Blog

  • நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை என்பது சரியா?

    நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை என்பது சரியா?

    அண்ணாகண்ணன்

    ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’ பாடலை அண்மையில் கேட்டேன். 1991ஆம் ஆண்டு வெளியான சிகரம் திரைப்படத்தில், வைரமுத்து எழுதிய பாடலுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசையமைத்துப் பாடியுள்ளார். மிக இனிய இசையும் குரலும் நல்ல பல வரிகளும் கொண்ட பாடல். மென்மையாக வருடி, உள்ளத்தை லேசாக்கக் கூடியது.

    வாராயோ வெண்ணிலாவே, நிலாவே வா, நிலா நிலா ஓடி வா என நிலவை அழைத்த கவிஞர்களின் வரிசையில் வைரமுத்து இணைந்தார். வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா என்றும் இவரே கேட்டார். வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாடலில் நிலவுடன் காதலையும் கலந்து பாடி ஈர்த்துள்ளார். இதில் இடம்பெற்ற ‘நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை!’ என்ற வரியை முதலில் கேட்ட போது, ஏதோ அரிய தத்துவம் போல் மயக்கியது. பிறகு தான் இது அறிவியலுக்குப் புறம்பானது என்பது புலப்பட்டது.

    இருவர் படத்தில் ‘பூ கொடியின் புன்னகை’ என்ற பாடலிலும் ‘நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை’ என எழுதியுள்ளார். அடிப்படை இல்லாத இப்படி ஒரு பார்வையை வைரமுத்து எங்கிருந்து பெற்றார் என்று தெரியவில்லை.

    சூரிய ஒளி, பூமியின் மேற்பரப்பில், குறைந்த அலைநீளம் கொண்ட நீல நிறத்தை அதிகமாகச் சிதறடிப்பதால் வானம் நம் கண்களுக்கு நீல நிறமாகத் தெரிகிறது. சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிறமாக வானம் தெரிவதற்கு ஒளிச்சிதறலே காரணம். இந்த நிறங்கள் மாறக் கூடியவை. இந்த நிறங்களுக்கு அப்பால் எல்லையற்ற வெளியும் எண்ணற்ற கோள்களும் கற்பனைக்கு எட்டாத சக்திகளும் இருக்கின்றன. இந்த நிலையில், நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை என்பது அறியாமையின் வெளிப்பாடு.

    ஒன்றுமற்ற ஒரு வெற்றிடத்திலிருந்துதான் இவ்வளவு பெரிய பிரபஞ்சம் தோன்றியிருக்கிறது. எனவே வானம் என்பதே ஏதுமில்லாதது எனக் கூற இயலாது. மேலும், இந்த வெற்றிடத் தத்துவத்திற்கும் நீலத்தைப் பிரிப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

    ‘வானம் எனக்கொரு போதிமரம்’ என எழுதிய வைரமுத்து, நீலத்தைத் தான் வானம் என்று கருதி எழுதினாரா? வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் மனுசனை இன்னும் பார்க்கலையே என எழுதிய வைரமுத்து, வானத்தை இன்னும் சரியாகப் பார்க்கவில்லையா?

    Share
  • ஆண்டவனே வழிகாட்டு !

    ஆண்டவனே வழிகாட்டு !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    அதிகாரம் என்றும் ஆகாது உடலுக்கு
    அதிகாரம் உலக அழிவுக்கு வித்தே
    இதிகாசம் புராணம் எடுத்துமே சொன்னது
    எதையுமே கேளா எழுந்தது அதிகாரம்

    அதிகாரம் அரச கட்டிலில் அமர்கிறது
    எதையுமே பாரா எக்காள மிடுகிறது
    ஊதிப் பெருக்க ஒன்றாக இணையும்
    பாதகர் பலரும் பக்கமாய் வருகின்றார்

    நீதியை மிதிக்கின்றார் நிட்டூரம் செய்கிறார்
    போதனை போதனை பொய்யாய் விரிக்கிறார்
    பாதகத்தை செய்ய பக்குவமாய் சொல்கிறார்
    பாரிருப்பா ரெல்லாம்  பதறித் துடிக்கின்றார்

    அநியாயம் அங்கே அதிரசமாய் ஆகிறது
    ஆலவட்டம் பிடிப்பார் அகமகிழ்ந்து நிற்கின்றார்
    அதிகார அரக்கன் அஹிம்சையை மறந்து
    அதிகார வெறியால் ஆடியே நிற்கின்றான்

    காவலர்க ளெல்லாம் கடிநாயாய் மாறுகிறார்
    கடித்துக் குதறி கடுவிஷமாய் ஆகின்றார்
    நீதிமான்கள் யாவருமே நினைவிழந்து நிற்கின்றார்
    அதிகாரம் அங்கே அதிர்ந்துமே சிரிக்கிறது

    வள்ளுவர் கண்ணீர் கடலினுள் மூழ்கின்றார்
    வள்ளலார் மனமொடிந்து வாடியே நிற்கின்றார்
    தெள்ளுதமிழ் பாரதியார் உள்ளம் ஒடிகின்றார்
    தேசபிதா காந்திமகான் தனைமறந்து அழுகின்றார்

    அறமுடையார் அனைவருமே ஆண்டவனை நாடுகிறார்
    அவலங்கள் போக்கிடவே அனைவருமே வேண்டுகிறார்
    அமைதியொடு அன்புயர அதிகார வெறியழிய
    அனைத்துமாய் இருப்பவனே ஆண்டவனே வழிகாட்டு

    Share
  • (Peer Reviewed) செம்மொழியாம் தமிழ்மொழி

    (Peer Reviewed) செம்மொழியாம் தமிழ்மொழி

    முனைவர் பீ. பெரியசாமி,
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
    டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி,
    ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம் – 632317,
    தமிழ்நாடு, இந்தியா,
    மின்னஞ்சல்: periyaswamydeva@gmail.com,
    கைபேசி: 9345315385,

    ORCID ID –  https://orcid.org/0000-0002-7395-9699


    1. முன்னுரை

    மொழி என்பது ஒருவர் தன் உணர்வுகளைப் பிறருக்கு அறிவிக்கப் பயன்படும் ஒரு தொடர்புக் கருவியாகும். இந்தியாவில் உள்ள மொழிக்குடும்பங்களில் மிகப் பழமையானது திராவிட மொழிக்குடும்பமாகும். அத்திராவிட மொழிக்குடும்பத்தின் தாய் மொழியாக விளங்குவது தமிழ் மொழியாகும். அத்தமிழ் மொழியின் தொன்மையையும் அம்மொழி பெற்றிருக்கும் செம்மொழிக்குரிய தகுதிகளையும் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அதனடிப்படையில் மொழியின் அடிப்படை, இந்திய மொழிக்குடும்பங்கள், திராவிட மொழி, திராவிட மொழிகளின் தாய் தமிழ்மொழி, திராவிட மொழிகளின் எண்ணிக்கை அவற்றின் பகுப்புமுறை, தமிழ் மொழிக்கும் பிற மொழிகளுக்குமானத் தொடர்பு, தமிழ்மொழி, வெளிநாட்டார் குறிப்புகள், நூல்கள், கல்வெட்டுகள், தமிழரின் தொன்மை, சிறப்பு, தோற்றம், செம்மொழியே தமிழ்மொழி எனும் தலைப்புகளினூடாக இவ்வாய்வுக்கட்டுரை பயணித்து தமிழ்மொழியில் செம்மொழிக்குரிய தகுதிப்பாடுகளை ஆராய்கின்றது.

    2. மொழி

    மொழி என்பது, மனிதர்கள் தங்களது உணர்வுகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்கான ஒரு முறையான வழிமுறையாகும். இது, பேச்சு மொழி, எழுத்து மொழி என இரண்டாகப் பகுப்பர். ஆரம்பத்தில் பேச்சுமொழி சைகைகளாகவும், எழுத்து மொழி குறிகள், அடையாளங்களாகவும் இருந்தன. இதனை,

    குழந்தைகளின் மொழித்திறன் வளர்ச்சி, பிறப்பிலிருந்தே தொடங்கி பல ஆண்டுகள் நீடிக்கும்.மொழியின் பிறவடிவம், செயல்முறை ஆகிய இரண்டையும் உள்ளத்தில் கொண்டு மொழியை விளக்கிய அறிஞர்கள் பொருளைக் குறிக்க மரபாக ஏற்பட்ட குறியீடுகளின் ஒழுங்குபட்ட அமைப்பே மொழி என்றனர். (திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ப.2)

    எனவும்,

    ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுக் குழுவினர் புரிந்து கொள்ளும் வரையறுக்கப்பட்ட ஒலிகளின் இணைப்பே மொழி என்றனர். (திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, பக்.2-3)

    ஜான்சாமுவேல் கூறியுள்ளார். குறியீடும்,  ஒலிகளும் மொழிகளின் தோற்றத்தின் அடிப்படை என்பது இதிலிருந்து அறியமுடிகின்றது.

    மொழியே ஒரு இனத்தின் முக்கிய அடையாளம்.மொழி என்பது சொல்வளம், இலக்கியம், இலக்கணம், ஆகியவற்றையே கொண்டிருத்தல் சிறப்பு. மொழியானது பிறரிடம் தொடர்பு கொள்ளவும், தன் உணர்வுகளை வெளிப்படுத்தவும் பயன்படுகிறது. இதனை,

    மொழி மனித சமுதாயத்தோடு தோன்றி, நின்று, அழியும் என்பது தெளிவு. மொழி நாகரிகத்தின் வித்து; எண்ணத்தின் வடிவம்; ஒருவரோடு ஒருவரை பிணைக்கும் இணைப்பு; காலத்தைக் கடந்து நிலையாக நிற்கின்ற கருத்தோவியம்; மற்ற உயிரினங்களுக்கிடையே காணப்படாத பெருஞ்சிறப்பு; பழக்கம் என்ற விளைநிலத்தின் பயிராக்கப்பட்ட பயிர். (திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ப.3)

    என ஜான்சாமுவேல் கூறியுள்ளார். எனவே மனிதன் சமூகமாகக் கூடிவாழத் தலைப்பட்ட காலத்திலே மொழிகள் தோன்றியிருக்க வேண்டும் என்பதை உய்த்துணர முடிகின்றது.

    3. இந்திய மொழிக் குடும்பங்கள்

    இந்தியாவில் ஆஸ்ட்ரிக் குடும்பம், இந்தோ – ஆரிய மொழிக் குடும்பம், திபத்தோ –  சீன மொழிக் குடும்பம்,  திராவிட மொழிக் குடும்பம் என்ற நான்கு மொழிக் குடும்பங்கள் உள்ளன.

    4. திராவிட மொழி

    திராவிட மொழி என்பது மொழியல்ல. அது மொழிக் குடும்பத்தின் பெயர். தமிழிலிருந்து தோன்றிய பல மொழிகளின் கூட்டே திராவிட மொழி என்பது. இதனை முதலில் ஆய்ந்த டாக்டர் கால்டுவெல் அவர்கள் தென்னிந்திய திராவிட மொழிகளையே ஆய்வுக்கு உட்படுத்தினார் பின்னர் ஏற்பட்ட மொழியியல் ஆய்வின் வளர்ச்சியின் காரணமாக வட இந்தியாவிலும், பிற இடங்களிலும் திராவிடம் மொழிகள் கண்டறியப்பட்டன. தமிழில் திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குமரிலபட்டரே பயன்படுத்தியுள்ளார். அவர்,

    திராவிட மொழிகளை ஆந்திர, திராவிட பாஷா(திராவிட மொழிகள்,(தொகுதி-2), ப.79)

    என்க கூறியுள்ளார். பழங்காலத்தில்,

    தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளை‘Tamilian’அல்லது ‘Tamulic’ ( திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.21)

    என்றே  அழைத்துள்ளனர்.

    ‘தமிழ்’ என்ற சொல்லிலிருந்து தான் ‘திராவிட’ என்ற சொல் உருவாயிற்று என்பதை ஸ்டென்கனொவ் எனும் ஆய்வாளர்,

    ‘திராவிட’ என்ற சொல்லை விட ‘திரமிள’ என்ற சொல் தான் பழமையாக உள்ளது என்றும் அது ‘தமிழ்’ என்ற சொல்லிலிருந்து உருவானது ( திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.26)

    என்று கூறியுள்ளார். இந்தியாவின் பழைமையான நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதை,

    இந்திய நாட்டை பொறுத்தமட்டில் ஆரியர்கள் வருவதற்கு முன்பே சிறந்ததொரு நாகரிகம் இந்திய மண்ணில் உருவாகி வளர்ந்திருந்தது என்பதும் அந்நாகரிகம் பல கோணங்களில் பண்பட்டுச் சிறந்து இருந்தது என்பதும் இன்றைய ஆராய்ச்சியாளர்களின் முடிபாகும். ( திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.31)

    என்றும்,

    திராவிட மொழிகள் மிகப் பழமையான மொழிகள் என்பதும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய நாட்டில் வழக்கிலிருந்து வந்துள்ளன என்பதும் இன்றைய மொழியியலாளர்களின் கொள்கை. (திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.35)

    என்றும் ச. அகத்திய லிங்கம் கூறியுள்ளார். இவற்றின்வழி திராவிட நாகரிகம் இந்தியாவின் பண்பட்ட நாகரிகம் என்பதும் பழைமையான நாகரிகம் என்பதும் அறியமுடிகின்றது. மேலும், இதற்கு வலுசேர்க்கும் விதமாக,

    திராவிடர்கள் பற்றிப் பொதுவாக இரண்டு வன்மையான கருத்துக்கள் உள்ளன. ஒன்று அவர்கள் இந்நாட்டுப் பழங்குடியினர், இந்நாட்டுக்கே சொந்தமானவர்கள். (திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.95)

    எனக் கூறியதிலிருந்து திராவிடர்களே இந்தியாவின் மூத்த குடிமக்கள் என்பது நிறுவப்படுகின்றது.

    சமஸ்கிருத மொழியிலிருந்து தான் இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளும் தோன்றின என கால்டுவெல் எனும் அறிஞரின் ஆய்வுநூலான திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் வெளிவரும்வரை சமஸ்கிருத மொழியாளர்களாலும் அதற்குத் துணை போன சில மொழியியல் ஆய்வாளர்களாலும் நம்பவைக்கப்பட்டிருந்தன. ஆனால்,

    திராவிட மொழிகள் சமஸ்கிருத மொழியிலிருந்து பிரிந்தவை அல்ல என்றும் இவை தனி ஒரு இனம் ( திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.40)

    என்று விளக்கியுள்ளார்  கால்டுவெல்.

    5. திராவிட மொழிகளின் எண்ணிக்கை

    திராவிட மொழிகளின் எண்ணிக்கையில் ஆய்வாளர்களிடையே பல்வேறு கருத்து மாறுபாடுகள் உள்ளன. அவற்றுள் டாக்டர் கால்டுவெல் திராவிட மொழிகள் பன்னிரண்டு என்கிறார்.

    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளி ஆகிய ஐந்து மொழிகளையும் பண்பட்ட மொழிகளாகவும் தோடா, கோடா, கோண்டு, கூ என்ற நான்கையும் பண்படாத மொழிகளாகவும் கருதினார். பிராகூயி, மால்டோ போன்ற மொழிகளைச் சுட்டிச் சென்றார் தவிர அவற்றைப் பற்றிய சிறப்பாராய்ச்சியினை அவர் மேற்கொள்ளவில்லை. (திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ப.18)

    மேலும், கிரியர்ஸன் எனும் மொழியியல் ஆய்வாளர்,

    கொலாமி, நாயக்கி ஆகிய இரு மொழிகளையும் கால்டுவெல் கூறியதோடு இணைத்து திராவிட மொழிகள் 14 எனக் குறிப்பிட்டுள்ளார். திராவிட மொழிகளைத் தென் திராவிட மொழிகள், நடு திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என்று பிரித்தும் ஆராய்ந்துள்ளனர்.

    பர்ரோதன் ஆய்வில்,

    1950 இல் பெங்கோ, பர்ஜி ஆகியன திராவிட மொழிகளின் கிளை மொழிகள் எனக் கண்டார்.

    ஆனால், தற்போது திராவிட மொழிகளின் எண்ணிக்கை முப்பதுக்கும் மேலாகப் பெருகி உள்ளன.

    6. திராவிட மொழிகளின் பகுப்பாய்வு

    திராவிட மொழிகளைத் தென் திராவிட மொழிகள், நடு திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என மூன்று பிரிவுகளாகப் பகுப்பர். அவற்றுள், தமிழ், மலையாளம், கொடகு, கோடா, தோடா, கன்னடம், படகா, துளி ஆகிய ஒன்பது மொழிகளும் தென் திராவிட மொழிகள்.நடு திராவிட மொழிகளைத் தெலுங்கு – குவி கிளை என்றும்,  கொலாமி –  நாயக்கி கிளை என்றும் மொழி நூலால் இரு கூறுபடுத்துவர்.தெலுங்கு – குவி கிளையில் – தெலுங்கு, கோண்டி, குவி, குவி, பெங்கோ, மண்டா ஆகிய ஏழு மொழிகளும் கோலாமி – நாயக்கி கிளையில் – கோலாமி, நாயக்கி,  பர்ஜி, கடப்பா ஒல்லாரி,  கடப்பா சில்லூர் ஆகிய ஐந்து மொழிகளும் உள்ளன.வட திராவிட மொழிகள் – பிராகுயி, மால்டோ, குருக் ஆகிய மூன்று மொழிகள்.

    7. திராவிட மொழிகளின் தாய் தமிழ்மொழி

    திராவிட மொழிகளில் பல்வேறு வகையிலும் தொன்மை வாய்ந்ததும் மற்ற மொழிச் சொற்களுக்கு எல்லாம் வேர்ச்டசொற்களைத் தந்ததும் தமிழ் மொழியே ஆகும். தமிழில் தான் திராவிட மொழி நூல்களுக்கு எல்லாம் காலத்தால் முந்திய தொல்காப்பியம் எனும் நூல் தோன்றியுள்ளது. இதனை,

    திராவிட மொழிகளில் காணப்படும் மிகவும் பழமையான நூல்களில் முதன்மையானது தொல்காப்பியம். ( திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.150)

    என்று ச. அகத்திய லிங்கம் கூறியுள்ளார். மேலும், ஏனைய திராவிட மொழிகளைக் காட்டிலும் பழமையான இலக்கண இலக்கியங்கள் தமிழில் உள்ளன என்பதை,

    திராவிட மொழிகளின் பழமையான இலக்கியங்களையும் இலக்கணங்களையும் கொண்டுள்ளது தமிழ்மொழி. ( திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.106)

    என்றும் கூறப்பட்டுள்ளது. டாக்டர் ஜார்ஜ் ஆலுவர் சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றத்திற்கு அடிப்படை காரணமாக இருந்தவர்கள் திராவிட மக்களே எனத்  தெளிவுபடுத்தி உள்ளார். இதன்வழி தமிழ்மொழி திராவிட மொழிகளின் தாய் என்பதை அறியலாம்.

    8. தமிழ்மொழி

    தமிழின் பழமைக்குச் சான்றாய் விளங்கும் கி.மு. 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டே தமிழ்மொழி, இலக்கியம், இலக்கணம் பற்றிய ஆதாரங்கள் ஆரம்பமாகின்றன. கிறிஸ்துக்கு முன்பே தமிழில் சிறந்த படைப்புகள் இருந்தன என்பதை,

    திராவிட மொழிகளுக்குள்ளே கிறிஸ்துவ சகாப்தத்தின் துவக்கத்திலிருந்தே சிறப்புமிக்க இலக்கியங்களைக் கொண்டு சிறந்த மொழி தமிழேயாம். (தமிழும் பிற பண்பாடும், ப.15)

    என்று தெ. பொ. மீனாட்சி சுந்தரம் கூறுவதிலிருந்து அறியலாம். மேலும்,

    தமிழ் மொழியின் வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகளுக்கு இலக்கியங்களையே முதன்மையாகக் கொள்ள வேண்டியதிருக்கிறது. இலக்கியம் என்று குறிப்பிடுகின்ற பொழுது இலக்கியத்தரம் வாய்ந்த நூல்கள் என்ற வரையறைக்கு உட்படுத்தாது எல்லா பொருள்களையும் பற்றிய உரைநடை அல்லது செய்யுள் வடிவில் உள்ள எல்லாத் தமிழ் நூல்களையும் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். (தமிழ் மொழி வரலாறு, பக். 41- 42)

    என்றும் கூறியுள்ளார். எனவே, தமிழ் மொழியின் பழமையான நூல்களைத் தேடி ஆய்வதிலிருந்தே தமிழரின் தமிழ்மொழியின் முழுமையான வரலாற்றை அறிய முடியும் என்பதை உணரமுடிகின்றது.

    9. வெளிநாட்டாரின் பார்வையில் தமிழ்மொழி

    வெளிநாட்டார் சில  தமிழ் மொழியினைக் குறித்த நூல்களை இயற்றியுள்ளனர். அவைகளும் நமக்குத் தமிழ்மொழியின் தொன்மையையும் சிறப்பையும் அறிய உதவுகின்றன. அவற்றுள், பால்தே இயற்றிய இந்திய மொழிகள் பற்றிய நூலொன்று எழுதியுள்ளார். 1680இல் கோஸ்டா தமிழ் இலக்கணத்தை இலத்தின் மொழியில் இயற்றியுள்ளார். 1685 இல் புருனோ தமிழ் இலக்கண நூல் ஒன்று எழுதியுள்ளார். பெஸ்கி (வீரமாமுனிவர்) பேச்சுத்தமிழ் இலக்கணம் ஒன்றை எழுதியுள்ளார். வீரமாமுனிவர் போர்த்துகீசிய மொழியிலும் தமிழிலும் அகராதிகளை இயற்றியுள்ளார். இவையெல்லாம் குறிப்பித்தகுந்தவைகள்.

    10. தமிழ் மொழியின் தொடர்பு

    தமிழ்மொழி ஆரிய மொழி, கிரேக்கம், கொரிய மொழி, ஜப்பானிய மொழி ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புடையனவாக விளங்குகின்றன. இதனால் பிற மொழிகளில் தமிழ் மொழிச் சொற்களும் தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களும் கலந்து போயின. இதனை,

    பன்னெடுங்காலமாகப் பிறமொழி பேசும் மக்களோடு ஏற்பட்ட தொடர்பினாலே பல பல சொற்கள் தமிழிலே புகுந்து இன்றைய வழக்கிலும் நிலைபெற்று விட்டன. இதுபோலவே தமிழ்ச் சொற்களும் பிற மொழிகளில் புகுந்தன. (தமிழும் பிற பண்பாடும், ப.13)

    என்பதன் வழி அறியலாம். மேலும்,

    1700 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் பலர் மலாயாவை, கெடாவை, சயாமைக் கைப்பற்றி ஆண்ட செய்திகளும், அவர்களில் முதலாம் குலோத்துங்கன் பர்மாவை ஆண்ட செய்தியும், சோழன் கரிகாலன் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட செய்தியும், இலக்கியங்களாலும், வரலாறுகளாலும், கல்வெட்டுகளாலும் அறியப்படும் உண்மைகளாகும். இதனால், தமிழ் மொழியானது அக்காலத்திலேயே உள்நாட்டை ஆட்சி புரிந்தும், வெளிநாட்டை ஆட்சி புரிந்தும் ஒரு வல்லரசின் ஆட்சி மொழியாகவும் இருந்திருக்கிறது எனத் தெரிய வருகிறது. (தமிழின் சிறப்பு, ப.28)

    படையெடுப்புகளாலும் தமிழ்மொழி வெளிநாடுகளில் பரவியது என்பதை இதன்வழி அறியமுடிகின்றது.

    11. தமிழ்மொழிக்கும் ஏனைய திராவிட மொழிகளுக்குமான உறவு

    தமிழ் மொழிக்கும் ஏனைய திராவிட மொழிகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இதனை,

    கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வரருசியும் (Vararuchi), கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பூஞ்சலையும்(Patanjali) குறிப்பிடும் சில தென்னிந்தியச் சொற்களுடன் இதைத் தொடங்கலாம். இதற்குப் பின்னர் பாலி, சமஸ்கிருதம், பிராகிருதம்  ஆகிய மொழிகளின் இலக்கியங்களிலும், குமரிலபட்டரின் (Kumarila Bhatta), ‘தந்திர வாத்திகா’ (Tantra Varttika) போன்ற நூல்களிலும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திராவிட குடும்ப மொழிகளிலும் குறிப்புக்கள் வருகின்றன. கி.பி.14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘லீலா திலகம்’ (Lila Tilakam) எனும் மலையாள நூல் பாண்டிய நாட்டிலும், சோழ நாட்டிலும் நிலவிய சில வழக்காறுகளையும் உச்சரிப்புகளையும் குறிக்கின்றது. இதற்கு முற்பட்ட இராம சரிதம் போன்ற மலையாள நூல்கள், தமிழ் நூல்களே என்க கூறப்படுவதுமுண்டு. (தமிழ் மொழி வரலாறு, பக். 49-50)

    என்பவற்றிலிருந்து அறிய முடிகின்றது.

    • கல்வெட்டுகள்

    தமிழ் மொழியின் தொன்மையை அறிந்து கொள்ளக் கல்வெட்டுகள், பட்டயங்கள், செப்பேடுகள், இலக்கியங்கள், இலக்கணங்கள், வெளிநாட்டார் குறிப்புகள், வெளிநாட்டார் நூல்கள், மொழியியல் ஆய்வுகள் எனப் பல இருந்தாலும், கல்வெட்டுச் சான்றுகள் என்பவை முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில்,

    தமிழகம் கல்வெட்டுகளுக்குப் பெயர் போனது. ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே கல்வெட்டுகளைக் கண்டுள்ளது தமிழகம். (திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.142)

    என்பதன் வழி ஏனைய மொழிக் கல்வெட்டுகளைக் காட்டிலும் தமிழ் மொழியில் உள்ள கல்வெட்டுகள் காலத்தால் முந்தியவை என்பதை அறியமுடிகின்றது. மேலும்,

    இன்று கிடைக்கும் கல்வெட்டுகளில் பழமையானவை பிராமி எழுத்துக்களால் ஆனவை. இவற்றைக் கீழ் வளைவு, மறுகால் தலை, ஆனைமலை, அழகர் மலை, மேட்டுப்பட்டி, முத்துப்பட்டி, சித்தனை வாசல், திருவாதவூர்,  விக்கிரமங்கலம் போன்ற இடங்களில் காணலாம். இவற்றைப் பற்றிய செய்திகள் கிபி 1903 முதலே நமக்குக் கிடைக்கின்றன. (திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.142)

    என்பதன் வழி தமிழகத்தில் கல்வெட்டுகள் கிடைக்கப்பட இடங்களை அறியமுடிகின்றது. அவ்வாறு கிடைக்கும் கல்வெட்டுகள், தமிழ், கிரந்தம், வட்டு எழுத்து ஆகிய மூன்று வகை எழுத்துக்களால்  பொறிக்கப்பட்டுள்ளன. மேலும்,

    தமிழகத்தின் தென் மாவட்டங்களிலுள்ள குகைகளில் பிராமி வரிவடிவத்தில் எழுதப்பட்ட சிறிய கல்வெட்டுகள் பல காணப்படுகின்றன. இவை பிராமி வரிவடிவத்தில் தெற்கத்திய முறையில் எழுதப்பட்டவையாகும். கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் தொல் எழுத்தியல் (Paleography) ஆராய்ச்சி அடிப்படையில் இவற்றின் காலத்தைக் கிறிஸ்துக்கு முந்திய மூன்றாம் இரண்டாம் நூற்றாண்டுகள் என மதிப்பிடுகின்றனர். (தமிழ் மொழி வரலாறு, ப.46)

    எனவே கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவில் தமிழில் கல்வெட்டுகள் எழுதப்பட்டுள்ளன என்பது அறியப்படுகின்றது. இதுவே பழமை என்றல்ல மேலும் பழமையானக் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. கிடைத்துக் கொண்டும் உள்ளன. சமீப காலமாகத் திருச்செந்தூர் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் கல்வெட்டுகளும் முருகன் சிலைகளும் பாறைகளும் கண்டறியப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • வெளிநாட்டார் குறிப்புகள்

    வெளிநாட்டினர்களான மெகஸ்தனிஸ், பெரிபுளூஸின் ஆசிரியர், ப்ளினி, தாலமி, சீன யாத்திரிகர் யுவன் சுவாங், மார்கோபோலோ போன்றவர்கள் குறிப்புகள் குறிப்பிடத் தகுந்தன. இவர்களின் குறிப்புகள் தமிழ் மொழியினுடைய பழமைக்குக் குறிப்பிடத் தகுந்த சான்றுகளாகின்றன.

    12. தமிழ் மொழியின் சிறப்பு

    தமிழ் மொழியில் முதல் எழுத்துக்கள் மொத்தம் 30 தான். அவை உயிர்- 12, மெய்- 18, உயிர்மெய் – 216, ஆயுதம் -1 என மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன.  இம்மொழி எழுதவும் படிக்கவும் ஏனைய மொழிகளைக் காட்டிலும் எளிமையானது என்பதை,

    தமிழ் மொழியானது எழுத மட்டுமல்ல படிக்கவும் எளிது. தமிழில் ஒரு எழுத்துக்கு ஒரே ஒலியானதால் எவரும் எளிதாக எதையும் படிக்க முடிகிறது. (தமிழின் சிறப்பு, ப.15)

    என்றும், அதனை எழுதும் முறை எளிமையானது என்பதை,

    சீன, சப்பானிய மொழிகளின் எழுத்துக்களைப் போல் மேலிருந்து கீழ்நோக்கி எழுதுகிற அல்லது உருது மொழி எழுத்துக்களைப் போல வலப்புறமிருந்து இடப்புறம் நோக்கி எழுதுகின்ற கடினமான முறை தமிழுக்கு இல்லை. இடதுபுறமிருந்து வலப்பக்கம் நோக்கி எளிதாக எழுதலாம். (தமிழின் சிறப்பு, ப.16)

    என்றும் கூறப்பட்டுள்ளது.

    13. தமிழ் மக்களின் தோற்றம்

    தமிழ் மக்கள் இந்தியாவின் பூர்வக்குடிகள் என்பதை முன்னமே கண்டோம். அவர்களின் காலம் என்ன என்பதை இன்றளவும் நம்மால் ஆராய்ந்தறிய முடியாததாகவே உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளிலும், 2300 ஆண்டு பழமை வாய்ந்த பிராமிய கல்வெட்டுகளிலும் தமிழ்மொழி குறிப்புகள் காணப்படுகின்றன.  2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோம் நாட்டை ஆண்ட ஏழாவது சாலமன் காலத்தில் தமிழர்கள் அந்நாட்டுடன் உறவு கொண்டிருந்தார்கள். 3000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்தில் என்மானார் புலவர், என்ப எனத் தொல்காப்பியரே குறிப்பிட்டுள்ளார். மேலும்,

    தமிழகத்தில் 3 கடற்கோள்கள் அடுத்தடுத்தும் தோன்றிக் கடல்நீர் நாட்டில் புகுந்து நிலப்பரப்பை, மக்களை, தமிழ்ச் சுவடிகளை அழித்துவிட்டன என்றும்,  இது நடந்த காலம் 3000-ம், 5000-ம், 9000-ம் ஆண்டுகளாயின எனவும் கூறப்படுகிறது. (தமிழின் சிறப்பு, ப.30)

    என்பதன் வழி ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இங்குத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதை அறியமுடிகின்றது. அதுமட்டுமன்றி,

    காவிரிபூம்பட்டினத்தில் நிலைத்து நின்று வாழும் தமிழ் மக்களைப் “பதியெழு அறியாப் பழங்குடியினர்” என இளங்கோவடிகள் கூறுகின்றார். இதற்கு உரை கூற வந்த அடியார்க்கு நல்லார், “படைப்புக் காலந் தொட்டே வாழுங்குடியினர்” எனக் கூறியிருக்கிறார். தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது, “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றி மூத்த குடியினர்” என ஆசிரியர் பரிமேலழகர் கூறுகிறார். (தமிழின் சிறப்பு, ப.26)

    என்கின்றனர். இவற்றின்வழி, தமிழ்மொழியின் தொடக்கக் காலம் என்பது அறுதியிட்டுக் கூற இயலாத வகையில் நீண்டு செல்கிறது என்பதை அறியமுடிகின்றது.

    14. தமிழ்மொழி செம்மொழி

    தமிழ் செம்மொழித் தகுதிக்குத் தொன்மை ஒரு முக்கியமான கூறுபாடாகக் கருதப்படுகிறது. தமிழின் தொன்மை உலகளாவிய ஒன்று. என்பதை,. “Apart from literature written in classical (Indo-Aryan) Sanskrit, Tamil is the oldest literature in India” (Encyclopedia Britannica. Vol.II.P.350) என்று என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தமிழையும், சமஸ்கிருதத்தையும் தொன்மையான இந்திய மொழிகள், செம்மொழிகள் எனக் கூறியிருக்கிறது.உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இதில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் இல்லை என்பதால் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் உள்ளன. ஆனால் சில மொழிகள் மிகப் பழமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகவும் உள்ளன. இவற்றில் சில மொழிகளைச் செம்மொழிகள் என்று அடையாளப்படுத்துகின்றனர்.

    15. செம்மொழித் தகுதி

    ஒரு மொழிக்குச் செம்மொழி என்ற தகுதி அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் இலக்கியத் தரத்தின் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படுகிறது. இருப்பினும் செம்மொழி என்பதற்கு அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான இரண்டு சிறப்புகள் தேவையாய் இருக்கின்றன. அவைகள், இலக்கியப் படைப்புகள், கலைப் படைப்புகள் இந்த இரு படைப்புகளைக் கொண்டே அந்த மொழி செம்மொழிகளாக அறிவிக்கப்படுகின்றன. அந்தவகையில், 2004-ம் ஆண்டுச் செப்டம்பர் 17-ம் நாள் நடைபெற்ற இந்திய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழைச் செம்மொழியாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஆணை, 2004 அக்டோபர் 12-ம் நாள் வெளியிடப்பட்டது.

    • இலக்கியப் படைப்புகள்

    ஒரு மொழியின் சிறப்பிற்கும் செம்மைக்கும் முதல் அடையாளமாகத் திகழ்வது அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்கள்தான். இந்த இலக்கியங்களில் இருக்கும் பழமையுடன் அதில் கருத்துச் செறிவுகளும் இருக்க வேண்டும். ஒரு மொழியின் சிறப்பு அந்த மொழியில் படைக்கப்பட்ட இலக்கியப் படைப்புகள் வழியாகத்தான் அறிய முடிகிறது.

    • கலைப் படைப்புகள்

    ஒரு மொழியின் பழமைக்கு இலக்கியம் சான்றாக இருந்தது என்பதுடன் அந்த மொழி சார்ந்த பகுதிகளில் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் அந்த மொழியின் பழமையை உணர்த்தும் அடுத்த சான்றாக இருக்க வேண்டும். கலைப் படைப்புகள் என்பது கட்டடக் கலை, சிற்பக் கலை போன்ற பழமை வாய்ந்த கலைச் சான்றுகளாக இருக்க வேண்டும்.

    16. உலகச் செம்மொழிகள்

    16.1. தொல் பழமை

    சுமேரிய மொழி, எகிப்திய மொழி, பண்டைய பாபிலோனியம், மத்திய அசீரியம், வேத சமசுகிருதம், பண்டைய எபிரேயம், பண்டைய பாரசீகம், பண்டைய சீனம், பண்டைய கிரேக்கம், பண்டைய சமசுகிருதம், பண்டைய தமிழ், பண்டைய பாளி, பண்டைய இலத்தீன், பண்டைய மண்டேயம், பண்டைய சீரியாம், மத்திய பாரசீகம், பண்டைய கொப்டிக்

    16.2. திராவிட மொழிகள்

    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்

    16.3. இந்தோ-ஐரோப்பிய மொழிகள்

    கிரேக்க மொழி, சமசுகிருதம், இலத்தீன், பாரசீக மொழி

    16.4. ஆப்பிரிக்க-ஆசிய மொழிகள்

    அரபு மொழி, எபிரேயம்

    16.5. சீனோ-திபெத்திய மொழிகள்:

    சீன மொழி

    17. பழமை வாய்ந்த தமிழ்மொழி

    இந்தியாவில் ஆரியம் சார்ந்த பண்பாட்டிற்கு வடமொழி எப்படி விளங்கியதோ அதைப் போலவே திராவிடம் சார்ந்த பண்பாட்டிற்குத் திராவிட மொழிகளில் முதலாவதான தமிழ் 6000 ஆண்டுகள் மேற்பட்ட இலக்கிய பழமை வாய்ந்தது. ஐரோப்பிய நாகரீகத்தை அறிந்து கொள்ளக் கிரேக்கம், இலத்தீன் மொழிகள் போல் தற்போதைய இந்திய வரலாற்றை அன்றைய சேர, சோழ, பாண்டியர்கள், போன்ற வரலாற்றை அறியத் தமிழ், மொழி தேவையாக உள்ளது.

    18. செம்மொழிக்கான தகுதிகள்

    தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, நடுவு நிலைமை, தாய்மைப் பண்பு, பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு, பிற மொழித் தாக்கமில்லா தன்மை, இலக்கிய வளம், உயர் சிந்தனை, கலை இலக்கியத் தனித்தன்மை, மொழிக் கோட்பாடு

    18.1. தொன்மை

    செம்மொழி நிலைக்கு ஒரு மொழி ஆயிரம் ஆண்டுக்கால தொன்மை படைத்ததாக விளங்க வேண்டும். தமிழோ ஆயிரமல்ல ஓராயிரம் ஆண்டிற்கும் மேலாகப் பேசி, எழுதி, படைத்து தனக்குள்ளே பெரும் இலக்கியச் செல்வங்களைக் கொண்டது. இதனை எவராலும் மறுக்கப்படாமல் ஏற்கத்தக்க அளவிற்கு இதன் தொன்மை சிறப்பானது. அத்துடனில்லாமல் இன்றளவும் உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களின் பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும், கல்வி கற்கும் மொழியாகவும், படைப்பு புனைதலில் புதிய புதிய துறைகளிலும் நிகரற்று விளங்குவது அதன் தனிச் சிறப்பு.

    18.2. தனித் தன்மை

    பல்வேறு திணை நிலங்களிலும் திராவிட குடும்ப மொழிகள் கிளைத்திட வைத்த தமிழ், தாயாக விளங்கி தனக்கென ஒரு மொழிக் குடும்பத்தை உருவாக்கி தன்னைச் சுற்றி வேர்களாகவும், விழுதாகவும் மொழிகள் கிளைப்பினும் தன்னிலை மாறாத உன்னத நிலையுடன் நிலைபெற்று விளங்குவது இதன் தனித்தன்மையாகும்.

    18.3. பொதுமைப் பண்பு

    உலகின் எந்த இயற்கை மொழிக்கும் இல்லாத சிறப்புமிக்க இலக்கணக் கட்டமைப்பு கொண்டது தமிழ் மொழி. தமிழின் இலக்கணப் பொதுமைப் பண்பு நெறிகள் திராவிட மொழிக் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் இதர இயற்கை மொழி அனைத்தும் பயனுறும் வகையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.

    18.4. நடு நிலைமை

    தமிழின் இலக்கண விதி உன்னத நெறியுடனான பன்முகத் தன்மை கொண்டது. எனினும் இதன் இலக்கண விதிகள் வேறு எதனுடனும் சாராமல் தனித்தியங்கி நடுநிலையுடன் விளங்குவது.

    18.5. தாய்மைத் தன்மை

    தமிழ் எனும் மூல மொழி தான் மட்டுமே என்ற தன்னலமின்றி தாய்மைப் பண்புடன் திராவிட மொழிக் குடும்பம் உருவாகிட அடிப்படையில் விளங்கியது. பேச்சு மொழியென்றும், இலக்கிய வளமிக்க மொழிகளென்றும், பல்வேறு தன்மையுள்ள மொழிக் குடும்பத்தில் முதலாய் ஏனையவற்றுக்குத் தொடக்கமாய் விளங்கும் தாய்மைப் பண்பு ஏனைய இயற்கை மொழிகளை விடச் சிறப்பானது.

    18.6. பண்பாட்டுக் கல்வியறிவு பட்டறிவின் வெளிப்பாடு

    தமிழின் உன்னதமே அதன் இலக்கிய வளங்கள் தாம். தமிழரின் அகத்திணைக் கோட்பாடும், புறத்திணைக் கோட்பாடும் இலக்கியப் படைப்பாளர்களான முன்னோர்களின் பண்பாட்டுக் கல்வியறிவின் வெளிப்பாடாகும். அகத்திணை புறத்திணை மட்டுமல்லாமல் மெய்யியல் கோட்பாடும், அறவழிக் கோட்பாடும் வேறெந்த இயற்கை மொழிப் படைப்பிலும் தமிழில் உள்ள அளவுக்கு இல்லை. இந்த இலக்கிய வளமே தமிழ்ப் புலவர் பெருமக்களின் அறிவுப் புலன் சான்றாக இன்றளவும் திகழ்கிறது.

    18.7. பிறமொழித் தாக்கமில்லா தனித் தன்மை

    உலகில் நிலவும் மொழிக் குடும்பங்களில் மூல மொழியாய்த் திகழும் மொழிகள் யாவும் வேர்ச் சொல்லாக்கத் திறன் குறைவால் பிறமொழிகளின் கூறுகளை சில துறைகளில் தாங்கி நிற்கின்றன. வினைகளால் ஒரு புதிய துறை சார்ந்த சொற்களைத் தமிழில் எளிதாக உருவாக்கும் அளவுக்கு இலக்கண வளம் செறிந்தது தமிழ். ஆகையினால் கடந்த காலமாயினும் சரி நிகழ்காலமாயினும் சரி எதிர்காலமாயினும் சரி எக்காலத்திலும் சமூகப் பண்பாட்டில் நிகழும் மாற்றங்களுக்கேற்ப தனித் தன்மையுடன் தனக்கேயுரிய இலக்கண செழுமையுடன் தமிழில் புதிய சொற்களை, துறைகளை உருவாக்குதல் எளிது. காட்டாக, கம்ப்யூட்டர் எனும் 20ஆம் நூற்றாண்டு சாதனம். உலகெங்கும் பல துறைகளில் பரவியது போன்றே தமிழ் நிலத்திலும் காலூன்றியது. பிறமொழிகள் அதில் வழங்கும் துறை சார்ந்த சொற்களை நேரடியாகப் பயன்படுத்தும் நிலையில் தமிழில் அதனைப் பொருளுணர்ந்து கணியம், கணினி, கணிப்பொறி என ஆக்கம் செய்து பயன்படுத்தல் ஒன்றே தமிழின் பிறமொழி கலவாத் தனித்தன்மை விளங்கிக் கொள்ளத்தக்கது.

    18.8. இலக்கிய வளம்

    தமிழர் தமிழ் இனம் எனும் மக்களினத்தைத் தெளிவாக அறியக்கூடிய காலக் கண்ணாடியாக விளங்குவது தமிழில் உள்ள இலக்கியங்களே. இலக்கியங்கள் வழியாகத் தமிழரைப் பார்க்கும் போது தமிழ் நிலத்தில் ஓங்கி இருந்த பண்பாட்டை, சமூக, பொருளாதார, இயற்கைக் கோட்பாட்டுடன் இணைந்த தமிழரின் வாழ்வை, வளத்தை அறிய இயலும். சங்க காலத்திலிருந்து தொடங்கும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒவ்வொரு காலம் தோறும் அந்தந்த சூழல்களுக்கேற்ப அரசன், தலைவன், தெய்வம், அற வாழ்க்கை, அக வாழ்க்கை, புற வாழ்க்கை, வீரம், இயற்கை வளம், பழக்க வழக்கம், வழிபாட்டு முறைகள் என்பன போன்றவற்றின் தாக்கம் எப்போதெல்லாம் அதிகரிக்கின்றதோ அப்போதெல்லாம் அது தொடர்பான இலக்கியங்கள் படைக்கப்பட்டன. எந்த இலக்கியமாக இருந்தாலும் அதில் கையாளப்படும் மொழியின் ஓசை, எழுத்து, சொல், பொருள் போன்றவை பொதுமைப் பண்புடன் துலங்கும் வகையில் இலக்கணக் கட்டமைப்புடன் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளது.

    தமிழிலக்கியத்தின் சிறப்பு : பொதுவில் இத்தகைய இலக்கியப் படைப்புகள் தனிநபர், தன்னார்வக்குழு, அரசு நிறுவனம் எனும் மூன்று தளங்களில் உருவாக்கப்பட்டன. சிற்சில இலக்கியம் தனிப்புலவர்களால் உருவாக்கப்பட்டது. அதைப் போலவே கூட்டாகப் புலவர்கள் குழுக்களும் நூல்களைப் படைத்துள்ளனர். இது போன்ற படைப்பிலக்கியப் பணிகளுக்குக் கொடையாளர்களாக அரசர்கள், அரசாங்கம் விளங்கியுள்ளது. சில அரசர்களே புலமை மிக்கவர்களாக விளங்கி இருந்தமையால் நேரடி இலக்கியப் படைப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

    பெரும்பாலான சங்க இலக்கிய நூல்கள் புலவர்கள் அமர்ந்த பெரும் குழுவால் உருவாக்கப்பட்டு அவைகளை பிறிதொரு புலவர் குழு அந்த இலக்கிய திறனை அதன் மொழியமைப்பை ஆய்வு செய்வர். பிறிதொரு புலவர் குழு. அப்படைப்பு எக்காலமும் தமிழர்களுக்குப் பொதுவில் பயன்பட வேண்டும் எனும் உயரிய சிந்தனையால் அதன் இலக்கணக் கட்டமைப்பை ஆய்ந்திடுவர். இவ்வாறு ஒரு படைப்பு ஆய்வுக்குப்பின்னரே மக்களை அடைந்ததால் மொழிப் பயன்பாடு, பொதுமைப்பணபாடு தமிழரிடம் மிகுந்திருந்தது. தமிழ் இலக்கிய நூல்களில் கற்பனை நயத்தை விட இன்புறு நோக்கு அதிகமிருக்கும். இயற்கையோடு இணைந்த வாழ்வியல் பண்பாட்டைத் தமிழர்கள் கொண்டிருந்ததால் அது இலக்கியப் படைப்புகளிலும் எதிரொலித்தன.

    தமிழ் இலக்கியப் படைப்புகள் சங்க காலம் தொடங்கி 16ஆம் நூற்றாண்டு வரை செய்யுள் நடையிலேயே படைப்புகள் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே உரைநடை எனும் புதிய நடை தமிழில் இடம் பெற்றது. பின்னர் ஈழத்து ஆறுமுகநாவலர் தொடங்கி நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியார், திரு.வி.க. வரை பலர் உரை நடை இலக்கியம் வளர வித்திட்டனர். மேலைநாட்டு இலக்கியங்களையொத்த புதினங்கள், சிறுகதைகள் கட்டுரைகள் எனத் தமிழிலக்கியம் உரைநடை பரிமாணம் பெற்றது. செய்யுள் நடைகளில் படைத்த இலக்கியங்களில் இலக்கணக் கட்டமைப்புடன் பல்வேறு சிற்றிலக்கியங்களும், காப்பியங்களும் விரவியுள்ளன. இவற்றில் தூது, பிள்ளைத் தமிழ், பரணி, கலம்பகம், குறவஞ்சி, பள்ளு, உலா, பல்சந்தம் எனச் செய்யுள் வடிவ இலக்கியத்துள் உறுப்புகளாக விளங்குகிறது.

    இது போலவே மரபு நடைச் செய்யுள் வடிவிலிருந்து புதுக்கவிதை, அய்க்கூ எனும் வடிவுடனும் தமிழ்க் கவிதை படைக்கப்படுகிறது.

    தமிழ் தன் இலக்கியச் செல்வங்களால் இன்புறு, கற்பனை இலக்கியத்துடன் நில்லாமல் தொழில் நுட்பம் சார்ந்த அறிவியல் நூல்கள் படைப்பாக்கத்திற்கும் உட்பட்டுள்ளது. படைப்பின் எந்த உறுப்பாக இருப்பினும் அதற்கேற்ற சொல்வளமும், பொருள் வளமும் தமிழில் சிறப்புடன் விளங்குவதால் உலக இயற்கை மொழிகளின் இலக்கிய தளத்தில் தமிழுக்கென தனித்துவமான இடமுள்ளது.

    18.9. உயர் சிந்தனை

    இலக்கியத்தில் உயர் சிந்தனை என்பது அது எத்தகைய படைப்பாக விளங்கினும் மக்கள் சமூகத்திற்குப் பயன் விளைவிப்பதாக விளங்குதலே. இந்த அடிப்படைதான் தமிழ் இலக்கியங்களின் கருப் பொருளாக விளங்குகின்றன. தமிழ் இலக்கியங்கள் எத்தகைய காலத்தவையாக இருப்பினும் அவை மானுடம் போற்றும் உயர் சிந்தனைகளின் தொகுப்பாகவே மிளிர்வதைக் காணலாம். சங்க இலக்கியங்களில் பாடுபொருளாக விளங்கும் அகத்திணையும், புறத்திணையும், அறவியலும் தமிழர் வாழ்வுடன் இணைந்த உயர் சிந்தனை மரபாகும். உயர் சிந்தனை மரபுகள் இலக்கியத்தில் நிலை பெற்றிட வேண்டி இலக்கண நெறிகள் பிழையறப் பின்பற்றப்பட்டன. தனிமனிதர் தொடங்கி சமூகம், அரசு என்ற மூன்று நிலைகளிலும் கோட்பாடுகளை, வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் உள்ள உயர்ந்த சிந்தனை மரபு உலக சிந்தனை மரபிலிருந்து உயர்ந்தோங்கியவை என்பது மறுக்கவியலாது.

    18.10. கலை இலக்கிய தனித் தன்மை வெளிப்பாடு

    தமிழ் இலக்கியங்களில் திகழும் கலை நயம் தனித் தன்மை பெற்றது. தமிழ் இலக்கியங்களில் தனிப்பாடலாயினும், புலவர்கள் குழு படைத்து, தொகுத்த பாடலாயினும் அரசர்கள் அரசு உதவியுடன் படைப்புகளை உருவாக்கிய இலக்கியங்களில் இழையோடும் கலை நயமும், கவி நயமும் போற்றத்தக்கவை.

    ஏழைப்புலவரான சத்திமுத்தப் புலவர் அக்காலத்தில் பாடிப்பரிசு பெறும் வண்ணம் ஓர் ஊருக்குச் சென்றார். அது பனிக்காலம் என்பதால் மேலாடை இல்லா கவிஞர் குளிர்தாங்காமல் ஊர் புறத்தே இருந்த குட்டிச் சுவருக்கருகில் நடு நடுங்கி இருந்தார். அச்சமயம் இரைதேடப் பறந்த நாரையொன்றைப் பார்த்த சத்திமுத்தப் புலவரின் சிந்தனை கவிபுனையத் தொடங்கியது. அவர் கவிதையை உரக்கக் கூறிய போது அந்த வழியாக இரவுக் காவலுக்குத் தாமே பொறுப்பேற்ற அவ்வூர் அரசன் குட்டிச் சுவரருகே ஒரு கவிதை ஒலிப்பதைக் கண்டு கூர்மையாக அதைக் கேட்டனன்.

    “நாராய் நாராய் செங்கால் நாராய்
    பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன
    பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
    நீயு நின் மனைவியும் தென்திசை குமரியாடி
    வட திசைக்கு ஏகி விராயின்
    எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் டங்கி
    நனைசுவர்க் கூறைகளைக் குரற் பல்லி
    பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
    எங்கோ மாறன் வழுதி கூடலில்
    ஆடையின்றி வாடையின் மெலிந்து
    கையது கொண்டு மெய்யது பொத்திக்
    காலது கொண்டு மேலே தழீஇப்
    பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
    ஏழையாளனைக் கண்டனும் எனுமே” (தனிப்பாடல் – சத்திமுத்தப்புலவர்)

    என்று பாடினார் சத்திமுத்தப் புலவர். பாடி முடித்ததும் மறைவிலிருந்த அரசன் அவரறியாமல் தன் மேலாடையை அவர் மேல் போர்த்துமாறு வீசி விட்டு உடனிருந்த காவலரைப் பணிந்து இப்புலவரை அரண்மனைக்கு அழைத்து வர ஆணையிட்டுச் சென்றான்.

    தமிழகத்தை ஆண்ட பல அரசர்களும் சிறந்த புலமையுடையோர். இயற்கையோடு இணைந்த வாழ்வில் ஊறித் திளைப்பவர்கள். அதனால் அவர்கள் நாட்டு நலத்துடனேயே தங்களின் புலமை வளர்க்கும் திறத்தால் அறிவு சார் புலவர் பெருமக்கள் எப்போதும் அரசவையில் சூழ்ந்திருக்குமாறு வாழ்ந்தனர். இது போன்ற அவைக்களத்தில்தான் கருத்துப் பரிமாற்றம், புதிய பொருட்களைப் பற்றிய ஆய்வு, இலக்கியம் படைத்தல் போன்ற தமிழ்ப் பணிகள் நடந்தது. மேற்காணும் அரசனும் அத்தகையவனே. நாரையின் கூர்மையான நீள மூக்கிற்கு இயற்கையான எடுத்துக்காட்டை அறியப் பல புலவர்களையும், நூல்களையும் ஆய்வு செய்தும் சரியான விடை தெரியாத நிலையில் அரசனின் ஐயத்தையும் போக்கி, தன் நிலையையும் தன் மனைவியின் பிரிவாற்றாமையையும் நயம்படக் கூறிப் பாடிய செய்யுள்.

    ஒரு புலவனின் புலமை அவன் வறுமை. அரசனின் ஐயம் என்பவற்றை மட்டும் கொண்டதல்ல. அந்நாளில் ஆள்வோரும், புனைவோரும் இயற்கையோடு இணைந்த இயல்பு வாழ்க்கையில் திளைத்தனர். அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஒரு கோட்பாட்டுடன் விளங்கியுள்ளது. வாழ்வதற்கேற்ற நிலம், காலம் அமையப் பெற்றதால் அன்பு தழைக்கும் அமைதி வாழ்வைக் கொண்டிருந்தனர். அதனால் அவர்களின் சிந்தனை எச்சூழலிலும் இயற்கை வயப்பட்டதாகவே விளங்கியுள்ளது. இந்த பண்பே பொதுமையாக இக்கால இலக்கியங்களிலும் வெளிப்பாடாக விளங்குகிறது.

    18.11. மொழிக்கோட்பாடு

    உலகில் சில இனங்களின் அடையாளமாக மொழி காணப்படுகிறது. அந்த மொழியில் படைக்கப்பட்டுள்ள படைப்புகளும், மொழியின் பயன்பாடும், அதன் பொதுப்பண்புகளும் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் வகையில் மொழியானது தனக்குள் உரியவாறு கட்டமைப்பைக் கொண்டிருப்பதே அம்மொழியின் அடிப்படைக் கோட்பாடாகும். இந்த அரும் பண்புகள் தமிழுக்குண்டு.

    மொழியியலாளர் ஒரு மொழியை மதிப்பிடுகையில் மொழியில் உருவான இலக்கியங்களைத் திறனாய்வு செய்வர். அதில் அம்மொழிக்குரிய இனம், அது வாழ்ந்த, வாழ்ந்துவரும் சூழல், காலம் எனும் மூன்றையும் நோக்குவர். ஏனெனில் ஒரு மொழியால் உருவான இலக்கியம் அச்சமூகத்தை மட்டுமே நமக்குத் தெரிவிப்பவை அல்ல. கூடவே அச்சமூகத்தைத் தொடர்ந்து வரும் மரபார்ந்த பண்பு நலன்கள் பலவற்றையும் தெரிவிக்கின்றன. எனவே தான் முன்னோர்கள் தமிழ் மொழிகளின் படைப்புகள் சமுதாயத்தில் தாக்கத்தை உருவாக்கும் வல்லமை கொண்டது என்கிற காரணத்தால் இலக்கியங்கள் கற்பதற்கும், கற்பிப்பதற்கும் வழங்கும்போது பொருளமைதி குறித்த கோட்பாட்டை வகுத்தனர். இந்த கோட்பாட்டை நெறி பிறழாமல் விளங்க இலக்கணத்தை வகுத்தனர். அதனால் தான் தமிழ்மொழி தனக்குள்ளே இலக்கணம் என்கிற கட்டமைப்பைப் பெற்றுள்ளதால் தரமிக்க இலக்கியப் படைப்புகள் அனைத்தும் சங்ககாலம் முதல் ஓர் ஒழுங்கமைதியுடன் பேணப்பட்டுவருகிறது. அத்துடன் வளர்ந்து வரும் புதிய துறைகள் எதுவென்றாலும் அதனையும் ஏற்றுத் தனித்தன்மை மாறாமல் தூய தமிழ்ச் சொற்களிலேயே அத்துறைகளை அறியும் வண்ணம் சீரிளமைத் திறனுடன் தமிழ் மொழி விளங்குகிறது. இத்திறனே அதன் கோட்பாடாகும்.

    இந்த பதினோர் தகுதிப்பாடுகளும் தமிழுக்கு மட்டுமே பொருந்துவனவாம் என்பதுதான் தனிச் சிறப்பு சமஸ்கிருதத்துக்கு ஏழு தகுதிப்பாடுகளும், லத்தீன், கிரேக்க மொழிகளுக்கு எட்டுத் தகுதிப்பாடுகளும் மட்டுமே பொருந்துகின்றன என்பது மொழியியலாளர் கணிப்பு

    19. தமிழ்ச் செவ்வியல் நூல்கள்

    தமிழ் மொழி இலக்கியங்கள் ஐரோப்பியச் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீன், சீனம், ஹீப்ரு, பாரசீகம், அரேபியம் ஆகியவற்றைக் காட்டிலும்  செறிவு மிக்கவை.  கி.பி. 600க்கு முந்தைய காலத்தைச் செவ்வியல் காலமாகக் கொண்டு அக்காலப்பகுதியில் தோன்றிய நூல்களைச் செவ்வியல் அவைகள்,

    19.1.இலக்கணம்

    தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள்

    19.2.சங்க இலக்கியம் – எட்டுத்தொகை

    நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு

    19.3.பத்துப்பாட்டு

    திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்

    19.4.பதினெண் கீழ்க்கணக்கு

    நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது , இனியவை நாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஐந்திணைஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழிஐம்பது, திணைமாலைநூற்றைம்பது, பழமொழி, சிறுபஞ்சமூலம், திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை

    19.5.காப்பியம்

    சிலப்பதிகாரம், மணிமேகலை,

    19.6. முத்தொள்ளாயிரம்

    ஆகியனவாகும்.

    20. முடிவுரை

    தமிழ்மொழி இந்திய மொழிகளில் பழமையானது என்பதும், தமிழர்களே இந்நாட்டின் பழங்குடிகள் என்பதும், சிந்து சமவெளி நாகரிகம் தமிழர்களுடையதே என்பதும் இக்கட்டுரையின்வழி அறியப்படுகின்றது. அதுமட்டுமல்லாது சமஸ்கிருதம் உள்ளிட்ட எம்மொழியிலிருந்தும் தோன்றியதல்ல தமிழ்மொழி . அது சுயம்புவாக தானே தோன்றி மற்ற மொழிகளுக்கு தாயாக விளங்கக் கூடியது. இம்மொழியின் தோற்றத்தையோ இம்மொழி பேசும் மக்களின் தோற்றத்தையோ எக்கால எல்லைக்குள்ளும் அடக்க இயலாது. உயிர்கள் தோன்றிய காலத்தில் தோன்றிய மனித இனம் தமிழினம். இம்மொழி வணிகத்தாலும், படையெடுப்புகளாலும் பல்வேறு நாடுகளுக்குச் செல்லலாயிற்று. அதுமட்டுமன்றி இம்மொழியில் பல்வேறு மொழிச் சொற்களும் புகுந்துக் கொண்டது. இருந்தாலும் தன் தன்மை மாறாமல் இன்றளவும் நிலைத்து வருகின்றது. அது மட்டுமன்றி செம்மொழிக்குரிய அனைத்துத் தகுதிப்பாடுகளையும் தன்னக்தே கொண்டு செம்மொழியாம் தமிழ்மொழி எனச் சீரிய நடைபயின்று வருகின்றது என்பது இவ்வாய்வுக்கட்டுரையின் வழி அறியப்பட்டது.

    துணைநூற்பட்டியல்

    1. அகத்தியலிங்கம், ச. திராவிட மொழிகள், (தொகுதி-1), மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002.
    2. அகத்தியலிங்கம், ச. திராவிட மொழிகள், (தொகுதி-2), மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002.
    3. மீனாட்சி சுந்தரனார், தெ. பொ. தமிழ் மொழி வரலாறு, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2022.
    4. மீனாட்சி சுந்தரனார், தெ.பொ. தமிழும் பிற பண்பாடும், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1998.
    5. விசுவநாதன், கி.ஆ.பெ. தமிழின் சிறப்பு, பாரி நிலையம், சென்னை, 1993.
    6. ஜான் சாமுவேல், ஜி. திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ஆசியவியல் நிறுவனம், சென்னை, 2001.
    7. Encyclopedia Britannica. Vol.II.
    8. https://www.tamilvu.org/courses/hg300/hg304/html/hg304tso.htm

    மதிப்பாய்வறிஞரின் கருத்துரை

    Ø தனது மொழிச் செல்வப் பெருமையையும் பண்பாட்டு விழுமியத்தையும் கருத்திற் கொள்ளாமல் நடப்பியல் சார்ந்த, பயனற்ற ஒரு அலங்கார வாழ்வுக்குத தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இன்றைய தமிழ்ச சமுதாயத்திற்குக், குறிப்பாக இளைஞர் சமுதாயத்திற்குப் பயன்படும் ஒரு கட்டுரை இது.

    Ø திராவிட மொழிகள் பற்றி உலகந்தழுவிய அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் கருத்துக்களை நிரலாகப் பயன்படுத்தியிருப்பதும் இந்திய மொழிக்குடும்பங்களைப் பற்றிய பகுப்பும் வரலாற்றுப் பின்புலமும் மொழியியல் ஆய்வு மாணவர்களுக்குப் பெருந்துணையாகலாம்.

    Ø “உயர்பதவியில் இருப்பதனாலேயே அனைத்தும் தெரிந்தவர்கள்” என எண்ணிக் கொள்ளும் போலிகள் வலம் வரும் காலத்தில், வலிமையான தரவுகளோடும், பொருத்தமான மேற்கோள்களோடும் கட்டுரை அமைந்திருப்ப்து ஒரளவு ஆறுதலைத் தருகிறது.

    Ø ஆய்வு நெறி முற்றாகப் பின்பற்றப்படவில்லை எனினும் அதற்குப் பங்கம் ஏற்படாத அளவுக்குக் கட்டுரை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Ø பத்தி பிரிப்புக்களிலும் அவற்றுக்கு எண் மற்றும் பகுப்பு எண் கொடுப்பதிலும் ஆய்வாளர் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சான்றாகச் செம்மொழிக்கான தகுதிகள் என்னும் பத்திக்கு எண் கொடுக்காமல், அதன் துணைப் பிரிவுகளுக்கு எண்கொடுத்திருப்பதைச் சுட்டலாம். செம்மொழிக்கான தகுதிகள் என்னும் பத்திக்கு எண் 11 என்றால் தொடர்ந்து வரும் உட்தலைப்புக்கள் 11.1. 11.2 11.3 11.4 என்று அமைந்திருக்க வேண்டும். அதுதான் ஆய்வு நெறி. இதுபோன்றே கட்டுரையின் அனைத்துப் பத்திகளுக்கும் உட்தலைப்புக்களுக்கும் எண் கொடுத்திருந்தால் கட்டுரை இன்னும் சிறந்திருக்கும்.

    Ø சராசரியாகப் பக்கத்திற்கு ஐந்தென நூற்றுக்கும் மேற்பட்ட ஒற்றுப்பிழைகள் நீக்கமற இலங்கும் இறைவனைப் போல் கட்டுரை எங்கும் பரந்து கிடக்கின்றன. “மொழி என்பது ஒருவர் தன் உணர்வுகளை (ப்) பிறருக்கு அறிவிக்கப் பயன்படும் ஓர் தொடர்பு (க்) கருவியாகும்.” என இரண்டு ஒற்றுப் பிழைகளோடுதான் கட்டுரையே தொடங்குகிறது. வல்லினம் மிகுதலும் மிகாமையும் செம்மொழியான தமிழின் தனிச்சிறப்பல்லவா?


     

    Share
  • விம்பிள்டன் – ஒரு புலம்பெயர்ந்த தமிழன் கண்ட 50 ஆண்டு பார்வை

    விம்பிள்டன் – ஒரு புலம்பெயர்ந்த தமிழன் கண்ட 50 ஆண்டு பார்வை

    சக்தி சக்திதாசன்

    1975ஆம் ஆண்டு. பதினெட்டு வயதுடன் ஒரு இளைய தமிழ் மாணவன் இலங்கையில் இருந்து உயர்கல்விக்காக, ஒரு கனவுடன் இங்கிலாந்தை அடைகிறான்.

    அவனுக்கு சமையல், பனி, பசுமை, பசியுடன் பசும் கவலை. ஆனால் இங்கிலாந்தின் மதிய பத்திரிகை தாள்களில் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் ஒரு பெயர் மட்டும் பிரகாசிக்கிறது விம்பிள்டன்.

    அதிகாரமுள்ள இங்கிலாந்தின் டென்னிஸ் அரங்கம்.

    புலம்பெயர்ந்த இளைஞனின் வாழ்க்கையில் இந்த விளையாட்டு நிகழ்வு எப்படி ஒளியும் நிழலும் ஆனது .

    1877 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டி, உலகின் மிகப் பழமையான மற்றும் மதிப்புக்குரிய டென்னிஸ் போட்டியாக விளங்குகிறது.

    இங்கிலாந்து இதனை தம் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகக் கொண்டாடுகிறது.

    வெள்ளை உடைகள், பழங்கால மர பலகை புள்ளிவிவரங்கள், முக்கனிகள், ஸ்ட்ராபெரி ஆகியவையுடன் தேசிய ஒளிப்பதிவுகளும், பி.பி.சி நேரடிக் காட்சிகளும் இதை ஒரு நாட்டுப்பற்றின் பிம்பமாக மாற்றியுள்ளன.

    1970களில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு விளையாட்டுப் பண்பாடுகள் புதிது.

    கிரிக்கெட் மட்டும் சிலருக்கே பரிச்சயமாக இருந்தது.

    ஆரம்பத்தில் விம்பிள்டன் ஒரு “மேல்மட்ட மரபுக்கவசத்துடன் கூடிய வெள்ளையர் விழா” போலவே தோன்றியது.

    ஆனால் இடையே ஒலித்த கமெண்டேட்டர்களின் வாகைச்சொற்கள், சுய ஒழுக்கத்தின் நடிப்பு, வீரர்களின் அமைதியான போராட்டம்… இவை அந்த இளைய தமிழனின் கவனத்தை ஈர்த்தன.

    புதுமுகங்களை கொண்டு வந்த விம்பிள்டன்: மார்ட்டினா நவரட்டிலோவா, விரோஜினா வேட், 1990களில் வந்த வினஸ் மற்றும் செரீனா வில்லியம்ஸ் போன்ற கருப்பின வீராங்கனைகள், ‘தம்மைப் போன்றவர்கள்’ மேடையிலுள்ளதை புலம்பெயர்ந்த மாணவனுக்குக் காண்பித்தது.

    விம்பிள்டன் பல்லின சமத்துவத்தின் ஓர் அமைதியான தூதுவராக வளர்ந்தது .

    வீரர்களை மட்டும் அல்ல, பார்வையாளர்களின் மனதையும் மாற்றியது.

    வாழ்க்கை முறை மாறுதல்: ஆண்டுதோறும் ஒவ்வொரு ஜூலை மாதமும் அந்த மாணவன் இப்போது இங்கிலாந்துப்.பிரஜை.

    வீட்டு நாகரிகத்தை விம்பிள்டன் பார்வையுடன் பொருத்திக் கொண்டார்.

    1980களில் பின்புற வரிசையிலிருந்த புலம்பெயர்ந்த மக்களுக்கு விம்பிள்டன் வழிமுறைகள், காகித வாசல் சீட்டுகள், கட்டண உயர்வுகள் அனைத்தும் “தடைச் சின்னங்கள்” போலவே இருந்தன.

    சத்தம் இல்லாத பிரேக்குப் பொழுதுகள், காழ்ப்புணர்வு நிறைந்த கமெண்ட்டுகள் சில சமயங்களில் மன உளைச்சலை ஏற்படுத்தின.

    விளம்பரத்திற்கும் வணிகரீதியிலும் போட்டி மெதுவாக நகரும்போது, பசுமையும் பசுமை மனப்பான்மையும் குறைந்தது என்பது கண்ட வருத்தமாக இருந்தது.

    இப்போது 68 வயதுடைய ஒருவன் — அன்றைய விம்பிள்டன் போட்டியையும், இன்றைய இணைய ஓட்டுக்களிலும் காணும் தமிழ்க் குழந்தைகளையும் இணைத்துப் பார்க்கிறான்.

    அவனுக்கு, விம்பிள்டன் என்பது வெறும் விளையாட்டு நிகழ்வல்ல — அந்த நாடு எப்படி, எதனால், எங்கு திருந்தியது என்பதற்கான ஒரு சமூகக் கண்ணாடி.

    அவனது கனவுபசுமை மேடையைப் போலவே பசுமை மனமுடைய புது தலைமுறையினரை வளர்த்தெடுத்திடும் உயர் நோக்குடையது.

    புலம்பெயர்ந்த ஒரு மாணவனின் பார்வையில் விம்பிள்டன் என்பது நேரம் போவதைக் காட்டும் கடிகாரம் மட்டுமல்ல. அது உலகம் நோக்கும் திறந்த ஜன்னலாகவும், ஒருமைப்பாட்டின் ஓர் அடையாளமாகவும் மாறிவிட்டது.

    இங்கிலாந்தின் விளையாட்டு அரங்கில், தமிழரின் சிந்தனையும் கூச்ச உணர்வும், ஒளியும் நிழலும் நிகழ்த்தும் வண்ணப் பயணமாக இருக்கிறத்.

    என் இனிய வாசக உள்ளங்களே !

    இங்கிலாந்தில் என் வாழ்வுப் பயணத்தின் 50 வருடங்களை முடித்து விட்ட இந்த ஆண்டில் இந்த உலகப் பிரசித்தி பெற்ற போட்டி மீதான எனது பார்வையை பகிர்ந்து கொண்டேன்.

    Share
  • நினைத்துப் படிப்போம் நிமலனும் மகிழுவான் !

    நினைத்துப் படிப்போம் நிமலனும் மகிழுவான் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    வள்ளுவம் படிப்போம் வள்ளலார் படிப்போம்
    பட்டினத் தடிகள் பாட்டையும் படிப்போம்
    நாலடி படிப்போம் நல்லுரை படிப்போம்
    தேனார் திரு  வாசகம் படிப்போம்

    மூலரைப் படிப்போம் மூதுரை படிப்போம்
    சீலமாம் அடியார் திருமுறை படிப்போம்
    கம்பனைப் படிப்போம் கவிமணி படிப்போம்
    பாரதி பாரதி தாசனைப் படிப்போம்

    படிப்போம் படிப்போம் பலதும் படிப்போம்
    படித்ததை மனதில் பக்குவப் படுத்துவோம்
    படித்ததை படித்த நிலையிலே விட்டிடா
    படித்ததை  வாழ்வுக்குப் படிக்கல் லாக்குவோம்

    முன்னவர் நமக்காய் எழுதிக் குவித்தார்
    முது சொம்மாக நிறைந்தே இருக்கு
    எடுக்க எடுக்க எமக்கே பயனே
    எடுத்துப் படித்தால் இமயமாய் உயருவோம்

    வாழ்வின் தத்துவம் வண்ணமாய் சொன்னார்
    வரம்பைக் கட்டிக் காத்தார் வாழ்வினை
    வழுக்கி வீழா காத்திட முனைந்தார்
    நினைத்துப் பார்க்கையில் நெஞ்சம் நிறையுது

    கையைப் பிடித்து அழைத்துச் சென்று
    கடமை கண்ணியம் காட்டி நிற்கிறார்
    அறத்தை உணர்த்தி அன்பை உணர்த்தி
    ஆண்டவன் நினைப்பை அகத்தில் பதிக்கிறார்

    நூல்களைப் படிப்போம் நுண்மாண் கருக்களை
    வாழும் வாழ்வுக்கு வழியாய் கொள்ளுவோம்
    மனத்தின் மாசை அகற்றும் மருந்தாய்
    நினைத்துப் படிப்போம் நிமலனும் மகிழுவான்

    Share
  • கண்ணதாசன் பாடல்களில் ஆன்மீக அறிவியல் – 12

    கண்ணதாசன் பாடல்களில் ஆன்மீக அறிவியல் – 12

    சக்தி சக்திதாசன்

    “பாடல் எழுதும் போது எல்லாம் நான் ஒரு பாமரனாகிறேன்,” என்று கவியரசர் கண்ணதாசன் ஓரளவு நகைச்சுவையோடும், ஆழமாகவும் கூறியிருப்பார்.

    இன்றைய போதனைகள் புத்தக பக்கங்களில் சிக்கிக் கிடக்கும்போது, அவர் பாடல்கள் பாமரனின் இதயத்தில் நெடுக பரவி உருக்கமாக குரல் கொடுக்கின்றன.

    சாமானிய மனிதன் திருப்பதி சென்று வணங்கும் போது தன் உள்ளே எழும் பயம், ஆசை, ஏக்கம் அனைத்தையும் கண்ணதாசன் வரிகளில் காண்கிறான்.

    “அருணாசலா” என அவர் உரைத்த ஒவ்வொரு அடியிலும் ஆன்மாவின் அசைவும், உள்ளத்தின் வலியும் ஒலிக்கின்றன.

    இந்தக் கட்டுரையில், அவருடைய பாடல்களில் தோன்றும் ஆன்மீகப் பின்னணியை ஒரு பொதுமகனின் நேர்மையான உணர்வுகளில் இருந்து பார்வையிடப் போகிறோம் .

    ஞானமும் பாசமும் கலந்து ஓர் இறை நாடாளும் மொழியாக வளர்ந்த கவிதைகளின் பயணம் இது.

    இனி வரிகளைப் பார்ப்போம்

    கண்ணன் என்னும் மன்னன் பேரை
    சொல்ல சொல்ல
    கல்லும் முள்ளும் பூவாய் மாறும்
    மெல்ல மெல்ல

    கண்ணன்” என்பதன் வெளிப்படை பொருள் கிருஷ்ணர் என்றே இருந்தாலும், ஆன்மீகப் பார்வையில் இது சுத்தம், கருணை, ஈர்ப்பு எனும் தெய்வீக சக்தியைச் சுட்டுகிறது.

    மனிதன் கண்ணன் எனும் நாமத்தை குறும்புக்காக அல்ல, இருகரம் நீட்டிச் சொல்லத் தொடங்கும்போது, அவனது உள்ளத்து மயக்கம் கலைந்து, உலகின் கடினம் கன்மங்களும் (“கல்லும் முள்ளும்”) மெதுவே மலர்களாக மாறுகிறது .

    அதாவது உள்ளத்தின் கெட்ட எண்ணங்கள் கரைந்து, அமைதி, சமாதானம், பாசம் போன்ற மலர்கள் மலருகின்றன.

    “சொல்ல சொல்ல…” என்பது ஜபம், நாமசங்கீர்த்தனை போன்ற உள்மூச்சு சாதனைகள் போன்றது.

    “மெல்ல மெல்ல…” என்பது பயணத்தின் நிதானத்தை — உடனடித் திருவிளைவு அல்ல, நெடுநாள் தீட்சையின் பயனைச் சுட்டுகிறது.

    அவர் சொல்லும் ஒரே நாமம் நம்முள் ஏற்படுத்தும் அந்தரங்க மாற்றம் — இதுவே இந்த வரிகளில் அடங்கிய அதீத ஆன்மீக உண்மை.

    இனி அடுத்து

    எண்ணம் என்னும் ஆசைப்படகு
    செல்ல செல்ல
    வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம்
    துள்ள துள்ள

    எனும் வரிகளையும்.எமது கவியரசரின் ஆன்மீகக்.கோணமும் உள்ளதா என்று பார்க்கலாம்.

    இது வெறும் காதல் அல்லது மனித உணர்வைப் பற்றி மட்டும் பேசும் வரிகள் போல தோன்றினாலும், இவற்றில் ஒரு ஆழ்ந்த ஆன்மீகப் பார்வை நிரம்பியிருப்பதைக் காணலாம்.

    வாருங்கள், வரிகளைக் கவனமாக விரித்து பார்ப்போம்.

    “எண்ணம் என்னும் ஆசைப்படகு செல்ல செல்ல…”
    இது மனதின் யாத்திரை இல்லையா ? சஞ்சலமான எண்ணங்களின் பயணம்.

    இங்கே “எண்ணம்” என்பது மனிதனின் சிந்தனைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

    “ஆசைப்படகு” என்பது ஆசைகளால் இயக்கப்படும் மனம் .

    இது சம்சாரத்திற்குள் பயணிக்கும் நாவாயைக்கூறும் உருவகம்.

    ஆன்மீகப் பாதையில், இந்த எண்ணங்கள் வெறுமனே யாதொன்றையும் தாண்டாது முன்னே செல்கின்றன.

    ஆனால், அவை நடத்தும் பயணம் நம் உள்ளத்தின் ஆழத்தில் மாற்றங்களை உருவாக்குகிறது.

    “வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ள துள்ள…”

    தெய்வீக சக்தியின் வெளிப்பாடு – சக்தியின் உந்துதல்

    “பெண்மை உள்ளம்” என்பது இங்கு பெண்தன்மையை மட்டுமல்லாமல், பராசக்தியையும், கருணையை ஏந்தும் ஆதித்தாயியையும் குறிக்கக்கூடும்.

    அந்த உள்ளத்தில் வெள்ளம் பெருகும் – அதாவது, தெய்வீக சக்தி அதிகரிக்கிறது; அந்த பரிசுத்த எழுச்சி துள்ளித் துள்ளிக் களிக்கிறது.

    இது ஆன்மாவின் உணர்வு பூரிப்பும், சக்தியின் உந்துதலும்.

    ஒரு பக்கம், ஆசைகள் மனத்தை இழுத்துச் செல்லும் பொழுது, மற்றொரு பக்கம், அந்த ஆசைகளால் தூண்டப்படும் தேடலில் உள்ளம் ஒரு பரிபூரணத்தை அடைகிறது.

    இது இன்பத்தில் இல்லை – இறை உணர்வின் பரவலில் உள்ளம் துள்ளும் தருணம்.

    “சங்க நிரைத்த புவியிலே” என்ற வார்த்தைகளை போலவே, இங்கே உணர்ச்சி வெள்ளம் ஆன்மீகப் பரவலைக் குறிக்கிறது.

    அப்பப்பா அப்படியே கவியரசரின் வரிகளுக்குள் விழுந்து நீச்சலடிக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

    இன்பத்தின் ஆழத்திற்கு அல்லவா அடித்துச் செல்லப்படுகிறோம்.

    வாருங்கள் உங்களை அடுத்த அலைக்குள் இழுத்துச் செல்கிறேன்

    தென்றல் இன்று பாடும் பாடல் என்ன என்ன
    தென்றல் இன்று பாடும் பாடல் என்ன என்ன
    சின்ன கிளிகள் சொல்லும் கதைகள் என்ன என்ன
    சின்ன கிளிகள் சொல்லும் கதைகள் என்ன என்ன

    “தென்றல் இன்று பாடும் பாடல் என்ன என்ன…”

    இறை அருள் நம்மை எப்போதும் எட்டிப் பார்க்கும் குரல்
    தென்றல், ஆன்மீகத்தின் பார்வையில், இறை பரிசுத்த சத்தமாகவும், நமக்கு உள்ளளவிலேயே கனிவாக ஒலிக்கும் அறிவுரையாகவும் பார்க்கப்படுகிறது.

    தென்றல் என்றால் தவிர்க்கமுடியாத ஒரு அழைப்பு போல அது நம்மை நோக்கிக் கீற்றுக்கீற்றாய் வந்து, “நீ என்னுள் கேள்” எனச் சொல்வது போல் இந்த பாட்டில், அந்த தென்றல் பாடும் இசை என்பது நம் உள்ளத்தில் எழும் விழிப்புணர்ச்சி அல்லது தெய்வீகக் குறிப்பு.

    “சின்ன கிளிகள் சொல்லும் கதைகள் என்ன என்ன…”

    நற்குணங்களின் நட்பு மொழிகள் — இறை இளமை திருவுணர்வுகள்
    சின்ன கிளிகள் — இவை குழந்தையின் உள்ளம் போல தூய்மையான எண்ணங்களுக்குச் சின்ன உருவகங்கள்.

    கிளிகள் உன்னதமான நற்குணங்களை (அன்பு, கருணை, நம்பிக்கை) நம் மனதுடன் பகிரும் தூதர்கள் போல. அவைகள் சொல்லும் கதைகள் என்பது நம் மனம் கேட்டுச் சொல்லும் உள் உண்மைகளின் மென்மையான அறிவுரை.

    சின்ன கிளிகள் = நம் உள்ளத்தின் தூய எண்ணங்கள், முன்வாழ்ந்த மகான்கள் அல்லது குழந்தைத் தெய்வங்கள்
    கதைகள் = ஒவ்வொரு நாள் வாழ்க்கையிலும் இறை நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் ஆன்மீகக் கற்றல்களின் கதைச்சுருக்கம்

    மொத்தத்தில்…
    இந்த வரிகள் இயற்கையின் மென்மையிலிருந்து கடந்து நம்முள் ஒலிக்கும் தெய்வீக வாய்மொழிகளைப் பேசுகின்றன.

    தென்றலும் கிளிகளும் ஒன்றாய் சொல்லும் அந்த மெளனச் செய்தி — “உயிரின் அமைதியை உறுதி செய், அங்கே தான் இறை இருக்கின்றான்.” என்கிற வாக்கில் எழுதியிருப்பாரோ ?

    சரி இனி அடுத்த வரிகளைப் பார்ப்போம்

    கண்ணும் நெஞ்சும் ஒன்றுக்கொன்று
    பின்ன பின்ன
    என்னை துன்பம் செய்யும் எண்ணம் என்ன என்ன

    இந்த வரிகளில் உணர்வுப் புழுங்கலும், ஆழ்ந்த ஆன்மீக ஏக்கமும் இயல்பாகக் கலந்து ஓடுகிறது.

    வாருங்கள், இதை உள்நோக்கத்தில் புனைந்துகொண்டு, ஒரு ஆன்மீக நுண்ணுணர்வு அடங்கிய விளக்கத்தில் பரிமாறிப் பார்க்கலாம்.

    “கண்ணும் நெஞ்சும் ஒன்றுக்கொன்று பின்ன பின்ன…”

    இது உளவுருக்கம் மற்றும் தெய்வச் சேர்ந்த உணர்வின் ஓட்டம்  .

    இங்கே ‘கண்’ என்பது பார்வையை மட்டும் அல்ல, உள்ளார்ந்த விழிப்பையும் குறிக்கலாம். ‘நெஞ்சு’ என்பது உணர்வுகளின் இருப்பிடமாய், இறையை உணரும் மையமாகக் கொள்ளலாம்.

    இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று பின்னிப் பின்னி செல்லும் தருணம் என்பது, ஆன்மிகத் தேடலின் ஆரம்பம் .

    “பார்வையால் உணர்வு தூண்டப் பெறுகிறது, உணர்வால் பார்வை பெருமை பெறுகிறது.”
    இது ஒரு பக்தன், தெய்வத்தை உள்மனத்துடன் நாடும் முயற்சியின் பிரதிபலிப்பு.

    “என்னை துன்பம் செய்யும் எண்ணம் என்ன என்ன…”

    அவித்யையின் விளையாட்டோடு கலந்த அக எண்ணத்தின் எழுச்சி.

    மனதிற்குள் எழும் எண்ணங்களே நமக்குத் துன்பத்தை அளிக்கின்றன.

    ஆன்மீகப் பார்வையில், இந்த எண்ணங்கள் மாயையின் வெளிப்பாடுகள். “என்ன என்ன…” என்று பலமுறை சொல்லும் பாவனையின் பின்னணி .

    அது ஒரு வகை மயக்கம், அவை ஓர் ஓய்வு இல்லா சுழற்சி.

    இது யோகி யார் என்பதைப் பற்றிய தவம் போல — யார்தான் இந்த எண்ணங்களை உருவாக்குகிறார்கள்? என் ஆத்மா அவையல்ல; ஆனால் அவை என்னுள் ஏன் வேரூன்றுகின்றன?

    இக்கேள்வியை மனதுள்.வேள்வியாக்கும் வரிகள் இவை.

    சுருக்கமாகச் சொன்னால்…
    இந்த வரிகள் — ஒருவன் உணர்வுகளால் தன்னை இழந்தும், பிறகு அந்த இழப்பில் இறையையும் தேட முயல்கின்ற பயணத்தின் ஓர் அத்தியாயம்.

    இவை ஆத்ம சந்தேகத்தின் ஊடே ஆனந்தத்தை நோக்கிய விரோதம் வாய்ந்த பயணங்களைப் பிரதிபலிக்கின்றன.

    ஆகா தோண்டத் தோண்ட வைரங்கள் வருவது போல கவியரசரின் வரிகளுக்குள் புகுந்து கொள்ள பேரானந்தம் காத்திருக்கதே !

    சீக்கிரம் வாருங்கள் ஆராயும் மனதின் ஈரம் காயுமுன்னே அடுத்த வரிகளைப் பார்ப்போம்.

    அக்கம் பக்கம் யாரும் பார்த்தால்
    வெட்கம் வெட்கம்
    அக்கம் பக்கம் யாரும் பார்த்தால்
    வெட்கம் வெட்கம்
    அன்பே உன்னை நேரில் கண்டால்
    நாணம் நாணம்
    அன்பே உன்னை நேரில் கண்டால்
    நாணம் நாணம்

    ஆசை நெஞ்சை சொல்லப்போனால்
    அச்சம் அச்சம்
    அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில்
    மிச்சம் மிச்சம்

    இந்த வரிகளில் காதலான உணர்வோட்டம் மேலோட்டமாகத் தோன்றினாலும், அதற்குள் ஒரு நுட்பமான ஆன்மீகத் தேடலும் நாணமும் உள்ளது.

    வாருங்கள், மென்மையான ஆன்மீகக் கோணத்தில் இதை உள்நோக்கமாக விரித்துப் பார்க்கலாம்.

    “அக்கம் பக்கம் யாரும் பார்த்தால்… வெட்கம் வெட்கம்”

    இறையை நாடும் தனிப்பட்ட பயணத்தின் பொருள்   இறைசிந்தனையில் முழுமையாக கலையும் போது, வெளி உலகம் ஒருவனின் மனநிலை மாற்றங்களை கவனிக்கலாம்.

    அந்த நேரத்தில் வரும் ஒரு வியக்கத்தக்க மௌனம் அல்லது மகிழ்ச்சி, மற்றவர்கள் பார்த்துவிடுவார்களோ என்ற இறுக்கம்.

    ஆன்மீகத்தில் இது ‘அந்தரங்க பக்தி’ என அழைக்கப்படுகிறது.

    அந்த நெகிழ்வுக்கு மனம் வெட்கப்படுவது, சுயத்தை விடுத்து இறை நடுக்கத்தில் நின்றிருக்கும் நிலை.

    “அன்பே உன்னை நேரில் கண்டால்… நாணம் நாணம்”

    தெய்வீக தரிசனத்தின் முன்னே வரும் வீடுபடுத்தும் மரியாதை
    இறையை உணர்ந்த தருணங்களில் மனம் சின்னமாகி விடும்.

    நேரில் கண்ட உணர்வில் ஏற்படும் நாணம், நமக்கு எவ்வளவு பாவபரிசுத்தம் தேவை என்பதை உணர்த்தும்.

    இது ஒரு தேடிய பக்தனுக்கு கிடைக்கும் வரம் .

    தனக்கு இன்னமும் தகுதி இல்லை என்ற சுயவிமர்சன மயக்கம்.

    “ஆசை நெஞ்சை சொல்லப்போனால்… அச்சம் அச்சம்”

    உள் விருப்பங்களை இறைவனிடம் பதியும்போது ஏற்படும் அச்சம்
    நம் ஆசைகளை, தயங்களை வெளிப்படுத்தும் முன் வரும் மனமுழுக்கம்.

    “நான் என்னைத் தூய்மைப்படுத்தியுள்ளேனா?” என்ற சந்தேகம்.

    இங்கே ஆசை என்பது உலக ஆசைகளை மட்டும் அல்ல — இறையை பெறும் அகமான ஏக்கம் கூட இருக்கலாம். அதனைத் திறந்துவிட அச்சம்தான்.

    “அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில்… மிச்சம் மிச்சம்”

    நித்தியமான இறை நினைவு – அகபரிந்த மனநிலை
    நாள்கள் மாறினாலும், நெஞ்சில் மிச்சமாகக் கிடப்பது ஒரே நினைவு.

    அந்த ‘அன்பு’. இவ்விதமான நிலை, பக்தியின் பரிணாம வளர்ச்சியை அறிவிக்கிறது.

    எத்தனை காலங்களாக இருந்தாலும், அந்த நிஜமான தேடல் விடாமல் இருக்கிறது.

    மொத்தத்தில்…
    இந்த வரிகள், ஒரு பக்தன் இறைநேசத்தினால் உருவாகும் உள்ளார்ந்த நிலைகளை மிக நெகிழ்வாகவும், இயற்கையாகவும் வெளிப்படுத்துகின்றன .

    வெட்கம், நாணம், அச்சம், நினைவு. இவை அனைத்தும் உண்மையான ஆன்மீக வாழ்வின் பரிணாம நிலைகள் என்பதைத் தொட்டுத் தெரிவிக்கின்றன.

    என் இனிய வாசக உள்ளங்களே ! காதல் பாடலில் கூட கவியரசர் கண்ணனை மையமாக நிறுத்தியது அதன் ஆன்மீகக்.கோணத்துள் கொஞ்சம் மூழ்கிப்பார்க்க இந்தப் பாமஅ ரசிகனைத் தூண்டியது.

    இந்தப் பயணத்தில் எனக்குத் துணையாக வரும் உங்களுக்கு எனது அன்பு நன்றி கலந்த வணக்கங்கள்.

    மீண்டும் அடுத்த பகுதியில் மற்றொரு பாடலோடு

    Share
  • 3 BHK – திரை விமர்சனம்

    3 BHK – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்
    3 BHK திரைப்படத்தை இன்று பார்த்தேன். படத்தின் தொடக்கத்தில் காசா கிராண்டு நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்கள். இது வழக்கமானது தானே என்று நினைத்தால், இந்த ஒட்டுமொத்தப் படமும் காசா கிராண்டுக்கும் அது போன்ற இதர ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் மிகப் பெரிய விளம்பரப் படமாக அமைந்துள்ளது.
    வீடு வாங்க ஆசைப்படுபவர்களுக்கான எல்லாத் தூண்டில்களும் வலைகளும் சரியாக வீசப்பட்டுள்ளன. வாடகை வீட்டில் உள்ள சிக்கல்களை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதில் உள்ள கட்டுப்பாடுகள், போதாமைகள், சிக்கல்கள் அனைத்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. தண்ணீரை அளவாகப் பயன்படுத்த வேண்டும் என்பது தொடங்கி, மழைக் காலத்தில் வீட்டில் தண்ணீர் புகுந்துவிடுவது வரை. இதற்கு ஒரே தீர்வு, சொந்த வீடு வாங்க வேண்டும் (சொந்த வீட்டுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது என்பது தனிக்கதை).
    சொந்த வீடு வாங்குவோருக்கான அடுத்த தூண்டில், இந்த இடம் பெரிய அளவில் வளரும். உங்கள் முதலீடு பல மடங்கு உயரும் என்பது. இதைப் படிப்படியாகப் படத்தில் காட்டுகிறார்கள். 2006க்கு முன்பு ஏழரை லட்ச வீடு, பிறகு பதினைந்து லட்சமாகி, அது பிறகு இருபத்தைந்து லட்சமாக உயருகிறது. இப்போது எவ்வளவு லட்சம் என்பதைச் சொல்லாமல் விட்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்களை மனத்தளவில் இந்த விலைக்குத் தயார் செய்வதற்கு இந்த முந்தைய விலை விவரம் உதவுகிறது.
    கடன் வாங்காமல் வீடு வாங்க முடியாது என்பது படத்தின் அடுத்த மையக் கருத்து. இது வசனமாகவே வருகிறது. எனவே கடன் வாங்கத் தயங்குபவர்களை அதிலிருந்து வெளிவந்து கடன் வாங்கத் தூண்டுகிறார்கள்.
    வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது என்பதை ஏதோ பெரிய வெற்றி என்பதைப் போல், பல முறைகள், பல காட்சிகளில் காட்டுகிறார்கள். வீட்டுக் கடன் அளிப்பவர்கள், உரிய சான்றுகள் இருந்தால் மட்டுமே அளிப்பார்கள். இது முழுவதும் வணிகம். இதில் குடும்பக் கண்ணீருக்கு எல்லாம் இடமில்லை. வருவாய்ச் சான்று உள்பட வங்கி கேட்கும் சான்றுகள் உங்களிடம் இருந்தால் கடன் கிடைக்கும். இல்லை என்றால் இல்லை. இதற்கு எல்லாம் ரொம்ப உணர்ச்சிவசப்படக் கூடாது. இப்போது நிலையான வருவாய் இல்லாவிட்டாலும், அதிக வட்டிக்கு வீட்டுக் கடன் கொடுக்கப் பலர் இருக்கிறார்கள். அவர்களின் குறி, வட்டி வருவாய் தான். அப்படியே உங்களால் கடன் கொடுக்க முடியாவிட்டால், வீட்டை ஜப்தி செய்து ஏலம் விட்டுவிடுவார்கள். எனவே, வீட்டுக் கடனால் வங்கிகளுக்கோ நிதி நிறுவனங்களுக்கோ பெரிய இழப்பு எதுவும் கிடையாது; லாபமே அதிகம்.
    சொந்த வீடு வாங்க நினைப்பவர்கள், புறநகரில், சற்று தூரத்தில், சிறு நகரங்களில், கிராமங்களில் மனையாக வாங்கி வீடு கட்டலாம்; தனி வீடும் வாங்கலாம். இந்த வாய்ப்புகளைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் அடுக்குமாடி வீட்டை மட்டுமே தேர்ந்தெடுக்குமாறு காட்சிகள் அமைந்துள்ளன. இது அடுக்குமாடி நிறுவனங்களுக்கே சாதகமானது.
    படத்தின் நிறைவுக் காட்சியில், சித்தார்த் வாங்கும் சொந்த வீடும் காசா கிராண்டு வீடாக இருப்பது தற்செயலானது இல்லை.
    அந்த வீட்டைப் பார்க்க வரும் வீட்டுத் தரகர் யோகி பாபு அதன் சுவரைத் தடவிப் பார்த்து, தரமாகத்தான் கட்டியிருக்கிறார்கள், உங்கள் அப்பாவைப் போல என்று சொல்வதும் தற்செயலானது இல்லை.
    படம் பார்க்கும் ரசிகர்களை வாடிக்கையாளர்களாக மாற்றும் உள்நோக்கத்துடன் இந்தப் படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார்கள். இதற்குள் கச்சிதமான குடும்பக் கதையை, அதன் உணர்ச்சிகரமான தருணங்களோடு, ஆசைகளோடு கனவுகளோடு காட்சிப்படுத்தி இருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.
    படத்தில் நடித்துள்ள சரத்குமார், தேவயானி, சித்தார்த் உள்பட அனைவரும் இது விளம்பரப் படம் இல்லை; உண்மையான கதை என்ற உணர்வை ஏற்படுத்தும் படியாகவே நடித்திருக்கிறார்கள்.
    அடுக்குமாடி வீட்டின் சிக்கல்களை, வீட்டுக் கடன் வாங்குவதன் சிக்கல்களை இன்னொருவர் இன்னொரு படமாகத் தயாரிக்கலாம்.
    Share
  • பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவு

    பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவு

    பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

    அவர் குறித்து, 30 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய விருத்தம் இது.

    ஆண்பால் ஒளவை!

    – அண்ணாகண்ணன்

    பாட்டாலே பாரதிநீ! பளபளக்கும்
    பைந்தமிழால் அவன்தாசன்! படைத்த நூலால்
    கேட்டாலே இனிக்கின்ற கிப்ரான்! என்றும்
    கீழடையாத் தரத்தாலே ஷெல்லி! சென்ற
    நாட்டாலே புகழ்நாட்டும் தாகூர்! கொண்ட
    ஞானமதால் இறக்காத மில்டன்! நீதான்
    பூட்டாலே அடங்காத புஷ்கின்! வீழும்
    பூந்தமிழை வாழவைக்கும் சேது ராமன்!

    கற்பனையால் காதலினால் கண்ண தாசன்!
    கைத்திறத்தால் ஷேக்ஸ்பியர்நீ! கவிதை சொல்லும்
    கற்பகமாய் நின்றதனால் வேர்ட்ஸ்வொர்த்! நாளும்
    கழறுகின்ற தத்துவத்தால் சாக்ர டீஸ்நீ!
    அற்புதமாய் நிற்கின்ற அரிஸ்டாட் டில்தான்!
    அருந்தமிழின் கடலுக்குள் பாதை கண்ட
    உற்சவமே வாஸ்கோட காமா! என்றும்
    உண்மைகளின் சீருருவே சேது ராமா!

    கவித்தேரில் மற்றுமொரு கம்பன்! நல்ல
    கவிதைகளால் இன்னுமொரு இளங்கோ! வெண்பாப்
    புவிவென்ற புகழேந்தி உன்றன் பாட்டன்!
    போர்ப்பரணி கொட்டியதில் செயங்கொண் டான்நீ!
    குவியாத தாமரைநீ! ஒட்டக் கூத்தன்!
    கொலுவீற்ற தமிழால்நீ ஆண்பால் ஒளவை!
    செவிமோதும் அமுதத்தால் சேது ராமன்
    செம்மாந்த தமிழ்போல நீடு வாழி!

    Share
  • நற்றமிழின்  காவலன் இற்றைத் திங்களின் நாயகன் – அ.கி. பரந்தாமனார்

    நற்றமிழின் காவலன் இற்றைத் திங்களின் நாயகன் – அ.கி. பரந்தாமனார்

    முனைவர் நா. சியாமளா
    உதவிப் பேராசிரியர் , தமிழ்த்துறை
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி
    சரவணம்பட்டி, கோயம்புத்தூர்-35.

    அன்றாட நடைமுறையில் பயன்படும் மொழியை அடிப்படையாகக் கொண்டு தமிழ் இலக்கணத்தைப் புதிய தமிழுக்கு இலக்கணமாக்கிக் காட்டியவர். மாணவர்கள் செய்யும் இலக்கணப் பிழைகளைத் தன் எழுதுகோல் கொண்டு வேரோடு களைந்தவர். நாளிதழ்கள் மாத இதழ்களைக் களங்களாகக் கொண்டு  அதில் இடம்பெறும் தவறுகளையும் அதன் திருத்தங்களையும் சுட்டிக்காட்டி திருத்தி  தமிழின் நிலையை  உயர்த்திப் பிடித்தவர். நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்று யாரேனும் நம்மைப் பார்த்துக் கேட்டாலே தமிழ்ப் பெருமகனார் அ.கி. பரந்தாமனாரின் நினைவு வராத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது . பள்ளி கல்லூரி நாள்களிலேயே தனி இதழ்களில் கவிதை எழுதி வெளியிட்டவர். பள்ளி கல்லூரிகளில் சரித்திரத்தை விரும்பிப் பாடமாகப் படித்தவர். திராவிட இந்தியா என்னும் புகழ்பெற்ற நூலின் ஆசிரியர் டி. ஆர் .சேஷய்யங்காரும் ஸ்ரீனிவாச்சாரியாரும்அ.கி.ப விற்குப் பேராசிரியர்களாக இருந்தவர்கள். அவர்கள் அன்று ஊட்டிய தமிழ்ப்பற்று தான் மதுரை நாயக்கர் வரலாற்றையும் தலைசிறந்த பாண்டிய மன்னர்களின்  வரலாற்றையும் எழுதுவதற்குத் தூண்டுதலாக அமைந்தது என்று அ.கி.ப கூறுவார். மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் வாரம் தோறும் மதுரை நாயக்கர் வரலாறு பற்றித் தொடர் சொற்பொழிவாற்றுவார் .ஆங்கிலப் பெரும் புலவர் கிப்பன் எழுதிய ரோமன் நாட்டு வரலாற்றை ஒட்டியே மதுரை நாயக்கர் வரலாற்று நூலை  அவர் உருவாக்கியுள்ளார். தான் இயற்றிய நூல்களுள் இந்நூலையே  சிறப்பானதாகக் கருதினார். தமிழ்நாடு ஞாயிறு மலரில் வாழ்க்கைக் கலை, பேச்சுக்கலை, தலைசிறந்த பாண்டிய மன்னர்களின் வரலாறு பற்றியும் சிறுவர் பாடல்களைக் கீரன் என்னும் புனைபெயரிலும் எழுதியவர்.

    இவரது மணி விழாவை மதுரை திருவள்ளுவர் கழகம் சிறப்பாகக் கொண்டாடியது .அவ் விழாவின்பொழுது எழுத்தாளர் மன்றத்தினர் இவருக்குப் பைந்தமிழ்ப் பாவலர் என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தனர். பாடநூல்களிலும் மற்ற இதழ்களிலும் மாணவர்களுக்காக இவர் எழுதிய சிறுவர் பாடல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு எங்கள் தோட்டம் என்ற நூலாக வெளிவந்தது. இந்த நூல் நடுவண் அரசின் சிறுவர் இலக்கியப் பரிசினை வென்றது. இந்தச் செய்தியை வானொலி வாயிலாக மதுரை தியாகராசர் கல்லூரியின் அந்நாள் முதல்வர் சிதம்பரநாதன் அவர்கள் கேட்டவுடன் அன்று மாலையே கல்லூரி வளாகத்தில் அ. கி. பரந்தாமன் அவர்களுக்குப் பாராட்டு விழாவை நடத்தினார். இருள் சூழ்ந்து ஊர் அடங்கி அமைதியாக இருக்கும் பொழுது தான் இவரது எழுதுகோலும் எண்ண அலைகளும் எழுந்து நின்று ஆர்ப்பரிக்குமாம். தான் எழுதும் கட்டுரைகளில் முழு திருப்தி ஏற்பட்டால்தான் அதை அவர் நூலாகக் கொண்டு வருவாராம். புரட்சிக் கவிஞர்கள் என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைத் தொகுப்பினை  அவர் வெளியிடவில்லை. ஏனெனில் அவர் மனம் நிறைவடையும் வகையில் அதனை விரித்து எழுத வேண்டும் என்று அவர் நினைத்திருந்ததாகவும் அதைச் செய்வதற்கான சூழல் அமையாததாலும் வெளியிட இயலவில்லை. தான் எழுதிய கவிதை நூலை மகாவித்வான் வேணுகோபாலப் பிள்ளை அவர்களிடம் மேற்பார்வைக்காகக் கொடுப்பார் .தான் எழுதிய நூல்கள் பிழையில்லாமல் வெளிவர வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்துவார். நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்கின்ற தனது நூலுக்கு கூடுதலாக இரு தமிழறிஞர்களை மேற்பார்வையிடச் செய்து பிழையின்றி வெளிவர ஏற்பாடு செய்தார். தான் எழுதும் நூல்களுக்கு தாமே முதலீடு செய்து அதை அச்சில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார் .அவ்வமயம் மலர் நிலையம்  பதிப்பகத்தார் தாங்களாகவே முன்வந்து அவர் நூல்களை விற்றுத் தர உரிமை கோரினர். அ.கி. பரந்தாமனாரும் அதற்கு உடன்பட்டு ஒப்புதல் அளித்தார். இவ்வாறு அவரது பல நூல்கள் வெளியாகிக் கொண்டிருந்த சமயத்தில் சில ஆண்டுகளுக்குப் பிறகு மலர் நிலையத்தார் விற்பனை செய்த நூல்களுக்கு உரிய தொகையைக் கொடுக்காததால் அதிக பொருள் இழப்பிற்கு ஆளானார் அ.கி.ப. உடனே சற்றும் யோசிக்காமல் அந்தப் பதிப்பகத்தார் மீது வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றார். ஆயினும் ஓரளவு தான் பணம் கிடைத்தது. அந்தப் பணமும் வழக்கு நடத்தும் செலவுகளுக்குத் தான் பயன்பட்டது. ஓர் எழுத்தாளன் அதுவும்  ஒரு தமிழ்ப் பேராசான் பதிப்பகத்தார் மீது வழக்கு தொடுத்து வெற்றி பெற்றது எழுத்துலகில் அன்று வியப்பான செய்தியாக அமைந்தது. மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இவர் பணியாற்றியபோது விடுதிக் காவலராகவும் இருந்தார். மாணவர்களுடைய அன்பைப் பெற்றிருந்ததால் அவர் பல ஆண்டுகள் விடுதிக் காவலராகப் பணியாற்ற முடிந்தது. எந்த ஒரு செருக்கும் இல்லாமல் இயல்பாக எப்பணியையும் மனமுவந்து செய்து முடிக்கக்கூடிய வல்லமைக்  குணம் அவரிடம் இயல்பாகவே குடியிருந்தது. அ.கி. பரந்தாமன் ஓய்வு பெற்ற போது அவரது மாணவர்கள் மதுரை விளக்குத் தூணில் இருந்து தியாகராசர் கல்லூரி வரை மேளதாளத்துடன் அவரை ஊர்வலமாக அழைத்து வந்தார்கள். கல்லூரியில் விடைபெறும் விழாவைச் சிறப்பாக நடத்தி பணமுடிப்பும் கொடுத்தார்கள். இவையெல்லாம் மாணவர்கள் அவர் மீது அன்பு மழை பொழிந்ததற்கான அடையாளங்கள். தமிழக அரசு தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவிய போது அவருக்குத் திரு. வி. க விருதும் பொற்கிழியும் வழங்கிக் கௌரவித்தது.அ.கி.ப சிறந்த இலக்கிய இலக்கண நூலாசிரியர்; எழுத்தாளர்; பேச்சாளர்; கவிஞர்; சிறுவர் பாடல் ஆசிரியர் ; அதையும் தாண்டி மனித நேயம் மிக்க பண்பாளர். எங்கெல்லாம் நல்ல தமிழ் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அ.கி. பரந்தாமனாரின் உள்ளம்  வாழ்த்து மழை பொழிந்து கொண்டே இருக்கும். தமிழுக்காய் வாழ்ந்த தலைமகனை அவர் பிறந்த சூலைத் திங்களிதழ் தன் மடியில் வைத்துத் தாலாட்டி மகிழ்வதில் பெருமை கொள்கிறது.

    இலக்கியம் போற்றும் இனிய மனிதர் விரும்பிய
    இலக்கினை நோக்கிப் பயணப்படுவோம்!

    Share
  • வாசகரின் வாசகத்தை மனமுருகிப் படிப்போம்!

    வாசகரின் வாசகத்தை மனமுருகிப் படிப்போம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஆதியந்த மில்லா அருருளான சோதியை
    அதிமதுரத் தமிழினில் அமர்த்தினார் வாசகர்
    தேசமே வியந்தேற்ற திவ்ய திருவாசகமாய்
    மலர்ந்துமே வந்து மனமமர்ந்து நிற்கிறது

    வாதவூர் பிறந்தார் மனமெல்லாம் இறையே
    சோதனையை வாதவூரர் சுகமாகக் கண்டார்
    காதலுடன் கடவுளை கைகூப்பி நின்றார்
    கையணைத்துக் கடவுளும் கரையேற்றி விட்டார்

    மந்திரியாய் இருந்தார் மனமெல்லாம் சிவனே
    மாணிக்கம் வைரம் மனமேற்க வில்லை
    பார்க்கு மிடமெங்கும் பரமனே தெரிந்தார்
    பாடினார் வாசகத்தைப் பரமனுமே ஏற்றார்

    அதிகாரம் வாதவூரர் அகம் ஏறவில்லை
    ஆணவம் அவரிடத்து அணுகிடவும் இல்லை
    அகமுழுக்க அரனே அமர்ந்துமே இருந்தார்
    ஆசையில்லா நிலையினிலே வாதவூரர் வாழ்ந்தார்

    பக்தியின் பக்குவத்தைப் பலவாறு பாடினார்
    பாடிய அத்தனையும் பசுந்தமிழின் சொத்தே
    தத்துவம் இருந்தது தர்க்கமும் இருந்தது
    இத்தரையில் யாவர்க்கும் ஏற்றதாய் அமைந்தது

    மதங்கடந்து பலபேரும் மனமேற்றி நின்றார்
    மாபெரும் தத்துவத்தை வாசகரே மொழிந்தார்
    தேனாகாத் தித்திக்க திரு வாசகத்தை
    ஊனுருக உவந்தளித்தார் உளமுருகி வாதவூரர்

    வாசகரின் வாசகத்தை மனமுருகிப் படித்தால்
    மனமாசு அகன்றோடும் மாவெளிச்சம் வந்துவிடும்
    சித்தம் தெளியும் சிவனருளும் கிடைக்கும்
    நித்தம் படிப்போம் நிம்மதியைப் பெற்றிடுவோம்

    Share
  • திருப்புவனம் அஜித்குமார் கொடூர மரணம்

    திருப்புவனம் அஜித்குமார் கொடூர மரணம்

    அண்ணாகண்ணன்

    திருப்புவனம் காவலர் அஜித்குமாரின் கொடூர மரணம், காவல் துறையின் கோர முகத்தைக் காட்டுகிறது.

    அஜித்குமாரை உடல் முழுவதும் ஈவு இரக்கமின்றி அடித்து, மிளகாய்ப் பொடி தடவி, சாகடித்த காவலர்களுக்கு எந்தக் குற்றவுணர்வும் இருக்காது. மேலதிகாரி சொன்னார், நான் செய்தேன் என்பார்கள். இது அவர்களுக்குச் சாதாரணம். ஆனால், பாதிக்கப்படும் மக்களுக்கோ அழியாத ரணம். சிரமறுத்தல் வேந்தருக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை, நமக்கோ பெரிய வாதை என்ற பாரதிதாசனின் பாடலே நினைவுக்கு வருகிறது.

    காவல் துறையினர், தங்கள் உயரதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் கண்டால், ஐயா / அம்மா எனப் பணிவாக அழைப்பார்கள். விறைப்பாக வணக்கம் வைப்பார்கள். அவர்கள் முன்னால் நின்றுகொண்டே கடமையாற்றுவார்கள். அதே நேரம், இதே காவலர்கள், சாமானிய எளிய மக்களை அதட்டி அழைப்பார்கள். வாடா போடா என ஒருமையில் பேசுவார்கள். அவர்களை உட்காரச் சொல்லாமல், நிற்க வைத்தே பேசுவார்கள். ஆதாரம் இல்லாவிட்டாலும் வெறும் சந்தேகம் இருந்தாலே அடித்து நொறுக்குவார்கள். அதிகாரம் மேலிருந்து கீழ்நோக்கிப் படிப்படியாகப் பரவும்.

    காவல் துறையினர் யாரையும் தடுத்து நிறுத்தி, அவர்களின் அடையாள அட்டையைக் கேட்க முடியும். தன்னை விசாரிக்கும் காவலரிடம் அடையாள அட்டையைக் காட்டுமாறு இங்கு யாரும் கேட்க முடியுமா?

    காவல் துறையினர் மீது மரியாதை எழ வேண்டுமே தவிர, பயம் வரக்கூடாது. காவல் துறை உங்கள் நண்பன் என ஒலிபெருக்கியில் பேசுவார்கள். ஆனால், கூட்டத்தை ஒழுங்குபடுத்த, லத்தியைச் சுழற்றுவார்கள். இவர்களின் லத்திக்குப் பயந்தே தள்ளுமுள்ளு ஏற்படும். யாருக்கு எந்தக் காயம், எந்த இழப்பு ஏற்பட்டாலும் இவர்களுக்குக் கவலை இல்லை. யாரும் இவர்களைக் கேள்வி கேட்க முடியாது.

    இந்தப் புண்ணிய பூமியில், ஜனநாயகத் திருநாட்டில், கேட்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது எனத் தலைநிமிர்ந்து யாரும் நடக்க முடியாது. காவல் துறையினர் மன்னர்களைப் போல் நடப்பார்கள். அவர்களுக்கு மக்கள் கூழைக் கும்பிடு போட வேண்டும். மதிக்காதவர்களை முட்டிக்கு முட்டி தட்டுவார்கள். சட்டத்தைத் தங்கள் கையில் எடுப்பார்கள். சிறைக் கழிவறையில் வழுக்கி விழவைத்து, மாவுக் கட்டுப் போடுவார்கள். நீதியை நிலைநாட்டியதாக நினைப்பார்கள்.

    காவல் துறையில் வெளிப்படைத்தன்மை இல்லாததே அடிப்படைச் சிக்கல். எல்லாக் காவல் நிலையத்திலும் கண்காணிப்புப் படக்கருவிகள் வைக்காதது ஏன்? அவை எந்த நேரத்திலும் இயங்குவதை உறுதி செய்யாதது ஏன்? காவல் துறையினர் மீது குற்றம் சாட்டப்படும்போது, அவர்கள் மட்டும் எளிதாகத் தப்பிவிடுவர். அந்த அமைப்பே கூட்டாகச் சேர்ந்து அவர்களைக் காப்பாற்றும்.

    இடைநீக்கம், இடமாற்றம், அபராதம் போன்றவை தண்டனையே கிடையாது. இதைச் செய்தவன் மூலம் ஏதோ நடவடிக்கை எடுத்தது போல் காட்டுகின்றார்கள். மனமாற்றம் ஏற்படுத்தவே தண்டனை என்றால், உண்மையில், தண்டனை பெற்றவர்களுக்கு இதனால் எந்த மனமாற்றமும் ஏற்படாது.

    அஜித்குமாருக்கு நடந்தது, நாளைக்கு யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். யாரும் எதற்கும் பொறுப்பு ஏற்க மாட்டார்கள். அதிகாரம் மிக்கவர்களுக்குச் சேவைகள் செய்து, அவர்களைக் காத்து நிற்பார்கள். எளிய மக்களை அடித்துத் துரத்துவார்கள். எனில், இந்த மக்களுக்கு யார்தான் பாதுகாப்பு?

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 305

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 305

    சக்தி சக்திதாசன்
    இங்கிலாந்து

    அன்பான வல்லமை வாசக நெஞ்சங்களே !

    நான் நலமேயுள்ளேன் . நீங்களும் நலமாக இருக்க அனைவர்க்கும் பொதுவான இறையைப் பிரார்த்திக்கிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

    2025-இன் மே மாதம், இங்கிலாந்து ஒரு பரிணாமக் கட்டத்தில் நுழைந்தது. வெப்பம் அதிகரித்தது மட்டுமல்ல, அரசியல் சூழ்நிலையும், சமூக மாற்றங்களும், கலாச்சார நிகழ்வுகளும் நாட்டின் மனநிலையை பிரதிபலித்தன.

    புதிய ஆட்சியின் சவால்கள், மக்கள் எதிர்பார்ப்புகள், மற்றும் உள்ளூர் தேர்தல்களின் தாக்கம்—இவை அனைத்தும் ஒரு புதிய பாதையை உருவாக்கின.

    அரசியல் பரிமாணம்: லேபர் ஆட்சியின் சோதனைக்காலம்

    2024-இல் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பிரதமர் கியர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் அரசு, தனது ஆட்சியின் 11வது மாதத்தில் முழுமையான செலவுத்திட்ட மதிப்பீட்டை (Comprehensive Spending Review) மே 11-ஆம் தேதி வெளியிட்டது.

    இது, நாட்டின் எதிர்கால செலவுகள் மற்றும் முதலீடுகளுக்கான திசையை நிர்ணயித்த முக்கிய தருணமாக அமைந்தது.

    NHS மற்றும் பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி

    சுகாதார சேவைகளுக்கு வருடத்திற்கு 2.8% வரை அதிகரிப்பு.

    பொதுத்துறை முதலீடுகள் – பள்ளிகள், போக்குவரத்து, மற்றும் பசுமை ஆற்றல் திட்டங்களில் முதலீடு.

    பிரதமரின் நோக்கம் – “ஒரு புது பத்தாண்டு தேசிய மறுசீரமைப்பு” என்ற லேபர் வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் முயற்சி.

    இது, லேபர் ஆட்சியின் “தொடக்க வெற்றிக்காலம்” முடிவடைந்து, நடவடிக்கைகள் மூலம் நம்பிக்கை பெற வேண்டிய கட்டமாக மாறியதை சுட்டிக்காட்டுகிறது.

    உள்ளூர் தேர்தல்கள்  ரீபார்ம் UK-வின் எழுச்சி

    மே 2 அன்று நடைபெற்ற உள்ளூர் தேர்தல்களில், ரீபோர்ம் (Reform UK) கட்சி 677 கவுன்சில் இடங்களை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

    குறிப்பாக, ஹல் ‘ கிழக்கு யோர்க்‌ஷையர் (Hull & East Yorkshire) மற்றும் Greater Lincolnshire ஆகிய இரண்டு புதிய மேயர் ஆட்சிகளை கைப்பற்றியது.

    ஆனால்…

    – இது முழுமையான வெற்றி அல்ல

    ரீபோர்ம் யூ.கே (Reform UK) இன் வெற்றிகள் பெரும்பாலும் சிறிய நகரங்களில் மட்டுமே.

    சவால்கள் – கட்சி உறுப்பினர்கள் சிலர், “தொழிலாளர்களை நீக்குவோம்” போன்ற பிரச்சனையான கருத்துகளை வெளியிட்டதால், சட்டரீதியான சிக்கல்கள் உருவாகும் அபாயம்.

    இது, பிரதமர் ஸ்டார்மரின் ஆட்சிக்கு எதிரான மக்கள் எதிர்வினையாக பார்க்கப்படுகிறது.

    ஆனால் ரீபோர்ம் யூ.கே (Reform UK) இப்போது ஆட்சியில் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது .

    இது ஒரு புதிய சோதனை.

    சமூக மாற்றங்கள் பல நிகழ்ந்தன ப்ரைட்(Bright) விழாக்களில் ஆதரவு குறைவு.

    LGBTQ+ ப்ரைட் விழாக்களுக்கு பெரும்பாலான பெருநிறுவனங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளன..

    Sony, Durex, Costa Coffee போன்ற பிராண்டுகள், DEI (Diversity, Equity, Inclusion) கொள்கைகளுக்கான அரசியல் எதிர்ப்புகளால், அமெரிக்காவில் ஏற்பட்ட அழுத்தங்களின் தாக்கமாக இங்கிலாந்திலும் பின்வாங்கியுள்ளன.

    இது, சமூக நீதி மற்றும் வர்த்தக அரசியலின் மோதலை வெளிப்படுத்துகிறது.

    இங்கிலாந்து நிறுவனங்கள், அமெரிக்க அரசியல் சூழ்நிலையின் தாக்கத்தில் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றத் தொடங்கியுள்ளன.

    கலாச்சாரம் மற்றும் மக்கள் நிகழ்வுகள்:

    ஷெல்சி மலர் கண்காட்சி (Chelsea Flower Show) [மே 21–25]

    பசுமை நகரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருப்பொருளில் தோட்டக்கலை விழா.

    வைக்கல் விழ (Hay Festival (மே 22–ஜூன் 1) – இலக்கியம், கவிதை, சிந்தனை உரைகள்.

    – Brighton Festival (மே 3–26) – இசை, நாடகம், நடனம், திரைப்படம்.

    – FA Cup Finals (மே 17–18) – வெம்ப்லியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இறுதிப்போட்டிகள்.

    இப்படியான கலாசார நிகழ்வுகள் பல நடந்தேறின.

    ஒரு தேசத்தின் திசை மாற்றம் ஏற்படும் சாத்தியக்கூறுகள் இங்கிலாந்தில் தென்படத் தொடங்கியுள்ளது.

    2025 மே மாதம், இங்கிலாந்து அரசியல் மறுசீரமைப்பு, சமூக சிந்தனையின் மாறுதல், மற்றும் கலாச்சார உற்சாகம் ஆகியவற்றின் சந்திப்பாக அமைந்தது.

    லேபர் ஆட்சி தனது வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது.

    Reform UK தனது வெற்றிகளை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    மக்கள், மாற்றத்திற்கான உணர்வுடன், நடவடிக்கைகளை எதிர்பார்க்கும் நிலையில் இருக்கின்றனர்.

    இஸ்ரேல்–ஈரான் யுத்தம் மேற்கு ஆசியாவை பதற்றமூட்டும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் கெயர் ஸ்டார்மர் எடுத்துள்ள நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.

    அவர், ஈரான் இந்தப் பகுதியில் நீண்ட காலமாக அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாகக் கூறியதுடன், இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக்கொள்ளும் உரிமை உள்ளது என வலியுறுத்தியுள்ளார்.

    இதன் மூலம், இங்கிலாந்து இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், மேற்கு ஆசியாவில் அமைதி நிலவ வேண்டும் என்ற நோக்கத்துடனும் செயல்படுகிறது.

    இருப்பினும், இந்த நிலைப்பாடு ஈரானின் தாக்குதல்களை கண்டிக்கும் வகையிலும், இஸ்ரேலின் பாதுகாப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

    இஸ்ரேல்–ஈரான் மோதல் தொடர்பாக இங்கிலாந்து அரசு முன்பு எடுத்திருந்த நிலைப்பாடுகள் சில முக்கிய அம்சங்களை கொண்டிருந்தன:

    – பயண எச்சரிக்கை: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளுக்கான பயணங்களைத் தவிர்க்குமாறு பிரித்தானிய குடிமக்களுக்கு அரசு அறிவுறுத்தியது.

    இது அப்பகுதியில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையை பிரதிபலிக்கிறது.

    – பிரித்தானிய குடிமக்கள் வெளியேற்றம்: இஸ்ரேலில் உள்ள பிரித்தானியர்களை வெளியேற்ற சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இது பிராந்தியத்தில் தீவிரமடைந்த மோதல்களுக்கு பதிலாக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

    – இராணுவ பங்கேற்பில் எச்சரிக்கை: ஈரான், இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் என எச்சரித்தபோதும், இங்கிலாந்து நேரடியாக எந்த இராணுவ நடவடிக்கையிலும் பங்கேற்கவில்லை.

    இதன் மூலம், இங்கிலாந்து தற்காலிகமாகத் தன்னைத் தவிர்த்துக்கொண்டு, பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியது.

    இங்கிலாந்து அரசு, பொதுவாக, இஸ்ரேலின் பாதுகாப்பு உரிமையை ஆதரிக்கின்ற போதிலும், நேரடி மோதல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் ஒரு சமநிலை நிலைப்பாட்டை முன்னெடுத்துள்ளது.

    இது ஒரு மாதம் மட்டுமல்ல – ஒரு புதிய அரசியல் பருவத்தின் தொடக்கம்.

    உக்ரைன் உடன்படிக்கை: இங்கிலாந்து மற்றும் உக்ரைன் இடையே 100 ஆண்டு கால பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இது ரஷ்யா-ஈர்ப்பு சூழ்நிலையில் உக்ரைனுக்கு உறுதுணையாக அமைகிறது.

    பிரெக்சிட் பிந்தைய வர்த்தக ஒழுங்குகள்: ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை மீளாய்வு செய்யும் முயற்சிகள் தொடங்கப்பட்டன.

    அரசியல் நிதி ஒழுங்குமுறை: தேர்தல் நிதி முறைகள் மற்றும் அரசியல் நிதி பங்களிப்புகள் தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் குறித்து விவாதம் நடைபெற்றது.

    பாராளுமன்ற சீர்திருத்தம்: மேலவை உறுப்பினர்களை நியமிக்கும் முறையில் மாற்றம் செய்யும் திட்டம் முன்வைக்கப்பட்டது.

    2025 ஜூன் மாதம், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு வரலாற்றுச் சம்பவமாக, தீராத நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் தங்கள் உயிரை தாங்களே முடிக்க அனுமதிக்கும் கருணைக் கொலை மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

    314–291 என்ற வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மனித உரிமை, கண்ணியமான இறப்பு, மற்றும் தனிநபர் சுயாதீனத்தை முன்னிறுத்தும் ஒரு முக்கியமான சட்டமாக கருதப்படுகிறது.

    இது, 1967ஆம் ஆண்டு கருக்கலைப்பு சட்டத்துக்குப் பிறகு சமூகக் கொள்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றமாகவும் பார்க்கப்படுகிறது.

    இருப்பினும், இந்த மசோதாவுக்கு எதிராக பலர் கவலை தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக, மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் சமூக அழுத்தத்தால் தங்கள் உயிரை முடிக்கத் தூண்டப்படக்கூடும் என்ற எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

    இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவை உள்ளிட்ட மதநம்பிக்கைக் குழுக்கள், மனித வாழ்வின் மதிப்பை வலியுறுத்தி, இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியிருந்தனர்.

    இந்த சட்டம் மேல்சபையில் மேலும் பரிசீலிக்கப்படவுள்ள நிலையில், இங்கிலாந்து சமூகத்தில் இறுதி நேர உரிமைகள் குறித்த விவாதங்களை இது மேலும் தீவிரமாக்கியுள்ளது.

    இந்த மாத மடலில் இங்கிலாந்தில் ஏற்பட்ட பல நிகழ்வுகளையும் அதன் தாக்கங்களையும் பார்த்தோம்.

    மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும்வரை.

    Share
  • யாரிசைக்க வருகுவதோ? – சில கேள்விகள்

    யாரிசைக்க வருகுவதோ? – சில கேள்விகள்

    அண்ணாகண்ணன்

    யாரிசைக்க வருகுவதோ? – ஒலி யாழினின்று வருகுவதோ? என்ற பாடலை இன்று வானொலியில் கேட்டேன். 2022ஆம் ஆண்டு வெளியான ஹே சினாமிகா படத்தில் கோவிந்த் வசந்தா இசையில், மதன் கார்க்கி வரிகளில், பாம்பே ஜெயஸ்ரீ குரலில் வெளிவந்துள்ளது. மிக இனிய இசை, நெகிழச் செய்யும் வரிகள்.

    பாரதியாரின் எங்கிருந்து வருகுவதோ – ஒலி யாவர் செய்குவதோ? என்ற பாடலின் தாக்கம், இந்தப் பாடல் முழுவதும் வெளிப்படுகிறது.

    குன்றினின்றும் வருகுவதோ எனப் பாரதி கேட்பதை, மாமலையின் மீதிருந்தோ? என மதன் கார்க்கி கேட்கிறார். காற்றைக் கொண்டு தருகுவதோ எனப் பாரதி கேட்பதை, காற்றிலேறி வருகுவதோ? என மதன் கார்க்கி கேட்கிறார். யமுனை அலை பற்றிப் பாரதி கேட்க, கடல் அலை பற்றி மதன் கார்க்கி கேட்கிறார். ஆயினும் நாணறுந்த இன்பமெலாம் நானருந்த வருகுவதோ? என்ற மதன் கார்க்கியின் வரியை நான் மிகவும் ரசித்தேன்.

    இதன் பல்லவியில் ஒலி எங்கிருந்து வருகிறது என்று கேட்ட பிறகு, மாமலையின் மீதிருந்தோ? – வெள்ளி மாகமதன் மீதிருந்தோ? எனக் கேட்கிறார். வெள்ளி மாகம் என்பது எதைக் குறிக்கிறது? மாகம் என்பதற்கு மேலிடம், ஆகாயம், சுவர்க்கம், திக்கு, மேகம் எனச் சில பொருள்கள் அகராதியில் உள்ளன. மேகம் எனக் குறிப்பிட விரும்பினால் நேரடியாக வெள்ளி மேகமதன் மீதிருந்தா என்றே கேட்டிருக்கலாம். மாகம் என முற்றிலும் புதிய சொல் தேவையில்லை. வெள்ளி என்பதுடன் இணைத்துப் பார்த்தால், வெள்ளி ஆகாயம் என்பதே பொருளமைதியுடன் உள்ளது. இதைத்தான் மதன் கார்க்கி சொல்ல விரும்புகிறாரா?

    Share
  • கவியரசரின் பாடல்களில் ஆன்மீக அறிவியல் – 11

    கவியரசரின் பாடல்களில் ஆன்மீக அறிவியல் – 11

    சக்தி சக்திதாசன்

    கண்ணதாசனின் வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் ஆன்மீக உணர்வுகள் ஆழமானவை.

    ஆலயமணி படத்திற்காக கவியரசர் தந்த ” சட்டி சுட்டதடா ” எனும் பாடலின் வரிகளை ஒரு ஆன்மீகக் கோணத்தில் பார்க்கும் முயற்சி இது.

    மனித மனம் ‘சட்டி’ எனில், அதில் சுட்டு பாசங்களை குறைத்து, அகந்தையை வேகவைத்து, இறைவன் வாசமருக்கக் கூடிய புனித பாத்திரமாக நாம் தங்களை மாற்றிக்கொள்வதே இங்கு குறிப்பதாகும்.

    ஒருவரின் உள்ளம் பழிக்கு அப்பாற்பட்டதும், ஆசைகளில் உருகாததுமான நிலைக்கு வந்தால்தான், அந்த மனிதனிடமிருந்து இயற்கையாகவே ஆன்மீக வாசனை பீறிடும் — அது தான் இறைநேயம் என்ற வாசனை.

    இந்த பாடல்வரிகள் கவிஞர் கண்ணதாசனின் ஆழ்ந்த வாழ்வுப் பிழை அனுபவங்களை மிக நேர்த்தியாகவும் யதார்த்தமாகவும் எடுத்துரைக்கின்றன. இதை மிகவும் எளிமையான தமிழில் புரியவைத்தால்:

    – “சட்டி சுட்டதடா கை விட்டதடா” – தண்ணீர் கையிலிருக்கும் போது சுடுகின்றது போல தெரியாது. ஆனால் சுட்ட பிறகுதான் அதிலிருந்து கை விலகுகிறது.

    அதே மாதிரி,

    – “புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா” – சில தவறுகள் மனிதரின் உணர்வுகளைக் காயப்படுத்தும். அவை அதைப்போலவே நெஞ்சை நொறுக்கும்.

    – “நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா” – வாழ்க்கை முடிந்த பிறகுதான் நாம் எது சரி, எது தவறு என்பதை உணர்கிறோம்.

    இந்த வரிகள் சொல்லும் முக்கியமான உண்மை என்னவென்றால், வாழ்க்கையிலே பல நேரங்களில், தவறுகள் செய்த பிறகு தான் அதுதவறு என புரிகிறது.

    சில அனுபவங்கள் நம்மை எரித்துப்போகச் செய்த பிறகுதான் நம்மால் அந்த அழுத்தத்தை உணர முடிகிறது.

    ஆனால் அப்போது நாம் ஏற்கனவே காயமடைந்திருக்கிறோம்.

    இது மிகவும் தத்துவமிகுந்த உணர்வெழுச்சி.

    வாழ்வின் உண்மையான பாடங்களை, வலிகள் வழியாகவே நாம் கற்றுக்கொள்கிறோம் என்பது கவிஞரின் வாசகமாகும்.

    இனி அடுத்து

    பாதி மனதில் தெய்வம் இருந்து
    பார்த்துக் கொண்டதடா
    மீதி மனதில் மிருகம் இருந்து
    ஆட்டி வைத்ததடா
    பாதி மனதில் தெய்வம் இருந்து
    பார்த்துக் கொண்டதடா
    மீதி மனதில் மிருகம் இருந்து
    ஆட்டி வைத்ததடா

    ஆட்டி வைத்த மிருகம் இன்று
    அடங்கி விட்டதடா
    ஆட்டி வைத்த மிருகம் இன்று
    அடங்கி விட்டதடா
    அமைதி தெய்வம் முழு மனதில்
    கோவில் கொண்டதடா

    இந்த வரிகள் கவிஞர் கண்ணதாசனின் உளமனப்பொருள் ஓவியக் கலைக்கே ஒரு சான்றாகும்.

    அவர் மனித மனதின் இரு முரணான நிலைகளைக் காணத்தக்க வகையில் வெளிப்படுத்துகிறார்:

    ஒருபுறம் தெய்வீகப் பக்தி, மறுபுறம் புலித்தனக் கவிழ்ச்சி.

    “பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா” என்பதில், மனிதனில் எழுந்திருக்கும் ஒழுக்கமிக்க, உயர்ந்த சிந்தனைகளைப் பேணும் ஒரு பக்கத்தை அவர் காண்கிறார்.

    அதே நேரத்தில், “மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா” என்று சொல்லும்போது, மனிதனின் அடிமைபட்ட எண்ணங்கள், ஆசைகள், கோபங்கள் போன்ற விலங்குப் போக்குகள் பலவீனங்களை உருவாக்குகின்றன என்பதையும் சொல்லுகிறார்.

    இவை மட்டும் ஒரு காட்சியை புணர்ந்து காட்டாமல், “ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா” என்று சொல்லுவதன் மூலம், அந்த விலங்கு சுயாதீனமான மனப்போக்கை துறந்துவிட்டு சமாதானத்தை நாடுகிறதென்கிறார்.

    முடிவில், “அமைதி தெய்வம் முழு மனதில் கோவில் கொண்டதடா” – எனும் வரிகள், ஒரு மனிதனின் விழிப்புணர்வும் ஆன்மீகப் பரிணாமமும் இடம் பெற்று, மனம் முழுதும் அமைதி மிக்க தெய்வீக உற்சாகத்தால் நிரம்பி விட்டதாகக் கூறுகின்றன.

    இது மட்டும் ஒரு கவிதை அல்ல.

    இது, மனதின் மாறுபட்ட நிலைகளையும், கடைசியில் அமைதியை நோக்கும் ஆன்மிகப் பயணத்தையும் மிக எளிமையாகத் தத்துவமாகவும் உரைக்கும் கண்ணதாசனின் வார்த்தை மேதைமையின் ஓர் ஒளிப்படம்.

    இனி

    ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடி விட்டதடா
    ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா
    தர்மதேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
    தர்மதேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
    மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று
    ஓய்வு கொண்டதடா

    இந்த வரிகள் கண்ணதாசன் அவர்களின் ஆன்மீகத்தையும், மன அமைதி குறித்து அவருடைய நுட்பமான சிந்தனையையும் அழகாகச் சொல்கின்றன.

    – “ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடி விட்டதடா” — மனதில் இருந்த குழப்பம், பயம், தவறு, மோசமான எண்ணங்கள்—அவையெல்லாம் ஓடி விட்டன என்கிறார்.

    “பேய்கள்” என்பது இங்கு அத்தகைய எதிர்மறை எண்ணங்களுக்கு உருவகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

    “ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா” — ஆலயத்தில் மணி ஒலிப்பதைப் போல, அந்த இறைவனின் ஆனந்தம், பரிசுத்தம் நெஞ்சினுள் ஒலிக்கிறது.

    நம் உள்ளத்தில் ஒரு தூய்மை ஏற்பட்டுவிட்டது.

    – “தர்மதேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா” — மனசாட்சி விழித்தெழுந்து, தர்மத்தின் சத்தம் (நீதி, நேர்மை) நம்முள் முழங்குகிறது.

    தர்மதேவன் என்றால் நீதியை பிரதிநிதித்துவம் செய்யும் தெய்வம்.

    – “மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா” — அந்த இறைவனின் அருளால், மனம் அமைதியடைந்து முழுமையான ஓய்வை உணர்கிறது.

    “சாந்தி” என மும்முறை சொல்வது, அது உடல், மனம், ஆத்மா—மூன்றுக்கும் அமைதியை உணர்த்துவதாகும்.

    இதனுடைய மையக் கருத்து தற்காலிக உலகக் குழப்பங்களில் இருந்து வெளிவந்து, இறைவனை எண்ணும்போது நம்முள் ஏற்படும் அகநிம்மதி.

    இது ஒருவிதமான தியான நிலை போலவும் இருக்கிறது.

    உண்மையிலேயே இவை நம்மைக் கேட்க கேட்கவே சாந்தமடைய வைக்கும் சொற்கள்.

    அடுத்து

    எறும்புத் தோலை உரித்துப் பார்க்க
    யானை வந்ததடா
    நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க
    ஞானம் வந்ததடா
    எறும்புத் தோலை உரித்துப் பார்க்க
    யானை வந்ததடா
    நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க
    ஞானம் வந்ததடா
    பிறக்கும் முன்னே இருந்த உள்ளம்
    இன்று வந்ததடா
    பிறக்கும் முன்னே இருந்த உள்ளம்
    இன்று வந்ததடா
    இறந்த பின்னே வரும் அமைதி
    வந்து விட்டதடா

    எனும் வரிகளைப்.பார்ப்போம் வாருங்கள்

    தமிழ் கவித்துறையின் பெருமையைப் பேசும் போது, கவியரசர் கண்ணதாசரின் பெயர் வழியாகவே தொடங்க வேண்டும் என்பது இயல்பே.

    அவருடைய இவ்வரிகள், வாழ்வின் உள்மனச்சட்டங்களை, மனிதனின் அகத்துணைகளைப் பதிவு செய்யும் ஓர் ஆழ்ந்த ஆன்மீகப் பயணமாகவே தோன்றுகின்றன.

    கவியரசரின் வரிகளில் உள்ள சுவடுகள்:

    “எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா” என்ற வரி, ஒன்றைப் புரிந்து கொள்ளாதவரின் அத்துமீறிய ஆர்வத்தையும் மூடநம்பிக்கையையும் குறிக்கிறது.

    எறும்பு சிறியதொரு உயிர்; அதன் தோலை உரியவேண்டும் என்பதற்கே யானை எனும் பெருமை தேவைப்படுமா?

    இதுவே ஒரு உவமையாகவும் பரமார்த்தமாகவும், அற்பமான விஷயங்களை விளக்கும் பட்சத்தில் கூட நாம் எவ்வளவு செலவிடுகிறோம் எனக் கவிஞர் கேட்கிறார்.

    அதை எதிரொலிக்க “நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா” என்பது, மனித உள்ளத்தின் ஆழத்தைப் புரிந்து கொள்ள உணர்வு மற்றும் ஞானம் வேண்டும் என்பதைக் கூறுகிறது.

    இதயம் என்பது உணர்வுகளின் வாசஸ்தலம்.

    அதை உரிக்கின்றபோது மனநிலை நுட்பமாக, நியாயமாக விளங்கும்.

    இங்கு ஞானம் என்பது யானையைவிட பலமிகுந்தொரு சக்தியாகவே புலப்படுகிறது.

    “பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா” மனித ஆன்மா என்பது கால வரம்புகளுக்குப் பிறந்ததல்ல.

    அது ஒரு தொடரும் சிந்தனையின் இயக்கமாகத் தோன்றுகிறது.

    உள்ளத்தின் சாத்தியங்கள் பிறவிக்கு முன்பே உள்ளது என்பதே இந்த வரியின் தத்துவக் கூறு.

    “இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா” என்ற பின்வரிகள், இறப்புக்குப் பின்னரும் உணர்ச்சி சீர்மை, மன அமைதி என்று பல்வேறு நோக்குகளில் வாசகரைத் தூண்டுகின்றன.

    அதை வாழ்நாளிலேயே அடைய முடியும் என்ற சிந்தனை உண்டு. ஆனால், அது எப்போது வருகிறது என்பதில்தான் மனித வாழ்க்கையின் விசித்திரம் இருக்கிறது.

    இந்த வரிகளைப் பார்ப்பவர்களுக்கு இது ஒரு தத்துவ இலக்கிய அனுபவமாகும்.

    பார்வைத் தூய்மை, உவமையின் புதுமை, உளவியலின் ஆழம் மற்றும் மனித உணர்வின் துல்லியமும் இவற்றின் மூலம் வெளிப்படுகிறது.

    எளிய சொற்களில் ஆழ்ந்த கருத்துகளை ஒளிக்கின்ற வகையில் கவியரசர் கண்ணதாசர் இவ்வரிகளை உருவாக்கியுள்ளார்.

    இதே போல, நம் பூர்வீகத்தின் ஆன்மீகத் தத்துவங்களை கவிதையாக மாற்றி, எந்தவொரு மனிதனும் தனது வாழ்வை நோக்கிச் சிந்திக்கச் செய்யும் திறமையே அவருடைய கவியின் செழுமையாகும்.

    கவியரசருடைய பாடல்கள் ஒவ்வொருவருக்கும் வித்திதாசமான கோணப் பார்வையைத் தருகின்றன.

    என் கோணப்பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

    மீண்சும் அடுத்தொரு பாடலின் பகுப்பாய்வில் சந்திக்கும்வரை.

    Share
  • தமிழ்க் கவியுலகில் தனிக்கொடி ஏற்றினார் !

    தமிழ்க் கவியுலகில் தனிக்கொடி ஏற்றினார் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    முத்தமிழ் வாழ்த்த முத்தையா பிறந்தார்
    சொத்தாகத் தமிழைச் சேர்த்துமே வைத்தார்
    கம்பனைத் தொட்டார் கவிமழை பொழிந்தார்
    கண்ண தாசனாய் கவி மன்னரானார்

    பக்தியில் திளைத்தார் பரமனைத் துதித்தார்
    நெற்றியில் நீறும் பொட்டுமாய் திகழ்ந்தார்
    ஆலயம் சென்றார் அரனை வணங்கினார்
    ஆத்திக வாதியாய் ஆனந்தம் அடைந்தார்

    அரசியல் அலையால் அள்ளுண்டு போனார்
    ஆத்தீக அகத்தில் நாத்திகம் நுழைந்தது
    விதண்டா வாதம் பேசினார் எழுதினார்
    வீணாய்க் காலம் கழித்தார் இருளில்

    சாமியை ஏசினார் சாத்திரம் எதிர்த்தார்
    சங்கர மடத்தைத் தகர்ப்பேன் என்றார்
    தேவார புராணம் தீயிட முனைந்தார்
    திசை அறியாமல் சிக்கினார் இருளில்

    நாத்திகம் என்பது நஞ்சென உணர்ந்தார்
    ஆத்தீகம் அவரை அணைத்துமே நின்றது
    கண்ணனைப் பாடினார் காஞ்சியை நாடினார்
    திருமுறை படித்தார் திளைத்தார் பக்தியில்

    பக்திப் பாடல்கள் பற்பல பாடினார்
    பாமரர் விளங்க பலவும் பாடினார்
    தத்துவம் பாடினார் சித்தரைப் போலவே
    இத்தரை பயனுற எழுதினார் எழுதினார்

    உரைநடை உலகில் உயர்ந்தே நின்றார்
    உரைநடை கூட கவிநடை ஆனது
    உள்ளம் அமர உரைநடை அமைந்தது
    கவி கண்ணதாசன் உரை மன்னரானார்

    திரைக்கதை வசனம் காவியம் ஆனது
    கவிதை நடையில் வசனம் எழுந்தது
    கவித்துவ நிலையைக் காட்டியே நின்றார்
    கவி கண்ணதாசன் கலைமகள் வரமே

    சமயங் கடந்து தமிழை எழுதினார்
    அவலம் களைந்திட அதிகம் எழுதினார்
    மனதில் பட்டதை வண்ணமாய் வடித்தார்
    மாபெரும் கவியாய் திகழ்கிறார் மனங்களில்

    வெள்ளித் திரைக்கு அள்ளிக் கொடுத்தார்
    வேதனை சோதனை சாதனை பாடினார்
    தத்துவப் பாடலை முத்திரை ஆக்கினார்
    தமிழ்க் கவியுலகில் தனிக்கொடி ஏற்றினார்

    Share