பி .தமிழ்முகில் நீலமேகம்

அன்று  கல்லூரியின் கடைசி  வேலை நாள். பரீட்சைகள் அனைத்தும் முடிவடைந்து, அன்று  விடைத்தாட்கள் விநியோகிக்கப் பட்டு, மாணவர்களால் சரிபார்க்கப் படும். அதன் பின்னே, பரீட்சை முடிவுகள் அனைத்தும் வெளியிடப்படும். இது அந்தக் கல்லூரியின் வழக்கமாய் இருந்தது.

நகரின் அந்த புகழ்பெற்ற மகளிர் கல்லூரியில் விரிவுரையாளராய் பணியாற்றி வந்தாள்  சசிகலா. திருத்திய விடைத்தாட்களை எடுத்துக் கொண்டு அந்த முதுகலை இறுதியாண்டு வகுப்பிற்குள் நுழைந்தாள்.மாணவிகளுக்கு விடைத்தாட்களை கொடுத்துவிட்டு, எவருக்கேனும் மதிப்பெண் வழங்கியதில் ஏதேனும் ஐயமிருப்பின் தன்னை அணுகுமாறு கூறிவிட்டு அமர்ந்தாள்.

சற்று நேரத்தில், மாணவி ஜனனி வந்து விடைத்தாளில் ஏதோ சந்தேகம் கேட்டாள். அவளது சந்தேகத்தை தெளிவடையச் செய்துவிட்டு, அவள் முதல் மதிப்பெண் பெற்றிருந்தபடியால், அவளுக்கு வாழ்த்துகளைக் கூறிவிட்டு,       “மாணவிகளே ! உங்களுக்கு வழங்கியுள்ள மதிப்பெண்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் வந்து கேளுங்கள்” என்றாள். அப்போது, ஆர்த்தி என்ற மாணவி விடைத்தாளுடன் வந்தாள்.

“என்ன ஆர்த்தி? ” என்று கேட்டு சசிகலா முடிக்கும் முன், ஆர்த்தி அழ ஆரம்பித்து விட்டாள்.

“மேடம், தயவு செய்து என்னை பாசாக்கி விட்டுருங்கள். அரியர்ஸ் வந்தால், எனக்கு ஒரு  வருஷம்  வேஸ்ட் ஆயிடும். ப்ளீஸ், கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க” என்று கெஞ்சினாள்.

பேப்பரை வாங்கிப் பார்த்தாள்  சசிகலா. மதிப்பெண் போடுவதற்கு வழியே இல்லாமல் இருந்தது. என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, சிந்தியா அங்கு வந்தாள். அவளும் அவ்வகுப்பில் ஆர்த்தியுடன் பயிலும் மாணவி.

“மேடம், நீங்கள் ஃபர்ஸ்ட் மார்க் வாங்குன ஜனனிக்கு யுனிவர்சிட்டி ப்ரொஃஃபிஷியன்சி கிடைக்கறதுக்கு மார்க் குறையுதுன்னு போட்டுக்  குடுத்த போது,  ஃபெயில் ஆன ஆர்த்தி பாஸ் ஆக ஏன் மார்க் போடக் கூடாது” என்றாள்.
சசிகலாவிற்கு அவள் சொன்னதைக் கேட்டதும் ஆத்திரத்தில் கண்கள் சிவந்தன. ஏனெனில், அவள் அங்ஙனம் பாரபட்சம் பார்ப்பவளில்லை. ஜனனிக்கு அவள் போடாமல் விட்டிருந்த மதிப்பெண்களையே போட்டிருந்தாள்.

ஆத்திரம் மேலோங்க, “சிந்தியா !  உன்  பேப்பரைக் கொண்டு வா…” என்றாள். வந்தவளிடம் பேப்பரை வாங்கி ஆத்திரத்துடன் சிந்தியாவின் விடைத்தாளில் பத்து மதிப்பெண்கள் குறைத்துக் கொடுத்து அனுப்பி விட்டாள். அவளுக்கு அன்று முழுவதும் ஏனோ மனம் சரியாகவே இல்லை.

மாலை, கல்லூரி முடிந்ததும், சற்று நேரம் பூங்காவிற்கு சென்றுவிட்டு வீட்டுக்குச் செல்லலாம் எண்றெண்ணியவள், சற்று நேரத்தில் பூங்காவினை வந்தடைந்தாள். மரநிழலில் வந்தமர்ந்தவள், சுற்றியோடும் அணில்களையும், கீச்சிட்டுச் சுற்றும் பறவைகளையும் இரசித்துக் கொண்டிருந்தாள். அவளது மனதில் அன்றைய சம்பவம்   நிழலாடியது.

“சே…நன்றாக படிக்கக் கூடிய மாணவி தான்.தன் அதிகப்ப்ரசங்கித் தனத்தால்,  ஆத்திரத்துக்கு ஆளாகி, தன் மதிப்பெண்களை இழந்ததோடில்லாமல், என் மனநிம்மதியையும் குலைத்து விட்டாளே இந்த சிந்தியா ! ” என்றவளது சராசரி மானுட மனம் எண்ணியது.

“நாளை சிந்தியாவை,  அவளது ஆராய்ச்சிக் கட்டுரையை பிரசுரத்திற்கு அனுப்ப  தயார் செய்யச் சொல்ல வேண்டும். இரண்டு மாதம் கழித்து நடக்கவிருக்கும்  தேசிய அளவிலான அறிவியல் மாநாட்டிற்கு அவள் தயார் செய்து, என்னிடம் தந்த கட்டுரை மற்றும் நழுவல் படங்களை பார்வையிட்டு, குறைகள் இருப்பின் திருத்தச் சொல்லி, அவளை மாநாட்டில் பேச தயார் செய்ய வேண்டும் ” என்றவளது ஆசான் மனம் எண்ணியது.

     ” ஓர் நல்லாசானுக்கு மாணாக்கரிடையே என்றுமே உயர்வு தாழ்வு ஏற்படுவதில்லை !!! “
                       

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *