பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 21

0

63 நாயன்மார்கள் வரலாறு – 19 திருநாவுக்கரசர் நாயனார்பகுதி 2

 

 

மொழியும் இனமும்

நம் மொழி இலக்கியத்துள் முதன்முதலாக மொழிவழித் தேசிய இனம் என்ற புதிய மரபினைத் தோற்றுவித்த பெருமை அப்பரடிகளையேச் சாரும்! தமிழன்என்ற சொல்லையும் முதன்முதலில் கூறிய முதல் தமிழரும் அவரே!

ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்’ (6-23-5)

தன் பொருட்டே திருநாவுக்கரசர் நாயனார் பெருமானை தமிழ் மொழித் தலைவர் எனக் குறிப்பிடுகிறார் போலும் சேக்கிழார் பெருமான்.

சண்பைநா டுடைய பிள்ளை தமிழ்மொழித் தலைவ ரோடு

மண்பயில் சீர்த்திச் செல்வமாமறைக் காடு வைகி, என்கிறார்.

அப்பரடிகள் தருமசேனர் எனும் சமணராய் இருந்தபோது அவர்களோடு கூடியிருந்து அவர்தம் சோற்றை உண்ட தன் உடல் மாசுபட்டுள்ளதோ என்று அவருடைய உள் மனது வருந்த, அந்த மாசைப் போக்க வேண்டும் என்று நினைத்தார். பொதுவாக இத்தகைய மாசு நீங்க வேண்டுமானால் ஒன்று நீரால் அல்லது தீயால் மட்டுமே ஆகும் என்ற எண்ணத்தில் தன் உடலை இந்த இரண்டு முறையிலும் தூய்மை செய்ய விழைந்தார். முதல் முறையாக திருக்கெடில நதியில் நீராடி அப்பாவத்தைப் போக்க முனைந்தார். அடுத்து எஞ்சிய மாசும் பாவமும் தீயால் சுட்டெரிக்க முடிவெடுத்தவர், தூங்கானை மாடத்தில் எழுந்தருளியிருக்கும் சுடர்கொழுந்தீசரைப் பார்த்து வழிபட்டு ஓர் விண்ணப்பமும் வைத்தார்.

 பொன்னார் திருவடிக் கொன்றுண்டு

  விண்ணப்பம் போற்றிசெய்யும்

என்னாவி காப்பதற் கிச்சையுண்

  டேலிருங் கூற்றகல

மின்னாரு மூவிலைச் சூலமென்

  மேற்பொறி மேவுகொண்டல்

துன்னார் கடந்தையுள் தூங்கானை

  மாடச் சுடர்க்கொழுந்தே

இடவம் பொறித்தென்னையேன்று கொள்ளாயிருஞ் சோலை திங்கள்

தடவும் கடந்தையுள் தூங்கானை மடத்தெந்தத்துவனே

அப்பரடிகள் சிவபெருமானிடம், “என் உடம்பில் உயிர் இருக்க வேண்டும் என்பது உமது விருப்பமாயின் எனது தோளில் இடபச் சூலக்குறி பொறிக்க வேண்டும்” என்று விண்ணப்பித்தார். சிவகணம் மூலமாக இடபச் சூலக்குறிகளைப் பொறிக்கச் செய்தார். அப்பரடிகளும் அகம் குளிர்ந்தார். வாகீசப் பெருமான் பெண்ணாகடத்தினின்றும் புறப்பட்டுத் தில்லை சென்று கூத்தப் பெருமானின் ஆனந்தத் திருக்கூத்தினைக் கண்டு களிப்புற்றவர், ‘கருநட்ட கண்டனை’ எனும் திருவிருத்தம், ‘பத்தனாய்ப் பாடமாட்டேன்’ என்னும் திருநேரிசை, ‘அன்னம் பாலிக்கும் தில்லை’ எனும் திருக்குறுந்தொகை, ‘அரியாணை அந்தணர் தம் சிந்தையானை’ எனும் பெயரில் திருத்தாண்டகம் முதலிய பலப்பல பதிகங்கள் பாடி மகிழ்ந்து துதித்தார்.

திருஞானசம்பந்தப் பெருமானின் சைவத்திருப்பணி பற்றி அறிந்த நாவுக்கரசர் அவரைக் காண சீர்காழி எனும் திருத்தலம் நோக்கிச் சென்றபோது சம்பந்தரும் ‘அப்பரே வாருங்கள்’ என்று அன்போடு எதிர்கொண்டழைத்தார். இருவரும் திருமறைக்காடு சென்று வேதத்தால் பூட்டப்பட்ட ஆலய மணிக்கதவை தமிழ் பண்ணிசைப்பாடி திறக்கவும் மீண்டும் மூடவும் செய்தனர். சில நாட்கள் அவருடன் தங்கியிருந்தவர் பின்னர் விடைபெற்று சோழ நாட்டு திருத்தலங்கள் பலவற்றிற்கும் சென்று வழிபட்டு, திருச்சத்திமுற்றம் எனும் திருத்தலம் சென்றடைந்தார்.

கோவாய் முடுகி யடுதிறற்

  கூற்றங் குமைப்பதன்முன்

பூவா ரடிச்சுவ டென்மேற்

  பொறித்துவை போகவிடின்

மூவா முழுப்பழி மூடுங்கண்

  டாய்முழங் குந்தழற்கைத்

தேவா திருச்சத்தி முற்றத்

  துறையுஞ் சிவக்கொழுந்தே.

திருச்சத்திமுற்றத்து சிவக்கொழுந்தீசரிடம் தம்முடைய நீண்ட நாள் பேரவாவை நிறைவேற்றித் தருமாறு வேண்டி நின்றார். ஈசனின் அழகிய பொன் போன்ற திருவடியை தம் தலைமேல் சூட்டியருள வேண்டும் என்ற வேண்டுதலை வைத்தார். எம்பெருமானும் நல்லூருக்கு வா என்று பணித்தார். நல்லூர் சென்று பாதம் பணிந்த அப்பரடிகளைப் பார்த்து, ‘உம்முடைய நினைப்பதனை முடிக்கின்றோம்’ என்றவர் தம் சென்னிமிசை பாதமலர் சூட்டினான் சிவபெருமான். நாவுக்கரசரும் திருத்தொண்டகச் செந்தமிழ்ப் பாமாலை பாடிப் பரவினார். இப்பதிகத்தில் பாடல்தோறும் இறுதி அடியில்,

திருவடி என் தலைமேல் வைத்தார்

நல்லூ ரெம் பெருமானார் நல்லவாறே

என தம்மை ஆட்கொண்ட  நல்லூர் எம்பெருமானின் கருணைத் திறத்தை வியந்துருகிப் போற்றுகின்றார்.

பின்னர் திருப்பழன நாதரை வழிபட எண்ணி திங்களூர் என்ற ஊரின் வழியே சென்றார். அங்கு தமது பெயரால் சோலைகள், குளங்கள், சாலைகள், தண்ணீர்பந்தல் முதலிய அறங்களை அப்பூதியார் என்ற பெருமகனார் செய்து வருவதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அப்பூதி அடிகள் நாயனாரைச் சந்தித்து, திருவமுது செய்ய அவரது வீட்டிற்குச் சென்ற போது அரவத்தால் மாண்ட அப்பூதி அடிகளாரின் மூத்த மகனை, ‘ஒன்றுகொலாம்’ எனும் திருப்பதிகம் பாடி உயிர்ப்பித்துப்  பின் பயணத்தைத் தொடர்ந்தார்.

திங்களூரை விட்டுப் புறப்பட்ட திருநாவுக்கரசு நாயனார் திருப்புகலூரை அடைந்தபோது அங்கு வந்த திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை மீண்டும் சந்தித்து, இருவரும் திருவீழிமிழலை சென்றடைந்தனர். அப்போது அங்கு நாடு வளம் இன்றி வறட்சியுற்றிருந்தது. மக்கள் உண்ண உணவின்றி துன்பத்துக்கு ஆளாகியிருந்தனர். மக்களின் துன்பம் தீர நாட்டில் பஞ்சம் ஒழிய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் கண்ணயர்ந்தனர். பெருமக்கள் இருவரின் கனவிலும் இறையனார் வந்து அருளியதன் பேரில், விண்ணிழி விமானநாதன் ஆலயத்தைச் சென்று வணங்கி காழிப்பிள்ளையார் கிழக்கு வாயில் பலிபீடத்தை அடைந்தார். அங்கு ஒரு பொற்காசு இருப்பதை அறிந்து அதனை வணங்கி எடுத்தார். அப்பரடிகளும் மேற்கு வாயிலில் பலிபீடத்திலிருந்து பொற்காசை எடுக்க இருவரும் மகிழ்ச்சியுடன் இரு மடங்கள் அமைத்து மக்களுக்கு அன்னதானப் பணிபுரிந்தனர்.

அதன் பின்னர் இருவரும் அங்கிருந்து புறப்பட்டு திருமறைக்காடு (தற்போது வேதாரண்யம் என்று வழங்கப்படுகிறது) சென்று வேதங்களால் பலகாலம் அடைக்கப்பட்டிருந்த கதவினைத் திறக்கவும் மூடவும் பாடியருளினர்.

திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்

உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந்நின்றார்

மறைக்க வல்லேரோ தம்மை திருவாய்மூர்ப்

பிறைக்கொள் செஞ்சடையார் இவர் பித்தரே

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாண்டிமாதேவியின் அழைப்பை ஏற்று மதுரையை நோக்கிப் புறப்பட்டவுடன், திருநாவுக்கரசு நாயனார் பெருமான் சோழ நாட்டுத் தலங்களைத் தொடர்ந்து தரிசித்துத் திருத்தொண்டு செய்து வந்தார். சமணர்களால் மறைக்கப்பட்டிருந்த பழையாறை வடதளி ஆலயத்தை மீண்டும் திறந்து தரிசிக்காமல் செல்வதில்லை என்று உண்ணா நோன்பு மேற்கொண்டார். எம்பெருமானும் பழையாறை நகரில் வாழும் மன்னன் கனவில் தோன்றி, உண்ணாமை பூண்டிருக்கும் நாவுக்கரசர் வெளிப்படையாகக் கண்டு வழிபடும் வகையில் ஆவன செய்யுமாறு கூறி மறைந்தார். மன்னனும் நேரில் சென்று அப்பரடிகளின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அவரோடு சென்று வடதளிநாதனை வணங்கி, புதிய கோபுரம் எழுப்பி பல நிவந்தங்களையளித்தான்.

பின்னர் நாவுக்கரசர் திருச்சிராப்பள்ளி, திருவானைக்கா, திருவெறும்பூர், திருப்பராய்த்துறை முதலிய பல தலங்களை வழிபட்டு பின் திருப்பைஞ்ஞீலியை அடைந்தார். அப்போது அவருக்குப் பசி மேலிட்டபோது, சிவபெருமான் கட்டமுது தந்தருளினார். தல யாத்திரையைத் தொடர்ந்து மேற்கொண்ட திருநாவுக்கரசு நாயனார், திருக்காளத்தியில் காளத்தியப்பரையும், கண்ணப்ப நாயனாரையும் தரிசித்துவிட்டு திருக்கயிலை யாத்திரை மேற்கொண்டார். உடல் தளர்ந்த நிலையிலும் உறுதி தளராத அவரை சிவபெருமான் அங்கு ஓர் தடாகத்தில் மூழ்கப் பணித்துத் திருவையாற்றில் திருக்குளத்தில் எழச் செய்து சிவனார் உமையம்மையோடு திருக்கோயில் காட்சியைத் திருநாவுக்கரசு நாயனாருக்குக் காட்டியருளினார்.

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி

        மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி

ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி

        ஓவாத சத்தத் தொலியே போற்றி

ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி

        ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி

காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி

        கயிலை மலையானே போற்றி! போற்றி!

எனும் போற்றித் திருத்தாண்டகம் பாடி திருஐந்தெழுத்தை ஓதி அவ்வாவியில் மூழ்கித் திருவையாற்றில் உள்ள ஒரு தடாகத்தில் தோன்றிக் கரையேறினார். சம்பந்தரிடம் விடைபெற்று பாண்டி நாடு சென்ற நாவுக்கரசர் அங்கு நெடுமாறன், மங்கையர்கரசியார், குலச்சிறையார் ஆகியோரின் விருந்தினராய்த் தங்கி அவர்களோடு தல யாத்திரை மேற்கொண்டு பல தலங்களையும் பணிந்து திருப்புகலூர் வந்து தங்கி புகலூர்ப் பெருமானை வணங்கி, உழவாரப் பணி செய்து மகிழ்ந்தார். அப்போது அவர், நின்ற திருத்தாண்டகம், தனித் திருத்தாண்டகம், மன்னுறைவோர் வாழ்பதிகள், வாழ்த்துத் திருத்தாண்டகம், திருநேரிசை, தனித்திருநேரிசை, ஆருயிர் திருவிருத்தம், தசபுராணத் தடைவு, பாவநாசத் திருப்பதிகம், அறைகூவும் திருப்பதிகம் முதலிய பாமாலைகளைப் பாடியருளினார்.

தமது 81வது வயதில் திருப்புகலூரை அடைந்த திருநாவுக்கரசு நாயனார் அங்கேயே தங்கித் உழவாரப் பணியைச் செய்தார். திருப்புகலூர் இறைவனை பல நாட்கள் தங்கி வணங்கிய அப்பரடிகள் உலக வாழ்வில் வெறுப்புற்று இறைவன் திருவடிப்பேறு எய்த விரும்பினார். திருப்புகலூர் இறைவன் தன்னை திருவடியில் இருத்திக் கொள்வான் என முன்னுணர்வு பெற்று திருப்பதிகங்கள் பாடினார்.

தன்னைச் சரணென்று தாளடைந்

  தேன்றன் அடியடையப்

புன்னைப் பொழிற்புக லூரண்ணல்

  செய்வன கேண்மின்களோ

என்னைப் பிறப்பறுத் தென்வினை

  கட்டறுத் தேழ்நரகத்ஹ்

தென்னைக் கிடக்கலொட் டான்சிவ

  லோகத் திருத்திடுமே

 

எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ

        எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற்

கண்ணிலேன் மற்றோர் களைக ணில்லேன்

        கழலடியே கைதொழுது காணி னல்லால்

ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்

        ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்

புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்

        பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

எனவரும் திருத்தாண்டகத்தில் பாடியருளியபோது புகலூர்ப் புண்ணியன் கருவறையில் சோதி எழுந்தது. அச்சோதியிற் கலந்து நுண்ணறிய சிவானந்த வடிவேயாகி அண்ணல் சேவடிக்கீழ் எய்தி இன்புற்றார். அப்பரடிகள் சிவனடி சேர்ந்த திருநாளே சித்திரை சதயத் திருநாளாகும்.

 

திருநாவுக்கரசர் நாயனார் புராணம் சொல்லும் கருத்து

ன்று உலக நாடுகள் அனைத்தும் தனிமனிதச் சுதந்திரத்தை நிலைநாட்ட ஐ.நா. சபை என ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். அந்த மாமன்றத்திலேயே அப்பரடிகளின் திருவாக்கு பொறிக்கத்தக்கதாகும்! உலக வரலாற்றில் ஒரு சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துத் தனி நபராக நின்று போர்ப்பரணி பாடிய முதற்குரல் எழுந்த இடம் நம் தமிழகத்துப் பாடலிபுத்திரமாகும். ஏழாம் நூற்றாண்டில் மக்கள் துணை இன்றி மகாதேவன் துணையோடு தன்னந்தனி மனிதராய் ஒரு மாபெரும் சாம்ராச்சியத்தையே  எதிர்த்துப் போராடியவர் நம் அப்பரடிகள்!

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்

        நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்

        இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை

தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான

        சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்

கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்

        கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.

சிவபெருமானைத் தவிர வேறு எவருக்கும் அடி பணிய மாட்டோம் என வீரமுழக்கமிட்டார்.

நெடுநாட்கள் சமணத்திலிருந்த அப்பரடிகள் அங்கு தலைவர்கள் திருமடம் அமைத்து தங்கள் சமயத்தைப் பரப்ப தொண்டர்களைக் கூட்டி, அவர்கட்கு மதப்பயிற்சி அளிப்பதைக் கண்டிருப்பவர், சைவநெறியில் அத்தகைய அமைப்பு ஏதும் இல்லாத நிலை கண்டு வருந்தினார். சைவம் தழைக்கும் வகையில் தொண்டர்களை உருவாக்கத் தாமே திருப்பூந்துருத்தி என்னும் ஊரில் திருமடம் அமைத்தார். அத்திருமடம் வானுயர சேக்கிழார் காலம் வரை சிறப்பான முறையில் ஓங்கி இருந்துள்ளது. சைவசமய வரலாற்றில் சமய நெறி பரப்பத் தோன்றிய முதல் திருமடம் என்பதும் திருநாவுக்கரசு நாயனார் இத்திருமடத்தில் தங்கிப் பல பதிகங்கள் பாடி பொய்யிலியைப் பூந்துருத்தி கண்டேனே எனவும் பரவிப்பாடிப் பணிந்தார். அப்பரடிகளும், சம்பந்தரும் பூந்துருத்தி ஆலயம் சென்று, வணங்கி திருமடத்திலும் பல நாட்கள் தங்கியிருந்தனர்.

அப்பரடிகள் உள்ளத்துறவு நெறியினை உலகுக்கு உணர்த்த விரும்பிய எம்பெருமானார், அடிகள் உழவாரப் பணியாக அவ்வாலயத்தில் உள்ள புல், பூண்டு முதலியவற்றையும், கற்களையும் களைந்து எறிந்தபோது இறையருளால் பொன்னும் நவமணியும் அக்கல்லோடும், புல்லோடும் கலந்து வந்தன.  ஓடும், செம்பொன்னும் ஒன்றாகக் கருதும் அப்பரடிகள் அவற்றையும் அப்புல்லோடும், கல்லோடும் எடுத்துத் தூர வீசி தாம் துறவின் சிகரம் என நிறுவினார்.

அப்பரடிகள் திருத்தொண்டு செய்து வரும்போது ஒரு நாள் அரம்பையரும், தேவமாதரும் கூடி நின்று அவர்தம் திருமேனியில் நறுமலர் பெய்து நடனமாடினர். ஆனால் அடிகளார் சிந்தை மயக்கமின்றித் தம்பெருமான் திருவடியையே சிந்தையில் நிறுத்தி ஒருமனமுடையவராய்த் திகழ்ந்தார்.

நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும் பொன்னார் சடை புண்ணியன்

பொக்கமிக்கவர் பூவும் நீரும் கொண்டு

நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.

என்று பொய்யாக வேடமிட்டு ஆடம்பரமாக ஆலயத்தில் வழிபாடு செய்யும் போலிகளைக் கண்டு இறைவன் நகைப்பான் என்கிறார்.

ஒன்றே கடவுள் எனும் அப்பரடிகள் பல தெய்வ, சிறு தெய்வ வழிபாட்டினை வெறுத்துப் பேசுகிறார்.

யாரோர் தேவ ரெனப்படு வார்க்கெல்லாம்

மாதே வன்னலால் தேர்மற் றில்லையே

எனக்கூறி ஒருவனே தேவன் என வலியுறுத்தினார்.

 

கோலும் புல்லும் ஒரு கையில் கூர்ச்சமும்

       தோலும் பூண்டு துயரம் உற்று என் பயன்

       நீல மா மயிலாடுதுறையனே

       நூலும் வேண்டுமோ நுண் உணர்ந்தோர்கட்கே

நீல மயில்கள் நடமாடும் சிறப்பு வாய்ந்த மயிலாடுதுறை தலத்தில் உறைபவனும், வேதங்களில் சொல்லப்படும் மெய்ப்பொருளின் வடிவமாகிய சிவபெருமானை உணர்ந்தவர்களுக்கு, வேறு எந்த அறிவு நூல்களும் தேவைப்படாது என்கிறார்.

பண்டைய நாளில் தமிழகம் பேசும் மொழி, மதம், கலை, பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் போன்றவற்றால் மாறுபடாமல் இருந்தாலும் நாடாளும் மன்னர்களால் வகுத்த நாட்டெல்லைகளால் சேர, சோழ, பாண்டிய, தொண்டை, கொங்கு எனப் பல்வேறு நாடுகளாக இருந்தது. தமிழ் வேந்தர் படையெடுத்துச் சென்று இமயம் வரை நம் தமிழ்க்கொடியை நாட்டினர். கடல் கடந்த நாடுகளிலும் நம் தமிழ் மொழியும், தமிழர் தம் கொடியும் பறந்தது. இவர்களையெல்லாம் இணைக்கின்ற சக்தி ஒன்று தேவையென்று முதல் அமைச்சராய் இருந்த சேக்கிழார் பெருமான் நினைத்தார். இமயத்தை ஒட்டி வாழ்ந்தாலும், கடல் கடந்து வாழ்ந்தாலும் கன்னித் தமிழ் நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் இவர்களை ஒன்றிணைக்க ஒரு மாபெரும் சக்தியாகச் செய்யவல்லது அமிழ்தினும் இனிய நம் செந்தமிழ் மொழியே என உறுதியாக நம்பினார். நம் செந்தமிழ் மொழிக்கு, அஞ்சாமையும், நெஞ்சுறுதியும் கொண்ட  ஒரு தலைவனை தமிழக மக்களுக்குக் காட்சிப்படுத்தினார் சேக்கிழார். அந்த தமிழ் மொழித் தலைவனே திருநாவுக்கரசர் நாயனார்.

திருநாவுக்கரசு பெருமானை, எம்பெருமான் சூலை நோய் கொடுத்து ஆட்கொண்ட வேளையில் மனிதன் நோய் பற்றி, அதன் கொடுமை பற்றி, தமக்குற்ற சூலை நோய் பற்றி, அதன் கொடுமை பற்றி அவர் பாடியுள்ள பாடல் நமக்கே சூலை நோய் ஏற்பட்டது போன்று துடித்துப்போகச் செய்கிறது.

கூற்றாயின வாறுவி லக்ககிலீர்

  கொடுமைபல செய்தன நானறியேன்

ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்

  பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

தோற்றாதென் வயிற்றின் அகம்படியே

  குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில

  வீரட்டா னத்துறை அம்மானே.

இப்பாடலில் உள்ள சொற்கள் அனைத்தும் வயிற்று வலி வந்த ஒருவரின் அனுபவ உண்மை என்பது விளங்கும். இத்திருப்பதிகம் ஒரு சத்தியவாக்கு, ஒரு திருமந்திரம் என்பது அனுபவப்பூர்வமான சத்தியம் ஆகும். இன்றும் தீராத வயிற்று வலி உள்ளவர்கள் திருவதிகை சென்று 48 நாட்கள் காலையும், மாலையும் இத்திருப்பதிகம் பாடினால் கொடிய சூலை நோய் நீங்கக் காண்பது அனுபவப்பூர்வமான உண்மை. அப்பரடிகளின் வாக்கு சத்திய வாக்கு என்றும் அவருடைய ஒவ்வொரு சொல்லும் மந்திரச் சொல் என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது.

அப்பரடிகள் 49,000 தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். இவற்றில் சில பதிகங்கள், தாள அமைப்பினைச் சேர்ந்தவை. தாள அமைப்புடன் பாடப்பட்டவற்றைப் பண்ணாங்கப் பாடல்கள் என்றும், தாள அமைப்பு இல்லாத பாடல்கள் சுத்தாங்கப் பாடல்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. திருத்தாண்டகம், திருவிருத்தம், திருக்குறுந்தொகை ஆகியவை திருநாவுக்கரசு நாயனார் பாடிய சுத்தாங்கப் பதிகங்கள். அப்பரடிகளின் அனைத்துப் பாடல்களும் தமிழ்ச் சுவையும் பக்திச் சுவையும் தோய்ந்தவை.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.