பாத யாத்திரை (திருவேங்கடமலை) அனுபவங்கள்::

3

பெருவை பார்த்தசாரதி  ::

இறை வழிபாட்டு முறைகளை நமது முன்னோர்கள் மிக நேர்த்தியாக வகைப்படுத்தி, அதை எவ்வாறேல்லாம் பின்பற்ற வேண்டும் என்று பின் வரும் சந்ததியினருக்கு மிகத் தெளிவாக வழங்கி இருக்கிறார்கள். இவ்வழிபாட்டு முறைகளை எல்லாம் மஹான்கள், ரிஷிகள், ஆசார்ய புருஷர்கள், குருமார்கள் போன்றோர்கள் அவ்வப்போது நமக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இவ்விதம் புனிதமான ஆலயங்களுக்குச் செல்லுதல், தீர்த்த யாத்திரை, பாதயாத்திரை, நாம சங்கீர்த்தனம், பஜனை செய்தல், அனுதினமும் வீட்டிலேயே பெருமானை ஆராதனம் செய்தல் போன்ற பல வழிகளைப் பின்பற்றும் அன்பர்கள் இருக்கிறார்கள். நமது வசதிக்காக நாம் பின்பற்றும் வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொள்ளாமல் முறைப்படி பின்பற்றுவதே மேல் என்றும், மாறாக வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொண்டால் புனிதத்தலங்களின் ‘சாந்நித்தியம்’ மாசுபடத்தொடங்கிவிடும் என்பதையும் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே எடுத்துரைத்திருக்கிறார்கள். இறை வழிபாட்டுக்கென்று இடமும், தகுந்த நேரமும் இருக்கிறது, ‘ஏதோ நமக்கு நேரம் கிடைக்கிறது’ என்று நினைத்து ஆலயங்களுக்கும், பூஜை போன்ற சுபகாரியங்களுக்கும் நாம் நினைத்த நேரத்தில் செல்ல முடியாது, அதற்கும் பகவானின் அருள் வேண்டும் என்பதால்தான், “ஏழுமலையான் அழைத்தால் மட்டுமே திருமலைக்குச் செல்ல முடியும்” என்பதைச் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக இறை சிந்தனையும் நம்மோடு கைகோர்க்கவேண்டும்.  ‘பசி’ எடுக்கிறது என்று யாரும் நமக்குச் சொல்வதில்லை, அதுபோல் ‘தாகம்’ எடுக்கிறது தண்ணீர் குடி என்று யாரும் தூண்டுவதில்லை. பசியும், தாகமும் இயற்கையாக தோன்றுவதுபோல், ‘இறை சிந்தனை’ என்பதும் இயற்கையாகவே எழவேண்டுமாம். நம்மை அறியாமலேயே நமது உடம்பும் மனமும் மாசு படிந்து இருக்கலாம். ஆதலால் தான் நாம் குளித்து முடித்து, மடித்துணி தரித்த சமயத்தில் மாத்திரம் இறைச்சிந்தனையோடு ஆலயத்துக்குச் செல்கிறோம். தருமமிகு பாரதத்தில் எண்ணற்ற ஆலயங்கள் இருக்கின்ற போதிலும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்துவிக்கப் பட்ட வைணவ திவ்ய ஆலயங்களுக்கு (108) செல்வதையும், இதேபோல ‘அப்பர்’, ‘சுந்தரர்’, ‘மாணிக்கவாசகர்’ போன்ற நாயன்மார்களால் பாடல்பெற்ற சைவத்தலங்களுக்கு (274) யாத்திரை செல்லுதலை மட்டுமே ஒரு கடமையாகக் கொண்டுள்ள பக்தர்களையும் நம்மிடையே காணலாம்.  இப்படிக் குறிப்பிட்ட தலம், குறிப்பிட்ட நேரம் என்பது மனிதன் செய்கின்ற எல்லா நல்ல காரியங்களோடும் இணைந்து விடுவது மிகவும் அவசியமாகிறது, அது மாறும் போது தவறாகிறது. இப்படிப்பட்ட நல்ல நேரமும், சந்தர்ப்பமும் கைகூடும் சமயத்தில்தான் மனமொத்த கருத்துடைய நண்பர்கள் ஒருங்கே இணைந்து, மார்கழித் திங்களில், ‘ஓங்கி உலகளந்த உத்தமனின் பேர் பாடிக்கொண்டு’ (திருப்பாவையின் மூன்றாவது பாசுரம்) பாதயாத்திரையை பதினெட்டு நண்பர்களுடன் சென்னை மகாலிங்கபுரத்திலிருந்து பிரசன்னவேங்கடேஷ் என்பவரது வழிகாட்டுதலுடன் தொடங்கினோம். நான்கு நாட்கள் பாதயாத்திரை சென்ற அனுபவத்தில், பல ஆலயங்களைக் காண முடிந்த போதிலும், மிகச்சிறப்பாக அமைந்த ஒரு சில விஷேசமான ஆலயங்களின் சிறப்பை மட்டுமே இங்கே மிகச்சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். என்னதான் பத்திரிகையிலும், மாத இதழ்களிலும் இத்தலங்களைப் பற்றி அனேகர் அறிந்திருந்தாலும், புதிதாக பாதயாத்திரை தொடங்கும் அன்பர்களுக்கு நிச்சயமாக உதவும் என்பதால், ஆலய பட்டர்களிடமிருந்தும், பக்தர்களிடமிருந்தும் நேரடியாக பெறப்பட்ட இத்தகவல்களை உங்கள் முன் வைக்கிறேன். இந்த அரிய ஆலயத் தகவல்கள், நம்மை ஆச்சரியத்துக்குள் ஆழ்த்துகின்றன.முறைகளை நமது முன்னோர்கள் மிக நேர்த்தியாக வகைப்படுத்தி, அதை எவ்வாறேல்லாம்

பாற்கடலைக் கடைந்து, அமுதத்தை எடுக்கும்போது ஆலகால விஷத்தை ஈஸ்வரன் உண்டதாக நாம் படித்திருக்கிறோம். அந்த விஷத்தை அப்படியே விழுங்கி விட்டதால் சர்வ லோகமும் அழியும் என்பதாலும், விழுங்கியதை உமிழ்ந்து விட்டால் அதைவிட ஆபத்து என்பதாலும் பார்வதி தேவி, ஈஸ்வரனை தன் மடியில் கிடத்தி, அவ்விஷத்தை கண்டத்தில்(கழுத்தில்) கைவைத்து அதே இடத்தில் நிறுத்திவிட்டார். ஆலகால விஷத்தைத் தடுத்து சர்வ லோகத்தையும் காப்பாற்றி அமுதத்ததயும் வழங்கியதால் இறைவி “அமுதாம்பிகை” என்றும், இறைவன் “பள்ளி கொண்ட பரமன்” என்றும் அழைக்கப் படும் ‘சுருட்டப் பள்ளி என்ற இடத்தில் முதல் நாள் இரவு தங்கினோம். சயனத் திருக்கோலத்தில் ஈஸ்வரன், பார்வதிதேவியின் மடியில் பள்ளிகொண்டிருக்கும் ஒரே ஆலயம் என்று சொல்லும்படியாக சுருட்டப்பள்ளி திகழ்கிறது. இங்கே வைணவ ஆலயத்தைப் போல், பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி, துளசி வழங்குவது ஆலய சிறப்பம்சத்தில் ஒன்று. குடும்ப சமேதரராக தட்சிஷினாமூர்த்தியை இவ்வாலயத்தில் மட்டுமே காணமுடியும்.

அடுத்து வருவது நாகலாபுரம் ‘ஸ்ரீவேதநாராணப் பெருமாள்’ ஆலயம். திருவரங்கத்தில் பெருமாள் தெற்கு நோக்கி அருள்பாலிப்பதுபோல், இங்கே வித்தியாசமாக அனைத்து ஆலயங்களிலிருந்தும் மாறுபட்டு மேற்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வருடத்தில் ஒரு நாள் சூரியாஸ்தமனத்தின் போது, ஒரு குறிப்பிட்ட நாழிகையில் சூரியநாராயணனின் சூரியக்கிரணங்கள் வேதநாராயணப் பெருமானின் சன்னிதியில் பகவானின் பாதம் தொடங்கி, நாபி, சிரசு என்று மூன்று நாட்கள் தொடர்ந்து விழுந்து கொண்டே இருப்பது அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் சூரியபூஜை என்று நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டு தெப்போற்சவமும் நடைபெறுமாம். பத்து அவதாரங்களில் முதலாவதாரத்தில் “மச்சாவதாரம்” என்கிற மீன் வடிவத்தில் ‘மூலவர்’ தோற்றமளிக்கிறார். கோவிலின் சிற்பங்கள் அனைத்திலும் மச்சாவதாரத்தின் மகிமையைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

மூன்றாவதாக நாராயண வனத்தில் எழுந்தருளியிருக்கும் “கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள்” ஆலயம். ஆலயத்தின் தோற்றமே அனனவரையும் பிரமிக்க வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. பகவான் ஸ்ரீனிவாசனுக்கும், பத்மத்தில் (தாமரை மலர்) அமர்ந்திருக்கும் தேவி பத்மாவதிக்கும் திருமணம் நடந்த இடம் என்று தலவரலாறு சொல்கிறது. திருமணத்தின் போது பங்கு கொண்ட அனைவருக்கும் ‘மஞ்சள் பிரசாதம்’ வழங்குவதற்காக சுமார் ஒரு டன் எடைகொண்ட மஞ்சள் தயாரிக்கும் மிகப் பெரிய பாறைக்கல்லால் ஆன இயந்திரம் ஒன்று தாயாரின் சந்நிதிக்கு முன்பு வைக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறது. எம்பெருமான் வேட்டைக்கு வரும்போது இச்சம்பவங்கள் நிகழ்ந்ததால், எம்பெருமானின் விழிகள் திறந்த நிலையிலும், திருக்கரத்தில் உடைவாளுடன், திருஒட்டியானத்தில் பத்து அவதாரங்களின் தோற்றங்களும் இடம்பெற்றிருப்பது அபூர்வம். யாத்திரையின் இடையில் ‘ராமகிரி’ என்றொடு தலத்தைப் பற்றிய தகவலை அறிந்தோம், பிரதான சாலையிலிருந்து சற்று தொலைவில் இருப்பதாலும், நேரக்குறைவின்மையாலும் அங்கு செல்லமுடியவில்லை.

 நீண்ட தூரம் நடந்து ஒரு இடத்தைக் கடப்பது, அவ்வளவு எளிதல்ல என்பதை பாதயாத்திரையின் போது தோன்றும் ‘உடல் உபாதைகள்’ மூலம் அறியலாம். இதனைக் கருத்தில் கொள்ளும்போது, இங்கே திருமங்கையாழ்வார் பாசுரம் ஒன்று நினைவுக்கு வருகிறது. திருமங்கையாழ்வார் தனது பெரியதிருமொழியில் “நாராயணா” என்னும் திருநாமத்தை அனுசந்தித்துக் கொண்டிருக்கும் அடியார்களுக்கு, அவர்கள் படும் துன்பங்களெல்லாம் கதிரவனைக் கண்ட பனித்துளிபோல் மறைந்து விடும் என்கிறார். மகத்தான இச்சொல், சகலவிதமான செல்வத்தையும், தாய் தன் மகவுக்குச் செய்யும் நலனைவிடவும், தீவினைகளைப் போக்கி பரமபதத்தையும் கூட அளித்துவிடும் என்பதை பின்வரும் பாடல் மூலம் விளக்குகிறார். அதனால்தான் ‘நாராயணா’ என்ற சொல்லை “நலம் தரும் சொல்” என்கிறார்.

 “குலம்தரும் செல்வந் தந்திடுமடியார் படுதுய ராயின வெல்லாம்

நிலந்தரஞ் செய்யும் நீள்விசும் பருளும் அருளொடு பெருநிலமளிக்கும்

வலம்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்

நலந்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்  ‘நாராயணா’ வென்னும் நாமம்” 

 அடியார்கள் அனைவரும் மாஹாலிங்கபுரத்தில் ஒன்றுகூடித் தொடங்கிய பாதயாத்திரை, சூளைமேடு, அண்ணாநகர், வில்லிவாக்கம், கொளத்தூர் வழியாக ரெட் ஹில்ஸ், பிறகு கண்ணணோடை பாலம், மதுரவாயல், சூளைமேனி, ஊத்துக்கோட்டை, சுருட்டப்பள்ளி, நாகலாபுரம், பிச்சாட்டூர், நாராயணவனம், புத்தூர், ‘புடி’ ரயில் நிலையம், திருச்சானூர் வழியாக முடிவில் திருமலை சென்றடைந்து ஏழுமலையானைத் தரிசித்து சென்னை வந்தடைந்தோம்.

“திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒர் திருப்பம் நேருமடா” என்பது போல், பாத யாத்திரை முடித்து  சென்னை திரும்பிய அன்று (20-12-12)எனக்கோர் மகிழ்ச்சியான செய்தி, வல்லமை குழுவினர் மீண்டும் ஓர் முறை தொடர் கட்டுரைக்கு “வல்லமை விருது” வழங்கி சிறப்பித்திருந்தார்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “பாத யாத்திரை (திருவேங்கடமலை) அனுபவங்கள்::

  1. Many thanks for your excellent description of our padhayatra and the temples en route. It is my great pleasure for having a gentleman like you in the group. Thanks to Kannan as well for introducing to the group. I would like to add that Suruttappalli is most famous for Pradhosham as the event generated from that sacred temple only. As you concluded, even for me a surprise was awaiting. I got interview for a gazetted officer post in Cochin, for which I received call letter the next day after we finished our pilgrimage. I dedicate the same in the lotus feet of Sri Hari. Let your pious deeds continue in the name of Lord Vishnu. Govinda Govinda.

  2. Hello, 

    Congratulations on completing the padtha yathirai. Based on your article I can deduce that you had good darshan. Interesting to know about the “Surutapalli” temple.

    thanks again

    Dhilip UPPILI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.