Blog

  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (5)

    பவள சங்கரி

    ”ஒரு கொள்கையை எடுத்துக்கொள் அதற்காகவே உன்னை அர்ப்பணித்து, பொறுமையுடன் போராடிக் கொண்டிரு.  உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும் – சுவாமி விவேகானந்தர்.

    ஒரு செயலைச் செய்து முடிக்க உறுதியான எண்ணம் கொண்டு அதை ஆரம்பிக்கும் போதே அதற்குரிய சக்தி தானகாவே கிடைத்துவிடும் என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள். நமக்குள் புதைந்து கிடக்கும் சக்தியை பாதி அளவிற்கும் கூட நாம் பயன்படுத்துவது இல்லை என்றே கூறுகின்றனர். நம் முயற்சியை முழுமையாகப் போடும்போது அது பன்மடங்காகப் பெருகத்தான் செய்யும் என்பதும் நாம அனுபவத்தில் காணும் உண்மைதான். கண்ணிற்குத் தெரியாத கடவுள் போலத்தான் நம் சக்தியும் அல்லவா.நம் பார்வைக்குத் தெரியாவிட்டாலும் நமக்குத் தேவையான நேரத்தில் நம்முள் புகுந்து பெரும் சாதனைகள் புரிகிறதல்லவா?

    எதையும் தள்ளிப்போடாமல் உடனே செய்யப் பழகுங்கள்!

    எடுத்த காரியத்தை உடனடியாக முடிக்கப் பார்க்க வேண்டும். தேவையில்லாமல் தள்ளிப்போடும் வழக்கம் நம் வெற்றிப் படிக்கு ஓர் தடைக்கல்லாக ஆகிவிடும்.  தள்ளிப்போடாமல் காரியங்கள் செய்வது எப்படி?

    முதல் நிலையாக நாம் எப்பொழுது, எப்படி, ஏன் தள்ளிப் போடுகிறோம் என்று பார்க்கலாமா? நம் வாழ்க்கையின் ஏதோ ஒரு புள்ளியில்தான் இந்தத் தள்ளிப்போடும் வழமை வந்து தொற்றிக்கொள்கிறது. உதாரணமாக, பலர் தன் அன்றாடக் கடமைகள் அனைத்திலும் மிகத் தெளிவாக இருப்பவர்கள், வழக்கமாகச் செய்ய வேண்டிய மருத்துவப் பரிசோதனை, உணவுக் கட்டுப்பாடு, போன்றவற்றில் கோட்டை விட்டு விடுவார்கள். கடந்த 6 மாத காலத்தில் நாம் எதற்கெல்லாம் தள்ளிப் போட்டிருக்கிறோம் என்பதைப் புரட்டிப் பார்த்தோமானால் நாம் எதற்கெல்லாம் தள்ளிப் போட்டிருக்கிறோம் கண்டு கொள்ளலாம். இது ஒரு சுய பரிசோதனை. நம்முடைய தொழில் சம்பந்தப்பட்டதாகவோ, சமூக வாழ்க்கை, பொருளாதாரச் செயல்கள், இப்படி எதுவாகவும் இருக்கலாம். அது. எதனால் தள்ளிப் போடப்பட்டது என்று ஆராய்ந்தால் அதற்கான காரணம், பயம், சலிப்பு, களைப்பு, நன்றாக செய்ய வேண்டும் என்ற பேராவல் போனறவைகளாக இருக்கலாம். இல்லை என்றால் வேறு ஏதாவது பொழுதுபோக்கில் ஈடுபட்டு, இதையெல்லாம் தள்ளிப் போட்டோமா என்பதைக் கண்டறிந்தாலே அதிலிருந்து, எளிதாக மீண்டு விடலாம்.

    இரண்டாம் நிலையாக; மிக நன்றாக ஒரு காரியத்தை செய்ய வேண்டும் எனற எதிர்பார்ப்பில்,   நிதானமாக நன்றாகச் செய்யலாமே என்று தள்ளிப் போடுவோம். ஒரு வேளை அது தகுதிக்கு மீறிய உயர்தரத்தை எதிர்பார்ப்பதாகக்கூட இருக்கலாம். அதனைக் கண்டறிந்து, உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதனைத் தவிர்த்தாலே, இது போன்று தள்ளிப் போடுதலை விட்டுவிடுவோம்.,  அதற்காக ஒழுங்கு முறையைக் கைவிட்டு விட வேண்டும் என்பது பொருளல்ல. அதிகப் படியான கவனம் தேவைப்படக்கூடிய பணியைக் கண்டறிந்து செயல்படுவதால் அவசியமான வகையில் நம் பொன்னான நேரத்தைச் செலவிட முடியும்.

    அடுத்து மூன்றாம் நிலையாக, ஒரு வேலையை நாம் தள்ளிப் போடுவதற்கான காரணம் பல நேரங்களில் நம் அணுகு முறையால்தான். உதாரணமாக, வரவு செலவுக் கணக்கு போடுவது போன்ற மூளைக்கு வேலை கொடுக்கும் பணியை இரவு 10 மணிக்கு மேல் ஓய்வெடுக்கும் வேளையில் செய்ய முனைவது.  குறிப்பிட்ட அந்த , வேலையைத் தள்ளிப் போடத் தூண்டுகிறது.

    இது போன்று தொடர்ந்து தள்ளிப் போடுகிறோம் என்றால், அந்த வேலையச் செய்யும் முறையை சற்றே மாற்றியமைக்க வேண்டும் சலிப்படையச் செய்யக்கூடிய வேலைகளைச் செய்ய முற்படும் போது விடுமுறை நாளையோ, ஓய்வாக இருக்கும் நேரத்தையோ தேர்ந்தெடுத்து, மனம் விரும்புகிற நல்ல பாடலோ, பிடித்த உணவு வகைகளோ, பக்கத்தில் வைத்துக் கொண்டு செய்ய முற்பட்டால எப்படித் தள்ளிப் போடும் எண்ணம் வரும்? எந்த வேலையாக இருந்தாலும், அதை விருப்பத்துடன் உற்சாகமாக, நகைச்சுவை உணர்வுடன்,ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு செய்ய வேண்டும். அப்படியும் செய்ய முடியவில்லையென்றால் வேறு ஒருவரது மூலமாகவாவது வேலையை முடிக்கப் பார்க்க வேண்டும் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கப் பார்ப்பதால், அதை நிறைவேற்றுவதற்குரிய சக்தியையும், நேரத்தையும் விட அதிகமாகவே செலவிட வேண்டி வரும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

    சில நேரங்களில் நாம் மிகவும் விரும்பிச் செய்யக் கூடிய வேலைகளைக் கூடத் தள்ளிப் போட நேரிடுகிறது. உதாரணமாக நல்ல அழகான  ஓவியம் வரைந்து புதிதாகக் கட்டியிருக்கும்  நம்முடைய வீட்டின் வரவேற்பறையில் மாட்ட வேண்டும் என்ற ஆசை. நம்முடைய மற்றப் பணிகள் மற்றும் பொறுப்புகள் காரணமாக  தள்ளிப் போய்க்கொண்டே இருக்கலாம். தம்மைப் போன்றே இது போன்ற கலைகளில் நாட்டம் கொண்ட வேறு நண்பரையோ அல்லது பயிற்சி வகுப்பின் மூலமாகவோ ஊக்கச் சக்தியைப் பெற்று, மளமளவென வேலையை முடிக்க முயல வேண்டும். அப்படி முயற்சி எடுத்து ஒரு வேலையை முடிக்கும் பட்சத்தில் ,அதை நமக்குப் பிடித்த உணவோடு, குடும்பத்துடன், கொண்டாடலாமே.

    சில நேரங்களில் ஒரு காரியத்தில் இறங்கும் போது, அதனால் அவமானப் பட்டுவிடுவோமோ அல்லது தவறாகப் போய்விடுமோ என்ற அச்சம் காரணமாகக் கூட, தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம். இது போன்ற நேரங்களில் நாமே நன்றாக சிந்தித்து எதற்காக அஞ்சுகிறோம் என்பதைக் கண்டறிந்து, அதனைத் தவிர்க்கப் பார்க்க வேண்டும். முடியவில்லையென்றால், நண்பர்களிடம் ஆலோசனை பெற்றாவது, அக்காரியத்தைத் தொடர முயற்சிக்க வேண்டும். அந்தக் காரியத்தின் மூலம் நமக்கு ஆதாயம் கிடைக்கும் என்று உணர்ந்தால் அதை எப்படியாவது முடிக்க முயல வேண்டும்.

    அன்றாடம் நாம் முடிக்க வேண்டிய பணிகளை, நம் கைப்பட குறிப்பெடுத்து எழுதி வைத்துக்  கொள்ள வேண்டும்.
    தேவையான ஓய்வு எடுக்கவும் தயங்கக் கூடாது. இல்லாவிட்டால்  அது வேலை செய்யும் நேரத்தை நம்மையறியாமலே கைப்பற்றிவிடும்.

    மிகவும் சலிப்படையச் செய்யக் கூடிய நீண்ட வேலையாக இருந்தால், அதைப் பிரித்து ஒரு வாரத்திலோ அல்லது மாதக் கணக்கிலோ குறிப்பிட்டு நிர்ணயித்து சலிப்படையாமல் செய்து முடிப்பதற்கு வழி வகுத்துக் கொள்ள வேண்டும்.

    நண்பர்களுடன் போனில் பேசுவது, படிப்பது, எழுதுவது, போன்ற மன உற்சாகம் அளிக்கக் கூடிய செயல்களுக்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும். மேற்கண்ட அனைத்து விசயங்களையும் உள் வாங்கி, செம்மையாக நம் கடமையை நேரந்தவறாமல் செய்யும் போது, வெற்றி நிச்சயம்தானே!

    தொடரும் .

    படங்களுக்கு நன்றி:

    http://photosofinteriors.com/contact-us/home/landscape.html?start=1

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(48)

    சக்தி சக்திதாசன்

       

     

     

     

    அன்பினியவர்களே !

    இங்கிலாந்திலிருந்து இனிய வணக்கங்கள் .

    “அரசனுக்கொரு காலம் வந்தால் புருஷனுக்கொரு காலம் வரும் ” என்றொரு முதுமொழி உண்டு. அதே போல ஆங்கிலத்தில் உள்ள முதுமொழி ஒன்று “If the mountain will not come to Muhammad, then Muhammad will go to the mountain” அதாவது மலை முகமதுவிடம் வராவிட்டால், முகமது மலையிடம் போக வேண்டும். ஆமாம் காரியம் ஆக வேண்டுமானால் யார் பெரியவர் என்று பார்த்துக் கொண்டு இருக்காமல் யாருக்கு அந்தக் காரியம் முக்கியமானதாக இருக்கிறதோ அவர்கள் அக்காரியத்தின் நிறைவேற்றுதலுக்கு முதல் முயற்சியை எடுக்க வேண்டும் என்பதுவே உண்மை.

    என்னடா சக்தி என்ன பிதற்றுகிறானோ ? என்று எண்ணுகிறீர்களா ? கவலையை விடுங்கள் .

    அது சரி யார் அரசன் ? யார் புருஷன் ? . யார் மலை? யார் முகமது ?  யோசனையாக இருக்கிறது இல்லையா ? எனது இந்தக் கடிதத்தின் சாரமே பெப்பிரவரி மாதம் 17ம் திகதயளவில் நடைபெற்ற இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமரன் அவர்களின் இந்திய விஜயத்தைப் பற்றியே ஆகும் ?

    அது எல்லாம் இருக்கட்டும் அவரது விஜயத்திற்கும் நான் மேலே குறிப்பிட்ட முதுமொழிகளுக்கும் என்ன சம்மந்தம்? விளக்க வேண்டியது எனது கடமையல்லவா?

    ஆனந்தமாக ஆடிக்கொண்டிருந்த இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு இப்போ அடங்கிப் போயிருக்கிறது.

    எத்தனையோ விதமான பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதித்து பல நடவடிக்கைகளை முடுக்கி விட்டும் கூட எதிர்பார்த்த அளவில் நாட்டின் பொருளாதாரம் அவர்கள் எதிர்பார்த்த திசையில் எதிர்பார்த்த அளவில் முன்னேறவில்லை.

    பொருளாதாரத்தைச் சீர் செய்கிறோம் என்று சூளுரைத்து பதவியேற்ற கூட்டரசாங்கத்தின் ஜந்து வருட கால பதவிக் காலம் தனது மூன்றாவது ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. ஆயினும் பொருளாதாரம் சீரமைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை.

    இன்னும் இரண்டே வருடங்களில் மற்றொரு தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலையிலிருக்கும் அரசாங்கம் ஏதாவது வகையில் நாட்டின் பொருளாஅதாரத்தை முன்னோக்கித் தள்ள வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.

    அதிகமாகப் பேசப்பட்டு வரும் ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்தும் இதேமாதிரியான பொருளாதாரச் சிக்கலுக்குள் தம்மைப் புதைத் துக் கொண்டு வெளிவரத் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையிது. ஜரோப்பிய ஒன்றியத்தினுள் ஓரளவு பொருளாதாரச் சிக்கலில் விடிகாணத் திடங்கிய ஜேர்மனிய தேசமும் மீண்டும் பிந்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இங்கேதான் இங்கிலாந்துப் பிரதமரின் இந்திய நாட்டு வ்ஜயத்தின் முக்கியத்துவம் உணரப்பட வேண்டியிருக்கிறது.

    மேலைத்தேச நாடுகள் விரும்பியோ விரும்பாமலோ எதிர்கால உலகப் பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியா எடுக்கப்போகும் பங்கு மிகவும் பிரதானமாகி விட்டது.

    இந்தியாவை விட பொருளாதார முன்னேற்றம் அதிக அளவு காணப்படும் சீனாவை விட இந்தியாவில் முதலீடு செய்வதையே இம்மேலைத் தேசநாடுகள் அதிலும் குறிப்பாக இங்கிலாந்து முனைப்புக் காட்டி வருகிறது.

    இங்கிலாந்தின் அரசாங்கத் திணைக்களங்கள் உட்பட பல முன்னனி கம்பெனிகள் தமது பிந்தள வேலைகளை இந்தியாவில் நிகழ்த்தும் வகையில் தமது கட்டமைப்புக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    நிலமை இவ்வாறிருக்க இங்கிலாந்தின் உள்நாட்டு அரசியல் நிலைமைகள் உலகப்பொருளாதாரச் சூழல்களை கணக்கிலெடுக்கத் தவரும் வகையில் தமது உள்நோக்கக் பார்வையைத் தீவிரப்படுத்தினார்கள்.

    விளைவு ,

    வெளிநாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு பணிபுரியவோ அன்றி கல்வி பயிலும் வசதிக்காகவோ வருபவர்கள் இந்நாட்டின் பொருளாதாரத்தைச் சுரண்டுபவர்களைப் போலக் காட்டுவதனால் அரசியல் கட்சிகள் சில தமது ஆத்ரவைப் பெருக்கிக் கொள்ளலாம் எனக் கண்டு கொண்டு தமது துவேஷ உணர்வை ஆசியாவிலிருந்து அதுவும் குறிப்பாக இந்தியாவிருந்து சமீபத்தில் வந்தவர்களை நோக்கிக் கக்கத் தொடங்கினார்கள்.

    பொருளாதாரச் சிக்கலினால் தவித்துக் கொண்டிருந்த இங்கிலாந்து மக்கள் இவ்வுணர்வலைகளினால் தாக்கப்பட்டத்தைக் கண்ட அரசும் கல்விபயில வரும் இந்திய மாணவர்களின் விசா விடயத்தில் கெடுபிடியக் காட்டினார்கள்.

    அப்போது இது பல பகுதிகளில் சர்ச்சைக்குரிய விடயமாகவிருந்தது. இத்தகைய கெடுபிடிகள் இங்கிலாந்துக்கு வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து இங்கிலாந்துக்கு வரும் அந்நியச் செலவாணி வரும்படியைத் தக்கி விடும் எனும் வாதம் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் நிலவியது.

    இத்தகையதொரு நிலைமையில் தான் அடுத்தடுத்து வெளியிடப்பட்ட பொருளாதார அறிக்கைகள் இங்கிலாந்தின் பொருளாதாரம் வீழ்ழ்ச்சியிலிருந்து மீண்டு விட்டாலும் மறுபடி வளர்வதற்கு அதிக காலம் எடுக்கும் என்று சுட்டிக்காட்டின.

    புரிந்தது இங்கிலாந்து அரசுக்கு இந்நிலையிலிருந்து தமது பொருளாதாரத்தை மீட்டெடுக்க தமது வியாபார நுணுக்கங்களை பொருளாரத்தில் ஓங்கி வளரும் இநியா போன்ற நாடுகளில் விச்தரிப்பது ஒன்றேதான் சிறந்தமுறை எனும் முடிவெடுத்தார்கள்.

    இதோ அதன் விளைவாக 159 பேர் அடங்கிய குழுவுடன் இங்கிலாந்துப் பிரதமர் இந்தியாவிற்குப் படையெடுத்து விட்டார்.

    இந்தியாவிற்கும், இங்கிலாந்திற்கும் இடையே உள்ள உறவின் பாரம்பரியத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பிரதமரின் பேச்சுக்கள் அடங்கியிருந்தன.

    தமது நன்மைக்காக இதைச் செய்திருந்தாலும் உலகத்தில் முன்னனி நாடுகளில் இந்தியா வகிக்கும் கேந்திர ஸ்தானத்தை சுட்டிக் காட்டும் வகையில் இந்நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன.

    அதுமட்டுமின்றி இங்கிலாந்தின் பல வங்கிகளின் பிற்தளச் செயற்பாடுகள் இந்தியாவில் நடைபெறுகின்றன. இங்கிலாந்து மக்களின் வங்கிக் கணக்குகளின் விபரங்கள் பல அவர்களின் பிரத்தியேக விபரங்கள் உட்பட இந்திய நாட்டுக் கிளைகளில் உள்ளன. இணையத்தளத்தில் நடைபெறும் சமூகவிரோத செயற்பாடுகளினால் இத்தனித்துவமான விபரங்கள் திருடர்கள் கைகளில் கிடைத்து விடக்கூடாது என்று பொதுமக்கள் மனதில் பீதி நிலவுகிறது.

    தனது இந்த இந்திய விஜயத்தின் மூலம் இருநாடுகளுகிடையிலும் இணையத்தள மோசடிகளைத் தடுக்கும் வகையிலான ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்திலும் பிரதமர் கையொப்பமிட்டுள்ளார்.

    இது இங்கிலாந்து மக்களுக்கு தமது வங்கிகளில் உள்ள நம்பிக்கையைக் கூட்டுவதோடு மேலும் பல நிதி நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளை இந்தியாவில் விஸ்தரிப்பதற்கு வழிவகுக்கும் என்று பிரதமர் நம்புகிறார் போலும்.

    அது மட்டுமா?

    எந்த இந்திய மாணவர்களின் வருகைக்கு சில மாதங்களின் முன்னால் கெடுபிடி விதித்தார்களோ அதே இந்திய மாணவர்களுக்கான விசா ஒரேநாளில் கிடைபதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும், இந்திய வியாபார முகவர்கள் தமது வியாபாரங்களை இங்கிலாந்திலும் நடத்துவதற்கு ஏதுவாக அவர்களுக்கான விசாவும் ஒரேநாளில் கிடைப்பதற்கு வழிவகுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார் நம்முடைய பிரதமர்.

    இதற்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள் ?

    அமரர் தமிழ்வாணன் அவர்களின் “துப்பறியும் சங்கர்லால்” எனும் மர்ம நாவல்களைப் படிக்காதவர்கள் மிகவும் சொற்பமானவர்களே ! அவரது கதையின் நாயகன் “சங்கர்லால்” பற்றி எழுதும் போது “சங்கர்லாலின் ஜாகுவார் சீறிக் கொண்டு கிளம்பியது” என்று எழுதுவார்.

    இப்போது அமரர் தமிழ்வாணன் இருந்திருந்தால் அந்த ஜாகுவாரைத் தயாரிக்கும் நிறுவனன் ஒரு இந்தியருடைய கைகளிலே என்று கண்டு மிகவும் மகிழ்ந்திருப்பார்.

    ஆமாம் இங்கிலாந்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வாகனங்களாக இருந்த “ஜாகுவார்” மற்றும் “லாண்ட்ரோவர்” என்பன மிகவும் மோசமான நிதிநிலைமையடைந்து அதை இந்திய நிறுவனமான “டாட்டா” கொள்வனவு செய்து அத்தொழிலாளர்களின் வாழ்வையும் அக்கார்களின் பெயரையும் காப்பாற்றியது. அதுமட்டுமின்றி இங்கிலாந்தில் அனைத்துப் பெரிய நிறுவனங்களும் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு பொருளாதாரச் சூழலில் இக்கார்களைத் தயாரிக்கும் நிறுவனம் மட்டும் தனது வியாபாரம் பெருகக் கண்டது.

    இவ்வியாபாரப் பெருக்கத்தின் மூலம் மேலும் பலருக்கு வேலைவாய்ப்புக் கிட்டியது. இந்நிறுவனத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்பதை விளக்கிய ஒரு பொருளாதார நிபுணர் கொடுத்த விளக்கம் என்னை வியப்பிலாழ்த்தியது.

    பிரித்தானிய பொரியிலளாரின் நிபுணத்துவத்தையும், ஜெர்மனிய நிர்வாகிகளின் நிர்வாகத் திறனையும் இந்திய முதலீட்டாளர்கள் நன்கு பயனுள்ல முறையில் உள்வாங்கி இந்நிறுவனத்தைத் தகுந்த முதலீட்டுடன் முன்னெடுத்துச் சென்றதே இந்நிறுவனத்தின் வியாபார வெற்றியின் இரகசியம் என்று சொன்னார்.

    இவரது இக்கூற்று இந்தியர்களின் வியாபார நுணுக்கங்களையும், அவர்கள் வெற்றியடைய எடுக்கும் கூட்டு நடவடிக்கையின் திறனையும் நன்கு எடுத்துக்காட்டுகிறது.

    இதன் அடிப்படையிலேயே இங்கிலாந்து அரசாங்கமும் மேலும் பல இந்திய முதலீட்டாளர்கள் இத்தகைய மென்னெடுப்புக்களை எடுப்பார்கள் என எண்ணி அதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முனைகிறார்கள் என்பது தெளிவாகிறது.

    அத்தோடு மும்பாயிலிருந்து பெங்களூர் வரை ஒரு வியாபாரக் அதவொன்றை ஏற்படுத்தும் வகையில் ஒரு வழி சமைத்து பல புதிய மாதிரி நகரங்களை உருவாக்க பிரித்தானிய கட்டிட, நகர ஆராய்வாளர்களின் உதவியை அளிக்க இங்கிலாந்து ஏறந்தாழ 1 பில்லியன் இங்கிலாந்து பவுண்ஸை முதலீடு செய்வதாகவும் பிரதமர் கமரன் அறிவித்துள்ளார்.

    அதுசரி இந்திய மக்களின் மனதில் இடம்பிடிக்க பிரதமர் கமரன் கையாண்ட யுத்தி என்ன தெரியுமா? இந்திய மக்களின் அது உன்னத விளையாட்டான கிரிக்கட் விளையாட்டை விளையாடியதன் மூலம் இந்திய மக்களின் கவனத்தைத் தன்பால் ஈர்த்து விட்டதாக எண்ணி விட்டார் கமரன் போங்கள் !

    இதற்கு இந்தியாவின் நிலைப்பாடு என்ன ?

    இங்கிலாந்து தனது நன்மைக்காக இத்தகிய ஒரு அதீத உறவைப் பெண முன்வந்தது எனினும் இந்தியா உலக பொருளாதார முன்னனி நாடுகளில் முன்வரிசையில் நிற்கும் காரண்த்தினால் இதனை தனக்குச் சாதகமான முறையில் உள்வாங்கிக் கொள்ல வேண்டும்.

    பொருளார முன்னேற்றம் சமுதாயத்தில் அடிமட்டத்தில் அல்லலுறும் மக்களைச் சென்றடைவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    வடகிழக்கு ஆசியப் பிராந்தியத்தின்  அதிமுக்கிய நாடாக இந்தியா திகழ்கிறது. அதுமட்டுமின்றி பொருளாரத்தில் முன்னனியில் நிற்கும் நாடுகளைக் கொண்ட க்20 அமைப்பிலும் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கிறது.

    2020 இல் இந்தியா உலகின் முன்னனி நாடாகத் திகழும் என்று வலியுறுத்திய இந்திய முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களிஉன் கனவு எமது கண்முன்னே நிஜமாவது போன்ற உணர்வு தோன்றவில்லையா?

    காத்திருப்போம், களித்திருப்போம்

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • மீன் சமையல்காரன்

     

    பிச்சினிக்காடு இளங்கோ

     

    வலையை விரிக்கிறேன்

    விழித்து

    விழிமூடும்வரை

     

    வலையில் விழவேண்டும்

    என்பதற்காக அல்ல

     

    விழுபவை

    வீணாகிவிடக்கூடாதே

    என்பதற்காக

     

    இருந்தநிலையில்

    வந்துசேர்வதில்லை

    அனைத்தும்

     

    அவசர அவசியத்திற்காக

    சந்தைக்கும்

    சென்று திரும்புவதுண்டு

     

    வலைவிரிக்கத்தெரியாதவர்களுக்கு

    அரிய தருணங்கள்

    அறியாத்தருணங்களே

     

    கணமும் வலைகளோடு

    கவனமாய்த்திரிகிறேன்

    கர்வமடைகிறேன்

     

    இருந்தும் தேடியும்

    பெறவேண்டியதைப்

    பெறவேண்டும் என்பதே

    பெருநோக்கம்

     

    படத்துக்கு நன்றி: http://pdnphotooftheday.com/2009/01/288

     

    Share
  • நெற்றித்திலகமிடுவோம்!

     

    ஷைலஜா

    சகுந்தலை தொலைத்த
    கணையாழியைப்போல
    காணாமல் போயிருந்த
    பெண்ணினத்தின் துணிச்சல்
    உச்சியின் கிரீடமாக
    இன்று மீண்டிருக்கிறது.
    மசிக் கசிவினையெல்லாம்
    மனக் கசிவாக்க வேண்டாம்
    உபாதைகளை எல்லாம்
    நம் பாதைகளாய்ப்
    புலம்ப வேண்டாம்
    மறைமுகமின்றி
    உள்முகம் காட்டுவோம்
    அடுப்பு வெளிச்சத்தில்
    எழுதிய எழுத்துக்களை
    ஆற்றலுடன் வெளியே படைப்போம்
    நேற்றைய தழும்புகளுக்கு
    சோர்ந்துபோகாமல்
    இன்றைய வியர்வையினை
    நெற்றிக்குத்
    திலகமிடுவோம்!

     

     

    Share
  • மணிக்கொடி ஏற்றிய வெற்றிக்கொடி …!

    ஜெயஸ்ரீ ஷங்கர்

     “மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்…
    ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்…”

    இந்த சாதாரண சினிமாப் பாடலின் அசாதாரணமான வரிகள், ஒவ்வொருவரின் சாதாரண இதயத்திலும் கூட  அசாதாரண அதிர்வலைகளை நிச்சயமாக எற்படுத்தி இருக்கும். சாதிக்க நினைக்கும் இதயங்களுக்கு இந்த வரிகள் தான் ஊக்கபானமாக இருந்திருக்கும்.

    இதைப் பற்றி சிந்தனை செய்யும் போதே, சிந்தனைகள்  செயலாகி செயல் புத்தகமாகி எழுதிய புத்தகம் அனைத்தையும் தாண்டிச் சென்று புகழ்க்கொடியை விரித்து “வெற்றிக் கொடி ” ஏந்தி வெளிவந்து , அதை எழுதியவருக்கு “மலர் மாலையை” அணிவித்து அழகு பார்த்தால்..!
    ஆம்…அதுவும் நடந்தது. உண்மையின் அடிப்படையில் செய்யும் இந்த விமர்சனம் நிலைக்கும் என்று   நம்புகிறேன் நம்புகிறேன்.

    இரவும், பகலுமாக கருமமே கண்ணாக ஊன், உண் மறந்து  துயில் துறந்து சமுதாயச் சிந்தனையோடு பல தலை முறைகளுக்கும் எடுத்துச் சொல்லும் நோக்கத்தோடு “மணியான சுதந்திர எண்ணங்களை” ‘மணிக்கொடி’ கதையாக  900 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வரலாற்றில் இடம் பெரும் வண்ணம் நாவலை எழுதி முடித்து நிம்மதி பெருமூச்சு விட்டதும்….அந்த ‘மணிக்கொடி’ மகளே தன்னை ஈன்ற தாய்க்கு மலர்மாலையை பெற்றுத் தந்து அணிந்தவரை அழகு பார்க்கும் பாக்கியம் எழுத்தாளருக்கு மட்டும் தான் கிட்டும்  ஒரு வரப்பிரசாதம்.

    அந்த இன்பத்தை தமது வாழ்வில் அனுபவித்தவர் பிரபல சமூக எழுத்தாளர், சீரிய சிந்தனையாளர்.’ஜோதிர்லதா கிரிஜா‘ அவர்கள் என்று இந்த உலக மகளிர் தினத்தில் சொல்லிப் பெருமைப் படுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    அறுநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் என்று எழுத்தோடு வாழ்வை பின்னிக் கொண்ட “சாதனைப் பெண்மணி”  காலங்களைக் கடந்து பேசப்படும் பொக்கிஷமான ‘மணிக்கொடி‘ என்ற புத்தகத்தை தன் வாழ்நாளின் சாதனையாக எழுதிப் படைத்தவர். சிதம்பரம் அண்ணாமலைச் செட்டியார் பரிசும், விருதும் பெற்றது மணிக்கொடி.

    ஏதோ…பிறந்தோம்….இருந்தோம்…வாழ்ந்தோம் என்று மட்டும் இல்லாமல் ‘நாட்டுக்கு நீ என்ன செய்தாய்’..? என்ற கேள்விக்கு இடம் வைக்காமல் ‘நாட்டுக்காக இவர் இதைச் செய்தார்..’ என்று சொல்லும் பட்டியலில் இவரது ‘மணிக்கொடி’யே …’தாயின் மணிக்கொடி பாரீர்’  என்று ‘வெற்றிக் கொடியை ‘ உயரே பிடித்தபடி, தன்னையும் உயர்த்தி தன்னைப் படைத்தவரையும் உயர்த்தி நிறுத்தும் போது …

    மகளிர் தினத்தில் சாதனை படைத்த பெண்மணிகளை நினைவு கூர்ந்து வாழ்த்துச் சொல்லும் விதமாக என்றென்றும் அழியாப் புகழ் கொண்ட எழுத்தாளர் ‘ஜோதிர்லதா கிரிஜா ‘ அவர்களுக்கு வாழ்த்துக் கூறி நல்லாசிகள் வேண்டுவோம்.

    Share
  • கனவுத் தொழிற்சாலையின் கன்சல்டன்டாக நான்

    பேரா. நாகராசன்

    கன்சல்ட்டன்ட் என்று நான் என்னைச் சொல்லிக் கொண்டால் அது இன்சல்ட்தான் ஆனாலும் தொழிற்துறையில் அந்த வார்த்தை மட்டும்தான் அப்போது என் வேலையைக் குறிக்க ஓரளவு உதவி செய்தது. என் கல்வியும் நான் பெற்ற மதிப்பெண்களும் எனக்கு ஒரு சாதாரண வேலையைக்கூட வாங்கித் தராது என்பதை மற்றவர்களைவிட நான் தெளிவாக அறிந்திருந்தேன். ஆனாலும் சிவகாமிப்பாட்டி மட்டும் ஒரு மாற்றுக்கருத்தை எனனைப்பற்றி முன்மொழிந்து கொண்டிருந்தார்.  கண்ணில் பூவிழுந்து பார்வை சரியில்லாதபோதும் என் கைரேகையைப் பார்ப்பதில் குறியாக இருப்பார்.  அவர் மட்டுமே என் கையில் உள்ள மேடுகளும் ஆழமாய்ப் பதிந்த கோடுகளும் நான் ஒரு மாதிரியான அறிவாளியாக் வருவேன் என்று கட்டியம் கூறுவதாகச் சொல்வார்.  படிப்பென்னவோ விஞ்ஞானம் கல்வியியல் உளவியல் என்று கூட்ஸ் வண்டி அடிக்கடி பாதை மாறுவதுபோல் மாறி நான் படித்த பல்கலைக் கழகத்திலேயே நான் மாணவராக இருந்தபோது புகழ்ந்துபேசிய ஒருவர் துணைவேந்தராக வந்தபோது என்னை ஆசிரியராக்கியது.  அவரே வெறி பிடித்தவர் போன்று எனக்குப் பதவி உயர்வு கொடுத்து என்னை நானே நம்பமுடியாத உயரத்தில் தக்க வைத்தார்

    எனக்கு எளிதாக வந்த திறன் ஒன்று உண்டென்றால் அது நலிந்த நிறுவனங்களை விலைக்குவாங்கி விற்பது பற்றி ஜக்கம்மா குறி சொல்வதுபோல் அருள்வாக்குச் சொல்வது.  எந்த நிறுவனங்கள் இந்த வேலைக்குச் சரிப்படும் என்று என்னால் உடனே கண்டுபிடிக்க முடிந்ததால் அவ்வாறு வாங்கி விற்பது லாபகரமாக் இருந்ததால் எனக்கு நல்ல மார்க்கெட் இருந்தது.  அப்படி ஒரு வாங்கி விற்கும் கன்சல்டன்சியில் நான் ஒருவரைச் சந்தித்தது என்னைக் கனவுத் தொழிற்சாலையில் கொஞ்சகாலம் குப்பை கொட்ட வைத்தது. தமிழ்த் திரை உலகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குழுவின் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டு வளர்ந்த தொழில்.  முதலில் ஸ்டூடியோ சொந்தக்காரகள் கையில், பின்னர் பெரிய கதாநாயகர்களின் கைக்குள், அதன்பின் வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஃபைனான்சியர்கள் கையில் அப்புறம் தொழிநுட்பம் தெரிந்த இயக்குநர் குழுவின் கையில் என்று மாறி மாறி வந்துள்ளது.  ஒரு காலத்தில் திரை உலகைத் தன் ஆளுமைக்குள் வைத்திருந்த குடும்பம் இனிமேல் ஸ்டுடியோ நடத்தத் தன்மானம் இடங்கொடுக்கவில்லை என்று கருதி அவர்களின் ஸ்டுடியோவை விலைக்கு விற்கவந்து அது தொடர்பாக வாங்குபவருடன் இந்தக் குறிசொல்லும் பணியால் தொடர்பு ஏற்பட்டது.  வாங்கியபின் அதன் வளர்ச்சிக்கான திட்டங்கள் உத்திகள் தீர்மானம் செய்யும் நிலையில் எனக்கு ஒரு வாய்ப்பு அங்கே கிடைத்தது

    ஆராய்ச்சி மாணவனாக இருந்தால் அடிமை வேலை செய்ய வேண்டும் என்பது பல்கலைக் கழகத்தில் எழுதப்படாத விதி.  அப்படியாகத்தான் எனக்குக் கிடைத்த வேலை ஆராய்ச்சி சஞ்சிகளைப் பதிப்பித்து விற்று வருமானம் ஈட்டுவது.  மூன்று சஞ்சிகளைப் பதிக்கும் வேலையைத் தொடங்கி அதன் வடிவமைப்பு விற்பனை என்று நானாவித வேலையையும் செய்து பழகிக் கொண்ட எனக்கு என்பலம் என்னவென்று ஒருநாள் தெரிந்தது.  சக ஆய்வு மாணவர் ஒருவன் என்னுடைய வழிகாட்டியான பேராசிரியத் தலைவர் என்னை வெளியேற்ற ஏற்பாடு செய்துவருவதைச் சொன்னார்.  வழிகாட்டிக்கும் ஆய்வு மாணவனுக்கும் உள்ள உறவு பலசரக்குக் கடைச் செட்டியாருக்கும் பொட்டலம் கட்டும் இளைஞனுக்கும் இடையே உள்ள உறவு போன்றது.  செட்டியார் எச்சரிக்கை எத்திராஜராகப் எதிர்க்கடை வராதவாறு வேலை செய்பவர்களுக்குப் பொட்டலம் கட்டுவது தவிர எந்த வேலையையும் கற்றுக்கொடுக்க மாட்டார்.  அப்படியே அவரைத் தாண்டிக் கற்றுக் கொண்டவனையே விட்டால் வினை என்று கூலியில்லாத வேலையாளாக மாற்றி மருமகனாக ஆக்கிக்கொள்வார்.  இங்கு நான் வெளியேற்ற்ப்படும் நிலையில் முன்யோசனை இல்லாமல் என் சக ஆய்வாளரிடம் இந்த மடம் இல்லையென்றால் எனக்கென்ன கவலை இங்கிருந்து நேராக எந்தப் பத்திரிக்கை வாசலில் நின்றும் நான் ப்ரூஃப் ரீடர் வேலைக்கு வந்திருக்கேன் என்று சொன்னால் அப்படியே தூக்கிட்டுப் போயிடுவாய்ங்க தெரியுமா என்று ஆண்டுக் கணக்காக ஆய்வு என்ற பெயரில் நான் செய்த புரூஃப் ரீடர் வேலையைச் சொல்ல அவர் என்னுடைய பேராசிரியரிடம் போட்டுக் கொடுக்க அதனால் என் வழிகாட்டி என்னை வெளியே போக முடியாதபடி செய்துவிட்டார். அதுமூலம் நான் பத்திரிக்கையில் ஒரு வேலையை உருப்படியாகச் செய்யமுடியும் என்று எண்ணத் தோன்றியது

    எனது நண்பரின் புதிய முயற்சியில் அவர் முன் எடுத்த ஒரு திட்டம் சினிமாத் துறையில்  ஒரு வாரப் பத்திரிக்கை தொடங்குவது.  அந்தக் காலகட்டத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பும் சூல்நிலையில் அவரை ஆசிரியராகக் கொண்டு இந்தப் பத்திரிக்கையை நடத்தவேண்டும் என்பது அவரின் இந்த முயற்சிக்கு அடிப்படையாக அமைந்தது பத்திரிக்கையைத் தொடங்கி வடிவமைத்து உருவாக்கி வெளிவிடும் வேலையைத் திட்டமிட்டுச் செயல்படுத்தும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது.  ஆராய்ச்சி மாணவனாக இருந்தபோது சென்னை அரசினர் தோட்டத்தில் வசித்துக்கொண்டு கால் இடறிக்கீழே விழுந்தால் ஒரு தியேட்டர் படியில் விழவேண்டும் என்ற சூழலில் ஆய்வறிக்கைக்காக அல்லும் பகலும் நேரம் செலவழித்ததால் ஒரு திரைப்படம்கூடப் பார்த்ததில்லை.  ஒருமுறை என் சகஆய்வு மாணவரின் காதல் திருமண வரவேற்புக்காக இடம் புக் செய்ய ஒரு ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன்.  வாசலில் ஏகப்பட்ட கூட்டம் என்னவென்று தெரியாமலேயே வரவேற்பாளரிடம் சென்று பணம்கட்டிவிட்டுத் திரும்பி வந்தால் கூட்டம் என்னைப் பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பதுபோல் பார்த்தது.  ஏணிப்படி ஏறுமாறாக என்று கேடடதற்கு உன் அருகில் ரிசப்சனில் நின்றது யார் தெரியுமா  என்று கேட்டது கூட்டம். ஐயா தெரியாதய்யா என்று சொன்னேன்.  நீயெல்லாம் தமிழ்நாட்டில் பிறந்ததே ஒரு பெரிய பாவம் என்று சலித்துக்கொண்ட ஒரு பெரிசு பையா அதுதான் இந்தியத் திரை உலகின் கனவுக் கன்னி அவரைப் பார்க்க நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம் என்று சொன்னார்கள்.  இந்த இரண்டு நிகழ்வுகளுமே திரைத்துறையைப்பற்றிய என் பாண்டித்துவத்தைப் பறைசாற்றும்.

    எப்படியோ போடப்போகும் பணம் 5 லட்சம் வந்தால் வரட்டும் போனால் போகட்டும் நான் கவலைப்படமாட்டேன் நீங்கள் நடத்துங்கள் உங்கள் நாடகத்தை என்று சொல்லிவிட்டார் நண்பர். நன்குபடித்துப் பட்டம் பெற்ற எழுத்தாற்ற்ல் மிக்க கணினிப் பயன்பாடு தெரிந்த தலைமை ஏற்கவும் தலைமையின்கீழ்ப் பணி செய்யவும் விழைவுள்ள ஆறுபேரை ஆசிரியக்குழுவாக அமைத்து இந்திய அளவில் தலை சிறந்த இயக்குனர் நடிகர்களை அழைத்துவந்து நேருக்குநேர் சந்திப்பு பேட்டி என்று பயிற்சி அளித்து ஒவ்வொரு வாரமும் ஒருவர் தலைமையில் மற்றவர்கள் குழுவாகப் பணி செய்து பத்திரிக்கையைக் கொண்டுவரும் அளவுக்குப் பயிற்சி அளித்துப் பத்திரிக்கையின் வெள்ளோட்டமாக மூன்று மாதங்கள் பத்திரிக்கையை முழுமையாக அச்சிட்டு தெரிந்தெடுத்த சிலருக்கு அனுப்பி அவர்களின் கருத்துக் கேட்டு இறுதியில் ஐந்து நிமிட விளம்பரப்படம் ஒன்றை சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆர் ஆகியோரின் வாழ்த்துக்களுடன் உருவாக்கி அந்தப் பத்திரிக்கை வெளியானது.  கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நாடுதிரும்பாமல் அமெரிக்காவில் உயிர் துறந்தார்.  அவருக்கென்று ஆரம்பித்த பத்திரிக்கை என்பதால் வேறு  யாரையும் ஆசிரியராகப் போடாமல் அந்தப் பத்திரிக்கை பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடந்தது.

    அந்தப் பத்திரிக்கையின் ஆல் இன் அழகுராஜாவாக ஆல் ரவுண்டராக நான் இருந்த காலத்தில் ஒரு பெரிய அச்சுக்கூடத்தில் ஸ்டாப் தி பிரஸ் என்று அச்சிடுவதை நிறுத்தும் அதிகாரத்துடன் பவனிவந்து திரை உலகம் தொடர்பான ஒரு பெரிய தரவுத் தளத்தினை உருவாக்கி (திரை உலகக் கிசுகிசுவும் உள்ளடக்கம் ஆனால் வெளியிட்டதில்லை) புலனாய்வுக் கட்டுரை நம்பகமான் தகவல் என்று அது தரமான திரை உலகச் செய்திகளுடன் பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடக்க அடித்தளம் அமைத்தேன்.

    அந்தப் பத்திரிக்கை மூடப்படும்வரை பெண்களைக் காட்சிப்பொருளாகவோ கவர்ச்சிப் பொருளாகவோ காட்டாமல் ஒரு படத்தில் தாரகையாகி சிவப்பு விளக்கு வெளிச்சத்தில் மறைந்த கதாநாயகிகள் மரணப் படுக்கையில் வெளி உலகின் பார்வையில் இருந்து மறைந்து இருந்த மாபெரும் நடிகையைக் கண்டுபிடித்து வெளி உலகுக்குக் கொணர்ந்து அவரின் இறுதி ஆசையை நிறைவேற்றியது என்று மங்கையருக்கு ஒருசில நற்பணிகள் செய்தது இந்நாளின் என்னுடைய மலரும் நினைவுகளாகக் கருதலாம்.

    படத்திற்கு நன்றி உதயன்.

    Share
  • தாய்க்குப்பெருமை சேர்த்த மகன்!….

    விசாலம்                                                                                                                                                                                                                          

    ஒரு தாயின்  சொற்படி நடந்து அந்தத் தாய்க்குப் பெருமைச் சேர்க்கும் வண்ணம் ஒரு மகன் இருந்து விட்டால் அந்தத் தாய்க்கு அதைவிட வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்? ஆம்  கொல்கத்தாவில் ஒரு ஏழைக் குடுமபம்  இருந்தது

    ஒரு தாயும் அவரது மகனும் , அவர்கள் சிறிய கிராமத்தில் வ  சித்து வந்தனர் தாய் மிகவும்   சிரமப்பட்டு  உழைத்து மகனை படிக்க வைத்தார் .மகனும் தெருவில் இருக்கும்  விளக்கின் அடியில் அமர்ந்து   படிப்பான் படிக்கும் நேரம் தவிர அவனும்  மிகக் கடுமையாக உழைத்தான் ,உழைப்பின் பலன் கிடைத்தது    காலேஜும் சேர்ந்து பின்   துகலைப் பட்டப்   படிப்பும் படித்து முதல் இடத்தில் தேறினார்  பின்  மேடையிலும் பேச ஆரம்பித்து சிறந்த பேச்சாளராகவும்  ஆனார் .மிகவும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் பேசியதால் அவர் பேச்சைக் கேட்கக் கூட்டம்  அதிகம் வரும் இத்தனை இருந்தும் ப்ல மாதங் ள் வேலைக் கிடைக்காமல் இருந்ததால் வீட்டில் வறுமை மிகுந்தது தாய்க்கும் வயதானதால் முன்பு போல் வேலைச் செய்யமுடியவில்லை ஆகையால் கஞ்சி வைத்து குடிப்பார்கள்  தாய் தனக்கு இல்லாமல் தன் மகனுக்கு அளிப்பார்      மகனோ ஆசையுடன் தாய்க்கு அளிப்பார்  இத்தனைக் கஷ்டப்பட்டவர் பிற்காலத்தில்  யாவரும் போற்றும்   மகன்  ஆனார் அவர்தான் திரு ஈச்வர சந்திர வித்யாசாகர்

    பல நாட்கள் பொறுமையாக இருந்த பின்  அவருக்கு நல்ல வேலைக் கிடைத்து முதல் சம்பளம் வாங்கியதும் தன் தாயிடம்  ஓடி வந்து  அவர்  பாதங்களில் வைத்து “அம்மா எனக்காக் நீங்கள் எத்தனைக்  கஷ்டப் பட்டிருக்கிறீர்கள் உங்களுக்கு என்ன வேண்டும்? நான் உடனே வாங்கித் தருகிறேன் “என்றார்

    அதற்கு அந்தத் தாய் ” எனக்கு இப்போது ஒன்றும் வேண்டாம் தகுந்த நேரம் வரும் போது நானே கேட்கிறேன் ” என்றார்

    ஒரு சமயம் தாயுடன் கிராமத்தில் நட்ந்த ஒரு சந்தைக்கு ஈச்வர சந்தரவிதயாசாகர் புறப்பட்டார் தாய் மிகுந்த பழைய புடவையைக் கட்டிக் கொண்டு கிளம்பினார் , உடனே மனம் பொறுக்காமல்  கடையிலிருந்து நாலு  புது புடவைகள் வாங்கித் தன் தாயிடம் தந்தார் .

     “அம்மா இந்தாருங்கள் இப்போதாவது சொல்லுங்கள் ,,உங்களுக்கு என்ன வேண்டும்”

    மகனே  நமது கிராமத்தில் சிறந்த பள்ளிகூடம் இல்லை வெகு தூரம் நட்ந்து சென்றால் தான் ஒரு பள்ளி வருகிறது     அந்தக்குழந்தைகள் பத்திரமாகத்  திரும்பி வரும் வரை பெற்றோர்கள் தவித்துப் போகிறார்கள்   ஆகையால் நான் மூன்று ஆபரணங்களைக் கேட்கப் போகிறேன் முதல் ஆபரணம் நமது கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம்      அதை நீதான் கட்டிக் கொடுக்க வேண்டும்”

    மகனின் கண்களில் கண்ணீர் வழிய  தாயின் ஆசையைப் பூர்த்திச்செய்தார் , பின் கொஞ்சக்காலம்   கழிந்தப்பின் ” இரண்டாவது ஆபரணம் எது அம்மா “? என்று கேட்டார் அப்பா மகனே  கிராமத்து மக்கள் குடிநீருக்காக  மிக கஷ்டப்படுகின்றனர் ஆகையால் கிரமத்திற்கு குடிநீர் வரவழைக்க எதாவது வழி செய்  இதுதான் என் இரண்டாவது  ஆபரணம் ”  திரு வித்யாசாகரரும் பல இடத்தில் குழாய்கள்  கிணறுகள் வைத்து   அந்தக் கிராமத்தை வசதியாக்கினார் தாயின் மனமும்  மகிழ்ச்சி அடைந்தது

    ஒருநாள் தெருவில் வந்துக் கொண்டிருக்கையில்   ஒரு  யாளியைப்பார்த்து மனம் வருந்தினார் அந்தத் தாய் உடனே தன் மகனிடம் “மகனே என் மூன்றாவது ஆபரணம் கேட்கும் நேரம் வந்து விட்டது பள்ளிக்கூடம் அமைத்தாய்  குடிநீரும் கொடுத்தாய் இப்போது அவர்களுக்கு ஒரு   மருத்துவ மனையும் கட்டிக் கொடுத்து விடு  ” தன் தாயை அன்புடன் அணைத்துக் கொண்டார் அவர்      உடனே அவர் ஆசை நிறைவேறியது

    தன் மகனை அணைத்துக் கொண்டு “ஒரு தாய்க்கு  உன்னைப் போன்று ஒரு மகன் இருந்தால் போதும்  உலகமே சுவர்க்கமாகிவிடும் ‘ என்று நெஞ்சு தழுக்கக் கூறினாள் ஸ்ரீசத்யசாயி பாபா சொன்ன உண்மைச் சம்பவம்   இது


    Share
  • காட்சிகள் சில . மகளிர் தினம்

    விசாலம்

    காலை நேரம் .}    என்ன  இன்னும் பொன்னம்மா வேலைக்கு வரவில்லையே  இந்த வேலைக்காரி டென்சன்   என்னிக்குத்தான் போகுமோ ?’

    “ஏன் பொன்னம்மா இவ்வளவு லேட் ? ” ஏன் இப்படி அழுவுறே  “.

    “அத ஏம்மா கேக்கறீங்க .இஸ்கூல் பீஸுன்னு வச்சிக்கினுருந்தேன் ஒரு நூறு ரூபா  ..அதயும்  என் புருசன் எடுத்துக்குனு ஓடிட்டாரு. என் முவத்தைப்பாருங்கம்மா   கன்னத்தல எத்தன அடின்னு பாருங்கம்மா .’

    “ஆமாம்  என்ன இப்படி அடிச்சிருக்கான்  ? எதுக்கு அவனுக்கு பணம் ?

    “அதாம்மா  . அந்தப்பாழாப்போன  குடி  ……. எல்லாம் நா  பொண்னா பொறந்த வேளை  இந்த அழகல  இன்னிக்கி “மகளிர் தினமாம் ”

    கோடி வீட்டம்மா  சொல்லிச்சு  …..இதுவாம்மா  “மகளிர் தினம் .புருசன்டேந்து அடி வாங்கி சாவரதா   மகளிர் தினம் “?

    காட்சி 2        “என்னங்க  டாக்டரம்மா  என் வயித்தல வளர்ர குழந்தை நன்னாருக்குன்னு சொன்னா ……..நானு ..நன்னா சத்துள்ள  உணவை
    சாப்பிடணுமாம்

    “அது சரி  தாமரை  .    என்ன குழந்தன்னெ  கேக்கச் சொன்னேன்னே  கேட்டயா  ‘?

    ” கேட்டேங்க   . சொல்லமாட்டேன்னுட்டாங்க  . எதுவா இருந்தா என்னாங்க   ?

    “என்ன?      எதுவா இருந்தா என்னாங்க,,,,,,, இழுக்கறே  அப்போ பொட்டப்புள்ள தான் பொறக்கும்  .எனக்கு வேண்டாம் அது    ஏற்கனவே
    ஒன்னு இருக்கு சிலவு வைக்க  ….. அத  அழிச்சுடு  …”

    ” நான் அந்த பாவத்த  செய்யமாட்டேனுங்க  .  அது நம்ம குழந்தைங்க ‘

    “சீ வாய மூடு . எனக்கு வர சம்பளத்ல  இன்னொரு மவளா?    அப்படி பெத்துண்டேன்னா உங்கப்பன் வூட்டுக்கு போ  இங்க வராதே ‘

    “என்னங்க  இன்னிக்கு ‘மகளிர் தினம்” னு பேபர்ல போட்டிருந்துச்சு  இப்படி
    நடந்துக்கிறீங்களே!

    ‘மகளிர் தினமாவது மண்ணாங்கட்டியாவது .இதெல்லாம் நமக்கில்லை  அதல்லாம் பெரிய இட சமாச்சாரம்   இங்க நான் சொல்றத நீ கேக்கணும்  தெரிமா?”

    காட்சி மூன்று  . .. ஏம்பா    கொஞ்சம் பஸ்ஸ  நிறுத்துப்பா    ஸ்டாப்பில கூட ஓட்டிண்டே போறயே ‘

    ”  என்னம்மா  ஆம வேகத்ல  வந்துகிட்டு  …. ஏறுங்கம்மா  சீக்கரம் .   ”

    ” அம்மாடி   எத்தன  மேல படி  ஏறவே முடியலை   கைல வேற இரண்டு பை,,,,,, இன்னிக்கின்னு பாத்து மளிகை சாமானும் தெரியாத்தனமா வாங்கிட்டேன் வீட்ல இருக்கற ஆம்பள பசங்கள  என்னத்த சொல்றது ?”

    ” என்னங்கம்மா   ……ஏறிட்டீங்களா ? இந்தாங்க  சீட்டு  ‘

    ” என்னப்பா  நான் எப்படிப்பா    சில்லறை  எடுக்கறது  உட்க்கார ஒரு இடமில்ல .  யாராவது ஒத்தராவது எழுந்து எடம் விடறாளா பாரு
    எல்லாம் இளம் வயசுகள் . ஆனா  கூட வயசுக்கு மரியாத கொடுக்கறாளோ பாரு ஏதுடா ஒரு வயசான பொம்பள  நிக்கறாளே ன்னு
    ஒத்தருக்கும் தோணலயே ‘

    “அம்மா  அதெல்லாம் அந்தக்காலம் .சரி சரி டிக்கட்ட பிடிங்கோ  ‘

    ”  ஏண்டா  சுரேஷ்  மகளிர் தினத்துக்கு    உங்கம்மாக்கு   என்ன வாங்கி  தரப்போறே ‘

    ஒ  இன்னிக்கு மகளிர் தினமா  மறந்தே போயிடுத்து , வேலன்டின் டே தான் எப்பவும் ஞாபகம் இருக்கு ‘

    “சரி சரி இதான் சாக்குன்னு  என் கன்னத்தை கிள்ளாதே . பக்கத்தல நிக்கற அந்த வயசான மாமி பாக்கறா,”

    “எழுந்து இடம் தரவா?’

    ” என்ன லூஸுடா நீ     என்னிக்கோ உம் பக்கத்தல உட்காந்துக்க  சான்ஸ் கிடைச்சிருக்கு அதபோய்  விடறேங்கறயே

    காட்சி  4      ஏண்டி கலா  பக்கத்தாத்து மாமாக்கு இந்த அல்வாவ கொடுத்துட்டு வா இத்தன நாளா உனக்கு கணக்கு வேற கத்துக்கொடுத்திருக்கா தவிர உன் பிறந்த நாள் வேறு ‘

    “சரியம்மா  கொடு .”

    ”  மாமா  சீனுமாமா  ..எங்கே இருக்கீங்க  ? ஓ உள்ளே படுத்திருக்கீங்களா? ‘

    ‘ ஆமாண்டி செல்லம்    தலவலி …  உள்ள வா ……. கையில என்ன ?

    “அல்வா மாமா  . இன்னிக்கி என் பெர்த் டே . மாமா’

    ‘ ஆஹா   கங்ராஜுலேஷன்ஸ் .அதான் இன்னிக்கு இந்த நீல டிரெஸ்லே ரொம்ப அழகா இருக்கே என்ன போனமாசம் முழுக்க வரலை ,’

    ” அதுவா   …….வந்து      வந்து ..’

    ஐயோ என்ன வெட்கம் பாரு  . நீ பெரிய மனுசி ஆயிட்டே  இல்லையா ? என்ன ஒன்னும் பேசமாட்டேங்கறே .அது  சரி  அங்க  தலவலி
    பாம் வச்சிருக்கேன்  அத எடுத்துண்டு வந்து என் நெத்திலே தடவி விடு  .’

    சரி மாமா  ”

    “ஆஹா  என்ன இதமாக தடவி விடறே . அப்படியே உன்னைக்கட்டிக்கணும்போல  இருக்கு ‘

    ” சீ  என்ன  மாமா செய்றீங்க   . தப்பான காரியம் செய்யறீங்க   என்ன விடுங்க நான் வரேன் ஐயோ அம்மா  …… என்ன இந்த மாமா
    தனி ரூம்முக்கு கூட்டிண்டு போறாம்மா  . ‘

    ” உங்கம்மாவுக்கு  காதில விழாது  .  சும்மா இரு . இன்னிக்கு மகளிர் தினம் அதான் உனக்கு இந்த பரிசு   . என்  அன்பை  உனக்கு காட்டவேண்டாமா ”

    “என்ன  இது அல்வா கொடுக்கப்போன பொண்ணை இன்னும் காணோம்   ஏண்டி கலா என்னடி பண்ற இத்தன நேரம் ”

    காட்சி 5   என்னம்மா  நான் இத்தன நிறைய மார்க் எடுத்து  கிளாசிலே முதல் இடம் வந்திருக்கேன்  . மேலே படிக்க விடமாட்டேங்கற ‘

    ” எல்லாம் இத்தன படிச்சது போறும் ஜானா …  கல்யாணம் ஆகி ஒரு இடத்துக்குத்தானே போணும்  உன் தம்பிகள் இரண்டு பேர் இருக்கா ஞாபகம்  வச்சுக்க  உனக்கே படிப்புக்கு சிலவழிச்சுட்டா  அவாளுக்கு எங்க போறது ?’

    “என்னம்மா  நீ   ரமேஷுக்கு படிப்பே வரலை   சிவா  ஊரை சுத்தறான் .  ஆனா நான் எல்லாத்லேயும் முதலா இருந்தாலும் மேலே படிக்க விடமாட்டேங்கற அப்பா  நீங்களாவது சொல்லுங்கோ இந்த  அம்மாக்கு ‘

    ”   ஜானா செல்லம் அம்மா சொல்றது சரிதான் நீ உன் புக்காத்துக்க போனப்பறம்  மேலே படி இல்ல  ஸ்டேட்ஸ்க்குத்தான் போ

    இப்ப  உன் தம்பிகளத்தான்  பாக்கணும்  ‘

    “என்னப்பா  நீங்களுமா   …….. மகளிர் தினத்ல இப்படி  ஒரு பதிலா ?  நம் நாடு மாறவே போறதில்ல   இந்த பெண்கள் விஷயத்ல ,,,,,,,

    காட்சி  6     ” அன்பு சகோதரிகளே   இன்று மகளிர் தினம்   மார்ச் எட்டாம் தேதி  .   பெண்கள் சுதந்திரத்திற்கு இன்னும் நாம் போராட வேண்டும்

    ஆண்களுக்கு சரிசமமாக நாம் எல்லா வேலைகளையும் கற்றுக்கொண்டு அவர்களைவிட ஒரு படி மேலேயே வளர்ந்திருக்கிறோம்
    ஆனாலும்  நமக்கு ஒரு  ரெகக்னிஷன்  கிடைப்பதில்லை  வீட்டிலும் அடிமைப்போல் தான்  வாழ்க்கை இருக்கிறது

    டிரீங்க  டிரீங்  ……….. ” ஒரு நிமிடம்    இதோ வந்துவிட்டேன்

    ” என்னங்க  என்ன வேணும்  இந்த நேரத்தல கூப்படறீங்க நான் மேடைல பேசிண்டிருகேங்க ‘

    “போதும் பேசினது  வீட்டுக்கு வந்து தொலை , ஒம் பொண்ணு  முத்தரசி ஙொய் ஙொய்ன்னு  அழறது என்னால பாத்துக்க முடியாது

    “ஏன் சீட்டு விளையாட போணுமா என்ன…….  வழக்கம்போல ‘

    ‘ நீ முதல்ல வீட்டிற்கு வா  அப்பறம் பேசலாம் ‘

    “மன்னித்துக்கொல்ளுங்கள்  அன்பு சகோதரிகளே  நான் என்ன சொன்னேன்  ஆம் நாம் மகளிர் சுதந்திரத்திற்காக போராட வேண்டும்

    தைரியமாக  சூழ்நிலையைச் சமாளிக்க வேண்டும் தன் காலிலிலேயே நிற்க கற்றுக்கொள்ள வேண்டும்   .  மகளிர் தினத்திற்காக  என் நல் வாழ்த்துகள்

    அவசரமாக நான் வீடு போக வேண்டும் . நன்றி வணக்கம்

    Share
  • சிரிப்பில்…

       செண்பக ஜெகதீசன்

    ஆளுக்கு ஆள் ஆயுள்,

    அளவிலுண்டு வேறுபாடு-

    கூடலாம், குறையலாம்..

     

    அதில் அவன்

    அழுதுகொண்டே பிறக்கிறான்

    அழுதுகொண்டே வாழ்கிறான்

    அழுதுகொண்டே சாகிறான்..

     

    ஆனால் இந்தப் பூக்கள்,

    சிலமணி நேரம் வாழ்ந்தாலும்

    சிரித்துக்கொண்டே இருக்கின்றன..

     

    புரிந்ததா மனிதனே,

    தெரிந்துகொள் பார்த்து-

    சிரித்து வாழ்

    சிரிக்க வாழாதே அழுது…!

     படத்துக்கு நன்றி

     http://stuffpoint.com/flower/image/104090/beautiful-iris-purple-flowers-picture/                                       

    Share
  • இஸ்ரேல் பயணம் – 10…….

     

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நாங்கள் கடைசியாக இஸ்ரேலில் பார்த்த இடம் மசாடா (Masada).  இங்கு போவதற்குச் சொந்தமாக டாக்சி வைத்திருக்கும் ஒரு பயண வழிகாட்டி கிடைத்தார்.  பிழைப்புக்காக இவர் இந்தத் தொழிலைச் செய்யவில்லை.  கொஞ்சம் வருமானம் வருகிறது என்பதோடு ஏதாவது செய்துகொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவும் இதைச் செய்து வருகிறார்.  அமெரிக்காவில் எங்கள் யூத நண்பர் ஒருவரின் நண்பர் மூலம் இவருடைய முகவரி கிடைத்தது.  இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டதும் உலகின் பல நாடுகளிலிருந்தும் யூதர்கள் இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்தனர்.  எங்கள் நண்பரின் நண்பரும் அவர் மனைவியும் இப்படி இஸ்ரேலுக்கு அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள்.  இவர் மனைவி ஹீப்ரு பல்கலைக் கழகத்தில் வேலைபார்க்கிறார்.  இவர்களிடமிருந்து பயண வழிகாட்டியின் முகவரியைப் பெற்றுக்கொண்டதும் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.  மிகவும் வெக்கையான இடம், நிறையத் தண்ணீர் கொண்டுவாருங்கள், உடன் தலையை நன்றாக மூடிக்கொள்ள ஒரு தொப்பியையும் கொண்டுவாருங்கள் என்று முதலிலேயே எங்களை எச்சரித்தார்.  சென்னை வெயிலுக்குப் பழகிப் போயிருந்த எங்களுக்கு அப்படி என்ன வெயில் இருந்துவிடப் போகிறது என்று நினைத்தோம்.  அங்கு காரில் போகும்போதும் அந்த இடத்தை அடைந்த பிறகும் இருந்த வெக்கையைப் பார்த்த பிறகுதான் அவர் சொன்னது எவ்வளவு சரி என்று தோன்றியது.  வழி நெடுக பாலைவனப் பிரதேச மணல் குன்றுகளும் ஆங்காங்கே பேரீச்சம்பழத் தோட்டங்களும் இருக்கின்றன.  ஜெருசலேம் நகரிலிருந்து 30 மைல் தொலைவில் இருக்கும் மசாடாவிற்குச் செல்லும் சாலை நேர்த்தியாக இருக்கிறது.  வழியில் எந்த விதமான கட்டடங்களும் இல்லை.  ஒரே மணல் காடாகக் காட்சியளிக்கிறது.

    பாலஸ்தீனம் முழுவதும் சிறிய குன்றுகளும் சமவெளிகளும் நிறைந்து காணப்படுகிறது.  அதற்கு மேல் பாலைவனப் பிரதேசம் மிகுதியாக இருக்கிறது.  மத்திய தரைக் கடலை நோக்கிச் செல்லும்போதுதான் சமவெளிப் பிரதேசம் இருக்கிறது.  மசாடா, இஸ்ரேலின் தென்கிழக்குக் கோடியில் உள்ள ஜுடாயா (Judean) பாலைவனப் பகுதியில் இருக்கிறது.  இதற்குப் பக்கத்தில் இருக்கும் உயிரற்ற கடலின் (Dead Sea, இதற்கு ‘சாக்கடல்’ என்றும் பெயர்) மட்டத்திலிருந்து மசாடா 1,300 அடி உயரத்தில் இருக்கிறது.  இதை ஊர் என்பதை விட பெரிய குன்றின் மேல் உள்ள சமதளப் பகுதியில் கட்டப்பட்ட, மதில் சுவரால் சூழப்பட்ட அரண் என்று கூறலாம்.  இதற்குள் மூன்று அரண்மனைகள், யூதர்களின் கோயிலான சினகாக் ஒன்று, பல வீடுகள், சிப்பாய்களின் குடியிருப்புகள், தானியக் கிடங்குகள், தண்ணீரைச் சேமித்து வைக்கப் பெரிய தொட்டிகள், பொது மற்றும் தனிப்பட்டவர்களின் குளியல் அறைகள் என்று அக்காலத்திய பொறியியல் விநோதங்கள் பல இருக்கின்றன.

    மசாடா 2001-இல் ஐ.நா.வின் உலகப் பாரம்பரிய இடங்களில் (UN World Heritage Sites) ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. மசாடா என்றால் ஹீப்ரு மொழியில் கோட்டை என்று அர்த்தமாம்.  இது கி.மு. இரண்டாம், முதலாம் நூற்றாண்டுகளிலேயே கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.  கி.மு. 42 – 4 வரை யூத மன்னனாக விளங்கிய ஹெராட் (Herod) (இவன் ரோமானிய அரசர்களின் ஆளுகைக்குக் கீழ் இருந்தவன்) ஒரு வேளை தன் பதவிக்குப் பங்கம் வந்தால் தான் அதில்  தங்கிக்கொண்டு மறுபடி ஆட்சியைப் பிடிக்க ஏதுவாக இதை விரிவுபடுத்திக் கட்டினானாம்.  ஆனால் அதை உபயோகிக்கும் தேவை ஹெராட் மன்னனுக்கு ஏற்படவில்லை.

    ஹெராட் இறந்ததும் மசாடா ரோமானியர்களின் வசம் சிக்கியது.  கி.பி. 66-இல் யூதர்கள் ரோமானியர்களை எதிர்த்துப் போராடி மறுபடி இதைத் தங்கள் வசமாக்கிக்கொண்டனர்.  ஆனால் கி.பி. 70-இல் தங்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த யூதர்களை ரோமானிய அரசன் நசுக்கி ஜெருசலேமில் இருந்த அவர்களின் இரண்டாவது கோவிலையும் இடித்துத் தரைமட்டமாக்கினான்.  (அதன் வெளிச் சுவர் ஒன்று மட்டும் இப்போது இருக்கிறது.  இது இஸ்ரேலியர்களின் புனித இடங்களில் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது.)  ஜெருசலேமை இழந்த பிறகு பல யூதர்களுக்கு பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  ஆனால் ரோமானியர்களை எதிர்த்தே தீருவது என்று முடிவுசெய்து 960 யூதர்கள் மட்டும் – இவர்களுடைய குடும்ப அங்கத்தினர்களும் சேர்ந்து – ரோமானியர்களிடமிருந்து தப்பிக்கத் தங்கள் வசமிருந்த மசாடாவிற்குப் போய்த் தங்கினர்.  அங்கு இரண்டு வருடங்கள் தங்கி ரோமானியர்களிடமிருந்து தங்களைக் காத்துக்கொண்டனர்.  கி.பி. 73-இல் ஃப்ளேவியஸ் சில்வா (Flavius Silva) என்னும் ரோமானிய படைத் தளபதி மசாடாவை முற்றுகையிட்டான்.  மலையின் அடிவாரத்தில் 10,000 ஆட்களைக் கொண்ட படையைத் தங்கச் செய்து மலைக்கு மேல் செல்வதற்கு படிகளைக் கொண்ட சாய்தளத்தைக் (ramp) கட்டினான்.  இந்தப் படை கோட்டையைச் சூழ்ந்துகொண்டு கோட்டைக்குள் இருப்பவர்கள் தப்பிக்க முடியாமல் செய்தது.  கடைசியாகச் சுவர்களைத் தகர்க்கும் இயந்திரங்களை இந்தச் சாய்தளம் மூலம் மேலே கொண்டுசென்று கோட்டையை ரோமானியப் படை தகர்த்தது.  இனி மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்பதை அறிந்த யூதர்கள் ரோமானியர்களிடம் சிக்குவதற்குப் பதிலாக உயிரை இழப்பதே மேல் என்று முடிவுசெய்து எல்லோரும் இறந்துவிடுவது என்று முடிவுசெய்தார்களாம்.  யார் யாரைக் கொல்ல வேண்டும் என்று சீட்டுப்போட்டு எடுத்தார்களாம்.  முதலில் பத்துப் பேர் மற்றவர்களைக் கொல்ல வேண்டும் என்றும் பின் அந்தப் பத்துப் பேரை யார் கொல்ல வேண்டும் என்றும் முடிவுசெய்தார்களாம்.  இதற்குரிய சான்றுகளை இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.  இரண்டு பெண்களும் மூன்று குழந்தைகளும் எப்படியோ தப்பித்தார்களாம்.  மசாடா கோட்டைதான் பாலஸ்தீனத்தில் யூதர்களின் கடைசி இடமாக விளங்கியது.

    மசாடா ஒரு செங்குத்தான குன்று.  இதன் மேல்தளம் சமதளமாக இருக்கிறது.  அதன் விஸ்தீரணம் இருபது ஏக்கர்.  இந்தக் கோட்டைக்கு இரண்டு சுற்றுச் சுவர்கள் உண்டு.  வெளிச்சுவரின் நீளம் 1,400 மீட்டர்.  இதற்கு இணையாக இதற்கு உள்புறம் இன்னொரு சுவர் இருக்கிறது.  இவை இரண்டும் எளிதில் தகர்க்க முடியாதவை.  வெளிச் சுவரின் அகலம் 1.5 மீட்டர்; உயரம் நான்கு முதல் ஐந்து மீட்டர்.  உள்சுவரின் அகலம் ஒரு மீட்டர்.  இரண்டு சுவர்களுக்கும் இடையேயுள்ள நான்கு மீட்டர் இடம் 110 அறைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.   இந்த அறைகளுக்குள்ளே நுழைய வடக்குப் புறமாக வாசல் அமைக்கப்ப்பட்டிருக்கிறது.  மசாடா முழுவதும் கற்களால் கட்டப்பட்டிருப்பதாலும் இங்குள்ள சீதோஷ்ணநிலை மிகவும் ஈரச்சத்தில்லாமல் வெப்பமாக இருப்பதாலும் பல நூற்றாண்டுகளாக இவை அப்படியே பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.  வெளிச்சுவரில் 37 கோபுரங்கள் இருக்கின்றன.  இவை ஒவ்வொன்றுக்கும் இடையே 35-90 மீட்டர் இடைவெளி இருக்கிறது.  இந்தக் கோபுரங்களில் ஏறுவதற்கு உள்ளேயே படிகள் கொண்ட சாய்தளம் இருக்கிறது.  இரண்டு சுவர்களுக்கும் இடையே உள்ள அறைகளின் மேலே கூரை வேயப்பட்டிருக்கிறது.  இந்தக் கூரைகள் மரக்கட்டைகளாலும் அவற்றிற்கு குறுக்கே செங்கோணத்தில் (right angle) அமைக்கப்பட்டிருக்கும் நாணல்களாலும் கட்டப்பட்டிருக்கின்றன.  இதற்கு மேலே பின்னப்பட்ட பாய்களை வைத்துக் கூரையை மூடியிருக்கிறார்கள்.  இந்தக் கூரைகள் மிகவும் பலமாக இருந்ததால் வீரர்கள் இதன் மீது நடக்கவும் கனமான பொருட்களை வைத்துக்கொள்ளவும் வசதியாக இருந்திருக்க வேண்டும்.  மலை மீது ஏறிவந்த எதிரிகளின் மீது வீரர்கள் எறிந்த கற்கள் இடிபாடுகளுக்கிடையே கிடைத்திருக்கின்றன.  சுவர்களுக்கு இடையே இருந்த அறைகள் வீரர்கள் தங்கிகொள்வதற்காகக் கட்டப்பட்டவை.  ஆனால் ஹெராட் காலத்தில் இந்த அறைகளில் யாரும் தங்கியிருக்கவில்லை.  ரோமானியரை எதிர்த்துப் போராடிய யூதர்கள் காலத்தில் அவர்கள் இந்த அறைகளில் தங்கியிருந்திருக்க வேண்டும்.  அவர்கள் உபயோகித்த அடுப்புகள், பாத்திரங்கள் இன்னும் இருக்கின்றன.

    அரணிற்கு உள்ளே மூன்று அரண்மனைகள் இருக்கின்றன.  அரண்மனைகளுக்கு அருகே உள்ள வீடுகள் எல்லாவற்றிலும் கிட்டத்தட்ட ஒரே அமைப்பில் கட்டப்பட்டிருக்கின்றன.  முதலில் ஒரு அறை,  பின் முற்றம், அதற்குப் பின் அறைகள் இருக்கின்றன.  இவற்றின் சுவர்களில் சுவர்ச் சித்திரங்கள் காணப்படுகின்றன.  தொல்பொருள் ஆராய்ச்சிக்குப் பிறகு அவற்றை மூடியிருந்த மண் அகற்றப்பட்டதால் சில சித்திரங்கள் மங்க ஆரம்பித்தனவாம்.  அவற்றை ஜெருசலேமிற்கு எடுத்துச் சென்று புதுப்பித்து மறுபடி அதே இடங்களிலேயே பொருத்தினார்களாம்.  மசாடாவில் உள்ள கட்டடங்கள் யாவும் அந்தக் கால கட்டடக்கலையின் நேர்த்திக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

    பல காலம் தங்குவதற்குத் தேவையான வசதிகள் கோட்டைக்குள் இருந்தனவாம்.  மழைத் தண்ணீர் ஒரு இடத்தில் சேர்ந்து பின் தொட்டிகளில் சேர்வதற்குரிய வகையில் அமைத்திருக்கிறார்கள்.  அங்கு வருஷம் முழுவதும் பெய்த மழையின் அளவு 22 செண்டி மீட்டர்கள்தான்.  வடக்குப் பகுதியில் இருக்கு அரண்மனைக்குப் பக்கத்தில் உள்ள இடம் மிகவும் செழிப்பானதாம்.  இந்த இடத்தை மற்ற எந்தக் காரியத்திற்காகவும் உபயோகித்ததாகத் தெரியவில்லை.  இரண்டு வருடங்களுக்கு மேலேயே அவர்கள் அங்கு தங்க நேர்ந்திருந்தாலும் இந்த இடத்தில் விளைந்ததை வைத்து சமாளித்திருப்பார்களாம்.  மூன்று அரண்மனைகள் இருக்கின்றன.  ஹெராட் தங்குவதற்கான அரண்மனை, விருந்தினர்களை வரவேற்கும் இடம், சிப்பாய்கள் தங்கும் விடுதிகள், விசாலமான குளியல் அறைகள், பொழுதுபோக்கிற்கான இடம் என்று இன்று இடிபாடுகளாகக் காணப்படும் இடங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

    மலைக்கு மேல் செல்வதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன.  முதலாவது முதல் முதலாக யூதர்கள் கட்டிய ‘பாம்புப் பாதை’.  இது மிகவும் செங்குத்தாக இருக்கிறது.  இதை யாரும் இப்போது உபயோகிப்பதில்லை.  இரண்டாவதாக ரோமானியர்கள் கட்டிய படிகளைக் கொண்ட சாய்தளப் பாதை.  மலைக்கு மேல் போவதற்கு இந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் இருக்கிறார்கள்.  படிகளில் ஏறிச் செல்வதற்கு மலைக்காதவர்கள் இதில் செல்லலாம்.  அதிக தூரம் ஏற முடியாதவர்களுக்கு ‘கேபிள் கார்’ வசதி இருக்கிறது.  மலையடிவாரத்திலிருந்து ஆரம்பிக்கும் இந்த சேவை மூலம் நேரே மலை உச்சிக்குப் போய்விடலாம்.  மலைக்கு மேலே இருக்கும் இந்த அரண் முழுவதும் சமதளத்தில் இருக்கிறது.  கேபிள் காரிலிருந்து இறங்கியவுடன் நேரே அரணின் எல்லா இடங்களுக்கும் நடந்து செல்லலாம்.

    மசாடா பாலஸ்தீனத்தின் ஒரு கோடியில் இருப்பதாலும் இங்கு யாரும் வரவில்லையாதலாலும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக பாழடைந்து போயிருந்த கோட்டையை இஸ்ரேலிய அரசு தேவையான இடங்களில் புதுப்பித்திருக்கிறது.  1965-இல் இந்த அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டது.  இப்போது முன்னால் எப்படி இருந்தது என்று கற்பனை செய்து புதுப்பித்திருகிறார்கள்.

    ஜோஸபஸ் ஃப்ளேவியஸ் (Josephus Flavius) என்னும் வரலாற்று ஆசிரியர் யூதர்கள் ரோமானியர்களை எதிர்த்து மசாடாவில் தங்கிப் போர்புரிந்ததை யூதர்களின் யுத்தம் (The Jewish war) என்ற தன் நூலில் எழுதியிருக்கிறார்.  இவர் யூதராகப் பிறந்தவர்.  யூதர்கள் ரோமானியரை எதிர்த்ததைத் தடுத்து நிறுத்த முயன்றார்; ஆனால் முடியவில்லை.  பின்னர் யூதர்களின் சார்பில் சண்டையிட்டு ரோமானியர்களால் சிறைபிடிக்கப்பட்டுப் பின்னால விடுவிக்கப்பட்டார்.  யூதர்களுக்கும் ரோமானியர்களுக்கும் இடையே தூது போய்க்கொண்டும் இருந்திருக்கிறார்.  கடைசியாக ரோமானியர் பக்கம் சேர்ந்து ரோமானியக் குடிமகன் ஆனார்.  ரோமானிய அரசன் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த யுத்தத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்.

    பயணிகளுக்கு வசதியாக மலைக்கு மேலேயே இப்போது குடிதண்ணீர் வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள்.  களைப்படையும் பயணிகள் ஓய்வு எடுக்க நிழல் தரும் இடமும் கல்லினால் செய்யப்பட்ட பெஞ்சுகளும் இருக்கின்றன.  இத்தனை வசதிகள் இருந்தும் அங்கு அடிக்கும் வெயில் யாரையும் அசத்திவிடும்.  தண்ணீரைக் குடித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.  வெயிலிலிருந்து காத்துக்கொள்ள தலையில் தொப்பியையும் எப்போதும் அணிந்துகொள்ள வேண்டும்.

    மசாடா யூதர்களின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் சின்னமாக இப்போது விளங்குகிறது.  இஸ்ரேலியப் பள்ளிக் குழந்தைகளை இங்கு அழைத்து வந்து யூதர்கள் ரோமானியர்களை எதிர்த்து நின்ற வீரத்திற்குச் சான்றாக  இந்தக் கோட்டையைக் காட்டுவார்களாம்.  இஸ்ரேலியப் படைகள் தங்கள் பயிற்சிகளை முடித்த பிறகு இங்கு வந்து ‘மசாடா இனி ஒரு போதும் வீழ்ச்சி அடையாது’ (‘Masada shall not fall again’) என்று சூளுரைப்பார்களாம்.

    மசாடாவிலிருந்து சிறிது தொலைவில் இருக்கும் உயிரற்ற கடலைப் பார்க்கச் சென்றோம்.  இதன் நீர் மிகவும் உப்பாக இருப்பதால் இதில் உயிரினங்கள் எதுவும் இல்லை.  இந்தக் கடல் நீருக்கும் மண்ணிற்கும் நிறைய மருத்துவக் குணங்கள் இருக்கின்றன என்கிறார்கள்.  இதனால் இதன் அருகில் உடல் பயிற்சிக்குத் தேவையான வசதிகள் கொண்ட ஓட்டல்கள் இருக்கின்றன.  இது ஒரு சிறிய ஏரியின் அளவுதான் இருக்கும்.  ஆனாலும் நீர் உவர்ப்பாக இருப்பதால் கடல் என்று அழைக்கிறார்கள்.  இதன் ஒரு பகுதி ஜோர்டான் நாட்டிலும் ஒரு பகுதி இஸ்ரேலிலும் இருக்கிறது.  இதன் நீளம் தெற்கு வடக்காக 47 மைல்கள்தான்; அகலம் 10 மைல்கள்.  இது கடல் மட்டத்திற்குக் கீழே 1300 அடியில் இருக்கிறது.  இதுதான் உலகிலேயே தாழ்ந்த இடம் என்கிறார்கள்.  ஜோர்டன் நதிதான் இதில் கலக்கிறது.  இப்போது ஜோர்டன் நதியின் நீரின் பெரும் பகுதியை விவசாயத்திற்குப் பயன்படுத்துவதால் இந்தக் கடலின் நீர் மட்டம் குறைந்துகொண்டே போகிறதாம்.

    இந்தக் கடல் பற்றிய விளம்பரங்களில் ‘இதில் மூழ்கவே முடியாது.  அப்படியே மிதந்துகொண்டே இருக்கலாம்.  இதற்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு’ என்று போட்டிருக்கிறார்கள்.  அந்த இடம் மிகவும் வெக்கையாக இருப்பதால் கடல் நீர் மிகவும் சூடாக இருக்கிறது.  கரையில் உள்ள மணலில் கால் வைக்கவே முடியவில்லை.  அப்படி ஒரு சூடு.  சிலர் தண்ணீரின் மேலே மிதந்துகொண்டிருந்தார்கள்.  கடலின் கரைக்கு அருகிலேயே உப்பற்ற குளிர்ந்த நீர், குழாய்கள் மூலம் வருவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  கடலில் மிதந்துவிட்டு இவற்றில் நீராடிவிட்டு வரலாம்.  கடலுக்குப் பக்கத்திலேயே உல்லாசப் பயணிகளுக்கு வசதியாக உணவகங்கள் இருக்கின்றன.

    இதையடுத்து நாங்கள் பார்க்கச் சென்றது உயிரற்ற கடல் சுவடிகள் (Dead Sea Scrolls) கண்டுபிடிக்கப்பட்ட கும்ரான் (Qumran) என்னும் குகைகள் அடங்கிய இடம்.  கி.மு. 150-க்கும் கி.பி. 68-க்கும் இடையில் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு பகுதியினர் தங்களுடைய கடவுளின் தூதர் வருவார் என்று எதிர்பார்த்து மற்றவர்களிடமிருந்து தனித்து எளிய வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தூதரை வரவேற்கும் ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.  இவர்கள் இந்தச் சுவடுகளை விட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.  1948-இல் பெடுயின் (Bedouin) என்னும் ஆடு மேய்க்கும் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் தற்செயலாக இந்தக் குகைகளுக்குள் ஒன்றில் காணாமல் போய்விட்ட தன் ஆட்டுக்குட்டி ஒன்றைத் தேடிச் சென்றிருக்கிறான்.  அங்கு தாழிகளுக்குள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த சுவடிகளைக் கண்டிருக்கிறான்.  இந்தச் சுவடிகள் கிறிஸ்துவுக்கு முன் எழுதப்பட்ட யூதர்களின் வேத புத்தகமான தோராக்களின் (Torah) விளக்கங்கள்.  இவை கண்டுபிடிக்கப்பட்டதும் முதலில் இவை கிறிஸ்துவ சமயத்தின் வரலாற்றையே மாற்றிவிடலாம் என்று கிறிஸ்துவர்கள் பயந்தார்களாம்.  ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. முன்பே கூறியபடி, இந்தச் சுவடிகள் இப்போது மிகவும் பத்திரமாக இஸ்ரேல் மியுசியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    (தொடரும்)

    மசாடாவின் படங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

    https://picasaweb.google.com/108173580006522327175/MasadaQumranAndDeadSea?authkey=Gv1sRgCJL_nIiBia7v1AE

     

     

     

     

     

     

     

     

    Share
  • பிள்ளை பாலுக்கு அழுகிறது

    -கிருஷ்ணமாச்சாரி

     

    அழுதது நான், சிரித்தனர் பலர்,

    பாலுக்கு பிள்ளை அழுகிறது

    என கரிசனத்தில்  சிலர்..

    அழுதது  நான், வெய்தனர் பெற்றோர்

    Ballக்கு பிள்ளை அழுகிறது

    என அறிவுரையில் சிலர்

    பால் படித்து, பால் சேர்த்து, பால் சேர்ந்து

    பெற்ற என் பாலகன்

    இன்று வெளிநாட்டில்

    நாளை எண்ணும் நான்

    இன்றும் அழுகிறேன்..

    பிள்ளை பாலுக்கு அழுகிறது.

    என முணுமுணுக்கும் பலர்.

    பாலுக்கு அழுவதே வாழ்க்கையாய்..

     

    படத்துக்கு நன்றி: http://www.dreamstime.com/royalty-free-stock-image-circle-life-sign-image17022616

     

    Share
  • ஒரு மரத்தின் நாட்குறிப்பேட்டிலிருந்து ….

     

    பி. தமிழ்முகில் நீலமேகம்

     

     

    ஒரு மரத்தின் நாட்குறிப்பேட்டிலிருந்து :

     

    நிலத்துடன் உறவாடி

    காற்றுடன் கதை பேசி

    மேகத்துடன் நட்பு பாராட்டி

    எத்தனையோ புள்ளினங்களை

    எம் கரங்களில் தாங்கி

    தஞ்சம் கொடுத்து

    மனித குலத்திற்கு

    எம்மையே அர்ப்பணித்து

    தியாகச் சுடராய்

    உயிருடன் இருக்கும் போதும்

    மரித்து விட்ட பின்பும்

    ஏதேனுமொரு வகையில்

    பயனுளதாய் – எடுத்த பிறவியின்

    நோக்கம் தனை நிறைவேற்றிடும்

    நாங்கள் – மண்ணின் மைந்தர்களன்றோ ??

    எங்களைக் காத்தல் உங்களின்

    கடமையன்றோ மனிதர்களே ??

    இன்று உங்கள் சுயநலத்திற்காக

    எங்களை காவு வாங்குகிறீர் !!

    எதிர்காலத்தில் எமக்காய் நீங்கள்

    ஏங்கும் நாட்களும்

    வெகு தொலைவில் இல்லை !!

    சுதாரித்து எம்மைக் காத்தால்

    நாளைய வாழ்வு

    வளமாய் எம்முடன் !!!

    இல்லையேல் – மரமும்

    மனித இனமும் இனி

    அருங்காட்சியகத்தில் தான் !!!

    Share
  • தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் – 11

    திவாகர்

    ஒரு நல்ல திரைப்படம் எனும்போது, நல்ல கதையமைப்பு, அளவான திரைக்கதை, மனதில் பதியும்படியான வசனம், திறமையான டைரக்‌ஷன், ஒலி, ஒளி, இசை, கருத்தாழம் மிக்க பாடல்கள், அதற்கும் மேலாக திறமையான நடிக நடிகையர்கள் இவைகள் எல்லாம் அழகுற சேர்ந்தால்தான் அந்தத் திரைப்படம் வெற்றிகரமாக அமையும். பல நாட்கள் மக்களால் பார்க்கப்பட்டும் ரசிக்கப்பட்டும் புகழின் உச்சியை அடையும். ஆனந்த விகடனில் வெளிவந்த ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ கூட ஒரு நல்ல திரைப்படம் போலத்தான். ஆனால் இந்தத் தொடரில் இரண்டு பேர், ஒருவர் தேவன் இன்னொருபேர் சில்பி, இருவர் மட்டுமே சேர்ந்து ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை விட அதிக ஆர்வத்தை வாசகர்களிடையே இத்தொடர் மூலம் ஏற்படுத்தினர் என்று சொல்லலாம்.

    1948 ஆம் ஆண்டில் ஓவியர் சீனிவாசன் என்னும் ’சில்பி’யைக் கொண்டு தமிழகத்தில் உள்ள கோயில் கடவுளர் மற்றும் சிற்பச் செல்வங்களை அப்படியே சித்திரத்தில் கொண்டுவந்து பதிப்பித்தால் என்ன என்ற ஒரு திட்டம் தேவன் மூளையில் உதித்திட, அதை உடனடியாக செயலில் காட்டினார். தமிழ்நாட்டில் ஏறத்தாழ சிறப் எழில் கூட்டிய எல்லாக் கோயில்களையுமே தென்னாட்டுச் செல்வங்களில் காணலாம். முக்கியமாக தஞ்சை, தாராசுரம், திரிபுவனம்,  ஸ்ரீரங்கம், பேரூர் போன்ற கோயில்களில் உள்ள தெய்வங்களோடு அங்கு கொஞ்சும் எழிலுடன் காணக்கிடைக்கும் சிறப்ங்களையும் கோட்டோவியமாகக் காண்பிக்கப்பட்டது. தென்னாட்டுச் செல்வங்களில் தலையானதாக சில்பியின் வரைவுகள் போற்றப்பட்டன. மேலே குறிப்பிட்டது போல திரைக்கதை வசன டைரக்‌ஷனை தேவன் பார்த்துக் கொள்ள ஏனைய முக்கிய வேலைகளை சில்பி பார்த்துக் கொள்ள, இந்தத் தொடர் வெளிவர வெளிவர  ஆனந்த விகடன் பத்திரிக்கையின் தரம் எங்கோ மேல்வானத்து உச்சியில் ஏற்றப்பட்ட காலங்கள் கூட அவைதான் என்றே சொல்லலாம். அந்தச் சமயத்தில் ஆனந்த விகடன் நிறுவனமான ஜெமினியின் ’சந்திரலேகா’ திரைப்படம் வேறு திரையுலகத்தை கலக்கிக்கொண்டிருந்தது என்பதையும் வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

    ஒரு திரைப்படம் நன்றாக ஓடினால் என்னதான் திறமையான டைரக்டர், நல்ல திரைக்கதை போன்றவை பெரும்பங்கு பெற்றாலும், அதை மக்களுக்கு வெளிப்படுத்தும், மக்கள் பார்த்தவுடன் ரசிக்கும் வகையில் நடித்திட்ட நடிகர் மட்டுமே பேரும் புகழும் அதிகமாகப் பெறுவார்கள். கூடவே இசையும் பாட்டும் கனஜோராக இருக்கும் பட்சத்தில் பாடகர்களும், இசையமைப்பாளரும் பெரும் புகழ் பெறுவார்கள். ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ தொடரில் நடிப்பது, இசை, ஒளியாக்கம், பாடல் எல்லாம் ஓவியர் சில்பியுடையதாகும். திரைக்கதை வசனம் டைரக்‌ஷன் என்பது தேவன் அவர்களுடையதாகும். ஓவியர் சில்பியின் முழுப் பரிமாணத்தை வெளிப்படுத்தியதாகும். ஆனாலும் தேவன் இந்தக் கட்டுரைகளில் எந்தவொரு இடத்திலும் தன் பெயரைப் போட்டுக் கொள்ளவில்லை என்பது ஒரு சிறப்பு.

    தென்னாட்டுச் செல்வங்கள் ஏறத்தாழ 13 வருடங்கள் (சிற்சில இடைவெளிகளுடன்) ஆனந்த விகடனில் தொடராகச் சென்றதாக பேராசிரியர் பசுபதி அவர்கள் தெரிவிக்கிறார்கள். ஓவியர் கோபுலு இந்தத் தொடரைப் பற்றித் தெரிவிக்கையில் தேவன் இருந்தவரை தேவனே தன் கைப்பட கட்டுரை எழுதியதாகத் தெரிவிக்கிறார். (எங்களை வழி நடத்தியவர் எழுத்தாளர் தேவன். சில்பியின் தெய்வீக ஓவியங்களுக்கு அவர் பரமரசிகர். தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்களில் இருக்கும் விக்கிரங்களின் நேர்த்தியை, சிற்பங்களின் அழகை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, 1948-இல் ஆனந்த விகடனில் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ என்னும் தலைப்பில் ஒரு தொடரைத் தொடங்கத் திட்டமிட்டார் ‘தேவன்’. தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து, பிரபல கோயில்களில் உள்ள சிற்பங்களை வரைவதற்கு சில்பியைத் தயார்படுத்தினார். சில்பியும் மிக ஆர்வத்தோடு, அந்தப் பணியை ஏற்றுக் கொண்டார். உடனே காஞ்சிபுரம் சென்று, காஞ்சிப் பெரியவரிடம் ஆசி பெற்றுக் கொண்டார். “ )  (http://s-pasupathy.blogspot.in/2012/11/1_30.html) “ (சில்பி) தான் வரைந்த சிலைகளைப் பற்றிய குறிப்புகளை ஒரு தாளில் எழுதிக் கொண்டுவந்து , அந்தப் படங்களைப் பற்றி தேவனிடம் விளக்கிச் சொல்வார். தேவன்தான் அதை நயமாக எழுதுவார்” (http://s-pasupathy.blogspot.in/2013/03/8.html)

    அதே போல தேவன் மறைந்த பின்னரும் பிற்காலத்தில் இந்த தொடர்க் கட்டுரை வரத்தான் செய்தது. இந்தக் கட்டுரைகள் தேவனுக்குப் பிறகு பி.ஸ்ரீ. ஆச்சார்யா தொடர்ந்திருக்கிறார் என்பது பேராசிரியர் பசுபதியின் கருத்து. எழுத்தாளரான பி.ஸ்ரீ. ஆச்சார்யாவும் மிகச் சிறந்த புலனாய்வு எழுத்தாளர் என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அவரது ஆழ்வார்கள் புத்தகம் இன்னமும் எனக்கு ஒரு வேதப்புத்தகம் போல.

    தேவன் தன் காலத்தில் எழுதினாலும் ஏன் தன் பெயர் போட்டுக்கொள்ளவில்லை என்பது தெரியவில்லை. ஏற்கனவே அவரது புதினங்கள் அவர் பெயர் போட்டு தொடராக விகடனில் வந்துகொண்டிருந்ததால் இப்படி இன்னொரு தொடருக்கும் வேண்டாமே என்று போடாமல் இருக்கலாம். தேவனின் முழுப்பரிமாணம் தெரியும் எழுத்துகளுக்கே தேவன் தன் பெயரைப் போடுவதும் உண்டு என்ற காரணமாகவும் இருக்கலாம். இந்தத் தொடர் ’தேவன்’ என்கிற தனிப்பட்ட எழுத்தாளரின் சொந்தம் அல்ல என்று அவர் நினைத்திருக்கலாம். அதே சமயம் ஒரு பத்திரிகை ஆசிரியர் என்பவர் தன் புத்தகத்தில் எத்தனையோ பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.  தேவன் பத்திரிக்கை ஆசிரியர் என்பதால் அவருக்குள்ள ஏகபோக உரிமையில் இந்தக் கட்டுரைத் தொடருக்கு தன் பெயர் போட்டுக்கொள்ளவில்லை என்று கூட சொல்லலாமோ என்னவோ. இருந்தாலும் இது தேவன் எழுத்துதான் என்பதற்கு ஒரு சான்று தருகிறேனே..

    திரிபுவனக் கோயில் கட்டுரையில் ’கஷ்டப்படும் இஷ்ட தெய்வங்கள்’ என்ற தலைப்புப் பெயர் கொடுத்தவர் சில ஒதுக்கப்பட்ட சிலைகளைப் பற்றி வர்ணிக்கையில் இப்படி எழுதுகிறார்.

    செல்லும் காலமெல்லாம் அதிகாரம் செலுத்திய தெய்வங்கெளெல்லாம் ‘இன்று கல்லானோம், செம்பானோம், எல்லாம் உங்கள் தயவினால்தான், உங்கள் நாஸ்திகத்தால்; அதற்கும் மேலாக உங்கள் ஆஸ்திக டம்பாச்சாரி விலாஸங்களால்தான்’ என்று சொல்லாமல் சொல்கின்றன.

    ஒரு உடைந்த பிள்ளையார் சிற்பத்தில் மேலும் உடைக்கப்பட்ட ஒற்றைத் தந்தத்தைப் பற்றி எழுதுகிறார்.

    “ஒரு காலத்தில் பூஜைக்கு உபயோகமாயிருந்து பின்பு கை கால்கள் பின்னமடைந்து, இப்போது இம்மண்டபத்தில் சிற்பக்காட்சிகளுக்கிடையேதான் இந்தப் பிள்ளையாரும் காட்சி தருகிறார்.

    “வேதவியாஸர் மகாபாரதம் பாட விநாயகர் மேரு மலையை ஏடாகக் கொண்டு எழுதத் தொடங்கினாரே, அப்போது எழுத்தாணி இல்லையே என்று ஒரு கொம்பை (தந்தம்)  முறித்துக் கொண்டு, ஒற்றைக் கொம்பராக இருந்தாரல்லவா? அந்த மிஞ்சிய தந்தத்தையும் உடைத்துவிட்டான் ஒரு புண்ணியவான்’.

    இன்னொரு இடத்தில் இதே கோயிலில் நாயர் மண்டபத்தில் ஒரு இடிந்த சிலையைப் பற்றி வர்ணிக்கிறார்.

    ‘நாயர் மண்டபத்து மூலைத் தூணின் கீழ், பிரம்மாவுக்கு இடது பக்கத்தில், வெண்சாமரம் வைத்துக் கொண்டு, சொகுசாக நிற்கும் சேடியின் சிற்பமொன்று காணப்படுகிறது. இது உருவில் சிறிதாக இருந்தாலும் நுட்ப வேலைப்பாடுகளிலும், ஜடையழகிலும் வெண்சாமரத்தின் ;கூந்தல்; வேலைப்பாட்டிலும், ரஸிகருள்ளத்தைப் பெரிதும் கவர்கின்றது.

    மண்டபத்தின் கீழ்ப்பாகம் புதைந்து கிடக்கிறது. நம்மவர்களின் சிற்பக் கலைச் சுவை எவ்வளவு தூரம் க்ஷீணித்துக் கீழ்ப்பட்டிருகிறது என்பதற்கு ஒரு அறிகுறி போலே”

    ஆனாலும் மிகப் பெரிய அளவில் தமிழ்நாட்டில் பரவிக்கிடந்த இந்த கோயில் சிற்பங்களை ஒரு சமூகத் தொண்டாகக் கருதி இப்படி ஒரு அழகிய விதத்தில் தொடராக பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு வந்ததில் பெரும்பங்கு தேவனுக்கு உரியது. இந்தத் தொடரைப் படித்ததினால் சிற்பத் தெளிவு மக்களிடையே பெருகியது என்பதை விட நம் பழைய பண்பாட்டுக் கருவூலம் எச்சரிக்கையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உணர்வாவது படிக்கும் ஒவ்வொரு வாசகனிடத்தேயும் ஏற்பட்டிருக்கும் என்றே நினைக்கிறேன். சமூகம் சார்ந்ததாகவும் தெய்வீகம் மிக்கதாகவும், நம் கலாச்சாரத்தின் பெருமையை மிகப் பெரிய அளவில் ஒரு வாராந்தரி மூலம் கொண்டு சென்ற தேவன் அவர்களை நம் தமிழுலகம் என்றும் மனதில் நினைத்திருக்கவேண்டும். பத்திரிக்கையுலகில் இது பெரும் மாற்றத்தையும் உண்டுபண்ணியது என்றே சொல்லலாம். வாசகர்கள் எந்த நல்ல கருத்து கொண்ட எழுத்துக்களையும் எந்த நிலையிலும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையையும் பத்திரிகைகளிடையே இந்த சமுதாயத் தொடர் தோற்றுவித்தது. இல்லையானால் பதின்மூன்று வருடங்கள் இந்தத் தொடர்தான் தொடர முடியுமா?

    ஆனால் தற்சமயத்தில் இன்றைய வாராந்தர பத்திரிகைகளின் நிலை அப்படியே தலைகீழாக இருக்கிறது. இன்று , பரபரப்பு செய்திகளையும் திரைப்படத்து நடிக நடிகைகளின் செய்திகளையும் அரசியல் ஆதாயச் செய்திகளுமே தங்கள் தலையாயப் பணியாகக் கொண்டு செயல்படும் வாராந்தரிகள், சமுதாயப் பணிகளிலும், தரத்திலும் – தேவன் பாஷையில் சொல்லவேண்டுமென்றால் – க்ஷீணித்துக் கிடக்கின்ற நிலையில் உள்ளன.. இப்படி ஒரு பொதுஜனத் தொண்டாக ஒரு உன்னதத் தொடராக  வாராந்தரிகளில்  எதுவும் வருவதில்லை என்ற ஏக்கம் எல்லோருக்குமே வருவதுண்டு.

    இன்றும் கூட தென்னாட்டுச் செல்வங்கள்  ஒவ்வொரு தொடரிலும் வெளிவந்த ஓவியர் சில்பியின் தெய்வீக ஓவியங்கள் மக்கள் இதயங்களைக் கவர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஓவியர் சில்பிக்கு இவைகளை ரசித்து ஆராதித்த மக்கள் ‘தெய்வீக ஓவியர்’ என்றே விருது கொடுத்து மகிழ்ந்தனர். ஓவியங்களின் உன்னத தரத்தை தமிழ்நாட்டில் வானுயர உயர்த்திய ஓவியர் சில்பி இன்றைக்கும் பல ஓவியர்களின் குருவாகத் தெரியப்படுகின்றார். இன்றைக்கு ஆனந்த விகடன் பதிப்பகம் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ தொடரை ஒரு புத்தகமாகக் கொண்டு வந்து – படைப்பு ஓவியர் சில்பி என்று பெரும்பெயர் கொடுத்து வெளியிட்டிருக்கிறது. நம் கட்டுரையிலும் தெய்வீக சில்பியின் ஒரு சில தெய்வீக ஓவியங்கள் உங்கள் பார்வைக்குக் கொடுத்திருக்கிறேன்.

    இந்த ஓவியங்களில் புத்தக வண்ணத்தில் உள்ளது பேராசிரியர் பசுபதி அவர்களின் வலைப்பகுதியிலிருந்து அவர் அனுமதியோடு கொடுக்கப்பட்டுள்ளது. கோட்டோவியங்களுக்கு நன்றி : ஆனந்த விகடன்.

    இனி தேவனின் கட்டுரைகளுக்கும், சிறுகதைகளுக்கும் வருவோம். தேவன் கட்டுரைகளும் சிறுகதைகளும் மட்டுமே ஆனந்தவிகடன் பத்திரிகையில் கல்கி ஆசிரியாக இருந்தவரை எழுதிக் கொண்டிருந்தார். 1939 இல் ஆரம்பித்த மைதிலி தொடர்கதை ‘நாரதர்’ பத்திரிகையில்தான் வெளிவந்தது. ஆனந்தவிகடனில் அவர் உதவி ஆசிரியராக இருந்தபட்சத்தில் ஏறத்தாழ முதல் எட்டாண்டு காலத்துக்கு தேவனின் கட்டுரைகளும் சிறுகதைகளும் வந்து வாசகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. கட்டுரைகளில் அந்தக் காலப் போக்கும், அரசியலும், முக்கியமாக உலகநாடுகளின் அரசியலும், இந்திய பிரிட்டிஷ் அரசியலும் பேசப்படுவதைப் பார்த்தால் நமக்கு 1934 இலிருந்து அடுத்து வரும் ஆண்டுகளின் நிலை கண்கூடாகத் தெரியும். உலகப் போரைப் பற்றிய கிண்டலும் நக்கலும் கலந்த கட்டுரைகள் கூட தேவன் எழுதியுள்ளார். முதலில் சிறுகதைகளின் கதைக்கு வருவோம். பின் கட்டுரையையும் ஒரு கை பார்ப்போம்.

    தொடர்ந்து வரும்

    Share
  • பாரதியின் வேத முகம் – 4

    சு.கோதண்டராமன்

     பூரண ஞானம் பொலிந்த நன்னாடு

    பாரதியார் இந்தியாவிற்குச் சுதந்திரம் வேண்டியது ஏன்? அன்னியர் நம்மை ஆளக்கூடாது என்பதாலா? அல்ல. அத்வைதக் கொள்கையை நெஞ்சில் நிலையாகப் பதித்திருந்த அவர் நம்மவர் அன்னியர் என்று பிரித்துப் பார்க்கவில்லை.  அதனால் தான் அவரது எழுத்துகளில் எங்கும் ஆங்கிலேயர் பால் வெறுப்புக் காணப்படுவதில்லை. பின் அவரது விடுதலை வேட்கைக்குக் காரணம் என்ன? பார்ப்போம்.

    பூமண்டலத்தில் அன்பும் பொறையும்

          விளங்குக, துன்பமு மிடிமையு நோவும்

          சாவு நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம்

          இன்புற்றுவாழ்க

    என்பது பாரதி விநாயகரிடம் வைக்கும் வேண்டுகோள். எல்லா உயிர்களும் தெய்வம் என்பதை உணர்ந்து விட்டால் பிறர் மீது அச்சம், பகைமை, கோபம், பொறாமை ஏற்படுமா? பூமண்டலம் எங்கும் அன்பும் பொறையும் மட்டுமே விளங்கும்.

    அச்சம் முதலான இந்தத் தீய குணங்களை நீக்கி விட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும் என்று பாரதி கூறுகிறார். எல்லோரும் அமர நிலை எய்த முடியும்.

    எல்லா உயிர்களிலும் இறைவன் உள்ளான் என்ற வேதக் கருத்தை உலகிற்கு அளிக்கத் தகுதி பெற்ற ஒரே நாடு இந்தியா தான்.

    எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்

    என்றுரைத்தான் கண்ண பெருமான்

    எல்லோரும் அமர நிலை எய்தும் நன்முறையை

    இந்தியா உலகிற்களிக்கும் ஆம்

    இந்தியா உலகிற்களிக்கும் ஆம் ஆம்

    இந்தியா உலகிற்களிக்கும் – வாழ்க

    இந்தியா தாழ்ந்து நின்றால் உலகனைத்திலும் அஞ்ஞான இருள் பரவி விடும். எனவே தான் பாரதி இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்று பாடுபடுகிறார்.

    சுதந்திர தேவியின் ஒளி பெறாவிடில் அங்கு அறிவுண்டோ, ஆக்கமுண்டோ?

    காவிய நூல்கள், ஞானக் கலைகள், வேதங்களுண்டோ?”          என்று கேட்கிறார். மேலும் மற்றோரிடத்தில்,

    வேத நூல் பழிக்கும் வெளித் திசை மிலேச்சர்

    பாதமும் பொறுப்பாளோ பாரத தேவி?”

    என வினவுகிறார். ஏனெனில் அம்மிலேச்சர்,

    மாதர் கற்பழித்தலும் மறையவர் வேள்விக்கு

    ஏதமே சூழ்வதும் இயற்றி நிற்கின்றார்

    எனவே பாரதி இந்தியாவிற்குச் சுதந்திரம் வேண்டியது வேத நெறி தழைக்கவும், உலகெங்கிலும் அறம் ஓங்கி வளரவும் தான்.

    பாரதி மகாத்மா காந்தியைப் போற்றியது ஏன்? எல்லா உயிர்களும் கடவுள் என்ற அத்வைதக் கொள்கையைக் கொண்டு, இழிவான வழி முறைகளே நிறைந்த அரசியலைத் தூய்மைப்படுத்தியதற்காகத் தான்.

    மன்னுயிரெல்லாம் கடவுளின் வடிவம்

                கடவுளின் மக்களென் றுணர்தல்

                இன்ன மெய்ஞானத் துணிவினை மற்றாங்

                கிழிபடு போர் கொலை தண்டம்

                பின்னியே கிடக்கும் அரசியலதனிற்

                பிணைத்திடத் துணிந்தனை, பெருமான்

    என்று காந்தியைப் பாராட்டுகிறார் அவர்.

    படத்துக்கு நன்றி: http://www.vallamai.com/wp-content/uploads/2012/03/Subramania-Bharathiar-Rare-Photos.jpg


    Share
  • நிதிநிலை அறிக்கை ஒரு சிறு அலசல்!….

    கிருஷ்ணமாச்சாரி                                                                                                                                    

    கற்க கசடற, நிற்க அதற்குத் தக… இளம் பருவம் பல கேள்விகளை கேட்கும் பருவம், பல புதிய முயற்சிகளை தேடும் பருவம். பல இளம் விஞ்ஞானிகள் பள்ளி பருவம், கல்லூரி பருவத்தில் புதிய முயற்சிகளை எடுத்து மேற்கொள்ளும் சில கண்டுபிடிப்புக்கள் மக்களுக்கு உதவும் என்றாலும் வியாபாரமாக்க முடியாத நிலையில் ஒரு கண்டுபிடிப்பாகவே மறைந்து விடுகிறது. அப்படிப்பட்ட நிலை மாற உதவும் இந்த நிதி அறிக்கையில்,  நிறுவனங்கள் தனது லாபத்தில் 2% வரை இப்படிப்பட்ட துவங்கு நிலை ஆராய்ச்சிகளுக்கு உதவும் நிலையை அளித்தது, பல கண்டுபிடிப்புகள் இங்கு வெளிஉலகிற்கு வர ஒரு நல்ல வாய்ப்பு.

    நிதிப் பற்றாக்குறைக்கு இறக்குமதி செய்ய வேண்டிய கச்சா எண்ணெய், நிலக்கரி ஆகியவற்றை காரணம் காட்டியும் அதே சமயம் இவற்றை குறைக்க மாற்று சக்திகளான, காற்றாலை, கழிவிலிருந்து ஆற்றல் போன்றவற்றிற்கு உதவி அறிவித்திருப்பது இன்றைய தேவையை அறிந்து செயல் படுவது. ஜெர்மனியை விட இந்தியாவில் சூரிய ஒளி மணி நேரங்கள் இரு பங்கு இருந்தும், நாம் உற்பத்தி செய்யும் ஆற்றல் மிகச் சிறிதே. அனைத்து புது கட்டிடங்களும் சூரிய ஒளி மின்சாரத்தை  தயாரிக்கும் வகையில் அமைக்கப் பட வேண்டும் என ஒரு விதி அவசியம். எப்படி மழைநீரை சேகரிக்கிறோமோ, அப்படி சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதும் ஒரு விதியாக ஆக்கப்பட வேண்டும்.

    பெண்களுக்கான வங்கி என்பது இந்தக் காலத்தில் அவசியமான ஒன்றா என்பது ஒரு கேள்வி. தனியார் நிறுவனங்களும், PSUக்களும் வங்கி துவக்கலாம், இந்திய தபால் துறையும் வாங்கி ஆகும் எனும் அறிவிப்புக்களுக்கு மத்தியில், இந்த அறிவிப்பு தேவையானதாக தோன்றவில்லை. தற்போதைய வங்கிகளில் ஆண்-பெண் என பிரித்து பேதம் பார்கிறார்கள் எனும் எண்ணத்தையோ, பெண்களுக்கு வங்கிகளில் பாதுகாப்பு இல்லை எனும் தோற்றத்தையோ இது உருவாக்குகிறது. அப்படியெனில் இதற்கு காரணம் என்ன என அறிந்து அதைப் போக்குதல் மிக அவசியமாகிறது. எந்த வங்கியும் தன்னிடம் பணம் சேமிக்க வரும் ஆணையோ பெண்ணையோ ப்ரிஹ்த்டுப் பார்ப்பதில்லை. அப்படி எனில் கடன் அளிக்கும் போது பிரித்துப் பார்க்கப் படுகிறதா? என்ன காரணம், பெண்கள் கல்வி அறிவு, செயல் அறிவு இருந்தும் குடும்பத்தில் அவர்களின் முக்கிய பங்குகள், இப்படி பேதம் பார்க்க வைக்கிறதா? ஆம் எனில் அதை சரியாக அணுகுதல் முக்கியம்.

    இளைய தலைமுறைக்கு தனது திறன் வளர்க்க பயிற்சி என்பது நல்ல விஷயம். ஆனால் பயிற்சியில் வெற்றி அடைந்தால் சான்றிதழுடன் சராசரியா ரூபாய் 10000 வரை அளிக்கப்படும் என்பது பணத்திற்காக சில நிறுவனங்கள் இப்பயிற்சி முறையை சரியாக உபயோகிக்காமலோ, அல்லது பயிற்சி அளித்தது போல  தவறாக உபயோகிக்கவோ வாய்ப்பு உண்டு. கல்வியை பணத்துடன் இணைத்து பார்ப்பது தவறு. அதைவிட இன்றைய தலைமுறையின் அத்தியாவசிய தேவையான SOFT SKILL எனப்படும் தொடர்புத் திறன் (communication skills), பந்தி நடத்தை (table manners), sசெயலை முன் வைக்கும் திறன் (presentation skills) போன்றவற்றை பற்றி சிறு வயது முதலே பள்ளிகளில் அறிமுகப் படுத்துதல் அவசியம். குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் இருந்து வரும் குழைந்தை இவற்றை அறிஐயும் போது, வலைக்காக வேறு இடம் செல்கையில் தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதை இது தவிர்க்கும்.

    ஆதார் அட்டை வாங்கி கணக்குகளுடன் இணைக்கப்படும். குறிப்பாக இந்த அட்டையின் சிறப்பு நமது தனித் தன்மை பெற்ற விழி மற்றும் கை ரேகைகளின் தொகுப்பு. நம் போல் வேறு யாரும் வர முடியாது என்பதின் ஒரு தணிக்கை. இது முழுதும் உபயோகப்படுத்தப் பட வேண்டும். ஆதார் அட்டை இருந்தால்தான் வங்கிக் கணக்கு, பத்திரம் பதிவு என்று மட்டும் இல்லாமல் இந்த இடங்களில், அட்டை கொண்டுவந்தவர் தான் அட்டைதாரரா?  என சோதிப்பது அவசியம். இவ் வசதிகள் இவ்விடங்களிலோ அல்லது ஒரு பொது இடத்தில் பரிசோதனை செய்து சான்றிதழ் பெறுவதோ போலி அட்டைகள் வலம் வருவதைத் தடுக்கும். அதுபோல, வாக்களிக்கும் போதும் கை-ரேகை சோதனை  செய்து அட்டைதாரரை பரிசோதிப்பதும் அவசியம்.

    பெரும் பணக்காரர்கள்  வரி. பெரும்பாலும் இந்த நிலையில் உள்ளவர்கள் உரிமையளராகவோ அல்லது நிறுவனங்களில் பெரும் பதவியிலோ இருக்க வாய்ப்பு உண்டு. இந்நிலையில், இந்த வரியை நிறுவனங்களோ வேறு ஏதாவது வழியில் ஈடுகட்ட முயலும். எனவே அவர்களுக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை. அரசாங்கத்திற்கு லாபமா என்றால்,, இதை நிறுவனங்களே ஈடுகட்டும் வகையில் கணக்கு வகைதான் மாறும், வரி தனி ஒருவர் அதிகமாகவும், நிறுவனம் குறைவாகவும் கட்ட வாய்ப்பு அதிகம். இது ஒரு சொந்தக் கருத்து மட்டுமே.

    மற்றபடி புகைப்பொருட்கள் விலை ஏற்றம் என்பது எப்பொழுதும் எதிர்பார்ப்பதே. பொருள்கள் விலையில் அதிகம் மாற்றம் இல்லை என்று கூறமுடியாது ஏனெனில் கடந்த இரயில் நிதி அறிக்கையில் சரக்கு கட்டணம் 5-8% ஏறிவிட்டது. விலை ஏற்றத்தை அது பார்த்துக் கொள்ளும்.

    வீட்டுக்கடன் வரிவிலக்கு 250000 ஆக அதிகரிப்பு. நல்ல விஷயம் ஆனால், மேலே குறிப்பிட்ட சரக்கு கட்டண மாற்றத்தால் சிமென்ட் மூட்டை 2-4 ரூபாயும்,  ஸ்டீல் விலை 5-8%  வரை அதிகரிப்பும் இந்த சேமிப்பை ஈடுகட்டிவிடும். இந்த இரண்டு துறைகளும் ரயில் போக்குவரத்தை அதிகம் உபயோகிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

    மொத்தத்தில் குடுத்தோம், எடுத்தோம் என கணக்கிட்டு நமது பையில் ஒன்றும் மிஞ்சப் போவதில்லை.

    எச்சரிக்கை: இனி சாப்பிடப் போகும்போது அந்த ஓட்டலின் மொத்த சதுர அடி எவ்வளவு என கேட்டு தெரிந்து கொள்ளவும். 2000க்கு மேல் இருந்தால் உங்கள் பில்லில் 4% வரை ஏற்றம் காண வாய்ப்பு உண்டு. இனி  உணவகங்களில் இப்படியும் நடக்கலாம்…

    சர்வர்: சார்! இந்தாங்க மெனு கார்ட்..

    வந்தவர்: இதை விடுங்க..முதல்ல ஹோட்டல் லே-அவுட் பிளான் காட்டுங்க

    Share