Blog

  • நமது பிரபஞ்சத்தைப் புலப்படாத மற்ற இணைப் பிரபஞ்சங்களின் ஈர்ப்புவிசை இழுக்கின்றதா ?

     

    Multiverse Theorem 

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=39qmbl7mpJQ

    From Universe to Multiverse

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=RGUD-HA9jaE

    The Multiverse Theory (Full Video)

    முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த “பெருவெடிப்பு நியதிக்கு” கிடைத்த மாறுபட்ட வரவேற்பு போல் இப்போது இணைப் பிரபஞ்சங்களின் ஈர்ப்பு விசை நமது பிரபஞ்சத்தை இழுப்பதால் முரண்பாடுகள் தோன்று கின்றன என்னும் கருத்தும் குழப்பம் உண்டாக்குகிறது.   ஆனால் எமக்குப் புதிய சான்றுகள் கிடைத்து, பிரபஞ்சம் பற்றிய எங்கள் கருத்து முழுவதும் இப்போது மாறி விட்டது.

    ” ஜார்ஜ் எஃப்ஸ்தாதியு  [George Efstathiou] வானியல் பௌதிகப் பேராசிரியர், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம். 

    மற்ற பிரபஞ்சங்களின் இழுப்பால், நமது பிரபஞ்சக் கதிர்வீச்சில் [Radiation] முரண்பாடுகள் இருப்பதை நான் 2005  ஆண்டிலே  அறிவித்தேன்.  அந்தக் கோட்பாடு பிளாங்க் விண்ணோக்கிப் பதிவு மூலம் 2013 இல் நிரூபணம் ஆனது.   இந்த முரண்பாடுகள் யாவும் பெருவெடிப்பு விளைவில் பிரபஞ்சம் தோன்றிய போதே  உண்டானவை.

    டாக்டர்  லாரா மெர்சினி – ஹௌடன்,  சித்தாந்த பௌதிகவாதி,  நார்த் கரோலினா பல்கலைக் கழகம்.  

    Multiverse -4

    “வெறுமையிலிருந்து எதுவுமே உருவாக முடியாது.”

    லுகிரிடியஸ் ரோமானிய வேதாந்தி (Lucretius) கி.மு. (99-55)

    “நமது பிரபஞ்சம் பத்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெய்யாகவே வெறுமையிலிருந்து தோன்றியதாக நான் அனுமானம் செய்கிறேன் ! . . .ஏன் அவ்விதம் நிகழ்ந்தது என்னும் கேள்விக்கு எனது தாழ்மையான முன்னறிவிப்பு இதுதான் : எப்போதாவது ஒரு யுகத்தில் அப்படி நேரும் தோற்றங்களில், நமது பிரபஞ்சமும் ஒன்று என்பது !”

    எட்வேர்டு டிரையன், பௌதிகப் பேராசிரியர் நியூயார்க் பல்கலைக் கழகம் (1975)

    “கவிஞன் அண்டக் கோள்களில் மண்டையை நுழைக்க வேண்டுகிறான். தர்க்கவாதி தன் மண்டைக்குள் அண்டங்களைத் தேடிச் செல்கிறான். அப்புறம் அவன் தலைதான் பிளக்கிறது.”

    ஜி.கே. செஸ்டர்ஸன் (G.K. Chesterson) (1874-1936)

     

    Multiverse -1

    புலப்படாத மற்ற பிரபஞ்சங்கள் நமது பிரபஞ்சத்தைத் தம் வசம் நோக்கி இழுக்கின்றன.

    நமது பிரபஞ்சம் கோடான கோடிப் பிரபஞ்சங்களில் ஒன்றா ?  ஆமாம், நமது பிரபஞ்சம் போல் இணையாகப் புலப்படாமல் வேறு பல பிரபஞ்சங்களும் உள்ளன.  2013 இல் முதன்முதல் பிளாங்க் விண்ணோக்கி [Plank Telescope] அகிலப் பின்புலக் கதிர்வீச்சு வரைப்பட வடிப்பின் [Cosmic Map of Background Radiation] மூலம், பன்மடங்கு பிரபஞ்சங்கள் [Multiverse] இருப்புக்குச் சான்றுகள் காட்டியுள்ளது.   இந்த பிளாங்க் விண்ணோக்கி மூலம் உறுதியான  அறிவிப்பு 2013 ஜூன் மாதம் வெளியாகி இருக்கிறது.   மேலும் மற்ற பிரபஞ்சங்களின் ஈர்ப்பு விசை இழுப்பால் கதிர்வீச்சில் முரண்பாடுகள் [Anomalies in Radiation] இருப்பதும் முதன்முதல் முடிவு செய்யப் பட்டது.

    அந்த அறிவிப்பில் ஒரு முக்கியவிதி விலக்கு : பிளாங்க் விண்ணோக்கி மூலம் விளைந்த புதிய கோட்பாடான, “கருமை ஓட்டத்துக்கு” [Dark Flow, like Dark Energy, Dark Matter] சான்று தேடியது.   அதற்குச் சான்று கிடைக்க வில்லை. கருமை ஓட்டம் பற்றிக் கருத்து இல்லாவிடில் பிற பிரபஞ்சங்களைப் பற்றி விளக்கம் தேவை யில்லை.   கருமை ஓட்டம் என்பது ஒரு விஞ்ஞானப் புனைகதை யூகிப்பில்லை.   பிரபஞ்சத்தில் உள்ள பிண்டப் பரவல் அதற்கு ஓர் எண்ணிக்கை தர முடிய வில்லை.  அதனால் அதன் இருப்பு தர்க்கத்துக்கு உட்பட்டது. கருமை ஓட்டத்தின் இருப்பே, நமது கண்ணோட்ட வரம்புக்கு அப்பாற் பட்ட வெளி விளிம்பில் நமக்கருகில் உள்ள பிண்டத்தை இழுக்கிறது.

     

    Multiverse -2

     

    பிரபஞ்சம் தோன்றி 380,000 ஆண்டுக்குப் பிறகு எழுந்த ஒளிவீச்சைக் காட்டும் பிரபஞ்ச நுண்ணலைப் பின்புலம் [Cosmic Microwave Background – (CMB)] ஓர் முடிவான அகிலவியல் ஒப்புமை அரங்கமாக [Ultimate cosmic Reference Frame] எடுத்துக் கொள்ளப் படுகிறது.   2010  ஆண்டு ஆய்வுப்படி புதிரான கருமை ஓட்டம் முதலில் வெளியிட்ட தூரம் இரட்டித் திருப்பதாக அறியப்பட்டுள்ளது.  கருமை ஓட்டம் என்பது காலக்ஸி கொத்து  ஒளிமந்தை களின் [Galaxy Clusters] வியப்பான, குறிப்பிட்ட திசைவேகம் [600 -1000 km/s].

    நமது பிரபஞ்சம் போல் இணைப் பிரபஞ்சங்கள் விண்வெளியில் உள்ளனவா ?

    விஞ்ஞானிகள் இப்போது நமது பிரபஞ்சத்தைப் போல ஓர் இணையான பிரபஞ்சம் (Parallel Universe) இருக்கலாம் என்று மெய்யாக நம்புகிறார்கள். புத்தகத்தில் படிக்கும் விஞ்ஞானப் புனைகதை இல்லை இது ! “Multiverse” என்னும் சொல்லை முதலில் ஆக்கியவர் அமெரிக்க வேதாந்தி வில்லியம் ஜேம்ஸ் (1848-1910). சொல்லப் போனால் நமக்குத் தெரியாமல் குறிப்பிட முடியாத எண்ணிக்கையில் இணையான “பல்லரங்கப் பிரபஞ்சங்கள்”  (Multiverses) இருக்கலாம் என்று யூகிக்கப் படுகிறார்கள் ! நாம் அவற்றில் ஒன்றான நமக்குத் தெரியும், உப்பி விரியும் ஒரு பெருவெடிப்புப் பிரபஞ்சத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். அந்தப் பிரபஞ்சங்கள் கால வெளியும், மர்மமான, புதிரான பண்டங்களும் கொண்டிருக்கலாம் ! மெய்யாக நமது பிரபஞ்சத்தில் உள்ள ஈர்ப்பாற்றல் வலுவற்ற சமிக்கை மற்ற இணைப் பிரபஞ்சத்திலிருந்து கசிந்து புகுந்து விட்ட ஒன்றுதான் ! இதில் வியப்பென்ன வென்றால் இந்த இணைப் பிரபஞ்சம் நமது பிரபஞ்சத்துக்கு மிக்க அருகில் இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

    Multiverse Raising

    பிரபஞ்சத்தின் பரிமாணங்கள் நான்கு அல்ல பதினொன்று !

    உன்னத இழை நியதி (Superstring Theory) பெருவெடிப்புக்கு முந்தய சில அடிப்படை விளைவுகளையும் விளக்க உதவுகின்றது ! ஒற்றை நியதியில் இழை நியதி பராமாணுக்கள், அடிப்படை இயற்கை உந்துவிசைகள் (Particles & Fundamental Forces of Nature) யாவும் உன்னத சீரான நுண்ணிழைகளின் அதிர்வுகள் (Vibrations of Tiny Supersymmetric Strings) என்று தெளிவாகக் கூறுகிறது. பரமாணுக்களின் அணுக்கூண்டில் இயங்கும் “நுண்துகள் ஈர்ப்பாற்றல்” (Quantum Gravity) தன்மைகளை விளக்கும் மகிமை கொண்டது இந்த உன்னத இழை நியதி !  ஏறக்குறைய உயிரியல் பிறவி மூலமான “டியென்னே” (DNA) போன்றது பிரமஞ்சத்தின் ஒற்றை உன்னத இழை நியதி என்று வைத்துக் கொள்ளலாம் ! புரட்சிகரமான இந்த இணைப் பிரபஞ்சக் கோட்பாடு எப்போது உதயமானது என்னும் கேள்வி எழுகிறது இப்போது ! உன்னத இழை நியதி, பெருவெளி, கருமைப் பிண்டம் (Superstring Theory, Hyperspace & Dark Matter) ஆகிய புதிய கோட்பாடுகள் எழுதப்பட்டதும் பௌதிக விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் விஞ்ஞானத்தை விளக்க நாமறிந்த நான்கு காலவெளிப் பரிமாணங்கள் மட்டும் போதா வென்றும், அவை மெய்யாகப் பதினொன்று எண்ணிக்கைகள் என்றும் உணர்ந்தார்கள் ! அவ்வித முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்ததும், அடுத்தோர் முடிவும் உதயமானது ! அதாவது நாமறிந்த பிரபஞ்சமானது எண்ணிற்ற  “சவ்வியல் குமிழிகளில்”  (Membraneous Bubbles) ஒன்றானது ! சவ்வுக் குமிழிகள் பதினொன்றாம் பரிமாணத்தில் கொந்தளிக்கும் போது அலைகள் எழுகின்றன !

     

     

    பெருவெடிப்பு மீளும் காலவெளித் தொடர் நிகழ்ச்சி

    இப்போது குமிழிப் பிரபஞ்சங்கள் இரண்டு ஒன்றை ஒன்று தொட்டால் என்ன நிகழும் என்று நினைக்கிறீர்கள் ? பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் விஞ்ஞானி நீல் துராக் (Neil Turok), அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி பர்ட் ஓவ்ரட் (Burt Ovrut), & பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி பால் ஸ்டைன்ஹார்ட் (Paul Steinhardt) ஆகிய மூவரும் அவ்விதம் இரண்டு குமிழிப் பிரபஞ்சங்கள் ஒரு யுகத்தில் தொட்டன என்று நம்புகிறார்கள் ! அதன் விளைவென்ன ? மெய்யாக ஒரு மிகப் பெரும் வெடிப்பு நேர்ந்து ஓர் புதிய பிரபஞ்சம் << நமது பிரபஞ்சம் >> பிறந்ததாம் ! அப்படி அவர்கள் அறிவித்ததும் உலக விஞ்ஞானச் சமூகத்திற்கு ஓர் அதிர்ச்சி உண்டானது ! அந்த விளக்கவுரை சம்பிரதாய பெருவெடிப்பு நியதியின் முகத்தைத் திருப்பி விட்டது !

     

     

    அதாவது நாமறிந்த பெருவெடிப்பு மெய்யாக பிரபஞ்சத்தின் ஆரம்பகால முதற் தோற்றமில்லை. காலவெளிப் படைப்பு அதற்கும் முற்பட்டது; மேலும் பெருவெடிப்பு அடுத்தும் தொடராய் நிகழலாம் என்னும் புரட்சி கரமான ஓர் அதிசய பிரபஞ்சத் தோற்றங்களின் “காலவெளித் தொடர் நிகழ்ச்சியை” (Space-Time Chain Event) அவர்கள் எடுத்துக் கூறினார். பெருவெடிப்புகள் எப்போதும் நிகழலாம் ! இப்போது பிரபஞ்சத்தின் மூலத் தோற்றத்தை வைத்து நமக்கு எச்சரிக்கையாய்ப் பூதகரமான ஒரு பயங்கரக் கேள்வி எழுகிறது ! பிரபஞ்சக் குமிழிகள் ஒன்றை ஒன்றை மோதி நமது பிரபஞ்சம் தோன்றிய தென்றால் மீண்டும் அவ்விதம் மோதும் ஒரு வாய்ப்புள்ளதா ? பதினொன்று பரிமாணமுடைய அகில வெளியில் எந்த நிகழ்ச்சியும் ஏற்படலாம் !

     

     

    நான்கு வகுப்பு வடிவ நிலைகளில் பிரபஞ்ச அமைப்புகள்

    “பல்லரங்கப் பிரபஞ்சம்” அல்லது “மேநிலைப் பிரபஞ்சம்” (Multiverse, Multi-Domain Universes or Meta-Universe) என்பது நிகழக் கூடிய பல்வேறு இணைப் பிரபஞ்சங்கள் பற்றிய ஓர் சித்தாந்தப் பௌதிகக் கோட்பாடு (Hypothesis of Possible Multiple Universes). அதனுள் நாம் வாழும் பிரபஞ்சமும் அடங்கும். அது ஒரு பௌதிக விஞ்ஞான மெய்ப்பாடுதான் ! பற்பல பிரபஞ்சங்களின் கட்டமைப்புகள் (Structures of the Multiverse), ஒவ்வொரு பிரபஞ்சத்தின் இயல்பான பண்பாடு (The Nature of Each Universe), பல்வேறு பிரபஞ்ச உட்பண்டங்களின் உறவுப்பாடு (The Relationship between the Constituent Universes), ஆகியவை குறிப்பிட்ட பிரபஞ்சத்தின் சித்தாந்த பௌதிகக் கோட்பாடைச் சார்தவை. “Multiverse” என்னும் சொல்லை ஆக்கியவர் அமெரிக்க வேதாந்தி வில்லியம் ஜேம்ஸ் (1848-1910). அவற்றை (Alternate Universes, parallel Universes, Quantum Universes, Parallel Worlds, Alternate Realities & Alternate Timelines) என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள்.

     

    clipboard012.jpg

     

    பல்லரங்க பிரபஞ்சங்கள் வகுப்பு -1, வகுப்பு -2, வகுப்பு -3 & வகுப்பு -4 (Level I, Level II, Level III & Level IV) என்று நான்கு வகுப்புகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. இந்தப் வகுப்பு முறைகளை ஆக்கியவர் மூவர் : 1. ஜியார்ஜ் எல்லிஸ் (George Ellis). 2. யு. கெர்ச்செனர் (U. Kirchner) & 3. டபிள்யு. ஆர். ஸ்டோஜர் (W.R. Stoeger). அப்பிரிவு முறைகளுக்கு “டெக்மார்க் வகுப்பியல்”  (Tegmark Classification) என்பது பெயர்.

    1. பல்லரங்க பிரபஞ்சங்கள் (Multi-Domain Universes)

    வகுப்பு : 1 (திறந்த வெளிப் பிரபஞ்சம்) யுகங்கள் கடந்த பிரபஞ்சத்தின் எல்லையிலா அகிலவெளி வீக்கம் பற்றி ஒரு பூர்வீக முன்னறிவிப்புச் சித்தாந்தம் இது. அதனில் ஆதிகால நிபந்தனைகள் எடுக்கப்பட்டு ஹப்பிள் தொலைநோக்கி காணமுடிந்த கொள்ளளவுகள் இருக்க வேண்டும்.

    (Level : 1 A Generic Prediction of Cosmic Inflation is an infinite Ergodic Universe which, being infinite, must contain Hubble Volumes, realizing all initial conditions)

     

     

     

    2. வேறுபட்ட பௌதிக நிலைத்துவம் கொண்ட பிரபஞ்சங்கள் (Universes with Different Physical Constants)

    வகுப்பு : 2 (ஆன்ரி லிண்டேயின் குமிழ் நியதி) (Andrei Linde’s Bubble Theory) கொந்தளிக்கும் அகிலவெளி வீக்கத்தில் வெப்ப அரங்கங்கள் பரிமாணவியல், நுண்துகள் இருப்புகளுடன் வேறுபட்ட, வளப்பூட்டும் பௌதிக நிலைப்பாடுகள் அடைவது. (Level : 2 In Chaotic Inflation other Thermalized Regions may have different Effective Physical Constants Dimensionality & Particle Content. Also it includes Wheeler’s Oscillating Universe Theory)

    3. பன்மடங்கு பிரபஞ்சங்கள் (Multiverses)

    வகுப்பு : 3 நுண்துகள் யந்திரவியலை விளக்கும் போது சமத் தோற்றம் கொண்ட ஆனால் மாறுப்பட்ட தன்மையுள்ள பல்வேறு பிரபஞ்சங்களைப் பற்றிக் கூறுகிறது. 2007 செப்டம்பரில் டேவிட் டாய்ட்ஸ்ட் (David Deutsch) பல்வேறு உலகங்களைப் பற்றி விளக்கமும் நிரூபணமும் அளித்தார் (Level : III An Interpretation of Quantum Mechanics that proposes of Multiple Universes which are identical but exist in possibly different States)

    4. முடிவான முழுத் தோற்றப் பிரபஞ்சங்கள் (Ensemble Theory of Tegmark – Ultimate Ensemble)

    வகுப்பு : 4 மற்ற கணித அரங்குகள் வெவ்வேறு அடிப்படைப் பௌதிகச் சமன்பாடுகளை உண்டாக்குகின்றன. (Level : IV Other Mathematical Structures give different fundamental Equations of Physics)

    எண்ணற்ற பிரபஞ்சங்களின் குமிழ்க் கோட்பாடு (Bubble Theory of Infinite Universes)

    வகுப்பு -2 இல் வரும் அகிலவெளி வீக்கத்தில் தோன்றும் பொருத்தமான குமிழ்ப் பிரபஞ்சங்களைப் பற்றி ஆன்ரி லிண்டே எடுத்து விளக்கினார். விஞ்ஞானிகள் பலர் ஒப்புக்கொண்ட கோட்பாடி இது. இந்த கோட்பாடு கூறுவது என்ன ? நுண்துகள் திரட்சி நுரையிலிருந்து (Quantum Foam) ஒரு “தாய்ப் பிரபஞ்சத்திலிருந்து” (Parent Universe) மற்ற பிரபஞ்சங்கள் உதித்தன என்பதே !

    “இணையான உலகங்கள்” என்னும் நூல் எழுதிய மிச்சியோ காக்கு

    ஜப்பானிய அகிலவியல் மேதை மிச்சியோ காக்கு (Parallel Worlds By : Michio Kaku) தான் 2004 இல் வெளியிட்ட கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்: நான் எழுதிய “இணையான உலகங்கள்” நூலில் காலவெளி அமைப்புகளை விளக்குவதற்குப் பதிலாக கடந்த பல ஆண்டுகளில் வளர்ந்த அகிலவியல் உளவுப் புரட்சிகளைக் குறிப்பாகக் காட்டுகிறேன். முதல் பாகத்தில் பிரபஞ்சத்தைப் பற்றியும், முற்போக்கான அகில வீக்கம் பற்றியும் கூறி முடிவில் பெருவெடிப்புடன் முடிகிறது. இரண்டாம் பாகத்தில் பல்லரங்கப் பிரபஞ்சங்கள் பற்றி எழுந்த கோட்பாடுகளை விளக்கி பரிமாண எண்ணிக்கை விரிவானது பற்றியும், உன்னத இழை நியதி பற்றியும் கூறுகிறேன். மூன்றாவது பாகத்தில் எப்படிக் கோடான கோடி ஆண்டு களுக்குப் பிறகு பிரபஞ்சம் குளிர்மயமாகி முடிவடையும் என்பதை விளக்கம் செய்கிறேன்.

     

     

    (தொடரும்)

    *****************************

    Image Credits : Scientific American (May 2003)

    தகவல்:

    1. Astronomy’s Explore the Universe 8th Edition (2002) December 31, 2001

    2. National Geographic Magazine (1982) Frontiers of Science The Family of the Sun By: Bradford Smith Ph. D. Professor of Planetary Sciences, The University of Arizona.

    3. National Geographic Magazine (1975) Amazing Universe, The Family of Stars By: Herbert Friedman.

    4. Internet Article “Stellar Evolution”

    5. Majestic Universe By: Serge Brunier (1999)

    6. Neutron Stars & Pulsars -From the Internet Sources (December 2006)

    7. Parallel Universe – BBC Information (February 14, 2002)

    8. Scientific American “Parallel Universes” By Max Tegmark, Professor of Physics & Astronomy, University of Pennsylvania (May 2003)

    9. Parallel Worlds (The Science of Alternate Universes & Our Future in the Cosmos) By : Michio Kaku (2005)

    10.   50 Greatest Mysteries of the Universe – Astronomy Magazine (August 21, 2007)

    11.  http://www.space.com/18811-multiple-universes-5-theories.html   [December 7, 2012]

    12.  http://en.wikipedia.org/wiki/Multiverse   [October 24, 2013]

    13.  http://nautil.us/issue/6/secret-codes/beyond-the-horizon-of-the-universe

    14.  http://www.scientificamerican.com/article.cfm?id=new-physics-complications-lend-support-to-multiverse-hypothesis [June 1, 2013]

    15.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/10/is-our-universe-one-of-billions-new-planck-data-has-anomalies-caused-by-unknown-gravitational-pull-t.html  [October 23, 2013]

    *******************************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  (October 26, 2013)

    http://jayabarathan.wordpress.com/

    YouTube – Videos from this email
    Share
  • குறவன் பாட்டு – 16

                                   சச்சிதானந்தம்

    பிற்பகல் உணவு உண்ணுதல்

     சேகரம் செய்த பழங்களில் சிறிய,

    பகுதியைப் பிரித்துக் குறத்தியும் கொடுக்க,

    தான் கொண்டுவந்த தேனள்ளிக் குறவனும்,

    பழங்களில் குழைத்து அமுதம் செய்தான்!                                                                       126

     

    வான்கொண்ட தேவரும் காணா அமுதினை,

    கோன்கொண்ட மாளிகைக் கொள்ளாக் குளுமையை,

    கான்கொண்ட குறவனும் கவின்மிகு குறத்தியும்,

    தேன்கொண்ட உணவுண்டு எளிதினை அடைந்தனர்!                                                  127

     

    வயிறாரக் கனி யுண்டு, சுடும்

    வெயிலாற நிழல் கண்டு, பேசி

    மனதார மையல் கொண்டு, வாழும்

    இதுதானே வாழ் வென்று வாழ்ந்தனர்!                                                                                 128

     

    பருந்தின் சிறகைக் குறத்திக்குப் பரிசளித்தல்

    எச்சம் கீழே வீழா உயரத்தில்

    உச்சிப் பாறையில் வாழும் பருந்தின்,

    ஒச்சச் சிறகைச் சிரமம் இன்றி

    மேலே ஏறி எடுத்து வந்தான்!                                                                                                     129

     

    எடுத்து வந்த சிறகைத் தந்து

    மிடுக்கினோடு குறத்தியைக் கண்டு, பாறை

    இடுக்கிலேறிப் பருந்தை மீறிச் சிறகைக்

    கடத்தி வந்த கதையைச் சொன்னான்!                                                                                  130

    Share
  • உயிர் பெறுமா நீதியின் குரல்?

    உரத்த சிந்தனை

    இன்னம்பூரான்

    “ மக்கள் தொகுதிக்கும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கும் அன்யோன்யமான தொடர்பு இருக்கவேண்டும்…அவர் தொகுதியின் தேவைகளை நிறைவேற்றவும், மக்களின் அபிலாஷைகளை மதிக்கவும், கருத்துக்களை கேட்டறியவும் பாடுபடவேண்டும். மக்களும் அவருடைய பாவனைகளை தங்கள் பக்கம் திருப்பவும், அவரை தட்டிக்கேட்கவும் முடிய வேண்டும்…”

    ~ இந்திய அரசியல் சாசன கூட்டுக்குழு அறிக்கை: முதல் பாகம் -1933-34 (இங்கிலாந்து பிரபுக்கள் மன்றமும், மக்கள் சபையும்: பக்கம் 110)

    அன்றாட அரசியல் நிகழ்வுகள் மக்கள் மன்றத்தில் அலசப்படும்போது, அவற்றின் பின்னணிகளும், அடித்தளங்களும் மறக்கப்படுவதையும், மறைக்கப்படுவதையும் கண்கூடாகக் காண்கிறோம். தற்காலம், நமது இந்திய நாடாளுமன்றமே சர்ச்சைக்கு உட்பட்டுள்ளது. வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் சிலரின் அணுகுமுறைகளும், செயல்பாடுகளும், ஒழுங்கீனங்களும், கவலையை தருகின்றன. மக்களாட்சியின் மேலாண்மை குலைந்து விட்டது என்ற பேச்சு, ஊடகங்களில் மிகவும் அடிபடுகிறது. ஜனநாயகம் தான் சுதந்திர இந்தியாவின் ஆணிவேர் என்பது இந்திய அரசியல் சாசனத்தின் முத்திரை. குந்தகம் விளையாமல் அதை பாதுகாப்பது நம் கடமை. அதை செவ்வனே நிறைவேற்ற, பின்னணிகளையும், அடித்தளங்களையும், தற்காலத்து விவாதங்களிடமிருந்து சற்றே தள்ளி நின்று, பரிசீலிப்பது நலம் பயக்கும்; நடுவு நிலை ஆய்வுகளை முன் கொணரும். ஜனநாயகத்தின் பல பரிமாணங்களை தனித்தும், தொகுத்தும் புரிந்து கொள்வதால், பொது மக்களில் ஒவ்வொருவரும் தனது வாக்கை அளிப்பது முதல், பிரதிநிதி/அரசு நிர்வாகம் ஆகியவற்றை கண்காணிக்கமுடியும். பொது நலம் சார்ந்தக் கருத்துக்களை அமலாக்குவதைத் துரிதப்படுத்த முடியும். அதற்கான வேத பாடம் தான் மேற்கோளில். அந்த கூட்டுக்குழு தன்னுடைய பொறுப்பை முழுமையாக உணர்ந்து, இந்தியாவிலிருந்து சான்றோர்களை வரவழைத்து, அவர்களின் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டது. அவர்களில் ஒருவர் பாபா சாஹேப் அம்பேத்கார் அவர்கள்.

    சாக்கோ தலைமையிலான நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இறுதி அறிக்கையை நிறைவேற்றி, தோழமை கட்சியான தி.மு.க. உள்பட, முக்கிய கட்சிகளிடமிருந்து எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்டுள்ளது. இது புதிது அல்ல. இன்று வரை, இந்தியாவின் பாராளுமன்ற கூட்டுக்குழுக்களின் சாதனைகள் சொல்லிக்கொள்ளும் மாதிரி இல்லை. எல்லாம் இழுபறி தான். முதற்கண்ணாக, நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழுவின் விருத்தாந்தம், இந்த ஸ்பெக்ட்ரம் கூட்டுக்குழுவின் இடம், பொருள், ஏவல் பற்றி அலச உதவும்.

    மாநில சட்டசபைகளும், நாடாளும் மன்றமும் பலவிதமான, பளுவான கடமைகளை ஆற்றுவதால், அவை குழுக்கள் மூலமாக இயங்குவது உலகளாவிய நடைமுறை. தணிக்கை அறிக்கைகளை ஆராயும் பொதுக்கணக்குக்குழு, மனுக்களை ஆராயும் குழு, அரசு கம்பெனிகளை ஆராயும் குழு, ஒவ்வொரு துறையையும் கண்காணிக்கும் குழு போன்றவை எப்போதும் நிலுவையில் உள்ளவை. குறிப்பிட்ட நடவடிக்கையை ஆராய, இரு மன்றங்களும் ஒத்துப்போய் அல்லது அவைத்தலைவர்கள் தீர்மானித்து, குழுக்கள் நியமிக்கப்படுவது உண்டு. அவை தான் கூட்டுக்குழுக்கள். நமது அரசியல் சாஸனமோ, நாடாளுமன்ற மரபோ அவற்றை பற்றிய வரையறைகளை விதிக்கவில்லை. அதன் காரணம் நாடாளுமன்றத்தின் ஆளுமையை மதிக்கும் அணுகுமுறை. ஆனால், ஒவ்வொரு கூட்டுக்குழுவும் விட்ட குறை தொட்ட குறையாகவே இயங்கியுள்ளன. இந்திய அரசியல் சாஸனம் 1950ல் அமலுக்கு வந்தது. 37 வருடங்களுக்கு கூட்டுக்குழு அமைக்க வேண்டிய நிர்பந்தம் நமது குடியரசுக்கு ஏற்படவில்லை. தணிக்கை அறிக்கைகளை ஆராயும் பொதுகணக்குக்குழுவின் தலைமை, முக்கிய எதிர்க்கட்சிக்கு என்ற அருமையான மரபு ஆளும் கட்சிக்கு தர்மசங்கடமானது. போஃபோர்ஸ் பீரங்கி விவகாரம் 1987ல் தலையெடுக்க, ஆளும் கட்சி உபத்ரவம் தாங்காமல், ஒரு கூட்டுக்குழுவுக்கு அடி கோலியது. எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்தது. அதன் அறிக்கையை நிராகரித்தது. அடுத்த இரண்டு கூட்டுக்குழுக்களும் (1992, 2001) தாறுமாறான பங்குச்சந்தை வஞ்சகங்களை ஆராய்ந்தன. அவற்றின் அறிக்கைகளின் மேல் சொல்லிக்கொள்ளும் படி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. குளிர்பானங்களில் கிருமிநாசினிகள் கலந்துள்ளன என்ற குற்றச்சாட்டை விசாரித்த கூட்டுக்குழுவின் அறிக்கை அந்த குற்றச்சாட்டு உண்மை என்றது. அத்துடன் சரி. நோ ஆக்க்ஷன். குளிர்பானங்கள் இன்றும் சக்கை போடு போடுகின்றன. குடிநீர் பிரச்னை தீரவும் இல்லை.

    அடுத்த கூட்டுக்குழு ஸ்பெக்ட்ரம் சிக்கலை பற்றி. அது தான் இந்த பாடு படுகிறது. 30 உறுப்பினர்களில் பாதி, அதாவது 15 உறுப்பினர்கள்,குழுத்தலைவர் மீது நம்பிக்கையில்லை என்று லோக்சபை தலைவரிடம் மனு கொடுத்து வரலாறு படைத்தனர். ஆக மொத்தம் கூட்டு இல்லை. எல்லாம் வழ, வழ, கொழ, கொழ தான்! தற்காலம் வருமுன்காப்போன் ஆகிவிட்ட அரசு நிர்வாகம், ஹெலிகாப்டர் ஊழல் பற்றி விசாரிக்க ஒரு கூட்டுக்குழுவுக்கு ஏற்பாடு செய்து விட்டது. மேற்படி நடவடிக்கைகளை சீர் தூக்கிப்பார்த்தால், எதிர்க்கட்சி தலைமையில் இயங்கும் பொதுக்கணக்குக்குழுவின் அறிக்கைகளை நீர்த்துப்போக செய்யத்தான் இந்த கூட்டுக்குழு உபாயம் பயன்படுவதாக, நமது நாடாளுமன்ற வரலாறு கூறுகிறது.

    சுருங்கச்சொல்லின், இது வரை இந்திய பாராளுமன்றத்தின் கூட்டுக்குழுக்கள் அவசியமான பின்னணியில் நியமிக்கப்படவில்லை; அவை பிரிதிநித்துவ ஜனநாயகத்துக்கு இணங்க நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டதாக சொல்வது கடினம். பொதுக்கணக்குக்குழுவின் அறிக்கைகளை நீர்த்துப்போக செய்வது இந்திய அரசியல் சாஸனத்தை அவமதிக்கும் செயல் என்றால்,அது மிகையாகாது.

    நன்றி: தினமலர்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (80)

    சக்திசக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிமையான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களோடு கலப்பதில் மகிழ்கிறேன்.

    இன்றைய உலகம் அவசரமான வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சமூக விஞ்ஞான முன்னேற்றங்கள் கன வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன.

    இவைகளில் எத்தனை மனித வாழ்க்கையை மேம்படச் செய்வதற்கு உதவுகின்றன என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    பேருந்திலே பிரயாணம் செய்து கொண்டிருப்பவர்கள், புகையிரதங்களில் பயணித்துக் கொண்டிருப்பவர்கள், ஆகாயவிமானத்திலே மிதந்து கொண்டிருப்பவர்கள் ஏன் சாலையோரமாக நடந்து கொண்டு பயணிப்பவர்கள் என பலவகையான பிரயாணிகளின் கைகளில் பெரும்பான்மையாக நாம் காண்பது கைத்தொலைபேசிகளோ அன்றி சிறிய அளவிலான “ஜ பாட்(I Pad)” அன்றி “டாப்லெட்(Tablet)” எனப்படும் கையளவிலான கனிணிகளேயாகும்.

    இன்றைய தொடர்பு சாதனங்களில் முன்னணியில் இருப்பவை இவைகளாகும். இதன் மூலம் இன்றைய இளைய தலைமுறை ஏன் முதிய தலைமுறை கூட சமூகத்தில் மற்றையோர்களுடனான தொடர்புகளைப் பேணி வருவது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

    இச்சமூகத்துடனான தொடர்பு சாதனங்கள் இளைய தலைமுறையின் அபிப்பிராயங்களில் , கருத்துக்களில் பல மாற்றங்களுக்குக் காரணமாகின்றன என்பதுவும் மறுக்கப்பட முடியாத உண்மையே

    இவற்றில் சில நன்மைகளை நோக்கியும், சில தீமைகளை நோக்கியும் இத்தலைமுறையை வழிநடத்துவதற்குக் காரணங்களாகின்றன என்பதுவும் உண்மையே.

    ஆனால் இவைகளின் இயக்கத்தை அதற்காக முற்று முழுவதுமாக ஒதுக்கி வைத்து விட்டு வாழ்ந்து விட முடியுமா?

    இம்முன்னேற்றங்கள் பலரின் வாழ்வில் பலரது முன்னேற்றங்களுக்கு வழிகோலியுள்ளது என்பதை மறுத்து விட முடியாது.

    இத்தொடர்பு சாதனங்கள் வழங்கும் இருபத்திநாலு மணிநேர சேவையினால் இன்று அரசியல் உலகில் கூட பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அரசியல்வாதிகள் மக்களின் முன்னே நிறுத்தி அலசப்படுவதற்கு மிகக் குறைந்த நேரமே தேவைப்படுகிறது.

    பல முன்னனி நாடுகளின் அரசியல் தலைவர்கள் இன்று சமூக வலைத்தளங்களின் மூலமாகவே தமது கொள்கைப் பிரகடனங்களைச் செய்வதைக் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கிறது.

    அது மட்டுமின்றி என்னையே ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அதாவது எழுத்துலகில் நான் காலூன்றி நிற்பதற்கு மூலகாரணமே இணையத்தளங்களும், இணையமுமே காரணம்.

    அது தவிர இளம் படைப்பாளிகள் பலர் பெயர் பெற்ற எழுத்தாளர்களோடு ஒரே தளத்தில் எழுதுவதன் மூலம் தமது கலையை வளர்த்துக் கொள்கிறார்கள்.

    இதை நான் பகிர்ந்து கொள்வதன் பிரதான நோக்கம் சமீபத்தில் முகநூல் வலையத்தளத்தின் மீது எழுந்துள்ள ஒரு சர்ச்சைக்குரிய செய்தியே.

    சிறிது காலத்தின் முன்னால் முகநூல் தம்முடைய இணைய தளத்தில் ” பயங்கரவாதிகளாலும், மத்திய கிழக்கு நாடுகளின் சில அரசுகளினாலும் நடத்தப்படும் கழுத்து வெட்டி நிறைவேற்றப்படும் மரணதண்டனைகளின் வீடியோக் காட்சிகளைப் பகிர்ந்து கொள்வதைத் தடை செய்திருந்தது.

    ஆனால் சமீபத்தில் சில நாட்களின் முன்னால் இக்காட்சிகள் அதைப்பற்றிப் பீற்றிக் கொள்வதற்கல்லாமல் அதன் கொடூரத்தைச் சித்தரிக்கும் நோக்கத்திற்காகப் பகிரப் படுமானால் அதைத் தடைசெய்யப் போவதில்லை என்று அறிவித்தது.

    இது சமூகத்தில் பலவிதமான சர்சைகளைக் கிளப்பி விட்டிருக்கிறது .

    முகநூல் வலைத்தளம் இளையோர் மத்தியிலும், முதியோர் மத்தியிலும் மிகவும் பரவலாக தொடர்புகளைக் கொண்டிருக்கும் ஒரு இன்றியமையாத தொடர்பு சாதனம். இதிலே இத்தகைய விளம்பரங்களுக்கு இடம் கொடுப்பது ஒரு பொறுப்பற்ற தன்மை என்று சமூகத் தலைவர்கள் பலர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள்.

    எது எக்காரணத்திற்காக நடத்தப்பட்டாலும் இவை மனிதக் கொலைகளே இவைகளைப் பகிரங்கமாக இணைய தளங்களிலே பகிர்ந்து கொள்வது மனித தர்மத்திற்குப் புறம்பானது என்கிறார்கள்.

    fb3

    மார்புப் புற்றுநோய் காரணமாக மார்பகங்களைச் சத்திர சிகிச்சைக்குள்ளாக்கி அப்புற்று நோயிலிருந்து பூரண குணமடைந்த பெண்கள் தமது அறுவை சிகிச்சையின் ரணங்களின் படங்களை தமது இணைய தளத்தில் முகநூல் தடை செய்திருக்கிறது.

    மக்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டும் படங்களைத் தடை செய்து விட்டு இப்படியான மனிதக் கொலைகளின் வீடியோக்களை அனுமதித்திருப்பது எப்படி நியாயமாகலாம் எனச் சில பெண்ணுரிமை வாதிகள் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள்.

    இது மிகவும் விவாதிக்கப்பட வேண்டிய விடயமே ! முகநூல் வலைத்தளம் ஒரு பிரத்தியேகமான வலைத்தளம். தமது வலைத்தளத்தில் எவற்றை அனுமதிப்பது, எவர்றை அனுமதிப்பதில்லை என்று தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு.

    ஆனால் சமுதாயத்தில் பல இளவயதினரின் மனதில் தீவிரமான் கருத்தோட்டங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு முன்னனி சமூகத் தொடர்பு இணைய தளம் தாம் தமக்கு சமுதாயத்தில் உள்ள பொறுப்பை உணர்ந்து தமது கொள்கைகளை வகுத்துக் கொள்ள வேண்டியது அவர்களது தார்மீகக் கடமையாகும் .

    சமுதாயம் என்பது ஒரு தனிப்பட்ட மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல பல வேறுபட்ட கருத்துகள் கொண்டவர்கள் மனித நலனை முன்வைத்து இணைந்து உருவாக்கும் ஒரு கட்டமைப்பே சமுதாயமாகும்.

    இங்கு நாம் ஒவ்வொருவரும் எமது கடமையை உணர்ந்து செயலாற்றத் தவறினால் ? . . . . . .

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 17

    தேமொழி

     

    tribal lady

     

    காத்திருப்பில் கலங்காதே …

    கொல்லிமலை காட்டுக்குள்ள
    மூங்கில் வெட்டும் சின்னப்புள்ளை
    மூணு நாளா தவிச்சிருக்கு -என்
    முகம் காண துடிச்சிருக்கு.

    பச்சரிசி சோறோடு
    கருவாட்டு குழம்பாக்கி
    தெருவோடு பார்த்திருக்கு -எனக்காக
    ஒத்தையிலே காத்திருக்கு.

     

    அன்பு நண்பர் கவிஞர் தனுசு அவர்களின் கவிதைக்கு வரைந்த ஓவியம்.
    தனுசுவின் முழுக்கவிதையினையும் படிக்க இங்கு செல்லவும்
    வாய்ப்பளித்த கவிஞர் தனுசுவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

     

     

     

     

    Share
  • காத்திருப்பில் கலங்காதே …

    -தனுசு-

    கொல்லிமலை காட்டுக்குள்ள
    மூங்கில் வெட்டும் சின்னப்புள்ளை
    மூணு நாளா தவிச்சிருக்கு -என்
    முகம் காண துடிச்சிருக்கு.

    பச்சரிசி சோறோடு
    கருவாட்டு குழம்பாக்கி
    தெருவோடு பார்த்திருக்கு -எனக்காக
    ஒத்தையிலே காத்திருக்கு.

    உச்சந்தலை கூந்தலிலே
    கட்டிவச்ச கருப்பு!
    நெற்றியெனும் முற்றத்திலே
    பொட்டு வச்ச வனப்பு !

    கண்ணுக்குள் குடிவந்த
    கடல்மீனின் துடிப்பு!
    கன்னக் கதுப்பினில்
    உப்பியிருக்கும் செழிப்பு!

    வெளஞ்ச சோளக்கொல்லை
    போல உந்தன் உடம்பு!
    மெலிந்த உதட்டோரம்
    மின்னுமடி சிவப்பு!

    நிமிர்ந்து நடந்தாலே -சுவைக்கும்
    மாங்கனி நினைப்பு!
    இத்தனையும் பார்த்தாலே -மனசில்
    வைக்குமடி நெருப்பு!

    மலரும் நினைவினில் -உன்முகம்
    உலர வேண்டாமடி
    புலரும் பொழுதிதில் -விலகும்
    உன் வருத்தமடி!

    கொஞ்சிப்பேச வாரேனடி
    கொஞ்சம் பொறு மயிலே!
    கூட்டிக் கொண்டு வாரேன்
    குளிர்காயும் நிலவை!

    கொக்கரொக்கோ கூவும்வரை
    நித்திரைக்கு தடை சொல்ல
    வில்லாளன் வாரேனடி
    வன வேட்டை முடித்து.

     

     

     

    Share
  • நிழல் தேடிய மரம்

    லக்ஷ்மி ​வைரமணி

    ஓம் சரவணபவ மந்திரம் ஓத மறந்து விட்டேனே? அதனால் வந்த விளைவு தானோ இது? சீக்கிரம் பழனி முருகன் கோவிலுக்குப் போலாம் வா என்றாள் சுனிதா. நீ இறைவனுக்கு தாசனா அம்மா? நீ சொன்னா பெய்யெனப் பெய்யும் மழைன்னு ஆயிடுது. கரி நாக்கு……… வட்டமுகத்துடன் பாப்தலையுடன் உதடைச்சுழித்து மழைத்தூறலில் பிளாஸ்டிக் உறைக்குள் உள்ள குறிப்பை மழையில் படித்தபடி இருந்த மாதங்கி கேட்டாள்.

    யாருக்கு யார் தாசனாய் இருப்பது? எல்லோருமே இறைவனுக்கு தாசன்கள்தானம்மா……………….தனக்கு இறைவனிடம் கேட்காமல் பிறருக்காக இறைவனிடம் யாசிக்கும் எவருக்கும் கேட்டது கிடைக்கும்னு படிச்சதில்ல.  புக்கை மூடு….மழைல படிச்சது போதும். விழுந்தா எலும்பு கூடத் தேறாது.

    உயிரைக் காப்பாற்றியவர் கடவுளுக்கு ஒப்பானவர்கள். அந்த இறைவனை நமக்குப் பிடித்த உருவத்தில் வழிபடுவது இயற்கை அவ்வளவுதான். மடிசார் உடுத்திட்டுதான் பகவானை சேவிக்கணும்னு இல்ல. கவுனை மாட்டிட்டு சர்ச்ல இருக்கணும்னு கட்டாயம் இல்ல. மசூதில போய் மண்டியிடணும்னு அவசியமும் இல்ல. பிற உயிருக்குக் கெடுதல் பண்ணாம, முடிஞ்சா நல்லது செய்யணும். இல்லன்னா அடுத்தவங்களக் கெடுக்காமலயாவது இருக்கணும். அவங்க பக்கத்துல கடவுள் கூடவே இருப்பாருன்னு உங்க ஆசிரியர் உனக்கு சொல்லலயா மாதங்கி…………..

    எல்லாரும் அவங்கஅவங்க பொண்ணுக்காக பக்கத்துல வந்தாச்சு…… நீமட்டும் ஹாஸ்டல்ல  ஏம்மா இருக்க…..அப்பாவோடு வந்துடு……ஒண்ணா இருப்போம்.

    ஒண்ணா சேந்து போங்க……..அப்பிடின்னா ஒண்ணு செய்யணும்…

    பசங்கள நாங்க செய்யுற மாதிரி……நிறைய பாடம் இருக்கு…..நீங்க படிச்சுடுங்க. பிரின்சிபால் அப்பிடித்தான் ராட்சசன் என்று சொன்னால் அவன் படிப்பான். அங்க போய் நீங்க கண்டுக்காதீங்க படிக்கறதுக்காகக் குழந்தைக்குப் பேய் வருதுன்னு பயம் காட்டுற மாதிரி ஆசிரியர் நாங்க உங்களக் காட்டுவோம்.கண்டுக்காதீங்கன்னு சொல்வோம். அவ படிச்சுடுவான். அவன் அறிவு அவ்வளவுதான்….ஆனா பசங்க ஒண்ணொண்னும் பாசமாத்தான் இருக்கும் ஆசிரியர்மேலே……….வாழ்க்கைன்னா மாணவனுக்கு இன்னங்கறது ஒரு சிலருக்கு மட்டும்தான் புரியும். புரிஞ்சவன் மேல போறான். புரியாதவன் இப்படித்தான்.அந்த தியாக மனப்பான்மை இருக்கறதுக்காக நான் ஹாஸ்டல்ல இருக்கேன்.சுயநலம் வந்துடக்கூடாது பாரு. கடமைக்காக உன்னை வளர்த்து விட்டேன். பள்ளியே கதின்னு வந்துட்டேன் ஆச்சு இதோ பதினொரு வருட அனுபவம். அதோ நிக்குது பார் மரம். அது இன்னைக்கு தலை விரிச்சுக்கிட்டு பழத்தை எல்லாத்துக்குத் தருது…நான் ஏன் தரணும்னு அந்த மரம் நினைச்சிருந்தா வெயிலடிக்கிறப்ப அது கீழே அந்தக் குழந்தை விளையாட முடியுமா பாரு……அப்ப நீயும் மரமா அம்மா! கிட்டதட்ட அப்படித்தான்….

    காந்தி மாதிரி, காமராஜ்,கக்கன் இவங்கள மாதிரி இந்தக் காலத்துல வாழ்ந்தா பைத்தியம் அப்பிடின்னு சொல்வான். மரத்தையும் வெட்டாத ஆளா பாத்துத் தேடுறேன். நிழலா இருக்கும்னு….கிடைக்க மாட்டேங்குது……..

    சோ…..நிழல் தேடிட்டிருக்கற மரம்…..அப்பிடித்தானே………..

    தனியா உட்கார்ந்துட்டு இருந்தா நிறைய சாதிக்கலாம். தண்டமா பொழுது போக்காம…பேசாமல் இருந்தால் நிறைய வேலை செய்யலாம். அதனால் தான் உன்னையும் சொல்றேன்.

    இப்பத்தான் புரியுது…அம்மா ஏன் தனியா நிக்கறான்னு. ஆனா உங்க பசங்களப்பாத்தா மட்டும் குஷி வந்துடுது…..

    பசங்கன்னாலே ஜாலி தான். அது ஒரு அழகிய காலமப்பா….சந்தோஷமா வாழ்ந்த காலங்கள் அது……நீயும் சேந்து இருன்னு இனிமேலும் சொல்லுவியா!

    எனக்கு அப்படி உங்கள சொல்ல முடியாது. அப்ப அவங்களோட சேர்ந்து சிரிக்கலாம். உள்ள ஒண்ணு! வெளில ஒண்ணுன்னு பேச முடியாது………. அனுபவம் பேசுதப்பா……………..சிரித்தாள் மாதங்கி. அம்மா சித்தப்பா எங்கே அம்மா? அவர் மாணவர்களை உருவாக்கும் பணில முழுமையா இருக்காரம்மா………. சதுரங்கத்திற்கு 64 கட்டங்கள் தான். ஆனால் சில பேருடைய வாழ்க்கையிலும் ஆய கலைகள் 64 போலத் திருட்டுத்தனம் நிறைய உண்டு. யாரை வெட்டுனா யாரு மேல போலாம்னு. தனக்கும் ஒரு பொண்ணு இருக்குன்னு நினைக்கறதில்ல. க்ளாஸ் டோருக்குள்ள அப்பாவும், வெளில பொண்ணுமா இருக்கணும். அப்ப தெரியும் சில பேருக்கு  வேதனைன்னா என்னன்னு? பூஜைக்கு வர்ற ஆளுங்க விபூதி எதுக்கு பூசிக்கிறாங்க! தேங்காய எதுக்கு உடைக்கறாங்கன்னே தெரியாம கலந்துக்கறாங்க! அதெல்லாம் தெரிஞ்சா ஏம்மா அனாவசியமா பேசுவாங்க…

    அம்மா…..இதெல்லாம் உனக்கு யாரும்மா சொல்லிக் கொடுத்தாங்க……..பழைய பேப்பர்கடை புத்தகங்கள் தாம்மா என் அறிவை வளர்த்த அறிவு இயந்திரங்கள்.

    இராஜாவை வெட்டுனா ஆட்டமே க்ளோஸ் என்று தெரிவதில்லை. ஏற்கனவே நிறைய கோளாறுகள்.

    சாமிய நல்லா கும்பிட்டுக்க………..மாதங்கி…..போலாம்………

    தான் என்ற ஆளுமை நிறைய வளர்ந்து விட்ட நிலையில் பிள்ளையார் தான் எங்கும் முழுமுதற்பொருளாய் நிற்கின்றார். ஆனால் இங்கு அவர் ஏன் வர மறந்தார் எனப் பல முறை சிந்தித்தேன். நான் இங்கு வரக் காரணமே அதுதானோ? சுனிதா பல முறை யோசித்தாள். பிள்ளையார் விளக்கு வாங்கி வரச் சொல்லி வாங்கிய நேரம் வைக்க இடத்தைத் தேட யோசித்துக் கொண்டே இருந்தாள். வழி இல்லாமலா போய்விடும் என்று விரைந்தாள் பள்ளியை நோக்கி.

    Share
  • வாழ்க்கை நலம் – 32

    குன்றக்குடி அடிகள்

    32. ஒழுக்கமுடைமை

    மனிதனை வளர்ப்பது ஒழுக்கம். மனிதனை உயர்த்துவது ஒழுக்கம். ஒழுக்கம் என்ற சொல் மக்கள் மன்றத்தில் பரவலாகப் பேசப்பெறுவதே. தீய பழக்கங்கள் வேறு; ஒழுக்கம் வேறு. தீய பழக்கங்களை ஒழுக்கதிற்குள் அடக்கலாம். ஆனால் ஒழுக்கதிற்குள் தீய பழக்கம் வராது. கள்ளுண்ணல் முதலிய குற்றங்கள் தீயபழக்கங்கள் இந்தக் குற்றங்கள் ஒழுக்கக் கேடுகள் அல்ல.

    ஒழுக்கம் – ஒழுகுதல். மற்றவர்களுடன் மோதாமல் மற்றவர்களுக்குத் தீங்கு நேராமல் நடப்பது – வாழ்வது ஒழுக்கமுடைமை. “உலகத்தோடு ஒட்ட ஒழுகல்” ஒழுக்கம் என்றும் திருக்குறள் கூறுகிறது. மனிதன் ஒரு சமூகப் பிராணி. மனித வாழ்வு ஒரு சமூக வாழ்வு. மனிதனின் சமூக வாழ்வுக்குத் தீங்கு செய்வனவெல்லாம் தீய பழக்கம். ஒழுக்கக்கேடு தவிர்க்கத்தக்கது.  மனிதனைச் சமூக வாழ்வில் நிலைபெறச் செய்வனவெல்லாம் ஒழுக்கமுடைமை.

    “உலகம் வேண்டுவது ஒழுக்கமே!
    சுயநலம் தீய ஒழுக்கம்!
    சுயநலம் அற்றதே நல்லொழுக்கம்!”

    என்றார் விவேகானந்தர். சுயநலம் தீய ஒழுக்கம். பொது நலத்திற்கு எதிரான சுயநலம் தீய ஒழுக்கம், பொது வாழ்வைச் சிதைக்கும் சுயநலம் தீய ஒழுக்கம்.

    நாம் தமிழர்கள், நாம் இந்தியர்கள், நாம் மனிதர் என்ற நியதிக்கேற்ப ஒழுகத் தவறுதல் கூடாது. தமிழர்களாகவும் இந்தியர்களாகவும் மனிதர்களாகவும் வாழ்வதே நல்லொழுக்கம்.

    நாடுகள் சுதந்திரம் பெற்றபின் “குடிமைப் பயிற்சி” என்பது மலிந்து வருகிறது. குடிமைப் பண்பு என்றால் என்ன? ஒருவர் வாழும் ஊரோடு ஒத்திசைந்து வாழ்தல் குடிமைப் பண்பு. இனம், மொழி, சாதி, மதச் சண்டைகள் போடுதல் தீயொழுக்கமாகும். எல்லோரும் ஒரு குலம்; எல்லோரும் ஓர் இனம் என்று எண்ணுதல் நல்லொழுக்கமாகும்.

    நல்லொழுக்கம் நாட்டின் குடிகளைத் தழீஇயதாக விளங்கும். நல்லொழுக்கத்தை ஒருமைப்பாடு என்று கூறினாலும் கூறலாம். மனிதகுல ஒருமைப்பாடே நல்லொழுக்கம். எல்லா உயிர்களிடத்திலும் எத்துணையும் பேதமுறாது, மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்த்து ஒழுகுதலே ஒழுக்கம்.

    குடிமைப் பண்பிலாதார்,ஒருமைப்பாட்டுணர்வு இலாதார்.  உலகந்தழீஇய செந்தண்மை இலாதார் ஒரு நாட்டின் குடிமக்களாதல் இயலாது. ஏன்? அவர்கள் மனிதக் கணக்கில்கூட வரமாட்டார்கள். அவர்களை இழிந்த பிறப்பு என்று ஏசுகிறார் திருவள்ளுவர்.

    ஒன்றே குலம்; எல்லோரும் ஒருகுலம்; எல்லோரும் ஓர் இனம். ஒப்புரவுடன் ஒத்திசைந்து வாழ்தல், உலகம் உண்ண உண்ணல், உலகம் உடுத்த உடுத்தல், வாழ்வித்து வாழ்தல் – இதுவே ஒழுக்கம்.

    இந்த ஒழுக்கம் வளர, உழைத்து உண்ணுதல். உண்பித்து உண்ணுதல் என்ற நடைமுறை துணை செய்யும்.

    இந்த நல்லொழுக்கதிற்குப் பகையான ‘பிறர் பங்கைத் திருடுதல்’, பிறர் வருந்த வாழ்தல் ஆகியன தவிர்க்கப் பெறுதல் வேண்டும்.

    ஒழுக்கமே மானுடத்தின் விழுப்பம்; சிறப்பு. ஒழுக்கமுடைய உலகம் வளரும்! வாழும்!

     

     

     

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 8ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    ஏதப்பட்டாய் இனி மேற்படும் பாட்டை இது என்றறிந்து
    போதப் பட்டாயில்லை நல்லோரிடம் சென்று புல்லறிவால்
    வாதைப் பட்டாய், மடமானார் கலவி மயக்கத்திலே
    பேதைப் பட்டாய் நெஞ்சமே! உனைப் போல் இல்லை பித்தருமே. 1.

    என் நெஞ்சே! கேடு கெட்ட என் மனமே! பெரியோர்களைத் துணை கொண்டு நல்வழிப் படவில்லை; உன்னுடைய பேதமையால் நல்லவர்களிடம் சென்றடைந்தும் தவறுகளைச் செய்து வேதனைப் பட்டாய்; மான்போன்ற அழகிய கண்களைக் கொண்ட பெண்களின் கலவி மயக்கத்தில் வீழ்ந்து கிடந்தாய்; உன்னைப் போல வேறு பித்தர் எவரும் உண்டோ?

    பேய்போல் திரிந்து பிணம் போல் கிடந்து இட்ட பிச்சையெல்லாம்
    நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன் மங்கையரைத்
    தாய்போல் கருதித் தமர் போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லிச்
    சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே. 2.

    மெய்ஞானம் கைவரப் பெற்றவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? பேய் போல அங்குமிங்குமாய் அலைந்து திரிவர்; உயிரற்ற உடல்போல கிடைத்த இடத்தில் படுத்துப் புரண்டு கொண்டும்; பிக்ஷை பாத்திரத்தில் எவர் உணவு இட்டாலும் அதனை வாங்கி நாயைப் போல உண்டு கொண்டும்; நரியைப் போல ஒளிந்து மறைந்து ஓடி ஒளிந்து கொண்டும்; பெண்களைக் கண்டால் தாய் என்ற உணர்வோடு வணங்கிப் போற்றிக் கொண்டும்; ஊரார் அனைவரையும் சுற்றத்தார் போலக் கருதிக் கொண்டு அன்போடு பழகியும்; சின்னக் குழந்தையைப் போல கல்மிஷம் இல்லாமல் தெளிந்த அறிவோடு இருப்பர்.

    விடக்கே, பருந்தின் விருந்தே, கமண்டல வீணின் இட்ட
    முடக்கே, புழு வந்து உறைவிடமே, நலமுற்றும் இலாச்
    சடக்கே, கருவி தளர்ந்து விட்டால் பெற்ற தாயும் தொடாத்
    தொடக்கே, உனைச் சுமந்தேன் நின்னின் ஏது சுகம் எனக்கே. 3.

    அட மாமிசப் பிண்டமே! (விடக்கு = மாமிசம்); பருந்துகளுக்கு இனிய விருந்தே! கையில் கமண்டலம் சுமக்கும் பிரம்மன் படைத்த கோணலே (முடக்கு = கோணலான); புழுக்களுக்கு உணவாகி, அவை வந்து குடியேறும் மாமிசப் பிண்டமே; நன்மை எதையும் செய்யாத உடலே (சடக்கு = உடல்); உடலின் அங்கங்கள் செயல் இழந்தால் அன்னை கூடத் தொடத் தயங்கும் மிருகமே (தொடக்கு = மிருகம்); உன்னை இது வரை சுமந்துகொண்டிருக்கின்றேனே, உன்னால் என்ன சுகத்தைக் கண்டேன்? சொல்.
    (தன் உடலைத் தானே விமரிசித்து அதற்காக வருந்துவதாக அமைந்த பாடல்)

    அழுதால் பயன் என்ன, நொந்தால் பயன் என்ன ஆவதில்லை
    தொழுதால் பயன் என்ன, நின்னை ஒருவர் சுட உரைத்த
    பழுதால் பயன் என்ன, நன்மையும் தீமையும் பங்கயத்தோன்
    எழுதாப்படி வருமோ? சலியாது இரு என் ஏழை நெஞ்சே! 4.

    என் அருமை ஏழை நெஞ்சமே! உன் அறியாமையால் நீயாகவே தேடிக்கொண்ட துன்பங்களை எண்ணி அழுது வருந்துவதால் என்ன பயன்; அதற்காக மனம் நொந்து போவதாலும் என்ன பயன்; அந்த நிலையில் போய் தொழுவதாலும் என்ன பயன்; உன் மனம் வருந்தும்படி தவறுகளை எடுத்துக் காட்டிப் பேசுவதாலும் என்ன பயன்; இவற்றால் எல்லாம் ஆவது எதுவும் இல்லை. இவைகள் எல்லாம் முன்பே பிரம்மன் உன்னைப் படைக்கும்போது உனக்கென்று எழுதிவைக்கவில்லை யென்றால் இவற்றால் எல்லாம் எந்தப் பயனும் இல என்பதை உணர்ந்து மனம் வருந்தாமல் இரு.

    ஊரீர்! உமக்கோர் உபதேசம் கேளும்! உடம்பு அடங்கப்
    போரீர் சமணைக் கழுவேற்று நீற்றைப் புறந்திண்ணையிற்
    சாரீர், அனதலைச் சுற்றத்தை நீங்கிச் சகம் நகைக்க
    வேரீர், உமக்கவர் தாமே தருவர் இணையடியே. 5.

    ஊராரே கேளுங்கள்! உங்களுக்கெல்லாம் நான் செய்யும் உபதேசம் இதைக் கேளும்; முன்பு சமணர்களைக் கழு மரத்திலேற்றிய சைவர்கள் அணியும் திருநீற்றினை உடலெங்கும் பூசிக்கொண்டு வீட்டின் முன்புறத் திண்ணையிற் படுத்து உறங்குங்கள்; கூட்டம் கூடி உறவென்று சொல்லியும், சுற்றம் என்று சொல்லியும் திரியும் கூட்டத்தை விட்டு நீங்கி உலகம் சிரித்தாலும் இரந்துண்டு வாழ்வாயாக! அப்படிச் செய்வாயானால் எம்பெருமான் உம்மை ஆட்கொண்டு தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்வார்.

    நீற்றைப் புனைந்தென்ன, நீராடப் போயென்ன நீ மனமே
    மாற்றிப் பிறக்க வகை அறிந்தாயில்லை மாமறை நூல்
    ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்
    ஆற்றிற் கிடந்தும் துறை அறியாமல் அலைகின்றதே. 6.

    உடலெங்கும் திருநீற்றைப் பூசியென்ன; புனிதத் தலங்களுக்குச் சென்று நதிகளில் நீராடியதால் என்ன; ஏ மனமே! இப்படி அஞ்ஞானியாக அன்றி மெய்ஞானியாக மாறிப் பிறக்க வழி அறிந்திருக்க வில்லை; சதுர் வேதங்களைப் படித்து உணர்ந்து கொள்ளவோ, ஏழுகோடி மந்திரங்களின் பெருமையை உணரவோ உன்னால் முடியவில்லையே, என்ன பயன். ஆற்றிலேயே மிதந்து கொண்டிருந்தாலும் தோணி தான் ஒதுங்க வேண்டிய துறை அறியாமல் தத்தளிக்கின்றதே! என்ன செய்ய.

    செல்வரைப் பின் சென்று உபசாரம் பேசித் தினந்தினமும்
    பல்லினைக் காட்டிப் பரதவியாமற் பரானந்தத்தின்
    எல்லையில் புக்கு நல் ஏகாந்தமாய் எனக் காமிடத்தே
    அல்லல் அற்று என்றிருப்பேன் ஆலநீழல் அரும் பொருளே. 7.

    ஆல விருட்சத்தின் கீழமர்ந்த குரு தட்சிணாமூர்த்திப் பெருமானே! செல்வந்தர்களைத் தேடிச் சென்று அவர்கள் மனம் மகிழும்படி பேசி மகிழ்வித்து, பல்லெல்லாம் தெரியக் காட்டிக் கெஞ்சிக் கூத்தாடி வாணாளை வீணாளாக ஆக்காமல் பரமானந்த வாழ்வின் எல்லை கண்டு ஏகாந்தமாய் அமர்ந்து அல்லல் நீங்க ஆனந்த வாழ்வை என்று பெற்று வாழ்வேன் சொல்.

    ஓங்காரமாய் நின்ற வத்துவிலே ஒரு வித்து வந்து
    பாங்காய் முளைத்த பயன் அறிந்தால் பதினாலு உலகும்
    நீங்காமல் நீங்கி நிறையா நிறைந்து நிறையுருவாய்
    ஆங்காரமானவர்க்கு எட்டாக்கனி வந்து அமர்ந்திடுமே. 8.

    ஓங்காரமாய் விளங்கும் பிரணவப் பொருளதனுள் வந்து விழுந்த வித்தொன்று முளைத்து செடியாகி மரமாகி செழித்தோங்குவதன் நோக்கம் என்னவென்ற உண்மையை அறிந்து கொண்டால், ஈரேழு பதினான்கு உலகத்திலும் நீக்கமற நிறைந்து பரிபூரணமாக விளங்குகின்ற நிறைந்த ஆனந்தம் எதுவோ, மனதில் மமதை எனும் அகங்காரம் கொண்டவர்க்கு எட்டாத கனி எதுவோ அந்தப் பரம்பொருள் எனும் கனி வந்து நம் மனதில் அமர்ந்து கொண்டு அருள் பாலிக்கும்.

    விதியார் படைப்பும் அரியார் அளிப்பும் வியன் கயிலைப்
    பதியார் துடைப்பும் நம்பால் அணுகாது பரானந்தமே
    கதியாகக் கொண்டு மற்றெல்லாம் துயிலிற் கனவென நீ
    மதியாதிரு மனமே இதுகாண் நன் மருந்து உனக்கே. 9.

    முத்தொழில் புரியும் தெய்வங்களில் பிரம்மனின் படைப்பினால் உண்டாகும் இன்ப துன்பங்களும், காத்திடும் கடவுளாம் ஹரியின் கொடைகளும், கயிலையங்கிரி வாழ் பரமேஸ்வரனின் அழிக்கும் தொழிலும் அவற்றால் உருவாகும் விளைவுகளும் நம்மை என்றும் அண்டவே அண்டாது மனமே, பரம்பொருளை மனதில் தியானித்துக் கொண்டு அவனே எல்லாம் என்று இருந்தால், உலகில் மற்றெல்லாமுமே உறக்கத்தில் காணும் கனவு போல நீ அவற்றைப் பற்றி கவலை கொள்ளாதிரு மனமே, இதுதான் உனக்கு நல்ல மருந்து.

    (மகாகவி பாரதியும் “உலகெலாம் ஓர் பெருங்கனவு, அஃதுளே உண்டு, உறங்கி, இடர் செய்து செத்திடும் கலக மானுடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவாகும்; இதனிடை சில தினங்கள் உயிர்க்கமுதாகியே செப்புதற்கரிதாக மயக்குமால்; திலக வாணுதலார் தரும் மையலாம் தெய்விக கனவன்னது வாழ்கவே” எனும் வரிகளை நினைவு கொள்ளலாம்.)

    நாய்க்குண்டு தெண்டு, நமக்குண்டு பிச்சை, நமனை வெல்ல
    வாய்க்குண்டு மந்திர பஞ்சாக்ஷர மதியாமல் வரும்
    பேய்க்குண்டு நீறு, திகப்புண்டு நின்ற பிறவிப் பிணி
    நோய்க்குண்டு தேசிகன் தன்னருள் நோக்கங்கள் நோக்குதற்கே. 10.

    குப்பை மேடுகளில் நாய்களுக்கு உணவாக மனிதர் வீசியெறிந்த எச்சில் இலைகள் இருக்கின்றன; மனிதருக்கோ வீடுதோறும் சென்று கேட்டுப் பெறும் பிக்ஷை உணவு கிடைக்கும்; நம்மைக் கொண்டு போக வருகின்ற நமனை வெல்ல நம் வாய் உச்சரிக்க பஞ்சாக்ஷர மந்திரமும் உண்டு; நாம் அந்த சிவபெருமான் அடிமை என்று உணராது நம்மை பீடிக்க வரும் பேய்களை விரட்ட நெற்றியில் பூசும் திருநீறு உண்டு; பிறவிப் பிணி நீங்கப் பெம்மான் அருட்பார்வை நமக்கு எப்போதும் உண்டு என்பதை தெளிந்திரு.

    (இன்னும் வரும்)

    Share
  • இந்திய அமெரிக்கர்களின் இன்னும் சில முறையற்ற செயல்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்காவில் இங்கொன்றும் அங்கொன்றுமாக தவறுகள் நிகழ்ந்தாலும் நீதிமன்றங்கள் ஒழுங்காகச் செயல்படுகின்றன. நீதிபதிகள் நாணயமாக நடந்துகொள்கிறார்கள். சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படுகின்றன. அமெரிக்காவிலும் 150 வருஷங்களுக்கு முன்னால் நிறைய ஊழல் இருந்தது. ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல அவையெல்லாம் மறைந்துவிட்டன. இப்போது பொதுமக்களில் பலர் நாணயமாக நடந்துகொள்கிறார்கள். சட்டம், ஒழுங்கை மதிக்கிறார்கள். சட்டத்தை மீறிச் செயல்படத் துணிவதில்லை. சட்டத்தை மீறுபவர்களுக்குத் தண்டனை கண்டிப்பாகக் கிடைக்கும், காவலர்களுக்கோ அதிகாரிகளுக்கோ லஞ்சம் கொடுத்துத் தப்பித்துக்கொள்ளலாம் என்ற வாய்ப்பும் இல்லை என்பதும் காரணங்களாக இருக்கலாம். ஆயினும் அறமற்ற செயலைச் செய்யும் மனப்பாங்கு இப்போது அமெரிக்கர்களிடம் இல்லை. ஆனால் அமெரிக்காவிற்கு வரும் இந்தியர்களுக்கு அறமற்ற செயலைச் செய்யக் கூடாது என்ற மனப்பாங்கு இருக்கிறது என்று சொல்ல முடியாது.

    பல வருடங்களுக்கு முன்னால் தொலைபேசிக் கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருந்த காலம். அமெரிக்காவிலிருந்து இந்தியாவில் உறவினர்களைக் கூப்பிட வேண்டுமென்றால் ஒரு நிமிடத்திற்கு மூன்று டாலர் கட்டணம். அதிலும் மாணவர்களாக வந்தவர்களுக்குப் பண நெருக்கடி அதிகம். இந்தியாவிலிருந்து பெற்றோரோ மற்ற உறவினர்களோ கூப்பிட்டாலும் அதற்கும் நிறையச் செலவாகும். அதனால் அதுவும் கட்டுப்படியாகாது. தாங்கள் நலமாக இருக்கிறோம் என்பதைப் பெற்றோர்களுக்குத் தெரிவிப்பதற்கு ஒரே வழி (கடிதங்கள் எழுதுவதைத் தவிர) அமெரிக்காவிலிருந்து பெற்றோர்களைக் கூப்பிடுவதுதான். தொலைபேசியில் பேச ஆரம்பித்து 59 நொடிகளுக்குள் ஏதாவது கோளாறு ஏற்பட்டு தொலைத்தொடர்பைத் துண்டிக்க நேர்ந்தால் தொலைபேசிக் கம்பெனிக்குப் பணம் எதுவும் கட்டத் தேவையில்லை. இதைப் பயன்படுத்திப் பல மாணவர்கள் 58 நொடிகள் பேசிவிட்டு ஏதோ கோளாறு என்று கம்பெனியிடம் சொல்லிவிட்டுத் தொலைபேசியை வைத்துவிடுவார்கள். இப்போது இதெல்லாம் தேவையில்லாமல் போய்விட்டது. ஒரு மாதத்திற்கு $35 கட்டிவிட்டால் இந்தியாவில் உள்ளவர்களோடு மட்டுமல்ல, உலகின் 60 நாடுகளில் இருப்பவர்களோடு காலவரையின்றிப் பேசலாம்.

    அமெரிக்காவில் கார்ப்பரேட்டுகள் எத்தனை தகிடுதத்தங்கள் புரிந்தாலும் அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகள் கொடுப்பார்கள். அவற்றில் ஒன்று வாங்கிய சாமான்களை பொருட்களைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் திருப்பிக் கொடுக்கலாம் என்பது. பொருள் வாங்கியதற்குரிய ரசீதை வைத்திருந்தால் முழுப் பணமும் திரும்பக் கிடைத்துவிடும். (உணவுப் பொருட்களுக்கும் இந்தச் சலுகை உண்டு; ஆனால் ஒரு சில நாட்களில் திருப்பிக் கொடுக்க வேண்டும்.) ஒரு முறை ஒரு பெண் டிபார்ட்மெண்ட் கடையில் பனிச்சறுக்கு விளையாடும்போது போட்டுக்கொள்ளும் உடையை வாங்கிக்கொண்டு ஸ்விட்ஸர்லாந்திற்குப் போய் அங்கு அதை உபயோகித்துவிட்டு நான்கு மாதங்கள் கழித்துக் கடைக்கு வந்து தான் அதைப் போட்டுக்கொண்டு விளையாடியபோது அதில் இருந்த நிறைய மினுக்குத் துகள்கள் உதிர்ந்துவிட்டதாகவும் தனக்கு அது மிகவும் சங்கடத்தைக் கொடுத்ததாகவும் கூறித் திருப்பிக் கொடுக்க முயன்றார். கடையின் அந்தப் பொருள் விற்கும் பகுதியின் மேனேஜர் மறுப்பு எதுவும் சொல்லாமல் திருப்பி வாங்கிக்கொண்டார். இப்படி வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தும் கம்பெனிகள் அவர்கள் தலையில் வேறு விதமாக மிளகாய் அரைப்பது வாடிக்கையாளர்களுக்குத் தெரியாது. இது ஒரு அதீத உதாரணம் என்றாலும் அமெரிக்காவில் வாங்கிய பொருளைத் திருப்பிக் கொடுப்பது என்பது சாதாரணமாக நடைபெறும் விஷயம். குறிப்பாக கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில் பரிசு பெற்றவர்கள் பரிசு தங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் அதைக் கடையில் கொடுத்துவிட்டு தங்களுக்குப் பிடித்த ஒன்றை வாங்கிக்கொள்ளலாம். தாங்கள் வாங்கும் பொருள் பரிசின் விலையை விடக் கூடுதலாக இருந்தால் அதற்குரிய பாக்கிப் பணத்தைக் கொடுத்து வாங்கலாம். விலை குறைவாக இருந்தால் அந்தப் பணத்தைக் கடை, கார்டாக கொடுத்துவிடும். அப்போதைக்கு எதுவுமே பிடிக்கவில்லையென்றாலும் பரிசுப் பொருளுக்குரிய பணத்தை கடை கொடுக்கும் கிரெடிட் கார்டாக வாங்கிக்கொண்டு எப்போதாவது அதை உபயோகித்துக்கொள்ளலாம். அதற்குக் காலவரையறை இல்லை. பரிசாகக் கொடுப்பதற்காக அல்லாமல் தங்களுக்காக வாங்கினாலும் அதைத் திருப்பிக் கொடுக்கலாம். ஆனால் அமெரிக்கர்கள் பொருள்கள் வாங்கும்போது திருப்பிக் கொடுப்பதற்காகவென்றே வாங்குவதில்லை. பிடிக்காவிட்டால் திருப்பிக் கொடுக்கிறார்கள் அவ்வளவே. ஆனால் இந்தியர்கள் கணினி, கேமரா போன்ற சில சாமான்களை வாங்கி உபயோகித்துவிட்டு தவணைக்குள் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். இது பிடிக்காமல் திருப்பிக்கொடுக்கும் ரகத்தில் வருவதில்லை. உபயோகிப்பதற்காகவென்றே வாங்கிவிட்டு, உபயோகித்துவிட்டுத் திருப்பிக் கொடுப்பது. இது அறநெறியற்ற செயல் அல்லவா?

    இப்போது அமெரிக்காவில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள். அதிலும் கணினிக் கம்பெனிகளுக்காகச் சில மாதங்கள் அமெரிக்காவில் தங்கி அவர்களுக்குத் தேவையான வேலைகளைச் செய்து கொடுத்துவிட்டுத் திரும்பிப் போகும் கணினி வல்லுநர்கள் நிறையப் பேர். இப்படித் தற்காலிகமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களுக்கு அமெரிக்க உணவு அவ்வளவு பழகியிருக்காது. இங்கேயே நிறைய வருடங்கள் தங்கிவிட்ட இந்தியர்களும் அமெரிக்க, மற்றும் மற்ற நாட்டு உணவு வகைகளைச் சாப்பிடப் பழகிக்கொண்டாலும் இந்திய உணவுகளையும் இன்னும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இவர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு வகைகள் இந்தியாவிலிருந்தும் காய்கறிகள் அமெரிக்காவின் மற்றப் பகுதிகளிலிருந்தும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்தும் வருகின்றன. அமெரிக்க இந்தியர்களின் இந்த உணவுத் தேவையைப் பயன்படுத்திக்கொண்டு இந்த உணவுகளை அமெரிக்காவில் வினியோகம் செய்யும் கம்பெனிகள் – இவை இந்தியர்களால் நடத்தப்படுபவை – சில சாமான்களில் அதை விட விலை குறைவான சாமான்களைக் கலந்துவிடுகிறார்கள். உதாரணமாக கடலைப் பருப்பில் பட்டாணிப் பருப்பைக் கலந்துவிடுகிறார்கள். பார்க்க அவை இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கும். உற்றுப் பார்த்தால்தான் அவற்றுக்குரிய வித்தியாசம் தெரியும். ஓடிக்கொண்டே இருக்கும் அமெரிக்கர்களுக்கு இடையே வாழும் இந்தியர்களுக்கும் இதெற்கெல்லாம் நேரம் இருப்பதில்லை. அதே மாதிரி கடலை மாவில் பட்டாணிப் பருப்பு மாவைக் கலந்துவிடுகிறார்கள். அமெரிக்காவிற்குள் வரும் எல்லா உணவுப் பொருள்களின் தரத்தையும் பரிசீலித்து அனுப்ப அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் துறை (Food and Drug Administration) இயங்கி வருகிறது. அரிசியில் மணலைக் கலந்தாலோ அல்லது புழுக்கள் இருந்தாலோ இந்தத் துறை அதைக் கண்டுபிடித்துத் தடைசெய்துவிடும். ஆனால் கடலைப் பருப்பில் பட்டாணிப் பருப்பைக் கலந்தால் இவர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியாது.

    இந்தியாவிலிருந்து முருங்கைக் காய்களைப் பனிக்கட்டியில் உறையவைத்துக் (freeze) கொண்டுவருகிறார்கள். ஒரு முறை நான் முருங்கைக்காய்களை வாங்கியபோது அவை மிகவும் முற்றிப் போயிருந்தன. இன்னொரு முறை வாங்கியபோது மிகவும் பிஞ்சாக இருந்தன. இரண்டு முறையும் உபயோகத்திற்கு லாயக்கற்றவையாக இருந்தன. மொத்தத்தில் ஒன்றிரண்டு அப்படி இருந்தால் பரவாயில்லை. அதில் இருந்த எல்லாமே முற்றலாகவோ அல்லது மிகவும் பிஞ்சாகவோ பார்த்துப் பார்த்துத் தேர்தெடுத்தவை போல் இருந்தன. இது ஒரு வகை ஏமாற்று. உறையவைத்துப் பாக்கெட்டுகளில் வருவதால் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்து வாங்க முடியாது. அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு முற்றல் எது, பிஞ்சு எது என்பதெல்லாம் மறந்திருக்கலாம். மேலும் இந்தியாவிற்கு அடிக்கடி போகாதவர்கள் பலருக்கு இதுவாவது கிடைக்கிறதே என்ற மனப்பான்மைதான் இருக்கிறது. மேலும் இதையெல்லாம் கண்டுகொள்ள இவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. நான் ஒரு முறை அந்தக் கம்பெனி ஆட்களிடம் முறையிட்டேன். எங்கள் கம்பெனியில் உள்ள தர மதிப்பீடு செய்யும் குழுவிடம் கூறியிருகிறேன். இனி நன்றாக இருக்கும் என்றார்கள். அத்தோடு சரி. எந்த வித மாற்றமும் இல்லை. தரம் குறைந்த சாமான்களை வாங்காமல் இருப்பதே இவர்களுக்குப் பாடம் கற்பிக்கச் சிறந்த வழி. அதைச் செய்ய யாரும் தயாராக இல்லாத வரை இவர்களும் இப்படித் தரம் குறைந்த சாமான்களைத்தான் அமெரிக்காவில் விற்பார்கள்.

    அமெரிக்காவில் ஆண்களும் பெண்களும் திருமணம் செய்துகொள்வதற்கு முன் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொள்வதற்காக சேர்ந்து பழகுவார்கள். இதற்கு ‘dating’ என்று பெயர். முதல் தடவை பார்த்த பெண்ணையோ ஆணையோ பிடித்துப் போக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கொஞ்ச நாட்கள் பழகிவிட்டுப் பிடிக்கவில்லையென்றால் இன்னொரு துணையைத் தேடலாம். ஆனால் பழகுவதற்காக மட்டும் அமெரிக்கர்கள் ‘dating’ பண்ணுவதில்லை. இப்போது ‘dating’ பண்ணிக்கொண்டிருக்கும்போதே கணவன், மனைவி போல் நிறைய ஜோடிகள் குடும்பம் நடத்துகிறார்கள். ஆனாலும் அமெரிக்கர்கள் எப்படியும் இந்த உறவை விட்டுப் போகப் போகிறோம் என்று ‘dating’ பண்ணுவதில்லை. இதிலும் சில இந்தியப் பையன்கள் முறையற்ற செயலில் இறங்குகிறார்கள். அமெரிக்கப் பெண்களுடன் கொஞ்ச நாட்கள் ஜாலியாக இருந்துவிட்டுப் பின் இந்தியாவிற்குப் போய் பெற்றோர் பார்த்து முடித்துவைக்கும் பெண்ணை மணந்து கொண்டுவிடுகிறார்கள். அமெரிக்கப் பெண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு இது ஒன்றும் பெரிய இழப்பல்ல. பெண்மை, கற்பு என்பதற்கெல்லாம் அமெரிக்க அகராதியில் அர்த்தங்களே வேறு. ஆனாலும் எப்படியும் பெற்றோர் பார்த்த பெண்ணைத்தான் மணமுடிக்கப் போகிறார்கள் என்று உறுதியாக இருக்கும்போது ஏன் இப்படிப்பட்ட செயல்களில் இறங்க வேண்டும்?

    Share
  • சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி 8

    பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ

    சைவத்தைப் பற்றி எழுதி வருவதில் சிலருக்கு வருத்தம் ; வைணவத்தை விட்டுவிட்டீர்களே என்று. அவர்கள் மன நிறைவுக்காக வைணவத்தின் பக்கம் கொஞ்சம் எட்டிப் பார்ப்போமே! இதோ வைணவக் காவியமான கம்பராமாயணம் : வை.மு.கோ பதிப்பு. மாரீசன் வதைப் படலம் (சில பதிப்புகளில் இப்பாடல் சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலத்தில் இடம் பெறுகிறது). இராமனால் நிராகரிக்கப்பட்டு இலக்குவனால் உறுப்பு நலங்கள் அழிந்த சூர்ப்பணகை, தன் அண்ணன் இராவணனிடம் வந்து முறையிடுகிறாள். ; சீதையைப் பற்றிக் கூறி அவன் காமத்தைத் தூண்டுகிறாள். “கடவுளர்கள் தத்தம் மனைவியரைத் தத்தம் உடல்களிலேயே இடம் தந்து வைத்திருக்கின்றனர் ; நீ சீதையைப் பெற்றால் எங்கே வைத்து வாழ்வாய் ?” என்ற கேள்வியைத் தூக்கிப் போடுகிறாள்.இங்கே முழு முதல் கடவுளான சிவ பெருமானைத்தான் கம்பர் முதலில் குறிப்பிடுகிறார். இருப்பினும் கம்பநாட்டாழ்வார் வைணவக் கொழுந்து அல்லவா! அதனால் பிற கடவுளர் மனைவியர் பெயர்களைக் கூடச் சொல்லாமல், தன் சமயக் கடவுளின் மனைவியை மட்டும் “பங்கயத்து இருந்த பொன்” என வருணிக்கிறார். இதோ அப்பாடல் :

    “பாகத்தில் ஒருவன் வைத்தான்; பங்கயத்து இருந்த பொன்னை
    ஆகத்தில் ஒருவன் வைத்தான்; அந்தணன் நாவில் வைத்தான்;
    மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை-
    மாகத் தோள் வீர!-பெற்றால், எங்ஙனம் வைத்து வாழ்தி?”.

    இப்பாடலில் நாம் கவனிக்க வேண்டியது யார் யார் தத்தம் மனைவியருக்கு எங்கே இடம் கொடுத்தார்கள் என்பதைத்தான். அந்தணன் ஆகிய பிரமன் கலைமகளைத் தன் நாவிலே வைத்துக்கொண்டானாம். எல்லாக் கணவர்களையும் போல அவனுக்கும் வாய் திறந்து பேச்சும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. திருமாலோ நல்ல கணவனாகத் திருமகளைத் தம் மார்பில் (இதயத்தில்) ஏந்திக்கொண்டார். பாவம் பரமசிவம் மட்டும் தம் உடலில் பாதியைப் பாகம் செய்துகொடுக்க வேண்டியதாயிற்றாம்!

    இதற்குப் புராணத்தில் கதை ஒன்று உண்டு.பிருங்கி முனிவர் தீவிரச் சிவ பக்தர். கையிலாயம் சென்ற போது சிவபெருமானும் பார்வதி தேவியும் அருகருகே நெருக்கமாக அமர்ந்து இருந்தனராம்.தேவியை வணங்க விரும்பாத முனிவர் சிந்தித்தார். வழி ஒன்று புலப்பட்டது. வண்டு உரு எடுத்தார். Photoshop -இல் செய்வது போல அம்மையை மட்டும் தனியே கத்தரித்து விட்டு அப்பனைச் சுற்றி வந்து வணங்கினாராம். அதனால் தேவி கோபம் கொண்டு முனிவரைச் சபித்துவிட்டாராம். இனி என்றுமே இறைவனை விட்டுப் பிரியக் கூடாது ; அதற்கு என்ன செய்யலாம் எனத் திருக்கேதாரம் என்னும் திருத்தலத்தில் இருந்த கௌதம முனிவரைக் கேட்க அவர் கேதாரகௌரி விரதத்தை உபதேசித்தாராம். அதன் படிச் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து விரதம் இருந்தார் தேவி. மனம் மகிழ்ந்த பரமசிவன் தேவி வேண்டியபடியே தம் உடலின் இடப் பாகத்தில் இடம் தந்தாராம். அதனால் ‘அர்த்தநாரீஸ்வரன்’ என்னும் பெயரையும் பெற்றார்.ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போல சிவனும் சக்தியும் ஒன்றே என்பதை நிலைநாட்டுகிறது இக்கதை என்பர்.

    கணவனும் மனைவியும் இப்படித்தான் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும் ஆணும் பெண்ணும் சமம் என்பதையும் இக்கதை உணர்த்துகிறது. மணவிலக்கு அதிகரித்து வரும் இக்காலத்தில் இக்கதை மிகவும் தேவைப் படுகிறது. ‘அர்த்தநாரீஸ்வரன்’ என்பதை மாதுடையபாகன், பாகம் பிரியார், மாதொரு கூறர்…என்றெல்லாம் மொழிபெயர்த்து நம்மவர் பாடி உள்ளனர். கடும் தவம் மேற்கொண்ட அன்னை பார்வதி, கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் ஈசனது இடப்பாகத்தைப் பெற்றார். அப்படி ஈசன் மலைமீது ஜோதியாக எழுந்தருளி, அர்த்தநாரீசுவரராகக் காட்சி தந்த தலம் ” திருவண்ணாமலை ” என்கிறது அருணாசலப் புராணம். தென்னகத்திலேயே திருச்செங்கோட்டில்தான் அர்த்தநாரீசுவரருக்கென்று தனிக் கோவில் உள்ளது.இறைவனின் இடப்பக்கத்தில்தான் இறைவிக்கு இடம் ; ஆனால், திருவதிகை வீராட்டானத்தில் உமையம்மை ஈசன் உடலில் வலப் பக்கம் இருக்கக் காணலாம். இவை தனிச் செய்திகள்.

    இத் திருகோலத்தைச் சைவப் பெரியார்கள் பலரும் பாடிப் பரவி இருக்கின்றனர் :

    “வெந்த வெண்நீறு அணிந்து விரிநூல் திகழ்மார்பின் நல்ல
    பந்தணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்து அருளி”
    என்று திருஞானசம்பந்தர் திருச்செங்கோட்டுத் தேவாரத்தில் பாடினார்.

    மணிவாசகப் பெருமானும்,
    “தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
    பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
    சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மைக்
    கோலமே நோக்கிக் குளிர்ந்து ஊதாய் கோத்தும்பி”
    என்று திருவாசகத்தில் பாடியுள்ளார்.

    அதிவீரராம பாண்டியர், கரிவலநல்லூர் அந்தாதியில்
    “உரகா பரணத் திருமார்பும் உமைஒப் பனையாள் இடப்புறமும்,
    சிரமா லிகையும் புரிசடையும் செய்ய வாயும் கறைமிடறும்
    வரதா பயமும் மழுமானும் வயங்கு கரமும் மலரடியும்
    கருவா புரியான் வெளிப்படுத்திக் காட்சி கொடுத்து நின்றானே” எனக் கண்ணுள் ஓவியம் தீட்டிக் காட்டுகிறார்.

    இத் திருவடிவை வட மொழியில், ‘அர்த்தநாரீஸ்வரர்’ என்பர். அர்த (ardha) என்றால் பாதி என்பது பொருள் ; நாரீ = பெண் ; ஈஸ்வரர் என்றால் இறைவனாகிய சிவன்.அதாவது பாதி பெண்ணாக விளங்கும் இறைவன் என்பது முழுப் பொருள். அப்படியானால் இடப்பக்கம் பெண்மைத் தன்மையுடனும் வலப்பக்கம் ஆண் பண்புகளுடனும் இருப்பதாகப் பொருள் வரும். அதாவது ஆண் 50 % பெண் 50 % என்று ஆகும் ஆனால் இதனை விடச் சிறந்த பொருள் தரும் தொடர் ஒன்றை நம் முன்னோர் தந்திருக்கிறார்கள். அச்சொல் : ‘அம்மையப்பர்’.

    இச்சொல் பல பொருள்களை உள்ளடக்கியதாக விளங்குகிறது. அம்மையின் பண்புகளும் அப்பனின் இயல்புகளும் கலந்து அமைந்துள்ளன ; பெண் பண்புகள் அதிகமாக அமையும் போது பெண்ணாகவும் ஆண் தன்மைகள் மிகுதியாக ஆகும் போது ஆணாகவும் விளங்குதல் ; பெண்ணாக இருந்தாலும் ஆண் தன்மைகள் மறைவதில்லை, ஆணாக இருப்பினும் பெண் தன்மைகளும் மறையாமல் இருக்கும்… இவற்றை எல்லாம் பொதிந்து வைத்துள்ள சொல்தான் ‘அம்மையப்பர்’..

    அதனால்தான் நாயன்மார்களும் சிவனடியார்களும் அச்சொல்லைப் பெய்து இறைவனை வழிபட்டார்கள் ; பாடல்களைப் பாடி மகிழ்ந்தார்கள் :காண்க –

    அம்மையப்ப ரேஉலகுக் கம்மையப்பர் என்றறிக
    அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் – அம்மையப்பர்
    எல்லா உலகிற்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
    அல்லார்போல் நிற்பர் அவர். எனத்

    திருக்களிற்றுப்படியார் திருக்கடவு உய்யவந்த தேவ நாயனார் நான்கு முறை அம்மையப்பரை அழைக்கிறார்.

    மாணிக்கவாசகரோ,
    “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே …
    இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே” (திருவாசகம் : பிடித்த பத்து – முத்திக்கலப்புரைத்தல்)
    என்று பாடி, தப்பிக்க முடியாதபடி இறைவனைத் தாம் பிடித்துவிட்டதாகப் பெருமிதம் கொள்கிறார்.

    வள்ளலாரோ,
    ” அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
    அம்மைஅப் பாஇனி ஆற்றேன்.”
    என்று அழுது அவனருள் வேண்டுகிறார்.

    அம்மையும் அப்பனுமாக இறைவன் இருக்கிறான் என்ற ஈடு இணையற்ற இத்தத்துவத்தை உலகுக்குச் சொன்னது சைவம். (அந்த இறைவனுக்குப் பிள்ளைகள் ஆகிற) நாமும் கருக்கொண்ட நாள் முதல் மண்ணுக்கு எருவாகும் நாள் வரை அம்மையப்பனாகத் தான் இருக்கிறோம். இதனை, இக்கால அறிவியல் தெள்ளத் தெளிவாக ஐயத்துக்கு இடமின்றி எடுத்துரைக்கிறது

    அம்மையப்பனாகத் தான் கரு உருவாகிறது. ஒன்பதாம் வாரம் வரை ஆண் பெண் வேறுபாடு இல்லாமலே கரு வளர்கிறது. காண்க :

    Until the ninth week of fetus development, the embryonic reproductive apparatus is the same one for the two sexes. (http://www.baby2see.com/gender/external_genitals.html)

    ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் இருப்பதற்குக் காரணம் ஆண்மை / பெண்மைச் சுரப்பு நீர்மங்கள் ( male/female harmones). ஆண்மைச் சுரப்பு நீர்மங்கள் ‘androgens’ எனப்படும். பெண்மைச் சுரப்பு நீர்மங்களுக்கு ‘estrogens’. என்று பெயர். ‘அம்மையப்பர்’ தத்துவம் உடலில் மட்டும் அல்ல இந்தச் சுரப்பு நீர்மங்களிலும் உண்டு. ஆம் இவை இரண்டுமே ஆண் உடலிலும் உள்ளன ; பெண் உடம்பிலும் உண்டு – வெவ்வேறு அளவுகளில், விகிதங்களில்.( Men and women produce both of these classifications of hormones that cause behaviors classified as male or female …but they produce them in varying amounts. – http://www.wisegeek.org/what-are-male-hormones.htm).

    முதல் ஒன்பது வாரங்கள் வரை அம்மையுமாக இல்லாமல் அப்பனுமாக இல்லாமல் இருந்த கரு (க்குழந்தை – ‘fetus’) உடலில் இந்தச் சுரப்பு நீர்மங்கள் சுரக்கத் தொடங்குகின்றன. எது அதிகமாகச் சுரக்கிறதோ அதுவாக அக்கரு உருப்பெறுகிறது. ஆண்மைக்குரிய சுரப்பு அதிகமாக இருந்தால் ஆண்மைக்கு உரிய கூறுகள் வளரத் தொடங்குகின்றன. பெண்மைக்குரிய பண்புகள் / உறுப்புகள் தளரத்தொடங்கும் ; பெண்மைக்குரிய சுரப்பு அதிகமாக இருந்தால் கரு பெண் குழந்தையாகும். ஆண்மைக்குரிய பண்புகள் / உறுப்புகள் குறையத் தொடங்கும். இப்படி வளர்வதை ‘progressive traits’ என்றும் தளர்வதை ‘regressive traits’ எனவும் ஆங்கிலத்தில் கூறுகிறார்கள்.

    ‘ஆண் மிகில் ஆணாகும் ; பெண் மிகில் பெண்ணாகும்’ என்று திருமூலர் சொன்னது இங்கும், இதற்கும் பொருந்தும்.முதலில் வேறுபாடு இல்லாமலே உருவான பிறப்பு உறுப்புகள் இப்போது ஆணாகவோ பெண்ணாகவோ வடிவம் பெறுகின்றன.

    development of sex

    கரு(க் குழந்தையின் ) பிறப்பு உறுப்பில் மொக்கையாக இருந்த பகுதி

    – ஆண் கருவில் லிங்கமாக வளர்கிறது. . இது வளர்ச்சி. ”progressive trait’ ;

    – பெண் கருவில் இது சுருங்கி யோனி வாயிலில் இருக்கும் பருப்பாகும் (clitoris). இதனைத் தளர்ச்சி எனலாம் (regressive trait).

    கரு(க் குழந்தையின் ) உள் இருக்கும் ‘gonad’ என்பது ஆணில் விதைகளாகவும் (testes) பெண்ணில் சூலகங்களாகவும் வளர்கின்றன. (படங்களைக் காண்க) ஆணில் prostate ஆக வளரும் பகுதி பெண்ணில் கருப்பையாக மாறுகிறது.

    indifferent stage

    ‘ அம்மையப்பர்’ என்னும் சொல்லில் இன்னொரு கருத்தும் அடங்கி உள்ளது. ஆண் உடம்பில் ஆணின் கூறுகள் ஓங்கி இருந்தாலும் பெண்ணின் கூறுகள் முழுவதுமாக மறைந்து விடுவது இல்லை. காட்டாக மார்பகத்தைக் கூறலாம். பெண்ணுடலில் எடுப்பாகப் புடைத்து எழும் முலைப் பகுதி ஆணின் உடம்பில் அமுங்கிப் போகிறதே ஒழிய மறைந்துவிடுவது இல்லை. ஆகவே ஒவ்வொருவர் உடலும் ‘அம்மையப்பர்’ தத்துவத்தில் உருவாக்கப்பட்டு அம்மையப்பராகவே வளர்ந்து வாழ்ந்து மறைகிறது. இந்த உண்மையைச் சைவ சமயமே உணர்த்துகிறது. உண்மையில் பார்க்கப் போனால் 100 % ஆணும் இல்லை ; 100 % பெண்ணும் இல்லை. இருகூறுகளும் கலந்ததுதான் இந்த உடல். சைவ சமயம் உணர்த்தும் இத்தத்துவத்தை இக்கால அறிவியல் உறுதி செய்கிறது. வட மொழிப் பெயரைவிடத் தமிழ் மொழிச் சொற்றொடர் ‘அம்மையப்பர்’ எவ்வளவு பொருள் பொதிந்ததாக அறிவியல் உண்மைகளுடன் கூடி ஒளிருவதை எண்ணி எண்ணி வியக்கத்தான் வேண்டும்.

    இக்கால அறிவியல் சொல்லாத / சொல்ல முடியாத / அறிந்துகொள்ளாத / அறிந்துகொள்ள முடியாத இன்னொரு கருத்தைத திருமூலர் முதலான சித்தர்களும் மாணிக்கவாசகர் உள்ளிட்ட ஞானிகளும் வலியுறுத்திச் சொல்லி இருக்கின்றனர். அதுதான் மூல முதல் காரணனாம் “இறைவன்” என்னும் கருத்து. உடல் எப்படி உருவாகிறது என்பதை விளக்கும் அறிவியல் அந்த உடலை இயக்கும் உயிர் பற்றி எதுவும் கூறுவது இல்லை. ஆனால் உடலுக்கு உயிரைத் தருபவன் இறைவன் என எல்லாச் சமயங்களும் உரைக் கின்றன. சைவச் சமயமும் இதனை வலியுறுத்துகிறது.

    “அருளல்ல தில்லை அரனவன் அன்றி
    அருளில்லை யாதலி னவ்வோர் உயிரைத்
    தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
    வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே” என்கிறார் திருமூலர்.

    “உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
    மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
    திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
    கடைவைத்த ஈசன் …”
    “ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
    தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே”
    என உறுதியாகச் சொல்லிக் கருப்பப் பையில் கருத்தரிக்கும் நேரத்தில்
    ” பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்” என அழுத்தம் திருத்தமாக உரைக்கிறார் திருமூலர்.

    இப்படிப் பிண்டம் என்னும் உடல் பற்றித்: திருமூலர் கூறும் கருத்துகள் ஏராளம். அவற்றுள் சிலவற்றை மட்டுமே இங்குக் கண்டோம். பிண்டம் பற்றி அகத்தியர் முதலான சித்தர்களும் ஞானிகளும் நிறைய கூறி இருக்கின்றனர். மக்கள் நோய் நொடி இல்லாமல் நூறாண்டுகளுக்கும் மேலாக வாழ்வது எப்படி என்றெல்லாம் விளக்கி இருக்கிறார்கள். அவற்றைப் புரிந்துகொள்ளும் பொறுமையோ அறிவோ ஆற்றலோ நமக்கு இப்போது இல்லாமல் போய்விட்டது. நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதால் அது –

    “மெய்யாயிருந்தது நாட்செல நாட்செல வெட்டவெறும்
    பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே !”.(பெரிய ஞானக் கோவை).

    பிண்டத்தை முடித்துவிட்டோம் ; இனி அண்டத்தைப் பார்ப்போமே…

    தொடரும்

    Share
  • இது நிகழாதிருந்திருக்கலாம்

    பவள சங்கரி

    என் பார்வையில் தமிழ்ச் செல்வியின் கவிதைகள்

     நூல் பெயர்: இது நிகழாதிருந்திருக்கலாம்

    ஆசிரியர் : ஜி. தமிழ்ச் செல்வி

    பக்கங்கள் : 88

    விலை : ரூ. 80

    வெளியீடு : தாரிணி பதிப்பகம்

    4 ஏ – ரம்யா பிளாட்ஸ்

    32 – 79 காந்தி நகர் 4வது மெயின் ரோடு

    அடையார்

    சென்னை – 600020

    Idhu Nigazhaadhu irundhirukkalam -1

    ஆடிவரும்தென்றலெனில் ஆக்கும்துயர் கொஞ்சமல்ல

    அத்தனையும் நீக்கியுளம் அன்புகொள்ளாதோ

    கூடிவரும் பூவின்மணம் கொல்லுதய்யா உன்நினைவில்

    கொண்டதுவோர் துன்பந்தனைக் கிள்ள வாராயோ

    கோடியெனத் தன்னருகில் கொள்ளியெழிற் தாரகைகள்

    கொட்டிகிடந்தென்ன மதி கூடிவிடாதே

    ஓடிஒரு சோடியினை உள்ளமதிற் காணும்வரை

    ஒவ்வொருநாள் தேய்ந்துமது ஒய்ந்துவிடாதே ”

    கவிஞர் வாலியின் உள்ளம் உருக்கும் உன்னத காதல் கவிதை வரிகள்! கண்டதும் காதல், காணாமலே காதல், கண்டும் காணாத காதல், காத்திருப்பில் சுகம் காணும் சோகமான காதல், தோல்வியிலும் துவளாமல் துள்ளி எழும் காதல், பார்த்திருக்க பறந்து செல்லும் கைக்கெட்டா காதல் என்று காதலில் பலவகைகள் அல்லது காதலின் பல முகங்கள் கவிஞர்களின் கற்பனை ஊற்றுக்கு ஒரு வரம்.

    படைப்புகள் ஒரு படைப்பாளியுடன் வாழ்ந்து, பயணித்து, உள்ளுக்குள் ஊடுறுவி, எதைஎதையோத் தேடி, எதையோ காணாததைக் கண்டுபிடித்து,  பிடித்ததை  பூப்போல மென்மையாக அள்ளி அணைத்து சேதாரம் இல்லாமல், தேன்மையிட்டு, வண்ணக் கலவையும், வட்டெழுத்தும் கொண்டு தலைவாழையிலையிட்டுப் பரிமாறிய விருந்தாயின், சுகமாகச் சுவைக்கத் தடையேது?  வார்த்தைகள் கடைவாயில் சிக்கும் கடினமான கற்கண்டாயிராமல், எளிமையாக நுண்மாண் நுழைபுலத்தினுள் புகுந்த கடியாய் இருந்தால் கசக்குமா என்ன?  கண்டதும் பற்றிக் கொள்ளும் மெல்லிய சொற்கள் சுவைகூட்டுவதும் இயல்புதானே! இப்படித்தான் கவிஞர் தமிழ்ச் செல்வியின் இது நிகழாதிருந்திருக்கலாம் நம் தூக்கத்தைத்  தொலைத்துவிடுகிறது! துக்கத்தையும் கூடத்தான்…

    என் காதல் உயிர்

    மலர்ந்தே இருக்க

    பதிவிடுகிறேன்

    என் எழுத்து கல்வெட்டுகளை

    என்று தன் நிலைத்த கனவை, கலையாத கனவுகள் என்று தலைப்பிட்டு ஆரம்பிக்கிறார்.

    ‘காதல்’ என்பதே அந்த முதற் பார்வையில் கருவாகி,  முத்தாகி, உள்ளேயே உருண்டு, திரண்டு ஒளிவடிவாய் பிரகாசிப்பதுதானே.  ‘விழிகள் தழுவிய சிலிர்ப்பின்’ முடிவில்

     உன் கவனத்தை

    என் பக்கம் ஈர்க்கவே

    என் கால் கொலுசுகள்

    சப்திக்கிறது.

    அன்புக் காதலின் சின்னமாக கொலுவிருக்கும் இந்தக் கொலுசின் ஓசையால் ஈர்க்கப்படாத காதலன் இந்தப் புவியில் ஏது? அதற்கு இக்கவிஞர் மட்டும் விதிவிலக்கா என்ன?

    தென்றலினும் மென்மையாக

    உன் தீண்டல்

    எங்கோ பார்த்தபடி

    உரசிச் சென்றாய் என்னை!

    முதல் தீண்டலின் சுகானுபவத்தை மூடி மறைக்க வல்லார் யார்?  பார்த்தும் பார்க்காதது போன்றும், தொட்டும் தொடாமலும் உரசும் கள்ளத்தனம் காதலின் இயல்பு  அல்லவா!

    விடியலும் விலகலும்

    ஒருசேர நிகழ

    நீ விலகாமல்

    கலைந்தது உறக்கத்தில்

    முத்த கனவு

    முதல் முத்தம் – கவிஞரின் பெருமூச்சு நம்மையும் சூடேற்றிச் செல்கிறது. காதல் என்றாலே இந்த மெல்லிய சோகம் தானே சுகத்தின் உச்சம்!

    உன் கரங்களின் பிடி

    தந்த இறுக்கத்தில் தான்

    உன் ஆழ்ந்த காதலை

    பரிமாறினாய்

    முதல் அணைப்பின் சுகம் முத்தாய்ப்பாய் நிலைத்திருக்கும் மாயம், கவிஞரின் வார்த்தையில் காவியமாய் ஆகிறது.

    நீ என்னருகில் இருப்பதே

    உலகின் மகிழ்வு எல்லையாகிறது

    விலகாதே எப்பொழுதும்

    ஊடலும், கூடலும் காதலுக்குப் பாடமானாலும், அதட்டலும், அதிகாரமும்கூட இனிமையாகத்தான் இருக்கிறது கவிஞரே!

    உன் மடி என் மஞ்சமாக

    கற்பனையில் திளைக்கிறது

    காதல் மனம்

    காதல் என்ற ஒன்று உள்ளத்தில் புகுந்து விட்டாலே அது பொத்தி வைக்கும் வகையறியாது என்றாலும்,

    காதலின் உச்சம்

    நம் மன நிர்வாணம் சமர்ப்பித்தல்

    என்றே சரசமாடுகிறது

    நொடிப் பொழுதும்

    இன்பத்தின் உச்சம் என்பது வெறுமைதானோ? சும்மாயிருப்பதே சுகம் என்கிறார்கள் சித்தர்கள். இதுவும் அந்த ‘சும்மா’வும் ஒன்றுதானோ? தன்னை மறந்த நிலை என்கிறார்களே அதுவாக இருக்குமோ இது? ஆம் வாசகரை பலவாக சிந்திக்க வைக்கிறதே.. இதுதானே இந்த கவிதையின் வெற்றி!

     

    பாதுகாப்பின் உச்சமென

    மிச்சம் இல்லாமல்

    உறுதி சொல்கிறது

    பிணைந்த கரங்கள்

    உயிரோட்டமுள்ள அழகான சொல்லாடல்.

    மௌனகூட்டிற்குள்

    எனக்காக மட்டுமே

    உனக்காக எழுதப்படும்

    மடல் வடிவிது.

    ஒவ்வொரு எழுத்தும்

    அரும்புகளில் மலர்களாக

    குவிந்து விரிவதில்

    எனக்கான உயிர்ப்பின்

    நெகிழ்ச்சி விரிந்து போகிறது.

    விரிந்து போகும் நெகிழ்ச்சியின் உயிர்ப்பு கவிஞரின் ஒவ்வொரு வார்த்தையிலும் மலர்ந்து மணம் பரப்புகிறது.

    உனை காணும் அந்த

    கணம் ஒன்றில்

    என் தேடுதல் முடிந்து

    என் வாழ்வும்

    முற்று பெறும்.

    காத்திருப்பின் சுகமான ரணங்களை சுவையாக விளக்கும் கவிமொழிகள்.

    நாணத்தில் தலைகவிழ

    உன் முகம் மறைந்த நொடியில்

    என்னைப் பற்றியதான

    திட்டல் தொடர்கிறது

    எனக்குள்ளே.

    யதார்த்தத்தின் சுகமான சுமைகளின் நீட்சி.

    நினைத்த மாத்திரத்தில்

    உன் பிம்பத்தை

    வடித்து  விடுகிறது மனம்

     

    இந்த மனிதர்களுக்குத்

    தெரியவில்லை

    காதல் இல்லை

    என்றால் சுரப்பியும்

    நீர்த்துப் போகும் என்று.

    கவிஞரின் கற்பனைக் குதிரை வெகு லாவகமாக வானில் சிறகடித்துப் பறக்கும் அற்புதக் காட்சி!

    எண்ணங்களற்ற மனவெளியில்

    இறக்கைகள் நீட்டி

    பறப்பதான அனுபவம் தான்

    நம் தனிமைத் தகர்ப்பு.

    தனிமையின் தகர்ப்பு இனிமையின் வார்ப்பான வார்த்தை முத்துக்கள்!

    சுமையென்று பாராமல்

    சுமப்பதில் தான்

    ஆழந்த அன்பு

    ஆட்சி செங்கோல்

    ஆகிறது.

    பசுமை மலர்களின்

    ஒவ்வாத  அணிவகுப்பும்

    இசைவான இணைவிற்காக

    இலகுவாக இமைக்கிறது

    உயிர்களின் லீலைகள்.

    கற்பனை வளமிக்க அழகான சொற்குவியல்கள்.

    மௌனங்களும் பேசுகிறது

    மந்திரமாக உள்ளுணர்வை

    வழியாக்கி

    வாசகரையும் தொத்திக்கொள்ளும் கவிஞரின் அனுபவ மொழிகள்.

    தன் பொம்மையை

    பத்திரப்படுத்தும்

    குழந்தையைப் போல

    என்னை பாதுகாப்பதிலேயே

    உன் வாழ்வின் கணங்கள்

    கடந்து போகிறது.

    பெண்மையின் பரிதவிப்பை, எதிர்பார்ப்பை அழகாக எதிரொலிக்கச் செய்யும் சொல்லாடல்கள்.

    விழித்து நிற்கும்

    கவனத்தின் உயிர்ப்பில்

    காதல் மட்டும்

    காதலாக மட்டும்

    வாழ்தல் மட்டும் வாழ்வின்

    அர்த்தம்

    காதல் மட்டுமே வாழ்க்கை, வாழ்க்கையெல்லாம் காதல்மயம் என்று வாழ்வின் அர்த்தமே காதலில்தான் உள்ளது என்பதை  இதைவிட அழுத்தமாகக் கூற இயலாது.

    உணர்வின் உச்சம்

    அழுகையின் மிச்சம்

    கசப்பில் காழ்ப்பும்

    இனிப்பிி்ற்குள் உவர்ப்புமாக

    உருவகக் கூட்டமைப்பில்

    நடிகையாகிறது  மனம்

    பிரிவுத் துயரின் உச்சம், அக்கக்கூவின் சோக கீதங்கள்!

    உன் தோளில் சாய்ந்துறங்கிய போதும்

    காய்ச்சலில் சுருண்டழுத போதும்

    உன் மடியில் துவண்டு கிடந்தபோதும்

    தாயின் ஸ்பரிசத்தை உன்னிடம்

    உணர்ந்தேன்

     உண்மையான காதலின் உச்சம்,  தாய்மைப் பாசத்தைப் பறைசாற்றும்  இன்பம்தான் அல்லவா? அதனை அழகாக வெளிப்படுத்தியிருக்கும் சொற்கள்.

    உன்னோடு கழித்த நொடி ஏதும்

    உருக்குலையவில்லை  நினைவடுக்குகளில்

    பசுமை  கோர்த்து சிரிக்கிறது

    உயிர்தன்மையின் சிநேகிதத்தில்

    கலையாத கனவுகள்,  முதல் பார்வை,  முதல் தீண்டல், முதல் முத்தம், முதல் அணைப்பு,  விலகாதே  எப்போதும்.. நொடிப் பொழுதும், இணைந்திறுக , பற்றுதல், காதல் கருத்தரிப்பு, உன் நினைவுகள், புறக்கணிப்பு, தனிமைத் தகர்ப்பு, நமக்கான ஊடல், கொந்தளிப்பு,   என  தலைப்புகள் ஒவ்வொன்றும் ஆயிரம் கதை சொல்கிறது. மொத்தத்தில் தமிழ்ச் செல்வியின் கவிதைகள் நாற்பதும் நம்மை காதல் உலகிற்குள் இலவசமாய் இட்டுச் செல்கிறது!

    Share
  • குறளின் கதிர்களாய்… (13)

     

    தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

    கற்றனைத் தூறு மறிவு.

    -திருக்குறள்- 396 (கல்வி)

     

    புதுக் கவிதையில்…

     

    தோண்டத் தோண்டத்தான்

    ஊறும்

    வேண்டுமட்டும் தண்ணீர்,

    மணற்கேணியில்..

     

    மனிதன் கதையும் இதுதான்-

    கற்றிடக் கற்றிடத்தான்

    கூடிடும் அறிவு…!

     

    குறும்பாவில்…

     

    ஊறிடும் கேணிநீர் தோண்டத்தோண்ட..

    பெருகிடும் அறிவுமே,

    படிக்கப் படிக்க…!

     

    மரபுக் கவிதையில்…

     

    தண்ணீர் தொடர்ந்து வந்திடவே

    தாழ்வாய் உள்ள கேணியதில்

    மண்ணைத் தோண்டி எடுத்திட்டால்

    மேலும் மேலும் ஊறிடுமே,

    கண்ணாய்ப் போற்றும் கல்வியிலும்

    கற்றிடு கற்றிடு மேன்மேலும்,

    திண்ணமாய் ஓங்கி வளர்ந்திடுமே

    தீராச் செல்வம் அறிவதுவே…!

     

    லிமரைக்கூ…

     

    வெட்டவெட்ட ஊறிடும்மணற் கேணி,

    அறிவதில் உயர்ந்திடவே

    தொடர்ந்துகற்கும் கல்விதான் ஏணி…!

     

    கிராமியப் பாணியில்…

     

    தோண்டுதோண்டு நல்லாத்தோண்டு

    தோப்புக்குள்ள கேணியத்தான்..

     

    தோண்டத்தோண்ட மண்ணுவரும்

    தொளபோட்டுத் தண்ணிவரும்,

    சேத்துமண்ண எடுத்துவுட்டா

    ஊத்துத்தண்ணி ஓடிவரும்,

    தோண்டுதோண்டு நல்லாத்தோண்டு..

     

    படிப்புக்கதயொம் இப்புடித்தான்,

    படிக்கவேணொம் படிக்கவேணொம்

    படிப்படியா படிக்கவேணொம்

    பலகலயொம் படிக்கவேணொம்

    படிக்கப்படிக்க அறிவுவளரொம்

    பலகதயொம் தெரிஞ்சிபோவொம்..

     

    அதுக்கு,

    படிக்கவேணொம் படிக்கவேணொம்

    படிப்படியா படிக்கவேணொம்…!

     

    -செண்பக ஜெகதீசன்…

    Share
  • கோல்கேட்டும் மறக்கப்பட்ட இதர ஊழல்களும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மற்றும் நிலக்கரிச் சுரங்க வயல் ஒதுக்கீடு தொடர்பான முறைகேட்டுக்காக தற்போது சிபிஐயால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலக்கரித் துறையின் முன்னாள் செயலர் பி.சி. பரேக் ஆகியோரினால் அரசுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நிலக்கரித்துறை செயலாளரோ தனக்கு எந்த அளவிற்கு இதில் பொறுப்பு உள்ளதோ அதே அளவிற்கு பிரதமருக்கும் பொறுப்பு உள்ளது என்று கூறியிருக்கிறார். பிர்லா அவர்களோ நான் நிதியமைச்சரை சந்தித்துவிட்டேன், எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறுகிறார். எப்பவும் போல நமது பிரதமர் மௌனமாக இருந்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்.

    அரசுத் துறை நிறுவனங்கள் மட்டுமே பங்குகொள்ளத் தகுதி பெற்றவையான, ஒடிஸா மாநிலத்தின் தலபிரா நிலக்கரிச் சுரங்க வயல் ஒதுக்கீட்டில், தனியார் நிறுவனமான ஹிண்டாலும் ஒதுக்கீட்டு விண்ணப்பம் பெற்று சேர்க்கப்படுகிறது. அன்றைய செயலர் பி.சி. பரேக், நெய்வேலி நிலக்கரி கழகம் மற்றும் ஹிண்டால் நிறுவனம் என இரண்டும் சேர்ந்து அந்த நிலக்கரிச் சுரங்க வயலைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் , பிரதமருக்குத் தெரிந்தே அரசின் கருத்துருவை தயாரித்ததாக பரேக் கூறுகிறார். இப்படி ஒரு மாற்றம் செய்ய வேண்டுமானல் அதனை அரசாணையில் குறிப்பிட வேண்டாமா?
    மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன், அரசிதழில் வெளியிட்டு அதற்குப் பிறகு விண்ணப்பங்கள் பெற்றுத்தான் ஒதுக்கீடு செய்தார்களா என்பதற்கான விளக்கமும் அளிக்கப்படவில்லை.

    மற்ற தொழிலதிபர்கள் பிர்லாவின் பக்கம் இருந்து கொண்டு இப்படியிருந்தால் நாங்கள் எப்படி முதலீடு செய்ய முடியும் என்று கூறுகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு இதுபோல் அம்பானியால் இயற்கை எரிவாய்வு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி சில நாட்கள் தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் பரபரப்பாக பேசின. இன்று அதனுடைய நிலை பற்றி ஒரு செய்தியும் தெளிவாக இல்லை. அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு கிணறுகளிலிருந்து சிலவற்றை மட்டும் தயாரித்துவிட்டு மற்றவைகளிலிருந்து எரிவாயு எடுப்பதில்லை. இதனால் உற்பத்தி இழப்பால் பல லட்சம் கோடி நட்டம் ஏற்படுகிறது. இதைத்தவிர அவர் உற்பத்தி செய்வதற்காக வழங்கக்கூடிய விலையும் மிக அதிகமாக உள்ளது. பெட்ரோலியத் துறை இதற்கான எந்த விதமான சரியான விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.

    சில நாட்களுக்கு முன்பு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றிய நிலை என்ன என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. உறுதியான நேர்மையான தலைமை இல்லாததே இதற்கெல்லாம் காரணம். இனிமேலும் நேர்மையான ஆட்சியாக இல்லாவிட்டால் இது போன்று பல லட்சம் கோடிகள் போய், கோடி, கோடிகள் நட்டம் ஏற்பட்டு அரசு திவாலாகிவிடும் அபாயம் ஏற்படும். திறமையற்ற நிர்வாகமும் ஏமாறும் மக்களும் இருக்கும் வரை இந்த இந்திய ஜனநாயகம் பிழைக்கும். பிர்லாக்களும், அம்பானிகளும் வாழ்வார்கள். ஆனால் மக்கள் மட்டும் ஏழைகளாகவே இருப்பார்கள்.

    ஜெய்ஹிந்த்!

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    ‘பாரதநாடு பழம்பெரும் நாடு, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்’ என்று பாரதி எழுதியது எதற்காக என்று நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

    பாரதநாட்டை சுமார் இருநூறு வருடம் சுல்தான்கள், இருநூறு வருடம் மொகலாயர்கள், பின்னர் வந்த ஐரோப்பியர், பிரிட்டிஷ்காரர்கள் முன்னூறு வருடங்கள் ஆண்டனர். ஔரங்கசீப் காலத்தில் முக்கால்வாசி பாரதம் மொகலாயர் கைக்குப் போனது என்றால் இங்கிலீஷ்காரர்கள் கையில் அகண்டபாரதம் முழுவதுமே சென்றுவிட்டது. ஆட்சியாளர் அனைவருமே பாரத பண்பாட்டை முற்றிலும் நிராகரித்தவர் (ஒரு அக்பர் தவிர) என்று கூடச் சொல்லலாம். இத்தனை பரதேசத்தவர் ஆண்டாலும் உள்ளூற நிரவிக்கிடந்த பாரதத்தின் ஆன்மீக நம்பிக்கையையோ பண்பாட்டு விதானங்களையோ இவர்களால் மாற்றமுடியவில்லைதான்.

    பாரத ஆன்மீகப் பண்பாடு, கலாசாரங்கள் இவையாவும் தர்மத்தின் அடிப்படையில் ஏற்பட்டவை. ஆரம்பத்திலிருந்தே அதர்மத்தைக் கண்டு அஞ்சுபவர்களாக நம் முன்னோர்களை சித்தரித்திருந்தார்கள். அதர்மம் துளிர்த்து வன்முறையாட்டம் ஆடும்போதெல்லாம் தெய்வம் தோன்றி அந்த அதர்மத்தை அழித்தது என்பதை பரிபூர்ணமாக நம்புபவர்கள். அப்படி அதர்மத்தை அழிக்கும் தெய்வங்களுக்கு நன்றி பாராட்டி விழா எடுத்து மகிழ்பவர்கள். வேலனுக்கும் துர்க்கைக்கும் திருமாலுக்கும் கண்ணனுக்கும் ராமனுக்கும் என்றில்லாமல் தம் ஊர்மக்கள் நன்மைக்காக உயிர்த்தியாகம் செய்து தெய்வமாகிவிட்டவர்களுக்கும் அவர்களைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் விழா கொண்டாடி வருபவர்கள். இதை நம் பாரதம் முழுமைக்கும் வெவ்வேறு விதமாக காணலாம்.

    ஆனாலும் அங்கே குறிக்கோள் ஒன்றே.. ‘தர்மம் வெல்லவேண்டும் – அதர்மம் அழியவேண்டும், ஊர் செழிக்கவேண்டும், நல்லதோர் சமுதாயம் உருவாகவேண்டும்.. இதுதான் குறிக்கோள். இந்த குறிக்கோள் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் விதமாக அமையவேண்டும் என்பதற்காக அதற்கான புராணக் கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. அக்கருத்துகள் பொதுவாக மெய்ஞ்ஞானமாகவே இருந்தாலும் அது விஞ்ஞானத்தோடு பொருந்தும் வகையிலும் இருந்தது. இந்த புராணக்கருத்துகள் நாளடைவில் பாமரருக்கு எளிதாகப் புரியவைக்கும்படியாக புராணக்கதைகளாக மாறின. இக் கதைகளை மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஊர் மக்கள் ஒற்றுமையாக இருந்து எல்லோரும் சேர்ந்து பண்டிகையாகக் கொண்டாடினர். அப்படிப்பட்ட ஒரு பண்டிகையைப் பற்றிய பதிவு ஒன்றினைப் பற்றியதுதான் இந்த வார வல்லமையாளர் எழுதியது.

    http://aalosanai.blogspot.in/search?updated-min=2013-01-01T00:00:00%2B05:30&updated-max=2014-01-01T00:00:00%2B05:30&max-results=40

    சரதபௌர்ணிமை என அழைக்கப்படும் ஐப்பசி மாத முழுநிலவு நாளன்று கொண்டாடப்படும் கஜகிரி லக்ஷ்மி பூஜையைப் பற்றிய பதிவாகும். இந்த பூஜைக்கான ஆதி காரணங்கள், விஞ்ஞானத்துடன் சம்பந்தப்பட்டதாக எப்படி அமைகிறது, பாரதத்தின் எந்தந்தப் பகுதியில் கொண்டாடப்படுகிறது, விரதம், அதன் பலன்கள் போன்றவைகளை விவரமாகக் கொடுத்துள்ளார் பதிவர் திருமதி பார்வதி ராமச்சந்திரன்.

    நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் உருவான இவை போன்ற விரதகால பூஜைகள் பண்டைய காலத்திலிருந்தே மக்கள் அனுசரித்து வந்திருக்கின்றனர் என்பதனை விவரமாக தெரிவித்திருக்கிறார்.

    புராணக் கதை எதுவானால் என்ன, அதனால் தீங்கு நெருங்காத அளவுக்கும் மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவும், அவர்களின் மன வளமும், செல்வ வளமும் பெருகும் விதமாகவும் அமைந்தால் சமுதாயம் வளரும் இல்லையா.. வளரும் சமுதாயம் நல்ல சமுதாயமாகவும் தர்மம் குன்றாத சமுதாயமாகவும் இருந்துவிட்டால் உலகில் ஏது பிரச்னை.. இப்படியெல்லாம் நம் மனதில் கேள்வி எழும்பும் அளவுக்கு சிந்தனைகள் உருவாக்கிய திருமதி பார்வதி ராமச்சந்திரனை இந்த வார வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு நம் பிரத்தியேக வாழ்த்துகள்.

    கடைசி பாரா: கவியரசைப் பற்றிய சக்திதாசன் கவிதை

    பூஜ்ஜியத்துக்குள் ஒரு ராஜ்ஜியத்​தை

    பூட்டி ​வைத்த பரம் ​பொருளின்

    தத்துவத்​தை எளி​மையாக்கி எமக்க​தை

    தீந்தமிழ்ப் பாடலாக்கிய கவி​வேந்த​னே!

    Share