Blog

  • சீதாயணம் [முழு நாடகம்] -8 படக்கதையுடன்

     

     

    சீதாயணம் நாடகம் -8 

    படக்கதை -8 

    சி. ஜெயபாரதன், கனடா

     

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

     

    சீதாயணம் படக்கதை

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு :  வையவன்

    ஓவியம் :  ஓவித்தமிழ்

     sita 1

    sita 2

    [தொடரும்]

    +++++++++++++++

    தகவல்

    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma

    3.  Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

    6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013)  [R-2]

     

    Share
  • URL for videos in Youtube – Isaikkavi Ramanan

     

    Dear Friends!

    Vanakkam!

    As you know, Swathi Solutions have taken up the task of bringing out my works in the form of audio CDs, ebooks and apps. Now, they have started uploading my videos in Youtube. Here is the URL:

    http://www.youtube.com/IsaikkaviRamanan

    isakkaviramanan/wp-login

    I would request you all to subscribe to it. It is of course free!

    Here is the list of my ebooks:

    1. Agathiyar Andhaadhi (100 Venbas)
    2. Nathiyil Vizundha Malar (Poems)
    3. Ellorkkum Thanthai Iraivan (Article on Siva)
    4. Imayam:Andharangathin Bhagirangam (Essay on my pilgrimage)
    5. Drop from the Gita (English – Two part essay on Bhagawat Gita)
    6. ManonmaNi Maalai (100 Venbas)
    7.Thirumanam Enbadhu (Write up on the institution of marriage, meaning of mantras)
    8. A Sublime Sacrament (English – Write up on the institution of marriage, meaning of mantras

    You may visit www.kalakendra.com to get these books.

    Here is the list of my CDs:

    1. Aathi Choodi
    2. Way of the Vedas – வேத நெறி
    3. Durga Saptha Sloki

    These three are presented as conversational explanations in English and Tamil. My good friend Dharma Raman has rendered the English portions. Nritya Jagannathan has chanted the Vedic mantras and Durga Saptha Sloki.

    4. Nathiyil Vizundha Malar
    My Tamil poems and some of my songs in my voice. Dharma Raman has provided appropriate explanatory preludes beautifully.

    5. Manonmani Maalai
    My 100 verses (Venbas) in my voice. Dharma Raman comes in whenever necessary to explain the nuances.

    This is a new experiment. Its success depends on your support!
    My explanatory notes in English and Tamil on Avvaiyar’s Aathi Choodi is now available as Mobile App also (apart from audio CD) thanks to Swathi Soft Solutions, Chennai.

    Please click kalakendra.com/aathichoodi to access it.

    It is your support which would encourage them to bring out more of my works.

     

    Love,

    Ramanan

    Share
  • குலதெய்வம்

    சு. கோதண்டராமன்

          ரயில் சென்னையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. சுந்தரேசனின் மனம் மும்பையின் நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் தான் எத்தனை மாற்றங்கள்!  இன்று ரயிலில் பயணம் செய்வோம் என்று நேற்று இந்நேரம் அவன் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. வலுக் கட்டாயமாக அல்லவா என்னை ரயில் அனுப்பி வைத்து விட்டாள். என் நலத்தை விரும்பித் தான் சொல்கிறாள். எப்படியாவது இந்த இக்கட்டிலிருந்து தப்பினால் சரி என நினைத்துக் கொண்டான்.

          நேற்று ஜோதிடரைச் சந்தித்தது இவ்வளவு நீண்ட பயணத்தில் கொண்டு விடும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. தொழில் மந்தம் என்பது தற்போது உலகில் எல்லா நாடுகளுக்கும் உள்ள பிரச்சனை. ஆனால் இவன் விஷயமே வேறு. தென்னை மரத்தில் தேள் கொட்ட, பனை மரத்தில் நெறி கட்டியது என்கிற மாதிரி அமெரிக்காவிலிருந்து இவனுடைய சிறு தொழிலுக்கு மூலப் பொருள் அனுப்பி வந்த கம்பெனி மூடப்பட, இவன் தொழில் படுத்து விட்டது. அதே பொருளை உள் நாட்டில் ஒரு நிறுவனத்தில் வாங்கப் போய் இவனுடைய சரக்கின் தரம் குறைந்தது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராகக் கழன்று விட்டனர். வங்கியில் முடிந்த அளவுக்குக் கடன் வாங்கியாகிவிட்டது. தொழிலாளர்களையும் வேலையை விட்டு நீக்க முடியவில்லை. அடுத்த மாதம் சம்பளம் கொடுக்க வழி இல்லை என்ற நிலையில், அந்தப் பாலக்காட்டு ஜோதிடரைப் பற்றி அவன் மனைவி சொன்ன போது அரை மனதாக ஒப்புக் கொண்டான். அவனுக்குப் பொதுவாக, ஜோதிடம் மாந்திரீகம் இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லை. என்றாலும் துன்பம் மிகும்போது யார் எது சொன்னாலும் கேட்கக் கூடிய மன நிலைக்கு வந்து விடுகிறோம் அல்லவா?

          ஜோதிடர் சோழி போட்டுப் பார்த்து என்னென்னவோ கணக்குகள் போட்டு, “நீங்கள் குல தெய்வத்தை மறந்து விட்டீர்கள். அதனால் தான் உங்களுக்கு இத்தனை தொல்லைகள்” என்றார். அவனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. இவன் குல தெய்வத்தை மறந்ததனால் அமெரிக்கக் கம்பெனி மூடப்பட்டது என்பது அறிவுக்குப் பொருத்தமாக இல்லை. என்றாலும் எதிர் வாதம் செய்யும் மன நிலையில் அவன் இல்லை.

          “குல தெய்வம் என்றால் என்ன?” சோதிடரைக் கேட்டான். “உங்கள் குலத்துக்கு என்று ஒரு தெய்வம் இருக்கும். உங்கள் மூதாதையர் வணங்கி வந்திருப்பார்கள். வீட்டில் பெரியவர்கள் அல்லது உங்கள் தாயாதி பங்காளிகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று சொன்னார்.

          தெய்வம் ஒன்று தான், அதைப் பலரும் பல பெயர்களில் வணங்குகிறார்கள் என்பது தான் அவனுடைய கல்வி அவனுள் ஏற்படுத்தியிருந்த நிலைப்பாடு. இவர் ஏதோ உன்னுடைய குலத்துக்கு என்று ஒரு தனித் தெய்வம் இருக்கிறது என்கிறார். அப்படியே இருந்தாலும் வணங்காமல் விட்டு விட்டதால் அது துன்பம் கொடுத்துப் பழி வாங்குகிறது என்றால் அதைப் போய்த் தெய்வம் என்று எப்படி ஏற்றுக் கொள்வது? அவன் குழம்பிக் கொண்டிருந்தான்.

          அவன் மனைவிக்கு அந்தக் குழப்பம் எதுவும் இல்லை. வீட்டுக்கு வந்தவுடன் “நம் குடும்பத்துக்குக் குல தெய்வம் எது?” என்று அவனுடைய அம்மாவிடம் கேட்டாள்.

          “கொட்டூர் ஐயனார்னு சொல்வாங்க. நானே ஒரு தடவை தான் கல்யாணம் ஆன புதுசில் போயிருக்கிறேன். இவனுடைய அப்பாவுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. என் மாமனார் வற்புறுத்தி கல்யாணம் ஆன கையோடு அழைத்துப் போனார்.”

                    “அது எங்கே இருக்கு?’

                    “மாயவரம் போய் பஸ்ஸிலே போனோம். எந்தப் பக்கம்னு தெரியல்லே.”

          மணி பத்து ஆயிற்று. கால தாமதம் செய்யாமல் அவனது மனைவி தத்காலில் தாதர் எக்ஸ்பிரஸ்ஸில் சென்னைக்கு ஒரு டிக்கெட் புக் செய்தாள். கூகுள் ஆண்டவர் உதவியால் மாயூரம் என்ற மாயவரம் என்பது தற்போது மயிலாடுதுறை என்று அழைக்கப்படுகிறது என்பதையும் சென்னையிலிருந்து நாள் பூராவும் அடிக்கடி பஸ் போகிறது என்ற விவரத்தையும் தெரிந்து கொண்டாள். “மயிலாடுதுறையில் இறங்கி கொட்டூருக்குப் போகும் வழியை விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள். நான் நாளைப் பயணத்துக்கான ஆகாரம் தயார் செய்கிறேன்” என்று உள்ளே போய்விட்டாள். இவனைப் பேசவே விடவில்லை.

          அவன் அம்மா முழு விவரத்தையும் தெரிந்து கொண்டு, “போய்ப் பார்த்து விட்டு வா. எந்தத் தெய்வமாவது கண்ணைத் திறக்கட்டும்” என்று சொன்னாள்.

          நம்பிக்கை இல்லாவிட்டாலும் வேறு வழி இல்லாததால் அவன் இதற்கு உட்பட்டான். இரவு தாதரிலிருந்து கிளம்பியாயிற்று. பன்னிரண்டு மணி நேரம் பயணம் பெரும்பாலும் தூக்கத்தில் போய் விட்டது. இன்னும் பன்னிரண்டு மணி நேரம் பகல் பொழுது போக வேண்டும். இதுவே சென்ற வருடமாக இருந்தால் அவன் ரயில் பயணத்தில் நேரத்தை வீணாக்கமாட்டான். விமானத்தில் வந்து போய் விடுவான். ஆனால் இன்று நிலைமை வேறு. விமானக் கட்டணத்துக்கு உள்ள காசில் ஒரு தொழிலாளிக்குச் சம்பளம் கொடுக்கலாம். பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டான்.

          காலையில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இறங்கி பல பேரை விசாரித்த பின் ஒரு நடத்துனர் சொன்னார், “கொட்டூர் தானே? ஏறி உக்காருங்க.”

          அரை மணி கழித்து, கொட்டூர் நிறுத்தத்தில் இறக்கி விட்டு விட்டு பேருந்து போய் விட்டது. இறங்கினவன் திரு திரு என்று விழித்தான். கண்ணுக்கெட்டியவரை வீடா வேறு கட்டிடங்களா காணப்படவில்லை. எங்கு பார்த்தாலும் பசுமையான வயல்கள் தான். இப்படி நடுக்காட்டில் இறக்கி விட்டுப் போய் விட்டார்களே, விசாரிக்கலாம் என்றால் ஒரு மனித ஜீவனைக் கூடக் கண்ணில் காணோமே என்று அலுத்துக் கொண்டான்.

          அங்கே ஒரு மண் சாலை பிரிந்து சென்றது. அதன் முகப்பில் ஒரு காங்கிரீட் முகப்பு வளைவு தென்பட்டது. அதில் கொட்டூர் ஐயனார் கோவில்  கும்பாபிஷேக விழா வளைவு என்று எழுதி இருந்தது. இந்தச் சாலையில் போக வேண்டும் போல் இருக்கிறது. எவ்வளவு தூரம் போக வேண்டுமோ, சரி போவோம். வந்தாயிற்று. எது வந்தாலும் அனுபவிக்கத் தான் வேண்டும் என்று நினைத்துக் கொண்டு நடந்தான்.

          ஊர் எல்லையிலேயே ஐயனார் கோவில் இருந்தது. பூட்டி இருந்தது. அங்கே விளையாடிக் கொண்டிருந்த பையன்களிடம் கேட்டான். “இந்தக் கோவில் எப்போ திறப்பாங்க?’

          “பூசாரியார் வீட்டுக்குப் போய்க் கேளுங்க. வாங்க அழைச்சிட்டுப் போறேன்.”

          பூசாரி வீடு மண் குடிசை. முன்னும் பின்னும் தோட்டம். கொல்லையில் மாட்டுக்குத் தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த பூசாரி சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தார்.

          “வாங்க, எங்கேருந்து வரீங்க?’

          “மும்பையிலிருந்து. இந்த ஐயனார் எங்களுக்குக் குல தெய்வம்னு சொன்னாங்க. பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்.”

          “நீங்க இது வரைக்கும் இங்கே வந்ததில்லையே? யாரு வீடுன்னு தெரியல்லியே. உங்க அப்பா பேரு என்ன?”

                    “ராமநாதன்.”

                    “ராமநாதனா? தெரியல்லியே. உங்க தாத்தா பேரு?’

                    “சாம்பசிவம்.”

                    “ஓகோ, நம்ம சாம்பசிவம் ஐயா பேரனா நீங்க? ரொம்ப வருஷத்துக்கு முந்தி உங்க அப்பா ஒரு தடவை வந்துட்டுப் போனாரு. ரொம்ப நாளா குல தெய்வத்தை மறந்துட்டீங்க. பரவாயில்லே. இப்பவாவது நினைச்சுக்கிட்டு வந்தீங்களே. இந்த ஐயனார் ரொம்ப சக்தி வாய்ஞ்சவருங்க. ஒரு நடை வந்துட்டுப் போய்ட்டால் நினைச்ச காரியம் நடக்கும். நடத்திக் குடுத்துடுவாரு.”

          “அபிஷேகம் பண்ணணும். எவ்வளவு ஆகும்?”

          “காசு கிடக்குங்க. வீட்டிலே மாடு கறக்குது. பால் எடுத்துக்கலாம். கொல்லையிலே தென்னை மரம் இருக்கு. இளநீ பறிச்சுக்கலாம். நல்லெண்ணை மட்டும் கால் லிட்டர் வாங்கினாப் போதும். அதுக்குள்ள காசைக் குடுங்க. அப்புறம் காசு இருந்தா எனக்கு ஏதாவது தட்சிணை கொடுங்க. உங்க தாத்தா வருஷம் தவறாமே வந்துட்டுப் போவாரு. அவரு இந்நேரம் போயிருப்பாருன்னு நினைக்கிறேன். இருந்தா வராம இருக்க மாட்டாரு. உங்க அப்பா அம்மா எல்லாம் நல்லா இருக்காங்களா?”

          “அப்பா போய் இருபது வருஷம் ஆவுது. அம்மா மும்பையிலே என்னோட இருக்காங்க.”

          “சரி. பல் விளக்கீட்டிங்களா?”

          “இல்லே. மயிலாடுதுறையிலே பஸ் ஏறி நேரே இங்கே தான் வரேன்.”

          “சரி. பையை இங்கே வைங்க. பையனை அனுப்பறேன். தோப்புக்குப் போய்ட்டு வாங்க. அங்கேயே குளத்திலே பல் விளக்கிட்டு வாங்க. வந்ததும் டீயைக் குடிச்சிட்டு கோவிலுக்குப் போகலாம். கோவில் கிணத்திலேயே குளிச்சிடலாம். மத்தியானம் ஒரு மணிக்குள்ளே பூசை முடிஞ்சு பிரசாதம் வாங்கிக்கலாம். இந்த ஊரிலே ஓட்டல் கீட்டல் கிடையாது. அதனாலே இந்தப் பிரசாதம் தான் மதியத்துக்கு உங்களுக்கு. திரும்ப மும்பை தான் போறீங்களா, இங்கே பக்கத்திலே வேறே வேலை இருக்கா?”

          “இன்னிக்கி சாயங்காலம் மயிலாடுதுறைலே பஸ் ஏறி நாளைக் காலைலே ஏழு மணிக்கு சென்னையிலே ரயிலைப் பிடிக்கணும்.”

          பூஜைகள் எல்லாம் திட்டமிட்டபடி நடந்தது. பத்து மணிக்கு நாளைய தாதர் எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் புக் செய்யலாம் என்று நினைத்திருந்தான். அங்கே சுற்றுவட்டாரத்தில் ப்ரௌசிங் சென்டர் என்று எதுவும் இல்லை என்பது தெரிந்தது. சரி, பரவாயில்லை. நாளை அன்ரிசர்வ்டில் போக வேண்டியது தான் என்று தீர்மானித்துக் கொண்டான்.

          முப்பத்தைந்து வருடமாகத் தன்னை வந்து பார்க்கவில்லை என்பதற்காக எப்படி எல்லாமோ காய்களை நகர்த்தித் தன்னை இங்கு வரவழைத்த அந்த ஐயனாரைத் தரிசனம் செய்து கொண்டான். கோவிலிலேயே சாப்பிட்டுவிட்டுக் கிணற்றங்கரையில் கை கழுவி விட்டு வரும்போது தான் ஐயனாருக்கு இன்னும் கோபம் தணியவில்லை என்பது தெரிந்தது. படி தடுக்கிக் கீழே விழுந்து விட்டான். கையை ஊன்றி எழுந்திருக்க முயலும்போது கையில் பயங்கர வலி.

          பதறிக் கொண்டு ஓடி வந்தார் பூசாரி. “படி இருக்கு, பார்த்து வரக்கூடாதா? சம தரையிலேயே நடந்து பழகி இருப்பீங்க போல. மெதுவா எழுந்திரிங்க.”

          எழுந்தான். தாங்க முடியாத வலி. கையைத் தூக்க முடியவில்லை. பூசாரி பார்த்தார். “கை எலும்பு முறிஞ்சிருக்குங்க. அது தான் இந்த வலி வலிக்குது. வலது கையாச்சே. ரொம்பக் கஷ்டமா இருக்குமே. வாங்க வீட்டுக்குப் போவோம். மருந்து போட்டுக்கலாம்.”

                    “இங்கே பக்கத்திலே டாக்டர் யாராவது இருக்காங்களா?”

          “டாக்டரா, மயிலாடுதுறைக்குத் தாங்க போகணும். எலும்பு முறிவுக்கு டாக்டர் கிட்டே போய்ப் பிரயோஜனமில்லீங்க. நல்ல வேளை, நாளைக்குப் புதன் கிழமை. தென்னமரக்குடி வைத்தியரு இருப்பாரு. நீங்க இங்கே தங்கிடுங்க. காலையிலே நான் அழைச்சி்ட்டுப் போறேன்.”

          “நடந்தாலே கை அதிருது. ஒரு சைக்கிள்  கிடைச்சுதுன்னா என்னை மெதுவா பஸ் ஸ்டாப்பு வரைக்கும் கொண்டு விட்டிருங்க. நான் பஸ் புடிச்சு மயிலாடுதுறையிலே டாக்டர் யார் கிட்டேயாவது காட்டிக்கிறேன்.”

          “தம்பி, நான் உங்களுக்கு நல்லதுக்குச் சொல்றேன். டாக்டர் கிட்டே போனீங்கன்னா கையைக் கோணல் மாணலா வெச்சு மாவுக் கட்டு போட்டுடுவாங்க. அப்புறம் ஆயுசுக்கும் கை வளைஞ்சே இருக்கும். அப்புறம் உங்க சௌகரியம்.”

          அதற்குள் வீடு வந்து சேர்ந்தது. மும்பைக்காரருக்கு கை முறிஞ்சு போச்சுங்கிற தகவல் கிடைச்சு தெரு வாசிகள் அனைவரும் கூடிவிட்டார்கள். எல்லோரும் ஒரு முகமாக, “டாக்டர் கிட்டே போகாதீங்க தம்பி. எந்தெந்த ஊரிலே இருந்தோ இங்கே தென்னமரக்குடிக்கு வராங்க. டாக்டர் கிட்ட போய் கையைக் கோணலாக்கிக்கிட்டவங்க இங்கே வந்து சரி பண்ணிட்டுப் போறாங்க. இந்த வட்டாரத்திலே விவரம் தெரிஞ்சவங்க இங்கே தான் வருவாங்க” என்று உரிமையோடு உபதேசம் செய்தார்கள்.

          வேறு வழி இல்லை. பதினெட்டாம் நூற்றாண்டின் மூட நம்பிக்கைகளிலேயே  வாழும் இந்த ஊரில் மாட்டிக் கொண்டு விட்டோம். இந்த மக்களின் தயவு இல்லாமல் இங்கே எதுவும் நடக்காது. இவர்கள் சொன்னதைக் கேட்டுத் தான் ஆகவேண்டும்.

          பூசாரி கையில் ஏதோ எண்ணையைத் தடவி விட்டு ஒரு பழைய துணியைக் கொண்டு கட்டுப் போட்டார். கையை அசைக்காமல் இருக்க கழுத்திலே சேர்த்துக் கட்டிவிட்டார். வீட்டுத் திண்ணையில் ஒரு கயிற்றுக் கட்டிலைப் போட்டு, “இதிலே படுத்துங்க. காலைலே பொழுது விடிஞ்சதும் போகலாம்” என்றார்.

          மறுநாள் காலையி்ல் பூசாரி அவனைச் சைக்கிளில் பின்புறம் உட்கார வைத்து பஸ் நிறுத்தத்துக்கு அழைத்து வந்தார். மூன்று பஸ் மாறி மெதுவாகத் திருப்புகலூர் வந்தார்கள். ஒரு ஆட்டோ பிடித்து தென்னமரக்குடியை நோக்கிப் போனார்கள். போகிற வழியில் “திருப்புகலூர் பாடல் பெத்த தலங்க. அப்பர் முத்தி அடைஞ்ச ஊரு. இதோ வருது பாருங்க, திருக்கண்ணபுரம். சௌரிராஜப் பெருமாள். கோவிலும் பெரிசு. பாருங்க. குளமும் பெரிசு. தென்னமரக்குடி வைத்தியம் என்று பல ஊர்களில் பல பேர் வைத்தியம் செய்றாங்க. அது எல்லாம் போலி. இப்போ நாம போற இடம் தான் உண்மையான பரம்பரை வைத்தியர்” என்று ஏதேதோ சொல்லிக் கொண்டு வநதார் பூசாரி. இவனுக்கு அதை எல்லாம் கேட்கக் கூடிய மன நிலை இல்லை.

          ஒரு வாய்க்கால் கரையில் ஆட்டோ நின்றது. இரண்டே வீடுகள் தான் அங்கே. ஒரு வீட்டு வாசலில் ஆளோடியில் மக்கள் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள். பலர் வெளியில் நின்று கொண்டும் அடுத்த வீட்டில் இருந்த டீக்கடையில் டீ குடித்துக் கொண்டும் இருந்தார்கள்.

          சட்டை அணியாத வைத்தியர் வந்து ஆளோடியில் தரையில் உட்கார்ந்தார். நோயாளிகளும் உதவிக்கு வந்தவர்களும் அவரைச் சுற்றி இருந்தார்கள். அந்த சூழ்நிலையைப் பார்த்தால் அது வைத்திய சாலை என்ற எண்ணமே ஏற்படவில்லை அவனுக்கு.

          ஒவ்வொருவராகப் பார்த்து வெளியேற வெளியேற கூட்டம் உட்கார்ந்தபடியே முன் நோக்கி நகர்ந்தது.          இவரிடம் வைத்தியம் செய்து என்ன ஆகப் போகிறதோ என்று பயம் ஏற்பட்டது. பூசாரிக்குத் தெரியாமல் பஸ் ஏறி மயிலாடுதுறை போய் விடலாமா என்று தோன்றியது.

          இவனுடைய முறை வந்தது. கையை அமுக்கிப் பார்த்துவிட்டு, “எலும்பு ஒடஞ்சிருக்குங்க. சிம்பு வெச்சுக் கட்டுப் போடறேன். பெசல் எண்ணை தரேன். கட்டின் மேலேயே எண்ணையை தினம் மூணு வேளையும் போட்டு வாங்க. அடுத்த புதன்கிழமை வாங்க. வரும் போது ஒரு கோழி முட்டையும், கொஞ்சம் உளுத்தம்மாவும் கொஞ்சம் வெள்ளைத் துணியும் கொண்டு வாங்க என்றார். மூங்கில் சிம்புகளை வைத்துக் கட்டுப் போட்டார்.

          எண்ணை எவ்வளவு வேணும் என்று வைத்தியர் கேட்டதற்கு “அம்பது ரூபாய்க்குக் குடுங்க” என்றார் பூசாரி. ‘ஃபீஸ்’ என்று இழுத்தான். “எண்ணைக்கு மட்டும் தாங்க காசு வாங்கறது” என்றார் வைத்தியர்.

          இன்னும் ஒரு வாரம் இங்கே தங்கணுமா? போச்சு. எல்லாத் திட்டங்களும் மண். தொழிற்சாலை ஏற்கெனவே தள்ளாடிக் கொண்டு இருக்கிறது. நானும் இல்லாவிட்டால் சர்வநாசம் தான். ஐயனார் மேல் கோபம் கோபமாக வந்தது. வந்து பார்க்கவில்லை என்று தண்டனை. வந்து பார்த்ததற்கும் தண்டனையா? கை வலியை விட மன வலி தான் பெரிதாக இருந்தது.

          பூசாரி வீட்டுக்கு அழைத்து வந்தார். கைதி போல உணர்ந்தான். “இன்னும் ஒரு வாரம் நீங்க என் வீட்டிலேயே தங்கிடுங்க. ஊருக்குப் போன் போட்டுச் சொல்லிடுங்க. ஒண்ணும் யோசனை பண்ணாதீங்க. உங்க தாத்தா குடும்பமும் எங்க தாத்தா குடும்பமும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணா இருந்தவங்க. சந்தோஷமா இருங்க. ஐயனாரு கை விட மாட்டாரு.”

          என்ன சொல்வது என்று தெரியவில்லை. வீட்டுத் திண்ணையில் கட்டிலே கதியாகக் கிடந்தான். முடிந்த போது ஐயனார் கோவிலில் போய் உட்கார்ந்தான். ஊர் மனிதர்கள் அடிக்கடி வந்து நலம் விசாரித்து விட்டுப் போனார்கள். இந்தக் கிராம வாசிகளுக்குத் தான் எத்தனை பாசம். நான் இவர்களுக்கு என்ன செய்தேன் என்று நினைக்கிறான். ஏதேனும் செய்தால் தான் பாசம் காட்ட வேண்டும் என்ற வணிகக் கலாசாரத்தில் வளர்ந்தவன் அவன்.

          பூசாரி கோவில், வயல் வேலைகளுக்குப் போன நேரம் போக மீதி நேரத்தில்  இவனை நன்றாகக் கவனித்துக் கொண்டார். வேளா வேளைக்கு அவரது மனைவி சாப்பாட்டை ஒரு கிண்ணத்தில் போட்டு ஸ்பூனுடன் கொடுத்தாள். இடது கையால் சாப்பிடப் பழகிக் கொண்டான்.

          பொழுது போக வேண்டுமே.

          “வீட்டிலே டீவி இருக்குங்க. கரண்ட் தான் கிடையாது. ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம் தான் வரும். அதுவும் எப்ப வரும்னு சொல்ல முடியாது.”

          அவனுக்கு ஒரே பொழுது போக்கு பூசாரியின் மகனும் அவனுடைய நண்பர்களும் தான். இவனுடைய இளமைப் பருவம் சென்னை நகரில் கழிந்தது. கிராமப் புறங்களைப் பார்க்கவோ அந்த வாழ்க்கை முறையைப் பற்றி அறியவோ அவனுக்கு வாய்ப்புக் கிட்டியதில்லை. இப்பொழுது வாய்ப்பும் கட்டாய ஓய்வும் கிடைத்து, சிறுவர்கள் மாமரத்தில் கயிறு கட்டி ஊஞ்சல் ஆடுவதையும் கிட்டிப் புள், கோலி, பம்பரம் விளையாடுவதையும், சிறுமிகள் பாண்டி விளையாடுவதையும், ‘ஆலாப் பொறுக்கி, ஆரோட சேத்தி’ என்று நீளமாகப் பாட்டுப் பாடிக் கொண்டே கற்களை விட்டெறிந்து பிடிக்கும் விளையாட்டையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

          அவ்வப்போது பூசாரி வந்து தன் குடும்பக் கதையைச் சொல்வார். “எனக்கு நாலு பசங்க. இங்கே இருக்கிறவன் தான் கடைசி. பெரியவன் டிரைவிங் கத்துக்கிட்டான். இப்போ துபாயிலே இருக்கான். ரெண்டாவது பையன் ஃபிட்டர் தொழில் கத்துகிட்டு கும்மாணத்திலே வேலை  பாக்கிறான். மூணாவது பய அங்கேயே இஞ்சினீரிங் காலேஜிலே படிக்கிறான். பெரியவன் அனுப்பற பணத்திலே தாங்க அவன் படிப்பு நடக்குது. இப்ப பெரியவனுக்குக் கல்யாணம் ஆயிடிச்சின்னா அவன் தம்பிக்குப் பணம் அனுப்பறது நின்னு போயிடும். ஒரு நல்ல எடம் வந்திருக்கு. தம்பி படிப்புக்காக அவனுடைய கல்யாணத்தை ஒத்திப் போடறதும் சரியில்லே. பார்ப்போம். ஐயனாரு ஏதாவது வழி காட்டுவாரு.”

          பூசாரி மட்டுமல்ல, அந்த ஊர் ஆண்கள் ஒவ்வொருவரும் இவனிடம் வந்து தங்கள் சொந்தக் கதை முழுவதையும் சொல்லிக் கொண்டார்கள். இதையெல்லாம் என்னிடம் ஏன் சொல்கிறார்கள், கேட்டு எனக்கு என்ன உபயோகம் என்று நினைத்தாலும் வேறு வழி இல்லாமல் கேட்டுக் கொண்டான்.

          அதே போல, இவனைப் பற்றியும் ஒவ்வொருவரும் குடைந்து குடைந்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அடுத்தவருடைய சொந்த விஷயங்களில் தலையிடுவது தவறு என்ற நாகரிகம் தெரியாத காட்டு வாசிகள் என்று நினைத்தான். முதலில் தன்னைப் பற்றி அரை குறைத் தகவல்களை மட்டுமே வெளியிட்டவன் பின்னர் மனம் மாறி இவர்கள் தங்களைப் பற்றி முழுமையாகச் சொல்லிக் கொள்வது போல என்னிடமும் எதிர்பார்க்கிறார்கள். சொல்வதில் என்ன தவறு என்று நினைத்து எல்லாவற்றையும் சொல்லிவிட்டான், தனது தொழிற்சாலை தள்ளாட்டத்தில் இருப்பது உள்பட.

          ஒருநாள் பூசாரியின் பையன், “வித்தை காட்டறேன் பாருங்கடா” என்று அக்கம் பக்கத்துப் பையன்களைக் கூட்டி வந்தான். ஒரு நூலில் ஒரு சிறு கல்லைக் கட்டி நூலின் மறு முனையை ஒரு குச்சியில் தொங்க விட்டான். மற்ற பையன்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்து அந்த நூலில் வைத்தான். நூல் எரிந்தது. அதில் கட்டப்பட்டிருந்த கல் கீழே விழுந்தது. “இது தான் வித்தையாக்கும்” என்று பையன்கள் கேலி செய்தார்கள். “இருங்கடா, இன்னும் இருக்குடா” என்று சொல்லி விட்டு வேறு ஒரு நூலை எடுத்தான். அதில் ஏதோ பச்சிலைச் சாற்றைத் தடவினான். சற்று நேரம் காய வைத்து விட்டு முன்பு போல் அதில் கல்லைக் கட்டித் தொங்க விட்டான். இப்பொழுது அதைப் பற்ற வைத்தான். நூல் எரிந்தது. கரியாயிற்று. ஆனால் கல் விழவில்லை. மற்றப் பையன்கள் வாயைப் பிளந்தார்கள்.

                    “எப்படிடா? டேய் எனக்குச் சொல்லிக் குடுடா.”

                    “மூணு நாள் பட்டினி கிடக்கிறியா, அப்ப தான் சொல்லித் தருவேன்.”

          இதைப் பார்த்துக் கொண்டிருந்த போது சுந்தரேசனுக்கு மூளையில் பளிச்சென்று ஒரு மின்னல் தோன்றியது. மூலப் பொருள் தரக் குறைவைச் சரி செய்ய ஒரு வழி புலப்பட்டு விட்டது. ஒரு வருஷமாக மூளையைக் கசக்கிக் கொண்டபோது கிடைக்காத திட்டம் ஒரு வாரமாக அதைப் பற்றிச் சிந்திக்காத போது தோன்றியது.

          “தம்பி, இங்கே வா, எனக்கு அந்த வித்தையைச் சொல்லிக் குடு, நான் மூணு நாள் பட்டினி கிடக்கிறேன்” என்றான்.

          “உங்களுக்குச் சொல்லித் தரேண்ணே. நீங்க பட்டினி எல்லாம் கிடக்க வேண்டாம். வேறே ஒண்ணும் இல்லீங்க. முருங்கை இலைச் சாறு அது ”

          அடுத்த புதன் கிழமை வந்தது. தென்னமரக்குடிக்கு அழைத்துப் போனார் பூசாரி. வைத்தியர் கட்டைப் பிரித்தார். கையில் ஒவ்வொரு இடமாக அழுத்திப் பார்த்துக் கொண்டே வந்தார். குறிப்பிட்ட ஓரிடத்தில் கட்டை விரலால் பலமாக அழுத்தினார். வலி தாங்காமல் ஆ என்று அலறினான் அவன். அடுத்த கணம் வலி மாயமாக மறைந்தது. எட்டு நாட்களாக கையில் இருந்த கனம் குறைந்தது. கை என்று ஒன்று இருப்பதான உணர்வே இல்லை. வைத்தியர் முட்டையையும் உளுத்தம் மாவையும் குழைத்துக் கை முழுவதும் பற்றுப் போட்டார். ஒரு வெள்ளைத் துணியை வைத்துக் கட்டினார்.

          “நாளைக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு கட்டை அவுத்துட்டு வெந்நீரை விட்டுக் கழுவி துன்னூத்தைப் பூசுங்க. ஒரு வாரத்துக்கு எண்ணெயைத் தடவிங்க. நீங்க உங்க ஊருக்குப் போகலாம்.”

          வெளியில் வந்ததும் பூசாரி சொன்னார், “ஒரு வாரம் எண்ணை போட்டதிலே எலும்பு தசை எல்லாம் இளகி ரப்பர் கணக்கா ஆயிருச்சு. இப்போ அது தன் இடத்திலே சரியா ஒக்காந்துகிச்சு. டாக்டர் கிட்ட போனீ்ங்கன்னா, அன்னிக்கே சேத்து வைச்சுக் கட்டுப் போடுவாங்க. தசை விறைப்பா இருக்கறப்போ எலும்பைப் பொருத்தினா அது முசிறிக்கிட்டுத் தான் இருக்கும். அதிலே ஒரு சின்னப் பிசிறு இருந்தாலும் கை கோணிப் போயிடும். இப்படி இளக்கிக் கட்டறது தான் இயற்கையான நிலைக்குக் கொண்டாரும்” என்றார்.

          “இதுவே மும்பையிலே இருந்தா எக்ஸ்ரே, ஆப்பரேஷன், ஸ்டீல் பிளேட் வைக்கறதுன்னு அம்பதாயிரம் ரூபாய் செலவு வெச்சுடுவாங்க. நீங்க வெறும் அம்பது ரூபாயிலே முடிச்சுக் குடுத்துட்டீங்க. ரொம்ப நன்றிங்க. இன்னிக்கு சாயங்காலம் பஸ்ஸிலே சென்னைக்குப் போறேன்” என்றான்.

          “எங்களை எல்லாம் நெனப்பிலே வெச்சுங்க” என்றார்.

          “உங்களை மறக்க முடியுமா? உங்க பையனையும் மறக்க முடியாது. இந்த ஒரு வாரம் ஓய்வு எடுத்ததிலே எனக்கு ஒரு புது வழி புலப்பட்டிருக்கு. ஐயனார் அருளாலே, அது வெற்றிகரமா முடிஞ்சுதுன்னா, என் தொழில் நிமிர்ந்துடும். அப்புறம் உங்க பையனோட காலேஜ் படிப்பை நான் பார்த்துக்குவேன்” என்றான்.

          “எல்லாம் நல்லபடியா நடக்கும் ஐயனாரு கை விடமாட்டாரு. போய்ட்டு வாங்க.”

          மூன்று மாதம் கழித்து பூசாரிக்குப் போன் வந்தது. “தொழில் நல்லா நடக்குது. உங்க மூணாவது பையன் ஃபோன் நம்பரைக் குடுங்க. அவன் காலேஜ் ஃபீஸ் எவ்வளவு, யார் பேருக்குப் பணம் அனுப்பணும்கிற தகவலை வாங்கிக்கிறேன், அத்தோட உங்க சின்னப் பையனுக்கும் என் நன்றியைச் சொல்லுங்க” என்றான் சுந்தரேசன்.

          “நன்றி ஐயனாருக்குத் தாங்க சொல்லணும். வருசா வருசம் வந்துட்டுப் போங்க” என்றார் பூசாரி.

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 18

    தேமொழி

    வாழ்வில் எதுவும் கடந்து போகும்

    depression

     

    மனித மனமே கேளு
    மயக்கம் என்ன கூறு
    கலங்கும் நெஞ்சே ஆறு
    இது வாழ்வில் காணும் பேறு

    எதுவும் கடந்து போகும்
    எண்ணம் கிடந்து வாட்டும்
    எதையும் தாங்கும் இதயம்
    எளிதில் மறந்து போகும்

     

     

    கவிதை வரிகளுக்குரியவரான காவியக்கவி இனியா அவர்களுக்கு நன்றி
    (http://kaviyakavi.blogspot.com/2013/09/blog-post_20.html)

     

    Share
  • பாதை மறந்த பருந்து …!

    ​ஜெயஸ்ரீ ஷங்கர்

    எங்கடீ அந்தப் பயல்?

    போய்ட்டான்…..

    போயிட்டானா…..? ஆத்த விட்டே போயிட்டானா அவன்..?

    ம்ம்ம்ம்

    அவ்வளவு பெரிய மனுஷனாயிட்டானா அவன்..? அவன் என்னைக் கண்டிக்கலாம்…நான் அவனைக் கண்டிக்கப்டாதோ..?

    அ ….ஹாங் …..அது….வேறொண்ணுமில்லடீ …..கிளிக்கு ரெக்கை முளைச்சுடுத்து…..ஆத்தவிட்டேப்  பறந்து போயிடுத்தூ ……..!

    பாலூட்டி வளர்த்த கிளி

    பழம் கொடுத்து பார்த்த கிளி…..

    நான் வளர்த்த பச்சைக் கிளி..

    நாளை வரும் கச்சேரிக்கு…..

    செல்லம்மா…எந்தன் செல்லம்மா…..!

    திடுமென மின்வெட்டானதால் தொலைகாட்சி கண்ணை மூடி திடீர் சாமியாரானது.

    அதனால் என்ன…?  வீட்டுக்குள்ள தான் கதையும் பாட்டும் நடந்து கொண்டே இருக்கிறதே. அந்த கௌரவப் பாட்டு போனால் என்ன… இருக்கவே இருக்கிறது… வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக் விதை…..!

    இட்டிலித் தட்டிலிருந்து ஒவ்வொரு இட்டிலியாகப் பெயர்த்து ஹாட் பாக்ஸில் போட்டு வைத்த சாரதா, பஞ்சு பஞ்சாக வெள்ளை வெளேரென்று மல்லியப் பூக் கணக்கா இருந்த இட்டிலிகளைப் பார்த்து, ஆஹா…எம்புட்டு அழகா இருக்கு…பார்க்கும்போதே திங்கச் சொல்லி நாக்கு நம நமங்குதே…. சாரதா… இட்டிலில உன்னை அடிச்சுக்க ஆளே இல்லடீ…. என்று  இல்லாத காலரை இழுத்து விட்டுக் கொண்டு தனக்குத் தானே தட்டிக் கொண்ட சாரதா, சடக் கென்று திரும்பிப் பார்த்தபோது… அங்கே கைகள் இரண்டையும் கதவில் முட்டுக் கொடுத்தபடி மகன் சிவராமன்  நின்று இவளையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

    “என்னடா சிவராமா… எப்ப வந்தே… யார் மேலே என்ன கோபம்?….அதான்…கோபம் கண்ணுல கொப்பளிக்குதே… அப்படி என்ன ஆச்சு உனக்கு?”

    “இன்னும் என்ன ஆகணும்….? சைக்கிள் பஞ்சர்… நான் பிளஸ் டூ படிக்கேல ‘அரசு மூலமா அம்மா’ கொடுத்த சைக்கிள் இது. இம்புட்டு நாள் ஓடிச்சே அதே பெருசு… என் கையில பஞ்சர் ஓட்டக் கூட காசு இல்ல… இனிமேட்டு நான் அதைத் தொட மாட்டேன்… அதான்.. அப்படியே காயலான் கடையில வித்துட்டேன்.”

    “எம்புட்டுக்கு? அந்தக் ரூபாயை என்ன செஞ்சே? இங்கிட்டு தா என் கையில.”

    “ஆமா… துருப்பிடிச்ச சைக்கிளுக்கு கட்டு கட்டாத் தூக்கிக் கொடுத்தாங்க. நான் அதை தோல் பையில எடுத்தாந்திருக்கேன். நூறு ரூபாய் கூட தர மாட்டேன்னு சொல்லிட்டான்… நீ என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது. எனக்கு நாளைக்கே புதுசா ‘ஹோண்டா’ பைக் வேணும். வாங்கித் தாங்க. இல்லாட்டி வீட்டுப் பக்கமே வரமாட்டேன்.”

    “டேய்.. சிவா… ஒரு வேலையை பிடிச்சுக்கடா… பெறவு உனக்கு என்ன வேணுமோ அத நீயே உன் சொந்த பணத்துல வாங்கிக்கிறலாம். அப்பா இந்த வீட்டை லோன் போட்டு வாங்கியிருக்காரு… மாசா மாசம் ஹவுசிங் லோனும் வட்டியுமே அவரோட கையைக் கடிக்குது. நாளைக்கே ‘ஹோண்டா’ பைக்கைக் கொண்டான்னு கேட்டா எப்புடி, உங்கப்பா என்ன ராக்கொள்ளையா அடிக்கப் போறாரு..?” இட்டிலிக்குத் தோதாகத் தொட்டுக் கொள்ள கொத்தமல்லிச் சட்னி அரைத்து எடுத்து கிண்ணத்துக்குள்  வைத்தபடியே அவனைப் பார்க்கிறாள் சாரதா.

    “நீ தலை எடுத்தாத் தான் நாங்க நிமிர முடியும். நீ தெனம் ஏதாச்சும் ஒண்ணு சொல்லிட்டு வரே. படிச்சு முடிச்சு ஒரு வருஷமாகப் போவுது.. இன்னும் நீ உட்கார்ந்த இடத்துலயே இருந்தீன்னா….எப்புடி.? நெனச்சுப் பாரு. உனக்குன்னு குடும்பம் ஆக வேணாமா?

    வேலை இருந்தாத்தான மேல்கொண்டு நடக்கும்..? உன் நெலம புரிஞ்சு யோசிடா தம்பி.”

    “எல்லாம் என் நெலம புரிஞ்சுதான் நான் இருக்குறேன். இந்தத் தீவாளிக்கு ஏதாச்சும் கேட்டனா..? நீயே சொல்லு… நல்ல துணி மணி வாங்கித்தரச் சொன்னா… நீ வேலைக்கிப் போற பவுசுக்கு புதுசு கேட்குதோ..?ன்னு நொண்டிடியடிப்பீங்க.

    வெடி வாங்கித் தரச் சொன்னா, நான் கஷ்டப்பட்டு சம்பாரிச்ச பணத்த நீ புஸ்வாணம் விடத் தேவையில்லன்னு சாக்கு சொல்லுவீங்க. இதெல்லாம் எதுக்குண்டு தான் நான் வாயைப் பொத்திகினு இருக்கேன். நான் என்னா இப்ப உன்னிய எனக்குக் கலியாணம் முடிச்சு வெய்யினா கேட்டேன்.. ஒரு பைக்கு தானே கேட்டேன்… அதுக்கு ஏன் இப்படி நொய்யி நோய்யின்னு பேச வைக்கிறே?

    ஆனாலும் இன்னாம்மா நீ….எப்பப் பாரு ‘இல்லே பாட்டுப் பாடி’ அழுதுக்கிட்டு. என் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் எப்பிடி இருக்கானுவுங்க தெரியுமா? நான் ஒருத்தன் மட்டும் தான் பஞ்சத்துக்கு பெறந்த பரதேசி. ம்ஹும்…..அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு நாளைக்கு புது பைக் வேணும். அம்புட்டுத் தான். அந்தாள லோன் போடச் சொல்லு…இல்லாட்டி நீ உன் நகையை வித்து எனக்கு பைக் வாங்கிக் கொடு…நான் சம்பாதிச்சு உனக்கு நகை பண்ணிப் போடறேன்.”

    “போடா உன் வேலையைப் பார்த்துட்டு… நகையை விக்கணுமாம்? தங்கம் என்ன தெருவிலயா போட்டுக் கூவி கூவி விக்கிறாங்க. இவன் வாங்கித் தருவானாம்… நான் நம்பி… நல்ல கதையா இருக்குது? அப்பா காதுல விழுந்துச்சுன்னா அம்புட்டுத்தேன். போ இங்கிட்டிருந்து.. வேற வேலை எதுனா இருந்திச்சின்னாப் போய்ப் பாரு.”

    “எம்மா…..அவரு இருக்காரா.? வந்தாச்சா?”

    “யார்ரா….அவுரு…?”

    “அதான் உன் புருஷன்….!”

    “வாயை மூடு…! அப்பான்னு மருவாதியாக் கூப்பிடு  …! அவரு அப்பமே வந்துட்டாரு.”

    “இப்ப எங்க? யார்கிட்ட போன்ல என்னியபத்தி குத்தம் குறை சொல்லி பாரதம் படிக்கிறாரா?”

    “ரூம்ல…..க்ரானிகல் நியூஸ் பேப்பர்ல க்ராஸ் வார்ட் வருமே..அத்த எடுத்து வெச்சுக்கிட்டு  மண்டையைப் போட்டுக் குழப்பிட்டு இருப்பாரு..!”

    “அவுரு அதுக்குக் கூட சரிப்பட்டு வர மாட்டாரு.”

    “அவரு பாட்டுக்கு என்னத்த செஞ்சாலும் நீ ஏண்டா… தப்பாவே நினைக்கிறே ? பெத்தவங்களை, பெரியவங்களை வாய்க்கு வந்தபடில்லாம்  பேசிடக் கூடாது சிவராமா… எம்புட்டு வாட்டி சொல்லுறது. மரியாதையாப் பேசக் கத்துக்கண்டு. அம்மா எப்பவும் நல்லது தான் சொல்லுவா. நான் சொல்லுறதையாச்சும் நீ கேளுப்பா.”

    “அவரு மட்டும் என்னிக்காச்சும் யாருக்காச்சும் மரியாதை கொடுத்து பேசிருக்காரா?அட்லீஸ்ட் உனக்காச்சும்….! நீயே கேட்டுப் பாரு. அது… வேறொண்ணுமில்லம்மா… தான் தான் சம்பாதிக்கிறோம்னு மண்டை கர்வம்… திமிர்… கொழுப்பு… அந்தாளுக்கு…! இவரப்  போயி யார்மா உன் தலைல கட்டி வெச்சது..! சுயநலம் பிடிச்ச ஆளு.”

    “வாயை மூடுடா…!”

    “ஏன்…உன் புருஷனைச் சொன்னா உனக்குக் கோவம் பொத்துக்கிட்டு வருது? காலைல ஒரு நூறு ரூபாய் கேட்டதுக்கு, நாக்கைப் பிடுங்கறாப்பல எம்புட்டு கேள்வி கேட்குறாரு. நீயும் கேட்டுக்கிட்டு தானே வாயை மூடிட்டு இருந்தே. எனக்கு இப்ப நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது. நாளைக்கு எனக்கு புது பைக் கண்டிப்பா வேணும்.”

    “இப்ப நீ உன் பேருக்குப் பின்னாடி ஒரு வாலைக் ஒட்ட வெச்சிருக்கியே, பிஏ டிகிரி வாலு…! அது மட்டும் என்ன சும்மா வந்து தர்மத்துக்கு ஒட்டிக்கிச்சா. அவரில்லாமல் உன் பேருக்கு பின்னாடி பட்டம் பறக்குமா? நெனெச்சுப் பாரு.. அன்னிக்கு ஆயிரமாயிரமா  உன் படிப்பு செலவுக்குக் கொட்டினவர் தான்… இப்பத் தான் நூறு ரூபாய்க்கு கணக்கு கேட்குறாரு… எதுக்குன்னு விஷயத்தைச் சொல்லி வாங்கிட்டு போறது தானே நீ..? உனக்கென்னாத்துக்கு அம்புட்டு ரோஷம்?”

    “சரி…சரி….இப்ப நீயே அவுரு காதுல போட்டு வெய்யி, எனக்கு ஹோண்டா பைக்கு வேணுமின்னு..சொல்றியா?”

    “திடுதிப்புன்னு பைக் வேணுமுன்னா துட்டுக்கு எங்கிட்டுப் போறது. நீ கேக்குறதும் அநியாயமால்ல இருக்குது.”

    “நீ அந்தாளுக்கு வக்காலத்துக்கு வரே பாரு….! ஒழுங்கா இருக்குறவனையும் கிரிமினல் பண்ணிடுவீங்க ரெண்டு பேருமா சேர்ந்து…! நான் போறேன்.”

    “இந்தாடா… கையைக் அலம்பிட்டு வா… சூடா இட்டிலியும், மல்லி சட்னியும் செஞ்சிருக்கேன்… போட்டுத் தரேன்… தின்னுட்டு தொலை.. என் கோபத்தைக் கிளறாத. வீட்டை விட உனக்கு உன்னோட உருப்படாத ஃப்ரெண்ட்ஸ் தான் முக்கியமா போயிட்டாங்க இல்லே…? பசிக்குமில்ல… இந்தா இட்டிலி,  தட்டையாச்சும் கையால வாங்கு.”

    “அதென்னமோ நீங்களே தின்னுங்க….நான் போறேன்…!”

    “டேய்….இப்ப இந்தத் தட்டை நீ வாங்கப்போறியா இல்லியா..? இப்பிடி யார் மேலயாச்சும் எப்பப்பாரு கோபப்பட்டுக்கினு சாப்பிடாமப் போனே… பெறவு சோத்துக்காக தெருநாய் கணக்கா அலைய வேண்டியது தான். நெனப்பிருக்கட்டும்.” எச்சரிக்கும் குரலில் எரிச்சலோடு அம்மா நீட்டிய தட்டை வெடுக்கெண்டு பிடுங்கிய சிவராமன் நேரே வாசலுக்கு நடக்கிறான்.

    “சிவராமா…எங்கடா….போறே…!”

    “ம்ம்ம்….தெருநாய் கணக்கா அலையப் போறேண்டு  சாபம் கொடுத்தீல்ல, அதான்… எப்படின்னு பார்க்கப் போறேன். என்ன இந்த உலகத்துல நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் இருக்கறதா உங்களுக்கு நினைப்பா… உங்களுக்குத் தான் என்னிய விட்டா யாருமில்லை. அதைத் தெரிஞ்சுக்கங்க  முதல்ல. எனக்கு ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ். என் பேரைச் சொன்னால் உசுரக் கூடக் கொடுப்பாங்க. தெருநாய் மாதிரி அலையப் போறேனாம்… நெனப்பப் பாரு.” கோபத்துடன் கத்திக் கொண்டே வாசல் படியில் கையில் தட்டோடு இறங்கி நிற்கவும்,

    எங்கிருந்தோ ஓடி வந்த தெருநாய் இவன் முன்னே வாலாட்டிக் கொண்டு நின்று நிமிர்ந்து இவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தது,

    “அண்ணே…ரொம்பப் பசிக்குது…ஏதாச்சும் இருந்தா நீயாச்சும் போட மாட்டியா”  அந்தக் கண்களின் பாஷையைப் புரிந்து கொண்ட சிவராமன் சற்றும் யோசிக்காமல் தட்டிலிருந்த இட்டிலிகளை அந்த நாய்க்கு வைத்தான்.

    அவனை நன்றியோடு நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு, குனிந்து கொண்டு வாலாட்டியபடியே ஒரு இட்டிலியை கவ்விக் கொண்டது.

    “எம்புட்டுத் திமிரு இருந்தா நீ இந்தக் காரியம் செய்வே…? விலைவாசி விக்கிற விலையில, நாய்க்கு இட்டிலி கேக்குதோ? எம்புட்டு தகிரியம் திங்கக் கொடுத்தா அப்பிடியே தெருவுல நாய்க்குப் போட ..!  உனக்கு இனிமேட்டு இங்க  சோறு கிடைக்காது. எந்த நாய் உனக்குச் சோறு போடுதுன்னு நானும் பார்க்கறேன்” உள்ளிருந்து தான் கண்ட காட்சியில் கோபப்பட்டுக் கொண்டு ஓடிவந்த சாரதா. ஏதோ தன் மகன் செய்யக் கூடாத காரியத்தை செய்து விட்டது மாதிரி கத்தித் தீர்த்தாள் .

    “இன்னொருவாட்டி உனக்கு யாரு இப்படி இட்டிலியைப் போட்டு கையில நீட்டப் போறாங்க… இப்படியே பட்டினி கெட..அப்பவாச்சும் புத்தி வருதாப் பாப்போம்.”

    “யாருக்கு வேணும்…?  இந்தா இட்டிலி தட்டைப் பிடி.

    போம்மா… நீயும் உன் இட்டிலியும் வீணாப்போன சட்டினியும்..! யாருக்கு வேணும்..?” கனன்று கொண்டிருந்த மொத்த கோபத்தையும்  கதவில் காண்பித்து விட்டு, விடு விடென்று வாசல் கேட்டை ஓங்கி அடித்துச் சார்த்திவிட்டு மறைகிறான் சிவராமன்.

    துர்வாசர் புனர்ஜென்மம் எடுத்து … அப்படியே இவன் மூக்கு மேலே அட்டென்ஷன்ல நிக்கிறாரு போல. வயசுப் பிள்ளைக்கு இத்தனை கோபம் ஆகாதுப்பா. அலுத்துக் கொண்டே காலித்தட்டை எடுத்துக் கொண்டு சமையலறை நோக்கிப் போகிறாள்.

    பாவம் சிவராமன்… அவன் மட்டும் என்ன செய்வான். ‘வெறும் பி.ஏ  வுக்கு இங்க வேலையில்லைப்பா’… என்று சொல்லி அவனை ஓவ்வொரு கம்பெனியும் நிராகரிக்கும்போதேல்லாம்… ‘சார்… இது உப்புப் போட்டு தின்ன பி.ஏ ஸார் ‘ என்று உரக்க கத்திவிட்டு வரவேண்டும் போலத் தானிருக்கும்.

    சாரதாவுக்கு  தாகம் தொண்டையை அடைக்க, ஃப்ரிட்ஜைத் திறந்து தண்ணீர் பாட்டில் எடுக்கக் குனிந்து பார்க்கும் போது தான் தெரிந்தது.. பேருக்கு ஒரு பாட்டில் கூட அங்கு இல்லை…

    ‘கஷ்டம் கஷ்டம்….ஒரு பாட்டில் தண்ணீர்  கூட பிடிச்சு வைக்க ஒரு மனுஷன் கிடையாது இங்கே… எல்லாம் நானே தான் செய்ய வேண்டியிருக்கு. நான் தண்ணியப்  பிடிச்சு ஃப்ரிட்ஜ்ல வெச்சா மாத்திரம், ஒரு மணி நேரத்தில் அத்தனை பாட்டிலையும் காலி பண்ணி உருட்டி விடத் தெரியும். அங்க பாரு… ஏதோ பறக்கும் தட்டு வி​ளையாடினாப்போல மூலைக்கு மூலை காலி பாட்டிலும், காப்பி டம்பளரும் சிதறிக் கிடக்கறத. இந்த லட்சணத்துல இவிங்களுக்கு  கோபத்துக்கு ஒண்ணும் குறைச்சலில்லை.’ முனகியபடியே குடத்துத்திலிருந்து ஒரு  சொம்பில் தண்ணீரை மொண்டு எடுத்து கட கடவென்று குடித்ததும்… உடம்பு முழுதும் புத்துணர்ச்சி பரவியது போலிருந்தது அவளுக்கு.

    “சாரதா” உள்ளிருந்து கணவரின் குரல்….!

    “இதோ….வந்துட்டேங்க!” இவளின் பதிலும்.

    “உன் சீமந்தப் புத்திரன் வந்தாச்சா….இல்லை இன்னும் பொறுக்கிட்டு தான் இருக்கானா?”

    “நானா கண்டேன்….என்னிய ஏன் இப்ப வேண்டாத வம்புக்கு இழுக்கறீங்க ? நீங்களாச்சு உங்க புள்ளயாச்சு..”

    “இப்படி விட்டேத்தியா பதில் சொல்ல எப்பக் கத்துகிட்டே..? யார் சொல்லிக் கொடுக்கிறாங்க… அந்தப் பொறம்போக்கா …?” என்று கேட்டபடியே உள்ளிருந்து வரும் கணவரைப் பார்க்கப் பார்க்க எதிர்த்துப் பேச நாக்குத் துடித்தது. அடக்கிக் கொண்டாள். ‘இப்ப நான் என்ன சொன்னாலும் இவர் கிட்ட எடுபடாது….வீணா சண்டை வளரும்… வேண்டாம்’ என்று மனதை அடக்கி வைத்தாள்.

    “என்ன பண்ணிருக்கே….போடு. தின்னுட்டு தூங்கறேன். நான் ஒருத்தன் அதுக்கு மட்டும் தானே இருக்கேன்னு உங்க ரெண்டு பேருக்கும் நினைப்பு.”

    “என்ன க்ராஸ் வார்ட்ல வார்த்தைங்க  ஒண்ணும் சரியா வந்து விழலையா? அதான் இங்க வந்து கொட்டறீங்களா..? நமக்கு இருக்கறதே ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு கருவேப்பலை கொத்தாட்டம் ஒத்தப் பிள்ளை… அத்தப் போயி நீங்களே பொறம்போக்குன்னு சொன்னா எப்பிடிங்க?” இட்டிலியை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தவள் அதை அப்படியே டைனிங் டேபிள் மீது வைத்து விட்டு, எமெர்ஜென்சி கைவிளக்கை எடுத்து வர மீண்டும் சமையலறைக்குள் நுழையும்போது போன மின்சாரம் ரீங்காரமாய் வந்தது.

    ஊதா…..ஊதா…..

    ஊதாக் கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்

    நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்….

    நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்…

    ரோஜா……ரோஜா…..கலரு பொம்மி…

    உனக்கு யாரு  மம்மி…..!

    ஏய் நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடணும்…!

    ஏய் நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடணும்…!

    ஊதா……ஊதா…..!

    தொலைக்காட்சிப் பெட்டியில் வருத்தப் படாத வாலிபர்கள் ஆடிக் கொண்டிருக்க… சாரதாவுக்கு எரிச்சல் வந்தது.

    உன் தலையில் அம்மிக் கல்லைத் தூக்கிப் போடணும்.. பாட்டைப் பாரு பாட்டை…..டொக்கென்று  டிவியை  அணைத்து விட்டு, கரையான்கள் மாதிரி சினிமா உலகத்துக்குள்ளார நுழைஞ்சுட்டானுங்க.. இவனுங்களாலத் தான் வளருற புள்ளைங்க கெட்டுக் குட்டிச் சுவராப் போறாய்ங்க. ஏற்கனவே நாடு தள்ளாடுது… இனிமேட்டு ஒரு ‘கௌரவமும்’ பார்க்க முடியாது….எல்லாம் டண்டனக்கா தான். அம்புட்டு  சானல்லயும் இதேப்  பாட்டைப் போட்டு மோசம் செய்யுது.

    “சாரதா… பார்த்தீல்ல உலகத்த… அதான் சொல்றேன்.. அந்தக் கருவேப்பலைக் கொத்து நாளைக்கு உன்னோட சாவிக்கொத்தைப் பிடுங்கிட்டு ஓடும் போது தான் உனக்கு மண்டேல ஏறும்… அது வரைக்கும் பாசம் கண்ணை மறைக்கும்.”

    “அப்ப நீங்க உங்கம்மா அப்பாகிட்ட அப்படித்தான் செஞ்சீங்களா…? நீங்க அவுங்க இருக்குற வரைக்கும் அவுங்களை உங்க உள்ளங்கையில வெச்சுத் தானே தாங்கு தாங்குன்னு தாங்கினீங்க..? உங்க ரத்தம் தான அங்கிட்டும் ஓடுது… உங்க பிள்ளையும் உங்கள மாதிரி தான இருப்பான். பார்த்துக்கிட்டே இருங்க. என் வாக்குத் தான் பலிக்கப் போவுது.”

    “கிளிச்சுச்சு. நீ கனவு காணுற அந்தக் காலமெல்லாம் மலையேறிப் போச்சுடி… நீ இன்னும் புரியாதவளா இருக்கே. நாலு இடம் போனாத் தான் உலகம் தெரியும். நீ கிணத்துத் தவளை. உன்னோட உலகம் சமையல்கட்டும் எச்சப்  பாத்திரமும் மட்டும் தான். அக்கம் பக்கம் வம்படிக்கக் கூட  ஒஞ்ஜோட்டு புள்ளைங்க இங்கன யாரும் கிடையாது. எல்லாருமே ரெண்டு சம்பாத்தியக் குடும்பமாப் போச்சு. ஞாயித்துக் கிழமை தவுற மத்த நாள்ல பூட்டு தானே வீட்டை காக்குது. எங்க ஆபீஸ் அக்கவுண்டண்ட் பார்த்தசாரதி இருக்காரில்ல…?”

    “ஆமா… அவருக்கு என்னாச்சு? ஹார்ட் அட்டாக்கா..? அல்லது அவுரு வீட்டாண்ட திருட்டுப் போயிரிச்சா..?”

    “ஏண்டி…உனக்கு நல்லதே தோணாதா?”

    “இப்பல்லாம் நல்லதே நடக்க மாட்டேங்குதே. எங்கிட்டுப் பார்த்தாலும் இப்படித் தான இருக்குது…அதான்..நீங்க சொல்லுங்க.

    அப்ப அவுருக்கு என்னாச்சு?”

    “ஹார்ட் அட்டாக் தானா தான் வருமா என்ன..? பெத்ததுங்க நெஞ்சுல ஓங்கிக் குத்தாமல் செய்கையால குத்தினாலும் வலி  வரும்… அவரோட பையன் ரெண்டு மூணு நாளா வீட்டுக்கே வரலையாம். ஆபீசுக்கும் போகலையாம். திடீர்னு நேத்து வந்து மாலையும் கழுத்துமா வீட்டு வாசல்ல வந்து நின்னானாம்.”

    “அடப் பாவமே…..! ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிகிட்டானா…?”

    “நானே சீரியஸ் விஷயம் சொல்ல வாரேன். உனக்கென்ன  இப்ப ராகத்தோட பாட்டுக் கேட்குது..? நீயும் இப்பல்லாம் இந்தப் பாளா போற டிவி யைப் பார்த்து ரொம்பவே கேட்டுப் போயிட்டே. எப்பப்பாரு…..ஏதாச்சும் பாடிக்கிட்டு….!”

    “ம்ம்ம்… சரி, சாரி… சொல்லுங்க…சொல்லுங்க என்னாச்சு? அவரு ஏத்துக்கிட்டாரா.? பார்த்தசாரதி பக்கா அய்யங்காரு குடும்பம்… அந்த மைதிலி மாமி செய்யுற புளியோதரை தொட்டாலே கை மணக்கும்… இல்லீங்க.”

    “ஆமாங்க…!” என்று தன் குரலை பெண் குரல் போல மாற்றிச் சொல்லிக் காட்டியவர், “என்னை முழுசா சொல்ல விட மாட்டியே… சரி ஒண்ணும் வேண்டாம்… உன் மரமண்டைக்கு தீனியை தவிர  வேற ஒண்ணும் ஏறாதுன்னு தெரிஞ்சு போச்சு. இட்டிலியைப் போடு.”

    “என்னங்க நீங்க….அப்படி என்னத்த சொல்லிப்புட்டேன்னு இம்புட்டு கோபம் உங்களுக்கு…? மேல சொல்லுங்க..இட்டிலி எடுத்து வெக்கிறேன்.”

    “கூட வேலை பார்குற ஒரு தெலுங்குக்கார பிள்ளைய . கல்யாணம் கட்டி கூட்டிட்டு வந்திருக்கான். இவரு பெத்த பிள்ளையின்னு கூட நினைக்காம, போடா வெளிலன்னு துரத்தி விட்டுட்டு இத்தோட முடிஞ்சி போச்சுன்னு சொல்லி ரெண்டு பக்கெட் தண்ணியை தலயில் கொட்டிக்கிட்டாராம்.”

    “அதனால ஜலதோஷமில்ல பிடிச்சிருக்கும். இப்பக் கிடந்து வருத்தப் பட்டு என்ன பிரயோஜனம்.? ஆரம்பத்திலிருந்து கண்டிச்சு வெச்சிருந்தா இப்ப இந்த நிலை வராதில்ல. இப்ப என்னாச்சு..? பெத்தத தொரத்திட்டு ரெண்டு பெருசும் அழுதுகிட்டு  நிக்கிறாங்களா?  பாவம்ங்க…அவுங்க.”

    “அதான் சாரதா …நானும் சொல்றேன்….இன்னைக்கு அவருக்கு,  நாளைக்கு நமக்குன்னு ஆயிடக் கூடாதில்லையா..?”

    “அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுங்க..நம்ம பையன் தங்கக்குடம். அந்த வளிக்கெல்லாம் போயிறமாட்டான்.”

    “ஆமா..உன்கிட்ட வந்து சொன்னான்… இப்படியே அவனைத் தலையில ஏத்தி வெச்சுக் கெரகமாடிக் கொண்டாடு. அவன் அப்படியே உன்னை நசுக்கிட்டு உருளப் போறான். உன் பாசம் உன் கண்ணை,  காதை,வாயை அடைச்சிடுத்து.. என்ன செய்யறது. உனக்கெல்லாம் பட்டாக் கூடத் தெரியாது..”

    “வயசுப் பசங்க கொஞ்சம் அப்படி இப்படித் தான் இருக்குங்க, நாம பெரியவங்க அவங்களை கொஞ்சமாச்சும் நம்பணும். எல்லாத்தையும் ஒரே மாதிரி பார்த்தால் கஷ்டமில்லையா. இதோ… இப்ப இட்டிலி கூட திங்காமல் தெருநாய்க்கு போட்டுட்டு கோபத்தோட வெளிய கெளம்பிட்டான். நீங்க எப்பப்பாரு நீங்க அவனை எதாச்சும் சொல்லி அவன் மனசை வேதனை செய்யுறத மொதல்ல கொஞ்சம் நிப்பாட்டுங்க. உலகம் தெரியாத பிள்ள அவன். இப்பத்தான் அவனுக்கு நல்லது கேட்டது விளங்குது.”

    “அவனுக்காடி உலகம் தெரியாது. உலகத்தைக் கூறு போட்டு வித்துப்புடுவாங்குங்கடி. அவனும் அவன் கூட்டாளிங்களும். அவன் முழியப் பார்த்தாலே எனக்கு அவன் ஏதோ தகிடுதத்தம் பண்ணிட்டு வந்த மாதிரியே இருக்கும். என்னியப் பார்த்தாலே திருட்டு முழி முழிக்கிறான். அவனை எப்படி நம்பச் சொல்றே நீ?”

    “ஹலோ…!” என்று இழுத்த சாரதா “நம்ம முழில கொஞ்சமாச்சும் அவனுக்கும் இருக்குமில்ல. என்னமோ நம்ம ராஜபார்வை பார்க்கிறாப்பல, அவனை என்ன வேணா உங்க இஷ்டத்துக்கு சொல்லிக்கிருங்க. ஆனா அவனைத் திருடு, கொறடுன்னு மட்டும் எதாச்சும் சொன்னீங்கன்னா எனக்குக் கெட்ட கோபம் வரும், இப்பமே சொல்லிட்டேன்… ஆமா.”

    “அவனைச் சொன்னா உனக்கு பாசம் பொத்துக்கிட்டு வந்துடுமே. எப்டியோ நீ அவனுக்கு அசாத்தியச் செல்லம் கொடுத்து, அவனும்   கெட்டு குட்டிச்சுவரா போயாச்சு. இனிமேட்டு சாண் போனா என்ன முழம் போனா எனக்கென்ன? நேத்திக்கி நான் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வரும்போது வழக்கமா வர வழில வராமல் தீபாவளிக் கூட்டமா இருந்திச்சேன்னு  கொஞ்சம் சுத்தி வந்தேன் பாரு… வரக்குள்ள அங்கன  ஒரு பெட்டிக்கடையில நம்ம அய்யா செம ஸ்டைலா நிக்கிறாரு… சாம்பிராணிப் பொகை  போடுற சாயுபு கணக்கா. ஊதி ஊதி புகையை விட்டுக்கிட்டு… கூடவே இன்னும் ரெண்டு தத்தாரிப் பசங்க, இவனுக்கு ஜால்ரா போட. அப்டியே… வண்டியை விட்டு எறங்கி ரெண்டு சாத்து சாத்தினா என்னன்னு தோணிச்சு. இருந்தும் கட்டுப் படுத்திகிட்டேன். எதுக்குத் தெரியுமா?”

    “அச்சச்சோ…..என்னது…! .சிகரெட் பிடிக்கிறானா..? எதுக்கு சாத்தாம விட்டீங்க..?”

    “என் மானம் போயிறக் கூடாது பாரு….அதுக்காண்டி தான், கண்டுக்கிடாம விட்டுட்டேன். அதான் இன்னிக்கி காலீல நூறு ரூபாய் கேட்டான் பாரு… அப்ப சேர்த்து வெச்சு நான் கொடுத்த டோசுல, இனிமேட்டு வாயில கொள்ளிக்கட்டையை செருகும்போது அவனுக்கு நான் சொன்ன நெனப்பு தான் வரும் பாரு..! “புலம்பிக் கொண்டே இட்டிலியை சாப்பிட்டு முடித்தவர் எழுந்து கையலம்பிவிட்டு பெரிதாக ஒரு ஏப்பம் விட்டுவிட்டு படுக்கையை நோக்கி கொட்டாவி விட்டுக் கொண்டே போனார்.

    “என்னங்க நீங்க…இப்படி ஒரு குண்டைத் தூக்கி போட்டுட்டு போறீங்க. நம்ம சிவராமனா சிகரெட் பிடிக்கிறான் ..? எனக்குத் தெரியவே தெரியாது. ஆச்சரியமா இருக்குதே. நம்பவே முடியலீங்க.”

    “சிவராமன்னு பேரு வெச்சா சிகரெட்டெல்லாம் பிடிக்க மாட்டான்னு நினைச்சியாக்கும்? இதுக்கெல்லாம் அவன் ஊருக்கும் உனக்கும் பத்திரிகை வெச்சுட்டுத் தான் ஆரம்பிப்பானா என்ன..? ஹ ஹா….நம்பவே முடியலியாம். இப்படிப் பிள்ளையை நம்பினா, மத்ததெல்லாம் எப்புடி நம்ப முடியும்? சொல்லுறவங்களக் கூட நம்ப முடியாது. எப்பிடியோ போ, எனக்குத் தூக்கம் வருது.”

    “இருங்க…..அவன் வரட்டும் இன்னிக்கு. நான் ரெண்டுல ஒண்ணு பார்த்துப்புடறேன். அவன….!” கடைசி இட்டிலி தொண்டைக்குள் இறங்காமல் அடைக்கவும், சாரதா  தட்டை எடுத்துக் கொண்டு எழுந்தவள்… ‘இன்னும் இவனால என்னவெல்லாம் பிரச்சனைகள் வரப்போகுதோ…? முருகா…..அந்தப் பிள்ளைக்கு நல்ல புத்தியைக் கொடுத்து ஒரு நல்ல வேலையையும்  கொடுத்து உட்கார வெச்சிடேன், உனக்குப் பழனிக்கு வந்து பாலாபிஷேகம் செய்யறேன்.’

    அதற்குள் வாசல் கேட்டுத் திறக்கும் சப்தம் கேட்டு எட்டிப் பார்த்த சாரதாவுக்கு , சிவராமனின் முகத்தைப் பார்த்ததும் கொஞ்சம் ஆறுதலாகவும் நிறைய கோபமும் சேர்த்தே வந்தது.

    அவன் உள்ளே வரக் காத்திருந்தவள் போல…

    “வர வர உன் போக்குவரத்தே சரியில்லை….ஆமா…நீ சிகரெட் பிடிக்கிறியா?  எங்க ஊது… பார்க்கலாம். அம்புட்டுப் பெரியவனாயிட்டியா  நீ? அப்பா…அன்னிக்கி  உன்னிய தெருவுல சிகரெட்டு பிடிக்கிறதைப் பார்த்துபுட்டு வந்து இங்க குதி குதின்னு குதிக்கிறாரு….என்னமோ நான் தான் உன் கையில திணிச்சு புகை விடுடா மகனேண்டு  சொன்ன மாதிரியும்.. அதான் நீ கேட்ட ரூபாயைக் கூட தராம உன்னை காலீல திட்டினாராம். ஏன் தான் இப்படியெல்லாம் செய்யுறியோ?”

    “நீங்க பாட்டுக்கு யாரையோ பார்த்துட்டு நான் தான்னு சொன்னால், அதுக்கெல்லாம் நான் பொறுப்பு ஏத்துக்கிட முடியாது.” கோபத்துடன் கத்திவிட்டு சாப்பிடாமல்,  டிவியைப் போட்டவன் அதை  இன்னும் சற்றுப் பெரிதாக வைத்துக் கொண்டு அதைத் தீவிரமாகப் பார்ப்பது போல சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான் சிவராமன்.

    “இப்பவாச்சும்…வந்து சாப்பிடு வா…!” பாசம் மேலிட்டது சாரதாவுக்கு.

    “நான் சாப்பிட்டாச்சு.”

    “சமைச்சது அம்புட்டும் வீணாப் போகுதில்ல….உன் கோபத்தை சாப்பாட்டு மேல ஏன் காமிக்கிறே?”

    “அதான் வாசல்ல நாய் இருக்கே,இனிமேட்டு அதுக்குப் போடு….நன்றியாவாச்சும் இருக்கும்…அதான வேணும் உங்களுக்கு..!”

    “ஏண்டா இப்படில்லாம் பேசறே..? என்னாச்சுடா உனக்கு…..மூஞ்சியே சரியில்லை..வெளில எதாச்சும் பிரச்சனையா? மூஞ்சியே பேய் அரைஞ்சாப்பல இருக்குது….?”

    “காசில்லாம சுத்தினா மூஞ்சி பேயறைஞ்சாப்பல தான்மா இருக்கும். எனக்கு வெளில ஒரு பிரச்சனையும் இல்ல…அம்புட்டும் வீட்டுக்குள்ளாற தான். அதான் பைக் வாங்கித் தரச் சொல்லிருக்கேன். சொன்னியா அவுருகிட்ட. என்ன சொன்னாரு.”

    “ம்ம்ம்…சொல்றேன்….சொல்றேன்….” என்று நகர்ந்தவள்,

    இவனோட இப்பப் பேசினா சண்டை வளரும், ஊகித்தபடி “டேய்..சிவராமா ,கதவை சார்த்தி பூட்டு….நான் படுக்கப் போறேன். பசிச்சா எடுத்துப் போட்டு சாப்பிடு. ஐயோ ராமா…இந்த இடுப்பு இந்த வலி வலிக்கிதே…அயோடெக்ஸ் எங்கிட்டு இருக்கோ..தேடணும்” சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்று மறைந்தாள் சாரதா.

    “யாரை நம்பி நான் பொறந்தேன்..

    போங்கடாப் போங்க…
    என் காலம் வெல்லும்,
    வென்ற பின்னே வாங்கடா வாங்க…
    குளத்திலே தண்ணியில்லே
    கொக்கும் இல்லே மீனும் இல்லே
    பெட்டியிலே பணமில்லே
    பெத்த புள்ளே சொந்தமில்லே…
    தென்னைய பெத்தா இளநீரு
    பிள்ளைய பெத்தா கண்ணீரு
    பெத்தவன் மனமே பித்தம்மா
    பிள்ளையின் மனமே கல்லம்மா…

    “ஆமா…..இவனுங்க வேற…கல்லு…மண்ணுன்னு… சொல்ல வந்திட்டாய்ங்க” அவசரமாக டிவியை அணைத்தான் சிவராமன்.

    அறைக்குள் அப்பாவும் அம்மாவும் காரசாரமாய் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் ஹால் வரைக்கும் கேட்டது.

    இவனுக்கும் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவர்களும் உரக்கப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

    “இவனெல்லாம் உருப்பட மாட்டாண்டி…..இவனுக்கெல்லாம் நீ வக்காலத்து வாங்கிட்டு வராத….பைக்கும் கிடையாது…அவனுக்கு எந்த சோக்கும் கிடையாது.உருப்படாத பய…. நடந்து போகச்சொல்லு. அப்பத்தான் சொகத்தோட அருமை தெரியும். நம்ம நிம்மதியைக் கெடுக்கறதே அவனுக்குப் பொளப்பு. எத்தனை பசங்க படிச்சமா வேலைக்குப் போனமான்னு இருக்குறாங்க…நமக்குன்னு…என் கர்மம்….!நாட்டுல என்ன வேலையா இல்லே….? இவனுக்கு சொகுசா உட்கார்ந்து தண்டச் சோறு தின்னக் கேக்குது.

    நீ பேசாம படுடி….பிள்ளைக்கு பைக்கு வேணுமாம் பைக்கு…. அவனுக்கு இன்னைக்கு பைக்கு வேணும்பான் ..நாளைக்கு புதுசா செல்ஃபோன் வேணும்பான். அவன் கேக்குறத பறிச்சுக் கொடுக்க எல்லாம் மரத்துலயா முளைச்சு நிக்குது. பெத்தவங்க கஷ்டம் தெரியாத பயபுள்ள… நடுத்தெருவுல நிப்பாட்டினாத்தான் வெவரம் வெளங்கும். நானும் இவன் வயசைத் தாண்டி வந்தவன் தான..ம்க்க்க்க்க்க்க்க்…” என்று செருமிய சத்தம் கேட்டதும்…சிவராமனின் கன்னத்தில் அறைந்தது போலிருந்தது அந்த வார்த்தைகள்.

    ‘இதுக்கெல்லாம் நான் வருத்தப் படமாட்டேன்…இவிங்களுக்கும் நான் யாருன்னு காமிக்கணும்….இது போல உருப்படாத அப்பன்களுக்கு  உணர்த்தணும். எப்பயும் நான் என்ன இப்பிடியேவா இருந்துடப் போறேன்..? என்னவோ சொல்லுவாங்களே..ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு.இவங்க இப்படித் தான். திருந்தாதவிங்க. எப்பப் பாரு கேள்வி கேட்டு கொடஞ்செடுத்து உசுர வாங்கிருவாய்ங்க. இவிங்களுக்கு சம்பாதிச்சாப் போதும்…அது எப்பிடியிருந்தா என்ன?’ சடக்கென்று எழுந்திருந்த சிவராமன் தனக்கு தேவையானதை எடுத்து ஒரு பையில் திணித்துக் கொண்டு கிளம்பினான்.

    ‘இப்படிப்பட்ட அப்பா,அம்மா இருக்கிறதாலத் தான் நாட்டுல கொலை, கொள்ளை, செயின் ஸ்னாட்ச்சிங், ஜேப்படி எல்லாம் சர்வ சாதாரணமா நடக்குது. இங்கன இருந்தாத் திட்டியே கொன்னுருவாய்ங்க.’

    ‘வீட்டை விட்டே ஓடிறலாமா..? ஓடிறலாம் ..அப்பத்தான் இவிங்க ரெண்டு பேத்துக்கும் என்னோட அருமையும் புரியும்.’

    டிவி ஸ்க்ரீனில் ஒரு வெள்ளைத் தாளை ஒட்டியவன்,

    “நான் உருப்படுவதற்காக போகிறேன்

    ஒரு வீட்டு நாய்த் தெருநாயாகிறது

    நிம்மதியாக இருங்கள்.”

    சிவப்பு ஸ்கெட்ச் பேனாவால் அதன் மேல் கொட்டை எழுத்தில்  எழுதிவிட்டு விளக்கை அணைத்துவிட்டு, மெல்லக் கதவைச் சார்த்திவிட்டு  வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

    வீடு இருளில் மூழ்கிப் போகிறது.

    வாசற்படி கடந்து தெருவுக்கு வந்ததும், அங்கு ஓரமாகப் படுத்திருந்த தெருநாய் இவனைப் பார்த்ததும் வேகமாக எழுந்து நின்று சோம்பல் முறித்து விட்டு தலையை நிமிர்த்திக் கொண்டு இவனைப் பார்த்து, “இந்நேரத்துக்கு இங்கிட்டுப் புறப்பட்ட…’?… விடாமல் குறைக்க ஆரமபித்தது. வீட்டை விட்டு நடக்க நடக்க…நாயும் தொடர்ந்து குரைத்துக் கொண்டே வந்தது.

    முதல் முறையாக வீட்டை விட்டு வெளியேறிப் போகிறோம் என்றதும், அவனையும் அறியாமல் ஒரு பயம் வந்து அவனை சூழ்ந்து கொண்டது. நாம சொன்னது போலவே திருடனாகி விடுவோமோ? போலீஸ் லத்தியால் முட்டிக்கி முட்டி அடி வாங்கிக் கம்பி எண்ணுவோமோ? காசு கிரிமினல் ஆக்கிடும்… யாரும் தட்டிக் கேட்க ஆளில்லையின்னா நல்லவன் கூட கிரிமினல் ஆயிறுவானே. நான் செய்யுறது மட்டும் சரியா? நான் இப்போ எங்கிட்டுப் போவேன்?

    கால்கள் வீட்டைக் கடந்து நடக்க நடக்க, மனம் நொண்டியடித்தது. உள்ளிருந்து பொங்கி வந்த எண்ணங்கள்  வீட்டுக்குள் அவனை இழுத்தது. மனசாட்சி சாட்டையை உருவியது. ‘அம்மா பாவம்….அப்பாவும் பாவம்..!’ தன்னை உணர்ந்ததும் பாசம் மேலிட்டது.

    “பெத்தவன் மனமே பித்தம்மா
    பிள்ளையின் மனமே கல்லம்மா.”.

    காதுக்குள் பாடல் வரிகள் மீண்டும் ஒலித்தது. சரியாகத் தான் சொல்லியிருக்காங்க. நான் தான் புரிஞ்சுக்கலை.

    சிவராமன் அந்த நாயைப் பார்க்கிறான். அதுவும் உடனே நின்று இவனைப் பார்க்கிறது .

    எனக்குத் தெரிஞ்சு நான் உனக்கு இன்னிக்கு மட்டும் தான் இட்டிலி வெச்சேன். அதுக்கே நீ  இப்படி வாலாட்டிக்கிட்டு பின்னாடியே வாரியா …இல்லே… நான் இங்கன இல்லாத போனா உனக்கு நாளைக்கி சோறு கிடைக்காதேன்னு குரைக்கிரியா …சீ …போ….! துரத்திப் பார்க்கிறான்.

    ச்சே….நானும் ஏன் உன்னைத் துரத்தோணம்?

    அதுவும் வாலை ஆட்டியபடியே குரைத்துக்  கொண்டே கூட வருகிறது.

    தெரு முழுதும் கடந்திருப்பான். சிவராமன்… நாய்க்குக் கூட நன்றியும், கடமை உணர்வும் இருக்கு… எனக்கில்லையே..? அப்பா சொல்வதிலும் நியாயம் இருக்கு. அவர் சரி தான். நான் தான் மாறணும் .தெரு திரும்புவதற்குள் அவன் மனம் திரும்பிவிட்டது. சிவராமன்  வீட்டை நோக்கித் திரும்புகிறான்.

    தான் எழுந்த வேலை முடித்துவிட்டு ஓடிச்சென்று வாலைச் சுருட்டிக் கொண்டு மீண்டும் ஓரமாகப் போய்ப்  படுத்துக் கொள்கிறது அந்த நாய்.

    பூனை போல மறுபடியும் வீட்டுக்குள் நுழைந்து கொண்டு கதவைச் சார்த்திக் கொள்கிறான் சிவராமன்.

    நுழைந்ததும், முதல் வேலையாக ,அவன் எழுதி ஒட்டிய வெள்ளைத் தாளை டீவி ஸ்க்ரீனிலிருந்து பிய்த்து, ‘ஒரு தெருநாய் என்னை உருப்பட வெச்சிருச்சு’ என்று சொல்லிக் கொண்டே அதைத்  துண்டு துண்டாக கிழித்து ஜன்னல் வழியாக வீசுகிறான்.

    Share
  • இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் : (5) க்ரௌஞ்ச பக்ஷி

    நடராஜன் கல்பட்டு

    தூக்கணங்குருவி பற்றி எழுதிய போது அதன் துர் குணம் பற்றியும் நான் சொல்லிஇருந்தேன்.  ஆண் பறவை ஒரு கூடு கட்டி பின், ஒரு பெண் பறவை அதனுடன் ஜோடி சேர்ந்தவுடன், ஆண் மேலும் ஒன்று இரண்டு என பல கூடுகள் கட்டி பல புதிய ஜோடிகள் சேர்த்துக் கொண்டு வாழ்ந்திடும் என்று.

    அதற்கு நேர் எதிர் ஆங்கிலத்தில் Sarus crane  என்று  அழைக்கப் படும் கிரௌன்ச பக்ஷி.

    Saurus cranes-2

    கொக்கு இனத்திலேயே மிக உயரமானது கிரௌன்ச பக்ஷி.  இந்தப் பறவையை தென் இந்தியாவில் காண முடியாது.  வட இந்தியாவில் ஹரியானா, டில்லி, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வயல் வெளிகளிலும் தரிசு நிலங்களிலும் இப் பறவைகளைக் காண முடியும்.

    வால்மீகி ராமாயணம் பிறக்கக் காரண கர்த்தா என நமது புராண இதிகாசங்களிலும் சமிஸ்கிருத கவிதைகளிலும் இடம் பெற்றுள்ள பறவை இந்த கிரௌஞ்ச பட்சி.                                                                                                                                 .

    இப்பறவையின் ஓர் அபூர்வ குணம், ஒரு முறை ஜோடி சேர்ந்த பறவைகள் ஆயுள் பூராவும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாது.  ஒரு பறவை இறந்து விட்டால் மற்றொன்று பிரிவாற்றாமையில் துணை பிரிந்த இடத்திலேயே சில நாட்கள் சுற்றிச் சுற்றி வந்து உணவு கூட உட்கொள்ளாமல் தன் உயிரை விட்டு விடும்.  கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உச்ச கட்ட உதாரணம் இப்பறவை.

    கிரௌஞ்ச பக்ஷி கூடு அமைத்து முட்டை இட்டு குஞ்சு பொரித்து குஞ்சுகளை வளர்ப்பது ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரையில் ஆன நாட்களில்.  இது தன் கூட்டினை நீர் தங்கிய நெல் வயல்களின் நடுவே அமைக்கும்.  கூடு சுமார் மூன்றடி விட்டத்தில் வைக்கோல், நாணல் இவற்றால் அமைக்கப் பட்டு இருக்கும்.  இப்பறவை இடும் இரண்டு முட்டயினை அடை காப்பது அனேகமாக பெண் பறவைதான்.  குஞ்சுகள் வெளியே வந்தவுடன் அவற்றுக்கு உணவு அளிப்பது இரு பறவைகளுமே.

    கிரௌஞ்ச பக்ஷி பறக்க ஆரம்பிப்பதோ பறப்பதோ பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும்.  போர் விமானங்கள் சுமார் முன்னூறு அடி நீளமுள்ள விமானம் தாங்கிக் கப்பல்களிலிருந்து ஆகாயத்தில் எழும்பும்போது, ஜம்போ ஜெட் விமானங்கள் சில கிலோ மீடர் தூரம் தரையில் ஓடிப் பின்னரே ஆகாயத்தில் எழும்புகிறதல்லவா ?  அதுபோலத்தான் கனமான இந்தக் கிரௌஞ்ச பக்ஷிகளும் இறககைகளை அடித்துக்கொண்டு பல அடி தூரம் தரையில் ஓடிப் பின்னரே அகாயத்தில் எழும்பும்.  அதன் பின்னரும் அதிக உயரத்தில் பறக்காது.

    பல மாநிலங்களில் மக்கள் இப்பறவைகளைக் கொல்வ தில்லை என்பதால் மனிதர்களைக் கண்டு இவை பயந்து ஓடுவதில்லை. நிலங்களில் வேலை ஆட்கள் வேலை செய்துகொண்டிருக்கும் போது அவர்களருகிலேயே பயமின்றி இவை இரை தேடிக் கொண்டு இருக்கும்.

    Saurus cranes-1 “வெவ்வேறு திசையில் நோக்கினாலும் என்றுமே நாங்கள் இருவர்தான் ஜோடி”

    இறைவன் படைத்த இயற்கையில் தான் எத்தனை  வினோதங்கள்!  எத்தனை காட்சிகள் !!

    (வண்ணப் படங்கள் இ​ணைய தளத்தில் இருந்து)

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    நாடகம் என்பது நிச்சயமாக கேளிக்கைக்காகவோ பொழுதுபோக்குக்காகவோ நடத்தப்படுவதில்லை என்பதை ஆதிகாலம் முதலே நம் முன்னோர்கள் தெரியப்படுத்தி வந்தார்கள். ஏழாம் நூற்றாண்டு மகேந்திரவர்மன் தன் நாடகங்கள் மூலம் சமூகத்தின், மதங்களின் சீர்கேட்டை விமர்சித்து எழுதி அந்த நாடகங்கள் இன்றளவும் புகழ்பெற்று விளங்குகின்றன. முத்தமிழின் முக்கியமான பகுதி கூட நாடகத்தமிழ்தான். தேசங்களில் அநீதியான ஆட்சியாளர்களை விமர்சிக்கவும் அவர்களின் நீசத்தனத்தை மக்கள் மத்தியில் பரப்பி அவர்களின் போக்கை நீக்கவும் வீதி நாடகங்கள் பெரிதும் பயன்பட்டுவந்தன என்பதை எத்தனையோ இலக்கிய சரித்திர ஆதாரங்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

    காலப்போக்கில் நாடகம் நடத்தும் முறையிலும் அதை அரங்கேற்றும் முறையிலும் எத்தனையோ புதுமைகள் ஏற்பட்டாலும் அதன் அடிப்படைக் கருத்தானது அதாவது பாமரமக்களுக்கு எடுத்துச் செல்லும் நல்ல கருத்துகள் எந்நாளும் மாறப்போவதில்லைதான். மிக நாகரீகமாகவும் மிக நவீன வசதியிலும் வாழும் இந்தக் கால கட்டத்திலும், எத்தனைதான் தொலைக்காட்சியும், திரைப்படமும் நம் வாழும் முனறையிலேயே வந்து நம் பொழுதைப் போக்கினாலும் நாடகத்துக்கென ஒரு பங்கு நம் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறது.

    நாடகநடிகர்களின் வாழ்க்கை முழுவதையும் நாம் சாதாரணமாக அலசிப்பார்த்தால் மேடைதான் அவர்கள் உலகம். மேடையில் அவர்கள் அன்றைக்குத் தோன்றும் கதாபாத்திரங்கள்தான் அவர்கள் வாழ்க்கை, மேடையில் நேரடியாகக் கிடைக்கும் ரசிகர்களின் பெருத்த கரகோஷம்தான் அவர்கள் மூச்சுக்காற்றுக்குத் தேவைப்படும் பிராணவாயு. இவர்களுக்கு குடும்பம், வயிற்றுக்கு சாப்பாடு இவையெல்லாம் கூட இரண்டாம்பட்சம்தான். மேடை வாழ்க்கையை அர்த்தமுள்ள ஒன்றாக உணர்கிறார்கள், இவர்கள்.

    y. g. Mahendranராஜபார்ட் ரங்கதுரை என்றொரு திரைப்படம் பார்த்திருப்பீர்கள். ஒரு கூத்தாடியின் கதை அது. சிவாஜி கூத்தாடியாக நடித்து கலக்கியிருப்பார். அதைப் போலவே நாடகமேடையில் இன்றைய வாரம் ஒரு நாடகத்தினைக் காண நேர்ந்தது. நாடகத்தையே லட்சியமாகக் கொண்டு தன் வாழ்க்கையை வழிநடத்திச் செல்லும் நாடக நடிகனின் கதை. நாடகத்தின் பெயரே ‘நாடகம்’ என்று வைத்திருக்கிறார் திரு ஒய்.ஜி.மகேந்திரா. நாடகம் முன்னேறவும் இடர் வந்தபோதும் கைவிடாமல் நாடகத்தை நடத்திக் காட்டும் நாடகக் கலைஞராக வந்து அந்த நாடக நடிகனின் பாத்திரத்திலேயே வாழ்ந்து காட்டியிருக்கிறார் திரு ஒய்.ஜி. மகேந்திரா. அவருக்கு நாடகத் திலகம் என்று பட்டம் உண்டு. அந்தப் பட்டத்தின் பெயருக்கு ஏற்றவாறு நாடகத்தைப் போற்றிப் பாதுகாக்கவேண்டிய அவசியத்தை சமூகத்துக்கு உணர்த்துகிறார்.

    நாடகங்கள் பாதுகாக்கப்படவேண்டும். எதிர்காலத்திலும் வளம்பெற வேண்டிய அளவுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை நம் சமுதாயத்துக்கு இருக்கிறது. நாளைய தலைமுறை அப்படியே ரோபோ’வுக்கு மாறினாலும் கூட அந்தப் புதுமைக்கேற்ப நாடகங்கள் சமூகத்துக்கு நல்ல கருத்துகள் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். தமிழுக்கு அழிவில்லை என்பது உண்மையானால் அந்தத் தமிழின் ஒரு அங்கமான நாடகத்துக்கும் அழிவில்லைதானே.

    ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாடகத்துறையில் இருந்து, ஒன்றாய்க் கலந்து, அதனோடே வாழ்ந்துகொண்டிருக்கும் நாடகத் திலகம் திரு ஒய்.ஜி.மகேந்திராவை வல்லமை இந்த வார வல்லமையாளராகக் கௌரவிப்பதில் மகிழ்ச்சியோடு பெருமையும் கொள்கிறது. நாடகங்களை நாம் எல்லோரும் போற்றவேண்டும்,என்ற கோரிக்கையோடு, எங்கள் வாழ்த்துகளையும் திரு ஒய்.ஜி.எம் க்கு வழங்கி மகிழ்கிறோம்.

    Share
  • ஐயப்பன் திருப்புகழ் – 1

    சு.ரவி

     

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

    வணக்கம், வாழியநலம்,

    மயிலையில் பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய என் அப்பா, தனது மாலைநேரங்களில் ராஜாஜி சீவல்ஸ்டோர்ஸில் வாங்கிய ரெண்டணா சந்தனத்தைப் பூசிக்கொண்டு வீட்டின் மொட்டைமாடியில் ஈஸிசேரில் படுத்திருக்க, நான் கால்பிடித்துவிடுவேன். அந்த சுகத்தில் 4கட்டை ஸ்ருதியில் அவர் பாடும் திருப்புகழ்ப் பாடல்கள் தான் எனக்கு அருணகிரியாரை அறிமுகப்படுத்தின.
    ” கைத்தல் நிறைகனி, உம்பர் தரு தேனு, சந்ததம் பந்தத் தொடராலே, திருமகளுலாவும், அதலசேடனாராட,
    ஏதுபுத்தி ஐயா…” என தினம் ஒரு நாலைந்தாவது வரும்..

    பின்னர் என் பத்தாம் வகுபு நாட்களில், TMS பாடி,நடித்த ‘அருணகிரிநாதர்’ படத்தின் “முத்தைத்தரு, பக்கரை விசித்ரமணி, தண்டையணி வெண்டையும்” ஆகிய பாடல்கள்
    ஒருமுறை கேட்டமாத்திரத்தில் என் உள்ளம் புகுநது, அப்பாவைத்திருந்த திருப்புகழ்ப் புத்தகத்தை அட்டையொடு அட்டை படிக்கவைத்தன. எததனை சந்தங்கள்.. எத்தனை தாளங்கள்.. என்ன எளிமை.. அன்றே நான் அருணகிரியின் சந்தத் தமிழுக்கு அடிமையானேன்..

    பின்னர் அருணகிரியாரின் தடங்களை ஒட்டி காமாக்ஷி தாஸர் என்பவர் அன்னை காமாக்ஷி மீது எழுதிய திருப்புகழ், திருவகுப்புகள் போன்ற நூல்களையும் படித்து பிரமித்தேன் ( இந்த நூல்கள இப்போது கிடைக்கிறதா என்று தெரியவில்லை)

    பித்துக்குளி முருகதாஸ் அவர்தம் குளுகுளு குரலிலும், வள்ளிமலையில் வள்ளிமலைஸ்வாமிகள் வகுத்துக் கொடுத்தமுறைப்படி திருப்புகழ்ப் பாடல்கள் இசைக்கப்படுவதையும், அதனையொட்டி திரு ராகவன் அவர்களின் இசையிலும் கேட்கும் பேறு பெற்றேன்.

    எனை இவ்வாறு முற்றிலும் ஆட்கொண்ட சத்குருநாதர் அருணகிரிநாதரின் சந்தத் தமிழே குருவாக, என் சபரிமலை யாத்திரைகளின் போது ஐயப்பன் மீது இயற்றிய ஐயப்பன் திருப்புகழ்ப் பாடல்களை இத்தளத்தில் பகிர்கிறேன்.
    இந்தத் திருப்புகழ்ப் பாடல்களை ஏற்ற ராகங்களில் இசையமைத்துப் பாடி மெருகேற்றிய என் சக ஐயப்ப நண்பர் திரு.V.K. நாராயணன் அவர்களை நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

    இந்தத் திருப்புகழ், நாமகிரிப்பேட்டையார் சிந்துபைரவியில் வாசித்த சந்தத் திருப்புகழைக் கேட்டபாதிப்பில் சிந்துபைரவியில் உருவானது. பின்னர் நண்பர் நாராயணன் இதனை ராகமாலிகையாக முறையே ” செஞ்சுருட்டி,மோஹனம்,புன்னாகவராளி,சங்கராபரணம், மாண்ட், முகாரி, சிந்துபைரவி, மத்யமாவதி ” ஆகிய ராகங்களில் செதுக்கிக் கொடுத்தார்.

    (பாடிப்) பார்க்க, ரசிக்க…..

    இணைப்பாக நெய்ப்பிரியன் -அக்ரிலிக் ஓவியம்- பார்க்க, ரசிக்க…

    ஐயப்பன்

    ஐயப்பன் திருப்புகழ்

    தனன தானன தந்தன தானன
    தனன தானன தந்தன தானன
    தனன தானன தந்தன தானன தனதான

    கனக மேனியி னின்னொளி மேவிட
    இலகு மோர்நகை சிந்தியு லாவிட
    அளக பாரம சைந்திட வேல்விழி மயல்வீச
    கவினு லாவிய பெண்மையெ லாமொரு
    கவிதை யாகிம யங்கிய தோவென
    வடிவு மேவிவி ளங்கிய மோஹினி மனமாற

    பனிநி லாவொடு கங்கைகு லாவிய
    சடையு ளானர வங்களு லாவரும்
    அழகு மேனிய னன்றொரு தாருக வனமீது
    பதித ரானவர் தம்குல மாதரின்
    மனமெ லாமழி யும்படி தேசுறு
    வடிவி னான் சிவ சங்கர தேவனும் உறவாட

    வனமு லாவிய பம்பையி லேசிறு
    மதலை யாகிவ ளர்ந்தவ னேகொடு
    மஹிஷி மாளச ரந்தனை ஏவிய சபரீசா!
    வரையி லாதுவ ளர்ந்திடு தீவினை
    அதனி லேஉழ லும்படி மாயையில்\
    அறிவி லாதும யங்கிட வேஎனை விடுவாயோ!

    எனது நானெனும் எண்ணமெ லாமற
    இடைய றாதும னந்தனி லேபத
    சரண மேநிலை நின்றிட நீதிரு அருள்தாராய்!
    சபரி மாமலை தங்கிய மோஹன
    வரிக ளோடிய வன்புலி வாஹன
    ஹரிஹரா பதி னெண்படி மேவிய பெருமாளே!

    (பத சரண மேநிலை நின்றிட நீதிரு அருள்தாராய்!)

    Share
  • ஆணிவேரின் நம்பிக்கை

    கோதை நாராயணன்

    பயத்தில்  வேர்த்து கொட்டியது யாழினிக்கு …..

    நேற்று அவ்ளோ தூரம் சொன்ன பிறகும் ஏன் இப்படி பண்ணினான் குமார்? கேள்விகள் மனதை குடைந்தன… அவசரமாக தன் செல்போனை எடுத்து கெளதமை அழைத்தாள்.

    “ஹலோ, கெளதம்… நான் குமாரோட ஹாஸ்டலில் இருந்து பேசுறேன்… குமார் ஹாஸ்டலை காலி பண்ணிட்டு ஊருக்கே போய்ட்டானாம்… நீ கொஞ்சம் சீக்கிரம் நாம எப்போதும் மீட் பண்ற இடத்துக்கு வா… அர்ஜெண்டா பேசணும்…!”

    “இன்னும் பத்து நிமிஷத்தில் அங்க இருப்பேன் யாழினி… டோன்ட் ஓரி “

    ஹாஸ்டல் நிர்வாகியிடம் திரும்பி ,”ஓ.கே சார்… குமார் எதுவும் போன் பண்ணினா…. நான் வந்தேன்னு சொல்லுங்க. நன்றி!”

    “ஏம்மா… எதுவும் தப்பு தண்டாவாம்மா?”

    “அப்டியெல்லாம் இல்ல சார்…” என சிநேகமாய் புன்னகைத்து விட்டு தன் ஸ்கூட்டியை பூங்காவை நோக்கி பறக்க விட்டாள்.

    இவளுக்கு முன்னே அங்கு காத்திருந்த கெளதம், “என்னாச்சு யாழினி குமாருக்கு? நாம தான் நேத்து அத்தனை தூரம் அவனுக்கு நம்பிக்கை கொடுத்தோமே! அப்புறம் என்ன?”

    “தெரியலடா… நேத்து நம்மகிட்ட காட்டின அவங்க அம்மாவோட லெட்டர் குப்பையில் கிடந்தது”

    எழுப்பதைந்து வயதானவளின் இரத்தின எழுத்துக்கள்… குண்டு குண்டாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய்… ஒரு சில நாட்களுக்கே  சமைக்க அரிசி இருப்பதாகவும், எப்படியோ சமாளிப்பதாகவும், வேலை கிடைத்ததா என்பது பற்றியும் கேட்டு கொண்டிருந்த ஒரு வளமான வறுமை கடிதம் கசங்கிய நிலையில் யாழினி கையில்.

    “அத்தோடு அவன் மெடிக்கலில் வாங்கிய தூக்க மாத்திரை பில்லும் இருந்ததுடா.”

    “ப்ச்… இவனுக்கு ஏன் இப்படி புத்தி போகுது. எனக்கு கோவம் தான் வருது. இப்ப என்ன பண்ணலாம்?”

    “நீ உடனே கிளம்பி அவன் ஊருக்கு போய் அவனை காப்பாத்து எப்டியாவது. நா சுதா வீட்டுக்கு போறேன்.”

    “அவளுக்கு தெரியுமா விசயம்?”

    “தெரியல யாருக்கோ கிளம்பும் போது கண் கலங்கிய படியே போன் பேசினானாம்”

    “இவனுக்கெல்லாம் காதல்!”

    “நீ டென்ஷன் ஆகாத கெளதம். டோன்ட் வேஸ்ட் டைம். கிளம்பு” என அவனை அனுப்பி விட்டு சுதாவைத் தேடி போனாள்.

    குமார், யாழினி, கெளதம் மூவரும் ஒரே கல்லூரியில் படித்து நல்ல ரேங்க்கில்  பாஸ் செய்தவர்கள். வேலைத் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் கிடைத்த பாடு இல்லை. இதில் குமார் தான் மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவன். அதுவும் அவன் தாய் தந்தைக்கு பிள்ளை பாக்கியமே இல்லாமல் இருந்து பின் வெகு வெகு வருடங்களுக்கு பின் பிறந்தவன். தாயின் கொஞ்ச நஞ்ச நகைகளையும் விற்று படித்தாயிற்று. முடித்தவுடன் வேலை என கனவு கண்டவனுக்கு தகுந்த வேலை கிடைக்காமல் அல்லாடும் நிலை. தான் காதலிக்கும் சுதாவின் வீட்டிலோ வேலை இல்லாத குமாரின் நிலை கேள்விக்குறியாக பார்க்கப்பட்டது .

    முதல் நாள் தன் தாயிடம் இருந்து வந்த கடிதத்தையும் காண்பித்து, சுதாவின் அப்பா சற்று கேவலமாக தன்னை பேசியதை பற்றியும் கூறி கண்ணீர் விட்டான். இனி வேலை கிடைக்காத பட்சத்தில் தான் உயிரை மாய்த்து கொள்ள போவதாக நம்பிக்கையற்று பேசினான்.

    பஸ்சை விட்டு இறங்கிய கெளதமுக்கு சுத்தமான காற்றும், பச்சை மண் வாசனையும் காந்தமாக இருந்தது. இந்த சூழ்நிலையில் வளர்ந்தவனா குமார். கொடுத்து வைத்தவன் என மனதில் நினைத்தபடியே நடந்தான். சிறிய ஊர் என்பதால் குமாரின் வீட்டை எளிதாக கண்டு பிடித்தான். வீடு உள் பக்கமாக பூட்டி இருந்தது.

    “குமார்!… குமார்…!”

    வேகமாக கதவு திறக்கப்பட்டது. திறந்த குமாருக்கு எதிர்பாராமல் அங்கு நின்ற கெளதமை பார்க்க அதிர்ச்சியாக இருந்தது.

    “வ…வ… வாடா… நீ… எங்க?” வேர்த்து கொட்டி இருந்தது. இடக்கையை அவசரமாக மறைத்தான். மாத்திரைகள்…!!

    விடு விடுவென்று  உள் நுழைந்த கெளதம், குமாரின் கன்னத்தில் பளார் என்று அறைந்தான்.

    கெளதமின் அடியை எதிர்ப்பாராத குமார் நிலைகுலைந்து போனான்.

    “கொழுப்படா உனக்கு? நானும் யாழினியும் எவ்ளோ தூரம் படிச்சு படிச்சு சொன்னோம், அதுக்கு அப்புறமும் இப்டியொரு மடத்தனமான முடிவுக்கு வந்து இருக்கேன்னா… உன்னையெல்லாம் எப்படி நண்பன்னு சொல்றது?”

    “இல்லடா… நேத்து சுதாவின் அப்பா ரொம்ப கேவலமா பேசிட்டார்டா!”

    “பேசட்டும். அதற்கென்ன… மகளுக்கு தகுந்த பாதுகாப்பு வேணும்னு அவர் நினைக்குறதுல என்ன தப்பு?”

    “ஒவ்வொரு வார்த்தையும்…”

    “பதிலுக்கு நல்ல நம்பிக்கையான வார்த்தைகளை கொடுத்து இருக்க வேண்டியது தானே அவருக்கு? அத விட்டுட்டு உயிரை போக்கி கொள்ள துணிவது கெட்டிகாரத்தனமா?”

    “சுதாவின் அழுகை என்னை தூங்கவிடலைடா…” சொல்லும் போதே குமாரின் கண்கள் குளமாகியது.

    “பெரிய்ய்ய்ய இவன்… காதலிக்கும் பெண்ணுக்கு நம்பிக்கை கொடுக்க முடியாத உனக்குக்கெல்லாம் எதுக்குடா காதல்? யாழினியின் மாமா சிபாரிசு செய்தாரே அந்த வேலையாவது இப்போதைக்கு ஒத்துக்கோ…”

    “அது என் சொந்த முயற்சி இல்லையே!”

    “ஓ! சுதாவின் அப்பா பேசினா அவமானமா இருக்கு, சுதா அழுதா தாங்க முடியல, சிபாரிசுல வேலை கிடைச்சா உன் தன்மானம் இடிக்குது… சோ… இப்டி சத்தம் இல்லாம உயிரை விட்டுட்டா எல்லா பிரச்சனையும் தீர்ந்திடும் இல்லையா?”

    குமார் பேச எத்தனிக்கும் தருவாயில் வாசல் கதவு கிறீச் என சத்தமிட இருவரும் திரும்பினர்.

    நெற்றியில் வழிந்த வேர்வையை சேலை முந்தானையால் துடைத்தபடியே “ஸ்ஸ்… என்ன வெயிலு!” நன்கு கருத்த மேனி, ரவிக்கை அணியாத கண்டாங்கி சேலை, காதுகளில் பாம்படம், கையில் ஒரு ஓலை பெட்டியுடன் விரல்களை குடையாக புருவத்தின் மேல் வைத்து, “யாரு குமாரு… உன் சேக்காழியா…?”

    “ஆமாம்மா!” எனக் கூறிய குமார் தாயாரின் கையிலிருந்த பெட்டியை பார்த்தான். அதில் அரிசி, பருப்பு, காய்கறி என ஒரு பத்து நாளைக்கு தேவையான சாமான்கள் இருந்தன.

    “என்னம்மா இது? யார்கிட்டயும் போய் கடன் வாங்கினயா?”

    “இல்ல ராசா. நேத்து தினக்கூலிக்கு ஒரு ஆள் குறையுதுன்னு  மேலத்  தெரு அண்ணாச்சி சொன்னாக, அதான் போனேன். அதுல தான் இது. இந்த கட்டைல உசிரு இருக்கிற வரைக்கும் எம் மவனுக்கு நா உழச்சு சோறு போடாம யாரு போடுவா… நீ கவலை படாதேய்யா. வேல கிடைக்குறப்போ கிடைக்கட்டும். உக்காந்து பேசுங்கய்யா இரண்டு பேரும்” என கூறிய படியே நிலைப்படியை உராய்ந்த படியே அடுப்படிக்கு சென்றாள் மோர் கொண்டு வர.

    சொடேர் என்று இருந்தது குமாருக்கும், கெளதமுக்கும். ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்க முடியாமல் வார்த்தைகள் தொலைந்து நின்றனர், பெரியவளின் நம்பிக்கைக்கு முன் தோற்று.

    மறு நாள் வீட்டிலிருந்து சந்தோசமாக கிளம்பினான் வருங்கால தொழிலதிபதி குமார். முதலீடாக அவன் கோல்டு மெடல்கள் அவன் பையில்.

    முன்னேற்றத்தை தேடும் சிந்தனை  மட்டுமே அவன் முகத்தில்…

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 15 – ப்ரான்ஸ்

    சுபாஷிணி ட்ரெம்மல்

    மட்ரிட் நகரிலிருந்து புறப்பட்டு வெகு தூரமான ஒரு நாட்டிற்கு நாம் இப்போது செல்லப்போவதில்லை. ஸ்பெயினின் எல்லை நாடான ப்ரான்ஸுக்குத் தான் உங்களை அழைத்துச் செல்லப் போகின்றேன். 🙂

    ப்ரான்ஸில் இருக்கும் அருங்காட்சியகங்கள் அனைத்தையும் பார்ப்பதென்றால் அதற்கு நமக்கு ஒரு வருடம் கூட ஆகலாம். அவ்வளவு அருங்காட்சியகங்கள் நிறைந்த ஒரு நாடு ப்ரான்ஸ். ப்ரான்ஸின் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருக்கும் நகரங்களான ஆவியோன், லியோன், நீட்ஸா, தூலூஸ், காண்ட், க்ராஸ், தலநகரமான பாரிஸ் என இந்த நகரங்களெல்லாம் வரலாற்று பழமை வாய்ந்த  நகரங்கள். ஐரோப்பாவின் முழுமைக்கும் ப்ரெஞ்சு  தாக்கம் என்பது மிக விரிவானது. ஐரோப்பாவுடன் நின்று விடாமல் ஆப்பிரிக்க, அமெரிக்க கண்டம் வரை தனது ஆளுமையை விரிவாக்கியது ப்ரான்ஸ்.

    paris3

    ப்ரான்ஸ் என்றதுமே பலருக்கும் அறிமுகமாக மனதில் தோன்றுவது பாரிஸ் நகரம் தான். பாரிஸின் பெயரைக் கேட்டதுமே ப்ரமாண்ட கட்டிடங்களும், புதுமை உலகமும், கேளிக்கைகள் நிரம்பிய சொர்க்கபுரி என்பதுமாக நமது மனம் கற்பனையில் சிறகடிக்கும். இந்த தோற்றத்தின் இடையே பாரிஸின் உண்மையான வரலாற்று முகம் மறைந்தும் கூட போகலாம். ஆனால் ஒரு வகையில் பாரிஸை விட்டு தூரம் சென்று ப்ரான்ஸின் ஏனைய பகுதிகளுக்குச் சென்றோமேயானால் ப்ரான்ஸின் விரிவான அறிமுகத்தை நாம் நன்கு பெற முடியும். பாரிஸின் தற்போதைய சூழலில் அதன் பண்டைய வரலாற்று சிறப்புக்களையும் விட இன்றைய பொருளாதார சூழல், அதனால் மக்கள் நிறைந்து வழியும் இந்த நகரத்தின் சீர்குலையும் நிலை தான் பெரும்பாலும் கண்களுக்குத் தென்படுவதாக இருக்கின்றது. பாரிஸை பார்த்து விட்டு இது தான் ப்ரான்ஸ் என நம்பிக் கொண்டிருந்தோமேயானால் உண்மையான ப்ரான்ஸின் முழு வடிவத்தை நாம் அறிந்து கொள்ளவே முடியாது என்பதை ப்ரான்ஸின் ஏனைய இடங்களுக்குச் சென்று பார்த்து வரும் வாய்ப்பு அமைந்தமையினால் நான் நேரடியாக அதனை உணரும் வாய்ப்பு பெற்று அறிந்து கொண்டேன். இதனால் ஓரளவிற்கு ப்ரான்ஸ் அதன் பண்டைய சிறப்புக்களும், பொருளாதார வளமும், மக்களின் வாழ்வியலும் என்ற ரீதியில் எனக்கு ஓரளவு அறிமுகமாக அமைந்தது எனச் சொல்லலாம்.

    ஐரோப்பாவிற்கு நான் வந்த ஆரம்ப காலகட்டத்தில், அதாவது 1999ம் ஆண்டு வாக்கில் ஜெர்மனியில் தமிழ் இலக்கிய சந்திப்புக்களின் போது எனக்கு அறிமுகமான, பாரிஸில் இருந்த சில நண்பர்களின் அறிமுகம் ஏற்பட்டது. அந்த வகையில் திரு.அரவிந்தன்,  மறைந்த திரு.புஷ்பராஜா, மறைந்த திரு.கலைச்செல்வன் ஆகியோரையும் ஏனைய சில நண்பர்களையும் சந்திக்க என் நான் சில முறை பாரிஸ் சென்று வந்துள்ளேன். இலக்கிய சந்திப்புக்களில் கலந்து கொள்ளவும் ஒரு முறை தமிழ் பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றவும் சென்று வந்திருக்கின்றேன். பாரிஸின் சரவணபவனில் இந்திய உணவை சுவைத்ததும் மறு நாள் வரை எனது குளிர் ஜாக்கெட் எல்லாம் இந்திய உணவின் வாசனை நிறைந்து இருந்ததும் கூட இன்னமும் மனதில் பசுமையாக இருக்கின்றது.

    paris5பாரிஸ் – லா செப்பல் வீதியில் (2010)

    மற்றொரு முறை, 2002ம் ஆண்டு வாக்கில், எனது கார் விபத்துக்குள்ளாகிவிட ஜெர்மனியில் அதனை ஓப்பல் விற்பனையாளரிடம் கொடுத்து சரி செய்வதை விட பாரிஸில் பாதி குறைந்த விலையில் சீராக்கலாம் என நண்பர் புஷ்பராஜா சொல்ல 500கிமீ தூரம் பாரிஸுக்கு காரை ஓட்டிச் சென்று காரை சரி செய்து விட்டு தமிழ் நண்பர்களையும் சந்தித்து விட்டு வந்தேன். அப்படி செல்லும் போது அந்த நண்பர்களின் துணையுடன் எனக்கு பாரிஸ் கொஞ்சம் அறிமுகமானது. அப்போது பாரிஸில் தமிழர்கள் நிறைந்திருக்கும் வணிகப்பகுதியான லா செப்பல் பகுதியில் தமிழ்க்கடைகளையெல்லாம் பார்த்து வியந்து போயிருக்கின்றேன். தமிழ்க்கடைகளில் கிடைக்கும் கொத்து ரொட்டி, தோசை என சாப்பிட்டு மகிழ்ந்திருக்கின்றேன். அதன் பின்னர் பல முறை எனது தொழில் சார்ந்த பயணங்களாக பாரிஸுக்கும், க்ரனோபலுக்கும் செல்வது ஏற்பட்டது. அத்தகைய பயணங்களில் நான் பாரிஸில் சில அருங்காட்சியகங்களைக் காணும் வாய்ப்பு பெற்றேன்.

    paris4

    பாரிஸ் க்ரனோபல் என்ற இரண்டு நகரங்களைப் பார்த்த எனக்கு ப்ரான்ஸை ஓரளவு அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட நானும் என் கணவருமாக 2009ம் ஆண்டில் 18 நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு வாகனத்திலே பயணம் செய்தோம். இந்த பயணத்தின் போது ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட்டிலிருந்து புறப்பட்டு ஃப்ரைபுர்க் வந்து அங்கிருந்து பெசன்சோன் வந்து அங்கு இரண்டு நாட்கள் தங்கிச் சுற்றிப் பார்த்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு லியோன் வந்து அங்கு சில நாட்கள் இருந்து பின்னர் மார்செல் வந்து அங்கே செய்ண்ட் ராஃபெல்லில் தங்கியிருந்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நைஸ் நகரம் வந்து  பின்னர் மோனாக்கோ சென்று பின்னர் மீண்டும் திரும்பி கான்ஸ் வந்து அங்கு சில நாட்கள் இருந்து பின்னர் ஆவியோனில் சில நாட்கள் என இருந்து திரும்பினோம். ஏறக்குறைய 2300கிமீ தூரம் வாகனப் பயணம் நானும் என கணவருமாக வாகனத்தை ஓட்டிக் கொண்டு இந்தப் பயணத்தை மேற்கொண்டோம். ப்ரான்ஸின் ஒரு சில நகரங்களை மட்டுமே இந்த பயணத்தின் போது பார்க்க முடிந்தது. ஒரு சில முக்கிய இடங்களுக்கு மட்டுமே சென்று அருங்காட்சியகங்கள் சென்று புதிய விஷயங்களை அறிந்து வர முடிந்தது.  மீண்டும் ஒரு முறை இதே போல ஆனால் இதுவரை செல்லாத ஏனைய நகரங்களையும் சென்று பார்த்து வர வேண்டும் என்ற என்ணமும் மனதில் ஓடிக் கொண்டுதானிருக்கின்றது. இந்த பயணத்தின் போது நான் அறிந்து கொண்ட புதிய விஷயங்கள் ஏராளம் ஏராளம். அவையெல்லாம் வாய்ப்பு கிட்டும் போது தகுந்த பதிவுகளின் வழி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என்ணம் மனதில் இருக்கவே செய்கின்றது. ப்ரான்ஸின் ஒவ்வொரு நகரமும் தனிச்சிறப்புடனும் பிரமாண்டத்துடனும் தனித்துவத்துடன் விளங்குவது உண்மை.

     paris2

    ஸ்பெயினில் உள்ள அருங்காட்சியகங்களின் என்ணிக்கையை விட ப்ரான்ஸில் மிக அதிகம் என்று நிச்சயம் கூறுவேன். பாரிஸ் நகரில் மட்டுமே உள்ள அருங்காட்சியகங்களின் பட்டியல் ஒன்று இங்கே 150 அருங்காட்சியகங்கள் இருப்பதாக பட்டிபலிட்டிருக்கின்றது (http://en.wikipedia.org/wiki/List_of_museums_in_Paris ).  இவை ஒவ்வொன்றையும் சென்று காண என் வாழ்க்கை நிலை இடம் அளிக்காது என்றாலும் சில பாரிஸிலுள்ள குறிப்பிடத்தக்க அருங்காட்சியகங்கள் சிலவற்றிற்குச் சென்று வந்திருக்கின்றேன். அவற்றில் சிலவற்றை இத்தொடரில் அறிமுகப்படுத்துவதும் வாசகர்களாகிய உங்களுக்கு சுவாரஸியமாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் பாரிஸில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு அடுத்து உங்களை அழைத்துச் செல்லலாம் என நினைக்கின்றேன்.

    எந்த அருங்காட்சியகம் செல்லப்போகின்றோம் என்பது அடுத்த வாரம் வரை சஸ்பென்ஸ் 🙂

    Share
  • குறளின் கதிர்களாய்… (14)

    செண்பக ஜெகதீசன்

     

    பயன்மர முள்ளுர்ப் பழுத்தற்றாற் செல்வம்

    நயனுடை யான்கட் படின்.

    -திருக்குறள்- 216 (ஒப்புரவறிதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    பயனாகும் எல்லார்க்கும்,

    நல்ல மரம்

    பழத்துடன் நின்றிருந்தால்

    ஊர்நடுவே..

     

    பிறர்க்குதவும்

    ஈர நெஞ்சுடையோரிடம்

    இருக்கும் செல்வத்திற்கும்

    இதுதான் கதை-

    இதுவும் உதவும் எல்லோருக்கும்…!

     

    குறும்பாவில்…

     

    நடுவூர் நல்மரத்துப் பழங்கள்போல்

    பலருக்குதவும்,

    நல்லமனமுள்ளவன் கைச் செல்வமும்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    நல்ல மரமது ஊர்நடுவே

    நிறைய பழுத்து நின்றிருந்தால்,

    எல்லா மக்களும் பயன்பெறுவர்

    எடுத்து மகிழ்வுடன் சுவைத்திடுவர்,

    செல்வ மிதனின் கதையிதுதான்

    சேர்ந்தவர்க் குதவும் குணமுடைய

    நல்லவர் கையில் நிறைந்திருந்தால்

    நாடும் எவர்க்கும் குறைவிலையே…!

     

    லிமரைக்கூ…

     

    நல்லபழத்துடன் நடுவூர்நிற்கும் மரம்,

    எல்லார்க்கும் உதவிடும்

    செல்வம்நிறை நல்லவரின் கரம்…!

     

    கிராமியப் பாணியில்…

     

    நல்லமரம் நல்லமரம்

    நடுவூருல நல்லமரம்,

    பாக்க ஒசந்தமரம்

    பலருக்கும் ஒதவொம்மரம்,

    பலரொம் அறிஞ்சமரம்

    பழமெல்லாம் நெறஞ்சமரம்,

    எட்டிப் பறிச்சிடலாம்

    எல்லாரும் தின்னுடலாம்..

     

    இதப்போல

    நல்ல மனுசங்கிட்ட

    நெறஞ்கிருக்கொஞ் செலுவமெல்லாம்

    எல்லாருக்கொம் ஒதவிடுமே

    நல்லதெல்லாம் நடந்துருமே

    நாமொம்

    நல்லவார்த்த சொல்லுவமே…!

     

        

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 17ம் பகுதி

    தஞ்​சை​ வெ​. கோபாலன்

    திருக்கைலாயம்.

    கான்சாயும் வெள்ளி மலைக்கரசே நின் கழல் நம்பினேன்
    ஊன் சாயும் சென்மம் ஒழித்திடுவாய் கரவூரனுக்கா
    மான் சாயச் செங்கை மழுவலம் சாய வளைந்த கொன்றைத்
    தேன் சாய நல்ல திருமேனி சாய்ந்த சிவக் கொழுந்தே. 1.

    மணம் பரப்பும் (கான் = மணம்) பனிமலையாம் கயிலையங்கிரிக்கு அதிபதியே! (கரவூரன் = கரவூர் என வழங்கும் விரிஞ்சீபுரத்து அன்பன். அங்கு சிவனுக்குப் பூசை புரியும் அந்தணச் சிறுவனுக்கு அபிஷேகம் செய்ய எட்டவில்லை என்பதால் சிவன் தலை குனிந்து கொடுத்ததாகத் தல புராணம் கூறுகிறது) கரவூர் அன்பனான சிவசருமனுக்காக உன் திருக்கரங்கரங்களில் தாங்கியுள்ள மான் சாய்ந்திடவும், மற்றோர் கையிலுள்ள மழு வலப்புறமாகச் சாய்ந்திடவும், உன் கழுத்தில் அணிந்திருக்கும் கொன்றைமாலையிலிருந்து தேன் ஒழுக, இவை அனைத்தோடும் உன் திருமேனியும் சாய அமர்ந்திருக்கும் சிவக் கொழுந்தே உன் பாதங்களைப் பணிந்தேன், மாமிசப் பிண்டமான இப்பிறவியை ஒழித்து எனக்கு மோட்சமளிப்பாய்.

    குறிப்பு:- விரிஞ்சிபுரம் பற்றியும் அங்கு சிவனுக்கு பூசை செய்த அந்தணச் சிறுவன் சிவசருமன் பற்றியும் இங்கு தெரிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும். விரிஞ்சிபுரத்து ஈசன் மார்க்கபந்தீச்வரர், அம்பாள் மரகதாம்பிகை. 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தத் திருத்தலம் வேலூருக்கு அருகில் இருக்கிறது. இவ்வூரின் தலபுராணத்தின் படி படைப்புக் கடவுளான பிரம்மா இங்கு சிவபூஜை செய்யும் சிவாச்சாரியார் குடும்பத்தில் சிவசர்மனாகப் பிறந்தார். சிவசர்மன் உபநயனம் செய்யப்படாத குழந்தையாக இருந்த போதே அவனுடைய தந்தையார் இறந்து போனார். விரிஞ்சிபுர ஆலயத்திலுள்ள சிவனுக்கு பூஜை செய்யும் கடமை இந்த சிறுவனுக்கு வந்தது. ஆனால் உபநயனம் (பூணூல் அணிதல்) நடந்தால்தான் பூஜை செய்ய முடியும். இறந்து போன சிவாச்சாரியாரின் உறவினர்களுக்கு அவர் விட்டுச் சென்றிருக்கிற நிலம் மற்றும் பூஜை செய்யும் உரிமை அனைத்தையும் பிடுங்கிக் கொள்ள வேண்டுமென்கிற எண்ணம். அதனால் சிறுவன் சிவசர்மனிடம் உன் முறை வரும்போது நீ போய் பூஜை செய்யவில்லையானால் அந்த உரிமை எங்களுக்கு வந்துவிடும். நிலத்தையும் நாங்கள் பிடுங்கிக் கொள்வோம் என்றனர். சிவசர்மாவின் தாய் இறைவன் மார்க்கபந்தீச்வரரிடம் வேண்டிக் கொண்டார் வழிகாட்டு என்று. கார்த்திகை மாதத்தில் கடைசி சனிக்கிழமை இறைவன் அந்த அன்னையின் கனவில் தோன்றி சிறுவனை பூஜை செய்ய அனுப்பும்படி சொல்லி ஆசி வழங்கினார். மறு நாள் சிவசர்மன் பிரம்ம தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து கொண்டிருந்த போது சிவபெருமான் ஒரு கிழவர் வேடத்தில் வந்து அவனுக்கு பூணூல் அணிவித்து உபநயனம் செய்வித்து பிரம்மோபதேசம் எனும் காயத்ரி மந்திர உபதேசம் செய்து வைத்தார். அதோடு சிவனுக்கு பூஜை செய்யும் உரிமையுள்ள சிவதீட்சையையும் வழங்கினார். பின்னர் கிழவர் மறைந்து சென்றார். சிறுவன் பிரம்ம தீர்த்தத்திலிருந்து புனித நீரை குடத்தில் எடுத்துக் கொண்டு ஒரு யானை மீதேறி கோயிலுக்கு வர அங்கு கூடியிருந்தோர் அதிசயித்துப் போக, கோயில் கதவு தானாகத் திறந்து கொண்டது. ஏதோ காலம் காலமாக பூஜை செய்து வந்த அனுபவசாலியைப் போல அந்தச் சிறுவன் முதலில் சுவர்ண கணபதிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்தான். அடுத்து பூஜை செய்ய சிவனிடம் சென்றால் அவனால் சிவனுடைய தலையை எட்ட முடியவில்லை. இறைவா! உன் தலையில் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்ய எனக்கு உயரம் எட்டவில்லையே என்ன செய்வேன் என்று வேண்ட, சிவன் தன் தலைமுடியைத் தாழ்த்தி குனிந்து கொடுத்து அவன் பூஜை செய்ய வசதியாக நின்றார். இன்றும் அங்கு சிவன் சற்று குனிந்த நிலையில் இருப்பார். இங்கு பட்டினத்தார் இதைக் குறிப்பிட்டு அன்று அந்தச் சிறுவனுக்காக உன் உடல், கை மழு, மான், கழுத்து மாலை அனைத்தும் தாழக் குனிந்தாயே என்கிறார்.

    இல்லம் துறந்து பசி வந்தபோது அங்கு இரந்து தின்று
    பல்லும் கறையற்று வெள்வாயுமாய் ஒன்றில் பற்றுமின்றிச்
    சொல்லும் பொருளும் இழந்து சுகானந்தத் தூக்கத்திலே
    அல்லும் பகலும் இருப்பதென்றோ கயிலாயத்தனே. 2.

    வீடு, வாசல், மனைவி மக்கள் அனைத்தையும் நீங்கி வெளியேறி, பசி எடுத்தால் பிச்சை எடுத்து உண்டு, இல்லறத்தில் உணவு அருந்தியபின் தாம்பூலம் போட்டு பற்கள் கறையாகி விடுமே, அதுபோல அல்லாமல் கறையற்ற பல்லோடு வெளுத்த வாயோடும், எதிலும் பற்று இல்லாமலும், சொற்களை நீக்கி மவுன நிலை அடைந்து, எனக்கென பொருள் எதுவை இல்லாமல் சுகானந்த அனுபவத்தில் இரவு என்ன, பகல் என்ன என்று எப்போதும் யோக நித்திரையில் இருக்கும் நாள் என்றோ கயிலையில் அமர்ந்த கோவே.

    சினந்தனை அற்றுப் பிரியமும் தானற்றுச் செய்கை அற்று
    நினைந்தது அற்று நினையாமையும் அற்று நிர்ச்சிந்தனாய்த்
    தனந்தனியே இருந்து ஆனந்த நித்திரை தங்குகின்ற
    வனந்தனில் என்று இருப்பேன் அத்தனே கயிலாயத்தனே. 3.

    இயல்பிலே உள்ளத்தில் அமைந்த கோபத்தை அறவே நீக்கி; ஆசையை அகற்றி; செய்கைகள் அனைத்தையும் துறந்து; இதுவரை மனதில் சேர்த்து வைத்திருந்த நினைவுகளையெல்லாம் நீக்கிவிட்டு; மறந்து விடுதல் என்பதையும் மறந்துவிட்டு; வெறுமையான மனத்தினனாய்த் தன்னந்தனியானாய் அமர்ந்து சிவசிந்தனையோடு எப்போதும் இருப்பது எப்போது ஐயனே கயிலாயத்தமர்ந்த கோவே.

    கையார வேற்று நின்று அங்ஙனந் தின்று கரித்துணியைத்
    தையாது உடுத்து நின் சந்நிதிக்கே வந்து சந்ததமும்
    மெய்யார நிற்பணிந்து உள்ளே உரோமம் விதிர்விதிர்ப்ப
    ஐயாவென்று ஓலமிடுவதென்றோ கயிலாயத்தனே. 4.

    கை நிறைய பிச்சை ஏற்று, வாங்கிய இடத்திலேயே அதை உட்கொண்டு, கரிபடிந்த துணியைத் தைக்காமல் உடுத்துக் கொண்டு உன்னுடைய சந்நிதிக்கு வந்து சதாகாலமும் மனதில் உன்னை எண்ணிப் பணிந்து, உடலில் மயிர்க்கால்கள் அனைத்தும் குத்திட்டு நிற்க ‘ஐயா’ என்று உரத்தக் குரலெடுத்து உன்னைப் பார்த்து ஓலமிடுவது என்னாளோ, கயிலையில் அமர்ந்த பெம்மானே.

    நீறார்ந்த மேனி உரோமஞ் சிலிர்த்து உளம் நெக்குநெக்கு
    சேறாய்க் கசிந்து கசிந்தே உருகி நின் சீரடிக்கே
    மாறாத் தியானம் முற்றானந்த மேற்கொண்டு மார்பில் கண்ணீர்
    ஆறாய்ப் பெருகக் கிடப்பதென்றோ கயிலாயத்தனே. 5.

    உடலெங்கும் திருநீறணிந்து, உன்னை எண்ணி மயிர்க்கால்கள் குத்திட்டு, உள்ளமோ உன்னை நினைந்து நெக்குருகி சேறு போல கனிந்து, உன் சேவடித் தாமரைகளை மனதில் எண்ணி எப்போதும் தியானம் செய்து, கண்களில் பெருகி வரும் கண்ணீரால் மார்பு நனையக் கிடப்பது என்னாளோ, கயிலைமலை வாழ் சிவபெருமானே.

    செல்வரைப் பின் சென்று சங்கடம் பேசித் தினந்தினமும்
    பல்லினைக் காட்டிப் பரிதவியாமற் பரானந்தத்தின்
    எல்லையில் புக்கிட ஏகாந்தமாயெனக் காமிடத்தே
    அல்லல் அற்று என்று இருப்பேன் அத்தனே கயிலாயத்தனே. 6.

    செல்வம் படைத்த சீமான்களைத் தேடிப்போய் என் துயரங்களையெல்லாம் சொல்லி, பற்களைக் காட்டிக் கெஞ்சி பரிதவித்து நிற்காமல், பரானந்தமாம் சிவானந்தத்தின் எல்லைக்குக் கொண்டு சென்று, ஏகாந்தமாகத் துன்பங்கள் எதையும் அண்டவிடாமல் இருக்க அருள் செய்திடுவாய் அத்தனே, கயிலாயம் அமர்ந்த பெருமானே.

    மந்திக் குருளை யொத்தேனில்லை நாயேன் வழக்கறிந்தும்
    சிந்திக்கும் சிந்தையை யான் என்செய்வேன் எனைத்தீது அகற்றி
    புந்திப் பரிவிற் குருளையை ஏந்திய பூசையைப் போல்
    எந்தைக்கு உரியவன் காணத்தனே கயிலாயத்தனே. 7.

    குட்டிபோட்ட குரங்கு தன் குட்டியை எடுப்பதில்லை, அந்த குட்டியே தாயின் வயிற்றைக் கவ்விக் கொள்ளும் (மர்க்கட நியாயம்) போல நான் உன்னைக் கவ்விக் கொள்ளவில்லை, நாயினும் கேவலமான நான் நிலைமைகளை அறிந்திருந்தும் உன்னைச் சிந்திக்காமல் இருக்கும் என்னுடைய சிந்தையை என்னவென்று சொல்வேன்; என் உள்ளம் புகுந்த கள்ளத்தை நீக்கி பூனை எப்படித் தன் குட்டியைக் கவ்விக் கொண்டு போகுமோ அதுபோல (மார்ச்சால நியாயப்படி) நீ என்னை கவ்விக் காத்திட வேண்டும் தந்தையே, கயிலை நாயகனே.

    வருந்தேன் பிறந்தும் இறந்தும் மயக்கும் புலன்வழி போய்ப்
    பொருந்தேன் நரகிற் புகுகின்றிலேன் புகழ்வாரிடத்தில்
    இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன் இயல் அஞ்செழுத்தாம்
    அருந்தேன் அருந்துவன் நின்னருளால் கயிலாயத்தனே. 8.

    திருக்கயிலாயம் அமர்ந்த சிவபெருமானே! இனி நான் பிறந்தும் பின் இறந்தும் இப்படி துன்பப்படமாட்டேன், ஐம்புலன்களின் மயக்கத்தால் அவை காட்டும் திசை நோக்கிப் போய் எச்செயலிலும் ஈடுபட்டுத் துன்புறமாட்டேன்; பாபக் குழியெனும் நரகத்தில் விழமாட்டேன், காரணம் நான் நின் அடியவர் கூட்டத்தில் சேர்ந்திருக்கிறேன், அந்த அடியார் திருக்கூட்டத்தை எந்த காரணத்தினாலும் விட்டு விலகமாட்டேன், இனிய தேனின் சுவையுடைய உன் ஐந்தெழுத்தாம் ‘சிவாயநம’ எனும் மந்திரத்தை அருந்திக் கிடப்பேன்.

    மதுரை:
    விடப்படுமோ இப்பிரபஞ்ச வாழ்க்கையை விட்டு மனம்
    திடப்படுமோ நின்னருள் இன்றியே தினமே அலையக்
    கடப்படுமோ அற்பர் வாயிலிற் சென்று கண்ணீர் ததும்பிப்
    படப்படுமோ சொக்கநாதா! சவுந்தரபாண்டியனே. 9.

    மதுரை வாழ் சோமசுந்தரா! சவுந்தரபாண்டியனே! இப்பூவுலக வாழ்க்கையில் காணுகின்ற அனைத்து இன்பங்களையும் விட்டு நீங்கிவிடமுடியுமா; அப்படி விட்டு விலகிவிட மனம்தான் துணிந்து திடப்படுமோ; அப்படியின்றி தினம்தினம் அதனைச் சாராமல் இருக்கத்தான் முடியுமா; மனம் சலனப்பட்டு அங்குமிங்குமா அலைக்கப்படுமோ; அற்பர்கள் வீட்டு வாயிலில் சென்று கண்களில் நீர் சோர நின்று மனவருத்தம் பட இயலுமோ, நின் அருள் கிடைக்காதவரை அவை இயலாது.

    (இன்னும் வரும்)

    Share
  • நான் அறிந்த சிலம்பு! – 98

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

    வயல் வழி

     

    கயல் போன்ற கண்ணையுடைய
    கண்ணகியின் காதலனே!
    வயல் வழியே நாம் செல்லலாம்;
    என்றாலோ..

    அந்த இடங்களில்
    குளங்களில் எல்லாம் நறுமணப் பூக்கள்…
    நீண்ட முதுகையுடைய வாளை மீன்கள்
    கயல் மீன்களைத் துரத்தும்;
    அவ்வாளை மீன்களை
    நீர்நாய்கள் வாயில் கவ்விப் பிடிக்கும்.

    தப்பிய வாளைமீன்கள்
    விலாங்குமீன்கள் உழல்கின்ற
    சேற்றினில் துள்ளிப் பாயும்.

    இக்காட்சியைக் காணும் கண்ணகி
    அஞ்சவும் நேரிடும்.

     

    கரும்புவயல்களில் காணப்படும்
    தேனடைகள் சிதைந்து
    அவற்றினின்று வழிகின்ற தேன்
    அருகிருக்கும் வயல்களில்
    வண்டுகள் சூழ்ந்திருக்கும்
    பொய்கை நீரில் கலந்திருக்கும்.

     

    அடங்காத தாகத்தால் நாம்
    அறிவு மயங்கி விதிகள் மறந்து
    உட்கை குவித்து
    அத்தண்ணீரை அள்ளிப் பருகவும் கூடும்.

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 76- 85
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    Share
  • சதுரங்கச் சாம்பியன்

     
    தமிழ் பரதன்
    விஸ்வநாதன் ஆனந்தாய் இருந்து ts
    செஸ்வநாதன் ஆனந்தாய் மாறிய – காலம் அது.

    நார்வே நாட்டின் நாயகனோடு
    தாய் நாட்டின் மடியில் தலை வைத்துப் போட்டி.

    அறுபத்து நான்கு கட்டங்களில்
    அசத்தப் போவது யார்?

    பத்திரிக்கைகளின் பாராட்டு மழையில்
    நனையப் போவது யார்?

    பத்து சுற்றுகளுக்குள் பதில்,
    தெரிந்து விட்டது -அடுத்த
    சதுரங்க சாம்பியன் யாரென்று?

    வந்தாரை வாழவைக்கும்
    தமிழகத்தில் கார்ல்ஸன்
    மட்டும் விதி விலக்கா?

    வயதுக்கு வந்தனம் செய்தாலும்
    அதிகம் திறமைக்கு
    தானே கிட்டியது பரிசு.

    ஐந்து சாம்பியன் பட்டம்
    வென்றாலும் இன்று ஆனந்துக்கு
    துணையாய் இருப்பது
    வரலாறு தானே.

    வரலாறு படைத்த நாயகன்
    அடுத்த முறை அவதாரம் எடுத்து
    ஐந்தை ஆறாக மாற்றட்டும்,
    ஆதரவளிப்போம் ஆனந்த்க்கு!

    படத்திற்கு நன்றி:

    http://www.ask.com/wiki/Viswanathan_Anand?o=2802&qsrc=999&ad=doubleDown&an=apn&ap=ask.com

    Share
  • DESTINATION

     

     

    Pavala Sankari

    DESTINATION

    Flower-Wallpaper-HD

    why do I adore you?
    Because–
    Endless travel of mind
    To be reached – the destination
    It can never wander hopelessly.

    Because –
    Almighty knows – my
    urgent requirement – worth
    To be settled over – in the
    Wisdom of Destiny!

    Nature never asks – why
    everyone loves Her
    Because
    She knows – the reason
    of her creation – ECSTASY

    Why do I love you?
    Because–
    The bud does not require the Sun
    To answer – why and when she blossoms
    She can never stay as bud for long!

    I believe this sun rises for me
    Only for me – Therefore
    Then – I love Thee
    My Sun rise!

    Pavala

    Share