ஒரு மரத்தின் நாட்குறிப்பேட்டிலிருந்து ….
பி. தமிழ்முகில் நீலமேகம்
ஒரு மரத்தின் நாட்குறிப்பேட்டிலிருந்து :
நிலத்துடன் உறவாடி
காற்றுடன் கதை பேசி
மேகத்துடன் நட்பு பாராட்டி
எத்தனையோ புள்ளினங்களை
எம் கரங்களில் தாங்கி
தஞ்சம் கொடுத்து
மனித குலத்திற்கு
எம்மையே அர்ப்பணித்து
தியாகச் சுடராய்
உயிருடன் இருக்கும் போதும்
மரித்து விட்ட பின்பும்
ஏதேனுமொரு வகையில்
பயனுளதாய் – எடுத்த பிறவியின்
நோக்கம் தனை நிறைவேற்றிடும்
நாங்கள் – மண்ணின் மைந்தர்களன்றோ ??
எங்களைக் காத்தல் உங்களின்
கடமையன்றோ மனிதர்களே ??
இன்று உங்கள் சுயநலத்திற்காக
எங்களை காவு வாங்குகிறீர் !!
எதிர்காலத்தில் எமக்காய் நீங்கள்
ஏங்கும் நாட்களும்
வெகு தொலைவில் இல்லை !!
சுதாரித்து எம்மைக் காத்தால்
நாளைய வாழ்வு
வளமாய் எம்முடன் !!!
இல்லையேல் – மரமும்
மனித இனமும் இனி
அருங்காட்சியகத்தில் தான் !!!