Blog

  • வார ராசிபலன்!..(04-03-13 – 10-03-13)

     காயத்ரி பாலசுப்ரமணியன்

    வார ராசிபலன் (04-03-13 – 10-03-13)

    மேஷம்:  சங்கடம், அனாவசிய சந்தேகம் ஆகியவற்றில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, கலைஞர்கள் வெளிவட்டாரப் பழக்கங்களில் கவனமாக இருத்தல் அவசியம். இந்த வாரம் சக ஊழியர்களின் போக்கில், இணக்கமும், சுணக்கமும் கலந்தே காணப்படும். எனவே பணியில் இருப்பவர்கள் பக்குவமாக நடந்து கொள்வது அவசியம். பொது வாழ்வில் இருப்பவர்கள் கடந்த கால சோதனைகள் தந்த பாடங்களை நினைவில் கொண்டு செயலாற்றினால், வெற்றியும், நிம்மதியும் நிலைத்திருக்கும் . வியாபாரிகள் சரக்குகள் வாங்கும் போதும், விற்கும் போதும், பெரிய தொகைக்கான வாக்குறுதி தருவதில் கவனமாய் இருப்பது நல்லது.

    ரிஷபம்: பொது வாழ்வில் இருப்பவர்கள் கோபம், படபடப்பு இரண்டையும் குறைத்துக் கொண்டால் நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவெடுக்க இயலும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் பொறுப்புக்களை சிறப்பாய் செய்து வர, பணி சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எளிதாகும். மாணவர்கள்  பிரச்னைக்குரிய விஷயங்கள், பிரச்னைக்குரிய நபர்கள் ஆகிய இரண்டிலிருந்தும் விலகி இருந்தால், அமைதியாய் செயல்பட்டு அதிக மதிப்பெண்களை பெறலாம். இந்த வாரம்  கலைத் துறையினருக்கு அரசு அளிக்கும் விசேஷ சலுகைகளைப் பெற்று மகிழும் வாய்ப்புக்கள் வந்து சேரும்.

    மிதுனம்: வியாபாரிகள் வெளி நாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும் முன்பு, ஆவணங்களையும், விதிமுறைகளையும் சரிபார்த்துச் செயல்படுதல் நல்லது. இல்லத்தில் அமைதி தவழ்வது பெண்களின் கையில்தான் உள்ளது. தவணை முறையில் பொருள்கள் வாங்குவதற்கு பதிலாக பண இருப்புக்கு ஏற்றவாறு பொருள்களைத் தேர்ந்தெடுங்கள்.பொருளாதரச் சிக்கல்கள் குறையும். பணியில் இருப்பவர்கள் முக்கியமான கோப்புகளைக் கையாள்கையில், மறதிக்கு இடம் அளிக்காதவாறு செயல்படுவது நல்லது. கலைஞர்கள் தேவையற்ற மன உளைச்சலைத் தவிர்க்க, தன்னுடைய பணியில் மட்டும் கவனம் செலுத்தவும்.

    கடகம்: பெண்கள் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னகளை வளர விடாதீர்கள். உடனடித் தீர்வுகள், உறவின் விரிசல்களை சரிசெய்துவிடும். பொது வாழ்வில் உள்ளவர்கள் உள்ளவர்கள் நிதானமாகச் செயலாற்றினால் அது உங்கள் உயர்வுக்கு வழி வகுக்கும். இந்த வாரம் நண்பர்களிடையே சிறு சிறு பூசல்கள் வந்து போகும்.எனவே மாணவர்கள் கடந்த கால விஷயங்களைப் பற்றிய விமர்சனங்களில் ஈடுபடவேண்டாம். கூட்டாளிகடையே நிலவி வந்த குழப்பமும் குதர்க்கங்களும் விலகிவிடும். புதிய வியாபார முயற்சிக்கு உற்சாகத்துடன் துணையிருப்பார்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

    சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்கள் பெண்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பார்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் .தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்தல் நலம். மாணவர்கள் வாகனத்தில் செல்லும் போது கவனத்தைச் சிதற விடாதீர்கள். வியாபாரிகள் எடுக்கும் பணியில் நிதானத்துடன் செயல்பட்டால், சிக்கல்கள், வேண்டாத மனௗளைச்சல் ஆகிய இரண்டையும் தவிர்த்து விடலாம். கலைஞர்களுக்கு அவர்களின் தன்னம்பிக்கை முயற்சிக்குத் தக்க விதத்தில் துணை புரியும். பணியில் இருப்பவர்கள் வேலை விஷயத்தில் மெத்தனமாய் இராமல், கவனத்துடன் இருத்தல் அவசியம்.

    கன்னி: பொறுப்பில் இருப்பவர்கள் நண்பர்கள் விஷயத்திலும்,மற்றும் அவர்களுக்கென்று பணம் செலவழிப்பதிலும் அளவோடு இருப்பது நல்லது. மாண வர்கள் புதிய இடங்களுக்குச் செல்கையில், அறிமுகம் ஆகாதவரை நம்பி ஏமாந்து விடாதீர்கள். பணியில் இருப்பவர்கள் . முக்கியமான கோப்புக்களை உங்களின் நேரடி கவன த்தில் வைத்துக் கொள்ளுங்கள். நேரம் விரையமாகாமல் விரைந்து பணியாற் றலாம். கலைஞர்கள் வரவுக்கு மீறிய செலவுகளுக்கு இடமளிக்காதீர்கள். எவ்வளவு அதிகமான பணியிருந்தாலும், பெண்கள் வேளை தவறாமல் உணவு உண்டு விட்டால், ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

    துலாம்: கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள், கணக்குகளை ஒழுங்காகப் பராமரித்து வந்தால்,வேண்டிய சலுகைகளைப் பெறலாம். பெண்கள் கைப் பணத்தைப் பார்த்துச் செலவழியுங்கள். கடன் வாங்க வேண்டியிராது. இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்கள், நல்ல வேலையில் அமர்வார்கள். படிப்பில் மட்டுமின்றி, விளையாட்டுகள், போட்டிகள் ஆகியவற்றிலும் மாணவர்கள் வெற்றி வாகை சூடும் வாய்ப்புக்கள் பல வந்து சேரும். இந்த வாரம் கலைஞர்களின் கலகலப்புக்கு இடையே சிறிது சலசலப்பும் அவ்வப்போது தலைகாட்டும். எனவே சக கலைஞர்களின் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.

    விருச்சிகம்: பெண்களுக்கு உறவினரோடு உரையாடி மகிழும் வாய்ப்புக்கள் வந்த வண்ணம் இருக்கும். பெற்றோர் காட்டும் அன்பும், அரவணைப்பும் பிள்ளைகளை உற்சாகப் படுத்தும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் மதிப்பு கூடும்.இயந்திரம், இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலில் உள்ளவர்கள் கவனத்துடன் செயலாற்றுவதோடு, தகுந்த பாதுகாப்பு விதிகளையும் கடை பிடிப்பது நல்லது..வியாபாரிகள் புதிய துறையில் இறங்கும் முன்பு, ஏற்ற இறக்கங்களை அறிந்து கொண்டால் அதற்குத் தக்கவாறு செயலாற்ற முடியும்.

    தனுசு: நேரம் தப்பித் தூங்கவேண்டிய சந்தர்ப்பங்களுக்கு இடமளிக்காத வகையில்,மாணவர்கள் திட்டமிட்டு பணிகளை முடிப்பது புத்திசாலித் தனம். பெற்றோர்கள் பிள்ளைகளின் போக்கிற்கேற்ப இதமான ஆலோசனை வழங்குங்கள். உங்கள் வழிக்கு வந்து விடுவார்கள். பணியில் இருப்பவர்கள் தங்கள் துறை தொடர்பான விவரங்களை சேகரித்து வைத்துக் கொள்வதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டை எளிதில் பெறலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தேவையில்லாமல் காரசாரமான விவாதங்களிலும், விமர்சனங்களிலும் தலையிடாதீர்கள். அமைதியான முறையில் வேலைகள் செல்லும்.

    மகரம்: குடும்ப விவகாரங்களில் பெண்கள் சிறிய விஷயங்களுக்காக சர்ச்சையில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் நலம். மாணவர்கள் சிக்கலான நேரங்களில் அனுசரித்து நடந்து கொண்டால், பிரச்னைகள் பெரிதாகாமல் பிசுபிசுத்துவிடும்.கலஞர்கள் வீண் வதந்திக்கு முக்கியத்துவம் அளிக்காமலிருந்தால், நிம்மதி நிலவும். வியாபார நிமித்தம் வெளியூர் செல்கையில், உணவு மற்றும் குடிநீரில் கவனமாய் இருந்தால், தேக உபாதை கள் தலைகாட்டாது. பணியில் இருப்பவர்கள் தாங்கள் புழங்கும் விலையுயர்ந்த பொருட் களின் பரமரிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். பங்குதாரரிடையே நிலவிய மனஸ் தாபம் நீங்கும்.

    கும்பம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார்கள். வியாபாரிகள் அதிக லாபத்தினை எதிர்பார்த்து, குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் எந்த காரியத்தினையும் ஒத்திப் போடாமல் உடனுக்குடன் செய்து விடுங்கள். கடைசி நேர அலைச்சலைத் தவிர்த்து விடலாம். பெண்கள் வீண் செலவுகளைத் தவிர்த்தால், பொருளாதார இழப்புகள் அவ்வளவாய் இராது. மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்தினால், மதிப்பெண்களோடு, உங்களது மதிப்பும் உயரும்.

    மீனம்:பெற்றோர்கள்  பிள்ளைகளின் கையில் அதிக பணம் தருவதைத் தவிர்த்தல் நலம்  பெண்களுக்கு விழா, விருந்து என்று பொழுது மகிழ்ச்சிகரமாக செல்லும்.     இந்த வாரம் கலைஞர்களுக்கு தங்கள் திறமைகளை திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வியாபாரிகள் கடன் வாங்கி செலவு செய்வதைக் குறைத்துக் கொள்வது அவசியம்.  பொது வாழ்வில் இருப்பவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றிகரமாய் மாற, உடன் இருப்பவர்கள் உறுதுணையாய் இருப்பார்கள்.   மாணவர்கள்  நேர்வழியில் போட்டிகளை எதிர்கொண்டால், எதிலும் வெற்றி பெறலாம்

    Share
  • விண்கற்கள் தாக்குதலைக் கையாள அகில நாட்டு பேரவைப் பாதுகாப்புக் குடையை அமைக்க ரஷ்யத் துணைப் பிரதமர் அழைப்பு

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    http://www.youtube.com/watch?v=90Omh7_I8vI&feature=player_embedded

    [Meteor Strike Injures 1200 People in Russia]

    “பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண்பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும்.   விண்பாறைகள், முரண்கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை  பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.”

    டிமிட்ரி ரோகோஜின்  [Dmitry Rogozin, ரஷ்யத் துணைப் பிரதம மந்திரி]

    “இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும்.  இந்நிகழ்ச்சியில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக்கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 25 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.”

    நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program]

    Meteor Closeby travel

     

    ரஷ்ய நாட்டின் மையப் பகுதி யூரல்ஸ் அரங்கில் [Urals Region] உள்ள தொழிற்துறை நிரம்பிய செலியாபின்ஸ்க் [Chelyabinsk] நகரத்தில் 2013 பிப்ரவரி 15 இல் வானிலிருத்து ஒலி மிஞ்சிய வேகத்தில் [வினாடிக்கு 20–30 கி.மீ] [40,000 mph] பாய்ந்து விழுந்த விண்கல் [Meteor] ஒன்று பேரொளி வீசி வெடித்தது ! எதிர்பாரத விதமாக நேர்ந்த இந்த விண்வெளி நிகழ்ச்சி ஓர் அதிசயச் சம்பவமாகக் கருதப் படுகிறது.  30-50 கி.மீ. [10 -15 மைல்] உயரத்தில் நேர்ந்தது அந்த வெடிப்பு.  வெடிப்பு ஆற்றல் : 470 கிலோ டன் டியென்டி [TNT].   வெடிப்பொலி அதிர்ச்சியில் சுமார் 1200 பேர் காயமுற்றதுடன், 2960 வீடுகளில் சேதங்களும் கண்ணாடி ஜன்னல்கள் உடைப்புகளும் நேர்ந்துள்ளன.  50 பேர் மருத்துவ மனையில் சிகிட்சை பெற்றார்.  விளைந்த சேதாரச் செலவு :  சுமார் 33 மில்லியன் டாலர்.  பூமி நோக்கி வந்த அந்த விண்கல்லின் நீளம் சுமார் 30 அடி, எடை 10 டன் என்று கணிக்கப் படுகிறது.

    ரஷ்யா நகரத்தில் சிதறி விழுந்து பாதகம் விளைவித்த அந்தப் பயங்கர விண்கல் அசுர வெடிப்பு ஏற்கனவே ஓர் விண்வெளித் துண்டுடன் மோதியதால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ரஷ்யப் பேராசிரியர் எரிக் காலிமாவ் [Eric Galimov of Vernadsky Institute of Geochemistry]  கூறுகிறார்.

    Russian Meteor piece

    அதாவது அந்த அசுர வெடிப்பு மோதல் விண்வெளியில் நேர்ந்த பிறகே அவற்றின் சிதறல் துண்டுகள் பூமியின் சூழ்வெளியில் இறங்கி எரியத் தொடங்கின என்பது அறியப் படுகிறது.  வான மண்டலத்தில் உடைந்து தூளாகிச் சிதறி விண்கல் தூசிகள் அயனிகளாகி எரிந்து பேரொளி யோடு பிரகாசித்தது.  அந்த ஒளிமயமான தோரணக் காட்சி பூமியின் ஈர்ப்பு விசையால் குவிந்து வளைந்து வந்தது.  இறுதியில் முறிந்து ஒளிச்சக்தி ஒலிச் சக்தியாய் வெடித்து பேரதிரவை உண்டாக்கியது !  150 அடி நீளமுள்ள பெரிய முரண் கோளின் போக்கைக் கண்காணித்து வந்த வானியல் விஞ்ஞானிகள், 30 அடி நீளம் உள்ள சிறிய விண்கல்லைக் காணத் தவறி விட்டனர். அதனால் எச்சரிக்கை செய்ய முடியாமல் போனது !   இப்போது ரஷ்ய அரசாங்கமே முன்வந்து, விண்கல் வீச்சைக் கண்காணிக்க வேண்டும் என்றும், விழுவதற்கு முன்னே மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும், ஐக்கியக் கூட்டுப் பணியாகப் விண்வெளிப் பாதுகாப்பு முறைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வெளிவந்துள்ளது !

    Location of Impact

    விண்கற்கள் தாக்குதலைத் தடுக்கும் உலகக் கூட்டியக்கப் பாதுகாப்பு:

    “பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண்பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும்.   விண்பாறைகள், முரண்கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை  பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.” என்று  ரஷ்யத் துணைப் பிரதம மந்திரி,  டிமிட்ரி ரோகோஜின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   இந்தச் சிறப்பு அறிவிப்பு  மாஸ்கோவில் “தந்தையர் நாட்டு நினைவு “நாளில் அவர் அறிவித்தார்.   மேலும் இந்த விண்கல் விண்வெளிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஐக்கிய நாடுகள் பேரவைக் குடையின் கீழ் அமைக்கப் பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.   இத்தகைய  மாபெரும் பாதுகாப்புத் திட்டம் அமெரிக்கா போன்ற ஆற்றல் மிக்க பெருநாடும் தனித்துச் செய்து முடிப்பது கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    Meteor damage -2

    தற்போது உலக நாடுகளிலுள்ள ஏவுகணை முறிப்பு ஏற்பாடு & வான வெளி எதிரடிப்புப் பொறி நுணுக்கங்கள்  [Anti-Missile System & Aerospace defense Technologies] பூமியி லிருந்து ஏவுகணை ராக்கெட்டுகள் ஏவப்பட்ட பிறகு தாக்கப் போவதை மட்டுமே தடுப்பவை.   அவை விண்வெளியிலிருந்து வீழும் விண்கற்களின் பயணத் திக்கைக் கண்காணித்து, மாற்றி அமைத்து, மாந்தரைப் பாதுகாக்க  முடியா.   விண்கல், விண்பாறை, முரண்கோள், வால்மீன்கள் எனப்படும் அகிலவெளிப் பகைத் தூள்கள் செல்லும் திக்குகளை நுணுக்கமாய்க் காண முடியா !   விண்பாறை வீழ்ச்சிப் பாதிப்புகளிலிருந்து தப்பிப் பிழைக்க மாந்தரை எச்சரிக்கை செய்யவோ, அபாயத்தி லிருந்து பாதுகாக்கவோ வேண்டு மென்றால், ரஷ்யா, அமெரிக்கா, சைனா, ஐரோப்பிய நாடுகள் போன்ற வல்லரசு நாடுகள் பல பங்கெடுக்க வேண்டும்.   மேலும் உலக நாடுகள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் துணைக் கோள்கள், விண்வெளிப் பொறி நுணுக்கக் கருவிகள்  மேன்மைப் படுத்த வேண்டும்.

     

    Damage Potential

    இந்தப் பிரச்சனை மிகவும் சிக்கலானது.   வெகு தூரத்தில் பயணம் செய்து கொண்டு, வேகமாய்ப் பாய்ந்து வரும் விண்கல்லின் பளு, பரிமாணம், வேகம் அறிவதுடன், சூரியனைச் சுற்றும் வீதி [Solar Orbit], திசைப்போக்கு, நகர்ச்சி ஆற்றலும் தொடர்ந்து கருவிகளால் கண்காணிக்கப் படவேண்டும்.   அதற்குப் புவியிணைப்புச் சுற்றில் சுற்றி வரும் [Geosynchronous Orbit] மூன்று அல்லது நான்கு துணைக்கோள்கள் ஏவப் பட வேண்டும்.   அந்தத் துணைக்கோள்கள் பூமியைத் தாக்கப் போகும் ஒரு விண்கல் நகர்ச்சியைத் தொடர்ந்து நோக்கி வந்தால், அதைத் தகுந்த நேரத்தில் தாக்கித் திசை திருப்பவோ, முறிக்கவோ பூமியிலிருந்து ஏவுகணைகள் அனுப்ப வேண்டும்.   அந்த விண்வெளி நுணுக்கச் சாதனையில் அபாய எச்சரிக்கை செய்யவும்,  பூமியில் விழும் இடத்தை முன்பே அறிவதும் அவசியம் ஆகிறது.   விண்கல்லின் திசைமாற்ற ஏற்ற காலப் பொழுதும், மனிதரற்ற கணைகள் அனுப்பித் திசை திருப்பவும் தேவையான கால நேரம்  பூமி வல்லுநருக்கு அதிகம் கிடைப்பதில்லை.

    Meteor hits Russia

    ஒலியதிர்ச்சி விபத்தில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறிக் குத்திய மனித உடற் காயங்கள்தான் மிகுதி.  சில வீடுகளின் சுவர்கள் பிளந்தன, முறிந்து விழுந்தன. சில வீடுகளில் கதவுகள் தூக்கி எறியப் பட்டன. கட்டங்கள் இடிந்தன. மருத்துவ மனைகளில் இன்னமும் 50 பேர் முதலுதவிச் சிகிட்சைகள் பெற அனுமதிக்கப் பட்டுள்ளார்.  நகர மாந்தர் உதவிக்கு 20,000 உதவிப் படை ஊழியர்கள் அனுப்பப் பட்டிருப்பதாக ரஷ்ய அபாயநிலை அமைச்சர் விலாடிமிர் புக்கோவ் கூறியிருக்கிறார்.  முடிவில் விண்கல் சிதறல் விழுந்த ரஷ்ய ஏரி செபார்குள்ளில் [Chebarkul] அரசாங்க நீர்மூழ்கி ஊழியர் ஆறு பேர் குதித்து மூன்று மணிநேரம் சிதறிய விண்கற்களைத் தேடிச் சேகரிக்க முயன்றார்.  இதுவரை எதுவும் கிடைத்தாகத் தெரிய வில்லை.

    Harder than Diamonds

    1908 ஆண்டு சைபீரியாவில் நேர்ந்த “துங்கஸ்கா நிகழ்ச்சி” [Tunguska Event] எனப்படுவதில் ஏதோ ஓர் முரண்கோள் அல்லது வால்மீன் [Asteroid or Comet] விழுந்து பெருங்குழி  ஏற்பட்டுள்ளது.  அதற்குப் பிறகு 2013 இல் அடுத்த அதிர்ச்சி நிகழ்ச்சி இது.  “இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும்.  இந்த நிகழ்ச்சியில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக் கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 30 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.” என்று நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program] கூறுகிறார்.

    Impact of a Meteor

    இம்மாதிரி விண்வெளி விபத்துக்களைத் தடுக்கவோ, எச்சரிக்கை செய்யவோ, உலக நாடுகள் ஒன்று சேர்ந்து, குறிப்பாக ரஷ்யா, அமெரிக்கா, சைனா “முரண்கோள் தடுப்பு ஏற்பாடு” [Anti-Asteroid Defense System (AADS)] ஒன்றை அமைக்க வேண்டும் என்று ரஷ்யப் பாராளுமன்றத்தின் அயல்நாட்டுத் துறை அமைச்சகத் தலைவர், அலெக்ஸி புஸ்காவ் கூறியிருக்கிறார்.

    Antarctica Meteorite

    ++++++++++++++++++++

    தகவல்: 

    1. http://www.telegraph.co.uk/news/worldnews/europe/russia/9872020/Meteoroid-falling-over-Russia-caught-on-camera.html
    2. http://www.telegraph.co.uk/news/newsvideo/9872507/The-science-behind-Russian-meteor-strike.html
    3. http://www.telegraph.co.uk/science/space/9872991/Asteroid-passing-Earth-is-closest-ever-of-this-size.html
    4. http://www.youtube.com/watch?v=90Omh7_I8vI&feature=player_embedded 
    5. http://www.dailygalaxy.com/my_weblog/2013/02/10-ton-meteor-explodes-over-russia-injuring-hundreds-this-am.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+TheDailyGalaxyNewsFromPlanetEarthBeyond+%28The+Daily+Galaxy+–Great+Discoveries+Channel%3A+Sci%2C+Space%2C+Tech.%29
    6. http://rt.com/news/meteorite-crash-urals-chelyabinsk-283/
    7.  http://rt.com/news/scientists-explain-chelyabinsk-bolide-337/
    8. http://en.wikipedia.org/wiki/Tunguska_event  [February 19, 2013]
          9.  Russia Calls for United Meteor Defense [February 26, 2013]
         10. Meteorite’s Powerful Blast Explosion Due to Space XCollisions  [February 28, 2013]
         11.  Antarctica Team Finds Largest Chondrite Meteorite in Past 25 Years [March 1, 2013]

     

    +++++++++++++++++++

    S. Jayabarathan [jayabarat@tnt21.com]  (March 3, 2013)

    YouTube – Videos from this email
    Share
  • தொல்லைகாட்சி- கிச்சன் சூப்பர் ஸ்டார்-சரவணன் மீனாட்சி – போக்கிரி

    மோகன் குமார்

    நிலம் வாங்கலியோ நிலம்

    சனிக்கிழமை காலை டிவி பொட்டியை போட்டால் போதும் ஜெயா டிவி, விஜய் டிவி, ஜீ டிவி என எல்லா சானலிலும் நிலம் வாங்கலியோ நிலம் என சின்னத் திரை நடிகர்கள் வந்து கெஞ்சி கெஞ்சி கேட்கிறாங்க. ஒவ்வொன்னும் அரை மணி நேர விளம்பரதாரர் நிகழ்ச்சி. 5 நிமிஷம் பாத்தா போதும், போனை எடுத்து மத்த விபரங்களை கேட்க வச்சிடுவாங்க. அவ்ளோ தூரம் பில்ட் அப் செய்றாங்க

    போனை எடுத்து அந்த நம்பருக்கு முயற்சித்தால் கிடைப்பதே இல்லை. டிவியில் அவர்கள் விளம்பரம் வரும் அந்த அரை மணி தான் அவர்கள் கஸ்டமர் பிடிக்கிற நேரமே போலிருக்கு. நம்ம நம்பரை பார்த்து விட்டு பின் அவர்களே போன் செய்தனர் நான் கேட்ட கேள்விகள் ரொம்ப சிம்பிள் ” அப்ரூவ்டு நிலமா? ” ” ஆமா சார் பஞ்சாயத்து அப்ரூவ்டு ” – இது ஏமாத்து வேலை என தெரியும் – எனவே ” பேங்க் லோன் கிடைக்குமா ? ” என அடுத்து கேட்க ” கிடைக்காது சார்” என வழிக்கு வந்தார்கள். வெறும் நிலத்துக்கும் கூட வங்கிகள் லோன் தரும்; ஆனால் அது அப்ரூவ்டு என்றால் மட்டுமே கிடைக்கும் இவர்கள் தரும் விளம்பரத்தை நம்பி இடம் வாங்குவோர் என்றோ ஒரு நாள் அவர்கள் விற்கப் போகும் போது இது அப்ரூவ்டு இடம் அல்ல என உணர்வார்கள். பாவம் !

    கிச்சன் சூப்பர் ஸ்டார் வின்னர்

    விஜய் டிவியில் பல வாரம் நடந்த சமையல் நிகழ்ச்சி – கிச்சன் சூப்பர் ஸ்டார். வீட்டம்மா சமையல் சமாச்சாரம் பார்க்கும் ஆர்வத்தில் இருக்க , நானோ அதில் வரும் சபர்ணா எனும்  அம்மணியை காணும் ஆர்வத்தில் இருப்பேன்.

    நிகழ்ச்சி எப்பவாவது தான் பார்ப்பது வழக்கம். 2 சமையல் எக்ஸ்பர்ட்கள் ஜட்ஜாய் இருப்பது சரி. தொகுத்து வழங்கும் நடிகர் சுரேஷும் ஜட்ஜ் வேலை பார்க்கிறார்.அதான் பெரும் உறுத்தல். குறிப்பாய் இறுதிப் போட்டியில் பூஜா மற்றும் மெட்ரோ ப்ரியா இருவருக்கிடையே தான் போட்டி. இருவரில் யார் டைட்டில் ஜெயிப்பது எனும் நிலையில் இரு சமையல் எக்ஸ்பர்ட்களும் ஆளுக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க சுரேஷ் தான் ஓட்டு போட்டு ” பூஜா ஜெயித்தார் ” என்று அறிவித்தார்.

    நிற்க. மேற்படி பூஜா ரொம்ப சுமார் தான். டிவியில் இது வரை பல போட்டிகளில் கலந்து கொண்டதாகவும் எப்பவும் சிறு பரிசு கூட ஜெயித்ததில்லை என்றும், இம்முறை டைட்டில் ஜெயித்தேன் என்றும் ஒரு பாட்டம் (நிசமாய்) அழுதார் !

    நம்ம ஆளு பைனலுக்கே வரலை என நானே கடுப்பில் இருந்தேன் .. ஹூம் !

    சன் டிவி சூர்ய வணக்கத்தில் ராஜா – பாரதி பாஸ்கர் உரையாடல்

    சன் டிவி காலை வணக்கம் நிகழ்ச்சிக்கு சூர்ய வணக்கம் என்று புதிதாய் பெயர் சூட்டியுள்ளனர். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் முன் பேசும் தொகுப்பாளினி சற்று அழகாய் இருப்பார் என்பதால் எப்பவாவது சற்று பார்ப்பது வழக்கம் 🙂 அப்படி ஒரு முறை நிகழ்ச்சி பார்க்கும் போது சமையல் அறை வேலைகள் பற்றி ராஜா – பாரதி பாஸ்கர் உரையாடல் காண முடிந்தது.

    பாரதி பாஸ்கர் சொன்ன சில விஷயங்கள் சிந்திக்க வேண்டியவை:

    * சமையல் என்பது பெண்ணின் வேலை என்று தான் இன்னமும் தள்ளி விடுகிறோம். ஒவ்வொரு நாளும் 3 வேளை சமையலும், அதற்கான திட்டமிடலும் பெண்ணுக்கு பெரும் சுமை. எப்போதேனும் ஒரு முறையாவது ஆண் சமைத்தால் பெண்ணுக்கு பெரும் relief ஆக இருக்கும்

    * மாலை 8 மணிக்கு மனைவி ஒரு வேளை வீட்டுக்கு வந்தால், அதற்கு முன் வரும் கணவரும், குழந்தைகளும் – அவள் வந்து தான் சமையல் செய்யணும் என காத்திருக்கிறார்கள். எவ்வளவு சோர்வாக வந்தாலும் வேலைக்கு செல்லும் பெண்கள் உடனே அடுப்படிக்கு செல்லவேண்டியிருக்கிறது

    * மறு நாள் சமையல் பற்றி முதல் நாளே திட்டமிட வேண்டியிருக்கிறது. அப்போது தான் தேவையான எல்லா பொருளுமே வாங்கி, தேவைப்பட்டால் நறுக்கி வைத்துக் கொள்ள முடியும்.

    * சமையல் முழுதும் செய்யா விடினும் ஆண்கள் மற்றும் வீட்டில் உள்ள சின்ன சின்ன வேலைகளை பகிர்ந்தால் அதுவே பெண்களுக்கு பெரும் ஆறுதலாய் இருக்கும். வேலைகளை பேசிக் கொண்டே சேர்ந்து செய்யும் போது நிச்சயம் கணவன்- மனைவிக்குள் அன்னியோன்னியம் வருகிறது

    ராஜா ஆண்கள் பக்கத்தை பேசுகிறேன் என தொடர்ந்து ஒரு புறம் பெண்களை கிண்டல் செய்து கொண்டிருந்தது, நல்ல விஷயத்தை சற்று டைவர்ட் செய்தது என்றாலும், பாரதி பாஸ்கர் விடாப்பிடியாக தான் சொல்ல வந்தது முழுதும் அழகாய் சொல்லி முடித்தார் !

    பிளாஷ்பேக் ஆனந்த கீதனின் வார்த்தை விளையாட்டு

    சன் டிவி துவங்கிய பொழுதில் பிரபலமாக இருந்தவர் ஆனந்த கீதன். இவரும் மாலா, ரபி பெர்னாட், ரமேஷ் பிரபா, ரெகோ போன்றோர் தான் அப்போது பிரபல தொகுப்பாளர்கள் (கால ஓட்டத்தில் இவர்களில் ஒருவரும் இப்போது சன் டிவி யில் இல்லை )

    ஒரு நிமிடம் பேசும் வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும். அதுவும் ஆனந்த கீதன் எப்படியும் 1 நிமிடம் பேச விடாமல் மக்களை அவுட் ஆக்கிடுவார்.

    அலுவலக அல்லது வீட்டு கெட் டூகெதர்களில் நாங்கள் எளிதில் நடத்தும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று.

    நீங்க யாரு ? இப்படிக்கு சரவணன்

    சூப்பர் சிங்கர் பார்க்க 9 மணிக்கு டிவி போட்டால் , சரவணன் – மீனாட்சி தொடர் தான் நடக்கும் கடைசி 5 நிமிஷம் பார்த்தாலே ( கொஞ்சம் கஷ்டம் தான் !) கதை முழுக்க புரிஞ்சிடும்.

    சரவணனுக்கு பல்பு மாட்டும்போது ஷாக் அடிச்சு கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு, தலையில் ஆப்பரேஷன் (!!??) எல்லாம் ஆகிடுது. இதை வச்சு ரெண்டு மூணு நாள் ஓட்டிட்டு, அப்புறம் சரவணன் கண்ணு முழிச்சதை காட்டினாங்க. நினைவு சரியா இருக்கோ இல்லியோ என்கிற மாதிரி சந்தேகம் வர வச்சு, ” மாமா .. மச்சான் ” என எல்லாரையும் சரியா அடையாளம் சொல்லும் சரவணன், மனைவி மீனாட்சியை மட்டும் பார்த்துட்டு ” நீங்க யாரு ? ” என கேட்குறாரு பாருங்க… சான்சே இல்லை. பார்த்த மூணு பேரும் விழுந்து விழுந்து சிரிச்சோம்

    நல்லா கண்டு புடிக்குறாங்கய்யா மேட்டரு. .. இனிமே சரவணனுக்கு நினைவு வராமல் நடக்கும் குழப்பங்கள், ரெண்டு வருஷம் கழிச்சு நினைவு மீள்வது என சில பல வருஷம் ஓட்டுவாங்க ! நடக்கட்டும் ! நடக்கட்டும் !

    பார்த்த படம் – போக்கிரி

    போக்கிரி படம் வந்தபோது ” வழக்கமான மசாலா, நம்ப முடியாத சண்டைகள், திருப்பங்கள்” என எனக்கு சுத்தமாய் பிடிக்கவே இல்லை ! பின் மெதுவாக தான் வடிவேலு காமெடி ஹிட் ஆனது. வடிவேலுவின் பெஸ்ட் காமெடி பார்ட்களில் ஒன்று போக்கிரி (வின்னர், தொட்டால் பூ மலரும் போன்றவை இன்னும் சில)

    ஞாயிறு வேறு படம் ஏதும் இல்லாததால் பொறுமையாய் போக்கிரி பார்த்து கொண்டிருந்தோம். இளைய தளபதி “எக்ஸ்பிரஷனே இல்லாமல் நடிப்பதை தான் ” இயல்பான நடிப்பு” என்று வைத்திருக்கிறார் போலும். அதிலும் போலிஸ் என்று தெரியும் போது அவரை யூனிபார்மில் காட்டுவார் பாருங்கள். அப்போது விழுந்து புரண்டு சிரித்தேன்.

    வீட்டம்மா விஜய் ரசிகை ஆயிற்றே .. ” பாரு ..சிரிப்பு போலிஸ் .. நடந்து வர்றாரு ” என்று கிண்டல் அடிக்க அடுத்த நிமிடமே கிளைமாக்ஸ் சண்டையில் யூனிபார்மில் முழு சண்டையும் போட்டார். இப்ப வீட்டம்மா ” பாத்தீங்களா சிரிப்பு போலிஸ்னு சொன்னீங்க எப்புடி? ”

    மிக டைட் ஆன போலிஸ் யூனிபார்மில் அவர் சண்டை போடும் போது எப்ப அந்த பேண்ட் கிழியுமோ என்று தான் நமக்கு பயமாய் இருந்தது. இதை சொன்னால் வீட்டம்மாவிடம் அடுத்த திட்டு விழும் என கப் சிப் ஆனேன் !

    படங்களுக்கு நன்றி:

    http://tamil.oneindia.in/movies/specials/2012/12/tv-fame-saravanan-meenakshi-debuts-in-cinema-166859.html#slide36475

    http://www.comicsda.com/2013/02/vijay-tv-neeyaa-naanaa-vs-kichen.html

    Share
  • பிரபஞ்ச மண்டலமே

     

    சத்தியமணி

    பிரபஞ்ச மண்டலமே ! வானவெளி அண்டமே
    உயிர்அஞ்ச செயும் உன்சினம் நியாயம் தானோ !
    இனமொன்று எனச்சொல்லி இனவிரிசல் கிளப்பிட்டோம்
    மதமில்லை எனச்சொல்லி மதங்களுக்கு மாறிட்டோம்
    சாதியில்லை எனச்சொல்லி சலுகைகள் எதிர்பார்த்தோம்
    நீதிசமம் எனச்சொல்லி நியாயங்களை வேட்டுவைத்தோம்
    பாதிபகல் பழிகூறி பலர்வாழ்வில் புகைவைத்தோம்
    பகுத்தறிவு எனப்பேசி பிறர்பேச்சின் வழிநடந்தோம்
    கருத்தறிவு தர்பாரில் அரசியலைக் கலந்துவிட்டோம்
    ஆட்சிக்கு வரவிழைந்து அத்துனையும் முயற்சித்தோம்
    காட்சிக்கு தேவைமட்டும் காட்டியதில் விளையாண்டோம்

    எதற்காக கல்லெறிந்து எங்களை தாக்குகிறாய் ?
    எங்களின் சட்டசபை போல்புவியை ஆக்குகிறாய் ?
    எச்சரிக்கைப் போலெங்கோ இப்போது செய்தவிதி
    எம்மண்ணில் வீசுவது எப்போது சொல்லிவிடேன் ?
    திருந்தவிலை நாங்கள் ! திருந்தவும் விழையவில்லை!
    ஊழற்சுவை கண்டோம்! உன்மேலும் பயமில்லை!
    இருந்தும்
    பிரபஞ்ச மண்டலமே ! வானவெளி அண்டமே
    உயிர்அஞ்ச செயும் உன்சினம் நியாயம் தானோ !

    Share
  • என்னைக் கவர்ந்த மனிதர்கள்..

    மாதவன் இளங்கோ

    எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருந்தாலும், எழுத்துலகில் இருக்கும் எத்தனையோ ஜாம்பவான்களை விடவும் ஒருபடி மேலே சென்று, பெரிதாக நாம் ஒன்றும் செய்து விட முடியாது. ஆனாலும், என் ஆதர்ச எழுத்தாளர்களின் சீரிய எழுத்துகளின் உந்துதலாலும், தமிழின் மேல் கொண்ட காதலாலும், மனதில் உதிப்பதையெல்லாம் கிறுக்கிக் கொண்டிருக்கும் ஒரு கடைஞன் நான்.

    சில சமயங்களில் மின்னல்போல் பளீரென ஒரு எண்ணம் வெட்டும். அந்த எண்ணத்தின் பின்னால் இடியைப் போல கிடுகிடுவென சிறிதுநேரம் ஓடினால், அதைப்பற்றிய கடந்தகாலப் பதிவுகள் அனைத்தும் முன்னே வந்து கொட்டும். சிதறி விழும் சிந்தனைகளைத் தமிழில் கோர்த்துப் பார்த்தால் அது ஒரு கட்டுரையாகவோ, கவிதையாகவோ அல்லது கதையாகவோ வடிவெடுக்கிறது.

    இந்தக் கட்டுரையில் நான் எழுதப்போகும் விஷயம் கூட அப்படி பளீரென மின்னிய ஒன்று தான். சில நாட்களுக்கு முன்னாள், ஹாலந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாம் நகரில் ஒரு கருத்தரங்கில் அமர்ந்திருந்த போது உதித்த எண்ணம். ஆனால், வேடிக்கை என்னவென்றால் இதற்கு தலைப்பு வைக்கத்தான் மெனெக்கெட்டு சிறிது நேரம் சிந்திக்க வேண்டியதாய்ப் போயிற்று.

    என்னைப் பொறுத்தவரை மனம் என்பது ஒரு ‘விவாதக்களம்’; சிந்திப்பது என்பது எனக்குள் ‘விவாதித்துக் கொள்வது’ போன்றது. ஏனெனில், நான் ஒவ்வொருமுறையும் ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்கும்போதெல்லாம், மூன்று பேர் கொண்ட ஒரு ‘திறனாளர் குழு’ (Brain Trust) என் மனவெளியில் புகுந்து விடுகிறது. ‘மாதவன் இளங்கோ’, ‘மாதவன்’, மற்றும் ‘இளங்கோ’ ஆகிய வல்லுநர்கள் தான் அந்த குழு உறுப்பினர்கள். இவர்கள் மூவரும் கடுமையாக விவாதித்து விட்டு, முடிவாக எனக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள்.

    சில நேரங்களில் முடிவுகளைக் கூட அவர்களே எடுத்துவிடுவது உண்டு. பல நேரங்களில் முடிவே எடுக்காமல் காலங்காலமாக, இரவு பகலாக விவாதிக்கொண்டே இருப்பார்கள். இன்று சிறிது விரைவாகவே முடிவெடுத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

    “எனது கதாநாயகர்கள் என்று தலைப்பு வைக்கலாம்.” என்று மாதவன் கூறினார்.

    “கதாநாயகர்களா? வேண்டவே வேண்டாம்! நம் நாட்டில் கதாநாயகர்கள் என்றாலே திரைப்பட நடிகர்கள்தான் என்பது போலாகிவிட்டது. வேறு ஏதாவது சொல்லுங்கள்.” என்று தனது உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார் இளங்கோ.

    “எனது முன்மாதிரிகள்?” என்று மாதவன் இளங்கோ அவர் தரப்பிற்கு ஒரு தலைப்பை முன்வைத்தார்.

    “முன்மாதிரிகள் என்றால் Role Models தானே? அதெல்லாம் வேண்டாம். அதை இவருடைய தொழிலோடு தொடர்புபடுத்தி விடுவார்கள். இல்லையென்றால் யாரேனும் ஒரு அரசியல்வாதியையோ, தொழிலதிபரையோ நினைத்துக் கொள்வார்கள்.” என்று மாதவன் மறுப்பு தெரிவித்து விட்டார்.

    “என்னைக் கவர்ந்த எளிய மனிதர்கள் – இது எப்படி இருக்கிறது?” என்று மீண்டுமொரு தலைப்பை முன்மொழிந்தார் மாதவன் இளங்கோ.

    அவர் கூறியதையே மற்ற இருவரும் வழிமொழிந்தாலும், ‘எளிய’ என்கிற சொல்லை மட்டும் நீக்கிவிடலாம் என்று இளங்கோ பரிந்துரை செய்தார். அந்தப் பரிந்துரையை மற்ற இருவரும் ஆதரித்து, எனக்கு ஆலோசனை வழங்கியதால், அதை ஏற்றுக்கொண்டு இந்த கட்டுரையைத் தொடர்கிறேன்.

    அவர்கள் குறிப்பிட்டதுபோல், இன்று நான் ஏதேனும் ஒரு நடிகரைப் பற்றியோ, அரசியல்வாதியைப் பற்றியோ அல்லது தொழிலதிபரைப் பற்றியோ சொல்லப் போகிறேன் என்று நீங்கள் நினைத்தீர்களேயானால், நிச்சயமாக உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.

    ஏனெனில், என்னைக் கவர்ந்த மனிதர்களில் பெரும்பாலானோர் சாமான்யர்கள் தான். அவர்கள்தான் என் முன்மாதிரிகள்! அவர்கள்தான் என் கதாநாயகர்கள்!

    எனது வாழ்க்கைப் புத்தகத்தின் வாசித்து முடிக்கப்பட்ட பக்கங்கங்களைச் சற்று புரட்டிப் பார்த்தால், அவைகளெல்லாம் இப்படிப்பட்ட எத்தனையோ எளிய மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கைமுறைகள், அவர்களுடன் பழகியதால் எனக்குள் உண்டான மாற்றங்கள், அவர்களிடமிருந்து நான் கற்ற விஷயங்கள் – இவற்றின் பதிவுகளால்தான் நிரம்பியுள்ளது.

    இன்று அப்படிப்பட்ட ஒரு யதார்த்தமான மனிதரைப் பற்றித் தான் உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

    எனக்கு அப்போது பன்னிரண்டு வயது இருக்குமென்று நினைக்கிறேன்.

    எங்கள் வீட்டுத் தெருமுனையில் ஒரு காமாஜர் சிலை இருந்தது. தினமும் காலை வேளையில் அங்கு ஒரு சிறிய கூட்டம் கூடும். ஒரு வயதான பெரியவர், சிலைக்கு அருகே இருக்கும் ஒரு கல்லின்மேல் நின்றுகொண்டு, ஏதோ சில கேள்விகளைக் கேட்டுக்கொண்டு இருப்பார். அதற்கு அவரைச் சுற்றி நின்றுகொண்டிருக்கும் மனிதர்கள் பதில் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

    அவர் பெயர் சுப்ரமணி – படிப்பறிவில்லாத ஒரு மேஸ்திரி. அவரைச் சுற்றி நின்றுகொண்டிருந்தவர்கள் அவரிடம் பணிபுரியும் கட்டிடத் தொழிலாளிகள்! அவர் என்னுடைய சிற்றூரில், நான்கைந்து இடங்களில் ஒரே சமயத்தில் கட்டிடங்களும், வீடுகளும் கட்டிக்கொண்டிருந்தார்.

    ஆனால், அவர்கள் அப்படி அங்கு என்னதான் பேசிக்கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற ஆர்வமிகுதியால், ஒருநாள் அவர்கள் அருகே சென்று நடப்பவற்றை கவனித்தேன். அந்த கட்டிடடத் தொழிலாளிகள் வெவ்வேறு இடங்களில் நடந்து கொண்டிருக்கும் அவர்களுடைய கட்டுமானப் பணிகளின் நிலவரம் குறித்து பெரியவருக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தனர்.

    பெரியவர் அவர்களைக் கேட்ட கேள்விகள் இவைதான்:

    1 . நீ நேற்று என்ன செய்தாய்?

    2 . இன்று என்ன செய்யப்போகிறாய்?

    3 . களத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? (கட்டுமான பொருள் பற்றாக்குறை அல்லது வேறு ஏதேனும்)

    4 . எங்கெல்லாம் முக்கியமான பணிகள் நடக்கின்றன? (அடித்தளம், கூரை முதலியன)

    5 . யாருக்காவது அடி பட்டதா?

    6 . யாரேனும் இன்று விடுமுறை எடுத்துள்ளார்களா?

    இவ்வாறு கேட்டுவிட்டு, தொழிலாளிகள் எழுப்பிய பிரச்சினைகளுக்குத் தன்னுடைய தீர்வுகளையும், அறிவுரைகளையும் வழங்கிக்கொண்டிருந்தார். கடினமான பிரச்சினைகளைக் கூட அவருக்கே உரித்தான பாணியில் – இன்முகத்தோடும், வேடிக்கையாகவும் பேசியபடியே ஆலோசனை வழங்குவதில் மனிதர் கெட்டிக்காரர்.

    பிறகு, அவர் செய்த செயல் எனக்கு அப்போது புரியவில்லை. சில பணியாளர்களிடம் மட்டும் “நேற்று நீ எங்கு சென்றாய்?” என்று கேட்டு விட்டு, “இன்று இவனோடு போ!” என்று கூறி வேறு இடத்துக்கு அனுப்பினார்.

    இவையெல்லாம், நான் சிறுவயதில் அவர் அருகில் இருந்து கவனித்தது! இன்னும் சொல்லப்போனால் எங்களுடைய வீட்டைக்கூட அவர்தான் கட்டினார். அதனாலேயே அவருடன் மேலும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அறிய பல விஷயங்களை எல்லாம் ஏதோ அற்பமான சமாச்சாரங்கள் போல போகிற போக்கில் வேடிக்கையாக விளக்கிக்கொண்டு போவார்.

    காலங்கள் ஓடின.

    நான் ஐரோப்பாவில் ஒரு கருத்தரங்கில் அமர்ந்திருக்கிறேன். கற்றறிந்த மேதைகள் விவாதித்துக்கொண்டும், அவர்களுடைய ஆய்வுக்கட்டுரைகளைப் பற்றி மேடையில் உரையாற்றிக்கொண்டும் இருந்தார்கள்.

    “Scrum Methodology Vs Traditional Project Management” என்பது தான் தலைப்பு.

    குறிப்பு: இசுக்கிரம் (Scrum) என்பது ஒருவகை மென்பொருள் உருவாக்க முறையியல். இதுபற்றி நான் எழுதியுள்ள குறுங்கட்டுரையை இங்கு காண்க –  http://ta.wikipedia.org/s/5zx

    கருத்தரங்கில் சிலர் ‘daily stand -up meetings’ பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் கருத்து தெரிவித்துக்கொண்டு  இருந்தார்கள்.

    என் நினைவுகள் 21  ஆண்டுகளுக்கு முன்னர் பறந்தது!

    1 . நீ நேற்று என்ன செய்தாய்?

    2 . இன்று என்ன செய்யப்போகிறாய்?

    3 . களத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? (கட்டுமான பொருள் பற்றாக்குறை அல்லது வேறு ஏதேனும்)

    கருத்தரங்கில் –

    சிலர் தங்கள் பணிகளை ‘முக்கியத்துவத்தின் அடிப்படையில் எப்படி வரிசைப்படுத்துவது?’, ‘அவ்வாறு செய்வதின் அனுகூலங்கள் என்ன?’, மற்றும் ‘மாஸ்கோ (MoSCoW) முறை’ என்று ஏதேதோ புரியாதவைகளைப் பற்றியெல்லாம் உரையாற்றினர்.

    என் நினைவுகள் மீண்டும் 21  ஆண்டுகள் பின்னோக்கி பயணித்தது!

    4 . எங்கெல்லாம் முக்கியமான பணிகள் நடக்கின்றன? (அடித்தளம், கூரை முதலியன)

    இன்று…

    சிலர் ‘பணியாளர்கள்தான் ஒரு நிறுவனத்தின் சொத்து’ என்றும் அவர்களுக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவத்தைப் பற்றியும் போதித்துக்கொண்டிருந்தனர்.

    அன்று…

    5 . யாருக்காவது அடி பட்டதா?

    6 . யாரேனும் இன்று விடுமுறை எடுத்துள்ளார்களா? 

    இன்று…

    சிலர் திறமான முறையில் எப்படி ‘Knowledge Management’ புரிவது என்றும் ‘Staff Rotation’ பற்றியும் விவாதித்தனர்.

    அன்று…

    சில பணியாளர்களிடம் மட்டும் நேற்று நீ எங்கு சென்றாய்?” என்று கேட்டு விட்டு, “இன்று இவனோடு போ!” என்று கூறி வேறு இடத்துக்கு அனுப்பினார்.

    என் மனதில் ஆயிரம் கேள்விகள் ஓடின..

    …. இருபது வருடங்களுக்கு முன், ஒரு சாதரணரிடமிருந்து, கற்றுக்கொண்ட அதே விஷய ஞானத்தை, படித்த மாமேதைகள்  ஆங்கிலத்தில்  விளக்குவதைக்  கேட்பதற்கா  நான்  ஒரு லட்ச ரூபாய் (1400€)  செலவளித்தேன்?

    …. அவர் பேசவில்லை, நடைமுறைப்படுத்தினார்!

    …. இவர்கள் பேசும் வார்த்தைகளில் இவர்களுக்கே நம்பிக்கை இல்லாத போது, எங்கே, என்றைக்கு நடைமுறைப்படுத்த போகிறார்கள்?

    …. இந்த எளிய விஷயங்களைப் புரியவைக்க ஒரு விவாத மேடை வேறு!

    …. எளிய வழிமுறைகளை சந்தைப்படுத்துவதற்கு என்றே இடையிடையே திணிக்கப்படும் எவருக்கும் விளங்கா பிதற்றொலிகள் வேறு!

    அறிவு என்பது புத்தகங்களைப்  படித்துவிட்டுப்  பிதற்றும் மேதைகளுக்கும்,  ‘so called’ சான்றிதழ் பெற்ற  வல்லுநர்களுக்கும் (certified professionals)  மட்டுமேயான  சொத்து அல்ல.

    இது போன்ற சாதாரண மனிதர்களிடம்தான் உலக வாழ்க்கைக்குத் தேவையான ‘இயல்பறிவு’ புதையலாய் பதுங்கிக்கிடக்கிறது.

    ஆனால் இன்று பலருக்கு இயல்பறிவு என்பதே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது – இந்தப் பலரில் நானும் அடக்கம்!

    இந்த நிகழ்வு கதையும் அல்ல! என் கற்பனையும் அல்ல. உண்மை! நீங்கள் இந்தக் கட்டுரையை  வல்லமையில்  படித்துக்கொண்டிருப்பது எந்த அளவிற்கு உண்மையோ – அந்த அளவிற்கு உண்மை. என்னைத் தட்டி எழுப்பிய   உண்மையும் கூட!

    இந்தக் கட்டுரையை என் கதாநாயகரான ‘சுப்பிரமணி மேஸ்திரிக்குச்’ சமர்ப்பிக்கிறேன். ஆம். நான் ஏற்கனவே சொன்னதுபோல், என் கதாநாயகர்களில் பெரும்பாலானோர்  இத்தகைய சாமான்யர்களே; ஆனால் சாமான்யப்பட்டவர்களில்லை. ‘உருள்பெருந்தேர்க்கு அச்சாணிகளாம்’  இவர்களின் ‘உருவுகண்டு எள்ளாமல்’, சாமான்யர்களைப் படித்து சாதனையாளர்களாக முயற்சிக்க வேண்டும்.

    இன்னும் சொல்லப்போனால், திருபாய் அம்பானி போன்ற சாதனையாளர்களைப் பற்றிய புத்தகங்களை வாசித்தால்கூட, அவர்கள் சாமானியர்களாக இருந்தபோது செய்தவற்றயே பெரும்பாலும் அவை பேசுகின்றன. அவர்களுக்கு இருந்த கடின உழைப்பு, ஒழுக்கம், உந்துதல், இவையனைத்திற்கும் மேலாக அவர்களுக்கு இருந்த ‘இயல்பறிவு’ – இவற்றிற்குப் பரிசாகத்தான் காலம் அவர்களை சிகரத்தில் வைத்து அழகு பார்த்தது.

    என் கதாநாயகரும்  சிகரம் தொட்டவர் தான்! ஆனால் என்ன? அவர் தொட்ட ‘சிகரத்தின் உயரம்தான் வேறு!’.

    Share
  • நான் கண்ட முருக பக்தர்!..

    விசாலம்                                                                                                                                    

    பல வருடங்களுக்கு முன் ……… பம்பாயில் தாதர் அருகில் இருக்கும் என் வீட்டிற்கு பள்ளியிலிருந்து வந்துக்கொண்டிருந்தேன் . என் வீட்டின் அருகில் இருக்கும் ஒரு பார்க்கிலிருந்து மிக அழகான காதிற்கு இனிமையான இசை, தென்றலில் மிதந்து என்னை அப்படியே ஸ்தம்பிக்க வைத்தது .கூடவே ஹார்மோனியத்தின் ஒலியும் அந்த இசையுடன் சேர்ந்து மெருகூட்டின .  நடு நடுவே முருகா என்ற நாமமும் கேட்டது . அந்தப்பார்க் மிகவும் சிறியது . தாதர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருக்கிறது . அந்த இடம் அநேகமாக மராட்டியர்கள் வசித்து வரும் இடம் . அங்கு தான் பிரகாஷ் படுகோனே . முன்னாள் கிரிகெட் வீரர் தாமானே. மெர்ச்சன்ட், உலகப்புகழ் பின்னணி பாடகி , லதாமங்கேஷ்கர் ஹிந்தி கிளாசிகல் பாடகர் திரு நாரயண் வியாஸ் போன்றவர்கள் வசித்து வந்தார்கள் . இப்போதும் அவர்கள் வீடுகள் அங்கு இருக்கின்றன ஆனால் அவர்கள் அங்கு இல்லை . அங்கு எல்லோருமே மராட்டியர்கள் தான் .இந்த நிலையில் முருகனின் பாடல்கள் அந்த இடத்தில் அமிருதமாக பொழிய எனக்கு வியப்பு ஏற்பட்டது.

    PITHUKULI_jpg_2623_2623536f

    மாதுங்கா என்றால் சென்னையில் இருக்கும் தி.நகர் மாதிரி….. ஆனால் தாதர் அப்படி இல்லை . அந்த இசையைக் கேட்க நானும் அந்த இடம் சென்றேன். அங்கிருந்தவர் எல்லோரும் வேஷ்டி சட்டையுடன் நெற்றியில் விபூதி தரித்து பயபக்தியுடன் ஒருவரைச்சுற்றி நின்று கொண்டிருந்தனர் அந்த ஒருவர் தாடியுடன் இருந்தார் தலையில் சீரடி பாபாவைப்போல் மஞ்சள் துணி கட்டியிருந்தார். முகத்தில் தமிழ்வாணன் போல் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டிருந்தார் . கொஞ்சம் தூரத்தில் ஒரு கூஜாவுடன் ஒருவர் நின்றிருந்தார் . அவர் அருகில் சென்றேன்

    “இங்கு என்ன நடக்கிறது .? இங்கு அமர்ந்து பாடுபவர் யார் ?”

    “இவரை உங்களுக்குத்தெரியாதா? இவர் பெரிய முருக பக்தர் . இவர் போக இருந்த ரயில் மூன்று மணி நேரம் லேட் அதனால் இந்த கார்டனில் அமர்ந்து இருக்கிறார்கள் . சில பக்தர்களின் வேண்டுகோளின்படி பாடிக்கொண்டிருக்கிறார்.

    ” இவர் பேரென்ன ?’

    ” இவரை எல்லோருக்குமே தெரியும் இவர்தான் பித்துக்குளி முருகதாஸ் “

    ” ஆ ..  அவரா இவர் .. இவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கேன் . இப்போதுதான் நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது”

    என் வீடு மிக அருகில் இருந்ததால் வேகமாக வீட்டிற்கு வந்தேன் என் பள்ளிப் புத்தகங்களை வைத்துவிட்டு வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிக்கொண்டு திரும்பவும் அந்த இடத்திற்கு வந்து புல்லில் அமர்ந்தேன் ஆஹா இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை

    கந்தா, குமரா, வடிவேலா என்று பல பாடல்கள் , பின் திருப்புகழ் என்று அருவி கொட்டுவது போல் அவருக்குரிய பாணியில் பாடிக்கொண்டிருந்தார் அன்றுதான் அவரை முதன் முதலாக பார்த்தேன். அதன் பின் பல தடவைகள் மாதுங்கா பஜனைசமாஜுக்கு வருகை தரும்போதெல்லாம் நான் போவது வழக்கம் பின்னர் அவரைப்பற்றி பல விஷயங்கள் நான் தெரிந்துக்கொண்டேன்

    ஆமாம் ! அவர் பெயர் பித்துக்குளி முருகதாஸ் என்று வந்த காரணம் என்ன ?

    பிரும்மானந்த பரதேசி என்ற ஒரு சித்தர் இருந்தார் , அவர் உடை ஒன்றும் அணியமாட்டார் ஆனால் அவரது உடலை அவரது தலை முடி மூடி மறைத்தது .அத்தனை நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும் . அவரது வயதைப்பற்றி பலர் பலவிதமாகச்சொல்லி வந்தனர் . சிலர் நானூறு வயது என்றும் கூறினர் . ஒரு தடவை அவர் கோயம்பத்தூரில் நடந்துக்கொண்டிருக்க திரு முருகதாஸ் ஒன்பது வயது பையன் .. தெருவில் கல்லை எரிந்து வீதியில் விளையாடிக் கொண்டிருந்தான் . அந்த நேரம் நிர்வாணமாக பிரும்மானந்தர் அந்தப்பக்கம்வந்தார் . அவரை இந்த நிலையில் பார்த்ததும் “சே என்ன இவர் இப்படி வருகிறாரே என்று நினைத்து ஒரு பயத்தில் கல்லை அவர் மேல் வீசினான். அவ்வளவுதான் அவர் நெற்றியில் அந்தக்கல் பட்டு பொல பொலவென இரத்தம் வழியத்தொடங்கியது .

    “டேய் பித்துக்குளி” ! நீயும் என்னைப்போல் ஒரு நாள் ஊர் சுத்தி முருகன் பெயரைச்சொல்லி முன்னுக்கு வரக்கூடியவன் .நீ ஏண்டா இப்படி செய்தே?’ என்றபடி தன் நெற்றியில் கையை வைத்தார் . என்ன ஆச்சரியம் .உடனே இரத்தம் வடிந்தது நின்று விட்டது . அன்று அவர் மேல் அளவுகடந்த பக்தி ஏற்பட்டு அவர் அழைத்த பெயரான “பித்துக்குளியையே” தன் பெயருடன் சேர்த்துக்கொண்டு பித்துக்குளி முருகதாஸ் ஆனார் . முருகதாஸின் இயற்பெயர் திரு. சுப்பிரமண்யம் அவரது தாயின் பெயர் அலமேலு தந்தை திரு சுந்தரமய்யர் .. நடுத்தர குடும்பமாக இருந்தாலும் இவர் தானம் செய்வதை மிக முக்கியமாகக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தார் கேட்பவர்க்கெல்லாம் இல்லையென்று சொல்லாமல் தண்ணீர் மற்றும் உணவு வாரி வழங்குவார். ஒரு சிறந்த முருகபக்தர். அவருக்குப் பிறந்த அவரது மகனோ ஒரு முருகபக்தன் மட்டுமில்லாமல் முருகதாசனாகவும் ஆகிவிட்டார். ஒரு எட்டு வகுப்பு வரைதான் படித்திருந்த அவர் பின்னால் உலக முழுவதும் சுற்றித் தமிழும், தமிழ்ப்பாடல்களையும் பரப்பி சரவணபவ அலைகளை வீச வைத்தது எத்தனைப் பெரிய சாதனை! அவரது எட்டு வயதிலேயே பல பக்திப் பாடல்கள் அருவி போல் கொட்ட ஆரம்பித்தன, அவரது பதினைந்தாம் வயதில் எங்கும் வந்தேமாதரம் ஒலி நிரம்ப அவர் மனதும் நாட்டிற்கு எதாவது செய்யவேண்டும் என்று தீர்மானிக்க சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். வீட்டிலிருந்தபடி இது செய்ய முடியாது என தீர்மனித்து வீட்டை விட்டு வெளியேறினார், பிரிட்டிஷ் போலீஸ் அவரைப்பிடித்து செம அடி அடித்தது அந்த அடியில் தான் அவருக்கு ஒரு கண் சேதமாகி பார்வை போனது என்று சிலர் சொன்னார்கள். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் அவர் கிட்டிப்பிள்ளை விளையாட்டின் போது அந்தக் கில்லித் தண்டு கண்ணில் தெரித்து ஒரு கண்ணில் அடிப்பட்டதாக என் தந்தை எனக்குச் சொல்லியிருக்கிறார். இரண்டுமே சரியாக இருக்கலாம் .

    இதனால் தான் அவர் முகத்தை கருப்பு கண்ணாடி அலங்கரித்தது .பின்னர் பெங்களூரு சிறையிலும் அந்தப் போராட்டத்தின் போது கைதியாகி அடைக்கப்பட்டார். ஒரு ஆறுமாதங்கள் கழிந்த பின் வெளியே வந்து முழு ஆன்மீகத்தில் ஈடுபட்டார். அடிக்கடி பழனி குகையிலும் , திருவண்ணாமலை குகையிலும் தியானம் செய்ய ஆரம்பித்தார்  ஒரு சன்யாசியாக.

    வட இந்தியாவுக்குப் பாத யாத்திரையாக பல முக்கிய க்ஷேத்திரங்களுக்குப்போய் தன் ஆன்மீக அறிவை வளர்த்துக்கொண்டார் , ஒரு சமயம் சரஸ்வதி நதியின் கரையில் அமர்ந்து தியானம் செய்ய அவரது உள்மனம் அவரை அழைத்தது ” முருகதாஸ் .. நீ தமிழ் நாட்டிற்கு திரும்பிச்செல். உனக்கு அங்கு பல சேவைகள் செய்ய வாய்ப்பு காத்திருக்கிறது , ஒரு பெரிய இசை மேதையாக பக்தியைப் பரப்பு ” இந்த உள்குரலைக்கேட்டு முருகனது ஆணையாக இதை பாவித்து உடனே தமிழ் நாட்டிற்குத் திரும்பி வந்துவிட்டார். அப்போது அவருக்கு வயது முப்பது ., அவரது இசை பழனி மலையில் எதிரொலிக்க திரு பிரும்மானந்த பரதேசி சுவாமிகள் இதைக்கேட்டு அவரை சிஷ்யராக ஏற்று பல பாடல்களைக் கற்றுக்கொடுத்தார் . அவரைத்தவிர ஆனந்தாஸ்ரமத்தின் தலைவர் சுவாமி ராமதாசர் கேரளாவில் இருக்கும் கஞ்சன்கோடிலிருந்து வந்து இவரது இசையில் மெய்மறந்து அவருக்கு “முருகதாஸ்” என்ற பட்டமும் கொடுத்தார் . அத்துடன் பிரும்மானந்த யோகீஸ்வரர் கொடுத்த ‘பித்துக்குளி’ என்ற பெயரையும் இவர் தன் பெயருடன் சேர்த்துக்கொண்டார்.

    images (2)

    இவர் அடிக்கடி விரதங்கள் அனுஷ்டிப்பார் அதில் சஷ்டி, கிருத்திகை, ஏகாதசி, சதுர்த்தி என்று பல மாறி மாறி வரும் இந்த விரதத்துடன் மௌன விரதமும் அடிக்கடி கடைபிடிப்பார். இவர் கன்யாகுமரிலியிலிருந்து பத்ரி கேதார்நாத் வரை பல புண்ணிய தலங்களைத் தரிசித்திருக்கிறார் இவருக்குக் கன்யாகுமரி கோயில் மிகவும் பிடித்த ஒன்று . கிட்டத்தட்ட தன் ஐம்பத்தெட்டாவது வயதில் அவர் திருமணம் செய்து கொள்ள அந்தத் தேவியின் அருளைக் கேட்டபோது பகவதி தேவியும் தன் மேலிருந்த பூவை கீழே போட்டு சம்மதம் தெரிவித்தாளாம் . அதன் படி அவருக்கு வந்த மனைவியின் பெயரும் தேவி சரோஜா .. இந்த தேவி சரோஜா பித்துக்குளி முருகதாஸின் இசையிலும் அவரது முருக பக்தியிலும் மனதைப் பறி கொடுத்து அவரைத் தன் மணாளனாக ஆக்கிக்கொள்ள விரும்பினார். இதில் அவருக்குச் சேவை செய்ய வேண்டும், அவருடன் சேர்ந்து முருகனது பாடல்களைப் பாட வேண்டும் என்ற நோக்கமே அந்தப் பெண்மணிக்கு இருந்ததாம் . கன்யாகுமரி அம்மனும் பூவை அளித்து சம்மதம் தெரிவித்ததால் பித்துக்குளி முருகதாஸ் அவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணம் ஆனபின் ஒரு தடவை அவர் தன் மனைவியுடன் மும்பைக்கு வருகை தந்தார் . அப்பப்பா .. அப்போது நடந்த சம்பவம் . இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது . ஒரு சன்யாசியாகப் போனவர் எப்படி இந்த வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பலர் அவர் முன் மிகவும் மோசமாக கடுப்பைக் காட்டினர் மாதுங்காவில் அவர் பஜன் நடக்கவிடாமல் கற்களை வீசினர். பின்னால் அமர்ந்திருக்கும் சிலருக்கு இது தெரிந்து மெள்ள அவரைப் பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்ததாக கேள்விப்பட்டேன், அவர் திருமணம் குறித்து ஒரு பத்திரிக்கையாளர் பேட்டி எடுத்தபோது அவர் சொன்னது .”அடியேன் வயது ஏற ஏற என் உடல் தொல்லை தரும் நேரத்தில் என்னைப் பார்த்துக்கொள்ள என் தாயார் தான் இருந்தார் .அவர் மிகவும் பாசமானவர் . அவருக்கு நான் சேவை செய்யவேண்டுமே தவிர அவர் எனக்கு செய்வதை அடியேன் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்? சில கடமைகள் மனைவிதான் செய்ய முடியும். கணவர் நோய்வாய்பட்டால் கூட இருந்து பார்த்துக்கொள்வது அவள்தான். அடியேனின் மனைவி தேவி சரோஜா மிகவும் அன்பைப் பொழிபவர் . கடவுளின் சித்திரங்கள் மிக அழகாக வரைவார். எல்லாம் அந்த முருகனின் விருப்பம் ” ஆம் உண்மைதான் , சிறுவயதை விட வயதான பின்தான் எல்லோருக்கும் ஒரு துணை மனம் விட்டுப் பேசவோ , அல்லது அன்பை பரஸ்பரம் பரமாறிக்கவோ  தேவைப்படுகிறது

    இவருக்கு அமைந்த மனைவி கடவுள் பக்தி மிகுந்தவர் . அவர் வீட்டில் அம்பாள் பூஜை ஒவ்வொரு வெள்ளிக் கிழமைக்கும் நடக்கும் . அதுவும் லலிதா சஹஸ்ரநாமம் சொல்லியபடி இச்சா சக்தி , ஞானசக்தி , கிரியா சக்திக்கு பூஜை நடக்கும் . பலர் இந்தப் பூஜையைப் பார்க்க வருவார்கள். இவரைப் பார்க்க விரும்புபவர்கள் மாட்டுப் பொங்கலன்று மருதமலை முருகனை தரிசிக்கப் போனால் இவரையும் பார்க்கலாம். ஒவ்வொரு வருடமும் தவறாமல் இவர் இந்த மருதமலைக் கோயிலுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார், இவருடைய முருகனும் இவருக்குப் பல அதிசயங்களைச் செய்திருக்கிறான். ஒரு சமயம் இவருடைய மற்றொரு கண்ணில் பிரச்சனை ஏற்பட்டு வலி ஏற்பட்டதாம். ஏற்கனவே தன் ஒரு கண் தெரியாமல் போனதால் இந்தக் கண்ணிற்கும் ஏதாவது வந்துவிடப் போகிறதே என்று சுவாமி ராம்தாஸ் ஆச்ரம பஜனுக்குப் போனார் அங்கு முருகனின் பல பாடல்கள் கேட்டு தன்னை மறந்தார் . அப்போது ஒரு மூதாட்டிக்கு அருள் வந்து அவரிடம் வந்தாள் . அவரது வலது கண்ணைத் தடவி விட்டாள் ” அப்பா முருகதாஸ் இந்தக்கண்ணுக்கு ஆயுசு கெட்டி .. நீ நன்றாக இருப்பாய்” என்றாள். மற்றொரு சமயம் வட இந்தியாவில் பாதயாத்திரை போயிருந்த போது ஒரு நாள் இரவு எட்டுமணி மேல் இருக்கும் . மனித நடமாட்டம் இல்லாத ஒரு இடம் . பசி எடுத்தது . அங்கு ஒரு சின்ன வீடு தென்பட்டது. உள்ளே ஒரு பெண்மணி நின்றது தெரிந்தது . வீட்டு வாசலுக்குப் போய் “அம்மா சாப்பிட எதாவது இருக்கிறதா?” என்று கேட்க அந்த அம்மாள் ஒரு வாழை இலை போட்டு சுடச்சுட சாதம் பரிமாறினார் . பின்னர் ” மகனே இந்தத் திண்ணையில் ஓய்வுஎடுத்துக்கொண்டபின் நாளை யாத்திரை தொடருங்கள்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். மறுநாள் காலை .ஆதவனின் கிரணங்கள் ஒளிபட திண்ணையிலிருந்து எழுந்து கதவைத்தட்ட அது தானாகவே திறந்து கொண்டது. உள்ளே அறைகள் ஒன்றுமில்லாமல் வெட்டவெளியாக இருந்ததாம் . வந்தது அந்த முருகனின் தாயல்லவா . அப்படியே கண் கலங்கி தன்னை மறந்து நின்றார் முருகதாஸ் . பிருந்தாவனத்தில் நடந்த ஒரு சம்பவம் . யமுனை நதிக்கரையில் உள்ள பிருந்தாவனில் ஒருவர் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தார் . கண்ணன் விளையாடிய இடமல்லாவா? கிருஷ்ணலீலா சொல்லிக்கொண்டிருந்தார் , ‘கண்ணன் வந்தான் மெள்ள பூனைப்போல் நடந்து உறியின் மேல் ஒரு கண் வைத்து கல்லடித்தான் பின் வெண்ணெயைத் திருடி உண்டான் .பின் எல்லா கோபிச்சிறுவர்களும் கேட்க தன் கையை வீசிக்கொடுத்தான் ” என்றபடி அவர் தன் வெறுங்கையை வீசினார் ..

    கூட்டத்தில் அமர்ந்திருந்த அத்தனைப்பேர் வாயிலும் வெண்ணெய் விழுந்தது. ஒரு மறக்க முடியாத சம்பவமாக பித்துக்குளி முருகதாஸ் உணர்ச்சி வசப்பட்டு கூறினார். இவருக்கு மலேசியாவில் இருக்கும் பத்துமலை முருகன் ரொம்பவும் பிடித்த இடமாம். வாழ்க்கையில் பலராலும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கும் . ஊனமுற்றவர்களுக்கும் பலவிதத்திலும் சேவை செய்து வந்திருக்கிறார் இவர். தை பூசத்திலே இவரது பிறந்த நாள் வருவதினால் அன்று எல்லோருக்கும் அன்னதானம் செய்து வருகிறார் . அவரது மனைவி தேவி சரோஜா இந்த உலகத்தில் இல்லாதது மனதுக்கு கனமாகத்தான் இருக்கிறது . தவிர ஶ்ரீ ஜ்யோதி மாயாதேவி டிரஸ்டு ஒன்றும் சேவை செய்யும் நோக்கத்துடன் நடத்தி வருகிறார் என்று தெரிய வந்தது . நான் அடிக்கடி ரசித்து கேட்கும் இவரது பாடல்கள். அம்மா தாயே கலைவாணி . அலைபாயுதே மகர குண்டலம் ஸ்வாகதம் செந்தூர் முருகன்  பால் வடியும் முகம் …………..

    இந்த முருக பக்தரைப்பற்றி எழுதியதை ஒரு இரண்டு பேர் படித்தால் கூட நான் எழுதிய பலனும் மனத் திருப்தியும் எனக்கு ஏற்படும்.

    Share
  • பிப்ரவரி (2013) மாதச் சிறுகதைப் போட்டி முடிவுகள்

     

    அன்பு நண்பர்களே,

     வணக்கம். ஐக்கியா தொண்டு நிறுவனம் மற்றும் நம் வல்லமையும் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டிக்கு மகத்தான ஆதரவு அளித்து வரும் அனைத்து படைப்பாளர்கள் மற்றும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. நல்ல படைப்புகள் வாசகர் மனதில் என்றும் நீங்காத இடம் பெற்றுவிடுகிறது. இது போன்று நிலைத்து நிற்கச் செய்யும் படைப்புகளை ஊக்குவிப்பதே  இப்போட்டியின் முக்கிய குறிக்கோள். அந்த வகையில் நம் படைப்பாளிகள் அனைவரும் பாராட்டும், வாழ்த்தும் வாசகர்களிடமிருந்து பின்னூட்டமாகவும் பெற்று வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற ஊக்கங்களே மேலும் ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கக்கூடியது. ஆக, வாசகர்களின் முழுமையான ஈடுபாடும் மிகஅவசியமாகிறது. தொடர்ந்து அனைவரின் ஒத்துழைப்பையும் நாடுகிறோம். தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டிருக்கும் ஐக்கியா தொண்டு நிறுவனர் திரு வையவன் அவர்களுக்கும், சிறுகதைகளை பொறுமையாக வாசித்து அதற்கான மதிப்பீட்டை பாரபட்சமின்றி வழங்கி வரும் பிரபல விமர்சகர் உயர்திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் நம்முடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதோ சென்ற பிப்ரவரி மாதத்தின் போட்டி முடிவுகள். வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றி பெறும்  விடாமுயற்சியில் இருப்பவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பர்களே. தொடர்ந்து உங்கள் படைப்புகளை வரவேற்கிறோம்.

    அன்புடன்
    பவள சங்கரி

    வெங்கட் சாமிநாதன்

    இம்மாதம் கதைகள் குறைந்துள்ளது வழக்கமாக நிறைய கதைகள் அனுப்புகிறவர்கள் பலனின்றி உற்சாகம் குறைந்த காரணமாகவும் இருக்கலாம். ஆனாலும்  இரண்டு கதைகள் நன்றாக எழுதப்பட்டுள்ளனவை வந்துள்ளன. வழக்கம் போல் பழமை பேசியின் ”பணவிடையும்”, மணி ராமலிங்கத்தின்  ”சூரியன் வந்து வாவென்றபோது” என்னும் இரண்டு கதைகளும் நன்றாக எழுதப்பட்டுள்ளன். உண்மையில் கதைகள் என்று எழுதப்பட்டுள்ளவை இவை இரண்டு தான். இரண்டுமே தடம் மாறும்போது திரும்ப தடம் வந்து சேரும் மனிதப் பண்பைச் சொல்கின்றன. இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    அன்புடன்,

    வெ.சா.

    போட்டியில் பங்கு பெற்ற கதைகள்:

    வறு கடலை

    முதல் நாள்

    வயோதிகருக்குமுண்டு வெறி

    கல்லூரி கட்டணம்

    பழங்கணக்கு

    உறவுகள்

    பறவை மனசு

    ஆட்ரா ராசா”

    பச்சை நிறமே இல்லை”

    குறையொன்றுமில்லை”!…..

    ஆதிரையின் தீர்மானம்

    தொடர்ந்து இந்த முறையும் பரிசு பெற்றுள்ள திரு பழமைபேசி மற்றும் மணி ராமலிங்கம் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.  தொடர்ந்து அனைவரும்  இப்போட்டியில் பெங்கெடுத்து தங்கள் வல்லமையை  வெளிப்படுத்தி பரிசுபெற வாழ்த்துக்கள்.

     

    Share
  • அறுமுகநூறு (3)

    சச்சிதானந்தம்

    அறுமுகநூறு

     

    தமிழெனும் மந்திரம் தருவாய் போற்றி,

    உமியெனும் செருக்கை அறுப்பாய் போற்றி,

    சிமிழெனக் குவிந்த குறுநகை போற்றி,

    அமிழ்ந்திடும் மனமுன் அடியைப் போற்றி!                                                                     11

     

    அரும்பாத தாமரைப் புன்னகை போற்றி,

    அரும்பாதம் பற்றியே போற்றுவோம் போற்றி,

    தரும்பாதம் பற்றினால் வரம்தருவான் போற்றி,

    விரும்பாத பேருக்கும் அருளுவான் போற்றி!                                                                 12

     

    ஐந்தமு துணவின் சுவையே போற்றி,

    நைந்தம னங்களுக் கருள்வாய் போற்றி!

    வைந்தவ ரெல்லாம் வருவார் போற்றி,

    பைந்தமிழ் மைந்தன் பெருமை போற்றி!                                                                         13

     

    இசைக்கு மயங்கும் இறைவா போற்றி,

    இமைக்க மறந்தேன் உன்னைப் போற்றி,

    இணைந்து கொண்டேன் தலைவன் போற்றி,

    இருண்ட இதயம் களைவோன் போற்றி!                                                                          14

     

    வாரம் கடந்து, வருடம் கடந்து,

    வாழ்வைக் கடந்து, வேட்கை கடந்து,

    காமம் கடந்து, கவலை கடந்து,

    கந்தன் அருளின் கருணை அடைவோம்!                                                             15

     

    (தொடரும்)

    படத்திற்கு நன்றி :

    http://www.gildedserpent.com/art36/SashiResponse.htm

     

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8

    தேமொழி

     

    புல்லாங் குழல்கொண்டு வருவான்! – அமுது
           பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
    கள்ளால் மயங்குவது போலே – அதைக்
           கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்.       

    தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
    தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை.

    கண்ணன் – என் விளையாட்டுப் பிள்ளை
    -பாரதியார்

     

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 9                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7>>

    Share
  • தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் 9

    திவாகர்

    தமிழிலே பல நகைச்சுவை கதைகள் ஆதியிலிருந்தே உண்டு. மகாகவி பாரதி நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்பது அவர் கவிதைகளிலே மிகச் சிறந்த இடத்தைப் பெற்ற குயில் பாட்டு ஒன்றினைப் படித்தாலே போதும். மனிதன் ஒருவனே நகைச்சுவையை ரசிக்கத் தெரிந்தவன், அதை உணர்ந்து வெளிக்காட்டி சிரிக்கத் தெரிந்தவன். காந்தியடிகள் வாழ்க்கையில் நகைச்சுவைக்கு மிகப் பிரதானம் உள்ளது. கடுமையான எண்ணம் கொண்ட எதிரிகளைக் கூட உண்மையான புன்னகையோடு எதிர்கொண்டால் அவனை இம்சிக்காமலே வெற்றி கொள்ளமுடியும் என்பார்.. அஹிம்சாவாதியல்லவா.. அதே போல பக்தியால் நாம் மனமுருகிப்பாடும் தேவாரத்தில் கூட அப்பர் பெருமான்  ”வெள்கினேன் வெள்கி நானும் விலாவிறச் சிரித்திட்டேனே (உள்ளத்திலேயே நீ இருக்க வெளியே எல்லாம் உன்னைத் தேடுவது கண்டு எனக்குள்ளே வெட்கப்பட்டு விலா எலும்பு விரிய சிரித்தேன்) என்று  கூட சிரிப்பதில் உள்ள சுகத்தைப் பாடுவார். எத்தனை சீரியஸான ஆசாமியையும் நல்லதொரு நகைச்சுவை கொண்டு சிரிக்க வைக்கமுடியும் அப்படி சிரிக்கவில்லையென்றால் அவன் மனிதப் பிறவியே அல்ல. சிரிப்பினால் ஆயுள் பெருகும். மனம் விட்டு சிரிக்க சிரிக்க உடலிலிருந்து கெட்ட வாயுக்கள் வெளியே வருகின்றன.

    எல்லா எழுத்தாளர்களுமே முடிந்தவரை நகைச்சுவையை தம் எழுத்தில் காண்பிக்கதான் வேண்டும். அப்படிக் காண்பிக்கத்தான் செய்கிறார்கள். எளிய நகைச்சுவையின் ருசியே ஒரு தனி விருந்து. அதை அனுபவித்துப் படிப்பதே ஒரு சுகம்.

    கல்கியின் கதைகளில் மிகப் பெரிய புகழ் பெற்ற பொன்னியின் செல்வனில் கூட அந்தக் கதாநாயகனான அருள்மொழிவர்மனை விட வந்தியத் தேவனும், ஆழ்வார்க்கடியானும் அதிகம் பேசப்படுகிறார்கள். காரணம் நகைச்சுவையோடு அந்தப் பாத்திரங்களை வாசகர் நெஞ்சங்களை நிரப்பியதுதான். அப்படித்தான் சுஜாதாவின் புகழ்பெற்ற ‘கணேஷ்-வசந்தில்’ வசந்த் மூலம் படைக்கபபட்டிருக்கும் நகைச்சுவை மட்டும் இல்லாவிட்டால் இரு பாத்திரங்களுக்குமே ஒரு மிகப் பெரிய ரசனை கிடைத்திருக்காதுதான். ஆனால் சென்ற நூற்றாண்டின் இணையற்ற நகைச்சுவை நாயகன் யாரென்றால் அது நிச்சயமாக தேவனின் ‘சாம்பு’தான்.

    சாம்பு பாத்திரம் படைக்கப்பட்ட காலத்தைப் பற்றி முதலில் சொல்லவேண்டும். இரண்டாம் உலகப்போர் மும்முரமாக நடைபெற்ற 1942 ஆம் ஆண்டில் தேவன் ‘துப்பறியும் சாம்பு’ எழுதினார். அந்தக் கால கட்டத்தில் தேசத்தில் உலக மகா யுத்த பயமும், பிரிட்டிஷாரின் மீதான கோபமும், யுத்தகாலமாதலால் அத்தியாவசியப் பொருட்கள் பஞ்சமும், இந்த யுத்தத்தைக் காரணம் காட்டி அரசாங்கத்தின் அச்சுறுத்தலும் இதற்கும் மேல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உச்சகட்டமான ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற கோஷத்துடன் விதேசப் பொருட்களையும் பகிஷ்கரித்த நாட்கள் அவை. நிச்சயமாக சாதாரண பொதுமக்கள் நிம்மதியில்லாமல் வாழ்ந்த நாட்களாக அந்தக் கால கட்டத்தை நாம் காட்டலாம். இரண்டாம் உலக யுத்தத்தில் இங்கிலாந்து பல தோல்விகளை சந்தித்த காலமாதலாலும், உலகத்தின் தலைநகரமாகக் கருதப்பட்ட லண்டன் மாநகரமே அபாயக் கட்டத்தில் இருந்ததாலும் பிரிட்டிஷார் பாரதமக்கள் மீது எவ்வித தயாதாட்சண்ணியமும் காண்பிக்காத சிரமமான நாட்கள் என்றே சொல்லவேண்டும். யுத்தத்தில் பாரதம் நேரடியாக அவ்வளவாக பாதிக்கப் படவில்லையே தவிர, யுத்தகால கஷ்டங்கள் என்னென்ன உண்டோ அனைத்திலும் தேசம் முழுவதும் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தது என்றுதான் தெரியவருகிறது. இப்படிப்பட்ட விசித்திரமான சூழ்நிலையில்தான் தேவனின் மூளையில் சாம்பு தோன்றினான். துப்பறியும் சாம்பு எனும் பெயரில் ஆனந்த விகடனில் தொடராக எழுதவும் ஆரம்பித்தார். பின்னாளில் அந்த கதை பெரும் புகழ் அடையப் போகிறது. அந்த சாம்பு தமிழர்களின் ஹாஸ்ய உணர்ச்சியில் திக்கு முக்காடி மிகப் பெரிய நாயகனாய் வலம் வரப் போகிறான் என்பதை தேவன் அன்று உணர்ந்திருப்பாரோ என்னவோ..

    இதில் விசேஷம் என்னவென்றால் தேவனால் தோற்றுவிக்கப்பட்ட தலைசிறந்த நகைச்சுவைக் கதையின் நாயகனான ‘துப்பறியும் சாம்புவுக்கு’ தெரியாத கலை ஒன்று உண்டு என்றால் அது ‘துப்பறிவதுதான்’. தேவன் துப்பறியும் சாம்புவை எப்படி அறிமுகம் செய்கிறார் – சற்று படியுங்களேன்.

    ‘நாற்பதாவது வயதில் எவனொருவன் முட்டாளாகவே இருக்கிறானோ அவன் ஆயுள் முழுதும் முட்டாளாகவே இருப்பான்’ என்று யாரோ -முட்டாள்தனமாக அல்ல- சொல்லிவைத்தார். சாம்புவுக்கு நாற்பது வயது சரியாக ஆகி இருந்தது. அவனை எல்லோரும் பார்த்த மாத்திரத்தில் ‘முட்டாள்’ என்றார்கள்.

    ‘விளாம்பழம்’ பார்த்திருக்கிறீர்களா? கொஞ்சம் பெரிய விளாம்பழத்தை நினைத்துக்கொள்ளுங்கள்; அதுதான் சாம்புவின் தலை. கன்றுக் குட்டிகள் அழகாக காதுகளை முன்புறம் வளைத்துக்கொண்டு பார்க்கும் அல்லவா? அந்த மாதிரி காதுகள்… கண்கள் ஒருமாதிரி அரைத்தூக்கத்தைத் தேக்கிகொண்டிருக்கும். இந்த லட்சணங்களுடன் ஒரு பித்தானில்லாத சட்டை.. ஒரு பழைய கோட்டு, கிழிசல் குடை இவைகளை சேர்த்துகொள்ளுங்கள்.. இதோ சாம்பு பிரத்தியட்சமாகிவிட்டான்..”

    தேவன் இப்படித்தான் ஒரு கதாநாயகனை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.. பின்னாளில் இதே தொடரில் போகப் போக மிகப் பிரபலமாகி தன் ஆடை அலங்காரங்களை சற்று மாடர்னாக சாம்பு மாற்றிகொண்டாலும் அவன் முட்டாள்தனம் மட்டும் அவனோடு அப்படியே ஒட்டிகொண்டுவிட்டதை தேவன் அழகாக விவரிப்பார் கதை முழுதும். ஏனெனில் சாம்புவின் முட்டாள்தனம்தான் அவன் பலம். அவன் புத்திசாலியாக செயல்படுவதாக நினைத்துக் கொண்டு அவன் ஈடுபடும் காரியங்கள் அனைத்தும் அவனுக்கு மாபெரும் தோல்வியை – அவன் ஒருவன் மட்டுமே அறியும் விதத்தில் – அடைவதையும் ஆனால் அதிர்ஷ்ட தேவதை அவனை அணைத்துக் கொண்டு வெற்றியின் உச்சியை அடைவதையும் மிக அழகாக விவரித்திருப்பார் தேவன்.

    துப்பறியும் சாம்பு வின் சித்திரமே விசித்திரம். தேவனின் பல கதை, கட்டுரைத் தொடர்களுக்குச் சித்திரங்கள் வரைந்தவர் ராஜு. ‘துப்பறியும் சாம்பு’வின் சித்திரத்துக்கு உயிரூட்டியவர் அவரே. பிறகு, விகடனில், தேவனின் மறைவுக்குப் பின், 1958 ஆம் ஆண்டில்‘சாம்பு’ ஒரு சித்திரத் தொடராக வந்தபோது ‘கோபுலு’ படங்கள் வரைந்தார் (நன்றி, பேராசிரியர் பசுபதியின் வலைப்பூ).மேலும் திரு பசுபதி எழுதுகையில் இப்படிச் சொல்கிறார்.

    தேவனின் ’துப்பறியும் சாம்பு’ தமிழ் நகைச்சுவை இலக்கியத்தில் தனித்தன்மையுடன் விளங்கும் ஒரு சிறுகதைத் தொடர். ஆகஸ்ட், 30, 1942 -இல் “ஆனந்த விகடனில்” தொடங்கிய அந்தத் தொடரைப் பற்றிய சில சுவையான தகவல்களைத் ‘தம்பி’ ஸ்ரீநிவாசன் தருகிறார்:

    “ சாம்புவை வைத்து முதலில் ஒன்பதே கதைகளை ‘தேவன்’ எழுதினார். பின்பு வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க, மேலும் ஒன்பது கதைகளை எழுதினார். ஆனால், பொதுமக்கள் சாம்புவை அதிகமாக எதிர்பார்க்கவே திரும்பவும் இருமுறை சாம்பு கதைகளைத் தொடர்ந்தார். மொத்தம் 50 சாம்பு கதைகள் வெளிவந்துள்ளன. சாம்பு கதைகள் எழுது முன்பு “கோபாலன் கவனிக்கிறார்’ என்ற ஒரு சிறு துப்பறியும் தொடரையும் எழுதினார்” (https://groups.google.com/forum/?fromgroups=#!topic/yappulagam/Dqqb2UWCkag)

    பின்னாட்களில் எஸ்.எஸ். வாசனின் ஜெமினி நிறுவனம் எடுத்த  ’மோட்டார் சுந்தரம் பிள்ளை’ எனும் திரைப்படத்தில் சாம்புவின் ஆக்கம் பயன்படுத்தப்பட்டது. சாம்பு கதைகளில் வந்த நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தாமல் சாம்புவின் டெக்னிக் மட்டும், (அதாவது சாம்புவின் முட்டாள்தனம், அப்பாவித்தனம், அதிர்ஷ்டம் இந்த மூன்றும் கலந்த கலவை) பயன்படுத்தப்பட்டது. படத்தில் கதாநாயகனாக நடித்த சிவாஜியின் மருமானாக வரும் நாகேஷ் அந்தப் பாத்திரத்தில் மிக இயற்கையாக நடித்தார். அதற்கு அவர் உடல் வாகு கூட பயன்பட்டது என்றே நினைக்கிறேன். தேவன் தன் கடைமூச்சு வரை விகடனில் பணியாற்றியதால் அவருடன் அவர் பாத்திரப்படைப்புகளும் சேர்ந்து ஜெமினி நிறுவனத்தாருக்கு சொந்தமாகப் பட்டதோ என்னவோ தேவன் கதையோ சாம்புவோ இந்தப் படத்தில் சம்பந்தப்பட்டதாக டைட்டிலில் காண்பிக்கவில்லை. (கோமதியின் காதலன்’ படத்தில் மிக அழகாக ‘கதை – தேவன் – ஆனந்தவிகடன்’ என்று பிராண்ட் கொடுத்து டி.ஆர். ராமச்சந்திரன் டைட்டில் போட்டிருந்தார் என்பதையும் நினைவில் கொள்க.) ஆனால் மோட்டார் சுந்தரம் பிள்ளையில் தேவன் பெயர் இல்லாவிட்டால் என்ன, அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளிவந்த அத்தனை பேரும் நாகேஷ் வடிவில் மறுபடியும் தேவனின் ‘சாம்பு’ வைப் பார்த்த திருப்தியை அடைந்தார்கள் என்றே பேசப்பட்டதும் உண்டு.

    தேவன் உயிருடன் இருக்கும் காலத்திலேயே அவரே சாம்பு நாடகத்துக்கான வசனத்தையும் எழுதி இருக்கிறார். அவர் காலத்திலேயே சாம்பு நாடகமும் பலமுறை மேடையேற்றப்பட்டது. என்.எஸ் நடராஜன் என்கிற தேவனின் நண்பர் சாம்பு வேஷம் போட்டதாலேயே சாம்பு என்.எஸ். நடராஜன் என்று அறியப்பட்டதாக பேராசிரியர் பசுபதி எழுதியிருக்கிறார். (இவருடைய நாடக போஸ்டர் ஒன்று 1962 இல் வெளியானது, படமாகக் காண்பிக்கப்பட்டுள்ளது). தேவன் கைப்பட எழுதிய  நாடகமாக்கப்பட்ட ஆக்கத்தைக் கூட பேராசிரியர் பசுபதி தன் வலைப்பூவில் பதிப்பித்துள்ளார். சாம்பு பின்னாளில் தூரதர்ஷனில் தொடராக வந்தது. காத்தாடி ராமமூர்த்தி சாம்புவாக நடித்தார். மேலும் பல நாடகக்குழுக்கள் சாம்புவைப் பயன்படுத்திக் கொண்டன.

    துப்பறியும் சாம்புவில் சென்னையின் முக்கியமான இடமான மாம்பலம் வெகுவாகப் பேசப்பட்டது. திருநீர்மலை, பாரீஸ்கார்னர், (டவுன்) எழும்பூர், செண்ட்ரல் போன்ற இடங்களைப் பற்றிய வர்ணனை அவ்வப்போது வரும். கும்பகோணம் சற்று பிராபல்யம் பெற்றது என்றும் சொல்லலாம். சாம்புவின் கீர்த்தி மேலும் பெருக பெருக பெங்களூர், பம்பாய், லண்டன் போன்ற நகரங்களுக்கும் சாம்புவை அனுப்பி அந்தந்த நகரங்களின் அப்போதைய நிலையையும் நமக்கு அறிமுகம் செய்தார். 1940 களில் இந்த இடங்கள் எப்படி இருந்தன என்பதும் நாம் அறிய உதவுகின்றன.

    சாம்புவின் கதைகள் மூலம் மிக வேகமாக மக்கள் மனதில் பதிந்த இன்னொரு பாத்திரம் இன்ஸ்பெக்டர் கோபாலன். பாவம்! இவரைப் பொருத்தமட்டில், பார்வைக்கு முட்டாள் போல தெரிந்தாலும் சாம்புவைப் போல ஒரு உயர்ந்த, திறமை மிக்க துப்பறிபவர் இந்த உலகத்துலேயே கிடையாது என்ற எண்ணம் உண்டு என்பதால் அதிகாரபூர்வ மற்றும் அதிகாரபூர்வமில்லாத ரகசிய வழக்குகளிலெல்லாம் சாம்புவை சிக்க வைத்து சாம்பு ஒன்றும் புரியாமல் வேடிக்கைப் பார்த்து ஏதோ செய்து தொலைக்க அதுவே கடைசியில் வெற்றியில் கொண்டுவிட, ஒவ்வொரு நிகழ்ச்சியும் அலுப்பு தட்டாமல் கொண்டு செல்லும் தேவனின் எழுத்துத் திறமையை எவ்வளவுதான் மெச்சினாலும் தகும்.

    தேவன் எப்படி சாம்பு பாத்திரத்தைப் படைத்தாரோ அதற்கு நேர் மாறாக கும்பகோணத்து வேம்புவை சிருஷ்டி செய்து, அவளை சாம்புவின் மனைவியாக்கி, அந்த மனைவிக்கு உண்மையான முட்டாள் சாம்புவை புரிய வைத்து அவள் மூலம் ஏகப்பட்ட கிண்டல்களும் அதே சமயம் சிருங்காரக் கொஞ்சல்களுக்கும் குறையில்லாமல், பஞ்சமில்லாமல் வாசகர்களுக்கு விருந்து படைத்தார். பின்னர் சாம்புவுடன் அவனுக்குப் பிறந்த சுந்துவும் சேர்ந்துகொண்டு அவனறியாமல் அவன் வழக்குக்கு உதவுவதையும் தேவன் விவரிப்பார். அதே சமயம் சமூகத்தின் பல அங்கங்களில் கதையை நகர்த்தி, சமூகங்களில் பரவலாகத் தெரிகின்ற அந்தக் கால நிக்ழ்வுகளை ஒவ்வொரு கதையிலும் வாசகருக்கு தன் பாணியில் தேவன் அறிமுகப்படுத்துவார். ஒவ்வொருவரின் உண்மை சுபாவம் அல்லது இயல்பினை அவர் வெளிச்சம் போட்டுக் காட்டும்போது நகைச்சுவையை அவர் எந்த அளவுக்கு வெற்றிகரமாக பயன்படுத்தி உள்ளார் என்கிற விவரம் புரியும்.

    இந்த சாம்பு-வேம்பு கலாட்டா இருக்கும் ஒரு கதையைத்தான் பார்ப்போமே

    ‘படங்களுக்கு நன்றி: பேராசிரியர் பசுபதி”, கனடா.

    Share
  • நிறைகுடம்

    பழமைபேசி

    செம்மாந்து போயிருந்தேன். என்றுமில்லாதபடிக்கு அன்றைய நாளில் மண்ணின் மீதிருக்கும் பாசம் பொத்துக் கொண்டு வழிந்தோடியது. வெளியுலகமே அறியாத உள்ளோங்கிய கிராமத்தில் மக்களொடு மக்களாய், மண்ணோடும் மண்ணடி வேரோடும், நாகரிகம் என்பதையெல்லாம் சட்டை செய்யாமல் ஓடித் திரிந்தவன். பதினாறு ஆண்டுகளாய் புலம் பெயர்ந்த மண்ணில் தட்டுத்தடுமாறி முட்டி மோதித் திரிகிறேன். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் எனத் திரிய முற்பட்டாலும் போகவிட்டுச் சுண்டி இழுக்கிறது மண் வாசம்.

    ஆறு மணிக்குத்தான் வரச் சொல்லி இருந்தார்கள். எங்கோ கத்திய கிடாயின் குரல் கேட்டுக் கிடைகொள்ளாமல் இருக்கும் பால் வற்றிய ஆடு போலத்தான் எனக்கும் கிடை கொள்ளவில்லை. மனையாளையும் குழைந்தைகளையும் பிந்திச் சில நேரம் கழித்து வாருங்கள் எனச் சொல்லிவிட்டு, அடுத்த இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த மேரியாட் வளாகத்திற்கு ஏகினேன்.

    முன்கூட்டிச் சென்றமைக்குப் பல காரணங்கள். ஆயினும் இது முதன்மையானது. நான் ஊரிலிருந்து புறப்படுமுன்னமே அறிவுறுத்தப்பட்டு இருந்தேன். ”ஐயா அவர்கள் வருகிறார்கள். நான் உடனிருந்து எல்லாப் பணிவிடையும் செய்யக் கடமைப்பட்டவள். ஆனால் என்னால் வர இயலாது. ஆகவே நீங்கள் அது குறித்துக் கடமையாற்ற வேண்டும்!” என அன்புத் தமிழுள்ளம் ஒன்று எம்மைப் பணித்திருந்தது.

    வளாகத்தில் நுழைகையில், யாதோ ஒரு திருமண விழாப் பந்தலுக்குள் நுழைவதாயும் உற்றார் உறவினர் இருக்க வளாகத்தைச் சுற்றிலும் எஞ்சோண்டுப் பிள்ளைகளோடு ஓடித்திரியலாமெனும் புளகாங்கித வேட்கைத் துள்ளலுடனும் மனம் ஆர்ப்பரித்தது.

    முனைவர் மு.வரதராசனார் நூற்றாண்டு விழா, வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் வெள்ளி விழா, இது ஒரு தமிழ் விழா என்கிற வகையில் விழா ஏற்பாடுகளுக்கும் எம்மால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டுமெனக் கருதி வருவோரை வரவேற்பதற்கான முகாமையில் போய்ச் சேர்ந்து கொண்டேன். அங்கே கட்டுக் கட்டாய் விழா மலர்கள். அதிலொன்றை எடுத்துப் பார்த்து இன்பமுற்றுக் கொண்டிருந்தேன். அதற்கொரு காரணமும் உண்டு. விழா மலருக்காகப் பணி புரிந்தவர்களுள் நானும் ஒருவன். மலரில் இடம் பெற்றிருந்த படைப்புகளைப் பார்த்து மகிழ்ந்தேன். ஓரிருவர் வந்து மலர் நன்றாக வந்திருப்பதாய்ச் சொல்லிப் பாராட்டினார்கள். தலைதாழ்ந்து பணிவோடு நன்றி அறிதலைப் பணித்தேன்.

    ஐயா அவர்களும் எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன் அவர்களும் உள்நோக்கி வந்து கொண்டிருந்ததைக் கண்டதும், இருந்ததை இருந்தபடியே கிடத்தி விட்டு ஓடோடிச் சென்று எம் வணக்கத்தை உரித்தாக்கினேன். அமைதியான பாங்கும், அதிர்வற்ற குரலும் எம்மை நிலைகுலையச் செய்தன. அரசியல்வாதி என்றாலே உரத்துப் பேசுவதும், அதிர்வை வெளிப்படுத்துவதும், மேட்டிமையைப் பகர்வதும் என்றில்லாமல் அப்படியானதொரு கள்ளங்கபடமற்ற சிரிப்போடு உள்ளே வந்து கொண்டிருந்தார்.

    ஓடிச் சென்று இருக்கைகளைப் பறித்துக் கொண்டு வந்து முன்பக்கமாகவே இட்டு அமரும்படி வேண்டினேன். அந்தச் செய்கையை அவர் அவ்வளவாக இரசித்திருக்கவில்லை. ”இதெல்லாம் என்ன பழக்கம்? நானே எடுத்துக்குவனே??”, மெய்முழுதும் கூசியது எனக்கு. போ என்றவுடன் போய்விடுமா தொட்டிற்பழக்கம்?!

    குடிக்கத் தண்ணீர் கொடுத்து விழாவினுடைய சிறப்பு விருந்தினருக்குக் கொடுத்துச் சேர வேண்டிய நுழைவுச் சீட்டுகள், குறிப்பேடுகள், விழா மலர் உள்ளிட்ட புரவுப்பை(souvenir)யை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தோம். இன்முகத்தோடு வாங்கி வைத்துக் கொண்டு, உள்ளீடுகளை எல்லாம் ஆய்ந்தபடி ஒவ்வொன்றும் எதற்கு உரிய சீட்டுகள் போன்ற தகவலைக் கேட்டறிந்து கொண்டார்.

    தமிழ்விழாவுக்கு வரும் முதன்மை விருந்தினர்களை வரவேற்று,  அவர்கள் தங்கியிருக்கும் வரையிலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்வதற்கும் நேரப்பராமரிப்பினைப் பேணுவதற்கும் ஓம்புநர்களை நியமிப்பது வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மரபாகும். அதன்படி, நானே அவருக்கான ஓம்படையாளனாக இருப்பது என்றும், அது எமக்குக் கிட்டிய வாழ்நாள்ப் பேறும் என்றும் எண்ணிக் கொண்டேன்.

    வரவேற்பு நிகழ்ச்சியின் போது தமிழிசை நிகழ்ச்சி இடம் பெற்றது. தனக்கு எப்போதுமே தமிழிசையின்பால் நாட்டம் உண்டென்று சொன்னவர், நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே சென்று அமர்ந்து கொண்டார். கிட்டத்தட்ட ஐம்பது சிறார்கள் தமிழிசையை இசைத்தார்கள். பாடிய குழந்தைகளை எல்லாம் பாராட்டி ஊக்கமூட்டி எழுச்சியூட்டினார். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட எனது மகளையும் அவர் வாழ்த்தியதில் நானும் என் மனைவியும் மிகுந்த இன்பம் கொண்டோம்.

    வரவேற்பு நிகழ்ச்சியின் போது கூட்டநெரிசலும் இரைச்சலும் வெகுவாக இருந்தது. அது கண்டு இவர் என்ன நினைப்பாரோவென மனக்கிலேசம் கொண்டிருந்தேன் நான். ஆனால் அவர் அதைக் கண்டு பெரிதும் உவகையுற்றார். ஊரு விட்டு ஊரு வந்து, அதுவும் அமெரிக்காவில் இவ்வளவு தமிழர்களா? “நம்மூருக் கோயில் திருவிழா மாதிரி இருக்கு. நான் ஊர்லயே இந்த மாதிரிப் பார்த்து நாளாச்சு” எனச் சொல்லி மக்களோடு மக்களாகத் தன்னையும் இணைத்துக் கொண்டார். மகிழ்ச்சியாக இருந்தது.

    பணிவுக்கு இலக்கணம் ஐயாதான். அமெரிக்க வெளியுறவுத்துறை அங்கீகரிக்கிறது என்றால் அதற்கென்று ஒரு விலை இருக்கத்தானே செய்யும்? தமிழ்விழாவுக்கு இவரை அழைப்பது என்ற பேச்சு மேலெழுந்தவுடனேயே பெரும்பாலானோர் சொன்னது இதுதான். “அவ்ளோ பெரிய கம்யூனிஸ்டுக்கு விசா கிடைக்குமா? அதுவும் அமெரிக்க விசா?! வாய்ப்பே இல்லை!!” என்றார்கள். ஆனால் நடந்தது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது.

    ஐயா அவர்களுடைய உள்புகலுக்கான விண்ணப்பம், மற்ற விருந்தினர்களுடைய விண்ணப்பத்தினொடு மற்றொன்றாக முகவர் ஒருவரின் வழியாக அமெரிக்கத் தூதரகத்தில் கையளிக்கப்பட்டது. தூதரகத்தின் மூத்த செயலாளரும் தூதரகத்தில் பணியாற்றும் பொருளாதார நிபுணருமாக இருவரும் ஐயா அவர்களின் வீட்டுக்கே வருகை தந்து, உள்புகலுக்கான பூர்வாங்க வேலைகளைச் செய்து உரிய மரியாதையையும் சிறப்பையும் அளித்துச் சென்றார்கள்.

    தமிழ்விழாவின் முதல்நாள் நிகழ்ச்சி காலை எட்டு முப்பது மணிக்குத் துவங்கும் என குறிப்பேட்டில் இருப்பதைப் பார்த்துக் கொண்டு, எட்டு மணிக்கெல்லாம் தான் தங்கியிருந்த விடுதியின் முன்றலுக்கு வந்து விட்டார். ஐயா, நிகழ்ச்சி துவங்க நேரம் பிடிக்கும்; ஆகவே கொஞ்சம் தாழச் செல்லலாம் என்றதற்கு மறுத்து விட்டார். “அதனாலென்ன? போயி சனங்களை வேடிக்கை பார்த்திட்டு இருக்கலாம். நாம போயிறலாம்!” என்று வற்புறுத்தியபடியே இருந்தார். பிறகு தனியொரு வண்டியில் கவனகர் கலை.செழியன், திருமிகு கலைச்செல்வன், முனைவர்.பொன்னவைக்கோ முதலியோருடன் விழா வளாகம் சென்றடைந்தோம்.

    முழுநாள் விழாவாக நடந்த அந்த இரு நாட்களிலும், முழு நேரமும் அவையிலேயே இருந்து நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க விரும்பினார். இணை அரங்குகளாகப் பல நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவற்றுள் ஒரு சிலவற்றுக்கு ஐயாவையும் அழைத்திருந்தனர். பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களை விட்டுப் பிரிய அவருக்கு மனம் இடங்கொடுக்கவில்லை என்பது அவரது முகக்குறிப்பிலிருந்து அறிந்து கொண்டேன். அமெரிக்காவில் இடம் பெற்ற கலை, இலக்கிய நிகழ்ச்சிகளின் மீது அளப்பரிய நாட்டம் கொண்டவரானார். பல்லூடகத் தமிழ் இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சியைப் பார்த்து விட்டுத் தாம் மிகுந்த வியப்புற்றதாகவும், இதை எப்படி வடிவமைக்கிறீர்கள் என்றும் பெருவிருப்போடு கேட்டுத் தெரிந்து கொண்டார்.

    எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன் அவர்களது கவனகக்கலை நிகழ்ச்சியின் போது, ஐயாவை இணையரங்கில் இடம் பெற்ற நிகழ்ச்சியொன்றுக்கு சிறப்பாளராக வரச் சொல்லி விழா அமைப்பாளர் அழைத்தார். ஐயா அவர்கள் தயங்கித் தயங்கி வேண்டினார். ஒரு நூற்றாண்டு போற்றும் மாமனிதர் தயங்கி வேண்டுவதைப் பார்க்கும் போது எனக்குக் கண்கள் பொங்கி வழிந்தது. “ஊர்லிருந்து எங்கூடவே வந்தாரு. கூடவே இருக்காரு. ஆசையா என்னோட நிகழ்ச்சியப் பார்த்து உங்க கருத்தைச் சொல்லுங்க ஐயான்னு சொல்லிட்டுப் போயிருக்காரு. நானும் சரின்னு சொல்லிட்டேன். இந்த நேரத்துல கூப்பிடுறீங்களே?”, மனிதர் ஒருவருக்குக் கொடுத்த வாக்கின்பால் கொண்ட பற்றினால் அல்லாடினார்.

    நண்பகல் இடைவேளையின் போது உண்டிச்சாலைக்கு அழைத்துச் சென்று, முக்கிய விருந்தினர் என்பதால் வரிசையில் நிற்க வேண்டாமேயெனக் கருதினேன். மனிதர் விட்டுக் கொடுத்தாரில்லை. ஐயா, உங்களால் வேண்டுமானால் நிற்கலாம். காலையிலிருந்து இங்குமங்கும் ஓடித்திரியும் என்னால் இயலாது எனச் சொல்லவுமே என்னுடன் வர ஒப்புக்கொண்டார். காரம், இனிப்பு ஆகியவற்றைத் தவிர்த்து விடுகிறார். அதே வேளையில் தனக்கு வேண்டுமென்பதைக் கேட்டு வாங்கி உண்டார்.

    சாதிக்கொடுமைகளைக்கு எதிராக மக்களோடு மக்களாகச் சேர்ந்து போராடியவரின் தமிழ்ப்பற்றினை நாடறியாது. அவர் ஒரு பெரிய எழுத்தாளர். இலக்கியநயம் கொண்டவர். பல நூல்களை எழுதியவர். தமிழ்விழாவில் இடம் பெற்ற கவியரங்க நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும். அந்த நேரத்தில் என்னை அரங்கத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் என முன்கூட்டியே அறிவுறுத்தி இருந்தார். அதைப் போலவே கவியரங்கத்தை மிகவும் நெகிழ்ச்சியோடு கண்டு களித்தார். உடனமர்ந்திருந்தவர்களிடம் உடனுக்குடனே தனது விமர்சனத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தார். கவியரங்கம் முடிந்தவுடனே, கனடாவில் இருந்து வந்திருக்கும் கவிஞர் புகாரியைச் சந்திக்க வேண்டுமெனக் கோரினார். அதன்படியே அவரையும் கண்டு, அவர் வாசித்த கவிதையை வெகுவாகப் புகழ்ந்துரைத்தார். கூடவே தமிழ்நாட்டு இதழொன்றிலும் அதை இடம் பெறச் செய்வதற்கான ஒப்புதலையும் கவிஞரிடம் கேட்டுப் பெற்றார் ஐயா.

    மாநாட்டில், சாதியொழிப்பு குறித்தும், தமிழ்மக்களின் மேன்மை குறித்தும் ஆய்ந்தெடுத்த மேன்மையான உரையொன்றை அவர் வழங்கினார். வந்திருந்தவர்களுள் கணிசமானவர்களைத் தவிர மற்றவர்கள் அவர்தம் பேச்சைக் கேட்டுப் பயன்கொள்ளத் தவறிவிட்டனர் என்பது மிகவும் ஏமாற்றத்துக்குரிய ஒன்றாகும். வேடிக்கையில் மூழ்கியவர்களுக்கு அவரது பேச்சின் முக்கியத்துவம் தெரிந்திருக்கவில்லை. தனியரங்குகளில் அவர் ஆற்றிய உரைகளுக்குப் பெருமளவில் வரவேற்புக் கிட்டியது.

    ஐயா அவர்கள் செல்லுமிடங்களில் எல்லாம் மக்கள் தொடர்ந்து வந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தனர். சாதிக் கொடுமைகளுக்கெதிராகவும், ஆதிக்க மனப்பான்மைக்கெதிராகவும் போராடி பல இன்னல்களை நேர்கொண்டு குடும்ப உறுப்பினர்களை விட்டுத் தவித்துத் தான் ஈந்தவற்றை ஒரு கணமேனும் அவர் வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை. தன்னை மிகவும் அடக்கத்தோடும் கூடியிருந்த மக்களுள் தன்னையும் ஒருவனாக இருக்குமாறும் இருந்து கொண்டார். அவரது போக்கே அப்படிப்பட்ட இயல்பான ஒன்றாக இருந்தது.

    மாணவர்களுக்கான தமிழ்ப்போட்டியில் பங்கு பெற்று கூடுதலாகப் பரிசுகளை வென்ற என் மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு பெரிதும் வியந்தார். அமெரிக்காவுல இருந்துட்டு கோயமுத்தூர்ல இருக்குற மாதிரியே இருக்குறீங்க என்று சொல்லி அவளை உச்சி முகர்ந்தார். எனக்கு தலைகால்ப் புரியாத உள்ளக்குளிர்மை.

    தமிழன் தமிழச்சி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவி யாழினி அவர்களது சிலம்பாட்டத்தைப் பார்த்து மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டார். விழாவில் எத்தனை எத்தனையோ மனிதர்களை அவர் சந்தித்துப் பேசினார். ஆனாலும் தாம் சந்தித்த ஒருவரை மறுமுறை பார்க்கும் போது, அவர்தம் பெயர் சொல்லியே விளித்தார். எண்பத்து எட்டு வயது மனிதரின் நினைவாற்றல் கண்டு அதிர்ந்து போனேன்.

    நான்காம் நாள் காலையில் மிகவும் வருத்தப்பட்டுப் பேசினார். இதுக்குள்ள விழா முடிஞ்சி போச்சா? வந்தவங்க எல்லாரும் திரும்பவும் அவங்கவங்க ஊர்களுக்குப் போயிட்டாங்களா?? சிறு குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு வினவினார். அவர் முகம் பார்த்து எனக்கு வந்துவிட்டது பசலை எனப்படுகிற பிரிவுநோய்.

    இரவில் சரியாகத் தூக்கம் வரவில்லையாதலால் விழா மலர் முழுக்கப் படித்து விட்டேன். இப்போது இரண்டாம் வாசிப்பு போய்க்கொண்டிருக்கிறது எனச் சொல்லி, அதிலிருக்கும் கட்டுரைகள் குறித்து அளவளாவத் துவங்கி, அடியேன்தான் மலரின் ஆசிரியர் என்ற முறையில் என்னிடம் அவர் சில கேள்விகளைக் கேட்கவே, அவை குறித்து எதுவும் நினைவில் இல்லாமையால் குற்ற உணர்வோடு அல்லலுற்றேன். அவரது நினைவாற்றலுக்கு முன்னால், இருக்கும் இரு கால்களை நான்காக்கி அவற்றுள் உள்ள பின்னாங்கால்கள் பிடரியில்படத் திரும்பி ஓட வேண்டும் போல இருந்தது.  மலரின் படைப்புகளைப் பல முறை வாசித்துப் பிழை திருத்தியவன் நான். எனினும் அவர் வினவும் வினாக்களுக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. . மனிதர் ஒவ்வொரு வரியையும் மேற்கோள் காட்டிப் பேசுகிறார்.

    அவருடன் இருந்த அந்த நான்கு நாட்களும் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டி இருந்தது. எளிய மனிதனின் ஓம்புதலுக்குரிய எல்லைக் கோட்டுக்கும் வெளியே செல்லாமல், அதே வேளையில் ஒரு வாழும் வரலாற்றுக்கு ஆற்ற வேண்டிய பணிவிடைகள், சிறப்புகள் செய்தாக வேண்டுமென்பது மிகக் கடினமான ஒன்றாகும்.அதைத்தான் நான் அங்கு செய்து கொண்டிருந்தேன்.

    மக்களுக்காய்ச் சிறைக்கொட்டடியில் வாழ்ந்த மனிதருக்கு இந்த மக்கள் மேல்தான் எவ்வளவு அன்பும் அக்கறையும்? ”ஊருக்குத் திரும்பி வந்த வழி நெடுகிலும் அந்தத் தாத்தா மட்டும் ஏன் ஸ்பெசல்? எனக்கும் அவரைப் பிடிச்சிருக்கு. நம்ம வீட்டுக்கு எப்ப வருவாரு??”, மகள் கேட்டுக் கொண்டே இருந்தாள். அவருடைய தனிப்பட்ட தகவலோ, தொடர்பு எண்ணோ எதையும் கேட்டுப் பெற விரும்பவில்லை நான். தவறு செய்து விட்டேனோ என மனமும் சஞ்சலத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்தது அந்த வாரம் முழுமைக்கும்.

    “பழமைபேசி, நான் நல்லகண்ணு பேசுறன். இப்ப நான் அட்லாண்டா போய்ட்டு இருக்குறேன். நாளைக்கு ஊருக்குக் கிளம்புறேன். அதான் உங்ககிட்ட சொல்லிட்டுக் கிளம்பலாம்னு கூப்பிட்டேன். இந்த ரெண்டு மூனு நாளா, உங்க ஊர்ப்பழமை புத்தகம்தான் படிச்சிட்டு இருக்குறன். இப்ப மூனாவது வாட்டி படிச்சிட்டு இருக்குறன். கொங்குநாட்டைக் கொண்டாந்து அப்படியே கண்ணுல நிறுத்திட்டீங்க. நல்லா இருக்கு!!”, அவர் அறிந்திருக்க மாட்டார்; மறுபக்கத்தில் அலைபேசியைப் பிடித்துக் கொண்டிருப்பவனின் விழிகள் சொரிந்து கொண்டிருக்கின்றன என்பது.

    Share
  • திமிங்கிலம் உலகின் மிகப்பெரிய உயிரினமாக இருப்பதன் காரணம் என்ன?

    தேமொழி

    உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்தின் வளர்ச்சியின் அளவும் இயற்கையில் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.  அரளிச்செடி ஆலமரம் போல உயரமாக வளருவதில்லை. பூனையும் யானையின் அளவுக்குப் பெரியதாக வளருவதில்லை.  இதன் காரணத்தை சிறு வயதிலேயே நாம் அறிந்து கொள்ள விரும்பியிருப்போம்.  நம் பெற்றோரை நாம் கேட்டு நச்சரித்த கேள்விகளில் இது ஒன்றாகவும் இருக்கலாம்.

    ஆன்மீக வழியில் வாழ்க்கையைப் பார்ப்பவர்களுக்கு இக்கேள்விக்கு விடை சுலபம். இதற்குக் காரணம் இறவைனின் விருப்பம், இறைவன் படைத்தபடி உலகம் இயங்குகிறது, அதில் வாழும் உயிரினங்களும் இயங்குகின்றன என்று விளக்குவார்கள். ஆனால் அறிவியல் அறிஞர்கள் இதற்கும் மேலான விளக்கத்தைத் தேடி ஆராய்வார்கள், இந்த ஆர்வம் அவர்கள் இயல்பு. உயிரியல் (biology), சூழலியல் (ecology),  பரிணாமம் (evolution) போன்ற துறைகளின் அறிவியல் அறிஞர்கள் உயிரினங்களின் வளர்ச்சியின் அளவு, விலங்கினங்களின் கூட்டத்தில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை என இவையாவற்றையும் ஆராய்ந்து அவற்றை விளக்கும் கோட்பாடுகளை உருவாக்குவார்கள். மேலும் அதிக அறிவியல் தகவல்கள் தெரியத் தெரிய, விளக்கம் தரும் இக்கோட்பாடுகளும் இவர்களால் மாற்றியமைக்கப் படும். ஆனால் காரணம் அறிய விரும்பும் ஆராய்ச்சி மட்டும் தொடர்ந்த வண்ணம் இருக்கும்.

    அந்நாள் அறிவியல் அறிஞர் ‘சார்லஸ் டார்வின்’ (Charles Darwin), தற்கால அறிவியல் அறிஞர்களான ‘டெட் கேஸ்’ (Ted Case), ‘ஜான் டைலெர் போனெர்’ (John Tyler Bonner) போன்றவர்கள் உயிரினங்களின் வளர்ச்சி பற்றி  ஆராயந்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.  ஒரு உயிரினத்தின் வளர்ச்சியின் அளவை நிர்ணயிப்பது எது என்பதைத் தெரிந்து கொள்ள உலகிலேயே மிகப் பெரிய உயிரினமான நீலத்திங்கிலம் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொண்டு அதன் மூலம் இக்கேள்விக்கு விடை காண முயல்வோம்.

     

    புவியினை வாழுமிடமாகக் கொண்ட உயிரினங்களில், அதாவது இதுவரை புவியின் வரலாற்றில் தோன்றி அழிந்த மற்றும் இன்றும் வாழும் உயிரினங்களைக் கணக்கில் கொண்டால், திமிங்கிலங்கள் தான் அளவில் பெரியவை.  உலகின் மிகப் பெரிய விலங்கினங்களைப் பட்டியலிட்டால், பட்டியலில் தரவரிசைப்படி வரும் முதல் பத்து விலங்குகளுமே வெவ்வேறு வகையான திமிங்கிலங்கள்தான். நிலத்தில் வாழும் மிகப் பெரிய விலங்கான யானையைவிடப் பலமடங்குப் பெரியவை திமிங்கிலங்கள். இந்த திமிங்கிலங்களிலும் நீலத்திமிங்கிலமே மிகப் பெரியது.

    பெருங்கடல்களில் வாழும் நீர்வாழ் விலங்கான திமிங்கிலம் முன்னொரு காலத்தில் நிலத்தில் வாழ்ந்ததாகவும், ஏதோ சில சுற்றுச்சூழல் காரணங்களினால் கடலுக்கு இடம் பெயர்ந்ததாகவும், அத்துடன் பரிணாம வளர்ச்சியின் காரணமாக நீரில் வாழ்வதற்கேற்ற தகவமைப்புகளைப் பெற்றிருப்பதாகவும் அறிவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். எனவே குட்டியீன்று பாலூட்டும் பாலூட்டி வகையான திமிங்கிலங்களின் தோற்றம் நீர்வாழ்கைக் கேற்ற தகவமைப்புகளைப் பெற்று மீன்கள் போன்று தோன்றுகின்றன. ஆனால் மீன் போன்ற தோற்றமளித்தாலும் திமிங்கிலங்கள் மீன் இனத்தைச் சேர்ந்தவை அல்ல.

    மற்ற பாலூட்டிகளைப் போலவே உடல் உறுப்புகள் கொண்டவை நீலத்திமிங்கிலங்கள். இதய அமைப்பு, நுரையீரல்கள் வழி சுவாசிப்பது என யாவும் பாலூட்டிகள் போன்றே இவற்றிற்கு அமைந்திருக்கிறது.  மீன்களைப்போல செவுள்களால்  நீலத்திமிங்கிலங்கள் சுவாசிப்பதில்லை.   நீலத்திமிங்கிலங்கள் தலையில் உள்ள துவாரங்கள் வழியே காற்றை உள்ளிழுத்து சேமித்து வைத்துக்கொள்ளும். உணவிற்காகக் கடலின் ஆழம் வரை சென்றாலும் 20 நிமிடங்கள் வரை கூட நீலத்திமிங்கிலங்களால் தாக்குப் பிடிக்க முடியும்.  மீண்டும் காற்றை வெளியேற்ற நீர்பரப்பிற்கு வந்து துவாரங்கள் வழியே கற்றை வெளியேற்றும் பொழுது 30 அடிகள் உயரம் வரை ஒரு நீர் ஊற்றுபோல நீரைப் பீய்ச்சி அடிக்கும்.

    இந்த நீலத்திமிங்கிலங்கள் (Balaenoptera musculus, விலங்கியல் இனப் பெயர்), பாலூட்டிகள் வகுப்பு (Class: Mammalia), கடற்பாலூட்டி வரிசை (Order: Cetacea) என வகைப்படுத்தப் படுகிறது. நீலத்திமிங்கிலம் ஒரு ஊனுண்ணி/விலங்குண்ணி (carnivore). இது உண்பது ஓரிரு சென்டிமீட்டர் நீளம் அளவேயுள்ள கூனிப்பொடி (Krill) என்னும் அளவில் மிகச் சிறிய இறால் வகை கணுக்காலி (tiny Crustaceans, a group of Arthropods). சராசரியாக 90 ஆண்டுகள் வரை உயிர்வாழும் ஒரு நீலத்திமிங்கிலத்தின் நீளம் ஏறத்தாழ 100 அடிகள் (up to 33 meters in length). இதன் உடல் எடையோ 200 டன்கள் வரை இருக்கும்.  அதாவது ஒரு நீலத்திமிங்கிலத்தின் எடை 40 யானைகளின் மொத்த உடல் எடைக்குச் சமம். இரு மிகப் பெரிய டயனோசாரின் உடல் எடைக்குச் சமம். மனித உடலின் நீளத்துடனும், யானையின் உடல் எடையுடனும் ஒப்பிடப்பட்ட படங்கள் விளக்கத்திற்காகக் கொடுக்கப் பட்டுள்ளது.

    நீலத்திமிங்கிலத்தின் நாக்கின் பரப்பளவு 50  பேர் அமரும் அளவு பெரியது. அதன் நாக்கின் எடை ஒரு யானையின் எடையளவு ஆகும். அதன் இதயத்தின் அளவு ஒரு சிறிய ஊர்தியின் (car) அளவும், அதன் குருதி நாளங்கள் ஒருசிறிய மனிதன் அதன் வழியே நீந்திச் செல்லும் அளவு பெரியவை. ஆனால் அதன் உணவுக்குழாய் (oesophagus) மிகவும் சிறியது. ஒரு சிறிய ரொட்டித் துண்டும் அதன்வழியாகச் செல்லமுடியாமல் சிக்கிக் கொள்ளும் அளவு சிறியது.  நீலத்திமிங்கிலத்தின் வாய் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதனால் பெரிய விலங்குகளை உண்ண முடியாது. உருவில் மிகச்சிறிய கூனிப்பொடி இறால்களையும், அதே அளவுள்ள மிகச் சிறிய மீன்களை மட்டுமே உண்ணமுடியும்.  ஆனால் இக்குறையைத் தீர்க்கும் வண்ணம் அதன் உணவு உண்ணும் முறை தகவமைந்துள்ளது.

     

    நீலத்திமிங்கிலம் மிகப்பெரிய உயிரினமாக இருப்பதன் காரணம் என்ன?
    நீலத்திமிங்கிலம் உணவு உண்ணும் முறை பெரிதும் வேறுபட்டது.  இதன் வாயில் ஒரு மீட்டர் அகலமுள்ள பலீன் தகடுகள் (baleen plates) 30 இருக்கிறது.  இவை சீப்பு போன்ற உருவத்தில் பல சிறிய இழைகளைக் கொண்டிருக்கும்.  இதன் உணவான கூனிப்பொடி இறால்கள் கூட்டம் கூட்டமாக கடலில் நீந்தும்.  இக்கூட்டத்தை நெருங்கியதும் நீலத்திமிங்கிலம் வாயை மிக அகலமாகத் திறந்து நீருடன் கூனிப்பொடி இறால்களை விழுங்கும் (lunge feeding behavior).  இவ்வாறு விழுங்கும் உணவும் நீரும் நீலத்திமிங்கிலத்தின் உடல் எடையைவிட 125% அதிகமாக இருக்கும்.  இவ்வாறு விழுங்குவதற்கு ஏதுவாக அதன் வாயும் கீழ்தாடையும் மிக அகலமாகத் திறக்கும் வண்ணம் அமைந்துள்ளது. பிறகு விழுங்கிய நீரை பலீன் தகடுகள் வழியாகத் துப்பும். நாவை மேல்நோக்கி அழுத்தி நீரை வெளியேற்றும்.  அப்பொழுது பலீன் தகடுகளின் இழைகளால் கூனிப்பொடி இறால்கள் சலிக்கப் பட்டு அதன் வாய்க்குள் சிக்கி விடும்.  இவற்றை அப்படியே நீலத்திமிங்கிலம் விழுங்கி விடும்.

    ஒரு நாளைக்கு 40 மில்லியன்கள் கூனிப்பொடி இறால்களை (4 டன்கள் எடை வரை) நீலத்திமிங்கிலம் உணவாக உண்ணும், அதனால் அது பெறும் சக்தியின் அளவு 480,000 கலோரிகள். நீலத்திமிங்கிலத்தின் உணவான கூனிப்பொடிகளின் தொகையும் உலகில் மிக மிக அதிகம். கூனிப்பொடிகளின் உருவ அளவும் அதிகத் தொகையும்; அது போலவே நீலத்திமிங்கிலத்தின் வாயும் உணவு உண்ணும் முறையும் ஒன்றுக்கொன்று மிகவும் பொருந்தியுள்ளது. நீலத்திமிங்கிலங்களின் உணவாவதற்கே கூனிப்பொடிகள் பிறந்தது போலவும், அவற்றை உண்ணவே நீலத்திமிங்கிலங்கள் பிறந்தது போலவும் இயற்கையில் அமைந்திருக்கிறது.  இந்த சாதகமான உணவு சூழ்நிலை நீலத்திமிங்கிலம் அதிகம் உண்டு மிகப் பெரிய அளவாக வளர பரிணாம வளர்ச்சிப்படி ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

    மற்றொரு காரணம் அது வாழும் நீர்நிலை செய்யும் உதவி.  நிலத்தில் வாழும் உயிரினங்கள் பெரிதானால்,  அந்த உடலுக்கேற்ற அதிக எடை புவியீர்ப்பு விசையினால் புவி நோக்கி இழுக்கப்பட்டு சிரமம் கொடுக்கும்.  அதற்குத் தீர்வாகப் பெரிய விலங்குகள் உடல் எடையைத் தாங்கும் பருத்த கால்களைக் கொண்டிருக்கும், காட்டாக யானையைக் கொள்ளலாம்.

    நிலவாழ் உயிரனங்களுக்கு இருக்கும் புவியீர்ப்புத் தாக்கம் நீர்வாழும் உயிரினங்களுக்கு இல்லை.  மாறாக நீரின் மேல்நோக்கு விசை (buoyancy) நீர்வாழ் விலங்குகளுக்கு நீரில் மிதக்க உதவுகிறது. ஆர்கிமிடீஸ் கொள்கை விளக்கும் நீரின் இப்பண்பினால் பெறப்படும் உதவியால் சக்தி விரயமாவது குறைகிறது. இதுபோல வாழும்  நீர்நிலையின் சூழல் வழங்கும் உதவி, அதிக உணவு வளம், அதை உண்ணும் உடலின் தகவமைப்பு ஆகியவை நீலத்திமிங்கிலங்கள் உருவில் பெரியவையாக வளர உதவியிருக்கிறது. அடுத்து நமக்கு நியாயமாக எழ வேண்டிய கேள்வி, அவ்வாறானால் நீலத்திமிங்கிலங்கள் இதற்கும் மேலும் ஏன் பெரிதாக வளரக்கூடாது என்பது.

    உயிரினத்தின் உருவம் பெரிதாகப் பெரிதாக,  அதன் வளர்ச்சிக்கேற்ப வளர்சிதை மாற்றத் தேவைகள் அதிகரிக்கும். அதனால் உடலினைப் பராமரிப்பதற்கும் அதிக சக்தி தேவைப்படும்.  அதற்கு வேண்டிய சக்தியைப் பெற அதிகம் உண்ண வேண்டியிருக்கும். இவ்வாறு உணவைத் தேடி உண்டு, செரிமானம் செய்து சக்தி பெறுவதற்கும் அந்த உயிரினம் சக்தியை விரயம் செய்ய வேண்டி இருக்கிறது. நீலத்திமிங்கிலம் நிலையாக ஒரிடத்தில் நிலைத்து இருந்து உணவு உண்ணுவதற்கு 15 மடங்கு அதிக சக்தி செலவழிக்கப் படுகிறது.  இது நீந்துவதற்குத் தேவையான சக்தியை விடவும் 5 மடங்கு அதிகம்.

    வணிகத்தில் முதல் போட்டு வியாபாரம் செய்து லாபம் பார்ப்பது போன்ற செயலை இந்த உணவு தேடும் முயற்சிக்கு ஒப்பிடலாம். இவ்வாறு உணவின் மூலம் பெறப்படும் சக்தி (வரவு), அந்த சக்தியைப் பெற செலவழித்த சக்தியையும் அத்துடன் உடலைப் பராமரிக்க செலவிடப்படும் வளர்சிதை மாற்றதிற்கு தேவையான சக்தியையும் (செலவு) விட அதிகமாக இருந்தாலே இந்த உணவு வேட்டை லாபம் தரும் செயலாக இருக்கும். உபரியாக கிடைக்கும் சக்தி உடலை மேலும் வளர்க்க உதவும். இதற்கு உதவும் வகையில் உயிரினம் உண்ணும் உணவும் தகுந்த அளவு கிடைக்க வேண்டும்.

    ‘ஜான் டைலெர் போனெர்’ என்னும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக உயிரியல் பேராசிரியர் ஒரு உயிரினத்தின் வளர்ச்சியை நிர்ணயிப்பதன் முக்கிய உயிரியல் காரணிகள் எனக் குறிப்பிடுபவை (1) உயிரினத்தின் திறன், (2) உடலின் புறப் பரப்பளவு, (3) உடலின் கட்டமைப்பு, (4) வளர்சிதை மாற்றத்தின் அளவு, மற்றும் (5) உயிரினத்தின் எண்ணிக்கையின் தொகை (five important biological features: strength, surface area, complexity, rate of metabolism, and organism abundance). அறிவியல் அறிஞர்கள் இந்தக் காரணிகளை ஒரு கணித சமன்பாடு/வாய்ப்பாடாக உருவாக்கிய  பின்பு, ஒரு உயிரினத்தின் தகவல்களை அதில் பொருத்தி கணக்கிடுவார்கள். கணித மதிப்பீடுபடி அந்த உயிரினத்தின் வளர்ச்சி அதன் சூழ்நிலைக்கேற்ற வாழ்க்கைத் தகவமைப்பு படி, அதற்கு சாதகமான முறையில் எந்த அளவு வளர்ச்சி அடைய முடியும் என்பது இதனால் தெரிய வரும்.

    இவ்வாறு நீலத்திமிங்கிலத்தினைப் பற்றிய தகவல்களைக் கொண்டு மதிப்பிட்ட பொழுது, அது தேவைகளை சமாளித்து வெற்றிகரமான வாழ்க்கை வாழ 33 மீட்டர் வரை வளர முடியும் எனத் தெரிந்தது.  இதுவரை காணப்பட்ட நீலத்திமிங்கிலங்களின் சராசரி நீளமும் ஏறத்தாழ இதே அளவுதான்.  இதிலிருந்து நீலத்திமிங்கிலத்தின் உணவு வகை, அதன் சூழ்நிலை காரணிகள் நிர்ணயித்தபடி நீலத்திமிங்கிலங்கள் இதற்கும் மேல் வளர வாய்ப்பில்லை என்பதை இயற்கை நிர்ணயித்துள்ளது தெரிய வருகிறது.

     

    சிந்தனைக்கு: ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? எதற்காக? போன்ற கேள்விகளைக் கேட்கும் ஆர்வமுள்ள குழந்தைகளின் மனநிலையை வளர்ந்த பின்பு பலர் கைவிட்டு விடுகிறோம்.  ஆனால் இது போன்று தெரிந்து கொள்ளும் ஆர்வம்தான் இன்றைய அறிவியல் வளர்ச்சிக்குக் காரணம்.   இவ்வாறு ஆர்வத்தில் ஆராய்ந்து தாங்கள் கண்டறிந்து சொல்லப்படும் உண்மைகள், சமுதாயத்தில் காலம் காலமாக நம்பப்பட்ட கொள்கைகளுக்கு மாறாக இருந்தால், அவற்றைச் சொல்லுபவர்கள் அனுபவிக்கும் இன்னல்களும் ஏராளம். எடுத்துக் காட்டாக, நவீன அறிவியலின் தந்தை என ஐன்ஸ்டினால் புகழப்பட்டவர் வானியல் மேதை கலிலியோ, இவர் பூமி சூரியனைச் சுற்றுகிறது என்பதை வலியுறுத்தியதற்காகக் கிறிஸ்துவ மதக் குருமார்களால் கண்டிக்கப் பட்டார். முதுமையிலும் வாழ்நாள் முழுவதும் வீட்டுச் சிறையில் அடைக்கப் பட்டுத் தண்டிக்கப்பட்டார். அறிவியல் முன்னேற்றம் அடைந்த இக்காலத்திலும், முதன் முதல் நிலவில் காலடி எடுத்து வைத்த  நாடான அமெரிக்காவின் சில பள்ளிகளில் டார்வினின் ‘இயற்கைத் தேர்வு நியதி’யைக் (Theory of Natural Selection) கற்பிக்கத் தடைகள் போடப்படுகின்றன.  இது போன்ற ‘மதத் துரோகம்!’ என்று கூறி தடைகள் போடும் குறுகிய மனப்பான்மை மனித அறிவு வளர்ச்சிக்கு உதவாது என்பதை மக்கள் உணர்வது மனித குல மேம்பாட்டிற்கு வழி வகுக்கும்.

     

    தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறும் அறிவு.
    [குறள் 396]

    Content References:
    Blue whale
    http://en.wikipedia.org/wiki/Blue_whale
    http://animals.nationalgeographic.com/animals/mammals/blue-whale/

    National Geographic Explorer : Kingdom of the Blue Whale
    http://channel.nationalgeographic.com/channel/videos/kingdom-of-the-blue-whale/
    http://animals.nationalgeographic.com/animals/mammals/blue-whale/

    Why are blue whales so enormous?
    http://ed.ted.com/lessons/why-are-blue-whales-so-enormous-asha-de-vos

    John Tyler Bonner, Why Size Matters: From Bacteria to Blue Whales, 2011, Princeton University Press; Reprint edition
    http://books.google.com/books/about/Why_Size_Matters.html?id=pNIkFBA0kdAC

    Ted J. Case, 1979, Optimal body size and an animal’s diet, Acta Biotheoretica, Volume 28, Issue 1, pp 54-69
    http://link.springer.com/article/10.1007%2FBF00054680?LI=true

    Pictures Source:
    http://images.nationalgeographic.com/wpf/media-live/photos/000/004/cache/blue-whale_477_600x450.jpg
    http://animals.nationalgeographic.com/animals/blue-whale-interactive/
    http://channel.nationalgeographic.com/channel/content/kingdom-of-the-blue-whale-3302/blue-whale-facts/#/compare/length
    http://channel.nationalgeographic.com/channel/content/kingdom-of-the-blue-whale-3302/blue-whale-facts/#/compare/weight
    http://images.nationalgeographic.com/wpf/media-live/photos/000/006/cache/krill_601_600x450.jpg
    http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/74/Buoyancy.svg/301px-Buoyancy.svg.png

     

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (4)

    பவள சங்கரி

    எல்லோரும் நல்லவரே!

    சக மனிதர்களை பாரபட்சமின்றி நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். எவரையும், எக்காரணம் கொண்டும் வெறுத்தல் ஆகாது. அடிப்படையில் காழ்ப்புணர்ச்சியும், தோல்வி அச்சமும் கொண்டவர்களே அடுத்தவரை வெறுத்துப் புறக்கணிக்க எண்ணுகின்றனர். ஒருவரை வெறுக்கும்போது, நம் மனதில் அவரைப் பற்றி அடிக்கடி சிந்திக்க வேண்டிய தேவை ஏற்படுவதோடு, அவரால் நமக்கு பெரும் தீங்கு விளையப் போவதாகவும், அவர் நமக்கு பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் எண்ணி தேவையில்லாமல் சுய பச்சாதாபம் கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாகிறோம். இந்த சுய பச்சாதாபம் என்பது நம் வெற்றியின் முக்கியமான ஒரு எதிரி எனலாம். தன்னம்பிக்கையை முற்றிலும் குலைக்கக்கூடியது. அது  மட்டுமல்லாமல் இந்த வெறுப்புணர்ச்சி, அதிகம் கோபம் கொள்ளுதல், பழி வாங்குதல், போன்ற செயல்களில் ஈடுபட்டு கால விரயம் ஏற்படச்செய்கிறது. அத்துடன் மனக்கவ்லை கொள்ளச்செய்து ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டுவிடும்.

    நம்மை அடுத்தவர் வெறுக்கிறார் என்ற ஐயமும் கூட பலவிதமான கற்பனைக் குழப்பத்தை ஏற்படுத்தி நம்மைச் செயலிழக்கக் செய்யக்கூடும். பலர் தங்கள் மனதில் உள்ள வெறுப்பைக் காட்டாமலே சம்பந்தப்பட்டவரிடம் நைச்சியமாகப் பேசி தங்கள் காரியத்தை சாதித்துக்கொள்ள முற்படுவார்கள். ஆயினும் ஏதோ ஒரு சிறு செயலில் தன்னையறியாமல் அது வெளிப்பட்டுவிடும். அப்படி ஒருவரை கண்டுகொள்ள நேர்ந்தால் இயன்றவரை அவர் மனம் புண்படாதவாறு அவரைவிட்டு விலகிவிடுதலே சிறந்த தீர்வாகும். இப்படிச் செய்வதால் தேவையற்ற மன உளைச்சலிலிருந்து தப்பிக்கலாம்.

    மறதி என்பது மனப்புண் ஆற்றுமோர்  சிறந்த மருந்து!

    நம் மனதைப் பாதித்த சம்பவங்களை முற்றிலும் மறக்க முயற்சிப்பதே அதன் தொல்லையிலிருந்து விடுபடும் உபாயம். இது சற்று கடினமான செயல்தான் என்றாலும் சில அற்ப விசயங்களுக்காக நம் பொன்னான நேரத்தை விரயமாக்குவது தேவையற்றது. சில ஆண்டுகளுக்கு முன் நமக்கு நடந்த ஒருசில சம்பவங்கள் அன்று நம்மை பெரிதும் பாதித்திருக்கக்கூடும். வாழ்நாளில் என்றுமே அதை மறக்க முடியாத ஒன்று என்றுகூட எண்ணியிருப்போம். ஆனால் இன்று அதை நினைக்கும் போது அது திரை மறைவில் நிழலாடும் ஓவியம் போன்றே தோன்றும். அதையும் கட்டாயமாக நினைவில் கொண்டு வந்தால்தான் பிடிபடும். எப்படியும் காலம் ஒரு நாள் அதை மறக்கச் செய்யப்போகிறது என்று உறுதியாக தெரியும் போது அப்படிப்பட்ட ஒன்றிற்காக மனதை வருத்திக் கொள்வதைவிட அதிலிருந்து விடுபட்டு அதனை முற்றிலும் மறக்க முயற்சிப்பதே சிறந்தது அல்லவா.. நல்ல ஆக்கப்பூர்வமான சிந்தைகளை உரமிட்டு வளர்ப்பது போல தேவையற்ற நினைவுகளை புறந்தள்ளி அதனை முற்றிலும் நம் நினைவுகளிலிருந்து அகற்றி விடுதலே வெற்றிக்கான அடுத்தபடியை நெருங்கும் வழி அல்லவா.

    தொடருவோம்

    படத்திற்கு நன்றி:

    http://inspirational-images.tumblr.com/

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…. (47)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள்.

    மிகவும் அதிகமாக பேசப்பட்ட, பேசப்படுகின்ற ஒரு கணிப்பீடு இலண்டனின் ஜனத்தொகை பற்றிய கணக்கீடு ஆகும். சமீபத்திய இங்கிலாந்து அரசு நடத்திய ஜனத்தொகை கணிப்பீட்டின் லண்டன் பற்றிய கணிப்பீடு ஒரு தொகுதி மக்களிடையே கொஞ்சம் அச்சத்தைக் கிளப்பி விட்டிருக்கிறது என்று கூடச் சொல்லலாம்.

    அது என்ன என்கிறீர்களா?

    லண்டன் வெள்ளை இணத்தவரின் எண்னிக்கை என்றுமில்லாதவாறு குறைந்திருக்கிறது என்கிறது இப்புதிய ஜனத்தொகை கணிப்பீடு. ஆமாம் லண்டனிலுள்ள வெள்ளை இனத்தவரின் எண்ணிக்கை 620000 த்தால் குறைந்துள்ளதாம்.

    இது ஏறக்குறைய ஸ்கொட்லாந்தின் நகரமான கிளாஸ்கோவின் மொத்த ஜனத்தொகையே அந்நகரத்தை விட்டுக் குடிபெயர்ந்ததிற்குச் சமனாகும் என்கிறது இவ்வறிக்கை.

    லண்டனின் மொத்த ஜனத்தொகையில் முதன்முரையாக வெள்லை இனத்தவரின் எண்ணிக்கை ஆக 45% ஆகக் கணிக்கப்பட்டிருக்கிறது.

    ஆ ! அடடா? அப்படி என்னதான் நடந்து விட்டது இந்த வெள்லை இனத்தவருக்கு ? என்ன நாங்கள் புலம் பெயர்ந்து வந்து அவர்களையே அவர்களது புலத்திலிருந்து பெயர்த்து விட்டோமா?

    ரொம்பக் குழப்பமாயிருக்கிறதே !

    இவ்வறிக்கையை பல அரசியல் கட்ச்சிகள் தமது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தத் தவர மாட்டார்கள். குறிப்பாக இங்கிலாந்து நாட்டின் இனத்துவேஷக் கட்சியாகக் கருதப்படும் தேசிய முன்னனிக் கட்சியான “பிரித்தானியத் தேசியக் கட்சி” பார்த்தீர்களா சொன்னோமே கேட்டீர்களா ? அந்நிய நாட்டுக்காரரை அளவு கணக்கில்லாமல் இங்கு குடியேற விட்டதால் வந்த விளைவைப் பார்த்தீர்களா ? அடித்து, அடித்துச் சொன்னோமே , குடிமூழ்கி விட்டதே ! என்று ஒரேயடியாகக் கூப்பாடு போடத் தொடங்கி விடுவார்கள்.

    ஏன் பழமைவாதக் கட்ச்சியான கன்சர்வேடிவ் கட்ச்சி கூட தமது குடிவரவுக் கொள்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்கு ஆதரவாக இவ்வறிக்கையை உபயோகிக்கத் தயங்க மாட்டார்கள்.

    கொஞ்சம் இனத்துவேஷம் கொண்டவர்களோ க்ட்ட்கவே வேண்டாம் போங்கள் …….

    ஆனால் ஒரு அரசியல் விமர்சகரான மார்க் ஈஸ்டன் என்பவர் இவ்வரிகையைப் பார்க்கும் விதமே வித்தியாசப்படுகிறது. லண்டனில் வெள்ளை இனத்தவர்களின் எண்னிக்கை குறைவதற்கும் வெளிநாட்டுக்காரர் இங்கிலாந்திற்கு வருவதற்கும் பெரிய தொடர்பொன்றுமில்லை அதௌதான் இதற்குக் காரணமுமில்லை என்கிறார்.

    அது தவ்ர வெள்ளை இனத்தவர் லண்டனை விட்டு வெளியேறியதற்குக் காரணம் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது என்று ஒரு முன்னேற்ரமான காரணத்தை முன்வைக்கிறார்.

    அதாவது வெள்ளை இனத்து மக்கள் நடுத்தர வர்க்கத்தினராக இருக்கும் போது லண்டனையும் அதைச்சுற்றியும் வாழ்ந்து வந்தார்கள் ஆனால் அவர்களது வாழ்க்கைத்தரம் பெரும்பான்மையாக மேல்வர்க்கமாக மாறியவுடன் இயற்கைச் சூழல் நிறைந்த அதிக விலைகூடிய இடங்களில் வீடுகளை வாங்கி அங்கு குடிபெயர்ந்து விட்டார்கள் என்கிறார்.

    அதுமட்டுமின்றி அந்நியநாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் தான் பொருளாதாரக் கஷ்டத்தில் இருப்பதால் வேலைவாய்ப்பு அதிகமுள்ள லண்டனைச் சுற்றி வாழ்வதனால் அவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகி விட்டது என்கிறார். அது மட்டுமின்றி வெளிநாட்டு மாணவர்களும் லண்டனில் அதிகமாக படிப்பதனால் அவர்களது தொகையும் கணக்கிடப்பட்டுள்ளது என்கிரார்.

    ஒரே அரிக்கை வித்தியாசமான கோணங்களுக்கூடாக பார்க்கப்படும் போது வித்தியாசமான வியூகங்களைத் தருகிறது. ஆனால் அது எத்தனை பேருடைய வாழ்க்கையச் சிலசமயங்களில் திசை திருப்பி விடுகிறது இல்லையா?

    அப்பாடா ! ஒரு வழியாக இங்கிலாந்தின் குடிவரவுக்காரர்களாகிய நாங்கள் காப்பாற்றப்பட்டு விட்டோமா?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    27.02.2013

    Share
  • பூக்களுதிர் காலம்

     

    வருணன்

    நீண்டு நெளிந்து செல்லும்
    குருதிப் புனலில் குளித்தெழுகிறது
    இத்தரணி
    பூக்கள் நிறைந்த வனத்தில்
    ஒவ்வொரு அநியாயத்திற்கும்
    ஒவ்வொரு வஞ்சனைக்கும்
    ஒவ்வொரு குரோதத்திற்கும்
    ஒவ்வொரு காழ்ப்புக்கும்
    ஒவ்வொரு துரோகத்துக்கும்- சிந்தும்
    ஒவ்வொரு அப்பாவியின் துளி இரத்ததிற்கும்
    ஒவ்வொரு பாவத்திற்கும்- வடிக்கும்
    ஒவ்வொரு துளி ஏழையின் கண்ணீருக்கும்
    ஒன்றென்ற கணக்கில் உதிரத் துவங்கின.
    மெல்லத் துவங்கியது தரணியின்
    பூக்களுதிர் காலம்
    உதிர்ந்து கருகிய பூக்களின் சாம்பலுக்கிடையே
    முட்டித் துளிர்த்தது
    நட்பெனும் ஒரு பூ
    வையம் பூக்களின் காடானது
    மீண்டும்.

     

    படத்துக்கு நன்றி: http://www.webdesignhot.com/wp-content/uploads/2013/02/Abstract-Tree-with-Flower-Patterns.jpg

     

    Share