Blog

  • கண்ணனின் தங்கை

    பார்வதி இராமச்சந்திரன்

    art pi subadha kamsaகோகுலக் கண்ணன் தன் சின்னப்  பாதங்கள் பதித்து நம் இல்லங்கள்  தோறும் எழுந்தருளும் நன்னாள்  ‘ஸ்ரீஜெயந்தி’. நாடே விழாக்கோலம் பூண்டு, கண்ணன் அவதரித்த பொன்னாளைக் கொண்டாடும் தருணத்தில், சாக்தர்கள், ‘யசோதா கர்ப்ப சம்பூதாவாக’ அவதரித்த அன்னை ஸ்ரீதுர்க்கையின் திருஅவதார தினமாகவும் கோகுலாஷ்டமியைக் கொண்டாடுகின்றார்கள்.

    சாக்தத்தில் தேவியும் ஹரியும் ஒன்றேதான் என்கின்ற தத்துவத்தை புராண ரீதியாகக் கூறும் போது, நாராயணனின் சகோதரி சக்தி என்று கூறுகின்றோம். தசமஹா வித்யா தேவியரே, தசாவதாரம் எடுத்து அசுர சம்ஹாரம் செய்தனர் என்றும் கூறுகிறது சாக்தம். யோகமாயா தேவியான சக்தி, கண்ணனின் வளர்ப்புத் தாயான யசோதைக்கு மகளாக அவதரித்ததால், கண்ணனின் தங்கையாக அறியப்படுகின்றாள்.

    சிறையிருந்த வசுதேவர், தேவகி தம்பதியரின் ஏழாவது கர்ப்பத்தில் ஆதிசேஷன் பிரவேசித்தார். ஸ்ரீவிஷ்ணுவின் திருவுளப்படி, யோகமாயையான மஹாமாயையின் செயலால், அந்தக் குழந்தை, வசுதேவரின் முதல் மனைவியாகிய ரோகிணியின் கர்ப்பத்தில் சேர்ந்தது.

    கிருஷ்ணாவதாரத்திற்கு  முன்பாக, யோகமாயா தேவியை, ஸ்ரீ மஹாவிஷ்ணு, யசோதாவின் கர்ப்பத்தில் பிரவேசிக்குமாறு கூறினார். வசுதேவரால் மதுராவிற்கு கொண்டு வரப்பட்டவுடன் தேவியின் அவதார நோக்கம் நிறைவேறுமென்றும் திருவாய்மொழிந்தருளினார்.

    அவ்வண்ணமே அம்பிகை யசோதாவின்  கர்ப்பத்தில் பிரவேசித்தாள். நந்தகோபரின் திருமகளாய் அவதரித்தாள். யோகமாயையின் மாயாசக்தியால் புவனமுழுதும் அந்த இரவில் ஆட்கொள்ளப்பட்டது.

    வசுதேவர், கண்ணனை எடுத்துக் கொண்டு கோகுலத்தில் நுழைந்த போது, நள்ளிரவு நேரம். நந்தகோபனின் மனையை அவருக்கு எடுத்துக் காட்டும் முகமாக, சின்னக் குழந்தையாக அவதரித்திருந்த தேவி, மெல்ல அழுதாள். அழுகுரலை வைத்து, இல்லத்தை கண்டுபிடித்த வசுதேவர், திறந்திருந்த கதவுகளைக் கடந்து குழந்தையின் இருப்பிடத்தை அடைந்தார். திரிகுணாத்மிகாவான அம்பிகை, தாதியின் வடிவமும் தாங்கி, சின்னக் கண்ணனை வாங்கிக் கொண்டு, யசோதையின் பெண் குழந்தையை வசுதேவரிடம் சேர்ப்பித்தாள். வசுதேவர் மதுராவை அடைந்தார்.

    தேவகிக்கு எட்டாவதாக பெண் குழந்தை பிறந்தது, கம்சனின் காதுகளை எட்டியது. ‘ஒரு வேளை இது தேவர்களின் சூழ்ச்சியோ’ என்று சந்தேகித்த அவன், பெண் குழந்தையின் கால்களைப் பற்றித் தூக்கி, அதைக் கொல்வதற்காக, கத்தியை ஓங்கினான்.

    திடுமெனத் தோன்றிய பேரொளிப் பிரகாசம், சிறையை நிறைத்தது. குழந்தை வடிவம் நீங்கி, சக்ரம், சங்கம், கேடயம், கத்தி, அம்பு, வில், சூலம், தர்ஜனீ(அதட்டும் தோரணையில் ஆட்காட்டி விரல் இருப்பது) என்ற எட்டு மஹாயுதங்கள் விளங்கும் அழகிய திருக்கரங்கள் உடையவளாய், அஷ்டபுஜ மஹா துர்க்கையாகக் காட்சியளித்தாள் அன்னை. மிகுந்த கோபத்துடன், “மூடனே, உன்னைக் கொல்லப் போகிறவன், ஏற்கெனவே அவதரித்து விட்டான், உன் கொடுமைகளை நிறுத்தி, உன்னை  நீ காத்துக் கொள். உன்னை நானே கொன்றிருப்பேன். என் பாதங்களைப் பற்றியதால் விட்டு விட்டேன்” என்று கூறி விட்டு மறைந்தருளினாள். அதன் பின், மருத்கணங்களாகிய தேவர்களால் துதிக்கப்பட்டவளாக, பூமியில் கோயில் கொண்டருளினாள்.

     இவ்வாறு அம்பிகை ஸ்ரீகிருஷ்ணாவதாரத்திற்கு உதவியதற்கு, முன்பொரு முறை வசுதேவர், தம் குலகுருவான கர்கமஹரிஷியின் துணை கொண்டு பராசக்தியை, பூஜித்ததே காரணம் என்று தேவி பாகவதம், ஸ்காந்த புராணம் போன்றவை தெரிவிக்கின்றன.

    ஸ்ரீ துர்கா பிரபாவம், ஸ்ரீகிருஷ்ணருக்கு, மற்றொரு சமயத்திலும் துர்க்கை உதவியதை விவரிக்கின்றது.

    சத்ராஜித் என்னும் மன்னன் சூரிய பகவானின் அருளால், ‘ஸ்யமந்தகம்’ என்னும் ரத்தினம் பெற்றான். அது ஒவ்வொரு நாளும், ஒருவன் தூக்கக் கூடிய சுமை எவ்வளவோ அதைப் போல் எட்டு மடங்கு பொன்னை அளிக்கும். ஸ்ரீகிருஷ்ணர் ஒரு முறை அதைக் கேட்டதற்கு, சத்ராஜித் தர மறுத்து விட்டான். ஒரு நாள் சத்ராஜித்தின் தம்பி ப்ரஸேனன் அதை அணிந்து கொண்டு வேட்டைக்குச் சென்றான். அவனை ஒரு சிங்கம் கொன்றது. அந்த சிங்கத்தை, ஜாம்பவான் என்னும் கரடி வேந்தன் கொன்று, ஸ்யமந்தகத்தை எடுத்துச் சென்றான்.

    பிரஸேனனை, ரத்தினத்திற்காக ஸ்ரீகிருஷ்ணர் கொன்றிருக்கக் கூடும் என்ற அபவாதம் பரவியது. இதைச் சகிக்காத ஸ்ரீகிருஷ்ணர், படையுடன் பிரஸேனனைத் தேடிச் சென்றார். காட்டில், இறந்த பிரஸேனனையும், அவனருகில் இருக்கும் சிங்கத்தினையும் கண்டார். அருகிலிருக்கும் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ஜாம்பவானின் இருப்பிடத்தை அடைந்தார். கரடியரசனான ஜாம்பவானின் குகைக்கு வெளியே யாதவ சேனையை நிறுத்தி விட்டு, தான் மட்டும் உள்ளே சென்றார். அங்கு இருந்த ஸ்யமந்தகத்தைக் கண்டு அதை எடுக்க முயலும் போது, ஜாம்பவானுக்கும் கிருஷ்ணருக்கும் கடும் போர் மூண்டது. 27 நாட்கள் போர் நீடித்தது. இறுதியில், ஜாம்பவானுக்கு, ஸ்ரீராமாவதாரத்தை நினைவுபடுத்தினார் கிருஷ்ணர். ஜாம்பவான் மகிழ்ந்து, ஸ்யமந்தகத்தை அவரிடம் ஒப்படைத்ததோடு, தன் மகள் ஜாம்பவதியையும் மணம் செய்து கொடுத்தான்.

    இதற்கிடையில், ஜாம்பவானின் குகைக்குள் கிருஷ்ணர் சென்றதும் வெளியில் காத்திருந்த யாதவ சேனையினர், பன்னிரண்டு நாட்களாகியும் கிருஷ்ணர் திரும்பாததால், அவர் ஏதோ ஆபத்திற்கு உள்ளாகிவிட்டதாகக் கருதிக் கொண்டு, வசுதேவரை அடைந்து விவரம் கூறினர்.

    வசுதேவர், துக்கத்தில் மூழ்கினார். அதன் பின் தேவரிஷியான நாரதரின் ஆலோசனைப்படி, ஒன்பது நாட்கள் துர்க்கா தேவியைப் பூஜித்தார். ஒன்பதாவது நாளின் நிறைவில், ஸ்ரீகிருஷ்ணர் ஜாம்பவதியுடனும், ஸ்யமந்தகத்துடனும் துவாரகையை அடைந்தார். ‘மஹாமாயா ஸ்வரூபிணியான துர்கா தேவியின் வழிபாடே தன் புதல்வனை உயிருடன் அழைத்து வந்தது’ என எண்ணி வசுதேவர் மகிழ்ந்தார். இவ்வாறு துர்கையின் பெருமை, ஸ்ரீதுர்கா பிரபாவத்தில் பேசப்படுகின்றது.

    ‘யோக மாயை’ என்றும் ‘மஹாமாயை’ என்றும் போற்றித் துதிக்கப்படும் ஸ்ரீதுர்க்கை, முப்பெருந்தேவியரின் ஒருங்கிணைந்த வடிவம் என்று போற்றப்படுகின்றாள்.

    பராசக்தியான‌ அம்பிகை நான்கு வித சக்திகளாக இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. போக சக்தியாக பவானியும், குரோத சக்தியாக காளியும், போர்ச் சக்தியாக துர்க்கையும், புருஷ சக்தியாக விஷ்ணுவும் அருளுகிறார்கள். அதைப் போல், பராசக்தியிடமிருந்து உதித்த பஞ்ச பிரகிருதி சக்திகளுள் அந்தக‌ரணத்திற்கு அதிஷ்டாத்ரி தேவியாக இருப்பவள் துர்க்கா.

    ‘துர்கை’ என்ற பதத்தை சாக்த பஞ்சாக்ஷரமாகக் கூறுவதுண்டு (த,உ,ர,க,ஆ என்று பிரிக்கலாம். த என்ற எழுத்து அசுரர்களின் நாசத்தையும், உ என்ற எழுத்து விக்ந நாசத்தையும், ர என்ற எழுத்து ரோக நாசத்தையும் கஎன்ற எழுத்து பாப நாசத்தையும், ஆ என்ற எழுத்து பய நாசத்தையும் குறிக்கின்றது.).

    ஸ்ரீ துர்கா சப்த ஸ்லோகி, ஸ்ரீ துர்கா ஸூக்தம் முதலான மந்திரங்களின் சக்தி அளவிடற்கரியது.

    தேவி அனைத்து விதமான தவிர்க்க முடியாத துக்கங்களிலிருந்தும் தன்னை வணங்குபவரைக் காக்கின்றாள். முடிவில் பிறவிக் கடலினில் இருந்தும் தாண்டுவிக்கின்றாள்.

    கோகுலாஷ்டமி தினத்தில், கண்ணனையும், கண்ணனின் தங்கையையும் பூஜித்து மகிழ்வோம்!!

    =====================================================================================================

    (படத்துக்கு நன்றி:http://2.bp.blogspot.com/_Gilf-Htg-us/SXhx3sPJjQI/AAAAAAAAABg/xkE5btcRQQc/s400/art+pi+subadha+kamsa.JPG)

    Share
  • அக்காவுக்குத் தெரிய வேண்டாம்!

          ஜோதிர்லதா கிரிஜா

    “சந்துரு சார்” என்று சுருக்கமாய் அழைக்கப்படும் தன் அலுவலர் சந்திரசேகரன் கொஞ்ச நாள்களாய்த் தன்னைப் பார்க்கிற பார்வையே சரி யில்லை என்று நளினிக்குத் தோன்றிக்கொண்டிருந்தது. சில ஆண்களைப் போல் அருவருப்பை உண்டாக்கும் பார்வையை அவள் மீது அவர் என்றுமே படரவிட்டவர் அல்லர்தான். ஒருகால், அம் மனிதன் தனக்கு எரிச்சல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக வலிய விளைவித்துக்கொண்ட கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுகிறாரோ என்னவோ என்னும் எண்ணமும் அவளுக்கு அவ்வப்போது வந்துகொண்டிருந்தது. எனினும், கடந்த சில மாதங்களாய் அவரது பார்வையில் ஒரு வேறுபாட்டை அவள் தெளிவாய்த் தெரிந்து கொண்டிருந்தாள். பார்வை தப்பானதாக இல்லாவிட்டாலும் அதில் ஓர் ஆழத்தையும் ஏதோ சொல்ல வந்து அதை ஒத்திப்போட்டுக்கொண்டு இருந்ததையும் உள்ளுணர்வாய் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அவருக்கு நாற்பது வயது என்பதும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் புற்று நோய்க்கு தன் மனைவியைப் பறி கொடுத்தவர் என்பதும் அந்த அலுவலகத்து ஊழியர்கள் அனைவருக்கும் தெரியும். முப்பத்தைந்து வயதுக்குள் மனைவியைப் பறிகொடுத்துவிட்டு அதன் பின் மறுமணம் பற்றிச் சிந்திக்காமல் இருந்து வந்தவராய்த் தோன்றிய அவர் மீது எல்லாருக்குமே ஒரு மரியாதை இருந்தது. அவ்வலுவலகத்தைச் சேர்ந்த தலைமை எழுத்தர்கள், சக அலுவலர்கள் ஆகியோர் திருமண வயதில் தங்களுக்கு மகள்கள் இருந்த நிலையில் அவரை வளைத்துப் போட முயன்றது உண்டுதான்.  ஆனால், அந்த எண்ணம் தமக்கு இல்லை என்று அவர் திட்டவட்டமாய்ச் சொல்லிவிட்டார். இந்தத் தகவலும் எல்லாருக்குமே தெரியும்.

    இந்த நிலையில், தன்னை அவர் அண்மைக் காலமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த வித்தியாசமான பார்வை நளினியைப் பாதித்தது. அவளும் அதனால் அவர்பால் கவர்ந்திழுக்கப்பட்டாள் எனும் பொருளில் அன்று. அது அவளுக்குப் பிடிக்கவில்லை எனும் பொருளில்தான் அந்தப் பாதிப்பு இருந்தது.  வாயைத் திறந்து ஒரு மனிதர் தம் எண்ணத்தை வெளிப்படுத்தாத வரையில் வெறும் பார்வைக்கு என்ன விதமாய் எதிரொலிப்பது என்று அவள் மலைத்தாள். தன் மேலதிகாரியை எரிச்சலோடு திருப்பி முறைத்துப் பார்ப்பது என்பது அவளது கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. அப்படி யெல்லாம் ஓர் அலுவலகத்தில் பணி புரியும் ஓர் இளம் பெண் தன் அலுவலரை முறைத்துக்கொள்ள முடியாது. அது அறிவுடமையும் ஆகாது. எனவே அவர் வாய் திறந்து அந்தப் பார்வை மாற்றத்துக்கான காரணத்தைத் தாமாகவே வெளிபடுத்துகிற வரையில் பொறுமையாக இருக்க வேண்டியதுதான் என்று காத்திருப்பதைத் தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. எனவே அவள் காத்திருந்தாள்.

    இவ்வாறு அவரது பார்வை மாற்றத்தை அவள் கவனிக்கத் தொடங்கியதன் பின் சுமார் ஆறு மாதங்கள் கழித்து அவள் எதிர்பார்த்திருந்த அந்த நாளும் வந்தது.

    வாய்மொழிக் கடிதங்களை வழக்கம்போல் சொன்னதன் பிறகு, “மிஸ் நளினி! உங்க கிட்ட நான் ஒரு பெர்சனல் விஷயம் பேசணும். நீங்க சம்மதிச்சா நாம வெளியே எங்கேயாவது ஓட்டலுக்குப் போய் காப்பி குடிச்சுக்கிட்டே பேசலாம். இல்லே, அதுக்கு நீங்க சம்மதிக்கல்லேன்னா, நீங்க சொல்ற எந்த எடத்துக்கும் நான் வரத்தயார்…. இல்லாட்டி, இங்கேயே கூட நான் அதைச் சொல்ல முடியும்,” என்று சன்னமாய்ச் சற்றே பிசிறடித்த தயக்கமான குரலில் கூறிய நேரத்தில் பாதி சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அவர் அவளை நேரடியாய்ப் பார்க்காமல் தலையைக் குனிந்துகொண்டார்.

    இப்படி ஒரு பேச்சை எதிர்பார்த்திருதவளாதலின், எவ்வாறு அதற்கு எதிரொலிக்க வேண்டும் என்பது பற்றி யோசித்து ஏற்கெனவே முடிவு செய்துவைத்திருந்த அவள், “என்ன சொல்லப் போறீங்க, சார்? ஓரளவுக்கு நான் ஊகிச்சேன்.  ஆனா அதை உங்க வாயிலேர்ந்து கேட்டதுக்கு அப்புறம் என் பதிலை நான் சொல்றேன்!” என்ற நளினியை அவர் சட்டென்று தலை உயர்த்தி வியப்புடன் பார்த்தார். ஏனெனில், அவள் குரலில் தேசலோ, தடுமாற்றமோ துளியும் இல்லை. அவளும் அவரை நேரடியாய்ப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் வெட்கமோ, அது சார்ந்த செம்மையோ அறவே தென்படவில்லை என்பதையும் அவர் கவனிக்கத் தவறவில்லை. கம்பீரம், தேவையற்றுச் சிரிக்காதிருத்தல், அளவான புன்சிரிப்பு, அடக்கமான ஆடை, அணிகலன்கள் ஆகியவற்றின் வாயிலாகத் தான் ஒரு மாறுபட்ட பெண் என்பதை அவருக்கு உணர்த்தியிருந்த நளினி அந்தப் பொதுமையான எதிர்ச்செயல் மூலம் அவரை மேலும் வியப்புற வைத்தாள். அவர் அவளை மரியாதையுடன் பார்த்தார்.

    அவரது வலக்கையின் விரல் மேசையின் விளிம்பில் இருந்த சிவப்பு மின்விளக்கின் பொத்தானை அழுத்தியதை அவள் கவனிக்கத் தவறவில்லை. அலுவலகம் தொடர்பான கமுக்கமான கடிதங்களை வாய்மொழிகையில் அவர் அந்தப் பொத்தானை அழுத்தி அறையின் வெளியே சிவப்பு விளக்கு எரியச் செய்வது வழக்கம். அலுவலரின் அறைக்கு வெளியே சிவப்பு விளக்கு எரியும் போது யாரும் கதவைத் தட்டிவிட்டும் கூட உள்ளே வரக்கூடாது– உள்ளே வர அனுமதி கேட்கவும் கூடாது-  என்பது அலுவலக விதி.

    “சொல்லுங்க, சார்!”

    சந்திரசேகரனை அவளது எதிரொலி தயங்க வைத்தது. அவரது தலை தாழ்ந்துகொண்டது. என்ன முயன்றும் அவரால் அவளை நேருக்கு நேராய்ப் பார்க்க முடியவில்லை. எனினும், குரலைச் செருமிச் சரிப்படுத்திக்கொண்டு, “ நீங்களே சரியா ஊகிச்சுட்டீங்கன்னு நினைக்கிறேன்…” என்றார்.

    “நான் ஊகிச்சேனா இல்லையான்றதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், சார்.  நீங்க சொல்ல வந்ததைச் சொல்லுங்க!”

    அதன் பின் அவர் சற்றே தலை உயர்த்தி அவளை அரையாகப் பார்த்தார்: “நான் மனைவியை இழந்தவன்கிறது உங்களுக்குத் தெரியும். இல்லியா?”

    “தெரியும்.”

    “என் மனைவி தவறிப்போய் அஞ்சு வருஷம் ஆயிடிச்சு. எனக்குக் குழந்தைகள் இல்லேன்றதும் உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்.”

    “தெரியும், சார்.”

    “அஞ்சு வருஷமா மறுமணத்துல ஆர்வம் இல்லாமதான் இருந்தேன்.  ஆனா இப்படியே முழு வாழ்க்கையையும் கழிச்சுட முடியாதுன்னு தோணுது.. அதனால, மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிறதுன்ற முடிவுக்கு வந்திருக்கேன்…”

    “அது உங்க சொந்த விருப்பம். அது சரியான முடிவும்தான், சார்.”

    அவள் இவ்வாறு சொன்னதும், அவரது அரைப் பார்வை ஒரு நம்பிக்கையுடன் முழுப் பார்வையானது.

    “என் வயசு தெரியுமா உங்களுக்கு?”

    “தெரியும், சார். வர்ற மே மாசம் உங்களுக்கு நாப்பது முடியுது. உங்க பெர்சனல் ஃபைல் என்கிட்ட தானே இருக்கு? அதனால தெரியும்.”

    அவளது ஜாக்கிரதையான பதிலை அவர் தம்முள் மெச்சிக்கொண்டார்.

    “உங்களுக்கு இருபத்தேழு ஆகுது. இல்லியா?”

    “ஆமா.”

    “பதிமூணு வயசு வித்தியாசம்.  ஆனா இன்னும் எனக்கு ஒரு நரை முடி கூடக் கிடையாது…”

    நளினிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அதை மறைக்க அவள் முயலவில்லை.

    “சார்! ஒரு நிமிஷம்… உங்க ஆர்வத்துக்கு ரொம்ப நன்றி.  ஆனா அதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட சில விஷயங்களைச் சொல்லணும். முதல் உண்மை எனக்கு இதிலே ஆர்வம் கிடையாது…”

    “அப்படிச் சொல்லாதீங்க, நளினி! உங்க மேல எனக்கு ஒரு பிடிமானம் ஏற்பட்டிருக்கு. அதை லவ்னே சொல்லலாம். என் மனைவியை நான் லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கல்லே. அது என் அம்மா-அப்பா செஞ்சு வெச்சது…அதுக்காக நான் அவளை நேசிக்கல்லேன்னெல்லாம் பொய் சொல்ல மாட்டேன்.”

    “உங்க நேர்மையான பேச்சைப் பாராட்டுறேன், சார்! ஆனா, ஒரு நிமிஷம்… நான் இன்னும் பேசி முடிக்கல்லே. எங்க குடும்பத்தைப் பத்தி உங்க கிட்ட நான் பேச வேண்டியிருக்கு. நாங்க மொத்தம் அஞ்சு பேரு. நாலு பொண்ணுங்க. கடைசியா ஒரு தம்பி.  நான் மூணாவது பொண்ணு. எனக்கு அப்பா கிடையாது. எங்கப்பா செத்துப் போன போது எனக்குப் பதினஞ்சு வயசு. எனக்கு முந்தினவளுக்குப் பதினெட்டு.  எல்லாருக்கும் மூத்த அக்காவுக்கு இருபத்தொரு வயசு. கெட்ட வழக்கம் எதுவும் இல்லாத நல்ல அப்பா அவரு.  ஆனா ரொம்பப் படிக்காதவரு. ஒரு ப்ரைவேட் கம்பெனியில வாச்மேனா இருந்தவரு. அவரோட சொற்ப சம்பாத்தியத்துக்கு எங்களையெல்லாம் அவர் படிக்கவெச்சுக்கிட்டு இருந்ததே அதிகப்படி. அவர் காலமானதும் எங்களுக்கெல்லாம் கண்ணைக்கட்டிக் காட்டில விட்டது மாதிரி இருந்திச்சு. நிராதரவா உணர்ந்தோம். எங்கம்மா அப்படியே இடிஞ்சு போயிட்டாங்க. ஹார்ட் பேஷண்டாவும் ஆயிட்டாங்க. கையில சேமிப்பு எதுவும் இருக்கல்லே. இருந்த சொற்பத்துல அவங்களுக்கு வைத்தியம் பார்த்தோம். எல்லாமே கரைஞ்சிடிச்சு. ஆனா, எல்லாருக்கும் மூத்த எங்கக்காவுக்கு வேலை கிடைச்சிச்சு. மத்தவங்கல்லாம் படிச்சுக்கிட்டு இருந்தோம். அவளால தான் எங்க குடும்பம் அரையும் குறையுமாச்  சாப்பிட்டு வாழ்ந்திச்சு. சில நாள் ஒரு வேளைதான் சாப்பிட முடிஞ்சிச்சு. அவ வேலைக்கு வந்ததுக்கு அப்பால அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் அடுத்த அக்காவுக்கு வேலை கிடைச்சிச்சு. அதுக்கு ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் எனக்கு இந்தக் கம்பெனியில ஸ்டெனோ வேலை கிடைச்சிச்சு. எனக்கு அஞ்சு வருஷம் செர்வீஸ் ஆகுது.  அப்ப? எங்கக்காவுக்கு இப்ப முப்பத்து மூணு வயசு ஆகுது. அவளுக்கு இன்னும் கல்யாணம் பண்ணி வைக்க முடியல்லே. வரதட்சிணை வாங்குற பழக்கம் ரொம்பவே குறைஞ்சிடுச்சுன்னு பலரும் உளறிக்கிட்டு இருக்காங்க. அது பணக்காரக்குடும்பங்கள்ல தான் நடக்குது. அதனால, என்ன பிரயோசனம்? ஏழைங்களும், நடுத்தரக்குடும்பங்களும் இன்னும் இந்த வரதட்சிணைப் பேயால கஷ்டப்பட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க….நீங்க என்னை லவ் பண்றதாச் சொன்னீங்க. அதை நான் தப்புன்னு சொல்லமாட்டேன்.  நீங்க லவ் பண்ற பொண்ணோட வேண்டுகோளை நிறைவேத்தி வெச்சிங்கன்னா, உங்க லவ் உண்மையான லவ்னு நான் நம்புவேன், சார். யாரை நாம லவ் பண்றோமோ அவங்களோட சந்தோஷம்தானே நம்ம குறிக்கோளாய் இருக்கணும்? இல்லியா, சார்?”

    அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது அவருக்குப் புரியவே செய்தது. அவர் மேலும் மரியாதையுடனும் களங்கமற்ற அன்புடனும் அவளைப் பார்த்தவாறு இருந்தார்.

    “சொல்லுங்க, சார்.”

    “விஷயத்துக்கு வாங்க.”

    “புரியாதவங்களுக்குத் தானே சார் விஷயத்தைச் சொல்லிட்டு இருக்கணும்? சரி. என் வாயாலே சொல்லிடறேன். என் மேல நீங்க வெச்சிருக்கிற அன்பு உண்மையானதாய் இருந்தா எங்க மூத்த அக்காவை நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்! அவளைப் பார்த்துட்டே நீங்க சம்மதமோ மறுப்போ சொல்லலாம், சார். அவ என்னை விட அழகாய் இருப்பா. ரொம்ப நல்லவ சார் எங்கக்கா. கல்யாணமே வேண்டாம்னு இருக்கா சார் அவ.  எங்களுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வைக்கிறதுதான் அவளோட லட்சியமாம். ஏன்னா அவளுக்கு முப்பத்து மூணு வயசு ஆயிடிச்சாம். வரிசையாத்தான் பண்ணணும்னு முனைஞ்சா எல்லாருக்குமே வயசு ஆயிடுமாம். சொல்றா! தவிர, உங்க வயசுக்கு அவ அதிகம் பொருத்தமானவ. இல்லியா, சார்?”

    சந்திரசேகரன் கண்ணிமைக்காமல் நளினியைப் பார்த்தவாறு இருந்தார். முகத்தில் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. கடந்த ஆறு மாதகாலத்துக்கும் மேலாய் அவரது பார்வையில் தோன்றி இருந்த கள்ளம் காணாமல் போய் விட்டிருந்தது.

    “நீங்க சொன்னது ரொம்பவே சரி, மிஸ் நளினி! தன் அன்புக்கு உரியவளைச் சந்தோஷப்படுத்துறதுதான் ஒரு நல்லவனோட கடமை. நான் நல்லவன்னு உங்ககிட்டேருந்து செர்ட்டிஃபிகேட் வாங்கறதுல ஆர்வமுடையவனாய் இருக்கேன், மிஸ் நளினி!”

    “தேங்க்யூ, சார்! என்னிக்குப் பொண்ணு பார்க்க வர்றீங்க?”

    “நீங்க இவ்வளவு சொன்னதுக்குப் பெறகு, உங்க அக்காவைப் பார்க்காமயே என் பதில் ‘யெஸ்’ தான்! ஆனா அவங்க என்னைப் பார்க்கணுமில்லே? அதானால நீங்க என்னைக்கு வரச் சொல்றீங்களோ அன்னைக்ககு வர்றேன்.”

    “தேங்க்ஸ், சார்.  ஆனா மச்சினியை யாராச்சும் நீங்க, வாங்க, போங்கன்னு பன்மையில பேசுவாங்களா?”

    “மாட்டாங்கதான்! ஆனா அது எங்க கல்யாணத்துக்குப் பெறகு!” என்று அவர் சிரித்த சிரிப்பில் அவளும் கலந்துகொண்டாள்.

    இருவரும் சேர்ந்து இரைச்சலாய்ச் சிரித்தது வெளியே கேட்க, கதவுக்கு அருகே முக்காலியில் உட்கார்ந்திருந்த பியூன் கந்தசாமி, “ரெட் லைட்டைப் போட்டுக்கிட்டு கூத்தடிக்கிறாங்கப்பா உள்ளே ரெண்டு பேரும்!” என்றான்.

    இது பற்றி  அறியாத நளினி, “ஆனா நீங்க எனக்கு ஒரு சத்தியம் பண்ணித் தரணும்…” என்றாள்.

    “என்ன!”

    “இப்ப நாம பேசினது எதுவும் எங்க அக்காவுக்குத் தெரியவே கூடாது!”

    “சொல்லவே மாட்டேன்! நானென்ன மடையனா?” என்றார் சந்திரசேகரன்.

    Share
  • நினைவான பாரதியின் கனவு!

    பவள சங்கரி

    தலையங்கம்

    மத்திய அரசின் உணவு பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதில் அரசாங்கத்திற்கு பொது மக்களின் மனப்பூர்வமான வாழ்த்துகள்! இதற்கு உறுதுணையாக நின்ற மத்திய மாநில அரசு மற்றும் அரசியலாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வோம். பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்தோம் என்று காட்டக்கூடிய முதல் நடவடிக்கையாக இதைக் கருதலாம். 1960 மற்றும், 1940களிலும் ஏற்பட்ட பஞ்சங்கள் பற்றிய செய்திகளை இன்று நினைத்தாலும் கண்ணீர் மழையாகப் பொழிவதை மாற்றியமைத்து நாட்டின் 67 சதவிகித மக்கள் பயனடையும் வகையில் இந்த வளமானச் சட்டத்தை நிறைவேற்றி வயிற்று உணவிற்கு வழி செய்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி வகுத்த ஆட்சியாளர்களுக்கு நன்றி தெரிவிப்போம். இந்தத் திட்டத்திற்காக அரசு ரூ.1.25 லட்சம் கோடியை செலவிடவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. குச்சிக் கிழங்கைச் சாப்பிட்டும், விவசாயிகள் வறண்டு போன வயல்களில் எலியைப்பிடித்து சுட்டுத் தின்று பசியாறிய கொடுமைகளெல்லாம் இனி நடக்காது என்று உறுதியாக நம்புவோம். தமிழ்நாடு போன்ற சில மாநிலங்கள் குடும்பத்திற்கு 20 கிலோ அரிசி அல்லது கோதுமை போன்றவைகளை இலவசமாக வழங்கியும் வழிகாட்டியுள்ளனர் என்பதையும் இந்த நேரத்தில் நினைவு கூறலாம். இந்தச் சட்டத்தின் நடைமுறை இடர்பாடுகளைக் களைந்து முழுமையாக இத்திட்டம் மக்களைச் சென்று அடைவதற்கு உண்டான வழிவகைகளையும் மேற்கொள்ள வேண்டும் . எந்த நாட்டிலும் இல்லாத வகையிலான ஒரு அற்புதமான திட்டம் இது என்பதில் ஐயமில்லை.

    ஆயினும், எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணம் காட்டும் நாம், அங்கு இருப்பது போல பணிரண்டாம் வகுப்பு வரையிலான கட்டாய இலவசக் கல்வியைக் கொண்டுவர வேண்டுமென்ற பொது மக்களின் ஆதங்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். கல்விக்கூடங்கள் அறச்சாலைகளாக இருப்பதைவிட்டு ஒரு வணிகத்தளமாக, தொழிலகமாக மாறிவிட்டது வேதனைக்குரிய விசயம். இப்போது இருக்கும் கட்டணங்களே அதிகமாக இருக்கும் நிலையில் மேலும் அதை அதிகப்படுத்திக்கொண்டே போவதும் அதற்கு மாநில அரசு நீதியரசர் தலைமையில் ஒருவரை நியமித்து ஆய்வுக்கு உட்படுத்தவும், அவரும் ஒரு மிகப்பெரிய தொகையைக் கட்டணமாக பெற்றோரின் மீது சுமத்துவதும், அதுவும் பத்தாது என்று பள்ளி நிர்வாகங்கள் கூறிக்கொண்டு சிலர் வழக்கு மன்றம் செல்வதும், சிலர் ஏற்றுக்கொள்வதும் வேடிக்கையான காட்சியாக உள்ளது. இதில் சில நிர்வாகங்கள் தன்னிச்சையாகவே கட்டணங்களை அதிகப்படுத்திக்கொள்வதும். குழந்தைகளின் பெற்றோர்கள் தெருவில் இறங்கி போராடுவதும் வாடிக்கையாகிக் கொண்டிருக்கிறது. இலவசப் பொருட்கள் நமக்குத் தேவையில்லை. தொலைக்காட்சிப் பெட்டியோ, காற்றாடி, மாவரைக்கும் இயந்திரம் என எந்த இலவசமும் வேண்டியதில்லை. கட்டாய இலவசக் கல்வித்திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது. மாற்று திட்டங்கள் மூலமாகவாவது பெற்றோரிடம் பணம் வசூலிப்பதையும் தடுக்க வேண்டுமென்றால் பணிரெண்டாம் வகுப்புவரை இருக்கும் அனைத்து கல்விக்கூடங்களையும் அரசுடமையாக்க வேண்டுவது மட்டுமே முழுமையான தீர்வாக இருக்க முடியும். இலவசப் பொருட்கள் வேண்டாம், இலவசக் கல்வியைக் கொடுத்து கண்ணைத் திறவுங்கள். மன்னர் மானியம் ஒழிக்கப்படவில்லையா?, வங்கிகள் தேசிய உடமையாக்கப்படவில்லையா?, பேருந்துகள் நாட்டுடமையாக்கப்படவில்லையா?. அதே போன்று மக்கள் நலவாழ்விற்காக, குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காக, அனைத்து கல்வி நிலையங்களும் தேசிய உடமையாக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் பேராவலாக இருக்கிறது என்பதையும் அரசு உணர வேண்டும்.

    Share
  • ராதை பிறந்தாள் !கோதை பிறந்தாள்!

    சத்திய மணி

     

    (ஸ்ரீஜெயந்தி வருமுன்னர் அவசரமாய் ராதைப் பிறந்தாளா?…ஆம் ராதை எங்கே
    கண்ணன் அங்கே…..)
    ராதை பிறந்தாள் குட்டி ராதை பிறந்தாள்images (1)
    புதுக் கீதங்கள் பிறந்ததம்மா
    கோதை பிறந்தாள் கிளிக் கோதை பிறந்தாள்
    இனிக் கண்ணனுக்கு சந்தோஷமா? ()

    கன்னித் தமிழோ இல்லை நெல்லைத் தமிழோ
    சென்னித் தமிழோ இல்லைச் சென்னைத் தமிழோ
    ஆசைத் தமிழோ இல்லை ஓசைத் தமிழோ
    பூசைத் தமிழோ இல்லைப் பாசத் தமிழோ
    கேட்கும் இனிமேல் அதைச் சேர்க்கும் கவிமேல்
    பூக்கும் மடிமேல் தம்பி பாடப் பழகு()
    ராக்கன் இசையோ இல்லை ஜாக்ஸன் இசையோ
    காக்கும் ரங்கனின் திருப் பாவை இசையோ
    நாக்கில் உதிர்க்கும் கண்ண தாசன் இசையோ
    நாட்டை எழுப்பும் மீசைக்காரன் இசையோ
    கேட்கும் மழலை இனி சேர்க்கும் குழலை
    தூக்கம் மடிமேல் தாலாட்டப் பழகு

     

     

    Share
  • கண்ணனின் கட்டளை!…

    பெருவை பார்த்தசாரதி

    images1966 ஆம் வருடம் கவிர் வாலி இயற்றிய ‘கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் கண்ணன் பிறந்தான்’ என்ற அருமையான திரையிசைப் பாடல் இன்று அனைவரது நினைவுக்கும் வரும். வருஷம் தோறும், ஆவணி மாதம், கிருஷ்ணபட்ச அஷ்டமி தினத்தை, கண்ணனின் அவதாரத் திருநாளாகக் கொண்டாடுகிறோம். அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டப் பிறந்த கண்ணனின் பிறந்த நாளன்று வல்லமை வாசகர் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கிருஷ்ணாவதார நோக்கமும், கிருஷ்ணலீலைகளும் யாவரும் அறிந்ததே. இதைப் பற்றிச் சொல்லாதவர்களும், எழுதாதவர்களும் கிடையாது என்றே கூறலாம். ஸ்ரீகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று, கிருஷ்ணாவதாரத்தில் நடந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பற்றி அனைவரும் அறிந்திருந்தாலும், வித்தியாசமான கண்ணோட்டத்தில் அதன் உட்கருத்தை மட்டும் ஆறாய்வோம்.

    வசுதேவருக்கும், தேவகிக்கும் பிறந்த ஆறு குழந்தைகளை கம்சன் மிகவும் கொடூரமாக, முறட்டுத்துத்தனமாக, எப்படிக் கொன்றான் தெரியுமா?……அந்தப் பிஞ்சுக்குழந்தைகளின் இருகாலைப் பிடித்து உயரே சுழற்றி, அதன் தலையை சுவற்றில் அடித்துக் கொல்வானாம்.

    ஆறு குழந்தைகளை கொன்றபிறகு, ஏழாவது முறையாக தேவகியின் வயிற்றில் ஆதிசேடனுடைய அம்சம், கர்ப்பமாக வந்து தங்கியது. பகவான் துஷ்டர்களை அழிக்கும் பொருட்டு திருஅவதாரம் செய்யவேண்டிய காலம் நெருங்கி விட்டதை உணர்ந்து, மாயையை அழைத்து, பின் வருமாறு கட்டளையிடுகிறார்.  ‘நீ தேவகியின் வயிற்றில் வளரும் கருவை எடுத்து,  வசுதேவரின் முதல் மனைவியான ரோகினியின் வயிற்றிக்கு மாற்றி விடு, அதற்கு பதில் நான் தேவகியின் வயிற்றில் அவதாரம் செய்வேன்’ என்கிறார். அதேநேரத்தில் நந்தகோபரின் மனைவி யசோதையின் வயிற்றில் நீ பெண்ணாகப் பிறக்கவேண்டும்.  ஆண்டவன் கட்டளை அல்லவா, இந்த மாற்றம் ஒரு சில நொடியில் நடந்துமுடிந்ததை மானுடர்கள் ஒருவரும் அறிகிலர். கம்சனின் பயத்தால் தேவகியின் கர்ப்பம் கலைந்துவிட்டது என்று, மக்கள் தினமும் கம்சனை நிந்திக்கத் தொடங்கினர்.

    சில நாட்களுக்கு பிறகு தேவகி எட்டாவது முறையாக கருவுற்றாள் என்ற செய்தி அறிந்த கம்சன், முதலில் அவளையே கொன்றுவிட எண்ணுகிறான். அதன்பிறகு, பெண் கொலை, சகோதரி கொலை, கர்ப்பிணி கொலை என மூன்று கொடும்பாவங்களும் சேர்ந்து கொள்வதால் இந்த எண்ணத்தை கைவிடுகிறான். இந்த நேரத்தில்………

    இனிநடக்கப்போவதெல்லாம் ஆண்டவன் கட்டளையாயிற்றே!…..அதன்படிதான் எல்லாம் அரங்கேரவேண்டும். அப்போது மீண்டும் ஒரு மாற்றம் நிகழ்கிறது.  வசுதேவர் தேவகிக்குப் பிறந்த தெய்வக்குழந்தையை கோகுலத்து யசோதையிடம் விட்டு விட்டு, யசோதையிடம் இருக்கும் பெண்குழந்தையை மதுராபுரி தேவகிக்கும் ஒரே நேரத்தில் மாற்றம் செய்கிறார்.

    images (2)கண்ணிமைக்கும் நேரத்தில், மாற்றங்கள் சட்டென முடிவடைகிறது, பின்னர் கம்சனுக்கு எட்டாவது குழந்தை பற்றிய விஷயம் தெரிவிக்கப்பட்டவுடன், அவன் வாளை உறுவிக்கொண்டு, தேவகியின் கூச்சலைப் பற்றி கவலைப்படாமல், குழந்தையின் இரு கால்களைப் பற்றி, ஒரு சுழற்று சுற்றி ஓங்கி சுவற்றில் அடிப்பதற்க்கு முன்னால், மஹாசக்தியின் அம்சமல்லவா அந்த மாயக்குழந்தை,  கம்சனின் கைநழுவி வானத்தில் ஓரிடத்தில் நின்று,  “ஏ மூடனே, என்னை உன்னால் கொல்லமுடியாது, தெரிந்தோ, தெரியாமலோ எனது காலை பிடித்துவிட்டாய், காலைப்பிடித்தவனை நான் ஒருபோதும் கொல்லமுடியாது, எனது காலைப்பிடித்தால் அது சரணாகதிக்குச் சமம், அதனால் உன்னை மன்னித்துவிடுகிறேன். மேலும் ‘உன்னை கொல்வதற்கு ஒருவன் ஒருத்திக்கு மகனாய்ப் பிறந்து, வேறொருத்தியிடம் மகனாய் வளர்ந்து வருகிறான்’ என்று கூறி மறைகிறாள்”.

    இச்சொல்லைக் கேட்டபிறகு, கம்ஸனுக்கு மரணபயம் வந்து, அந்த  மரணபயமே கம்சனின் பாதி உயிரை எடுத்து விடுகிறதாம். மரண பயம் என்பது மரணத்தை விடக்கொடியது. இந்த பயமே, பலரை வாட்டி, வதைப்பதை நாம் எல்லோரது அனுபவத்திலும் காணலாம். மரணத்தை மனிதன் மறந்தாலும், அது நம்மை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொண்டிருக்குமாம்.

    ஆங்கிலப் படங்களில் வரும் சில மெய்சிலிர்க்கும் காட்சியைப் பார்த்திருக்கிறோம். படம் மிகச் சுவாரஸ்யமாகப் ஓடிக்கொண்டிக்கும்போது, வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, அனைவரையும் கொடுமைப் படுத்தி, உலகை அழிக்க சவால் விட்டுக் கொண்டிருப்பான். இதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாக கதாநாயகன் மிகச்சாதாரணமா, கண்ட்ரோல் ரூமை அடைந்து, அதன் மூலம் வில்லனின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதைப்போல்……

    images (1)இறைவன் உலகில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். வசுதேவர், குழந்தையாகிய பகவானைத் தலையில் கூடையில் வைத்து எடுத்துச் செல்வதற்காக எத்தனிக்கும்போது,  வசுதேவருடைய கைவிலங்குகள் மற்றும் கால்விலங்குகள் அவரை அறியாமலேயே கழன்று விலகும், சிறைக்கதவுகள் தானாகத் திறக்கும். வழிப்பயணத்தின் போது, ஆதிசேஷன் துணையாகவும், தனது படத்தை விரித்து குடையாக மழையிலிருந்து பகவான்சிசுவைப் பாதுகாப்பான், யமுனைநதி தனதுயிரைப் பிடித்து நிறுத்தி, நீரைப் பிரித்து,  தானே வழிவிடுவாள், இச்சம்பவத்தின் போது எல்லாமே மாயையின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். வசுதேவர், யாதொரு கவலையும் இல்லாமல், இறைவன் இட்ட கட்டளையை இச்சையுடன் நிறைவேற்றுகிறார்.

    இறைவனைச் சரணாகதி அடைந்து, அவனே கதி என்பதை ஏற்றுக் கொண்டால், மற்றதெல்லாம் நாம் நினைத்தபடி நடக்கும் என்பதுதான இந்நிகழ்ச்சியின் நீதி. 5000 வருடங்களுக்கு முன்பே இந்த மாற்றங்கள் நிகழ்ந்த போது, ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். வசுதேவரின் கை மற்றும் கால் விலங்குகள் எப்படி தாமாக விலகியதோ, பகவானைச் சரணந்தவர்களிடம், பிறப்பு, இறப்பு, வாழ்க்கை போன்ற துன்பங்கள் அனைத்தும் தாமாக விலகிவிடும். நித்தமும், அனுதினமும் கண்ணனைத் தியானிப்பவர்களுக்கு பிறவித் துன்பம் இல்லை என்பதுதான் கண்ணனின் பிறவித் தத்துவம். இந்நிகழ்ச்சிகளைக் கூர்ந்து படித்து கிரகித்துக் கொள்வதின் மூலம், இதன் உட்பொருள் அறியமுடியும்.

    இந்நிகழ்ச்சிகளின் உட்கருத்தைப் படம்பிடித்துக் காட்டுவது போல, சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் திருப்பாவையில் உள்ளடக்கிய 25 வது பாசுரத்தில் மிக அழகாகப் பாடியதைப் பார்போம்:-

    ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்

    ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,

    தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த

    கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

    நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

    அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்

    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

    வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

    பொருள்:

    தேவகிக்கு மகனாய் பிறந்து அதே இரவில், யசோதையின் மகனாய் ஒளிந்து வளர்ந்துவர, அதைப் பொறுக்காது உன்னைக் கொல்ல நினைத்த, கம்ஸனின் வயிற்றில் நெருப்பாக நின்றாய்!, எங்கள் குறை தீர்க்கும்படி உன்னைப் பிரார்த்தித்து, வந்தோம், நாங்கள் விரும்பியதைத் தருவாயானால், லக்ஷ்மி தேவி விரும்பும் உன் குணச்செல்வத்தையும், உன் வீரத்தையும் நித்தமும் பாடி வருத்தம் நீங்கி மகிழ்ந்து கொண்டே இருப்போம்.

    images (3)இந்தப் பாசுரத்தில் அடங்கிய எண்ணற்ற தத்துவங்களைப் போல், மேலும் பல மகிமைகளையும், உட்கருத்துக்களையும் கிருஷ்ணாவதாரத்தின் அடிப்படைத் தத்துவம் உட்பட பல தகவல்களை, ஸ்ரீமத் பாகவதத்திலுள்ள,  பத்தாம் ஸ்கந்தத்தில் படித்துத் தெரிந்து கொள்ளலாம். இச்சம்பவத்தைப் போல் வெண்ணெய் திருடுதல், ராஸ நடனம் புரிந்து கோபியர்களின் உடைகளைக் களவாடுதல், புல்லாங்குழலில் கிருஷ்ணகானம் போன்ற கண்ணனின் ஒவ்வொரு லீலைகளுக்குள்ளும் பல உண்மைத் தத்துவங்கள் அடங்கி இருக்கிறது.

    கிருஷ்ண ஜெயந்தியன்று பாகவதம் முழுவதும் படித்தால் நலம்தரும், முடியாதவர்கள் பகவத்கீதை படிக்கலாம், அதுவும் முடியாதவர்கள் கிருஷ்ணாவதாரத்தில் நிகழ்ந்த கிருஷ்ணலீலைகளுள் ஒன்றையாவது படித்தால் அதைவிடப் புண்ணியம் வேறொன்றுமில்லை என்பது, நமது பூர்வாச்சார்யர்கள் மற்றும் மஹான்களின் கருத்தாகும்.

    “ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து”

    Share
  • கோகுலத்தில் கோலாகலம்!

     

    -கவிநயா

    கோகுலமே ஒரே நிசப்தமாக இருந்தது. கொலுசுச் சப்தம் கூட பூதாகரமாகக் கேட்பது போல் இருந்ததால், நிசப்தமான இடத்தில் குரலெழுப்பாமல் இரகசியக் குரலில் பேசிக் கொள்வது போல், சப்தம் எழுப்பாமல் கொலுசணிந்த பாதங்களை மெதுவாக எடுத்து வைத்து நடந்தாள், ராகினி.

    ராகினி அவள் அம்மாவுடன் கோகுலத்தில் வசிக்கும் அத்தை மகள் லலிதை வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள்.

    கிருஷ்ணன் பிறந்தது முதல் கோகுலத்தை விட்டு எங்கேயும் வருவதில்லை, லலிதை. அதனால் அவளை (கிருஷ்ணனையும்) பார்க்கும் ஆவலில், அம்மாவையும் இழுத்துக் கொண்டு இங்கேயே வந்து விட்டாள், ராகினி!

    ஆளரவமேயின்றி திறந்து கிடந்த வீடுகளை வியப்போடு வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தார்கள், இருவரும். பகல் நேரத்தில் இப்படி ஒரு நிசப்தமா? கொஞ்சம் அச்சமாகக் கூட இருந்தது இருவருக்கும்.

    இதோ… லலிதையின் வீடு!

    லலிதையின் வீடும், இவர்கள் பார்த்த மற்ற வீடுகள் போலவே திறந்துதான் கிடந்தது. வீட்டில் யாரும் இருப்பது போலவே தெரியவில்லை. எல்லோரும் எங்கே போயிருப்பார்கள்? ‘லலிதை’ என்று சப்தமாகக் கூப்பிடக் கூட ஒரு மாதிரியாக இருந்தது. உள்ளே சென்று பார்க்கலாம்…

    உள்ளே… கூடத்தில்… அவர்கள் கண்ட காட்சி!

    ஒரு பெரிய பையன் குனிந்து கொண்டிருக்க, அவன் மீது ஒரு சின்னப் பையன் ஏறிக் கொண்டு, உறியிலிருந்த பானையை எடுத்துக் கொண்டிருந்தான்.

    “ஆ!” என்று தன்னையுமறியாமல் சப்தமிட்டாள் ராகினி.

    திடீரென்று கேட்ட குரலால் திடுக்கிட்டு, பானையைத் தவற விட்டு விட்டான், அந்த நீல வண்ணச் சிறுவன். பானை கீழே விழுந்து உடைய, அதிலிருந்த வெண்ணெய் வெள்ளை வெளேரன்று பந்து பந்தாய் ஆங்காங்கே சிதறியது. சட்டென்று கீழே குதித்த அவன், ராகினியும் அவள் அம்மாவும் அங்கே வாய் பிளந்து நிற்பதைக் கண்டும் காணாதது போல், சாவகாசமாகக் கீழே உட்கார்ந்து வெண்ணெயைக் கைகள் நிறைய அள்ளி வாய் நிரம்ப வைத்து உண்ண ஆரம்பித்தான். அந்த இன்னொரு சிறுவனையும் உண்ணும்படி சைகை செய்தான்.

    “மாட்டிக் கொண்டாயா!”

    என்ற உற்சாகக் குரலைக் கேட்டுத் திரும்பினாள், ராகினி.

    அங்கு நின்றிருந்தவள், சாட்சாத் அவள் அத்தையேதான்! லலிதையின் அம்மா.

    ராகினியையும், அவள் அம்மாவையும் பார்த்தவள், “வாருங்கள் அக்கா, வா ராகினி. உங்களைப் பார்த்ததில் ரொம்பவும் சந்தோஷம். ஆனாலும் உங்களைக் கவனிப்பதற்கு முன், இந்தப் பயலை அவன் அம்மாவிடம் கொண்டு ஒப்புவித்து விட்டு வந்து விடுகிறேன்.”

    நீலப் பையன் தப்பிச் செல்ல எந்த அவசரமும் காட்டவில்லை. யாரோ என்னவோ நமக்குச் சம்பந்தமில்லாததைப் பேசுகிறார்கள் என்பது போன்ற பாவனையுடன், குறும்புச் சிரிப்புடன், வெண்ணெயை அள்ளித் தின்று கொண்டிருந்தான்.

    “இந்தக் கள்ளக் கிருஷ்ணன் வெண்ணெய் திருடுகிறான் என்று நான் சொன்ன போதெல்லாம் இவன் அம்மா யசோதா என்னை நம்பவே இல்லை. அவனைக் கையோடு பிடித்துக் கொண்டு வா, அப்போது பார்க்கலாம் என்று சொல்லி விட்டாள்! இவனைப் பிடிக்கத்தான் இத்தனை நேரம் ஒளிந்து கொண்டு காத்திருந்தேன்! இதோ இப்போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டானே!”

    என்று சொல்லியபடி, லலிதையின் அம்மா நீலக் கிருஷ்ணனின் ஒரு கரத்தை இறுகப் பற்றி இழுத்துக் கொண்டு, யசோதையின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். ராகினியும், அவள் அம்மாவும் கூடவே, என்ன நடக்கப் போகிறதோ என்ற ஆவலுடன் அவளைப் பின் தொடர்ந்தார்கள்.

    இவர்கள் போகும் வழியில் இன்னொருத்தியும் ஒரு கையை நீட்டிப் பிடித்தபடி வந்து கொண்டிருந்தாள். யாரையோ பிடித்திருப்பது போல பாவனை இருந்தாலும், அவளுடன் வேறு யாரும் வருவதாகத் தெரியவில்லை; அவள் மட்டும் வருவதாகவே ராகினிக்குத் தெரிந்தது.

    கொஞ்ச தூரம் சென்றதும், இன்னொருத்தியும் அதே போல கையை நீட்டிப் பிடித்தபடி வந்தாள். (அதாவது, ஒருத்தி பிடித்திருந்த கிருஷ்ணனை இன்னொருத்திக்குத் தெரியவில்லை!) இப்படியே ஒவ்வொருத்தியாகச் சேரச் சேர, ஒரு பெரிய கூட்டமே சேர்ந்து விட்டது. பெரியதொரு ஊர்வலம் போல அனைவரும் சேர்ந்து யசோதையின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்கள்!

    “யசோதா!”

         “யசோதா!”

                 “யசோதா!”

    ஆளுக்கொரு குரலெழுப்பிக் கூப்பிட்டார்கள். யசோதா வெளியில் வந்தவள், இத்தனை பெரிய கூட்டத்தைப் பார்த்துத் திடுக்கிட்டாள்.

    “என்னடி இது? அத்தனை பேரும் ஒன்றாகச் சேர்ந்து வந்திருக்கிறீர்கள்? அது மட்டுமில்லாமல் எல்லோரும் ஒரு கையை ஒரு பக்கமாக நீட்டிக் கொண்டே வேறு இருக்கிறீர்கள்? எல்லோருக்கும் ஒரே சமயத்தில் கை சுளுக்கிக் கொண்டு விட்டதா?”, முகவாயில் கை வைத்துக் கொண்டு ஆச்சரியமாகக் கேட்டாள். அவளுக்கும் அவர்கள் எல்லோரும் பிடித்திருந்ததாக நினைத்த கிருஷ்ணர்கள் தெரியவில்லை.

    “யசோதா! உன் பிள்ளை எங்கள் வீடுகளில் வெண்ணெய் திருடுகிறான் என்று சொன்ன போது நம்ப மாட்டேனென்றாயே? கையோடு பிடித்துக் கொண்டு வா, பார்க்கலாம் என்றாயல்லவா? பார் உன் பிள்ளையை! வெண்ணெய் அள்ளிய கையோடு, அதை உண்ட வாயோடு, அப்படியே பிடித்துக் கொண்டு வந்திருக்கிறேன்! இப்போதாவது நம்புவாயல்லவா?”, லலிதையின் அம்மா, கையில் பிடித்திருந்த கிருஷ்ணனை யசோதையின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினாள்.

    “ஆமாம்… பார், நாங்களும் உன் பிள்ளையைப் பிடித்து வந்திருக்கிறோம்”, என்று எல்லோரும் அவரவர் பிடித்து வைத்திருந்த கிருஷ்ணனை யசோதையின் முன்னால் நிறுத்தினார்கள்.

    ஒவ்வொருத்திக்கும் தன் கையில் பிடித்திருந்த கிருஷ்ணன் மட்டுமே தெரிந்தான். மற்றவர்கள் கையில் பிடித்திருந்த கிருஷ்ணன் தெரியவில்லை. யசோதைக்கோ இவர்கள் கூட்டி வந்த எந்த கிருஷ்ணனுமே தெரியவில்லை!

    இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்ட யசோதைக்குக் கோபம் வந்து விட்டது!

    “என்னடி, விளையாடுகிறீர்களா? என் பிள்ளை காலையிலிருந்து எங்குமே போகவில்லை! இப்போது கூட உள்ளே ததியோன்னம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். பார்க்கிறீர்களா?” என்றவள் உள் பக்கம் திரும்பி, “கிருஷ்ணா! கிருஷ்ணா! இங்கே வா!”, என்று உரக்கக் கூப்பிட்டாள்.

    “என்னம்மா… கூப்பிட்டாயா?” என்றபடி ததியோன்னமும் கையுமாக கிருஷ்ணன் உள்ளிருந்து வந்தானே பார்க்க வேண்டும்!

    வந்திருந்த அத்தனை கோபிகளின் வாயும் அடைத்து விட்டது! “என்ன இது? கிருஷ்ணன் உள்ளே இருந்து வருகிறானே!” என்று தன் கையில் இருந்த கிருஷ்ணனை ஐயத்துடன் பார்த்தார்கள்.

    தயிர் வழியும் வாயோடு, உள்ளிருந்து வந்த கள்ளக் கிருஷ்ணன் சிரிக்க, எல்லோருடைய கிருஷ்ணர்களும் வெண்ணெயுண்ட வாயோடு இப்போது எல்லோர் கண்களுக்கும் தெரிய… கோகுலம், ஒரு நொடியில் கோலாகலமானது!

    “தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு”,  தளர்நடை இட்டு வருவான்;
    பொன்னேய் நெய்யொடு பாலமுது உண்டொரு புள்ளுவன் பொய்யே தவழும்!
    மின்னேர்  நுண்ணிடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய்வைத்த பிரானே!
    அன்னே  உன்னை அறிந்துகொண்டேன் ; உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே

    தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு = இரண்டு விதமாப் பொருள் சொல்லுவார்கள்:
    1.   தானும், தன் ஆயிரம் தோழர்களும்-ன்னு = 1000 friends, is too big a number, of the same age group:)
    2.   “தன் நேர்” = தன்னைப் போலவே ஆயிரம் பிள்ளைகள்; ஆயிரம் கண்ணன்கள்!!!
    தளர்நடை இட்டு வந்து, நெய் உண்டு, உண்ணவே இல்லை-என்று சாதிக்கும், பொய்யே தவழும்
    குட்டிக் கிருஷ்ணனைக் கண்டு யசோதையும் அஞ்சுகிறாள்!

     

    “அம்மா, அம்மா! லலிதையோடு நானும் இனி கோகுலத்திலேயே இருக்கிறேனம்மா!” என்று நச்சரிக்க ஆரம்பித்திருந்தாள், ராகினி!

     

    அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள்!

     

    [நன்றி: பாசுரம், உதவி – KRS என்ற கண்ணபிரான் ரவிசங்கர்]

    படத்துக்கு நன்றி: http://artstudio108.com/inspirational/Krsna_stealing_butter.jpg

    Share
  • கோகுலாஷ்டமி சிறப்புப் பகிர்வு

     

    சு.ரவி

    வணக்கம் வாழியநலம்

    Gokulashtami 1

     

    “இதழ்த்தா மரைக்குள் கரத்தா மரையால்
    பதத்தா மரைசுவைக்கும் பாலன்- மிதக்கின்றான்
    ஆலிலைப் பாய்மேல்; அவனுங்கள் இல்லத்தில்
    காலிணை வைப்பன் கனிந்து.”

     

     

     

     

     

     

     

     

     

    Yasodai krishna

     

     

    “பண்வாய் இடைச்சி பரவசமாய்க் கண்ணனைக்
    கண்ணம்மா ஆக்கிக் களிக்கின்றாள்!- எண்ணில்
    இகம்பரம் கடந்த பரம்பொருள் இங்கே
    திகம்பரமாய் நிற்கின்ற தே!”

     

     

     

     

     

     

     

     

    Share
  • குழந்தையும் தெய்வமும்.

    தனுசு

    குழந்தை பிறப்பு குறைந்துவிட்ட
    கணக்கைக் கண்டு
    காரணமறிய
    கள்ளத்தனமாய்
    கடவுள் வந்தான் பூமிக்கு….

    சகதியில் பன்றி
    தன் குட்டிகளோடு புரள
    தாய் பன்றியை
    ஏக்கத்தோடு பார்த்தான்
    ஓரத்தில் நின்ற
    அனாதை சிறுவன்.

    பில்கேட்ஸின் சுவரொட்டியை
    கிழித்துவிட்டு
    பத்தாவது நாள் பட சுவரொட்டியை
    ஒட்டுவதில்
    நேர்த்தியாய் இருந்தான்
    ஒரு குழந்தை தொழிலாளி.

    புதிய சட்டைக்கு
    பட்டன் தைக்கும் சாக்கில்
    தன் மீது போட்டுப் பார்த்து
    தடவிக் கொடுத்தான்
    கிழிந்த ஆடையுடன் ஒரு சிறுவன்.

    உணவகத்தில்
    வயிறு நிறைந்து
    எழுந்தவரின் இலையில்
    உண்ணாமலிருந்த லட்டை
    உற்றுப்பார்த்து
    எடுத்துப் போட்டுத் துடைத்தான்
    பசித்த வயிறோடு ஒரு பாலக ஊழியன்.

    தன்னால் செய்யப்பட்ட பட்டாசுகள்
    வானத்தில்
    வண்ணம் காட்ட
    அதை நோக்கும் எண்ணமில்லாமல்
    புண்ணான உடம்பில்
    உண்ணாத வயிறும்
    வேதனை கொடுக்க
    வதை பட்டான்
    பட்டாசு தொழிற்சாலையில்
    ஒரு சிறுவன்.

    ஒப்பாரி பாட யாருமில்லாததால்
    ஈக்கள் மொய்க்க
    இறுதிப் பயணத்துக்குத் தயாரானது
    குப்பைத்தொட்டியில் கிடந்த
    ஒரு குழந்தை.

    மலர்ந்த பூக்களை
    தட்டில் வைத்து
    பூ பூவென கூவினாள்
    வாடிய முகத்துடன் சிறுமி.

    கல் சுமக்க போனவிடத்தில்
    வல்லுறவு சுமத்தப்பட்டதால்
    வெளியுலகம் அஞ்சி
    கூடுக்குள் குருகியது
    ஒரு பூப்பெய்தா பிஞ்சு.

    கும்பிட கடவுள்
    கைக்கெட்டும் தூரத்திலிருக்க
    கோயிலின் வாசலில்
    கள்ளனோ
    கபோதியோ
    அவனை கையெடுத்து கும்பிட்டு
    “ஐயா…சாமி….” என்றே
    காசு கேட்டது
    ஒரு குழந்தைக்கூட்டம்.

    குழந்தையாய்ப் பிறக்க
    குழந்தைகளே விரும்பவில்லை
    ஏழையாய்ப் பிறக்க
    எந்த உயிரும் தயாரில்லை
    தன் தவறை உணர்ந்தான்
    தலையில் அடித்துக்கொண்டான்

    என்னடா
    ஏதடா
    ஏனிந்த நிலையடா
    படைத்தவன் நானா?
    என் பணியும் வீணா?
    இறைவன் என்பவன்
    இனி எதற்காக
    இரங்கல் பாடுங்கள்
    இன்றோடு எனக்காகவென
    கண்ணீர் விட்டு அழுதான்.

     

    படத்துக்கு நன்றி: http://qhpc.org/wp-content/uploads/2013/02/Tears-of-Faith.jpg

     

    Share
  • ரசனையின் சிலிர்ப்பு!…

    தி. சுபாஷிணி

    tkc1881 ஆம் ஆண்டு, ஆவணித் திங்களில், ரோகிணி நட்சத்திரத்தில் பூ ஒன்று தோன்றியது. இப்பூ பூத்து, தமிழ்க்கவியின்பத்தில் திளைத்து, எது கவியென கண்டுகொண்டு களித்தது. கம்பனைக்கண்டு குதூகளித்தது. கும்மாளம் போட்டது. கம்பனின் இதயம் புகுந்து கம்பனாகவே மாறிவிட்டது. பழந்தமிழ் பாடல்களையெல்லாம் வெளிக்கொணர்ந்து, படித்து படித்து ரசித்து சிலிர்த்தது. அச்சிலிர்ப்பில் தமிழ்ப்பண்பாடு மலர்ந்தது. சமயம், தமிழிசை, நாடகம், நடனம், ஓவியம், சிற்பம், கோயில், பக்தி என அனைத்து விடியல்களையும் அறிந்து பாராட்டியது. பாராட்டப் பாராட்ட ஆனந்தம் பெருகியது. இதை தன்னைச் சார்ந்தவர்களுக்கு அள்ளி அள்ளி அளித்தது. அறிஞர், அல்லாத பாமரன், பணக்காரன், இல்லாதவன் என பாகுபாடில்லது, தன்னிலத்தில் இருத்தி, இன்னமுதூட்டி தங்கு தங்கு எனத் தங்கவைத்து, ரசனையின்பத்தை பொதிகைச் சாரலாய்ப பொழியச் செய்தது.

    இப்பூ, ‘தமிழின்பத்தால் அவரது மீசையும் முறுவல் சிந்தும்‘ எனப் போற்றப்படும் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் ஆவார். கிருஷ்ணன் அவதரித்த ரோகிணி நட்சத்திரப் பூ! இவ்வாண்டு இந்த ரசனை மலருக்கு 132 ஆவது பிறந்த நாளாகும்.

    ஆன்றோர்களும் சான்றோர்களும் அடங்கிய வாசகர் வட்டம் கணையாழிக்கு உண்டு என்பதை நான் நன்கு அறிவேன். சாகித்ய விருதோடு இயல் விருதையும் தாங்கி நிற்கும் சீரிய எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்களின் கவலையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். “விழாவிற்கு வந்திருக்கும் விருந்தினரை வரவேற்று, முதலில் கொடுக்கும் குளிர்பானமகிய எலுமிச்சை பானத்தில் பழரசத்திற்கு பதிலாக செயற்கை மணத்தை கலந்து, பொய்யான பானத்தை மெய்யான பானம்போல் கொடுக்கின்றோம். அனால் உணவு அறிந்தி கை கழுவுகையில், கழுவும் நீர்கே கிண்ணத்தில் எலுமிச்சம் பழத்துண்டை வைக்கின்றோம். நாம் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்“ என்பதுதான் அவரது கவலை. இக்கவலையின் வீச்சு என்னை 132 ஆண்டுகளுக்கு முன் போகவைத்துவிட்டது.

    தமிழ் பண்பாட்டின் உன்னதத்தை உணர்ந்து தன் வாழ்வியல் ஆக்கி, தன சமகாலச்  சான்றோர்களையும்  ஆளுமைகளையும் தன் பக்கம் ஈர்த்த பூவாய் அவதரித்த ரசிகமணி டி.கே.சிநினைவில் என்னை அமரவைத்துவிட்டது.

    1930 &ஆம் ஆண்டு என்றே சொல்லலாம். அப்போது சென்னையில், தி.நகரிலுள்ள பசுல்லா சாலையில் ஒரு பங்களா வீட்டில், கீழ்பகுதியில் கல்கி தங்கி வசித்து வந்தபோது, மாடிப் பகுதியில் திரு.ராஜாஜி அவர்கள் வசித்து வந்தார்.

    அப்போது, பிரபல வக்கீலும், நீதிபதியுமான ஸ்ரீனிவாச அய்யங்கார் அவர்களது வீட்டில் கம்பராமாயண வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அலுவலகம் செல்பவர்களின் வசதிக்காக, வகுப்பு மாலை 7 மணிக்கு துவங்கும். வகுப்பு முடியும் நேரம் இரவு 11 மணி ஆகிவிடும். நாள் தவறாது கல்கி இந்த வகுப்பிற்கு சென்று வந்தார். தினந்தோறும் மாலையில் 6 மணிக்குச் செல்லும் கல்கி, வீடு திரும்ப பன்னிரண்டு மணிவரை ஆவதை ராஜாஜி அவர்கள் கவனித்து வந்தார். சில நாட்கள் கழித்து ராஜாஜி கல்கியிடமே இதுபற்றி விசாரித்தார். வேறு ஏதாவது தப்பு காரியம் செய்கிறாயா, என்று நேரடியாகவே கேட்டு விட்டார்.  துளியும் மறைக்க முடியாத நிலையென உணர்ந்த கல்கி, “வக்கீல் ஸ்ரீனிவாச அய்யங்கார் வீட்டில் ஒருவர் தினந்தோறும் கம்பராமாயண வகுப்பு நடத்துகிறார். அது மிகவும் அருமையாக இருக்கின்றது” என்று கூறவே தன்னையும் அங்கு அழைத்துப் போகுமாறு ராஜாஜி கல்கியிடம் வேண்டினார். அன்றிலிருந்து கம்பராமாயண வகுப்பிற்கு இருவரும் இணைந்து போகத் தொடங்கி விட்டனர். 1937 ஆம் ஆண்டு ராஜாஜி அவர்கள் சென்னை மகாண முதல்வராய் பொறுப்பேற்றார். அப்போதும் கம்பராமாயண வகுப்பை மறக்கவில்லை. விடாது சென்றார். நாட்டின் பணிகளைச் செய்து விட்டு மிகவும் களைத்து வரும் இவருக்காக வக்கீல் அவர்கள் கட்டில் ஒன்று போட்டு வைத்திருந்தார். வேலைப்பளுவின் காரணமாக அதில் படுத்துக்கொண்டே கம்பராமாயணத்தை தொடர்ந்து அனுபவித்தார்.

    ஆம்! உணர்வின் உன்னதமாகிய இதய தத்துவமாகிய டி.கே.சியையும், அறிவின் ஆளுமையாகிய ராஜாஜியையும் இணைத்தவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள். இந்த இணைப்பினால் இலக்கியம், இசை, கலை, அரசியல் ஆகிய துறைகளில் வரலாறு போற்றும் பல விளைவுகள் விளைந்தன. ராஜாஜியின் நட்பினால் டி.கே.சிக்கு பல பெரியவர்களின் உறவும், மதிப்பும் கிடைத்தன.

    சென்னைக்கு மகாத்மா காந்தி வந்திருந்த சமயம். இராஜாஜி அவர்கள் தன்னுடன் தன் நண்பர் தி.கேசியை அழைத்துக் கொண்டு அவரைப் பார்க்கச் சென்றார். அப்போது காந்திஜியிடம் ராஜாஜி, “தன் வாழ்வின் 50வது வயதில் சந்தித்தவர் நண்பராகவும், அதிலும் மிகவும் அணுக்கமான இதயபூர்வமான நண்பராகவும் இருக்க முடியுமா? நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்று கேட்க, மிகவும் புரிதலோடு மகாத்மா அவர்கள், “ஓ! பார்த்திருக்கேனே! இதோ! என்முன்! உங்களோடு!” என்று சட்டென்று பதிலளிக்கிறார். “ஆமாம்! என் 50 ஆவது வயதில் சந்தித்த இவர், இதுவரை நான் சந்தித்த, கிட்டிய நண்பர்களைக் காட்டிலும் எனக்கு நெருங்கிய நண்பர்” என்று ஆமோதித்தார். இப்படித்தான் அவரை அறிமுகப்படுத்தினார் ராஜாஜி.

    மகாத்மா காந்தி தேச சேவைக்காகத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்தார். அவ்வமயம் எல்லாவகைப் பற்றுக்களையும் எளிதாக ஓரிரு நாட்களில் துறக்க முடிந்தது. அவருக்கு இலக்கியப் பற்றைத் துறக்க ஒரு வாரம் ஆகியது. ராஜாஜி அவர்களின் மகன் நரசிம்மனிடம் காந்திஜி அவர்கள், “உன் அப்பாவிடம் இலக்கியப்பற்று அதிகம் இருக்கின்றது. அதைத் துறக்கச் சொல்” என்றாராம். ஆனால் சில வருடங்கள் கழித்து, ராஜாஜி தன் நெருங்கிய நண்பரை காந்தியிடம் அழைத்துச் சென்றார். அப்போது அந்நண்பர் “கம்பராமாயணம்” பாடல் ஒன்றைப் பாடி ஆங்கிலத்தில் விளக்கம் கூறினார். அவ்வளவுதான் அந்த கணமே காந்திஜியின் இலக்கிய சன்னியாசம் கழன்று விழுந்து விட்டது.  நான் கம்பராமாயணத்தை அனுபவிக்க வேண்டும் என்று வேண்டினாராம். அதற்கு நீங்கள் தமிழ் கற்க வேண்டும் என்று அந்நண்பர் பதில் கொடுத்தாராம். காந்தியின் இலக்கிய சன்னியாசத்தை துறக்க செய்து  விட்டார் ரசிகமணி.

    உயர்ந்த பதவிகளில் இருந்த அதிகாரிகள், நீதிபதிகள், அமைச்சர்கள் என அனைவரும் டி.கே.சியுளன் பழகுவதை தமக்கு ஒரு பெருமையென நினைத்தனர். எனினும் அவருடைய கம்பராமாயண திருத்தங்களால்  ஏற்ப்பட்ட எதிர்வினைகளால் டி.கே.சி மனம் நைந்து போனார். அச்சமயத்தில் ராஜாஜியின் செல்வாக்கும் அவரது நட்புக்குழாத்தின்  அவரது இதயத்திற்கு இதமாக இருந்தன.

    டி.கே.சியின் நட்பினால் ராஜாஜிக்கு ஆன்ம அமைதியும், ஆனந்தமும் கிடைத்தன. அரசியல் பரபரப்பில் வேஷதாரிகளுக்கும், ஆஷாடபூதிகளுக்கும் இடையே பெற்ற சொல்லவொண்ணாத வேதனையெல்லாம்  டி.கே.சி என்ற அன்பு தத்துவத்தில் மூழ்கி மூழ்கி மறக்க கற்றுக்கொண்டார். தம்மிடத்தில் ஒருவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காத டி.கே.சியை போன்ற தன்னலமற்ற உத்தமர்களோடு பழகும்போது, ராஜாஜி தம்முடைய முகமூடியையும், கறுப்பு கண்ணாடியையும் கழற்றி எறிந்துவிட்டு, அன்பை கொட்டிக்கொண்டு இருப்பார்கள்.

    அன்பு தத்துவமாக திகழ்ந்த ரசிகமணி டி.கே.சியைப்பற்றி ராஜாஜி கூறுவதை நாம் பார்க்கலாம்

    ராஜாஜி::

    ராஜாஜி அவர்கள் குற்றாலத்திற்கு வந்த வருடம் 1956 ஆம் ஆண்டு. அங்கு தங்குகிறார்கள். அவர்களுடன் இணைந்து மற்றவர்களும் வெளியில் நடக்கிறார்கள். ஐந்தருவிக்கு போகும் வழியில் மலை ஏறத் தொடங்குகிறார்கள். சிற்றருவிக்கும் மேலே சற்று தொலைவில் பெரிய பாறைகளால் ஆன சமவெளி இருக்கிறது. அப்படியே அங்கு தன் தோள் துண்டை உதறி விரித்து அமர்ந்து விடுகிறார். நேரமோ வெயில் கொளுத்தும் மதியம். நினைவு அலைக் குமிழுக்குள் ஆழமாகச் சென்று விட்டார். ராஜாஜி அமர்ந்த கோலம் & அப்படியே சம்மணம் போட்டு ஒரு யோகிபோல் அமர்ந்துவிட்டார்.

    டி.கே.சியும் ராஜாஜியும் சந்திக்க காரணமாயிருந்தவர் ‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள். ராஜாஜியின் 50 வயதில்தான் இந்நட்பு மலரத் தொடங்கியது. டி.கே.சியை காந்திக்கு அறிமுகப்படுத்தினார் ராஜாஜி. அப்போது காந்தியிடம் ராஜாஜி, “டி.கே.சி எனக்கு 50 வது வயதில் நண்பர். நண்பரைவிட காதலர்” என்றே அறிமுகப்படுத்தினார். ராஜாஜியோ அறிவின் கொடுமுடி. டி.கே.சி அவர்களோ உணர்வின் உன்னத உச்சம். அறிவு, உணர்வு இரண்டின் உச்சங்களின் நட்பு அக்காலத்தில் வரலாறாக மாறியது. ராஜாஜிக்கு அரசியலில் காந்தி குரு என்னில் இலக்கியத்திற்கு டி.கே.சிதான் குருவாக இருந்தார். அரசியல் வேலைகளால் மனம் சோர்வாய் இருக்கும்போதெல்லாம் டி.கே.சியுடன் வந்து தங்கிவிடுவார் குற்றாலத்தில். மனதை சரி செய்துகொண்டு, புத்துணர்ச்சி பெற்றுத் திரும்புவார். இலக்கிய சர்ச்சைகளும், அறிவார்த்தமான, தத்துவார்த்தமான உரையாடல்களும் இவர்கள் இடையே ஏற்படும்போது, கூட இருப்பவர்களுக்கு நல்ல சிந்தனை விருந்தாக இருக்கும் என்று கூறுவார்கள் நீதிபதி எஸ்.மகராஜன் அவர்கள். கலையை அனுபவித்து, ஆனந்தத்தை அனுபவிக்கும் அனுபவத்தை டி.கே.சி. அவர்கள் ராஜாஜிக்கு நல்கினார். பல இலக்கியச் சான்றோர்கள் அவருக்கு டி.கே.சியால் கிடைத்தனர். டி.கே.சிக்கு ராஜாஜியின் அரசுத் தலைவர்கள் மகாத்மா காந்தி, நேரு, வினோபா இன்னும் பல பெரியோர்களின் நட்பு கிடைத்தது. “தமிழிசை இயக்கம்” நடத்தும்போது, டி.கே.சியை பல வித்வான்கள் கண்டனம் தெரிவித்தனர். அவரது இராமாயண நூலை எரித்தனர். ஆனால்அவருக்குத் துணையாக ‘ராஜாஜி’ நின்றார். கல்கியில் இதுபற்றிக் கட்டுரை எழுதினார். அதுபோல், காங்கிரஸ் கட்சியில் பெருந்தகையார் ராஜாஜி பற்றி மாற்றுக் கருத்து தெரிவிக்கும்போது, ராஜாஜியின் நல்ல இதயத்தையும் பண்பையும் பற்றி ‘பத்தரைமாற்றுத் தங்கம்’ என தலைப்பிட்டு கட்டுரை எழுதி, தமிழ் மக்களுக்குப் புரிய வைத்தார் டி.கே.சி. அவர்கள். அவர்களது நல்நட்பின் பண்பும் பயனும் அது.

    இந்தியா விடுதலை அடையும்முன் இடைக்கால அமைச்சரவையில் ராஜாஜியும் அங்கம் வகிக்க வேண்டும் என விரும்பி நேரு, ராஜாஜியை அழைத்தபோது, அவர் டி.கே.சியுடன் குற்றாலத்தில்தான் இருந்தார். இங்கிருந்து தில்லி கிளம்பினார். 1952ல் காமராஜர் பொதுத்தேர்தலின் போது  நிலைமையைச் சமாளிக்க ராஜாஜி தேவை என்று தீர்மானித்து காமராஜர் குற்றாலத்துக்கு வந்து, ராஜாஜியை அழைத்துச் சென்றார். தில்லியின் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்று இருந்தபோதும் ராஜாஜியின் உள்ளம் முழுவதும் டி.கே.சி. நினைவாகத்தான் இருந்தது என்பதை அவரது ஏக்கம் நிறைந்த கடிதங்கள் கூறின.

    ‘முதல் தாம்பூலம்’  என்னும் கட்டுரை மகாபாரத நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதினார்  ராஜாஜி அவர்கள். அதைப் படித்து ரசித்த டி.கே.சி. அவர்கள், ராஜாஜிக்கு தம் மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார். அதில் “மகாபாரதக் கதை முழுவதையும் நீங்கள் தமிழ் மக்களுக்கு எழுதலாமே” என்ற யோசனையையும் வழங்கி இருந்தார். அதுதான் ‘வியாசர் விருந்து’ என்று மலர்ந்தது. பின்னாளில் “சக்ரவர்த்தித் திருமகன்’ என இராமாயணத்தையும் எளிய தமிழில் ராஜாஜி எழுதினார்கள். இவ்விரு செயல்களும் தன் பணிகளிலேயே சிறந்த பணியும் மனதிற்கு திருப்தி அளித்தன என்பதையும் அவர் உணர்ந்தார். வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் டி.கே.சியைப் பற்றிப் பேசிப் பேசி  நட்பின் ஆற்றாமையை தீர்த்துக்கொண்டார் ராஜாஜி. எதற்கும் கலங்காத அறிவின் சிகரம், தன் நண்பர் அமரரானபோது நிலை குலைந்துதான் போனார். இதோ! டி.கே.சியின் அலைகள் அந்தப் பொதிகை மலைத் தென்றலாய் வருடும் இன்பத்தை  அனுபவித்துக் கொண்டு, அந்தப் படபடக்கும் வெய்யிலில் ஆனந்தத்தின் உச்சத்தில் அமர்ந்திருக்கிறார்.  ஏனையோர் அவராக அதிலிருந்து வரட்டும் என்று அவர் முகம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். நண்பர்களே! அறிவும் அன்பும் கலக்கும் அனுபவம் அங்கு நடந்து கொண்டிருக்கின்றது. நண்பர்களே! எப்போது நீங்கள் குற்றாலம் சென்றாலும் பொதிகைத் தென்றல், அந்நல் நட்பின் பண்பைப் பகரும். உணர்வீர்கள் நண்பர்களே!

    பூரணஹரியும்  பூரண ரசிகமணியும்::

    சென்ற திங்கட்கிழமை கண்ணன் பிறந்த நாள். அந்தத் திங்கட்கிழமையே தமிழ்க் கவிதை தரும் மகிழ்ச்சியின் ரகசியம். தமிழ் வசன நடை முன்னேற்றத்தின் ரகசியம். தாளமும் ராகமும் சேர்ந்த நல்லிசையின் ரகசியம். தெய்வ பக்தி தரும் நிம்மதியின் ரகசியம். அன்பின் பரம மகிழ்ச்சி, வேஷங்களின் பொய்ம்மை, அனைத்தும் நன்றாகக் கண்ட பூரண ரசிகமணி டி.கே.சி. பிறந்த நாளும்,

    ஹரியின் பூரணாவதார கண்ணனின் ஜன்ம நட்சத்திரமும், டி.கே.சியின் ஜன்ம நட்சத்திரமும், ஒன்றாய்ச் சேர்ந்த திருவிழாவை மகிழ்ச்சியுடன் சென்ற திங்கட்கிழமை கொண்டாடினோம். இந்தத் திருவிழாக்கள் ஞானமும் அன்பும் நாட்டில் வளரச் செய்யும்.

    கண்ண பகவான் ரோஹிணி நட்சத்திரத்தில் அவதரித்தான். ரோஹிணி நட்சத்திரக் கூட்டம் சகடத்தைப்போல் இருப்பதாகக் கண்டு அதற்குப் பெயரும் சகடம் என்றே சொல்வது வழக்கம். வண்டியின் முக்கிய பாகம் அச்சு மரம். அச்சு மரத்துக்கு வடமொழி ‘அக்ஷ’. அதன் கீழ் பிறந்தான் கண்ணன்  என்று விஷ்ணுவுக்குப் பீஷ்மாச்சாரியார் தந்து பாடிய ஆயிர நாமங்களில் ‘அதோகஜ’ என்பதும் ஒன்று. அதாவது அச்சு மரத்தடியில் அவதரித்தான் என்று.

    இந்த அச்சு மரத்தடியில் மற்றொருவர் அவதரித்தார். தமிழ்க் கவிக் காதலர் டி.கே.சி. என்று பெயரைப் பெற்ற மகான் சிதம்பரநாத முதலியார் அவர்கள். இவர்தான் ‘கல்கி’ கூட்டத்தின் குலபதியாக இருந்து பல்லாண்டு அந்தப் பத்திரிகையையும், அதை நடத்தியவர்களையும், படிப்பவர்களையும் ஆசீர்வதித்து வந்தார். அவரைக் கல்கி மறக்கமுடியுமா? சிரீஜயந்தி என்றால் கண்ணன் பிறந்தநாள். டி.கே.சி. பிறந்தநாள் என்றும் தமிழர் கொண்டாடும் நாள்.

    பூரண ஹரியும் பூரண ரசிகமணியும் (ரசிகமணி கட்டுரைகள், மித்ர ஆர்டிஸ் கிரியேஷன்ஸ் 32/9 கஷ்காடுகாரை, சென்னை 24& முதற்பதிப்பு &2004.

    Share
  • மகாபாரத முத்துக்கள்!..பாகம் 3

    புவனேஷ்வர்

     

    மகாபாரதமுத்துக்கள்பூரிசிரவஸ்வதம்வலக்கைவெட்டுண்டது!

    வணக்கம் அன்பர்களே.

    சென்ற பதிவில், சாத்யகி அருச்சுனனிடம் வந்ததையும், அருச்சுனனின் அதிருப்தியையும் பார்த்தோம் அல்லவா? அதன் பின் என்ன நடந்தது என இன்று பார்க்கலாம்:-

    யுத்தத்தில் யாராலும் ஜெயிக்க முடியாதவனான சாத்யகி அருச்சுனனை நோக்கி வருவதைக்கண்ட பூரிசிரவஸ், மிக்க ஆத்திரத்துடன் சாத்வதனை (சாத்யகியை) நோக்கி விரைந்தான். அவனைப்பார்த்து “அடே சாத்யகி, நீ இன்று என் கண்ணில் பட்டது எனது அதிர்ஷ்டம் என்றே கருதுகின்றேன்.  நீண்டநாட்களாக எனது நெஞ்சில் பூட்டி வைத்திருந்த ஆசையினை இன்று உன்னுடன் போரிட்டு தீர்க்கப்போகிறேன். நீ யுத்தத்தில் பயந்து ஓடிப்போனாலோழிய உன்னை உயிருடன் இன்று தப்ப விட மாட்டேன். உன்னைப்பெரிய வீரன் என்று நினைத்து கர்வம் கொண்டுள்ள  தாசார்ஹனே, உன்னை இன்று போரில் கொன்று குருகுல வேந்தன் துரியோதனனின் மனம் மகிழப்பண்ணுவேன். நீ எனது பாணங்களால் எரிக்கபெற்று யுத்தகளத்தில் வீழ்ந்து கிடப்பதை இன்று கேசவனும் அர்ஜுனனும் காணப்போகிறார்கள். நீ என்னால் வதம் செய்யப்பட்டாய் என்று அறிந்து, உன்னை இப்படைக்குள் அனுப்பிய தருமன் தன் செயலை நினைத்து வெட்கி மாழ்கப்போகிறான். நிணமும் குருதியும் பூசப்பட்டு உன்னுடல் யுத்தபூமியில் கிடப்பதைக்கண்டு குந்திபுத்திரனான அருச்சுனன் பூரிசிரவசின் வீரத்தை அறிந்துகொள்ளப்போகிறான். பழங்காலத்தில் மகாபலியுடன் போர் புரிய இந்திரன் விரும்பியது போல உன்னுடன் போர் புரிய எனக்கு என்றுமே விருப்பம் உண்டு, சாத்யகி. கொடிய யுத்தம் என்றால் என்ன என்பதை இன்று நான் உனக்கு காட்டுவேன். ராமனின் இளவல் லக்ஷ்மணனால் இந்த்ரஜித் யமனுலகம் ஏகியது போல, என்னால் கொல்லப்பட்டு நீ கொடுங்கூற்றுக்கு இரையாகப்போகிறாய்! நீ என்னால் வதைக்கப்பட்டதை கண்டு கிருஷ்ணனும் பார்த்தனும் தருமராஜன் யுதிஷ்டிரனும் யுத்தத்தின் மேலுள்ள பற்றினை விடுவார்கள், பார். எனது கூரிய அம்புகளால் உன்னைக்கொன்று, உன்னால் கொல்லப்பட்ட வீரர்களின் மனைவிகளை நான் திருப்திபடுத்துவேன். சிங்கத்தின் கண்ணில் பட்ட சிறு மான் போல, என் கண்ணில் பட்ட நீ இன்று உயிருடன் திரும்ப இயலாது!” என சூளுரைத்தான் பூரிசிரவஸ்.

    பூரிசிரவசின் இந்த வார்த்தைகளை கேட்ட சாத்யகி சிரித்தான். சிரித்து விட்டு பூரிசிரவசைப்பார்த்து “குருகுல வீரனே, யுத்தத்தில் பயம் எனக்கு என்றமே இருந்ததில்லை. பயனற்ற வார்த்தைகளால் ஏன் என்னை பயமுறுத்த முயற்சிக்கிறாய்? அது வீண் வேலை. என்னை யுத்தத்தில் நிராயுதபாபாணியாக்கும் வல்லமை பெற்ற வீரனே என்னை யுத்தத்தில் கொல்லவியலும். என்னை கொல்லும் வீரன், இனி வரும் எல்லா யுகங்களிலும் எதிரிகளைக்கொல்லுவான்! வீணர்கள் பேசும் வீண் வார்த்தைகளை யுத்தகளத்தில் நீ பேசுவதால் என்ன பலன்? முடிந்தால் உன் வீரத்தை செயலில் காட்டு. (மழைக்கு உதவாத) வெண்மேகங்கள் கர்ஜிப்பது போல உள்ளது உன் கூச்சல். வீரனே, உன் க்ர்ஜனைகளைக்கேட்டு எனக்கு வரும் சிரிப்பினை என்னால் அடக்க இயலவில்லை! நீ நெடுங்காலமாக ஆசைப்படுவதாக சொன்னாயே, என்னுடனான அந்த போர், அது  இன்று, இப்போதே, இங்கேயே நடக்கட்டும். உன்னுடன் போர் புரிய ஆவலுடன் உள்ள எனது மனம் இனி எந்த தாமதத்தையும் பொறுக்காது. மூடனே, உனைக்கொல்லாமல் நான் இன்று போரில் இருந்து ஓயப்போவதில்லை” என்று பதில் கூறினான்.

    இப்படி சற்று நேரம் ஒருவரை ஒருவர் திட்டி விட்டு, இளம் காளைகளை ஒத்த அந்த இரு வீரர்களும் சினம் மேலிட போர் புரிய ஆரம்பித்தார்கள். ஒருவர் உயிரை மற்றொருவர் குடிக்க ஆவலோடு அம்புகளை பொழிந்தார்கள். வில்வித்தையில் தேர்ந்த அந்த இரு வீரர்களும் ஒருவரை ஒருவர் அறைகூவி, மதம்கொண்ட இரு யானைகள் ஒரு பெண்யானைக்காக மோதுவது போல போரிட்டார்கள்.

    இரு மேகங்கள் மழை பொழிவது போல, அவ்விரு வில் வீரர்களும் ஒருவர் மீது ஒருவர் பாணங்களை வருஷித்தார்கள். சோமதத்தனின் மகன் சினியின் பேரனை கொல்வதற்கு அவன் மீது பத்து கூரிய அம்புகளை எய்தான். அதன் பின்னும் பல கூரிய அம்புகளை சாத்யகி மீது அவனை கொல்லும் ஆவலால் ஆத்திரத்துடன் விடுத்தான் பூரிசிரவஸ். ஆனால் சாத்யகியோ மிக நிதானமாக, அந்த அம்புகள் அவனை வந்து அடையும் முன்னரே, தன் அம்புகளால் தடுத்தான்.

    தங்கள் குலங்களுக்கு பெருமைசேர்க்கும் வ்ருஷணி குல வீரனும் குருகுல வீரனும் அம்பு மழையால் ஒருவரை ஒருவர் மூடினார்கள். மகாரதர்களின் வழக்கம் போல, ஈட்டிகளையும் குறுவேல்களையும் எறிந்து ஒருவரை ஒருவர் நொறுக்கப்பார்த்தார்கள்.

    இரு புலிகள் தங்கள் நகங்களால் போரிடுவதைப்போலவும், இரு மத யானைகள் தங்கள் தந்தங்களால் போரிடுவதைப்போலவும் அவர்கள் போரிட்டனர். உடல்களில் குருதி பெருக உயிரைப்பணயம் வைத்து பரம்பரைப்பகையை நினைத்து போரிட்டனர்.

    வெற்றி அல்லது வீரமரணம் ஏதாயினும் மகிழ்ச்சி என, அந்த சூரர்கள் மோதினர். பிரம்மபதத்தினை வீரமரணம் மூலம் பெற விழைந்து கர்ஜித்தனர். இவர்கள் போரினைக்கண்டு தார்தராஷ்ட்ரர்களின் (துரியோதனின் மைந்தர்கள்)  மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது.

    இருவர் தேர்களும் உடைந்தன. இருவர் தேர்க்குதிரைகளும் மாண்டன. இருவர் விற்களும் உடைந்தன. தேரும் வில்லும் இழந்த அந்த இரு மகாரதர்கள் கத்தியும் கேடயமுமாக மண் மீது குதித்தனர்

    காளையின் தோலால் ஆன இரு பெரிய ஒளி வீசும் கேடயங்களை ஏந்தி, மின்னும் வாட்களை பற்றி சாத்யகியும் பூரிசிரவசும் யுத்தபூமியில் சுற்றி சுற்றி போரிட்டனர். வட்ட வடிவில் சுற்றி வந்தும், குறுக்கும் நெடுக்குமாக பாய்ந்தும், பக்கவாட்டில் பாய்ந்தும், மேலே குதித்தும், அவ்விரு மாவீரர்கள் வாட்போர் புரிந்தனர். எதிர்பாராத சமயம் ஒருவரை ஒருவர் வெட்டி காயப்படுத்தினர். எதிராளியை கொல்ல  சமயம் பார்த்த வண்ணம் தங்களை தற்காத்துக்கொண்டு இருவரும் செய்த லாவகமான கத்திப்போர் அற்புதமானது என வட்டமாக வீரர்கள் நின்று வேடிக்கை பார்க்க துவங்கினர். நெடுநேரம் அதி லாவகமாக பண்ணின போருக்குப்பின், படைகளுக்கு எதிரில் இருவரும் சற்றே ஓய்வெடுத்தனர். பின் புத்துணர்வுடன் போரிட ஆரம்பித்தனர். முன் நடந்த போரை விட உக்கிரமாக நடந்தது கத்திப்போர்.

    சிறிது நேரத்திலேயே நூறு பொன் நிலவுகள் பொறிக்கப்பெற்ற இரு கேடயங்களும் துண்டுகளாக சிதறின. கேடயங்கள் இல்லாமல் வாட்போர் செய்யக்கூடாது எனபது யுத்த விதி.  இருவரிடமும் ஆயுதங்கள் இல்லை. ஆகையால் மல்யுத்தம் துவங்கியது. திண்மையான மார்பும், கதைகளை ஒத்த  நீண்ட புஜங்களும் கொண்ட அந்த வீரர்கள், ஒருவரை ஒருவர் கைகளால் அடித்தும் எட்டிப்பிடித்தும், கழுத்தைப்பிடித்தும் போரிட்டனர். மல்யுத்தத்தில் அவர்கள் எடுத்த வருஷக்கணக்கான பயிற்சி அன்று வேடிக்கை பார்க்க நின்ற படைவீரர்களை மகிழ்விக்கும் விதமாக வெளிப்பட்டது. அவர்கள் போரிடும் போது, மலைகளில் இடியோசை ஒலிப்பது போல ஓசைகள் எழுந்தன. தந்தங்களின் கூரிய முனைகளால் போராடும் யானைகளைப்போலவும் கூரிய கொம்புகளால் போரிடும் எருதுகளைப்போலவும் அந்த வீரர்கள் போரிட்டனர். சிலசமயம் கைகளால் கட்டிப்பிடித்தும், சில சமயம் தலைகளால் முட்டியும், சில சமயம் கால்களால் தடுக்கியும், தோள்களை தட்டியும், சிலசமயம் நகங்களால் கிள்ளியும், சில சமயம் இறுகப்பிடித்தும், இடுப்பை சுற்றி கால்களால் பிணைத்தும், பூமியில் உருண்டும், சிலசமயம் முன்னேறியும் சில சமயம் பின்வாங்கிப்பதுங்கியும் சில சமயம் உயர குதித்தும், யுத்த சாஸ்திரத்தில் உள்ள அத்துணை வகையான தாக்குதல்களையும் செய்து ஒருவரை ஒருவர் கொல்லப்பார்த்தனர்.

    இவர்களுக்கிடையில் இவ்வாறு யுத்தம் மும்முரமாக நடந்துகொண்டிருக்கையில், அருச்சுனன் அவர்களைப்பற்றி லக்ஷியமே பண்ணாமல் ஜயத்ரதனை வதம் பண்ணுவதில் முனைப்பாக கடும் யுத்தம் பண்ணிக்கொண்டிருந்தான்.

    சாத்யகியின் ஆயுதங்கள் தீர்ந்து போன தருணம், வாசுதேவன் பார்த்தனிடம் பேசலுற்றான். “பார்த்தனே, பூரிசிரவசுடன் போராடிக்கொண்டிருக்கும் அந்த வில்வீரன் சாத்யகி தேரை இழந்துவிட்டான். உனக்காக அவன் இந்த கௌரவ சேனையை பிளந்து கொண்டு உன்னைப்பின்தொடர்ந்து வந்துள்ளான். பெருவீரத்துடன் அவன் எல்லா கௌரவ வீரர்களுடனும் மோதி விட்டான். அப்படி மோதிக்களைத்து, அவன் இப்போது யாகங்களில் சிறந்த தானங்களை அளவின்றி கொடுக்கும் அந்த தலைசிறந்த வள்ளல் பூரிரவசுடன் போரிடுகிறான்”…. கண்ணன் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே, பூரிசிரவஸ் கடுஞ்சினத்துடன் சாத்யகியை ஒரு மத யானை இன்னொரு மதயானையை அடிப்பது போல அடித்தான்.

    கண்ணனின் வார்த்தைகளை கேட்ட விஜயன், தனது போரை ஒரு நிமிஷம் நிறுத்தி விட்டு சாத்யகியின் நிலைமை என்ன என்று திரும்பிப்பார்த்தான். அப்போது வாசுதேவன் மறுபடியும் அருச்சுனனை பார்த்து, “ஒ அருச்சுனா, யாதவ குலத்துதித்த புலியைப்போன்ற சாத்யகி, அதோ பூரிசிரவசுக்கு தோற்கபோகிறான். உனக்காக செயற்கரிய வீரச்செயல்களை இன்று செய்து இங்கு வந்துள்ள உனது சிஷ்யனான யுயுதானன் (சாத்யகி) களைத்தும், தேரிழந்தும் ஆயுதங்கள் இல்லாமலும் உள்ளான். உன் படைகளிலேயே தலைசிறந்த வீரனான சாத்யகி, யாகங்கள் செய்வதில் பக்தியுள்ள, மாபெரும் வள்ளலான  பூரிசிரவசுக்கு இன்று இரையாகாமல் காக்க வேண்டியது உன் கடமை! மகாவீரனே, இப்போது சாத்யகியைக்காப்பாற்ற  என்ன செய்யவேண்டுமோ, அதை செய்யக்கடவாய்” எனக்கூறி நிறுத்தினான்.

    அதற்கு தனஞ்சயன் மகிழ்ச்சியோடு வாசுதேவனைப்பார்த்து, “அதோ பார் கிருஷ்ணா, குருகுல ஸ்ரேஷ்டனான பூரிசிரவசும் யதுகுலத்து சிங்கமான சாத்யகியும் யானையும் சிம்மமும் போரிடுவதைப்போல போரிடுகிறார்கள்”. பார்த்தன் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும் போதே, பூரிசிரவஸ் சாத்யகியை அடித்து மண் மேல் வீழ்த்தினான். ஒரு சிம்மம் யானையை இழுப்பது போல, தர தரவென தரையில் சாத்யகியை இழுத்தான் பூரிசிரவஸ்.

    பின், தனது வாளை உறையிலிருந்து உருவி, சாத்யகியின் தலைமயிரைப்பிடித்து இழுத்து, பரம்பரைப்பகைவனை மார்பில் உதைத்தான் பூரிசிரவஸ். அழகிய குண்டலங்கள் அணிந்த  சாத்யகியின் தலையை வெட்ட ஆயத்தமாகி வாளை உயர்த்தினான் பூரிசிரவஸ். பரம்பரைப்பகைவனை கொல்லப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் பூரிசிரவஸ், வாளை உயர்த்தி, (சாத்யகி தன்னால் ஜயிக்கப்பட்டு கிடக்கும் காட்சியை ரசித்தவாறு) அப்படியே நின்றான். அந்த நேரம், பூரிசிரவசால் மிதிக்கப்பட்டு கீழே கிடந்த சாத்யகி, தன் தலையை தன்னால் ஆனமட்டும் வேகமாக, ஒரு குயவனின் சக்கரம் போல சுழற்றி தன்னை மிதித்து, தலைமயிரைப்பற்றி இருந்த பூரிசிரவசிடம் இருந்து விடுவித்துக்கொள்ள முயன்றான்.

    அப்போது மீண்டும் வாசுதேவன் மிக்க கவலையுடன், “பார்த்தனே, அதோ பார், உன் நண்பனும் சிஷ்யனுமான சாத்யகி சோமதத்தனின் மகனுக்கு தோற்று விட்டான். வில்வித்தையில் உனக்கு சற்றும் சளைக்காத உன் சிஷ்யன் அதோ பார், பூரிசிரவசால் கொல்லப்படப்போகிறான். இதுவரை யுத்தத்தில் யாராலும் ஜெயிக்கப்படாதவன் என்ற உன் சிஷ்யனின் பெயர் பொய்யாகி விடும் போல இருக்கிறதே, அங்கே பார்.” என்று கூறினான்.

    அப்போது அருச்சுனன், பூரிசிரவசை மனத்தால் நமஸ்கரித்து பேசலுற்றான். “குருகுலத்தின் புகழை பெருக்கும் மாவீரன் பூரிசிரவஸ் சாத்யகியைக்கொல்லாமல் வெறுமனே விளையாட்டுப்போல இழுக்கிறானே, அது குறித்து நான் மகிழ்கிறேன், கண்ணா. சாத்யகியைக்கொல்லாமல் சும்மா இழுத்து அவமானப்படுத்தும் அந்த மாவள்ளலை நான் போற்றுகிறேன்” எனக்கூறி, மனத்தால் பூரிசிரவசை அருச்சுனன் மெச்சினான்.

    ஆனாலும் சாத்யகியின் கஷ்டமான நிலைமையைக்கண்டும், நிராயுதபாணியான அவனை பூரிசிரவஸ் ஆயுதத்தால் வெட்ட முயற்சிப்பதையும் கண்டு,  “வாசுதேவரே, ஜயத்ரதனைக்கொல்வதிலேயே முனைப்பாக இருந்ததினால் நான் சாத்யகியை கவனிக்க இயலாது இருந்தேன். இருந்தாலும், தங்கள் கட்டளைப்படி, இதோ யாதவ குல மாவீரனுக்காக, மிகக்கஷ்டமான ஒரு காரியத்தை பண்ணுகிறேன்” என்று சொன்னான்.

    அடுத்த கணம், காண்டீபத்தில் இருந்து கூரிய அம்பு ஒன்று புறப்பட்டது. கத்தி பிடித்த பூரிசிரவசின் வலக்கரம் ஐந்து தலை நாகம் போல, நிலத்தின்கண் வீழ்ந்தது. சாத்யகி பிழைத்தான்.

    பூரிசிரவசோ ஒரு கணம் திகைத்தான். சாத்யகியை விட்டு விட்டு, பின்னாலிருந்து தன் கண்ணுக்கு தெரியாமல் யார் இந்த இழிசெயலை செய்தது என சுற்றும் முற்றும் பார்த்தான். அந்தோ, பேரதிர்ச்சி! பீபத்சு (பார்த்தன்) தான் இக்காரியத்தினை செய்தது என்று அறிந்ததும் அவனால் நம்ப முடியவில்லை. சுதாரித்துக்கொண்டு, துக்கமும் கோபமும் கொண்டு பார்த்தனை இகழ்ந்து இடித்துரைக்கத்தொடங்கினான்

    அப்புறம் என்ன ஆனது? பூரிசிரவஸ் என்ன சொன்னான்? இது யுத்த தருமத்துக்கு விரோதமில்லையா? அருச்சுனன் என்ன சொன்னான்?

    அந்தப்பகுதி அடுத்த பதிவில்!

    (தொடரும்)

    உபரித்தகவல்கள்:

    பீபத்சு = அருச்சுனன். தகாத காரியத்தை கனவிலும் செய்யாதவன் என்று பொருள். தனக்கு கிட்டிய சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்டு ஒருநாளும் தகாத காரியம் செய்ய மாட்டான், பாப காரியம் செய்ய மாட்டான் என்ற புகழால் வாய்த்த பெயர்.

    அந்தக்காலத்தில் தேர்கள் இன்றைய armour vehicles  போலத்தான் இருந்தன என்பது பாரதத்தில் தெளிவாக வரும். இன்று தொலைக்காட்சியில் காட்டுவது போல குதிரை வண்டி போல இருக்கவில்லை. நான்கு குதிரைகள் (குறைந்த பட்சம்) பூட்டப்படும். இரண்டு முன்பக்கம் பூட்டப்பெறும். இரண்டு குதிரைகள் சக்கரத்துக்கு ஒன்றாக இடது பக்கமும் வலது பக்கமும் பூட்டப்பெறும். முன்னே ஒருவர், சக்கரத்துக்கு ஒருவர் என்று மூன்று சாரதிகள் உண்டு. ரதத்தின் எல்லா பக்கமும் புலித்தோலும் மாட்டுத்தோலும் சாளரங்கள் போல வேய்ந்து, இருக்கும். Bullet proof “Kevlar” இன்று செய்யும் பணியை அன்று தோல் செய்தது. ஆயுதங்கள் supply ஏந்தி எட்டு மாட்டு வண்டிகள் தேரை பின் தொடரும். சாதாரணமாக அந்த மாட்டு வண்டிகளை வீரர்கள் தாக்க மாட்டார்கள். எந்த ரதத்தை வீரன் பயன் படுத்துகிறானோ அதை மட்டுமே உடைக்கப் பார்ப்பார்கள். மாட்டு வண்டிகள், ஆயுதம் எடுத்து கொடுப்போர், பக்க வாத்தியம் வாசித்து உற்சாகப் படுத்துவோர், வேடிக்கை பார்க்க வந்தோர், தோல்வியை ஒப்புக்கொண்டோர், கருணை வேண்டுவோர், யுத்தத்தில் தூதர்களாக வருவோர், நிராயுதபாணிகள் ஆகியோர் மீது ஆயுதப் பிரயோகம் செய்வது யுத்த விதிகளுக்கு முற்றவும் புறம்பானது. ஆனால் யுத்த சூட்டில் சில விதி முறைகள் அவ்வப்போது மீறப்பட்டன.

    கேடயங்களும் மாட்டுத்தோலால் செய்யப்பட்டவை. பொன்னால் வல்ல வடிவமாக, பிறை வடிவமாக நிலவுகள் போன்ற designs பொறிக்கப் பட்டவை. இது தமிழகத்திலும் வழக்கம், புறநானூறிலும் வரும்.

    Share
  • கென்யா பயணம் 6!…

    நாகேஸ்வரி அண்ணாமலை

    masai masai2 masai3

     

    கென்யா பயணம் 6

    கென்யாவில் மசாய் இனத்தைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள் இன்றும் இயற்கைச் சூழலிலேயே வாழ்ந்து வருவதாக அறிந்து அவர்களைச் சந்திப்பது எப்படி என்று இன்டர்நெட்டில் தேடினோம்.  அவர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறிய வழிகாட்டி கேட்ட தொகை மிகவும் அதிகமாக இருந்தது.  இருப்பினும் அதை விட்டால் வேறு வழியில்லை என்பதை அறிந்து அவரோடு தொடர்பு கொண்டு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தோம்.

    முதல் முதலாக நைரோபியிலிருந்து வெகுதூரத்திற்குப் பயணம் செய்தோம்.  நைரோபியை விட்டு செல்லச் செல்ல கிராமப்புறக் காட்சிகள் தோன்றத்  தொடங்கின.  சிறிய ஊர்கள், சிறிய இடங்கள், சிறிய வாகனங்கள் என்று எல்லாம் நைரோபியில் பார்த்ததற்கு எதிர்மாறாக இருந்தன.  நம் நாட்டு ஆட்டோக்கள் போல் வாகனங்கள் சாலையில் ஓடிக்கொண்டிருந்தன.  இதில் ஒன்றைக்கூட நைரோபியில் நாங்கள் பார்க்கவில்லை.

    கிட்டத்தட்ட நூறு கிலோ மீட்டர் தூரம் சென்றதும் ஓட்டுநர் வண்டியை ஒரு குக்கிராமத்தில் நிறுத்தினார்.  அங்கு சில பழங்குடி மக்களின் இருப்பிடங்கள் இருந்தன.  அங்கு ஜேக்ஸன் (இவருடைய இயற்பெயரை அவர்கள் மொழியில் சொன்னார்.  அது எங்களுக்கு வாயில் நுழையவில்லை.) என்பவரை எங்களோடு வேனில் ஏற்றிக்கொண்டு நாங்கள் அதுவரை வந்துகொண்டிருந்த, பக்கத்து நாடான டான்ஸானியா செல்லும் நெடுஞ்சாலையை விட்டுப் பிரிந்து காடு போல் இருந்த இடத்தின் கச்சா ரோடுகளில் பயணிக்க ஆரம்பித்தோம்.  ஆங்காங்கே பழங்குடி மக்களின் ஊர்கள், அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பள்ளிகள் ஆகியவற்றைக் கடந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகு ஜேக்ஸனின் குடும்பம் இருக்கும் இடத்தை அடைந்தோம்.  வழியில் பழங்குடிமக்கள் சிலரையும் காட்டுப்பாதையில் பார்த்தோம்.

    ஜேக்ஸன் மஸாய் இனத்தைச் சேர்ந்தவர்.  இந்த இனம் ஒரு இடத்தில் வசிக்காமல் இடம் பெயர்ந்துகொண்டே இருக்குமாம்.  இவர்களைப் பொறுத்த வரை மண்ணை உழுது நிலத்தில் பயிரிட்டால் அது நிலத்தைப் புண்படுத்துவதாகுமாம்.  ஆதலால் இவர்கள் ஒன்றும் விளைவிப்பதில்லை.  ஆடு, மாடுகள்தான் இவர்களுடைய சொத்து.  அவற்றை நம்பித்தான் இவர்கள் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.  ஒரு இடத்தில் ஆடு, மாடுகளுக்கான புல் தீர்ந்ததும் வேறு இடத்திற்கு இடம்பெயர்கிறார்கள்.

    நாங்கள் ஜேக்ஸனின் குடும்பம் இருக்கும் இடத்தை அடைந்ததும் முதலில் எங்களை வரவேற்றது அவருடைய எட்டு வயது மகள்.  பயண வழிகாட்டி அந்தப் பெண்ணிடம் ஸ்வாஹிலியில் ‘உங்கள் பாட்டி எங்கே?’ என்று கேட்டார்.  அதற்குப் பதிலாக அந்தப் பெண் எங்களை காம்பவுண்டிற்குள் அழைத்துச் சென்றார்.  காம்பவுண்ட் என்பது 15’-க்கு 15’ அடியில் அமைக்கப்பட்ட இரண்டு சிறிய குடிசைகள், ஆடு, மாடுகளை இரவில் அடைக்கும் பெரிய கொட்டில் ஆகியவையே.  கொட்டிலில் ஒரு கன்றுக் குட்டியைத் தவிர வேறு எதுவும் இல்லை.  கன்றின் தாய் மற்றப் பிராணிகளோடு மேய்ச்சலுக்குப் போயிருப்பதாகக் கூறினார்கள்.  அந்த இடம் முழுவதும் மிருகங்களின் சாணம்.  அதனால் நிறைய ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன.  பாவம், கன்றுக்குட்டி சதா காதுகளையும் வாலையும் சுழற்றி ஈக்களை விரட்ட முயன்றுகொண்டிருந்தது.  முதலில் எங்களைப் பார்த்ததும் கொஞ்சம் மிரண்டது.  ஆனால் பின்னால் சமாளித்துக்கொண்டு மறுபடியும் படுத்துக்கொண்டது.

    அந்த குடிசைகளின் கூரை புல்லால் வேயப்பட்டது.  சுவர்கள் மண்ணாலும் மரக்குச்சிகளாலும் எழுப்பப்பட்டவை.  குடிசைகளுக்கு முன்னால் இரண்டு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.  ஒரு பெண் – இவர் ஜேக்ஸனின் அக்காள் மகளாம்.  புருஷன் இறந்த பிறகு இவர்களுடனே வசித்து வருகிறாள் – ஒரு விறகுக் கட்டை சுமந்துகொண்டு வந்து போட்டுவிட்டு அருகில் உட்கார்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்தார்.  அவர் எங்களைக் கண்டுகொள்ளவே இல்லை.  ஆனால் இன்னும் மூன்று பெண்கள் நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.  அவர்களில் ஒருவர் ஜேக்ஸனின் மனைவி.  கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டிருந்தார்.  காம்பவுண்டிற்குள் நுழைந்ததும் ஜேக்ஸன் மனைவியிடம் எதுவும் பேசவில்லை.  குழந்தையையும் பார்க்கவில்லை.  ஒரு குடிசையின் உள்ளே சென்று தன் தாயை வெளியே அழைத்து வந்தார்.  அவருக்கும் எனக்கும் இரண்டு பிளாஸ்டிக் நாற்காலிகளைப் போட்டு எங்களை உட்காரவைத்தனர்.

    அவருக்கு வயது எண்பதுக்கு மேல் இருக்கும்.  அவர்தான் குடும்பத்தின் தலைவி (matriarch).   இவருக்குப் பத்துக் குழந்தைகள்.  ஜேக்ஸன் இவருக்குப் பத்தாவது குழந்தை.  இவருடைய அண்ணன் மகள் ஒருத்தி இவர்கள் குடும்பத்தோடு இருக்கிறாள்.  அவள் பக்கத்துப் பள்ளியில் ஆறாவது வகுப்புப் படிக்கிறாள்.  இவளோடு எங்களால் ஆங்கிலத்தில் உரையாட முடிந்தது. (கென்யர்கள் எல்லோரும் நல்ல ஆங்கிலத்தில் பேசுவது பற்றிப் பின்னால் கூறுகிறேன்.)

    ஜேக்ஸன் காது வளர்த்துக்கொண்டிருந்தார்.  நம் நாட்டில் அந்தக் காலத்தில் பெண்கள் வளர்த்துக்கொண்டிருப்பார்களே அதை விடப் பெரியதாக இருந்தது. நாம் காதணிகள் அணிகிறோமே அந்த இடம் பூராவும் பெரிய ஓட்டையாக இருந்தது.  ஆனால் காதில் அணிகலன் எதுவும் அணியவில்லை.  பெண்கள் யாரும் இப்படிக் காதை ஓட்டையாக வளர்த்துக்கொள்ளவில்லை.  ஆனால் காதிலும் கழுத்திலும் கைகளிலும் நிறையப் பாசிகளினால் ஆன அணிகலன்களை அணிந்திருந்தார்கள்.  சிறு பிள்ளைகளைத் தவிர மற்றப் பெண்கள் எல்லோரும் அவர்களுடைய பாரம்பரிய உடையில் இருந்தனர்.

    அந்தக் குடும்பத் தலைவி என்னிடம் அவருடைய மொழியில் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.  எனக்கு ஒன்றும் புரியவில்லை.  அவர் செய்த சைகைகளிலிருந்து ஏதோ கொஞ்சம் புரிந்தது.  தேவைப்பட்டால் பயண வழிகாட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.  நாங்கள் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளை பயண வழிகாட்டி ஸ்வாஹிலியில் ஜேக்ஸனிடம் கேட்க, அவர் தன் உறவினர்களிடம் மசாய் மொழியில் கேட்டார்.  அவர்களுடைய பதிலும் மசாய்மொழியில் தொடங்கி ஸ்வாஹிலி வழியாக ஆங்கிலத்தில் எங்களுக்கு வந்து சேர்ந்தது.  ஜேக்ஸனின் தாய் இரண்டு குடிசைகளில் ஒன்றைக் காட்டி அது தன் வீடு என்று பெருமையாகக் கூறிக்கொண்டார்.  என்னை அங்கு அழைத்துச் சென்றார்.  உள்ளே நுழைந்தால் ஒரே இருட்டாக இருந்தது.  கண்கள் ப்ழகிய பிறகு ஒரு பக்கம் இருந்த கட்டில் தென்பட்டது.  இவர் ஒருவருக்கு மட்டும் இந்த குடிசை என்றால் மற்ற அத்தனை பேருக்கும் இன்னொரு குடிசையா?  கென்யாவைப் பற்றிய செய்திக் குறிப்புகளில் கணவனுக்கு ஒரு வீடு, முதல் மனைவிக்கு வலது பக்கத்தில் வீடு, இரண்டாவது மனைவிக்கு இடது பக்க வீடு என்றெல்லாம் போட்டிருந்தது.  ஜேக்ஸன் குடும்பத்தைப் பொறுத்த வரை அப்படி எதுவும் இல்லை.  மேலும்இவருக்கு ஒரே மனைவிதான்.

    வீட்டில் மளிகைச் சாமான்கள் என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.  இவர்களுடைய எல்லா வேளைகளிலும் அவர்களுடைய உணவு மாட்டுப்பாலும் இறைச்சியும்.  தேவையானபோது ஆடுகளை வெட்டி இறைச்சி உணவைத் தயாரித்துக்கொள்வார்களாம்.  எல்லோருக்கும் அடுத்த வேளைக்கான இறைச்சியை எங்கு சேமித்துவைத்திருந்தார்கள் என்று தெரியவில்லை.  பக்கத்தில் கடை, கண்ணி என்று எதுவும் கிடையாது.  என்ன வேண்டுமென்றாலும் பதினைந்து கிலோமீட்டர் தூரம் நடந்து வர வேண்டும்.

    ஜேக்ஸன் குடும்பம் இருக்கும் இடத்திற்கு ஜீப்பில் சென்றபோது வழியில் சில இளம் பழங்குடிப் பெண்களைப் பார்த்தோம்.  இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் பலாத்காரம் பற்றி நிறையப் படித்திருந்த எனக்கு அந்தப் பெண்களின் பாதுகாப்பு பற்றிய பயம் ஏற்பட்டது.  ஜேக்ஸனிடம் (பயண வழிகாட்டி மூலம்தான்) அது பற்றிக் கேட்டேன்.  அதற்கு ஜேக்ஸன் அளித்த பதில் சுவாரஸ்யமாக இருந்தது.  பையன்களும் பெண்களும் குறிப்பிட்ட வயதுக்கு மேல் தனித் தனியாக வசிக்கிறார்கள்.  பையன்கள் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் அவர்களுக்கு அவர்களுடைய இனத்தின் மதிப்பீடுகளை (values) கற்றுத் தருவார்களாம்.  சமூகத்தில் எல்லா அங்கத்தினர்களும் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும் என்பது அவற்றில் ஒன்று.   பெண்களுக்கு மரியாதை காட்ட வேண்டும் என்பது இன்னொன்று.  இப்படி வாழ்க்கை விதிகளைக் கற்றுக்கொண்ட பிறகுதான் இளைஞர்களை மசாய் இனத்தின் அங்கத்தினர்களாகச் சேர்த்துக்-கொள்வார்களாம்.  இதை ஒரு வகையான வயதுக்கு வரும் சடங்கு (initiation ceremony)  என்று சொல்லலாம்.  இப்படி அங்கத்தினர்களாகச் சேர்ந்த பிறகு அவர்கள் கற்றுக்கொண்ட மதிப்பீடுகளிலிருந்து மாறுவதில்லையாம்.

    இப்போது ஜேக்ஸன் கொஞ்சம் கொஞ்சமாக கென்யாவின் மைய நீரோட்டத்தில் சேர்வதுபோல் தெரிகிறது.  அவருடைய அண்ணன் மகள் பள்ளியில் படிக்கிறாள்.  ஜேக்ஸன் பக்கத்திலுள்ள இடத்தில் அவர்களுடைய பாரம்பரிய நம்பிக்கைக்கு மாறாகத் தக்காளி பயிரிடுகிறார்.  பக்கத்துச் சுனையிலிருந்து குழாய் மூலம் அந்தத் தக்காளித் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுகிறார்கள்.  ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து அந்த நிலத்தை வாங்கினாராம்.  ஐரோப்பியர்கள் கென்யாவில் வாழ்ந்துவந்தபோது அங்கு சில நிலங்களை வாங்கியிருக்கிறார்கள்.  நாட்டை விட்டுப் போகும்போது மறுபடி கென்யர்களுக்கு விற்கிறார்கள்.  மற்ற நிலமெல்லாம் மசாய் இனத்திற்கு உரியது; தனிப்பட்டவர் சொத்தாக இருக்க முடியாது. ஐரோப்பியர்களிடமிருந்து வாங்கி நிலம் வைத்திருப்பவர்களின் நிலத்தைவிற்பனை செய்யும் நிலத்தரகராக ஜேக்ஸன் நைரோபியில் வேலைபார்க்கிறார்.  அவர் பாரம்பரிய உடையில் இல்லை.  பேண்ட் அணிந்திருந்தார்.  மேலே தோலினால் ஆன கோட்டு அணிந்திருந்தார். மசாய் மக்களும் மாறி வருகிறார்கள்.

    பயண வழிகாட்டி எங்களிடம் வாங்கிய பணத்தில் நானூறில் ஒரு பங்கைத்தான் ஜேக்ஸனுக்குக் கொடுத்தார்.  நைரோபியிலிருந்து இரண்டு மாம்பழச் சாறு பாட்டில்களும் (நைரோபி மாலில் மாம்பழங்கள் கிடைத்தன) இரண்டு பாட்டில் குடிநீரும் வாங்கிவந்திருந்தார்.  அவற்றை ஜேக்ஸன் மகளிடம் கொடுத்தபோது அந்தப் பெண் அவற்றை ஆசையோடு வாங்கிக்கொண்டாள்.  கென்யாவில் இப்படிதான் விபரம் தெரிந்தவர்கள் மற்றவர்களைச் சுரண்டி வாழ்கிறார்கள்.

    உலக மக்கள் அனைவரும் பாரம்பரிய மசாய் மக்களைப் போல எளிய வாழ்க்கை வாழ்ந்தால், உலகம் மாசுபடாமல், இயற்கை வளத்தை இழக்காமல் பல்லாயிரம் ஆண்டுகள் அப்படியே இருக்கும்.

    மசாய் மக்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

    https://picasaweb.google.com/108173580006522327175/MasaiMara?authkey=Gv1sRgCJDwzOCbvsuWLw

    தொடரும்

    Share
  • சிலை அழுதது – 4

    தேமொழி

    அபிக்கு மீண்டும் வகுப்புகள் ஆரம்பித்து அதில் மூழ்கிப் போனாள்.  ரிக்கியின் நினைவுகள் வரும்பொழுது புத்தகங்களையே வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருப்பாள், தலையில் எதுவும் ஏறாது.  ரிக்கி ஆயுள் காப்பீடு  எடுத்திருந்திருக்கிறான். அந்த இழப்பீட்டுத் தொகை அவளுக்குக் கிடைத்தது.  அவனுக்கு இறுதி மரியாதை செலுத்தும் பொழுது வீர வணக்கத்துடன் முக்கோண வடிவில் மடித்துக் கொடுக்கப் பட்ட தேசியக் கொடிக்கு ஒரு கண்ணாடி போட்ட முக்கோண வடிவ மரப்பெட்டியை வாங்கி அதில் கொடியைப் பத்திரப் படுத்தி ரிக்கியின் புகைப் படத்திற்கு அருகில் வைத்துக் கொண்டாள்.

    நவம்பரில் ‘வெட்டரன்ஸ்’ நாள் (veterans day) என்னும் வீரர்கள் தினத்தில் ரிக்கியின் நினைவு அவளை அதிகம் வாட்டியது.  அவனது பெற்றோர்களுக்கும் அப்படித்தானே இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். அவர்கள் மூன்று பிள்ளைகளையுமே நாட்டுக்காக இழந்தவர்கள், அவர்களுக்கு வலி அதிகமாகத்தான் இருக்கும். ஒருமுறை அவர்களைப் போய்ப் பார்த்து வந்தாலென்ன என்று தோன்றியது. வரும் தேங்க்ஸ் கிவிங் நாளுக்கு சென்று வர விமானப் பயணச் சீட்டு ஏற்பாடு செய்து கொண்டாள். ஆனால் ரிக்கியின் பெற்றோர்களுக்கு அவள் வருவதைத் தெரிவிக்க விரும்பவில்லை.  வரத் தேவையில்லை என்று சொல்லிவிட்டால் மீறி போவது நன்றாக இருக்காது. திடீரெனப் போய் எதிரில் நின்றால் அவர்களால் தவிர்க்க முடியாது என்று அபிக்குத் தோன்றியது.

    *

    மரங்களில் இருந்து இலைகள் உதிரத் தொடங்கியது, குளிர் சிறிது சிறிதாக அதிகரித்தது. ரிக்கியின் தந்தை வில்லியம்ஸ் தனது சக்கரநாற்காலியை உருட்டிக் கொண்டு போர்ட்டிகோவிற்கு வந்தார்.  வாசலில்  இருந்த பெரிய மக்னோலியா மரங்கள் ஏதோ அலுத்து சலித்துப் போனது போல அசைவற்று நின்றது.  பெரும்பாலான வீடுகளின்  வாசலில் தேங்க்ஸ் கிவ்விங் நாள் அலங்காரம் இருந்தது.  வைக்கோல் கட்டும்,  சில சோளத் தட்டைகளும், சோளக் கொள்ளை பொம்மைகளும், வாசல் கதவில் அலங்கார மலர் வளையங்களும் அல்லது குறைந்தது ஒரு ஆரஞ்சு வண்ணப் பூசணிக்காயாவது இருந்தது.

    வில்லியம்ஸ்  குளிருக்கு இதமாக இருக்க  சிவப்பு கட்டம் போட்ட ஃப்ளேனெல் முழுக்கைச் சட்டை அணிந்து, பழுப்பு கார்டுராய் கால்சராயும் அணிந்திருந்தார். மடியில்  புத்தகமும், கழுத்தில் கயிற்றில் தொங்கவிடப்பட்ட படிக்கும் கண்ணாடியும் இருந்தது.  ஆனால் படிப்பில் ஆர்வம் இல்லாது வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

    ரிக்கியின் அம்மா இரண்டு கோப்பைகளில் சூடான மால்ட் பானமும் அதில் மார்ஷ்மல்லோ கட்டிகளை மிதக்கவிட்டுக் கொண்டுவந்தார். வில்லியம்ஸின் அருகில் இருந்த முக்காலியில் அவரது கைக்கெட்டும் தூரத்தில் கோப்பைகளை வைத்தார். தனது தோளில் போட்டு எடுத்து வந்திருந்த சால்வையை வில்லியம்ஸின் தோளில் போர்த்திவிட்டு, போர்ட்டிகோவில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டார்.  மனைவி வந்ததோ, அதைத் தொடர்ந்து அவர் செய்த பணிவிடைகளோ வில்லியம்ஸிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.  சிலைபோலவே இறுகிய முகத்துடன் இருந்தார்.  அவரும் அவர் மனைவியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதும் குறைந்து விட்டது.  ஏதோ மிச்சமிருக்கும் நாட்களை கழிக்க வேண்டுமே என்ற வெறுப்பில் நாட்களை ஓட்டும் மனப்பான்மையில் இருந்தார்கள்.

    வாசலில் ஒரு வண்டி வந்து நின்றது இருவர் கவனத்தையும் கவரவில்லை.  விமான நிலையத்தில் இருந்த ஊர்திகளில் ஒன்றை வாடகைக்கு எடுத்து அந்த வண்டியை அபியே ஒட்டிக் கொண்டு வந்திருந்தாள்.  வண்டியின் கதவு திறந்து சாத்தப்படும் சப்தம் கேட்டு இருவரும் ஒரு சேர  திரும்பிப் பார்த்தார்கள்.  அவர்களைப் பார்த்து கையை அசைத்து விட்டு வண்டியின் டிக்கியில் இருந்து ஒரு பெரிய தோல் பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள் அபி.  அவளைப் பார்த்து எரிச்சலடைந்த வில்லியம்ஸின் தந்தை தனது மனைவியை நோக்கித் திரும்பி, “ஏன் இந்த கறுப்பி இங்கே வந்திருக்கிறாள்? நீ ஏதும் அழைத்தாயா? என்  நிம்மதியைக் குலைக்கவே பிறந்தவள் இவள்.  ஏதேனும் பணம் அல்லது உதவி என்று கேட்டால் துரத்திவிடு, இனி இந்தப்  பக்கமே வராதே என்று எச்சரித்து விடு,” என்றார்.

    அவர் பேசியது எங்கே அபியின் காதில் விழுந்துவிடுமோ என்று கலவரம் அடைந்த ரிக்கியின் அம்மா, “நான் அழைக்கவில்லை, அவள் வரப்போவது எனக்குத் தெரியாது. சரி, சரி, நீங்கள் அமைதியாக  இருங்கள். இப்படிப்  பேசுவது அவள் காதில் விழுந்தால் அவள் வருந்த மாட்டாளா? என்ன இருந்தாலும் அவள் நம் ரிக்கியை மணந்தவள் இல்லையா? நீங்கள் எதுவும் பேசாதீர்கள். அவளிடம் நானே பேசிக் கொள்கிறேன்,” என்று மெதுவான குரலில் அவரைக் கண்டித்து விட்டு  எழுந்தார்.

    “ஆமாம், இவளுடன் பேச எனக்கு என்ன இருக்கிறது?” என்று முணுமுணுத்தார் வில்லியம்ஸ்.  அவரது செய்கையால் ஆயாசம் அடைந்த அவர் மனைவி அவரைக் கண்களால் அடக்கிவிட்டு வாசலுக்கு வந்தார்.

    “வா, அபி. என்ன இந்தப் பக்கம் நான் உன்னை எதிர்பார்க்கவே இல்லை.”

    “மாம், நீங்கள் மிகவும் மெலிந்து  விட்டீர்கள்,”  என்று கூறிய அபி ரிக்கியின் அம்மாவை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.  தோளில் தொங்கிய பையை போர்ட்டிகோவின் வாசல் கதவருகில் இருந்த ஆடும் நாற்காலியில் வைத்துவிட்டு, குளிருக்காக அணிந்திருந்த அங்கியின் தலைக் குல்லாவை நீக்கிவிட்டாள்.

    “மாம், திடீரென முடிவெடுத்துப் புறப்பட்டுவிட்டேன், உங்களுக்குத் தெரிவிக்க அவகாசம் இல்லாமல் போனது,” என்றவள் சக்கரநாற்காலியில்  அவளை வரவேற்காமல், வேறு புறம் முகத்தை திருப்பிக் கொண்டிருந்த வில்லியம்ஸிடம்  சென்று அவரையும் கட்டி அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

    “உங்கள் உடல் நலம் எப்படி இருக்கிறது டாட்?”

    வில்லியம்ஸ் அவளைத் திரும்பியும் பார்கவில்லை.  அதை பொருட்படுத்தாத அபி  பையைத் திறந்து அதில் ரிக்கிக்கு இராணுவ மரியாதை செய்து முக்கோணமாக மடித்து அளிக்கப் பட்ட தேசியக் கொடியை அது வைக்கப் பட்டிருந்த முக்கோண மரப்பேழையுடன் எடுத்துக்கொண்டு வீட்டிற்குள்ளே சென்றாள்.  ரிக்கியின் அம்மாவும் அவளைத் தொடர்ந்தார்.

    “அபி, குளிருக்கு இதமாக சூடாகக் குடிக்க ஒரு சாக்லேட் பானம் செய்து தருகிறேன்,” என்றவாறு சமையலறைக்குச் செல்லத் திரும்பினார்.

    “வேண்டாம் மாம், நன்றி.  இப்பொழுதுதான் விமான நிலையத்தில் பருகினேன்,  சிரமப்பட வேண்டாம், இந்தாருங்கள் இராணுவத்தினர் தந்த தேசியக் கொடி,  ரிக்கியின் படத்திற்கு முன் வையுங்கள்,” என்று கொடுத்தாள்.

    “நீயே வைத்துவிடு அபி.”

    சுவரில் வரிசையாக மாட்டப் பட்டிருந்த படங்களில் இராணுவ உடையுடன்  இருந்த ரிக்கியின் கொள்ளுத் தாத்தா, தாத்தா, பெரிய தாத்தா, அண்ணன், அக்கா, ரிச்சர்ட் என அனைவரும் அவளைப் பார்த்துப் புன்னகைப்பது போல இருந்தது அபிக்கு.  பொதுவாக அனைவருக்கும் ஒரு சல்யூட் வைத்தாள். அனைவரது படங்களுக்கும் கீழே அவரவர் தேசியக் கொடி இருந்தது. ரிக்கியின் படத்திற்கு முன் இருந்த இடத்தின் கீழே மட்டும்  அந்த நீண்ட ஷெல்ஃப்  பலகை காலியாக இருந்தது. அபி அவன் படதின் முன்பு கொடியை வைத்துவிட்டு மீண்டும் அவனுக்கு மட்டும் ஒரு சல்யூட் வைத்தாள்.

    அவன் திடீரென படத்திலிருந்து எழுந்து வந்து, அபி அவன் மீது பானம் ஊற்றிவிடுவாள் என்பது போல அச்சப்படுவதாக பாசாங்குக் காட்டி ஓடி சிரிக்க மாட்டானா என்று தோன்றியது அபிக்கு. முதல் முறை அவனைப் பார்த்த பொழுது இருந்த அதே போன்ற அவனது தனித் தன்மையான முத்திரைச் சிரிப்புடன் படத்தில் அவன் இருந்தான். அவன் படத்துக்கு ஒரு பறக்கும் முத்தம் ஒன்றை அனுப்பிவிட்டு அபி  திரும்பினாள். அவள் கண்கள் கலங்கி இருந்தது.  ரிக்கியின் அம்மாவும் கண்ணைத் துடைத்துக் கொண்டார்.  அபி அவர் தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்துவிட்டு மீண்டும் வெளியே வாசலுக்கு வந்தாள்.

    அவளைத் தொடர்ந்த ரிக்கியின் அம்மா, “உன் படிப்பு எப்படிப் போகிறது அபி, வரும் கோடையில் முடித்து விடுவாயல்லவா?” என்றார்.

    “ஆமாம் மாம். நன்றாகப் படிக்கிறேன், வரும் கோடையில் முடித்துவிடுவேன்.”

    அபி பையைக் குடைந்து அதிலிருந்து சிறியகைப்பை ஒன்றை எடுத்து அதிலிருந்த ஒரு உறையை ரிக்கியின் அம்மாவிடம் கொடுத்தாள்.

    “என்ன அபி இது?” என்றவாறு பிரித்தவர் அதில் உள்ள காசோலையை எடுத்துப் பார்த்தார். அதில் பெறுனர் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் வில்லியம்ஸ் என்று குறிப்பிடப்பட்டு நாநூறு ஆயிரம் டாலர்களுக்கு தொகை நிரப்பப் பட்டிருந்தது.

    அவரது கேள்விக்குறியானப் பார்வையைப் புரிந்து கொண்ட அபி, “மாம், இது ரிக்கியின் உயிர்க் காப்பீட்டுத் தொகை. எனக்குச் சேரவேண்டும் என்றுக் குறிப்பிட்டு காப்பீட்டு பத்திரம் எடுத்திருந்திருக்கிறான். அதனால் எனக்கு அனுப்பி வைக்கப் பட்டிருந்தது.”

    “நாநூறு ஆயிரம் டாலர்களுக்கு காப்பீடா!!! இராணுவம் வழங்கும் உச்ச காப்பீட்டு அளவுத் தொகை அல்லவா இது?”

    “ஆமாம் மாம்.  காப்பீடு செய்தது தெரியும், ஆனால் இந்த அளவுக்கு ஒரு பெரிய தொகைக்கு ரிக்கி செய்திருப்பான் என்று எனக்குத் தெரியாது.”

    “அதை ஏன் நீ எங்களுக்கு எழுதிக் கொடுக்கிறாய் அபி? அவன் உன் நலனுக்காகக் கொடுத்திருக்கிறான். அவனுக்கு ஏதாவது நேர்ந்தால் நீ சிரமப் படக் கூடாது என்பது அவன் நோக்கமாக இருந்திருக்கிறது. அதை நீ எங்களுக்குத் தர நினைப்பது தவறு. உன் படிப்பு முடிந்ததும் படிப்புக்காக நீ வாங்கிய கல்விக்கடனை அடைக்கலாம், ஒரு வேலை கிடைக்கும் வரை உள்ள இடைப்பட்ட காலத்தைத் தள்ள உதவியாயிருக்கும். ஒரு சிறிய ஊரில் நீ வாழ  நினைத்தால் தொகையில் ஒரு பகுதியைப் போட்டு சிறிய வீடும், மற்றொரு பகுதியை மூலதனமாக வைத்து உனது திட்டப்படி ஒரு தொழிலும் தொடங்க முடியும், அதனால் உன் எதிர்கால வாழ்க்கையும் சீராக அமையும், இந்தா இதைப் பிடி. ரிக்கியின் விருப்பத்துக்கு மாறாகா நீ இதைச் செய்வதோ, அதற்கு உடன்பட்டு நாங்கள் ஏற்றுக் கொள்வதோ சரியல்ல,” காசோலையை உறையில் போட்டு மீண்டும் அவளது பையிலேயே போட்டார் ரிக்கியின் அம்மா.

    “இல்லை மாம். போர் முனையில் மரணம் எதிர்பார்க்கக் கூடியது என்றாலும் ரிக்கியும் இவ்வளவு சீக்கிரம் அவன் வாழ்வு முடிவடையும் என நினைத்திருக்க மாட்டான்.  எங்களுக்குக் குழந்தைகள் இருந்தால் எப்படி திட்டமிடுவானோ அது போல முன்னெச்சரிக்கையாகத் திட்டமிட்டிருப்பான் போலும்.  அவ்வாறு ஏதும் பிள்ளை பிறந்திருந்தால் நானே உங்களிடம் இந்தப் பணத்தைத் தர எண்ணாமல் அவன் குழந்தையின் நல்வாழ்விற்குத்தான் பயன் படுத்துவேன். ஆனால் நாங்கள் சிறிது காலம் போகட்டும் என நினைத்ததால் குழந்தைகளைப் பற்றிய  எங்கள் திட்டங்கள் நிறைவேறாமல் போய் விட்டது.  இவ்வளவு பணம் எனக்கு எதற்கு? எனக்கு படிப்பு இருக்கிறது, உழைக்கும் காலம் இன்னமும் நிறைய இருக்கிறது, ஆர்வமும் இருகிறது. அந்த மூலதனமே எனக்குப் போதும்.  என் எதிர்காலத்தை நானே எதிர்கொள்வேன். டாடும் நீங்களும் சக்கரநாற்காலியை ஏற்றி இறக்கும் ஒரு வண்டியை இதில் வாங்கிக் கொண்டால் ரிக்கி நிச்சயம் மகிழ்வான், இல்லையா?”

    அபி மீண்டும் பையிலிருந்து உறையை எடுத்து ரிச்சர்டின் அம்மாவின் கையில் திணிக்க முயன்றாள். அவர் தடுத்தார்.

    அபி சக்கரநாற்காலிக்கு அருகில் சென்று வில்லியம்ஸின் முன் முழங்காலிட்டு அமர்ந்தாள்.  அவர் அவளை ஏறெடுத்தும் பார்க்காமல், பொருட்படுத்தாமல் இன்னமும் சிலை போலவே அமர்ந்திருந்தார்.  அபி அவரது சட்டைப் பையில் உரையை மடித்துச் செருகினால்.  அவரது மடி மீது முகத்தைப் புதைத்துக் கொண்டு “என்னை மன்னித்துவிடுங்கள் டாட்,” என்றாள்.

    அவர் மெதுவாகத் திரும்பி அவளைப் பார்த்தார்.  அபி தலையை உயர்த்தி கலங்கிய கண்களுடன் மீண்டும், “என்னை மன்னித்துவிடுங்கள் டாட்.  உங்கள் பரம்பரையின் சிறப்பைத் தொடர, உங்கள்  ஆசைப்படி,  இராணுவத்தில் பணியாற்ற ரிக்கியின் வாரிசை உங்களுக்கு என்னால் கொடுக்க முடியாமல் போய் விட்டது.  இதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.  உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்,” என்றவள் எழுந்து வில்லியம்ஸை ஆறுதலாக அணைத்து மீண்டும் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு, “உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் டாட்,” என்று சொன்னாள்.

    ஆடும் நாற்காலியில் இருந்த தனது தோள்பையை எடுத்து மாட்டிக் கொண்டு ரிக்கியின் அம்மாவை அணைத்து அவர் கன்னத்திலும் முத்தமிட்டாள். பிறகு வாசலைக் கடந்து திரும்பிப் பார்க்காமல் வெளியேறினாள்.  வண்டியில் ஏறும் முன்பு  கையசைத்து, “குட் பை, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் வில்லியம்ஸ்,” என்று கூறி வண்டியைக் கிளப்பிச் சென்றுவிட்டாள்.

    அதுவரை டாட், மாம் என்றவள் சட்டேன்று யாரோ முன்பின் தெரியாத மூன்றாம் மனிதர்களை அழைப்பது போல மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் என்றதிலிருந்து நீங்களும் நானும் இனி யார் யாரோ, நமக்குள் இனி எந்தத் தொடர்பும் இல்லை, இனி நீங்களே அழைத்தாலும் உங்கள் வீட்டில் நான் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்று அபி குறிப்பால் உணர்த்தியது ரிக்கியின் அம்மாவிற்குப் புரிந்தது.  தனது மகன் அன்பு செலுத்திய ஒரே உயிரும் அவர்களை விட்டு நீங்கியது புரிந்தது.  அபியின் அந்த வேதனைக்குக் காரணம் அவள் வந்த பொழுது வில்லியம்ஸ் பேசியது அவள் காதில் விழுந்து விட்டதால் என்பதும் புரிந்தது.

    ஒரு தேங்க்ஸ் கிவிங் பண்டிகையில் தொடங்கிய அவளது உறவு மற்றொரு  பண்டிகை சமயத்தில் முறிந்து விட்டது.  அவர்கள் அவளை சரிவர நடத்தாவிட்டாலும் அவள் அந்தக் குடும்பத்திற்கு தனது நன்றியைக் காண்பித்து விட்டாள். ஒரு பெருமூச்சுடன், வேதனை நிறைந்த முகத்துடன் ரிக்கியின் அம்மா வில்லியம்ஸைத்  திரும்பிப் பார்த்தார்.  இதுவரை சிலை போலவே இருந்த வில்லியம்ஸ் இப்பொழுது குலுங்கிக் குலுங்கி அழுது  கொண்டிருந்தார்.

    (முற்றும்)

     

     

     

    படம் உதவி:
    http://www.front-porch-ideas-and-more.com/image-files/thanksgiving-106.jpg
    http://i.ebayimg.com/t/Flag-Display-Case-Military-Shadow-box-with-Stand-Base-for-3-X-5-flag-FC35-OAK-/24/!B8nTciQ!Wk~$(KGrHqR,!hYEze!fILZiBM3kJcVGT!~~_35.JPG

     

     

     

    Share
  • நம்பிக்கை.. அதானே எல்லாம்!

    சங்கர் ராமன்

    நிராகரிப்பை நிராகரியுங்கள்;

    “சக்சஸ்images

    சக்சஸ்

    சக்சஸ்…”

    வெற்றி பெறத் துடிக்கும் அனைவரின் காதுகளிலும் ஒலிக்கவேண்டிய அற்புதமான வார்த்தைகள். வெற்றி என்பதற்கு ஆங்கிலத்தில் உச்சரிக்கப்படும் அழகான வார்த்தைகள்..

    உச்சரித்த உதடுகள் சாதாரணமானவை அல்ல. தமிழ்த் திரையுலக வரலாற்றைப் புரட்டிப்போட்ட படம் “பராசக்தி”. அப்படத்தில் அறிமுகமாகி பின்னாளில் நடிப்பிற்குப் பல்கலைக்கழகமாக விளங்கும் செவாலியே டாக்டர். சிவாஜி கணேசன் அவர்களால் உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள்தான் அவை. திரையுலக வாழ்க்கையில் தனது முதல் காட்சியில் அவர் பதிவு செய்த வார்த்தைகள் அவரின் வாழ்க்கைப் பதிவையே பின்னாளில் மாற்றியது என்றால் அது மிகையாகாது.

    வார்த்தைகளுக்கு எப்போதுமே வலிமையுண்டு. “நீங்கள் எதுவாக நினைக்கிறீர்களோ அதுவாகவே மாறுவீர்கள்” என்பது விவேகானந்தரின் வாக்கு. முயற்சியோடு பயிற்சியும் இருந்தால் எல்லா வெற்றிகளும் எளிதில் வரும் என்பதில் ஐயமில்லை. பராசக்தி படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த சமயம் பாரம்பரியமிக்க ஒரு வார இதழில் அப்படம் பற்றிய திரைவிமர்சனம் வெளிவந்தது. அதில் “பராசக்தி படம் மிகப்பொpய வெற்றிப்படமாக அமைந்து தமிழ்த்திரைஉலகம் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகச்சிறப்பான கதை வசனத்தை கருணாநிதி எழுதியுள்ளார். அனைத்தும் சரியான முறையில் இருந்தாலும் அறிமுகமாகியிருக்கும் கதைநாயகன் மட்டும் சரியான தேர்வல்ல. அவரை மாற்றியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்” என்ற கருத்துகள் இடம் பெற்றிருந்தன. அதே போன்று அவருக்கு ஒப்பனை செய்ய வந்த ஒப்பனைக்காரரும் “இவரின் முகம் சரியில்லை. இவருக்கு ஒப்பனை செய்ய விருப்பமில்லை” என்று சொல்லிவிட்டார்… இவர்கள் அத்தனை பேருக்கும் சிவாஜி பதில் சொல்லவில்லை காலம் பதில் சொல்லியது.

    என்னுடைய வெற்றிக்குக் காரணமாக நான் சொல்வது கடின உழைப்பைத்தவிர வேறொன்றுமில்லை

    – சிவாஜிகணேசன்.

    எந்த வார இதழ் இவரை குறை கூறியதோ அதே வார இதழ் தனது பொன்விழா மலரில் உலகின் மிகச்சிறந்த நடிகர்களின் பட்டியலை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் முதல் இடம்பெற்றவர் ‘செவாலியே’ டாக்டர். சிவாஜிகணேசன் அவர்கள்தான். ஆம் நிராகரிப்புகளையே நிராகரித்தவர் அவர்.

    அவருடைய வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் பிரான்ஸ் நாட்டில் நடிப்புப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. உலகின் எந்த நடிகரும் இவரின் சாயல் இல்லாமல் நடிக்க முடியாது என்பதே நிதர்சனமாக உண்மையாகும். இவரின் முகம் சரியில்லை என்று கூறிய ஒப்பனைக்காரருக்கு பிற்காலத்தில் உதவி செய்த மாமனிதர் சிவாஜி என்பதும் குறிப்பிடத்தக்கதே ஆகும்.

    எல்லோருக்கும் வெற்றிபெற விருப்பமிருக்கிறது.

    ஆனால் வெகுசிலரே வெற்றி பெற தங்களைத் தயார் செய்துகொள்கிறார்கள்.

    உழைப்பே வெற்றியின் திறவுகோலாக அமைகிறது. தோல்வியடையக்கூடாது என்ற வகையிலே பலரும் போராடி வருகின்றனர். வெற்றி பெற போராட்டம் தேவையில்லை. செய்யும் வேலைகளை ஆர்வமுடன் செய்தாலே வெற்றி நம் வாசல் தேடி அலையும்.

    உண்ணுவதையும், உறங்குவதையும் மட்டுமே வேலையாகக் கொண்டவர்களை இவ்வுலகம் விழுங்கிவிடும். உங்களிடம் இந்த உலகம் எதையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. வெற்றி எல்லோருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. நிராகரிக்கப்பட்ட பலரும் பின்னாளில் தொடர்ந்த உழைப்பினாலும் முயற்சியாலும் வெற்றி பெற்றிருக்கின்றனர். இதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம்.

    அமெரிக்காவில் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் 5ம் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அதில் பறவைகள் பற்றிய பாடத்தை ஒரு ஆசிரியப் பெண்மணி நடத்திக் கொண்டிருந்தார். கோழி எப்படி முட்டையிடும்? அவற்றை எப்படி அடைகாக்கும்? என்பது பற்றி கூறிக் கொண்டிருந்தாள். அதைக்கேட்ட சிறுவன் வீட்டிற்குச் சென்றான். அம்மாவிடம் அடம்பிடித்து பத்து முட்டைகளை வாங்கி வரச் சொன்னான். நடுவீட்டில் அவற்றை வரிசையாக வைத்து அதன்மீது ஏறி அமர்ந்தான். வீடு முழுக்க அசுத்தம் செய்த தன் மகனைத் திட்டினாலும் அவன் செய்து பார்த்த செயலை தனக்குள் ரசித்துக் கொண்டாள்.

    அவர்தான் தாமஸ்ஆல்வாஎடிசன்!

    மறுநாள் வீட்டில் நடந்தவற்றை ஆசியரிடம் சொல்லி “நீங்கள் சரியான முறையில் கற்றுத்தரவில்லை. அதனால் தான் இந்தத் தவறு நடந்தது” என்று தைரியமாக எதிர்த்து நின்றான். எதிர்த்தவுடன் அந்த ஆசிரியப் பெண்மணி சிறுவன் என்று பார்க்காமலே அவனை அடித்து,அழவைத்தாள். அவன் சட்டைப் பையில் ஒரு கடிதத்தை எழுதிவைத்து உடனே வீட்டிற்கு அனுப்பினார். அழுதுகொண்டே வீடு வந்து சேர்ந்த தன் பையனை தேற்றி விட்டு விவரங்களைக் கேட்டறிந்தாள் அவன் தாய்.

    அவனது சட்டைப்பையில் கடிதம் வடிவில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்! அதில் “உங்கள் பையன் அடிமுட்டாள். இவன் இன்று முதல் எங்கள் பள்ளியில் மட்டுமல்ல… உலகத்தின் எந்தப்பள்ளியிலும் படிப்பதற்கு லாயக்கற்றவன்” என்று எழுதப்பட்டிருந்தது. அந்த நிராகரிப்பு அந்தத் தாயினை வேதனைப்படுத்தியது. ஆனால் அந்த வேதனை அவளுக்குள் உரமானது. அந்த உரமே அவள் பையனுக்குள் கருவானது.

    தன் மகனிடம் அன்று அவள் சொன்ன வார்த்தைகளே பிற்காலத்தில் நிதர்சனமான உண்மையானது. “நீ இனி எந்தப் பள்ளிக்கூடத்திற்கும் செல்ல வேண்டாம் என் கூடவே இருந்து கற்றுக்கொள். எதிர்காலத்தில் உன்னைப் பற்றிய பாடங்கள் உலகப் பள்ளிக் கூடங்கள் அனைத்திலும் இருக்கும்” என்ற வார்த்தைகள்தான் அவை. அந்த வார்த்தைகள் உண்மையானது.

    பள்ளியிலிருந்து நிராகரிக்கப்பட்டு விரட்டப்பட்ட அந்த அமெரிக்கச் சிறுவன் வேறுயாருமல்ல… அவர்தான் 1600 கண்டுபிடிப்புகளுக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன். உலக அளவில் 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்ற ஒரே விஞ்ஞானி இவர்தான். ஆம் நிராகரிக்கப்பட்டவர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதே உலகம் அறிந்த உண்மையாகும்.

    எந்தத் தடைகளுக்கும் அஞ்சாதீர்கள்.

    அவற்றை வரவேற்று கொண்டாடுங்கள்.

    ஏனெனில்

    தடைகள்தான் உங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும்.

    நெருக்கடியான காலகட்டம்தான் மிகச் சிறந்த மனிதனை அடையாளம் காட்டுகின்றன. சராசரி வாழ்க்கையோடு சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.

    “இருந்தாலும் இறந்தாலும்

    பேர் சொல்ல வேண்டும்

    இவர் போல யாரென்று

    ஊர் சொல்ல வேண்டும்”

    என்ற வரிகள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மட்டும் எழுதப்பட்ட வைர வரிகள் அல்ல. நம் ஒவ்வொருவருக்கும் உரித்தான வரிகளே இவை. எதையாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற நினைப்போடு வாழுங்கள். எதிர்காலம் உங்களை கட்டி அணைத்துக் கொள்ளும்.

    இது நம்ம ஊருல நடந்த கதை. பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த கதை இது. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது “கண்ணன்” என்ற சிறுவர் பத்திரிக்கைக்குக் கதை எழுதி அனுப்பியிருந்தான் ஒரு மாணவன். பள்ளிக்கூட முகவரிக்கு அந்தக் கதை பிரசுரமாகாமலே திரும்பி வந்து விட்டது. வகுப்பாசிரியர் கையில் கதை கிடைத்துவிட்டது. அவ்வளவுதான் ஆசிரியர் காதைப் பிடித்து திருகி அவரைப் படாதபாடு படுத்திவிட்டார்.

    “படிக்குற வயசுல உனக்கெல்லாம் எதுக்குடா இந்தக் கதை எழுதுற வேலை. படிப்புல அக்கறை இல்ல. “வாங்கற மார்க்கைப் பாரு” என்று கேலி செய்து அவர் காதைப் பிடித்துத் திருகியிருக்கிறார். அதன் பிறகு எதற்கெடுத்தாலும் காது திருகும் பணியினை அவர் அடிக்கடி செய்து கொண்டிருந்தார். அவர் வகுப்பில் அடிக்கடி தண்டனைக்குள்ளாகும் காதுகளைப் பெற்றவர் வேறுயாருமல்ல. பல்லாண்டுகளாக வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் “இன்று ஒரு தகவல்” சொல்லி வந்த தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களே ஆவார்.

    தென்கச்சி.கோ.சுவாமிநாதன்

    அவர் வானொலியில் புகழ்பெற்று உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அவருக்கு ஒரு கடிதம் வருகிறது. ‘ஐயா… சென்னை வானொலி நிலையம் கடந்த சில வருடங்களாக ஒலிபரப்பிக் கொண்டிருக்கும் ‘இன்று ஒரு தகவல்’ என்ற நிகழ்ச்சியை நான் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவன். தினந்தோறும் வானொலியில் தகவல் தரும் அந்த மதிப்பிற்குரிய பெரியவருடன் தொடர்புகொள்ள விரும்புகிறேன். எனவே அவருடைய பெயர் என்ன? முகவரி என்ன என்பதைத் தெரியப்படுத்த இயலுமா?’ என்று கேட்டு அடிக்கையெழுத்திட்டிருந்தார்.

    அந்தக் கடிதத்தை எழுதியவர் வேறு யாருமல்லர். தென்கச்சியாரின் காதுகளைத் திருகிய மதிப்பிற்குரிய ஆசிரியரே ஆவார். இதனைத் தன் கூட்டங்களில் அடிக்கடி தென்கச்சியாரே கூறியிருக்கிறார். “நீ என்ன பெரிய ஆளா? என்று கூறி ஏளனம் செய்த ஆசிரியரே பிற்காலத்தில் மதிப்பிற்குரிய பெரியவருக்கு… எனக் கடிதம் எழுதக் காரணம் என்ன? வேறு எதுவுமில்லை. தென்கச்சி சுவாமிநாதனின் அயராத உழைப்பு மட்டுமே ஆகும்.

    நாம் அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அற்புதமான வரிகள் “எதனால் நீங்கள் நிராகரிக்கப்பட்டீர்களோ அதனைக் கொண்டே வெல்ல வேண்டும்” என்பதே ஆகும். இவை இளைய சமுதாயத்தின் எழுச்சி நாயகன் விவேகானந்தனின் வரிகள். புரிந்து கொள்ளுங்கள். இந்த உலகில் வெற்றியாளர்கள் அனைவரும் நிராகரிப்பை வென்றவர்களே. ஆம் உங்களை ஒதுக்கித் தள்ளுபவர்களை பாராட்டுங்கள். ஆம்! உங்களின் வளர்ச்சிக்கு அவர்கள் வழிகாட்டுகிறார்கள். புறக்கணிப்பை புறக்கணியுங்கள்… முதல் புறக்கணிப்பிலேயே முடிந்து போகாதீர்கள்… சில அடிகள் நடந்து பாருங்கள். வெற்றி தேவதை உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்.

    தோல்வியடைந்தவர்கள் இரண்டு வகையினர்.

    சிந்திக்காமல் செயலாற்றியவர் ஒரு வகை.

    சிந்தித்துவிட்டு செயலாற்றாமல் விட்டவர்கள் மற்றவர்கள்.

    செயல்படுங்கள். வெற்றி அருகில்தான் உள்ளது.

    படத்திற்கு நன்றி:

    http://www.google.co.in/imgres?imgurl=http://successonline.com.au/wp-content/uploads/2011/04/building-the-bridge-to-success.jpg&imgrefurl=http://successonline.com.au/&h=1200&w=1600&sz=606&tbnid=FjvY4Hf915FvtM:&tbnh=90&tbnw=120&zoom=1&usg=__003ZAzIdnMU-215nHnUKGyHprVo=&docid=V_FclXvLjj3_kM&sa=X&ei=foccUsrgN4iMrQf_3ICoCA&ved=0CEQQ9QEwAg&dur=1336

    Share
  • யோகக்காரன்…

    செண்பக ஜெகதீசன்happyindex

    நினைத்தபடி நடந்தால்,

    நீ யோகக்காரன்..

     

    நடக்காவிட்டால்,

    நீ பெரும் யோகக்காரன்..

     

    காரணம்,

    கடவுளின் விருப்பம் அது-

    நடக்கும் இனி நல்லபடி…!

     

    படத்துக்கு நன்றி

    http://www.growyourselves.com/10-characteristics-of-a-happy-person.html

    Share
  • நிஜம்

     

    ரிஷி ரவீந்திரன்

    உனக்குத் தெரிந்தNijam (2
    நானும்
    எனக்குத் தெரிந்த
    நீயும்
    யாரோ ?…

    என்னைப் பற்றி
    நீ அறிந்த
    நிஜமும்
    உன்னைப் பற்றி
    நான் அறிந்த
    நிஜமும்
    நிஜமான நிஜமா ?

    Share