63 நாயன்மார்கள் வரலாறு – 19. திருநாவுக்கரசு நாயனார் (பகுதி – 1)

 

திருநாவுக்கு அரசுவளர்

  திருத்தொண்டின் நெறிவாழ

வருஞானத் தவமுனிவர்

  வாகீசர் வாய்மைதிகழ்

பெருநாமச் சீர்பரவல்

  உறுகின்றேன் பேருலகில்

ஒருநாவுக்கு உரைசெய்ய

 ஒண்ணாமை உணராதேன். 

உழவாரத் தொண்டர் என்று போற்றப்படும், தேவார மூவருள் இரண்டாமவரான திருநாவுக்கரசர் நாயனார் பைந்தமிழோடு பல கலைகளையும் கற்றுத் தேர்ந்த பெருமகனார். இவர் சமண சமயம் சார்ந்தபோது, ‘தரும சேனர்’ என்ற பட்டப் பெயரோடு திகழ்ந்தவர். இப்பெருமான் தமிழையும், கலைகளையும் சிவபரம்பொருளாகக் கண்டு மகிழ்ந்து உளம் கனிந்து பாடுகின்றார்.  சிவபெருமானையே ஆசிரியன் என்றும் தமிழன் என்று கூறி மகிழ்வது அழகு. திருநாவுக்கரசு நாயனாரை சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் “திருநின்ற செம்மையே செம்மையாகக் கொண்ட திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்” என்று போற்றுகின்றார்.

“தேவாரப்பதிகத்தைப் பாடினபடியால், நீ இனி நாவுக்கரசு என்ற பெயருடன் உலகில் நிலைத்திருப்பாய்” என்று சிவபெருமானார் அசரீரி வாக்கு அருளினார். திருஞானசம்பந்த நாயனார், இந்நாயனாரை ‘அப்பர்’ (தந்தை) என்று அழைத்தமையால் அப்பர் என்றும், இவர் தாண்டகம் எனும் விருத்த வகையைப் பாடியமையால் தாண்டக வேந்தர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
கி.பி. ஏழாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் திருமுனைப்பாடி (நடுநாடு) நாட்டில், திருவாமூரில், குறுக்கையர் குடி எனும் சைவ வேளாளர் குலத்தில் புகழனார் மற்றும் மாதினியார் தம்பதியினருக்கு மூத்த குழந்தையாக திலகவதியார் எனும் திருமகளும், இரண்டாவதாக ஒரு ஆண் மகவும் அவதரித்தனர். இந்த ஆண் மகவுக்கு மருள்நீக்கியார் எனும் திருநாமம் சூட்டப்பெற்றது.

திருநாவுக்கரசர் அவதரித்த திருமுனைப்பாடி எனும் திருத்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தேவாரம் பாடிய மூவர் பெருமக்களான, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரில் இருவர் அவதரித்த தலம் திருமுனைப்பாடி.

“மண்மேல் நம்மைச் சொற்றமிழ்ப் பாடு என சிவபெருமானே கேட்க ஆலால சுந்தரரும் அருந்தமிழால் பாடினார். கல் மிதக்கச் செய்தும், மறைக்கதவம் திறந்தும், பாம்பு கடித்த பாலகனைப் பாரறிய எழுப்பியும் பெருமானே சால நீ பசித்தாய்” எனக் கூறிக் கட்டமுது கொடுக்கக் கன்னித்தமிழால் கல்லும் கரைந்துருகக் கவி பாடிய நாவுக்கரசுப் பெருமானும், ஆரூரரும் அவதாரம் செய்த நாடு இந்நாடு என்பது பெருஞ்சிறப்பாகும்.

அறந்தருநா வுக்கரசும் ஆலால சுந்தரரும்

பிறந்தருள உளதானால் நம்மளவோ? பேருலகில்

சிறந்த்திரு முனைப்பாடி திறம்பாடும் சீர்பாடு

என்கிறார் சேக்கிழார் பெருமான். சைவம் சார்ந்து அடியவர் பெருமக்களைப் பாடுவதே தம் பிறவிப் பயன் என்று கருதிய நாவுக்கரசர், ‘தொண்டர் புராணம்’ பாடினார். புகழ்மிக்க சான்றோர்களும் அருளாளர்களும் தோன்றும் நாடு வளம் கொழிக்கும் என்ற வகையில் நாவரசர் திரு அவதாரம் செய்த திருமுனைப்பாடி எனும் பதி வளமோடிருப்பதில் வியப்பேதுமில்லையே?

மாசற்ற மதியினைப்போல் வளர்ந்து வந்த மருள் நீக்கியாரின் தமக்கை திலகவதியாரின் பன்னிரண்டாம் அகவையில், பண்டைய நாளின் வழக்கப்படி திருமணப் பேச்சு ஆரம்பித்தது. அறிவும் அழகும் நற்குணமும், குடிச்சிறப்பும் ஒருங்கே அமையப்பெற்ற கலிப்பகையார் என்ற வேளாண் குடித்தலைவருக்கு திலகவதியாரை மணமுடிக்க விரும்பி பெரியோர் சிலரை புகழனார்பால் அனுப்பினர். தந்தையாரும் தம் அருமை மகளைக் கொடுக்க இசைவளித்து அனுப்பினார்.

இச்சமயத்தில் வடநாட்டு மன்னன் ஒருவன் படையெடுத்து வர கலிப்பகையாரும் கடமை பெரிதென வடநாடு நோக்கி படை கொண்டு சென்றவர் நீண்ட நாட்கள் நடந்த போரால் திரும்பவில்லை. இதற்கிடையே நாவுக்கரசரின் பெற்றோரும் நோய்வாய்ப்பட்டு இறையடி சேர்ந்தனர். பெற்றோரை இழந்த பிள்ளைகள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்தனர். போர்க்களம் சென்ற கலிப்பகையாரும் வீர மரணம் அடைந்தார்.

பெற்றோர் கலிப்பகையாருக்கு மணமுடிக்க இசைந்ததால், தான் அவருக்கே உரியவள் ஆதலால் தன் உயிரை அவர் உயிரோடு இசைவிக்கத் துணிந்தார் அக்கன்னி திலகவதியார் எனும் கற்புக்கரசி. அதுகண்ட மருள்நீக்கியார் தம் தமக்கையார் திருவடிகளில் விழுந்து, தாய்க்குத் தாயான தமக்கையும் உயிர் துறக்கத் துணிந்தால் தாமும் அதற்கு முன் உயிர் துறப்பேன் என்று சபதமேற்றார் மருள்நீக்கி. நெக்குருகி நின்ற திலகவதியாரும் தம்பியார் உளவாக வேண்டும் என்ற விருப்பினால், நூல் தங்காது அனைத்துயிர்க்கும் அருள் தாங்கி இம்பர் மனைத்தவம் புரிய முடிவெடுத்தார்.

தம்பியார் உளர் ஆக வேண்டும்

  என வைத்த தயா

உம்பர் உலகு அணைய உறு

  நிலை விலக்க உயிர் தாங்கி

அம் பொன் மணி நூல் தாங்காது

  அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி

இம்பர் மனைத் தவம்

  புரிந்து திலகவதியார் இருந்தார். 

இவ்வம்மையாரையே திருப்புகழ் எனும் தேனமுதத்தில் அருணகிரியார்,

“மாது புகழை வளர்க்கும் திருவாமூர்” என்று போற்றினார்.

மனைத்தவம் புரிந்த தமக்கையார் தம் தம்பியாரை கல்வி கேள்விகளில் மிக்க சான்றோனாக வளர்த்தார். தமிழகத்தில் அப்போது சமணம் தலைத்தூக்கியிருந்த காலம். உலக நிலையாமை, செல்வம் நிலையாமை என நிலையாமையையே நிலைக்களனாகக் கொண்டது சமணம். மருள்நீக்கியாரின் வாழ்வியல் சூழலில் ஏற்பட்ட பேரிழப்புகள் அவர்தம் மனத்தில் பெருஞ்சுமையாக நிலையாமையை எண்ணி எண்ணிச் சுழன்றது. நில்லாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கையல்லேன் எனத் தேர்ந்து கொல்லாமை மறைந்தொழுகும் சமண சமயம் சாய்ந்தார். சமண சமய நூல்கள், வேத நூல்கள் கற்று ‘தரும சேனர்’ எனும் புதிய பெயரோடு, சமண மதத்துறவியாகவும், அச்சமண மடாதிபதிகளில் ஒருவராகவும் ஆனார். அந்நாளில் பாடலிபுத்திரம் (இந்நாள் கடலூர்) எனும் ஊர் சமண சமயத் தலைவர்களின் தலைமை இடமாகவும் புகலிடமாகவும் இருந்தது. சமண சமயக் கொள்கைகளை விளக்கி மக்களை அச்சமயத்தின்பால் ஈர்த்தார்.

தம்பியாரின் இந்நிலைக் கண்ட தமக்கையாரோ சிந்தை நொந்தார். மனம் தாளாது இருந்தவர் திரு அதிகை வீரட்டானம் என்னும் திருத்தலத்தை அடைந்து அங்கு ஒரு திருமடம் அமைத்து வீரட்டானப் பெருமானுக்கு திருப்பணி செய்து அப்பெருமானைப் புகழ்ந்து பாடி வழிபட்டு இருந்தார். தம்பியாகிய மருள்நீக்கி சைவம் நீங்கச் சமணம் சார்ந்து வாழும் பெருந்துயரை எம்பெருமானிடம் முறையிட்டு, தம்பி மீண்டும் சைவம் வரல் வேண்டும், அதற்குத் திருவருள் புரிய வேண்டும் என்று அனுதினமும் வேண்டி வழிபட்டு நின்றார்.

 மன்னு தபோ தனியார்க்குக் கனவின்

  கண் மழ விடையார்

உன்னுடைய மனக் கவலை ஒழி

  நீ உன் உடன் பிறந்தான்

முன்னமே முனியாகி எனை

  அடையத் தவம் முயன்றான்

அன்னவனை இனிச் சூலை மடுத்து

  ஆள்வம் என அருளி. 

சூலை நோயால் மருள்நீக்கியை ஆட்கொள்வோம் என்று திலகவதியாரின் கனவில் தோன்றி அருள்பாலித்துச் சென்றார் சிவபெருமான். தருமசேனராம் மருள்நீக்கியின் வயிற்றில் ஏற்பட்ட சிறிது வலி பன்மடங்காகப் பெருகி சமணத் துறவிகளின் மந்திரங்களுக்கும், மருந்துகளுக்கும் கட்டுப்படாமல் உயிர் போவது போன்ற வலியால் துடிதுடிக்கச் செய்தது. தாய்க்குத் தாயான தமக்கையாரின் நினைவு வர அவரை உடனே காண விழைந்தார். நம்பிக்கைக்குரிய ஒரு சமையல்காரரை அனுப்பி தமக்கையாருக்கு செய்தி சொல்லச் செய்தார்.

நன்று அறியா அமண் பாழி

  நண்ணுகிலேன் எனும் மாற்றம்

சென்று அவனுக்கு உரை

  என்று திலகவதியார் மொழிய

அன்று அவனும் மீண்டு போய்ப்

  புகுந்தபடி அவர்க்கு உரைத்தான். 

செய்தி கொண்டு போனவன் தமக்கையோடு வருவான் எனக் காத்திருந்த தருமசேனர் தனியாக வந்தவரைப் பார்த்து திடுக்கிட்டு கேட்டபோது, அம்மையார் அங்கு வர மறுத்த செய்தியைக் கூறினார். சூலை நோயிலிருந்து விடுவிக்க இயலாத சமண மதத்தை நம்பி இனியொரு பயனும் இல்லை என்று உணர்ந்து தமக்கையாரின் திருவடியையே சரணமாக அடைவேன் என்று சூலுரைத்து, அனைத்தையும் விடுத்து, வெள்ளாடை தரித்து திருவதிகைக்குக் கிளம்பினார்.

 அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு

  எய்தி இதற்கு இனி யான்

எவ்வாறு செய்வன் என

  ஈசர் அருள் கூடுதலால்

ஒவ்வா இப் புன் சமயத்து

  ஒழியா இத்துயர் ஒழியச்

செவ்வாறு சேர் திலக வதியார்

  தாள் சேர்வன் என.

தம்பியாரின் நிலை கண்டு வருந்திய திலகவதியார், அவருக்குத் திருநீறளித்து வீரட்டானப் பெருமானைத் தரிசித்து வரப் பணித்தார். திருக்கோயிலை வலம் வந்து வணங்கி எழுந்த மருள்நீக்கியார் உள்ளுணர்வு உந்த செந்தமிழ்ப் பதிகம் பாடலானார். திலகவதியாரின் ஆலோசனைப்படி தருமசேனர் சிவபெருமான் மேல் “கூற்றாயினவாறு விலக்ககிலீர்” என்னுந் தேவாரத் திருப்பதிகத்தைப் பாடியருளினார்.

நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை

  அன்பு உறுசிந்தையில் நேசம் மிக

மாற்றார் புரம் மாற்றிய வேதியரை

  மருளும் பிணி மாயை அறுத்திடுவான்

கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்

  எனநீடிய கோதில் திருப்பதிகம்

போற்றால் உலகு ஏழின் வரும் துயரம்

  போமாறு எதிர் நின்று புகன்றனரால்.

உடனே சூலைநோய் நீங்கிற்று.

கூற்றாயின வாறுவி லக்ககிலீர்

  கொடுமைபல செய்தன நானறியேன்

ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்

  பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

தோற்றாதென் வயிற்றின் அகம்படியே

  குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில

  வீரட்டா னத்துறை அம்மானே. 

அந்தப் பாடலின் இனிமையில் கரைந்த சிவபெருமான், “செந்தமிழ்ச் சொல் மலர்களால் ஆன திருப்பதிகமாகிய பாமாலையை நீ பாடியமையால் இன்று முதல் உன் நாமம் திருநாவுக்கரசு என ஏழு உலகமும் ஏத்துக” என அசரீரியாக வானில் ஓர் ஒலி ஒலித்தது.

சிவாலயங்களுக்கு மக்கள் செல்வது குறைந்து, ஆலயங்கள் அனைத்தும் கவனிப்பாரின்றி செடி கொடிகள் முளைத்து  சிதைந்து போன கட்டடங்களாக ஆன நிலையில்தான் தருமசேனரான மருள்நீக்கியார் சைவத்துக்கு மீண்டார். கோயில் கோபுரங்களில் மரம் வளர்ந்து தகர்த்தது. கோயிலைச் சுற்றிலும் புல்லும் பூண்டும் முள் செடியும் வளர்ந்தன. மக்கள் செல்லவே அஞ்சும் நிலை ஏற்பட்ட இந்த நேரத்தில்தான் அப்பரடிகள் சைவம் சார்ந்தார். அது முதல் திருநாவுக்கரச நாயனார் சைவத் தொண்டு செய்யலானார். தம் கரங்களில் புல், பூண்டு அகற்றும் ‘உழவாரம்’ என்ற கருவியை எடுத்துச் சென்று ஆலயத் திருப்பணிகளை செய்து மக்களையும் அவ்வழியில் ஆற்றுப்படுத்தினார். பல்வேறு சிவாலயங்களில் உழவாரப் பணி செய்து முன்னோடியாக இருந்தமையால், “உழவாரத் தொண்டர்” என அழைக்கப்பட்டார். இன்றும் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர்.

திருவதிகை சென்ற தங்கள் சமண மதத் தலைவர் தமக்கையாரிடம் சென்று சைவம் சார்ந்தார் என்ற செய்தியை அறிந்த சமணர் ஒன்றுகூடி ஆலோசனை செய்தனர். பின் பல்லவ மன்னனிடம் சென்று, தருமசேனர் சூலைநோய் என்று பொய் கூறி சைவ சமயம் சேர்ந்ததால் நம் சமண சமயம் தாழ்ந்தது எனக்கூறி அவரைக் கோபமூட்டினர். மன்னனும் தன் ஆணையை மீறிய அவனைத் தண்டித்து ஒறுத்தல் வேண்டும் என்றார். நாவுக்கரசரை கைது செய்து வரும்படியும் ஆணையிட்டார். மன்னனின் ஆணையை ஏற்று அமைச்சர்களும், அதிகாரிகளும் திருவதிகை நோக்கிச் சென்று, நாவுக்கரசுப் பெருமான் திருமடத்தில் அவரைப் பார்த்து, பல்லவ மன்னனின் ஆணையைப் பற்றிக் கூறினர்.

நாவுக்கரசரும் “மறு மாற்றத் திருத்தாண்டகம்” எனும் செந்தமிழ்ப் பாமாலையால் பதிலளித்தார்.

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்

        நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்

        இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை

தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான

        சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்

கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்

        கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.

ஆனால் அமைச்சர்களும் சேவகர்களும் அப்பரடிகள் திருவடியில் வீழ்ந்து, மன்னவன் ஆணையை நிறைவேற்றாவிட்டாலும், மன்னன் தங்களை தண்டிக்காமல் இருப்பதற்காகவாவது வரவேண்டும் என்று பணிந்து வேண்டினர். அப்பரடிகளும் இறைவன் சிவபெருமான் உடனிருக்க அங்கு செல்வதில் தடையில்லை என்று கூறி பல்லவன் அரண்மனை நோக்கிச் சென்றார். பல்லவ மன்னனோ நாவுக்கரசரை சந்திக்காமலேயே விசாரிக்காமலே தண்டனை அளித்தான்.

நாவுக்கரசரை நீற்றறையில் (சுண்ணாம்பு கொதிக்க வைக்கும் அறை) அடைத்து வைத்தான். தில்லைக் கூத்தப்பெருமான் திருவடியை நினைந்து வழிபட்டவருக்கு எந்தத் தீங்கும் நேராது உயிர் பெற்றார்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

எனப் பாடினார். எட்டு நாட்கள் கடந்து நீற்றறையை நீக்கியபோது இறையருளால் நாவரசர் அன்றலர்ந்த செந்தாமரை போல் புன்னகைத் தவழும் திருமுகத்தோடு காட்சியளித்தார்.

அடுத்ததாக நஞ்சு கலந்த பாலடிசில் பருகத் தந்தனர்.

துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்தி ராதே
அஞ்செழுத் தோதில் நாளு மரனடிக் கன்ப தாகும்
வஞ்சனைப் பாற்சோ றாக்கி வழக்கிலா வமணர் தந்த
நஞ்சழ தாக்கு வித்தார் நனிபள்ளி யடிக ளாரே.

அந்த நஞ்சும் அவரை ஒன்றும் செய்யவில்லை.

அடுத்ததாக யானையை விட்டு மிதிக்கும்படி ஆணையிட்டான். ஆனால் அந்த யானை அவரை வணங்கிச் சென்றது. இதனால் வேறு வழி இன்றி திருநாவுக்கரசு நாயனாரை ஒரு கல்லில் கட்டி கடலில் வீசும்படி அரசன் ஆணையிட்டான்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்,
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினு,
நற்றுணை யாவது நமசி வாவே.

என்று வீரம் பொங்கப் பாடினார் திருநாவுக்கரசு நாயனார். இதனால் கட்டிய கல் பூவாக மாறி கடலில் மிதந்து வந்தது. திருநாவுக்கரசு நாயனாரும் கரை வந்து சேர்ந்தார். சிவபெருமானின் அருளைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மனம் மாறி இறுதியில் பல்லவ மன்னனும் சைவ சமயத்தைத் தழுவினான். அப்பரடிகளின் திருவடிகளில் வீழ்ந்து சமணம் விட்டு சைவம் சார்ந்தான். அவனால் உருவாக்கப்பட்ட சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்துத் தகர்த்து அக்கற்களைக் கொண்டே ‘குணபரவீச்சுரம்’ என்னும் திருக்கோயில் கட்டினான்.

தொடரும்

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.