Blog

  • வார ராசி பலன் 21.10.13-27.10.13

    மேஷம்:மறைமுகப்போட்டிகளால், பொறுப்பான பணியில் இருப்பவர்கள், தங்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சில தடுமாற்றம் ஏற்பட்டாலும், தங்கள் திறமையால், நினைத்த காரியத்தை முடித்து விடுவார்கள். இந்த வாரம் தூக்கமின்மை, சோர்வு ஆகியவை பொது வாழ்வில் இருப்பவர்கள் செய்யும் பணிகளின் வேகத்தைக் குறைக்கலாம். பெண்கள் அக்கம் பக்கத் தாரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகுவது அவசியம். கலைஞர்கள் பிறரிடம் கைமாற்றாக பணம் பெற்று செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும். மாணவர்கள் கேளிக்கைக்கக நேரம் செலவழிப்பதை குறைப்பது நல்லது.
    ரிஷபம்: அலுவலக வட்டத்தில், உபத்திரவம் செய்பவர்களின் எண்ணிக்கை கூடாமல் இருக்க, அனைவரிடமும் பக்குவமாகப் பழகுவது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பழைய விரோதம் மீண்டும் தலைகாட்டும் வாய்ப்பிருப்பதால் எதிலும் கவனமாக இருப்பது அவசியம். இந்த வாரம் மாணவர்களுக்கு அடிக்கடி பராமரிப்பு செலவு வைக்கும் வாகனங்களை மாற்றி புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு வந்து சேரும். பணியில் இருப்பவர்கள் திடீரென்று வரும் இடமாற்றம், பதவி மாற்றம் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள தயாராய் இருப்பதன் மூலம் தங்கள் திறமையை உயர்த்திக் கொள்ளலாம்.
    மிதுனம்: இந்த வாரம் உங்கள் செல்வாக்கு மூலம் லாபம் அடைந்தவர்களேதக்க நேரத்தில் உதவி செய்ய யோசிப்பார்கள். பெண்களிடம் நெருக்கம் காட்டி வந்த உறவுகள் மெல்ல விலகும் . கலைஞர்கள் அவசரமாக பணியில் ஈடுபட்டாலும், விரும்பிய பலன் கிடைக்க, நண்பர்கள் உறுதுணையாய் இருப்பார்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் மதிப்பு, மரியாதை தெரியாதவர்களிடம் பழக நேரிடும். எனவே எந்த சூழலிலும் சொந்த விஷயங்களைப் பிறரிடம் பரிமாறிக் கொள்வதைத் தவிர்க்கவும். கர்ப்பிணிப் பெண்களின் உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படலாம். எனவே தேக நலனை நல்ல முறையில் பராமரித்து வரவும்.
    கடகம்: இல்லத்தில் எழும் பிரச்னைகளைத் தீர்க்க, பெண்கள் நிதானத்தைக் கடைபிடித்து வந்தால்,உறவுகள் சீராக இருக்கும். பணியில் இருப்பவர்கள் தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருந்தால், மன அமைதி கெடாமல் வேலைகளில் ஈடுபடலாம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளும் முன் பணியின் தன்மை அறிந்து செயல்பட்டால், பொறுப்புக்களை நிறைவேற்றுவதோடு நல்ல பெயரையும் தக்க வைத்துக் கொள்ளலாம். இந்த வாரம் கடின முயற்சி மற்றும் அலைக்கழிப்புக்குப்பின் கலைஞர்களின் உண்மையான உழைப்பிற்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
    சிம்மம்: இந்த வாரம் வியாபாரிகள் கடனைத் தீர்ப்பதற்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைக் காப்பாற்ற முழு முயற்சியில் இறங்கி வேலை செய்து கடனை அடைத்து, லாபத்தைப் பெருக்கிக் கொள்வார்கள். மாணவர்கள் மேற்கொள்ளும் பயணம் ஆதாயத்தை ஏற்படுத்துவதாக அமையும். பெண்கள் மனதில் குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் வேலை செய்வதன் மூலம் குடும்பப் பொறுப்புக்களை சரிவர செய்து நல்ல பெயரைப் பெறலாம். கலைஞர்கள் தங்கள் கடன் பற்றிய நிலவரத்தை முழுமையாக தெரிந்து கொண்டு செயல்பட்டால்,பொருளாதாரச் சரிவுகளை ஓரளவு சரிக்கட்டமுடியும்.
    கன்னி: இந்த வாரம் சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு சரக்குகளை வாங்குதல் நலம். மாணவர்கள் மற்றவர் கூறும் குறைகளையும், விமர்சனங்களையும் பொருட்படுத்தாது, கல்வியில் கவனமாக இருந்தால் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை இடைய இயலும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் சுமூகமாக நடந்து கொண்டால், குற்றங்குறை என்பது தேய்பிறையாக கரைந்துவிடும்.குடும்பத்தில் சந்தோஷம் நிலவி வந்தாலும், உறவினர் வருகையால், சிறு சலசலப்பு தோன்றி மறையும். பொது வாழ்வில் இருப்பவர்கள் நிர்வாக விவகாரங்களில், தகுந்த ஆலோசனையின் பேரில் செயல்படவும்.

    துலாம்: கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள், கணக்குகளை ஒழுங்காகப் பராமரித்து வந்தால்,வேண்டிய சலுகைகளைப் பெறலாம். பெண்கள் கைப் பணத்தைப் பார்த்துச் செலவழியுங்கள். கடன் வாங்க வேண்டியிராது. இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்கள், நல்ல வேலையில் அமர்வார்கள். படிப்பில் மட்டுமின்றி, விளையாட்டுகள், போட்டிகள் ஆகியவற்றிலும் மாணவர்கள் வெற்றி வாகை சூடும் வாய்ப்புக்கள் பல வந்து சேரும். இந்த வாரம் கலைஞர்களின் கலகலப்புக்கு இடையே சிறிது சலசலப்பும் அவ்வப்போது தலைகாட்டும். எனவே சக கலைஞர்களின் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.
    விருச்சிகம்: பெண்களுக்கு உறவினரோடு உரையாடி மகிழும் வாய்ப்புக்கள் வந்த வண்ணம் இருக்கும். பெற்றோர் காட்டும் அன்பும், அரவணைப்பும் பிள்ளைகளை உற்சாகப் படுத்தும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் மதிப்பு கூடும்.இயந்திரம், இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலில் உள்ளவர்கள் கவனத்துடன் செயலாற்றுவதோடு, தகுந்த பாதுகாப்பு விதிகளையும் கடை பிடிப்பது நல்லது..வியாபாரிகள் புதிய துறையில் இறங்கும் முன்பு, ஏற்ற இறக்கங்களை அறிந்து கொண்டால் அதற்குத் தக்கவாறு செயலாற்ற முடியும்.
    தனுசு: நேரம் தப்பித் தூங்கவேண்டிய சந்தர்ப்பங்களுக்கு இடமளிக்காத வகையில்,மாணவர்கள் திட்டமிட்டு பணிகளை முடிப்பது புத்திசாலித் தனம். பெற்றோர்கள் பிள்ளைகளின் போக்கிற்கேற்ப இதமான ஆலோசனை வழங்குங்கள். உங்கள் வழிக்கு வந்து விடுவார்கள். பணியில் இருப்பவர்கள் தங்கள் துறை தொடர்பான விவரங்களை சேகரித்து வைத்துக் கொள்வதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டை எளிதில் பெறலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தேவையில்லாமல் காரசாரமான விவாதங்களிலும், விமர்சனங்களிலும் தலையிடாதீர்கள். அமைதியான முறையில் வேலைகள் செல்லும்.
    மகரம்: குடும்ப விவகாரங்களில் பெண்கள் சிறிய விஷயங்களுக்காக சர்ச்சையில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் நலம். மாணவர்கள் சிக்கலான நேரங்களில் அனுசரித்து நடந்து கொண்டால், பிரச்னைகள் பெரிதாகாமல் பிசுபிசுத்துவிடும்.கலஞர்கள் வீண் வதந்திக்கு முக்கியத்துவம் அளிக்காமலிருந்தால், நிம்மதி நிலவும். வியாபார நிமித்தம் வெளியூர் செல்கையில், உணவு மற்றும் குடிநீரில் கவனமாய் இருந்தால், தேக உபாதை கள் தலைகாட்டாது. பணியில் இருப்பவர்கள் தாங்கள் புழங்கும் விலையுயர்ந்த பொருட் களின் பரமரிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். பங்குதாரரிடையே நிலவிய மனஸ் தாபம் நீங்கும்.
    கும்பம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார்கள். வியாபாரிகள் அதிக லாபத்தினை எதிர்பார்த்து, குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் எந்த காரியத்தினையும் ஒத்திப் போடாமல் உடனுக்குடன் செய்து விடுங்கள். கடைசி நேர அலைச்சலைத் தவிர்த்து விடலாம். பெண்கள் வீண் செலவுகளைத் தவிர்த்தால், பொருளாதார இழப்புகள் அவ்வளவாய் இராது. மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்தினால், மதிப்பெண்களோடு, உங்களது மதிப்பும் உயரும்.
    மீனம்:மாணவர்கள் கடினமான பாடங்களை குறித்த நேரத்திற்குள் முடிப்பதற்காக, பிறர் தயவை நாட வேண்டியிருக்கும். எனவே சிறிய சண்டைச் சச்சரவுகளை பெரிது படுத்தாமலிருப்பது நல்லது. இந்த வாரம் பெண்களுக்கு வரவும், செலவும் போட்டி போட்டுக் கொண்டு வரும். உள்ளன்போடு பழகுபவர்களின் ஆதரவு பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு தனித்தெம்பைத் தரும். வியாபாரிகள் செலவுகளில் சிக்கனத்தைக் கடைபிடியுங்கள். கிடைக்கும் லாபத்தின் அளவு குறையாமலிருக்கும். சுய தொழில் புரிபவர்கள் திட்டமிட்ட காரியங்கள் திட்டப்படி நடப்பதில் சிறு சுணக்கம் ஏற்படலாம்.

    Share
  • தெரியும் பார்…

    செண்பக ஜெகதீசன்

     

    பிடிக்கவில்லை என்றாலும்

    இதழ்களில்

    புன்னகையை ஒட்டிக்கொள்..

     

    வேண்டாம் என்றாலும்

    வாயில் கொஞ்சம்

    வழிவிடு இனிய சொல்லுக்கு..

     

    தேவையில்லை என்றாலும்

    தெரிந்தோ தெரியாமலோ

    பிறர்க்குக்

    கொஞ்சம் உதவிப் பழகு..

     

    பலனேயில்லை யெனிலும்

    பலர்க்கு

    நலனே செய்துபார்..

     

    தேவையே இல்லையெனிலும்

    தெரியும் பார்

    உன்னைச் சுற்றி ஒளிவட்டம்…!

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – ஊட்ஸி அருங்காட்சியகம் 11

    11. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – ஊட்ஸி அருங்காட்சியகம் – 3, போல்ஸானோ, இத்தாலி.

    சுபாஷிணி ட்ரெம்மல்

    அண்மையில் வெளிவந்த பி.பி.சி செய்தி ஒன்று குறைந்தது 19 பேர் ஊட்ஸியின் பரம்பரையில் வந்தவர்கள் என்று இத்தாலியின் திரோல் பகுதியில் உள்ளவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. http://www.bbc.co.uk/news/world-europe-24477038 தற்கால DNA சோதனைகளின் ஏற்பட்டுள்ள வளர்ச்சியில் இவ்வகையில் ஆய்வு செய்து ஒரு நபரின் பரம்பரையை இனங்காணும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. இந்த ஆய்வுகளினால் 5300 ஆண்டு பழமையான ஊட்ஸிக்கும் தற்சமயம் உறவினர்கள் இருப்பது நமக்குத் தெரிய வருவதும் ஒரு சுவாரசியமான விஷயம் தானே. இண்டஹ் ஆய்வுகள் மேலும் தொடர்வதால் இன்னும் பலர் கூட அடையாளம் காணப்படலாம்.

    ஊட்ஸியை ஆராயும் ஒரு ஆய்வாளர்.
    நன்றி:http://www.voanews.com

    o1

    ஊட்ஸி எப்படி இறந்திருப்பார்?

    ஆய்வாளர்களின் கணக்குப்படி இவர் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த சமயத்தில் இவரை யாரோ தாக்கியிருக்கின்றனர். தாக்குதலால் உண்டான காயம் உடலில் தோல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் எய்திய அம்பினால் தான் இவர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. அந்த அம்பு முதுகுப் பகுதியின் வழியாகச் சென்று இருதயத்தைத் தாக்கி அம்பில் இருந்த விஷமும் உடலின் ரத்தத்தில் கலந்து இந்த இறப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதே மருத்துவக் கண்டுபிடிப்பு.

    ஊட்ஸியின் உடலில் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகள் அவர் உடலுடன் கண்டெடுக்கப்பட்ட சாதனங்கள், எச்சங்கள் அனைத்தும் அவரது வாழ்க்கை நிலையை விளக்குவதற்கு ஆய்வாளர்களுக்கு பெரிதும் உதவுவனவாக அமைந்திருக்கின்றன. ஊட்ஸி தனது கையில் வைத்திருந்த கோடாறியும் அம்புகளும் ஏனைய சாதனங்களும் அவர் ஒரு வீரராக இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு இட்டுச் செல்கின்றன. அவர் கொண்டிருந்த ஆடை அமைப்பு, ஆயுதங்கள், உடலில் இருந்த தானிய வகைகள் இவையனைத்தும் இவர் ஒரு ஷமான் – shaman (குறி சொல்பவர் ) ஆக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளதாகக் காட்டுகின்றன. இக்கருத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைவது இவர் உடலில் இருக்கும் சில குறிகள்.

    ஊட்ஸியின் உடலில் பச்சை குத்தப்பட்டதற்கான அறிகுறிகளை இவரது உடலை ஆராய்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். கால் பகுதியில் புள்ளிகள் பல குத்தப்பட்டிருப்பதையும் இவை ஏதும் நோயினால் ஏற்பட்டதல்ல என்பது பச்சைக் குத்தப்பட்ட குறிகள் என்றும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இத்தாலியின் இப்பகுதியில் வாழ்ந்த பண்டைய மக்களின் நாகரிகத்தில் பச்சைக் குத்திக் கொள்ளுதல் என்பது குறி சொல்பவர்கள் பழக்கத்தில் இருந்து வரும் ஒரு ஐதீகமாக கருதப்படுகிறது. பச்சை குத்துதல் என்பது இந்த ஐரோப்பிய மனிதர் சார்ந்திருந்த சமூகத்திலும் இன்றைக்கு 5300 ஆண்டுகளுக்கு முற்பட்டே இருந்து வந்தது என்பதை அறியும் போது இதே போன்ற பச்சைக் குத்திக் கொள்ளுதல் நம் இந்திய பண்பாட்டிலும் வழக்கில் இருந்து வருவதும் இவ்விதமான பண்பாட்டு ஒற்றுமைகளும் ஆச்சரியம் கொடுக்கின்றன.

    ஊட்ஸியின் உடல் மிகப் பாதுகாப்பாக இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஊட்ஸி மம்மி இருக்கும் பகுதிக்கு பின் பகுதியில் பனிப்பகுதி போல அதிகமான குளிர் தரும் வகையில் குளிர்சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. ஊட்ஸி ஒரு கண்ணாடி அறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறார். ஆகவே நேராகப் பார்க்க முடியாது. ஒரு கண்ணாடி வழியாகத்தான் காண முடியும். மம்மியின் உடல் எந்த வகையான பாக்டீரியாவினாலும் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் இந்த பாதுகாப்பு அமைந்துள்ளது.

    ஊட்ஸி வைக்கப்பட்டிருக்கும் இக்கட்டிடத்தின் முதல் மாடிப்பகுதியின் மாடல் இது. (மே 2013)

    o2

    ஊட்ஸியின் உடலை புதைப்பதா எரிப்பதா அல்லது இப்படி காட்சிக்கு வைப்பதா என்ற கேள்விகளும் ஆரம்ப நிலையில் எழாமல் இல்லை. ஆனால் இவர் உடல் ஆய்வுலகத்திற்கு அளித்த பல்வேறு தகவல்கள் இவர் உடலின் அமைப்பு, பனியிலே உறைந்து மட்டுமே மம்மியாக்கப்பட்ட ஒரு உடல் என்ற வகையில் மிகத்தனித்துவம் வாய்ந்த மம்மியாக ஊட்ஸி ஆய்வுலகத்தின் கண்களுக்குத் தென்படுவதால் பொதுமக்களும் ஊட்ஸியை காண வேண்டும்; அதற்கு ஒரு அருங்காட்சியகம் வேண்டும் என்று முடிவாகி இப்போது நிரந்தரமாக இங்கே ஊட்ஸி காட்சிக்கு இருக்கின்றார்.

    இப்போது இப்படி இருக்கும் ஊட்ஸி..

    o3

     

    o4இப்படித்தான் இருந்திருப்பார் என அண்மைய கண்டுபிடிப்புக்களை வைத்து மாடல் செய்திருக்கின்றனர்.

    ஊட்ஸி அருங்காட்சியகத்திற்கு நானும் என் கணவரும் சென்ற போது வசந்த கால தொடக்கம். ஆனால் குளிர் 15 டிகிரி, மழைத்தூரலும் வேறு சேர்ந்து கொண்டது. அருங்காட்சியகத்தினுள்ளே குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிப்பதால் நாங்கள் ஏறக்குறைய 1 மணி நேரம் வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்றுக் கொண்டு உள்ளே சென்று பார்த்தோம். அந்தக் குளிரில் குடை பிடித்துக் கொண்டு மழையில் நின்று கொண்டிருந்த அசௌகரியங்களெல்லாம் ஊட்ஸியை நேரில் பார்த்து அவர் பற்றிய ஆய்வு விஷயங்களை அறிந்து கொண்ட போது மறைந்து விட்டன.

    ஊட்ஸியைப் பற்றி விரிவான விவரங்கள் தரும் நூல் Otzi: The Iceman. இந்த நூல் அருங்காட்சியகத்திலேயே விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த நூலை இத்தாலி, டோய்ச், ஆங்கிலம் ப்ரென்ச் ஆகிய மொழிகளில் மொழி பெயர்த்து அருங்காட்சியகத்தின் மேல் மாடியில் ஒரு வாசிக்கும் பகுதி அமைத்து அங்கு வைத்திருக்கின்றனர். படங்களுடன் கூடிய அனைத்து வயதினரும் வாசித்து மகிழக் கூடிய நூல் இது. ஊட்ஸியைப் பற்றி மேலும் அதிக விவரங்கள் அறிந்து கொள்ள விரும்புவோர் அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ பக்கமான http://www.iceman.it/ சென்று மேலும் பல படங்களும் விவரங்களும் வாசித்துப் பயனடையலாம்.

    இத்தாலியின் திரோல் மாகாணத்திற்குப் பயணம் செல்பவர்கள் மறக்காமல் சென்று பார்த்து வர வேண்டிய ஒரு அருங்காட்சியகம் இது என்பதில் சந்தேகமில்லை!

    தொடரும்

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 7ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    என் செயலால் ஆவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே
    உன் செயலே என்று உணரப்பெற்றேன், இந்த ஊனெடுத்த
    பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை, பிறப்பதற்கு
    முன் செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே. 1.

    இங்கு நடைபெறும் எந்தச் செயலும், நான் எனும் இந்த உயிராலோ அல்லது அவ்வுயிரைத் தாங்கும் உடலாலோ நடைபெறவில்லை, நடப்பது அனைத்தும் இறைவா உன் செயலால் என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன், இந்த ஊனுடம்பைப் பெற்று இந்த பூமியில் நான் பிறந்த பின்னர் செய்த தீச்செயல்கள் எவையும் இல்லை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். நான் முந்தைய பிறப்புகளில் செய்த தீவினையால் அன்றோ எனக்கு இப்படித் துன்பங்கள் நேரிடுகின்றன.

    (இந்த இடத்தில் பட்டினத்தார் இப்பிறவியில் தீங்கு எதையும் தான் செய்யவில்லை என்றும், முற்பிறவியில் செய்த தீவினையால் இப்படி நேர்ந்தது என்று எதைக்குறித்துப் பாடினார் என்பதை விளக்க வேண்டும் அல்லவா? பட்டினத்தார் வரலாற்றில் ஒரு நிகழ்ச்சியை நாம் இப்போது பார்க்க வேண்டும்.

    பட்டினத்தார் திருவாரூரிலிருந்து கிளம்பி கொங்கு நாட்டை அடைந்து மெளன விரதம் பூண்டு ஊர் ஊராய் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு நாள் இரவில் ஒரு முரடனுடைய வீட்டின் முன்பு நின்று, தான் மெளன விரதம் பூண்டு பேசாமல் இருப்பதால் தன்னிரு கைதட்டி பசிக்குச் சோறு கேட்டார். அந்த முரடனுக்கு என்ன ஆத்திரமோ இவரை யாரென்று அறியாமல் கைதட்டியா சோறு கேட்கிறாய் என்று அவரை தடிகொண்டு நையப் புடைத்து விட்டான். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுவாமிகள் இனிமேல் என்னைத் தேடிக் கொண்டு வந்து யாராவது உணவு அளித்தால் அன்றி உணவு உட்கொள்ளுவதில்லை என்று முடிவு செய்து துளுவ நாட்டுக்குச் சென்று அங்கு உஞ்சேனை மாகாளம் சென்று ஒரு விநாயகர் ஆலயத்தில் உட்கார்ந்து கொண்டார்.

    அப்படி அவர் அங்கு உட்கார்ந்திருந்த காலத்தில் ஒரு நாள் இரவு, சில திருடர்கள் அவ்வூர் அரசன் பத்திரகிரியின் அரண்மனையில் திருடிக் கொண்டு வரும் வழியில் சுவாமிகள் உட்கார்ந்திருந்த கோயில் விநாயகருக்கு அணிவிக்கவேண்டுமென்று எண்ணி ஒரு விலை உயர்ந்த பதக்கத்தை இருளில் விநாயகர் என்று நினைத்து சுவாமிகளின் கழுத்தில் போட்டுவிட்டுப் போய்விட்டனர். மறு நாள் அரண்மனையில் திருட்டுப் போய்விட்டது என்று காவலர்கள் தேடிக்கொண்டு வரும்போது பிள்ளையார் கோயிலில் நிஷ்டையில் ஆழ்ந்திருந்த சாமியாரின் கழுத்தில் ஒரு பதக்கத்தைப் பார்த்துவிட்டு, இவரைப் பிடித்துப் பெரிதும் துன்புறுத்தினார்கள். மன்னர் முன் விசாரணை நடந்தது. சுவாமியை கழுமரத்தில் ஏற்றிவிடுமாறு மன்னன் கட்டளையிட்டான். இவரை கழுமரத்தருகில் கொண்டு சென்று கழுவிலேற்ற முயற்சி செய்கையில் அவர் இந்தப் பாடலைப் பாடி இறைவனை வழிபட்டார். அந்தக் கழுமரம் தீப்பிடித்து எரிந்து சாம்பலாயிற்று. மன்னன் அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் என்பது கதை)

    திருவேடமாகித் தெருவிற் பயின்றெனைத் தேடிவந்து
    பரிவாகப் பிச்சை பகருமென்றானைப் பதம் பணிந்தேன்
    கருவாகும் ஓதக் கடற்கரை மேவக் கருதுமென்னை
    உருவாக்கிக் கொள்ளவல்லோ இங்ஙனே சிவனுற்றதுவே. 2.

    தாருக வனத்தில் சிவபெருமான் பிக்ஷாடனராக மண்டையோடு ஏந்தி தாருக வனத்து முனி பத்தினிகளிடம் பிக்ஷை கேட்டுப் போனது போல நானும் ஆண்டி வேடமிட்டு தெருத் தெருவாய் பிக்ஷை வேண்டி கேட்டுப் பெற்று உண்ணும் நேரம், பரிவோடு என்னை அணுகி பசிக்கிறது அன்னம் கொடு என்று என்னுடைய பிக்ஷை அன்னத்தைப் பங்கிட்டுக் கொள்ள திருவேடமிட்டு வந்த அந்த சிவபெருமானின் தாள் பணிகின்றேன். அப்படி உலகத்துக்கே பிக்ஷை அளிக்கும் சிவன் என்னிடம் வந்து பிக்ஷை கேட்டுப் பெற்ற என்னை தடுத்தாட்கொண்டு இனி பிறவி இல்லாத நிலை அளிக்கவல்லவோ, சம்சார சாகரத்தில் வீழ்ந்து கிடக்கவிருந்த என்னை அவன் தடுத்தாட்கொண்டிருக்கிறான்.

    விட்டேன் உலகம் விரும்பேன் இருவினை வீணருடன்
    கிட்டேன் அவர் உரை கேட்டும் இரேன் மெய் கெடாத நிலை
    தொட்டேன் சுகதுக்கம் அற்றுவிட்டேன் தொல்லை நான்மறைக்கும்
    எட்டேன் எனும் பரம் என்னிடத்தே வந்து இங்கு எய்தியதே. 3.

    சதுர்மறை எனும் நான்கு வேதங்களுக்கும் எட்டாத பரம்பொருளான ஈசன் என்னைத் தேடி வந்து இங்கு அடைக்கலம் தந்த பிறகு இவ்வுலக பந்த பாசங்களையெல்லாம் விரும்பாமல் அறவே விட்டுவிட்டேன். வீண் வம்பு பேசும் வீணர்களுடனான உறவை நீங்கிவிட்டேன். அப்படிப்பட்டவர்கள் பேசும் பேச்சுக்களையும் காது கொடுத்துக் கேளேன். இப்பிறவிக்கு நன்மை பயக்கும் நிலைமையை அடைந்து விட்டேன். சுகம் துக்கம் எதுவும் என்னை பாதிக்காத நிலையை அடைந்து விட்டேன்.

    அட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறும் அவ(ஸ்)த்தை ஐந்தும்
    விட்டேறிப்போன வெளிதனிலே வியப்பொன்று கண்டேன்
    வட்டாகிச் செம்மதிப் பாலூறல் உண்டு மகிழ்ந்திருக்க
    எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி யிருக்கின்றதே. 4.

    எட்டு அங்கம், அதாவது #அஷ்டாங்க யோகம், *ஆறுவகையான ஆதார நிலைகளையும், @ஐந்து வகையான அவஸ்தை எனும் அனுபவத்தினையும் கடந்து மேலே மேலே உணர்வால் சென்று அந்தப் பரவெளியெனும் சொர்க்கத்தை அடைந்த போது வியப்பான காட்சி கண்டேன். அப்படி வியந்து நின்ற அந்தக் கணத்தில் சந்திர மண்டலத்தினின்றும் பொழியும் அமிழ்த பானத்தை உண்டு களித்தேன். எளிதில் கிடைத்தற்கரிய பேரின்பத்தில் என் நினைவிழந்து மூழ்கிக் கிடக்கின்றேனே.

    # அஷ்டாங்க யோகம்: எட்டு அங்கங்களாவன யம, நியம முதலான எட்டு யோகங்கள். அவை
    யம, நியம, ஆசன, பிராணாயாம, பிரத்யாகார, தாரண, த்யான, சமாதி ஆகிய யோகங்களாம்.
    *6 ஆதாரங்கள்: மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விஸுத்தி, ஆக்ஞை.
    @ 5 அவ(ஸ்)தைகள்: ஜாக்கிரம், ஸொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்.

    (யோகம் பயில்வோர் தெரிந்து கொண்டு விளக்கம் பேற வேண்டிய மார்க்கங்கள் மேற்சொன்ன எட்டு அங்க, ஆறு ஆதார, ஐந்து அவஸ்தைகளைக் கடந்து மேலே செல்லுகையில் ஆங்கே பரவேளி தோன்றும். அப்பரவேலி நடுவே வட்டவடிவான ஜோதி, அதனின்றும் தோன்றும் அமிழ்தம் என்றெல்லாம் சொல்லப்படும் அமரத்தன்மை பற்றி சுவாமி குறிப்பிடுகிறார்.)

    எரிஎனக்கென்னும், புழுவோ எனக்கெனும், இந்த மண்ணுஞ்
    சரிஎனக்கென்னும், பருந்தோ எனக்கெனுந், தான் புசிக்க
    நரி எனக்கென்னும், புல்நாய் எனக்கு என்னும், இந்நாறு உடலைப்
    பிரியமுடன் வளர்த்தேன் இதனால் என்ன பேறெனக்கே. 5.

    நம் உயிர் குடியேறி வாசம் செய்யும் இந்த பூத உடலை எப்படியெல்லாம் வளர்த்துப் பாதுகாத்தேன். சோப்பு என்ன, பவுடர் என்ன, வாசனைக்கு செண்ட் என்ன இதன் மேலே விதவிதமாய் உடைகள் என்ன, சிறு சிராய்ப்பு ஏற்பட்டால்கூட அதைப் பார்த்துப் பார்த்து மாய்ந்து போனது என்ன, அப்படிப்பட்ட உடலை விட்டு என் உயிர் நீங்கிய பின் பிணமென பெயரிட்டு, அதிக நேரம் வைத்திருந்தால் நாற்றமெடுக்கும் என்று கொண்டு போய் கொளுத்திட அனைவரும் அவசரப்படும் இந்த உடலைப் பார்த்து அக்னி பலே எனக்கு உணவாகப் போகிறது என்று எண்ணுமாம்; இதை மண்ணில் புதைக்கட்டும் இது எனக்கு உணவாகும் என்று புழு எண்ணுமாம்; மண்ணோ இதோ இந்த உடல் எனக்குத்தான் எனுமாம்; உயரப் பறக்கும் பருந்து சரிதான் இது எனக்குத்தான் எனுமாம்; நரியானது நான் உலாவும் சுதந்திரப் பிரதேசத்துக்குத்தானே இதைக் கொண்டு வரவேண்டும், அப்போது இது எனக்குத்தான் என்று எண்ணுமாம்; கேவலாமான பிறவியான நாய் இருக்கிறதே அதுகூட இது எனக்குத்தான் வேறு யாருக்கு? என்று கேட்குமாம். இப்படி இத்தனை பேர்கள் இந்த நாற்ற உடலுக்குக் காத்துக் கிடப்பது தெரியாமல் நான் இத்தனை காலமும் இதை எப்படியெல்லாம் பேணிப் பாதுகாத்தேன்.

    அண்ணல்தன்வீதி அரசிருப்பாகும் அணிபடையோர்
    நண்ணொரு நாலு ஒன்பதாமவர் ஏவலும் நண்ணுமிவ்வூர்
    துண்என்பசிக்கு மடைப்பள்ளியான சுகமும் எல்லாம்
    எண்ணிலி காலம் அவமே விடுத்தனம் எண்ண அரிதே. 6.

    நம் உடலானது ஒரு சிற்றூர் என்று எண்ணிக் கொள்ளுங்கள். இந்த சிற்றூரை ஆளும் அரசன் நம்முடைய ஆன்மாவாகும். அந்த அரசன் உட்காரும் சிம்மாசனம் நம்முடைய இதயம். வாழ்வுக்கு உரிய *ஆறு ஆதாரங்கள் வீதிகள், அவைகளில் உலாவி வந்து, வாழ்வியல் தத்துவங்கள் **முப்பத்தியாறையும் படைகளாக எண்ணிக் கொண்டு, அந்த அரசன் பசியாற்றிக் கொள்ள மடைப்பள்ளியாக இவ்வுடலின் வயிற்றைப் பயன்படுத்திக் கொண்டு சுகமடைந்து வாழ்கிறான். இப்படிப்பட்ட வாழ்க்கையை எண்ணிப் பார்ப்பதும் சிறப்பானதே.

    (நம் உடலில் ஆறு ஆதாரங்கள் உள. இவற்றைத் சைவ சித்தாந்தத்தில் தாமரை மலராக உருவகம் செய்வர். சக்கரம் எனவும் உரைப்பர். இது நான்கு இதழ் தாமரை வடிவம் உடையது. இதன் வடிவம் நாற்கோணத்தில் முக்கோணம். இதிலிருந்து மற்ற சக்கரங்கள் இயங்குவதால் இதனை மூலாதாரம் என்றார்கள். இங்குதான் குண்டலினி சக்தி இருக்கிறது.இந்த ஆறு ஆதாரங்கள் எவை என்பதை 4ஆவது பாடலில் விளக்கியிருக்கிறோம். (திருமந்திரம் 1704ஆம் பாடல்)

    The Saiva Siddhanta analyses the universe into 36 Tattvas (principles). The 36 Tattvas arise from Maya, the material cause of the world. Suddha Maya is Maya in its primal state. From it arise the five pure principles called Siva Tattva, Sakthi Tattva, Sadasiva Tattva, Iswara Tattva and Suddhavidya Tattva. Siva functions through these five pure principles.

    என் பெற்ற தாயரும் என்னைப் பிணமென்று இகழ்ந்து விட்டார்
    பொன் பெற்ற மாதரும் போவென்று சொல்லிப் புலம்பி விட்டார்
    கொன் பெற்ற மைந்தரும் பின் வலம் வந்து குடம் உடைத்தார்
    உன் பற்று ஒழிய ஒரு பற்றுமில்லை உடையவனே. 7.

    இவ்வுடலை விட்டு உயிர் போயின பின்பு, இதைப் பெற்ற அன்னையும் இதை ‘பிணம்’ என்று சொல்லி விட்டாள்; பொன்னும் பொருளுமாக என்னிடம் பெற்றுக் கொண்ட மனைவி உட்பட பெண்டிரெல்லாம் இதைக் கொண்டு போங்கள் என்று உரைத்து விட்டார்; பெற்ற பிள்ளைகளோ இடுகாட்டில் நீர் நிறைந்த மண் குடத்தைத் தலையில் வைத்துக் கொண்டு இவ்வுடலை மூன்று முறை சுற்றி வந்து அக்குடத்தை பின்புறமாக வீசி குடத்தை உடைத்துவிட்டுப் போய்விட்டார், இப்படிப்பட்ட நிலையில் இறைவா உன்னைத் தவிர எனக்கு இனி பற்றுக்கோடு யார்?

    கறையற்ற பல்லும் கரித்துணி ஆடையும் கள்ளமின்றி
    பொறையுற்ற நெஞ்சமும் பொல்லாத ஊணும் புறந்திண்ணையும்
    தரையிற் கிடப்பும், இரந்து உண்ணும் ஓடும் சகமறியக்
    குறைவற்ற செல்வம் என்றே கோல மாமறை கூப்பிடுமே. 8.

    மனித வாழ்க்கையில் எது குறைவற்ற செல்வம் தெரியுமா? வெற்றிலை, புகையிலை, சிகரெட், பீடி, பீடா போன்றவற்றைப் போட்டுப் போட்டுக் கறை படிந்த பற்கள் இல்லாமல் பளிச்சென்று விளங்கும் வெள்ளைப் பற்களும், மடிப்பு கலையாத பட்டு பீதாம்பர வஸ்திரங்கள் அன்றி அழுக்குப் படிந்திருந்தாலும் உடலை மறைக்கவோர் ஆடை; வஞ்சமில்லாததும், பொறுமையுள்ளதுமான நல்ல மனம்; தெய்வம் தந்த பூமியே படுக்கையாகவும்; பிச்சை வாங்கி உண்ண ஒரு திருவோடும் ஆக இவைகளே நிரந்தர செல்வம் என்று நம் வேதங்களும் சொல்லுகின்றன.

    எட்டுத் திசையும், பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய்
    முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாம்
    கட்டிச் சுருட்டித் தங்கட் கக்கத்தில் வைப்பர் கருத்தில் வையார்
    பட்டப் பகலை இரவென்று கூறிடும் பாதகரே. 9.

    இந்த அண்ட பெருவெளியின் எட்டுத் திசைகளிலும், பதினாறு கோணங்களிலும் எங்கும் நீக்கமற நிலவி பரவியிருக்கும் ஜோதி ஸ்வரூபனான பரப்பிரம்மத்தை, அற்புத ஜோதியை உணர்ந்து கொள்ளாத மூடர்கள் அவை பற்றிய சுவடிகளை மட்டும் துணியில் கட்டிக் கயிற்றால் கட்டித் தங்கள் கக்கத்தில் வைத்துக் கொண்டிருப்பார்களே தவிர அந்த உண்மையைப் புரிந்து கொண்டு மனதில் கொள்ளாதவர்கள். இவர்கள் பட்டப் பகலை இரவு என்று கூறிடும் பாதகர்கள் ஆவார்கள்.

    (இதன் பொருள் இவ்வண்ட பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கின்ற சர்வ பரிபூரண சச்சிதானந்த பரிபூரணத்தை விளக்குகின்ற சாஸ்திர நூல்களை, புராண, இதிகாசங்களை படித்துப் புரிந்து மனதில் கொள்ளாமல் அந்த சுவடிகளை மட்டும் நூலினால் கட்டித் தங்கள் கக்கத்தில் வைத்துக் கொள்வதால், படித்துப் புரிந்து உணர்ந்து கொண்டதாய் ஆகிவிடுமா? என்பதுதான் கேள்வி. இந்தக் கருத்தை வலியுறுத்தும் ஒரு பாடல் இதோ:

    ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
    நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
    வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மானிடர்
    கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே.

    தாயுமானவ சுவாமிகளும் “சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே” என்று இறைவன் குடிகொள்ளும் இடம் மனமே என்பதை விளக்குவதையும் இங்கு சிந்திக்கலாம்.)

    உரைக்கைக்கு நல்ல திருவெழுத்து ஐந்துண்டு உரைப்படியே
    செருக்கித் தரிக்கத் திருநீறுமுண்டு தெருக்குப்பையில்
    தரிக்கக் கரித்துணி ஆடையும் உண்டு எந்தச் சாதியிலும்
    இரக்கத் துணிந்து கொண்டேன் குறையேதும் எனக்கில்லையே. 10.

    என் நாவு எப்போதும் உரைக்க திரு ஐந்தெழுத்து இருக்கிறது; இறைவனை எண்ணி பெருமைப்பட்டு நெற்றியில் தரிக்கத் திருநீறும் இருக்கிறது; மற்றவர்கள் வீசியெறிந்த கரித்துணி குப்பைமேட்டில் இருக்கிறது நான் எடுத்து உடுத்துக் கொள்ள; பசியெடுத்தால் யார் எவர் எந்த சாதி என்பதைப் பொருட்படுத்தாமல் பிக்ஷை கொள்ளவும் மனம் துணிந்து விட்டேன், பின்னர் எனக்கு என்ன குறை?

    (இன்னும் உண்டு)

    Share
  • சீதாயணம் படக்காட்சி ~ [3]

    சி. ஜெயபாரதன், கனடா

    (முதல் காட்சி)

     

    அன்புள்ள நண்பர்களே,

    “சீதாயணம்” என்னும் எனது நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். முக்கியமாக இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, பிள்ளைகளை இழந்து, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரையும் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாப நிகழ்ச்சி இது.

    அன்புடன்,
    ஜெயபாரதன், கனடா

    +++++++++++++

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு : வையவன்

    ஓவியம் : ஓவித்தமிழ்

    Scene -4

    Scene -5

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 94 (21.10.13)

     

    மலர் சபா

     

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

    புகார்நகரின் வாயிலைக் கடத்தல்

    அதன் பின்
    மலையிலிருந்து புறப்பட்டுப்
    பாய்ந்து வரும் பேராறு போல
    உலகோர் வந்து போவதற்கு ஏற்ப
    மிகவும் அகலமாக அமைக்கப்பட்டிருந்த
    புகார் நகர வாயிலைக்
    கடந்து சென்றனர்
    கோவலனும் கண்ணகியும்.

    இலவந்திகைப் பள்ளியின் எயிலின் பின்புறத்தே போதல்

    உருவம் இல்லாத காமன் எனும்
    குறுநில மன்னன்
    சோழமன்னனுக்குத் திறையாக
    இளவேனிலையும் தென்றலையும்
    வழங்கியது போலவே
    பலவகை மலர்களை அடுக்கிய
    நல்லதொரு மரநிழலை உடைய
    இலவந்திகை எனும்
    எழில்மிகு சோலையின்
    மதிற்புறத்தைக் கடந்தனர்.

    “காவிரியின் கடைமுகம் கழிந்து, வடகரையின் வழியாக மேற்கு நோக்கி வழிக்கொள்ளல்”

    தாழ்ந்து படர்ந்த சோலை
    இருமருங்கிலும் சூழ்ந்து நிற்கும்
    காவிரிப் பெருங்கரையில்
    புனலாடச் செல்வதற்கென்று
    அமைக்கப் பட்டிருந்த பெருவழியில் சென்று
    நீராடும் துறையைக் கடந்து,
    வளம் சார்ந்த காவிரியின்
    வடகரையில் அமைந்திருந்த
    சோலையின்வழியே
    காலைப்பொழுதில் நீராடிச்செல்பவர்
    மறைந்து மறைந்து போவதைப்போல்
    கடந்து சென்றனர்.
    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 26 – 35

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பால்வீதி மையப் பூதக் கருந்துளை நோக்கிப் பேரசுர அகில வாயு முகில் விரைகிறது.

    Supermassive Blackhole

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

    காலவெளிக் கருங்கடலில்
    கோலமிடும்
    ஒளிமந்தைத் தீவுகள் !
    காலாக்ஸி மந்தையில்
    சுருள் சுருளாய் சுற்றுபவை
    கால்களா ? வால்களா ? கைகளா ?
    ஆதி அந்தம் அறிய முடியா
    அகில வலைக் கடலில்
    ஆக்டபஸ் போல் நீந்துபவை
    காலாக்ஸி ஆழிகள் !
    மையத்தில் ஒளிக்கதிர் வீசும்
    பூதக் கருந் துளைகள்
    பிரபஞ்சக் கலைச் சிற்பியின்
    கருமைக் களஞ்சியம் !
    அகிலக் கருங்கடலில்
    அசுரத் தீவுகளாய்  ஊர்ந்திடும்
    பூதத் திமிங்கலங்கள் !
    தூங்கியும் தூங்காத உடும்புகள் !
    விண்மீன் விழுங்கிகள் !
    காலாக்ஸிகள் பின்னலாம் !
    விண்மீன்கள் பிறக்கலாம் !
    ஒளியை உறிஞ்சிக்
    கருமைப் பிண்டமாய் மாற்றும்
    மந்திரவாதி
    மர்மக் கருந்துளை !

    ++++++++++++++++++

    Fig 1 Big Bang & Galaxy Formation

    2012 இறுதி மாதங்களில் ஸ்லோன் புள்ளியியல் விண்வெளித் தேர்வில் [Sloan Digital Sky Survey III] கண்டு பிடித்து, நூற்றுக் கணக்கான விண்மீன்கள் நமது பால்வீதி காலக்ஸியின் மையத்தை நீண்ட சுழிச் சுற்று வீதிகளில் வலம் வருகின்றன என்று வெளியிட்டுள்ளது.   இந்தச் சுற்று வீதிகளில் அறியும் விளக்கம் :  இந்த விண்மீன்கள் யாவும் பால்வீதித் தட்டின் [Milky Way Bar] ஒரு பகுதி என்பதே !   இந்த ஒளிமந்தை தட்டுகள் காலக்ஸி வடிவமைப்பைத் தேர்வு செய்ய முக்கிய காரணமாக இருப்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்.

    டேவிட் நிதேவர் [மிச்சிகன் பல்கலைக் கழகம்] [Sloan Digital Sky Survey III (SDSS III]

    பால்வீதித் தட்டின்  [Milky Way Bar]  இருப்பைப் பல்வேறு தனித்துவக் கோடுகளிலிருந்து நாங்கள் கண்டறிவோம். ஆயினும் எந்த விண்மீன்கள் தட்டின் பகுதியில் உள்ளன என்பதும், அவை என்ன வேகத்தில் சுற்று கின்றன என்பதும் எங்களுக்குத் தெரியாது.   தட்டுகள் உருவான முறை அவற்றின் பண்பாடுகளை எடுத்துக் கூறும்.    காலக்ஸி மையக் கருந்துளையைச் சுற்றும் விண்மீன்கள், காலக்ஸியின்  மற்ற விண்மீன் களை விட எந்த விதத்தில் சார்புள்ளவை, அல்லது வேறுபட்டவை  என்பதை அறிய முடியும்.

    கெயில் ஸஸோவாஸ்கி  [National Science Foundation, Ohio State University]

     

    Gas Flow towards Milky Way Centre

     

    ஈசா விஞ்ஞானிகளின் விண்ணோக்கி மூலம் பார்த்துக் கூறிய ஓர் உன்னத முதற் கண்டுபிடிப்பு

    தென்  அமெரிக்காவின் சில்லியில் உள்ள மிகப்பெரும் விண்ணோக்கியில் ஈசா வானியல் விஞ்ஞானிகள் கூர்ந்து நோக்கி ஓர் உன்னதக் கண்டு பிடிப்பை முதன்முதல் அறிவித்தனர்.   அந்த அரிய புதிய கண்டு பிடிப்பு என்ன ?   பூமியைப் போல் பன்மடங்கு நிறையுள்ள ஒரு பூத வாயு முகில் நமது பால்வீதி ஒளிமந்தையின் மையக் கருந்துளை நோக்கி நகர்ந்து, விரைவாக்கம் [Acceleration] மிகுவதைக் கண்டு பிடித்தனர்,   இதுதான் முதல் முறை விண்ணோக்கி மூலம் விஞ்ஞானிகள் அந்த அற்புதப் பூத நிறைக் கருந்துளை ஈர்ப்பைத் தெளிவாகக் கண்டுள்ளார்.    அதற்கோர் விளக்கம் :   அந்த வாயு முகில் பிண்டம்  அண்டையில் இருக்கும் பெருநிறை விண்மீன்களிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும்.   அந்த விண்மீன்கள் உள்ளே உட்புயல்கள் எழுந்து அவற்றின் நிறை அதிவேகத்தில் இழந்து குறைவாகி வருகிறது.   அம்மாதிரி விண்மீன்கள் முறிவு, முன்பு அறியப் பட்ட ஒரு மையக் கருந்துளையைச் சுற்றும் இரட்டை விண்மீன்கள் ஒன்றோடு ஒன்று மோதி உடைந்து சிதைந்தவையே.   அவ்விதம் வெளி யேறிய வாயு முகிலே நமது பால்வீதி மையக் கருந்துளை நோக்கி விரைந்து செல்கிறது என்று கண்டுள்ளார்.

    Fig 1C How Galaxy Works

    கடந்த 20 ஆண்டுத் திட்டத்தில் ஈசாவின் விண்ணோக்கிகளைப் பயன்படுத்தி, காலக்ஸி மையத்தை நோக்கி நகரும் விண்மீன்களைத் தொடர்ந்து கண்ணோக்கி, ஜெர்மன் மாக்ஸ் பிளாங்க் விண்வெளித் தாரகைப் பௌதிக விஞ்ஞானி ரைஹார்டு கென்ஸல் [Reinhard Genzel of Maxs Plank Institute of Extraterrestrial Physics] ஒரு தனிப்பட்ட புது வடிவண்டம், மையக் கருந்துளையை நோக்கி நெருங்குவதைக் கண்டிருக்கிறார்.   கடந்த 7 ஆண்டுகள் கவனித்ததில் அதன் வேகம் வளர்ந்து, மணிக்கு 8 மில்லியன் கி.மீ. ஆக இரட்டித்துள்ளது.   தற்போது [2013]  அது மையக் கருந்துளையின் “விளைவுத் தொடுவான்,”  [Event Horizon]  தடத்திலிருந்து சுமார் 39 ஒளி மணி [Light -Hours] தூரத்தில் நகர்கிறது.   இந்த தூரம் வானியல் நோக்குப்படி மையக் கருந்துளைக்கு மிக நெருக்கமான அரங்கம்.  அந்த வடிவண்டம் மற்ற அண்டை விண்மீன்களை விட குளிர்ந்த உஷ்ணத்தில் [280 டிகிரி செல்சியஸ்] இருப்பது.   பெரும்பாலும் ஹைடிரஜன், ஹீலிய வாயுக்கள் கொண்டவை.  பூமியைப் போல் 3 மடங்கு நிறை யுடையது.   மையக் கருந்துளையின் திணிவு அடர்ந்த அரங்கத்தில் அயனியான வாயு முகில் [Ionized Gas Cloud] விண்மீன்களின் தீவிர புறவூதா கதிர்வீச்சில்  ஒளிமயமாய்த் தோன்றுகிறது.

    கருந்துளையைச் சுற்றியுள்ள சூடான வாயுவை விட விரைந்து போகும் வாயு முகிலின் தற்போதைய திணிவு [Density] மிக அதிகமாய் உள்ளது.   ஆனால் வாயு முகில் தீவிரப் பசியோடு உள்ள மையக் கருந்துளையை வெகு அருகில் நெருங்கும் போது,  பெருகிச் செல்லும் புற அழுத்தம் முகிலை அழுத்திச் சுருக்குகிறது.    அதே சமயம், நமது சூரியனை விட 4 மில்லியன் மடங்கு ஈர்ப்பு  ஆற்றல் கொண்ட மையக் கருந்துளையின் இழுப்பு, சுற்று வீதியில் உள்ள  முகிலை நீளச் செய்து தன்னை நோக்கி உறிஞ்சி விரைவாக்கம் செய்கிறது.

    Stars Orbiting Milkyway

    “சமீபத்திய ஹப்பிள் தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகள் வானியல் விஞ்ஞானிகளுக்கு மாபெரும் பிரபஞ்சச் சவாலாகி விட்டன !  காரணம் அது ஒவ்வொரு காலாக்ஸியின் மையத்திலும் பூதகரமான கருந்துளை ஒன்று இருப்பதைக் காட்டி விட்டது !”

    ஸ்டீவ் நாடிஸ், (Astronomy Science Editor)

    “கருந்துளைகள் மெய்யாகக் கருமை நிறம் கொண்டவை அல்ல !  அவை ஒளித்துகள் மினுக்கும் வெப்பக் கதிர்களை (Quantum Glow of Thermal Radiation) வீசுபவை.

    ஸ்டீஃபென் ஹாக்கிங் (1970)

    பிரபஞ்சம் உப்பி விரியும் போது, காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன ! அதை வேறு விதமாகக் கூறினால், காலாக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்வதால், பிரபஞ்சம் உப்பி விரிகிறது என்பது தெளிவாகிறது ! அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு கூண்டு என்று கருதக் கூடாது ! அது சோப்புக் குமிழிபோல் உப்பிக் கொண்டே போகும் ஒரு பெருங்கோளம் !

    The Largest black hole

    வானியல் மேதை எட்வின் ஹப்பிள்

    பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தின் மர்மமான விசித்திரங்கள் !  அந்தக் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன !  எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்து போய் எஞ்சிய திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் அடர்த்தியாகி “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை அடைவதுதான் கருந்துளை.  அந்தச் சமயத்தில் கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்கற்று முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது. (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) !

    விண்வெளி விடைக் கைநூல் (Ths Handy Space Answer Book)

    இந்த பௌதீக உலகத்திலே மர்மத்தைத் தாண்டிச் சென்று குறிப்பிடாத ஒரு மர்மம் இல்லை ! அனைத்து அறிவு வீதிகளும், நியதிகளின் தனி வழிகளும், சிந்தனை யூகிப்புகளும் முடிவிலே, மனித மகத்துவம் தொட முடியாத ஒரு பிரதமக் கொந்தளிப்பை (Primal Chaos) நோக்கிச் செல்கின்றன.”

    லிங்கன் பார்னெட் (பிரபஞ்சம் & டாக்டர் ஐன்ஸ்டைன்)

    பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்வுச் சுற்று ஆயுள் முடிந்த பின் பெருநிறை விண்மீன்கள் (Massive Stars) ஒருவேளை சிதைந்து, ஒற்றைப் பூதநிறை வடிவுக் (Super Massive Object) கருந்துளைகள் நிலை பெறத் தோன்றியிருக்கலாம்.

    ஆன்ரியா கீஸ், வானியல் பௌதிகப் பேராசிரியை (Andrea Ghez, UCLA)

     

    Fig 1A Smith Gas Cloud

    பால்வீதி மையத்தை நோக்கிப் பயணம்

    நூறாயிரம் ஒளியாண்டு அகலமான நமது பால்வீதி காலாக்ஸி போல் மில்லியன் கணக்கான காலாக்ஸி ஒளிமந்தைகள் பிரபஞ்ச விண்வெளிக் கடலில் நகர்ந்து கொண்டு வருகின்றன.  மனத்தாலும் படத்தாலும் கற்பனை செய்ய முடியாத அந்த ஒளிமயத் தாம்பாளத்தில் கோடான கோடி விண்மீன்கள் காலாக்ஸி மையத்தைச் சுற்றி வருகின்றன.  பேரசுர ஈர்ப்பாற்றல் கொண்ட அத்தனை கோடி விண்மீன்கள் காலாக்ஸியின் பின்னல் வலையிலிருந்து தப்பி ஓடிவிடாதபடி அதன் மையத்தில் மாயமான புதிரான ஓர் ராட்சத விசையின் கவர்ச்சி இருக்க வேண்டும் என்று பல்லாண்டுகளாக வானியல் விஞ்ஞானிகள் ஊகித்து வந்தார்கள்.  2005 ஆம் ஆண்டில் அந்த மர்மான மைய ஈர்ப்புவிசை என்ன வென்று விஞ்ஞானிகள் தெளிவாகக் கண்டறிந்தனர்.  அது ஒரு பூதக் கருந்துளை என்பது உறுதியாக அறியப்பட்டது.  நமது பால்வீதி ஒளிமந்தை பூமியிலிருந்து 26,000 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.  அதன் அகலம் சுமார் : 100,000 ஒளியாண்டு.  அதில் உள்ள விண்மீன்கள் எண்ணிக்கை சுமார்: 100 பில்லியன் ! நமது பரிதி அவற்றில் ஒன்று !

    Milkyway -1

    1999 ஆம் ஆண்டில் முதன்முதல் துல்லியமாக பரிதி பால்வீதி காலாக்ஸியில் ஒருமுறைச் சுற்றும் காலாக்ஸி ஆண்டு காலத்தை (A Galactic Year = 226 Million Years) 226 மில்லியன் ஆண்டுகள் என்று விண்வெளியில் அளந்து கண்டிருக்கிறார்.  இதே இடத்தில் முன்பு பரிதி மண்டலம் இருந்த போதுதான் உலகத்தில் ஏராளமான பல்வேறு டைனோஸார்ஸ் பூமியில் உலவி வந்தன !  இதுவரைப் பரிதி மண்டலம் சுமார் 20 அல்லது 25 சுற்றுக்கள் பால்வீதி மையத்தைச் சுற்றி விட்டது என்று ஊக்கிக்கப் படுகிறது !

    இப்போது ரேடியோ தொலைநோக்கியைப் (Radio Telescope) பயன்படுத்தி வானியல் விஞ்ஞானிகள் ஹப்பிள் தொலைநோக்கி கணக்கிடுவதைப் போல் 500 மடங்கு துல்லியமாக அண்டவெளி வடிவுகளை, அவற்றின் இடை வெளித் தொலைவுகளை (Celestical Bodies & Distances) அளந்து விடுகிறார். பால்வீதி ஒளிமந்தையில் பரிதி மண்டலக் கோள்கள் சுற்றியதை அவ்விதம் கணித்ததில், அவற்றின் சுற்று வேகம் (Orbital Speed) விநாடிக்கு 135 மைல் என்று அறிந்திருக்கிறார். அதாவது பால்வீதியைப் பரிதி மண்டலம் ஒருமுறைச் சுற்ற சுமார் 226 மில்லியன் ஆண்டுகள் எடுக்கின்றன.

    Milky Way Galaxi -1

     

    பால்வீதி காலாக்ஸியின் விபரங்கள்

    நமது பால்வீதி ஒளிமந்தை ஒரு சுருள் காலாக்ஸி (A Spiral Galaxy).  அதன் வளைவுக் கரங்கள் “எரியும் கிருஷ்ணச் சக்கிரம்” போல் சுருளாய் மையத்தி லிருந்து தொடங்குகின்றன. ஒரு கரத்தில் உள்ள பரிதி மண்டலம் பால்வீதி மையத்திலிருந்து 26,000 ஒளியாண்டு தூரத்தில் சுற்றி வருகிறது.  பால்வீதி மையத்தைப் பரிதி மணிக்கு 486,000 மைல் வேகத்தில் சுற்றி வருகிறது.  பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு வடிவும் (Object) பிரபஞ்சம் சீரான விரைவாக்க வீதத்தில் (Constant Accelerating Rate) விரிந்து வருவதால். ஒன்றை விட்டு ஒன்று நகர்ந்து கொண்டே வருகிறது.

    பரிதி மண்டல அளப்பின் போது விஞ்ஞானிகள் பால்வீதி மையத்தின் அருகே இருக்கும் “சாகிட்டேரியஸ் A” (Sagittarius A) என்னும் ஓர் விண்மீனைக் குறிவைத்தார்.  இருபது ஆண்டுகளுக்கு முன்புதான் [1988] அந்த விண்மீன் கண்டுபிடிக்கப்பட்டது.  பத்து நாட்கள் தொடர்ந்து தொலைநோக்கி மூலம் அந்த விண்மீனின் நகர்ச்சியை மற்ற விண்மீன்கள் நகர்ச்சிக்கு ஒப்பாக அளந்தார்கள்.  அவர் குறிவைத்த “சாகிட்டேரியஸ் A” விண்மீனின் ஒப்பியல் நகர்ச்சித் தூரம் மிக மிகச் சிறியது.

    fig-1d-our-milky-way-galaxy-details

    அதாவது பரிதி போல் மையத்தைச் சுற்றும் வேகம் (விநாடிக்கு 135 மைல்) இல்லாமல் “சாகிட்டேரியஸ் A” மையத்தை மிக மிகக் குன்றிய வேகத்தில் சுற்றுவதால் மையத்தில் பேரசுரத் திணிவுள்ள கருந்துளை ஒன்றிருப் பதற்குச் சான்று அளித்துள்ளது.  அந்த மையக் கருந்துளையின் அசுர நிறை நமது பரிதியின் நிறையைப் போல் 2.6 மில்லியன் மடங்கு என்று கணிக்கப் பட்டுள்ளது !

    நமது பரிதியானது பால்வீதி மையத்தை நோக்கியோ அல்லது விலகியோ காலாக்ஸித் தளமட்டத்திற்கு (Galactic Plane) மேலோ அல்லது கீழோ நகர்ந்து வருவதாக அறியப் பட்டுள்ளது.  அவ்விதம் பரிதி மேலும், கீழும் ஏறி இறங்கும் ஒரு சுற்றியக்கத்துக்கு 64 மில்லியன் ஆண்டுகள் ஆகின்றன !  மேலும் பால்வீதி ஒளிமந்தை “விர்கோ குழுக் கொத்து” (Virgo Cluster) ஈர்ப்பாற்றலால் கவரப் படுகிறது என்பதும் அறியப்பட்டிருக்கிறது.பொதுவாக நமது பால்வீதி ஒளிமந்தையின் காந்தக் களம் நமது பரிதி மண்டலத்தைக் காலாக்ஸியிலிருந்து அடிக்கும் புயலிலிருந்து பாதுகாக்கிறது.

    fig-1e-the-milky-way-system

    பால்வீதி ஒளிமந்தை மையத்தின் நடுக்கரு

    பால்வீதி காலாக்ஸியின் நடுக்கருத் தோற்றம் விண்மீன்கள் பிறப்பிக்கும் கண்ணுக்குப் புலப்படாத பல்வேறு அலைவரிசைகளில் (Invisible Wavelengths) இருக்கும் ஓர் அரங்கமாக அறியப்பட்டுள்ளது.  சிவப்பு நிறம் ரேடியோ அலை எழுச்சியைக் காட்டும்.  பச்சை நிறமுட்சிவப்பு நடுநிலைக் கதிர்வீச்சைக் காட்டுகிறது.  நீல நிறம் எக்ஸ்-ரே வீச்சைக் காட்டுகிறது. (படத்தைப் பாருங்கள்)

    “பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்வுச் சுற்று ஆயுள் முடிந்த பின் பெருநிறை விண்மீன்கள் (Massive Stars) ஒருவேளை சிதைந்து, ஒற்றைப் பூதநிறை வடிவுக் (Super Massive Object) கருந்துளைகள் நிலை பெறத் தோன்றியிருக்கலாம்.” என்று காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் வானியல் பௌதிகப் பேராசிரியை ஆன்ரியா கீஸ் கூறுகிறார்.  கீஸின் ஆராய்ச்சிக் குறிக்கோள்கள் யாவும் விண்மீன்கள், அவற்றைச் சுற்றும் கோள்கள் ஆகியவற்றின் மூலத் தோற்றத்தை நோக்கியே சென்றன.  அத்துடன் அவரது ஆராய்ச்சிகள் காலாக்ஸியின் மையத்தில் இருக்கும் பிண்டத்தின் பரிமாற்றம், இயற்கைப் பண்பாடு (Distribution & Nature of Matter at the Center of Galaxy) பற்றியும் இருந்தன.  புது நோக்கு முறையைப் பயன்படுத்தி தூசிமிக்க பால்வீதி மையத்தைத் துருவி ஆராய்ந்து, பற்பல விண்மீன்கள் விரைவாகச் சுற்றி வரும் ஒரு கருந்துளை வீற்றிருப்பதைக் கண்டார்.  அது ஓர் சாதாரண கருந்துளை இல்லை.  நமது பரிதியப் போல் பல கோடி மடங்கு பேராற்றல் கொண்ட பூதக் கருந்துளை அது !

    fig-2-our-huge-milky-way-galaxy

    பால்வீதி மையத்தில் உள்ள கருந்துளை நமதி பரிதியைப் போல் 3 மில்லியன் மடங்கு பெருநிறை கொண்டது !  அது சாகிட்டேரியஸ் விண்மீன் கொத்துக்களில் (Constellation of Sagittarius) உள்ளது.  நமது பால்வீதி காலாக்ஸி மைய்த்தில் இருக்கும் கருந்துளை “சாக்கிட்டேரியஸ் A” என்று அழைக்கப் படுகிறது.

    1995 ஆம் ஆண்டிலிருந்து கீஸ் ஹவாயியில் உள்ள மௌனா கியா மலை மீதிருக்கும் 10 மீடர் தொலைநோக்கியில் பால்வீதி மையத்தின் அருகில் காணப்படும் சுமார் 200 விண்மீன்களின் நகர்ச்சியை ஆராய்ந்து வந்தார்.  காலாக்ஸி மையத்தின் அருகில் 20 விண்மீன்கள் கருந்துளையை மணிக்கு 3 மில்லியன் மைல் படுவேகத்தில் சுற்றுவதைக் கண்டார்.  அந்த வேகம் சாதாரண விண்மீன் வேகத்தை விட 10 மடங்கு வேகமாகும்.  கீஸின் கண்டு பிடிப்பு பிரபஞ்சத்தின் கோடான கோடிப் பெரும்பான்மையான காலாக்ஸி களின் மையத்தில் பூதப் பெருநிறைக் கருந்துளை ஒன்று உள்ளது என்பதற்கு உதவுகிறது.   அத்துடன் கருந்துளை களின் நிறையும் அவற்றின் இயற்கைப் பண்பாடும் அதன் பெருவ டிவத்தைச் சார்ந்தவை என்பதும் அருகில் உள்ள காலாஸிகளை உண்டாக்கியவை என்பதும் புலனாயிற்று.

    Our Milky Way Galaxy

    fig-3-a-galactic-core

    பிரபஞ்சக் கருந்துளைகள் ஆக்கவும் செய்யும் ! அழிக்கவும் செய்யும் !  அவை அருகில் அகப்படும் விண்மீன்களையும், வாயு முகில்களையும் உறிஞ்சி விழுங்கி விடும் !  அப்போது அந்த நிகழ்ச்சியில் அசுரச்சக்தி தூள்கள் உள்ள உந்து ஒளிக்கதிர்களை (Jets of Super High Energy Particles & Radiation) கருந்துளைகள் வீசும் !  அந்த ஒளிக்கதிர் உந்து வீச்சுகள் பல மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் விண்வெளியில் நீள்பவை !  அவையே பிண்டமும் சக்தியும் அளித்துக் காலாக்ஸி ஒளிமந்தைகளை தோற்றுவிக்கும் விதைகள் என்றும் அறியப் படுகின்றது.

    காலாக்ஸிகள் பிரபஞ்ச வரலாற்றின் அறிகுறிச் சின்னங்கள் !

    பிரபஞ்சத்தில் கோடான கோடி விண்மீன்கள் சுற்றும் மந்தை மந்தை யான காலாக்ஸிகள் அகிலத்தின் அடிப்படை அரங்கம் (Basic Unit of Cosmology) !  அவற்றில் இருப்பவை பெரும்பாலும் : எண்ணற்ற விண்மீன்கள், வாயுக்கள், தூசி துணுக்குகள், பேரளவில் கரும்பிண்டம் (Dark Matter) ! பூகோளத் தளத்திலிருந்து பிரபஞ்ச விளிம்புவரை தொடும் காலாக்ஸிகள் மட்டும்தான் பிரபஞ்சத்தின் ஆதிகால மூல வரலாறுகளை விளக்கும் பூர்வாங்க “மைல்கற்கள்” அல்லது “அறிகுறிச் சின்னங்கள்” (Signposts) !  காலாக்ஸி ஒன்றில் பில்லியன் கணக்கில் விண்மீன்களும் மற்றும் சில வாயுக்களும், கருமைப் பிண்டங்களும் (Dark Matter) ஈர்ப்பாற்றலால் பின்னிக் கொண்டிருக்கின்றன !  விலக்கித் தள்ளும் “கருமைச் சக்தியால்” (Repulsive Dark Energy) மந்தை காலாக்ஸிகள் நில்லாமல் பிரபஞ்ச விளிம்பை விரித்துக் கொண்டு விரைவாய்ச் செல்கின்றன.  வாயுக்கள் நிரம்பச் செழித்து இன்னும் புதிய விண்மீன்கள் உருவாகும் நமது பால்வீதி காலாக்ஸி சுருள் வடிவைக் (Spiral Shaped Milkyway) கொண்டது.  நீள்வட்ட காலாக்ஸியில் (Elliptical Galaxy) வாயுக்கள் கிடையா.  மற்றும் பால்வீதிக்கு அருகில் “ஆப்பம்” போன்ற தட்டு லென்ஸ் காலாக்ஸியும் (Lenticular Galaxy), வடிவீன காலாக்ஸியும் (Irregular Galaxy), ஸாகிட்டாரியஸ் குள்ள காலாக்ஸியும் (Sagittarius Dwarf Galaxy) பல்வேறு வடிவத்தில் உள்ளன.

    fig-5-spectacular-view-in-the-universe

    பிரபஞ்ச காலக்ஸிகள் எப்படித் தோன்றின ?

    அகிலவியல் தத்துவங்களின் (Cosmology) விளக்கங்கள் வானியல் தொலைநோக்குகளின் தேடல் மூலமாக விரைவாக விருத்தியாகும் போது, பிள்ளைப் பிராந்தியத்தில் பிரபஞ்சத்தின் (Infant Universe) பிண்டமானது எவ்வித யந்திரவியல் நியதியில் ஒன்றாய்ச் சேர்ந்தன என்பதை விஞ்ஞானிகள் இப்போது கூர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள்.  நமக்கு எழும் கேள்வி இதுதான் : எவை முதன்முதலில் தோன்றியன ? காலாக்ஸிகளா ? விண்மீன்களா ? அல்லது கருந்துளைகளா ?  பிள்ளைப் பிரபஞ்சம் ஆதியில் பல்லாயிரக் கணக்கான டிகிரி உஷ்ணமுள்ள வாயுக்களும், கருமைப் பிண்டமும் (Dark Matter) சீராகக் கலந்திருந்த கடலாக இருந்துள்ளது.  கண்ணுக்குப் புலப்படாத, மர்மான, பிரதானமான பெரும்பிண்டம் இருந்ததற்குக் காலாக்ஸிகளின் மீது உண்டான பூத ஈர்ப்பியல் பாதிப்பே மறைமுக நிரூபணங்களாய் எடுத்துக் கொள்ளப் பட்டன.  ஆயினும் காலாக்ஸிகள், விண்மீன்கள், கருந்துளைகள் எப்படி ஒருங்கே சேர்ந்திருந்தன என்பதுதான் விஞ்ஞானிகளைச் சிந்திக்க வைக்கும் பிரபஞ்சத்தின் புதிர்களாகவும், மர்மமாகவும் இருக்கின்றன !

    fig-7-quasar-brightest-object

    பிரபஞ்சத்தின் நுண்ணலைப் பின்புலத்து விளைவுகளின் (Microwave Background Effects) மூலம் ஆராய்ந்ததில், பிரபஞ்சம் குளிர்ந்திருந்த போது, பிண்டம் ஒன்றாய்த் திரண்டு, பெரு வெடிப்புக்குப் பிறகு 380,000 ஆண்டுகள் கழிந்து “பளிங்குபோல்” (Transparent) இருந்தது என்று கருதுகிறார்கள் !  பெரு வெடிப்புக்குப் பின் 1 பில்லியன் ஆண்டுகள் கடந்து, பிரபஞ்சத்தின் கட்டமைப்புகளான விண்மீன்களும், காலாக்ஸிகளும் உருவாயின என்று கருதப்படுகிறது.

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Common are Black Holes ? & How Did the Milky Way Galaxy Form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. Daily Galaxy – Cataclysmic Orbit – Our Solar System’s Journey Through the Milky Way Posted By : Luke McKinney [Sep 26, 2008]
    21 Daily Galaxy -GAIA Space Probe – Mapping the Family Tree of the Milky Way Posted By : Casey Kazan (July 2, 2007]
    22 Daily Galaxy – Hubble’s Secret – Orbiting the Milky Way Posted By : Casey Kazan [Dec 22, 2008]
    23 Daily Galaxy – 18 Billion Suns – Biggest Black Hole in the Universe Discovered Posted By Rebecca Sato [Dec 30, 2008]
    24. Daily Galaxy – Journey to the Center of the Milky Way Postd By : Casey Kazan (Jan 12, 2009)

    25.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/10/stars-orbiting-milky-ways-core-act-as-a-giant-mixer-for-the-galaxy.html  [October 15, 2013]

    26.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/10/violent-supermassive-black-hole-engine-observed-generating-huge-spiral-structure-at-galaxy-center.html   [October 16, 2013]

    27.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/10/image-of-the-day-colossal-cosmic-cloud-accelerating-towards-milky-ways-supermassive-black-hole.html [October 16, 2013]

    28.  www.dailygalaxy.com/my_weblog/2013/10/violent-supermassive-black-hole-engine-observed-generating-huge-spiral-structure-at-galaxy-center.html  [October 16, 2013]

    29.  http://www.spacedaily.com/reports/Gravitational_waves_help_understand_black_hole_weight_gain_999.html [October 18, 2013]

    (தொடரும்)

    ******************
    S. Jayabarathan (jayabarat@tnt21.com) (October 19, 2013)

    Share
  • புரிந்துணர்வு ஒப்பந்தம்!

    மதுரையைச் சேர்ந்த லாப நோக்கற்ற சமூக முனைப்பு நிறுவனமான நேடிவ்லீட் பௌண்டேஷன் (Nativelead Foundation – N L F ), எஸ்.ஏ.பி லேப்ஸ் இந்தியா ( SAP Labs India) என்ற ஜெர்மனியைத் தலைமை இடமாகக் கொண்ட பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

    இது எஸ்.ஏ.பி லேப்ஸ்-இன் `நிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புணர்வு’ (Corporate Social Responsibility) திட்டத்தின் ஓர் அங்கமாகும். இந்த உடன்படிக்கையின் படி நேடிவ்லீட்( NLF) ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் 20 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் மத்தியில் தொழில் முனைப்பு பற்றிய பலவகையான பயிற்சிகளை மேற்கொள்ளும். இதன் நோக்கம் இந்திய கண்டுபிடிப்புகள் மற்றும் தயாரிப்புகளை உலக சந்தைக்குக் கொண்டு வருவதாகும். புது யுக தொழில் முனைப்புகளை ஊக்குவிப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.

    நேடிவ்லீட் நிறுவனம், பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் மற்றும் கல்வி முடித்த இளைஞர்கள் மத்தியில் புதிய தொழில்களில் முனைவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை ஊக்குவித்து அதற்கான பயிற்சிகள் மற்றும் தொடர்புளை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

    அதன் மூன்று ஆண்டு திட்டத்தின்படி இப்பிராந்தியத்தில் 100 கல்லூரிகளில் பயிலும் ஒரு லட்சம் மாணவர்கள் மத்தியில் தொழில் தொடங்குதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி 50 உலக தரம்வாய்ந்த இந்திய கண்டுபிடுப்புகள் மற்றும் தயாரிப்புகளை உலக சந்தைக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளும்.

    நிகழ்ச்சியில் பேசிய NLF நிறுவனத்தின் இயக்குனர் R சிவராஜா கூறியதாவது, இன்னும் சில வருடங்களில் இந்தியாவின் இளைஞர்களின் எண்ணிக்கை மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது மிக அதிகமாக இருக்கும் என கணக்கிடப் பட்டுள்ளது. இது நாட்டுக்கு ஒரு பெரிய சக்தியாக இருந்தாலும் இந்த இளைய சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது நாட்டிற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றார்.
    .

    அதை எதிர் கொள்வதற்கான ஒரே வழி இப்போதிருக்கும் இளைஞர்கள் மத்தியில் தொழில் முனைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைத் தொழில் தேடுபவர்கள் என்ற நிலையில் இருந்து வேலை கொடுப்பவர்கள் என்ற நிலைக்குக் கொண்டு வருவதாகும் என்றார்.

    நேடிவ்லீட் நிறுவனத்தின் இத் திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் எஸ்.ஏ .பி (SAP) நிறுவனம் தனது அதிநுட்ப கண்டுபிடிப்பான எஸ் .ஏ.பி ஹானா (SAP Hana technology) தொழில் நுட்பம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதைப் பயன்படுத்தி மாணவர்கள் பல சமுதாய முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடுப்புகளை மேற்கொள்ள வழிவகுக்கிறது.

    இதன்படி எஸ்.ஏ .பி (SAP ) நிறுவனத்தின் பணியாளர்கள் நேடிவ்லீட் ஒப்ந்தம் செய்திருக்கும் கல்லூரி மாணவர்களுடன் மூன்று கட்டமாக தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். அவையாவது கற்பித்தல், புதிய உத்திகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் உதவுதல் மற்றும் அத்தகைய தேர்ந்த உத்திகளின் அடிப்படையில் புதிய தொழில்களைத் தொடங்க உதவுதல் ஆகியனவாகும்.

    நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஏ.பி யின் துணை தலைவர் மாத்யு தாமஸ் கூறும் போது எஸ்.ஏ.பி ஆனது மாணவர்களைத் தொழில்முனைவோர் ஆக்குவதை அதன் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் முக்கிய அங்கமாக கொண்டுள்ளது என்றும் அதற்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதலையும் கொடுக்க தயாராக உள்ளது என்றும் கூறினார்.

    எஸ்.ஏ.பி இன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய தொழில்களைத் தொடங்க தேவையான அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும் வசதியை இந்த சமூகப் பொறுப்புணர்வு திட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதே அதன் நோக்கம் ஆகும் என்றார்.

    நேடிவ்லீட் உடன் ஆன ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் நாட்டில் மாணவர்கள் தொழில்முனைவோராக தேவையான ஊக்கத்தையும் வழிகாட்டுதலையும் கொடுத்து அவர்களுக்கும் நாட்டுக்கும் வளமான எதிர் காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என நம்புகிறோம் என்றார் .

    நிகழ்ச்சியில் எஸ்.ஏ.பி நிறுவனத்தின் ஆசிய தலைவர் – (சமூக பொறுப்புணர்வு), திருமதி.சின், குஞ்சன் பட்டேல் மற்றும் நேடிவ்லீட் நிறுவனத்தைச் சார்ந்த அஸ்வின் தேசாய், நாகராஜா பிரகாசம் ஆகியோர் உடனிருந்தனர்.

    Share
  • கதவைத் திறந்தால் கண்ணதாசன்

     

    கதவைத் திறந்தால் கண்ணதாசன்

    அன்பர்களே!

    வணக்கம்!

    அக்டோபர் 20. ஞாயிறு, மாலை 6.15 மணிக்கு, “கதவைத் திறந்தால் கண்ணதாசன்” நிகழ்ச்சி!

    மரபின் மைந்தன் முத்தையாவும் நானும் பேசுகிறோம்.

    இடம்: சிருங்கேரி ஜகத்குரு சனாதன தர்ம சமிதி, 23, சிருங்கேரி மடம் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை 28.

    அனைவரும் வருக!

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • விவேகானந்தர் 150 -ஆம் ஆண்டுப் பிறந்த நாள் விழாவும் பேராசிரியர் பெஞ்சமின் லெபோவுக்குப் பாராட்டு விழாவும்.

    கடந்த மாதம் 29 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மதியம் 3 மணி அளவில் விவேகானந்தர் விழா பாரீஸ் 14 -ஆம் வட்டத்தில் உள்ள Maison de l’Inde என்னும் கட்டிடத்தில் நடைபெற்றது.

    DSC_0034

    பிரான்சு சிவன் கோவில் தலைவர் திருமிகு அருட்செல்வர் சுகுமாறன் முருகையன் அவர்கள் தலைமை ஏற்க, ஆசிரியர் ப. சின்னப்பா, M.A, B.Ed தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினார். இந்திய இல்லம் என்ற பொருள் கொண்ட ‘Maison de l’Inde’ -இன் இயக்குநர் திரு பிக்காஸ் சானியால் வரவேற்புரை நிகழ்த்தினார்.

    சுவாமி விவேகானந்தரைப் பற்றி இளம்பெண்கள் இருவரும் இளைஞர் ஒருவரும் சிற்றுரை ஆற்றினர். அவர்களுள் செல்வி கரின்லட்சுமி ஆங்கிலத்திலும் செல்வி சாரா கோதண்டம் பிரஞ்சிலும் செல்வன் ராமு பாலாஜி தமிழிலும் தம் உரைகளை அளித்தார்கள். செல்வன் ராமு பாலாஜி, விவேகானந்தர் போலவே வேடம் பூண்டு அனைவரையும் கவர்ந்தார்.

    பின்னர், பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தலைமையில் சிறப்புரைகள் நடந்தன . ஆசிரியர் ப. சின்னப்பா, M.A, B.Ed அவர்கள் ‘சிக்காகோவில் விவேகானந்தர்’ என்ற தலைப்பில் பேசினார் . பேராசிரியர் தளிஞ்சான் முருகையா அவர்கள் ‘பாரிசும் விவேகானந்தரும்’ என்ற தலைப்பில் உரையாற்றும் போது இதுவரை நமக்குத் தெரியாத பல செய்திகளை எடுத்துரைத்தார். இப்போது Maison de l’Inde இருக்கும் தெருவுக்குப் பக்கத்தில் உள்ள வீதியில்தான் விவேகானந்தர் தங்கி இருந்தார் என்ற செய்தி அனைவருக்கும் வியப்பை அளித்தது.விவேகானந்தர் பற்றிய பல தவல்களைப் புலவர் பொன்னரசு தம் உரையில் பரிமாறினார். ‘விவேகானந்தரும் தமிழர்களும்’ என்னும் தலைப்பில் இறுதியாக உரையாற்றிய பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, விவேகானந்தர் ஞான ஒளி பெற்றது கன்னியாக் குமரிக் கடல் பாறையில், அவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தவர் இராமநாதபுர அரசர் சேதுபதி, அவர் திரும்பி வந்தபோது முதல் வரவேற்பு அளித்தது தமிழகம், அவர் ஆற்றிய ஆங்கில உரைகளை முதல் முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர்கள் தமிழர்கள்… என வரிசையாக அடுக்கி அவரை உலகின் உச்சிக்குக்கொண்டு சென்றவர்கள் தமிழர்களே என நிலை நாட்டினார்.

    DSC_0083

    அதன் பின் மேடை ஏறிய முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திருமிகு கோவிந்தசாமி செயராமன், பேராசிரியர் பெஞ்சமின் லெபோ எழுதி அண்மையில் புதுவைக் கம்பன் கழகம் வெளியிட்ட ‘கம்பன் களஞ்சியம் தொகுதி 1 ‘ என்னும் நூலைப் பாராட்டிப் பேசினார். பேராசிரியருக்கும் அவர் துணைவியாருக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்த சிவன் கோவில் தலைவர் திருமிகு அருட்செல்வர் சுகுமாறன் முருகையன், அவர் துணைவியார் இருவரும் சேர்ந்து பாராட்டுப் பத்திரத்தை வழங்கினார்கள். அந்த நூலுக்காகவும் பேராசிரியர் இத்தனை ஆண்டுகள் பிரான்சில் தமிழுக்கு ஆற்றிய அளப்பரும் தொண்டுகளுக்காகவும் வழங்கப்பட்ட அதில் பாராட்டுரை வெண்பாவில் அமைந்திருந்தது. திருவாளர்கள் கோவிந்தசாமி செயராமன், தமிழியக்கன் தேவகுமாரன், ஆசிரியர் சின்னப்பா, புலவர் பொன்னரசு, பேராசிரியர் தளிஞ்சன் முருகையா… எனப் பலரும் பொன்னாடை போர்த்திப் பேராசிரியரைப் பாராட்டினார்கள் .

    DSC_0088

    இதற்கிடையில் பிரான்சு நாட்டின் இந்தியத் தூதர் மேதகு அருண் குமார் சிங், தம் பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தார். அவர் முன்னிலையில் செல்விகள் சாரா கோதண்டம், ழுலியா கோதண்டம் பரத நாட்டிய விருந்து அளித்தனர். இந்தியத் தூதர் தம் உரையை நிகழ்த்திய பின்னர், பங்கு கொண்ட செல்வியர், செல்வனுக்குப் பரிசு வழங்கினார். பின், இந்திய இராமகிருஷ்ண மடத்தின் பொதுச் செயலர் சுவாமி சுத்திதானந்தா, பாரீசு இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி வீத்மோகானந்தா உரையாற்றினார்கள். இறுதியாகத் தமிழியக்கன் தேவகுமாரன் நன்றி உரைக்க விழா இனிதே நிறைவு பெற்றது. அனைவரும் சிற்றுண்டி அருந்திச் சென்றனர். இவ்விழாவிற்காக முன்னின்று உழைத்தவர்கள் – திருமிகு கோவிந்தசாமி செயராமன், திருமிகு தமிழியக்கன் தேவகுமாரன் –நம் பாராட்டுதல்களுக்கு உரியவர்களே!

    வருணனை : புதுவை எழில்.

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 6ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    வேதத்தின் உட்பொருள் மண்ணாசை மங்கையை விட்டுவிடப்
    போதித்த வன்மொழி கேட்டிலையோ செய்த புண்ணியத்தான்
    ஆதித்தன் சந்திரன் போலே வெளிச்சம தாம் பொழுது
    காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே. 1.

    பெரியோர்கள் நமக்கு எத்தனையோ உபதேசங்களைச் சொல்லி வைத்தார்கள்; எதைத்தான் கேட்டு அதன் வழி நடந்தோம்? நான்கு வேதங்கள் கூறுகின்ற நற்கருத்துக்களைக் கேட்டுப் பின்பற்றினோமா? இல்லை, மண்ணாசையை, பெண்மீதான ஆசையை விட்டுவிடு என்றார்கள் சிவ நேசச் செல்வர்கள், அவர்கள் சொல்லியபடியாவது அவற்றை விட்டுத் தொலைத்தோமா? இல்லையே! ஏதோ நல்ல காலம், நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த புண்ணியங்களின் பலனாக நம்முடைய ஆன்மா இவ்வுடலை விட்டு நீங்கிச் செல்லுங்கால், சூரியனும் சந்திரனும் போல ஒளிபடைத்ததாக வெளியேறும், அப்படி வெளியேறிய ஆன்மா செல்ல வேண்டிய மார்க்கத்தில் வேறெதுவும், ஒரு காதற்ற ஊசியும் கூட அதன் கூட வராது என்பதை உணர்வாயாக.

    மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
    இனமான சுற்றம் மயான மட்டே, வழிக்கேது துணை
    தினையா மளவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்
    தனை ஆளவென்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே. 2.

    ஒருவன் வாழ்ந்து முடிந்து இறந்து போகும்போது, அவனோடு நெடுங்காலம் வாழ்ந்த அவன் மனைவியும், அவனுடைய பிள்ளை குட்டிகளும், அவன் பாடுபட்டுத் தேடிச் சேர்த்து வைத்த செல்வமும், இவை அனைத்தும் வீடு வாயில் வரையிலும் தான் கூட வரும். வாசலைத் தாண்டிவிட்டால் அவனுடைய இனத்தார், உறவினர், நண்பர்கள் இவர்கள் எல்லாம் மயானம் மட்டும் வருவர். இதைத் தாண்டி அவன் ஆன்மாவானது உடலைவிட்டுப் பிரிந்து தனிவழி போகும்போது அது கூட வருவோர் எவருமின்றி தனித்தே போகுமே, வாழ்ந்தபோது இருந்த மனைவி, மக்கள், உறவு, நட்பு இவர்களில் எவரும் அப்போது உடன் வருவதில்லையே. அதனால்தான் வாழுகின்ற காலத்தில் ஒரு சிறு தினை அளவாவது, அல்லது எள் அளவிலாவது முன்பு நல்ல காரியம், தர்ம காரியம் செய்திருந்தால் அதன் பலன்கள் அப்போது துணை வரும், ஆன்மாவும் சிவலோகம் சென்றடையும், ஆம்! இது நிச்சயம்.

    அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழியம் பொழுக
    மெத்திய மாதரும் வீதி மட்டே, விம்மி விம்மி யிரு
    கைத்தல மேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடுமட்டே
    பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே. 3.

    பாடுபட்டுத் தேடிய செல்வமும், செறுக்கான வாழ்வும் வீட்டோடு சரி; கண்களில் கண்ணீர் ஆறாய்ப் பெருக ஓவென கட்டி அழும் மனைவி முதலான வீட்டுப் பெண்கள் வீட்டின் வாசலோடு சரி; இரு கரங்களைத் தலையில் தாங்கிக் கொண்டு விம்மி அழும் பிள்ளைகள் சுடுகாட்டுக்கு வந்து எரியேற்றுவதோடு சரி; அப்படியானால் நீ இறந்த பின் உன் ஆன்மா தனிவழிச் செல்லும்போது துணைக்கென்று யார் வருவர்? அப்போது கூட வரக்கூடியவை நீ செய்த புண்ணியங்களும் பாவங்களும் தான். பலன்களும் பண்ணிய பாவ புண்ணியங்களுக்கேற்ப அமைந்திடும்.

    சீதப் பனிக்கு உண்டு சிக்கெனக் கந்தை, தினம் பசித்தால்
    நீ துய்க்கச் சோறு மனைதோறும் உண்டு, நினைவெழுந்தால்
    வீதிக்குள் நல்ல விலை மாதருண்டு இந்த மேதினியில்
    ஏதுக்கு நீ சலித்தாய் மனமே யென்றும் புண்படவே. 4.

    பனிக் காலத்தில் கடுமையான குளிர் அடிக்கும்போது கதகதப்பாக இருக்க நிறைய கந்தல்கள் உண்டு; தினமும் பசியெடுக்கும் போதெல்லாம் உனக்குப் பசியாற வீடுதோறும் சோறு உண்டு; காம உணர்வு மனதில் எழுமானால் வீதிகளில் பல விலைமாதர்கள் உண்டு; அப்படி நினைத்ததெல்லாம் கிடைக்க மார்க்கம் இருக்கையில் எதற்காக மனம் வருந்தி சலிப்புறுகிறாய்?

    ஆறு உண்டு, தோப்பு உண்டு, அணி வீதி அம்பலம்தானும் உண்டு
    நீறுண்டு கந்தை நெடுங் கோவணமுண்டு நித்த நித்தம்
    மாறுண்டு உலாவி மயங்கு நெஞ்சே மனைதோறும் சென்று
    சோறுண்டு தூங்கிப் பின் சும்மாயிருக்கச் சுகமுண்டே. 5.

    உறுதியான நிலையின்றி சஞ்சலத்தால் உலவி பேதலிக்கும் மனமே! உடலைத் தூய்மை செய்து கொள்ள நதிகள் இருக்கின்றன; வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பி களைப்பு தீர ஓய்வெடுக்க பசுமையான நல்ல தோப்புகள் இருக்கின்றன; அங்கு மன நிறைவோடு உலாவி வர இடமும் உண்டு; அழகழகான வீதிகளும், வீதிதோறும் அற்புதமான வீடுகளும் இருக்கின்றன; மக்கள் கூடியிருக்க பொதுவிடங்களும் இருக்கின்றன; நெற்றியில் ஐந்தெழுத்தோதி பூசிக்கொள்ள திருநீறும் இருக்கிறது; இடையில் அணிந்திட கந்தைத் துணியும் கெளபீனமும் உண்டு; போதாதற்கு வீடுவீடாகச் சென்று பிட்சை பாத்திரம் ஏந்தி அதில் கிடைக்கும் உணவை உண்டு, உண்ட களைப்பு தீர் நன்கு படுத்துறங்கி சும்மாயிருக்கும் சுகமும் இருக்கிற பொது எதற்காக வீணில் மனம் சஞ்சலிக்கிறாய்.

    உடுக்கக் கவிக்க குளிர்காற்று வெயில் ஒடுங்கி வந்தால்
    தடுக்கப் பழைய ஒரு வேட்டியுண்டு, சக முழுதும்
    படுக்கப் புறந்திண்ணை எங்கெங்கும் உண்டு, பசித்து வந்தால்
    கொடுக்கச் சிவனுண்டு, நெஞ்சே நமக்குக் குறைவில்லை. 6.

    கவலைப்படும் என் நெஞ்சே! கேள் நமக்கு எந்தக் குறைவும் இல்லை. ஏன் தெரியுமா? குளிர் காற்றினாலும் வெயிலினாலும் துன்பப்பட்டு உண்டாகும் களைப்பைத் தீர்க்க உடுத்திக் கொள்ளவும், குளிருக்குப் போர்த்திக் கொள்ளவும் பழைய துணியிருக்கிறது. படுத்து உறங்க வேண்டுமானால் திரும்பிய பக்கமெல்லாம் வீட்டின் வாசற் புறத்தில் திண்ணைகள் உண்டு; பசித்த உயிர்களுக்கு உணவளிக்க உலகையாளும் சிவபிரான் இருக்கிறார், அப்படியிருக்க நாம் ஏன் வருந்த வேண்டும்.

    மாடுண்டு கன்றுண்டு மக்கள் உண்டென்று மகிழ்வதெல்லாம்
    கேடுண்டு எனும்படி கேட்டுவிட்டோம் இனிக் கேள் மனமே
    ஓடுண்டு கந்தை உண்டு உள்ளே எழுத்து ஐந்தும் ஓத உண்டு
    தோடுண்ட கண்டன் அடியார் நமக்குத் துணையும் உண்டே. 7.

    மனமே! இன்னும் கேள்! நமக்குப் பால் தரவும், உழைக்கவும் மாடுகள் உண்டு, அவற்றுக்குக் கன்றுகளும் உண்டு, நம் குலம் தழைக்க மக்கள் உண்டு என்று மனம் மகிழ்ந்திருப்பதெல்லாம் பின்னாளில் அவைகள் எல்லாம் இல்லாமல் போய் மனம் துன்பப்படவும் நேரிடும் என்பதைப் பெரியோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆகவே நிலையற்ற மேற்சொன்ன செல்வங்களில் மனத்தைச் செலுத்தாமல் உண்ண உணவுக்கு பிட்சைப் பாத்திரம் உண்டு, உடுக்க கந்தை உண்டு, ஓதுவதற்கு பஞ்சாட்சர மந்திரம் உண்டு, தோடுடைய செவியன், விடையேறிய சிவனுடைய அடியார்களின் துணை உண்டு என்பதை நிச்சயப் படுத்திக் கொள்.

    மாத்தான வத்தையும் மாயாபுரியின் மயக்கத்தையும்
    நீத்தார் தமக்கொரு நிட்டை உண்டோ நித்தனன்பு கொண்டு
    வேர்த்தால் குளித்துப் பசித்தால் புசித்து விழி துயின்று
    பார்த்தால் உலகத்தவர் போலிருப்பர் பற்றற்றவரே. 8.

    சொர்க்கத்தைப் போல சுகானுபவங்களையும், மாயையால் கிடைக்கும் அற்புதப் பொருட்களின்பால் ஏற்படுகின்ற மயக்கத்தையும் நீக்கிவிட்டவர்கள் தங்களுக்கென்று பிறர் காணும்படியாக செய்யக்கூடிய தவம் எனும் புறத் தோற்றங்கள் என்று ஏதாவது இருக்கிறதா என்ன? ஞானத்தை அடைந்து விட்ட அவர்களும் மற்றவர்களைப் போலவே வியர்த்தால் குளித்தும், பசித்தால் உணவை உண்டும், உறக்கம் வந்தால் படுத்து உறங்கியும் உலகில் வாழுகின்ற மற்றவர்களைப் போலத்தான் காணப்படுவர். யோகியர்கள் தங்கள் வெளித் தோற்றத்தால் சாதாரண மக்களினின்றும் மாறுபட்டுத் தோன்றுவதில்லை.

    ஒன்றென்று இரு, தெய்வம் உண்டென்று இரு, உயர் செல்வமெல்லாம்
    அன்றென்று இரு, பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும்
    நன்றென்று இரு, நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
    என்றென்று இரு மனமே உனக்கே உபதேசம் இதே. 9.

    ஏ மனமே! உனக்கு உபதேசம் இது. தெய்வம் ஒன்று என்று இரு. அந்த தெய்வம் என்றும் இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டு இரு. உயர்ந்த செல்வங்கள் எல்லாமே நிச்சயமற்றவை என்பதை உணர்ந்து கொண்டு இரு. பசித்தவர்களின் முகம் கண்டு இரக்கம் கொண்டு இரு. அறவழி நடப்பவர்களோடும், உத்தமர்களோடும் நட்பு கொண்டு இரு. அப்படிப்பட்டவர்கள் நட்பு நன்மை தரும் என்பதை உணர்ந்து கொண்டு இரு. நடுநிலை மாறாமல் நடந்து கொண்டு நமக்கு விதித்தது இவ்வளவுதான் என்று மனதைத் தேற்றிக் கொண்டு இரு.

    நாட்டமென்றே இரு, சற்குரு பாதத்தை நம்பு, பொம்மல்
    ஆட்டமென்றே இரு, பொல்லா உடலை அடர்ந்த சந்தைக்
    கூட்டமென்றே இரு, சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ் நீர்
    ஓட்டமென்றே இரு, நெஞ்சே உனக்கு உபதேசம் இதே. 10.

    உன் வாழ்வின் குறிக்கோளை உணர்ந்து கொண்டிரு; நல்வழிகாட்டும் உத்தமமான குருவின் பாதங்களை நம்பு; வாழ்க்கை ஒரு பொம்மலாட்டம் என்பதை உணர்ந்து கொள், சுற்றம் நட்பு இவைகள் உன்னைச் சுற்றியுள்ள அடர்ந்த சந்தைக் கூட்டம் என்பதை தெரிந்து கொள், குடத்தைக் கவிழ்த்த நீர் போலத்தான் வாழ்க்கை என்பதை உணர்ந்து கொள், இதுவே உனக்கு உபதேசமாகும்.

    (இன்னும் உண்டு)

    Share
  • இப்படியும் சில மனிதர்கள்! – 8

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    தில்லும் திவானாவும் நெற்குன்றத்திலிருந்து புறப்பட்டு சைதாப்பேட்டையிலிருந்த தங்கள் மகள் வீட்டுக்குச் சென்றார்கள் அல்லவா? அங்கு மகள் வீட்டில் மாடி போர்ஷனில் இவர்கள் இருவரும் தனிக் குடித்தனம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த வீடு மகளுக்குச் சொந்தமானது. மாடி போர்ஷன் கட்டுவதற்கு தில் பணம் கொடுத்திருந்தார் போலிருக்கிறது. ஆகவே அவர்களே அங்கு குடிபோய்விட்டார்கள். மாடியில் பெற்றோர்களும், கீழ் வீட்டில் மகள் குடும்பமும் இருந்தன. மகளுக்கு மாமனார் மாமியார் ஆகியோரும் இருந்ததால் இவர்கள் தனியாக இருக்க வேண்டியதாக போயிற்று. எனினும் அனேகமாக இரண்டு குடும்பத்துக்கும் மகள் வீட்டில்தான் சாப்பாடு நடக்கும்.

    தில் திவானா இருவரும் மகனையும் மருமகளையும் பார்ப்பதற்காக நெற்குன்றம் வருவதில்லை. இந்த நிலையில் மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்காக ஒரு பயிற்சி வகுப்பில் சேர்ந்து ஓராண்டு காலம் படிக்க வேண்டியிருந்தது. அந்த ஒரு வருஷமும் சாமிநாதனின் மகள் நல்ல காலமாக வேலப்பன்சாவடியில் ஒரு கல்லூரியில் வேலை செய்து வந்ததால் குடும்பத்தை ஓரளவு நன்றாக நடத்த முடிந்தது. மேலும் அவளுக்கு நிறைய டியூஷன் படிக்க மாணவ மாணவியர் வந்தனர். அது ஏதோ ஒரு குருகுலம் போல சதாகாலமும் மாணவர்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கும். அதனால் அவசரமாக கடைக்குப் போகவேண்டுமென்றாலோ, அல்லது யாராவது விருந்தினர் வருவது, பேருந்துக்குக் கொண்டு விடுவது போன்றவற்றுக்கு இவர்கள் உதவிகரமாக இருந்தனர்.

    பயிற்சி முடிந்து தில்லின் மகன் அமெரிக்காவுக்குச் செல்லத் தயாரானார். மனைவி வேலையில் இருந்ததால் அவளுக்குத் துணையாக சைதாப்பேட்டையிலிருந்த பெற்றோர்களை வந்து பார்த்துக் கொள்ள முடியுமா என்று கேட்டார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். சைதாப்பேட்டைதான் எங்களுக்குச் சரியாக இருக்கும். நெற்குன்றத்துக்கு வருவது என்றால் வெளியூர் பயணம் போல இருக்கிறது என்று மறுத்துவிட்டனர். சரி இவர்களை எதிர்பார்த்தால் உதவ மாட்டார்கள், நான் மட்டும் முதலில் போய் அங்கு வீடு பார்த்துக் கொண்டு உன்னையும் வரவழைத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு தில்லின் மகன் புறப்பட்டு விட்டார்.

    சாமிநாதனும் அவன் மனைவி, மகன் ஆகியோர் அடிக்கடி சென்று மகளைப் பார்த்துக் கொண்டனர். அமெரிக்காவில் நியு ஜெர்சி மாகாணத்தில் வேலையில் அமர்ந்த மகன் ஆறு மாத காலத்துக்குள் மனைவியையும் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று விட்டார். அவர்கள் அமெரிக்கா போனதும் நெற்குன்றம் வீடு காலியாக இருக்கிறது, நீங்கள் இங்கு வந்து தங்கிக் கொள்ளுங்கள் என்று கேட்டதற்கும் தில் திவானா மறுத்து விட்டனர். சில காலம் வீட்டை வாடகைக்கு விட்டு வைத்திருந்தனர். ஆனால் வீட்டை அவர்கள் சரியாக வைத்துக் கொள்ளவில்லை. ஆகையால் வீட்டை விலைபேசி விற்றுவிட்டனர். எதிர் வீட்டில் இருந்த மகாலக்ஷ்மியின் உறவினர் அந்த வீட்டை வாங்கிக் கொண்டனர்.

    அமெரிக்கா சென்ற சில காலத்துக்குள் அவர்கள் சாமிநாதனையும் அவன் மனைவியையும் நியு ஜெர்சிக்கு வரும்படி கேட்டுக் கொண்டனர். இவனும் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு அமெரிக்காவுக்கு மனைவியையும் அழைத்துக் கொண்டு சென்றான். இரண்டு மாதம் அங்கு தங்கியிருந்த போது இவர்கள் இருவரையும் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று காட்டினார்கள். வட அமெரிக்காவில் கனடா எல்லையில் இருந்த நயாகரா நீர்வீழ்ச்சிக்குச் சென்றது இவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. தன் மகன் அவனுடைய மாமனார் மாமியாரை மட்டும் அமெரிக்காவுக்குக் கூட்டிச் சென்று பல இடங்களுக்கும் அழைத்துப் போனது தில்லுக்கும் திவானாவுக்கும் வயிற்றில் தீயை மூட்டிவிட்டது.

    தாங்களும் அமெரிக்காவுக்கு வரவேண்டும் தங்கள் இரண்டு பேருக்கும் டிக்கெட்டுகள் வாங்கி அனுப்பச் சொல்லி கேட்டுவிட்டு, சென்னை அமெரிக்கன் கான்சலேட் அலுவலகத்துக்குப் போய் தங்களுக்கு விசாவுக்கும் ஏற்பாடு செய்து கொண்டார்கள். விசாவுக்காக அவர்கள் மகனுடைய கடிதம், வங்கி பாஸ் புத்தகத்தின் நகல் ஆகியவற்றைக் கொண்டு போய் கொடுத்து அலைந்து திரிந்து விசாவை வாங்கிவிட்டார்கள். ஒரு நல்ல நாளில் தில்லும் திவானாவும் முதன் முறையாக வான ஊர்தியில் அமெரிக்காவுக்குப் பயணமானார்கள்.

    அமெரிக்கா சென்றடைந்த இருவருக்கும் அவ்வூரின் குளிர் பொறுக்கவில்லை. மேலும் தில் தனக்கு சந்தி, ஜபம் இவையெல்லாம் செய்வதற்கு இங்கு போதிய வசதி இல்லை. இங்கெல்லாம் மடி தீட்டு ஒருவரும் பார்ப்பதில்லை. இப்படி பல குறைகளைச் சொல்லி ஒரு மாதத்தில் தான் ஊர் திரும்புவதாகச் சொல்லி இருவரும் இந்தியா திரும்பி விட்டனர். இவர்களுக்குத் தெரியும் அங்கு இவர்களுக்குச் சரிவராது என்று, என்றாலும் கூட தன் பிள்ளை மாமனாரை வரவழைத்து விருந்தினராக உபசரித்தது இவர்கள் இருவருக்கும் பொறுக்க வில்லை. வீம்புக்குச் சென்று திரும்பி விட்டனர். பாவம், மகனுக்கு அனாவசியமான செலவு. ஆனாலும் தில் சென்னைக்கு விரைவில் திரும்புவதற்கு வேறொரு காரணமும் இருந்திருக்கிறது. அது மற்றவர்களுக்கு அப்போது புரியவில்லை.

    தில் சென்னையில் ஒரு பெரிய கம்பெனியில் வேலையில் இருந்த போது தனது தூரத்து உறவுப் பெண்மணி ஒருவருக்கு அதே கம்பெனியில் வேலை வாங்கிக் கொடுத்திருந்தார். அப்படி அந்தப் பெண் தன் கூட வேலை செய்து வந்த நாளில் இருவருக்கும் நெருக்கம் அதிகரித்து ஒரு நல்ல நாளில் திருநீர்மலைக்குச் சென்று அவளுக்கும் தில்லுக்கும் பொதுவான சில உறவினர்களை அழைத்துச்சென்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டு விட்டனர். இது மிகவும் ரகசியமாக நடந்ததால் அவரது முதல் மனைவியான திவானாவுக்கு இந்த விவரங்கள் தெரிந்திருக்க வில்லை. பொதுவான உறவினர்களும் தங்களுக்கு எதுவும் தெரியாதது போல கடப்பரையை விழுங்கியவர்களைப் போல வாயைத் திறக்காமல் இருந்து விட்டனர். புது திருமணமான பெண்ணுக்குப் போரூரில் தனியாக இடம் பார்த்து குடிவைத்து விட்டார் தில். வாரத்தில் சில நாட்கள் அங்கும் சில நாட்கள் திவானாவுடனும் குடித்தனம் செய்யத் தொடங்கியிருந்தார்.

    இரண்டு பெண்களும், ஒரு மகனும் இருந்த நிலையில் தில் இப்படியொரு செயலைச் செய்திருந்தது பிள்ளைகளுக்கு பலகாலம் கழித்துத்தான் தெரிய வந்தது. இதன் காரணமாக தில்லோடு அவரது மகள், மகன் ஆகியோர் கடுமையாக சண்டையிட்டாலும், திவானா மட்டும் அதீதமான பதிபக்தி காரணமாக அதை அவ்வளவு தீவிரமாக எதிர்க்கவில்லை. மேலும் இதனால் திவானா தன் பதி மீது வைத்திருந்த அன்பு, இல்லை இல்லை அப்படிச் சொல்லக்கூடாது, பக்தி எல்லை கடந்திருந்தது. எனவே அவர் செய்யும் தவறுகளைக் கூட தன் மக்களிடம் ஏதாவது சப்பைக்கட்டுக் கட்டி சமாதானம் செய்துவிடுவதோடு, தானும் சமாதானமாகிவிட்டாள். இப்படி இரு பெண்டாட்டிக்காரராக தில் இருப்பது மெல்ல மெல்ல மற்ற உறவினர்களுக்கும் பரவியிருந்தாலும், அவர்கள் இரண்டு கட்சியாகப் பிரிந்து தில் சார்பில் பரிவு காட்டுபவர்களாகச் சிலரும், அதை எதிர்க்க திராணியின்றி சிலரும் இருந்தனர். ஆனாலும் சாமிநாதனின் மாப்பிள்ளையும், அவரது இரு சகோதரிகளும் இதில் மிகவும் உறுதியாக இருந்து தில்லின் இரண்டாவது திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்கள் சம்மதம் இருக்கிறதோ இல்லையோ, பல ஆண்டுகள் தில் தனது இரண்டாவது மனைவியோடு அன்போடு வாழ்க்கை நடத்தி அங்கும் ஒரு மகனை ஈன்றெடுத்து அவர்களுக்குச் சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கிக் கொடுத்து திறம்பட இரண்டு வீட்டையும் பாலன்ஸ்டாக நடத்தி வந்ததைப் பாராட்டியே ஆக வேண்டும்.

    இப்போது தில் ஏன் அப்படி அடித்துப் பிடித்துக் கொண்டு அமெரிக்காவிலிருந்து திரும்பினார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறதல்லவா. இந்த நிலையில் தில் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு சஷ்டியப்த பூர்த்தி நடைபெறுவதாக இருந்தது. முதல் மனைவியின் மகனுடன் உறவு கெட்டிருந்த நிலையில் தன் இரண்டாம் மனைவியின் மகனை விட்டு ஒரு பத்திரிகை அடித்து தனக்கு மணிவிழா கொண்டாட ஏற்பாடு செய்தார். இதனை அறிந்து அப்போது நெற்குன்றம் வீட்டிலிருந்த சாமினாதனின் மருமகன் ஒரு வழக்கறிஞரை விட்டு நோட்டீஸ் விட்டு இரண்டாம் திருமணம் செல்லுபடியாகாது. அந்த மகனுக்கு எந்த சட்டப்படியான உரிமையும் கிடையாது. அவன் தில்லின் சஷ்டியப்த பூர்த்தி விழாவைக் கொண்டாட அனுமதிக்கக்கூடாது என்று நோட்டீஸ் விட்டுவிட்டார். அவர்கள் தங்களுடைய வக்கீலை கலந்து ஆலோசித்துவிட்டு அந்த விழாவை நிறுத்தி வைத்து விட்டனர்.

    இப்போது அமெரிக்காவில் இருக்கும் தில்லின் மகனும் மருமகளும் பல ஆண்டுகளுக்கு முன்பு தில் தனது சஷ்டியப்த பூர்த்தியைக் கொண்டாட முடியாமல் போய்விட்டது; அதற்குத் தனது வக்கீல் நோட்டீஸ்தான் காரணம் என்பதால் இப்போது தங்கள் செலவில் அவருக்கும் திவானாவுக்கும் தில்லுக்கும் சதாபிஷேகம் எனும் எண்பதாவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடலாம் என்று முடிவு செய்தார்கள். அது குறித்து தில்லுக்கு செய்தி கொடுத்து அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து அதற்கான ஏற்பாடுகளை சென்னையில் தானே செய்துவிடுவதாகவும், அதற்கான பணத்தைத் தனக்கு அனுப்பி விடுமாறும் தில் கேட்டுக் கொண்டார். தில்லின் மனைவி அதற்குள் விழாவுக்கான பட்ஜெட்டையும் போட்டுவிட்டாள். உறவினர்கள் எல்லோருக்கும் துணிமணிகள், மண்டபம், சாப்பாடு போன்ற செலவுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னதாக அனுப்பும்படி மகனுக்கு திவானா கேட்டாள். மகன் அவர்கள் சொல்லும் திட்டத்தைப் பார்த்து பயந்து போனார்.

    மாப்பிள்ளை தன் மாமனாரான என் நண்பன் சாமிநாதனிடம் கேட்டார் என்ன செய்யலாம் என்று. சாமிநாதன் சொன்னார் அவர்கள் பட்ஜெட்டில் கால்பகுதிக்குள் இந்த விழாவை மிகவும் சிறப்பாகச் செய்ய முடியும் என்றும், அதை சென்னையில் இல்லாமல் ​வேறொரு சிறப்பு வாய்ந்த நகருக்கு வெளியேயுள்ள ஆலயத்தில் தனது நண்பர்கள் மூலம் செய்து விட முடியும் என்று சொல்லவே, தில்லின் மகன் அப்படியே ஏற்பாடுகளைச் செய்யலானார். தில்லுக்கு போன் செய்து நான் எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்து விடுகிறேன். நான் சொல்லுமிடத்துக்கு நீங்கள் வந்து விழாவை ஏற்றுக் கொண்டு போனால் போதும் என்று சொல்லிவிட்டார். இதனால் தில்லுக்கும் திவானாவுக்கும் அதிர்ச்சி, மகன் மீது அளவிடமுடியாத கோபம். இதற்கெல்லாம் சாமிநாதனின் மகள்தான் காரணம் என்று அவள் மீது அவர்களுக்கு தீராத ஆத்திரம் ஏற்பட்டது.

    தாங்கள் கேட்டபடி தில்லின் மகன் பணம் கொடுக்காததல் திவானா அடிக்கடி தன் மருமகளுக்குப் போன் செய்து இதுபோன்ற விசேஷங்கள் என்றால் எல்லா உறவுக்காரர்களும் வருவார்கள், அத்தனை பேருக்கும் ஆண்களுக்கு வேஷ்டி துண்டும், பெண்களுக்குப் புடவையும் வாங்கித் தருவதோடு தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் புதிய உடைகள் வாங்க வேண்டும். அதற்காக தேவையான அளவு பணம் கொடுத்தால்தான் சதாபிஷேகம் சிறப்பாக அமையும் என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்தினாள். மருமகள் தன் மாமியாரிடம் இதையெல்லாம் உங்கள் மகனிடம் பேசிக்கொள்ளுங்கள் அவர்தான் இவற்றைக் கவனித்துக் கொள்ளவும் பணம் செலவு செய்யவும் செய்கிறார், தனக்கு இதில் ஒரு பங்கும் இல்லை. அவர் சொல்வதைச் செய்வதுதான் தன் கடமை என்று அவர்களுக்கும் தனது பதிபக்தியைத் தெளிவாக எடுத்துக் கூறினாள். இது என்ன, இவள் தன்னைக் காட்டிலும் பதிபக்தியோடு இருக்கிறாளே, நிஜமாகவேதானா அல்லது தனக்கு ஏட்டிக்குப் போட்டியாக இப்படிப் பேசுகிறாளா என்று திவானாவுக்குக் குழப்பம்.

    இறுதியாக தில்லும் திவானாவும் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்த போதும் அவர்கள் விரும்பியபடி எதுவும் நடக்கவில்லை. நண்பன் சாமிநாதன் என்னுடைய உதவியை நாடினான். எனக்குப் பழக்கமான என்னுடைய ஊரையடுத்த மிகப் பிரபலமான ஓர் சிவத் தலத்தில் அவ்வூர் ஆலய விழா மண்டபத்தில் ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தேன். அங்கு எனக்கு நிறைய நண்பர்கள் இருந்ததால் எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்தது. அவ்வூர் ஆலயத்தில் சதாபிஷேகம் செய்துகொள்ள ஏற்ற இடம் என்று அவ்வூர் தலபுராணம் கூறுவதையும் எடுத்துச் சொல்லி, அது குறித்த ஒரு சிறு புத்தகத்தையும் வெளியிட ஏற்பாடுகள் நடந்தன. இவை பற்றிய எந்த செய்தியையும் தில் போன் மூலமாகக் கூட சாமிநாதனிடம் கேட்கவில்லை; சாமிநாதனும் என்ன ஏற்பாடுகள் செய்கிறோம் என்று அவரோடு பேசவில்லை. பேச்சு வார்த்தை முழுவதும் சாமிநாதனுக்கும் மருமகனுக்கும் இடையேதான் நடந்தது. நீங்கள் யார் ஆலோசனைகளையும் கேட்க வேண்டாம். நீங்கள் விழாவைச் சிறப்பாக நடத்தக் கூடியவர், உங்கள் நண்பரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்று எனக்குத் தெரியும். ஆகவே இந்த விழாவை நான் சிறப்பாக நடத்தி முடித்து விட்டால் என் கடமை முடிந்து விடும். அவர்கள் அதற்கு மேல் என்னிடம் எதையும் எதிர் பார்க்கமுடியாது. ஏனென்றால், பல லட்சம் பெறுமான அவர்களது மாம்பலம் வீட்டை விற்ற போது என்னிடம் ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை. விற்ற பணத்தில் ஒரு பைசா கூட என் கண்களில் காட்டவில்லை. அவர் மனமுவந்து கொண்டு வந்து கொடுத்த சிறு தொகைக்கான முதலீட்டுப் பத்திரத்தைத் தூக்கி எறிந்து விட்டேன், என் கடமை முடிந்தது என்றார் அவர்.

    சாமிநாதனின் மனச்சாந்திக்காகவும், அவன் மருமகனின் நோக்கம் நிறைவேற வேண்டியும் நான் இந்த விழா குறித்து சிறப்பு கவனம் செலுத்தி மிக அற்புதமாக ஏற்பாடுகளைச் செய்தேன். இதில் ஏதாவது குறை காண வேண்டுமென்று விடாப்பிடியாக தில்லும், திவானாவும், அவரது நெருங்கிய உறவினர்கள் சிலரும் காத்துக் கொண்டிருந்தனர். நகரத்தை விட்டு வெகு தூரத்தில் ஒரு கிராமக் கோயிலில் நடந்தால் அங்கு யார் வருவார்கள்? என்றார்கள். அப்படி வந்தாலும் அவர்கள் தங்குவதற்கு அங்கு வசதியான இடம் இருக்கிறதா. குளிக்கவும் மற்ற தேவைகளுக்கும் அங்கு வசதிகள் எப்படி? என்றெல்லாம் கேள்விக் கணைகள் பிறந்தன. எல்லாம் இருக்கும் வசதிக்குள் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். அங்கு ஒருநாள் தங்க இத்தனை கேள்விகளா, என்னவோ வாழ்நாள் முழுவதும் அங்கேயே இருக்கப்போகிறோம் என்கிற மாதிரி என்று அவர்களுக்குப் பதில் சொல்லியாயிற்று.

    இருந்தாலும் அவர்களுக்கு எந்த விவரங்களையும் தெரியாமலே அவர்கள் எல்லாம் தங்குவதற்கு ஒரு திருமண மண்டபம், அங்கேயே இரண்டு நாட்கள் டிபன், காபி, சாப்பாடு எல்லாவற்றுக்கும் சமையல்காரர்களை நியமித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமண மண்டபத்தில் நிறைய பேர் தங்க முடியுமா. எங்கள் கம்பெனியிலிருந்து பெரிய உத்தியோகஸ்தர்கள் எல்லாரும் காரில் வருவார்கள். அவர்களுக்கு எப்படி ஏற்பாடு என்றெல்லாம் கேள்வி பிறந்தது. அவர்கள் விழாவன்று காலையில் வந்துவிட்டு பகல் உணவுக்குப் பிறகு போய்விடுவார்கள். இங்கேயேவா தங்கப் போகிறார்கள். அப்படி அவர்கள் ஓரிரு நாட்கள் தங்குவதாயிருந்தால் அதற்கும் நாங்கள் ஏற்பாடு செய்து விடுவோம் என்று சாமிநாதன் கூறிவிட்டான்.

    விழாவுக்கு முதல் வாரம் சாமிநாதனின் மகள் அமெரிக்காவிலிருந்து வந்து சேர்ந்தாள். நேராக அவள் சாமிநாதன் வீட்டுக்கு வந்து விட்டாள். பின்னர் அங்கிருந்து சைதாப்பேட்டை போய் மாமனார் மாமியாரைப் பார்த்துவிட்டு திரும்ப வந்து விட்டாள். அவளிடம் செய்யப்பட்டிருக்கிற ஏற்பாடுகள் குறித்து சொல்லப்பட்டது. அவளுக்கும் அவள் கணவருக்குத் தெரிவித்த போது அவருக்கும் இதில் முழு திருப்தி ஏற்பட்டது. திங்கட்கிழமை சதாபிஷேகம். முதல்நாள் ஞாயிறன்று ருத்ர ஏகாதசி எனும் ஜபம் முதலானவை. இருந்தது. இவர்கள் வெள்ளிக்கிழமையே அவ்வூருக்கு வந்து விட்டார்கள். அவர்களை திருமண மண்டபத்தில் தங்க வைத்தோம். அங்கு சாப்பாடு முதலான ஏற்பாடுகள் மிக அருமையாக இருந்தது. குறை ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஆனால் திவானாவின் வழக்கம் போல சமையல் காரர்களிடம் சென்று தனக்கும் தில்லுக்கும் வெங்காயம், புடலங்காய் சேர்க்கக்கூடாது சாப்பட்டில் அவைகளை நீக்கிவிடுங்கள் என்று சொன்னாள். நான் சென்று, நீங்கள் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ள வேண்டாம். அவர்களுக்கு வேண்டுமானால் அவைகளை பரிமாற வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

    ஞாயிறன்று ருத்ர ஏகாதசி தொடங்கியது. தான் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பதால் தன்னால் மணையில் கீழே அமர முடியாது, நாற்காலியில்தான் உட்காருவேன், கொண்டுவா நாற்காலிகளை என்றார் தில். உடனே எங்கள் நண்பர்கள் ஓடிப்போய் சில நாற்காலிகளை வாடகைக்கு வாங்கி வந்து கோயில் மண்டபத்தில் போட்டார்கள். மண்டபம் மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு தூணிலும் குழல் விழக்குகள் எரிந்தன. கோயில் பதாகைகள் வாயிலிலும் மண்டபத்தின் நுழைவுப் பாதையிலும் கட்டப்பட்டிருந்தன. இதையெல்லாம் பார்க்கப் பார்க்க இது ஏது குறையொன்றும் சொல்லமுடியாது போல இருக்கிறதே என்று தில்லும் திவானாவும் கவலைப் பட்டனர்.

    மறுநாள் நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடந்தேறின. கஜ பூஜை, கோ பூஜை என்று யானைக்கும், பசுவுக்கும் பூஜைகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. ஆலய மரியாதைகள் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. கோயில் நாதஸ்வர வித்வான்கள் வந்திருந்து நாதஸ்வர இசை எழுப்பினார்கள். புகைப்படங்களும், வீடியோ படங்களும் எடுக்கப்பட்டன. இவர்கள் உறவினர்கள் ஐம்பது பேர் இருக்குமென்றால், எங்கள் நண்பர்கள் வகையில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் இருந்தனர். எங்கள் நண்பர்கள் வீட்டில் குளிர்சாதன வசதி இருந்த விடங்களில் உறவினர்கள் சிலர் படுக்க வைக்கப்பட்டனர். கல்யாண மண்டபத்துக்கு அருகில் ஒரு சங்கத்தின் கட்டடம், அதையும் திறக்கச்சொல்லி அங்கும் சிலர் தங்க வைக்கப்பட்டனர். அப்படி அங்கெல்லாம் தங்கியவர்கள் என்னிடமும் சாமிநாதனிடமும் ஏகமாகப் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர். இதையெல்லாம் பார்த்து தில் திவானா வாயடைத்துப் போய்விட்டனர்.

    அந்த மாவட்டத்திலேயே சிறந்த வேத பண்டிதர்கள் வந்து விழாவை நடத்தி வைத்தனர். மிகச் சிறந்த சமையல்காரர்கள் முதல் நாள் தொடங்கி விழாவின் மதியம் வரை சுவையான சாப்பாட்டை பரிமாறி அசர வைத்துவிட்டனர். இப்படி அவர்கள் எதிர்பார்ப்பையும் மீறி, இப்படியும் நடத்த முடியுமா என்று அதிசயிக்கத் தக்க வகையில் சதாபிஷேகத்தை சாமிநாதன் முடித்து வைத்தார். எல்லோரும் ஊருக்குத் திரும்பி விட்டனர். தில் திவானா இருவரும் மட்டும் விழாவில் தங்களுக்கு பரிசாக வந்த வேஷ்டிகள், புடவைகள் இவற்றைப் பிரித்து பெட்டிக்குள் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கொண்டு வந்த பெட்டிகளில் இடம் போதாததால் சாமிநாதனிடம் கேட்டுப் பெட்டி, பை முதலானவற்றை வாங்கி அதிலும் நிரப்பிக் கொண்டனர். அவர்கள் தனி அறையில் இதையெல்லாம் பெட்டிக்குள் அடைத்துக் கொண்டிருக்கும் போது சாமிநாதன் எதேச்சையாக அந்த அறைக்குள் சென்று விட்டான்.

    அப்போதுதான் தில் மனம் குளிர்ந்து, சம்பந்தி, விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி விட்டீர்கள். இவ்வளவு அருமையாக நகரத்தில் எங்களால் ஏற்பாடு செய்ய முடியாது. என் மைத்துனன் மகன் கூட சொன்னான், கஜ பூஜைக்கும், கோ பூஜைக்கும் சென்னையில் எங்கே போவது, இங்கு இதையெல்லாம் கண்குளிர பார்க்கும் வாய்ப்பும், கோயிலில் தரிசிக்கும் வாய்ப்பும் ஒருசேர கிடைத்ததற்கு பாக்கியம் செய்திருக்கிறோம் என்றான். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை என்று சொல்லிவிட்டு, திவானாவை நோக்கி, ஏய்! அந்த வேஷ்டி துண்டை எடு என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சாமிநாதன் காதில் வாங்காதது போல வெளியே வந்து விட்டான். அங்கு திவானா என்ன ஜாடை காண்பித்தாளோ தெரியவில்லை தில்லும் அதன் பிறகு வேஷ்டி துண்டு சாமிநாதனுக்குக் கொடுப்பது பற்றி வாயையே திறக்கவில்லை. இவனுக்கும் கவலையில்லை. அவர்கள் கொடுக்கக்கூடாதே என்றுதான் வேண்டிக் கொண்டிருந்தான்.

    எல்லாம் முடிந்து அவரவர் வீடுகளுக்குச் சென்று விட்டனர். தில் தன் மகனிடம் கேட்டார். நீ எங்களை கவனிப்பதில்லை. மாதாமாதம் எங்களுக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்றார். திவானா மகனிடமும் மருமகளிடமும், தங்களுக்கு வயது ஆகிவிட்டதால் இனி எங்களால் தனியாக இருக்க முடியாது. ஆகையால் நீ மட்டும் அமெரிக்காவுக்குப் போ, உன் மனைவியை இங்கு விட்டுவிட்டுப் போ. எங்களைப் பார்த்துக் கொள்ள வேறு யார் இருக்கிறார்கள். இவள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூசாமல் கேட்டார்கள்.

    மகனுக்கு அதுவரை அடக்கி வைத்திருந்த கோபம் வெடித்து வெளிவந்தது. ஆதிமுதல் அவர்கள் நடத்தைகளையெல்லாம் சுட்டிக் காட்டிப் பேசினார். மாம்பலம் வீட்டை பல லட்சம் ரூபாய்க்கு விற்ற பணம் என்ன ஆகியது. அது விற்பது குறித்து எனக்கு ஏதாவது தகவலாவது கொடுத்தீர்களா. உங்கள் பணமெல்லாம் என்ன ஆயிற்று. அதற்கெல்லாம் கணக்கு எங்கே. உங்கள் பணமெல்லாம், வீடு விற்ற பணமெல்லாம் செலவாகி யிருந்தால் எந்த வகையில் செலவு ஆனது எல்லாவற்றையும் எழுதிக் கொடுங்கள். உங்களுக்குத் தேவையென்றால் நான் மாதாமாதம் அனுப்புகிறேன். என் மனைவியை இங்கே உங்களுக்கு சேவை செய்ய விட்டுவிட்டுப் போ என்கிறீர்களே, அங்கு வெளிநாட்டில் நான் சாப்பாடுக்கு என்ன செய்வேன். இங்கு உங்களுக்கு அண்ணன் பிள்ளை, அண்ணன் பெண், அத்தான், அம்மாஞ்சி என்று ஊர் முழுவதும் உறவுக் காரர்கள். அங்கு எனக்கு தலைவலி என்றால்கூட கவனிக்க யார் இருக்கிறார்கள். இதுவரை அவளா உங்களைப் பார்த்துக் கொண்டாள். இனி அந்தப் பேச்சையே எடுக்காதீர்கள். அவளுக்கும்தான் உடல்நலம் இல்லை. அவள் தன்னைப் பார்த்துக் கொள்வாளா உங்களுக்கு சேவை செய்வாளா என்றார்.

    நீ செய்வது பாவமில்லையா என்றார் தில். ஆம் பாவம் தான். ஆனால் அந்த பாவம் தீருவதற்காக நான் பல தர்ம காரியங்களைச் செய்து கொண்டு வருகிறேன். நீங்கள் நான் செய்ய வேண்டிய உதவிகளுக்கு அருகதை உள்ளவர்களாக இருந்திருந்தால் உங்களுக்குச் செய்திருக்கலாம். நீங்கள் அந்த அருகதையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. உங்களுக்கு நான் உதவி செய்வது என்பது தேவையில்லாதது. அது பாவம் என்றால் அந்தப் பாவம் தீர நான் பல தான தர்மங்களைச் செய்து கொண்டுதான் இருக்கிறேன். அதுவே போதும் என்றார். தில்லுக்கும் திவானாவுக்கும் பேசுவதற்கு வாய் இல்லை. அதுவரை அவர் பக்கம் நின்று மகன் மருமகளை கரித்துக் கொட்டியவர்கள் மெதுவாக ஒதுங்கிக் கொண்டனர். ஒருவருக்கும் பேச வாய் இல்லை. ஒரு வழியாகத் தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்து விட்டு ஊருக்குப் புறப்பட மகனும் மருமகளும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

    அவர்கள் புறப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்து தில் வீட்டில் காணப்படவில்லை. திவானாவிடம் கேட்டதற்கு அவர் அங்கே போயிருப்பார் என்றாள். எங்கே என்று சொல்லவில்லை. மகனும் புரிந்து கொண்டு கேட்கவில்லை. இருவரும் விமான நிலையத்துக்குக் கிளம்பும் வரையில் தில் வீடு திரும்பவில்லை. ஒரு வழியாக இங்கு விழாவுக்காகச் செலவழித்த ஒரு வார காலத்தை ஈடுகட்டும் வகையில் போரூரில் தன் துணைவி வீட்டில் கழித்துவிட்டு வீடு திரும்பியதாக அமெரிக்கா திரும்பிய மகனுக்குத் தகவல் கிடைத்தது. அப்பாடா! இனி தில்லின் தொல்லையும் , திவானாவின் தொந்தரவும் இருக்காது என்று அமைதி அடைந்தனர்.

    முற்றும்

    Share
  • குறவன் பாட்டு – 15

    சச்சிதானந்தம்

    குறத்தி புலிக் குட்டிகளைக் கொஞ்சுதல்

     

    தாய்ப்புலி யொன்று குட்டிகள் தன்னை,

    யாரும் காணாப் புதரில் விட்டு,

    தாய் நாட்டைப் பிரியும் தமிழன்போல,

    மனமின்றி இரைகொள்ளச் சென்றது ஒவ்வொருநாளும்!                                             118

     

    அவ்வொருநாளில் அவ்வழிவந்த அழகிய குறத்தி,

    புதரை விட்டு வெளியேவந்த குட்டிகள் கண்டு,

    பாசத்தோடு தாயைப்போல அள்ளிக் கொஞ்சிப்,

    புதரில் விட்டுத் தன்வழி சென்றாள்!                                                                                           119

     

    குறவன் குறத்தி சந்திப்பு

     

    கச்சை குறைவாய்க் கட்டியதாலே, கூடையிலிட்ட,

    கனிகளை மலர்களை சுமந்திட மலர்களை,

    சுருட்டிப் பந்தாய் உருட்டித் தலையில்,

    சும்மாடாக்கிக் கூடை சுமந்தாள் குறத்தி!                                                                 120

     

    கிளிகளும் குறத்தியும்

     

    கூடை சுமந்து நடந்த குறத்தியை

    கிளிகள் மேலே சுற்றிப் பறந்தன,

    குறத்தியின் அழகோ! கனிகளின் மனமோ!

    கிளிகளை ஈர்த்தது இரண்டினில் எதுவோ!                                                                              121

     

    சீருடை அணிந்த மழலைகள் போலே,

    பசுமையில் செம்மை வார்த்த கிளிகள்,

    கூடை என்னும் கிரீடம் சுமந்த,

    குறத்தியின் முடியில் மரகதம் ஆயின!                                                                                    122

     

    சிறகை விரித்துக் கிளிகள் அடிக்க,

    கூடையி லிருந்த மலர்கள் தெறிக்க,

    நடந்திடும் குறத்தியின் அடியினை நிறைத்து,

    வழியெங்கும் மலர்கள் பூசனை செய்தன!                                                                              123

     

    குறத்தி இருக்குமிடம் அறிதல்

     

    மலர்கள் சிந்திய தடத்தினைக் கொண்டு,

    குறத்தி நடந்த வழியினைக் கண்டு

    குறவனும் தொடர்ந்து மலர்மேல் நடந்து,

    ஒருவரை ஒருவர் சோலையில் கண்டனர்!                                                                            124

     

    பாதம் போல வாயும் சிவந்து,

    கனிகள், மலர்கள் மட்டும் இன்றிக்,

    கிளிகளும் சுமந்த குறத்தியைக் கண்டு,

    குறவன் சிரித்தான் கடகட வென்று!                                                                                              125

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…79

    சக்தி சக்திதாசன்

     

    Begonia Tiger-Jul 13 09 Begonia_tiger

     

     

     

     

     

     

    அன்பினியவர்களே !

     

    மற்றொரு மடல், மற்றொரு வாரம். இணைவதில் ஈடில்லா மகிழ்ச்சி,

    இதோ மாறுதலுக்காக போகோனியா டைகர் ( Bogonia Tiger) எனும் ஒரு கட்டுரையுடன் உங்கள் முன்னே.

    என்ன இது புதுவிதமான சமாச்சாரம் ? எதைப் பற்றிய அலசலாகவிருக்கும் என்னும் எண்ணம் உங்கள் மனங்களில் ஓடுவது இயற்கை.

    ஆமாம் இது புதுவிதமான தலையங்கம் தான் ஏனெனில் எனது விழிகளினூடக நான் பார்த்த ஒரு காட்சியின் புதிய பரிணாமம் என் மனதினுள் ஏற்படுத்திய உணர்ச்சிப் பிரவாகங்களின் வடிப்பு இது எனலாம்.

    சில தினங்களுக்கு முன்னால் எமது இல்லத்திலுள்ள கன்சர்வேட்டரி (conservatory) அதாவது சூரியஒளியின் வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் அறையினை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தேன்.

    அந்த அறையினுள் பொதுவாக வீட்டினுள் அதாவது வெப்பத்தை விரும்பும் சிறிய செடிகளை வைத்து வளர்ப்பது வழக்கம்.அப்படியான செடிகளில் ஒன்றின் மீது என் பார்வை பட்டது. அதன் பெயர் ஆங்கிலத்தில் போகொனியா டைகர் என்பதாகும்.

    என்ன அந்தச் செடியில் அப்படி என்ன பிரமாதத்தைக் கண்டு விட்டாய் என்று நீங்கள் புதிராக என்னை நோக்குவது தெரிகிறது.

    ஆத்திரப்படாதீங்க, அவசரப்படாதீங்க சொல்றேன் கொஞ்சம் பொறுங்க . .. .

    மனித வாழ்க்கையின் சுழற்சியை, காலத்தின் வேக ஓட்டத்தை அச்செடியின் உருவம் ஏனோ என் மனதில் உருட்ட ஆரம்பித்தது. அந்தச் செடியை அதே இடத்தில் இதன் முன்னால் எத்தனையோ தடவைகள் பார்த்திருக்கிறேன். ஆனால் முன்பொருபோதுமில்லாதவாறு என் மனதின் சிந்தனைச் சக்கரத்தை புதுவிதமான திசையில் உருட்ட ஆரம்பித்தது.

     சுமார் 28 வருடங்களுக்கு முன்னால் அப்போது எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்களிருக்கும், என் மகனுக்கு வயது ஒன்று கூட ஆகவில்லை ( ஓ. . . இப்போது நான் அவனை அண்ணாந்து பார்க்கும்படி வளர்ந்து விட்டானோ ?).

     இரும்பையே கடித்து ஜீரணமாக்கிவிடுவேன் என்னும் மூடத்தனமான தைரியம் அறிவுத்திறனை மறைத்து நிற்கும் இளரத்தம் துடித்து நிற்கும் வேளை.

     எனக்கு நானே முதலாளியாக இருப்பதே உலகத்தில் அதிசிறந்த பணி என்னும் ஒரு பிடிவாதம் மனதில் ஓங்கி வளர்ந்ததினால் சொந்தத்தொழில் நடத்துவதாக எண்ணி பணத்தை விரயம் பண்ணிக்கொண்டிருந்த நேரம்.

     ஒருநாள் காரில் சென்று கொண்டிருந்தபோது ஒரு வீட்டினுள் வளர்க்கும் செடிகள் விற்பனையாகும் கடை ஒன்றின் முன் நிற்கும் போது அங்கிருந்த ஒரு தாவரத்தின் மீது என் பார்வை பதிந்தது. ஏனோ அதை வாங்கி விட வேண்டும் என்னும் அவாவில் அதை வீடு கொண்டு வந்து சேர்த்து விட்டேன்.

    எதற்காக இந்தக் கஷ்டமான நிலையில் இந்த அனாவசியச் செலவு என்று என் மனைவி கடிந்து கொண்டாலும் அதை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தாள்.

    அதே “போகோனியா டைகர்” என்னும் அந்தச் செடிதான் ஏறத்தாழ 28 வருடங்களின் பின்னர் என் பார்வையில் பட்டது.

    28 வருடகாலம் என்பது மனிதவாழ்க்கையைப் பொறுத்தவரை பல மாற்றங்களை உள்லடக்கியதாக இருக்கும். அந்தச் செடியின் பார்வையில் எனது வாழ்க்கையில் இவ்விருபத்தைந்து வருடகால வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் எப்படி இருந்திருக்கும் என்று நான் எண்ணத் தலைப்பட்டமையே என்னெஞ்சில் ஏற்பட்ட உணர்ச்சிப் பிரவாகங்கள்.

    ஒரு குழந்தையின் தந்தையாக, ஒரு பதின்ம வயதுக் குழந்தையின் தந்தையாக இன்று ஒரு இளம் டாக்டரின் தந்தையாக மாற்றமடைந்த என்னைப்பற்றிய அச்செடியின் பார்வை எத்தகையதாக இருந்திருக்கும்?

    அதே சூழலில் எனது மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து முழுநேர வேலை பார்த்துக் கொண்டு என் மகனின் அன்புத்தாயாக தனது பணியையும் கவனித்துக் கொண்டு , மாலைநேர வகுப்புகளின் தனது பட்டப்படிப்பை முடித்துக் கொண்ட எனத்ஹு மனைவியின் மீதான அச்செடியின் பார்வை எவ்வாறு இருந்திருக்கும் ?

    அதுமட்டுமா? ஒரு இருபத்திஜந்து வருடகாலம் மனிதன் வாழ்வதென்பதே கடினமாக இருக்கையில் அச்செடி எவ்வாறு இவ்விருபத்தைந்து வருடகாலம் உயிர்தப்பி வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே அதிசயம்தான்.

    அச்செடி தனது வாழ்வி அந்திமகாலத்தை அடைகின்றது போலத் தெரிந்தவுடன் அதன் ஒரு கிளையைக் கிள்ளி வேறொரு சிறு தொட்டியில் நாட்டி அதன் அதன் வாழ்வை நீட்டி வைத்த என் மனைவியின் விடாமுயற்சி என்னைத் திகைப்பினுள் ஆழ்த்துகிறது.

    என் வாழ்க்கையில் பொறுப்புக்களின் கனத்தைப் புரியாதவனாக கண்மூடித்தனமாகச் செலவு செய்து கொண்ட காணும் புதுவிதமான சாதனங்களை எனதுடையதாக்கிக் கொள்ளவேண்டும் என்ற நப்பாசை கொண்டு அலைந்த என்னுள் நிகழ்ந்த மாற்றங்களை அச்செடியின் பார்வையின் கோணத்திலிருந்து நோக்கினால் எவ்வாறு இருக்கும் என்று எண்ணிப்பார்க்கையில் மனமே ஒருமுறை சிலிர்த்துப் போகிறது.

    அன்றிலிருந்து இன்றுவரை மூன்று இல்லங்களை மாறி, மாறி வந்த அந்தச் செடியின் மனதில் வித்தியாசமான இல்லங்களில் வித்தியாசமான இடங்களில் தான் தரித்திருந்த நினைவுகள் பதிந்திருக்குமா?

    விந்தை மிகு உலகத்தில் விசித்திர வினாக்கள்!…

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

     

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • நல்ல மாட்டுக்கு!….

    இன்னம்பூரான்

     

    நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதுமாம், சுரணை வர. அசோகர், அக்பர், கரிகாலன் போன்ற நிர்வாகிகளால் ஆளப்பட்ட ‘காமதேனு’ இந்திய மக்களுக்கு எத்தனை சூடுகள், ஆண்டவா! நமது மந்திரிமார் ஆளாளுக்கு ராசா. வச்சதே சட்டம். கொண்டதே கோலம். சராசரி இந்தியன் வருமான வரியை பைசல் செய்து ஜூலை 31க்குள் கட்டி, ஆவணத்தை பதிவு செய்யவில்லை என்றால், நிதி அமைச்சரகம் பிறாண்டிப்பிடும், பிறாண்டி. ஆனா பாருங்கோ. 1966ல் வருமானவரியை அறவே மறந்து வரலாறு படைத்தவர் பாபு ஜகஜீவன் ராம். லஜ்ஜையை இழப்போம் என்று வலுக்கட்டாயமாக கஜ்ஜை கட்டிக்கொண்டு நியாயத்தையும், தர்மத்தையும் செய்கைகளால் குலைக்கும் தலை மாந்தர்களுக்கு சூடும் இல்லை, சுரணையும் இல்லை என்ற தோற்றம் நம்மை அலக்கழிக்கிறதே.

    சுதந்திர இந்தியாவில் அமைச்சர்களுக்கான நெறி ஒன்று உளது. அதன் படி மத்திய/மாநில அமைச்சர்பிரான்கள் தங்களின் சொத்து சுதந்திரம், சுற்றத்தின் சொத்து சுதந்திரம், வர்த்தக ஈடுபாடுகள் வகையறா பற்றி பிரதமரிடம்/ முதல்வரிடம் வருடாவருடம் ஆகஸ்ட் 31க்கு முன்னால் அறிவிக்க வேண்டும். போதாக்குறைக்கு இவர்களுக்கு ரிமைண்டர் வேறே. இந்த வருடம், உரிய காலத்தில் அலக்ஷ்யமாக அந்த அறிவிப்பை தராத நம்பர் ஒன் ஆசாமிகள்;

    ஜனாப் குலாம் நபி ஆசாத்;

    சட்டம் பேசும் சட்டாம்பிள்ளை கபில் சைபல்;

    நிலக்கரி சர்ச்சையில் சற்றே மாட்டிக்கொண்டிருக்கும் ஶ்ரீபிரகாஷ் ஜைஸ்வால்;

    திரு. பல்லம் ராஜு;

    திரு. ஹரீஷ் ராவத்.

    அலக்ஷ்யமாக அந்த அறிவிப்பை தராத நம்பர் டூ ஆசாமிகள்;

    உலகாளும் ஆசை கொண்டிருந்த திரு.சசி தரூர்.

    ஹோம் இலாக்கா ஆர்.பி.என். சிங்.

    ஆந்திரா மாமி டி.புரந்தேஸ்வரி.

    பிரதீப் ஜைன்.

    அதிர் ரஞ்சன்.

    இன்றைய தேதி வரை அதை சமர்ப்பித்தவர்கள்: ஏ.கே.அண்டனி, ஷரத் பாவர், சுஷீல்குமார் ஷிண்டே,பி.சிதம்பரம், வீரப்ப மொய்லி, மல்லிகார்ஜுன கார்கே, ஆஸ்கர் ஃபெர்ணாண்டெஸ், சால்மன் குர்ஷித்.

    இந்த தொட்டகுறை தொடாதகுறை சமாச்சாரங்கள் மத்திய அரசை சார்ந்தது. மாநில அரசுகளில்  எப்படி நடக்கிறதோ!!! இன்றைய சூடு படி 14 காபினெட் அமைச்சர்கள், 21 உப அமைச்சர்கள் கமுக்கமா இருக்கிறார்கள் போலும். இந்த அழகில் தேர்தல் வரும் சின்னங்கள் தென்படுகின்றன.

     நீங்க என்ன பண்ணுவேள்?

     

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

     

    www.olitamizh.com

    Share