Blog

  • உதவித் தொகை நிகழ்ச்சி

    அன்பு நண்பர்களுக்கு,

    வணக்கம்

    05.01.2013 – அன்று வந்தவாசியில்
    யுரேகா கல்வி உதவித் தொகைத் திட்டத்தில்
    உதவி பெறும் 12ஆம் வகுப்பு மாணவிகள்
    9 பேர்களுக்கு
    சூரிய விளக்குகள் மற்றும்
    டியூசன் பீஸ் வழங்கும் நிகழ்வு
    அம்மையப்பட்டு யுரேகா கல்வி இயக்க
    அலுவலகத்தில் நடைபெற்றது.
    மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
    மு.முருகேஷ் தலைமை ஏற்றார்.

    நிகழ்வில் கலந்து கொண்ட
    குழந்தைகளோடும்,  அவர்களுடைய
    பெற்றோர்களோடும் கலந்துரையாடினார்.
    12ஆம் வகுப்பு மாணவிகள் அனைவரும்
    1150 மதிப்பெண்களுக்கு மேல் பெறுவதாக
    உறுதியளித்தனர்.

    நிகழ்வில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்
    சு.உமாசங்கர் , தகவல் தொகுப்பாளர் சி.கோமதி
    ஆகியோர் கலந்து கொண்டனர்.
    -மு.மு , திட்ட மேலாளர்.

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூர்வ காலத்துப் பூமத்திய ரேகை ஒரு சமயம் வடதுருவத்துக்கு அருகில் இருந்ததைக் காட்ட பூர்வப் படிவுகள் [Fossils] ஆதாரம்

                                                                             சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    பூமியின் துருவங்கள்

    இரண்டும் திசை மாறும்

    அரை மில்லியன் ஆண்டுக் கொரு முறை

    கிரீன் லாந்து கனடா வழியே

    ஒரு யுகத்தில் செல்லும்

    தடம் புரண்ட பூமத்திய ரேகை !

    வடதிசை செங்குத்தாய் திரும்பி

    கிழக்குத் திசையானது !

    துருவங்கள் மாறிச் சுழற்சி நின்று

    எதிர்த் திசையில் ஓடும் !

    மின்னியல் இயக்கம் பூமியில்

    தன்னியல் மாறும் !

    சூழ்வெளி வாயுக் குடை முறிந்து

    பாழ்வெளி ஆகும் !

    நீர் மண்டலம் ஆவியாகி

    நீங்கிவிடும் ! சூடேறி

    உயிரினங்கள் செத்துப் பிழைக்கும் !

    பயிரினங்கள் வேர் அறுந்து

    பசுமை இழக்கும் !

    அரை மில்லியன் ஆண்டுக்கு

    ஒருமுறை நேர்ந்திடும்

    பிரளயச் சுழற்சி பிறகு மீளும்

    இயற்கை அன்னையின்

    கோரத் திருவிளை யாடல் !

    வையகப் போக்குத் தாறு மாறாகி

    யுகப் புரட்சி ஏற்படும் !

    பிரளய நர்த்தனம்

    பூமியில் அரங்கேற்றம்

    புதிய பூமி உருவாக !

    ++++++++++++++++++

    Marine beings

    Ordovician period

    பூமியின் துருவக் காந்த அரங்குகளை [Polar Magnetic Regions] எடுத்துக் கொண்டால் 450 மில்லியன் ஆண்டுகட்கு முன்னர், அந்த அரங்குகள் முற்றிலும் வேறுபட்ட தளங்களில் அமைந்திருந்தன. அதனால் பூமத்திய ரேகையும் வேறோர் பகுதியில் இருந்துள்ளது. வட அமெரிக்கா கண்டம் 90 டிகிரி கோணத்தில் ஆர்டோவிசியன் யுகத்தில் [Ordovician Period] சரிந்திருந்தது. அதாவது இன்று வடக்கு என்று கருதப்படும் பகுதி அப்போது கிழக்காக இருந்திருக்க வேண்டும். அந்த யுகத்தில் ஹர்ரிக்கேன்கள் அடிக்காததால் கடலில் மிதமான ஆழத்தில் பேரளவு கொத்தளிப் பில்லை. ஆதலால் கடலடிப் படிமானப் புழுதிகள் [Sediments] பல மில்லியன் ஆண்டுகளாக ஒரே நிலையில் முடங்கி இருந்தன. அவற்றில் புதைந்த பூர்வப் படிவுகளை [Fossils] வைத்து ஆர்டோவிசியன் பூமைய ரேகையைத் [Ordovician Equtor] துல்லியமாய்க் கணித்திட முடிகிறது.

    ஜிஸ்சுவோ ஜின் [Jisuo Jin, University of Western Ontario, Canada]

    பூர்வீக ஆர்டோவிசியன் பூகோளவியல் [Ancient Ordovician Geography] அந்த யுகத்தில் இருந்த பாறைப் பதிவுகளின் நிரந்தரக் காந்தக் கருவி திசை திருப்ப [Permanent Magnetic Compass Directions] அடிப்படை இயக்கத்தை வைத்து அறியப்பட்டன.

    பிலிப்ஸ் மெக்காஸ்லாண்ட் [Philips McCausland, University of Western Ontario, Canada]

    Prehistoric Equator

    2012 டிசம்பரில் கனடா அண்டாரியோவின் வெஸ்டெர்ன் பல்கலைக் கழகத்தின் பூதளவியல் விஞ்ஞானிகள் இருவரின் குழு 450 மில்லியன் ஆண்டுக்கு முன்னர், ஆர்டோவிசியன் யுகத்தில் [Ordovician Period] இருந்தாக எண்ணப்படும் பூமத்திய ரேகையைத் [Equtor] துல்லியமாகக் கண்டுபிடித்து அறிவித்தது. அக்குழுத் தலைவர் பெயர்கள் : ஜிஸ்சுவோ ஜின் & பிலிப்ஸ் மெக்காஸ்லாண்ட். அந்தக் கண்டுபிடிப்பு பூர்வயியல் விஞ்ஞானி களுக்கும் [Paleontologists], அண்டக்கோளியல் ஆய்வாளருக்கும் [Planetary Scientists] ஒரு முக்கிய நிகழ்ச்சி யாய்க் கருதப்படுகிறது. மேலும் தனிப்பட்ட உலோகவியல் தாதுக்களைத் தேடும் துறைஞர் களுக்கும் தேவையானதாய்த் தெரிகிறது. ஆர்டோவிசியன் பூதளவியல் யுகம் சுமார் 488 மில்லிய ஆண்டுகட்கு முன்னர் துவங்கி, 444 மில்லியன் ஆண்டு காம்பியன் யுகத்தில் [Cambian Period] முடிவு அடைந்தது.

    [Paleontology is the scientific study of prehistoric life. It includes the study of fossils to determine organisms’ evolution and interactions with each other and their environments.]

    அந்தக் கனடா ஆய்வுக் குழுவினர் ஆர்டோவிசியன் பூமையக் கோடு கிரீன்லாந்தின் வடப் பகுதி 6000 கி.மீ. நீட்சியில் துருவிக், கனடாவின்
    மானிடோபா மாநிலம், அமெரிக்காவின் யூடா, நெவேடா மாநிலம் வழியாக ஓடியதைக் கணித்து அறிவித்துள்ளார்கள்.

    Marine Diversity

    “பூமியின் துருவக் காந்த அரங்குகளை [Polar Magnetic Regions] எடுத்துக் கொண்டால் 450 மில்லியன் ஆண்டுகட்கு முன்னர், அந்த அரங்குகள் முற்றிலும் வேறுபட்ட தளங்களில் அமைந்திருந்தன. அதனால் பூமத்திய ரேகையும் வேறோர் பகுதியில் இருந்துள்ளது. வட அமெரிக்கா கண்டம் 90 டிகிரி கோணத்தில் ஆர்டோவிசியன் யுகத்தில் [Ordovician Period] சரிந்திருந்தது. அதாவது இன்று வடக்கு என்று கருதப்படும் பகுதி அப்போது கிழக்காக இருந்திருக்க வேண்டும். அந்த யுகத்தில் ஹர்ரிக்கேன்கள் அடிக்காததால் கடலில் மிதமான ஆழத்தில் பேரளவு கொத்தளிப்பில்லை. ஆதலால் கடலடிப் படிமானப் புழுதிகள் [Sediments] பல மில்லியன் ஆண்டுகளாக ஒரே நிலையில் முடங்கி இருந்தன. அவற்றில் புதைந்த பூர்வப் படிவுகளை [Fossils] வைத்து ஆர்டோவிசியன் பூமைய ரேகையைத் [Ordovician Equtor] துல்லியமாய்க் கணித்திட முடிகிறது,” என்று கூறுகிறார் ஜிஸ்சுவோ ஜின் [Jisuo Jin, University of Western Ontario, Canada]

    “பூர்வீக ஆர்டோவிசியன் பூகோளவியல் [Ancient Ordovician Geography] அந்த யுகத்தில் இருந்த பாறைப் பதிவுகளின் நிரந்தரக் காந்தக் கருவி திசை திருப்ப [Permanent Magnetic Compass Directions] அடிப்படை இயக்கத்தை வைத்து அறியப்பட்டன, ” என்று கூட்டாளி விஞ்ஞானி பிலிப்ஸ் மெக்காஸ்லாண்ட் [Philips McCausland] கூறுகிறார்.

    Fig 1 Polat Shift in Earth

    பூகோள வரலாற்றில் நேர்ந்துள்ள வடதென் துருவ மாற்றங்கள் !

    பூமியின் வடதென் காந்தத் துருவங்கள் எப்போதும் ஒரே திசை நோக்கி இருப்பவை அல்ல ! அவை சிறுகச் சிறுக கோணம் மாறி பல்லாயிரம் ஆண்டுகள் படிப்படியாக நகர்ந்து பிறகு வடதுருவம் தென் துருவமாகவும், தென் துருவம் வடதுருவமாகவும் மாறிவிடுகின்றன ! பூகோளத்தின் துருவங்கள் கடந்த 65 மில்லியன் ஆண்டுகளாக 130 தடவைகள் மாறி வந்துள்ளன என்று பூதளவியல் விஞ்ஞானிகள் (Geologists) கணித்துள் ளார்கள் ! அதாவது சராசரி அரை மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுத் துருவ மாற்றம் நேர்ந்திருக் கிறது ! பூமியில் முதன்முதல் பாறைகள் உருவான போது அவை யாவும் வியப்பூட்டும் வண்ணம் அப்போதையப் பூகாந்தத் திசை அமைப்பைப் (Orientation of Earth’s Magnetic Field) பதிவு செய்துள்ளன !

    Ordovician period -1

    பூதளவியல் விஞ்ஞானிகள் பல்வேறு யுகத்தில் பல்வேறு இடங்களில் உண்டான பாறை மாதிரிகளைச் சேகரித்து அவ்விதத் துருவ மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதைக் காட்டியிருப்பது ஆச்சரியமாக உள்ளது ! பூமியில் இப்போதிருக்கும் வடதென் துருவத் திசை அமைப்பு “நேர் அமைப்பு” (Normal Direction) என்றும் அதற்கு எதிரான திசை அமைப்பு “திருப்ப அமைப்பு” (Reversal Direction) என்றும் விஞ்ஞானிகளால் குறிப்பிடப் படுகின்றன ! கடந்த 150 ஆண்டுகளாக (1985 Factual) பூகாந்தத் திசைக் கோணம் ஒரே மட்டக் கோட்டில் (Lattitude) (79 டிகிரி) இருந்திருக்கிறது ! அதே சமயத்தில் அதன் நேரியல் கோடு (Longitude) ஆண்டுக்கு 0. 042 டிகிரி கோண வீதத்தில் மாறி வந்துள்ளது ! மேலும் இதற்கு முன்பு பூகாந்தத் துருவத் திசை நீடிப்புக் குறைந்தது 2.6 பில்லியன் ஆண்டுகள் கூட இருந்துள்ளது என்று அறிப் படுகின்றது !

    Fig 1E Relative Size of Sunspots

    2004 டிசம்பர் 26 ஆம் தேதி தென்னாசியக் கடற்கரையில் படையெடுத்த அசுரச் சுனாமியை எழச் செய்த கடற் பூகம்பம் எவ்விதம் உண்டானது என்பதற்குப் பூமி அடித்தட்டின் (Earth’s Tectonic Plate Crust) நிலையற்ற தன்மையே என்று ஊகிக்கப் படுகிறது. அத்தகைய நிலையற்ற கொந்தளிப்புக்குப் பூகாந்தத் திசை மாற்ற நகர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. சூரியன் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறைத் தவறாது அதன் “பரிதித் தழும்பு மீட்சி” உச்சத்தில் (Peak Sunspot Cycle) தனது துருவத் திசையை மாற்றுகிறது ! அவ்விதப் “பரிதித் துருவத் திருப்பம்” அடுத்து 2012 ஆம் ஆண்டில் நேரப் போகிறது ! தென்திசை நோக்கிய காந்தத் திரட்சி (Magnetic Flux) மைய ரேகையில் (Solar Equator) செழித்த பரிதித் தழும்புகளிலிருந்து நகர்ந்து வடப்புறம் திரும்புகிறது. ஆனால் பூமியின் துருவ மாற்றம் பரிதியில் நேர்வது போல் ஒரு சில குறுகிய ஆண்டுகளில் நிகழ்வதில்லை !

    பூமியின் துருவ மாற்றங்கள் எப்படி நிகழ்கின்றன ?

    Fig 2 Coriolis Force

    பூகோளத்தின் துருவ மாற்றங்கள் தாறுமாறான கால இடைவெளிகளில் இதுவரை நேர்ந்துள்ளன. சமீபத்தில் உண்டான துருவ மாற்றம் 780,000 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்திருக்கிறது. ஆயினும் ஏன் அவ்விதம் நேர்கிறது என்று விஞ்ஞானிகள் வியப்புறுகிறார்கள். வெப்பக்கனல் திரவ இரும்புள்ள உட்கருவில் கொந்தளிக்கும் மின்னோட்டம் (Electric Current) உண்டாக்கும் பூமியின் பிரதமக் காந்தத் தளம் துருவ முனைத் திசையைத் திருப்புகிறது ! அப்போது ஒரு காந்தத் திசைகாட்டி முள் (Needle of the Magnetic Compass) வட திசைக்குப் பதிலாகத் தென் திசையைக் காட்டும் ! பூமியின் வரலாற்றில் முரணான கால இடை வெளிகளில் அவ்விதத் துருவத் திருப்பம் 100 மேலான தடவைகளில் நிகழ்ந்துள்ளன. “பூர்வ எரிமலைப் பாறை மாதிரிகளைப் புதிதாக ஆராய்ந்த போது இரண்டாவது காந்த மூலச் சேமிப்பு (Secondary Magnetic Source) பிரதம காந்த முனைத் திருப்பம் ஏற்படுத்துமா அல்லது எப்படி நிகழ்த்துகிறது என்று கண்டுபிடிக்க உதவி செய்யும். வடதென் துருவங்களை நோக்கும் பிரதமக் காந்தத் தளம் தளர்ச்சியுறும் போது, பூமியின் ஆழமற்ற உட்கருவில் அடித்தட்டுப் பாறைக்குக் கீழாகத் தோன்றிவரும் இரண்டாவது காந்தத் தளம் முக்கியத்துவம் அடைகிறது !” என்று விஸ்கான்சின்-மாடிஸன் பல்கலைக் கழகப் பூதளவியல் பேராசிரியர், பிராடு ஸிங்கர் கூறுகிறார்.

    Fig 3 The Coriolis Effect

    பிராடு ஸிங்கரும் மேற்கு ஜெர்மனியில் ஆய்வு செய்யும் கென்னத் ஹா·ப்மனும் (Kenneth Hoffman) சேர்ந்து ஹவாயிக்கு அருகில் தாஹிதியின் (Tahiti) பூர்வீக எரிமலைக் குழம்பை 30 ஆண்டுகளாகச் சோதனை செய்து பூமியின் காந்த முனைத் திருப்பின் வழிமுறைகளைக் (Patterns) கண்டறிந்தனர். வெப்பக் கனலில் திரவமான இரும்பு செழிப்பான உலோகங்களின் காந்த சக்தி திரவம் குளிர்ந்து திடமாகிக் கடினமானதும் உட்கருவில் அடைபட்டு விடுகிறது ! “பூமியின் காந்த தளத்தின் மீது எரிமலைக் குழம்பு குளிர்ந்து படிந்ததும் அப்போதுள்ள புதிய காந்த தளத்தின் பதிவு நினைவு பற்றிக் கொள்கிறது. அவ்விதம் உண்டான எரிமலைக் குழம்பின் நினைவை அழிப்பது மிகக் கடினம். அதுவே பூகாந்தத்தின் பூர்வத் திசை அமைப்பின் (Paleomagnetic Direction) பதிவாகி விடுகிறது.” என்று பிராடு ஸிங்கர் கூறுகிறார்.

    Sunspots Development

    பரிதிக் காந்த முனைத் திருப்பத்தால் ஏற்படும் இயற்கைக் கேடுகள்

    2012 டிசம்பர் 21 ஆம் தேதியை ஒரு பயங்கர தினமாக விஞ்ஞானிகள் மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறார் ! சூரியனில் 11 ஆண்டுகள் கடந்து மீண்டும் வரும் துருவ முனை மாற்றுச் சுற்றியக்கத்தில் வடதென் துருவங்கள் மாற்றம் அடையப் போகின்றன ! பரிதியில் இப்படித் திடீரென்று துருவ நகர்ச்சியும், மாற்றமும் ஏற்படுவது இயற்கை ! அவ்விதத் துருவ மாற்றங்கள் பரிதியின் காந்தத் தளங்களில் நேரிடும் “சீரமைப்பு மீளியக்கங்கள்” (Harmonic Cycles). துருவ முனைத் திருப்பங்கள் “சூரிய வடுக்கள் அல்லது தழும்புகள்” (Sun Spots or Sun Acnes) காரணமாக இருப்பதால் நிகழ்கின்றன. அல்லது பரிதியின் காந்த சக்தியால் நேரிடுகின்றன.

    Fig 1 Polat Shift in Earth

    11,500 ஆண்டுகளில் மீண்டும் வரப் போகும் பயங்கரப் பனியுகக் காலத்தின் மையத்தில் புவி மாந்தர் இருப்பதாகப் பூதளவியல் விஞ்ஞானிகள் நினைவூட்டி வருகிறார். அந்தச் சுழல் நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது துருவத் திருப்பமும், பூத எரிமலை வெடிப்புகளும், அசுரப் பூகம்பங்களும், சுனாமிகளும், தீவிர ஹரிக்கேன்களும் மக்களைப் பாடுபடுத்திக் கொந்தளிப்பில் தவிக்க வைக்கலாம் ! 2008 ஆம் ஆண்டில் மட்டும் கடந்த 200 ஆண்டுகளில் நேராத மூன்று அசுரப் பூகம்பங்கள் ஏற்பட்டு மக்களைப் பாதித்துள்ளன ! அவற்றைத் தூண்டும் மூல காரணங்களில் ஒன்றாகப் பூகாந்த முனை நகர்ச்சிகள் பங்கு பெறுமா என்பதைப் பூதள விஞ்ஞானிகள்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

    [தொடரும்]

    +++++++++++++++++++

    தகவல்கள்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By : Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    11 Universe By : Roger Freedman & William Kaufmann III (2002) 11 (a) Earth Science & The Environment By : Graham Thompson & Jonathan Turk (1993)
    12 Hutchison The Encyclopedia of Earth : Magnetism, Gravity & Heat (1985)
    13 Science Daily : Magnetic Field Reversals Illuminated By Lava Flows Study [September 26, 2008]
    14 Pure Energy System News : Earth’s Magnetic Field Reversal By : Mary-Sue Haliburton
    15 Magnetic Storm Home Page What Drives Earth’s Magnetic Field (Oct 2003)
    16 BBC News : Is The Earth Preparing to Flip ? By : David Whitehouse (March 27, 2003)
    17 Scientific American Magazine – Our Ever Changing Earth – Probing the Geodynamo By : Gary Glatzmaier & Peter Olson (September 26, 2005)
    18 Solar Pole Shift & Pole Reversal in 2012 (http://newsvote.bbc.co.uk/mpapps/pagetools ) By : Patrich Geryl (May 19, 2009)
    20. http://en.wikipedia.org/wiki/Ordovician Ordovician Period [December 18, 2012]
    ******************
    S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 6, 2013)

    http://jayabarathan.wordpress.com/

    ******************

    Share
  • ஜூனியர் சூப்பர் டான்சர்

    செல்வரகு

    (பாலிமர் தொலைக்கட்சியில் ஞாயிறுதோறும் காலை 10 மணி முதல் 11மணி வரை)

    ஜூனியர் சூப்பர் டான்சர்

    உங்கள் பாலிமர் தொலைக்கட்சியில் ஞாயிறுதோறும் காலை 10 மணி முதல் 11மணி வரை பிரமாண்டமான நடன மேடை அமைத்து கலா மாஸ்டர் இயக்கத்தில் இணைந்து கலக்கும் ஜூனியர் சூப்பர் டான்சர் எனும் புதிய நிகழ்ச்சிஒளிபரப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் 8 வயது முதல் 13 வயதுள்ள 52 சுட்டி பசங்கள் மற்றும் நட்சத்திர நடுவர்கள் நமீதா ,அசோக் மாஸ்டர் ,பிரசன்னா  மாஸ்டர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் முதலில் அறிமுக சுற்று நடைபெறுகிறது .இதில் நடிகை அனுராதா மகள் அபிநயா ஸ்ரீ மற்றும் டான்சர் பாபி ஆகியோர் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக பங்கேற்கிறார்கள் .

    Share
  • தாய்மை

    செண்பக ஜெகதீசன்

     

    கன்றை நினைத்து கொட்டில்பசு

    கண்ணீர் விட்டே அழைப்பதுவும்,

    குன்றில் யானை ஏறிநின்று

    குரலை உயர்த்திப் பிளிறுவதும்,

    தின்று விடாமல் தாய்ப்பறவை

    திசைக்கும் திரும்பிக் கூவுவதும்,

    என்றும் காணும் உண்மைதானே

    ஏற்றம் மிக்கது தாய்மைதானே…!

     

    படத்துக்கு நன்றி: http://designbeep.com/2010/05/09/25-emotional-mother-and-baby-animal-photos-from-wildlife/

     

     

    Share
  • இஸ்ரேல் பயணம் – 4

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அப்போது பாலஸ்தீனம் ஆட்டோமான் பேரரசின் அரசராகிய சுல்தான் ஆளுகையில் இருந்தது.  எப்படியாவது சுல்தானைச் சந்தித்து பாலஸ்தீனத்தில் யூதர்களைக் குடியேற்றுவதற்கு ஒரு ஒப்பந்தத்தை (charter) வாங்கிவிட வேண்டும் என்று ஹெர்ஸல் பல நடுவர்களின் வழி முயன்றார்.  ரஷ்யாவில் நிலைபெற்றிருந்த ரஷ்ய சனாதனக் கிறிஸ்துவ அமைப்பு (Russian Orthodox Church) ஒரு போதும் பாலஸ்தீனம் யூதர்கள் வசம் வருவதை அனுமதிக்கப் போவதில்லை என்பதால் ஹெர்ஸல், ரஷ்ய அதிபர் ஜாரின் (Czar) உதவியை நாடாமல் ஜெர்மன் அதிபர் மூலம் சுல்தானிடம் சம்மதம் பெற முயன்றார்.  அந்த முயற்சியும் வெற்றி பெறாததால் தானே சுல்தானைச் சந்தித்து ஆட்டோமான் பேரரசுக்கு இருந்த கடனைத் தீர்க்க உலகெங்கிலுமுள்ள பணம் படைத்த யூதர்கள் உதவுவார்கள் என்று கூறினார்.  ‘நாடு என்னுடையதல்ல.  அது மக்களுடையது’ என்று கூறி அந்தத் திட்டத்தை சுல்தான் ஏற்க மறுத்துவிட்டார்.  மேலும் யூதர்கள் ஆட்டோமான் பேரரசின் குடிமக்களாகி அதன் இராணுவத்தில் பணிபுரிந்தால் ஹெர்ஸலின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாகக் கூறினார்.

    இதை ஏற்க மறுத்த ஹெர்ஸல்  பின் பிரிட்டனின் பக்கம் திரும்பினார்.  பிரிட்டிஷ் அரசு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யாவில் (அப்போது கென்யா பிரிட்டனின் காலனியாக இருந்தது) ஒரு இடத்தை யூதர்களுக்கு ஒதுக்கித் தருவதாகக் கூறியது.  தங்களின் புனித இடமான பாலஸ்தீனத்தில்தான் தங்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று வற்புறுத்திக்கொண்டிருந்த யூதர்களுக்கு இது பிடிக்கவில்லை.  கடைசியாகப் பாலஸ்தீனத்திற்குப் போவதற்கு இது முதல் படி  என்று ஹெர்ஸல் கூறியதை  மற்ற யூதர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.   ஹெர்ஸல் இத்தாலிய அரசரையும்  போப்பையும் சந்தித்து இது  பற்றிக் கேட்டபோது, யூதர்கள் கிறிஸ்துவ மதத்தைத் தழுவினாலொழிய அவர்கள் பாலஸ்தீனத்திற்குத் திரும்புவதைத் தன்னால் ஆதரிக்க முடியாது என்று போப் கூறிவிட்டார்.  தன் கனவு பலிக்காமலே 1904-இல் ஹெர்ஸல் இறந்துவிட்டார்.  நாற்பத்தைந்து வருடங்களுக்குப் பிறகு (இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்ட பிறகு) அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வியன்னாவில் அவர் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து அவருடைய உடலை இஸ்ரேலுக்குக் கொண்டுவந்து இஸ்ரேலில் உள்ள ஜெருசலேமிற்கு மேற்குப் பகுதியில் இருந்த குன்றில் புதைத்து அந்தக் குன்றிற்கு ஹெர்ஸல் குன்று என்று பெயரிட்டனர்.  யுத்தத்தில் இறந்த வீரர்களைப் புதைக்கும் இடமாக அது இப்போது விளங்குகிறது.

    பல யூதர்களின் மனதில் கடவுளால் தங்களுக்கு அளிக்கப்பட்ட இடமான பாலஸ்தீனம் தேனும் பாலும் பாயும் இடம் என்ற எண்ணத்தை உண்டுபண்ணியிருந்தது.  ஆனால்  பாலஸ்தீன் கரடு முரடான, மலைகளும் பாலைவனமும் நிறைந்த இடம்.  இது 1517-லிருந்து ஆட்டொமான் பேரரசின் கீழ் இருந்தது.  மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில் இருந்த இதில் யூதர்களும் பாலஸ்தீன அரேபியர்களும் அடுத்தடுத்து வாழ்ந்து வந்தனர்.  1897-இல் முதல் யூத மாநாடு நடந்த போது இங்கு 50,000 யூதர்களும் 4,00,000 அரேபியர்களும் இருந்தனர்.  இங்கிருந்த யூதர்களில் பலர் ஐரோப்பாவில் வாழ்ந்து வந்த வசதிபடைத்த யூதர்கள் நன்கொடையாக அளித்த பணத்தால் எப்படியோ வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருந்தனர்.  பின்னால் வெளியிலிருந்து பாலஸ்தீனத்திற்கு வந்த யூதர்கள் தங்கள் புண்ணிய பூமியில் தங்கள் இறைவனை வணங்குவதற்காகவும், முடிந்தால் அந்த மண்ணிலேயே இறந்து புதைக்கப்படுவதற்காகவும் பணத்தோடு வந்தனர்.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் பாலஸ்தீனத்திற்கு வந்தவர்களோ அவர்கள் வாழ்ந்த நாடுகளில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு அஞ்சி ஓடி வந்தவர்கள்.

    ஹெர்ஸல் யூதர்களின் தேசம் நிறுவப்படுவதற்குப் போராடிக்கொண்டிருக்கும்போதே பல நாடுகளிலிருந்தும் யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறிக்கொண்டிருந்தனர்; பல ஸ்தாபனங்களையும் நிறுவிக்கொண்டிருந்தனர்.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் ஜெருசலேமில் 10,000 யூதர்கள் வசித்துவந்தனர்.  1870-இல் போலந்து, லித்துவேனியாவிருந்து வந்தவர்கள் சாஃபேட் (Safed), அக்ரே (Acre), ஜாஃபா (Jaffa) ஆகிய இடங்களில் குடியேறினர்.  ஆட்டோமான் அரசின் ஒப்புதலோடு பிரான்ஸிலிருந்து வந்த ஒரு யூதக் கல்வியாளர் மிக்வா இஸ்ரேல் என்னும் இடத்தில் ஒரு விவசாயப் பள்ளியை நிறுவினார்.  ரஷ்யப் படுகொலையிலிருந்து தப்பித்து வந்த யூதர்கள் விவசாயக் குடியிருப்புகளையும் கிராமங்களையும் நிறுவினர்; பின்னால் பல பள்ளிகளை நிறுவினர்.  இப்படியாக, பல இடங்களிலிருந்து வந்த யூதர்கள் தங்களுக்கென்று பல ஸ்தாபனங்களை நிறுவிக்கொண்டனர்.  இந்த ஸ்தாபனங்களுக்குத் தேவைப்பட்ட இடங்களை பாலஸ்தீனத்திலிருந்த அரேபியர்களிடமிருந்தும் துருக்கியர்களிடமிருந்தும் (துருக்கி ஆட்டோமான் பேரரசின் மையப் பகுதி) வாங்கினார்கள்.  ஹீப்ரு மொழிப் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது.  யூதர்களின் முதல் மருத்துவமனை அரேபியர்களின் துறைமுகமான ஹைபாவில் ஜெர்மனியிலிருந்து பாலஸ்தீனத்திற்குக் குடிபெயர்ந்த ஒரு மருத்துவரால் 1911-இல் ஆரம்பிக்கப்பட்டது.  1912-இல் அமெரிக்கப் பெண்கள் யூத அமைப்பு (American Jewish Women’s Organization), தன் இரு அங்கத்தினர்களை ஜெருசலேமில் ஒரு கிளினிக் ஆரம்பிக்க அனுப்பியது.  அமெரிக்க யூதர் ஒருவர் ஜெருசலேமில் ஒரு மருத்துவமனையை நிறுவப் பணம் கொடுத்தார்.  (1948-இல் இஸ்ரேல் நாடு உருவாக்கப்படும் வரை அமெரிக்காவில் குடியேறியிருந்த பணக்கார யூதர்கள் பாலஸ்தீன யூதர்களுக்கு நிறையப் பண உதவி செய்துகொண்டிருந்தனர்.  ஆனால் இஸ்ரேல் உருவாகி அரை மணி நேரத்திலேயே அமெரிக்கா அதற்கு அங்கீகாரம் அளித்தது.  அதன் பிறகு அமெரிக்க அரசின் பணமும் – அங்குள்ள யூதர்களின் கட்டாயத்தினால் – இஸ்ரேலுக்குக் கிடைக்கத் தொடங்கியது.  இப்போதும் அமெரிக்காவின் ஆதரவும் பண உதவியும் இருப்பதால்தான் இஸ்ரேல் பலம் பெற்று விளங்குகிறது.) 1913-இல் பெண்களுக்கான விவசாயப் பண்ணை தொடங்கப்பட்டது.  1919-இல் ஹீப்ரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யூதர்களின் தேசிய நிதி (Jewish National Fund) ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது.  இந்த நிதியிலிருந்து பல ஸ்தாபனங்களுக்கு நிதியுதவி கொடுக்கப்பட்டது.

    இந்த நிதியிலிருந்து 43 குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன.  அப்போது யூதர்கள் விவசாயிகளாகவும்  விவசாயப் பண்ணைகளில் வேலைபார்ப்பவர்களாகவும் இருந்தனர்.  சிலர் தொழில் வல்லுநர்களாகவும் கடைச்  சொந்தக்காரர்களாவும் இருந்தனர்.  இந்தச் சமயத்தில் பாலஸ்தீனத்தில் யூதர்களின் எண்ணிக்கை 90,000-ஆகப் பெருகியிருந்தது.  யூதர்களின் வரவால் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், தங்கள் நலனைக் காத்துக்கொள்ள பாலஸ்தீனத்திலிருந்த அரேபியர்கள் ஆட்டோமான் அரசியலில் பங்கு பெறத் தொடங்கினர்.  ஜெருசலேமைச் சேர்ந்த இரண்டு அரேபியர்கள் கான்ஸ்டாண்டினோபிளில் இருந்த ஆட்டோமான் பார்லிமெண்டிற்குத் தேர்தெடுக்கப்பட்டனர்.  ஆட்டோமான் அரசும் யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் வருவதைத் தடுக்கப் பல நடவடிக்கைகள் எடுத்தது.  முதல் உலகப் போர் 1914-இல் ஆரம்பித்ததும், பிரான்ஸ், பிரிட்டனுடன் ரஷ்யாவும் ஆட்டோமான் அரசின் எதிரி ஆயிற்று.  பாலஸ்தீனத்தில் அப்போதிருந்த யூதர்களில் பலர் ரஷ்யாவிலிருந்து வந்தவர்களாகையால், ஆட்டோமான் அரசு அவர்களின் மீது வெறுப்பைக் காட்டி அடக்குமுறையையும் அவிழ்த்துவிட்டது.  இதனால் பல யூதர்கள் பக்கத்து நாடான எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில் தஞ்சம் புகுந்தனர்.

    யூத சமுதாய நிறுவன இயக்கத்தில்  (Zionist Movement) சம்பந்தப்பட்டிருந்தவர்களை ஆட்டோமான் அரசு நாடு கடத்தியது.  இதனால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்று பயந்த ஜாஃபாவைச் சேர்ந்த யூதர்கள் தங்களுக்குள் ஒரு படையை நிறுவி நேசநாடுகளோடு (பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா) சேர்ந்து போர்புரியத் தயாராகினர்.  ஆட்டோமான் அரசுக்கு எதிராகப் போரிட்டால் தங்களுடைய கோரிக்கையான பாலஸ்தீன நாட்டைத் தங்களுக்கு நேசநாடுகள் உருவாக்கிக் கொடுப்பார்கள் என்று அவர்கள் நம்பினர்.

    துருக்கியைத் தோற்கடித்து  மத்திய கிழக்கில் தன் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற பிரிட்டனின் சுயநலமும்  இதற்கு ஒத்துப் போகவே, பாலஸ்தீன யூதர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரிட்டிஷ் வெளிநாட்டு மந்திரி லார்ட் ஆர்த்தர் ஜேம்ஸ் பேல்ஃபர் (Lord Arthur James Balfour), இங்கிலாந்திலுள்ள யூதர்களின் தலைவரான லார்ட் வால்டர் ராத்சைல்ட்க்கு (Lord Walter Rothschild) 1917 நவம்பர் 2-இல் எழுதிய கடிதத்தில் பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு ஒரு தனி நாடு அமைக்க பிரிட்டன் உதவும் என்று கூறினார்.  அப்படி நாடு அமைக்கும் பட்சத்தில் அங்கேயே இருக்கும் யூதரல்லாத மற்றவர்களின் உரிமைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.  இது பேல்ஃபர் அறிக்கை (Balfour declaration) எனப்படும். இருபது ஆண்டுகளுக்கு முன் ஹெர்ஸல் ஆட்டோமான் சுல்தான்களிடமிருந்து இம்மாதிரியான ஒரு ஒப்பந்தத்தைப் பெற முயன்று அதில் தோல்வி கண்டிருந்தார்.  பேல்ஃபர் அறிக்கை, அப்போது பலம் மிகுந்த நாடாக விளங்கிய பிரிட்டனிடமிருந்து வந்ததால் முக்கியம் வாய்ந்ததாக யூதர்களால் கருதப்பட்டது.

    இந்த பேல்ஃபர் அறிக்கையின் முக்கிய காரணகர்த்தா செயிம் வெயிஸ்மேன் (Chaim Weizmann).  (இவர் பின்னால் இஸ்ரேலின் முதல் ஜனாதிபதியானார்.)  முதல் உலக யுத்தத்தின்போது ஆயுதங்கள் தயாரிக்கத் தேவையான அசிடோன் (acetone) என்னும் பொருளை ஜெர்மனி கையகப்படுத்திக்கொண்டதால் பிரிட்டனால் ஆயுதங்கள் தயாரிக்க முடியாமல் இருந்தது.  செயிம் வெயிஸ்மேன் என்பவர் ஒரு விஞ்ஞானி என்பதோடு பிரிட்டனில் வாழ்ந்த யூதர்களின் தலைவரும் கூட.  இவருக்கு ஹெர்பெர்ட் சாமுவேல் என்னும் யூத பார்லிமெண்ட் அங்கத்தினர் ஒருவர் நண்பர்.  வெயிஸ்மேன் அசிடோன் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தது பிரிட்டனுக்கு மிகவும் உதவியாக இருந்தது.  அதோடு யூதர்களுக்கு ஒரு சொந்த நாட்டை உருவாக்கினால், அமெரிக்காவிலுள்ள யூதர்கள் அமெரிக்காவை முதல் உலக யுத்தத்தில் கலந்துகொள்ளத் தூண்டுவார்கள் என்றும் பிரிட்டன் கணக்குப் போட்டது.  அதோடு, ரஷ்ய யூதர்கள் ரஷ்யாவில் புரட்சி நடத்தி வந்த போல்ஷிவிக் கட்சியோடு அதிகத் தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் அதனால் தொடர்ந்து ரஷ்யா பிரான்ஸோடும் பிரிட்டனோடும் சேர்ந்து முதல் உலக யுத்தத்தில் ஈடுபடும் என்றும் நினைத்தனர்.  இதையெல்லாம் விட இன்னொரு முக்கிய காரணம் யூத இனம், பழைய கிரேக்க இனத்திற்குப் பிறகு தோன்றிய சிறந்த இனம் என்றும், அவர்களுக்கென்று சொந்த நாடு அமைத்துக்கொடுக்க வேண்டும் என்றும் அதுவும் பிரிட்டன் அதைச் செய்ய வேண்டும் என்றும் பேல்ஃபரே விரும்பினார் என்பது.

    வெயிஸ்மேன் ரஷ்யாவில் 1874-இல் பிறந்தவர்.  பள்ளிப்படிப்பை முடித்த பிறகு வேதியலில்  மேற்படிப்புப் படிப்பதற்காக ஜெர்மனி சென்றார்.  அங்கிருந்து  இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர்  பல்கலைக்கழகத்தில் வேதியல்  பேரசிரியராக வேலை கிடைத்து, இங்கிலாந்து வந்து அங்கேயே குடியுரிமை பெற்றார்.  இவர் இரண்டு முறை உலக யூதர்களின் அமைப்பிற்குத் தலைவராக (1920-1931, 1935-1946) இருந்திருக்கிறார்.

    பேல்ஃபர் அறிக்கை  வெளிவந்தபோது 90,000 யூதர்களும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட அரேபியர்களும் பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்தனர்.  அதாவது ஜனத்தொகையில் 87 சதவிகிதம் அரேபியர்கள்.  பாலஸ்தீனத்திலும் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் வாழ்ந்த யூதர்களுக்கு பேல்ஃபர் அறிக்கை பெரிய வெற்றியாகத் தோன்றியது.  ஆனால் பல பாலஸ்தீன அரேபியர்களுக்கு தங்கள் நாட்டை யூதர்களோடு பங்கு போடுவது பிடிக்கவில்லை.  சுற்றியிருந்த அரபு நாடுகளுக்கும் தங்களுக்கிடையில் யூத நாடு உருவாவது பிடிக்கவில்லை.

    1918-இல் பிரிட்டிஷ்  படை ஆட்டோமான் அரசின்  கீழ் இருந்த பாலஸ்தீனத்தை  வென்று ஜெருசலேமிற்குள் புகுந்தது.  பாலஸ்தீனம் முழுவதும் பிரிட்டனின் கைக்கு வந்தது.  இதோடு பாலஸ்தீனத்தில் அது வரை இருந்த ஆட்டோமான் ஆட்சி முடிவிற்கு வந்தது.  பாலஸ்தீனம் பிரிட்டனின் அதிகாரத்தின் கீழே வந்ததும், யூதர்கள் அங்கு சிறுபான்மையினராக இருந்தபோதிலும், ஜெருசலேம் நிர்வாகத்தில் தங்களுக்கு அரேபியர்களோடு சம உரிமை வேண்டுமென்றும், ஒரு யூதர் ஜெருசலேம் மேயராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்க அலுவல்களில் ஹீப்ருவுக்கும் அரேபிய மொழியோடு சம அந்தஸ்து வேண்டும் என்றும் கோரினர்.  (பாலஸ்தீனத்தில் உள்ள ஒரு பழமையான நகரம் ஜெருசலேம்.  இங்குள்ள யூதக் கோயிலில் இருந்த குருமார்களும் செல்வந்தர்களும் ஏழைகளுக்கு எதிராகச் செய்த கொடுமைகளைத் தட்டிக் கேட்ட இயேசுவை இங்குதான் சிலுவையில் அறைந்தார்கள்.)  இந்த உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டாலும், தங்களுக்கு எப்படியும் பிரிட்டன் தனி நாடு அமைத்துக் கொடுக்கும் என்று யூதர்கள் நம்பினர்.  இதற்குப் பிறகு ரஷ்யாவிலிருந்தும் போலந்திலிருந்தும் பல யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு வந்தனர்.  இப்படி வந்தவர்கள் சாலைகள் அமைப்பது, சதுப்பு நிலங்களைச் சுத்தப்படுத்துவது போன்ற வேலைகளைச் செய்ததோடு தற்காலிகக் கூடாரங்களில் வசித்துக்கொண்டு, தங்கள் வருமானத்தை எல்லாம் ஒரு மத்திய கமிட்டிக்கு அனுப்பினர்.  இந்தச் சமயத்தில்தான் ஹீப்ரு மொழியை வளர்ப்பதிலும் இவர்கள் ஆர்வம் காட்டி, அம்மொழியில் நிறைய கவிதைகள் இயற்றினர்.  மதச் சடங்குகளில் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு வந்த ஹீப்ரு மொழி அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுத்தப்பட்டு வளரத் தொடங்கியது.  அதன் பிறகு அது வாழும் மொழியாக புனர்ஜென்மம் எடுத்தது.  .

    படங்களுக்கு நன்றி:

    http://wis-wander.weizmann.ac.il/chaim-weizmann#.UOVSXqxa6RM

    Share
  • பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (47)

    கேள்வி:

    மொழிகளில் தோற்றம் பற்றிக்  கணிக்க மொழியியலில் நெறிமுறை இருந்தால், அதைக் கொண்டு தமிழின் தொன்மையைக் கணக்கிட முடியுமா?

    பதில்

    PlosOne என்னும் ஆன்லைன் இதழில் வெளியான Charles Perreault & Sarah Mathew எழுதிய Dating the origin of language using phonemic diversity (http://www.plosone.org/article/info:doi/10.1371/journal.pone.0035289) என்னும் ஆய்வுக்கட்டுரையையும் இதன் எதிர்வினைகளையும் படித்துப் பார்த்த இராமகி tamilmanram@googlegroups.com –இல் தமிழ் ஒலியன்களின் எண்ணிக்கையை (முருகையன் கூறியதாக அவர் கொண்ட 95) வைத்து, கட்டுரை காட்டும் நெறிப்படி கணக்கிட்டால், தமிழின் தோற்றக் காலம் மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் போகும்போல் தெரிகிறது என்னும் ஐயத்தை எழுப்பி, ந.தெய்வசுந்தரத்தின் கருத்தைக் கேட்டிருந்தார். தெய்வசுந்தரம் தமிழ் ஒலியன்கள் 95 அல்ல; அது முருகையனின் கருத்தும் அல்ல என்று மறுத்துவிட்டு, மேலே சொன்ன கட்டுரையைப் பற்றி என்னுடைய கருத்தைக் கேட்டார். என் கருத்து இது.

    மேலே சொன்ன கட்டுரையைப் போன்று இன்னொரு ஆய்வுக்கட்டுரை சயின்ஸ் என்ற புகழ்பெற்ற ஆய்விதழில் ஒன்றரை ஆண்டுக்கு முன் (4.15.2011) வெளிவந்தது. அது Quentin Atkinson எழுதிய Phonemic diversity supports serial founder effect model of language expansion from Africa என்னும் கட்டுரை.

    தமிழின் தோற்றம் என்னும்போது தமிழ் மொழியின் தோற்றத்தைக் குறிக்கிறோம். தமிழ் இலக்கியத்தின் தோற்றத்திற்கு எழுத்துச் சான்று இருக்கிறது. உலகில் மொழிக்கு எழுத்து முறை தோன்றியது 5500 ஆண்டுகளுக்கு முன்தான். இதனால் மொழியின் தோற்றத்திற்கு எழுத்துச் சான்று எந்த மொழிக்கும் இதற்கு முன்னால் இருக்க முடியாது. எழுதப்படுவதற்கு முன் ஒரு மொழி பேச்சு வழக்கில் நிச்சயம் இருக்கும்.

    5000 ஆண்டுப் பழமை உள்ள சிந்துவெளி நாகரிகத்தின் எழுத்து மொழி தமிழ் என்பதன் சான்று உலகின் தொல்லெழுத்து அறிஞர்கள் பொதுவாக ஒப்புக்கொள்ளும் வகையில் இன்னும் நிறுவப்படவில்லை. அது ஒரு திராவிட மொழி என்பதற்குப் பல வாதங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தத் திராவிட மொழி தமிழ் என்பதற்குப் போதுமான சான்று இல்லை.

    கல்வெட்டுகளில் தமிழின் முதல் எழுத்துச் சான்று கிடைத்துள்ள கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன் தமிழ் பேச்சு மொழியாக இருந்திருக்கும். மொழியின் ஒலியைப் பதிவுசெய்யும் தொழில்நுட்பம் வரும்வரை காற்றோடு போன பேச்சு மொழி எந்த அகச்சான்றையும்  விட்டுப்போக முடியாது. தமிழ் என்று இனங்காணும் நிலையில் உள்ள ஒரு மொழி பேச்சு வழக்கில் இருந்த காலத்தைக் காண்பதற்குத் தமிழுக்கு வெளியே புறச்சான்றைத்தான் தேட வேண்டும்.

    இன்று சில தொல்மானிடவியல் ஆய்வாளர்களும் மரபணுவியல் ஆய்வாளர்களும் சேர்ந்து ஒரு நிலப்பரப்பில் வாழும் பல மொழி பேசும் குழுக்களின் மொழி அமைப்பிலும் மரபணு அமைப்பிலும் காணும் ஒப்புமை ஒரு குழுவில் இல்லாமல் போகும்போது, குழுவின் மரபணு அமைப்பை வைத்து, அந்தக் குழுவின் மொழி காலத்தால் முந்தியதா, பிந்தியதா என்று ஆராயத் துவங்கி-யிருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி துவக்கநிலையில் இருக்கிறது. (http://www.mpg.de/19395/Language_genetics)  திராவிடமொழி பேசுபவர்களையும் ஆரிய மொழி பேசுபவர்களையும் பற்றி இத்தகைய ஆராய்ச்சி இனிமேல்தான் நடைபெற வேண்டும். இது மொழியியலாளர்கள் மட்டும் செய்யக்கூடிய ஆராய்ச்சி அல்ல. மரபணு ஆராய்ச்சிதான் இதன் அடிப்படை. இந்த ஆராய்ச்சி நடந்தாலும், அது மூலத்= திராவிடமொழியின் காலத்தைக் காட்டலாமே தவிர, தமிழின் காலத்தைக் காட்டாது.

    மொழியிலாளர்கள் போன நூற்றாண்டில் மொழியின் அகச்சான்றை வைத்து, ஒரு குடும்பத்தைச் சார்ந்த மொழிகளில் ஒவ்வொன்றும் எக்காலத்தில் மூல மொழியிலிருந்து பிரிந்து தனிப் பேச்சு மொழி ஆனது என்று கணிக்க ஒரு நெறிமுறையை உருவாக்கினார்கள். அதற்குச் சொல்வழிக் காலவரிசை (glottochronology) அல்லது சொல் புள்ளீயியல் (lexical statistics) என்று பெயர். இந்த ஆய்வு நெறியின் கருதுகோள் இது: மொழியில் பிரதிப் பெயர்கள், எண்ணுச் சொற்கள், உறவுச் சொற்கள் போன்ற சில வகைச் சொற்கள் பிற மொழிகளிலிருந்து  கடனாகப் பெறப் படுவதில்லை; அவை ஒரு மொழியின் இயல்பான வளர்ச்சிப் போக்கில் மறைந்தால், மறையும் காலவிகிதம் ஒரு வாய்பாட்டிற்குள் அடங்கும். இந்த வாய்பாட்டால் கண்டுபிடிக்கும் கால விகிதத்தை ஒரே மொழிக் குடும்பத்தின் மற்ற மொழிகளின் கால விகிதத்தோடு ஒப்பிட்டு ஒரு மொழி தனிமொழி ஆன காலத்தைக் கணிக்கலாம். 1970-இல் கமில் சுவலபில் போட்ட கணக்குப்படி, தமிழ் கி.மு. நான்காம் – மூன்றாம் நூற்றாண்டிற்கு இடையில் தனி மொழியானது. அதாவது, மூலத்திராவிட மொழியிலிருந்து காலப்- போக்கில் பிரிந்துவந்த மொழிகளிலிருந்து தமிழ் தன்னை வேறுபடுத்திக்-கொண்டது. மேலே சொன்ன தமிழ் ஆவணச் சான்றின்படி இது தவறான கணக்கு என்பது புரியும்.

    இது போன்ற முரண்களாலும், கடன் வாங்காத சொல்வகையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஒப்பிடப் பயன்படுத்தும் அடிப்படைச் சொற்கள் குறைந்துகொண்டு போனதாலும் பேச்சுமொழியின் காலத்தைக் கணிக்கும் இந்த மொழியியல் முறை புறந்தள்ளப்பட்டது.

    முதலில் சொன்ன கட்டுரைகளில் மொழியின் காலத்தைக் கணிக்க மொழிக் கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன, இந்த ஆய்வுகளைச் செய்தவர்கள் மொழியியலாளர்கள் அல்ல என்றாலும். இந்த ஆய்வு முறை சொற்களுக்குப் பதிலாக ஒலியன்களின் எண்ணிக்கையை வைத்து மொழியின் காலத்தைக் கணக்கிடுகிறது. இந்த ஆய்வின் நோக்கம் மனித மொழி தோன்றிய காலத்தைக் கண்டறிவது. ஒரு மொழியின் ஒலியன்களின் எண்ணிக்கை மிக மெதுவாகவே, மிகப் பெரிய கால இடைவெளியிலேயே, விரியும் என்பது இந்த ஆய்வின் கருதுகோள். இன்றைய ஆப்பிரிக்க மொழிகளில் ஒலியன்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது; குறைந்த ஒலியன்களோடு பிறந்த மனித மொழி இந்த அளவு எண்ணிக்கையில் அதிகரிக்கப் பத்தாயிரக் கணக்கான ஆண்டுகள் ஆகும்; அதிகரிப்பைக் கணிக்க ஒரு வாய்பாட்டை உருவாக்கலாம்; அதை வைத்து மொழியின் தோற்றதக் காலத்தைக் கணக்கிடலாம் என்று இந்தக் கட்டுரைகள் காட்ட முயல்கின்றன.

    அதே நேரத்தில், இன்றைய மனிதனின் முன்னோடிகள், 100000 – 70000 ஆண்டுகளுக்கு முன்னால், ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து வெளியேறி உலகில் பரவியபோது புதிய சூழலில் அவர்களுடைய சில மரபணுக்கள் மறைவது போல, மொழியின் பரவலில் ஒலியன்கள் மறைகின்றன என்றும் இந்தக்  கட்டுரைகள் கருதுகின்றன. எனவே, ஆப்பிரிக்க மொழிகளின் ஒலியன்களின் எண்ணிக்கையை விடக் குறைவாக ஒலியன்கள் உள்ள மொழிகள் காலத்தால் பிற்பட்டவை என்பது இந்த ஆய்வின் மற்றொரு கருதுகோள். ஒரு மொழியின் ஒலியன் எண்ணிக்கைக்குப் பல காரணங்கள் இருந்தாலும், மேலே சொன்ன ஒலியன் தோன்றும், மறையும் விதி சரியானது என்பது இந்தக் கட்டுரைகளின் வாதம். இது மரபணுவின் தோற்றம், மறைவு விதி போன்ற ஒன்றை ஒலியன்களுக்கு ஏற்றிப் பார்க்கின்ற ஆய்வு முறை. ஒலியன்களின் தோற்றம், மறைவு பற்றிய இந்த வாதத்தை மொழியிய-லாளர்கள் பொதுவாக ஒத்துக்கொள்வதில்லை.. இந்த ஆய்வு முறையின் குறைகளைக் காட்டும் பல கட்டுரைகளை Language Typology என்னும் ஆய்விதழ் (Issue 15, 2011) வெளியிட்டிருக்கிறது.

    தமிழின் ஒலியன்களின் எண்ணிக்கை உலக மொழிகளின் சராசரி (40) எண்ணிக்கையை விட பெரிதும் வித்தியாசமானது அல்ல. இந்த எண்ணிக்கையை வைத்துத் தமிழ் காலத்தால் பிந்தியது என்று சொல்ல முடியாது.

    குமரிக் கண்டத்திலிருந்து இன்றைய மனிதர்களின் முன்னோர்கள் உலகில் பரவினார்கள் என்பதற்கு விஞ்ஞான ஆதாரம் இல்லை. ஆப்பிரிக்காவிலிருந்து உலகில் பரவிய இந்த முன்னோர்கள் –இவர்கள் இன்றைய மனிதர்களின் மூளைக்கு அடிப்டையான மூளை வளர்ச்சி பெற்றவர்கள்- இந்தியக் கண்டத்திற்குப் பரவிய காலத்தைப் பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துகள் இருக்கின்றன. சிலர் இது 50000 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்கிறார்கள்; சிலர் 70000 ஆண்டுகளுக்கு முன் என்கிறார்கள். (http://news.nationalgeographic.com/news/2005/11/1114_051114_india.html). இந்த முன்னோடிகள் ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பிய காலத்திற்கு முன்னரே மனிதனின் மொழி தோன்றிவிட்டது. ஆனால், இந்தியக் கண்டத்திற்கு வந்தவர்கள் என்ன மொழி அல்லது மொழிகள் பேசினார்கள் என்று தெரியாது.

    அவர்கள் பேசிய மொழியை, எந்தவித ஆதாரமும் இல்லாமல், வரலாற்றுக் காலத் தமிழுக்கு ஒத்த மொழி என்று எடுத்துக்கொண்டாலும்கூட தமிழின் தொன்மையின் மேல் எல்லை 70000-50000 ஆண்டுகள். ஆனால், தமிழ் என்று இன்று நாம் சொல்லும் மொழிக்கு ஒத்த மொழி இந்தக் கால கட்டத்திற்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னாலேயே தோன்றியிருக்கும்.

    பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (46)

    Share
  • குடதிசை மருங்கில்

    தேமொழி

    ஆசியக்  கலை அருங்காட்சியகம்:

    ஆசிய நாடுகளின் கலைபொருட்களைச் சேகரித்து வைத்திருக்கும் அமெரிக்க அருங்காட்சியகங்கள் பல.  ஒரு சிறிய ஊரின், ஒரு சிறிய நூலகத்திலும் குறைந்தது ஒரு பத்து  ஆசியக் கண்டத்தின் கலைப் பொருட்களாவது பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும்.

    பெருநகர் அருங்காட்சியகங்களில்  ஆசியக் கலைப் பொருட்களுக்கென்றே சிறப்பாகத் தனிப்பட்ட பகுதிகளும் ஒதுக்கப் பெற்றிருக்கும்.  ஆண்டிற்கு ஒரு முறை ஏதாவது ஒரு கருத்தினைத் தேர்வு செய்து, அதற்குப்  பொருத்தமான கலைப் பொருட்களை விளக்கங்களுடன் காட்சிக்கு வைத்து பார்வையாளர்கள் காண இந்த அருங்காட்சியகங்கள் வழி செய்வதும் உண்டு.

    ஆசியக் கலைப்பொருட்களை மட்டுமே கொண்டு தனிச் சிறப்பு மிக்க “ஆசியக் கலை அருங்காட்சியங்கள்” இருப்பது இரு பெரு நகர்களில். அவைகள் அமைந்திருப்பது  வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் நகரிலும், கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலும். இப்பகுதியில் அதிக அளவில் ஆசிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டோர் பலர் வாழ்வது அதற்கு முக்கிய காரணம்.

    சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம்

    பெரும்பான்மையான அருங்காட்சியகங்களில் இருக்கும் ஆசியக் கலைப் பொருட்கள் பெரும்பாலும் தூரக்கிழக்கு நாடுகளான சீனா, ஜப்பான் நாடுகளைச் சார்ந்த கலைப் பொருட்களாகவோ அல்லது தென்கிழக்காசிய நாடுகளைச் சார்ந்தவையாகவே இருக்கும்.  ஆசிய நாடுகளில் இருந்து வந்து குடிபுகுந்தோரில் பெரும்பாலும் இந்நாடுகளைச் சார்ந்தவர்களாகவே அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். தெற்காசிய நாடான இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளான ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் கலைப்பொருட்கள் மற்ற ஆசிய நாட்டு கலைப்பொருட்களை விட குறைவாகவே இடம் பிடித்திருக்கும்.  ஆசியநாட்டு வழி வந்தவர்களில் தெற்காசியப்பகுதியினைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்ற ஆசிய நாட்டினரைவிட எண்ணிக்கையிலும் அமெரிக்காவில் குறைவு.

    இந்த நிலைக்கு மாறாக அதிக  இந்தியக் கலைப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருப்பது சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஆசியக்  கலை அருங்காட்சியகத்தில் மட்டும்தான். இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் 18,000 திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் 6,000 ஆண்டுகள் பழமையான ஆசியக் கலாச்சாரத்தை விளக்கும் கலைப் பொருட்களாகும். இவற்றில் பெரும்பான்மையான கலைப் பொருட்களை நன்கொடையாக கொடுத்து உதவியவர் சிக்காகோவில் வாழ்ந்த தொழிலதிபர் ‘ஆவ்ரி ப்ரெண்டேஜ்’ (Avery Brundage) என்பவர்.

    இவர் 1959 இல் சான்  ஃபிரான்சிஸ்கோ நகருக்கு தன் தனிப்பட்ட கலைபொருட்கள் சேகரிப்பினை நன்கொடையாக வழங்க ஒப்புதல் அளித்தார்.  ஆனால் அதற்கு அவர் விதித்த நிபந்தனை, அக்கலைப் பொருட்களை சிறந்த முறையில் பார்வைக்கு வைக்கும் பொருட்டு சான்  ஃபிரான்சிஸ்கோ நகர் ஒரு புதிய அருங்காட்சியகத்தைக் கட்ட வேண்டும் என்பது. அவர் வேண்டுகோளை ஏற்று, புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, ஜூன் 1966 இல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. தன் ஆசியக் கலைப்பொருட்கள் சேகரிப்பை வழங்கிய ஆவ்ரி ப்ரெண்டேஜ், இந்த  ஆசியக்  கலை அருங்காட்சியகம் சான் ஃபிரான்சிஸ்கோ நகரை ஒரு சிறந்த ஆசியக் கலாச்சார மையமாக ஆக்க உதவும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

    தொடர்ந்து ஆசியக் கலைப்பொருட்களை சேகரித்த வண்ணமே இருந்த அவர் மீண்டும் அவற்றையும் நன்கொடையாக வழங்க முன் வந்தார்.  அதற்கு அவர் விதித்த புது நிபந்தனை, சான்  ஃபிரான்சிஸ்கோ நகர் அருங்காட்சியகத்தின் நிர்வாகத்தை மேற்பார்வையிட தனி நிர்வாகக் குழுவை அமைத்து, நிர்வாகம் தன்னாட்சி உரிமை அடைந்து நிர்வாகக் கட்டுப்பாட்டைத் தனது குழுவின் பொறுப்பில் வைத்திருக்க வேண்டும், நிர்வாகத்தில் நகரின் தலையீடு இருக்கக் கூடாது என்பது.

    சான்  ஃபிரான்சிஸ்கோ நகர் அந்த நிபந்தனையையும் ஏற்று, ஆவன செய்த பின்பு ஆவ்ரி ப்ரெண்டேஜ் 1969 இல் மீண்டும் ஒரு பெரிய ஆசியக் கலைப் பொருட்கள் சேகரிப்பை அருங்காட்சியகத்திற்கு வழங்கினார்.  அருங்காட்சியகத்தின் குறிக்கோள், மேலை நாடுகளிலேயே சிறந்த ஆசியக் கலாச்சார மையமாக அந்நகரின் அருங்காட்சியகத்தை உயர்த்துவதுதான். அதன் பிறகு அதிக கலைப்பொருட்களுடன் பல்கிப் பெருகி விரிவடைந்த வண்ணமே உள்ளது அருங்காட்சியகம். அதன் பராமரிப்பை சான்  ஃபிரான்சிஸ்கோ நகர் ஏற்றுக் கொண்டுள்ளது, நிர்வாகம் தனிப்பட்ட குழுவின் மேற்பார்வையில் தொடர்ந்து வருகிறது. தற்பொழுது உலகில் அதிக அளவு ஆசியக் கண்டத்தின் கலைப்பொருட்களைக் கொண்டுள்ளது சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம்.

    மீண்டும் தொடர்ந்து 1975 ஆண்டு, தனது இறுதிக்காலம் வரை ஆசியக் கலைப்பொருட்களை சேகரித்த ஆவ்ரி ப்ரெண்டேஜ், அவை அனைத்தையும் அருங்காட்சியகத்திற்கே நன்கொடையாக அளித்துவிட்டார்.  அருங்காட்சியகத்தில் உள்ள ஏறத்தாழ  பாதி கலைப்பொருட்கள் (7,700) இவர் மனம் உவந்து நன்கொடையாக அளித்ததே. இவற்றில் மிக அரியதாகக் கருதப்படுவது 338 ஆம் அண்டு செய்யப்பட்ட சீன நாட்டின் வெண்கல புத்தர் சிலை.  இவரது முயற்சியால் இன்று அமெரிக்கா மட்டுமல்ல உலகிலேயே  அதிக ஆசிய நாட்டு கலைப்பொருட்களைக் கொண்டு சிறந்துள்ளது  சான் ஃபிரான்சிஸ்கோவின் ஆசியக்  கலை அருங்காட்சியகம்.  இதனால் புதிய கட்டிடம் தேவைப்படும் நிலையும் ஏற்பட்டபொழுது, மக்களின் பெரும் ஆதரவுடன், நகரின் மையத்தில் மற்றொரு கட்டிடத்தில் அருங்காட்சியம் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.

    சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம் வளர்ச்சிக்கு மேலும் பல “சிலிக்கன் பள்ளத்தாக்கு’ (silicon valley) தொழில் நுட்ப தொழிலதிபர்களும் மிகத் தாராளமாக நிதி வழங்கி ஆதரித்து உள்ளார்கள். அவர்களில் ஒருவர் கொரியா நாட்டு  வழி வந்த ‘சாங் மூன் லீ’ (Chong-Moon Lee) ஆவார்.

    இங்கிருக்கும் கலைப்பொருட்கள்;
    (1) சீனா
    (2) ஜப்பான்
    (3) கொரியா
    (4) தென்கிழக்காசிய நாடுகள் (கம்போடியா, தாய்லாந்து, மயன்மார், லாவோஸ், வியட்நாம், பிலிப்பின்ஸ், இந்தோனேஷியா, மலேஷியா)
    (5) தெற்காசியா (இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா)
    (6) இமாலய நாடுகள் மற்றும் திபெத்திய புத்த மத நாடுகள் (திபெத், நேபாள், பூட்டான், மங்கோலியா)
    (7) பாரசீகம் மற்றும் மேற்காசிய நாடுகள் (ஈரான், ஈராக், ஆஃப்கானிஸ்த்தான், டர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான்)
    என்ற ஏழு ஆசியப் பிரிவுகளில் வகைப் படுத்தப் பட்டுள்ளன.

    சிறிய மரகதக் கற்கள் முதற் கொண்டு மிகப் பெரிய சிலைகளையும், ஓவியங்களையும், புகைப்படங்களையும், பீங்கான் மற்றும் மட்பாத்திரங்கள், அரக்கு, துணி, மரத் தளவாடங்கள், போர்க்கருவிகள் மற்றும் கவசங்கள், பொம்மைகள், கூடைகள் எனப் பலவகையான 18,000 பொருட்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கிறது. என்றும் நிரந்தரமாக காட்சிக்கு வைக்கப் பட்டிருப்பவை 2,500 கலைப் பொருட்கள்.

    இவையாவும் மூன்று அடிப்படைக் கருத்துக்களை விளக்கும்  வகையில் இடம் பெற்றுள்ளன. அவை:
    (1) புத்தமதத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
    (2) ஆசிய நாடுகளுக்கிடையே ஆன கலாச்சார மற்றும் வணிக  பரிவர்த்தனைகள்
    (3) ஆசிய நாடுகளில் இடம்பெறும்  நம்பிக்கைகளும், பழக்க வழக்க நடைமுறைகளும் ஆகும்.

    இந்தியாவினைக் குறிக்கும் சிறப்பு கண்காட்சியாக சென்ற ஆண்டுகளில்:
    மேவார் அரச பரம்பரையின் கலைப்பொருட்கள் [Princes, Palaces, and Passion: The Art of India’s Mewar Kingdom (2007)]
    இந்திய அரசர்களும் அவர்களது அரசவையின் சிறப்புகளும் [Maharaja: The Splendor of India’s Royal Courts (2011)]
    ஓவியர் சஞ்சய் பட்டேலின் இந்தியக் தெய்வங்களின் ஓவியங்கள் [Deities, Demons, and Dudes with ‘Staches: Indian Avatars by Sanjay Patel (2011)]

    இந்த ஆண்டில்:
    இந்திய தெய்வங்களின் கற்சிலைகள் [Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum (2012)]
    போன்ற சிறப்பு கலைபொருட்கள் கண்காட்சிகளையும்  சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம் வழங்கியுள்ளது.

    (தொடரும்)

    Source:
    Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
    San Francisco Asian Art Museum
    August 25, 2012–February 25, 2013

    All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
    © Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.

     

     

    << குடதிசை மருங்கில் – 2

    Share
  • பச்சைக் கிளி

    நடராஜன் கல்பட்டு

     ரகு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரிந்து வந்தான்.  எங்கு போவதானாலும் காரில் தான் பயணம்.

     அவனுடைய சித்தப்பா சித்தி விழுப்புரத்தில் வசித்து வந்தனர்.  அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.  அதனால் தானோ என்னவோ ரகு மீது அவர்களுக்கு அளவு கடந்த பாசம்.  ரகுவுக்கும் அவர்கள் மீது ஒரு தனி மரியாதை.  எப்போது விழுப்புரம் வழியாகச் சென்றாலும் சித்தப்பா வீட்டிற்குச் செல்லாமல் இருந்ததில்லை.

    அப்படி ஒரு முறை சென்றபோது:

    “வா, ரகு.  எப்படி இருக்கே?  அப்பா அம்மா சௌக்யமா?” என்றபடி அவனை வரவேற்றாள் சித்தி.

     அவர்கள் குடி இருந்த வீடு ‘ஸ்டோர்’ என்று சொல்வார்களே அப்படிப் பட்ட ஒன்று.  ‘ஸ்டோர்’ வீடு என்றால் என்ன தெரியுமா?  தெருவிலிருந்து கதவு வழியே நுழைந்தால் வரிசையாக ஐந்தாறு வீடுகள் இருக்கும்.  இந்த வீடுகளுக்கெல்லாம் பொதுவாக செங்கல் பதித்த நீண்ட முற்றம்.  கொல்லைப் புரத்திலோ வாசல் புரத்திலோ ஒரு பொது அறை உண்டு.  குடி இருப்பவர்களின் வீட்டில் உள்ள வயது வந்த பெண்கள் மாத விடாய் நாட்களைக் கழிக்க அந்த பொது அறை.  கொல்லைப் புரம் ஒரு பொது குளியல் அறை, கிணறு மற்றும் கழிப்பறை.  ஒவ்வொரு வீட்டிற்கும் வாசலில் ஒரு திண்ணை.   வீட்டினுள்ளே ஒரு சமையல் அறை, ஒரு படுக்கை அறை.  சமையல் அறையில் ஒரு பக்கத்தில் பாத்திரங்கள் சுத்தம் செய்யும் இடம்.  அவ்வளவே.

     உள்ளே நுழைந்தவுடன் சூடான காப்பி வந்தது.  சித்தி சொன்னாள், “ரகு காப்பி சாப்டூட்டு குளிச்சுட்டு வா.  பத்து நிமிஷத்துலே உனக்குப் புடிச்ச கத்தரிக்கா ரசவாங்கி ரெடி ஆயிடும்.”

     “சித்தி நான் கெளம்பற போதே குளிச்சுட்டு தான் கெளம்பினேன்.”

     “சரி.  இந்தா இந்த பழய ஆனந்த விகடனப் பாத்துண்டு இரு.  சாதமெல்லாம் ரெடியா இருக்கு.  ரசவாங்கி மட்டும் பண்ணிடறேன்.  நீ ட்ரெஸ்ஸ மாத்திண்டு வா.”

     “சரி” என்று சொல்லிய ரகு, ஒரு வேஷ்டியைக் கட்டிக் கொண்டு கையில் ஆனந்த விகடனுடன் திண்ணையில் வந்து அமர்ந்தான்.

     அவன் உட்கார்ந்த அடுத்த நிமிஷமே எங்கிருந்தோ பறந்து வந்தது ஒர் பச்சைக் கிளி.  பதினாறு வயதிருக்கும்.  அரக்கு பார்டருடன் கூடிய பச்சை நிறப் பட்டுப் பாவாடை, சட்டை, மஞ்சள் நிற மேலாக்கு இவற்றுடன் தனது கைகளிரண்டையும் ஒரு கிளி பறப்பது போல் விரித்து வைத்த படி வளைந்து வளைந்து ஓடிவந்த அவள் ரகுவின் கையில் உள்ள ஆனந்த விகடனைப் பார்த்தவுடன், “ஹையா ஆனந்த விகடன்” என்று கத்தியபடி அதைப் பிடுங்கி எறிந்து விட்டு, “ஹஹ்ஹா” என்று குரல் எழுப்பிய படி மீண்டும் வந்தபடியே பறந்து சென்றது அந்த பச்சைக் கிளி.

     ரகுவுக்கு சில வினாடிகள் ஒன்றும் புரியவில்லை.  பின்னர் எழுந்து சென்று ஆனந்த விகடனை எடுத்து வந்து திண்ணயில் உட்கார்ந்தான்.

     சற்று நேரத்திற்கெல்லாம் சித்தி, “ரகு சாப்பாடு ரெடி.  உள்ளே வறயா?” என்றாள்.

     “சித்தி இங்கெயே ஒரு தட்டுலே போட்டுக் கொண்டு வந்துடேன்.”

     சாப்பாடு வந்தது.  ரகு அதை ருசித்துக் கொண்டே, “சித்தி உன் கை மணமே தனி.  கத்திரிக்காய் ரசவாங்கி சாப்பிடணும்னா இங்கெதான் வரணும்.”

     திடீரென மறுபடி ‘கீ… கீ…’ என்று கத்தியபடி பறந்து வந்தது பச்சைக் கிளி.  ரகுவின் கையிலிருந்த தட்டைப் பார்த்ததும், “ஹையா கத்திரிக்காத் தான்”  என்று கத்தியபடி ஒரு தானைக் கையில் எடுத்து வாயில் போட்டுக் கொண்டது.  பின் விரித்த கைகளுடன் வளைந்து வளைந்து “கீ…கீ…”  என்று கத்தியபடி ஓடியது.

     மூன்றாவது வீட்டுத் திண்ணையில் சில குழந்தைகள் தாயக் கட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர்.  அங்கு சென்றடைந்த பச்சைக் கிளி கட்டங்களில் இருந்த சோழி, புளியங்க்கொட்டை இவற்றைக் கைலத்துவிட்டு, “ஹஹ்ஹா”  என்று கத்தியபடி மீண்டும் பறந்தது.

     விளயாடிக் கொண்டு இருந்த சிறுவர் சிறுமிகள்,  ‘பயித்தியம்’ ‘பயித்தியம்’.  ஏன் இங்கே வந்தே?  ஒங்க வீட்டுக்கே போ” என்று கத்தினர்.

     ஐந்தாவது வீட்டிலிருந்து அப்போது வெளியே வந்த ஒரு மாமி, “சனியனே…சனியனே…ஏண்டி ஒன்னெக் கட்டிப் போட்டு இருந்தேனே.  யாருடீ கட்டெ அவுத்து உட்டா?  வாடி உள்ளே” என்றபடி பச்சைக் கிளியின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு தன் வீட்டிற்குள்ளே மறைந்தாள்.

     “சித்தி, அந்தக் குழந்தைக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி அது நடந்துக்கறது?” என்றான் ரகு.

     சித்தி ஆரம்பித்தாள்.  “பாவம் அந்தப் பொண்ணு.  ரெண்டு வருஷத்துக்கு முன்னே ஒம்போதாங்க்ளாஸ் படிச்சிண்டு இருந்தா.  கால் வருஷப் பரீக்ஷை  நடந்துண்டு இருக்கறப்போ ஒரு நாள் கொஞ்சம் சீக்கிரமாவே ஸ்கூல் போய்ட்டா.  க்ளாஸ்ரூம் கதவு தெறக்காததுனாலே ஒரு மரத்தடிலே ஒக்காந்து படிச்சிண்டு இருந்தா.

     அப்போ அங்கே வந்த ஒரு பத்தாங்க்ளாஸ் பையன் அவளெக் கட்டிப் புடிச்சு முத்தம் கொடுத்தான்னு மத்த பொண்ணுங்கள்ளாம் சொன்னா.  பாவம் மீனாக்ஷி.  அன்னிலேருந்து இப்படி ஆயிட்டா.  அன்னியோட அவ படிப்பும் நின்னு போச்சு.

     அவ அப்பா அம்மா பாக்காத வயித்தியம் இல்லே.  வேண்டிக்காத தெய்வம் இல்லே.  எப்பொதான் அந்த ஆண்டவன் கண்ணு தொறப்பானோ தெரிலே.”

     “ஆண்டவா உனக்குக் கண்ணே இல்லையா?  இந்தப் பச்சைக் கிளிக்கு இப்படி ஒரு சோதனையா?” என்று மனதில் எண்ணியபடி மீதி சாப்பாட்டை விருப்பின்றி  சாப்பிட்டு முடித்தான் ரகு.

     “ரகு நான் படுக்கை போடறேன். காரை ஓட்டிண்டு வந்தது ஒனக்குக் களப்பா இருக்கும். கொஞ்ச நாழி ரெஸ்ட் எடுத்துண்டுட்டு சாயங்காலமாக் கிளம்பிப் போகலாம்”, என்றாள் சித்தி.  ரகுவும் உள்ளே சென்று படுத்துக் கொண்டான். ஆனால் தூக்கம் வரவில்லை.

     மீண்டும் மீண்டும் ஒரே எண்ணம் மனத் திரையில்.  ‘இந்த சின்னம் சிறிசுக்கு இப்படி ஒரு கஷ்டமா?  ஆண்டவா உனக்குக் கண்ணே இல்லையா?’ என்று.

     மணி மூன்றாயிற்று.  ரகு பேன்ட் ஷர்ட் போட்டுக்கொண்டு கிளம்பத் தயாரானான்.  அப்போது மீனாக்ஷியின் அம்மா, “மீனா இங்கே வந்தாளா?’ என்று கேட்டபடி ஓடி வந்தாள்.  “அரை மணி நேரமா அவளக் காணும்.  எங்கே போய்ட்டாளோ தெரியலயே,” என்றவள் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது.

     ரகு, “சித்தி நான் போய்ட்டு வறேன்.  சித்தப்பா வந்தா சொல்லிடு,” என்றபடி வாசலை அடைந்தான்.

     “ரகு, இன்னும் ஒரு அரை மணி நேரத்துக்குள்ளே சித்தப்பா வந்துடுவா.  கொஞ்சம் வெயிட் பண்ணேன்.”

     “நான் இருட்டுக்கு முன்னே மெட்ராஸ் போய்ச்சேரணும்னு பாக்கறேன் சித்தி.  அடுத்த தடவே வரெச்சே ஒரு நாள் பூரா தங்கறாப்ளே வறேன்.”

     “மெட்ராஸ்லேந்து திரும்பிப் போறெச்சே வரயா?”

     “இல்லே சித்தி. திரும்பிப் போறச்சே வேற வழியால போகலாம்னு யோசனை பண்ணிண்றுக்கேன்.”

     சித்தியின் பாசம் கலந்த உபசரிப்பு ‘வா…வா’ என்றாலும் பச்சைக் கிளியின் பரிதவிப்பு பற்றிய எண்ணம் அவனை ‘வராதே…வராதே’ என்று தடுத்தது.

     ரகு, சித்தி வீட்டிலிருந்து கிளம்பி ஐந்து நிமிஷம் கூட ஆகியிருக்காது.  ஒரு நூறடி தூரத்தில் கைகளை விரித்தபடி பச்சைக் கிளி ஓடிக்கொண்டிருந்தாள்.  சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் பருந்து போல அவள் மீது பாய்ந்தனர்.  அவர்கள் மோதியதில் மீனாக்ஷி கீழே விழ ஒருவன் அவளது மேலாக்கைப் பிடித்து இழுத்தான்.  மற்றவன் அவளது சட்டையைப் பிடித்து இழுக்க அது சற்று கிழிந்தது.

     அதற்குள் அங்கு சென்றடைந்த ரகு காரை விட்டு இறங்கி அந்த சிறுவர்களை பலமாக அடித்து உதைத்தான்.  சிறுவர்கள் ஓடி மறைந்தனர்.  தரையில் கிடந்த மீனாக்ஷியை கையைக் கொடுத்துத் தூக்கினான்.  பின் அவளது மேலாக்கை அவள் மீது போர்த்தி அவள் மீது ஒட்டிக் கொண்டிருந்த புழுதியைத் தட்டினான்.  பிறகு கைத்தாங்கலாக அவளை காருக்குள் ஏற்றி உட்கார வைத்தான்.

     சில வினாடிகள் பச்சைக் கிளியின் உடலெல்லாம் மலேரியாக் காய்ச்சல் வந்தது போல நடுங்கியது.  மீனாக்ஷி பேச ஆரம்பித்தாள், “அங்கிள் ஒங்கள மாதிரி நல்லவா இருக்கற இந்த உலகத்துலே இந்த மாதிரி கெட்டவாள் எல்லாம் ஏன் இருக்கா?”

     சிறு இடைவெளிக்குப் பின் தொடர்ந்தாள்  பேச்சை மீனாக்ஷி. “அங்கிள், ஆத்துக்குப் போனதும் நடந்ததை அம்மா கிட்டே அப்படியே சொல்லாதேங்கோ.  அம்மாவாலே அதெத் தாங்கிக்கவே முடியாது.  பாவம் அம்மா.  உயிரே போனாலும் போயிடும்.  ரோடுலே ஓடறச்சே கல் தடுக்கி கீழே விழுந்துட்டேன்.  ரோடு ஓரத்துலே இருந்த முள் செடிலே மாட்டி சட்டை கிழிஞ்சுடுத்துன்னு  சொல்லுங்கோ.”

     மற்றுமொரு இடைவெளிக்குப்பின், “அங்கிள், அப்பா அம்மா கிட்ட என்னை மறுபடியும் ஸ்கூல்லே சேக்கச் சொல்லுங்கோ.  எனக்கு நெறய படிச்சு சரோஜினி நாய்டு, மேதா பட்கர், கிரண் பேடி இவா மாதிரி வரணும்னு ஆசை,” என்றது பச்சைக் கிளி.

     “ஆண்டவா இந்தப் பிஞ்சு உள்ளத்தில்தான் எத்தனை பாசம்.  எத்தனை ஆசை.  சற்று முன்புதான் ‘உனக்குக் கண் இல்லையா?’ என்று கேட்டேன். கண்கள் மட்டுமல்ல, காதுகளும் உனக்கு இருக்கிறது என்பதைக் காட்டி விட்டாய்.  தாயே மீனாக்ஷி நீ உன் பெயர் கொண்ட இந்தக் குழந்தையின் ஆசையையும் பூர்த்தி செய்து விடு”, என வேண்டிக்கொண்டான் ரகு.

     வீடு வந்ததும் மீனாக்ஷி கேட்டுக் கொண்டபடியே அவள் அம்மாவிடம் சொன்னான் ரகு.

     மீனாக்ஷி, “அம்மா நான் ரோடுலே ஒடிண்டு இருந்தப்போ கல் தடுக்கி விழுந்துட்டேன்.  அங்கிள்தான் என்னத் தூக்கி விட்டு ஆத்துக்கு அழைச்சிண்டு வந்தாம்மா,” என்றாள்.   மகள் கோர்வையாகப் பேசுவதைப்   பார்த்து அவள் அம்மாவுக்கு ஒரே அதிர்ச்சி, ஆச்சரியம்.

     ரகு காரில் ஏறியபோது அவனுக்கு வழியனுப்ப வாசலுக்கு வந்தவர்கள் நான்கு பேர், சித்தி, மினாக்ஷி மற்றும் அவளது அப்பா, அம்மா.

     மினாக்ஷி, “பை அங்கிள்.  நீங்க மறுபடியும் எங்க ஊருக்குக் கட்டாயம் வரணும்,” என்றாள் கைகளை ஆட்டியபடி.

     “கட்டாயம் வருவேம்மா,” என்றபடி காரைக் கிளப்பினான் ரகு.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …. (39)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே 1

    2012ம் ஆண்டு எனும் மாடியின் முடிவில் நின்று கொண்டு 2013 எனும் மாடியை வியப்புடன் நோக்கிக் கொண்டே இம்மடலை உங்களுக்கு வரைகின்றேன்.

    காலம் காற்றுப் போல பறக்கின்றது. ஒரு இரயில் பெட்டியில் உட்கார்ந்து கொண்டு சாளரத்தின் வாழியே வெளியே கடந்து செல்லும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு இருக்கும் பயணியின் கண்களில் தெரியும் அற்புதமான, மிதமான ,மோசமான காட்சிகள் இது அற்புதம், இது மிதம், இது மோசம் எனப்தைப் புரிந்து கொண்டு இரசிப்பதன் முன்னாலே அக்காட்சி மின்னல் வேகத்தில் மறைந்து விடுவது போலத்தான் வாழ்வின் நிகழ்வுகளும் எம்மைக் கடந்து கனவேகத்தில் பறக்கின்றன.

    ஆனால் இரண்டுக்கும் ஒரு வித்தியாசம் ? அட என்னடா அப்படி என்னதான் வித்தியாசம் என்கிறீர்களா?

    இரயில் பயணி தவற விட்ட காட்சியை நிச்சயம் மீண்டும் பார்த்துத்தான் ஆக வேண்டும் என எண்ணினால் அதே பயணத்தை , அதே பாதையில் மீணடுமொருமுறை செய்து கொள்ளலாம். ஆனால் நாம் எமது வாழ்வில் தவற விட்ட கணங்களை மீண்டும் அனுபவிப்பது சாத்தியமாகுமா? இல்லையே !

    முடிந்த ஆண்டின் கணக்கை கடைசிப் படியில் நின்று அலசுவது சுலபம். ஆனால் எமது முன்னே இருக்கும் ஆண்டு எமக்கு தரப்போவது என்ன? எமது வாழ்க்கைப் பயணம் எந்தப்பாதையில் எவ்வகையில் திருப்பப்படப் போகிறது என்பதை யாருமே அறிய மாட்டார்.

    அது ஒரு திறக்கப்படாத புத்தகம். அதன் நிகழ்வுகளை அனுபவித்துக் கொண்டே தான் அறியலாம். ஆனால் இதுவரை படித்து முடித்து கடைசிப் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் இந்த 2012 எனும் அத்தியாயத்தில் நாம் கண்டவைதான் என்ன ? சற்றே அலசுவோமா வாருங்கள் !

    இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் இந்த 2012 ஒரு மைல் கல் என்றே சொல்ல வேண்டும். 2005ம் ஆண்டு சிங்கப்பூரில் உலக ஒலிம்பிக் கமிட்டியின் 2012 ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நாடு இங்கிலாந்து என்று அறிவிக்கப்பட்ட நேரம் தொடக்கம் ஒலிம்பிக் நடந்து முடிந்த வரைக்கும் பலவகையான நிகழ்வுகல் அரங்கேறி முடிந்து விட்டன.

    ஆனால் அனைத்துக்கும் முடி சூட்டியது ஒலிம்பிக் போட்டி என்றே சொல்ல வேண்டும். டோனி பிளேயர் பிரதமராக இருந்த காலம் தொடங்கி இன்று டேவிட் கமரன் பிரதமராக இருக்கும் காலத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியே கடந்த 2012ம் ஆண்டின் முத்திரையான நிகழ்வு என்றால் மிகையாகாது.

    உலகப் பொருளாதாரம் கனவேகத்தில் சரிந்து கொண்டு சென்றதன் ஆரம்பம் 2008ம் ஆண்டே என்று சொல்லலாம். அச்சரிவினை சரியான முறையில் கையாளத் தவறி விட்டது இங்கிலாந்தின் அப்போதைய அரசாங்கம் எனும் வாதத்தை முன்வைத்து 2010ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கூட்டணி அரசாங்கம் அமைக்க மட்டுமே அதிகாரம் பெற்ற கன்சர்வேடிவ் கட்சி தனது அனுமானத்தின் படி நாட்டின் சரிவை மாற்றியமைக்கும் பணியில் எதிர்பார்த்தபடியான முன்னேற்றங்களை இந்த இரண்டரை வருடங்களில் ஏற்படுத்தவில்லை.

    மக்களின் மனதில் இருந்த பொருளாதார நிலை பற்றிய ஐயப்பாட்டை ஒரு 6 மாத காலம் மறக்கப் பண்ணியிருந்தது ஒலிம்பிக் போட்டிகளே !

    நாடு இருக்கும் சிக்கலுக்குள் ஒலிம்பிக் போட்டிக்காக இத்தனை தொகையான பணத்தை வாரி இறைப்பது தேவையா? எனும் வாதம் பல கோணங்களில் இருந்து எழுந்து கொண்டுதான் இருந்தது. இவ்வொலிம்பிக் போட்டிகள் அரசு எதிர்பார்த்தபடி வெற்றியடையாது எனும் எதிர்பார்ப்பில் அப்போது “சொன்னேன் கேட்டீர்களா?” எனும் பல்லவியைப் பாடக் காத்திருந்தவர்கள் எதிர்பார்ப்பில் மண்ணை வாரிப்போட்டு நாட்டின் அனைத்து மக்களும் தமது வேறுபாடுகளை மறந்து இவ்வொலிம்பிக் போட்டியின் வெற்றிக்காக உழைத்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

    கொள்கையளவில் அதீத வேறுபாடுகளைக் கொண்டிருந்த கட்சிகளான “கன்சர்வேடிவ்” கட்ச்சியும், “லிபரல் டெமகிரட்ஸ்” கட்ச்சியும் கூட்டரசாங்கம் அமைத்திருந்தாலும் அதன் பலன் அவர்கள் இருவருக்கும் மோசமானதாகவே 2012ல் அமைந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பொதுக் கருத்துக் கணிப்பீட்டில் இவ்விரண்டு கட்சிகளுக்கும் பலத்த அடி விழுந்துள்ளது.

    இவர்களது எதிர்காலம் எத்தகைய சுபீட்சம் வாய்ந்தது என்பதை 2013ம் ஆண்டின் நிகழ்வுகள் தான் காட்டப் போகிறது.

    அடுத்து இவ்வருடம் இங்க்லாந்தில் இடம்பெற்ற மிகவும் பரவலாக அனுபவிக்கப்பட்ட நிகழ்வு இங்கிலாந்து மகாராணியாரின் 60 ஆண்டுகால பதவிக்கால கொண்டாட்டங்களாகும்.

    இக்கொண்டாட்டங்கள் மீண்டும் ஒருமுறை நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தி நாட்டின் பொருளாதாரச் சிக்கல்களை மறந்து ஒரு சிறிய இடைவெளியில் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

    அது தவிர இங்கிலாந்தைப் பொறுத்தவரை இவ்வருடம் பலவழிகளிலும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலான அரசியல் சட்டங்களை உள்ளடக்கியதாகவே அமைந்திருக்கிறது.

    அமெரிக்காவை எடுத்துக் கொண்டோமானால் அமெரிக்க நாட்டின் முதலாவது கருப்பு இனைத்தைச் சேர்ந்த ஜனாதிபதி எனும் சாதனையை ஏற்படுத்திய ஒபாமா அவர்கள். தனது சாதனைக் காலம் ஒரு பதவிக்காலம் மட்டுமே என்று ஆக்கிவிடாமல் இவ்வருடம் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாகியுள்ளார்.

    முதலாவது முறை ஜனாதிபதியாக அவர் பதவி ஏற்றபோது உலகெங்கும் ஒரு அமைதி கலந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அவற்றில் பல எதிர்பார்ப்புக்களாகவே முடிந்து போயின.

    நான்கு வருட கால பதவியின் மூலம் தான் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் அந்த எதிர்பார்ப்புகளுக்கு இப்பதிவிக்காலத்திலாவது செயலாக்கம் கொடுப்பாரா என்பதையும் 2013ம் ஆண்டில் அவர் எடுக்கப் போகும் நடவடிக்கைகளை வைத்துத்தான் கூற முடியும்.

    கடந்த வருடம் அமெரிக்காவைப் பொறுத்தவரையில் சில கசப்பான மனிதக் கொலைகள் நிகழ்வுகளின் மூலம் தன்மீது கறையைப் பூசிக்கொண்டிருக்கிறது. துப்பாக்கிகளை சாதாரண் குடிமகனும் வைத்திருக்கலாம் எனும் அவர்களின் அரசியல் சட்டத்திற்குப் பலமான சோதனைகள் எழுந்துள்ளன.

    மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக அரபு-இஸ்ரேல் சிக்கலுக்கு தீர்வை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு எத்தகைய அழுத்தத்தைப் பிரயோகிக்கப்போகிறது என்பதை ஆவலுடன் உலகின் பலநாடுகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. இதற்குரிய விடையையும் 2013 நல்குமா? என்பது கேள்விக்குறியே !

    ஆசிய நாடுகளை எடுத்துக் கொண்டோமானல் பொருளாதார ரீதியில் வளர்ந்து கொண்டு செல்லும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மேலைநாடுகளின் பொருளாதாரத் தேக்கத்தினால் சிறிது பின்னோக்கிச் சென்றிருந்தாலும் விளைவான பொருளாதாரக் கண்ணோட்டம் வளர்ச்சியாக இருந்திருக்கிறது.

    இப்பொருளாதார வளர்ச்சியின் தாக்கம் மத்திய வர்க்கத்தினோடு தங்கி விடாமல் பெரும்பான்மையான அடிமட்டத்தில் வாழும் மக்களைச் சென்றடையும் வழிமுறைகளை இந்தியா போன்ற நாடுகள் செயல்படுத்துமா ? என்பதையும் 2013ன் நடவடிக்கைகள் தான் உணர்த்தப் போகின்றன.

    “அரபு நாடுகளின் எழுச்சி” என்று வர்ணிக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளினதும், அரபு நாடுகளினதும் சர்வாதிகாரத் தலைமைகள் தூக்கியெறியப்பட்டு “ஜனநாயக ஆட்சிமுறை” என வர்ணிக்கப்படும் ஆட்சிகள் பலநாடுகளில் அமைக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாட்சி முறைகள் உலகப் பொருளாதாரத்தில் தம்மை இணைத்துக் கொள்ளும் வகையிலான ஜனநாயக முறையைப் பின்பற்றப் போகின்றனவா? அன்றி மதச் சார்பான தீவிர அரசியல் நடத்தும் ஆட்சிகளை அமைக்கப் போகின்றனவா? என்பதையும் இந்நாடுகளின் 2013ம் ஆண்டு நடவடிக்கைகள் காட்டிக் கொடுக்கப் போகின்றன.

    ஈழத்துத் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு அரசியல் தீர்வு காணப்பட்டு அங்கு வாழும் மக்கள் அனைவரும் சம உரிமையுடன், சகோதரத்துவ மனப்பான்மையுடன் ஒரு அமைதி வாழ்வை அடைவார்களா? எனும் கேள்வியின் விடையையும் 2013ம் ஆண்டின் நிகழ்வுகளே அளிக்கப் போகின்றன.

    உலகம் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. மக்களின் தேவைகளும், ஆசைகளும் அவர்களது ஆற்றலை மீறிய அளவில் வளர்ந்து கொண்டு செல்கிறது

    மனிதாபிமானம், மனிதநேயம், அன்பு, கருணை என்பன மக்களின் பண்புகளில் முதலிடம் பெறும் தன்மை குறைந்து கொண்டு செல்கிறது.

    சமுதாயம், சமூகம் எனும் பரந்த நோக்கம் குறுகிக் கொண்டு தன்னலவட்டம் விரிந்து கொண்டு செல்கிறது.

    இத்தகைய ஒரு சூழலில் தான் டிசம்பர் மாதம் 21ம் திகதி உலகம் தனது முடிவை அடையப் போகிறது எனும் வதந்தி உலகமெங்கும் வேகமாகப் பரவி வந்தது. இவ்வதந்தியின் வேகத்திற்கு ஈடுகட்டும் முகமாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் இத்தகைய நிகழ்வுக்குச் சாத்தியமில்லை என்று ஒரு மறுப்பறிக்கை விடுமளவிற்கு இக்கருத்து மக்களின் மனதில் ஒரு பீதியை, ஒரு கிலேசத்தைக் கிளப்பி விட்டிருந்தது என்றே சொல்ல வேண்டும்.

    ஆனால் இன்று அது வெறும் வதந்தி என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் இப்படியான ஒரு நிகழ்வு ஒவ்வொருவரையும் தமது வாழ்க்கையை எடைபோட்டுப் பார்க்கப் பண்ணியிருக்க வாய்ப்பிருக்கிறது.

    இந்த எடைபோடுதலில் மக்கள் வாழ்க்கையில் மனிதநேயம் எத்தகைய எடையை எடுத்தது என்பதே கேள்விக்குறி ?

    இனம், மதம், மொழி, நிறம் எனும் பாகுபாடுகளைக் கடந்து மனிதன் தன்னை மனிதனாகக் கணிக்க முயற்சித்துள்ளானா ?

    எம் அனைவரின் அவதானமும் 2013ம் நோக்கித் திரும்பியுள்ளது .

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • வால்ட்விட்மன் வசனகவிதை -5 என் பாடத் துவக்கம்

     

    வால்ட்விட்மன்  வசனகவிதை -5

    என் பாடத் துவக்கம்

    (Beginning My Studies)

                                                                                                                     (1819-1892)
                                                                                                           (புல்லின்இலைகள் -1)

                                                                                                         மூலம் : வால்ட் விட்மன்

                                                                                            தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    வால்ட்விட்மன்வாழ்க்கைவரலாறு:

    அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்து தந்தையால் நிறுத்தப் பட்டார். ஆகவே அவர் சிறு வயதிலேயே ஓர் அச்சகத்தில் பணிசெய்ய வேண்டிதாயிற்று. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நாளிதழ்களுக்கு எழுதியும், அவற்றுக்குப் பிறகு தொகுக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார். அவரது 17 வயதில் பள்ளி ஆசிரியராகச் சில காலம் வேலை செய்தார். 27 ஆவது வயதில் புரூக்லின் தின இதழின் ஆசிரியரானார். புரட்சிகரமான அவரது கவிதைப் படைப்புகள் மிகவும் தனித்துவ முறையில் பாலுறவு உட்பட ஆவேச உணர்ச்சியில் எழுதப் பட்டவை. அவர் அமெரிக்கக் குடியாட்சியை பேரளவு மதிப்புடன் கொண்டாடியவர். படைப்புகளில் குறிப்பாக அவர் முதலில் வெளியிட்ட சிறிய கவிதைத் தொகுப்பு “புல்லின் இலைகள்” [Leaves of Grass] அவராலே பன்முறைத் திருத்தமாகிப் பின்னால் விரிவு செய்யப் பட்டது.

    வால்ட் விட்மன் தனது கவிதைகளில் ஒளிமறைவின்றி எதையும் வெளிப்படையாக வெளியிட்டதால், அவரது படைப்புகள் ஆபாசமானவை, வெறுக்கத் தக்கவை என்று முதலில் பலரால் ஒதுக்கப் பட்டன ! அவரது கவிதைகள் அனைத்தும் எதுகை, மோனைத் தளை அசையின்றி இலக்கண விதிக்கு அப்பாற்பட்ட வசன நடைக் கவிதைகளாய்[Free Verse] எழுதப் பட்டவை. அவரது கவிதைகளை உயர்வாகப் பாராட்டி யவருள் ஒருவர் கவிஞர் எமர்ஸன் [Ralph Waldo Emerson]. 1855 இல் 12 பாடல்களுடன் முதற்பதிப்பு “புல்லின் இலைகள்” புத்தகத்தை வெளியிட்டார். பின்னால் அது 300 கவிதைகளுடன் விரிவானது. அதற்கு ஆரம்பத்தில் அமெரிக்கர் ஆதரவு கிடைக்க வில்லை.

     1848 இல் வால்ட் விட்மன் நியூயார்க்கிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் சென்றார். அவர் அங்கேதான் முதன் முதலில் அடிமைகள் நடுத்தெருவில் ஏலம் விடப்படும் அருவருப்பு வாணிபத்தையும்,அடிமைக் கறுப்பர் படும் கொடுமைகளையும் கண்டு மனவேதனை அடைந்தார். ஆர்வமாய்ப் படிக்கும் வேட்கை மிகுந்த வால்ட் விட்மன் 1848 இல் தனது சொந்தச் செய்தித்தாள் “உரிமைப் பூமி“ [Free Soil] என்பதை வெளியிட்டு அதற்கு அதிபதி ஆனார். மின்சார உடல் பற்றி என் பாடல் [I Sing the Body Electric] & என்னைப் பற்றிய எனது பாடல்[Song of Myself] ஆகிய இரண்டு நூல்களும் மனித உடம்பைப் பற்றியும், உடல் நலம்,பாலுறவு பற்றியும் எழுதப் பட்டவை.

    தென்னக மாநிலங்களில் கொடுமைப் படுத்தப்படும் அடிமைகளை விடுவிக்க ஆப்ரஹான் லிங்கன் கடுமை யான போர் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. அதுவே சகிக்க முடியாத “சிவில் போர்” [Civil War] எனப்படும் உள்நாட்டுப் போரானது. அரசாங்க ஐக்கியப் படைக்கும், “கூட்டு மாநிலங்கள்” என்னும் கன்ஃபெடரேஷன் படைக்கும் யுத்தம் உண்டானது. இறுதியில் இருபுறமும் சமப்போர் புரிந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 30,000 மேற்பட்டது. அப்போது ஐக்கியப் படைகளுடன் போர் புரிந்த வால்ட் விட்மன் சகோதரன் ஜார்ஜ் விட்மன் காய முற்றதால் அவரைக் குணப்படுத்த வால்டயர் வாஷிங்டன். D.C. வர வேண்டிய தாயிற்று. அவர் சுயப்பணி யாளராய்ச் சேர்ந்து காயமுற்ற சுமார் 100,000 நபர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தது. வாஷிங்டன் D.C., மருத்துவ மனைக்கு பணிபுரிய வால்ட் விட்மன் 600 தடவை வந்ததாக அறியப் படுகிறது.

    சிவில் போர் வெற்றியில் முடிந்து, ஆப்ரஹாம் லிங்கன் இரண்டாம் முறையாக நின்று, ஜனாதிபதி தேர்வு வெற்றி பெற்ற விழாவில் வால்ட் விட்மன் கலந்து கொண்டவர் என்று அறியப் படுகிறது. போர் முடிந்து சட்ட மூலமாக அடிமை வைப்பு முறை அமெரிக்காவில் நீக்கப் பட்டது. போர் நின்ற ஐந்தாம் நாள், அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் பலியானார். லிங்கன் சுடப்பட்டு மரித்ததைப் பற்றி வால்டர் விட்மன் எழுதிய இரங்கற்பா “ஓ காப்டன், என் காப்டன்” படிப்போரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவது. 19 ஆம் நூற்றாண்டில் கவிதைப் படைப்புகள் எழுதிய வால்ட் விட்மனுக்கு 20 ஆம் நூற்றாண்டில்தான் அவரது படைப்புகளின் உன்னதம் வெளியாகிப் பரவியது. அவருடைய படைப்புகளின் செல்வாக்கு,மேன்மை புகழ் பெற்ற கவிஞர்கள் பாப்லோ நெரூடா, அல்லன் கின்ஸ்பெர்க், [அமெரிக்கா] ஃபெர்னான்டோ பெஸ்ஸோவா [போர்ச்சுகல்] ஆகியோர் ஆக்கங்களில் தெரிகிறது. வால்ட் விட்மன் கவிதைப் படைப்புகள் சில : அடிமை ஒழிப்புப் போர் பற்றி “டிரம் டாப்ஸ்”, “பீட் பீட் டிரம்ஸ்”, “இரங்கற்பா ஆப்ரஹாம் லிங்கனுக்கு”, குடியாட்சித் திறப்புகள்,” “இந்தியா நோக்கிப் பாதை.” [Drum-Taps, Beat ! Beat ! Drums !” “When Lilacs Last in the Dooryard Boom’d”, Democratic Vistas,” “A Passage toIndia.”].

     1873 இல் மூளை அடிப்பில் [Stroke] அவர் பாதிக்கப் பட்டு ஒரு பகுதி உடலுறுப்புகள் பயன்படுத்த இயலாது போயின. அதோடு ஒன்பது ஆண்டுகள் காலந் தள்ளி 1892இல் அமெரிக்கக் கவிதை மேதை வால்ட் விட்மன் தனது 73 ஆம் வயதில் காலமானார்.

    +++++++++++++++++++++++++++++

                                                                                                                   என் பாடத் துவக்கம்

                                                                                                                    (Beginning My Studies)

                                                                                                                          [வால்ட்விட்மன்]

    படிக்கத் துவங்கிய போது

    பரவசம் அளித்தது எனக்குப் பேரளவில் :

    எனது முதல் எட்டு நடை,

    கற்கும் தன்னுணர்வு, கற்கும் வடிவங்கள்,

    விளை யாட்டின் மேன்மை,

    சின்னஞ் சிறு பூச்சி, விலங்கு,

    கண்ணோக்கு, நட்பு, ஐம்புல உணர்வு !

    முதல் எட்டு அச்சம் தரினும், மிகையாய்

    மகிழ்ச்சி அளித்தது எனக்கு !

    நடந்த தூரம் சிறிது ! நடை மேலும்

    தொடர விருப் பில்லை !

    நிறுத்தினேன், திரிந்தேன் எந்நாளும்,

    பள்ளியில் கற்றதைப்

    பரவசப் பாக்களில் பாடுதற்கு !

    +++++++++++++++++

                                                                                                                              தொடங்குபவர்கள்

                                                                                                                                         (Beginners)

                                                                                                                                       வால்ட் விட்மன்

    வையத்தில் தொடங்குவோர்க் கெல்லாம்

    வசதிகள் எவ்விதம்

    வழங்கப் படும் படிப் படியாய் ?

    எவ்விதம் அவை அரிதானவை

    எவ்விதம் உலகுக்கு அச்சம் அளிக்கும் ?

    எவ்விதம் தமக்கேற் றளவில்

    ஏற்றுக் கொள்கிறார் ?

    தமக்குத் தாமே எவ்விதம் அவர்

    தாங்கிக் கொள்கிறார்

    இன வெறுப்பை எல்லாம்

    பிறரையும் முன் னிறுத்தி !

    தோன்றும் அவர்

    முரண்பாடு எத்தகையது அவரது

    வயதுக் கேற்ப !

    எப்படி அதை எதிர் கொள்வர்

    மக்கள்

    ஆயினும் அதை அறியாமல் ?

    எப்படி அவரது விதியில்

    ஏதோ ஒன்று நிலையாக உள்ளது

    எந்நாளும் ?

    எப்படி அவர் எப்போதும்

    தப்பாகத் தேர்ந் தெடுக்கிறார்

    தாம் மேலாய்ப் போற்றும்

    தமது வெகுமதிப் பரிசுகளை ?

    எவ்விதம் மாறாத

    ஒரே விலை கொடுத் தின்னும்

    வாங்கிக் கொள்கிறார்

    மாபெரும் அதே

    வாணிபச் சரக்கை ?

    +++++++++++++

    தகவல்:

    1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

    2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]

    3. Britannica Concise Encyclopedia [2003]

    4. Encyclopedia Britannica [1978]

    5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

    6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

    [ஆப்ரஹாம்லிங்கன்நாடகம்]

    Share
  • இறைவன் எங்கே..

    தேவா

    இறைவன்

    உண்டென்றும் இல்லை என்றும்

    உரைப்போர் உலகில் கோடியுண்டு

    கைலாயத்தில் கண்டேன்  ஈசனை என்போர் சிலர்

    காசிக்கு சென்றாலும் பாவங்கள்  போகவில்லை

    என்போரும் உண்டு ,

    பயிர் காத்திட மழை ,ஈந்திடும் முகிலும் இறைவனே என்று

    எழுதிவிட்டார் வள்ளுவன் ,

    தெய்வத்தை பல உருவில் வணங்கினாலும்

    அழுகின்ற குழந்தைக்கு பசிதீர்க்கும் உள்ளத்துக்கோர்

    ஆலயம் கட்டி வணங்குவேன்

    வாடுகின்ற மனிதனுக்கு ஊக்கமூட்டி ,

    பகிர்ந்துண்ணும் இதயமே இறைவன் வாழும் ஆலயம் அன்றோ!

     

    படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/csureshbabu/3350928450/

     

    Share
  • எல்லோருக்கும் நம் இறைவன் !

    விசாலம்

    காக்கும் கடவுளான ஸ்ரீமகாவிஷ்ணு உலகசிருஷ்டியில் ஒரு பாரபட்சமின்றி அபயம் என்று வந்தவர்களைக் கைவிடாமல்  காப்பாற்றியிருக்கிறார் இதில் ஆறறிவு படைத்தவர்கள் மட்டுமல்லாது ஐந்தறிவு பிராணிகளுக்கும் தன் அருள் தந்து உயர்ந்த பதவியையும் அளித்திருக்கிறார்.

    ஸ்ரீராமர் கானகத்தில் இருந்த தருணத்தில் பலருக்கு இவரது அன்பும் அருளும் கிடைத்திருக்கிறது   ஒரு படகோட்டியான குகன் ராமர் ,சீதை இலட்சுமணர் மூவரையும்  மிகவும் அன்பொழிய வரவேற்று .உபசரித்து பின் கங்கையைக்கடக்கவும்  உதவி புரிந்தான். அவனை அப்படியே ஆலிங்கனம்  செய்துகொண்ட ராமர்  தன்னுடைய சகோதரானாகவும் ஏற்றுக்கொண்டார்

    அரக்கனின் மகனாகப்பிறந்த பிரஹ்லாதன் தன் ஒரே நாமமான “ஓம் நமோநாரயணாய “என்பதை விடாமல் பிடித்துக்கொண்டு அவனது தந்தை கொடுத்த அத்தனைக்கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு உயிர் பிழைத்தான்  மலை உச்சியிலிருந்து அவன் தள்ளப்பட்டவுடன் ஒடோடி வந்து தன்கைகளில் அவனை   ஏந்தியபடி காப்பாற்றினார் விஷ்ணு அடுத்ததாக யானையை ஹிரண்யகசிபு அனுப்ப   யானை தன் காலால்  அவனை மிதிக்க வந்தவுடன் பிரஹ்லாதனைக்கண்டு அருகில் வந்து அப்படியே  வணங்கிவிட்டு சென்றது கடைசியில்  விஷ்ணுவே நரசிம்மாவதாரம் எடுத்து அவனுக்கு  அருள் புரிந்தார்  தன் பக்தனுக்கு எதிரியாக நின்ற அரக்கனைக்கொன்றாலும் கடைசியில் மோட்சம் அளித்தார்

    கானகத்தில் ராமர் சீதாபிராட்டியின் மடியில் தலை வைத்துப்படுத்திருக்க அந்த நேரம் பார்த்து ஜயந்தன் காகம் உருவில் வந்து   சீதையின் மார்ப்பைக்கொத்தியது    ஸ்ரீராமர்  தன் மேல் இரத்தத்துளி சொட்டுவதைப்பார்த்து விழித்து  காகத்தின் செயலைப்பார்த்து கடுங்கோபம் கொண்டு தர்ப்பையில் பிரம்மாஸ்திரம்  ஜபித்து அதன் மேல் ஏவினார் .ஜயந்தன் உருவில் இருந்த காகம் உயிர்ப் பிச்சைகேட்டு  பிரும்மா ,விஷ்ணு சிவன் எல்லோரிடமும் போக  ஸ்ரீராமர் விட்ட அஸ்திரத்தை   அவர்கள் தடுத்து நிறுத்த  முடியாதென்றும்  அதனால் ஸ்ரீராமரிடமே போய் மன்னிப்புக்கேட்கும்படி  சொல்ல  காகம் திரும்பவும் ஸ்ரீராமரிடமே வந்து அவர் பாதங்களில் விழுந்தது  பரந்தாமனும்  காகத்தை மன்னித்து உயிர்ப்பிச்சை அளித்தார் .

    இப்போது பார்த்தசாரதியாக வந்த கிருஷ்ணனைப்பார்க்கலாம்  மஹாபாரதத்தில் பாண்டவர்களுக்கும்  கௌரவர்களுக்கும் போர் .அதில் அர்ஜுனனுக்குத்தேர் ஓட்டுபவராக கண்ணன் வருகின்றான் அப்படித்தேரை ஓட்டிவரும் போது  தேரில் கட்டிய குதிரைகள்  தாகத்தால் நாக்கு உலர்ந்து கனைத்தன .  இதைப்புரிந்து கொண்ட கிருஷ்ணர் குதிரைகளின்  தாகம் போக்க தன் அம்பை பூமியில் வீசிதண்ணீரை வெளியே பீச்ச வைத்து அதனது தாகத்தைப்போக்கினார் .

    பெருமாளே தன் மூச்சாகக்கொண்டிருந்த இந்திராஜும்னன்  என்ற அரசன் ஒரு தடவை தவம் செய்து கொண்டிருக்க அவரைப்பார்க்க திரு அகத்திய முனிவர்  வந்தார் .தன் தவத்தில் மூழ்கிப்போன அரசன் அகத்தியமுனிவரை வரவேற்க மறந்தான். பின் முனிவர் தான் வந்ததைத்தெரிவிக்க கனைத்தார்  பின்னர் அவர் கோபம் கொண்டு “உனக்கு இத்தனை கர்வம் கூடாது நீ யானையாகப் பிறக்கக் கடவது ” என சாபம் கொடுத்தார் .  அடுத்த பிறவியும் வந்தது . அரசன்  யானையாகப் பிறந்தான். ஆனாலும் அந்தப் பரந்தாமனை நினைக்காமல் இல்லை   தினமும் கஜேந்திரன் அருகே இருக்கும் குளத்திற்குச்சென்று தாமரை மலரைப்பறித்து அந்தத்திருமாலை வழிபடும் ஒரு நாள்  …. தாமரை மலரைப்பறிக்க   ஒரு முதலை  அதன் காலைக்கவ்வியது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நீருக்குள்ளே இழுக்க ஆரம்பித்தது  /யானையோ தன் பூஜை முடியும் வரை பொறுத்துக்கொள்ளச்சொல்லி கெஞ்சியது. ஆனாலும் முதலை விடவில்லை ,  யானையும் கடைசி வரைப்போராடியது  .   ஒன்றும் பலனளிக்காமல் போக  “ஆதிமூலமே என்னைக் காப்பாற்று “என்று அலறியது   திருமால் கருடன் மேல் பறந்து வந்து தன் சக்கரத்தை வீசி முதலையின் கழுத்தை அரிந்து  யானையைக்காப்பாற்றிவிடுகிறார். இதுவே ‘கஜேந்திர மோட்சம்’,  என பாகவதத்தில் மிகவும் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது

    பறவையை எடுத்துக்கொண்டால் ஜடாயூ நம் கண்முன்னால் வருகிறார் .ராமர்   கானகத்தில்  பர்ணசாலை அமைத்து   சீதை லட்சுமணருடன்  இருந்த நேரத்தில் இராவணன்சீதையை அபகரிக்க திட்டம் போட்டு அதில்   வெற்றியும் பெற்று  சீதாபிராட்டியை   தூக்கி தன் விமானத்தில் வைத்து பறக்கும் நேரத்தில் ஜடாயூ என்ற பட்சி ராவணனை மடக்கியது அவனை மேலே போகவிடாமல் போர் புரிந்தது .சீதையைக்காப்பாற்ற தன் உயிர் போனாலும் போகட்டும் என்ற முடிவில் போரிட்டது தன்  அருமை நண்பர் தசரதரின் மருமகள் சீதையைக்காப்பாற்றியே ஆகவேண்டும்  என்ற தீர்மானத்தில் ஆக்ரோஷமாகப் போரிட அந்த இலங்கேஸ்வரன் தன் கத்தியால் அதன் இறகுகளை வெட்டி மாய்த்தான் .இதை எதிர்ப்பார்க்காத ஜடாயு சுருண்டு கீழே விழ அந்த நேரத்தில் ஸ்ரீராமரும் சீதையைத்தேடி அந்தப்பக்கம் வர ஜடாயூவின் நிலைமையைக்கண்டார் .ஜடாயூ தன் உயிரைப்பிடித்து வைத்துக் கொண்டு நடந்த விஷயத்தை  பரந்தாமனிடம் சொல்லி உயிரை விட்டது. ஸ்ரீராமர்  அதைத் தன் தந்தை ஸ்தானத்தில் வைத்து அதற்கு ஈமக்கடன்கள் எல்லாம் செய்து மோட்சமும் அளித்தார் .பறவைக்கும் மோட்சமளித்த பரந்தாமனின் கருணையை என்னவென்று சொல்வது?

    இலங்கைக்குப்போக பாலம் அமைக்கும் தருணம் எல்லா வானரங்களும்  பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்க ஒரு சிறு அணிலும்  தானும் ஸ்ரீராமருக்கு ஏதாவது வழியில் உதவ வேண்டும் என்று எண்ணி தன் முதுகை ஈரத்தில் நனைத்து பின் மணலில் உருண்டு அந்த மணலை  பாலம் கட்டும் இடத்தில் உதறிவிட்டு வந்தது. இதைப்பலமுறை செய்ய ராமரும்  இதைக் கவனித்து ஓடோடி வந்து அதை மடியில் வைத்து தன் மூன்றுவிரல்களால் அதை அன்புடன் அதன் முதுகில் தடவிக்கொடுத்தார். அந்த மூன்று வரிகளை இன்றும் அணிலிடம் பார்க்கலாம்

    சுக்ரீவன்   தன் சகோதரன் வாலி யுடன் போரிட ராமரின் சரணம் நாட வானர இனமாக இருந்தாலும் சுக்ரீவனை தன் நண்பனாக ஏற்றுக்கொண்டு  வாலியுடன் போரிட்டு அவனுக்கு ராஜ்ஜியமும் திரும்ப வாங்கித்தருகிறார்  ஸ்ரீ ராமர்  அத்துடன் இல்லாமல்  அனுமனுக்கு சிறிய திருவடி என்ற உன்னத பதவியும் கொடுத்து  சிரஞ்சீவி பட்டமும் அளிக்கிறார் .தவிர  அவர் ஆசைபடி தன்னிடமே இருந்து சேவை செய்யும் வாய்ப்பையும் அளித்து கௌரவிக்கிறார் . அவரது அன்பை என்னவென்று சொல்ல !

    கிருஷ்ணாவதாரதில்  கண்ணனைக்கொல்ல வந்த எல்லோருக்குமே மோட்சம் கிடைத்து விடுகிறது இதில்  காளிங்கன் என்ற நாகம் நம் நினைவில் வரும் காளிங்கன் கக்கும் விஷத்தினால் யமுனையில் வாழும் பல நீர் விலங்குகள் மாண்டன  மீன்களெல்லாம் செத்து மடிந்தன  இதன் முன் கதைஎன்னவென்றால் முன்பு கருடன் யமுனையில் இருந்த மீன்களை  எல்லாம் தின்று வந்தது  இதனால் வருந்திய மீன்கள்  சௌபரி என்ற முனிவரிடம் சென்று முறையிட்டன  முனிவரும் மீன்களில் மேல் பரிதாபப்பட்டு   கருடனை அழைத்து  யமுனையில் வாழும் மீன்களைத்தின்னால்  அது இறந்துவிடும் என்று சாபம் கொடுத்தார்  கருடனுக்கு பயந்துக்கொண்டிருந்த காளிங்கன்  நல்லதாகப் போயிற்று  என்று எண்ணி தான் வாழ மிகவும் பாதுகாப்பான இடம் யமுனைதான் என்று அங்கு வந்து தங்கி அட்டூழியம் செய்தது இதனால் கோப கோபியர்கள் கவலையுற்று கண்ணனிடம் சொல்ல அவரும் யமுனையில் நேரே காளிங்கனின் தலையில் குதித்து வாலைப்பிடித்தபடி நடனமாடிபோர் புரிந்து அதை சாகும் நிலைக்கு கொண்டுவர  காளிங்கனின் இரு மனைவிகள் அழுதபடி கண்ணனிடம் சரணமடைந்தனர் பின் தங்கள் மாங்கல்ய பிச்சை  கேட்டனர்.. கண்ணன் அந்த கொடிய பாம்பையும் மன்னித்து உயிர்ப்பிச்சை அளித்தார். இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகளில் அனைத்துயிர்களிடத்தும் பரந்தாமன் சமமாக கருணைக்காட்டி உய்விக்க வருபவன் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். என்னே ஆண்டவனின் அருள்!

    படங்களுக்கு நன்றி:

    http://www.radiokrishna.com/cosmologia.htm

    http://devotionalonly.com/lord-mahavishnu-pictures-and-wallpapers/

    Share
  • பேணுக வீடும்!

    வன்புணர்வுக்கெதிரான போராட்டத்தில்
    பங்கேற்றுத் திரும்பியவனைக் கண்டதும்
    ஓடோடிச் சென்று
    தாவிப் பாய்ந்து
    மேலேறி
    கழுத்தைக் கட்டிக் கொண்டு
    அன்பும் அக்கறையுமாகச் சொல்கிறாள்!
    அம்மாவை அடிச்சிடாதீங்கப்பா
    அம்மா பாவம்ப்பா
    இன்னிக்கி… இன்னிக்கி….
    சோறு கொஞ்சமா குழைஞ்சிடுச்சாம்!!

    Share
  • கொங்கு நாட்டு மகளிருக்கான சடங்குகளும், சம்பிரதாயங்களும்

    பவள சங்கரி

    இயற்கையின் படைப்புகளிலேயே மிகவும், உன்னதமானது பெண் இனம். அனைத்து உயிரினங்களுக்கும்   தனிப்பட்டதொரு மென்மையையும், அழகையும் அள்ளி வழங்கியிருப்பது கண்கூடு. அந்த வகையில் மனிதப் பிறவியில் இந்தப் பெண் இனம் பல வகையான உணர்வுகளுக்கும், அதற்குரிய சூழலுக்கும் ஆட்படுவதும் இயற்கை. இந்த இயற்கையின் விநோதத்தை அதீதமாக காட்சிப்படுத்த நினைப்பது மனிதர்களுக்கேயுரிய இயல்பாக இருப்பதே நம் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளின் முக்கிய அம்சமாக இருக்கிறது. இதில் பெரும்பாலும் நன்மைகளும், தீமைகளும் சமமாகக் கலந்து இருப்பதே நிதர்சனம். வளர்ந்து விட்ட நாகரீகத்தில் மற்றைய சில நாடுகளில் ஓரளவிற்கு இதெல்லாம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், நம் இந்திய கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் இதெல்லாம் இன்றும் வழமையாகத்தான் இருக்கிறது. வாழையடி வாழையாக கடைபிடிக்கப்படும் பழக்க வழக்கங்கள் பல அர்த்தமுள்ளதாக இருப்பினும், சில வேண்டாதவையாகவும் தேவையற்றவைகளாகவும் உள்ளது.

    பொதுவாக பெண்களின் பருவக் காலங்களை , பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை மற்றும் பேரிளம்பெண் என ஆறு வகைகளாகப் பிரித்துள்ளனர். பேதைப் பருவம் என்பது ஏழு வயது வரையிலான குழந்தைப் பருவம். பெதும்பை என்பது பதினொரு வயது வரையிலான ஒரு பருவம். அடுத்து வருவதுதான் மங்கை எனும் பூப்படையும் பருவம். மடந்தை என்பவள் திருமண வயதில் இருக்கும் பத்தொன்பதிற்கும் மேற்பட்ட பருவத்தினள். அரிவை எனும் பருவம் இருபத்தைந்து வயதான தாய்மைப் பருவம். தெரிவை என்பது உலகம் அறிந்த முப்பது வயதிற்கும் மேலான பருவம். அடுத்து நாற்பது வயதுப் பருவமான உலக ஞானமும், அனுபவமும் பெற்ற பேரிளம் பெண் என்பது. இதன் அடிப்படையிலேயே நம்முடைய பெரும்பான்மையான சம்பிரதாயங்கள் அமைந்திருக்கின்றன.

    ஒரு பெண்ணின் வாழ்நாளில் முக்கியமாக நான்கு வகையான சடங்குகள் இடம்பெறும்.

    இதில் முதலில் அங்கம் வகிப்பது ’பூப்பு நன்னீராட்டு விழா.’. பெண் குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்திற்கு தயாராகும் நிலையை  அறிவிக்கும் விழா என்றே சொல்லலாம். சுரப்பிகளின் செயல்பாடுகளால் பலவிதமான மன மாற்றங்கள் மற்றும்  உடல் மாற்றங்களும் ஏற்பட்டு பெருங்குழப்பத்தை ஏற்படுத்தும் பருவம் இது. இந்த விழாக்கள் மூலமாக் உற்றார், உறவினர், சொந்த, பந்தங்கள் என அனைவரும் கலந்து ஒன்று கூடி அப்பெண்ணை வாழ்த்துவதோடு, அப்பருவத்தின் முக்கியத்துவத்தை, எதிர்வரும் காலங்களில் அவள் எச்சரிக்கையுடன் வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தக்கூடிய ஒரு கலாச்சார பாதுகாப்பு விழாவாகவும் அமைகிறது.

    ஒரு பெண் பருவமடைதலை, ‘பூப்பு நன்னீராட்டு விழா’ என்று கொண்டாடும் மரபு சார்ந்த பழக்கம் ஆதிகாலந்தொட்டு தொடர்ந்து வழக்கத்தில் இருந்துள்ளது. ’பூப்பு நன்னீராட்டு விழா’ என்ற சொல் வழக்கு இடைக்காலத்தில் தோன்றியிருக்கலாம். ஆரம்பத்திலிருந்து ‘தெரட்டி’ அல்லது ‘திரட்டிச்சீர்’ என்ற சொல்லாட்சியே வழக்கில் இருந்துள்ளது. ’தெருட்டு’ என்ற சொல்லிற்கு ‘விவரம் அறிதல்’ என்ற பொருள் உண்டு. விவரம் அறியும் பருவம் என்பதை அறிவிக்கும் விதமாக இவ்விழா கொண்டாடப்படலாம். ‘தெருட்டு’ என்ற சொல் நாளடைவில் மருவி ‘தெரட்டி’ அல்லது ‘திரட்டி’ என்று வழங்கப்பட்டிருக்கலாம்.

    இந்தத் திரட்டிச் சீரில் தாய்மாமன் பங்கு இன்றியமையாதது. வளமைச் சடங்குகளின் ஒன்றாகக் கருதப்படும் இது  மேளதாளங்களுடன், பட்டுப்புடவைகள் சீர் வரிசைகள் எனப் பெரும் கொண்டாட்டமாக விளங்கும் பெரும்பாலும் வீடுகளில் செய்யப்படும் இச்சடங்குகள், இடப்பற்றாக்குறை காரணமாக திருமண மண்டபம் போன்ற பொது இடங்களிலும் நடைபெறும் வழமையும் உள்ளது. ’தீட்டு கழிக்கும் சடங்கு’ என்றும் இதனைக் கூறுகின்றனர். பிட்டு செய்து சுற்றி தீட்டுக் கழிப்பது முக்கியமான வழக்கமாக இருந்து வருகிறது. இந்தச் சடங்குகள் செய்யாமல் ஒரு பெண்ணை மணமேடையில் ஏற்ற முடியாது என்ற பழக்கம் இன்றளவிலும் பெரும்பாலும் கடைபிடிக்கப்படுகிறது. கொங்கு நாட்டிற்கேயுரிய தனிப்பட்டதொரு மரபு விழாவாகவே இது இருந்து வருகிறது.

    அடுத்து வருவது, திருமணச் சடங்குகள். திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமானதொரு நிகழ்வு. சமூகத்தில் ஒரு தனிப்பட்ட மதிப்பை அளிக்கக்கூடியதும் அதுதான்.

    ”திருமணம் ஆனவர்கட்கு மாங்கலிய  வரி வாங்கும் கொங்குச்செப்பேடு ஒன்று திருமணம் ஆகாதவர்களைப் ‘பயலாள்’ என்று குறிக்கிறது” என்கிறார் புலவர் ’கல்வெட்டு’ இராசு அவர்கள்.

    கொங்கு சமுதாயத்தில், குறிப்பாக கொங்கு வேளாளர் சமூகத்தில் திருமணச் சடங்குகள் மிகவும் வித்தியாசமானது. மிகப் பழமையான பண்பாட்டிற்கு உரியதாம். முதலில் பெண்ணிற்கும், மாப்பிள்ளைக்கும் ஜாதகம், மற்றும் மற்ற பொருத்தங்கள்  பார்க்கும்போதே  சகுனங்கள் பார்ப்பது முக்கியமாகக் கருதப்படுகிறது. அதாவது, பூனை குறுக்கே வருவதோ, விறகுக் கட்டை சுமை எதிரே வருவதோ நல்ல சகுனம் அல்லவாம். கழுதை கத்துவது, வண்ணான், (சலவைத் தொழிலாளி) அழுக்கு மூட்டை, சவம் போன்றவைகள் எதிர் வருவது நல்ல சகுனமாம். பறவை, விலங்கு போன்றவைகள் வலம் போக வேண்டுமாம். பொருத்தம் நல்லபடியாக அமைந்தால் அடுத்து நிச்சயதார்த்தம் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் மண ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். திருமண ஓலையும் வாசிக்கப்படும்.. அடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகளில், மாங்கல்யத்திற்கு பொன் கொடுத்தல், உப்புச் சர்க்கரை மாற்றுதல், விறகு வெட்டல், நெல் குத்துதல், முளைப்பாலி போடுதல், கூறைப்புடவை எடுத்தல், முகூர்த்தக்கால் போடுதல், படைக்கலம் வைத்தல், குயவர்களிடம் எழுத்துப்பானை என்ற பொங்கல் பானை வாங்குதல், பிறைமண் எடுத்தல், பேய்க் கரும்பு நாட்டல், காப்புக் கட்டுதல், சீர்த்தண்ணீர் கொண்டு வருதல், மங்கலன் முகம் துடைத்தல், ஆக்கை சுற்றிப் போடுதல், செஞ்சோறு அஞ்சடை கழித்தல், உருமால் கட்டுதல், கோயில் மாலை பெறுதல், குப்பாரி கொட்டல், நிறைநாழி, கணபதி மற்றும் குலதெய்வ வழிபாடு, வெற்றிலை கட்டுதல், இணைச்சீர், கூடைச்சீர் அல்லது நாழியரிசிக் கூடை, பட்டம் கட்டுதல்,, தாரை வார்த்தல், திருப்பூட்டுதல், நலங்கிடல்,  குலம் கோதுதல், அம்மி மிதித்து அருந்ததி காட்ட்ல், பரியம் செலுத்துதல், சம்பந்தம் கலக்கல் போன்ற பல்வேறு சடங்குகள் மூன்று நாட்களுக்கு நடைபெறும்.

    முனை முறியாத பச்சரிசி, அறுகம்புல், மஞ்சள் போன்றவைகளின் கலவையே அறுகரிசி என்று சொல்லப்படுகிற அட்சதை. பெரியோர்  அந்த அறுகரிசியை இரண்டு கைகளாலும் எடுத்து,

    “ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறு பேறு பெற்றுப் பெருவாழ்வு வாழ்க”
    என்று உச்சந்தலையில் 3 முறை இட்டு வாழ்த்துவார்கள்.

    மங்கல நாண் சூட்டி திருமணம் முடிந்த பிறகும் பல்வேறு சடங்குகள், சம்பிரதாயங்களுடன், விருந்து மற்றும்  சாந்தி முகூர்த்தம் என்று பட்டியல் நீளும். இதன் பிறகு இறுதியாக உற்றார், உறவினரின் விருந்தோம்பலுடன் விழா இனிது நிறைவேறும். தற்காலத்தில் இதில் பெருமளவிலான சடங்குகள் சுருங்கி, கோவிலில் திருமணம் செய்து, மண்டபத்தில் வரவேற்பு வைத்து எளிதாக முடித்து விடுகிறார்கள். கோவிலில் வைக்கும் திருமணத்திற்கு சடங்குகளும், சம்பிரதாயங்களும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதும் ஐதீகம்.

    அடுத்து வருவது ’வளைகாப்பு’ என்கிற  கட்டுச்சாத விருந்து. அதாவது பெண் திருமணம் முடிந்து முதல் குழந்தை கருவுற்றவுடன், 5, 7, 9ம் மாதங்களில் அவரவர் குல வழக்கப்படி, ஏதாவது ஒரு மாதத்தில், கணவன் மற்றும் உறவினர்கள், முன்னிருந்து நடத்தும் சம்பிரதாயமான ஒரு விழா. நம் நாட்டில் பின்பற்ற்ப்படும் பல சடங்குகளுக்கும், சம்பிரதாயங்களுக்கும் பல அறிவியல் காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள்
    பொதுவாக கருவுற்றிருக்கும் பெண்கள் பிரசவ காலம் குறித்த அச்சத்துடனே இருப்பார்கள். ஏற்கனவே அனுபவம் பெற்ற தாய்மார்கள், நெருங்கிய உறவினர்கள் ஒன்றுகூடி, அவருக்கு இறை நம்பிக்கை மற்றும் சடங்குகள் மூலம் அதனைத் தெளிய வைத்து அவரை மனரீதியாக பிரசவத்திற்கு தயார் செய்கிறார்கள். ஒரு சில குடும்பங்களில் பிரசவம் எளிதாவதற்காக மருந்து கொடுக்கும் வழக்கமும் உண்டு. வயிற்றில் இருக்கும் குழந்தை ஆறாம் மாதத்திற்கு மேல் வெளியுலகத் தொடர்பை, அதாவ்து ஓசைகள், சூடு, குளிர்ச்சி போன்ற அனைத்தையும் உணர ஆரம்பிக்கின்றது. தாய் அணிந்திருக்கும் கண்ணாடி வளையல்களின் ஒலியினால் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாகவும், குழந்தைக்கு  உறவுகளின் அண்மையும் மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவதோடு தாயின் மன நிலையில் ஏற்படும் உற்சாகமும் வளரும் குழந்தைக்கு நன்மை பயக்கக்கூடியதாகிறது.

    மணப்பெண் போன்று அலங்காரம் செய்து உயர்ந்த மேடையில் அமரச்செய்து, தாய் வீட்டு சீதனங்களுடன், பலவகை இனிப்புகள், பழ வகைகள் இவைகளுடன், சந்தனம், குங்குமம்  அறுகரிசி, பன்னீர் போன்றவைகளுடன் நலங்கு வைத்து, மங்கல ஆரத்தி எடுத்து, வளையல் அணிவித்து, கலந்து கொள்ளும் பெண்களுக்கும் தாம்பூலமும் வளையல்களும் கொடுப்பார்கள்.  பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்து, அப்பெண்ணை கணவன் வீட்டிலிருந்து தாய் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். குழந்தை பிறந்தவுடன், நல்லநாள் பார்த்து சீருடன் சென்று மீண்டும் கணவன் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். பெண்மைக்கும், தாய்மைக்கும் செய்யும் மிகச் சிறந்த மரியாதைப் பண்பு இது. இதனால் அந்தப் பெண்ணின் மனநிலையில் ஏற்படும் நம்பிக்கையும், நல்ல சிந்தனைகளும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும்.

    இறுதியாக, கணவனை இழந்த பெண்களுக்குச் செய்யும் தேவையற்ற சில சடங்குகள். அது போன்ற சடங்குகளைச் செய்யாவிட்டால்  குடும்பத்தில் ஏதும் பிரச்சனை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் விருப்பமின்றி செய்பவர்களும் உண்டு.கண்மூடித்தனமான பழக்கங்கள் மண்மூடிப் போக வேண்டும். பண்டைய பண்பாடும், கலாச்சாரமும் காப்பாற்றப்பட வேண்டும் என்று சில பழமைவாதிகள் இன்ற்ளவிலும் செய்யும் சில சடங்குகளும், சம்பிரதாயங்களும் சம்பந்தப்பட்டவர்களுக்கு இரத்தக் கண்ணீர் வடியச் செய்யக்கூடியவை. இதெல்லாம் தேவைதானா, இதற்கெல்லாம் ஏதும் குறிப்பான காரணம் இருக்கிறதா, இந்தக் கொடுமைகளைக் கடைபிடிக்காவிட்டால் அப்படி என்னதான் நடந்துவிடும் என்ற வாதத்திற்கானதல்ல இது. . நம்முடைய பழைய சம்பிரதாயங்களும், பழக்க வழக்கங்களும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவைகள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதற்கான எல்லையை வகுக்க வேண்டும். அதாவது தேவையற்ற சில சடங்குகளும், சம்பிரதாயங்களும், மாற்றப்பட வேண்டும்.

    கணவனை இழந்த துக்கத்தில் நொந்து போயிருக்கும் பெண்ணை ஈவு, இரக்கமே இல்லாமல் சடங்குகள் என்ற பெயரில் செய்யக்கூடியவைகள் கொடுமை. இன்று பெரும்பாலும் அவைகள் தவிர்க்கப்பட்டு வருவதும், கணவனை இழந்த பெண்களும், பொட்டு வைத்துக் கொள்வதும், சாதாரணமாக உடுத்துவதும் பழக்கத்தில் வந்து கொண்டிருப்பதும் ஆறுதலான விசயங்கள். வெண்ணிற ஆடையோ, காவி ஆடையோ உடுத்தும் வழமை பெரும்பாலும் மாறிவிட்டதும் குறிப்பிடத்தக்கது. மனித வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு சடங்குகளும், சம்பிரதாயங்களும் மட்டுமே பொறுப்பாக முடியாது என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டிருப்பதன் விளைவு வருந்தச் செய்யும் தேவையற்ற சடங்குகளின் நிராகரிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இன்று, பெருகி வரும் காதல் மணங்களும், பெற்றோர் சம்மத்ததுடன் நடைபெறும் பிற மத, இன, மொழியின் கலப்புத்  திருமணங்களாலும், பல சம்பிரதாயங்கள் மறைந்து கொண்டிருக்கின்றன என்பதும் நிதர்சனம்.

    உசாத்துணை : திருமணச் சீர்கள் பற்றிய விவரங்கள், புலவர் இராசு அவர்களின் “கொங்கு வேளாளர் சீர்களும், இலக்கியங்களும்” என்ற நூல்.

    நன்றி: தமிழ் மரபு விக்கி.

    Share
  • டிசம்பர் (2012) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்

    வெங்கட் சாமிநாதன்

    இம்மாதம் வந்துள்ள 21 கதைகளுள் மூன்று மிக முக்கியமாகத் தெரிகின்றன.

    இரண்டு பேர், பழமைபேசியும், மணியும் முன்னரே தெரிந்தவர்கள்.

    தெரிந்தெடுக்கப்பட்டவரகளும் கூட.  இருவரும் இம்முறையும் தாம் சொல்ல வந்த விஷயத்தாலும் சொல்லும் திறமையாலும் முன்னிற்கின்றனர். அதே போல நரசய்யாவும் புனைவு அல்ல எனினும், அவர் சொல்லித்தானே இது உண்மை சம்பவம், புனைவு அல்ல என்று நமக்குத் தெரிகிறது, அன்றாட கடல் வாழ்வில் எப்போதும் நிகழ்ந்துவிடக்கூடும்  வாழ்வின் எல்லைக்குப் போய் மீளும் அனுபவத்தை ஏதோ தூங்கி எழுந்த சமாசாரமாக நாடக பாணியும் அதீத வார்த்தைகளும் அற்று மிக அடங்கிய குரலில் எழுதியிருக்கிறார்.  மணி பேசாப் பொருளை எவ்வளவு தூரம் பேசவும் வேண்டும், பேசாது ஒதுங்கவும் வேண்டும், என்று தானே எல்லைக் கோடு இட்டு விளையாடியிருக்கிறார். பழமை பேசியும் பாசமும் ஏக்கமும் மூன்று காலகட்டங்களில் வெளிப்படும் வேறுபடும் உணர்வுகளை, மறுபடியும் அசட்டு உணர்ச்சிகள் இல்லாது எழுதியிருக்கிறார். இம்மூன்றுமே எனக்கு திறமையான எழுத்துக்களாகப் படுகின்றன. எதை விடுவது? எதை ஏற்பது? புனைவு அல்ல என்று ஒதுக்குவதா? ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டவர்கள் என்று ஒதுக்குவதா? ஒவ்வொரு முறையும் ஒரு  புது உலகம். ஒரு  புது வெளியீட்டு முறை.  கைப்பாவை,  மனம் அகண்டம், அங்கிங்கென்னாதபடி, மூன்றையுமே சொல்லத் தோன்றுகிறது. வ்ருடக் கடைசித் தேர்வில் ஒன்று தானே தேர்வு பெறும், எத்தனை எழுதினாலும். இப்போதைக்கு புதிய அனுபவங்களையும், அதைச் சொல்லும் திறமையையும்  கொண்டவர்களை அங்கீகரிப்போமே.

    இம்மூவரில் எவரையும் ஒதுக்கும் காரணங்கள் இப்போது எனக்கு ஏதும் புலப்படவில்லை. இடைப்பட்ட நிலை தானே.

    பங்கு கொண்ட எல்லோருக்கும் என்  புது வருட வாழ்த்துக்கள்

    தேர்வு செய்யப்பட்டுள்ள சிறுகதைகள், (1) பழமை பேசியின், கைப்பாவை, (2) மணியின் மனம் அகண்டம், (3) நரசய்யாவின் அங்கிங்கென்னாதபடி.

    வெ.சா.

    டிசம்பர் (2012) சிறுகதைப் போட்டியில் பங்குபெற்ற  சிறுகதைகள்:

    1.விதி செய்வோம்

    2. ரிஷி கர்பம்

    3. ரத்தப் பிச்சை

    4. பலா மரங்கள்

    5. கைப்பாவை

    6. பூக்களில் பேதமென்ன?

    7. அன்னையர் தினம்

    8. ஞானோதயம்

    9. அவசரப் புத்தி

    10.ப்ரைவசி

    11. ஊர் நூலகம்

    12. அருவி சத்தம்

    13. குழந்தையும் தெய்வமும்

    14. விழுதுக்குள் வேர்

    15. அங்கிங்கெனாதபடி!

    16. கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு?

    17. ஜோடிக்கிளிகள்

    18. கண் பேசும் வார்த்தைகள்

    19. மனம் அகண்டம்

    20. கூர் வாள்

    21. ஸ்டீல் பீரோ

    பரிசு பெற்ற மூவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.  போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்கு பெற்று பரிசு பெறவும் வாழ்த்துக்கள்.

    அன்புடன்

    ஆசிரியர்

    Share