முக்கோணக் கிளிகள்
(பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை)
படக்கதை – 3
மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
வசனம், வடிவமைப்பு : வையவன்
ஓவியர் : தமிழ்
+++++++++++++++
முக்கோணக் கிளிகள்
(பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை)
படக்கதை – 3
மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
வசனம், வடிவமைப்பு : வையவன்
ஓவியர் : தமிழ்
+++++++++++++++
கிரேசி மோகன்

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
—————————————————————
’’கண்ணன் அந்தாதி’’
———————————
காப்பு
————-
காப்புக் கரம்கொண்டு காதைப் பிடித்துமால்
தோப்புக் கரணமிடத் தீர்ப்பளித்தோய் – யாப்பெனெக்(கு)
அந்தாதி வெண்பாவில் அம்மான் புகழ்பாட
தந்தாதி தெய்வமே தா….
———————————————————————————————————————-
நூல்
———–

சரணா கதியென்று சார்ந்து கிடப்போர்க்(கு)
அரணாய் இருக்கும் அரியே -நரனாய்ப்
பிறந்து வளர்ந்து பிணியென்ற சாக்கில்
இறந்தில்லை யாவ(து) எதற்கு….(1)
எதற்கென்ற கேள்வி முதற்கொண்டு மாயை
உதிக்கின்ற ஞானமே எல்லாம் -மதித்துத்
துதிக்கின்ற நானும் விதிக்கின்ற நீயும்
நதிக்கரை நாணல்நீர் நட்பு….(2)
நட்புனக்கு லீலை நயவஞ் சகம்மாயை
கட்புலனுக்(கு) எட்டாக் கடிதொளியே -முட்புதரில்
நிற்கவைத்து ரோஜாவை நீமுகர்ந்து பார்கின்றாய்
அற்பசுகம் ஆண்டவர்க்கு மா….(3)
ஆண்டவா நீலவண்ணம் பூண்டவா நீள்விசும்பில்
நீண்டவா பாரதப் பாண்டவராய் -வேண்டவா!
தூண்டவா பக்தியால் !, தீண்டவா பாரதியாய் !,
கீண்டவா தீங்கைக் கிழித்து….(4)
கிழிந்து பிணியில் கிடக்கும் உடம்பைப்
பிழிந்து சுகம்மேலும் பார்க்கும் -இழிந்த
மனமேன் கொடுத்தாய் எனையேன் படைத்தாய்
உனைஏன் கேட்கநான் உண்டு….(5)
————————————————————————————————————
கிரேசி மோகன்

அதர்மமே யானாலும் அஞ்சாது செய்யும்
சுதர்மம் சுதந்திர சொர்கம் -பதமுறும்
பாதுகையே போய்ச்சொல் தூதுவனாய்க் கண்ணனிரு
காதுகளில் காத்திருப்பே னென்று….(1)….
அகங்காரம் ஆசை பயம்கோபம் என்றும்
சுகம்காணும் சொந்த நலத்தில் -புகுந்தாடும்
மால்கட்டு நீங்கிட மாலோலன் பங்கயக்
கால்கட்டும் பாதுகாய் காப்பு….(2)….
அகஸ்மாத்தாய்க் கேட்டோர் அதிசயிக்கும் வண்ணம்
சகஸ்ரம் எழுதிய சிங்கம் -நிகமாந்த
தேசிகர் பாதுகையை யாசகமாய்ப் பெற்றுத்தா
வாசகனென் தோஷம் விடுத்து….(3)….
சாவடி ஆவிற்கு பாவடி ஆழ்வார்க்கு
காவடி ஐவர்க்கு , மாபலிக்கு -மூவடி
நீவடி வாவது நெஞ்சமர் ராதைக்கு
சேவடி உன்கால் அணிக்கு….(4)….
வேத புராண இதிகாச சாத்திரம்
ஓதும் உபநிடதம் ஓங்காரம் -ஆதிகள்
நூலணி நான்முகன் தோளணி சம்புதொழும்
காலணி பாதுகையே காப்பு….(5)….
வானத்து கங்கை வருடிடும், அன்று
தானத்தை தோழர்க்குத் தந்திடும் -தூணித்துச்
சாய்ந்திட தூர்த்திடும் ஸ்ரீரங்கன் கால்களை
காய்ந்திடாது காப்போனே காப்பு….(6)….
நின்றாலும் நீண்டு வளர்ந்தாலும் எங்கு
சென்றாலும் சேவடி சேவகரே -அன்றாலில்
கண்ணுறங்கும் போது கழற்றி இருப்பானே
எங்கிருந்தீர் சொல்லும் எமக்கு….(7)….
சேதாரம் இல்லாது செங்கட் திருமாலின்
பாதார விந்தத்தைப் பாதுகாக்கும் -ஆதாரமே
தூதுபோய்க் கண்ணன் ஏதுதான் கூறினான்
பாதுகாய் பகர்வாய் புகன்று….(8)….
நூபுரம் தண்டை நொறுங்கப் பிரபஞ்ச
கோபுரம் தாண்டிக் கிளர்ந்தவன் -மாபரம்பொருள்
மாதவ னோடு மகோன்னதத்தில் பங்குற்ற
பாதுகா சாகசனைப் போற்று….(9)….
மூவா முகுந்தரின் பாதாதி கேசத்தை
நோவாமல் தாங்கி நடத்துவோய் -சேவா
கணத்தில் உமக்கு அனந்தனின் காலை
தினம்தினம் சேவிக்கும் வாய்ப்பு….(10)….
வாளி,சங்கு, சக்கரம், வாள்தண்டு கேடயம்
தோளணி வில்லும் துயரறுக்கும் -கோளரி
மாதவன்கை ஆயுதங்கள் ஆனாலும் பாதுகாக்கும்
மாதவன்கை ஆயுதங்கள் பாதுகாப்ப தென்னவோ
பாதுகையே காலணிந்த கை….(11)….
தூணுதைத்தான் பின்னர் வானளந்தான் பேதை
மானுடனாய் காட்டில் அலைந்தான் -தானுகந்த
நாளாலில் சேயாக வாளாய் இருந்தவன்
காலளவு பாதுகாய் கூறு….(12)….
காதலில் ராதையைக் காண ரகசியம்
சீதையை மீட்க அவசரம் -கோதையைப்
பெண்ணெடுக்கப் போகையில் பின்னைடைந்தீர் பக்தியில்
பெண்ணுருகும் பாசுரம் கேட்டு….(13)….
பதம்வரையும் வானுமுற்ற பாகவதக் காரன்
பதவுறையாய் சென்ற கதையை -பதவுரையாய்
கூறவல்ல காலணியே வேறுதுணை ஏனெமக்கு
நீரிருக்க நிர்பயமா னேன்….(14)….
தோளணி பூந்துழாய் மேலணி பீலியென
மாலணி ஆபரணம் ஆயிரம் -காலணி
பாதுகைக்கு ஈடாய் படிதாண்டி ஓடிவர
ஏதுகை நெஞ்சே நமக்கு….(15)….
கண்ணிரெண்டால், விண்ணளந்தோன் காணாது போனாலும்
கண்ணிரெண்டு கொண்டோய் குமிழ்களாய் -மண்ணிருந்து
போற்றும் அடியார்கள் புகழ்செலவம் கல்விபெற
சாற்றுன் எஜமான் செவிக்கு….(16)….
வாயுள்ள பிள்ளை வரிசங்கும், ஓயாமல்
கையாலா காதுசுழல் சக்கரமும் -பாயாம்
அரவணையும், வாயில் கரமணைக்கும் சப்த
மரவடியைக் காதால் மடுத்து….(17)….
சகியின் வெளுத்து வளைந்த கழுத்தின்
மகிமையால் சங்கை மறந்தான் -திகிரியை
வாய்க்களித்தான் வேழனுக்கு, வாய்ப்பளித்தான் காலணியே
ஆய்க்குலத்தோன் என்றும் அணிந்து….(18)….
விதுரன் அகத்தில் வினயமும், யுத்த
சதுரங்கத்தில் கீதையும், ராதை -மதுரம்
சுதாமன் சினேகிதம், சந்தித்த தெல்லாம்
பதாம்புயத்துப் பாதுகாய் பேசு….(19)….
காலன் எதிர்வரும் காலம் அணுகிட
மாலன் மலர்த்தாள் முகர்ந்திடும் -காலன்
சகஸ்ரம் உரைத்திட சித்திர குப்தன்
புகஸ்ரமம் கொள்வான் பயந்து….(20)….
கர்ணனின் தாராளம் குபேரன் ஏராளம்
நர்மதை நீர்வேகம் நின்னருளே -வர்ணணை
செய்து வரவழைக்க சொற்களை தேசிகர்போல்
பெய்திட வாக்கைப் பெருக்கு….(21)….
நிற்கையில் மெத்தை நடக்கையில் வாகனம்
வெற்பெடுக்கும் போது வரைதாங்கி -தெற்குநோக்கித்
தூங்கும் அரங்கன் துயிலெழுவ தற்குள்சொல்
தாங்கிய யோகத் தெளிவு….(22)….
சாமா னியரை சதுர்வேதி ஆக்கிஹரி
நாமா வளியயை நவிலவைத்த -ராமா
னுஜனே முழுமுதல் நாரணனைத் தாங்கும்
புஜனே நிஜத்தில் புகுத்து….(23)….
பைகொண்ட பாம்பில் படுத்த பரம்பொருள்
வைகுண்ட நாதர் வடிவத்தை -கைகொண்டு
ஏந்தும்கால் பாதுகையே நீந்திவா பாற்கடலில்
ஏந்திச்செல் என்னை எடுத்து….(24)….
தென்னிலங்கை செல்கையில், தூதுசென்(று) ஐவர்க்காய்
மண்ணளந்து கேட்கையில், மாவலிதன் வரமேற்று
விண்ணளந்த வேளையில், விரகத்தில் ராதைக்காய்
கண்ணலைந்த காலத்தில், காலிருந்த பாதுகாய்
மண்ணளைந்து உண்டவனை என்னகத்திற்(கு) இழுத்துவா….(25)….
கிரேசி மோகன்
தொந்தி குலுங்கிட தந்தி ஜொலித்திட
முந்தி முழுமுதல் மோதகன்முச் -சந்தி
அரசடியில் வீற்று அருள்பாலிக் கின்றான்
முரசடித்தேன் தந்திக்கு முந்து….(3)
ஆனைக்கா அம்மையும் ஊனைக்கொள் ஊர்த்தவர்க்கும்
சேனைக்கா வேலன் சகோதரனாய்-தீனர்க்காய்
தோன்றிய பிள்ளாய், தமிழாக அவ்வைக்கோல்
ஊன்றிய வேழா உதவு….(4)
அக்கினிக்கு முப்புரத்தை ஆட்படுத்த தேரேறி
உக்கிரமாய் சென்ற உருத்திரர்க்கே -விக்கினமாய்
அச்சொடித்து உன்னிருப்பை எச்சரிக்கை செய்தவரை
உச்சரிக்க வைத்தாய் ஒழுங்கு….(5)
கணபதி ராயா மனிதச காயா
பனிபதி கைலாசப் பையா -தனபதி
மாலின் மருகோனே மயிலோனின் மூத்தோனே
கோல வினாயகனே காப்பு….(6)
கயிலாய சீதனம் கற்பகச் செல்லம்
மயிலாப்பூர் தோழன் மகோதரன் -பயிலோரும்
பள்ளிப் பரிட்சையில் பெற்றிட வெற்றியை
அள்ளித் தருவான் அவன்….(7)
அருகம்புல் தேங்காய் எருக்கம்பூ, மாலின்
மருகன்பால் வைக்க மகிழ்ந்து -ஒருகொம்பால்
நான்முகன் நம்தலையில் நட்ட விதையினை
ஆனைமுகம் ஆக்கும் அரசு….(8)
cowசுகள் பேணிடும் கண்ணன் மருகோனே
mouseயிக வாகனா மோதகா -houseனுள்
வாராய் வினாயகா வேளை சதுர்த்தியில்
தாராய் அறிவில் தெளிவு….(9)
மூஷிக வாகனனை தோஷ விநாசகனை
பாஷைகள் போற்றும் ப்ரணவனை -வேஷமாய்
வேழத்தோல் போர்த்திய தோழக் கடவுளை
ஏழைகள் ஈசனை ஏத்து….(10)
அரச மரத்தடியில் ஆகாசம் பார்த்து
உரசும் எலியோடு ஒண்டி -பெருசாய்
எதிர்பார்ப்பு ஏதுமின்றி ஏழெட்டு தேங்காய்
சதிராக யாதுமருள் வான்….(11)
கமர்கட் கடலையுண்டை குச்சிஐஸ் மூன்றும்
சமர்பிப்பேன் நானுக்கு என்றும் -அமர்ந்திட்டு
செங்கழுநீர் பிள்ளையாரே சாப்பிட்டு த்ருப்தியாய்
சங்கத் தமிழ்மூன்றும் தா….(12)….
——————————
பெரியவா அருள்வாக்கில் ‘’ஷோடஸ வினாயகரைப்’’ பற்றி எழுதியதைப் படித்து எழுதியது….
—————————-
ஷோடஸ நாயகர்
———————-
பிள்ளையார் பிறப்பு
———————–
நீராடும் வேளை நிலைவாசல் காவலுக்கு
ஓராளைத் தேடினாள் ஓங்காரி -சேறாக
மேனியில் பூசிய மஞ்சளால் செய்தனள்
ஞானி வினாயக னை….
ஆதியே ஆனாலும் அன்னை குளிக்கையில்
பாதியில் வந்த பரம்பொருளை -வீதியில்
தள்ளிய பிள்ளை தலையைத் தகப்பனரன்
கிள்ளியங்கு வைத்தான் கஜம்….
ஸுமுகர்
———–
சிரித்த வதன ஸுமுகரைப் போற்ற
விரித்த வலைவெவ் வினையை -அறுத்து
இழைத்திடுவான் அத்தச்சன் எண்ணென் கலையாய்
அழைத்திடுவாய் அவ்வை அளவு….(1)….
ஏகதந்தர்
———–
சோகம் களைந்து ஸுமுகம் குவித்திடும்
யோகம் விரும்பிட ஏற்றிவிடும் -ஏகதந்தன்
காப்பிருக்க கற்பூரம் கூடவேண்டாம், காரியக்கை
பூப்பறிக்கும் உன்வீட்டில் பார்….(2)….
கபிலர்
——–
சிந்தூர வண்ணனை சித்தி அருளேக
தந்தன் கபிலனைத் தோத்தரிக்க -வந்த
கருத்ததெல்லாம் பாலாக, கண்முன் விலகும்
வருத்தமெலாம் சாயம் வெளுத்து….(3)….
கஜகர்ணகர்
—————
கஜகர்ணம் மற்ற கடவுளர்க்கு போட
நிஜவர்ணம் காட்டும் நெகிழ்ந்து -கஜகர்
ணகர்கபிலர் காதினில் நாத்திக பூசை
பகர்அப லைக்கும் பலன்….(4)….
லம்போதரர்
————–
சம்போ மகாதேவர் செய்த தலைப்பிள்ளை
லம்போ தரனால் லகுவாக -வம்போடு
தும்பும் விலகும் துதிக்கை விரட்டிடும்;
நம்பாள் கஜகர் ணகர்….(5)….
விகடர்
———–
மகுடம் தரித்தரன் முப்புரம் ஏக
சகடத்தின் அச்சை சிதைத்த -விகடன்
லலிதாங்கி மைந்தனை லம்போ தரனை
எலிதாங்கும் ஆனையை ஏத்து….(6)….
விக்கினராஜர்
—————-
சுக்கிரன் பார்க்க சுரர்கள் பணிந்திட
இக்கிரக பூமியில் இந்திரனாய், -விக்கின
ராஜன் விகடனை ராப்பகலாய் வேண்டிட
பூஜா பலனாய் பவிஷு….(7)….
வினாயகர்
————
வினாஅகம் கேட்க விசாரணை செய்யும்
மனோமுக மார்கம் முனிக்கே -வினாயகன்
விக்கின ராஜனை வேண்டித் துயில்வோர்க்கு
சொக்கிடும் போதேமோட் ஷம்….(8)….
தூமகேது
———–
சோமதேவன் சீமந்தன் மாமன்மால் அம்சமா
சாமகாதன் சீமந்தன் மாமன்மால் அம்சமாய்
தூமரூப துஷ்டனைத் தீர்த்திட -தூமகேது
தூமதீது துஷ்டனைத் தீர்த்திட -தூமகேது
வாக அவதரித்து வெற்றியை சூடிய
வாகை வினாயகனை வாழ்த்து….(9)….
கணாத்யஷர்
—————
அனாதியாதி அச்சன் அரசவை பூத
கணாதி களின்சேனைக் காவல் -ஜனாதிபதி
தூமகேது முன்புநின்று தோப்புக் கரணமிட
சாமகீதம் சம்சார சிந்து….(10)….
பாலசந்த்ரர்
————–
நாலுமுகன் செய்த நடிகர் களையியக்கும்
பாலமுக பாலசந்த்ர பிள்ளையார் -ஞால
கணாத்யஷன் காலில் கிடப்போர்க்கு நாளும்
தனாக்ஷர தீரம் தரும்….(11)….
கஜானனர்
————-
அஜாதசத்ரு ஆனை அரக்கனுக்(கு) அன்று
கஜேந்திர மோட்ஷம் கொடுத்த -கஜானனன்
கோலசந்த்ரன் கொண்டமகா கர்வம் அடக்கிய
பாலசந்த்ரன் பாதம் புகு….(12)….
வக்ரதுண்டர்
—————
வக்ரதுண்ட சேயின் விடைபெறாமல், முப்புர
நிக்ரகம் செய்ய நினைத்தூர்ந்த -உக்ரகண்டர்
சக்ரதுண்டம் செய்த சதுர்த்தி கஜானனர்
விக்னகண்டம் தீர்ப்பார் விரைந்து….(13)….
சூர்ப்பகர்ணர்
—————-
வரம்தரும் போதே முறம்போல தீதை
புரம்தள்ளி நையப் புடைத்து -அறம்பொருள்
ஆர்ப்புகங்கை போலின்பம், அவ்வீடு சேர்த்திடும்
சூர்ப்பகர்ண வக்ரதுண்ட சேய்….(14)….
ஹேரம்பர்
————-
பேரம்பார் பண்ணிப்பார் பூவெருக்கம் புல்லருகம்
பேரன்பாய் பாதத்தில் போட்டுவிட்டு -ஆரம்பம்
ஹேரம்பா என்றழைக்க எப்படியும் வெற்றிதான்
நேரும்பார் சூர்ப்பகர்ண னால்….(15)….
ஸ்கந்தபூர்வஜர்
—————–
சீரும்பர் கோன்மகள் சேனை கரம்பிடித்த
சூரன்பால் வேலெறிந்த ஸ்கந்தனுக்கு -ஹேரம்பர்
முன்வந்த பூர்வஜர் ,பெண்ணாக வெற்றியாய்நம்
பின்வந்து நிற்கும் பிடி….(16)….
பலஸ்ருதி
————-
பதினாறும் பெற்று பெருவாழ்வு காண
பதினாறு பேர்களைப் பெற்ற -அதிகாரி
அக்கணேச ஆனைமுன் விக்கினங்கள் வைத்திட
மக்கிடுமே மண்புழுவாய் மாய்ந்து….
——————————
கிரேசி மோகன்

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————–
’’கண்ணன் காப்பு’’
——————————

வையங்கள் ஏழை, வயிறார உண்டும்,
ஐயம் மிகக்கொண்டு அய்யனே ,-கையால்,
பிடித்துக் கமலப், பதவிரலை அன்று,
கடித்துக் களித்தவனே, காப்பு….
நான்மறை ஓதிடும் ,நான்முகன் வாழ்ந்திடும்,
தாமரை நாபியும், பூமகள் -போய்மறையும்,
சந்தனம், ஸ்ரீவத்ஸம், சாற்றும் திருத்துழாய்யு
கந்திடும் திண்மார்பும் காப்பு….
மோதகப் பிள்ளை முழுங்க, பதைபதைத்து
பீதகப் பட்டாடை பாழாகக், -காதினைக்,
கைகளால் பற்றி, கரணமிட்(டு) ஆழியை
கொய்தகோ பாலனே, காப்பு….
தேர்கடவி, பாரதப் போர்முடிக்க, பார்த்தனின்
சீர்கெடலை கீதையால் செப்பனிட்டோன், -மோர்குடத்தை
கல்லால் உடைத்தன்று, கோபியர் கோபத்திற்க்
குள்ளான கண்ணனே காப்பு….
சாக்கிரதை யாக சகாக்களுடன் சென்றாயர்,
தூக்கிலிட்ட வெண்ணை திருடியுண்ட, -போக்கிரிப்
பையனே. பேய்மழைக்குப் பர்வதம் தாங்கியக்
கையனே, கண்ணனே, காப்பு
——————————————————————————————–
படங்களுக்கு நன்றி :
http://kamadenu.blogspot.in/2014_01_01_archive.html
– கே.எஸ்.சுதாகர்
ஒரு நாட்டின் மூலமான மக்களை சுதேசிகள் (Indigenous people) என்கின்றோம். மூத்தகுடிகள், பூர்வீகக்குடிகள் என்றும் சொல்லலாம். அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை ஆதிவாசிகள் (Aboriginals), தீவுவாசிகள் (Torres Strait Islanders) என்ற இரண்டு வகையான மக்களை அப்படிச் சொல்கின்றார்கள். இவர்களுக்கிடையே ஏராளமான வித்தியாசமான பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், மொழியினைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.

அவுஸ்திரேலியாவில் உள்ள மக்கள் தொகையில் இவர்கள் 2% ஆவார்கள். இது ஏறக்குறைய 400,000. இதில் ஆதிக்குடிகள் 357,000. ஐரோப்பியர்களின் வருகைக்கு (1788) முன்னர் ஏறத்தாழ 600 – 700 இனக்குழுவினர் (tribal groups) இருந்திருக்கின்றார்கள். அப்போது ஏறக்குறைய 250 விதமான மொழியைப் பேசியிருக்கின்றார்கள்.
இதில் ஆதிக்குடிகள் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவில் இருந்தும், தீவுவாசிகள் Torres Strait (400ற்கும் மேற்பட்ட தீவுகள்) இலிருந்தும் வந்தவர்கள் ஆவார். ஆதிகாலத்தில் அவுஸ்திரேலியாவும் ஆசியாவும் ஒன்றாக இருந்ததாகவும் (ஆழமற்ற கடல் பரப்பு இவை இரண்டையும் இணைத்திருந்தது) பின்னர் இவையிரண்டும் பிரிந்ததாகவும் சொல்லப்படுகின்றது. இற்றைக்கு 50,000 – 130,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள தீவுகளிலிருந்து, இந்த ஆழமற்ற கடல்பரப்பினூடாக முதன்முதலாக அவுஸ்திரேலியாவிற்கு ஆதிக்குடிகள் வந்து சேர்ந்தார்கள் என நம்பப்படுகிறது. இவர்கள் அவுஸ்திரேலியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள கடற்கரையோரங்களில் முதலில் குடியேறினார்கள். விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, 56,000 – 78,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் பெறப்பட்டுள்ளன.
சுதேசிகள் தாம் வாழ்ந்த இடங்களைக் கொண்டு பின்வருமாறு அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
Nyoogar (மேற்கு அவுஸ்திரேலியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ளவர்கள்)
Murri (நியூ சவுத்வேல்ஷின் வடக்குப்புறம் மற்றும் குவீன்ஸ்லாந்தின் தென்கிழக்கு)
Yolngu (Nothern Territory இன் வடக்குப்புற நிலமான Arnhem)
Palawa (ரஸ்மேனியா – Tasmania)
Nungah (தெற்கு அவுஸ்திரேலியா)
Koori (நீயூ சவுத் வேல்ஸ்)
Koorie (விக்டோரியா)
1770 ஆம் ஆண்டு பிரித்தானியாவிலிருந்து கப்டன் ஜேம்ஸ் குக் என்பவர் தனது Endeavour என்ற கப்பலின் மூலம் Botany Bay என்ற இடத்தை வந்தடைந்தான். அதன்பிறகு 18 வருடங்கள் கழித்து குடியிருப்பதற்காக பிரிட்டனில் இருந்து வந்தார்கள். பழங்குடிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டன. சில ப்ழங்குடிக்குழுக்கள் கொல்லப்பட்டனர். 1789 இல் பிரித்தானியமக்கள் கொண்டுவந்த சின்னம்மை மூலம் சிட்னியைச் சூழவிருந்த ஆதிக்குடிகள் கொல்லப்பட்டனர். ஒருபோதும் இந்த வருத்தத்தைச் சந்தித்திராத அவர்களுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி இருக்கவில்லை.
ஆதிக்குடிகளின் பிள்ளைகள் அவர்களிடமிருந்து பலவந்தமாகப் (STOLEN GENERATION) பிரித்தெடுக்கப்பட்டார்கள். இந்தப்பிரித்தெடுப்பு 1970 ஆம் ஆண்டுவரை நடந்தது. எத்தனை பிள்ளைகள் இப்படிப் பிரித்தெடுக்கபட்டார்கள் என்ற சரியான தரவுகள் கிடைக்கவில்லை. தரவுகள் அழிக்கப்பட்டன, தொலைந்துவிட்டன. ஏறத்தாழ 1910 இலிருந்து 1970 வரை 10% ஆன பிள்ளைகள் பிரித்தெடுக்கப்பட்டார்கள்.

ஆதிக்குடிகளுக்கென ஒரு கொடி Harold Thomas இனால் உருவாக்கப்பட்டு 1971 இல் அடிலயிட்டில் (Adelaide) பறக்கவிடப்பட்டது. கொடியின் மேற்பகுதியான கறுப்பு நிறம் ஆதிக்குடிகளையும், கீழ்ப்பகுதியான சிவப்புநிறம் ஆதிக்குடிகளுக்கும் நிலத்துக்குமான தொடர்பையும், நடுவே இருக்கும் மஞ்சள் நிறத்திலான வட்டம் சூரியனையும் குறிக்கிறது. உலகைப் படைத்தவர்கள் முன்னோர்கள் எனவும், அவர்களே நிலத்தைப் படைத்து அதிலே மலைகள் ஆறுகள் மரங்கள் என்பவற்றை உருவாக்கினார்கள் எனவும் ஆதிவாசிகள் நம்புகின்றார்கள்.

டிடிஜிறிடு (Didjeridu) என்ற வாத்தியக்கருவியும் பூமராங்கும் (Boomerang) ஆதிக்குடிகளின் சின்னங்களாகக் கருதப்படுகின்றன.
1960 ஆம் ஆண்டுவரையும் வாழ்வாதாரத்துக்கான (கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவை) உரிமைகள் மறுக்கபட்ட நிலையில் ஆதிக்குடிகள் இருந்துள்ளார்கள். 1965 ஆம் ஆண்டுமுதல் vote போடும் உரிமை பெற்றார்கள். 1967 முதல் குடித்தொகை மதிப்பீட்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். 7 கோடி 618 இலட்சம் சதுர கிலோமீட்டரைக் கொண்ட அவுஸ்திரேலிய நிலப்பரப்பில் ஆதிவாசிகளுக்கென ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பு 9 இலட்சத்து 20 ஆயிரம் சதுரகிலோமீட்டர்கள் ஆகும்.

1972 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா தினத்தன்று, ஆதிக்குடிகள் கன்பராவில் உள்ள பாராளுமன்றத்திற்கு முன்னால் உள்ள Ngunnawal என்ற நிலத்தில் ஒரு கூடாரம் அமைத்து தமது கொடியைப் பறக்கவிட்டார்கள். ‘அவுஸ்திரேலியா அரசு தங்களை ஒரு வெளிநாட்டுப்பிரஜைகள் போல நடத்துவதால், வெளிநாட்டு மக்களுக்கு இருக்கும் Embassy போல தங்களுக்கும் ஒன்று தேவை’ என அறிவித்து அந்தக்கூடாரத்தை ஆதிக்குடிகளின் Embassy என அறிவித்தார்கள். அவுஸ்திரேலியா அரசு அதை அகற்றுவதற்கு முயற்சித்த போதிலும், அது மீண்டும் கட்டப்பட்டு 1992 முதல் நிரந்தரமாக அங்கே உள்ளது.
ஐரோப்பியரின் வருகைக்கு முன்னர் ஏறக்குறைய 250 ஆதிக்குடிகளின் மொழிகள் (Alngith, Antakarinya, Bandjalang, Bayungu, Darling, Dirari, Iwaidja, Kamu, Kanju, Thawa, Yorta Yorta) இருந்தன. காலப்போக்கில் இவை அழிந்து கொண்டு வருகின்றன. ஆதிக்குடிகள் பேசிவந்த barramundi, billabong, boomerang, kangaroo, kookaburra, dingo, koala, wombat போன்ற பல சொற்கள் இன்று அவுஸ்திரேலியர்களின் ஆங்கிலச்சொற்களுடன் கலந்துவிட்டன.
எண்ணிலடங்கா ஏடுகளில் எத்தனையோ கவிதைகள்
எழுதிக் குவித்த கவிஞர்களின் எண்ணிக்கையும் இங்கு அதிகம்!
அன்றுமின்றும் பெண்ணைப் பற்றிப் பாடாத கவிஞன் யாரிங்கே?
சொல்லும் பொருளும் துள்ளி வருவது பெண்ணைப்பற்றி எழுதும்போதுதானே!
கண்களில் தோன்றுமிந்த காந்த மின்னல்..சில..பல..
எண்ணப் பரிமாறல்களால் காதல் ஆகிவிடும் விந்தை!
தன்னுள் ஏற்பட்ட தாக்கத்தை மொழிபெயர்த்தால்
தானாக மலர்ந்திடுமே கவிதை! பூங்கவிதை!!
தொன்று தொட்ட தமிழ்க்குடியில் பிறந்தமகள்!
தாய்வீட்டுச் சீதனமாய் நான்குவகை குணங்கள்!
எழில்சிந்தும் இளமையின் ஏற்றமிகு வதனம்!
இருந்தாலும் ஓர் குறைதான் உண்டு அந்த ஊமைப்பெண்ணில்!!
இவள் கண்ட மணவாழ்க்கை இனித்திடுமா எனும்கேள்வி
மனதினிலே தாங்கியபடி புகுகின்றாள் முதலிரவு!
கரம்பற்றும் நாயகனைத் தினம் அழைக்க வழிகளில்லை!
சரம்சரமாய் நீர்விழுமே! இருகண்ணில் இருந்தபடி!!
இதுதான் காட்சியென..பாடலொன்று வேண்டுமெனக் கவிஞர் பணிக்கப்படுகிறார். கதாநாயகன் பாடும் பாடல் நாயகிக்கு இதமாக இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அவள் மனம் காயப்பட்டுவிடக் கூடாதென..எத்தனை லாவகமாய்..கவனமாய்..வார்த்தைகளைச் சித்திரம் போல் செதுக்கியிருக்கிறார்!
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் தேன்
ஆறு போலப் பொங்கி வரவேண்டும் வரவேண்டும்
அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் தேன்
ஆறு போலப் பொங்கி வரவேண்டும்
அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகைபோல் – என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் – என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் ம்ம்..
இதுவரை எழுதிய வரிகளிலும் மென்மை நிறைந்திருக்கிறது. எனினும் இனிவரும் வரிகளைப் பாருங்கள்..இப்படி எழுதக் கண்ணதாசன் மட்டுமே வர வேண்டும்!!
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும் மொழி வேண்டும்
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னம் இருக்கும் இந்தச் சின்ன முகத்தில் பல
மொழிகள் பாடம் பெற வரவேண்டும் பல
மொழிகள் பாடம் பெற வரவேண்டும் ம்ம்..
இவளது முகத்தில் தவழும் மெளன மொழியை அறிந்துகொள்ளப் பல மொழிகளும் அவளிடம் வரவேண்டுமாம்! பெண்மையின் மென்மையை – கண்ணதாசனே எத்தனை அழகாய் ஆராதித்திருக்கிறாய்? கவிதையா.. உணர்ச்சியா..?! உன்னால்தான் இப்படி மொழிபெயர்ப்பு நடத்த முடிகிறது! உன்னால்தான் திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் முழுநிலவாய் ஜொலிக்கின்றன! உள்ளத்தின் கதவுகள் எல்லாம் உன் கவிதை பெறவே திறந்து கொண்டன!
திரைப்படம்: கொடிமலர்
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
http://www.youtube.com/watch?v=PFO5EbeDm5I
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் தேன்
ஆறு போலப் பொங்கி வரவேண்டும் வரவேண்டும்
அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் தேன்
ஆறு போலப் பொங்கி வரவேண்டும்
அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகைபோல் – என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் – என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் ம்ம்..
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும் மொழி வேண்டும்
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னம் இருக்கும் இந்தச் சின்ன முகத்தில் பல
மொழிகள் பாடம் பெற வரவேண்டும் பல
மொழிகள் பாடம் பெற வரவேண்டும் ம்ம்..
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
எனக்காக இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் பாடி என்னை மகிழ்வித்த ராகப்பிரவாகம் சுந்தருக்கு என் உள்ளத்து நன்றிகள்!
http://www.youtube.com/watch?v=PFO5EbeDm5I
-விசாலம்
என் அண்ணி எனக்குத் தாய்!
தாயில்லாத நிலையில்
அவளே எனக்குத் தாயானாள்!
நிலாக் காட்டிச் சோறு ஊட்டினாள்!
அவள் மடியில் நான் படுக்க,
வந்தன பல நீதிக் கதைகள்!
அவள் ஜீஜாபாயாக ஆனாள்,
என்னைச் சிவாஜியாக ஆக்க!
கணக்கில் தவறு செய்ய,
கன்னத்தில் விழும் செல்ல அடி!
நான் அவள் கழுத்தை அணைப்பேன்,
என் உச்சியில் ஒரு “இச்” கொடுப்பாள்!
அண்ணனுக்கு ஆபிஸே உலகம்…
எனக்கோ அண்ணியே உலகம்!
கிரிக்கெட்டுக்கும் வருவாள்,
என் சிக்சரில் மனமகிழ்வாள்!
இன்று நான் ஓர் ஆணழகன்!
மீசை முளைத்த துடி இளைஞன்!
முதல் மாதச் சம்பளம் என் கையில்…
முகமலர அண்ணி வந்தாள்!
“வாழ்த்துகள்!” என்று கைக்குலுக்கினாள்.
முதுகில் மட்டும் ஒரு செல்லத்தட்டு!
மடியில் இடம் கொடுத்த அண்ணி
இன்று மாறுபட்டு இருப்பதேன்?
அணைக்கத் துடித்த என் கைகளை
ஏதோ ஒன்று தடுப்பதேன்?
அண்ணியின் வளர்ப்புமுறையா?
மனதிற்கு ஒரு தடுப்புமுறையா?
சமுதாயம் என்ற வேலியா?
சட்டம் என்ற கல் சுவரா?
கிரேசி மோகன்

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————

’’கண்ணன் காப்பு’’
——————————–
உறியிழுத்தாய், பின்னர் உரலிழுத்தாய், பின்னர்
மரமிழுத்தாய், பின்னர் மதகில் – அரவிழுத்தாய்,
பின்னர் நகிலிழுத்தாய், பெண்கள் துகிலிழுத்தாய்,
கண்ணா எனையிழுப்பாய், காப்பு….
சகடா சுரனை சுமந்தா காய,
முகடில் முறித்த முகுந்தா, – பகடையில்,
தோற்றவர்க்காய் தேரேறி , நூற்றவர் மாய்ந்திட,
கூற்றவனாய் நின்றவனே, காப்பு….
கோடி குருமார்கள் கூறிய வேதாந்தம்,
தேடிப் படித்தும் திருப்தியில்லை, – நாடியில்,
ஏதோ அதிருப்தி, என்னென்று சொல்வது,
கீதோ பதேசகா, காப்பு….
தரையில் புரளபீ தாம்பர ஆடை,
சுருளும் முடிநுதல் சாய, -முரளி
மனோகரா வந்துன், மதிவதனம் காட்டு.
கனாவரும் நேரத்தில், காப்பு….
கன்னத்தில் அன்னையிட்ட, கண்மை திருஷ்டியது,
வண்ணக் கருமையில் வாடிட, -எண்ணற்ற,
இம்சைக்(கு) இடமாகி, இன்னல் கடந்தோனே,
கம்சன் மருகோனே, காப்பு!!
——————————————————————————————————————-
படங்களுக்கு நன்றி :
http://kamadenu.blogspot.in/2014_01_01_archive.html
முனைவர் அண்ணாகண்ணன்
இலக்கிய வீதியும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சும் இணைந்து ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ என்ற தலைப்பில் சென்னை, தியாகராய நகர், கிருஷ்ண கான சபாவில் மாதந்தோறும் இலக்கிய நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் 02.05.2014 அன்று ‘மறு வாசிப்பில் தேவன்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் கிரேசி மோகன் உரையாற்றினார். மிக இயல்பாகவும் எளிமையாகவும் நகைச்சுவை மிளிர, அவரது உரை அமைந்திருந்தது.
“எனக்கு இலக்கியம் எல்லாம் தெரியாது; தெரிந்ததெல்லாம் கலக்கியம்தான்” என்றே பேச்சைத் தொடங்கினார். அவரது உரையிலிருந்து ஒரு சிறிய பகுதி இங்கே:
“தேவனின் படைப்புகளிலிருந்து தாக்கம் பெற்றே இன்றும் நான் எழுதி வருகிறேன். அவருடைய கதை ஒன்றில், தன்னிடம் கண் ஆப்பரேஷன் செய்துகொண்ட ஒருவரிடம் டாக்டர் ரெண்டு விரலைக் காட்டி, இது எவ்வளவு என்பார்; அவர் ரெண்டு என்பார்; ரெண்டாயிரம் ரூபாய் கட்டணம் என்பதையும் அதில் மறைமுகமாகச் சுட்டுவார்; இது போன்ற இயல்பான நகைச்சுவையைத் தேவனிடம் காணலாம். அவரைத் தமிழின் பி.ஜி.வுட்ஹவுஸ் (P.G.Wodehouse) என்பார்கள்; நான், பி.ஜி.வுட்ஹவுஸை இங்கிலாந்தின் தேவன் என்பேன்.
“அந்தக் காலத்து நடைமுறைகளைத் தேவன் எழுத்திலிருந்து நிறையக் கற்க முடிகிறது. தேவனின் அப்பா மறைந்த போது, ஆசாரம் மிகுந்த அவர் குடும்ப நண்பர் ஒருவர், தேவனிடம் துக்கம் விசாரிக்கவில்லை; விசாரித்தால் அந்தத் தீட்டு ஒட்டிக்கொள்ளும்; குளிக்க வேண்டும் என்பதால், தேவன் வரும்போதெல்லாம் ஓடி ஒளிந்திருக்கிறார். அவரைத் தேவன் ஒரு முறை நிறுத்தி, செத்துப் போனது எங்க அப்பாதான்; நான் இல்லை என நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார்.
“தேவன், பிராமணத்துவமாக எழுதினார் எனச் சிலர் விமர்சிக்கிறார்கள்; அது, முழு உண்மை இல்லை; அவர், முதலியார் மொழியிலும் இதர பிரிவினரின் மொழியிலும் கூட எழுதியிருக்கிறார். அவர், அய்யராக இருந்தாலும் அய்யங்கார் பாத்திரங்களைச் சிறப்பாக எழுதியிருக்கிறார்; அய்யங்கார் பரிபாஷைகளை அவரிடமிருந்தே நான் கற்றேன். அப்படியே பிராமண நடையில் அவர் எழுதியிருந்தாலும் அது ஒன்றும் தவறு இல்லை. ஏனெனில் அது அவரோடு உடன் பிறந்தது. என்னை ரிக்ஷாக்காரன் வேடத்தில் நடிக்க வைத்தாலும் என்னால் பிராமண பாஷையில்தான் பேச முடியும்.
“அவ்வை சண்முகியில் முதலியார் பாத்திரத்துக்காகத் தேவனின் கதைகளைப் படித்துக் குறிப்பெடுத்துக்கொண்டேன். சதிலீலாவதி படத்திற்கு முதலில் என் மொழியில் வசனங்களை எழுதிவிட்டு, அதன் பிறகு கோவை சரளாவுடன் உட்கார்ந்து, அதைக் கொங்குத் தமிழுக்கு மாற்றினேன். அது போல், தெனாலி படத்திற்கு என் மொழியில் வசனங்களை எழுதிவிட்டு, அதன் பிறகு அப்துல் ஹமீதுடன் உட்கார்ந்து, ஈழத் தமிழுக்கு மாற்றினேன்.
“நான் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சைதை துரைசாமி கலந்துகொண்டார். அவரிடம் பேசும்போது, நான் உதய சூரியனையே பார்ப்பதில்லை என்றேன்; ஏனென்றால் நான் எழுந்திருப்பதே 9 மணிக்குத் தானே. அடுத்து, நானும் இரட்டை இலை தான் என்றேன். அவர் வியந்து பார்த்தார். வெற்றிலை, புகையிலை என்றேன்.
“தேவனின் எழுத்துகளைத் தொடர்ந்து படியுங்கள். சிரித்து மகிழுங்கள்.”
இவ்வாறாகக் கிரேசி மோகன் பேசினார்.
அவரது ஒரு மணி நேரப் பேச்சின் ஒரு சிறிய பகுதியை என் நினைவில் பதிந்தவாறு இங்கே அளித்துள்ளேன். கிரேசி மோகன், சந்தர்ப்பத்துக்கு ஏற்ப உடனடி நகைச்சுவைகளும் உதிர்த்தார். “தேவன் படைப்புகளின் பட்டியலை நீங்கள் சொல்கிறீர்களா? நான் படிக்கட்டுமா?” என முன்னிலை வகித்த எழுத்தாளர் ஜே.எம்.சாலி கேட்க, நீங்களே சொல்லுங்க; கேட்கறது ஈஸியா இருக்கு என்றார். முனைவர் ப.சரவணன் தொகுப்புரை ஆற்றுகையில், கிரேசி மோகனின் சிறப்புகளை எடுத்துரைத்தார்; அடுத்துப் பேச வந்த கிரேசி மோகன், சரவணன் நன்றாக என்னைப் பற்றிச் சொன்னார்; அவையெல்லாம் நான் எழுதித் தந்தவை எனப் பொய்யாக வேடிக்கை செய்தார். அப்பப்ப தண்ணி போடுவேன் என்றபடி, இடையிடையே தண்ணீர் குடித்தபடியே பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு இலக்கிய வீதி இனியவன் அழைத்தபோது, எவ்வளவு நேரம் பேச வேண்டும் என மோகன் கேட்க, ஒரு மணி நேரம் என இனியவன் சொல்லியிருக்கிறார். அதற்கு, மேடை நாடகங்களில் நாங்கள் இருபது பேர் சேர்ந்து ஒரு மணி நேரம் பேசுவோம்; இங்கே நான் ஒருவனே ஒரு மணி நேரம் பேசணுமா எனக் கேட்டதாகச் சொன்னார். இப்படியாக இயல்பாக அவையைச் சிரிக்க வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் குமாரகிருஷ்ணன், இலக்கிய வீதியின் அன்னம் விருதினைப் பெற்றார். அவர் தன் உரையில், பரமார்த்த குரு கதைகளைத் தேவி வார இதழில் 100 வாரங்கள் எழுதிய அனுபவத்தை எடுத்துரைத்தார். குரு ஒருவர், சிஷ்யர்கள் ஐந்து பேர் என்ற வடிவில் சிஷ்யர்களின் முட்டாள்தனங்களைப் புதிது புதிதாக யோசித்து, தானே முட்டாள் ஆனதையும் கூறினார். முட்டாள்தன யோசனைகளை நண்பர்களிடம் கேட்க, அவர்கள் சமோசா வாங்கித் தரச் சொல்ல, இவரும் வாங்கித் தந்துள்ளார். சாப்பிட்ட பிறகு யோசனையைச் சொல்லும்படி கேட்க, இப்போதுதானே கேட்டிருக்கிறாய், யோசித்துச் சொல்கிறோம் என அவர்கள் சொன்னதைப் பகிர்ந்தார்.
கிரேசி மோகன் நகைச்சுவையில் மட்டுமின்றி, வெண்பா, சந்தப்பா எழுதுவதிலும் அவர் வல்லவர். வல்லமை மின்னிதழில் திருமால் திருப்புகழ் என்ற தலைப்பில் தினந்தோறும் அழகிய சந்தப் பாடலை எழுதி வருவது, நாம் அனைவரும் அறிந்ததே. புகழின் வெளிச்சம் எவ்வளவு இருந்தாலும் குழந்தையைப் போல் உற்சாகத்துடன் பழகுகிறார். என் தமிழாசிரியர் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்களிடம் அவர் வெண்பா கற்றதால், என்னை அவரது சகா (colleague) எனக் கூறினார்.
கிரேசி மோகனின் கலகலப்பான பேச்சினைக் கேட்க, அரங்கு நிறைய அன்பர்கள் திரண்டு, மனம் நிறைய மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர்.
படங்கள்: அண்ணாகண்ணன்
கிரேசி மோகன்

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————————
‘’கண்ணன் காப்பு’’
——————————

தீரன், யமுனா தரங்கக் கரையோரன்,
சேரும் இளமாதர் ஜீவான்ம -சோரன்,
அழகில் சுகுமாறன், அன்பில் உபகாரன்,
கழுகில் வரும்நேரம் காப்பு….
குவலயா பீடத்தின் கொம்பொசித்துக் கம்சன்,
கவலையால் பீடிக்கக் கொன்றோன் – ’அவலையா
தந்தாய் எடுத்துக்கொள் தோழாயென் செல்வமுன்
கந்தையைக் கட்டுமென்றோன்’ காப்பு….
கூவும் கஜேந்திரனை, காத்த புஜேந்திரா,
ஏவிய சக்கரத்தை ஏந்தியவா, -காவிய
பாகவதக் கண்ணா, பரந்தாமா நாரணா,
காகவத காகுத்தா காப்பு….
ஆலில் மிதந்தவா, ஆழ்வார்கள் பாசுர,
நூலில் நிறைந்தவா, நந்தலாலா, -தோளில்,
திருத்துழாய் பூண்ட, திருவோணத் தானே,
கருத்தில் கலந்துவளைக் காப்பு….
கால்கள் பலநூறு, கண்டேனென் வாசலில்,
வால்கள் புடைசூழ வந்தமுகுந்தன்,-நூல்போல்,
அணிவகுப்பாய் சென்று ,அடுக்களை உள்ளில்
விநியோகம் செய்தான் விருந்து!!
—————————————————————————————–
படங்களுக்கு நன்றி:
http://kamadenu.blogspot.in/2014_05_01_archive.html
இந்த வார வல்லமையாளர்!
மே 5, 2014
வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..
**************************************************************************************
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு திரு. ராஜா கார்த்திக் கண்ட்டா அவர்கள்
**************************************************************************************
![]()
வல்லமை இதழால் இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்யப் பெறுபவர் திரு. ராஜா கார்த்திக் கண்ட்டா அவர்கள்.
இலண்டனைச் சேர்ந்த 33 வயதான திரு. ராஜா கார்த்திக் கண்ட்டா என்பவர் பெரும்பான்மையான இந்திய இளைஞர்களில் தனிப்பட்டவராகப் பிரகாசிக்கிறார். இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தனது சொந்த மாநிலமான ஐதராபாத்திலிருந்து இலண்டன் சென்று அங்குள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனத்திற்காகப் பணியாற்றுபவர். சமீபத்தில் (ஏப்ரல் 30, 2014 ) ஆந்திராவில் நடந்த மக்களவைத் தேர்தலில் தனது வாக்கைப் பதிவு செய்யும் பொருட்டு இந்தியா வந்திருப்பவர். உள்ளூரில் இருந்து கொண்டே தாய்நாட்டு நலனில் அக்கறையின்றி வாக்குப் பதிவு செய்யாமல் அலட்சியமாக இருக்கும் சிலருடன் ஒப்பிடும்போது இவர் வாக்களிப்பதற்காகவே வெளிநாட்டிலிருந்து சொந்த மண்ணிற்கு வந்திருப்பது பாராட்டிற்குரியது.
ராஜா கார்த்திக் கண்ட்டா இதற்கும் ஒருபடி மேலே சென்று, தனக்குச் சிறப்புச் சலுகையை எதிர்பார்த்து, மக்களுடன் வரிசையில் நின்று வாக்களிக்காமல் அனைவரையும் முந்த நினைத்த மத்திய அமைச்சரும், அரசியல் தலைவரும், நடிகருமான திரு. சிரஞ்சீவியின் செயலுக்கு வெளிப்படையாகத் தன் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். இவரது எதிர்ப்பினால் வேறு வழியின்றி ஐதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு செய்ய வந்த சிரஞ்சீவி தனது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அங்கு கூடியிருந்த மற்றவர்கள் போலன்றி, அவர் மத்திய அமைச்சர் என்ற பெரும் பதவியில் இருப்பவராயினும் அவரும் பொது மக்களைப் போலவே வரிசையில் நின்றுதான் வாக்களிக்கச் செல்ல வேண்டும் என்று துணிச்சலாக அவரைத் தட்டிக் கேட்டு, ஒரு சிறந்த குடிமகனாகத் தன் கடமையைச் சரிவர நிறைவேற்றிய இவருடைய செயல் பாராட்டுதலுக்குரியது. இவரது இந்த செயலை ஆதரித்து வரிசையில் காத்திருந்த மற்றவர்களும் கரவொலி எழுப்பித் தங்கள் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியின் காணொளி சுட்டி இங்கே: http://youtu.be/LPyL5X8oThw
இது குறித்து செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த ராஜா கார்த்திக், “நான் அயல்நாட்டில் வசிக்கும் இந்தியன், எனது வாக்குரிமையை நிறைவேற்றவே இந்தியா வந்தேன். சிரஞ்சீவி முதியவரோ, மாற்றுத்திறனாளியோ அல்ல, அதனால்தான் நான் அவரிடம் உங்களுக்குச் சிறப்புச் சலுகை வேண்டுமா எனக் கேட்டு அவரை வரிசையில் நிற்கச் சொன்னேன், சிரஞ்சீவியை நான் மதித்தாலும் அவர் விதிமுறைகளை மீறுவதை அனுமதிக்க முடியாது,” என்று சொல்லியிருக்கிறார். இது போன்று அதிகாரத்திற்கு அஞ்சாது துணிச்சலுடன் இந்திய அரசியல்வாதிகளைக் கண்டிக்கப் பலர் முன் வர வேண்டும்.
சிறப்பு மிக்க நடத்தையால், இந்திய இளைய சமுதாயத்திற்கு முன்னுதாரணமாக விளங்கிய திரு. ராஜா கார்த்திக் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
செய்திகள் பல செய்தித் தளங்களில் இருந்து திரட்டப்பட்டன.
படம் உதவி: www.ndtv.com