திவாகர்

 

“மாமா உங்களை எதிர்த்து எப்போதுமே பேசாதவன் நான். நீங்க வந்து இந்தப் பொண்ணு கழுத்துல தாலி கட்டுடா’ன்னீங்க.. நான் யோசிக்காம கட்டினேன். என் எதிர்கால வாழ்க்கையைப் பத்திக் கூட யோசிக்காம நீங்க சொன்னதைத்தான் செஞ்சேன். ஆனா அவளோடு குடும்பம் நடத்தக்கூடாதுன்னு நீங்க ஒரு வார்த்தை சொல்லலே.”

 

“டேய்.. டேய் என்னடா சொல்லறே?”

 

“ஆமாம் மாமா.. தாலி கட்டின ஒரு பெண்ணை நான் கூட்டிண்டு வீட்ல ஒத்தரை ஒத்தர் தனியாவா பாத்துண்டிருக்க முடியும்..? பிரியா அழகான பொண்ணு. அத்தோட அறிவுள்ள பொண்ணு.. நான் ஒரு முட்டாள்.. உங்க வளர்ப்புல வளர்ந்தவன் இல்லே.. வேறெப்படி இருக்கமுடியும். நாய் மாதிரி நன்றி உள்ளவனாகத்தான் இருக்கமுடியும். அந்த நாயாதான் அவள் பின்னாடி அன்னிக்குப் போனேன். ஆனா பிரியா படிப்படியா என்னை மாத்தி எனக்குப் புத்திமதி சொல்லி நாயா இருந்த என்னை ஒரு மனுஷனா ஆக்கினா.. ‘

 

முரளி கொஞ்சம் நிறுத்தினான். பெருமூச்சு விட்டான். கோபம் அதிகமாக இருந்த மாமாவிடம் நெருங்கி கொஞ்சம் நிதானமாகப் பேசினான்.

 

‘நீங்க அப்பப்போ இங்க வீட்டுக்கு வரட்டுமா வரட்டுமான்னு கேக்கற போதெல்லாம் நான் வேணாம்.. வேணாம் மாமான்னு தடுத்தேன். ‘இப்போ ரஞ்சிதா இல்லே மாமா அவ பிரியாமுரளி’ன்னு பேரை மாத்திண்டான்னு சொன்னேன். நீங்க கண்டுக்கவே இல்லை.. எந்த எழவானாலும் பேரை வெச்சுக்கட்டுமே..ன்னு அலட்சியமா சொன்னீங்க.. ஆனாலும் குடும்பம்னு வந்துட்டா ஒரு ஆண்மகன் தன் குடும்பத்துக்கு எப்போதுமே விசுவாசமா உண்மையா இருக்கணுமா இல்லையா.. பிரியாவே ஒரு வார்த்தை சொன்னா.. ‘நான் மாமாவோட பலவந்தப்படுத்தப்பட்டு வேறே வழி தெரியாம பைத்தியம் மாதிரி அவஸ்தைப்பட்டேன். வாஸ்தவம்தான். ஆனா இப்போதான் கணவன் மனைவி உறவுங்கிறது என்ன ஒரு அழகான உறவுன்னு புரியுது. இதோ பாருங்க.. உங்களுக்கும் எனக்கும் அது என்ன காரணத்தாலோ கல்யாணம்னு ஒண்ணு நடந்திடுச்சு. இப்போ காலம் மாறிடுச்சு. இரண்டு மனம் ஒத்துப் போறவங்கதான் கணவன் மனைவியா ரொம்ப நாள் வாழமுடியும். அப்படி ஒத்துப் போகலைன்னா டைவோர்ஸ் வாங்கிண்டு அவரவர் பாதைல நடக்கணும். இதுக்கு இப்போ சமூக அங்கீகாரம் கூட பலமா கிடைச்சாச்சு. பெண்களும் பழைய மாதிரி இல்லாம சுயமா சிந்திச்சு மானத்தோட மரியாதையோட செயல் படற காலம் இது. இப்போ என்ன? கொஞ்ச நாள் உங்க மாமா கூட ‘லிவ் இன்’ மாதிரி இருந்தேன். ஆனா கலியாணம் பண்ணிக்காம இருந்தேன். இப்போ பிரிஞ்சாச்சு. அதாவது இது கூட டைவோர்ஸ் மாதிரித்தானே.. ஒரு டைவோர்ஸியான என்னை நீங்க ரிஜிஸ்டர் விவாகம் பண்ணிண்டீங்க.. இப்போ சட்டப்படி கணவன் மனைவி.. நான் என் கணவன்கிட்டே உண்மையா இருப்பேன். அப்படியே நீங்களும் இருந்தீங்கன்னா நம்ம புது வாழ்க்கையை தென்றல் போல ஆனந்தமா கழிப்போம்’ன்னு சொன்னா மாமா.”

 

“அடேய் பைத்தியக்காரா.. நீ நிஜமாவே லூஸாடா.. அவ அப்படி சொன்னா நம்பிடுவியா? டேய்.. ஒரு தற்காலிகமா அரேஞ்ச்மென்ட் தேவை.. அதுக்காக உன்னை அப்படி அவளுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சேன். இப்போ அவ ஆடற நாடகப் பேச்சைக் கேட்டுட்டு நீ அவ காலடில போய் விழலாமாடா.. டேய்.. பொம்பளை பேச்சை எல்லாம் மதிக்கலாமாடா.. மதிச்சா நம்மை மிதிச்சுடுவாங்கடா.. மடையா.. இப்போ என்ன ஆச்சு.. எங்க போய் ஒளிஞ்சுண்டா.. வரச் சொல்லுடா நான் அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கறேன். ரெண்டு வேளை சோத்துக்கு வழியில்லாத குடும்பம் அது…. அந்தக் குடும்பத்துக்கு இவளுக்காக லட்சம் லட்சமா செலவு பண்றேண்டா.. வரச் சொல்லுடா அவளை.. இல்லே நான் போய் இழுத்து வரேன்.”

 

“மாமா.. அவ ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கா..”

 

“ஆஸ்பத்திரியா.. எதுக்கு?”

 

“மாமா..“ என்று இழுத்தான். “குடும்பம் நடத்துறேன்னு சொன்னேன் இல்லே.. அதான் அவளுக்கு இப்போ மூணாவது மாசம்..”

 

“புரியுதுடா.. “

 

கந்தசாமி கோபத்தோடு பின் கையைக் கட்டிக்கொண்டு அங்குமிங்கும் நடந்தார். கொஞ்ச நேரம் வரை பேசாமல் அப்படி நடந்தவர் ஏதோ முடிவுக்கு வந்தவர் போல முகத்தை வைத்துக்கொண்டு முரளியின் அருகே சென்றார்.

 

“முரளி, இன்னிக்கு நீ ஆஸ்பத்திரிக்குப் போகாதே.. ஆனா நாளைக்குப் போகற.. போயிட்டு அவளோட வயித்தை க்லீன் பண்ணிடறே.. புரியுதா.. எனக்கும் புரியுது.. பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா எரியத்தான் செய்யும்.  நான் ஒரேயடியா உங்களை நம்பியது என் தப்புதான். ஆனா இது உனக்கு இது கடைசி எச்சரிக்கை.. இனிமே அவகிட்டே நெருங்காதே.. ஒரு மாசம் போகட்டும். அவ ரெஸ்ட் எடுக்கட்டும். அவளை அவ ஊருக்கே அனுப்பிச்சிடலாம். அவங்கம்மா ஒழுங்கா எங்கிட்டே அனுப்பிடுவாங்க.. நீ என்ன பண்றே.. அவ ஊருக்குப் போன உடனே அதைக் காரணம் காட்டி ஒரு டைவோர்ஸ் அப்ளிகேஷன் போட்டா டைவோர்ஸ் வாங்கித் தரேன். அதுக்கப்பறம் நல்ல குடும்பத்துல பார்த்து உனக்கு ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வெக்கறது என் பொறுப்பு.. ஆனா ஒண்ணு இந்த விஷயம் யாருக்கும் அதாவது முக்கியமா சுந்தருக்கோ அல்லது கல்யாணுக்கோ தெரியவே கூடாது.. சரியா?”

 

முரளி ஒன்றும் சொல்லவில்லை. பெரியப்பா வீட்டை விட்டு வெளியே போனார்.

 

நினைவுகள் திரும்பின. மறுபடியும் கல்யாண் வீடு

 

கல்யாண் தலையை ஆட்டினான், “ச்சே.. இதுவும் ஒரு வாழ்க்கையாடா.. டேய் முரளி, பயப்படாம சொல்லு. நீ இதுக்கப்பறம் அவர் எல்லை மீறக்கூடாதுன்னு கொலை பண்ணிட்டியா? சொல்லுடா.. தயங்காம சொல்லு.. அன்னிக்கு ராத்திரி நடந்தப்பறம் அவரால சும்மா இருக்கமுடியாதே.. வஞ்சம் கொண்ட பாம்பு மாறி அலைஞ்சாராடா.. சீச்சீ கேக்கவே அருவறுப்பா இருக்குடா..”

 

முரளி இதைக் கேட்டதும் காதை மூடிக்கொண்டான்.

“டேய் கல்யாண்.. நான் ஏண்டா அவரைக் கொலை பண்றேன்.. இல்லைடா நான் ஸத்தியமா எங்கம்மா மேலே சத்தியமா நான் கொலை பண்ணலே..”

 

“அப்போ பிரியா பண்ணிட்டாளாடா?”

 

“ஐய்யய்யோ அவ பேரை இழுக்காதேடா.. அவ மனசுல தங்கம்டா.. ரொம்ப ஸாஃப்ட் கூட.. நிஜமாவே சொல்லறேன்.. அவ பழசு எல்லாத்தையும் மறந்து புது வாழ்க்கை வாழணும்னுதானே ஆசைப்படறவ. அவ எதுக்குடா கொலை பண்றா?”

 

கோம்டி குறுக்கிட்டாள்.

“அப்போ நீங்களும் இல்லே.. பிரியாவும் இல்லேன்னு கச்சிதமா சொல்லறீங்க.. ஆனா இந்தக் கதையை போலீஸ் கேட்டாக்க இந்த கேஸ் ஃபைலை ஈஸியா மூடிடுவாங்க மிஸ்டர் முரளி.. கொலைப் பழியை உங்க ரெண்டு பேர் மேலயும் போட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் வஞ்சம் வெச்சு செஞ்சுட்டாங்கன்னு எப்படியாவது சொல்லி ஜெயில்ல போட்டுடுவாங்க”

 

“ஐய்யோ அப்படியெல்லாம் பயமுறுத்தாதீங்க கோம்டி..”

 

“பின்னே எப்படித்தான் இதை சால்வ் பண்றது? சரி, அதுக்கப்பறம் உங்க மாமா எப்படி பிஹேவ் பண்ணினார். அதைச் சொல்லுங்க உங்க மனைவி இந்த விஷயத்தை எப்படி டீல் பண்ணாங்க?”

 

“மேடம்! அதுக்கப்பறம் ஒரு மாசம் கழிச்சு என்னை மறுபடியும் இவன் பெரியப்பா பிரியாவைப் பத்தி கேக்கறச்சே நான் கண்டிப்பா சொல்லிட்டேன்.” அவன் நினைவுகள் மறுபடியும் பின்னோக்கிச் சென்றன.

 

கந்தசாமியின் வீடு.

 

“இதோ பாருடா முரளி! உனக்கும் எனக்குமுள்ள உறவு ரொம்ப பாசமானது. இதுல பொண்ணுங்க மத்தில புகுந்து குழப்பக்கூடாது. நீ இன்னமும் அவளை ஊருக்கு அனுப்பலே. ஏன் அனுப்பலே? அத முதல்ல செய்யு! அதுக்கப்பறம் எனக்குத் தெரிஞ்ச வக்கீல்கிட்ட நான் பேசறேன்.. டைவோர்ஸ் வாங்கிடணும்.. இந்தக் கல்யாணமே என் சுய நலத்துக்காக ஒரு வியாபாரம் போல பண்ணி வெச்சுட்டேன்.. அதனால உனக்கு இன்னொரு பொண்ணு பார்த்துட்டேன். மாரேஜ் பீரோ மூலம்தான் பார்த்தேன். எல்லாமே நல்லா அமைஞ்சிருக்கு. அவளைக் கல்யாணம் பண்ணிண்டு சுகமா இரு., சரிதானா?”

 

“மாமா.. இனிமே கல்யாணம் எல்லாம் நான் செஞ்சுக்கறதா இல்லே.. அதோட நான் பிரியாவை டைவோர்ஸ் பண்றதாவும் இல்லே.. இது முடிஞ்சு போன விஷயம். இதைப் பத்திப் பேசி நமக்குள்ள ஒரு பிரச்சினையை உருவாக்கிக் கொள்ள வேணாம் மாமா..”

 

“என்னடா பெரிய பிரச்சினை..   டேய் மடையா.. உனக்கு எத்தனை தடவை சொல்வேன். அவ என் ஆள்டா.. எனக்காக என்னோட சௌகரியத்துக்காக வேண்டி நீ அதுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பேங்கிற நம்பிக்கையில இந்தக் கல்யாணம் நடந்ததுடா.. இதோ பார்.. நீ என்ன பிரச்சினையை எதிர்பார்க்கறே? ரஞ்சிதா ஏதாவது தற்கொலை பண்ணிக்குவா இல்லே கோர்ட்டுக்குப் போவா.. இப்படில்லாம் பிரச்சினை எதிர்பாக்கறியா? நீ கவலைப்படாதேடா.. நான் அவளை உன் வாழ்க்கைல புகுத்தினவன்.. நானே அவளை வெளியே கிளப்பிடறேன். அப்பறமா நீ புதுக் கல்யாணம் பண்ணிண்டு சந்தோஷமா இரேண்டா..”

 

“இல்ல மாமா! இனிமே எனக்கு லைஃபே என் பிரியா’தான்னு உங்கள்ட்ட எத்தனையோ தடவை சொல்லிட்டேன். இப்பவும் சொல்லறேன்.. பிரியாதான் என் பொண்டாட்டி..  பழசையெல்லாம் ஒரேயடியா மறந்துடுங்க.. அவ வயசு என்ன.. உங்க வயசு என்னன்னு நினைச்சுப் பாருங்க.. சட்டப்படி கூட எங்களுக்குதான் சாதகமா இருக்கு.  நீங்க இந்த விஷயத்தை மறக்கத்தான் வேணும். இல்லன்னா நான் கல்யாண்கிட்டயோ இல்லே வேற இடத்திலயோ ஏன், பிரியாவே சொல்லற மாதிரி போலீஸ்கிட்டயோ மத்யஸ்தம் செஞ்சுக்கப் போவேன்.. சொல்லிட்டேன்.. நீங்க இந்த விஷயத்தைப் பத்தி பேசறதோ இல்லே எங்க வீட்டுக்கோ வரவேணாம்.”

 

“என்ன மறுபடியும் சொல்லு.. கல்யாண்கிட்ட மத்யஸ்தம் போவியா.. போலீஸ்கிட்ட போவியா? அடேய்.. அடேய்.. என்னையே பயமுறுத்தறியாடா.. என்னைப் பத்தி உனக்கு என்னடா தெரியும்.. இதோ பார்.. யார்கிட்டே பேசறேன்னு தெரிஞ்சுதான் பேசறியா? நான் பொல்லாதவன்,, ரொம்ப ரொம்ப ரொம்ப பொல்லாதவன்..  நீ கல்யாணைப் பாக்கறதுக்கு இல்லே போலீஸ்கிட்ட போகறதுக்கு முன்னாடியே உன்னை சுட்டுப்போட்டு நம்ம தோட்டத்துலயே புதைச்சுடுவேன்.” என்றவர் கோபத்துடன் தன் பீரோவிலிருந்து கைத்துப்பாக்கியை எடுக்கிறார்.

 

“சொல்லுடா.. சொல்லு.. இப்போ சொல்லு.. உனக்கு அந்த கேடுகெட்ட ரஞ்சிதா முக்கியமா இல்லே நான் முக்கியமா? சொல்லுடா..”

 

முரளி கலங்கினாலும் அவரிடம் வருகிறான்.

“மாமா.. நீங்க வளர்த்தீங்க.. உங்களுக்கு உரிமை இருக்கு.. என்னைக் கொன்னு போட்டுப் புதைச்சுடுங்க.. என்னைக் கல்யாணம் பண்ணின பிரியாவுக்கு கடைசி வரைக்கும் அவ மானத்தை பெருமையை காக்க போராடித்தான் செத்தேன்னு ஒரு திருப்தியும் இருக்கும். உங்க பேச்சைக் கேட்டு கட்டின பொண்டாட்டியையே அதுவும் என் பிரியாவை கூட்டிக்கொடுக்கற கேவலமான வாழ்க்கையே எனக்கு வேணாம்.. அப்படி ஒண்ணு ஆச்சுன்னா நான் தற்கொலைதான் பண்ணிப்பேன்.. அதனால உங்க கையாலே சாகறதுல எனக்குப் பயமே இல்ல.. சுடுங்க மாமா..”

 

அவன் அழுகிறான். மாமாவுக்கு வெறுப்பு வருகிறது..

 

“அடச்சீ போடா.. போடா.. என் கண் முன்னால இனிமே வராம எங்கயாவது போடா.. வாழ்க்கையும் வியாபாரமும் ஒண்ணுதாண்டா.. போ.. போ..”

 

நினைவுகள் மறுபடி கல்யாண் இல்லத்தில்

 

“நான் அன்னிக்கு அப்படி தைரியமா அப்படி சொல்லிட்டுப் போயிட்டேன். வீட்டையும் காலி பண்ணி நங்க நல்லூர்ல ஒரு வீடு பார்த்து அங்க நாங்க செட்டில் ஆயிட்டோம். பத்து நாள் ஆச்சு.. மாமாவுக்கு ஜுரம் வந்து படுத்துட்டாராம். பொன்னம்மாவை வெச்சு எனக்கு ஃபோன் பண்ணினார். சுந்தரும் வரச் சொன்னான். அவனுக்கு இந்த விஷயம்லாம் கொஞ்சமும் தெரியாதுன்னா கூட மாமா உடல் சுகமில்லேன்னு தெரிஞ்சு வந்திருக்கிறான். நானும் போனேன். கையைப் பிடிச்சுண்டுட்டார். “கல்யாண் வரணும்டா.. அவன் வந்துட்டா அவனுக்கு பொறுப்பெல்லாம் கொடுத்துட்டு நான் பாட்டுக்கு காசி ராமேஸ்வரம் போயிடறேன்’னு சொன்னார். கல்யாண் வர்றவரைக்குமாவது என்னை அடிக்கடி வந்து பாத்துக்கச் சொன்னார். ‘வளர்த்த பாசம் கூப்பிடுதுடா.. வாடா’ அப்படின்னு அழுதார். அவ்வளவுதான்.. நான் வழக்கப்படி எங்க ஆஃபீஸ் விட்டவுடன் சாய்ங்காலம் இங்க கிண்டில வந்து பார்த்துட்டு அவரோட ஷேர் சமாசாரம்லாம் சொல்லுவார்.. அதை இங்க கம்ப்யூட்டர்ல காமிப்பார்.. நானும் சில திருத்தங்களை நோட் பண்ணிட்டுப் போயிடுவேன், ஆனா சாப்பாடெல்லாம் கூட உட்கார்ந்து சாப்பிடறதில்லே.. கொலை நடந்த அன்னிக்கு வாக்கிங்காக அதிகாலைல வரச் சொன்னார். ரெண்டு பேரும் வாக்கிங்க் போனோம். அப்படி போகறச்சேதான் நடந்ததெல்லாம் மறந்துட்டேன்.. கல்யாண் நாளைக்குக் காலைல வர்றான். சுந்தர்கிட்ட கார் இருக்கு.. ரெண்டு பேரும் போய் அவனை அழைச்சிண்டு வாங்க.. அவனோட பேருல தாத்தாவோட சொத்தை எழுதணும்.. உனக்கும் சுந்தருக்கும் கூட என் சொத்துலேர்ந்து கொஞ்சம் பங்கு தரச் சொல்லி கல்யாண்கிட்டே பேசறேன். உங்க மூணு பேரை விட்டா எனக்கு யார் இருக்காங்க..” அப்படில்லாம் பேசினார். இனிமே பிரியா விஷயத்துல தான் குறுக்கே வரமாட்டேன்னு சொன்னாரு. ‘சாயங்காலம் ஆஃபீஸ் விட்டதும் வாடா.. இன்னும் நிறையப் பேசணும் உங்கிட்டே’ அப்படின்னு. தலையாட்டிட்டு நான் வீட்டுக்குப் போயிட்டு டிபன் சாப்பிட்டுட்டுதான் ஆஃபீஸ் போனேன். சாயங்காலம் ஆறரை மணிக்கு சாதாரணமா இங்க வீட்டுக்குள்ளே நுழையறச்சே வீடு உள்ளே தாள் போடாம மூடிண்டிருந்தது. என்னடா இதுன்னு உள்ள நுழைஞ்சு பார்த்தா மாமா ரத்த வெள்ளத்துல ஹால்ல கிடக்காரு. உடனேயே போலீஸ்க்கு ஃபோன் போட்டுச் சொன்னேன். அவ்வளவுதான்.. அவரை யாரோ அஞ்சு அஞ்சறை வாக்குல கொலை பண்ணியிருக்காங்கன்னு போஸ்ட் மார்ட்டத்துல சொல்லறாங்க. நான் ஆறரை மணிக்குதான் இங்கே நுழைஞ்சேன். எனக்கு ஒரே ஒரு உறுத்தல் என்னன்னா இந்த கலியாண ஒப்பந்தமும் பிரியாவோட பழைய கதையும் வெளில தெரிஞ்சா அனாவசியமா எங்க மேல பழி வந்துடுமேன்னுதான் பயந்தேன்.”

 

“ஸோ.. அந்தப் பழி வராதவாறு சுமதி மேல இன்ஸ்பெக்டர்கிட்ட திருப்பி விட்டீங்க இல்லே? சரி, இந்த சுமதி யாரு?” கோம்டி நிதானமாகவே கேட்டாள்.

 

“தெரியாதுங்க உண்மையில.. ஆனா எங்க மாமாவை ஒரு தடவை அங்க அழைச்சுண்டு போனேன். என்னைக் காருலயே இருக்க வெச்சுட்டு ஏதோ பேசிட்டு வந்தார்.. வீட்டுக்குத் திரும்பி வர வழியிலே திரும்பவும் சுமதி வீட்டுக்கு காரைத் திருப்பி விடச் சொன்னார். அங்க அவ வீட்ல என்ன நடந்ததோ தெரியலே.. ரொம்ப இறுக்கமான முகத்தோட வந்தார். இன்னும் சொல்லப் போனா சித்ரா பௌர்ணமி அன்னிக்கு பிரியா மேல எவ்வளோ கோபம் இருந்ததோ அந்த கோபமான முகத்தை அவர்கிட்டே அன்னிக்குப் பார்த்தேன். எங்கிட்டயே சொன்னார்.. “இந்த பொம்பளங்க எப்பவுமே இப்படித்தாண்டா..”ன்னு சொன்னார். நான் ரொம்ப விசாரிக்கலே.. திரும்பவும் எங்க பிரியா விஷயம் எடுத்துடுவாரோன்னு பயந்துட்டேன். ஆனா சுமதிகிட்டேயும் இவர் வம்பு வெச்சிருக்கணும்டா கல்யாண்.. அதனாலதான் இன்ஸ்பெக்டர்கிட்ட சொன்னேன். எனக்கு என்னன்னா இந்த மனுஷன் எங்கியாவது அடிபடணும்னு மனசுக்குள்ளயே ஆசை இருக்குடா.. எனக்கும் பிரியா சுமதி மாதிரி பெண்கள் கனெக்ஷன் நிறைய வெச்சுருக்கார்னு சந்தேகம் வந்ததுடா.. யாராவது கோபத்துல சுட்டுப் போட்டுருப்பாங்கன்னுதான் நினைக்கிறேன்.”

கோம்டி தன் கை வாட்சைப் பார்த்துக் கொண்டாள். எழுந்து கொண்டாள்.

 

“சரி மிஸ்டர் முரளி உங்க விஷயம் முடிஞ்சவரைக்கும் வெளியே வராம பாத்துக்கறோம். ஆனா வேற எந்த விஷயம் கிடைச்சாலும் எங்கிட்டே முதல்ல சொல்லணும்.”

 

கல்யாண் சற்று இடிந்துபோன நிலையில் இருந்ததைக் கவனித்தாள் கோம்டி.

 

“என்ன சார்.. உங்க பெரியப்பா பத்தி யோசிக்கிறீங்களா..  எல்லாத்தையும் எல்லாரையும் விசாரிக்கணும்.. இன்னும் என்னென்ன விஷயம்லாம் வரப் போகுதோ.. நான் வரட்டா?” கொஞ்சம் பரிவோடுதான் சொன்னாள்.

 

அவன் தலையசைத்தான். அவள் எதிரில் உள்ள தன் இல்லத்துக்குச் சென்றாள்..

 

இரவு படுக்கப் போகுமுன் ஒருமுறை கல்யாணுக்கு ஃபோன் செய்தாள்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.