாசகர் இல்லறைத்தைத் துறந்த பெருஞானி.

    உற்றாரை யான் வேண்டேன்
    ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
    கற்றாரை யான் வேண்டேன்
    கற்பனவும் இனி அமையும்
    குற்றாலத்து அமர்ந்து உறையும்
    கூத்தா உன் குரை கழற்கே
    கற்று ஆவின் மனம்போலக்
    கசிந்து உருகி வேண்டுவனே!

    இதுதான் அவரின் நிலை. அதனால் அவர் ஆண்டாள் மனநிலைக்கு எப்பொழுதுமே வரமாட்டார். அதனால்த்தான் திருவெம்பாவையினை தானாய் நிற்காமல் இளம்பெண்கள் மூலம் இறையின் நிலையினை,  ஆன்ம தத்துவத்தை சொல்ல விளைந்தார் என்றுதான் எண்ண முடிகிறது. ஆண்டாள் முப்பது பாடினார். மணிவாசகர் இருபது பாடல்களே பாடினார். அதற்குள்ளும் ஒரு தத்துவம் உலகியலோடு இணைகிறது. பெண்களின் உடற்கூறு இங்கு மணிவாசகருக்கு விளங்கி இருக்கிறது. ஆனால் பெண்ணாய் இருந்தும் ஆண்டாள் ஏன் முப்பது பாடல்கள் பாடினார் என்பது அந்தத் திருமாலுக்கு மட்டுமே தெரியும் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    திருவெம்பாவையில் சக்தியின் தத்துவமும் வெளிப்பட்டு நிற்கிறது. பாவை நோன்பின் அடிப்படையே சக்தியை முன்னிறுத்துவதேயாகும். சக்தியே “பின்ன மிலான் எங்கள் பிரானாய்”, “பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை”, ஆதியும் அந்தமும் இல்லா அந்த அரும் பெருஞ்சோதிக்குள் அப்பனும் அம்மையுமாய் அந்தப் பரம் பொருள் இருக்கிறது என்பதை மணிவாசகப் பெருமான் திருவெம்பாவை வாயிலாக எமக்கெல்லாம் உணர்த்தி நிற்கிறார்.

    திருவெம்பாவையை மார்கழியில் பாடுவதற்காய் மணிவாசகப் பெருமான் வழங்கி இருந்தாலும் அதனூடாய் – ஆன்மீக வெளிப்படுகிறது. ஆத்மஞானம் வெளிப்படுகிறது. இறைவனை மனதிருத்திப் பாடினால் மாநிலம் செழிக்கும், மழைவளம் மிகும், மழைவளம் மிகுந்தால் மக்கள் மனவளம் சிறக்கும். மனவளம் சிறந்தால் மாதேவன் மனமதில் அமர்வான். மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி வையகம் எங்கும் பரவிடும் அல்லவா. திருவெம்பாவையினைப் படிப்போம் எம் சிந்தையில் இருத்துவோம் !

    Share
  • பல்லழகன் – பகுதி – 14

     

     

    திவாகர்

     

    கோம்டி கொஞ்சம் யோசனை செய்துவிட்டு பேப்பரை எடுத்துக்கொண்டு குறிப்புகள் எழுதிக் கொண்டாள். பிறகு தன் கைப்பையோடு எதிர்வீடான கல்யாண் வீட்டுக்குக் கிளம்பினாள். அவள் அம்மா எதிரே வந்தாள்.

     

    “ஏண்டி கோமதி? இன்னிக்கும் கிலினிக் பங்க் அடிக்கப் போறியா?”

     

    “பாக்கலாம்மா.. எதிர்வீட்டுக்குதான் போறேன்.. வேலை இல்லேன்னா வந்துடறேன்.. ஆனாலும் என்ன உனக்குக் கிலினிக்லேர்ந்து கலக்ஷன் வந்துடறது இல்லே..”

     

    “அது சரிடி.. அந்த கல்யாண் போட்டோவை ஏண்டி இங்க க்லினிக்ல மாட்டி வெச்சுருக்கே..”

     

    “கல்யாண் போட்டோவை கல்யாண்னு ஏன் பாக்கறே? அவன் பல்லைப் பாரும்மா.. பல் ஆஸ்பத்திரிக்கு பல்லழகன் போட்டோ இல்லையேன்னு தேடிண்டிருந்தேன்.. இவன் மாட்டினான். இப்பதான் கிலினிக்குக்குக் களையே வந்திருக்கு.”

     

    “ஆனாலும் ரொம்ப மோசம்டி நீ.. சீக்கிரம் வந்து சேரு.”

     

    கல்யாண் வீடு. சுந்தர் கையைப் பிசைந்துகொண்டே உட்கார்ந்திருக்கிறான். கல்யாண் முகம் சற்று கோபமாக இருப்பதை அங்கு வந்த கோம்டி பார்க்கிறாள்.

     

    “என்ன கல்யாண்.. இவர் என்ன சொல்றார்.. ஏதாவது புதுத் தகவல் கொடுக்கிறாரா? அது சரி, இன்னிக்கு வொர்க்கிங்க் டே ஆச்சே.. ஆஃபீஸ் இருக்குமே.. ரொம்ப பிஸியான ஆளாச்சே..”

     

    அவளின் கிண்டல் வார்த்தைகள் புரிந்தாலும் அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை. கல்யாண் பேசினான்.

     

    “கோம்டி! இன்னிக்கு இன்ஸ்பெக்டர் மோகன் இவனை ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி இருந்தாராம். போயிருக்கான். (சுந்தரைப் பார்த்து) சுந்தர்! நீயே சொல்லுடா அங்க என்ன நடந்ததுன்னு.”

    சுந்தர் ஸ்டேஷனில் நடந்ததை விவரிக்கிறான்.

     

    போலிஸ் ஸ்டேஷன்

    இன்ஸ்பெக்டர் மோகன் சாந்தமாகத்தான் விசாரிக்கிறார்.

     

    “மிஸ்டர் சுந்தர்.. நீங்க முதல்ல உங்களை விசாரிக்கறச்சே உங்க மாமாவை கொலை செஞ்ச நாள்லேர்ந்து ஒரு வாரம் முன்னாடி வரைக்கும் பார்க்கலேன்னு சொன்னீங்க.. ஆனா அவர் கார்ல நீங்க அந்தக் குழந்தைங்க ஆசிரமத்துக்கு கொலை நடந்ததுக்கு இரண்டு நாள் முன்னாடி அழைச்சிட்டு வந்ததாக அந்த ஆசிரமம் மேனேஜர் தகவல் கொடுத்திருக்கார். பாலபாலிகா ஆசிரமம் இல்லையா அத்தோட பேரு. இதை ஏன் எங்களுக்குச் சொல்லலே?”

     

    சுந்தர் அசரவில்லை. அவனும் நிதானமாகவே பதில் சொன்னான்.

    “கரெக்ட்தான் சார். ஆனா எங்க மாமா எங்கிட்ட ஒரு சத்தியம் வாங்கி இருக்காரு சார். அதாவது பாலபாலிகா ஆசிரமத்துக்கு அவர் நிறைய நிதிஉதவி பண்றார் சார். ‘இதை ரகசியமா வெச்சுக்கணும்டா சுந்தர்.. தருமகாரியமெல்லாம் வெளியில தம்பட்டம் அடிச்சுக்கக்கூடாது. ஒரு கை செய்யறது இன்னொரு கைக்குத் தெரியக்கூடாது.. அதனால யார்கிட்டயும் எந்த சமயத்துலயும் சொல்லக்கூடாதுடான்னு சத்தியம் வாங்கினார். நான் தர்மகாரியம் பண்றது ஊருலகத்துக்குத் தெரியணுங்கறது அவசியம் இல்லடா.. அதனாலதான் சொல்றேன்.’ அப்படின்னார். நீங்க சொல்லுங்க இன்ஸ்பெக்டர்.. நான் சத்தியத்தை மீறமுடியாம அப்படி சொன்னேன். ஆனா இதுல ஒண்ணும் பெரிய பொய்யோ அல்லது பெரிய விஷயமே இல்லையே சார். அதனாலே நானும் பெரிசா எடுத்துக்கலே.”

     

    “சரி, உங்களுக்குப் பெரிய விஷயம் இல்லேதான் சார். ஆனா கொலைங்கிறது ரொம்பப் பெரிய விஷயம்.”

     

    சுந்தர் கெஞ்ச ஆரம்பித்தான்.

     

    “சார் அது பெரிய விஷயம்தான் சார்.. ஆனா என் நிலைமையைப் பாருங்க சார்.. மாமா சத்தியம் வாங்கினது எப்படி எல்லார் முன்னாடியும் சொல்லறதுன்னு தெரியலே.. அதனால அந்த சமயத்துல அப்படிச் சொல்லிட்டேன்.”

     

    “ஏன் மிஸ்டர் சுந்தர்.. தரும காரியத்தை வெளில சொல்லறதுல என்ன இருக்கு? போகட்டும்.. நீங்க எத்தனை மணிக்கு அங்க போனீங்க? எத்தனை மணிக்கு அவரை வீட்ல விட்டுட்டு அவர் காரை எடுத்துப் போனீங்க எங்கிற விவரமெல்லாம் ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதிக் கொடுங்க.. ஆசிரமம் விஷயம் தவிர வேற எங்கேயாவது போனீங்களான்னு கூட அதையும் எழுதுங்க. அதாவது நீங்க சம்பந்தப்பட்டது, அல்லது வேற யார் சம்பந்தப்பட்டதா இருந்தாலும் எழுதுங்க.. அப்பறம் உங்களுக்கு யார் மேலேயாவது சந்தேகம் இருக்கா?”

     

    “ஸார்.. எனக்கு யார் மேலயும் சந்தேகம்லாம் இல்லே சார்..”

     

    “சரி, அன்னிக்குக் காலைல வைத்தீஸ்வரன் கோயில் போனேன்னு சொன்னிங்க இல்லையா.. இங்கிருந்து எத்தனை மணிக்குக் கிளம்பினீங்க.. உங்களுக்கு எத்தனை மணிக்கு கொலை பத்திய முரளி கால் வந்தது வைத்தீஸ்வரன் கோயிலிலேர்ந்து எத்தனை மணிக்குக் கிளம்பினீங்க.. இந்த டீடெயிலும் ஸ்டேட்மென்ட்ல கொடுத்துடுங்க..”

     

    சுந்தர் எழுதிக்கொடுத்து வந்தான்.

     

     

    கல்யாண் வீடு

     

    அதை வீட்டுக்கு வந்து கல்யாணிடம் சொல்லுகையில் அவனுக்குக் கோபம் வந்தது. இந்த விஷயத்தை ஏன் முன்னமே தன்னிடமோ இல்லை கோம்டிக்கோ சொல்லவில்லை என்று கோபமாக சொல்லிக் கொண்டிருந்தான்.

     

    “சுந்தர் போலீஸ் ஸ்டேஷன் வந்தது பற்றி இன்ஸ்பெக்டர் மோகன் என்னிடம் பேசினார் கல்யாண். இவர் கொடுத்த ஸ்டேட்மென்ட் விஷயம்லாம் எனக்குத் தெரியும். இன்ஸ்பெக்டர் எங்கிட்டே என்ன கேட்டார்னு எவ்வளோ தூரம் சுந்தரோட ஸ்டேட்மென்ட் உண்மைன்னு விசாரிக்கணும்னு சொன்னார். நானே இன்னிக்கு சாயந்திரம் இவர் ஆஃபீஸுக்குப் போகலாம்னு இருந்தேன். எனிஹவ், நீங்க இங்கே வரவழைச்சது கூட நல்லதுதான். ஏன்னா இங்கதானே கொலை நடந்தது?”

     

    சுந்தர் கோபமாகப் பார்த்தான்.

    “அப்போ நான் இந்தக் கேஸுல இன்வால்வ் ஆகியிருக்கேன்னு சொல்லறிங்களா மேடம்.?. நான் உங்கள்ட்ட கொஞ்சம் மாத்திச் சொன்னது உண்மைதான். ஆனா மாமா எங்கிட்டே சத்தியம் வாங்கினதாலே இதெல்லாம் வெளியே சொல்லமுடியலே.”

     

    அவள் சிரித்தாள்.

    “என்ன சுந்தர்.. வெளியே சொல்ல வெட்கப்படவேண்டிய விஷயமா இது? உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா.. நீங்க ஆரம்பத்திலேர்ந்து அதிகம் பொய்தான் பேசறிங்க..  அதனால உங்க மேலே சாதாரணமாகவே இன்ஸ்பெக்டருக்கு ஏற்பட்ட மாதிரி எனக்கும் சந்தேகம் ஏற்படுது..”

     

    “பொய்யா.. அப்போ நான் சொன்னது எல்லாமே பொய்னு குற்றம் சொல்லறிங்களா.. கல்யாண்! அநியாயம்டா இது!”

     

    “ஏண்டா  ஏற்கனவே பொய் சொல்லிதானே இப்போ வரைக்கும் மாட்டிண்டு இருக்கே? இதோ பார்.. எனக்கு உண்மை தேவை. அதனால இன்ஸ்பெக்டருக்கும் கோம்டிக்கும் ஏற்படற அதே சந்தேகம் எனக்கும் இருக்குடா..”

     

    கோம்டி புன்னகையை விரிவு செய்தாள்.

    “சரி, கொலை நடந்த அன்னிக்கு நீங்க எங்க இருந்தீங்க?”

     

    “நான் உண்மையைத்தான் சொல்லறேங்க.. நான் வைத்தீஸ்வரன் கோயில்லதான் இருந்தேன். மாமா காருலதான் போனேன்.”

     

    “சரி, அதுக்கும் முதல் நாள் அதாவது கொலை நடந்ததுக்கு முதல் நாள் எங்க இருந்தீங்க?”

     

    “மாமா கார் சர்வீஸ்க்கு விட்டுட்டு ஆஃபீஸ் போனேங்க.. மறுபடியும் மத்தியானம் கூட அங்கேதான் போனேன். அவங்க கொடுத்த சர்வீஸ் ரசீது கூட கார் உள்ஷெல்ஃப்ல வெச்சுருக்கேன். நீங்க வேணுமின்னா செக் பண்ணிக்கலாம்”

     

    ரவியிடம் திரும்பினாள்.

    “ரவி அந்த சர்வீஸ் ரசீதைக் கொஞ்சம் எடுத்துவரமுடியுமா?” என்று கேட்டவள் அவனருகே காதில் இன்னொன்றையும் சொன்னாள்.

     

    “சரி, கார் சரியாக சர்வீஸ் பண்ணாங்களா.. மிஸ்டர் சுந்தர்?”

     

    “அடுத்த நாள் ரொம்பதூரம் போயிட்டு வரணுமேன்னு ஒரிஜினல் சர்வீஸ் டீலர்கிட்டே விட்டுட்டுதான் நானும் நல்லாவே சர்வீஸ் பண்ணனும்னு சொன்னேன். வண்டி சூபரா இருந்தது.”

     

    “ஓகே மிஸ்டர் சுந்தர்.. கொலை நடந்த நாளுக்கு முதல் நாள் காரை சர்வீஸுக்கு விட்டீங்க. அதுக்கும் முதல் நாள்தான் கந்தசாமியை அழைச்சிண்டு பாலபாலிகா ஆசிரமம் போனீங்க இல்லையா?!”

     

    “ஆமா.. ஆமா.. நீங்க சொல்லறது அப்படியே கரெக்ட்..”

     

    “இதையும் ஸ்டேட்மென்ட்ல எழுதி போலீஸுக்குக் கொடுத்தீங்க இல்லே?”

     

    “ஆமா.. அவங்க எல்லாத்தையும் கேட்டாங்க.. எதுக்கு வம்புன்னு கார் சர்வீஸ் ஒரு சில்லி மேட்டர்னா கூட அதையும் சேர்த்துதான் ஸ்டேட்மெண்ட்ல எழுதினேன்.”

     

    ரவி உள்ளே வருகிறான். கையில் உள்ள பேப்பரை கோம்டியிடம் தருகிறான்.

     

    “சுந்தர் சொன்னது உண்மைதான் கார் சர்வீஸ் பண்ணது வாஸ்தவம்தான். ரசீதை நல்லா பாரு கோம்டி.” என்று ஒரு நம்பரைக் காண்பித்தான்.

     

    “மிஸ்டர் சுந்தர்.. இப்பதான் சொன்னீங்க.. கார் சர்வீஸ்லாம் சில்லி மேட்டர்தான்.. இருந்தாலும் போலிஸ் ஸ்டேட்மென்ட்ல அப்படியே அதைப் பத்தியும் எழுதியிருக்கேன்னு.. ஆனா மிஸ்டர் சுந்தர்.. கார் சர்வீஸ் மேட்டர் சில்லி மேட்டர் இல்லன்னு நான் சின்ன ப்ரூஃப் தரட்டுமா? நீங்க எதையுமே சீரியஸா எடுத்துக்கலே..”

     

    சுந்தர் பயந்தான் சற்று. அவளை பரிதாபமாகப் பார்த்தான். அவள் குரல் கொஞ்சம் கடுமையாக வந்தது.

     

    “சென்னைலேர்ந்து வைத்தீஸ்வரன் கோயில் போயிட்டு வர கிட்டதட்ட 500 கி.மீட்டராவது ஆகும் இல்லையா.. ஆனா இந்தக் கார் இப்போ வரைக்கும் அதாவது சர்வீஸ் பண்ண தினத்திலேர்ந்து இன்னிக்கு இப்போது வரைக்கும் இந்த ஒரு வாரத்துல நூறு கிலோ மீட்டர் கூட ஓடல. இத்தனைக்கும் இந்தக் காரை நேத்து ஒரு தடவை கல்யாண் யூஸ் பண்ணி முப்பது கிலோமீட்டராவது போயிருப்பாரு.. சர்வீஸ் பண்ணின போது உங்க கார் ஸ்பீடோ மீட்டர்ல உள்ள கார் ரன்னிங்க் ரீடிங்க் இந்த ரசீதுல பேனால அழகா தெளிவா எழுதியிருக்கான். அந்த ரீடிங்க்லேர்ந்து நூறு கிலோமீட்டர் கூட அதிகமா இந்த கார் ஓடலேன்னு இப்போ கல்யாண் கார்ல பார்த்த அதே ரீடிங்க் மார்க் சொல்லுது. ஸோ நீங்க கொலை நடந்த அன்னிக்கு வெளிலே ரொம்ப தூரம்லாம் போகலே.. ஆனா அப்படி போனா மாதிரி பொய் ஸ்டேட்மென்ட் போலீஸ்கிட்ட கொடுத்திட்டு அதையே எங்க காதுலயும் சொல்லி போலீஸுக்குக் கொடுத்த பூவையும் எங்களுக்கும் சேர்த்தே சுத்தியிருக்கீங்க.. நீங்க இனிமேயும் பொய் சொல்லாம உண்மையை சொன்னீங்கன்னா நீங்க எப்படி தப்பிக்கலாம்னு வழியை நாங்க சொல்லுவோம். இல்ல.. முயலுக்கு மூணு கால்தான்னு முரண்டு பிடிச்சீங்கன்னா இதோ இப்படிப்பட்ட ப்ரூஃப் உங்களை அழகாக் காட்டிக் கொடுத்துடும். ஏற்கனவே உங்கமேல சந்தேகத்துல இருக்கற போலீஸ்கிட இந்த மாதிரி சின்ன விஷயம் ப்ரூஃபா கிடைச்சிடுச்சுன்னா அதை வெச்சுண்டு அவங்க அடிக்கற அடியில நீங்கதான் கொலையாளிங்கறதும் அவங்க  வெளிக்கொண்டு வந்துடுவாங்க.. அப்புறம் உங்க இஷ்டம்..”

     

    கோம்டி சொல்லச் சொல்ல ஆச்சரியம் அதிக அளவாய்க் காண்பித்து கல்யாண் அவளைக் கையைப் பிடித்துக் குலுக்கினாலும் சுந்தர் தன் தலையைப் பிடித்துக் கொண்டே அப்படியே சோபாவில் சாய்ந்தான். ரவி இப்போது சுந்தரைப் பார்த்தான். அருகே சென்றான்.

     

    “இப்போ இன்னொரு உண்மையும் சொல்லணுமே.. கல்யாணோட பெரியப்பா கொடுத்த அந்த பத்து லட்சம் ரூபாயை சிதம்பரத்துல நீங்க கொண்டு போய் கொடுக்கலியே.. அந்தப் பணத்தை எங்கே வெச்சிருக்கீங்க.. அதையும் சொல்லணும்..”

     

    சுந்தர் தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதான்..

    “கல்யாண்.. நான் என்னவெல்லாமோ நினைச்சு உங்கிட்டே எல்லா விஷயமும் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்லயே உன்னைப் பாக்கறச்சே சொல்லலாம்னுதாண்டா இருந்தேன்.. இந்தக் கொலை நடந்த முதல் நாளே நான் தீர்மானம் பண்ணது என்னன்னா அடுத்த நாள் காலைல ஸ்டேஷனுக்கு வந்து அங்கேயே உன்னை உக்காத்தி வெச்சு எல்லா விஷயத்தையும் சொல்லிட்டுதான் இங்க மாமா வீட்டுக்கு அழைச்சுட்டு வரணும்னுதாண்டா.  உனக்குப் பெரிய துரோகம் பண்ணிட்டார்டா.. உனக்கு மட்டுமில்லே.. எனக்கும் சேர்த்துதாண்டா சொல்லறேன். ஐய்யோ.. வேணாம் வேணாம்னு நான் எத்தனையோ முறை சொல்லியும் மாமா கேட்கலியேடா.. அவருக்கென்ன? செய்யறதெல்லாம் செஞ்சிட்டு அவர் பாட்டுக்கு போய்ச் சேர்ந்துட்டார்.. இப்போ யாருடா அவர் செஞ்ச பாவத்துக்கெல்லாம் அனுபவிக்கறது..” அழுதான் அவன்,

     

    கல்யாண் கடுமையாகப் பேசினான். “பச்சதாபப்பட்டு அழுதா போதுமா சுந்தர்.. இப்போ வரைக்கும் நீ பொய் சொல்லித்தான் வந்திருக்க.. இன்னும் கூட நீ என்ன நடந்ததுன்னு சொல்லறதுக்கு மனசு உனக்கு வரல்லே..”

     

    “இல்லடா.. இல்லே.. நான் சொல்லப் போகறது கொஞ்சம் டெலிகேட்டான விஷயம்டா.. வெளியில தெரிஞ்சா ரொம்ப கேவலமா நினைப்பாங்க.. (கோம்டியை காட்டி) இவங்க முன்னாடி சொல்லறதுக்குக் கூட கூச்சமா இருக்கு.. ஆனா இப்போ வேற வழி தெரியலே.. கல்யாண்.. உன்னோட மாமா ஒரு குரூரமான மெண்டாலிடி உள்ளவர்டா.. ரொம்ப ரொம்பகாலமா இப்படித்தான் இருக்கார். குரூரம்னு சொன்னா கூட அதுக்கு அர்த்தம் இல்லை. இன்னும் மேல.. உனக்கு எப்படி சொல்லறதுன்னு தெரியலே..”

     

    கோம்டி சற்று நிதானமாகவே கேட்டாள். “ உங்க மாமா பெரிய பெண் பித்தர்.. அதத்தானே சொல்ல வரீங்க..”

     

    தலையை அசைத்தான். “சாதாரண ஸ்த்ரீ வெறியன் இல்ல மேடம்.. எப்படிச் சொல்றதுன்னே தெரியல. அவர் ஒரு சைகோபாத் செக்ஸ் வெறியர்.”

     

    “உங்களுக்கு எப்போ தெரிய வந்தது இந்த விஷயம்?”

     

    “நாலு மாசமாவே தெரியும் மேடம். ஒரு நாள் சாயங்காலம் ஆஃபீஸ்லேர்ந்து கிளம்பறச்சே மாமா ஃபோன் வந்தது.  ஆடிட்டர் அர்ஜெண்டா சில பேப்பர் டைப் பண்ணனும்னு சொல்லி சில அப்ளிகேஷன் ஃபார்ம் லிங்க் அனுப்பிச்சிருந்தார். அதை கம்ப்யூட்டர்லயே பார்த்து சரியா அந்த காலம்ன் பார்த்து டைப் செய்யணும். இதெல்லாம் முரளியும் செய்வான். ஆனா ரெண்டு மூணு நாளா அவன் வரல்லே.. ஆளும் கிடைக்கலே. அப்போ என்னைக் கூப்பிட்டார். நான் இங்க வந்தேன்.  கம்யூட்டரைக் காமிச்சு அந்த லிங்க் எடுத்து ஃபார்ம் ஃபில் பண்ணி ப்ரிண்ட் அவுட் எடுக்கணும்டா.. அதைப் பண்ணு.. பேப்பர்ல சைன் பண்ணினா ஆடிட்டர் நேரயே  நாளைக்காலைல இன்கம்டாக்ஸ் ஆஃபீஸ்ல கொடுத்துடுவார்டா’ன்னு எனக்குச் சொன்னார். நானும் கம்ப்யூட்டர்கிட்டே உட்கார்ந்து இதையெல்லாம் செஞ்சுண்டுருக்கறச்ச இவர் ஹால்ல தன் ஃபோனை   நோண்டிண்டிருந்தார். நான் முதல்ல அத சரியா கண்டுக்கலதான். கம்ப்யூட்டர் வேலை முடிச்சு பிரிண்ட் அவுட்லாம் எடுத்து அவர்கிட்ட கையெழுத்து வாங்கணும்னு கொஞ்சம் அவர்கிட்டே நிதானமாத்தான் போனேன்.”

     

    அவன் நினைவுகள் அந்த நாளிரவு நிகழ்ச்சிக்குத் தாவின. இதே ஹால்தான். மாமா சோபாவில் வெகு சீரியஸாக ஃபோனில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தார். சுந்தர் கையில் பேப்பர்களுடன் மெதுவாக ‘என்ன போட்டோ அது’ என்று ஒரு ஆவலில் அவர் பின்னால் நின்று அவருக்குத் தெரியாமல் எட்டிப் பார்த்தான். எல்லாமே பெண்களின் நிர்வாணப் படங்கள். அதிர்ச்சியில் நிலைமை தெரியாமல் கத்தி விட்டான். அவன் கைகளிலிருந்த பேப்பர்கள் சிதறி கீழே விழுந்தன.

     

    “மாமா! என்ன இதெல்லாம்? அதுவும் நீங்களா இப்படி?”

     

    மாமாவும் இவன் திடீரென வந்து கத்திக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார். அந்த அதிர்ச்சியில் அவசரமாக எழுந்து கொள்ளும்போது தடாலென அவர் கையிலிருந்த ஃபோன் ஏடாகூடமாக கீழே விழுந்து இரண்டாக விரிந்து போனது. அவசரமாக கீழே விழுந்த ஃபோனை எடுத்து அந்த இரண்டுப் பகுதிகளையும் சேர்க்கையில் அது வேலை செய்யாமல் ரிப்பேரானது தெரிய வந்தது. ஆத்திரம் வந்தது மாமாவுக்கு. சுந்தர் பக்கத்தில் வந்து ஆத்திரத்துடன் ‘பளாரென’ அவன் கன்னத்தில் அறைந்தார். சுந்தர் கன்னத்தைத் தடவியபடி அப்படியே நின்றான்.

     

    மாமா கொஞ்சம் நிதானத்துக்கு வந்தார். ஒரு கையில் ஃபோனைப் பார்த்துக் கொண்டே அவனைப் பார்த்தார்.

    தொடரும்

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 21

    63 நாயன்மார்கள் வரலாறு – 19 திருநாவுக்கரசர் நாயனார்பகுதி 2

     

     

    மொழியும் இனமும்

    நம் மொழி இலக்கியத்துள் முதன்முதலாக மொழிவழித் தேசிய இனம் என்ற புதிய மரபினைத் தோற்றுவித்த பெருமை அப்பரடிகளையேச் சாரும்! தமிழன்என்ற சொல்லையும் முதன்முதலில் கூறிய முதல் தமிழரும் அவரே!

    ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்’ (6-23-5)

    தன் பொருட்டே திருநாவுக்கரசர் நாயனார் பெருமானை தமிழ் மொழித் தலைவர் எனக் குறிப்பிடுகிறார் போலும் சேக்கிழார் பெருமான்.

    சண்பைநா டுடைய பிள்ளை தமிழ்மொழித் தலைவ ரோடு

    மண்பயில் சீர்த்திச் செல்வமாமறைக் காடு வைகி, என்கிறார்.

    அப்பரடிகள் தருமசேனர் எனும் சமணராய் இருந்தபோது அவர்களோடு கூடியிருந்து அவர்தம் சோற்றை உண்ட தன் உடல் மாசுபட்டுள்ளதோ என்று அவருடைய உள் மனது வருந்த, அந்த மாசைப் போக்க வேண்டும் என்று நினைத்தார். பொதுவாக இத்தகைய மாசு நீங்க வேண்டுமானால் ஒன்று நீரால் அல்லது தீயால் மட்டுமே ஆகும் என்ற எண்ணத்தில் தன் உடலை இந்த இரண்டு முறையிலும் தூய்மை செய்ய விழைந்தார். முதல் முறையாக திருக்கெடில நதியில் நீராடி அப்பாவத்தைப் போக்க முனைந்தார். அடுத்து எஞ்சிய மாசும் பாவமும் தீயால் சுட்டெரிக்க முடிவெடுத்தவர், தூங்கானை மாடத்தில் எழுந்தருளியிருக்கும் சுடர்கொழுந்தீசரைப் பார்த்து வழிபட்டு ஓர் விண்ணப்பமும் வைத்தார்.

     பொன்னார் திருவடிக் கொன்றுண்டு

      விண்ணப்பம் போற்றிசெய்யும்

    என்னாவி காப்பதற் கிச்சையுண்

      டேலிருங் கூற்றகல

    மின்னாரு மூவிலைச் சூலமென்

      மேற்பொறி மேவுகொண்டல்

    துன்னார் கடந்தையுள் தூங்கானை

      மாடச் சுடர்க்கொழுந்தே

    இடவம் பொறித்தென்னையேன்று கொள்ளாயிருஞ் சோலை திங்கள்

    தடவும் கடந்தையுள் தூங்கானை மடத்தெந்தத்துவனே

    அப்பரடிகள் சிவபெருமானிடம், “என் உடம்பில் உயிர் இருக்க வேண்டும் என்பது உமது விருப்பமாயின் எனது தோளில் இடபச் சூலக்குறி பொறிக்க வேண்டும்” என்று விண்ணப்பித்தார். சிவகணம் மூலமாக இடபச் சூலக்குறிகளைப் பொறிக்கச் செய்தார். அப்பரடிகளும் அகம் குளிர்ந்தார். வாகீசப் பெருமான் பெண்ணாகடத்தினின்றும் புறப்பட்டுத் தில்லை சென்று கூத்தப் பெருமானின் ஆனந்தத் திருக்கூத்தினைக் கண்டு களிப்புற்றவர், ‘கருநட்ட கண்டனை’ எனும் திருவிருத்தம், ‘பத்தனாய்ப் பாடமாட்டேன்’ என்னும் திருநேரிசை, ‘அன்னம் பாலிக்கும் தில்லை’ எனும் திருக்குறுந்தொகை, ‘அரியாணை அந்தணர் தம் சிந்தையானை’ எனும் பெயரில் திருத்தாண்டகம் முதலிய பலப்பல பதிகங்கள் பாடி மகிழ்ந்து துதித்தார்.

    திருஞானசம்பந்தப் பெருமானின் சைவத்திருப்பணி பற்றி அறிந்த நாவுக்கரசர் அவரைக் காண சீர்காழி எனும் திருத்தலம் நோக்கிச் சென்றபோது சம்பந்தரும் ‘அப்பரே வாருங்கள்’ என்று அன்போடு எதிர்கொண்டழைத்தார். இருவரும் திருமறைக்காடு சென்று வேதத்தால் பூட்டப்பட்ட ஆலய மணிக்கதவை தமிழ் பண்ணிசைப்பாடி திறக்கவும் மீண்டும் மூடவும் செய்தனர். சில நாட்கள் அவருடன் தங்கியிருந்தவர் பின்னர் விடைபெற்று சோழ நாட்டு திருத்தலங்கள் பலவற்றிற்கும் சென்று வழிபட்டு, திருச்சத்திமுற்றம் எனும் திருத்தலம் சென்றடைந்தார்.

    கோவாய் முடுகி யடுதிறற்

      கூற்றங் குமைப்பதன்முன்

    பூவா ரடிச்சுவ டென்மேற்

      பொறித்துவை போகவிடின்

    மூவா முழுப்பழி மூடுங்கண்

      டாய்முழங் குந்தழற்கைத்

    தேவா திருச்சத்தி முற்றத்

      துறையுஞ் சிவக்கொழுந்தே.

    திருச்சத்திமுற்றத்து சிவக்கொழுந்தீசரிடம் தம்முடைய நீண்ட நாள் பேரவாவை நிறைவேற்றித் தருமாறு வேண்டி நின்றார். ஈசனின் அழகிய பொன் போன்ற திருவடியை தம் தலைமேல் சூட்டியருள வேண்டும் என்ற வேண்டுதலை வைத்தார். எம்பெருமானும் நல்லூருக்கு வா என்று பணித்தார். நல்லூர் சென்று பாதம் பணிந்த அப்பரடிகளைப் பார்த்து, ‘உம்முடைய நினைப்பதனை முடிக்கின்றோம்’ என்றவர் தம் சென்னிமிசை பாதமலர் சூட்டினான் சிவபெருமான். நாவுக்கரசரும் திருத்தொண்டகச் செந்தமிழ்ப் பாமாலை பாடிப் பரவினார். இப்பதிகத்தில் பாடல்தோறும் இறுதி அடியில்,

    திருவடி என் தலைமேல் வைத்தார்

    நல்லூ ரெம் பெருமானார் நல்லவாறே

    என தம்மை ஆட்கொண்ட  நல்லூர் எம்பெருமானின் கருணைத் திறத்தை வியந்துருகிப் போற்றுகின்றார்.

    பின்னர் திருப்பழன நாதரை வழிபட எண்ணி திங்களூர் என்ற ஊரின் வழியே சென்றார். அங்கு தமது பெயரால் சோலைகள், குளங்கள், சாலைகள், தண்ணீர்பந்தல் முதலிய அறங்களை அப்பூதியார் என்ற பெருமகனார் செய்து வருவதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அப்பூதி அடிகள் நாயனாரைச் சந்தித்து, திருவமுது செய்ய அவரது வீட்டிற்குச் சென்ற போது அரவத்தால் மாண்ட அப்பூதி அடிகளாரின் மூத்த மகனை, ‘ஒன்றுகொலாம்’ எனும் திருப்பதிகம் பாடி உயிர்ப்பித்துப்  பின் பயணத்தைத் தொடர்ந்தார்.

    திங்களூரை விட்டுப் புறப்பட்ட திருநாவுக்கரசு நாயனார் திருப்புகலூரை அடைந்தபோது அங்கு வந்த திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை மீண்டும் சந்தித்து, இருவரும் திருவீழிமிழலை சென்றடைந்தனர். அப்போது அங்கு நாடு வளம் இன்றி வறட்சியுற்றிருந்தது. மக்கள் உண்ண உணவின்றி துன்பத்துக்கு ஆளாகியிருந்தனர். மக்களின் துன்பம் தீர நாட்டில் பஞ்சம் ஒழிய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் கண்ணயர்ந்தனர். பெருமக்கள் இருவரின் கனவிலும் இறையனார் வந்து அருளியதன் பேரில், விண்ணிழி விமானநாதன் ஆலயத்தைச் சென்று வணங்கி காழிப்பிள்ளையார் கிழக்கு வாயில் பலிபீடத்தை அடைந்தார். அங்கு ஒரு பொற்காசு இருப்பதை அறிந்து அதனை வணங்கி எடுத்தார். அப்பரடிகளும் மேற்கு வாயிலில் பலிபீடத்திலிருந்து பொற்காசை எடுக்க இருவரும் மகிழ்ச்சியுடன் இரு மடங்கள் அமைத்து மக்களுக்கு அன்னதானப் பணிபுரிந்தனர்.

    அதன் பின்னர் இருவரும் அங்கிருந்து புறப்பட்டு திருமறைக்காடு (தற்போது வேதாரண்யம் என்று வழங்கப்படுகிறது) சென்று வேதங்களால் பலகாலம் அடைக்கப்பட்டிருந்த கதவினைத் திறக்கவும் மூடவும் பாடியருளினர்.

    திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்

    உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந்நின்றார்

    மறைக்க வல்லேரோ தம்மை திருவாய்மூர்ப்

    பிறைக்கொள் செஞ்சடையார் இவர் பித்தரே

    திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாண்டிமாதேவியின் அழைப்பை ஏற்று மதுரையை நோக்கிப் புறப்பட்டவுடன், திருநாவுக்கரசு நாயனார் பெருமான் சோழ நாட்டுத் தலங்களைத் தொடர்ந்து தரிசித்துத் திருத்தொண்டு செய்து வந்தார். சமணர்களால் மறைக்கப்பட்டிருந்த பழையாறை வடதளி ஆலயத்தை மீண்டும் திறந்து தரிசிக்காமல் செல்வதில்லை என்று உண்ணா நோன்பு மேற்கொண்டார். எம்பெருமானும் பழையாறை நகரில் வாழும் மன்னன் கனவில் தோன்றி, உண்ணாமை பூண்டிருக்கும் நாவுக்கரசர் வெளிப்படையாகக் கண்டு வழிபடும் வகையில் ஆவன செய்யுமாறு கூறி மறைந்தார். மன்னனும் நேரில் சென்று அப்பரடிகளின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அவரோடு சென்று வடதளிநாதனை வணங்கி, புதிய கோபுரம் எழுப்பி பல நிவந்தங்களையளித்தான்.

    பின்னர் நாவுக்கரசர் திருச்சிராப்பள்ளி, திருவானைக்கா, திருவெறும்பூர், திருப்பராய்த்துறை முதலிய பல தலங்களை வழிபட்டு பின் திருப்பைஞ்ஞீலியை அடைந்தார். அப்போது அவருக்குப் பசி மேலிட்டபோது, சிவபெருமான் கட்டமுது தந்தருளினார். தல யாத்திரையைத் தொடர்ந்து மேற்கொண்ட திருநாவுக்கரசு நாயனார், திருக்காளத்தியில் காளத்தியப்பரையும், கண்ணப்ப நாயனாரையும் தரிசித்துவிட்டு திருக்கயிலை யாத்திரை மேற்கொண்டார். உடல் தளர்ந்த நிலையிலும் உறுதி தளராத அவரை சிவபெருமான் அங்கு ஓர் தடாகத்தில் மூழ்கப் பணித்துத் திருவையாற்றில் திருக்குளத்தில் எழச் செய்து சிவனார் உமையம்மையோடு திருக்கோயில் காட்சியைத் திருநாவுக்கரசு நாயனாருக்குக் காட்டியருளினார்.

    வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி

            மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி

    ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி

            ஓவாத சத்தத் தொலியே போற்றி

    ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி

            ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி

    காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி

            கயிலை மலையானே போற்றி! போற்றி!

    எனும் போற்றித் திருத்தாண்டகம் பாடி திருஐந்தெழுத்தை ஓதி அவ்வாவியில் மூழ்கித் திருவையாற்றில் உள்ள ஒரு தடாகத்தில் தோன்றிக் கரையேறினார். சம்பந்தரிடம் விடைபெற்று பாண்டி நாடு சென்ற நாவுக்கரசர் அங்கு நெடுமாறன், மங்கையர்கரசியார், குலச்சிறையார் ஆகியோரின் விருந்தினராய்த் தங்கி அவர்களோடு தல யாத்திரை மேற்கொண்டு பல தலங்களையும் பணிந்து திருப்புகலூர் வந்து தங்கி புகலூர்ப் பெருமானை வணங்கி, உழவாரப் பணி செய்து மகிழ்ந்தார். அப்போது அவர், நின்ற திருத்தாண்டகம், தனித் திருத்தாண்டகம், மன்னுறைவோர் வாழ்பதிகள், வாழ்த்துத் திருத்தாண்டகம், திருநேரிசை, தனித்திருநேரிசை, ஆருயிர் திருவிருத்தம், தசபுராணத் தடைவு, பாவநாசத் திருப்பதிகம், அறைகூவும் திருப்பதிகம் முதலிய பாமாலைகளைப் பாடியருளினார்.

    தமது 81வது வயதில் திருப்புகலூரை அடைந்த திருநாவுக்கரசு நாயனார் அங்கேயே தங்கித் உழவாரப் பணியைச் செய்தார். திருப்புகலூர் இறைவனை பல நாட்கள் தங்கி வணங்கிய அப்பரடிகள் உலக வாழ்வில் வெறுப்புற்று இறைவன் திருவடிப்பேறு எய்த விரும்பினார். திருப்புகலூர் இறைவன் தன்னை திருவடியில் இருத்திக் கொள்வான் என முன்னுணர்வு பெற்று திருப்பதிகங்கள் பாடினார்.

    தன்னைச் சரணென்று தாளடைந்

      தேன்றன் அடியடையப்

    புன்னைப் பொழிற்புக லூரண்ணல்

      செய்வன கேண்மின்களோ

    என்னைப் பிறப்பறுத் தென்வினை

      கட்டறுத் தேழ்நரகத்ஹ்

    தென்னைக் கிடக்கலொட் டான்சிவ

      லோகத் திருத்திடுமே

     

    எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ

            எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற்

    கண்ணிலேன் மற்றோர் களைக ணில்லேன்

            கழலடியே கைதொழுது காணி னல்லால்

    ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்

            ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்

    புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்

            பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

    எனவரும் திருத்தாண்டகத்தில் பாடியருளியபோது புகலூர்ப் புண்ணியன் கருவறையில் சோதி எழுந்தது. அச்சோதியிற் கலந்து நுண்ணறிய சிவானந்த வடிவேயாகி அண்ணல் சேவடிக்கீழ் எய்தி இன்புற்றார். அப்பரடிகள் சிவனடி சேர்ந்த திருநாளே சித்திரை சதயத் திருநாளாகும்.

     

    திருநாவுக்கரசர் நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    ன்று உலக நாடுகள் அனைத்தும் தனிமனிதச் சுதந்திரத்தை நிலைநாட்ட ஐ.நா. சபை என ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். அந்த மாமன்றத்திலேயே அப்பரடிகளின் திருவாக்கு பொறிக்கத்தக்கதாகும்! உலக வரலாற்றில் ஒரு சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துத் தனி நபராக நின்று போர்ப்பரணி பாடிய முதற்குரல் எழுந்த இடம் நம் தமிழகத்துப் பாடலிபுத்திரமாகும். ஏழாம் நூற்றாண்டில் மக்கள் துணை இன்றி மகாதேவன் துணையோடு தன்னந்தனி மனிதராய் ஒரு மாபெரும் சாம்ராச்சியத்தையே  எதிர்த்துப் போராடியவர் நம் அப்பரடிகள்!

    நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்

            நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்

    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்

            இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை

    தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான

            சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்

    கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்

            கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.

    சிவபெருமானைத் தவிர வேறு எவருக்கும் அடி பணிய மாட்டோம் என வீரமுழக்கமிட்டார்.

    நெடுநாட்கள் சமணத்திலிருந்த அப்பரடிகள் அங்கு தலைவர்கள் திருமடம் அமைத்து தங்கள் சமயத்தைப் பரப்ப தொண்டர்களைக் கூட்டி, அவர்கட்கு மதப்பயிற்சி அளிப்பதைக் கண்டிருப்பவர், சைவநெறியில் அத்தகைய அமைப்பு ஏதும் இல்லாத நிலை கண்டு வருந்தினார். சைவம் தழைக்கும் வகையில் தொண்டர்களை உருவாக்கத் தாமே திருப்பூந்துருத்தி என்னும் ஊரில் திருமடம் அமைத்தார். அத்திருமடம் வானுயர சேக்கிழார் காலம் வரை சிறப்பான முறையில் ஓங்கி இருந்துள்ளது. சைவசமய வரலாற்றில் சமய நெறி பரப்பத் தோன்றிய முதல் திருமடம் என்பதும் திருநாவுக்கரசு நாயனார் இத்திருமடத்தில் தங்கிப் பல பதிகங்கள் பாடி பொய்யிலியைப் பூந்துருத்தி கண்டேனே எனவும் பரவிப்பாடிப் பணிந்தார். அப்பரடிகளும், சம்பந்தரும் பூந்துருத்தி ஆலயம் சென்று, வணங்கி திருமடத்திலும் பல நாட்கள் தங்கியிருந்தனர்.

    அப்பரடிகள் உள்ளத்துறவு நெறியினை உலகுக்கு உணர்த்த விரும்பிய எம்பெருமானார், அடிகள் உழவாரப் பணியாக அவ்வாலயத்தில் உள்ள புல், பூண்டு முதலியவற்றையும், கற்களையும் களைந்து எறிந்தபோது இறையருளால் பொன்னும் நவமணியும் அக்கல்லோடும், புல்லோடும் கலந்து வந்தன.  ஓடும், செம்பொன்னும் ஒன்றாகக் கருதும் அப்பரடிகள் அவற்றையும் அப்புல்லோடும், கல்லோடும் எடுத்துத் தூர வீசி தாம் துறவின் சிகரம் என நிறுவினார்.

    அப்பரடிகள் திருத்தொண்டு செய்து வரும்போது ஒரு நாள் அரம்பையரும், தேவமாதரும் கூடி நின்று அவர்தம் திருமேனியில் நறுமலர் பெய்து நடனமாடினர். ஆனால் அடிகளார் சிந்தை மயக்கமின்றித் தம்பெருமான் திருவடியையே சிந்தையில் நிறுத்தி ஒருமனமுடையவராய்த் திகழ்ந்தார்.

    நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே

    புக்கு நிற்கும் பொன்னார் சடை புண்ணியன்

    பொக்கமிக்கவர் பூவும் நீரும் கொண்டு

    நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.

    என்று பொய்யாக வேடமிட்டு ஆடம்பரமாக ஆலயத்தில் வழிபாடு செய்யும் போலிகளைக் கண்டு இறைவன் நகைப்பான் என்கிறார்.

    ஒன்றே கடவுள் எனும் அப்பரடிகள் பல தெய்வ, சிறு தெய்வ வழிபாட்டினை வெறுத்துப் பேசுகிறார்.

    யாரோர் தேவ ரெனப்படு வார்க்கெல்லாம்

    மாதே வன்னலால் தேர்மற் றில்லையே

    எனக்கூறி ஒருவனே தேவன் என வலியுறுத்தினார்.

     

    கோலும் புல்லும் ஒரு கையில் கூர்ச்சமும்

           தோலும் பூண்டு துயரம் உற்று என் பயன்

           நீல மா மயிலாடுதுறையனே

           நூலும் வேண்டுமோ நுண் உணர்ந்தோர்கட்கே

    நீல மயில்கள் நடமாடும் சிறப்பு வாய்ந்த மயிலாடுதுறை தலத்தில் உறைபவனும், வேதங்களில் சொல்லப்படும் மெய்ப்பொருளின் வடிவமாகிய சிவபெருமானை உணர்ந்தவர்களுக்கு, வேறு எந்த அறிவு நூல்களும் தேவைப்படாது என்கிறார்.

    பண்டைய நாளில் தமிழகம் பேசும் மொழி, மதம், கலை, பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் போன்றவற்றால் மாறுபடாமல் இருந்தாலும் நாடாளும் மன்னர்களால் வகுத்த நாட்டெல்லைகளால் சேர, சோழ, பாண்டிய, தொண்டை, கொங்கு எனப் பல்வேறு நாடுகளாக இருந்தது. தமிழ் வேந்தர் படையெடுத்துச் சென்று இமயம் வரை நம் தமிழ்க்கொடியை நாட்டினர். கடல் கடந்த நாடுகளிலும் நம் தமிழ் மொழியும், தமிழர் தம் கொடியும் பறந்தது. இவர்களையெல்லாம் இணைக்கின்ற சக்தி ஒன்று தேவையென்று முதல் அமைச்சராய் இருந்த சேக்கிழார் பெருமான் நினைத்தார். இமயத்தை ஒட்டி வாழ்ந்தாலும், கடல் கடந்து வாழ்ந்தாலும் கன்னித் தமிழ் நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் இவர்களை ஒன்றிணைக்க ஒரு மாபெரும் சக்தியாகச் செய்யவல்லது அமிழ்தினும் இனிய நம் செந்தமிழ் மொழியே என உறுதியாக நம்பினார். நம் செந்தமிழ் மொழிக்கு, அஞ்சாமையும், நெஞ்சுறுதியும் கொண்ட  ஒரு தலைவனை தமிழக மக்களுக்குக் காட்சிப்படுத்தினார் சேக்கிழார். அந்த தமிழ் மொழித் தலைவனே திருநாவுக்கரசர் நாயனார்.

    திருநாவுக்கரசு பெருமானை, எம்பெருமான் சூலை நோய் கொடுத்து ஆட்கொண்ட வேளையில் மனிதன் நோய் பற்றி, அதன் கொடுமை பற்றி, தமக்குற்ற சூலை நோய் பற்றி, அதன் கொடுமை பற்றி அவர் பாடியுள்ள பாடல் நமக்கே சூலை நோய் ஏற்பட்டது போன்று துடித்துப்போகச் செய்கிறது.

    கூற்றாயின வாறுவி லக்ககிலீர்

      கொடுமைபல செய்தன நானறியேன்

    ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்

      பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

    தோற்றாதென் வயிற்றின் அகம்படியே

      குடரோடு துடக்கி முடக்கியிட

    ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில

      வீரட்டா னத்துறை அம்மானே.

    இப்பாடலில் உள்ள சொற்கள் அனைத்தும் வயிற்று வலி வந்த ஒருவரின் அனுபவ உண்மை என்பது விளங்கும். இத்திருப்பதிகம் ஒரு சத்தியவாக்கு, ஒரு திருமந்திரம் என்பது அனுபவப்பூர்வமான சத்தியம் ஆகும். இன்றும் தீராத வயிற்று வலி உள்ளவர்கள் திருவதிகை சென்று 48 நாட்கள் காலையும், மாலையும் இத்திருப்பதிகம் பாடினால் கொடிய சூலை நோய் நீங்கக் காண்பது அனுபவப்பூர்வமான உண்மை. அப்பரடிகளின் வாக்கு சத்திய வாக்கு என்றும் அவருடைய ஒவ்வொரு சொல்லும் மந்திரச் சொல் என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது.

    அப்பரடிகள் 49,000 தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். இவற்றில் சில பதிகங்கள், தாள அமைப்பினைச் சேர்ந்தவை. தாள அமைப்புடன் பாடப்பட்டவற்றைப் பண்ணாங்கப் பாடல்கள் என்றும், தாள அமைப்பு இல்லாத பாடல்கள் சுத்தாங்கப் பாடல்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. திருத்தாண்டகம், திருவிருத்தம், திருக்குறுந்தொகை ஆகியவை திருநாவுக்கரசு நாயனார் பாடிய சுத்தாங்கப் பதிகங்கள். அப்பரடிகளின் அனைத்துப் பாடல்களும் தமிழ்ச் சுவையும் பக்திச் சுவையும் தோய்ந்தவை.

     

     

    Share
  • அழகைப் பார்த்து ஏமாந்த மீன்!! (நீதி கதை)

    ஏ. எஸ். கோவிந்த ராஜன்

    இயற்கை எழில் நிறைந்த அழகான ஊர் தான் புதூர். அங்கு ஏரி, குளங்கள் என நீர் நிலைகள் நிறைந்திருக்கும். அங்குள்ள ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. அக்குளத்தில் உள்ள மீன் குட்டிகள் எப்பொழுதும் கூட்டமாக விளையாடிக் கொண்டிருக்கும்.

    அதில் ஜானி, பட்டு என்ற இரு குட்டி மீன்கள் விளையாடிக் கொண்டிருந்தன. ஜானி, ஏய்! பட்டு எங்கே என்னைப் பிடி பார்க்கலாம் என்றது. அதற்கு பட்டு, என்னிடமே சவால் விடுகிறாயா? இப்பொழுது பார். ஒரு நொடியில் உன்னை பிடிக்கிறேன் என்று கூறி விளையாடிக் கொண்டே கரையோரம் வந்தன.

    அச்சமயம் கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து, ‘ஏய் ஜானி, அங்கே பார் அவன் எவ்வளவு கருப்பாக இருக்கிறான்.” மேலும் அவன் குரலை நீ கேட்டிருக்கிறாயா? அருவருப்பாக இருக்கும். அவனை பார்த்தாலே பயமாக இருக்கிறது. வா! ஜானி நாம் உள்ளே சென்று விடலாம் என்று கூறியதும், எல்லா மீன்களும் குளத்திற்குள் வேகமாக சென்றுவிட்டன.

    வேக வேகமாக மீன்கள் உள்ளே சென்றபோது, குட்டிகளா! ஏன் இப்படி அவசரமாக ஓடி வருகிறீர்கள்? என்று அங்குள்ள ஒரு பெரிய மீன் கேட்டது. கரையோரத்தில் ஒரு காகம் இருக்கிறது. அக்காகத்தின் நிறம் மற்றும் குரலைக் கேட்டால் பயமாக இருக்கிறது. அதனால்தான் வேகமாக ஓடி வந்தோம் என்றது, பட்டு.

    அதற்கு அந்த பெரிய மீன் காகத்தால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றது. ‘உருவத்தை மட்டுமே வைத்து ஒருவரைப்பற்றி தவறாக நினைக்கக்கூடாது” என்று பெரிய மீன் கூறியது. மற்ற மீன்குட்டிகள் இந்த தாத்தாவுக்கு வேறு வேலையே இல்லை. எப்பொழுதுமே உபதேசம் தான் என்று கூறிவிட்டு சென்றன.

    தினமும் காகத்தைப் பார்த்து கரைக்குச் செல்லாமல் குளத்தினுள்ளேயே விளையாடிக் கொண்டிருந்தன, மீன்கள். சில நாட்களுக்குப் பிறகு குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்திருந்தது.

    அதை பார்த்த மீன் குஞ்சுகள், ஏய்! அங்கே பாருங்கள். வெள்ளை நிறத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறது. அதன் அலகு நீளமாக மட்டுமில்லாமல் கூர்மையாகவும் உள்ளதே! அதனுடைய நடையைப் பார் என்று கொக்குவை வர்ணித்துக் கொண்டிருந்தது.

    மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது, கொக்கு. உடனே மீன் குட்டிகள் கொக்குவைப் பார்த்து நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், உங்களது அலகை தொட்டுப் பார்க்கலாமா? என்று ஒரு மீன் குட்டி கேட்டது.

    அக்குட்டிமீன் அவ்வாறு கேட்டதும் கொக்கு மகிழ்ச்சியில் மூழ்கியது. உடனே, கொக்கு தொட்டுப் பார் என்று கூறியது. ஒரு மீன் குட்டி கொக்கிடம் சென்றதும், கொக்கு அந்த மீனை கவ்விக் கொண்டது. நன்றாக மாட்டிக்கொண்டாயா? என்றது.

    கொக்கிடம் மாட்டிய மீன் ஆ! என்னை விட்டிவிடுங்கள்! என்று கெஞ்சியது. இதை பார்த்த மற்ற மீன் குட்டிகள் ஆபத்து ஆபத்து வேகமாக ஓடுங்கள் என்று அனைத்து மீன்களும் குளத்திற்குள் சென்றன. ஆனால், அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது. மற்ற மீன் குட்டிகள் அந்த தாத்தா மீன் சொன்னது சரிதான்.

    அழகை மட்டும் பார்த்து ஒருவருடன் பழகக்கூடாது என்று அனைத்து மீன்களும் உறுதியெடுத்துக் கொண்டன. அன்று முதல் அனைத்து மீன் குட்டிகளும் கவனமாக இருந்தன. மகிழ்ச்சியாக குளத்தில் வாழ்ந்து வந்தன.

    நீதி : அழகற்று இருப்பது எல்லாம் தீயதுமல்ல. அழகாக இருப்பது எல்லாம் நல்லதுமல்ல.

    Share
  • ஒளவையார் புறப்பாடல்களில் பெண்நிலைப் பதிவுகள்

    முனைவர் மூ. சிந்து
    இணைப் பேராசிரியர்
    தமிழ்த்துறை
    டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி ( தன்னாட்சி)
    காளப்பட்டி ரோடு, கோயம்புத்தூர் – 641048

    முன்னுரை

    இலக்கியங்கள் கால வளர்ச்சிக்கேற்பப் புதுப்பொழிவுடன் தோற்றம் பெறுகின்றது. தமிழ் மொழியில் தினந்தோறும் புதிய புதிய இலக்கியங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இவ்வாறு தோன்றிய இலக்கியங்களில் வரலாறுகள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டும் அவற்றில் நிகழும் மாற்றங்கள் குறித்தும் ஆராயப்படுகின்றன. இனியும் ஆராயப்படும் என்பதில் எவ்விதமான ஐயப்பாடுமில்லை என்பதை உறுதியாகக் கூறலாம்.

    சங்க இலக்கியங்களின் காலம் என்பது அந்தந்த கால கட்டத்தில் வாழ்ந்த அரசர்கள் புலவர்கள் அவர்களின் ஆட்சிநிலை சிறப்பு ஆகியவற்றின் மூலமாக அறிய முடிகிறது. ஆண்பாற் புலவர்களையே பாராட்டிய காலங்களில் பெண்பாற் புலவர்களும் கல்வியில் மேம்பட்டவர்களாகத் திகழ்ந்தனர். கற்புக் கடம் பூண்ட பொற்புடை மகளீரும் என்ற நிலைமாறி பெண்கள் கல்வி நிலையில் சிறப்புடன் திகழ்ந்துள்ளன ஆண்களுக்கு நிகராப் பெண்களும் சமூகத்தில் இருந்தனர் என்பதை அறியமுடிகிறது.

    சங்க காலங்களில் காக்கைப்பாடினியார், நச்செள்ளையார், ஓக்கூர் மாசத்தியார், ஓரம்போகியார், ஒளவையார் என 41பெண் புலவர்கள் கல்வி நிலையில் சிறப்பு பெற்று விளங்கியதை அவர்களது பாடல்கள் மற்றும் செயல்களில் அறியமுடியும். சங்க இலக்கியங்களில் மேற்கூறிய பெண்டிர் தம் சிறப்பினைக் கூறியிருந்தாலும் இதில் அனைவராலும் போற்றப்பட்டு அனைவரின் உள்ளத்தில் சிறப்பிடம் பெற்றுத் திகழ்ந்தவர் என்பதை “ஒளவையார் புறப்பாடல்களில் பெண்நிலைப் பதிவுகள்” கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    ஒளவையும் புறப்பாடல்களும்

    ஒளவை பாடியவையாகப் புறநானூற்றில் 33 பாடல்கள் கிடைக்கின்றன. இவர் தமது புரவலர்களாக நால்வரைக் குறிப்பிடுகின்றார். அதியமானை பாட்டுடைத் தலைவனாக் கொண்டு 22 பாடல்களும், பொகுட்டெழினியைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு 3 பாடல்களும், நாஞ்சில் வள்ளுவனைப் பற்றி 3 பாடலும், மூன்று வேந்தர் ஒருங்கிருந்த போது அவர்கள் குறித்த 1 பாடலும், பொது நிலையில் 6 பாடல்களும் இவரால் பாடப்பெற்றுள்ளன.

    ஒளவையும் அதியமானும்

    ஒளவை தம்மை ஆதரித்த புரவலர்களில் குறிப்பிடத்தக்கவனாக அதியமானைப் பதிவு செய்கிறார். அதியமானின் வீரத்தைப் பெரிதுபட அவ்வை எடுத்துரைக்கின்றார் அப்பதிவுகள் பின்வருமாறு.

    போரில் அதியமானைக் கூரைப்படை, தார்படைக் கொண்டு வெல்லுதல் இயலாது அவன் மன்றில் தொங்கும் முடிவினில் காற்றுப்பட்டு எழும் ஒலியைக் கேட்டதும் அது போர்க்கான முழக்கமாகக் கருதி பேருக்கு எழும் இயல்புடையவன் (புறம் 89)

    புலவர்களுக்கும் நாட்டுமக்களுக்கும் எளியவன் எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்ற வலிமையன் நீர்த்துறையில் யானையின் கோடுகளைத் தழுவி உடலை வருடி விளையாடுவதைப் பொறுத்துக் கொள்ளும் யானை போல அதியமான் புலவர்க்கு இனியன் அதே யானை மதம் கொண்ட போது பாகனையே பயமுறுத்தும் அதைப் போல போரிடத்தில் அதியமான் சினந்து நிற்பான்.   (புறம் 315)

                        வைகல் என்தேர் செய்யும் தச்சன்
                        திங்கள் வளத்த கால் கால் அன்னான்            (புறம் -87)

    அதியமானின் பேராற்றலை உவமைகள் கொண்டு ஒளவை முன் வைப்பது சிந்தனைக்குரியது. புலி முன் நில்லா இருளின் நிலை போலவும் வலிமை மிகு எருதின் முன் கடக்க முடியா சாலை எதுவும் இருக்க முடியா நிலை போலவும் அதியமான் முன் பகைவர் விளங்குகின்றனர். இவ்வாறு பெருவீரனாக அதியமானை ஒளவை பதிவு செய்வதன் மூலம் புரவலர்கள் இயல்பை விளக்குகிறார். அதியமான் அன்பிற்கு கட்டுப்பட்டவனாய் (தம் போன்ற பாணர்) பாதுகாவலனாய் வலிமை பெற்றவனாய்ச் சித்தரிப்பதன் மூலம் தம் போன்ற பாடினிக்கான சமூக வெளியைப் புலப்படுத்துகிறார். ஆற்றல் கொண்ட பெருவீரனுக்குச் சமமான சுயமதிப்பை பெற்றவர்களாக தம் போன்ற பாடினிகள் இருந்தமைக்கு அதியன் அவ்வைக்கும் கொடுத்த நெல்லிக்கனி ஒன்றே தக்க சான்றாக்கலாம்.

    அதியனிடம் நெல்லிக்கனி உண்டவரும் அவனோடு சேர்ந்து கள்ளுண்டவளுமான இந்த ஒளவை ஆண்-பெண் நட்புக்கு இலக்கியமாய் பங்குநிலை மாதிரியாய் (Role Model) விளங்குகின்றார்.

    அதியமானின் கொடைத்திறம்

    அதியமான் விருந்தோம்பும் திறத்தில் சிறந்தவன் என்பதை ஒரு நாள் அல்ல இருநாள் அல்ல பலநாள் பலரோடு புலவர்கள் சென்றாலும், தலைநாள் போன்றே அதியன் பரிசளிப்பான். யானைக் கோட்டிடை வைத்த கவளம் போல பரிசில் தப்பாது என்பது உறுதியாகும். (புறம் – 101)

    அதியன் வாழ்நாள் நீட்டிக்கச் செய்யும் கருநெல்லிக் கனியை தான் உண்ணாது தனக்கு உண்ணக் கொடுக்க அவ்வை அவனை நீலமணி மிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீ என (புறம் 91) இவர் வாழ்த்துகிறார். இவ்வுலகம் நிலைபெற்று விளங்குவதற்கு இத்தகு இறை குணமே காரணமாக அமையும் என்பதாகக் கொண்டு அவ்வை அதியனை நீலமணி மிடற்றன் என்கிறார்.

    இம்மொழி வரையறுப்பதாக அமைகிறது, நீலமணி மிடற்றன் என்பது இயற்கையை அதீத ஆற்றலை உணர்த்தும் குறியீடாக அவ்வையால் முன் வைக்கப்படுகிறது எனலாம். இதற்கு அதியனை நாட்டு எல்லையைப் பெருக்கி வளமுடன் வாழ வேண்டுமென்று வாழ்த்தாத தன்மையைக் காரணமாகச் சுட்டலாம்.

    தொன்மங்கள் உயிர்ப் பொருளாக விளங்குகின்றன. சமூகத்துடன் துடிப்புள்ள உயிர்த் தொடர்பு கொண்டு விளங்குகின்றன. சமூகத்தின் ஒவ்வொரு நுனிக் கூறுகளுக்குள்ளும் நுழைந்து ஊடுருவிச் செல்கின்றன.

    மேலும் நெல்லிக்கனி தந்த அதியமானை தன் தந்தையென பாராட்டுவதன் மூலம் மேற்கூற்றை உறுதி செய்கிறார். அதியனை தந்தையாகப் பாவிப்பது மட்டுமின்றி மக்கள் விரும்பும் மண்ணின் மைந்தனாக அதியன் இருக்க வேண்டுமென்ற கருத்தினை இனங்கான முடிகிறது. ஒளவை தான் பெற்ற கொடை என்றில்லாமல் பெண்கள் கலைகளோடு தொடர்புடையவர்களாகவும் அக்கலையும் கலைஞர்களும் சமூக மதிப்பு பெற்றிருந்தமையும் தம் போன்ற பாணர்கள் குறித்தும் பதிவு செய்கிறார். (புறம் -103)

                        இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்
                         தோன்றா திருக்கவும் வல்லன் மற்றதன்   (புறம் 315)

    என்ற ஒளவையின் கூற்றில் அதியனின் கொடை மேம்பாடு உணர்த்துவதுடன் தலைமை பொறுப்பில் உள்ள அவன் அதிகாரமற்றவனாய் படுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் குணம் உடையவனாய் சித்தரிப்பதன் மூலம் ஆணின் பேராண்மை சுட்டுவதாக

    அமைகிறது. ஆணிக் அடக்கி ஆளும் குணத்திற்கு மாற்றா பேராண்மை குணம் ஆணின் குணமாக இருக்க வேண்டுமென்றெ அவ்வையின் விருப்பினை இங்கு இனம் காண முடிகிறது.

    அதியமானின் இறப்பும் ஒளவையின் இரங்கலும்

    அதியமான் இறப்பை ஆற்ற இயலாது ஒளவை மூன்று பாடல்களில் தம் வருத்தத்தைப் பதிவு செய்கிறார். அவை கையறு நிலைத் துறைகளாக அமைகின்றன.

    அதியமானின் உடலை எரிக்கின்ற தீ அதனை அணுமி எரித்தாலும் எரிக்கட்டும் அல்லது வானுயர சென்றாலும் செல்லட்டும் வெண்கொற்றக்குடையாய் உலகைக் காக்கின்ற ஞாயிறு போன்ற அதியமானின் புகழை எத்தீயாலும் எரிக்க முடியாது என்பதை

                        திங்க ளன்ன வெண்குடை
                        ஞாயிற் றன்னோன் புகழ்மா யலவே   (புறம் 231)     

    என்ற பாடலில் உணரலாம்.

    அதியன் தன் அதிகாரத்தால் ஆக்கிரமிப்பு கொள்ள நினையாத மனதையும் நாடு பற்றிய அவன் பார்வையும் இனம் காண முடிகிறது. அதாவது நிலவரைக்குட்பட்ட நாடு என்ற கருத்தியல் ஒளவையால் புறம் தள்ளப்படுகிறது.

    (புறம் 232)

    இனிபாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈருநருமில்லை (புறம் 236)   என்ற பாடல் வரிமூலம் பாணருக்கான சமூக வெளியில் அதியனுக்கு இருந்த மரியாதையும் அவன் அவர்களை மதித்த பாங்கும் தன்னிடம் உள்ளத்தைப் பிறருக்கு பகிர்ந்து கொடுத்து தனக்கென வாழா பண்புடையவனாக அவன் இருந்தமை இனம் காட்டுவதுடன் பாணர் குலத்துக்கு நேர்ந்த சமூக நெருக்கத்தையும் இனம் காட்டுகிறது.

    பொகுட்டெழினி

    அதியமான் வாழ்ந்த காலத்தில் பொருட்டெழினியைச் சிறப்பித்ததாக (புறம் 96) ஒருபாடலும் அதியனின் இறப்பிற்கு பிறகு (புறம் 102) ஆட்சி சிறப்பையும் புறம் (103) குடிச்சிறப்பையும் கூறி ஒளவை மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.

    தும்பைப் பூமாலை அணிந்த மார்பினையும் நீண்ட கையினையுடைய என்னுடைய தலைவன் அதியனுக்கு மகன் என்பதன் வாயிலாக அதியனின் குணமே அவனுக்கு வெற்றியைத் தருகிறது. அக்குணத்தால் பெண்களால் பொருட்டெழினியும் நேசிக்கப்பட்டான் என்ற குறிப்பினையும் இனம் காண முடிகிறது.

    அதியனுக்கு பிறகு பொருட்டெழனி சேம அச்சு போல இருந்து செயல்படுவான் என்பதை

                          எருதே யிளைய துகமுனை ராவே
                        கீழ்மரத்தி யாத்த சேவச் சன்ன (புறம் 102)

    என்ற பாடல் வாயிலாக உணரமுடிகிறது.

    ஒளவையின் எதிர்பார்ப்புகளான ஆளமைப்பண்பு என்பது மேற்கூறிய செய்திகள் வாயிலாக இனம் கொள்ளலாம்.”

    நாஞ்சில் வள்ளுவன்

    நாஞ்சில் வள்ளவன் கொடை குணமுடையவன். புலவர்களைப் புரக்கும் இயல்புடையோன் என்பதும் தெரிய வருகின்றன. இரப்பவரின் தாழ்ச்சியைக் கருதாமல் தன்னுடைய தரத்தின் உயர்ச்சியை எண்ணிப் பெரிய யானையைக் கொடுத்ததன் வாயிலாக கொடைத்தன்மையை இனங்காணலாம். பாணர் குலத்தின் சமூக மதிப்பறிந்து ஒழுகுபவனாக நாஞ்சில் வள்ளுவன் அவ்வையால் சித்தரிக்கப்பட்டுள்ளான். தன் போன்ற பாணரை சமூக மதிப்பில் உயர்ச்சியாக அவ்வை முன் வைப்பதன் மூலம் பெண் கவிகளுக்கு சமூக வெளியான தன்னிலை அடையாளத்தையும் அவ்வடையாளத்திற்கு வேண்டிய விழைவும் குறிப்பால் உணர்த்துகிறார் எனலாம்.

    மூவேந்தர்கள்

    ஒளவையார் தான் வாழ்ந்த காலத்தில் பொதுநிலையில் மன்னர்களின் தன்மையை தம் பாடல்களில் வரலாற்று ஆதாரமாக முன்வைத்துள்ளார் என்றாலும், அவ்வையின் காலத்தில் உருவாகிக் கொண்டிருந்த நிலவுடைமை சமூகத்தின் குறியீடுகளாக மூவேந்தர்களையும் நாட்டையும் சுட்டுகிறார் எனலாம்.சுருங்கக் கூறின் அவ்வை காண விழைந்த ஆளமைபண்புள்ள மண்ணின் மைந்தர்களாக அவர்கள் மாற உலக அறத்தை அறிவுறுத்துவதாக அமைகிறது. நாடு என்ற கருத்தியலை அவ்வை புறத்தள்ளிவிட்டு குறுகிய கால வாழ்க்கையை இன்பத்தோடு வாழவேண்டும் என்று ஆணுக்கான சமூக மதிப்புடைய வீரம் முதன்மைப்படுத்தப்படுகிறது. சுருங்ககூறின் அவ்வை முன் வைக்கும் அதியனது வீரம் இனக்குழுவின் வீரம் எனலாம்.

    துணைநின்ற நூல்கள்

    1. புலவர் இரா.இளங்குமரன் – சங்க இலக்கியம் – புறநானூறு
    2. முனைவர் பொ.நா.கமலாஃ – தொல்காப்பியம் முதல் தெரிதா வரை
    3. க.பஞ்சாங்கம் – இலக்கியத் திறனாய்வு கோட்பாடுகளும்
    4. மாலதி மைத்ரி – விடுதலையை எழுதுதல்

    Share
  • சிலப்பதிகாரத்தில் வஞ்சிப்பத்தனின் ஊனம்

    முனைவர் த. ஆதித்தன்
    இணைப்பேராசிரியர்
    அரிய கையெழுத்துச் சுவடித்துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613 010.

    காப்பியம், நாவல் போன்றன தனிநபரின் கதையினை மட்டும் எடுத்துரைப்பதாக அமைவதில்லை. அவை சமுதாயத்தைப் பிரதிபலிப்பவை.  கூடிவாழும் பலரைக் கொண்டது சமுதாயம்.  சமுதாயத்துள் உள்ள பல இனத்தாரும் மற்றொரு இனத்தாரோடு முழுவதுமோ அல்லது ஏதேனும் ஒருவகையிலோ இயைந்து வாழும் தன்மையினைக் காணலாம்.  காரணம் எந்த நபராலும் தனித்து இயங்க இயலாது.  பிறர் உறவு இன்றியோ, உதவியின்றியோ வாழ்வது இயலாதது. காட்டினுள் துறவுப்பூண்டு சென்றாலும் எதிர்படும் பறவைகள், விலங்குகள், தாவரங்களைச் சாந்ந்து தானே வாழவேண்டும். எனவே பிறர் தொடர்பின்றி வாழ்தல் இயலாது.

    காப்பியமும் அப்படித்தான்.  நூற்றுக்கணக்கான மாந்தர்கள், அவர்கள் தொடர்பான நிகழ்வுகள், அந்த நிகழ்வுகளுக்கு இடையேயான பிணைப்புகள் முதலான  தன்மைகளைக் கொண்டு ஒரு காப்பியம் நீண்டு செல்கிறது.  இவற்றில் அனைத்து மாந்தர்களும் முதன்மை மாந்தர்களை மையமாகக் கொண்டே இயங்குவாரர்கள் என்று தோன்றும்.  ஆனால் அந்த முதன்மை மாந்தரின் இயக்கம் சில துணைநிலை மாந்தர் இன்றி நிகழாது என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.  ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட சிலப்பதிகாரம் பல துணைநிலை மாந்தர்களைக் கொண்டிருப்பதும் அவர்களில் முதன்மைத் தன்மை கொண்டவர்களையும் காண முடிகின்றது.  அவர்களுள் வஞ்சிப்பத்தன் என்னும் பொற்கொல்லனின் பங்கினை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

    சிலம்பின் நீதிகள்

    சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று நீதிகள் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று, உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பவை ஆகும்.  இந்த மூன்றினையும்,

    அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்
    உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
    ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்
    சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
    சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
    நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் என
    (சிலம்பு. பதிகம் – அடி 55-60)

    என்னும் பதிகத்தின் வாயிலாக நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.  பதிகத்தினை ஒரு நூலின் முன்னுரையாகக் கொண்டால் அந்த நூலின் மையத்தினைத் தெரிவிக்கும் தன்மையில் இந்தப் பதிகச் செய்தி அமைந்து விளங்குவதைக் காணலாம்.  அந்த மூன்று நீதிகள் நிலைநாட்டப்படுவதற்கும் துணை நிலை மாந்தர்களே முதன்மை நிலையில் துணை புரிந்திருக்கின்றார்கள் என்பதைக் காணமுடிகின்றது.

    அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று

    முதல் நீதியான அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று என்னும் நீதி வெளிப்படுவதற்குப் பாண்டியன்  நெடுஞ்செழியனும் கோப்பெருந்தேவியும் முதற்காரணமாக விளங்குகின்றனர்.  ஆராயாமல் கோவலனைக் குற்றவாளி என்று கருதி மரணத் தண்டனை வழங்கியதன் மூலம் பாண்டியன் நெடுஞ்செழியன் அரசியலில் பிழை செய்தவன் ஆகின்றான்.  ஆராயாமல் தீர்ப்புச் சொல்வதற்கு உரிய காரணங்களில் ஒன்றாகக் கோப்பெருந்தேவி விளங்குகின்றாள்.

    கோப்பெருந்தேவியின் சிலம்பைத் திருடிய கள்வன் என்ற குற்றச்சாட்டு, கோவலன் மேல் சுமத்தப்படுகின்றது.  குற்றம் சுமத்தப்பட்டவனிடம் இருக்கும் சிலம்பினை உடனே பெறவேண்டும் என்னும் விரைவு நெடுஞ்செழியனிடம் காணப்படுகின்றது. அந்த விரைவுக்குக் காரணம் கோப்பெருந்தேவி கொண்டிருந்த ஊடலை அந்தச் சிலம்பின் துணைகொண்டு தணிக்கலாம் என்னும் எண்ணமே ஆகும். அதுவே ஆராயாமல் தீர்ப்பு வழங்கும் மனநிலையைப் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு ஏற்படுத்தியிருகிறது.

    கோவலன் கையில் வைத்திருக்கும் சிலம்பானது கோப்பெருந்தேவிக்கு உரிய சிலம்பு என்று பொற்கொல்லன் தெரிவித்த ஒரு செய்தியைத் தவிர பாண்டியன் நெடுஞ்செழியனுக்குக் கோவலன் கையில் இருக்கும் சிலம்பினைப் பற்றி எதுவும் தெரியாது.  பொற்கொல்லன்தான் தேவியின் சிலம்பினைச் சீர் செய்வதற்காகப் பெற்றவன்.  எனவே கோப்பெருந்தேவியின் சிலம்பு எத்தகையது என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் ஊர் காப்பாளர்களுக்குச் சிலம்பினைத் தெரியுமே தவிர, கோவலனின் கையில் இருப்பது கோப்பெருந்தேவியின் சிலம்பு என்று தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. அவ்வாறு இருக்கையில், கோப்பெருந்தேவியின் சிலம்பு அந்தக் கள்வனின் கையில் இருந்தால் அவனைக் கொன்று அந்தச் சிலம்பினைக் கொண்டு வாருங்கள் என்று ஆணையிட்ட பாண்டியனின் செயல் அறிவுக்குப் பொருந்தும்  செயலாகத் தோன்றவில்லை. அவ்வாறு நமக்குத் தோன்றும் என்று கருதியே இளங்கோவடிகள் இந்தப் பகுதியின் தொடக்கத்திலேயே ‘வினை விளை காலம் ஆதலின்’ என்று தெரிவித்துள்ளார். தீய செயல் நடப்பதற்கான காரணம் அது என்பதாலேயே நெடுஞ்செழியனிடம் விரைவான எண்ணம் எழுந்துள்ளது. பிற உயிர் தொடர்பான நீதியினை வழங்கும்போது இவ்வளவு விரைவு கூடாது என்று ஓர் அரசனுக்குத் தெரியாமல் இருக்காது. தெரிந்து இருந்தும் அவ்வாறு அவன் விரைந்து ஆணையிடுவதற்குக் காரணமாக அந்தச் சூழல் அமைந்திருக்கிறது என தெளியலாம்.

    அவ்வாறு நெடுஞ்செழியன் பதற்றத்துடன் விரைந்து முடிவெடுப்பதற்குக் காரணமாக அமைந்தது கோப்பெருந்தேவியின் ஊடல் ஆகும். எனவே கோப்பெருந்தேவியும் அரசியலில் ஏற்பட்ட பிழைக்குக் காரணம் ஆகிறாள். எனவே சிலப்பதிகாரத்தின் முதல் நீதியாகிய அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று என்னும் நீதிக்கு அடிப்படையாக இந்த இரண்டு துணைநிலை மாந்தர்களும் விளங்கியுள்ளனர் என்பது தெளிவாகிறது.

    வஞ்சிப் பத்தனின் பங்கு

    பாண்டியன் கொலைத் தண்டனை விதிக்கும் சூழல் உருவாவதற்குக் காரணமாக இருப்பவன் வஞ்சிப்பத்தன் என்னும் பொற்கொல்லன். எனவே துணைநிலை மாந்தனாகிய வஞ்சிப்பத்தனும் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று என்னும் நீதி வெளிப்படுவதற்கு அடிப்படையாய் அமைந்துள்ளான் எனலாம்.

    “துன்பியல் நாடகங்கள் எதிர்மாந்தரை இன்றியமையாதுடையன. சிலம்பில் பாத்திரமாக வரும் பொற்கொல்லன் எதிர் மாந்தனாக அமையினும் உருவமற்ற ஊழ் எதிராற்றல் எனக் கொள்வது இயல்பு” (சுப்பிரமணியன். ச.வே., 1984, இளங்கோவின் இலக்கிய உத்திகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, ப.61) என்னும் அடிகளால் சிலப்பதிகாரத்தின் எதிர்நிலை மாந்தனாக இடம்பெறும் பொற்கொல்லன், துணைநிலை மாந்தனாக இடம்பெற்று எவ்வாறு முதன்மைத் தன்மை அடைந்துள்ளான் என்பதை அறியமுடிகிறது.

    “கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய
    நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர
    மெய்ப்பை புக்கு விலங்கு நடைச் செலவின்
    கைக்கோல் கொல்வனைக் கண்டனனாகித்
    தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற
    பொன்வினைக் கொல்லன் இவனென”
    (சிலம்பு. கொலைக்களக் காதை, அடி.105-110)

    என்னும் அடிகளில் பொற்கொல்லன் வந்த தன்மையினை இளங்கோ தெரிவித்துள்ளார். அவனை நூற்றுக்கணக்கான கொல்லர் தொடர்ந்து வந்திருக்கின்றனர் என்றால் அவன் பொற்கொல்லருக்கெல்லாம் தலைமை நிலையில் அமைந்திருக்கிறான் என்பதனைத் தெரிந்துகொள்ள முடிகிறது. அவனது உடலினைச் சட்டை பொதிந்திருக்கிறது என்று சிறப்பாகத் தெரிவித்திருக்கும் காரணத்தால் பிற பொற்கொல்லர்கள் மேலாடை என்னும் சட்டை அணியாமல் இருந்திருப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. மேலும் அந்தச் சட்டையை அவனுக்கு உரிய அடையாளமாகவும் இளங்கோ தெரிவித்துள்ளார். ஏனெனில் உயர்நிலை பெற்ற கொல்லனுக்கு உரிய அடையாளங்களில் ஒன்றாக அது அமைந்துள்ளது எனலாம். மேலும் அவனது கையில் கோல் ஒன்று இருத்தாகவும் இளங்கோ குறிப்பிட்டுள்ளார். அந்தக் கோல், பொற்கொல்லனின் தொழிலுக்குத் துணைபுரியும் ஊதுகோலா அல்லது குறட்டுக்கோலா அல்லது தலைமைப் பொற்கொல்லன் என்னும் அடையாளக் கோலா என்னும் சிந்தனையைத் தூண்டுகிறது. அவன் நேராக நடக்கவில்லை, மாறாகப் பக்கம் சாய்ந்து சாய்ந்து நடந்துள்ளான். எனவே அவனது செயலில் நேர்மை இருக்காது என்பதனை வாசகர்களுக்கு இளங்கோ குறிப்பால் உணர்த்தியுள்ளளார் எனலாம்.

    வஞ்சிப்பத்தன் வந்த சூழ்நிலையும் அவனது உயர் நிலையும் கோவலனைக் கவர்கின்றன. அந்தக் கவர்ச்சியின் காரணமாக இந்தப் பொற்கொல்லன் நல்லவனா, கெட்டவனா என்னும் எண்ணம் கோவலனுக்கு எழவில்லை. மாறாக இவனே இந்தச் சிலம்பை விற்றுக் கொடுப்பதற்கு ஏற்றவன் என்னும் எண்ணமே எழுகிறது. எனவே,

    “காவலன் தேவிக்கு ஆவதோர் காற்குஅணி
    நீ விலை இடுதற்கு ஆதியோ என”
    (சிலம்பு. கொலைக்களக்காதை அடி. 111-112)

    என்று தெரிவிக்கிறான். கோவலன் தெரிவிக்கும்போதே தான் கொண்டு வந்திருக்கும் சிலம்பானது பாண்டியனின் மணைவி காலுக்கு ஏற்றது என்கிறான். சொத்தெல்லாம் இழந்த பின்னரும் அவனிடம் பழம் பெருமை எண்ணம் நிலைத்தே நின்றிருக்கிறது. எனவேதான் கொண்டு வந்திருக்கும் சிலம்பானது சாதாரணச் சிலம்பு இல்லை என்று தெரிவிக்கும் நோக்கில் தேவிக்குப் பொருத்தமானது என உரைக்கிறான்.  அவ்வாறு உரைத்தது பழம் பெருமையினை உரைக்கும் நோக்கம் உடையது இல்லை என்றால்  தனது சிலம்புக்கு அதிக விலை பெறும் நோக்கமுடையது எனலாம். கோப்பெருந்தேவிக்கும் பொருத்தமானது என்று சொன்னால்  அதிக விலை பெற முடியும் என எதிர்ப்பார்த்து அவன் கூறியிருக்கிறான் என்றும் கொள்ளலாம்.

    நூறு பொற்கொல்லர் சூழந்துவர வந்த வஞ்சிப்பத்தன், தனி ஒருவனாக இருந்த கோவலனைப் பார்த்துப் பணிவாகக் கூறுகிறான்.

    “அடியேன் அறியேன் ஆயினும் வேந்தர்
    அடிமுதல் கலங்கள் சமைப்பேன் யானெக்
    கூற்றத் தூதன் கொதொழு தேத்த
    போற்றருஞ் சிலம்பின் பொதிவாய் அவிழ்த்தனன்
    மத்தக மணியொடு வயிரம் கட்டிய
    பக்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூல்
    சித்திரச் சிலம்பின் செய்வினை எல்லாம்
    பொய்த்தொழில் கொல்லன் புரிந்துடன் நோக்கின்
    கோப்பெருந்தேவிக் கல்லதை இச்சிலம்பு
    யாப்புற வில்லை என முன்போந்து
    விறல் மிகு வேந்தற்கு விளம்பியான் வரஎன்
    சிறுகுடில் அங்கண் இருமின் நீர்எனக்
    கோவலன் சென்று அக்குறுமகன் இருக்கையோர்
    தேவகோட்டச் சிறையகம் புக்கபின்”
    (சிலம்பு. கொலைக்களக்காதை: அடி.113-126)

    என்னும் அடிகளில் வஞ்சிப்பத்தனின் கபட எண்ணம் வெளிப்படா வஞ்ச நடிப்பு வெளிப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

    கோவலன் தான் கொண்டு வந்திருக்கும் காற்சிலம்பு உயர்வானது என்னும் எண்ணத்துடன் இருக்கிறான் என்பதை மிக எளிதில் புரிந்து கொண்டான் வஞ்சிப்பத்தன். எனவே தாழ்ந்த நிலை அடைந்த பின்னும் கோவலனிடம் இருக்கும் உயர்வு எண்ணத்தினை அப்படியே அவனிடம், நிலைபெறச் செய்கிறான். அதற்காகவே தன்னைத் தாழ்த்திக் கொள்கிறான் வஞ்சிப்பத்தன். ‘நீ கொண்டு வந்திருக்கும் சிலம்பின் உயர்வினை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை, இருப்பினும் அரசிக்குப் பாதமுதல் உள்ள அனைத்து அணிகலன்களையும் செய்யும் பொறுப்புடையவன்’ என்று பெருமையாகச் சொல்கிறான். அவ்வாறு சொல்லும்போது கோவலனைப் பார்த்து வணங்கி உரைத்துள்ளான், அந்த மிதமிஞ்சிய பணிவானது உள்ளே கயமையை மறைத்து வைத்துள்ளதனை யாரும் எளிதில் அறிய முடியாதவாறு காட்சிப்படுத்துகிறது. அதேநேரம் இந்த இடத்தில் இளங்கோ வெளிப்பட்டு அந்த வஞ்சிப்பத்தனைக் கூற்றத்தூதன் என்று குறிப்பிடுகிறார்.

    வஞ்சிப்பத்தன் என்னும் பாத்திரம் மிக உயர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் பாத்திரம் என்னும் நிலையில்  படைத்த இளங்கோ, அந்தப் பாத்திரத்தின் நயவஞ்சக எண்ணத்தினைத் தாங்கிக் கொள்ள இயலாமல்  அவ்வப்போது வெளிப்பட்டு, அவனை இகழ்ந்திருப்பதைக் காணமுடிகிறது.

    வஞ்சிப்பத்தனின் பணிவினை நம்பிய கோவலன் தான் கொண்டுவந்த சிலம்புப் பொதியினை அவிழ்க்கிறான், அந்தச் சிலம்பினைப் பார்த்த மாத்திரத்திலேயே அதன் உயர்வினை உணர்ந்துவிடுகிறான் வஞ்சிப்பத்தன். அந்த நிலையிலும் இளங்கோ வெளிப்பட்டு அவனைப் பொய்த்தொழில் கொல்லன் என்று இகழ்ந்துரைக்கிறார்.

    சிலம்பினைப் பார்த்த ஒரு சில நிமிடங்களிலேயே பொற்கொல்லனிடம் சூழ்ச்சி சூழ்ந்துவிடுகிறது. இதுதான் அரசியின் சிலம்பு என்றும் அந்தச் சிலம்பினைத் திருடியவன் இவன்தான் என்றும் நிலைநாட்டிடத் துடிக்கிறான். இவ்வளவு விரைவில் பொற்கொல்லனிடம் சூழ்ச்சி சூழ்ந்ததால்தான் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று என்னும் நீதி வெளிப்பட்டது.

    காவலன் கொண்ட ஐயம்

    மன்னனிடம் கோவலனைக் கள்வன் என நிலைநிறுத்தியபின் பொற்கொல்லன் காவலர்களை அழைத்துக்கொண்டு தன் இருப்பிடத்தில் இருக்கும் கோவலனிடம் வந்தான். கோவலனது தோற்றத்தைப் பார்த்தான் ஒரு காவலன். இவனது தோற்றமானது இலக்கணத்தின் சிறிதும் மாறாமல் இருக்கிறது, இவன் திருடனாக இருக்க முடியாது என எண்ணுகிறான்.

    “இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கிவன்
    கொலைப்படு மகனலன் என்று கூறும்”
    சிலம்பு. கொலைக்களைக் காதை: அடி. 162-163)

    என்னும் அடிகள் வாயிலாகப் பொற்கொல்லனின் சூழ்ச்சியை உடைக்கப் பார்க்கிறான் அந்தக் காவலன். இந்த காவலனது பேச்சினைப் போல் பிற காவலர்களும் பேசிவிட்டால் தனது சூழ்ச்சி உடைந்து விடும் என்ற எண்ணம் பொற்கொல்லனிடம் எழுகிறது. எனவே திருடர்கள் எத்தகையவர்கள் என்று உரை நிகழ்த்துகிறான் பொற்கொல்லன்.

    திருடர்கள் எட்டுவகையான உத்திகளைத் தங்கள் திருட்டுத் தொழிற்குப் பயன்படுத்துவார்கள் என்கிறான். அந்த எட்டு உத்திகளில் முதலாவதான மருந்து என்னும் உத்தியைப் பயன்படுத்தினால் மன்னன் இட்ட பணியை உங்களால் செய்ய இயலாது. மந்திரத்தை அவர்கள் தங்கள் நாவில் உரைத்துவிட்டு வந்தால் உங்களுக்கு அவன் இந்திரகுமாரன் போலத் தோற்றம் அளிப்பான். தேவ தோற்றத்துடன் தோன்றிக் கையில் பெரும் பொருள் உடையவன் போலச் செல்வான். அவன் வைக்கும் மருந்தில் மாட்டிக் கொண்டால் அவ்விடத்தை விட்டு நம்மால் அகலமுடியாது. இடம், காலம், கருவி என்னும் மூன்றின் துணையுடன் திருடர்கள் திருடப் புகுந்தால் இந்திரன் மார்பில் உள்ள ஆரத்தைக் கூட திருடிவிடுவார்கள். பகல், இரவு என்றில்லாமல் எந்த நேரமும் திருடிவிடுவார்கள் என்று உரைக்கிறான். இந்த உரையோடு நிறுத்திவிட்டால் இந்த காவலர்களுக்கு மேலும் ஐயம் ஏதாவது ஏற்பட்டு விடும் என்பதற்காகத் திருடர்கள் திருடிய சில நிகழ்வுகளைத் தெரிவிக்கிறான்.

    தூதன் போல் அரண்மனை வாயிலில் பகலில் இருந்தவன் இரவில் பெண்ணின் கோலத்துடன் உள்ளே புகுந்துவிட்டான். அவ்வாறு புகுந்தவன் விளக்கு ஒளி மறைந்த இருள் பகுதி வழியாகவேச் சென்றான். இளவரசன் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவனது வயிர மாலையை அபகரித்தான். திடீரென எழுந்த இளவரசன் அந்த திருடனை நோக்கித் தனது வாளினைப் பாச்சினான். உடனே அந்தத் திருடன் தனது கையில்  இருந்த வாளுறையால் வாளினைப் பறித்துக்கொண்டான். இளவரசன் அந்தத் திருடனை மல்யுத்தத்தில் வீழ்த்தலாம் என்று முயன்றான். அந்தத் திருடன் திடீரென்று மறைந்து கொண்டதால் தூணில் குத்தினான் இளவரசன். இவ்வாறெல்லாம் கூறும் பொற்கொல்லன் என்னும் துணைமை மாந்தன் இல்லை என்றால் இந்த நீதி வெளிப்பட்டிருக்காது என்பது உறுதி.

    பொற்கொல்லனுக்குத் துணையான காவலன்

    காவலர்களில் ஒருவன் பொற்கொல்லனுக்குத் துணைபுரியும் நோக்கில்  இல்லை என்றாலும், ‘கள்வர்க்கும் மற்றவர்க்கும் வேறுபாடு தெரியாது நல்லவர் போன்றே தோன்றுவர். எனவே கொல்லாமல் விடக்கூடாது’ என்கிறான். அவ்வாறு கூறுவதற்கு ஒரு நிகழ்வினையும் கூறுகிறான். நிலத்தைப் பெயர்ப்பதற்கு உரிய உளியினைக் கையில் தாங்கி, நீல ஆடையினை உடுத்திக் கொண்டு அணிகலன்களைக் கவரும் நோக்கத்தோடு ஒரு மழைநாள் இரவில் திருடன் ஒருவன் புலிபோலப் பாய்ந்து வந்தான். அவனைக் கொல்வதற்காக நான் கைவாளினை உருவினேன், அந்த வாளினைப் பிடுங்கிக் கொண்டு அவன் எங்கு மறைந்தான் என்பதைக் காணமுடியவில்லை என்று தெரிவித்தான். அவ்வாறு தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே கல்லாக் களிமகன் ஒருவன் கோவலனை வாளால் வெட்டிவிடுகிறான். இவ்வாறு கோவலன் கொலைக்களப் படுவதற்குக்   காரணமாக இருந்தவர்கள் அனைவரும் துணைநிலை மாந்தர்களாகவே காணப்படுகின்றனர். இருந்தாலும் காப்பிய நீதிக்குத் துணைநின்று முதன்மைத் தன்மை பெற்றுள்ளார்கள் என்பதனை உணரமுடியும்.

    வஞ்சிப்பத்தன் என்னும் பாத்திரம் கதையின் தலைவன் கோவலன் கொலைக்களப்படுவதற்குக் காரணமாக அமைந்தது என்றாலும் அது விதிக் கொள்கையின்பால் பட்டதே என்பதை சிலப்பதிகாரம் எடுத்துரைக்கிறது. வஞ்சிப்பத்தனின் தோற்றத்தைக் குறிக்கும்போது அவன் நேராக நடக்கவில்லை மாறாகப் பக்கம் சாய்ந்து சாய்ந்து நடந்தான் என்பதாக, இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். அது அவனின் செயலில் நேர்மை இராது என்பதை உணர்த்தவே என கொள்ளலாம். அவ்வகையில் வஞ்சிப்பத்தனின் மனதில் இருந்த ஊனமே இப்பெரும் ஊழ் செயலாற்றலுக்கு காரணமாயிற்று எனலாம். இதன் மூலம் உடல் ஊனத்தைவிட கொடுமையானதாக உள்ள ஊனம் திகழ்வதையும் சிலப்பதிகாரம் வெளிப்படுத்துவதை அறியமுடிகிறது.

    Share
  • கோதையின் தமிழைக் கொண்டாடி மகிழ்வோம் !

    கோதையின் தமிழைக் கொண்டாடி மகிழ்வோம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மாதங்களிலே மார்கழி மகத்தான மாதம். சைவமும், வைணமும் சங்கமிக்கும் மாதம். திருவெம்பாவையும் திருப்பாவையும் ஆலயங்களில் பக்தி பூர்வமாய் பாடப்படுகின்ற மாதம். ஆண்டாளின் அமுதத் தமிழும், மணிவாசகரின் உருக வைக்கும் தமிழும் பக்தியுடன் சேர்ந்து இசையாய் எழுந்து நிற்கும் மாதம். இந்த மாதம் இறையினை ஏற்றிப் போற்றி நிற்க அமைந்திட்ட மாதம். தெய்வீக மாதமாய் விளங்குவதால் –  குடும்ப விழாக்களுக்கோ வீட்டு நிகழ்வுகளுக்கோ இடம் கொடுப்பதில்லை. தெய்வீக மாதத்தில் தெய்வத்தை நினை என்று எங்கள் முன்னோர்கள் சொல்லி வைத்து விட்டார்கள். தெய்வீகம் முன்னிற்பதால் மார்கழி பீடை உடையது அல்ல –   பீடுடைய மாதம் என்பதே மிகப் பொருத்தமானதாகும். கண்ணனும் கீதையில் “மாதங்களில் நான் மார்கழி” என்று மொழிந்ததாய் அறிகின்றோம். சிவனும், திருமாலும் ஏற்றிப் போற்றப்பட்டு – சிவன் அடியாரும், திருமால் அடியாரும் தீந்தமிழால் பாமாலை சூட்டினார்கள். அப்படி அவர்கள் பாமாலை சூட்டி யதும் மார்கழியிலேதான். அந்த வழியில் ஒரு அடியார் பெண்ணாய் அமைந்து திருமாலுக்குப் பாமாலையோடு, பூமாலையையும் சூட்டி மகிழ்கின்றார். அவர்தான் – சூடிக் கொடுத்த சுடர்க் கொடியான கோதை நாச்சியார். சைவசமய குரவர்போல் – வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் வருகிறார்கள். அவர்கள் பன்னிருவர். அவர்களில் ஒரே ஒரு பெண்ணாய் வாய்த்தவர்தான் கோதை நாச்சியார்.  பெரியாழ்வாரின் மகளாய் திருமாலின் அருளினால் வாய்த்தவர்.

    திருமாலினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள். திருமாலின் பக்தியில் ஆழ்ந்தவர்கள். ஆதலால் ஆழ்வார்கள் என்று போற்றப்படும் உன்னத நிலைக்கு ஆழானவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். அப்படியான ஆழ்வார்களில் ஒரு பெண்ணாய் இருக்கும் நிலையில் ஆண்டாள் நாச்சியார் விளங்குகிறார். ஆண்டாளைத் தவிர மற்றைய ஆழ்வார்கள் அனைவரும் ஆண்களாய் இருப்பதால் – அவர்கள் திருமாலை நோக்கும் விதமும் திருமாலை ஏற்றிப்போற்றிப் பாடும் விதமும் ஆண்டாள் போல் இருக்கவில்லை. அவர்கள் யாவரும் ஆண்கள் என்பதால் அவர்கள் நோக்கும், போக்கும் அவர்களுக்கே உரித்தானதாய் ஆகியே இருந்தது எனலாம். அவர்களும் திருமாலைக் காதலித்தார்கள். அந்தக் காதலும் பல நிலையிலே அமைந்திருந்தது. அவர்கள் அனை வரும் தம்மைப் பெண்ணாக உருவகித்தே தம்முணர்வுகளை வெளிப்படுத்தும் நிலை இருந்தது. ஆனால் பெண்ணாகவே இருந்த காரணத்தால் ஆண்டாள் நாச்சியாரின் வெளிப்பாடும், உணர்வுகளும், பெண்மைக்குரிய பாங்கிலேயே அமைந்திருந்தது. இதனால் ஏனைய ஆழ்வார்களின் தமிழைவிட ஆண்டாள் நாச்சியாரின் தமிழ் – அமுதத் தமிழாய், சங்கத் தமிழாய், காதல்த்தமிழாய், கற்கண்டுத் தமிழாய், அணைக்கும் தமிழாய், ஈர்க்குந்தமிழாய், படிக்கப் படிக்க சுவைக்கும் தமிழாய் – பல்பரிணாம் கொண்டதாய் விளங்கியது – விளங்குகிறது என்பதை மறுத்துரைத்து விடல் இயலாது.

    “திருப்பாவை” என்பது மார்கழியின் மகத்துவம், அந்தத் திருப்பாவையினை தமிழுக்கு, பக்தி உலகுக்கு வழங்கியவர் கோதை நாச்சியாரான ஆண்டாளே. மார்கழியில் மாலவனைப் போற்றிப் பாடும் பாங்கில் – பக்தியை, காதலை, அறிவியலை , வாழ்க்கை முறையை, தமிழ்ச் சுவையை, சமூகவியலை, இயற்கையை,  என்று பலவற்றை ஆண்டாள் நாச்சியார் திருப்பாவை வாயிலாக வழங்கி வரமாக்கி இருக்கிறார். திருப்பாவையினை சைவர்களும் படிக்கலாம். பக்தியினை ஊட்டும் மருந்து திருப்பாவையில் இருக்கிறது. பக்தி என்பது பரந்தது விரிந்தது. ஆண்டாளின் பக்தியும் அப்படியானதே. சைவத் தமிழ் உலகில், சைவப் பக்திப் பெருவெளியில் காரைக்கால் ஈந்திட்ட அம்மை போலவேதான் — வைணவப் பக்திப் பெருவெளியில் ஆண்டாள் நாச்சியாரும் வந்து அமைகிறார் என்பதை மனமிருத்துதல் வேண்டும். நால்வருக்கே வழிகாட்டி காரைக்காலம்மைமையார். ஆழ்வார்களும் அவர்கள் பின்வந்த வைணவப் பெரியவர்களும் ஏற்றிப் போற்றப்படும் வகையில் வந்தமைந்தவர்தான் ஆண்டாள் நாச்சியார். காரைக்கால் அம்மையாரை சிவபெருமான் அம்மையே என்று அழைத்தார் திருமாலோ ஆண்டாள் நாச்சியாரை தன் அருகிலேயே அணைத்துக் கொண்டார். காரைக்கால் அம்மையார் பெண்ணழகை பேயுருவாக்கிட சிவனிடம் வேண்டினார். கோதைநாச்சியார் தன்னழகை மானிடர்க்கு ஈயாது மாலவனுக்கே ஈந்தார். அத்தனைக்கும் வித்து பக்தி ஒன்றேதான்.

    மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
    நீராடப் போதுவீர்! போதுமினோ, நேர் இழையீர்!
    சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
    கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
    ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
    கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
    நாராயணனே, நமக்கே பறை தருவான்,
    பாரோர் புகழப் படிந்தேலோர் எம் பாவாய்.

    என்று திருப்பாவையை ஆண்டாள் நாச்சியார் ஆரம்பிக்கின்றார். முப்பது பாடல்கள் முத்தாக, கோதை தந்த சொத்தாக பக்தியுலகுக்கு வாய்த்திருக்கிறது. முதலாம் பாடலிலிருந்து பதினைந்தாம் பாடல்வரை துயில் கொண்டிருக்கும் தோழியரை எழுப்பும் விதமாய் திருப்பாவை அமைந்திருக்கிறது. மார்கழியில் பாவை நோன்பினை நோற்பதை மங்கையர் மனமிருத்த வேண்டும் என்பதை ஆண்டாள் நாச்சியார் பல வகைகளில் காட்டும் பாங்கும், அதற்காக தன்னுடன் வருமாறு தோழியரான மங்கையரை, அதிகாலை துயில் எழுப்புவதாகவும் அமையும் திருப்பாவைப் பாடல்கள் படித்து இன்புறத்தக்கன. அது மட்டுமல்ல திரு மாலின் தன்மைகளையும் எடுத்துக் காட்டியும் நிற்கின்றன.

    வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
    செய்யும் கிரிகைகள் கேளீரோ பாற்கடலுள்
    பையயத்துயின்ற பரமன் அடிபாடி
    நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
    மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
    செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
    ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
    உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்

    பாவை நோன்பினை எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும் பக்குவத்தை ஆண்டாள் நாச்சியார் மிகவும் நுட்பமாய் மனத்தில் பதியும் வண்ணம் இங்கே விபரித்து நிற்கிறார்.

    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
    நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
    தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
    ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
    பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
    வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
    நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

    ஓங்கி உலகளந்த உத்தமன் என்று திருமாலைக் காட்டும் பாங்கு ஆண்டாளின் பக்தியின் உச்சம். அத்துடன் பாவை நோன்பினைக் கடைப்பிடித்தால் விளையும் நற்பலன்களையெல்லாம் பட்டியல் படுத்திக் காட்டுகிறார். “வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்” ஆண்டாள் நாச்சியாரின் முத்திரையாய் ஒளிர்கிறதல்லவா!

    ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்
    ஆழுயுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
    ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
    பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
    ஆழிபோல் மிம்மி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
    தாழாதே சாரங்கம் உதைத்த சரமழைபோல்
    வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
    மார்கழி நீராட மகிழ்தேலோர் எம்பாவாய்

    மழை எப்படி உருவாகிறது என்னும் அறிவியலை ஆண்டாள் நாச்சியார் இங்கே காட்டும் நுட்பம் வியப்பாய் இருக்கிறதல்லவா! பக்தியுடன் அறிவியலை இணைக்கும் கோதைத் தமிழைக் கோண்டாடி மகிழ்வது எம் தலையாய கடனல்லவா !

    “கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
    நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
    நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் நங்காய்”

    ” ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
    மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்”

    “உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
    செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்”

    ஆண்டாள் நாச்சியாரின் அகம் எப்படிப் பார்க்கிறது! பார்க்கும் பார்வையும், அதனூடாய் வெளிப்படுத்தும் காட்சியும் சுவையோ சுவையாய் சொக்க வைக்கிறதல்லவா!

    மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
    கோலே விளக்கே கொடியே விதானமே
    ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய் !

    ஆண்டாள் நாச்சியார் மணிவண்ணனைப் போற்றி மனமிருத்தி மகிழுகிறார்.

    கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன்தன்னைப்
    பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
    நாடு புகழும் பரிசினால் நன்றாக
    சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
    பாடகமே என்றனைய பல்கலனும் யாமணியோம்
    ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
    மூடநெய் பெய்து முழங்கை வழிவார்
    கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

    கூடாரை வெல்லும் சிறப்புடைய கோவிந்தா உன்னை நோக்கிய நோன்பினால் எமக்குக் கிடைப்பதுதான் பேரின்பம். புகழோ ஆபரணங்களோ எமக்குப் பெரிதல்ல கோவிந்தா! உன்னை எண்ணி நின்று பிரசாதத்தை கூடியிருந்து உண்ணுவதே பேரின்பமாகும்.

    கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்ணோம்
    அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
    பிறவி பெறுந்தன்னை புண்ணியம் யாமுடையோம்
    குறைவொன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு
    உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னோடு
    சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
    இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

    நாங்கள் யாவருமே அறிவில்லாதவர்கள். பசுக்கூட்டம் வழிசென்று வாழ்பவர்கள். ஆயர்குலக் கொழுந்தே உன்னால் வைகுண்டத்தையே காணுகின்றோம். அந்தப் பாக்கியம் எமக்குக் கிடைத்திருக்கிறது. கோவிந்தா நீயோ குறை ஒன்றுமே இல்லாதவன். உனது உயர்வு தெரியாது சிறு பிள்ளைகளாய் உன்னை ஒருமையில் அழைத்தும் இருக்கிறோம். எங்கள் சிறுமைகளை மன்னித்து எங்களுடன் உறவாய் இருப்பதை மட்டும் விட்டுவிடாதே!

    சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
    பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்
    பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
    குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
    இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
    எற்றைக்கும் ஏழே பிறவிக்கும் உன்தன்னோடு
    உற்றோமே யாவோம் உனகேநாம் ஆசெய்வோம்
    மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

    ஏழேழ் பிறவிக்கும் எங்களுடனே இருந்துவிடு. உந்தன் உறவை துண்டித்து மட்டும் விட்டுவிடாதே. உந்தன் பொற்றமரை அடியினைப் போற்றியே நிற்கின்றோம். எங்களின் விரத்தத்தை ஏற்றிவிடு கோவிந்தா. எந்த ஒரு பொருளும் எங்களுக்குப் பொருட்டல்ல. எங்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த சின்ன நோன்பை கோவிந்தா ஏற்றுக் கொண்டு எங்களை உன்னயல் வைத்திடுவாய் என்று ஆண்டாள் நாச்சியார் மனமுருகி வேண்டி நிற்கிறார்.

    வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
    திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
    அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
    பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
    சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
    இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
    செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
    எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

    தான் மனமுருகிப் பக்தியுடன் எம்பெருமான் நாராயணன் அருளைப், புகழை, பாடிய “சங்கத்தமிழ் மாலை” முப்பதையும் தப்பாமல் பாடினால் செல்வத்திருமாலின் திருவருளால் இன்புற்ரு வாழ்வார்கள் என்று உறுதி மொழியாய் உரைத்து நிறைவு செய்கிறார் திருப்பாவையினை ஆண்டாள் நாச்சியார்.

    திருவாடிப் பூரத்து ஜகத்து உதித்தாள் வாழியே:
    திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே,
    பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே:
    *பெரும்பூதூர் மாமுனிக்கு பின் ஆனாள் வாழியே,
    ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே:
    உயர் அரங்கற்கே கண்ணி உகந்து அளித்தாள் வாழியே:
    மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே:
    வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே*

    வைணவத்துக்கு வாய்த்த பெருஞ் சொத்து ஆண்டாள் நாச்சியார். மானிட இன்பங்களை, பக்தியில் திளைத்த ஆண்டாள் நாச்சியார் – இறையுடன் கலக்கும் மாறாப் பேரின்பமாய் ஆக்கி விடுகிறார். ஆண்டாள் நாச்சியாரின் நோக்கும் போக்கும் பேரின்பக் காதலாகவே பேருருக் கொள்ளுகிறது. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி கோவிந்தனை கொழுநன் ஆக்கிய பெருமையினை கோதை நாச்சியார் பெற்றுக் கொள்ளுகின்றார். கோவிந்தன் மேல் கொள்ளும் காதலை எடுத்துரைக்க ஆண்டாள் நாச்சியார் எடுத்தாளும் தமிழ்தான் அவரை அனைவரின் அகத்திலும் அமர்த்தி விடுகிறது. பக்தியின் பரவசத்தைப் பக்குவத்தை பாங்குடன் வெளிப்படுத்த அமுதத் தமிழை ஆண்டாள் நாச்சியார் கையாண்ட பாங்கு அனைவரையும் அவர் பக்கம் திருப்பியே விட்டது. எனவே “கோதைத் தமிழ் கொண்டாடும் தமிழாய்” ஆகியே விட்டது.

    Share
  • பல்லழகன் – பகுதி 13

    திவாகர்

     

    கோம்டி வீடு

     

    “கல்யாண்! இன்னும் தூங்கலியா?”

     

    அவன் பெருமூச்சு விடுவது அவளுக்குக் கேட்கிறது. “தூங்கறது இருக்கட்டும். இன்னும் சாப்பிடக்கூட இல்லே.”

     

    “முரளி அங்கே இருக்காரா?”

     

    “இல்லே அவன் நங்க நல்லூர் அவன் வீட்டுக்குப் போயிட்டான். அவனுக்கென்ன.. அவன் மனசுல இருந்த அத்தனைக் கஷ்டத்தையும் இறக்கி எனக்குக் கொடுத்துட்டு போயிட்டான். அது இருக்கட்டும்.. உங்களுக்கு முரளி சொல்றதெல்லாம் எப்படி படறது?”

     

    “ம்ம்.. சொல்றேன்.. நீங்க என்ன பண்ணுங்க முதல்ல போய் சாப்பிட்டுட்டு வந்து பேசுங்க..

     

    “இல்லல்ல.. என் எதிர்லயேதான் சாப்பாட்டை வெச்சிருக்கேன்.. ஆனா ஏறத்தான் மாட்டேங்குது.. நீங்க பேசுங்க கோம்டி. உங்க பேச்சைக் கேட்டுண்டே சாப்பிடறேன். ஆனா ஒண்ணுங்க உங்க மூளை அபாரமா வேலை செய்யுது.”

     

    “சரி, சாப்பிட்டுண்டே கேளுங்க. முரளி கொலை செய்ய வாய்ப்பிருந்தும் சரியான காரணங்கள் இருந்தும் அவன் கொலை செய்யலேன்னுதான் நினைக்கிறேன். ஆனா முரளி சித்ரா பௌர்ணமியன்னிக்கு நடந்ததுன்னு சொன்னது உண்மையாக இருந்தாலும் அதுக்கப்பறம் துப்பாக்கியை உங்க பெரியப்பா எடுத்தது.. வாய்ச்சவடாலா பேசினது.. சுட்டாலும் சுடுங்க ஆனா.. இனிமே பிரியாவை சந்திக்க கண்டிப்பா வீட்டுக்கு அவரை வரவேணாம்னு சொன்னதெல்லாம் கொஞ்சம் இடிக்குது. உங்க பெரியப்பா அவ்வளோ ஈஸியா எந்த விஷயத்தையும் விடறவர் கிடையாது ”

     

    கல்யாண் பதில் ஏதும் சொல்லவில்லை.. ‘ம் ம்’ என்று மட்டும் சொன்னான்.

     

    “சரி, பெரியப்பாவோட இந்த மாதிரியான பொம்பிளை ஃபோபியோ இன்னும் எங்கெல்லாம் பரவி இருக்குன்னு கண்டுபிடிக்கணும்.. அதே போல சுந்தர் எதுக்காக சிதம்பரம் போய் பிரியா வீட்டுல பத்து லட்சம் கொடுத்து இதுல இன்வால்வ் ஆனான்.. அவனுக்கு இந்த பெரியப்பாவோட லீலைகள் எவ்வளோ தூரத்துக்குத் தெரியும்.. அல்லது ஜஸ்ட் பெரியப்பாவோட கோரிக்கை மேலே பணம் கொரியர் மூலமா கொடுக்கறது போல போனானான்னும் தெரியணும்.. அவன் இந்தக் கொலைல சம்பந்தம் இருக்கான்னு பாக்கணும்.. எதுக்குன்னா அவன் டிடாச்மென்ட் எங்கிற பேருல அவனை இந்த விசாரணை சர்க்கிள்லேர்ந்தே தவிர்க்கப் பாக்கறான். அதனாலதான் சந்தேகம் வருது. ஆனா அவனோ அந்த சமயத்துல ஸ்பாட்’ல இல்லங்கறது எவ்வளோ தூரம் உண்மை.. அவன் முதல்லயே சிதம்பரமோ வைத்தீஸ்வரன் கோயில் போகாம இங்கேயே இருக்கறதுக்குக் கூட சான்ஸ் இருக்கு. அப்படியே சிதம்பரம் போனா கூட அவன் பணத்தைக் கொடுத்தானாங்கறது கூட கண்டுபிடிக்கணும். அதனால முரளிக்குத் தெரியாம சிதம்பரம் போகணும். அப்படி போகறதுக்கு முன்னாடி காலைல நான் சுந்தர்கிட்டே பேசணும்.. எப்படி பொன்னம்மாவோட சித்ரா பௌர்ணமி விஷயம் முரளியைப் பேச வெச்சதோ அதுமாதிரி சிதம்பரம் ரஞ்சிதாவோட அம்மாவும் பெரியப்பா கொடுத்த பத்துலட்ச ரூபாய் விஷயமும் சுந்தரைப் பேசவைக்கும்னு நினைக்கிறேன். இன்னும் ரவி வேற என்னன்ன விஷயம்லாம் சொல்லப் போறானோ.. அவன் சுந்தரை ஃபால்லோ பண்ணிட்டிருக்கான்.  கல்யாண்.. நீங்க சாபிட்டுட்டுப் படுங்க..  நாளைக்கான விஷயத்தை நாளைக்குப் பாத்துக்கலாம்.. ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயம் கிடைச்சாலும் கொலைக்கான நேரடியான விவரம் கிடைக்கலே. முரளிகிட்டே கொஞ்ச நாள் ஜாக்கிரதையா பழகுங்க..”

     

    அவன் உம் உம் என சொன்னதிலிருந்து சாப்பிடுகிறான் என்பது புரிந்தது.

     

    “சரி சாப்பிடுங்க.. நான் நாளைக்கு மத்யானமா உங்களைப் பாக்கறேன்.. குட் நைட்.”

     

    என்று சொல்லிவிட்டு ஃபோனைக் கட் செய்தாள். “பாவம்.. பெரியப்பா இவ்வளோ பெரிய காமாந்தகன்னு தெரிஞ்சவுடனே அப்செட் ஆயிட்டான்.. சாதாரண காமாந்தகன் இல்லடா மகா அயோக்கியத்தனமான காமப் பிசாசுன்னு தெரிஞ்சா இவன் என்ன செஞ்சுப்பானோ.. அடடா.. இந்த சுமதியைப் பற்றி கல்யாண்கிட்ட கேட்கலையே.. சரி, நாளைக்குப் பார்த்துப்போம்.. ஆனா முரளி சுமதியைப் பத்திப் பேசறச்சே ஒண்ணும் சொல்லலியே.. பார்க்கணும் நாளைக்கு..”

     

    என வாய்விட்டுச் சொன்னவள் கண்ணை மூடிப் படுக்க ஆரம்பித்தாள். அதற்குள் இன்னொரு ஃபோன் வந்தது. ரவிதான் பேசினான். அவன் அவளிடம் ஏதோ சொல்லச் சொல்ல நிதானமாகக் கேட்டாள்.

     

    ‘தேங்க்ஸ்டா ரவி, எனக்கு எப்பவுமே சுந்தர் மேல சந்தேகம் உண்டுதான்.. நீ சொன்னபடி அந்தம்மா பேரு என்ன சொன்னே சூடாமணி இல்லே.. அவங்க நம்பர் அனுப்பு. நான் பேசறேன், அத்தோட அந்த ஆசிரமத்துப் பெயர் சொல்லமாட்டேன்.. இந்த போலீஸ் பேரைச் சொல்லி பேசவெச்சுட்டா போச்சு. எதுக்கும் இன்ஸ்பெக்டர் மோகன்கிட்ட சொல்லி சுந்தர்கிட்டே பேசச் சொல்றேன். ஆனா போலீஸ் ரொம்ப விசாரிக்காது. அவங்களுக்கு இந்தக் கேஸ் எப்போ முடிக்கலாம்னுதான் இருக்கு,,  டோண்ட் வொர்ரி.. குட் நைட்.’ ஃபோனை வைத்தாள்.

     

    அடுத்த நாள் காலை பதினோறு மணியளவில் எக்ஸ்ப்ரஸ் மால் இரண்டாவது மாடி.. கூடவே தோழி சாந்தியுடன் ஒரு கடையில் நுழையப் பார்த்தவள் சட்டென அந்தக் கடை வாயிலில் நின்று நிதானித்தாள். சாந்தி கவனித்தாள் அவளை.

     

    “என்னடி அப்படியே நின்னுட்டே..”

     

    “இருடி.. உள்ளே கல்யாண் இருக்கான்”

     

    “யாரு அந்த பல்லழகனா? இருக்கட்டுமே.. பார்த்தா நல்லதுதானே.. சிரிச்சாதான் கஷ்டம்..”

     

    “இல்லடி.. நீ கொஞ்சம் பின்னாடி வா.. உள்ளே போகாம வெளியே கண்ணாடி மூலமா பாருடி.. அவன் கூட யாருன்னு பாக்கணும்.. அந்த பொம்பிளை யாருடி.. இன்னும் மூஞ்சியைக் காமிக்கலே,, பின்னாலே திரும்பிப் பார்த்தாதான் தெரியும்.. ஒருவேள இவதான் பிரியாவா.. அவன் அண்ணின்னு நினைக்கிறேன்..”

     

    “யாரு.. அந்த முரளி பொண்டாட்டின்னு சொன்னியே.. அவளா இவ..?”

     

    “இருக்கலாம்.. ஆனா இவன் எதுக்காக இவளை அழைச்சுண்டு வரணும்? ஹேய் அவ திரும்பிப் பாக்கறா.. இவளா.. இவ நம்ம சுமதி இல்லே.? அட, அதோ பாருடி உங்கண்ணன் ரவி கூட அவன் கூட  எதையோ டிரெஸ் எடுக்கிறான். அட, ரவி எவ்வளோ உரிமையோட அவளைத் தொட்டு டிரஸ் மேட்ச் பண்றான் பாருடி! ”

     

    “ஆமாண்டி நம்ம சுமதியேதான்.. ரவியும் கல்யாணும் சுமதிக்குத் ஏற்கனவே தெரியுமா?”

     

    “பார்த்து ரொம்ப நாளாச்சு. எஸ்.. திஸ் இஸ் சுமதி.. அட இவளா.. அவங்க பெரியப்பா இந்தப் பொண்ணை இன்னும் விடலியா? இவ விஷயம் எவ்வளோ தூரம் கல்யாணுக்குத் தெரியும்? இவளோட விஷயம் தெரியும்னா இவனுக்கு அப்போ நம்ம கிலினிக்ல நடந்த விஷயம் தெரியுமா? ரவிக்கு எவ்வளோ விஷயம் தெரியும்? அல்லது தெரியாதது மாதிரி நம்மகிட்டயே நடிக்கிறாங்களா? இவகிட்ட இன்ஸ்பக்டர் வேற போகச் சொல்லி பேசச் சொன்னாருடி.. அது வேற யாரோ சுமதின்னு நினைச்சுண்டிருந்தேன். இவளுடைய கதைதான் நமக்குத் தெரியுமே.. கல்யாண்கிட்டே சுமதி எப்படி மாட்டினா.. அன்னிக்கு இன்ஸ்பெக்டர் இவளை சந்தேகமா பேசறச்சே கல்யாண் சுமதிக்கு சப்போர்ட்டா பேசினானே..  (அப்போது அவர்கள் மூவரும் பில் கவுண்டர் அருகே வருகிறார்கள்) “யேய் சாந்தி!. பாருடி நிறைய வாங்கியிருக்காங்க.. அவ பரம்பரைக்கும் மேலே வரும். ஏய் அவன் வர்றாண்டி.. கொஞ்சம் நம்மளை மறைச்சுக்கலாம். கல்யாணுக்கு மட்டுமில்லே.. சுமதிக்கும் நம்மளைத் தெரியுமே.. ரவியையும் கூப்பிடாதே.. நான் இப்போ அவங்களை பார்க்க விரும்பலே.”

     

    என்று சொன்ன கோம்டி தன் தோழியுடன் அடுத்துள்ள கடையின் உள்ளே நுழைந்தாள். கல்யாணும் ரவியும் கூட வந்தப் பெண்மணியும் தன்னைக் கடந்த உடன் அவர்களறியாமல் பின் தொடர்ந்தாள். கீழே வந்தவுடன் அவன் ஃபோனில் அழைக்க சில நிடங்களில் அங்கே ஒரு ஊபெர் டாக்ஸி வந்தது. அதில் மூவரும் பின் சீட்டில் அமர்ந்து கொள்ள அந்த வண்டி போகத் தொடங்கியது.

     

    சாந்தியும் கோம்டியும் வேடிக்கை பார்த்தாலும் கோம்டி ஏனோ அவர்களை அதற்கு மேலும் பின் தொடர விரும்பவில்லை.

    “சரிடி.. சீக்கிரம் உன் டிரஸ் செலக்ஷனை முடிச்சுடலாம்.. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. போகணும்.”

     

    கோம்டி வீடு (க்லினிக்) மதிய வேளையில் கோம்டி தனியாக உட்கார்ந்து குறிப்பு எடுத்துக் கொள்ளும்போது அவளுக்கு ஃபோன் வருகிறது.

     

    கல்யாண் பேசினான்.

    “கோம்டி! வீட்டுலதானே இருக்கீங்க.. உடனே நம்ம வீட்டுக்கு வந்தால் சுந்தருடன் பேசலாம்! ரவியும் இங்கதான் இருக்கான்.” .

     

    ஒரு நிமிடம் யோசித்தாள். “சரி, இப்போ மணி ரெண்டாகுது.. அரை மணி நேரம் லேட்டானா பரவாயில்லையா? வருகிறேன்..  அவர் அங்க இருப்பாரா.. ஏதாவது மீடிங்க்னு போயிடுவாரா?” என்றாள்.

     

    “இல்லே.. இருக்க வெக்கிறேன்.” ஃபோனை வைத்தான்.

     

    அவள் இன்னொருவருக்கு ஃபோன் செய்தாள். “எப்படி இருக்கீங்க சூடாமணி அம்மா? சௌக்கியமா இருக்கீங்களா? எனக்கு உங்க நம்பரை சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் உங்க ஊர் போலீஸ் மூலமா வாங்கிக் கொடுத்தார். நாம ஃபோன்லயே பேசலாமா.. இல்லே நேர வந்தா பேசுவீங்களா? எப்படி சௌகரியம்? இப்போ நான் தனியா இருக்கேன். என் பக்கத்துல யாரும் கிடையாது.. ஆனா சிதம்பரம் எனக்குத் தெரியாத ஊரு. யாராவது தெரிஞ்ச போலீஸைத்தான் துணைக்கு அழைச்சுட்டு வரணும்..”

     

    “ஐய்யய்யோ இதுக்கெல்லாம் எதுக்கு இவ்வளவு தூரம் சிரமத்தோட வரணும்? உங்களுக்கு என்ன தேவையோ சொன்னீங்கன்னா பதில் சொல்லிடறேம்மா.. உங்க பேரு?”

     

    “என் பேரு கோம்டி.. இது வாட்ஸப் கால்தான்.. இதையே வீடியோ காலா மாத்தி பேசலாமா? உங்களுக்கும் என் மேல நம்பிக்கை வரும்..”

     

    வீடியோவில் அந்த சூடாமணி வந்தாள்.

    “சரி, இருக்கட்டும்.. நான் நேரா விஷயத்துக்கு வரேன் சூடாமணி..  உங்களுக்கு கந்தசாமியை எவ்வளோ வருஷமா தெரியும்?”

     

    “எந்த கந்தசாமிம்மா?” அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள் சூடாமணி.

     

    “இதோ பாருங்க சூடாமணி.. நான் முடிஞ்சவரைக்கும் உங்களையும் உங்க பொண்ணு பிரியாவையும் காப்பாத்ததான் முயற்சி பண்றேன்.. நீங்க கோ ஆபரேட் பண்ணலேன்னா சிதம்பரம் போலீஸ் துணையோட உங்களை சென்னை அழைச்சுட்டுவந்து போலீஸ் ஸ்டேஷன்ல வெச்சுதான் விசாரிப்பாங்க.. உங்க இஷ்டம்..”

     

    அவள் கை எடுத்து கும்பிட்டாள். “அம்மா இல்லேம்மா.. எனக்கு எதுக்கும்மா வீண்தொந்தரவெல்லாம். அந்த கந்தசாமியைப் பத்தி பேசவே வேணாம்னுதான் அப்படிச் சொன்னேன்மா.. நான் திருச்சில இருக்கறச்சே பழக்கம்மா அவர். அங்க ஒரு பெரிய அனாதைக் குழந்தைங்க காப்பகம்னு இருக்கு. அங்க பல வருஷமா வேலை பார்த்தேன்மா. ஏன்னா புருஷன் குடிகாரன்.. அவனையும் பாத்துக்கணும்.. அதுக்காக அந்த காப்பகத்துல கிட்டத்தட்ட மானேஜர் மாதிரி வேலை. அங்க கந்தசாமி அடிக்கடி வருவார். குழந்தைங்க மருத்துவச் செலவையெல்லாம் ஏத்துப்பார். அதுவும் பெண்குழந்தைங்கன்னா அடிக்கடி வெளியே அழைச்சுண்டு போய் ஊரெல்லாம் சுத்திக் காண்பிப்பார்.  அப்போதான் பழக்கம்மா.. அந்தக் காப்பகத்துலேர்ந்து மேல்படிப்பு படிக்க வெக்கிறேன்னு சில பொண் குழந்தைகளை தன்னோட செலவுல மெட்ராஸ்ல தெரிஞ்ச ஹாஸ்டல்ல வெச்சுப் படிக்க அனுப்பி வெச்சாரு. எங்க வீட்டுக்கு வந்து என் பொண்ணைப் பார்த்தார். அடிக்கடி வர ஆரம்பிச்சாரு.. அவருக்கு அப்பவே வயசு அம்பத்து அஞ்சோ அறுபதோ கூட இருக்கும். ஒருதடவை நான் வீட்ல இல்லாதப்ப என் பொண்கிட்ட மயக்க மருந்து கொடுத்து அத்துமீறிட்டார்மா. அவளுக்கு வயசு இருபதுதான்மா.. காலேஜ் ஃபைனல் வருஷம் போயிண்டிருந்தா.. எனக்கு இந்த விஷயம் தெரிஞ்சவுடனே சத்தம் போட்டேன்மா.. அவரு பயமுறுத்தினாரு. நாங்கல்லாம் பணக்காரங்க இல்லம்மா.. அடுத்த வாரமே நாங்க வேலையை விட்டுட்டு வீட்டைக் காலி பண்ணிண்டு எங்க ஊரு சிதம்பரம் வந்துட்டோம். ஆனாலும் அவரு விடலே.. என் பொண்ணு ரொம்ப முரண்டு பிடிச்சா.. அழுதாம்மா.. ஆனா பணம் பத்தையும் செய்யும்.. அவரு எங்க மூஞ்சில பணத்தை அள்ளி வீசினார்மா.. நாங்க வேற வழியில்லாம பொறுக்கிக்கினோம்..” அவள் அழுதாள். அழுதபடி இருந்தவள் புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்தபடி பேசினாள்.

     

    “புரியுது.. மேலே சொல்லுங்க சூடாமணி”

     

    “இந்த உலகத்துல எப்படி பிறந்தாலும் ஏழையா பொறக்கக்கூடாதம்மா.. அப்படி ஏழை வீட்ல பொறந்தாலும் அழகான பொண்ணா பொறக்கக்கூடாதும்மா.. அதனால் இத்தனையும் அனுபவித்தோம். பணம்தான்மா குற்றம் செஞ்சது. அந்தப் பணம் எங்க வாழ்க்கை சுகமா போறதுக்குத் தேவை. என் பொண்ணு நல்லா படிச்சவ.. ஆனா அவ இவரை மனசார ஏத்துக்கலை. ஆனா இந்த மாதிரி கொடுமை அவளுக்கு பிடிக்கலை.. வேற வழியில்லாம வயசு வித்தியாசம் ஜாஸ்தியானாலும் பரவாயில்லே.. இந்தாளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லச் சொன்னா.. இவரும் அப்படி பண்றேன்னு ஒரு வருஷகாலம் அப்படியே சொல்லிச் சொல்லி ஏமாத்தினாரும்மா. என் பொண்ணு ஒத்துக்காம சண்டை போட்டா.. எழுதி வெச்சுட்டுத் தற்கொலை பண்ணிப்பேன்னு அழுதா.. வேற வழியில்லாம அவரே ஏற்பாடு பண்றேன்னு சொல்லி அவர் உறவுக்கார பையனுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சார்மா.

     

    “மிஸ்டர் முரளிதானே அவர் பேரு?”

     

    “ஆமாம்மா.. ஆனா அத்தோட விட்டாரா.. நாலஞ்சு மாசத்துக்கு மாசத்துக்கு முன்னாடி இங்க வந்தாரு. கலியாணம் பண்ணிய பொண்ணைத் திரும்பவும் எங்கிட்டயே அனுப்பறேன்னு சொல்லி அஞ்சு லட்சம் பணம் கொடுத்தாரு. இனிமே பிரியாவைத் தானே பாத்துக்கறேன்னும் சொல்லிட்டுப் போயிட்டாரு. இது நடந்தவுடனே என் பொண்ணுக்கு ஃபோன் போட்டுப் பேசினேன்மா. அந்த ஆள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுன்னு தெளிவா சொல்லிடுத்து. பிரியா இப்போ மகிழ்ச்சியா கல்யாணம் ஆகி முழுகாம இருக்குது.. அதனால அவளே சொல்லிட்டா.. ‘இனிமே அந்தாளு பத்தி எந்தப் பேச்சும் தேவையில்லே.. அந்தாளைப் பத்திப் பேசினா அம்மா பொண்ணு உறவைக் கூட கட் பண்ணிடுவேன். ஜாக்கிரதை.. ன்னு கண்டிப்பா சொல்லிட்டாம்மா’ என் பொண்ணு. நான் அப்படியே சந்தோஷமா இரும்மா’ன்னு சொல்லிட்டேன்மா.. அவ்வளவுதான்.. அதுக்கப்பறம் நாங்க கந்தசாமியோட எந்தத் தொல்லையுமில்லாமதான் இப்போவரைக்கும் இருக்கோம். போனவாரம் அந்த ஆளை யாரோ கொலை பண்ணிட்டாங்கன்னு சொல்லி மூணாம் நாள் போலீஸ்க்காரன் வந்து சொல்லிட்டு ரஞ்சிதான்னு இங்க யாராவது இருக்காங்களான்னு கேட்டாங்க.. அப்படி யாரும் இல்லே.. இந்த கந்தசாமி என் பொண்ணை அப்படித்தான் கூப்பிடுவாருன்னு தெரியும்.. ஆனாலும் ரஞ்சிதா புஞ்சிதா உறவெல்லாம் போனவுடனே அந்தப் பேருல என்ன இருக்குன்னு அப்படி சொல்லிட்டோம்.. இவ்வளவுதான்மா..”

     

    “சூடாமணி! உனக்கு கந்தசாமி போனவாரம் அதாவது கொலை நடந்த அன்னிக்கு மத்தியானம் பத்துலட்சம் அனுப்பிச்சாரா? யாராவது வந்து கொடுத்தாங்களா?”

     

    “ஐய்யய்யோ..  அப்படியெல்லாம் ஒரு பைசா வாங்கல்லம்மா.. எப்போ என் பொண்ணு சொல்லிடுத்தோ.. அப்பவே அந்தக் கந்தசாமி உறவுல்லாம் போயிடுச்சும்மா.. ஆறு மாசம் முன்னாடி கொடுத்த அஞ்சு லட்சம் பணம் கூட அப்படியே வெச்சுருக்கேன்மா.. சந்தர்ப்பம் வரச்சே திருப்பிக் கொடுக்கணும்னுதான். அப்படிப்பட்டவ எதுக்கும்மா அவங்கிட்டே நான் பணம் வாங்கணும்? எங்க குலதெய்வம் சாட்சியா, என் பொண்ணுக்குப் பொறக்கப்போற குழந்தை மேல சாட்சியா சொல்லறேன்மா.. சத்தியமா ஒரு பைசா நான் வாங்கலே.. அப்படி பணம் கொடுக்கவும் யாரும் வரல்லேம்மா” அவள் அழுதுகொண்டே தன் கையை தலைமேல் வைத்துப் பேசினாள்.

     

    “சரி சூடாமணி.. எனக்கு இன்னொரு விஷயம் தெரிஞ்சாகணும். திருச்சிலேர்ந்து பொண்குழந்தைகளை மெட்ராஸ் அனுப்பிவெச்சு படிக்க வெப்பார்னு சொன்னியே.. அந்த இடம் சென்னையில இப்போ எங்க இருக்குன்னு சொல்லமுடியுமா?”

     

    “முடியும்மா.. ஆனா அந்த ரிகார்ட் திருச்சிலதான் இருக்கு. எனக்கு அந்தப் பொண்ணுங்க பேரெல்லாம் நல்லாவே ஞாபகம் இருக்கு.  நான் எல்லா விவரமும் கேட்டு வாட்ஸ் ஆப்’லியே கொஞ்ச நேரத்துல அனுப்பறேன்மா.. எதுக்கும்மா.. எல்லாரும் சின்னக் குழந்தைங்கம்மா.. என்னா வயசு 12, 13 இருக்கும் இப்போ..”

     

    “இருக்கட்டும் ஒரு விசாரணைக்குதான்.. நீ விவரம் அனுப்பு.. வேற ஏதாவது கேள்வி கேட்கணும்னா நான் உன்னைக் கூப்பிடறேன். சரி வெச்சுடு..”

     

    தொடரும்

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 20

     

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 19. திருநாவுக்கரசு நாயனார் (பகுதி – 1)

     

    திருநாவுக்கு அரசுவளர்

      திருத்தொண்டின் நெறிவாழ

    வருஞானத் தவமுனிவர்

      வாகீசர் வாய்மைதிகழ்

    பெருநாமச் சீர்பரவல்

      உறுகின்றேன் பேருலகில்

    ஒருநாவுக்கு உரைசெய்ய

     ஒண்ணாமை உணராதேன். 

    உழவாரத் தொண்டர் என்று போற்றப்படும், தேவார மூவருள் இரண்டாமவரான திருநாவுக்கரசர் நாயனார் பைந்தமிழோடு பல கலைகளையும் கற்றுத் தேர்ந்த பெருமகனார். இவர் சமண சமயம் சார்ந்தபோது, ‘தரும சேனர்’ என்ற பட்டப் பெயரோடு திகழ்ந்தவர். இப்பெருமான் தமிழையும், கலைகளையும் சிவபரம்பொருளாகக் கண்டு மகிழ்ந்து உளம் கனிந்து பாடுகின்றார்.  சிவபெருமானையே ஆசிரியன் என்றும் தமிழன் என்று கூறி மகிழ்வது அழகு. திருநாவுக்கரசு நாயனாரை சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் “திருநின்ற செம்மையே செம்மையாகக் கொண்ட திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்” என்று போற்றுகின்றார்.

    “தேவாரப்பதிகத்தைப் பாடினபடியால், நீ இனி நாவுக்கரசு என்ற பெயருடன் உலகில் நிலைத்திருப்பாய்” என்று சிவபெருமானார் அசரீரி வாக்கு அருளினார். திருஞானசம்பந்த நாயனார், இந்நாயனாரை ‘அப்பர்’ (தந்தை) என்று அழைத்தமையால் அப்பர் என்றும், இவர் தாண்டகம் எனும் விருத்த வகையைப் பாடியமையால் தாண்டக வேந்தர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
    கி.பி. ஏழாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் திருமுனைப்பாடி (நடுநாடு) நாட்டில், திருவாமூரில், குறுக்கையர் குடி எனும் சைவ வேளாளர் குலத்தில் புகழனார் மற்றும் மாதினியார் தம்பதியினருக்கு மூத்த குழந்தையாக திலகவதியார் எனும் திருமகளும், இரண்டாவதாக ஒரு ஆண் மகவும் அவதரித்தனர். இந்த ஆண் மகவுக்கு மருள்நீக்கியார் எனும் திருநாமம் சூட்டப்பெற்றது.

    திருநாவுக்கரசர் அவதரித்த திருமுனைப்பாடி எனும் திருத்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தேவாரம் பாடிய மூவர் பெருமக்களான, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரில் இருவர் அவதரித்த தலம் திருமுனைப்பாடி.

    “மண்மேல் நம்மைச் சொற்றமிழ்ப் பாடு என சிவபெருமானே கேட்க ஆலால சுந்தரரும் அருந்தமிழால் பாடினார். கல் மிதக்கச் செய்தும், மறைக்கதவம் திறந்தும், பாம்பு கடித்த பாலகனைப் பாரறிய எழுப்பியும் பெருமானே சால நீ பசித்தாய்” எனக் கூறிக் கட்டமுது கொடுக்கக் கன்னித்தமிழால் கல்லும் கரைந்துருகக் கவி பாடிய நாவுக்கரசுப் பெருமானும், ஆரூரரும் அவதாரம் செய்த நாடு இந்நாடு என்பது பெருஞ்சிறப்பாகும்.

    அறந்தருநா வுக்கரசும் ஆலால சுந்தரரும்

    பிறந்தருள உளதானால் நம்மளவோ? பேருலகில்

    சிறந்த்திரு முனைப்பாடி திறம்பாடும் சீர்பாடு

    என்கிறார் சேக்கிழார் பெருமான். சைவம் சார்ந்து அடியவர் பெருமக்களைப் பாடுவதே தம் பிறவிப் பயன் என்று கருதிய நாவுக்கரசர், ‘தொண்டர் புராணம்’ பாடினார். புகழ்மிக்க சான்றோர்களும் அருளாளர்களும் தோன்றும் நாடு வளம் கொழிக்கும் என்ற வகையில் நாவரசர் திரு அவதாரம் செய்த திருமுனைப்பாடி எனும் பதி வளமோடிருப்பதில் வியப்பேதுமில்லையே?

    மாசற்ற மதியினைப்போல் வளர்ந்து வந்த மருள் நீக்கியாரின் தமக்கை திலகவதியாரின் பன்னிரண்டாம் அகவையில், பண்டைய நாளின் வழக்கப்படி திருமணப் பேச்சு ஆரம்பித்தது. அறிவும் அழகும் நற்குணமும், குடிச்சிறப்பும் ஒருங்கே அமையப்பெற்ற கலிப்பகையார் என்ற வேளாண் குடித்தலைவருக்கு திலகவதியாரை மணமுடிக்க விரும்பி பெரியோர் சிலரை புகழனார்பால் அனுப்பினர். தந்தையாரும் தம் அருமை மகளைக் கொடுக்க இசைவளித்து அனுப்பினார்.

    இச்சமயத்தில் வடநாட்டு மன்னன் ஒருவன் படையெடுத்து வர கலிப்பகையாரும் கடமை பெரிதென வடநாடு நோக்கி படை கொண்டு சென்றவர் நீண்ட நாட்கள் நடந்த போரால் திரும்பவில்லை. இதற்கிடையே நாவுக்கரசரின் பெற்றோரும் நோய்வாய்ப்பட்டு இறையடி சேர்ந்தனர். பெற்றோரை இழந்த பிள்ளைகள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்தனர். போர்க்களம் சென்ற கலிப்பகையாரும் வீர மரணம் அடைந்தார்.

    பெற்றோர் கலிப்பகையாருக்கு மணமுடிக்க இசைந்ததால், தான் அவருக்கே உரியவள் ஆதலால் தன் உயிரை அவர் உயிரோடு இசைவிக்கத் துணிந்தார் அக்கன்னி திலகவதியார் எனும் கற்புக்கரசி. அதுகண்ட மருள்நீக்கியார் தம் தமக்கையார் திருவடிகளில் விழுந்து, தாய்க்குத் தாயான தமக்கையும் உயிர் துறக்கத் துணிந்தால் தாமும் அதற்கு முன் உயிர் துறப்பேன் என்று சபதமேற்றார் மருள்நீக்கி. நெக்குருகி நின்ற திலகவதியாரும் தம்பியார் உளவாக வேண்டும் என்ற விருப்பினால், நூல் தங்காது அனைத்துயிர்க்கும் அருள் தாங்கி இம்பர் மனைத்தவம் புரிய முடிவெடுத்தார்.

    தம்பியார் உளர் ஆக வேண்டும்

      என வைத்த தயா

    உம்பர் உலகு அணைய உறு

      நிலை விலக்க உயிர் தாங்கி

    அம் பொன் மணி நூல் தாங்காது

      அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி

    இம்பர் மனைத் தவம்

      புரிந்து திலகவதியார் இருந்தார். 

    இவ்வம்மையாரையே திருப்புகழ் எனும் தேனமுதத்தில் அருணகிரியார்,

    “மாது புகழை வளர்க்கும் திருவாமூர்” என்று போற்றினார்.

    மனைத்தவம் புரிந்த தமக்கையார் தம் தம்பியாரை கல்வி கேள்விகளில் மிக்க சான்றோனாக வளர்த்தார். தமிழகத்தில் அப்போது சமணம் தலைத்தூக்கியிருந்த காலம். உலக நிலையாமை, செல்வம் நிலையாமை என நிலையாமையையே நிலைக்களனாகக் கொண்டது சமணம். மருள்நீக்கியாரின் வாழ்வியல் சூழலில் ஏற்பட்ட பேரிழப்புகள் அவர்தம் மனத்தில் பெருஞ்சுமையாக நிலையாமையை எண்ணி எண்ணிச் சுழன்றது. நில்லாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கையல்லேன் எனத் தேர்ந்து கொல்லாமை மறைந்தொழுகும் சமண சமயம் சாய்ந்தார். சமண சமய நூல்கள், வேத நூல்கள் கற்று ‘தரும சேனர்’ எனும் புதிய பெயரோடு, சமண மதத்துறவியாகவும், அச்சமண மடாதிபதிகளில் ஒருவராகவும் ஆனார். அந்நாளில் பாடலிபுத்திரம் (இந்நாள் கடலூர்) எனும் ஊர் சமண சமயத் தலைவர்களின் தலைமை இடமாகவும் புகலிடமாகவும் இருந்தது. சமண சமயக் கொள்கைகளை விளக்கி மக்களை அச்சமயத்தின்பால் ஈர்த்தார்.

    தம்பியாரின் இந்நிலைக் கண்ட தமக்கையாரோ சிந்தை நொந்தார். மனம் தாளாது இருந்தவர் திரு அதிகை வீரட்டானம் என்னும் திருத்தலத்தை அடைந்து அங்கு ஒரு திருமடம் அமைத்து வீரட்டானப் பெருமானுக்கு திருப்பணி செய்து அப்பெருமானைப் புகழ்ந்து பாடி வழிபட்டு இருந்தார். தம்பியாகிய மருள்நீக்கி சைவம் நீங்கச் சமணம் சார்ந்து வாழும் பெருந்துயரை எம்பெருமானிடம் முறையிட்டு, தம்பி மீண்டும் சைவம் வரல் வேண்டும், அதற்குத் திருவருள் புரிய வேண்டும் என்று அனுதினமும் வேண்டி வழிபட்டு நின்றார்.

     மன்னு தபோ தனியார்க்குக் கனவின்

      கண் மழ விடையார்

    உன்னுடைய மனக் கவலை ஒழி

      நீ உன் உடன் பிறந்தான்

    முன்னமே முனியாகி எனை

      அடையத் தவம் முயன்றான்

    அன்னவனை இனிச் சூலை மடுத்து

      ஆள்வம் என அருளி. 

    சூலை நோயால் மருள்நீக்கியை ஆட்கொள்வோம் என்று திலகவதியாரின் கனவில் தோன்றி அருள்பாலித்துச் சென்றார் சிவபெருமான். தருமசேனராம் மருள்நீக்கியின் வயிற்றில் ஏற்பட்ட சிறிது வலி பன்மடங்காகப் பெருகி சமணத் துறவிகளின் மந்திரங்களுக்கும், மருந்துகளுக்கும் கட்டுப்படாமல் உயிர் போவது போன்ற வலியால் துடிதுடிக்கச் செய்தது. தாய்க்குத் தாயான தமக்கையாரின் நினைவு வர அவரை உடனே காண விழைந்தார். நம்பிக்கைக்குரிய ஒரு சமையல்காரரை அனுப்பி தமக்கையாருக்கு செய்தி சொல்லச் செய்தார்.

    நன்று அறியா அமண் பாழி

      நண்ணுகிலேன் எனும் மாற்றம்

    சென்று அவனுக்கு உரை

      என்று திலகவதியார் மொழிய

    அன்று அவனும் மீண்டு போய்ப்

      புகுந்தபடி அவர்க்கு உரைத்தான். 

    செய்தி கொண்டு போனவன் தமக்கையோடு வருவான் எனக் காத்திருந்த தருமசேனர் தனியாக வந்தவரைப் பார்த்து திடுக்கிட்டு கேட்டபோது, அம்மையார் அங்கு வர மறுத்த செய்தியைக் கூறினார். சூலை நோயிலிருந்து விடுவிக்க இயலாத சமண மதத்தை நம்பி இனியொரு பயனும் இல்லை என்று உணர்ந்து தமக்கையாரின் திருவடியையே சரணமாக அடைவேன் என்று சூலுரைத்து, அனைத்தையும் விடுத்து, வெள்ளாடை தரித்து திருவதிகைக்குக் கிளம்பினார்.

     அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு

      எய்தி இதற்கு இனி யான்

    எவ்வாறு செய்வன் என

      ஈசர் அருள் கூடுதலால்

    ஒவ்வா இப் புன் சமயத்து

      ஒழியா இத்துயர் ஒழியச்

    செவ்வாறு சேர் திலக வதியார்

      தாள் சேர்வன் என.

    தம்பியாரின் நிலை கண்டு வருந்திய திலகவதியார், அவருக்குத் திருநீறளித்து வீரட்டானப் பெருமானைத் தரிசித்து வரப் பணித்தார். திருக்கோயிலை வலம் வந்து வணங்கி எழுந்த மருள்நீக்கியார் உள்ளுணர்வு உந்த செந்தமிழ்ப் பதிகம் பாடலானார். திலகவதியாரின் ஆலோசனைப்படி தருமசேனர் சிவபெருமான் மேல் “கூற்றாயினவாறு விலக்ககிலீர்” என்னுந் தேவாரத் திருப்பதிகத்தைப் பாடியருளினார்.

    நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை

      அன்பு உறுசிந்தையில் நேசம் மிக

    மாற்றார் புரம் மாற்றிய வேதியரை

      மருளும் பிணி மாயை அறுத்திடுவான்

    கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்

      எனநீடிய கோதில் திருப்பதிகம்

    போற்றால் உலகு ஏழின் வரும் துயரம்

      போமாறு எதிர் நின்று புகன்றனரால்.

    உடனே சூலைநோய் நீங்கிற்று.

    கூற்றாயின வாறுவி லக்ககிலீர்

      கொடுமைபல செய்தன நானறியேன்

    ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்

      பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

    தோற்றாதென் வயிற்றின் அகம்படியே

      குடரோடு துடக்கி முடக்கியிட

    ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில

      வீரட்டா னத்துறை அம்மானே. 

    அந்தப் பாடலின் இனிமையில் கரைந்த சிவபெருமான், “செந்தமிழ்ச் சொல் மலர்களால் ஆன திருப்பதிகமாகிய பாமாலையை நீ பாடியமையால் இன்று முதல் உன் நாமம் திருநாவுக்கரசு என ஏழு உலகமும் ஏத்துக” என அசரீரியாக வானில் ஓர் ஒலி ஒலித்தது.

    சிவாலயங்களுக்கு மக்கள் செல்வது குறைந்து, ஆலயங்கள் அனைத்தும் கவனிப்பாரின்றி செடி கொடிகள் முளைத்து  சிதைந்து போன கட்டடங்களாக ஆன நிலையில்தான் தருமசேனரான மருள்நீக்கியார் சைவத்துக்கு மீண்டார். கோயில் கோபுரங்களில் மரம் வளர்ந்து தகர்த்தது. கோயிலைச் சுற்றிலும் புல்லும் பூண்டும் முள் செடியும் வளர்ந்தன. மக்கள் செல்லவே அஞ்சும் நிலை ஏற்பட்ட இந்த நேரத்தில்தான் அப்பரடிகள் சைவம் சார்ந்தார். அது முதல் திருநாவுக்கரச நாயனார் சைவத் தொண்டு செய்யலானார். தம் கரங்களில் புல், பூண்டு அகற்றும் ‘உழவாரம்’ என்ற கருவியை எடுத்துச் சென்று ஆலயத் திருப்பணிகளை செய்து மக்களையும் அவ்வழியில் ஆற்றுப்படுத்தினார். பல்வேறு சிவாலயங்களில் உழவாரப் பணி செய்து முன்னோடியாக இருந்தமையால், “உழவாரத் தொண்டர்” என அழைக்கப்பட்டார். இன்றும் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர்.

    திருவதிகை சென்ற தங்கள் சமண மதத் தலைவர் தமக்கையாரிடம் சென்று சைவம் சார்ந்தார் என்ற செய்தியை அறிந்த சமணர் ஒன்றுகூடி ஆலோசனை செய்தனர். பின் பல்லவ மன்னனிடம் சென்று, தருமசேனர் சூலைநோய் என்று பொய் கூறி சைவ சமயம் சேர்ந்ததால் நம் சமண சமயம் தாழ்ந்தது எனக்கூறி அவரைக் கோபமூட்டினர். மன்னனும் தன் ஆணையை மீறிய அவனைத் தண்டித்து ஒறுத்தல் வேண்டும் என்றார். நாவுக்கரசரை கைது செய்து வரும்படியும் ஆணையிட்டார். மன்னனின் ஆணையை ஏற்று அமைச்சர்களும், அதிகாரிகளும் திருவதிகை நோக்கிச் சென்று, நாவுக்கரசுப் பெருமான் திருமடத்தில் அவரைப் பார்த்து, பல்லவ மன்னனின் ஆணையைப் பற்றிக் கூறினர்.

    நாவுக்கரசரும் “மறு மாற்றத் திருத்தாண்டகம்” எனும் செந்தமிழ்ப் பாமாலையால் பதிலளித்தார்.

    நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்

            நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்

    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்

            இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை

    தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான

            சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்

    கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்

            கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.

    ஆனால் அமைச்சர்களும் சேவகர்களும் அப்பரடிகள் திருவடியில் வீழ்ந்து, மன்னவன் ஆணையை நிறைவேற்றாவிட்டாலும், மன்னன் தங்களை தண்டிக்காமல் இருப்பதற்காகவாவது வரவேண்டும் என்று பணிந்து வேண்டினர். அப்பரடிகளும் இறைவன் சிவபெருமான் உடனிருக்க அங்கு செல்வதில் தடையில்லை என்று கூறி பல்லவன் அரண்மனை நோக்கிச் சென்றார். பல்லவ மன்னனோ நாவுக்கரசரை சந்திக்காமலேயே விசாரிக்காமலே தண்டனை அளித்தான்.

    நாவுக்கரசரை நீற்றறையில் (சுண்ணாம்பு கொதிக்க வைக்கும் அறை) அடைத்து வைத்தான். தில்லைக் கூத்தப்பெருமான் திருவடியை நினைந்து வழிபட்டவருக்கு எந்தத் தீங்கும் நேராது உயிர் பெற்றார்.

    மாசில் வீணையும் மாலை மதியமும்
    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
    மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
    ஈச னெந்தை யிணையடி நீழலே.

    எனப் பாடினார். எட்டு நாட்கள் கடந்து நீற்றறையை நீக்கியபோது இறையருளால் நாவரசர் அன்றலர்ந்த செந்தாமரை போல் புன்னகைத் தவழும் திருமுகத்தோடு காட்சியளித்தார்.

    அடுத்ததாக நஞ்சு கலந்த பாலடிசில் பருகத் தந்தனர்.

    துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்தி ராதே
    அஞ்செழுத் தோதில் நாளு மரனடிக் கன்ப தாகும்
    வஞ்சனைப் பாற்சோ றாக்கி வழக்கிலா வமணர் தந்த
    நஞ்சழ தாக்கு வித்தார் நனிபள்ளி யடிக ளாரே.

    அந்த நஞ்சும் அவரை ஒன்றும் செய்யவில்லை.

    அடுத்ததாக யானையை விட்டு மிதிக்கும்படி ஆணையிட்டான். ஆனால் அந்த யானை அவரை வணங்கிச் சென்றது. இதனால் வேறு வழி இன்றி திருநாவுக்கரசு நாயனாரை ஒரு கல்லில் கட்டி கடலில் வீசும்படி அரசன் ஆணையிட்டான்.

    சொற்றுணை வேதியன் சோதி வானவன்,
    பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக்
    கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினு,
    நற்றுணை யாவது நமசி வாவே.

    என்று வீரம் பொங்கப் பாடினார் திருநாவுக்கரசு நாயனார். இதனால் கட்டிய கல் பூவாக மாறி கடலில் மிதந்து வந்தது. திருநாவுக்கரசு நாயனாரும் கரை வந்து சேர்ந்தார். சிவபெருமானின் அருளைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மனம் மாறி இறுதியில் பல்லவ மன்னனும் சைவ சமயத்தைத் தழுவினான். அப்பரடிகளின் திருவடிகளில் வீழ்ந்து சமணம் விட்டு சைவம் சார்ந்தான். அவனால் உருவாக்கப்பட்ட சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்துத் தகர்த்து அக்கற்களைக் கொண்டே ‘குணபரவீச்சுரம்’ என்னும் திருக்கோயில் கட்டினான்.

    தொடரும்

     

     

     

    Share
  • ஒரு வாசகம் (சிறுகதை)

    முனைவர் த. ஆதித்தன்
    இணைப் பேராசிரியர்
    அரிய கையெழுத்துச் சுவடித் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

    அலுவலகத்தில் இருந்து மாலை வீடு திரும்பும் வழியில் தேநீர் அருந்துவதற்காகச் சாலையோரக் கடையில் வண்டியை நிறுத்தினார் கதிர். கண்ணாடிப் பெட்டிகளுக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பலகாரங்களின் மணம் ஈர்த்தது.

    “பருப்பு வடை கொடுங்க” என்றார். காகிதத் துண்டினுள் வைத்து கடைக்காரர் கொடுத்த வடையை வாங்கியபடி அங்கே சாலையோரம் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார். வடையைப் பிய்த்து வாயினுள் திணித்தார். மணம் தந்த ஈர்ப்பு ஒருபுறம், அதன் முறுமுறுப்பும், பருப்பு, மசாலா இவற்றின் சுவை ஒரு புறமும் என ஈர்ப்பினை அதிகரிக்க அனுபவித்து உண்டார்.

    “சார் அப்படியே ஸ்டாங்கா ஒரு இஞ்சி டீ”. சென்ற மாதம் ஒரு நாள் ஊருக்குத் தபால் அனுப்புவதற்காக இக்கடையின் அருகில் இருக்கும் கொரியர் அலுவலகத்திற்கு வரும் போதுதான் இக்கடைக்கு முதன் முறையாக வந்தார். பதார்த்தங்களின் மணமும், சுவையும் ஈர்க்க இப்பொழுது அடிக்கடி வரும் வாடிக்கையாளர்.

    பக்கத்தில் இருந்த நாற்காலியில் மாலைநேர நாளிதழ்கள் இருந்தன. ஒன்றை எடுத்து பெரிய எழுத்துகளில் இருக்கும் தலைப்புகளைப் படித்தப்படி கடைசிப் பக்கம் வரவும், வடை சாப்பிட்டு முடிக்கவும், கடைக்காரப் பையன் தேநீரைக் கொண்டு கொடுக்கவும் சரியாக இருந்தது.

    கடையில் கூட்டம் குறைவுதான். இருந்தாலும் வாடிக்கையாளர்கள் கல்லாப் பெட்டி அருகில் அட்டையில் ஒட்டியிருக்கும் கியூ.ஆர் கோட் என்னும் விரைவுத் துலக்கிக் குறியீட்டை செல்போன் மூலம் புகைப்படம் எடுத்து, பணம் செலுத்தும் போது வரும் ஒலி, சாலையில் செல்லும் வாகனங்களின் ஓசை, கடையின் முன் அமர்ந்ததும், நடந்தபடியும், போனில் எதை எதையோ பேசிக் கொண்டிருப்பவர்களின் சப்தம் போன்றவை ஒன்று சேர்த்து எழும்பும் ஓசை அவனுள்  இசையாக ஊடுருவியது. அதை ரசித்தபடி தேநீரைக் குடித்து முடித்தார்.

    அங்கிருந்த நபர்களின் முகங்களை ஏனோ இன்று கவனித்தார். அவரை அறியாமல் கண்கள் அவர்களை ஆராய்ந்தது. யாரும் தவறுதலாக எடுத்துவிடக்கூடாது என தோன்றியது. உடனே, “சார் பருப்பு வடை நல்லா இருக்கு. இன்னொரு வடை எடுத்துக்கிறேன்” என்றபடி எடுத்தார்.

    சாப்பிட்டபடியே பார்வையைப் பரவவிட்டார்.  வரும்போது எல்லாம் பார்க்கும் கூட்டம்தான்.  இன்று உன்னிப்பாகக் கவனிக்கும் போது இயல்பாய் இல்லாமல் இருந்தது.  நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தபடி வடையைக் கொஞ்சம் கொஞ்சமாக மென்று தின்றுகொண்டே கடைக்கு வந்திருந்தவர்களைக் கவனிக்கும்போது, திடீரென கவனத்தில் உறைத்தது.  அங்கிருந்தவர்கள் பெரும்பாலும் விலைஉயர்ந்த ஆடை அணிந்து நாகரிகமாகவும், பகட்டுடனும் தோன்றினார்கள்.  அவர்கள் இங்கு ஏன் வருகிறார்கள் என்று எண்ணி ஆச்சரியப்பட்டார்.  காரணம்,  இந்த சாலையோரக்கடை அப்படியொன்றும் உயர்ந்ததாகத் தோன்றவில்லை.  மீண்டும் மீண்டும் அவரது கண்கள் அவர்களின் முகங்களை நோக்கியே சென்றன.  பெரும்பாலானவர்களின் விரலிடுக்குகளில் சிகரெட். அவர்களின் கண்கள் இலேசாகச் சிவந்து இருப்பது அதிர்ச்சியளித்தது.  சிலர் பான்மசாலா பாக்கெட்களைத் திறந்து பகிர்ந்து கொண்டனர்.  பார்வைக்கு எங்குமே தென்படாத அப்பொருள்களைக் கடைக்காரர் மறைவாக வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்து எடுத்துக்கொடுப்பதும் இன்றுதான் அவர் கண்களில் பட்டது.  அதிர்ச்சியுடனே சாப்பிட்டதற்கான தொகையைக் கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டார்.

    *******

    வீட்டிற்கு வந்ததும் உடைமாற்றி, கைகால்களை அலம்பிக்கொண்டு, முன்அறையில் ஷோபாவில் உட்கார்ந்தார்.  தொலைக்காட்சியை இயக்கினார்.  போதைப் பொருட்களுக்கு எதிரான அரசின் விளம்பரம் ஓடியது.  ஆத்திரத்துடன் தொலைக்காட்சியை அமர்த்தினார்.  அவரது அறைக்குள் வந்த மனைவி,

    “டீ குடிக்கிறீங்களா? கொண்டு வாரேன்”

    “வேண்டாம், வரும்போது கடையிலேயே குடிச்சிட்டேன்.  நீ குடிச்சியா….. பையன் எங்க”?

    “புதுசா கேக்குறீங்க பையன பற்றி….. வளந்திட்டானுல…. முன்னால போல இல்லனு  தோணுது….. ”

    “என்னாச்சு”

    “உங்களுக்கு எப்போதும் ஆபீஸ் ஆபீஸ்னு,  நானும் வீட்டுப்வேலைய பார்த்திட்டு டெய்லரிங் ஒர்க் பார்க்கிறதால சோர்ந்து போயிடுறேன்”.

    “என்ன சொல்லவர்ற….. ஒழுங்கா சொல்லு… ”

    “எப்பொழுதும் போல லேப்டாப் ஓப்பன் பண்ணி ஆபீஸ் ஒர்க்க பார்க்க வேண்டியதுதானே, புதுசா என்ன கேள்வி”?

    “திட்டுறியா? அல்லது கோபிச்சுக்கிறியா”?

    “ஒங்கள திட்டமுடியுமா? அல்லது  உங்ககிட்ட கோபிச்சுக்கத்தான் முடியுமா”?

    “நிறுத்து  … நேரடியா விசயத்த சொல்லு…” அவள் கதிரின் அருகில் வந்து அமர்ந்தாள்.

    கண்கள் கலங்கின.. “அவனுக்குப்  படிப்புல கவனம் குறைஞ்சமாதிரி தெரியுது… ஆறாம் வகுப்பு வந்தாச்சு.  அதுக்கு ஏத்த பொறுப்பும் இல்ல… ஒழுங்கா சாப்பிடறதும் இல்ல…. வந்ததுமே கதவ சாத்திகிட்டு தூங்கிடுறான்.  கேட்டா சோர்வா இருக்குங்கிறான்..”

    “சரி சின்னப் பையன்தான.. நான் பாக்குறேன்.. சாப்பிட்டானா? ”

    “ஸ்கூல்ல இருந்து வந்த உடனேயே பசிக்கிதுன்னான்.. யூனிஃபார்ம் கூட மாத்தல… கிச்சனுக்குப் போயி நாலு பிரட்ட எடுத்து ஜாம் தடவி சாப்பிட்டுட்டு படுக்கப் போயிட்டான்… ”

    “படிக்க சொன்னியா? ”

    “ஸ்கூல்லயே படிச்சிட்டானாம். போன வருசம்னா நீங்க ஆபீஸ் போகும்போது அவன ஸ்கூல்ல விட்டுட்டு போவீங்க.. இப்போ ஸ்கூல் வேன்ல அனுப்புறோம்.  ஆறே முக்காலுக்கே வேன் வந்திருது.  காலையிலேயும் அவன் ரெடியாகி வேனுக்குப் போறதுக்குதான் நேரம் சரியா இருக்கு…. ”

    “காலையில நான்கு மணிக்கு எழுந்திரிக்கணும்.. எழுந்திரிக்க வைக்கணும்”.

    “சரிதான்.. அவன் குழந்தைங்க….. பத்துவயசுதான ஆகுது.  இருந்தாலும் ஹோம்வொர்க் இருந்தா காலையிலேயே எழுந்திருச்சி பண்ணிடுறான்.. ”

    “ம்….. கவனிக்கிறேன்”   என்றபடி மகனின் அறைக் கதவைத் திறந்தார்.  மனைவியும் உடன் வந்தாள்.  கட்டில் அருகில் புத்தகப்பை திறந்த நிலையில் இருந்தது.  கட்டிலில் படுத்திருந்த முருகன் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தான்.   அவள்,

    “பாத்தீங்களா  யூனிஃபாம்ம மாத்திட்டு படுன்னு சொன்னா…. சட்டய கழற்றவே இல்ல… நிக்கர மட்டும் கழற்றியிருக்கான், அதையும் கட்டில்லேயே போட்டிருக்கான்.  பீரோக்குள்ள எவ்வளவு துணி இருக்கு, நீங்களாவது ஒண்ண எடுத்து போட்டுவிடுங்க..  எனக்கு டெய்லரிங் ஒர்க் இருக்கு… வர்ரேன்…” என்றபடி சென்றுவிட்டாள்.

    கதிர் கட்டிலில் சரிந்து  படுத்திருந்த மகனைத் தூக்கி நேராகப் படுக்கவைத்தார்.  தினமும் காலையில் மட்டுமே, அதுவும் புறப்படும் போக்கில் மகனைப் பார்ப்பதோடு சரி.  அவனோடு அமர்ந்து பேசி பல மாதங்கள் இருக்கும் போல் தோன்றியது.  கட்டிலில் கிடந்த சீருடை கால்சட்டையையே போட்டு விடுவோம் என்று அதை எடுக்க முயன்றார்.  அதன் ஒரு பாக்கெட் பகுதி மகனின் ஒரு கைப்பிடிக்குள் இருந்தது.  விரல்களைப் பிரித்து எடுத்தார்.  கால்சட்டையில் மாட்டியிருந்த பெல்ட்டை கூட கழற்றாமல் விட்டிருந்ததைப் பார்த்து வெறுப்பானார்.  பெல்ட்டை நீக்கி அருகில் இருந்த மேசையில் வைத்தார்.  கால்சட்டையை மாட்டிவிடுவதற்காக உதறினார்.  அதன் பாக்கெட்டிலிருந்து பான்மசாலா பாக்கெட் வெளியில் விழுந்தது.  அதைக் கையில் எடுத்தப்படியே அதிர்ச்சியில் கட்டிலில் அமர்ந்தார்….

    தலை சுற்றியது.   நம்ம குழந்த, ஆறாவது படிக்குற பையன் பாக்கெட்ல….. அவரால் ஜீரணிக்க முடியவில்லை… ஆழ்ந்து தூங்கும் பையனைப் பார்த்தபடியே இருந்தார்….

    அறைக்குள்ளே வந்த அவர் மனைவி,  “எவ்வளவு நேரமா மகனையே பார்த்திட்டு இருப்பீங்க…  நிக்கர போட்டுவிட்டுட்டு வராம, உங்க அழகுராசாவ ரசிச்சிட்டே இருக்கீங்க போலருக்கு…. பாசம் பொங்குது…. ”

    எதுவும் பேசாமல் போர்வையைப் போர்த்திவிட்டுவிட்டு கால்சட்டையைப் பான்மசாலா பாக்கெட்டோடு கையில் எடுத்தபடி எழுந்திருந்தார்….

    மீண்டும் அவர் மனைவி, “சரி சின்னபையன்தான… படுத்துகிடட்டும்,  நிக்கர அழுக்குத் துணிகள போடுற கூடையில போட்டிருங்க…. ”

    “இவனா சின்னப்பையன்…..” என்று தொடங்கியவர் சட்டென்று நிறுத்திக் கொண்டார்.  தனது அதிர்ச்சியையும், பதட்டத்தையும் மனைவிக்குக் கடத்தவேண்டாம்.  மெதுவாகச் சொல்லிக்கொள்ளலாம் என நினைத்தபடி அங்கிருந்து நகர்ந்தார்..

    “நீங்க அவன்கூட நேரம் செலவு பண்ணினாதான…. வேகமா வளர்ந்திட்டான்…  அவன் வளர்ந்திருக்கிறதயே  இண்ணைக்குத்தான் பாக்கிறதுபோல சின்னபையனாங்கிறீங்க…..  ம்   ஆனா எண்ணைக்கும் அவன் நமக்குக் குழந்தைதாங்க”  என்றபடி நகர்ந்தாள்.

    எதையும் அவர் உள்வாங்கும் மனநிலையில் இல்லை.. அதிர்ச்சியில் இருந்து மீளமுடியவில்லை.  கடும் ஆபத்தான நிலையில் நிற்பதைப் போல தோன்றியது.  பான்மசாலா பாக்கெட்டை மறைத்து வைத்துவிட்டு, கால்சட்டையை அழுக்குத்துணிகள் போடும் கூடையில் போட்டுவிட்டு திரும்பும்போது,

    “சாப்பாடு ரெடி, சாப்பிடலாம்  வாங்க… ” என்றாள்.  வலி  நிறைந்த உள்ளத்தோடு பின்னால் சென்றார்.

    *******

    மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் கதிர் எழுந்துவிட்டார்.  மனைவி   “இண்ணைக்கு லீவுதான…. கொஞ்ச நேரம் படுங்க… ”   என்றாள்

    “நீ ரெஸ்ட் எடு… நான் உறுப்பினரா இருக்கிற பன்னாட்டு நண்பர்கள் சங்கம் சார்பா, நகராட்சி பூங்காவ கிளீன் பண்றோம்… ஆறு மணிக்கு ஆரம்பிக்கிறோம்…  அப்போதான் வாக்கிங் வர்ரவங்ககிட்டேயும் விழிப்புணர்வ ஏற்படுத்தமுடியும், அங்கேயே டிபன் சாப்பிட்டிடுவேன்.  உங்க இரண்டுபேருக்கு மட்டும் சமைச்சுக்கோ… ” என்றபடி தயாராகத் தொடங்கினார்.

    மகன் படுத்திருந்த அறையை எட்டிப் பார்த்தார்… இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான்.. மனதுக்குள் இருந்த அதிர்ச்சி, கோபமாக மாறியிருந்தது.  அவனை எழுப்பி ஏண்டா.. எனக்கேட்டு ஓங்கி அறையலாம் போல் இருந்தது.

    அடக்கிக் கொண்டார்… தயாரானதும் மனைவியிடம்,  “கதவ உள்பக்கமாகப் பூட்டிக்கோ… நான் கிளம்புறேன்…” என்றபடி பதில் எதிர்பாராமல் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

    பூங்கா அருகில் செல்லும்போதே நிகழ்ச்சி தொடங்கும் நிலையில் இருந்தது புலப்பட்டது..  வண்டியை நிறுத்திவிட்டு வேகமாகச் சென்றார்.  வா வா என நண்பர்கள் அழைத்தனர்.  விழிப்புணர்வு நிகழ்வுக்கான பதாகையை இருவர் விரித்துப் பிடித்தனர்.   அதன் பின்னால் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் புகைப்படத்திற்காக நிற்க தொடங்கினர்.  இவரும் சேர்ந்து கொண்டார்.  அருகில் தூய்மைப்படுத்துவதற்கான உபகரணங்கள் இருந்தன.  புகைப்பட நிகழ்வு முடிந்ததும் தன்னார்வலர்கள் உபகரணங்களை எடுத்துக்கொண்டு தூய்மைப் பணியில் இறங்கினர். சிலர் அங்கு வந்து செல்பவர்களிடம் விழிப்புணர்வுக்கான துண்டு பிரசுரங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தனர்.  எதிலும் மனம் லயிக்காததால் பூங்காவினுள் கட்டப்பட்டிருந்த சிமெண்ட் இருக்கையில் அமர்ந்தார்.  சில நிமிடங்களில் அருகில் இருந்த இருக்கையில், நடைபயிற்சியை முடித்த இரண்டு கல்லூரி மாணவர்கள் வந்தமர்ந்தனர்.  ஒருவன் சட்டைப்பையில் இருந்து பான்மசாலா பாக்கெட்டை எடுத்து சிறிது கையில் கொட்டினான்.  இது கண்ணில் பட்டதும் கதிர்க்குப் படபடப்பு அதிகமாயிற்று.  அதற்கிடையில் ஒருமாணவன்,

    “ஏண்டா இப்படி போதைக்கு அடிக்ட் ஆயிட்டே…. விட முயற்சி பண்ணுடா…. ”

    “ஸ்கூல்ல வைச்சே பழகினதுடா….. விட முடியல…. என்றபடி பான்மசாலாவை வாயினுள் வைத்தான்…. ”

    “வீட்ல கண்டுபிடிக்கலயா?  …… ”

    “எங்கப்பா எப்போதும் ஆபீஸ், ஆபீஸ்னு ஆபீஸ் வொர்க்கிலேயே இருப்பார்… லீவு நாளுனா இதோ சர்வீஸ்ங்கற  பேர்ல பன்னாட்டு நண்பர்கள் சங்கம் பண்றாங்களே…. இதேபோல போயிடுவாரு…… “வீட்ட எங்க கவனிச்சாரு…. அவருக்கு வீட்டையும் ஆபீசையும் பேலன்ஸ் பண்ணத் தெரியலடா… ”

     “சோசியல் சர்வீசும் தேவதானடா….. இதோ பாரு சிறப்பா… பண்றாங்களேடா…..”

    “தெரியலடா உனக்கு… சர்வீஸ் நூறு ரூபாய்க்குப் பண்ணுனா ஆயிரம் ரூபாய்க்கு விளம்பரம், அவங்களுக்கான சாப்பாடுனு செலவு பண்ணுவாங்கடா….”

    “கொஞ்சமாவது நல்லது நடக்குதா இல்லையா? …. ”

    “டேய் முதல்ல… அவங்கவங்க வீட்ட ஒழுங்கா கவனிக்காங்களான்னு பார்த்தா உனக்குப் புரியும்…. ஒவ்வொரு வீடும் நல்லபடியா இருந்தாலே சமுதாயம் நல்லாயிடும்டா…. மாற்றம், சர்வீஸெல்லம் ஒவ்வொரு வீட்ல இருந்தும் வரணும்டா…. அங்கிருந்தே தொடங்கணும்டா….. ”

    “நீ போதைக்கு அடிமையானதுல ஒங்க அப்பாவுக்குப் பங்கு இருக்குங்கிறியா?….. ”

    “கண்டிப்பா….. ஊருக்கும், நாட்டுக்கும் உண்மையிலேயே நல்லது  செய்றதுன்னா வீட்ல உள்ள குழந்தைகள நல்ல தலைமுறையா உருவாக்குறதுதான்.  வீட்ல எங்ககூட நேரம் செலவுபண்ணி கவனிச்சிருக்க வேண்டாமா?  எங்க மாற்றத்த கண்டுபிடிச்சி திருத்துறத விட்டுட்டு…. சொல்வாங்களே  கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானத்த கிழிச்சிட்டு வைகுண்டம் போக ஆசப்பட்ட கதைன்னு…..  அது போலத்தான் இவங்க சேவையெல்லாம்”.

    “உனக்கே நல்லா தெரியுதேடா…..  இது கெட்டதுணு விட்டுட வேண்டியதுதானே….”

    “இப்போ முத்திப்போச்சுடா….. ஸ்கூல்ல படிக்கும்போது திருந்தியிருந்தா  ஈசியா இருந்திருக்கும்…..”

    “கண்டிப்ப மட்டுமே காட்டுற அப்பாவுக்கு எங்கிட்ட அன்பா, அரவணைப்பா நடந்துக்ற,  புரிஞ்சிக்கிற பக்குவம் இல்ல…. என்னாலயும் அவங்க ஓடுற ஓட்டத்துல டிராவல் பண்ண முடியல…. பிடிக்காம ஒதுங்கி ஒதுங்கி போனதுலதான் இப்படி மாட்டிக்கிட்டேன்டா….”

    “அதுக்காக சர்வீஸ் பண்றதையும், சோசியல் கான்ட்றிபூயூசனையும்  குறை சொல்லலாமா”?

    “சரியான இடத்துல போடுற உழைப்புத்தான் பயன்தரும்.  அதேபோல நுனிமரத்துல இருந்திட்டு அடிமரத்த வெட்டுறது போலத்தான். குடும்பத்த பார்க்காம, சமுதாயத்த திருத்த வருவதும், அடுத்த எலக்சன பற்றி மட்டுமே, அதுதான் அடுத்த தேர்தல்ல வெற்றி பெறுவத மட்டுமே முதன்மையா நினைக்கிறவங்க ஆட்சிக்கு வந்தா இப்படித்தான்…. அவங்ககிட்ட அடுத்த தலைமுறைய பற்றி நினைக்குற எண்ணம் எப்படி இருக்கும்…. அவங்க எப்படி போதையில்லாத சமுதாயம் உருவாகவும், இளைய சமுதாயம் இப்படி அடிமையாகாம இருக்கவும், பாடுபட போறாங்க…. எப்படி போதைய ஒழிக்க போறாங்க?   வாய்ப்பில்ல…. அதுவர பெற்றோர்களுக்குத்தான் அந்தபொறுப்பு…  வீட்ட பாத்திட்டு அப்புறமா பொதுவெளிக்கு வரலாம்…. நல்லா புரிஞ்சுக்கோ ஒவ்வொரு வீடும் நல்லா இருந்தா நாடுதானா நல்லாயிடும்….”

    அவர்களின் உரையாடல் தொடர்ந்தது கொண்டிருந்தது. மாணவர்களின் பேச்சு கதிரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது.  எழுந்தார் நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம், வீட்டிற்கு அவசரமாகச் செல்ல வேண்டியிருப்பதாகச் சொல்லிவிட்டு புறப்பட்டார். ஒவ்வொரு வீடும் நல்லாயிருந்தா நாடும் நல்லாயிருக்கும்ங்குற  மாணவனின் வாசகம் மனதுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது….

    *******

    வீட்டின் முன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார் கதிர்.  ஷோபாவில் அமர்ந்து காப்பி அருந்திக் கொண்டிருந்த மனைவி கதிரைப் பார்த்ததும்,  “ஏன்ன உடனே வந்திட்டீங்க….. ”

    “ஆமா… அங்க ஒர்க் ஆரம்பிச்சாச்சி, நம்ம காம்பௌண்ட்டுக்குள்ள, வீட்டைச் சுற்றி இருக்கிற தோட்டத்தைச் சுத்தப்படுத்தலாம்னு தோணுச்சு… அதான் வந்துட்டேன்… பையன் எழுந்திருச்சிட்டானா? ”

    “லீவுதான தூங்கட்டும்னு தான் விட்டுட்டேன்…. “சாப்பிட்டுவிட்டு வந்திடுவேன்னு சொன்னீங்களே…. ”

    “இல்ல நாம மூணுபோரும் சேர்ந்தே வீட்ல சாப்பிடலாம்னுதான்……”

    “சந்தோசம்…. பஸ்ட் நீங்க ஒரு கப் காப்பி குடிங்க…. எடுத்திட்டுவாறேன்…. அப்புறம் டிபனுக்கு என்ன பண்ணலாம்னு பார்ப்போம்…. ”

    “ஓங்கையால எதசெய்தாலும் அது தேவாமிர்தம் போலத்தான் இருக்கும்…..”

    “போலத்தான் இருக்கும்னா…. தேவாமிர்தமா இருக்காது….”

    “அய்யய்யோ என்ன விட்டுடு” என்றபடி தோட்டத்தைச் சீர்செய்ய அரிவாள், மண்வெட்டி, துடைப்பம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தார் கதிர்.

    “சமையல முடிச்சிட்டு நானும் ஜாயின் பண்ணிக்கிறேன்….” என்றபடி சமையல்கட்டினுள் நுழைந்தாள்.

    கதிர் தோட்டத்தைப் பார்த்தார்.  மலர்ந்த பூக்கள் உதிர்ந்து கிடந்தன….  அம்மலர்களின் ஊடே முதிர் இலைகளும் விழுந்து கிடந்தன.  செடிகளில் ஒழுங்காக வெட்டபடாத  கிளைகள் வெளிநீட்டிக் கொண்டிருந்தன.  குறு மரங்களில் காய்ந்த கிளைகள் இருந்தன.   தரையில்  தண்ணீர் சென்று வரும் கால்வாயும், மணல் பாத்தியும் சிதைந்து போயிருந்தன.  அங்கிருந்த செடிகளிலும், மரங்களிலும் இலைகள் அசைவது நின்றன.  காற்றடிக்கவில்லை மழை வருவதற்கு முந்தைய புழுக்கம் பரவிஇருந்தது.  விதவிதமான செடிகளும், பூக்களும் பச்சைப் போர்வையாக வரவேற்கையில் புழுக்கம்  பெரிதாகப்படவில்லை.

    தோட்டத்தின் உயிர்ப்பை மேலும் அழகாக்க கதிர் களத்தில் இறங்கினார்.  முதலில் களைச்செடிபோல வளர்ந்திருந்த புல்களை அப்புறப்படுத்தி ஒருமுனையில் குவித்துவைத்தார்.  ஊடுகிளைகளையும் கத்தரித்தார்.  தரையில் கிடந்த உதிர்ந்த பூக்களையும், இலைதழைகளையும் பெருக்கி ஒன்றாகச் சேர்த்து வைத்து அழுத்தினார்.

    உடைந்திருந்த இரண்டு தொட்டிகள், பிற குப்பைகளையும் அப்புறப்படுத்திவிட்டு, தூய்மை செய்வதற்குப்பயன்பட்ட கருவிகளைச் தண்ணீர் விட்டு சுத்தம் செய்தார்.  அப்போது அங்கு குப்பைக்கூடையுடன் வந்த அவரது மனைவி, “வீட்ட சுத்தமா பெருக்கியாச்சி, கூடையில இருக்கிற குப்பைய காம்பவுண்டுக்குள்ள தூரமா போட்டு எரிக்கப்போறேன்.  நீங்க சேத்து வைச்சிருக்கிற வேஸ்ட்டையும் அதுல போட்டு எரிச்சிடவா?

    “நல்லது அப்படியே செய்….. ”

    “இப்பத்தான் தோட்டம் தோட்டம்போல இருக்கு….. உங்க கைவண்ணத்துல தோட்டமே அருமையா மாறிட்டுது… ”

    “சரி சரி நான் குளிச்சிட்டு வந்திடுறேன்…. ”

    குளித்துவிட்டு, புதிய உடைகளை மாற்றிய கதிர் முன்னறையில் ஷோபாவில் உட்கார்ந்தார். கையில் காப்பியோடு வந்த கதிரின் மனைவி… அதை அவரிடம் கொடுத்துவிட்டு, “குடிங்க…. சீக்கிரமா டிபன் ரெடியாயிரும்….” என்றபடி அருகில் உட்கார்ந்தாள்.

    “பையன் என்ன பண்றான்… எழுந்திரிச்சிட்டானா? ”

    “ம்….. இப்பதான் பிரஸ்.. பேஸ்ட் எடுத்திட்டு பாத்ரூம் போயிருக்கான்… ”

    “அவனபற்றித்தான் கவலையா இருக்கு… வர்ற திங்கள்கிழமையில இருந்து நான் ஆபீஸ் போகும்போது நானே ஸ்கூல்ல கொண்டு விட்டுட்டு வந்திடுறேன்… 8.45 மணிக்கு கிளம்பினா போதும்…. ஈவினிங் மட்டும் நீ  ஸ்கூல்ல இருந்து உன் ஸ்கூட்டரில் கூட்டிட்டு வந்திர முடியுமா”?

    “ஓ.கே. நல்ல ஐடியாதான்… நமக்கு வேன் ஃபீஸ் மிச்சம்.   அதவிட படிக்கிறதுக்கு டைம் கிடைக்கும்.. ”

    “நான் அவங்க கிளாஸ் டீச்சர்கிட்ட ஃபோன் பண்ணி சொல்லிடுறேன்…  வரும் வாரத்தில் இருந்து வேன் வேண்டாம்னு சொல்லிடுறேன்”.

    “காலையில இரண்டு மணிநேரம் பையனுக்கு மட்டுமல்ல நமக்கும் கிடைக்குது… ”

    “ஆமா… இன்னொரு சர்ப்பிரஸ்”

    “வீட்டச்சுத்தி கிலின் பண்ணியிருக்கீங்களே அதுவே சர்ப்பிரைஸ்தான்.. ”

    “ம்….. இண்ணைக்கு டிபன் சாப்பிட்டதும் நாம மூணுபேரும் வெளியூருக்கு….. புரியல…. பிக்னிக் போறோம்…. ”

    “என்ன திடீர்னு….. எந்த ஊருக்கு”?

    “அத நாம மூணுபேரும் டிபன் சாப்பிடும்போது பேசி முடிவெடுப்போம்…உங்க ரெண்டு பேரோட முடிவுத்தான் என்னோட முடிவு… ஒருநாள் மட்டும் வெளியே தங்குறமாதிரி பிளான் பண்ணலாம்… ”

    “உங்க பையன் இதகேட்டதும் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க போறான்…. குக்கர் விசில் வர சத்தம் கேட்குது… டிபன் ரெடியாயிடுச்சி… நான் வெளியே கூட்டி வைச்சிருக்கிற குப்பைகளைக் கொளுத்திவிட்டிறேன்… நீங்க சிரமத்தப்பாக்காம உங்க பையன ரெடி பண்ணுங்க… இந்த செய்தி தெரிஞ்சா அவனாவே ரெடியாயிருவான்…. ”

    குளியலறையில் இருந்து வெளியேவந்த முருகன், “ரெடியாயிக்றேன்…” உடனே….. அப்படினா தனியா சொல்ல வேண்டியதில்ல…….ஃபுல்லா கேட்டியா….” என்றார் கதிர்.

    “நீங்களே ஸ்கூல்ல கொண்டு விடப்போறதுல இருந்து எல்லாத்தையும் கேட்டேன்… ஐயம் ரியலி ஹேப்பி அப்பா…. ” என்றபடி அப்பாவைக் கட்டிக் கொண்டான்…  கதிரும் அணைத்துக் கொண்டார்.  ஆனால் முகம் மன அழுத்தத்தோடு காட்சியளித்தது.  அன்பாலும், அரவணைப்பாலும் முருகனை மாற்றிவிட வேண்டுமே என்னும் உணர்வு மனதுக்குள் கவலையாய் பரவியிருந்தது.

    “பையனைக் கொஞ்சுறது இருக்கட்டும்… குளிச்சிட்டு, நான் புதுசா தைத்த சட்டையும், நிக்கரும் மேசையில இருக்கு…. போடச் சொல்லுங்க… நேற்று போட்ட யூனிஃபாம் சட்டையிலேயே மகாராசா நிக்கிறாரு…. ” என்றபடி அம்மா எழுந்திருந்து தோட்டத்திற்குச் சென்றாள்.

    கதிரின் அணைப்பில் இருந்து சட்டென விலகி படுக்கையறை நோக்கி ஓடினான் முருகன்.

    “என்னாச்சுடா….” என்றார் கதிர்.

    “இல்லப்பா என் யூனிஃபார்ம் நிக்கர்…. எங்கப்பா..” என்றபடி கட்டில் முழுவதும் தேடினான். போர்வையை எடுத்து உதறினான், கட்டிலின் அடியில் குனிந்து பார்த்தான்.

    “அழுக்குத் துணியெல்லாம் போடுற கூடையில போயி பாரு… அங்க கிடக்கு”  என்றதும் வேகமாகச் சென்றான்… கூடையை நோக்கி…. கூடையின் மேலேயே கிடந்தது நிக்கர்.

    எடுத்து அதன் பாக்கெட்டுக்குள் கைவிட்டுத் தேடினான். மறு பாக்கெட்டுக்குள்ளும் தேடினான்.  எதுவும் இல்லை. உடலெல்லாம் குப்பென வியர்த்தது. தந்தையைப் பார்த்தான். அவர் கையில் இருந்த அலைபேசியை இயக்கி ஏதோ செய்துக் கொண்டிருந்தார். உண்மையில் அவன் செய்கைகளைத்தான் அவன் அறியாமல் கவனித்துக் கொண்டிருந்தார் கதிர்.  அவன் எதை தேடுகிறான் என்பதையும் அறிந்தே மவுனம் காத்தார்.

    அவன் அழுக்குத்துணிகள் இருந்த கூடைக்குள் கைகளைவிட்டு துழாவினான்.  கூடை மூடியை ஒரு கையால் தன்னோடு அணைத்துக் கொண்டு கூடையைச் சரித்து, துணிகளைத் தனித்தனியே பிரித்து சோதித்தான்.  அவன் தேடியது கிடைக்கவில்லை. கூடையில் இருந்த தூசு வியர்வை ஈரத்தில் நனைந்திருந்த சட்டையில் ஆங்காங்கே ஒட்டிக் கறையாகத் தெரிந்தது.

    “கதிர் மகனிடம், எத தேடுற இவ்வளவு பதட்டமா”?

    “இல்லப்பா ஒரு முக்கியமான….. பேப்பரூ…. நிக்கர் பாக்கெட்டுக்குள்ள…. இருந்துது…. கா ….. ண்….ல….. ”  என தடுமாறியபடியே சொன்னான்.

    “வீட்டுக்குள்ள வேறுயாருவரப்போறா….. மூணு பேர்தான் இருக்கோம்….  ஒழுங்கா தேடுனா கிடைக்கும்… ” இன்னும் அதிகமாக வியர்த்தது முருகனுக்கு. மீண்டும் படுக்கையறைக்குச் சென்று தரையில் படுத்தபடி உன்னிப்பாகக் கட்டிலுக்கு அடியில் பார்த்தான். அதற்கிடையில் மறைத்து வைத்திருந்த பான்மசாலா பாக்கெட்டை கதிர் எடுத்தபடி வெளியே தோட்டத்திற்குள் வந்தார். அவர் மனைவி பெரும்பாலான குப்பைகளைக் கூட்டி வைத்து தீயிட்டுக்கொண்டிருந்தாள். அது எரிய ஆரம்பித்திருந்தது.  “நான் குளிச்சிட்டு வந்திடுறேன்”  என்றபடி அவள் வீட்டிற்குள் நுழைந்தாள்.  கதிர் பான்மசாலா பாக்கெட்டை நெருப்பில் போட்டார். வீட்டிற்குள் வந்தார். ஷோபாவில் அமர்ந்தபடி சன்னல் வழியே எரியும் குப்பையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.  முருகனைப் பார்த்த அம்மா, “என்னடா இப்படி நிக்குற…. படபடப்பும், பரபரப்புமா….. ”

    “இல்லம்மா…. ஒரு…. பேப்பர காணல….. ”

    “எப்பவும் பரபரப்பா இருக்கிற உங்க அப்பாவே அமைதியாயிருக்காரு … எவ்வளவு பெரிய மாற்றம் நமக்கு அனுசரணயா வேற…. எம் மனசும் அமைதியாயிருச்சி….. “டேய் ஏண்டா…. சட்டைய எல்லாம் ஈரமாக்கி அழுக்காக்கி…… துவைச்சா போகுமாடா ….  முதல்ல கழட்டுடா”  என்றபடி அருகில் சென்று சட்டையைக் கழற்றி கூடையில போட்டாள் அமைதியாக நின்றான் முருகன்.

    “முதல்ல போய் குளிச்சிட்டு வாடா…. அப்புறமா அப்பாவும் பிள்ளையுமா தேடலாம்…. ”என்றபடி  உள்ளறைக்குள் சென்றாள்.

    கதிர், “இப்போதான் பெருக்குன குப்பையெல்லாம் தோட்டத்து சருகுகளோடு சேர்த்து  கொளுத்திவிட்டுருக்கா உங்கம்மா…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே தோட்டத்திற்கு ஓடினான்.

    நெருப்பினுள் பாதி எரிந்த நிலையில் பான்மசாலா பாக்கெட் தெரிந்தது. குளிர்ந்த காற்று வேகமாக அடிக்கத் தொடங்கியிருந்தது.  அதில் நெருப்பு அணைவதும், பற்றுவதுமாக இருந்தது.  குனிந்து கையால் பாக்கெட்டை நெருப்பினுள் தள்ளிவிட்டான்.  காற்றடிப்பதால் விழுந்து கொண்டிருந்த சருகுகளையும், சரியாகக் கூட்டிப் பெருக்காமல்விட்ட காகிதக் குப்பை போன்றவற்றையும் வேகமாகப் பொறுக்கி எடுத்து எரியும் நெருப்பில் போட்டபடி இருந்தான் முருகன்.

    அனைத்தையும் சன்னல் வழியே கதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.  தோட்டம் முழுவதும் அங்கும் இங்கும் ஓடி அனைத்து குப்பைகளையும் சேகரித்து நெருப்பில் போட்டுக்கொண்டிருந்தான். வீதியில் செல்வோர், வருவோர் யாரும் முருகன் கண்ணிற்குத் தெரிவது போல் இல்லை. குப்பைகள் எரிவதிலேயே கவனமாக இருந்தான்.  அதே தெருவில் இரண்டு வீடுகள் தாண்டி அவனுடன் வகுப்பில் படிக்கும் இராமனின் வீடு இருந்தது.  இராமனின் தாத்தா தெருவழியாகச் செல்லும் போது, “முருகன் காலையிலேயே கிளீனிங் ஒர்க்கா”?  என்றபடி சென்றார்.  எதுவும் காதில் விழவில்லை.  குப்பைகள் முழுவதுமாக எரிந்து தணிந்தது.  முருகனின் படபடப்பும் தணிந்திருந்தது.  அப்பொழுது காம்பௌண்ட் வாசல் பக்கத்தில் குப்பைக் கூடையோடு சென்று கொண்டிருந்த இராமன்,  “முருகா”  என்றான்.  அப்பொழுதுதான் இயல்பான முருகன் வாசல்பக்கம் சென்றான்.  மழையும் மெதுவாகத் தூற தொடங்கிற்று.

    “எப்போ நல்லவனா மாறின….. எங்க தாத்தா உன்ன புகழ்ந்து சொன்னதோட, குப்பைக் கூடையைக் கொடுத்து தெருமூலையில இருக்கிற தொட்டியில கொட்டிட்டு வரச்சொல்லிட்டாரு.  சரி குளுந்த காற்று அடிக்குதே இப்படி நிக்குற….” என்றபடி சிரித்தான்.  மழை திடீரென வேகமெடுத்து பெய்யத்தொடங்கியது.  முருகன் வெட்கம் மேலிட   “குளிக்கப்போறேண்டா”   என்றபடி வீட்டை நோக்கித் திரும்பினான்.  இராமன்  “வாறேண்டா”  என்றபடி ஓடினான்.

    முருகன் மழையில் நனைந்தபடி தோட்டத்தைப் பார்த்தான்.  குப்பைகள் நீங்கி சுத்தமாக இருந்தது.   மழையின் குளிரைவிட   எப்போ நல்லவனா மாறின    என்ற இராமனின் வாசகம் இதயத்தைக் குளிர்வித்தது.  குழந்தை மனது மேலிட, வீட்டு மாடியிலிருந்து குற்றால அருவிபோல விழும் மழைநீரில் குளிக்க தொடங்கினான்.

    குளித்து, உடைமாற்றிவிட்டு வந்த முருகனின் தாயார் கதிரிடம்,  “பையன கவனிச்சிங்களா…..  எங்க? ”

    “வெளியில  பாரு…… ”

    இருவரும் வாசலுக்கு வந்தனர்…..

    “ஷவர் குளியலைவிட அருமையா இருக்கு…. சோப் குடுக்கிறீங்களா….” என்றான் முருகன்… “சீக்கிரமா குளி…. அம்மா புது டிரஸ்…..  வைத்திருக்கிறா… டிபன் சாப்பிட்டுட்டு பிக்னிக்குக்கு பிளாள் பண்ணனும்… ” என்றார் கதிர்.

    மழையில் புழுதியெல்லாம் அடங்கிபோயிருந்தது.  மழையின் வாசத்தோடு இளம் தளிர்களும், பூக்களும் காற்றில் வாசம் பரப்பின……

    *******

    Share
  • கண்ணதாசன் பாடல்களில் ஆன்மீகம் – 16

    கண்ணதாசன் பாடல்களில் ஆன்மீகம் – 16

    சக்தி சக்திதாசன்

    கண்ணதாசன் பாடல்களில் ஆன்மீகம் எனும் பார்வையில் இன்று பார்க்கப்போகும் பாடல்

    ஆசையே அலை போலே
    நாமெல்லா..ம் அதன் மேலே
    ஓடம் போலே ஆடிடுவோமே
    வாழ்நாளிலே

    ஆசையே அலை போலே
    நாமெல்லா..ம் அதன் மேலே
    ஓடம் போலே ஆடிடுவோமே
    வாழ்நாளிலே…

    பருவம் என்னும் காற்றிலே..
    பறக்கும் காதல் தேரிலே
    ஆணும் பெண்ணும் மகிழ்வா..ர்
    சுகம் பெறுவா..ர்
    அதிசயம் காண்பார்
    நாளை உலகின் பாதையை இன்றே
    யார் காணுவார்..

    ஆசையே அலை போலே..
    நாமெல்லா..ம் அதன் மேலே
    ஓடம் போலே ஆடிடுவோமே
    வாழ்நாளிலே..

    வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
    வடிவம் மட்டும் வாழ்வதே..ன
    இளமை மீண்டும் வருமா..
    மணம் பெறுமா..
    முதுமை..யே சுகமா…
    காலம் போகும் பாதையை
    இங்கே யார் காணுவார்

    ஆசையே அலை போலே
    நாமெல்லா..ம் அதன் மேலே
    ஓடம் போலேஆடிடுவோமே
    வாழ்நாளிலே..

    சூறை காற்று மோதினா..ல்
    தோணி ஓட்டம் மேவு..மோ
    வாழ்வில் துன்பம் வரவு
    சுகம் செலவு இருப்பது கனவு..
    காலம் வகுத்த கணக்கை இங்கே
    யார் காணுவார்..

    ஆசையே அலை போலே
    நாமெல்லா..ம் அதன் மேலே
    ஓடம் போலே ஆடிடுவோமே
    வாழ்நாளிலே..

    கண்ணதாசன் பாடல்களில் ஆசை, வாழ்க்கை, காலம், இளமை, முதுமை போன்ற மனித வாழ்வின் அடிப்படை உண்மைகள் மிக எளிய உவமைகளில் வெளிப்படுகின்றன.

    “ஆசையே அலை போலே” என்ற பாடலில் அவர் ஆசையை அலைக்கு ஒப்பிட்டு, மனிதனை ஓடமாகக் காட்டுகிறார்.

    இது அலைபோல் அசையும் ஆசையின் நிலையற்ற தன்மை மற்றும் அதன் மீது மனிதன் வாழ்நாள் முழுவதும் ஆடிக்கொண்டிருக்கும் நிலையைக் காட்டுகிறது.

    இங்கு அவர் ஆன்மீக அறிவின் அடிப்படை உண்மையை ஆசை நிலையற்றது, வாழ்க்கை ஒரு பயணம் மிக எளிமையாக வெளிப்படுத்துகிறார்.

    இந்தப் பாடல் கண்ணதாசனின் தத்துவப்பாடல்களில் ஒன்று.

    வாழ்க்கையின் சுழற்சியை இளமை, காதல், முதுமை, துன்பம், சுகம், காலம் அனைத்தையும் ஆசையின் அலை என்ற மைய உவமையில் இணைத்து, மனிதன் வாழ்வின் பாதையை ஆராய்கிறார்.

    பாடல் சமூகப்பாடல் போலத் தோன்றினாலும், அதன் உள்ளே ஆன்மீக சிந்தனை ஆழமாகப் பதிந்துள்ளது.

    “ஆசையே அலை போலே… நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே”

    ஆசை என்பது அலை போல நிலையற்றது, எப்போதும் அசையும்.

    அதிலே மனிதனி ஓடம் போல ஆசையின் மீது ஆடிக்கொண்டிருப்பவன்.

    ஆன்மீகப் பொருளாக இதிலே வாழ்க்கை ஆசையின் அலைகளால் இயக்கப்படுகிறது.

    அதிலிருந்து விடுபடுதல் தான் உண்மையான சாந்தி என அழகாக எடுத்துரைக்கிறார்

    “பருவம் என்னும் காற்றிலே… பறக்கும் காதல் தேரிலே”

    இளமை என்றால் காற்றாகவும் காதல் என்பதை அது அசைக்கும் தேர் என்கிறார்.

    ஆணும், பெண்ண மகிழ்ச்சி, சுகம், அதிசயம் எனும் உணர்வுகளினூடாக காலத்தின் ஓட்டத்தோடு பயணிக்கிறார்கள்.

    ஆன்மீகப் பொருளாக இளமை, காதல், சுகம் அனைத்தும் தற்காலிகமமானவை அவை நிலையற்றவை என்று சிந்திக்க வைக்கிறார்.

    “வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதே”

    வாழ்க்கை அது காலத்தோடு தீர்ந்தத ஆனால் அங்கே உடல் வடிவம் மட்டும் வாழ்கிறது.

    இளமை அது மீண்டும் வராது அபடியாயின் முதுமை சுகமா? என்கிறார் கவியரசர்.

    ஆன்மீகப் பொருள் இங்கே உடல் நிலையற்றது எனவும் ஆன்மா மட்டுமே நிலைத்தது எனவும் வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைக்கிறார்.

    “சூறை காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ”

    வாழ்க்கை என்பதை தோணியாகவு
    ம் விதியை சூறை காற்று என்றும் கொண்டால் விளைவு துன்பமே !

    இந்நிலையில் சுகம் செலவுவாகவும் துன்பம் வரவாகவும் கொண்ட ஒரு வாழ்க்கை கணக்கின் தத்துவமாகத் தருகிறார்.

    ஆன்மீகப் பொருள் இங்கே துன்பம்–சுகம் இரண்டும் வாழ்க்கையின் இயல்பான இரு முகங்கள் அவற்றை சமமாக ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

    கண்ணதாசன் சமூகப்பாடல்கள் மனித வாழ்வின் உண்மைகளை வெளிப்படுத்தும் போது, அவற்றில் ஆன்மீக அடுக்குகள் இயல்பாகவே கலந்து விடுகின்றன.

    ஆசை, காதல், சுகம், துன்பம் போன்ற சமூக அனுபவங்களை அவர் ஆன்மீக உவமைகளால் விளக்குகிறார்.

    “ஆசையே அலை போலே” பாடலில், ஆசை–அலை, மனிதன்–ஓடம், வாழ்க்கை–தோணி என்ற உவமைகள் சமூக அனுபவத்தையும் ஆன்மீக உண்மையையும் இணைக்கின்றன.

    இதன் மூலம் அவர் சமூகப் பாடல்களை ஆன்மீகப் பாடல்களாக மாற்றுகிறார், அதாவது வாழ்க்கை அனுபவம் என்பது ஆன்மீகப் பயணம் என்பதை உணர்த்துகிறார்.

    “ஆசையே அலை போலே” என்பது வெறும் சமூகப் பாடல் அல்ல.

    அது ஆசையின் நிலையற்ற தன்மை, வாழ்க்கையின் சுழற்சி, சுக–துன்ப சமநிலை, உடலின் நிலையற்ற தன்மை ஆகியவற்றை ஆன்மீகமாக வெளிப்படுத்தும் பாடல்.

    கண்ணதாசன் சமூகப்பாடல்களில் கூட ஆன்மீக அறிவை நுட்பமாக இணைத்து, மனிதனை சிந்திக்க வைக்கும் கவிஞராக திகழ்கிறார்.

    Share
  • நாவலர் பெருமானை நாமென்றும் போற்றுவமே!

    நாவலர் பெருமானை நாமென்றும் போற்றுவமே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    சைவத்தைத் தமிழைத்  தம்முயிராய் எண்ணி
    வையத்தில் பலரும் வந்தார்கள் தந்தார்கள்
    திருமுறைச் செல்வர்கள் அளவிலாத் தந்தார்கள்
    அவர்வழியைத் தொடர்ந்து வந்தார்கள் சிலபேர்கள்

    நாயன்மார் வழியைத் தடம்பற்றி நின்று
    நல்லைநகர் நாவலரும் நற்றடத்தைப் பதித்தார்
    நற்றமிழை அணைத்தார் நம்சைவம் காத்தார்
    கற்றபடி நடந்தார் கடவுளையே நினைத்தார்

    நீறணியும் குடும்பம் நேர்மையுடை குடும்பம்
    நாவலரின் குடும்பம் நல்லதொரு குடும்பம்
    சைவமொடு தமிழை தாங்கிவிடும் குடும்பம்
    சன்மார்கம் நிறைந்த நாவலரின் குடும்பம்

    தமிழோடு சைவம் தானவர்கள் சொத்து
    சைவத்தை அவர்கள் உயிராக நினைத்தார்
    நாவலரின் மனத்தில் பதிந்தநல் விதையாய்
    நம்சைவ மூன்றி வேர்விட்டு நின்றதே

    சைவத்தைக் காத்திட தனையீந்தார் நாவலர்
    சைவத்தைப் பரப்பிடத் தலமையினை ஏற்றார்
    சைவத்தைத் தடுப்பாரை தூக்கியே எறிந்தார்
    சைவத்தின் காவலனாய் தலைநிமிர்ந்து நின்றார்

    மாற்றுமத போதனையை மறுத்துரைத்து நின்றார்
    மாற்றுமதத் தலைமைகளை மண்கெளவச் செய்தார்
    சைவத்தின் மேன்மைகளை சகலருக்கும் சொன்னார்
    சன்மார்க்க வழிநடந்து சாதித்தார் நாவலரும்

    கற்பவைகள் கற்றார் கசடறவே கற்றார்
    மற்றவர் விளங்க மறுதலியா உரைத்தார்
    சொற்கள் சுவையாக சுள்ளென்று உறைக்க
    கருத்தோடு சொற்கள் கணக்கின்றிப் பெருகின

    நீறணிந்த நெற்றியுடன் நிமிர்ந்தநற் பார்வையுடன்
    நாவலரும் வந்தார் நம்சைவம் காத்தார்
    பாவலரும் பண்டிதரும் நாவலரைப் பார்த்து
    தேவார முதலிகளே வந்ததாய் நினைத்தார்

    ஐந்தாங் குரவராய் ஆக்கினார் நாவலரை
    அரன்நாமம் சொல்லியே நாவலரும் வாழ்ந்தார்
    அறமேந்தி வாழ்ந்தார் ஆன்மீகம் அணைத்தார்
    அன்னைத் தமிழுக்கு அரும்பணிகள் ஆற்றினார்

    இலக்கியத்தை இலக்கணத்தை ஏந்தினார் நாவலர்
    எழுத்துப் பிழையினை எதிரியாய் பார்த்தார்
    சொற்பிழை தவிர்த்தார் நற்றமிழ் விதைத்தார்
    தமிழன்னை சிறக்கவே தமிழ்த்தொண்டு செய்தார்

    கல்வியைக் கண்ணாய்க் கருதென்று மொழிந்தார்
    கற்பதற்கு வசதியாய் நூல்களை எழுதினார்
    பள்ளிகளை நிறுவினார் பாடநூல்கள் ஈந்தார்
    தெள்ளுதமிழ் உள்ளமெலாம் நிறைந்திடவே செய்தார்

    நாவலரின் வசனநடை நற்றமிழின் வரமாகும்
    வசனநடை  கைவந்த வல்லாளர் நாவலரே
    அவர்நடையை தமிழறிஞர் அனைவருமே போற்றுகிறார்
    போற்றுகின்ற நாவலரை ஏற்றியே வாழ்த்திடுவோம்

    ஈழத்தில் சைவம் எழுந்தோங்கி நிற்பதற்கு
    காரணமாய் காவலனாய் நாவலரே நிற்கின்றார்
    நாவலர் வரவாலே நம்சைவம் பிழைத்தது
    நாவலர் பெருமானை நாமென்றும் போற்றுவமே !

    Share
  • பல்லழகன் – பகுதி 12

    திவாகர்

     

    “மாமா உங்களை எதிர்த்து எப்போதுமே பேசாதவன் நான். நீங்க வந்து இந்தப் பொண்ணு கழுத்துல தாலி கட்டுடா’ன்னீங்க.. நான் யோசிக்காம கட்டினேன். என் எதிர்கால வாழ்க்கையைப் பத்திக் கூட யோசிக்காம நீங்க சொன்னதைத்தான் செஞ்சேன். ஆனா அவளோடு குடும்பம் நடத்தக்கூடாதுன்னு நீங்க ஒரு வார்த்தை சொல்லலே.”

     

    “டேய்.. டேய் என்னடா சொல்லறே?”

     

    “ஆமாம் மாமா.. தாலி கட்டின ஒரு பெண்ணை நான் கூட்டிண்டு வீட்ல ஒத்தரை ஒத்தர் தனியாவா பாத்துண்டிருக்க முடியும்..? பிரியா அழகான பொண்ணு. அத்தோட அறிவுள்ள பொண்ணு.. நான் ஒரு முட்டாள்.. உங்க வளர்ப்புல வளர்ந்தவன் இல்லே.. வேறெப்படி இருக்கமுடியும். நாய் மாதிரி நன்றி உள்ளவனாகத்தான் இருக்கமுடியும். அந்த நாயாதான் அவள் பின்னாடி அன்னிக்குப் போனேன். ஆனா பிரியா படிப்படியா என்னை மாத்தி எனக்குப் புத்திமதி சொல்லி நாயா இருந்த என்னை ஒரு மனுஷனா ஆக்கினா.. ‘

     

    முரளி கொஞ்சம் நிறுத்தினான். பெருமூச்சு விட்டான். கோபம் அதிகமாக இருந்த மாமாவிடம் நெருங்கி கொஞ்சம் நிதானமாகப் பேசினான்.

     

    ‘நீங்க அப்பப்போ இங்க வீட்டுக்கு வரட்டுமா வரட்டுமான்னு கேக்கற போதெல்லாம் நான் வேணாம்.. வேணாம் மாமான்னு தடுத்தேன். ‘இப்போ ரஞ்சிதா இல்லே மாமா அவ பிரியாமுரளி’ன்னு பேரை மாத்திண்டான்னு சொன்னேன். நீங்க கண்டுக்கவே இல்லை.. எந்த எழவானாலும் பேரை வெச்சுக்கட்டுமே..ன்னு அலட்சியமா சொன்னீங்க.. ஆனாலும் குடும்பம்னு வந்துட்டா ஒரு ஆண்மகன் தன் குடும்பத்துக்கு எப்போதுமே விசுவாசமா உண்மையா இருக்கணுமா இல்லையா.. பிரியாவே ஒரு வார்த்தை சொன்னா.. ‘நான் மாமாவோட பலவந்தப்படுத்தப்பட்டு வேறே வழி தெரியாம பைத்தியம் மாதிரி அவஸ்தைப்பட்டேன். வாஸ்தவம்தான். ஆனா இப்போதான் கணவன் மனைவி உறவுங்கிறது என்ன ஒரு அழகான உறவுன்னு புரியுது. இதோ பாருங்க.. உங்களுக்கும் எனக்கும் அது என்ன காரணத்தாலோ கல்யாணம்னு ஒண்ணு நடந்திடுச்சு. இப்போ காலம் மாறிடுச்சு. இரண்டு மனம் ஒத்துப் போறவங்கதான் கணவன் மனைவியா ரொம்ப நாள் வாழமுடியும். அப்படி ஒத்துப் போகலைன்னா டைவோர்ஸ் வாங்கிண்டு அவரவர் பாதைல நடக்கணும். இதுக்கு இப்போ சமூக அங்கீகாரம் கூட பலமா கிடைச்சாச்சு. பெண்களும் பழைய மாதிரி இல்லாம சுயமா சிந்திச்சு மானத்தோட மரியாதையோட செயல் படற காலம் இது. இப்போ என்ன? கொஞ்ச நாள் உங்க மாமா கூட ‘லிவ் இன்’ மாதிரி இருந்தேன். ஆனா கலியாணம் பண்ணிக்காம இருந்தேன். இப்போ பிரிஞ்சாச்சு. அதாவது இது கூட டைவோர்ஸ் மாதிரித்தானே.. ஒரு டைவோர்ஸியான என்னை நீங்க ரிஜிஸ்டர் விவாகம் பண்ணிண்டீங்க.. இப்போ சட்டப்படி கணவன் மனைவி.. நான் என் கணவன்கிட்டே உண்மையா இருப்பேன். அப்படியே நீங்களும் இருந்தீங்கன்னா நம்ம புது வாழ்க்கையை தென்றல் போல ஆனந்தமா கழிப்போம்’ன்னு சொன்னா மாமா.”

     

    “அடேய் பைத்தியக்காரா.. நீ நிஜமாவே லூஸாடா.. அவ அப்படி சொன்னா நம்பிடுவியா? டேய்.. ஒரு தற்காலிகமா அரேஞ்ச்மென்ட் தேவை.. அதுக்காக உன்னை அப்படி அவளுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சேன். இப்போ அவ ஆடற நாடகப் பேச்சைக் கேட்டுட்டு நீ அவ காலடில போய் விழலாமாடா.. டேய்.. பொம்பளை பேச்சை எல்லாம் மதிக்கலாமாடா.. மதிச்சா நம்மை மிதிச்சுடுவாங்கடா.. மடையா.. இப்போ என்ன ஆச்சு.. எங்க போய் ஒளிஞ்சுண்டா.. வரச் சொல்லுடா நான் அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கறேன். ரெண்டு வேளை சோத்துக்கு வழியில்லாத குடும்பம் அது…. அந்தக் குடும்பத்துக்கு இவளுக்காக லட்சம் லட்சமா செலவு பண்றேண்டா.. வரச் சொல்லுடா அவளை.. இல்லே நான் போய் இழுத்து வரேன்.”

     

    “மாமா.. அவ ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கா..”

     

    “ஆஸ்பத்திரியா.. எதுக்கு?”

     

    “மாமா..“ என்று இழுத்தான். “குடும்பம் நடத்துறேன்னு சொன்னேன் இல்லே.. அதான் அவளுக்கு இப்போ மூணாவது மாசம்..”

     

    “புரியுதுடா.. “

     

    கந்தசாமி கோபத்தோடு பின் கையைக் கட்டிக்கொண்டு அங்குமிங்கும் நடந்தார். கொஞ்ச நேரம் வரை பேசாமல் அப்படி நடந்தவர் ஏதோ முடிவுக்கு வந்தவர் போல முகத்தை வைத்துக்கொண்டு முரளியின் அருகே சென்றார்.

     

    “முரளி, இன்னிக்கு நீ ஆஸ்பத்திரிக்குப் போகாதே.. ஆனா நாளைக்குப் போகற.. போயிட்டு அவளோட வயித்தை க்லீன் பண்ணிடறே.. புரியுதா.. எனக்கும் புரியுது.. பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா எரியத்தான் செய்யும்.  நான் ஒரேயடியா உங்களை நம்பியது என் தப்புதான். ஆனா இது உனக்கு இது கடைசி எச்சரிக்கை.. இனிமே அவகிட்டே நெருங்காதே.. ஒரு மாசம் போகட்டும். அவ ரெஸ்ட் எடுக்கட்டும். அவளை அவ ஊருக்கே அனுப்பிச்சிடலாம். அவங்கம்மா ஒழுங்கா எங்கிட்டே அனுப்பிடுவாங்க.. நீ என்ன பண்றே.. அவ ஊருக்குப் போன உடனே அதைக் காரணம் காட்டி ஒரு டைவோர்ஸ் அப்ளிகேஷன் போட்டா டைவோர்ஸ் வாங்கித் தரேன். அதுக்கப்பறம் நல்ல குடும்பத்துல பார்த்து உனக்கு ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வெக்கறது என் பொறுப்பு.. ஆனா ஒண்ணு இந்த விஷயம் யாருக்கும் அதாவது முக்கியமா சுந்தருக்கோ அல்லது கல்யாணுக்கோ தெரியவே கூடாது.. சரியா?”

     

    முரளி ஒன்றும் சொல்லவில்லை. பெரியப்பா வீட்டை விட்டு வெளியே போனார்.

     

    நினைவுகள் திரும்பின. மறுபடியும் கல்யாண் வீடு

     

    கல்யாண் தலையை ஆட்டினான், “ச்சே.. இதுவும் ஒரு வாழ்க்கையாடா.. டேய் முரளி, பயப்படாம சொல்லு. நீ இதுக்கப்பறம் அவர் எல்லை மீறக்கூடாதுன்னு கொலை பண்ணிட்டியா? சொல்லுடா.. தயங்காம சொல்லு.. அன்னிக்கு ராத்திரி நடந்தப்பறம் அவரால சும்மா இருக்கமுடியாதே.. வஞ்சம் கொண்ட பாம்பு மாறி அலைஞ்சாராடா.. சீச்சீ கேக்கவே அருவறுப்பா இருக்குடா..”

     

    முரளி இதைக் கேட்டதும் காதை மூடிக்கொண்டான்.

    “டேய் கல்யாண்.. நான் ஏண்டா அவரைக் கொலை பண்றேன்.. இல்லைடா நான் ஸத்தியமா எங்கம்மா மேலே சத்தியமா நான் கொலை பண்ணலே..”

     

    “அப்போ பிரியா பண்ணிட்டாளாடா?”

     

    “ஐய்யய்யோ அவ பேரை இழுக்காதேடா.. அவ மனசுல தங்கம்டா.. ரொம்ப ஸாஃப்ட் கூட.. நிஜமாவே சொல்லறேன்.. அவ பழசு எல்லாத்தையும் மறந்து புது வாழ்க்கை வாழணும்னுதானே ஆசைப்படறவ. அவ எதுக்குடா கொலை பண்றா?”

     

    கோம்டி குறுக்கிட்டாள்.

    “அப்போ நீங்களும் இல்லே.. பிரியாவும் இல்லேன்னு கச்சிதமா சொல்லறீங்க.. ஆனா இந்தக் கதையை போலீஸ் கேட்டாக்க இந்த கேஸ் ஃபைலை ஈஸியா மூடிடுவாங்க மிஸ்டர் முரளி.. கொலைப் பழியை உங்க ரெண்டு பேர் மேலயும் போட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் வஞ்சம் வெச்சு செஞ்சுட்டாங்கன்னு எப்படியாவது சொல்லி ஜெயில்ல போட்டுடுவாங்க”

     

    “ஐய்யோ அப்படியெல்லாம் பயமுறுத்தாதீங்க கோம்டி..”

     

    “பின்னே எப்படித்தான் இதை சால்வ் பண்றது? சரி, அதுக்கப்பறம் உங்க மாமா எப்படி பிஹேவ் பண்ணினார். அதைச் சொல்லுங்க உங்க மனைவி இந்த விஷயத்தை எப்படி டீல் பண்ணாங்க?”

     

    “மேடம்! அதுக்கப்பறம் ஒரு மாசம் கழிச்சு என்னை மறுபடியும் இவன் பெரியப்பா பிரியாவைப் பத்தி கேக்கறச்சே நான் கண்டிப்பா சொல்லிட்டேன்.” அவன் நினைவுகள் மறுபடியும் பின்னோக்கிச் சென்றன.

     

    கந்தசாமியின் வீடு.

     

    “இதோ பாருடா முரளி! உனக்கும் எனக்குமுள்ள உறவு ரொம்ப பாசமானது. இதுல பொண்ணுங்க மத்தில புகுந்து குழப்பக்கூடாது. நீ இன்னமும் அவளை ஊருக்கு அனுப்பலே. ஏன் அனுப்பலே? அத முதல்ல செய்யு! அதுக்கப்பறம் எனக்குத் தெரிஞ்ச வக்கீல்கிட்ட நான் பேசறேன்.. டைவோர்ஸ் வாங்கிடணும்.. இந்தக் கல்யாணமே என் சுய நலத்துக்காக ஒரு வியாபாரம் போல பண்ணி வெச்சுட்டேன்.. அதனால உனக்கு இன்னொரு பொண்ணு பார்த்துட்டேன். மாரேஜ் பீரோ மூலம்தான் பார்த்தேன். எல்லாமே நல்லா அமைஞ்சிருக்கு. அவளைக் கல்யாணம் பண்ணிண்டு சுகமா இரு., சரிதானா?”

     

    “மாமா.. இனிமே கல்யாணம் எல்லாம் நான் செஞ்சுக்கறதா இல்லே.. அதோட நான் பிரியாவை டைவோர்ஸ் பண்றதாவும் இல்லே.. இது முடிஞ்சு போன விஷயம். இதைப் பத்திப் பேசி நமக்குள்ள ஒரு பிரச்சினையை உருவாக்கிக் கொள்ள வேணாம் மாமா..”

     

    “என்னடா பெரிய பிரச்சினை..   டேய் மடையா.. உனக்கு எத்தனை தடவை சொல்வேன். அவ என் ஆள்டா.. எனக்காக என்னோட சௌகரியத்துக்காக வேண்டி நீ அதுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பேங்கிற நம்பிக்கையில இந்தக் கல்யாணம் நடந்ததுடா.. இதோ பார்.. நீ என்ன பிரச்சினையை எதிர்பார்க்கறே? ரஞ்சிதா ஏதாவது தற்கொலை பண்ணிக்குவா இல்லே கோர்ட்டுக்குப் போவா.. இப்படில்லாம் பிரச்சினை எதிர்பாக்கறியா? நீ கவலைப்படாதேடா.. நான் அவளை உன் வாழ்க்கைல புகுத்தினவன்.. நானே அவளை வெளியே கிளப்பிடறேன். அப்பறமா நீ புதுக் கல்யாணம் பண்ணிண்டு சந்தோஷமா இரேண்டா..”

     

    “இல்ல மாமா! இனிமே எனக்கு லைஃபே என் பிரியா’தான்னு உங்கள்ட்ட எத்தனையோ தடவை சொல்லிட்டேன். இப்பவும் சொல்லறேன்.. பிரியாதான் என் பொண்டாட்டி..  பழசையெல்லாம் ஒரேயடியா மறந்துடுங்க.. அவ வயசு என்ன.. உங்க வயசு என்னன்னு நினைச்சுப் பாருங்க.. சட்டப்படி கூட எங்களுக்குதான் சாதகமா இருக்கு.  நீங்க இந்த விஷயத்தை மறக்கத்தான் வேணும். இல்லன்னா நான் கல்யாண்கிட்டயோ இல்லே வேற இடத்திலயோ ஏன், பிரியாவே சொல்லற மாதிரி போலீஸ்கிட்டயோ மத்யஸ்தம் செஞ்சுக்கப் போவேன்.. சொல்லிட்டேன்.. நீங்க இந்த விஷயத்தைப் பத்தி பேசறதோ இல்லே எங்க வீட்டுக்கோ வரவேணாம்.”

     

    “என்ன மறுபடியும் சொல்லு.. கல்யாண்கிட்ட மத்யஸ்தம் போவியா.. போலீஸ்கிட்ட போவியா? அடேய்.. அடேய்.. என்னையே பயமுறுத்தறியாடா.. என்னைப் பத்தி உனக்கு என்னடா தெரியும்.. இதோ பார்.. யார்கிட்டே பேசறேன்னு தெரிஞ்சுதான் பேசறியா? நான் பொல்லாதவன்,, ரொம்ப ரொம்ப ரொம்ப பொல்லாதவன்..  நீ கல்யாணைப் பாக்கறதுக்கு இல்லே போலீஸ்கிட்ட போகறதுக்கு முன்னாடியே உன்னை சுட்டுப்போட்டு நம்ம தோட்டத்துலயே புதைச்சுடுவேன்.” என்றவர் கோபத்துடன் தன் பீரோவிலிருந்து கைத்துப்பாக்கியை எடுக்கிறார்.

     

    “சொல்லுடா.. சொல்லு.. இப்போ சொல்லு.. உனக்கு அந்த கேடுகெட்ட ரஞ்சிதா முக்கியமா இல்லே நான் முக்கியமா? சொல்லுடா..”

     

    முரளி கலங்கினாலும் அவரிடம் வருகிறான்.

    “மாமா.. நீங்க வளர்த்தீங்க.. உங்களுக்கு உரிமை இருக்கு.. என்னைக் கொன்னு போட்டுப் புதைச்சுடுங்க.. என்னைக் கல்யாணம் பண்ணின பிரியாவுக்கு கடைசி வரைக்கும் அவ மானத்தை பெருமையை காக்க போராடித்தான் செத்தேன்னு ஒரு திருப்தியும் இருக்கும். உங்க பேச்சைக் கேட்டு கட்டின பொண்டாட்டியையே அதுவும் என் பிரியாவை கூட்டிக்கொடுக்கற கேவலமான வாழ்க்கையே எனக்கு வேணாம்.. அப்படி ஒண்ணு ஆச்சுன்னா நான் தற்கொலைதான் பண்ணிப்பேன்.. அதனால உங்க கையாலே சாகறதுல எனக்குப் பயமே இல்ல.. சுடுங்க மாமா..”

     

    அவன் அழுகிறான். மாமாவுக்கு வெறுப்பு வருகிறது..

     

    “அடச்சீ போடா.. போடா.. என் கண் முன்னால இனிமே வராம எங்கயாவது போடா.. வாழ்க்கையும் வியாபாரமும் ஒண்ணுதாண்டா.. போ.. போ..”

     

    நினைவுகள் மறுபடி கல்யாண் இல்லத்தில்

     

    “நான் அன்னிக்கு அப்படி தைரியமா அப்படி சொல்லிட்டுப் போயிட்டேன். வீட்டையும் காலி பண்ணி நங்க நல்லூர்ல ஒரு வீடு பார்த்து அங்க நாங்க செட்டில் ஆயிட்டோம். பத்து நாள் ஆச்சு.. மாமாவுக்கு ஜுரம் வந்து படுத்துட்டாராம். பொன்னம்மாவை வெச்சு எனக்கு ஃபோன் பண்ணினார். சுந்தரும் வரச் சொன்னான். அவனுக்கு இந்த விஷயம்லாம் கொஞ்சமும் தெரியாதுன்னா கூட மாமா உடல் சுகமில்லேன்னு தெரிஞ்சு வந்திருக்கிறான். நானும் போனேன். கையைப் பிடிச்சுண்டுட்டார். “கல்யாண் வரணும்டா.. அவன் வந்துட்டா அவனுக்கு பொறுப்பெல்லாம் கொடுத்துட்டு நான் பாட்டுக்கு காசி ராமேஸ்வரம் போயிடறேன்’னு சொன்னார். கல்யாண் வர்றவரைக்குமாவது என்னை அடிக்கடி வந்து பாத்துக்கச் சொன்னார். ‘வளர்த்த பாசம் கூப்பிடுதுடா.. வாடா’ அப்படின்னு அழுதார். அவ்வளவுதான்.. நான் வழக்கப்படி எங்க ஆஃபீஸ் விட்டவுடன் சாய்ங்காலம் இங்க கிண்டில வந்து பார்த்துட்டு அவரோட ஷேர் சமாசாரம்லாம் சொல்லுவார்.. அதை இங்க கம்ப்யூட்டர்ல காமிப்பார்.. நானும் சில திருத்தங்களை நோட் பண்ணிட்டுப் போயிடுவேன், ஆனா சாப்பாடெல்லாம் கூட உட்கார்ந்து சாப்பிடறதில்லே.. கொலை நடந்த அன்னிக்கு வாக்கிங்காக அதிகாலைல வரச் சொன்னார். ரெண்டு பேரும் வாக்கிங்க் போனோம். அப்படி போகறச்சேதான் நடந்ததெல்லாம் மறந்துட்டேன்.. கல்யாண் நாளைக்குக் காலைல வர்றான். சுந்தர்கிட்ட கார் இருக்கு.. ரெண்டு பேரும் போய் அவனை அழைச்சிண்டு வாங்க.. அவனோட பேருல தாத்தாவோட சொத்தை எழுதணும்.. உனக்கும் சுந்தருக்கும் கூட என் சொத்துலேர்ந்து கொஞ்சம் பங்கு தரச் சொல்லி கல்யாண்கிட்டே பேசறேன். உங்க மூணு பேரை விட்டா எனக்கு யார் இருக்காங்க..” அப்படில்லாம் பேசினார். இனிமே பிரியா விஷயத்துல தான் குறுக்கே வரமாட்டேன்னு சொன்னாரு. ‘சாயங்காலம் ஆஃபீஸ் விட்டதும் வாடா.. இன்னும் நிறையப் பேசணும் உங்கிட்டே’ அப்படின்னு. தலையாட்டிட்டு நான் வீட்டுக்குப் போயிட்டு டிபன் சாப்பிட்டுட்டுதான் ஆஃபீஸ் போனேன். சாயங்காலம் ஆறரை மணிக்கு சாதாரணமா இங்க வீட்டுக்குள்ளே நுழையறச்சே வீடு உள்ளே தாள் போடாம மூடிண்டிருந்தது. என்னடா இதுன்னு உள்ள நுழைஞ்சு பார்த்தா மாமா ரத்த வெள்ளத்துல ஹால்ல கிடக்காரு. உடனேயே போலீஸ்க்கு ஃபோன் போட்டுச் சொன்னேன். அவ்வளவுதான்.. அவரை யாரோ அஞ்சு அஞ்சறை வாக்குல கொலை பண்ணியிருக்காங்கன்னு போஸ்ட் மார்ட்டத்துல சொல்லறாங்க. நான் ஆறரை மணிக்குதான் இங்கே நுழைஞ்சேன். எனக்கு ஒரே ஒரு உறுத்தல் என்னன்னா இந்த கலியாண ஒப்பந்தமும் பிரியாவோட பழைய கதையும் வெளில தெரிஞ்சா அனாவசியமா எங்க மேல பழி வந்துடுமேன்னுதான் பயந்தேன்.”

     

    “ஸோ.. அந்தப் பழி வராதவாறு சுமதி மேல இன்ஸ்பெக்டர்கிட்ட திருப்பி விட்டீங்க இல்லே? சரி, இந்த சுமதி யாரு?” கோம்டி நிதானமாகவே கேட்டாள்.

     

    “தெரியாதுங்க உண்மையில.. ஆனா எங்க மாமாவை ஒரு தடவை அங்க அழைச்சுண்டு போனேன். என்னைக் காருலயே இருக்க வெச்சுட்டு ஏதோ பேசிட்டு வந்தார்.. வீட்டுக்குத் திரும்பி வர வழியிலே திரும்பவும் சுமதி வீட்டுக்கு காரைத் திருப்பி விடச் சொன்னார். அங்க அவ வீட்ல என்ன நடந்ததோ தெரியலே.. ரொம்ப இறுக்கமான முகத்தோட வந்தார். இன்னும் சொல்லப் போனா சித்ரா பௌர்ணமி அன்னிக்கு பிரியா மேல எவ்வளோ கோபம் இருந்ததோ அந்த கோபமான முகத்தை அவர்கிட்டே அன்னிக்குப் பார்த்தேன். எங்கிட்டயே சொன்னார்.. “இந்த பொம்பளங்க எப்பவுமே இப்படித்தாண்டா..”ன்னு சொன்னார். நான் ரொம்ப விசாரிக்கலே.. திரும்பவும் எங்க பிரியா விஷயம் எடுத்துடுவாரோன்னு பயந்துட்டேன். ஆனா சுமதிகிட்டேயும் இவர் வம்பு வெச்சிருக்கணும்டா கல்யாண்.. அதனாலதான் இன்ஸ்பெக்டர்கிட்ட சொன்னேன். எனக்கு என்னன்னா இந்த மனுஷன் எங்கியாவது அடிபடணும்னு மனசுக்குள்ளயே ஆசை இருக்குடா.. எனக்கும் பிரியா சுமதி மாதிரி பெண்கள் கனெக்ஷன் நிறைய வெச்சுருக்கார்னு சந்தேகம் வந்ததுடா.. யாராவது கோபத்துல சுட்டுப் போட்டுருப்பாங்கன்னுதான் நினைக்கிறேன்.”

    கோம்டி தன் கை வாட்சைப் பார்த்துக் கொண்டாள். எழுந்து கொண்டாள்.

     

    “சரி மிஸ்டர் முரளி உங்க விஷயம் முடிஞ்சவரைக்கும் வெளியே வராம பாத்துக்கறோம். ஆனா வேற எந்த விஷயம் கிடைச்சாலும் எங்கிட்டே முதல்ல சொல்லணும்.”

     

    கல்யாண் சற்று இடிந்துபோன நிலையில் இருந்ததைக் கவனித்தாள் கோம்டி.

     

    “என்ன சார்.. உங்க பெரியப்பா பத்தி யோசிக்கிறீங்களா..  எல்லாத்தையும் எல்லாரையும் விசாரிக்கணும்.. இன்னும் என்னென்ன விஷயம்லாம் வரப் போகுதோ.. நான் வரட்டா?” கொஞ்சம் பரிவோடுதான் சொன்னாள்.

     

    அவன் தலையசைத்தான். அவள் எதிரில் உள்ள தன் இல்லத்துக்குச் சென்றாள்..

     

    இரவு படுக்கப் போகுமுன் ஒருமுறை கல்யாணுக்கு ஃபோன் செய்தாள்.

    தொடரும்

    Share