Blog

  • இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்! (2013)

    round

    தீபாவளி தீபாவளிதான்!Ha. Di

    தீபாவளி சிந்தனைகள்

    சிறு வயது குறும்புகள்

    தேடுமிடம்!

     

    அருளுடை அன்னை சாரதா தேவியார்

    Fall colors in Shade’s Mill – Cambridge, Acrylic

    இசைபட வாழ்தல்

    காப்பு 

    நடராஜன்

    குல தெய்வம்

    diwa

    புஜ்ஜியும் பொம்மைகளும்

    நேயம் ம​றைவதில்​லை

    ஓசை

    உச்சி தன்னை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி

     

    மனித நேயம்!buss

    கரையாக் காகங்கள்

    அரசியல் தீபாவளி…

    பட்டாசு வெடிக்கலாமா செல்லம்?

    நாக்பூரின் புதிய ஐயப்பன் கோவில்

    யம தீபம்

    ஓய்வு பெறும் ஒரு கிரிக்கெட் சகாப்தம் (ஸச்சின் டெண்டுல்கர்)

    ஜோதிடத்தில் ஐப்பசியின் சிறப்பு!20101106014834_dsc_0842-300x200

     பண்டிகை தந்ததொரு  பாடம் 

     

    தீபநாள் வேண்டுதல்…

     

    தீபாவளி நல்வாழ்த்துகள்

     

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 10ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    அடியார் உறவும், அரன் பூசை நேசமும், அன்பும் அன்றிப்
    படிமீதில் வேறு பயன் உளதோ, பங்கயன் வகுத்த
    குடியான சுற்றமும் தாரமும் வாழ்வும் குயக் கலங்கள்
    தடியால் அடியுண்ட வாறொக்கும் என்று இனம் சார்ந்திலரே. 1.

    சிவநேசச் செல்வர்களான அடியார்களின் நட்பும், சிவபெருமானுக்குச் செய்கின்ற பூஜைகளும், அவர் மீது செலுத்துகின்ற அன்பையும் உள்ளடக்கிய பக்தி மார்க்கத்தை விட இவ்வுலகிலுள்ள ஜீவன்களுக்கு வேறு நல்ல செயல் ஏதேனும் இருக்கிறதா என்ன? பிரமன் படைப்பில் நமக்கென்று அமைந்த சுற்றத்தார், மனைவி முதலான உறவினர்கள், அவர்களோடு இனிது வாழ்கின்ற வாழ்க்கை இவைகள் யாவுமே குயவன் செய்த மட்பாண்டங்களைத் தடியால் அடித்தால் என்னவாகுமோ அதைப் போல ஆகும் என்பதை எண்ணி நல்லோர் நட்பை சார்ந்திருக்கவில்லையே.

    ஆங்காரப் பொக்கிசம், கோபக் களஞ்சியம், ஆணவம்தான்
    நீங்கா அரண்மனை, பொய்வைத்த கூடம், விண் நீடிவளர்
    தேங்கார் பெருமதிற் காம விலாசம், இத்தேகம் கந்தல்
    பாங்காய் உனைப் பணிந்து எப்படி ஞானம் பலிப்பதுவே. 2.

    என்னுடைய இந்த உடல் இருக்கிறதே இது கிழிந்து போன தோலால் ஆன பை. இது எப்படி இருக்கிறது தெரியுமா, அகங்காரத்தை உள்ளடக்கிய பொக்கிஷம், கோபத்தைத் தேக்கி வைத்த களஞ்சியம், ஆணவம் குடிகொண்ட அரண்மனை, பொய் கோலோச்சுகின்ற கூடம், விண்ணை முட்டும் பெரிய மதிற்சுவரைக் கொண்ட காமவிலாச மாளிகை. இவை அத்தனையையும் நீக்கிவிட்டு இறைவா உன்னைப் பணிந்து வணங்கி நற்கதி அடைகின்ற ஞானத்தைப் பெறுவது எங்ஙனம்?

    ஒழியாப் பிறவி எடுத்து ஏங்கி ஏங்கி உழன்ற நெஞ்சே
    அழியாப் பதவிக்கு அவுடதம் கேட்டி, அனாதியனை
    மழுமான் கரத்தனை மால் விடையானை மனத்தில் உன்னி
    விழியால் புனல் சிந்தி விம்மி அழு; நன்மை வேண்டும் என்றே. 3.

    ஓயாமல் திரும்பத் திரும்பப் பிறந்து, பின் இறந்து இப்படி எத்தனையோ பிறவி எடுத்து மனம் வருந்தி தவிக்கின்ற என் நெஞ்சே! அழிவற்ற முக்தி நிலையை அடைய உனக்கு ஒரு மருந்தைச் சொல்கிறேன் கேள்! தொடக்கமோ முடிவோ இல்லாத ஆதி அந்தமில்லாப் பெருமானை, மழு, மான் இவற்றைத் தன் கரங்களில் தாங்கியவனும், திருமாலை ரிஷபமாகக் கொண்ட சிவபெருமானை மனத்தால் தியானித்து, கண்ணீர் விட்டு அழுது அரற்றி, அவனது அருட்கருணை வேண்டுமென்று வரம் கேட்டு உய்வாயாக.

    நாய்க்கொரு சூலும், அதற்கோர் மருத்துவம் நாட்டில் உண்டோ?
    பேய்க்கொரு ஞானம் பிடிபடுமோ பெரும் காஞ்சிரங்காய்
    ஆக்குவார் ஆர் அது அருந்துவர் ஆர் அதுபோல் உடம்பு
    தீக்கிரை ஆவதல்லால் ஏதுக்காம் இதைச் செப்புமினே. 4.

    *நாய் கர்ப்பமாக இருந்தால் அதை வைத்தியம் செய்து பிரசவம் எல்லாம் பார்க்கிறோமா என்ன? பேய்களுக்கு நல்ல ஞானம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமா என்ன? எட்டிக் காயை பயிராக்கி காய்த்தால் அதை உண்பார் உண்டா என்ன? அதுபோலத்தான், இந்த நம்முடைய உடல் இருக்கிறதே இதிலிருந்து ஆவி நீங்கிவிட்டால் தீக்கு இரையாவதைத் தவிர வேறு பயன் உண்டோ சொல்.

    *அந்தக் காலத்தில் நாய் சினை கொண்டிருந்தால் அதற்கு மருந்து கொடுத்து மருத்துவம் பார்க்கும் வழக்கம் இல்லை என்பதால் இப்படிக் குறிப்பிடுகிறார். இபொழுது வளர்ப்புப் பிராணிகளாக நாய் வளர்ப்போர் அதையும் செய்யலாம்.

    கச்சிற் கிடக்கும் கனதனத்திற் கடைக்கண்கள் பட்டே
    இச்சித்திருக்கின்ற ஏழை நெஞ்சே, இமவான் பயந்த
    பச்சைப் பசுங்கொடி உண்ணாமுலை பங்கர் பாதத்திலே
    தைச்சுக்கிட மனமே ஒருக்காலும் தவறில்லையே. 5.

    பெண்களின் மார்பில் கச்சைக்குள் அடங்கிய கனத்த தனங்களின் மீது இச்சைகொண்டு அலையும் பேதை நெஞ்சே! மலையத்துவஜனின் மகளான பச்சைப் பசுங்கொடியன்ன விளங்கும் அந்த உமாதேவியாம் உண்ணாமுலை அம்மையைத் தன் உடலின் வாமபாகத்தில் கொண்ட சிவபெருமான் பாத கமலங்களில் மனத்தைச் செலுத்திக் கிடந்தால் உனக்கு ஒரு துன்பமும் வாராதே.

    மானார் விழியைக் கடந்தேறி வந்தனன் வாழ்குருவுங்
    கோனாகி என்னைக் குடியேற்றிக் கொண்டனன் குற்றமில்லை
    போனாலும் பேறிருந்தாலும் நற்பேறிது பொய்யன்று காண்
    ஆனாலும் இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே. 6.

    மானின் விழிகளையொத்த வேல்விழி மாதர்களின் மோகவலையைக் கடந்து அதிலிருந்து விடுபட்டு வந்துவிட்டேன், ஞானகுருவாக வந்து இறைவன் அருள்பாலித்து என்னை ஏற்றுக் கொண்டனன்; ஆகையால் எனக்கு இனி ஒரு குறையுமில்லை. இந்த பூத உடல் இருந்தாலும் சரி, இல்லை அழிந்தாலும் சரி எனக்கு எந்தக் குறையுமில்லை; அப்படிப்பட்ட நற்பேற்றினை நான் பெற்றுவிட்டேன், இஃது உண்மை. இருந்தாலும் இந்த இழிவான உடலைத் தாங்கிக் கொண்டிருப்பது எனக்கு அருவருப்பாகத்தான் இருக்கிறது.

    சற்றாகிலும் உந்தனைத் தானறியாய் தனை ஆய்ந்தவரை
    உற்றாகிலும் உரைக்கப் பொருந்தாய் உனக்கான நிலை
    பற்றாய் குருவைப் பணியாய் பரத்தையர் பாலிற் சென்று என்
    பெற்றாய் மட நெஞ்சமே உனைப்போல் இல்லை பித்தனுமே. 7.

    ஏ மட நெஞ்சமே! ஒரு சிறிதாவது உன்னைப் பற்றி நீ யார் என்பதை ஆராய்ந்தறிந்து பார்த்திருக்கிறாயா? இல்லையே! போகட்டும் அப்படித் தன்னைத் தானே யார் என்று வினா எழுப்பி ஆய்ந்து அறிந்து ஞானம் பெற்றவரை அணுகி அவர் உரையையாவது கேட்டதுண்டா? இல்லையே. ஆகையால் உனக்கு ஏற்ற நிலை எது என்பதை எண்ணி அதனைப் பின்பற்றுவாயாக. சற்குருநாதரைக் கண்டு அவர் பாதங்களைப் பணியாமல், பொதுப் பெண்டிர் இல்லம் சென்று நீ பெற்றதென்ன? உன்னைப் போன்ற பித்தன் இவ்வுலகில் வேறு யாரும் இல்லை.

    *உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊற்றையறப்
    புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன் உயர் பொன் எனவே
    ஒளியிட்ட தாள் இரண்டுள்ளே இருத்துவது உண்மையென்று
    வெளியிட்டு அடைத்து வைத்தேன் இனிமேல் ஒன்றும் வேண்டிலனே. 8.

    கல்லை உளியால் செதுக்கிச் சிற்பமாக ஆக்கிய விக்கிரகத்தையும், மிக அழகாக உருவாக்கிய சுண்ணாம்பினால் ஆன சிலையையும், புளியினால் தேய்த்துப் பளபளக்கும் செம்பினால் ஆன விக்கிரகத்தையும் நான் போற்றி வணங்க மாட்டேன். பொன்மேனி அமைந்த பரமேஸ்வரனின் தாமரைப் பாதங்கள் இரண்டையும் என் நெஞ்சத்துள் பதித்து வைத்து விட்டேன், எனவே இனி எனக்கு ஒன்றும் வேண்டியதில்லை.

    *பத்ரகிரியாரும் தன் பாடலொன்றில் இப்படிச் சொல்லுகிறார்: “உளியிட்ட கல்லும், உருப்பிடித்த செஞ்சாந்தும் புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம்”.

    கல்லால் எறியுண்டும் காலால் உதையுண்டும் காளை கையில்
    வில்லால் அடியுண்டும் முன்னாள் விடம் உண்டு மேவிளித்துப்
    பல்லால் புரமெரி ஏகம்பவாணர் பதாம் புயத்தின்
    சொல்லார் செவியினிற் கேளாதிருந்தது என் தொல்வினையே. 9.

    சாக்கிய நாயனார் எறிந்த கல்லால் அடிபட்டும், காளத்தி வேடன் கண்ணப்பன் தன் காலால் உதையுண்டும், இளையவனான அர்ஜுனனிடம் வில்லாம் அடிபட்டும், அந்த நாளில் பாற்கடலைக் கடந்தபோது எழுந்த ஆலகால விடத்தை உண்டு கண்டத்தில் தாங்கியும் இப்படி சிரமங்களையெல்லாம் பட்டபோதும், பற்கள் தெரிய புன்னகைத்த ஏகம்பவாணருடைய பொன்மலர் பாதங்களைப் பாடிய பனுவல்களைக் காதால் கேளாமலே இருந்தது என் முன்வினைப் பயனே.

    ஒருநான்கு சாதிக்கு மூவகைத் தேவர்க்கும் உம்பருக்கும்
    திருநாளும் தீர்த்தமும் வேறுளதோ அத்திசைமுகனால்
    வருநாளில் வந்திடும் அந்தக் கண்ணாளன் வகுப்பொழியக்
    குருநாதன் ஆணை கண்டீர் பின்னை ஏது இக்குவலயத்தே. 10.

    நான்கு வருணத்தார்களுக்கும், மும்மூர்த்திகளுக்கும், இவர்கள் அல்லாத மற்ற தேவர்களுக்கும் திருவிழாவோ அல்லது புண்ணிய தீர்த்தமோ வேறு ஏதேனும் உண்டோ? பிரம்ம தேவன் வகுத்தபடி அதது அந்தந்த நாட்களில்தான் வரும். பிரம்ம சிருஷ்டிப் பணி முடியும் காலத்தில் பரமகுருவான பரமேஸ்வரனின் பாதரவிந்தங்களே கதி என்பதைத் தவிர வேறு என்ன உண்டு இந்த உலகத்தில்.

    (இனி வருவது பட்டினத்தார் தன் அன்னைக்கு அந்திமத் தீயிட்டபோது பாடிய பாடல்கள்)

    Share
  • காந்தாரி கொடுத்த சாபம்!…

    தஞ்சை வெ.கோபாலன்

    மகாபாரதத்தில் மெளஸர பர்வம் என்ற பகுதி கதையின் இறுதிப் பகுதியில் உண்டு. அது சொல்லும் நீதி என்னவென்றால் ஒவ்வொருவரும் செய்யும் வினைகளின் பலன் அவரவர்க்கு வந்து சேரும் என்பதுதான். அதனால்தான் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் நல்லதாகவே இருக்கும்படி பார்த்துச் செய்வது. இதைத்தான் வினைப்பயன் என்பார்கள். இது நம்மைப் போன்ற மனிதர்களுக்கு மட்டுமல்ல, புராண புருஷர்களையும் இந்த வினைப்பயன் பாடாய்ப் படுத்தியிருக்கிறது.

    பெரியவர்கள் சாபம் கொடுத்தால் பலிக்கும் என்ற நம்பிக்கை உண்மைதான்; சாபமிட்டால் அது சாபத்தை ஏற்பவர்களின் வினைப்பயனை ஒட்டிதான் விளைவுகள் அமையும். நம் செயலுக்குப் பயன் இதுபோன்ற எதிர்பாராதவர்களின் சாபத்தினால் கிடைத்து விடுகிறது. பெரியவர்கள் வாழ்த்தோ அல்லது சாபமோ நம்மை எந்தெந்த விதங்களில் பாதுகாக்கும் அல்லது பாடாய்படுத்தும் என்பதற்கு மகாபாரதத்தில் மெளஸர பர்வத்தில் பதில் கிடைக்கிறது.

    பாரத தேசத்தின் மாபெரும் காப்பியமான மகாபாரதத்தில் அந்த பதினெட்டு நாட்கள் பாரதப் போர் முடிந்த நேரம். கண்ணில்லாத தன் கணவன் திருதராஷ்டிரன் கண்களில் துயரத்தால் கண்ணீரும், நெஞ்சத்தில் தாங்கமுடியாத சோகமும் மண்டிக் கிடக்க அவன் மனைவி காந்தாரியோ தன் மக்கள் மாண்டு கிடந்த அந்த போர்க்களத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறாள். குரு வம்சத்தின் புத்திரர்கள் வளைய வந்த பழைய நாட்களையும், அவர்கள் அனுபவித்த அரச போகங்களையும், இறுதியில் பிணங்களாக இந்த யுத்த பூமியில் விழுந்து கிடந்ததையும் அவள் எண்ணிப் பார்க்கிறாள். கண்களுக்குப் பார்வை இருந்தும், தன் கணவனால் பார்க்கமுடியாத இந்த உலகத்தைத் தானும் பார்ப்பதில்லை எனும் வைராக்கியத்தில் தன் கண்களைத் துணியால் கட்டிக் கொண்டு வாழ் நாளெல்லாம் அலைந்தவள், இப்போதும் கண்கட்டோடுதான் சுற்றுகிறாள்.

    ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அருளிய வரத்தினால் கண்கள் மூடப்பட்டிருந்தும், அந்த யுத்தகள காட்சிகளை அவள் மனக் கண்களால் பார்க்கமுடிகிறது. இந்த போரைத் தன் எண்ணம் போல நடத்தி முடித்துவிட்ட சாட்சாத் கண்ணனே அருகில் இருந்து அவளை வழிநடத்திக் கொண்டு வருகிறான். பாண்டவர் பக்கம் சேர்ந்து கொண்டு கெளரவர்களின் ஒட்டுமொத்த அழிவுக்கும் காரணமானவன் அல்லவா இந்த கண்ணன். என் வாரிசுகளை பூண்டோடு அழித்துவிட்டு, அழித்தவர்களுக்குத் துணை புரிந்துவிட்டு ஒன்றுமே தெரியாத நல்லவன் போல அல்லவா என்னோடு இந்த ரணபூமியைச் சுற்றிக் காட்டுகிறான் என்று காந்தாரியின் மனத்தில் தீப்பற்றி எரியத் தொடங்குகிறது

    இவன் மட்டும் நினைத்திருந்தால் இந்த பேரழிவைத் தடுத்திருக்கலாம் அல்லவா? ஆனால் இவன் அப்படிச் செய்யவில்லையே. என் மக்கள் அழியவேண்டு மென்பதற்காகத்தானே அவனே பார்த்தனுக்குத் தேர் சாரதியாக இருந்து அவனை வழிநடத்தியிருக்கிறான். இப்படி யுத்த களத்தின் காட்சிகளை கண்ணன் எடுத்துச் சொல்லச் சொல்ல, அவள் மனக்கண்முன் வீராதிவீரர்கள் மாண்டுபோன காட்சிகள் தென்பட தென்பட அவள் நெஞ்சத்துத் தீ பெரு நெருப்பாகப் பற்றிக் கொண்டு அந்தத் தீயின் கொதிப்பு வெளிப்படும்படி கண்ணனிடம் கேட்கிறாள். கண்ணன் எவ்வளவோ எடுத்துச் சொன்னான் தான் போர் வராமல் செய்ய அரும்பாடு பட்டதையும், ஒவ்வொரு முறையும் துரியோதனன் தன் பிடிவாதத்தினால் தன் அழிவைத் தானே தேடிக் கொண்டான் என்பதையும் காந்தாரிக்கு விளக்கமாக எடுத்துரைத்தான்.

    “கண்ணா! எங்கள் குரு வம்சம் பூரணமாக அழிந்துபோன காட்சிகளைக் காண்கிறேன். என் மக்கள் போரில் மாண்டுபோன காட்சிகளைக் காண்கிறேன். இந்த யுத்தகளம் குருதியால் நனைந்ததைப் போல, இப்போது என் நெஞ்சமும் கோபத் தீயால் வெந்து போயிருக்கிறது. கிருஷ்ணா! எங்கள் வம்சம் இங்கு எப்படி நசிந்து போனதோ, அது போலவே உனது விருஷ்னி வம்சமும் அழிந்து போகட்டும்! அந்த அழிவையும் நீ பார்த்துவிட்டு அதனோடு நீயும் அழிந்து போ!” என்றாள் ஆத்திரம் பொங்க.

    ஒன்றல்ல, இரண்டல்ல நூறு மக்களையும், சுற்றத்தார், நண்பர்கள், வீராதி வீரர்கள், குருமார்கள், வீரபுருஷர்கள் என்று அத்தனை பேரையும் இழந்து தவிக்கும் அந்தத் தாயின் வயிறு இப்படித்தான் எரியும், அந்தத் தாயின் வாயிலிருந்து புறப்பட்டு வந்து தன்னைத் தாக்கும் இந்த சாபம் நிச்சயம் பலிக்கத்தன் போகிறது என்பதை நன்கு உணர்ந்திருந்த கண்ணன் முகத்தில் சோகத்துடன் ஒரு புன்னகை படர்ந்தது.

    அந்தத் தாயின் கரங்களை ஆதரவோடு பற்றிக் கொண்டான் கண்ணன். தனக்கு இப்படியொரு சாபத்தின் பலனாக முடிவு ஏற்படுவதாயின் அதுவும் ஏற்புடையதே என்று அவன் மனச்சாட்சி சொல்லியது. அவன் முகத்தில் சாந்தம் நிலவியது. காந்தாரியின் அந்தச் சாபம் விருஷ்ணிகளை எப்போது எப்படி சாய்த்தது?

    ஒரு மனிதன் வாழ்விலும் தாழ்விலும் ஒரே மாதிரியான அடக்கம், பணிவு, பிறர்க்கு உதவும் பாங்கு இவற்றோடு இருந்தால் அவன் பிறவி எடுத்த பயன் உயர்ந்தது. ஆனால் மனிதன் உயர உயர அகந்தையும், செல்வச் செருக்கும் அவன் கண்களை மறைக்க, தான் சர்வ வல்லமைப் படைத்தவன் எனும் அகந்தை ஏற்படுமானால் அவனது முடிவு நெருங்கிவிட்டது என்பதைக் காட்டும். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைச் சார்ந்த விருஷ்ணிகளுக்கு உலகில் தாங்களே மிகவும் உயர்ந்தவர்கள் எனும் செருக்கு, கர்வம் ஏற்பட்டுவிட்டது. அது எல்லை கடந்து போய் விட்டது.

    துவாரகையில் ஸ்ரீ கிருஷ்ணனின் தந்தை வசுதேவர் ஒரு யாகத்துக்கு ஏற்பாடு செய்தார். அதற்காக பாரதவர்ஷத்தின் பல பகுதிகளிலிருந்தும் ரிஷிபுங்கவர்கள் வரத் தொடங்கினர். விஸ்வாமித்திரர், துர்வாசர், வசிஷ்டர், நாரதர் முதலான பல ரிஷிகள் வரத் தொடங்கினர். தான் எனும் அகங்காரமும், செருக்கும் தலைக்கு மேல் போய்விட்ட விருஷ்ணிகள் இந்த ரிஷிகளை அவமானப்படுத்தும் நோக்கத்துடன், கிருஷ்ணரின் மகன் சம்பா என்பவனை ஒரு கர்ப்பமடைந்த பெண்போல வேடம் தரித்து அந்த ரிஷிகளின் முன்பாகக் கொண்டு போய் நிறுத்தி, “முனிவர்களே இந்தப் பெண்ணுக்கு என்ன குழந்தை பிறக்கும்?” என்று கேட்டனர்.

    இவர்கள் தங்களை அவமதிப்பதற்காக இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட முனிவர்கள் ஆத்திரத்துடன் சொன்னார்கள், “இவளுக்கு ஒரு இரும்புத் தடி பிறக்கும்; அதுவே உங்கள் விருஷ்ணி குலம் அழிவுக்குக் காரணமாகும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டனர். உண்மையில் அந்த சம்பாவின் வயிற்றில் கட்டப்பட்டிருந்த துணிகளுக்குள் ஒரு இரும்புத் துண்டும் இருந்தது.

    ரிஷிகளின் கோபத்துக்கு ஆளான விருஷ்ணிகள் அச்சமுற்று உக்கிரசேன மகாராஜாவிடம் சென்று நடந்தவைகளை விவரித்தனர். அந்த ரிஷிகளின் சாபம் பலித்துவிடுமே. அந்த இரும்புத் துண்டைப் பொடிப்பொடியாக்கிக் கொண்டுபோய் கடலில் தூவிவிடுங்கள் என்று அரசன் சொன்னான். உடனே விருஷ்ணிகள் அந்த இரும்புத் துண்டை பொடியாக்கினார்கள். பெரும்பாலும் பொடியாகிப் போனாலும், ஒரு சிறு இரும்புத் துண்டு மட்டும் பொடியாகாமல் அப்படியே இருந்தது. அதைக் கொண்டுபோய் கடலில் போட்டுவிட்டு விருஷ்ணிகள் இந்த இரும்புத் துண்டுதானே நம் வம்சத்தை அழிக்கும் இப்போது அதைக் கொண்டு போய் கடலில் போட்டாகிவிட்டது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

    நல்ல வேளை இந்த நிகழ்வுகள் எல்லாம் கிருஷ்ணனுக்குத் தெரியாது என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் பரம்பொருளான ஸ்ரீ கிருஷ்ணன் இவை அத்தனையையும் நன்கு அறிவான். கடலில் போட்ட அந்த இரும்புத் துகள்கள் கரையொதுங்கி அங்கெல்லாம் வளர்ந்திருந்த நாணல் புதர்கள் மூங்கில் தடிகளைப் போல தடித்து வளர்த்தன.

    குருக்ஷேத்திர யுத்தம் முடிந்த பின்னர் கிருஷ்ணன் துவாரகை திரும்பியிருந்தார். அங்கு அவர் முப்பத்தாறு ஆண்டுகள் தர்மத்தோடு ஆட்சி புரிந்தார். தன் பிறப்பின் நோக்கங்கள் அனைத்தும் முடிவடைந்து விட்டது எனும் எண்ணமும் கிருஷ்ணனுக்கு உண்டானது. தன்னுடைய யாதவ குலத்து விருஷ்ணிகளும் நாளாக ஆக அகந்தையின் உச்சிக்குச் சென்றுவிட்டதை கண்ணன் கவனித்தான். எவர் ஒருவருக்கு வேண்டிய செல்வமும், அதிகாரமும், செல்வாக்கும் கிடைத்து விடுகிறதோ அவன் அகந்தையின் உச்சத்துக்குச் சென்றுவிடுவான் என்பதுதான் இந்த உலக வாழ்க்கை சொல்லும் நியதி. ஒரு குலம் அல்லது இனம் அழிவதற்கு எவைகள் எல்லாம் காரணங்களாக அமையுமோ அவைகள் எல்லாம் அவர்களிடம் வந்து சேர்ந்தன. இதன் பயனாக துவாரகையில் மெல்ல மெல்ல தீமைகள் எல்லாம் நடக்கத் தொடங்கின.

    கிருஷ்ண பரமாத்மாவின் சுதர்சன சக்கரம் மறைந்து போனது. பாஞ்சஜைன்யம் எனும் கிருஷ்ணனின் சங்கும் இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டது. கிருஷ்ணனின் தேரும், பலராமனின் ஏர் ஆயுதமும் காணாமல் போயின. காந்தாரி இட்ட சாபம் பலிக்கத் தொடங்கிவிட்டதோ? கிருஷ்ணனிடம் சென்று பலரும் முறையிட்டனர். செய்த பாவங்கள் தீர மக்கள் தல யாத்திரை போய்வரும்படி கிருஷ்ணன் பணித்தான். மக்களும் கிளம்பினார்கள் ஒரு கிரகண சமயத்தில். அதுவே ஒரு கெட்ட சகுனமாக ஆகிவிட்டது.

    தல யாத்திரை புறப்பட்டவர்களுக்குள் குருக்ஷேத்திர யுத்தம் பற்றிய விவாதம் தொடங்கி அவர்களுக்குள் கைகலப்பில் முடிந்தது. பாண்டவர்கள் பக்கம் போரிட்ட சாத்யகிக்கும் கெளரவர்கள் பக்கம் போரிட்ட கீர்த்திவர்மனுக்கும் தகறாறு மூண்டது. இந்த சண்டையில் கீர்த்திவர்மனை சாத்யகி கொன்று விடுகிறான். இவ்விருவரும் சண்டை செய்தபோது மீதமிருந்த யாதவர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து கொண்டு ஒருவரையொருவர் கடற்கரையில் உலக்கை அளவில் வளர்ந்திருந்த நாணல் தடிகளைக் கொண்டு தாக்கிக் கொன்று குவிக்கத் தொடங்கினார்கள். இந்த போரின் உச்ச கட்டத்தில் கிருஷ்ணனின் மகன்களும், பேரப்பிள்ளைகளும், சகோதரர்களும் மாண்டு போனார்கள்.

    இப்படி கோட்டைக்குள் குத்து வெட்டு என்று உருவெடுத்து யாதவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு ஒருவரையொருவர் கொன்று குவிக்கத் தொடங்கியதும் பலராமன் காட்டுக்குள் தவம் செய்யச் சென்று விட்டார். இதற்கிடையே கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு ஒரு செய்தி சொல்லி அனுப்பினார். பெண்களை ஜாக்கிரதையாக மீட்டுக் கொண்டு வந்து அத்தினாபுரத்தில் சேர்க்கும்படி அவர் அர்ஜுனனை கேட்டுக் கொண்டிருந்தார்.

    கடற்கரை முழுவதும் முன்பு கடலில் கலக்கப்பட்ட இரும்புத் துகள்கள் படர்ந்து அங்கெல்லாம் முளைத்தெழுந்த புற்களின் இலைகள் கத்திகளாக மாறி இவர்களைக் கொன்று போட்டன. மீதமுள்ள பெண்களை ஒன்று திரட்டி கிருஷ்ணன் அவர்களிடம் உங்களையெல்லாம் அழைத்துச் செல்ல அர்ஜுனன் வருகிறான், அவன் உங்களைப் பத்திரமாக அத்தினபுரம் கொண்டு சேர்ப்பான் என்று சொல்லிவிட்டுத் தானும் கானகம் சென்று தவம் செய்யச் செல்கிறான். காட்டில் சென்ற பலராமனும் தன் பிறப்பின் நோக்கம் முடிந்துவிட்டதை உணர்ந்து வைகுண்டம் செல்கிறான்.

    ரிஷிகள் விருஷ்ணிகளுக்கு சாபமிட்டபோது சம்பாவின் வயிற்றில் வைத்துக் கட்டப்பட்ட இரும்புத் தடியைப் பொடித்து கடலில் கலந்த போது ஒரு சிறிய துண்டு பொடிபடாமல் மிகுந்தது அல்லவா, அந்தச் சிறு துண்டை மீனொன்று விழுங்கிவிட்டது. கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு மீனவனிடம் அந்த மீன் சிக்கிக் கொண்டது. அதன் வயிற்றில் ஒரு சிறு இரும்புத் துண்டு இருப்பதறிந்து அதை மீனின் வயிற்றைக் கிழித்து எடுத்தான் அவன். அதைக் கல்லில் நன்கு இழைத்து கூராக்கித் தன் அம்பின் நுனியில் அதைப் பொறுத்தி வேட்டைக்குப் புறப்பட்டான்.

    தன் கண் முன்னாலேயே தன்னுடைய இனம் அழிவதை கிருஷ்ணன் பார்த்துக் கொண்டு வருத்தமடைந்தான். அவன் மனம் அமைதியை நாடியது. தன் இனத்தின் அழிவு மட்டுமல்ல தன்னுடைய முடிவும் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்து கொண்டான் கிருஷ்ணன். மன அமைதி நாடி அருகிலுள்ள ஒரு வனத்தினுள் சென்றான். அங்கு நெடிது வளர்ந்திருந்த புல் வெளியொன்றில் சிறிது ஓய்வெடுக்க கால்நீட்டிப் படுத்தான். அவன் உடல் முழுவதும் புல்லினுள்ளும் பாதங்கள் மட்டும் ஒன்றின் மேலொன்றாக வைத்துப் படுத்தான். அப்போது அந்த வனத்தினுள் வேட்டைக்கு வந்தவன் புல்வெளியில் மான் ஒன்று தலையை நீட்டிப் படுத்திருப்பது போல காட்சியளித்த கிருஷ்ணனின் பாதங்களை நோக்கி முன்பு மீனின் வயிற்றிலிருந்து மீட்டு இரும்புத் துண்டு பொருத்திய அம்பை எய்தான். அது கிருஷ்ணன் பாதங்களைத் துளைத்துக் கொண்டு உடலின் உள்ளே சென்றது. கிருஷ்ணனுக்கு உடலின் பாதங்களைத் தவிர வேறு எங்கு அடித்தாலும் மரணம் நேராது. தரையில் படுத்திருந்த கிருஷ்ணனின் கால்கள் மானின் தலையைப் போல இருந்ததால் அதை நோக்கி எய்த அம்பு கிருஷ்ணனின் உயிரைக் குடித்தது. அன்று காந்தாரி கொடுத்த சாபம் இப்படி நிறைவேறியது.

    அத்தினபுரத்தில் இருந்த அர்ஜுனனுக்கு கிருஷ்ணனின் மறைவு குறித்த தகவல் நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் தெரியவந்தது. துவாரகையில் ஆண்கள் எல்லாம் இறந்து போன நிலையில் மீதமிருந்த பெண்மணிகளை மீட்டுக் கொண்டு போகும் கடமை அர்ஜுனனுக்கு இருந்தது. ஆகவே அவன் அந்தப் பெண்மணிகளையும் குழந்தைகளையும் மீட்டுக் கொண்டு அத்தினபுரம் நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். துவாரகை நகரம் பாழ்நகரம் ஆகிவிட்டது. பெண்கள் கூட்டம் அர்ஜுனனின் பாதுகாப்போடு புறப்பட்ட பின்னர் துவாரகை நகருக்குள் கடல் புகுந்தது. அத்தோடு பெருமை மிகுந்த அந்த நகரம் கடலினுள் மூழ்கியது.

    அர்ஜுனன் பாதுகாப்போடு சென்ற பெண்களையும் குழந்தைகளையும் வழியில் திருடர்கள் வழிமறித்தார்கள். அவர்களோடு போரிட அர்ஜுனன் தன் காண்டீபத்தை எடுத்து வளைத்தான். அந்தோ, அந்த காண்டீபம் இப்போது வீரியம் இழந்து செயலற்றதாகிவிட்டது. திருடர்களிடமிருந்து மீண்ட பெண்களை அழைத்துக் கொண்டு அர்ஜுனன் அத்தினாபுரம் சென்றடைந்தான்.

    இந்த நிலைமையை வியாசருக்கு எடுத்துரைத்து அவருடைய ஆலோசனைகளைக் கேட்க அர்ஜுனன் வியாசரை அணுகினான். விருஷ்ணிகள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு மாண்டு போனதையும், பலராமனும் ஸ்ரீ கிருஷ்ணனும் இவ்வுலக வாழ்வை நீத்து வைகுந்தம் சென்று விட்டதையும், துவாரகை நிர்மூலமான செய்தியையும், தன்னுடைய அஸ்திரங்கள் எல்லாம் பயனற்று போனதையும் எடுத்துச் சொன்னான்.

    அர்ஜுனன் சொன்ன அனைத்தையும் கேட்டுக் கொண்ட வியாச பகவான் சொன்னார், “வில்விஜயா! நீங்கள் அனைவரும் இந்த மண்ணுலகத்தில் பிறவி எடுத்த நோக்கம் நிறைவேறிவிட்டது. கிருஷ்ணனின் நோக்கமும் நிறைவேறி விட்டது. உங்களிடம் இருந்த அஸ்திரங்கள் அனைத்துக்கும் இனி வேலை இல்லாமல் போய்விட்டது. அர்ஜுனா! நீயும் உன் சகோதரர்களும் இனியும் இந்த பூவுலகில் இருக்கத் தேவையில்லை. ஆகையால் நீங்களும் புறப்படுங்கள்” என்று ஆணையிட்டார்.

    பாண்டவர்கள் தருமன் தலைமையில் திரெளபதியுடன் தங்கள் தலைநகரைவிட்டுப் புறப்பட்டு சுவர்க்கம் செல்ல தீர்மானித்து இந்த புனித பாரத பூமியை வலம் வந்து வடக்கு நோக்கிச் சென்று பனிபடர்ந்த ஹிமாச்சலத்தைக் கடந்து சுவர்க்கம் செல்ல பயணத்தைத் தொடங்கினார்கள்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்! …81

    சக்தி சக்திதாசன்

    scl3 scl2 scl1

     

     

     

     

    அன்பினியவர்களே !

     

    வாயுபகவானின் சீற்றத்துக்கு இலக்காகி சூறாவளியினுள் சுழன்றடித்து விட்டு ஓரளவு நிலையாக நிற்கின்ற இங்கிலாந்தின் தென்பகுதியில் இருந்து மீண்டும் ஒரு மடலின் வாயிலாக உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இல்லங்கள் அனைத்தும் ஒளிமயமாக தீபாவளி எனும் இத்திருநாள் இதோ மிக அருகில் நெருங்கி விட்டது.

    இல்லங்களின் சூழ்ந்துள்ள கருமையை மட்டுமல்ல மனித உள்ளங்களின் கருமையையும் ஓட்டிவிட அனைத்து உள்ளங்களும் ஒளிமயமாக மனிதாபிமானம் எனும் இனிய உணர்வின் அடித்தளத்தில் அனைவரது வாழ்விலும் இனிய நிகழ்வுகள் பொங்கட்டும்.

    சமீபத்தில் இங்கிலாந்து தொலைக்காட்சியில் பார்த்த ஒரு நிகழ்ச்சி மனதில் பல எண்ணங்களை அலை மோதப் பண்ணியது.

    சுகாதாரம் ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது. இச்சுகாதாரத்தைச் சரியாகப் பேணாததினால் நோய்வாய்ப்ப்படுவோர் பலர்.

    நாமும் நாம் சார்ந்த இடமும் மட்டுமே எமது வாழ்க்கைக்குப் போதுமானது என்று எண்ணும் மனப்பான்மையே இன்றைய அவசர உலகத்தில் நிலவுவது போலத் தெரிகிறது.

    என்னருகில் இருக்கும் குப்பையை அப்புறப் படுத்தி விட்டால் போதும் அக்குப்பை மற்றொருவர் அருகில் போய் விழுந்து அவர் அதனால் அருவருப்படைவதைப் பற்றிய கவலை எமக்கில்லை என்னும் மனப்பாங்கிலேயே பலர் நடந்து கொள்வது போன்று தென்படுகிறது.

    இன்றைய இங்கிலாந்தின் தெருக்களில் காணப்படும் குப்பைகள் எப்படி அங்கே வருகின்றன ? அதற்குக் காரணம் யார்?  எனும் கேள்விகள் எழும்போது அதற்கான விடையும் தயராக எமது மனங்களினுள் இருக்கிறது.

    இத்தகைய தெரு அசுத்தங்களின் பொறுப்பும் எமது தலைகளிலேயே விழுகிறது. நாம் ஒவ்வொருவரும் இந்நாட்டின் பிரஜைகள் நாம் வாழும் நாடு மிகவும் சுத்தமான நாடாக இருப்பது நாம் வாழும் வீட்டின் சுத்தத்தினால் நாம் எத்தனை பெருமையடைகிறோமோ அத்தகிய பெருமையை எமக்கு அளிக்க வேண்டும்.

    ஆனால் அப்படி பெருமை கொள்பவர்கள் எத்தனை பேர் எனும் கேள்வி எழுந்தால் அதற்கான பதில் வேதனையைத்தான் தரும்.

    இதன் காரணம் என்ன ?

    சொந்த வீட்டில் வசிப்பதற்கும் வாடகை வீட்டில் வசிப்பதற்கும் இடையிலான வேறுபாடே இதற்கான விளக்கத்தை அளிக்கிறது.

    தமது சொந்த வீடுகளில் வாழ்பவர்கள் அவ்வீட்டை சுத்தமாக எடுக்கும் முயற்சிகளை தாம் வாடகைக்கு இருக்கும் வீட்டைச் சுத்தப்படுத்துவதில் எடுப்பார்களா ?

    சந்தேகமே !

    இதற்கு விதிவிலக்காக பலர் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையானோர்தாம் வாழும் நாட்டை தமக்கு உரிமையுள்ள ஒரு நாடாக எண்ணிப்பார்பதில்லை.

    இம்மனப்பான்மையை நான் பல புலம் பெயர்ந்த மக்களிடையே காண்கிறேன். தமக்கு வாழ்விடமும், வாழ்வாதரத்திற்கான வசதிகளையும் செய்து தந்த இப்புகலிட நாட்டிற்கு தமது தாய்நாட்டை விட அதிக கெள்ரவமளிக்க வேண்டிய தேவையிருந்தும் ஏதோ வாடகை வீட்டில் வாழ்வது போன்ற ஒரு மனப்பான்மையில் வாழ்வதைக் காணும்போது உள்ளத்தில் கொஞ்சம் வேதனை எழத்தான் செய்கிறது.

    இத்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு பிரதான சாலையில் ஒரு பக்க நடைபாதையை சாலையைத் துப்பரவு செய்யும் மாநகரத் தொழிலாளிகள் துப்பரவு செய்த அதேநேரத்தில் மறுபக்கத்தை 24 மணி நேரம் துப்பரவு செய்யாமலே விட்டு விட்டார்கள்.

    விளைவு !

    துப்பரவு செய்யப்படாத நடைபாதையோரம் குப்பை கூழங்களால் நிறைந்து காணப்பட்டது.

    அருகில் குப்பைத் தொட்டிகள் இருக்கக்கூடியதாக குப்பைகளை நடைபாதையில் போட்டு விட்டு எதுவித அக்கறையுமில்லாமல் நடக்கும் பலரைக் காணக்கூடியதாக இருந்தது.

    இச்சாலை துப்பரவிற்காக வருடமொன்றுக்கு ஒரு பில்லியன் ஸ்ரெலிங் பவுண்ஸ் வரையில் செலவு செய்யப்படுகிறது.

    இதர்காகச் செலவிடப்படும் பணத்தில் சுகாதாரச் சேவையில் மேலும் எத்த்னையோ ஆயிரம் தாதிகளையும், டாக்கடர்களையும் நியமிக்கலாம்.

    பாடசாலைகளின் தரத்தை உயர்த்தப் பயன்படுத்தலாம். வேலையர்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பை உயர்த்தக்கூடிய வகையில் அவர்களுக்குப் பயிற்சியளிக்க இப்பணத்தை உபயோகிக்கலாம்.

    ஆனால் பொறுப்பர்ர தன்மையில் நாம் நடந்து கொள்வதால் எமது குப்பைகளை அகர்றுவதர்காக இப்பணம் செலவிடப்படுவது மிகவும் பரதூரமான கண்டனத்துக்குரியது என்றார் அந்நிகழ்ச்சியை நடத்தியவர்.

    இதைத்தான் அழகாக எமது புரட்சித் தலைவர் தனது பாடல் ஒன்றில்,

    “நாடென்ன செய்தது நமக்கு

    எனக் கேள்விகள் கேட்பது எதற்கு

    நீயென்ன செய்தாய் அதற்கு என

    நினைத்தால் நன்மை உனக்கு ” என்றார்.

    ஒரு நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் அந்நாட்டின் பாராமரிப்பில் பங்குண்டு. குறிப்பாக தமது நாட்டின் சுத்தத்தைப் பேணுவதில் நாம் ஒவ்வொருவருமே பலவிதமான் பங்களிப்புகளைச் செய்யலாம். செய்ய வேண்டியது எமது தார்மீகப் பொறுப்பு.

    அனைத்து இல்லங்களிலும் ஒளிரும் தீபாவளித் தீபங்கள் அவ்வில்லங்களின் கருமையை மட்டுமல்ல மனித மனங்களில் உள்ள கருமைகளையும் விரட்டட்டும்.

    என் இனிய வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

     

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • மதிப்பு!…

    செண்பக ஜெகதீசன்

     

     

     மதிப்பு…

     

    உலோகத்தை உருக்கி

    உருக்கொடுத்து சிலையாய்,

    மனிதன்

    உயர்த்திவிடுகிறான் மதிப்பை-

    வணங்கும் தெய்வமாக..

     

    மதிப்பு

    விலைமதிப்பாகும்போது,

    வெளியேற்றப்படுகிறார் கடவுள்

    கடத்தல் பொருளாக..

     

    படைத்தவனைப் படைத்தவனே

    கடத்துகிறான்

    கிடைக்கும் காசைக்

    கடவுளாய் எண்ணி..

     

    இப்போது சிரிக்கிறான்

    இறைவன்,

    இவனைப் பார்த்து…!

     

           

    Share
  • வாழ்க்கை நலம் – 33

    குன்றக்குடி அடிகள்

    33.  பொறுத்தாற்றும் பண்பு

    பொறுத்தாற்றல், பண்புகள் அனைத்திற்கும் மேம்பட்ட பண்பாகும். பொறுத்தாற்றல் பண்பால் பகைமை தடுக்கப்படுகிறது; திருத்தங்கள் காண்பதற்குரிய வாயில்கள் தோன்றுகின்றன; வலிமையும் தகுதியும் வளர்கின்றன. மகிழ்ச்சியின் திறவுகோலாகப் பொறுத்தாற்றும் பண்பு விளங்குகிறது.

    உணர்ச்சிவசப்படுதல், அளவுக்கும் அதிகமான தன்மானம், பெருமை ஆகியன பற்றிக் கவலைப்படுதல், தேவையில்லா ஒரு மதிப்புபுணர்ச்சியைத் தமக்குத்தாமே உருவாக்கிக் கொள்ளுதல் ஆகியன பொறுத்தாற்றும் பண்புக்குத் தடையானவை.  சில நாள் பொறுத்திருந்தாலே பல சாதனைகள் செய்யலாம். காலம் கருதிக் காத்திருப்பின் சல்லடையில்கூடத் தண்ணீர் எடுத்துச் செல்ல இயலும்.  ஆம்! தண்ணீர் பனிக்கட்டியாக உறையும்வரை காத்திருக்க வேண்டும்.

    வாழ்க்கையின் இயல்பே கூடிச்சேர்ந்து வாழ்தல்தான் அதுவே மானுட சாதியினுடைய படைப்பின் நோக்கம்.  கூடிவாழ்தல் எளிதான செயலா? அம்மம்ம! உயிர்க்குலம் அனைத்தினோடும் கூடக் கூடி வாழ்தல் இயலும்.  பாம்பினைப் பழக்கிடலாம்.  ஆனால், மனிதர்களுடன் சேர்ந்து வாழ்வது எளிமையான காரியமன்று!

    மானுட ஜாதி தன் பயணத்தைத் தொடங்கிய நாளிலிருந்தே சண்டை போடுதலைத்  தொடங்கிவிட்டது. ஆம்! கலகங்களையும் சண்டைகளையும் நேரிடும் அவமானங்களையும் கண்டு வருந்துதல் கூடாது. திருத்தங்கள் காண முயலவேண்டும். குற்றங்களுக்குத் திருத்தம் காணும் முயற்சியிலேயே கூட்டுறவு வெற்றிபெற இயலும். திருத்தம் காண இயலாது போனால், பொறுமையாக இருந்தாக வேண்டும். சண்டைபோட்டுக் கொள்வதும் பிரிவதும் விரும்பத்தக்கதல்ல.

    பொறுத்தாற்றும் பண்பை வளர்த்து உறுதிபடுத்துவது நம்மை வளர்த்துக் கொள்வதேயாகும். வலிமை, தூய்மை யாரிடம் இருக்கிறதோ அவர்களை எந்த இழிவும் சென்றடையாது.  அவதூறுகள் நெருப்பிடை வீழ்ந்த உமியெனக் கருகிப்போம். சிலர் கோழை என்று கூறி ஆறுதல் பெறுவார். அதனால் நமகென்ன குறை?

    குப்பை கூளம் இல்லாத இடத்தில் நெருப்பு பற்றி எரியுமா என்ன? ஆதலால் பொருத்தாற்றும் பண்பைப் பெற வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்; தூய்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தகுதிகள் பலவற்றையும் முயன்று அடைய வேண்டும்.

    இப்படி வளர்ந்த நிலையில் காட்டும் பொறுமைதான் பொறுமை; வலிமை சார்ந்த பொறுமை.  தகுதி மிகுதியும் உடையோரின் பொறுமையே வாழ்வளிக்கும்; வையகத்தின் வரலாற்றை இயக்கும் திருக்குறள்,

    “மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
    தகுதியான் வென்று விடல்.”

    என்று கூறி வழிநடத்துகிறது.

    ஆம்! மற்றவர் பழிதூற்றினால் அதனால் உண்மையில் விளைவது; தகுதியில்லாதவராக இருந்தால் சினம், பகை, கலகம்; தகுதிமிகுதியும் உடையோராக இருந்தால் திருத்தம் காண முயற்சி செய்வர்; பழிதூற்றுவாரையும் வாழ்த்துவர்.

    பரபரக்க வேண்டாம்; உணர்ச்சி வேண்டாம்; தேர்ந்து தெளிக! குப்பைகள் அகற்றப்பட வேண்டியவையே! குப்பைகள் உடைய இடங்கள் அகற்றப்படுவன அல்ல; அகற்றவும் இயலாது.  குற்றங்களைத் திருத்துக. பயன் கொள்ள முயலுக. இவ்வழி பொறுத்தாற்றும் பண்பு வளரும்; நாளும் குற்றங்களிலிருந்து விடுதலை பெறுக; வளர்க! வலிமை பெற்றுயர்ந்திடுக; தகுதிகள் பலவும் பெற்று உயர்ந்திடுக; எல்லாரும் அணைவர். கூடி வாழ்ந்திடலாம். கோடி நன்மை பெறலாம்.

     

     

     

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி – 9

    பேராசிரியர் பெஞ்சமின் லெபோ

    அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் ; பிண்டத்தில் உள்ளது அண்டத்தில். சைவ சமயம் வலியுறுத்தும் கருத்து இது. இக்கருத்தையே இக்கால அறிவியல் அறிஞர்
    Neil DeGrasse Tyson ““We are part of this universe; we are in this universe, but perhaps more important than both of those facts, is that the universe is in us,” என்கிறார்.(Neil DeGrasse Tyson is the director of the Hayden Planetarium at the American Museum of Natural History and host of NOVA scienceNOW.) இந்த அறிவியல் உண்யையை அக்காலத்திலேயே உணர்த்தியது சைவ சமயமே!

    நமக்குள்ளே இருக்கும் அண்டம்தான் உடல் என்ற பிண்டம். இது வரை இப்பிண்டம் பற்றித் திருமூலர் கூறிய செய்திகளைத் தற்கால அறிவியல்கள் உறுதி செய்வதைக் கண்டோம். இந்தப் பிண்டத்துக்கு வெளியே இருப்பது அண்டம். இது பற்றி மணிவாசகப் பெருமான் உரைப்பதை இனிப் பார்ப்போம். இவரைப் பற்றிய சிறு குறிப்பு ஏற்கனவே இங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவர் இயற்றிய திருவாசகத்தின் திருவண்டப் பகுதியில் அண்டம் பற்றிய தன் கருத்துகளைப் பொதிந்து வைத்துள்ளார் :

    “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
    அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி
    ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
    நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன
    இல்நுழை கதிரின் துன் அணுப் புரையச்
    சிறிய ஆகப் பெரியோன் தெரியின். “.

    இதன் பொருள் :

    பிரமாண்டம் எண்ணற்ற கோள்களையுடையது. அக்கோள்களின் தன்மைகளை முழுவதுமாகத் தெரிந்து கொள்ள முடியாது.அவற்றின் அழகும் சீரமைப்பும் கண்டு வியப்பதற்கும் ஆராயுமளவிற்கும் உரியவையாய் இருக்கின்றன.ஒவ்வொரு கோளிலும் தனியழகு சிறக்கிறது. விளக்கிச் சொன்னால் கோடிக் கணக்கில் அவை விரிகின்றன.ஓர் ஓட்டையின் வழியாக வீட்டுக்குள் வருகின்ற சூரிய வெளிச்சத்தில் அணுப்போன்ற தூசிகள் அலைந்து திரிவது காணப்படுகிறது. அது போன்று கோள்கள் வானில் மிதந்து கொண்டிருக்கின்றன. அளவில், சிறிய அணுவுக்கும், பெரிய அண்டத்திற்கும் அமைப்பு ஒன்றேயாகும்.ஆராய்ந்து பார்ப்பவர்க்கு இவ்வுண்மை விளங்குகிறது…என விளக்கம் தருவர் சைவ சமயப் பெரியோர்.

    இனிச் சொல்லுக்குச் சொல் பொருள், உட்பொருள் காண்போம்:

    “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் “

    அண்டம் என்பது முட்டையைக் குறிக்கும். முட்டையின் வடிவம் நீள்கோளம் (ellipse) ஆகும் . எனவே அண்டம் பேரண்டம்’ universe’ என்றெல்லாம் அழைக்கப்படும் அது நீள் கோள வடிவு உடையது என்பதற்காகத்தான் ‘அண்டம்’ என மாணிக்கவாசகர் அழைத்தார் (அல்லது அவருக்கு முன்பிருந்தோர் அழைத்தனர் ) .

    அண்மைக்கால விண்வெளி ஆய்வு அறிஞர்கள் (astrophysicists) இதே கருத்தை இப்போது வெளியிட்டு உள்ளனர். 2001 -இல் NASA அனுப்பிய Wilkinson Microwave Anisotropy Probe (WMAP). என்னும் விண் வெளிக்கலம் ஒன்பது ஆண்டுகளாக விண்வெளியைச் சுற்றி வந்து பல கோடி அரிய தகவல்களை அனுப்பிவைத்தது. அவற்றை அலசி ஆய்ந்த இத்தாலி நாட்டு அறிஞர்கள் அண்டம் பற்றிய தகவல்களைக் கண்டறிந்து உள்ளனர்.

    – அண்டத்தின் வயது 13.75 பில்லியன் ஆண்டுகளாம்

    (http://wikipedia.orange.fr/wiki/Wilkinson_Microwave_Anisotropy_Probe). ;
    – 4 % அளவில்தான் அண்டத்தில் ‘பொருள்’ (matter) சிதறிக் கிடக்கிறதாம் ;
    – 22 % கரும் பொருளாம்.

    இந்த ஆய்வுகளின் அடிப்படையில் அவர்கள் வெளியிட்ட கருத்து :
    மிகச் சரியான கோள வடிவில் அமையாமல் அண்டம் சற்றே (நீள் வட்ட) மாத்திரை போல அமைந்துள்ளது என்பதே. முட்டை வடிவமே அண்டத்துக்குப் பொருத்தம் என இத்தாலி பெரேரா பல்கலைக் கழகத்தின் விண்வெளி ஆய்வு அறிஞர்கள் லெயோனார்டொ காம்பனெல்லி பாரி பல்கலைக்கழக ஆய்வு அறிஞர்கள் பவோலா செயா, லுய்ழி டெடெஸ்கோ முதலியோர் கருதுகின்றனர்.

    (Instead of being perfectly round like a globe, the universe might be a bit stretched in shape like a pill. Now astrophysicist Leonardo Campanelli of the University of Ferrara and his colleagues Paolo Cea and Luigi Tedesco at the University of Bari, all in Italy, have found that a universe shaped a bit like an oval can explain this so-called “quadrupole anomaly.”http://www.space.com/2988-bursting-spherical-bubble-universe-pill-shaped.html http://www.nbcnews.com/id/15197712/ns/technology_and_science-space/t/universe-might-be-oval-shaped/#.Umj8iRAlTrY
    எனவே, மாணிக்கவாசகர் பயன்படுத்திய ‘அண்டம்’ என்ற சொல்’ universe’ என்னும் சொல்லுக்குப் பொருத்தமாகவே உள்ளது.

    அடுத்த சொல் : பகுதி. அண்டத்தின் பகுதி எனக் குறிப்பிடும் மாணிக்கவாசகரின் கருத்தில் பகுதி என்ற சொல்லைப் பன்மையாகக் கொண்டால், அறிவியல் பொருள் அதில் புதைந்து இருப்பதை உணரலாம். (பண்டைக் காலத்தில் ‘கள் ‘ விகுதி அதிகம் பயன்படுத்தப்படவில்லை ; ஒருமையே பன்மைக்கும் வரும் ). ஆகவே அண்டத்தில் பல பகுதிகள் உண்டு என்ற பொருள் தொக்கி நிற்கிறது. இக்கால அண்ட ஆய்வறிஞர்கள் (cosmologists) அண்டத்தில் நான்கு பகுதிகள் உண்டு என்கிறார்கள். அவை காட்சிக்குட்பட்ட பேரண்டம், கரும்பொருட்கள், கரும்சக்திகள், ஒளி எல்லையைத் தாண்டியுள்ள பகுதி. (காண்க :http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D).

    அதனைத் தொடர்ந்து வரும் சொல் ‘உண்டை’. உண்டை உருண்டை இரண்டும் ஒரு பொருள் குறித்த இரு சொற்கள் உருள்வது உருளை ; வட்டம்தான் உருளும் எனவே உண்டை என்பதன் வடிவம் வட்டம் அதாவது கோள வடிவம். அண்டப் பகுதியில் உள்ளவை யாவும் கோள வடிவின. நம் உலகமும் அண்டத்தில் உள்ள பகுதிதானே. ஆகவே நம் உலகமும் கோள வடிவிலேயே உள்ளது என்பது பெறப்படும்.இந்த உண்மையை எட்டாம் நூற்றாண்டு மணிவாசகப் பெருமான் வரிகள் எடுத்துரைக்கின்றன. உலகம் தட்டையானது என்றே மக்கள் கருதி வந்த மிக முற் காலத்திலேயே உலகம் உருண்டை என்ற கருத்தைக் கொண்டிருந்தவர் தமிழர். புறநானூறு 17 -ஆம் பாடலில் சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை

    “இனிது உருண்ட சுடர் நேமி
    முழுது ஆண்டோர் வழிக் காவல” என விளிக்கிறார் குறுங்கோழியூர்க் கிழார்.

    கோள்கள் வடிவத்தால் உருண்டையானது என்பதை இப் புறநானூற்றுப்பாடல் உணர்த்துகிறது. இந்த உண்மையை மேனாட்டார்க்கு உணர்த்த கலிலேயோ கலிலேயி (கி.பி. 1564-1642) வரவேண்டி இருந்தது. மேலும் கதிரோனைச் சுற்றியே கோள்கள் சுற்றுகின்றன என்ற உண்மையும் தமிழர்களுக்குத் தெரிந்து இருந்தது.

    “வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
    இளங்கதிர் ஞாயிறு” எனச் சிறுபாணாற்றுப்படை (242-243) கூறுகிறது காண்க.

    மாணிக்கவாசகரின் இந்தப் பாடலின் நான்காம் சீர் ‘பிறக்கம்’ . இச்சொலுக்குப் பொருள் என்ன? ‘ஒளி ‘ என்றொரு பொருள் உண்டு. திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது பதினொன்றாந் திருமுறை யில் இடம் பெறுவது. அருளிச் செய்தவர் பட்டினத்து அடிகள். இந் நூலில் 992 ஆம் பாடலில்

    “மின்னின் பிறக்கம் துன்னும்நின் சடையே
    மன்னிய அண்டம்நின் சென்னியின் வடிவே”

    என்று பாடுகிறார்.இங்கே மின்னலின் ஒளி என்னும் பொருள் தருகிறது ‘பிறக்கம்’ என்ற சொல். ஒளி என்னும் பொருளில் இச்இசால்லைப் பயன்படுத்தும் கம்பர்

    “மணியால் ஓங்கல்
    பிறக்கம் உற்ற மலை நாடு” என்று பாடுவார் :
    காண்க : கிட்கிந்தா காண்டம் நாடவிட்ட படலம்
    (பாடல் 30 வை மு கோ பதிப்பு)

    பிறக்கம் என்பதற்குப் பெருக்கம்,பெரு(க்)குதல் என்றும் பொருள் உண்டு. இதனை “மரகதம் குவால் மாமணி பிறக்கம்” – (திருவண்டப் பகுதி). இதன் பொருள் :பச்சை மணியின் குவியலும் சிறந்த செம்மணியின் பெருக்கமும், இப் பொருளில் கம்பரும் ,
    ” வரை உறு பிணப் பெரும் பிறக்கம் மண்டின” எனச் சுந்தர காண்டம் சூளாமணிப் படலம் 58 ஆம் பாடலில் பாடினார்.

    பிறக்கம் என்ற சொல்லுக்குக் குவியல் என்னும் பொருளும் உண்டு என்கிறது வலைத் தமிழ். (http://www.valaitamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D–tamil-dictionary109230.html). அது மட்டும் அன்று ; brightness , heap , splendour பிரகாசித்தல் ஒளிப்பிறக்கம் இருண்ட பின்னணியில் ஒளியார்ந்த பொருளின் விளிம்பு பெரிதாகத் தெரியும் நிலை, அவிரொளிக்காட்சி.என்றெல்லாம் பொருள் கொள்ளலாம் என்று தமிழ் லெக்சிகன் குறிப்பிடுகிறது.

    (http://glosbe.com/ta/en/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

    http://www.tamillexicon.com/?s=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&option=glossary&act=findout)

    இவற்றைத் தொகுத்துச் சொன்னால், ஒளி, பெருக்கம், குவியல், மாட்சிமை (splendour)…என்று பொருள் தரும் சொல்தான் ‘பிறக்கம்’ என்னும் சொல் என்பது தெளிவு. இத் தெளிவுடன் அண்டப் பகுதி உண்டைப் பிறக்கம் என்னும் சொற்றோடரைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

    அண்டத்தில் உள்ளவை கோள வடிவை உடையவை ; ஒளி தருபவை / பெறுபவை/விடுபவை , குவியலாக இருப்பவை, காட்சிக்கு மாட்சிமையுடன் விளங்குபவை…அண்டம் இப்படி இருப்பதாகத்தான் இக்கால அண்டவியல் உரைக்கிறது. அண்டப் பகுதியில் குவியலாக, தொகுதியாக உள்ளவற்றை ‘galaxy clusters’ என்பர். (காண்க : http://en.wikipedia.or/wiki/List_of_galaxy_clusters). இவற்றைத் தானே மாணிக்கவாசகரும் ‘”அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் ” எனப் பாடுகிறார்.

    அண்டத்தின் இன்னொரு தன்மையை அடுத்த வரியில் அவர் வெளிப்படுத்துவதைப் பாருங்கள் : “அளப்பருந் தன்மை”. அளக்க இயலாத தன்மையை உடையதாம் அண்டம். வலிமை வாய்ந்த தொலை நோக்கிகள், நவீன விண்வெளிக் கலங்கள், நெடுந்தொலைவு பாயக் கூடிய உந்தூர்திகள் (rockets) …என நாலு கால் பாய்ச்சலில் அறிவியல் முன்னேறி வந்தாலும், அண்டத்தின் அகல(ம்) நீள(ம்) ஆழங்களையோ காலத்தையோ இன்னும் துல்லியமாக் கணிக்க முடியவில்லையே! அதனால்தான் போலும் மாணிக்கவாசகர், ‘அளக்க முடியாத அண்டம்’ என விளக்குகிறார். நம் நாட்டு ஞானி மாணிக்கவாசகரின் இக்கருத்துக்கு அரண் அமைக்கிறார் அமெரிக்க அரசியல்வாதி ரிச்சர்ட் ஹெச் பேக்கர் :”For most people, we often marvel at the beauty of a sunrise or the magnificence of a full moon, but it is impossible to fathom the magnitude of the universe that surrounds us.” புகழ் பெற்ற எழுத்தாளரும் பெரும் பேச்சாளரும் சுற்றுச் சூழல் ஆர்வலருமான இன்னோர் அமெரிக்கர் கர்ட் கோப் (Kurt Kobb ) கூறுகிறார் :

    “The one thing we know for certain about the universe is that it is unfathomable. …. No matter how many narratives we construct, literary, historical, scientific or religious, the universe will remain unfathomable.” அளப்பரியது என்னும் பொருளைத் தரும் ‘ ‘unfathomable’ என்னும் சொல்லையே பெய்கிறார்கள்!, மாணிக்கவாசகரைப் போலவே! அமெரிக்கக் கவிஞரும் மெய்ப்பொருள் அறிஞருமான என்றி டேவிட் தோரோ ‘The universe is wider than our views of it’ என்கிறார்.

    மாணிக்கவாசகர் பாடலின் அடுத்த சீர்கள் : “வளப் பெருங் காட்சி” அசர வைக்கிறது. அண்டம் தரும் காட்சி கண்ணையும் கருத்தையும் கவரும் மாட்சியாம்! 21 -ஆம் நூற்றாண்டு NASA வின் விண்வெளிக்
    கலங்களும் செயற்கைக் கோள்களும் எடுத்து அனுப்பிய வண்ணப் படங்கள் எட்டாம் நூற்றாண்டு மாணிக்கவாசகரின் கூற்று எத்துனை உண்மையானது என்று சான்று பகருகின்றன. Google, Filckr, youtube…போன்ற தளங்களில் அண்டம் பற்றிய படங்களைத் தேடிப் பாருங்கள். சில எடுத்துக்காட்டுகள் :

    http://www.pinterest.com/szokiadams/our-unfathomable-universe/
    (https://www.google.fr/search?q=universe&source=lnms&tbm=isch&sa=X&ei=A_FrUpitJs3whQeysIG4Aw&ved=0CAcQ_AUoAQ&biw=1680&bih=870)
    http://www.flickr.com/search/?q=the+universe%2C+nasa+images
    http://www.youtube.com/watch?v=8Jw27YHrugg&hd=1

    அண்டம் தரும் காட்சியை அதன் அளப்பரும் மாட்சியைக் கவிஞர் வால்ட் விட்மன், “Every cubic inch of space is a miracle” என்று வியக்கிறார்.”Space is the breath of art.” என இன்னொருவர் – Frank Lloyd Wright (கட்டிடக் கலை நிபுணர்) வருணிக்கிறார். ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்த அமெரிக்க எழுத்தாளர், John Muir

    “…flying through space with other stars all singing and shining together as one, the whole universe appears as an infinite storm of beauty.” என எழுதுகிறார்.

    இப்படி அறிவியலார், அவர் அல்லாதவர் என அனைவரையும் கவரும் அண்டத்தின் காட்சி மாட்சிமை உடையதுதானே.

    மணிவாசகர் பாடலின் இரண்டு அடிகளை மட்டுமே பார்த்திருக்கிறோம். நான்கு வரிகளையும் அடுத்த வாரம் காண்போம்.

    Share
  • கொலு 2015

    விசாலம்

    அந்தக்கால கொலுவுக்கும் இந்தக்கால கொலுவுக்கும் நிறைய வித்தியாசங்களை நான் பார்க்கிறேன் அந்தக்காலத்தில் கொலு படிகள் மூளையை உபயோகித்து அமைக்கப்பட்டன. இந்தக்காலத்தில் கொலு வைக்க ரெடிமேடாக எல்லா அளவுகளிலும் படிகள் வாங்கமுடியும் .இதை கொலு ஆனப்பின் புத்தக அலமாரிப்போல் உபயோகித்தும் கொள்ளலாம் அந்தக்கால கொலுவில் அதிக சிரத்தை ,பக்தி இருந்தது.இந்தக்காலத்தில் பக்தியை விட புகழுக்கு ஆசை, தற்பெருமை போன்றவை முக்கியத்துவம் பெருகிறது இதற்கு விதிவிலக்கு இருக்கலாம் .அந்தக்காலத்தில் கல்லுரல் ,அம்மி குழவி தவிர பிரசாதம் செய்ய வேறு உதவியில்லை.இக்காலத்திலேயோ பலவிதமான் மிக்ஸி ,அல்லது ரெடிமேட் மாவு ,விற்கப்பட்டு வேலைபளுவை மிகவும் குறைக்கிறது, அந்தக்காலத்தில் கொலு மூலம் பல உறவினர்கள் கூடும் வாய்ப்பும் தினமும் மஞ்சள் குங்குமம் கொடுக்கும் பாக்கியமும் வீட்டுத்தலைவிக்கு கிடைத்தது.உறவினர்களின் இணைப்பால் குடும்பம் மேலும் வலிமை பெற்றது ,இதனால் வளரும் சிறுமிகளுக்கும் நம் கலாச்சாரம் தெரிய வந்து அதில் அவர்கள் ஈடுபட்டு கலாசாரமும் வளர்ந்தது. இப்போதோ பத்து நாட்களில் தமக்கு சௌகரியமான நாளை தேர்ந்தெடுத்து அன்று மட்டும் மஞ்சள் குங்குமம் கொடுக்க அநதப்பெண்மணியின் பங்கு முடிந்து விடுகிறது .இதனால் வருங்கால சந்ததிக்கு மாமா பெண் ,அத்தை பெண் குடும்பம் கூட தூரமாகி போய் விட்டது .அந்தக்காலத்தில் ஆபீஸ் போகும் பிரச்சனை மிகக்குறைவு .ஆனால் இந்தக்காலத்தில் ஒவ்வொரு நபரும் வெளியில் உத்தியோகம் பார்க்கின்றனர் .இதனால் இது போல் பத்து நாட்கள் பண்டிகை ஒரு பாரமாக அமைந்து ஏனோதானோவென்று அநத் திருநாள் முடிக்கப்படுகின்றது. உடலிலும் உள்ளத்திலும் ஒரு சலிப்பு தட்டுகிறது .தவிர அந்தக்காலத்தில் பணம் குறைவாக இருந்தாலும் மனநிறைவு அதிகமாக இருந்தது . இந்தக்காலத்தில் எத்தனை சம்பாதித்தாலும் போதவில்லை. ஏனென்றால் நிறைந்த மனம் இல்லாமல் பேராசை அதிக பங்கு வகிக்கிறது .இதனாலே பூக்காரி கூட இது போன்ற நாட்களில் மல்லிகை முழம் முப்பது ரூபாய் என்று விற்கின்றனர் அந்தக்காலத்தில் பண்டிகைகேற்ப உடையைக்காண ஒரு தெய்வீக உணர்வு ஏற்பட்டது .இந்தக்காலத்தில் சிலரைப்பார்க்க ஒரு பேஷன் பரேட் பார்க்கும் பிரமை ஏற்படுகிறது .சிலர் தன் தோற்றத்திற்கு பொருந்துகிறதா என்று கூட பார்க்காமல் தங்களை அலங்கரித்துக்கொள்கிறார்கள்.சரி இப்போது 2015ல் கொலுவைப்பற்றிய ஒரு கற்பனை

    காட்சி ஒன்று

    மூன்று தலைமுறை கொண்ட ஒரு குடும்பம்.பாட்டி ராஜம்மா ,மருமகள் ராஜி , பேத்தி லலிதா .கொலு சமீபிக்கும் நேரம் ,பாட்டிரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கிறார். பின் தன் பேத்தியை அழைக்கிறார்.

    “ஏண்டி லல்லி கொலு வரதே. இந்த வருஷம் என்ன புதுசா வைக்கப்போறே? தலைவிரிக்கோலமாய் லல்லி வருகிறாள் ஒரு திராட்சைக்குலை காதில் தொங்கியபடி தோளை இடிக்கிறது .

    “பாட்டி நான் இந்தக்கொலுவுக்கு ஒரு பிசினஸ் ஆரம்பிச்சிருக்கேன் .கொலு கான்ட்ரேக்ட் பிசினஸ்.”
    “அதென்னடி கொலு கான்ட்ரேக்ட் ?’

    “அதுவா .வந்து ….அது சஸ்பென்ஸ் பாட்டி கொலுக்கு முதல் நாள் நான் உனக்கு சொல்றேன்.இப்ப வெளிலே எனக்கு நிறைய வேலை இருக்கு. பை பாட்டி, பை அம்மா “

    பாட்டி தன் மருமகளை அழைக்கிறார் . ” ஏண்டி ராஜி என்ன சும்மாவே இருக்கே ! இன்னும் பொம்மை எடுக்கலை .இன்னும் படி கட்டலை . இந்த வருஷம் என்ன பண்றதா உத்தேசம் .லல்லி என்னவோ பிசினஸ் ன்னு சொல்லிட்டு போறா. என்னமோம்மா.இந்தக்கால பொண்களை என்ன சொல்றது?’ “அம்மா நான் என்ன செய்யட்டும்? உங்க பேத்தி ஏதோ கொலு பிசினஸ் செய்யறாளாம் அதோட பேரு முத்தேவி என்டர்பிரைஸ். .என்னை கவலப்படாம இருக்க சொல்றா.”
    காட்சி இரண்டு .

    கொலுவுக்கு முதல் நாள்.வாசலில் பெல் அடிக்க .கதைவைத் திறந்தாள் பாட்டி . இரண்டு பேர்கள் டை கட்டியபடி ஜோராக நின்று வணக்கம் செலுத்தினர் “பெரியம்மா இதுதானே முப்பதாம் நம்பர் வீடு?”
    “ஆமாம் .நீங்கள்ளாம் யாரு ?”

    “நாங்க முத்தேவி கம்பெனிலேந்து வந்திருக்கோம்.’

    “அதுக்கு இங்க ஏன் வந்திருக்கேள்?

    “உங்க வீட்ல கொலு வைக்கணும் ஆர்டர் வந்திருக்கு . பெரியம்மா , எங்க கொலு வைக்கணும் ?எத்தனை படிகள் வைக்கணும்?

    பாட்டி வழக்கமாய் வைக்கும் இடத்தைக்காட்ட அவர்களும் அந்த இடத்தை மேற்பார்வையிட்டார்கள் “பெரியம்மா இந்த இடத்தில் ஐந்து படிகள் கட்டினால் கதவு திறக்க இடஞ்சலாக இருக்கும் . அந்தக்கார்னர்லேந்து வச்சாக்க இடமும் இருக்கும் .போக வர வழியும் இருக்கும்.ஒரு ஐந்து நிமிஷத்ல நாங்க வறோம் ” என்றபடி வெளியே சென்று பின் அழகான ஹின்டேலியம் படிகளுடன் வந்தனர் .மளமளவென்று படிகளைப் பொருத்தினர் .மேலே அழகான நம் கொடி போன்று மூன்று கலர் கொண்ட ஒரு துணியை விரித்தனர் . பின் பாட்டியைப்பார்த்தனர் . “பெரியம்மா ,கொலுவில் எந்த மாதிரி பொம்மை வேணும், சொல்லுங்க, சிவன் பார்வதியா. அனந்த சயனமா, தேச தலைவர்களா .,காந்தியா நேருவா……..அப்பறம் விவேகானந்தர் . ராகவேந்திரர் ன்னு நிறைய இருக்கு ” “எல்லாம் கலந்து இருக்கட்டும் .தம்பி “. “சரிங்க” . என்று சொன்னபடி அவர்கள் கொலு வைக்க ஆரம்பித்தார்கள்.அழகாக முதல் படியில் கலசம் பின் ஆண்,பெண் மரப்பாச்சிக்களுடன் ஆரம்பித்து கன கச்சிதமாக வைத்து முடித்தனர்..பின் அழகான ரங்கோலி போடப்பட்டது. அருகில் அண்ணா ஹஸாரே உண்ணா விரதம் இருப்பதும் .மியூசிக் அகாடமியில் பாட்டுக்கச்செரி சீனும் மிக அழகாக ஒரு கால் மணி நேரத்தில் செய்து முடித்துவிட்டனர் . “பெரியம்மா நாங்க கொலு வச்சுக்கொடுத்துட்டோம் தினமும் சுண்டல் ,வடை ,பாயசம் செஞ்சு கொடுக்கறோம்.பத்து நாளுக்கும் சேர்த்து சொன்னால் 20% தள்ளுபடி ” “அப்படியா ? சரி எத்தனை சார்ஜ் வாங்கறே?”

    “வெத்தலை .பாக்கு. மஞ்சள் குங்குமம் பையோட ரூ,10000.ஆனா இது உங்க வீட்டு சின்னம்மாவோட கம்பெனி .அதனாலே ரூபாயை அவ கிட்டே கொடுத்துடுங்கோ”

    “வேறு என்ன ஸ்பெஷல் செஞ்சு தரே?”

    “கொலுக்கு முதல் நாளிலிருந்து. கடைசி நாள் வரை புடவை .சட்டை மாட்சிங்காக எடுத்து பிரஸ் செய்து தறோம் .அதுக்கு தனியாக ரூபாய் வாங்கறோம் .ஒரு நாளைக்கு நூறு ரூபாய் .தவிர வாசல்ல மாக்கோலம் காவியுடன் போட்டுக்கொடுக்கறோம்.

    இந்த நேரத்தில் லல்லி நுழைகிறாள் . “என்ன பாட்டி .என்ன அம்மா கொலு வச்சாச்சா? ரொம்ப கவலைப்பட்டாயே பயந்தாயே! “நன்னா இருக்குடி இந்த பிசினஸ் ! எத்தன வீட்டை பிடிச்சிருக்கே?

    ” இது வரை 200 வீடுகளுக்கு ஆர்டர் கிடைத்திருக்கு .இதுக்குன்னு தனியா இரண்டு பேரை ரெக்ரூட்டும் செஞ்சிருக்கேன் அவாளுக்கு நல்ல ஸேலரியும் தரேன் . நமக்கும் நல்ல லாபம் கிடைக்கும் “

    “கிடைக்காம என்ன செய்யும் ? இந்தக்காலத்தில் உடம்பு நலுங்காம கொண்டாடத்தானே உங்கள மாதிரி பெண்ணுக்கு பிடிக்கிறது. சரி வேறு என்ன ஸ்பெஷல் வச்சிருக்கே? “அதுவா பாட்டி .இன்னும் நிறைய பிளான் இருக்கு. முகத்துக்கு ஏத்தாற்போல் தலைக்கொண்டை போட்டு விடுகிறோம் தினமும் செய்ய வேண்டிய சுண்டல் பற்றியும் விளக்குகிறோம்.ஆர்டர் கொடுத்தால் பிரசாதம் செய்தும் தருகிறோம் .என்ன அம்மா உனக்கு பிடிசிருக்கா எங்க பிசினஸ்? “லல்லி . நீ சொல்றதெல்லாம கேக்க நன்னாத்தான் இருக்கு.ஆனா சில மாடர்ன் பேமிலி ரொம்ப பெரிய ஹோதாவா கொலு வைப்பாளே,அவாளுக்கு எதாவது ஸ்பெஷல் உண்டா?” “ஒ உண்டே அவாளுக்கு பீஸா .பாஸ்தா ,நூடுல்ஸ்,சௌமீன், ஸ்பிரிங் ரோல் தவிர ஐஸ் க்ரீமும் கொண்டு தருகிறோம் .பிரண்டோட சேர்ந்து சாப்பிட அவாளுக்கு ரொம்ப பிடிக்கும் தவிர ஃப்யூசன் ம்யூசிக்கில் “லலிதா சஹஸ்ரநாமம் “சப்ளை செய்கிறோம் .கர்பா டேன்ஸ் இப்போ பேஷன் ஆயிடுத்து.அதுக்கு தகுந்த பாட்டும் சிடி ல கிடைக்கும் .”

    “ஆஹா கேக்கவே ரொம்ப இன்டெரெஸ்டிங்கா இருக்கே .ம்ம் அப்பறம்” …”

    “அப்பறம் நாங்க கொலு காம்படிஷனுக்கும் அப்பிளிகேஷன் பார்ம் தந்து அத பில் அப் செஞ்சு அனுப்பறோம் சரி இன்னும் நாலு வீடு முடிக்கணும் .போய்ட்டு வரோம் பெரியம்மா ” “ஏதாவது சாப்பிட்டு போங்கோ . ஏ ராஜி இவாளுக்கு காபியும் கொஞ்சம் பக்ஷணமும் கொண்டு கொடு ” இதோ வரேம்மா ” என்றபடி ராஜி வர “எள்ளுங்கறத்துக்குள் எண்ணெயா நிப்பா என் மாட்டுப்பெண் ” என்றாள் மாமியார் பெருமையுடன் ,

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    திருவேங்கடவனை சிலப்பதிகாரம் சங்கு சக்கரதாரியாகவும் மேலே வானமே கூரையாகவும், அந்த திறந்த வான் வெளியில் இரண்டு பக்கத்திலும் சூரியனும் சந்திரனும் தரிசனம் செய்து கொண்டிருக்க, தன்னந்தனியாளாக வேங்கடமலையில் நின்ற நெடுமாலாக வர்ணிக்கிறது. ஐந்தாம்/ஆறாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்ததாக சொல்லப்பட்ட முதல் மூன்று ஆழ்வார்கள் திருவேங்கடவனை சிவகேசவனாக தரிசித்துப் பாடி மகிழ்ந்தார்கள். பின்பு வந்த குலசேகர ஆழ்வாரும், நம்மாழ்வாரும், திருமங்கை மன்னனும், திருவேங்கடவனை திருமாலாக பாவித்து பாடல் அருளினார்கள். தமிழ்த்தாயின் தவச் செல்வி ஆண்டாளோ சாட்சாத கண்ணனாக, தன் மணாளனாக திருவேங்கடவனை தரிசித்து, அவனிடம் தன் காதலை எடுத்துச் சொல்லுமாறு மேகசந்தேசம் அனுப்பி வைத்தாள். அடுத்து வந்த அருணகிரியாரோ மாமன் மருகனான முருகனே எம் திருவேங்கடவன் என இரண்டு முத்தான தமிழ்பாடலால் புகழ்ந்தருளினார். தேவி பக்தர்களுக்கு அவன் ’அவளாய்’ மாறியதில் ஆச்சரியமே இல்லைதான். புத்தபிரானின் சீடர்களுக்கு எட்டடி உயர புத்தபிரானாய் காட்சி அளித்ததில் கூட வியப்பு இல்லைதான்.

    ’எவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்’ எனும் நம்மாழ்வார் வார்த்தைகள் பொய்த்துப் போகக்கூடாதே என்று அந்த சத்திய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு யார் மனதில் எப்படி தான் இருக்கவேண்டும் என நினைக்கிறார்களோ அப்படியே தன் உருவத்தை அவர்களுக்கு காண்பித்துக் கொண்டிருக்கும் மாயன் அவன் என்கிற உண்மை அறிந்தோர்களுக்கு அவன் என்றும் திருவேங்கடமுடையான். இன்னும் சொல்லப் போனால்.படித்த அறிஞர்களுக்குதான் இந்த வேற்றுமையே தவிர பாமரரான பக்தர்களுக்கு அவன் என்றென்றும் திருவேங்கடத்தான் மட்டுமே.

    இதை மனதில் வைத்துதான் என்னுடைய ‘திருமலைத் திருடன்’ புதினத்தில் நாயகிகளில் ஒருத்தியை சைவப்பித்தாக வர்ணித்து அவள் திருவேங்கடவனை சிவனாகப் பாவித்து தரிசனம் செய்ததாகச் சொல்லியிருந்தேன். திருவேங்கடவன் ஒவ்வொருவருக்கும் பிரத்யட்ச தெய்வம். உண்மையில் அவனுக்கு மதமோ பிரிவினையோ ஒத்து வராது என்பதும், இவன் நம்மவன் என்ற உரிமையும் அவனைத் தரிசித்த அத்தனை பேரின் மனசாட்சியும் சொல்லத்தான் செய்யும்.

    இது இப்படி இருக்க, இப்பேர்பட்ட இஷ்ட தெய்வமான இந்த திருவேங்கடவனுக்கு தமிழில் திவ்வியப்பிரபந்தம் தவிர்த்து அதிகம் பாடல்கள் இல்லையே என்று வருத்தப்பட்டதுண்டு. திவ்விய கவி என்பார் அழகான பாடல்கள் சில நூறு தீந்தமிழில் பாடியுள்ளார் என்பது ஒரு ஆறுதலான விஷயம். இதுகூட ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு என்பது குறிப்பிடத்தக்கது. அதே காலத்தில் அன்னமய்யா தெலுங்கில் பாடிய எத்தனையோ ஆயிரம் பாடல்களில் சில ஆயிரம் பாடல்கள் கிடைத்துள்ளது. ஆனாலும் தமிழ் என்றும் இனிமையான மொழியாயிற்றே.. செந்தமிழில் இறைவனைப் பாடும்போது அவன் அதிகம் மகிழ்வதாக எனக்கு ஏதோ ஒரு மயக்கமான நம்பிக்கை எப்போதும் உண்டு. (இந்த மயக்கம் தெளியக்கூடாது என்று அஞ்சுபவன் கூட.)

    photoஅந்த நம்பிக்கையின் உருவகமாக காப்பியக் கலைஞர் மீனவன் அவர்கள் திருவேங்கடத்தான் அந்தாதி பாடல்களை பதிவு செய்து வருவது என் மனதுக்கு ஒரு நிறைவைக் கொடுத்தது என்றே சொல்வேன். இந்த வாரத்தில் அவர் பதிப்பித்த சில பாடல்கள் திருமலைத் தேன் போல இனித்தது. ஒரு சில தேன் துளிகைளை நீங்கள் பருக, படிக்கக் கீழே காணலாம்.

    தலைஆ யிரம்கொண்டான் தன்மேல் துயிலும்
    நிலையான் தனையே நினையாய் – மலையப்பன்
    காலைப் பணிந்தால் கர்மம் தொலைந்தங்கே
    ஆலாய்ப் பரவும் அருள்.

    அருளாளன் மாமலையான் ஆயிரமாம் சென்னிக்(கு)
    உரியவன் தன்மேல் உறஙகும் – பெருமான்
    பரந்தாமன் காலைப் பிடித்தார்தம் வாழ்வு
    நிரந்தரமாய் வாழும் நிலைத்து.

    நிலையாய்த் திருப்பதியான் நெஞ்சிற்குள் நின்ற
    சிலையாளன் சீதரன் செல்வப் – பொலிவாளன்
    மங்கை அலர்மேலு மார்பிருக்கத் தான்மகிழ்வான்
    எங்குமிருப் பானென்(று) இயம்பு.

    இயம்புதமிழ்ப் பாசுரங்கள் எல்லாம் அறிந்தே
    வயங்குதிரு மாலவனை வாழ்த்தி – மயலகற்றும்
    ஏழு மலையானை எங்கள் பெருமானை
    வாழியவே என்றுநீ வாழ்த்து.

    இதே போல திருச்சானூரில் குடியிருக்கும் இதய தெய்வம் அலர்மேல் மங்கையின் மீதும் இவர் அந்தாதி பாடியுள்ளார். திருவேங்கடத்தானின் புகழ் பரப்பும் காப்பியக் கவிஞர் மீனவன் அவர்களை இந்த வார வல்லமையாளராக கௌரவம் செய்வதில் பெருமை கொள்கிறோம். வாழ்க அவர் தமிழ்த் தொண்டு. திருவேங்கடத்தானின் அருள் கவிஞருக்கு பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுதல்கள்.

    கடைசி பாரா: ‘தமிழ்த்தேனி’ யின் ‘மனக்குரங்கு’ கதையிலிருந்து:

    எப்பவுமே எந்த ஒரு பொருளையும் எவ்வளவு ப்ரச்சனை இருந்தாலும் எவ்ளோ ஓய்ந்து போயிருந்தாலும் இரவு எவ்வளவு நேரமானாலும் அது அதுக்குரிய இடத்திலே வைக்கணும் னு எல்லாருக்கும் உபதேசம் செய்வார் சபேசன், அவரும் அப்படியே வைப்பார்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 95

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

     

    கவுந்திஅடிகள் வாழும் பள்ளியை அடைதல்

     

    காத தூரம் கடந்து சென்று
    பூக்கும் மரங்கள் இருந்த சோலையில்
    கவுந்தியடிகள் எழுந்தருளிய
    தவச்சாலையைக் அடைந்து

    அங்கிருந்த பூஞ்சோலையில்

    இருவரும் தங்கினர்.

     

    கண்ணகியின் வினாவும், கோவலன் உரைத்த விடையும்

    இற்றுவிடுமோ என்று ஐயப்படும்படி
    கொடி போன்ற இடையையும்
    நடந்து வந்த களைப்பால்
    மிகவும் வருந்திய பாதங்களையும் கொண்ட
    கருங்கூந்தல் கண்ணகி பெருமூச்செறிந்தனள்.

    தன் கூரிய பற்கள் வெளியே தெரியும்படி
    முற்றாத தன் மழலைச் சொல்லாலே

    கோவலனை வினவினள்:
    “மதுரை மூதூர் இன்னும் எவ்வளவு தொலைவில் உள்ளது?”

    கண்ணகியின் அறியாமையும் துயரும் கண்டு
    வருந்திய கோவலன் தானும் வருந்தி,
    “நறுங்கூந்தல் உடையவளே!
    மதுரை மாநகர் இன்னும்
    முப்பது காத தூரத்தில் உள்ளது” என்றனன்.

     

    கோவலனும் கண்ணகியும் அறப்பள்ளியில் இருந்த கவுந்திஅடிகளைத் தொழுதல்

    அதன் பின்னர்,
    தேன் போன்ற மொழியுடைய கண்ணகியோடு
    தவச்சாலைக்குச் சென்று
    கவுந்தியடிகளின் திருவடிகளில்
    வீழ்ந்து வணங்கினன் கோவலன்.

     

    கவுந்தி அடிகளின் வினாவும் கோவலனது மறுமொழியும்

     

    “அழகும் உயர்குடிப் பிறப்பும்
    பெருமை தரும் ஒழுக்கமும்
    அருக தேவனின் ஆகமவிதிகள்
    பிறழாமல் கடைப்பிடிக்கும் நீங்கள்
    தீவினை செய்தவர்களைப்போல்
    உங்கள் நாட்டை விட்டு நீங்கி
    இங்கே வருவதற்குக் காரணம் யாது?” எனக்
    கவுந்தியடிகள் கேட்க,
    கோவலனும்,
    “அருந்தவத்தை உடையீர்!
    மதுரை நகர் சென்று
    வாணிகம் செய்து
    பொருளீட்ட விரும்புகிறேன்
    என்பதைத் தவிர
    வேறொன்றும் சொல்லும்

    நிலையில் நான் இல்லை…”
    என மறுமொழி பகர்ந்தனன்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (12)

    12. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – ஸ்பெயின்

    சுபாஷிணி ட்ரெம்மல்

    ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றை கவனிக்கும் போது ஒவ்வொரு நாடும் அதன் இப்போதைய நாட்டு எல்லையை அடைய குறிப்பிடத்தக்க போர்களை சந்தித்து வெற்றிகளையும் தோல்விகளையும் மாறி மாறி அனுபவித்து அவை கடந்து வந்திருக்கும் பாதையை ஒதுக்கி வைத்துப் பார்த்து விட முடியாது. சரித்திரத்தில் மிகப் பல மாற்றங்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்த ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயினும் அடங்குகின்றது.

    ஸ்பெயினின் எல்லை நாடுகளாக இன்று இருப்பவை போர்த்துக்கலும் பிரான்சும். ஏறக்குறைய 35,000 ஆண்டுகளாக மனித வாழ்க்கை இருந்திருப்பதற்கான தடயங்கள் இங்கு தென்படுகின்றன. ரோமானிய பேரரசு தனது ஆளுமையை விரிவாக்கிய போது இன்றைய ஸ்பெயினின் எல்லைக்குள்ளும் வந்தது இந்தப் பேரரசு. சில நூறு ஆண்டுகள் ரோமானிய ஆட்சி, பின்னர் 8ம் நூற்றாண்டு தொடக்கம் மூரிய இஸ்லாமியர்களின் கைக்குள் ஸ்பெயின் வந்துவிட இஸ்லாமிய கலைகள் பெருகி வளர்ந்த ஒரு மேற்கு ஐரோப்பிய நாடாக அக்கால கட்டத்தில் ஸ்பெயின் விளங்கியது. அக்காலகட்டத்தில் நாடெங்கிலும் பதிந்து போன இஸ்லாமியக் கலைகளும் கலாச்சாரமும் கட்டிடக் கலையும் இன்றும் மறையாமல் ஸ்பெயினின் சில நகரங்களில் இருக்கின்றன.

    12ம் நூற்றாண்டு தொடங்கி, 13, 14ம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற பல போர்களில் ஆயிரக்கணக்கான போர் வீரர்களின் மரணத்தைத் தாண்டி இஸ்லாமிய ஆட்சி முற்றிலுமாக ஸ்பெயினிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டது. மீண்டும் கத்தோலிக்க கிறிஸ்துவ ஆட்சி ஸ்பெயினைக் கைப்பற்றி மிகுந்த ஆளுமையுடனும் தீவிரத்துடனும் நாடு முழுமைக்கும் கத்தோலிக்க மதம் சார்ந்த அரசாக உருவாகியது. மூரிய இஸ்லாமியர்களால் அழிக்கப்பட்ட மறைக்கப்பட்ட தனது முந்தைய பாரம்பரியத்தை மீட்டெடுத்தது இந்தப் புதிய அரசு. இந்த முயற்சிகளோடு இப்புதிய அரசின் செயல்பாடுகள் நின்று விடவில்லை.

    கடல் போரினை விளக்கும் ஒரு 17ம் நூற்றாண்டு ஓவியம் (2013)
    கடல் போரினை விளக்கும் ஒரு 17ம் நூற்றாண்டு ஓவியம் (2013)

    ஸ்பெயின் இப்போதைய போர்த்துக்கலையும் தனது ஆளுமைக்குள் கொண்டு வந்ததோடு உலகம் முழுதும் தனது பராக்கிரமத்தை நிலை நாட்ட கடல் வழி பயணத்தில் கவனம் செலுத்தி மிகத்தீவிரமாக பல மாலுமிகளையும் ஆய்வாளர்களையும் இப்பணியில் அமர்த்தியது. வணிகம், புதிய நிலப்பரப்பை கண்டு பிடித்தல் அங்கு தனது ஆளுமை விரிவாக்கம் செய்தல் என்பவை இதன் முக்கிய நோக்கமாக இருந்த போதிலும் கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதையும் அதன் தலையாய நோக்கமாகக் கொண்டு இயங்கியது இந்தப் புதிய அரசு. ஸ்பெயின் அரச பரம்பரையினர் போர்த்துக்கல் மாலுமிகளுக்கு மிகுந்த பொருளுதவியும் தேவையான அனைத்து ஏற்பாட்டு வசதிகளையும் செய்து கடல் வழி பயணத்தை ஊக்குவித்தது. அந்த முயற்சிகளின் பின்னனியில் அமைந்த பயணத்தின் காரணத்தினால் தான் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்த வரலாற்று முக்கியத்துவம் பொருந்திய நிகழ்வு நடபெற்றது; வாஸ்கோ ட காமா இந்தியா வந்ததும் நிகழ்ந்தது. கடல் வழி பயணத்தில் ஏனைய ஐரோப்பிய முயற்சிகள் மீண்டும் ஆப்பிரிக்காவைச் சுற்றி இந்தியா வந்து பின்னர் மலாயா தீபகற்ப இந்தோனேசிய தீவுகளை அடைந்ததும் பின்னர் மேலும் பயணத்தை விரிவாக்கி கொரியா, சீன வழிப் பயணங்களை மேற்கொண்டதும் என புதிய பாதைக்கு ஆதாரமாக அமைந்தது இந்த முயற்சிகளின் தொடர்ச்சிகள். இந்த மாலுமிகள் ஈடுபட்ட கடல் வழி பயண ஆய்வுகளின் வழியாக ஆய்வு உலகில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன. மிக முக்கியமாக இன்றைய உலகின் பல நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு தாக்கமும் அடிப்படையும் கொடுத்த பெருமை இந்த வகை முயற்சிகளையேச் சாரும்.

    கடல் வழி பயணம் மேற்கொண்டு இந்த மாலுமிகளும் ஆய்வாளர்களும் மேற்கொண்ட பயணங்களினால் ஸ்பானிஷ் மொழி உலகின் சில குறிப்பிடத்தக்க நாடுகளில் அதிகாரப்பூர்வ மொழியாக ஆகியிருக்கின்றது. உருளைக்கிழங்கு, மிளகாய், முந்திரி, தக்காளி போன்ற தாவர உணவுகள் ஐரோப்பா, ஆசியா ஆகிய நாடுகளுக்கு அறிமுகமாகின. கத்தோலிக்க கிறிஸ்துவ மதம் அமெரிக்கா முழுமைக்கும், ஆசிய நாடுகளில் அதிலும் குறிப்பாக இந்தியாவிலும் காலூன்றியது.

    ஸ்பேனிஷ் மாலுமிகள் இவ்வகைப் பயணங்களில் செல்லும் போது தமது கப்பலில் கத்தோலிக்க மத குருமார்களையும், போர் வீரர்களையும், அரச பிரதி நிதிகளையும், வணிகர்களையும் சேர்த்தே அழைத்துச் செல்வார்களாம். ஓரிடத்திற்கு வணிக நோக்கமாகச் சென்று, உள்ளூர் அரசியல் பிரமுகர்களிடம் ஸ்பேனிஷ், போர்த்துக்கீஸிய அரச தூதுவர் வழியாக நட்புறவை உருவாக்கிக் கொண்டு பின்னர் அங்கே உள்ளூர் மக்களை ஏதாவது ஒரு காரணத்தினால் கத்தோலிக்க மதத்திற்கு மதம் மாற்றுவதும் பின்னர் தக்க வாய்ப்பு அமைந்தால் அரசியல் ரீதியாக தமது முயற்சிகளைத் துவக்கி நாட்டை கைப்பற்றுவதும் என்பது குறிப்பிடத்தக்க வகையில் நிகழ்ந்துள்ளன. இவர்களின் இந்த திட்டமிட்ட பயணத்தினால் வெற்றி மேல் வெற்றியாகக் குவித்தது ஸ்பேனிஷ் அரசு. தாம் போரிட்டு வென்றோ அல்லது தந்திரமாகவோ கைப்பற்றும் நாடுகளிலும் நகரங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்ட பொன்னும் மணியும் வைரங்களும் வைடூரியங்களும் ஸ்பேனிஷ் அரச மாளிகையில் அலங்கரித்துக் கொண்டிருந்தன. ஸ்பெயின் நாட்டின் வளத்தை இவை பெருக்கிக் கொண்டிருந்தன.

    15ம் நூற்றாண்டு தொடங்கி ஸ்பேனிஷ் அரசின் பொருளாதார உதவியுடன் போர்த்துக்கீஸிய மாலுமிகள் மேற்கொண்ட கடல் பயணங்களின் போது உலகின் வெவ்வேறு பூகோளப்பகுதிகளிலிருந்து தேடிக் கொண்டு வந்து சேர்த்த விலை மதிக்க முடியாத பொருட்கள் அனைத்தும் இப்போது ஸ்பெயினின் பல நகரங்களில் உள்ள அருங்காட்சியகங்களை நிரப்பியிருக்கின்றன. இந்த வரலாற்று தொன்மை மிக்க பொருட்களையெல்லாம் அதன் அருமை பெருமை உணர்ந்து உலகத்தரம் நிறைந்த ஆய்வுத்தரம் பொருந்திய பிரமாண்டமான அருங்காட்சியகங்களை ஸ்பெயின் நிருவியுள்ளது. தனது ஆளுமை எந்தெந்த நாடுகளிலெல்லாம் நிருவப்பட்டதோ அங்கிருந்தெல்லாம் கொண்டு வரப்பட்டு தனியார் சேகரிப்பாகவும் அரச சேகரிப்பாகவும் அமைந்த அனைத்து பொருட்களும் அதனதன் நோக்கத்திற்கேற்ற வகையில் இனம் பிரிக்கப்பட்டு வெவ்வேறு பிரத்தியேக அருங்காட்சியகங்கள் நிறுவப்பட்டு இப்பொருட்கள் எல்லாம் இப்பிரமாண்டமான எழில் நிறைந்த கட்டிடங்களில் காட்சிக்கு வைக்கப்ப்பட்டுள்ளன.

    ஸ்பெயினில் இதுவரை நான் ரோண்டா, மலாகா, கோர்டோபா, டொலேடோ, ஸ்பெயினின் தலைநகர் மட்ரிட் ஆகிய பெரும் நகரங்களுக்குச் சென்று வந்திருக்கின்றேன். ஸ்பெயினுக்குச் சொந்தமான கனேரித் தீவுகளை இங்கு தற்சமயம் குறிப்பிட அவசியமில்லை என்பதாலும் அதன் சிறப்புகள் ஸ்பெயின் தீபகற்பத்திலிருந்து வேறுபடுவதாலும் கனேரித் தீவுகளில் உள்ள அருங்காட்சியகங்கள் பற்றி வேறொரு முறை குறிப்பிட நினைத்திருப்பதாலும் இத்தீவுகளின் அருங்காட்சியகங்களை இப்பதிவில் ஒதுக்கிவிடுவது சிறப்பு என்றே கருதுகிறேன். அந்த வகையில் இந்த நான்கு மிகப் பெரிய நகரங்களிலும் நான் சென்று பார்த்து தகவல் பதிந்து கொண்டு வந்த அருங்காட்சியகங்கள் 30க்கும் மேற்பட்டவை.

    இந்த 30க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களில் எதிலிருந்து தொடங்குவது எதில் முடிப்பது என்பது எனக்கு ஒரு சோதனைதான். ஆனாலும் ஸ்பெயின் நாட்டினை என் மனதில் நினைத்தால் கடல் பயணமும் அதன் தொடர்பான நிகழ்வுகளும் தான் மனதில் வந்து அலை மோதுகின்றன. ஆக மட்ரிட்டில் அமைந்திருக்கும் Museo Naval அதாவது (Naval Museum) கடல்வழிப்பயண அருங்காட்சியகம் முதலாகத் தொடங்கி இந்த நாட்டின் அருங்காட்சியகங்களை அறிமுகப்படுத்துவதே தகும் என்று கருதுகிறேன்.

    அருங்காட்சியகத்தின் வாசல் பகுதி (2013)
    அருங்காட்சியகத்தின் வாசல் பகுதி (2013)

    பயணம் செல்ல ஆயத்தமாகி விட்டீர்களா..? நம் பயணத்திற்கான கப்பலும் அதன் மாலுமியும் காத்திருக்கிறார்கள். வாருங்கள் செல்வோம்..!

    தொடருவோம்

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 9ம் பகுதி

    தஞ்சை வெ.கோபாலன்

     

    பட்டினத்தார் பாடல்கள் – பகுதி- 9

     

    நேமங்கள், நிட்டைகள், வேதங்கள், ஆகம நீதிநெறி

    ஓமங்கள், தர்ப்பணஞ் சந்தி செப மந்த்ர யோகநிலை

    நாமங்கள், சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே

    சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே.   1.

     

    நித்ய கர்மாணுஷ்டானங்கள் என்று சொல்லி, ஸ்நான, பான, போஜன விதிமுறைகளைச் சொல்லி, நேம நிஷ்டையோடு வாழ்வதாகப் பிறர் உணரும்படி காட்டிக் கொண்டு, தினசரி வேதபாராயணம் செய்வதாய்ச் சொல்லிக் கொண்டு, ஆகம சாஸ்திரம், நியாயம் போன்ற வழிகளைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டு, மாதாந்தர, அமாவாசை திதி தர்ப்பணங்கள் செய்து கொண்டு, காலை, பகல், சந்தி ஜெபம் செய்து கொண்டு, மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டு, சகஸ்ரநாமம், அஷ்டோத்தரம் என்று இறைவன் புகழைப் பாடிக் கொண்டு, நெற்றியில் சந்தனமென்ன, திருநீறு என்ன என்று பளிச்சென்று பிறர் பார்த்து அதிசயிக்க அணிந்து கொண்டு ஒவ்வொரு ஜாமத்திலும் ஆத்மார்த்தமில்லாமல் நாம் செய்யும் பூசனைகள் அனைத்தும் போலித்தனமே.

     

    நான் எத்தனை புத்தி சொன்னாலும் கேட்டிலை நன்னெஞ்சமே

    ஏன் இப்படி கெட்டு உழலுகின்றாய் இனி ஏதுமிலா

    வானத்தின் மீனுக்கு வன்றூண்டிலிட்ட வகையதுபோல்

    போனத்தை மீள நினைக்கினையே என்ன புத்தியிதே.  2.

     

    எத்தனை முறை உண்மைகளை எடுத்துரைத்தாலும் ஏ மனமே! நீ கேட்பதாயில்லை. ஏன் இப்படி கெட்டு அலைகிறாய்? வானத்தில் கணக்கின்றிக் கொட்டிக் கிடக்கும் விண்மீன்களை (நட்சத்திரங்களை) பிடித்து விடவேண்டுமென்று தூண்டிலைப் போடுவதைப் போல் நடந்ததையே மீண்டும் மீண்டும் நினைத்துருகி வருந்திடுகிறாயே, என்ன புத்தியப்பா இது.

     

    (மகாகவி பாரதியின் இந்தப் பாடலை நினைவில் கொள்ளுங்கள்:–

     

    “சென்றதினி மீளாது மூடரே! நீர்

    எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

    கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

    குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.

    இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்

    எண்ணமதைத் திண்ணமுறை இசைத்துக் கொண்டு

    தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்!

    தீமையெல்லாம் அழிந்து போம், திரும்பி வாரா!”)

     

    இன்னுமொரு பாடலையும் படியுங்கள்:–

     

    “சென்றதைக் கருதார், நாளைச் சேர்வதை நினையார் கண்முன்

    நின்றதைப் புசிப்பார் வெய்யினிலவாய் விண் விழுது வீழ்ந்து

    பொன்றின சவம் வாழ்ந்தாலும் புதுமையாய் ஒன்றும் பாரார்,

    நன்று தீதென்னார் சாட்சி நடுவான் ஜீவன்முத்தர்”

     

    அஞ்சக்கரமெனுங் கோடாலி கொண்டிந்த ஐம்புலனாம்

    வஞ்சப் புலக்கட்டை வேரற வெட்டி வளங்கள் செய்து

    விஞ்சத் திருத்திச் சதாசிவ மென்கின்ற வித்தையிட்டுப்

    புஞ்சக்களை பறித்தேன் வளர்த்தேன் சிவபோதத்தையே. 3.

     

    ‘அஞ்சக்கரம்’ எனும் பஞ்சாக்ஷரம் எனும் ஐந்தெழுத்துக் கோடாலியைக் கொண்டு ஐம்புலன்கள் எனும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றாலும், அவை உணரும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐவகையாலும் உணருகின்ற போகங்களை வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டி எடுத்துவிட்டு, மனத்தை வளம்பெறச் செய்து, உரமிட்டு தயார் செய்து அதில் சதாசிவம் எனும் மந்திர வித்தை விதைத்துப் பின் விளையும் களைகளை நீக்கி மனதில் சிவானந்தப் பயிரை நன்கு வளர்த்தேன்.

     

    தாயாரும் சுற்றமும் பெண்டிரும் கைவிட்டுத் தாழ்ந்திடுநாள்

    நீயாரு நானார் எனப் பகர்வார் அந்த நேரத்திலே

    நோயாரும் வந்து குடிகொள்வரே கொண்ட நோயும் ஒரு

    பாயாரு நீயும் அல்லாற் பின்னை ஏது நட்பாம் உடலே.     4.

     

    உன்னைப் பெற்ற தாயாரும், சுற்றத்தாரும், தாலிகட்டி மணம் செய்த மனைவியரும் இவர்கள் எல்லாம், நீ உன் வாழ்வின் இறுதி கட்டத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், இனி வேறு வழியில்லை நீ இவ்வுலக வாழ்வை நீத்திடப் போகிறாய் எனத் தெரிந்ததும், நீ யார், நான் யார் என்று விரக்தி நிலைக்கு வந்து விடுவார்கள். அந்த நேரம் பார்த்து நோய்கள் இருக்கின்றனவே, அவை உன்னை வந்து பற்றிக் கொண்டுவிடும். அந்த நோயும், நீ படுத்துக் கிடக்கும் பாயும் அன்றி பின் உனக்கும் உன் உடலுக்கும் யார் உறவு சொல்.

     

    ஆயும் பொழுது மயிர்க்கால்கள் தோறும் அருங்கிருமி

    தோயும் மலக்குட்டையாகிய காயத்தைச் சுட்டி விட்டாற்

    பேயும் நடனமிடும் கடமாமென்று பேசுவதை

    நீயும் அறிந்திலையோ பொருள் தேட நினைந்தனையே.     5.

     

    ஏ நெஞ்சமே! இந்த உடலைப் பற்றி நன்றாக ஆய்ந்து உணர்ந்து பார்! உடலில் உள்ள ஒவ்வொரு மயிர்க்காலிலும் ஏராளமான கிருமிகள் மலிந்து கிடக்கின்றன; உடலோ கழிவுகளைத் தாங்கிய பண்டம்; இந்த உடலில் ஊசலாடும் உயிர்மட்டும் இவ்வுடலை விட்டு நீங்கி விட்டால் இதைக் கொண்டு போய் மயானத்தில் எரித்து விடுவர். அந்த இடம் பேய்கள் ஆடுகின்ற மேடை என்று மக்கள் பேசுவதை நீ கேட்டதில்லையோ? அப்படிப்பட்ட இந்த உடலை வளர்க்க, இதனை வாசனை திரவியங்களிட்டு பாதுகாக்கப் பொருள் தேட நினைக்கின்றனையே, அது சரியா?

     

    பூணும் பணிக்கல்ல, பொன்னுக்குத் தானல்ல, பூமிதனைக்

    காணும் படிக்கல்ல, மங்கையர்க்கு அல்ல, நற் காட்சிக்கல்ல,

    சேணும் கடந்த சிவனடிக்கல்ல என் சிந்தை கெட்டுச்

    சாணும் வளர்க்க அடியேன் படும் துயர் சற்றல்லவே.   6.

     

    என் உடலைப் பேணி பாதுகாப்பது எதற்காகத் தெரியுமா? பொன்னும், மணியுமாக இழைத்த அழகிய ஆபரணங்களை அணிந்து அலங்காரம் செய்து கொள்வதற்காக அல்ல; பொன்னும் பொருளும் தேடி செல்வச் சீமானாக விளங்குதற்கும் அல்ல; ஏராளமான நிலம் நீச்சை வாங்கிச் சேர்ப்பதற்காகவும் அல்ல, பெண்களுக்காகவும் அல்ல; ஊர் சுற்றிப் பார்த்து இயற்கை வளங்களைக் கண்டு களிக்கவும் அல்ல; அண்டங்களைக் கடந்த சிவபெருமானின் சேவடிகளைத் துதித்து வாழ்ந்திடவும் அல்ல; புத்தி கெட்டுப் போய் என்னுடைய ஒரு சாண் வயிற்றை நிரப்புவதற்காகவன்றோ நான் இத்தனை கஷ்டங்களையும் பட்டுக் கொண்டிருக்கிறேன்.

     

    வெட்டாத சக்கரம், பேசாத மந்திரம், வேறொருவர்க்கு

    எட்டாத புட்பம், இறையாத தீர்த்தம் இனி முடிந்து

    கட்டாத லிங்கம், கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே

    முட்டாத பூசையன்றோ குருநாதன் மொழிந்ததுவே.    7.

     

    செப்புத் தகட்டில் பதிந்து வைக்காத மந்திரித்த சக்கரங்கள், வாயினால் உச்சரிக்காத மந்திரங்கள், எவர்க்கும் கிட்டாத மலர்கள், பிறர்க்கு அர்க்கியம் தராத புனித நீர்; துணியில் சுற்றிப் பெட்டியில் வைத்து மூடாத சிவலிங்க விக்ரகம்; நினைத்த காரியத்தை செய்து முடிக்காத நெஞ்சம் என்று இத்தகு நிலையில் உள்ள நிலை எதுவோ அதுவே எனது குருநாதர் எனக்கு உபதேசித்த மந்திரம்.

     

    எருமுட்டை பிட்கின் உதிர்ந்திடும் செல்லுக்கு எவர் அழுவார்

    கருமுட்டை புக்குக் கழல் அகன்றாய் கன துக்கமதாய்ப்

    பெருமுட்டுப் பட்டவர் போல அழும் பேதையீர்! பேத்துகிறீர்

    ஒருமுட்டும் வீட்டு மாநாமம் என்றைக்கும் ஓதுமினே.  8.

     

    அன்பர்களே! ஒரு சொல் கேளீர்! அன்னையின் கருவில் உதித்து, அங்கு வசித்து வெளிவந்து வந்த இடத்தில் ஏராளமான துன்பங்களைப் பட்டு துக்கப்பட்டு வருந்தி அழும் பேதைகளே, நீங்கள் கலங்கி மனம் வருந்துவதால் என்ன பயன்? இந்த உடல் அழியப் போவது. அதை சிந்தை செய்வதை விட்டு மனம் தேறுவீர். எருமுட்டை எனப்படும் விராட்டி உதிர்ந்து பொலபொலவென்று கொட்டும் நிலைகண்டு யார்தான் அழுது புலம்புவார். இவ்வுடல் இருக்கும் வரைக்கும் இறைவனின் திருநாமத்தை எண்ணி வழிபட்டு மகிழ்ந்து இருப்பாயாக.

     

    மையாடு கண்ணியும், மைந்தரும் வாழ்வு மனையும் செந்தீ

    ஐயா நின்மாயை உருவெளித் தோற்றம் அகிலத்துளே

    மெய்யாயிருந்து நாட்செல நாட்செல வெட்ட வெறும்

    பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே.     9.

     

    உடல் செந்தீ போன்ற ஜொலிப்போடும், மாலை நேர செவ்வானம் போன்று தோற்றமளிக்கும் சிவபெருமானே! மாயையாய் உருவான இந்த பூவுலகில் மாயை வடிவில் இங்கிருக்கும் அனைத்துமே உண்மை என நம்பும்படியாக, மாடு, மனை, வீடு, இல்லாள், பிள்ளை என்று பல வடிவில் தோற்றமளித்து, பின்னர் நாளாக ஆக மெல்ல அனைத்துமே பொய்யாய், இல்லையெனும்படியாகவும், கனவு போலவும் மெல்லக் கரைந்து போயிற்றே.

     

    ஆயாய் பலகலை ஆய்ந்திடும் தூய அருந்தவர்பால்

    போயாகிலும் உண்மையைத் தெரிந்தாய் இல்லை, பூதலத்தில்

    வேயார்ந்த தோளியர் காம விகாரத்தில் வீழ்ந்து அழுந்தி

    பேயாய் விழிக்கின்றனை மனமே என்ன பித்துனக்கே.  10.

     

    ஏ மனமே! பற்பல கலைகளை ஆய்ந்து நன்கு தேறிய தூய்மையான தவசிகளிடம் சென்றாவது வாழ்வின் உண்மையை அறிந்து கொள்ளவில்லை, அதை விடுத்து இளம் மூங்கிலைப் போன்ற தோளை உடைய அழகுப் பெண்களின் பால் உள்ள ஈர்ப்பால் விழுந்து, அதிலேயே மூழ்கி பேய்போல விழிக்கின்றாயே. உனக்கு என்ன பைத்தியமா?

     

    (மேலும் வரும்)

    Share
  • வார ராசி பலன்28.10.13-03.11.13

    மேஷம்: வேலை வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் திறமைக்கு தகுந்த பணியில் அமர்வார்கள். மாணவர்கள் சில நேரம் ஆசிரியர்களின் கெடுபிடிக்கு ஆளாகும் சூழலிருப்பதால், தங்கள் வேலைகளை உடனுக்குடன் முடிப்பது நல்லது. வியாபாரிகள் முக்கிய முடிவெடுக்கும் தருணங்களில், நிதானமாகச் செயல்பட்டால், நிம்மதி காண முடியும். பெண்கள் நிதி நிலைக்கேற்றவாறு செலவுகள் செய்தால், கடன் தொல்லைகள் அதிகரிக்காது. முதியோர்களின் ஆரோக்கியம் சீராகத் திகழ்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சமிராது.

    ரிஷபம்: நீங்கள் மேற்கொள்ளும் வெளியூர்ப் பயணங்கள் லாபகரமாக இருக்கும். மனைவி வழி உறவுகளோடு கருத்து மோதலில் இறங்க வேண்டாம். வியாபாரிகள் முக்கியமான பொறுப்புக்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ளுதல் நல்லது. பெண்கள் மனம் விரும்பிய ஆடை, அலங்காரப் பொருட்களை வாங்கி மகிழ்வர். சில நேரங்களில் வேலை முடிவதற்கு காத்திருக்க வேண்டி வரும். வெளி இடங்களில் குடிக்கும் நீர் மற்றும் உண்ணும் உணவு வகைகளில் மிதமாக இருக்க, ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

    மிதுனம்: கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். நட்பும், உறவும் உங்களை விட்டு விலகாது. துவங்கிய காரியங்கள் துரிதமாக நடப்பதால், மனதில் மகிழ்ச்சி தங்கும். கலை ஆர்வம் உடைய பெண்களுக்கு திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணி புரிபவர்களால் ஏற்படும் இடையூறுகளை தங்கள் சாமர்த்தியத்தால் முறியடிப்பீர்கள். சிலருக்கு வெளிநாடுகளுக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டும். வாகன பராமரிப்புக்கு சற்று அதிக பணம் ஒதுக்க வேண்டியிருக்கும். கூட்டுத் தொழிலில் உள்ளவர்களுக்கு கையில் கணிசமான லாபத்தோடு ஒப்பந்தங்களும் வந்து சேரும்.

    கடகம்: எப்பாடு பட்டாவது உங்கள் வேலைகளை முடித்துவிடுவீர்கள். முக்கியமான முடிவுகளை குடும்ப உறுப்பினரோடு கலந்து ஆலோசித்து செயல்படுவது நன்று. பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாளவும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளை நிதானமாகக் கையாண்டால், பண இழப்புக்களைத் தவிர்த்து விடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    சிம்மம்: சுற்றி வளைக்காமல், நேரடியாக விவாதிப்பது குடும்பப் பிரச்னைகளை தீர்க்கும் வழியை எளிதாக்கும். விதிமுறைகளை கடைபிடிப் பதில் சுணக்கம் வேண்டாம் முக்கிய திட்டங்களை வெற்றிகரமாக முடிக்க தகுந்த நபரை அணுகுதல் நல்லது. வரவு செலவு இரண்டிலும் கவனம் வைப்பது அவசியம். உங்கள் திறமையால், பணி உயர்வைப் பெற்றுக் கொள்வீர்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்த்து விடுங்கள்.கடிதம் மூலம் நல்ல செய்தி வரும்.

    கன்னி: வியாபார விஷயங்களில் எல்லாம் தெரியும் என்று செயல்பட்டால், சில சரிவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகள் உங்கள் வேலைகளை விமர்சனம் செய்யும் சூழலுக்கு ஆளாகா வண்ணம் கவனமாக செயல்படுங்கள். பெண்கள் அவசர கதியில் வேலை செய்வதைக் காட்டிலும், நிதானமாக வேலை செய்தால், எடுக்கும் முயற்சிகளில் முழு வெற்றி கிட்டும். வயதானவர்களின் சிறு உடல் உபாதைகளை உடனுக்குடன் கவனித்து விடுவது நல்லது. இல்லத்தில் மங்கள காரியங்கள் நிகழும்.

    துலாம்: காதல் ஜோடிகளின் கல்யாணக் கனவுகள் நனவாகும். வீடு. மனை விவகாரங்களில் லாபம் தங்க, அவ்வப்போது ஆவணங்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள். வியாபார திட்டங்களின் விரிவாக்கம் சட்ட திட்டங் களுக்கு உட்பட்டதாக இருந்தால், வருகின்ற லாபம் குறையாமல் இருக்கும். உடன் பிறப்புக்கள் வழியில் சிறு மனஸ்தாபங்கள் அவ்வப்போது தலை காட்டும். பண வரவு சீராக இருந்தாலும், செலவுகளின் மீதும் உங்கள் கவனம் இருப்பது நல்லது. கலைத்துறையில் இருப்பவர்கள் சாக்கு போக்கு சொல்லும் நபர்களிடம் எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.

    விருச்சிகம்: உயர்பதவியில் இருப்பவர்கள் ,பாரபட்சமின்றி பிறருக்கு சலுகைகளை வழங்கினால், நிறுவன வேலைகள் சுறுசுறுப்பாக செல்லும். தம்பதிகள் இடையே இருந்த மனக் கசப்பு நீங்குவதால், மீண்டும் மகிழ்ச்சி பூக்கும். பெண்கள் அக்கம் பக்கத்தாரோடு பழகுவதில் ஒரு எல்லை வைத்துக் கொண்டால், தொல்லை ஏதும் இராது. உங்கள் சாமர்த்தியத்தால் வர வேண்டிய வரவுகளை வசூல் செய்து விடுவீர்கள். குல தெய்வப் பிரார்த்தனையை மறவாமல் செய்து வாருங்கள். குடும்பத்திலும், உள்ளத்திலும் நிம்மதி நிலைத்திருக்கும்.

    தனுசு: துவங்கிய காரியங்கள் துரிதமாக நடைபெற, இதமான போக்கைக் கையாளும் வியாபாரிகளுக்கு அனைத்திலும் வெற்றிதான்! உறவினர் வருகையால், இல்லத்தில் பரபரபரப்பும் மகிழ்ச்சியும் கூடும். மாணவர்கள் சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு செயல்பட்டால், பாடங்கள் சுமையாய் தோன்றாது. கர்ப்பிணிப் பெண்கள் அவ்வப்போது தேவையான மருத்தவ பரிசோதனைகளை மேற்கொள்ள, பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். இரவலாகப் பொருள்களை தருவதையும், பெறுவதையும் தவிர்த்தல் நலம்.

    மகரம்: அரசுத் தொடர்பான காரியங்கள் நினைத்தவாறே முடியும். பெண்களுக்கு இல்லத் தேவைகளை ஈடுகட்டும் அளவிற்கு பணப்புழக்கம் இருக்கும். உடனிருப்பவர்களால் சில நெருக்கடிகளுக்கு ஆளாக நேரிடும். எனவே புதிதாக பணியில் அமர்ந்திருப்பவர்கள், வேண்டாத விவாகாரங்களிலிருந்து தள்ளியே இருங்கள். பொது சேவையில் இருப்பவர்கள் பிறரிடமிருந்து பொறுப்புக்களை பெறும் போதும், தரும் போதும் விழிப்புடன் இருப்பது அவசியம். அதிக அலைச்சல், அதிக வேலை இரண்டும் உங்கள் உற்சாகத்தைக் குறைக்கலாம்.

    கும்பம்: புதிய ஒப்பந்தங்கள் கலைஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மாணவர்கள் சின்ன சின்னப் பிரச்னைகளுக்கு உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்தால், கல்வியில் அதிக கவனம் செலுத்தலாம். பெற்றோர்கள் பிள்ளைகள் விஷயத்தில் இதமான அணுகு முறையைக் கையாண்டால், பல பரச்னைகளுக்கு உடனடியான தீர்வு கிட்டும். பெண்கள் வரவுக்கு ஏற்ற செலவு என்பதில் கவனமாக இருந்தால், கடன் தொல்லையும் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். அனுசரித்து செல்லும் தம்பதியர் நடுவே அன்பும், பாசமும் பெருகும்.

    மீனம்: புது உறவுகளின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், கலகலப்பும் கூடும். பிள்ளைகள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தால், மருத்துவச் செலவுகள் கணிசமாகக் குறையும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவால், வேலைகளை ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள். முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள், வீண் பழிகளைத் தவிர்க்க, கூடுதல் கவனத்துடனும், திறமையுடனும் செயல்பட்டு வருவது அவசியம். பெண்களுக்கு குடும்பத்தாரோடு புதிய இடங்களுக்கு சென்று மகிழும் வாய்ப்பு கூடி வரும்.

    Share
  • சீதாயணம் படக்கதை [4]

    சீதாயணம் படக்கதை [4]
    (இரண்டாம் காட்சி)

    சி. ஜெயபாரதன், கனடா

     image

    அன்புள்ள நண்பர்களே,

    “சீதாயணம்” என்னும் எனது நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். முக்கியமாக இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, பிள்ளைகளை இழந்து, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரையும் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாப நிகழ்ச்சி இது.

    அன்புடன்,
    ஜெயபாரதன், கனடா

    +++++++++++++

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு : வையவன்

    ஓவியம் : ஓவித்தமிழ்

     image (3

    image (1)

    Share
  • நமது பிரபஞ்சத்தைப் புலப்படாத மற்ற இணைப் பிரபஞ்சங்களின் ஈர்ப்புவிசை இழுக்கின்றதா ?

     

    Multiverse Theorem 

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=39qmbl7mpJQ

    From Universe to Multiverse

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=RGUD-HA9jaE

    The Multiverse Theory (Full Video)

    முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த “பெருவெடிப்பு நியதிக்கு” கிடைத்த மாறுபட்ட வரவேற்பு போல் இப்போது இணைப் பிரபஞ்சங்களின் ஈர்ப்பு விசை நமது பிரபஞ்சத்தை இழுப்பதால் முரண்பாடுகள் தோன்று கின்றன என்னும் கருத்தும் குழப்பம் உண்டாக்குகிறது.   ஆனால் எமக்குப் புதிய சான்றுகள் கிடைத்து, பிரபஞ்சம் பற்றிய எங்கள் கருத்து முழுவதும் இப்போது மாறி விட்டது.

    ” ஜார்ஜ் எஃப்ஸ்தாதியு  [George Efstathiou] வானியல் பௌதிகப் பேராசிரியர், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம். 

    மற்ற பிரபஞ்சங்களின் இழுப்பால், நமது பிரபஞ்சக் கதிர்வீச்சில் [Radiation] முரண்பாடுகள் இருப்பதை நான் 2005  ஆண்டிலே  அறிவித்தேன்.  அந்தக் கோட்பாடு பிளாங்க் விண்ணோக்கிப் பதிவு மூலம் 2013 இல் நிரூபணம் ஆனது.   இந்த முரண்பாடுகள் யாவும் பெருவெடிப்பு விளைவில் பிரபஞ்சம் தோன்றிய போதே  உண்டானவை.

    டாக்டர்  லாரா மெர்சினி – ஹௌடன்,  சித்தாந்த பௌதிகவாதி,  நார்த் கரோலினா பல்கலைக் கழகம்.  

    Multiverse -4

    “வெறுமையிலிருந்து எதுவுமே உருவாக முடியாது.”

    லுகிரிடியஸ் ரோமானிய வேதாந்தி (Lucretius) கி.மு. (99-55)

    “நமது பிரபஞ்சம் பத்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெய்யாகவே வெறுமையிலிருந்து தோன்றியதாக நான் அனுமானம் செய்கிறேன் ! . . .ஏன் அவ்விதம் நிகழ்ந்தது என்னும் கேள்விக்கு எனது தாழ்மையான முன்னறிவிப்பு இதுதான் : எப்போதாவது ஒரு யுகத்தில் அப்படி நேரும் தோற்றங்களில், நமது பிரபஞ்சமும் ஒன்று என்பது !”

    எட்வேர்டு டிரையன், பௌதிகப் பேராசிரியர் நியூயார்க் பல்கலைக் கழகம் (1975)

    “கவிஞன் அண்டக் கோள்களில் மண்டையை நுழைக்க வேண்டுகிறான். தர்க்கவாதி தன் மண்டைக்குள் அண்டங்களைத் தேடிச் செல்கிறான். அப்புறம் அவன் தலைதான் பிளக்கிறது.”

    ஜி.கே. செஸ்டர்ஸன் (G.K. Chesterson) (1874-1936)

     

    Multiverse -1

    புலப்படாத மற்ற பிரபஞ்சங்கள் நமது பிரபஞ்சத்தைத் தம் வசம் நோக்கி இழுக்கின்றன.

    நமது பிரபஞ்சம் கோடான கோடிப் பிரபஞ்சங்களில் ஒன்றா ?  ஆமாம், நமது பிரபஞ்சம் போல் இணையாகப் புலப்படாமல் வேறு பல பிரபஞ்சங்களும் உள்ளன.  2013 இல் முதன்முதல் பிளாங்க் விண்ணோக்கி [Plank Telescope] அகிலப் பின்புலக் கதிர்வீச்சு வரைப்பட வடிப்பின் [Cosmic Map of Background Radiation] மூலம், பன்மடங்கு பிரபஞ்சங்கள் [Multiverse] இருப்புக்குச் சான்றுகள் காட்டியுள்ளது.   இந்த பிளாங்க் விண்ணோக்கி மூலம் உறுதியான  அறிவிப்பு 2013 ஜூன் மாதம் வெளியாகி இருக்கிறது.   மேலும் மற்ற பிரபஞ்சங்களின் ஈர்ப்பு விசை இழுப்பால் கதிர்வீச்சில் முரண்பாடுகள் [Anomalies in Radiation] இருப்பதும் முதன்முதல் முடிவு செய்யப் பட்டது.

    அந்த அறிவிப்பில் ஒரு முக்கியவிதி விலக்கு : பிளாங்க் விண்ணோக்கி மூலம் விளைந்த புதிய கோட்பாடான, “கருமை ஓட்டத்துக்கு” [Dark Flow, like Dark Energy, Dark Matter] சான்று தேடியது.   அதற்குச் சான்று கிடைக்க வில்லை. கருமை ஓட்டம் பற்றிக் கருத்து இல்லாவிடில் பிற பிரபஞ்சங்களைப் பற்றி விளக்கம் தேவை யில்லை.   கருமை ஓட்டம் என்பது ஒரு விஞ்ஞானப் புனைகதை யூகிப்பில்லை.   பிரபஞ்சத்தில் உள்ள பிண்டப் பரவல் அதற்கு ஓர் எண்ணிக்கை தர முடிய வில்லை.  அதனால் அதன் இருப்பு தர்க்கத்துக்கு உட்பட்டது. கருமை ஓட்டத்தின் இருப்பே, நமது கண்ணோட்ட வரம்புக்கு அப்பாற் பட்ட வெளி விளிம்பில் நமக்கருகில் உள்ள பிண்டத்தை இழுக்கிறது.

     

    Multiverse -2

     

    பிரபஞ்சம் தோன்றி 380,000 ஆண்டுக்குப் பிறகு எழுந்த ஒளிவீச்சைக் காட்டும் பிரபஞ்ச நுண்ணலைப் பின்புலம் [Cosmic Microwave Background – (CMB)] ஓர் முடிவான அகிலவியல் ஒப்புமை அரங்கமாக [Ultimate cosmic Reference Frame] எடுத்துக் கொள்ளப் படுகிறது.   2010  ஆண்டு ஆய்வுப்படி புதிரான கருமை ஓட்டம் முதலில் வெளியிட்ட தூரம் இரட்டித் திருப்பதாக அறியப்பட்டுள்ளது.  கருமை ஓட்டம் என்பது காலக்ஸி கொத்து  ஒளிமந்தை களின் [Galaxy Clusters] வியப்பான, குறிப்பிட்ட திசைவேகம் [600 -1000 km/s].

    நமது பிரபஞ்சம் போல் இணைப் பிரபஞ்சங்கள் விண்வெளியில் உள்ளனவா ?

    விஞ்ஞானிகள் இப்போது நமது பிரபஞ்சத்தைப் போல ஓர் இணையான பிரபஞ்சம் (Parallel Universe) இருக்கலாம் என்று மெய்யாக நம்புகிறார்கள். புத்தகத்தில் படிக்கும் விஞ்ஞானப் புனைகதை இல்லை இது ! “Multiverse” என்னும் சொல்லை முதலில் ஆக்கியவர் அமெரிக்க வேதாந்தி வில்லியம் ஜேம்ஸ் (1848-1910). சொல்லப் போனால் நமக்குத் தெரியாமல் குறிப்பிட முடியாத எண்ணிக்கையில் இணையான “பல்லரங்கப் பிரபஞ்சங்கள்”  (Multiverses) இருக்கலாம் என்று யூகிக்கப் படுகிறார்கள் ! நாம் அவற்றில் ஒன்றான நமக்குத் தெரியும், உப்பி விரியும் ஒரு பெருவெடிப்புப் பிரபஞ்சத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். அந்தப் பிரபஞ்சங்கள் கால வெளியும், மர்மமான, புதிரான பண்டங்களும் கொண்டிருக்கலாம் ! மெய்யாக நமது பிரபஞ்சத்தில் உள்ள ஈர்ப்பாற்றல் வலுவற்ற சமிக்கை மற்ற இணைப் பிரபஞ்சத்திலிருந்து கசிந்து புகுந்து விட்ட ஒன்றுதான் ! இதில் வியப்பென்ன வென்றால் இந்த இணைப் பிரபஞ்சம் நமது பிரபஞ்சத்துக்கு மிக்க அருகில் இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

    Multiverse Raising

    பிரபஞ்சத்தின் பரிமாணங்கள் நான்கு அல்ல பதினொன்று !

    உன்னத இழை நியதி (Superstring Theory) பெருவெடிப்புக்கு முந்தய சில அடிப்படை விளைவுகளையும் விளக்க உதவுகின்றது ! ஒற்றை நியதியில் இழை நியதி பராமாணுக்கள், அடிப்படை இயற்கை உந்துவிசைகள் (Particles & Fundamental Forces of Nature) யாவும் உன்னத சீரான நுண்ணிழைகளின் அதிர்வுகள் (Vibrations of Tiny Supersymmetric Strings) என்று தெளிவாகக் கூறுகிறது. பரமாணுக்களின் அணுக்கூண்டில் இயங்கும் “நுண்துகள் ஈர்ப்பாற்றல்” (Quantum Gravity) தன்மைகளை விளக்கும் மகிமை கொண்டது இந்த உன்னத இழை நியதி !  ஏறக்குறைய உயிரியல் பிறவி மூலமான “டியென்னே” (DNA) போன்றது பிரமஞ்சத்தின் ஒற்றை உன்னத இழை நியதி என்று வைத்துக் கொள்ளலாம் ! புரட்சிகரமான இந்த இணைப் பிரபஞ்சக் கோட்பாடு எப்போது உதயமானது என்னும் கேள்வி எழுகிறது இப்போது ! உன்னத இழை நியதி, பெருவெளி, கருமைப் பிண்டம் (Superstring Theory, Hyperspace & Dark Matter) ஆகிய புதிய கோட்பாடுகள் எழுதப்பட்டதும் பௌதிக விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் விஞ்ஞானத்தை விளக்க நாமறிந்த நான்கு காலவெளிப் பரிமாணங்கள் மட்டும் போதா வென்றும், அவை மெய்யாகப் பதினொன்று எண்ணிக்கைகள் என்றும் உணர்ந்தார்கள் ! அவ்வித முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்ததும், அடுத்தோர் முடிவும் உதயமானது ! அதாவது நாமறிந்த பிரபஞ்சமானது எண்ணிற்ற  “சவ்வியல் குமிழிகளில்”  (Membraneous Bubbles) ஒன்றானது ! சவ்வுக் குமிழிகள் பதினொன்றாம் பரிமாணத்தில் கொந்தளிக்கும் போது அலைகள் எழுகின்றன !

     

     

    பெருவெடிப்பு மீளும் காலவெளித் தொடர் நிகழ்ச்சி

    இப்போது குமிழிப் பிரபஞ்சங்கள் இரண்டு ஒன்றை ஒன்று தொட்டால் என்ன நிகழும் என்று நினைக்கிறீர்கள் ? பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் விஞ்ஞானி நீல் துராக் (Neil Turok), அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி பர்ட் ஓவ்ரட் (Burt Ovrut), & பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி பால் ஸ்டைன்ஹார்ட் (Paul Steinhardt) ஆகிய மூவரும் அவ்விதம் இரண்டு குமிழிப் பிரபஞ்சங்கள் ஒரு யுகத்தில் தொட்டன என்று நம்புகிறார்கள் ! அதன் விளைவென்ன ? மெய்யாக ஒரு மிகப் பெரும் வெடிப்பு நேர்ந்து ஓர் புதிய பிரபஞ்சம் << நமது பிரபஞ்சம் >> பிறந்ததாம் ! அப்படி அவர்கள் அறிவித்ததும் உலக விஞ்ஞானச் சமூகத்திற்கு ஓர் அதிர்ச்சி உண்டானது ! அந்த விளக்கவுரை சம்பிரதாய பெருவெடிப்பு நியதியின் முகத்தைத் திருப்பி விட்டது !

     

     

    அதாவது நாமறிந்த பெருவெடிப்பு மெய்யாக பிரபஞ்சத்தின் ஆரம்பகால முதற் தோற்றமில்லை. காலவெளிப் படைப்பு அதற்கும் முற்பட்டது; மேலும் பெருவெடிப்பு அடுத்தும் தொடராய் நிகழலாம் என்னும் புரட்சி கரமான ஓர் அதிசய பிரபஞ்சத் தோற்றங்களின் “காலவெளித் தொடர் நிகழ்ச்சியை” (Space-Time Chain Event) அவர்கள் எடுத்துக் கூறினார். பெருவெடிப்புகள் எப்போதும் நிகழலாம் ! இப்போது பிரபஞ்சத்தின் மூலத் தோற்றத்தை வைத்து நமக்கு எச்சரிக்கையாய்ப் பூதகரமான ஒரு பயங்கரக் கேள்வி எழுகிறது ! பிரபஞ்சக் குமிழிகள் ஒன்றை ஒன்றை மோதி நமது பிரபஞ்சம் தோன்றிய தென்றால் மீண்டும் அவ்விதம் மோதும் ஒரு வாய்ப்புள்ளதா ? பதினொன்று பரிமாணமுடைய அகில வெளியில் எந்த நிகழ்ச்சியும் ஏற்படலாம் !

     

     

    நான்கு வகுப்பு வடிவ நிலைகளில் பிரபஞ்ச அமைப்புகள்

    “பல்லரங்கப் பிரபஞ்சம்” அல்லது “மேநிலைப் பிரபஞ்சம்” (Multiverse, Multi-Domain Universes or Meta-Universe) என்பது நிகழக் கூடிய பல்வேறு இணைப் பிரபஞ்சங்கள் பற்றிய ஓர் சித்தாந்தப் பௌதிகக் கோட்பாடு (Hypothesis of Possible Multiple Universes). அதனுள் நாம் வாழும் பிரபஞ்சமும் அடங்கும். அது ஒரு பௌதிக விஞ்ஞான மெய்ப்பாடுதான் ! பற்பல பிரபஞ்சங்களின் கட்டமைப்புகள் (Structures of the Multiverse), ஒவ்வொரு பிரபஞ்சத்தின் இயல்பான பண்பாடு (The Nature of Each Universe), பல்வேறு பிரபஞ்ச உட்பண்டங்களின் உறவுப்பாடு (The Relationship between the Constituent Universes), ஆகியவை குறிப்பிட்ட பிரபஞ்சத்தின் சித்தாந்த பௌதிகக் கோட்பாடைச் சார்தவை. “Multiverse” என்னும் சொல்லை ஆக்கியவர் அமெரிக்க வேதாந்தி வில்லியம் ஜேம்ஸ் (1848-1910). அவற்றை (Alternate Universes, parallel Universes, Quantum Universes, Parallel Worlds, Alternate Realities & Alternate Timelines) என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள்.

     

    clipboard012.jpg

     

    பல்லரங்க பிரபஞ்சங்கள் வகுப்பு -1, வகுப்பு -2, வகுப்பு -3 & வகுப்பு -4 (Level I, Level II, Level III & Level IV) என்று நான்கு வகுப்புகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. இந்தப் வகுப்பு முறைகளை ஆக்கியவர் மூவர் : 1. ஜியார்ஜ் எல்லிஸ் (George Ellis). 2. யு. கெர்ச்செனர் (U. Kirchner) & 3. டபிள்யு. ஆர். ஸ்டோஜர் (W.R. Stoeger). அப்பிரிவு முறைகளுக்கு “டெக்மார்க் வகுப்பியல்”  (Tegmark Classification) என்பது பெயர்.

    1. பல்லரங்க பிரபஞ்சங்கள் (Multi-Domain Universes)

    வகுப்பு : 1 (திறந்த வெளிப் பிரபஞ்சம்) யுகங்கள் கடந்த பிரபஞ்சத்தின் எல்லையிலா அகிலவெளி வீக்கம் பற்றி ஒரு பூர்வீக முன்னறிவிப்புச் சித்தாந்தம் இது. அதனில் ஆதிகால நிபந்தனைகள் எடுக்கப்பட்டு ஹப்பிள் தொலைநோக்கி காணமுடிந்த கொள்ளளவுகள் இருக்க வேண்டும்.

    (Level : 1 A Generic Prediction of Cosmic Inflation is an infinite Ergodic Universe which, being infinite, must contain Hubble Volumes, realizing all initial conditions)

     

     

     

    2. வேறுபட்ட பௌதிக நிலைத்துவம் கொண்ட பிரபஞ்சங்கள் (Universes with Different Physical Constants)

    வகுப்பு : 2 (ஆன்ரி லிண்டேயின் குமிழ் நியதி) (Andrei Linde’s Bubble Theory) கொந்தளிக்கும் அகிலவெளி வீக்கத்தில் வெப்ப அரங்கங்கள் பரிமாணவியல், நுண்துகள் இருப்புகளுடன் வேறுபட்ட, வளப்பூட்டும் பௌதிக நிலைப்பாடுகள் அடைவது. (Level : 2 In Chaotic Inflation other Thermalized Regions may have different Effective Physical Constants Dimensionality & Particle Content. Also it includes Wheeler’s Oscillating Universe Theory)

    3. பன்மடங்கு பிரபஞ்சங்கள் (Multiverses)

    வகுப்பு : 3 நுண்துகள் யந்திரவியலை விளக்கும் போது சமத் தோற்றம் கொண்ட ஆனால் மாறுப்பட்ட தன்மையுள்ள பல்வேறு பிரபஞ்சங்களைப் பற்றிக் கூறுகிறது. 2007 செப்டம்பரில் டேவிட் டாய்ட்ஸ்ட் (David Deutsch) பல்வேறு உலகங்களைப் பற்றி விளக்கமும் நிரூபணமும் அளித்தார் (Level : III An Interpretation of Quantum Mechanics that proposes of Multiple Universes which are identical but exist in possibly different States)

    4. முடிவான முழுத் தோற்றப் பிரபஞ்சங்கள் (Ensemble Theory of Tegmark – Ultimate Ensemble)

    வகுப்பு : 4 மற்ற கணித அரங்குகள் வெவ்வேறு அடிப்படைப் பௌதிகச் சமன்பாடுகளை உண்டாக்குகின்றன. (Level : IV Other Mathematical Structures give different fundamental Equations of Physics)

    எண்ணற்ற பிரபஞ்சங்களின் குமிழ்க் கோட்பாடு (Bubble Theory of Infinite Universes)

    வகுப்பு -2 இல் வரும் அகிலவெளி வீக்கத்தில் தோன்றும் பொருத்தமான குமிழ்ப் பிரபஞ்சங்களைப் பற்றி ஆன்ரி லிண்டே எடுத்து விளக்கினார். விஞ்ஞானிகள் பலர் ஒப்புக்கொண்ட கோட்பாடி இது. இந்த கோட்பாடு கூறுவது என்ன ? நுண்துகள் திரட்சி நுரையிலிருந்து (Quantum Foam) ஒரு “தாய்ப் பிரபஞ்சத்திலிருந்து” (Parent Universe) மற்ற பிரபஞ்சங்கள் உதித்தன என்பதே !

    “இணையான உலகங்கள்” என்னும் நூல் எழுதிய மிச்சியோ காக்கு

    ஜப்பானிய அகிலவியல் மேதை மிச்சியோ காக்கு (Parallel Worlds By : Michio Kaku) தான் 2004 இல் வெளியிட்ட கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்: நான் எழுதிய “இணையான உலகங்கள்” நூலில் காலவெளி அமைப்புகளை விளக்குவதற்குப் பதிலாக கடந்த பல ஆண்டுகளில் வளர்ந்த அகிலவியல் உளவுப் புரட்சிகளைக் குறிப்பாகக் காட்டுகிறேன். முதல் பாகத்தில் பிரபஞ்சத்தைப் பற்றியும், முற்போக்கான அகில வீக்கம் பற்றியும் கூறி முடிவில் பெருவெடிப்புடன் முடிகிறது. இரண்டாம் பாகத்தில் பல்லரங்கப் பிரபஞ்சங்கள் பற்றி எழுந்த கோட்பாடுகளை விளக்கி பரிமாண எண்ணிக்கை விரிவானது பற்றியும், உன்னத இழை நியதி பற்றியும் கூறுகிறேன். மூன்றாவது பாகத்தில் எப்படிக் கோடான கோடி ஆண்டு களுக்குப் பிறகு பிரபஞ்சம் குளிர்மயமாகி முடிவடையும் என்பதை விளக்கம் செய்கிறேன்.

     

     

    (தொடரும்)

    *****************************

    Image Credits : Scientific American (May 2003)

    தகவல்:

    1. Astronomy’s Explore the Universe 8th Edition (2002) December 31, 2001

    2. National Geographic Magazine (1982) Frontiers of Science The Family of the Sun By: Bradford Smith Ph. D. Professor of Planetary Sciences, The University of Arizona.

    3. National Geographic Magazine (1975) Amazing Universe, The Family of Stars By: Herbert Friedman.

    4. Internet Article “Stellar Evolution”

    5. Majestic Universe By: Serge Brunier (1999)

    6. Neutron Stars & Pulsars -From the Internet Sources (December 2006)

    7. Parallel Universe – BBC Information (February 14, 2002)

    8. Scientific American “Parallel Universes” By Max Tegmark, Professor of Physics & Astronomy, University of Pennsylvania (May 2003)

    9. Parallel Worlds (The Science of Alternate Universes & Our Future in the Cosmos) By : Michio Kaku (2005)

    10.   50 Greatest Mysteries of the Universe – Astronomy Magazine (August 21, 2007)

    11.  http://www.space.com/18811-multiple-universes-5-theories.html   [December 7, 2012]

    12.  http://en.wikipedia.org/wiki/Multiverse   [October 24, 2013]

    13.  http://nautil.us/issue/6/secret-codes/beyond-the-horizon-of-the-universe

    14.  http://www.scientificamerican.com/article.cfm?id=new-physics-complications-lend-support-to-multiverse-hypothesis [June 1, 2013]

    15.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/10/is-our-universe-one-of-billions-new-planck-data-has-anomalies-caused-by-unknown-gravitational-pull-t.html  [October 23, 2013]

    *******************************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  (October 26, 2013)

    http://jayabarathan.wordpress.com/

    YouTube – Videos from this email
    Share