நான் அறிந்த சிலம்பு – 53 (07.01.13)

மலர் சபா

புகார்க் காண்டம் – 07. கானல் வரி

 
           (6)
எம் தலைவி மீது
பெருங்காதல் கொண்டவராய்
அன்று சோலையில்
கையுறை ஏந்தி வந்து
அவளை அடைய உதவிகேட்டு
என் பின்னே வந்தார் தலைவர்.
அன்று அவருக்கு அயலாராய்
நின்றிருந்தோம் நாங்கள்..
அவர் விருப்பத்துக்கு உடன்பட்டோம்.
ஆனால் இன்று
அயலார்போல் அவர் நின்றிருக்க
இரந்து கேட்கும் நிலையில் நாங்கள்..
அவரின் அருள் மறந்த குணம்
ஏழையாகிய யாம் எங்ஙனம் அறிவோம்?!
மாந்தர் முகத்திலுள்ள கண்களையும்
நீரில் தோன்றும் நிலவின் நிழலைக் கண்டு
மலர்ந்த கருங்குவளை மலர்களையும் கண்டு
எது கண் எது மலர் என்றறியாத வண்டுகள்
ஊசலாடும் வளமுடைய
புகார் அன்றோ எம் நகரம்!
            (7)
மோதுகின்ற பெரிய அலைகளால் தாக்கப்பட்டு
அசைந்து ஒலிக்கின்ற வாயுடைய சங்குகள்,
ஆற்று மணலில் சிறுமியர்
எழுதிவைத்த இழைத்து வைத்த வண்டலை
உழுது அழிக்கும்.
அது கண்டு கோபமுற்ற சிறுமிகள்
தாம் அணிந்திருந்த மலர்மாலைகளை
மென்விரல்களால் அறுத்தெறிந்து
அச்சங்குகள் மீது வீசுவர்.
அப்போது ஆங்கே சிதறிய நீலமலர்கள்
யாரோ ஒருவர்
இமை சுருக்கிப் பார்ப்பது போல்
தோற்றமளித்திட,
அம்மாலைப்பொழுதினில் கடற்கரை வந்தவர்
அவற்றைக் கண்டு
மகளிரின் கண்களோ என்று எண்ணித்
தொடர்ந்து செல்லாமல் மயங்கி நிற்பர்.
அத்தகு இயல்புடைய
புகார் அன்றோ எம் நகரம்!
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram18.html
படத்துக்கு நன்றி:
http://www.tamilvu.org/courses/degree/c012/c0123/html/c01236l4.htm
Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *