Blog

  • நாற்பது நாட்களில் செவ்வாய்க் கோள் செல்லும் அதிவேகப் பிளாஸ்மா ராக்கெட் !

                                                                 சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

    செந்நிறக் கோளுக்குச்
    சீக்கரம் செல்லும்
    ராக்கெட் தயாராகி வருகுது !
    நாற்பது நாட்களுக்குள்
    மின்னியல் உந்திடும் அதிவேக
    ஏவுகணை
    எதிர்கால விண்கப்பலை
    இயக்கப் போகுது !
    இரண்டு வருடங்கள் எடுத்தன
    இதற்கு முன்பு !
    பிளாஸ்மா ராக்கெட்டின்
    வலு மிகைவு ! எடை குறைவு !
    மலிவான பயணம் !
    நிதி விரயம் குறைவு !
    இயக்கத் திறன்பாடு மிகைவு !
    பயணக் காலம் குறைவு !
    பாதுகாப்பு மிகைவு !
    எரிவாயு ஆர்கான் மலிவு !
    எந்திர சாதனங்கள்
    குறைவு !
    பரிதியின் கதிர்வீச்சால் விமானிக்குப்
    பாதிப்புகள் குறைவு !
    பிளாஸ்மா
    விண்வெளிக் கப்பலில்
    விமானிகள் விரைவாய்ச் சென்று
    வியாழனுக்குப் போய் மீள
    ஈராண்டுதான் !

    ++++++++++++++++

    “வாஸிமர் பிளாஸ்மா ராக்கெட் எஞ்சின் ((VASIMR) விண்வெளிப் பயணம் செய்யத் தயாராக இருக்கும் ஏவுகணைகளையும் விட அதிக சக்தி வாய்ந்த மின்னியல் உந்துச் சாதனம் (High Power Electric Propulsion System).”

    “நாங்கள் ஆய்வு விருத்தி செய்யும் ராக்கெட் பொறிநுணுக்கம் ‘அணுப்பிணைவு நுணுக்க மாற்றம்’ (Transformational Technology in Nuclear Fusion) எனப்படுவது.  விண்வெளிப் போக்கு வரத்துக்கு இரசாயன எரிசக்திப் பயன்பாடு மெய்யாக வெகுதூரம் கொண்டு செல்லாது என்பது எனது நெடுங் காலத்துக் கருத்து.”

    ஃபிராங்கிலின் சாங்டியாஸ் (Franklin Chang-Diaz, VASIMR Plasma Rocket Engine Chief Designer)

    “ஆழ் விண்வெளி விண்ணுளவியில் (Deep Space -1 Spaceship) இணைத்துள்ள அயான் உந்து சக்தி எஞ்சின் (Ion Propulsion Engine) விண்வெளித் திட்ட வரலாற்றில் இதுவரை பயன்பட்ட ராக்கெட்டுகளை விட நீடித்த காலத்தில் பணி புரிந்துள்ளது.”

    நாசா விஞ்ஞானி, ஜான் பிரோ·பி (NASA Scientist John Brophy) (August 19, 2000)



    “(பரிதி சக்தி மின்னியல் எஞ்சின்) (Solar Electric Ion Engine) எனப்படும் புதிய ஏவுகணைப் பயன்பாடு இயற்கை நியதியைப் பின்பற்றி மெய்யாக விண்வெளியில் வேலை செய்வதை நாங்கள் காண முடிந்தது.  பரிதி வெளியேற்றும் பிளாஸ்மா அயனி வாயு பூமியின் காந்த தளத்தைத் தாக்கும் போது இருவிதமான பிளாஸ்மா அடுக்கு அரங்கிற்கு வரம்பை உருவாக்குகிறது.  ஒவ்வோர் அடுக்கும் வெவ்வேறு மின்னியல் பண்பாடு கொண்டது.  அந்த வேற்றுமையே பூகோள வாயு மண்டத்தைத் தாக்கி ‘வண்ண வான் ஒளியை’ (Aurora) உண்டாக்குகிறது.”

    ராஜர் வாக்கர் (Roger Walker, ESA Advasnced Concepts Team)

    “சில ஆண்டுகளில் நிச்சயம் இந்தப் பொறியியல் நுணுக்கம் (பிளாஸ்மா ராக்கெட்) பூமிக்கும் நிலவுக்கும், பூமிக்கும் செவ்வாயிக்கும் விண்கப்பல்களைத் தொடர்ந்து இயக்குவிக்கும்.”

    பீடர் கான்லன் (Neutel Project Chief Executive Officer)


    “பிளாஸ்மா பொறிநுணுக்கம் விண்வெளிப் பயணத்தை அதி வேகமாகவும், பாது காப்பாகவும் ஆக்கப் போகிறது.  எங்களைப் போன்ற விண்கப்பல் விமானிகள் பரிதி மண்டலத்தின் மற்ற கோள்களுக்கு விரைவாகச் செல்வதோடு பல்வேறு கோள்களுக்குப் போக உடனே தயாராக்க ஏதுவாகிறது.  அதாவது அதிவேகப் பயணம் என்றால் நுண்மை ஈர்ப்பில் (Micro-Gravity) குன்றிய நேரம், சூரியக் கதிர்வீச்சால் (Solar Radiation) விமானி களுக்குக் குறைந்த காலத் தாக்குதல் என்பது அர்த்தமாகும்.”

    டேவிட் வில்லியம்ஸ் (Canadian Astronaut Twice in Space)

    “பிளாஸ்மா பொறியல் நுணுக்கம் விண்வெளிப் பயணச் செயற்பாட்டுக்கு ஏற்றது.  சாதனம் மிகவும் சிறியது,  திறனியக்கம் (Efficiency) மிக்கது.  50 கிலோ வாட் மின்னாற்றலுக்கு உலகிலே மிகச் சிறிய சாதனம் இது.”

    டிமதி ஹார்டி (Neutel Project Head Engineer)

    “பிளாஸ்மா ராக்கெட் உறுதியானது.  நிலவுக்கு அப்பாலும், செவ்வாய்க் கோளுக்கு அப்பாலும் பயணம் செய்ய மெய்யாகப் பிணைவு நுணுக்க மாற்றம் நமக்குத் தேவை.  வாஸிமர் ராக்கெட் (VASIMR) வருங்காலப் பயணக் குதிரைக்கு உகந்த வளர்ச்சித் துறை (Work Horse for the Transformational Infrastructure) என்று நாங்கள் குறிப்பிடுகிறோம்.”

    ஃபிராங்கிலின் சாங்டியாஸ் (Franklin Chang-Diaz, VASIMR Plasma Rocket Engine Chief Designer)


    புதுவித அதிவிரைவு விண்வெளிப் பயண ராக்கெட்டுகள்

    1960 -1970 ஆண்டுகளில் சந்திரனில் கால்வைத்த விண்வெளித் தீரர்களைச் சுமந்து சென்ற சனி -5 ராக்கெட் (Saturn V Rocket) திரவ எரிசக்தியில் இயங்கி விருத்தியானது.  அடுத்து விண்வெளி மீள்கப்பலில் (Space Shuttle) பயன்பட்டவை திடவ எரிசக்தியில் இயங்கிய ஏவுகணைகள்.  இவை இப்போது மெதுவாய்ச் செல்லும் புராதன ராக்கெட்டுகளாகி விட்டன ! அதி வேகத்தில் போகும் புதிய அயான் எஞ்சின் ராக்கெட்டுகள் எதிர்காலத்துக்காகப் படைக்கப்பட்டு வருகின்றன !  புதிய பிளாஸ்மா ராக்கெட்டுகள் 300 மடங்குக்கும் மேற்பட்ட வல்லமையில் இயங்குபவை. அதி வேகமாய் இயங்கிப் பயணக் காலத்தைக் குறைப்பவை.  அவற்றில் நகரும் யந்திரச் சாதனங்கள் மிகவும் குறைவு.  சாதாரண இரசாயனத் திரவ எரிசக்தியில் உந்தும் ராக்கெட்டில் செவ்வாய்க் கோளுக்குச் செல்ல சுமார் இரண்டு வருடங்கள் எடுக்கும் போது, பிளாஸ்மா ராக்கெட் மூலம் பயணத்தை நாற்பது நாட்களில் முடிக்கலாம்.  அதற்குத் தேவைப்படும் ஆர்கான் எரிவாயுவின் கொள்ளளவு மிகக் குறைவானதே.

    இந்தக் குறிக்கோளில் இப்போது 200 கி. வாட் பிளாஸ்மா ராக்கெட் எஞ்சின் ஒன்று வெற்றிகரமாகத் தயாராகி உள்ளது.  ஆனால் இந்த ராக்கெட் எஞ்சின் கனமான விண்கப்பலைப் பூமியிலிருந்து தூக்கிச் செல்ல உதவாது.  திரவ அல்லது திடவ எரிசக்தியில் (Solid or Liquid Fuel) இப்போது போல் ஏவப்பட்டுச் சுற்றுப் பாதையில் விடப்பட்ட விண்கப்பலை விரைவாக நெடுநாளைக்கு உந்திச் செல்ல அவை பயன்படும்.  நாசா இந்தப் பிளாஸ்மா ராக்கெட் எஞ்சினை 2013 ஆவது ஆண்டில் முதன் முதலாக அகில நாட்டு விண்வெளி நிலையத்துடன் (International Space Station) இணைத்துச் சோதனை செய்யத் திட்ட மிட்டுள்ளது.

    சோவியத் ரஷ்யா 1963–1965 ஆண்டுகளில் முன்னோடியாக பிளாஸ்மா ராக்கெட்டு களைச் செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் விண்ணுளவிகளில் பயன்படுத்தி இருக்கிறது.  நாசா 1998 இல் முதன்முதல் அயான் ஏவுகணை ஒன்றைத் தனது ஆழ்வெளி விண்கப்பலில் (Spaceship : Deep Space -1) வெற்றிகரமாகப் பயன்படுத்தி வால்மீன் பொரெல்லியை (Comet Borrelly) நோக்கி அனுப்பப் பட்டது.  அந்த அயான் எஞ்சின் விண்கப்பல் இயங்க 200 நாட்களுக்கு உந்து சக்தி அளித்தது.

    அடுத்து ஈசா (ESA -European Spase Agency) 2003 இல் தனது முதல் நிலவுப் பயணத்துக்கு அயான் எஞ்சின் (Ion Engine for SMART -1 Spacecraft) ஒன்றைப் பயன்படுத்தியது.  நவீன நூற்றாண்டில் கனடாவின் நோவா ஸ்கோஷ்யா கம்பெனி ஒன்று விருத்தி செய்த “ரேடியோ நிலைய மின்னலை அனுப்பிகள்’ (Radio Station Transmitters) பிளாஸ்மா ராக்கெட் தயாரிக்க உதவுகின்றன.

    நௌடல் ஹாக்கெட்ஸ் கோவைச் சேர்ந்த (Nautel Ltd. of Hacketts Cove with Texas Rocket Compay) டெக்ஸஸ் ராக்கெட் கம்பேனி அட் ஆஸ்ட்ராவுடன் (Texas Rocket Company, Ad Astra) சேர்ந்து பிளாஸ்மா ராக்கெட்டை உருவாக்கி வருகிறார்.  அது கால்ஃப் பந்து உறையளவு உள்ள ரேடியோ அதிர்வலை வீச்சு ஜனனி (Golf Bag Size Radio Frequency Generator). அந்த ரேடியோ அலைகள் நுண்ணலை அடுப்பு போல் சூடாக்கி (Microwave Oven Heater) ஸீனான் அல்லது ஆர்கான் வாயுவை பரிதியுள் இருக்கும் அயனிகள் போல் ஆக்கி பிளாஸ்மா (Xenon or Argon Gas into Plasma) நிலை அடைகிறது.  பிளாஸ்மா பிறகு பல்வேறு மின்காந்த அடுக்குகள் ஊடே அனுப்பப் பட்டு வேகம் அடைந்து உந்து சக்தி அளிக்கிறது.  இதுவே நவீன அதிவேக பிளாஸ்மா ராக்கெட் எஞ்சின் என்று குறிப்பிடப் படுகிறது.

    அயான் உந்துவியல் எஞ்சின் எவ்விதம் இயங்குகிறது ?

    நிலவுக்குச் சென்றுள்ள ஈசாவின் விண்கப்பல் சுமார்ட் -1 இல் (SMART -1 Lunar Probe) பயன்பட்டிருக்கும் மின்னியல் உந்து எஞ்சின் இயங்கும் முறை பரிதியில் நிகழும் இயற்கை நியதியைப் பின்பற்றுகிறது.  எரிவாயு ஒன்று அயான்களாகி அந்த அயான்கள் பிறகு காந்த தளத்தில் விரைவாக்கம் பெற்று சிறு உந்து சக்தியை விண்கப்பலுக்கு உண்டாக்குகிறது.  ராக்கெட் எஞ்சினில் பயன்படும் வாயு : ஸீனான் (Xenon Gas).

    1.  ஸீனான் வாயு அணுக்கள் ஓர் உருளைக் கொள்கலத்தில் அதிக அழுத்தத்தில் அடைக்கப் பட்டு மின்சக்தியால் நேர்முனை ஏற்றமான ஸீனான் அயனிகளாகப் (Positively Charged Xenon Ions) பிரிவாகிறது.

    2.  உருளைக் கலத்தைச் சுற்றியுள்ள மின்வடங்கள் (Electric Coils) மின்காந்தத்தை உண்டாக்கி எதிர்முனை ஏற்றமுள்ள எலெக்டிரான்களைக் குவித்து எதிர்மின் முனையில் (Cathode) ஒதுக்குகிறது.

    3.  எதிர்மின் முனையில் எலெக்டிரான்கள் சேமிப்பாக, நேர்மின் முனை அயனிகள் சேர்ந்து விரைவாக்கம் பெற்று வெளியே தள்ளப் படுகின்றன.

    4.  விரைவாக்கம் பெற்ற ஸீனான் அயனிகள் வேகமாக வெளியேறும் போது எதிர்ப் புறத்தில் பேரளவு உந்து சக்தி உண்டாக்கப் படுகிறது.

    திரவ, திடவ எரிசக்தியைப் பயன்படுத்தியுள்ள இரசாயன ராக்கெட்டுகள் வெளிவிடும் தீமயக் காட்சி போலின்றி, அயனி ராக்கெட்டுகள் நீல வண்ண அயனிகளை வெளியேற்றும்.  இந்த வாயு அயான் வெளியேற்றமே ராக்கெட்டுக்கு எதிர் புறத்தில் உந்து சக்தி அளிக்கும்.  பயன்படும் ஸீனான் வாயு கனமற்றது.  மலிவானது.  இயக்க நிதிச் செலவு சிக்கனமானது.  சாதாரண ராக்கெட் போலின்றி அயனிகள் ராக்கெட் விரைவாகச் செல்வதால் கால நீட்சி குன்றுகிறது.  அயான் ராக்கெட்டுகளில் ஒரு குறைபாடும் உள்ளது.  திடீரென அது கனமான பளுவைத் தூக்கவோ, தள்ளவோ முடியாது.  ஆதலால் பூமியிலிருந்து கிளம்ப இரசாயன ராக்கெட்டுகளே தேவைப்படும்.  புமியின் ஈர்ப்பாற்றலைத் தாண்டிப் பயணம் செய்யும் போது அவற்றின் உந்து சக்தி மிகையாகிறது.  சுமார்ட் -1 இல் அமைத்த ‘பரிதி மின்னியல் உந்து எஞ்சின்’ (Solar Electric Propulsion) மிகச் சிறியது.  அதன் அயான் எஞ்சின் விண்கப்பலுக்கு அளிக்கும் உச்ச உந்து வேகம் மணிக்கு 16,000 கி.மீடர் (மணிக்கு 9600 மைல்).  அதன் எடை 375 கி.கிராம். அந்தச் சிறிய எஞ்சினால் நிலவை வந்தடைய 15 மாதங்கள் எடுத்தன.  சுமார்ட் -1 நிலவுப் பயண நிதி ஒதுக்கு 110 மில்லியன் ஈரோ (133 மில்லியன் US டாலர்).

    பிளாஸ்மா ராக்கெட் இயக்கத்தின் அடிப்படைத் தத்துவம்

    பிளாஸ்மா ராக்கெட் எஞ்சின் பரிதியின் உஷ்ணத்தை (Plasma Starts at 10,000 C) அடைந்து எரிசக்தி வாயுவை அயனிகள் (Ionized Gas Fuel) ஆக்கி உந்தும் பிணைவு நுணுக்கத்தைப் (Fusion Technology) பயன்படுத்துகிறது.  பிளாஸ்மா எஞ்சினில் மூன்று கட்ட சாதனங்கள் இயங்குகின்றன.  முன்னரங்கம், மைய அரங்கம், பின்னரங்கம் (Forward Cell, Central Cell & Aft Cell) என்று முக்கட்ட அமைப்பு ராக்கெட் இணைப்பாகச் சேர்க்கப் பட்டுள்ளது.

    1.  ராக்கெட்டின் முன்னரங்கம் : உந்து சக்தி தரும் ஹைடிரஜன், ஸீனான், ஆர்கான் போன்ற எரிசக்தி வாயு செலுத்தப் பட்டு அயனிகளாகி பிளாஸ்மா நிலைக்கு வரும் உருளைக் கலம்.

    2.  ராக்கெட்டின் மைய அரங்கம் :  இந்த உருளைக் கலத்தில் மின்காந்த சக்தி அயனிகளுக்கு மின்பெருக்கி போல் (Amplifier) மிகையான சக்தி ஊட்டுகிறது.   அதாவது ரேடியோ மின்னலைகள் நுண்ணலை அடுப்பு போல் (Microwave Oven) வெப்ப சக்தி அளிக்கின்றன.

    3.  ராக்கெட்டின் பின்னரங்கம் :  இந்த உருளைக் கலத்தில் ஒரு ‘மின்காந்த விரிவு வாய்’ (Magnetic Nozzle) மேற்கொண்டு வெப்ப சக்தி அளித்து உஷ்ணம் 100 மில்லியன் டிகிரி C ஆக ஏற்றம் அடைந்து அயனிகள் பிளாஸ்மாவாக (Plasma) அதி வேகத்தில் வெளியே தள்ளப் படுகின்றன.  அந்த வெப்ப நிலை விண்வெளி மீள்கப்பல் (Space Shuttle) ராக்கெட் வெளிவீச்சு போல் 25,000 மடங்கு சூடானது !  பிளாஸ்மா அதி வேக வெளியேற்ற விசை எதிர்த் திசையில் அதே அளவு ஆற்றல் உள்ள உந்து சக்தியை விண்கப்பலுக்குத் தருகிறது. (Action & Reaction are equal & opposite).

    ராக்கெட் குறிப்பியல் உந்து அதிர்வு (Rocket’s Specific Impulse)

    பரிதியில் நிகழும் அணுப்பிணைவு இயக்கம் பேரளவு வெப்ப சக்தியை வெளி யேற்றுகிறது.  ராக்கெட் பொறியியல் நிபுணர் இப்போது அந்த அளவற்ற சக்தியைப் பயன்படுத்த முனைகிறார்.  செவ்வாய்க் கோளுக்குப் போகத் திட்டமிடும் மனிதர் செல்லும் பயண காலத்தைப் பாதியாக்கும் இந்தப் புதிய பிணைவு இயக்க ராக்கெட்டுகள்.

    Rocket Engines Type Thrust (Pound Force) Specific Impulse (Seconds) Lifetime Fuel Usage
    Saturn V F-1 (1x) (1960 years) Chemical 1,700,000 298 minutes
    Space Shuttle Main Engine (1x) (1980 years) Chemical 500,000 440 minutes
    NSTAR Ion Engine   (1) Electric 0.02 3300 years
    NEXT  Ion Engine     (2) Electric 0.07 4300 years
    VASIMR® VX-200(New Plasma Rocket)

    (2005)

    Electric 1 5000 >years

    அத்தோடு மனிதர் மீது பயணத்தின் போது பரிதிக் கதிர்த் தாக்குதலும் பாதியாகும்.  ராக்கெட் விஞ்ஞானத்தில் ஒரு ‘ராக்கெட் எஞ்சின் எரிசக்தி திறனியக்கம்’ (Fuel Efficiency of Rocket Engine) அதன் ‘குறிப்பியல் உந்து அதிர்வு’ (Specific Impulse) ஒப்பு நோக்கில் ஆராயப் படுகிறது.  குறிப்பிட்ட அளவு எரிசக்தியால் (Unit Fuel) உண்டாகும் குறிப்பளவு உந்து விசையானது (Unit Thrust) எவ்வளவு காலம் நீடிக்க முடியும் என்பதே ஒப்பு நோக்கப் படுகிறது.  ‘குறிப்பியல் உந்து அதிர்வு’ (Specific Impulse) விநாடிகளில் (Seconds) கணக்கிடப் படுகிறது.

    ஓர் அணுப்பிணைவு எஞ்சின் ராக்கெட் சாதாரண இரசாயன எரிபொருள் ராக்கெட் எஞ்சினை விடச் சுமார் 300 மடங்கு மிகையான குறிப்பியல் உந்து அதிர்வு (Specific Impulse) கொண்டது.  திரவ, திடவ இரசாயன எரிபொருள் (Liquid or Solid Chemical Fuel Rocket)  பயன் படுத்தும் ராக்கெட் எஞ்சின் ‘குறிப்பியல் உந்து அதிர்வில்’ (Specific Impulse) கூறினால் சுமார் 450 விநாடிகள்.

    அதாவது ஒரு பவுண்டு (500 கிராம்) எரிபொருள் ஒரு பவுண்டு உந்து விசையை (Lb Force) 450 நிமிடங்கள் வரை நீடித்தளிக்கும்.  ஆனால் வல்லமை பெற்ற பிளாஸ்மா எஞ்சின் ஆர்கான், ஸீனான் வாயுவை அயனிகளாக்கி ‘குறிப்பியல் உந்து அதிர்வு’ 135,000 விநாடிகள் தரும் (450 X 300 = 135000).

    உதாரணமாக இரசாயன எரிபொருள் ராக்கெட்டில் இதுவரைச் செவ்வாய்க் கோளுக்குப் போக 2 ஆண்டுகள் எடுத்தன.  பிளாஸ்மா எஞ்சின் ராக்கெட்டில் விமானிகள் 40 நாட்களில் செவ்வாய்க் கோளை நெருங்கி விடலாம்.  அதுபோல் பூமியிலிருந்து பூதக்கோள் வியாழனுக்குப் போய்வரச் சுற்றுக் காலம் இரண்டே ஆண்டுகளில் முடிந்து விடலாம் !

    (தொடரும்)

    படங்கள்:  Astronomy Magazine, BBC News, National Geographic News, NASA & ESA

    தகவல்:

    1.  BBC Science & Technology – New Space Engine Clocks up Record (Aug 19, 2000)

    2.  How Fusion Propulsion Will Work By : Kevin Bonsor (March 12, 2001)

    3. (a) BBC News : Europe Lunar Adventure Begins -The First Solo European Mission to the Moon is Well on its Way (Sep 28, 2003)

    3 (b) BBC News : Probe Pushes onto Lunar Target – Smart -1 Spacecraft Has Fired up its Innovative Solar-Electric Engine (Sep 30, 2003)

    3 (c) BBC News : Europe Lunar Probe Arrives at the Moon -The Smart -1 Lunar Probe has Entered into Orbit Around the Moon – The First Europen Mission to do so. (Nov 16, 2004)

    4.  BBC News : Plasma Engine Passes Initial Test (Dec 14, 2005)

    5.  Space Fellowship : Plasma Rocket Engine VASIMR VX-200 First Stage Achieves Full Power Rating By : Klaus Schmidt (Oct 27, 2008)

    6. NASA Report : ESA SMART -1 Lunar Probe (Nov 23, 2009)

    7.  CBC (Canadian Broadcasting Company) News : Nova Scotia Company Helps Build Plasma Rocket (January 7, 2010)

    8.  Ad Astra Rocket Company : Chemical VS Plasma Rockets

    9.  Wikipedia : Plasma Propulsion Engine (May 20, 2010)

    10.  Space Flight Now : Plasma Rocket Could Revolutionize Space Travel By Stephan Clark (June 1, 2010)

    11.  Wikipedia : Variable Specific Impulse Magento Plasma Rocket (VASIMR) (June 1, 2010)

    ********************
    S. Jayabarathan (jayabarat@tnt21.com) June 4, 2010

    Share
  • கண்ணாள் ஓதுகம்

    இன்று மனையாளிடமிருந்து இன்னமும் எதுவும் வாங்கிக் கட்டிக் கொள்ளவில்லை. இப்படியான நல்லதொரு தருணத்தில், என்றோ அறியப்பெற்ற இலவு காத்த கிளியின் கதைதான் நினைவுக்கு வருகிறது.

    காய் பழுத்துக் கனியாகும் தருவாயில் உண்ணலாமெனக் கிளியானது காத்திருக்க, முற்றி வெடித்த காயிலிருந்து தெறித்த வெண்பஞ்சுத் திரள்கள் சிதறி வான் நோக்கிப் பறக்க, காத்திருந்த அக்கிளி ஏமாந்து போனதாம். ஆனால் நான் இங்கு கண்டு கொண்டிருக்கும் காட்சியோ அதனின்றும் மாறாக இருக்கிறது.  இந்த இலவம் பஞ்சுத் திரள்கள் போன்ற இவ்வெண்கீற்றுகள் நளினத்தோடு அசைந்தாடியபடியே கீழ் நோக்கி வந்து புல்வெளியின் மேல் படர்ந்து கொண்டிருக்கின்றன.

    ”ஒயிட் கிறிஸ்துமஸ் எனச் சொல்வது இதனால்தானோ?” என்று எண்ணியபடியே சாளரத்தினூடாய் வெளியில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வானிலிருந்து கீழிறங்கிக் கொண்டிருந்த உறைபனிப் பிசிர்களின் நுரைநாட்டியம் எழிலார்ந்த கண்காட்சியாய் இருக்கிறது. இது போன்ற காற்றரவமற்ற பனிப்பொழிவின் போது பறக்கும் சன்னக்கீற்றுகளின் தவழோட்டப் போட்டி எனக்கு மிகவும் பிடிக்கும்.

    குறிப்பிட்ட உயரத்தில் தவழ்ந்து கொண்டிருக்கும் இரு வேறு பனிக்கீற்றுகளை ஒரு சேரக் கவனித்து, அவை எப்படியான நளினங்களைக் கையாண்டு தரையிறங்குகின்றன; எது தரையைக் காலத்தாழ்ச்சியுடன் பிந்திச் சென்றடைகிறது என்பதே அவற்றுக்கிடையிலான போட்டியாகும். நாம் ஒன்றைக் கணிக்க, பெரும்பான்மையான நேரங்களில் அதுவே பிந்திச் சென்றடைந்து வெற்றி பெறும். ஆனால்  ஒரு சில கீற்றுகள் காற்றோடு கரைந்து விடும்; அல்லது, பிறிதொரு கீற்றோடு புணர்ந்து மறைந்து விடும். இப்போட்டிக்குச் சுவை கூட்டுவதே அத்தகைய எதிர்பாராதவைதான்.

    “காலையில எழுந்ததுமே வேடிக்கைதானா? எந்திரிச்சதே காலையில பத்து மணிக்கு. இதுல இவருக்கு அப்படியென்ன வேடிக்கையோ? ஏங்க, வாங்க இங்க!”

    பனிப்பொழிவுடனான இலயிப்பில் இருந்தவனை இடை மறித்ததிலிருந்து துவங்கியது, அன்றைய நாளுக்கான ஓதுகம்.  இதற்கு பொண்டாட்டி அர்ச்சனை என்கிற மற்றொரு பெயரும் உண்டு. நத்தார் நாளில் கிடைக்கப் பெறும் அர்ச்சனை என்பதால், அது ‘நத்தார் நாள் ஓதுகம்’ எனும் சிறப்பும் பெறுகிறது.

    நத்தார் நாள்! டொரொண்டோ நகரில் வாழும் இலங்கைத் தமிழர்களிடமிருந்து கற்றுக் கொண்டதில் இதுவுமொன்று. போர்ச்சுக்கீசியர் ஆண்ட நாடான இலங்கையில், கிறிஸ்துமசைக் குறிக்கும் போர்ச்சுக்கீசியச் சொல்லான ’நாட்டல்’ எனும் சொல்லில் இருந்து பிறந்ததான் இந்த நத்தார் எனும் தமிழ்ச் சொல்.

    அது கிடக்கட்டும். நத்தார் நாள் என்பதால் நமக்கான அர்ச்சனைகள் ஓய்ந்து விடுமா? அவை ஓய்ந்து விட்டால்,  நம்மால்தான் இயல்பாய் இருந்துவிட முடியுமா என்ன??

    “என்ன நாஞ்சொல்றது காதில விழுதா, இல்லியா??”

    “விழுகுது, விழுகுது! காபி போட்டுட்டே சொல்லலாம்ல?!”

    “அதெல்லாம் போட்டுத்தான் வெச்சிருக்கு. உங்களுக்குதா நான் சொல்றது காதுலயே விழுகுறதில்ல! என்னங்க, எனக்கு ஒரு பொட்டுத் தூக்கங்கூட இல்ல தெரியுமா?”

    “அட! ஏன், என்னாச்சி?”

    “ஆமாங்க. திகழ் நல்லா தூங்கிட்டா. கமழ் கொஞ்சங்கூடத் தூங்கவே இல்ல. நாலஞ்சி வாட்டி வயித்துல போயிடிச்சி. ஒரே அனத்தல். ஆளே, கிரங்கிப் போயிட்டாளுங்க. ஒரு எட்டு எமர்ஜென்சிக்குப் போயிட்டு வந்திருங்க. கிறிஸ்துமஸ் நாளன்னிக்கு வேற யாரும் தெறந்திருக்க மாட்டாங்க!”

    “ப்ச்! என்னை எழுப்பி இருக்கலாமே? இதா, நான் ஒடனே கிளம்புறேன்!!”

    பாவம் பிள்ளை. சுருண்டு படுத்திருக்கிறாள். என்னைப் பார்த்ததும் கைகளை நீட்டுகிறாள்.

    “இரு தங்கம்! அப்பா முகங்கழுவி, உடுப்பு மாத்திட்டு வந்து உன்னை எடுத்துக்கிறேன்!” ஒரு முத்தத்தோடு விடைபெற்று, குளியலறைக்குப் போய் ஆயத்தமாகினேன்.

    ”ஏங்க, அதுக்குள்ள எங்க போனீங்க? ஒன்னு சொன்னா, அதைக் கிரமமா செய்ய மாட்டீங்களா?? அதுக்குள்ள இன்ட்டர்நெட்டுல என்ன வேண்டிக் கிடக்கு?”

    “நான் கீழ போயி, வண்டிய ஸ்டார்ட்ல நிறுத்திட்டு வந்தேன். அப்பத்தான கொஞ்சமாச்சும் வெதுவெதுப்பேறி இருக்கும்?!”

    “அதுக்கு இவ்வளவு நேரமா? இன்சூரன்சு கார்டு எடுத்து வெச்சிகிட்டீங்களா?? கையில இந்த பிஸ்கெட் பாக்கெட்டும், தண்ணியும் வெச்சிகிங்க. வயித்துல போறதால நான் பால் எதுவும் குடுக்கலை. சரியா?”

    “சரி!”

    “என்ன சரி? கொழந்தைக்குக் குளிராதா?? இருங்க, ஸ்வெட்டர் போட்டு, தலைக்கும் குல்லா போட்டு வுடுறேன்!!”

    குழந்தை என்னருகில் வந்து சொல்கிறாள், ”அப்பா, நான் நல்லாத்தான் இருக்கன்பா. கூட அம்மா வரலையா? அப்ப, நான் வரலப்பா!”

    ”அப்படியெல்லாம் சொல்லக் கூடாதுடா செல்லம்; போனவுடனே வந்திடலாம் செரியா?”

    வீட்டில் மற்ற பிள்ளைகள் இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இரவு படம் பார்த்த பின்னர் ஊரிலிருக்கும் தாத்தா, பாட்டி, பெரியப்பா வீட்டு அண்ணன், தங்கைகளுடன் பேசிவிட்டுப் படுக்கைக்குப் போக வெகு நேரமாகிவிட்டிருந்ததும், பனிபொழிவின் போதான சூழலின் இதமும்தான் அவர்களுக்கான இன்பத்துயிலைக் இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மறுபுறத்தில் அகத்தாளின் தங்குதடையில்லா ஓதுகமும் தொடர்ந்து கோலோச்சிக் கொண்டு இருக்கிறது.

    அவசரகால மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் ஆறு மைல்கள்தான். ஆனாலும் அரை மணி நேரம் பிடித்தது. தெருவெங்கும் பனிப்பொழிவு. வேகமாகச் சென்றால் வண்டி ஒருபக்கமாக இழுத்துவிடும் என்கிற அச்சம். மிகக் கவனமாகவும் மெதுவாகவும் உருட்டினேன்.

    “அப்பா, சாந்தாகிளாஸ் எப்பப்பா நம்ம வீட்டுக்கு வந்தாரு? டோரா பொம்மையெல்லாம் எப்பிடிப்பா நம்ம வீட்டுக்கு வந்திச்சி??”, வழியெங்கும் கிறிஸ்துமஸ் தாத்தா புராணமே பாடினாள் கமழ். திடீரெனத் திசைமாறிக் கேட்டாளே ஒரு கேள்வி?! வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஒன்றுக்கு நான்கு முறை மூச்சிழுத்துக் கொண்டேன்!! எப்படி, இந்தக் குழந்தைகளுக்கு இப்படியெல்லாம் கேட்கத் தோன்றுகிறதோ??

    “சொல்லுங்ப்பா. சாமிகிட்டப் போன குழந்தைகளோட வீட்டுக்கும் சாந்தா போயிருப்பாராப்பா? அவங்களுக்குக் குடுத்த கிஃப்ட் எல்லாத்தையும் அவங்க அப்பா, அம்மா என்ன செய்வாங்க??”, அமெரிக்காவில் அண்மையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின் விளைவாய் எழும் இக்கேள்விகளால் எனக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. இருந்தும் அதை அவளுக்குக் காண்பித்து விடாமல் உரையாடலைச் சரிக்கட்ட வேண்டிய கட்டாயத்தில் நானிருக்கிறேன்.

    ”இத பாரு கண்ணா! இது எமர்ஜென்சி டாக்டரைப் பாக்குற இடம்; கொஞ்ச நேரமாகும். அம்மாவைக் கேட்டு அழக்கூடாது. போனதும் டயாப்பரை மாத்திகிடணும். சரியா?”

    சொல்லி முடிக்கவில்லை; அழைப்பு மணி ஒலித்தது. ஓதுகம் என்றால், ஓயாமல் ஓதப்பட வேண்டும்தானே? அல்லாவிடில் அதற்கான இலக்கணக் கூறுகள் பாழ்பட்டு விடுமல்லவா?! சரி, தயாராகுவோம் ஓதுகத்துக்குச் செவிமடுக்க!!

    ”சொல்டா!”

    “போயிச் சேர்ந்ததும் கூப்பிட்டு சொல்ல மாட்டீங்களா? ரோட்டுல பார்த்துக் கவனமாப் போய்ச் சேர்ந்தீங்களா, இல்லையா??”

    “இப்பதான் வந்து வண்டிய நிறுத்துறேன். நீ கூப்பிடுற!”

    “இங்கிட்டு இருக்கிற ஆஸ்பிடலுக்கு எதுக்கு இவ்ளோ நேரம்?”

    “வழியெல்லாம் இன்னும் பனி விழுந்திட்டு இருக்கு. அதான் மெதுவா ஓட்டிட்டு வர வேண்டியதாப் போச்சி!”

    “சரீ..! சரீ… எதுக்கும் ஒரு பதில், ஒரு விளக்கம், தயாரா வெச்சிருப்பீங்களே?! உள்ள போனதும் முதல் வேலையா டயாப்பரை மாத்திடுங்க. பையைக் கார்லயே வெச்சிட்டு போயிடாதீங்க; சரியா?”

    “இம், சரி! சொல்லியனுப்பினது ஞாவகம் இருக்கு. அப்ப நான் வெச்சிடவா?”, உடனே சரியெனச் சொல்வார்கள் என எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனம்.

    “இல்ல. இன்னொன்னு சொல்லணும் உங்களுக்கு. இன்னிக்குக் கிறிஸ்துமஸ்ங்றதால கொஞ்சம் முன்னபின்ன ஆகும். குழந்தைய பத்திரமாப் பார்த்துகுங்க. உள்ள, போன் வேலை செய்யாது. அப்பப்ப ரூமை விட்டு வெளியில வந்து எனக்குப் பேச முயற்சி செய்யணும். செரியா?”

    ”டே, வெளியில வந்து பேசறதெல்லாம் நடக்குற காரியமா? அதும் குழந்தைய விட்டுட்டு??”

    “முயற்சி செய்யுங்கன்னுதான் சொன்னேன். புரியுதா? செரி, நான் வெச்சிடுறேன். பார்த்து டாக்டர்கிட்ட என்ன ஏதுன்னு கேட்டுட்டு வாங்க!!”

    “ரொம்ப நல்லாவே!”, ஓய்ந்ததடா சாமி! மனத்துள் சிரிப்பு எக்காளமிட்டுக் கொண்டது.

    மருத்துவ மனையிலிருக்கும் கழிவறைக்குச் சென்று குழந்தைக்கு இடப்பட்டிருந்த அரைக்கச்சையை மாற்றி, துடைத்து விட்டுப் பின்னர் புதியதொன்று அணிவிக்கப்பட்டது. வரவேற்பு பணிப்பெண் எங்களைக் கவனித்து உள்ளே அனுப்பினாள். அமெரிக்க மருத்துவ எமர்ஜென்சிப் பிரிவு எனும் அவசர கால சிகிச்சைப் பிரிவில் இது ஒரு வினோதம் என்றுதான் சொல்ல வேண்டும். நான்கைந்து பேர்தான் அங்கு குழுமி இருந்தார்கள். விடுப்புக்காலங்களில் குறைந்தது ஐம்பது, அறுபது பேராவது இருப்பார்கள். ஆனால் இன்று பெரிதாகக் கூட்டமெதுவும் இல்லை. பெருத்த மகிழ்ச்சி.

    சென்றமர்ந்த பத்துமணித் துளிகளுக்கெல்லாம் உள்ளே அழைத்துச் சென்று எங்களுக்கான அறையில் அமர வைத்து விட்டார்கள். இவ்வணுகுமுறையானது அமெரிக்காவுக்கே உரிய ஒரு சிறப்பாகும். மருத்துவமனை, குடிபுகல் மற்றும் குடியுரிமை அலுவலகம் முதலான இடங்களில் இம்முறை கையாளப்படுகிறது. உலகுக்கே உயரிய தலைவர் என நம்பப்படுகிற அமெரிக்க குடியரசுத் தலைவரின் அலுவலகத்திலும் கூட இம்முறையே கையாளப்படுகிறது.

    வருகையாளருக்கான நேர்முக நேரம் ஒதுக்கப்பட்டு அவருக்கான தனியறையும் ஒதுக்கப்பட்டு விடும். குறிப்பிட்ட நேரத்தில் குடியரசுத் தலைவரே அவ்வறைக்கு வந்து, வந்திருக்கும் வருகையாளரைச் சந்திப்பதுதான் அம்முறையாகும். இதன் மூலம், குடியரசுத் தலைவரின் நேர ஆளுமை கட்டுக்குள் வருகிறது; தேவையற்ற காலவிரயம் தவிர்க்கப்படுகிறது. அல்லாவிடில், அவருடைய அறைக்குள் வருகையாளர் வருதல், இருக்கையில் இருத்துதல், வழியனுப்புதல் எனப் பலவாறாக குடியரசுத் தலைவரின் மதிப்புமிக்க நேரம் வீணாகும். இது போன்றே மருத்துவரின் நேரக்கட்டுப்பாடும் கையாளப்படுகிறது.

    தன் கையில் இருக்கும் கரடி பொம்மையுடன் பேசிக் கொண்டு இருந்தாள் கமழ்.  நத்தார் நாளில் வேலை செய்ய நேர்ந்த வருத்தமெதுவுமின்றிப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர் அறைக்கு வெளியே இருந்த மருத்துவமனைப் பணியாளர்கள். சற்று நேரத்திற்கெல்லாம் மருத்துவர் நீட்றா கதவைத் தட்டிக் கொண்டே உள்ளே நுழைந்தார்.

    உங்களை இந்த நன்னாளில் இங்கு வரச் செய்தது என்னவோ என வாஞ்சையாகக் கேட்டறிந்து கொண்டார் மருத்துவர் நீட்றா. கன்னத்தில் குழிவிழ, ”ஐ காட் கிஃப்ட் ஃப்ரம் சான்ட்டா” என்று சொல்லிச் சிரித்தாள் கமழ். அந்த அயர்விலும் அவள் அழகாய்க் காட்சியளித்தாள். உங்க குழந்தை மிகவும் அழகு எனச் சொல்லிக் கொண்டே அவளது காது, கண்கள் முதலானவற்றைப் பரிசோதித்துக் கொண்டார் நீட்றா.

    ”வயிற்றில் ஏதாவது வைரஸ் இருக்கக் கூடும். உடம்பு சுடவில்லையாதலால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை” என்று கூறிக்கொண்டே மருந்துக்கான சீட்டெழுதிக் கொடுத்து விட்டு விடைபெற்றுக் கொண்டார் அவர்.

    குழந்தைக்குச் சட்டை, ஸ்வெட்டர் முதலானவற்றை அணிவித்து வெளியே அழைத்து வந்தேன். மருத்துவரைப் பார்த்ததற்கான உடன்தொகை(copay) செலுத்திவிட்டுத் தலைநிமிர்ந்தேன். என்னதான் மருத்துவக் காப்பீடு வைத்திருந்தாலும், உடன்தொகையாக சொச்சப் பணத்தை நாம்தான் கட்ட வேண்டுமென்பது அமெரிக்கக் காப்பீட்டு நடைமுறையாகும்.

    “சார், கேன் யூ ஹெல்ப் மீ சார்?” என்றாள் அந்த வெள்ளைக்காரி. எனக்கு மனம் சஞ்சலமாக இருந்தது. விட்டேற்றியாக ஏதாவது சொல்லியிருக்கலாம். ஆனால் உதவி கேட்டு நிற்பவர்களை நத்தார் நாளதுவுமாக எப்படி உதறித்தள்ளுவது? கமழ் வேறு உடனிருக்கிறாள். அந்தம்மாவைப் பார்க்கவும் பாவமாய் இருக்கிறது.  எந்த நேரத்திலும் அழலாம் என்கிற தொனியில் இருக்கிறது அவள் முகம். அவளுக்கென்ன துன்பமோ??

    அவளுடைய குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என வந்திருக்கிறாள். கிறிஸ்துமசுக்காக இருந்த காசெல்லாம் செலவாகி, பற்று அட்டைகளிலும் இனி கடன் வாங்கப் பெறுமானம் இல்லையாம். மகளுக்கு மருந்து வாங்கச் செலுத்த வேண்டிய உடன்தொகைக்கு இருபது டாலர் வேண்டுமெனக் கேட்கிறாள். மனம் கனக்கிறது. அவளது குழந்தையின் முகமும் பெருஞ்சோகமாய் இருக்கிறது.

    ”என்னிடம் பணமாக இல்லை. வேண்டுமானால் இருபத்தி நான்கு மணி நேர வால்கிரீன்சு மருந்தகத்திற்கு வாருங்கள்; உடன்தொகையை நானே செலுத்தி விடுகிறேன்!” எனச் சொல்லி விடைபெற்றுக் கொண்டேன்.

    இந்த அமெரிக்காவில் இப்படியான ஏழைச்சோகம் நிறைய. காசு இருக்கும் வரையிலும் தாம்தூமென்று பொருட்களாய் வாங்கிச் செலவளிப்பது ஒரு பக்கம். தாய்மார்களின் இப்படிப்பட்ட அவலமும் அல்லலும் மறுபக்கம். கிட்டத்தட்ட முப்பது விழுக்காடு அளவிலான அமெரிக்கக் குழந்தைகளுக்கு அம்மாவின் ஆதரவு மட்டுந்தானாம். தனித்தாயா(single mom)க இருப்பாளோ இவளும்? மனம் பதைபதைத்தது. என்றுதான் இவர்கள் சேமிக்கக் கற்றுக் கொள்வார்களோ??

    உப்பும் புளியும் இருக்கும் மொடாவில், அரைக்காசு, முக்கால்க்காசு எனச் சிறுகச் சிறுகச் சேமிக்கும் என் அம்மாவின் நினைவுதான் எனக்கு வருகிறது. அஞ்சறைப் பெட்டியில் காசில்லையென்றால் அம்மாவுக்கு தலையே வெடித்துவிடும். அதெல்லாம் இன்றைய அம்மாக்களுக்குத் தெரிவதே இல்லை. எதுவும் கிடைக்காத நேரத்தில் சாணி தட்டிக் காய வைத்த வறட்டிகளை விற்றாவது காசாக்கி விடுவாள் அம்மா.

    விடுப்பு நாளான இந்நாளில் திறந்திருக்கும் ஒரே ஒரு மருந்தகம், இந்த வால்கிரீன்சு மருந்தகம்தான். நான் வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்தில் அந்த வெள்ளைக்காரியும் வந்து விட்டாள். எனது கையிலிருந்த மருந்துச் சீட்டினைக் கொடுத்தேன். அவளும் அவளது குழந்தைக்கானதைக் கொடுத்திருக்கிறாள். இன்னும் இருபது மணித்துளிகள் ஆகும் எனச் சொல்லிவிட்டார்கள்.

    “என்ன, நானே வெளியில வந்ததும் கூப்பிடச் சொன்னனே? கூப்பிட மாட்டீங்களா??”

    “சாரி! நான் இப்பதான்…”

    “எதுக்கும் ஒரு சாரி. அதெப்படிங்க உங்களால முடியுது? சரி, டாக்டர் என்ன சொன்னாரு?”

    “ஸ்டொமக் வைரஸா இருக்கும்னு சொல்லி மருந்து எழுதிக் குடுத்திருக்காரு!”

    “சரியப்ப, வீட்டுக்கு வாங்க. நான் வாங்கிக்கிறன்!!”

    “இல்ல. நான் வால்கிரீன்சு பார்மசியில குடுத்து இருக்கன்!”

    அவ்வளவுதான். சாமியாடி விட்டாள். “எங்கிட்ட சொல்லிட்டுப் போயிருக்கணும். நான் ட்வெண்டிப் பெர்சண்ட் கூப்பன் வெச்சிருக்கன். அது போக, கிரிடிட் கார்டுல பே பண்ணக் கூடாது. ப்ளெக்சிபிள் ஸ்பெண்டிங் அக்கவுண்ட்ல பே பண்ணனும். உங்களை வெச்சிட்டு எனக்குப் பெரிய்ய்ய அக்கப்போரு!!”

    “இல்லடா. நான் ப்ளெக்சிபிள் ஸ்பெண்டிங் கார்டு எடுத்திட்டு வந்திருக்கேன்!”, ஒருவழியாய்த் தப்பித்தாயிற்று. நல்ல வேளையாக, நான் மருத்துவச் செலவுக்கான வருமானவரிக் கழிவு தரும் ப்ளெக்சிபிள் ஸ்பெண்டிங் பற்று அட்டையைக் கொண்டு வந்திருந்தேன். அல்லாவிடில், அதற்கும் சேர்த்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருந்திருக்கும்.

    மீண்டும் அந்த வெள்ளைக்காரி என்னைப் பார்த்து ஒருவிதப் பணிவோடு சிரித்துப் பேச முயன்றாள். நான் மகளைக் கவனிக்கும் பாங்கில் தவிர்த்து விட்டேன். பேச்சுக் கொடுத்தால், சொந்தக்கதை சோகக்கதையைச் சொல்வார்கள். நமக்கெதுக்கு வம்பு?

    முறை வந்ததும், வெள்ளைக்காரியின் மருந்துக்கும் எங்களது மருந்துக்கும் நானே உடன்தொகை செலுத்து விடுகிறேன் எனச் சொன்னேன். அங்கிருந்த வேலையாள் என்னை ஒரு மாதிரி வித்தியாசமாய்ப் பார்க்கிறாள்.

    மருந்தைப் பெற்றுக் கொண்டவள் என்னைப் பார்த்து மீண்டும் நன்றி சொன்னாள். அடுத்த மாதம் காசோலை அனுப்புவதாகச் சொல்லி, அனுப்புவதற்கு ஏதுவாக என் வீட்டு முகவரியைக் கேட்டாள். பணிவுடன் மறுத்து விட்டேன். அலைபேசி எண்ணாவது கொடுங்கள் என வேண்டினாள். நத்தார் நாளில் உதவக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றியெனச் சொல்லி அலைபேசி எண் பகிர்வதையும் தவிர்த்து விட்டேன்.

    கண்களில் நீர் மல்க அவளும், வீட்டிற்குப் போக வேண்டிய அவசரத்திலிருந்த நாங்களும் விடை பெற்றுக் கொண்டோம். கண்ணிலிருந்து மறையும் வரையிலும், அவர்களைப் பார்த்து கையசைத்துக் கொண்டே வந்தாள் கமழ்.

    ”அட, நீங்க இவ்வளவு சுருக்கமா வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லங்க!”

    “இன்னும் முன்னாடியே வந்திருப்போம். ஆனா அந்த இன்னொரு குடும்பத்துக்கும், அதான் அந்த வெள்ளைக்காரிக்கும் சேர்த்து பில் பே பண்றதுல கொஞ்சம் நேரம் செலவாயிடிச்சி!”

    “இன்னொரு குடும்பமா? என்ன உளர்றீங்க?? யாரது?? எழவு, உங்களை அனுப்புனதே தப்பாப் போச்சி!!”

    அவ்வளவுதான்! நத்தார் நாள் ஓதகம் பெருவேகம் கொண்டு சீற்றத்துடன் பொழியத் துவங்கியது.

    “நீ கொழந்தையப் பாரு. எனக்கு செமயாப் பசிக்குது! சிறுகுடல் பெருங்குடலைத் தின்றும் போல இருக்கு. போயிக் குளிச்சிட்டு வந்து சோறுங்கணும் முதல்ல!”, நடந்ததை முழுமையாகச் சொல்லாமல் வேகமாய்ச் சென்று குளியலறைக்குள் நுழைந்து கொண்டேன். மெய்யாலுமே பசிக் கிரக்கமாயிருக்கிறது எனக்கு.

    வீட்டு முகவரி, அலைபேசி எண் முதலான தனிப்பட்ட தகவலெதையும் பகிராமல் உதவி செய்து வந்த செருக்குடன் கூடிய மகிழ்ச்சியோடு, வெதுவெதுப்பான சுடுநீர்ச் சாறல்க்குளியலில் திளைத்துக் கொண்டிருக்கிறேன் நான்.  “யாரோ வெள்ளைக்காரியாம். யாரது? அவளை எப்படி இந்தாள் சந்திச்சாரு? இந்தாள் எதுக்கு அவளுக்குப் பணம் கட்டணும்??” இப்படியான பல குடைச்சல்களுடன் கூடிய தலைவலி வரவேண்டியவருக்கு வந்துவிட, சமையலறையில் உருண்டு புரண்டு சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கிறது வாயில்லாத எங்கள் வீட்டுப் பாத்திரங்கள்.

    Share
  • புத்தாண்டு வாழ்த்துக்கள்!

     

     

    காலமெனும் தேரேறி வருடமொன்று
    காற்றோடின்று பறந்ததுவே
    கண்டது நாம் பல நன்மை தீமையே
    கரையட்டும் துன்பங்கள் அதனுடனே
    தடைகளைத் தாண்டி நாமும்
    விடைகளைத் தேடி ஓடினோம்
    முடைகளை விலக்கியே ஆண்டின்
    முடிவினில் மிதக்கிறோம்
    இரண்டாயிரத்து பன்னிரண்டு
    இயம்பிய உண்மைகள் பலவுண்டு
    இதயத்தில் அவற்றை நிறுத்தியே
    இரண்டாயிரத்து பதின்மூன்றேகுவோம்
    பழையன கழிதலும் புதியன புகுதலும்
    பதித்திடும் படிப்பினை பகிர்ந்திடும்
    பளிச்சிடும் உண்மைகள் விழித்திடும்
    பனித்திடும் விழிகளை நிறைத்திடும்
    சுவைத்திடும் காலங்கள் கொண்டது
    சுவைதரும் நிகழ்வுகள் கொண்டது
    சுகந்தரும் நினைவுகள் தந்திடும்
    சுந்தரமான புது வருடம்
    அனைத்து அன்பு உள்ளங்கள்
    அனைத்துக்கும் அன்புநிறை
    ஆயிரம் புதுவருட வாழ்த்துக்கள்
    வாழிய ! வாழிய ! நிறைவுறவே !
    அன்புடன்
    சக்தி சக்திதாசன் குடும்பம்
    Share
  • வருக புத்தாண்டே!

    கவிநயா

     

    புத்தாண்டை வரவேற்போம்!

    புதுவாழ்க்கை அமைத்திடுவோம்!

    புத்துணர்வு பெற்றிடுவோம்!

    புதுமைபல செய்திடுவோம்!

     

    கவலைகளைக் கழற்றி வைப்போம்!

    தன்னம்பிக்கை தக்க வைப்போம்!

    முயற்சிகளை முடுக்கிடுவோம்!

    அயர்ச்சிகளைத் தள்ளி வைப்போம்!

     

    அன்பாலே கோவில் செய்வோம்!

    அறிவொளியால் விளக்கிடுவோம்!

    அவனியெல்லாம் ஒளியேற்றி

    ஆனந்தமய மாக்கிடுவோம்!

     

    இயற்கையைப் பேணிடுவோம்!

    இச்சகத்தைப் போற்றிடுவோம்!

    இறையவனின் தாள்பணிந்து

    இன்பமுடன் வாழ்ந்திடுவோம்!

     

    படத்துக்கு நன்றி: http://thelonggoodbye.wordpress.com/2011/12/18/happy-new-year-wallpaper-romney-picks-up-endorsements-and-gets-machiavellian/

     

    Share
  • பூவிதழாய் வருக!

     

    திருஅரசு

    புத்தாண்டே வருக! பூவிதழாய் வருக!
    பூத்துக்குலுங்க வருக! நறுமணமாய் வருக!
    மெல்ல மெல்ல வருக! மெல்லிதழாய் வருக!
    சப்தமில்லாமல் வருக! சங்கீதமாய் வருக!
    தவழ்ந்து தவழ்ந்து வருக! தளிர்நடையாய் வருக!
    வசந்தமாய் வருக! வருக வருகவே!
    வண்ண வண்ணமாய் வருக! வளமாய்  வருக!
    பனித்துளியாய் வருக! பசுமையாய் வருக!
    சிறு சிறு மழையாய் வருக! சித்திரச் செவ்வானமாய் வருக!
    மழலையின் மகிழ்வு சிரிப்பாய் வருக, வருகவே!!

     

     

    Share
  • வந்தது புத்தாண்டு…

    செண்பக ஜெகதீசன்…

     

    வந்தது புதிதாய் ஆண்டு

    வாழ்க்கை சிறந்திட வேண்டு,

    சிந்தையில் மேன்மை கொண்டால்

    சிறப்புதான் என்றும் உண்டு,

    முந்தைய ஆண்டின் தடைகள்

    முன்னே செல்ல நடைக்கல்,

    நொந்திடத் தேவை யில்லை

    நாளை நீயே வெல்வாய்…!

     

    படத்திற்கு நன்றி: http://www.ladcblog.org/2012/01/the-7-ups-of-life/thumbs-up/

    Share
  • 2013

    -தனுசு-

     

    எங்களோடு சேரும்
    இன்னுமொரு என் நண்பனே
    உனக்கு
    வரவேற்பு முதலில்
    வருக! வருக!!

    ஒவ்வொரு ஆண்டும் சேரும்
    ஒவ்வொரு நண்பனும்
    ஒவ்வொரு வகையில்
    எங்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறான்!

    அந்த வகையில்
    இன்று எங்களோடு கை கோர்க்கும் நீ
    எங்கள் கரம் பற்றி
    கொண்டு செல்….

    குற்றம் தவிர்த்து
    சுற்றம் சேர்த்து
    பற்றை வளர்த்து
    பஞ்சம் போக்கி
    வன்மம் நீக்கி
    நெஞ்சை நிமிர்த்தி
    வீரம் வளர்த்து
    வெற்றி படைத்து வாழ!

    இதுவரை நாங்கள்
    சேர்த்த நண்பர்களில்
    நீயே
    முதல்வனாய் இரு!
    மூலவனாய் இரு!
    முன்னவனாய் இரு!
    மூத்தவனாய் இரு!

    எங்கள் இல்லங்களில்
    உன் பாதம் படத்துவங்கும்
    இந்த நேரத்தில் இருக்கும்
    உற்சாகமும் ஆணந்தமும்
    என்றென்றும் நீடித்திருக்க வேண்டுமென
    கூறிக்கொண்டு வா
    அனைவருக்கும்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்!

     

     


     

     

    Share
  • இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்….!!

    ராஜேஸ்வரி ஜெகமணி

    ஆங்கில ஆண்டின் முதல் நாள் இது ..


    ஆனந்தமாய் வாழ்த்தும் பொன்னாள் இது..
    வெற்றி நம்மைத்தேடி வரும் நன்னாள் இது ..
    எண்ணப்படி வாழ்வு தரும்  இந்நாளில்
    இன்று போல் என்றும் வாழ புத்தாண்டு வாழ்த்துகள்….

    எண்ணிய முடிதல் வேண்டும்  
    நல்லவே எண்ணல்வேண்டும்;
    திண்ணிய நெஞ்சம் வேண்டும் ;
     தெளிந்தநல் லறிவு  வேண்டும்;

    மனதில் உறுதி வேண்டும்
       வாக்கினிலே  இனிமை வேண்டும்;
    நினைவு நல்லது வேண்டும்,
       நெருங்கின பொருள் கைப்பட  வேண்டும் ;

    கனவு மெய்பட வேண்டும்,
       கைவசமாவது விரைவில்  வேண்டும்
    தனமும் இன்பமும் வேண்டும்
       தரணியிலே பெருமை வேண்டும்;

    என்று  பொன் எழிலாய் பூத்திருக்கும் புத்தாண்டில் பிரார்த்திப்போம் …

    துன்ப மினியில்லை.சோர்வில்லை,தோற்பில்லை,
    அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட புத்தாண்டினை வரவேற்போம் …

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில்
    ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
    நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த
    ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

    இனிய நாளை இன்னிசையோடும் இன்பத்தோடும் , இனிப்போடும் கொண்டாடி மகிழ இனிய வாழ்த்துகள்….

    Share
  • புது வருடம்

    தேவா

     

    புது வருடத்தில்

    அவன்  வாழ்க்கை சிறக்குமா ..

    நல்ல நேரம் பிறக்குமா ???

    தின நாளிதழில் தேடிகொண்டிருந்தான்

    வாழ்கையை இளைஞன் ,

    இளைஞனே!!

    உனக்கு  சொல்வேன்,

    உழைக்கும் தினமுனது ”முகூர்த்தநாள்”

    உறங்கா நேரம்

    உன் ‘‘நல்ல நேரம் ”

    சோம்பி படுத்திடும் நேரம் ”’ராகுகாலம் ”’

    வீணடிக்கும் நேரமே ,…..

    உன் ”’எமகண்டம் “…..

     

    படத்துக்கு நன்றி: http://mimohanraj.wordpress.com/category/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/

    Share
  • என்றோ ஒரு நாள்!

    இன்னம்பூரான்

    புத்தாண்டு தினம்: 01 01 2013

    புத்தம் புதிய நேரம்: 01 01 1906

    நண்பர்களே!

    மடலாடும் குழுக்களில் இருக்கும் நாம், மற்றபடி ஆடாவிடினும், மடலாடி பழகுவுமே என்ற எண்ணம் உதயமாயிற்று. இனி, முடிந்தவரை கடுதாசிகள் எழுதுவதாக, உத்தேசம். அது நம் நெருக்கத்தை மேன்மைபடுத்தும் என்று தோன்றுகிறது. நேரமின்மையால், என்னுடைய இணையதளத்திலும். வலைப்பூவிலும் பதிவுகளை ஏற்றுவதில் சில வருட தாமதம் ஆகிவிட்டது. விட்ட குறை, தொட்ட குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது. இனிமேல், என்னுடைய இணையதளத்திலும், வலைப்பூவிலும் பதிவுகளை ஏற்றி, அதற்கான தொடர்பு கொடுத்தால், அதை மனமுவந்து படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதழியல், மடலாடல் குழுக்கள் விதிகளுக்கு உட்பட்டு என் இயக்கம் அமையும்.

    முதற்கண்ணாக, உங்கள் யாவருக்கும் என் 2013 புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் அபிலாஷைகள் பூர்த்தியாக வேண்டும் என இறைவனிடன் என் பிரார்த்தனைகள்.

    அன்புடன்

    இன்னம்பூரான்

    01 01 2013

    *

    திருமலையில் அலை மோதும் கூட்டம். நிரம்பி வழியும் உண்டியல். இந்து மத அபிமானிகள், சமய சந்தர்ப்பமாக அகப்பட்டுக்கொண்ட கிருத்துவ பண்டிகையை, விமரிசையாக கொண்டாடுவார்கள். ‘அதைக்கொடு’, இதைக்கொடு’ ஒம்மாச்சியிடம் பட்டியல் சமர்ப்பிப்பார்கள். சந்தடி சாக்கில், நானும் உங்கள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மாமாங்கம் 12 வருடங்களுக்கு ஒரு முறை. இங்கோ 26 வருடங்களுக்கு பிறகு தான் நாலு இலக்கங்களும் வெவ்வேறாக அமைந்துள்ளன. (1987 ~2013). அத்துடன் விட்டு விடுவது விவேகம். இதில் ஆரூடம் தேடுவதற்கு ஒன்றுமில்லை.

    க்ரகேரியன் காலண்டர் படி மூன்றாவது சகாப்தத்தின், 21வது நூற்றாண்டின், 2010 என்ற பத்தாண்டு வரிசையில் நான்காவது ஆண்டு பிரவேசிக்கும் இந்த தினம், கலியுகத்தின் 5114-5 ஆண்டாகக் கருதப்படுகிறது. அசிரியன் காலண்டர் அதை விட அரதப்பழசாம்: 6763. சும்மா பத்தாயிரம் ஆண்டுகளை கூட்டிக்கொண்டால், ஆச்சு ஹொலெசின் காலண்டர்: 12013. அது தொல்லியல் துறை போன்றவைக்கு பயன் படுமாம். யுனிக்ஸ் நேர பட்டியல் கொடுத்து, கணக்கு எலிகளாகிய உம்மையும், எம்மையும் பயமுறுத்தும் உத்தேசம் இல்லை.

    இந்தியாவில் தொன்மை காலத்திலிருந்தே ‘காலம்/ன் மீது கவனம் அதிகம். கி.பி.நான்காவது நூற்றாண்டு காலகட்டத்திலியே ‘சூர்ய சித்தாந்தம்’ என்ற நக்ஷத்திர மண்டலம் பற்றிய நூல், உலகம் உருண்டை என்கிறது. உஜ்ஜயின் என்று இன்று கூறப்படும் அவந்தி என்ற நகருக்கும் ரோஹிதகா நகருக்கும் இடையே ஓடும் ரேகையை மையப்படுத்தி, கால நிர்ணயம் செய்கிறது.  நாகரீகத்துக்கும், பண்பாட்டுக்கும், கலைகள், கல்வி, அறிவியல் ஆகியவற்றுக்கு மூலாதாரமாக விளங்கிய மேதைகளை அணைத்து, ஆதரித்து, போஷித்தது பழங்கால மன்னராட்சிகள் என்பதற்கு சந்திரகுப்த மெளரியர், அசோகச் சக்கரவர்த்தி, தென்னாட்டு சேர,சோழ, பாண்டியர், ஷெர்ஷா ஸூரி போன்றோரின் சாதனைகள் சாட்சி. வர, வர மாமியார் கழுதை போல் ஆனாளாம் என்றபடி, 17ம் நூற்றாண்டிலியே இருண்ட காலம் தொடங்கியது. அறிவியலுக்கும் அரசாங்கத்தும் காத தூரம் என்று அந்தப்புர வாசிகளாகிவிட்ட இந்திய சமஸ்தானதிபதிகள் சூர்ய சித்தாந்ததைக் கண்டுகொள்ளவில்லை. காலம் மாறாவிடினும், அங்கங்கே (தற்கால அமைப்புப்படி, ஜில்லாவுக்கு, ஜில்லா!) நேரங்கள் மாறிய வண்ணம் பாடாய் படுத்தின. மக்களை பற்றி யாருக்குக் கவலை?

    1802 லிருந்து மதராஸ் நேர நிர்ணயம் என்று ஒரு நடைமுறை இருந்தாலும், 1905 வரை, அதாவது ஒரு நூற்றாண்டுக்கு மேல், மத்திய அரசு கால நிர்ணயம் பற்றி கவலைப்படவில்லை. அலஹாபாத் அருகில் ஓடும் 82.5 கிழக்கு: என்ற ரேகையை மையப்படுத்தி, ஜனவரி 1 ,1906 அன்று இந்தியாவின் ஒரே ஒரு கால நிர்ணயத்தை பிரகடனப்படுத்தியது. அந்த பிரகடனத்தின் நினைவாக, இன்றைய தலைப்பு அமைந்தது.

    ஆனால், 1947 வரை பம்பாயும், 1948 வரை இந்த விஷயத்தில் கல்கத்தாவும் தனி ராச்சியம். அது மட்டுமல்ல. இரண்டாவது யுத்த காலகட்டத்தில், செப்டம்பர் 1, 1942லிருந்து அக்டோபர் 14, 1945 வரை, இந்தியாவின் நேரம் ஒரு மணி நேரம் முந்தி வைக்கப்பட்டது. இந்த நல்ல வழக்கம் ஏன் கை விடப்பட்டது என்று புரியவில்லை. இன்றளவும் மேற்கத்திய நாடுகள், மின்சாரத்தை மிச்சம் பிடிக்க, இந்த முறையை கையாளுகின்றன.

    இந்தியா ஒரு காண்டம் போன்ற பெரிய நாடு. அருணாசலபிரதேசத்தில் ஆதவன் எழும்போது, அஹமாதாபாத்தில் இருட்டு. ஆகவே, அதற்கேற்ப மணி அடிப்பது தான் விவேகம். கிட்டத்தட்ட 28 தீர்க்கரேகைகளை உட்கொண்ட நம் பிரதேசத்தில், இந்த இரண்டு மாநிலங்களுக்கும் இரண்டு மணி நேர வித்தியாசம் இருப்பது என்னவோ, விஞ்ஞானம் அறிந்த உண்மை. அதை விஞ்ஞானிகள் அழுத்தமாகக் கூறினாலும், அரசு அசைந்து கொடுக்கவில்லை. பூகோள உண்மைகளை பகர்ந்து விட்டு, இந்த 28 தீர்க்கரேகைகளை உட்கொண்ட நம் பிரதேசம் பெரிதல்ல என்றும், சீதோஷ்ண நிலை ஒரு பொருட்டு அல்ல என்று அடித்துப் பேசி ‘ஒரே இந்தியா! ஒரே கால நிர்ணயம்’ என்ற அறிவியல் கலைந்த கூற்றை 2004ல்  உறுதி செய்து விட்டார், நாம் விஞ்ஞான அமைச்சர் கபில் சிபல் அவர்கள்.  ரயில்வே கால அட்டவணைகளைப்பார்த்தால் திகைத்துப் போகும் வரை, அவை பல குழப்பமான வகைகளில் காலம் தள்ளி வந்தது தெரிய வருகிறது. சொல்லப்போனால், அது பெரிய கதையாக நீண்டு விடும்.

    அன்புடன்,

    இன்னம்பூரான்

    01 01 2013

    *

    உசாத்துணை:

     http://www.hindustantimes.com/editorial-views-on/Edits/Two-timing-India/Article1-246310.aspx

    http://www.hindu.com/thehindu/mp/2002/01/07/stories/2002010700130300.htm

    http://dst.gov.in/admin_finance/un-sq1007.htm

    *

    Copyright: Innamburan: The moral rights of the author has been asserted. No reproduction in any form/fashion without his prior permission.

    Share
  • மெய்ஞ்ஞானத்திலிருந்து தோன்றியதே விஞ்ஞானம்!

    நேர்காணல் – பவள சங்கரி

    புகழ் கண்டு மயங்காதே
    புகழ் தேடிச் செல்லாதே
    புகழாரம் பாடாதே.

    இன்னல் கண்டு கலங்காதே
    இகழ்ச்சி கண்டு பதராதே
    இகழ்ந்துரைக்க எண்ணாதே

    தியானம் என்றால் என்ன?

    “எண்ணத்தை வெளிப்படுத்துவதுதான் தியானம். நல்லெண்ணத்தை நாம் கொள்ளும்போது அதுவே நம் செயலுக்கு ஆதாரமாக விளங்குகிறது. நற்சுவாசத்துடன், நல்லெண்ணத்தை நாம் வெளிப்படுத்தும்போது அந்த அலைகள் அதற்கு தகுந்தவற்றை ஈர்த்து நம் செய்கைக்கு துணை புரிகின்றது.”

    “தியானம் மூலம் தம் குருதேவர் ஈஸ்வரபட்டர் மாமகரிஷிகள் கொடுக்கும் பாடங்களின் மூலம் தம்முடைய மெய்ஞ்ஞானத்தை உயர்த்திக் கொள்வதோடு தம் வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொண்டு அதன் தரத்தையும் உயர்த்திக் கொள்ளலாம். சப்த ரிஷிகளின் துணையோடு, மாமகரிஷிகள், நவகோள்கள் , ராசி மண்டலங்கள், நட்சத்திர மண்டலங்களின் ஈர்ப்போடு தம்மைத் தாமே உயர்த்திக் கொள்ள்லாம்” என்று ஆணித்தரமாகக் கூறும் ஞானத்திருமதி ராஜம்மாள் பாலசுப்பரமணியம் அம்மையார், தன்னுடைய 70 அகவையைத் தாண்டியவர். சற்குருதேவர் ஈஸ்வரபட்டர் மாமகரிஷியின் அருளாசிகளால்தான் உங்களுடன்  உரையாடுகிறேன் என்று ஆரம்பித்தவர், நல்ல ஆரோக்கியமும், தெளிவான சிந்தனையும், கலகலப்பான உற்சாகமும், அமைதியான மனோநிலையும் கொண்ட இளம் மங்கையாக வலம் வருதலே இதற்கான சான்று.. ஆவிகளுடன் தம்மால் உரையாட முடியும் என்றும் அதற்கான அனுமதி கிடைக்கும் போது மட்டுமே அது குறித்த செய்திகளை பகிர்நது கொள்ள முடியும் என்றும் சொல்லி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். இது குறித்து அவரிடம் மேலும் சில வினாக்களும் அதற்கான அவ்ருடைய விடைகளும் பல ஐயங்களை தெளிவாக்கும் விதமாக அமைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரியின் தாளாளர் ’கவாலியர்’ எம். எஸ் மதிவாணன் அவர்களின் உடன் பிறந்த சகோதரி இவர். இவர்களின் குடும்பமே ஆழ்ந்த ஞானமும், எண்ணமே கடவுள் என்ற உறுதியான நிலைப்பாடும், நேர்மையே  இலட்சியம் என்ற கடப்பாடும் கொண்டு செயல்படும் பாங்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியது.

    தியானத்தினால் சாதிக்கக்கூடியவை எவை?

    தம்முள் இறைவனைக் காணும் சக்தியைப் பெற்று தெய்வ நிலை பெறச் செய்வதே தியானம். இல்லறத்தை நல்லறமாக்கி, இல்லத்தையே ஆலயமாக்கி, இல்லறத்தில் இருந்தபடியே உயர் ஞானம் பெற்று இறைத்தன்மையை அடையச் செய்வதே தியானம்.

    இறைவனை எங்கனம் அறிவது?

    பாலாகி, தயிராகி, மோராகி, வெண்ணெயாகி,நெய்யுமாகி உருப்பெற்ற பிறகு மீண்டும் மாற்ற முடியுமா? அதை நெய்யாக மட்டுமே பயன்படுத்த முடியும். கொடிய விடமும், அமுதுணவும் அனைத்துமே ஆண்டவன் படைப்புதான். பாலைப்போல எண்ணமும், பாலின் உருமாற்றத் தயிரைப்போல் இவ்வெண்ணத்தால் எடுக்கும் சுவாசமும், மோரைப்போல் கடையப்பெற்ற உணர்வும், வெண்ணெயைப்போல் அவ்வுணர்வின் வழித்தொடர் திரட்டலும், நெய்யைப் போல ஞானமும் பெற்றால் அந்த ஞானத்தையே ஒவ்வொரு ஆத்மாவும் அவரவர்கள் எதன் வழித்தொடரை செயலாக்கும் குறிக்கோள் கொண்டுள்ளனரோ அவற்றில் நெய்யைப் போன்று செயல்படுத்தலாம்.

    தியானத்தின் மூலம் கடவுளைக் காண முடியுமா?

    “எண்ணமேதான் கடவுள்;
    கடவுளேதான் எண்ணம்;
    எண்ணத்தை பரிசுத்தப்படுத்தினால்
    கடவுளைக் காணலாம்!

    இயற்கையே கடவுளாக்கி, அன்பையே தெய்வமாக்கி நல்லெண்ணம், நல் சுவாசம் எடுக்கும் முறையை வழிப்படுத்துதல் வேண்டும். இயற்கையே கடவுள் என்றால் இயற்கையின் படைப்பான நாமும் கடவுள்தான். இயற்கையின் கடவுளான நாம் அன்பான தெய்வ உணர்வை உணர்ந்தோமானால், அத்தெய்வீக நல்லுணர்வு கொண்ட சுவாசம் நாமெடுக்கும் பொழுது அவ்வுணர்வால் ஏற்படும் நல்லெண்ணமுடன் கூடிய சுவாசத்தால் இறைவனின் இயற்கைப் படைப்பிற்கு நற்சக்தி ஒளி அலை கூடுகின்றது.

    இயற்கையாய் உள்ள் நம் பூமியின் உணர்வின் சுவாச நிலைக்கொப்ப அமில குணக்காற்றைத்தான் பால்வெளி மண்டலத்தில் பலவாக பரவியுள்ள அமில குண நிலையையே சூரியனின் அமில குணத்திற்கும், பூமியின் உணர்வு அமில சுவாச மோதலுக்கும் தனக்கு வேண்டிய அலையை மட்டும் எடுப்பதினால், இன்றுள்ள இவ்வகத்தக் காற்று மண்டல நிலையையே நாமெடுக்கும் நல்லுணர்வின் கூட்டுச் சக்தியினால் எடுக்கப்படும் ஜெபசுவாச அலையின் ஈர்ப்பினால் பூமியையே புனிதத் தன்மை ஈர்ப்பாக்கலாம். எண்ணிலடங்கா மனித ஆத்மாக்களின் எண்ண சுவாசமும் மற்ற இனவர்க்கங்களின் சுவாசமும் நம் பூமி எடுத்து வெளிகக்கும் சுவாசமுடன் கலந்து வெளிப்படும் இயற்கையையே நற்கடவுளாக்க நல்லெண்ண சுவாசம் நாம் எடுக்க வேண்டும்.

    நல்லெண்ணம் மட்டுமே இறைவனைக் காணும் வழி என்றால் எண்ணத்தை பரிசுத்தப்படுத்துவது எங்கனம்?

    பசி, தூக்கம் மற்றும் இயற்கையின் சில மாற்றங்களும் நம் உடலில் எண்ணத்தைச் செலுத்தாமலே உணர்வினால் ஏற்படுகிறது. உணர்வால் எண்ணத்தால் தெரிவதைப் போன்று எண்ணத்தைக் கொண்டு உணர்வையும் மாற்றி அமைக்க முடிகிறது.

    ஜீவனுக்கே சக்தி நீர். அந்நீர் சக்தியுடன் வளரும் பூமியில் எப்படிச் சில இரசாயணத் திரவங்களை எடுத்து அவற்றைப் பக்குவ முறையினால் மாற்றிய பிறகு அதே நீரை அவற்றில் சேர்த்தால் கெட்டுவிடுகிறது. நீரில்லாமல் எண்ணெய் இல்லாவிட்டாலும்  நீர் சேர்த்தால் எண்ணெய் கெட்டுவிடுகிறது. இதைப்போன்று நம் எண்ணத்தை நாம் செலுத்தும் முறைப்படியே தெயவமாகவும் ஆகலாம்  அன்றி பேயாகவும் சுழலலாம்.. ஆக நல்ல எண்ணங்களே நம்மை கடவுட்தன்மை பெறச்செய்கிறது. அதாவது, உணர்வுடன் கூடிய எண்ணங்களைச் செலுத்தி பலவாக நிலைகளைப் புரியும் ஆற்றல் கொண்ட முதிர்ச்சியுற்ற பிறப்பினனான மனிதன், எந்த உணர்வின் அடிப்படையில் வளர்ச்சியின் வழிப்பெற்றானோ அதே உணர்வலைக்குத் தன்னை வழிநடத்த இந்த ஞானத்தைச் செலுத்துவானேயானால் அவனே தேவனாகலாம்.

    இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் கோபம், குரோதம், வஞ்சனை, வெறி போன்ற தீய எண்ணங்களை வளர்த்து ஆண்டவனின் ஆலயத்தை அசுத்தம் செய்யாமல், நம் எண்ணத்தை உயர் ஞானம் கொண்டு சொல்லாலும், செயலாலும் , நம்முள் இருக்கும் இறைவனை வணங்குதலே அந்த இறைவனை நேரில் காணும் மார்க்கமாகும்.

    மதம் என்பதன் அடிப்படையில் இறைநிலையை அடையும் தன்மை பற்றி தங்கள் கருத்து என்ன?

    பேரண்ட பூமியின் காற்று மண்டலத்தின் ஈர்ப்பு ஓட்டத்தில் ஓடும் நம் பூமி ஒலிக்கும் நாதம்தான் ‘ஓம்’ என்ற நாதம். இந்த ‘ஓம்’ என்ற நாதமே பூமியின் சகல ஜீவராசிகளுக்கும் அடிப்படை. இந்த ‘ஓம்’ என்ற நாதத்தின் ஒலியில்தான் எல்லாமில் எல்லாமாய் நாம் உள்ளோம். மற்ற மண்டலங்களில் இவ்வொலியின் தன்மை மாறுபடுகிறது. நம் பூமியின் ஜீவ ஒலியான இந்த ‘ஓம்’ என்ற ஒலியை நாம் எடுக்கும்போது நம் ஆத்மாவும் அவ் ‘ஓம்’ என்ற ஒலியுடனே ஐக்கியப்படுகிறது. இதையே கிறித்துவ மதம் ‘ஆமென்’ என்றும் முகமதியர்கள் , ‘அல்லாஹீ அக்பர்’ என்றும் நாதமெழுப்புகின்றனர்.

    மனித இனங்களை மதத்தினால் அவர்களுக்கு நல் உணர்வுகளும், சில வழித்தொடர் வாழ்க்கையில் நல் வழிகளையும் ஒழுங்குபடுத்தி மதம் என்ற அடிப்படை பிணைப்பிற்குள் ஓர் கூட்டு அமைப்பு ஏற்படுத்தி மனித இனங்களின் எண்ணங்கள் சிதறாமல் ஒழுங்கு முறையென்ற வேலி அமைத்து பாதுகாப்பு உணர்வைக் கூட்ட வழிவந்தது மதம். ஆனால் வளர்ந்துவிட்ட இந்த சமுதாய வளர்ச்சிப் பெருக்கத்தில் மதத்தைக் கொண்டு இனத்தைப் பிரிக்கும் துவேச அலைகளும், தன் மதம் என்ற வெளியின் பிணைப்பும் வளர்த்துக் கொண்டு ஒன்றே குலமான மனித இனத்தை ஒருவனே தேவனாக உணரும் வழித் தொடரை மதங்களைப் பிரித்து, உணர்வுகளை மாற்றி தத்தம் சமுதாய இச்சையின் வெறியில் சுழன்றுள்ள் இக்கலியின் காலத்தில் வளர்ந்துவிட்ட இனப்பெருக்கத்தில் எந்த அடிப்படையில் மதம் உருவானதோ அதற்கெல்லாம் மீறிய இனப்பெருக்கத்தில் உள்ள சமுதாய வளர்ச்சியில் மாற்றம் கொண்டுள்ள இந்நாளிலும் இம்மதம் என்ற பிடியிலிருந்து எல்லா மதமும் நம் மதம்தான் என்ற மனித ஆத்மாவின் உயர்ந்த ஞான மதம் செல்ல வேண்டும். எம்மதமும் தனதாகக் கொள்ளும் ஞான உணர்வுதான் இன்றைய காலகட்டத்தின் அவசியத் தேவையாகும். எண்ணத்தால், உணர்வால் ஞான மதம் ஒவ்வொருவரும் பெறல் வேண்டும்.

    ”காற்றிலிருந்தே ஆகாரம் பெற முடியும்” என்ற தங்கள் கருத்தின் அடிப்படை யாது?

    சரீரத்தில் சுவாசம் நாசியின் வழிகாற்று ஆகாரம் உட்செல்லும் பொழுது உடலினுள் இயங்கும் உயிர்காற்று நொடிக்கும் குறைவான நேரத்தில் நாடிகளின் வழியோடி செயல்படும் விதமே, சரீரத்தை இயக்கி தொழில்படும்பொழுது உடலில் பசி, தாகம் ஏற்படுவதெல்லாம் இந்த உயிர்காற்றின் மூலம்தான் சரீரசெயல் அனைத்தையும் ஓர் கட்டுக்கு வைத்து பஞ்சேந்திரியங்கள் புற வாழ்க்கைச் செயலில் இயங்கும் இயக்கத்தை நிலைநிறுத்தி, ஒருமையுள் ஐந்திடக்கிட்டால், தியானத் தொடரே நிலைபெற்றுவிட்டால், காற்றிலிருந்தே ஆகாரம் பெற்றிடும் அமைவு ஏற்பட்டுவிடும்!

    மனிதன் மகானாவது எங்கனம்?

    வாழ்க்கையில் எளிமையும், ஆத்மாவில் சுகத்தையும் அனுபவிக்கும் எண்ணத்தின் குணத்தைப் பெறும் மார்க்கமே மனிதன், மனிதனாகும் முதல் நிலை. இம் முதல் நிலையில் மனிதனால் எடுக்கப்படும் அறிவின் பகுத்தறிவு உயர்ஞானத்தின் மெய்ஞானத்தில் கண்டறியும் உண்மையின் சக்தியை மனிதருக்குள் மனிதராய் விதைக்கப்படும் ஒலி அலைகள் ஒளி பெறும். மனிதனைப் பக்குவப்படுத்தும் நிலைதான் மகானாகும் நிலை!

    தியானத்தின் பலன் பற்றி….?

    காற்றலையில், ஜீவ நீர்ச்சக்தியில் சூரியனுக்கும் பூமிக்கும் மற்ற கோள்களின் தொடர்புக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும் சுழல் ஓட்டத்தினால் காந்த மின் தொடர்பு ஒலியாகி, ஒளியாகி, நீராகி உருவாகும் உயிர்த்துடிப்பு ஒவ்வொன்றிலுமே காந்த மின் அலை வளர்த்து, சக்தியின் தொடர்பை மனித உணர்வு எண்ணத்தால் ஜீவகாந்த நினைவு அறியும் அறிவு, பகுத்தறியும், ஞானமுதிர்ச்சியுற்ற நம் சரீரத்தை, நாம் நம்முள்ளுள்ள ஜீவகாந்த நுன்ணலையை உயர்காந்த ஈர்ப்பு நிலைக்கு இவ்வுடல் என்ற கோளத்தையே எண்ணத்தில் தியானம் கொண்டு மனிதனின் உயர்வு நிலைக்கு ஒளிநிலை என்றும், பிறவாநிலை என்றும் உணர்த்திய வழித்தொடருக்குச் செல்ல வழிகாட்டுவதே தியான முறை.

    புறத்தடைகளைத் தகர்த்து அகத்தினுள் ஆழ்ந்து தியானம் செய்யும் முறை யாது?

    கண்மூடி அமர்ந்து முதலில் தாய், தந்தை, அடுத்து குலதெய்வத்தையும், அடுத்து குருவையும் வணங்கிப் பின் உயர்வு வழி காட்டிய நற்குண தெய்வநிலை பெற்றோரின் எண்ணமுடன் நம் எண்ணத்தைச் செலுத்தி பின் எண்ணத்தை மேல்நோக்கி சூரியனின் எதிரில் நாம் உள்ளதாக எண்ணி ‘ஓம்’ என்ற ஒலியுடன் சுவாசத்தை மேலே சூரியனிலிருந்து எடுத்து சூரியனை புருவ மத்தியில் பொட்டு வைக்கும் இடத்தில் நினைத்து,  எண்ணத்தைக் குவித்து, சித்தர்கள், ஞானிகள், முனிவர்கள், மகரிஷிகள் ஆகியவர்களை மனதில் எண்ணிச் சாந்தமாய் சுவாசமெடுத்து தியானித்துப் பழக வேண்டும்.

    அப்போது நம் வாழ்க்கைத் தொடர்பில் நடந்தவை, நடப்பவை, நடக்க வேண்டியவை போன்ற எண்ணங்கள் யாவும் இவ்வுணர்வில் இச்சரீரம் பெற்ற காலம் முதற்கொண்டு ஓடிய நினைவோட்டங்கள் மோதும். அதே ஓட்டத்தில் எண்ணத்தைச் செலுத்தாமல், அவரவர்கள் தெய்வமாய் வணங்கும் குல தெய்வத்தின் தொடர்பு கொண்டு சாதி, மத வேற்றுமை இன்றி முன்னோர்களால் வழிப்படுத்திக்காட்டிய தம் குருத் தொடர்பைக் கூட்டிக்கொண்டு , நாம் எண்ணும் குரு சூரியனில் இருந்தே நம் ஆத்மாவை உயர்வு நிலைப்படுத்தும் உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி அறியும் தொடர்புடன் உணர்வை ‘ஓம்’ என்ற ஒலியுடன் இச்சுவாசத்திற்கு உயர்காந்த நுண் அலையை எடுக்க வேண்டும்.

    இச்சரீரம் ஜீவகாந்த சக்தி கொண்டது. நாமெடுக்கும் அலை உயர்காந்த நுண்ணிய ஒலி சக்தி பெற்றது. உடல் என்ற ஜீவசக்தி உணர்வு எண்ணத்தில் உயர்காந்த தொடர்பலையை அறியும் ஆற்றலுடன் தியானத்தை மேற்கொண்டோமானால் மனிதனுக்கடுத்த தெய்வநிலை இச்சரீர பிம்பத்திலிருந்தே ஒவ்வொருவரும் பெறலாம்!!

    நாமும் தெய்வநிலையைப் பெற முயற்சிப்போம் என்ற நற்சிந்தையுடனான மன நிலையுடன் ராஜம்மாள் அம்மையாரை வணங்கி விடைபெற்று வந்தோம்.

    Share
  • இஸ்ரேல் பயணம் – பகுதி (3 )

    நாகேஸ்வரி அண்ணாமலை

    யூதர்களுக்குத் தனி  நாடு வேண்டும் என்று எண்ணியவர்களில் யெஹுதா ஹை அல்கலை (Yehuda hai Alkalai) என்பவரும் ஒருவர்.  இவர் 1798-இல் போஸ்னியாவில் உள்ள சரஜெவோவில் (Sarajevo) யூத மத போதகர் ஒருவரின் (Rabbi) மகனாகப் பிறந்தார்.  சிறு வயதில் பாலஸ்தீனத்தில் வளர்ந்தபோது (யூத மதக் கல்வியைக் கற்றுக்கொள்ளும் பொருட்டு யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு வந்துகொண்டிருந்தனர்) யூத மத போதகர்களின் கருத்துக்களின் தாக்கத்திற்கு உள்ளானார்.  1825-இல் செர்பியாவில் யூத மத போதகராக வேலைபார்த்தார்.  1834-இல் இவர் எழுதிய புத்தகத்தில், அதுவரை யூத மதத்தினர் கடவுளின் தூதர் தங்களை வந்து தங்களுடைய புண்ணிய தலத்திற்கு அழைத்துச் செல்வார் என்று எண்ணியிருந்ததற்கு மாறாக இவர் பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடியிருப்புகளை அமைக்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தார்.  1840-இல் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் (அப்போது அது ஆட்டொமான் பேரரசில் இருந்தது.  பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை ஆட்சி நடத்திய ஆட்டோமான் பேரரசு இப்போதைய துருக்கி, சிரியா, லெபனான், ஈராக், இஸ்ரேல், பாலஸ்தீனம், எகிப்து, யேமென் ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருந்தது). குழந்தைகளின் இரத்தத்தை மதச் சடங்குகளுக்கு உபயோகிக்கிறார்கள் என்று யூதர்களின் மீது குற்றம் சுமத்தப்பட்ட போது தங்களுக்கென்று ஒரு சொந்த நாடு வேண்டும், அங்குதான் அவர்களுக்குப் பாதுகாப்பு என்ற முடிவிற்கு வந்து, யூதர்கள் தங்களுடைய மீட்சிப் பணியில் தாங்களே ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்திப் பல சிறிய புத்தகங்களும் அறிக்கைகளும் வெளியிட்டார்.  கடவுளின் தூதர் வருவதற்கு முன்பே யூதர்கள் தங்கள் புனித நாட்டில் வாழ்ந்து அவரை வரவேற்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.  தூதரை அனுப்பிவைப்பது இறைவனின் செயல் என்றாலும், மனிதர்களின் உழைப்பும் விடாமுயற்சியும் தேவை என்று எடுத்துரைத்தார்.  ஹீப்ரூ ஒரு புனித மொழி, அதை மதச் சடங்குகளுக்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்று மதபோதகர்களிடையே நிலவி வந்த எண்ணத்தையும் மாற்றினார்.  பல நாடுகளில் பல மொழிகள் பேசி வந்த யூதர்கள் எல்லோரும் ஒன்றுபட வேண்டுமென்றால் எல்லோரும் ஹீப்ரூ மொழியைக் கற்க வேண்டும் என்றும் அது தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தபட வேண்டும் என்றும் கூறினார்.  யூதர்களின் மீட்சி நிறைவுற வேண்டுமென்றால் எல்லா நாட்டிலுள்ள யூதர்களும் தங்களுக்குள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, தாங்கள் வாழ்ந்து வரும் நாடுகளை விட்டு வந்து, புனித நாட்டில் குடியேற வேண்டும்; அங்கு இந்தத் தலைவர்கள் மூலம் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ள வேண்டும் என்று போதித்தார்.

    பாலஸ்தீனத்தில் யூதர்  தேசிய இனத்தை நிறுவுவதற்கான  இந்த இயக்கம்தான் ஆங்கிலத்தில் ஸயோனிஸம் (Zionism) என்று அழைக்கப்படுகிறது.   இதைத் தமிழில் யூத இனவாதம் எனலாம்.  இந்த இனவாதத்திற்கு ஒரு தனி நாடு வேண்டும் என்பதே கோரிக்கை.

    இவரையடுத்து போலந்து  நாட்டில் மத போதகராக இருந்த ஸ்வி ஹிர்ஷ் கலிச்செர் (Zwi Hirsch Kalischer) பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.  யூதர்களின் மீட்சி திடீரென்று நிகழக் கூடிய தெய்வீக அற்புதம் அல்லவென்றும், கொடைப் பண்பு உடையவர்களின் ஆதரவாலும் உலகின் எல்லா நாடுகளிலுமுள்ள எல்லா யூதர்களும் தங்கள் புனித நாட்டில் சேருவதை ஆதரிப்பதாலும் மட்டுமே நிகழக் கூடியது என்றும் கூறினார்.  யூதர்களின் புனித இடமான பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேறி அங்கு விளைநிலங்களையும் முந்திரித் தோட்டங்களையும் விலைக்கு வாங்கி அவற்றில் பயிரிடுவதின் மூலம் அங்கு ஏற்கனவே வாழ்ந்துவரும், ஏழ்மையில் வாழும் யூதர்களுக்கு உதவ வேண்டும் என்றார்.  யூதர்கள் ஒரு தனி நாட்டில் கூடி வாழ வேண்டும் என்பதும், அந்தத் தனி நாடு யூதர்கள் தங்கள் புனித இடமாகக் கருதும் பாலஸ்தீனமாக இருக்க வேண்டும் என்பதும் இவருடைய அடிப்படைக் கொள்கை.

    இவரை அடுத்து யூதர்களுக்குத் தனி நாடு அமைப்பதில் தீவிரமாக இருந்தவர் லேட்வியாவில் 1865-இல் பிறந்த ஆபிரகாம் ஐஸக் குக் (Abraham Isaac Kook) என்பவர்.  பாலஸ்தீனத்தை விட்டுச் சென்ற யூதர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் யூத மதத்தைக் கடைப்பிடித்து வந்தாலும், தங்கள் புனித இடமான பாலஸ்தீனத்தில் வாழ்ந்தால்தான் யூத மதத்திற்கே உரிய சிறப்புத் தன்மையை இழக்காமல் இருக்க முடியும் என்றும், அதற்குப் பாலஸ்தீனத்தில் அவர்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.  இப்படி உருவாக்கப்படும் நாட்டில்தான் யூதர்கள் தங்களுடைய பழைய கலாச்சார, மதக் கோட்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியும் என்றும் இவர் அறிவுறுத்தினார்.

    இவர்களுக்குப் பின்னால் வந்த மதச்சார்பற்ற யூதர்களும், யூதர்கள் ஒரு இனம் என்ற அடிப்படையில், யூதர்களுக்கென்று தனி நாடு வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர்.  எல்லா யூதர்களும் பாலஸ்தீனத்தில் கூடி வாழ முடியவில்லையென்றாலும், யூதர்களுக்கென்று இருக்கும் நாட்டில் அங்கு போக விரும்புபவர்கள் போவதற்கு வசதியாக ஒரு நாடு வேண்டும் என்று நினைத்தனர்.  (இப்போதும் அமெரிக்காவில் குடியேறிருக்கும் யூதர்கள் தங்கள் வாழ்க்கையில் அடிக்கடி அங்கு போய்வர வேண்டும் என்று நினைக்கின்றனர்.  (நான் முன்னால் குறிப்பிட்ட எங்கள் அமெரிக்க யூத நண்பர் ‘வருடத்திற்கு ஒரு முறையாவது நான் அங்கு போக விரும்புகிறேன்.  அப்படிப் போகவில்லையென்றால் ஏதோ ஒரு குற்ற உணர்வு எனக்குள் ஏற்படுகிறது’ என்பார்.  இன்னொரு நண்பர் யூத மதத்தின் வாழ்க்கைச் சட்டங்களைக் (Jewish law) கற்றுக்கொள்ள ஜெருசலேமிற்குப் போய்வந்தார்.)

    மதச்சார்பற்ற யூத  தேசிய இனத்தை நிறுவுவதற்கான  இயக்கத்தை ஆரம்பித்தவர்களுள்  தியோடர் ஹெர்ஸல் (Theodor Herzl) என்பவர் முதன்மையானவர்.  1860-இல் ஹங்கேரியிலுள்ள புடாபெஸ்ட் என்னும் ஊரில் பெரிய செல்வந்தரின் மகனாகப் பிறந்த இவர், புடாபெஸ்ட்டில் பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு வியன்னாவிற்குச் சென்று அங்குள்ள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.  பின் ஆஸ்ட்ரியாவின் பத்திரிக்கை ஒன்றிற்கு பாரீஸ் செய்தியாளராக வேலைபார்த்தபோது ஆல்ப்ரெட் ட்ரைஃபஸ் (Alfred Dreyfus) என்னும் பிரெஞ்சு நாட்டு யூதருக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதி ஹெர்ஸலின் வாழ்க்கையையே முற்றிலும் மாற்றிவிட்டது.  ட்ரைஃபஸ் பிரெஞ்சு ராணுவத்தில் வேலைபார்த்தபோது ஜெர்மனிக்காக உளவுபார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, ராணுவ மரியாதை எல்லாம் பறிக்கப்பட்டு, ஒரு தீவில் சிறைவைக்கப்பட்டார்.  ஏற்கனவே யூத எதிர்ப்பை தன்னுடைய வாழ்க்கையில் அனுபவித்திருந்தாலும், அது ஒரு தனி மனிதனுடைய வாழ்க்கை அனுபவம் என்று நினைத்திருந்த ஹெர்ஸல், இப்போது யூதர் என்பதற்காக ட்ரைஃபஸுக்கு அந்த அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்தார்.  அன்றிலிருந்து யூத எதிர்ப்பு என்பது மத எதிர்ப்பு மட்டுமல்ல, இன எதிர்ப்பும் என்றும் நினைத்தார்.  அதிலும் நவீன, கலாச்சார மேம்பாடுடைய, நாகரீகம் மிகுந்த பிரான்ஸில் அந்தச் சம்பவம் நடந்தது அவரை மிகவும் பாதித்தது.

    ஹெர்ஸலுக்கு முன்பே பல யூதர்கள் தங்களுடைய இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்றிருந்த போதிலும், இவர் அதற்கான காரியங்களில் ஈடுபடத் தொடங்கினார்.  பெல்ஜியத்தில் உள்ள ஒரு பெரிய பணக்கார யூதரை தனக்கு உதவ அணுகினார்.  அவர் நிறையப் பணம் செலவழித்து சில யூதர்களை அர்ஜெண்டைனாவில் குடியேற்றியிருந்தார்.  ‘யூதர்கள் விவசாயத்தில் சிறந்தவர்கள்; அவர்கள் அங்கு அதில் சிறந்து விளங்கினால் ரஷ்யாவிற்குக் கூட அவர்கள் குடிபெயரலாம்; அவர்களை எல்லோரும் விரும்பி ஏற்றுக்கொள்வார்கள; இப்போதே அவர்களை முன்னுக்குத் தள்ளுவது அவ்வளவு சரியல்ல’ என்று அவர் கூறிவிட்டார்.  இன்னும் சில பணக்கார யூதர்களும் இதே மாதிரி ஹெர்ஸலுக்கு உதவ ஆர்வம் காட்டாததால், பல நாடுகளில் வசிக்கும் யூதர்களையெல்லாம் ஒன்றுகூட்ட ஒரு மாநாடு நடத்துவதென்று முடிவுசெய்து, 1897-இல் ஸ்விட்சர்லாந்திலுள்ள பேஸல் (Basle) என்னும் ஊரில் ஒரு மாநாட்டைக் கூட்டினார்.  இதற்கு இருபத்து நான்கு நாடுகளிலிருந்து ஆண்களும் பெண்களுமாக இருநூறுக்கும் மேற்பட்ட யூதர்கள் வந்திருந்தனர்.  யூத நாடு அமைப்பதன் மூலம்தான் யூதர் இனத்தையும் அவர்களின் மதத்தையும் எதிர்காலத்தில் காப்பாற்ற முடியும் என்று அந்த மாநாட்டில் அறிவுறுத்தப்பட்டது.  அதன் பிறகு நடந்த மாநாடுகளில் நிறையப் பேர் அவருடைய இயக்கத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்தனர்.

    Share
  • வல்லமையின் பார்வையில் 2012

    பவள சங்கரி

    தலையங்கம்

    2012ல் நம் அகண்ட பாரதத்திற்கு  பிரச்சனைகளும் அகண்டு ஆழ்ந்து இருப்பதுதான் வேதனைக்குரிய விசயம்.  சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது என்பது போலத்தான் நம்முடைய வளர்ச்சிப்பாதையும்  உள்ளது நம் இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பான்மையான மக்கள் கடுமையான உழைப்பாளிகளாகவும், உயர்ந்த இலட்சியங்களுடன் வாழ்பவர்களாகவே இருக்கின்றனர். தனி மனித முயற்சிக்கு விதவிதமான முட்டுக்கட்டைகள் போடாமல் அரசாங்கம் தகுந்த ஒத்துழைப்பை அளித்து வந்தாலே நம்முடைய இந்தியத் திருநாடு வல்லரசாகிவிடும் என்பதில் ஐயமில்லை. நம்முடைய கட்டமைப்பைப் பொறுத்தவரை சிறு தொழில்களைச் சார்ந்தே, பெருந்தொழில்கள். என்றிருப்பதால், பெருந்தொழில்கள் தானாகவே வளர்ச்சியடைய முடியாது. சிறு தொழில்களும் வளர்ந்தால்தான் பெருந்தொழில்களும் வளர முடியும். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் பெருந்தொழில்கள் கட்டமைப்பினுள்ளே சிறுதொழில்களும் அடங்கிவிடும். ஆனால் இந்தியாவில் சிறு தொழிலைச் சார்ந்துதான்  பெருந்தொழில் இருப்பதால் நம்முடைய வளர்ச்சி எல்லா வகையான மக்களைச் சார்ந்த வளர்ச்சியாக இருக்கிறது. இன்று சிறு தொழில்கள் நசிந்து விடும் நிலையில் சூழ்நிலைகள் உருவாகிவிட்டன. தினமும் 4 அல்லது 8 மணிநேரம் மின்சாரம் வழங்கப்பட்டால் 24 மணி நேரமும் செயல்படும் தொழிற்கூடங்கள் எவ்வாறு செயல்பட முடியும்?. இதன் விளைவாக உழைப்பதற்குத் தயாராக இருந்தும், சிறந்த திட்டங்கள் கைவசம் இருந்தும் தொழிலாளர்களுக்குரிய சம்பளத்தை வழங்க முடியாத நிலையில் சிறு முதலீட்டாளர்களும்,தொழிலாளர்களும் வாழ வழியின்றி திண்டாடும் சூழலில் 2012ம் ஆண்டு கடந்து போய் உள்ளது. விவசாயத் துறையை எடுத்துக் கொண்டால் அதன் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது. வானி்லை மாற்றங்களால் வறட்சியும், நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்குரிய மின்சாரமும் இல்லாததால் பல விவசாயிகள் தங்களுடைய உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டிய நிலை எற்பட்டுள்ளது, மின்சாரம் இல்லாத காரணத்தினால் விலை பொருட்களை பயன்படுத்தக்கூடிய ஆலைகள் பெருமளவில் கொள்முதல் செய்யாத காரணத்தினால் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்பதால், பெரும் நட்டத்திற்குள்ளாகி செய்வதறியாது,  தொடர்கின்ற மரண ஓலங்கள்தான் விவசாயிகள் வீட்டில் கேட்க முடிகிறது. நமது அரசாங்கம் 2013 ல் இதற்கு சரியான தீர்வு சொல்லுமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலை தொடருமானால் படித்த இளைஞர்கள் நாளுக்குநாள் பெருகி வருகிற சூழலில், வேலை வாய்ப்பை உருவாக்குகின்ற ஆலைகள் சரிவர இயங்காததால் படித்த இளைஞர்கள் மத்தியில்  மன அமைதியின்றி வாழும் நிலை உருவாகக் கூடுமாதலால் பல பிரச்சனைகள் முளைக்கலாம். மன விகாரங்கள் அடைவதால் பாலியல் பலாத்காரங்களும், கொலை, கொள்ளை போன்ற செயல்கள் நடப்பதற்கும் வழி வகுக்கின்றன. பெண்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டிய அதே நேரத்தில், பெண்களுக்கான தற்காப்புக் கலைகள் கட்டாயப்படுத்தப்பட வேண்டும். பெண்களும் கால்ச் சூழல்கள் குறித்த விழிப்புணர்வுடன் சிந்தித்து செயல்படவேண்டும்.

    இந்த 2013ல், 2012ல் நடந்த துயரமான நிகழ்வுகளைத் தவிர்த்து வளமான வாழ்க்கை வாழ்வதற்குரிய நல்ல சூழ்நிலை உருவாகுவதோடு, இந்த 2013 நமது வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்லாக அமைய வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது.

    ப்டத்திற்கு நன்றி:

    http://2013-wallpapers.blogspot.in/2012/07/happy-new-year-wallpapers-2013.html

    Share
  • அச்சம் தவிர்!

    வன்புணர்வுக்கெதிரான
    போராட்டக் களத்தில்
    எவனோ
    இடுப்பைக் கிள்ளிவிட்டான்!
    இதை மற்றவரிடம்
    சொல்வதா? வேண்டாமா??
    ஆறுதல் கிடைக்குமா?
    அவமானம் நேருமா??
    சீற்றம் கொண்ட புயலே
    சிக்குண்டது புயலில்!!
    இதை எல்லாம் வீணாக
    எதுக்கு பெரிசு பண்ணிட்டு?!
    அரவமற்று அடங்கிப் போனது
    களமாடிய ஆவேசப் பெருங்காற்று!!

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    1980 களின் ஆரம்பங்களில் எனக்கு ஒரு ஆருயிர்த்தோழி இருந்தாள். வீடு எதிர் வீடுதான். சாலை சற்று அகலமானது என்பதால் நாங்கள் இருவரும் ஏதாவது இருக்கும் இடத்திலிருந்தே பேசவேண்டுமானாலும் சைகை மொழிதான்.. எப்போதாவதுதான் என் வீட்டுக்கு வருவாள்.. ஏனெனில் வச வசவென நண்பர்கள் கூட்டத்துக்கு குறைவே கிடையாத நாட்கள் அவை. அவளுக்கு கூட்டம் பிடிக்காது, கூச்சப்படுவாள். நான் அவள் வீட்டுக்குப் போவதுண்டு.. அவ்வப்போது பலகாரம், சாப்பாடு கூட உண்டு. ஐயப்ப பூஜை சமயங்களில் மட்டும் தன் அப்பாவுடன் சாயங்காலம் பூராவும் எங்களுடனே அவள் ஆஜர்தாம்..

    இரவு எந்நேரம் படுக்கப் போனாலும் நான் கண்டிப்பாக காலை எழுந்தே ஆகவேண்டும்தான்.. காரணம் அவள் அங்கேயிருந்து என்னைக் கண்டதும் குட்மார்னிங் திவாம்மா.. (திவா மாமா) என்று கூவுவதைக் கேட்டே ஆகவேண்டும். ஆமாம்.. எதிர்வீட்டு நண்பர் திரு சுப்பாராவ் அவர்களின் குழந்தை சுசீலாவுக்கு அத்தனை பிரேமை என் மீது.. மழை நாளானாலும் பனியானாலும் அந்தக் குழந்தை ஜன்னலருகே இந்தக் கூவலுக்காக காத்துக் கிடக்கும் . அவள் தந்தையும் தாயும் என்னுடைய இனிய நண்பர்கள் ஆதலால் ஒரு செல்ல கோபத்துடன் என்னைக் கண்டிப்பார்கள்.. ‘எங்களுக்குக் கூட அவள் குட்மார்னிங் சொல்வதில்லை’ என்று குறை வேறு சொல்வார்கள்.. நாள் தவறினாலும் அவள் கூவும் குட் மார்னிங் மட்டும் தவறவே தவறாது (நாங்கள் எங்காவது வெளியூர் பயணத்தில் இருந்தால் தவிர)..

    அவள் இதை விளையாட்டாகவோ அல்லது அன்பால் ஏற்பட்ட கடமையாகவோ, இப்படி தினம் செய்யலாம். ஆனால் எனக்கு அப்போதெல்லாம் சுசீலா மிகப் பெரிய டானிக்.. ஒரு சுறுசுறுப்பும் பரபரப்பும் என்னையறியாமல் தொற்றிக்கொள்ளும். . குட் மார்னிங் சொல்வதெல்லாம் எப்படி டானிக் ஆகும் என்று கேள்வி வரும்.. அதை அந்தக் கணங்களில் அனுபவித்தவர்தாம் அதன் மகிமையையும் உணரமுடியும். நல்ல வார்த்தை நாலு சொல்லும்போது அந்த நல்லதின் விளைவும் அலைகளும் நம்மையும் தொற்றி பற்றிக் கொள்ளும். உற்சாகம் கூடவே தோன்றும். அந்த நாள் இனிய நாள்தான். இப்போதும் கூட சில நண்பர்களிடமிருந்து நல் வணக்கமும் வாழ்த்தும் எஸ் எம் எஸ் மூலமாக வந்து கொண்டிருக்கிறது. இங்குள்ள (மிகப் பெரிய பதவியில் இருந்தாலும்) தமிழ் நண்பர் திரு முத்துசாமி அவர்கள் ’இந்த நாள் இனிய நாளாகட்டும்’ என்று செய்தி அனுப்பிக் கொண்டே இருப்பார். அதைப் பார்த்ததும் நமக்குள்ளே ஒரு புது உற்சாகம் தோன்றி மறைவதை மறுக்கவே முடியாது.

    இனிய நாள் என்றதும் இந்த நாள் இனிய நாள் என்று தினம் குழுமங்களில் கூவும் நண்பர் ஜோ’வை இணைய நண்பர்களுக்கு நினைவு வந்துவிடும். ஜோ’வும் நாள் தவறாமல் இந்த நாள் இனிமையாக இருக்கட்டும் என்று எல்லோருக்கும் சொல்லி வருகிறார். விடா முயற்சியாக நாளும் அலுக்காமல் அவர் இந்த நல்ல வார்த்தைப் பதிவிடும் போதெல்லாம் பார்க்கும், படிக்கும் எல்லோருக்குமே உற்சாகம் வரத்தான் செய்யும்.

    இதோ புது வருடம் வந்துகொண்டே இருக்கிறது. சற்று திரும்பிப் பார்த்து நடந்து போன நிகழ்ச்சிகளை சற்று நினைவு கூர்ந்தால் சென்று போன வருடம் நல்லதை விட கெட்டதுகளை அதிகம் உண்டாக்கிச் சென்ற வருடமாகிவிட்டதோ எனக் கூட தோன்றலாம். இருந்தும் நாம் நல்லவைகளையே இனி எதிர்பார்ப்போம்.. நல்லவைகளையே நினைப்போம். ஜோ’வைப் போலவே அவர் தரும் இனிய செய்திகளைப் போலவே இந்த நாள் என்றல்ல, இந்தப் புதிய வருடத்தில் வரும் ஒவ்வொரு நாளும் இனிய நாளாக அமைந்திட பிரார்த்திப்போம்.

    ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு நாளும் புதுப்புது உற்சாகத்தை உண்டாக்கி, இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என நினைக்க வைத்து இந்த நாள் இனிய நாளென்று நல்லதையே நாளும் நினைக்க வைத்து வரும் இனிய தோழர் ஜோ எனும் ஜோசப் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமையாளர் குழுவினர் சார்பில் அறிவிப்பது இந்த வருடத்தில் கடைசியாக நான் செய்துகொண்டிருக்கும் செயல்களில் ஒரு மிக நல்ல செயலாகக் கருதுகிறேன். ஜோ’வுக்கு ஜே போட்டு அவருக்குப் பொது வாழ்த்தோடு புது வருட வாழ்த்தையும் சொல்லிக் கொள்கிறேன்.

    கடைசி பாரா:

    உற்றார்கள் எமக்கில்லை யாரும் என்னும்
    உற்றார்கள் எமக்கிங்கே எல்லாரும் என்னும்

    என்ற நம்மாழ்வாரின் தீர்க்கதரிசன வார்த்தைகளை, அதன் சத்தியத்தை எண்ணி எண்ணி அனுக்கணமும் வியந்து கொண்டே, உங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    Share