சிறுகை அளாவிய கூழ் – 8
இவள் பாரதி
வாழைப்பூவிரல்களை விரித்து
பருப்புக்கடைய
உள்ளங்கை காட்டும் குழந்தை
நண்டூறுது
நரியூறுது சொல்லி
கிச்சுக் கிச்சு மூட்டுமுன்னே
சிரித்துவிடுகிறது
====
இருமல் சத்தத்தை
இதயத்துக்குள்
வலிந்தனுப்புகிறேன்
உன் உறக்கம்
கலைந்துவிடக் கூடாதென
====
விவசாய நிலத்தில்
விதைக்கப்பட்டு
துளிர்த்திருக்கும்
ஒருவார பயிர்களென
ஒருசேர வளர்ந்திருக்கிறது
உன் மொட்டைத் தலை
=====
ஒவ்வொருமுறையும்
விளையாடுகிறேன்
உன்னிடம் தோற்பதற்காகவே
மிக அருமை. காட்சி கண்முன் விரிய வார்த்தைகளல் பந்தலிட்டிருக்கும் மங்கைக்கு வாழ்த்துக்கள்.
வாழைப்பூ விரல்கள் – அழகான உவமை. வாழ்த்துக்கள்.
தாயின் அனுபவம் சேயின் மகத்துவம்
ஆயின் கவிதரும் அமுதால் மருத்துவம்
இருகை தட்டியே மகிழும் பாரதியுன்
சிறுகை அளாவிய கூழ்