Blog

  • இஸ்ரேல் பயணம்- 5

    நாகேஸ்வரி அண்ணாமலை

    யூதர்கள் சாலைகள், ஸ்தாபனங்கள் அமைத்ததால் அரேபியர்களும் பயன் அடைந்தாலும், ஐரோப்பாவிலிருந்து வந்த யூதர்களுடைய தனி நாடு அமைக்கும் திட்டத்தைப் புரிந்துகொண்டு கலக்கம் அடைந்தனர்.  பாலஸ்தீனம் முழுவதும் தங்களுக்கே என்று நினைத்திருந்ததற்கு மாறாக, நிறைய யூதர்கள் மேலும் மேலும் குடியேறுவதும், அவர்கள் அரேபியர்களுக்குச் சொந்தமான பல இடங்களை வாங்கிப் போடுவதும் இவர்களின் கோபத்தைக் கிளப்பியது.  யூதர்களின் குடியேற்றத்தை நிறுத்தும் பொருட்டு 1920-இல் யூதர்கள் தனியாக இருந்த குடியிருப்புகளை அவர்கள் தாக்கினர்.  இதில் யூதர்களின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர் கொல்லப்பட்டார்.  சாகும் தறுவாயில் அவர் கூறிய ‘நாட்டிற்காக உயிர் விடுவது நல்லது’ என்ற வார்த்தைகள் அவரை ஒரு பெரிய தியாகி ஆக்கின.  யூத நாட்டை உருவாக்கியே தீருவது என்பதில் யூதர்கள் முடிவாக இருந்தனர்.  தங்களுக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அசெம்பிளியையும், கமிட்டியையும் அமைத்துக்கொண்டனர்.  பாலஸ்தீனத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறாமலே தங்களைக் காத்துக்கொள்ள ஒரு சிறு படையையும் அமைத்துக்கொண்டனர்.  இது பின்னால் இஸ்ரேலின் ராணுவத்தின் முக்கிய அங்கமானது.  இவற்றோடு தொழிலாளர் அமைப்பு ஒன்றையும் அமைத்துக்கொண்டனர்.

    முதல் உலகப் போருக்குப் பின் ஆட்டோமான் பேரரசு பாலஸ்தீனம் உட்பட பல இடங்களை இழந்தது.  ஜூலை 1922-இல்  சர்வதேச சங்கம் (League of Nations) பாலஸ்தீன அரசியலை மேற்பார்வை செய்ய பிரிட்டனை நியமித்தது. பல நேசநாடுகளின் ஒப்புதலோடு வெளியிடப்பட்ட இந்த நியமனம் (இதை ஆங்கிலத்தில் British Mandate என்றார்கள்.) யூதர்களின் பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது.  இதையடுத்து பிரிட்டன் தன் ராணுவ நிர்வாகத்தை நீக்கிவிட்டு, சிவில் நிர்வாகத்தை பாலஸ்தீனத்தில் அமைத்தது.  ஹெர்பெர்ட் சாமுவேல் என்னும் பிரிட்டிஷ் யூதரை பாலஸ்தீனத்திற்குத் தன் பிரதிநிதியாக நியமித்தது.  இவரும் பாலஸ்தீனத்தில் யூத நாடு ஒன்றை அமைக்க வேண்டும் என்னும் கூட்டத்தைச் சேர்ந்தவராகையால், அப்போது பாலஸ்தீனத்தில் வாழ்ந்துவந்த யூதர்கள் தங்களுடைய கடவுளின் தூதர் அவர் என்று – முதலிலாவது – எண்ணி வரவேற்றனர்.

    பாலஸ்தீனம் பிரிட்டனின்  அதிகாரத்தின் கீழ் வந்துவிட்டதால் எப்படியும் பிரிட்டன் பேல்ஃபர் அறிக்கையின் மூலம் பாலஸ்தீனத்தில் தனி நாடு அமைக்கத் தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் கண்டிப்பாக நிறைவேற்றும் என்று நம்பினர்.  இதை  யூதர்கள் தங்களுடைய பெரிய  வெற்றியாகக் கருதினர்.

    தொடர்ந்து யூதர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து  பாலஸ்தீனத்தில் குடியேறி வந்ததாலும் அங்கு நிலங்களை வாங்கிக்கொண்டிருந்ததாலும்  பாலஸ்தீனம் தங்களுக்கு மட்டுமே  சொந்தம் என்று நினைத்துக்கொண்டிருந்த  அரேபியர்கள் பாலஸ்தீனத்திற்குள் யூதர்கள் வந்து தங்கும்  முக்கிய இடமான ஜாஃபாவைத்  தாக்கினர்.  அதைத் தொடர்ந்து  அதற்கு வடக்கிலும் தெற்கிலும் இருவருக்கும் இடையே கலவரங்கள் வெடித்தன.  யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் வருவதுதான் கலவரங்களுக்குக் காரணம் என்று நினைத்த ஹெர்பெர்ட் சாமுவேல் தற்காலிகமாக யூதர்கள் வருவதைத் தடைசெய்தார்.  ஆனால் சீக்கிரமே அந்தத் தடை நீக்கப்பட்டது.

    இதற்கிடையில் லண்டனில், பாலஸ்தீனத்தில் யூதர்களின் நாட்டை உருவாக்க பாலஸ்தீன் உருவாக்க நிதி (Palestinian Foundation Fund) என்ற அமைப்பு நிறுவப்பட்டது.  அதே சமயத்தில் அங்கு அவர்களின் விவசாயக் குடியிருப்புகளை நிறுவ ஸயோனிஸ்ட் சங்கம் இன்னொரு நிதியை ஏற்படுத்தியது.  ரஷ்யாவிலிருந்து குடியேறிய ஒரு யூதர் பாலஸ்தீனத்தில் மின்நிலையங்களை அரசு அனுமதியுடன் தொடங்கினார்.  இதனால் டெல் அவிவ் (Tel Aviv), ஹைஃபா (Haifa), டிபீரியஸ் (Tiberius) போன்ற யூதர்கள் வாழ்ந்த பகுதிகள் தொழில்வளர்ச்சியில் மிகுந்த முன்னேற்றம் கண்டன.  யூதர்களின் எண்ணிக்கை பாலஸ்தீனத்தில் அதிகரித்துக்கொண்டே போனதால் பீதியடைந்த அரேபியர்களின் பயத்தைப் போக்க பிரிட்டிஷ் அரசு யூதர்களின் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தியது.

    கட்டுப்பாடுகள் இருந்தாலும்  பாலஸ்தீனத்திற்குள் யூதர்கள் வருவது குறையவில்லை.  1924-1929 வரை போலந்திலிருந்து பல யூதர்கள் போலந்து அரசு யூதர்களுடைய வருமானவரியை அதிகரித்ததால் போலந்தை விட்டு பாலஸ்தீனத்திற்கு வந்தனர்.  இந்தச் சமயத்தில் இவர்களுக்கு அமெரிக்காவிற்குப் போக அனுமதி கிடைக்கவில்லை.  இந்த வணிகர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறி வணிக நிறுவனங்களைத் தொடங்கினர்.  முன்னால் வந்த யூதர்களைப் போல் அல்லாமல் இவர்கள் நகரவாசிகள் ஆயினர்.  இதனால் டெல் அவிவ் போன்ற நகரங்களில் ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டன.  கட்டடப் பணி வளர்ந்தது.  யூதர்கள் வாழ்ந்த நகரங்கள் விரிந்துகொண்டே போயின.  யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே அவ்வப்போது கலவரங்களும் வெடித்தன.

    1932-க்கும் 1939-க்கும்  இடையில் 175,000 யூதர்கள் ஜெர்மனியிலிருந்தும் போலந்திலிருந்தும் பாலஸ்தீனத்தில் குடியேறினர்.  இதனால் பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3,00,000 ஆனது.  ஸயோனிஸ்ட் அமைப்பின் தலைவர்களுக்கும் ஜெர்மன் அரசின் வெளியுறவு அமைச்சகத்திற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தினால் ஜெர்மானிய யூதர்கள் தங்களுடைய சேமிப்பின் ஒரு பகுதியை ஜெர்மனியிலிருந்து எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.  இதனால் பாலஸ்தீனத்திற்குள் நிறையப் பணம் கொண்டுவரப்பட்டு அதன் பொருளாதாரம் சிறப்படைந்தது.  உலோகங்கள், துணி, வேதியல் பொருள்கள் ஆகியவற்றின் வணிகம் பெருகியது.  மேலும் இப்படி வந்தவர்களில் பலர் கல்வியில் சிறந்தவர்களாக விளங்கியதால் ஹீப்ரு பலகலைக்கழகமும் மற்ற ஆராய்ச்சி நிறுவனங்களும் மேம்பாடடைந்தன.  கலைகளும் கலைக்கூடங்களும் சிறப்புற்றன.  இவர்கள் நகரங்களில் வாழத் தொடங்கியதால் யூதர்களின் நகரங்களும் விரிவடைந்துகொண்டே போயின.

    யூதர்களின் செல்வமும்  செல்வாக்கும் அதிகரித்துக்கொண்டே போனதால் அரேபியர்களின்  பயமும் அதிகரித்தது.  அது  பெரிய கலவரமாக வெடித்தது.  புதிதாக யூதர்கள் வாங்கும் விவசாய நிலங்களில் ஏற்கனவே  அரேபியர்கள் வேலைபார்த்துக்கொண்டிருந்தால் அவர்களுடைய வாழ்க்கை ஆதாரத்திற்கு ஒரு சிறிய பகுதியை விட்டுவிட்டுத்தான் நிலத்தை வாங்க வேண்டும் என்று பாலஸ்தீனத்தை ஆண்ட பிரிட்டிஷ் அரசு உத்தரவு போட்டிருந்த போதிலும், யூதர்கள் அந்தக் கட்டுப்பாடுகளை நிராகரித்துவிட்டு அப்படிப்பட்ட நிபந்தனை இல்லாத நிலங்களையே வாங்கினர்.  மேலும் அந்த நிலங்களில் பாடுபட யூதர்களையே நியமித்தனர்.  தாங்கள் இது வரை உழைத்து வந்த நிலங்கள் தங்கள் கைகளை விட்டுப் போனதுமல்லாமல் தங்களுக்கு வேலையும் போய்விட்டதால் அரேபியர்களின் கோபம் அதிகமானது.  யூதர்களுக்குப் பணமும் தொழில்நுட்ப அறிவும் இருந்ததால் அவர்களின் விளைபொருள்களான காய்கறிகள், பழங்கள் அதிக அளவில் சந்தைக்கு வந்து அரேபியர்களின் பொருள்களைச் சந்தையிலிருந்து விரட்டியடித்தன.  யூதர்கள் தங்களுக்கென்று யூதர்கள் நிறைய வாழும் டெல் அவிவ் நகரில் ஒரு சிறிய துறைமுகத்தையும் அமைத்துக்கொண்டனர்.  யூதர்களின் வளர்ச்சியை நிறுத்தும் நோக்கத்துடன் அரேபியர்கள் ஆரம்பித்த கிளர்ச்சி, யூதர்கள் தங்களை மேலும் வலுப்படுத்திக்-கொள்வதற்குப் பயன்பட்டது.

    மேலும், யூதர்கள் முதலில் இரகசியமாக ஆரம்பித்த படைக்குத் தடை விதித்திருந்த பிரிட்டிஷ் அரசு அந்தத் தடையை நீக்கி. யூதர்கள் தங்களுக்கென்று ஒரு படையை வைத்துக்கொள்ள அனுமதித்தது.  1939-இல் 14,500 ஆட்களைக் கொண்டதாக இந்தப் படை இருந்தது.

    அடிக்கடி யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே  மோதல்கள் ஏற்பட்டதால் பிரிட்டிஷ் அரசு 1936-ல் லண்டனிலிருந்து லார்ட் பீல் (Lord Peel) என்பவரை பாலஸ்தீனத்திற்கு அங்குள்ள நிலைமையை அறிந்துவர அனுப்பியது.  அவர் தன்னுடைய நீண்ட அறிக்கையில், யூதர்கள் பழங்காலத்திலிருந்தே பாலஸ்தீனத்தோடு அவர்களுக்கிருந்த தொடர்பால் அதற்கு உரிமை கொண்டாடுவதும், அரேபியர்கள் பதிமூன்று நூற்றாண்டுகளாக அங்கு வாழ்ந்துவருவதால் அவர்கள் அதற்கு உரிமை கொண்டாடுவதும் சரியே என்றும் வாதிட்டு, இருவருக்கும் பாலஸ்தீனத்தைப் பகிர்ந்து கொடுப்பதே சரியான தீர்வு என்றும் அப்படிச் செய்வதின் மூலம்தான் அங்கு ஏற்படும் கலவரங்களுக்கு முடிவு காணமுடியும் என்றும் கூறினார்.

    பாலஸ்தீனத்தின் வட மேற்குப் பகுதியில் இருந்த கலீலி மற்றும் கடற்கரையை  ஒட்டிய சமவெளிப் பிரதேசத்தை – இது பாலஸ்தீனத்தின் பரப்பளவில் 20 சதவிகிதம்; ஆனால் வளம் நிறைந்த பகுதி –  யூதர்களுக்கும் மற்ற இடங்களைப் பாலஸ்தீன அரேபியர்களுக்கும் கொடுப்பதென்றும் முடிவாகியது.  இருவரும் தனித்தனியே தங்கள் நாடுகளை அமைத்துக்கொள்வதென்றும், அரேபியர்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதி பின்னால் ட்ரானஸ் ஜோர்டன் (Transjordan) என்ற பகுதியோடு சேர்க்கப்படும் என்றும் பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது.  ஜோர்டன் நதிக்குக் கிழக்கே இருந்த நிலப் பகுதி ட்ரான்ஸ் ஜோர்டன் என்றும் மேற்கே இருந்த பகுதி வெஸ்ட் பேங்க் (West Bank) என்றும் அழைக்கப்பட்டன.    வெஸ்ட் பேங்க் பாலஸ்தீன அரேபியர்களுக்குக் கொடுக்கப்பட்டது.  பின்னால் ட்ரான்ஸ் ஜோர்டன், ஜோர்டான் என்ற தனி நாடாகியது.

    தங்களுக்குப் பாலஸ்தீனம் முழுவதும் வேண்டும் என்று  கேட்டுக்கொண்டிருந்த யூதர்களில் ஒரு பிரிவினர் பீலின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லையாயினும், மற்றவர்கள் அப்போதைக்கு அதை ஏற்றுக்கொள்ளுவதென்றும் பின்னால் பிரிட்டிஷ் அரசோடு பேசி இன்னும் கொஞ்சம் இடம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்ததால் பீலின் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  மேலும், ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த பிறகு யூதர்களின் நிலை மோசமாகிக்கொண்டே போனதால் யூதர்களுக்கென்று உடனே ஒரு நாடு வேண்டும் என்ற எண்ணத்திலும் யூதர்கள் இந்தத் திட்டத்தை ஒப்புக்கொண்டனர்.  தங்களிடம் ஒரு படை இருந்ததால் பின்னால் அரேபியர்களோடு சண்டைபோட்டு அவர்கள் நிலத்தில் ஒரு பகுதியை எடுத்துக்கொள்ளலாம் என்று இரகசியமாகத் திட்டமிட்டதும் இன்னொரு காரணம்.

    ஆனால், சிரியாவில் நடைபெற்ற அரேபியர் மாநாட்டில் பல அரபு நாடுகளிலிருந்து வந்திருந்த 400 பிரதிநிதிகள் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.  அரேபியர்களுக்கு மட்டுமே உரிய அரபு நாட்டை (பாலஸ்தீனத்தை) யூதர்களோடு பங்கு போட்டுக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை.  பீலுக்குப் பிறகு பாலஸ்தீன நிலையைக் கண்டறிய அனுப்பப்பட்ட இன்னொருவர் பாலஸ்தீனத்தைப் பிரிப்பது மிகவும் சிக்கலான காரியம் என்று அறிக்கை கொடுத்ததால் பீல் திட்டம் கைவிடப்பட்டது.

    யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும்  இடையே நடக்கும் போராட்டங்களும் கலவரங்களும் தொடர்ந்தன.  யூதர்கள் தங்கள் குடியிருப்புகளை  நிறுவும் திட்டங்களும் தொடர்ந்தன.  பிரிட்டன் இரு தரப்பையும் கூட்டி ஒரு முடிவிற்கு வர முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை.  இதற்கிடையில் 1939-இல் ஐரோப்பாவில் யுத்த மேகங்கள் சூழ்ந்துவந்ததால் பிரிட்டன் அதில் கவனம் செலுத்த விரும்பியது.  யூதர்கள் அதிகமாக பாலஸ்தீனத்தில் குடியேறுவதும் யூத-அரேபிய போராட்டங்களுக்குக் காரணம் என்று பிரிட்டன் முடிவு செய்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் 75,000 யூதர்கள் மட்டுமே பாலஸ்தீனத்திற்கு வரலாம் என்று வரையறுத்தது.  சுதந்திரம் அடையப் போகும் பாலஸ்தீனத்தில் அரேபிய பெரும்பான்மையோடு தாங்கள் வாழ வேண்டும் என்று எண்ணிய யூதர்கள், பிரிட்டன் ஸயோனிஸத்தின் எதிரி என்று நினைக்க ஆரம்பித்தனர்.

    இருப்பினும், இரண்டாவது உலக யுத்தத்தில் பிரிட்டனின் பக்கம் சேர்ந்து சண்டையிட்டால் யுத்தத்திற்குப் பிறகு பிரிட்டன் தங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையைப் பல யூதர்கள் வைத்திருந்தனர்.  இவர்களால் பிரிட்டனை எதிர்த்த பிரிவினர் நசுக்கப்பட்டனர்.  பிரிட்டனோடு சேர்ந்து சண்டையிட்ட பல யூதர்கள் யுத்தத்தில் உயிர் இழந்தனர்.

    யுத்தம் முடிவடைந்ததும் பிரிட்டனில் தொழில் கட்சி  (Labour Party) ஆட்சிக்கு வந்தது.  இது கொள்கையளவில் யூதர்களுக்கு ஆதரவாக இருந்தாலும், செயல்களில் யூதர்களுக்கு எதிராகவே இருந்தது.  இதனால் பாலஸ்தீனத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளை யூதர்கள் எதிர்த்து, யுத்த முடிவில் ஐரோப்பாவில் அகதிகளாக்கப்பட்ட யூதர்களைப் பாலஸ்தீனத்திற்குள் சட்டவிரோதமாகக் கூட்டிவந்தனர்.  ஐரோப்பாவில் அவர்கள் புறப்பட்ட இடங்களிலிருந்தும் பாலஸ்தீனத்தில் அவர்கள் நுழைய முயன்ற இடங்களிலும் அவர்களைத் தடுத்து நிறுத்த பிரிட்டன் முயன்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    பாலஸ்தீனத்தில் பலரை இழந்த பிரிட்டன் அதற்கு மேல் அங்கு இருப்பதால் தனக்குப் பலன் எதுவும் இல்லை என்று  எண்ணிப் பாலஸ்தீனப் பிரச்சினையை  மறுபடி ஐ.நா.-விடமே கொடுத்தது.  ஐ.நா. சபை பாலஸ்தீனப் பிரச்சினையைத்  தீர்க்க ஒரு குழுவை நியமித்து  பாலஸ்தீனத்திற்குச் நேரில் சென்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியது.  இந்தக் குழு ஜெருசலேமில்  ஐந்து வாரங்கள் தங்கியிருந்த போது யூதப் பிரதிநிதிகள், குழு அங்கத்தினர்களைச் சந்தித்துத் தங்கள் பக்கக் கோரிக்கைகளைக் கூறினர்.  ஆனால் அரேபிய பிரதிநிதிகள் இவர்களைச் சந்திக்கவில்லை.  பாலஸ்தீனத்தை பிரிட்டனின் அதிகாரத்திலிருந்து விடுவித்துவிடுவது என்றும், பாலஸ்தீனத்திற்குச் சுதந்திரம் கொடுப்பது என்றும் ஐ.நா.வில் தீர்மானிக்கப்பட்டது.  1947 நவம்பரில் பாலஸ்தீனத்தை யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே பிரிப்பது என்ற தீர்மானத்தை 33 நாடுகள் ஆதரித்தன; 13 நாடுகள் எதிர்த்தன; 13 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.  இத்தீர்மானத்தின்படி ஆறு லட்சம் யூதர்களுக்கு 5700 சதுர மைல் இடமும் 14 லட்சம் அரேபியர்களுக்கு 4300 சதுர மைல் இடமும் கொடுக்கப்பட்டது.  ஜெருசலேம், பெத்லஹேம் முதலான புண்ணிய தலங்கள் ஐ.நா.வின் பார்வையில் இருக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.  யூதர்களுக்கு அவர்களே எதிர்பார்த்ததை விட அதிக நிலம் கிடைத்தது.

    இதை எதிர்த்த அரேபியர்கள்  பாலஸ்தீனத்தை முழுவதுமாகப் பெறப் போவதாகச் சூளுரைத்தனர்.  இதையடுத்து அரேபியர்களும்  யூதர்களும் உள்நாட்டு யுத்தத்தில்  ஈடுபட்டனர்.  முதலில் அரேபியர்களின்  கை ஓங்கியிருப்பதாகத் தோன்றினாலும், யூதர்கள் தங்கள் படைபலத்தால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களைப் பிடித்துக்கொண்டனர்.  முதலில் பாலஸ்தீனத்தைப் பிரிக்கும் முடிவை அமெரிக்கா வெகுவாக ஆதரித்து ஐ.நா.வின் அந்த முடிவைச் செயலாக்கத் தன் வோட்டை அளிக்கத் தயாரானது,  ஆனால் உள்நாட்டுப் போர் தீவிரமடையவே தன் முடிவிலிருந்து பின்வாங்கி ஐ.நா.வின் கீழ் பாலஸ்தீனம் இருப்பதே சரி என்று நினைத்தது.

    அமெரிக்க ஆதரவுத்  தங்களுக்குக் குறைவதை உணர்ந்த  பாலஸ்தீன யூதர்கள் தங்கள் படைபலத்தால் தங்களுக்கு ஐ.நா.வால் கொடுக்கப்பட்ட  இடங்களைத் தங்கள் அதிகாரத்திற்குள் கொண்டுவந்தனர்.  அதே சமயத்தில்  அமெரிக்காவையும் பாலஸ்தீனப் பிரிவினைக்குச் சம்மதிக்க  வைக்க முயன்றனர்.  இதனால் அமெரிக்காவும் அங்கு அமைதியை  நிலைநாட்ட முன்றது.  யூதர்கள் அரேபியர்களும் யூதர்களும் வாழ்ந்த இடங்களையும் பிடித்துக்கொண்டனர்.  இந்தச் சமயத்தில்தான் பல அரேபியர்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு விட்டு வெஸ்ட் பேங்க் பகுதியிலும் சிரியா, லெபனான், ஜோர்டன் போன்ற நாடுகளிலும் அகதிகளாகக் குடிபெயர்ந்தனர்.  மிஞ்சியிருந்த சிலரையும் யூதர்கள் பலவந்தமாக வெளியேற்றினர்.  1948 ஏப்ரலில் டேர் யாசின் (Deir Yassin) என்ற இடத்தில் 110 அரேபியர்கள் யூதர்களால் கொல்லப்பட்டதை அடுத்து 7,50,000 பாலஸ்தீன அரேபியர்கள் பாலஸ்தீனத்தை விட்டே வெளியேறினர்.  இதனால் பாலஸ்தீனத்தில் யூதர்களின் எண்ணிக்கை பெரும்பான்மை ஆகியது.

    1948 மே 15-ஆம் தேதி பாலஸ்தீனத்தை  விட்டு வெளியேறப் போவதாக  பிரிட்டன் அறிவித்தது.  மே 14-ஆம் தேதி இரவு 11:55 மணிக்கு  யூதர்கள் ஐ.நா.வால் தங்களுக்குக்  கொடுக்கப்பட்ட இடங்களை  இஸ்ரேல் என்ற நாடாகப்  பிரகடனம் செய்துகொண்டனர்.  அரேபியர்கள் ஐ.நா.வின்  தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாமல்  மறுபரிசீலனை செய்யும்படி  கேட்டுக்கொண்டிருந்ததால், இன்று வரை அரேபியர்களுடைய ஆளுகைக்கு உட்பட்ட, இறையாண்மை உள்ள (sovereign) பாலஸ்தீன நாடு உருவாகவில்லை.

    படங்களுக்கு நன்றி :

    http://en.wikipedia.org/wiki/United_Nations_Partition_Plan_for_Palestine

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D

    தொடரும்

    Share
  • தமிழின் இமயம் திருவள்ளுவர்

     

     

    கவிஞர் இரா .இரவி

     

     

    படத்திற்கு நன்றி:

    http://foter.com/f/photo/3138264542/5719167fda/

     

    Share
  • சொல்லின் செல்வன்

    கவிநயா

     

    இராமயணத்தில் ஸ்ரீ ராமனை நாராயணானாக உணர்ந்தவர்கள், அவனை ஆண்டவனாக அறிந்தவர்கள், ஒரு சிலரே. அவர்களில் ஒருவன் அனுமன்.  ஆஞ்சநேய ஜெயந்தியை முன்னிட்டு, அனுமன் ஸ்ரீராமனைச் சந்திக்கும் படலத்தைப் பற்றி இங்கே பேசலாம். எத்தனையோ பெரியவர்கள் மிகவும் விசேஷமாக அனுபவித்துச் சொல்லும் கதை இது. என்றாலும், இந்தச் சிறிய அணிற்பிள்ளைக்கும் இப்படிப்பட்டதொரு ஆசை வந்து விட்டது. ஸ்ரீ ராமனும், அனுமனும் பொறுத்தருள வேண்டும். ஸ்ரீ ராமஜெயம்.

     

    சுக்ரீவன், தன் அண்ணன் வாலிக்குப் பயந்து, அவன் வரமுடியாத இடமான ரிச்யமுக பர்வதத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறான். வாலி அங்கே வர மாட்டான் என்ற நிம்மதியோடு தன்னுடைய சில மந்திரிகளோடும், பரிவாரத்தோடும் நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தவனுக்கு அன்றைக்கு ஒரு சோதனை வருகிறது. இரண்டு வில்லாளிகள், இவர்கள் இருக்கும் மலை நோக்கி வந்து கொண்டிருப்பதை, தொலைவில் இருந்து பார்த்து விடுகிறான். உடனே பயம் பிடித்துக் கொள்கிறது. ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது போல, யாரைப் பார்த்தாலும் வாலியின் ஆட்களாகவே தெரிகிறது அவனுக்கு.

     

    சுக்ரீவனின் நல்வினைப் பயன் இரண்டு விதங்களில் அருமையாக வேலை செய்கிறது. ஒன்று, தன்னிகரில்லா ஆஞ்சநேயன் அவனுக்கு மந்திரியாக அமைந்தது. இரண்டு, பரம்பொருளான ஸ்ரீ ராமன் அவனைத் தேடி வந்தது! நாம் தேடி, வேண்டி, விழைந்து, முயன்று, காணத் தவிக்கும் பரமானந்தமே அவனைத் தேடி வருகிறது என்றால், அவன் செய்த நல்லூழ்தான் என்னே!

     

    செய்வதறியாத போதுகளில் செய்வது போல், அப்போதும் தன் மதி மந்திரியான அனுமனைத்தான் அழைக்கிறான். அவனிடம் தன் அச்சத்தைத் தெரிவித்து, தொலைவில் வந்து கொண்டிருக்கும் வில்லாளிகள் யாரென அறிந்து வரும்படி பணிக்கிறான்.

     

    பாற்கடலைக் கடைந்த போது, முதலில் ஆலகால விஷம்தான் பொங்கி வருகிறது; அதைக் கண்ட அனைவரும் பீதியடைந்து கலங்குகையில், முக்கண்ணன் அங்கே வந்து, ‘அஞ்சற்க’ என்று சொல்லி, தானே அந்த விஷத்தை உண்டு அனைவரையும் காத்தருள்கிறார். அந்த சிவனைப் போலவே இங்கே கலங்கி நின்ற வானரர்களுக்கு, ‘அஞ்சற்க’ என்று அனுமன் அபயம் அளிக்கிறானாம். அனுமனும் சிவ பெருமானின் அம்சமாகவே கருதப்படுவதால் கம்பனின் உவமையும் அப்படியே இருக்கிறதாம்.

     

    அபயம் அளித்த ஆஞ்சநேயன், “நான் போய் அவர்கள் யாரென்று அறிந்து வருகிறேன்”, என்று சொல்லி, ஒரு மாணவப் பிரம்மச்சாரியின் வடிவத்தை எடுத்துக் கொள்கிறான். (ஒரு வேளை அவர்கள் வாலி அனுப்பிய ஆட்களாகவே இருந்து விட்டால்?).

     

    அவ்வுருவுடன் அவர்கள் இருக்கும் பக்கம் செல்கிற வாயு புத்திரன், அவர்கள் கண்களில் படாதபடி மறைந்து நின்று கொண்டு, அவர்களை உற்று நோக்குகிறான். இங்கேதான் அனுமன் body language –ஐப் படிப்பதில் எவ்வளவு தேர்ந்தவன் என்று அழகாகக் காட்டுகிறார் கம்ப நாட்டாழ்வார்.

    “வில்லேந்தி இருந்தாலும் இவர்கள் இருவரும் தவ வேடமும் பூண்டிருக்கிறார்கள். இது முரண்பாடாக இருக்கிறதே.  நடந்து வந்த களைப்பையும் மீறி, புழுதி படிந்த தோற்றத்தையும் மீறி, அவர்களின் தேஜஸானது விழிகளைக் கூசச் செய்கிறது. அதனோடு கூட இவர்களிடத்தில் ஏதோ ஒரு பெருங் கோபமும், சோகமும் தெரிகிறது. ஏதோ ஒரு விலைமதிப்பில்லாத பொருளைத் தொலைத்து விட்டுத் தேடுவது போல அங்குமிங்கும் பார்த்தபடியே இருக்கிறார்கள்.  ஒரு வேளை இவர்கள் முத்தேவர்களோ? இருக்காது, இருவர் மட்டும் தானே இருக்கிறார்கள்? கொடிய மிருகங்கள் கூட இவர்களைக் கண்டதும் தன் கன்றுகளைக் கண்டது போல் மனம் நெகிழ்ந்து அன்பைப் பொழிகின்றன. மயில்கள் தங்கள் தோகைகளை விரித்து அவர்களுக்குக் குடை பிடிக்கின்றன. இவர்கள் நடந்து வரும் பாதையில் கிடக்கின்ற கற்களும் புற்களும் கூட இவர்கள் பாதங்களை அழுத்தாமல் மலர்களைப் போல் குழைந்து கொடுக்கின்றன. இவர்களைப் பார்த்தாலே மனித உருவில் வந்த பரம்பொருள் போலல்லவா இருக்கிறது.”

     

    இப்படியாக பலவாறு எண்ணமிடும் புத்திமானான அனுமனுக்கு, இவர்கள் உயர் குணத்தோர் என்பதும், தருமத்திலும், நல்லொழுக்கத்திலும், கருணையிலும் தமக்கு நிகரில்லாதவர் என்பதும் புரிகிறது.  அவர்களைக் காணக் காணத் தன் என்பும் உருகும் அளவு அன்பு பெருக்கெடுப்பதை உணர்கிறான். முன் எப்போதோ விட்டுப் பிரிந்தோரை வெகு காலத்திற்குப் பின் பார்ப்பது போல் செயலற்று நிற்கின்றான். தன்னையறியாமலேயே தன் உள்ளத்தில் எல்லையில்லாமல் ஊறும் அன்பிற்குக் காரணம் அறியாது திகைக்கிறான்.

     

    அனுமனின் அத்தகைய நிலையை, ஸ்ரீ ராமன்  யாரென அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் அன்பூற நிற்கின்ற நிலையை நினைத்தாலே நம் நெஞ்சம் நெகிழ்கின்றது. இறைவனை அறியும் முன்பு இருக்கக் கூடிய மனநிலையை ஸ்ரீ ராமகிருஷ்ணர் வர்ணிக்கையில் “கதிரவன் உதிக்கும் முன்பு கீழ்வானம் சிவந்து, அவனை வரவேற்கத் தயாராக இருப்பது போல் இருக்கும்” என்பார். அதைப் போன்ற மனநிலையில்தான் அனுமனும் இருந்தான் போலும்.

     

    பிறகு அவர்களைப் பற்றி பயம் கொள்ளக் காரணம் இல்லையென்று நிச்சயித்து, அவர்கள் கண்களில் படும்படியாக முன்னால் வந்து, “உங்கள் வருகை துன்பம் இல்லாததாக இருக்கட்டும்”, என்று வாழ்த்துகிறான். பதிலாக இராமனும், “நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?” என்று வினவுகிறான்.

     

    “மேகங்கள் திரண்டிருப்பது போல அழகான நீல நிறத்தைக் கொண்டவனே! பெண்களுக்கு நஞ்சு போல இருப்பவனே! குளிர்ச்சி மிகுந்த பனியிலும் வாடாத தாமரை மலர் போல மலர்ந்திருக்கும் சிவந்த அழகிய விழிகளை உடையவனே! நான் வாயுதேவனுக்கு அஞ்சனையிடத்தில் பிறந்தேன். அனுமன் என்பது என் பெயராகும்” என்கிறான்.

     

    அனுமன் பேசுவதிலிருந்தே அவனுக்கு ஸ்ரீ ராமனிடம் ஏற்பட்டு விட்ட ஈடுபாடு விளங்குகிறது. அதிலும் “நளிரிரும் பனிக்குத் தேம்பாக் கஞ்சமொத்த அலர்ந்த செய்ய கண்ண” என்ற தொடர் எனக்கு மிகவும் பிடித்தது. ‘குளிர்ச்சி மிகுந்த பனியிலும் வாடாத தாமரை மலர் போன்ற சிவந்த’ என்ற நேரடிப் பொருள் மட்டும் அல்லாமல் இன்னொரு பொருளையும் காண முடிகிறது. கண்ணீர் துலங்கும் கண்களை, பனித் துளி படிந்த மலருக்கும் ஒப்பிடலாம்.  அதாவது சீதா பிராட்டியைக் காணாமல் கண்கள் கலங்கிய வண்ணமே இருக்கிறான் ராமன். இடைவிடாது கலங்கும் காரணத்தால் அவனுடைய விழிகள் சிவந்திருக்கின்றன.  அப்படி இருந்த போதிலும் அவன் விழிகள் செந்தாமரை மலர்கள் போல விரிந்து அத்தனை அழகாகக் காட்சி தருகின்றன என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா.

     

    “இந்த மலையில் தங்கி வாழ்ந்து வருகின்ற சூரியனுக்கு மகனாகப் பிறந்த சுக்ரீவன் ஏவிய பணிகளைச் செய்பவன் நான். உங்கள் வருகையைப் பார்த்து மகிழ்ந்த சுகிரீவன், தாங்கள் யாரென்று பார்த்து வரும்படி என்னைப் பணித்தான்”, என்கிறான்.

     

    அனுமன் இவ்வாறெல்லாம் பேசிக் கொண்டு வரும்போதே, அவன் யாரென்று தெரிந்து விடுகிறதாம், இராமனுக்கு. “இவனே சிறந்த குணங்கள், கல்வி, கல்வியால் வரும் அடக்கம், அறிவு, இவை அனைத்தின் வடிவமாவான்”, என்று தெரிந்து கொண்டு, தம்பிக்கும் அதனை எடுத்துரைக்கிறான். கல்வி இருக்கும் இடத்தில், அது உண்மையான கல்வியாக இருக்கும் பட்சத்தில் கூடவே பணிவும் இருக்கும் என்பதை இங்கே சொல்லாமல் சொல்கிறார், கம்பர்.

     

    “தம்பீ, இவன் பேசிய பேச்சிலிருந்தும், பேசிய விதத்திலிருந்தும், இவன் அறியாத வேதங்களோ, கலைகளோ இல்லையெனும்படியான அறிவுத் தெளிவு தெரிகிறது பார்த்தாயா? இப்படி சொல்லின் செல்வனாக விளங்கும் இவன் நான்முகனோ, அல்லது சிவபெருமானேதானோ?” என்று வியக்கிறான், இராமன்.

     

    அந்த அளவிற்கு அன்பும், பண்பும், அடக்கமும், மட்டுமின்றி, அனுமனின் பேச்சு தெளிவாகவும், இலக்கணப் பிழைகளோ, உச்சரிப்புப் பிழைகளோ அற்றும், அதிக சப்தமாக இல்லாமலும், மிக மெதுவாக இல்லாமலும், கேட்பதற்கு தெளிவாகவும் இனிமையாகவும் இருந்ததாம். அப்படிப் பேசக் கூடியவர்கள், அந்த அளவு கல்வியும் அறிவும் தெளிவும் பெற்றவர்கள் பிரமனுடைய அல்லது சிவனுடைய அம்சமாகவோதான் இருக்க வேண்டும், அவர்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் என்று வியக்கின்றானாம் இராமன். இந்த இடத்தில் இராமன் தானே நாராயணன் என்று அவன் அறிந்திருப்பது போலக் காட்டி இருக்கிறார் கம்பர். தான் இங்கு இருக்கையில் மற்ற இருவரில் ஒருவனாகத் தானே இவன் இருக்கக் கூடும் என்று கேட்கிறான் போலும்.

     

    மேலும், “இவன் உருவத்தைப் பார்த்து இவன் சாதாரணமானவன் என்று நினைத்து விடாதே. உலகத்துக்கே அச்சாணி போன்று இருக்கும் இவனுடைய திறமைகளை எல்லாம் நான் தெரிந்து கொண்டேன்; நீயும் கூடிய விரைவில் தெரிந்து கொள்வாய்”, என்கிறான்.

     

    பிறகு அனுமனை நோக்கி, “உன் அரசன் சுக்ரீவன் எங்கே இருக்கிறான் என்று சொல். அவனைப் பார்க்கத்தான் நாங்களும் வந்திருக்கிறோம். எங்களை அவனிடம் அழைத்துச் செல்”, என்கிறான்.

     

    இவ்வாறு இராமன் சொன்னதைக் கேட்டு அனுமனும், தங்களையும் சுக்ரீவனையும் காப்பதற்கெனவே வந்ததற்காக அவர்களுக்கு நன்றி செலுத்தி, அவர்களின் ஆற்றலைப் போற்றிப் புகழ்கிறான் . சுக்ரீவனின் வரலாற்றை விளம்புகிறான்… தான் ‘சொல்லின் செல்வன்’தான் என்பதை மீண்டும் நிரூபிக்கிறான். “நீங்கள் யார் என்று” என்று நேரடியாகக் கேட்காமல், “யாரென விளம்புகேன் நான் என் குலத்தலைவற்கு உம்மை”, அதாவது, “எங்கள் குலத் தலைவனாகிய சுக்ரீவனிடம் சென்று நீங்கள் யாரென்று சொல்வேன்?” என்று கேட்கிறான். இராமனின் ஆணைக்கிற்கிணங்க தம்பி இலக்குவன் தங்களுக்கு நேர்ந்தவற்றை எடுத்துச் சொல்லத் தொடங்குகிறான்…

     

    இவ்விதமாக அனுமன் இராமனைச் சந்தித்த கணம் முதலாகவே அவர்கள் இருவருக்கும் இடையேயான பரஸ்பர அன்பு வெளிப்பட்டு விட்டது.

     

    ஆஞ்சநேயனுக்கு ஸ்ரீராமன் மேல் இருந்த பிரேமையும், அன்பும், பக்தியும் போல் நமக்கும் ஏற்பட அஞ்சனா புத்திரன் அருளட்டும்.

     

    ஸ்ரீ ராமஜெயம்.

     

    படத்துக்கு நன்றி: http://smilemakerkrishna.blogspot.com/2012/08/lord-rama-and-hanuman.html

     

     

     

     

    Share
  • தொல்லை காட்சி :சூப்பர் சிங்கரில் உலக நாயகன்-இளமை-புதுமை !

    மோகன் குமார்

    சூப்பர் சிங்கரில் கமல்

    கமல் மற்றும் விஸ்வரூபம் ஹீரோயின் பூஜா சூப்பர் சிங்கருக்கு வந்திருந்தனர் (ஆண்ட்ரியா வருவார் என அய்யாசாமி தினம் காத்திருந்து, காத்திருந்து ஏமாந்து போனார்)

    கமல் பல நேரம் எளிமையாய் பேசியது ஆச்சரியமாய் இருந்தது. “இப்படி நல்லா பாடுபவர்களை முன்பே தெரிந்திருந்தால், நான் அதிகம் பாடியிருக்க மாட்டேன்” என்றார் கமல் சிரித்தபடி. DTH பற்றியும் மனம் விட்டுப் பேசினார்.

    திவ்யதர்ஷினி மற்றும் மா. கா. பா என இரு தொகுப்பாளர்கள் இருந்தும் கமல் இருந்த 3 நாளும் மா. கா. பா அநேகமாய் வாயே திறக்கலை. திவ்யதர்ஷினி தான் பேசித் தள்ளினார்.

    பசங்க எல்லாரும் as usual ” இவர் கடவுள் மாதிரி ; இவரை ஒருமுறை பார்ப்பதே பூர்வ ஜன்ம புண்ணியம் ” என்று பேசினர் (கமலும் இதற்கு வழக்கம்போலவே நாத்திகம் பேசினார்)

    சன் மியூசிக்கில் படப்பிடிப்பு தளம்

    சினிமா- படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யங்களை சன் மியூசிக்கில் இயக்குனர்களே வந்து பேசும் “கட் டு கட் ” என்கிற நிகழ்ச்சி சன் மியூசிக்கில் வருகிறது. புது படங்களுக்கு அல்ல சில வருடம் முன்பு வெளியான படங்களுக்கு ! ஆடுகளம் படம் எடுத்த போது நிகழ்ந்த சுவாரஸ்யங்களை பகிர்ந்தார் வெற்றிமாறன். தெருவில் தனுஷும் தாப்சியும் பேசிக்கொண்டு நடக்கும் அந்த அழகான இரவுக் காட்சிக்கு தாப்சி பாட்டுக்கு எதோ பேசிக் கொண்டு நடக்க, டப்பிங்கில் தான் ஒழுங்கான வசனம் போட்டு நிரப்பிக் கொண்டோம் என்றார் இப்படி சினிமாவின் பின்னணியில் இருக்கும் பல கதைகள், ரீல் இவற்றை அறிய சுவாரஸ்யமாய் இருக்கிறது. நாமெல்லாம் சினிமா கிசு கிசுவை ரசிக்கிற ஆட்கள் தானே ! இணையத்திலாவது அந்துமணி துணுக்கு மூட்டை வாசித்துக் கொண்டு தானே இருக்கிறோம் !

    பிளாஷ்பேக் : இளமை -புதுமை

    சன் டிவியில் இந்த நிகழ்ச்சி வாராவாரம் வரும் நாளும், நேரமும் கூட நினைவிருக்கிறது. ஒவ்வொரு புதன் மாலை ஏழரைக்கு ஒளிபரப்பாகும். சொர்ணமால்யா தொகுப்பாளராக வந்த முதல் நிகழ்ச்சி. அப்போல்லாம் அவருக்கு என்னா fan following தெரியுமா !

    ஐந்தாறு இளைஞர்கள், இளைஞிகள் உடன் அமர்ந்து அவர்களை ஜோக் அடிக்க வைத்து, சொர்ணமால்யாவும் களாய்ப்பது தான் நிகழ்ச்சி. நடு நடுவே காமெடி சீன்களும் போடுவர்.

    தலைப்புக்கேற்றவாறு இளமையும், மகிழ்ச்சியும் ததும்பும் இந்நிகழ்ச்சி ஒரு காலத்தில் பலருக்கும் விருப்பமான ஒன்றாக இருந்து பின் அர்ச்சனா தொகுப்பாளராக வந்து, சில வருடங்கள் கழித்து fade out ஆனது !

    கலைஞர் டிவி – குடும்ப திரைப்புதிர்

    குடும்ப திரைப்புதிர் என்கிற சினிமா குவிஸ் நிகழ்ச்சி (நமக்கெல்லாம் திரைப்புதிர் என்றால் தெரியாது. சினிமா குவிஸ் என்றால் தான் புரியும் 🙂

    ஒரு குடும்பத்திலிருந்து மூன்று பேர் வந்து பங்கேற்க ஏதாவது வீடியோ ஆடியோ கிளிப்பிங் காட்டி கேள்விகள் கேட்கிறார்கள். வருவோரில் வயதானோர் பலர் இருப்பதால் இவர்கள் கேட்கும் இக்கால கேள்விகளுக்கு சரியே பதில் சொல்வதில்லை

    நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் தெரியுமா? சொர்ணமால்யா ! இன்றைய சொர்ணமால்யாவை சின்னத் திரைக்குள் அடக்குவது சற்று சிரமம்தான் ! ரெண்டு வித குரலில் பேசி பயமுறுத்துகிறார்.

    நிகழ்ச்சி பார்க்கிறீர்களோ இல்லையோ, சினிமா என்பது பலருக்கும் பிடித்த ஒன்று தானே ! விருப்பமுள்ளோர் முடிந்தால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் !

    செட் அப் பாக்ஸ் அப்டேட்

    அரசு டிவி கனக்ஷன் தருகிறோம்; செட் அப் பாக்ஸ் தேவையில்லை என லோக்கல் கேபிள் டிவி காரர்களே தங்கள் சேவையைத் தொடர்கிறார்கள். எங்களுக்கும் வழக்கமாய் காணும் பெரும்பாலான சானல்கள் வருவதால் அதில் தொடர்கிறோம். நிறைய புது தமிழ் சானல்கள் கூட வருது. இரண்டு முக்கிய ஸ்போர்ட்ஸ் சானல்களும் உண்டு ! செட் ஆஃப் பாக்ஸ் செலவு இப்போதைக்கு இல்லை. நூறு ரூபாயில் மாதம் டிவி பில் முடிஞ்சிடுது !

    ஆரோகணம் – லட்சுமி ராமகிருஷ்ணா பேட்டி

    ஏனோ இவ்வார இறுதியில் பல சானல்களிலும் ஆரோகணம் பட இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணா பேட்டி வந்து கொண்டிருந்தது. எனக்குக் கூட படத்துக்கு ஏதும் தேசிய விருது கிடைச்சிடுச்சோ என சந்தேகமே வந்திடுச்சு. அப்புறம் தான் தெரிஞ்சுது. புத்தாண்டுக்கு பல சானல்களும் அவரிடம் பேட்டி எடுத்துட்டு அதை இன்று மறு ஒளிபரப்புகின்றன என்பது !

    ஆரோகணம் மலையாளம், தெலுகு, கன்னடா எல்லாவற்றிலும் ரீ மேக் ஆகுதாம். லட்சுமி ராமகிருஷ்ணா அவர்களின் பெண்ணுக்குத் திருமணம் ஆவதால் (என்னாதிது ! அவருக்கு கல்யாண வயசில் பெண்ணா !) தற்போது எந்த ப்ராஜக்ட்டும் எடுக்கவில்லை என்றார்.

    ஆரோகணம் படம் இன்னும் பார்க்கவில்லை. விரைவில் பார்க்கணும் !

    Share
  • ஆசான்

    பி .தமிழ்முகில் நீலமேகம்

    அன்று  கல்லூரியின் கடைசி  வேலை நாள். பரீட்சைகள் அனைத்தும் முடிவடைந்து, அன்று  விடைத்தாட்கள் விநியோகிக்கப் பட்டு, மாணவர்களால் சரிபார்க்கப் படும். அதன் பின்னே, பரீட்சை முடிவுகள் அனைத்தும் வெளியிடப்படும். இது அந்தக் கல்லூரியின் வழக்கமாய் இருந்தது.

    நகரின் அந்த புகழ்பெற்ற மகளிர் கல்லூரியில் விரிவுரையாளராய் பணியாற்றி வந்தாள்  சசிகலா. திருத்திய விடைத்தாட்களை எடுத்துக் கொண்டு அந்த முதுகலை இறுதியாண்டு வகுப்பிற்குள் நுழைந்தாள்.மாணவிகளுக்கு விடைத்தாட்களை கொடுத்துவிட்டு, எவருக்கேனும் மதிப்பெண் வழங்கியதில் ஏதேனும் ஐயமிருப்பின் தன்னை அணுகுமாறு கூறிவிட்டு அமர்ந்தாள்.

    சற்று நேரத்தில், மாணவி ஜனனி வந்து விடைத்தாளில் ஏதோ சந்தேகம் கேட்டாள். அவளது சந்தேகத்தை தெளிவடையச் செய்துவிட்டு, அவள் முதல் மதிப்பெண் பெற்றிருந்தபடியால், அவளுக்கு வாழ்த்துகளைக் கூறிவிட்டு,       “மாணவிகளே ! உங்களுக்கு வழங்கியுள்ள மதிப்பெண்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் வந்து கேளுங்கள்” என்றாள். அப்போது, ஆர்த்தி என்ற மாணவி விடைத்தாளுடன் வந்தாள்.

    “என்ன ஆர்த்தி? ” என்று கேட்டு சசிகலா முடிக்கும் முன், ஆர்த்தி அழ ஆரம்பித்து விட்டாள்.

    “மேடம், தயவு செய்து என்னை பாசாக்கி விட்டுருங்கள். அரியர்ஸ் வந்தால், எனக்கு ஒரு  வருஷம்  வேஸ்ட் ஆயிடும். ப்ளீஸ், கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க” என்று கெஞ்சினாள்.

    பேப்பரை வாங்கிப் பார்த்தாள்  சசிகலா. மதிப்பெண் போடுவதற்கு வழியே இல்லாமல் இருந்தது. என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, சிந்தியா அங்கு வந்தாள். அவளும் அவ்வகுப்பில் ஆர்த்தியுடன் பயிலும் மாணவி.

    “மேடம், நீங்கள் ஃபர்ஸ்ட் மார்க் வாங்குன ஜனனிக்கு யுனிவர்சிட்டி ப்ரொஃஃபிஷியன்சி கிடைக்கறதுக்கு மார்க் குறையுதுன்னு போட்டுக்  குடுத்த போது,  ஃபெயில் ஆன ஆர்த்தி பாஸ் ஆக ஏன் மார்க் போடக் கூடாது” என்றாள்.
    சசிகலாவிற்கு அவள் சொன்னதைக் கேட்டதும் ஆத்திரத்தில் கண்கள் சிவந்தன. ஏனெனில், அவள் அங்ஙனம் பாரபட்சம் பார்ப்பவளில்லை. ஜனனிக்கு அவள் போடாமல் விட்டிருந்த மதிப்பெண்களையே போட்டிருந்தாள்.

    ஆத்திரம் மேலோங்க, “சிந்தியா !  உன்  பேப்பரைக் கொண்டு வா…” என்றாள். வந்தவளிடம் பேப்பரை வாங்கி ஆத்திரத்துடன் சிந்தியாவின் விடைத்தாளில் பத்து மதிப்பெண்கள் குறைத்துக் கொடுத்து அனுப்பி விட்டாள். அவளுக்கு அன்று முழுவதும் ஏனோ மனம் சரியாகவே இல்லை.

    மாலை, கல்லூரி முடிந்ததும், சற்று நேரம் பூங்காவிற்கு சென்றுவிட்டு வீட்டுக்குச் செல்லலாம் எண்றெண்ணியவள், சற்று நேரத்தில் பூங்காவினை வந்தடைந்தாள். மரநிழலில் வந்தமர்ந்தவள், சுற்றியோடும் அணில்களையும், கீச்சிட்டுச் சுற்றும் பறவைகளையும் இரசித்துக் கொண்டிருந்தாள். அவளது மனதில் அன்றைய சம்பவம்   நிழலாடியது.

    “சே…நன்றாக படிக்கக் கூடிய மாணவி தான்.தன் அதிகப்ப்ரசங்கித் தனத்தால்,  ஆத்திரத்துக்கு ஆளாகி, தன் மதிப்பெண்களை இழந்ததோடில்லாமல், என் மனநிம்மதியையும் குலைத்து விட்டாளே இந்த சிந்தியா ! ” என்றவளது சராசரி மானுட மனம் எண்ணியது.

    “நாளை சிந்தியாவை,  அவளது ஆராய்ச்சிக் கட்டுரையை பிரசுரத்திற்கு அனுப்ப  தயார் செய்யச் சொல்ல வேண்டும். இரண்டு மாதம் கழித்து நடக்கவிருக்கும்  தேசிய அளவிலான அறிவியல் மாநாட்டிற்கு அவள் தயார் செய்து, என்னிடம் தந்த கட்டுரை மற்றும் நழுவல் படங்களை பார்வையிட்டு, குறைகள் இருப்பின் திருத்தச் சொல்லி, அவளை மாநாட்டில் பேச தயார் செய்ய வேண்டும் ” என்றவளது ஆசான் மனம் எண்ணியது.

         ” ஓர் நல்லாசானுக்கு மாணாக்கரிடையே என்றுமே உயர்வு தாழ்வு ஏற்படுவதில்லை !!! “
                           

    Share
  • இயற்கை

     

     

    பி.தமிழ்முகில் நீலமேகம்

     

    இறைவனின் திறமையில் உருவான

    கற்பனை  ஓவியம் …….. உலகம்….

    இறைவன் தன் எண்ணற்ற திறமைகளை

    தனது உலக ஓவியத்தில்

    தீட்டி வைத்துள்ளான்……….

    நீரோடையென……..கடலென ……

    மலையென…… நிலமென ……..

    நீரென…..காற்றென…..

    அந்த வண்ண ஓவியத்தில்

    நாமும் நடமாடும்

    கதாபாத்திரங்கள்……

    நாம் இருக்கும் அழகான ஓவியத்தை/ புகைப்படத்தை

    பொக்கிஷமாய் காப்போம் அன்றோ???

    காத்திடுவோம் – இறைவன்

    நமக்களித்த இயற்கையை…….

    நம் பொக்கிஷமென……

    விட்டுச் செல்வோம் – நம்

    சந்ததிக்கு   வளமான இயற்கையை வரமாய்……..

    படத்திற்கு நன்றி:

    http://www.prelovac.com/vladimir/beautiful-nature-pictures

    Share
  • பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

    தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போரூர் கிளை சார்பாக ” தூய்மை நகரம்” என்ற இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.

     

    • குடியிருப்பு பகுதிகளில் ‘தூய்மை குழுக்கள்’ உருவாக்கி செயல்பட வைப்பது.
    • பிளாஸ்டிக்கின் விளைவுகள் பற்றி வலுவான விழிப்புணர்ச்சியினை உருவாக்கி, அதன் பயன்பாட்டினை குறைக்க செய்வது மாற்று வழிமுறைகளை நடைமுறைப்படுத்த செய்வது.
    • திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் வெளியேற்றம், கழிப்பிட மேலாண்மையில் கவனம் செலுத்துவது, குறுந்திட்டங்கள் உருவாக்கி, குடியிருப்பு பகுதி அளவில் செயல்படுத்துவது.
    • பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என பொது இடங்களில் தூய்மையினை படைப்பது.
    • இன்றைய நகர சூழல் உருவாக்கும் நோய்கள் / அபாயங்கள் பற்றி மக்களை உணர வைப்பது. அதை எதிர் கொள்ளவும், தடுப்பு முறைகளை உருவாக்கவும் மக்களை பங்கேற்க வைப்பது.
    • வீட்டுத் தோட்டம், நகரப் பூங்காக்கள், வீதியோர மரங்கள் – இவைகளில் மக்களின் கவனத்தினை ஈர்ப்பது போன்ற செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தவே தூய்மை நகரம் துவக்கப்பட்டுள்ளது.

    ” தூய்மை நகரம்” மக்களிடம் அறிமுகப்படுத்த “பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி ” 06/01/2013 அன்று நடைப்பெற்றது.

     

    இந்த பேரணியை சென்னை மாநகராட்சி 11வது மண்டல குழு தலைவர் திரு. K. சேகர் அவர்கள் மற்றும் 153வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி லதா குமார் அவர்கள் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், இணைத்தலைமை பொறியாளர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

    இந்த பேரணியில் போரூர் 153, 151 வட்டப் பகுதியில் உள்ள 23 குடியிருப்போர் நல சங்கங்களின்  பொறுப்பாளர்களும் பகுதி  வாழ் மக்களும் கலந்து கொண்டனர். அனைத்து வணிக சங்கங்கள்  தென் சென்னை சிறுகுறுந்தொழில் முனைவோர் சங்கத்தினர் என பல தரப்பட்டனரும் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு அறிவியல் இயக்கம், வட சென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர்களும், காட்டராம்பாக்கம் ஊராட்சி  நடுநிலைப்பள்ளி துளிர் இல்லக் குழந்தைகளும் கலந்து கொண்டனர். சுமார் 500க்கும் மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்த பேரணி போரூர் அரசு மேல்நிலைப்பள்ளி  அருகில் துவங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று சக்தி நகர் குடியிருப்போர் நலசங்க அலுவலகத்தில் நிறைவுற்றது. மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் திரு K. பீமாராவ் அவர்கள்  பேரணியினை நிறைவு செய்து உரையாற்றினார்.

    சக்தி நகர் குடியிருப்போர் நலசங்க வளாகத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு கண்காட்சி  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியினை திரு. லட்சுமி நாராயணன் அவர்கள்  துவக்கி வைத்தார். திரு. A. ரவீந்திரன், திரு. சக்திவேல், திரு. ரவிக்குமார், திரு. கலைச்செல்வன் இக்கண்காட்சியினை உருவாக்கினர்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு  அறிவியல் இயக்கம் (TNSF) சேர்ந்த 

    திரு. கு. செந்தமிழ்ச்செல்வன், மாநிலத் தலைவர், TNSF,

    திரு. உதயன், மாவட்ட துணைத்தலைர் , TNSF,

    திரு ஜெகதீசன், மாவட்ட செயலாளர், தென் சென்னை , TNSF

    போரூர் கிளைத் தலைவர் திரு. ரகுநாதன், , TNSF

    போரூர் கிளை செயலாளர் திரு மாசிலாமணி, , TNSF

    போரூர் கிளை பொருளாளர்  திரு. செங்கன் , TNSF மற்றும்

    நகரின் முக்கிய நபர்கள்  பலரும் கலந்து செயல்பட்டனர்.

    நன்றி,
    கு.செந்தமிழ் செல்வன்
    மாநில துணைத் தலைவர்.
    தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
    9443032436

    Share
  • சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது

                                                                                                             வைகைச் செல்வி

                                                                                         வனம்பாடி, வானம்பாடி, வனராணி
         
         
                                                                                                      சி. ஜெயபாரதன், கனடா

    இந்த பூமி நமது
    இந்த வானம் நமது
    இந்த நீர்வளம் நமது
    முப்பெரும் சூழ்வளத்தை
    துப்புரவாய் வைக்கும்,
    ஒப்புரவு நமது பொறுப்பு.

    இவ்விதம் பறைசாற்றித் தமிழகத்தின் செவியெல்லாம் இராப் பகலாய் முழக்கம் செய்து வருபவர், வைகைச் செல்வி. ஊழியப் பணிபுரியும் பெண்டிரை ஆணாதிக்கப் பரம்பரை பாலியல் சீண்டல் களால் பேரின்னல் கொடுத்து, மன வேதனை தரும் கொடுமைகளைப் பாரதக் கலாச்சாரக் கூட்டங்களில் முரசடித்து வருபவர், வைகைச் செல்வி. தொழிலகங்களில் ஊழியம் புரியும் மாதர்களின் தொழில்மூலம் ஏற்படும் உடல்நலச் சீர்கேடுகளை உலகப் பேரவைகளில் உரை யாற்றிக் காட்டி வருபவர், வைகைச் செல்வி. ‘கூடுவிட்டுக் கூடு பாயத் தனிப் பறவைக்குக் காலெதற்கு ? சிறகெதற்கு ? ‘ என்று கேட்கும் வானம்பாடி வைகைச் செல்வி, தமிழகத்தில் திருச்சி, நெய்வேலி, மதுரை, சிவகாசி, சென்னை, கரூர், கோவை, திருப்பூர், நாகை போன்ற தளங்களுக்கு அடிக்கடிச் சென்று சூழ்வெளி மாசுப் பிரச்சனைத் தீர்வுகளில் பங்கெடுத்தும், பெண்டிர் உரிமை பற்றிக் கருத்தரங்குகளில் உரையாற்றியும் வருகிறார். தனிப் பறவையாகக் காலில் சக்கரங்கள் பூட்டிக், கைகளில் இறக்கைகளைக் கோர்த்து, இப்பணிகளைக் கனிவோடும், பூரிப்போடும், அயராது, அலுக்காது செய்து வரும் வைகைச் செல்விக்கு இணை எவருமில்லை. ‘செவிக் குணவில்லாத போது, சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் ‘ என்ற வள்ளுவர் வாக்குப்படி வைகைச் செல்வி, ஊழியப் பணிபுரிந்து ஓய்வான வேளைகளில், எழுத்துப் படைப்புகளில் ஈடுபட்டுக் கவிதை, கட்டுரை, கதைகள் எழுதி வருகிறார். பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களான இன்னா நாற்பது, இனியவை நாற்பது போன்று, வைகைச் செல்வியின், ‘அம்மி ‘ என்னும் ‘கவிதைகள் நாற்பது ‘ புதுயுகத் தமிழ்க் காவியப் பூங்காவில் பூத்த வாடா மலர்கள்!

    வைகைச் செல்வியின் சாதனைகள்

    வைகைச் செல்வி என்னும் புனைப்பெயர் போர்த்திய ஆனி ஜோஸ்ஃபின் மதுரையில் பிறந்து, மதுரையில் வளர்ந்து, மதுரையில் மேற் படிப்பை முடித்து மூன்று கல்லூரிப் பட்டங்கள் [M.A.(Eng.Literature), M.Com., M.B.A.] பெற்றவர். அவற்றிலும் திருப்தி அடையாமல் மேலும் சிறப்பு நுட்பங்களைப் பயின்று வேறு சில மேல்நிலை டிப்ளோமாக்களையும் (Post Graduate Diplomas in Environmental Laws, Industrial Pollution Control, Labour Laws & Computer Applications) வாங்கியவர். ‘கற்றது கடுகளவு! கல்லாதது கால் பந்து அளவு ‘, என்னும் கல்வி நெறியை மேற்கொண்டு, முனைவர் பட்டப் படிப்புக்குத் [Ph D. in Occupational Health Hazards of Women in Textile Industries & Environmental Management] தன்னைப் பதிவு செய்திருக்கிறார். சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் ஓர் மேலதிகாரியாகப் பணியாற்றி வந்தவர்.

    பள்ளிப் பருவம் முதலே கவிதைகள் எழுதத் துவங்கி கடந்த 20 வருடங்களாகக் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி வருகிறார். கல்லூரிப் பட்டமளிப்பு விழாக்கள் சிலவற்றிலும், உலக சூழ்மண்டலப் பேரவைகள் சிலவற்றிலும், தமிழ்நூல்கள் வெளியீடுக் கூட்டங்களிலும் பெண்டிர் நிலை மேம்பாடு பற்றிப் பலமுறை உரையாற்றி யிருக்கிறார். 2005 ஜூன் முதல் உதயமாகி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும், ‘வானகமே, வையகமே ‘, என்னும் சூழ்மண்டலக் கண்காணிப்பு இதழில் ‘இது நம்ம பூமி ‘ என்னும் தலையங்கக் கட்டுரையைத் தொடர்ந்து எழுதி அதன் கெளரவ ஆசிரியராகப் பணிபுரிந்து அதற்கு மெருகேற்றி, ஒளியேற்றி வருகிறார்.

    2002 டிசம்பரில் காவ்யா பதிப்பகம் வெளியிட்ட இவரது முதற் காவியம், ‘அம்மி ‘ என்னும் கவிதைத் தொகுப்பு, கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் பாடநூலாக மதிப்புப் பெற்றுள்ளது! பணிபுரியும் பெண்டிர் பாலியல் சீண்டல் இன்னல்களை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றி வைகைச் செல்வி ‘பணிச்சூழலில் பெண்களுக்கான பாதுகாப்பு ‘ என்னும் ஒரு நூலில் எழுதியுள்ளார். தமிழகத்தின் சில கவிஞர்களைச் சூழ்வெளியைப் பற்றி எழுத வைத்து ‘நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே ‘ என்னும் தலைப்பில் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். 2003 இல் அந்நூல் தமிழ்நாடு பல்கலைக் கழகத்தில் பாட நூலாக எடுத்துக் கொண்டுள்ளது. அவரது கதைகளை எல்லாம் ஒன்று திரட்டிக் ‘கறிவேப்பிலைச் செடியும், நெட்டிலிங்க மரங்களும் ‘ என்னும் தலைப்பு நூலைக் காவ்யா பதிப்பகம் 2004 டிசம்பரில் வெளியிட்டது. 2005 ஆம் ஆண்டில் ‘ஊழியப் பணிபுரியும் பெண்டிர் படும் பாலியல் சீண்டல்கள் ‘ பற்றி அவரது கைநூல் ஒன்றும் வெளியானது.

    நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2002 ஆண்டில் வைகைச் செல்வியைச் சிறந்த எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்துப் பரிசும் அளித்தது. சிறந்த பெண் எழுத்தாளியாகச் சக்தியின் 2003 ஆண்டுப் பரிசும் அவருக்குக் கிடைத்தது. திருப்பூர் லயன்ஸ் கிளப் 2003 இல் அவரைப் பாராட்டிச் சிறந்த பெண் கவிஞர்ப் பரிசைக் கொடுத்தது. 2006 பிப்ரவரியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் நடத்திய, ‘சூழ்வெளியும், சுத்தமய நிலைப்பாடும் ‘ [Environment & Sustainability] எனப்படும் உரை அரங்கில் அவர் வாசித்த, ‘பாரதத்தில் சூழ்வெளிப் பாதுகாப்பு நிலைப்பாடு ‘ என்னும் கருத்துரைப் பத்துச் சிறப்புக் கட்டுரைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. அதே சமயத்தில் திருச்சி ஸெயின்ட் ஜோஸஃப் கல்லூரி ஏற்படுத்திய, ‘விஞ்ஞானத் தமிழ் தேசீயச் சொற்பொழிவு விழாவில் ‘ [National Seminar on Scientific Tamil] வைகைச் செல்விக்குச் ‘சூழ்வெளிக் கவிஞர் ‘ [Environmental Poet] என்னும் சிறப்பு விருதை அளித்துள்ளது. திருச்சியில் உள்ள பாரதி தாசன் பல்கலைக் கழகத்தில் அவரை வெற்றிப் பெண்மணி என்று பாராட்டிக் கெளரவித்துள்ளனர். 2006 மார்ச் 8 ஆம் தேதி, நெய்வேலியில் உள்ள ‘மாதர் பொதுத்துறைப் பணியகம் ‘ வைகைச் செல்விக்குப் ‘பெண் சாதிப்பாளி ‘ என்னும் விருதைக் கொடுத்துக் கெளரவித்திருக்கிறது.

    அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆய்வாளர் ஒருவர், ‘வைகைச் செல்வியின் கவிதைகளில் பெண்ணியம் ‘ பற்றிய ஒரு தெளிவுரையைத் [Thesis] தயாரித்துள்ளார். 2004 டிசம்பரில் நேர்ந்த தெற்காசிய சுனாமிப் பாதிப்பு பற்றிய ஓர் ஆய்வுரையை, 2005 டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி முதலாண்டு நினைவுப் பூர்த்தி விழாவில் வைகைச் செல்வி உரையாற்றி வெளியிட்டார். மாதம் ஒருமுறை அண்ணா பல்கலைக் கழக வானொலி நிலைய ஒலிபரப்பில், ‘சக்தி அறிவாயடி ‘ என்னும் வழக்கமான வாயுரையில் தொடர்ந்து உரையாற்றி வருகிறார். சூழ்வெளி மாசுகள் சம்பந்தமாகக் குட்டித் திரைப்பட வெளியீடுகள் சிலவற்றைத் தயாரித்துள்ளார். அவரது கவிதைகளைச் சென்னைப் பல்கலை கழகம், பாரதியார் பல்கலைக் கழகம், மனோன்மணியன் சுந்தரனார் பல்கலைக் கழகம், தமிழ் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆகியவை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டுள்ளன. பாமரக் கலைக்கூத்து மூலம் [Folk Arts] தமிழகம் எங்கும் பரப்பும் பயிரின, உயிரினச் சூழ்வெளிக் கலாச்சாரக் குழுப் [Eco Cultural Awareness Team] படைப்புநரும் அவரே.

    தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வைகைச் செல்வியின் சிறப்புப் பணியை மெச்சி அவரை மூன்று மாத மேற்பயிற்சி பெற டென்மார்க் தேசத்திற்கு 2001 ஆண்டு அனுப்பியது. அந்த மகிழ்ச்சியான பயிற்சி சமயத்தில் நோய்வாய்ப்பட்ட அவரது அருமைத் தந்தையார் சென்னையில் எதிர்பாராது காலமாகி, வைகைச் செல்விக்கு அதிர்ச்சி அளித்து ஆறாத துயரை, நெஞ்சில் அழியாதவாறு பதித்து விட்டது!

    வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது

    மதுரை வைகை ஆற்றங்கரையில் துவங்கி, சென்னைக் கடற்கரை வரையில் என் கவிதைகள் பயணம் செய்கின்றன என்று வைகைச் செல்வி தனது ‘அம்மி ‘ கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் சொல்கிறார். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முச்சங்கம் வைத்து, முத்தமிழை வளர்த்த பாண்டிய மன்னர்களின் பாதம் பட்ட மதுரை மாநகரில் பிறந்து, வளர்ந்து, கன்னித்தமிழில் புலமை பெற்று, ஒளவையார், ஆண்டாள் வழித்தோன்றலாய் அரியதோர் காவியம் படைத்ததில் பெருமிதம் கொள்கிறார். வெள்ளமோ அல்லது வெற்று மணலோ எது காணப்பட்டாலும், தன் கற்பனைக்கு ஊற்றாய் இருந்ததோடு பெரும்பாலான துயரங்களையும், ஏமாற்றங்களையும் கவிதைகளாக மாற்றயதே அந்த வைகை ஆறுதான் என்று மனதின் உள்ளோட்டத்தைக் காட்டிக் கொள்கிறார்.

    பல்வேறு வேலை அழுத்தங்களுக்கு மத்தியில், போர்க்கள அவசரத்தில் ஏற்படும் வேதனைக்கு நடுவில் எவ்வித முயற்சியும் செய்யாமலே பல சமயங்களில் தானாக முகையவிழ்ந்த வரிகளே கவிதைகளாகப் பரிணமிதுள்ளன என்று சொல்கிறார். பூவைத் தொடுவது போல், பூவாசத்தை எப்படி ஈர்ப்பது ? கவிதை வரிகளுக்குள் கண்ணுக்குப் புலனாகாத ஏதோ ஒருமணம் இழையோட வேண்டும் என்று கூறுகிறார் வைகைச் செல்வி. சொல்ல நினைப்பதைச் சொல்ல இயலாமல் ஏற்படும் நெஞ்சுத் துடிப்பைப் போல், கவிதையின் தாக்க மிருக்க வேண்டும். நிரம்ப மெய்ப்பாடும், சிறிது கற்பனையும் கலந்தவை அவரது கவிதைகள். வைகைச் செல்வியின் படைப்புக்கு வித்திட்டவை வானவில், மழை, இலைகள், மரங்கள், மலர்கள், காதல், கனவு, காட்டு வெளி, காலம், நட்பு, சினம், மோதல், அநீதி, சுயநலம், அடிமைத்தனம், பதவி உயர்வு, பொய்வாசம் போன்றவை. அம்மி கூடத்தான் அவரது கவிதைப் பூக்களில் ஒன்றாக மலர்கிறது. படைப்புகள் உள்பட தனது எல்லா முயற்சிகளுக்கும், தேடல்களுக்கும் சேர்ந்து உழைத்து, காயம் பட்டபோது மனதைத் தேற்றி, போராட்டங்களில் தனக்கு உதவியாகத் தோள் கொடுத்து, மேம்பட்ட கல்வியையும், இறைப்பற்றையும் ஊட்டி, உன்னத நிலைக்குத் தன்னைக் கொண்டு வந்தவர், அருமைத் தந்தை திரு. ஆபிரகாம் ஞானமுத்து இஸ்ரேல் என்று தனது முன்னுரையில் போற்றுகிறார், வைகைச் செல்வி.

    எது கவிதை ? என்ன செய்யும் கவிதை ?

    கவிதை எதுவென்று வைகைச் செல்வியே தன் கவிதை ஒன்றில் கூறுகிறார். ‘ஒரு கவிதையும்… பல கவிதைகளும் ‘ என்னும் தலைப்பில், நவீனக் கவிதைகள் இடியாப்ப இழை போல், வரிகள் ஒன்றை ஒன்று ஊடுறுவிப் பின்னிக் கொண்டு உட்கருத்து விளங்காமல் சிக்கலானவை; படிப்போருக்குப் பொருள் மயக்கம் அளிப்பவை; வரிகளை மடக்கி, மடக்கி எழுதுவதா கவிதை என்று கேட்கிறார் வைகைச் செல்வி. கவிதைகளின் வரிச் சொற்கள் செங்கல் சுவர்போல் அணிவகுத்துக் கட்டப் படாமல், தெளிந்த சிற்றோடை போல் சிரித்தோடிக் கலைத்துவ மணம் பரப்ப வேண்டும். வரிகளின் மொழிகள் நளினமாகத் தாளமுடன் நடனமாடி நாதசுரக் கீதம் போலும், வீணையின் நாதம் போலும் ஒலித்து நெஞ்சில் அரங்கேற வேண்டும். வெறும் சொற்களை மட்டும் சுடவிட்டுப் பட்டாசு போல் வெடிக்க விட்டால் பார்க்க விந்தையாகவும், வேடிக்கையாகவும் மனதைத் துள்ள வைக்கும்! ஆனால் அவை எல்லாம் ஒளியற்று விண்ணில் புகையாக மறைந்து, மண்ணில் குப்பையாக நிறைந்து மாசுகளாக மண்டிக் கிடப்பவை!

    மரபில் விளையாடி
    புதுமைப் பூச்சூடி,
    நடந்த இளங் கவிதை
    நவீனப் புயலில் சிக்கி விட்டது!….

    நவீனத்தில், மேலும்
    இடியாப்பச் சிக்கல்கள்!
    மடக்கிய வரிகளுக்குள்
    அடங்குமோ ஓர் கவிதை ?

    என்று சுட்டிக் கேட்டபின் வைகைச் செல்வி தொடர்கிறார்,

    பாலும், தெளி தேனும், பாகும் பருப்புமிவை
    நாலும் கலந்துருக்கி,
    வார்த்தை விதை ஒன்று,
    மூளைக்குள் தெறிக்க,
    முளை விட்டு உணர்வுக்குள்
    கணுக் கணுவாய்ப் பயிர் வளர,

    செங்குருதிப் புனல் பாய,
    மண்ணுக்குள் அடிக்கரும்பாய்,
    மனசெல்லாம் சர்க்கரையாய்,
    நெஞ்சுக் குழிக்குள்ளே,
    இறங்கி வழிந்தோடி
    உறங்கும் உயிர்ப் பந்தை,
    (உசிப்பிப்)
    புரட்டுவது கவிதை

    என்று ஓர் அரிய விளக்கம் தருகிறார்.

    எது கவிதை என்னும் கேள்விக்கு நான் அளிக்கும் பதிலிதுதான்: கவிதை என்பது,

    உள்ளத்தைப் படமெடுத்துக் காட்டுவது!
    உலகத்தை விழித்திரையில் நாட்டுவது!
    வெள்ளத்தைச் சிற்றோடையில் கூட்டுவது!
    வெண்ணிறத்தைப் பன்னிறத்தில் தீட்டுவது!

    பொய்யுலகைக் கண்முன்னே காட்டுவது!
    பூரணத்துவம் நோக்கிக்கை நீட்டுவது!
    மெய்யுலகைத் தூண்டிலிட்டு மீட்டுவது!
    மேம்பாட்டை மின்னல்போல் ஊட்டுவது!

    கவிஞர் திலகம் புகாரியின் ‘அன்புடன் ‘ வலையிதழில் எழுந்த ‘எது கவிதை ‘ என்ற கேள்விக்கு நான் எழுதிய பதிலுடன் பின்னாங்கு வரிகளைச் சேர்த்துள்ளேன்.

    கவிதையின் தனித்துவப் பண்பு சுருங்கச் சொல்லி சுவையை அளித்தல். காவியக் கம்பரின் இராமகதை போல், சமீபத்தில் நீண்ட கவிதை வடிவில் எழுதப் பட்டது, கண்ணதாசன் படைத்த ஏசு பெருமான் வரலாறு. பத்து அல்லது இருபது வரிகளில் ஒரு கவிதை தன் முழுக் கருத்தை முரசடிக்க முடிய வில்லை யென்றால், ஐம்பது வரிகளில் அது உறுதியாகக் கூற முடியாமல் தவியாய்த் தவிக்கும்! தற்காலச் சிறு கவிதைகள் நீண்டு போனால், இரண்டு முறைகளில் அவற்றின் அழுத்தமும், நளினமும் குன்றி விடுகிறது! நேரமின்றி நோக்கும் கண்கள் விரைவாய் நுகரும் நீண்ட வரிகளில், உட்கருத்துத் தண்ணீராகித் தளர்ந்து கரைந்து விடுகிறது!

    மூச்சை எடுத்துக் கொண்டு கடைசியாக ஐம்பதாவது வரியைப் படிக்கும் போது, ஐந்தாவது வரி என்ன சொல்லியது என்பது மறந்துபோய்த் தொடர்ச்சி அறுபடுகிறது! முடிவில் கவிதை என்ன சொல்லியது என்பது புரியாமல் கண்கள் மேலும், கீழும் தாவி மனம் குழம்பி விடுகிறது! அவ்விதச் சிரம மின்றி வைகைச் செல்வியின் படைப்புக் கவிதைகளோ அவர் தன் உள்ளக் கடலில் மூழ்கி எடுத்தெழுதிய சின்னஞ்சிறு முத்துக்கள்! உதடுகள் உதிர்க்காத, உள்ளம் கனலாய் வெளிவந்து ஊட்டிய விழித்திரை மொழிகள்! உள்ளம் படமெடுத்துக் காட்டிய வெண்திரைக் காட்சிகள்! பசுமரத்து ஈட்டிபோல், படிப்போர் உள்ளத்தில் பாய்ந்து தைத்துக் குருதியுடன் கலந்து கொள்பவை!

    சர்க்கஸ் விளையாட்டு போல் வார்த்தைகளை பல்டி அடிக்க வைத்து, அந்தரத்தில் தொங்கும் வளையங்களில் தாவி ஊஞ்சல் ஆடுவதா கவிதை ? வார்த்தைகளின் வயிற்றைக் கிழித்துக் குடலை உருவி மாலை போட்டுக் கொள்வதா கவிதை ? இரண்டு மணிநேரம் சர்க்கஸ் ஆட்டத்தைக் கண்டு நாம் பிரமித்தாலும், வெள்ளித் திரையில் உள்ளத்தைத் தொடும் ஒருகலைக் காட்சிபோல், சர்க்கஸ் ஆட்டம் பல்லாண்டு காலம் மனதில் நீடிப்ப தில்லை! சுருங்கச் சொல்லிக் கதை புனையும் கவிதை ஒரு குட்டித் திரைப்படம். கருத்தாட்சி [Theme], சொல்லாட்சி [Word Power], நடையாட்சி [Style], அணியாட்சி [Simile, Metaphor, Allegory, Alliteration, Antithesis, Irony, Personification (Figure of Speech)] மூலம் உள்ளத்தைக் கவர்ந்த கவிதை, நமது நினைவில் அழியாதவாறு ஓட்டிக் கொண்டு விடுகிறது! அத்தகைய கலைப் படைப்பு நியதிகளைக் கையாண்டு எழுதப் பட்டவையே, வைகைச் செல்வியின் காவியக் கவிதைகள்! அவரது கவிதைகளில் வரும் வார்த்தைகள் வெறும் குட்டிக்கரணம் போடவில்லை! சொற்களின் வயிற்றைக் கீறி, சுவைப்போரின் நெஞ்சைப் பிளக்கவில்லை! வார்த்தைகள் சிலம்பாட்டம் ஆடாமல், சிந்துபாடிக் கோலாட்டாம் ஆடுகின்றன!

    வைகைச் செல்வி கையாளும் கவிதை நடை தென்றல் நடை. வான மண்டலத்தில் மேகங்கள் நகர்வதைப் போல் வரிகள் மிதந்து செல்கின்றன! கவிதை மொழிகள் அன்ன நடை போடுகின்றன! கராத்தே முறையில், கவிதை வரிகள் காலைத் தூக்கிப் படிப்போரை எட்டி உதைக்காமல், கசப்பையும் கனிவோடு சொல்கின்றன! புதுக் கவிதைகள் போல் சொற்கள் சடுகுடு பாடிக் கபடி ஆடாமல், நீரின் மீது படகுபோல் மெதுவாய்த் தானாய்ப் போகின்றன. துப்பாக்கி ரவைகள் போல் சுட்டுத் தள்ளி மனத்தில் புரட்சி செய்தாலும், புதுக் கவிதைகளின் வரிகள் ஏனோ மனதில் பதிந்து கொள்வதில்லை! காரணம் புதுக் கவிதைகள் பலவற்றின் பொருள் பளிச்செனத் தெரியாமல் புதிராகப் பதுங்கிக் கொண்டிருப்பதால்தான்! தேவையற்ற அமங்கலச் சொற்களைப் புகுத்திக் கொண்டு, படிப்போரை அதிர்ச்சியிலும், அருவருப்பிலும், ஆங்காரத்திலும் அவரது கவிதைகள் தள்ளுவதில்லை; ஆணும், பெண்ணும், சிறுவரும், வயோதிகரும் அவரது கவிதைகளைப் படிக்கலாம். படிப்போர் கவனத்தை ஈர்க்கவும், பணப் பெட்டியை நிரப்பவும், பகட்டாக அவரது கவிதைக் காவியம் படைக்கபட வில்லை!

    வைகைச் செல்வியின் கவிதைகள் தனித்துவம் கொண்டவை. கலைத்துவம் செழித்தவை. உண்மைக் கருத்துக்கள் கவிதைக்கு ஆத்மாக உள்ளொளி காட்டிப் புறவொளி வீசுகின்றன. கவிதைகள் யாவும் தனித்துவ முறையில் தாமாக நம்முடன் உரையாடுகின்றன. வைகைச் செல்வியின் எந்தக் கவிதையும் சங்கு ஊதி உரத்த குரலில் பிறருக்கு உபதேசிக்க வில்லை! ஒரு கவிதை சங்கை வாயில் வைத்துக் கொண்டு சிங்கம் போல் உறுமிக் கர்ஜிக்கும் போது அதன் சப்தம் செவிப்பறையில் விழுவதற்குப் பதிலாக அதைக் கிழித்துப் போட்டு மூளையில் பதியாமல் நழுவுகிறது. சொல்லாமல் சொல்லும் நெறியும், செய்யாமல் செய்த உதவியும் என்னாளும் மறக்கப் படுவ தில்லை. வைகைச் செல்வியின் வரிகள் வாழ்க்கை நெறியைச் சொல்லாமல் சொல்கின்றன. ஒவ்வொரு கவிதையும் அவரது மனதைக் கண்ணாடி போல் காட்டுகிறது. ‘அம்மி ‘ என்னும் அவரது கவிதைக் கோப்பு வழக்கம் போல் பெண்களின் பிரச்சனைகளைக் கும்மி அடிக்காமல், பளிச்செனக் கண்ணில் மின்னல்போல் வெட்டி அதிர்ச்சி கொடுக்கிறது. கண்ணில் விழும் இல்லறத் தூசுகளை மெல்லவே காட்டுகிறது! ஆண்-பெண் நட்பு உறவுகளில் அனுதினம் முட்களாய்க் குத்திவரும் முள்வேலிகளைக் காட்டுகிறது! சூழ்வெளி மாசுகளை அகண்ட வெண்திரையில் ஒளிபெருக்கிக் காட்டுகிறது!

    வைகைச் செல்வியின் கவிதைகள் சில நமக்குக் கதை சொல்லுகின்றன! சில நாடகமாய் கண்முன் நடக்கின்றன! சில புயல்போல் நெஞ்சைத் தாக்குகின்றன! சில தென்றல் போல் மேனியைத் தழுவுகின்றன! சில கவிதைகள் நெஞ்சை முள்ளாய்க் குத்துகின்றன! மெய்த்துவ வாழ்க்கை முறைகளை மெல்லிய நடையில் சொல்லுகின்றன. சில கவிதைகளில் முடிவில் வரும் ஓரிரு வரிகளைப் புரிந்து கொள்வது சற்று கடினமாக உள்ளது! சொற்கள் எளிதாக இருந்தாலும், தெளிவாகத் தெரிந்தாலும் வரிகள் ஒட்டு மொத்தமாய் என்ன உரைக்கின்றன என்று புரியாமலும் போகலாம்!

    பெண்மையும், விடுதலையும்

    கேளுங்கள், கொடுக்கப்படும்! தட்டுங்கள் திறக்கப்படும் என்று பைபிள் சொல்கிறது. ஆனால் வைகைச் செல்வி, ‘உள்ளே ஒரு வானவில் ‘ என்னும் கவிதையில்:

    தாழ் திறக்கும் என்றால்தான்
    காத்திருத்தல் சுகம்,
    இல்லையெனில்
    மரண வேதனை!
    தாழ் திறக்கா விட்டாலும்
    மரண வேதனை!

    அந்திப் பொழுதின் வானவில்!

    பரிதி மறையும் போது செவ்வானின் சிவப்பொளி பட்டால், அந்திப் பொழுதின் வானவில் எந்த நிறத்தில் ஒளிக்கும்! நிச்சயம் ஏழு நிறங்களைக் காண முடியாது! வெண்ணிற ஒளி ஒன்றுதான் மழைத்துளிகளின் ஊடே நுழையும் போது பன்னிற வானவில் தோன்றும். செந்நிற ஒளியில் வானவில்லின் கண்சிவந்து போகும், கதவு திறக்கும் என்று காத்திருக்கும் மங்கையின் விழிகளைப் போல்!

    பகலென்று தெரிந்தால்,
    சிறகுகளை விரிக்கலாம்!
    இரவென்று தெரிந்தால்
    கூட்டுக்குள் ஒடுங்கலாம்!

    அந்திப் பொழுதாய் இருந்தாலும்,
    சில்லென்ற குளிர்காற்றும்,
    சிங்காரப் பூமணமும்,
    உன் முத்தம் தந்திடுமோ ?

    கால மயக்கத்தில்
    கண் விழித்துப் பார்க்கையில்
    பகலா, இரவா ஏதும் புரியவில்லை!
    அந்திப் பொழுதின் வானவில் ….

    செந்நிறத்தில் மங்கிக் கலங்கிப் போயிருக்கும் மங்கையின் மதி மயக்கத்தைக் காட்டுகிறார்.

    பெண்டிர் விடுதலையைப் பற்றிக் குறிப்பிடும் போது,

    பாரதத்தில் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஆண், பெண் அனைவரும் அடிமைகளாய்ச் சிறையிலிருந்தோம்! காந்தி, நேரு, பட்டேல், பாரதியார் வீர சுதந்திரம் வேண்டிப் போராட நம் நாட்டில் சுதந்திரச் சூரியன் உதித்துச் சிறைக் கதவுகள் திறந்தன! ஆனால் இந்திய சமூதாயத்துக்கு முழு விடுதலை கிடைக்க வில்லை! உண்மையாகக் கிடைத்தது பாதி விடுதலையே! அதுவும் யாருக்குக் கிடைத்தது ? பாதித் தொகையான ஆடவருக்கு மட்டுமே! மீதித் தொகையானப் பெண்டிருக்கு ? விடுதலைப் பதில் ஆடவரின் தடுதலை பெண்ணுக்குக் கிடைத்தது! பெண்களின் விடுதலை களவாடப் பட்டு, இரண்டு மடங்கு அசுர பலத்துடன் ஆதிக்கம் செலுத்தும் ஆடவருக்குப் பெண்கள் அடிமைகள் ஆக்கப் பட்டார்! அன்னியனுக்கு அடிமையாய் இருந்த பெண்டிரினம், இப்போது ஆடவருக்கு அடிமை ஆகி யிருக்கிறது! இவ்வுலகம் ஆடவரின் உலகம்! ஆடவர்களால் உண்டாக்கப் பட்ட உலகம்! ஆடவருக்காக உண்டாக்கப் பட்ட உலகம்! பாரத தேச வீடுகளின் கூரையைப் பிரித்துப் பார்த்தால் இப்போதும் பெரும்பான்மையான வீடுகளில், பெண்கள் இரண்டாம் வகுப்புப் பிறவிகளாகத்தான் நடத்தப்பட்டு வருகிறார்கள். பிறருக்குத் தெரியாமலும், வெளியே சொல்ல முடியாமலும் பல்லாயிரக் கணக்கான பாரதப் பெண்டிர், ஆடவரைப் பல்லக்கில் தூக்கிக் கொண்டு அடிமைகளாய், சேடிகளாய்ப் பணிசெய்து மெளனக் கண்ணீர் விட்டு ஊமைகளாய் நெஞ்சுக்குள்ளே அழுது கொண்டிருக்கிறார்கள்!

    அன்று

    அடிமைச் சிறையில் இருந்தோம்.
    காந்தியும், நேருவும், பட்டேலும், ….
    பாரதியாரும்,
    வீர சுதந்திரம் வேண்டிப்
    (போராட)
    (சிறைக்) கதவுகள் திறந்தன!
    தலைமறைகள் கடந்தோட
    (பெண்களாகிய) நாங்கள்,
    இன்றும் சிறையில்தான்!
    ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்,
    சாவி
    எங்களிடமே உள்ளது!

    பாரத தேசத்தில் பூரண சுதந்திரம் அடைந்தவர் மெய்யாக ஆடவர் மட்டுமே! தேவையான மானிட உரிமைகளுக்குப் போராடி ஏமாற்றம் அடையும் பெண்டிருக்கு எப்படிக் கிடைக்கும் விடுதலை ? எப்போது கிடைக்கும் உரிமைகள் ? அடிமைப் பட்ட பெண்ணுலகம் வீறுகொண்டு எழுந்து சிறைக் கதவுகளை படாரென்று உடைக்கவோ அல்லது பூட்டைக் கிளிக்கென்று திறக்கவோ அவரிடமே உறுதியும், சாவியும் உள்ளது என்று சுட்டிக் காட்டுவது அவரது புரட்சி மனதை வெளிப்படுத்துகிறது. ஆனால் வல்லமை பெற்ற ஆணாதிக்க உலகம் பெண்களின் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, கண்ணைக் கட்டி, கையைக் கட்டி, காலைக் கட்டிச் சாவியைக் களவாடி, நெஞ்சுறுதியை நசுக்கி வருகிறது என்பது கட்டுரையாளர் கருத்து!

    ‘உயிரினும் இந்தப் பெண்மை இனிதோ ? ‘ என்னும் கவிதையில் வாழ்வின் இன்ப துன்பங்களில் ஒன்றான ஆண்-பெண் நட்பைப் பற்றி அஞ்சாமல் நெஞ்சுறுதியுடன் கூறுகிறார். தாமரை இலைமேல் ஒட்டாமல் உருளும் நீர்த்துளி போல், ஆணும் பெண்ணும் தோழமை உணர்வோடு பழக முடியும் என்பதை, வெகு, வெகு அழகாகக் கூறுகிறார்! வாழ்க்கையில் தந்தை, தமையன், கணவன், புதல்வனைத் தவிர பிரியமான மற்றோர் அன்னிய ஆடவனுடன் உரையாடுவது, உறவாடுவது, உலவி வருவது முற்றிலும் தவறு; அதுவும் நட்பு என்பது அறவே கூடாது என்னும் பாட்டி காலப் பழைய கோட்பாடுகள் நாட்டை விட்டு நழுவிச் செல்லும் காலமிது! ஆணும், பெண்ணும் தாமரை இலை மீதோடும் தண்ணீர் போல், ஒட்டாமல் உறவாடலாம், உரையாடலாம், ஒன்றாகப் பழகிக் கொள்ளலாம் என்ற மனிதப் பண்பு நியதி அவரது கவிதைகளிலும், கதைகளிலும் [ ‘தாயின் மடியில் ‘] கனிவாக வெளிப்படையாகக் காணப்படுகின்றன.

    ‘சுற்றுப்புறத் தூய்மையை முதலில்
    கற்றுக்கொள்!
    பிறகு கற்றுக்கொடு!
    இல்லாவிடில்,
    நம் கல்லறைகளை
    நாமே கட்ட ஆரம்பிபோம்! ‘

    ‘நட்பு ஓர் கண்ணாடிக் கிண்ணம்! எந்தக் கைபட்டும் அது உடைய வேண்டிய தில்லை! சொந்தக் கரங்களே சில வேளைகளில் அதைத் தவறப் பார்க்கின்றன! ‘
    ‘செந்தீ யணைக்க நீருண்டு!
    சினத்தீ யணைக்க யாருண்டு ?

    ‘மங்கையராகப் பிறப்பதற்குப் பெரும்
    மாதவம் செய்திட வேண்டு மம்மா! ‘

    என்று கவிமணி பாடினார்.

    ஆனால் வைகைச் செல்வி பெற்ற தாயைப் பார்த்துப் பெண்ணைப் பெறுவதற்கு நீ மாதவம் செய்யத் தேவையில்லை என்று எதிர்வாதம் புரிகிறார்! பெண்ணென்று உளவிப் பெண்கருவை நீக்கும் கண்ணிய மனிதர் வாழும் இந்தியாவில் பெண் குழந்தை பிறப்பதே பாபமாகக் கருதப்பட்டுப் பெண்டிர் எண்ணிக்கை ஆண்டு தோறும் குறைந்து வருகிறது.

    என் தாயே! ..
    என்னைப் பெற நீ
    மாதவம் செய்திருக்கத்
    தேவை யில்லை!
    அந்தக் கூட்டத்தில்
    எந்தன் பிரிய நண்பன் இருக்கிறான்.
    பகற் பொழுதினிலேயே
    அவனுடன் நானமர இயல வில்லையே!
    (ஆனால்) இவ்விரவில்… ?
    அவன் ஓர் ஆணாம்!
    நானோர் பெண்ணாம்!
    என் மனத்தின் ஆண்மை
    யாருக்குப் புரியும் ?
    ஆதாமுக்குப் பிறகு ஆடவனு மில்லை!
    ஏவாளுக்குப் பிறகு பெண்டிரு மில்லை!
    இது இங்கே யாருக்குப் புரியும் ?

    நட்பு, சுமை, சுயநலம், மெளனம்!

    ‘நட்பு ஓர் அழகிய கண்ணாடிக் கிண்ணம்! அது ஓர் அற்புதச் சித்திரக் கிண்ணம்! ஆனால் எளிதில் உடைந்து ஒட்டாமல் போகும் கண்ணாடிக் கிண்ணம் ‘ என்று ஓர் இனிய சிறு கதையைத் தன் கவிதை ஒன்றில் கூறுகிறார் நமக்கு.

    ஒரு முரட்டுக் குதிரை முட்செடி ஒன்றை மிதித்த பின் கூறுகிறதாம்: ‘தளிர்ச் செடியே! உனது முள் என் காலை யிடறிக் காயப் படுத்தியது; எனக்கு வலித்தது உண்மைதான்! ஆனால் அந்த முள்ளில்லா விட்டால், நான் உன்னைக் கடந்தல்லவா போயிருப்பேன், ‘ என்று தணிவாய்ச் சொன்னது.

    குதிரைக் கால் நசுக்கிய முட்செடி கால்பட்டுக் கசங்கினாலும், கசிந்த இலைகள் ஒளியுடன் பலபலக்க, ‘குதிரையே! உன்னைத் தெரியாமல் குத்தி விட்டேன் நான். மன்னித்துவிடு என்னை ‘ என்று கனிவாய் சொல்லியது.

    குதிரை வெட்கத்துடன் தலைகவிழ்ந்து, ‘தளிர்ச் செடியே! நானும் உன்னைத் தெரியாமல் மிதித்து விட்டேன், என்னை நீ மன்னித்து விடு ‘ என்று பணிவாய்ச் சொன்னதாம்.

    இதுதான் நட்பு என்று தன் குட்டிக் கதையில் சுட்டிக் காட்டுகிறார், வைகைச் செல்வி. ‘நட்பு ஓர் கண்ணாடிக் கிண்ணம்! எந்தக் கைபட்டும் அது உடைய வேண்டிய தில்லை! சொந்தக் கரங்களே சில வேளைகளில் அதைத் தவறப் பார்க்கின்றன! அவனும் நானும் ஆணும் பெண்ணுமாக அல்லாமல், என்றென்றும் தோழர்களாய், அருகருகே நிற்கிறோம்! ஆயினும் எங்களுக்குள் ஓர் சிறு இடைவெளி, முகக்கண்களின் இடைத்தூரம், எமக்கு நடுவில்! அச்சிறு அகலத்திலே காலநதி கரை புரண்டோடுகிறது, ‘ என்று ஆண்-பெண் இடையே நேரும் புனித நட்பைப் பற்றி அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்! கணவனின் பிணைப்பிலோ, நண்பனின் உறவிலோ அல்லது ஆண்-பெண் நட்பிலோ பழக்க, வழக்க முறைகளில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பது வெகு வெகு அபூர்வம்! பிரச்சனைகள் தீவிரமாய்ப் பற்றி எரியாமல் இருப்பதற்கு யாராவது ஒருவர் ஊமையாகவோ, செவிடாகவோ அல்லது குருடாகவோ இருக்க வேண்டும்! குதிரையும், முட்செடியும் எதிர் எதிரே நின்று தானிழைத்த தவறை உணர்ந்து வருந்தி, மன்னிப்புக் கேட்டுக் கொள்வது, ஒரு மகத்தான சமூகக் காட்சி! மெய்யான தம்பதிகளோ, நண்பர்களோ அல்லது உறவினர்களோ யாரும் அவ்வித அமைதி வழியில் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வது அபூர்வம்!

    வாழத் தெரியாத தோழன் ஒருவனுக்கு, ‘மெளனம் ‘ என்னும் கவிதையில் பெண்ணொருத்தி ஓர் ஊசி போடுகிறாள். அவனுக்கு கடிதத்தில் என்ன எழுதுவது ? புறக்கணிக்கும் தன் மனதை எழுத்தில் தோழனுக்கு எப்படிக் காட்டுவது ? கண்ணெதிரே காணும் போது, உறவை முறிக்கப் போகும் பெண்ணொருத்தி எப்படி அதைத் தெரிவிப்பாள் ?

    நானுனக்கு
    என்ன எழுத வேண்டுமென்று
    தெரியவில்லை!
    ஆனால் (உனக்கு)
    என்ன எழுதக் கூடாதெனத்
    தெரிகிறது!

    உன்னிடம் நான்
    என்ன பேச வேண்டும் என்று
    இதுவரையில் தெரிய வில்லை!
    ஆனால் (உன்னிடம்)
    என்ன பேசக் கூடாதெனத்
    தெரிகிறது!

    அதனால்தான் நீ
    நேரில் இருக்கையில் பேசாமலும்,
    தூரப் போய்விட்ட பிறகு
    எழுதாமலும் இருக்கிறேன்!

    இவ்விதம் வாழத் தெரியாத தோழன் மீது வாளெடுத்து வீசாமல், எளிய வாதத்தின் மூலமாக மெளன ஊசி போட்டு வெளியே தள்ளும் பெண்ணை எவராவது பார்த்ததுண்டா ? தோழனைக் காயப் படுத்தாமல், ‘போயொழி, திரும்பி வராதே ‘ என்று புறக்கணிப்பதை இத்தனை மென்மையாக, மெழுகு மொழியில் எந்தப் பெண்கவி சொல்லி யிருக்கிறார் ?

    ‘உறவு என்றொரு சொல்லிருந்தால், பிரிவு என்றொரு பொருளிருக்கும், ‘ என்று கவிஞர் கண்ணதாசன் வெள்ளித் திரைப் படமொன்றில் பாடல் புனைந்தார். பிரியப் போகும் நண்பன் ஒருவன் தனது தோழி மீது பூவை வீசி விட்டாலும், பூவிலுள்ள முள் அவளது கண்ணைக் குத்தி விடுகிறது! அவன் அவளிடம் சொல்லாமல் போகிறான். பிரிவுத் துயரைச் சிறிதும் காட்டிக் கொள்ளாமல் மிருகத்தைப் போல் நீங்குகிறான். அதைக் கண்டு மனம் வருந்துகிறாள் ஒரு மாது! படிப்போர் நெஞ்சைத் தொடுகிறது, அவரது பாடலின் பரிவு வரிகளும், ஊசிமொழி நடையும்!

    நண்பனே!

    எந்நேரத்திலும், எதற்காகவும் நீ
    என்னைப் பிரிந்து போகலாம்! அது
    உன்னுடைய சுதந்திரம்!
    பிறரைப் போல நீயும்,
    என் மீது
    கல்லெறியலாம்! ….

    என்னைக்
    காயப் படுத்தலாம்!
    கூழாங் கற்கள் முதல்
    பாறாங் கற்கள் வரை, எனக்குப்
    பரிச்சயமே!
    அன்பின் மிகுதியால்
    பளிங்குக் கற்களை வீசியவரும் உண்டு!
    ஆனால்
    உனக்கு உரிமை அதிகம்..!

    நண்பனே! நீதான்
    கதவைத் திறந்து
    (என்னை) எட்டிப் பார்த்தாய்!
    ஆச்சரிப் பட்டாய்!
    அன்பு காட்டினாய்!
    முகம் தெரியாத போதும்,
    பெயர் சொல்லி அழைத்தாய்!
    பிறகென்ன ?
    எல்லா வற்றையும், நீயே மூடலாம்!
    ஆயினும்
    நீ திறந்தது சாளரக் கதவுதான்!

    யாரென்று அறிவதற்குள்
    பிரிந்திட்டாய்!
    கற்களை வீசியவர்
    மத்தியில்
    நீயோ பூவை வீசினாய்!
    முள்ளொன்று
    கண்ணில் தங்கி விட்டாலும்,
    என்னில்
    ஒருகணம் மென்மை (உணர்ச்சி)!
    கண்ணிமைக்க மறந்தது
    என் குற்றம்தான்!

    என்னைப் போல் நிறமுடைய
    அத்தூதனைத் தவிர
    வேறெவனும்
    எனக்குச் சொந்த மில்லை!
    சொல்லாமல் பிரிந்திட்டாய்!
    தண்ணிலவும், செங்கதிரும்
    யார் அழைத்து வந்தன ?
    யார் சொல்லிப் போயின ?
    நீயும் பிரிந்து செல்லலாம்,
    அது உன் சுதந்திரம்!

    என்று கசப்பு மொழிகளை உதிர்த்து, நண்பனுக்கு நிரந்தர ஓய்வை அளிக்கிறார், வைகைச் செல்வி!

    சினமென்னும் கொல்லியைப் பற்றிக் கூறும் போது, ஒளவை மூதாட்டி போல் முதுமொழியில் கூறுகிறார்:

    செந்தீ யணைக்க நீருண்டு!
    சினத்தீ யணைக்க யாருண்டு ?

    என்று தீப்பறக்கச் சொல்லும் சொற்கள் மனப்பாறையில் அழுத்தமாகப் பொறிக்கப் படுகின்றன!

    எரிமலை வெடிக்க
    அக்கினிப் பொறிகள்
    சரமாய்ச் சொரியும்! …
    மல்லிகை பந்தலில்
    அனற் கங்குகள்! …
    வெள்ளை உள்ளம்,
    மெல்லிய தளிர்க்கொடி எல்லாம்…
    கோபத் தீயில் ..
    உருகி யோடும்! …
    அறிவு மயங்கி, ஆன்மா மறைய
    உணர்ச்சிக் கொதிப்பில்… ஆட்டம் போடுது
    மனித மிருகம்!

    வேரை அழிக்கும் செந்தீக்கு
    உன்னில் அசையும்,
    உயிர்ப்பூத் தென்றலைச்
    சுவைத் தறிய வழியேது ?

    தொழிற் துறைகளில் பெண்டிர் பணியாற்றும் போது, அவர்களுக்குப் பதவி உயர்வுகள் என்பது பாலைவனக் கனவுகளாய்ப் போவதைப் பற்றி ஒரு கவிதையில் வருந்துகிறார். ஆடவருக்கு ஊழியப் பயிற்சி அளித்த மூத்த அனுபவப் பெண்ணுக்கு முன்பாக, அதே வாலிபர் பதவி உயர்வு பெற்று அதே பெண்ணுக்கு அதிபதியாக ஆவது, ஆடவர் உத்தியோக உலகில் வழக்கமாக நேரும் அதிர்ச்சி நிகழ்ச்சிகள்.

    ஆண்டுகள் பலவாய் ஓடி…ஓடி
    இறுதியில்
    (பதவி உயர்வென்னும்)
    அந்த ஏணியை அடைந்தேன்!
    கூரிய கற்களும்… கொடிய முட்களும்
    குத்திக் கிழித்தும்
    (உயர்ச்சி நோக்கி ஆவலாய்)
    ஓடிய கால்கள் ….!
    ஏணியின் உயரம்
    அயர்ச்சியை அளிக்க ….
    புத்துயிர் பெற்றுக்
    கண்களைத் திறந்தேன்!

    காலை எடுத்து
    முதற்படி வைப்பதற்குள் ….
    என்னைத் தாண்டிச்
    (சென்றன) சில காகங்கள் ….
    கழுத்தில் சலங்கையுடன்,
    காலில் எலியுடன்,
    ஏணியைத் தள்ளி
    (என்னையும் மிதித்துக் கொண்டு)
    இடத்தை நிரப்பின!

    என்று மனவேதனைப் படுகிறார்!

    ‘பலி ‘ என்னும் கவிதையில் ஒரு பெண்மேல் விழும் பழிகளைப் பற்றி வர்ணிக்கிறார். பெண்ணின் உடல் உழைப்பும், வேலை ஊதியமும் பிறருக்கு அனுதினமும் பயன்பட்டாலும், புகழ் கிடைப்பதற்குப் பதிலாகப் பழியும் பாவமும், வலியும் வருவது யாருக்கு ? அதே அந்தப் பெண்களுக்குத்தான்!

    ‘நானிட்ட புள்ளிகளில் யார் யாரோ கோலமிடுகிறார்! நான் வரைந்த ஓவியத்துக்கு யார் யாரோ வண்ணம் தீட்டுகிறார்! நான் வடித்த சிற்பத்தில் யார் உளியோ மெருகேற்றுகிறது! நான் படைத்த கவிதைக்கு யார் யாரோ அர்த்தம் சொல்கிறார், ‘ என்று குற்றங்கள் சாட்டி அவரது அம்மிக் கவிதை தொகுப்பின் மீது ஆய்வுக் கட்டுரை எழுதும் எனக்குப் பாராட்டை அளிக்கா விட்டாலும், பதிலாக என் முதுகில் ஓங்கி இப்படி அடிக்காமல் விட்டிருக்கலாம்!

    என் வீட்டு ரோஜாப்பூ
    யாருடைய வீட்டு மேஜையிலோ ?
    நான் கோர்த்த மணிமாலை
    எந்தப் பொம்மை கழுத்திலோ ?
    என் தோட்ட மருதாணி
    யாருடைய விரல்களிலோ ?
    என் வீட்டுத் தென்னங் கீற்று
    யார் வாசல் தோரணமோ ?

    ஆனால்
    யார் யாருக்கோ வரவேண்டிய
    வலியும், துக்கமும்
    ஒட்டுமொத்தமாய்
    (வருவது)
    எனக்கு மட்டும்தான்!

    பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாகப் புற்றுநோயாய்ப் பரவித் துயர்ப்படுத்தும் ஜாதி, மத, இன, மாநில வேறுபாடுகள், ஏற்றத் தாழ்வு நிலைகள் மக்களிடையே உண்டாக்கிப் பேரளவில் பிளவு படுத்திக், குழுவினங்கள் ஒன்றுக் கொன்று போரிட்டும், தீயிட்டும், கொன்றழித்தும் பழிவாங்கும் படலங்களைப் பல கவிதைகளில் காட்டுகிறார், வைகைச் செல்வி.

    காஷ்மீர் முதல் கன்னியா குமரி முனைவரை இந்திய மக்களுக்கு இராமன் மீதுள்ள பற்றுபோல, பாரத நாட்டின் மீது பற்றுமில்லை, பாசமுமில்லை, பரிவுமில்லை. சுமார் 200 ஆண்டுகளாக இந்தியாவை அடிமை பூமியாக மிதித்து வந்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்காக 50 கோடி மக்கள் ஒன்றாகச் சேர்ந்து புரட்சி செய்தோம், போராடினோம், முடிவில் வெற்றி பெற்றோம். விடுதலை பெற்றோம். ஆனால் இப்போது அனைவரும் மீண்டும் பிளவுபட்டு சுயநலக் குழுக்களாய் பிரிந்து கொண்டு யார் பலசாலி என்று நிரூபிக்க ஒருவரை ஒருவர் வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்.

    ‘நமக்குள் ஓர் வல்லரசு ‘ என்னும் படைப்பில் நாட்டில் நச்சுப் பாம்புகளாய் முளைத்து நாசம் செய்துவரும் மூர்க்க மதவாதிகளின் அநீதிக் கொலைகளைக் கேட்டு கொதிப்படைகிறார். பாரத நாட்டின் பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களின் தீவிர அடிப்படை மதவாதிகள் சீக்கியர், இஸ்லாமியர், கிறித்துவர், தலித்துகள் போன்ற அப்பாவிச் சிறுப்பான்மை மக்களை தீயிலிட்டும், கத்தி, கம்புகளால் காயப் படுத்தியும், கோயில்களை இடித்தும், அவமானப் படுத்தியும், கொலை செய்தும் வருவது விடுதலைப் பாரதத்தில் அநீதியான, சட்ட விரோதமான கோரக் கொடுஞ் செயல்களே!

    என்னைப் பார்த்து
    ஊர் கூடிச் சொல்கிறது:
    ‘நான் பள்ளத்தில் இருக்கேனாம் ‘
    அவர்கள் எல்லாரும் ஏறி நிற்கையில்
    என் தட்டு மட்டும்
    தாழ்ந்தி ருக்கிறது!
    நான் மறைந்து விட்டேனாம்!

    கட்டைகள் மிதக்கையில்,
    கல்லொன்று ஆழத்தில் உறங்குகிறது!….
    மலைதான் என்னை இடறிற்று,
    கூழாங்கற்கள் அல்ல! ….

    ஏறிக் கொண்டிருக்கையில்
    ஏணியை எடுத்திருந்தால்
    ஏற்றுக் கொண்டிருப்பேன்!

    மேலேறி வந்து மூச்சிரைக்க நிற்பதற்குள், எட்டி உதைக்கின்ற நெஞ்சங்கள் ஏராளம் என்று பெருமூச்சு விடுகிறார்! ‘கீழே விழுந்தாலும் சருகல்ல நான் சாவதற்கு ‘ என்று கூறி வீறுகொண்டு எழுந்து தாக்கத் தயாராகிறார். ஆணவத் தேரில் பவனிவரும் ஆதிக்கவாதிகளைக் கவிதையில் சுட்டிக் காட்டுகிறார், வைகைச் செல்வி.

    ஆணவத் தேரேறி

    (என்னை)
    ஒடுக்கப் பார்த்தாலும்,
    கண்ணாடிக் குப்பிக்குள்
    (வெடித்து விடும் பெண்மை எனும்)
    புயல்காற்று ஒடுங்குமோ ?

    என்று பெண்ணென்பவள் ஒரு புயல் என்று ஆணவச் செவியில் அறைகிறார், வைகைச் செல்வி.

    ‘நாணமும், அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம், நங்கையர்க்கு அல்ல ‘ என்று பாரதியார் அழுத்திச் சொல்வதை வைகைச் செல்வி முத்திரை அடித்து வெளியிடுகிறார்.

    அச்சம் எனக்கில்லை!
    தாழ்வும் எனக்கில்லை!
    எதிராளி பலம் பார்த்து (நான்)
    போருக்கு வரவில்லை!
    இந்நெருப்பில் கைவைக்க
    எவர் வந்தால் என்ன ? ….

    தொடர்ந்து விழுகின்ற
    சம்மட்டி அடிகள்…
    உலைக் களத்தில் புரள்கையில் ….
    வலியின் கீற்றுகள்
    உடலெங்கும் பரவும்!
    சிறகுகளை விரித்து நான் எழும்பிப்
    பறக்கையில்
    எனக்கெதற்கு மரக்கால்கள் ?

    என்று கனல் தெறிக்கும் வரிகளில் அதிகாரக் கோலோச்சி ஆணவத் தேரேறி ஒடுக்கப் பார்க்கும் ஆதிக்கவாசிகள் மீது ஆவேசமாய்க் கணைகளை வீசி எறிகிறார்.

    ரயில்பெட்டி எரித்துச் சவப்பெட்டி செய்யலாமா ?

    ‘இமயம் முதல் குமரி வரை மண்ணும் மாறவில்லை! விண்ணும் மாறவில்லை! ஆனால் அவற்றிடையே வாழும் மனிதர் மாறிவிட்டார்! பல்வேறு மரபினர், சாதியினர், மொழியினர், மதத்தைச் சார்ந்தவர் பாரதத்தில் உள்ளார். மனம் விட்டுச் சிரித்தாலும், அவரது நெஞ்சிக்குள் பல்லாண்டு காலம் பகையுடன் புகையும் ஒரு நச்சுத்தீ உருவாகிக் கசிகிறது!

    உணர்ச்சி முழக்கங்கள்

    தீக்குச்சி போலாகி,
    மனத்தை உரசுகையில்
    (கனல் பற்றி எரிந்து விளைபவை)
    ஆறாத ரணங்கள் அம்மா! ….
    சமுதாய இருட்டிற்கு
    வெளிச்சம் தேவைதான்!

    அதற்காக
    உன்னை நானும்,
    என்னை நீயும்
    எரிக்கும் முயற்சியில் இறங்குவதா ? ….
    ரயில்பெட்டி எரித்துச்
    சவப்பெட்டி செய்யலாமா ?

    என்று டெல்லி ரயில் நிலையத்தில் எரிந்த ரயில் பெட்டிகளில் கரிந்துபோன மனிதர் மீது, மனமுருகி மரணக் காவியம் படைக்கிறார்.

    புத்தருக்கு அசோக மன்னர் எழுப்பிய கற்தூண்கள் போல எந்த மன்னனும் இராமனுக்கு பிறந்த மண்ணான அயோத்தியா புரியில் தூண்கள் கட்டவில்லை. அங்கே மசூதி யிருந்த தளத்தில் கோயிலிருந்ததாக ஒரு புனைகதை. இராமன் தன்னை அவதார நாயகனாக் கருதவில்லை என்று வால்மீகி ராமாயணம் மூலம் தெரிய வருகிறது. ஆனால் இந்து மதவாதிகள், அரசாங்க ஆதிக்கவாதிகள் இராமனைத் தேவனாக நம்பிக் கொண்டு, இந்த்துக்களையும் நம்ப வைத்துச் சட்டத்துக்கு விரோதமாய், புதியதோர் ஆலயம் கட்ட இஸ்லாமியரின் மசூதியை ஓரிவில் இடித்துத் தள்ளினார்கள். புனிதன் இராமன் பிறந்த புண்ணிய பூமியே முதலில் இந்து முஸ்லீம் கலவரத்துக்கு அடித்தளமாகி, பிறகு அது குஜராத்தில் கொந்தளிப்பாகி, டெல்லியில் ரயில்பெட்டி எரிப்பாகி இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தீயிட்டுக் கொளுத்தி தற்காலத்து முற்போக்கு மாந்தர், கற்காலத்தை நோக்கிப் பிற்போக்கில் சென்று, அரசியல் வாதிகளின் தூண்டுகோலில் மாட்டி நாட்டிலெங்கும் வினை விதைத்தார்கள்.

    இனிய இந்தியனே!
    பிறனை நேசித்துப்
    பிறனைப் புரிந்து கொண்டால்
    (உறுதியாய்) நமக்குள்
    ஓர் வல்லரசு தோன்றாதா ?

    இவ்வாறு வல்லரசு என்னும் வார்த்தையை இரட்டைப் பொருளில் விளக்குகிறார்.

    ‘உயிரின் ஒலியில் ‘ என்னும் காதல் கவிதை அந்திம வேளையில் உயிர் அணையப் போகும் மங்கை ஒருத்தியின் நேசத்தை கல்லும் உருகும்படி அன்பனுக்குக் கனிவாகச் சொல்கிறது. இங்கே ஒரு சிறுகதை உருவாகிறது. துன்ப முடிவை நோக்கிப் பயணம் செய்யும் அன்பின் அத்தமன நாடகம்!

    உயிர் ஊசலாடுகிறது, அந்தி நேரத்தில் மங்கி அணைந்திடும் வெளிச்சம் போல். ஆயினும் என் நேசத்தை நீ யின்னும் அறியவில்லை என்பது என்னை உறுத்துகிறது! அணையப் போகும் விளக்கின் உயிர்த் துடிப்பு உன் செவியில் கேட்கிறாதா ? அன்பனே! எத்தனை முறைகள் மீண்டும், மீண்டும் சொல்லி யிருக்கிறேன், உன்னை நேசிக்கிறேன் என்று. மரணத்தின் வாசலில் நுழைந்தாலும் என் நேசம் வலியது. எமனது இரும்புக் கரங்கள் என்னை இழுத்துச் செல்வதற்குள், உன் விரல்களைப் பற்றி அவ்வார்த்தைகளை ஒருமுறைச் சொல்ல என் ஆன்மா துடிக்கிறது. ஆனால் சொற்கள் உதடுக்குள் உறைந்து போய் விட்டன! சொற்கள் குஞ்சுகள் போல் ஓட்டை உடைத்து வெளிவரத் துடிக்கின்றன. என் அன்புக்குரியவனே! இனி நேரமில்லையே அதற்கு ? உறுதி படைத்த நம்பிக்கை அது என்பதை ஐம்புலன்கள் உணருமா ? வெண்ணிறத்தில் பன்னிற வானவில் மறைந்துள்ளது ஏன் உனக்கு தெரியாமல் போயிற்று ?

    இப்ப்போது உடலும், உணர்வும் மெளனச் சமாதியில், நிரந்தரமாய்ச் சங்கமம் அடையப் போகின்றன! மூழ்கும் படகின் மூச்சுப் நின்று பயணம் முடியப் போகிறது! உடலுக்கு நங்கூரம் பாய்ச்சி உயிருக்கு விடுதலை! அந்திப் பொழுதோ கண்மூடப் போகிறது! …தீபம் அணையும் சமயம்! .. கொஞ்ச நேரந்தான். பிறகோ ஓசையும், ஒளியுமில்லா உலகில் மூழ்கிப் போவேன். அதற்குள் அறைக்குள்ளே அசைந்தாடும் உன் நிழலை மட்டும் எனக்குக் காட்டுவாயா ? என்று அணையும் விளக்கு அதன் துணையிடம் துன்ப நாடகம் போடுகிறது!

    பந்தக்கால் வேண்டாம்! சொந்தக்கால் போதுமடா!

    ‘என்ன விலை காதலே ‘ என்னும் கவிதையில் காதலர் இல்லறத் தம்பதிகளாய் ஆகும்போது ஏற்படும் தொல்லைகளை எடுத்துக் காட்டுகிறார். காதல் புரியும் ஆண், பெண் இருவர் திருமணம் புரிகையில் அவரது இருதரப்புக் குடும்பத்தாருடன் அடிக்கடி உறவாடி ஒட்டிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் நேருகிறது. ஆனால் காதலிக்கும் ஆணும் பெண்ணும் கல்யாணம் செய்தபின் தனியாக ஓர் உல்லாசத் தீவில் வாழத் திட்ட மிடுகிறார்! ஆனால் உல்லாசத் தீவில் அன்னை, தந்தை, தமையன், தமக்கை இல்லாமல் தனியாக வாழ முடியுமா ? தற்காலக் குடும்பங்களில் முக்கியமாக தம்பதிகளின் வயோதிகப் பெற்றோர் பாரமாகிக் கண்காணிக்கப் படாமல் புறக்கணிக்கப் படுகிறார். சகோதர, சகோதரிகள் உறவாட முடியாதபடி விலக்கப் படுகிறார். தம்பதிகளின் வீட்டுப் பிரச்சனையே கைவச நிதிப் பற்றாக்குறைக்குப் பிறகு, வயோதிகப் பெற்றோரைப் பேணும் பொறுப்புதான்! பொறுப்பு யார் மீது விழுகிறது என்னும் தீராத போரே! பெண்ணின் பெற்றோர் அறவே வரவேற்கப் படுவதில்லை! ஆனால் ஆண்டுதோறும் வேண்டும் தீபாவளிச் சன்மானங்கள் பெண் வீட்டார் கொண்டு வந்தால் பேரானந்தம், பெருமதிப்பு, பெரு வரவேற்பு! தீபாவளி விளக்குகள் அணைந்த பிறகு மறுபடியும் அவர்மீது பெருவெறுப்பு, அருவருப்பு, கடுகடுப்பு! இவை யாவும் வீடுகளில் மீண்டும் மீண்டும் நிகழ்பவை.

    பெண்ணின் பெற்றோருக்குக் கணவன் தரும் வெறுப்பு வெகுமதி போல், பலரது வீடுகளில் மனைவியும் கணவனின் பெற்றோரை வரவேற்பதில்லை. புற்று நோயுடன் மருத்துவம் பெற, ஊரிலிருந்து அழைத்து வந்த வயோதிகத் தாயைப் படியிலே நிறுத்தி ‘வீட்டுக்குள் அழைத்து வரக் கூடாது, மருத்துவ மனைக்குக் கொண்டு செல், ‘ என்று கணவனுக்கு கட்டளை யிட்ட ஒரு கருணையற்ற மாதை நான் அறிவேன்.

    ‘சென்ற நிமிடம் வரை
    நீயும் நானும் காதலித்தது….
    உண்மை!
    (திருமணம் புரிய ஒப்புக் கொண்டோம்)

    இப்போது நீ சொல்கிறாய்,
    அண்ணன் ஒரு தண்டச் சோறு,
    அவன் வேண்டாமாம்! ….
    அணியணியாய்க் கழற்றி
    (பொன் நகைகள்)
    அத்தனையும் விற்று
    என்னைப் படிக்க வைத்த
    என்னருமை அம்மா வேண்டாமாம்!
    எட்டு விரல்களைத்
    தட்டச்சில் தாரை வார்த்து (உதவிய)
    என் அக்காள் வேண்டாமாம்!
    ஓய்வு பெற்ற பின்னும்
    ஒன்னே கால் லட்சத்தை
    அன்பளிப்பாய்த் தந்த
    (என்னருமை)
    அப்பாவும் வேண்டாமாம்!

    ‘அன்பனே! என்னைக் காதலித்த காலத்தில் அப்பாவை, அம்மாவைத் தப்பாமல் தரிசித்தாய்! அக்கா, தங்கையிடம் சிரிப்போடு பேசினாய், பழகினாய்! வெள்ளித் திரைக்கு அண்ணன்தான் உன் கூட்டாளி! திருமணம் என்றவுடன் அத்தனை பேர்களையும் அறுத்தெறியும் பாதகனே!

    கேளடா அறிவு கெட்டவனே!
    கல்யாணம் ஆகிவிட்டால்,
    கல்லாகி விடுவேனா ?
    கயவர்கள் உலகத்தில்
    சுயநலமே வாழ்க்கை யெனில்
    எனக்குப்
    பந்தக்கால் தேவை யில்லை!
    சொந்தக்கால் போதுமடா !

    என்று காதலன் கன்னத்தில் பளாரென்று சொற்களால் வைகைச் செல்வி அறைவது நம் நெஞ்சில் இடிச் சத்தம் போல் எதிரொலிக்கிறது! தன்னை மட்டும் நேசித்து தன்னுடன் பிறந்தாரைத் தூசிக்கும் காதலன் உண்மையான காதலனா என்று ஐயுற்று அவனைப் புறக்கணிக்கிறார். திருமணம் புரியும் ஒருவன் தன்னை நேசிக்கும் ஒரு தனிப் பெண்ணை மணப்பதாகத் தெரிந்தாலும், மெய்யாக அவன் மணம் புரிவது ஒரு கூட்டுறவுப் பண்பில் வளர்ந்த குடும்பப் பெண்ணைத்தான். ஆக திருமணச் சந்திப்பு நிலையத்தில் சேரும் இரயில் தொடர்கள் இரண்டு. இருதரப்பு எஞ்சின்கள் ஒரே பாதையில் ஒதுங்கி ஓய்வெடுக்கும் போது மோதிக் கொள்ளாமல் இருப்பது அபூர்வம். சந்திக்கும் போது அடுத்தடுத்த பாதைகளில் இணையாக இயங்கி, மோதாமல் போதல் அறிவுடைமை.

    வனம்பாடி, வானம்பாடி, வனராணி

    வைகைச் செல்வியை ஆரம்பித்திலேயே ‘சூழ்வெளிக் காப்பாளர் ‘ என்று நான் சுட்டிக் காட்டினேன். தற்போது சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் ஓர் மேலதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். பணிபுரிந்து வரும் சூழ்வெளிக் கண்காணிப்புத் துறையின் துப்புரவு குறிக்கோள்களைப் பல கவிதைகளில் வைகைச் செல்வி எளிதாகத் தெளிவாக எடுத்துக் காட்டி யிருக்கிறார். தமிழகத்தின் சிறந்த கவிஞர்கள் 66 பேர் சூழ்வெளித் தூய்மைப்பாடு பற்றி எழுதிய 70 கவிதைகளை ‘நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே ‘ என்னும் தலைப்பில் தொகுத்து 2003 டிசம்பரில் வெளியிட்டிருக்கிறார். 2003 இல் தமிழ்நாடு பல்கலைக் கழகத்தில் பாட நூலாக எடுத்துக் கொள்ளப் பட்டது அந்நூலின் ஒப்பில்லாத் தகுதிக்கும், உயர்வுக்கும் சான்றாக நிற்கிறது. வானம்பாடியான வைகைச் செல்வி ஒரு வனம்பாடி, ஒரு வானகம்பாடி, ஒரு வனராணி!

    ‘திக்குத் தெரியாத காட்டில் ‘ சிக்கிக் கொண்டு, கடைசியில் மரத்தின் நிழலில் சுகங் கண்டு அதன் கீழ் களைப்பாறிப் பூரிப்படைகிறார்.

    நிலையற்ற இன்பத்தில்
    நெடுங்காலம் மூழ்கி விட்டேன்!
    போதை தெளிந்த பின்னும்
    புறப்பட மனமில்லை! ….
    போதி மரத்தின் கீழ்
    பொழுதெல்லாம் தூங்கியதால்
    ‘நான் ‘ மட்டும்
    என்னில் விசுவரூபம் எடுத்தது!
    நீதியும், நேர்மையும் ….
    ஓங்கி அழைத்தாலும்,
    மரத்தின் நிழலே
    சுகமாய்ப் போயிற்று!

    ‘கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று ஆரம்பம் ‘ என்னும் படைப்பில் ஒரு கவிதை நாடகத்தைக் காணலாம். தொழில் யுகத்தில் மக்கள் ஊழியத்துக்கு உதவ தொழிற்சாலைகள் ஏறக்குறைய ஆண்டு முழுவதும் ஓடுகின்றன. கழிவுத் துணுக்குகள் வாயுவாகவோ, திரவமாகவோ அல்லது திடவத் தூளாகவோ வெளித் தள்ளாத தொழிற்சாலைகள் உலகில் எங்கும் கிடையா! தொழில் நிர்வாகிகள் கழிவுத் துணுக்குகளை சூழ் வெளியைத் தொடுவதற்கு முன்பு வடிகட்டியோ, ரசயான முறையில் பிரித்தெடுத்தோ அவற்றைச் சுத்தீகரிக்க வேண்டும். அரசாங்கக் கட்டுப்பாடு ஆணையாளர் அவ்விதம் செய்யப் படுவத்துவதை அடிக்கடி உளவு செய்து, மீறித் தவறு செய்பவரைத் தண்டிக்க வேண்டும். அல்லாவிடில் அவற்றின் கழிவுப் பொருட்கள் புகையாகவும், மாசு திரவமாகவும், திடப் பொருளாகவும் வெளியேறிச் சூழ்வெளியின் நீர்வளம், நிலவளம், வாயுமண்டலம் மாசுபடுகின்றன. அதுவே அவர் கவிதையில் விளக்க வரும் புதுயுக தொழிற்துறை நச்சுக்கள் புரியும் யுத்தம்!

    நான்கு திசைகளிலும்
    புகை போக்கிகள்!
    நச்சுக் காற்று நெளிந்து ஊடுறுவி
    மனித நாற்றுகளை
    மெளனமாய்த் தலைசாய்க்க
    கத்தியின்றி…ரத்தமின்றி
    யுத்த மொன்று ஆரம்பம்!

    நாள்தோறும் பேருந்து,
    வாகனங்கள், வண்டிகளின்
    கரிய புகையால்
    வெளியை நிரப்பும்! ….
    ஓங்கியுயர்
    மரங்களை வெட்டி விட்டார்.
    மழையும்தான் பொய்க்காதோ
    மண்ணுலகம் தன்னில் ? ….

    ஆலைகள் வைத்தார், அருகில்தான் கல்விச்
    சாலைகள் வைத்தார்!
    ஆலைக் கழிவும், ரசாயன நீரும்
    மாணவருக்கு
    அங்கே இலவசமாய் அளிக்கப்படும்!

    மனிதரால் மாசுபட்ட
    வாயு மண்டலத்துக்கோர்
    முகமிருந்தால்
    அம்மைத் தழும்புகள்
    நிறைந்திருக்கும்! ….
    கத்தியின்றி…ரத்தமின்றி
    யுத்த மொன்று ஆரம்பம்!
    சத்தமின்றி வருவதால்
    யாருக்கும் கவலை யில்லை!
    ஊருக்கும் புரிய வில்லை!

    சுற்றுப்புறம் என்பது
    எங்கோ யில்லை!
    என்னைச் சுற்றி …. உன்னைச் சுற்றி
    நம்மைச் சுற்றித்தான்.

    சுற்றுப்புறத் தூய்மையை முதலில்
    கற்றுக்கொள்!
    பிறகு கற்றுக்கொடு!
    இல்லாவிடில்,
    நம் கல்லறைகளை
    நாமே கட்ட ஆரம்பிப்போம்!

    வைகைச் செல்வி வனாந்திர மரங்களின் உயிர்த்தோழி! மரங்களை நேசிக்கும் வனராணி அவர். அவற்றைப் பின்வருமிரண்டு கவிதைகளில் காணலாம்.

    ‘மரங்களே!… ஓ மரங்களே! ‘ என்னும் கவிதையில் வனராணி தன் கனவுகளை நமக்குக் காண்பிக்கிறார்.

    மரங்களை நேசிக்கிறேன்,

    மனிதர்களைக் காட்டிலும் பிரியமாய்.
    இனிய வசந்தத்தில்
    இலைகள்
    பகலில்.. பல்வேறு நிறத்தில்
    மெல்லிய மஞ்சலில், ..
    அரக்கு வண்ணத்தில்
    கரும் பச்சையாய், இளம் பச்சையாய்
    கண்சிமிட்டிச் சிரிக்கும்!
    என்னை அருகே அழைக்க ..
    தவம் செய்கின்றன.
    அருகிருக்கையில்

    தாழக்கிளை பரப்பி, (என்னைத்)
    தொட்டுவிடத் துடிக்கும்!
    தூரத்தி லிருந்தாலும்
    கரமசைத்துக் கூப்பிடும்! ….
    என்னைப் போல
    நிமிர்ந்து நிற்கும் யூகலிப்டஸ்!
    இப்படி எத்தனை எத்தனை மரங்கள்
    என்னை நேசிக்கின்றன!

    அதனால் சொல்கிறேன்,
    மரங்களை வெட்டாதீர்!
    வெட்டுகையில்
    இதயத் துடுப்பு எனக்கு
    மெல்ல, மெல்லக் குறையும்!

    இறுதியாக ‘வரம் வேண்டும் ‘, என்னும் கற்பனைக் கவிதை அவரது அம்மிக் கவிதைத் தொகுப்பில் ஓர் உன்னதப் படைப்பு என்பது என் கருத்து. அவர் கிறித்துவ மதத்தில் நம்பிக்கை கொண்டவ ராயினும், அவர் தன்னை ஓர் இந்துவாகக் கருதிக் கொண்டு, இறைவனிடம் வரம் கேட்கிறார். வனராணி ஆயினும் வனாந்திரத்தில் பல்லாண்டுகள் முனிவர் போல் தவம் செய்யாது ஓர் வரம் கேட்கிறார்.

    இறைவா! ஒரு
    வரம் வேண்டும் எனக்கு.
    மரமாய் மாற வரம் வேண்டும்!

    அந்த மரத்தில்
    ஆயிரம் கரங்கள் வரும்!
    எதற்கு ? … (கனிகள் பறிக்க)
    ஆயிரம் ஆயிரம் பூப் பூக்கும்!
    காக்கை, குருவி தேடி வரும்!
    கவிதை சொல்லக் கூடு கட்டும்!

    வெட்ட வெளியில் நின்றாலும்,
    பட்ட மரமாய் ஆனாலும்,
    பூங்கதவாய் உருவெடுப்பேன்!
    வெட்ட வரும் மனிதனை
    விரட்டிப் பிடித்து
    உயரே தொங்க விடுவேன்!

    ஏ மனிதா!
    நீ ஊதித் தள்ளும் புகையால் நாற்றம்,
    நீ கட்டிய ஆலைப் புகையால்
    மூச்சு முட்டும்!
    நீ ஓட்டும்
    வாகனக் கரிப் புகையால்,

    வாயு மண்டலம் மாசுபடும்!

    நானோ
    தென்றல் காற்றைத் தவழ விட்டுக்
    கொண்டல் தொட்டு
    மழை பெய்து,
    சுற்றுச் சூழலைச் சீர் செய்வேன்!
    இறைவன் படைத்த பூமியிது!
    இதைத்
    தூசுபடுத்த, மாசுபடுத்த
    எவர்க்கு மிங்கே உரிமை யில்லை!

    மரத்தை வளர்த்திடுவாய்,
    பரம்பொருள் கட்டளை
    இது வென்பேன்.

    (மரத்தை)
    வெட்டிப் போட எத்தனித்தால்,
    கட்டிப் போடுவேன்
    காலமெல்லாம்!

    கடைசியில் ஒளவை மூதாட்டி அறிவுரை போல், ‘சுற்றுச் சூழல் சீர்கெட்டால், அற்றுப் போகும் மனித இனம்! ‘ என்று மனிதருக்குப் பறைசாற்றுகிறார்.

    காடும் மலையும் இல்லை யென்றால்
    வீடும் நாடும் இனி யேது ?
    சுற்றுச் சூழல் சீர்கெட்டால்
    அற்றுப் போகும் மனித இனம்!

    ‘காட்டு வெளியினிலே ‘ என்னும் கவிதையில் ஒரு துன்பியல் நாடகம் அரங்கேறுகிறது! காதலனை நம்பி மோசம் போன ஒரு கோதையின் சிறு கதையைக் கேளுங்கள்.

    ‘என்னை நீ அந்த அடர்ந்த காட்டுக்குள்ளே அழைத்துச் சென்றாய். மான் குட்டியைப் போல நானும் துள்ளி ஓடினேன். வனத்தின் மண் வாசனை முகர்ந்தேன். ஓவ்வோர் இலையாகத் தொட்டு, எல்லா மரங்களும் நம்மைச் சுற்றி மறைத்துக் கொண்ட போது, நான் உன்னைச் சுவாசித்தேன். நீ களிப்புடன் கவிதை பாடினாய் அப்போது! ‘மரங்கள் தமது கரங்களை நீட்டி, வானின் மீது எழுத ஓயாமல் போராடுகிறது! ஆனால் பூமியோ மரங்களுக்கு விடுதலை தருவதில்லை! ‘ என்று மொழிந்து ஓர் அழகிய கவிதையைப் படைத்தாய்.

    உறவுக்குப் பிறகு வருவது பிரிவுதானே! அன்று சகுந்தலைக்கு அவ்விதம் நேர்ந்தது! நீ துஷ்யந்தன் பரம்பரையில் வந்தவன் தானே! பிரிந்து எங்கே போனாய் ? உன் மாளிகைப் பூங்காவுக்கு! அங்கே வசந்த காலம் காத்திருந்தது உனக்கு. ஆனால் நானோ அந்தக் காட்டு நிகழ்ச்சியை நினைத்த வண்ணம் தனியே கவலையைச் சுமந்து கொண்டு வீடு திரும்பினேன். இங்கே என்னுலகில் இலையுதிர் காலம். துக்கமுடன் தாழ்வாரத் தூணில் சாய்ந்திருக்கிறேன். என்மீது விழுந்த வேப்பமர இலையொன்று மனதைக் கலைத்தது! அது நான் கானகத்தில் மான்போல் துள்ளி விளையாடியதை மீண்டும் நினைவூட்டும். என்னை மறந்து போன கவிஞனே! அன்று காட்டிற்குள் என்னை அழைத்துச் செல்லாதிருந்தால், என் மனசும் இன்று கன்னியாக அல்லாவா வாழ்ந்து கொண்டிருக்கும் ? ‘ என்று கண்களில் வெந்நீர்த் துளிகளைச் சிந்துகிறாள் பாவை! மரத்தில் இலையுதிர் காலத்து இலைகளைப் போல், மங்கையின் கண்ணீர் துளிகள் பொலபொலவென உதிர்ந்தன வென்று உவமை காட்டுகிறார்.

    என் கூடு எதுவெனத் தெரிய வில்லை!

    ‘கல்லும், வில்லும்…புல்லாங்குழலும் ‘ என்னும் கவிதையில், கூடு தேடும் இல்லறப் பறவை ஒன்று கூடு தெரியாமல் தடுமாறித் தவிக்கும் தனிமை நிலையை உருக்கமாகக் கூறுகிறார்.

    எல்லாப் பறவைகளும்
    கூடுகளுக்குப் போய்விட்டன!
    அந்தி மயங்கும் வேளையில்
    தனிப் பறவையாய் அலைந்தும்
    என் கூடு எதுவென
    எனக்குத் தெரிய வில்லை!
    பிறிதோர் கூட்டில்
    யார் என்னைச் சேர்ப்பார் ?

    அத்துவானக் காட்டில்
    வேடரைத் தவிர யாருமறியேன்!
    உன் கையில்
    வில்லையும், கல்லையும்
    எதிர்பார்த்தேன்!
    (ஆனால் நீ)
    புல்லாங் குழலுடன்
    வந்தாய்!
    கூடு விட்டுக் கூடு செல்ல
    காலெதற்கு ? சிறகெதற்கு ?
    கலைந்த கூடுகள்
    காணாமல் போய்விட்டால்,
    பிறிதோர் கூட்டில்
    யார் என்னைச் சேர்ப்பார் ?

    நானுனக்குப் பல்லக்குத் தூக்கியல்லவா ?

    ‘பல்லக்குத் தூக்கி ‘ என்னும் கவிதைப் படைப்பில், திருமணமாகித் தன்மனை விட்டுப் புதுமனையில் அடிமையாய்ப் புகுந்த ஒரு பெண் படும்பாடு அழகாக எடுத்துக் காட்டப் படுகிறது!

    நான் உன் நாட்டுக்குத்
    திரும்பி வந்த அகதி!
    உன் மூச்சுக்கள் நிறைந்த
    காற்றைச் சுவாசிக்கிறேன்.
    ஒரு வாய்ச் சோற்றுக்கும்,
    ஒரு குவளை நீருக்கும்
    கையேந்தி நிற்கையில்
    கட்டிப் பிடித்தென்னை
    (நீ) முத்த மிடுகையிலே,
    நெஞ்சக்குழி
    கண்ணீரால் நிரம்பியது!

    உன் சன்னதியில்
    நின்றாலும்,
    தூபக் காட்டும்
    (தீபப் பூசாரி) அல்ல நான்!
    நாயகன் பொற்பாதம் கழுவிட
    வாசற் படியோரம்
    (என்னேரமும்)
    காத்திருக்கும் அடிமை நான்!

    என் அரசே!
    கம்பீரமாக நீ உலா வருகையில்,
    உன்னோ டிருப்பதற்கு
    கட்டாயத் தகுதி….
    (என்ன எனக்கு ?)
    பட்டத்து ராணியா ?
    ஆமென்று சொல்லாதே!
    (பாமரனே!)
    பல்லக்குத் தூக்கி யன்றோ ?
    எந்நாளும் நானுனக்கு ?

    அடுத்துச் ‘சுயநலக் ‘ கூட்டத்தைப் பற்றிச் சொல்லும் போது, வைகைச் செல்வி:

    பக்கத்தில் வந்தால் …
    பல்லிளிக்கும் பச்சோந்தி…!
    விரட்டிப் பயனில்லை!
    ஒன்று பலவாய்ப் பெருகி
    கூட்டம் கூட்டமாய் எதிர்க்கும்!
    போராடிப் போராடி
    எதிர்க்கப் பலமின்றிச்
    சடலம் சரியும்!
    காக்கையும் காத்திருக்கும்,
    நிரந்தரமாய்ப் பிணந்தின்ன!

    பெண்சிசுக் கொலையைப் பற்றி, சுமை ‘ என்னும் கவிதையில் வைகைச் செல்வி பனிரெண்டு வரிகளில் எழுதுகிறார்: ‘பாரமாக, யாரும் பாவமெனப் பாராத, எவரும் விரும்பாத ஓர் அழுக்குக் குப்பையாக, ஒரு மூலையில் கிடக்கிறது! கப்பலின் சுமை மிதமிஞ்சிப் போனாலும், கடலில் அதை எறிந்து விடாதே! அதன் பிணைப்புக் கயிற்றை அறுத்து விடாதே, ‘ என்று சிசுவை உண்டாக்கிய ஆண், பெண் இருபாலரையும் வேண்டிக் கொள்கிறார்.

    கேட்பாரற்ற தொரு
    அழுக்கு மூட்டையாக,
    வேண்டாத குப்பையாகத்தான்
    ஒரு மூலையில் கிடக்கிறேன்!
    கப்பலின் சுமை
    மிதமிஞ்சிப் போனாலும்
    என்னை.. நடுக் கடலில்
    எறிந்து விடாதே! …
    பிணைப்புக் கயிறை
    அறுத்து விடாதே!

    ‘கருவில் பெண்ணை அழிப்போர்க்குக்
    காட்டை அழித்தல் பெரிதாமோ ? ‘

    என்றும் ‘மெல்லச் சாகுமோ மலைக் காடுகளும் ‘ என்னும் கவிதையில் பெண்சிசு அழிப்பை மேலும் கண்டிக்கிறார்.

    பாரதியாரின் பிறந்த நாளைக் கொண்டாடும், ‘பாரதியின் கனவுகளே ‘ என்னும் ஒரு கவிதையில் பணக்கார வர்க்கத்தினரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்: பதவி ஆசை பெருகிப் பணத்தைக் கொட்டி பேராசனத்தைப் பிடித்து ஆட்சி செய்யும் ஆதிக்கவாதிகள் மக்களின் உரிமையைச் சுரண்டி, உழைப்பை உறிஞ்சி, ஊதியத்தைக் களவாடிப் பணப் பெருச்சாலியாகி வருகிறார்! அவர்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

    வெள்ளையனுக்கு நாம் அடிமை யில்லை என்று சொன்னாய்! ஆமாம் விடுதலை பெற்ற பிறகு, ஆதிக்கம் செலுத்தும் போது அரசியல்வாதி வெள்ளையனைப் பின்பற்றி அவனுக்குச் சமமாகி விட்டனர்! ஒரு புறத்தில் வெள்ளையன் முன்னேறி நிலவில் தடம்வைத்து ஆராச்சிக்காக அங்கே குழி தோண்டுகிறான்! ஆனால் நம் ஆட்சியாளர் கண்ணீர் விட்டு வளர்த்த அருமைச் சுதந்திர மரத்தை வெட்டிப் பூமியில் குழி தோண்டுகிறார்கள், வேரிலும் ஏதாவது மரக் கனிகள் அகப்படுமா என்ற பேராசையில்!

    ஏசு பெருமான் பிறந்த நாளைக் கொண்டாடும் தினத்தை வர்ணிக்கும் கிறிஸ்துமஸ் கவிதை ஒன்று:

    மனிதன் படைக்கப் பட்டதோ
    தேவ சாயலில், அவன்
    உருமாற்றம் ஆனதோ
    ஹிட்லராய்,
    முசோலினியாய்!
    இன்றவன்
    கடவுள் பாதி
    மிருகம் பாதி
    கலந்து செய்த கலவை!

    மனிதன் ஆளுவது மிருக நாடாயினும், அவன் ஆளவந்த தேசம் ஓர் அன்பு நாடுதான்!

    கடவுளும், மனிதனும்
    ஒன்றிணைந்த அற்புதம்,
    என்பதை நினை வூட்டவே
    இன்று [கிறிஸ்மஸ் தினத்தில்]
    மறுபடி பிறக்கிறது,
    பெத்லகேம் குழந்தை.

    என்று மெல்லோசையில் ஏசுவெனும் தெய்வச்சிசு பிறப்பை இனிமையாகக் கூறுகிறார்.

    அம்மி நூலில் நாற்பது கவிதைகளின் தலைப்பும் அவற்றின் பக்கமும் உள்ள முகப்பு அட்டவணை ஏன் தவிர்க்கப் பட்டது என்று தெரிய வில்லை. ‘அம்மி ‘ என்னும் தலைப்பை விட கவிதை நூலுக்கு, மரத்துக்கு மதிப்பளிக்கும் ‘வரம் வேண்டும் ‘ என்னும் தலைப்பு பொருத்தமானது என்பது கட்டுரையாளர் கருத்து. அவரது சூழ்வெளிக் கண்காணிப்புப் பணியையும், சிந்தனையில் ஊறிய வேட்கையும், காவியப் கலைப் படைப்புத் திறனையும் அந்த தலைப்பு ஒன்றாக இணைக்கிறது. மண்ணில் மரம் வேண்டும் என்று கடவுளிடம் வரம் வேண்டும் வனராணி வைகைச் செல்வி.

    இறுதியாகத் தமிழ்க் கவியரசி வைகைச் செல்விக்கு எனது வேண்டுகோள்! ‘நீங்கள் நட்டு நீரூற்றி வளர்த்த ‘கவிதைகள் நாற்பது ‘ ஆலமரங்களாய்ப் பெருகி விழுதுகள் விட்டுக் ‘கவிதைகள் நானூறு ‘ என்னும் சோலை வனங்களாய் விரிந்து, இல்லறத் தூசுகளையும், சூழ்வெளி மாசுகளையும், மக்களுக்கு எடுத்துக் காட்டட்டும்! நாற்பது கவிதைகளில் அவரது இன்ப, துன்ப, ஏமாற்றங்கள், இலட்சியங்கள், மனத் தாக்கல்கள் மின்மினி போல் மின்னி மின்னிப் பயணம் செய்து வரலாற்று மைல் கற்களாய் கண்ணில் படுகின்றன.

    தமிழன்னை பெற்ற மாதர்குல மாணிக்கங்களில் ஒருவரான வைகைச் செல்வி, தமிழ் கூறும் நல்லுகத்தின் ‘வையகச் செல்வியாக’ வளர்ந்தோங்க என் வாழ்த்துக்கள்.

    ++++++++++++++++++

    வைகைச் செல்வியின் ‘அம்மி ‘ காவ்யா வெளியீடு,
    [முதல் பதிப்பு: டிசம்பர் 2002], விலை ரூ.40
    14. முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம்,
    கோடம்பாக்கம், சென்னை: 600 024

    +++++++++++++++

    jayabarat@tnt21.com [S. Jayabarathan (April 10, 2006)]

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • நெற்றிக் கண்

    கவிநயா

     

    எப்படி அடக்கினாலும் அடங்காமல்

    விட்டேனா பார் என்று

    எகிறுகிறது மனசு.

     

    பொறு, பொறு,

    இன்னும் கொஞ்சமே கொஞ்சம் பொறு

    என்கிறது அறிவு.

     

    அடக்கி மடக்கி முடக்கி வைத்தவை யெல்லாம்

    அடிவயிற்றில் சென்று அமர்ந்து கொண்டு

    அனலாக எரித்துத் தகிக்கிறது.

     

    விழிகளினின்றும் வழிகின்ற உவர் புனல்,

    வெந்நீர் ஊற்றாய் முகிழ்த்து,

    பேரருவியாய்க் கொதித்துப் பெருகுகிறது.

     

    நெஞ்சுக் குழிக்குள்ளிருந்து

    நெருப்புக் கங்குகளாய்ப் பிரசவிக்கத் தயாரான வார்த்தைகள்,

    நாவின் நுனியில் நின்று கொண்டு நர்த்தனம் ஆடுகின்றன.

     

    தெறிக்கும் கனலின் வெம்மை விதையில்

    ஊறித் திளைத்து முளைக்கத் தொடங்கி யிருக்கிறது,

    நெற்றிக் கண்ணொன்று.

     

    படத்துக்கு நன்றி: http://theholyarunachala.wordpress.com/category/rajarishi-sathguru-sri-rajalinga-swamigal-merges-with-lord-sri-arunachaleshwara-2/

     

    Share
  • ரேகை

    செண்பக ஜெகதீசன்

     

    போடும் ஒரு நெல்லுக்காக

    கிளி எடுத்த

    பொய்யான சீட்டை வைத்துப்

    புளுகுவதை நம்பாமல்,

    கைரேகைக்

    கதைகளையும் நம்பாமல்,

    கைரேகை தேயக்

    கடும் உழைப்பு உழைத்தால்

    உன்ரேகை(அடையாளம்) தெரியும்

    உயர்வாக…!

     

    படத்துக்கு நன்றி: http://suite101.com/article/palm-reading-describes-four-personality-types-a91142

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 53 (07.01.13)

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

     
               (6)
    எம் தலைவி மீது
    பெருங்காதல் கொண்டவராய்
    அன்று சோலையில்
    கையுறை ஏந்தி வந்து
    அவளை அடைய உதவிகேட்டு
    என் பின்னே வந்தார் தலைவர்.
    அன்று அவருக்கு அயலாராய்
    நின்றிருந்தோம் நாங்கள்..
    அவர் விருப்பத்துக்கு உடன்பட்டோம்.
    ஆனால் இன்று
    அயலார்போல் அவர் நின்றிருக்க
    இரந்து கேட்கும் நிலையில் நாங்கள்..
    அவரின் அருள் மறந்த குணம்
    ஏழையாகிய யாம் எங்ஙனம் அறிவோம்?!
    மாந்தர் முகத்திலுள்ள கண்களையும்
    நீரில் தோன்றும் நிலவின் நிழலைக் கண்டு
    மலர்ந்த கருங்குவளை மலர்களையும் கண்டு
    எது கண் எது மலர் என்றறியாத வண்டுகள்
    ஊசலாடும் வளமுடைய
    புகார் அன்றோ எம் நகரம்!
                (7)
    மோதுகின்ற பெரிய அலைகளால் தாக்கப்பட்டு
    அசைந்து ஒலிக்கின்ற வாயுடைய சங்குகள்,
    ஆற்று மணலில் சிறுமியர்
    எழுதிவைத்த இழைத்து வைத்த வண்டலை
    உழுது அழிக்கும்.
    அது கண்டு கோபமுற்ற சிறுமிகள்
    தாம் அணிந்திருந்த மலர்மாலைகளை
    மென்விரல்களால் அறுத்தெறிந்து
    அச்சங்குகள் மீது வீசுவர்.
    அப்போது ஆங்கே சிதறிய நீலமலர்கள்
    யாரோ ஒருவர்
    இமை சுருக்கிப் பார்ப்பது போல்
    தோற்றமளித்திட,
    அம்மாலைப்பொழுதினில் கடற்கரை வந்தவர்
    அவற்றைக் கண்டு
    மகளிரின் கண்களோ என்று எண்ணித்
    தொடர்ந்து செல்லாமல் மயங்கி நிற்பர்.
    அத்தகு இயல்புடைய
    புகார் அன்றோ எம் நகரம்!
    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    படத்துக்கு நன்றி:
    http://www.tamilvu.org/courses/degree/c012/c0123/html/c01236l4.htm
    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    புதிய வருடத்தில் நான் பேச்ப்போவது மிக மிகப் பழைய விஷயங்கள் சம்பந்தப்பட்டவைதான்.. ஆனால் இவை மட்டும் இல்லையேல் இந்த இடங்களில் மனிதனின் ஆதி நாகரீகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று எதிர்கால மக்களுக்கு எப்படித் தெரிய வரும்.. நான் சொல்வது இந்த மியூசியங்கள்தான்.

    பல வருடங்களாகவே எனது பழக்க வழக்கங்களில் இது ஒன்றுதான். இந்தியாவில் எந்த நகருக்கு செல்ல நேர்ந்தாலும் நான் அங்கே தெரிந்து கொள்ள விழைவது அந்த நகரில் மியூசியம் இருக்கிறதா என்பதுதான்.. இப்படித்தான் விஜயவாடாவில் உள்ள மியூசியத்தில் காலத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்ட ஒரு நடராஜர் கற்சிலையைக் காண நேரிட்டது. அங்கேயே அந்த நகரின் மத்தியிலேயே ஒரு சிறிய பாறை மலை.. அந்த மலையினைக் குடைந்து சின்னச் சின்ன கோயில்கள். ஒரு குடைவரைக் கோயிலில் மகிஷாசுர மர்த்தனியும் நடராஜரும் செதுக்கப்பட்டுள்ளனர்.. கொஞ்சமும் தவறாமல் அதே பாணியில் இரட்டையர் போல இருந்த நடராஜரின் ஒரு கற்சிலை அந்தப் பிராந்தியத்தில் கண்டெடுக்கப்பட்டு அங்கே உள்ள மியூசியத்தில் சேர்க்கப்ப்பட்டதும் இந்த கற்சிலை கலையில் ஆர்வம் உள்ளவருக்கு விருந்தாக இருந்ததும் நினைவுக்கு வருகிறது.. அதே போல இன்னொரு விஷயமும் அதன் மூலம் அறியலாம். காலத்தால் மகேந்திர பல்லவனின் குடைவரைகளுக்கு முற்பட்டதாக இருப்பதையும், நடராஜர் அந்தப் பழைய காலத்தில் எவ்வாறெல்லாம் இந்தப் பகுதியில் வணங்கப்பட்டு வந்திருக்கிறார் என்பதும் தெரிய வரும்

    நான் வம்சதாரா எனும் முதல் நாவல் எழுதுவதற்கான ஒரு நல்வாய்ப்பையும் கொடுத்தது கூட ஒரு மியூசியம்தான். விசாகப்பட்டினத்தில் உள்ள மியூசியத்தில் அந்த பதினோராம் நூற்றாண்டின் தமிழ்க் கல்வெட்டை நான் காண நேரிடாவிட்டால் வம்சதாரா எனும் புத்தகம் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அந்தக் கல்வெட்டைத் தொடர்ந்து சென்றதால்தானே வம்சதாரா வந்தது என்பதை ஏற்கனவே எழுதிப் பதிவு செய்துள்ளேன்.

    நம் பாரதமே புராதன பூமி. எத்தனையோ  நேர்த்தியான கலைச் சிற்பங்கள் நிறைந்த பூமி. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லுமோ என்று தோன்ற வைக்கும்.. இன்னமும் சொல்லப்போனால் உலகில் எந்த ஒரு நகரத்திலும் நேர்த்தியாக செயல்பட்டு வரும் ஒவ்வொரு மியூசியத்திலும் பாரத புராதனக் கலைச் சிற்பங்கள் இல்லாமல் அந்த மியூசியங்கள் புகழ் பெற்றிருக்க முடியாது.. இந்தக் கருத்தை இன்னும் வலுப்படுத்துகிறது திருமதி தேமொழி எழுதிய சான்பிராஸிஸ்கோ நகரைப் பற்றிய கட்டுரையும் அதன் அருங்காட்சியகம் பற்றிய தகவல்களும்.(குடதிசை மருங்கில்)

    ஆசிய நாடுகளின் கலைப்பொருட்களைச் சேகரித்து வைத்திருக்கும் அமெரிக்க அருங்காட்சியகங்கள் பல.  ஒரு சிறிய ஊரின், ஒரு சிறிய நூலகத்திலும் குறைந்தது ஒரு பத்து  ஆசியக் கண்டத்தின் கலைப் பொருட்களாவது பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும்.

    பெருநகர் அருங்காட்சியகங்களில்  ஆசியக் கலைப் பொருட்களுக்கென்றே சிறப்பாகத் தனிப்பட்ட பகுதிகளும் ஒதுக்கப் பெற்றிருக்கும்.  ஆண்டிற்கு ஒரு முறை ஏதாவது ஒரு கருத்தினைத் தேர்வு செய்து, அதற்குப்  பொருத்தமான கலைப் பொருட்களை விளக்கங்களுடன் காட்சிக்கு வைத்து பார்வையாளர்கள் காண இந்த அருங்காட்சியகங்கள் வழி செய்வதும் உண்டு.

    ஆசியக் கலைப்பொருட்களை மட்டுமே கொண்டு தனிச் சிறப்பு மிக்க “ஆசியக் கலை அருங்காட்சியங்கள்” இருப்பது இரு பெரு நகர்களில். அவைகள் அமைந்திருப்பது  வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் நகரிலும், கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலும். இப்பகுதியில் அதிக அளவில் ஆசிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டோர் பலர் வாழ்வது அதற்கு முக்கிய காரணம். – மேலும் படிக்க http://www.vallamai.com/literature/articles/30356/

    ஒவ்வொரு நகரத்துக்கும் இந்த அருங்காட்சியகம் என தமிழில் பேசப்பட்ட மியூசியம் மிகவும் அவசியம் என்றே கருதுகிறேன். நம்மவர்கள் மியூசியத்தையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இன்னமும் பல கலைச் செல்வங்களும் பண்டைய காலத்தில் வணங்கப்பட்ட பல தெய்வச் சிலைகளும் பல்வேறு இடங்களில் கேட்பாரற்று சிதறிக் கிடக்கின்றன. ஆனால் அன்னிய நாட்டவர் அப்படியல்ல ..ஆவ்ரி ப்ரெண்டேஜ் போன்றோர் எப்படியெல்லாம அரும்பொருட்கள் சேகரிக்க எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை இக்கட்டுரையைப் படித்தால்தான் தெரியும். நல்லதொரு கட்டுரையை வழங்கி இப்புத்தாண்டைத் தொடக்கி வைத்த தேமொழி அவர்களை இந்த வார வல்லமையாளராக மகிழ்ச்சியோடு அறிவிக்கிறோம். தேமொழிக்கு அன்பான வாழ்த்துகள்.

    கடைசி பாரா: தேவா’வின் கவிதை வரிகள்.

    அழுகின்ற குழந்தைக்கு

    பசிதீர்க்கும் உள்ளத்துக்கோர்

    ஆலயம் கட்டி வணங்குவேன்

    வாடுகின்ற மனிதனுக்கு

    ஊக்கமூட்டி ,பகிர்ந்துண்ணும்

    இதயமே இறைவன் வாழும்

    ஆலயம் அன்றோ!

    Share
  • வார ராசிபலன் (07-01-2013-13-01-2013)

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம்: பெண்கள் நினைக்கின்ற விஷயங்களில் வெற்றி பெற உங்கள் வாக்குச் சாதுர்யம் கை கொடுக்கும். மாணவர்கள் சஞ்சலங்கள் வளர இடம் கொடாதாவாறு மன திடத்துடன் இருந்தால், மகிழ்வுக்கு குறைவிராது. முதியவர்கள் நோய்களுக்கு நீங்களே மருந்துகளை தேடாமல், தகுந்த மருத்துவரை அணுகுதல் நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்றக் கூடிய அளவிற்கு வியாபாரிகளுக்கு மன வலிமையும், உடல் வலிமையும் கூடும். பணியில் இருப்பவர்கள் புதிய ஊழியர்களிடம் உங்கள் வாதத் திறமையை காட்டாமல் எளிய முறையில் பழகிவந்தால், நல்ல நட்பு உருவாகும். சரளமான பணப்புழக்கம் தனித் தெம்பைத் தரும்.

    ரிஷபம்: இந்த வாரம் கலைஞர்களுக்கு ஏமாற்றமாய் இருந்த விஷயங்கள் சாதகமாய் மாறும் சூழல் உருவாகும். வியாபாரிகள் பண விவகாரங்களில், பங்குதாரர்களுடன் கலந்து பேசி செயல்படுதல் நல்லது. மாணவர்கள் உங்கள் அமைதி, கடும் வார்த்தைகளாலும், அவசர செயல்களாலும் பாதிப்படையாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் அலுவலக அளவில் நட்புகளை ஓர் எல்லையோடு நிறுத்திக் கொண்டால்,மன சஞ்சலம் குறைவதோடு அதிக இழப்புகளும் இராது. சுய தொழில் புரிபவர்கள் ஆரம்ப முயற்சிகளில் சுணக்கம் காட்டாமலும் இருந்தால், வெற்றி வரும் வழி, லாபம் இரண்டும் உறுதியாகும்.

    மிதுனம்: மாணவர்கள் செய்ய வேண்டிய காரியங்களை பட்டியலாக்கி வைத்துக் கொண்டால், மறதியால் வரும் சிக்கல்கள் அகலும். கலைஞர்கள் வருமானத்தை அதிகப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு உறவும், நட்பும் கை கொடுப்பதால், மகிழ்ச்சிக்கு குறைவிராது. இந்த வாரம் கரைந்த சேமிப்பை ஈடுகட்ட எடுக்கும் முயற்சியில் பெண்கள் ஓரளவு வெற்றி காண்பார்கள். சுய தொழில் புரிபவர்கள் உங்களுக்கு உதவக் காத்திருக்கும் நண்பர்களையும், வாய்ப்புக்களையும் நழுவ விடாமல் தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொண்டால், எதிர்காலம் வளமாய் அமையும்.கடினமான பணிகளில், மூத்த அதிகாரிகளின் ஆலோசனையை பின்பற்றுதல் நலம் .

    கடகம்: பெண்கள் தங்களின் உயர்வான எண்ணங்கள் ஈடேறுவதற்கு ஆரோக்கியம் தடையாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் ஈடுபாடோடு எந்தச் செயலைச் செய்தாலும் அதில் வெற்றி காண முடியும். பிள்ளைகள் பெற்றோர்களின் மனதிற்கேற்ப நடந்து கொள்ள முன்வருவார்கள். நண்பர்கள் பிணக்கை மறந்து இணக்கமாக நடந்து கொள்வர் . பணியில் உள்ள ஒரு சிலருக்கு தேவையில்லாத இடமாற்றம் உண்டாகும். கலைஞர்கள் உங்கள் புகழைக் கண்டு பொறாமைப் படுபவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது அவசியம். மறைமுக எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட மன உறுதி தேவைப்படும்.

    சிம்மம்:கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கின்ற சலுகையை முறையாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. சரக்கு வினியோகம் செய்பவர்கள் வெறும் வாய் வார்த்தையை நம்பி பொருள் கொடுப்பதைக் குறைத்துக் கொண்டால் நஷ்டம் இராது. பெண்கள் இல்லத்திலும், அலுவலகத்திலும் வீண் பேச்சுக்களைக் குறைத்தால், அமைதிக்கு பங்கம் வராமலிருக்கும். சுய தொழில் புரிபவர்கள் காலத்தின் மதிப்பும் அருமையும் உணர்ந்து செயல்பட்டால், எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். வியாபாரிகள் சுகமான வாழ்க்கைக்கு ஆசைபட்டாலும்,இந்த வாரம் அங்கும், இங்கும் சுற்றித் திரியும் நிலைதான்.

    கன்னி: முக்கியமான பொறுப்புக்களை வகிப்பவர்கள், சிந்தனையை பணியில் செலுத்தி எச்சரிக்கையுடன் செயல்பட்டால், வரவிருக்கும் பிரச்சனைகளைத் தவிர்த்து விடலாம். வெளியூர்ப் பயணங்களால் செலவுகள் கூடினாலும், வியாபாரிகள் நினைத்த காரியத்தை முடித்து விடுவீர்கள். கவனக் குறைவாகச் செயல்படும் பிள்ளைகளை இதமாகக் கண்டிப்பதே நல்லது. புதிய இடங்களுக்குச் செல்பவர்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்தால், பயணங்கள் இனிமையாக அமையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதால் பெண்கள் இல்லத்தை அழகு படுத்தும் பணிகளை விருப்பத்துடன் செய்வார்கள்.

    துலாம்: நாணயத்தின் அடிப்படையில் செயல்பட்டால் எந்த ஒப்பந்தமும் எளிதில் கலைஞர்கள் வசமாகும். பணியில் இருப்பவர்கள் அதிகமாகப் புகழ்பவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் சமயோசிதமாகச் செயல்பட்டால், எதிரிகளின் கரம் மேலோங்காதிருக்கும். குற்றம் சொல்லும் உறவினரின் தேவைகளை பெண்கள் முதலில் பூர்த்தி செய்தால், இல்லம் அமைதியாக இருப்பவும், உறவுகள் வலுவாகவும் திகழும். மாணவர்கள் சாதாரணமாய் சொல்லும் வார்த்தைகளை சண்டைக்குக் காரணமாக்குபவர்களிடமிருந்து விலகி இருங்கள். பாதி பிரச்சனைகள் தானே குறைந்து விடும்.

    விருச்சிகம்: வாடிக்கையாளர்களின் வரவால், வியாபாரிகள் மகிழ்வர். இந்த வாரம் தந்தை வழி உறவுகளுடன் மோதல், அதிருப்தி அன்று அங்கலாய்த்துக் கொள்ளும் நிலை இருந்தாலும்,பக்குவமாக நடந்து கொள்வது புத்திசாலித்தனமாகும். கலைஞர்கள் செய்யும் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தால், நல்ல பெயரைப் பெற இயலும். பணிச் சுமை கூடுவதால்,பெண்களுக்கு எரிச்சலும், அசதியும் அவ்வப்போது வந்து போகலாம். பணியில் இருப்பவர்கள், தெரிந்தவர்களுக்கு மட்டும் சில சலுகைகளை அளிப்பது, விதிமுறைகளைத் தளர்த்துவது போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். உங்கள் கௌரவம் குலையாமலிருக்கும்.

    தனுசு: வீடு,மனை விஷயங்கள் உங்களுக்கு சாதகமாய் முடிய, சமாதானமாய்ப் போவது புத்திசாலித்தனமாகும். .மாணவர்கள் எந்தவொரு விஷயத்தையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் கவனத்துடன் இருப்பது அவசியம். வரவுக்கும் செலவுக்கும் சரியாய் இருப்பதால், வியாபாரிகள் கட்டட விரிவாக்கம் ஆகியவற்றை சற்று ஆறப் போடுவது நல்லது. பெண்கள் உங்களை புகழ்பவர்களை நல்லவர்கள் என்று நம்பி உங்கள் ரகசியங்களை பரிமாறிக் கொள்ள வேண்டாம். உயர்பதவி வகிப்பவர்கள் நிர்வாக விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் அதனைத் தீர்க்கும் நபரிடம் பொறுப்புக்களை அளிப்பது அவசியம்.

    மகரம்: பங்குதாரர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் வீண் சண்டைகளைத் தவிர்த்தால், வெற்றிக்கான வாய்ப்பு கை நழுவாமல் உங்கள் வசம் இருக்கும். எடுத்த காரியம் யாவும் நன்கு முடிவதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவார்கள். கலைஞர்கள் கடன் தொல்லைகளிலிருந்து பெருமளவு விடுபடுவர். எனினும் எந்த சூழலிலும் சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளாமலிருப்பது அவசியமாகும். பிள்ளைகள் வெளியில் செலவிடும் நேரம் அதிகமாக இருக்கும் என்பதால், பெற்றோர்கள் அவர்களின் நடவடிக்கையை கவனித்து வருவதோடு இதமாக புத்தி சொல்லித் திருத்தினால், அவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவர்.

    கும்பம்: வண்டி வாகனங்களை வாங்கி விற்பவர்கள் முறையான வழியைக் கடைப்பிடித்தால், எந்த சிக்கலும் தோன்றாமலிருக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் தங்களுடைய கொள்கைகளைக் கட்டிக்காக்க போராட வேண்டியிருக்கும். கூட்டுத் தொழிலில், பங்குதாரர் விலகினாலும், புதியவர் சேர்க்கையால் தொழில் வளம் சீராக இருப்பதால், வியாபாரிகள் தெம்புடன் திக்ழ்வார்கள். பொது வாழ்வில் இருப்போர்கள் வந்து சேரும் பொறுப்புகளை சுமப்பதற்கு அதிக உழைப்பை போட வேண்டியிருக்கும். மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் சொற்படி நடந்தால், மனக் கவலையின்றி சிறகடித்துப் பறக்கலாம்.

    மீனம்: மாணவர்கள் உங்கள் கருத்துக்களை கோர்வையாகச் சொன்னால், எவரிடமும் நல்ல பெயரை பெற்றுவிடலாம். பெண்கள் பேச்சில் இனிமை இருந்தால், உறவுகளும் இனிமையாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். கலைஞர்கள் கடுமையாக உழைத்தால், தடை என்ற சொல்லுக்கு இடமின்றி வெற்றிகள் வந்து குவியும். பொது வாழ்வில் இருப்போர்கள் பிறருக்காக கடன்பட நேரிடும் . எனவே எதிலும் அளவாக இருப்பது நல்லது. பெண்கள் பணியிடத்தில் கோபதாபங்களுக்கு இடம் கொடாமல் இருந்தால், உங்கள் கௌரவம் சிறப்பாகவே இருக்கும். முதியவர்கள் மனதில் சிலசமயம் எதிர்மறையான எண்ணங்கள் ஓடும். அதனை மற்ற தியானம்,மூச்சுப் பயிற்சி மற்றும் நல்ல பொழுது போக்கு அம்சம் ஆகியவற்றில் தங்கள் கவனத்தை திசை திருப்புவதே புத்திசாலித் தனம்.

    Share
  • பிக்கோலிம் போர்

    தேமொழி

    முதலாம், இரண்டாம், மூன்றாம் பானிபட் போர் எனத் தொடர்ந்து நடந்த பானிபட் போர்களையும், போரின் கொடுமை கண்டு மனம் மாறி அசோகரை புத்த மதத்தை ஆதரிக்கச் செய்த கலிங்கப் போர் பற்றியும் இந்திய வரலாற்றுப் பாடத்தில் படிக்காத இந்தியப் பள்ளி மாணவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் “பிக்கோலிம் போர்” (Bicholim conflict) பற்றிப் படித்ததுண்டா?

    படித்திருக்காவிட்டால் கவலை வேண்டாம். உங்கள் தேச பக்தி, பொது அறிவு எதிலும் குறை இருப்பதாக வருந்தவும் தேவை இல்லை.  காரணம், அப்படி  ஒரு போரே நடந்தது இல்லை.  ஆனால் நடந்ததாக ஒரு மோசடி சமீபத்தில் விக்கிபீடியாவில் நிகழ்ந்திருக்கிறது.

    கோவா மாநிலத்தின் பிக்கோலிம் என்ற இடத்தில் இப்படி ஒரு போர்  நடந்ததாக ஒரு கட்டுக் கதை.  1640 இல் இருந்து 1641 வரை கோவாவை ஆட்சி புரிந்த போர்ச்சுகீசியர்களுக்கும் மராட்டியப் பேரரசுக்கும் இடையில் நடந்ததாக விக்கிபீடியாவில் ஜூலை 4, 2007 இல் ஒரு கட்டுரை எழுதப் பட்டிருந்திருக்கிறது.   இந்தக் கட்டுக் கதையின்படி, பிக்கோலிம் போரின் விளைவாக ஒரு சமாதன உடன்படிக்கை ஏற்பட்டு போர் நின்றது.  உடன்படிக்கையின் விளைவாக சுதந்திர கோவா மாநிலம் அமைக்கப் பட்டது.  இந்தக் கட்டுக் கதை 5 ஆண்டுகள், 5 மாதங்கள், 25 நாட்கள் விக்கிபீடியா வலைதளத்தில் இடம் பெற்ற பின்பு, சமீபத்தில் அது மோசடி பதிவு என கண்டு கொள்ளப் பட்டு, சென்ற ஆண்டு 2012 டிசம்பர் 29 ஆம் தேதி நீக்கப் பட்டுவிட்டது. இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாகக் காட்டப் பட்ட சான்றுகள் அனைத்தும் பொய்யானவை.  தற்பொழுது விக்கிபீடியாவில் பதிவு செய்யப்பட்ட மோசடி செய்திகளின் வரிசையில் பிக்கோலிம் போர் இடம் பிடித்துள்ளது (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Wikipedia:List_of_hoaxes_on_Wikipedia மற்றும் http://en.wikipedia.org/wiki/Wikipedia:Articles_for_deletion/Bicholim_conflict மற்றும் http://en.wikipedia.org/wiki/Bicholim_conflict ).

    அதிலும் வேடிக்கை என்னவென்றால் இந்தக் கட்டுரை சிறந்த கட்டுரை என்ற பாராட்டுப் பெற்றிருக்கிறது.  அனைத்திற்கும் மேலாக விக்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கட்டுரை (featured article) வரிசையில் இடம் பெற வேண்டும் என்ற முயற்சி  எடுக்கப்பட்டு, பரிந்துரையையும் செய்யப்பட்டு அது நிறைவேறாமல் போயிருக்கிறது. இது போன்ற மோசடிப்  பதிவுகள் இந்தப் பதிவினைவிடவும் அதிக காலம் வலம்  வந்திருக்கிறது.   ஜூலியஸ் சீசரைக் கொன்றவன் என்று ஒரு கற்பனை கொலைகாரனின் கதை எட்டு ஆண்டுகளும், சீன நகர் ஒன்றின் நகராட்சித் தலைவர் என்று ஒரு சீன மாணவன் தனது பெயரையே வைத்து எழுதி வைத்த பதிவு ஒன்று ஏழு ஆண்டுகளும் விக்கியில் இடம் பெற்று பின்பு உண்மை அறிந்து நீக்கப் பட்டிருக்கிறது.

    மோசடிக் கட்டுரைக்காக கொடுக்கபட்டிருந்த படங்கள்:

    http://i.dailymail.co.uk/i/pix/2013/01/05/article-0-16C24759000005DC-508_306x423.jpg

    http://i.dailymail.co.uk/i/pix/2013/01/05/article-0-16C24751000005DC-431_306x423.jpg

    இதனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது; ஒரு விக்கி கட்டுரை தகுந்த ஆதாரங்கள் தரத் தவறினால், விக்கியின் மற்ற கட்டுரைகளுக்கு அக்கட்டுரை வழி தொடர்பு கொடுக்கப் படாவிட்டால், இணையத்திலும் தேடும் செய்தி நம்பிக்கைக்குரிய தளங்களில் கொடுக்கப் படாவிட்டால், அதற்கு நாம் முக்கியம் கொடுக்கக் கூடாது.  அதனை ஆதாரமாக உபயோகிப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    சிந்தனைக்கு:  கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் உண்மையல்ல தீர விசாரிப்பதே மெய் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.  கற்பனைத்திறன் வாய்ந்த ஒருவரால் நடந்த வரலாறு என ஒரு கட்டுக் கதை புனைந்து மோசடி செய்ய இயலுமானால், காலம் காலமாக நாம் கேட்டு வளரும் வரலாற்று  மற்றும்  இதிகாசக் கதைகளை எவ்வளவு தூரம் நம்புவது என்பது குழப்பத்தைத் தருகிறது. பொதுவாகவே எந்த ஒரு வரலாற்று உண்மையும் வெற்றி பெற்றவர் கண்ணோட்டத்தில்தான் வழங்கப் படுகிறது என்பதும் நாம் அறிந்ததே.  புரட்சியில் தோல்வி அடைந்தால் தோற்றவரை தீவிரவாதி அடக்கப்பட்டார், சர்வாதிகாரி ஒடுக்கப்பட்டார் என்று நமக்கு அறிவிக்கப் படுவதும், புரட்சியில் வெற்றி பெற்றவரை  நாட்டிற்காக உழைத்த தன்னலமற்ற தியாகி வரிசையில் இடம் பெறச் செய்வதும் நம் வாழ் நாளிலேயே நாம் பார்ப்பதுதான்.

    எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

    மெய்ப்பொருள் காண்பது அறிவு

    செய்தி ஆதாரம்:

    http://www.dailydot.com/news/wikipedia-bicholim-conflict-hoax-deleted/

    http://www.dailymail.co.uk/news/article-2257482/The-war-Wikipedia-fooled-years-Bicholim-Conflict-article-elaborate-4-500-word-hoax.html?ito=feeds-newsxml

    படம் உதவி:

    http://upload.wikimedia.org/wikipedia/commons/6/63/Wikipedia-logo.png

    http://upload.wikimedia.org/wikipedia/commons/5/55/War-elephant-illustrated-london-news.jpg

    http://i.dailymail.co.uk/i/pix/2013/01/05/article-0-16C24759000005DC-508_306x423.jpg

    http://i.dailymail.co.uk/i/pix/2013/01/05/article-0-16C24751000005DC-431_306x423.jpg

    Share
  • முரண்

     

     

    பி.தமிழ்முகில் நீலமேகம்

     

    ஆதவன் கூட தூக்கக் கலக்கத்தினின்று

    விடுபடாத இந்த கருக்கலில்

    எங்கோ அவசரமாய்

    எதையோ தேடி ஓடுகிறீர்களே…..

    எனதருமை மானிடர்களே…

    சற்று நில்லுங்கள்!!!

    எங்கே செல்கிறீர்கள்?

    உங்களது இல்லத்திற்கா? அல்லது…

    அலுவலகத்திற்கா??

    இரவெல்லாம் கண்விழித்து

    பகலெல்லாம் கண்ணயரும் அதிசயம்

    உங்களிடம் மட்டும் தான் காண்கிறேன்…

    அதுவும்…. சில காலமாய்த்தான்…

    சுறுசுறுப்பாய் செயல்பட  பகலையும்….

    இளைப்பாறித் துயிலுற இரவையும்

    இறைவன் காரணமின்றிப் படைத்திருக்க மாட்டான்!!!

    ஆனால் …..  இன்றோ…..

    அனைத்தும் தலைகீழாய்….

    ஏனிந்த முரணான மாற்றம்????

    படத்திற்கு நன்றி:

    http://www.prelovac.com/vladimir/beautiful-nature-pictures

    Share