பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவு

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
அவர் குறித்து, 30 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய விருத்தம் இது.
ஆண்பால் ஒளவை!
– அண்ணாகண்ணன்
பாட்டாலே பாரதிநீ! பளபளக்கும்
பைந்தமிழால் அவன்தாசன்! படைத்த நூலால்
கேட்டாலே இனிக்கின்ற கிப்ரான்! என்றும்
கீழடையாத் தரத்தாலே ஷெல்லி! சென்ற
நாட்டாலே புகழ்நாட்டும் தாகூர்! கொண்ட
ஞானமதால் இறக்காத மில்டன்! நீதான்
பூட்டாலே அடங்காத புஷ்கின்! வீழும்
பூந்தமிழை வாழவைக்கும் சேது ராமன்!
கற்பனையால் காதலினால் கண்ண தாசன்!
கைத்திறத்தால் ஷேக்ஸ்பியர்நீ! கவிதை சொல்லும்
கற்பகமாய் நின்றதனால் வேர்ட்ஸ்வொர்த்! நாளும்
கழறுகின்ற தத்துவத்தால் சாக்ர டீஸ்நீ!
அற்புதமாய் நிற்கின்ற அரிஸ்டாட் டில்தான்!
அருந்தமிழின் கடலுக்குள் பாதை கண்ட
உற்சவமே வாஸ்கோட காமா! என்றும்
உண்மைகளின் சீருருவே சேது ராமா!
கவித்தேரில் மற்றுமொரு கம்பன்! நல்ல
கவிதைகளால் இன்னுமொரு இளங்கோ! வெண்பாப்
புவிவென்ற புகழேந்தி உன்றன் பாட்டன்!
போர்ப்பரணி கொட்டியதில் செயங்கொண் டான்நீ!
குவியாத தாமரைநீ! ஒட்டக் கூத்தன்!
கொலுவீற்ற தமிழால்நீ ஆண்பால் ஒளவை!
செவிமோதும் அமுதத்தால் சேது ராமன்
செம்மாந்த தமிழ்போல நீடு வாழி!