குறளின் கதிர்களாய்… (13)

 

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறு மறிவு.

-திருக்குறள்- 396 (கல்வி)

 

புதுக் கவிதையில்…

 

தோண்டத் தோண்டத்தான்

ஊறும்

வேண்டுமட்டும் தண்ணீர்,

மணற்கேணியில்..

 

மனிதன் கதையும் இதுதான்-

கற்றிடக் கற்றிடத்தான்

கூடிடும் அறிவு…!

 

குறும்பாவில்…

 

ஊறிடும் கேணிநீர் தோண்டத்தோண்ட..

பெருகிடும் அறிவுமே,

படிக்கப் படிக்க…!

 

மரபுக் கவிதையில்…

 

தண்ணீர் தொடர்ந்து வந்திடவே

தாழ்வாய் உள்ள கேணியதில்

மண்ணைத் தோண்டி எடுத்திட்டால்

மேலும் மேலும் ஊறிடுமே,

கண்ணாய்ப் போற்றும் கல்வியிலும்

கற்றிடு கற்றிடு மேன்மேலும்,

திண்ணமாய் ஓங்கி வளர்ந்திடுமே

தீராச் செல்வம் அறிவதுவே…!

 

லிமரைக்கூ…

 

வெட்டவெட்ட ஊறிடும்மணற் கேணி,

அறிவதில் உயர்ந்திடவே

தொடர்ந்துகற்கும் கல்விதான் ஏணி…!

 

கிராமியப் பாணியில்…

 

தோண்டுதோண்டு நல்லாத்தோண்டு

தோப்புக்குள்ள கேணியத்தான்..

 

தோண்டத்தோண்ட மண்ணுவரும்

தொளபோட்டுத் தண்ணிவரும்,

சேத்துமண்ண எடுத்துவுட்டா

ஊத்துத்தண்ணி ஓடிவரும்,

தோண்டுதோண்டு நல்லாத்தோண்டு..

 

படிப்புக்கதயொம் இப்புடித்தான்,

படிக்கவேணொம் படிக்கவேணொம்

படிப்படியா படிக்கவேணொம்

பலகலயொம் படிக்கவேணொம்

படிக்கப்படிக்க அறிவுவளரொம்

பலகதயொம் தெரிஞ்சிபோவொம்..

 

அதுக்கு,

படிக்கவேணொம் படிக்கவேணொம்

படிப்படியா படிக்கவேணொம்…!

 

-செண்பக ஜெகதீசன்…

Share

Comments

2 responses to “குறளின் கதிர்களாய்… (13)”

  1. தனுசு

    வழக்கம் போல் அருமை

  2. -செண்பக ஜெகதீசன்…

    திரு. தனுசு அவர்களின் கருத்துரைக்கு
    மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *