Blog

  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூர்வீக யுகத்தில் நிலவை முடுக்கி ஓட்டியது உள்ளிருந்த மின்காந்த உந்துசக்தியே

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
     
     

    பொங்கிவரும் பெரு நிலவைத்
    தங்க நிலவாய்ப் புலவர் புனைந்தார்

    உள்ளடுப்பு அணைந்து போய் முகத்தில்
    பள்ளம், பருக்கள், கருமை நிழல் !
    முழு நிலவுக்கு
    வெள்ளை அடித்து
    வேசம் போடுவது பரிதி !
    நிலவின் பிறப்ப றியோம் !
    அச்சின்றி சுற்றுவது நிலவு !
    அங்கிங் கெனாதபடி
    எங்கும்
    வங்குப் பெருங்குழிகள் !
    சுற்றியும் சுழலாத பம்பரம் !
    ஒருமுகம் காட்டும் புவிக்கு !
    மறுமுகம் மறைக்கும் !
    நிலவில்லை யென்றால்
    அலைகள் இல்லை ! காற்றில்லை !
    கடல் மட்டத் துக்கு
    ஏற்ற மில்லை ! இறக்க மில்லை !
    புவியைச் சுற்றி வட்டமிட
    துடுப்பின்றி நிலவை
    முடுக்கி விட்டது எவ்விதம் ?
    ஒரு யுகத்தில் நிலவை இயக்கியது
    உட்தளக் காந்த சக்தி !

    +++++++++
     
     

     
    “பூர்வீக நிலவுப் பாறை மாதிரிகள் நிலவு ஒரு காலத்தில் பெற்றிருந்த நீண்ட கால இயக்க சக்தியை [Dynamo Power] உறுதிப் படுத்துகின்றன. இந்தப் புதிய கோட்பாடு நிலவின் தோற்ற வரலாற்றை மாற்றப் போகிறது. கோளம் குளிர்ந்து போகும் என்னும் விளைவே உந்து சக்தியின் இயக்கம் இல்லாத தால் நேர்கிறது என்று பொதுவாக நாம் அனுமானிக்கிறோம். நிலவில் எடுத்த இந்தப் பாறைச் சான்றுகள், வேறு வித இயக்க முறைகளும் அதன் குளிர்ச்சியில் பங்கெடுக்கலாம் என்று எடுத்துக் காட்டுகின்றன.”

    பேராசிரியர் ஃபிரான்சிஸ் நிம்மோ [Originator of the Moon Dynamo Theory]

    “பூர்வீக நிலவின் பாறை மாதிரிகள் ஒரு காலத்தில் நிலவு பெற்றிருந்த நீண்ட காலம் நீடிப்பு உந்து சக்தியைக் காட்டுகின்றன. 3.7 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு வெப்பச் சுற்றியக்கம் கொண்ட திரவ உலோக உட்கருவை [Liquid Metal Convective Core] பெற்று, வலிமை மிக்க காந்த தளத்தைக் கொண்டிருந்தது. விஞ்ஞானிகள் முன்பு யூகித்ததற்கு மாறாக அது நீடித்து இருந்ததென்று இப்போது ஆய்வுகள் காட்டுகின்றன. அதாவது உந்து சக்தியை இயக்கி வந்தது வேறு விதமான மூலச் சக்தி என்பது அறியப் படுகிறது.”

    பெஞ்சமின் வைஸ் [ Associate Professor, Planetary Science, MIT ]

    Fig 1B The Birth of the Moon

    “பிண்டங்கள் பிளந்து விழுகின்றன, நடுமையம் தாங்க முடியாமல்.”

    வில்லியம் பட்லர் ஈட்ஸ், ஐரிஸ் கவிஞர் (1865-1939)

    நம்மால் எட்டிப் பிடிக்க இயலாதபடி அல்லது நாம் கண்டுபிடிக்க முடியாதபடி எந்த ஒரு பொருளும் நம்மிடமிருந்து நீக்கப்பட வில்லை.

    டெஸ்கார்டிஸ், பிரெஞ்ச் கணித மேதை (1596-1650)

    காலாக்ஸியிலும், பால்மய வீதியிலும் விண்மீன்கள் தூள்களாய்ச் சிந்திக் கிடக்கின்றன.

    மில்டன், ஆங்கிலக் கவிஞன் “இழந்த சொர்க்கலோகம்” (1608-1674)

    இருள்வெளியின் திமிங்கலப் பற்கள் அப்படியே அதை விழுங்கிவிடும்.

    வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆங்கில நாடக் மேதை (1564-1616)
     

    Inside of Moon

     
     
    பூர்வீக காலத்தில் நிலவை இயக்கி வந்த உட்தளக் காந்த சக்தி

    நிலவும் ஒரு காலத்தில் பூமியைப் போல் உட்கருக் கனலில் இயங்கும் மின்காந்த சக்தியின் உந்து விசையால் சுற்றி வந்திருக்கிறது. இப்போது நிலவு குளிர்ந்து போய் உள்ளடுப்புக் கனல் அணைந்து ஆறிப் போன ஓர் அண்டக் கோளாய்ப் பூமியை வலம் வருகிறது. நிலவு 3.7 பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் திரவ உலோகம் உட்கருவில் கொதித்து மிக்க வலிமையுள்ள காந்த மண்டலத்தைப் பெற்று ஆற்றலுள்ள ஓர் அண்டக் கோளாய் இருந்திருக்கிறது. 1969 ஜூலையில் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் முதலாகத் தன் தடம் வைத்துப் பல்வேறு மாதிரிப் பாறைகளைப் பூமிக்குக் கொண்டு வந்தார். அவருக்குப் பின்னால் நிலவில் நடந்த விண்வெளி விமானிகளும் மாதிரிப் பாறைகள் பல எடுத்து வந்தார். அவை யாவும் காந்த சக்தி உள்ளதாக அறியப் பட்டன. அதாவது நிலவு இயக்கமற்ற குளிர்ந்த தளக் கோளில்லை என்பது தெளிவானது. அதாவது ஒரு காலத்தில் நிலவில் காந்த சக்தி அளித்த சுற்றியக்கம் கொண்ட திரவக் கனல் உட்கரு [Liquid Metal Convective Core] இருந்திருக்க வேண்டும் என்று உறுதியானது.

    நிலவின் உட்கருக் கனலடுப்புக்கு எரிசக்தி நீண்ட காலமாய் ஊட்டியது எதுவென்று இன்னும் தெரியாமல் மர்மமாய் இருக்கிறது. ஒரு எதிர்பார்ப்பு அந்த உந்துசக்தி பூமியைப் போல் சுயமாய்த் தொடர்ந்தியங்கும் ஓர் ஆற்றல் என்பது. திரவக் கருவின் காந்த விளைவு இயக்கமும் பின்னர் குறைந்து மாறியதால், நிலவும் குளிர ஆரம்பித்தது. உட்கருவுக்கு நீண்ட கால எரிசக்தி ஊட்டும் மூலப் பொருள் எதுவும் இல்லாததால் பல மில்லியன் ஆண்டுகள் கழித்து அண்டக் கோள் குளிர்ந்த மரணக் கோளாய் ஆகிவிடுகிறது. நிலவுக்கும் அதே கதிதான் நேர்ந்தது. பூமியின் உட்கருக் கனல் அடுப்புக்குத் தொடர்ந்து எரிசக்தி அளித்து வருவது ஒரு பெரும் அணு உலை, அல்லது பேரளவு கதிரியக்க உலோகங்களின் தேய்வு வெப்பமே [Radioactive Decay of Heavy Elemets Like Uranium, Thorium]. நிலவு குளிர்ந்து போனதற்குக் காரணம் அதன் உட்கருக் கனல் அடுப்பைத் தூண்டிய எரிசக்தி வற்றி இல்லாமல் போனதே ! அப்பெல்லோ -11 விண்வெளி விமானிகள் கொண்டு வந்த நிலவுப் பாறை மாதிரிகள் 3.7 பில்லிய ஆண்டுக்கு முந்தியவை என்றும், காந்த சக்தி கொண்டவை என்றும் தெளிவாக அறியப்பட்டன.
     

    Earth's Moon

     
    “பூர்வீக நிலவின் பாறை மாதிரிகள் ஒரு காலத்தில் நிலவு பெற்றிருந்த நீண்ட காலம் நீடிப்பு உந்து சக்தியைக் காட்டுகின்றன. 3.7 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு வெப்பச் சுற்றியக்கம் கொண்ட திரவ உலோக உட்கருவை [Liquid Metal Convective Core] பெற்று, வலிமை மிக்க காந்த தளத்தைக் கொண்டிருந்தது. விஞ்ஞானிகள் முன்பு யூகித்ததற்கு மாறாக அது நீடித்து இருந்ததென்று இப்போது ஆய்வுகள் காட்டுகின்றன. அதாவது உந்து சக்தியை இயக்கி வந்தது வேறு விதமான மூலச் சக்தி என்பது அறியப் படுகிறது,” என்று பெஞ்சமின் வைஸ் [ Associate Professor, Planetary Science, MIT ] கூறுகிறார்.

    சூரிய மண்டலத்தில் நூதனப் புதிரான பூகோளம்

    பிரபஞ்சக் காலாக்ஸிகளில் நாமறிந்த பால்மய வீதியின் பரிதி மண்டலத்தில் நாம் வசிக்கும் ஒரே ஒரு கோளில்தான் நூதனமாகப் பேரளவில் நீர்மயம் திரவ வடிவிலும், திடவ உருவிலும், ஆவியாகவும் (Liquid, Solid & Vapour) பல கோடி ஆண்டுகள் நீடித்து வருகிறது. அதிலும் விந்தையாகப் பூமியின் பிரம்மாண்டன கடற்குழி எப்படி நீர்மயமாக நிரம்பியது என்பது புதிர்களில் ஒரு புதிராக உள்ளது ! அந்தக் கடல்நீர் எப்படி உப்புக் கலவை நீராகி உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பது மேலும் புதிராக உள்ளது ! பல மாதிரிச் சான்றுகளில் ஒத்திருக்கும் துணைக்கோள் நிலவு பூமியின் சேயாகக் கருதப்படுகிறது ! ஆனால் வாயு மண்டலமும், நீர் வளமும் தாய்க்கோளில் பெருவாரியாக இருக்கச் சேய்க் கோளில் ஏனப்படி இல்லாமல் போயின என்பதும் வியப்பாக இருக்கிறது ! பூமிக்கு ஒரே முகத்தை மட்டும் மில்லியன் ஆண்டுகளாய்க் காட்டிச் சுற்றிவரும் துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது என்பது உறுதியாக அறியப் பாடாமல் இன்னும் புதிரான ஒரு சிந்தனைக் கோட்பாடாகத்தான் உள்ளது.

    சூரிய மண்டலத்தில் உள்வட்டக் கோள்களான புதன், வெள்ளி, பூமி (நிலவு), செவ்வாய் ஆகிய நான்கு கோள்களும் திடப் பிண்டம் (Solid Matter) கொண்டவை. பூமியில் மட்டும் திடப் பிண்டமும் பெருவாரிக் கடல் நீரும் உள்ளன. ஆனால் வெளிவட்டக் கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கும் ஏன் வாயுக் கோள்கள் ஆயின ? திடக்கோள்கள் பரிதியின் மூர்க்க ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு நெருக்கமான நீள்வட்ட வீதியில் சுற்றுகின்றன. அதே சமயத்தில் வெளிவட்ட வாயுக் கோள்கள் உள்வட்டக் கோள்களுக்கு அப்பால் வெகு தொலைவில் சுற்றி வருகின்றன.

    North and South Poles

     
    அப்பொல்லோ பயணத்தில் கிடைத்த ஒப்பில்லா மாதிரிகள்

    பரிதியின் உள்வட்டக் கோள்களில் புதனுக்கும், வெள்ளிக்கும் துணைக் கோள் எதுவும் இல்லை. செவ்வாய்க் கோளுக்கு உருளைக் கிழங்கு போல் இரண்டு சிறிய துணைக் கோள்கள். பூமிக்கு ஒரு துணைக்கோள். வெளி வட்டத்தில் உள்ள வியாழனுக்கு 63 நிலவுகள், சனிக்கு 62 நிலவுகள், யுரேனசுக்கு 27 நிலவுகள், நெப்டியூனுக்கு 13 நிலவுகள் இருப்பது வியப்பாக உள்ளன. பல ஆண்டுக் காலமாக வானியல் விஞ்ஞானிகள் பூமியும் சந்திரனும் தனித்தனியாகத் தோன்றிப் பிறகு ஈர்ப்பு மண்டலத்தில் சேர்ந்து கொண்டவை என்று கருதினார்கள். அதைக் “கூட்டுச் சேகரிப்பு” முறை (Co-Accretion) என்று வானியல் விஞ்ஞானிகள் குறிப்பிடுவர். கூட்டுச் சேகரிப்பு முறையில் உருவாகும் ஓர் அண்டம் அருகில் பரவிய பிண்டத் துணுக்குகளை ஈர்ப்பு விசையால் தன்வசம் இழுத்து உடல் பெருத்து ஈர்ப்பாற்றலும் மிகை யாக்கிக் கொள்வது. இழுப்பு நியதி (Capture Theory) நிலவு உண்டான பிறகு, பூமி நோக்கி வந்து புவியீர்ப்பு மண்டலத்தில் இழுக்கப் பட்டுச் சுற்றி வருவதாகச் சொல்கிறது.

    Fig 1 The Theia Planet Theory

    பிளவுக் கோட்பாடு (Fission Theory) சொல்கிறது: பரிதி மண்டலத்தில் தோன்றிய இளம்பருவக் காலத்தில் பூமி அரைத் திரவ நிலையில் (Semi-fluid State) இருந்து பிளவு ஏற்பட்டு சிறு கோளொன்று நிலவாகப் பிரிந்து பூமியைச் சுற்றியது. அடுத்தது “குளிர்த்திண்மை விதி” (Condensation Theory) எனப்படுவது. அந்த முறையில் பரிதி மண்டலக் கோள்கள் உண்டான “நிபுளாவி லிருந்து” (Nebula) தனித்தனியாக உருவாகிய இரண்டு கோள்களாக பூமியும், நிலவும் அனுமானிக்கப் படுகின்றன.

    1969-1970 ஆண்டுகளில் நிலவுக்குப் பயணம் செய்த பல்வேறு அப்பொல்லோ குறிப்பணிகளில் (Apollo Moon Missions) வானியல் விமானிகள் கொண்டுவந்த இரசாயன மாதிரிகள் நமது துணைக்கோள் நிலவைப் பற்றி மகத்தானப் புதுமைகளை வெளியிட்டன. நிலாப் பாறைகளின் மாதிரிகளில் பூமியில் கிடைக்கும் “ஆக்ஸிஜென் ஏகமூலப் பொருட்கள்” (Oxygen Isotope Materials) போல் காணப் பட்டன. அதாவது பூமியும், நிலவும் பரிதி மண்டலத்தின் ஒரே அரங்கப் பகுதியில் (Same Region of the Solar System) தோன்றையவை என்று நிரூபித்தன ! அத்துடன் நிலவிலும் பூமியைப் போல் உச்ச உஷ்ணத்தில் உருகும் ஆவியியல் மூலகங்கள் (Volatile Elemets that melt at high Temperatures) எதுவும் கிடையாது ! அவை இரண்டும் ஆதி காலத்தில் அதி உச்சநிலை உஷ்ணத்தில் வடிவானவை என்பது தெரிய வருகின்றன.

    வானியல் விஞ்ஞானிகள் நிலவின் இரசாயன மாதிரிகள் பூகோளத்தின் மேற்தளத் தட்டைப் போல் (Earth’s Mantle) ஒத்திருப்பதைக் கண்டறிந்தார்கள். ஆனால் தோன்றிய போது பூமியின் மேற்தளத் தட்டு மிகத் திண்மையான உலோகத்திலிருந்து உண்டானது. தனித்துத் தோன்றிய நிலாவிலே எப்படி பூமியை ஒத்த உலோகவியல் தட்டுப் பொருட்களைக் கொண்டிருக்க முடியும் என்னும் கேள்வி எழுகிறது ! அப்பொல்லோ-11 வானியல் விமானிகள் கொண்டுவந்த வெள்ளைக் கூழாங்கற்களில் நூதனப் பாறை “அநார்த்தோசைட்” (Anorthosite) இருந்தது. அப்பாறையில் பூமியில் தென்படும் சோடியம், கால்சியம் அலுமினியம் சிலிகேட் (Sodium & Calcium Aluminiuam Silicates) தாதுக்கள் இருந்தன.

    நிலவு தோன்றியதை முடிவு செய்ய மூன்று நிபந்தனைகள்

    நிலவு எப்படி உண்டானது என்ற கேள்விக்குப் பதில் கூறும் எந்தக் கோட்பாடும் கீழ்க்காணும் மூன்று நிபந்தனை மெய்ப்பாடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் :

    1. நிலவின் கீழான பிண்டத் திணிவு [(Moon’s Density 3.3 gram/c.c) (Earth’s Density 5.5 gram/c.c)] கூறுவது என்ன வென்றால், நிலவின் இரும்பு உட்கரு (Iron Core) பூமியை போல் கனமான தில்லை என்னும் கருத்து.

    2. நிலவின் பாறைகளில் நீரைப் போல் ஆவியாகும் பொருட்கள் (Volatile Substances) இல்லை. அதாவது பூமியை விடப் பேரளவில் சூடாக்கப்பட்ட தளத்தைப் பெற்றுள்ளது நிலவு (Baking of Lunar Surface).

    3. பூமியிலும் நிலவிலும் காணப்படும் ஆக்ஸிஜென் ஏகமூலத் தாதுக்கள் ஒரே ஒப்புமை வீதத்தில் இயற்கையாகப் படிந்துள்ளன (Relative Abundane of Oxygen Isotopes). அதாவது பரிதி மண்டலத்தில் ஒரே தூரப் பகுதியில் பூமியும், நிலவும் உண்டாகி உள்ளன.

    நிலவு எப்படி தோன்றியது என்பதற்குக் கூறப்படும் கோட்பாடுகள்

    பூமியின் இரட்டைக் கோள்போல் காணப்படும் நிலவு எப்படிப் பிறந்தது என்பதை விளக்க வானியல் விஞ்ஞானிகள் நான்குவிதக் கோட்பாடுகளை அனுமானம் செய்கிறார். முதல் மூன்று நியதிகளில் ஓரளவு மெய்யாடுகள் இருந்தாலும், நான்காவது “பூதத் தாக்கு நியதியே” (The Giant Impact Theory) பெரும்பான்மை விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

    1. பிளவு நியதி (The Fission Theory)

    இந்தக் கோட்பாட்டின்படி நிலவு ஒரு காலத்தில் பூமியின் ஒரு பகுதியாக ஒட்டியிருந்து பிறகு சூரிய மண்டலத்தின் துவக்க காலத்தில் எப்படியோ பிளந்து தனியாகப் பிரிந்தது என்று கருதப் படுகிறது. தற்போதுள்ள மாபெரும் பசிபிக் கடற்குழியே நிலவுக்குப் பூர்வீக இருப்பிடமாக இருந்திருக்க வேண்டு மென்று யூகிக்கப் படுகிறது ! அந்தப் பகுதியி லிருந்துதான் நிலவு பிரிந்து வந்திருக்க வேண்டும் என்பது ஒரு சித்தாந்தக் கருத்து. இதற்கு ஒரு காரணம். பூமியின் மேற்தளத் தட்டு (Earth’s Mantle) நிலவின் தளப்பகுதி இரசாயனப் பொருட்களை ஒத்துள்ளது. வேகமாகச் சுழலும் பூமியே, சுழல்வீச்சு விசையால் பிரிந்து போன சிறு கோளை வெளியே தள்ளிச் சுற்ற வைத்திருக்கும். அந்தக் கோட்பாடை மெய்யாக எடுத்துக் கொண்டால் பூமியிலும் நிலவிலும் ஏதாவது ஒத்திருக்கும் “பூர்வப் படிவச் சான்றுகள்” (Fossil Evidences) கிடைத்திருக்க வேண்டுமல்லவா ? ஆனால் அத்தகைய நிரூபணச் சான்றுகள் அப்பொல்லோ பயண விமானிகளுக்கு கிடைக்கவில்லை. மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.

    2.  கைப்பற்று நியதி (The Capture Theory)

    இந்தக் கோட்பாடு மூலம் அறிவது: நிலவு சூரிய மண்டலத்தில் முதலில் வேறெங்கோ தோன்றியது என்றும், பின்னால் அதைப் பூமியின் ஈர்ப்பு விசை இழுத்துக் கொண்டது என்றும் அனுமானம் செய்யப் படுகிறது. நிலவில் காணப்படும் வெவ்வேறு விதமான இரசாயனப் பொருட்களுக்கு இவ்விதி உதவினாலும் பூகோள ஈர்ப்பில் கவரப்பட்டு, நிலவு சுற்றும் நீள் வட்டவீதிக்கு வந்தது என்பதை விளக்க முடியாவில்லை. காரணம் பூமியை நோக்கி இழுக்கப்படும் நிலவைக் கட்டுப்படுத்தி மெதுவாக்கும் ஓர் எதிர்ப்பு உந்தாற்றல் எதுவும் இல்லாமல் அப்படிச் செய்ய முடியாது என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார். மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.

    3. குளிர்த்திண்மை நியதி (The Condensation Theory)

    சூரிய மண்டலத்தை உருவாக்கிய மூல “நிபுளாவிலிருந்து” (Nebula) பூமியும், நிலவும் தனித் தனியாகத் தோன்றியவை என்றும் நிலவு பூமியைச் சுற்றும் கோண வட்டவீதியில் தள்ளப்பட்டது என்றும் இந்தக் கோட்பாடு அனுமானம் செய்கிறது ! அந்தக் கோட்பாடு மெய்யென்றால் அவை இரண்டுக்கும் ஏறக்குறைய ஒரே அளவு திணிவுள்ள “கன உலோக உட்கரு” (Same Dense Iron Core) அமைய வில்லை யென்னும் முரண்பாடு உண்டாகுகிறது. அத்துடன் அவை இரண்டும் ஒரே மாதிரி உட்பொருட்கள் (Composition of Materials) கொண்டிருக்க வில்லை. மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.

    4. அசுரத் தாக்கு நியதி அல்லது விலக்கு வளைய நியதி (The Giant Impact Theory or The Ejected Ring Theory)

    பெரும்பான்மையான வானியல் விஞ்ஞானிகள் தற்போது ஏற்றுக் கொண்டை கோட்பாடு இது. இந்தக் கொள்கையின்படி செவ்வாய்க் கோள் அளவான குட்டிக் கோள் ஒன்று, சூரிய மண்டலம் உண்டான இளம்பருவத்தில் பூமியைத் தாக்கியதாகவும், மோதலின் விளைவில் இரண்டு கோள்களின் மேற்தளத் தட்டுப் பொருட்கள் பேரளவில் எறியப்பட்டன வென்று அனுமானம் செய்கிறது. சிதறிய துணுக்குகள் ஒன்துடன் ஒன்று சேர்ந்து. நிலவாக உருண்டு திரண்டு பூமியைச் சுற்றும் ஒரு கோளானது. மோதலில் எழுந்த கனல் வெப்பத்தால் நிலவின் பாறைகள் சூடாக்கப் பட்டன ! நிலாவின் பெரும்பகுதி ஏன் பாறைக் குன்றாக உள்ளது, அக்குன்றுகள் எப்படிக் கடுமையாகச் சூடாக்கப்பட்டன என்னும் கேள்களுக்கு விளக்கம் தருகிறது இந்தக் கோட்பாடு. சூரிய மண்டலம் உருவான பிறகு இத்தகைய மோதல்கள் பெருமளவில் நேர்ந்ததற்குச் சான்றுகள் கிடைக்கின்றன.

    உறுதி செய்யப்பட்ட முடிவான நிலவுத் தோற்ற நியதி

    1970 ஆண்டுக் காலங்களில் நிலவுத் தோற்றத்தை விளக்க வானியல் விஞ்ஞானிகள் முடிவான பூதத் தாக்கு நியதியை (The Giant Impact Theory) அரங்கேற்றினார்கள். பூமி மீது மோதிய சிறிய கோள் முட்டிய போது, “கோண-மையத் தாக்குதலில்” (Off-center Impact) மோதியதாக அனுமானிக்கப் படுகிறது. அத்தகைய மோதல் இளமைப் பருவப் பூமிக்கு விரைவான துவக்கச் சுழற்சியை (Fast Inititial Spin) அளித்திருக்க முடியும் என்றும், எறியப்பட்ட துண்டம் நிலவாக வடிவம் பெற்றுச் சுற்றியிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது. அத்துடன் மோதலில் விளைந்த வெப்பசக்தி நிலவின் பாறைப் பொருட்களைச் சூடேற்ற ஏதுவாக உதவியிருக்கும் என்று நம்பச் செய்கிறது. ஏறக்குறைய அடுத்த பத்தாண்டுகளாக “பூதத் தாக்கு நியதியை” விஞ்ஞானிகள் நம்பாமல் இருந்தனர். 1984 இல் நடந்த ஒரு கூட்டுக் கருத்தரங்கில் எல்லா நியதிகளும் விவாதிக்கப்பட்டு, முடிவில் பெரும்பான்மையான எண்ணிக்கையில் பூதத் தாக்கு நியதி பலரால் ஒப்புக்கொள்ளப் பட்டது.

    50 மில்லியன் ஆண்டு வயதாகிப் பூமி தவழ்ந்து வளரும் பருவத்தில் உடல் முறுக்கேறாது கனிந்த நிலையில் உள்ள போது அத்தகைய பூத மோதல் நிகழ்ந்திருக்க முடியுமென்று நம்ப இடமிருக்கிறது ! அதை நிரூபித்துக் காட்ட அமெரிக்காவில் போல்டர், கொலராடோ தென்மேற்கு ஆய்வுக் கூடத்தில் ராபின் கானூப் (Robin Canup, Southwest Research Institute), என்பவரும் காலி·போர்னியா பல்கலைக் கழகத்தின் எரிக் ஆஸ்ஃபாக் (Erik Asphaug) என்பவரும் ஒரு புதிய “கணினி போலிப் படைப்பை” (Computer Simulation) வெற்றிகரமாகச் செய்தார்கள்.

    ******************

    [தொடரும்]

    தகவல்கள்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)

    3. Astronomy Facts File Dictionary (1986)

    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)

    6. Cosmos By Carl Sagan (1980) 7. Dictionary of Science – Webster’s New world (1998)

    8. Physics for Poets By : Robert March (1983)

    9. Atlas of the Skies (2005)

    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)

    11 Wikipedia – Inner Structure of the Moon (January 31, 2008)

    12. http://en.wikipedia.org/wiki/Dynamo_theory [October 12, 2012]

    13. http://www.dailygalaxy.com/my_weblog/2012/12/nasas-totally-cool-new-moon-maps.html NASA’s New Totally Cool Moon Maps [December 7, 2012]

    14. http://web.mit.edu/newsoffice/2012/moon-dynamo-0127.html [January 27, 2013]

    15. http://www.dailygalaxy.com/my_weblog/2013/01/the-moon-was-once-powered-by-a-dynamo-core-mit-research-revealed-ancient-power-source.html [January 28, 2013]

    ******************

    S. Jayabarathan jayabarat@tnt21.com [February 23, 2013]

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – தொடர்-27

     பெருவை பார்த்தசாரதி

    வரலாற்றில் இடம்பெற்ற பெரிய விவேகிகள் எல்லோருமே, தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சூழல்களுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து,  பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து காட்டினார்கள் என்பதைத்தான் கடந்த 26 தொடர்களிலும் எழுதி வருகிறேன்.

    இவர்கள் அனைவருமே, உள்ளத்தின் ஆழத்தில் உறைந்து கிடக்கும் நேர்மை நிரம்பிய ஆற்றலை வெளிக்கொணர்ந்து, ஒருமுகக் கவனத்தின் மூலம் உலகுக்கு வழிகாட்டினார்கள் என்பதை பலவித சான்றுகளோடு விவரிக்கப்பட்டது. இவர்களின் சாதனைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் ரகசியம் யாதென!….. ஆராயும்போது, ‘ஆழ்மனத்தில் மறைந்திருக்கும் ஆக்கப் பூர்வமான ஆற்றலை’ பிறர் அறியும்படி வெளிக்கொணர்ந்த விதமே, இவர்களை உலகறியச் செய்தது எனத் தோன்றும்.

    இருபத்திநான்கு மணி நேரத்தில், காலை எழுந்தது முதல், இரவு படுக்கைக்குப் போகும் வரை ‘நேரம் எவ்வாறு கழிந்தது’!… என்பதை யாரும் அவ்வளவாகப் பொருட்படுத்துவதில்லை. அதேசமயத்தில், நேரம் வீணாகக் கழிந்துவிட்டதைப் பற்றி நினைத்துப் பார்க்காதவரும் இருக்க முடியாது என்றே கூறமுடியும். ஆனால், அறிவாளிகளும், சாதனையாளரும், சிந்தனையாளரும் ஒவ்வொரு நிமிடமும் ஆக்கப் பூர்வமான நேர்மை நிரம்பிய எண்ணங்களோடு ஒவ்வொரு நிமிடமும் யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

    ஒரு நல்ல காரியத்தைத் தொடங்க நினைக்கும்போது, வேறொரு எண்ணம் அதைச் செய்ய விடாமல் தடுக்கிறது, அப்போது, ‘ஆஹா’ அந்த நல்ல செயலை நேற்றே செய்திருக்கலாமே!….,நேற்று நேரம் இருந்தும் அதைச் செய்யாமல் விட்டுவிட்டோமே!…”என்ற எண்ணம் எல்லோருக்கும் மறுநாள்தான் உதயமாகிறது.

    ஒரு நல்ல நிகழ்ச்சி ஒன்றை மனம் விரும்பி ஏற்கின்ற அதே சமயத்தில், கெட்ட நிகழ்ச்சியைக் காண அதே மனம் விரும்புவதில்லை. ஆனால் நல்லதோ, கெட்டதோ, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தீர ஆராய்ந்து அதிலிருந்து நல்லதைப் பெற முடியும் என்பதையே வாழ்வியல் பாடம், படிப்பிணை, பட்டறிவு, அனுபவம் என்றெல்லாம் பலவாறாகக் கூறக் கேட்டிருக்கிறோம்.

    தீய எண்ணங்களை விலக்கி, தீச்சொற்களைப் பயன்படுத்தாமல், ஆக்கப் பூர்வமான எண்ணங்களுக்கு இடம் விடும்போது, வாழ்க்கைப் பயணம் இனிதே தொடர்கிறது என்பதை   வள்ளுவர் பின்வரும் குறளில்:- “ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நின்றாகாதாகி விடும்”  என்கிறார். அதாவது பாலில் துளி நஞ்சு கலந்தது போல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லானால் அதுவரை கூறிய நல்ல சொற்கள் அனைத்தும் பயனற்றுப் போய்விடும்” என்பதே இக்குறளின் கருத்து.

    ஒரு நாட்டின் அரசன் என்ற முறையில், செய்ய வேண்டிய எவ்வளவோ நல்ல காரியங்கள் இருந்தும், தீய செயலை உடனே செய்த “இராவணன்”, இராமாயணம் உருவாகக் காரணமாயிருந்தான். அவனது தீய எண்ணத்துக்கு வித்திட்டவள் சூர்ப்பனகை. மாகாபாரதத்தில் “சிசுபாலன்” தீச்சொற்களால், பகவான் கிருஷ்ணனையே சுட்டெறித்தான், ராஜசூய யாகம் நடக்கும் போது, பலர் முன்னிலையில் சபையில் அவதூறு பேசி பகவானையே பகைத்துக் கொண்டவன் சிசுபாலன். “துரியோதனன்” கடுஞ்சொற்களால் மகான்கள் அனைவரையும் மட்டம் தட்டினான். தீய எண்ணத்தால் எழுந்த பேச்சால், பீஷ்மர், விதுரர், துரோணர் போன்ற பெரியோர்களின் ஆசியைப் பெறமுடியவில்லை. துரியோதனன் மனதில் தீய எண்ணங்களை வளர்த்தவர் “சகுனி”. இவர்கள் மூவரின் மன நிலையைச் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை, யாவரும் அறிந்ததே.

    இப்படி மனதில் தீய எண்ணங்கள் நிறைந்தவர்கள் பலர், கொடுஞ்செயல்களைப் புரிந்து உலக வரலாற்றிலே இடம் பெற்றவர்களும் இருக்கிறார்கள். சிறுவயதிலேயே எதிர்மறை எண்ணங்களையும், தீய எண்ணங்களையும் வெகு விரைவில் வளர்த்துக் கொண்ட சிறுவன் ஒருவன் வளர்ந்து பெரியவனாகும் போது, உலகறிந்த மிகப் பெரிய கொடுங்கோலனாக வலம் வந்தான் என்பதை விவரிக்கிறது வரலாறு.

    ‘வெற்றி வீரன்’, ‘மாவீரன்’, ‘உலகை ஆளப்பிறந்தவன்’, ‘சர்வ வல்லமை படைத்தவன்’ என்றெல்லாம் தன்னைத் தானே நினைத்துக் கொண்டு, மமதை என்கிற சிம்மாசத்தில் வாழ்ந்தவன். ஆணவம், அகங்காரம், அதிகாரம் இவற்றின் பிறப்பிடமாக இருந்த இவன் உலகமே தன்னைக் கண்டு அஞ்ச வேண்டும் என்று நினைத்தானே தவிர, இரக்கம், அன்பு என்றால் என்ன வென்று அறியாதவனாகவே வாழ்ந்தான். தன்னிடம் மண்டியிட்ட பல்லாயிரக்கான யூதர்களின் மண்டையை உடைத்தான், உயிர்ப்பிச்சை கேட்டு மன்னிப்புக் கோரியவர்களை தூக்கிலிட்டான் என்பது இவனது சரித்திரம். கொடுமைக்கடலில் குதித்து சந்தோச நீச்சல் கற்றவன் ஹிட்லர். யாராவது கொடுஞ்செயல் புரிந்தால் அவர்களை ‘ஹிட்லர்’ என்று சொல்கிறோமே, இந்த அடைமொழிக்கு அடையாளமாகத் திகழ்ந்தவன். பலருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவன்.  இவனைப் போன்றே “மனித நேயம்” இல்லாத, உலக சரித்திரத்தில் இடம்பெற்ற மற்ற வீரர்களையும் நாம் அடையாளம் காணமுடியும்.

    இவர்களை நினைக்கும் போது, நாம் எப்படி வாழக்கூடாது என்பதை நன்றாக அறியமுடியும். அதே சமயத்தில், நாம் ஒன்றைச் சிந்திக்க மறந்து விடுகிறோம், அதாவது, எத்தகய கொடுஞ்செயல்களையும் புரியாது, ஈகைக் குணத்தால், புலவர்களைப் பாராட்டிப் பரிசு கொடுத்து, பரந்து விரிந்த சாம்ராஜ்ஜியத்தில் வெற்றிக் கொடி நாட்டிய நமது நாட்டில் தோன்றிய ஆக்கப் பூர்வமான சிந்தனைகளையும், செயல்களையும் புரிந்த சேர, சோழ, பாண்டியர் என்னும் வீரர்களை நினைவுக்குக் கொண்டுவர வேண்டியது நமது கடமை. இவர்களும் போர்புரிந்து பகைவரை வென்ற மாவீரர்கள்தான். ஆனால் எத்தகய நல்லெண்ணத்தோடு வாழ்ந்தார்கள் என்று சிந்திக்க வேண்டும்.

    ஒருவரது வாழ்க்கை, அவரது எண்ணம்போல்தான் அமையும் என்பதற்கு “எண்ணம் போல் வாழ்வு”,மனம் போல் மாங்கல்யம்”, “எண்ணம்போல் செயல்” என்றெல்லாம் சொல்வதை நாம் வழக்கத்தில் கொண்டிருக்கிறோம். எண்ணத்தைப் பொருத்தே, செய்யக்கூடிய செயல் அமைவதால்தான், தீயதைக் கேட்காதே, தீயதைப் பார்க்காதே, தீயதைப் பேசாதே என்பதை சிறுவயதிலிருந்தே படித்து வருகிறோம்.

    ஆக, எண்ணத்திற்கும் செயலுக்கும் தொடர்பு உண்டு. எண்ணம், புத்தி, மனம், சிந்தனை போன்ற அனைத்திற்கும் விரிவான விளக்கமளிக்கிறார் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸிக்மண்ட் ப்ராட் (Sigismund Schlomo Freud:: 6 May 1856 – 23 September 1939) என்னும் உளவியல் மருத்துவர். மனிதர்களின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாயும்போது, மனதின் இயல்புகளை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மனித மனம் பற்றிய உளப்பாகுபடுகளை, ஐடி (ID), ஈகோ (Ego), சூப்பர் ஈகோ (Super Ego) என்று மூன்று வகையாகப் பிரித்து ஒவ்வொன்றிற்கும் மிக நுண்ணிய விளக்கம் தந்திருக்கிறார் ஸிக்மண்ட். மனத்தை அறிந்து கொண்டால் மகான்களாக முடியும் என்று சொல்கிறோம் அல்லவா!…ஸிக்மண்ட் என்ன கூறுகிறார் என்பதை மேலும் தெரிந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் செல்லவும்.

    http://en.wikipedia.org/wiki/Id,_ego_and_super-ego)

    ஒரு நல்ல விஷயத்தை மற்றவரிடம் சொல்லும்போது, அதை அவர் மகிழ்ச்சியாக மனதார ஏற்றுக்கொள்கிறாரா?..இல்லையா?….என்பதை அவரது பதிலை வைத்தே அறிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு ஒருவர் ‘என்னுடைய மகன் மாநிலத்திலேயே முதலாவதாக வந்திருக்கிறான்’ என்ற தகவலை மிகவும் மகிழ்ச்சியாக அவரது நண்பனுக்குத் தெரிவிக்கிறார், இதைக்கேட்ட அவரது நண்பர் ‘என்ன மார்க் வாங்கி என்ன ப்ரயோசனம், எவ்வளவு படிச்சாலும் வேல கிடைக்க மாட்டேங்குது’ என்ற பதிலிலிருந்து அவரது எதிர்மறை எண்ணமும் சுயநலமும் வெளிப்பட்டு விடுகிறதல்லவா?.. இதேபோல சுபகாரியங்கள் நடக்கும் இடத்தில் அபசகுனமாகவும், அனர்த்தமான வார்த்தைகளையும் பிரயோகிப்பவர்களது மனதை எளிதாக அடையாளம் காணமுடியும்.

    இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சியிலிருந்தும், வாழ்வியல் கல்வியைத் தொடங்கும்போது, பலரது மனம் நல்லனவற்றையே விரும்புகிறது. வாழ்வில் மகிழ்ச்சி ஒன்றே போதும் என்று மனம் நினைக்கிறது, சிறிது துன்பம் இடர்வந்தாலும் அதை மனம் ஒப்ப இயலாது என்பதை சென்ற இதழில் விளக்கி இருந்தேன்.

    நல்லெண்ணங்களை வளர்த்துக் கொள்ள வழிகாட்டியாக அறநெறிக்கதைகள் அடங்கிய மகாபாரதக் கிளைக்கதைகள், இராமாயணக்கதைகள், முல்லாக் கதைகள் மற்றும் ஸென் மற்றும் சூஃபி கதைகள் நமக்கு அவ்வப்போது உதவுகிறன்றன. உதாரணத்திற்கு ‘ஸென்’ கதைகளில் வரும் கருத்துக்களில் மேலெழுந்தவாரியாக ஒன்றுமில்லாததாகத் தோன்றினாலும், ஆழ்ந்து படித்தால் உள்ளுக்குள் அர்த்தம் பொதிந்ததாகத் தெரியும். வாழ்வியல் நடைமுறைகளை எதார்த்தமாக எடுத்துச் சொல்லும். எடுத்துக்காட்டாக, ஸென் கதைகளின் வருகின்ற ஒன்றை இங்கே கூறவிரும்புகிறேன். ஸென் துறவி ஒருவர், சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்போது, குதிரை மேய்ப்பவன் ஒருவன், சாட்டையினால் ஒரு குதிரையின் முதுகில் பலமாக அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, ‘துஷ்டனே, ஏன் அந்த வாயில்லா ஜிவனை அடிக்கிறாய்’ என்று கூச்சலிடுகிறார். அவனோ எதையும் சட்டை செய்யாமல் குதிரையை நையப் புடைத்துக் கொண்டிருப்பதிலேயே கவனம் செலுத்துகிறான். திரும்பத் திரும்ப ஸென் துறவி கூச்சலிடுவதைப் பார்த்துவிட்டு, குதிரை மேய்ப்பவன் சாட்டையை அவர் பக்கம் திருப்புகிறான். பிறகு, அவரைப் பார்த்து ‘நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?..என்கிறான்.

    “அந்தக் குதிரையை அடிப்பதை நிறுத்து, தீய எண்ணங்களால் சூழப்பட்டு, உனக்குள் தறிகெட்டு ஓடும் மனக் குதிரையை, முதலில் சாட்டையால் அடித்து, அதைச் செம்மைப்படுத்து” என்று ஸென் துறவி…..சொல்கிறார்

    ஒரு சிறிய நிகழ்ச்சியில், பல அர்த்தங்கள் பொதிந்து காணப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

    சிறார் பருவத்தில் வகுப்பறையில் பாடம் படிக்கிறோம், பிறகு கல்லூரி, அதன் பிறகு உயர் படிப்பிற்காக வெளிநாட்டில் என்றெல்லாம் கல்வி பயின்று, ஒரு கால கட்டத்தில் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம். கல்வி பயிலுவது என்பது ஒரு காலகட்டத்தில் நின்று விட்டாலும், ‘வாழ்வியல் கல்வி’ வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    தினந்தோறும், பத்திரிகைகள், தொலைக்காட்சி, ஊடகம், இணையதளம், குடும்ப அனுபவங்கள் இதுபோல் உலகியல் நடப்புகள் அனைத்துமே, நமக்கு அனுதினமும் வாழ்வியல் பாடம் புகட்டிக் கொண்டேயிருக்கின்றன. ஏதாவதொரு பாடம் அல்லது படிப்பிணை எங்கோ நடந்த சம்பவத்திலிருந்து நமக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இப்படி நாம் அனைவருமே புதிது புதிதாக, தீயதை விலக்கி நல்ல வாழ்வியல் பாடங்களை ஏதோ ஒரு சம்பவங்களிலிருந்து கற்றுக் கொண்டே வரும்போது, அதற்கு முடிவு என்பது இருக்குமா?…என்ற கேள்வி எழுந்தால், வாழ்வியல் கல்வி என்பது ‘இறக்கும் வரை தொடரும்’ என்பதே பதிலாக இருக்க முடியும்.

     தொடரும்………

    Share
  • வார ராசி பலன்கள் 25.02.13-03.03.13

    மேஷம்: உயர்ந்த பதவியில் இருப்போர்கள், பிறரின் குற்றம் குறைகளை இதமாக சுட்டிக் காட்டினால், வேலைகள் தேங்காமல் முடிந்து விடும். இந்த வாரம் பெண்கள் உறவுகளி டமிருந்து அதிக சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. பொது சேவையில் ஈடுபட்டுள்ள வர்கள் பொதுப்பிரச்னைகளைத் தீர்க்க, புத்திசாலித்தனமும், பொறுமையுமே உதவும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் தகுதிக்கேற்ற நட்பைத் தேடிக் கொண்டால், வீண் தலைவலியை தவிர்த்து விடலாம். வியாபாரிகள் புதிய முயற்சிகளுக்குத் தேவையான பக்கபலத்துடன் களம் இறங்கினால், நினைத்ததை சாதிக்க இயலும்.

    ரிஷபம்: கலைஞர்கள் வெளி இடங்களுக்கு எடுத்துச் செல்லும் பொருட்களில் கவனமாக இருந்தால், கலை நிகழ்ச்சிகள் வெற்றிகரமாய் அமையும். பெண்கள் மின்சாதனப் பொருட்களை கவனமாய் கையாளுங்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, சேமிப் பை அதிகப்படுத்தினால், கடன் தொல்லைகளை குறைத்து விடலாம். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு சற்றே பொறுப்புக்கள் அதிகரிக்கும். மாணவர்கள் சிறிய காரியத்தை யும் சிரத்தையுடனும் செய்தால் சிறப்பான பலனைப் பெறலாம்,அடிக்கடி வெளியூர்ப் பயணம் செல்பவர்கள் சளித் தொந்தரவுக்கு ஆளாக வேண்டி வரும். வியாபாரிகள் ஒப்பந்தங்களைப் பெற அங்கும், இங்கும் அலைந்து திரிவர்.

    மிதுனம்: பெண்கள் அடிக்கடி வரும் கோபத்தை குறைத்து கொண்டால், இல்லத்தில் சச்சரவு எழாது. மாணவர்கள் தேவையற்ற எண்ணங்களுக்கு இடம் தராமல், படிப்பில் கவனம் செலுத்தி வாருங்கள். அதிக நேரம் பணியில் ஈடுபடுபவர்கள் உடல் நலனில் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டிய வாரமிது. நீங்கள் எங்கு பணி புரிந்தாலும், சொல்,செயல் ஆகிய இரண்டிலும் நிதானத்தைக் காட்டி வந்தால், எந்த நிலைமையும் சமாளித்து விடலாம். வியாபாரிகள் வாக்குறுதிகளை வழங்குவதைக் காட்டிலும் அதை நிறைவேற்றி வைப்பதில் கவனமாய் இருந்தால், சிக்கல்கள் ஏதும் வராது. அனைவரை யும் அனுசரித்துச் செல்வதன் மூலம் கலைஞர்களுக்கு ஆதாயம் இரட்டிப்பாகும்.

    கடகம்: உங்களின் நிதி நிலைமைக்கேற்றவாறு காசோலைகளை பயன்படுத்துவது நல்லது. புதிய நபர்களிடம் வியாபார ஒப்பந்தம் செய்யும் முன்பு, அவர்களின் பொருளாதாரம், முன் அனுபவம் ஆகியவற்றை அறிந்து செயல்படவும். பணியில் பொறுமையை சோதிக்கும் சந்தர்ப்பங்களையும், லாவகமாக கையாண்டால், மன அமைதிக்கு பங்கம் வராது. சுய தொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகள் வெற்றி பெறுவதற்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும்.மாணவர்கள் நாவடக்கம் நன்மையைத் தரும் என்பதை நினைவில் கொண்டு செயல்பட்டால், நற்பெயரை எளிதில் தக்க வைத்துக் கொள்ள இயலும்.

    சிம்மம்: சிலருக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று மகிழும் வாய்ப்பு கிட்டும். கர்ப்பிணிப் பெண்கள் உடலில் சில அசௌகரியங்கள் தோன்றி மறையலாம். தகுந்த மருந்து களை உட்கொண்டால், ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணியில் இருப்பவர் களை கவனத் தடுமாற்றம், மறதி ஆகியவை அலைக்கழிக்கும். மாணவர்கள் வெளி வட்டாரப் பழக்கங்களில் தராதரமறிந்து பழகிவந்தால், வீண் சங்கடங்கள் உங்களை அண்டாது. கலைஞர்கள் அபவாதங்களுக்கு இடமளிக்காதவாறு உறுதியாய் செயல் படுங்கள். வியாபாரிகள் ஏனோதானோவென்று பணிகளைச் செய்யாமல், தகுந்த திட்டப்படி செய்தால், குழப்பங்களைத் தவிர்த்து விடலாம்.

    கன்னி: ஏற்ற இறக்கமான  சூழலிலும் பெண்கள் புன்னகையே பதிலாக தந்து வாருங்கள். குடும்ப ஒற்றுமை குலையாமல் இருக்கும். பணி புரியும் இடங்களில் அவசரமாய் செயல்படுவதை தவிர்த்து, தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டால், எவரும் உங்களை குறை கூற மாட்டார்கள். பண விஷயங்களில் எவருக்கும் அவசரப்பட்டு வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். மாணவார்கள் மாதத் தேர்வுகளை அலட்சிய மாக எண்ணாமல் கவனத்துடன் எழுதுவது அவசியம். வியாபாரிகளுக்கு, நம்பிக்கை க்குரிய பணியாளர்கள் நிறுவனத்திலிருந்து விலகிச் செல்லும் சூழல் உண்டாகும். வாகனப் பராமரிப்பிற்கென்று சில்லறை செலவுகளை செய்வீர்கள்.
    துலாம்: பணி புரிபவர்கள் உடனிருந்தே காலை வாருபவர்களிடம் உஷாராக இருந்தால், உங்கள் உழைப்பு வீணாகாமலிருக்கும். பெண்கள் உபத்திரவம் தரும் அண்டை அயலா ரை அருகில் சேர்க்காதீர்கள். உங்களின் விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப் பாக வைத்தால், வீண் கலக்கத்தை தவிர்த்து விடலாம். உங்களின் பழைய அனுபவம், தொடர்புகள் ஆகியவற்றின் உதவி கொண்டு வியாபார சிக்கலைத் தீர்க்க இது ஏற்ற வாரம். கலைஞர்கள் சுற்றியிருப்பவர்களால் வீண் செலவுகள் செய்ய வேண்டிய சுழலுக் குத் தள்ளப்படுவர். மாணவர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளில் அதிக கவனம் தேவை.

    விருச்சிகம்: வியாபாரிகள் உங்கள் சேவையை விமர்சனம் செய்யும் வாடிக் கையாளர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். மாணவர்கள் புதிய இடங்களில், உணவுக் கட்டுப்பாட்டை கடை பிடித்தால், உடல்நலம் நன்றாகத் திகழும். புதிய வீடுகள் மற்றும் மனைகளை வாங்கும் முன் பத்திரங்களைச் சரிபார்ப்பது அவசியம். வீண் ஜம்பம், வேண்டாத பெருமை இரண்டையும் விலக்கிவிட்டால், கலைஞர்கள் நிம்மதியாய் வேலை செய்யலாம். பணியில் இருப்பவர்கள் பதற்றமின்றி பொறுமையுடன் செயல்பட்டால், உயரதிகாரிகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக முடியும். பெண்களுக்கு வேலை பளு கூடலாம்.

    தனுசு: கடன் தொல்லைகளினால் சிறிது மன சஞ்சலம் ஏற்பட்டாலும், சிக்கல் வராமல் இந்த வாரம் சமாளித்து விடுவீர்கள். பங்குதாரார்களின் ஆதரவால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கலைஞர்கள் அதிக புகழ்ச்சி எனும் வலை விரிப்பவரிடம் மாட்டிக் கொள்ளாமல் விலகியே இருங்கள். பணியிடத்தில் பிறர் கூறும் குற்றம், குறைகளுக்காக அவர்களிடம் வாக்கு வாதத்தில் இறங்குவதை தவிர்த்துவிடவும். சில சந்தர்ப் பங்களில்,நண்பர்களே உங்களை எதிரியாய் கருதி உங்களோடு மோதும் நிலை உருவாகும். தேவையில்லாமல் பெண்கள் தங்கள் அலுவலக ரகசியங்களை பிறரிடம் கொட்ட வேண்டாம் .

    மகரம்: எதிரும் புதிரும் இருந்த உறவுகள், நெருங்கி வருவதால், பெண்கள் மகிழ்ச்சி யுடன் திகழ்வார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவது அவசியம். மாணவர்கள் சின்னசின்ன விஷயங்களுக்கு உணர்ச்சி வசப் படுவதைத் தவிர்த்தல் நலம். தம்பதிகளுக்குள் அனுசரணையும், புரிதலும் இருந் தால், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் தங்கும். பணியில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு களை விருப்பமுடன் ஏற்றுக் கொள்வவதால், நல்ல பெயரோடு பதவி உயர்வும் வந்து சேரும். தொழிலாளர்கள் இடையே தோன்றும் மன வேறுபாடுகள் பெரிதாகாமல் இருக்க அவர்களை தட்டிக் கொடுத்து செல்லுங்கள். வியாபாரம் சீராக இருக்கும்.

    கும்பம்:வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களை ஒப்புக்கொள்ளும் முன், அதில் உள்ள நிறைகுறைகளை உணர்ந்து செயல்படுவது நலம். பெண்கள் பிள்ளைகளின் கூடாத நட்பினால் தோன்றும் பிரச்னைகளை முளையிலேயே கிள்ளுவது புத்திசாலித்தனமான செயலாகும். நீங்கள் எதிர்பார்த்தவகைகளில் வரும் அதிக வரவால் பழைய கடன்களை தீர்க்க தேவையான பணம் கிடைக்கும். சுய தொழிலில் தோன்றும் கஷ்டங்களைக் கடக்க உங்கள் உழைப் பும், சாமர்த்தியமும் கை கொடுக்கும். கலைஞர்கள் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல தகவல்கள் கிடைக்கும் வரை பொறுமையாய் இருப்பது அவசியம்.

    மீனம்: எதிலும் முனைப்புடன் ஈடுபடும் மனப்பாங்கால், வியாபாரிகள் எடுக்கும் முயற்சியெல்லாம் லாபமாய் மாறும். மாணவர்கள் புதிய இடங்களில் எவரை நம்பியும் உங்கள் உடைமைகளை ஒப்படைக்க வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னை களை நிதானமாகக் கையாள்வது நல்லது. பெண்கள் முன் கோபத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு செயலில் இறங்கினால், குடும்ப முன்னேற்றமான நிலைக்கு செல்வது உறுதி. கலைஞர்கள் பெரிய மனிதர்களின் சந்திப்பினால் பெரிய செலவுகளைச் சந்திக்க நேரிடும் . கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் அவ்வப்போது தோன்றும் சிறிய சச்சரவுகளைப் பெரிது படுத்தவேண்டாம்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 60 (25.02.13)

     

     

     

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    (23)
    காமம் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா இடும்பை
    எய்தியோன் சொல்லுதல்

    இளமையான அன்னமே!
    நீ இவளுடன் நடந்திடாதே! நடந்திடாதே!
    அலைகள் சூழும் கடல்பகுதியில் வாழ்பவரை
    தமது அழகால் கொன்று திரிகிறாளே!
    இவள் நடைக்கு நின் நடை ஒப்பாகாது!
    அதனால் அவளோடு நடந்திடாதே!

    (24)

    கட்டுரை

    மாதவி, கலவியால் மகிழ்ந்தாள்போல் கோவலனிடம்
    இருந்த யாழை வாங்கி, புலவியால் கானல் வரி பாடத் தொடங்குதல்

    அவ்விடத்தில்
    கோவலன்  யாழதனில் வாசித்த
    கானல்வரிப் பாடல்களை
    மான் போன்ற நெடிய கண்களையுடைய
    மாதவி கேட்டனள் .

    அவன் பாடிய பாடல்களில்
    பிறிதொரு பெண்ணைப் பற்றிய
    எண்ணங்கள் உள்ளடக்கிய
    குறிப்புகள் இருந்தன என்றும்,
    இவன் அன்றைய தன் நிலையிலிருந்து
    தன்னோடு கூடியிருந்த நிலையிலிருந்து
    இன்று பெரிதளவும் மாறியிருக்கிறான் என்றும்
    எண்ணினள் மாதவி.

    மனதில் ஊடல் கொண்டாலும்
    அவனுடன் கூடியிருந்த அக்கணத்தில்
    இன்புற்றவள் போலவே
    தோன்றினள் மாதவி.

    யாழினை அவனிடமிருந்த வாங்கி,
    வேறு குறிப்புகளை மனதில் கொண்டவள் போலவே
    தன் இனிய குரலில்
    பாடத் தொடங்கினள் மாதவி.

    அந்நிலத்துக்குரிய தெய்வமாகிய வருணனும்
    அப்பகுதிவாழ் மக்களும் கேட்டு
    இன்புறும்படி வியந்திருக்கும்படி
    யாழதனுடன் இரண்டறக் கலந்து
    தன் இனிய குரலில்
    பாடத் தொடங்கினள் மாதவி.

    அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram20.html

    படத்துக்கு நன்றி:
    http://www.nagapattinam.tn.nic.in/thestory.html

    Share
  • தொல்லை காட்சி: ரபி பெர்னாட் பேட்டி – தோனி -சூப்பர் சிங்கர் – மொக்க பார்ட்டி

    மோகன் குமார்

    பிளாஷ்பேக்: ரபி பெர்னாட் நேர்காணல்கள்

    ரபி பெர்னாட் சன் டிவியில் நேர்காணல் துவங்கிய போது பெரும் வரவேற்பை பெற்றது. பரந்த அரசியல் அறிவும், பிரபலங்களை அழைத்து வந்து சர்ச்சைக்குரிய கேள்வியை அவர் பொறுமையாய் கேட்கும் விதமும் அற்புதமாக இருக்கும். பல அரசியல் வாதிகளுக்கு கோபம் வருமளவு விவாதம் வலுத்ததும் உண்டு அதே ரபி பெர்னாட் – அதே நேர்காணலை இன்றும் ஜெயா டிவியில் செய்கிறார் ஆனால் பெரும்பாலானோர் பார்க்கிற மாதிரி தெரியவில்லை. காரணம் இப்போது நடுநிலைமை என்பது சிறிதும் இன்றி முழுக்க முழுக்க அ. தி.மு. க சார்பாக சென்று விட்டதுதான். ரபி பெர்னாடுக்கு ராஜ்ய சபா உறுப்பினராக அரசியல் வாழ்வில் ஏறுமுகம் என்றாலும், ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக அவரின் இந்த இன்னிங்க்ஸ் அவ்வளவு பிரகாசிக்க வில்லை.

    மொக்க பார்ட்டி

    சன் மியூசிக்கில் வரும் நிகழ்ச்சி மொக்க பார்ட்டி. போனில் அழைக்கும் நபரை மொக்கை போடா சொல்லி , Compere -ம் சேர்ந்து மொக்கை போடுகிறார். சினிமா நிகழ்ச்சியில் இருந்து ஒரு டயலாக் எடுத்து போட்டும் போனில் பேசுபவரை களாய்க்கிறார்கள் . எல்லாம் சரிதான். சில நேரம் கிண்டல் எல்லையை மீறி விடுகிறது. சமீபத்தில் ஒருவரை களாய்க்கும் போது ” டேய் லூசுக்கு பிறந்த லூசு பயலே ” என்ற சினிமா டயலாக்கின் ஆடியோ வடிவம் போட்டு கிண்டலடித்தனர். போனில் பேசுபவரை கிண்டலடிப்பது வரை சரி. அவர் அப்பாவையும் சேர்த்து ” லூசுக்கு பிறந்த லூசு பயலே ” என்று கிண்டலடிப்பது சரியா? என்னமோ போங்க !

    சூப்பர் சிங்கர்

    அதென்னவோ தெரியலை.. டிவியில் தொடர்ந்து அல்லது அதிகம் பார்க்கும் நிகழ்ச்சி இதுவாகவே இருக்கிறது. வார நாட்களில் வீட்டுக்கு வருகிற நேரத்துக்கு இதை தான் பார்க்க முடிகிறது என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

    பாடுவோர் செலெக்ட் ஆவார்களா இல்லையா என நாமும் ஒரு ஜட்ஜ் மாதிரி அவர்களின் முதல் 2 வரி கேட்டு விட்டு சொல்லுவது ஒரு விளையாட்டு மாதிரி இருக்கிறது. பெரும்பாலும் நாம் சரியாகக் கணித்தாலும், சில நேரம் நம் கணிப்பு பொய்யாகும் போது நம் கோபம் ஜட்ஜ் மீது திரும்புகிறது

    நிற்க. சில மிக வித்தியாசமான பாடகர்களை இதில் அவ்வப்போது காண முடிகிறது. முழுக்க பெண் குரலில் மட்டுமே பாடும் நபர், வாத்திய கருவிகளை வாயாலே முழுமையாய் வாசிப்பவர் என மனிதர்களுக்கும் தான் எத்தனை திறமைகள் !

    அம்மாவும் ஐயாவும்

    காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை கெசட்டில் ( Gazette) வெளியிட்டது தனது முக்கிய சாதனை என அம்மா எழுதி வைத்து கொண்டு ஜெயா டிவியில் படிக்க, மறுபுறம் ஐயாவோ கலைஞர் டிவியில் “இதற்கு காரணம் நாங்க தான்” என்றார். தஞ்சாவூரிலும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆறுகள் அனைத்தும் வறண்டு கிடக்கு. அதைக் கண்டுகொள்ளாமல், இதை தனது சாதனை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை என்னவென்று சொல்வது! கர்நாடகாக்காரர்கள் உச்சநீதிமன்றம் சொல்வதையும் சரி, மத்திய அரசு பேசுவதையும் பெரிதாய் எடுத்து கொள்வதும் இல்லை. தண்ணீர் திறந்து விடுவதுமில்லை. இந்த விஷயத்தில் அங்குள்ள அரசியல்வாதிகள் காட்டும் ஒற்றுமையை நம் தமிழக அரசியல்வாதிகள் காட்டினாலாவது பிரச்சனை நிஜமாய் தீர சற்று வாய்ப்புண்டு

    சுஜாதாட்ஸ் 10 – காணொளி

    நமது தல சுஜாதா இளைஞர்கள் செய்ய வேண்டிய 10 விஷயம் என்று எழுத்தில் எழுதியதை நிச்சயம் ஏற்கனவே படித்திருப்பீர்கள். அதனை அப்படியே ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசியுள்ளார் இயக்குனர் கரு. பழனியப்பன். யூ டியூபில் தேடி கேட்டு பாருங்கள். தலைவர் சொன்னது இன்றைக்கும் அப்படியே பொருந்துகிறது !

    கிரிக்கெட் கார்னர்

    மீண்டும் சென்னையில் ஒரு கிரிகெட் மேட்ச். அஸ்வின் தனது Career best பந்து வீச்சை சொந்த மண்ணான சென்னையில் வீசியது ஒரு பக்க மகிழ்ச்சி என்றால், சச்சின் மீண்டும் பார்முக்கு வந்தது இன்னொரு மகிழ்ச்சி. சென்னையில் கிரிக்கெட் நடக்கும் போது ரேடியோவில் தமிழ் காமண்டரி சொல்வது வழக்கம். அப்போதெல்லாம் டிவி யில் கிரிகெட் மேட்ச் ஆன் செய்து விட்டு, சவுண்டை மியூட் செய்து, ரேடியோவில் தமிழ் காமண்டரி ஆன் செய்து வைத்து விடுவோம். தமிழில் காமண்டரி கேட்டவாறு, டிவி யில் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் ஆனந்தம் இருக்கே.. அடடா ! சொர்க்கம் !

    தோனியின் அதிரடி ஆட்டம் – தனி பதிவு எழுதி பாராட்ட வேண்டும்.. இந்த 1 பதிவு போதாது 🙂

    Share
  • தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் – 6

    திவாகர்

    தேவன் ஒரு சகாப்தம் – 5

    கும்பகோணம் போலீஸ் ஸ்டேஷனில் சி.ஐ.டி. சந்துருவும் ஸர்க்கிள் இன்ஸ்பெக்டர் கோபாலனும் நாற்காலிக்கு ஒரு எமனாக இரண்டு எமன்கள் உட்கார்ந்திருப்பதாக சுந்தரத்துக்குப் படுவதாகவும், ஒரு எமனிடமிருந்து தப்பினால் இன்னொரு எமனிடம் மாட்டியே ஆகவேண்டும் என்றும் தேவன் எழுத, அந்த எழுத்துக்கள் மூலமாக ஒரு சுவாரஸியமான உரையாடல் தொகுப்பை நாம் இங்கே பார்க்கலாம். சுந்தரம் கால்கள் நிலையற்று தவிக்க தட்டுத் தடுமாறிச்சென்றுதான் அந்த பிரசித்தி பெற்ற நாற்காலியில் அமர்கிறான். சந்துரு ஆரம்பிக்கிறார்.
    .
    “உம்.. சுந்தரம் ஸார்! இதற்கு பதில் சொல்லுங்கள்!”

    “ஆஹா.. இதோ சொல்லிவிடுகிறேன்.. எதற்கு?”

    ”இனிமேல் நான் கேட்கப்போகிற கேள்விக்கு!”

    “ஓ! அதற்கென்ன? ஓ! கேளுங்கோ, கேளுங்கோ.. ரைட்!”

    “நரஸிம்மனும் மாயவரத்துக்கு வந்தார்! நீங்களும் மாயவரம் போனீர்களே.. அது எப்படி?

    “ஓ! அதுவா.. நரஸிம்மன்.. என்னை அங்கே வரும்படி சொன்னான்.”

    “சரி, எதற்காக சொன்னார்?”

    உம், அதை அவனையே நீங்கள் கேட்டுவிடலாமே?”

    “கேட்பதற்கு பதில் சொல்லும்.. என்ன காரணத்தைச் சொல்லி உம்மை அவர் வரச் சொன்னார்?”

    “காரணம் ஒண்ணுமில்லே.. நான் தான் என்னை வரச்சொல்லும்படி அவனைச் சொல்லச் சொன்னேன்!”

    “உம்மை அவர் வரச் சொன்னார் என்றீரே.. சித்தே முந்தி?”

    “ஆமாம்! அவனை விட்டு என்னைச் சொல்லச் சொன்னேன்.. அவன் சொன்னான்.. ஹிஹிஹி..”

    “அட, அவரை ஏன் ஐயா நீர் அப்படிச் சொல்லச் சொன்னீர்?”

    “அதைச் சொல்றேளா? தெரிஞ்சுண்டேன்! தெரிஞ்சுண்டேன்..அதுவா கேக்கறேள்? ஓஹோ!”

    “ஓய்! நான் கேட்டதற்குப் பதறாமல் பதில் சொல்லும்!”

    ”என்ன கேள்வி அது?”

    “நீர் ஏன் ஐயா அவர் கூட மாயவரம் போனீர்?”

    “நான் போகவே இல்லையே.. அவன் தானே கூப்பிட்டான்?”.

    “உஷ்! அதற்கு நீர்தானே அவரைக் கூப்பிடச் சொன்னதாகச் சொன்னீர்?”

    “அதுவும் சரி! நான் சொன்னேன், “அடே நரஸிம்மா! நானும் வரேண்டா மாயவரத்துக்கு, என்னைக் கொஞ்சம் நீ கூப்பிடுடா” அப்படின்னேன். அவன் உடனே என்னைக் கூப்பிட்டுட்டான்.. நான் உடனே புறப்புட்டுட்டேன்.. ஹி ஹி ஹி..”

    “இதென்னயா உளறல்.. நாங்கள் என்ன பயித்தியக்காரங்களா?”

    “நோ நோ! யார் சொன்னது? நான் அப்படி எங்கே சொன்னேன்? கேட்டுப் பாருங்கோ!” சுந்தரம் திருதிருவென்று நாலுபுறமும் விழித்தான்.

    ஸர்க்கிள் மேஜை மீது கையைத் தட்டினார்; “சுந்தரம், பல விஷயங்களை நீர் மறைக்கிறதாக உம்ம பேரில் எங்களுக்கு ஒரு சந்தேகம் இருந்து வருகிறது.. ஆகையால்..”

    “எனக்கு அதைக் கேட்க ரொம்ப வருத்தமாக்யிருக்கிறது சார்!”

    “உம்ம வருத்தம் இருக்கட்டும்! உமக்கு இது விஷயமாக தெரிந்ததை எங்களிடம் ஒளிக்காமல் சொல்லப்போகிறீரா.. இல்லையா?”

    “கட்டாயமா சொல்றேன்.. நிமிஷத்திலே சொல்றேன்.. ஒரே வார்த்தையிலே கூடச் சொல்லிடறேன்.. உங்கள்கிட்ட சொல்லாம யார்கிட்டேச் சொல்லப்போறேன்? ஹிஹிஹி”

    சந்துரு நெற்றிப்பொட்டுகளை அமுக்கி விட்டுக்கொண்டே, “ஏன் ஸார் சுந்தரம்! உம்மை நாங்கள் அழைத்துக் கொண்டு வந்த போது உங்களிடம் பரபரப்பே தென்படவில்லையே! இப்படி நடக்கப்போகிறது என்று நீர் எதிர்பார்த்தீரோ?”

    “உம்.. ஆமா, ஆமா, ஓ யெஸ்!”

    “எப்படி எதிர்பார்த்தீர்?”

    “ஒருநாள் இல்லாவிட்டால் ஒரு நாள் நீங்கள் கூப்பிடவேண்டியவர்தானே?”

    “எதற்காகவோ?”

    “எனக்குத் தெரியாது.. ஆனால் நான் மட்டும் எதிர்பார்த்தேன்”

    “அதுதான் ஏன் என்கிறேன்?”

    நரஸிம்மன் விறைத்துப் பார்த்தான்.. முட்டாள் சுந்தரம் மாட்டிக்கொண்டுவிட்டானே.. கடைசியில் சந்துரு எப்படியோ மடக்கிவிட்டானே.. சுந்தரமும் இயந்திரம் போல் பதில் சொல்லி வந்தவன் ஒருமுறை திடுக்கிட்டான். உள்ளங்கையை எடுத்து மேஜைமேல் வைத்தான். “மிஸ்டர் சந்துரு! இதைக் கவனித்துப் பாருங்கள்! என்ன தெரிகிறது? ஒரு மெல்லிய கோடு, இதோ இங்கே ஆயுள் ரேகையை வந்து வெட்டுகிறது, இல்லையா?” என்றான்.

    ”சரி?”

    ”இந்த இடம் இருபத்தி நாலு முதல் இருபத்தாறு வயது வரைக் குறிக்கிறது..’சீரியோ’ ஹஸ்தரேகை சாஸ்த்திரத்துலே போட்டுட்டான். இப்படி இருந்தால் கோர்ட்டு வழக்குகளில் சம்பந்தம் உண்டு என்று! அதுதான் நான் எதிர்பார்த்தேன்..”

    சந்துரு சோர்வுடன் பெருமூச்சு விட்டு நாற்காலியில் சாய்ந்து விட்டார். அட பழி!

    “கேளுங்கள் மேலே! இன்னும் என்ன? என்றான் சுந்தரம்.

    “மாயவரத்துக்கு ஏன் சார் சுத்து வழியாய் போனீர்கள்?

    “ஓ! நாங்கள் போனது சுத்து வழியோ? ஓஹ்ஹோ?”

    “உமக்குத் தெரியாதாக்கும்?

    “தெரியாது! நீங்கள் இப்போ சொன்னது நல்லதாப் போச்சு.”

    “ஏன்?”

    ”நேர்வழியிலே போயிருந்தா, போகும்போதே பிடிச்சுருப்பேளே”

    ”அது சரி, பின்னால் நரஸிம்மன் வந்தாரே.. எங்கே அவரை முதலில் பார்த்தீர்கள்?”

    “நான் பார்க்கவே இல்லை!”

    “ஏன் பார்க்கவில்லை?”

    ”நாங்கள்தான் பார்த்ததும் வேகமாய்ப் போனோமே?”

    “அப்படி வரும்படி சொல்லிவிட்டு அப்படி வேகமாய் போவானேன்?”

    “நான் சாஸ்திரிகளை முன்னாலே போய்ப் பார்க்கத்தான்!”

    “சாஸ்திரிகளை முன்னால் என்ன பார்வை? சொல்லலாமா?”

    “சும்மாத்தான். எனக்கு ஸந்தியாவந்தனத்துலே ஒரு சந்தேகம்! போறதுதான் போறமே, நரஸிம்மன் வரதுக்கு முந்தியே அதைக் கேட்டுடலாம்னு போனேன்!”

    “அதைக் கேட்டீரா?”

    ”கேட்கல்லே, அதுக்குள்ளே நரஸிம்மனே வந்துட்டான். அவனையே கேட்டுத் தெரிஞ்சுக்கலாமுன்னு விட்டுட்டேன்..”

    “ஓஹோ! ஸந்தியாவந்தனத்துல சந்தேகம் கேழ்க்கிறதுக்கு மாயவரம் போனேள். இல்லையா?”

    “இன்னொரு சின்னக் காரியம். ரொம்ப அல்பக் காரியம்.. அதையும்கூட பார்த்துக்கலாம்னு”

    “கம்பளி சமாசாரமா அது?”

    “ஓ! அதுதான், உங்களுக்கே தெரிந்திருக்கே! பேஷ்.. பேஷ்!”

    “அதிலே என்ன இருந்தது?”

    ”கம்பளிதான் இருந்தது.. ஆஸ்திரேலியா ஆட்டுக் கம்பளி!”

    “வேற ஒண்ணும் இல்லே? அப்படித்தான் நினைச்சேன்.. கொடுத்த போது!”

    “அப்படிச் சொல்லுங்கள்!.. அதில் வேறே விஷயம் இருந்தது என்பது எப்போது தெரிந்தது?”

    பாருங்கள்.. இதுவரை ஒரு அசடு போலவே இருந்து அச்சுபிச்சு போல பேசிக் குழப்பியவன் போகிற போக்கிலும் பேச்சு சுவாரஸியத்திலும் தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே சர்வ சாதாரணமாக வாய் விட்டு உளறி தாங்கள் மாயவரம் சென்றது வைரம் ரத்தினம் வைத்த கம்பளிக்காக என்று சொல்லி  மாட்டிக்கொண்டு விழிப்பதையும், ஒருவாறு மூச்சு முட்டி, விரல்கள் தாளமிடுவது போல நடுநடுங்கி பிறகு ஒருவழியாய் சமாளித்து அது எலி கிடைத்ததால் கம்பளியில் விழுந்த ரத்தின ஓட்டைகள் என்று சொல்லி மழுப்பி விடுவான். ‘கிறுக்குப் பிடித்தவன் மாதிரி பதில் சொல்கிறீரே’.. என்ற எரிச்சலான திட்டலும் வாங்கினாலும் அவன் அசட்டுத் தனமே அன்று எப்படியோ அவனைக் காப்பாற்றியதையும் தேவன் மிக அருமையான உரையாடல்கள் மூலம் நகைச்சுவை உணர்ச்சியோடு இங்கே அள்ளித் தெளித்திருப்பார்.

    தேவன் காலத்திலேயே தேவனின் கதைகள் நாடகமாக்கப்பட்டன. நாடக வசனங்களை தேவனே எழுதினார். அந்த நாடகங்களில் கல்யாணியும் ஒன்று.இந்த அழகான கல்யாணியை எழுதுவதற்க்கு முன்னர் ‘கோமதியின் காதலன்’ என்றொரு நகைச்சுவைத் தொடர் விகடனில் எழுதினார். கோமதியின் காதலன் 1945 இல் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களால் நாடகமாக மேடையேற்றப்பட்டது.  பின்னர் 1955 இல் ப. நீலகண்டன் இயக்கத்தில் திரைப்படமாகவும் ஆக்கப்பட்டது. இதில் கோமதியாக சாவித்திரியும் காதலனாக நகைச்சுவை நடிகர் டி.ஆர். ராமச்சந்திரனும் நடித்தனர். டி. ஆர். ராமச்சந்திரன் அந்த நாட்களில் பெரிய நகைச்சுவை நடிகராக இருந்திருக்கவேண்டும். அவர்தாம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கூட. இளமையான சாவித்திரிக்கு சற்று வயதான தோற்றத்தில் காணப்படும் ஜமீந்தார் மகனாக நடித்ததால்தான் என்னவோ, டி ஆர் ஆரின் படம் அவ்வளவாக எடுபடவில்லை. கிழக்குப்பதிப்பகம் சமீபத்தில் இந்தக் கதையை மறுபதிப்பு (படத்தில் உள்ளது) செய்த போது, ’இதற்கு ஈடாக இன்னொரு காதல் கதையைமுன்வைப்பது கடினம். எழுதப்பட்ட காலம் தொடங்கி இன்று வரை சிரஞ்சீவியாக கோலோச்சிக்கொண்டிருக்கிறது இந்நாவல்.நாயகனும் நாயகியும் அல்ல. காதலும் நகைச்சுவையும்தான் இந்நாவலின் மெய்யான ஜோடி’ என்று முன்னுரை கொடுத்து விளம்பரம் செய்தது.

    கோமதியின் காதலன் சினிமாவுக்கு ஏற்ற கதைதான். இரு ஜமீன்களிடையே கோர்ட் வரை சென்றுள்ள பகை. இதில் ஒரு ஜமீந்தார் மகள் கோமதி, அவள் சென்னையில் தங்கிக்கொண்டு படித்து வருகிறாள். எதேச்சையாக அவள் ஊரில் வந்த போது அவளைக் கண்டதும் காதல் கொள்கிறான் பகையாளியின் மகனான  ராஜா. ஆனால் அவனுக்கும் முதலில் பகைவீட்டார் மகள் என்பது தெரியாமல் போகிறது. ஊரில் சகோதரனுடன் சண்டை போட்டுக் கொண்டு சென்னை வந்த கதாநாயகன் பட்டணத்துத் திருடர்களிடம் இருக்கும் பெட்டியையும் இழந்து, கடைசியில் கதாநாயகி தங்கிப் படிக்கும் வீட்டுக்காரரிட்மே வாகன் ஓட்டுனராகச் சேருகிறான் (இதற்கு மேல் கதை வேண்டுமோ.. இதைப் போல சினிமாக் கதைகள் பின்னர் நிறைய வந்துவிட்டன அல்லவா..).. ஆனால் தேவன் சாதாரணமாக ஒரு கதையை இஷ்டம் போல எழுதுவதில்லை. இந்தக் கதையில் மணி என்றொரு வில்லங்கப் பாத்திரம். (திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்துக்குப் பொருத்தமாக நடித்தது நடிகர் தங்கவேலு). அவன் கதாநாயகன் பெட்டியைத் திருடும்போது, அதிலுள்ள டைரியைப் படித்துவிட்டு அவனைப் பற்றிய சகல விஷயங்களையும் அறிந்துகொண்டு, தானே உண்மையான ஜமீன் வாரிசு என்று இதுவரை பார்த்தறியாத கதாநாயகியைக் கவர வருவது ஒரு விசேஷம்தான். ஆனால் கதையில் உள்ள சுவாரசியம் திரைப்படத்தில் கிடைக்கவில்லை. ஆனால் இந்தக் கதையில் உள்ள காதலையும் நகைச்சுவையையுமே அப்படியே அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட சபாஷ் மீனா, காதலிக்க நேரமில்லை போன்ற திரைப் படங்கள் மிகப் பெரிய வெற்றியை ஈட்டுத் தந்தன என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

    கோமதியின் காதலன் கதை எழுதும்போது உலகப் போர் நடந்து கொண்டிருந்தபடியால். ஜப்பான்காரன் குண்டு போடுவதும், அடிக்கடி அபாயச்சங்கு அலறுவதையும் சுவையாக விவரிப்பார் தேவன். நகைச்சுவை தேவனது கோட்டைதான். இருந்தாலும் அவரது அடுத்த நாவல்களான மிஸ்டர் வேதாந்தம், லக்ஷ்மி கடாட்சம், ஸ்ரீமான் சுதர்ஸனம் போன்றவை நவரசங்களையும் பிரதானமாக கொண்டதாகத்தான் எழுதினார். மிஸ்டர் வேதாந்தம் ஒரு அருமையான பாத்திரம். கதாநாயகனான வேதாந்தமும் சரி, நாயகியான செல்லமும் சரி, வாழ்க்கையின் கஷ்டங்களை அனுபவிக்கவென்றே பிறந்தனர் போலும் என்று வாசகர்களுக்குத் தோன்றும். அதே சமயத்தில் சமுதாயத்தின் அத்தனை குறைகளையும் நிறைகளையும் ஒருங்கே கொண்டு வந்து விடுவார் தேவன். இந்தக் கதையைப் பற்றி ஒரு சில கருத்துகள் உண்டு.

    (தொடர்ந்து வரும்)

     

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7

    தேமொழி

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    அடிவானத் தேயங்குப் பரிதிக் கோளம்
    அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்
    இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி
    எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து
    முடிவான வட்டத்தைக் காளி யாங்கே
    மொய்குழலாய், சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்.
    வடிவான தொன்றாகத் தகடி ரண்டு
    வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய். (150)

    – பாஞ்சாலி சபதம், பாரதியார்

     

    பாடல் சொல்வது:
    சூரியனாகிய கோளம், அடிவானத்தில் மிக விரைவாகச் சுழல்வதைப் பார்.  வானத்தில் இடிகளோடு கூடிய பத்துக் கோடி மின்னல்களை எடுத்து, அவற்றை உருக்கி, வார்த்து, ஒரு தகட்டை உருவாக்கிக் காளி அம்மை என்ன விரைவாகச் சுற்றுகிறாள் என்பதைக் காண்பாய்.  என்ன வலிமை, என்ன மாட்சி இங்கே வெளிப்படுகிறது, பார்!  ஒரு தகடு என்றா சொன்னேன்!  இரண்டு தகடுகள் அல்லவா இருக்கின்றன!  இரண்டு தகடுகள் ஒன்றன் மேலொன்றாகப் பொருந்தி, இங்கே வட்டமாகச் சுழல்கின்றன.

    பதவுரை – ஹரிகி (ஹரி கிருஷ்ணன்)
    அவர்களின் பாஞ்சாலி சபதம் – என்னுரை தொகுப்பிலிருந்து

     

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 6>>

    Share
  • “ ஆட்ரா ராசா”

    தமிழ்த்தேனீ
    “இது அரசியல் தொடர்பான கதை அல்ல, இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்கள் யாரையும் குறிப்பிடுவன அல்ல”
    —————————————————————————————————————————–
    “கீழே இருக்கும் சாதாரண மக்களைப் பற்றிக் கவலையே இல்லாமல் பூமியைவிட்டு சற்று உயரத்தில் இருக்கும் மரங்கள், மலைகள் போன்றவற்றிலேயே  உலாவி வாழ்க்கையின் சுகங்களை அனுபவித்து தனக்கு வேண்டிய போது மட்டும் கீழே இறங்கி வந்து மக்களிடம்   இருக்கும் கனியை தட்டிப் பறித்து  மேலே சென்றுவிடும் குரங்குகள்.”
    தமிழ்த்தேனீ

    ஏங்க  தோட்டத்துப் பக்கம் போயி பாருங்க, காக்காய் கூட்டம்  கும்பலா பறக்குது, கா கா ன்னு ஒரே கத்தல் வேற என்றாள் அலமேலு,
    இதோ பாக்கறேன் என்றபடி எழுந்து சென்ற அவரை  ஒரு சொக்காய் போட்டுண்டு போங்க, வெறும் உடம்போட போகாதீங்கோ, பூச்சி பொட்டு இருக்கப் போறது என்றாள் அலமேலு,
    சரி என்று ஒரு சொக்காயை எடுத்து மாட்டிக்கொண்டு தோட்டத்துப் பக்கம்  கதவைத் திறந்தார் வெங்கடேசன் , ஒரு பெரிய  குச்சியை கையில் கொடுத்து இதை எடுத்துண்டு போங்கோ, , போனவாரம் ஒரு பாம்பு வந்துதே அதிலேருந்து எனக்கு பயமா இருக்கு என்றாள்/;.
    ஒண்ணும் பயப்படாதே அலமேலு இந்த மாதிரி பாம்பு , பல்லி, எறும்பு,  கொசு குரங்கு இதெல்லாத்தோடயும் வாழக் கத்துக்கணும், இல்லேன்னா இந்தக் காலத்திலே வாழ முடியாது. நான் பாத்துக்கறேன் நீ இங்கேயே இரு என்று கூறிவிட்டு தோட்டத்துக்கு போனார் வெங்கடேசன். ஜன்னல் வழியா அவரையே பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அலமேலு.
    காக்காய்கள் ஒரு இடத்தைக் குறிவைத்து பறந்து பறந்து கத்திக் கொண்டிருந்தன. அங்கே உற்றுப் பார்த்தார் வெங்கடேசன், அந்த மரக் கிளையில்  ஒரு குரங்கு  இந்தக் காக்காய்களின் கூக்குரல்களினால் சற்றும் பாதிக்கப்படாமல் அலக்‌ஷியமாக உட்கார்ந்து ஒரு பப்பாளிப் பழத்தை தின்பதிலே கவனமாக இருந்தது.
    காக்காய்களுக்கு அந்தக் குரங்கு  மரத்திலே இருக்கும்  தங்களின் கூட்டைக் கலைத்துவிடுமோ என்று பயம். ஆனால் அவைகளின் பயமும் பல நேரங்களில் உண்மையாகி இருக்கின்றதே,
    குரங்குகள் தங்களுக்குள்ளே ஏற்படும் விரோதங்களினால்   பல பிரிவாகப் பிரிந்து  சுய லாபத்துக்காக அடித்துக்கொள்ளும்போது எதிர்ப்படும் எதைப் பற்றியும்  கவலைப்படாமல் சுயலாபத்தை மட்டுமே  கணக்கில் வைத்துக்கொண்டு  பல குருவிக் கூடுகளையும், பல பறவைகளின் கூடுகளையும் பிய்த்துப் போட்டுவிட்டு சென்று விடுவது பலகாலமாகவே நடந்து கொண்டிருக்கிறது
    அதனால் ஏற்பட்ட உயிர்ப் பயத்தாலும் ,தங்கள் குழந்தைகளைப் பற்றிய பயத்தாலும் காக்காய்கள் கும்பலாக ஒன்று கூடி குரங்கைத் துரத்துவதிலே கவனமாய் இருந்தன  ஐந்தறிவு மட்டுமே இருக்கும் இந்த பறவைகளின் உணர்வுகள் ஆறரிவு கொண்ட மனிதருக்கு  ஏன் வரவில்லை, மிருகங்கள்  பறவைகள்  இவைகளைப் பார்த்தாவது மனிதர்கள் திருந்த வேண்டும்.
    மனிதருக்கு இந்த ஒற்றுமை எப்போது வருமோ என்று தோன்றியது அவருக்கு,  காக்காய்கள் உணவுண்ணும் போதும் உறவினர்களை அழைத்து பங்கிட்டு உண்கின்றன, துன்பம் வரும்  வேளையிலும் ஒன்றாகக் கூடி  எதிர்கொள்கின்றன. பாராட்ட வேண்டியதுதான் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் வெங்கடேசன்,
    பப்பாளிப் பழத்தை ரசித்து உண்டுவிட்டு அதன் தோலை விசிறி எறிந்து விட்டு மரத்தைவிட்டுக் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தது குரங்கு.

    ஏங்க அந்தக் குரங்கு எறங்கி வருது உள்ளே வந்துடுங்க என்று கூவினாள் அலமேலு,    மதில் சுவற்றின் மேல் வந்து உட்கார்ந்து இவரை ஒரு வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு இவரைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் நடந்து சென்று பக்கத்திலே இருந்த பீ எஸ் என் எல் கோபுரத்துக்கு தாவி அதன் மேல் அனாயாசமாக கிடு கிடுவென்று ஏறி மேலே சென்று உட்கார்ந்து கொண்டது.
    அப்போதுதான் கவனித்தார் வெங்கடேசன் அங்கே ஏற்கெனவே இந்தக் குரங்கின்  துணைவி உட்கார்ந்து கொண்டிருப்பதை. மேலே சென்ற குரங்கு கையில் வைத்திருந்த இன்னொரு பப்பாளிப் பழத்தை அன்போடு துணைவிக்கு கொடுத்துவிட்டு  தன் துணைவி  அந்தப் பப்பாளிப் பழத்தை உண்ணும் அழகை ரசித்த படியே  சாவகாசமாக உட்கார்ந்து  துணைவியாரின் தலையில் பேன் பார்க்கத் தொடங்கியது.
    மீண்டும் வாசலில் காக்காய்களின் கூக்குரல் கேட்டது , அட என்னடா இது தொந்தரவு என்று யோசித்துக் கொண்டே வெங்கடேசன் வாசலுக்கு வந்து பார்த்தார், யாரோ ஒரு வடநாட்டு மனிதன் ஒரு குரங்கின் கழுத்தில்  கயிற்றில் கட்டி  தன் தோளிலே உட்காரவைத்துக்கொண்டு வந்து  ஒரு மேளத்தை அடிக்கத் தொடங்கினான்,
    குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் கூட்டமாய்க் கூடி வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.
    அந்தக் குரங்கு அந்த வடநாட்டான் கொடுத்த  ஒரு வேர்க்கடலையை தின்றுவிட்டு அவன் சொல்வதையெல்லாம் செய்யத் தொடங்கிற்று.
    அவன் வைத்திருந்த கொம்பில் தலை கீழாக தொங்கியும், அந்தக் கொம்பை தன் தோளிலே வைத்துக்கொண்டு குட்டிக் கரணமடித்தும் வேடிக்கை காட்டியது.  எப்படியும் இந்த மனிதன் தன் பசிக்கு வேண்டியதை கொடுப்பான் என்னும் நம்பிக்கையுடன் ஆடுடா  ராசா ஆடுடா ராசா என்று அவன் கொடுக்கும் குரலுக்குத் தகுந்தவாறு அவன் சொல்வதையெல்லாம் செய்து கொண்டிருந்தது.
    வேடிக்கை பார்க்கும்  மக்களையும், ஆடும் அந்தக் குரங்கையும் ,  பீ எஸ் என் எல் கோபுரத்தின்  உச்சியிலிருந்து அந்த இரு குரங்குகளும் வேடிக்கை பார்க்கத் தொடங்கின.
    ஒரு வேர்க்கடலைக்காக வேடிக்கை செய்து உயிர் வளர்க்கும் இந்தக் குரங்கு எப்போது கோபுரத்தை நிமிர்ந்து பார்க்கும்? எப்போது தான் அடிமைப் பட்டிருப்பதை உணரும் என்று எண்ணமிட்டபடியே உள்ளே வந்தார் வெங்கடேசன்.
    தொலைக் காட்சியில் ஒருவர் பாம்பு போல்  வேடமிட்டு ஆடிக்கொண்டிருந்தார், மற்றொருவர் சிங்கம்போலவும், புலி போன்றும் உடலில் வண்ணங்களைப் பூசிக்கொண்டு புலிஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார்.
    மீண்டும் வாசலில் ஒரு குரல் ஒரு மனிதன் முட்ட முட்ட சாராயத்தைக் குடித்துவிட்டு  டேய் யாரும் நம்மளை ஒண்ணும் செய்ய முடியாது ,
    எவனாவது கிட்டே வந்தீங்க குடலை உருவிடுவேன், நான் குடிச்சிருக்கேனு பாக்கிறியா? எவ்ளோ குடிச்சாலும் நான் ஸ்டடியா இருப்பேன், பாரு  எப்பிடி நேரா நடக்கறேன் பாரு , கொஞ்சம் கூடத் தள்ளாட மாட்டேன் என்றாவாறு தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டிருந்தான்.
    எல்லா மிருகங்களின் வேடமும் , பாம்பு போன்றவைகளின் வேடமும் மனிதருக்கு பொருந்துகிறதே. எந்த ஒரு மிருகமோ மற்ற எந்த ஜீவராசிகளுமோ ஏன் மனித வேடம் போடுவதில்லை என்று யோசித்தார் வெங்கடேசன்.

    Share
  • நம்பிக் கெடாதே…


     செண்பக ஜெகதீசன்

    ஆம்பிள்ளய அதிகமாத்தான் நம்பிக்கெடாதே

    அசிங்கப்பட்டு வாழ்க்கையிலே நொந்துவிடாதே,

    காம்பிருக்க சுளைவிழுங்கும் பிறவிகதாண்டி

    கண்மூடிப் போயிடாதே வேலியத்தாண்டி..

    (ஆம்பிள்ளய..)

     

    ஆயிரமாச் சத்தியங்கள் செய்திடுவாங்க

    அத்தனையும் சத்தியமாய் நம்பிவிடாதே,

    பாயும்புலி போலவேதான் பதுங்கிடுவாங்க- தனியே

    பக்குவமாய்ப் பேசியபின் ஒதுங்கிடுவாங்க..

     

    ஓவியமே நீயெனத்தான் கதைவிடுவாங்க

    உயிரக்கூட விடுவேண்ணு வாயடிப்பாங்க,

    தேவதையே நீதானுண்ணு ஏத்திடுவாங்க- பின்னே

    தேவையில்ல நீயெனவே மாத்திடுவாங்க..

    (ஆம்பிள்ளய..)

     

    சொத்துசொகம் வேணாமுண்ணு சொல்லிடுவாங்க

    சொத்தெல்லாம் நீதாண்ணு சுத்திடுவாங்க,

    மத்ததெல்லாம் முடிஞ்சபின்னே மாறிடுவாங்க- உன்

    மானமெல்லாம் போகக்கரை ஏறிடுவாங்க..

     

    பேப்பரிலே பாப்பதெல்லாம் பொய்யிணுவாங்க

    பேய்பிடிச்சி நீயலைய விட்டீடுவாங்க,

    ஆப்பசைச்ச கொரங்குபோல மாட்டிக்கிடாதே- அதுக்கு

    அப்புறமா அவப்பெயரச் சூட்டிக்கிடாதே..

    (ஆம்பிள்ளய..)

     

    அப்பாஅம்மா சொல்லக்கேக்கத் தவறிவிடாதே

    ஆசைப்பட்டு வாழ்க்கையிலே இடறிவிடாதே,

    எப்பவுமே நல்லதையே மறந்துவிடாதே- இதை

    ஏத்துக்கிட்டா வாழ்க்கையுந்தான்  சிறந்துவிடாதோ…

    (ஆம்பிள்ளய..)

    படத்துக்கு நன்றி

    http://cutcaster.com/photo/901762805-Happy-Indian-woman/

     


    Share
  • மஞ்சளைப் போற்றுதும்!

    மேகலா இராமமூர்த்தி

    இந்தியா ஆன்மிகத்தில் உலக நாடுகள் அனைத்திற்கும் முன்னோடியாய் விளங்குவதுபோல் அறிவியலிலும் விளங்கி வருகின்றது எனலாம். ஆம்..நம் முன்னோர்கள் ஆன்மிகத்தையும், அறிவியலையும் சார்ந்தே தம் நடைமுறை வாழ்வைச் செம்மையாக நடத்தி வந்துள்ளனர் என்பதற்கு எத்தனையோ சான்றுகளைச் சொல்லலாம். அவற்றில் ஒன்றுதான் மங்கலத்தின் அடையாளமாக நம் இந்தியர்கள் போற்றுகின்ற மஞ்சள்.

    மஞ்சள் இல்லையேல் ஆன்மிக நிகழ்வுகளோ, பூசைகளோ இல்லை என்னும் அளவிற்கு எல்லாவற்றிலும் அஃது நீக்கமற நிறைந்துள்ளது. காட்டாக, மஞ்சள் பிள்ளையார் பிடித்துவைத்துத்தான் பல்வேறு இறைபூசைகளையும் நாம் தொடங்குகின்றோம். கோயில்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் மஞ்சள்காப்பு சார்த்துகின்றோம். மழை தெய்வமான மாரியம்மன் கோயில்களில் அன்னைக்கே நாம் ’மங்களகரமான’ மஞ்சள் உடையைத்தான் பெரும்பாலும் அணிவித்து அழகு பார்க்கின்றோம்.

    நாம் கொண்டாடும் விழாக்கள் என்று எடுத்துக்கொண்டால் தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் மஞ்சள் கொத்தையும், இஞ்சிக் கொத்தையும் பொங்கற் பானையைச் சுற்றிக் கட்டியபின்பே பகலவனுக்குப் பொங்கலைப் படையலிடுகின்றோம். இரு மனங்கள் இணையும் திருமண விழாவிலும் மங்கல நாணை மஞ்சள் தடவி மெருகேற்றி ’மஞ்சள்கயிறு’ என்று அதற்குப் பெயர் கொடுத்துப் பெருமை கொள்கின்றோம். இவ்வாறு விழாக்களிலும், பண்டிகைகளிலும் அரசியாகக் கோலோச்சும் மஞ்சளின் மருத்துவப் பயன்களையும் அறிந்தே நம் முன்னோர் அதனை மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தியுள்ளனர் எனலாம்.

    இனி, மஞ்சளின் வகைகள் குறித்தும், அவற்றின் உபயோகங்கள் குறித்தும் சற்றுக் காண்போம்.

    மஞ்சளில் முட்டா மஞ்சள், குட மஞ்சள், குரங்கு மஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள் எனப் பல வகைகள் இருப்பினும், பெரும்பாலும் நம் மக்கள் உபயோகிப்பது முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், மற்றும் விரலி மஞ்சள் ஆகியவற்றையே. இவற்றில் முதலில் சொல்லப்பட்ட முட்டா மஞ்சள் உருண்டையாக இருக்கும். இது பூசுமஞ்சளாக உடலில் பூசிக் குளிப்பதற்கே பெரிதும் பயன்படுகின்றது.

    இரண்டாவதாகக் கூறப்பட்ட கஸ்தூரி மஞ்சளையும் உடலிற்குப் பூசிக் குளிக்கலாம். நல்ல நறுமணத்தைத் தரக்கூடியது. நம் தமிழகப் பெண்கள் முன்பு இவ்விரு மஞ்சள் வகைகளையும் உடலிற்குப் பூசிக் குளித்தனர். (இப்போது அவ்வழக்கம் அருகிவருவது வருந்தத்தக்கது.) இதனால் பல்வேறு வகையான தோல்நோய்கள் அவர்களை அண்டாமல் இருந்தன. சோரியாஸிஸ் (psoriasis), படை (ezema), தடிப்புகள் (rashes) போன்ற தோல்நோய்கள் உடலில் பரவாமல் இருந்தன. இவ்வளவு ஏன்…..அம்மை நோய்களால் தோலில் ஏற்படும் வடுக்களையும் (scars), பருக்களின் தொல்லைகளையும் கூடத் தொடர்ந்து மஞ்சள் பூசிக்குளிப்பதன் வாயிலாக நீக்க முடிந்தது. முதுமையைத் தள்ளிப்போடவும் (delay aging) இளமைப் பொலிவைத் தக்கவைக்கவும் மஞ்சள் உதவுவதாக மருத்துவ ஆராய்ச்சிகள் சான்று பகர்கின்றன.

    மஞ்சள் பூசிய (அன்றைய) மங்கையரின் எழில்முகம் மங்களகரமான தோற்றப் பொலிவைத் தந்து ஆடவரையும் மயக்கியது. அதனால்தான் அவர்கள் “மஞ்சள் முகமே வருக! மங்கல விளக்கே வருக!” எனப் பாட முடிந்தது. இப்போது மஞ்சள்பூசும் வழக்கம் அருகியும், அற்றும் போய் வருவதால் (இன்றைய) ஆண்கள் பெண்களைப் பார்த்து “ஃபேர் அண்ட் லவ்லியே (fair and lovely)…..குண்டு மல்லியே!” என்று மாற்றிப் பாடவேண்டியுள்ளது.

    மூன்றாவதாகக் குறிக்கப்பட்ட விரலி மஞ்சளே சமையலுக்குப் பயன்படும் கறி மஞ்சளாகும். மஞ்சளில் காணப்படுகின்ற முக்கிய வேதிப்பொருளான குர்குமின் (curcumin) பல்வேறு அற்புதமான மருத்துவ குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

    நம் தமிழகத்தில் மஞ்சள் சேர்க்காத உணவுத் தயாரிப்பே இல்லை என்னும் அளவில் எல்லாவகைச் சமையலிலும் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர் நம் மக்கள். அஃது மிகுந்த பாராட்டிற்குரியது. உணவின் மணத்தையும், நிறத்தையும் கூட்டும் மஞ்சள் சாம்பார், பொறியல், கூட்டு, அவியல் எனச் சைவ உணவுகளாகட்டும், மீன், இறைச்சி முதலிய அசைவ உணவுகளாகட்டும் எல்லாவற்றிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. உணவில் மஞ்சளைச் சேர்ப்பதினால் அவ்வுணவுப் பொருள்களிலுள்ள உடலுக்குத் தீங்குவிளைவிக்கும் கண்ணிற்குப் புலப்படா நுண்ணுயிரிகள் (viruses and bacteria) முற்றிலும் அழிக்கப்படுகின்றன என்பதனை இன்றைய மருத்துவ அறிவியல் ஆமோதிக்கின்றது. இதனை ஈராயிரம் (2000) ஆண்டுகட்கு முன்பே அறிந்து பயன்படுத்திவரும் நம் மக்களின் பேரறிவு போற்றிப் புகழத்தக்கது.

    மஞ்சளின் சர்வரோக நிவாரணத் தன்மையைக் கண்ட மேற்கத்திய நாடுகள் அதனை வியந்து பாராட்டுகின்றன. அமெரிக்காவின் மிசிசிபி பல்கலைக்கழக மருத்துவ மையம் (University of Mississippi Medical Center) 1995-ஆம் ஆண்டு மஞ்சளின் அற்புதத் தன்மையை அறிந்து மஞ்சளுக்கான பிரத்யேகக் காப்புரிமையைப் (patent) பெற்றது. (பின்பு இந்தியா தாமதமாக விழித்துக்கொண்டு ’மஞ்சள் எமதே’ என மேல்முறையீட்டு வழக்குத் தொடர்ந்து வெற்றிபெற்றது வேறு கதை.)

    இனி மஞ்சளின் மருத்துவப் பயன்பாடுகள் சிலவற்றைக் காண்போம்.

    மிகச் சிறந்த கிருமிநாசினியான (antibiotic) மஞ்சள் புற்றுநோய்க்கான ஆராய்ச்சியில் சமீபகாலமாக அதிக அளவில் மேலைநாட்டவரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதில் மஞ்சளின் புற்றுநோய் எதிர்ப்பாற்றல் (anti-cancer property) மெய்ப்பிக்கப்பட்டு வருகின்றது.

    அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் (UCLA’s Jonsson Comprehensive Cancer Center) நிகழ்ந்த ஆராய்ச்சியில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பரவும் புற்றுநோய்ச் (head and neck cancer) செல்களை அழிப்பதிலும், புற்றுநோய்ப் பரவலைத் தடுப்பதிலும் மஞ்சளிலுள்ள குர்குமின் முக்கியப் பங்காற்றுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தோல், பெருங்குடல், மார்பகம் ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய்கள் குறித்த ஆராய்ச்சியிலும் மஞ்சளின் புற்றுநோய் ஒழிப்புத்திறன் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.

    மஞ்சளின் மற்றொரு முக்கிய மருத்துவ குணமாகக் கருதப்படுவது உடலில் ஏற்படும் அழற்சிகளைத் தடுக்கும் குணமே (anti-inflammation property). அரிசோனா பல்கலைக்கழகத்தில் (University of Arizona) எலிகளை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியைக் (rheumatoid arthritis) குறைக்கவும், மேலும் அதிகமாகாமல் தடுக்கவும் மஞ்சள் உதவுகின்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    அதுபோலவே, மனிதனின் ’தலைமைச் செயலகமான’ மூளையிலுள்ள செல்தொகுப்பில் ஏற்படுகின்ற அழற்சியாலும், ஒருவித புரதப் படிவினாலும் (hyperphosphorylated tau protein) மறதிநோயான அல்சைமர் (Alzimer disease) ஏற்படுகின்றது என மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இத்தகைய மூளைச் செல்களின் அழற்சியையும், புரதப் படிவினையும் தடுப்பதிலும் மஞ்சளிலுள்ள குர்குமின் முக்கியப் பங்காற்றுகின்றது என்று புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மஞ்சளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வதனால்தான் இந்தியாவிலுள்ள முதியோர்கள் அதிக அளவில் அல்சைமர் போன்ற மறதிநோய்கட்கு (மேல்நாட்டவர்போல்) ஆட்படவில்லை எனத் தோன்றுகின்றது.

    மஞ்சளின் மற்றொரு குறிப்பிடத்தக்க மருத்துவப் பண்பு, உடலிற்குத் தீங்கிழைக்கும் ஆக்சிஜன் மூலக்கூறுகளைத் (free radicals) தடுத்து அவற்றிடமிருந்து உடலைக் காப்பதே (antioxidant). இப்பண்பினால் இதயநோய்களையும், நீரிழிவு (diabetes mellitus), முதுமை காரணமாகக் கண்களில் ஏற்படும் பல்வேறு நோய்கள் (macular degeneration, cataract, etc.), இரத்தம் உறைதல் (blood clot), கை, கால்களைப் பலவீனமாக்கும் மற்றும் அவற்றின் செயல்திறனைப் பாதிக்கும் பார்கின்சன் நோய் (Parkinson Disease) போன்ற பல நோய்களின் தாக்கத்தை ஆரம்பத்திலேயே மஞ்சள் தடுத்துவிடுகின்றது எனலாம். உடலில் கெட்ட கொழுப்பு (bad cholesterol) சேராமல் தடுப்பதிலும் மஞ்சளின் பங்கு முக்கியமானது.

    மஞ்சள்பொடியை தினமும் ஒரு தேக்கரண்டி அளவு (1 teaspoon) சாப்பிடுவதோடு, உணவுக் கட்டுப்பாட்டையும் (diet control) மருத்துவர் கூறுவதுபோல் கடைப்பிடித்தால் உடல் எடை விரைவில் குறையும் என சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. தொழுநோயைத் தடுக்கவும் மஞ்சள் உதவுவதாகத் தெரிகின்றது.

    அதுமட்டுமா? குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போன்ற நோய்களைத் தீர்ப்பதற்கும் மஞ்சளைப் பயன்படுத்தலாம். கொதிக்க வைத்த பாலில் ஒரு சிட்டிகை (a pinch) மஞ்சள்பொடியைச் சேர்த்துக் கொடுத்தால் தொண்டைப் புண், இருமல் முதலியவை குணமாகும். மஞ்சளைத் தீயில் சுட்டு அதன் புகையைச் சுவாசித்தால் மூக்கடைப்பு, சளி, தலைவலி போன்றவை குணமாகும்.

    மஞ்சளை நீரில் கலந்து சாப்பிட்டால் மூலநோய் குணமாகும் என நம்பப்படுகின்றது. கை, கால்களில் ஏற்படும் சொறி, சிரங்கு போன்றவற்றிற்கு மஞ்சளையும், வேப்பிலையையும் அரைத்துத் தடவலாம். மஞ்சளைத் தேங்காயெண்ணெயிலோ அல்லது நல்லெண்ணையிலோ குழைத்தும் காயங்களுக்குப் போடுவதுண்டு.

    பல்வலி ஏற்படும்போது வலியுள்ள பல்லில் சிறிது மஞ்சள்பொடியை வைத்து தேய்த்தால் (massage) பல்வலி தீரும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். வயிற்றுப் போக்கைத் (diarrhea) தடுக்கவும் மஞ்சள் பயன்படுகின்றது.

    அடிபட்டதனால் ஏற்படும் புண், நீரில் அதிகநேரம் நிற்பதனால் ஏற்படும் சேற்றுப்புண் ஆகியவற்றிற்கு மஞ்சளை இழைத்துப் போடுவது நல்ல பலன் கொடுக்கும்.

    இப்படி மஞ்சளின் பயன்களைப் பட்டியலிட்டால் அவை எண்ணிலடங்கா. நம் இந்திய மண்ணின் சொத்தான மஞ்சள், இயற்கை அன்னை நமக்கு வழங்கிய அருட்கொடையாகும். அழகு சாதனமாகவும், முதுமையை விரட்டும் காயகல்பமாகவும், அற்புதமான மருந்தாகவும் பயன்பட்டு வருகின்றது இம்மஞ்சள்.

    மண்ணைத் தோண்டத் தோண்ட இயற்கை வளங்கள் கண்ணுக்குப் புலப்படுவதுபோல் மஞ்சளை வைத்து ஆய்வுகள் செய்யச் செய்ய அஃது எல்லா நோய்களையும் நீக்கக் கூடிய ஒப்பற்ற மாமருந்து என்பது மெய்ப்பிக்கப்பட்டு வருகின்றது. (எனினும் சிறுநீரகம், பித்தப்பையில் கற்கள் உடையோர் (kidney and gallbladder stones), நாட்பட்ட வயிற்றுப் புண்ணை (chronic stomach ulcer) உடையோர், மற்றும் இரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்துண்போர் (blood-thinning medications like Aspirin, Coumadin etc.) மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்பு மஞ்சளை உபயோகிப்பது சாலச் சிறந்தது.)

    முத்தாய்ப்பாக நாம் சொல்ல விரும்புவது ஊனுடம்பாகிய ஆலயத்தினுள் புக எத்தனிக்கும் மூப்பு, பிணி போன்ற தீய சக்திகளைத் தடுக்கும் அரணாய் விளங்குவது மஞ்சளாகும். அயல்நாட்டவரும் போற்றும் நம் மஞ்சளின் மகிமையை நாம் உணர்ந்து பயன்படுத்துவோம். நோயின்றி வாழ்வோம்.

    இறுதியாக மஞ்சளைப் ’போற்றிப் பாடி’ நாம் கட்டுரையை நிறைவு செய்வோம்.

    ”கொஞ்சும் எழில்திகழ் மேனியைப் பெற்றிட

    அஞ்சி நோயெல்லாம் நமைவிட்டு ஓடிட

    நெஞ்சம் இனிக்கும்நல் மங்கலம் தங்கிட

    மஞ்சளைப் போற்றுதும் மஞ்சளைப் போற்றுதும்!”

    படங்களுக்கு நன்றி: http://en.wikipedia.org/wiki/Turmeric

    http://www.picsearch.com/pictures/Food%20!!%20Drink/Spices/Spices%20Tr%20-%20W/Turmeric.html

    Share
  • அறுமுகநூறு (2)

    -D.சச்சிதானந்தம்-

     

    முதல் பகுதி இங்கே

     

    அடிமனக் கடலின் அமுதே போற்றி,

    அறுமுக நிலவின் ஒளியே போற்றி,

    அதிமது ரத்தின் சுவையே போற்றி,

    அருள்மனம் பொங்கி அருள்வாய் போற்றி!                                                                     6

     

    கவிமனம் கொண்ட கந்தா போற்றி,

    குவிமனம் என்றாய் குகனே போற்றி,

    செவியினில் மந்திரம் சொன்னாய் போற்றி,

    புவியினைக் காக்கும் புதல்வா போற்றி!                                                                          7

     

    அகமிகுங் குகனின் நினைவே போற்றி,

    மிகமிகு மவனின் கருணை போற்றி,

    முகமிகு முறுவல் தருவோன் போற்றி,

    சுகமிகு மவனை நினைந்தே போற்றி!                                                                              8

     

    இளமுறு வல்தரு வள்ளல் போற்றி,

    வளமுறு மில்தரு மன்னன் போற்றி,

    உளமுறு மல்லல் கொல்வோன் போற்றி,

    குளமுறுங் கமலக் குழவியே போற்றி!                                                                             9

     

    தண்டம் கொண்ட தருவே போற்றி,

    அண்டம் காக்கும் உருவே போற்றி,

    கண்டம் கறுத்தவன் மைந்தா போற்றி,

    கொண்டோம் மனதில் உன்னைப் போற்றி!                                                                      10

     

    படத்துக்கு நன்றி: http://www.hindudevotionalblog.com/2012/12/hindu-god-subramanya-pictures.html

     

    Share
  • காதற்களம் வெல்ல

     

    சத்தியமணி

     

    காமனின் பாலுக்கு வள்ளுவத்தை யாசி
    காதலின் பாலுக்கு கம்பன்வரி யோசி
    வாமனன் போல்வளரும் வஞ்சிச் தமிழ் பேசி
    தாமதமின்றி பெரும் சிந்துகவி வாசி

    காதலுக்கு சாதியில்லை கண்ணதாசன் கூற்று
    காதலுக்கு வார்த்தையில்லை வைரமுத்து பாட்டு
    காதலுக்கு மாயமென்று வாலிசொல்ல கேட்டு
    காதலுக்கு பாடற்சொன்னோர் கோடியிங்கு கூட்டு

    கற்பனையில் வந்ததெல்லாம் காதற்கலையல்ல‌
    விற்பனைக்கு தந்த‌தெல்லாம் காதற்நெறியல்ல‌
    அற்பதனம் கவர்ச்சிகளும்! காதற்குற்றமல்ல‌
    நற்பதமே காதலறம்! காதற்களம் வெல்ல

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் … (46)

    சக்திசக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன்.

    இன்று நான் இக்கடிதத்தை வரைந்து கொண்டிருக்கும் நாள் காதலர் வாழ்வினில் ஒரு இனிய நாளாகிறது. ஆமாம் பெப்பிரவரி 14ம் திகதி ஆங்கிலத்தில் ” Valantines day ” என்று அழைக்கப்படும் காதலர் தினமாகும்.

    இதை நான் வாழும் இவ்விங்கிலாந்து தேசத்திலே மிகவும் விமரிசையாக கொண்டாடுகிறார்கள். 1975ம் ஆண்டு ஜனவரி மாதம் நான் லண்டனில் காலடி வைத்தேன். அதைத் தொட‌ர்ந்து வந்த அந்த பெப்பிரவரி மாதம் 14ம் திகதி தொலைக்காட்சிப் பெட்டியிலும், வானொலிப் பெட்டியிலும் இத்தினத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை எண்ணி வியந்தேன்.

    காதலர்க்கு என்று ஒரு தினமா? என்னடா இது விசித்திரமாகவிருக்கிறதே ! என்று எண்ணினேன். நாம் வாழும் பின்புல நாடுகளிலே காதலை நெஞ்சங்களுக்குள் புதைத்து வைத்து ஏதோ தவறு செய்கிறவர்கள் போல ஒளிவிலும் மறைவிலும்  நடப்பதே காதல் என்று எண்ணியிருந்தவனுக்கு காதலர்களுக்கு ஒரு தினத்தையே ஒதுக்கியிருப்பதைக் கண்டதும் வியப்பேற்படுவதில் வினோதமொன்றுமில்லையே !

    இதன் பின்பு பல வருடங்கள் உருளும் உலகோடு உருண்டு செல்வது போல இத்தினமும் தன்பாட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தது.

    அதன் பின்பு நானும் காதலித்தேன், காதலியை மணமுடித்தேன் அப்போது கூட இத்தினத்தின் தாத்பரியத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.

    ஒருமுறை என்னோடு வேலை செய்யும் ஒரு ஆங்கில சக ஊழியருடன் இதைப்பற்றி ஆழமாக உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது.

    காதலுக்கு என்று ஒரு தனித்தினம் தேவைதானா? எனும் கேள்விக்கு மிகவும் ஆணித்தரமாக எதிர்த்தரப்பு வாதங்களை நான் முன் வைப்பதை மிகவும் அமைதியாக செவி மடுத்த அந்நண்பர் முறுவலித்தபடியே ” நீ நாளை உயிருடன் இருப்பாய் என்பதற்கு என்ன உத்தரவாதம் ? ” என்றார் என்னால் பதில் கூறமுடியவில்லை. தொடர்ந்த அவர் ” ஒவ்வொரு வருடமும் உன் மனைவியின் மீதுள்ள அன்பை போற்றிப் புகழும் ஒரு திருநாளாக இதை ஏன் உபயோகிக்கக் கூடாது?” என்று கேட்டு விட்டு, மிகவும் இளமையிலே காலமாகி விட்ட தனது தந்தை அவர் மறையும் வரை ஒவ்வொரு காதலர் தினத்திற்கும் தனது மனைவிக்குக் கொடுத்த பரிசுப்பொருட்களை அவரின் அன்னை மிகவும் பாதுகாப்பாகப் பேணி ஒவ்வொரு வருடமும் அதைப்பார்த்து பூரிப்படைவதாகவும் கூறினார்.

    அந்நாளின் முக்கியத்துவம் சிறிதளவில் எனக்குப் புரிந்தது.

    அதன் ஆரம்பத்தைச் சற்றுப் புரட்டிப் பார்த்தேன்.

    இத்தினக் கொண்டாட்டத்தின் ஆரம்பம் கிறித்துவ முனிவர்களான வ”வலென்டைன்ஸ் ( Valentinus)” என்பவர்களின் வழி ஆரம்பமாகியது என்று கூறுகிறார்கள்.

    சரி அப்படியானால் இத்தினத்திற்கும் இவ்  Valentinus என்பவருக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் ? உங்கள் குழப்பம் புரிகிறது.

    புராதான ரோம ஆதிக்கத்தின் கீழ் திருமண்ம் செய்யக்கூடாதென த்டைவிதிக்கப்பட்டிருந்த சிப்பாய்களுக்கும், தண்டிக்கப்பட்டவர்களுக்கும் திருமணம் செய்து வைத்தமைக்காக இவர் சிறை வைக்கப்பட்டதே இவருக்கும் காதலுக்குமான தொடர்பு என்கிறார்கள்.

    அத்துடன் அவர் சிறையிடப்பட்டபோது அவரைக் காவல் செய்த சிறையதிகாரியின் மகளின் நோயை இவர் குணப்படுத்தியதாகவும், இவர் தூக்கிலிடப்பட்ட போது ஒரு மட்டையில் ” உன்னுடைய வலென்டையினிடமிருந்து (From your Valentine)” என்று எழுதியனுப்பயதாகவும் கூறப்படுகிறது.

    அந்த அடிப்படியில் ஆரம்பிக்கப்பட்ட இக்காதலர் தின விழாவானது பல வடிவங்களில், பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இத்தினத்தில் பலர் தமது காதலை தாம் விரும்புகிறவர்களிடத்தில் வெளிப்படுத்துவார்கள், மற்றும் சிலர் தமது திருமண விருப்பத்தைத் தெரிவிப்பார்கள்.

    பல வண்ணத்திலான காதலர் தின வாழ்த்து அட்டைகள், பலவகையான பரிசுப்பொருட்கள் என்பன காதலர்களிடம் கைமாறப்படும்.

    அது மட்டுமின்றி இரகசியக் காதலர்களிடம் இருந்து குறிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து அட்டைகள் பரிசுகள் என்பன கொடுக்கப்படும். இதைத் தமக்கு யார் கொடுத்திருப்பார்கள் என்று அறிவதில் பெரிய முனைப்பைக் காட்டுவார்கள் அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள்.

    எது எப்படியாயினும் காதலுக்கு மொழி, இனம், மதம், நிறம் இல்லையே ! அனைவர்க்கும் பொதுவான இக்காதல் கூட அனைவர்க்கும் பொதுவான இறையின் ஒரு அம்சமோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்தி தாசன்
    இலண்டன்

    Share
  • ​வால்ட் விட்மன் வசனக் கவிதை -12

    என்னைப் பற்றிய பாடல் – 5

    (Song of Myself)

    (1819-1892)
    (
    புல்லின் இலைகள் -1)

    மூலம் : வால்ட் விட்மன்

    தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
    +++++++++++++++

    புவியில் பிறந்தது எத்தகைய அதிர்ஷ்ட மென

    எவராவது நினைத்த துண்டா ?

    எனக்குத் தெரியும், அப்படிச் சொல்வோரிடம்

    விரைவில் சொல்வேன்

    இறப்பதும் ஓர் அதிர்ஷ்டம் என்று !

    புறக்கணிப்பேன் மரணத்தை நான்

    இறப்பிலும், பிறப்பிலும்

    புதிதாய்க் குளித்த சிசுவாய் !

    தலை முடிக்கும், கால் தடத்துக்கும்

    இடையே நான்

    அடைபட்டுப் போன தில்லை !

    அப்படிச் சொல்வோரிடம் பன்முகத் துறைப்

    பண்டங்களை ஆய்ந்து பார் !

    அனைத்தும் இனியவை.

    புவி இனியது ! விண்மீன்கள் இனியவை !

    அவற்றோ டிணைந்ததும் இனியபவை !

    நானொரு பூமி அல்ல !

    பூமியோடு ஒட்டியவ னல்ல !

    நாட்டு மக்களின் துணைவன் நான்

    கூட்டாளி நான் !

    என்னைப் போல் பிறரும் நிலைத்து

    எந்நாளும் வாழ்பவர் தான் !

    ஆழமற் றவர் தான் !

    (அழியாதவர் என்றவர் அறியார்

    ஆனால் நான் அறிவேன்)

    ஒவ்வொரு வகுப்பும் தனக்காகத் தான்

    உள்ளது !

    நானிருப்பது எனக்காகத் தான் !

    ஆணோ பெண்ணோ

    தானிருப்பது தனக்காகத் தான் !

    எனக்கவர் இளைஞராய் இருப்பர்,

    வனிதை யரைக் காதலிப்பர்.

    மனிதன் பெருமைப்பட வேண்டும் எனக்கு

    மனிதனைப்

    புறக்கணித்தால் குத்தும் என்னை !

    இனிய காதலியும்,

    வயதான பணிமாதும் எனக்கு

    அன்னையர் !

    தாய்மார் களின் தாய்கள் ஆவார் !

    புன்னகை புரியும் இதழ்களும்

    கண்ணீர் சொரியும் விழிகளும் எனக்குத்தான் !

    பிள்ளைகளும், தமது பிள்ளை களைப்

    பெற்றோரும் எனக்குரி யவர் !

    அமணமாய்  நிற்கிறாயா ? அதற்குன்னைப்

    பழித்திட மாட்டேன் ! உன்மேல்

    சலிப்படை யேன் ! உனை ஒதுக்கி விடேன் !

    கட்டமிட்ட ஆடையுள்  ஊடுருவிக்

    காண்கிறேன் நீ

    உள்ளாயா இல்லாயா என்று !

    நிலைத்து உறுதியாய் நிற்கிறேன்

    களைப் பின்றிச் சேமித்து

    அசைத்துத் தள்ள முடியாமல் !

    +++++++++++++

    தகவல்:

    1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

    2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]

    3. Britannica Concise Encyclopedia [2003]

    4. Encyclopedia Britannica [1978]

    5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

    6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

    ********************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan] (February 20, 2013)

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • பாரதியின் வேத முகம் – 2

     சூழ்ந்ததெல்லாம்  கடவுள்

                                                                                                                                                                                          சு.கோதண்டராமன்

    கடவுள் எங்கே இருக்கிறார்? தூணிலும் உள்ளார், துரும்பிலும் உள்ளார் என்று சொல்கிறோம். அதற்குச் சான்றாகப் பிரகலாதன் கதையைக் கூறுகிறோம். இதை இக் கால இரணியர்கள் ஏற்றுக் கொள்வார்களா?    புராணங்களைப் புளுகு என்று தள்ளும் காலம் இது.

    தமிழா, தெய்வத்தை நம்பு. பயப்படாதே, உனக்கு நல்ல காலம் வருகின்றது….. வேதங்களை நம்பு. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்து கொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல நடந்து கொள்ளாதே என்று அறிவுறுத்திய பாரதி பிரகலாதன் கதைக்குப் புதிய பொருள் தருகிறார்.

    ஈசாவாஸ்ய உபநிடதம் கூறும் ‘இந்த எல்லாமே இறைவன் தான்’ (ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம்) என்ற கருத்தை அதில் காண்கிறார்.

    சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே

                சொல்லென்று இரணியனும் உறுமிக் கேட்க

                நல்லதொரு மகன் சொல்வான் தூணிலுள்ளான்

                நாராயணன் துரும்பிலுள்ளான் என்றான்

                வல்லமைசேர் கடவுளில்லாப் பொருளொன்றில்லை

                மகாசக்தி இல்லாத வஸ்து இல்லை

                அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை

                அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ

                           

                கேளப்பா சீடனே கழுதை ஒன்றை

                கீழான பன்றியினைத் தேளைக் கண்டு

                தாளைப் பார்த்திருகரமும் சிரமேற் கூப்பி

                சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும்

                கூளத்தினை மலத்தினையும் வணங்கல் வேண்டும்

                கூடி நின்ற பொருனனைத்தின் கூட்டம் தெய்வம்

                மீளத்தான் இதை மட்டும் விரித்துச் சொல்வேன்

                விண் மட்டும் தெய்வமன்று மண்ணுமஃதே

     

    யஜுர் வேதத்தின் ருத்ரம் என்னும் பகுதி உபநிடத மகா வாக்கியங்களின் விளக்கமாக உள்ளது. இது உலகம் முழுமையையும் ருத்திர வடிவமாக வணங்குகிறது.

    மந்திரி, வணிகர், தேரோட்டி, வேடர், கள்வர், விராதன், [ஒழுக்கக் கேட்டால் புறம் தள்ளப்பட்டவர்], தச்சர், குயவர், செம்படவர் என்று பல வடிவங்களில் விளங்கும் ருத்திரருக்கு வணக்கம் தெரிவிக்கும் அது, சடைமுடியர், மொட்டைத் தலையர், நிற்பவர், நடப்பவர், தூங்குபவர், அருகில் இருப்பவர், தொலைவில் இருப்பவர் என்று எவரையும் மிச்சம் வைக்காமல் இறைவனாகக் கருதி வணங்குகிறது. மனிதர் மட்டுமல்ல, நாய், குதிரை ஆகிய விலங்குகள் வடிவத்திலும் ருத்திரன் விளங்குவதாகக் கூறப்படுகிறார். தேர், ஆற்று நீர், மரங்கள் போன்ற உயிரற்ற பொருள்களாகவும் அவர் இருக்கிறார். இந்த மனிதருக்குள்ளும், பிராணிகளிடத்திலும், பொருட்களுக்குள்ளும் ருத்திரன் வசிப்பதாகக் கூறாமல் அவர்களே, அவையே ருத்திரன் என்று கூறுவது கவனிக்கத்தக்கது.

    “நீயே கார்த்திகை நட்சத்திரமாகவும் அக்னியாகவும் உள்ளாய். நீயே அக்னியின் சுவாலை, பிரஜாபதியின் ஒளி, சோமரசத்தின் பிரகாசம். நீயே ரோகிணி நட்சத்திரமாகவும் பிரஜாபதியாகவும் உள்ளாய். நீயே ஆதிரை, நீயே ருத்திரன், நீயே புனர்வஸு, நீயே அதிதி, நீயே பூசம், நீயே பிரகஸ்பதி, நீயே ஆயில்யம், நீயே பாம்புகள், நீயே மகம், நீயே பித்ருக்கள்…” என்று நீளும் மற்றொரு யஜுர் வேதப் பகுதி [யஜுர் 4.4.10] விண்ணிலுள்ள நட்சத்திரங்கள், தேவர்கள் எல்லாவற்றையும் ஒரு பரம்பொருளின் பல தோற்றங்களாகக் காண்கிறது.

    இந்தக் கருத்தைப் பாரதி பின்வருமாறு பாடினார்.

    சுத்த அறிவே சிவமென்றுரைத்தார் மேலோர்;

    சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;

    வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர்,

    வித்தையிலாப் புலையனுமஃதென்னும் வேதம்;

     

    பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று

    பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்

    நித்த நுமதருகினிலே குழந்தை யென்றும்

    நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்த்துவீரே?

     

    உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை;

    ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;

    பயிலுமுயிர் வகைமட்டுமன்றி யிங்குப்

    பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;

     

    வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்

    மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே

    இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;

    எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்

    [பாரதி அறுபத்தாறு 15, 17, 18]

    மனிதர்க்குக் கோபம் வருவதற்கான காரணத்தை ஆராய்கிறார் பாரதி. நம்மைச் சூழ்ந்தது எல்லாம் கடவுள், நாமும் கடவுள் என்ற எண்ணம் எப்பொழுதும் நமக்கு இருக்குமானால் நமக்குக் கோபம் வராது அல்லவா? நம்மிலும் வேறான ஒரு பொருளிடம் தானே நாம் கோபித்துக் கொள்ள முடியும். அப்படி ஒரு பொருள் எதுவும் இல்லை என்ற வேதக் கருத்தைச் சுருக்கமாக, மூன்று வார்த்தைகளில் தருகிறார். சூழ்ந்தது எல்லாம் கடவுள்.

     

                சூழ்ந்ததெலாம் கடவுள் எனச் சுருதி சொல்லும்

                நிச்சயமாம் ஞானத்தை மறத்தலாலே

                சேருவதே மானிடர்க்குச் சினத்தீ நெஞ்சில்.

    தன் வசன கவிதையில் பாரதி இக் கருத்தை மேலும் விளக்குகிறார்.

    இவ்வுலகம் ஒன்று

    ஆண், பெண், மனிதர், தேவர்,

    பாம்பு, பறவை, காற்று, கடல்,

    உயிர், இறப்பு இவை அனைத்தும் ஒன்றே

    ஞாயிறு, வீட்டுச் சுவர், ஈ, மலை, அருவி,

    குழல், கோமேதகம் இவ்வனைத்தும் ஒன்றே

    இன்பம், துன்பம், பாட்டு,

    வண்ணான், குருவி, மின்னல், பருத்தி                            

    இஃதெல்லாம் ஒன்று

    மூடன், புலவன்,

    இரும்பு, வெட்டுக்கிளி

    இவை ஒரு பொருள்

    வேதம், கடல்மீன், புயற் காற்று, மல்லிகை மலர்

    இவை ஒரு பொருளின் பல தோற்றம்

    உள்ளதெல்லாம் ஒரே பொருள் ஒன்று

    இந்த ஒன்றின் பெயர் – தான்

    தானே தெய்வம்

    தான் அமுதம் இறவாதது  

     

    பாரதி இக்கொள்கையைப் பின்பற்றினார். அத்வைத நிலையின் உச்ச கட்டத்தில் நின்று அவர் பாடுகிறார்.

    காக்கைச் சிறகினிலே நந்தாலா நின்றன்

    கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

    பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா நின்றன்

    பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

    கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா நின்றன்

    கீதம் இசைக்குதடா நந்தலாலா

    தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத்

    தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா

     

    உலகனைத்துமாக வியாபித்து நிற்கும் பிரமம் நானே (அஹம் ப்ரம்மாஸ்மி) என்ற உபநிடதக் கருத்து எவ்வளவு எளிய சொற்களில்  வெளிப்படுகிறது பாருங்கள்.

     

    வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்

    மண்ணில் திரியும் மரமெல்லாம் நான்

    கானிழல் வளரும் மரமெலாம் நான்.

    காற்றும் புனலும் கடலுமே நான்,

     

    விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,

    வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,

    மண்ணில் கிடக்கும் புழுவெல்லாம் நான்

    வாரியிலுள்ள உயிரெலாம் நான்.

     

    கம்பனிசைத்த கவியெலாம் நான்,

    காருகர் தீட்டும் உருவெலாம் நான்,

    இம்பர் வியக்கின்ற மாட கூடம்

    எழில் நகர் கோபுரம் யாவுமே நான்

     

    இன்னிசை மாதரிசையுளேன் நான்

    இன்பத் திரள்கள் அனைத்துமே நான்,

    புன்னிசை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,

    பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.

     

    மந்திரங் கோடி இயக்குவோன் நான்

    இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்

    தந்திரங் கோடி சமைத்துளேன் நான்,

    சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.

     

    அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்

    அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,

    கண்ட பல சக்திக் கணமெலாம்நான்,

    காரணமாகிக் கதித்துளோன் நான்.

     

    நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,

    ஞானச் சுடர் வானில் செல்லுவோன் நான்,

    ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்

    அறிவாய் விளங்கு முதற் சோதி நான்.

     

    http://artgallerydg.blogspot.in/2010/10/subramanya-bharathi.html

     

    Share