Blog

  • நான் அறிந்த சிலம்பு – 51 (31.12.12)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 07. கானல் வரி

    (4)

    ஆற்றினில் புதுப்புனல் கண்ட
    உழவர் மகிழ்ந்து ஆர்க்கும் ஓசை,
    நீர் மதகுதனில்
    நிறைந்து வடிகின்ற ஓசை,
    கரைகளை வரப்புகளை
    உடைத்துப் பாய்கின்ற நீரின் ஓசை,
    புதுப்புனல் விழாவில்
    களித்து மகிழும் மாந்தர்
    எழுப்பி நிற்கும் பல்வித ஓசை,

    இவை அனைத்தும்  கரையின்
    இருபக்கமும் ஆர்ப்பரிக்க
    நின் கடமையாகிய
    நல்லொழுக்கம் தவறாது
    நடந்து செல்லும் காவிரியே,
    நீ வாழ்க!

    சோழனின் வளத்தை
    அதிகரிக்க எண்ணியே
    நீ அங்ஙனம் நடந்து செல்கிறாய்!
    உன் வளத்தில் கொழித்திருக்கும்
    போர் மறவர் வாயை மூடாமல்
    ஆரவாரித்துக்கொண்டே இருக்கின்றர்.
    அத்தகு வளத்துக்குக் காரணமான
    காவிரியே நீ வாழ்க!

    (காப்பியத்தின் திருப்புமுனை – மாதவி தவறாகப் புரிந்து கொள்ளுதல்

    தான் உடன் இருப்பதால், பரத்தையருடன் கூடி மகிழ முடியாத கோவலன் வருந்துகிறான்;
    மாதவி தன்னிடம் இருக்கும் வளமெல்லாம் தான் அருளிய வளம்தான் என்று பாடுகிறான்;
    இவ்வாறாக மாதவியின் சந்தேகம் அதிகரித்தது.
    இந்த இப்பகுதிதான் காப்பியத்தின் திருப்புமுனையாக அமைகிறது.)

    (5)

    சார்த்து வரி- முகச் சார்த்து
    புகார் நகரைச் சிறப்பித்துப் பாடுதல்
    தோழி தலைமகன் முன் நின்று வரைவு கடாதல்

    கருங்குவளை மலர்போலும்
    நீண்ட கண்களை உடையவள்
    எம் தலைவி;
    அவளிடம்
    கடலின் பெருந்தெய்வமான
    வருணனைச் சுட்டிக் காட்டிச்
    சாட்சியாக வைத்திருந்து
    நின்னைப் பிரிய மாட்டேன்;
    விரைவில் மணம்புரிந்து கொள்வேன்
    என அன்று கூறிய எம் தலைவர்
    அச்ச்சுளுரைகள்
    நிறைவேற்றாமல் பொய்த்துவிட்டார்.

    ஐயனே!
    அறனில்லாதவர் அவர் என்று
    எங்ஙனம் நாங்கள் அறிவோம்!

    நிலத்தில் கிடக்கின்ற வெண்சங்குகளையும்
    வெண்முத்துகளையும் கண்டு
    அவைதாம் தம்மை மலர்விக்க வந்த
    வெண்மதியும் விண்மீன்களும் என்றெண்ணி
    மொட்டவிழும் ஆம்பல்கள்
    பகலை இரவென்று
    தவறாக நினைக்கும்
    தன்மை வாய்ந்த
    புகார் அன்றோ எம் நகரம்!

    (ஆம்பல் பொழுது கண்டு ஏமாந்தது போல, தலைவனின் இயல்பு குறித்துத் தவறாக
    நாங்கள் புரிந்து கொண்டோம்…என்பது கருத்து)

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram18.html

    படத்துக்கு நன்றி:
    http://www.eegarai.net/t77585-topic

    Share
  • குறும்பா!

    -தனுசு-

     
    பக்கம் பக்கமாய்
    படித்த
    பாக்களெல்லாம்
    இன்றைய
    பறக்கும் உலகில் சுருக்கப்பட்டு
    ஆனது குறும் பா!

    அது
    கடுகு முதல் கடவுள் வரை
    அணு முதல் ஆழி வரை
    அத்தனையும் நயமாய்
    சொல்லவைக்கும் ரொம்ப குறும்பா!

    அதில்
    காரம் முதல் கனல் வரை
    காதல் முதல் காமம் வரை
    அத்தனையும் கண்டு
    சுவைக்கலாமடா என் செல்லக் குறும்பா!

    அதன் சுவைப்பற்றி
    சொல்ல
    நான் எதைக்கொண்டு வர…
    அட அட டா
    அது
    இனிக்கும் கரும்பின் அடிக் குறும்பா!

    Share
  • தண்டனை

    செழியன்

    மருத்துவ சேவையில்
    மணக்க வேண்டிய …மலரை
    மனமில்லா
    பாவிகள் பலர்
    காமவெறி கொண்டு ….
    சிதைத்து  ….சேதாரப்  படுத்திவிட்டார்கள்
    சேதாரத்திற்கு
    ஆதாரம் இருந்தும் ..
    நாடாளும் அரசு
    தண்டிக்காமல்
    நாட்களை  நகர்த்திக் கொண்டு இருக்கிறது ,……
    நாடக காட்சிகளாக .
    மறந்தும் அவர் களுக்கு
    மரண தண்டனை  அளிக்க  கூடாது .
    காமத்தை …….
    கனவிலும்  நினைக்கமுடியாதபடி
    உடலில் அந்த
    உணர்வுகளை  தூண்டும்  நரம்புகளை
    ஊனப்படுத்தி …..
    உயிர் உள்ளவரை  அந்த ……
    உணர்வுக்கு….  ஏங்கி…… ஏங்கி…..
    கடைசி வரை  காலத்தை கழிக்கவேண்டும் .
    அடக்கு முறையில்
    காம வெறியை  களிப்பவர்களை
    அண்டத்திலிருந்தே   கழித்துவிடவேண்டும்

     

    படத்துக்கு நன்றி: http://my.englishclub.com/profiles/blogs/silent-of-tears

     

    Share
  • பாரத நாட்டின் பெளதிக மேதை ஸர்.சி.வி. ராமன்

                                                                                                                     (1888-1970)


                                                              http://www.youtube.com/watch?v=XaWBI9w129w

                                                                                      (Scattering of Yellow Light)

                                                                                                    [Raman Effect]



    நோபெல் பரிசு பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி


    ஆப்பில் பழம் மரத்திலிருந்து கீழே விழுந்த போது, ஏன் தரை நோக்கி விழுந்தது என்ற வினா, ஐஸக் நியூட்டன் [Isaac Newton] முதன் முதல் ஈர்ப்பு விசையைக் [Gravitation] கண்டு பிடிக்க ஏதுவாயிற்று! அதுபோல் ஒரு நிகழ்ச்சி, சி.வி. ராமன் வாழ்க்கையிலும் ஒரு பெரும் திருப்பத்தை உண்டாக்கியது! 1921 ஆம் ஆண்டு பிரிட்டனில் நிகழ்ந்த ஓர் விஞ்ஞானப் பேரவையில் ராமன் பங்கெடுத்துக் கப்பலில் மீளும் சமயம், ஓர் விஞ்ஞானப் புதிர் அவரது கவனத்தை ஈர்த்தது. கப்பல் மத்திய தரைக் கடல் [Mediterranean Sea] வழியாக ஊர்ந்து செல்கையில், கடல் நீரின் அடர்த்தியான நீல நிறம் அவரது கண்களைக் கவர்ந்து, சிந்தனா சக்தியைத் தூண்டியது! நீலம் நிற கடல் நீரிலிருந்து எப்படி உண்டாகிறது ? அந்த மூல வினாவே அடிப்படையாக இருந்து, ஒளியின் மூலக்கூறுச் சிதறலை [Molecular Scattering of Light] அவர் கண்டு பிடித்து, ராமன் பின்னால் பெளதிகத்திற்கு நோபெல் பரிசு பெறுவதற்கு ஏதுவாயிற்று!

    இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பாவில் ஜெர்மன் விஞ்ஞானி ராஞ்சன் எக்ஸ்ரேக் கதிர்களைக் கண்டு பிடித்து நோபெல் பரிசு பெற்ற போது, பிரான்ஸில் ஹென்ரி பெக்குவரல், மேடம் கியூரி ஆகியோர் இருவரும் கதிரியக்கத்தைப் பற்றி விளக்கி நோபெல் பரிசைப் பகிர்ந்து கொண்ட போது, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது ஒப்பியல் நியதிக்கு நோபெல் பதக்கம் அடைந்த போது, இந்தியாவில் சி.வி. ராமன் தனது ஒளிச்சிதறல் [Scattering of Light] நியதியை வெளியாக்கி 1930 இல் நோபெல் பரிசைப் பெற்றார். தமிழ் நாட்டைச் சேர்ந்த சி.வி. ராமன்தான் பிரிட்டிஷ் இந்தியாவில் முதன் முதல் பெளதிக விஞ்ஞானத்தில் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்து, இத்தகைய பெரும் மதிப்பைப் பெற்றவர்.

    திரவம், திடவம் அல்லது வாயுவில் உள்ள மூலக்கூறுகள் [Molecules in Liquid, Solid or Gas] தம்முள் ஊடுறுவும் ஒளியை ஓரளவுச் சிதறடித்து, சிதறிய ஒளியின் அலை நீளத்தை [Wavelength] மாறும்படிச் செய்கின்றன. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering], அல்லது ராமன் விளைவு [Raman Effect] என்று பெளதிகத்தில் கூறப் படுகிறது. ராமன் ஒளிநிறப் பட்டை [Raman Spectrum] மூலக்கூறுகளின் அமைப்பைக் [Structure of Molecules] காண உதவுகிறது. இந்திய விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர் என அகில நாடுகளில் போற்றப் படுகிறார், சி.வி, ராமன்.

    சி.வி. ராமனின் ஆரம்ப வாழ்க்கை வரலாறு

    சந்திரசேகர வெங்கட ராமன் 1888 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளி நகரில் பிறந்தார். தந்தையார் விசாகப் பட்டணத்தில் கணித, பெளதிகப் பேராசிரியராய் A.V.N. கல்லூரியில் பணி யாற்றி வந்தார். ராமன் முதலில் A.V.N. கல்லூரியில் பயின்றார். அப்போது ராமன் கணிதம், பெளதிக முற்போக்குக் கோட்பாடுகளை [Advanced Concepts of Maths & Physics] எளிதில் புரிந்து ஆழ்ந்து கற்றுக் கொண்டார். அடுத்து சென்னைப் பட்டணம் பிரசிடென்ஸிக் கல்லூரில் படித்து, முதல் வகுப்பில் சிறப்புயர்ச்சி [First Class with Distinction] பெற்று, மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் 1904 இல் B.A. பட்டமும், 1907 இல் M.A. பட்டமும் பெற்றார். ராமன் 16 வயதில் பி.ஏ. படித்த போது சிறப்பாக பெளதிகத்தில் முதல்வராகத் தேறித் தங்கப் பதக்கம் பெற்றார். ராமன் எம்.ஏ. வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போதே அவரது ஈடுபாடு ஒளி, ஒலி ஆராய்ச்சிகளில் [Optics, Acoustics] ஆழ்ந்திருந்தது. விஞ்ஞானக் கல்வியை மேலும் தொடர அவர் வெளிநாடு செல்ல வேண்டி யிருந்ததாலும், அந்தக் காலத்தில் விஞ்ஞானப் படிப்பால் உத்தியோக வாய்ப்புகள் எதுவும் இல்லாததாலும், ராமன் விஞ்ஞானத்தில் மேற்படிப்பைத் தொடர முடியாது போயிற்று.

    1907 ஆம் ஆண்டில் அரசியலார் நிதித்துறை நிறுவனத்தில் [Financial Division of the Civil Service] கணக்காளராக [Accountant] வேலை செய்ய, ராமன் கல்கத்தாவுக்குச் சென்றார். அப்பணியில் அவர் பத்தாண்டுகள் அங்கே வேலை செய்தார். அந்த சமயத்தில்தான் ராமன் தனியாகக் கல்கத்தாவில் இருந்த இந்திய விஞ்ஞான வளர்ச்சிக் கூட்டகத்தில் [Indian Association for the Cultivation of Science] தன் விஞ்ஞானப் படிப்புகளைத் தனியாகத் தொடர்ந்தார். அவர் கணக்கராக முழு நேரம் வேலை செய்து வந்ததால், முதலில் ஓய்வு நேரத்தில் மட்டுமே கல்கத்தா விஞ்ஞான வளர்ச்சிக் கூட்டகத்தில் பெளதிக ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். ஓய்வு நேர ஆராய்ச்சிகள் செய்த அந்தக் குறுகிய காலத்திலே அவர் ஓர் சிறந்த சோதனை நிபுணர் என்று பெயர் பெற்றார்.

    அவர் முதலில் ஒலியின் அதிர்வுகள் பற்றியும் [Vibrations in Sound], இசைக் கருவிகளின் கோட்பாடு [Theory of Musical Instruments] பற்றியும் ஆராய்ச்சிகள் செய்ய ஈடுபட்டார். இசைக் கருவிகளின் பெளதிக ஈடுபாடு அவரது வாழ்க்கை பூராவும் நீடித்தது. அவரது நுண்ணிய விஞ்ஞான ஆராய்ச்சிகளைப் பற்றி அறிந்த, கல்கத்தா பல்கலைக் கழகம் 1917 இல் பெளதிகப் பேராசிரியர் வேலையை ராமனுக்குக் கொடுக்க முன்வந்தது. ராமனும் அதை விருப்பமுடன் ஏற்றுக் கொண்டு, ஏறக்குறைய 16 ஆண்டுகள் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் பெளதிகப் பேராசிரியராகப் பணி யாற்றினார்.

    ராமன் விஞ்ஞான ஆராய்ச்சிகளின் பொற்காலம்

    கல்கத்தா பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய அந்தப் பதினாறு ஆண்டுகளை ராமனின் பொற்காலம் என்று சொல்லலாம். அப்போதுதான் அவரது அரிய, புதிய, அநேக விஞ்ஞானப் படைப்புகள் தோன்றி உலகத்திற்கு அறிமுக மாயின. 1926 இல் ராமன் இந்தியப் பெளதிக வெளியீடு [Indian Journal of Physics] பதிவைத் துவங்கித் தனது விஞ்ஞானப் படைப்புகள் வெளியாக ஏற்பாடு செய்தார். 1928 இல் இந்திய விஞ்ஞானப் பேரவையின் [Indian Science Congress] தலைவராக ராமன் தேர்ந்தெடுக்கப் பட்டு முதலில் இந்தியருக்கு அறிமுக மானார். பிரிட்டிஷ் அரசாங்கம் ராமனது விஞ்ஞானப் படைப்புகளைப் பாராட்டி, 1929 இல் ஸர் [Sir] பட்டம் அளித்துத் தீரமேதமை [Knighthood] அங்கிகரிப்பும் செய்தது. மேலும் பிரிட்டன் பேரரசுக் குழுவினரின் ஹூஸ் பதக்கத்தையும் [Hughes Medal of the Royal Society] ராமனுக்குக் கொடுத்தது. 1930 ஆம் ஆண்டு நோபெல் பரிசையும் ராமன் பெளதிகத்திற்குப் பெற்று, உலகப் புகழடைந்தார்.

    நோபெல் பரிசு பெற்றபின் 1934 இல் பெங்களூர் இந்திய விஞ்ஞானக் கழகத்தில் [Indian Institute of Science] ஓர் பெரும் பதவி ராமனுக்காகக் காத்துக் கொண்டிருந்தது! பெளதிகத் துறைப் பிரிவில் தலைவர் [Head of the Physics Dept] பதவியை ஏற்றுக் கொள்ள, ராமன் கல்கத்தாவிலிருந்து பெங்களூருக்குச் சென்றார். பிரிட்டிஷ் இந்தியாவில் அந்தக் காலத்தில் [1909] செல்வாக்குடைய டாடா தொழிற்துறைப் பேரரசு [Tata Industrial Empire] கட்டிய ஆசியாவிலே உயர்ந்த ஓர் விஞ்ஞான ஆராய்ச்சிப் பயிற்சிக் கூடம் அது! பெங்களூரில் 1948 வரை அப்பதவியில் இருந்து கொண்டே, இடையில் நான்கு ஆண்டுகள் விஞ்ஞானக் கழகத்தின் அதிபதியாகவும் [President] பொறுப்பேற்றார். கல்வி புகட்டும் கடமையில் அவர் ஆழ்ந்து கண்ணும் கருத்தோடும் வேலை செய்தார். அவரிடம் பெளதிக விஞ்ஞானம் படித்து மேன்மை யுற்றுப் பிற்காலத்தில் பெரும் பொறுப்பான பணி யாற்றியவர்கள், பலர். 1939 இல் அகிலக்கதிர் [Cosmic Rays] ஆய்வுத் துறைப் பகுதியில் ஆராய்ச்சி செய்ய வந்த விஞ்ஞானி டாக்டர் ஹோமி ஜெ. பாபா [Dr. H.J. Bhabha]. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியாவிலே மிகவும் முற்போக்கான அணுவியல் ஆராய்ச்சி உலைகளையும், அணுசக்தி நிலையங் களையும் பாரதத்தில் தோற்றுவித்த அரிய மேதை டாக்டர் பாபா! இரு மேதைகளும் ஒருவர் மீது ஒருவர் மதிப்பும், நட்பும் கொண்டிருந்தார்கள்.

    சுதந்திர இந்தியா 1948 இல் அவருக்காகப் பெங்களூரிலே ஓர் புதிய ஆராய்ச்சிக் கூடத்தைக் [Raman Research Institute] கட்டி அவர் தனியாக ஆராய்ச்சிகள் புரிய வசதி செய்தது. அதன் ஆணையாளராக [Director] சி.வி. ராமன் நியமிக்கப் பட்டார். பெங்களூரில் [1970 நவம்பர் 21] அவர் காலமாகும் வரை, ராமன் அந்த ஆராய்ச்சிக் கூடத்திலே ஆய்வுகள் புரிந்து வந்தார்.

    ராமனின் பெளதிக விஞ்ஞானப் படைப்புகள்

    1921 ஆம் ஆண்டு பிரிட்டனில் நிகழ்ந்த விஞ்ஞானப் பேரவையில் பங்கெடுத்துக் கப்பலில் மீண்ட சமயம், ஓர் விஞ்ஞானப் புதிர்க் காட்சி அவரது கவனத்தை ஈர்த்தது. மத்திய தரைக் கடல் [Mediterranean Sea] வழியாகக் கப்பல் ஊர்ந்து செல்கையில், கடலின் அடர்ந்த எழில்மிகு நீல நிறம் அவரது கண்களைக் கவர்ந்து, சிந்தனா சக்தியைத் தூண்டியது! நீல நிற ஒளி கடல் நீரிலிருந்து எப்படி உண்டாகிறது ? கடல் நீரில் தொங்கும் துகள்கள் [Suspended Particles in Water] பரிதியின் ஒளியைச் சிதற வைத்து நீல நிறம் எழுகிறது, என்று நோபெல் பெற்ற பிரிட்டிஷ் பெளதிக விஞ்ஞானி ஜான் ராலே [John W.S. Rayleigh (1842-1919)] கூறிய விளக்கத்தை ராமன் ஒப்புக் கொள்ள வில்லை. கல்கத்தாவை அடைந்த பின், ராமன் அந்த நிகழ்ச்சியைச் பற்றி ஆராய்ந்தார். ராமன் சோதனைகள் செய்து, நீரில் ஒளியைச் சிதற வைத்து, நீரில் நீல நிறத்தை உண்டாக்குபவை, நீரில் தொங்கும் துகள்கள் அல்ல, நீரின் மூலக்கூறுகள் [Water Molecules] என்று நிரூபித்துக் காட்டினார்.

    1923 இல் அமெரிக்க பெளதிக விஞ்ஞானி ஆர்தர் காம்ப்டன் [Arthur Compton (1892-1962)] காம்ப்டன் விளைவைக் [Compton Effect] கண்டு பிடித்தார். அதன்படி எக்ஸ்ரேக் கதிர்கள் [X-Rays] பிண்டத்தை [Matter] ஊடுறுவும் போது, சில கதிர்கள் சிதறி முன்னை விட நீண்ட அலைநீளம் [Longer Wavelength] அடைகின்றன. அந்த நிகழ்ச்சியில் எக்ஸ்ரே ஒளித்திரள்கள் [X-Ray Photons] பிண்டத்தில் உள்ள எலக்டிரானுடன் மோதி, ஓரளவு சக்தியை இழக்கின்றன. 1925 இல் ஜெர்மன் கணித விஞ்ஞானி வெர்னர் ஹைஸென்பெர்க் [Werner Heisenberg (1901-1976)] காம்ப்டன் விளவை ஆக்குவவை எக்ஸ்ரே ஒளித்திரள்கள் மட்டும் அல்ல, கண்ணுக்குத் தெரியும் சாதாரண ஒளியும் [Visible Light] உண்டாக்கும், என்று முன்னறிவித்தார். வெர்னர்தான் விஞ்ஞானத்தில் புரட்சி ஏற்படுத்திய குவாண்டம் யந்திரவியல் [Quantum Mechanics] நியதியை உருவாக்கி, 1934 இல் நோபெல் பரிசு பெற்றவர்!

    மேதைகள் ஒரே மாதிரி சிந்திப்பார்கள் [Great men think alike] என்பது ஓர் பழமொழி! 1923 இல் ராமனும் மேற் குறிப்பிட்ட காம்ப்டன் விளைவைத் தனித்த முறையில் தானும் ஆராய்ந்து அதே முடிவுக்கு வந்தார்! 1925 இல் வெர்னர் கூறியதை இரண்டாண்டுகளுக்கு முன்பே கண்ணில் தெரியும் ஒளியும் பிண்டத்தில் சிதறிக் காம்ப்டன் விளைவு நிகழ்த்துவதை முன்னோடிச் சோதனை முடிவுகளில் [Preliminary Observations] ராமன் கண்டறிந்தார்.

    ராமன் விளைவு என்றால் என்ன ?

    ஒளியானது ஓர் பளிங்குக் கடத்தி [Transparent Medium] ஊடே நுழையும் போது, ஒளியின் சில பகுதி சிதறி அதன் அலை நீளம் மாறுகிறது. அந்த நிகழ்ச்சி ராமன் சிதறல் [Raman Scattering] என்று இப்போது அழைக்கப் படுகிறது. அதுவே ராமன் விளைவு [Raman Effect] என்றும் பெயர் பெறுகிறது.

    ராமன் தனது சோதனைகளைச் சீராக்கி 1928 இல் தூசியற்ற வாயுவிலும், தூய அடர்த்தியான திரவத்திலும் ஒற்றை நிற ஒளியை [Monochromatic Light] ஊடுறுவச் செய்து, ஒளிச் சிதறல் [Scattering of Light] நிகழ்வதை ஆராய்ந்தார். வாயுவில் ஒளியின் தனித்துவக் கோடுக்கு [Normal Line] இருபுறமும் இடம் தவறிய கோடுகளும் [Displaced Lines], திரவத்தில் தொடர்ந்த பட்டையும் [Continuous Band] தெரிந்தன. இவையே ராமன் ஒளிநிறப் பட்டைகள் [Raman Spectra] என அழைக்கப் படுபவை. அவ்விளைவுகள் மூலக்கூறுகளின் உள்ளே நிகழும் நகர்ச்சியால் உண்டாகு கின்றன. மூலக்கூறுகளுடன் மோதும் போது ஒளித் திரள்கள் [Photons] சக்தியை இழக்கலாம்! அல்லது சக்தியை சேர்க்கலாம்! ராமன் ஒளிச்சிதறல் [Raman Scattering] ஒளிநிறப் பட்டைகளைத் தனியே காட்டி, மூலக்கூறுகளின் வடிவத்தையும், அவற்றின் நகர்ச்சியையும் பற்றிய தகவலைத் துள்ளியமாகக் காட்டுகிறது.

    ஒற்றைநிற ஒளி ஓர் பளிங்குக் கடத்தி ஊடே நுழையும் போது, ஓரளவு ஒளிச் சிதறுகிறது. சிதறிய ஒளிநிறப் பட்டையை [Spectrum] ஆராய்ந்தால், மூல ஒளியின் அலை நீளத்துடன், [Wavelength of the Original Light] அதற்குச் சம அளவில் மாறுபடும் வேறு நலிந்த கோடுகளும் காணப் பட்டன. அவை ராமன் கோடுகள் [Raman Lines] என்று அழைக்கப் படுகின்றன. ஊடுறுவும் ஒளித்திரள்கள் [Photons] கடத்தியின் கொந்தளிக்கும் மூலக்கூறுகளுடன் கூட்டியக்கம் [Interaction with Vibrating Molecules] கொள்வதின் விளைவால், ஒளித்திரள் சக்தியை இழந்தோ, அல்லது சக்தியைப் பெருக்கியோ அவ்வாறு மாறுபட்ட கோடுகள் தோன்றுகின்றன. ஆதலால் ராமன் விளைவு மூலக்கூறுகளின் சக்தி மட்டத்தின் நிலைகளை [Molecular Energy Levels] அறியப் பயன்படுகிறது.

    ராமன் பலவித ஒளிச் சுரப்பிகளைப் [Light Sources] பயன்படுத்தி ஒளித் திரட்சியை [Intensity of Light] மிகைப் படுத்த முயன்று பலன் அடையாது, இறுதியில் பாதரஸப் பொறி மின்விளக்கு [Mercury Arc Lamp] ஒளியில் தேவையான ஒளி அடர்த்தி கிடைத்தது. அந்த ஒளித் திரட்சியை உபயோகித்துப் பலவித திரவங்கள் [Liquids], திடவங்கள் [Solids] ஆகியவற்றில் சிதறிய ஒளியின் ஒளிநிறப் பட்டைகளை [Spectra] ஆராய்ந்தார். அப்போது பாதரஸப் பொறி ஒளிநிறப் பட்டையில் இல்லாத வேறுவிதக் கோடுகள் பல, சிதறிய ஒளிநிறப் பட்டையில் தெரிந்தன! திரவ, திடவ மூலக்கூறுகள் சிதறிய அப்புதிய கோடுகளே ராமன் கோடுகள் [Raman Lines] என்று குறிப்பிடப் படுகின்றன.

    ராமன் செய்த மற்ற விஞ்ஞான ஆராச்சிகள்

    ராமன் செய்த மற்ற விஞ்ஞான ஆராய்ச்சிகளில் முக்கியமானவை, 1935 இல் ஒளிச் சிதறல் மீது ஒலி அலைகள் [Sound Waves on the Scatting of Light], 1940 இல் படிமங்களில் அணுக்களின் அதிர்வுகள் [Vibrations of Atoms in Crystals], 1950 இல் வைரம் போன்ற பளிங்குக் கற்களில் எழும் ஒளிவீச்சு [Optics in Gemstones], 1960 இல் உயிரியல் விஞ்ஞானத்தில் மனிதக் கண்கள் காணும் பன்னிறக் காட்சி [Physiology of Human Colour Vision] போன்ற பெளதிக அடிப்படைகள். மற்றும் சில தலைப்புகள்: ஒலிவியல் அதிர்வுகள், [Acoustical Vibrations], படிமங்களால் எக்ஸ்-ரே கதிர்த் திரிபுகள் [X-Ray Diffraction by Crystals], படிமக் கொந்தளிப்பு [Crystal Dynamics], படிம உள்ளமைப்பு [Crystal Structure], திரவத்தேன் ஒளி ஆய்வு [Optics of Colloids], மின்சாரப் பலகுணவியல்/காந்தப் பலகுணவியல் [Electric & Magnetic Anisotropy]. இசைக் கருவிகளின் இசை ஒலியின் பெளதிக இயல்பையும் [Physical Nature of Musical Sounds], இசைக் கருவிகளின் இயக்கவியலையும் [Mechanics of Musical Instruments] ராமன் ஆராய்ச்சி செய்தார். ஒலியியலில் ஈடுபாடுள்ள ராமன் வயலின் இசைக்கருவி எவ்வாறு ஒலி அதிர்வை நீடிக்கிறது என்று ஆராய்ச்சிகள் புரிந்து, இசைக்கம்பி இசைக் கருவிகளைப் பற்றி ஆய்வு நூல்களும் எழுதியுள்ளார்.

    ராமனின் பெளதிகக் கண்டுபிடிப்புகள் விஞ்ஞான வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றவை. அவரது பெளதிக ஆக்கம் மூலக்கூறுகளின் உள்ளமைப்பை [Molecular Structure] ஆராய்ச்சி செய்யப் பயன்படும் பல முறைகளில் ஒன்றாக உள்ளது. அவரது கோட்பாடுகள், ஒளியானது ஒளித்திரள் [Photons] வடிவத்தில் துகள்களைப் [Particles] போல் நடந்து கொள்கின்றன என்று அழுத்தமாக எடுத்துக் காட்டி, குவாண்டம் நியதியை [Quantum Theory] மெய்ப்பிக்கின்றன. குவாண்டம் என்பது சக்தியின் மிகச் சிறிய, பிரிக்க முடியாத துணுக்கு அளவு [Smallest Indivisible Unit of Energy]. ஒவ்வோர் துணுக்கும் ஓர் முழு இலக்கப் [Integral Number] பகுதியாகப் பல எண்ணிக்கையில் சேர்ந்து, முழுச் சக்தியை உண்டாக்குகிறது.

    இந்திய விஞ்ஞான வளர்ச்சிக்கு ராமன் செய்த பணிகள்


    ராமன் புதிய இந்தியப் பெளதிக வெளியீடு [Indian Journal of Physics] விஞ்ஞான இதழை முதன் முதல் ஆரம்பித்து, அதன் ஆசிரியராகவும் இருந்தார். அந்த வெளியீட்டுப் பதிவுகளில் பல விஞ்ஞானப் படைப்புகள் வெளிவர ராமன் ஏற்பாடு செய்தார். 1961 இல் ராமன் கிறித்துவ விஞ்ஞான கழகத்தின் [Pontificial Academy of Sciences] அங்கத்தினர் ஆகச் சேர்ந்து கொண்டார். அவரது காலத்தில் கட்டப் பட்ட ஒவ்வோர் இந்திய விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் அவர் நிதி உதவி செய்திருக்கிறார். இந்திய விஞ்ஞானப் படிப்பகத்தைத் [Indian Academy of Sciences] துவங்கி, அவர் அதன் அதிபதியாகப் பணி யாற்றினார். நூற்றுக் கணக்கான இந்திய, பர்மிய [Myanmar] மாணவர்களுக்குக் விஞ்ஞானக் கல்வி புகட்டி, அநேகர் பல்கலைக் கழகங்களிலும், அரசாங்கத் துறைகளிலும் உயர்ந்த பதவிகளில் பணி புரிந்து வந்தார்கள். உலக நாடுகள் சி.வி. ராமனுக்குப் பல விருதுகளையும், கெளரவ டாக்டர் பட்டங்களையும், விஞ்ஞானப் பேரவைகளில் அதிபர் பதவியையும் அளித்தன.

    விஞ்ஞான மேதை ஸர் சி.வி. ராமன் பெங்களூரில் 1970 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி காலமானார். இந்தியாவில் முன்னோடியாக விஞ்ஞான வளர்ச்சிக்கு விதையிட்டு, அதை விருத்தி செய்ய அநேக இளைஞர்களை விஞ்ஞானத்தில் உயர்வாக்கிய ஸர் சி.வி. ராமனை, இந்திய விஞ்ஞானத்தின் தந்தை என்று உலகம் போற்றிப் புகழ்வதில் உண்மை இருக்கிறது!

    +++++++++++++++++

    தகவல் :

    1.  The Biographical Dictionary of Scientists, Editor : David Abbott, Ph.D  [1984]

    2.  http://www.maattru.com/2011/12/blog-post_4629.html   [ இந்திய அறிவியல் = ராமன் விளைவு ? ]

    3.  http://en.wikipedia.org/wiki/C._V._Raman  [December 29, 2012]

    4.  www.physics.iitm.ac.in/~labs/amp/CVRaman-Life-and-Works.pdf  Life and Works of C.V. Raman

    [January 18, 2009]

    5.  http://portal.acs.org/portal/acs/corg/content?_nfpb=true&_pageLabel=PP_SUPERARTICLE&node_id=515&use_sec=false&sec_url_var=region1&__uuid=e678ec59-ed47-4834-9489-7e088c0af6fb    [The Raman Effect]  [December 15, 1998]

    +++++++++++++++++++

    Previous Entry: 

    +++++++++++++++++++++++
    S. Jayabarathan (jayabarat@tnt21.com) December 30, 2012  [R-1]
    Share
  • கவிஞர் பிறந்தார்!!!

     

    தேமொழி

     

    “போஸ்ட்இட் நோட்பேட்” தாளில்

    அவசரக் குறிப்பொன்று எழுதி

    கொடுக்கிறேன் அதைத் தோழிக்கு

    படித்தபின் அவள் சொன்னது

    சொன்னதே இல்லையே இதுவரை!!!

    குறுங்கவிதையும் எழுதுவாயா நீ?

     

     

    படம் உதவி:

    http://southyourmouth.blogspot.com/2012/08/lunchbox-notes.html

     

     

    Share
  • இந்த வார ராசிபலன் (31- 12 – 2012 முதல் 06 – 01- 2013 வரை)

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம்: பொது வாழ்வில் இருப்போர்கள், வீண் வதந்திகளை நம்பி செயலில் இறங்காமலிருந்தால், உங்களின் உயர்வு சீராக இருக்கும். கலைஞர்களுக்கு: உங்கள் திறமைகளை மிளிரச் செய்யும் வாய்ப்புக்கள் பல தேடி வரும். அதனை நல்ல முறையில் பயன்படுத்துவது உங்கள் கையில்தான் உள்ளது!
    மாணவர்கள் புதிய இடங்களில் பழக்கமில்லாதவர்களிடம் அதிகம் ஒட்டி உறவாட வேண்டாம். பெண்கள் குடும்ப விஷயங்களில் கோப தாபத்தை கட்டுக்குள் வைத்தால், எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விடலாம்! சிறிய சச்சரவுகளை பெரிதாக்காதவாறு சமாதானமாக நடந்துகொள்ளுங்கள். அலுவலகச்சூழலில் இருக்கும் இறுக்கமும் தானே விலகி விடும். வியாபாரிகள் எதிலும் நேர்மைக்கு இடம் கொடுக்க, வெற்றியோடு நல்மதிப்பும் உங்களுக்கே!

    ரிஷபம்: வியாபார வாய்ப்புக்களில், சில சந்தர்ப்பங்களில், கைக்கெட்டிய பொருள் வாய்க்கெட்டவில்லை என்ற நிலை நேரிடும். எனினும் விடாமுயற்சியால் விரும்பியதை அடைந்து விடுவீர்கள். பெண்கள் உழைப்பிற்கு நேரம் ஒதுக்குவதைப் போல, ஆரோக்கியத்திற்கும் நேரம் ஒதுக்கினால், மருத்துவச்செலவுகள் கணிசமாகக் குறையும். வரவும் செலவும் சமமாக இருப்பதால், சேமிப்பு என்பது பெயரளவில்தான் இருக்கும். தம்பதிகள் மன வேற்றுமைகள் நீங்க மனம் விட்டுப் பேசுங்கள். குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சி மலர்ந்து விடும். பங்குச் சந்தையில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும், அதிக ஆசை யினால் அதிக பணம் முடங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஞாபக மறதியால் வரும் சிக்கல்களைத் தவிர்க்க, எதையும் உடனுக்குடன் குறித்து வைப்பது நல்லது.

    மிதுனம்: பொருட்களை வாங்கி விற்பவர்கள் தேடி வரும் வாய்ப்புகளை வியாபாரமாக, உங்கள் வாய்ச் சொல்லால் மாற்றி விடுவீர்கள். உங்கள் தொழில் தொடர்பான பிரச்சனைகளை வளர விடாமல் உடனுக்குடன் சுமூகமான முறையில் முடித்துக் கொண்டால், தேக்க நிலை உருவாகாமலிருக்கும். மாணவர்கள் எந்தச் சூழலிலும், தவறான திசைப் பக்கம் திரும்பாமலிருங்கள்! வாழ்க்கை வசந்தமாகும். பண விவகாரங்களில் பிறர்க்கு சிபாரிசு செய்யும் முன் அவர்களின் பின்புலம் பற்றி அறிந்து செயல்பட்டால், சட்டச்சிக்கல்களுக்கு இடமிராது. நெருங்கிய நண்பர்களுடன் வாக்குவாதத்தில் இறங்குவதைத் தவிர்த்துவிட்டால், நட்பின் இழை விலகாமலிருக்கும்.

     கடகம்: பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவைகள் உங்களின் விருப்பப்படியே நடைபெறும் . வீண் செலவுகளைக் குறைப்பதில் சற்று கவனமாக இருங்கள். சேமிப்பதற்கான வழி வகைகள் மேலும் அதிகரிக்கும். வியாபாரிகளும், தொழிலதிபர்களும், பொருளாதாரத்தில் அகலக் கால வைக்காமல், கட்டுக் கோப்பாய் செயல்பட்டால், லாபத்தின் வரவில் குறைவிராது. பணிபுரியும் இடங்களில் முரண்பட்ட கருத்துள்ளவர்களுடன் மோதுதலைத் தவிர்க்கவும். பெண்கள் கணவன் வழி உறவினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முதலிடம் கொடுத்து விடுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்!

    சிம்மம்: பெண்கள் எந்த நல்ல விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனடியாக செயலில் இறங்குங்கள். கிடைக்கும் பலனும், மகிழ்ச்சியும் இரட்டிப்பாகும். நண்பர்களின் சந்தோஷத்திற்காக அதிக பணம் செலவழித்து சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள்! வியாபார விரிவாக்க விவகாரங்களில், பங்குதாரர்களுடன் கலந்து பேசி செயல்படுதல் நல்லது. நீண்ட நாட்களாக பிரிந்த உறவுகள் மீண்டும் குடும்பத்தில் இணைவதால், மகிழ்ச்சிப்பூ மீண்டும் மலர்ந்து விடும். மாணவர்கள் தேவையில்லாமல் அதிக நேரம் கண் விழித்தலைக் குறைத்துக் கொண்டால், ஆரோக்கியம் சீராகத் திகழும்.

    கன்னி: பிறரிடம் உள்ள குறைகளை விடுத்து, நிறைகளை மட்டும் கணக்கில் கொள்ளுங்கள். நேசம் பாராட்டி உதவுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும். மாணவர்கள் வாகனம் ஓட்டும் போது சிந்தனையை சிதற விடாமலிருப்பது நல்லது. வரும் வாய்ப்புகளை தட்டிப் பறிப்பவரிடம் கலைஞர்கள் உஷாராக இருந்தால், உங்கள் திறமைகளை பிறர் எளிதில் கண்டு கொள்ள முடியும். அலுவலக அளவில் பொதுப் பிரச்னைகளுக்காக, நண்பர்கள் சிலரின் நட்பை முறித்துக் கொள்ள நேரிடும். முக்கிய பொறுப்புக்களில் இருப்பவர்களுக்கு எதிரிகளின் தொல்லை சற்று அதிகரிக்கலாம். எனவே கவனமாகச் செயல்படுவது அவசியம்.

    துலாம்: நிலுவையில் உள்ள பாக்கியெல்லாம் வசூலாகி விடுவதால், புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் இறங்குவீர்கள். பொதுவாழ்வில் இயங்கிக் கொண்டிருப்பவர்கள் தம்முடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால், உங்கள் பணிகளில் எவரும் பழுது சொல்ல முடியாது. மாணவர்கள் புதிய சூழலில் வீண் வம்பு தும்புக்கு வேலை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகிவருவது நல்லது. வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களைப் பெற, சில நெருக்கடிகளை தாண்டிச் செல்ல வேண்டியிருக்கும் .எனவே நிதானமாக செயல்படுவது அவசியம்.

    விருச்சிகம்: இயன்ற வரை வீண் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். வரவுக்குள் செலவுகள் அடங்கிவிடும். காரணமற்ற கோபம் மற்றும் எரிச்சலால் பெண்களுக்கு வேலைகள் தேங்கும் நிலை உருவாகலாம். போட்டிகள் மூலம் உங்கள் திறமை வெளிப்படும்வரை கலைஞர்கள் பொறுமையாய் இருப்பது நல்லது. வியாபாரிகள் ஆரோக்யமான போட்டி மூலம் வாடிக்கையாளர்களின் வரவைத் தக்க வைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனமாகும். முதியவர்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். சுறுசுறுப்புடன் திகழலாம். சொத்து விஷயங்களில் உங்களின் நேரடி கவனம் தேவை.

    தனுசு: புதுப்புது யுக்திகளை பயன்படுத்துவதன் மூலம், கூட்டுத் தொழிலில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். பொருளாதாரச் சிரமங்கள் குறைவதால், பெண்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். இல்லத்தில்,கோபத்தைக் குறையுங்கள். பிரச்சனைகளின் தாக்கமும் தானே குறைந்து விடும். சக மாணவர்களின் மனோபாவத்திற்கேற்றவாறு , உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொண்டால், கல்வி தொடர்பான வேலைகள் கடகடவென்று முடிந்து விடும். கடும் பணியில் உள்ளவர்கள் உழைப்பில் சலிப்பு சேராமல், பம்பரமாய்ச் சுழல, சத்தான உணவு வகைகள் சாப்பிடுவது நல்லது. இது நாள் வரை எட்டியும், தட்டியும் சென்ற வாய்ப்புகள் மீண்டும் கலைஞர்களை நாடி வரும்.

     மகரம்: வாழ்க்கைத் துணையுடன் இணக்கமாக இருக்கும் தம்பதிகளுக்கு வாழ்வு இனிக்கும். மாணவர்கள் கல்லூரி விழா, போட்டிகள் ஆகியவற்றில் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள்.சில நேரங்களில் உடன் பணி புரிபவர் ஏட்டிக்குப் போட்டியாக செயல்படுவர். முக்கிய பொறுப்புக்களை ஏற்றுள்ளவர்கள் பதவிக்குரிய அதிகாரம் வரம்பு மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நினைத்ததைவிட நல்ல பலன் நிறையவே கிடைக்கும். வியாபாரிகள் நிர்ப்பந்தத்தின் பேரில் சலுகைகளை வலுக்கட்டாயமாய் பெற முயற்சிப்பவர்களோடு கூட்டு முயற்சியில் இறங்க வேண்டாம்.சிறு உடல் உபாதைகளால், பெண்கள் அவதிப்பட நேரிடும்.

    கும்பம்: பெண்கள் பணச் செலவில் கட்டுப்பாடாய் இருந்தால்,கடன்களை கட்டுக்குள் வைத்துவிடலாம். பங்குச் சந்தை வியாபாரத்தில் இருக்கும் ஏற்றமும், இறக்கத்திற்கேற்ப வியாபாரிகள் செயல்படுவது அவசியம். வேலையில் இருப்போர்கள், பல சமயம் நேரம் காலம் பாராமல் உழைக்க வேண்டியிருக்கும் .சிலர் சொந்த வீடு வாங்குவதற்காக எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் சில இழப்புக்கள் சில லாபங்கள் இரண்டையும் பெறுவர். அன்புக் கட்டளையால், நண்பர்களுக்கு சில உதவிகளை மகிழ்வுடன் செய்து கொடுப்பீர்கள்.

    மீனம்: வியாபாரிகளுக்கு முன்பிருந்த சுணக்கமான நிலை என்பது மறைந்து இணக்கமான சூழல் நிலவும். பெண்கள் வேலைப்பளு ஆரோக்கியத்தோடு மோதாமல் பார்த்துக் கொள்ளவும். மாணவர்கள் பிறரிடம் கைமாற்றாக பணம் பெற்று செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும். புதிதாக வேலையில் சேர்ந்திருப்பவர்கள் பேச்சில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், பணியில் கவனம் செலுத்தினால், பாராட்டு பல வந்து சேரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் நடவடிக்கைகளில் தென்படும் மாறுதல்களை இதமாகச் சுட்டிக் காட்டுங்கள். உங்களை புரிந்து கொள்வார்கள்.

    Share
  • ஸ்டீல் பீரோ

     

    விசாலம்

    நான்  அசையாமல் சிலைப் போல் உட்கார்ந்திருந்தேன் என் கையில் ஸ்காட்ஸ் விஸ்கி ,,,,,அழகு பூக்கள் கொண்ட ஒரு கண்ணாடிக் கோப்பையில்  நிரம்பி இருந்தது. சிலர் பேசினது காதிலே   விழுந்தது.

    “பாவம் ஸ்ரீதர் , பெண்டாட்டி மேலே உசிரையே வச்சிருந்தான் .இப்டி அல்ப ஆயுசிலே அவ   பொசுக்குன்னு போவாள்னு யார் நினைச்சா?”

    “ஆமாண்டா ரகு , அவன்  இப்போ   அந்த ஸ்டீல் பீரோ கம்பெனியை யாருக்கோ வித்துட்டானாம் ”

    “மனுசன் ரொம்ப உழைச்சு லட்ச லட்சமா சம்பாதிச்சான்! தனக்கு பிடிச்ச மாடல் பொண்ணைக்  காதலிச்சான்      பழகினான்    பின்னாலே  கல்யாணமும் கட்டிக்கிட்டான்.என்ன சொல்ல!  அவன்  கொடுத்து வச்சது அவ்வளவுதான் ”

    பேச்சு முடிந்தது ,நான் மனதிலேயே சிரித்துக்கொண்டேன்    விஸ்கி கோப்பையைப் பார்த்தேன் .என் ஸ்வீட்    டர்ர்லிங் கல்பனா சிரித்தாள். ஸ்விம்மிங் சூட்டில் நின்றாள்.    அழகு பிம்பம் தான் ,,,,சும்மாவா அவளுக்கு அழகுப் போட்டியில் முதல் பரிசு கிடைத்தது!

    நான் அவளை மிகவும் நேசித்தேன் ,,அவளை அனுபவித்தேன் ,,,

    கோப்பையிலிருக்கும்  விஸ்கியை முழுங்கினேன் ,சற்று தொலைவில் இன்னும் இருவர் என்னைக்காட்டி ஏதோ பேசுகின்றனர்.
    என்னதான் பேசுவார்கள்?       ஐயோ பாவம் மனுசன் மனைவியை இழந்து நிற்கிறான் என்ற அனுதாப    பேச்சுதான்    .ஹாஹாஹா மனைவியை இழந்தேனா? இல்லைக்கொலைச் செய்தேனா?

    திடிரென்று பெரிதாக  சிரிக்கிறேன் ஒரு சிவப்புபட்டை அணிந்த ஆள் என் சோகத்தைப் போக்க  மஞ்சள் தண்ணீர் நிரப்பிவிட்டுப்
    போகிறான். அந்தக்கோப்பையின் உள் என் கல்பனா பீரோவில் சாய்ந்தபடி நிற்கிறாள்.   ஒரு கையை கதவின் மேல் தூக்கியபடி வைத்துப்போஸ் தருகிறாள் ,அவள் இளமையின் பூரிப்புகள் என்னை மயங்கச்செய்தன.

    நான் யார் என்று உங்களுக்கு   தெரியவில்லையா?  இது தருகிறேன் என் அறிமுகம்

    நான் தான்  “ராஜா”   , ஸ்டீல் பீரோ கமபெனியின் ராஜாவும் நான் தான் .சின்ன கம்பெனியாக ஆரம்பித்த எனக்கு  உழைப்புடன்
    அதிருஷ்டமும் கைக்கொடுத்து  என்னை உச்சியில் தூக்கியது ,அப்போதுதான் நான் 27 வய்து நிரம்பிய காளை என்று  என் மனதில்
    பட அரம்பித்தது,    என்   கம்பெனிக்கு அழகான நல்ல மாடெலிங் பெண் வேண்டும் என்று   விளம்பரம் கொடுத்தேன் பல அழகிகள் வந்தார்கள்    .கடைசியில் நான் என் கல்பனாவை தேர்ந்தெடுத்துக்கொண்டேன். அவள் புன்னகை ,பெரிய காந்தக்கண்கள் தந்தம் போன்ற கைகள் அந்த ஆப்பிள் கன்னம் .,,மொத்தத்தில் நல்ல பிகர்தான் ,,,அவளை   செலெக்ட் செய்தேன் ,வேலையுடன் என்னுடைய மனைவி என்ற பட்டமும் கொடுக்க எண்ணினேன் ,,,,அவள் மாடல் செய்ய   கம்பெனி வளர்ந்தது ,அவள் என் மனைவியும்  ஆனாள்,

    மேலும் ஒரு பெக் ,,,நிரப்புகிறேன் என் கடந்தகாலம் சினிமா  ரீல் போல் ஓடியது ,

    நான்  கதாநாயகனா?     இல்லை வில்லனா?

    நான் அப்போது ரொம்ப   பிசி .நேற்று சென்னை   இன்று மும்பய்  ,நாளை கொல்கத்தா ,என்று பிசினஸ் பிசினஸ் என்று பம்பரம் போல் சுற்றினேன் இன்று போர்ட் ஆப் மீடிங் ,,நாளை  பார்ட்டி  திறப்பு விழா என்று ஒரே சுற்றுதான்   ஆக என் கலபனாவைப் பார்க்கும் நேரம் மிகக்குறைந்தது. .இந்த விஐபிக்கு  நேரமில்லை ,,,,,,,,,,,,,பாவம் கல்பனா நன்கு படித்தவள் ,அறிவாளி என்னிடம் கொஞ்சம் கொஞ்சமாக வியாபார நுணுக்கங்கள் எல்லாம் படித்து பிசினஸ் டெக்னிக் முழுவதும் கற்றுக்கொண்டு என்னையும் மிஞ்சிவிட்டாள்,     எனக்கு உதவி செய்தாள். எல்லாவற்றிலும் தேவதை மாதிரி வளைய வந்தாள்,நான் அவள் அழகை ரசித்தேன்
    அவளிடம் எப்போதும் இருக்க விரும்பினேன் ஆனால்  என் பிசினஸ் என்னை விடவில்லை   பணம்  புகழ் என்ற  ஆசையும்   மேலும் சேர்ந்துக்கொண்டது. அத்னால் பல நாட்கள் பாவம்  அவள்  தனியே விடப்பட்டாள்  இதனால் அவள்   மனம் என்னை விட்டு விலகுகிறது என்று நான் உணரவில்லை ,,,,,,,

    என் விஸ்கி கிளாஸைப் பார்க்கிறேன் ,யார் நிற்கிறான் ?

    பாஸ்கரன தானே ! ஆஹா என்ன அழகு அவனும் ஒரு மாடல்தான் சுருட்டை முடி , நான் ஒரு முட்டாள் ,,யானை தன் தலையில்
    மண் அள்ளிப்போட்டதைப்போல்  நானே என் வாழ்க்கைக்கு உலை வைத்து விட்டேன் அவனை என் கம்பெனிக்கு மானேஜராக   ஆக்கினேன் அவன் எனக்கு உயிரையே கொடுத்தான்    நானும்  அவனும் பிரிக்கமுடியாத நண்பர்கள் ஆனோம் , என் கல்பனாவுக்கும் அவனை மிகவும் பிடித்து விட்டது. .அண்ணா அண்ணா என்றுதான் கூப்பிட்டாள் ,,

    என் விஸ்கி காலி ஆயிற்று  கையால் ஒருவனுக்கு சைகை செய்தேன் அவன் என்னிடம் ஓடி வந்து திரும்ப நிரப்பினான் ,,,,,,,

    ஒருநாள்  கல்பனா குழைந்தாள் ,,,, தன் ,உடல் பருத்துவிட்டதாகவும் நீச்சல் குளம் சென்று வருவதாகவும் கூறினாள். அவள் ஆசைக்கு நான்  மறுப்பு தெரிவித்தது கிடையாது ,,”ஒகே மாலை ஒரு பார்ட்டி இருக்கு அதற்கு வந்து விடு”என்று சொல்லி கிளம்பினேன் ,,,,சிறிது தூரம் சென்ற பின் தான் என் முக்கிய பேப்பரை மறந்து வந்தது  தெரிந்தது . திரும்ப வீட்டிற்குப் போனேன் , அங்கு நீச்சல் உடையில்  கல்பனா நிற்க அவளைத் தழுவியபடி பாஸ்கர் ,,,,,,எனக்கு ஒரே ஷாக் ,,,,,,,அடித்தது ,,,, போனச்சுவடு தெரியாமல் திரும்பி விட்டேன் .

    சரக்கு உள்ளே போயிற்று ,,,,,,,,,,
    “எனக்கு மட்டும் தான் நீ என்று நான் சொன்ன போது எப்படி கன்னம் குழிய சிரித்தாள் துரோகி ,,,நயவஞ்சகி ..இது வெளியில்
    தெரியக்கூடாது  ஆசைக்காட்டுவது போல்  நடித்து அவளை முடிக்க வேண்டும் நான் மாட்டிக்கொள்ளக்கூடாது ,, ,,,,அந்த அழகு ராணியை”  ,,,,,,,,,,,,,,என் கையை முறுக்கிக்கொண்டேன்

    இரவு  வந்தது   என் கல்பனா என்னிடம் வந்தாள் நான் பார்த்த காட்சியைப் பற்றி அவளிடம் கேட்கவில்லை  கடைசி வரை நடிக்க வேண்டும் ,அவளும் ஒன்றும் தெரியாதது போல் நடித்து துரோகி,,,,,,, என்னுடன் விளையாடினாள்.ஒரு வாரம் ஓடியது  மும்பய்க்குப் கம்பெனி விஷயமாகப் போனேன் இரண்டு நாட்களுக்குள் திரும்பினேன்   பாவம் கல்பனா !நான் வேலை கம்பெனி பார்ட்டி என்று அவளை விட்டு போய்க்கொண்டே இருந்தால்  அவளும் தான் என்ன செய்வாள்?அவளுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறதே 1 சம்பாதித்தது போதும் இனி  பிசினஸ் என்று ஓடாமல் அவளுடன் இருக்கலாம் ,அவளை மன்னித்து விடலாம்  என்று என் நல்ல மனம் சொல்லியது     ஒரு வாரம் வேலையை இரண்டு நாளில் முடித்து விட்டு “கல்பனா கல்பனா”என்று   மனதில் கூறிக் கொண்டு  சன்னல் திரையைத் தள்ளினேன் , கல்பனா  பாஸ்கர் இருவரும் இருந்தனர் ,கஜூரஹோ ஞாபகம் வந்தது ,,,,என்  ,,நரம்புகள் புடைத்துக்கொண்டன. மெல்ல திரும்பினேன்   இப்போது என் மூளைக்கு வேலைக்கொடுத்தேன் ,எப்படிஅவளைக் கொல்வது?

    ஒரு   புது  மாதிரியான ஸ்டீல் பீரோ ஒன்று  தயாரித்தேன். திருடன்  அதைத் திற்க்க முயன்றால் ஷாக் அடித்து மயக்கமடைவான்
    உள்ளே மின்சாரக்கம்பிகள் அதிக சக்தி இல்லாமல் இணைக்கப்பட்டிருக்கும் ,வெளியில் செல்லும் போது அதன் விசையைப் போட்டு விட்டுச் செல்லவேண்டும்    என் விருப்பபபடி நானே அதைத் தயாரித்தேன் .நல்ல சக்தியான  மின்சாரக் கம்பிகள் பொருத்தினேன், மறுநாள் என் அழகு கல்பனாவை   இல்லை  இல்லை  துரோகி கல்பனாவைக்கூப்பிட்டேன் ;”என்ன  டார்லிங்     தேனொழுக பதில் ‘நான் அவளை என் பக்கம் இழுத்தபடி,

    ”   என் டியர்  கல்பனா  நீ  “இந்த பீரோவில் சாய்ந்தபடி போஸ் தரவேண்டும். விளம்பரம் இந்தப் புது பீரோவுக்குத்தான்  நீ சாய்ந்து நின்றாலே போதும் பலர்  வாங்குவதற்கு   ஆர்டர் கொடுத்து விடுவார்கள்” என்று அந்தத் துரோகியை அணைத்துக்
    கொண்டேன் ,

    மறுநாள்      என் எண்ணம் படியே  அவளும் வந்தாள் பச்சை நிற பீரோவில் சாய்ந்தாள் ,,,,,,,,,,வெற்றி  முழு வெற்றி  ,,நான் நினைத்தது நடந்தது ,,,,,,விழிகள் பிதுங்க விழுந்தாள்,   என் கம்பெனியை விற்றுவிட்டேன் ,கோர்ட்டில் எல்லா பீரோக்களும் ஒரே கலராக இருந்ததால் தவறாக இதில் சாய்ந்து விட்டாள் என்று வாதாடினார் என் வக்கீல்    பணத்தை அள்ளி வீசினேன்  அங்கு  ,பணம் பேசியது , பணத்தால் ஜயித்தேன் ,   அவளைக் கொன்று விட்டேன் ஆனால் இன்று மனச்சாட்சி என்னைக் கொல்கிறது ,,,,,,,,,,

    கீழே மயங்கி சாய்கிறேன்  “பாவம் மனைவி மேல் உசிரே வச்சிருந்தார்  ,சோகத்தை இப்படி போக்கறார்”என்ற குரல் கிணற்றுக்குள் விழுவது போல் விழுகிறது ,,,,,,,,,,

    Share
  • பாத யாத்திரை (திருவேங்கடமலை) அனுபவங்கள்::

    பெருவை பார்த்தசாரதி  ::

    இறை வழிபாட்டு முறைகளை நமது முன்னோர்கள் மிக நேர்த்தியாக வகைப்படுத்தி, அதை எவ்வாறேல்லாம் பின்பற்ற வேண்டும் என்று பின் வரும் சந்ததியினருக்கு மிகத் தெளிவாக வழங்கி இருக்கிறார்கள். இவ்வழிபாட்டு முறைகளை எல்லாம் மஹான்கள், ரிஷிகள், ஆசார்ய புருஷர்கள், குருமார்கள் போன்றோர்கள் அவ்வப்போது நமக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இவ்விதம் புனிதமான ஆலயங்களுக்குச் செல்லுதல், தீர்த்த யாத்திரை, பாதயாத்திரை, நாம சங்கீர்த்தனம், பஜனை செய்தல், அனுதினமும் வீட்டிலேயே பெருமானை ஆராதனம் செய்தல் போன்ற பல வழிகளைப் பின்பற்றும் அன்பர்கள் இருக்கிறார்கள். நமது வசதிக்காக நாம் பின்பற்றும் வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொள்ளாமல் முறைப்படி பின்பற்றுவதே மேல் என்றும், மாறாக வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொண்டால் புனிதத்தலங்களின் ‘சாந்நித்தியம்’ மாசுபடத்தொடங்கிவிடும் என்பதையும் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே எடுத்துரைத்திருக்கிறார்கள். இறை வழிபாட்டுக்கென்று இடமும், தகுந்த நேரமும் இருக்கிறது, ‘ஏதோ நமக்கு நேரம் கிடைக்கிறது’ என்று நினைத்து ஆலயங்களுக்கும், பூஜை போன்ற சுபகாரியங்களுக்கும் நாம் நினைத்த நேரத்தில் செல்ல முடியாது, அதற்கும் பகவானின் அருள் வேண்டும் என்பதால்தான், “ஏழுமலையான் அழைத்தால் மட்டுமே திருமலைக்குச் செல்ல முடியும்” என்பதைச் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக இறை சிந்தனையும் நம்மோடு கைகோர்க்கவேண்டும்.  ‘பசி’ எடுக்கிறது என்று யாரும் நமக்குச் சொல்வதில்லை, அதுபோல் ‘தாகம்’ எடுக்கிறது தண்ணீர் குடி என்று யாரும் தூண்டுவதில்லை. பசியும், தாகமும் இயற்கையாக தோன்றுவதுபோல், ‘இறை சிந்தனை’ என்பதும் இயற்கையாகவே எழவேண்டுமாம். நம்மை அறியாமலேயே நமது உடம்பும் மனமும் மாசு படிந்து இருக்கலாம். ஆதலால் தான் நாம் குளித்து முடித்து, மடித்துணி தரித்த சமயத்தில் மாத்திரம் இறைச்சிந்தனையோடு ஆலயத்துக்குச் செல்கிறோம். தருமமிகு பாரதத்தில் எண்ணற்ற ஆலயங்கள் இருக்கின்ற போதிலும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்துவிக்கப் பட்ட வைணவ திவ்ய ஆலயங்களுக்கு (108) செல்வதையும், இதேபோல ‘அப்பர்’, ‘சுந்தரர்’, ‘மாணிக்கவாசகர்’ போன்ற நாயன்மார்களால் பாடல்பெற்ற சைவத்தலங்களுக்கு (274) யாத்திரை செல்லுதலை மட்டுமே ஒரு கடமையாகக் கொண்டுள்ள பக்தர்களையும் நம்மிடையே காணலாம்.  இப்படிக் குறிப்பிட்ட தலம், குறிப்பிட்ட நேரம் என்பது மனிதன் செய்கின்ற எல்லா நல்ல காரியங்களோடும் இணைந்து விடுவது மிகவும் அவசியமாகிறது, அது மாறும் போது தவறாகிறது. இப்படிப்பட்ட நல்ல நேரமும், சந்தர்ப்பமும் கைகூடும் சமயத்தில்தான் மனமொத்த கருத்துடைய நண்பர்கள் ஒருங்கே இணைந்து, மார்கழித் திங்களில், ‘ஓங்கி உலகளந்த உத்தமனின் பேர் பாடிக்கொண்டு’ (திருப்பாவையின் மூன்றாவது பாசுரம்) பாதயாத்திரையை பதினெட்டு நண்பர்களுடன் சென்னை மகாலிங்கபுரத்திலிருந்து பிரசன்னவேங்கடேஷ் என்பவரது வழிகாட்டுதலுடன் தொடங்கினோம். நான்கு நாட்கள் பாதயாத்திரை சென்ற அனுபவத்தில், பல ஆலயங்களைக் காண முடிந்த போதிலும், மிகச்சிறப்பாக அமைந்த ஒரு சில விஷேசமான ஆலயங்களின் சிறப்பை மட்டுமே இங்கே மிகச்சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். என்னதான் பத்திரிகையிலும், மாத இதழ்களிலும் இத்தலங்களைப் பற்றி அனேகர் அறிந்திருந்தாலும், புதிதாக பாதயாத்திரை தொடங்கும் அன்பர்களுக்கு நிச்சயமாக உதவும் என்பதால், ஆலய பட்டர்களிடமிருந்தும், பக்தர்களிடமிருந்தும் நேரடியாக பெறப்பட்ட இத்தகவல்களை உங்கள் முன் வைக்கிறேன். இந்த அரிய ஆலயத் தகவல்கள், நம்மை ஆச்சரியத்துக்குள் ஆழ்த்துகின்றன.முறைகளை நமது முன்னோர்கள் மிக நேர்த்தியாக வகைப்படுத்தி, அதை எவ்வாறேல்லாம்

    பாற்கடலைக் கடைந்து, அமுதத்தை எடுக்கும்போது ஆலகால விஷத்தை ஈஸ்வரன் உண்டதாக நாம் படித்திருக்கிறோம். அந்த விஷத்தை அப்படியே விழுங்கி விட்டதால் சர்வ லோகமும் அழியும் என்பதாலும், விழுங்கியதை உமிழ்ந்து விட்டால் அதைவிட ஆபத்து என்பதாலும் பார்வதி தேவி, ஈஸ்வரனை தன் மடியில் கிடத்தி, அவ்விஷத்தை கண்டத்தில்(கழுத்தில்) கைவைத்து அதே இடத்தில் நிறுத்திவிட்டார். ஆலகால விஷத்தைத் தடுத்து சர்வ லோகத்தையும் காப்பாற்றி அமுதத்ததயும் வழங்கியதால் இறைவி “அமுதாம்பிகை” என்றும், இறைவன் “பள்ளி கொண்ட பரமன்” என்றும் அழைக்கப் படும் ‘சுருட்டப் பள்ளி என்ற இடத்தில் முதல் நாள் இரவு தங்கினோம். சயனத் திருக்கோலத்தில் ஈஸ்வரன், பார்வதிதேவியின் மடியில் பள்ளிகொண்டிருக்கும் ஒரே ஆலயம் என்று சொல்லும்படியாக சுருட்டப்பள்ளி திகழ்கிறது. இங்கே வைணவ ஆலயத்தைப் போல், பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி, துளசி வழங்குவது ஆலய சிறப்பம்சத்தில் ஒன்று. குடும்ப சமேதரராக தட்சிஷினாமூர்த்தியை இவ்வாலயத்தில் மட்டுமே காணமுடியும்.

    அடுத்து வருவது நாகலாபுரம் ‘ஸ்ரீவேதநாராணப் பெருமாள்’ ஆலயம். திருவரங்கத்தில் பெருமாள் தெற்கு நோக்கி அருள்பாலிப்பதுபோல், இங்கே வித்தியாசமாக அனைத்து ஆலயங்களிலிருந்தும் மாறுபட்டு மேற்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வருடத்தில் ஒரு நாள் சூரியாஸ்தமனத்தின் போது, ஒரு குறிப்பிட்ட நாழிகையில் சூரியநாராயணனின் சூரியக்கிரணங்கள் வேதநாராயணப் பெருமானின் சன்னிதியில் பகவானின் பாதம் தொடங்கி, நாபி, சிரசு என்று மூன்று நாட்கள் தொடர்ந்து விழுந்து கொண்டே இருப்பது அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் சூரியபூஜை என்று நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டு தெப்போற்சவமும் நடைபெறுமாம். பத்து அவதாரங்களில் முதலாவதாரத்தில் “மச்சாவதாரம்” என்கிற மீன் வடிவத்தில் ‘மூலவர்’ தோற்றமளிக்கிறார். கோவிலின் சிற்பங்கள் அனைத்திலும் மச்சாவதாரத்தின் மகிமையைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

    மூன்றாவதாக நாராயண வனத்தில் எழுந்தருளியிருக்கும் “கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள்” ஆலயம். ஆலயத்தின் தோற்றமே அனனவரையும் பிரமிக்க வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. பகவான் ஸ்ரீனிவாசனுக்கும், பத்மத்தில் (தாமரை மலர்) அமர்ந்திருக்கும் தேவி பத்மாவதிக்கும் திருமணம் நடந்த இடம் என்று தலவரலாறு சொல்கிறது. திருமணத்தின் போது பங்கு கொண்ட அனைவருக்கும் ‘மஞ்சள் பிரசாதம்’ வழங்குவதற்காக சுமார் ஒரு டன் எடைகொண்ட மஞ்சள் தயாரிக்கும் மிகப் பெரிய பாறைக்கல்லால் ஆன இயந்திரம் ஒன்று தாயாரின் சந்நிதிக்கு முன்பு வைக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறது. எம்பெருமான் வேட்டைக்கு வரும்போது இச்சம்பவங்கள் நிகழ்ந்ததால், எம்பெருமானின் விழிகள் திறந்த நிலையிலும், திருக்கரத்தில் உடைவாளுடன், திருஒட்டியானத்தில் பத்து அவதாரங்களின் தோற்றங்களும் இடம்பெற்றிருப்பது அபூர்வம். யாத்திரையின் இடையில் ‘ராமகிரி’ என்றொடு தலத்தைப் பற்றிய தகவலை அறிந்தோம், பிரதான சாலையிலிருந்து சற்று தொலைவில் இருப்பதாலும், நேரக்குறைவின்மையாலும் அங்கு செல்லமுடியவில்லை.

     நீண்ட தூரம் நடந்து ஒரு இடத்தைக் கடப்பது, அவ்வளவு எளிதல்ல என்பதை பாதயாத்திரையின் போது தோன்றும் ‘உடல் உபாதைகள்’ மூலம் அறியலாம். இதனைக் கருத்தில் கொள்ளும்போது, இங்கே திருமங்கையாழ்வார் பாசுரம் ஒன்று நினைவுக்கு வருகிறது. திருமங்கையாழ்வார் தனது பெரியதிருமொழியில் “நாராயணா” என்னும் திருநாமத்தை அனுசந்தித்துக் கொண்டிருக்கும் அடியார்களுக்கு, அவர்கள் படும் துன்பங்களெல்லாம் கதிரவனைக் கண்ட பனித்துளிபோல் மறைந்து விடும் என்கிறார். மகத்தான இச்சொல், சகலவிதமான செல்வத்தையும், தாய் தன் மகவுக்குச் செய்யும் நலனைவிடவும், தீவினைகளைப் போக்கி பரமபதத்தையும் கூட அளித்துவிடும் என்பதை பின்வரும் பாடல் மூலம் விளக்குகிறார். அதனால்தான் ‘நாராயணா’ என்ற சொல்லை “நலம் தரும் சொல்” என்கிறார்.

     “குலம்தரும் செல்வந் தந்திடுமடியார் படுதுய ராயின வெல்லாம்

    நிலந்தரஞ் செய்யும் நீள்விசும் பருளும் அருளொடு பெருநிலமளிக்கும்

    வலம்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்

    நலந்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்  ‘நாராயணா’ வென்னும் நாமம்” 

     அடியார்கள் அனைவரும் மாஹாலிங்கபுரத்தில் ஒன்றுகூடித் தொடங்கிய பாதயாத்திரை, சூளைமேடு, அண்ணாநகர், வில்லிவாக்கம், கொளத்தூர் வழியாக ரெட் ஹில்ஸ், பிறகு கண்ணணோடை பாலம், மதுரவாயல், சூளைமேனி, ஊத்துக்கோட்டை, சுருட்டப்பள்ளி, நாகலாபுரம், பிச்சாட்டூர், நாராயணவனம், புத்தூர், ‘புடி’ ரயில் நிலையம், திருச்சானூர் வழியாக முடிவில் திருமலை சென்றடைந்து ஏழுமலையானைத் தரிசித்து சென்னை வந்தடைந்தோம்.

    “திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒர் திருப்பம் நேருமடா” என்பது போல், பாத யாத்திரை முடித்து  சென்னை திரும்பிய அன்று (20-12-12)எனக்கோர் மகிழ்ச்சியான செய்தி, வல்லமை குழுவினர் மீண்டும் ஓர் முறை தொடர் கட்டுரைக்கு “வல்லமை விருது” வழங்கி சிறப்பித்திருந்தார்கள்.

    Share
  • வால்ட் விட்மன் வசனகவிதை -4 அவனுக்கு ஒரு பாடல்

                                                                                                                  (1819-1892)
                                                                                                        (புல்லின்இலைகள் -1)

                                                                                                          அவனுக்கு ஒருபாடல்

                                                                                                         மூலம் : வால்ட் விட்மன்

                                                                                              தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

    வால்ட்விட்மன் வாழ்க்கை வரலாறு:

    அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்து தந்தையால் நிறுத்தப் பட்டார். ஆகவே அவர் சிறு வயதிலேயே ஓர் அச்சகத்தில் பணிசெய்ய வேண்டிதாயிற்று. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நாளிதழ் களுக்கு எழுதியும், அவற்றுக்குப் பிறகு தொகுக்கும் ஆசிரியராகவும் பணி யாற்றினார். அவரது 17 வயதில் பள்ளி ஆசிரியராகச் சில காலம் வேலை செய்தார். 27 ஆவது வயதில் புரூக்லின் தின இதழின் ஆசிரியரானார். புரட்சி கரமான அவரது கவிதைப் படைப்புகள் மிகவும் தனித்துவ முறையில் பாலுறவு உட்பட ஆவேச உணர்ச்சியில் எழுதப் பட்டவை. அவர் அமெரிக்கக் குடியாட்சியை பேரளவு மதிப்புடன் கொண்டாடியவர். படைப்புகளில் குறிப்பாக அவர் முதலில் வெளியிட்ட சிறிய கவிதைத் தொகுப்பு “புல்லின் இலைகள்” [Leaves of Grass] அவராலே பன்முறைத் திருத்தமாகிப் பின்னால் விரிவு செய்யப் பட்டது.

    வால்ட் விட்மன் தனது கவிதைகளில் ஒளிமறைவின்றி எதையும் வெளிப் படையாக வெளியிட்டதால், அவரது படைப்புகள் ஆபாசமானவை, வெறுக்கத் தக்கவை என்று முதலில் பலரால் ஒதுக்கப் பட்டன ! அவரது கவிதைகள் அனைத்தும் எதுகை, மோனைத் தளை அசையின்றி இலக்கண விதிக்கு அப்பாற்பட்ட வசன நடைக் கவிதைகளாய்[Free Verse] எழுதப் பட்டவை. அவரது கவிதைகளை உயர்வாகப் பாராட்டி யவருள் ஒருவர் கவிஞர் எமர்ஸன் [Ralph Waldo Emerson]. 1855 இல் 12 பாடல்களுடன் முதற்பதிப்பு “புல்லின் இலைகள்” புத்தகத்தை வெளியிட்டார். பின்னால் அது 300 கவிதைகளுடன் விரிவானது. அதற்கு ஆரம்பத்தில் அமெரிக்கர் ஆதரவு கிடைக்க வில்லை.

    1848 இல் வால்ட் விட்மன் நியூயார்க்கிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் சென்றார். அவர் அங்கேதான் முதன் முதலில் அடிமைகள் நடுத்தெருவில் ஏலம் விடப்படும் அருவருப்பு வாணிபத்தையும்,அடிமைக் கறுப்பர் படும் கொடுமைகளையும் கண்டு மனவேதனை அடைந்தார். ஆர்வமாய்ப் படிக்கும் வேட்கை மிகுந்த வால்ட் விட்மன் 1848 இல் தனது சொந்தச் செய்தித்தாள் “உரிமைப் பூமி“ [Free Soil] என்பதை வெளியிட்டு அதற்கு அதிபதி ஆனார். மின்சார உடல் பற்றி என் பாடல் [I Sing the Body Electric] & என்னைப் பற்றிய எனது பாடல்[Song of Myself] ஆகிய இரண்டு நூல்களும் மனித உடம்பைப் பற்றியும், உடல் நலம்,பாலுறவு பற்றியும் எழுதப் பட்டவை.

    தென்னக மாநிலங்களில் கொடுமைப் படுத்தப்படும் அடிமைகளை விடுவிக்க ஆப்ரஹான் லிங்கன் கடுமை யான போர் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. அதுவே சகிக்க முடியாத “சிவில் போர்” [Civil War] எனப்படும் உள்நாட்டுப் போரானது. அரசாங்க ஐக்கியப் படைக்கும், “கூட்டு மாநிலங்கள்” என்னும் கன்ஃபெடரேஷன் படைக்கும் யுத்தம் உண்டானது. இறுதியில் இருபுறமும் சமப்போர் புரிந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 30,000 மேற்பட்டது. அப்போது ஐக்கியப் படைகளுடன் போர் புரிந்த வால்ட் விட்மன் சகோதரன் ஜார்ஜ் விட்மன் காய முற்றதால் அவரைக் குணப்படுத்த வால்டயர் வாஷிங்டன். D.C. வர வேண்டிய தாயிற்று. அவர் சுயப்பணி யாளராய்ச் சேர்ந்து காயமுற்ற சுமார் 100,000 நபர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தது. வாஷிங்டன் D.C., மருத்துவ மனைக்கு பணிபுரிய வால்ட் விட்மன் 600 தடவை வந்ததாக அறியப் படுகிறது.

    சிவில் போர் வெற்றியில் முடிந்து, ஆப்ரஹாம் லிங்கன் இரண்டாம் முறையாக நின்று, ஜனாதிபதி தேர்வு வெற்றி பெற்ற விழாவில் வால்ட் விட்மன் கலந்து கொண்டவர் என்று அறியப் படுகிறது. போர் முடிந்து சட்ட மூலமாக அடிமை வைப்பு முறை அமெரிக்காவில் நீக்கப் பட்டது. போர் நின்ற ஐந்தாம் நாள், அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் பலியானார். லிங்கன் சுடப்பட்டு மரித்ததைப் பற்றி வால்டர் விட்மன் எழுதிய இரங்கற்பா “ஓ காப்டன், என் காப்டன்” படிப்போரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவது. 19 ஆம் நூற்றாண்டில் கவிதைப் படைப்புகள் எழுதிய வால்ட் விட்மனுக்கு 20 ஆம் நூற்றாண்டில்தான் அவரது படைப்புகளின் உன்னதம் வெளியாகிப் பரவியது. அவருடைய படைப்புகளின் செல்வாக்கு,மேன்மை புகழ் பெற்ற கவிஞர்கள் பாப்லோ நெரூடா, அல்லன் கின்ஸ்பெர்க், [அமெரிக்கா] ஃபெர்னான்டோ பெஸ்ஸோவா [போர்ச்சுகல்] ஆகியோர் ஆக்கங்களில் தெரிகிறது. வால்ட் விட்மன் கவிதைப் படைப்புகள் சில : அடிமை ஒழிப்புப் போர் பற்றி “டிரம் டாப்ஸ்”, “பீட் பீட் டிரம்ஸ்”, “இரங்கற்பா ஆப்ரஹாம் லிங்கனுக்கு”, குடியாட்சித் திறப்புகள்,” “இந்தியா நோக்கிப் பாதை.” [Drum-Taps, Beat ! Beat ! Drums !” “When Lilacs Last in the Dooryard Boom’d”, Democratic Vistas,” “A Passage to India.”].

    1873 இல் மூளை அடிப்பில் [Stroke] அவர் பாதிக்கப் பட்டு ஒரு பகுதி உடலுறுப்புகள் பயன்படுத்த இயலாது போயின. அதோடு ஒன்பது ஆண்டுகள் காலந் தள்ளி 1892இல் அமெரிக்கக் கவிதை மேதை வால்ட் விட்மன் தனது 73 ஆம் வயதில் காலமானார்.

    +++++++++++++++++++++++++++++

    அவனுக்கு ஒரு பாடல்

    [வால்ட் விட்மன்]

    அவனுக்காக நான் பாடுகிறேன்

    முற்காலத்தின் மேலிருந்து எழுப்புகிறேன்

    தற்காலத்தை நான் !

    என்றும் நிலைத்த மரவேரி லிருந்து

    இழுப்பது போல்

    இறந்த காலத்தின் மேலிருந்து

    எடுத்து வருகிறேன்

    இந்த நிகழ் காலத்தை !

    காலவெளி நீட்சியில் நான் அவனை

    மேலாக்கி வருகிறேன்.

    தனக்கென விதிகள் படைத்து

    அந்த முறைகளால்

    தன்னையே தான் ஆக்கிக் கொள்ள

    பின்னிப் பிணைக்கிறேன்

    காலம் அழிக்கா விதிகளை !

    ++++++++++++++++++++++

    மாநிலங்களுக்கு எச்சரிக்கை

    [To the States]

    ஒரு மாநிலத் துக்கு அல்லது

    எந்த ஒரு மாநிலத் துக்கும்

    அல்லது மாநிலத்தில் உள்ள

    எந்நகரத் துக்கும் என்னுரை இதுவே :

    எதிர்த்து நில் தீவிரமாய் !

    எதற்கும் சிறிது கூட அடிபணி யாதே !

    ஏனென்று எந்த வினா யின்றி

    அடி பணிந்து நீ ஓர்

    அடிமை யாக ஆக்கப் பட்டால்,

    முழு அடிமை யாக ஆக்கப் படின்,

    இந்த பூமியிலே

    எந்த நாட்டுக்கும், எந்த நகரத் துக்கும்,

    எந்த மாநிலத் துக்கும்

    இழந்த சுதந்திரம் மீளாது

    என்றென்றும் !

    +++++++++++++

    தகவல்:

    1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

    2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]

    3. Britannica Concise Encyclopedia [2003]

    4. Encyclopedia Britannica [1978]

    5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

    6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

    [ஆப்ரஹாம்லிங்கன்நாடகம்]

    ********************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan] (December 27, 2012)

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • கூர் வாள்

    முகில் தினகரன்
    கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட வீடியோக் காமிராக்கள் லென்ஸ் கண்களால் அந்த பெட்டியை விழுங்கிக் கொண்டிருக்க, பதினைந்திற்கும் மேற்பட்ட பத்திரிக்கை நிருபர்கள் அந்த ஆவேசப் பேச்சைக் குறிப்பெடுத்துக் கொண்டிருக்க, ஊழல்…லஞ்சம்….அதிகார துஷ்பிரயோகம் போன்ற சமூக அவலங்களைத் தன் வார்த்தைச் சாட்டையால் விளாசிக் கொண்டிருந்தார் ‘கூர் வாள்” பத்திரிக்கையின் ஆசிரியர் துரைஜீவானந்தம்.

    ‘சார் இந்த வருடத்தின் சிறந்த புலனாய்வுப் பத்திரிக்கையாக உங்கள் ‘கூர் வாள்” தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு காரணம் உங்களோட தைரியமான எழுத்துக்களா?…இல்லை உங்களோட சமூக கண்ணோட்டமா?” ஒரு பெண் நிருபர் தன் நீண்ட கேள்வியை வைக்க,சக நிருபர்கள் முகம் சுளித்தனர்.

    ‘ரெண்டுமேதாம்மா சமூக கண்ணோட்டம்தான் அவலங்களைக் கண்டு கொதிப்படைய வைக்குது எழுத வைக்குது அப்படி எழுதும் போது தைரியமும் தானாகவே வந்திடுது..”

    ‘உங்க எழுத்துக்கள் மூலம் இந்த சமூகத்தைத் திருத்திட முடியும்னு நெனைக்கறீங்களா சார்?,”

    ‘ம்ம் முற்றிலுமா திருத்த முடியாவிட்டாலும் ஓரளவுக்கு மாற்ற முடியும்னு நினைக்கறேன்ம்மா..உதாரணத்துக்கு என்னோட பத்திரிக்கையைப் படிக்கற பாமரன் தெரிஞ்சோ தெரியாமலோ தன் அளவுல செய்யற சின்னச் சின்ன தவறுகளைத் திருத்திக் கொள்வானல்லவா?”

    ‘அது போதுமா சார்?”

    ‘தாராளமா…ஒவ்வொரு மனுசனும் தான் செய்யற தவறுகளை உணர்ந்து தன்னைத் திருத்திக் கொண்டால் போதும் இந்தச் சமூகமே திருந்திடும் ஏன்னா சமூகம் என்பது என்ன?..தனி மனிதர்களின் கூட்டுதானே?”

    ‘சரி சார்..பெரிய பெரிய அரசியல் திமிங்கலங்களை என்ன செய்யப் போறீங்க?” ஒரு ஆண் நிருபர் தன் பங்குக்கு கேள்வி ஒன்றை வீச,

    ‘சமூகத்தைத் திருத்தி ஒரு சமூக விழிப்பணர்வை பரவலா ஏற்படுத்திட்டாப் போதும் .அந்த வேள்வித் தீயிலே அரசியல் திமிங்கலங்கள் எரிஞ்சு சாம்பலாயிடும்”

    அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த பேட்டி முடிவடைய காரில் ஏறிப் பறந்தார் ‘கூர் வாள்” ஆசிரியர் துரைஜீவானந்தம்.

    மறுநாள் காலை.

    ‘ஏங்க நீங்க குளிச்சிட்டிருந்தப்ப உங்க சப்-எடிட்டர் போன் பண்ணினார்” துரைஜீவானந்தத்தின் மனைவி சிவகாமி சொல்லியபடியே சமையலறையை நோக்கிச் சென்றாள்.

    மொபைலை எடுத்து எண்களை நசுக்கினார்.

    ‘என்ன ராமு என்ன விஷயம்?”

    ‘சார்..அந்த லெதர் பேக்டரி மேட்டரை இந்த வார இஷ்யூல போட்டுடலாமா சார்?” சப்-எடிட்டர் ராமு கேட்க

    ‘ம்ம் அந்த லெதர் பேக்டரி முதலாளி அதுக்கப்புறம் கூப்பிடவேயில்லையா?” ‘இல்லை சார்”

    ‘ராஸ்கல் வெறும் அஞ்சு லட்சம்தான் கேட்டேன் அதைக் குடுக்கவே கஞ்சத்தனப்படறான் ..ஓ.கே ஓ.கே அவனோட லெதர் பேக்டரி கழிவுகள் எந்தெந்த எடத்துல ஆத்தோட கலக்குது அதனால என்னென்ன பாதிப்புக்கள் ஏற்படுதுங்கற ஆர்ட்டிக்கிளை இந்த வார இஷ்யூலேயே பொட்டுடு இதுக்கு மேல் வெய்ட் பண்ண முடியாது ஹூம்..அஞ்சு லட்சத்தை மிச்சம் பண்ணப் போய் மொத்த பாக்டரியையும் இழுத்து மூடப் போறான்” சிரித்தபடி போனை அணைத்தார்.

    சமையலறையிலிருந்து கலவர முகத்துடன் கைகளைப் பிசைந்தபடி வந்த சிவகாமி ‘ஏங்க கேஸ் தீர்ந்து போச்சுங்க”

    ‘அதான் ரெண்டு சிலிண்டர் இருக்குதல்ல?”

    ‘இல்லை” கொஞ்சம் லேட்டா புக் பண்ணினதால வர லேட்டாகுதுங்க அப்பவும் புக் பண்ணும் போதே அவன் சொன்னான் ரொம்ப டிமாண்டா இருக்கறதினால இந்தத் தடவ லேட்டாத்தான் வரும்னு.”

    ‘சரி சரி அதுக்கு ஏன் இந்தப் பொலம்பு பொலம்பறே” என்றவர் சில விநாடிகள் யோசித்து விட்டு ‘சரி..நம்ம ஏரியாவுக்கு சிலிண்டர் போடறவனோட பேரையும் மொபைல்  நம்பரையும் குடு”

    ‘பேரு சந்திர சேகர். நெம்பரு.” என்று இழுத்தவள் காலண்டர் அருகே சென்று அதில் குறித்து வைத்திருந்த நம்பரைச் சொல்லச் சொல்ல,

    துரைஜீவானந்தம் அழைத்தார்.

    ‘யாருப்பா,..சந்திரசேகரா?…நான் சாந்தி நகர்ல இருந்து பேசறேன் பத்திரிக்கைக்காரர்!…தெரியுதா? சரி..சரி.சிலிண்டர் ஒண்ணு உடனே வேணுமப்பா!…..என்னது புக் பண்ணனுமா?….அதெல்லாம் தெரியும்ப்பா நான் பண்ணிடறேன் நீ மொதல்ல ஒரு சிலிண்டரைக் கொண்டு வா!….யோவ் வேற யாருக்காவது வந்த சிலிண்டரை இங்க தள்ளிட்டு எங்களுக்கு வரும் போது அதை அங்க தள்ளிடு..இதெல்லாம் கூட சொல்லித் தரணுமா..என்ன?..,அது தப்பா?…அதெல்லாம் ஒண்ணும் தப்பில்லை ஒரு சின்ன அட்ஜஸ்ட்மெண்ட் என்ன செய்ய மாட்டியா?..” என்றவர் குரலை சற்றுத் தாழ்த்தி ‘ஒரு நூத்தம்பது ரூபா எக்ஸ்ட்ரா தர்றேன் வாங்கிக்க சரி..இருநூறே வாங்கிக்க! ஓ.கே இன்னிக்கே வந்திடுமல்ல?..சாரி..சாரி வெச்சிடு”

    ‘சிவகாமி இன்னும் அரை மணி நேரத்துல அவன் சிலிண்டர் கொண்டாந்திடுவான் அவனுக்கு எப்பவும் குடுக்கற பணத்தோட இருநூறு ரூபா சேர்த்துக் குடுத்துடு..என்ன?”

    ‘என்னங்க நீங்க?..யாருக்கோ வர்றதை நாம் இப்படி அதிகப் பணம் குடுத்து வாங்கிட்டா அவங்க என்னங்க பண்ணுவாங்க?…..பாவம் அவங்களும் நம்மை மாதிரிதானே?…சிரமப்படுவாங்கல்ல?”

    ‘ச்சீய் வாயை மூடிட்டு சொன்னதைச் செய்டி பெருசா பேச வந்திட்டா பொம்பளை காந்தி” திட்டியபடியே நகர்ந்தார்.

    மாலை ஆறு மணியிருக்கும், போர்ட்டிகோவில் அமர்ந்து அடுத்த வார இதழின் ப்ரூப் திருத்திக் கொண்டிருந்தார் துரைஜீவானந்தம்.  தெருவில் யாரோ இரண்டு பேர் கையில் ஒரு ஃபைலோடு தன் வீட்டின் முன் நின்று பேசிக் கொண்டிருக்க யோசனையுடன் எழுந்து கேட்டைத் திறந்து வெளியே வந்து விசாரித்தார்.

    ‘நாங்க எலக்ட்ரிசிட்டி டிபார்ட்மெண்ட் இந்த தெருவிற்கு சோடியம் வேப்பர் விளக்கு போட அனுமதியாகியிருக்கு .அதான் எங்கெங்கே விளக்குக் கம்பம் வரும்னு அளந்திட்டிருக்கோம்”

    தொடர்ந்து அவர்கள் பேசிய பேச்சிலிருந்து தன் வீட்டிற்கு மிகவும் தள்ளியே விளக்குக் கம்பம் அமைகின்றது என்பதைப் புரிந்து கொண்டவர் ‘என்ன சார் நீங்க பேசறதை வெச்சுப் பார்த்தா என் வீட்டுப் பக்கம் வெளிச்சமே வராது போலிருக்கே”

    ‘என்ன சார் பண்றது? ஒரு கம்பத்துக்கும் இன்னொரு கம்பத்துக்கும் இவ்வளவுதான் இடைவெளி விடணும்னு ரூல்ஸ் இருக்கே”

    ‘ரூல்ஸ் என்ன சார் ரூல்ஸ் உங்களை மாதிரி அதிகாரிங்க நெனச்சா அதை மாத்த முடியாதா என்ன?” சொல்லிவிட்டு அசிங்கமாய்ச் சிரித்தார் துரைஜீவானந்தம்.

    அந்தச் சிரிப்பின் உள்ளர்த்தம் புரிந்து கொண்ட அந்த நபர்களும் ‘மாத்தலாம்தான் ஆனா அதுக்குக் கொஞ்சம் ஹிஹிஹிஹி”

    வியாபாரம் பேசப்பட்டு பத்தே நிமிடத்தில் பேரம் படிய துரைஜீவானந்தத்தின் வீட்டு வாசலிலேயே ஒரு விளக்குக் கம்பம் வருவதற்கான ஏற்பாடு உடன்பாடானது.

    இரவு

    ‘ஏய் சிவகாமி வா..வா டி.வி.லே என்னோட பேட்டி போட்டிருக்கான் வந்து பாரு” சமையலறையை நோக்கிக் கத்தினார் துரைஜீவானந்தம்.

    சுவாரஸியமேயில்லாமல் நிதானமாய் வந்தாள் அவள்.

    ‘ஒவ்வொரு மனுசனும் தான் செய்யற தவறுகளை உணர்ந்து தன்னைத் திருத்திக் கொண்டால் போதும் இந்தச் சமூகமே திருந்திடும்”

    சிவகாமி திரும்பி கணவனை முறைத்தாள்.

    ‘சமூகத்தைத் திருத்தி ஒரு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திட்டாப் போதும் .அந்த வேள்வித் தீயிலே அரசியல் திமிங்கலங்கள் எரிஞ்சு சாம்பலாயிடும்”

    சிவகாமி சமையலறையை நோக்கித் திரும்பினாள்.

    “என்னோட பத்திரிக்கையைப் படிக்கற பாமரன் தெரிஞ்சோ தெரியாமலோ தான் தன் அளவுல செய்யுற சின்னச் சின்ன தவறுகளைத் திருத்திக் கொள்வானல்லவா,”

    சிவகாமி சமையலறையை நோக்கி நடந்தாள்.

    பாதியிலேயே போகும் அவளை கோபத்துடன் பார்த்தார் துரைஜீவானந்தம்.

    Share
  • ஆருத்ரா தரிசனம்

    ராஜேஸ்வரி ஜெகமணி

    ஊர்திரை வேலை யுலாவும் உயர்மலைக்
    கூர்தரு வேல்வல்லார் கோற்றங் கோள் சேரிதனில்
    கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
    ஆதிரைநாள் காணாதே போதியார் பூம்பாவாய்”

    திருமயிலையில் சாம்பலாகிய பெண்ணை உயிர்ப்பிக்க திருஞான சம்பந்தர் பாடிய மயிலையில் கொண்டாடப்படும் பல்வேறு சிறப்பு மிக்க திருவிழாக்களுள் திருவாதிரையும் ஒன்று.

    ஆருத்ரா தரிசனம் சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் ஒன்று

    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளோடு இணைந்து திருவாதிரை வருவதால் விண்ணிலிருந்து சந்திரன் தன்னை தலையில் அணிந்து சாப விமோசனம் அளித்த சிவபெருமானின் அன்பர்களை தன் பதினாறு அமுத கலைகளால் தழுவுகின்றான்.

    ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாக
    ஓருருவம் ஓர் நாமம் இல்லாத சிவ பெருமான் செம்பவள மேனி வண்ணன் என்பதனால் அவரை சிவப்பு நட்சத்திரமான திருவாதிரைக்கு உரியவனாக்கி அவரை திருவாதிரையான் என்றும் அழைத்தும் அந்த திருவாதிரையன்று, ஆடும் அந்த அம்பலக்கூத்தனை சிறப்பாக வழிபடுகின்றோம்..

    ஆருத்ரா என்பது ஆதிரையை குறிக்கும் சொல். சிவனுக்கு உரிய ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை. எனவேதான் இந்த திருவாதிரை நாளில் ஆடல் அரசனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது

    ஆருத்ரா தரிசன விழா ராமநாதபுரம் உத்தரகோசமங்கையில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இங்குள்ள மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில்
    அருள்பாலிப்பார்.

    ஆண்டுக்கு ஓரு முறை ஆருத்ரா தரிசனத்தன்று சிலையில் சந்தனம் களையப்பட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும்..

    கும்பகோணத்தில், மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பாக நடைபெறும்.

    அன்று 16 கோயில்களிலிருந்து சிவகாமியுடன் நடராஜர் தனித்தனியே புறப்பட்டு, திருக்குடந்தைக்கு ராஜாவாகிய அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயிலைப் பிரதட்சணம் செய்கின்றனர்.

    தொடர்ந்து கிழக்கு வீதியில் ஒவ்வொரு கோயிலிலிருந்தும் வந்த நடராஜரும், ராஜாவாகிய ஆதி கும்பேஸ்வரர் சுவாமிக்கு தங்களுடைய மரியாதையைச் செலுத்தும் வகையில் அர்ச்சனைகள் நடைபெறும்.

    பதிலுக்கு,ராஜாவாகிய ஆதி கும்பேஸ்வர ஸ்வாமியும் அந்தந்த கோயிலுக்கு உண்டான ஸ்வாமிக்கு பதில் மரியாதை செய்வார்.

    திருமணமான பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைக்கக் காண வேண்டிய விழா ஆருத்ரா தரிசனம்.

    கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புண்ணிய ஸ்தலமான சுசீந்திரம் அறம் வளர்த்த நாச்சியார் கோவில் பிரசித்தமானது.

    “ஆடல்வல்லான்’ என்று போற்றப்படும் ஆனந்த தாண்டவமாடும் நடராஜரை வழிபட்டால், மகிழ்ச்சி என்றென்றும் நிலைக்கும்.

    சிவபெருமானுக்குரிய வடிவங்களில் முதன்மையானது நடராஜர் வடிவமே. இவர் ஆடுவது ஆனந்த தாண்டவம். அம்பலவாணர், சபாபதி, கூத்தப்பெருமான், நடேசன், சித்சபேசன், நடராஜன், கனகசபாபதி, பொன்னம்பலம் என்ற பெயர்கள் உண்டு.

    திருவாதிரை நட்சத்திரம் நாள் தில்லை அம்பலத்தரசனுக்கு சிறப்பான விரத நாளாகும்.

    திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனம் செய்து சகல பாவங்கள், தோஷங்கள், தடைகள் நீங்கி வளமான வாழ்வு பெறலாம் ..

    ஆருத்ரா தரிசனத்தன்று ஆதிரைக் களி படைக்கும் வழக்கம் உண்மையான பக்தியுடன் எளிமையான உணவு படைத்தாலும் ஆண்டவன் ஏற்றுக்கொள்வான் என்பதே தாத்பர்யம்

    திருவாதிரைக்கு ஒருவாய்க்களி’ என்பது பழமொழி.

    எனவே மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி தின்று மகிழ்கின்றனர். இதே திருவாதிரை நாளன்று ஒருவாய் களி தின்றால், அதன்பலன் அளவிடற்கரியது.

    திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி தின்னாதவர் நரகக்குழி என்பது பழமொழி மூலம் பிரசாதத்தின் மகிமை விளங்கும்.

    களி என்றால் ஆனந்தம் என்று ஒரு அர்த்தம் ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜரை நாம் உண்மையான உள்ளன்புடன் வழி பட்டால் அவர் நமக்கு உண்மையான ஆனந்தமான மோக்ஷத்தை வழங்குவார் என்பதை உணர்த்துவதே களி படைப்பதன் உள்ளார்த்தம்.

    கோவை பேருரில் எம்பெருமானின் பின்னே பின்னி தொங்கவிடப்பட்டிருக்கும் ஜடா முடியையும் நாம் கண்டு ஆனந்தம் பெறலாம்.

    சப்த விடங்க ஸ்தலமான திருநள்ளாற்றிலும் அருணோதய காலத்தில் ஒரே சமயம் நடராஜப் பெருமானுக்கும், தியாகராஜப் பெருமானுக்கும் அபிஷேகம் நடப்பதை நாம் கண்டு ஆனந்தம் அடையலாம்.

    சுயம்புவாக தோன்றி மிகப்பெரிய திருவுருவமாக விளங்கும் திருநல்லம் என்னும் கோனேரி ராஜபுரத்திலும் திருவாதிரைத்திருவிழா பத்து நாள் மாணிக்கவாசகர் விழாவாக கொண்டாடப்படுகின்றது.

    ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரை நாள்
    நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
    தேரார் வீதியில் தேவர்குழாங்கள் திசையணைத்தும்
    நிறைந்து
    பாரார் தொல் புகல் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.

    என்று ஆனந்த சேந்தன் பாடிப் பரவியபடி, திருமால், பிரம்மன், இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் வந்து எம்பெருமான் ஆதிரைத் தேரோட்டத்தை காணும் அழகை தரிசிக்கும் திருநாளே திருவாதிரைத்திருநாள் ..

    கோயிலின் உள்ளே சென்று வழிபட முடியாதவர்களுக்காக தானே வெளியே வந்து தேரார் வீதியில் திருத்தேரில் வந்து நடராஜப் பெருமான் பஞ்ச மூர்த்திகளுடன் அருட்காட்சி அளித்து ஆனந்தம் பொழியும் அற்புதத்திருநாள் ..!

    Share
  • மனம் அகண்டம்

    மணி ராமலிங்கம்

    ஏர்போர்டிலிருந்து வரும்போதே  ராஜேஸீக்கு கிறக்கமாகத்தானிருந்தது. கூல் கேப்  (Cool cab) குளிர்காற்று தாண்டி வயிற்றிகுள் இலேசாய் மெல்லிய சூடு பரவிற்று.

    ’காரில் ஏறிவிட்டேன்.. உன் மீது தான் ஏறவேண்டும்..’ – சின்ன குறுஞ்செய்தி அனுப்பினான்.

    ’குதிரை காத்திருக்கிறது. J_ ’ பதில் செய்தி வந்த்து.

    ’ஓட்டி வந்து கொண்டேயிருக்கிறான். ‘ – அடுத்த செய்தி அனுப்பினான். கொஞ்ச நேரம் பதிலேயில்லை.

    ’இன்றைக்கு நீயும் குதிரை ஓட்ட வேண்டும் ..நீ முதலில்.. ‘  இன்னொரு செய்தியும் அனுப்பினான்.

    ‘ ம்ம்.. “ பதில் வந்தது.

    மெல்லிய உணர்வலை தலை உச்சியிலிருந்து  கால் நுனிவரை பாய்ந்து பரவியது. வயிற்றிக்கீழே மெல்ல இளகியிருந்தது. காது மடல்கள் சூடாவது தெரிந்தது.

    தனது அலைபேசியில் தனது மனைவியின் புகைப்படங்களை  பார்வையிட்டான். மற்ற தோழிகளின் படங்கள் புதைந்திருந்த கோப்புகளை அவசர அவசரமாய் தாவிச் சென்றான். ஆன்மீக படங்கள் என்று அதற்கு பெயரிட்டிருந்தான்.

    மனதிற்குள் தனக்கு பிடித்த  மனையாளின் இடுப்பு வளைவு, மேல் தொடை, தொண்டை மச்சம் வந்து போனது. கால்களை இறுக்கிக் கொண்டான். கவனத்தை திசை திருப்பினான். சில்லிட்டு இறுகும் முனைகளை அது தளர்த்தியது. வேக வேகமாய் மூச்சை விட்டுக்கொண்டான்.

    காரோட்டியிடம் பேச ஆரம்பித்தான். ‘ மழை பற்றி, ட்ராபிக் பற்றி, அவனைப் பற்றி என ஏதாவ்து  பேச ஆரம்பித்தான். கவனம் திருப்பினான். வண்டி சாந்தகுரூஸ் ஹைவேஸில் வேகமெடுக்க உடம்பு மெல்ல நிதானித்தது. இடுப்புக் கீழான இறுக்கம் தளர்ந்து, மெல்லிதான உணர்வு. கால் மூட்டிகளில் லேசாய் கணம் உணர்ந்தான்.

    மனம் முயக்கத்திற்கு முன்னான நெகிழ் கணத்தை நோக்கி பயணித்தது. என்ன சொல்வது, எப்படி பேசுவது, ஆரம்ப ஒத்திகைகள் எப்படி செய்வது என யோசிக்க ஆரம்பித்தான். தான் உச்சியடையாமல் அவளை உச்சிக்கு நகர்த்த வேண்டும் என்று இந்த முறையும் அதீத உந்துதல் கொண்டான்.

    இறந்த காலத்தின் முயக்க முன் கணங்கள் எல்லாம் இழுத்து  வந்து அவன் மனம், நிகழ்கால தளத்தில் கடை பரப்பியது. இறந்த காலத்தை கலைத்தான்.

    ப்ளைட் இறங்கி பேசியாயிற்று. இன்னும் வீடு சேர ஒரு மணி நேரமாகும். இந்த காத்திருத்தலை கனிவாக்க வேண்டும். மெல்ல அவளை இளக்க வேண்டும்.

    இது இருவருக்கும் புதிதல்ல. ஓவ்வொரு டூர் முடிந்து வரும்போதும்  இந்த குழையல், பிசையல், இளகல் நடக்கத்தான் செய்கிறது. இந்த முறை பெரிய அலுவலக வெளிநாட்டுப் பயணம். நீண்ட நாட்கள் டூர்.

    அங்கு பழைய தோழிகளை பார்த்தது, உல்லாசமாய் கழித்தது எல்லாம் ஞாபகம் வர, தனது ஐபேட்டை ஆன் செய்தான். புகைப்படங்களை வேகமாய் அலையவிட்டான். பேஸ் புக்கில் நுழைந்து, “ பேக் டூ பெவிலியன் “ என்று தனது ஸ்டேட்டஸ் (Status) குறிப்பிட்டான்.

    சாக்‌ஷீ ஏற்கனவே ஆன் லைனில் இருந்தாள். சாட்டினாள்.

    அதற்குள்ளாகவா ?

    ஆமாம் ?

    வீட்டை அடைந்துவிட்டாயா.. ?

    இல்லை.. ஏர்போர்ட்டிலிருந்து  வீட்டிற்கு.. ஆன் தவே.

    ரொம்ப நாள் கழித்து ஜனகன மணவா.. ???

    ராஜேஸ் பதில் சொல்ல  தயங்கினான். சாக்‌ஷீயிடம்  வாய் கொடுத்தால் மெல்ல சாட்டிலே சூடாக்கிவிடுவாள்.

    ரொம்ப போர் அடிக்கிற தினங்களில், வழமைகள் மனதை மந்தமாக்கும் தினங்களில், சாக்‌ஷீயிடம் பேசுவது நல்லது. மெல்லிதான அசைவ வார்த்தைகளால் சாட்டிலே சூடாக்கிவிடுவாள். ஓவ்வொரு வார்த்தையிலும்  சூசகமான நரம்பு முறுக்கும் சூடு.

    நேர் பேச்சிலும் வார்த்தையில் உடல்மொழியில் நெளியும் நளினம். மெல்லிய ஓவன் சூடு போல, இளக்கமாய் பேசி, சூரியனை உள்ளுக்குள்ளே தகிக்க வைப்பாள். ஆனாலும் எல்லை தாண்ட அநுமதிக்கமாட்டாள். நாசுக்காய் மறுத்துவிடுவாள்.

    “ மனதில் இருக்கிற சந்தோசத்தை எப்போதும் உடல் கொடுப்பதில்லை.. வேண்டாமே.. “

    வேறு எதாவது குறைகளை, வம்புகளை பேசி அதே அளவுக்கு துன்பத்திற்கு  கொண்டு சேர்த்துவிடுவாள்.

    “ இப்போது க்ரவுண்டு  எப்படியிருக்கிறது. ஸ்டெம்பு எதுவுமே இல்லையல்லவா.. கூல்யார் “ என்று இடுப்பில் குத்தும்போதுதான் தெரியும், உடல் சாதாரண நிலைக்கு வந்தடந்ததை உணர முடியும்.

    அவளது வார்த்தை விளையாட்டுகளும், அவள் இணையத்தில் கொடுக்கும் அசைவ ஜோக்குகளும், புதுப்புது ஐகான்களும் (Icon) நகைச்சுவை லிங்குகளும் புது மன்மத ரத்தம் பாய்ச்சும். அதில் அவள் நிபுணி. அதற்காக சில பிரத்யோக வகுப்புகளுக்கு போய் படிக்கவும் செய்தவள்.

    ராஜேஸீன் சாட் மெளனம் அவளுக்கு புரிந்திருக்க வேண்டும்.

    “அதீத சூடு பாலை திரித்துவிடும்..மேட்சு பார்த்தே விக்கெட் இழக்க வேண்டாம் என்று நினைக்கிறாய்.. ஆல் த பெஸ்ட்.. ஆகவே. நான் விடைபெறுகிறேன். ”

    மெல்லியதாய் சிரித்துக் கொண்டான். ’ எம காதகி.. ‘

    பவாய் ஐஐடியை வண்டி கடந்து கொண்டிருந்தது. இன்னும் அரை மணி நேரத்தில் போய்விடலாம்.

    *

    குழந்தைகள் தூஙகியாயிற்று. பெண் மட்டும் ’எப்ப அப்பா வருவார்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தாள். பையன் தனது வீடியோ கேம் ஒழுங்காக வந்துவிடுமா என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தான்.

    மெல்லிய லாவண்டர் பரவிய  தனது அறை அவளுக்கு மகிழ்ச்சி அளித்தது. அவனுக்கு பிடித்த தனது வெள்ளை நைட்டியை இறுக்கிக் கொண்டாள். மேல் சாலையும் போட்டுக் கொள்ள வேண்டும். அதை தளரவும், நழுவவும் விடும் தருணங்கள் ரொம்ப நுட்பமாக அமைய வேண்டும். கைகளை நெஞ்சோடு நெருக்கி, கொஞ்சம் குனிந்தும் பார்த்துக் கொண்டாள். விழுந்த பள்ளம் திருப்தியாயிருந்தது.

    கறுப்பு மணி கோர்த்த மங்கள் சூத்திரா (தாலி) இல்லாதது ஞாபகம் வந்த்து. அது முக்கியம். தனது ட்ரிஸ்ஸீங் அறையிலிருந்து தேடி எடுத்து அணிந்து கொண்டாள்.

    ராஜேஸீக்கு சில நகைகள் மகிழ்ச்சியளிக்கும். சில சமயம், கொஞ்ச நேரத்து குலவலுக்குப் பிறகு அவனே அதை கழட்ட சொல்லுவான். நகைகளால் மறைந்து இப்போது பளீரிடும் பகுதிகள் அவன் மூக்கின் வெள்ளை நுனியை சிவப்பாக்கும். விழிகள் நிலையாமையால் படபடக்கும்.

    பஞ்சாப் போய்விட்டு வந்த சில நாட்கள், கண்ணாடி வளையல் மட்டும் அணிந்து தன்னிடம் புதைந்த நாட்கள் நினைவுக்கு வந்தது.

    வளையல்கள் எதுவும் கையிலோ, அவன் முதுகிலோ குத்திவிடக் கூடாதென்ற பயம் இருந்தது.  இறுக்கிவைத்திருந்தாலும் அதை தளர்த்தி சத்தம் இடச் செய்வதில் அவனுக்கு ஒரு கிக் இருந்தது. வளையல்களை அவனே அசைத்து சில சமயம் சத்தம் எழுப்பிக்கொண்டான்.

    கல்யாணமாகி, ரொம்ப நாளுக்கு பிறகு தனது ஊரான உடுப்பிக்கு  தனது மனைவியை கூட்டிச் சென்றான். கல்யாண கலாட்டக்கள் ஏற்படுத்திய  வடு, இரு தரப்பு சண்டைகள் எல்லாம் தீர்ந்து ஓரளவு  மன மகிழ்ச்சியான குடும்ப  திருமண நிகழ்வு ஓன்றில்  ஸ்வேதாவும் இணைந்திருந்தாள். எல்லா வேலைகளையும் எடுத்து போட்டுக்கொண்டு செய்த, அவள் மீது கொஞ்சம் மரியாதையும், அன்பும் வந்தது. அந்த விதையின் நுனியில் காமமும் மலர்ந்திருந்தது.

    அந்த காலங்களில் கொஞ்ச  நாள், அவளை வெறுமனே காது தொங்காட்டான் மட்டும் அணியச் சொல்லுவான். உணர்ச்சிகரமான நேரங்களுக்கு முன்னும், பின்னும் அதையும், அதை சார்ந்த காதுப்பகுதியையும்  நிரடிக்கொண்டேயிருப்பான்.

    “ என்ன அம்மா ஞாபகமாக்கும் ‘ என்று ஸ்வேதா விளையாட்டாக  கேட்ட அன்று சடக்கென்று சுருங்கிப்போனான். அதற்குப் பிறகு அவளாக எந்த கேள்வியும் அந்த நேரத்தில் கேட்பதில்லை.

    பேசாமல் இருந்தாலும் சோர்ந்து விடுவான். பாதியில் நிறுத்தி பேசச் சொல்லுவான். பிடித்திருக்கிறதா, போதுமானதாகியிருக்கிறதா, வேறு ஏதாவது வேணுமா எனக் கேட்டுக் கொள்வான். அவனும் பேசுவான். அவன் மனநிலைக்கு ஏற்ப ஆயத்தமாகி, எந்த வார்த்தைகள் கேள்விகள் சுருதி கூட்டுகின்றன என்பதை கவனமாக யோசித்து செயல்பட வேண்டியிருக்கிறது.

    சில நேரங்களில் அவளுக்கு சிந்தனைகள், உணர்வுகள் புகை மூட்டமாகயிருக்கும். தனது நிலையை அவன் ஆர்வமின்மையோடும், மன மேய்தலோடும், திருப்தியின்மையோடும் தொடர்பு கொள்ளக் கூடாது என்பதில் அவள் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அகத்தின் மொழி உடல்மொழியாய் மாறாதிருக்க பிரயத்தனம் தேவை.

    அத்தகைய கணங்களில், தேவைக்கு மேலே ஒரு கோட்டிங் லிப்ஸ்டிக் அடித்துக்கொள்கிற கல்லூரிப் பெண்ணைப் போல உணர்வாள் ஸ்வேதா.

    இன்றும் பொதுவான கேள்விகள்  மட்டுமே கேட்க வேண்டும். நிலையிழந்து விடக்கூடாது  என்று நினைத்துக் கொண்டாள். முயக்க முன்கணம், அக்கணம், பிற்கணம் எல்லாம் சரியான கலவையாய் அமைவது பிசிறு தட்டாத கச்சேரிபோல.

    படுக்கையில் மனக்குறிப்பை உடல், வாய் மொழியால் உணர்த்துவது இப்போதெல்லாம் ஸ்வேதாவுக்கு பெரும் சவாலாகயிருக்கிறது.

    ஸ்வேதா தனது வழிக்கப்பட்ட கைகளை மறுபடியும் கண்ணாடியில்  பார்த்துக்கொண்டாள். ரொம்ப பிரமாதமாய் இருப்பதாய் மகிழ்ச்சி கொண்டாள். வயிற்றை ஒரு முறை உள்ளிழுத்து பார்த்தாள். இப்படியே எப்போதும் இருந்தால் இன்னும் சந்தோசமாய் இருக்கும் என்று எண்ணிக்கொண்டாள்.

    ராஜேஸ் அவள் வயிற்றை சில  சமயம் அழுத்தி, எப்படி நல்லாயிருக்கு பாரு என்று காண்பித்ததும் உண்டு.

    எவ்வளவு ஜீம் போகியும், ஏதோ காரணங்களால் மடிப்புகள் மறைவேதேயில்லை. இந்த நேரத்தில் அதை ஏன் நினைக்க வேண்டும் என்று அந்த எண்ணத்தை துரத்தினாள்.

    சில நேரங்களில் ராஜேஸ் சொல்லுவான், ‘ வயித்து மடிப்பெல்லாம் நத்திங்யார்.  ஆனா.. நீ ஆக்டிவாயிருக்க பாத்தியா.. அது தான் சந்தோசமாயிருக்கு.. “ என்பான்.

    இன்றைக்கும் கொஞ்சம் ஆக்டிவ்வா  ஏதாவது செய்ய வேண்டும். அவன் எதிர்பார்க்காமல் செய்கிற மெல்லிய விசயங்கள் அவனை மலரச்செய்யும். ரொம்பநாள் முன் கேட்டு இன்னும் நட்த்தப்பெறாமல் இருக்கிற சில விசயங்களையும், அவனை குழந்தை போல உணரச்செய்கிற சில முத்திரைகளையும் செய்யலாம் என எண்ணிக்கொண்டாள்.

    உடம்பு சோர்வாகி, லேசாய் வியர்வை முத்துக்கள் வந்த பின்பும் அவனுக்கு பேசிக்கொண்டேயிருக்க  வேண்டும். பொதுவாய் ஸ்வேதாவிற்கு தூக்கம் பொங்கி வழியும். ஆனால் அவன் மடை திறந்த வெள்ளம் போல பேசிக்கொண்டேயிருப்பான். தனது மனத்தின் வார்த்தைகளின் கடைசி சொட்டு வழிவது வரைக்கும் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும்.

    ஸ்வேதா தூங்கிப் போய்விட்டாள் என்று தெரிந்தால் அவனுக்கு கோபம் கோபமாய் வரும். பேசாமல் மூஞ்சி தூக்குவான். சமைக்க சொல்லி சாப்பிடாமல் போவான். உடம்பை உடல் குருதி நனைத்த துணியைப் போல ஏளனப் பார்வை விடுவான். அடுத்த நாள் குத்தல் வார்த்தைகளால் வறுத்துவிடுவான். ஒரு சில கண்ணீர் துளிகளை பார்த்தபின்பு தான் நிற்கும். மறுபடி குழைவு, இணைவு. முடிவில் பேச்சு, பேச்சு. பேச்சு.

    தூங்காமல் இருக்க வேண்டும். அவன் பேசுவதை கேட்டுக் கொண்டேயிருக்க  வேண்டும். சின்ன சின்ன  கேள்விகளால் தன் விழிப்போடு, கேட்கிறோம் என்பதை ஸ்வேதா உறுதிப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

    கேள்விகளிலும் கவனம் வேண்டும். மனதிற்குள் உட்கார்ந்து  அரித்துக் கொண்டிருக்கிற  சந்தேக, பயங்களை சுருதி மாத்தி கேள்விகளாக்கும் போது உண்மைக்  கதவுகள் சில சமயம் திறப்பது உண்டு.

    இப்படி யோசித்து, யோசித்து கேள்வி கேட்டு மருகாமல் அவளுக்கும் அமைதியாய் எண்ணங்களற்று தூங்கிப் போதல் பிடிக்கும் தான்.

    முயக்க முற்கணம், அக்கணம்  மற்றும் பிற்கணம் என்று  தனக்குள்ளும் தான் எத்தனை வானவில் மனத்தடங்கள்.

    குரோதம், அடங்காத ஆர்ப்பரித்தன்மை, வன்மம், பிரளயத்தை விழுங்கிவிடுகிற இச்சை அலை, பாறைகள் மோதி சமதளமான அமைதி, வெறுமனே சுத்த ஆகாசம், குழந்தை குதூகலிப்பை பார்த்து மகிழ்ந்து ஊட்டிவிடும் தாயுள்ளம் – என கலைடாஸ்கோப் போல மாறும் மனத்தடங்கள்.

    இப்போது சில நாட்களாய், அக்கணத்திற்குப் பின், தனக்கு பிடித்த, நட்சத்திரங்கள் கடந்து போகிற, மேக மூட்டத்தின் மீது தான் உட்கார்ந்து கொண்டிருக்க, சிந்தனைகளும், வார்த்தைகளுமற்ற ஒரு நிச்சலமான மெளன தளத்தில் வெறுமனே இருக்க அவா.

    ஆனாலும் அதை இழந்து, அதிலிருந்து குதித்து அவனைக் கவனிக்க வேண்டும். கேள்விகள் எழுப்பவேண்டும்.

    ஸ்வேதா சிந்தனை உதறினாள். மறுபடியும் காலை ட்ரெஸ்ஸீங் மேசையின் மீது வைத்து நைட்டியை உயர்த்தி குதிகால் அழகை மறுபடி ரசித்துக்கொண்டாள். தொடை, காலும் சேரும் பின்னங்கால் பகுதி ராஜேஸீக்கு ரொம்பவே பிடிக்கும்.

    ‘ ஏய், இதெல்லாம் இரண்டாவது  இன்னிங்க்ஸீக்கு வெச்சுக்கணும்னு  “ என்று  அவன் கெஞ்சியது ஞாபகம் வந்தது. சொல்லுவானே ஒழிய, ‘ரொம்ப டயர்டா இருக்குப்பா.. தூங்கு ‘ என்று சொல்லி தூங்கிப் போவான்.

    இந்த தடவை பெடி க்யூர் புதிய கடையில். நல்ல வந்திருக்கிறது. கொஞ்சம் காசு அதிகமென்றாலும் நகாசு வேலைகள் சுத்தம்.

    வெறுமனே இயந்திர தடவல்  இல்லாமல் வைசாலி ஸா தனது கரங்களால்  செய்த மஜாஸீம் ரொம்ப  சுகமாத்தானிருந்தது. சில  முக்கியமான முனைகளில் அவள் அழுத்தி தேய்த்த்து வித்தியாசமான அநுபவம் தான்.

    லாவண்டர் வாசனை கொஞ்சம்  அறையில் அதிகமானது போல  தோன்றிற்று. ஜன்னலை திறந்துவிட்டாள். ஏசியை அணைத்தாள். கொஞ்சம்  குளிர், கொஞ்சம் வாசனை. மெல்லிய ஈரப்பதம் தன்னுள், தன்மேல் இருப்பதை உணர்ந்தாள்.

    *

    காலிங்பெல் அடிக்குமுன்னரே கதவை திறந்தது.  அது எதிர்பார்த்தது தான் என்றாலும் ராஜேஸீக்கு கன்னக் குழி விழும் புன்னகையை கொடுத்தது. காரிடரில் ஏற்படுத்திய சத்தம், லிப்டின் அறிவிப்பு தனது வரவை சொல்லியிருக்கலாம். இல்லை வீடியோ டோரில் பார்த்து தெரிந்திருக்கலாம். உணர்ச்சி அலை இரத்தத்தை தலையிலிருந்து கீழ் நோக்கி பயணிக்க செய்தது.

    கண்கள் சிரித்துக்கொண்டன. மெல்லியதாய் அணைத்து வெல்கம் சொன்னாள். பிடித்த டியோடரண்ட். என்றைக்கோ சொன்னதை நினைவு வைத்து.

    ஸ்வேதா லக்கேஜை குனிந்து வாங்கிக் கொண்டாள். ஹாலில் மெல்லிய டிம் லைட் மட்டுமே போட்டிருந்தாள். வெள்ளை நைட்டியை மறுபடியும் தடவி கேட்டான்.

    “குட்டீஸ் தூங்கிடுத்தா.. “

    “ ஹீம்.ம்… சாப்பிடிரூங்களா.. “

    “குளிச்சுட்டு வந்துருவா.. “ போகாமல் அங்கயே நின்றான்.

    “டவல் எடுத்து வைச்சுருக்கேன்…”

    அவளையும் குளிக்க கூப்பிடலாமா  என்று யோசித்தான். அதிகம் காட்டிக் கூடாது என்று ஏதோ  ஒரு தத்துவம் தடுத்தது.

    “ சுமால் பெக்.. அண்ட் சம்திங்  டூ மன்ச்.. இஸ் இனப்..டியர்.. “ குளியலறைக்குள் புகுந்தான்.

    குளிக்கப் போயிருந்தால் நேரமாயிருக்கும். நுணுக்கமாய் பண்ணிய அலங்காரங்களை அவன் ரசிக்க முடியாது போய்விடும். குளியலறை எப்போதும் ராஜேஸ் சொல்வது போல இரண்டாவது  இன்னிங்கிஸ் தான்.

    கிச்சன் டேபிளில் வோட்காவை நிரப்பினாள். லெக் சிக்கனை  லேசாய் ஓவனில் சூடு பண்ணினாள். பதமான சில சைட் டிஸ்கள்.

    பாத்ரூமிலிருந்து அவன் தலை துவட்டிக்கொண்டு க்ரே நைட்டியோடு வந்தான். அவளுக்கு பிடித்த ஓன்று. ஓளிரும் கிரே.

    ஸ்வேதாவின் நண்பி ஸ்ரேயா வீட்டிற்கு ராஜேஸோடு போயிருந்த  போது அவள் ஸ்காட்லாந்து கணவனின்  இத்தாலி ஸ்டைல் துணி அறையை  நண்பிக்கு காட்டினாள். அதிலிருந்த ஒளிரும் க்ரே கலர் நைட்டியும் அவளுக்கு ரொம்ப பிடித்தது. ஸ்ரேயாவுக்கு அவன் இரண்டாவது கணவன். நல்ல கனவான். ஆஜானுபாகுவானவன்.

    ராஜேஸீக்கு ஸ்ரேயாவை ரொம்ப பிடித்ததை ஸ்வேதாவிடம் பகிர்ந்து கொண்டான். ஸ்வேதாவும் தனக்கு அவ்னை பிடித்ததை பகிர்ந்து கொண்டாள். அன்றைக்கு இருவரும் அதீத மகிழ்ச்சியாய் இருந்தார்கள்.

    அந்த சந்தோச ஞாபகத்தை ஸ்வேதா மீட்டு வர க்ளோயிங் க்ரே நைட்டியை ராஜேஸே சில சமயம் அணிந்து கொள்வதுண்டு. மென்மையாய் ஸ்வேதாவும் நான் வெள்ளை நைட்டி போட்டுக்கவா, உனக்கு க்ளோயிங் க்ரே அயர்ன் பண்ணி வைக்கவா என்று கேட்பதும் உண்டு.

    சில சமயம் வேண்டாம் என்று  சொல்லிவிட்டால் சுருக்கென்று மனம் பதைபதைத்து சுருங்கிக் கொள்வதுண்டு.

    பாத்ரூமிலோ, அவன் நைட்டி தேடும் இடத்திலோ அயர்ன் செய்து மடித்துவைத்ததுண்டு. இன்று அவனே அதை அணிந்து வந்தது ஸ்வேதாவுக்கு மெல்லிய ஹார்மோன் கிளர்ச்சியை கிளப்பியது.

    சந்தோசத்தில் அவனிடமிருந்தே கொஞ்சம் வோட்கா உறிஞ்சுக்கொண்டாள். கிறக்கமாய் கண் மூடி மல்லாந்திருந்தான். லெக் பீசை கடிக்கும் முன் அவளைப்பார்த்து புன்னகைத்தபடியே முழுக்க எச்சில் படித்தினான்.

    தான் முதலில் காய்களை  நகர்த்த ஏதோ ஒன்றை தடுப்பதை நிறைய முறை உணர்ந்திருக்கிறாள்.

    அவள் தலைகோதி கேட்டாள். “ ட்ரிப் எப்படி பாஸ் இருந்தது.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா..“

    நிறைய பேசவேண்டும் போல ராஜேஸீக்கு இருந்தது. மெல்லியதாய் பேச ஆரம்பித்தான். கேட்டுக்கொண்டே ஸ்வேதா தனது வெள்ளை நைட்டியின் இறுக்கத்தை தளர்த்தியபடி குனிந்து கேட்டாள்.

    ராஜேஸ் மேலும் பேசினான். சின்னதாய் இன்னொரு பெக் எடுத்துக்கொண்டான். இந்தமுறை பாதியை அவனே அவளுக்கு கொடுத்தான். அவள் லெக்பீசை ஊட்டிவிட்டாள்.

    நைட்டியின் மேல் சால்வையை முழுவதுமாக அவிழ்த்துவிட்டு  டைனிங் டேபிளை சுத்தம் செய்தாள்.

    அவளை அழுத்தி, பிடித்தபடியே ராஜேஸ் எழுந்தான்.

    *

    தூக்கம் வந்து விழித்து,மெல்லியதாய்  ஸ்வேதாவை அவள் தூக்கத்தை  கலைக்கமால் ஒதுக்கினான்.

    அவளுக்கு வெறுமனே – முழுக்க வெறுமனே – கட்டிக்கொண்டு படுப்பது பிடிக்கும். வெகு அரிதாக முயக்கத்திற்கு பின்னான தருணங்களில் மெல்லிதாய் கண்ணீர் தளும்புவதும் உண்டு. சில நாட்களில் அது விசும்பலாகவும் இருப்பது உண்டு.

    முன்னைக்கு இப்போது அது  வெகு அரிதாகவே இருக்கிறது. முன்னெல்லாம்  முயக்கத்திற்குப் பின்னான கண்ணீர் ராஸேஸீக்கும் மிகுந்த இன்பமும், பாதுகாப்பும் கொடுக்கும். அவளின் சந்தோசம் தவிர வேறேன்ன நான் சாதித்துவிடப் போகிறேன் என்கிற நிறைவு அவனை நிறைக்கும்.

    அந்த விசும்பலுக்கு காரணம் தேடத் தொடங்கிய காலத்திற்குப் பிறகு, குழப்பங்களும், நிறைய கேள்விகளும் தான் எஞ்சின. ஸ்வேதாவும் பதில் சொல்லி சலித்து போய்விட்டாள். அதானாலோ என்னவோ, விசும்பல்களை கூட விலக்கிவிட்டாள்.

    அசந்து தூக்கும் அவளை கொஞ்ச  நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். தனது மகிழ்ச்சி பூரணத்திலிருந்து கொஞ்சம் பூரணத்தை கொண்டே அவளும் செய்யப்பட்டதாக ஒரு  கற்பனை தோன்றிய கணம் ஒரு  தேவதை படுத்திருப்பது போல  தோன்றியது.

    அவளின் விசாலமான கண்களும், சின்னதாய் காதும், வளைந்து  குத்தும் மூக்கும், திறந்த வாயிலிருந்து அமைதியாய்  கைகட்டி நிற்கும் சீர்வரிசை  பற்களும், கலைந்து மணக்கிற  டை செய்யப்பட்ட, ஸ்டெரெயிட்டனிங்  செய்யப்பட்ட முடியும், பளீரிடுகிற தொடையும், குதிகாலும், மார்பும் – மெல்ல ஆசையாய் வலிக்காது காமமின்றி முத்தமிட்டபடி எழுந்து குளியலறைக்கு போனான். பூர்ணமத, பூர்ணமிதம்.

    தண்ணீர் வழிந்து சொட்டுகிற  தனது முழு உடலையும் ஒரு முறை பார்த்துக்கொண்டான். குளியலறையில் ஓவ்வொரு முறையும் தனது முழு உடலையும் பார்க்கும்போது என்ன விதமான அழுத்தம் தோன்றுமோ அதே மன அழுத்தம் அதே கசப்பு இந்த தடவையும்.

    மறுபடி ஷவரில் நின்று கொதிநீரை அதிகப்படுத்தினான். தனது தோல் எரியும் வரை அவன் சூடு நீரை அதிகப்படுத்திக்கொண்டே போனான்.

    பூர்ணத்துவம் வெப்ப காற்றாய் வெளியேறியதா ? உடல் உணர்வு வரவர பூர்ணத்திற்கு கீழேயிருந்த சூன்யத்தின் ஆளுமை பெருக்கம்.

    துவட்டியபோது தோல் எரிந்தது. மெல்ல படுக்கைக்கு வந்த போது, ஸ்வேதா அப்படியே தூங்கிக்கொண்டிருந்தாள். வெள்ளை நைட்டி ஒருபுறம், போர்வை மறுபுறம் என விலகியிருந்தது.

    இந்த முறை உடலை பார்க்க, கசப்பு மறுபடி எழுவது போல உணர்ந்தான். கசப்பு, கசப்பு எதனால், எங்கிருந்து, ஏன் என்று தெரியாத கசப்பு.

    மெல்ல அவள் அருகில் அமர்ந்து, அவளை மறுபடியும் உற்றுப்பார்த்தான். அவளுக்கு போர்வை போர்த்தினான். அவள் அசைவுகள் தனது உடலை தொடாதாவாறு தன்னை குறுக்கி உட்கார்ந்து கொண்டான்.

    தனது இடுப்புக்கு கீழே வேறு போர்வையால் மூடிக்கொண்டான்.

    ஆயாசம், குளியல் தந்த வெது வெதுப்பு, ஏதோவொரு கசப்பு என மனப்பாலைவனத்தில் எண்ணக் கானல் நீர்கள்.

    சில மணித்துளிகளுக்கு முன் அமிர்தத்தை போல் பாசாங்கு காட்டிய அது, அதன் எதிர்முனையில்  இப்போது. அமிர்த்த்தின்  அடியிலே அது இருந்ததா என்ன ? பூர்ணத்தின் அடியிலே சூன்யம், பெளத்தம்.

    தலை உலுக்கி, த்த்துவம்  உதறி, ஏதாவது செய்தால் நல்லது என நினைக்க, ஐபேட்டில் ஆன்மீக கோப்புகளை பாஸ்வோர்டு போட்டு திறந்து தனது தோழிகளின் புகைப்படங்களை மேய ஆரம்பித்தான்.

    சில பட மேய்தல்கள், சில குறுஞ்செய்திகளுக்கு  பதில்கள் என காலம் கடந்த  பிறகு அநிச்சையாய், தனது இடுப்புக்கீழே தடவி விட்டு கொண்டான்.

    கசப்பு குறைந்து, வலியின்றி அமைதியடைந்ததாய் உணர்ந்தான். தூங்கிப் போனான்

    Share
  • ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகுமா?

     

     சு. கோதண்டராமன் 

     

    போதி மரத்துப் புனிதன் சொன்னான்

    “சாவினை அறியாத் தனி மனை இல்லை”

     

    “பிறந்தவர் இறப்பதும் இறந்தவர் பிறப்பதும்

    உலகினில் இயல்பாம். ஒழித்திடு சோகம்”

    கண்ணன் உரைத்தான் கடும் சமர் நாளில்

     

    “நேற்றைய வலியும் நாளைய கனவும்

    நெஞ்சினில் பாரம். நீக்குக அதனை.

    இன்றெது உள்ளதோ இதுவே உண்மை”

    தத்துவ ஞானி ஜே.கே. பகர்ந்தான்.

     

    “சென்றது மீளுதல் செகத்தினில் இல்லை

    இன்று தான் புதிதாய்ப் பிறந்தோ மென்று

    எண்ணிக் களிக்க. இன்பமாய் வாழ்க.”

    ஆசையாய்ப் போற்றும் மீசைக் கவிஞன்

    அழுத்திச் சொன்ன கருத்துக ளாமிவை.

     

    அனைத்தும் கற்றேன். அறிஞன் ஆனேன்.

    இத்தனை அறிவையென் மூளைக்கனுப்பிய

    எந்தன் கண்களோ இன்னமும் அசடு.

    எட்டுச் சுரைக்காய் சுவைக்க அறியா.

     

    கண்டிராக் க்ண்ணனைக் காணவே வேண்டி

    கரைந்து உருகினாள் கவிதையில் மீரா.

    நிசிதின் பரசத நைன ஹமாரி

    (இரவும் பகலும் சொரியுதெம் கண்கள்)

     

    பெற்ற உறவைப் பிரிந்து நிற்கையில்

    இரவும் பகலும் சொரியுதெம் கண்கள்.

    ஏட்டுக் காயை எடுத்துச் சமைத்து

    அசட்டுக் கண்களுக் கருத்துவார் உளரோ?

     

    படத்துக்கு நன்றி

    http://nutrihealth.in/health/bottle-gourd-guard-against-diseases/

    Share
  • திருவாதிரைத் திருமுறை

    திரு நு த லோகசுந்தரம் 

     

    நமசிவய

     

    பொருள்முறைத் திருமுறை ©

    இதனில்

    திருஆதிரை திருமுறை ©

     

    தமிழகத்து சித்தாந்த சைவநெறியின்

    பன்னிரு திருமுறை  18000+ பாடல்களில்

    திருஆதிரை நாள் சிறப்பு வைகும்

    37 பாடல்களின் தொகுப்பு

     

    தொகுப்பாசிரியன்

    நூ. த. முத்துமுதலி-மயிலை

     

    ஞானசம்பந்தர் தேவாரம்

    திருமுறை 1

    1 ஆரூர்-வியாழக் குறிஞ்சி

    பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள்

    சூடலன் மூவிலைய சூலம் வலன் ஏந்திக்

    கூடலர் மூ எயிலும் எரி உண்ணக் கூர் எரி கொண்டு எல்லி

    ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே  1.105.1

     

    திருமுறை 2

    2 ஆமாத்தூர்-சீகாமரம்

    தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன்தன்

    நாள் ஆதிரை என்றே நம்பன்தன் நாமத்தால்

    ஆளானார் சென்(று)ஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக்

    கேளாச் செவி எல்லாம் கேளாச் செவிகளே  2.44.8

     

    3 மயிலை-கபாலீச்சரம்-சீகாமரம்

    ஊர்திரை வேலை உலாவும் உயர்மயிலைக்

    கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரிதனில்

    கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்

    ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்  2.47.4

     

    திருமுறை 3

    4 திருக்காட்டுப்பள்ளி(மேலை)-கொல்லி

    ஞாலத்தார் ஆதிரை நாளினான் நாள்தொறும்

    சீலத்தான் மேவிய திருமழ பாடியை

    ஞாலத்தான் மிக்கசீர் ஞானசம்பந்தன் சொல்

    கோலத்தால் பாடுவார் குற்றமற் றார்களே  3.29.11

     

    5 வெண்டுறை-பஞ்சமம்

    ஆதியன் ஆதிரையன் அனல் ஆடிய ஆரழகன்

    பாதியோர் மாதினொடும் பயிலும் பரமாபரமன்

    போதியலும் முடிமேல் புனலோ(டு) அரவம் புனைந்த

    வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே

    3.61.1

    நாவுக்கரசர் தேவாரம்

    திருமுறை 4

    6 ஆரூர்-காந்தாரம்

    ஊர்திரை வேலை உள்ளானும் உலகு இறந்த ஒண்பொருளானும்

    சீர்தரு பாடல் உள்ளானும் செங்கண் விடைக் கொடியானும்

    வார்தரு பூங்குழலாளை மருவி உடன் வைத்தானும்

    ஆதிரைநாள் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

    4.4.6

    திருமுறை 5

    7 திருவாரூர் திருஆதிரைப் பதிகம்-குறிஞ்சி

    முத்து விதான மணிப்பொன் கவரி முறையாலே

    பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே

    வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்

    அத்தன் ஆரூர் ஆதிரைநாளால் அதுவண்ணம்  4.21.1

    8

    நணியார் சேயார் நல்லார் தீயார் நாள்தோறும்

    பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்

    மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்(கு)

    அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்  4.21.2

    9

    வீதிகள் தோறும் வெண்கொடியோடு விதானங்கள்

    சோதிகள் விட்டுச் சுடர்மா மணிகள் ஒளி தோன்றச்

    சாதிகளாய பவளமும் முத்துத் தாமங்கள்

    ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்  4.21.3

    10

    குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்

    பிணங்கித் தம்மில் பித்தரைப் போலப் பிதற்றுவார்

    வணங்க ¢நின்று வானவர் வந்து வைகலும்

    அணங்கும் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்  4.21.4

    11

    நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்

    பலரும் இட்ட கல்லவடங்கள் பரந்(து) எங்கும்

    கலவ மஞ்ஞை கார் என்(று) எண்ணிக் களித்துவந்(து)

    அலமர் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்  4.21.5

    12

    விம்மா வெருவா விழியாத்தெழியா வெருட்டுவார்

    தம் மாண்பிலராய்த் தரியார் தலையால் முட்டுவார்

    எம்மான் ஈசன் எந்தை எனப்பன் என்பார்கட்(கு)

    அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்  4.21.6

    13

    செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்

    மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார்

    இந்திரன்ஆதி வானவர் சித்தர் எடுத்(து)ஏத்தும்

    தந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்  4.21.7

    14

    முடிகள் வணங்கி மூவாதார் கண்முன் செல்ல

    வடிகொள் வேய்த்தோள் வான்அர மங்கையர் பின்செல்லப்

    பொடிகள் பூசிப்பாடும் தொண்டர் புடை சூழ

    அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்  4.21.8

    15

    துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும்

    இன்பம் நும்மை ஏத்தும் நாள்கள் என்பாரும்

    நும்பின் எம்மை நுழையப் பணியே என்பாரும்

    அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்  4.21.9

    16

    பார் ஊர் பௌவத்தானைப் பத்தர் பணிந்(து) ஏத்தச்

    சீர் ஊர்  பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்(து)

    ஓரூர் ஒழியா(து) உலகம் எங்கும் எடுத்(து) ஏத்தும்

    ஆரூரன்தன் ஆதிரை நாளால் அதுவண்ணம்  4.21.10

     

    17 பயற்றூர்-திருநேரிசை

    மூ வகை மூவர் போலும் முற்றுமா நெற்றிக்கண்ணர்

    நாவகை நாவர் போலும் நான்மறை ஞானம் எல்லாம்

    ஆ வகை ஆவர்போலும் ஆதிரை நாளர் போலும்

    தேவர்கள் தேவர் போலும் திருப்பயற் றூரனாரே  4.32.5

     

    திருமுறை 5

    18 வீழிமிழலை-குறுந்தொகை

    ஏற்று வெல்கொடி ஈசன் தன் ஆதிரை

    நாற்றம் சூடுவர் நல்நறும் திங்களார்

    நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார்

    வேற்றுக் கோலம் கொள் வீழி மிழலையே  5.12.2

     

    19 ஆதிபுராணம்-குறுந்தொகை

    வேத நாயகன் வேதியர் நாயகன்

    மாதின் நாயகன் மாதவர் நாயகன்

    ஆதி நாயகன் ஆதிரை  நாயகன்

    பூத நாயகன் புண்ணிய  மூர்த்தியே   5.100.1

     

    திருமுறை 6

    20 கழிப்பாலை-தாண்டகம்

    பொடிநாறு மேனியர் பூதிப் பையர் புலித் தோலர் பொங்(கு)அரவர் பூண நூலர்

    அடிநாறு கமலத்தர் ஆரூர் ஆதி ஆன் அஞ்சும் ஆடும் ஆதிரையினார் தாம்

    கடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபாலப்பனார்

    மடிநாறு மேனி இம்மாயம் நீங்க வழி வைத்தார்க்(கு) அவ்வழியே போதும் நாமே

    6.12.4

    21 கருகாவூர்-தாண்டகம்

    அரை சேர் அரவனாம் ஆலத்தானாம் ஆதிரை நாளானாம் அண்ட வானோர்

    திரைசேர் திருமுடித் திங்களானாம் தீ வினை நாசன் என் சிந்தையானாம்

    உரை சேர் உகத்தார் உள்ளானுமாம் உமையாள் ஓர் பாகனாம் ஓத வேலிக்

    கரை சேர் கடல் நஞ்சை உண்டானாம் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே

    6.15.7

    22 ஆக்கூர்-தாண்டகம்

    மாதூரும் வாள் நெடும்கண் செவ்வாய் மலைமகளை மார்பகத்(து) அணைத்தார் போலும்

    மூதூர் முது திரைகள் ஆனார் போலும் முதலும் இறுதியும் இல்லார் போலும்

    தீதூர நல்வினையாய் நின்றார் போலும் திசை எட்டும் தாமே ஆகும் செல்வர் போலும்

    ஆதிரை நாளாய் அமர்ந்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே

    6.21.6

    23 பள்ளியில் முக்கூடல்-தாண்டகம்

    பூதியனைப் பொன்வரையே போல்வானைப் புரிசடைமேல் புனல் கரந்த புனிதன் தன்னை

    வேதியனை வெண்காடு மேயானை வெள்ஏற்றின் மேலானை விண்ணோர்க்(கு) எல்லாம்

    ஆதியனை ஆதிரை நன்னாளான் தன்னை அம்மானை மைம்மேவு கண்ணியாள் ஓர்

    பாதியனைப் பள்ளியில் முக்கூடலானைப் பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே

    6.69.3

    24 தலையாலங்காடு-தாண்டகம்

    தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைச் சூழ்நரகில் வீழாமே காப்பான் தன்னை

    அண்டத்துக் கப்பாலைக்(கு) அப்பாலானை ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை

    முண்டத்தின் முளைத்தெழுந்த தீஆனானை மூஉருவத்து ஓருருவாய் முதலாய் நின்ற

    தண்டத்தில் தலையாலங்காடன் தன்னைச் சாராதே சாலநாள் போக்கினேனே

    6.79.1

    25 புகலூர்-தாண்டகம்

    அங்கமே பூண்டாய் அனலாடினாய் ஆதிரையாய் ஆலநிழலாய் ஆனேறு ஊர்ந்தாய்

    பங்கம் ஒன்றில்லாத படர் சடையினாய் பாம்பொடு திங்கள் பகைதீர்த்து ஆண்டாய்

    சங்கை ஒன்றின்றியே தேவர் வேண்டச் சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்

    சிங்கமே உன்னடிக்கே போதுகின்றேன் திருப்புகலூர் மேவிய தேவதேவே

    6.99.2

    சுந்தரர் தேவாரம்

    திருமுறை 7

    26 இடையாற்றுத்தொகை-கொல்லி

    திங்களூர் திருஆதிரையான் பட்டினமூர்

    நங்களூர் நறையூர் நனிநாலிசை நாலூர்

    தங்களூர் தமிழான் என்று பாவிக்க வல்ல

    எங்களூர் எய்தமான் இடையாறு இடைமருதே    7.31.6

     

    27 நனிபள்ளி-பஞ்சமம்

    ஆதியன் ஆதிரையன் அயன் மால் அறிதற்கு அரிய

    சோதியன் சொல் பொருளாய்ச் சுருங்காமறை நான்கினையும்

    ஓதியன் உம்பர் தங்கோன் உலகத்தினுள் எவ்வுயிர்க்கும்

    நாதியன் நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளியதே   7.97.1

     

    சேந்தனார்

    திருமுறை 9

    28 திருப்பல்லாண்டு-பஞ்சமம்

    ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரை நாள்

    நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்

    தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசை அனைத்தும் நிறைந்து

    பாரார்  தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே  9.300

     

    காரைக்கால்அம்மையார்

    திருமுறை 11

    29 இரட்டைமணிமாலை

    வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்(கு)

    ஆதியனை ஆதிரை நன்னாளானைச்-சோதிப்பான்

    வல் ஏனமாய்ப் புக்கு மாலவனும் மாட்டாது

    கில்லேனமா என்றான் கீழ்      11.31

    30

    தலையாய ஐந்தினையும் சாதித்துத் தாழ்ந்து

    தலையாயின உணர்ந்தோர் காண்பர்-தலையாய

    அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்(டு)இருண்ட

    கண்டத்தான் செம்பொன் கழல்      11.33

     

    சேக்கிழார்

    திருமுறை 12

    31 திருத்தொண்டர் புராணம்

    மேவு திருஆதிரைநாள் வீதி விடங்கப் பெருமாள் பவனி தன்னில்

    தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து

    மூவுலகும் களிகூரவரும் பெருமைமுறைமை எல்லாம் கண்டு போற்றி

    நாவினுக்குத் தனிஅரசர் நயக்குநாள் நம்பர் திருஅருளினாலே

    32        12.1495

    சித்தம் நிலாவும் தென்திருஆரூர் நகர் ஆளும்

    மைத்தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ்செல்வம்

    இத்தகைமைத்து என்று என்மொழிகேன் என்று அருள் செய்தார்

    முத்து விதானமணிப் பொன்கவரி மொழி மாலை   12.1501

    33

    ஆய செய்கையில் அமரும் நாள்ஆதிரை நாளில்

    மேய பூசனை நியதியை விதியினால் முடித்துத்

    தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்த

    நாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார்    12.1839

    34

    அருக்கன் முதல் கோன் அனைத்தும் அழகிய உச்சங்களிலே

    பெருக்க வலியுடன் நிற்கப் பேணிய நல்லோரை எழத்

    திருக்கிளரும் ஆதிரைநாள் திசை விளங்கப் பரசமயத்

    தருக்கொழியச் சைவம் முதல் வைதிகமும் தழைத்(து) ஓங்க 12.1920

    35

    மெய்த்திரு ஞானசம்பந்தர் வாக்கின் வேந்தரை விருப்பினாலே

    அப்பரை இங்கு அணையப் பெறும் பேர் அருள் உடையோம் அந்தண் ஆரூர்

    எப்பரிசால் தொழுது உய்ந்தது என்று வினவிட ஈறில் பெரும் தவத்தோர்

    செப்பிய வண்தமிழ் மாலையாலே திருஆதிரை நிகழ்செல்வம் சொன்னார்

    36        12.2393

    ஆறு அணிந்த சடைமுடியார்க்கு ஆதிரை நாள்தொறும் என்றும்

    வேறுநிறை வழிபாடு விளக்கிய பூசனை மேவி

    நீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு எல்லாம் நிகழ் பசும்பொன்

    நூறு குறையாமல் அளித்து இன்அமுது நுகர்விப்பார்   12.3986

    37

    ஆன செயல் முறை புரிவார் ஒரு திருஆதிரை நாளில்

    மேன்மை நெறித்தொண்டர்க்கு விளங்கிய பொன் இடும் பொழுதில்

    மான நிலைஅழி தன்மை வரும் காமக்குறி மலர்ந்த

    ஊனம் திகழ் மேனியராய் ஒருவர் நீறு அணிந்து அணைந்தார்  12.3987

     

    திருச்சிற்றம்பலம்

    Share
  • எந்த முகம்…

    செண்பக ஜெகதீசன்    

    கடவுள் கொடுத்த முகத்தைக்

    கழற்றி வைத்துவிட்டு,

    கைவசம் தயாராய் உள்ள

    கபட முகங்களை

    கணத்துக்கொன்றாய் மாட்டிக்கொண்டு

    காட்சியளிக்கிறான்

    காசினியில் மனிதன்..

     

    இங்கு வந்து பார்க்கும் இறைவனும்,

    இவர்கள் எழுப்பிய கோவில்களில்

    இருப்பதாய்ச்சொல்லும் இறைவனும்

    ஏமாந்து விழிக்கிறான்-

    எந்தமுகம் இவர்களுக்கு நாம்

    தந்தமுகம் என்பதை அறியாமல்…!

     

    படத்துக்கு நன்றி

      http://saniyaartblog.wordpress.com/category/grade-7/ 

    Share