Blog

  • திருமால் திருப்புகழ் (23)

     

    கிரேசி மோகன்

    Asura Samhari

    தானதனத்த தானதனத்த தானதனத்த தானதனத்த
    தானதனத்த தானதனத்த -தனதான….

    —————————————————————————————————————————-

    “சீதையிருப்பை ராகவனுக்கு சேதியுரைத்த வானரஜித்தன் images (3)
    போலயெனக்கு, நானினிருப்பை -ரமணேசர்
    கூறுவிதத்தில் காணவிருப்பு, ஆழியையொத்த மேனியவஸ்த்தை
    தாவிகுதித்(து)இ ராவணபுத்தி -தெளிவாக,

    ஆதியிருப்ப சோகவனத்து ஆன்மசுகத்தில் ஆழநிலைக்க,
    பாரமொழித்து பூமிதனக்கு -எளிதாக,
    தேரைநடத்தி நூறையழித்து ஆளஐவர்க்கு (நாலொருவர்க்கு) வாழ்வையளிக்க
    போரைநிகழ்த்தி பாரதசத்தம் -இடுவோனே.

    தேதிகுறித்து தாமதமற்று வாகனபட்ஷி மீதுயிலக்மி
    கூடயிருக்க கீதையுரைக்க -திருமாலே,
    வாவியதற்குள் காளியனுச்சி மீதுகுதித்த பாதரசத்தை
    ஓதகவிக்குள் நேரில்நடத்த -வருவாயே

    சூதில்தொலைத்த மாதுஅழைக்க சேலையளித்து மானம்பிழைக்க
    வேகமுடைத்து ஞானமுகக்க -அருள்வாயே
    கேசவருக்கும் வாசவருக்கும் கூடிடும்பக்த கோடிகள்பெற்ற
    மாமயிலைக்கு மாதவமுக்தி -பெருமாளே”….கிரேசி மோகன்…..
    ———————————————————————————————————————–

    Share
  • அவளுக்கும் ஒரு பெயருண்டு!

    கீதா மதிவாணன்

    old-indexபட்டுத்தூளியிலிட்டு பாலாடையில் தேன்புகட்டி
    அந்நாளில் அவளுக்கும் ஒரு பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.
    வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும்போதோ,
    ரேசன் அட்டை புதுப்பிக்கப்படும்போதோ அன்றி
    அவளுக்கென்று ஒரு பெயர் இருப்பது
    அவள் நினைவுக்கு வருவதேயில்லை.
    தங்கமே வைரமே பவுனே பச்சைக்கிளியே என்று
    கொஞ்சுமொழிகளால் கொண்டாடப்பட்டும்
    அம்மாடி, கண்ணு, செல்லம், பாப்பாவென்று
    ஆசையாயும் அன்பாயும் அழைக்கப்பட்டும்
    அடியேய் இவளே…. நாயே பேயே சனியனே என்று
    பின்னாளில் பேரெரிச்சலுடன் விளிக்கப்பட்டும்
    கடந்துபோன காலத்தின் எந்த முடுக்கிலும்
    தன்பெயர் புழங்கப்படாததில் அவளுக்குப் பெருவருத்தம்.
    பள்ளிக்குச் சென்று பழக்கப்படாவாழ்வில்
    அவள் பெயர் தாங்கியதொரு அஞ்சலட்டைக்கும்
    வழியற்றுப்போனவளின் அந்திமக்காலத்தில்
    ஏக்கத்தவிப்போடு ஊசலாடிக்கொண்டிருக்கிறது உயிர்க்கூடு,
    காலனேனும் அவளைப் பெயரிட்டு அழைக்க
    காலத்தே வருவானாவென்ற காத்திருப்போடு!

    http://www.shunya.net/Pictures/NorthIndia/Bishnupur/Bishnupur.htm

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு

    எஸ். பழனிச்சாமி

    அன்புள்ள மணிமொழிக்கு,

    உன் அப்பா எழுதும் மடல். இந்த மடல் உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். இதை எழுத வேண்டிய அவசியம் என்ன என்றும் கேட்கத் தோன்றலாம். ஆனாலும் பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக உன்னைப் பார்க்காமலும், பார்க்க முடியாமலும் இருக்கின்ற ஏக்கம் என் மனதை அரித்துக் கொண்டிருப்பது உண்மை. அதன் வெளிப்பாடுதான் இந்த மடல்.

    இத்தனை நாட்களாக நீயும் உன் தம்பிகளும் ஃபேஸ்புக்கில் எழுதுவதை மட்டுமே படித்து வந்திருக்கிறேன். அது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான். இப்போது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதையும் அதில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். உன் தம்பிகள் படித்து முடித்து வேலையில் சேர்ந்திருப்பதையும், உனக்குத் திருமணம் ஆனதையும், குழந்தை பிறந்ததையும்கூட அதன் மூலம்தான் தெரிந்து கொண்டேன்.

    தாய்மை களை பொழியும் உன் அழகான முகத்தைப் பார்க்க வேண்டும், உன் மகனை என் மடியில் வைத்துக் கொஞ்ச வேண்டும் என்று மனது துடிக்கிறது. ஆனால் அதற்குத்தான் எந்த வழியும் இல்லாமல் போய் விட்டதே!

    அன்பு மகளே, உன்னுடனும், உன் தம்பிகளுடனும் நாம் எல்லோரும் ஒன்றாக இருந்த நாட்களை மட்டுமே நான் பொக்கிஷமாக நினைத்து இப்போதும் அசை போட்டுக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு சந்தோஷமான, அற்புதமான நாட்கள் அவை.

    நீ நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாய். காலையில் எழுந்தவுடன் நான் உங்களுக்கு பாடங்களைச் சொல்லிக் கொடுப்பேன். அப்போது உன் தம்பி செய்யும் சேட்டைகளை நான் விளையாட்டாகக் கிண்டல் செய்யும் போது, எல்லோரும் சிரிப்பீர்களே, அது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? எவ்வளவு சந்தோஷமான நாட்கள்!

    ஐந்தாம் வகுப்பில் நீ படிக்கும் போது, உன்னுடைய வகுப்புத் தோழி திவ்யாதான் எப்போதும் முதல் ரேங்க் வாங்குவாள் என்று நீ சொன்னாய்; நீ நினைத்தால் உன்னாலும் முடியும் என்று, உனக்கு மனதை ஒரு நிலைப்படுத்த கற்றுக் கொடுத்தேனே ஞாபகம் இருக்கிறதா? அந்த மாத பரீட்சையில் நீ முதல் ரேங்க் எடுத்தபோது எவ்வளவு சந்தோஷம் அடைந்தாய்? அன்றிலிருந்து எப்போதும் நீதான் முதல் ரேங்க் எடுத்தாய். அதனால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது.

    அன்பு மகளே, அப்படியெல்லாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று உனக்கு சொல்லிக் கொடுத்த எனக்கு, இத்தனை நாட்களாக உன்னை நேரில் பார்க்கவும், பேசவும் ஒரு வழி தெரியாமல் போய் விட்டதே? என்னுடைய தலைவிதியை நினைத்து பரிதாபப் படுவதா, பச்சாதாபப் படுவதா என்று எனக்குத் தெரியவில்லை.

    இத்தனைக்கும் நீ உன்னுடைய தோழி திவ்யாவைப் போல் எங்கோ அமெரிக்காவிலா இருக்கிறாய்? இதே தமிழ்நாட்டில் எட்டு மணி நேரப் பயண தூரத்தில் தானே இருக்கிறாய். அப்படி இருந்தும்கூட நான் உன்னைப் பார்க்கவோ, நீ என்னைப் பார்க்கவோ முடியாமல் போய் விட்ட இந்த காலத்தின் கொடுமையை என்னவென்று சொல்வது?

    அதிர்ச்சி தரக்கூடிய அந்தப் பிரிவு, நீ ஆறாவது படிக்கும்போதுதான் ஏற்பட்டது. அதன் காரணத்தைப் புரிந்து கொள்ளும் வயது அப்போது உங்களுக்கு இல்லை. இப்போது நீ வளர்ந்து பெரியவளாகி விட்டதால் உலக அனுபவம் உனக்குக் கிடைத்திருக்கும். அதுவுமில்லாமல் டிவி சீரியல்களில் எத்தனையோ வில்லிகளைப் பார்த்திருப்பாய். மனிதர்களின் குணாதிசயங்களைப் புரிந்து கொண்டிருப்பாய்.

    அன்பு மகளே, மனிதர்களை விட பணத்தை மட்டுமே பெரிதாக நினைக்கும், நேர்மையில்லாத, திடீர் பணக்காரியாகி விட்ட ஒரு மாமியாரின் புதிய வீட்டில் மருமகன் வாடகைக்கு குடியேறும் ஒரு நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. அதுவும் என் போன்ற தன்மானம் மிக்கவர்களுக்கு அந்த நிலை வரவே கூடாது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்கு நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன். இல்லாவிட்டால் உங்களையெல்லாம் அன்றே பிரிந்து தனியே சென்றுவிட வேண்டும் என்றவகையில் மிரட்டப்பட்டேன்.

    வேறு வழியின்றி அதை ஏற்றுக்கொண்ட என்னைத் தரக்குறைவாக நடத்தி, தனிமைப் படுத்தி, அவமானப் படுத்தி என்னை வீட்டை விட்டு வெளியேற்ற அவர்கள் முடிவு செய்து விட்ட பிறகு, என்னால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. அதனால் உங்களையெல்லாம் பிரிவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. என் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

    எங்க ஊர் ராஜா படத்தில் வரும் யாரை நம்பி நான் பிறந்தேன் என்ற பாடலில்

    பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா

    சோதனையைப் பங்குவச்சா சொந்தமில்லே பந்தமில்லே

    என்றும்

    குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே

    பெட்டியிலே பணமில்லே பெத்த புள்ளே சொந்தமில்லே

    என்றும் கவியரசு கண்ணதாசன் என்னுடைய அப்போதைய நிலையை மிகப் பொருத்தமாக சொல்லியிருப்பார்.

    அம்மா, நான் கோழையல்ல. தன்னம்பிக்கையும், தன்மானமும் உள்ளவன். மகாத்மா காந்தியின் அஹிம்சை வழியில் நம்பிக்கை கொண்டவன். கடவுள் மீது பக்தி உள்ளவன். தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும் என்ற தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவன். அதனால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தேன்.

    நீங்கள் வீட்டில் இருக்கும்போது உங்களைப் பிரிந்துவர என்னால் முடியாது என்றுதான், நீங்கள் பள்ளிக்குச் சென்ற பிறகு வீட்டை விட்டு வெளியேறினேன். அதன் பிறகு உங்கள் நினைவால் நான் பட்ட அவஸ்தைகளை வார்த்தைகளில் சொல்ல முடியாது. எப்போது வேண்டுமானாலும் அழுகை வெடித்துக் கிளம்பி விடும் என்ற நிலையில்தான் நான் இருந்தேன். அப்போது என் முக பாவம் அப்படித்தான் இருக்கும்.

    எப்படியோ பன்னிரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. உள்ளத்தில் ஏதோ ஒரு சோகம் நிரந்தரமாகத் தங்கி விட்டது போல் தோன்றுகிறது. பலவீன மனம் கொண்டவனாக இருந்திருந்தால் உயிரையே மாய்த்துக் கொள்ளும் எண்ணம் தோன்றி இருக்கும். ஆனால் கடவுள் அருளால் என்றாவது ஒருநாள் உன்னையும், உன் தம்பிகளையும் மீண்டும் பார்ப்பேன் என்ற ஒரு நம்பிக்கை மட்டுமே எனக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பைக் கொடுத்திருக்கிறது.

    பதினாலு வருடங்கள் ஸ்ரீராமனைப் பிரிந்த தசரதனின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று என்னால் உணர முடிகிறது. தசரதனுக்கோ வேறு மனைவிகள் மூலம் மற்ற பல குழந்தைகள் இருந்தனர். ஆனால் எனக்கு குழந்தைகள் நீங்கள் மட்டும்தானே!

    இன்று என்னுடைய பொருளாதார நிலைமை அப்படி ஒன்றும் மோசமில்லை. நேர்மையான உழைப்பில் சம்பாதித்து, ஓரளவு வசதியான ஒரு நடுத்தர வாழ்க்கைக்கு தேவையான, குடியிருக்க ஒரு ஃப்ளாட், வாகனங்கள் என்று எல்லாமே இருக்கிறது, குழந்தைகளாகிய நீங்கள் என்னுடன் இல்லை என்பதைத் தவிர.

    நான்தான் முயற்சி செய்து உங்களைப் பார்க்க வழிவகை செய்ய வேண்டும் என்று என்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிலர் சொல்கிறார்கள். ஃபேஸ்புக்கில் கூட ஃப்ரண்ட்ஸ் ரிக்வெஸ்ட் கொடுக்கலாம் என்று ஒரு நப்பாசை தோன்றும். ஆனால் என் மனம் வருந்தும்படி ஏதாவது ஆகிவிட்டால் என்னால் தாங்க முடியாது என்பதால் என்னைக் கட்டுப் படுத்திக் கொள்வேன்.

    சரி, இப்போது இந்த மடல் எதற்கு என்று கேட்கிறாயா? சென்ற வாரம் நான் ஊருக்குப் போய் இருந்தேன். அப்போது எனக்குத் தெரிந்தவர்கள் உன்னைப் பார்த்ததாகவும், பேசியதாகவும் சொன்னார்கள். வாழ்க்கையில் எல்லா செல்வங்களும் பெற்று, நீயும் உன் தம்பிகளும் வளமான வாழ்க்கை வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    நீங்கள் புத்திசாலி குழந்தைகள் என்பதை நானறிவேன். எனவே நீங்கள் என்னுடைய சூழ்நிலையைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப் படக்கூடாது. எல்லாம் விதித்தபடிதான் நடைபெறும் என்றால் பிறகு கவலைப்பட என்ன இருக்கிறது.

    இதன் மூலம் நான் தெரிவித்துக் கொள்வது இதுதான். உன்னையும், உன் தம்பிகளையும் பார்ப்பதற்கு மனத்தில் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னைப் பார்க்கத் தடையில்லாத சூழ்நிலை இப்போது அங்கு இல்லை என்றுதான் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.

    ஆனால் காலம் கனியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என் வாழ்நாள் முடிவதற்குள் என்றாவது ஒரு நாள் நாம் எல்லோரும் ஒன்றாகச் சேருவோம். அந்த நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பேன்.

    இப்படிக்கு

    உன் அப்பா

    Share
  • சிறுகை அளாவிய கூழ் – 8

    இவள் பாரதி

    AAA_2661

    வாழைப்பூவிரல்களை விரித்து

    பருப்புக்கடைய

    உள்ளங்கை காட்டும் குழந்தை

    நண்டூறுது

    நரியூறுது சொல்லி

    கிச்சுக் கிச்சு மூட்டுமுன்னே

    சிரித்துவிடுகிறது

     

    ====

     

    இருமல் சத்தத்தை

    இதயத்துக்குள்

    வலிந்தனுப்புகிறேன்

    உன் உறக்கம்

    கலைந்துவிடக் கூடாதென

    ====

     

    விவசாய நிலத்தில்

    விதைக்கப்பட்டு

    துளிர்த்திருக்கும்

    ஒருவார பயிர்களென

    ஒருசேர வளர்ந்திருக்கிறது

    உன் மொட்டைத் தலை

     

    =====

     

    ஒவ்வொருமுறையும்

    விளையாடுகிறேன்

    உன்னிடம் தோற்பதற்காகவே

     

    Share
  • தெய்வம் இருப்பது எங்கே

    கவிஞர் காவிரி மைந்தன்

    தெளிவாகத் தெரிவது ஒன்று! தெளிவின்றி மறைவது ஒன்று! எதை நாம் இருக்கிறது என்று உறுதி செய்ய முடியும்? எதை நாம் இல்லையென்று மறுத்திட முடியும்? கேள்விகள் பல எழலாம்! விடைகள் தான் எங்கே? அறிவுக் கண்ணில் பார்க்கும்போது அதற்கும் எல்லைகள் உண்டு! அகக்கண்ணால் பார்க்கும் போது அதற்கோர் உலகம் உண்டு! விஞ்ஞானம் கண்டுபிடிப்பதற்கு பன்னெடுங்காலம் முன்பாகவே மெய்ஞானம் கண்ட உண்மைகள் கோடி! அறிவின்வழி எதுவுமே உறுதி செய்யப்பட வேண்டும்! ஆன்மீகம் கண்டவர்கள் யார்? அதன்வழியே நின்றவர்கள் யார்? வழிவழியாய் தொடரும் இந்தச் செவி வழிச்சங்கதிகளை செப்பேட்டிலும், பனை ஓலைச்சுவடிகளிலும் காணும்போது விஞ்ஞானத்தை மெய்ஞானம் விஞ்சியிருப்பதை உணரலாம்! சூரிய கிரகணம், சந்திர கிரகணம் இவையெல்லாம்.. இந்த ஆண்டில்.. இன்ன தேதியில்.. இன்ன நேரத்தில் ஏற்படும் என்று நவீன உலகம் கண்டுபிடிப்பதற்கு முன்னரே, ஞானிகளும் மேதைகளும் தவசிகளும் தங்கள் மெய்யுணர்வால் கணக்கிட்டுச் சொன்னது எப்படி?

    அர்த்தமுள்ள இந்து மதத்தில் கவியரசர் கண்ணதாசன் அழகாக குறிப்பிடுகிறார். மாதா.. பிதா.. குரு.. தெய்வம்.. என்கிற பழமொழியில்.. மாதா என்பது சர்வ நிச்சயமான ஒன்று! மாதா சொல்லித்தான் ‘பிதா’ அறிமுகாகிறார் – குழந்தைக்கு! அக்குழந்தையை பிதா – குருவிடம் கொண்டு சேர்க்கிறார்! குருவோ.. தெய்வத்தை உணரச் செய்கிறார்!

    இறைவன் இருப்பது எங்கே என்கிற கேள்வி எழுவது இன்று நேற்றல்ல.. மறைபொருளின் கீர்த்தி அறியாத வரையில்.. உள்ளத்தில் உள்ளது கடவுள் என்பது உணராத வரையில்.. தெய்வத்தைத் தேடும் மனிதனின் வாழ்வில் மாற்றமில்லை. ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற நம் முன்னோர்கள் ஒவ்வொரு ஊரிலும் கோவிலை உருவாக்கினார்கள். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றும் பழமொழி தந்தார்கள். கற்பக் கிரகத்தில் கற்சிலையாய் இருந்தாலும் அங்கே கடவுளுக்கு நடத்தப்படும் ஆராதனையின்போது அந்த தீப ஒளி ஒருசில மணித்துளிகளுக்குள் .. சட்டென்று கண்ணில்பட்டு மறைந்தாலும் அங்கே காணும் தெய்வ தரிசனம் மனதில் நின்றுவிடும். ஆலயவழிபாட்டில்கூட அனுஷ்டிக்கப்படும் ஆராதனையிலும் சூட்சுமங்கள் பொதிந்தே உள்ளன. அவ்விடம் நின்று ஆண்டவன் எண்ணி அருளை வேண்டுவோர் உள்ளம் எப்படியிருக்க வேண்டும் என்பதைக்கூட கவியரசு கண்ணதாசன் இலக்கணம் வகுத்தாற்போல் ஒரு திரைப்பாடலில் தருகிறார் பாருங்கள்.. பாடலை மீண்டும் கேளுங்கள்..

    தெய்வம் இருப்பது எங்கே
    தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
    தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
    தெய்வம் இருப்பது எங்கே
    தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே
    தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே
    தெய்வம் இருப்பது எங்கே

    பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு
    பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு
    எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு
    எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு
    தெய்வம் இருப்பது எங்கே

    ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை
    ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை
    அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை
    அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை

    இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு
    இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு
    இவை தான்தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு
    இவை தான்தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு
    தெய்வம் ஏற்கும் உனது தொண்டு

    தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
    தெய்வம் இருப்பது எங்கே

    திரைப்படம்: சரஸ்வதி சபதம்
    பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: K.V. மஹாதேவன்

    http://www.youtube.com/watch?v=vbwcFTkjtJI

    Share
  • அய்யனாரும், ஆட்டுக்குட்டியும்

    பாகம்பிரியாள்A-index

    கம்பீரமான முகம், களையான மீசை
    கையில் இருக்கும் பளபள கத்தி,
    கனைத்து நிற்கும் குதிரை -இவை யாவும்
    கொடுமை ஏதும் நிகழாது என்று
    கொடுத்த நம்பிக்கையை…….

    அவர் காலடியில் கிடக்கும்
    ஆட்டுக்குட்டி கொடுக்கும் தீனமான
    அலறலோடு கலந்த அமானுஷ்யம்
    அதை அவசரமாய் அழித்துச் செல்கிறது
    ஒவ்வொரு ஓங்காரமான வீச்சுக்கும்!
    படத்துக்கு நன்றி

    http://www.skyscrapercity.com/showthread.php?t=1034825

    Share
  • பிராத்தனை துளிகள் ..!

    கலைமகள் ஹிதாயா ரிஸ்விp-images

    பிறந்து வாழுகின்ற உயிர்களின் எதிர் பார்ப்புக்கள்
    இறந்து போகின்ற உள்ளங்களின் வேதனைகள்
    வேடிக்கைப் பார்க்கின்ற இரக்கமில்லா ஜீவங்கள் ..!

    உயிரற்ற சடலத்தை சுமப்பதற்கு
    நான்கு தோள்கள் கரம் கொடுக்க
    மறுமை வாழ்வை நிலையுருத்தி நிற்கும் மரணம் ..

    பிறப்பும் இறப்பும் இணைந்துவாழும் வாழ்க்கை .
    நிலையற்ற நினைவுகளைஉறிஞ்சியெடுக்கின்ற மனசு
    எல்லாம் மறைகின்றன இரவு பகல் மாற்றங்களில்

    இஸ்மாயில் நபியின் தாகத்தை தீர்க்க ,
    ஊற்றெடுத்த சம்ஷம் நீரினை குடிக்க
    போட்டி போடுகின்ற நல்லடியார்கள் மத்தியில்

    வாழ, எல்லையற்ற சோதனைகள் தொடர
    பல நல்ல இதயங்கள் நொந்து மறைந்தனர்
    அப்பாவி உள்ளங்கள் மானம் காத்து..

    எத்தியோப்பிய மண்ணில்
    எலும்புக் கூடுகளாய் வாழும் உறவுகளுக்கு
    இதயம் பிழிந்தோடும் பிராத்தனை துளிகள் ..!

     

    Share
  • பூதச் சூட்டுப் பிரளயம் !

    சி. ஜெயபாரதன்images

    சூட்டு யுகம் பூதமாகிப் புவிக்கு
    வேட்டு வைத்து மீளுது !
    நாட்டு நகரம், வீட்டு மக்கள்
    நாச மாக்கிப் போகுது !
    புயலை எழுப்ப மூளுது !
    பேய்மழை கொட்டி அழிக்குது !
    நீரை, நிலத்தை, வளத்தை,
    பயிரை, உயிரை, வயிறை
    இயற்கை சிதைக்க வருகுது !
    கடல் வெப்பம், மட்டம் ஏற்றி
    கரைப் பகுதி மூழ்குது !
    மெல்ல மெல்ல ஏறி உஷ்ணம்,
    மேலே மீறிப் போகுது !
    சூட்டு யுகப் பிரளயம்,
    வீட்டை நோக்கித் தாக்குது !
    உன்னை, என்னை, உலகின் கண்ணை
    இன்னும் பிதுக்கப் போகுது !

     

    ஓரிடத்தில் எரிமலை சீறி
    உலகெல்லாம் பரவுது
    கரும்புகை மூட்டமே !
    ஓஸோன் குடையில்
    ஓட்டை விழுந்து,
    பரிதிக் கதிர்கள் பொசுக்கும் புவியை !
    துருவப் பனிப் பாறைகள்
    உருகி, உருகி
    உப்புக் கடல் உயரம் ஏறும் !
    பருவக் காலச் சுழற்சி, சுதித்
    தாளம் மாறிப்
    வேளாண்மை தவறிப் போகும் ,
    கோடை நீடிக்கும்,
    குளிர்காலப் பனிப் பாறைகள்
    வளராமல் குள்ள மாகும்
    துருவ முனைகளில் !
    நிலப்பகுதி நீர்மய மாகும் !
    நீர்ப்பகுதி வறண்டு போகும் !
    மனித சமூகம் நாச மடைய,
    புனித வாழ்வு புழுதி யாக
    புகுந்து விட்டது,
    பூதச் சூட்டுப் பிரளயம் !

    http://mindblowingscience.com/latest-news/north-pole-ozone-hole-its-happening-again/

    Share
  • திருமால் திருப்புகழ் (22)

    கிரேசி மோகன் krishna3xp

     
    —————————————
    தனதன தத்தன தனதன தத்தன
    தனதன தத்தன….

    ———————————————————————————————–
    “மதுவன சுக்ரிவ அனுமகு ரக்கினம் scan0098
    விழுசர ணக்கழல்-உடையோனே
    மனைவியின் கற்பினில் மகிழ்வுற புட்பக
    மதில்மனை புக்கிடும் -ரகுராமா

    யதுகுல விக்ரக ,யமுனைந திக்கரை
    யவனவ னப்பென -இடையாயர்
    மகளிர்அ ணைத்திட மழலைமு கத்தோடு
    குழலைஇ சைத்திடும் -நவநீதா

    பதவிரல் நெற்றியை கனகுமு றித்திட
    படவிட மெத்தையில் -படர்வோனே
    ரமணரு ரைத்திடு ரகசிய வித்தையின்
    ரசிகனெ னக்கது -எளிதாக

    விதமருள் உக்கிர சுதர்சன சக்கிரம் ,
    வலம்புரி சத்தமும் -கதையோடு
    சிலையுடை கத்தியும் கமலசு பிட்சமும்
    கரமதில் உற்றிடு -பெருமாளே”….
    ————————————————————————————————————————

     

     படங்களுக்கு நன்றி:

    http://spiritualmessenger.forumotion.com/t484-the-ramayana-part-6  

    Share
  • திருமால் திருப்புகழ் (21)

     

    கிரேசி மோகன்

     

    திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள்
    திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள்

     

    தனத்தந்த தான தனத்தந்த தான
    தனத்தந்த தான -தனதான….

    —————————————————————————————————————————-

    “நரைத்தெங்கும் சோகை எழக்கம்பு தேவை images (2)
    விறைத்தங்கம் பாயில் -விழுநேரம்
    அரைக்கண்ணும் மூட அவச்சங்கு ஊத
    நடுச்சந்தி ஓலை -தனிலேகி

    அரிச்சந்த்ர கானில் அடைத்துன்னை போவார்
    அதற்கென்று வாடாய் -பரிகாரம்
    இதற்குண்டு, வானை அடைக்கின்ற சோணை
    சிவக்கன்று ராமன் -ரமணேசர்

    உரைக்கின்ற நானார் வழிச்சென்று மீள
    இடைக்கன்று மேய -குழலூதும்,
    மயிற்கொண்டை சூடி மழைக்கென்று கோவர்
    தனக்குன்று தாரி -அருள்வாயே

    அரிச்சிந்தை சேயின் அழைக்கின்ற போது
    வரக்கம்பம் வாழும் -நரசீயா
    மணப்பெண்மை ஜாம்ப வதிக்கென்று கோயில்
    திருத்தங்கல் மேவும் -பெருமாளே”

    ——————————————————————————————————————————

    படங்களுக்கு நன்றி:

    http://wikimapia.org

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    உலகத்திலேயே மிகப் பெரிய வரத்தைப் பெற்றவர் யாரென்றால் உறக்கம் தேவைப்படும்போது அதை எளிதாக வரவழைத்துக்கொண்டு ஆனந்தமாக அனுபவித்து உறங்குபவர்தாம்.

    உறக்கம் பெரியதொரு சுகம்தான். உறக்கத்தில் மட்டுமே நாம், நம்மை மறக்கமுடியும். உறக்கம் இறைவன் உயிரினத்துக்குத் தந்த பரிசு.அதை சத்விநியோகம் செய்து கொள்வது கூட பெருங்கலைதான். ஏனெனில் மனிதகுலம் பெரும்பாலும் இந்தக் கலையைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல்தான் தவிக்கிறது. அதற்கேற்றாற்போலத்தான் இந்த நவீன காலமும் காலத்தின் மாற்றத்தில் தோன்றிய வசதிகளும் மனித குலத்தை உறக்கத்தின் பக்கம் போகாமல் அலைக்கழிக்கிறது. இயற்கை முறையில் வரவேண்டிய உறக்கம் செயற்கை முறையில் தருவிக்கப்பட்டு அதனால் கிறக்கம் மட்டுமே கிடைக்கிறது என்பதும் நிஜம்தானே..

    வாழ்க்கையில் எது குறைந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம். உறக்கம் குறைந்தால் நிச்சயம் உடல்நிலைக்குக் கெடுதல்தான். உறக்கம் குறைந்தால் முதலில் எரிச்சல்தான் வரும். நம் மனநிலையும் கெடும்.. இப்படிப்பட்ட உறக்கத்தைப் பற்றி நந்திதா அவர்கள் வேறு வகையில் வல்லமையில் எழுதியது மிகச் சரியாக மனதுக்குப்பட்டது. இதோ நந்திதா அவர்களின் எழுத்தில் உறக்கத்தின் மகிமையைக் கொஞ்சம் படியுங்களேன்.

    உயர்நிலைப் பள்ளியில் படிக்க வேண்டியது மலை போல் இருக்க என்னை சீண்டிப் பார்ப்பாய். உன் பிடியிலிருந்து விலக பல முயற்சிகள், பல உத்திகள், எல்லாம் பயன் அற்றுப் போயின.சில சமயம் எனது பலஹீனத்தைப் பயன் படுத்த உன் சாகசத்தில் பலியானேன்.

    பரிக்ஷை சமயத்தில் நான் இப்படி பலியாவதைக் கண்டு என் அம்மா பதறி எனக்கு காவலாக இருந்திருக்கிறாள். அவளைக் கண்டு நீ ஓடி ஒளிந்து கொண்டாய். பரிக்ஷைக்குப் பிறகு, பள்ளி திறக்கும் வரை நாம் இருவரும் உல்லாச பறவைகளாகி கனவு உலகில் பறந்து மெய் மறந்து இருந்தோம்.

    சே! மறுபடியும் பள்ளி திறந்து படிப்பு, அதன் பிறகு, மேல் படிப்பு. பட்டங்கள். பொறுப்புகள் சேர சாதிக்க நினைத்தேன். அப்பொழுதுதான் முதன் முதலாக கொஞ்சம் உன்னிடமிருந்து விலகினேன். ஏதாவது ஒன்றைப் பெற வேண்டுமானால் மற்றொன்றை தியாகம் செய்ய வேண்டும் என்பது இயற்கையின் விதி. சத்தியமாக நிரந்தரமாக உன்னை விட்டு விலக நினைக்கவில்லை. தற்காலிகமாகத்தான். சாதனைகள் வெற்றிக​ளைக் குவித்தன. பெரிய வேலைகள் என் வீடு தேடி வந்தன. என் வேலையில் நான் கண்ட வெற்றி, அதைத் தொடர்ந்த பெருமைகள், பரிசுகள், ​கெளரவங்கள், பட்டங்கள் என்னை வெறியனாக்கியது. இப்பெருமைக​ளை நிரந்தரமாக தக்க வைத்துக்கொள்ள பேராசைக் கொண்டேன். என் பதவி பணம், வீடு, வாகனம், ஆடம்பர வாழ்க்கையை அள்ளிக் குவித்தன. அதே சமயம் நமக்குள் ஏற்பட்ட விலகல், விரிசலாகி நிரந்தரமாக உன்னை முழுவதுமாக இழந்து தொலைத்தும் விட்டேன். உன்னை மதிக்காத என்னை உதறி விட்டு எங்கோ ஓடி ஒளிந்து கொண்டு என்னைப் பழி வாங்குகிறாய். உன் அருமையை இப்பொழுது உணர்ந்து விட்டேன். நீ கொடுத்த தண்டனை போதும்.

    நீ முழுவதுமாக என்னை விட்டு விலக என் உடல் கெட்டு விட்டது. உணவு செரிப்பது இல்லை. முன் போல் அலுவலத்தில் வேலையைக் குறித்த நேரத்தில் செய்ய முடியாமல் மேலதிகாரிகள் என்னை விட்டு வேறு ஆட்களைத்தேடி செல்ல எனக்கு வேலைப் போய்விட்டது. நண்பர்கள் என்னைக் கண்டு கொள்வதில்லை.

    அம்மா பாவம். எவ்வளவோ முயற்சி எடுக்கிறாள். நான் பழைய நிலைக்கு வர தினமும் கோவில், அர்ச்சனை, சதா வீட்டில் மந்திர ஓசை, யாகம் ஏன் மாந்திரீகம் கூட பார்த்து விட்டாள். பெரிய பெரிய டாக்டர்களிடமும் சென்றேன். என்னைச் சுற்றி மருந்துகள். இப்பொழுது 24 மணி நேரம் படுக்கையில் புரளுகிறேன்.

    கண்ணாடியில் என் முகம்……. எனக்கே சகிக்கவில்லை. கண்கள் சிவந்து கன்னங்கள் ஒட்டி, தோல் சுருங்கி…நடந்தால் தள்ளாட்டம். சில சமயம் ஆள் மாறாட்டமாகத் தெரிகிறது. இதற்கு காரணம் நீதான். நீயேதான். உன்னை விட்டு விலகியதற்கு நீ கொடுக்கும் தண்டனை. கொஞ்சம் கொஞ்சமாக கொல்வதற்குப் பதில் ஒரே அடியாக கொன்று விடு.

    ஐய்யோ.. நான் படும் அவஸ்தையைப் பார். எங்கே போய் விட்டாய். உன்னை எங்கே போய் தேடுவது. என் ஆஸ்தி பூராவும் செலவு செய்தால்கூட உன்னைக் கண்டு பிடித்துக் கொடுக்க முடியாது போல் இருக்கிறதே…

    டாக்டர்கள், நண்பர்கள், உறவினர்கள் கூறுவது.. நான் படும் அவஸ்தைக்கு உன் பிரிவே காரணம். எனக்கும் புரிகிறது. ஆனால் உனக்குப் புரிய வில்லையே. அம்மாவின் மடிதான் சொர்க்கம் என்பார்கள். ஆனால் நீ இல்லாததால் அது கூட முள்ளாய்த் தெரிகிறது இப்பொழுது.

    கெஞ்சிக் கேட்கிறேன். வந்து விடு.

    அழகான எழுத்தில் உறக்கத்தின் பெருமையை வடித்த நந்திதா அவர்கள் இந்த வார வல்லமையாளராக வல்லமை குழுவினர் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: ஞா. கலையரசியின் –

    1971 ஆம் ஆண்டில் குளோரியா ஸ்டீனெம் (Gloria Steinem) என்பவர் தாம் மிஸ் இதழில் முதன்முதலில் இச்சொற்களைப் பயன்படுத்தினார் என்றும் 1984 ல் கே பிரியான்ட் (Gay Bryant) என்பவர் தாம், ஓர் இண்டர்வியூவில் இவ்வாறு சொன்னார் என்றும்,இணையத்தில் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

    கண்ணாடிக் கூரை என்றால் என்ன?

    பெரிய வணிக நிறுவனங்களிலும், கம்பெனிகளிலும் மிக உயர்ந்த பதவிகளுக்கான ஏணியில் ஓரளவுக்குப் மேல் ஆண்களுக்கிணையாக பெண்களால் ஏற முடியாமல், தடுக்கும் நிலையைத் தான் கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிக் கூரையாக உருவகப்படுத்துகிறார்கள்.

    Share
  • புன்னகையை விற்பவளின் கதை

    திலினி தயானந்த

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

    பளபளக்கும் விழிகள், பூக்கும் இதழ்கள் என்பன மகிழ்ச்சி நிரம்பி வழியும் ஒரு வாழ்க்கையின் அறிகுறி. உண்மைதான், நான் இன்று எல்லோர் முன்னிலையிலும் புன்னகைக்கிறேன். இவ்வுலகில் வாழும் ஏனைய எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினைகள் எதுவுமே எனக்கு இல்லாதது போல பூரிப்புடன் உரையாடுகிறேன். உண்மையில் இன்னுமொருவர் முன்னிலையில் எனது விழிகளில் கண்ணீரைத் தேக்கி வைக்க எனக்கு உரிமையில்லை. உங்களைப் போலவே நானும் துயருருவதை சொல்வதற்கும் இயலவில்லை. புன்னகையால் துயரக் கண்ணீரை மறைத்தபடி, ஒப்பனைகளால் பிரச்சினைகளை மூடி, இந் நிறுவனத்துக்கு வரும் உங்களை வரவேற்கிறேன்.

    இரு விழிகளிலும் மையிட்டு விழிநீரை மறைத்த போதிலும், இதழ்களுக்குச் சாயமிட்டு மெருகூட்டிய போதிலும், ஆத்மாவை இரு கைகளிலேந்தி புன்னகையால் உங்களை வரவேற்ற போதிலும், இப் புன்னகையால் மூடப்பட்டிருக்கும் எனது வாழ்க்கையானது முட்கள் நிறைந்ததென எவ்வாறு உரைப்பேன்? தேவதையொருத்தியாக நீங்கள் என்னைப் பார்ப்பீர்கள் எனினும் நான் ஒரு பொம்மையல்ல. இந் நிறுவனத்துக்குள் நுழையும் கணம்தொட்டு உங்களுக்கு காணிக்கையாக்கும் புன்னகைகளுக்கு ஊதியம் கிடைக்கிறதெனக்கு. வாய் நிறைய ‘வணக்கம்’ சொல்லி உங்களை வரவேற்று பணப்பையின் சுமைக்கேற்ப கொடுக்கல் வாங்கல்களை நிகழ்த்தும் நீங்களும் நானும் அறியாமல் எங்களை விற்கும் நடைமுறையிது. தலைமை அதிகாரியின் மனநிலையை சாந்தப்படுத்தவும் எனது புன்னகைதான் தேவைப்படுகிறது.

    அதனை விருப்பத்துடன்தான் செய்கிறேனா என்பதை யாரும் அறிய மாட்டார்கள். அழகாகப் புன்னகைத்தபடியே இருந்த போதிலும் அப் புன்னகைக்குள் கண்ணீரும் வெளியே குதித்திடவென அலைபாய்கிறது. இச் சமூகத்தில் மிகவும் கௌரவமாக மதிக்கப்படும் ஒரு தொழிலை நான் செய்கிறேன். எனினும் சிலர் இதனை மோசமான கோணத்தில் பார்க்கிறார்கள். நிறுவனத்துக்குள் பிரவேசிக்கும் தலைவாசலிலிருந்து புன்னகையை விற்பது உண்மைதான். உங்களை எமது நிறுவனம் பக்கம் ஈர்க்க நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதுதான் எனது தொழில். இலகுவானதும் நிம்மதி தரக்கூடியதுமான தொழிலென நீங்கள் எண்ணிய போதிலும், இது உண்மையில் இலகுவானதா என்ன? புன்னகைக்கக் காசு செலவழியாது என ஒரு பேச்சுக்குச் சொல்வார்கள். எனினும் நான் புன்னகைக்க எனக்கு பணம் கொடுக்கப்படுகிறது. நான் புன்னகைத்தால் மாத்திரமே எனது நிலைப்பாடு உறுதியாகிறது. வாழ்க்கையை வாழ்ந்து செல்லவே இன்று நான் புன்னகைக்கிறேன்.

    சில மாதர்கள், தங்களது காரியங்களை ஆற்றிக் கொள்ளவென கனவான்களின் கைகளில் தொங்கிப் புன்னகைக்கிறார்கள். எனினும் எனக்குக் கவலையில்லை. நான் எனது தொழிலைச் செய்கிறேன். பொருளாதாரத்தை வளம் மிக்கதாக்கும் செயன்முறை இது. யார் எவ்விதத்தில் அதனை நோக்கிய போதும், மாதக் கடைசியில் கிடைக்கப் போகும் ஊதியத்தைப் பற்றியே நான் சிந்திக்கிறேன். அதற்காகத்தான் நான் புன்னகைக்கிறேன்.

    Share
  • வேஷஙகள்!…

    விமலா ரமணி

    காயத்திரி வாசலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.வாசலில் ஒரு விநோதப் பிச்சை .ராமர் வேடம் போட்டுக் கொண்டு தலையில் அட்டை கிரீடம் இடையில் அட்டை வாள் பளப்பளா உடை ஜரிகை பஞ்சக்கச்சம் ….முகமெல்லாம் நீல நிறப்பூச்சு ராமர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.
    வீதியில் போகிற சிலர் அந்த ராமனை வணங்கினார்கள். சிலர் ராமர் நீட்டிய கரத்தில் காசு போட்டார்கள்.
    அஞசன வண்ணன்,அயோத்தி ராமன் பாவம் அனாதையாய் நடுவீதியில் அல்லல் பட்டுக் கொண்டிருந்தார்.
    வில் ஏந்திய கரத்தில் பிச்சை பாத்திரம்,அபய ஹஸ்த முத்திரைக்குப் பதிலாக யாசிக்கும் முத்திரை….. கொடுமை…..
    இவளுக்குக் கோபமும் வேதனையும் ஒருங்கே வந்தன.
    மனிதர்களின் கடவுள் உணர்வை மத நம்பிக்கைகளை இப்படி தன் சுயநலத்திற்காகப் பயன் படுத்துவதா?பசி கொடியது தான். அதற்காகப் பரந்தாமனை அவமானப்படுத்துவதா?
    கம்பீரமான யானையை காசு வாங்க வைத்தேர்ம்.பிச்சை எடுக்க வைத்தோம்.யானைக்கு மட்டும் தன் பலம் தெரிந்திருந்தால் இப்படி அடிமைப் பட்டுக் கிடக்குமா?
    கடவுள் படைப்பில் மனிதன் புத்திசாலி,அதனால் தான் அவன் கடவுளையே காயப்படுத்துகிறான்.
    ”காயத்திரி ”
    விசுவின் குரல் கோபமாக ஒலிக்கிறது.
    ”எங்கே போய்த் தொலைஞ்சே?எனக்கு ஆபீஸுக்கு லேட்டாச்சு
    என் டை எங்கே?ஷர்ட்டுக்கு இஸ்திரி போட்டாச்சா?”
    வரிசையாகக் கேள்விகள்.
    இவனும் ஒரு விதத்தில் அதிகார வர்க்கம் தர்ன்.
    பெண் பார்க்க வந்தபோது என்ன சொன்னான்?
    ”எனக்கு என் மனைவி சம்பாதித்துப் போட வேண்டாம். குடும்பத் தலைவியாய் இல்லத்தரசியாய் இருந்தால் போதும்.”
    பெண்களுக்கு ரொம்பச் சுலபமான மலர்க் கிரீடம்.
    இவள் அம்மா தான் மகிழ்ந்து போனாள்
    .‘மாப்பிள்ளைக்கு ரொம்ப நல்ல மனசு.உன் உழைப்பை அவர் விரும்பல்லை.உன்னோட அன்பு தான் அவர் கேட்கறார்.”
    அப்போதே மாப்பிள்ளையாக்கி குதூகலித்தவள் அவள் தாய்.
    ”நீ வேலைக்குப் போக வேண்டாம். வேலையை ரிசைன் பண்ணிடு”
    என்றான் விசு
    இது அன்பா அல்லது இவள் பலத்தை முறியடிக்கும் முயற்சியா?
    இது அதிக சுதந்ததிரமா அல்லது இவள் சிறகுகளைப் பிய்த்தெறியும் சாமர்த்தியமா?
    ”நாலு பேர் எதிரே நீ கைகட்டிச் சேவகம் பாக்கறது எனக்குப் பிடிக்கல்லை…..”
    காயத்திரிக்குச் சிரிப்பு வந்தது. இவனுக்கு மட்டும் பணி புரிந்தால் போதுமா?
    ஆனாலும் இவள் தன் கருத்துக்களைச் சொல்லவில்லை.
    பெண்களக்குக் கல்விச் சுதந்திரமும் பொருளாதாரச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் தேவை என்று நினைப்பவள் இவள்.
    ஒரு பெண்ணின் இந்த அடையாளங்களை அழிக்கக் கூடாது என்று நினைப்பவள் இவள்.
    தன் அடையாளங்களை இழந்து வெறும் மனைவியாக மட்டும் வாழ முடியுமா ? என்று தோன்றியது.
    வண்ண வண்ணச் சிறகுகுளை வைத்திருக்கும் பறவைக்குச் சிறகுகள் ஒரு அடையாளம்.
    தன் வண்ணச்சிறகுகளை இழந்தால் அது பறவையல்ல வெறும் புழு…
    இவள் பறவையா அல்லது புழுவா?
    வானத்தில் பறக்கிற வல்லூறுகளிடமிருந்து இவளைக் காப்பாற்றப் போகிற சிபிச் சக்கிரவர்த்தியா இவன்?
    அல்லது அந்தப் பறவையையே பிரியாணி போடுகிற பரோட்டா
    மாஸ்டரா?
    தன் எதிர்காலக் கணவரைப் பற்றி இப்படித் தவறாக நினைப்பது கூடாது என்று இவள் பேசாமல் இருந்தாள்
    ஆரம்பத்தில்.திருமணம் முடிந்து புகுந்த வீடு வந்தபோது எல்லாமே நன்றாகத் தான் இருந்தது. மாமியாரின் அன்பும் கணவனின் நேசமும் இதயத்திற்கு இதமளித்தது.
    ஆனாலும் ஏதோ ஒன்று இடறுகிற மாதிரி….
    உள்ளூராக இருப்பதால் தன் மகளைப் பார்க்க இவள் தாய் அவ்வப்போது வருவதுண்டு.
    ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு கொஞசம் கொஞ்மாக மங்கிய உணர்வு.
    ”வாங்க சம்பந்தியம்மா ”என்று ஆரம்பத்தில் அழைத்த இவள் மாமியார் குரல் நாளடைவில் அடைத்துப் போயிற்று.
    அது கூடப் பரவாயில்லை.அவள் தாயின் தலையைக் கண்டதும்
    ”ஆ… வந்துட்டா பெரிய புள்ளைப் பாசம்…அப்படி பாசமா இருந்தா
    பொண்ணை ஏன் கட்டிக் கொடுத்தாங்க?”
    மாமியார்க்காரியின் கிசு கிசுத்த குரல்…
    இவளால் சொல்லவும் முடியவில்லை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை…
    கரு சுமந்து உயிர் கொடுத்த தாயின் மனத்தை நோகச் செய்ய இவள் விரும்பவில்லை..
    ஒரே மகள் பாசம் கொட்டி வளர்த்தவள்,தனி மனுஷியாக இருந்து
    அத்தனை சங்கடங்களையும் சந்தித்தவள்.
    கணவனை இழந்தபின் புகுந்த வீட்டாரால் ஏமாற்றப் பட்டும் கூட அதைப் பற்றி கவலைப்படாமல் தன் தாய்மைக்குரிய பணியைச் செய்து முடித்தவள்.
    மாதந்தோறும் இவள் அலுவலகத்திலிருந்து வரும் போது தான் தாய்க்காக ஸ்வீட் வாங்கி வருவாள்.
    ”எதுக்கும்மா ஸ்வீட்?எனக்கு ஏற்கனவே ரத்தத்துலே சர்க்கரை இருக்கு.உன்னைப் பார்த்துட்டே இருந்தாப் போதும் வேற எதுவும்
    வேண்டாம்.”
    கன்றைத் தொடர்ந்து செல்லும் தாய்ப்பசு அவள்.
    அதனால் தான் தன் மகளை அடிக்கடி பார்க்க வேண்டும் என்பதற்காக உள்ளூரிலேயே திருமணம் செய்து கொடுத்தவள்.
    எட்ட இருந்தாலும் கிட்ட இருந்தாலும் உறவுகள் என்பது உடல்களின் வெளி அடையாளம் மட்டும் அல்ல..
    அது உணர்வுகளின் சங்கமம்.
    இப்படிப் பட்ட தாயைப் பார்த்து இனி என்னைப் பார்க்க வராதே என்று கூற முயுமா என்ன?
    இவள் அலுவலகம் போனால் போகிற வழியில் தன் தாயைச் சந்தித்துவிட்டு வந்துவிட முடியும்…கோவிலுக்குப் போகிறேன் என்று கிளம்பினால் கூடவே மாமியாரும் கிளம்பி விடுகிறாள்.
    இவளுக்காக பூ பழம் வெற்றிலை பலகாரம் என்று பொருட்களைச் சுமக்க மாட்டாமல் சுமந்து வரும் தன் தாயைப் பார்க்க இவளுக்குப் பரிதாபமாக இருக்கும்.
    இந்தப் பொருட்களின் சுமையைவிட அவள் இதயம் சுமக்கும்
    சுமையை இவள் அறிவாள்.
    அது பாசச் சுமை அது இவளுக்கு மட்டுமே தெரியும்.
    அன்று…………
    வாசலைப் பார்ததபடி இவள் அமர்ந்ததிருந்த போது,,,,,
    அந்த ராமர் வேடப் பிச்சைக்காரன் வந்தான்.
    ”இந்தாப்பா” இவள் அவனைக் கூப்பிட்டாள்.
    ராமர் பிச்சை கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் ஓடி வந்தார்.
    ’குகனோடு ஐவரானோம் குன்று சூழ்வான் மகனோடு அறுவரானோம் ’ என்று அனைவரையும் தன் சகோதரனாக அணைத்துக் கொண்ட அந்த அயோத்தி ராமன்,
    இந்தா விபீஷணா லங்காபுரி ராஜ்யம் என்று ராஜ்யத்தைக் கொடுத்த ராமன்
    இன்று கை நீட்டி பிச்சை கேட்க வந்திருக்கிறான்.
    ”இந்தாப்பா ஐம்பது ரூபாய் இனிமே இப்படி சாமி வேஷம் போட்டுட்டு பிச்சை எடுக்காதே. நீ உன்னையும் தாழ்த்திட்டுக் கடவுளையும் கேவலப்படுததாதே.”
    ”என்னம்மா பண்றது வயத்துப் பிழைப்பு..”
    ”பிழைப்புன்னா உழைக்கணும் பிச்சை எடுக்கக் கூடாது…”
    ”நான் உழைக்கத தயார்..யார் வேலை கொடுப்பாங்க?
    ”கொடுப்பாங்க. முதல்லே உன் மேலே ஒரு நம்பிக்கையை நீ உருவாக்கணும்..’
    ” அம்மா நான் பத்தாவது வரை படிச்சிருக்கேன்.என்னை மேலே படிக்க வைக்க எங்க ஆத்தாவால முடியல்லை அப்பன் ஒரு குடிகாரன்.எங்கம்மாவை குடிக்கக் காசு கேப்பான். தரலேன்னா அடிப்பான்.அம்மா சம்பாரிச்சுட்டு வந்த பணத்தைத் திருடுவான்.எங்கம்மா அவனோட சித்திரவதை தாங்காம ஒரு நாள் அரளிவிதையை அரைச்சு குடிச்சு செத்துட்டா…எங்கப்பன் இன்னொருத்தியைக் கட்டிட்டு அவளோட இருக்கான்.எத்தனையோ இடத்துக்கு வேலை தேடிப் போனேன் கிடைக்கல்லை…எங்கம்மா எப்பவுமே சாமி சாமின்னு கோவில் கோவிலா சுத்தும்…சாமியை நம்பு அவர் காப்பாத்துவார்னு சொல்லும்…அதனாலே அதனாலே நானே நானே சாமி ஆயிட்டேன்.இந்த ராமர் வேசம் கட்டறப்போ நான் என்னை ஒரு குடிகாரனோட மகனா நினைச்சுக்கறதில்லை…ஒரு ராசாதி ராசாவாத் தான் நினைச்சுக்கறேன்.இது தான் என் பலம்.இந்த வேசம் .சும்மா..இதுக்குள்ளாற நிசமா ஒரு பக்தன் இருக்கான் தாயி…நான் கடவுளைக் கேவலப்படுத்தல்லை…என்னைக் கேவலமான நிலைக்குக் கொண்டு போன அந்தக் கடவுளை நான் எப்பவும் நினைச்சுட்டே இருக்கேன்.கடவுள் கிட்டே இந்த வேசத்தோட பேசிட்டுத் தான் இருக்கேன்…”
    காயத்திரி அவனை வியப்புடன் பார்த்தாள்.
    இவன் ஒரு வேடதாரி தான்.ஆனால் இவனுள் இருக்கும் அந்த மனிதனை அவள் இப்போது தான் பார்க்கிறாள்.
    ”சரி..ரெண்டு நாள் கழிச்சு வா..உனக்கு வேலைக்கு ஒரு ஏற்பாடு செய்யறேன்.”
    அவனை அனுப்பிவிட்டு உள்ளே வந்த போது மாமியார் பிலுபிலுவென்று இவளைப் பிடித்துக் கொண்டாள்.
    ”கண்ட கண்ட திருடனையெல்லாம் வீட்டுக்குள்ளே கூப்பிட்டு வேலை தரப் போறியா?முதல்லே அவன் வருவான்.அப்பறம் அவனோட கூட்டாளி வருவான்.எல்லாரையும் கொன்னுட்டு
    பணத்தை எல்லாம் திருடிட்டுப் போவான்.”
    நிறைய திகில் சீரியல் எல்லாம் பார்ப்பவள். அவள் சிந்தனை அப்படித் தான் இருக்கும்
    ’‘அத்தை” என இவள் சொல்ல ஆரம்பிப்பதற்குள் போன் ஒலித்தது. இவள் ரிசீவரை எடுத்தர்ள்.
    ”ஆஸ்பத்திரியிலிருந்து பேசறோம்…’
    பகீர் என்றது..ஒரு வாரமாக அம்மா இவளைப் பார்க்க வரவில்லை.ஒரு வேளை….?
    இவள் நினைத்தது சரிதான்.அவள் அம்மா வீட்டில் மயங்கி விழுந்திருக்கிறாள்.பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துவிட்டு இவளின் தொலைபேசி எண்ணைத் தந்திருககிறார்கள்.
    இவள் ஓடினாள்.
    ஒரு வாரம்….
    மரியாதைக்குக கூட விசுவோ அவன் தாயோ அவளை வந்து பார்க்கவில்லை…போன் செய்து விசாரிக்கவில்லை..
    தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போன கோபம் விசுவிற்கு இருக்கும்.

    அன்று….?
    விசு செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தான்.
    காயத்திரி போய் இரு வாரங்களுக்கு மேலாகிவிட்டது
    இவன் தாயின் புலம்பல் வேறு..இவன் ஏக டென்ஷனில் இருந்த நேரம்….
    அப்போது வாசலில்….”ஐயா” என்ற குரல்
    யாரோ ஒருவன் கையில் ஒரு பையுடன் நின்று கொண்டிருந்தான்.
    ”யாருப்பா நீ?”
    ”என் பேர் மாரியப்பனுங்க,,அம்மா எனக்கு வேலை தரதா சொன்னாங்க அம்மாவைக் காணவே இல்லீங்களே…”
    ”டேய் விசு அவன் ஒரு பிச்சைக்காரன் ..வேஷம் கட்டறவன். ஜாக்கிரதை”
    ஜன்னல் வழியே அம்மா கிசுகிசுத்தாள்.
    போன் கூப்பிட்டது.
    இவன் எழுந்து உள்ளே போனான்.
    காயத்திரி தான் பேசினாள்.
    ”நான் காயத்தரி”
    ”உம் தெரியுது..இங்கே திரும்பி வர உத்தேசம் இல்லையா?”
    சற்று நேரம் போன் மௌனித்தது.
    ”அம்மா பிழைச்சு எழுந்ததே மறு பிழைப்பு..”
    ”வயசானா ஏதாவது அப்படித் தான் ஆகும்..அதுக்காக…”
    ”அதுக்காகத் தான் நான் அம்மா கூடவே இருக்கணும்..”
    ”உங்கம்மா கோமாவிலே ஆயுசு பூராவும் இருந்தா நீ இங்கே வரவே மாட்டியா?”
    ”உங்க வாழ்த்துக்கு நன்றி.உங்கம்மா எப்படி இருக்கான்னு ஒரு மனிதாபிமானக் கேள்வி இல்லை.ஆனா நான அங்கே வரது பத்தித் தான் உங்க கவலை..இல்லையா?”
    ”இங்கே குடும்பத்தைப் பாத்துக்கணும்,…அம்மா..”
    ”ஆ.. அது தான்..இங்கேயும் ஒரு குடும்பம் இருக்கு..இங்கேயும் ஒரு அம்மா இருக்காங்க…அம்மாவுக்கு டெஸ்ட் பண்ணினதுலே சோடியம் லெவல் ஏற்ற இறக்கமா இருக்கு அது கீழே இறங்கும் போது மயக்கம் வந்துடறது..ஒத்தர் பக்கத்திலேயே இருந்து பாத்துக்க வேண்டி இருக்கு,லெவல் சரியானா..”
    ”ஒரு நர்ஸைப் போடு நீ புறப்பட்டு வா”
    காயத்திரி சிரிக்கும் சப்தம் கேட்கிறது.
    ”உங்கம்மாவைக் கூட்டிட்டு இங்கே வான்னு சொல்ல உங்களாலே முடியல்லை..நர்ஸைப் போடச் சொல்றீங்க..நான் இல்லேன்னர் என்ன வேற யாரையாவது கூட்டிட்டு வந்து குடும்பத்தைப் பாத்துக்கச் சொல்லுங்களேன்..”
    ”ஏய் ரொம்ப அதிகமாப் பேசறே,…”
    ’‘இல்லீங்க இப்பத்ததான் என்னை உணர்ந்து பேசறேன்.என் பலம் தெரிஞசு பேசறேன்.நான் உங்களுக்காகப் போட்ட மனைவிங்கிற அரிதாரத்தை அழிச்சுட்டுப் பேசறேன்.நான் மனைவி மட்டும் இல்லை ஒரு மகளும் கூட..மாறி வரும் இந்த வடிவங்கள்லே என் கடமையைத் தெரிஞசு பேசறேன்.பெண்மைங்கிற என் சுய அடையாளத்தைப் புரிஞசுட்டுப் பேசறேன்.என்னோட அம்மாவுக்கு முற்றிலும் குணமாற வரை நான் இங்கே தான் இருப்பேன்..அதைச் சொல்லத் தான் கூப்பிட்டேன்.”
    விசு சிரித்தான்.
    ”பணத்துக்கு என்ன பண்ணப் போறே? எங்கிட்டடே தானே கை நீட்டணும்?”
    ”ராமர் வேஷம் போட்டுட்டுப் பிச்சை எடுக்கற ஒரு பிச்சைக் காரனுக்கு இருக்கிற ஆத்ம சிந்தனை கூட உங்களுக்கு இல்லாதது கஷ்டம்…நான் என் வேலையை ராஜீனாமா செய்யல்லை…நீண்ட கால விடுப்புத் தான் எடுத்தேன் நான் வேலையிலே சேர்ந்துட்டேன்.என்னைத் தேடி ஒரு பிச்சைக் காரன் வருவான்,அவனை இங்கே அனுப்பி வையுங்க.இல்லேனாக் கூடப் பரவாயில்லை..தெருத் தெருவா.
    அவன் வேஷம் கட்டிப் பிச்சை எடுக்கும் போது நான் அவனைப் பாத்துக்கறேன்….அவனைக் கண்டுபிடிக்கறது சுலபம்..”
    ”ஒரு பிச்சைக் காரனுக்குப் போய்..”
    ”ப்ளீஸ்,,அதிப் படிப்பில்லாத டப்பாவாலாக்களால் ஒரு சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி சரித்திரம் படைக்க முடியும் என்றால் இந்தப் பிச்சைக் காரனையும் சரித்திரம் படைக்க வைக்கலாம்..முடிஞசா எனக்காகக் காத்திருங்க..நீங்க போட்ட எந்த வேஷமும் சரியில்லை…மகன் கணவன்…எந்த வடிவமும் சரியில்லை,,,,இந்தப் போலி வேஷங்களைக் கலைச்சுட்டு ஒரு மனுஷனா வாழப் பாருங்க”
    ”போதும் உபதேசம் நீ என் ஒய்ப்,,தெரியுமா?”
    ’ஆமாம் தலை குனிந்து தாலி வாங்கினவள் த்ர்ன். ஆனால் நான் இப்போ தலை நிமிர்ந்துட்டேன்.. பை ”
    விசு பிரமித்து நிற்க ….. வாசலில்,…..?
    அந்தப் பிச்சைக்காரன் தன் பையிலிருந்து
    அட்டைக் கிரீடம் உடைவாள் ஜிகினா உடை என்று ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டிருக்கிறான்.

    Share
  • என் மனம் நிறைந்த மணிமொழிக்கு!…

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    என் மனம் நிறைந்த மணிமொழிக்கு,

    ஆச்சரியப்படாதே…நான் தான்…!

    உனது விழிகள் விரிவதை நானும் பார்க்கிறேன். கள்ளி….! மொதல்ல இதைப் படியேன்.

    இது மாதிரி ஒரு கடிதத்தை நீ என்கிட்டேர்ந்து எதிர்பார்த்திருக்கவே மாட்டேல்ல. அது தான் ‘நாம்’.

    மாறுதல் மட்டுமே சமயத்தில் மனசுல ஒரு புத்துணர்வைக் கொண்டு தரும்னு நான் தான் அடிக்கடி உன்கிட்ட சொல்லுவேனே. அதான்
    ‘ ஒரு கைபேசி கடிதமாய் கைக்குள் மாறியது’ . எப்பப்பாரு என் குரலைக் கேட்கிற உன் காதுக்கு இன்னிக்கி மட்டும் ரெஸ்ட்.

    இந்த லெட்டரை நீ ரசிச்சுப் படிச்சா கண்டிப்பா ஏதாவது ஒரு பரிசை அனுப்பி வை.. பின்னே…..’சும்மா கிடைக்குமா சந்தோஷம் ?’ உன்னோட இந்த நேரம் கண்டிப்பா உன்னை கொஞ்ச நிமிஷம் நாம பழகின அந்தக் நாட்களுக்கு ‘விசா இல்லாமே இலவசமா’ கூட்டீட்டு போகுமே. அதுக்கு தான் நான் கேட்கிறேன் பரிசு.

    இதுக்கெல்லாமா பரிசுன்னு முணுமுணுக்காத. ! கஞ்சூஸ்….! இணையத்துல போயி பாரு…இதுக்கெல்லாம் தான் ஆயிரம் ரூபாயைப் பரிசா அள்ளித் தராங்களாம்.

    அதுக்குன்னு இந்த லெட்டரை அப்படியே ஜெராக்ஸ் பண்ணி அவுங்களுக்கு அனுப்பி வெச்சுடாதே . இது நமக்கே நமக்கு மட்டும்.
    பரிசுப் பணத்தை விட பெரிசு…. இல்லையா? நமது நட்பு.

    எனக்குப் பரிசெல்லாம் ஒண்ணும் வேண்டாம் மணிமொழி….இப்போ நீ மகிழ்வா இருந்தா அதுவே போதும். என்னைப் பத்தி உனக்குத் தெரியாதா என்ன?

    ம்ம்ம்…தலைய தலைய ஆட்டு…! ஆமாம்….ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையைப் பத்திப் பேசிப் பேசி நாமளும் தான் நாளைத் தள்ளறோம். இன்னிக்காவது எந்தப் பிரச்சனையைப் பத்தியும் நினைக்காமே இப்படியே சந்தோஷமா நீயும் நானுமா கொஞ்ச நேரம் ‘போவோமா…..ஊர்கோலம்…..’ ன்னு ஊர் சுத்தலாம் வா..மணிமொழி.

    ஹையா…நான் ரெடி…!

    நீ ரெடியா….. அப்ப ஜூட்…..கதவைச் சார்த்து…நல்ல திண்டுக்கல் பூட்டாப் போட்டு வீட்டைப் பூட்டிட்டு ‘சிறகை’ எடுத்து மாட்டு.. !

    ‘இரு மனம் அன்பாலே ஒன்றானது
    நேசத்திலே உள்ளம் பண்பாடுது

    பறவைகள் போலே பறந்திடுவோம்
    மகிழ்வுடன் வாழ்வோம் எந்நாளுமே

    இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே
    இதோ….இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்….

    அதோ..அதோ..என் பாட்டில் ஒரே ராகம்…
    கொடி நீ கிளை நான்

    மலர் போல் வாழ்வோம்
    துணை…நீ…..ஈ ஈ ஈ ஈ !

    பார்த்தியா….பார்த்தியா…..மணிமொழி…..நமக்காகவே ரேடியோல கூட நம்ம பாட்டையே போடறான் கேளு…!

    ஏய்…..இந்த ஆலமரம் எப்பிடி சூப்பரா இருக்கு பாரேன் ஜெயா …..! கொஞ்ச நேரம் இங்கயே உட்கார்லாம்டி.

    அந்த விழுது பாவம்டி…பச்சைப் புள்ளயாட்டம்….அதுல போயி இந்தத் தொங்கு தொங்குறே..நம்ம சைஸுக்கெல்லாம் இந்த ஆசை வரலாமா…?.விழுதுகள் கையை வாரி விட்டா, நமக்கு இடுப்பு எலும்பு நகுந்து போகும்…ஜாக்கிரதை…!

    கனவு தானே…..சும்மா நீ கண்ணை மூடு…! கண்டுக்காத…!
    “ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
    நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா

    தோழமை உறவுக்கு ஈடேதம்மா
    நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா”………

    என்னமா….பாடல் வரி எழுதிருக்கார்ல….சரி இங்கயே இப்படி உட்காரலாம்.

    சரி…கொஞ்ச நேரம் நீ பேசாமே இருப்பியாம்….நான் மட்டும் கடிதத்தைப் படிப்பேனாம் …முடிஞ்சா நீ “ம்ம்ம்..” கொட்டு….! இல்லாட்டியும் பரவால்ல.
    ஆனாத் தூங்கிடாதடி….என்னாலெல்லாம் உன்னைத் தூக்கிட்டுப் போக முடியாது. தாஜ்மகால் சைஸ்ஸுக்கு இருக்கே. பார்க்குறவுங்க என்ன சொல்லுவாங்க தெரியுமா?

    மிலிட்டரி டிரக்குல தாஜ்மகால் திருட்டுப் போகுதுன்னு சொல்லுவாங்க…! ஹ் ஹ் ஹஹஹா ..!

    சரி..நீ சிரிச்சது போதும்..இடி சத்தமா…கேக்குது .மழை வரும் போலிருக்கே…..? நீ .சீக்கிரமா மேல படிடி. பையன் காலேஜுலேர்ந்து வர்ற நேரம்.

    போச்சுடா……ஆரம்பிச்சுட்டியா…! அந்த இடத்தை கொஞ்சம் விட்டுட்டு வரமாட்டியே….! இரு..! க் க்க்க்க் கும்..!

    மணிமொழி…இதைக் கேளேன்…!

    நாம் சந்தித்துக் கொண்டு நான்கு வருடங்கள் கழிந்து விட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. எல்லாம் நேற்று நடந்தது போலிருக்கிறது. ஏதோ நேற்று தான் இரயில் ஏறி “காசி யாத்திரைக்கு” கூட்டத்தோட கூட்டமாப் புறப்பட்டது போலிருக்கிறது எனக்கு. நான்கு வருடங்களுக்கு முன்பு மணிமொழி என்ற உந்தன் பெயர் கூட எனக்கு அந்நியம் தான். ஆனால் இன்று அப்படியா ….? கால்கள் இல்லாமல் ஓடும் காலத்துடன் யாரும் போட்டி போட முடியாது. ஆறு ஆண்டுகளை ஓரந்தள்ளி ஓடிக் கொண்டிருக்கிறது காலம். இருப்பினும்,என் மனம் மட்டும் ஐம்பது வயதை விழுங்கி வெறும் நாலு வயதாகப் பொய்க் கணக்கு சொல்லிச் சமாளிக்கிறது தெரியுமா உனக்கு?

    ஹி ஹி ஹி ஹி ஹி ஹி …..!

    சிரிக்காதே. அது தான் நிஜம்.

    நாம் சந்தித்ததும் பிரிந்ததும் இரயிலில் தான். இடைப்பட்ட பதினைந்தே நாட்களில்,’ஆன்மீக சுற்றுலா’ என்று எண்ணிக் கொண்டு நூறு பேர்களில் ஒருத்தியாக கலந்து கொண்ட நாம் மட்டும் நம்மில் வளர்த்துக் கொண்ட நட்பு தான் நாம் வாழ்ந்த காலங்களுக்கு ஈடானது. இல்லையா?

    “ஓடுது ரயில் பாதை மனம் போலவே
    பாடுது குயில் அங்கே தினம் போலவே
    மா மரம் பூ பூத்து விளையாடுது
    காடெங்கும் புது வாசம் பரந்தோடுது
    பார்த்தது எல்லாம் பரவசம் ஆகும்
    புதுமைகள் காண்போம் என்னாளுமே
    இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே”

    ஷ்….ஷ்….ஷ்….! கொஞ்சம். லெட்டரைப் படிக்க விடேன்.

    அன்று,இரயிலில் உனது ஊர் வந்துவிடும் அவசரத்தில் எனது கைகளை இறுக்கிப் பற்றிய வண்ணம் ….”இன்னும் இரண்டு நிமிடங்களில் நான் ‘கடலூரில் ‘இறங்கிடுவேன்…நீ உன் வீட்டுக்குப் போனதும் என்னை மறந்துடாதே….நினைவு வெச்சுக்கோ ஜெயா..என்ன..இந்த காசியாத்திரை பயணத்துல உனது நட்பும் பாசமும் தான் இறைவன் தந்தது “இறைவன் இதயங்களை இணைப்பதில் இணையற்றவன்…” நீ கடைசியாகச் சொல்லிச் சென்ற வாக்கியம் இன்னும் முற்றுப்புள்ளி இன்றி உனது அடுத்த வாக்கியத்திற்காக காத்திருக்கிறது மணிமொழி.

    ‘திருப்பாதிரிபுலியூர்” மஞ்சள் நிறத்தில் கறுப்பு வண்ண எழுத்துக்கள் என் கண்களை மறைத்தது. நீ இரயிலை விட்டு இறங்கியதும் உன் கலங்கிய கண்கள் என்னைப் பார்த்துத் திரும்பவும், உனது குழந்தைகளும் கணவரும் ஓடி வந்து உன்னைக் கட்டிக் கொண்டதும், அதைப் பார்த்த என் மனம் ஆனந்தம் அடைந்ததும், ஏதோ நினைவுக்கு வந்து மறந்ததைச் சொல்ல வந்தவளாக நீ திரும்பும்போது தண்டவாளத்தை விட்டு ஊர்ந்து வேகம் பிடித்தது ரயில்..என்ன சொல்ல நினைத்து திரும்பியிருப்பாள்? . விடை தெரியாத கேள்விகள் என்னுள் இன்றுவரையில்.

    நீ இறங்கிச் சென்றபின், நீ அமர்ந்த இருக்கை காலியாகி எனக்குள் எதையோ உணர்த்தியது. முகத்தைத் ஜன்னல் பக்கமாகத் திருப்பிக் கொண்டேன். அருகில் இருந்த சக பயணி அம்மையார் என் கவனத்தைக் கலைத்து , நீங்க ரெண்டு பேரும் அக்கா தங்கச்சிங்க இல்லையா…..? நான் அப்படில்ல நினைச்சேன்..அவுங்க அங்கிட்டு எறங்கிப் போறாங்க….நீங்க எங்கிட்டு போகணும் …? என்று கேட்கவும், ….எனக்குள் பெருமை பொங்கியது.

    நாங்க இதே இரயிலில் பதினைந்து நாட்கள் முன்பு காசி யாத்திரைக்காக போனோம்.. அவங்க ரயில் சினேகிதி தான் . ஆனால் பதினைந்து நாட்கள் கூடவே வந்தவங்க…என்றேன். மனம் ஏனோ துணுக்குற்றது.

    கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொள்ளும் போதெல்லாம் என்னால் உன்னை நினைக்காமல் இருக்க முடியாது. நீயும் சொல்லிக் கொள்வாயே….அதெப்படி….பிரம்மன் ஒரே அச்சை பயன்படுத்தி .என்னையும் உன்னையும் அடுத்தடுத்துப் படைச்சாராடி….?
    என்று கேட்டு என் பதிலுக்காக ஆவலாகக் காத்திருப்பாய்.

    பதில் சொல்லத் தெரியாத நானும், அதை விட அதிசயம்…..உன்னையும் என்னையும் இப்படி இரயில் சினேகிதமாக்கி திருவிளையாடல் பண்றாரே அதை என்னன்னு சொல்வது? என்பேன்.

    நாம் சிரித்துக் கொள்வோம். வாழ்வின் அதிசயத்திற்கு அளவேயில்லை மணிமொழி என்பேன். நீயும் “தலையை ஆட்டி ஆமாமாமாம்’ என்று ஆமோதிப்பாய்.

    இன்னும் சிதம்பரம் சென்று சேர ஒரு மணி நேரம் இருக்கும். கண்கள் ஜன்னலின் வழியாக வெளியே நோக்கியது. பூமி தனது பச்சைப் பட்டுப் புடவையை வெய்யிலில் காய வைத்திருப்பது போல பசுமை கண்களைத் தாலாட்டியது. இளந்தென்றல் முகத்தைத் தடவிச் சென்றது. கனத்த மனம் இலவம் பஞ்சானது..

    ஆச்சு…..இன்னியோடு யாத்திரை முடிந்து வீட்டுக்குச் சென்று பழையபடி அதே..சமையல் பாத்திரத்தைக் கையிலெடுக்க வேண்டியது தான்…நானும் வீட்டைக் கூட்டிக் கழித்துப் பெருக்கி வகுத்து விடை தெரியாத வீட்டுக் கணக்கைப் போட்டுப் போட்டு அழிக்க வேண்டும். இத்தனை நாட்கள் கூடவே நடந்து வந்த உனக்கும் அங்கே உன் வீட்டில் அதே நிலை தான். எனக்கும் தெரியும்..

    ஆனால் என்ன, ஒவ்வொரு நாளும் நாம் நினைத்து நினைத்து புளங்காகிதம் அடைய இந்தப் பதினைந்து நாட்களில் எத்தனை விஷயங்கள் விஸ்வரூபமாய்….வாழ்கையை, உயிரை, அன்பை பாசத்தை, வாழ வேண்டும் என்ற வெறியை, உயிர் மீது மரியாதையை , மரண பயத்தை, நாம் அனுபவிக்கும் சுகமான வாழ்வை….ஏழ்மையை இயற்கையை,இயற்கையின் சீற்றத்தை, அதன் ஆளுமையை நமக்கு நாம் வாழும் உலகத்தில் மறு பகுதியை நம் கண் முன்னே அனுபவமாய் உணர்வு பூர்வமாக காண்பித்து புத்தி சொன்னது. இந்த அனுபவம் நமக்கு இந்த யாத்திரை சென்றிராவிட்டால் என்றைக்குமே கிடைத்திருக்காது.இல்லையா மணிமொழி.

    நடந்ததெல்லாம் கடந்து போய் பல வருடங்களானாலும் என்னுள் அந்த நினைவுகள் இன்று வரை அகலாமல் இருப்பதை நீ இந்தக் கடிதம் மூலம் படிக்கும் போது, எனது நினைவுப் படுகையுள் புகுந்திருக்கும் அத்தனை நிஜங்களும் உனக்குள்ளும் பதிவாகியிருக்கும் அல்லவா அதனால் தானோ என்னவோ உன்னைப் பற்றிய எண்ணம் வரும்போதெல்லாம் நாம் சேர்ந்து கடந்த அந்த நிழல் நாட்களும் நம்முடன் நினைவுகளாக மீண்டும் பயணிக்குமே என்பதால் இதையெல்லாம் இப்போது இங்கே எழுதுகிறேன்.

    எதிரெதிரே உட்கார்ந்திருந்தும் நாம் ஓரிரு முறைகள் மட்டும் பார்வைகள் பரிமாற்றத்துடன் ஒருவருக்கொருவர் சம்மந்தமே இல்லாமல் அமர்ந்திருந்தோம். அதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு தான் வருகிறது. நீ தான் முதலில் பேசினாய் “அந்த புத்தகத்தைத் தரீங்களா கொஞ்சம்..பார்த்துட்டு தரேன்” கொடுத்ததும் வாங்கிப் புரட்டிப் பார்த்துவிட்டு திருப்பி கொடுத்து விட்டாய்.

    ஏன்….? என் மௌனமான கேள்வி உனக்குக் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

    அந்தப் புத்தகத்தில் ஒன்றும் இல்லை….என்றாய்.

    என்ன எதிர்பார்க்கிறீங்க? என்றேன்.

    காசிக்குப் போறமே…ஏதாச்சும் தேவாரம்..திருவாசகம்…என்று அடுக்கியவளை….இந்தாங்க….தேவாரம்…! என்று என் கைப்பையிலிருந்து எடுத்துக் கொடுத்தேன்.

    சிரித்துக் கொண்டே வாங்கியவள்..உங்க பேரு ? என்றதும்….நமக்குள் பரஸ்பர பரிமாற்றம். கேள்வியும் பதிலுமாய் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள அந்த சில நொடிகள் போதுமானதாக இருந்ததே.

    ரயிலின் தாளஜதி காதோடு பேசிக் கொண்டே இருந்தது. எனது கண்கள் ஜன்னல் வெளியே தூரத்து மேகங்களை அளவெடுத்தது. திடீரென்று உனது கைபேசி பாட ஆரம்பித்தது.
    ‘யாரோ யாருக்குள் இங்கு யாரோ
    யார் என்று கண்டு யார் சொல்வாரோ

    கடல் கொண்ட மழை நீரை
    இனம் காண முடியாது

    உண்ணும் சோறு நூறாகும்
    ஒன்றுக்கொன்று வேறாகும்

    உப்பில்லாமல் என்னாகும்
    உப்பைப்போல
    நட்பை எண்ணுவோம்”
    நான் சிரித்ததை நீ பார்த்துவிட, என்னாச்சு? என்ற உனது கேள்விக்கு…கொஞ்ச நேரம் முன்னாடி ‘தேவாரம்’ கேட்டதை நினைச்சேன்….சிரிச்சேன். என்றேன்.

    ‘தேவாரம்’ படிச்சா இந்தப் பாட்டு கேட்கக் கூடாதாக்கும்…நீங்க போட்ட சட்டமா? என்று கூலாகக் நீ கேட்டதும்.
    அட….இது நன்னாருக்கே…..! என்ற நான்…ஆமாம்…நான் சட்டம் போட்டா நீ கேட்டுடப் போறியாக்கும்…என்றேன் உரிமையோடு.

    அதன் பின்பு நமக்குள் ஒரு புரிதலும் கூடவே நடந்ததை நமது பேச்சுவார்த்தைகள் பிரமாணம் செய்து கொண்டே வந்தது.

    இரயிலில் சள சள வென்று பலரும் பேசிக் கொண்டே வந்தார்கள். நீயும் நானும் மட்டும் பல வேளைகளில் ஒன்றும் பேசாமல்…! மௌனம் நம்மைச் சுற்றி வேடிக்கை பார்த்தது. இரவு ஓடிப் போனது. வாரணாசியில் சென்று நம்மை இறக்கி விட்ட இரயிலைத் தட்டி நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.

    நூறு பேர்களோடு இருந்தாலும் கூட…அதில் நாம் இருவர் மட்டும் தனியாகிப் போனோம். ‘மந்தைகளோடு சேராத ஆடுகளா நீங்க ரெண்டு பேரும்’ என்று நம் குழுமத் தலைவர் கேலி செய்ததும் நீ அவரைப் பிலு பிலு வெனப் பிடித்துக் கொண்டதும், இதோ இவ இருக்கா மாமா…ஹிந்தி தெரியுமாம்….பார்த்துப்பா…ச்சே..இங்கயும் நமக்கு சுதந்திரமே இல்லையா …என்றதும் அவர் ‘துண்டைக் காணோம்….ரகத்தில் ‘அம்மா…மணிமொழி, உங்க ரெண்டு பேர் வம்புக்கே நான் வரலை….பத்திரமா வந்து சேருங்க என்று சொல்லிவிட்டு நம்ம திசைக்கே கும்புடு போட்டுட்டுப் போனதை இப்போ நினைத்தால் கூட சிரிப்பு வருகிறது.

    நம்மைக் ஏன் என்று கேட்க ஆளில்லை என்ற தைரியத்தில் விடியும் முன்னமே கிளம்பி கங்கைக் கரைப் படித்துறைக்குச் சென்று அமர்ந்து கொண்டோம். உன் கைபேசியில் மெல்லிய புல்லாங்குழல் இசைக்க, மூடிய கண்களுக்குள் கிருஷ்ண பகவான் எங்கேயோ குழலூதுவது போல கற்பனை செய்ய வைத்தது. குளிர் காற்று மெல்ல வீச, இருள் விலக விலக கண்முன்னே பரந்து விரிந்த கங்கை மெல்ல மெல்ல கண்விழிப்பது போல அலையலையாய் ஒளிக்குள் சிக்கிக் கொள்ளும் இனிமையை கண்கள் இரண்டும் நிழற்படம் எடுத்துக் கொண்டது.
    ஆங்காங்கே படகுகள் ஆயத்தமாக நாமும் அந்த இளங்காலைப் பொழுதில் படகு சவாரி செய்தோமே…நினைத்தே பார்த்திராத திவ்ய தருணம் அது. அதிகாலை நேரத்தில் கங்கையில் படகு சவாரி நினைத்த போதேல்லாம் கிடைத்து விடுமா என்ன?

    எனக்கு மிகவும் பிடித்தமான
    “கங்கே……
    துடியில் உணரும் த்ரிபுட கேட்டு
    துயிலுணர்னு வா…..டி எண்டே…..
    நடன மண்டபம் துறந்து வா…..
    கங்கே…..கங்கே……!

    பாடகர் ஜேசுதாஸ் அவர்களின் மந்திரக் குரலில் வடக்குநாதன் படப்பாடலை மானசிகமாக மனதுக்குள் இசைத்து லயிக்கிறேன்..

    எத்தனை அருமை….எத்தனை இனிமை…என்று அமைதியை உள்வாங்கிக் கொள்ளும்போது தானே வாழ்வின் அர்த்தம் புரிகிறது.
    அரைமணிநேரப் படகு சவாரி அதுவும் இயற்கைச் சூழலோடு இனிமையான இசையோடு அன்றைய பொழுதின் ஊக்கபானம் நமக்கு.
    மெல்ல இறங்கி அப்படியே கங்கையில் முழுக்குப் போட்டுவிட்டு நாம் தங்கியிருந்த இடத்தை நோக்கி நடையைக் கட்டினோமே ஞாபகம் வருதா?

    காலையில் காசி விஸ்வநாதர் தரிசனம் என்று நம் எல்லோரையும் அழைத்துச் செல்ல, சின்ன சந்துகள், முட்டுச் சந்துகளை கடந்து தெருக்களைத் தாண்டி நடந்தே சென்றதும் ஒரே கால்வலி நாம இங்கேர்ந்து ஒரு சைக்கிள் ரிக்சா வெச்சுண்டு போயிடலாம் என்று சொன்னதும், இருவரும் ஒரு சைக்கிள் ரிக்சாவில் ஏறி ‘மந்திர் ஜானா ஹை ‘ என்று ஏறி உட்கார…அவனும் மெல்ல ரிக்சாவில் ஏறி உட்கார்ந்தவன் ‘அந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை ” எனும் ஸ்டைலில் மெல்ல ஓட்ட …..பொறுமை இழந்தவளாக “ஜல்தி ஜானா ஹை ….தோடா ஜல்தி சலோ..” என்று அவசரப்படுத்த…அவன் வேகமாக சந்து சந்தாகச் சுற்றிக் கொண்டு வந்து நம்மை இறக்கி விட்டு விட்டு “பீஸ் தேதோ….என்றான்.

    இருபது ரூபாயாம்…என்று கொடுத்துவிட்டு இறங்கினதும் அவன் ஏனோ தலை தப்பியது என்பது போல விருட்டென்று பறந்தான். பிறகு தான் தெரிந்தது நாம் இருவரும் எங்கு ஏறினோமோ அதே இடத்திலேயே வந்து இறங்கினோம் என்று. கண்முன்னே….சிறு சந்து..அதன் உள்ளே தான் கோயில்.என்ற விஷயம் புரிந்ததும் நம் இருவர் முகத்திலும் ஈயாடலை. அரைமணிநேரம் வேஸ்ட் என்று சொல்லி என்னை அடிக்க வந்தாயே….உன்னை நம்பினேன் பாரு…..ஹிந்தி தெரிஞ்சுமா உன்னை ஏமாத்தினான்…என்று நீ கேட்டதும். இல்ல பக்கத்தில நீ இருந்ததால தான் ஏமாத்தினான் என்று நானும் சால்ஜாப்பு சொல்லிக் கொண்டேன்.

    டீ …ஏமாத்துறாங்க…ஏமாந்துடாதே….ஜாக்கிரதை….இப்படிச் சொல்லிக் கொண்டே நாம் ஏமாந்த இடங்கள் தான் ஜாஸ்தி…!

    ஹரித்வாரில், பதஞ்சலி ராம்தேவ் பாபா ஆஷ்ரம் சென்று பார்த்துவிட்டு அங்கிருந்த கடையில் இரண்டு பாட்டிலைத் தூக்கிக் கொண்டு வரும் என்னைப் பார்த்து, அது என்ன என்று துளைத்தெடுத்தாய். உனக்கு மட்டும் கேட்கும் குரலில் “கோமியம்” என்றேனே..உடனே நீ அடிப்பாவி அதை ஏண்டி பணத்தைக் கொடுத்து வாங்கறே நம்ம ஊரு தெருவுலயே ஒரு நாளைக்கு ஓசிலயே ஒன்பது லிட்டர் பிடிச்சுக்கலாமேடி என்று நீ சொன்னதும் நம் அருகில் கூட இருந்த அத்தனை பேருமே சிரித்த சிரிப்பும் என் முகம் போன போக்கும் இன்னைக்கும் உனக்கு நினைவு இருக்கும் தானே?

    ரிஷிகேஷில் சென்று லக்ஷ்மன் ஜூலாவில் ஆடி ஆடி நடந்து சென்று அந்தக் கடைசியில் செருப்பைக் கழட்டி வைத்துவிட்டு பின்பு அதை அப்படியே மறந்து போய் திரும்பி வந்தபின் செருப்பின் நினைவு வர அந்தத் தொங்கு பாலத்தைப் பார்த்து மீண்டும் அது வரை சென்று வர பயந்து செருப்பையே நினைத்துக் கொண்டு வெறுங்காலில் ரிஷிகேஷ் முழுக்க நடக்க நடக்க…..”உனக்குப் புண்ணியந்தாண்டி …..” என்று நீ உசுப்பேத்தி விட்டு வேடிக்கை பார்க்க….எத்தனை மறக்க முடியாத நிகழ்ச்சியை நாம அனுபவிச்சிருக்கோம் இல்லையா மணிமொழி?

    நம்ம ரஜனிகாந்த் அவர்கள் வழக்கமாகத் தங்கும் அறையை நீ உனது கைபேசியில் படம் பிடித்துக் கொண்டு ஊருக்குப் போனதும் உனக்கொரு காப்பி தரேன்ன்னு சொல்லிவிட்டு இத்தனை வருஷமா நீ தரவேயில்லை…..என்று உன்னிடம் கேட்டுக் கொண்டே இருப்பேனே நினைவு இருக்கா…மொதல்ல ஒரு காப்பி போட்டு வை..! நரசுஸ் காப்பி இல்லடி….நன்னாக் காதுல வாங்கிக்கோ. ஃபோட்டோ காப்பி…அது..!

    ரிஷிகேஷ் மேலே சஹஸ்ராரம் என்ற ஒரு இடத்திற்குப் போனதையும், அங்கிருந்த நீர்வீழ்ச்சியைப் பார்த்து விட்டு அந்த ஸ்படிக நீரை பாட்டிலில் பிடித்துக் கொண்டு நாம் வருவதற்குள் நம்மை விட்டுவிட்டு பஸ் கிளம்பிவிட ரெண்டு பேரும் தனித்து விடப் பட்டு தவித்துப் போனோமே….அந்த சில நிமிடங்கள்…உனது கைபேசியில் சார்ஜ் தீர்ந்து விட, அந்தி மயங்கி இருள் சூழ, மழை கொட்டோ கொட்டுன்னு கொட்ட…நீ என்னை திட்டோ திட்டு திட்ட…நான் அழாத குறையா, ரஜனி ஸ்டைல்ல ‘கடவுளே…கடவுளே….கடவுளே….’ என்று படபடக்க…
    எப்படி வந்து சேர்ந்தோம் என்றே இன்னும் புரியவில்லை..எல்லாம் அந்த ஈசன் செயல் தான். என்ன சொல்ற? திரும்பி வந்து ஆளுயர ஸ்படிக இலிங்கத்துக்கு அந்த சஹஸ்ராரத்தில் பிடித்த நீரை விட்டு வழிபட்டதும் பட்ட துன்பம் சட்டென மறந்து போனதே….!

    பத்ரிநாத் பார்க்க கிளம்பியாச்சு. நூறு பேரும் இரண்டு சொகுசு பஸ்ஸில் பிரிந்து கல கலப்பாக ஏறி அமர்ந்ததும் ஒன்றன் பின் ஒன்றாக பஸ் கிளம்பியது. வெளியில் ஒரே மழை..குளிர்…அதிகமாக ரிஷ்கேஷில் மினெரல் வாட்டர் பிஸினெஸ் தான் இருந்தது . தண்ணீர் பாட்டில் ரெண்டு வாங்கிக் கொண்டோம்.அப்போது தெரியாது அந்தத் தண்ணீர் பாட்டிலின் எப்படி உதவும் என்பது..

    நான்கு மணிநேரம் இமயத்தின் மலையில் பஸ் வளைந்து நெளிந்து நம்மை இழுத்துக்கொண்டு செல்ல ஆரம்பித்தது. அதள பாதாளத்தில் கங்கை கரை புரண்டு ஓடுகிறாள். காசியில் பார்த்த அமைதியான கங்கை ஆற்றிற்கும், ஹரித்வாரில் பார்த்த கங்கை நதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத காட்டாற்று வெள்ளமாகக் கரை புரண்டு ஓடியது ரிஷிகேஷ் மலையில்.

    நம்மோடு வந்த ஒரு டாக்டர் அனைவரிடமும் சொல்லுகிறார்….”நான் இங்க ஒரு டாக்டர்…இந்த பஸ்ஸுல உங்களோட வரதுல உங்களுக்கெல்லாம் ஒரு சௌகரியம்…என்னன்னா…என்கிட்டே எல்லா விதமான மாத்திரைகளும், மருந்தும் இருக்கு…உங்க யாருக்காவது ஏதாவது ஒண்ணுன்னா உடனே என்கிட்டே சொல்லுங்கோ…” வாமிட் , தலை சுற்றல், மயக்கம்..என்று அடுக்கிக் கொண்டே போனார். கூடவே பெருமை பொங்கப் பார்த்தார் அவரது மனைவி.

    நல்லவேளையா….நம் பஸ்ஸில் ஒரு டாக்டர் இருக்கார் இல்லையா? என்று நிம்மதியானோம். இமயம்…….வானளாவ உயர்ந்த மலை..பல இடங்களில் மலையைப் பார்த்தால் பயமாகவே இருந்தது. மேலே ஏற ஏற…..காதை அடைத்துக் கொண்டோமே….திடீரென்று நம் பஸ்ஸின் முன்னே ஒரு பெரிய பாறாங்கல் பெருத்த ஒலியோடு வந்து விழுந்து வழிமறித்தது. ஊஊஊஊஒஈஈஈ..என்ற சத்தம் நாம் எல்லோருமே ஒரு கணம் பயந்து வீரிட்டோம் இல்லையா? அந்த பயம் இது வரை வந்ததில்லை. பஸ் அதே இடத்தில் சத்தியாகிரகம் செய்தது. பஸ் உள்ளிருந்து ஒவொருவராக இறங்கி எப்படியாவது அந்த பாறையை உருட்டி தள்ளி விடலாம் என்று பிரயத்தனம் செய்தார்களே..மழை வேறு விடாமல் பெய்தது. அடுத்தது வேற பாறை எதாச்சும் வந்து விழுமோ….? தலையில் பாறாங்கல்லைப் போட்டார் என்று சொல்லுவோமே….என்றெல்லாம் வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டிருந்தோம்.

    முப்பது பேர்களின் முயற்சியால் கூட அந்தப் பாறையை நகர்த்த முடியவில்லை. சிறிது நேரத்தில் ஒரு கிரேன் வந்து தனது இரும்புக் கையால் அலாக்காகத் தூக்கி அந்தப் பக்கமாக எறிந்ததே….பஸ் மீண்டும் விடாக் கண்டனாக மேலே கிளம்பியது. இன்னும் ஏழே கிலோமீட்டர் தூரம் தான். கௌரி குண்ட் வருவதற்கு. அப்பாடா என்று பெருமூச்சு விடும்போது…வண்டி இனிமேல் போகாது என்று சொல்லி நிறுத்தி விட்டானே.

    அத்தனை பேரின் என்னாச்சு? என்ற கோரஸான ஆவலும்….அதோ மலையிலிருந்து சரிவு…..விழுகிறது….அவன் சொன்ன இடத்தில் செக்கச் செவேல் என்று செம்மண் குழம்பு அருவியாக வழிந்து விழுந்து கொண்டிருந்தது. அதில் ஒரு டையர் ஏறினாலும் அவ்ளோ தானாம்….பஸ் வழுக்கிக் கொண்டு அதள பாதாளத்தில் விழுந்து விடுமாம். அவன் சொல்லிவிட்டு எல்லாரும் ஜன்னலை இழுத்து மூடிக்கங்க . இனிமேல் நாளைக்கு காலை தான் வண்டி திரும்பும்..மேற்கொண்டு போகாது. பத்ரியும் இல்லை கேதாரும் இல்லை…என்று சொல்லிவிட்டான்.

    அத்தனை மனங்களும் இருளில் மூழ்க பயத்தின் உச்சத்தில்…..மெல்ல மெல்ல சூழ்நிலையைப் புரிந்து கொள்ள எத்தனை சிரமப் பட்டோம் இல்லையா?

    நாம் ஏறிவந்த பஸ்ஸில் இருந்த ஒவ்வொருவரும் முதலில் சள சல வென்று பேசினார்கள்…பின்பு மெல்ல மெல்ல பேச்சு அடங்கியது…மௌனம்…..அமைதி….பயம்…..பல ஆயிரம் அடிகள் உயரத்தில் இமய மலை உச்சியில் ஒரே ஒரு பஸ் மட்டும் போகும் அளவுக்கு இருக்கும் இடத்தில் பஸ் நின்றுவிட, ஒரு பக்கம் உயர்ந்த மலை இந்தப் பக்கம் படு பாதாளம்….கீழே கரை புரண்டு ஓடும் நதி…எப்போ வேண்டுமானாலும் மேலிருந்து பாறை பெயர்ந்து பஸ் மீது விழலாம்…நிலச் சரிவு உண்டாகலாம்…..எதுவும் நடக்கலாம். உயிருக்கு உத்திரவாதம் இல்லை.

    முதல்லயே கைபேசி எல்லாம் உயிர் விட்டது. உண்மையின் சாரம் நமக்குப் புரிந்த போது பயம் பற்றிக் கொண்டதே….நீயும் நானும்…..
    கைகளைப் பற்றிக் கொண்டோம்….நான் என் குடும்பத்தையும், நீ உன் குடும்பத்தையும் மனசுக்குள் நினைக்க ஆரம்பித்தோம். இங்கெல்லாம் வந்திருக்கவே வேண்டாமோ…..என்று கூட முனுமுணுத்தோம் . அதற்குள் தானே அது நடந்தது..

    அந்த டாக்டரின் மனைவி வீல் என்று கத்திக் கதற ……அய்யய்யோ…..என்னாச்சுன்னா….என்று சொல்லி அழ ஆரம்பித்தாள் ….அவருக்கு உடல் முழுதும் வியர்த்து விட, மூச்சுத் திணறல் எடுக்க…..மயக்கம் வர..மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்ததன் அறிகுறி அனைத்தும் தெரிய வந்தது. அத்தனை பேருமே நடுங்கிப் போனோமே…உடனே விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்ல ஆரம்பித்தோம்….மறுபடியும் மறுபடியும் சொன்னோமே…அத்தனை பேரின் பெட்டிகளும் அடுத்த பஸ்ஸில் வர, நாம் மட்டும் இங்கே மாட்டிக் கொள்ள…அந்த மாமி..இவரோட மாத்திரைகள் எல்லாம் அந்த பஸ்ல மாட்டிண்டுடுத்து….இப்ப நான் என்ன செய்வேன்..? .என்று கதற, ஒரு வழியா அவரை அப்படியே பஸ்சுக்கு உள்ளயே தரையில் படுக்க வைத்து, நாம் கொண்டு போன தண்ணீரை அவர் மேல் தெளித்துக் குடிக்க வைத்து சிறிது நேரத்தில் அவர் மெல்லக் கண் விழித்தார்..அவருக்கு உயிர் வந்ததோ இல்லையே நமக்கெல்லாம் உயிர் வந்தது…இல்லையா…? ஆனாலும் ஒருத்தர் முகத்தில் சிரிப்புக்கான அறிகுறி கூட இல்லையே…..பின்னே…எப்படி? நம்ம உயிரே இங்க பெரிய கேள்விக்குறி மாதிரி இருக்கே…எப்படிச் சிரிக்கறது.

    மணிமொழி…..!

    ஜெயா….!

    நமது குரல்கள் மட்டுமே நம்மை இங்கு இருக்கிறோம் என்று அடையாளம் தெரிந்து கொள்வதற்கு…..!
    எங்கும் இருள் சூழ்ந்து விட்டது. மலை, மரங்கள்.வானம்,பள்ளம்,ஆறு,பஸ்…என்று எதுவுமே அடையாளம் இல்லாத ஒரே கும்மிருட்டு…அசுரக் காற்று பஸ்ஸை அசைத்துப் பார்த்தது…..! காற்றுத் தோற்றுப் போனதில் நமக்கு கொஞ்சம் சந்தோஷம். பசி…..தாகம்….பயம்……கவலை…என்னென்னவோ கற்பனைகள், சிந்தனைகள்…..இன்றோடு இப்படம் கடைசிடி……! என்று சொன்னதற்கு…..அத்தனை பேரிடமும் நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டேன். நினைவிருக்கா…..?

    ஐயோ….மணிமொழி…..வாழ்க்கையில் இந்த நிலை வேற யாருக்குமே வந்துடக் கூடாதுடி….பஸ் மேலே பாறை உருண்டு விழுமா? பஸ்ஸே மலைச் சரிவுல உருண்டு விழுமா….? எப்போ எது நடக்குமோ? என்ற கவலையில்…..வெறும் சப்தத்தை மட்டும் வைத்து திகிலோடு தூங்காமல் விடிய விடிய உட்கார்ந்திருந்தோமே நினைவிருக்கு இல்லையா?

    பின்னே…மறக்க முடியுமா…?

    நமக்கு பத்ரியும் வேண்டாம் கேதாரும் வேண்டாம்….வீட்டுக்குப் போனால் போதும்….! அதுவாவது நடக்குமா?

    மழை விடாமல் பெய்தது…..! அருகில் அப்பப்போ டப்டப டப் டப என்று சத்தம் கேட்கும்…பாறைகள் எங்கோ உருளும் சப்தம்…நாம் திகிலுடன் கைகளைப் பற்றிக் கொள்வோம்…கண்களுக்குள் ‘ கமலும் ரேகாவும்’ “என்ன சத்தம் இந்த நேரம்” பாடிவிட்டு பயந்த நிமிடத்தை நினைவுக்கு கொண்டு வந்து நீட்டும். சீ…..போ….என்று துரத்தினாலும் மீண்டும் …ஒன் …டூ…த்ரீ….என்று காதுக்குள் கேட்கும்.

    மணிமொழி…நெஜம்மா பயம்மா இருக்குடி….!

    எனக்கும் தாண்டி…ஜெயா…!

    அந்த நேரத்திலும் ஒரு பாட்டு…..சட்டி சுட்டதடா…கை விட்டதடா…..புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா…..! போனால் போகட்டும் போடா….!

    என்னடி…..இந்த மாதிரி பாட்டெல்லாம் பாடறே….! வேண்டாம் ஜெயா…..பயமா இருக்கு….என்று எனது கைவிரல்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நடுங்கினியே. அதை உணர்ந்ததும், நானும்….அச்சமில்லை….அச்சமில்லை….அச்சமென்பதில்லையே…உச்சி மீது இமயம் வந்து கல் சொரிந்த போதிலும்…அச்சமில்லை…அச்சமில்லை……என்று எனது நடுங்கும் குரலில் …….நா…நா….நான்….ப் ப் ப் ப் பா ட ….!

    அப்படியே…கண்ணை மூடித் தூங்கிருவோம்….பொழைச்சுக் கிடந்தா நாளைக்குப் பார்ப்போம்…என்றபடி .பஸ்ஸுக்குள் நம்மையும் மீறி உறங்கிப் போனோம்…காலையில் கண்விழித்தபோது…..நாம் அனைவரும் உயிருடன்…இருக்கிறோம் !

    எத்தனை சந்தோஷம் நம்முள்..!…மலைகளும், மரங்களும், பளிச்சென்று வண்ணப் படங்களாகத் தெரிந்தது.மழை சுத்தமாக நின்று விட்டிருந்தது..

    இன்று பிழைத்தது இறைவன் நமக்குப் போட்ட உயிர் பிச்சை தான். நேற்று இரவு எதுவும் நடந்திருக்கலாம்….நமக்கு ! அது தான் நிஜம். இல்லையா?

    ஒரு நாள் தூக்கம், ஒரு நாள் பசி, ஒரு நாள் எங்கும் இறங்கி நடக்க இடமில்லாமல்……..கண்ணாடி வழியாக ஒரே மலையைப் பயந்தபடி பார்த்துக்கொண்டு……”அந்த ஒருநாள் பீதியில் உறைந்தோம்…..இன்று நினைத்தால் என்னென்ன பயமோ”
    பாதி விழிகள் மூடிக் கிடந்தே….நடுங்கும் வேளையிலே…நீ சாட்சியடி மணிமொழியே ….! அன்றொருநாள்….இமய மலையில்….
    நீ இருந்தாய் என் அருகே…!

    அந்தப் பொழுதிலும் நான் பாட….அதை நீ ரசிக்க…இன்னும் நாம மலை இறங்கலை நினைவு வெச்சுக்க…என்று நீ சொன்னது இன்னும் என்
    நெஞ்சுக்குள் திக் திக் திக்..!

    மீண்டும் ரிஷிகேஷ்…அங்கு ஒரு ஆஷ்ரம் அருகே….ஒரு பெரிய மரம்…இது நினைவு இருக்கா மணிமொழி…!
    இந்த மரம் தான் ருத்திராட்ச மரம் என்று நாம் நினைத்துக் கொண்டு அதை தொட்டுத் தொழவும், இன்னும் பலர் வேக வேகமாக வந்து அந்த மரத்தை கட்டித் தழுவி, அதற்கு நமஸ்காரம் செய்து, கண்ணில் ஒத்திக் கொண்டு …”இதுவா..இதுவா…ஹேய்…இது ருத்திராட்ச மரமாம்…” என்று இன்னும் சிலரை அழைக்க… நம் கண்கள் வேறு திசையில் பார்த்ததும், அங்கு சுற்றிலும் இரும்பு வலை போட்டு அதனுள்ளே ஒரு மரம்….’ருத்ராட்ச மரம்’ என்று ஹிந்தியில் எழுதி இருந்தது. அப்போ இந்த மரம் என்று நாம் தலையை உசத்திப் பார்க்கையில்…இது ஒரு காட்டு மரம்…என்று தெரியவர…..நாம் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தோமே. அதற்குள்..”நாம எத்தனை புண்ணியம் பண்ணிருக்கோம்..தெரியுமா….இப்படி ஒரு ருத்திராட்ச மரத்தையே கட்டிப்பிடிக்க…!” என்று பில்ட் அப் வேற..

    ஹேய்….மணிமொழி….என்னாச்சு…இப்படிக் கொறட்டை விடறே…! ஹேய்…இப்பவே தூங்கிட்டியா? பாதி லெட்டர் தான் படிச்சேன்…இன்னும் எவ்ளோ இருக்கு தெரியுமா? அதுக்குள்ளே இப்டி தூங்கிட்டியே !….கண்டிப்பா…..என்னால.இந்தத் தாஜ்மகாலைத் தூக்க முடியாதுடி….என்று சொல்லிச் சிரித்தபடி தண்ணீரை எடுத்து மணிமொழி மீது தெளித்து எழுப்புகிறேன்..

    “ஐயய்யோ …இடி….மழை…” என்று நாகேஷ் ஸ்டைலில் துள்ளி எழுந்து பேந்தப் பேந்த விழிக்கிறாள் மணிமொழி.

    ஜெயா…மனியாச்சுடி….பையன் காலேஜ்லேர்ந்து வர நேரம்…என்றவள்…வீட்டுக்குப் போகணும்…..என்று சிறகை விரித்துச் சிட்டாகப் பறந்தாள் மணிமொழி. அவளது கைகளுக்குள் கடிதமும் பத்திரமாக.

    மணிமொழி….கடைசி ஒரு வரியை வீட்டுக்குப் போய் படி….என்ன….?

    எனது ஐம்பது வருட கால வாழ்வில் ஒரு பதினைந்தே நாட்கள் என் இதயத்தை விட்டு அகலாமல் பச்சைக் குத்திக் கொண்டது அந்த நாட்கள். உனக்குள்ளும் அந்தத் தாக்கம் ஏற்பட்டு இன்னும் அப்படியே இருக்கும் என்ற என் நம்பிக்கையை நீ புறந்தள்ள மாட்டாய் என்றறிவேன். இனிமேல் அடுத்த ஆன்மீகச் சுற்றுலா…..!

    வாயை மூடு…நாம எங்கயும் இனிமேல் இப்படிப் போகவேண்டாம்……!

    சரி…சரி…மணிமொழி…இந்தக் கடிதம் உன் கண்ணை நிறைத்தால் கண்டிப்பாக என் மனம் நிறைக்க பதில் போடுவாய் என்று நம்புகிறேன்.

    என்றும் உனது நினைவாக,

    ஜெயா….

    Share
  • ஒரு நாள் நடிகை!..

    விசாலம்

    நடிக்கும் தொழிலும் ஒரு கலை தான் ,ஆதி காலத்திலிருந்தே இசை நாட்டியம் நாடகம் என்று இன்று வரை தொடர்ந்து வருவது நமக்கு தெரிந்த ஒன்று.எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நாடகம் என்றால் எனக்கு உயிர்.

    நாடகம் பார்க்கப்போனால் ஒவ்வொரு காட்சியும் மிகவும் ரசித்துப்பார்ப்பேன்.நான் பார்த்த முதல் நாடகம் திரு மனோஹரின் இலங்கேஸ்வரன் பின் டி கே எஸ் பிரதர்ஸின் இராஜ இராஜ சோழன்,திரு சஹஸ்ரநாமத்தின் பராசக்தி , போலீஸ்காரன் மகள், நாலு வேலி நிலம் ,குலதெய்வம் போன்ற நாடகங்கள் இன்றளவும் என் மனதில் நிற்கின்றன.

    நாவப் டிஎஸ் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்கள் 8000 தடவைகள் நாடகங்களை நடத்தினார்கள்.என்று கேள்விப்பட்டேன். நாங்களும் எங்கள் நாடக குழுவுடன் இது போல் நாடகம் நடத்துவோம்.ஆனால் கூட்டம் வரவேண்டுமே என்பதால் சேவாஸ்டேஜ் திரு சஹஸ்ரநாமம் நடிக்கும் ஐந்து நாடகங்கள் நடுவே எங்கள் ஒரு நாடகத்தைப்புகுத்திவிடுவோம். சேவா ஸ்டேஜ் நாடக நடிகர்களுக்கு அந்த ஒரு நாள் ரெஸ்ட். இது பம்பாய் பாரதி கலா மன்றத்தில் நடக்கும்.

    பெயர் பெற்ற நடிகை என்றால் அவர்கள் சுதந்திரம் மிகவும் குறைந்து விடுகிறது. அவர் இஷ்டப்படி கடைக்குப்போக முடிவதில்லை, சுதந்திரமாக தெருவில் நின்று அரட்டை அடிக்க முடியவில்லை. வீட்டை விட்டு வெளியே வந்தாலே ஒரே கூட்டம் சேர்ந்து விடுகிறது.ஆட்டோகிராப் வாங்க சிலர் முண்டியடிப்பார்கள். அவர் கையைத்தொட சிலர் முயல்வார்கள். ‘அப்பப்பா ஏன் வெளியில் கிளம்பி வந்தோம் ‘ என்ற எண்ணம் அவர்களுக்கு நிச்சியம் தோன்றும். இதுவே வெளியூர் சூட்டிங் இருந்தால் இவ்வளவு சங்கடம் இல்லை. சூட்டிங்க நடக்கும் போது ஒருவிதமான கூட்டம் சேருவதில்லை.
    தவிர அந்த நாட்டு மக்களும் ஏதோ சினிமா ஷூட்டிங் போல் இருக்கு என்று தொந்தரவு செய்யாமல் தள்ளி நடந்து போகிறார்கள். இதை நான் லண்டனில் வெஸ்ட் மினிஸ்டர் பிரிட்ஜ் என்ற இடத்தில் பார்த்தேன். மாதுரி தீஷித்துடன் ஒரு ஹீரோ. நிற்க ஒரு நடனம் ,ஷூட்டிங் . அங்கு ஒரு விதமான தொந்தரவும் இல்லை.கூட்டம் சேரவுமில்லை.இதுவே பம்பாயாக இருந்தால் அவ்வளவுதான்.டிராபிக் ஜாம் ஆகிவிடும்.
    பாவம் நடிகை. எங்கு போனாலும் காருக்குள் சிறை.பின் வீடு வந்தால் வீட்டிற்குள் சிறை. இஷ்டப்படி சுதந்திரமாக இருக்க முடியவில்லை..சாதாரண மக்கள் போல் வாழ முடியவில்லை.தவிர தனக்கென்று ஒரு வாழ்க்கை ஸ்டைல் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டதால் பணம் போதாவிட்டாலும் அதை கடைப்பிடிக்க பின் பணம் போதாமல் மனசோர்வுக்கு ஆளாகிவிடுகிறார்கள். நடிகை மீனா குமாரியின் கடைசி காலம் இது போல் தான் இருந்தது.

    நானும் ஒரு நாள் நடிகையாக ஆனேன். அதாவது நடிகை படும் அவஸ்தையை நானும் அனுபவித்தேன். எப்படி தெரியுமா? எங்கள் நாடகம்

    பம்பாயில் நடக்க இருந்தது. எப்போதும் சமூக நாடகமாக இருக்கும் ஆகையால் உடைக்குப்பிரச்சனை ஏற்பட்டது இல்லை. ஆனால் அந்தத்தடவை

    வள்ளி திருமணம் என்ற நாடகம் எடுத்துக்கொண்டோம்.அதற்காக நம்பி ராஜனுக்கு தனி டிரெஸ் ,வேடனுக்கு தனி டிரெஸ் வள்ளிக்கு பின் குறத்திக்கு என்று ஏகப்பட்ட வேஷம். இதற்காக நாங்கள் நாடக உடை விற்கும் கம்பெனிக்கு கிளம்பினோம். எங்களுக்கு திரு சாந்தாராம் அவர்கள் நல்ல பழக்கம்.அவரது பெண் ஜெயஸ்ரீ எனக்கு நன்றாக தெரியும்.ஆகையால் அவர் மூலம் அவரது கம்பெனியின் வேன் எங்களுக்குக்கிடைத்தது.

    ஜவேரி பஜாரையும் தாண்டி இந்த நாடகத்திற்காக வேஷம் ,உடை வாடகைக்குக்கு கொடுக்கும் இடம் இருந்தது. அந்தக்கூட்டத்தில் நான் தான் நல்ல கலர்.அந்தக்காலத்தில் பார்க்க அழகாக இருப்பேன் என்று பலர் சொல்வார்கள். ஹூம் அது அந்தக்காலம். காலம் நமக்கு என்று நிக்குமா என்ன? அந்த ஓட்டத்துடன் நாமும் தான் ஓட வேண்டும். சரி வேனுக்குள் வருவோம் எங்கள் எல்லோருக்கும் இது ஒரு புது அனுபவம் ஏனென்றால் எப்போதும் ஒரிரெண்டு உடைகள் தான் வெளியிலிருந்து வாங்குவது போல் இருக்கும்.ஒன்று போலீஸ். மற்றோன்று சன்யாசி.ஆனால் இந்த நாடகத்திற்கோ எல்லோருக்கும் புது வேஷம்.அவர்கள் உடல் அமைப்புக்குத் தகுந்தாற்போல் உடை வேண்டும் ஆகையால் ஒரு 15 பேர் கிளம்பினோம். நடுவில் சமோசா கடை எங்களை வா வா என்று அழைத்தது. அருகில் பேல் பூரி கடை வேறு சரி இறங்கி சாப்பிட்டு வரலாம் என்று இறங்க நினைத்து கதவைத்திறக்க வாசலில் ஒருவன் எங்களைப்பார்த்து மாராட்டியில் வாங்கோ வாங்கோ பில்ம் ஸ்டார் வராங்க ‘என்று தங்கள் நண்பர்களிடம் கத்தினான்.’ யார் யார் உள்ளே இருக்கா ?” என்று ஒருவன் கேட்க இன்னொருவன் காமினி கௌசில் நளினி ஜய்வந்த மும்தாஜ். பிந்து என்று அடிக்கிக்கொண்டே போனான். நாங்கள் அவர்கள் வந்து ஏதாவது பிரச்சனை செய்யப்போகிறார்களோ என்று பயந்து சமோசாவை வாங்காமலே வேனில் அவசரமாக ஏறிக்கொண்டோம். நான் அவர்கள் போய் விட்டார்களோ என்று சன்னலைச்சற்று திறந்தேன் அவ்வளவு தான் .திரும்பவும் என்னை பெரிய நடிகை என்று எண்ணி அவரவர் சைக்கிளில் எங்களைத்தொடர்ந்தார்கள். டிரெஸ் கம்பெனியும் வந்தது.எப்படி இறங்கி உள்ளே செல்வது? அந்தக்கடை இருக்கும் இடமோ ஒரு சிறிய சந்து.. அந்தச்சந்தை நிரப்பியபடி கூட்டம் சேர்ந்தது. பின் எங்கள் டிரைவர் அந்தக்கடைக்குள் சென்று முதலாளியிடம் நிலமையை விளக்கினார் ,பின் எங்களுக்கென்று போலீஸ் பாதுகாப்பிற்காக வந்தது.நாங்கள் ஒவ்வொருவரும் இறங்கி அவசரமாக கடைக்குள் ஓடினோம் பின் கடைக்காரர் கடையின் ஷட்டரைப்போட்டு மூடிவிட்டார்.

    அப்பாடி இப்போது தன் நிம்மதி. அவர்கள் மீதும் தப்பில்லை ஒன்று அவர்கள் வயது.இரண்டாவதாக நாங்கள் வந்த வண்டி டைரக்டர் திரு சாந்தாராம் அவர்களது வண்டியில் நீல் கமல் என்று எழுதி இருந்தது. அந்த வேனைப்பார்த்து நான் ஒரு சினிமா நடிகை என்று எண்ணியிருக்க வேண்டும்.அப்பப்பா நடிகை அல்லாத எனக்கே இந்த ஒரு நாளே இப்படி என்றால் பெயர் பெற்ற புகழ் பெற்ற நடிகையின் நிலைமை. எப்படி இருக்கும் அவர்கள் மூச்சு விட்டால்கூட ஒரு ந்யூஸ் ஆகிவிடும். அவர்கள் வீட்டு நாய் பூனையும் நியூஸ் ஆகிவிடும். பாவம் இப்படி சுதந்திரமில்லாமல் இருக்க வேண்டி இருக்கே என்று நினைத்தேன். என்ன செய்வது பணத்திற்கும் புகழுக்கும் ஆசைப்பட்டால் எதையாவது தியாகம் செய்யத்தான் வேண்டும்

    இப்படியாக நான் ஒரு நாள் நடிகையானேன் ஹா ஹா ஹா இது எப்படி இருக்கு ?

    Share