Blog

  • டவுன் வித் அப்ஸ்கர்ட் பிக்ச்சர்ஸ்

    தேமொழி

    மேடையில் பரதநாட்டியம் ஆடிய அந்த மாணவி மெய் மறந்து, கலையுடன் தன்னை இணைத்துக் கொண்டு பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்தாள். அது அந்தப் பல்கலைக் கழகத்தின் முதுகலை மாணவ மாணவியரின் பிரிவுஉபச்சார விழா. அவளும் இறுதியாண்டில் பயிலும் மாணவிதான். ஆடிக்கொண்டிருக்கும் மாணவியை அதன் பிறகு அந்தக் கல்லூரி வளாகத்தில் பார்ப்பதென்பதே அரிதாகிவிடும். அவள் எங்கு போவாளோ, மேற்கொண்டு படிப்பாளோ, பணியில் அமர்வாளோ, கலைப்பயணத்தைத் தொடர்வாளோ என்பது போன்ற கேள்விகள் அவள் ஆடிய விதத்தைக் கண்ட பொழுது மனதில் எழுந்தது. அந்த விழாவில் அந்தத்துறையைச் சார்ந்த அனைவருமே பங்கு பெற்றனர். மூத்த மாணாக்கர்கள், இளைய மாணாக்கர்கள், பேராசிரியர்கள், கல்லூரியின் ஊழியர்கள் யாவரும் நடனத்தைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

    அவள் வகுப்பில் படிக்கும் புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்ட உடன் பயிலும் மாணவன் ஒருவன் அவர்கள் வகுப்பு நிகழ்சிகளை, விழா நடனங்களை, உல்லாசப் பயணங்களை உற்சாகமாகப் படம் பிடிப்பான். படங்களை வேண்டுபவருக்கும் பிரதி எடுத்து வழங்குவான். அன்றும் வழக்கம் போலவே புகைப்படம் எடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, தனது வகுப்புத் தோழியின் நடனத்தைப் பல கோணங்களிலும் ஓடி ஓடிப் படம் பிடித்தான். திடீரென யாரும் எதிர்பாராவண்ணம் நடனமாடியவளின் முந்தானை இருக்க வேண்டிய இடத்தை விட்டு நெகிழ்ந்து நழுவியது, அவள் அணிந்திருந்த சோளி, அவளது மார்பு சேலையினால் சரிவர மறைக்கபடாமல் போனது.

    ஆண்களும் பெண்களும் கலந்து இருந்த அவையில் அவ்வாறு நிகழ்ந்ததும் பெண்கள் அனைவருக்கும் சங்கடமானது. கூச்ச உணர்வில் நெளிந்தனர். நடனமாடிய மாணவிக்கு இது தெரியவில்லையா அல்லது நடனத்தில் இருந்த தீவிர ஈடுபாட்டில் அதனைப் பொருட்படுத்தவில்லையா என்றும் புரியவில்லை. அவளது வகுப்புத் தோழன் அத்துடன் மேற்கொண்டு படம் பிடிப்பதை நிறுத்தினான். கேமேராவின் லென்ஸ் கவரைப் போட்டு மூடிக் கொண்டே தனது இடத்திற்குத் திரும்பிவிட்டான். அவனது அந்த செய்கை மனதை விட்டு அகலாமல் கால்நூற்றாண்டு ஆகியும் நினைவில் தங்கி அவன் மீது அளவு கடந்த மதிப்பைத் தந்த வண்ணம் இருக்கிறது. இது ஓர் உண்மை நிகழ்ச்சியே.

    அன்று பெண்கள் மதிப்பில் மிகவும் உயர்ந்த இடத்தைப் பிடித்தான் அவன். அவன் தொடர்ந்து படம் எடுப்பது தவறா இல்லையா? அதில் என்ன தவறு? என்பது ஒவ்வொருவர் கோணத்திலும் வேறுபடலாம். ஆனால் அவன் செய்த செய்கையை அறிந்தால் அவனது தாய் மிகவும் பெருமைப் பட்டிருப்பார். சகோதரிகள் (இருந்திருந்தால்) அவர்களும் மகிழ்ந்திருப்பர். அதுவரை அவனுடன் படித்த அவனது வகுப்புத் தோழியரான மாணவிகளும், ஆசிரியைகளும் அவனை மனதிற்குள் பாராட்டியிருப்பார்கள் என்பதை அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து அத்துறை மாணவியர் அவன் பண்பாட்டைக் குறிப்பிட்டுப் பேசிய பொழுது தெரிந்தது.

    இது பண்பாட்டிற்கு, பெண்களை மதிக்கும் பண்பிற்கு நல்லதோர் சான்று. ஆனால் நாம் வாழும் உலகில் இருப்பவர் அனைவருமே இந்த மாணவனைப் போன்றவர்களாக இல்லாதிருப்பதே பெண்களுக்குத் துயரம் தரும் விதமாக அமைந்துவிடுகிறது.

    இந்நாட்களில் படம்பிடிக்கும் கருவியுடன் கைபேசி வந்ததும், பெண்கள் அறியாவண்ணம் அவர்கள் மீது நிகழ்த்தும் அத்துமீறல்கள் அதிகமாகிவிட்டன. அனுமதியின்றி யாரையும் படம் எடுப்பது தவறு. அது தனிமனித உரிமை மீறல். பொது இடங்களில் பெண்கள் கவனிக்காத பொழுது, அவர்கள் குனிந்து நிமிரும் பொழுதும், அரக்கப் பரக்க அவசர அவசரமாக ஓடும்பொழுதும், பேருந்துகளில் அமர்ந்திரருக்கும் பொழுது நின்றவண்ணம் மேலிருந்து பார்த்துத் தங்களுக்குக் கிடைக்கும் கோணத்தில் அவர்களது மார்பு, பின்புறம், இடை என  அவர்களது உடல் உறுப்புக் காட்சிகளைப் படம் பிடித்து வைத்துக் கொள்வதும், அதை இணையத்தில் பரப்புவதும் விரைவில் வெகுவாகப் பரவிவிட்டது. அது போலவே நம்பிக்கைக்குரிய தோழர்களாக இருந்த பொழுது எடுத்த படங்களை நட்பு முறிந்தவுடன் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதும், பெண்கள் தங்கள் காதல் துணையுடன் தனிமையில் இருக்கும் நிகழ்வுகளையும், குளிக்கும் அறையில் ஆடையற்று உள்ள நிலைகளையும் காணொளியாக எடுத்து வைத்துக் கொண்டு அதை வைத்தே அவர்களை மிரட்டி அலைக்கழிப்பதும், தன்னிசையைத் தீர்த்துக் கொள்வதும் தொழில்நுட்பம் வந்தபிறகு அதன் மூலம் பெண்கள் மீது நிகழ்த்தும் புதிய வகை வன்முறையாக மாறியுள்ளது.

    தானே வலிய விரும்பி அரைகுறை ஆடையுடன் அலையும் பெண்களையும், அது போன்ற ஆபாசக் கோணங்களில் தங்களைப் படம் எடுத்துக் கொள்ள விரும்பும் பெண்களையும் இணைத்து இங்குக் குழப்புவது நிலைமையின் தீவிரத்தை, கண்டனத்திற்குரிய செய்கையை மட்டுப்படுத்தி நீர்த்துப் போகும் என்பதால், அதனைத் தவிர்ப்போம். பெண்களே ஆபாசமாக அலையும் பொழுது அப்படித்தான் படம் எடுக்க விரும்புவார்கள் என்று கூறுவது பிரச்சனையைத் திசைத் திருப்ப விரும்பும் விதண்டாவாதம். கண்ணியத்தைக் கடைபிடிக்க விரும்புபவர்கள் இது போன்ற வாதங்களைத் தவிர்க்க வேண்டும். யாரும் எப்படியும் இருந்தாலும் நான் ஒழுக்க நெறியைப் பின்பற்றுவேன் என்பதுதான் பண்பாடாக இருக்க வேண்டுமே அல்லாமல், வீடு திறந்து இருந்தால் திருடுவதில் என்ன தவறு என்று கேட்பது ஒழுக்கத்தில் அடங்காது. கள்ளத்தனத்தில் அடங்கும். இது போன்ற நோக்கம் கொண்டு விவாதிப்பவர்களால் குற்றவாளிகளும் தப்பிப்பது எளிதாகிவிடும். பெண்களையும் சிறுமிகளையும், அவர்களது அனுமதியின்றி, அதுவும் அவர்கள் விரும்பத்தகாதவகையில் படம் பிடித்து மகிழும் கீழ்த்தர எண்ணம் கொண்டவர்களை கண்டிப்பது ஒன்றே இங்கு நமது நோக்கம்.

    என்றோ உருவாக்கிய சட்டம் தற்காலக் குற்றத்தைத் தண்டிக்க இயலாத வகையில் அதில் ஓட்டைகளுடன் குற்றவாளிகளைத் தப்பவிட நேர்ந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியை நிலைநிறுத்த ஒத்துழைக்காவிட்டால், அதனை நாம் அன்றே மாற்றவேண்டும். இக்கருத்தை வலியுறுத்த இவ்வார நிகழ்ச்சி ஒன்றினைச் சான்றாக முன் வைக்கிறேன். இந்நிகழ்ச்சி, மேலை நாட்டினர் என்றாலே பண்பாட்டில் குறைந்தவர்கள், கலாச்சாரமற்றவர்கள், பெண்களை போகப்பொருளாக மதிப்பவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் நம் பாரத மக்களின் அறியாமையைக் கண்களைத் திறக்கும்.

    பெண்களின் அந்தரங்கத்தில் ஊடுருவும் செயலைச் செய்து அற்ப மகிழ்ச்சி அடையும் ஆண்கள், இன்று நேற்றல்ல, பல காலமாக இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் அவர்களை ‘பீப்பிங் டாம்’ (Peeping Tom) என்ற அடைமொழியிட்டு அழைப்பார்கள். அத்துடன் பொது இடங்களில் இருக்கும் பெண்களின் ஆடைக்குள் காமெராவை நுழைத்து அவர்களது உள்ளாடையை, பிறப்புறுப்பை இக்கயவர்கள் எடுக்கும் படங்களை ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ (upskirt photos) என்று அழைப்பார்கள்.

    சென்ற புதனன்று (மார்ச் 5, 2014), அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் அவ்வாறு பெண்களை ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ பிடித்த தடியன் ஒருவனை நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். அம்மாநிலத்தின் சட்டப்படி முடிவெடுக்க வேண்டுமானால், அவன் செய்ததில் தவறில்லை என்ற தீர்ப்பை எழுதும் நிலைக்கு நீதிபதிகள் உள்ளானார்கள். அம்மாநிலத்தின் ‘பீப்பிங் டாம்’ சட்டப்படி ஒரு பெண் தனியிடமான ஆடைமாற்றும் அறையிலோ, குளியலறையிலோ, அவள் ஆடையற்று அல்லது அரைகுறை ஆடையுடன் இருக்கும் பொழுது படம் எடுப்பதையே சட்டப்படித் தண்டிக்க முடியும். ஆனால் நிர்வாண நிலையில் இல்லாமல், உடல் முழுவதும் மறைக்கும் ஆடை அணிந்து, பொது இடத்தில் உள்ள பெண்ணை ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ எடுப்பதைத் தண்டிக்கச் சட்டத்தில் வழியில்லை என்று கூறியது அம்மாநில உயர்நீதிமன்றம்.

    இத்தீர்ப்பால் கொதித்தெழுந்த அம்மாநில மக்களும் சட்டமன்ற உறுபினர்களும் மறுநாளே (வியாழக்கிழமை, மார்ச் 6, 2014) பெண்களை அவமதித்து இவ்வாறு ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ எடுத்து அவர்களைப் பாதுகாப்பற்றவர்களாக உணரச் செய்யும் நிலையைப் போக்க வேண்டும் என்று அறிவித்ததுடன், குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து இரண்டரை ஆண்டுகளிலிருந்து பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10,000 டாலர்கள் வரை அபராதமும் கட்ட வேண்டும் என்ற சட்டமியற்றி அதனை நடைமுறைப்படுத்தவும் வழி செய்துவிட்டனர். முதல்நாள் குற்றமற்றவன் என்று கருதப்பட்டவன், மறுநாளே மாற்றி எழுதப்பட்ட சட்டத்தினால் குற்றவாளியாகித் தண்டனை அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டான். அம்மாநிலப் பெண்களுக்கு இது இந்த ஆண்டிற்கான சிறந்த “உலக மகளிர் தினப்பரிசு” என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

    உலகில் பல நாடுகளில் இவ்வாறு தனி மனுத உரிமைக்கு ஊறு விளைவிக்கும் செயலைத் தண்டிக்கப்பட வேண்டியக் குற்றம் எனச் சட்டமியற்றப் பட்டாகிவிட்டது, அதில் இந்தியாவும் அடங்கும். இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66இ பிரிவுப்படி (under section 66E, of the Information Technology Act) இது போன்ற செயல் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

    தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து வரும் இக்காலத்தில் பெண்கள் முன்னைவிட எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. எதையும், யாரையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்து எச்சரிக்கையாக இருப்பது இன்றியமையாததாகிறது. ஸ்கைப் போன்ற காணொளி வழி அலுவலக தொழிலின் காரணமாக கலந்துரையாடல் நடக்கும் பொழுது, ஆண்கள் பெண்களுடன் உரையாடுவதை சாக்காக்கிக் கொண்டு அவர்களை மார்புவரை காமெரா கோணத்தை வைக்கச் சொல்லும் பொழுது பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த ஆண் ஒரு முதியோராக இருந்தாலும் கூட இந்த அறிவுரை பொருந்தும். பெரும்பாலும் வயோதிக ஆண் என்றால், தங்கள் தந்தை வயது உள்ளவர் என்று அன்புடனும் பாசத்துடனும் அவர்களை நினைப்பது பெண்களின் வழக்கம். ஆனால் பல முதியோர்களும் வல்லூறுகள் போலவே நடந்து கொள்வார்கள் என்பதையும், தனது ஒத்த வயது தோழர்களிடம் கூட எதிர்பார்க்க இயலாத முறையற்ற செயல்களுக்கும் அம்முதியோர்கள் துணிந்தவர்கள் என்பதையும் பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும். யாரையும் நம்பக்கூடாது என்பதே பெண்கள் முதலில் படிக்க வேண்டிய அரிச்சுவடிப் பாடம். தாங்கள் அறிந்த பெண்களையும், தங்களது மகள்களையும் இதனை நினைவுபடுத்தி நல்வழி காட்டவேண்டியது இன்றையத் தாய்க்குலச் சக்திகளின் கடமை.

    Share
  • புது மாப்பிள்ளை, பெண்ணுக்கு

    நிர்மலா ராகவன்

    உங்கள் திருமணத்துக்கு நாள் குறித்தாகிவிட்டது. நீங்கள் மாப்பிள்ளையாகின், சற்று வீரமாக, பொறுப்பானவனாக உணர்வீர்கள். ஏனெனில், இதுவரை பெற்றோர், அவர்களது பெற்றோர், ஆசிரியர்கள் யாவரும் சொற்படி நடந்த உங்களுக்கு, இப்போது நம் அதிகாரத்தைப் பிரயோகிக்க ஒரு நல்ல சந்தர்ப்பம் என்ற பெருமை எழக்கூடும்.

    புது மனைவியிடம், `உனக்கு சிவப்புப் புடவைதான் அழகாக இருக்கிறது. பச்சை வேண்டாமே!’ என்னும்போது, `கணவருக்குத்தான் நம்மீது எவ்வளவு ஆழ்ந்த அன்பு!’ என்று அவளும் உங்கள் விருப்பப்படியே நடக்கிறாள்.

    தான் சொல்வதை மந்திரமாக ஏற்று நடக்கும் மனைவியால் உங்கள் சுயமதிப்பு கூடுகிறது. அவளை இன்னும் அதிகமாக அடக்க முயற்சிக்கிறீர்கள். அதைப்பற்றி நண்பர்களிடமும் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறீர்கள்.  அவளும் விட்டுக்கொடுத்துக் கொண்டே போகிறாளா? பத்திரம்! ஒட்டகத்தின் மேல் சுமத்தப்பட்ட கடைசி இழை வைக்கோலைப்போல் அவள் முதுகு உடையும் நாள் அதிக தூரத்தில் இல்லை.

    ஒரு பெண் சுரத்தின்றி, எதிர்ப்பேச்சு பேசாது அடங்கிவிட்டால்,  அவள் கலகலப்பாக இல்லையே என்ற குறை கணவனுக்கு எழும். வெளியுலகில் பார்க்கும் பிற சுதந்திரமான பெண்களைப் பார்த்து, `எனக்கு ஏன் இப்படி ஒரு ஜடம் வாய்த்தது!’ என்று குறைபடுகிறான்.

    தன் பேச்சுக்கு மறுபேச்சே இருக்கக்கூடாது என்பதுபோல் நடக்கும் ஆண்களின் நிலை இதுதான்.

    (இப்படிப்பட்ட ஒருவரின் மனைவியை எனக்குத் தெரியும்.  நன்கு படித்து, உத்தியோகத்தில் இருப்பவள் ஆயினும், யாராவது பேசினால், அவர்களுடைய ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் சிரித்து வைப்பாள். அவளுடைய அபிப்ராயத்தைச் சொல்லும் உரிமை கல்யாணம் ஆனதுமே அவளிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. காலங்கடந்து அவர் விசனப்படுகிறார்).

    தனது ஆண்மையைத் தானே மெச்சி, மனைவியை நாலு பேர் முன்னிலையில் `முட்டாள்’ என்று திட்டி, அல்லது காரணமில்லாமல் பலத்த குரலில் திட்டி, அல்லது அவள் செய்த `முட்டாள்தனமான’ காரியம் எதையாவது தண்டோரா போட்டுச் சொல்லும் ஆண்கள் சற்று யோசிக்க வேண்டும். இப்படிச் செய்வதால், நீங்கள் உயர்ந்துவிட்டதாக யாரும் எண்ணப் போவதில்லை — உங்களைத் தவிர்த்து.

    பரிதாபத்துக்குரிய மனைவியோ, முகத்தில் எந்த சலனமும் இல்லாது உட்கார்ந்திருப்பாள். அவளுக்கு அவருடைய ஏச்சுப்பேச்சு பழகிவிட்டது. `எனக்கு வருத்தமாக இருக்கிறது. இப்படி என்னை மட்டம் தட்டிப் பேசாதீர்கள்,’ என்று கெஞ்சினாலும் அவர் மாற மாட்டார் என்பதை நடைமுறையில் கண்டவள் அவள்.

    “திரும்பக் கத்திப் பாருங்களேன்! எதற்காக இவ்வளவு  அவமரியாதையைப் பொறுத்துப் போகிறீர்கள்?”– கேட்டது நான்.

    பதில் உடனே வந்தது. “அது மரியாதை இல்லை!”

    பெண் மட்டும்தானா மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும்? யோசியுங்கள்!

    நீங்கள் பெண்ணானால்:

    பெண்பார்க்கும் வைபவம் முடிந்து, உங்களை மணக்கவும் சம்மதம் தெரிவித்துவிட்டார் ஒருவர். மூன்று மாதங்களுக்குப் பிறகு திருமணம் — நீங்கள் ஆவலோடு காத்திருந்த நன்னாள்.

    நிம்மதியுடன், இனி என்ன வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற நிம்மதி ஏற்படுகிறதா? (`நீ இப்படி குண்டா, வாயாடியா இருந்தா, ஒருத்தனும் ஒன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டான்!’ நம் பெண்களுக்கு அடிக்கடி வழங்கப்படும் இலவச போதனை).

    ஓர் ஆண்மகனை வளைத்துப்போடவா இத்தனை வருடங்களும் நீங்கள் உங்கள் மேனியழகைப் பாதுகாத்து வந்தீர்கள்?

    இல்லை, பிற ஆண்கள் உங்கள் அழகை ரசித்தால், கணவருக்குப் பிடிக்காதோ என்ற அச்சமா?

    எதுவாக இருந்தாலும், உங்கள் போக்கு சரியல்ல. உடம்பைச் சரிவர பராமரிப்பது வெளியழகுக்காக மட்டுமல்ல. ஆரோக்கியம் என்று ஒன்று இருக்கிறதே, தெரியாது? அளவுக்கு  அதிகமாகச் சாப்பிட்டு, நாற்பத்தைந்து வயதிலேயே சர்க்கரை வியாதி, ஓயாத கால்வலி, ரத்த அழுத்தம் என்றெல்லாம் நீங்கள் புலம்ப ஆரம்பித்தால், யாருக்கும் சுகமில்லை.

    கல்யாணமான முதல் கொஞ்ச நாட்கள் கணவர் நைச்சியமாகப் பேசி உங்களை `விரட்ட’ ஆரம்பித்தால் (அதாவது, அவருக்குப் பிடித்தமாதிரியே நீங்கள் எப்போதும் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தால்), ஒரேயடியாகப் பணிந்து போகாதீர்கள். உங்கள் தனித்தன்மையை இழந்து விடுவீர்கள். `பிறர் என்ன சொல்வார்களோ!’ என்று பயந்தே வாழ்க்கையைக் கழிப்பது நமக்கு தாமே அளித்துக்கொள்ளும் தண்டனை.

    எந்த ஒரு பந்தத்திலும், சந்தோஷம் அல்லது துயரம் மட்டுமே நிலைத்திருப்பது கிடையாது. உங்கள் போக்கிற்கு ஒருவர் விடவில்லை என்றால், உடனே உறவை முறித்துக்கொள்வதும் தகுந்த தீர்வு இல்லை. வாரத்தில் ஒரு நாளாவது சண்டை போடாமல், இருவரும் சேர்ந்து எங்காவது சென்று வந்தால்கூடப் போதும். மற்ற நாட்களில் கிடைக்காத மன ஒற்றுமை கிட்டிவிடும். (இது என் சொந்த அனுபவம்).

    மணந்தவரை (மணந்தவளை) மாற்ற முயல்வது ஒரு நாயைப் பூனையாக்கும் முயற்சிதான். ஒருவரையொருவர் அப்படியே ஏற்றுக்கொண்டால், புரிந்துணர்வு ஏற்பட, உறவு பலப்படும்.

    (இந்த ரீதியில் நான் மலேசிய ஆங்கில தினசரி ஒன்றில் எழுதியவைகளைப் படித்த சில ஆண்கள்,`My marriage has improved because of you!’ என்று நேரில் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்).

    Share
  • பெண்கள் உலகின் கண்கள்

       விமலா ரமணி

    மீண்டும் ஒரு மகளிர் தினம்.

    ஒவ்வொரு   வருடமும் நாம் இந்த நாளைக் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த நாளில் என்ன சாதிக்கறோம்  ?

    பெண்மைக்கு  என்ன பெருமை சேர்க்கிறோம்?

    எத்தனையோ தடைகளைத் தாண்டி வந்த பெண்மைக்கு என்ன மதிப்புத் தருகிறோம் ?

    இன்றும் செய்தி  தாள்களைப் புரட்டினால் ஆங்காங்கே பெண்கள் கற்பழிக்கப் பட்ட செய்திகள்..

    கணவனால் கொடுமைப் படுத்தப் பட்ட பெண்கள்..

    வரதஷிணைக் கொடுமைக்காக எரிக்கப்பட்ட பெண்கள்

    தந்தையே  தன் மகளைக் கற்பழிக்க முற்பட்ட  கயமைத் தனம் கல்வி கற்பிக்கும்  ஆசானே  மாணவியைக் கற்பழித்தல்….இப்படி எத்தனை எத்தனை செய்திகள்..

    ஆசானுக்கே அரிச்சுவடியில்  சந்தேகம் வரலாமா ?

    இன்னமும் அறியாமையிலும்  அவலத்திலும்  அடிபட்டு மிதிபட்டு அரைப் பைத்திய நிலையில்  அவதியுறும் பெண்கள்.

    இந்தக் குடும்ப வன்முறை பற்றிய ஒரு கட்டுரையை  ‘இந்து ’   செய்தித் தாளில் சமீபத்தில் படித்தேன்.

    நம் பாரதத்தின்   கிராமங்களில்  கூட அறிவியல் வளர்ச்சி வந்துவிட்டது.பெண்கள் கல்வி கற்க கிராமப் புறங்களிலுருந்து நகர்ப் புறங்களுக்கு வருகிறார்கள் கிராமம்  நகரம் என்ற நிலை மாறி. அனைவரும் நாகரீக வாழ்வைத் தேடி அலைகிறார்கள்.

    தொழில் நுட்ப நிலையிலும்  பல கிராமப் பெண்கள் சாதனை புரிந்துள்ளார்கள்.

    வாட்ச் மேன் மகள் சப் கலெக்டர் ஆகிறாள்.

    ஏழ்மை நிலையிலும படிக்கும் ஆர்வத்தால் தொழில் கல்வி பயின்று

     கல்லுரியில்  முதலாவதாக வந்து தங்கப் பதக்கம் பெறுகிறாள்.  ஒரு மாணவி.

    ஆனால் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு வரும் பெண்களின் மனநிலை என்ன என்பதை அந்தக் கட்டுரை விளக்குகிறது.

    தகப்பனால் அடி உதை வாங்கி அரைப்  பைத்திய நிலையில் இருக்கும் தாய்  ,எப்போதும் வறுமை எதிர் காலம் பற்றிய அச்சம்  ,தன் கற்புக்கு உத்திரவாதம் அற்ற நிலை , சமூகத்தின் பாலியல் பலாத்காரக்  கொடுமை …..

    இந்நிலையில் குடும்ப  வன்முறைச் சட்டங்கள் எப்படி உதவுகின்றன?

    தனி நீதி மன்றங்கள்   உதவும் அமைப்புக்கள் அத்தனையும் இருக்கின்றன.

    இத்தனை இருந்தும் எப்படி இத்தனை அக்கிரமங்கள் நிகழு

    கின்றன. ?

    ஒரு பீட்சாவுக்கு ஆர்டர் கொடுத்தால் அரை மணியில்  பீட்சா நம் இல்லம் தேடி வந்து விடுகிறது.

    அவதியுறும் பெண்மைக்குப் பாதுகாப்பு  தர அரை மணி  நேரம் போதாதா?  என்று வினா எழுப்புகிறார் கட்டுரையாளர்.

    அரசாங்கம்   இதற்குத் தனி ஏற்பாடு செய்ய வேண்டும்  அவசரகால  உதவியாக ஏதாவது ஒரு ஏஜன்ஸியை  ஏற்படுத்த வேண்டும் என்கிறார் அவ்ர்.

    ஒரு கதை உண்டு.

    ஒரு தவளையை ராமபிரானின் வில் அழுத்தி கொண்டிருந்ததாம்

    அதை உணர்ந்த ராமர் தன் வில்லை விலக்கிக் கொண்டு தவளையை பார்த்துக் கேட்டாராம்   ஏன் முன்பே நீ என்னிடம் முறையிடவில்லை?

     தவளை பதில் சொல்லியதாம்

     எனக்கு யாராவது துன்பம் தந்தால்  ராமா  என்று அழைப்பேன்

    ஆனால் அந்த ராமனாலேயே எனக்குத் துன்பம் ஏற்பட்டால் யாரை அழைப்பேன்?

    பல தகுதிகள் இருந்தும் திறமை இருந்தும் தன் திறமைகளைப் பெண்களால் முழுமையாக வெளிக் காட்ட முடியாமல் போவதின் காரணம் அவர்கள் குடும்ப சூழ்நிலைகளே

    குடும்ப வன்முறையால் பெண் இனம் அழிந்து கொண்டிருக்கிறது.

    வறுமையும் விரக்தியும்  அச்சமும் ஆட்க் கொண்ட நிலையில் அவர்களால் தம் இலக்கை  அடைய முடிவதில்லை.

    தவிர தற்கால நவநாகரீகப் போக்கும் போலி விளம்பரங்களின்  ஆதிக்கங்களும் இவர்களைத் திசைமாறச் செய்கின்றன.

    சிகப்பழகு தான் அழகு எனக் கூறும் விளம்பரங்கள்  முகச் சுருக்கம் இல்லாமல்  இருக்க செய்து கொள்ளப்படும் பொட்டக்ஸ் சிகிச்சை பற்றிய அறிவிப்புக்கள் அரை குறை ஆடைகளும் குட்டைப் பாவாடைகளும் இது தான் நாகரீகம் எனப் பறைசாற்றும் விளம்பரங்களும் பெண்மையின் அழகை ஜட்டி தெரிய  கீழே இருந்தபடி படம் பிடிக்கும் காமிராக் கோணங்களும்

    இவைகள் எல்லாமே பெண்மையைப் பெருமையைப் படுத்தவில்லை

    காதலர் தினத்தன்று பப்புக்குப் போய் பெண்கள் பீர் அருந்துவது  நாகரீகமல்ல

    சரிநிகர் சமானம் என்பது இதுவல்ல என்பதைப் பெண்களும் உணரவேண்டும்

    கணினியை திறந்தால் அது நம்மை டேட்டிங்கிற்கு அழைக்கிறது.

    தனிமையாக இருப்பவர்களுக்கு ஜோடி சேர்க்கிறது.

    நல்ல விஷயங்கள் எத்தனையோ கணினியில் இருக்க நாம் தேர்ந்ததெடுப்பது இதைத் தான்.

    பேஸ் புக்கில் ஆரம்பிக்கும் நட்பு கடைசியில் நாசமாகி தற்கொலைக்கு வித்திடுகிறது இது அறிவியல் வளர்ச்சி அல்ல அறியாமையின் தளர்ச்சி

    நடனப் போட்டி என்ற பெயரில் முன் பின் அறிமுகம் இல்லா  சிறுமிகள்  சிறுவர்களுடன் ஆட வைக்கப்படுகின்றனர்.

    பெற்றோர்களும் அதைப் பார்த்து ஆனத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

    அசிங்கமான அசைவுகள் ஆபாசப் பாடல்கள்  அர்த்தம் புரியாமலே ஆடும் இளம் சிறார்கள் பெற்றவர்களுக்குக் கூடவா அர்த்தம் தெரியாது.?

    ஒரு  கேரள நடிகை தன் பிரசவத்தை  நேரடி ஒளிபரப்புச் செய்ய

     டி வி சேனல்களுக்கு  அனுமதி அளிக்க பாவம் அந்தச் சேனல்காரர்கள்  கையில் வீடியோ காமிராக்களுடன் அவருக்கு பிரசவ வலி எடுக்கும் நேரத்திற்காகக் காத்திருந்தனர். பாவம் அவர் கணவருக்குக் கூட இல்லாத அக்கறை  புகைப் பட நிபுணர்களுக்கு

      காரணம்…?பணம் மணி துட்டு

    கடத்தல் கதையைச் சொல்லித் தரும் திரைப்படங்கள் அதைக் கடைப்பிடிக்கும்  மனிதர்கள்

    பாட்டு இல்லாத சினிமாக்கள் கூட வரலாம் பாட்டில் இல்லாத சினிமாக்கள் இல்லை

    இது நாகரீக வளர்ச்சியா? நச்சுத் தன்மை  வளர்ச்சியா?

    இந்த நச்சுத்  தான் சமுதாயத்தில் புறையோடி பாலியல் வன்முறைக்கு வித்திடுகிறது.

    அந்த்க காலப்பள்ளிகளில் மாரல் சயின்ஸ் என்றொரு வகுப்பு உண்டு.

    நல்ல நல்ல கருத்துக்களை கூறும் வகுப்பு

    இப்போது கூறுவதற்கும் ஆள் இல்லை கேட்கவும் காதுகள் இல்லை

    குறிப்பாக இளைய சமுதாயம்

    பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் வருவது போல்

    ஆடை குலைவுற்று நின்றாள்.

    ஆவெனத் துடித்தழுதாள்  வெறும்

    மாடு நிகர்த்த துச்சாதனன் 

    மைக்குழல் பற்றி இழுத்தான்

     என்பது போல்  இப்போது துச்சாதனர்கள் அதிகமாகி விட்டனர்.

    பெண் அடிமைக்கு எதிராக முப்பதுகளில் பாரதி குரல் கொடுத்தான்.

    மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்றான்.

    நாம் அர்த்தம் புரிந்து கொள்ளாமல் பெண்களைக் கொளுத்திக் கொண்டிருக்கிறோம்

    நாம் கட்டப் பஞ்சாயத்துப் பண்ணிக் கொண்டிருக்கிறோம்

    வார்ட் பாயால் கற்பழிக்கப் பட்ட பெண் கோமா நிலைக்குத் தள்ளப் பட்டு கருணைக் கொலைக்கும் மறுப்பு கூறப்பட்டு மருத்துவமனையின் தாதிகளால் பல வருடங்கள் பராமரிக்கப் பட்டு இன்னமும்  நடைப் பிணமாய் உயிர் வாழ்ந்து கொண்டிக்கிற அவரைப்போல்  அபலைப் பெண்கள்  இன்னும் எத்தனை பேர்..

    ஆசிட் வீசப்பட்டு அநியாமாய்  பலியான வித்யாக்களும். நிர்பயாக்களும்  எத்தனை பேர்..

    ஐந்து வயதிலும்  பத்து வயதிலும் பள்ளியில் படிக்கும் மாணவிகள் கற்பழிக்கப் படுகிற கொடுமை

    கற்புக்கு அர்த்தம் கூடத்  தெரியாத அந்தப் பிஞ்சு மலர்களைக் கசக்கிப்போட  எப்படி மனம் வருகிறது?

    காரணம்,,,? குடி வெறி…?

    நாமும் இந்தச் சமுதாயத்தில் தான் வாழ்ந்து  கொண்டிருக்கிறோம்.

    ஒரு செய்தி உண்மைச் செய்தி  தில்லியில் நடந்தது.

    கணவன் மனைவி இருவர் ஒரு ஹோட்டலில்   அறை எடுத்துத் தங்க

    கணவன்  தன் வேலை நிமித்தம் வெளியே செல்ல

    அரைக்கு வந்த அட்டண்டர் பையன்  தனியாக இருக்கும் அந்தப் பெண்ணிடம் பலாத்காரம் செய்ய

    உதவி கேட்டு அந்தப் பெண் கதற

    பக்கத்து அறைக்காரர் ஓடி வர

    தனக்கு உதவி கிடைத்ததென்று அந்தப் பெண் மகிழ்ந்த நேரத்தில்  அந்தப் பெண்ணுக்குக் கிடைத்த உதவி என்ன தெரியுமா  ?

    மேற்படி மனிதரும்  தன் வாய்ப்புக்காக க்யூவில் காத்திருக்கிறார்.

    என்ன  கொடுமை இது ?

    இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன ?நாம் மனிதாபிமானத்தை இழந்து விட்டோம்.

    பெண்ணின் பெருமை எல்லாம் மேடைப் பேச்சோடு சரி என்ற நிலைக்கு வந்துவிட்டோம்

    பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எல்லாத் துறைகளிலும் பரவிக் கிடக்கிறது.

    அவர்களின் வறுமை இயலாமை குடும்பச் சூழ்நிலை  இதை வைத்து அவர்கள் சூறையாடப் படுகிறார்கள்.

    மனம் ஆரோக்கியமான இருந்ததால் செயலில்  நேர்த்தி வரும்.

    அந்த  ஆரோக்கியம் சமுதாயத்திலும்  எதிரொலிக்க வேண்டும்

    தனி மனித சுதந்திரம் சுற்றுப் புறத்தையும்  செம்மைப் படுத்த வேண்டும்

    நினைவு நல்லது வேண்டும் என்று பாரதி கேட்டதும் இதைத் தான்.

    இது பெண்கள்  மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல.

    நாட்டுப் பிரச்சனை

    சமுதாயப் பிரச்சனை

    அகலிகைக்கு சாப விமோசனம் கிட்டியது பழைய கதை

    இன்று காத்திருக்கும் பெண்களுக்கு சாப விமோசனம் கிடைக்காது.

    காரணம்,,,?அவள் எதிரே வருவது ராமர் பாதங்கள் அல்ல

    ராவண பாதங்கள்

    இவளுக்குக் காத்திருக்க நேரமும் இல்லை

    நளாயினியைப் போல்  சூரியனை உதிக்காதே என்று  சாபமிட தவ வலிமையும் இல்லை

    அதனால் தான் இவளுக்குச் சமுதாயப் பாதுகாப்பு தேவை

    அரசாங்கத்தின் அரவணைப்புத் தேவை

    சக நண்பர்களின்  ஒத்துழைப்புத் தேவை

    சட்டத்தால் மட்டுமே இவளுக்குப் பாதுகாப்புக் கிடைக்காது

    இது  நாம் இழந்துவிட்ட மனிதாபிமானத்தின்  பிரச்சனை

    நான் இந்தியன் என்று பெருமைப் பட்டுக் கொள்ளும் போது

    நான் நல்ல மனிதன் பாரதமாதா கி ஜெய் என்று என் நாட்டைத் தாயாக வணங்குவதைப்  போல்

    பெண்கள் அனைவரையும்  (மனைவி நீங்கலாக) என் தாயாக சகோதரியாக  வணங்குவேன் என்று ஒவ்வொரு ஆணும் சபதம்

    எடுத்துக் கொண்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.

    அன்று தான் உண்மையான பெண்கள் தினம்

    பெருமைக் குரிய தினம்.

    பெண்கள் உலகின் கண்கள் என்பார்கள்.

    அந்தக் கண்களில் காட்டிராக்ட் வந்திருக்கிறது.

    தக்க காலத்தில்  உரிய நேரத்தில் மருத்துவம் பார்க்க வேண்டும்

    இல்லையென்றால்  குருட்டுப் பெண்ணின் வறட்டுப் பெருமையைத் தான் நாம் பேசிக் கொண்டிருப்போம்.

    வாழ்க பெருமை

    வாழ்க  பெண்கள் தினம்

    *******************************************************

    Share
  • மகளிர் அடைந்துள்ள ஏற்றங்களும், எதிர்நோக்கும் மாற்றங்களும்!

    மேகலா இராமமூர்த்தி

    மகளிர் தமது அடிப்படை உரிமைகளை அடைவதற்கும், வாழ்வில் சந்தித்த பல்வேறு அவலங்களை அகற்றுதற்கும் பெருமளவில் போராட்டங்களை நடத்தவேண்டிய சூழல் சென்ற நூற்றாண்டில் நிலவியது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்ற அம்மையார் (a freedom fighter, significant women activist and a social reformer) பெண்களுக்கெதிரான தேவதாசி முறையை ஒழித்துப் பள்ளியறைப் பதுமைகளாக இருந்த பெண்கள் பள்ளிக்கூடங்களில் கல்வி கற்பதற்கு வழிகோலினார். பகுத்தறிவுப் பகலவனான தந்தை பெரியார் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் நடத்தப்பட வேண்டும்; அவர்தம் விருப்பங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று கொள்கை முழக்கமிட்டார்.

    ’பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!

    பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!’ என்று பெண்மையை வாழ்த்திப்பாடி அவர்களை நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட புதுமைப் பெண்களாய் வாழ வலியுறுத்தினான் மானுடம் போற்றும் மாகவி பாரதி!

    ’கல்வியில் லாத பெண்கள்
    களர்நிலம் அந்நி லத்தில்
    புல்விளைந் திடலாம் நல்ல
    புதல்வர்கள் விளைதல் இல்லை!’
    என்றான் புரட்சிக்கவி.

    களர் நிலங்களாக இருந்த பெண்களின் தளர்நிலை இன்று வெகுவாக மாறியுள்ளது எனலாம். கல்வியெனும் விதையால் அறிவுப்பயிர் செழித்து வளர்ந்து சிந்தனைமலர்கள் மணம்வீசி வெற்றிக்கனிகளை எட்டிப்பறித்து வருகின்றனர் இன்றைய பெண்கள்! பள்ளிகளும் கல்லூரிகளும் ஆண்களுக்கே ஏகபோக உரிமையாய் இருந்ததுபோக இன்று ’எங்கெங்கு காணினும் சக்தியடா!’ என்று ஆனந்தக் கூத்தாடும் வகையில் சக்தி வடிவங்களான பெண்கள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அதிக அளவில் பயின்று வருகின்றனர். அதுமட்டுமா? ஆண்களைக் காட்டிலும் மங்கையர் திலகங்களே தேர்வுகளிலும் அதிக விழுக்காட்டில் தேர்ச்சி பெறுகின்றனர் என்கின்றன புள்ளி விவரங்கள்.

    இல்லத்தரசி என்ற பட்டத்தோடு பெயரளவில் ’அரசியாய்’ உண்மையில் அடுக்களை துடைத்தும், படுக்கையை விரித்தும் வீட்டினர் அனைவர்க்கும் அடிமையாய் வா(தா)ழ்ந்து வந்த பெண்கள் இன்று நாட்டையே ஆள்கின்றனர்! சந்திரனைக் காட்டிக் குழந்தைக்குச் சோறூட்டிக்கொண்டிருந்த மகளிர் இன்று சந்திர மண்டலத்திற்கே சென்று வருகின்றனர். அன்ன நடையால் வீட்டை மட்டுமே அளந்து கொண்டிருந்தவர்கள் இன்று வானை அளக்கின்றனர்; கடல் மீனை அளக்கின்றனர்.

    அலுவலகங்களிலும், ஆராய்ச்சிக் கூடங்களிலும், கணினி நிறுவனங்களிலும், கார்பரேட் கம்பெனிகளிலும் அற்புதமாய்ப் பணியாற்றி வருகின்றனர் இன்றைய பெண்கள் என்பதை எண்ண எண்ண இனிக்கவே செய்கின்றது! வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர்கள் இன்று தலைகுனிவைச் சந்தித்துவருவது மகளிர்க்கு மட்டற்ற மகிழ்ச்சி தருவதாய் உள்ளது.

    இவ்வாறு பெண்களின் முன்னேற்றமும் வளர்ச்சியும் இந்த 21-ஆம் நூற்றாண்டில் கணிசமான அளவில் உள்ளது என்றபோதிலும், அவர்களின் வெற்றியைக் குலைக்கவும், நிம்மதியைக் கெடுக்கவும், நல்வாழ்வை நாசமாக்கவும் நடைபெற்றுவரும் முயற்சிகளுக்கும், சதிகளுக்கும் பஞ்சமேயில்லை.

    வன்கொடுமைகள், பாலியல் தொந்தரவுகள் போன்றவற்றைப் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பெண்களும், அலுவலங்களில் பணிபுரியும் பெண்களும் அதிக அளவில் சந்தித்துவருகின்றனர். இத்தகைய கொடுமைகளால் உடலாலும், உள்ளத்தாலும் பாதிக்கப்படும் பெண்களில் சிலர் தற்கொலை செய்துகொள்வதும் தொடர்கதையாகி வருவதைப் பத்திரிகைகள் தினமும் பத்தி பத்தியாய் வெளியிடுகின்றனவே!

    இத்துணைப் பிரச்சனைகளுக்கு இடையிலும் விடாமுயற்சியுடன் தளராது பணியிடங்களில் உழைக்கும் பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரான அங்கிகாரமும், பதவி உயர்வும் கிடைப்பதில்லை என்பது கசப்பான உண்மையாகும். ஓரளவிற்குமேல் பெண்கள் உயர்பதவிகளுக்குச் செல்வதை ஆணாதிக்கச் சமுதாயம் பல்வேறு வகைகளில் தடைசெய்கின்றது; அனுமதிக்க மறுக்கின்றது. ’Glass Ceiling’ எனும் கண்ணுக்குத் தெரியாத இந்தத் தடுப்புச்சுவர் பெண்களின் உயர்வுக்கும் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய முட்டுக்கட்டையாய் இருப்பது வேதனையளிக்கின்றது. அதுபோல் ஒரே வேலையைச் செய்கின்ற ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே அளவிலான ஊதியமும் (சில இடங்களில்) வழங்கப்படுவதில்லை. தினக்கூலித் தொழிலாளர்களிடையே ’gender pay gap’ எனும் இவ்வூதிய வேற்றுமையை இன்றும்  நாம் கண்கூடாகக் காணமுடியும். இவையெல்லாம் பெண்களின் வளர்ச்சி கண்டு பொறுக்காத, அழுக்காறு மிகுந்த ஆண் அதிகாரவர்க்கத்தின் வேலையே என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை அல்லவா!

    வெளியில் பெண்களுக்கு இழைக்கப்படும் தீங்குகளும் தொல்லைகளும் ஒருபுறம் என்றால்….மறுபுறம் வீடுகளில் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் அவற்றிற்குச் சற்றும் குறைந்தவையல்ல. திருமணமான பெண்களில் சிலர் புக்ககத்தினரின் நாகரிகமற்ற பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் பொறுமையோடு தாங்கிக்கொள்ளவேண்டியுள்ள அவலநிலை இன்றும் நீடிக்கின்றது. திருமணமான உடனே பெண் பிள்ளைபெறத் தவறினால் சொல்லவே நாக்கூசும் ‘மலடி’ என்ற பட்டத்தை எந்தப் பல்கலைக்கழகத்திடமும் அனுமதி பெறாமல் இந்தச் சமூகம் அவளுக்குச் சூட்டுகின்றது! அதுபோக, குடும்பத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் அடுத்தடுத்துப் பெண் குழந்தைகள் பிறந்துவிட்டாலோ….அந்தப் பெண்ணுக்குக் கிடைக்கும் வசவுகளுக்கோர் அளவில்லை.

    மருத்துவ உண்மைகள் அனைத்தையும் தொலைக்காட்சிப் பெட்டிகள் வீட்டின் வரவேற்பறைக்கே வந்து வழங்கிவிட்டுப் போகின்ற இந்த நவீன யுகத்தில் மெத்தப் படித்ததாய் மார்தட்டிக்கொள்ளும் இன்றைய சமூகத்தினர் குழந்தைப்பேறு வாய்க்காமல் போவதற்கும், பெண் குழந்தைகள் தொடர்ந்து பிறப்பதற்கும், பெண்ணை மட்டுமே குறைசொல்லும் மடமையை, சிறுபிள்ளைத்தனத்தை எங்கு கற்றார்கள்?? ஆடவர்க்கென்று ஒரு (பொன்) தராசும் பெண்களுக்கென்று வேறொரு (மண்) தராசும் வாங்கி எடைபோடும் அற்புதப் பயிற்சியை எங்கு பெற்றார்கள்??

    இவையல்லாமல், குடியைக் கெடுக்கும் குடிக்கு அடிமையான கணவன்மார்களை மணந்துகொண்ட பெண்களின் துயர நிலையோ வார்த்தைகளின் விவரணைகளுக்கு அப்பாற்பட்டது!!

    அடுத்து, வரதட்சணை என்ற பெயரில் நடத்தப்படும் ’பணக்கொள்ளை’ இன்னமும் ஒழிந்தபாடில்லை; சொல்லப்போனால் அதிகரித்திருக்கின்றது என்பதே இன்றைய உண்மை நிலை. இதனால் வசதியில்லாத பெற்றோர்பலர் தங்கள் பெண்களின் எதிர்காலத்தை எண்ணி எண்ணிக் கலங்குகின்றனர்.

    ’பெண்ணியம்’ என்ற கொள்கை இப்பொழுது பலராலும் பரவலாகப் பேசவும் விவாதிக்கவும்படுகின்றது. ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளைப் பெறுவதும், வேலை வாய்ப்புக்களிலும், ஊதிய அளவுகளிலும் சமநிலை காண்பதும் அதன் அடிப்படைக் கோட்பாடுகள் ஆகும். அத்தோடு நில்லாமல், பெண்களின் சிந்தனைச் சுதந்திரத்தைத் தடைசெய்து அவர்களின் விருப்பத்திற்கெதிரான செயல்களை அவர்கள்மீது திணிப்பதையும், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளையும் பெண்ணியம் கடுமையாகக் கண்டிக்கிறது. இது வரவேற்கத்தக்க ஒன்றாகும்!

    இத்தகைய பெண்ணியச் சிந்தனைகள் இன்று எந்த அளவிற்குச் செயல்வடிவம் கண்டிருக்கின்றன என்பதை நடுநிலையான பார்வையோடு சிந்தித்துப் பார்த்தால் பெண்களின் நிலை இன்றைய சமூகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ளது என்றபோதிலும் இவ்வளர்ச்சி போதுமானது என்று சொல்வதற்கில்லை. அரசியலிலும், பொதுப்பணிகளிலும் இப்போதும் பெண்களின் பங்களிப்பு மிகக்குறைவே. இந்நிலை மாறவேண்டும். அரசியலிலும் பொதுப்பணிகளிலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் ஈடுபடவேண்டும். ’பெண்கள் தங்கள் உரிமைகளைத் தவறாது பெறுவதற்கு அவர்கள் தயக்கமின்றிப் பொதுப்பணிகளில் ஈடுபடவேண்டும்!’ என்று தந்தை பெரியார் கூறியதை நாம் இவ்வேளையில் நினைவுகூர்வது நல்லது!

    மேடைகளில் மட்டும் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுப்பதையும், வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக அமர்ந்துகொண்டு பெண்களின் நலன் குறித்து விவாதிப்பதையும் விடுத்துப் பெண்கள் ஒன்றுகூடி வீதிகளில் போராட வேண்டும். ‘கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்’ என்றோர் பழமொழி உண்டு. நாட்டின் எந்த மூலையில் எந்தப் பெண்ணுக்குப் பிரச்சனை என்றாலும் எல்லாப் பெண்களும், பெண்ணுரிமை அமைப்புக்களும் ஒன்றுபட்டுத் தட்டிக்கேட்க வேண்டும், எதிர்ப்புக்குரல் எழுப்பவேண்டும். கிராமங்களுக்கும், நாட்டின் மூலை முடுக்குகளுக்கும் சென்று பெண்ணுரிமை குறித்தும், அவை மறுக்கப்படும்போது மேற்கொள்ளவேண்டிய சட்ட வழிமுறைகள் குறித்தும் மகளிர் அமைப்புக்கள் கிராமப்புறப் பெண்களுக்குக் கற்பிக்கவேண்டும்.

    அணு மிகச்சிறியதுதான்; ஆனால் அது பிளக்கப்படும்போது வெளிப்படும் ஆற்றல் அளப்பரியது! அதுபோல் பலவீனமானவர்கள் (weaker sex) என்ற எண்ணத்தில் அநீதிகளுக்கு உட்படுத்தப்படும், அவலங்களுக்கு ஆட்படுத்தப்படும் பெண்ணினமும் ஒன்றுதிரண்டால் ‘ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி!’ என்று பாரதி எக்காளமிட்டதுபோல் மீண்டும் ஓர் யுகப்புரட்சியை நாடு சந்திக்கும் நிலை வரலாம். எனவே சமுதாயம் பெண்களைச் சுயமாகச் சிந்தித்துச் செயற்படவும், சுயமரியாதையோடு வாழவும் அனுமதிக்க வேண்டும். அதுபோல், பெண்களும் தம் எதிர்காலத்தை வளமானதாக மாற்றுவதற்கான முயற்சிகளில் தாமே ஈடுபடுவதும், அதற்கு ஏற்படும் தடைகளைத் தகர்த்துத் துணிச்சலோடு முன்னேறுவதும் அவர்களுக்கு ஏற்றத்தையும் எதிர்நோக்கும் மாற்றத்தையும் உறுதியாகத் தரும் என்பதில் ஐயமில்லை.

    ’உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்
    ஓது பற்பல நூல்வகை கற்கவும்
    இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
    யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
    திலக வாணுத லார்நங்கள் பாரத
    தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்
    விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
    வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்’

    என்ற முண்டாசுக் கவிஞனின் முத்தான வரிகளை மனத்தில் கொண்டு அயராது உழைத்தால் இந்தப் பாரையே வென்று சரித்திரம் படைப்பர் பாவையர்!

    Share
  • பெண் சுதந்திரம் எதுவரை?

    தஞ்சை வெ.கோபாலன்

    பெண்ணுரிமை, ஆண் பெண் சமத்துவம் போன்ற கருத்துக்கள் பல வடிவங்களில் விவாதிக்கப்படுகின்றன. பெண்ணியம் என்பது ஆண்களுக்குச் சமமானது, எந்த விதத்திலும் பெண்கள் ஆண்களுக்குக் குறைந்தவர்கள் இல்லை என்பது போன்ற கருத்துக்கள் இன்று நிலைபெற்றுவிட்டது. இன்னும் சில நேரங்களில் நவீன யுகப் பெண்கள் மேடைகளில் முழங்கும் கருத்துக்களைக் கேட்கும்போது இந்த நாட்டில் இன்னமும் பெண்கள் கவணைகளில் அடைக்கப்பட்ட மாடுகள் போல அடைக்கப்பட்டிருக்கிறார்களோ, எந்தவித சுதந்திரமும் இவர்களுக்கு இல்லையோ என்றுகூட கவலை கொள்ள வைத்து விடுகிறது.

    ஆனால் நாட்டு நடப்பைக் கூர்ந்து கவனித்தால் நிலைமை அப்படி அல்ல என்பதும், சில பெண்ணியத் தலைவர்கள் எனச் சொல்லிக் கொள்வோர் இப்படியெல்லாம் பேசுவதன் மூலம் தாங்கள் ஒரு சுதந்திரப் பறவைகள், பெண்களின் முன்னேற்றத்துக்காகத் தங்களைச் சர்வபரித்தியாகம் செய்து கொண்டவர்கள் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தவே இப்படிப் பேசுகிறார்கள் என்று தோன்றுகிறது. இவர்கள் பேச்சில் இருக்கும் உண்மைகள் என்ன, இவர்கள் பேசும் சுதந்திரம் என்பது எதுவரை ஆண், பெண் பேதங்கள் எதிலெல்லாம் இருக்க வேண்டும் போன்ற கருத்துக்கள் வரையறை செய்யப்படவேண்டும்.

    பெண் கல்வி வளர்ச்சியடைந்து உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில், கம்ப்யூட்டர் யுகப் பெண்கள் ஆணுக்குப் பெண் சமம் என்பதில் மட்டுமல்ல, சில நேரங்களில் அவர்களைக் காட்டிலும் அதிக நாகரிகத்தில் முன்னேறியவர்கள் என்றும் காட்டிக் கொள்கிறார்கள். மென்பொருள் துறையில் பணியாற்றும் பெண்கள் பெரும்பாலும் தங்கள் வீட்டைவிட்டு வெளிவந்து விடுதிகளில் அல்லது சிலர் கூடி ஒரு வீட்டை எடுத்துக் கொண்டு வாழ்கிறார்கள். விடுமுறை நாட்களில் ஆண் பெண் பேதமின்றி இவர்கள் ஓட்டல், சினிமா, பார்ட்டி என்றெல்லாம் சென்று தொட்டு விளையாடி பிறர் முகம் சுளிக்கும்படியும் நடந்து கொள்கிறார்கள். இந்த உண்மையை யாராவ்து சுட்டிக் காட்டினால் அவர்கள் ‘பத்தாம் பசலிகள்’, ‘நாகரிகம் தெரியாதவர்கள்’ என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.

    இன்று தி நியு இந்தியன் எக்ஸ்பிரசில் ஒரு செய்தி. கோவையில் எட்டிமடை எனும் இடத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பயிலும் இரட்டையர்களான இரு மாணவர்கள் தங்கள் கல்லூரியில் ஜூனியர் வகுப்பில் படிக்கும் ஒரு கேரளத்துப் பெண்ணுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார்கள். அவர்கள் வழக்கில் சொல்ல வேண்டுமானால், இவர்கள் மிகவும் சோஷலாக பழகி வந்திருக்கிறார்கள். இதைத் தவறு ஆண் பெண் பழக்கத்திலும் ஒரு எல்லைக்கோடு உண்டு என்று யாராவது சொன்னால் அவர்களை இவர்கள் நார் நாராகக் கிழித்துத் தொங்க விட்டுவிடுவார்கள். இந்த இரட்டையர்கள் அந்தப் பெண்ணுடன் ஒரு திரைப்படம் பார்க்க ஒன்றாக இன்னொரு பெண்ணுடனும் சென்றிருக்கிறார்கள். திரைப்படம் முடிந்த நிலையில் இன்னமும் பகல் பொழுது இருந்தமையால் அந்த இரட்டையர்கள் அந்த கேரளத்துப் பெண்ணை இடையர்பாளையம் எனுமிடத்திலுள்ள தங்கள் வீட்டுக்கு அழைத்திருக்கிறார்கள். இவர்கள்தான் சோஷலாகப் பழகுபவர்களாயிற்றே, இரண்டு இளைஞர்கள் ஒரு பெண்ணைத் தங்கள் வீட்டுக்குக் கூப்பிட்டது சரியா, அப்படிக் கூப்பிட்டவுடன் அந்தப் பெண் அவர்களுடன் போவது சரியா என்றெல்லாம் யாரும் கேள்விகள் கேட்டுவிடக் கூடாது, அது பெண்ணிய உரிமைகளுக்கு எதிரானது.

    அந்தப் பெண்ணும் அவர்கள் அழைப்பை ஏற்று அவர்களுடன் இடையர்பாளையம் சென்று அவர்கள் வீட்டில் அந்த இளைஞர்கள் கொடுத்த பானத்தை அருந்தியிருக்கிறாள். இதில் கொடுமை என்னவென்றால், அந்த பானத்தில் மயக்க மாத்திரை கலக்கப்பட்டிருந்தது. அவள் நினைவு இழந்தாள், அவ்விருவரும் அந்தப் பெண்ணை மாற்றி மாற்றி அனுபவித்திருக்கிறார்கள், பின்னர் அவளுக்கு நினைவு திரும்பியதும் அவளை விடுதியில் கொண்டு போய் விட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அந்தப் பெண் என்ன செய்தாள் என்பது தெரியவில்லை. அவள் அதன்பின் துபாயில் இருக்கும் தங்கள் பெற்றோருக்குத் தகவல் கொடுத்து அவர்கள் வந்து போலீசில் புகார் கொடுத்து அந்த இருவரில் ஒருவன் கைது செய்யப்பட்டிருக்கிறான். மற்றொருவன் தலைமறைவாகி யிருக்கிறான்.

    இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல செய்திகள் உண்டு. முதலில் பெண்ணிய உரிமைகள் பேசும் மாதரசிகள் இதுபோன்ற சோஷல் பழக்கங்களை ஆதரிக்கிறார்களா என்பதைச் சொல்ல வேண்டும். அவர்கள் விரும்பும் பெண் விடுதலை, அல்லது பெண்ணுரிமை என்பது எதுவரை என்பதை விளக்க வேண்டும். மகாகவி பாரதி பெண் விடுதலை பற்றி அதிகம் பேசுவான். அவன் கருத்து இதுபோன்ற சுதந்திரத்தை ஆதரிப்பது அல்ல. நேர்மையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத போக்கும், நேர்மை தவறாத, பாதை மாறாத பண்பும்தான் அவன் சொன்ன பெண் விடுதலை. இந்த கோவை சம்பவத்தில் நடந்தவைகளைக் கொண்டு பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாடங்கள் அனேகம்.

    வயதில் தந்தை அல்லது தாத்தா போல இருந்தாலும், ஆண் ஆண்தான். அவனிடம் பழகும் இளம் பெண்கள் ஒரு எல்லைக்கோட்டைத் தாண்டுவது என்பது அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆண் எந்த வயதினனாக இருந்தாலும் மனம் கோணலாக இருக்குமாயின் நிச்சயம் அவன் சமயம் வாய்க்கும்போது வக்கிரச் செயல்களில் இறங்குவான். அதுபோலவே நேர்மை எண்ணமும், பண்பாட்டில் நம்பிக்கையும் கொண்ட ஆண் இளம் வயதினனாக இருந்தாலும், இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள், தனிமையில் ஒரு இளம் பெண்ணோடு இருக்கும் நிலையிலும் அவன் நிலை தடுமாற மாட்டான். எல்லா ஆண்களும் தவறு செய்பவர்கள் அல்ல, அது போலவே எல்லோருமே அயோக்கியர்களும் அல்ல. இந்த பேதத்தை இத்தனை காலம் பழகிய பின்னும் ஒரு பெண்ணால் புரிந்து கொள்ள முடியவில்லை, இரு ஆண்களுடன் சினிமாவுக்குப் போகிறாள், அவன் கூப்பிட்டவுடன் அவன் வீட்டுக்குப் போகிறாள் என்றால் அது பெண்களின் சுதந்திரப் போக்கைக் காட்டுகிறதா, பேதைத் தனத்தைக் காட்டுகிறதா. நெஞ்சு கொதிக்கிறது இந்த நிலைகெட்ட மனிதரை நினந்து விட்டால். பட்டது போதாதோ, பெண்ணிய சிந்தனையாளர்கள் நல்லது செய்யாமல் போனாலும் போகட்டும், பெண்களைத் தூண்டிவிட்டு நாகரிகம், முன்னேற்றம் எனும் பெயரால் பலிகடாக்கள் ஆக்காமல் இருக்கட்டும்.

    Share
  • ராணி அப்பக்கா தேவி

    பார்வதி இராமச்சந்திரன்

    நம் நாட்டில், சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட எத்தனையோ வீரப் பெண்மணிகளை நாம் அறிவோம்!… ஆயினும் அவ்வளவாக அறியப்படாத சிலரின் வீர வரலாறுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களில் ஒருவரே, கர்நாடகாவின் கடற்கரையோரப் பகுதிகளில், ஒரு சிறு பிராந்தியத்தை அரசாண்ட ராணி அப்பக்கா தேவி..

    200701272171040116ம் நூற்றாண்டைச் சேர்ந்த அப்பக்கா தேவி, இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்ட வீராங்கனைகளுள் ஒருவர். போர்ச்சுகீசிய அரசாங்கத்தின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட தீரப் பெண்மணியாகிய இந்த ராணியைக் குறித்த வரலாற்றுப் பதிவுகள் அதிகம் இல்லை..ஆயினும் கிராமியப் பாடல்களில் இந்த ராணி இன்றும் வலம் வருகிறாள்.. வழி வழியாக, இந்த ராணியின் பெருமையை, பாடல்கள் வாயிலாக, அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்க்கிறார்கள் கர்நாடக மக்கள். ‘யக்ஷகானம்’ போன்ற கிராமியக் கலைகள் ராணியின் புகழ் பாடுகின்றன.

    இந்த ராணி, தன் வீரத்தினால், மக்களிடையே ‘அபய ராணி’ (பயமற்றவள்) என்று புகழப்படுகின்றாள்.

    இந்த ராணி, ‘துளுநாடு’ என்றழைக்கப்படும் கர்நாடக கடற்கரையோரப் பிராந்தியங்களில் அரசாண்ட  ‘சௌதா’ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.

    இவர்களின் தலைநகரம் ‘புட்டிகே’…’உல்லால் என்னும் பிரசித்தி பெற்ற துறைமுக நகரம், இரண்டாவது தலைநகராகவே அறியப்பட்டிருந்தது… ராணி அப்பக்கா, உல்லாலை மையமாகக் கொண்ட பிராந்தியத்தின் ராணியாகவே அறியப்படுகிறார். வரலாறும் இவரை ‘உல்லாலின் ராணி’ என்றே குறிப்பிடுகின்றது. இவரது காலம், ‘ஜான்சி ராணி’க்கு கிட்டத்தட்ட 300 வருடங்கள் முற்பட்டதென்று அறியப்படுகின்றது..

    இந்த ராணி, ஜைன மதத்தைச் சேர்ந்தவர்…ஆயினும் இவரது அரசாங்கத்தில், எல்லா மதத்தினருக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருந்தது.. மக்கள் நலனையே பெரிதும் மதித்து அரசாண்டவர் இவர். ஆகவே இவர் மக்களுக்குப் பிரியமான ராணியாகத் திகழ்ந்தார்.

    இளமைப் பருவம்:

    இளமையிலேயே மிகுந்த புத்தி கூர்மையும், சாதுர்யமும் பெற்றிருந்தார் அப்பக்கா.. போர்ப்பயிற்சிகள் பெற்று, வியூகங்கள் வகுத்து, படை நடத்துவதில் மிகுந்த திறமைசாலியென அறியப்பட்டார் இவர்.

    ‘அலிய சந்தானா’ (கேரளத்தின் மருமக்கள் தாயம் முறையை ஒத்தது) முறைப்படி, உல்லாலின் ராணியாக‌, தன் மாமா திருமலைராயனால் முடிசூட்டப்பட்ட இவருக்கு, ‘ ல‌க்ஷ்மப்ப‌ அரசா’ என்னும் அண்டை நாட்டு மன்னனோடு திருமணம் நிகழ்ந்தது.. விதி வசத்தால், அந்த மணவாழ்வு நீடிக்கவில்லை.. மீண்டும் உல்லால் வந்தார் அப்பக்கா. தனக்கு ல‌க்ஷ்மப்பா அளித்த நகைகளைத் திருப்பி அளித்து, மண உறவினைத் துண்டித்துக் கொண்டார்.  இதனால் கோபமடைந்த  ல‌க்ஷ்மப்பா, ராணியையும், அவளது அரசாங்கத்தையும் அழிக்க சபதமேற்று, அந்தச் சமயத்தில் ராணியை எதிர்த்த போர்ச்சுகீசியர்களுடன் நட்புறவு பூண்டான்.

    ராணி அப்பக்காவுக்கும் போர்ச்சுகீசியர்களுக்கும் வெளிப்படையான போர், கி.பி.1555ம் ஆண்டு துவங்கியது.. ராணி அப்பக்கா, கப்பம் கட்ட மறுத்ததே இதன் காரணமாகச் சொல்லப்படுகின்றது..

    கி.பி.1558ம் ஆண்டு, போர்ச்சுகீசியப் படை, மங்களூரைத் தாக்கி, கொடூரமான முறையில் போர் நிகழ்த்தி, ஆண், பெண் அனைவரையும் கொன்று குவித்து, நகரைக் கைப்பற்றியது… உல்லாலுக்கு குறிவைத்தது.

    கி.பி.1567ல், மிகக் கடுமையான போர் ஆரம்பமாகியது.. மிக அதிக அளவில், பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்பட்ட போதிலும், ராணி அதைத் தீரமுடன் எதிர்கொண்டார்.. எதிர்ப்பினை முறியடித்தார்.

    அதே வருடத்தில், ஜெனரல் பெய்க்ஸ்ஸோடோவின் தலைமையிலான படை, உல்லாலைக் கைப்பற்றி, அரண்மனைக்குள் நுழைந்தது.. ராணி, அங்கிருந்து தப்பி, ஒரு மசூதியில் தஞ்சம் புகுந்தார். அன்றிரவே, நம்பிக்கையான 200 வீரர்களுடன், அரண்மனையில் புகுந்து, ஜெனரல்  பெய்க்ஸ்ஸோடாவையும் 70 போர்ச்சுகீசிய வீரர்களையும் போர் புரிந்து  கொன்றார்.

    போர்ச்சுகீசியரை எதிர்க்க வேண்டுமென்பதற்காக, ராணி அப்பக்கா பீஜப்பூர் சுல்தானோடும், கோழிக்கோடு அரச குடும்பத்தினரோடும் உடன்படிக்கைகள் செய்து கொண்டார். அதன் காரணமாக, படையுதவியும் பெற்றார்.

    அக்னி வாணங்களைப் பயன்படுத்தி, போர் செய்யும் முறையில் வல்லவரான இவரை முறியடிப்பது போர்ச்சுகீசியருக்கு அத்தனை சுலபமாக இருக்கவில்லை.. இவர், நட்பு அரசர்களிடமிருந்து பெற்ற படையுதவியும் இவருக்குப் பெரும் பலமாக நின்றது. எனினும், இவரது போர்த்தந்திரங்களை,  இவரது கணவரே ஒற்றறிந்து போர்ச்சுகீசியருக்கு அம்பலப்படுத்தியதன் காரணமாக, இவர் இறுதியில் தோற்கடிக்கப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டார். இவர் சிறையிலும், அடக்கு முறைக்கு ஆட்படாமல் போரிட்டே மடிந்தார்.

    இந்த ராணியின் புகழ்பாடும் கிராமியப் பாடல்கள், இந்த ராணியின் இரு வீர மகள்களையும் சேர்த்தே போற்றுகிறது… மூவருமே ‘அப்பக்கா’ என்ற பெயரோடு அறியப்படுகின்றார்கள். மூவரையும் ஒருவராகவே கருதிப் பாடப்படும் நாட்டுப் பாடல்களும் உண்டு..

    உல்லாலில் ஒவ்வொரு வருடமும், ‘வீர ராணி அப்பக்கா உற்சவம்’ நடைபெறுகிறது..சாதனைப் பெண்களுக்கு ராணியின் பெயரால் விருது வழங்கி கௌரவிக்கிறது அரசு. பெங்களூரில் இந்த ராணியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

    தன் சொந்த வாழ்க்கையில் சங்கடங்கள் ஏற்பட்ட போதும், சோர்ந்து விடாது, விடாமுயற்சியுடன் அந்நியரை எதிர்த்து உயிர்விட்ட ராணி அப்பக்காவின் புகழ், என்றென்றும் மங்காது ஒளி வீசி நிற்கும்…

    அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!

    படத்துக்கு நன்றி:  http://www.hindu.com/2007/01/27/images/2007012721710401.jpg

    Share
  • சுதந்திர மகளிர் தினம்..!

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    unnamed

    மகளிர் தினம் …! கேட்பதற்கு நிறைவான வார்த்தையாக இருந்தாலும் சிறிது முரண்பாடாகத் தான் தோன்றுகிறது. அறிவுப்பூர்வமாகப் பார்த்தால் இதில் ஒரு விசேஷமும் இருப்பதாகத் தெரிவதில்லை. இது சும்மா மனதை மயக்கும் மாய வார்த்தை. அழும் பள்ளி சிறுமிகளுக்கு சாக்லேட் கொடுப்பது போலத் தான். ஒரு விதமான ஈசல் சந்தோஷம். தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் வித்தை. அப்படி என்ன தான் இருக்கிறது இந்த மகளிர் தினத்தில்?  வருடத்தின் ஒருநாள் மகளிர் தினம் என்றால் மீதம் உள்ள நாட்கள் மகளிருக்கு இல்லையா? அதன் குறிக்கோள் தான் என்ன? மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிறது என்று சொல்லிக்கொள்கிறோம். இத்தனை வருடங்களாகியும் மாறாத சூழல் இனி வரும் காலங்களில் மாறிவிடுமா?

    சர்வதேச அளவில் கூட  இத்தனை ஆண்டுகள் கழிந்தும் இன்னும் பூரண சுதந்திரம் மகளிருக்கு கிடைத்து விட்டதா என்பது கேள்விக் குறி தான். இது போன்ற எண்ணங்களை நாம் பரவலாக கேட்க முடிகிறது.

    செய்தித் தாளைத் திறந்தால் கூடவே நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் , 2 பெண்கள் கொலை, 5 பெண்கள் வன்முறையால் மானபங்கம் என்று பெண்கள் மீதான வன்முறைத் தாக்குதல் நீண்டு கொண்டே போகிறது. நாட்டில், ரோட்டில், வீட்டில், பள்ளியில், கல்லூரியில், மருத்துவமனையில் என்று அதிகப்படியான பெண்கள் தங்களின் வாழ்க்கையை நிம்மதியாக நடத்த மிகவும் சிரமப் படவேண்டியிருப்பது தான் நிதர்சன உண்மை. நாளுக்கு நாள் பெரும்பாலான பெண்கள் மனதாலும், உடலாலும் கஷ்டப் படுகிறார்கள். இன்றைய பெண்களுக்கு பாதுகாப்பு என்பது  துளியும் இல்லை என்பது தான் கண்கூடு. இதற்காக இந்த மகளிர் தினம் என்ன செய்யப் போகிறது. அது என்ன ஒரு அமைப்பா..? ஒரு திருநாள். நித்தம் திருவிழா கொண்டாட நினைக்கும் ஒரு வர்க்கத்தினருக்கு மட்டும் இது பொருந்தும். சமுதாயத்தில் உயர்ந்த இலட்சியங்கள் கொண்ட எத்தனையோ பெண்கள் எதுவும் செய்ய இயலாமல் சமூக விலங்குகளால் கைகள், கால்கள், கழுத்து , வாய் என்று பூட்டப்பட்டு இறுகிய நிலையில் இருக்கிறார்களே….அவர்கள் மகளிர் இல்லையா?

    அவலை நினைத்து உரலை இடித்த கதையாக, அவர்கள் இந்த மாய மான் தோற்றத்தில் மயங்கி ‘மகளிர் கொடியை உயர்த்திப் பிடித்தால் தெரியும் ‘அவளை அடித்து உரலில் கட்டிப் போட்டு’ விடுவார்கள்.

    சமத்துவம் ஒங்க வேண்டும். சமுதாயச் சீர்கேடுகள் அழிக்கப் பட வேண்டும். ஆண்களைப் பெண்கள் வாழ விட வேண்டும். பெண்களை ஆண்கள் வாழ விட வேண்டும். இதற்கெல்லாம் சட்டங்களும், திட்டங்களும் கொண்டு வரப்படல் வேண்டும். திருமணச் சந்தையில் பெண்ணைப் பெற்றவர்களுக்கும், பிள்ளையைப் பெற்றவர்களுக்கும் ஒரே சமமான நிலையில் பார்க்கப் பட வேண்டும். இது ஒரு சில இடங்களில் மாறி இருந்தாலும், இன்னும் சில கிராமப் பகுதிகளிலும், சின்ன டவுன், மற்றும் பல ஊர்களிலும் பழைய சம்பிரதாயப் படி தான் உயர்வு, தாழ்வு என்னும் கண்ணோட்டத்தோடு நடத்தப் படுவது தவிர்க்கப் பட வேண்டும்.இதற்கும் நாட்டில்  சட்டம் வர வேண்டும்.

    கண்டிப்பாக வரதட்ஷணை முற்றிலுமாக அழிக்கப் பட வேண்டும்.

    பெண்கள் தங்கத்தைத் தவிர்த்திடல் வேண்டும். பல அபாயங்களில் இருந்து அது அவர்களைக் காப்பாற்றும் என்ற மனப்பான்மையை ஒவ்வொரு மகளிரும் உணர வேண்டும்.

    சமுதாயத்தில் உயர் தட்டு பெண்டிருக்கு மட்டுமே இந்த மகளிர் தினம் ரோஜாப்பூவாக இருக்கும். மீதமுள்ள நடுத்தர வர்க்கப் பெண்களும் கீழ்தட்டு பெண்களும் அதனருகில் இருக்கும் முட்களாகத் தான் இந்த தினத்தை விமரிசிக்கிறார்கள். மாற வேண்டும். இந்த நிலை முற்றிலும் மாற வேண்டும். ஒரு பெண்ணைப் பெற்றவர், தன் பாசமுள்ள மகள் வீட்டை விட்டு வெளியே சென்ற பின்பு அவள் வீட்டுக்கு பத்திரமாக வந்து சேரும் வரையில் வயிற்றில் புளி கரைத்து கொண்டு தான் உட்கார்ந்திருப்பார்.வெளியில் சென்ற மனைவியோ, மகளோ, பேத்தியோ, வீடு வந்து சேரும் வரை ரோட்டில் அவளுக்கு பாதுகாப்பு என்பது குறைவு என்ற நினைவு அவருள் ஓடிக் கொண்டு தானே இருக்கும். இந்தியாவின் பல பகுதிகளில் இதே நிலைமை தான் தொடர்கிறது.

    சமத்துவம் பேசுவதெல்லாம் இங்கே சும்மா.பெண்களின் அதிகப்படியான சுதந்திரத்தை நிர்ணயம் செய்வது அவள் சம்பாதிக்கும் அதிகமான பணம் மட்டும் தான் காரணம்.இதற்கு நிறைய உதாரணங்கள் உங்களுக்கே தெரியும். இருதலைக் கொள்ளி  எறும்பின் நிலை தான் என்றும் பெண்டிரின் நிலை. தான் பிறந்த வீடும் தனக்கு சொந்தமில்லை. தான் புகுந்த வீடும் அவளுக்கு சொந்தமில்லை…என்று எப்போதும் மனதுக்குள் ஒரு பாதுகாப்பு இல்லாத நிலையில் தான் அவளது வாழ்வு ஆரம்பிக்கப் படுகிறது.

    எத்தனையோ பேர்கள் உடனிருந்து  மிகவும் கஷ்டப்பட்டு பெண்ணுக்கு அளிக்கப்படும் கொடுமையிலும் கொடுமையான ‘சதி’யை  நீக்கினார்கள். பெண் கல்விக்கு கைகொடுத்தனர். முன்னேற்றப் பாதை வகுத்து காண்பித்தனர். பெண்களுக்கு வழி விட்ட நல்லவர் அனைவருக்கும்  இந்த நாளில் நன்றி சொல்லலாம். இன்னும் ஒழிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது .

    மகளிர் சுதந்திரம் எனும் பெயரில் பெண்கள் செய்யும்  முறைகேடுகளும் கொஞ்ச நஞ்சமல்ல. பெரிய பெரிய நகரங்களில் அவர்களின் அதி மிகுதியான சுதந்திரப் போக்கால் ஏற்படும் குடும்ப இழப்புகள் நீதிமன்றங்களில் கோப்புக் குவியல்கள் சொல்லும்.

    இந்த உலகில் இருப்பது இரண்டு வர்க்கம். ஒருவரைச் சார்ந்து ஒருவர் என்று வாழும் போது ‘அன்பாக’ அச்சாணி இருந்தால் போதும்.

    அந்த பரஸ்பர நம்பிக்கையை ஒருவருக்கொருவர் அளித்துக் கொண்டால் குடும்பத்தில் அமைதி நிலவும்.இதை உணர்ந்து உணரச் செய்யுங்கள்.

    மகளிர் தினத்தில் முக்கியமாக  இன்றைய , இளைஞர்  சமுதாயத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பாதை மாறிப் போகிறார்கள். இவர்களுக்கு வாழ்வியல் நியதிகளை கற்றுத் தருவது நமது கடமையும் பொறுப்பும்.நாளைய இந்தியா சிறப்புற இன்றே இவர்களைக் காக்க வேண்டும்.விஞ்ஞானி அப்துல் கலாம் அன்று சொன்னதை மீண்டும் மீண்டும் மீள்பதிவு செய்வித்து நல்ல விஷயங்களை மூளைச் சலவை செய்த வண்ணம் இருந்தாலும் தவறில்லை. ஆரோக்கியமான இந்தியா இளைய சமுதாயத்தினரிடமிருந்து  உருவாக இன்றைய மகளிர் ஒவ்வொருவரும் ஆவன செய்யவேண்டும். இந்தியாவிலிருந்து மதுவும், புகையும் அடியோடு ஒழிக்க மகளிர் அனைவரும் மனிதச் சங்கிலியாய் ஒன்று திரள வேண்டும். அது ஒன்று இல்லாவிட்டால் போதும், எத்தனையோ குடும்பங்கள் புத்துணர்வு பெற்று சுவாசிக்கும்.

    நாளைய இந்தியா, கிராமப் பகுதிகளில் கூட பெண்கள் சுதந்திரமாக தனது கருத்துக்களை வெளியிடும் தைரியத்தோடு இருக்க வேண்டும்.

    சொல்வது போல சமூகத்தில் பல வகையான மனிதர்களை நான்கு பிரிவாகப் பிரித்துக் காட்டியிருக்கிறார்கள் பெரியவர்கள்.

    தன்னிடம் இருப்பதை பகிர்ந்து கொண்டு மகிழ்வோடு இருப்பவர்.

    தன்னிடம் மட்டும் இருக்க வேண்டும் இருந்தால் போதும் என்று மகிழ்வில் திளைப்பவர்

    அடுத்தவர் மட்டும் மகிழ்வோடு இருந்தால் போதும் என்றும் நினைப்பவர்

    தானும் சரி, அடுத்தவரும் சரி….மகிழ்வாக இருப்பதையே பிடிக்காதவர். இந்த பிரச்சனை பார்ட்டி.

    இதற்குப்  பின்னால் கதை கூட உண்டு. இதில் நாலாவது வகை முழுதும் முதல் வகையாக மாறி “மகளிர் தினம்” “மானுட தினமாக” மாறி விடும். அதன் பின் யாருக்கும் ‘எந்தத் தினம்மும்” தேவையில்லை. தினம் தினம் ‘திருவிழா’ தானே.

    ‘அக்ஷய திருதியை’ எட்டிப் பார்த்தது. தலையை மட்டும் நுழைத்தது, கைகளைக் குலுக்கியது, சென்ற வருடம் வரையில் ஏதோ ஆண்டாண்டு காலமாய் கூடவே வந்ததைப் போல சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டது. விற்காத குந்துமணி தங்கம் கூட விற்றுப் போனது. பெண்களைக் குறி வைத்துக் காயடித்ததாலோ ஏனோ , மந்தை மந்தையாய் சந்தையில் கத்திரிக்காய் வாங்குவது போல தங்கம் விற்றுப் போனது. இது ஒரு சின்ன உதாரணம் மட்டும் தான். இது போல எட்டிப் பார்த்த பலவற்றிற்கும் இப்போது அடிமையாய் இருப்பது கண்கூடு.

    மகளிர் தினமும் அப்படி உள்ளே நுழைந்தது தான்.அப்படி நுழைந்த இந்த நாள் ஒட்டுமொத்த மகளிருக்கும்  என்றாவது

    சுதந்திர மனப்பாங்கைப் பரவலாகத்  தந்தால் அன்று  தான் ‘மகளிர் தினம்’.அதுவரை அவளது முகத்திரை தான் அவளுக்கு  முத்திரை.

    Share
  • கண்ணாடிக் கூரை

    ஞா. க​லையரசி

    கண்ணாடிக் கூரை  (GLASS CEILING)

    மகளிர் தினம் நெருங்கும் இந்நாளில், ஆங்கிலப் பத்திரிக்கைகளில் அடிக்கடிக் கண்ணில் படும் சொற்கள் இவை.

    1971 ஆம் ஆண்டில் குளோரியா ஸ்டீனெம் (Gloria Steinem) என்பவர் தாம் மிஸ் இதழில் முதன்முதலில் இச்சொற்களைப் பயன்படுத்தினார் என்றும் 1984 ல் கே பிரியான்ட் (Gay Bryant) என்பவர் தாம், ஓர் இண்டர்வியூவில் இவ்வாறு சொன்னார் என்றும்,இணையத்தில் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

    கண்ணாடிக் கூரை என்றால் என்ன?

    பெரிய வணிக நிறுவனங்களிலும், கம்பெனிகளிலும் மிக உயர்ந்த பதவிகளுக்கான ஏணியில் ஓரளவுக்குப்  மேல் ஆண்களுக்கிணையாக பெண்களால் ஏற முடியாமல், தடுக்கும் நிலையைத் தான் கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிக் கூரையாக உருவகப்படுத்துகிறார்கள்.

    பெரிய வணிக நிறுவனங்களில் நடுத்தர பதவிகளை வகிக்கும் பெண்கள், எவ்வளவு தான் திறமைசாலிகளாக இருந்தாலும், சாதனை படைத்தவர்களாக இருந்தாலும், ஆண்களுக்கிணையாக மிக உயர்ந்த பதவிகளை எட்ட முடியாமல் தடுக்கும் இந்தக் கூரையை அண்மைக்காலத்தில், பெண்கள் பலர் தகர்த்தெறிந்து சாதனை படைத்து வருகின்றனர்.

    குறிப்பாக நிதி நிறுவனங்களிலும், வங்கிகளிலும் தங்களுடன் போட்டியிட்ட ஆண்களைப் பின்னுக்குத் தள்ளி, மிக உயர்ந்த பதவிகளைப் பெண்கள் எட்டிப் பிடித்திருக்கின்றனர்.

    ஒவ்வொரு வீட்டிலும் வருமானத்துக்கேற்ப வரவு செலவு பண்ணி, பட்ஜெட்டில் துண்டு விழாமல், எத்தகைய நெருக்கடியான சூழலிலும் குடும்பக் கப்பலை வெற்றிகரமாக செலுத்தும் நிதியமைச்சர் குடும்பத்தலைவி தானே?   எனவே நிதி நெருக்கடி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவு எடுக்கும் திறன்,இவர்கள் இரத்தத்திலேயே ஊறியிருக்கிறது.  மேலும் சிறப்பாகத் திட்டமிட்டுப் பணத்தைச் சேமித்து முதலீடு செய்வதில் ஆண்களை விட பெண்களே திறமைசாலிகள் என்பதால் தான்,

    “சேர்த்த பணத்தைச் சிக்கனமா

    செலவு பண்ண பக்குவமா

    அம்மா கையில கொடுத்துப் போடு சின்னக் கண்ணு

    அவங்க ஆறுநூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு”

    என்று அன்றே பட்டுக்கோட்டையார் பாடினார்.

    நாடு முழுதும் 15000 கிளைகளைக் கொண்ட, இந்தியாவின் மிகப்பெரிய பாரத ஸ்டேட் வங்கியின் சேர்மனாக, அண்மையில்  பதவியேற்றிருப்பவர் திருமதி அருந்ததி பட்டார்ச்சார்யா.  207 ஆண்டு வரலாறு கொண்ட பாரத ஸ்டேட் வங்கியின் முதல் பெண் சேர்மன் இவர் தாம்.

    நைனா லால் கித்வை, (ஹெச்.எஸ்.பி.சி),  சந்தா கோச்சார் (ஐ.சி.ஐ.சி.ஐ),  ஷிகா ஷர்மா (ஆக்சிஸ் வங்கி), விஜயலஷ்மி ஐயர் (பாங்க் ஆப் இந்தியா) அர்ச்சனா பார்கவ் (யுனைடெட் பாங்க்) என வங்கிகளில் மிகப் பெரிய பொறுப்பு வகிக்கும், பெண்களின் பட்டியல் நீள்கிறது.

    தற்போது நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, பெரிய வர்த்தக நிறுவனங்களிலும், பெண்கள் உயர்ந்த பதவிகளை எட்டி வருவதால், இக்கண்ணாடிக் கூரையில் விரிசல் விழத் துவங்கியுள்ளது. சாதனை பெண்டிரின் சீரிய முயற்சியால், இது முழுவதுமாக நொறுங்கி விழும் நாள், வெகு தூரத்திலில்லை.

    Share
  • பெண்ணிவள்..!

    “கவியன்பன்” கலாம்images

    காற்றாய் மென்மையும் கனியாய் இனிமையும் கொண்டு
    ……கனவிலும் நினைவிலுமே
    ஊற்றாய்ப் பெருகிடும் மேனி உணர்வுகள் எல்லாம்
    ..ஒடுங்கிடத் துணையாக
    ஆற்றல் மிக்கவன் படைத்து வழங்கினான் நாமும்
    ….ஆறுதல் பெற்றிடத்தான்
    போற்றும் வாழ்வினில் இன்பம் எய்திட இவளைப்
    ….புரிந்தவர் வென்றனரே!
    .
    பெண்ணும் பொறுமையில் பூமி போலவே இருப்பாள்
    ….பேச்சினில் புகழ்ந்ததுமே
    பெண்ணும் பொறுமையை இழப்பாள் பேச்சினில் வாய்மைப்
    …பிறழ்ந்திடும் வேளையிலே
    கண்ணும் இமைகளால் கவனம் செலுத்துதல் போல
    …காத்திட விரும்புவாளே
    விண்ணின் தாரகை  யல்லள் மேதினி கொள்ளும்
    …விளக்கதன் சுடராவாள்!

    பிள்ளை பெற்றிட மட்டும் இருப்பதாய் நினைத்தால்
    ….பிழைகளும் உன்னிடந்தான்
    உள்ளம் உணர்வுகள் எல்லாம் உணர்ந்திட வேண்டி
    ….உதவிட ஏங்கிடுவாள்
    கள்ளம் கபடமும் கொண்டு வாழ்ந்திட நினைத்தால்
    ….கனவிலும் மறந்திடுவாள்
    வெள்ளம் போலவே  கவலைப் பொங்கிடும் போதில்
    …விவேகமாய் முடிவெடுப்பாள்!

    படத்துக்கு நன்றி

     http://fabriziozangrilli.blogspot.in/2010_10_01_archive.html

    Share
  • பெண்ணியத்தை ஆண்கள் ஹைஜாக் செய்தது எப்படி?

    செல்வன்

    மேலைநாடுகளில் பெண்ணிய இயக்கங்கள் ஏற்படுத்திய தாக்கம், அதன் விளைவால் பெண்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றத்தை அலசுவது இக்கட்டுரையின் நோக்கம்.

    20ம் நூற்றாண்டில் பின்நவீனத்துவம், மார்க்சிசம் முதலானவை பெண்கள் முன்னேற்றத்தில் பெரும் திருப்பத்தைக் கொண்டுவந்தன. விவாகரத்து பெரும் பாவம், கல்யாணத்துக்கு முன் செக்ஸ் தவறு என்ற கன்சர்வேடிவ் சிந்தனைகள் 60களில் குறையத் துவங்கின. திருமணம் செய்யாமல் கூடிவாழ்ந்து குழந்தை பெறத் துவங்கினார்கள். பணியிடங்களில் ஆணுக்குச் சமமாக பெண்கள் பணிக்கு வந்தார்கள். ஆண் செய்யும் எந்த பணியையும் பெண்ணும் செய்யலாம் எனும் நிலை உருவானது. பிடிக்காத உறவுகள் விலக்கப்பட்டன. விவாகரத்துகள் பெருகின.

    ஆனால் அதே சமயம் விசித்திரமான ஒரு நிகழ்வும் நிகழ்ந்தது… வருடா வருடம் ஆண்/பெண் மகிழ்ச்சி விகிதத்தை அளந்து கொண்டுவரும் ஆய்வாளர்கள் 60களுக்குப் பின் பெண்களின் மகிழ்ச்சி வருடா, வருடம் குறைந்து வருவதைக் கண்டுபிடித்தார்கள். சுதந்திரமும், உரிமைகளும், கடமைகளும் பெருக மகிழ்ச்சி குறைந்தது. ஆண்களின் மகிழ்ச்சி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. 2009ம் ஆண்டுவரை இதே நிலைதான்

    இதுகுறித்து ஆய்வு நிகழ்த்திய பேராசிரியர் பெட்சி ஸ்டீபன்சன் பாலியல் சுதந்திரம், விவாகரத்து, முதலானவை 70களில் துவங்கி பெண்களுக்கு கிடைத்த உரிமைகளாக கூறப்பட்டாலும் இந்த உரிமைகளின் நன்மைகள் அனைத்தும் ஆண்களுக்கேச் சென்று சேர்ந்ததாகக் கூறுகிறார். இதற்கு ஒரு உதாரணமாக அவர் கூறுவது பாலியல் சுதந்திரம். 60களுக்கு முன்பு கல்யாணத்துக்கு முன் ஒரு பெண்ணுடன் உறவுகொன்டால் அவளை திருமணம் செய்தாக வேண்டும் எனும் சமூக நிர்ப்பந்தம் ஆணுக்கு இருந்தது. ஷாட்கன் வெட்டிங்க்ஸ் எனப்படும் துப்பாக்கிமுனை கல்யாணங்கள் அப்போது இதனால் நிகழ்ந்தன. ஆனால் பாலியல் சுதந்திரம் என்றானபின் அத்தகைய சமூக நிர்ப்பந்தங்கள் குறைந்துவிட்டன. ஆக இதன் முழுபலனும் ஆண்களுக்கே சேர்ந்தது என்கிறார் பெட்ஸி

    பாலியல் சுதந்திரம், அதிகரிக்கும் மணவிலக்குகள், பணிக்குச் செல்லும் சமூக நிர்ப்பந்தம், இவையே பெண்களின் மகிழ்ச்சி குறையக் காரணம் என பெட்சி ஸ்டிவன்சனின் ஆய்வு தெளிவாகக் கூறுகிறது. முன்பு பணிக்குப் போகாத ஆணுக்கு கல்யாணம் ஆகாது. பெண்கள் வேலைக்கு போகாததைப் பற்றி யாரும் அலட்டிகொண்டது இல்லை. ஆனால் இன்று வேலைக்குப் போகாமல் இருக்கும் பெண்ணுக்கு கல்யாணம் ஆகாது எனும் நிலைதான். பெண்களும் வேலைக்குப் போகவேன்டும் எனும் எதிர்பார்ப்பு சமூகத்தில் அதிகரித்து உள்ளது.

    பாலியல் சுதந்திரத்தின் ஒரு விளைவு அதிகரிக்கும் சிங்கிள் மதர்ஸ் எனப்படும் திருமணம் ஆகாதத் தாய்மார்கள். நம் நாட்டில் முன்பு விதவா விவாகம் மறுக்கப்பட்டதால் விதவைகள் அனுபவித்த துன்பங்களை விட அதிக துன்பங்களை இத்தாய்மார்கள் அனுபவிக்கின்றனர். மேலைநாடுகளில் மறுமணம் பிரச்சனை இல்லையெனினும் 20 வயதில் கையில் குழந்தையுடன் இருக்கும் பெண்ணுக்கு மணம் ஆவது அத்தனை எளிது இல்லை. இவர்களில் பலரும் ஏனோ கடைசிவரை திருமணம் செய்யாமலேயே பாய்பிரண்டுகளை மட்டும் மாற்றிக்கொண்டு வாழ்ந்துவிடுகிறார்கள். ஆய்வுகள் கூறுவது என்னவெனில் சிங்கிள் மதர்களிடம் வளரும் ஆண்குழந்தைகள் அதிக அளவில் சிறைக்குச் செல்வதும், பெண்குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வயதில் கர்ப்பமாவதும் அதிக அளவில் என்பதுதான்.

    இது கட்டாயம் பெண்ணின் குற்றம் மட்டும் அல்ல. ஆணின் குற்றமும் தான். ஆனால் இத்தகைய நிகழ்வுகள் நிகழாமல் இருக்கத் தானே திருமணம் என்ற அமைப்பு உருவானது? அது உடைந்ததன் பாதிப்பு முழுக்க பெண்கள் மேல் அல்லவா விழுகிறது?

    கலாசாரம், கற்பு, திருமணம், குடும்பம் அனைத்தும் பெண்கள் நன்மைக்காக ஆண்களை கட்டுக்குள் வைக்க உருவாக்கபட்டவை. இவை ஒழிந்தால் அதன் முழுபலனும் ஆண்களுக்கே சென்று சேரும். ஆணை இமிடேட் செய்வது தான் பெண்ணியம் எனச் சொல்லும் இயக்கங்கள் கேட்ட அனைத்து கோரிக்கைகளும் மேலை நாடுகளில் நிறைவேற்றப்பட்டன. துரதிருஷ்டவசமாக அதன் பலன்கள் முழுவதையும் ஆண்களே அடைகிறார்கள். பெண்கள் மகிழ்ச்சியை தொலைத்துவிட்டார்கள். கற்பு, திருமணம், கலாச்சாரம் அனைத்தும் ஆண்களை நெறிப்படுத்த இடப்பட்ட தளைகள். அவை அகற்றப்பட்டால் முழு நன்மையும் ஆண்களுக்கே.

    ஆணாதிக்க சமூகங்களில் நிலவிய இன்னொரு அவலம் சிசுக்கொலை. கள்ளிப்பால் ஊற்றி பெண்குழந்தைகள் கொல்லப்படுவதைப் படித்து வேதனைப்படுகிறோம். ஆனால் மேலை நாடுகளில் பல கோடி சிசுக்கள் பெண் உரிமை எனும் பெயரில் அபார்ட் செய்யப்படுகின்றன. சமீபத்தில் டெக்சாஸ் மாநிலத்தில் ஐந்துமாத சிசுவை அபார்ஷன் செய்ய தடை விதித்து சட்டம் நிறைவேற்றப்பட இருந்ததை எதிர்த்து பெண்ணுரிமை இயக்கங்கள் கடுமையாகப் போராடின.

    பண்டைய சமூகங்களில் பலதாரமணம் எனும் அவலம் இருந்தது. இன்று கற்பு நெறி எனும் முறையே அழிந்ததால் ஆண்கள் பலரும் கள்ள உறவுகளில் மூழ்கித் திளைக்கிறார்கள். சமீபத்தில் பிரெஞ்சு நாட்டின் அதிபர் கள்ள உறவு வைத்திருக்கும் செய்தி வெளியே வந்ததும் அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்தது.. பத்திரிக்கைகள் அதைப் பெரிதாகக் கன்டுகொள்ளவில்லை.

    ஆக பண்டைய சமூக அவலங்கள் வேறு பெயர்களில், வேறு விதங்களில் பெண்களை இன்னும் பாதிக்கின்றன. இதற்கான தீர்வுகள் எளிமையானவை அல்ல என்பதுதான் இதன் சோகமே.

    Share
  • பாட(ல்) பெறாத தலைவிகள்

    ரஞ்சனி நாராயணன்

     

    ஒவ்வொரு வருடமும் மகளிர் தினம் என்றால் பல பெண்கள் என் நினைவிற்கு வருவார்கள். முதலில் என் பாட்டி, பிறகு என் அம்மா, என் அக்கா. இவர்கள் எல்லோரையும் பற்றி பதிவுகள் எழுதியிருக்கிறேன். இன்னும் பல பக்கங்கள் எழுதலாம். ஆனால் இந்த மகளிர் தினத்திற்கு எனது தோழிகள் மற்றும் எனது மாணவிகள் சிலரைப்பற்றி எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்.

    மகளிர் நலம் பற்றிய கட்டுரையில் இவர்களின் பங்களிப்பு என்ன என்று தோன்றுகிறதா? தொடர்ந்து படியுங்கள் புரியும்.

    முதல் அறிமுகம் சாந்தி. நாங்கள் பெங்களூரு வந்த புதிதில் இவளும் திருமணம் ஆகி இந்த ஊருக்கு வந்தவள். எனது தோழியின் உறவு. தோழியின் தொடர்பு விட்டுப்போய் பலவருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் சாந்தியுடன் ஆன எனது நட்பு இன்றும் தொடருகிறது – கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக. வியப்பாக இருக்கிறது, இல்லையா?

    எங்கள் நட்பு இத்தனை வருடங்கள் ஆனபின்னும் வலுவாக இருக்கக் காரணம் நிச்சயம் நானில்லை. இந்தப்பெருமை முழுக்க முழுக்க சாந்தியைத்தான் சேரும். முதலில் சாந்தியின் வீடு எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்தது. சாந்தி வேலை செய்த பள்ளிக்கூடமும் அருகில் அதனால் ஏறக்குறைய தினமுமே சாந்தி என் வீட்டிற்கு வருவாள். என் குழந்தைகளுக்காக செய்யும் சிற்றுண்டியை சாந்திக்கும் கொடுத்து இருவருமாக காப்பி சாப்பிடுவோம். சில மாதங்களில் அவள் கருவுற்றாள். பிரசவத்திற்கு தாய்வீடு செல்லும்வரை மாலைவேளைகளில் எங்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். சில மாதங்களில் நாங்கள் வேறு வீட்டிற்கு மாறினோம். சாந்தியும் கணவரின் வேலை காரணமாக போபால் போய்விட  தொடர்பு விட்டுப் போயிற்று. வருடங்கள் கழிந்தன. ஒருநாள் ஜெயநகர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்-இல் நாங்கள் இருவரும் மீண்டும் சந்திக்க – நட்பு தொடர்ந்தது.

    எனக்கு சாந்தியிடம் மிகவும் பிடித்த விஷயம் எதற்கும் துளிக்கூட அலுத்துக் கொள்ள மாட்டாள். எங்கள் வீட்டுப் பக்கம் வரும்போதெல்லாம் நிச்சயம் எங்கள் வீட்டிற்கு வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போவாள். பல மாதங்கள், வருடங்கள் பார்க்கவில்லை என்றாலும் நேற்று பார்த்து பேசியதை இன்று தொடர்வது போல குற்றம் குறை கூறாமல் பேசுவாள். ஏன் எங்கள் வீட்டிற்கு வரவில்லை; ஃபோனாவது செய்யலாமே என்று கேட்கவே மாட்டாள்.

    வாழ்க்கை அவளை நிறையவே புரட்டிப் போட்டிருக்கிறது. ஆனால் அதைப்பற்றி பேசவே மாட்டாள். என்ன ஒரு அதிசயமான குணம்! குணக்கோளாறான கணவர்; பிறந்தவீடு புகுந்த வீடு இரண்டு பக்கமும் எந்தவித ஆதரவும் கிடையாது. சின்னசின்ன பள்ளிகளில் வேலை; கொடுக்கும் சம்பளத்திற்கு மேல் பிழிந்து எடுக்கும் வேலை. ஆனால் இவற்றைப்பற்றி பேசவே மாட்டாள். எனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா? எனது தோழி சொல்வாள் கதை கதையாக. ஒருவழியாக இப்போது ஒரு பெரிய பள்ளியில் நல்ல சம்பளத்தில் வேலை. பவித்ராவும் படித்து முடித்துவிட்டாள். இனியாவது அவளது வாழ்க்கை நல்லவிதமாக அமைய வேண்டும் என்பதுதான் எனது தினசரிப் பிரார்த்தனை.

    இரண்டாவது அறிமுகம் நிர்மலா. ஒருமுறை நானும் என் கணவரும் வெளியே போய்விட்டு திரும்பும்போது மழை கொட்டு கொட்டென்று கொட்ட, நாங்கள் அடைக்கலம் புகுந்தது நிர்மலாவின் கடையில். நாங்கள் இருவரும் தமிழில் பேசுவதைப் பார்த்துவிட்டு, வீட்டிற்குள் கூப்பிட்டு, தலை துடைக்க துண்டு கொடுத்து சுடச்சுட பாதாம் பால் கொடுத்தாள். இப்படித்தான் எங்கள் நட்பு ஆரம்பித்தது. நிர்மலாவும் தமிழ் நாட்டில் பிறந்தவள். திருமணம் ஆகி பெங்களூருக்கு வந்தவள். ஊறுகாய், அப்பளம் விற்கும் கடையை நடத்தி வந்தார்கள் கணவனும் மனைவியும். அத்துடன் பால் விநியோகம். கூடவே காப்பி, டீ, பாதாமி பால் தயாரித்துக் கொடுப்பார்கள். ‘காதலொருவனைக் கைபிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து’ என்ற பாரதியின் வார்த்தைகளை நிஜமாக்கிக் காட்டியவள் நிர்மலா. விடியற்காலையில் வரும் பால் வண்டியிலிருந்து பால் பொட்டலங்களை எண்ணி வாங்கி இறக்குவதிலிருந்து, மணிக்கணக்கில் கடையில் நின்று கொண்டு வியாபாரத்தை மேற்பார்வையிடுவதும், காப்பி, டீ, பாதம் பால் போன்றவற்றை தானே தயாரிப்பதும் ஆக அலுக்காமல் சலிக்காமல் உழைப்பவள். எப்போது போனாலும் சிரித்த முகத்துடன், கடும் உழைப்பின் அயர்ச்சி முகத்தில் தெரியவே தெரியாமல் வரவேற்கும் பக்குவம் எப்படி வந்தது இந்தப் பெண்ணிடம் என்று நான் வியப்பேன். இவளும் தனது குடும்பக் கஷ்டங்களை வாய்விட்டுச் சொல்லவே மாட்டாள். இன்று இரண்டு பெண்களுக்குக் கல்யாணம் செய்து சொந்த வீடும் வாங்கி தனது நிலைமையை முற்றிலும் மாற்றிக் கொண்டு விட்டாள் நிர்மலா.

    மூன்றாவதாக எனது மாணவி வெங்கட்லக்ஷ்மி. அருமையான பெண். எனது வகுப்பில் சேர்ந்தபோது திருமணம் ஆகியிருக்கவில்லை. முதல் நாள் வகுப்பில் மாணவர்களை ‘அவர்களை வியப்பில் ஆழ்த்திய சம்பவம்’ பற்றிப் பேசச் சொன்னேன். லக்ஷ்மி சொன்னாள்: ‘நான் வேலையில் சேர்ந்து இன்னும் ஒரு வருடம் ஆகவில்லை. இந்த மாதம் எல்லோருக்கும் சம்பள உயர்வு கொடுத்திருந்தார்கள். எனக்குத் தெரியும் எனக்கு சம்பள உயர்வு கிடைக்காது என்று. எல்லோருடைய சம்பள உயர்வையும் அறிவித்த எனது நிறுவன முதலாளி எனக்கு நாலாயிரம் ரூபாய் உயர்வு என்று சொன்னாவுடன் என்னால் நம்பவே முடியவில்லை. ‘உன்னுடைய திறமைக்கு நான் கொடுக்கும் பரிசு இது’ என்றார் அவர். இதுதான் மேடம் என்னை வியப்பில் ஆழ்த்திய சம்பவம்’ என்றாள். அலுவலக வேலையில் மட்டுமல்ல; எல்லாவற்றிலும் அவள் திறமையானவள் என்பதற்கு இன்னொரு சம்பவம்:

    லக்ஷ்மி சேர்ந்திருந்த எனது வகுப்பு முடிவடையும் நாள். (வகுப்பு என்று நான் சொல்வது 24 நாட்கள் கொண்டது) கடைசி நாளன்று எங்கேயாவது போகலாம் என்று மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். காலையில் போய்விட்டு இரவுக்குள் திரும்பிவிட வேண்டும். பலரும் பல யோசனைகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர். லக்ஷ்மி வந்தவுடன் எல்லோரும் அவளிடத்தில் யோசனை கேட்டனர். அவள் சொன்னாள்: ‘சிவன சமுத்திரம் போகலாம். மழை பெய்து அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காலையில் போய்விட்டு இருட்டுவதற்குள் திரும்பி விடலாம். சிற்றுண்டி, மதியம் உணவு, எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்துவிட்டீர்களா? போவதற்கு வண்டி? எத்தனை பேர் போகிறோம்? ஒவ்வொருவரும் எத்தனை பணம் கொடுக்க வேண்டும்?’ கிடுகிடுவென்று திட்டம் போட்டு, தொலைபேச வேண்டியவர்களுக்கு பேசி, வண்டி, சிற்றுண்டி, மதிய உணவு, நீர் என்று எல்லா ஏற்பாடுகளும் விரல் சொடுக்கும் வினாடியில் செய்து முடித்தாள். சின்ன பெண் என்ன ஒரு சாமர்த்தியத்துடன்  நிலைமையை கையாளுகிறாள்!

    லக்ஷ்மியின் அப்பா அம்மா இருவரும் கிராமத்திருப்பவர்கள். தனது தங்கைகளையும் தன்னுடன் பெங்களூருக்குக் கூட்டி வந்து அவர்களைப் படிக்க வைத்தவள் லக்ஷ்மி. தனக்குத் திருமணம் ஆனவுடன் தங்கைகளுக்கும் திருமணம் செய்து சொந்தமாக வீடு கட்டி அலுவலகம், குடும்பம் இரண்டையும் சிறப்பாக நிர்வகித்து வரும் லக்ஷ்மி என்னை வியக்க வைத்ததை என்னவென்று சொல்ல?

    நான் சொன்ன இவர்கள் எல்லோருமே என்னைவிட சிறியவர்கள். ஆனால் நான் இவர்களிடம் கற்றது ஏராளம். சாதிப்பதற்கு என்று எந்தக் களனும் வேண்டாம்; சொந்த வாழ்வில் வெற்றி பெறுவதுதான் நிஜமான சாதனை என்று நிரூபித்த பாட(ல்) பெறாத இந்த தலைவிகளைப் பற்றிய இனிய நினைவுகளுடன் எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

    Share
  • மகளிர் தின வேண்டுகோள்

     

    தி. சுபாஷிணி 

     

    சமம் வேண்டாமே!
    சஹிரிதயர்களாய் இருப்போமே!
    போற்ற வேண்டாமே – என்
    சுற்றம் தவிக்கும்போது
    எங்களைப் போகவிடலாமே
    வலியும் வாதையும்
    ஒன்றுதானே
    பெருமைப்பட வேண்டாம்
    பெருமிதம் கொள்ளலாமே
    முப்போதும்
    நீங்கள் நீங்களாய்
    இருப்பதுபோல்
    நாங்கள் நாங்களாய்
    இருக்க விரும்புவோம்தானே!

     

    Share
  • ” சார் ! சார் ! ஒரு கதை கேளுங்க சார் ! “

    கமலாதேவி அரவிந்தன்

    ” சின்னாங்கு இல்லேலா !
    அல்லாம்மா வேணாம்லா !
    பின் நவீனத்துவம்னா என்னாலா !
    சாந்த லெட்சுமிக்குத் தத்தாவ்லா ! ”

    unnamed (2)” இந்த தாமானுக்குப் போக எப்படியும் முக்கால் மணி நேரமாவது ஆகும். 120 ரிங்கிட்டுக்குக் குறையாது.”

    டேக்சி ஓட்டுநர் சொல்ல ,முப்பந்தைந்து ஆண்டுகட்கு முன்பு படித்த மலாய்மொழியில் உரையாடுவது ஸ்வேதாவுக்கு இன்பமாகத்தான் இருந்தது. ஆனால் சுட்டெரிக்கும் வெயிலில் காருக்குள் குளிர்சாதன வசதி இல்லாததால் சரீரமெங்கும் வியர்த்துக்கொட்டியது.

    கழுத்தைச்சுற்றிப் போட்டிருந்த துப்பட்டாவைக் கழற்றி கையில் பிடித்து விசிறிப் பார்த்தாள்.இட்லிப்பானையாய் வெந்துகொண்டிருந்த உஷ்ணத்துக்கு முன்னே அது பெப்பே காட்டியது.கார்க்கண்ணாடிக்கதவை திறந்தாலாவது சற்றே வெப்பம் தணியாதா, என்று திறந்தபோது வெயிலின் உக்கிரத்தில் சரேலென்று உள்ளே நுழைந்த காற்று கூட அனலாய் தகித்தது. என்ன வந்தாலும் சந்திக்காமல் போவதில்லை, எனும் வைராக்கியத்தோடு வந்திருந்ததால், இந்த முக்கால் மணிநேர தகிப்பை சகித்தே ஆகவேண்டும். ஆயாசமாக இருந்தது. எந்த நேரத்தில் இந்த பணியை ஏற்றுக்கொண்டோம் , என்று அப்படி பரிதவிப்பாக இருந்தது.இதுவரை சந்தித்த அனுபவங்களை மீண்டுமொரு முறை நினைத்துப் பார்க்கவும் மனசு கசந்தது.

    ஸ்வேதா பெண்கள் பத்திரிகையில் குறிப்பிட்ட செய்தித்துறையைச் சார்ந்தவள் .அதனாலேயே வாழ்க்கையில் பலரையும் சந்தித்த அனுபவம் அவளுக்கு உண்டு. அந்த அனுபவங்களையெல்லாம் பன்முகப்பரிமாணத்தில் அசராமல் எல்லா இசங்களையும், உயிர்த்துவம் , வாழ்வியல் கூறு, எனப்பல நீட்சிகளில், நேர்காணல்களாகவும், சமயத்தில் கவிதைகள், அவ்வப்போது புனைப்பெயரில் பெண்கள் கட்டுரைகள், ஏன் அரசியல் பார்வையில் கூட சில கட்டுரைகள்கூட எழுதியிருக்கிறாள்.,

    இதனால் கண்டடைந்த வாசகர்களின் நிறைவை மறுப்பதற்கில்லை.ஆனால் அண்மைய காலமாக, பெண்களின் எழுத்து பற்றி பரவலாக வந்த சில கருத்துக்களை ஜீரணிக்கவே முடியவில்லை.

    அதற்குக்காரணம் சில அரைவேக்காடுகளின் தத்துப்பித்து விமர்சனமும், சுய அட்சதையைத் தலையில் போட்டுக்கொண்டு சில கசடுகள் செய்த பம்மாத்து விமர்சனமும், நேற்று பெய்த மழையில் ஒண்டவந்த ஈசல்கள் கெட்ட கேட்டுக்கு, இவர்கள் வரவுக்குப்பின் தான் உலகமே இந்த மண்ணை திரும்பிப்பார்க்கிறது, என அஜால் குஜால் பேட்டி கொடுப்பதுமாய் , வந்த சில சேதிகளால் சுரணையுள்ள சிலர் கொதித்துப்போயினர். ஸ்வேதா பணிபுரியும் பத்திரிகை ஆசிரியரும் பெண்ணே என்பதால் அவருக்கும் சிலிர்த்துக்கொண்டு வந்தது.. புதுக்கவிதை எழுச்சியைக் கொடுத்தவரும், பின் நவீனத்துவ நாடகங்களால் உலக அரங்கில் பேசப்படவேண்டிய ,சாதனையாளருமான இலக்கியவாதி ,இருக்குமிடம் தெரியாமல் புத்தனாய் அமைதி காக்க ,இந்த அரைகுறைகளின் அலட்டலில் ஸ்வேதாவுக்கும் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இன்னொரு முக்காத்துண்டு அலட்டல், பெண்எழுத்து என்றாலே முட்டை சம்பாலும் கோழிக்கறியும் தான், அதற்கும் அப்பால் இவர்களால் என்ன சிந்திக்கமுடியும்? என்று தன் பங்குக்கு அம்மண ஜோக் அடித்தது. தெளிவுறவே அறிந்திருந்தால் தானே தெளிவு தர மொழிந்திடமுடியும்?

    ஆனால் ஸ்வேதாவின் பத்திரிகை ஆசிரியர் , இந்த அரைவேக்காடுகளுக்கு பதிலடி கொடுக்கவாவது ஒரு கட்டுரையின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தியபோது, கேட்டுக்கொண்டிருந்த அத்தனை பேருக்குமே அப்படியே மிளகாயை அரைத்துப் பூசினாற்போல் எரிந்துகொண்டு வந்தது.

    மூத்த பெண்ணிலக்கியவாதிகளின் நேர்காணலுக்கு ஸ்வேதாதான் கட்டுரையாளர் என்று முடிவானபோது, ஸ்வேதா ஒரு அட்சரம் மறுப்பு சொல்லவில்லை. ஆனால் அது எவ்வளவு பெரிய குறுக்குவெட்டு என்பதை அவள் அப்போது அறியவில்லை. இலக்கியம் படைத்தல் பற்றி ஸ்வேதாவுக்கென ஒரு கோட்பாடு இருந்தது. புனைவிலக்கியம் படைத்தல் ஒன்றும் வியாழவட்டம் அல்ல. அது ஆத்மாவின் ராகம்.வன்தொடர் குற்றியலுகரத்துக்கும் மென்தொடர் குற்றியலுகரத்துக்குமான வேறுபாடுகூடத் தெரியாமல், முப்பத்தெட்டு இலக்கணப்பிழைகளோடு கதைகள் எழுதிவிட்டு, நாங்கள் மண்வாசனை பொழியப்பொழிய எழுதுகிறோமாக்கும், ‘என்று ஜிஞ்சிண்ணாக்கடி வசனம் பேசுபவர்களைக்கூட மன்னித்துவிடலாம். ஆனால் லா, போட்டுப்பேசுவது மட்டுமே சிங்கப்பூர், மலேசிய இலக்கியம் என்று, விவஸ்தையே இல்லாமல்,கதையில் வரும் சொல் பிரபஞ்சத்துள் தேவையற்ற இடங்களிலெல்லாம்,” இல்லலா, என்னாலா, வா லா, போ லா, என்றெழுதி, மொழிவெளியையே அசிங்கப்படுத்தும் அனாமத்துக்களை மட்டும் அவளால் மன்னிக்கவே முடியவில்லை.இந்த கோரத்தைப்படித்துவிட்டு தமிழ்நாட்டுக்கு செல்லும்போது, வாங்க லா , ? என்று பேசவந்தவர்களைப் பார்த்து நேசமாக ஒரு வார்த்தை பேசத்தோன்றவில்லை. பாமரர்களின் பேச்சுவழக்கில் லா, உண்டுதான் , ஆனால் கற்றவர்கள் உரையாடும் சபையில் எங்குமே இந்த பம்மாத்து வசனம் கேட்டதில்லை.என்றாலும் கதையாடலின் கட்டுமானம் பற்றிய பிரக்ஞை போலும் தெரியாத மொழிச்சிதைவைக் கொடுக்கும்,கசடுகளின் சுய அட்சதையோ எழுதவே கூசுகிறது.

    யாகம் அல்லவா இலக்கியம் படைத்தல் என்பது.சமகால இலக்கியம் பற்றிய எந்த துணுக்குமே தெரியாவிட்டாலும் ,உள்ளீடின் உருவகமாவது வாசகனைச் சென்றடைய வேண்டாமா?

    வாழ்க்கையின் நிஜங்களுக்கு எந்த வகையிலும் மாற்றுக்குறையாமல் , ஒரு துறவியின் ஸ்பரிசம்போல், பட்டும்படாமல் அமானுஷ்யமாய், வாசகனின் உள்ளுறைந்த உணர்வில் , குறைந்த பட்சம் ஈஷிக்கொள்ளவாவது முடியுமென்றால் ஒரு படைப்பாளி பின்னர் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. ஆழ்மன நுணுக்கங்களின் பிரத்யட்சங்களை சுவாரஸ்யமாகக் கூற அனுபவம் எனும் விளை நிலத்தின் துல்லியம் மட்டுமே போதாது, என்பதில் ஸ்வேதாவுக்கு அழுத்தமான நம்பிக்கை இருந்தது.

    களப்பணி செய்தும், நேரில் சென்று சந்தித்தும் , போலியின் நிழல்ரேகை இருந்தால் கூட, அதை செம்மைப்படுத்தாமல் அவள் எழுத்து வந்ததில்லை. ஆனால் முழுமூச்சாய் இக்கட்டுரையில் இறங்கியபிறகுதான் மொட்டைப் பாலைவனத்தில் தவிக்கும் ஒட்டகமாய் தகவலுக்கு ஆலாய்ப்பறக்க வேண்டியிருந்தது. ஸ்வேதா இதை எதிர்பார்க்கவேயில்லை. குறிப்பிட்ட ஒருசிலரை மட்டுமே தொலைபேசியில் பிடிக்க முடிந்தது.மகிழ்ச்சியோடு பேசிய சிலர்,ஆய்ந்து ஓய்ந்து

    ” இலக்கியமா? ஹ்ம்ம், இன்னுமா எம்பேரை நினைவு வச்சுக்கிட்டு கூப்பிடறே ? என்று தூங்கி எழுந்தாற்போல் அலுத்துக்கொண்டவரும்,

    “ கதையா? அதையெல்லாம் நான் விட்டு ரொம்ப நாளாச்சு, நம்ப கதையே பெருங்கதையாயிருக்கு, இதிலே என்னா பேசச்சொல்றே ? “ என்று சலித்துக்கொண்டவர்களும்,

    ஆமாம், நான்தான் , இப்ப எதுக்கு அதெல்லாம் ?என்று பட்டென்று போனை வைத்தவர்களுமாக , ஸ்வேதாவுக்கு இவர்களை பேட்டி காண்பதே பெரிய சவாலாக இருந்தது.

    ஒரு கட்டத்தில் பேசாமல் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு, பழைய செய்தியாசிரியராகவே வேலையைத் தொடரலாமா என்று கூடத்தோன்றிவிட்டது.

    ஆனால் அசரீரி கூட ததாஸ்து சொல்லவில்லை. கர்மவினை யாரைவிட்டது? குபுக்கென்று உடம்பு குலுக்கிப்போட்டது. ஏதோ பெரும்பாறை மேல் ஏறி இறங்கினாற்போல் வண்டி சட்டென்று நின்றுவிட்டது. ஸ்வேதாவுக்குக் கவலையாக இருந்தது.சாலையெல்லாம் குண்டும் குழியுமாக,
    இடுங்கி நசுங்கிக் கிடக்கும் ஒரு குற்றுயிராய் தெரிந்த தாமான் வீடுகளும், படுதா போட்ட படிக்கட்டுக்கடைகளுமாக,ஏனோ இந்த ஏரியா மட்டும், அந்த வட்டாரத்துக்கே திருஷ்டிப்பொட்டாய் தெரிந்தது.

    ”கையில் இருந்த முகவரியைப்பார்த்தால் இது தாமானும் அல்ல. கம்போங்கும் அல்ல “ என்றான் டேக்சியோட்டி. அப்படியானால் யாரிடம் தான் கேட்பது ? டேக்ஸி சுற்றிச் சுற்றி வந்தது.

    அட ! யாரோ ஒரு வயதான பெண்மணி , பார்த்தால் இந்திய மாதுபோல் –கைலியும் பாஜுவும் அணிந்து, வீட்டுக்கு முன்னால் போட்டிருந்த நீண்ட பெஞ்சில் ஏதோ வைத்து விற்றுக்கொண்டிருந்தார். துணிந்து கேட்டுவிட ஸ்வேதா அருகே செல்ல, முகவரியை வாங்கிப்பார்த்த அந்த பெண்மணி ஆச்சரியமாகப் பார்த்தார்.

    ” இந்த முகவரியில உங்களுக்கு யாரைப் பாக்கணும் ?

    ” சாந்த லெட்சுமி, கதையெல்லாம் கூட எழுதுவாங்களே ”

    ” என்ன சொல்றீங்க ? கொஞ்சம் சத்தமாச்சொல்றீங்களா? ” ,மீண்டும் சத்தமாய் முழங்கியபோதும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் விழிக்க,

    தொண்டையின் முழுவீச்சையும் பிரயோகித்து, எம்பியகுரலில் ஸ்வேதா உரத்துக் கத்தினாள்.

    ” அட, என்றவாறே ட்ர்ஷ்ஷ் “ என்று வாய் திறந்து சிரித்தபோது இரண்டு பக்க பற்கள் இல்லை.தலைமுடி சுத்தமாய் நரைத்திருந்தது.

    ” நான் தான் சாந்த லெட்சுமி ! என்ன விஷயம் ! அட ! ? “

    கலர் கைலியும், மேலே இடுப்புவரை நீண்ட அரைக்கை பாஜுவும் அணிந்து தாட்டியாய், கனத்து , யாரோ செங்கோயான் பொம்பள , மாதிரி நின்ற இவரா சாந்தா லெட்சுமி ? நம்பவே முடியவில்லை,.

    35 ஆண்டுகட்கு முன்பு பூங்கொத்தைப்பிடித்துக்கொண்டு, பெரிய பெரிய பூக்களிட்ட ஒரு அழகான புடவையில் மலர்ந்து சிரித்த தோற்றத்தில் சாந்த லெட்சுமி அனுப்பிய புகைப்படம் இன்றும் ஸ்வேதாவின் ஆல்பத்தில் உண்டு. சாந்த லெட்சுமி மட்டுமல்ல. அன்று மும்முரமாய் எழுதிக்கொண்டிருந்த , 20க்கும் மேற்பட்ட பெண்கள் ஸ்வேதாவுக்கு பேனாத்தோழிகளாக தொடர்பில் இருந்தார்கள். பின் திருமணமாகி அவரவர் வாழ்க்கை, குழந்தைகள், குடும்பம் , என ஓடிக்கொண்டிருக்க கடிதத்தொடர்பு நீடிக்கவில்லை. ஆனால் அவர்கள் அத்தனைபேரிலும் சாந்த லெட்சுமி போன்ற சிலரே தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தனர். சாந்தலெட்சுமியின் எழுத்து பற்றி,பேசவேண்டுமென்றால் இலக்கியத்தின் மூலை முடுக்கில் கூட வைக்கத் தகுதியில்லை, என்று பலராலும் விமர்சிக்கப்பட்டவர்.அப்படியும் சாந்த லெட்சுமி எழுதுவதை நிறுத்தவில்லை.என் கடன் எழுதுவதே என்பது போல் அவர் கதைகள் ஏதாவது ஒரு பத்திரிகையில் பிரசுரமாகிக்கொண்டுதான் இருந்தன.

    நீ , நீங்க ?

    ” ஸ்வேதா !“

    ”அட, யாரு ? யாரு ? ஸ்வேதா ஓமணக்குட்டனா?? , என்னுடைய பேனாத்தோழி ஸ்வேதாவா !,?
    அப்படியே பாய்ந்துவந்து கட்டிக்கொண்ட சாந்த லெட்சுமியை நிதானத்துக்குக் கொண்டுவர சில நிமிஷங்கள் பிடித்தது

    ” ரெட்டைச்சடைபோட்டு, கருப்புகலர் காலர் வைத்த பனியனில் நீ அனுப்பின படம் இன்னும் கூட எங்கிட்டேஇருக்கு தெரியுமா, ஆமாம், என்ன விஷயமா என்னைப் பாக்க வந்திருக்கே , “

    விஷயத்தைக் கூறியதும் நாணிக்கண் புதைக்கவில்லையே தவிர அப்படி ஒரு வெட்கம். முகத்தில் பளிச்சிட்ட பிரகாசத்தை மறைக்கத்தெரியவில்லை சாந்த லெட்சுமிக்கு.

    ” பேட்டியா ?என்னையா ? இதுவரை யாருமே என்னை பேட்டி கண்டதேயில்லையே, நான், என்ன பேசப்போறேன் ?பரபரப்பில் குரல் நடுங்கியது

    மொதல்லே கோப்பி கலக்கறேன். ஒரு வா குடிச்சுக்கிட்டே பேசலாமே?

    வரக்கோப்பியை தனக்கு எடுத்துக்கொண்டு, பால் கலந்த காப்பியையும் , மேஜையில் விற்பனைக்கு வைத்திருந்த பலகாரங்களில் சிலதையும் ஒரு தட்டில் வைத்து நீட்டியபோது கைகளில் கறுப்பாய் தழும்பு கிடந்தது.எரிக்கும் இந்த வெயிலில் கொதிக்கும் இந்த காப்பியை எப்படிக்குடிப்பது ?

    அதற்குள் காதில் பொருத்த வேண்டிய கருவியை சாந்த லெட்சுமியின் மகள் வந்து காதில் மாட்டிவிட்டாள். பிறகு கத்திப்பேச வேண்டியிருக்கலை.

    ” என்னா பாக்கறே, ஒடம்பு ரொம்ப வெயிட் போட்டுடுச்சி,.டைபட்டிக் வேற, சதா மனஉளைச்சல் வேற, அதனால்தான் சாப்பாட்டுல கொஞ்சம் கட்டுப்பாடு, ஒரு வரக்கோப்பி நாலு தாவா பிஸ்கட் போதும், முக்கா நாள ஓட்டிடுவேன். என்னா சொல்லச் சொல்றே ?

    கல்யாணம் ஆவும்போதே 34 வயசாயிடுச்சி, ! ஆர்மியில இருக்கற அவர் என்னுடைய வாசகனா கடிதம் போடும்போது சந்தோஷமாத்தான் இருந்திச்சு. பிறகுதான் எங்களுக்குள்ளே காதல் கனிஞ்சது.கல்யாணமாகி மூத்த பையன் பொறக்கற வரைக்கும் பெரிசா பிரச்சினையொண்ணும் இல்லே.அடுத்தடுத்து மூணு பிள்ளைகள் பொறந்தப்புறம் அவரோட குடிப்பழக்கம் கொஞ்சம் அதிகமாயிடிச்சு. எப்படியும் அவரால குடிய நிறுத்த முடியல, எல்லாம் பொருளாதாரப் பிரச்சினைதான், வேறென்ன? ஆர்மியிலெருந்து வெளியானப்புறம் எங்கேயுமே சரியான வேலை கிடைக்கலை, ஒரு இடத்தில புல்லு வெட்டற வேலைதான் கிடைச்சது,ஆனா அதுவும் நிலக்கலை.

    அந்த கோவத்திலேயே சதா அடி, சண்ட, ஒரு கட்டத்தில மப்பு தலைக்கேறி,கீழே கிடந்த அல்லூர் சுத்தப்படுத்தற இரும்புக்கழியாலயே போட்டு சாத்திட்டாரு,. மூணு நாளைக்கப்புறம்தான் எனக்கு காது கேக்காமப்போனதே தெரிஞ்சுது.டாக்டர் கிட்டெயெல்லாம் போவலை, விஷயம் தெரிஞ்சதும் என்கையைப் பிடிச்சுக்கிட்டு அப்படி அழுதாரு.

    பிறகு கொஞ்சம் நாள் ஒழுங்காதான் இருந்தாரு. திரும்பவும் ஒரு நாள் குடிச்சுட்டு வந்தப்போ மாதவிடாய் நேரம் பாரு. அசந்து தூங்கிட்டேன். பசியோட வந்தவருக்கு கண்ணு மண்ணு தெரியல,! அவருக்கு குளிக்க வெந்நீர் போட்டிருந்த அடுப்பிலிருந்து ,அப்படியே எரியற கொள்ளிக்கட்டையாலே சூடு போட்டுட்டாரு , போயேன், ! குப்புறப்படுத்துக் கிடந்ததாலே பின்னாலயோட போச்சு. இல்லேன்னா மூஞ்சி, முகறையெல்லாம் வெந்து போயிருக்கும்.. அதுக்கப்புறம் தான்,
    காசுப்பிரச்சினையினாலதானே சண்டை வருதுண்னு நான் வேலைக்குப்போகத்தொடங்கினேன்.

    ஃபேக்டரியில” டாய்லெட் க்ளீனர்” வேலைதான் கிடைச்சது. அந்த கால ஆறாம்வகுப்பு தமிழ் படிச்ச எனக்கு வேறென்ன வேலை கிடைச்சுடும் ? ராத்திரி ஃபேக்டரியில கழிவறை துப்புரவுவேல, காலையில கொஞ்சம் தூங்கிட்டு , இப்படி ஏப்போஏப்போ, , கோரேங் பீசாங் ,னு எனக்குத்தெரிஞ்ச பலகாரங்களையும் செஞ்சு விக்கறேன்.செலவுக்கு பிரச்சினையில்ல. ஏதோ வாழ்க்கை ஓடுது,
    ஆனா இதையெல்லாம் பேட்டியில எழுதிடாதே, இனி இலக்கியம் பற்றி கேள்வி கேளு, நான் சொல்றேன். !

    விதிர்விதிர்த்துப் போயிருந்த ஸ்வேதாவால் பேசவே முடியவில்லை.அடிபட்டு, மொத்துப்பட்டு, ஃபேக்டரியில் இரவுவேலை செய்துகொண்டு, வீட்டுவேலை, அதோடு பலகாரம் செய்து விற்றல் என, குடும்பத்துக்காக ஓயாது உழைத்துக்கொண்டிருக்கும் இவளுக்கு கதை எழுத எப்படி நேரம் கிடைக்கிறது ?

    ” ஓ, ! அதுவா, நான் எழுத்தாளினி பாரு, என்னா வேலை செஞ்சுக்கிட்டிருந்தாலும் , மனசெல்லாம் ஏதாவது கற்பனையிலேயே தான் மூழ்கிக்கிடக்கும், ஏன் கேட்கறே ? பகலெல்லாம் நேரமே இருக்காதுங்கறது உண்மைதான். இரவு வேலைக்குப் போகும்போது, விடியற்காலை மூணுமணிக்கே வேலை முடிஞ்சுடும் பாரு, அப்புறமா , அங்கிருக்கற நீண்ட கல் பெஞ்சில குப்புறப்படுத்துக்கிட்டு , கொண்டுபோற நோட்டுப்புத்தகத்திலே எழுதுவேன். இடையிலே யாராவது டாய்லெட்டுக்குப் போறவங்க பாத்தாக்கூட சிரிச்சுக்கிட்டே போயிடுவாங்க, ! பொழுதுவிடியற வரைக்கும் இப்படியே ஓய்வு கிடைக்கற நேரமெல்லாம் எழுதிக்கிட்டே தான் இருப்பேன் ?

    போனமாதம்கூட முத்தாரம் பத்திரிகையில என் சிறுகதை ஒண்ணு பிரசுரமாச்சே, படிச்சியா? யாரோ ஒரு வாசகர் கூட உற்சாகமாக ஒரு வார்த்தை பாராட்டியிருந்தார். அதுதானே ஸ்வேதா ஒரு படைப்பாளிக்கு பெரிய ஊக்கம் ? ”

    ”நிச்சயமா, !அப்படீன்னா, எதிர்வினையை எப்படி எதிர்கொள்ள முடிகிறது ??”

    ” நான் அதைப்பற்றியெல்லாம் ரொம்ப கண்டு கொள்றதில்லை ஸ்வேதா, குசினியில உள்ள கரித்துணி மாதிரியிருக்கே இவுங்க எழுத்து,, சமையல் கட்டுக்கு அப்பால் வெளியுலகை எப்பத்தான் இவுங்க அண்ணாந்து பார்ப்பாங்க, னு ? கூடஒரு குப்பைமேதாவி என்னைப்பற்றி எழுதனான்.படிச்சப்ப கொஞ்சம் கவலையாத்தான் இருந்திச்சு ! ஆனால் இந்த இலக்கியம் கூட இல்லன்னா நான் இப்ப உயிரோடயே இருக்கமாட்டேன் தெரியுமா? ஏன் பொய் சொல்லணும் ? ஒருமுறை அப்படித்தான், குடிவெறியில , இந்த மூணு குழந்தைகளும் அவருக்குப்பொறக்கலைன்னு சொல்லிட்டாரு, எல்லாவற்றையும் பொறுத்துக்கிட்ட எனக்கு அதை மட்டும் தாங்க முடியலை.

    பொழுது எப்படா விடியும், இவரு வெளியே போனவுடனே போயி ராச்சூன் மருந்தை வாங்கிவந்து குடிச்சிடலாம்னு தான் காத்துக்கிட்டிருந்தேன், அவர் போனவுடனே அவசரம் அவசரமா வெளியே கடைக்குப்போறேன். உங்க கதை வந்திருக்கேம்மா, !ன்னு கடைக்காரர் சிரிக்கறாருன்னா பாரேன். பத்திரிகையை வாங்கிப்பார்த்தா, என்னோட சிறுகதை, –அய்யோ, என்ன சொல்ல, !

    ஸ்வேதா, அன்னைக்குத்தான் முடிவெடுத்தேன் ஸ்வேதா, ! இந்த உலகமே எதிர்த்தாலும் சரி, என்ன துன்பமே வந்தாலும் சரி, நான் என் உயிரை மட்டும் மாய்ச்சுக்கவே மாட்டேன், ஏன்னா நான் எழுத்தாளினி பாரு, பேனா புடிச்ச இந்த கையால நான் எழுதிக்கிட்டேதான் இருப்பேன், என்ன சொல்றே ? “

    விம்மிவெடித்துக்கொண்டு வந்த அழுகையை அடக்க ஸ்வேதா மிகவும் சிரமப்பட வேண்டியதாயிற்று. அடிவயிற்றினின்று எழுந்த கேவலை தேம்பதேம்ப அடக்க வேண்டியிருந்தது.ஒரு வார்த்தை கணவர் கடுமையாகப்பேசினாலே ஒரு வாரத்துக்கு நினைத்து நினைத்து அழுபவளுக்கு, சாந்தலெட்சுமி கூறிய தகவல்கேட்டு ,விக்கி விக்கி அழவேண்டும்போல் இருந்தது.

    -சூடு போடுவானா ? பிருஷ்டத்தில்லேயே தேய்த்துவிட்டானா ? இரும்புக்கழியால் அடித்து காதை செவிடாக்கிவிட்டானா?

    ஸ்வேதாவைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்தாள் சாந்தலெட்சுமி,

    ” பின் நவீனத்துவம், புதுமைப்புரட்சியாகவெல்லாம் எழுதணும்னு சொல்லிக்கறாங்க, ! ஆனா எனக்கு வாழ்க்கையே போராட்டமாயிருக்கு, ஒவ்வொரு நாளும் காலை நிம்மதியா விடிஞ்சாலே போதும்னு இருக்கு, இருந்தாலும் கற்றுக்கொள்ள ஆசையாத்தான் இருக்கு, யாராச்சும் , இந்த வட்டாரத்திலே, பின்நவீனத்துவம் பற்றி வகுப்பு எடுக்கறதா இருந்தா, உண்மையிலேயே கற்றுக்க ஆசையாதான் இருக்கேன் ஸ்வேதா, ! எங்கேயிருந்தாவது தொடங்கணும் தானே ? , !”

    அதற்குள் ”குவே “வாங்க மலாய்க்கார சிறுமிகள் சிலர் வந்தனர், இரண்டு பெண்மணிகள் கடனுக்கு வாங்கிப்போயினர். வந்தவர்களிடம் சிரித்த முகத்துடனேயே குவே, விற்றுக்கொண்டே சாந்த லெட்சுமி பேசினாள். அது நேர்காணல் மொழியாக இல்லாமல், சடக்கு மேலே வழிந்தோடும் கித்தாப்பால் மொழியாகத்தான் இருந்தது.

    தமிழ்கூறு நல்லுலகில் புதுமையும், போஸ்ட் மோடர்னிஸமும் கொடிகட்டிப் பறக்க, ஒட்டுப்பால் எழுத்தையும் நமக்கு யாராவது அறிமுகம் செய்ய வேண்டாமா? பேச்சிலும் கூட பனிப்புல்லின்மேல் முத்துப்போல் மின்னும் எந்த பளீரிடலும் இல்லை. சில இலக்கியசொகுசுகளுக்கே உரித்தான அலட்டல் நடிப்பும் , வெற்று பந்தாவும் கூட அறியாத அப்பாவியாகத்தான் பேசினாள். இரண்டுமணி நேரம் இடையறாத அருவியாய் பேசினாள்.ஒலிப்பதிவுசெய்வதைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல், அப்படியே அவளது மொழியிலேயே , ஆனால் பிழையில்லாத தமிழில் தான் பேசினாள்.
    சாந்த லெட்சுமியை பலகோணங்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டு , விடை பெறும்போது தயங்கிநின்றவளை அன்பு வழிய வழிய அப்படியே நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் ஸ்வேதா.

    ” இந்த முத்துமாலை உனக்கு ரொம்ப அழகாயிருக்கு ஸ்வேதா, “ என்று கபடமின்றி சிரித்த சாந்த லெட்சுமியின் கழுத்தில் அப்படியே அந்த முத்துமாலையை, கழற்றிப்போட்டு, மீண்டும் ஒருபுகைப்படம் எடுத்துக்கொண்டாள். நேர்காணலை அப்பொழுதே எழுதவேண்டும்போல் ஸ்வேதாவுக்கு பதறிக்கொண்டு வந்தது.

    கணினியை மடியில் வைத்துக்கொண்டு தட்டச்சு செய்யத் தொடங்கியபோது, பொலபொலத்துக் கொண்டு வந்தது. சாந்த லெட்சுமிக்கு பின்நவீனத்துவம் தெரியாதுதான், ஏன் சமகால இலக்கியம்பற்றிய பிரக்ஞை கூட இல்லைதான்.ஆனால் தான் கண்டதை, தன்னுடைய சிந்தனையை அகம் புறம் சார்ந்த எந்த நிலையிலும் சாயாமல் ,சுயம் மட்டுமே எழுத்தாய் வாழும் இவள் எழுத்தில் எந்த புதிய சிந்தனையும் கிட்டத்தில் கூட போகவில்லை.

    ஈவிரக்கமற்ற ஆணாதிக்க கொடுமையில் எந்த பிழையுமே காணாமல், ” என்ன இருந்தாலும் அவரு என் கணவர் தானே, இன்னைக்கும் நான் சாந்தலெட்சுமி ஏகாம்பரம் தானே, ”என இயல்பாய் ஏற்றுக்கொண்ட பாங்கே பழங்காலத்து பெண் தெய்வங்களின் நீட்சிதான், அதே பாணிதான் இவளது எழுத்திலும் கூட தொடர்கிறது, .யதார்த்த இலக்கியமோ, இயல்பியல் பார்வையோ, அதன் அரிச்சுவடி கூட இவள் அறிய மாட்டாள்.

    எந்த கலப்படமுமில்லாமல், கூடுமானவரை தன்னுடைய இயல்பிலேயே தான் எழுதுகிறாள்.?
    ஆனால் பின்நவீத்துவத்தின் அவதாரமே நாங்கள் தான் என்று கொஞ்சமும் லஜ்ஜையின்றி, பிறமொழி இலக்கியத்தின் தழுவல்களைத் திருடி தங்கள் பெயரைப் போட்டுக்கொண்டு திரியும், களவாடி ஜம்பங்களுக்கு முன்னால், சாந்த லெட்சுமியின் எழுத்து நிஜத்தின் தரிசனம். ஒருபக்க செவிப்பறையே கிழிந்து டமாரம் ஆன நிலையிலும், பிருஷ்டம் வெந்து பழுத்த நிலையிலும் கை, காலெல்லாம் சூடுபட்டு தழும்பேறிய உடல் கோலத்திலும் ,

    ” என்ன இருந்தாலும் அவரு என் கணவரு பாரு, என்ன செய்ய, வாழ்ந்துதானே ஆகணும்? , ”

    என வாழும் இவளுக்கு பின் நவீனத்துவம் எப்படித்தெரியும்? நிதர்சனத்தின் அச்சு அசலாய முகம் இவளது எழுத்து. நூற்றாண்டு மாறலாம்,மரபுகளும் கூட மரிக்கலாம்..ஆனால் பெண்ணின் இருப்பு அற்ற வாழ்க்கை எங்கேனும் சாத்தியமாகியிருக்கிறதா?

    சுயம் மட்டுமே வாழ்க்கையாய், எழுத்தாய் , இவ்வளவு துக்கத்திலும் உதட்டைக்கடித்து , அழுகையை விழுங்கிக்கொண்டு, ராஜபாட்டையே வந்து எதிரில் நின்றாலும் மண்டியிடாமல், கணவரை விட்டுக்கொடுக்காத, இந்த ஒற்றையடிப்பாதை நடையில் என்ன தவறிருக்கிறது.? துப்புரவு வேலை செய்தும் ,கழிவறைக்கு வெளியே படுத்துக்கொண்டு கிட்டும் சொல்ப நேரத்தில் கதை எழுதும் மாதரசி, நீ எந்த நூற்றாண்டுப்பெண் ?????????

    சாந்த லெட்சுமியை நினைக்க நினைக்க ஸ்வேதாவுக்கு நெஞ்சுடைந்து அழுகை வந்தது. தட்டச்சு செய்ய முடியாமல் மடிக்கணிணியை மூடியபோது, அட !

    அப்பொழுதுதான் ஸ்வேதாவுக்கு ஒரு அரிய விஷயம் ஞாபகத்துக்கு வந்தது.அவ்வளவு நேரமும் பேசிய பேச்சில் ஓரிடத்தில் கூட சாந்த லெட்சுமி , லா ‘ , போட்டுப் பேசவில்லை.

    [ முற்றும் ]

    Share
  • மகளிரைப் போற்றுதும்!

    இரா.தீத்தாரப்பன்

    மகளிரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மேம்படுத்த பல அரிய முயற்சிகள் செய்தவர் நம் திருவள்ளுவர். மகளிரை அடிமை போல நடத்துவதை அன்றே கண்டித்தவர்.

    ” சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர்
    நிறைகாக்கும் காப்பே தலை.”

    என்ற குறளில் தங்களைக் காத்துக் கொள்வதில் பெண்கள் தலையானவர்கள் என்று சொல்லிவிட்டு வேறு ஒரு குறளில்

    ஒழுக்கமாக இருந்து பெருமை பெறவேண்டுமென்றால் அதை ஒரு பெண்ணிடமிருந்து கற்றுக்கொள்”

    என்று ஆணைப்பார்த்துச் சொல்லுகிறார். அந்தக் குறள்

    ” ஒருமை மகளிரே போலப் பெருமையும்
    தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு”

    இதுவே! பின்னர் வந்த இளங்கோவடிகள் கண்ணகி வழக்குரைத்த அற்புதத்தை எடுத்துக்காட்டி அவளின் புகழை விண்ணுயரச் செய்தார். அவருக்குப் பின் வந்த கம்பரோ ,

    ” பெருந்தடங்கண் பிறைனுதலார்க் கெலாம்
    பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் “

    என்று சொல்லுவதிலிருந்து இயற்கையாகவே செல்வமும் கல்வியும் பெண்களிடத்தில் பூத்துக்கிடக்கின்றன என்பது தெளிவு.

    “மனைவி ஒருத்தியை அடிமைப் படுத்த வேண்டித்
    தாய்க்குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ?
    தாயைப்போல பிள்ளை என்று முன்னோர்
    வாக்குள தன்றோ? பெண்மை அடிமை யுற்றால்
    மக்களெல்லாம் அடிமையுறல் வியப்பொன்றாமோ?”

    என்று நம் மகாகவி பாரதியாரும் கொதிக்கிறார். ஹெலன் கெல்லர் என்ற வாய் பேசமுடியாத, காது கேட்காத, கண்ணால் பார்க்க முடியாத ஒரு பெண்மணி செய்த சாதனையை சமன் செய்த ஆண் உலகில் இல்லை என்பதே உண்மை.

    மகளிரைப் போற்றுவதும் மனிதத்தைப் போற்றுவதும் ஒன்றே!

    Share
  • பெண்ணுக்கு உரிமை

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

     

    பெண்ணுக்கு உரிமையை மறுத்து விட்டு
    பேசிய உலகத்தில் இன்று நாங்கள்
    கண்ணுக்கு நிகராக அவரை இன்று
    காதலித்துப் போற்றுகின்றோம் அவர்கள் வாழ்க!
    விண்ணுக்குக் கூடவே பெண்கள் கீர்த்தி
    விமானத்தில் பறந்தங்கு சென்ற தாவே
    மண்ணுக்கு புதுத்தெம்பு வந்து சேரும்
    மாதர் குலம் அதைக்கண்டு மகிழ்ச்சி கொள்ளும்.

    பூட்டிய கதவுகளை உடைத்துக் கொண்டு
    புரட்சி மங்கையர்கள் எழுந்து விட்டார்
    தீட்டுவார் புதுக்கவிதை அதிலே கொஞ்சம்
    தீவிரமும் வீரமும் நிறைந்திருக்கும்
    வீட்டுக்குள் படுப்பவரும் எழுந்து கொண்டு
    விடிவுக்காய் குரல்கொடுக்க வந்து விட்டாள்
    நாட்டிலே தமிழ்ப் பஞ்சம் குறைந்து போகும்
    நான்கு புறத் திசை இருந்தும் தமிழ் முழங்கும்.

    எழுத்துக்கள் எப்பொழுதும் எங்கள் உள்ள
    எழுச்சிக்கு துணையாக நிற்க வேண்டும்!
    அழுபவர்கள் குரல்களை அடக்கி விட்டு
    ஆர்ப்பரித்து அவர் எழும்பச் செய்ய வேண்டும்!
    விழுந்து கிடப்பவரை மெல்ல மெல்ல
    வீரமுள்ள வீரர்களை மாற்ற வேண்டும்.
    பழுது பட்டும் போகாமல் தமிழை என்றும்
    பக்குவமாய் நாம் காத்து வளர்க்க வேண்டும்

    Share